திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

————————————————————

 

திருக்குறளில் காமத்துப் பாலில் , பாடல் ஒன்றுண்டு! அக்குறட்பாவில் தலைவன் தலைவியை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கிறான்! அங்கிருந்த உருவத்தை,  தெய்வத் தன்மை வாய்ந்த அணங்கோ? அழகிய மயிலோ? என்று காட்சி யளவில் கருதுகிறான். இதுவரை தான் கண்டறியாத கவர்ச்சியும், உருவும் கொண்டு தன்னை மயக்கும் உருவம் அணங்கோ?  என்று தொலைவிலிருந்து கண்ட அவன் எண்ணுகிறான்; பின்னர் இன்னும் நெருங்குகிறான்.  செடி கொடிகள் இடையே நிற்கும் அவள் உருவம் ஒயிலாக வளைந்து காணப்பெறுவதால் அழகிய மயிலோ? என்று எண்ணுகின்றான்; இன்னும் அருகே நெருங்கிய போது, அவள் முகமும் அவள்  செவியில் அசையும் குழைகளும்  புலப்படுகின்றன! ஓ! அவள் மானிடப் பெண்தான்! என்று எண்ணியவன் அவள் யாரோ? என்று ஆவலுடன் நோக்குகிறான்! இவ்வாறு தொலைவிலிருந்து அருகே வர வர அவனுக்குத் தோன்றும் ஐயங்கள் நம்மையும் ஆவல் கொள்ள வைக்கின்றன. இவ்வாறே பெரியபுராணத்திலும்  ஓர் அரிய பாடல் நம்மைக் கவர்கின்றது.

திருவாரூரின்  இயற்க்கை வளத்தை விளக்கும் போது சேக்கிழார் தம் புலமை நலத்தால் நம்மை மகிழவும் நெகிழவும் வைக்கிறார்! அங்கே நெல்வயலைச் சூழ்ந்த சோலைகள்  மிகுந்த நிழலுடன் சற்றே இருண்டு  காட்சி யளிக்கின்றன. தொலைவிலிருந்து வரும் உழத்தியரின்  கண்களில் அச்சோலைகள் கரும்பு வயல் போலக்  காட்சி தருகின்றன! ஆனால் நெருங்கிக்  காணும்போது, வளமாகப் பெருத்து வளர்ந்த நெற்பயிர்களே, கரும்பு  போலத் தோன்றின என்கிறார்! அதனால் அங்கு வந்த அப்பெண்கள் ,’’கரும்பல்ல , நெல்! ‘’  என்று கூறி விடுகிறார்களாம். அங்கே  அடுத்து,  மிகுந்த வளத்தினால் பருத்துத் தோன்றிய கரும்புகள், பாக்கு மரங்களோ  என்று ஐயுற வைத்தனவாம்.உயர்ந்து வளர்ந்திருந்த கரும்புகள் , காண்பார் கண்முன் கமுக மரங்கள் போலக் கட்சி தந்தன! ஆனால் நெருங்கிக்  காணும்போதுதான் உழத்தியர், ’’கமுகல்ல; கரும்பு!’’ என்று கூறினார்களாம்.

இவ்வாறு மக்கள் பிறழவுணர்ந்ததற்குப் பகலிருளே காரணம். அந்த  இருளின்  இடையில் நீலப்பூக்களின் அகவிதழ்களில் புகுந்து வண்டுகள் குடைவதால் எழுந்த மகரந்தப் பூந்துகளே பார்ப்போரை ஏமாற்றுகின்றன! இவ்வாறு கூறும் உழத்தியர் பூக்களைத் தொடுத்து அணிந்துள்ளனர் . அவர்களின் கூம்பிய கரங்கள் தாமரை போல் காட்சி யளிக்கின்றன. இதற்குமேலும் சேக்கிழாரின்  கற்பனை, அந்த உழத்தியரின் குரல் அமுதம் போல் உள்ளதாம்! இனி முழுப்பாடலையும் காண்போம்

’கரும்பல்ல   நெல்லென்னக்  கமுகல்ல  கரும்பென்ன

 சுரும்பல்லி   குடைநீலத்  துகளல்ல  பகலெல்லாம்

 அரும்பல்ல  முலையென்ன  அமுதல்ல   மொழியென்ன

 வரும்பல்லா  யிரங்கடைசி மடந்தையர்கள்  வயலெல்லாம் ‘’

இப்பாடலில் கடைசியர் எனப்படும் உழத்தியர்கள் பல்லாயிரவர்  கூடி வயலெங்கும் நிறைந்து, நெல்லைக் கரும்பெனவும், கரும்பைக் கமுகு எனவும் பிறழ உணர்த்து கூவுகின்றனர். காரணம் , நீலப்பூக்களின் மகரந்தப் பூந்துகளே ஆகும்! அம்மகளிரின் கரங்கள் தாமரை போல் உள்ளன; அவர்தம்  குரல் அமுதம்போல் உள்ளதாம்!  இந்தக் கற்பனையின் மூலம் ‘’அளவை இயல்’’   (பிரமாணவியல்)  உண்மை ஒன்றினைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார்.

தூரத்தே ஒரு பொருளைக் கண்டறிந்த  ஒருவன், மேலும் அணுகிக் கண்டபோது அப்பொருளின் தன்மைகள் மாறுபட்டிருப்பதால்    வேறொன்றாக உணர்கிறான்!

இதில்   பிரத்தியட்சம் , அனுமானம், உவமானம், ஆகமம் என்ற நால்வகைப் பிரமாணங்கள் அமைந்துள்ளன! கரும்பு என்றும் , கமுகு என்றும் அனுமானம் செய்த பொருள்கள் பிரத்யட்சத்தில் நெல்லாகவும் கரும்பாகவும் இருக்கின்றன. உழத்தியர் குரல் அமுதம் போல் இருப்பதும் , கரங்கள் தாமரைபோல் இருப்பதும் உவமானம்! மயக்க உணர்வு வேறு, உண்மைநிலை வேறு என்ற ஆகம அளவையை  இப்பாடல் காட்டுகிறது!

========================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *