நலம் .. நலமறிய ஆவல் – 130
நிர்மலா ராகவன்
“உனக்கு என்ன வந்துவிட்டது? நல்ல பையனாக இருந்தாயே?” என்று என் பதின்ம வயது மாணவன் நவாவியைக் கேட்டேன், மலாய் மொழியில்.
சிறிதுகூட தயக்கமே இல்லாது வந்தது அவனது பதில்: “என் நண்பர்கள் அவ்வளவுபேரும் விஷம்!”
“தகாத உறவு என்று தெரிந்தே ஏன் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாய்?” என்று நான் கேட்டபோது, அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
ஏழைகளான பெற்றோருக்குப் பிள்ளைகளின் அத்தியாவசியத் தேவைகளை நிரப்புவதற்கே பொழுது போய்விடுகிறது, அதனால் தகுந்த கவனிப்பின்றி பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக நடக்கிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நவாவியைப்போல வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்த சிறுவர்களும் பாதைமாறிப் போகிறார்களே, ஏன்?
பல பெற்றோர் குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிக்க மாட்டார்கள். கேட்டால், `அவர்கள் மனம் நொந்துவிடும். பெற்றோருக்கு நம்மிடம் அன்பில்லை என்று நினைத்து அவமானம் அடைந்துவிடுவார்கள்!’ என்று பலவாறாகச் சொல்வார்கள். ஒரு வேளை, திருத்த நினைத்தாலோ கெஞ்சலாகச் சொல்வார்கள். யாரும் அதைச் செவிகொடுத்துக் கேட்பதில்லை. இத்தகைய வளர்ப்புமுறையால் தான் என்ன செய்தாலும் சரிதான் என்று தோன்றிப்போகிறது சிறுவர்களுக்கு.
அவர்களுக்குப் பன்னிரண்டு வயதாகும்போது, பெற்றோர் சற்று அடக்க முயல்கிறார்கள். ஐந்திலேயே வளைத்திருக்கவேண்டும். காலங்கடந்து திருத்துவது இயலாத காரியமாகிவிடுகிறது.
அந்த வயதுக்கே உரிய எதிர்க்கும் குணத்துடன், `என் பெற்றோருக்கு என்னைப் புரிவதேயில்லை!’ என்று தம்மை ஒத்த மாணவர்களிடம் குறை கூறுகிறார்கள். நண்பர்களுடன் ஒன்றாக இணையும்போது, அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் ஏற்பது தனி மகிழ்ச்சி. தீய பழக்கங்களைப் பெற்றோர் கண்டித்தால், அவர்கள் வேண்டாதவர்களாகி விடுகிறார்கள்.
பரவும் கசப்பு
பெற்றோரிடம் கொண்ட காழ்ப்பு ஆசிரியைகளிடமும் பரவுகிறது. `என்னைப் புரிந்துகொள்கிறவர்கள் நண்பர்கள் மட்டும்தான்!’ என்பார்கள்.
`உன் நண்பர்கள் உருப்படாதவர்கள்!’ இப்படிச் சொன்னால், எந்தப் பையன்தான் ஏற்பான்? (சில பெண்களும் இதில் சேர்த்தி).
பொதுவாக, நண்பர்களைக் குறை கூறாது, அவர்களுடைய பழக்கவழக்கங்களை மட்டும் குறிப்பிடலாமே!
“அவர்கள் சிகரெட்டில் ஆரம்பித்து, இன்று போதை மருந்துவரை போய்விட்டார்கள். இப்பழக்கம் சட்ட விரோதம் என்பது ஒருபுறமிருக்க, உன் ஆரோக்கியம் கெடும். படிப்பும் வீணாகும்,” என்று பொறுமையாக எடுத்துச்சொல்லும் பெற்றோர் மகனை சிறுகச் சிறுக மாற்ற முடியும்.
ஒரு தண்டனையானது அதிலிருந்து கற்கும்படி அமையவேண்டும்.
கதை
சுந்தர் கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தில் பாடம் நடக்கையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருந்தது. மீறினால், மறுநாள்தான் தவறிழைத்த மாணவன் அதைத் திரும்பப் பெறமுடியும்.
சுந்தர் நன்றாகப் படிப்பவன். அவனுடைய போதாத காலம், அவனுடைய கைத்தொலைபேசி பிடுங்கப்பட்ட அன்று வெள்ளிக்கிழமை. திங்கள்வரை அது இல்லாது, அவனுக்குக் கை ஒடிந்ததுபோல் ஆயிற்று! தலைமை ஆசிரியையிடம் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லாமல் போயிற்று. `நீயே இப்படிச் செய்யலாமா?’ என்று கைவிரித்துவிட்டாள்.
இனி எந்த விதியையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற புத்தி வந்தது பையனுக்கு.
தொலைகாட்சி, கணினி விளையாட்டுகளும் இளவயதினருக்கு மோகம் அளிக்கும் சாதனங்கள். உல்லாசமாகப் பொழுதைப் போக்க இவை இருக்கையில், யாராவது வீட்டுப்பாடம் செய்வார்களா!
பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து உண்மையை அறியும் பெற்றோர் குறிப்பிட்ட காலம் இவை இரண்டும் கூடாது, வீட்டுப்பாடத்தை முடிக்க வேண்டும் என்று தடை உத்தரவு போடலாம்.
இங்கு `காலம்’ என்பது சில மாதங்கள். அவர்களுக்கு முதலில் பொறுக்க முடியாமல் இருக்கும். பிறகு பழகிவிடும். வகுப்பில் நல்ல பெயர் எடுக்கும்போது, தொலைகாட்சியின் முக்கியத்துவம் குறைய, பொறுப்பு வந்துவிடும்.
வீண் தண்டனைகள்
சிலவித தண்டனைகளால் பயனுள்ள எதையும் கற்க மாட்டார்கள் சிறுவர்கள். உதாரணமாக, `பாடம் படிக்காது, இன்னொரு முறை தொலைகாட்சிமுன் உட்கார்ந்தாயோ..!’ என்று மிரட்டினால் பயமும் எதிர்ப்பும்தான் எழும்.
மாறாக, `அரைமணி நேரத்திற்குமேல் கணினி கூடாது. பரீட்சை நெருங்குகிறது! சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டாம்?’ என்று பொறுமையாக வழிகாட்டுவது சிறுவர்களைப் பொறுப்பானவர்களாக ஆக்கும்.
எது கூடாத நட்பு?
நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் மாதவனை அவன் வகுப்பிலிருந்த பிற மாணவர்கள், “உரு! கடம்!’ என்றெல்லாம் கேலி செய்வதைக் கண்டிருக்கிறேன். எதையும் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காது, மணிக்கணக்காக மனப்பாடம் செய்கிறான், இப்படிச் செய்வது பெண்களின் குணம் என்று அந்த கேலிக்கு அர்த்தம்.
மாதவனோ, தன் பொறுப்பை உணர்ந்திருந்தான். சக மாணவர்களின் கேலியை அலட்சியப்படுத்தினான். சில ஆண்டுகளுக்குப்பின் அவன் மேற்படிப்புக்கு ஆயத்தமாக, அவனை நையாண்டி செய்தவர்கள் பின்தங்கிப் போனார்கள்.
முன்னேறவிடாத முட்டுக்கட்டைகள்
சிறு குழந்தைகள் தாம் நல்லவர்களா, புத்திசாலியா என்று அறிய பெற்றோரது பாராட்டை எதிர்நோக்குவது இயற்கை.
`நீ உருப்படமாட்டே!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தால் குழந்தைகளுக்கு நற்புத்தி வரும் என்று எண்ணிய பெற்றோர் வாய்த்திருந்தால், சிலர் பெரியவர்களானபின்னும் அதேபோல் பழிக்கும் நண்பர்களையே நாடுகிறார்கள். தம்மை அவர்கள் முன்னேறவிடாது தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.
நாம் அடையும் மகிழ்வும், தன்னம்பிக்கையும் பிறரிடமிருந்துதான் பெறவேண்டும் என்ற நிலை ஓரளவு சரியாக இருக்கலாம். அதற்காக எப்போதும் பிறரையே நாடுவது பலகீனம் அல்லவா?
நண்பர்கள் மட்டுமல்ல, சில சமயம், வாழ்க்கைத்துணைகூட ஒருவரை தாழ்த்தக்கூடியதுதான்.
கதை: பயங்கொள்ளிகளின் ஆயுதம்
தன்னைவிடப் பலவிதங்களில் சிறந்திருந்த மனைவியை ஓயாது மட்டம்தட்டி, பலர் முன்னிலையில் `முட்டாள்’ என்று பழித்தால் தான் உயர்ந்துவிட்டதாக எண்ணும் ஆண்களில் சுதாகரும் ஒருவன்.
அவன் மனைவி சுமதிக்கு உற்றார் உறவினர் எவரும் அருகில் இருக்கவில்லை. அதனால் கணவன் அவளை எப்படி நிந்தித்தபோதிலும் அனுதாபம் காட்டவோ, அறிவுரை வழங்கவோ எவரும் இல்லை. படித்த பெண்ணானாலும் மரியாதை கருதி, `இதுதான் தமிழ் பெண்ணுக்கு அடையாளம்!’ என்று பொறுத்துப்போனாள்.
மனைவியை மட்டுமின்றி, அவளுடைய பெண் உறவினர்கள் யாராவது வந்தால், அவர்களையும் தாக்குவதுபோல் பேசத் துணிந்தான் சுதாகர்.
மனைவியை தாழ்த்திப் பேசும் ஆண்கள் உலகிலுள்ள எல்லாப் பெண்களையும் அப்படியே நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். அபூர்வமாக சில பெண்கள் எதிர்க்கையில், ஒரேயடியாகப் பயந்துவிடுவார்கள்.
(என்னை ஒருவர் அப்படி நடத்தியபோது, நான் எழுதியவைகளின் நீண்ட பட்டியலை அவரிடம் மௌனமாகக் கொடுத்தேன். புரட்டிவிட்டு, `பயமா இருக்கே!’ என்றார். அதன்பின் ஒரே மரியாதை!)
பயந்தாங்கொள்ளிகளின் ஆயுதம் அடங்கிப்போகும் பெண்களை மிரட்டுவதோ?
அதன்மூலம் தாம் தைரியசாலிகள்தாம் என்று தமக்கே தைரியம் சொல்லிக்கொள்கிறார்களோ?
ஆரம்பத்திலேயே எதிர்க்காது, விட்டுக்கொடுத்துப்போனது சுமதி செய்த தவறு. மனைவியின் எதிர்ப்பின்மை அவனுடைய பலத்தை அதிகப்படுத்துவதுபோல் இருக்க, வன்முறையில் இறங்கினான் சுதாகர்.
பிறர் நம்மை ஏற்கவேண்டும் என்று நம் சுயகௌரவத்தை விட்டுக்கொடுத்தால் பிறருக்கு மட்டுமின்றி, நமக்கும் நம்மையே பிடிக்காதுபோகும் அபாயம் இருக்கிறது.
நண்பர்களோ, உறவினர்களோ, நம் ஆற்றலை முழுமையாக வெளிக்காட்டாதிருக்க தடை போட்டால், அவர்கள் தொடர்பு வீண்.
தொடருவோம்

