Blog

  • நேமிநாத உரையின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டா?

     

    முனைவார் ஹெப்சி ரோஸ் மேரி. அ,உதவிப்பேராசிரியர், கேரளப்  பல்கலைக்கழகம்,திருவனந்தபுரம்.

    தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுந்த நூல்களில் ஒன்றே நேமிநாதம்.  இது ஒரு சமண நூல்.  சமணர்களால்  வணங்கப்படும் இருபத்து நான்காம் தீர்த்தரங்கர்களுள் இருபத்தி இரண்டாம் தீர்த்தரங்கரான  நேமிநாதர் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.  நேமிநாதம் தோன்றிய காலத்தில் ஒரு புகழ்பெற்ற நூலாக இருந்திருக்க வேண்டும்.  ஏனெனில்  நன்னூல் தோன்றுவதற்கு முன் தொல்கப்பியத்தைக் கற்பவர் முதலில் இந்நூலைக் கற்ற பின்னரே தொல்காப்பியத்தைக் கற்றுவந்தனர்.  தொல்காப்பியக் கடலைக் கடக்க நேமிநாதம் சிறுபடகாகப் பயன்பட்டது  என்பதை,

    ‘தொல்காப்பியக் கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்

    பல்காற்கொண் டோடும் படகென்ப  ( நே. நா. சி.பா) என்னும் சிறப்புப்பாயிரம் வரிகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலுக்கு சிறந்த உரை ஒன்று உண்டு.  இதன் காலம் பற்றி அறிஞர் பெருமக்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைப்பர். அக்காலத்தை ஆராய்வதாகக் இக்கட்டுரை அமைகிறது.

    நேமிநாத உரை

    நேமிநாதத்திற்குச் சிறந்த உரை ஒன்று உள்ளது.  இவ்வுரையாசிரியரின் ஊர், பெயர் எதுவுமே தெரியவில்லை என்றும் இதன் உரையாசிரியர் வயிரமேகர் என்றும் இருவேறு கருத்துக்கள் ஆய்வுலகில் நிலவுகின்றன.  நேமிநாத பழைய உரையாசிரியர் வயிரமேகம் என்னும் பெயரைக் கொண்டவர் என்றும் இவரே  நேமிநாத விருத்தியுரை எழுதியவர் என்றும் அவர் வயிரமேகம் என்னும் பெயரைக் கொண்டவர் என்றும் இவரே நேமிநாத விருத்தியுரை எழுதியவர் என்றும் அவ்வுரை வயிரமேக விருத்தி என வழங்கும் என்று மு. ராகவையங்கார் தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவதாக மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்.

    “மூவரா யவரின்  முதல்வராய் அதிதி

    புதல்வராய முப்பத்து முத்

    தேவரா யவர் தம் ராசராசபுரி

    வீதி மாதர் கடைதிறமினோ ( த.ப.10)

    என்ற தக்கயாகப் பரணித் தாழிசையில் அதன் உரையாசிரியர் வயிரமேக விருத்தி என்ற நூலைக் குறிப்பிடுகிறார்.  ‘முப்பத்து முத்தேவராயவர் தம் ராசராசபுரி என வரும் தொடருக்கு முப்பத்து மூன்று தேவர்கள் ஆராயும் அவருடைய இராசராசபுரி என்று பொருள் கூறிப் பின்னர் தேவராயவர் தம் என்பதில் தேவர் ஆயும் அவர் எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்தின் உகரமும் மகரவொற்றும் கெட்டன எனவுணர்க.  இது வயிரமேக விருத்தியுள் விளங்கும் என்று குறிப்பு எழுதியிருக்கிறார்.  வயிரமேக விருத்தி என்பது இலக்கணம், பற்றிய ஓர் விருத்தியுரை என்பதாகும்.  அன்றியும் செய்யும் என்னும் பெயரெச்சத்தில் மெய்யுடன் உகரம் கெடுதலையே தொல்காப்பியம் இளம்பூரணருரை (233) நன்னூல் மயிலை நாதருரை ஆகியன குறிப்பிடும்.  ஆனால் மெய்யுடன் உகரம் கெடுதலோடு ஏற்று ஒற்றும் கெடும் எனபதை விளக்கிக் கூறியவர் வயிரமேக விருத்தியுரைக்காரர் என்பது தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூற்றாகின்றது.

    அந்தக் கொளகையை முதன் முதலில் வெளியிட்ட நூலாசிரியர் நேமிநாதம் செய்தவரேயாவர்.

    செய்யு மென்னும் பேரெச்சத்தீற்று மிசைச்சில்லு கரம்

    மெய்யொடும் போம் ஒற்றொடும்போம் வேறு ( நே. நா. 63)

    என்று நேம்மிநாதம் இக்கருத்தை வெளியிடுவதைக் காணலாம்.  இவ்வாறு நேமிநாத ஆசிரியர் இக்கருத்தைச் சொன்னாரே ஒழிய, சொற்சுருங்கக் கூறிய அவரது சூத்திரக் கருத்தினை முன்னூல் பிராமாணத்துடன் விளக்கிக் கூறியவர் அந்நேமிநாத உரையாசிரியரே ஆவார்.  ஆகவே ஆயவர் என்பதை ஆயுமவர் என விரித்து அதற்கு விதி விளக்குமிடமாகத் தக்கயாகப் பரணியுரையாசிரியர் கூறும் வயிரமேக விருத்தி என்பது நேமிநாத விருத்தியே என்று கருதலாம் என்பர் அருணாசலம் (1969).  இவ்வுரை கருத்துரையும் பொழிப்புரையும் உதாரணமும் வினாவிடைகளும் சூத்திரத்தின் பொருள் நன்கு விளங்குவதற்குரிய உரைகளும் மேற்கோள்களும் கொண்ட விருத்தி உரையாகத் திகழ்கின்றது.

    உரையாசிரியரின் காலம்

    நேமிநாதம் ஒரு தொகுப்பு நூல், சுருக்க நூல், சுருக்க நூலுக்கு உடனுக்குடன் உரை எழுதாவிடில் பின்னே தெளிவு குன்றிப்போகும் என்பதனாலும் ஜைன இலக்கணங்கள் அனைத்தும் நூலாசிரியரை ஒட்டிய காலத்திலேயே உரையைப் பெற்றிருக்கின்றன என்பதாலும் நேமிநாதமும் குணவீரபண்டிதரின் காலத்திலேயே உரையைப் பெற்றிருக்க வேண்டும் என க. ப அறவாணன் ( 1974) குறிப்பிடுகிறார்.

    நேமிநாதம் 74 ஆம் பாடல் உரையில் ‘முத்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ’ என்ற திரு நூற்றந்தாதிப் பாடலை ( 31) மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார் உரையாசிரியர்.  இவ்வந்தாதியின் காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி. ஆகவே இவ்வுரையாசிரியரின் காலம் இதே காலம் அல்லது இதற்குச்சற்றுப் பிற்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் இறுதி  அல்லது 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கொள்வது பொருத்தமாகும் என்று மு. அருணாசலம் கூறியுள்ளார் ( 1969:109) பிற்காலத்தில் இக்கருத்தை இலக்கண அறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டனர்.  நேமிநாத உரையாசிரியரின் காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 15 ஆம் நூற்றண்டின் தொடக்கம் என்று கூறுவதற்குக் காரணமாய் அமைந்த ‘ முத்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ” என்ற திரு நூற்றன்ம்தாதிப் பாடல் கேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் நூலகத்தில் உள்ள நேமிநாத பழைய சுவடி (6370) ஒன்றில் காணப்படவில்லை.  இதைப் பார்க்கும்போது இப்பாடல் பிற்காலத்தில் இடைச்செருகலாக நுழைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  எனவே இவரது காலம் கி.பி 14 ஆம்  நூற்றாண்டுக்கு  முற்பட்டது.  க.ப. அறவாணன் கூறுவது போல மூல நூலாசிரியர் காலத்தை ஒட்டியே எழுதியிருக்கலாம் என்பது தெளிவு.

    மேலும் இவ்வுரையயின் காலம் கி.பி 15 ஆம் நூற்றாண்டு என்றால் இவ்வுரையாசிரியர் தம் உரையில் தொல்காப்பியம் ( 11, 12, 13… ) அணியியல் ( எ.4) யாப்பருங்கலக் காரிகை ( சொல்40) யாப்பருங்கல விருத்தி ( சொல்.54) போன்ற இலக்கண நூல்களை மேற்கோள்களாகக் காட்டும் உரையாசிரியர் தமது காலத்திற்கு முன்தோன்றிய நன்னூலை ஓரிடத்திலாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.  ஆனால் இவர் அவ்வாறு குறிப்பிடவில்லை.  எனவே இவர் பவணந்திக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.  மேலும் நன்னூலின் பழைய உரையாசிரியரான மயிலைநாதர் தமது உரைநடையில் நேமிநாத உரையாசிரியரின் உரையைப் பத்தொன்பது இடங்களில் மேற்கோள்காட்டியுள்ளார்.  எனவே மயிலைநாதரின் காலம் நேமிநாத உரையாசிரியரின் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு.  எனவே மயிலை நாதரின் காலம் நேமிநாத உரையாசிரியரின் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு.  மயிலை நாதர் பவணந்தியின் காலமாகிய 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வாழ்ந்தவர்.  நூலுக்கு உரை தேவைப்படும் அளவு பிரசித்தியடையக் குறைந்தது ஒரு நூறு  வருடம் செல்லுமென்று கொண்டாலும் இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கமாகலாம் ( 1969) என்று அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர்.  எனவே நேமிநாத உரையாசிரியர்   நேமிநாதம் தோன்றிய அதே காலத்தில், உரைகள் எழுந்த தொடக்கத்திலேயே அதாவது 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வாழ்ந்தவராதல் வேண்டும் என்பது தெளிவு.

    பயன்பட்ட நூல்கள்

    அரவிந்தன். மு வை      -உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம். 1968

    அருணாசலம். மு  , தமிழ் இலக்கியவரலாறு,12,13,14 ஆம் நூற்றாண்டு, பாரி நிலையம் சென்னை, 1970.

    அறவாணன். க.ப.சைனரின் தமிழிலக்கண நன்கொடை, ஜைன இளைஞர் மன்றம், சென்னை, 1974

    கோவிந்தராச முதலியார் – நேமிநாதம், தென்னிந்திய சைவசித்தாந்த. நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1973

     

    Share
  • முப்பெரும் தேவியர்

    (வஞ்சித்துறை )

    மலைமகள்

    ஆதியாம் முதல்
    பாதியாம் இவள்
    மீதியாம்    சிவம்
    தூதியாம்   பணி!

    அலைமகள்

    நாரணன்  மலர்
    தாரணம்   இவள்
    காரணம்   அரி
    வாரணம்  அணி

    கலைமகள்

    ஞானமும்  அவள்
    கானமும்    இதழ்
    மோனமும்  சுடர்
    தானமும்     இனி

    கல்வியும் தரும்
    செல்வமே வரம்
    வெல்லென உரம்
    சொல்லிட  வரும்

    அன்னையின் புகழ்
    முன்னையின்  கழல்
    கொன்னையை  விடும்
    சென்னையைத் தரும்

    Share
  • பொறித்துப் படி

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    எத்தனைக்  கொடுமையிது எத்தனைக்    கொடுமையிது இத்தருண  மிங்கே
    அத்தனைக்  கடுமையிது      அத்தனைக்   கடுமையிது       முத்தமிழ    ணங்கே!
    இத்தனைக்  காயமுடன்         இம்மகள்         துடித்தழுது        இவ்வலியு   மோடு
    வத்தனைக்  காய்வந்து            பலியாகி         கிடக்கிறாள்      பரிகாச        மோவிது ?

    பெண்ணுக்கு  சீர்மதிப்பும்  சிதறாத           சிறப்பும்   தருவதுதான்       ஈன்ற‌
    மண்ணுக்கு     அழகாகும்     மறையாதப் புகழாகு   மெனத்தெரியா மலே
    கண்ணுக்கு      இழுக்கும்      கசையடி       வழக்கும்   காணநாற்சந்      தியில்
    இண்டனமா!    இதற்கும்       மேலெழு         ந்தாரினி   எள்ளிநகை           யாடவோ

    குயிலாய்ப்    பாடிவரும்   பறவையை   பருந்துகள்  உரித்து    ருசியாற‌
    மயிலாய்ப்     பரதமிட        மேடையில்    வருவதை    குறித்து    பசியாற‌
    பயிலாய்ப்     பைந்தமி      ழாலினுடை   கண்ணகி    பதிவிர    தையான‌
    உயிரும்          குலமும்          இனமும்           இனியும்      கற்புடன்   வாழுமோ

    அன்னைக்கு   தங்கைக்கு   தமக்கைக்கு      தாரமாய்  வந்துள மனைக்கும்
    இன்றைக்கு    மகனுக்கு       மனைவியாய்    வந்திடும்  குலவிளக் கிற்கும்
    என்றைக்கோ  இந்நிலை     ஏற்பட்டிருப்பின்  ஆதாரம்  கேட்டுநீ   பார்ப்பாய்
    வன்மைக்கு      பலியாகி       இன்மைக்குள்     நீமட்டும்   அகந்தை  யோடு

    தவறிழைத்தால்  திருந்தவே  தப்புசெயின் வருந்தவே இனியும் வாழ்வில்
    உபரியானவை    வந்தபோது  உணர்ந்து       தெளிந்து  அறமும்   கண்டே
    கவரிமானினக்     கட்டுப்பாடு   மறந்து               போனதில்  தட்டுப்பா    டுமனச்
    சுவரினில்       குறளும்   அவ்வையின் அகச்சூடி  பொறித்துப்  படி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181016 -Matangi -floating in the composition of Kalidasa-24×32 lr

    ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்
    மாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்
    சேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்
    தாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….!

    போகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்
    ராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்
    ஆதரவிக்கிங்கென்றும் அவளருளே போதும்
    ஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….கிரேசி மோகன்….!

    ராஜ சியாமளா தெண்டகம்….!
    ———————————————

    நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி
    விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன
    இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்
    கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….!
    (மாதங்கியில்)
    சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்
    கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்
    கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்
    தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….!

    மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு
    தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு
    நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு
    பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….!

    சாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு
    கோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு
    நாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட
    தாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….!

    கல்வியவள் அருளால் கலவியாகப் படியும்
    வல்வினைகள் மாறி விளையாட்டாய் முடியும்
    செல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்
    அல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….!

    ஸ்திரபுத்தியோடு ஸ்திதப் ப்ரஞ்ஞனாக
    பெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக
    அறுபத்தி நான்கு ஆயகலை தம்மை
    குருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….!

    ராணி லலிதாங்கி ராஜ சியாமளா
    வாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே
    பூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ
    நான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….!

    மகரயாழை மடியினில் நீட்டி
    அகர உகர மகரம் மீட்டி
    சிகரமேரு சிரத்தினில் வீற்ற
    சகலகலா வல்லியைப் போற்று….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 182-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. வெங்கட்ராமன் எடுத்த இந்த நிழற்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    தண்டவாளத்தில் கூவிச் செல்லும் குயிலான இந்த இரயில்வண்டி மனிதர்களின் பயணத்தை இன்பமானதாய் மாற்றவல்லது. சாதி மத பேதங்களை ஒழிக்கவியலாது ஆறறிவு படைத்த மனிதர்கள் இன்னமும் போராடிக்கொண்டிருக்க, அறிவற்ற சடப்பொருளான இந்த இரயில்வண்டி அப்பேதங்களை ஒழித்துவிட்டமை அறிவியலின் அளப்பரிய ஆற்றலுக்கோர் தக்க சான்று!

    கூவும் இந்த எந்திரக் குயிலைச் சுந்தரத் தமிழில் பாட கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

    ”நீராவியில் தொடங்கி எண்ணெயில் வேகமெடுத்து மின்சாரத்தில் பறந்து செல்லும் உன்றன் பயணத்தில் எப்போதும் மனிதா்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்றனர் அவரவா் அடையாளமிழக்காமல்” என்று இரயில்வண்டியின் சாதனையைச் சிறப்பாய் விவரிக்கின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன். 

    மனித அறிவின் இறை

    சுரண்டலில் மனித ரத்தம்
    உறிஞ்சிய அட்டைகளின்
    அடையாளம்

    மத யானையின் வெறி
    அடங்கலில் நெருப்பின்
    உணவாய் நீயும் மனிதனும்

    காதல் பாடலின் இசையாய்
    மனித உறவுகளின் ஒற்றுமையாய்
    உலகம் பாடும் உன்னதப்
    படைப்பு

    சமத்துவத்தின் சங்கமமாக
    நீ நிற்கும்போது
    உலகம் வியக்கும்
    வேறுபட்ட மனித உணா்வைக்கண்டு

    நீராவியில் தொடங்கி
    எண்ணெயில் வேகமெடுத்து
    மின்சாரத்தில் பறந்து செல்லும்
    உன்றன் பயணத்தில்

    எப்போதும் மனிதா்கள்
    வேற்றுமையில் ஒற்றுமை
    அவரவா் அடையாளத்தோடு!

    *****

    செயற்கை தந்த கொடையான இந்த இரயில்வண்டி, பச்சைக்கொடி காட்டியதும் இச்சைகளை இறக்கிவிட்டு இயற்கையின் கொடையான நீலகிரி நோக்கிச் சாலம் காட்டிச் செல்லும் அழகைச் சொல்கிறது திரு. ஏ.ஆர். முருகன்மயிலம்பாடியின் கவிதை.

    பயணம்!!

    தட தடனு ஓடும் ரெயில்..
    தம்ம் கட்டும் பழைய ரெயில்!
    நீராவி என்ஜின் புகை
    நீலவானம் எங்கும் பரவ
    நீலகிரி ஓடும் ரெயில்!!
    பச்சைக்கொடி காட்டியதும்
    இச்சைகளை இறக்கிவிட்டு
    காரியமே கண்ணாகக்
    கடமையிலே கருத்தாகும்!
    விஞ்சுகிற இயற்கையின்
    கொஞ்சுகிற அழகினை
    நெஞ்சு மகிழ ரசித்திட
    செயற்கை தந்த கொடை!!
    வெட்டிப்பேச்சுச் சத்தமும்
    குட்டித்தூக்கக்குறட்டையும்
    சட்டையே செய்யாமல்
    மலை ஊரும் தேர்ப்படை!!
    பறவைகளும்விலங்குகளும்
    பழகிடுச்சு அதன் ரவுசு!!
    புகைவண்டி சொல்லுவதைப்
    புரிந்துகொள்ளும் மனசு…
    பொன்னான தன்பிறப்பின்
    பொறுப்புணர்ந்து பயணித்துப்
    போகவேண்டிய இடம் சேரும்!!

    *****

    ”வசதிவந்தால் திசைமாறும் மனிதர்போலன்றி நீ என்றும் திசைமாறாது இசைபெற்று இன்பம் தாராய்!” என்று மலை இரயிலுக்கு நல்லுரை நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ரயிலே…

    பசுமை மிகுந்த மலையினிலே
    பவனி வருமுனைப் பார்த்ததிலே
    பசுமையாய்த் தெரியும் நினைவினிலே
    பரவச மாகும் மனசெல்லாம்,
    வசதி வாய்ப்புகள் வந்ததுமே
    வேறு பட்டிடும் மனிதன்போல்
    திசையது மாறா திருந்தின்பம்
    தொடரந்து தாராய் மலைரயிலே…!

    *****

    தண்டவாளக் குயிலான இரயிலைப் ப(போ)ற்றிக் கவிதைகள் படைத்திருக்கும் கவிக்குயில்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது…

    உதகை மலை இரயில்!

    நீராவி எஞ்சின் பொருத்திய மலைரயில் உதகை செல்கிறதே..
    நீல வானத் திடையே தவழும் மேகத்துள் செல்கிறதே..
    காடுகள் சுரங்கம் அனைத்தையும் கடந்து ஊர்ந்து செல்கிறதே..
    குன்னூர் கேத்தி ஊர்களைக் கடந்து உயரத்தில் செல்கிறதே..

    செல்லும் வழியில் பள்ளத்தாக்குகள் கண்களுக் கோர் விருந்து..
    செல்லக் குழந்தைகள் முதியோர் அனைவர்க்கும் இப்பயணம் அருமருந்து..
    இருப்புப் பாதை நடுவில் இருக்கும் பற்சக்கர அமைப்பு..
    இரும்பைப் போன்ற வலுவானப் பிணைப்பைத் தந்திடும் அதற்கு..

    கொஞ்சிடும் இயற்கை எழிழைப் பருக உதவிடும் இவ்வண்டி..
    குறைந்த வேகத்தில் செல்லுமெனினும் குதூகலம் தரும் வண்டி..
    மலைகளின் அரசி நீலமலையின் சிறந்ததோர் அடையாளம்..
    மாநிலம் போற்ற கிடைத்தது இதற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்..

    பாம்பைப் போன்று வளைந்து நெளிந்து செல்லும் இவ்வண்டி..
    பயணிக்கத் தூண்டும் அம்சங்கள் அனைத்தும் கொண்டது இவ்வண்டி..
    எங்ஙனமேனும் ஒருமுறை அதிலே பயணம் சென்றிடுவோம்..
    எந்திர வாழ்வில் அலுத்த மனதுக்கு புத்துணர்வூட்டிடுவோம்..

    ”செல்லும் வழியில் தென்படும் காட்சிகள் கண்களுக்கோர் விருந்து; செல்லக் குழந்தைகள், முதியோர் அனைவர்க்கும் இப்பயணம் அருமருந்து; ஒருமுறையேனும் இந்த இரயிலில் பயணித்து எந்திரத்தனமாய் மாறிவிட்ட வாழ்வுக்குப் புத்துணர்வூட்டிடுவோம்” என்று முத்தான கருத்துக்களை வித்தாரமாய்ப் பேசும்  இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • குருச்சேத்திரப் போரில் ! 

    image.png

    சி. ஜெயபாரதன், கனடா

    செக்கு மாடுகளை வாங்கித்  
    தேரில் மாட்டினேன்! 
    திக்குத் தெரியாமல்
    வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி
    வந்தது என் தேர்
    கொடை ராட்டினம் போல்! 
    தலை சுற்றி வீழ்ந்தேன்!

    கீதையை உபதேசிக்க
    தேரோட்டி கிடைக்க வில்லை!
    திணறித் தேடினேன் 
    மனமுடைந்து!
    சினமுற்று விரட்டிய எனது
    செக்கு மாடுகளை
    எண்ணிக்
    கண்ணீர் விடுகிறேன்!

    இப்போது செக்கு மாடுகளைப்
    பயிற்றுவிக்க
    குப்பை வண்டிக் காரனை
    நியமித்தேன்!
    போருக்குப் போகையில்
    துடித்தேன்!
    நேராகப் போனது
    தேரானது,  
    நின்று நின்று!

    Share
  • கரிகால் பெருவளத்தான்

    முனைவர் மு.புஷ்பரெஜினா,
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்
    .

    கயவர்க்கு எதிர்க்கும் கரியாவான்
    எதிர்க்கும் பகைக்கு காலனாவான்
    குயவனைப் போல் அறம் ஆக்கிடுவான்
    குற்றமெல்லாம் அறவே போக்கிடுவான்

    மைவரை கானகத்தே மயங்கிடுவான்
    மையலாரை கானத்தால் மயக்கிடுவான்
    தைபோல் நல்வழிதான் காட்டிடுவான்
    தையலாரைத் தன்வழிதான் கூட்டிடுவான்

    கண்ணனினும் தேர்ப்பாகன் கண்டதுண்டோ
    கரிகாலனினும் தேர்ப்புகழான் ஆண்டதுண்டோ
    கன்னலிலும் தேனொத்த தினிமையுண்டோ
    கண்ணினுள் சிறுதுரும்பு காப்பதுண்டோ

    காவிரிதான் கரைதாண்டி புரண்டிடலாமோ
    காவிரிதாய் காத்திடாது அழிக்கலாமோ
    காலனவன் கைவிரித்திடாது கவர்ந்திடலாமோ
    கரிகாலனவ‌ன் கல்லணையிடாது காத்திடலாமோ

    அயலாரைத் துரத்தியடிக்கும் வெறியானதே
    கரிகாலன் தாள்கள்தான் கரியானதே
    ஆக்கிடும் வேள்விகள்தான் சரியானதே
    ஆக்கினைக்கு நல் அறம்தான் அரியானதே! 

    Share
  • இந்த வார வல்லமையாளர் (283)

    இந்த வார வல்லமையாளராக சுவடி ஆய்வுப் பெரும்புலவர் ப. வெ. நாகராஜனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.  எளிமையும், பெரும்புலமையும் வாய்ந்த வித்துவான் ப. வெ. நாகராசனார் (1937 – 2018) கோவையில் பிறந்து வாழ்ந்தவர். சிரவணம்பட்டி ஆதீனப் புலவராகத் திகழ்ந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பல நூல்களை சுவடிகளில் இருந்து அச்சில் பதிப்பித்தவர். சிரவை கௌமார மடாலயத்தின் தலைவராக வீற்றிருந்த கந்தசாமி அடிகளின் பல பிரபந்தங்களை அச்சில் கொணர்ந்தவர்.

    .(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி – 183

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 129

    நிர்மலா ராகவன்

    நிறைவுகளைப் பட்டியலிடுங்கள்

    எப்போதும் மகிழ்ச்சியின்றியே காணப்படுகிறவர்கள் யார்மேலாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவரும் அன்று அகப்படவில்லையா? `எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!’ என்று தம்மையே குறை கூறிக்கொண்டு இருப்பார்கள்.

    எவரிடமாவது தம் குறைகளைச் சொல்லிக்கொண்டால் வேதனை குறைகிறது என்று நினைத்தவர்களாகப் பலரும் தம் பாரத்தைப் பிறர் தலையில் ஏற்றிவைப்பார்கள். சொல்பவருக்கு மனம் எளிதாக ஆகிறதோ, என்னவோ, கேட்க நேர்ந்தவருக்கும் தாமே அனுபவித்ததுபோன்ற உணர்வு ஏற்பட, அவரது மகிழ்ச்சியும் குன்றிவிடும்.

    கதை

    சிறு வயதிலேயே தாயை இழந்த பத்மாசனி தந்தையின் செல்ல மகளாக வளர்ந்தவள். புக்ககத்திற்குப் போனபோது, அவள் உலகமே மாறிவிட்டது போலிருந்தது. படுத்த நிலையிலேயே ஓயாது அதிகாரம் செய்த மாமியாரை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை.

    அடிக்கடி தன் சகோதரனின் பிறந்தகத்திற்கு வந்து, மாமியாரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பாள். பிறரது முகத்திலும் வருத்தம் தென்படுவது ஆறுதலாக இருக்கும்.

    அருமையாக வளர்ந்த பெண்ணை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யாருக்கும் புரியவில்லை. அவளுடைய சோகம் வீட்டிலிருந்தவர்களையும் ஓரளவு பற்றிக்கொண்டது.

    `இவர்களாவது நம்மைப் புரிந்துகொண்டு, நம்மீது அன்பு செலுத்துகிறார்களே!’ என்று நினத்தவள்போல், அதையே வழக்கமாகக் கொண்டாள் பத்மாசனி. வரும்போதெல்லாம் மாமியாரைப்பற்றிய புகார்தான்.

    இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான், “தன் வீட்டில் நிம்மதியே இல்லை என்றுதான் இங்கு வருகிறாள். ஆனால், மாமியாரைப்பற்றியே புகார் செய்துகொண்டிருந்தால், நிம்மதி எப்படிக் கிடைக்கும்? பேச்சை மாற்றிவிடுங்கள்!” என்று உபாயம் கூறினேன்.

    இம்முறையால் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் சற்று நிம்மதி கிடைக்கும்.

    மாமியார் மட்டுமின்றி, பெற்ற குழந்தைகளைப்பற்றிகூட புகார் செய்யும் தாய்மார்கள் உண்டு.

    கதை: போட்டா போட்டி

    பாலம்மா தன் ஒரே மகளின் வீட்டுக்குப் போயிருந்தாள். அங்கு பெண்ணின் மாமியாரும் தங்கியிருக்க, குழந்தை வளர்ப்பிலிருந்து சமையல்வரை இரு தாய்மார்களுக்கும் மறைமுகமான போட்டி.

    `ஏனடா போனோம்!’ என்றாகிவிட்டது பெண்ணைப் பெற்றவளுக்கு. முகத்தைச் சுளித்துக்கொண்டு, “ஐயே! யாராவது பெண்வீட்டில் போய் தங்குவார்களா!” என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள்.

    தனக்கு ஒரு பெண் இருப்பதால்தானே இப்படி அவதிப்பட நேர்ந்தது என்று நினைக்க ஆரம்பித்தவள்போல், அவளைப்பற்றியும் ஓயாது குறை கூற ஆரம்பித்தாள்.

    அவளது புலம்பலைச் சகிக்க முடியவில்லை உறவினருக்கு.

    “நீ ஏன் சும்மா அதையே சொல்றே? எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று ஒருத்தி கூறி, அவள் வாயை அடைத்தாள்.

    நானும் அப்படித்தான்!

    கவுன்செலிங் செய்யும்போது, `எங்கள் குடும்பத்திலும் இப்படித்தான் நடக்கிறது!’ என்று கூறுவது உடனே பலனளிக்கும். `நான் மட்டும் தனியாக கஷ்டப்படவில்லை,’ என்ற நிம்மதி எழ, புகார் செய்பவர் சற்று அடங்குவார்.

    எல்லாருக்கும் நிகழ்காலத்தில் பெரிதாக எந்த பிரச்னையும் இருப்பதில்லை. இருந்தாலும், எதைப்பற்றியாவது யோசித்து, குறை கூறி, அனுதாபம் தேடுவது சிலரது குணம். அவர்களைப் பொறுத்தவரை, அனுதாபமும் அன்பும் ஒன்று.

    `அலுவலக நண்பர்கள் படுத்தும் பாடு..!’

    அவர்களைவிட்டு விலக வேண்டியதுதானே! நம் நிம்மதியைக் கெடுக்க நினைப்பவர்கள் நண்பர்களே இல்லை.

    “இந்த அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமம்..!’

    பிறரைப்பற்றி அவர்பின்னால் பேசினால் அவர் மாறுவாரா, என்ன! நம் நிம்மதிதான் கெடும்.

    `நான் சிறுவயதில் பட்ட துயரம் இருக்கிறதே..! சிரிப்பே கிடையாது!’

    இன்று அதைப்பற்றிப் பேசினாற்போல், என்றோ நடந்தது மாறிவிடப்போகிறதா?

    சிறு வயதில் சிரிப்புதான் முக்கியம்

    பிற்கால வாழ்க்கையில் எந்த இடர் வந்தாலும், அதைத் தாங்கும் சக்தி அளிக்கவல்லது சிறுவயதில் ஒருவர் அனுபவிக்கும் மகிழ்ச்சி. இது புரியாது, படிப்பு, பணம், பதவி என்ற நோக்கத்துடன் குழந்தைகளை விரட்டிக்கொண்டே இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறினாலும், என்ன அடைந்தாலும், சிரிப்பு மட்டும் அண்டாது.

    கதை

    பெற்றோர் அண்ணன்மார்களை மட்டும் படிக்க வைத்துவிட்டார்களே, தான் பட்டதாரி இல்லையே என்ற பெருங்குறை ரதிமலருக்கு. பிற பட்டதாரி ஆசிரியைகளுடன் காரணமின்றி சண்டை பிடித்துக்கொண்டிருப்பாள். தன் மகள் அனுசூயாவாவது படிப்பில் எல்லாரையும் மிஞ்சவேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது அவளுக்கு.

    நிறைய மதிப்பெண்கள் வாங்காவிட்டால், அறையில் பூட்டிவைப்பது, பட்டினி போடுவது என்று பலவாறாக மகளுக்குத் தண்டனை அளித்திருக்கிறாள் ரதிமலர்.

    என் மகளுடன் ஒன்றாகப் படித்துவந்தவள் மகள் அனுசூயா. தினமும் தன் தாய் செய்யும் கொடுமைகளைச் சொல்லி வருந்துவாளாம்.

    பதினாறு வயதான என் மகளுக்கோ, தோழிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டாள்.

    “எங்கம்மாவும் அப்படித்தான்! என்று சொல்லி வை,” என்றேன்.

    உடனே, “நீ அப்படி இல்லை என்று அவளுக்குத் தெரியும்!” என்றாள்.

    (பள்ளிப் பருவத்தில் வற்புறுத்தி எந்நேரமும் படிக்கவைத்தால், பிற்காலத்தில் புத்தகம் என்றாலே ஒரு வித பயம், அருவருப்பு ஏற்பட்டுவிடும் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்).

    எட்டாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் வாங்கி தாயை மகிழ்வித்த அனுசூயா அடுத்த ஆண்டில் அதற்கு எதிர்மாறாக எல்லாவற்றிலும் தோல்வியுற, தலைமை ஆசிரியை விழித்துக்கொண்டாள். அப்பெண்ணை அழைத்து விசாரிக்க, அவள் கதறியபடி தன் தாயின் போக்கை விவரித்தாளாம்.

    இன்று அனுசூயா நிறையப் படித்து, நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள்.

    மகிழ்ச்சி?

    சிறு வயதில் இழந்தது மீண்டும் கிடைக்குமா?

    கற்பித்தலும் சுதந்திரமும்

    சிறு வயதில் தம் குழந்தைகள் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒவ்வொரு பாடத்தையும் சொல்லிக்கொடுக்கும் தாய்மார்கள் அவர்களுக்குச் சுதந்திர உணர்வு அவசியம் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

    சிலருக்கு இடைநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்குக் கற்பிக்கத் தெரியாமல் போகலாம். அப்போது தானே எதையும் சமாளிக்கத் தெரியாது அல்லல் படுவார்கள் சிறுவர்கள்.

    கதை

    “என் காலத்தில் கல்வி வித்தியாசம். இல்லையா?” என்றாள் என்னைப் பார்க்க வந்த ஒரு தாய்.

    நான் சும்மா தலையாட்டி வைத்தேன். மகன் அமீர் படிப்பில் சுமார் என்ற வருத்தம் அவளுக்கு என்பது புரிந்தது.

    “எனக்கு அவனுக்குச் சொல்லிக்கொடுக்கத் தெரியவில்லை,” என்றாள் பரிதாபகரமாக. நான் அவளைக் குற்றம் சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் அவளுக்கு.

    “சும்மா பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள். அது போதும். அவன் ஏதாவது விவரித்தால் கேட்டுக்கொள்ளுங்கள்,” என்றேன்.

    `அம்மாவுக்கு நம் நலனில் ஆர்வம் இருக்கிறது!’ என்று ஏற்படும் உற்சாகமே ஒரு சிறுவனை முன்னுக்குக் கொண்டுவந்துவிடும். தீய நட்பை நாடாத குணம் வரும்.

    ஓரிரு மாதங்களிலேயே அமீரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. படிப்பில் ஆர்வம் மிகுந்து, கலகலப்பாக ஆனான்.

    கவலையே இல்லாதவர்களோ?

    உம்மணாமூஞ்சிகளாக இருப்பவர்கள், சிரித்த முகத்துடன் காணப்படுகிறவர்களைப் பார்த்து `இவர்கள் வாழ்க்கையில் வருந்தத்தக்கதாக எதுவுமே நடந்திருக்காதா!’ என்று ஆச்சரியப்படுவார்கள்.

    உண்மையில், துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிக்காதவர்களே கிடையாது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

    மன இறுக்கமா?

    ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போனால், பிறரது வித்தியாசத்தைப் பெரிதுபடுத்தி, நொந்துபோக மாட்டார். தங்களிடமும் சிறிது கருணையும், அன்பும் காட்டலாமே!

    காற்றாட வெளியில் போவது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, இனிய இசையைக் கேட்பது, நண்பர்களுடன் உறவாடுவது, நறுமணமுள்ள மலர்களை முகர்வது – இப்படி எத்தனை வழிகள் இல்லை, நிம்மதி அளிக்க!

    மாமியாரைக் குறைகூறியபடி இருந்த பத்மாசனிக்கு ஆதரவான கணவர், அன்பும் அறிவுமாக இருந்த பிள்ளைகள், பணத்தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை எல்லாமே கிட்டியிருந்தன. இவைகளை எண்ணி திருப்தி அடைந்திருக்கலாமே! கிடைக்காத ஒன்றுக்காக அநாவசியமாக நோவானேன்!

    உங்களிடம் இருக்கும் நிறைவுகளைப் பட்டியலிடுங்கள். குறைகளை அல்ல.

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  38

    க.பாலசுப்பிரமணியன்

    தோல்விகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?

     தோல்விகளும் தவறுகளும் கற்றலுக்கு அடிப்படை எனக் கருதப்படுகிறது. தோல்விகளைக்கண்டு துவளாமல் தவறுகளைக்கண்டு கலங்காமல் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் அடுத்த அடியை வைப்பதே வாழ்க்கையின் வெற்றிக்கு உத்திரவாதம் தரும். மாறாக, நமது கல்வித் திட்டங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தவறுகளை சுட்டிக்காட்டி ஒருவரை அவமானப் படுத்துவதும் தரக்குறைவாக நினைப்பதும் வழக்கமாக ஆகிவிட்டது..  தவறுகள் ஏற்படக் காரணம்  என்ன, அதற்கு அலட்சியம் காரணமா, அறிதல் புரிதலில் குறைபாடுகளா , ஒருவரின் சிந்தனையில் ஏற்பட்ட குறைபாடுகளா அல்லது ஒருவரின் அணுகுமுறையில் இருக்கின்ற குறைபாடுகளா என அலசி ஆராய்ந்து அவற்றை திருத்த முயற்சிக்க வேண்டும்

    உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஐசாக் நியூட்டன் பல முறைகள் தவறு செய்து வெற்றிகண்ட பின் தன்னுடைய வெற்றியை பாராட்டியவகளிடம் ” இப்பொழுது  999 முறைகளில் எவ்வாறு இதைச் செய்யக்கூடாது என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று தனது தவறுகளே வெற்றிக்கு வழிகாட்டியது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார் .இதே கருத்தின் பிரதிபலிப்பை நாம் ஐன்ஸ்டீன் போன்ற பல மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள் மூலம் அறிந்துகொள்கின்றோம். எனவே தவறுகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல நேரங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளாத மனிதன் ஒரு மூடனாக கருதப்படுகின்றான்.

    நாமெல்லாம் உலகம் போற்றும் நோபல் பரிசுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.  இந்தப் பரிசினைப் பெற்றவர்களை உலகம் போற்றும் அறிவாளிகளாகக் கருதுகின்றோம். இந்தப் பரிசை நிறுவிய ஆல்பிரேட் நோபல் அவர்களின் பின்னணி என்ன?

    ஆல்பிரேட் நோபல் ஒரு மிகச் சிறந்த அறிவியல் மேதை. அவர் இரண்டாம் உலகப் போரின் பொழுது ட்ரை நைட்ரோ கிலிசரின் (Tri-Nitroglycerine) என்ற ஒரு வேதியல் பொருளால் தயாரிக்கப்பட்ட (dynamite) டைனமைட் என்ற பொருளைக் கண்டுபிடித்தார் அது  ஒரு வெடிமருந்தாக உபயோகப் படுத்தப் பட்டது. இதன் காரணமாக பல வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்தனர். அதனால் இவருடைய வேதியல் பொருளின் தேவை அதிகமானது. இவரால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பொருள் சேர்க்க முடிந்தது. ஒரு நாள் காலை அவர் வாழ்ந்த நகரத்தில் உள்ள காலைப் பத்திரிகையில் “மரணத்தின் தூதர் ” என்ற தலைப்பில் ஒரு இரங்கல் செய்தியும் அத்துடன் இவரது படமும் வெளியிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நோபல் தன்னுடைய கண்டுபிடிப்பு எவ்வளவு தவறானது, அதனால் எப்படிப்பட்ட துன்பங்கள் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளன என்று சற்றே சிந்தித்தார். மனம் மாறி தன்னுடைய சொத்து முழுவதையும் உலக நன்மைக்குப் பயன்படும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையிலும் அதைச்செய்தவர்களை பாராட்டிப் போற்றும் வகையிலும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதற்க்குக் கொடுத்துவிட்டார். சில நேரங்களில் தங்கள் தவறுகளை உணர்ந்தவர்கள் ஏற்படுத்திய மாற்றங்களையும் விந்தைகளை சொல்லவும் முடியுமோ ?

    கலிங்கத்துப் போரில் வெற்றிகொண்ட மாமன்னன் அசோகன் மனம் மாறி அமைதியையும் ஆக்க பூர்வமான அரசாட்சியையும் மேற்கொண்டது யாவரும் அறிந்ததே ! பல நேரங்களில் தவறுகள் குறுகிய சிந்தனைகளாலும்  தான் என்ற மமதையினாலும், ஆணவப் போக்கினாலும், அளவற்ற ஆசைகளாலும் ஏற்படுகின்றன. இது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நித்தம் நடக்கும் செயல்களில் வெளிப்படுகின்றன. இவைகளைக் கட்டுப்படுத்தி நாம் பொதுநலச் சிந்தனையோடு எவ்வாறு வாழ முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதுவே ஒரு சிறந்த வாழ்க்கைக்கு அறிகுறி.

    இந்த மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வருவது  ஒரு முடியாத செயலல்ல. ஆனால் இதற்கு மனத்தளவில் மாற்றமும் முயற்சியும் தேவை. இந்த மாற்றங்கள் மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. எனவே உணர்வுகளின் தாக்கங்களை அறிந்து மாற்றங்களை செயல் படுத்துதல் மிக அவசியம். உலக அளவில் புகழ்பெற்ற ஜென் துறவி லா- ட்சு என்பவர் கூறுகின்றார்  ” மற்றவர்களை வெல்வதற்குப் படை வேண்டும். நம்மை நாமே வெல்வதற்கு வலிமை வேண்டும்.”

    தோல்விகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு வெற்றிப்பாதையில் நடைபோட வலிமை வேண்டும். இந்த வலிமையை நாம் எப்படிப் பெற முடியும்? தன்னம்பிக்கை, தன்னடக்கம், துணிவு, முயற்சி பொறுமை, நிதானம், செயல் திறன்கள் ஆகிய பல நம்முடைய வெற்றிக்கு முன்னோடியாக அமைகின்றன.

    சும்மாவா சொன்னாங்க “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்”

    நாமும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து பார்க்கலாமே. …

    (தொடரும்)

    Share
  • லட்சுமணன் கவிதைகளில் பெண்சமூகம் 

    முனைவர். த. கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம்,   அரசுக் கல்லூரி சித்தூர் பாலக்காடு, கேரளம்,678104. அலைபேசி: 9846741558.

    ————————————

    அகிலத்தில் அளவற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில்  பலநிலைகளில்  தம்மை மேம்படுத்திக் கொண்ட இனமாக விளங்குவது மனித இனமே. அவன்  தன் சிந்தனை வளத்தால்  பற்பல நன்மைகளை  அடைந்திருக்கின்றான்  என்பது வெள்ளிடை மலை. சிந்தனைத் திறன் கொண்டு அவன் படைத்த  அருங்கலைகளுள் ஆற்றல் மிக்க  ஒன்றாக விளங்குவது  கவிதைக் கலை. மரபுக்கவிதை, புதுக்கவிதை  என்று நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கவிதைக் கலையில்  இன்றைக்குத் தடம் பதித்தவர்கள்  பலர். அவர்களில் ஒருவர்  கவிஞர் லட்சுமணன்.

    லட்சுமணன் கோவைக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி யினரின் வாழ்வியல் நிலைகளை நன்கு அறிந்தவர். கீழிருந்து சென்ற பிற இனத்தினரின் ஆதிக்கத்தால் நசுக்கப் பட்ட இனமாக காட்சி தரும்  பழங்குடியினரின்  பொருளியலும் பண்பாடும்  எவ்வாறு  முடங்கிக் கிடக்கின்றன என்பதை வெளிப்படுத்த விரும்பிய சமூக நல விரும்பிகளில்  கவிஞர் லட்சுமணனுக்குத் தனியிடமுண்டு.  பழங்குடியினரின் மொழிகளில்  எழுதுவது என்பது மிக அரிதான நிகழ்வாகக்  காணப்படுகின்ற ஒன்று. அத்தகு சூழலில் இன்றைய படைப்புலகில்  அவர்தம் மொழியைக் கையாண்டு அம்மக்களின்  வலிகளைக் கவிதைகளாக்கித் தந்திருப்பது என்பது லட்சுமணனின் தனிச் சிறப்பாகும். அது அவரின் பேரவாவும் கூட.

    லட்சுமணன் எழுதிய   ”ஒடியன்” என்ற கவிதைத் தொகுப்பில்  கோவைக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் வாழும் இருளர் இனப் பழங்குடியினரின்  வேதனைகளும்  உரிமைக் குரல்களும்  நம் செவிகளில் விழுகின்றன. அவர்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே உணர்ந்தறிய வேண்டும் என்னும் ஆசிரியரின் அக்கறை காரணமாக இருளாமொழிச் சொல்லாடல்களே  அனைத்துக் கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் வாசிப்பாளனுக்கு  ஏற்படும்  சிரமம்  கருதி  ஒவ்வொரு கவிதையின் கீழும்  குறிப்புகள் இடம்பெறுகின்றன. இத்தகைய  தனித்துவம் மிக்க கவிதைத் தொகுப்பில்  பழங்குடியினப் பெண்கள் சந்திக்கும்  இடர்பாடுகள்  சில  பதிவாகியிருக்கின்றன. பெண்ணிய நோக்கில் அணுகுபவர்களுக்கு அக்கவிதைகள்  தரும் செய்திகள் புதுமையாகத் தோன்றும் என்பது திண்ணம்.

    தாய்வழிச் சமூகம்

    தாய்வழிச் சமூகத்தின்  மிச்சம் மீதிகளாக விளங்கும்  பல பழங்குடியினரில்  இருளர் இனத்தவரும் அடங்குவர். எனவே அம்மக்களிடையே  ’ஆணுக்குப் பெண் அடங்கி நடத்தல்’ என்னும்  புண் புரையோடிப் போயிருப்பதாக  அறிய வழியில்லை. ஆனால் அதை உணராத  பிற சமூகத்தினர் அனேகம்பேர்  அம்மலைப்பகுதிகளில்   தற்போது  வாழ்வதுண்டு.  அவர்களால்   இருளர்களின்  மரபார்ந்த  நல்ல சமூகப் பண்புகள் விமர்சிக்கப்படும்போது  ஏற்படும் முரண்  ஏளனத்திற்குரியதாகின்றது.  ஆண்மம் 2”  என்ற கவிதை வழி அந்நிலையைக் காட்சிப் படுத்துகின்றார்  லட்சுமணன்.

      ”காடூ  டவுனு

      காரமடெ

      ஏங்கே போனாலூ

      தம்மி  முன்னாலே போகின

      காளி பின்னாலே நடக்கின

      தப்புன்னா

      புருசனியே அடிப்பின

      இன்னாக்கு அச்சாமே பாக்க

     ஆனேகட்டிக்கு வந்தவாசி

     கண்டமுள்ளூல

     நாளெல்லால்லா அடீச்சாலூ

     தீருகாதில்லே  இவுங்க வெசாம்

    என்னும் கவிதை  பிற  இனத்தவரிடையே நிலவும்   ஆண் பெண் சமத்துவமின்மையை நையாண்டி செய்யும்  போக்கில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

    எங்கு செல்வதாக இருந்தாலும் இருளர் இனத்தவளாகிய தம்மி முன்னாலே நடக்க அவள் கணவனாகிய காளி அவள் பின்னாலே நடக்கின்றான்.  அவன் தவறு செய்தால்   இரண்டு அடி கொடுத்துத் தவறை  உணர்த்துகின்றாள். தாய்வழிச் சமூகத்தின் நடமாடும் சாட்சியாக தம்மி இங்கே காணப்படுகின்றாள். ஆனால் கீழிருந்து பிழைப்புத் தேடிச் சென்ற  பிற இனத்தவர்களுக்கு  இத்தகைய நிகழ்வுகள்  வினோதமாகத் தெரிகின்றது.  தாய்வழிச் சமூகத்தைப் புறந்தள்ளி  மேலெழும்பி வந்த தந்தைவழிச் சமூகத்தின்  இன்றைய சந்ததிகளாகிய  பிற சமூகத்தினருக்கு இருளர்களின்  பழம்பண்பாடு வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகின்றது.

    தந்தைவழிச் சமூகம்  உருவெடுத்த நிலையில் காலங்கள் செல்லச் செல்ல  அது ஆண்பெண் சமத்துவமின்மையை  உரமிட்டு வளர்த்தெடுத்தது. காலங்கள் பல நூறாண்டு உருண்டோடிய நிலையிலும்  பெண்சமூகம் இழந்தவற்றை மீட்டெடுப்பது என்பது எளிதில் இயலாத காரியமாகவே  இருக்கின்றது.  இந்நிலையில் ஆணுக்குப் பெண் அனைத்து வகையிலும் அடங்கி நடத்தல் என்னும் கொள்கை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இருளர் சமூகத்தின் பண்பாட்டு வேர்களை அசைத்துப் பார்க்கும் ”வந்தேறிகளின்” உள்ளடி வேலைகளை உணர்ந்து கொண்ட  இருளர் இனப் பெண் அவர்களின் பார்வையினை  விஷப் பார்வையாகச் சித்தரிப்பதில் தவறொன்று மில்லை.

    தங்களின்  உடல்களை அவ்வப்போது பதம் பார்க்கும்  விஷப் பூச்சிகளின் விஷத்தினை இறக்குவதற்காக  கண்ட முள்ளால்  மூன்றுமுறை அடிப்பது இருளர்களின் வழக்கம்.  ஆனால்  கீழ்நாட்டவர்களாகிய  வந்தேறிகளின்   உள்ளத்தில்  நிரம்பியிருக்கும்  விஷத்தினை   நீக்குவதற்கு  எத்தனை முறை  அடித்தாலும்  அவ்விஷம் தீராது என்பது  இருளர் இனப் பெண்ணின்  குமுறலாகத் தெரிகின்றது.  எனவே இருளர்களின்  வாழ்விலும் சில விரும்பத்தகாத பழக்க வழக்கங்கள்  பிற இனத்தவரின் சகவாசத்தால்   ஊடுருவுகின்றன என்பதை  மேற்கண்ட கவிதையின்  மூலம் கோடிட்டுக் காட்டுகிறார் கவிஞர்.

     விதவைக் கோலத்திற்கு விலக்களித்த சமூகம்

    தாய்வழிச் சமூகத்தின்  சிறந்த பண்புகளில் ஒன்று விதவை என்ற நிலை இடம் பெறாமை.  இருளர் சமூகத்திலும்  விதவைக் கோலத்தினைக் காண்பது  அரிது. இதை உணராத பிற இனத்தவர்  கணவனை இழந்த இருளரினப் பெண்களைப் பழித்துரைப்பது  அறியாமையின் வெளிப்பாடு. கணவனை இழந்து விட்டால்  மலர், திலகம், பிற அலங் காரப் பொருட்கள், வெண்மையல்லாத பிற வண்ண உடைகள் முதலானவற்றை  துறந்துவிட வேண்டும் என்ற கட்டாய நிலை இருளர் சமூகத்தில் இல்லை.  இதனை புதிர் என்ற தலைப்பிலான கீழ் வரும் கவிதை  விளக்கிக் காட்டுகின்றது.

    அப்பேங்கொடாத்த பச்செ பாவாடெ

      அண்ணேங்கொடாத்த  நீலே  சீலெ

      தொட்டில்லே ரொங்குகாதிருந்தே

      போடுகே

      கழுத்து  பாசி

      செல்லி தந்தெ

      செத்த பிந்துக்கும்

      அச்சாமேதானே கெடாக்கு 

      ‘இருளச்சிக்கு திமிரடங்கலெங்கா

      கெம்பனூரு கவுண்டிச்சி

    என்ற கவிதை தரும் செய்தி மனதிற்கு இனம்புரியாததொரு நெருடலை ஏற்படுத்துகின்றது. காலங்காலமாக பெண்ணடிமையாகிய கூண்டுக்குள் இருந்து பழகிப் போன பிற சமுகத்தைச் சார்ந்த  பெண்களுக்கு  இருளர்களின்  ஆண்பெண் சமத்துவப்போக்கு  ஒருவித அத்துமீறலாகத் தெரிகின்றது. அதனால் இருளச்சிக்குத் திமிரடங்கலெ என்றதொரு  தவறான புரிதலுக்கு இடங்கொடுத்து  விடுகின்றனர். பிற சமூகத்தினரிடம்  இடம்பெற்றிருக்கும்  சில பண்பாட்டு அடையாளங்கள் பெண்களை எவ்வளவு  இழிவான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன என்பதை கவிதையில் இடம்பெறும்  இருளரினப் பெண்  தன் கூற்றால் விளங்க வைக்கின்றாள்.

    ஒவ்வொரு பெண்ணும் தன் சிறு வயதிலிருந்தே  ஒரு சில அணிகலன்களால் தன்னை அலங்கரித்துக் கொள்கின்றாள். வண்ண உடைகளால் தன் மேனியை மூடி மறைக்கின்றாள். இது அவளுடைய தார்மீக  உரிமை. பொருளீட்ட இயலாத சிறு குழந்தையாக இருக்கும் நிலையில் அவளுடைய தந்தையும், தமையனும் அவளுக்கு வேண்டிய அவ்வடிப்படைத் தேவைகளை நிறைவு  செய்து தருவர். அந்நிலையை பிற சமூகத்தினருக்கு  நினைவு படுத்துவது போல  அப்பேங்கொடாத்த பச்செ பாவாடே; அண்ணேங் கொடாத்த நீலே சீலே; தொட்டில்லே ரொங்குகாதிருந்தே (உறங்கும் போதிருந்தே) போடுகே கழுத்துப் பாசிஎன்று  அவை ஒரு பெண் பிறந்ததிலிருந்து  அவளுடன் ஒட்டிக் கொண்டிருப்பவை  என்பதை எடுத்துரைக்கின்றாள் ஓர் இருளச்சி. இவைகளெல்லாம்  திருமணம் முடிந்த நிலையில்  கணவனால்  கொடுக்கப் பட்டவை களல்ல. ஒரு பெண் பிறந்ததிலிருந்து  அவளுடன் ஒட்டிக் கொண்டிருப்பவைகள். கணவன் என்ற ஒருவன் அவளுடைய வாழ்வில்  வந்தபோது அவன் கொடுத்த தாலி என்ற ஒன்று மட்டுமே இடையில் அவளால் அணியப்படுகின்றது.   எனவே கணவன் இறந்து விடும் நிலை உருவானால் அவன் கொடுத்த தாலியை மட்டுமே  ஒரு பெண் இழக்க நேரிடலாம்  என்னும்  நிதரிசனத்தை  மனித சமுகத்திற்கு உணர்த்துகின்ற நடமாடும் சாட்சிகள் இருளரினப் பெண்கள்.

    மேலே ஓர் இருளப்பெண்ணால் உணர்த்தப்பட்ட  யதார்த்தம் மறைக்கப்பட்ட நிலையில் அல்லது மறுக்கப்பட்ட நிலையில் பிற இனத்தாரிடையே பெண்சமூகத்தின்  அத்தனை உரிமைகளும் பல நூற்றாண்டுகளாகப் பறிக்கப்பட்டிருந்தன. விதவைக்கோலம் என்பது ஆதிக்க சமூகம் வளர்த்தெடுத்த   அநீதிகளில் ஒன்று. இதன் மூலம் குளிர் காய்ந்த ஆண்கள் பலருண்டு. இத்தகைய நடைமுறைத் தவறுகளை பழங்குடியின சமூகம் ஒரு போதும் செய்ததில்லை. ஆனால்  குஞ்சிலிருந்து நன்கு பழக்கப்பட்ட ’கூண்டுக்கிளி’  தன்னலமனம் படைத்த ஜோசியக்காரனின்  கூண்டுதான்  தன்னைப்  பாதுகாக்கும் கவசம் என்று தவறாக எண்ணி மகிழ்வதைப் போல  பிற சமூகத்தைச் சார்ந்த பெண்களும் பெண்ணடிமை நடைமுறைகளை உணர்ந்துகொள்ளத் தவறியதோடு  அவை தம்மினத்தின் பெருமையைத் துலக்கிக் காட்டும் கவசமாகக் கருதிக் கொண்டிருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும். இந்த நிலைதான் “லட்சுமணனின் கவிதையில் இடம்பெறும் ”கெம்பனூரு கவுண்டிச்சியின் மனநிலையாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது.

    பெண்குழந்தைகளைப் பேணிக்காக்கும் சமூகம்

    பிற சமூகங்களில் பெண்குழந்தைகள் பிறந்தால் வேண்டா வெறுப்பாக அக்குழந்தையை   வளர்க்க முற்படுவர். சிலர் பெண்சிசுக் கொலையைச் செய்து கருவிலேயே சமாதி கட்டி விடுவதும் உண்டு.  இத்தகு அவல நிலைக்குக் காரணமாக அமைவது  வரதட்சணை என்றதொரு கொடிய நோய்  பிற சமூகங்களில் புரையோடிப் போனதன் விளைவே என்பதை அனைவரும் அறிவர்.  அதற்கான பிரதிபலனை இப்பொழுது பழங்குடி யினரல்லாத பிற சமூகத்தினர் நன்கு  அனுபவிக்கின்றார்கள். பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து போனதால் சில ஆண்களுக்குத் திருமணம் நிகழ வழியில்லாத வகையில் பெண்கிடைப்பது அரிதாகிப் போனது. ஆனால்  அதைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் உருவாகாமல் இருப்பது  குறிப்பிடத்தக்கது. இத்தகு  இடைஞ்சல்கள்  இருளர் போன்ற பழங்குடியினர் சமூகங்களில் நிகழ வழியில்லை.

    பழங்குடியினர்  சமுகங்களில்  வரதட்சணை மற்றும் பெண்சிசுக்கொலை போன்ற அனர்த்தங்கள் அரங்கேறுவதில்லை. பெண்மைக்குரிய மரியாதையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்கி நிற்பதில்லை. எனவே பண்பட்டதொரு சமூகமேம்பாட்டினை அங்கே காண முடிகின்றது.

    வாழ்வியல் முரண்பாடு

    தன்னலமற்ற மனித சமூகத்தைக் காண்பது அரிதான ஒன்று.  தனக்குப் பிறக்கும் வாரிசு பெண்ணாக இருந்தால்   வருந்துகின்ற மனிதன்  தான் வளர்க்கும் கால்நடைகள்  பெண்கன்றை  ஈன்றால் மிக மகிழ்ந்து போகின்றான். மனிதனின் பொருளாதார வாழ்வியலில்  ஏற்படுகின்ற முரண்  இத்தகைய சூழல்களை உருவாக்குகின்றன. பெண்  குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி  அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போது வரதட்சணை என்பதன் பெயரில் ஒரு பெருந்தொகையினை இழக்க வேண்டிய நிலை பெண்ணைப் பெற்றவர்களுக்கு உருவாகின்றது. வரதட்சணை கொடுக்க இயலாத நிலை உருவாகுமானால்  புகுந்த வீட்டில் பெண் நல்லவிதமாக வாழ இயலாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய இடர்பாடுகள் நிறைந்த  சமூகத்தில் பெண் பிறந்த வீட்டா ருக்கு ஒரு சுமையாக மாறவேண்டிய நிலை காணப்படுகின்றது.  அதேவேளையில்  கால்நடைகளின் பெண்கன்றுகள் கால்நடைப் பெருக்கத்திற்குக் காரணமாக அமைவதோடல்லாமல் பால்வளம் தருவனவாகவும் திகழ்கின்றன. கால்நடைப் பெருக்கமும், பால்வளமும் மனிதனின் பொருளாதார வளத்தினை மேம்படுத்துகின்ற போது பெண்குழந்தைகளோ பெற்றோர்களுடைய பொருளாதாரச் சரிவின் மூலகாரணமாகத் தெரிகின்றனர். இத்தகையதொரு  அவலநிலையினை  ஆணாதிக்கச் சமூகம் பழங்குடியினரல்லாத  பிற சமூகங்களில் உருவாக்கி வைத்திருக்கின்றது. இதுவே பெண்சிசு மரணத்திற்கும், சில சமயங்களில் பெண் வாழாவெட்டியாக மாறிப் போய் விடுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.

    பெண்சிசுக் கொலை, வாழாவெட்டி  போன்ற வாழ்வியல் சுணக்கங்களை  தங்கள் வாழ்க்கையில் கண்டுணராத பழங்குடியினப் பெண்களுக்கு  பிற சமூகங்களில் அத்தகு நிலைகளைக் கண்டபோது  அவற்றைப் பற்றி விளங்கிக்கொள்ள இயலாத நிலை உருவாகின்றது. இதனை லட்சுமணனின் ஆண்மம் 3 என்ற கவிதை  புலப்படுத்துகின்றது.   

    “  ’மாடு பொட்டக்கன்னு போட்டிருக்கு

      கண்ணாலம் கணக்கா

      எல்லாத்துக்குஞ் சொல்லுக

      கோமயம் தெளிக்கினா

      கோமாளி நாய்க்கனுக்கு பொங்கல் வெக்கின

      என்னாதுக்கொ

      பொறந்தது  பேத்தியுன்னு

     பெணாங்குகா நாய்க்கச்சி.

    என்ற கவிதையில்  நாயக்கரினப்  பெண்ணொருத்தி  தன் மகனுக்குப் பிறந்த  பெண் வாரிசாகிய பேத்தியை வரவேற்பதற்குத் தயங்கிய தன்மையினைக் கண்டு வியக்கின்றாள் ஓர் இருளரினப் பெண்.  அதேவேளையில் தன்னுடைய மாடு பெண்கன்றை ஈன்றவுடன்  அனைவரிடமும் சொல்லி மகிழ்கின்றாள் ‘நாய்க்கச்சி’. அத்துடன் நின்று விடாமல்  இல்லத்தினை தூய்மை செய்து தான் வழிபடும் “கோமாளிநாய்க்கன்” என்ற தெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றாள். இவற்றையெல்லாம் கவனிக்கின்ற  இருளரினப் பெண் இந்நிலை ஏனென்று தெரியாமல்  குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றாள். இத்தகு காட்சிகளை நாம் கோவைக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் வாழும் மண்ணின் மைந்தர்களான இருளர்களிடமும் வந்தேறிகளான  பிற இனமக்களிடமும் காண்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிதரிசனமே லட்சுமணன் கவிதையில் பதிவாகியிருக்கின்றது.

    பழந்தமிழ்ப் பண்பாட்டில் ஆண்பெண் சமத்துவம்  இயல்பாகக் காணப்பட்ட ஒன்று.  இதுவே பழங்குடியினர்  பண்பாட்டில் இன்றும் நிலைபெறுகின்றது. ஆனால் சங்ககாலச் சூழலிலிருந்து  ஆண்பெண் சமத்துவ நிலையில் சமச்சீரின்மை உருவாகிய தன்மையினை வரலாறு விவரிப்பது உண்டு. அந்நிலை இன்றைய பிற சமூகத்தினரிடையே வேரூன்றி விட்டது. அது தொற்று நோய்  போல பழங்குடியினரிடமும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதே லட்சுமணன்  போன்ற சமூக ஆர்வலர்களின்  ஆசையாக இருக்கின்றது  என்பதை  ஒடியன் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணர்த்துகின்றன.

    ——————————–

    துணை நின்ற நூல்கள்:

    1. சுப்பிரமணியன். கா, சங்ககாலச் சமுதாயம்(1993), என். சி.பி.எச், அம்பத்தூர், சென்னை -98.
    2. திலகவதி.க. சங்ககால மகளிர் வாழ்வியல், (2001)இறையருள் பதிப்பகம், திருச்சி.
    3. பஞ்சாங்கம்.க, இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், (2012), அன்னம் வெளியீடு, தஞ்சாவூர் – 07.
    4. பெரியாழ்வார்.ஆர், இருளர் வாழ்வியல், (1982), சென்னை நூலகம்.
    5. லட்சுமணன், ஒடியன் (2011),என்.சி.பி.எச், அம்பத்தூர்,சென்னை – 98.

     

    Share
  • இமோஜி வாழ்வு!

    சதீஷ் குமார் டோக்ரா

    நம் முன்னோர்கள் அகம்-புறம் என்று நம் மனதிற்குள் செயல்படும் உள்ளுணர்வுகளையும் வெளியில் செயல்படும் புற உலகையும் வகுத்தனர். அகத்தின் பாதிப்பினால் புறமும், புறத்தின் பாதிப்பினால் அகமும் மாறுபடுகின்றது. அப்படித்தான் கடந்த 20-30 ஆண்டுகளில் வெளியுலகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் நமது உள் உணர்வுகளையும் மாற்றியமைத்துவிட்டன. இந்த மாற்றங்களில் மிக முக்கியமானதாக இருப்பது நம் சுயபிம்பத்தைப் பற்றி நாம் அளவுக்கு அதிகமாக கவலைப்படுவது. நான் குழந்தையாக இருந்தகாலத்தில் யாரும் தனது உண்மையான இயல்பை மறைத்துவிட்டு, தனக்கு சாதகமான ஒரு பிம்பத்தை வெளிக்காட்ட முயலமாட்டார்கள். தாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே மற்றவர்கள் தம்மைப் பார்க்கட்டும் என்கிற எளிமையோடு இருந்தார்கள். இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட குணாதிசயம் சிலரிடம் ஓங்கி நிற்கும். அதை வைத்துக்கொண்டே அந்த நபருக்கு நண்பர்கள் வட்டமோ அல்லது அறிமுகமானவர்கள் வட்டமோ ஒரு புனைப்பெயர் சூட்டிவிடுவார்கள். அந்த வகையில் அதிகமாகப் பேசுபவர் “லூசு” என்றும் எளிதாக ஏமாற்றப்படுபவர் “கோமாளி” என்றும் பெயர் பெறுவார்கள்.

    நான் பிறந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தசராவுக்கு முன் ராமலீலா நடைபெறும். ராமபகவானின் முழு கதையையும் நாடகமாக மேடைகளில் நடித்துக் காட்டுவார்கள். இடையிடையே கொடை வழங்குபவர்களுக்கான விளம்பரங்கள் வரும். இதேபோல ஒரு விளம்பரத்தின்போது ஒருவர் பியாரா என்பவரின் கடையைக் குறிப்பிட்டு அங்கேதான் பொருள்கள் வாங்க வேண்டும். அங்கே தரமுள்ள பொருள்கள் கிடைக்கும் என்று விளம்பரம் செய்ய, அடுத்தவர், “எந்த பியாரா? அந்த லூசா?” என்று சொல்லிவிட, உடனே நாடகத்தின் இயக்குநர் அவசர அவசரமாக மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்டார்.

    ஆனால், வேடிக்கையான உண்மை என்னவென்றால் ஊரில் பியாரா என்ற பெயருடன் சுற்றிக்கொண்டிருந்த பதினைந்து நபர்களில் “லூசு” என்று சொன்னால்தான் இவருடைய அடையாளம் தெளிவாகும். ஏனென்றால் யாரும் அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதே இல்லை.

    சில வாரங்களுக்கு முன் என் 95-வயது சித்தி பஞ்சாபிலிருந்து வந்தார். சற்றே உணர்வுப்பூர்வமான விஷயமாக இருந்தால் கண்ணீர் விட்டு அழத்தொடங்குவார். மனதிற்குள் என்ன இருக்கிறதோ அதனை அப்படியே வெளிப்படுத்தும் எளிமையான சுபாவம் கொண்டவர். தன் இயல்பை மீறி போலி பிம்பத்தை வெளிப்படுத்தும் எந்த முயற்சியும் அவரிடம் இல்லை.

    கடந்த முப்பது ஆண்டுகளின் தலைமுறையினர் சுயபிம்பத்தைப் பற்றிய கவலைகளை அதிகம் கொண்டிருக்கிறார்கள். அதாவது எப்போது சிரிக்க வேண்டும், எப்போது அழ வேண்டும், எப்போது கோபப்பட வேண்டும், எவ்வளவு தூரத்திற்கு இந்த உணர்வுகளை வெளியில் காட்ட வேண்டுமென அந்தந்த சூழ்நிலைக்கேற்ப கணக்குப் போட்டுச் செய்கிறது இன்றைய தலைமுறை.

    என் குழந்தைப்பருவத்தில் ஆங்கில திரைப்படங்களில் ஒரு மரணம் நடந்து உடலடக்கம் நடைபெறும்போது பளபளப்பான துணிகளில் இரங்கல் தெரிவிக்க வந்திருப்பவர்களையும், இறந்தவரின் மனைவியையும் அநாதையாகியுள்ள மகனையும் சோகமாக ஆனால் அமைதியாக நின்றிருப்பதை நம் நாட்டில் இறப்பின்போது வீட்டு உறுப்பினர்கள் உருண்டு உருண்டு அழுவதுடன் ஒப்பிட்டு “நம் நாட்டினர் உணர்வுகளுக்கு அடிமையானவர்கள்” என்று மன்னிப்புத் தொனியில் கூறுவோம்.

    மேலை நாடுகளில் அன்றிலிருந்தது தொடரும் உணர்வுகளின் கட்டுப்பாடுகளுடன் வெளிப்படும் தேற்றத்தைக் காட்டும் வழக்கம் நம் நாட்டில் இன்னும் பரவவில்லை. உணர்வுகள் மனதிலும் உடலிலும் பரவி தண்ணீர் வடிந்து போவது போல் நீங்கிவிடும். இவ்வாறு உணர்வுகள் பரவி வடிந்து போவதை கிரேக்கர்கள் கதார்ஸிஸ் என்ற வருணிப்பார்கள். இப்பொழுது சுயபிம்பத்தைக் கெடுக்க விரும்பாத இளைஞர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே பொத்தி வைப்பதால் மனஉளைச்சல் ஏற்படுகின்றது.

    மகிழ்ச்சி எல்லையைத் தாண்டிப் போகும்போது பைத்தியமாக நடந்துகொள்ள மனம் துடிக்கிறது. சோகம் வரும்போது வெடித்து அழத் தோன்றுகிறது. ஆனால், நம் சுயபிம்பம் “அழாதே!” என்று கட்டளையிடுகிறது. முன்காலத்தில் அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள பெண்கள் ஒன்று கூடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அனைவரின் மகிழ்விலும், சோகத்திலும் பங்குதாரர்களாக இருப்பார்கள்.

    இன்றைய உலகத்தில் மகிழ்ச்சியும் சோகமும் நம் தனிப்பட்ட சுமையாகிவிட்டது. அதைத் தனியாகவே சுமந்துகொண்டு போக வேண்டியுள்ளது.

    மற்றவர்கள் உங்கள் சுமையைப் பகிரும் வகையில் அதற்கு வசதியாக சமூக ஊடகங்கள் பலவிதமான இமோஜிகள் கொடுத்துள்ளன. முன்பு சோகம் விசாரிக்க நண்பர்கள் கூட்டம் வரும். இப்பொழுது இமோஜிகள் கூட்டம் வருகின்றன. சோகமான இமோஜியின் சோகமுகமும் மாறாது. அதன் கண்ணுக்கு சற்று கீழே வழியும் கண்ணீரும் வழிந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் தன் சோகத்தைச் சிரிப்பாக மாற்றாத, வழியும் கண்ணீரைத் துடைக்காத உங்கள் நண்பரால் அனுப்பப்பட்ட அந்த இமோஜி உங்கள் கணினியின் தரையிலோ, கைபேசியின் திரையிலோ அமர்ந்து உங்கள் சோகத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
    ============================================
    Read my websites:
    English: csprep.in
    http://kambaramayanam.in/index.html
    Tamil: dogratamil.com

    My contact number:
    +91 98400 93148

    Share
  • முழு  அருளைத்   தாநீ  !

    (மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா)

    கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
    கசடில்லா வீரம் தந்திடுவாய் தாயே
    உள்ளமெலாம் உண்மை உறையச் செய்வாய்தாயே
    உன்னையென்றும் மறவா வரமருள்வாய் தாயே

    மாசுடையார் தொடர்பை மடியச்  செய்வாய்தாயே
    மனமதிலே கருணை  வளரச்  செய்வாய்தாயே
    தானதர்மம் செய்ய  தயைபுரிவாய்  தாயே
    தர்மவழி  செல்ல  தக்கதுணை  நீயே

    ஈனநிலை  போக  எனக்கருள்வாய்  தாயே
    என்றும் உயர்வாக எண்ணமெனக் கருள்வாய்
    ஊனமுடை   எண்ணம்  உதிக்காவண்ணம் எனக்கு
    உனது கடைக்கண்ணால் எனைநோக்கு தாயே

    இப்புவியில்  நானும்  ஏழ்மையுற்றை போதும்
    தப்பிதங்கள்   செய்யா  தடுத்துவிடு  தாயே
    எப்பவுமே வாழ்வில் என்றுமுன்னை  மறவா
    முப்பொழுதும் நினைக்க முழுவருளைத் தாநீ

     

    Share
  • சூரியன் பின் தொடர்வேன்  !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா
    ++++++++++++++++


    ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு
    ஓடிப் போனேன் நானென்று !
    ஆனால்
    நாளை மழை தூவலாம் !
    நானும் சூரியன் பின் போகலாம் !

    ஒருநாள் அறிவாய் நீ
    உனக்கு ஏற்றவன் நானென்று !
    ஆனால்
    நாளை மழை தூவலாம் !
    நானும் சூரியன் பின் போகலாம் !

    நேரம் வந்து விட்டது,
    ஆருயிர்க் காதலி !
    பிரிய வேண்டும் நானும் !
    இறுதியாய் காதலி ஒருத்தியை நான்
    இழந்து போவதை
    அறிவாய் நீயும் முடிவில் !

    ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு
    ஓடிப் போனேன் நானென்று !
    ஆனால்
    நாளை மழை தூவலாம் !
    நானும் சூரியன் பின் போகலாம் !

    Share