படக்கவிதைப் போட்டி 182-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. வெங்கட்ராமன் எடுத்த இந்த நிழற்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!
தண்டவாளத்தில் கூவிச் செல்லும் குயிலான இந்த இரயில்வண்டி மனிதர்களின் பயணத்தை இன்பமானதாய் மாற்றவல்லது. சாதி மத பேதங்களை ஒழிக்கவியலாது ஆறறிவு படைத்த மனிதர்கள் இன்னமும் போராடிக்கொண்டிருக்க, அறிவற்ற சடப்பொருளான இந்த இரயில்வண்டி அப்பேதங்களை ஒழித்துவிட்டமை அறிவியலின் அளப்பரிய ஆற்றலுக்கோர் தக்க சான்று!
கூவும் இந்த எந்திரக் குயிலைச் சுந்தரத் தமிழில் பாட கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!
”நீராவியில் தொடங்கி எண்ணெயில் வேகமெடுத்து மின்சாரத்தில் பறந்து செல்லும் உன்றன் பயணத்தில் எப்போதும் மனிதா்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்றனர் அவரவா் அடையாளமிழக்காமல்” என்று இரயில்வண்டியின் சாதனையைச் சிறப்பாய் விவரிக்கின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன்.
மனித அறிவின் இறை
சுரண்டலில் மனித ரத்தம்
உறிஞ்சிய அட்டைகளின்
அடையாளம்
மத யானையின் வெறி
அடங்கலில் நெருப்பின்
உணவாய் நீயும் மனிதனும்
காதல் பாடலின் இசையாய்
மனித உறவுகளின் ஒற்றுமையாய்
உலகம் பாடும் உன்னதப்
படைப்பு
சமத்துவத்தின் சங்கமமாக
நீ நிற்கும்போது
உலகம் வியக்கும்
வேறுபட்ட மனித உணா்வைக்கண்டு
நீராவியில் தொடங்கி
எண்ணெயில் வேகமெடுத்து
மின்சாரத்தில் பறந்து செல்லும்
உன்றன் பயணத்தில்
எப்போதும் மனிதா்கள்
வேற்றுமையில் ஒற்றுமை
அவரவா் அடையாளத்தோடு!
*****
செயற்கை தந்த கொடையான இந்த இரயில்வண்டி, பச்சைக்கொடி காட்டியதும் இச்சைகளை இறக்கிவிட்டு இயற்கையின் கொடையான நீலகிரி நோக்கிச் சாலம் காட்டிச் செல்லும் அழகைச் சொல்கிறது திரு. ஏ.ஆர். முருகன்மயிலம்பாடியின் கவிதை.
பயணம்!!
தட தடனு ஓடும் ரெயில்..
தம்ம் கட்டும் பழைய ரெயில்!
நீராவி என்ஜின் புகை
நீலவானம் எங்கும் பரவ
நீலகிரி ஓடும் ரெயில்!!
பச்சைக்கொடி காட்டியதும்
இச்சைகளை இறக்கிவிட்டு
காரியமே கண்ணாகக்
கடமையிலே கருத்தாகும்!
விஞ்சுகிற இயற்கையின்
கொஞ்சுகிற அழகினை
நெஞ்சு மகிழ ரசித்திட
செயற்கை தந்த கொடை!!
வெட்டிப்பேச்சுச் சத்தமும்
குட்டித்தூக்கக்குறட்டையும்
சட்டையே செய்யாமல்
மலை ஊரும் தேர்ப்படை!!
பறவைகளும்விலங்குகளும்
பழகிடுச்சு அதன் ரவுசு!!
புகைவண்டி சொல்லுவதைப்
புரிந்துகொள்ளும் மனசு…
பொன்னான தன்பிறப்பின்
பொறுப்புணர்ந்து பயணித்துப்
போகவேண்டிய இடம் சேரும்!!
*****
”வசதிவந்தால் திசைமாறும் மனிதர்போலன்றி நீ என்றும் திசைமாறாது இசைபெற்று இன்பம் தாராய்!” என்று மலை இரயிலுக்கு நல்லுரை நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
ரயிலே…
பசுமை மிகுந்த மலையினிலே
பவனி வருமுனைப் பார்த்ததிலே
பசுமையாய்த் தெரியும் நினைவினிலே
பரவச மாகும் மனசெல்லாம்,
வசதி வாய்ப்புகள் வந்ததுமே
வேறு பட்டிடும் மனிதன்போல்
திசையது மாறா திருந்தின்பம்
தொடரந்து தாராய் மலைரயிலே…!
*****
தண்டவாளக் குயிலான இரயிலைப் ப(போ)ற்றிக் கவிதைகள் படைத்திருக்கும் கவிக்குயில்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது…
உதகை மலை இரயில்!
நீராவி எஞ்சின் பொருத்திய மலைரயில் உதகை செல்கிறதே..
நீல வானத் திடையே தவழும் மேகத்துள் செல்கிறதே..
காடுகள் சுரங்கம் அனைத்தையும் கடந்து ஊர்ந்து செல்கிறதே..
குன்னூர் கேத்தி ஊர்களைக் கடந்து உயரத்தில் செல்கிறதே..
செல்லும் வழியில் பள்ளத்தாக்குகள் கண்களுக் கோர் விருந்து..
செல்லக் குழந்தைகள் முதியோர் அனைவர்க்கும் இப்பயணம் அருமருந்து..
இருப்புப் பாதை நடுவில் இருக்கும் பற்சக்கர அமைப்பு..
இரும்பைப் போன்ற வலுவானப் பிணைப்பைத் தந்திடும் அதற்கு..
கொஞ்சிடும் இயற்கை எழிழைப் பருக உதவிடும் இவ்வண்டி..
குறைந்த வேகத்தில் செல்லுமெனினும் குதூகலம் தரும் வண்டி..
மலைகளின் அரசி நீலமலையின் சிறந்ததோர் அடையாளம்..
மாநிலம் போற்ற கிடைத்தது இதற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்..
பாம்பைப் போன்று வளைந்து நெளிந்து செல்லும் இவ்வண்டி..
பயணிக்கத் தூண்டும் அம்சங்கள் அனைத்தும் கொண்டது இவ்வண்டி..
எங்ஙனமேனும் ஒருமுறை அதிலே பயணம் சென்றிடுவோம்..
எந்திர வாழ்வில் அலுத்த மனதுக்கு புத்துணர்வூட்டிடுவோம்..
”செல்லும் வழியில் தென்படும் காட்சிகள் கண்களுக்கோர் விருந்து; செல்லக் குழந்தைகள், முதியோர் அனைவர்க்கும் இப்பயணம் அருமருந்து; ஒருமுறையேனும் இந்த இரயிலில் பயணித்து எந்திரத்தனமாய் மாறிவிட்ட வாழ்வுக்குப் புத்துணர்வூட்டிடுவோம்” என்று முத்தான கருத்துக்களை வித்தாரமாய்ப் பேசும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்கட்கும் வல்லமைக்கும் கவிஞர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.