Blog

  • தாய்மையே ! வெண்த்தூய்மையே !!

    (கலி விருத்தம் )

    தாயுமானவள்  தாரமானவள் தங்கையானவள்  அன்பினோடும்

    சேயுமானவள்  சேமமானவள்  சீருமானவள்    பண்பினோடும்

    வாயுமானவள்   வாசியானவள்  வாழ்வுமானவள் பண்ணோடும்

    வேயுமானவள்   பேருமானவள் பெண்மையாமவள்  தாய்மையே  1

     

    ஈரமானவள்     தீரமானவள்   ஆரமானவள்  அரசனாகும்

    வீரமானவள்    விசயமானவள் வித்தையாகி  அகிலமாகும்

    வாரமானவள்   மாதமானவள் வருடமாகியே வயதுமாகும்

    சாரமானவள்   சந்தமானவள் சக்தியாமித் தாய்மையே         2

     

    பெண்மையாக  மென்மையாக தந்திடும்பத்   துமாதமாக‌

    உண்மையாக    இன்மையாகத்     தங்கிடும்கருப்  பையுமாக‌

    தண்மையாக    திண்மையாக    கவனமாகப்  பெற்றெடுக்க‌

    ப‌ண்மையாக     நண்மையாக    பிறப்பளித்த  தாய்மையே                   3

     

    விழிகளாட்டி விரல்களாட்டி வளைகளாட்டி அம்மாயென‌

    மொழிகளுட்டி தமிழனாக்கி வழிகளாற்றிய‌ அன்னையை

    பழிகளாற்றிக் கலைகளென்ற‌ கவர்ச்சிகாம வெறியரை

    அழிப்பதற்குச் சூலமேந்தும் ஆதிகாளியே தாய்மையே        4

     

    கற்பனைக் கலையெழுதக் கன்னியரைப் பயமுறுத்தி

    அற்பனைப் போலசிலர் அறமாற்றி நெறிமாற்றி

    கற்பினைக் களங்கமுற கண்கலங்கச் செய்வதும்

    ஏற்பிலைக் காணாயோ! நீயும் பெண்தானே!!     5

     

    கற்றவை   யாவுமினி    கசடறவே   நெறிமாற‌

    மற்றவை   யேவுமினி  மறைமுக     வெறியேறி

    உற்றவை   யாலினிது  குற்றம்        வளராமல்

    கொற்றவைக் காக்கத் தீயோர்த் தலைவீழ‌ !!     6

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஒரு கதையை நடத்திச் செல்ல இருவர் வேண்டும்….PROTAGONIST & ANTAGONIST…..மேலும் PROTAGANISTஐ ANTOGANIST டுக்குஅடையாளம் காட்ட ஒருவரோ இல்லை ஒருத்தியோ வேண்டும்….பாகவதத்தில் PROTAGANIST கண்ணன்தான், ANTOGANIST கம்ஸன்தான்….. அன்றுANTOGANIST கம்ஸன் கைநழுவி ஆவேசமாய் ஆகாஸம் சென்று’’முட்டாளே !….உனது எருமை மாட்டு எமன் கோகுலத்தில் பசு மாட்டோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்’’ என்று பாகவதத்தில் கண்ணனை அடையாளம் காட்டியது ‘’ஆட்டகனிஸ்ட் காளி’’…..அதன்பின் வெகுநாள் கழித்து கண்ணனை தினமும்’’ முட்டாளே(அடியேன்தான்)….உனது காலைக் கடன் (திரு)மாலைக் கடன் கம்ப்யூட்டரில் வந்தாச்சு….எழுந்தேலோ ரெம்பாவாய் வெண்பாவாய்’’ என்று அடையாளம் காட்டிக் கொண்டிருப்பது ‘’கண்ணனை வரைந்து போட்டகனிஸ்ட் கேசவ்’’….இது என் அபிப்ராயம் & அனுபவம்….இனி வெண்பா(ஸாரி காலைக் கடன்)….!

    KRISHNA FOR TODAY….
    —————————————-

    181014 -Kali appears before Kamsa -wcol-charcoal Strathmore 160gsm tinted paper 9×12″ lr

    ‘தூளியாட்டம் ஆடும், துவண்டவன் காலில்கோ
    தூளியாய் ஒட்டித் துகள்பருக, -காளியாட்டம்
    ஆடிட்டு கம்ஸனுக்கு அண்ணன் வரவைமுன்:
    கோடிட்டு(வண்ணக் கோடிட்டு) கேசவ் (பின்)கழித்து’’….கிரேசி மோகன்…

    “யாரிதுசின் னப்பொண்ணு! யாதுமாகி நின்றிடும்
    பாரதி கண்ணம்மா போலிருக்கு ! -நேரெதிர்
    கண்டாயோ கேசவா கண்ணனில் காளியை !
    விண்டாயே வண்ணத்தில் வார்த்து”….கிரேசி மோகன் ..

    Share
  • ரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்

    Share
  • தாயுமானவன்!

    கவிஞர் அறிவுமதி

     

    என்னைத் தாயாக்கியவன் 

    கணவன்!

    எனக்குத் தாயாகியவன்

    நண்பன்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    மீனாட்ஷி திருக்கல்யாணம்….!
    ——————————–

    160731 Meenakshi Sudareshwara Kalyanam – lr wedding card -Vijaya Satyanarayana Watercolour A3

    ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
    பூசலா நாயனார் போலவே -யோசனையில்
    கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
    குண்டு குமாரனே காப்பு….(1)
    ———————————————————-
    கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
    —————————————————-

    சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
    அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
    இந்தமுறை காண மதுரையில் மீனாட்சி
    சுந்தரேசன் கல்யாணம் ஓம்….(2)

    பெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்
    ———————————————————–

    மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
    மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
    மேனாள் இமவான் மகளான மாதங்கி
    மீனாளாய் வந்த மலைப்பூ….(3)

    நிச்சயதார்த்தம்
    ———————

    சித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு
    இத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,
    தத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,
    முத்தண்ணா செய்தார் மணம்….(4)….!

    கல்யாணப் பத்திரிகை
    ——————————–

    சித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்
    இத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு
    பின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு
    கன்னிகா தானம்சொக் கர்க்கு….(5)

    கல்யாணச் சத்திரம்
    ————————-

    அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
    சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
    பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
    வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(6)

    சீர் வரிசை
    ————–

    பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
    வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
    குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
    மச்சினர் மல்லாந்த மால்….(7)

    வரதட்சிணை
    —————

    குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
    அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
    மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
    பாலாழிக் கண்ணஅம் பேல்….(8)

    ஜான்வாசம்
    ————–

    சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
    நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
    அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
    உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(9)

    கண்ணூஞ்சல்

    —————–

    கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
    விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
    மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
    கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(10)
    மாப்பிளைக் கண்ணுக்கு மையிடுதல்
    ———————————————-

    மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
    தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
    மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
    வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(11)

    காசியாத்திரை-மாப்பிள்ளைத் தோழன்
    ———————————————-

    யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
    மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
    காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
    ஈசன் விளையாடல் இது….(12)

    சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
    விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
    மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
    ஆலவாய் காசிநகர் ஆச்சு….(13)

    சம்பந்தி சண்டை
    ———————

    சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
    விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
    கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
    தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(14)

    மாப்பிள்ளை-முறுக்கு
    ————————-

    குனித்த தலையாய், குதிகால் நடையாய்
    பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
    புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
    முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(15)

    மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
    மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
    ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
    மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(16)

    கன்னிகாதானம்
    ——————-

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுறப்
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு….(17)….!

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து….(18)

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(19)

    அம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்
    ————————————————

    சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
    வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
    அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
    விம்மிஆ னந்தநீர் விட்டு….(20)

    கல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்
    ————————————————

    கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
    கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
    பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
    இல்லையொண் ணாத இனிப்பு….(21)

    கல்யாணச் சாப்பாடு
    —————————-

    உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
    தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
    கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
    வைகை விரைந்தாள் வளைந்து….(22)

    மொய் எழுதுதல்
    ——————–
    மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
    காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
    மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
    பையேந்தி நிற்பார் பணிந்து….(23)

    நலங்கு
    ———

    விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
    விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
    கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
    அண்டத்துக் கோளை அளிப்பு….(24)

    மாலை வரவேற்பு
    ——————–

    மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
    அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
    ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
    கூடலுக்குக் கூடுதல் கூத்து….(25)

    சாந்தி முகூர்த்தம்
    ———————–

    முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
    மதுரைவாழ் மக்களின் மாண்பு –
    பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
    மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
    வீட்டோட மாப்பிள்ளை வாள்….(26)

    இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
    நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
    என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
    அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(27)

    பாலிகை கரைப்பு
    ———————–

    மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
    பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
    மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
    கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(28)

    கட்டுச் சாதக் கூடை
    —————————

    கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
    அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
    கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
    கட்டுச்சா தக்கூடை கண்டு….(29)

    மலயத்துவசன் பிரிவோபசாரம்
    —————————————

    கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
    அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
    துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
    கவசமே கூடலைக் கா….(30)

    சிவசிவ என்று சிரத்தில் மலையத்
    துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
    கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
    நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(31)

    கோயிலுக்குல் புகுதல்
    —————————-

    சித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்
    சுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்
    கருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை
    அரஹர சம்போவென்(று) ஆர்ப்பு….(32)
    \

    பல ஸ்ருதி
    ————-

    மாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த
    போதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி
    கொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்
    விண்டதெலாம் வாணியவள் வாக்கு….(33)….!
    ——————————————————————————————————————————————————————————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181012 Bhavani -wcol 24×32 icam lr

    ’’அம்பாளும் பார்த்திட, நம்பாள் நடராசர்
    தெம்பாக ஆடுகிறார் தாண்டவம் ,-வம்பாள்
    தபஸ்விகள் ஏவினர், தாருகா கானில்
    அபஸ்மாரப் புல்(தர்ப்பை)மீ(து) அரன்போல்,-சபாஷ்நீ!
    சிவானி! எருமை சிகைபிடித்துக் கொன்ற,
    பவானி பவநோய் பிடி’’…. .கிரேசி மோகன்…!

    Share
  • மாணவர்கள் விழிவழியே கலைநயத்தைக் காட்டும் லலித் கலா அகாடமி.

    விவேக்பாரதி

    துவாரகா தாஸ் கோவர்த்தன தாஸ் வைணவக் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களில் இளங்கலைஞர்களின் கற்பனை மற்றும் கலைத்திறனை வெளிக்கொணர நிகழ்த்தப்படும் புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சியே Perceptiones 2K18. சென்னை கிரீம்ஸ் சாலையில், லலித் கலா அகாடமி வளாகத்தில் சுமார் 150 கலைப்படைப்புகள் காட்சிப் படுத்தபட்டிருக்கின்றன.

     வெவ்வேறு உணர்வுத் தளங்களைப் பிரதிபலிக்கும் 50 ஒவியங்களும் 100 புகைப்படங்களும் பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் ஈர்த்து நம் சிந்தனைகளைக் கவர்ந்திழுக்கும் மாணவக் கலைஞர்களின் கலைநயங்களைக் காண மக்கள் திரளாய்க் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். 10.10.2018 டில் பிரபல புகைப்படக் கலைஞர் திரு. வெங்கட் ராம் அவர்களால் து.கோ. வைணவக் கல்லூரியின் முதல்வர், டாக்டர் கணேசன், கல்லூரி பொருளாளர் திரு அஷோக் கேடியா மற்றும் காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் திருமதி வசந்த் அவர்களது முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    தொடங்கிவைத்து படைப்புகளை ரசித்துப் பார்வையிட்ட புகைப்பட வல்லுநர் வெங்கட் ராம் அவர்கள் “இந்த உலகம் நாளுக்கு நாள் தன்னை விரிவுப் படுத்தி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. நாமும் நமது விருப்பம் மற்றும் ஆர்வத்தைக் குறைக்காமல் அந்த மேம்பாட்டுக்குத் தக்கவாறு நம்மையும் தயார்ப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.” என்று மாணவர்களுக்கு அன்பான அறிவுரையும் வழங்கினார். அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை காட்சிக்கு இருக்கும் அரிய விழி விருந்தினைக் கண்டு ரசிக்க கலையுணர்வு கொண்ட மனங்கள் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை வரவேற்கப்படுகின்றனர். மாணவர்களின் கலைப் பார்வையைக் காட்டும் காட்சிக் களமாக இன்னும் சில நாட்கள் நல்ல பொலிவோடு விளங்கவிருக்கின்ற லலித் கலா அகாடமி நோக்கி கலா ரசிகர்களை அழைக்கிறோம்.

    Share
  • வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018

    பவள சங்கரி

     

    வல்லமை அன்பர்கள் சந்திப்பு, 14.10.2018 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை சென்னை அண்ணாநகரில், கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது.

    White Room for Scientific Tamil Development
    Manavai Mustafa Scientific Tamil Foundation Trust
    AE 103, 6th Street, 10th Main Road
    Anna nagar West, Chennai – 600040
    https://goo.gl/maps/8qNo5AEvEgN2

    பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி ஆலோசிப்போம். வல்லமையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்புவோர், அது குறித்து இந்தச் சந்திப்பில் நேரில் கேட்டறியலாம்.

    இந்த நிகழ்வில் பங்கேற்போர், தங்கள் வருகையை vallamaieditor@gmail.com என்ற முகவரியில் உறுதி செய்யுங்கள். வாருங்கள்! சந்திப்போம்! உரையாடுவோம்! ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181011 Lalitha lr

    புலிதாங்கி பாலர், எலிதாங்கி வேழர்,
    கலிதாங்கி கந்தர் குலாவும்- லலிதாங்கி
    ராணியே,ரக்‌ஷி: ரஹஸ்ய சினேகிதி
    வாநீயுன் வாசலில் வீடு….!

    ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
    —————————————–
    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள், தீராத தாகமவள்,
    உண்ணா முலையவளை உண்…கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

     

    181010 Pulaka Bhushanam Ashrayanti-wcol 24×32 icam lr

    வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன
    சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம்
    பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள்
    கனிந்திடும்காண் முத்திக் கனி”….!

    “ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை
    மூடி உறங்காதே முன்கதவை -ஏடி !
    எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி
    விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….!

    ’’முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன்
    பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
    சரமே அவன்மார் சரோஜமே தாமோ
    தரனுகக்கும் தாயே துதிப்பு “.!

    “பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும்
    மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
    நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு
    கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….!

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
    பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….!

    “வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
    சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில்
    தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை
    விந்தை இவள்செய் விதி”….

    ’’கைடபனைக் கொன்றவன், கார்முகிலாய் சேடன்மேல்
    மெய்படரச் சாய்ந்தவன்மேல் மின்னலாய் -மையடர்ந்த
    பங்கயக் கண்களால் பார்த்தது போதுமென்மேல்
    திங்கள் விழியைத் திருப்பு’’…கிரேசி மோகன்….!

    Share
  • வேழ கணபதி காப்பு

    -விவேக்பாரதி

    சந்தச் சிந்தியல் வெண்பாக்கள்

    மோன கணபதி ஞான கணபதி
    வான மருளிடு மாதி கணபதி
    கான கணபதி காப்பு!

    தீது விடுபட வாத மறுபட
    மோத வருமிட ரோடி விலகிட
    நாத கணபதி காப்பு!

    நாளு மடியவ ராழ வினைகெட
    ஆளு மரசுநி தான கணபதி
    தாளெ மதுகதி காப்பு!

    நீல நதிதவ மாழ வமரனு
    கூல கணபதி மூல அதிபதி
    கால கணபதி காப்பு!

    தேக முயர்நல மாக வழிசெயு
    மூக கணபதி மூட வினைதடு
    காக கணபதி காப்பு!

    ஆறு சடைதவ ழாதி சிவனொடு
    வீறு மிகவெதி ராடி வொருசிர
    மாறு கணபதி காப்பு!

    தேவி சிவனுல கான கதைசொல
    மேவி யொருகனி காணு மருநிதி
    தேவ கணபதி காப்பு!

    வேட ருயகுல நாத னெனவரு
    மேடு குகனுறு காத லுதவிய
    பீடு கணபதி காப்பு!

    தூய மதியிட னாய கடமைக
    ளோயு வரையினி லாக முயலுவ
    மேய கணபதி காப்பு!

    வாழ வொருவர மான பதகதி
    தோழ னெனவரு ளாதி கணபதி
    வேழ கணபதி காப்பு!! 

    -01.10.2018

    Share
  • சூழல்

    கவிஞர் பூராம்

    தூரலொடு கூடிய பெருமழை
    கூட்ட நெரிச்சலில்
    அவளுக்கருகில் அவன்
    விரும்புவதில்லை இதுபோன்ற
    நெருக்கத்தை
    அவளின் பரிசம் அவனை
    விலக மறுத்தது
    அவளின் தேவையும் நிராகரிக்க மனமில்லாத
    மனதோடு அவனும்
    உடல்கள் உரசலில் இனம்புரியாத இன்பத்துடன்
    பயணத்தின் நடுவே
    சூழல் கண்காணிப்பின்
    அருவருப்பும் அவளின் புரிதலும்
    இன்பமெல்லாம் அடி வனத்திற்கு அப்பால்
    சிறிய அவமானத்துடன்
    அவள் நினைவோடு
    கடந்து செல்லும் காற்று.

    Share
  • அரவணைப்பாய் தாயே நீயும்!

     

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    நவராத்திரி நன்னாளில் நலந்தரும் நாயகியிடம் வேண்டி நிற்போம்

    நலமுடன் நாங்கள்வாழ நாயகியைச் சரணடைவோம்
    நிலமெலாம் அமைதிகாண நெஞ்சார வேண்டிநிற்போம்
    அளவில்லா ஆசைதன்னை அகற்றிடு  தாயேயென்று
    அன்னையின் நாமம்தன்னை அனைவரும் துதித்தேநிற்போம்

    மதமதை  அடக்கிநிற்கும்  மகத்தான  மாதாநீயே
    மனமதில்  உறைந்துநிற்கும் மலமதைப்  போக்குதாயே
    உளமதில்  உன்னைவைத்து  உருகியே   பாடுகின்றோம்
    ஒருகணம் எம்மைப்பார்த்து உத்தமராக்கு  தாயே

    கல்வியைத் தரும்போதம்மா  கசடினை  நீக்கித்தாநீ
    நல்லதைச் செய்யுமெண்ணம்  நன்குநீ  படியச்செய்வாய்
    சொல்லெலாம் தூய்மையாக  சொல்லிட  வைப்பாயம்மா
    நல்மனத்  தோடுநாளும் வாழ்ந்திடச் செய்வாய்தாயே

    கோலமிட்டு  கும்பம்வைத்து  குத்துவிளக்  கேற்றுகிறோம்
    குடும்பமெலாம் ஒன்றுசேர்ந்து குறைசொல்லல் தவிர்க்கின்றோம்
    வாழுதற்கு நல்லவற்றை தேடித்தேடி எடுக்கின்றோம்
    வல்லமையின்  நாயகியே  வந்திடுவாய்  மனமெல்லாம்

    ஈரமுள்ள  வீரமதை  எங்களுக்  கருள்வாய்தாயே
    கோரமுள்ள குணமதனை கொன்றொழிக்க வேண்டுமம்மா
    பாரமுள்ள வினையனைத்தும் பறந்தோடச்  செய்வாயென்று
    ஆர்வமுடன்  வேண்டுகின்றோம் அம்மாநீ அரவணைப்பாய்!

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 6

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

    ————————————————————

     

    திருக்குறளில் காமத்துப் பாலில் , பாடல் ஒன்றுண்டு! அக்குறட்பாவில் தலைவன் தலைவியை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கிறான்! அங்கிருந்த உருவத்தை,  தெய்வத் தன்மை வாய்ந்த அணங்கோ? அழகிய மயிலோ? என்று காட்சி யளவில் கருதுகிறான். இதுவரை தான் கண்டறியாத கவர்ச்சியும், உருவும் கொண்டு தன்னை மயக்கும் உருவம் அணங்கோ?  என்று தொலைவிலிருந்து கண்ட அவன் எண்ணுகிறான்; பின்னர் இன்னும் நெருங்குகிறான்.  செடி கொடிகள் இடையே நிற்கும் அவள் உருவம் ஒயிலாக வளைந்து காணப்பெறுவதால் அழகிய மயிலோ? என்று எண்ணுகின்றான்; இன்னும் அருகே நெருங்கிய போது, அவள் முகமும் அவள்  செவியில் அசையும் குழைகளும்  புலப்படுகின்றன! ஓ! அவள் மானிடப் பெண்தான்! என்று எண்ணியவன் அவள் யாரோ? என்று ஆவலுடன் நோக்குகிறான்! இவ்வாறு தொலைவிலிருந்து அருகே வர வர அவனுக்குத் தோன்றும் ஐயங்கள் நம்மையும் ஆவல் கொள்ள வைக்கின்றன. இவ்வாறே பெரியபுராணத்திலும்  ஓர் அரிய பாடல் நம்மைக் கவர்கின்றது.

    திருவாரூரின்  இயற்க்கை வளத்தை விளக்கும் போது சேக்கிழார் தம் புலமை நலத்தால் நம்மை மகிழவும் நெகிழவும் வைக்கிறார்! அங்கே நெல்வயலைச் சூழ்ந்த சோலைகள்  மிகுந்த நிழலுடன் சற்றே இருண்டு  காட்சி யளிக்கின்றன. தொலைவிலிருந்து வரும் உழத்தியரின்  கண்களில் அச்சோலைகள் கரும்பு வயல் போலக்  காட்சி தருகின்றன! ஆனால் நெருங்கிக்  காணும்போது, வளமாகப் பெருத்து வளர்ந்த நெற்பயிர்களே, கரும்பு  போலத் தோன்றின என்கிறார்! அதனால் அங்கு வந்த அப்பெண்கள் ,’’கரும்பல்ல , நெல்! ‘’  என்று கூறி விடுகிறார்களாம். அங்கே  அடுத்து,  மிகுந்த வளத்தினால் பருத்துத் தோன்றிய கரும்புகள், பாக்கு மரங்களோ  என்று ஐயுற வைத்தனவாம்.உயர்ந்து வளர்ந்திருந்த கரும்புகள் , காண்பார் கண்முன் கமுக மரங்கள் போலக் கட்சி தந்தன! ஆனால் நெருங்கிக்  காணும்போதுதான் உழத்தியர், ’’கமுகல்ல; கரும்பு!’’ என்று கூறினார்களாம்.

    இவ்வாறு மக்கள் பிறழவுணர்ந்ததற்குப் பகலிருளே காரணம். அந்த  இருளின்  இடையில் நீலப்பூக்களின் அகவிதழ்களில் புகுந்து வண்டுகள் குடைவதால் எழுந்த மகரந்தப் பூந்துகளே பார்ப்போரை ஏமாற்றுகின்றன! இவ்வாறு கூறும் உழத்தியர் பூக்களைத் தொடுத்து அணிந்துள்ளனர் . அவர்களின் கூம்பிய கரங்கள் தாமரை போல் காட்சி யளிக்கின்றன. இதற்குமேலும் சேக்கிழாரின்  கற்பனை, அந்த உழத்தியரின் குரல் அமுதம் போல் உள்ளதாம்! இனி முழுப்பாடலையும் காண்போம்

    ’கரும்பல்ல   நெல்லென்னக்  கமுகல்ல  கரும்பென்ன

     சுரும்பல்லி   குடைநீலத்  துகளல்ல  பகலெல்லாம்

     அரும்பல்ல  முலையென்ன  அமுதல்ல   மொழியென்ன

     வரும்பல்லா  யிரங்கடைசி மடந்தையர்கள்  வயலெல்லாம் ‘’

    இப்பாடலில் கடைசியர் எனப்படும் உழத்தியர்கள் பல்லாயிரவர்  கூடி வயலெங்கும் நிறைந்து, நெல்லைக் கரும்பெனவும், கரும்பைக் கமுகு எனவும் பிறழ உணர்த்து கூவுகின்றனர். காரணம் , நீலப்பூக்களின் மகரந்தப் பூந்துகளே ஆகும்! அம்மகளிரின் கரங்கள் தாமரை போல் உள்ளன; அவர்தம்  குரல் அமுதம்போல் உள்ளதாம்!  இந்தக் கற்பனையின் மூலம் ‘’அளவை இயல்’’   (பிரமாணவியல்)  உண்மை ஒன்றினைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார்.

    தூரத்தே ஒரு பொருளைக் கண்டறிந்த  ஒருவன், மேலும் அணுகிக் கண்டபோது அப்பொருளின் தன்மைகள் மாறுபட்டிருப்பதால்    வேறொன்றாக உணர்கிறான்!

    இதில்   பிரத்தியட்சம் , அனுமானம், உவமானம், ஆகமம் என்ற நால்வகைப் பிரமாணங்கள் அமைந்துள்ளன! கரும்பு என்றும் , கமுகு என்றும் அனுமானம் செய்த பொருள்கள் பிரத்யட்சத்தில் நெல்லாகவும் கரும்பாகவும் இருக்கின்றன. உழத்தியர் குரல் அமுதம் போல் இருப்பதும் , கரங்கள் தாமரைபோல் இருப்பதும் உவமானம்! மயக்க உணர்வு வேறு, உண்மைநிலை வேறு என்ற ஆகம அளவையை  இப்பாடல் காட்டுகிறது!

    ========================================================================

    Share