Blog

  • மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்

    -முனைவர் அரங்க.மணிமாறன்

    முன்னுரை:    

    சிறுகதை இலக்கியங்கள் தமிழ்மக்களின் ஓய்வுநேரங்களைச் சுகப்படுத்தவும் நன்னெறி ஊட்டவும் கற்பனைகளைக் கொட்டித்தீர்க்கவும் தொன்ம-புராணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்லவும் பயன்பட்டன.

    இன்றைய காலக்கட்டத்தில் சித்தாந்த வேதாந்த கருத்துக்களின் வெளிப்பாட்டுக் கருவியாகப் பயன்பட்டு வருவதை உணரமுடிகிறது. காலத் தேவைக்கேற்ப விடுதலைச் சிந்தனைகளையும் பெண்ணியச் சிந்தனைகளையும் சமுதாயத்தில் நிலவும் சாதியப் பொருளாதாரச் சிக்கல்களையும் இசங்களின் கருத்துவெளிப்பாடுகளையும் பொருண்மைகளாகக் கொண்டு விளங்குகின்றன.

    அத்தகைய சிறுகதை வரலாற்றில் மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிக்காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.

    மேலாண்மை பொன்னுச்சாமி:

    மேலாண்மை பொன்னுச்சாமி விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாட்டில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் வாழ்வின் துன்பங்கள் கற்றுத்தந்த பாடங்களை நிறையவே படித்தவர். ஊரில் மளிகைக்கடை நடத்தியவர். பள்ளிப்படிப்பை நிறுத்தினாலும் சுயவிருப்பமாக இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தவர். கதை படைப்பிலக்கத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு முப்பத்தாறு நூல்களைப் படைத்தளித்துள்ளார்.

    அன்னபாக்கியன் அன்னபாக்கியச்செல்வன் முதலிய புனைப்பெயர்களில் எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளராக விளங்கியவர். இடதுசாரியச் சிந்தனையாளர்.

    இருபத்திரண்டு சிறுகதைநூல்கள், ஆறு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், ஒரு கட்டுரை நூல் என எழுத்துலகில் தடம்பதித்தவர். மனப்பூ சிறுகதைக்காகத் ‘தமிழக அரசின் விருது’ வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் ‘மாட்சிமை விருதும் கேடயமும்’ பெற்றவர். உயிர்காற்று சிறுகதைக்காக ‘பாரத ஸ்டேட் வங்கி விருதும்’ ‘கல்கி சிறுகதைப் போட்டி விருது’ ‘ஆனந்தவிகடன் பவளவிழா முத்திரைப்பரிசு’ பெற்றவர்.

    இவரது சிறுகதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டது. பாட்டையா சிறுகதை 12ஆம் வகுப்புப் பாடமாக அமைந்தது. இவரது சிறுகதைகளை ஆய்வுசெய்து பத்து இளநிலை ஆய்வும் நான்குபேர் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டு சிறப்பு அடைந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக 2007ஆம் ஆண்டு ’மின்சாரப்பூ’ சிறுகதை நூல் சாகித்திய அகடெமி விருதுபெற்றது.

    ‘சமரசமற்ற போர்க்குணம் மிக்க படைப்புகள்தாம் என் லட்சியம்’1 என்ற கொள்கையோடு எழுதிய மேலாண்மை பொன்னுச்சாமி 2017 அக்டோபர் 30 இல் மறைந்தார். ஆனால் அவருடைய சிந்தனைகளும் சித்தாந்தங்களும் என்றுமே அழியாமல் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

    சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்:

    இலக்கியங்கள் மனித சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. மனிதன் ஒரு சமூகவிலங்கு. ஒரு மனிதன் பிறமனிதரோடு தொடர்புகொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள் சமுதாயச் சிக்கல்களாகின்றன. ஒவ்வொரு காலத்திலும் ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்போடு இயைந்து மாற்றமடைந்து வந்திருக்கிறது சமுதாயம். சமுதாயம் (SOCIAL) எனும்சொல் குமுகாயம் எனும் சொல்லிலிருந்து, மனிதர்களின் கூட்டுவாழ்க்கையிலிருந்து உருவானதாகும்.

    “SOCIAL என்னும் சமுதாயத்தைக் குறிக்கும் SOCIETY என்னும் ஆங்கிலச்சொல் சமூகம் என்பதை குறிக்கும்.  SOCIAL என்னும் சொல்லோடு நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே மனிதனை விலங்கிலிருந்து பிரிப்பதே இந்தச் சமூகம் அல்லது சமுதாயம் என்ற சொல்தான்”2  என்கிறார் அ.மு.பரமுசிவானந்தம்.

    மனிதனை மனிதனோடு இணைத்து ஒரு சமூக அமைப்பை உருவாக்குவது சமுதாயம். இது “ஓர் ஒழுங்கின் அடிப்படையில் இணைக்கப்பட்டு தனிமனிதர்களுக்கும் அவர்களை பிணைக்கும் உறவுமுறைகளுக்கும் இடைவிடாத மாற்றம் நிகழ்கின்றது; இத்தகு சிக்கல்கள் மாறிக்கொண்டே இருக்கும் அமைப்பையே சமுதாயம் என்பர்”3 என்கிறார் பி.குப்புசாமி.

    ஓர் எழுத்தாளன் தன்னைச் சுற்றிய சமுதாய நிகழ்வுகளை இலக்கியத்தில் படைத்துக் காட்டுகிறான். மனிதச்சிந்தனைகள், வழக்காறுகள், நம்பிக்கைகள், குடும்பம், பொருளாதாரம்,அரசியல், பண்பாடு போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இலக்கிய வகைகளில் சிறுகதையும் ஒன்று. சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைக் களையும் நல்ல நோக்கத்தோடு எழுதப்படுபவை இச்சமூகப் படைப்புகள். அவற்றுள் சில சமுதாயப் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன் சில தீர்வுகளையும் கூறுகின்றன.

    “தனிமனித எண்ணங்கள், சமுதாயத்தின் பொதுவான நினைவோட்டம் என்னும் இரண்டு வகையான சிந்தனைகளின் அடிப்படையில்தான் காலங்காலமாக சமுதாயம் இயங்கிவருகிறது’4  என்கிறார் அரு.சின்னசாமி. தனிமனிதனின் போராட்டம், மானிடக் குழுவோடு இணையும்போது உருவாகும் போராட்டம் சமுதாயம் எனும் ஓர் அமைப்பை ஏற்படுத்துகிறது.

    ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளமைந்த பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூக நாவல் ஆக்குகிறான்”5  என்கிறார் கைலாசபதி. சமுதாயத்தின் மீதும் அதன் வளர்ச்சிமீதும் மிக்க அக்கறை உடையவரான மேலாண்மை பொன்னுச்சாமி தமது கதைகளில் சமுதாயம் சார்ந்த பல்வேறு சிக்கல்களை முன்வைத்து சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    அமைதி தேசம் மலர வேண்டும்:

    தனிமனிதக் கோபங்களும் பேராசைகளும் உலகயுத்தத்தையே உருவாக்குகின்றன. அடுத்தவர் வளர்ச்சிமீதும் வளத்தின் மீதும் பொறாமையும் அவற்றைக் கைப்பற்றி விடவேண்டும் எனும் ஆசையும் கொண்டு உலகப்போர்களை உருவாக்கி பேரழிவுகளுக்கு வழிவகுத்தனர்.

    ஆனால் பழந்தமிழர் அறத்தோடு கூடிய போர்முறைகளையே கையாண்டனர். பழந்தமிழரின் ஈரம் செறிந்த வீரம் மறம் எனப்பட்டது. தனக்கு நிகரான போர்த்திறனும் படைக்கலப் பயிற்சியும் பெற்றவர்களோடு மட்டுமே போரிடுவர். ஆவும், பார்ப்பனரும், பெண்களும், பிணியுடையவரும் ஈமக்கடனிருக்கப் புதல்வர் பெறாதவரும் யாம் போரிட இருக்கிறோம். நீங்கள் பாதுகாப்பான பொதுமன்றங்களுக்குச் செல்லுங்கள் என்று முரசறைந்து தெரிவித்த பின்னரே ஒத்த வலிமையுடையரோடு போரிடுவர்.6 (புறநானூற்றுப் பாடல் 9-நெட்டிமையார்). போரில் படைவிட்டவர் புறமுதுகிட்டவர் தனிநின்றவர் ஆகியோரைத் தாக்குதலில்லை.

    ஆனால் இன்றைய காலங்களில் போர் முதலியவை ஏற்படும்போதும் வன்முறைகளின் போதும் சாதியக் கலவரங்களின் போதும் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கின்றனர். அவர்களது சொத்துக்களைச் சூறையாடுகின்றனர் அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடுகின்றனர். சாதியக் கலவரங்களும் அரசியல் தேர்தல் கலவரங்களும் அப்பாவி மக்களையே குறிவைத்து நடக்கின்றன.

    பூர்ணம் அப்பாவி இளைஞன். இளம்வயதில் ஏற்பட்ட காய்ச்சலுக்கு சரியான வைத்தியம் செய்யாததால் போலியோ நோய்க்கு ஆட்பட்டு கால்கள் சூம்பிப் போனவன். சதைப்பிண்டமாக சக்கரப்பலகையில் சுற்றிவருபவன். மற்றவர்களின் ஏளனப்பார்வைக்கும் பேச்சுக்கும் ஆளானவன். குடிகாரத் தந்தையால் தன் தாய் மிதித்துக் கொல்லப்பட்டதையும் அடுத்து நடந்த சாதிய வன்முறையில் தந்தை அநியாயமாகக் கொல்லப்பட்டதையும் கண்ணெதிரே கண்டவன். தன் உடற்குறைபாட்டை மற்ற மனிதர்கள் கேலி செய்யும் வன்முறையையும் வெறுப்பவன்.

    அவனது குறைபாடு நிறைந்த வாழ்க்கையிலும் மனதுக்கு நிறைவு தரக்கூடிய ஓவியத் திறமையை இறைவன் அவனுக்கு அளித்திருந்தான்.
    ‘பெறமுடியாத அன்பைத் தருவதில் ஒரு சுகம். ஓர் இதம். பூமி முழுவதையும் அன்புக்காற்றால் நிரப்பிவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. போலியோவினால் தாக்க முடியாத அன்புப் பிரதேசமாக அவனது ஆகாயமனம்’.7

    அவனுக்கு பிளாட்பாரத்தில் ஒரு வெற்றிடம் வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்களை ஓவியமாக தீட்டுவான். இன்று என்ன வரையலாம் எனச் சிந்தித்தவனுக்கு இராமர் வரையலாம் என்ற முடிவு எட்டியது. நீலவண்ண இராமர்தான் அன்பின் பேருரு என்று முடிவெடுத்தான். இராமரை வரைந்த பின் வில் அம்புக்குப் பதிலாக அம்பு இருக்க வேண்டியகையில் சமாதானப் புறாவை வரைந்தான்.

    ‘இன்றைய உலகின் நோயே… வன்முறை தீதான். மருந்து? அன்புநீர்தான். சமாதானத் தென்றல்தான். சமகால வன்முறை நோய்க்கெதிரான இவனது ஓவியப்போர் இது. வில்லேந்திய ராமர் வலது கையில் வெண்புறா.’ அப்போது திடீரென அந்த தெருவில் தேர்தல் கலவரம் மூள்கிறது. ‘முன்னேறித் தாக்குகிற ஆயுதக் கும்பலின் வெறித்தனம் மூர்க்கம்… ராட்சஸமும் ரத்தப்பெருக்கும் மரண ஓலமுமாக… தெருவே ரணகளம்.’8

    உயிர் தப்பிக்க ஓடிவந்த ஒருவனை தாக்கவந்த கும்பலில் பூர்ணம் சிக்கிக்கொள்கிறான். கலவரம் முடிந்ததும் வீதியில் வெறுமை. பூர்ணத்தின் பிரேதம் மட்டும் வீதியில் கிடக்கிறது.

    அரசியல் சாதிய வன்முறைகள் நீங்கிச் சமாதானம் நாடெங்கும் நிலவவேண்டும் என்று அமைதியை விரும்பியவன் வன்முறையாலே கொள்ளப்படுகிறான். அந்த வழியே வந்த நாய் அவனது வாயில் வழிந்த ரத்தத்தில் அன்பின் வாசமே வீச நாய் நக்காமல் விலகியது!9

    இந்த தேசம் மத இன அரசியல் கலவரங்களின்றி அமைதி தேசமாக மலரவேண்டும். வன்முறைக்குப் பலியான கடைசி மனிதன் பூர்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற சிந்தனை இக்கதையின் மூலம் வெளிப்படுகிறது.

    பெற்றோர்களைக் காப்போம்:

    ‘அவன் இருப்பதோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ அனாதை இல்லம்’ என்ற கவிதை பெற்றோர்களைப் பாதுகாக்காத இன்றைய சமுதாய நிலையை வெளிப்படுத்துகிறது. இன்றைய அவசர உலகில் தாய் தந்தை முதலிய சொந்தங்களும் சுற்றங்களும் காலாவதியான நாகரிகமாகிவிட்டது. நகர நெருக்கடி வாழ்வில் வாடகைக் குடித்தனத்தில் வயது மூப்பு அடைந்த பெற்றோர்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டு வாழ முடியாத நெருக்கடிநிலை இன்று நிலவுகிறது. முதுமைப்பருவம் இரண்டாவது குழந்தைப் பருவமாகும். இயலாத முதுமைப் பருவத்தில் பெற்றோர்களைப் பராமரிக்காமல் அனாதை இல்லங்களில் விட்டுவிடும் நிலை பெருகியுள்ளது.

    நம்மை பெற்று வளர்த்து நம் வளர்ச்சியில் தங்கள் மகிழ்ச்சியை கண்ட பெற்றோர்களை காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சண்முகத்தின் அம்மாவுக்கு வயதாகிவிட்டது. பழுத்தபழம். சுயதேவைகளையே பூர்த்திசெய்து கொள்ள முடியாத கிழம். அவனால் அம்மாவைச் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் அம்மாவுக்கும் எதற்குப் பார்த்தாலும் சண்டை, வாதம். படுத்த படுக்கை என்றாலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுப்பதில்லை.

    படுக்கையிலேயே இருப்பதால் ஈக்கள் மொய்க்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. மனைவிக்கு தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டு நோய்தாக்கிவிடுமோ என்ற அச்சம். ‘பாவம்..நம்ம அம்மா. கவனிப்பார் இல்லாம காய்ஞ்சு நாறிப்போய்க் கிடக்குறா. சாவுதான் அவளுக்கு விமோசனம்.’10 என்று வருந்துகிறான். சம்முகம் சம்முகம் என்று அழைத்துக்கொண்டிருப்பதாலும் தின்பண்டங்கள் வேண்டும் என்று நச்சரிப்பதாலும் எரிச்சலடைகிறான்; செத்துத்தொலையேன் என்கிறான்.

    நான் எதுக்குடா சாகணும்? நான் உன்மனைவி சம்பாத்தியத்திலயா சாப்பிடுறேன்? எனக் கேட்க மனைவிக்கும் அம்மாவுக்கும் பற்றிக்கொள்கிறது சண்டை. நடுவில் மாட்டிக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறான். இந்த நிலையை மாற்றுவதற்குத் தன் தங்கை சுப்புத்தாய் வீட்டில் அம்மாவை விடுவது என்ற முடிவுக்கு வருகிறான்.

    தானும் தன் கணவனும் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளைப் பெற்றுவளர்த்த வீடு. இதை விட்டுப்போகமாட்டேன் என வீம்பு பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாகத் தங்கை வீட்டிற்கு அனுப்புகிறான். ஆனாலும் அம்மாவைக் கடைசி காலத்தில் தன்னுடனே வைத்துக் கொள்ள முடியாத ஆதங்கம் வாட்டி வதைக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பின் அவள் இறந்துவிட்டாள் என்ற செய்திகேட்டு செல்கிறான். எல்லாம் முடிந்து விட்டபின் தங்கையிடம் கேட்கிறான் அம்மா கடைசி ஆசையாக என்ன சொன்னாள் என்று அதற்கு தங்கை, “சாகுறப்ப ஒம் முகம் பாத்துகிட்டு சாகணும்’னு அவளுக்கொரு நெனைப்பு. ஒங்கையாலே கடைசிப் பாலைக் குடிச்சுட்டுச் சாகணும்’னு அம்மாவுக்கு ஒரு ஆசை.”

    அதைக் கேட்டவுடன் தாயைக் காக்க முடியாத தன் இயலாமையை எண்ணி ‘ஐயையோ..அம்மா…ஹ் ,ஒன்னைத் தவிக்கவிட்ட பாவியாயிட்டேனே.”11 என்று வெடித்து அழுகிறான். நாம் குழந்தைகளாக இருந்தபோது நாமும் பல துன்பங்களைத் தந்திருப்போம். அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டுதானே பரிவோடு நம்மைக் காத்தனர். அத்தகு பெற்றோர்களை முதுமையில் நாமும் நம் குழந்தைகளாகக் கருதிக் காக்க வேண்டியது நம் கடமை என்பதை இக்கதைவழிச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

    எல்லோரும் ஒரு குலம்:

    மனிதர்களில் ஒரு சிலரின் சுயநலத்தினாலேயே சாதி சமய மதப் பூசல்கள் உருவாகின்றன. மனிதர்கள் அனைவரும் சமம். நம் நாட்டில் அனைத்து மதத்தவர்களும் நண்பர்களாக அண்ணன் தம்பிகளாக மாமன் மைத்துனர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களின் வடைபாயசமும் கிறித்தவர்களின் கேக்கும் முஸ்ஸிம்களின் பிரியாணியும் பகிர்ந்துக் கொள்ளப்படுவதில் எந்த பேதமும் இல்லை. சமயங்களின் நீதிகளும் மத ஆசாரங்களும் மனுதர்மங்களும் அடுத்த மனிதனைக் கொன்றழிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை. உருவாக்கப்படவும் இல்லை.

    மனிதர் நோக மனிதர் பார்க்கும்
    வாழ்க்கை இனியுண்டோ?
    12 என்றார் பாரதி.

    வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இப்பூமியில் சாதி மத பேதங்கள் நீங்கி அனைவரும் இங்கு சரி சமமென வாழ வேண்டும்.

    போர்களும் கொலைகளும் பூசல்களும் நீங்கிய சமுதாயம் மலர வேண்டும்.

    இப்புராகிம் ராவுத்தர் துணி வியாபாரி. சைக்கிள் மிதித்து வியாபாரம் செய்பவர். இந்து பெரியவர் வீட்டிற்கு வியாபாரத்தின்போது எப்போதும் வருவர். உரிமையாக திண்ணையில் ஆற அமர அமர்ந்து கொண்டு பேசிவிட்டுத்தான் போவார். கைலி வாங்கிக்கிறீங்களா? மேல்துண்டு வாங்கிக்கிறீங்களா? என எதையாவது தருவார். பெரியவரின் பேரக்குழந்தைகளைக் கொஞ்சுவார். அவர்களுக்கு ஐந்து ரூபாய்த் தருவார். ஏன் எங்களுக்கு காசு தர்றீங்க?

    எங்க வீட்டில காசு வாங்கிக்கிறதுக்கு குழந்தைங்க இல்லையே அதான் என்பார்.

    அப்போது பெரியவர் ஊரில் நடக்கும் சில கலவரங்களில் முஸ்லீம்களின் பெயர்கள் அடிபடுவதை, “உங்க ஆளுங்க பொதுவா மொரட்டு சுபாவம்னு நெனைக்கேன்’ என்று கூறிவிட ராவுத்தர் அடுத்த சில நாட்களாக வருவதில்லை. அவசரப்பட்டுத் தான் கூறிவிட்ட கருத்தால் ராவுத்தர் மனம் புண்பட்டதை  எண்ணி வருந்துகிறார்.

    இத்தனைக்கும் ராவுத்தர் இவற்றையெல்லாம் கடிந்து பேசுபவர்.

    ‘கலவரம் எந்தச் சைத்தான் பண்ணினாலும்… பொண்ணுங்களும் புள்ளைங்களும்தான் ரொம்ப நாசமாகுதுகள். பூ மொட்டுக கருகுற பரிதாபம்தான்… பெருங்கொடுமை”என்றவர். பெரியவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதை அறிந்து வந்து பார்க்கிறார்.

    என்னை நீரு மனுசனா நெனைக்கலே.   முஸ்லிமா மட்டும் நெனைக்கீரு. அதானே காரணம்” கடவுள நம்புறவனுக்கு ஒரே கடவுளும் அவரு படைச்ச ஒரே மனுசங்களும்தான் உண்மை. மனுசங்க படைச்சுகிட்ட சாதிக மதங்க எல்லாம் உண்மையானதுல்லே…”13 (ப.42 பூமனசுகள்)  என்கிறார்.

    அன்பு மட்டுமே நிஜம் சாதி மத பேதங்கள் மனிதர்களே படைத்துக் கொண்ட மாயைகள் என்பதை இக்கதையில் கூறி பேதங்களற்ற சமுதாயம் மலரவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

    கல்வியே செல்வம்:

    கல்வியறிவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது. ஒரே மனித குலத்தில் ஒருவன் ஆண்டானாவதும் ஒருவன் அடிமையாவதும் கல்வியறிவு இன்மையினாலேயாகும். ஒருவன் கற்கும் கல்வி அவனை எதனையும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் பகுத்தறிவை உண்டாக்குகிறது. உழைப்பிற்கேற்ற பலனை உரியமுறையிலும் உரிமையாகவும் பெறக் கற்றுத்தருகிறது. சிந்தனை, செயல்திறன் வளர உதவுகிறது. எந்தச்செயலையும் செம்மையாகச் செய்ய உதவுகிறது.

    ‘கல்வி எனும் அகத்தே பொருளிருக்க
    புறத்தே பொருள் தேடி உழல்கின்றீரே’
    என்கிறது விவேகசிந்தாமணி.

    கல்வி ஒருவனை வாழ்வில் உயர்த்துகிறது. வறுமையைப் போக்குகிறது. சாதி மத பேதங்களை நீக்குகிறது. தங்கச்சாமியின் மகன் காமராசு கல்லூரியில் படிக்கின்றான். வறுமையான குடும்பம் வேளாண்மையில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் விளைச்சலும் இல்லை. காமராசு கல்லூரியில் சேர்வதற்குமுன் குடும்ப வறுமை காரணமாக மளிகைக் கடைக்கு பொட்டலம் போட போகட்டுமா எனும்போது, “மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான்டா கால் எடுத்து வைச்சா… பாதை தானாக வரும்டா படிக்காத பரம்பரை. பனையேறி சிரமப்பட்ட பரம்பரை. தராசு புடிச்சு ஊரு ஊரா சுத்தித் திரிஞ்ச வம்சம். நீயாச்சும் மேல்படிப்பு படிச்சு உசரத்துக்குப் போகணும்.”14 என்கிறார்.

    மகனின் படிப்புக்காக தங்கச்சாமி என்ற பெயருக்கேற்ப மாட்டுத்தரகில் நாணயமான அவர், 3300க்கு மாட்டை வாங்கி 7600க்கு விற்கிறார். பொய் சொல்கிறார். மனசாட்சி உறுத்துகிறது. மகனின் படிப்புக்காகவே இவற்றையெல்லாம் செய்கிறார்.

    அருஞ்சுனை நாடார் கீரை விற்பவர். சாதி வேறுபாட்டால் பாதிக்கப்பட்டவர். தன் பேரன் அருஞ்சுனை பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாததால் கடிக்க முடியாதபோது தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை விற்றுப்படிக்க வைக்கிறார். படிப்பு முடித்த அவன் அரசாங்கப் பதவிக்கு வந்துவிட்டான். ‘பேரனை நினைச்சா பெருமையாயிருக்கு. கவர்மெண்டு உத்தியோகம். பேரன் தலைமுறை கரையேறிட்டா அதுக்குப் பின்னாடி வர்ற தலைமுறைகளை அவன் மலைமேலே ஏத்திருவான். கீரை வித்து வவுத்தை நனைச்ச அருஞ்சுனை நாடான் பேரன்… கோட்டுசூட்டும் பூட்டுமா வரப்போறான்.

    தொங்கிப்போயிருந்த நரைத்த மீசையை இடது கையால் நீவினார்”15. தொழிற்சங்கத்தலைவர் பாலசுந்தரம் பிராமணர். தன்னை வீட்டுக்கு வரச்சொல்லி உபசரித்ததை பேரன் தாத்தாவுக்கு கூறுகிறான். இதைக்கேட்டதும் தான் முப்பதடி தூரத் தீண்டாமையால் பாதிக்கப்பட்டதையும் உழக்கில் தண்ணீர் இதெல்லாம் கல்வி தந்த மாற்றமென உணர்ந்து புளங்காகிதம் அடைகிறார்.

    முடிவுரை:

    ஒரு சமுதாயம் மேம்பட்டு விளங்கச் சாதி மத பேதமற்ற சூழல் உருவாக வேண்டும். பெற்றோர்கள் முதிய வயதில் குழந்தைகள். அவர்களைப் பாதுகாக்கவேண்டும். அரசியலிலும் மக்கள்செய்யும் செயல்களிலும் தூய்மையும் அன்பும் நிலைக்க வேண்டும். வன்முறை சாதிய கலவரங்கள் நீங்கி அன்பும் வளர்ச்சியும் மேம்படவேண்டும். கல்வியே சமத்துவ சமுதாயம் மலர வழிவகுக்கும் என்ற சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளைத் தமது சிறுகதைகளின் வழி மேலாண்மை பொன்னுச்சாமி வெளிப்படுத்தியுள்ளார்.

    முதன்மைஆதாரம்: அன்பூ வாசம்- சிறுகதை நூல் மேலாண்மை.  பொன்னுச்சாமி, கங்கை புத்தக நிலையம் 13 தீனதயாளு தெரு தியாகராய நகர் சென்னை-600 017. முதற்பதிப்பு :- திசம்பர்  2002

    *****

    அடிக்குறிப்புகள்:

    1.தமிழ் விக்கி பீடியா-மேலாண்மை பொன்னுச்சாமி நாள்:08.10.2018 4.10      பி.ப

    2.சமுதாயமும் பண்பாடும் ப.14- அ.மு. பரமுசிவானந்தம்- தமிழினி பதிப்பகம் சென்னை டிசம்பர்  2007

    3. AN INTRODUCTION OF SOCIAL PSYCHOLOGY P.469- 1982.

    4.தமிழர் சமுதாய வரலாறு ப.44 அரு.சின்னசாமி, வானதி பதிப்பகம் சென்னை  1979.

    5.தமிழ் நாவல் இலக்கியம் ப.224 –  க. கைலாசபதி குமரன் பப்ளிஷர்ஸ் சென்னை  1981.

    6.புறநானூறு நெட்டிமையார் பாடல்-9  ப.15  உமா பதிப்பகம் சென்னை- 2010

    7.அன்பூ வாசம் சிறுகதை ப.2  அன்பூ வாசம் சிறுகதை நூல், மேலாண்மை பொன்னுச்சாமி –  கங்கை புத்தக நிலையம் சென்னை 17.  முதற்பதிப்பு- டிசம்பர்  2002.

    8.மேலது ப.11

    9.மேலது ப.13

    10.மேற்குறித்த நூல் கடைசிப்பால் சிறுகதை ப.16

    11.மேலது ப.30

    12.பாரதியார் – பாரதியார் கவிதைகள்- தென்றல் நிலையம் சிதம்பரம்-  2000.

    13.பூமனசுகள் சிறுகதை ப.42-அன்பூ வாசம் சிறுகதை நூல் மேலாண்மை பொன்னுச்சாமி, கங்கை புத்தக நிலையம் சென்னை 17.  முதற்பதிப்பு- டிசம்பர்  2002.

    14.மேலது நூல்- பொய்ம்மையும் சிறுகதை ப.45

    15.மேலது நூல் சித்தாந்தம் சிறுகதை ப.61.

    *****

    கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்
    அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
    செங்கம். 606701
    பேசி:  99430-67963.

    Share
  • விஜயதசமி வெண்பாக்கள்…..!

    வெண்பாவில் அம்பாள்
       ——————————       காப்பு
           ——-
    எருதேறி ஈசன் ,எலியேறி வேழன்
    முருகேறி காக்க மயிலில் -உருகாது
    அன்பால் அழைக்கும் அடியேனின்
    வெண்பாவில் அம்பாளே வா….(1)….28-07-2011
    ————————————————————

    கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம்
    சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி
    இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து
    பலாவின் சுளையைப் புதைக்கும்….(2)….03-04-2008 

     
    அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
    பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
    பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
    தொழுவாய் அவளைத் தொடர்ந்து….(3)….16-10-2008

     திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி
    ———————————————–
    வானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா
    மோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா
    ஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப்
    பாத்த எவரோ பகர்….(4)….9-2-2009

    சுனையாக வாழும் சிவனிட பாகத்தில்
    அணையாத சக்தீயே, அம்மே -வினையான
    மண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை
    விண்ணாகா சத்தின் விளைவு….(5)….9-2-2009

    யானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம்
    ஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ
    மண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன்
    முன்தோற்று மண்டியிடு மாம்….(6)….9-2-2009

    தேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய்
    ஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல்
    பிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை (OR)உறுமாறி
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….(7)….10-2-2009

    பானைத்தோல் பாரத்தால் பட்டகடன் போக்கிட
    ஆனைக்கா அம்மை அடிக்கமலம் -தேனைப்போய்
    வண்டுண்ணும் வேகத்தில் வந்துநீ மொய்த்திட
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….(8)….10-2-2009

    கூன்பிறையும் மான்மழுவும் தேனொழுகும் பூவிதழும்
    பூணிறையின் ஊனுறையும் ஆணுமையை -நான்மறையும்
    வானவரும் மாலயனும் காணஅரி தானவளைக்
    காணத் திருவானைக் கா….(9)….11-2-2009

    தானே தனக்குவமை ஆன உமையாளை
    வீணே வர்ணிப்பதேன் வெண்பாவில் -ஆனை
    தனையன்று காத்த அகிலாண்ட வல்லி
    துணையென்(று) அவளைத் துரத்து….(10)….12-2-2009

    அம்புயக் கண்ணாளை அன்புய்யக் காண்பாளை
    அம்புவியைக் காப்பாளை அம்பாளை -அம்பலத்தார்
    மேனியிடப் பெண்பாலை ஞான முலைப்பாலை
    மானுடசேய்க்(கு) ஈன்றாளை மொய்….(11)….11-2-2009

    முகிலாண்ட வெற்பாளும் முக்கண்ணன் கற்பாளும்
    அகிலாண்ட ஆனைக்கா அம்மே -நகிலுண்ட
    சம்பந்தன் போலெண்ணி செந்தமிழ்ப் பாலூட்டு
    இம்மந்தன் வாக்கில் இசைந்து….(12)….11-2-2009

    முகிலாண்ட பர்வத முக்கண்ணன் கர்வமே
    அகிலாண்ட ஆனைக்கா அம்மே -நகிலாண்ட
    கண்டத்தால் மேனியே காணாது போயினும்
    உண்டெனெக்குன் பாதம் உதவு….(13)….11-2-2009

    கன்னலுன் இன்மொழி மின்னலுன் கண்ணொளி
    பின்னலோ பாம்புக்(கு) அடைமொழி -உன்னிலே
    தன்னை மறந்து தவம்செய்யும் பக்தர்க்கு
    எண்ண உருவம் எதற்கு….(14)….12-2-2009

    கல்லில் கலைநயம் சொல்லில் பொருள்மயம்
    துள்ளும் அபிநயம் தோற்றம் -உள்ளும்
    புறமும் உலவிப் பெருகும் பலவாம்
    இறைவன் அறிவே இவள்….(15)….12-2-2009

    இதம்தரும் வாழும் விதம்தரும் நாளும்
    புதன்தரும் காத்துப் பரிவை -நிதம்தரும்
    இங்கே இகபர பேரற் புதம்தரும்
    சங்கரி பதம்தரும்கொள் சார்ந்து….(16)….14-2-2009

    மலைப்புற வில்லாய் மலைப்புறம் ஏந்தி
    மலைப்புரம் மூன்றை முடித்தோன் -களைப்புறா
    வண்ணம் அவனை வலப்புரம் ஏந்திடும்
    அன்னை இடமே அரண்….(17)….16-2-2009

    இதம்தரும் வாழ்வை நிதம்தரும் பொல்லா
    மதம்தரும் ஆணவத்தை மாய்க்கும் -அதன்பின்
    சுதந்திரப் பேரற் புதம்தரும் அம்பாள்
    பதம்தரும் போற்றப் பணிந்து….(18)….16-2-2009

    மூளயோகம் வாயில்தாம் பூலம் உமிழ்ந்ததால்
    காளமேகம் ஆன கலிவரதன் -போலஆக
    வந்தென்நா வெற்றிலையில் வெண்பாக்கள் பூத்திட
    தந்தஆனைக் காகாரி(த்) துப்பு….(19)….13-2-2009

    அச்சுறுத்தும் பூதமா? அன்றிமாத்ரு பூதமா?
    எச்சரிக்கை யோடுன்னை உச்சரிப்பதா? -நச்சரவம்
    மாண்டோர் கபாலங்கள் பூண்டோன் இடபாகி
    வேண்டாமே வேஷ விருப்பு….(20)….13-2-2009

    கற்றதவள் நாமம் கசடறக் கைவரப்
    பெற்றதவள் பாதாம் புயம்பணிதல் -மற்றேதும்
    எண்ணா(து) இருப்போர்தம் வாழ்வை இனிப்பாக்கும்
    உண்ணா முலையாள் உறவு….(21)

    நானார் அறிதல் நமக்கெதற்கு அன்னையே
    நீயார் உணர்தலே நற்கதி -தாயார்
    மகனைத் தொலைப்பாளா மாதா தவிக்கின்றேன்
    அகலா(து) இருப்பாய் அணத்து….(22)

    மூகாம் பிகைஈசன் பாகாம் பிகைபக்தர்
    மோகாம் பிகையாள் மலர்த்தாளில் -பாகாய்
    உருகிக் கிடக்க உதவா மனமே
    கருகிக் கரையும் கபடு….(23)….20-2-2009

     இமயபுர ஈசன் இடபாக வாசி
     தமையன் திருமாலின் தங்கை -சமயபுர
     மாரியம்மா ஆத்தாவை காரியமாய்ப் பார்த்தோரை
     வீரியமாய்க் காப்பாள் விரைந்து….(24)….20-2-2009

    பரமஹம்சர் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்த
    அரனசைவே ஆதி உணர்வே -பரமசிவா
    னந்த லஹரி நவநீத சோதரி
    அந்தரி வந்(து)ஆ தரி….(25)….20-2-2009

    விலையைக் கொடுத்து வலிய வினையில்
    தலையைக் கொடுக்கும் மனதை -மலையத்
    துவசன் மகளே தெளிவுற வைப்பாய்
    கவசம் துணையுன் கழல்….(26)

    ஷ்யாம கிருஷ்ண சகோதரி தக்ஷிண
    ராம கிருஷ்ண உபாஸினி -நாம
    சஹஸ்ர சொரூபிணி சாஸ்வத சாக்ஷி
    ரஹஸ்ய சினேகிதி ரக்ஷி….(27)

    புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
    உள்ளம் உறையும் உமையோளே -வெள்ளி
    விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
    மடையோனென் நாவில் மலர்….(28)

    உன்னவரே ஞானத்தை உண்ணவரார் ஓடேந்தி
    கண்ணசைவில் ஞானம் கொடுத்திடும் -அன்னபூர்ணி
    என்நிலையைப் பாரம்மா ஏனிந்த பேதங்கள்
    இன்னலற வைராக்யம் இடு….
    தேகி பரமனிடம் தேஹி பவதிபிட்சாம்
    யோகிதிட சித்தம் எனக்கு….(29)

    கல்லூறும் தேரைக்கும் கர்பத்(து) உயிர்கட்கும்
    உள்ளூறச் சென்றுணவு ஊட்டிடும் -கொல்லூரின்
    மூகாம் பிகையே முனியாக வந்தெனது
    தேகான்ம பாவத்தைத் தீர்….(30)

    கன்னலுன் இன்மொழி மின்னலுன் கண்ணொளி
    பின்னலோ பாம்புக்(கு) அடைமொழி -உன்னிலே
    அர்கிய மாகிடும் அன்பர்க்(கு) அருளும்பொன்
    துர்கேயிப் பித்தளையைத் தேற்று….(31)….12-2-2009

    நின்றிட பூமா நகர்ந்திட ஸ்ரீதேவி
    ஒன்றிக் கலந்திட நீளாவாம் -மன்றில்
    நடமாட காளி நலம்பாட வாணி
    அடநமக்கு ஆயிரம்மா யி….(32)….6-7-2008

    குடைபோல் விரிந்த புடவைக் கொசுவம்
    இடையில் சொருகி இளையப் -பிடியாய்
    கபாலீசன் கோவிலில் கற்பகத்தைக் கண்டு
    உபாசித் தடைவீர் உயர்வு….(33)….29-11-2008

    உமையாளை, ஈசன் சுமையாளை, கண்கள்
    இமையாளாய் அன்பர் இதயம் -அமைவாளை
    கற்பக வல்லியை கற்பனைக்(கு) எட்டாத
    அற்புதம் தன்னை அணுகு….(34)….29-11-2008

    கோமள வல்லியை சாமள வண்ணியை
    ஆமளவு ஏத்தும் அடியார்க்கு -மாமலை
    வெள்ளிக்கு வாசினியால் வாக்கு விலாசத்தில்
    பள்ளித் தலமாகும் பார்….(35)….12-2-2009

    ஆவதும் போவதும் தேவதையுன் திட்டமென்றால்
    நாவெதற்கு பாவெதற்கு நீயெதற்கு -தீர்விதற்கு
    சொல்லடி மாயா சிவசக்தி, ஏனெதற்கு
    முள்ளடியில் ரோஜா மலர்….(36)….13-2-2009

    கற்றதவள் நாமம் கசடறக் கைவரப்
    பெற்றதவள் பாதாம் புயம்பணிதல் -மற்றெதும்
    எண்ணா(து) இருப்போர்க்கு என்நாளும் பொன்னாளாம்
    உண்ணா முலையாள் உறவு….(37)….19-2-2009

     ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
    —————————————–
    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள் தீராத தாகமவள்
    உண்ணா முலையவளை உண்….(38)….16-3-2009

    திருவொற்றியூர் கோயிலுக்குப் போன போது
    ——————————————————–
    கடுவிட கண்டக் கடவுளின் பொன்னார்
    உடலிடம் கொண்ட உமையே -வடிவுடை
    அம்மா உனைக்காண ஆர்வத் துடன்வருவேன்
    பெம்மான் சமேதராய்ப் பார்….(39)….25-3-2009

    கல்விக் கொடியுடையாள் செல்வத் திருவுடையாள்
    வெல்லும் வடிவுடையாள் ஒற்றியூர் -வல்லியைக்
    கண்டேனே பாதாதி கேச தரிசனம்
    உண்டேனே அன்னையருள் ஊற்று….(40)….25-9-2009

    ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….(41)….14-10-2010

    மீனாளை முத்தமிழ்த் தேனாளை அன்பர்க்காய்
    கோணாளை கூடலுக்கு கோனாளை -மானாளை
    மஞ்சத்தில் நாணாளை மாசக்தி ஆனாளை
    நெஞ்சத்தில் ஊற்றி நிரப்பு….(42)….08-05-2009

    நீரான, தீயான, நீள்விசும்பு காற்றான
    பாரான வாராஹியைப் பார்த்து -வாராய்
    சமய புரத்தாள்தாள் சேவிக்க நெஞ்ச
    சுமைகளைத் தீர்ப்பாள் சுமந்து….(43)….20-11-2009

    புரத்தாள் சமய புரத்தாள் இமய
    புரத்தான் இடது புரத்தாள் -திருத்தாள்
    கருத்தால் வணங்க வரத்தால் அபய
    கரத்தால் அணைப்பாள் குளிர்ந்து….(44)….20-11-2009

    மாரி சமயபுரக் காரி சதுர்வேத
    தாரி பிரியா அரனர்த்த -நாரி
    லலிதஅதி காரி கலிதீர சேரீர்
    பலிதஉப காரி பதம்….(45)….21-11-2009

    தேனைக்கால் ஏந்தி திரிகின்ற வண்டேபோல்
    ஊனைக்கால் தாங்க உலகுற்று -நானைப்போய்
    பானைத்தோல் மேனியாய் பாவிக்கா பேறரிவை
    ஆனைக்கா அம்மா அருள்….(46)….21-11-2009

    ஆயிரம் கண்ணுனக்கு ஆனாலும் கேட்கின்றேன்
    தாயினும் சாலத் தெரிந்துபார் -மாயிநீ
    அல்லா(து) எனக்கிங்(கு) அருளார் செய்வாய்இச்
    செல்லாத காசை செலவு….(47)….21-11-2009

    நையப் புடைத்துநம் மையல் விரட்டிட
    கையில் மணிப்பிரம்பு கொண்டவள் -உய்ய
    மனோண்மணி பாதங்கள் மகாகவி ஆக்கி
    சிரோன்மணி சேர்க்கும் சிறப்பு….(48)….21-08-2009

    மயிலை கபாலீஸ்வரர் ரிஷப வாகனத்தன்று எழுதியது….
    ———————————————————————-
    புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
    பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
    விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
    மடையோனென் நாவில் மலர்….(49)….25-03-2010

    ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….(50)….14-10-2010

    மூகாம் பிகைஈசன் பாகாம் பிகைபக்தர்
    மோகாம் பிகையாள் மலர்த்தாளில் -பாகாய்
    உருகிக் கிடக்க உதவா மனமே
    கருகிக் கரையும் கபடு….(51)….20-02-2009

    மாதவன் சோதரி ஆதிரைப் பத்தினி
    பூதலம் காக்கும் பராசக்தி -ஆதரி
    மைலாப்பூர் கற்பகமே மாற்றிந்த மூடன்நான்
    கையிலாப்பை கொண்ட குரங்கு….(52)….25-07-2011

    பூரணி வைகுண்ட நாரணி கைலாச
    நீறணி நாதனின் நாயகி -கூறுநீ
    கோத்திரப் புத்திரனாய் கொள்வேன் எனையென்று
    பூத்தர செவ்வாய் புலர்ந்து….(53)….25-07-2011

    சகுனங்கள் சாரா சழுக்குகள் சாரா
    ககனநவ கோள்கள் கொடுக்கும் -சகலவித
    தோஷங்கள் சாரா திருக்குவினை சாராமெய்
    பூசுங்கண் சக்த்தியைப் போற்று….(54)….25-07-2011

    மகிடா சுரனின் மகுடம் தெறித்து
    பகடைபோல் பாயப் பறித்து -சகடனை
    செற்ற முகுந்தனின் உற்ற சகோதரி
    வெற்றி வழிக்கு வரம்….(55)….25-07-2011

    வேத வயலது வித்தைப் பயிரது
    கோதுகளை நீக்கும் கரமது -சாதகன்
    நோயுறா வண்ணம் நல்லான் மனாய்மாற்றும்
    ஆயிரங் காலத்து ஆய்(தாய்)….(56)….25-07-2011

    இவ்வுலகில் நின்னருள் இல்லா(து) உடையுமோ
    வெவ்வினைகள் பூட்டி வளைவிலங்கு -அவ்வண்ணம்
    ஆகாது தேவி அடியவன் இப்பாவி
    தேகான்ம பாவத்தைத் தீர்….(57)….26-07-2011

    வார்த்தைகள் அற்ற வெளிகண்டு விண்டாதோர்
    போர்த்தும்மெய் ஞானப் புடவையே -தீர்த்தங்கள்
    முங்கியென் சேத்திரங்கள் தங்கியென் சம்புயிட
    பங்கியுனைக் காணாத போது….(58)….26-07-2011

    வம்பாளாய் வாழ்ந்து வசைபாடி பொய்யுரைத்து
    தெம்பாளும் யவ்வனம் தேய்ந்தபின் -அம்பாளை
    மூப்பில் முனகலாய் கூப்பிட கேட்பாளே
    யாப்பிலா குப்பையெதற்க்(கு) என்று….(59)….26-07-2011

    வெண்பா தருவதென் வேட்கை தணிக்கவா !
    அம்பாளுன் அச்சார ஆதரவா !-என்பதை
    வேழனும் வேலனும் சூழநின் சம்புவொடு
    ஏழையென் கண்முன் இயம்பு….(60)….26-07-2011

    அட்டாங்க நிட்டையில் மொட்டாய் மலர்ந்திங்கு
    கிட்டாத இன்பம் கொடுப்பவளே -தட்டாது
    அப்பேறு நானடைய அன்னையே கந்தனின்
    அப்பா ருடனெனை ஆள்….(61)….26-07-2011

    சுத்தம் அசுத்தமென சோதித்(து) அயர்ந்திடும்
    புத்தியின் பேதத்தைப் போக்கிடு -பித்தரின்
    வாமத்தில் நின்றிடும் ஜாமத்து நீலமே
    காமத்தைக் காளி களை….(62)….26-07-2011

    எழுதாத நாளே பழுதான நாளாம்
    பொழுதென்றும் வெண்பா புனைந்து -தொழுதிட
    செய்வாய் சிபாரிசு செவ்வேள் முருகனிடம்
    ”பெய்வாய் தமிழ்மோஹன் பால்”….(OR)
    பெய்வாய் தமிழென்று பேசு….(63)….26-07-2011

    பெண்மூலம் நிர்மூலம் பேசிடும் பேதைகாள்
    கண்மூலம் காத்திடும் கற்பகக் -பெண்மூலம்
    ஜாதகம் சொல்லும் சனிசெவ்வாய் தோஷங்கள்
    பாதகம்போய் ஆகும் பலன்….(64)….27-07-2011

    மஞ்சள் நிறப்பட்டில் மாணிக்க யாழ்மடியில்,
    கொஞ்சும் கிளியேந்தி கற்பனையை -விஞ்சிடும்
    வண்ணம் கொலுவிருக்கும் அன்னையை எண்ணுவோர்
    முன்னம் தமிழ்வண்டு மொய்ப்பு….(65)….27-07-2011

    சிங்கா சனமேறி சூலம் கரமேந்தி
    எங்கேனும் தீங்கு எழுந்தக்கால் -அங்கே
    குதித்திடும் தேவி பதித்திடும் பாதம்
    துதிப்பவர் நெஞ்சில் தெருள்….(66)….27-07-2011

    அபாயம் எனக்கூவி அஞ்சிடும் நெஞ்சே
    உபாயம் உனக்குரைப்பேன் ஒன்று -கபாலம்
    கலைமான் கரத்தோன், கலைநீர் சிரத்தோன்
    சிலைமா துமையை சரண்….(67)….27-07-2011

    பாலை வனக்கானல் சோலை புவிவாழ்வு
    நாளைக் கடத்தாதே நன்நெஞ்சே -தோலைத்
    தளர்த்தி வயோதிகம் தீண்டிடும் முன்னம்
    உளத்தில் உமையாளை உன்னு….(68)….27-07-2011

    மூப்பு முருங்கையில் தீர்ப்பூ மரணமுண்ண
    தோற்பிளமை வேதாளம் தொத்திடும் -காப்பில்
    மனம்தளரா விக்கிர மாதித்த தேவி
    மனம்குளிர என்றுமிள மை….(69)….27-07-2011

    சகவாச தோஷம் புகமோசம் போகா
    சகவாசம் சத்தில் சிலிர்க்க -சகவாச
    ஈசருடல் கொண்ட இடபாகி இங்கெனக்கு
    நீசருடன் வேண்டாம்சேர் நட்பு….(70)….27-07-2011

    நட்பெனக்(கு) இங்குன் நினைவே போதுமே
    கட்புலன்கள் கூட்டும் கிளர்ச்சியை -நுட்பமாய்
    காற்றில் புனலில் கனல்நீரா காசத்தில்
    விற்றிருக்கும் வாசி விலக்கு….(71)….27-07-2011

    விலக்கவொணா வாழ்வின் நிலைக்கதவு ஆசை
    அலைக்கழித்து ஐம்புலனை ஆட்டும் -முலைகனக்க
    சம்பந்த சேய்க்கு சுரந்தாய் அதுபோல
    நம்பந்தம் ஆக நினை….(72)….27-07-2011

    நினைவை மடக்கி மனதை முடக்கி
    அணைவை புலனை அடக்கி -கணைவிற்
    புருவத்தாள் ஞான உருவத்தாள் பாதம்
    மருவத்தூள் தூளாகும் மாசு….(73)….27-07-2011

    மாசுணப் புற்றில் மகிழ்ந்துகை விட்டாற்போல்
    ஆசுணம் ஐம்புல ஆசைகள் -வீசுநற்
    காற்றால் கமகமக்கும் குன்றிமைய பார்வதிமுன்
    தோற்று அடங்கும் திருக்கு….(74)….27-07-2011

    திருக்கை உபயம் திருக்கால் அபயம்
    சறுக்கி விழாத சபையும் -இருக்கையும்
    போட்டுக் கொடுக்கும் பராசக்தி பக்தரைக்
    கேட்டுத் தெரிந்துகொள் கூட்டு….(75)….28-07-2011

    கூட்டும் ரசமும் குழம்பும் பொறியலும்
    போட்டுப் பிசைந்து பருகிடும் -நாட்டம்
    விடுத்தவள் நாமம் விடாதோதும் பக்தர்
    படுத்தயிடத் தில்பால் பழம்….(76)….28-07-2011

    பழம்நழுவிப் பாலில் விழவைக்கும், மூப்புக்
    கிழம்குழவி போலே குதிக்கும் -அழும்
    படிவாழ்வில் துன்பம் படர்கின்ற நேரம்
    மடிதாங்கித் தேற்றுவாள் மா….(77)….28-07-2011

    மாகாளி சங்கரி மாதங்கி பார்வதி
    ஆகாலி மேய்ப்போன் அருந்தங்கை -மாகாளை
    வாகன ஈசனார் பாகத்(து) அமைவோளின்
    மோகன சக்தியில் மூழ்கு….(78)….28-07-2011

    முழ்கிக் குளித்தெழுந்து முப்புரி நூலிழந்து
    கூழ்கலம் காவி கமண்டலம் -சூழ்ந்திட
    சந்யாசம் கொண்டாலும் சத்தியத்தை சந்திக்க
    பெண்வேஷ சக்த்தியைப் பேணு….(79)….28-07-2011

    பேனும் பொடுகும் புகுந்தபெண் கூந்தலை
    வானத்து மேகமென்று வர்ணித்து -மானம்
    தொலைத்துப் புணர்ந்து திளைத்தது போதும்
    நிலைத்த பகவதியை நாடு….(80)….28-07-2011

    நாடியதும் தேடியதும் ஆடியதும் கூடியதும்
    ஓடி ஓளிந்திடும் ஓய்ந்ததும் -ஆடிவரும்
    வெள்ளிக்கு அம்பாளின் வெண்பொங்கல் வேகவைக்கும்
    சுள்ளிக்கும் சொர்கச் சிறப்பு….(81)….28-07-2011

    சிறப்பவள் சக்தி சினமவள் யுக்தி
    சுரப்பவள் பக்தி ஜகத்தில் -பிறப்பு
    இறப்பவள் ஆட்சி இருப்பவள் மாட்சி
    திறப்பவள் மோட்சத் திரை….(82)….28-07-2011

    திரைவிழுந்து கண்ணில் நரைபடர்ந்து இல்லச்
    சிறைகிடந்து வாழ்வாய் ஜடமாய் -தரைபடர்ந்து
    பின்புசவம் ஆகாது பேரின்பம் பெற்றிட
    அன்புசிவம் பாதி அணுகு….(83)….28-07-2011

    அணுகிட அன்னை, துணிகரத் தோழி
    முனகிட தாதி, மறலி -முனைய
    மனுகொடு நீயும் சினமொடு தாயுன்
    வினைகெட பாயும் வெகுண்டு….(84)….28-07-2011

    வெகுண்டெழும் சிங்கம் விரலசைத்து பக்தர்
    புகன்றிடப் பூனையாய் போகும் -திகழ்ந்திடும்
    பட்டர்க்(கு) அருள பவுர்ணமி சந்திரன்
    முட்டுமம்மா வாசை முடித்து….(85)….28-07-2011

    முடிந்தனை நாத்தனார் மூன்றம் முடிச்சை
    தடந்தோள் தமிழைத் தழுவ -இடம்தனை
    ஆதலால் வாரண ஆயிரத்தில் பெற்றனை
    கோதையாள் உள்ளம் குளிர்ந்து….(86)….28-07-2011

    நாவில் கலைமங்கை, மாவில் மலைமங்கை
    காவில் அலைமங்கை, கள்ளூறும் -பாவிலோ
    கோதையவள், ஆவிலே காமதேனு, மாவில்லில்
    சீதையவள் மொத்தத்தில் சித்….(87)….27-07-2011

    சித்தா னவள்வேத வித்தா னவள்ஜீவன்
    முத்தியில் சேர்ந்திடும் மூலமவள் -பத்தியில்
    பித்தா னவளிமய தத்தா னவளீசர்
    சொத்தா னவள்பதம் சேர்….(88)….27-07-2011

    சேறில் மலருமோ செந்தா மரைமுழுச்
    சோறில் மறையுமோ பூசணி -கூறம்மே
    பாவியென் நெஞ்சையெப் பாடுபட் டேனும்நீ
    கோயிலாய் செய்துவை கால்….(89)….27-07-2011

    காலை நனைத்திடும் நீலத் திரைகடல்
    ஓலம் ஒலித்திட ஓங்காரம் -ஜாலமாய்
    பூக்கொத்து போல்நிற்கும் பூவைக் குமரியின்
    மூக்குத்தி ஜோதியை மொய்….(90)….28-07-2011

    மொய்யெழுத வேண்டாம் மகமாயி உண்டியில்
    மெய்யுருக வேம்பை மடிசுமந்து -கையழுந்தக்
    கூப்பி அவள் கோயில் கோபுரத்தைக் கும்பிட
    காப்பவள் தண்டைக் கழல்….(91)….28-07-2011

    கழலவளை கொண்டுவந்துன் கண்முன் நிறுத்தும்
    கழலுதைக்கு அஞ்சுவான் காலன் -கழலுதிர்க்கும்
    தூளியுன் நெற்றி துலங்கவெண் நீறாக
    காளியுன் ஆயுளுக்கும் காப்பு….(92)….29-07-2011

    காப்பாள் கருமாரி, கைகொடுப்பாள் கற்பகம்
    கோர்ப்பாள் இருவரையும் காளிகாம்பா -வார்ப்பாள்
    இகம்மீ னாட்சி அகம்விசா லாட்சி
    சுகம்காஞ்சி காமாட்சி சேர்ந்து….(93)….29-07-2011

    சேர்ந்து களித்தது சோர்ந்து தனித்தது
    நேர்ந்திடாத வாழ்வு நிலைத்திட -சார்ந்திரு
    முண்டகக் கண்ணியின் மூலக் கருவறையில்
    தொண்டர் குழாமுடன் தோய்ந்து….(94)….29-07-2011

    தோய்ந்த தயிரை திருடி சகாக்களுடன்
    மேய்ந்த மலையடியில் மல்லாந்து -சாய்ந்துண்போன்
    செல்ல சகோதரியை கொல்லூர்மூ காம்பிகையை
    உள்ளப் பசியாற உண்….(95)….29-07-2011

    உன்னை நினைக்கையில் உள்ளம் உருகணும்
    என்னை மறந்துநான் ஏகாந்தம் -தன்னையே
    கொள்ளவும் அன்னையே கூட்டாய் அரனுடன்
    முள்ளெனுமென் நெஞ்சில் மலர்….(96)….29-07-2011

    மலரோ கனியோ இலையேல் இலையோ
    புலரும் அதிகாலைப் போதில் -குளிரக்
    குளித்தவள் பாதத்தில் கும்பிட்டு சேர்க்க
    களித்தவள் காப்பாள் குலம்….(97)….29-07-2011

    குலம்தழைக்கும் வாழ்வில் வளம்கொழிக்கும் வாக்கில்
    நலம்சிழிக்கும் மேலோர்தம் நட்பு -பலம்தழைக்கும்
    காமக் களமொழிக்கும், கூற லலிதா
    நாம சஹஸ்ரம் நமக்கு….(98)….29-07-2011

    நமக்குத் தொழில் நதிகங்கை இந்து
    சுமக்கும் சிவனிடம் சேர்ந்த -கமக்கும்
    குழல்தாங்கும் சக்தி கமல பதத்தை
    தொழல்கூலி சும்மா இருப்பு….(99)….30-07-2011

    இருப்பாள் இருந்தும் இராதாள் இவளை
    குறிப்பால் அறிதல் கடினம் -நெருப்பால்
    ஜலத்தால் வளியால் நிலத்தால் வெளியால்
    புலத்தால் உணரா பரம்….(100)….30-07-2011

    பரசிவ வெள்ளம் பருகிட உள்ளம்
    பரமஹம்ஸ பேரின்பம் புல்லும் -வரசவம்
    கங்கையில் மந்திரம் கர்ணத்தை ஓதிட
    தங்குபவ தாரிணித் தாய்….(101)….30-07-2011

    தாயவள் தாலாட்டு தூங்கும் விழிப்புணர்வை
    போயெழுப்பிப் பால்ஞானம் போட்டிடும் -நோயவளை
    கொண்டோர்க்கு சாவில்லை கூற்றுவன் மூப்பதை
    அண்டா(து) அளித்திடுவான் அம்….(102)….30-07-2011

    அம்மென்(று) அளிப்பவள் உம்மென்(று) உழைப்பவள்
    இம்மென்(று) இறைப்பவள், ஈசனார் -கம்மென்று
    பார்த்திருக்க ஆன்மனாய், பற்பல ஜீவனாய்
    பூத்திருப்பாள் சக்தி பரந்து….(103)….30-07-2011

    பறப்பாள் அடியார் பெருந்துயர் தீர்க்க
    பொருப்பாள் மருவும் பொழுதும் -சுரப்பாள்
    அவர்மேல் அருட்பாலை அன்னை, சகத்தில்
    இவர்போலிங்(கு) உண்டோ இறை….(104)….30-07-2011

    இறையவள், நான்கு மறையவள், நாதர்க்(கு)
    அரையவள், தீவளிவான் அப்பு -தரையவள்
    பக்தித் துறையவள் முக்தி அறையவள்
    சக்தியுறை பாதம் சரண்….(105)….30-07-2011
    ——————————————————————————————— 

       வெண்பூ வெண்பா
       ————————

      (சரஸ்வதி வெண்பாக்கள்)
      ————————————

                                                           
               சு.ரவி ரவிவர்மா ஓவியம் பார்த்து
               —————————————
      எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை
      பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் -உன்நுதல்
      குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில்
      தங்கிய மூக்குத்தி தூள்….(1)….09-05-2008 
     
     நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
     பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
     அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
     கலையாளை சேரக் கவி….(2)….01-04-2008

     நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
     தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
     கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
     அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)….21-11-2008

     ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
     கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
     பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
     ஆய கலையாள் அருள்….(4)….2-12-2008

     வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
     மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
     வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
     தேக்கும் வடிக்குமே தேன்….(5)….25-12-2010

     பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
     தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
     நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
     வாணி வரமருள்வாய் நீ….(6)….27-09-2009

     தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
     ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
     புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
     மனக்கிலேச யாழினை மீட்டு….(7)….13-12-2009

     வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
     நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
     புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
     சராசரங்கள் சேரும் சபை….(8)….02-01-2010

     கட்டளை போடு கலித்துறைக்கு பாரதி
     கட்டளை கோர்ப்பெனக்கு கைவர -வெட்டவெளி
     வெண்பா களித்துறையில் வாழவைத்த வாணியே
     என்பால் கலித்துறைக்கேன் ஏய்ப்பு….(9)….12-08-2011

     சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
     பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
     வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை 
     பெண்பாவாய் பாடிப் பற….(10)….12-08-2011

     நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
     அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
     பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
     சொற்றுளியால் சீராய் செதுக்கு….(11)….12-08-2011

     மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
     பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
     ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
     தாயே எனக்குமதைத் தா….(12)….12-08-2011

     சவ்வாது சந்தனம் சத்தியம் அவள்வாக்குக்(கு)
     ஒவ்வாத வாச உபமானம் -இவ்வாத
     உண்மை உணர்ந்தகம்பன் ஓதினன் அந்தாதி
     அம்மை சரஸ்வதிமேல் அன்று….(13)….12-08-2011

     வேதம் உபநிடதம் வித்தைகள் எண்ணென்னும்
     பாதம் விளையாடும் பிள்ளைகள் -மாதம்மும்
     மாரியும் பெய்தலாய் மாண்புமிகு கல்வியதி
     காரியின்கண் பார்க்கக் கவி….(14)….12-08-2011

     காமுறுவாள் கற்போர்மேல் கைகொடுக்கக் கற்பகமாய்
     நாமருவி நூற்சேலை நெய்திடுவாள் -பூமருவும்
     வாவிவளர் கூத்தனூர் தேவி சரஸ்வதி
     தாவி அளிப்பாள் தமிழ்….(15)….12-08-2011

     துமியென்ற கம்பன் தவறில்லை என்று
     சமயத்தில் செய்தாள் சகாயம் -தமிழென்று
     ஆய்ச்சியாய் வந்தன்று பேச்சு வழக்காக்க
     கூச்சலிட்ட கூத்தன் களைப்பு….(16)….12-08-2011

     காளிதாச கம்ப குமர குருபரர்கள்
     தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
     கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
     கைக்குட்டை யாய்கையில் கட்டு….(OR)
     கைக்குட்டை யாய்கை கொடு….(17)….12-08-2011

     படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
     மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
     கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
     வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)….12-08-2011

     வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
     தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
     மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
     ஞானத்தை நானுற நல்கு….(19)….12-08-2011

     அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
     பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
     ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
     மாற்றுத் துணியாய் மனது….(20)….12-08-2011

     கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
     வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
     கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
     தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)….13-08-2011

     வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
     சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
     பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
     பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)….13-08-2011

     துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
     சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
     கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
     நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)….13-08-2011

     சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
     துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
     சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
     வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)….13-08-2011

     கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
     சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
     கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
     கிரகங்கள் கூப்பும் கரம்….(25)….13-08-2011

     வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
     மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
     அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
     முளைத்திடு முண்டக மா….(26)….14-08-2011

     உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
     களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
     ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
     ஓசை சதங்கையொலி ஓம்….(27)….14-08-2011

     நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
     ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
     பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
     படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)….14-08-2011

     கோனார் கணக்கினில், கம்பன் கவிதையில்
     நானார் விளக்கநூல் நாற்பதில் -மூணாறில்
     எண்ணும் எழுத்துமாய் எங்கும் இருப்பவளை
     எண்ணல் அயன்கை எழுத்து….(29)….14-08-2011

     பேசக் கொடுத்ததில்லை பாரதியின் தாய்மொழி
     கோஷமிட்டு கூற்றன் குதிக்கஆ -வேசமுற்று
     நாரணா, நான்முகா, நாதா நமச்சிவாயா
     கூறநா கிட்டிடும் காப்பு….(30)….14-08-2011

     எண்ணமவள் நேற்று எழுத்தவல் இன்றுநாம்
     பண்ணும் செயலவள் பின்நாளை -பெண்ணவள்
     ஆன்றோர்க்கு ஞானம் அறிவிலார்க்கு ஆணவம்
     தேன்தோன்றும் தாய்சொல் தமிழ்….(31)….14-08-2011

     கீரன் திருமுரு காற்றுப் படையவள்
     மாறன் திருவாய் மொழியவள் -சூரன்
     மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு
     தகாதோர் செவிக்கவள் திட்டு….(32)….14-08-2011

     வண்டுவந்து மொய்க்கா வரைந்த மலர்சோலை
     கொண்டவர்மன் ஓவியத்தில் கால்மடித்து -முண்டகத்தின்,
     மெல்லிதழில், தோகை மயிலன்ன தடாகத்தில்
     நல்கிடுவாள் யாழில் நலம்….(33)….14-08-2011

     என்பிழைகள் ஏராளம் என்றாலும் அன்னையே
     புன்மொழியான் என்னைப் பொறுத்தருள்வாய் -உன்விழியால்
     கூட்டு தமிழை கவிபாடும் ஆற்றலை
     ஏட்டுச் சுரைக்காய் எனக்கு….(34)….15-08-2011

     பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
     பார்ப்பாள் பராசக்தி பாரதி -வாக்கில்
     வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
     தனயனென ஏற்பாள்அத் தாய்….(35)….17-08-2011

     வேசிவரக் காத்தவடை தோசை வரதனை 
     ஆசுகவி ஆக்கிய ஆனைக்கா -ஆசிகையே
     காளமேகம் வாய்க்கெட்டி கைக்கெட் டியவாணி
     மூளயோகம் என்வாய்க்கும் மூட்டு….(36)….18-08-2011

     பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
     காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
     தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
     காவியம் கொட்டும் களிப்பு….(37)….19-08-2011

     சாத்திரங்கள் வேதங்கள் கூத்தனூர் தேவியின்
     நேத்திரத்து தீர நுணலிமைகள் -பாத்திரம்
     கண்டவள் பார்வை கருவண்டு போடுமே
     பண்டிதப் பிச்சை பிறப்பு….(38)….19-08-2011

     பண்டித வன்புலிக்கு பாமரத் தோல்போர்த்தும்
     மண்டை கனத்தில் மிதக்குங்கால் -எண்டிசைக்கும்
     மூளியைக் காவிய மன்னனாய் மாற்றிடும்
     காளியின் தாஸன் கதை….(39)….19-08-2011

     வேதவ்யாசன் சொன்னது வேழம் தொகுத்தது
     கீதையைக் கண்ணன் கொடுத்தது -ஏதுமே
     வெற்றிக்குப் பின்னிருந்து வாணி விதைத்ததே
     முற்றும் துறக்கவும்அம் மாது….(40)….19-08-2011

     கூனியின் சூழ்ச்சியும் கைகேயி வீழ்ச்சியும்
     மானி இராமன் முதிர்ச்சியும் -தோணி
     குகனின் நெகிழ்ச்சியும் குன்றனைய வாயு
     மகனனுமன் வாக்குமவள் மாண்பு….(41)….19-08-2011

     பால்முகமும் வேல்விழியும் மால்மருவா நூல்மருங்கும்
     ஆல்சிவன்பெண் பால்வடிவாய், நால்மறையும் -தாள்தழுவ
     சீதமலர் போதமர்ந்து போதிக்கும் ஏதமில்
     லாதவள்யாழ் கீதம் லயிப்பு….(42)….19-08-2011

     கூனியின் சூழ்ச்சியில் கைகேயி வீழ்ச்சியில்
     மானி இராமன் முதிர்ச்சியில் -தோணி
     குகனின் நெகிழ்ச்சியில் குன்றனைய வாயு
     மகனின்சொல் வாக்கிலவள் மாண்பு….(43)….19-08-2011

     காடுவரை சென்றங்கு கொள்ளியில் வெந்துஎமன்
     ஏடுரைத்த வண்ணம் எரிவாயில் -போடும்முன்
     முட்டா ளையும்காக்கும் மந்திரமாம் வாணியைநா
     கட்டாலப் போறவனே கொள்….(44)….19-08-2011

     தாத்தனூர் சேர்த்த திரவியங்கள் செல்லாது
     கோர்த்தநூறு சுற்றமும் கூடவரா -கூத்தூர்
     பேடையை நம்பிநீ பாடை படுத்திருக்க
     காடென் கடைசிவரை காப்பு….(45)….19-08-2011

     கல்லறைக் காட்டினில் செல்லரித் தாலுமுடல்
     சொல்லரித்துப் போகாது சோர்வடையாய் -புல்லரித்து
     போற்றி உனைத்தூக்கி பூர்புவஸ் லோகத்திற்(கு)
     ஏற்றி விடுவான் எமன்….(46)….19-08-2011

     தெக்குவாய் கூறிடும் தோத்திரங்கள் சுத்தமாய்
     மக்குபோய் ஆளும் மகாசபை -சுக்கலான
     ஓலைச் சுவடி உவேசா அவர்களால்
     நாளைக் கடந்துநிற்கும் நூல்….(47)….19-08-2011

     கற்றதனால் ஆயபயன் நற்றமிழாள் நல்லுறவைப்
     பெற்றதே போதுமென்று போதியமர் -மற்றதெலாம்
     செந்திருவால் செல்வமும் சங்கரியால் வீரமும்
     வந்திரும்பார் வாணி வகுத்து….(48)….19-08-2011

     போகத்தில் விந்து புகுமுன் புகுந்தங்கு
     மோகச் சினைமுட்டை மூளையை -வேகவைத்து
     பாமரனா, பண்டிதனா, மாமர மண்டையா
     தாமரையாள் தந்திடுவாள் தீர்ப்பு….(49)….20-08-2011

     உச்சிக் குடிமியை ஊடாடும் பூணலை
     மெச்சிடும் ஆசார மேன்மையை -த்ச்சமாய்
     எண்ணும் கலைவாணி ஏற்பாள் வினயத்தை
     கண்ணின் மணியாய்க் குறித்து….(OR)
     மின்னும் அணியாய் மகிழ்ந்து….(50)….29-08-2011  

     வீணை படிகமணி வேதக் கரத்தளை
     பானை பிடிக்குமயன் பத்தினியை -சேனை
     கலைகள்எண் ணென்சூழ செந்தா மரையில்
     விளையும்வெண் பூவை வணங்கு….(51)….21-08-2011

     பத்தரைப் பொன்னில் பதினாறாம் யவ்வனத்தில்
     முத்திறைக்கும் சேயின் முறுவலில் -சித்திரையில்,
     புத்தரின் மோனத்தில், புண்ணிய தீர்த்தத்தில்
     இத்தரைதர் மத்தில் இவள்….(52)….21-08-2011

     காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்
     வாசி அடக்கும் விளையாட்டில் -பூசிடும்
     மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
     ஆ!சிரி அப்பா அவள்….(53)….21-08-2011

     தண்டடியில் தூங்கி தவமகுடி கேட்டெழுந்து
     மண்டயிடித் தாங்கே மலமறுக்கும் -குண்டலினிப்
     பாம்புக்(கு) அடங்காது, பாரதியின் கண்ணிநுண்
     தாம்புக்(கு) அடங்கத் தெருள்….(54)….21-08-2011

     ஈரெட்டு ஆறெட்டை ஈன்றவள், நான்மறையை
     சீராட்ட வந்த செவிலித்தாய் -பாரேட்டுப்
     பாக்கள் பதிகங்கள் பாசுரங்கள் யாவையும்
     ஆக்கி சமைத்திடும் ஆய்….(55)….22-08-2011

     அஞ்சிலே சம்பந்தர்(கு) ஆரா அமுதளித்து
     பிஞ்சில் பழுக்கவைத்த பார்வதி -கஞ்சியை
     கல்வி ‘நகரேஷு காஞ்சி’யாய் ஆக்கினள்
     செல்விகா மாட்சியில் சேர்ந்து….(56)….22-08-2011

     பொற்றா மரைக்குளமே, போட்ட பதிகங்களை
     சற்றும் முழுகாது சேர்த்தவளே -கொற்றவள்
     மீனாட்சி பிள்ளைத்த மிழ்சொல் குருபரர்
     நாணாச்சு வில்லம்பு நீ….(57)….22-08-2011
     
     எண்ணென் கலைகளை ஏழு சுரங்களில்
     பண்ணென யாழில் பயின்றிடும் -அன்னத்து
     வாகனன் பத்தினி வெண்தா மரைவாணி
     மோகனென் வாக்கினில் முந்து….(58)….17-07-2007
     
     வேதயிதி ஹாசபு ராண உபநிடதம்
     யாதுமுன் மூச்சில் இழையும்சங் -கீதமாகும்
     கோத்த படிகமாலை யோடுகூத்த னூர்வாழும்
     ஆத்தாளே ஆசுகவி ஆக்கு….(59)….17-07-2007
     
     வித்தை சிறக்க விளைவுகள் மேன்மையுற
     சித்தம் சிதறாது சீர்பெற -புத்தியில்
     வாநீ அமர்ந்திட வாக்கு பெருகிட
     வாணியின் தாளை வணங்கு….(60)….17-07-2007

     தன்னேரில் லாதவள் தானே தனக்குவமையாள்
     பொன்னேர் முகமும் புலமையால் -மின்னேர்
     வசீகர வாணி வழங்குவாள், ஞானப்
     பசீகரம் ஏந்திப் பிழை….(61)….23-08-2011

     வெற்றிட மாய்விளங்கும் சிற்றிடையை, செந்தமிழ்ப்பால்
     முற்றியத் தாய்மை முலையிரெண்டை -நெற்றியிடைக்
     குங்குமப் பொட்டை, கமலத் தயன்பெட்டை
     செங்கமல மொட்டை சரண்….(62)….23-08-2011

     வந்தனம் பாரதி வாணி சரஸ்வதி
     மந்தனென் மூளை முடுக்கினில் -வந்துநுண்
     ஆன்ம தரிசன ஆர்வம் பெருக்கிடு
     நான்மகன் அன்றோ நினக்கு….(63)….23-08-2011

     வாணி மஹாலதன் வாசலில் வீற்றிருக்கும்
     ராணியே நாடக ஏணியே -நானினி
     எப்போதும் நிந்தன் எழிலுருவை மாந்திட
     இப்போதே நெஞ்சம் இரங்கு….(64)….23-08-2011

     கோபம் அகங்காரம் கர்வம் புறங்கூறல்
     தாபம் தணியாதோர் தீவீரம் -பாபம்
     வரிந்திடச் செய்திடும் வீணர்தம் தீங்கில்
     இருந்திட மாட்டாள் இவள்….(65)….23-08-2011

     கம்பனின் இல்லத்து கட்டு தறிபாட
     நம்புமென் வாயுண்ணும் நோன்பிற்கா -அம்பையே
     உண்ணதான் வாயென்றால் ஊமையாய் ஆக்கிடு
     பண்ணது பின்னேபெப் பே….(66)….23-08-2011

     தோப்பில் துரவில் தளும்பும் அடவியில்
     மோப்பம் பிடிக்கும் மலர்வண்டில் -மேய்ப்புல்லின்
     வண்ண மரகதத்தில் வெற்படி வாரத்து
     மண்ணில் மழையின் மணம்….(67)….23-08-2011

     வாதாடல் வம்பிழுத்தல் வஞ்சித்தல் வைத்துமனை
     சூதாடல் மாற்றான் மனைசுகித்தல் -தோதாக
     வந்தவரை ஏய்த்து வழிப்பறி செய்தலிவை
     அந்தவா ணிக்கு அவம்….(68)….23-08-2011

     சத்துவத்தில் சாந்தமாய், சாகசத்தில் ராஜசமாய்
     சுத்தமன தாமசத்தில் சும்மாவாய் -அத்தனையும்
     தாண்டி அனுபூதி தந்திடும் தாயிவளை
     வேண்டிட வையத்தில் வான்….(69)….23-08-2011

     வலுவிவள் சேர்க்கை, வளமிவள் நூற்கை
     புலியிவள் மான்தோல் போர்த்தி -எளிமையாய்
     கோலம் கொடுத்தாலும், கூறக் கலம்பகம்
     காலன் உயிருக்கே காவு….(70)….24-07-2011

     கற்பனை தந்து கவிதை களைத்தந்து
     தற்பெருமை தந்துனைத் தாழ்த்திடுவாள் -அற்பனாய்
     செய்வள் சரஸ்வதி, சிந்தைக்கப் பால்செல்ல
     பெய்வள் திருஞானப் பால்….(71)….24-08-2011

     தனியானை வரும்முன் மணியோசை யாம்போல்
     கனிவான சொல்முன் குரலில் -தணிவும்
     உடையவர்கள் நாவில் சடையப்ப வள்ளல்
     கொடையளிப்பாள் கம்பன் கவிக்கு….(72)….24-08-2011

     கோல மயிற்சாயல் கூவும் குயில்வாயள்
     நூலை நிகர்த்துநெளி நுண்ணிடையாள் -பாலை
     வனச்சோலை பாக்கள் விழையும் கவிக்கு
     மனச்சோர்வை நீக்கும் மருந்து….(73)….25-08-2011

     எழுதா கிழவி, எழுதிப் பழக
     பொழுதும் அணைத்துப் புணரும் -அழகி
     துடியிடையில் பிள்ளைத் தமிழேந்தி, வேண்ட
     பொடிநடை யாய்வருவாள் பார்….(74)….26-08-2011

     வெண்தா மரைமேனி, செந்தா மரைப்பாதம்
     விண்தா மரைபூத்தோன் வல்லியே -கண்தா
     மரைபாராய் பண்தா மறைவாணி என்தாய்
     முறையன்றோ நீயிம் மகர்க்கு….(75)….26-08-2011

     பாழெனத் தள்ளாதிப் பாவியை உந்தன்கை
     யாழெனக் கொண்டுமடி ஏந்திடு -ஊழெனை
     வாட்டாத வண்ணம் வகைசெய்வாய் வாணி
     பாட்டெழுதப் போகுமே பாடு….(76)….27-08-2011

     தேவாரம் வேண்டாம் திருவாய் மொழிவேண்டாம்
     நாவோரம் நின்றென்னை நானறியும் -தீவீரத்
     தேடலில் ஈடுபட்டு வீடான் மனிலென்றும்
     நீடூழி வாழவைவா ணி….(77)….28-08-2011

     கூத்தன் சபாபதி கூடப் பிறந்ததால்
     கூத்தனூர் கொண்டாயோ கோயிலாய் -வாத்தியார்
     அம்மா எனக்களிப்பாய் ஆடா(து) அசங்காது
     சும்மா இருக்கும் சுகம்….(78)….29-08-2011
     
     காளமேகம் வெண்பாவில், கம்பன் விருத்தத்தில்
     காளிதாசன் கற்பனை கங்கையில் -ஏளுகின்ற
     பார தியெனதுவெண் பாக்களில் சீராக
     ஊர திசியக்க உய்….(79)….29-08-2011

     சங்கத் தமிழும், சதுர்மறையும், சாத்திரமும்
     செங்கண்மால் நாம சகஸ்ரமும் -சங்கரியின்
     ஆயிரம் பேரும் அதிகாரம் பெற்றது
     தாயிவள் வாய்வந்த தால்….(80)….29-08-2011

     நாடகம், சங்கீதம், நாட்டியம், முத்தமிழ்
     பாடும் பதிகங்கள் பாசுரங்கள் -நாடிடும்
     தன்முத் திரைபதிக்க தேவி சரஸ்வதியின்
     சின்முத் திரைக்கை சிறப்பு….(81)….29-08-2011

     சொல்லக்கேள் நெஞ்சே சகத்தில் பிறந்திறக்கும்
     அல்லல்தீர் மாமருந்து ஆகுமிங்கு -வெள்ளத்தை
     ஒத்து விரைந்துனக்கு ஓதுவிக்கும் ஓங்கார
     வித்தைக்(கு) அதிபதியின் வாக்கு….(82)….29-08-2011

     மாதவம் செய்தும் மகாயக்ஞம் செய்துமுன்
     தீதவம் தீராது, தாமரைப் -போதமர்
     வாணியை, ஞான விசார உயர்வளிக்கும்
     ஏணியை எந்நாளும் ஏத்து….(83)….29-08-2011

     நால்செல்ல நாள்செல்ல நாம்செல்ல வேண்டுமே
     ஆள்கொல்லி கூற்றன் அழைப்பானே -கேள்நல்ல
     வார்த்தைக்(கு) அதிபதி வாணியைப் போற்றிடப்
     பூர்த்தியா கும்பார் பிறப்பு….(84)….30-08-2011

     நாடுவாய் நெஞ்சே நளினம் அமர்வோளை
     சூடுவாய் நெஞ்சே சரோருகத்தாள் -பாடுவாய்
     நெஞ்சே பதுமத்தில் நல்லதோர் வீணையைக்
     கொஞ்சும் கலையாள் கழல்….(85)….30-08-2011

     அறிவு அலுத்திடும், ஆன்மீக ஞானச்
     செறிவு நிலைத்திடும் சான்றோர் -உறவாய்
     நெறியை உணர்த்திடும் நான்முகன் பத்தினி
     வெறிநான் அகந்தை விலக்கு….(86)….30-08-2011

     நாக்கில் நரம்பின்றி நாணாது பேசுவோர்
     வாக்கில் வராள்கலை வாணியவள் -தூக்கில்
     இடப்படும் போதும் இனியன கூற
     தடைப்படுமே தண்டனை தீர்ப்பு….(87)….30-08-2011

     கண்ணன் குழலில் கணபதி மோதகத்தில்
     வண்ண மயிலூர்வோன் வேல்முனையில் -மின்னிம்
     திருவில், மஹேசன் தவத்தில் திகழ்வாள்
     உருவிலிவள் பாயும் ஒளி….(88)….03-09-2011

    “தும்பைவெண் பட்டுடுத்தி தாமரை வீற்றவளை,
     நம்பிஊ டாடும்நன்  நூலிழையும், -கம்பனில்லக் 
     கட்டுத் தறியில்  கவியாகி நெய்துவெண்
     பட்டளிக்கும் பாரதிக்கே பார்”….(89)

    “கதிர்முகத்தாள் செந்நெல் கதிர்நகத்தால் யாழில் 
      உதிர்சுரத்தால் எண்எண் உரைப்பாள் -சதுர்முகத்தோன் 
      பத்தினி என்வாக்கில் பூத்திட நீயென்னைப்
      பத்திநீ எண்ணு பரிந்து”….(OR )
      பத்தினி, கம்பனை பாரதியைப் போலென்னைப்
      பத்திநீ எண்ணு பரிந்து”….(90)

    “தொழுகைக்கும் , காலில் விழுகைக்கும் , கண்ணீர் 
     அழுகைக்கும் வாணி அசையாள் – கழுகைத்தன் 
     வாகனமாய்க் கொண்டோன் வயிறுதித்தோன் பத்தினி
     நாகனமற் றோர்பால் நிலைப்பு”….(91)

    “நாபிக் கமலத்தில் நன்கமர்ந்து நானிலம் 
      சோபிக்க ஓதும் சதுர்முகனை -தாபிக்க 
      வைத்தவளைப் போற்றிட , வையத்(து ) தளவுகல்வி 
      கைத்தல நெல்லிக் கனி”….(92)

    ”அண்டாது  வெவ்வினைகள்,  ஆய  கலைகளை
      விண்டோதும்  வீணை  விரலாலைக் -கண்டோடும்;
      கொண்டாடும்  அன்பர்  குடும்பத்து  வாரிசாக
      வெண்டா  மரையாள்  விருப்பு”….(93)

    “விருந்தா வனக்கண்ணன் வேய்ங்குழல் வாக்கு,
     கருந்தா மரைக்கண்கள், கூறைக்குள் -பொருந்தாத 
     இல்லா இடையை , இருத்துவோர் புத்தியில் 
     சொல்லாள் பதத்தின் சுவடு”….(94)

    “சோதித்த பின்வாழ்க்கை சொல்லித் தரும்பாடம்;
     வேதத் தயன்மணந்த வாணியோ -போதித்து 
     கூட்டுவாள் சத்சங்கம் ,காட்டுவாள் நன்னெறி 
     தீட்டுவாள் வைரமாகத் தேய்த்து”….(95)

    “தலைஎழுத்தை மாற்றும் திருப்பட்டூர் அய்யன் 
      முலையழுத்த மோகிக்கும் மாதே -கலைஎழுத்தென்
       மேடை வசனத்தின் மேன்மைக்கு ,வெண்ணிற 
        ஆடை அணிந்தோய் அரண்”….(96)

    ”ஆரா முதனாகம்  ஆள்பவளும்,  வெள்ளிமலை
      ஊரான் இடபாகம் உற்றவளும் -கூறார்
      பதிலுனக்கு ஞானம்  பொருத்து; ,சரசு
      வதியே  வினாவிடை  வீடு”….(97)

    “மகர யாழை மடியேந்தி மீட்டி 
     அகர முதல அளிப்பாள் -நுகர்வோர்
     கவியிளங்கோ ,கம்பன், குமர குருபரராய் 
     புவிவிளங்க வாக்கன் பளிப்பு”….(98)

    “சம்போ மகாதேவன் சோதரி, செவ்விதழ் 
     அம்போ ருகமமர்ந்தோய் ஆதரி -அம்பே 
     சகலகலா வல்லி, சரஸ்வதி வாணி 
     புகலெனக்குன் பாதாம் புயம்”….(99)

    ”பாத நமஸ்காரம்,  பூசை  புனஸ்காரம்
     ஏதும்  புரிந்திலேன்  என்றாலும் -ஆதுரம்
      உற்றெனது  வாக்கிலே  உட்கார்ந்து  வெண்பாக்கள்
      பெற்றிட வைத்தாய்வெண் பூ”….(100)

    “புத்தகம் , முத்துமணி பக்கயிரு கைபற்ற 
     மத்தயிரு கையால் மடியேந்தும் -சித்திர 
     யாழினை மீட்டிடும் ஏழிசைச் செல்வியே 
     வாழிய வாழிய வே”….(101)
    —————————————————————————————————————

    பொன்மகள் வந்தாள்…. மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல் “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா 
     இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல் 
     ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை 
     பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
     நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
     சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால் 
     தாரங் களின்தயவால் தான்”….

             ” காப்பு”
                  ——–
    “அகழ்வாரைத் தாங்குகின்ற அக்காள்முன் வந்த ,
     முகிழ்வா ரிசமமர்ந்த மாமி -புகழ்பாட 
     பாழியன்தோள் மாமன்தோப் புக்கரணம் போட்டபின்பு 
     ஆழியைத்தந் தோன்தாள் அரண்”….

                   சமர்ப்பணம் 
                   —————-
    “அன்னை இருந்த அசோகவனம் சேர்ந்தன்று 
     அண்ணல் கணையாழி தந்தவள் -முன்னுச்சி 
     சூடா மணிகொணர்ந்து ,தேடும் இராகவன் 
     பாடொழித்தோன் பாதசமர்ப் பிப்பு”….

      
    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும் 
     அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய் 
     சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
     லக்குமி தாராய் லயம் “….(1)

    “கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு 
      உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின் 
      வீரதர் மத்தால் வியந்தவர்  வேண்டிட 
      கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(2)

    “சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய் 
     கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று
     பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே
     நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(3)

    “பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள்
     கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக் 
     காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு 
     வேலை திருவினையாள் வாகு”….(4)

    “தான மவள்லீலை தர்ம மவள்வேலை 
     மானம் புகுந்து மகாபலி -தானமிட்ட 
     கர்வத்தை மூவடியைக் கொண்டு அடக்கிய 
     தர்மத்தின் தாரம் திரு”….(5)

    “தானம் கொடுத்தமாட்டின் தாடை பிடிப்பது 
     ஈனம் எனநூல் இயம்பினாலும் -மானம் 
     பெரிதென்று எண்ணாமல் பிச்சை எடுப்போரை 
     சிறிதென்(று) ஒதுக்குவாள் சீர்”….(6)

    ’’பண்டிதர்  பின்தொடர  பிச்சைக்குப்  போயன்று
     கொண்டவூசிக்  கஞ்சியை  உண்டபின் -மண்டையில்
     கையோ(டு)  அகந்தை   கழவு  ரமணரை
     மெய்யோடு  சேர்த்தாள்பொன்  மாது’….(7)

    “அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில் 
      நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம் 
      தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை 
      தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….(8)

    “பூணுமய பக்திக்கே பூரித் தளித்திடும் 
     ஏனைய செல்விகள் ஏற்றத்தை -நாணய 
     நாயகி ஏற்பது நாற்புற சுத்தத்தை 
     போயகி லத்தை பெருக்கு”….(9)

    அலையில்  பிறந்து  அலையில்  புகுந்த
    அலைதாண்டா  பத்தினியை, அப்பொன் -சிலையை
    விழியில்  பதித்து  விரலால்  ஜபிக்க
    கிழியும்பார்  அவ்வறுமைக்  கீத்து….(10)

    வித்தைக்கு  வேண்டும்  வினயம்,  அதிதீர
    சித்தத்தில்  வேண்டும்  சரிசமம் -சுத்தத்தை
    வேண்டுவாள்  செந்திரு,  வாசல்  தெளிப்போர்க்கு
    யாண்டும்  வறுமை  இல….(11)

    பட்ட  கடனால்  பயந்தோடி  பாலாஜி
    எட்டா  மலையுச்சி  ஏறிட -வட்டி
    அசலோடு சேர்த்தளித்தும்  அந்தோ  புகழில்
    முசலானாள் ஆமைக்கு   முன்….(12)

    வானுகந்து  வந்தீரே  வகுண்ட  வாசலில்
    நானகன்று  சூரியாய்  நிற்பதற்கு -தானமொன்று
    செய்ய  வருவாளே  ஸ்ரீமன்நா  ராயணரின்
    கையைப்  பிடித்து  கனகு….(13)

    பாங்கியின் யோகத்தால் பார்த்தனுக்கு பாரதத்தில்
    சாங்கிய  யோகத்தைச் செப்பியவன் -நீங்கிய
    போதுன்னை ராமன் புலம்பினான் பார்த்தனாய்
    யாதுமான லக்குமி யே….(14)

    “தரமும் தரத்தில் நிரந்தரமும், செய்யும் 
     கருமத்தால் ஏழைக் குதவும் -கரமும் 
     இருப்பவர் வீட்டை  இமையாது காப்பாள் ,
     திருப்பள்ளி கொள்ளாள் திரு”….(15)

    “பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த 
     பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
     வீடு வரையுறவு வீதி வரைமனைவி 
     காடு வரைநெற்றிக் காசு”….(16)

    “அவலை சுசீலை அளிக்கக் குசேலன் 
     கவலை  களைந்தான்  கிருஷ்ணன்; -அவளை
     மணந்ததால்  அன்றோமால் மாங்கல்ய பிச்சை 
     பணம்தந்து பெற்றான் புகழ்”….(OR ) -அவளை
     வரித்ததால் தானேமால் வாரிக் கொடுத்து
     தரித்திரம் தீர்க்கத்  துணிபு”….(17)

    “நாத்தனார் வீரத்தை , கூத்தனூர் கல்வியை 
     ஏத்திட ஏற்றம்தான் , என்றாலும் -பூத்தமலர் 
     செவ்விதழின்  மீதேளும் செல்வியருள் இல்லையேல் 
     இவ்வுலகில்  இல்லை இருப்பு “….(18)

    “மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
     வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
     தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய 
     வேலியைக் காக்கும்செல் வி”….(19)

    “சித்திரம் கைப்பழக்கம் , செந்தமிழ் நாப்பழக்கம் 
     பத்தரை மாத்துப்பொன் பெண்பழக்கம் -உத்தம 
     பக்தி வயலில் புளகநீர் பாய்ச்சிட 
     முக்திநெல்லாய் விட்டெழும்உன் முன்”….(20)

    “தங்கநிற வண்டுகள் தாதுக்காய் மொய்த்திட 
     பொங்கும் புளகமலர் போல்மாலின்-அங்கம் 
     புளகத்தால் கூச்செறிய, பார்வையால் உண்ணும் 
     அலகொத்தக் கண்ணாள் அவள்”….(21)

    நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
     நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
     கொண்டதோர்  நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
     அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(22)

    ஏழை  சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
    பேழைவாய்  பொக்கையின் புன்னகையில், -வாழையடி
    வாழையாய் வந்த  விகல்பமில்லா  வேட்டதிர்வில்,
    தாழை  எனமணக்கும்  தாய்….(23)

    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல் 
     பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன் 
     மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி 
     பாலின் நிறத்தில் பொலிவு”….(24)

     மடைதிறந்த வெள்ளமாய் மங்கலப் பார்வை
     கடைதிறந்து காணமயிர் கால்கள் -புடைத்தெழ
     எல்லையில் லாயின்பம் எம்பிரா னுக்களிப்போய்
     அல்லலில்லா வாழ்வை அளி….(25)

    “கவுத்துவம் பூண்டவன் , கொன்று மதுவைக் 
     குவித்தவன் யோகத்தைக் கண்ணால் -கவுத்தவளே,
     நீலமணி பட்டதால் நீலமுற்ற பார்வையை 
     பாலனென் மீது பதி”….(26)

    ’’கைடபனைக்  கொன்றவன்,  கார்முகிலாய்  சேடன்மேல்
      மெய்படரச்  சாய்ந்தவன்மேல்  மின்னலாய் -மையடர்ந்த
      பங்கயக்  கண்களால்  பார்த்தது  போதுமென்மேல்
      திங்கள்  விழியைத் திருப்பு’’….(27)

     “நாணுமுன் கண்களை நாணாக்கி மன்மதன் 
     வேணுவின் மீதெய்து வெற்றியைப் -பூணுவான்;
     பாற்கடல் தோன்றிய பாவையே பார்வையை 
     ஓர்கணம் என்மீ (து ) உரசு”….(28)

    பயிரான பூர்வஜென்ம பாவங்கள் போக்கும்
    அயிரா வதத்தில் அமர்த்தும் -உயிராக
    எண்ணினாள் தங்குவாள், ஏத்தினால் தாங்குவாள்
    கண்ணினால் காவல் கொடுத்து….(29)

    “அத்தகைய பார்வை அடியேன் மீதுபட்டால் 
     எத்தகைய செல்வம் எனைச்சேரும் -குத்தகையாய் 
     பத்தினி யேநீ, படியில்லை பாற்கடலில்,
     இத்தரைக்குத் தாண்டிட ஏகு”….(30)

    நூறிடர்  தீர்த்திட  பாரதம்  செய்தவனின்
    மாரிடம்   கொண்ட  மகாலக்‌ஷ்மி -சோறிடும்
    சுத்தம்  எதிர்பார்ப்பாள்   செல்வம்  அளித்திட
    அத்திருக்(கு)ஆ  சாரம்  அணி….(31)

    “குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள் 
     அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின் 
     வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள் 
     கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”….(32) 

    “சொர்ண நிறவதனம், செம்மா துளையதரம் 
     வர்ணனைக்(கு) எட்டா வடிவழகு – கர்ணனை 
     மிஞ்சும் உதார மனத்திற்க்(கு) உரியவளால் 
     பஞ்சும் பசும்பொன்னாம் பார்….(OR )
     பஞ்சுமா கும்மாணிப் பொன்”….(33)

    “அத்தன் அரிமால் அவதா ரமாய்யெடுத்த
     பத்தையும் செய்த பணமிவளே -சத்த 
     நரசிம்மன் சாந்த நிலையுற்றார் ,செல்வி 
     வரசிம்மன் ஆனான் வரம்”….(34)

    “பெண்ணொருத்தி நின்றிடுவாள், பின்னிருந்து ஆடவனை 
     முன்னிறுத்தி ஈவாள் முழுவெற்றி  -கண்ணுறுத்தும்
     கானகத்து அல்லிலன்று காகுத்தன் ,பின்தொடர்ந்த 
     ஜானகியால் கண்டான் ஜெயம்”….(35)

     நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
     நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
     கொண்டதோர்  நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
     அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(36)

    ஏழை  சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
    பேழைவாய்  பொக்கையின் புன்னகையில், -வாழையடி
    வாழையாய் வந்த  விகல்பமில்லா  வேட்டதிர்வில்,
    தாழை  எனமணக்கும்  தாய்….(37)

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
    பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….(38)

    கன்றை விளிக்கும் கறவையின் கத்தலில்
    நன்றுரைக்கும் நல்லோர் நயவாக்கில் -வென்று
    முழங்கிடும் வீரத்தில், வேதாந்த மூச்சில்
    புழங்கிடும் பொமகள் பேச்சு….(39)

    யாப்பலங் காரத்தில் ,காப்புக் கவிதையில்
    மூப்புணர்ந்தோர் போக்கின் முதிர்ச்சியில் -நாப்பிளக்கப்
    பொய்பேசா நாவில், புறங்கூறா புத்தியில்
    தைபூசத் தான்மாமி தேசு….(40)

    ஏரோட்டி வேர்வையை, ஏமாந்த காதலால்
    நீரோட் டமான நினைவுகளை -போராட்ட
    ஊழியன் கூலி உயர்விழந்த துக்கத்தை
    தோழியாய் பொற்கை துடைப்பு….(41)

    பலியின் தலைவைத்துப் பாதாளம் பாய்ந்து
    கலிதீர்த்தக் காலிலிவள் காசாய் -ஒளிந்திருந்தாள்.
    பாதாளம் பாயும் பணமென்று சொன்னதன்
    ஆ!தாரம் அன்றோ அவள்….(or)
    ஆ!தாரம் அன்னை அருள்….(42)

    பரம்பொரு ளாதாரப் பொன்மகள் பார்வை
    தரம்தரும்சே தாரம் தவிர்த்து -வரம்தரும்
    செய்கூலி பக்திக்கு. செய்யவளால் உன்பணப்
    பைகாலி ஆகாது பார்….(43)

    “பணப்பை அரவம் படுத்த பொருளை 
     கணத்தும் பிரியாத கஞ்ச -மனத்தாளே,
     ஓரக்கண்ணால் என்னை ஒருமுறை பார்த்தெனக்கு
     சேரச்செய் செல்வச் செழிப்பு”….(44)

     வாளாழி வெண்சங்கு வில்லும் கதாயுதமும்
     தோளாலும் தர்மத் தலைவனை -பாலாழி
     தோன்றிய பொன்மகள் தேர்ந்தெடுத்தக் காரணத்தால்
     மூன்றிலவன் ஆனான் முதல்….(45)

    “பாக்கள் புனைந்திடுதல் பாரதியே ஆனாலும்
     வாக்கில் பொருளாக வந்தமர்ந்து -ஆக்குவள்
     ஆசுகவி தம்மை அகிலத்தில் செல்வந்த 
     காசுகவி யாய்பார் கவி”….(46)

    “கருவளர் பிள்ளையை காத்தவன் மார்பில் 
     மருவத்  ஸமாக  மிளிரும் -திருவளர்
     கண்தானம் கொண்டதோர் காளைக்கும் வாய்த்திடும் 
     சந்தான செல்வச் சிறப்பு”….(47)

    “கற்காத பேருக்கும் கோழைக் குமருளை
      துர்க்கா சரஸ்வதியர் தாரார்கள் -தர்காதி 
      தர்கத்தை விட்டுநீ தாமசமாய் நின்றாலும் 
      நற்காவல் பொன்மகள் நட்பு”….(48)

    “சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை 
     கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை 
     யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை 
     பாகிமாம் பாதாம் புஜம்”….(49)

    “பிருகு குலத்தில் பிறந்த திருவே 
      உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும் 
      அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு 
      வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….(50)

    “சிங்கம் அரியா சனத்து மடியமர்ந்து 
      பொங்கும் அவன்வெகுளி போக்கினோய் -தங்க
      வதனத்து தாயே வரவேண்டும்  மாலற்
      புதனோடு பொன் சேர்ந்தாற் போல்….(51)

     “வைகுண்ட வாசல் விளக்கேற்றும் பொன்ஒளியே ,
     பைகொண்ட பாற்கடல் பாம்பணைதோன் -மெய்கொண்ட ,
     ஐவர்க்காய் அன்று அலைந்த களைப்பகல
     கைவைத்துத் தீர்ப்போளே காப்பு”….(52)

     வீரென்று காற்று வீசப் பொழிந்திடும்
     நீருண்ட மேகம் நிகர்த்தது; -சோறுண்டு
     நாளான சோகத்தை நீக்கிடும் நாரணனை
     தாலாட்டும் தாய்விழிகள் தான்….(53)

    “புத்தி பலம்வீரம் பொன்புகழ் பேருனை
      சுத்தி வலம்வரும் செல்விபதம் -ஒத்தி 
      விழிநீர் அபிஷேகம் வார்த்திட பக்தி 
      வழிகூறும் முக்தி வரை”….(54)

    பொன்மகள் வந்தாள் (OR ) திரு விளையாடல்….
    “வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன 
      சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம் 
      பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள் 
      கனிந்திடும் காண்முத்திக் காய்”….(55)

    “கற்பை நெருப்பிலிட்ட காகுத்தன் சோதனையில் 
     பொற்பூ புகுந்தெழுந்தாள் பூரணமாய் -அற்ப 
     இராவணன் தீவெரிய இட்டனள் தீயை;
     இராகவன் தூதன் எரிப்பு”….(56)

    “ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை 
     மூடி  உறங்காதே முன்கதவை -ஏடி !
     எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி 
     விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….(57)

    “நற்கா ரியப்பயன் , நான்மறை நுண்பொருள் 
     பொற்கம லம்வீற்ற பேரெழில் -நற்குணங்கள் 
     பூண்ட நிறைவு , பராசக் தியினம்சம் 
     வேண்டும் அடியார் வரம்”….(58)

    “குமுத வதனம் ,கடல்கடைந்து வந்த 
      அமுத வளர்மதி அக்காள் -துமிதம் 
      தெறித்திடும் பாற்கடலில் தூங்கும் பெருமாள் 
      வரித்திடும் செல்வியை வாழ்த்து”….(59)

    “சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும் 
     கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
     பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும் 
     அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(60)

    “முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன் 
      பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
      சரமே அவன்மார் சரோஜமே தாமோ
      தரனுகக்கும் தாயே  துதிப்பு  “….(61)

    “கண்பறிக்கும் காந்தி , கமல முகம்கண்கள் ,
     விண்பரப்பில் எண்திசையாய் வீற்றிருந்து -மண்பிறப்பை 
     நோக்கி இயக்குவாள், நந்த குமாரனை 
     ஏக்கமுற வைக்கும் எழில்”….(62)

    ’’பொறிகளுக்கு எட்டாத போகமே, ஞான
     வரிகளுக்(கு) உட்பட்ட வாக்கே -தறிகளுக்கு
     ஈடான வேகத்தில் இற்றிடாத நூலாகத்
     தேடும் ரமணஎளி தே’’….(63)

    “வாள்எதிர்த்தால் நந்தகி , வில்எதிர்த்தால் சாரங்கி 
     ஆள்எதிர்த்தால் வெண்சங்கு ஆழிவட்டம் -கோள்எதிர்த்தால்
     கால்எதிர்த்த கூற்றனின் மேலுதைத்த வீரதுர்க்கா
     நூல்எதிர்த்தால் வாணிஅவள் நா”….(64)

    “பேராசை பின்சென்று போனால் பெருநஷ்டம் 
     பாரீசன் போனானே பத்தினியால்- மாரீச 
     மானென் (று) அறிந்தும் மயர்வுற்ற ராமனைத் 
     தானன்று சோதனைசெய் தாள்”….(65)

    “சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும் 
     கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
     பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும் 
     அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(66)

    “சிலையை வளைக்கவந்த ஸ்ரீராமன் ,செம்பொன் 
     சிலையான சீதையால் சொக்கி -சிலையாகி ,
     மற்றவர் வாய்ப்பை மறந்திட , கைவில்லை
     இற்றிட வைத்தாள் இவள்”….(67)

    “தரித்திரமாய் வந்தாடும் தாண்டவக் கோனை
     உருத்தெரியா வண்ணம் ஒசித்து -சரித்திரமாய் 
     செய்தெதிர் காலத்தை சீரும் சிறப்புமாய் 
     பெய்தா தரித்தளிப்பாள் பொன்”….(68)

    “கோதையாய் ,கோகுலக் கூட்டத்து தாதியாய்,
      ராதையாய் வந்தவனை ரட்சித்தோள் -கீதையாய் 
      வாக்கில் புகுந்துவந்த பாக்கிய லஷ்மியே 
      காக்கும் கடவுளுக்கு காப்பு….(OR )
      காக்கும் திருமஞ்சக் காப்பு”….(70)

    ’’ ஏறுக்கு மாறான நூறுக்கு தோல்விதர
       பாருக்கு வந்தபளு போக்கிட, -போருக்குக்
      காரண பாஞ்சாலி கூந்தல் விரிப்பிருந்து
      நாரணர்க்கு செய்தாள் நலம்’’….(OR)
      நாரணர்க்கு தோள்கொடுத்த நட்பு’’….(71)

    “பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும் 
     மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
     நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு 
     கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….(72)

    “ஊடலில் பாற்கடலை உக்கிரமாய் பொங்கவைத்து 
     தேடலில்மால் வாட,  திருவிளை -ஆடலாய்,
     ஆடிவரும் தங்கமிவள் அக்காள் நிலத்தடியில் 
     ஓடிக் கரியாய் ஒளிவு”….(73)

    “பாலுக்(கு) அழும்சேய்க்கு பார்வதியால் ஞானம் 
     கோலக் கவிக்கு கலைவாணி -சேலைத்
     தலைப்பிட்டு செல்வத்தை தாமரையாள் தந்து 
     இலைமேல்நீர் பற்றை இடும்”….(74)

    “ஆர்த்த கடலில் அரிமால் அவதாரப்
     பூர்த்தி  வரையில் பொறுமையாய் -காத்துக் 
     கிடக்கும் திருமகளே காக்கும் கடவுள் 
     எடக்கு மடக்கல்ல ஈது”….(75)

    “அகலாது கல்லில் அடைந்து கிடந்த 
      அகலிகை மீண்டாள், அதனை -உகந்தது,
      ஏகபதி நோன்பிருந்து ஏத்திய தாலன்றோ
      ராகவன் பாத ரசம்”….(76)

    “வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
     சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில் 
     தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை 
     விந்தை இவள்செய் விதி”….(77)

    அண்ணலும்  நோக்கினான், அன்னையும்  நோக்கினாள்
    அண்ணலவன்  நோக்கம்  அவதாரம் -அன்னையவள்
    நோக்கமோ அக்காள்  நிலமடந்தை மாந்தரை
    காக்கும் கருணை குணம்….(78)

    “குத்திய காகத்தைக் குத்திய காகுத்தன் 
     பத்தினி தெய்வத்தைப் போற்றிடுவோம் -இத்தரையில் 
     இன்னல் வருங்கால் இவளைத் துதித்திட 
     அண்ணல் அபயம் அளிப்பு”….(79)

    ’’தீதண்டும்  வேளை, திருக்கரம்  ஏந்திடும்
      கோதண்ட  ராமன்  கரம்பிடித்த -மாதண்டி(மாதை  அண்டி)
      வாழப்  பழகிடு , ஆழ்நிலை  யோகத்தில்
      ஏழைக்  குசேலா எழு’’….(80)

    “ஏழுமலைக்(கு ) ஏதிந்த ஏற்றம் எனப்பார்த்தால் 
     கீழ்அமர்ந்த வல்லியிரு கைகளால் -ஊழ்அழுந்த 
     வந்தவரை கேள்வனின் வட்டிக் கடன்தீர்க்க 
     உந்துகிறாள் உண்டியலுக் குள்”….(81)

    ’’வள்ளென்று  பேசாதே, தள்ளென்று  கூறாதே
      உள்ளொன்று  வைத்து  உரைக்காதே -கொல்லென்று
     பூத்த கமலத்தாள் , பொல்லாத  வர்களுக்கு
     ஏத்த வளல்ல எதிர்’’….(82)

    “எட்டுவகை செல்வங்கள் ,எட்டு வகைசுகங்கள் 
     கிட்டும் அவள்கடைக் கண்ணொன்று -பட்டால்;
     முராரி சகியால் முகாரி இசைக்கும் 
     பராரிக்கும் வாழ்வில் பொருள்”….(83)

    “வாழ்வில் பொருளிருந்தும் வாழ்வின் பொருளறியா 
     தாழ்வில் புகமறுப்பாள் தங்கமகள் -ஊழ்வினை 
     தந்த பொருளைத் திரும்ப எடுத்தழிப்பாள்
     சிந்தையின் செல்வச் செறுக்கு”….(84)

    குறுக்குவழி சென்று குவித்த பணத்தால்
    செறுக்கு மரச்சரிவில் செல்லும், -கிறுக்குத்
    தனம்பித்தம், செல்வி திருத்தாள் துதிக்கும்
    மனம்தான்பொன் செய்யும் மருந்து….(85)

    “வெண்பட் டுடுத்திப்பூ   வெண்மல்லித் தார்சூடி 
     மென்பட்டுத் தாமரை மீதிருந்து -கண்கொட்டா 
     ஞானியர் காட்சியே , நாணமுறக் கண்ணளிப்பாய்
     ஆணில் உயர்ந்த அரிக்கு”….(86)

    “எட்டுதிக்கு யானைகள் ஏந்திவரும் கங்கையால் 
     அட்டமா   லஷ்மிக் (கு ) அபிஷேகம் -கட்டுக்(கு)
     அடங்கா கடலரசன் ஆருயிர் பெண்ணே 
     தடந்தோள் மாலனமு தே”….(87)

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
     ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
     மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு 
     முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….(88)

    “வாரிசம் ஓர்கையில், வெண்குடை ஓர்கையில்
      ஆறுதல் கூட்டும் அபயத்தை-வேறிரு 
      அங்கைகள் தாங்கிடும் ஆதி இலக்குமி
      பங்கயத் தாளைப் பணி”….(89)

    “அம்புஜஅங் கைகள் அபயவரம் முத்திரையில் 
     அம்புஜம் ஏந்தும் அடுத்தயிரு-அம்புஜங்கள்,
     வெண்பட் டுடுத்துமைஸ்  வர்ய இலக்குமியை 
     பொன்கொட்ட வேண்டிப் பணி”….(90)

    “ஆறில் அபயம் அளித்திடப்பொன் , ஐந்தில்விண்
     சோறமுதம், வில்லம்பு , சங்காழி -வாரிசத்தை 
     தாங்கும்செம் பட்டு  தனலஷ்மி தேவியை 
     பாங்குற ஏத்திப் பணி”….(91)

    “கன்னல் ,இரண்டு கமலம் ,கதைகதலி 
     செந்நெல் ,அபயவரம் சாதிப்பாள்-தன்எண்கை 
     தாங்கிபச் சையணிந்த தான்ய இலக்குமியை 
     பாங்கிஎன எண்ணிப் பணி”….(92)

    “கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள் 
     நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள் 
     தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி 
     பரத்தினும் மேலாம் பணி”…(93)

    “இடையில் குழந்தை இரண்டிளநீர் கும்பம் 
     படைவாளும் கேடயமும் பற்றி -அடையாள 
     சேய்அபயம் காண்பிக்கும் சந்தான லஷ்மியை 
     போய்அபலை ஆகப் பணி….(OR )
     போய்சுபம் காணப் பணி”….(94)

    ’’வரிசங்கு, வீச்சாழி, வில்லம்பு, சூலம்
      வரஅபயம், புத்தகம், வீற்றெண் -கரத்தாள்,
      வறுமை சிவப்பணிந்த வீர இலக்குமியை
      பெருமையாய் சென்று பணி’’….(95)

    “பாசம்,வெண் சங்கு, படைதிகிரி, கேடயம் 
     வீசும்வாள், வாஞ்சை வரஅபயம்-பூசும்
     திலகநிறக் கூறையாள் திக்விஜய லஷ்மியை 
     புளகநீ ராட்டிப் பணி”….(96)

    “பூனைக்குப் போய்மணி பூட்டிய கர்வத்தில் 
    ஆனைக்கு லாடம் அடித்தேனே  ! -மோனை 
     எதுகை வரக்கண்(டு) எழுதப் புகுந்தேன் 
     பதுமையே கொள்ளென் பழுது”….(97)

    “திருமஞ் ஜனக்காப்பே, தீயிட்ட போதும் 
     கருமை யுறாதங்கக் காப்பே, -திருமகளே,
     பாதுகை இல்லாத போதும்மால் பாதகாப்பே,
     கோதுகைவெண் பாபாது   காப்பு”….(98)

    “மாவீரன் பாரதியின் மேதமை  இல்லாது 
      தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
      தொட்டால் தகதகக்கும் தங்கமுந்தன் கண்பார்வை 
      பட்டால் துலங்குமென் பா”….(99)

             (OR)
    “மாவீரன் பாரதியின் மேதமை  இல்லாது 
      தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
      பட்டால் தகதகக்கும் பொன்மக ளுன்பார்வை
      தொட்டால் துலங்கும்  தமிழ்”….(99)

    “ஈர துணியால் இறுக முடிந்துபசி 
     ஆற முடிக்கும் அரும்பணியில் -வீரத் 
     திருமகள் சேர்ந்தெட்டு  தோள்கொடுத்து, வானக் 
     கருமுகிலாய் தீர்ப்பாள் கலி”….(100)

    “வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார் 
     தேடும் அருட்ஜோதி தெய்வத்தை -நாடி 
     அழைத்த வருக்குமுன்பு ஆதிலஷ்மி சேர்த்து,
     செழித்திடப் பெய்வாள் செடிக்கு”….(101)

    “தாத்தாக்கை கோர்த்து தெருத்தெருவாய் சென்றன்று 
     சேர்த்தாள் தமிழின் சுவடிகளை -ஆத்தாவால்
     ஐம்பெருங் காப்பியத்தை ஐஸ்வர்ய மாய்பெற்றோம்,
     பைம்பொழில்வாழ் பங்கஜத்தைப் போற்று”….(102)

    “கொள்ளை அடிக்கவந்த கும்பினிக் காரனைக் 
      ‘வெள்ளையனே போவெளியே’ விண்டுரைத்த -பிள்ளை
       மகான் சுதந்திரத்தை மீட்டபோது, இட்ட 
       லகான்விஜய லஷ்மியின்லீ லை”….(103)

    ’’மூப்பினை  ஏற்றதிய  மானளித்த  நெல்லியை
     சாப்பிடாது  சென்றாள்  சாவெதிர்த்து -தோப்பில்
     தனிமரமாம்  அவ்வையை,  தைரிய  லஷ்மி
     பனிமலைஈ  சன்பால்வைப்  பு’’….(104)

    ’’ஏழை  இருபத்தி  ஏழை  பிரசவித்து
      பாழும்  வறுமையால்  பாடுற -தோழனுக்கு
      கண்ணன்சம்  பத்தைக்  கொடுத்திட  வைத்தது
      அன்னைசந்  தானலஷ்மி அன்பு’’….(105)

    “அச்சம் தவிர்த்திடும் , ஆண்மை பெருக்கிடும் 
     உச்சப் புகழில் உலவவிடும் -பச்சைமால் 
     இச்சைக் (கு) உரிய இகபர தேவதையே 
     பிச்சையிடு ஞானப் பிடிப்பு”….(106)

    “அம்பிகை பொன்மகளை ஆரா தனைசெய்து 
     நம்பினோர் கெட்டதில்லை நானிலத்தில் -சொம்பிலே 
     தேங்காய் மாவிலை தண்ணிள நீர்வைத்து 
     பாங்காய் இவளைப் பணி”….(107)

    ’’வேதம்  வளையல்,  விளக்கும்  உபநிடதம்
      பாதச்  சதங்கை,  புராணங்கள் -காதணி,
      கோதை  திருப்பாவை  கொண்டாள் புடவையாய்,
      பேதையென்  பாபாதப்  பூ’’….(108)

    வாயார வாழ்த்து வடவேங் கடன்நெஞ்சத்
    தாயாரை, பூவாழ் திருமகளை -ஓயாமல்
    அன்னை கடைக்கண் அனுக்கிரகம் கொண்டோர்முன்
    முன்னை வினைகள் முடம்…(109)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181008 – MaNigaNa Krishna -A4 wcol lr

    MONEYகன மால்சுதா மர்க்கன்று மாலை(மால்-செல்வத்தை)
    துணி(துணியில் முடிந்த)அவலுக்(கு) அளித்தவரே தாமு! -பிணிபிறவி
    தந்தாய் குசேலர் டவலாலென் கண்ணீரைத்
    தந்தையே வந்து துடை….கிரேசி மோகன்…..!

    Share
  • படக்கவிதைப் போட்டி 181-இன் முடிவுகள்

    மேகலா இராமமூர்த்தி

    காளையும் காளையரும் எதிர்நிற்கும் வீரக்காட்சியைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு.யெஸ்மெக். இப்படக்காட்சியை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்துள்ளவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    முல்லைநில முதுகுடியில் வளர்க்கப்படும் கொல்லேற்றினை அடக்கும் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதலைப் பல்வேறு தடைகளையும் தகர்த்தெறிந்து இன்றுவரை அழியாமல் காத்துவருகின்ற தமிழ்க்குடியினரைப் போற்றுவோம்! அவ்விளையாட்டுக்கான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி காளைக்கும் காளையர்க்கும் நேரும் ஊறுபாட்டைத் தவிர்ப்போம்!

    இனி கவிஞர்களின் முறை!

    ஏறுபோல் பீடுநடையிட்டு இப்படக்காட்சிக்குப் பாட்டெழுத வாரீர் பெருந்தகையீர்!

    *****

    விடையை அடக்கவிடாமல் இவ்விடலையரைத் தடுப்பது எது? மனமா… உடலா? என்று கேள்வி எழுப்புகின்றார் திரு. சீனிவாசன் கிரிதரன். 

    விடை அடக்க – காளை தம்
    படை முடக்கத் தோன்றும் பயம்
    இடை மறிக்க இரு இரும்புத் தேர்
    உடை களைந்து களமாட
    தடை எங்கே?
    மனதிலா, உடல் பலத்திலா.

    *****

    காளையும் காளையரும் இணைந்து வளர்த்தெடுத்த தொல்தமிழ் மரபின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் நம் பண்பாட்டின் உச்சம் என்று உவக்கின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன். இன்றோ நம் பண்பாட்டின் எச்சமும் அதுவே! 

    தொல்குடிச் சமூகத்தின்
    உச்சாணிக் கொம்பன்

    தான் வளா்த்த பண்பாட்டில்
    எழுந்து நிற்கும் இயற்கை
    ஒத்த உள்ளன்போடு
    எண்ணினான் வாழ

    காதலை வெளிப்படுத்த
    கையாண்ட காட்சிகள் பல

    வேர் தேடி ஓடியவன்
    காதலைக் கண்டான் வீரத்தில்
    காட்சிகள் மாறினாலும்
    சண்டைகள் மாறவில்லை

    விலங்கோடு போராடி
    விலங்கோடு உறவாடி
    விலங்கில் வீரத்தை உணா்ந்து
    வீரப் பண்பாடாக வளா்த்தெடுத்த காளை
    பண்பாட்டின் வீரனான காளை

    மனிதனுக்கு மட்டுமல்ல
    ரோசம்
    மாட்டிற்கும்தான்
    தன்னைத் தொட்டவன்
    குடல் சாிக்க வேகத்தொடு

    விவேகமாகத் துள்ளியெழும்
    காளைக்கு வாழ்க்கை!

    பண்பாட்டின் உச்சம்
    உலகுக்கு!

    *****

    ”அஞ்சு கத்தை சோளத்தட்டையைக் கஞ்சமின்றி முழுங்கிப்புட்டுத் தெம்பாக வந்து நிற்கும் காளையிவன், உங்களைப் பஞ்சராக்குமுன் ஓடிடுங்க பிஞ்சுகளே!” என்று  ’பஞ்ச்’ வசன கவிதையால் காளையரை எச்சரிக்கின்றார் ஏ.ஆர். முருகன்மயிலம்பாடி.

    சோரம் போகாத வீரம்
    அக்கட்ட போ அக்கட்ட போ…….
    அம்புட்டுப்பயலும்அக்கட்டபோ!
    திமிலை ஆட்டித் திமிரா வாரான்
    தில்லிருந்தாப் புடிச்சுக்காட்டு!!
    அஞ்சு கத்தை சோளத்தட்டை
    கஞ்சமின்றி முழுங்கிப்புட்டு
    மஞ்சுவிரட்டு நோம்பி போல
    பாஞ்சுவந்து நின்னிருக்கான்..
    பஞ்சராக்கும் முன்னால
    பிஞ்சுகளே ஓடிடுங்க!!!
    அம்புபோல கொம்பு சீவி
    தெம்போட வந்திருக்கான்..
    தள்ளிநில்லு இல்லையுனா
    தண்ணிகாட்டிப்போயிடுவான்!
    தமிழனோட அடையாளம்

    தாங்கி வருகிறான்….
    தம் புடிச்சு நின்னு காட்டு
    தலை வணங்குவான்…
    சிவபெருமான் வாகனம்
    கவனமிருக்கட்டும்….
    எவ்வளவோ தடைகளையும்
    எதித்து ஜெயிச்சவன்!.
    கல்வி செல்வம் இருந்தாலும்
    துள்ளவேணும் வீரம்..
    ஜல்லிக்கட்டு அருமையாக

    சொல்லித்தரும் பாடம்!

    *****

    ”மாட்டை அடக்கி மாந்தர் விளையாடிய வீர விளையாட்டு இது! இதை விளையாடுங்க…உடல் பலமாகுங்க!” என்று இளைஞர்கட்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கவனமாய் விளையாடுவீர்…

    பாயும் காளையை அடக்கிடவே
    பதுங்கி நிற்கும் காளையரே,
    மேயும் மாட்டைப் பழக்கியேதான்
    மாந்தர் அடக்கி விளையாடியது
    தூய தமிழர் வீரமானது
    தரணி யெல்லாம் போற்றிடவே,
    ஓய வேண்டாம் விளையாடுவீர்
    உங்கள் நலனுக் கிடர்வராதே…!

    *****

    ”சாதுவாயிருக்கும் காளை சீற்றம் அடைந்தால் மதயானையாய் மாறும்; அனைத்தையும் தவிடுபொடியாக்கும்” என்கிறார் திரு. ஆ. செந்தில்குமார். 

    காளையும்.. காளையரும்..
    ஆற்றல் மிகுந்திருக்கும்.. ஆனாலும் பரமசாது..
    சீற்றம் அடைந்துவிட்டால்.. தோற்றத்தில் மதயானை..
    பக்குவம் அடைந்துவிட்டால்.. ஆக்கப்பணிகட்குப் பேருதவி..
    அக்கணமே தவிடுபொடி.. அமைதியை இழந்துவிட்டால்..

    *****

    எந்தப் பயமுமின்றி எதிர்த்துவரும் காளைதனை எந்திரத்தின் பின்னொளிந்து என்ன செய்யப் போகின்றீர்? சல்லிக்கட்டுத் தடைநீங்கத் தடியடி ஏன் பட்டுலைந்தீர்? பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச் சாயடா! என்று மஞ்சு கண்டு அஞ்சும் காளையர்க்கு நெஞ்சுரம் அளிக்கின்றார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா. 

    மஞ்சினைக் கண்டு அஞ்சிடும் காளைகாள்…….
    பாய்ந்து வரும் காளைகண்டு பயந்து நிற்கும் காளைகளே
    ஓய்ந்து விட்டதா உங்கள் உள்ளத்தின் தற்றுணிபு?

    கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை
    ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து.
    கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை
    வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள்
    சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார்.
    நல்ல சகுனமிது நம்மினத்துக் கென்றிருந்தோம்.

    எந்தப் பயமுமின்றி எதிர்த்து வரும் காளைதனை
    எந்திரத்தின் பின்னொளிந்து என்ன செய்யப் போகின்றீர்?
    உற்ற நண்பன் பின்னே ஒளிப்பதுதான் வீரமென்றால்,

    விழலுக் கிறைத்தது போல் வீரத்தை வீண்டித்து
    பழம் படுபனையின் கிழங்கு பிளப்பதற்கு
    ஆப்பு மொங்கான் கோடரியை ஆயுதமாயக் கொண்டதுபோல்

    ஜல்லிக் கட்டுக்குத் தடைநீக்கம் பெற்றிடற்காய்
    சட்டமொன்றைக் கேட்டு தடியடியேன் பட்டுலைந்தீர்?

    மஞ்சுவைக் கண்டு அஞ்சிடும் இளைஞனே நீ
    சேயெனப் பசுவைப் போற்று சிரம்பணிந்ததனையேற்று
    வாயுறையாகப் பொங்கல் வழங்கி நற் பட்டுச் சாத்து
    தூய நல்லன் பினோடும் துணிவொடும் வீரத்தோடும்
    பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச்
    சாயடா அதனையுந்தன் சமர்த்தினை உலகு காண.
    வாயிலா நண்பன் மஞ்சு வதையுறாததனைப் பற்றி
    தாயென அன்பு செய்நீ தரணியுன் பண்பைக் காணும்.

    ஆய வெம் கலைகளுள்ளே அதுவுமொன்றிது வேறில்லை.
    நேயமும் தயையுமெங்கள் நிலத்தினில் புதிதோ இல்லை.

    *****

    ”கோபமே கொம்புகளாய்க் கொண்டு எமைத் தாக்க வரும் காளையே! யாம் கொள்ளையரோ காமுகரோ அல்லர்; உன்னோடு யாம் நிகழ்த்தும் வீரவிளையாட்டைக் காக்க மெரினாவில் கூடிய நல்ல(வ)ர்! எமைக்கண்டு சீறாதே…செல்!” என்று உண்மை விளம்புகின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன். 

    கோபமே கொம்புகளாய்,
    குருதிச் சிவப்பே கண்களாய்,
    குதித்தோடித் தாக்க வரும் காளையே
    நீ எங்களைத்
    தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்!

    விடிந்தும் விடியாப் பொழுதில்
    வாசலில் நீர் தெளித்துக் கோலமிடும்
    பெண்கள் தாலிப் பறித்தோடும்
    கொள்ளையர்கள் அல்ல நாங்கள்!

    பேருந்துக் கூட்ட நெரிசலிலும்
    விழாக் கடைவீதி என்றெங்கும்
    பெண்களைச் சீண்டுகின்ற
    காமப் பித்தர்கள் என்றா
    நீ எங்களைக் கருதிவிட்டாய்?

    நெருக்கடி மிகுந்த சாலைகளில்
    நடப்பவர்கள் நடுங்கியோட
    வாகனப் போட்டி நடத்தும்
    விபரமறியா விடலைகள் என்றே
    நீ நினைத்து விட்டாய் போலும்!

    உனக்கும் எங்களுக்குமான
    வீர விளையாட்டை மீட்டெடுக்க
    மெரினாவில் கூடிய பெருங் கூட்டத்தின்
    சிறு அங்கங்கள் நாங்கள்!

    ஆராய்ச்சி மணி அடித்த
    ஆரூர்ப் பசுவின் வாரிசு போலும் நீ
    அதனால்தான் அநீதி கண்டு
    சினமுற்றுச் சீறுகிறாய்!
    தவறேதும் நாங்கள் செய்யவில்லை
    தயவு செய்து திரும்பி விடு!

    *****

    கருத்தோட்டமும் கற்பனைச் செறிவுங்கொண்ட அற்புதக் கவிதைகளைப் படைத்தளித்திருக்கின்றீர்கள் கவிவலவர்களே! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பதைக் காண்போம்!

    நாட்டுக் காளையின் பெருமை..!
    காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
    ……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்.!
    பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
    ……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்.!
    தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
    ……….தொய்ந்துயர சற்றேபக்க வாட்டில் சாயும்.!

    வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
    ……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்.!

    முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
    ……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்.!
    கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
    ……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்.!
    கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
    ……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்.!
    போட்டியென வந்துவிட்டால் போதும் அது

    ……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்.!

    வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
    ……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு.!
    ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
    ……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை.!
    பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
    ……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்.!
    நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
    ……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்.!

    ”நாட்டுக் காளையே! கட்டான இளைஞர்களைக் கண்டால் நீ கட்டுக்கடங்காமல் சீறுவாய்; பாசத்தோடு அணைத்துப் பழகிவிட்டால் பகுத்தறிவுடையதாய் மாறுவாய்; நீ ஈசனுக்கு வாகனம்; உழவனென்னும் நேசனுக்கு நண்பன்” என்று காளையின் பெருமையினைக் கவினுறத் தன் பாட்டிலே காட்டியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181005 Yogakshemam Vahamyaham graphite charcoal A4 lr

    சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்
    காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த
    நாமத்தில் மூட நினைவே நிலை:யோகச்
    ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்…கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180917 Radhakrishna lr

    யிங்யாங் காக இணைப்பாம் இருவரும்,
    சங்கரன் சக்தியுமை ஜாடையில் -இங்கரன்
    கண்ணபிரான் சக்தியுமைப் பெண்ராதை: க்ரேசியின்
    எண்ணமிது வண்ணம்கே சவ்…..கிரேசி மோகன்…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181007 Bhaja Govindam lr A4 72 dpi

    ஸஹஸ்ராஹா ரத்தினில் ஸவ்யஸாஸி(அர்ஜுன்) பாம்பாய்
    அஹஸ்மாத்தாய் ஆடிய(காளிய நர்தனம்) ஆட்டர்(கோவிந்தர்)- புஹும்கண்ணன்
    நாமத்தைப் பார்த்தனே நாள்தோறும் சொல்லிடுவாய்
    ஷேமத்தை சேர்க்குமச் சொல்….!(1)….!

    நாகமாம் குண்டலினி நாட்டம் அவருக்கு(கோவிந்தர்)
    நாமத்தைக் கூறிடுவாய் நல்மனமே -ஜாமம்,
    பகலென்று பாரபட்ஷம் பாராது நாவே
    புகலந்த கோவிந்தன் பேர்….(2)….கிரேசி மோகன்….!

    முன்பு எப்பவோ எழுதியது….கேசவ் கிருஷ்ணா பயனுறச் செய்கின்றார்….இசையமைத்துப், பாடிய ‘’குருகல்யானின்’’பஜகோவிந்தம் இணைத்துள்ளேன்….!

    KRISHNA FOR TODAY….!
    —————————————————-
    சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
    சொல்கோவிந்தம் புல்மனமே
    வல்லான் காலன் வருகின்ற நேரம்
    தொல்காப்பியமா துணையாகும்….(3)….!

    வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும்
    வேட்கை அதற்கு மாறாக
    ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர்
    காசுபணம் கொள் சீராக….(4)….!

    காமினி கொண்ட கவர்ச்சிகள் மாயை
    மாமிசம் ரத்தம் இளக்காரம்
    நாமினி வாழ்வோம் நல்லோர் சேர்க்கையில்
    தூமணி மாட விளக்காக….(5)…!

    தாமரை இலைமேல் தத்தளிக்கும் நீராய்
    நாமுறை வாழ்க்கை நித்யமல்ல பாராய்
    பாமரப் பற்றும் பிறவிப் பிணியும்
    சாமரம் வீசும் சண்ட மாருதம்….(6)….!

    கூட்டினுள் மூச்சு குடியுள்ள வரையில்
    வீட்டினர் கேட்டு விசாரிப்பர்
    மாட்டிய மேனி மண்விழத் தாலி
    பூட்டிய மனையாள் பயமுறுவள்….(7)….!

    பிள்ளையில் ஆட்டம் பருவத்தில் நாட்டம்
    கொள்ளை அழகு கன்னியர் கூட்டம்
    வெள்ளையில் சொள்ளையில் வாட்டமாய் மூட்டம்
    உள்ளிறை தொட்டதில்
    எவர்கிங்கு தேட்டம்….(8)….!

    சோதரா சிந்திப்பாய் சீதனமாய் வந்த
    மாதரசி மகன் யாரென்று
    பூதலம் விசித்ரம் யாதுந்தன் சரித்ரம்
    ஆதலால் ஆய்ந்து அதைத்தீர் நீயின்று….(9)….!

    கற்றோர் சேர்க்கை பற்றினைப் போக்கும்
    பற்றது போக பரம வைராக்யம்
    உற்றிடும் அறிவால் மற்றவை பூஜ்யம்
    பெற்றிடுவாய் நீ மோட்ச சாம்ராஜ்யம்….(10)….!

    தேய்ந்தபின் தேகம் காமுறலாமோ
    காய்ந்திடும் குட்டைக்கு காகம் வருமோ
    பாய்ந்திடும் சுற்றம் பணமுள்ள வரையில்
    ஆய்ந்திடத் தத்துவம் சேர்க்கும்அக் கரையில்….(11)….!

    ஆள்படை செல்வம் இளமையின் கர்வம்
    தூள்படும் இமைக்கும் காலத்தில் சர்வம்
    நாள்பட அனைத்தும் மாயைஎன்(று) உணர்ந்து
    தாள்கிட தெய்வத தத்துவம் நினைந்து….(12)….!

    திடமாய் பொருள்சேர் உடலுள்ள வரையில்
    கடல்போல் கூட்டம் அலைமோதும்
    முடமாய் மூப்பில் ஜடமானவர்க்கோ
    அடடா கூறிட ஆளேது….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181003 Victory where there is Krishna and Arjuna-wcol A4 Gita 18:78

    இல்லாமல் நாமிருவர் என்றும் இருந்ததில்லை
    இல்லா திருப்பதே இங்குண்மை ! -வல்லானென்
    வேத மிதையுணர்ந்தால் வேதனைகள் இல்லைகாண்
    பாதமதைப் போரில் பதி”….!

    ”பார்முழுதும் நின்று பரந்த பரம்பொருள்
    ஓர்நாளும் மாறா(து) ஒழியாது ! -யார்வாளும்
    இத்தை அழித்தல் இயலா தெனவென்று
    சத்தை அறிவாய் சகா”…கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (282)

    இந்த வார வல்லமையாளராக ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சங்க காலத்தில் பேச்சுமொழியில் இருந்து எழுத்து மொழியாக மாறுவதற்குப் பிராமி எழுத்து அடைந்த மாறுதல்களையும், அதற்கான படிநிலை வளர்ச்சிகளையும் கண்டு பெருநூலாகப் படைத்தவர். சிந்து சமவெளி ஆய்வு தொல்திராவிட மொழி பேசுபவர்களால் ஆளுமை செய்யப்பட்ட நாகரீகம் என்பதனைப் பற்றி பல ஆழமான கட்டுரைகளை அரை நூற்றாண்டு காலமாக வெளியிடும் திரு. ஐராவதம் மகாதேவம் அக்டோபர் 2-ம் தேதி அன்று 88 வயது பூர்த்தி ஆகி, 89-ஆம் ஆண்டில் புகுகிறார். அன்னார் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வல்லமை வாழ்த்தையும், வணக்கத்தையும் தெரிவிக்கிறது

    .

    அக்டோபர் 2, 1930-இல் மண்ணச்சநல்லூரில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோஸப் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 – 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இவரது முதல் புத்தகம் 1977-ல் வெளியானது. ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’ என்ற நூல் சிந்து சமவெளி எழுத்தாய்வுகளுக்கு முக்கியமான தூண்டுகோல் ஆயிற்று. பின்னர், தமிழ் பிராமி கல்வெட்டுகளை முழுமையாக ஆராயும் நூலை 2003-ல் எழுதினார். கல்வெட்டியலைப் போன்றே ‘தினமணி’ இதழின் ஆசிரியராக (1987-1991) பணியாற்றிய காலகட்டத்தில் இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

    இந்திய பழைய வரலாற்றை அறிந்துகொள்ள, சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன:
    (1) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – சர் வில்லியம் ஜோன்ஸ் – 1786.
    (2) தமிழ் அதன் திராவிட மொழிக் குடும்பம் – பிரான்சிஸ் வைட் எல்லிஸ் – 1816.
    (3) சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிப்பு – சர் மார்ட்டைமர் வீலர் – 1924.

    திராவிட மொழிக்குடும்பம் என்ற மொழியியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்தவர் F. W. எல்லிஸ். சென்னையில் கலெக்டராக இருந்தவர். அவர் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பைச் சொல்லின் செல்வர் ரா, பி. சேதுப்பிள்ளை மறுபதிப்புச் செய்தார். எல்லிஸ் 300 நூல்களில் இருந்து (இப்போது அழிந்துபோன வளையாபதிக் காப்பியம் உட்பட!) மேற்கோள் காட்டியுள்ளார். அவர் 200 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் சமணர் என்று ஆய்ந்து, சென்னை அரசாங்கத்தால் சமணர்கள் திருவள்ளுவரை வழிபட்ட உருவத்தைத் தங்க நாணயமாக வெளியிட்டார். அதனைக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் உலகறியச் செய்தார். திருவள்ளுவரின் திருமேனி தங்கிய தங்கக் காசு:
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539

    தமிழ் பிராமி எழுத்து வட இந்தியாவில் இருந்து கர்நாடகம் வழியாக சமணர்களால் தமிழகம் வந்த வரலாற்றையும், தமிழுக்கு ஏற்ப மாறும் படிநிலைகளையும் நன்கு ஆராய்ந்து சங்க காலக் கல்வெட்டுகளை யாரும் படித்து அறியும் துறையைச் செய்தவர் ஐராவதம். சம காலக் காசுகளில் உள்ள பிராமிக்கும், தமிழில் புள்ளி ஏற்படும் கல்வெட்டுக் காலத்தைக் கணித்து, பல நூற்றாண்டுகள் [பார்க்க: கமில் சுவெலெபில் கூறும் தொல்காப்பியக் காலக்கோடு [1] ] வளர்ந்த தொல்காப்பியத்தின் முக்கியக் காலகட்டம் என்பது கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என அறிவியல் ரீதியாகத் தெளிவித்தவர் ஐராவதம் ஆவார். புள்ளிக் கோட்பாடு தமிழ் பிராமியில் ஏற்பட்டதால் தான் தொல்காப்பியர் அதுபற்றிப் பேசுகிறார். புள்ளிக் கோட்பாட்டால் தான் ஏனைய இலிபிகள் போலன்றி, தமிழில் கூட்டெழுத்துகள் இல்லாமல் எளிதான எழுத்தாகத் தமிழ் விளங்குகிறது, அதனால்தான், முதலில், தமிழுக்கு மற்ற இந்திய மொழிகளுக்கு முன்னரே தட்டச்சு, கணினியில் எழுதுரு ஏற்பட்டன. தினமணி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, முக்கிய மாற்றங்களைக் கொணர்ந்தார். உ, ஊகார உயிர்மெய் எழுத்துகளும், மலையாளத்தார் செய்வது போல, பெரியார் பரிந்துரை ஏற்கப்பட்டு, பிரித்து எழுதப்படலாம் என்ற கொள்கையுடையவர் ஐராவதம்.

    https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/Tamils-were-never-lsquoAryanisedrsquo/article16885688.ece

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Notes:

    [1]  K. Zvelebil wrote on the question of the date of Tolkappiyam in pp. 138-147, Smile of Murugan, 1973.

    (a) “The earliest, original version of the Tolkappiyam belongs to the ‘pre-Cankam’ period; the oldest layer of the grammar is somewhat earlier in time than the majority of extant classical Tamil poems.”
    (b) Approximately the 5th century AD is fixed by him “as the earliest possible date of Porulatikaram, and as the date of the final redaction of the Tolkappiyam.”
    (c) “Thus, the nuclear portions of Tolkappiyam were probably born sometime in the 2nd or 1st century BC., but hardly before 150 BC… The final redaction probably take place before the 5th century AD., so that the ultimate shape of the suutras as we have them before us is probably not earlier than the middle of the first millennium of our era.”

     

    It is sad news that Sri. Iravatham Mahadevan is no more. On the day he passed away, I wrote this note in googlegroups.

    தொல்லியல் மேதையாக விளங்கிய ஐராவதம் மகாதேவன் இன்று காலமாகிவிட்டார். அவரது இடத்தை நிரப்ப எதிர்காலத்தில் தமிழர்கள் தோன்றவேண்டும். சங்க கால தமிழ் கல்லெழுத்துக்கு “தமிழ் பிராமி” எனப் பெயரிட்டு அழைத்தவர் அவரே. விஞ்ஞானப் பூர்வமான முறையில் தொல்காப்பியர் காலத்தைப் புறச்சான்றுகள் மூலம் நிறுவினார். அதற்கு அவர் தமிழ் பிராமியில் புள்ளி உருவாகும் கல்வெட்டுகள், நாணயங்களைப் பயன்படுத்திய முறை வெகு நேர்த்தியானது.

    நான்கைந்து முறை ஐராவதத்தைச் சந்தித்து இருக்கிறேன். எப்பொழுதும் எங்கள் தாத்தா அவரது நண்பர் என்பார். ‘காலை எழுந்தவுடன் காப்பி’ … என்று பாரதியார் பாட்டை மாற்றி காப்பி குடிக்கக் கேட்பார். இரா. நாகசாமி, ஐராவதம் இருவரும் 1930-ல் பிறந்தவர்கள். ‘கடலோடி’ நரசையா ஐராவதத்தின் பிறந்தநாளை நினைவூட்டினார். அதனால் ஐராவதம் மகாதேவன் வாழ்ந்த காலத்தில் வல்லமை இ-இதழிகையில் வல்லமையாளராக அவரது கடைசி பிறந்தநாளின் போது அறிவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. http://www.vallamai.com/?p=88261

    தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு
    https://www.bbc.com/tamil/india-46344293

    Iravatham Mahadevan, leading scholar on the Indus Valley and Tamil Brahmi scripts, passes away
    https://www.thehindu.com/news/national/tamil-nadu/iravatham-mahadevan-leading-scholar-on-the-indus-valley-and-tamil-brahmi-scripts-passes-away/article25595085.ece

    ஐராவதத்துடன் போனிலும், மின்னஞ்சலின் வாயிலாகவும் 22 ஆண்டுக் காலம் தொடர்பில் இருந்தேன். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலும், திராவிட மொழிகளிலும் நதிகளின் பெயர்கள் பெண்ணாக அமைவதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளோம். அப்போது, சி-டமில் குழுவிலே, ஏற்றை என்பது ஆண் பனை, பெண்ணை என்பது பெண்பனை. பயன் கருதி, மாடு (cf. மடி) என்னும் பெண் பசுவுக்கான சொல், வேளாண்மை தொழிலர்களால் காளை(அ) எருதுக்கும் சில சமயங்களில் வருவதுபோல் என்ற கருத்தை மிகப் பாராட்டினார். பின்னர் எழுந்ததே விரிவான விளக்கங்களுடன் எழுதிய பதிவு:
    ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) – பனை மரங்களில் பால் பாகுபாடு. ழான் செவ்வியார் மறுமொழி காண்க.
    http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html

    கரிய பெண்ணை என்னும் நதிப்பெயர் கிருஷ்ணா (கிருஷ்ணவேணீ) என சம்ஸ்கிருதமயப்படுத்தப் பெற்ற பெயர். பழைய தமிழ்ப் பெயரைக் கம்பன் பாடியுள்ளான். ஹெச். லூடர்ஸ், மிகப் பழைய பிராகிருத சிலாலிகிதங்களின் நூலை வெளியிட்டார். அதில் “நோடகிரீசுவரசுவாமி” என கிருஷ்ணா (பெண்ணை ) நதி தோன்றுமிடத்தில் உள்ள சிவன் பெயர் நாளகிரி/நாடகிரி தானா என வினவியபோது, “இருக்கலாம். நோ நா இரண்டுக்கும் வித்தியாசம் மிகக் குறைவு பிராமியில். எஸ்டாம்ப்பேஜ் பார்க்கணும்” என்றார்.

    பொள்ளாச்சியில் ஸப்-கலெக்டர் பணி தான் அவரது முதல் வேலை. 1967-ல் தேர்தல் ஒரு சவாலாக அமைந்தது என்று கூறியுள்ளார். சிந்து கன்கார்டன்ஸ் நூல் எழுத, வா. செ. குழந்தைசாமியையும், ஐராவதத்தையும் அழைத்து கணினி கிண்டி பொறியியல் கல்லூரி உதவிக்கு பரிந்துரை செய்வதும், குகைகளில் பிராமி எழுத்துக்களைப் படிக்க சாரங்களை ஏபிடி கம்பெனியார் கட்டித் தந்து உதவியதும் மறக்க முடியாது என்பார்.

    பாங்காக்கில் 2016-ல் “மழுவாள் நெடியோன்” என்னும் Anthropomorpic Axe வடநாட்டில் வருணனுக்கு உண்டான வடிவம் தென்னகம் இரும்புக் காலத்தில் வருவதும், மிகப்பெரிய சிற்பமாக வடிவெடுப்பதும் பற்றி எழுதிய கட்டுரையைக் கூர்ந்து படித்து, “very deep obsevation” என்று குறிப்பிட்டு எழுதினார். ஐராவதத்தின் மின்னஞ்சல்களை முழுதும் படித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும்.

    2 மாதம் முன்பு தான் நண்பர் ஆர். பாலகிருஷ்ணன் சொற்பொழிவுக் காணொளியில் ஐராவதத்தைக் கண்டேன். உடல் மிக ஃப்ராஜைல் ஆக உள்ளது என எழுதியிருந்தேன். அதைக் குறிப்பிட்டு திரு. நரசையா அவர்களுக்கு கைப்படக் கடிதம் எழுதியிருந்தார். அதை இணைத்துள்ளேன். அவரது வாழ்நாள் பணியைக் குறிப்பிடும் இக் கடிதம் தட்டச்சாக்கணும்.

    தமிழின் தொன்மையை சிந்து சமவெளி ஆய்வுகளாலும், வடக்கே இருந்து வந்த ப்ராமி எழுத்து தமிழுக்காக மாறிய வரலாற்றையும் ஆராய்ந்த பெருமகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களுடன். ~NG


    Share
  • கல்வி

    -கவிஞர் பூராம்

    பிஞ்சு விரல்கள்
    வலி தாங்காமல் மனம்

    கண்களில் குளம்
    வலிந்தோடும் கன்னத்தி்ன் நீா்
    சுட்டது என்னை

    கூன்விழுந்த முதுகு
    கவிழ்ந்த தலை
    நம்பிக்கையில்லாக் கண்கள்

    பேச மறுக்கும் வாய்
    ஓலமிடும் மௌனம்
    அவமானத்தில்  நான்

    உண்ண பசியில்லை உண்கிறேன்
    சிந்திக்க மனமில்லை படிக்கிறேன்

    எழுத்துக்களோடு ஓயாத போராட்டம்
    சொற்களோடு முடிவில்லா தொல்லை

    அன்பாய் சில பேச
    பாசமாய் பகிர்ந்துண்ண
    ஏது நேரம்
    படிக்கிறார்கள் பிஞ்சுகள்

    அம்மாவின் ஆசைக்காக
    அப்பாவின் அன்புக்காக

    Share
  • நானோர் இழப்பாளி

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
    ++++++++++++++++

    நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி !
    வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !
    நேசித்த பெண்டிரில் நான்  வென்றது,
    நேசித்த வனிதரில் நான் இழந்தது,
    எல்லோரிலும் ஒருத்தியை மட்டும்
    இழந்தி ருக்கக் கூடாது நான் !
    கோடியில் ஒருத்தி அவள் !
    எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்,
    இறுதியில் அவளே  வென்றாள்.
    தோற்றது நான் !
    நானோர் இழப்பாளி !
    ஒட்டி இருந்தவளை இழந்தேன் !
    நானோர் இழப்பாளி !
    வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

    நான் சிரித்து வந்தாலும்
    நகைச்சுவை நாயகன் இல்லை !
    முகமூடிக்குக் கீழே
    அழுது கொண்டிருக்கிறேன் !
    வானிருந்து மழை பொழிவது போல்
    வீழும் என் கண்ணீர்த் துளிகள் !
    நான் அழுவது எனக்கா ?
    இல்லை அவளுக்கா ?
    தவறென்ன செய்தேன்
    தகாத இந்த தலை விதிக்கு ?  
    தாமத மானதென நோகிறேன் !

    கர்வம் வரும் முன்னே !
    கவிழ்ச்சி வரும் பின்னே !
    கதை சொல்வேன் உமக்கெல்லாம்,
    கவனம் வைப்பீர்  
    இழப்பு எதிரே வரும் முன் !
    இழப்பாளி  நான் !  
    ஒட்டி இருந்தவளை இழந்தேன் !
    இழப்பாளி நான் !
    வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

    Share
  • படக்கவிதைப் போட்டி – 182

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

    பவள சங்கரி

    கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

    21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித வசதி வாய்ப்புகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கியிருப்பதை யாரும் மறுக்கவியலாது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் கலாச்சாரப் பரிமாற்றங்களும் வெகு இயல்பாகிவிட்டதைக் காண முடிகின்றது. இதனால் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மீது திணிக்கப்படும் சுமைகள் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. விடுமுறைகளைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் அவர்களின் ஓட்டம் அந்த குழந்தைத் தன்மையையே பறித்து விடுவதையும் காணமுடிகின்றது. தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்ற பேராவல் பல பெற்றோர்களுக்கு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகின்றது. இதன் விளைவாக தாயின் வயிற்றில் கரு உருவாக ஆரம்பித்த உடனே குழந்தையின் மூளை வளர்ச்சிக்காகவும் சேர்த்து மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் பழக்கம் இன்று பரவலாகிக் கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மாறான இது போன்ற செயல்பாடுகளால் தற்போது வருகிற நோய்களும் நவீன மருத்துவத்திற்கு சவாலாகவே இருக்கின்றன.
    குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற கவனப் பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த ஆயிரக்கணக்கான அதி நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் இன்று வரை இது குறித்து பொது மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வு இல்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி. இத்தகைய நீண்ட ஆராய்ச்சி வரலாறு இருந்த போதினும், ADHD குறித்து பல முரண்பாடுகள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. ADHD ஒரு பொதுவான குழந்தை பருவ உளவியல் மன நோய் அறிகுறியாகவும், வலுவான மரபணு, நரம்பியல்-உயிரியல், மற்றும் நரம்பியல் அடிப்படையிலான குறைபாடாகவும் உள்ளது . இது கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றின் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) hyperkinetic நோய் (HD) என்ற பெயரில், இந்த நோய்க்கான ஒத்த செயல்பாடு அளவுகோல்களை பட்டியலிடுகின்றது.

    ADHD என்ற குறைபாடு பற்றி எப்படி கண்டறியப்பட்டது என்றும் இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் உலவுவதன் காரணம் குறித்தும் அறியும் முன்பு இதன் வரலாற்று பின்புலம் குறித்து சற்றேனும் அறிதல் அவசியம். வெகு சமீப காலமான 1987 களில் தான் இந்த குறைபாடு அதிகமாகக் கவனம் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் 3% அமெரிக்கக் குழந்தைகள் இந்த கவனச் சிதறல், அதீத செயல்பாட்டுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2000த்தில் இந்த எண்ணிக்கை 7% ஆக எகிறியது. இதுவே 2014 களில் 11% ஆக எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த குறைபாடுகளின் அறிகுறிகளுடன் போராடுவதற்காக, பாதிக்கப்பட்ட 3/2 குழந்தைகளுக்கு மிக சக்தி வாய்ந்த மருந்துகளான Ritalin மற்றும் Adderall போன்ற மருந்துகள் மிகக் குறைந்த பருவமான மூன்று வயதிற்குள்ளாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டங்களில் பிரான்சு, பின்லாந்து, இங்கிலாந்து, சப்பான் போன்ற நாடுகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தது ஆச்சரியமேற்படுத்தியது. மற்ற மேலை நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கக் குழந்தைகளை மட்டும் அதிகமாகப் பீடித்திருக்கும் காரணங்களையும் மற்றும் மூளையில் இயற்கையாகவே பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனையா என்று கண்டுபிடிப்பதற்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் இந்த குறைபாடு மரபு வழியில் வருவதா அல்லது குழந்தைகளிடம் இயற்கையாகத் தோன்றும் பழக்க வழக்கங்களா அல்லது அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் எதிர்வினையா போன்ற வினாக்கள் பெரும் சவாலாக இருந்துள்ளன. இதைவிட முக்கியமான சவாலாக இருந்தது, அதிக சக்தி வாய்ந்த மருந்துகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி, குறைபாடுகளையும் சரி செய்வதற்கு மாற்று உபாயங்கள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுதான். இந்த வினாக்களுக்கான விடையாக, மெரிலைன் வெட்ஜ் என்ற ஆய்வாளர், ‘இன்றைய உளவியல்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்ட, “பிரான்சு நாட்டு குழந்தைகள் மட்டும் ஏன் ADHD யால் பாதிக்கப்படவில்லை” என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், சிகிச்சை முறைமைகள், வளர்ப்பு முறை, உணவுப்பழக்கம், கல்வி முறை போன்ற ஆக்கபூர்வமானவற்றை விவாதித்துள்ளார். இந்த ஆய்வுகள் பிரான்சு நாட்டிற்கு மட்டுமன்றி இந்தியா போன்ற நாடுகளிலும் இது போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக மிக அரிதாக இருந்த காலகட்டம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதய காலகட்டங்களில் இது போன்ற குறைபாடுகள் இந்தியக் குழந்தைகளுக்கும் மிக அதிகமாகப் பரவி வருவது அதிர்ச்சியேற்படுத்துவதாகவே உள்ளது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைப்பாடு மட்டுமே இன்றும் உள்ளதையும் மறுக்க இயலவில்லை.

    ADHD குறைபாடு என்பதன் அறிகுறிகள் என்ன?

    கவனமின்மை

    1. பெரும்பாலும் கூர்ந்து கவனம் செலுத்தத் தவறுதல் அல்லது பள்ளிப் பாடங்களில் கவனமின்மையால் தவறு செய்வது அல்லது அன்றாட கடமைகள், மற்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது.
    2. பெரும்பாலும் பணிகள் செய்யும் நேரங்களில் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலோ அல்லது விளையாட்டு செயல்பாடுகளிலோ சிரமம் மேற்கொள்வது.
    3. பெரும்பாலான நேரங்களில் நேரடியாகப் பேசும்போது கவனம் செலுத்தாதது போன்ற தோற்றம்.
    4. பெரும்பாலும் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தாமலும், வீட்டுப் பாடங்களை முடிக்காமலோ அல்லது பணி செய்யும் இடத்தில் கவனமில்லாமல் கடமை தவறுவது (எதிர்ப்பு நடவடிக்கையாக இல்லையென்றாலும், அறிவுறுத்தல்களையோ, ஆணைகளையோ சரிவரப் புரிந்து கொள்ள இயலாமையால்)
    5. பெரும்பாலும் பணிகள் அல்லது செயல்பாடுகளை நிறுவுதலில் சிரமம் ஏற்படுவது.
    6. பெரும்பாலும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்பாடுகளைத் தவிர்ப்பது, விருப்பமில்லாமல் இருப்பது அல்லது பள்ளிப்பாடங்கள், வீட்டுப் பாடங்களில் கவனம் செலுத்தாமல் செய்ய மறுப்பது.
    7. பெரும்பாலும் விளையாட்டு சாமான்கள் அல்லது பென்சில், பேனா, புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்றை தொலைத்து விடுவது.
    8. சுற்று வட்டாரத் தடைகளால் எளிதில் கவனச் சிதறல் உண்டாவது.
    9. அன்றாட பழக்கங்களையும் மறந்து விடுவது.

     

    Hyperactivity – ஹைபர்ஆக்டிவிட்டி – அதீத செயல் திறன்

    1. பெரும்பாலும் படபடப்பாக கை, கால்களைச் சொடுக்குவது அல்லது இருக்கையில் நெளிந்து கொண்டிருப்பது.
    2. வகுப்பறையில் இருக்கையை விட்டு எழுந்து செல்வது.
    3. பெரும்பாலும் தேவையில்லாமல் வேகமாக ஓடுவது அல்லது மேலே ஏறுவது.
    4. பெரும்பாலும் அமைதியாக விளையாடத் தயக்கம்.
    5. பெரும்பாலும் யாரோ விரட்டுவது போன்ற ஒரு அவசரகதியிலேயே செயல்படுவது.
    6. பெரும்பாலும் அளவிற்கு அதிகமாகப் பேசுவது.

     

    Impulsivity – உணர்ச்சிவசப்படுதல்

    7. பெரும்பாலும் வினாக்கள் முடிக்கும் முன்னரே ஏதோ ஒரு விடையை உளறுவது.
    8. பெரும்பாலும் தனது முறை வரும்வரை பொறுமை காக்க இயலாமை.
    9. பெரும்பாலும் அடுத்தவருக்கு தடை ஏற்படுத்துவது அல்லது தேவையில்லாமல் உள்நுழைவது.
    ஏழு வயதிற்குள் மேற்கண்ட அறிகுறிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து 6 மாதமாக இருந்தால் மட்டுமே இது ADHD குறைப்பாடு எனலாம்.

    போட்டிகள் வெகு விரைவாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் உயர் கல்விக்காக இளமைப் பருவத்திலிருந்தே அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. இது போன்ற தருணங்களில் இந்த விதமான மருந்து மாத்திரைகள் பயன்பட்டால் அதனைத் தொடர்வதில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை. நல்ல கல்லூரியில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழி செய்யும் வகையில் இதனைத் தங்கள் கடமையாகக் கருதும் பெற்றோரே அதிகம் உள்ளனர் என்கிறார் இவர். விளையாட்டு மைதானமாக இருக்க வேண்டிய பள்ளிப் பருவம் இந்தக் குழந்தைகளுக்கு பெரிய பந்தய மைதானமாகக் காட்சியளித்துவிடுகின்றது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணித் திட்டமிடும் பெற்றோரை தவறு சொல்ல முடியாது என்றாலும், மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்த தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதும் நல்லதல்ல… குழந்தைகளின் எதிர்கால மகிழ்ச்சியும், வெற்றியும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களின் உடல் நலமும் என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் என்றே இதைப் பார்க்க முடிகின்றது. முழுவதும் மருந்துகளையே நம்பி இருப்பதைக்காட்டிலும் உளவியல் சிகிச்சை முறையை அதிகமாகத் தொடருவதே சாலச்சிறந்தது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதிகமான மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் மிகவும் மந்த நிலையை வெகு விரைவில் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இதனால் அவர்களின் கல்வி பிற்காலங்களில் கேள்விக் குறியாகவும் வாய்ப்புள்ளதை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

    மன அழுத்தம், மனச்சோர்வு, அதிக எதிர்பார்ப்பினால் ஏற்படும் மன உளைச்சல், தற்கொலை எண்ணம் போன்ற குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படும் உணர்வுரீதியான பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் மருந்துகளைவிட குடும்ப உளவியல் சிகிச்சை முறையே (family therapy techniques) பாதுகாப்பானது என்பதே இந்த ஆய்வுகளின் முடிவான கருத்தாக உள்ளது. இதற்கான பல குழந்தைகளின் எடுத்துக்காட்டுகளும் இந்த ஆய்வுக் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ளன. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ADHD பாதிப்பினால் அல்லலுற்ற ஒரு கலிபோர்னிய குழந்தையின் தாய் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு வீட்டில் கல்வி கற்க ஏற்பாடு செய்தபோது இந்தப் பிரச்சனை பெருமளவில் கட்டுப்பட்டது என்கிறார். செருமனியைச் சேர்ந்த ஒரு தாய், தம் குழந்தை ADHD பாதிப்பினால் மருத்துவமனைக்குச் சென்றபோது மருந்துகள் கொடுத்தபோது, “நாங்கள் அந்த மருந்திற்குப் பதிலாக அவளுக்கு ஒரு பியானோ வாங்கிக் கொடுத்தோம் – ஆச்சரியமான வகையில் நல்ல முடிவுகளைக் காண முடிந்தது” என்றார்.

    ஆக, மருந்துகளைவிட குழந்தைகளின் உணவு முறையில் சிறு மாற்றங்கள், அவர்களுடைய சக்தியை வெளிக்கொணர ஒரு உபாயமும், படைப்பாற்றலில் கவனம் செலுத்துவதும் இந்த குறைபாட்டிற்கான சிறந்த மாற்று மருத்துவம் என்பது தெளிவாக விளங்குகிறது. இந்த ஆய்வின் முடிவின்படி ADHD என்ற குறைபாடு குழந்தைகளின் இயற்கைக்கு மாறான ஒரு நிலைப்பாடோ அல்லது மருந்தினால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயோ அல்ல என்பதுதான். பல நேரங்களில் குழந்தைகள் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்ட பெற்றோர் இயல்பான குணநலனுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாமல் மருத்துவ உதவியை நாடுவதும், அவர்கள் ADHD குறைபாடு என்ற ஐயத்தால் சக்தி வாய்ந்த மருந்துகளைக் கொடுப்பதும் நிகழ்ந்துவிடுவதுண்டு. பெரும்பாலும் ADHD குறைபாடு என்று பட்டயம் கட்டி மருந்துக்கு பரிந்துரை செய்வது அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகள்தான் என்பதே நிதர்சனம். கடுமையான சூழல்களால் பாதிக்கப்பட்டு எதிர்வினையாற்றும் சில குழந்தைகளை பொறுப்பாக, பொறுமையாகக் கையாளத் தெரிந்த பெற்றோரே சிறப்பான பெற்றோரின் வளர்ப்பு முறையாகக் கருத முடியும்.

    இந்த ADHD குறைபாடு பரவுவதற்கான காரணம் அமெரிக்கக் கலாச்சாரம் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய விசயம் அல்ல என்றாலும் உலகின் பெரும் பகுதிகளின் நவீன கலாச்சாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பெரும்பாலான நவீனவாதிகளின் செயல்பாடுகளாகவும் அமைந்துவிடுவது என்றும் இந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
    இயல்பாகவோ அல்லது இயல்புக்கு மாறான குழந்தைகளின் நடத்தையோ என எதுவாக இருப்பினும் அது நாம் வாழும் சமூகத்தின் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதே சத்தியம். இதை உணராத பெற்றோரே பெருங்குழப்பத்திற்கு ஆளாகி, குழந்தை வளர்ப்பை பெரும் சுமையாகக் கருதி நிம்மதி இழக்கின்றனர். ஆம், ADHD என்ற குறைபாடு பற்றி பேசும்போது நாம் முதலில் கூர்ந்து கவனம் கொள்ள வேண்டியது மருந்தில் மட்டுமல்லாமல், நாம் வாழும் சமூகம் மற்றும் அதன் கலாச்சாரம் போன்றவைகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே முக்கியம். மருந்துகளையும் தவிர்த்து சூழ்நிலை மாற்றங்கள், படைப்பாற்றலை பெருக்குவது, உளவியல் சிகிச்சை முறை போன்ற பலவகை பரந்த வெளிகள் குறித்த கருத்துகளையும் அறிந்துகொள்ளும் உரிமைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நிச்சயம் உண்டு. இதில் குழந்தைகளின் உணவு முறையில் மாற்றம், குழந்தைகளுக்குத் தோதான பாடசாலைச் சூழல், ஊடகங்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெற்றோரின் பயிற்சி மற்றும் குடும்ப சிகிச்சை போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதும் அடங்கும்.

    இந்த பிரச்சனை வெகு விரைவாக வளர ஆரம்பித்தன. 1990 களில் 3 மில்லியன் அமெரிக்கக் குழந்தைகளுக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துகள் 2010 காலகட்டங்களில் 10 மில்லியன் குழந்தைகளாக உயர்ந்துவிட்டன. அவர்களை பள்ளியில் படிக்க வைப்பதே பெரும் போராட்டமாக இருந்ததால் உளவியல் சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்க வேண்டியதாகி இருக்கிறது. மேற்கண்ட அந்த மருந்துகள் மருத்துவ உலகிற்கு புதிதும் அல்ல. 1930 களில் மூக்கடைப்பு, அதிக பருமன் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டவைதான் என்கிறார். அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காரணியாக இந்த மருந்துகள் செயல்பட்டிருக்கின்றன.

    பின் அதனைத் தொடர்ந்து பல்வேறு பெயர்களில், கருத்துகளில் இந்த குறைபாடு பற்றிய விளக்கங்கள் பல விதமாகப் பரவி வரலாயிற்று. 1968 இல் DSM II என்ற உளவியல் கையேடு வெளியிட்டபோது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, குழந்தைகளிடம் காணப்பட்ட அதீத இயக்க எதிர்வினை குறித்த கண்டறிதல் மூலமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின், கவனமின்மை, அமைதியின்மை, கவனச்சிதறல், அதீத செயல்பாடு போன்ற குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தன. ஆனாலும் இதில் குழந்தைகளுக்கு பருவ வயது வரும்போது இந்த முதிர்ச்சியின்மை மறைந்துவிடக் கூடும் என்றனர்.

    பின் அடுத்த கட்டத்தில் இந்த குறைபாடுகளை, மூளையில் ஏற்படும் மெல்லிய ஒழுங்கின்மை அல்லது கரிம மூளை நோய்க்குறி என்றும் குறிப்பிட்டனர். மூளையழற்சி அல்லது மூளையில் ஏற்படும் வீக்கம் காரணமாகலாம் எனப்பட்டது. இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கே இந்த அறிகுறிகள் இருந்திருக்கும் என்று எண்ணினார்கள்.

    பாதிக்கப்பட்ட குழந்தை பின் விளைவுகள் இன்றி மீண்டு வர திட்டமிடுவது எப்படி?

    ADHD குறைபாடு என்று கண்டறியப்பட்ட ஒரு குழந்தை வேறு ஏதும் பின் விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாக எப்படி திட்டமிடலாம் என்று அக்குழந்தையின் தாயும், மருத்துவ ஆய்வாளரும் இணைந்து செயல்படும் முறையைக் காணலாம் ..

    பொதுவாக ஒரு குழந்தையின் நடத்தையில் வித்தியாசம் தென்பட்டால், அதாவது சம வயது உள்ள மற்ற குழந்தைகளுடன் வித்தியாசப்பட்டால் அந்த பெற்றோர் அந்தக் குழந்தை ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், குழந்தையை வேதனைப்படுத்தும் அந்த ஏதோ ஒன்றை கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவரை அணுகுகிறார்கள். கோபம், மரியாதையின்மை, கவனமின்மை, அதீத செயல்பாடு போன்ற குணநலன்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. குழந்தைகளின் மன வளர்ச்சி முழுமையடையாத சூழலில், வறுமை, வன்கொடுமை போன்ற பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் ஏற்படும் மாறுபட்ட சூழல் குழந்தையின் மனநிலையை பாதிப்படையச் செய்து அது அதன் நடத்தையில் வெளிப்படுவது இயற்கை. அதாவது குழந்தைகள் கடுமையானச் சூழலில் தங்களுடைய எதிர்ப்புகளை முழுமையாக வெளிப்படுத்தும் சக்தி இல்லாதபோது இது போன்ற மாறுபட்ட நடத்தைகள் இயல்பாகிவிடுவதுமுண்டு. இதனாலேயே மருத்துவர்கள் சிகிச்சை முறையை குழந்தையின் ஆணி வேரான குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகள் மத்தியில் வித்தியாசமான நடவடிக்கை உள்ள இது போன்ற குழந்தைகளை எளிதாகக் கண்டறிய முடிவதால் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவே பெற்றோருக்கு இது தெரிய வருகிறது. பெற்றோர் இது போன்ற சூழலை அமைதியாகக் கையாள்வதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை எளிதாக அணுகுவதோடு அதற்கான சரியான தீர்வையும் காண முடிகின்றது. சில காலங்கள் முன்பு குழந்தைகளின் இது போன்ற நடத்தைகளை அவர்களின் இயல்பாக எடுத்துக்கொண்ட சூழல் இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் உண்மை. அபரிமிதமான எதிர்பார்ப்புகளோடு வளர்க்கப்படும் குழந்தைகளின் இயல்பு நிலை பெரும்பாலான பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போவதும் அந்த குழந்தைகளின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகிவிடுகின்றது.


    பொதுவாக அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் மருந்துவம் பெரும் பங்கு வகிப்பதைக் காணமுடிகின்றது. கடுமையான போட்டிகள் நிறைந்த இந்த உலகில் குழந்தைகள் அதிக உழைப்பைப் போடாமல் பகல் கனவு கண்டுகொண்டு எதையும் சாதிக்க இயலாது என்று உறுதியாக எண்ணுகிறார்கள். இந்த கலாச்சாரம் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் இன்று தீயென பரவிக் கொண்டிருப்பதும் வேதனையான விசயம். மாணவர்கள் மத்தியிலேயே கல்வி என்ற அடிப்படையில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் இடைவெளிகள் உருவாகி வருவதையும் காணமுடிகின்றது. ஒரு குழந்தை தன் மூன்று அல்லது நான்கு வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போதே ஒவ்வொரு நாளும் அதன் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்களுக்கு அடிகோலிவிடுகின்றது என்பதே நிதர்சனம். மேல் படிப்பிற்காக குழந்தைகள் ஆரம்பக் கட்டத்திலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலான பெற்றோர் அந்த போட்டிகளை எதிர்கொள்ளத் தோதாக மருத்துவ உதவியையும் நாடுவது தங்கள் கடமை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டின் நவீனத்துவம் இந்த வகையில் குழந்தைகள் வளர்ப்பில் பல எதிர்மறையான கலாச்சாரங்களையும் ஊக்குவித்துக்கொண்டு வருவதை உணர முடிகின்றது. இதில் முக்கியமாகக் காண வேண்டியது இதைப்பற்றிய முழுமையான தெளிவு இல்லாத பெற்றோர் கூட பல தவறான முன் உதாரணங்கள் மூலமாக தவறான முடிவை எடுக்கவும் துணிகிறார்கள் என்பதுதான். இதனால் மேலும் பாதிப்புக்கு உள்ளாவது தங்கள் குழந்தைகள்தான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆம் விளையாட்டு மைதானமாக குதூகலிக்க வேண்டிய குழந்தைப்பருவம் பந்தய மைதானமாக விரட்டப்படுவது துரதிருட்டவசமானது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வேலை வாய்ப்பு பெறுவதில் எத்துணை சிரமத்தை தம் குழந்தை மேற்கொள்ளப் போகிறதோ என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாகிக் கொண்டுவருவதும் முக்கிய காரணமாகிவிடுகின்றது. கல்வி மட்டுமே எதிர்கால வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க முடியும் என்ற தீவிர எண்ணம் பெரும்பாலான பெற்றோரின் மனதில் ஆணித்தரமாகப் பதிந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது. இந்த மனநிலையில் வரும் பெற்றோர்களுக்கு மருத்துவர்களும் தங்கள் பங்கிற்கு பல புதிய புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தவும் தயங்குவதில்லை. ஆனால் பல நேரங்களில் அதன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெற்றோரின் ஒரே செல்ல மகன். தங்கள் குழந்தைக்கு ADHD குறைபாடு உள்ளது என்று அறிய வந்தபோது ஏனைய மற்ற பெற்றோரைப் போலவே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது உண்மைதான். என்றாலும் சில நாட்களில் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் இந்த குறைபாடு பற்றி ஆதியோடு அந்தமாக தகவல் திரட்ட ஆரம்பித்தவர்கள் இதற்கான தீர்வைக் கண்டறிய முற்பட்டார்கள். பல்வேறு மருத்துவர்களை அணுகி இது பற்றி பல தகவல்களை சேகரித்துக்கொண்டார்கள். இந்த குறைபாட்டிற்காக கொடுக்கப்படும் மருந்தின் வீரியம் மிக அதிகம் என்பதால் குழந்தை பல பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பிற்காலத்தில் குழந்தை மேலும் மந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்பதையும் உணருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரான மருத்துவர் மெரிலைன் வெட்ஜிடம் வருகிறார்கள். இந்த குறைபாட்டிற்காக பெரும்பாலும் கொடுக்கப்படும் மருந்தின் பெயரைச் சொல்லி அதைக் கொடுப்பதால் தங்கள் குழந்தைக்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கிறார்கள்.

    அந்த மருத்துவரின் பதிலும் பெரும்பாலும் ஆம் என்பதுதான். பெரும்பாலான குழந்தைகளை இது போன்ற மருந்துகள் அமைதியாக்கி, அவர்களின் கவனத்தை மீட்டுக்கொடுக்கின்றது. பல குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்தே பலன் தெரிய ஆரம்பிக்கின்றது. ஆனாலும் இந்தப் பெற்றோர் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இந்தக் குழந்தையை வழிநடத்த தாமும் உறுதுணையாக இருக்கமுடியும் என்று விருப்பம் தெரிவித்தபோது அவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர். இதற்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் தன்மைகள் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் பின் விளைவுகள் குறித்து தெளிவான விளக்கமளித்துள்ளார். உளவியல் மருத்துவர்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகளை பயன்படுத்துவது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில், அதாவது தேவையென்றால் பயன்படுத்தலாம் என்பதுதான். இந்த மருந்துகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முறையில் செயல்படுவதும் கண்கூடு. சிலருக்கு உடனே பலன் தெரியும் இதே மருந்து பலருக்கு நாள்பட எடுத்துக்கொண்டும் பலனளிப்பதில் மந்தமாக செயல்படலாம். அவரவர் உடல்வாகின் அடிப்படையிலேயே மருந்துகள் செயல்படுவதும் இயற்கை. பல நேரங்களில் முன் காலத்தில் குறும்புக்கார குழந்தை என்று வகைப்படுத்தப்பட்டு அதை இயல்பாக எடுத்துக்கொண்டு பெற்றோரும், ஆசிரியருமே அக்குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது போக இன்று நவீனக் கலாச்சாரம் என்ற போர்வையில் அதே குறும்புக்கார குழந்தைகள் கூட குறைபாடுள்ள குழந்தைகளாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவது வேதனையான செய்தியாகத்தான் பார்க்க முடிகின்றது.


    குழந்தைகள் உளவியல் மருத்துவம் சார்ந்து 25 வருட அனுபவம் கொண்ட மருத்துவரும், ஆய்வாளருமான மெரிலின் ஒரு சாதாரணமான குழந்தைத்தனம் என்ற இயல்பியலை நம் சமுதாயம் முற்றிலும் மாறுபட்ட வேறு எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது இன்றைய பெற்றோர் சமூகம் கூர்ந்து கவனம் கொள்ளத்தக்கது என்பதில் ஐயமில்லை.

    ஒரு திரைப்பட தயாரிப்பாளரான டேவிட்டின் தந்தை படைப்பாற்றல் உள்ள ஒரு குழந்தை இது போன்ற சூழல்களை எளிதில் கடந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்திருந்தார். இளம் வயதில் தனக்கும் இது போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும் அது தன் பெற்றோரால் பெரிதுபடுத்தப்படாமல் இயல்பாக கையாளப்பட்டதால் தான் இன்று ஒரு சாதாரண மனிதனாக வலம் வரமுடிகிறது என்பதையும் எண்ணிப்பார்த்ததோடு, தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளும் ஆரம்பத்தில் இதே குறைபாடுகளுடன் பள்ளி ஆசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் என்பதையும் அறிந்துகொண்டார்கள். மெக்கார்ட்னே போன்ற இசைக்கலைஞர் பகல் கனவு கண்டவாறு பள்ளிப்படிப்பில் கோட்டை விட்டவர், ஒரு கட்டத்தில் தீவிரமாக கிட்டார் இசையைக் கற்க ஆரம்பித்தார். வீட்டுப்பாடங்களைக்கூட கிட்டார் வாசித்துக்கொண்டே ஒழுங்காகச் செய்து முடிக்கும் வழமையும் கொண்டுவிட்டார் என்பது போன்ற பல தகவல்களை வாசித்து அறிந்தவர் தம் மகனுக்கும் மருந்து இல்லாமலே இயல்பு நிலைக்குக் கொண்டுவர வழிவகை செய்ய முடியும் என்பதையும் நம்பியதோடு அதற்கான சிறந்த திட்டமும் தீட்ட ஆரம்பித்தபோதுதான் இந்த மருத்துவர் குறித்த தகவல் அறிந்து அவரோடு சேர்ந்து தாமும் திட்டமிட, பெற்றோரின் ஒத்துழைப்புடன் டேவிட்க்கு மருந்து இல்லாமலே மருத்துவம் பார்க்க முடிவு செய்தார்.

    முதலில் அதிக அளவிலான உடற்பயிற்சியுடன் கூடியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் விளையாட்டுக் குழுவில் சேர்த்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். இது போன்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் குழந்தை மெல்ல மெல்ல தேறிக்கொண்டு வந்ததைக் கண்ட பெற்றோர் முழுமையாக இதே முறையை கையாளத் தொடங்கி, வெற்றியும் கண்டதாகக் கூறுகிறார் மருத்துவர்.

    ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற மனநலக் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்தம் பெற்றோர்களின் வாழ்க்கையையும் சேர்த்தே புரட்டிப்போடும் இது இன்று பெரும்பாலும் அனைத்து நாடுகளின் மருத்துவத்திற்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. மருத்துவமும், தொழில்நுட்பமும் பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளபோதும், இந்த குறைபாடு உலக அளவில் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கப்போகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதே உண்மை. இத்தகைய குறைபாடுகளுக்கு அனைத்து நாட்டு வல்லுநர்களும் இணைந்து, நம்முடைய அனைத்து பழம்பெரும் வைத்திய முறைகளையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரவேண்டிய காலகட்டம் இது.. 🙁

    பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் அமெரிக்க ஆய்வாளர் டாக்டர் மெரிலைன் வெட்ஜ். அமெரிக்கக் குழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். 13.2 % ஆண் குழந்தைகளும், 5.6 % பெண் குழந்தைகளும் அமெரிக்காவில் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ….

    கவனமின்மை குறைபாடு (ADHD) ஒரு குழந்தையின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கக்கூடியதாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தைக்கு மட்டுமா வேதனை … உண்மையில், அது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும், குடும்பத்திற்கும் அன்றாட வாழ்வியல் செயல்பாட்டிற்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ADHD இன் பாதிப்புகள் பால பருவத்திலிருந்து ஆரம்பித்து இளமைப் பருவத்திற்கும் தொடருகின்றன, கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிகரித்த செலவினங்களுடன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தக் குறைபாட்டில் கல்வியியல் சிக்கல்கள், சமூக திறன்கள் சிக்கல்கள், பலவீனமான பெற்றோர் -குழந்தை உறவுகள் போன்றவை அடங்கும். சமீபத்திய ஆய்வுகள் மூலம் 30 – 60%, பாதிக்கப்பட்டவர்கள் முதுகெலும்புக்குள் சீர்குலைவுக்கான குறிப்பிடத்தக்க அறிகுறிகள் உள்ளவர்களாக இருப்பதைச் சுட்டுகின்றன. இந்த குழந்தைகள் நீண்ட கால எதிர்மறை விளைவுகளுக்கு ஆட்படும் நிலையில் உள்ளனர். அதாவது கல்வி கற்க இயலாமையால் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படுவது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது. ADHD இன் சிறந்த சிகிச்சை முறை என்றால் அது பள்ளி நேரங்களில் ஏற்படும் அறிகுறிகளை மட்டும் கவனம் கொள்ளாமல், குழந்தைகளோ அல்லது இளைஞர்களோ யாராக இருந்தாலும் அவர்களது குடும்பங்களின் தினசரி வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டு அதற்கான தீர்வை ஏற்படுத்துவதேயாகும். ஆம், இந்த நோய்க்கான முழுமையான தீர்வுக்கான ஆய்வு என்றால் அது மொத்த குடும்பத்தின் செயல்பாடு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.

    ADHD உடைய குழந்தைகளுக்கு வயது ஏறிக்கொண்டிருக்கும்போது அவர்களின் குறைபாடுகளும், அவர்களது குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், செயல்திறன் செயல்பாட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், அவர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் தனிப்பட்ட வாழ்வியல் முறைகளைப்பொருத்து இடர்பாடுகள் விளைகின்றன. குடும்பம், பள்ளி வளங்கள், வயது, அறிவாற்றல், குழந்தை அல்லது இளம் நபரின் நுண்ணறிவின் அடிப்படையில் வேறுபடும். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணர்திறன் கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளை அறிந்து கொள்ளும் திறனும் அவசியம். உகந்த மருத்துவ உதவியும், நடத்தை மேலாண்மையும் ADHD யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் அளித்து சமுதாயத்தின் மீதான எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பதோடு அவர்களது முழு திறனையும் அடைவதற்கும் வழிவகை செய்கிறது.
    செறிவற்ற தன்மை, அதீத செயல்பாடு, மன இறுக்கம் போன்றவைகள் வழக்கமாக இக்குழந்தைகளின் பொதுவான பண்புகள் ஆகும். வளர வளர நாடகத்தன்மையுடனான செயற்பாடுகளும், அமைதியற்ற தன்மையும் வளர்ந்துவிடுகிறது.

    இதுமட்டுமல்லாமல் இந்தக் குறைபாடுகளின் தொடர்புடைய மற்ற பெரும் பிரச்சனைகளும் அதிகம். இதில் பெற்றோர், உறவினர், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறிப்பிடத்தக்கன. பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவது முக்கியம். ஒரு சாதாரண பெற்றோரின் கோரிக்கைகள் மற்றும் நடத்தை தொடர்பான ஆலோசனையுடன் பதிலளிக்காதபோது ஆரம்ப கட்டத்தில் அந்த பெற்றோர் மன அழுத்தத்திற்கு ஆளாகநேரலாம். பெற்றோர் குழந்தைகளுடன் மற்றும் அவர்களது கவனிப்பாளர்களோடு குழந்தை தொடர்புடைய செயல்பாடுகளில் கவனம் கொள்வதோ அல்லது உதவி புரிவதோ மேற்கொண்டால் அவை பெற்றோரின் மன அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளவையாக உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

    ஆரம்பப் பள்ளி ஆண்டுகள்

    இயல்பான வகுப்புத் தோழர்கள் பள்ளியில் வெற்றிகரமாக கற்றுக் கொள்ளும் திறன் மற்றும் முதிர்ச்சியை வளர்த்துக் கொள்ளத் துவங்குவதால் ADHD குறைபாடுகளுடன் உள்ள குழந்தை வித்தியாசமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலும் குழந்தைக்கு கல்வியில் பின்தங்கும் நிலை, அனுபவங்களை நிராகரிப்பது, குறைந்த சுயமதிப்பீடு, குறிப்பிட்ட கற்றல் சிரமங்கள் போன்ற பிரச்சினைகள், குழந்தையின் மன நிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு கல்வி உளவியலாளரின் மதிப்பீடு, அந்தக் குழந்தைக்கான கற்றல் திறன் மற்றும் சிரமங்களை வெளிப்படுத்த உதவும் என்பதால் அவர்கள் வகுப்பறையில் தேவையான ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கச் செய்யலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மற்ற குழந்தைகள் ஒதுக்கி வைப்பதையும் தகுந்த அறிவுரைகள், ஆலோசனைகளுடன் மாற்ற முயற்சி எடுக்கவேண்டும்.

    பல குழந்தைகள் மிகவும் குறைவாகத் தூங்கும் வழக்கங்களைக் கொண்டுள்ளனர். இதனால் தூக்கம் மோசமாகப் பாதிக்கப்படும்போது இவர்களின் பகல் நேர நடத்தைகளும் கூட மோசமாகிவிடுகின்றன. இதன் விளைவாக, பெற்றோர்கள்களுக்கு சிறிதளவேனும் ஓய்வற்ற சூழல் உருவாகிவிடுகிறது; குழந்தையின் மீது முழுநேர கவனம் செலுத்தவேண்டியதாகிறது. இதனால் பல நேரங்களில் குடும்ப உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் கூடுதல் சமூக மற்றும் நிதி சிக்கல்களையும் கொண்டு வருவதில் ஆச்சரியம் இல்லை. இதையெல்லாம் தாங்கினாலும் குழந்தைகளின் சோகமான உணர்வையோ அல்லது கோபமான நடத்தையையோ தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறார்கள்.

    ADHD பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவது எளிதன்று. இது போன்ற குழந்தைகளின் நடத்தை மதிப்பீடுகள் வழக்கமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது சுகாதார வல்லுநர்களால் செய்யப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆரோக்கியமான குழந்தை எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் என்பதை ஊகிக்க முடிவது போன்று ADHD குறைபாடு உடைய குழந்தைகளின் மன நிலையை ஊகிப்பது இயலாத காரியமாகலாம். காரணம் அவர்களின் சுய மதிப்பீடு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளால் குடும்பத்தின் அமைதிக்கு ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடன்பிறந்தவர்களுக்கும் அந்த கவலையும் சோகமும் தொற்றிக்கொள்கின்றன.

    ADHD சகோதரர்களிடமிருந்து கடுமையான உடல்நலம் வன்முறை, வாய்மொழி ஆக்கிரமிப்பு மற்றும் கையாளுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்பு செயல்களால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் உடன்படிக்கைகள் தெரிவிக்கின்றன. அதோடு, ADHD உடன் தொடர்புடைய சமூக மற்றும் உணர்ச்சியற்ற தன்மை காரணமாக அவர்களின் ADHD சகோதரர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தன. மேலும், ADHD அறிகுறிகளின் விளைவாக மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பல உடன்பிறந்தவர்கள் கவலை, கவலை மற்றும் சோகமாக உணர்கின்றனர்.

    எவ்வாறாயினும், சமூகம் மற்றும் குடும்ப செயல்பாட்டில் வெளிப்படையான முன்னேற்றம், குழந்தை மற்றும் அவர்தம் குடும்பத்தின் தொடர்ச்சியான வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான மேலும் பல ஆராய்ச்சிகள் தற்போதய அவசரத் தேவையாகிறது. இதற்கான முழுமையான ஆய்வுகளை அனைத்துத் தளங்களிலும் மேற்கொண்டு இந்த குறைபாடுகளினால் ஏற்படும் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காண்பது சவாலான காரியமாகவே உள்ளது என்பதில் ஐயமில்லை. அரசு மற்றும் பொது நல சேவை அமைப்புகளும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு விரைவில் செயல்படுவது அவசியமாகிறது.

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் 128

    நிர்மலா ராகவன்

     

    இந்த ஆண்களை..!

    `இந்தப் பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது!’ திருமணமான பல ஆண்களின் கூற்று இது.

    இந்தக் குழப்பத்தைச் சமாளிக்க ஏதாவது முயற்சி எடுத்துவிட்ட பிறகு, `இது வேண்டாத வேலை!’ என்று வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவார்கள்.

    ஆண்களோ, பெண்களோ, இப்போதெல்லாம் முப்பது வயதிலும் திருமணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். சிறிதுகாலம் பழகியபின்னரும், `சரியான துணைதானா?’ என்ற குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற அச்சமும், `புதிய குழப்பங்களுக்கு ஆளாக வேண்டுமா!’ என்ற தயக்கமும் ஒரு காரணம்.

    திருமணம் ஆனபின்பு, ஆண்களில் சிலர் தம்மைப்போலவே குழம்பிப்போயிருக்கும் நண்பர்களை நாடுவார்கள். வேறு சிலர் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலுக்கு அளிக்கும் கடும்வேலையால் தம்மை மறக்க முயற்சி செய்வார்கள்.

    இன்னும் சிலர், `நம் மனைவிதான் அப்படியோ?’ என்ற சந்தேகம் எழ, அதை நிவர்த்தி செய்துகொள்ளும் சாக்கில் பிற பெண்களுடன் உறவு பூண்டு, இறுதியில், `எல்லாப் பெண்களும் ஒரே லட்சணம்தான்!’ என்ற கசப்பான முடிவுக்கு வருகிறார்கள்.

    கதை

    `மனைவி என்றால், அவள் என் எண்ணங்களுக்கு ஒத்துப்போக வேண்டும். நான் சொல்கிறபடியெல்லாம் நடக்கவேண்டும்!’ என்ற சராசரி ஆணின் எதிர்பார்ப்புடன் விமலாவை மணந்தான் மனோகரன்.

    அவளோ சுதந்திரமாக வளர்க்கப்பட்டிருந்தவள். முதலில் கணவன் சொற்படியெல்லாம் கேட்டவளுக்குச் சில மாதங்களிலேயே மனநிம்மதி பறிபோக, கணவனின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான் வழி என்று தோன்றிப்போயிற்று. அடிக்கடி சண்டை வந்தது.

    இத்தனை நாட்களும் அடங்கி இருந்தவளுக்கு இப்போது என்ன வந்தது என்று குழம்பினான் மனோகரன்.

    நாள் முழுவதும் அன்று காலையில் நடந்த சம்பவமே விமலாவின் மனதில் திரைப்படமாக ஓட, அவளுடைய ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே போய்விடும்.

    வேலை முடிந்து மனோகரன் வீடு திரும்பும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு அப்பால் போய்விடுவாள். அலுத்துக் களைத்து வீடு வரும் ஒருவனுக்கு இப்போது எப்படி இருக்கும்?

    அவனும் எரிந்து விழுவான். அவளும் பதிலுக்குக் கத்துவாள்.

    பெண்களும் கணினியும் ஒன்று!

    கணினி எப்படி தன்னிடத்தில் உள்ள ஒரு செய்தியை மறவாது அப்படியே வைத்திருக்கிறதோ, அதேபோல்தான் பெண்களும். ஆனால் ஒரு வித்தியாசம். நல்லனவற்றை எளிதில் மறந்துவிடுவார்கள், அல்லது அலட்சியப்படுத்திவிடுவார்கள். எதிர்மறையான சம்பவங்கள், அவைகளுக்குக் காரணமாக இருந்த உணர்ச்சிகள் – மன இறுக்கம், வருத்தம், கோபம் போன்றவை — அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்.

    ஆண்களோ, இதற்கு நேர் எதிர். நிம்மதியைக் குலைக்கும் நினைவுகளை உடனுக்குடன் மறந்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, காலையில் நடந்த வாக்குவாதம் அத்துடன் முடிந்துபோய்விட்டது.

    இப்போது மனைவி முகத்தைத் திருப்பிக்கொண்டு போனது மனோகரனுக்கு எரிச்சலைத்தான் தராமல் என்ன செய்யும்?

    “என்ன கோபம்?” புரியாமல் கேட்டான்.

    “அப்படிச் சொன்னீர்களே..!” என்று விமலா விளக்கியபோது, “அதை இன்னுமா நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாய்? அலுவலகத்தில் ஏதோ பிரச்னை,” என்றான், அலட்சியமாக.

    தற்காலத்தில் வெளிவேலைகளில் பெண்களும் ஈடுபடுவதால், ஆண், பெண் இருவருக்குமே மன இறுக்கம் வர நிறைய காரணங்கள் இருக்கின்றன. இத்தருணங்களில் ஆண் விலகி இருக்கிறான். இதனால் அவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமாகாது. அவளைப்போல் அவனுக்குத் தன் உணர்ச்சிகள் புரிவதில்லை.

    ஆண்களுக்குப் பெண்களின் உடல்மொழி, குரலின் தளர்ச்சி இதெல்லாம் புரிவதில்லை. பெண்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். பிரச்னை எழாமல் என்ன ஆகும்?

    வெளிப்படையாகச் சொன்னால்தானே தெரியும்?

    அவள் (மனக்குறையுடன்): கல்யாணமான புதிதில் நீங்கள் என் விரல்களையெல்லாம் காதலுடன் கடிப்பீர்கள். இப்போது உங்களுக்கு என்மேல் உள்ள ஆசை போய்விட்டது.

    அவர்: அவ்வளவுதானே! செய்தால் போயிற்று. என் பல் செட்டை எடுத்துக்கொண்டு வா!!

    `இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது!’

    பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் ஆண்களுடன் சேர்ந்து படித்த பெண்களால்கூட ஆண்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    ஒரு பெண் தன் தந்தைக்கு மிக நெருங்கியவளாக இருந்தால்தான் பிற ஆண்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருவ வயதிலும் அவர்களுடைய உறவின் இறுக்கம் தளர்ந்துவிடாமல் இருக்கவேண்டும்.

    இரு பாலருக்குமே ஏன் இவ்வளவு குழப்பம் என்றால், ஆண்களின் மனப்போக்கும், பெண்களுடையதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

    கணவர் அனுதினமும் `ஐ லவ் யூ!’ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனெனில், ஆண்கள் பெண்களைப்போல் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள். மாறாக, செயலில் காட்டுவர். வீட்டையோ, தோட்டத்தையோ சுத்தப்படுத்துவார்கள். சமையலறையில் உடைந்த சாமான்களை பழுதுபார்ப்பார்கள். இது புரிந்து, கணவனும் மனைவியும் ஒரே காரியத்தில் – அது விளையாட்டோ அல்லது உடலுறவோ –ஈடுபட்டால் உறவு பலப்படும்.

    சொந்தக்கதை

    முப்பது வருடங்களுக்குமுன், தெரியாத்தனமாக நான் நிறைய ஆர்கிட் செடிகள் வாங்கினேன். நோஜாச்செடி ஐந்து வெள்ளியென்றால், ஆர்கிட் செடியின் விலை அதைப்போன்று மூன்று மடங்கு. பூத்தால் வாரக்கணக்கில் அப்படியே இருக்குமே! ஆனால், அவைகளைப் பூக்கவைக்க பட்ட பாடு!

    ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு பெரிய பேசினில் தண்ணீர் நிரப்பி, அதில் எருவைப்போட்டுக் கலக்கி, ஒவ்வொரு செடியாக பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.

    என்னுடன் ஒத்துழைத்த கணவருக்கு உற்சாகமாக இருந்தது. Felt romantic. ஒரே வேலையில் இணைந்து செய்கிறோமே!

    எனக்கோ செடிகளைப் பராமரிப்பதே தலையாய வேலையாகிப் போயிற்று. விடுமுறை நாளில் எங்கும் உல்லாசமாகச் செல்ல முடியவில்லை.

    ஒரு வருடம் நன்றாகப் பூத்தபின், `இந்தக் கஷ்டத்திற்கு கணவருடன் சண்டை போடுவதே மேல்!’ என்று தோன்றிப்போக, செடிகளைப் பிறருக்குக் கொடுத்துவிட்டேன்.

    பிரத்தியேகமான பொழுதுபோக்கு

    ஒரே காரியத்தைச் செய்தாலும், நெடுநேரம் ஒன்றாக இணைந்திருந்தால் அலுப்புத் தட்டாதா! கணவன் மனைவி இருவருக்குமே தனித்தனி பொழுதுபோக்கும், தனியாகக் கழிக்க அவகாசமும் அவசியம். (தேனிலவு இதில் சேர்த்தியில்லை). வெவ்வேறு பொழுதுபோக்காக இருந்தாலும், அவைகளைப்பற்றி கலந்து உரையாடினாலே நண்பர்களைப்போல நெருக்கம் ஏற்படும்.

    கவனக்குறைவல்ல

    `என் கணவர் நான் பேசும்போது கவனிப்பதே கிடையாது. அவருக்கு என்னைவிட தினசரியைப் படிப்பதும், தொலைகாட்சியும்தான் முக்கியம்!’ என்று அலுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஒன்று புரிவதில்லை. மனைவி பேசும்போது, `உம்,’ `சரி’ என்று முனகியபடி, வேறு எதிலோ கவனம் செலுத்துவதுபோல் காணப்பட்டாலும், அவர்களுக்குக் காது கேட்கும். கவனமும் உண்டு.

    புகழுங்கள்

    ஆண்கள் தம் மனைவியைப்பற்றிப் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.

    `இதையெல்லாம் மனைவியின் எதிரே கூறினால், அவள் கை ஓங்கிவிடுமோ?’ என்ற பயம் எழ, அவளிடம் வீறாப்பு காட்டுவார்கள்.

    இரு தரப்பினருக்கும் பாராட்டு வேண்டியிருக்கிறது. வெளியில் அலைந்துவிட்டு வரும் மனைவி, `நல்லவேளை, பாலைக் காய்ச்சி வைத்துவிட்டீர்கள்!’ என்று கணவனிடம் நன்றி தெரிவிக்கிறாள்.

    பதிலுக்கு, `இன்று பயற்றங்காய் பொரியல் முறுமுறுவென்று, நன்றாக இருந்தது!’ என்று மனைவியைப் பாராட்டுகிறான்.

    அவள் உற்சாகமாக, `எண்ணை அதிகமாகாது இருக்க, கடைசியில் ஓட்ஸைப்போட்டு, சற்று வதக்கினேன்,’ என்பாள். அடுத்தமுறை, இன்னும் கவனமாகச் சமைப்பாள்.

    இப்படி ஒருவர் செய்யும் நற்காரியத்தை உடனுக்குடன் புகழலாமே! சண்டை போடுவதைவிட இம்முறை எளிதானது. நல்ல பலனையும் அளிக்கும்.

    தொடருவோம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20

    -மேகலா இராமமூர்த்தி 

    அகத்திலே அன்பின்றி வேற்று ஆடவரின் பொருளைக் கைப்பற்றுவதை நோக்கமாய்க் கொண்டுப் புறத்தே போலி அன்பைக் காட்டுபவர்கள் வரைவின் மகளிராகிய பொதுமகளிர். அத்தகு நாணும் நற்பண்புமில்லா மகளிரின் தொடர்பைத் தவறென்று முதன்முதலில் கண்டித்தவர் வாழ்வியல் அறிஞரான வள்ளுவப் பேராசான். வள்ளுவத்தை அடியொற்றி நாலடியும் நடைபயின்று, பொதுமகளிரின் இயல்பையும் இழிகுணத்தையும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் விளக்கி அவர்தம் தொடர்பை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.

    எழிலும் பரந்த இடமும் கொண்ட விண்ணுலகின்கண் வாழும் தேவர்களால் தொழப்படும் செந்தாமரைக்கண்ணனாகிய திருமாலை ஒப்பவனாயிருந்தாலும், கொடுப்பதற்குரிய கைப்பொருள் இல்லாதவனாயின், (அவன் பொருளிலேயே நாட்டமுடைய) தளிர் மேனியுடைய பொதுமகளிர் தம் கைகளால் வணங்கி அவனுக்கு விடைகொடுத்துவிடுவர். 

    அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
    செங்கண்மா லாயினும் ஆகமன் – தங்கைக்
    கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
    விடுப்பர்தங் கையாற் றொழுது. 
    (நாலடி – 373)
     

    ”நீ செங்கண்மாலே ஆயினும் ஆகுக, எங்கள் அன்பைப்பெறுதற்குரிய ஒண்பொருள் உன்னிடமின்மையின் இங்குமக்கு வேலையில்லை, சென்று வருக!” என்று கும்பிடுபோட்டு அனுப்பிவிடும் பொதுமகளிரின் நீர்மையை நேர்மையாய்ப் பேசியிருக்கின்றது மேற்கண்ட நாலடி.

    இன்சுவை மிகுந்த தெளிந்த நீருடைப் பொய்கையில் பாம்புக்குத் தன்னுடலின் ஒரு புறமாகிய தலையைக் காட்டி, மற்றொரு புறத்தே அமைந்துள்ள வாலை  மீனுக்குக் காட்டி அந்தந்த இனத்திற்கு ஏற்றவகையில் ஒழுகி, உயிர்பிழைத்து வாழும் விலாங்கு மீன் போன்ற கள்ளச்செய்கைகளுடைய விலைமகளிரின் தோள்சேரும் காமுகர், விலங்கைப் போன்ற பகுத்தறிவற்ற அறியாமையுடையோர் ஆவர்.

    பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
    தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு
    மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
    விலங்கன்ன வெள்ளறிவி னார். 
    (நாலடி –  375)

    விலாங்கு மீனின் தலைப்புறம் பாம்பு போலவும், வால்புறம் மீன் போலவும் இருக்குமாகையால், மீனென்று கருதி பாம்பு இரைபிடிக்க வரும்போது அதற்குத் தலைப்புறங்காட்டி அதன் இனம்போல உலவி உயிர்தப்பியும், தனக்கு உணவாகிய சிறுமீன்கள் பாம்பென்று கருதி அஞ்சி விலகுமாயின் அவற்றிற்கு வால்புறங்காட்டி இரையுண்டு உயிர்பிழைத்தும் அம்மீன் வஞ்சித்து வாழ்தலின், பொருளற்றாரையும் பொருளுற்றாரையும் பகையாதும் நேசித்தும் அவரவர்க்கேற்பக் கள்ளத்தனமாய் ஒழுகிப் பொருள் பறித்து வஞ்சித்து உயிர்வாழும் விலைமகளிர்க்கு அதனை உவமையாய்க் காட்டியிருக்கின்றது நாலடியார். 

     ”தமது பேரழகே தூண்டிலாகவும், அச்சமும் நாணமும் ஊராண் ஒழுக்கமும் ஒப்பனையும் அத்தூண்டிலில் கட்டும் இரையாகவும், உலகத்தில் இளைஞர் திரட்டிய அருங்கலன்களும் பொன்னும் மீனாகவும், அம்மீன்களைப் பிடிக்கும் தமது தொழிலிடத்தே தப்பாத மகளிர்”  என்று பொதுமகளிரின் இயல்பை விவரிக்கின்றது பெருங்கதை எனும் அருந்தமிழ்நூல்.

    காரிகை கடுநுனைத் தூண்டிலாக
    உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும்
    கட்கின் கோலமுங் கட்டிரையாக
    இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய
    அருங்கல வெறுக்கை யவைமீனாக
    வாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப்
    பூங்குழை மகளிர்…
    (பெருங்கதை – இலாவாண காண்டம்)

    எனவே கள்ளமனமும் பொருள்நோக்கமும் கொண்ட வரைவின் மகளிரைவிட்டு விலகியிருப்பதே போற்றத்தக்க நல்லாண்மை எனலாம்.

    இனி, கற்புடைய மகளிரின் இயல்புகளை நாலடியார் வழிநின்று ஆராய்வோம்.

    குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
    கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
    கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
    மாதர் மனைமாட்சி யாள். 
    (நாலடி – 382)

    குடத்திலுள்ள நீரையே காய்ச்சிப் பருகிப் பசியாறும் வறுமை வந்துற்ற இன்னாக் காலத்தும், கடல்நீர் முழுமையும் உண்டு பசியாறுதற்குரிய அத்தனை உறவினரும் ஒருங்கு விருந்தாக வந்தாலும், தன் கடமையாகிய விரும்தோம்பும் இயல்பை விடாது மேற்கொள்ளுகின்ற மென்மையான சொற்களையுடைய பெண்ணே, இல்லற வாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவள் ஆவாள் என்பது நாலடி நவிலும் நற்கருத்து.

    அக் காலத்தில் விருந்தோம்பும் பண்பே இல்லறத்தினரின் தலையாயக் கடனாய்க் கருதப்பட்டது. அதனால்தான் வள்ளுவமும்,

    ”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.” (81) என்று விருந்தோம்பலை வலியுறுத்துகின்றது.

    ”வறுமை வந்துற்ற காலை விருந்தினரைக் கண்டால் ஒளிந்துவாழ நேரும்; உடம்பின் ஐம்புலன்களும் குறைவின்றி இருந்தாலும் வறுமையானது அறிவைக் கெடுக்கும் இயல்புடைத்து” என்று தன் இன்மையையும், அதுதரும் அவல வாழ்வையும் சோழன் உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னியிடம் வேதனையோடு விளம்புகின்றார் பெருங்குன்றூர் கிழார் எனும் புலவர்பெருந்தகை. 

    …உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
    பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
    அறிவுகெட நின்ற நல்கூர் மையே. (புறம் – 266)

    குலமகள் ஒருத்தியின் நல்லியல்பாம் நாணத்தை அருங்குணங்கள் பிறவற்றோடு ஒப்பிட்டு விதந்தோதுகின்றது நாலடியார்ப் பாடலொன்று!

    உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
    வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் – தெள்ளிய
    ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
    நாணுடையாள் பெற்ற நலம். (நாலடி –  386)

    உள்ளத்தில் இயற்கை நுண்ணுணர்வுடையானொருவன் கற்ற கல்வியை ஒத்ததாயும், கொடைக்குணம் உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒளிபொருந்திய செல்வத்தை ஒத்ததாயும், வாட்பயிற்சியில் தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில் விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும் இருக்கின்றது, நாண் முதலிய பெண்ணீர்மைகள் பெற்ற கற்புடைப் பெண்ணொருத்தியின் அழகு முதலிய குணநலங்கள்.

    ”அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
    நிச்சமும் பெண்பாற் குரிய என்ப”
    எனும் தொல்காப்பியக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த சிந்தனைகள் இவை எனலாம்.

    நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்” எனும் (பாரதியின்) பிற்காலச் சிந்தனையை இதனோடு பொருத்திப் பார்த்துக் குழப்பிக்கொள்வது தேவையற்றது. அந்தந்த காலகட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வியலையும் அவர்தம் சிந்தனையோட்டத்தையும் கண்ணாடிபோன்று பிரதிபலிப்பவையே இலக்கியங்கள் எனும் புரிதல் நமக்குத் தேவை.

    கற்புடைய மகளிரின் இயல்புகளைப் பரக்கப் பேசுகின்ற நாலடியார் பரத்தையரோடு திரிதரும் ஒழுக்கமற்ற ஆடவரின் இயல்புகண்டு வருந்தும் இல்லக்கிழத்தியரின் மனவுணர்வுகளையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை.

    கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
    ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் – ஒருங்கொவ்வா
    நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
    என்னையுந் தோய வரும்.
    (நாலடி –  387)

    ”மருதநிலத்து ஊரில் இருந்துகொண்டே அவ்வூரானொருவன் தரங்குறைந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் ஒரே விலைக்கு, தூணிப்பதக்கு என்று ஒரே அளவாக, ஒன்றாய் வாங்கினானாம்; அதுபோலப் பெண்மையியல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நன்னுதல் பரத்தையரை மருவிய மலைபோலும் பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடி உடல்தூய்மையும் செய்யாது என்னையும் தழுவ வருகின்றான்” என்று அவன் இழிகுணத்தை எண்ணி வருந்தி ஊடுகின்றாள் இல்லக்கிழத்தி.

    தூணி என்பது நான்கு மரக்காலும், பதக்கு என்பது இரண்டு மரக்காலுமாகத் தூணிப் பதக்கென்பது ஆறு மரக்காலளவைக் குறிப்பதாகும்.

    பரத்தையரிடம் சென்ற தன்னிடம் ஊடியிருந்த தலைவியைச் சமாதானம் செய்யப் பாணன் ஒருவனை அனுப்புகின்றான் தலைவன். அவனிடம் தலைவி கூறும் மொழிகள் இவை:

    அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
    பெரும்பொய் உரையாதி பாண – கரும்பின்
    கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
    இடைக்கண் அனையார்க் குரை.  
    (நாலடி – 390)

    அரும்புகள் போதாகி மலரும் மாலையை அணிந்த எம் தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றான் என்று பெரியதொரு பொய்ம்மொழியை எம்மிடம் மொழியாதே பாண! ஊரனாகிய எம் தலைவனுக்கு யாம் கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையில்லாமல் இருக்கின்றோம். ஆதலால், அதன் நடுக் கணுக்களை ஒப்ப அவனுக்குச் சுவைமிக்கவரான பரத்தையரிடம் இதனைச் சொல் என்று சினந்து கூறுகின்றாள்.

    அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அஃதொப்ப ஆராக்காமம் இல்வாழ்வுக்குத் தீராத்துன்பத்தை தந்துவிடக் கூடியது என்பதை மருதத்திணையில் காட்டப்படும் தலைவர்களின் பரத்தமை ஒழுக்கமும் அதனால் வெளிப்படும் தலைவியரின் மனவேதனையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

     [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்       பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share