குறளின் கதிர்களாய்…(230)
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
-திருக்குறள் -418(கேள்வி)
புதுக் கவிதையில்…
காதுகளின் பயன்
கேள்விஞானம் பெறுவதே..
கேள்விஞானத்தால்
துளைக்கப்படாத காதுகள்
கேட்பினும் அவை
கேட்காத
செவிட்டுக் காதுகளே…!
குறும்பாவில்…
கேள்விஞானம் பெறாத காதுகள்
கேட்பினும் அவை பயனேதுமற்ற
செவிட்டுக் காதுகள்தான்…!
மரபுக் கவிதையில்…
காதுக ளிரண்டு படைத்ததற்கே
காரண மிதுதான் கேளீரே,
ஓதி யுயர்ந்தோர் கொடுக்கின்ற
ஒப்பிலாக் கேள்வி ஞானம்பெற,
சேதி நல்லதாய்க் கேட்காத
செவிகளால் பலன தில்லையென்பதால்,
காதுக ளிவையொலி கேட்டாலும்
கருதப் படுமே செவிடெனவே…!
லிமரைக்கூ..
கேள்விஞானம் பெற்றாலது காது,
அவ்வாறில்லாக் காதுநன்றாய்க் கேட்டாலும்
பெற்றிடும்பேர் செவிடெனும் தீது…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும் கேள்விஞானம்
காதுக்கு வேணும் கேள்விஞானம்..
காதக் கடவுள் படச்சதுவே
நல்ல வார்த்த கேட்டிடத்தான்,
நல்லாப் படிச்சவன் சொல்லுகிற
நல்ல வார்த்த கேட்டிடத்தான்..
கேள்வி ஞானம் கேட்காத
காது நல்லாக் கேட்டாலும்,
அது
ஒண்ணுமே கேக்காத
செவுட்டுக்காது போலத்தான்..
அதால
வேணும் வேணும் கேள்விஞானம்
காதுக்கு வேணும் கேள்விஞானம்…!
செண்பக ஜெகதீசன்…