க.பாலசுப்பிரமணியன்

தோல்விகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?

 தோல்விகளும் தவறுகளும் கற்றலுக்கு அடிப்படை எனக் கருதப்படுகிறது. தோல்விகளைக்கண்டு துவளாமல் தவறுகளைக்கண்டு கலங்காமல் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் அடுத்த அடியை வைப்பதே வாழ்க்கையின் வெற்றிக்கு உத்திரவாதம் தரும். மாறாக, நமது கல்வித் திட்டங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தவறுகளை சுட்டிக்காட்டி ஒருவரை அவமானப் படுத்துவதும் தரக்குறைவாக நினைப்பதும் வழக்கமாக ஆகிவிட்டது..  தவறுகள் ஏற்படக் காரணம்  என்ன, அதற்கு அலட்சியம் காரணமா, அறிதல் புரிதலில் குறைபாடுகளா , ஒருவரின் சிந்தனையில் ஏற்பட்ட குறைபாடுகளா அல்லது ஒருவரின் அணுகுமுறையில் இருக்கின்ற குறைபாடுகளா என அலசி ஆராய்ந்து அவற்றை திருத்த முயற்சிக்க வேண்டும்

உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஐசாக் நியூட்டன் பல முறைகள் தவறு செய்து வெற்றிகண்ட பின் தன்னுடைய வெற்றியை பாராட்டியவகளிடம் ” இப்பொழுது  999 முறைகளில் எவ்வாறு இதைச் செய்யக்கூடாது என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று தனது தவறுகளே வெற்றிக்கு வழிகாட்டியது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார் .இதே கருத்தின் பிரதிபலிப்பை நாம் ஐன்ஸ்டீன் போன்ற பல மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள் மூலம் அறிந்துகொள்கின்றோம். எனவே தவறுகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல நேரங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளாத மனிதன் ஒரு மூடனாக கருதப்படுகின்றான்.

நாமெல்லாம் உலகம் போற்றும் நோபல் பரிசுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.  இந்தப் பரிசினைப் பெற்றவர்களை உலகம் போற்றும் அறிவாளிகளாகக் கருதுகின்றோம். இந்தப் பரிசை நிறுவிய ஆல்பிரேட் நோபல் அவர்களின் பின்னணி என்ன?

ஆல்பிரேட் நோபல் ஒரு மிகச் சிறந்த அறிவியல் மேதை. அவர் இரண்டாம் உலகப் போரின் பொழுது ட்ரை நைட்ரோ கிலிசரின் (Tri-Nitroglycerine) என்ற ஒரு வேதியல் பொருளால் தயாரிக்கப்பட்ட (dynamite) டைனமைட் என்ற பொருளைக் கண்டுபிடித்தார் அது  ஒரு வெடிமருந்தாக உபயோகப் படுத்தப் பட்டது. இதன் காரணமாக பல வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்தனர். அதனால் இவருடைய வேதியல் பொருளின் தேவை அதிகமானது. இவரால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பொருள் சேர்க்க முடிந்தது. ஒரு நாள் காலை அவர் வாழ்ந்த நகரத்தில் உள்ள காலைப் பத்திரிகையில் “மரணத்தின் தூதர் ” என்ற தலைப்பில் ஒரு இரங்கல் செய்தியும் அத்துடன் இவரது படமும் வெளியிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நோபல் தன்னுடைய கண்டுபிடிப்பு எவ்வளவு தவறானது, அதனால் எப்படிப்பட்ட துன்பங்கள் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளன என்று சற்றே சிந்தித்தார். மனம் மாறி தன்னுடைய சொத்து முழுவதையும் உலக நன்மைக்குப் பயன்படும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையிலும் அதைச்செய்தவர்களை பாராட்டிப் போற்றும் வகையிலும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதற்க்குக் கொடுத்துவிட்டார். சில நேரங்களில் தங்கள் தவறுகளை உணர்ந்தவர்கள் ஏற்படுத்திய மாற்றங்களையும் விந்தைகளை சொல்லவும் முடியுமோ ?

கலிங்கத்துப் போரில் வெற்றிகொண்ட மாமன்னன் அசோகன் மனம் மாறி அமைதியையும் ஆக்க பூர்வமான அரசாட்சியையும் மேற்கொண்டது யாவரும் அறிந்ததே ! பல நேரங்களில் தவறுகள் குறுகிய சிந்தனைகளாலும்  தான் என்ற மமதையினாலும், ஆணவப் போக்கினாலும், அளவற்ற ஆசைகளாலும் ஏற்படுகின்றன. இது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நித்தம் நடக்கும் செயல்களில் வெளிப்படுகின்றன. இவைகளைக் கட்டுப்படுத்தி நாம் பொதுநலச் சிந்தனையோடு எவ்வாறு வாழ முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதுவே ஒரு சிறந்த வாழ்க்கைக்கு அறிகுறி.

இந்த மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வருவது  ஒரு முடியாத செயலல்ல. ஆனால் இதற்கு மனத்தளவில் மாற்றமும் முயற்சியும் தேவை. இந்த மாற்றங்கள் மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. எனவே உணர்வுகளின் தாக்கங்களை அறிந்து மாற்றங்களை செயல் படுத்துதல் மிக அவசியம். உலக அளவில் புகழ்பெற்ற ஜென் துறவி லா- ட்சு என்பவர் கூறுகின்றார்  ” மற்றவர்களை வெல்வதற்குப் படை வேண்டும். நம்மை நாமே வெல்வதற்கு வலிமை வேண்டும்.”

தோல்விகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு வெற்றிப்பாதையில் நடைபோட வலிமை வேண்டும். இந்த வலிமையை நாம் எப்படிப் பெற முடியும்? தன்னம்பிக்கை, தன்னடக்கம், துணிவு, முயற்சி பொறுமை, நிதானம், செயல் திறன்கள் ஆகிய பல நம்முடைய வெற்றிக்கு முன்னோடியாக அமைகின்றன.

சும்மாவா சொன்னாங்க “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்”

நாமும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து பார்க்கலாமே. …

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *