Blog

  • நலம் .. நலமறிய ஆவல் – 127

    நிர்மலா ராகவன் 

    உள்ளுணர்வைக் கேளுங்கள்!

    மிக மலிவானது எது தெரியுமா? அறிவுரை வழங்குவதுதான்.

    சிலர் யாரும் கேளாமலேயே அறிவுரைகளை வாரி வழங்குவர். பிறருக்கு நன்மை செய்வதாகத்தான் எண்ணிக்கொண்டிருப்பார்கள். உண்மையில், தம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கென வழிகாட்டுகிறோம் என்று அவர்களுக்கே புரிவதில்லை.

    `நான் செய்த தவற்றை நீயும் செய்யக்கூடாது!’ என்று ஓயாது வழிகாட்டும் பெற்றோர் தம் குழந்தைகளின் சுதந்திர உணர்வைப் பறிக்கிறார்கள்.

    ஒருவருக்குச் சரியெனப்படுவது எல்லாருக்கும் அப்படித்தான் இருக்குமா?

    பிறரது விருப்பத்துக்கு எதிராக வழிகாட்டுவது எந்தப் பலனையும் தராது.

    பிறர் சொற்படி நடப்பதைவிட, அவர்கள் புரியும் பிழைகளிலிருந்து கற்பதே மேல்.

    அவசரப்படும் அம்மா

    தம் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை அமையவேண்டும் என்ற பதைப்பில் பல தாய்மார்கள் சிலவற்றை மறந்துவிடுகிறார்கள்.

    ஒருவருக்கு எதையாவது கற்றுக்கொடுக்க நினைப்பவர்கள் முதலாவதாக, அவர்களுடைய திறமையையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    “அந்த நாட்டிய வகுப்பில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள். என் நான்கு வயதுக் குழந்தையை சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்!” என்று ஓர் இளம் தாய் என்னிடம் புகார் செய்தாள்.

    நம் கை, கால், உடல் எல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆறு வயதாவது ஆகவேண்டும். கையை நீட்டவும் முடியாது, கால்களால் தரையை ஓங்கித் தட்டவும் முடியாது, வலம், இடம் என்ற வித்தியாசமும் புரியாது என்ற நிலையில் பரதநாட்டியம் ஆடுவதாவது!

    பிழை புரியுங்கள். அதுவே பாடமாகும்!

    தவறிழைத்துவிடுவோமோ என்று பயந்து, புதிய அனுபவங்களை நாடத் தயங்குபவர்கள் அனேகர்.

    வாழ்வில் எத்தனையோ இடர்கள். அவைகளை எப்படித் தவிர்ப்பது?

    புதிய முயற்சிகளில் இறங்கும்போது, பிழைகளும் ஏற்படத்தான் செய்யும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். துணிந்து ஒரு காரியத்தில் இறங்கிவிட்டு, அப்போது எழும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொண்டால், அடுத்த முறையும் அதேபோன்று நடக்காதிருக்க கவனமாகச் செயல்படலாம்.

    அப்படி நாம் இழைக்கக்கூடிய பிழைகளிலிருந்து கற்க ஒரு வாழ்நாள் போதுமா? பிறரது அனுபவங்களையும் நமக்குப் பாடமாக ஆக்கிக்கொள்ளலாமே!

    மாறாக, செய்த பிழைகளையே ஓயாது எண்ணிக் கலங்கி, `அக்காரியமே தவறு!’ என்பதுபோல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் அவை அச்சுறுத்த விடுவானேன்!

    சிறந்த வழிகாட்டி

    ஒருவருக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பது என்பது சாத்தியமில்லை. உள்மனம்தான் சிறந்த வழிகாட்டி. அது நம்முடன் பேசும்.

    எப்போது தெரியுமா?

    இரவில் கண்ணயரும் முன்னர், அதிகாலையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது. உள்மனம் கூறுவதை ஏற்றால், பிறகு எந்த நேரமும் அதை நாடலாம்.

    கதை

    சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் ஒரு புடவை வாங்க கடைத்தெருவிற்குப் போயிருந்தேன். பல கடைகள் ஏறி இறங்கியும், எதுவுமே எனக்குத் திருப்திகரமாக அமையவில்லை. `இது ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்த டிசைன்!’ என்று ஏதேதோ சொல்லித் தட்டிக்கழித்தேன்.

    நிறைய புடவைகளை எடுத்துக் காட்டிய ஒரு கடைச் சிப்பந்திக்குப் பொறுமை மீறியது. “உங்களுக்கு என்னதான் வேணும்?” என்றார், எரிச்சலை மறைக்காது.

    நானும் அலுப்பின் எல்லையில் இருந்தேன். மூச்சை நிதானமாக இழுத்து விட்டபடி, `என்னுடன் வரப்போகும் புடவையே, நீ எங்கே இருக்கிறாய்?’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அது என் கண்ணில் பட்டது!

    இப்போது அதே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்டு, உடனடியாக முடிவு எடுக்க முடிகிறது. வாங்கப்போகும் புடவையின் வண்ணத்திலிருந்து, அடுத்த பரீட்சையில் என்ன வரப்போகிறது என்பதுவரை சரியாக ஊகிக்க முடிகிறது. (நான் ஆசிரியையாக இருந்தபோது, ஆறு ஆண்டு காலம் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சைக்குமுன் வரப்போகும் கேள்விகளை உத்தேசமாகக் கணித்தேன். எல்லாமே சரியாக இருந்தன. பின்னென்ன! நான்தான் அக்கேள்விகளைத் தயாரித்திருக்க வேண்டும் என்று வதந்தி பரவ, அவைகளைப் பெற பிற பள்ளிமாணவர்கள் போட்டியிட்டார்களாம்!)

    உள்ளுணர்வின் உந்துதலில் கிடைக்கும் விடை நாம் எண்ணியதற்கு மாறாக இருக்கலாம். ஆனால், சரியாக இருக்கும். ஏன், எப்படி என்ற கேள்விகள் உதவாது. நம்பிக்கையுடன் துணிந்து ஏற்கவேண்டும்.

    இளைஞர்களே, வாழ்க்கைத்துணையைத் தேட ஒரு வழி இதோ!

    `என் வாழ்நாளை எல்லாம் என்னுடன் மகிழ்ச்சியாகக் கழிக்கப்போகிறவர் எப்படி இருப்பார்?’

    இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். முகம், கண், மூக்கு எதுவுமே நினைவில் எழாது. அவரது குணங்கள் ஒவ்வொன்றாக, பல நாட்களில் பிடிபடும். அப்படி ஒருவரைப் பார்க்கும்போது, `இவர்தான் நாம் தேடியவர்!’ என்று மனம் ஆர்ப்பரிக்கும்.

    விஞ்ஞானமும் உள்ளுணர்வும்

    எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொள்வதுதான் அறிவாற்றலுக்கு அடையாளம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். `இதை விஞ்ஞான ரீதியில் பரிசோதிக்க முடியுமா?’ என்று கேட்பார்கள், அலட்சியமாக. ஆனால், விஞ்ஞானிகள்கூட, எண்ணற்ற பரிசோதனைகளால் குழம்பி இருக்கும் ஒரு தருணத்தில் எதிர்பாராத விதமாக விடை கிடைக்க, `நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது!’ என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

    கடவுள், உள்மனம் – பெயர் எதுவாக இருந்தால் என்ன! பலன் கிடைக்கிறதே! ஏதாவது துன்பம் நேரும்போதுதான் ஒருவரை நமக்கு வழிகாட்ட நாட வேண்டும் என்பதுமில்லை.

    “வழிகாட்டல் என்பது இருண்ட கானகத்தில் ஒரு சிறிய விளக்கிற்கு ஒப்பானது. எதிரிலிருப்பவை யாவும் புலப்படாது. ஆனாலும், அடுத்த அடியை எடுத்துவைக்க அதுவே போதும்”. (ஸ்வாமி விவேகானந்தர்)

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(227)

    செண்பக ஜெகதீசன்

     

    இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய       

    தாமே தமிய ருணல்.                                                

           -திருக்குறள் -229(ஈகை)

    புதுக் கவிதையில்…

     

    சேர்த்த பொருளைப்

    பிறர்க்கு ஈந்திடாமல்

    தானே தனியாய் உண்பது,

    இரத்தலைக் காட்டிலும்

    கொடிதான ஒன்றே…!

    குறும்பாவில்…

     

    சம்பாதித்த பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல்               

    தான்மட்டும் உண்பது, 

    பிச்சையெடுப்பதைவிடக் கொடியதே…!

    மரபுக் கவிதையில்…

     

    மண்ணில் மனித வாழ்வினிலே

         முயன்று சேர்த்த பொருளதனைக்

    கண்ணிய மாகப் பிறருக்கும்

         கொடுத்தே யுதவி செய்யாமல்

    உண்ணத் தனக்கே வைத்திருந்தே

         ஒளிந்து தானே உண்டிடுதல்,

    திண்ண மாகத் தரந்தாழ்தே

         தெருவி லிரப்பினும் கேடாமே…!

    லிமரைக்கூ..

     

    சேர்த்ததில் செய்பிறருக் குதவி,     

    பணமதில் தானே தனித்துண்டால் கிடைக்கும்                   

    இரத்தலினும் கொடியதான பதவி…!

    கிராமிய பாணியில்…

     

    கொடுத்து ஒதவு கொடுத்து ஒதவு

    அடுத்தவருக்குக் கொடுத்து ஒதவு..

    ஒழச்சிச் சேத்த பணத்தயெல்லாம்

    ஒருத்தருக்கும் கொடுகாம

    ஒதவியேதும் செய்யாம,

    ஒளிச்சிருந்து தனியாவே

    தான்மட்டும் திங்கிறது,

    தரங்கொறஞ்சி

    தெருவுல பிச்சயெடுக்கிறதவிடக்

    கொடுமதானே..

    அதால

    கொடுத்து ஒதவு கொடுத்து ஒதவு

    அடுத்தவருக்குக் கொடுத்து ஒதவு…!

    செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • அகநானூற்றில் ஐந்திணை நீர் மேலாண்மை

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    அகநானூற்றில் ஐந்திணை மக்கள் வாழ்வியல் குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இன்றைய தேவையான நீர்மேலாண்மை குறித்த செய்திகள் என்னென்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

    குறிஞ்சி நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    கடல்நீரை முகந்து மேகங்கள் நெய்தல் நிலத்தில் அழகுடன் காணப்பட்டாலும் முதலில் மழைப்பொழிவைத் தொடங்குவது குறிஞ்சி நிலத்திலேதான். இதனை,

    கார்கதம்பட்ட கண்அகன் விசும்பின்
    விடுபொறி ஞெகிழியின் கொடிபட மின்னி
    படுமழை பொழிந்த பானாட் கங்குல்(அகம்.108)

    எனும் அகப்பாடல், அகன்ற ஆகாயத்தில் சினந்து எழும் மேகங்கள் பொறிவிடுகின்ற கொள்ளிக்கட்டை போல வரிசையாக மின்னி நள்ளிரவில் மிக்க மழையைப் பொழிந்தது என்று குறிப்பிடுகின்றது.மலைகளின் மீது இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலை சுனையாகும். இது வளமையான பாறைகளின்மேல் அமைந்திருந்ததாக,

    மல்லல் அறைய மலிர்சுனை……”(அகம்.308)

    எனும் அகப்பாடல் குறிப்பிடுகிறது. மேலும், வளமையான பாறையில் அமைந்துள்ள தெளிந்த பெருகிய நீரினை உடைய சுனை என்பதனால் சுனை பாறையின் மீதமைந்துள்ளது புலப்படுகின்றது.  சுனைகள் பறையின் கண் போன்று இருந்ததாக அகநானூற்றுப் புலவர்கள் கூறியுள்ளனர்.

    “பாறைக் கண் அன்ன நிறைச்சுனை பருகி”(அகம்.178)

    என்ற அகப்பாடல்கள் சுனையின் வடிவு பாறையின் கண்ணையொத்ததாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

    பாறை நெடுஞ்சுனை” (அகம்.2)

    என்ற அகப்பாடலடிகள் நீர் நிரம்பிய நீண்ட சுனைகள் இருந்ததாகவும், அவை பாறைகளின் இடையே இருந்ததாகவும் குறிப்பிடுகின்றது. அதேபோல் குறுகிய சுனைகள் இருந்ததாகவும் பாடல்களில் காண முடிகின்றது.

    பாடுஇன் அருவிப் பனி நீர்இன் இசை(அகம்.82)

    அருவிகள் விழும் ஓசை இனிய இசையினைப் போன்றுள்ளதென புலவர் கூறியுள்ளார்.

    சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் போல
    அருங்கடி அன்னையும் துயில்மறந் தனளே”(அகம்.252)

    என்ற நக்கண்ணையார்  பாடல் தலைவியின் காதலை அறிந்த தாய்  சிறிய கரையினையுடைய பெரிய குளத்தைக் காவல் செய்பவன் அதன் கரை உடைந்து போகாதபடி இரவெல்லாம் துயிலாது அதனைக் காப்பான் அதுபோல தன்னைக் காத்து நிற்பதாகத் தலைவி கூறும் உவமை வழி குளத்தைப் பாதுகாக்க பாதுகாவலர்கள் இருந்தது தெரியவருகின்றது. குளக்கரைகளைக் கட்டுமானங்களையே கவனத்தோடு கட்டிய மக்கள் அதையும் மீறி அணைகளில் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க பாதுகாவலர்களை நியமித்தது அவர்களின் நீர்ப்பராமரிப்புத் திறத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது. 

    முல்லை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    முல்லை நில பாறைகளின் நடுவே சுனைகள் இருந்ததனை,

    பாறைக் கண் அன்ன நிறைச்சுனை தோறும்”(அகம்.324)

    எனும் அகப்பாடல் கூறியுள்ளது. மேலும்,

    பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
    தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ” (அகம்.84)

    எனும் அகப்பாடல் மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிகழுமெனக் குறிப்பிடுகின்றது. மேலும், மேகங்கள் எந்ததிசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும் என்று கூறியுள்ளனர். 

    புன் காழ் நெல்லிப் பைங் காய் தின்றவர்
    நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி
    பண்ணன் சிறுகுடிப் படப்பை நுன்நுரை”(அகம்.54) சிறிய இலைகளையும், புல்லிய விதைகளையுமுடைய நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும் என்பதை அக்கால மக்கள் அறிந்துள்ளனர். பாலை வழிச் செல்லும் வழிப்போக்கரின் உயிரைப் போகடிக்காது தடுத்து நிறுத்தும் சுவைமிக்க காய்களைக் கொண்டது நெல்லி மரம் என்று மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்க கள் உண்டுள்ளனர். 

    மருத நில பாடல்களில் நீர் மேலாண்மை

    மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலையினை,

    துணிநீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்(அகம்.236)

    எனும் அகப்பாடலில் முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 

    நெடுநீர்ப்பொய்கை ……. ……….”(அகம்.246)

    நீள்இரும் பொய்கை ……. …… .”(அகம்.276)

    எனப் பொய்கை ஆழமானதாகவும், நீண்ட பெரிய நீர்நிலையாக இருந்ததையும் மேற்கண்ட அகப்பாடல்கள் சுட்டுகின்றன.

    மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    தெண்கட் தேறல் மாந்தி மகளிர்
    நுண்செயல் அம்குடம் இரிஇ”(அகம்.336)

    பாவைக் கொட்டிலார் என்ற அகநானூற்றுப் புலவர் நுண்ணிய வேலைப்பாடமைந்த குடங்களில் நீர் எடுக்க மருத நிலப் பெண்கள் நீர்த்துறைக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றார். எனவே தண்ணீர் எடுத்து வரத் தாழி, குடம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தியிருப்பதையறிய முடிகின்றது. 

    நெய்தல் நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டதை,

    தண் கயத்து அமன்ற ஒண்பூங் குவளை”(அகம்.180) எனும் அகப்பாடலில் காணலாம்.

    பாலை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    பாலை நிலத்தில் கோடை காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. இதனை,

    நிலம் நீர் அற்று நீள்சுனை வறப்ப
    குன்று கோடு அகைய கடுங்கதிர் தெறுதலின்(அகம்.295) 

    ”……………………….. வறுஞ் சுனை
    மை தோய் சிமைய மலைமுதல் ஆறே(அகம்.119)

    வறட்சி காலங்களில் நீரின்றி உட்பகுதி வற்ண்டு காணப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    மலையின் மீதிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியே அருவியாகும். மழை பெய்தால்தான் அருவிகள் விழும். மழைக்காலங்களில் மட்டுமே காணவியலும் அழகிய இயற்கை காட்சியது இதனை, 

    கழைநரல் வியல்அகம் வெம்ப மழைமறந்து
    அருவி ஆன்ற வெருவரு நனந்தலை(அகம்.241) என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது. மழை பொழியாததால் அருவிகள் இல்லாமல் போயின என்று குறிப்பிடுகின்றது. எனவே அருவி தோன்றுவதற்கு முக்கிய ஆதாரம் மழையே ஆகும்.

    ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கூவலிலுள்ள நீர் உவர்ப்புத்தன்மை உடையதாக இருந்துள்ளது. இதனை, 

    பிணர்அழி பெருங்கை புரண்ட கூவல்
    தெண்கன் உவர் குறைகுட முகவை
    அறனிலாளன் தோண்ட வெய்து உயிர்த்து
    பிறைநுதல் வியர்ப்ப உண்டனள் கொல்லோ ?”(அகம்.207)

    பாலை நிலத்தின்வழி உடன்போக்குச் சென்ற தலைவன் தாகத்தால் வருந்திய தலைவியின் தாகத்தைத் தணிக்கக் கூவலை மேலும் சிறிது தோண்டுகிறான். அப்போது உவர்நீர்  ஊறுகிறது. தலைவி அந்நீரை குடிக்கிறாள். எனவே பாலையில் உவர் நிலத்தில் அமைக்கப்படுவது ‘கூவல்’ என்பது புலனாகிறது. அவ் உவர் நிலத்திலுள்ள நீரும் உவர்ப்புத் தன்மையுடையதாதலால் கூவல் “உவர் நீரையுடைய நீர்நிலை” என்பது புலனாகிறது. வன்புல நிலத்தைத் தோண்டி செய்யப்பட்ட கூவலில் ஆநிரைகள் நீர் அருந்தச் செல்லும் . இதனை, 

    வன்புலம் துமியப் போகி கொங்கர்
    படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்(அகம்.295) என அகநானூற்றுப் பாடல் கூறியுள்ளது. இதன்வழிப் பாறை நிலத்தையுடைத்துச் செய்யப்பட்டதே கூவல் என்பது புலனாகிறது.

    கோவலர்கள் தான் கூவலை முதன்முதலில் தோண்டியிருக்க வேண்டும். ஏனெனில் கோவலர்கள் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக நெடுந்தூரத்திற்கு ஓட்டிச் செல்லும் போது அவைகள் தாகத்தால் வருந்தமுறும். அதனால் அவைகளின் தாகத்தைத் தணிக்க அவர்களால் அமைக்கப்பட்டதே இந்தக் கூவலாக இருக்கும். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். இதனை,

    “…………. ………….. …………. கோடை முகத்தலின்
    நீர்க்குஇயங்கு இனநிரைப் பின்றை வார்கோல்(அகம்.225) 

    நீர் பருகுவதற்குச் செல்லும் பசுக் கூட்டத்திற்குப் பின்னே நீண்ட கோலுடைய ஆயர்கள் வந்தனர் என்று இப்பாடல் கூறுகின்றது. 

    கடற்றுஅடை மருங்கின் கணிச்சியின் குழித்த
    உடைக்கண் நீடுஅமை ஊறல் உண்ட
    பாடுஇன் தென்மணி பயம்கெழு பெருநிரை(அகம்.399)

    நிறையப் பசுக்கூட்டங்களையுடைய கோவலர்கள் அவற்றின் தாகங்களைப் போக்குவதற்காக மலங்காட்டினைச் சார்ந்த பகுதியில் குந்தாலி என்ற கருவியால் குழி தோண்டினர். அதில் ஊறிய நீரைப்பருகிய இனிய ஓசையை உடைய மணிகளைக் கொண்ட பால் கொடுக்கும் பசுக்கள் என்பதன் வழி ஆநிரைகளுக்காக கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர் என்பதை அறியலாம். 

    பயநிரை சேர்ந்த பாழ்நாட்டு ஆங்கண்
    நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
    கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறுகுழி
    நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது(அகம்.155)

    ஆநிரைகள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பல இடங்களிலும் கோவலர்கள் தாம் தோண்டிய கூவலிலிருந்து வளைந்த வாயினை உடைய பத்தலால் நீர்  இறைத்துச் சிறுகுழியில் ஊற்றினர். பாலை நிலத்தின் வெப்பத்தினால் சிறுகுழியில் ஊற்றிய நீரானது காய்ந்து போனதாகக் கூறப்படுகின்றது. இதிலிருந்து கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. மேலும், பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும்.

    பாலை நிலத்தில் அழுகல்நீர்தான் இருக்கும். அந்நீர் இனிய தன்மையையும், மனநிறைவையும் தராது. அவ்வாரிருக்கும் நீரின் அழுகியவாடையும், உவர்ப்பும் தெரியாமலிருக்க பாலை வழியாகச் செல்வோர் நெல்லிக்காய் உண்டபின் அந்நீரை அருந்தியுள்ளனர்.

    நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
    செல்உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
    பல்காய் அம்சினை அகவும் அத்தம்(அகம்.271) 

    விளர்ஊன் தின்ற வேட்கை நீங்க
    துகள்அற விளைந்த தோப்பி பருகி(அகம்.265)

    எருதின் ஊனை உண்ட ஆறலை கள்வர்கள் ஆதனால் எழும் மிகுந்த நீர் தாகத்தைப் போக்கும் பொருட்டுத் தூயமுதிர்ந்த நெல்லினால் சமைத்த தோப்பிக் கள்ளினைக் குடித்தனர் என்ற அகநானூற்றுப் பாடல் வழி உணவு உண்டபின் நீர்  தாகத்தைப் போக்க ஆறலை கள்வர்கள் கள் குடித்தது புலனாகிறது. மேலும், பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். ஆயர்கள் தோண்டிய கூவல் வழிச் செல்வாரின் தாகத்தை  தணிக்கவும் பயன்பட்டது.

    கல்லுடை அதர கனம் நீந்தி
    கடல்நீர் உப்பின் கணம்சால் உமணர்
    உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இழத்து
    அகல்இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
    ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் .(அகம்.295)

    நெய்தல் நிலத்தைச் சார்ந்த உப்பு விற்கும் உமணர்  கூட்டம் பாலை நிலத்தைக் கடந்து சென்றது. உப்புச் சுமையினை இழுத்து வந்த எருதுகள் இளைப்பாறும் பொருட்டு ஓரிடத்தில் தங்குகின்றனர். அவ்விடத்தில் வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது. 

    கயம்துகள் ஆகிய பயம்தபு கானம்”(அகம்.11)

    என்று குளம் வறண்டு குளத்தின் அடிப்பகுதி துகள்களாகக் காணப்பட்டதை மேற்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

    வேனில் நீடிய வான் உயர் வழிநாள்
    வறுமை கூரிய மண்நீர்ச் சிறு குளத்
    தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்(அகம்.121)

    வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது அந்நீரை குளங்களில் தேக்குகின்றனர். குளங்களில் தேக்கும் நீர் இதர பிற தேவைகளுக்கு பயன்பட்டாலும் கூட அடிப்பகுதியின் வழியாக நீர் கசிந்து தேக்கங்களிலுள்ள நீரின் ஒரு பகுதி நிலத்தடி நீராகிறது நீரற்று வறண்ட கோடைக்காலங்களில் அக்குளங்களில் சிறுகுழியமைத்து அதை மேலும் மேலும் தோண்டும் போது நிலத்தின் அடுத்தடுத்த அடுக்குகளில் தேங்கியிருக்கும் நிலத்தடி நீர் வெளிப்படுகின்றது. இம்முறை சங்ககாலம் தொட்டு இன்றளவும் நடைமுறையிலுள்ளது. 

    கல்லறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில்” (அகம்.79) என்ற அகநானூற்றுப்பாடல் கருங்கல்லைச் சமமான வடிவத்தில் அறுத்தெடுத்து குழியமைத்ததாகக் குறிப்பிடுகின்றது. இதன்வழி அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்களின் சேகரித்து வைத்துள்ளனர் என்பதனை அறிய இயலுகின்றது.

    தாகத்தால் வருந்திய யானை யாமரப்பட்டைகளை உரித்துத் தாகம் தீர்த்துக் கொண்டதாக, 

    மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து
    நூர் அரை மருங்கின் நீர்வரப் பொளித்து(அகம்.257) எனும் அகப்பாடல் கூறியுள்ளது. அதாவது, தாகத்தால் வருந்திய யானைகள் நீருக்காக அலைந்து திரிந்து நீரற்ற நிலையில் யாமரத்தின் பட்டைகளைச் சுவைத்து அதிலுள்ள நீரினை உண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    நீரற்று தாகத்தால் வருந்திய மான் கூட்டங்கள் சிறிய இலையினையும், பெருத்த அடியினையும் உடைய நெல்லிக்கனியினைத் தின்று தாகம் தணித்ததாக,

    “………………………………. புல் இலைப்
    பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
    கான மட மரை கண நிரை கவரும்(அகம்.69) என்ற அகநானூற்றுப்பாடல் குறிப்பிடுகின்றது.

    கேணிகள் மருதநிலத்தில் இருந்ததனை,

    ஆறு செல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
    சிறுபல் கேணி ……………..” (அகம்.137)

    எனும் அகப்பாடல் சிறிய பலவேறு வகையான கேணிகள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. மேலும் மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது.

    புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்” (அகம்.237)

    என்று ‘புதவு’ பற்றிய குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி” (தமிழகப் பாசன வரலாறு, ப.29) என்று தமிழகப்பாசன வரலாறு குறிப்பிடுகின்றது.

    ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி
    குடைஅடை நீரின் மடையினள் எடுத்த(அகம்.275)

    வயலைச் செடிக்கு நீர் ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவர தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகி கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளதை மேற்கண்ட அகநானூற்றுப்பாடல் சுட்டுகின்றது. குடிநீர் எடுத்து வரவும் மேலே கண்ட முறையினையே அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

    நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி
    குறுநீர்க் கன்னல் எண்ணுநர்(அகம்.43)

    எனும் அகநானூற்றுப்பாடலில் ‘நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமைத்திருந்தும் புலனாகிறது. 

    முடிவுரை

    முதலில் குறிஞ்சி நிலத்தில் மழைப்பொழிவு தொடங்கும்.மலைகளின்மீது சுனைகள் மழைநீரைச் சேகரித்தது. சுனைகள் பார்ப்பதற்குப் பாறைகளின் கண்களைப்போல காட்சியளித்த்து. அருவிகளின் வீழ்ச்சி இனிய ஓசையாய் அமைந்திருந்த்து. பெரிய குளங்களைக் காவலர்கள் காவற்காத்தனர். மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிச்சயம். மேகங்கள் எந்தத் திசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும். நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும். உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்கக் கள் உண்டனர்.

    மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலை முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டன.

    பாலை நிலத்தில் கோடைக் காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். ஆநிரைகளுக்காகக் கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர். கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தினர். பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும். பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது.

    வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்கள் சேகரித்து வைத்துள்ளனர். மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது. ‘புதவு’ பற்றியக் குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி”. வயலைச் செடிக்கு நீர்  ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவரத் தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகிய கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளனர். நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாகப் பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமர்த்தியுள்ளனர். இவ்வாறாக அகநானூற்றில் நீர்மேலாண்மை குறித்து ஐந்திணைப் பாடல்களில் பேசப்பட்டுள்ளது.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்   – 632 521.

     

     

     

    Share
  • திருஞான சம்பந்தரின் வைதீகசைவ அடையாள மீட்டுருவாக்க அரசியல்

    ர.சுரேஷ்

    அடையாளம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Identity என்றுபெயர். அடையாளம் என்பதை பொதுவாக மொழி மதம், இனம்,சாதி, நிறம், பாலினம், நிலம் சார்ந்த கூட்டுணார்வின் இயைந்த தன்மை என வரையரைபடுத்தலாம். இவ்வடையாளங்கள் மனித ஓர்மைக்குள் நுழைந்துவிட்ட மிக வலுவான கருத்தாக்கமாகும். அடையாளமற்ற மனித இருப்பென்பது என்றுமே சாத்தியமானதாய் இருந்தததில்லை. அடையாளம் என்பது ஒரு கூட்டம் (அ) குழு தாமாக வரித்து கொள்வது மட்டுமேயன்றி பிறரால் திணிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். எப்படியாயினும் ஏதேனும் ஒரு அடையாளத்தின் கீழாகவே மனித இருப்பு என்பது நிலைகொண்டுள்ளது. இவ்வடையாளங்களின் ஒருங்கிணைவே அடையாள உருவாக்கங்கள் ஆகும்.

    அடையாள உருவாக்கங்கள் ஒரு கூட்டம் (அ) குழுவின் கோரிக்கைகள் தேவைகள் போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் அதிகார தளத்தில் தமக்கான சமூக மதிப்பை ஈட்டிக் கொள்ளவும் ஒரு பொது அடையாளத்தின் கீழ் இணைவதைக்குறிக்கும். இவை ஒவ்வொன்றும் தமக்கான கொள்கைகள், கோட்பாடுகள் என்றளவில் சில கருத்தியல் தகவுகளை முன்நிபந்தனையாக ஏற்கின்றன. மேலும் இவை அரசியல் பொருளாதாரம் பண்பாடு போன்ற காரணிகளையும் தமக்குரிய பின்னணிகளாக கொண்டவை ஆகும். ஒரு சமூகத்தின் தவிர்க்கவியலாத பண்புகளாக இவ்வடையாள உருவாக்கங்களைக் குறிப்பிடலாம். ஒவ்வொரு அடையாள உருவாக்கங்களுக்கும் ஒருவித அரசியல் தேவை உள்ளது.

    இந்நிலையில் அடையாளங்கள் தம்மோடு வேறுபட்ட பிற அடையாளங்களோடு மோத வேண்டிய காலத் தேவையும் எழுகிறது. அடையாளம் வேறுபாடு குறித்து, ந. முத்துமோகன் கீழ்க்கண்டவாறு கருத்துரைப்பார். அடையாளம் என்ற கருத்தாக்கம் தோன்றும்போதே வேறுபாடு என்ற கருத்தாக்கமும் தோன்றிவிடுகிறது. இவ்வகை வேறுபடுத்தலில் வேறுபட்டவை அடையாளத்திற்கு வெளியே நிற்கின்றன. அதாவது தன்னைப் பிறிதொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலே முனைப்படைகிறது. அடையாள அரசியல் தீவிரபடும்போது ஒருவரது சொந்த அடையாளம் தவிர்த்த பிறவற்றில் குறிப்பிட்ட ஒன்று பகை அடையாளமாக உருவாக்கப்படுகின்றது”1 என்றுகூறுவார். ஒரு அடையாளம் தன்மைப் போலவே இயங்கும் பிறிதொரு அடையாளத்தை அங்கீகரிக்காததும், பரிசீலனை செய்யாததும் அவற்றின் இருத்தல் நியாயத்தை மறுதலிப்பதுமான அரசியற்செயற்பாட்டை நிகழ்த்துகின்றது. மேலும் அவற்றின் முன்னேற்றத்தை தடைபடுத்தி விடுகின்றன. இந்திய தத்துவங்களின் வளர்ச்சிப்போக்கையும் மேற்குறித்த கருத்திற்கு அனுசரணையாகக் கொள்ளாம். இவ்வாறு இந்தியச் சமூகங்களில் அடையாளங்களின் எல்லையானது பிறிதொரு வேறுபட்ட அடையாளங்களுக்கு இடந்தரா வகையில் மிக கறாராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அடையாளங்கள் பிற அடையாளங்களோடு மோதுவதைப் போலவே தமக்குள் எழுகின்ற முரண்பாடுகளையும்   எதிர்கொள்ளவேண்டியுள்ளது. பலதரப்பட்ட பன்மிய கூறுகளுக்கிடையே பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றினை மட்டும் முதன்மைபடுத்தி அடையாளங்கள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகின்ற அடையாளங்கள் தம்மை போலவே இயங்கும் பிற அடையாளங்களை மறைத்து அவ்வடையாளங்களின் இருத்தலுக்கான நியாங்களை மறுதலிக்கின்றன. . இவை அடையாள இயக்கங்களின் வெகுசனத்தன்மைக்கு விரோதமானவையாகவும் அமைந்துவிடுகின்றன. இந்திய சூழலில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் பிராமண மேலாண்மை கட்டமைத்த இந்து தேசியம் எனும் பேரடையாளத்தை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

    தமிழ் மரபில் அடையாள அரசியல்

    அடையாள அரசியல் எனும் சொல்லாடல் பின்னை நவீனத்துவ சிந்தனையாளார்களால் நமக்கு அறிமுகமான போதிலும் அடையாளம் என்பது அதன் அரசியல் உணர்வு வெளிப்பாடும், தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்று நெடுங்கிலும் தொழிற்பட்டிருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டு வெளியில் பல அந்நிய கலாச்சார ஊடுருவல்கள் அவற்றின் மேலாதிக்கச் சிந்தனைகள் விரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக வைதீக நெறி சார்ந்த பிராமண மேலாண்மை, வா்ணாசிரம கொள்கை போன்றவற்றின் தாக்கங்களைப் பரவலாகக் காணலாம். இச்சூழலில் தமிழரின் அடையாள அரசியலும் ஆங்காங்கே தொழிற்பட்டிருக்கின்றன.

    “துடியன், பாணன், பறையன், கடம்பனென்று

    இந்நான்கல்லது குடியும் இல்லை

    ஒன்னாத் தெவ்வா் முன்னின்று விலங்கி

    ஒளிறு….”2

    இப்பாடல் வைதீக நெறிக்கும் வா்ணாசிரம கொள்கைக்கும் எதிரான இனக்குழு சமூகத்தின் கலக மொழியாகவும் தமழிழரின் அடையாள அரசியல் வெளிப்பாடாகவும் விளங்குகின்றது.

    வைதீகத்தைப் போன்றே தமிழா் பண்பாட்டில் கலந்துவிட்ட ஒன்றாகச் சமண- பௌத்தக் கருத்துகளும் காணக்கிடைக்கின்றன. சமண – பௌத்தரின் தத்துவக் கொள்கையான வாழ்க்கை நிராகரிப்பு, காம நிராகரிப்பு போன்றவற்றிற்கு எதிரான பாடல்களும் தமிழிலக்கியத்தில் பதிவாகியுள்ளன.

    “காமம் காமமென்ப காமம்

    அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்

    கடுத்தலும் தணிதலும் இன்றே யானை

    குளகு மென்று ஆள்மதம் போலப்

    பாணியும் உடைத்து காணுநா்ப் பெறினே” 3

    காமம் காமம் என்று உலகினா் அதனைக் குறை கூறுவா் அக்காமமானது புதிதாகக் தோற்றும் துன்பமும், நோயும் அன்று. நுண்ணியதாகி  மிகுதலுதம் குறைதலும் இல்லை. குளகு என்னும் தழையுணவை உண்டதனால் யானைக்கு ஏற்படும் மதத்தைப் போலக் கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும். செவ்வியை உடையது என்று குறுந்.136 – ஆம் பாடல் விளக்குகிறது. சங்கப் பாடல்களில் காமத்தைப் பற்றிய ஏக்கமும் திளைப்பும் அதிகம் பேசப்பட்டுள்ளன. இவற்றை சமண பௌத்த அறங்களுக்கெதிரான எதிர்புணா்ச்சி விசும்பல்களாகவும் தமிழ் அடையாள எடுத்துரைப்புகளாகவும் கருத இடமுண்டு. மேலும் தமிழ் அறவிலக்கியங்களிலிருந்தும் காப்பியங்களின் சமய வாதங்களிலிருந்தும் பல்வேறு விதமான கலக எடுகோள்களைக் கண்டடைய முடியும். தமிழிலக்கியப் பதிவுகளிலிருந்து இன்னும் ஏராளமான கருத்துக்களைத்  திரட்டி எதிர் – முரணாக அடுக்கிச் செல்லலாம்.

    திருஞான சம்பந்தரின் வைதீக சைவ அடையாள அரசியல்:

    தமிழ் மரபு தொடா்ச்சியில் சமயம் சார்ந்து உருவான மிகப்பெரிய அடையாள இயக்கமாகப் பக்தியியக்கத்தைக் குறிப்பிடலாம். சைவம் வைணவம் என இருவேறு அடையாளங்களின் குவிமுனையாகப் பக்தியியக்கம் விளங்கியதை உணரமுடிகிறது. சைவப் பின்னணியோடு நாயன்மார்களும் வைணவப் பின்னணியோடு ஆழ்வார்களும் இயங்கினா். பிராமண   வேளாள கூட்டிணைவின் மைய அச்சாகவும் சமண-பௌத்திற்கெதிரான எதிர்ப்பியக்கமாகவும் பக்தி இயக்கம் என்கிற ஒரு மாபெரும் அடையாளம் அமைப்பு ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அவற்றுள் திருஞானசம்பந்தரின் சைவ அடையாள மீட்டுருவாக்கம் என்பது குறிப்பிடத்தகுந்த  அளவில் அக்கால அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

    பக்தி இயக்கத்தை வேளாள இயக்கம் என்று வரலாற்றியலாளா்கள் கருத்துரைப்பா். இவ்வாறு தமிழ் வேளாளா்களால் முன்னெடுக்கப்பட்ட பக்தி இயக்கம் பொதுவாக அதன் பொதுமைப்பட்ட குறியீடுகளாக, தமிழ் – பக்தி – சைவம் என்ற நிலையில் தமது அடையாளத்தைக் கட்டமைத்திருந்தாலும் அதற்குள்ளாக,  சமஸ்கிருதம் – பிராமணியம்  – வைதீகம் மறைமுகமாக மேலான்மை செலுத்தியிருப்பதை திருஞானசம்பந்தர் பாடல்களில் அறியமுடிகிறது. எனவே பக்தி இயக்க எழுச்சியினூடாக, திருஞானசம்பந்தர் தம்முடைய வைதீக அடையாள அரசியலைத் தொழிற்படுத்தியுள்ளதை அனுமானிக்கலாம்.

    தமிழ்ச் சமூகத்தைப் பொருத்த வரையில் சமண – பௌத்த ஊடுபரவல் வைதீகத்திற்கு எதிரான போக்கையுடையதாகவே இருந்து வந்துள்ளது. வர்ணப் பாகுபாட்டை எதிர்த்தல், வேதவேள்விகளை எதிர்த்தல், பிராமண வா்க்“கத்தின் வெகுஜன விரோதப் போக்கினைக் கண்டித்தல் போன்றவை அவற்றின் முதன்மைப் பணிகளாக இருந்தன. இச்சூழலை எதிர்கொள்ளவும் வைதீக சைவ மரபை மீட்டுருவாக்கவும் திருஞான சம்பந்தருக்கு பக்தி இயக்கம் பெருத்த ஆயுதமாக விளங்கியது. இந்நிலையில் தாம் வழிவழியொழுகும் வைதீக மரபையும் வேளாளர் தலைமையிலான  தமிழ் சைவ பக்தி இயக்கத்தையும் இணைத்து சமண –பௌத்த மதங்களுக்கெதிரான வைதீக சைவ பேரடையாளத்தை உருவாக்குதிறார். இவ் வைதீக சைவ அடையாளம் எனும் கருத்தாக்கத்தினுள் சமண – பௌத்த அடையாளங்கள் பகையடையாளங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. திருஞானசம்பந்தா் பாடல்களில் பதிகம்தோறும் 10-ஆம் பாடல் சமண பௌத்தரைச் சாடுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறார். அப்பாடல்களில் சமண-பௌத்தர்களுக்கெதிரான வன்சொற்களும், இழிப்புரையும் பழிப்புரையும் ஏராளமாகக் காணப்படுகின்றன.

    சமண-பௌத்தா்களுடைய மத அடையாளங்களையும் மத நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கூறும் பாடல்கள் திருஞானசம்பந்தா் பாடல்களில் ஏராளமாகப் பயின்று வருகின்றது. திருஞானசம்பந்தா் சமணரைப் பற்றிக் கூறுவன.

    “கழுவார்…சமண்”4 “குற்றுடுக்கைச் சமணா்”5,“குற்றவிட்டுடுக்கையா்”6,அமண் உருவா்கள்7, அரைக் கூறையில்லார்,8 உடுக்கையின்றியே நின்று ஊர்நகவேத்திரிவார்,9 உடையிலா துழல்கின்ற குண்டா்,10 உரிஞ்சன் கூறைகள் உடம்பினராகி உழிதரு சமணா்,11

    இவ்வாறு சமண-பௌத்தா்களின் மத அடையாளங்களையும், நடைமுறை வழக்கங்களையும் இழித்தும், பழித்தும் பல இடங்களில் பேசுகின்றார் ஞானசம்பந்தா். மேலும்,

    அடையாதன சொல்லுவார் ஆதா்கள்12, அமண்ணொடு சீவரத்தாரவா் கொடிய வெவ்வுரை13, அல்லார் அலா் தூற்ற14 , அறிவதறிகிலார்15, ஆசியார மொழியார் அமண் சாக்கியா்16, உள்ளவா றறியார்17; , ஒன்று முணரா உளமா்18,

    எனப் பல வரிகளில் அவா்கள் குற்றமுடையவா்கள், குணமில்லாதவா்கள் பொய்யுரைப்பவா்கள், அல்லன பேசித் திரிபவா்கள், புறங்கூறுபவா்கள், அலா்தூற்றுபவா்கள், நல்வினை புரியாதவா்கள், பொல்லாதவா்கள், பொய்த் தவம் மேற்கொள்பவா்கள், பொய்களைக் கட்டியுரைப்பவா்கள் பொருளற்ற உரைகளைப் பேசுபவா்கள் எனப் பலவாறாகப் பேசுகிறார். மேலும்

    சமணா், புத்தா் முதலியோரது கொள்கைகளைப் பின்பற்ற வேண்டாமென மக்களுக்கு அறிவுறுத்தல்,“அமண்குண்டா் ஓதும் ஓத்தையுணரா தெழுநெஞ்சே”19 “அமண்குண்டா்…புறனுரையா தொன்றுங் கொள்ளேல்”20 “அமணா் அறிவில் சிறுதேரா் கோலும் மொழிகள் ஒழிய”21

    எனப் பல பாடல்களில் சமண பௌத்தர்களின் பொய்யுரைகளைக் கேட்காதீர்கள் என மக்களுக்கு அறிவுறுத்துகிறார். அதே சமயத்தில் சமண-பௌத்தா்களைக் குற்றங்குறையுடையவா்களாகக் காட்டுவது ஒருபுறமிருக்க வேதத்தின் வேள்வியின் மறையவரின் பெருமையைப் பல பாடல்களில் அதற்கு எதிரிடையாக முன்வைக்கிறார். சமண பௌத்தா்களைப் பொய்யா்கள் புறங்கூறுபவா்கள், வேடதாரிகள், பொய்தவத்தா், நெறி நில்லாதவா்கள், ஒழுக்கக் கேடுடையவா்கள் எனச் சாடிவிட்டு மறையவா்களைக் குறிப்பிடும்பொழுது,

    பொய்ம் மொழியா மறையோர்கள்22 மெய்மொழி நான் மறையோர்23; தளராத வாய்மைப் புந்தியின் நான்மறையோர்24 செய்தவ நால்மறையோர்25; நா மரு கேள்வியா்26

    மேலும் வேள்வியின் சிறப்பைக் கூறுமிடத்து,

    “கற்றாங்கு எரிஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம்”27

    “பரப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டரியோம்பும் சிறப்பார் வாழ் தில்லை”28

    என்றும்,

    “தக்கார், மறைவேள்வித் தலைஆய உலகுக்கு

    மிக்கார் அவா் வாழும் வழிமிழலையே”29

    எனப் பாடுகின்றார். இப்பாடல்கள் இறைவனை முதன்மைப்படுத்தாமல் வேள்வியையும் மறையவா்களையும் மறையவா் வாழ்கின்ற இடங்களையும் முதன்மைப்படுத்துவதாக உள்ளன. இவ்வாறு சமண, பௌத்தா்களின் மதரிதியான ஒழுக்க வழக்கங்களைப் பண்பாட்டை, சாஸ்திர அணுட்டானங்களைக் கீழ்த்தரமாகவும், நாகரிகமற்றதாகவும் சித்திரித்துக் காட்டிவிட்டு மறையவா் ஒழுக்கங்களையும் அவா்களின் வைதீக நடைமுறைகளையும் உயா்த்திக் கூறுகிறார்.

    திருஞானசம்பந்தரின் இத்தகைய முயற்சியால் சமண-பௌத்தப் பண்பாடு தன் மேலாண்மையை இழந்து தமிழ்ப் பண்பாடும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதைப் பின்னால் வந்த சோழப் பேரரசுக்காலகட்டத்திய சமூக நடைமுறைகளைக் கொண்டு உறுதியாக அவதானிக்கமுடிகிறது. இவ்வாறு தமிழ்ப்பண்பாட்டின்மீது மேலாண்மையைக் கட்டமைத்தும் சமண-பௌத்தப் பண்பாடுகளை அழித்தும் வைதீக மேன்மைக்குரிய கருத்தியலை ஒவ்வொரு பதிகத்திலும் வலியுறுத்தியுள்ளார். திருஞானசம்பந்தரின் இத்தகைய அடையாக அரசியலின் நோக்கம் வைதீகம் தழைக்கப்பாடுபடுவதும் அதனை எதிர்க்கும் கொள்கையுடைய சமண-பௌத்த மதங்களைத் தமிழ் மக்களைக் கொண்டே புறக்கணிக்கச் செய்வதும் தான் என்பதை மேற்கண்ட பாடல்கள் உணா்த்துகின்றன. இதற்கு அவருக்கு சைவ-வைதீக அடையாளம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. சமண பௌத்தத்தை எதிர்க்கும் இடங்களில் பெரும்பாலும் அவா்கள் வேதத்தை எதிர்ப்பவா்கள், வைதீகத்தின் வழி ஒழுகாதவா்கள், வேள்வியை மறுப்பவா்கள் என்றே பாடுகிறார். இதன்மூலம் சமண-பௌத்தத்திற்கெதிராகத் தமிழருடன் கூட்டணியை அமைத்துக் கொண்டு வைதீகத்தையே தமிழரின் அடையாளமாக முதன்மைப்படுத்துகிறார்.

    உதவிப்பேராசிரியர்

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்

    கோயம்பத்தூர்

    *****************

    அடிக்குறிப்புகள்

    1.ந.முத்துமோகன் தமிழ் அடையாள அரசியலின் இயற்கியல் ப.29

    2.மாங்குடிக்கிழார்,புறம் – 335

    1. குறுந்தொகை ப.எண் – 136

    4.திருப்பூவனம், 64

    5.திருக்குரங்கணில் முட்டம், 31

    6திரு ஐயாறு, 130

    7..திருபாம்புரம், 41

    8.திருக்கழுமலம், 19

    9..கீழைத்திருக்காட்டுப்பள்ளி, 5

    10.திருச்செங்காட்டங்குடி, 61

    11.திருநன்றியூர், 18

    12.திருஇலம்பெயங்கோட்டூர், 76

    13.திருப்புகலி, 30

    14.திருக்கரவீரம், 58

    15.திருநாகைக்காரோணம், 84

    16.திருவீழிமிழலை, 92

    17.திருவலிதாயம், 3

    18.திருப்பாம்புரம், 41

    19.திருநறையூர்ச்சித்தீச்சுரம், 71

    20.திருசோற்றுத்துறை, 28

    21.திருவேட்களம், 39

    22.திருப்புறவம், 74

    23.திருப்புகலியும், திருவீழிமிழலையும், 4:1

    24.மேலது., 4:1

    25.மேலது., 4:4

    26.திருமருகலும் திருசெங்காட்டங்குடியும், 6:2

    27.மேலது., 6:4

    28.கோயில், 80:1

    29.மேலது., 80:2

    28.சீகாழி, 81:10

    Share
  • பார்சிறக்க வாழ்ந்திடுவோம் !

    (எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா)

    கடவுள்   பக்தி    தனையின்று
    காசைக்  கொண்டு  பார்க்கின்றார்
    கடவுள்   பக்தி   என்றுசொல்லி
    கழுத்தை  அறுத்துக்  கொல்லுகின்றார்
    கடவுள்  பக்தி எனும்பெயரால்
    கற்பை  விலை  பேசுகிறார்
    கடவுள்  பக்தி  எனுமுணர்வை
    கருத்தில் கொள்ளா  இருக்கின்றார்  !

    குரு  பக்தி   நாட்டிலிப்போ
    குன்றிப்  போய்  இருக்கிறது
    குரு   கூட   இப்போது
    குறை  கொண்டே  உலவுகிறார்
    நல்ல   குரு   வாய்த்துவிடின்
    நம்  எண்ணம்  உயர்ந்துவிடும்
    நல்ல  குரு  ஆசிபெற்று
    நாம்  வாழ்வோம்  சிறப்புடனே  !

    அன்னை  தந்தை பக்தியின்று
    அருகி   வரப்   பார்க்கிறது
    அன்னை  தந்தை  வார்த்தைக்கே
    அர்த்தம்  இன்றிப்  போகிறது
    அன்னை தந்தை எமக்கெல்லாம்
    அதிக  சுமை  என்கின்றார்
    அக்கருத்தை துடைத்து  விட்டு
    அன்னை தந்தை தாழ்பணிவோம் !

    நாட்டுப்   பக்தி   இப்போது
    ஏட்டில்  மட்டும்  இருக்கிறது
    நாட்டு  நலம்  எனுமெண்ணம்
    நாவில் மட்டும்  இருக்கிறது
    நாட்டைப்  பற்றி  நினையாதார்
    வீட்டைப்  பற்றி  நினைக்காரே
    நாட்டை  என்றும் தாயெனவே
    நாம் பக்தி  செலித்திடுவோம் !

    பக்தி  எனும்   போதினிலே
    பக்குவம்தான்  முதன்மை பெறும்
    பக்தி   என்று   எண்ணுகையில்
    பரந்த  மனம்  எழவேண்டும்
    பக்தி  எனும்  பாதையிலே
    பண்பு  வந்து  நிற்கவேணும்
    பக்தி  செய்து  நாமென்றும்
    பார் சிறக்க  வாழ்ந்திடுவோம்  !

     

     

    Share
  • குருவிகுளம் அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் – ஓர் அறிமுகம்

    கிருஷ்ணமூர்த்தி. சோ.

    மனிதன் பண்டைக்காலந் தொடங்கி இன்றளவும் இறைவன் மீது கொண்ட பக்தியினால் வழிபாடு நடத்தி வருகின்றான். வழிபாடு மனத்திற்கு அமைதியும், வேண்டியன கிடைக்கவும் நிகழ்த்தப்படுகிறது. வழிபாட்டினைப் பெருந்தெய்வ வழிபாடு என்றும் சிறுதெய்வ வழிபாடு என்றும் இருவகைப் படுத்தலாம்.

    அம்மன் வழிபாடு

    நாட்டுப்புற மக்களிடையெ சிறுதெய்வ வழிபாடு மிகவும் போற்றப்பட்டு வருகிறது. அதிலும் அம்மன் வழிபாடு மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது. அந்த அம்மன்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்பப் பல பெயர்களிட்டு அழைப்பர். அவ்வாறே குருவிகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    கோயில் அமைவிடம்

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் வட்டத்தில் குருவிகுளம் அமைந்துள்ளது. குருவி + குளம் = குருவிகுளம் என இயல்பாகப்  புணர்ந்துள்ளது. குருவிகள் அதிகமாக உள்ள ஊர் என்றும் ஊரைச் சுற்றிக் குளங்கள் அதிகமாக இருப்பதால் குருவிகுளம் என்று அழைக்கப்படுகிறது. அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் குருவிகுளத்தின் மேற்குத் திசையில் இருப்பதால் இப்பெயர் பெற்றது.

    ஊரின் பெயர்க்காரணம்

    குருவிகுளம் என்ற சிறப்புமிக்க ஊரானது பழங்காலந் தொட்டே அதன் வரலாறு சிறப்பிடம் பெறுகிறது. அதாவது, ‘பட்சி தடாகம்’ என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் காலச்சக்கரம் சுழல அவ்வூரானது ‘பட்சி’ என்றால் ‘பறவை’ என்று பொருள். ‘தடாகம்’ என்றால் ‘குளம்’ என்று பொருள். இவ்வாறே ‘பட்சி தடாகம்’ என்பது பறவைகளில் அதிகமாக இருக்கும் குருவியின் காரணத்தால் ‘குருவிகுளம்’ என்று வழங்கப்படலாயிற்று.

    கோயில்தோற்றம்

    சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் குருவிகுளத்தில் கோயில் தோற்றுவிக்கப்பட்டது. இக்கோயிலானது குருவிகுளத்தில் தேவர் இன மக்களால் ஏற்படுத்தப்பட்டது. இக்கோயில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து உருவாக்கப்பட்டது.

    கோயிலின் உள்ளே மாரியம்மனின் வலப்பக்கத்தில் விநாயகரும் இடப்பக்கத்தில் முருகனும் உள்ளனர். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வலப்புறம் கருப்பசாமி கோயிலும் இடப்புறம் வைரவரும் உள்ளனர்.

    கோயிலைச் சுற்றி வரும்பொழுது தென்புறத்தில் வடக்குமுகமாக முத்துமாரியம்மனும் காளியம்மனும் வீற்றிருக்கிறார்கள். வடப்புறத்தில் துர்க்கையம்மன் இருக்கிறார். அதற்கு அருகாமையில் நாகாத்தம்மனும் இருக்கிறார்.

    கோயிலின் உள்ளேயே என்றும் வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்றும் உள்ளது. அதன் அருகில் தேவர் இன மக்களின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையும் உள்ளது. இவற்றை எல்லாம் அழகுபடுத்தும் விதமாகக் கோயிலைச் சுற்றிலும் பசுமையான பூச்செடிகள் வளர்ந்து கண்ணைக் கவரும் வண்ணம் விளங்குகின்றது.

    திருக்கோயில் வளர்ச்சி

    அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் தொடக்கக் காலத்தில் சிறு மண்பீடமாகவே அமைக்கப் பெற்றிருந்தது. அதன் பின்னர், தேவர் சமூகத்தினரால் கற்களாலான பீடம் அமைக்கப் பட்டிருந்தது.

    அன்னையின் அருள் பெற்ற பலர் அன்னைக்குச் சிறு கோயிலாவது இவ்விடத்தில் கட்ட வேண்டுமென்று முடிவெடுத்தனர். அதன்படி சிறுகோயில் எழுந்தது. அதன்பிறகு அது பெரிய கோயிலாக இன்று காண்போர் வியக்கும் வண்ணம் எழுந்தருளியுள்ளது.

    அம்மனின் திருவுருவம்

    “இறைவனுக்குள்ள இயல்பு நிலைக் குணங்களின் சின்னங்களாகத்தான் ஆலய விக்கிரகங்கள் விளங்குகின்றன”1 என்பர்.

    அவ்வகையில் அருள்மிகு மேல மாரியம்மன் கோயில் கிழக்கு பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.மேலும் அம்மனின் திருவுருவம் சிறுகுழந்தை வடிவில் நின்ற கோலத்தில் விளங்குகிறது. ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்பார்கள்.அதற்கேற்ப குருவிகுளம் மேல மாரியம்மன் பன்னிரெண்டு வயது குழந்தையைப் போலவே காட்சியளிக்கின்றது.அம்மன் இரண்டு கைகளை உடையவளாக வலக்கையில் உடுக்கையும் இடக்கையில் சூலாயுதமும் ஏந்தியவளாகச் சிங்க வாகனத்தில் எழுந்தருளியுள்ளாள்.

    விழாக்கள்  

    “விழா என்பது விழைவு என்ற சொல்லின் திரிபாகும்,”2 இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் இப்பிறவியில் இன்பமுடன் வாழவே விரும்புவர்.அவ்வாறு வாழ இறைவனை நினைத்து இறைவனுக்காகத் திருவிழாக்கள் கொண்டாடுவர்.அதுபோல், குருவிகுளம் மேல மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களை மாத விழாக்கள், ஆண்டு விழாக்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.

    மாத விழாக்கள் 

    மாத விழாக்கள் சிறப்பு வழிபாடு என்றும் கருதப்பெறும்.இங்கு மார்கழி மாதத் திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல், சிவராத்திரி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சித்ரா பௌர்ணமி, தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பூசை, நவராத்திரி போன்ற நாட்களிலும், செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பெறுகின்றன.

    ஆண்டு விழா

    பங்குனி மாதம் அம்மனுக்கே உகந்த மாதமாகக் கருதப்படுகின்றது.இந்தப் பங்குனி மாதத்தில்தான் இங்கு பொங்கல் விழாக் கொண்டாடப்படுகின்றது.

    இக்கோயிலில் இன்றியமையாத திருவிழாவாகக் கருதப்படுவது, பங்குனிப் பொங்கல் திருவிழாவாகும்.இத்திருவிழா பங்குனி வளர்பிறையில் நடத்தப்படுகிறது.இத்திருவிழா கொண்டாடுவதற்குக் குருவிகுளம் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி விழாநாள் குறிப்பர்.விழா நாட்களுக்கு ஒருவாரம் முன்னதாகவே கொடி சாட்டப்படும்.

    கொடி சாட்டுதல்

    கொடி சாட்டுதல் நாள் அன்று காலை சுமார் ஐந்து மணியளவில் ஊர்மக்கள் அனைவரும் மஞ்சள் நீரை அம்மனுக்கு ஊற்றி அபிடேகம் செய்து ஊர்ப்பெரியவர்களுக்கும், விரதமிருப்பவர்களுக்கும் காப்புக் கட்டுவர்.பின்னர் ஒவ்வொரு தெருவாகச் சென்று காப்புக் கொடியைக் (வேப்பிலையால் கட்டப்பட்டது) கட்டும்பொழுது அத்தெருப் பெண்கள் குலவை இட்டு வணங்குவர்.அன்றிலிருந்து திருவிழா தொடங்குகின்றது.

    கொடி சாட்டிய நாளில் இருந்து தெருக்களையும், வீடுகளையும் மிகச் சுத்தமாக வைத்திருப்பர்.மேலும் புலால் உணவைத் தவிர்ப்பர்.அந்த வாரத்தில் வெளியூர்களுக்குச் செல்லமாட்டார்கள்.அப்படித் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல நேரிட்டாலும் அன்றிரவே வந்துவிடுவர்.

    முதல் நாள் விழாவிலிருந்து ஏழு நாட்களும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்துவர்.எட்டாம் நாள் பொங்கல் விழா மிகச் சிறப்பாகவும் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.ஒன்பதாம் நாள் விழாவில் அம்மனுக்கு வலப்புறம் இருக்கும் கருப்பசாமிக்குப் பலியிடுதல் விழாவும் நேர்த்திக்கடன் செலுத்தும் விழாவும் நடைபெறும்.பத்தாம் நாள் விழாவில் மஞ்சள் நீரைத் தெளித்து விழாக் கொண்டாடுவர்.

    தல விருட்சம்

    அம்மனுக்கு உகந்த மரமாக வேம்பு கருதப்படுகிறது.ஆகையால் தான் “செழியர் புகழ் விளைத்த”3 பகுதியான குருவிகுளம் மேல மாரியம்மன் திருக்கோயிலில் தல விருட்சமாக வேம்பு உள்ளது.

    கோயிலைச் சுற்றிலும் வேம்பு அதிகமாகக் காணப்படுகின்றது.‘வேப்பிலையில் குடியிருப்பவள் அன்னை’ என்று அவ்வூர் மக்களால் அம்மன் பெரிதும் போற்றப்படுகிறாள்.

    திருவிழாச் சிறப்பு நிகழ்ச்சிகள்

    திருவிழா நாள் அன்று மாலையில் மாவிளக்கு எடுத்தல், கரகம் கிளம்புதல், முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், பொங்கலிடுதல், எண்ணெய்க்காப்புச் சாத்துதல், தீபம் ஏற்றுதல் ஆகியவை ஆண்டுவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாகக் கருதப்படுகின்றன.சில ஆண்டுகளுக்கு முன்னர் பூ மிதித்தல் விழாவும் நடைபெற்றது.ஏனோ, சில காரணங்களினால் இன்று கைவிடப்பட்டுள்ளது.

    நம்பிக்கைகள்

    “நம்பிக்கையானது மக்களுடைய உள்ளுணர்ச்சிகளின் வெளிப்பாடாகும்.நம்பிக்கை மனித வாழ்வின் உயிர் நாடி.உலகம், ஓர் அச்சில் சுழல்வதைப் போல, நம்பிக்கையை வைத்தே உலக மக்கள் இனம் இயங்குகிறது.”4 இவ்வாறு அனைத்துச் செயல்பாடுகளும் இறைவனின் அருளாலேயே நிகழ்கின்றன என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.அதனால்தான் இப்பகுதி மக்கள் மேல மாரியம்மன் மீது தீராத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

    தொகுப்புரை

    அருள்மிகு மேல மாரியம்மன் கோயில் சிறு மண் பீடமாக இருந்து இன்று மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.இக்கோயிலில் மாத விழாக்கள், ஆண்டு விழா என்ற வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.ஆண்டுவிழாவில் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.மேலும் குருவிகுளம் மேல மாரியம்மன் தீய சக்தியிலிருந்து தம்மைக் காக்கின்றாள் என்ற தீராத நம்பிக்கையை இப்பகுதி மக்கள் கொண்டுள்ளனர்.

    சான்றெண் விளக்கம்

    1.இரத்தின சண்முகனார். தெய்வ வழிச் சிந்தனைகள், பக்கம்.121

    2.சேதுபாண்டியன்.தூ, (ப,ஆ), பல்நோக்குக் கட்டுரைகள்,பக்கம்.38

    3.அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து, கழுகுமலை நகர் வளம்,பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்.

    4.பாலுச்சாமி.நா, (ப.ஆ) வாழ்வியற் களஞ்சியம், தொகுதி பதினொன்று,1991-பக்கம்.220–221.

    *********

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத் தலைவர்,

    பிர்லா பொதுப் பள்ளி,

    தோகா, கத்தார்.

    கைப்பேசி எண் : +974-55294870

    மின்னஞ்சல் : krishnatamilbps@gmail.com

    —————–

    Share
  • சோதனைகள் விலக சுதர்சன ஹோமம் நடைபெற்றது

    தன்வந்திரி பீடத்தில்

    சோதனைகள் விலக

    சுதர்சன ஹோமம் நடைபெற்றது

     

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை த்ருஷ்டி உபாதைகள், சத்ரு உபாதைகள் விலகவும், வியாபார அபிவிருத்திக்கும் சுபிட்சங்கள் பலபெற்று வளமுடன் வாழவும், ஸ்ரீ சுதர்சன மஹா யாகம் நடைபெற்றது.

    ஸ்ரீ சுதர்ஸன மஹாவிஷ்ணுவை வேண்டி இந்த யாகத்தில் நாயுருவி, வெள்ளை எள்ளு, வெண் கடுகு, சர்க்கரைப்பொங்கல், நெய், குங்குமப்பூ, கருநொச்சி, இருமுள், நீலஊமத்தம்பூ, வெள்ளைப் பூக்கள், பலாசு, அருகம்புல், தேன், குங்கிலியம், பலவகையான மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், முதலிய த்ரவியங்கள் சேர்கப்பட்டது. மேலும் யாகத்தில் வைத்து பூஜித்த வெண்ணையை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது.

    மேற்கண்ட யாகத்தில் தொழில், வியாபாரம், உத்யோகத்தில் உயர்வு, சத்ருபாதை விலக நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் அகல வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கும், பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்களில் இருந்து விடுபடவும், நற்சம்பத்துக்கள் பெறவும், சுக பிரசவம் நடைபெறவும், தடைகள் விலகவும், பசுக்கள் விருத்தி அடையவும், மன நலம் குணமாகவும், தீராத நோய்கள் தீரவும், கோபங்கள் தனியவும், சாபங்கள் விலகவும், பிறரிடம் அன்பு ஏற்படவும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த யாகத்தில் சென்னை மெட் இந்தியா மருத்துவமனை பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் T.S. சந்திரசேகர் அவர்கள் குடும்பத்தினர்களுடன் பங்கேற்று, ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

     

    நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் முனைவர் பா. ஜெய்கணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா.இளமாறன்) தற்போது காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகின்றார். தமிழ் இலக்கணம், இலக்கியம், பதிப்பு தொடர்பான ஆய்வுகள் பல நிகழ்த்தி நூல்கள் பல வெளியிட்டுள்ளார்.

    தமிழ் இலக்கண உரை வரலாறு : யாப்பியல் உரைகள் என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு , தொல்காப்பியம் – பன்முக வாசிப்பு , ஏழாம் இலக்கணம், அறியப்படாத தமிழ் உலகம், தமிழ் நூல் தொகுப்பு வரலாறு முதலான நூல்களை எழுதியும், தொகுத்தும், பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்னும் கவிதை நூலையும், கலியுகக்கிழவியும் ஓநாய்க்குட்டிகளும் என்னும் மொழிபெயர்ப்பு நாவலையும் 2018 இல் வெளியிட்டுள்ளார்.

    மொழி நிறுவனத்தின் வழியாக வெளியிடப்பெற்ற தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி வெளியீட்டுப் பணியிலும் ஆய்வாளராகச் செயல்பட்டுள்ளார். மாற்றுவெளி, புதிய புத்தகம் பேசுது முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இதழ்களிலும் கருத்தரங்கங்களிலும் வெளியிட்டுள்ளார். எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வழி சுவிட்சர்லாந்து சென்று அங்கு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்துள்ளார்.

    பொதிகைத் தொலைக்காட்சியில் ஓராண்டு கடந்து போய்க்கொண்டிருக்கும் தமிழின் பெருமையையும் சிறப்பையும் பறைசாற்றி வரும் “ழகரம்” என்னும் நேரலை நிகழ்வின் வல்லுநராகவும், நெறியாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.

    இவர் பெற்ற விருதுகள்:

    செம்மொழி நிறுவனம் வழியாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் இளம் ஆய்வறிஞர் விருது (1, 00,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2015)

    எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் – வளர்தமிழ் விருது (1,50,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2014)

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் – சிறந்த ஆய்வாளர்க்கான விருது ( 2013)

    Share
  • 2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
    ++++++++++++++

    மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்கு மானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைத் துவக்க வேண்டும்.

    தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928]

    “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”

    நிக்கோலை லாவெராவ் (President, Russian Academy of Sciences)

    ++++++++++++++

    See the source image

    காற்றடிப்புத்  திசைபோகும் கதிரியக்கப் பொழிவு

    ++++++++++
    +++++++++++
    See the source image
    கதிரியக்க நோயால் மரணம்
     
     
    புகுஷிமா அணுமின் உலை வெடிப்பு விளைவால் முதல் ஜப்பான் ஊழியர் மரண அறிவிப்பு
     
    2018 செப்டம்பர் 5 ஆம் தேதி ஜப்பான் அரசாங்கம் முன்வந்து 2011 மார்ச்சு மாதம் நேர்ந்த சுனாமிப் பேரலைத் தாக்குதலால்,  வெப்பத் தணிப்பு நீரின்றி, புகுஷிமா அணுமின் உலைகள் வெடித்ததில் பேரளவு கதிரியக்கம் பரவி, ஏழு வருடங்கள் கடந்து புற்றுநோயால் முதல் ஊழியர் ஒருவர் இறந்து போனதை வெளியிட்டுள்ளது.   ஊழியர் வயது ஐம்பதுக்கு மேலிருக்கும்.  2011 இல் 9.0 ரிக்டர் அளவு கடற்பூகம்பம் ஏற்பட்டு ஓர் அசுரச் சுனாமி எழுந்து,  18,000 ஜப்பானியர் மரணம் அடைந்தார்.  கடற்கரையில் இயங்கிக் கொண்டிருந்த புகுஷிமா அணுமின் உலைகள் உடனே நிறுத்தம் அடைந்தாலும், எரிந்து கொண்டிருந்த யுரேனிய எரிக்கோல்களுக்கு வெப்பத் தணிப்பு நீரோட்டத்தை ஜப்பான் பொறியியல் அதிகாரிகள் உண்டாக்க முடியவில்லை.  அதனால் நீராவி அழுத்தம் கூடி கட்டடம் வெடித்து, கதிரியக்க மூட்டம் சூழ்வெளி எங்கும் பரவியது.  2011 இல் நேர்ந்த புகுஷிமா அணுமின் உலை வெடிப்புகள் 1986 இல் சோவியத் ரஷ்யா செர்நோபிள் அணு உலை வெடிப்பை விடப் பன்மடங்கு தீவிர மானது,  தீங்கிழைப்பது, நெடுங்காலம் நீடிப்பது. செலவைக் கொடுப்பது
    See the source image
    கதிரியக்க அடிப்பும், உடல்கூறு விளைவுகளும்
     
    இப்போது ஜப்பானின் தொழில் ஊழியர் உடல்நலச் சீரமைப்பு  அமைச்சகம், புப்புசப் புற்று நோயில் இறந்த அந்த ஊழியருக்கு நட்டயீடுத் தொகை அளிக்க சட்டமிட்டு முன் அறிவித்துள்ளது. இறந்த ஊழியர் ஜப்பானில் உள்ள புகுஷிமா, மற்றும் உள்ள சில அ?ணுமின் உலைகளில் 35 ஆண்டுகள் வேலை செய்தவர்.  அவரது புற்றுநோய் பீடிப்பு 2016 பிப்ரவரியில் கண்டு பிடிக்கப் பட்டது.  அவர் விபத்து நேர்ந்த 2011 மார்ச்சு முதல் டிசம்பர் வரை அவசரத் தீவிர வேலைகளில் நேரடியாக ஈடுபட்டவர்.  ஜப்பான்    உடல்நலச் சீரமைப்பு அமைச்சகம் இதற்கு முன்பு புகுஷிமா விபத்தில் நான்கு ஊழியர் மிகையான கதிரடிப்பில் தாக்கப் பட்டிருந்ததை அறிவித்திருந்தது.  ஐந்து நபர்களில் ஒருவரே இறந்துள்ளதாகத் தெரிகிறது.  சுனாமிப் பேரலை அடிப்பால் 18,000 பேர் உயிரிழந்தார்;  160,000 பேர் புலம்பெயர்ந்தார்;  ஐந்து பேர் மிகையான கதிரடி பெற்றார். ஒருவர் கதிரடியால் இறந்தார்.

    See the source image

    புகுஷிமா அணுமின் உலைப் பகுதி 
    வான் மட்டக் கதிரியக்கப் பதிவு 

    புகுஷிமா அணுமின் உலை வெடிப்புகளால் சுமார் 160,000 ஜப்பானியர் புலம்பெயர நேர்ந்தது.  கதிர்வீசும் கதிரியக்கத் தூசி துணுக்குகள் ஜப்பான் தேசத்தின் இருபுறமும் நீண்டகாலம்  பரவின.  பல ஏக்கர் பரப்பளவு கதிரியக்க தளப் பொழிவுகளை யும், சேர்ந்து போன பல்லாயிரம் டன் கதிரியக்க திரவங்களை யும் அடைத்து வைக்கப் பூத வடிவில் பெரும் இரும்புத் தொட்டி கள் அமைக்க வேண்டியதாயிற்று.  கதிர்த்தீண்டல் தளப் பரப்புகளைத் துடைக்கப் பல வெளிநாட்டு [கொரியா] ஊழியர் அழைத்து வரப்பட்டார்.   2017 ஆண்டில் 250,000 வெளிநாட்டு ஊழியர்கள் கதிர்த்தீட்டைத் துடைக்க 182 கம்பேனிகள்  வேலை செய்தன.

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின் சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert) 

    See the source image

    +++++++++++++++++++++++

     

    World demand

    (Power Demand :1980 – 2035)

    +++++++++++++++

    Reactors operating & under construction

    மின்சார உற்பத்தி பற்றி மாறாகப் பேசும் பேரளவு தொழிற்துறை வல்லுநருக்கு எதிராகப் பெரும்பான்மை உட்துறைக் குழுவினர் அணுமின்சக்தியே எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும், போதிய இயக்கத் திறன் கொண்டிருப்பதுடன் இன்னும் சுற்றுச் சூழல் திருத்தம் செய்ய ஏதுவானது என்றும் கருதுகிறார். மேலும் சூழ்வெளியைச் சுத்தமாக வைத்திருக்க, அணுசக்தி மின்சாரமே எதிர்காலத்தின் பொறித்துறைகளுக்கு ஏதுவாக இருக்கும் என்பதைத் தொழிற்துறை நிபுணர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். காற்றாடிகள், இயற்கை வாயு, சூரிய சக்தி, நீர்ச் சக்தி, நிலக்கரி, எருச்சாணி போன்ற வற்றால் உண்டாக்கும் மின்சார உற்பத்திச் செலவுகள், அணுமின் சக்திக்குப் பின்னால் நெருங்கிய தொகையுள்தான் உள்ளன. அணு மின்சக்தி பற்றிப் பொது மக்களுக்குப் போதிய பாதுகாப்பு விதிகளும், அணுசக்தி பரிமாற்ற உறுதிப்பாடு பற்றியும் படிப்பு & பயிற்சி அளிப்பது நிபுணரின் முக்கிய குறிக்கோள் பணியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

     பிளாக் & வியாட்சி  [அமெரிக்க மின்சக்தி தொழிற்துறை ஆளுநர்கள், Black & Veatch US Power Industry Leaders]

    Japan Energy Resources

    Fig Nuclear Share

    “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”

    நிக்கோலை லாவெராவ் (President, Russian Academy of Sciences)

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின் சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)   

    World nuclear power sharing

    Nuclear Fuel Processing

    கேள்வி எழுப்பும் போது 45% தொழிற்துறை வல்லுநர் 2015 ஆண்டுக்குள் 20% மதிப்பளவில்தான் அணுமின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பது தெரிகிறது. அவர்களின் எதிர்நோக்கு நீட்சி [Future Projections] அணுமின்சக்தியின் பங்கு, 2015 இல் 18% என்றும், 2030 இல் 21% இருக்கும் என்றும் தெளிவாகத் தெரிகிறது.  2050 இல் அணுமின் ஆற்றலில் தேவை 40% ஆக இரட்டிக்கும் என்றும் 50% அல்லது அதற்கும் மிஞ்சியும் போகலாம் என்றும் கருதுகிறார்.

    [Black & Veatch, US Electric Power Utility Survey Results (2010)]   

    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமை யான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

    World nuclear capacity

    Fig World Nuclear Power Production

    ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது இயங்கப் போவதில்லை.

    ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

    அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும்.  பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரிய வில்லை !

    இயற்கை விஞ்ஞான இதழ்ப் பதிப்பு [Nature]

    World nuclear power generation 2013

    World Nuclear Resources

    புகுஷிமா விபத்துக்குப் பிறகு அகில நாட்டு அணுமின் சக்தியின் நிகழ்கால & எதிர்கால நிலைப்பாடு.

    இன்னும் குறைந்தது 35 – 50 ஆண்டுகளுக்கு உலக நாடுகள் அணுமின் சக்தியை அடிப்படைப்  பாரம் சுமக்கும் மின்சக்தியாய்ப் [Base Load Power] பயன்படுத்தும் என்று உலக அணுசக்திப் பேரவை [World Nuclear Association] நிபுணர்கள் கூறுகிறார்.  செர்நோபில், புகுஷிமா அணு உலை விபத்து களுக்குப் பிறகு பாதுகாப்புக் குறைபாடுள்ள அணுமின் நிலையங்கள் நிறுத்தமாகி, திருத்தமாகிச் செப்பணிடப் பட்டுள்ளன.  முதுமை அடைந்த பழைய மாடல் அணுமின் நிலையங்கள் நிறுத்தமாகி நிரந்தர ஓய்வு பெற்றுள்ளன.  ஜப்பானில் இயங்கும் அனைத்து [48] அணுமின் சக்தி நிலையங்களும் கடந்த 4 ஆண்டுகள் நிறுத்தமாகிச் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதிக்கப்பட்டுச் செப்பணிடப் பட்டு வருகின்றன. அவற்றில் 23 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கத் தயாராகி, முதல் அணுமின் உலை ஒன்று ஆகஸ்டு 11, 2015 இல் துவங்க ஆரம்பித்துள்ளது.

    Reactor under operation

    Nuclear Power in USA

    2015 ஆண்டில் அகில நாட்டு அணுமின்சக்தி உற்பத்தி நிலவரம்

    1.  1996 ஆண்டு முதல் பெருகி வந்த அணுமின்சக்தி உற்பத்தி, உச்ச அளவு 2660 டெர்ரா-வாட் ஹவர் [Twh -terra-watt-hours] ஆக ஏறி, 2006 ஆண்டு முதல் குறைந்து வருகிறது.  2013 ஆண்டில் 2359 Twh ஆகக் குன்றியது.   குறைந்த அணுமின்சக்தியை ஈடுசெய்தவை குறிப்பாக நிலக்கரி, இயற்கை வாயு [Natural Gas] மூலம் உற்பத்தியான அனல் மின்சக்தி.  1996 ஆண்டில் 17.6% உலகப் பங்களிப்பாக அணுமின் சக்தி பயன்பட, 2015 ஆண்டில் 10.8% பங்களிப்பு அளவே நிரப்பி வருகிறது.
    2. பத்தாண்டுக்கு முன்பு [2005]  உலகின் 31 நாடுகளில் இயங்கி வந்த 438 அணுமின் உலைகளில் இன்று 390 எண்ணிக்கை அளவில்தான் இப்போது [2015 ஜனவரி 1] இயங்கி வருகின்றன.  காரணம் 2011 இல் புகுஷிமா அணுமின் உலைகள் விபத்துக்குப் பிறகு ஜப்பான் பாதுகாப்பு விதி/நெறி முறைகள் உறுதியாக தனது 48 அணுமின் உலைகளை உடனே நிறுத்தியது.  [438 -48 = 390].  ஜப்பானில் 2 அணுமின் நிலையங்கள் மட்டும் 2013 முதல் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.  ஜப்பான் இன்னும் 17 அணுமின் உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவு செய்து வருகிறது.  அவற்றில் இரண்டடின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயங்க அனுமதி பெற்று 2015 ஆகஸ்டு 11 இல் முதல் யூனிட் துவங்கியுள்ளது.  இரண்டாவது யூனிட் ஓரிரு மாதங்களில் இயங்கத் துவங்கும்.
    3. ஜெர்மனி 2011 புகுஷிமா விபத்துக்குப் பிறகு 8 அணுமின்சக்தி நிலையங்களை நிறுத்தியது.  எஞ்சிய மற்ற 9 அணுமின் நிலையங்கள் 2015 – 2022 ஆண்டுகளில் படிப்படியாக நிறுத்தம் அடையும்.   இழப்பு மின்சாரத்தை ஈடுசெய்ய நிலக்கரி, அனல் மின்சாரம் பயன்படுத்தப் பட்டது.
    4. அமெரிக்கா 2012 முதல் பிளாரிடா, விஸ்கான்சின், வெர்மான்ட், மற்றும் கலிஃபோர்னியாவில் இயங்கிய பழைய, முதிய 7 அணுமின் நிலையங்களுக்கு ஓய்வு கொடுத்தது.   ஆயினும் எல்லா நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காதான் பேரளவு [19% பங்கு] அணுமின்சக்தி நிலையங்களைத் தற்போது இயக்கிக் கொண்டு வருகிறது.
    5. 2015 ஆண்டிலும் பிரான்ஸ் தனக்கு வேண்டிய மின்சாரத்தை 75% பங்கு அணுமின் நிலையங்களிலிருந்துதான் உற்பத்தி செய்து வருகிறது.
    6. இன்னும் பெல்ஜியம், ஸ்லோவாகியா, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகள் 50% பங்கு மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம்தான் உற்பத்தி செய்து வருகின்றன.

    2014 Reactors under construction

    கட்டுமான திட்டங்களில் உயிர்தெழும் புதிய அணுமின் நிலையங்கள்

    1. 2015 ஜனவரி முதல் தேதி நிலைப்படி இதுவரை உலக நாடுகளில் 65 புதிய அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன. புகுஷிமா விபத்துக்குப் பிறகு புதிய பாதுகாப்பு நெறி முறைகள் விதிக்கப்பட்டு 49 அணுமின் உலைகளின் கட்டுமான வேலைகள் தாமதமாகி வருகின்றன.  2015 டாலர் நிதி மதிப்பை ஒப்பிட்டால் அணுமின் நிலையக் கட்டுமானச் செலவுகள் மிக மிக அதிகமானவை. கட்டும் காலமும் நீண்டது.  கட்டுமானச் செலவுகள் கட்டு மீறிப் போவதைத் தடுப்பது கடினமாக உள்ளது.
    2. உலகில் 14 நாடுகள் 67 அணுமின் நிலையங்களைப் புதிதாய்க் கட்டப் போவதாக 2015 ஆண்டு அறிவிப்பு மூலம் தெரிய வருகிறது. அவற்றில் 80% ஆசிய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் அமைக்கப்பட உள்ளன.   சைனா ஒரு நாடுதான் 2018 ஆண்டுக்குள் 28 அணுமின் நிலையங்கள் உருவாக்கும் என்பது உறுதிப்படுகிறது.
    3. 2015 முதல் 2059 ஆண்டுவரை தேவைப்படும் மின்சார உற்பத்தியைப் பெருக்க 400 புதிய அணுமின் நிலையங்கள் கட்டப்பட வேண்டும். இயங்கி வரும் உலக அணுமின் நிலையத்தின் சராசரி  வயது நீடிப்பு சுமார் : 28.5 ஆண்டுகள்.  அவை 40 ஆண்டுகளைத் தொட்டால், நிறுத்தம் அடையும் நிலையை எட்டிவிடும்.  அவற்றின் ஆயுள் மேலும் நீடிக்கப்பட வேண்டுமானால் சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதித் தொகை புதுப்பிக்கத் தேவைப்படும்.  பொதுவாக அமெரிக்காவில் அணுமின் நிலைய ஆயுள் நீடிப்பு 40 ஆண்டு வரையறை அளவில் [Licensing Limit] அனுமதிக்கப் படுகிறது.  அமெரிக்காவில் உள்ள 100 அணுமின் நிலையங்களில் 72 குறிப்பாக 60 வருட ஆயுள் நீடிப்பு அளிக்கப் பட்டுள்ளன.

    Fig 4 Individual Country Production

    பின்புலம்:  2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து  நாடு, நகரம், வீடுகள், தொழிற் துறைகள் தகர்ந்ததோடு, புகுஷிமா அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    World nuclear power capacity

    தற்போது முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகிய வற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  அதாவது 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்தி ருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின்சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்ப்பு.

    1.  1986 செர்நோபில் அணு உலை விபத்தில் பாடங்கள் கற்றக் கொண்ட ரஷ்ய அணுசக்தித் துறை வல்லுநர் சிலரின் அரிய கருத்துக்கள் கீழே எழுதப்பட்டுள்ளன.

    World nuclear power countrywise

    1.1  ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தின் அதிபர் நிக்கோலை லாவெராவ் (Nikolai Laverov President, Russian Academy of Sciences) கூறுகிறார் :

    “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  ஜப்பான் பூகம்ப விபத்தில் (2011 மார்ச்சு) பெரிய எரிஆயில் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எப்படி எரிந்தததென்று பார்த்தோம். ஜப்பானில் நிதிவள விரையத்தோடு சூழ்வெளி, கடல் நீர் தூய்மைக்குக் கேடு விளைந்ததையும் கண்டோம்.  நாம் அம்மாதிரி ஒரே தவறுகளை ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறோம் ?”

    World nuclear power construction

    1.2 விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author) கூறுகிறார்

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.  அது முதல் பிரச்சனை.  இரண்டாவது செர்நோபில் விபத்தின் போது ரஷ்யாவில் தலைமை அரங்கை உடனே ஏற்படுத்தி அரசாங்க அமைச்சகங்கள் அத்தனையும் ஒத்துழைத்தன.  ஜப்பானில் அப்படிக் கூட்டுறவு நிகழவில்லை.  புகுஷிமா அணுமின் உலைகளின் உரிமையாளர் (Tokyo Electric Power Company -Tepco) ஒரு தனியார் நிறுவகம்.  டெப்கோ தனியாகப் பல்வேறு பாதுகாப்புப் பணிகளை உடனே செய்ய முடியவில்லை.  இதற்கு ஓர் உதாரணம் : புகுஷிமா தளத்தில் மின்சக்திப் பரிமாற்றம் அறுபட்ட பிறகு, உதவிக்கு அடுத்த தனியார் மின்சார வாரியத்திலிருந்து கொண்டு வர டெப்கோவுக்குப் பல நாட்கள் ஆயின !”


    Japan Energy Sharing

    1.3 செர்கி நோவிகோவ் (Sergei Novikov, Head of Communication at Rosatom) கூறுகிறார்

    ரஷ்யாவின் ரோஸாட்டம் குழு (Rosatom Group) ஜப்பான் நாடு அழைத்தால் முடங்கிப் போன அணு உலைகளுக்கு உதவி செய்யத் தயாராய் இருந்தது.  எந்த எந்தத் துறைகளில் உதவி தேவை என்று ஜப்பான் கேட்டால் அந்தத் துறைகளில் உடனே உதவிட நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.  (ஆனால் மெய்யாக அழைப்பு வரவில்லை).  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வெதேவ் (President Dimitri Medvedev) & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் (Prime Minister Vladimir Putin) இருவரும் (புகுஷிமா விபத்துக்குப் பின்) ஒருங்கே அழுத்தமாக இப்படி அறிவித்தார்:  ரஷ்யாவில் எரிசக்தியும் ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறை இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை..”

    Fig 1A Energy Map of India

    1.4 லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry) கூறுகிறார்

    “இப்போது ரஷ்ய அணுமின் நிலையங்களைப் பொருத்த வரையில் பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் முற்றிலும் வேறுபட்டவை.  ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்களில் சில 40 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்ட பழைய மாடல்கள் என்னும் குறைபாடு ஒருபுறம் இருக்கட்டும்.  அதற்குப் பிறகு சில மேம்பாடுகளை அவற்றில் ஜப்பானியர் செய்தனர் என்பது மெய்தான்.  அவற்றின் தகுதிப்பாட்டை நான் எடை போடப் போவதில்லை.  நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப் பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்கள் வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் தயார் முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை அபாய நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக் கோல்களின் வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டை அரணுக் குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைப்பாகி உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் [(1) Passive Air Heat Exchanger, (2) Long Term Fission Product Filtering System,  (3) Hydrogen Recombiners)] போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    Fig 1B Indian Reactors Operating & under Construction

    1.5 பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert) கூறுகிறார்

    ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் சில காலம் கடந்த பிற்போக்கு முறையில் கட்டப் பட்டிருந்தாலும் அவை 9 ரிக்டர் அசுர அளவு நிலநடுக்கத்தில் கூடப் பழுதாக வில்லை என்பது அழுத்தமாகக் குறிப்பிடத் தக்கது.  40 வருடங்கள் கடந்தும் டிசைன் முறைப்படி அவற்றில் பாதுகாப்பு இயக்கங்கள் சுயமாக நிகழ்ந்தன.  ஆனால் விபத்துக்கள் நேர்ந்ததற்குக் காரணங்கள் டிசைன் எல்லைக்கு அப்பாற் பட்டவை. 30 அடி (10 மீடர்) உயரச் சுனாமித் தாக்கல் இதுவரை எதிர்பாராது.  8 அடி (2.5 மீடர்) உயர அணையைத் தாண்டி அபாயப் பாதுகாப்புச் சாதனங்களைச் சுனாமிப் பேரலை அடிப்பு மூழ்க்கி விட்டு முடமாக்கியது.  எதிர்பாராத சுனாமியால் நேர்ந்த புகுஷிமா விபத்தால் உலக நாடுகளின் அணுசக்தி உற்பத்தித் திட்டங்கள் பாதிக்கப்பட வேண்டிய தில்லை.  ஆனால் ‘அவசியப் பன்முக அமைப்பு’ பற்றி ஒரு விதி (Law of Necessory Diversity) உள்ளது.  இது மர்·பி நியதி (Murphy’s Law) என்றும் அழைக்கப்படுகிறது.  அதாவது “சிந்தனைப்படி ஏதோ ஒரு தவறு நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டால், நிச்சயம் அது நேர்ந்திடும்.”

    இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.

    1.6  அலெக்ஸாண்டர் பைக்கோவ் (Deputy Director General IAEA) கூறுகிறார்

    புகுஷிமாவின் நிறுத்தமான அணு உலைகளின் வெப்பக் கட்டுப்பாட்டை ஜப்பான் நிபுணர் பல நாட்கள் செய்ய முடியாது கதிரியக்கம் வெளியேறித் தீவிர விபத்தானது.  இறுதியாக ஜப்பானிய பொறியியல் வல்லுநர் வெப்பத்தைக் கட்டுப் படுத்த முடிந்தது.  எங்கள் கணிப்பின்படி அணு உலைகளில் ஓரளவு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி சிதைவடைந்தன என்று கூறுகிறோம்.  ஆனால் அவை உஷ்ணம் மீறி அறிவிக்கப்பட்டது போல் உருகிப் போய்விட வில்லை (No Meltdown) என்பது எமது கருத்து.  அப்படி எரிக்கோல்கள் உருகிப் போயிருந்தால் உள்ளே பரவிய / வெளியே சூழ்ந்த கதிரியக்க வெளிவீச்சும் உக்கிரமும் பெரு மடங்காய் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.  அதாவது திரிமைல் தீவு விபத்து போல் எரிக்கோல்கள் புகுஷிமாவில் உருகிப் போகவில்லை !  ஹங்கேரியன் பாக்ஸ் அணுமின்சக்தி நிலைய விபத்து போல் (Hungarian Paks Atomic Power Plant Accident – Level 3) எரிக்கோல்களில் சிதைவுகள் நேர்ந்துள்ளன.

    (தொடரும்)

    ***************

    தகவல்:

    1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

    2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

    3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

    4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

    5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill

    6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

    7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

    8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

    9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

    10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants

    11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    13.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

    14.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

    15.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

    16.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

    17. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

    18. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

    19.  Nuclear {Power in Japan (March 30, 2011)

    20. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    20 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    21. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    22.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    23.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    24. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    25. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    26. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    27. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    28. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    29 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    30. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    31. http://www.bbc.com/news/world-asia-33858350 [August 11, 2015]

    32. http://www.vox.com/2015/8/12/9143265/japan-nuclear-restart-fukushima  [August 12, 2015]

    33.  http://www.world-nuclear-news.org/NP-US_power_industry_sees_nuclear_future-1802104.html  [February 18, 2010]

    34.  http://www.mining.com/75-of-future-nuclear-power-expansion-will-occur-in-china-russia-and-india/  [September 26, 2011]

    35.   http://www.mining.com/fukushima-was-a-blip-uranium-fundamentals-stronger-than-ever/  [January 29, 2012]

    35.  http://www.vox.com/2014/8/1/5958943/nuclear-power-rise-fall-six-charts [January 30, 2015]

    36.  http://fukushimaupdate.com/japan-ends-nuclear-shutdown-four-years-after-fukushima/  [August 11, 2015]

    37.  http://www.world-nuclear.org/  [2015]

    38.  https://en.wikipedia.org/wiki/World_Nuclear_Association  [July 30, 2015]

    39.  http://www.euronuclear.org/info/encyclopedia/n/nuclear-power-plant-world-wide.htm [June 1, 2015]

    40.  https://en.wikipedia.org/wiki/World_Association_of_Nuclear_Operators [April 3, 2015]

    41.  https://en.wikipedia.org/wiki/Nuclear_power  [August 28, 2015]

    42. https://news.sky.com/story/fukushima-worker-dies-of-cancer-caused-by-radiation-seven-years-after-disaster-11491282  [September 6, 2018]

    43. https://www.nytimes.com/2018/09/05/world/asia/japan-fukushima-radiation-cancer-death.html  [September 5, 2018]

    44. https://www.theguardian.com/world/2018/sep/05/japan-admits-that-fukushima-worker-died-from-radiation  [September 5, 2018

    45. https://en.wikipedia.org/wiki/Fukushima_Daiichi_nuclear_disaster_casualties [Sptember 6, 2018]

    ************************

    S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  September 30, 2018 [R-1]
    http:jayabarathan.wordpress.com/

    Share
  • வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

     

    ஆசிரியர் குழுவில் இணைகிறார் – முனைவர் கல்பனா சேக்கிழார்

    கடந்த 12 ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், கணினி, மொழியியல் ஆகியவற்றில் முதுகலை பட்டமும்  தமிழில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    இதுவரை ஆறு நூல்களும், 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 52 தொகுப்பு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.  பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியும் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (PDF)  மேற்கொண்டு வருகிறார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     

    Share
  • சுமைதாங்கி

    முனைவா் ரா. மூா்த்தி

     

     

    நாகரிக உலகத்தில்
    நாகரிகத்தை அழித்து
    நடைப் பயணம் மிடுகிறேன் – நகரும்
    சுமைதாங்கிக் கல்லாக……

    மண்ணை மலடாக்கி
    மண் கலயத்தை மரபாக்கி
    மாயத் தோற்றத்தில்
    வட்டிலும், வாளியுமாக
    சுனை நீரை சுழற்சி செய்து
    சுத்திகரித்து வாட்டா் பாட்டிலோடு
    வலம் வருகிறேன் – நகரும்
    சுமை தாங்கிப் பெண்ணாக………

    விளையும் நிலத்தை
    வீடுகட்ட விற்றுவிட்டு
    வீதியெல்லாம் விதவிதப்பட்டு
    காடு மேடெல்லாம் தடம் பதித்த கால்கள்
    கானமஞ்ஞையைப் போன்று
    கஞ்சிப் பாத்திரத்தைத் தலையில் ஏந்தி
    தனிமையில் சுமக்கிறேன்
    வாய்பேசா வன்மமாக……..

    கோமகன் கோட்டையாளவும்
    கோடித்துணி கொண்டு வரவும்
    கோலோச்சமிடுகிறேன். – அதனால் நான்
    சுமை தாங்கவில்லை, சுமை ஏற்கிறேன்……..

    நானும் கல்லும் ஒன்றென்று
    நாகரிகம் சொல்லுது அதனால் தான்
    ஒவ்வொரு நாளும் தேய்ந்து கொண்டிருக்கிறேன்………..

    முனைவா் ரா. மூா்த்தி
    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்
    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
    கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    Email: ramvini2009@gmail.com

     

     

    Share
  • காதல் என்பது..

                                                      

                                                                            திவாகர்

     

    என் மனம் பூராவும் குழப்பத்தாலும் பயத்தாலும் தயக்கத்தாலும் இழுபட்டது. இவள் இப்படி இத்தனை வெளிப்படையாக இருப்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். இவள் ஏன் இப்படி கேட்கிறாள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க நேரமில்லைதான். சட்டு புட்டென்று பதில் சொல்லிவிட்டு ஓடிவிட வேண்டிய சூழ்நிலை.. ஆனால் ஓட முடியுமா?

    ”ம்.. பரவாயில்லே.. உண்மையைத் தானே சொல்லறோம்.. உன் வைஃப் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.. என்ன சாரதா.. நான் சொல்லறது சரிதானே.. ம்.. பாருங்க எங்க மோகன் எவ்வளோ ஆவலா எதிர்பார்க்கிறார்ன்னு. கம் ஆன் ஆனந்த்.. நாம் ரெண்டு பேரும் காதலிச்சது உண்மைதானே.. பத்தோ பன்னிரெண்டோ காதல் கடிதம் எழுதிண்டோமே.. உண்மைதானே’

    ”ஆமாம் சார் ஆமாம்.. இவள் சொல்வது சரிதான்.. இவள் என் காதலி.. இரண்டு பேரும் உயிருக்குயிராக காதலித்தோம்.. ஆனால் கலியாணம்தான் செய்துகொள்ளவில்லை..” என்று சொல்லமுடியுமா.. அதுவும் யார் எதிரில் குறுகுறுவென அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி சாரதாவின் எதிரில்..

    எனக்குதான் இத்தனை பயமே தவிர அந்த மோகன் மட்டும் அவள் சொல்வது போல ஆவலாக இருந்தான் என்பது என்னவோ உண்மைதான்.. சித்ராவே மறுபடியும் ஆரம்பித்தாள்.

    ”உனக்குத் தெரியாது ஆனந்த்.. நான் எத்தனையோ தடவை சொன்னாலும் இவர் ஒப்புக்கவே மாட்டார்.. நான் விளையாட்டுக்குச் சொல்றேன்னு கிண்டல் பண்ணுவார்.”

    அந்த மோகன் சிரித்தான்.. “ஹே சித்து.. இவர் முழிக்கற முழிலேர்ந்து தெரியறது.. இப்ப உன்னை நம்பறேன்.. டோண்ட் கம்பெல் ஹிம்.. மிஸ்டர் ஆனந்த்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இவ நிறைய தடவை உங்களைப் பத்தி சொல்லறச்சே நான் கிண்டல் பண்ணுவேனா.. இவ கொஞ்சம் சீரியஸ் டைப்.. அவ்வளவுதான்.. வாங்க ஸ்டார்பக்ஸ் போகலாம்.. ஒரு காபி சாப்பிட்டாதான் இவளுக்கு டென்ஷன் தீரும்.’

    லண்டன் ஐ எனும் அந்த சிறப்புமிக்க டூரிஸ்ட் இடத்தில்தான் இத்தனை குழப்பமும் நடந்தேறிக் கொண்டிருந்தன. மோகன் ஏதோ சுமுகமாக தீர்த்து வைப்பது போல பாவனை செய்தாலும் காபி அருந்தும்போதும் சித்ராவே மெதுவாக கேட்டாள்.

    ’ஆனந்த்.. போகட்டும். உனக்குதான் என் லவ் லெட்டர்லாம் ரொம்ப பிடிக்கும் இல்லையா? உங்கிட்டே என்னோட லவ் லெட்டர் ஏதானும்  இருந்தா கொடேன்.. இவர்கிட்டே காண்பிக்கணும்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. இந்த லவ் லெட்டர் கான்செப்ட்டே இப்பல்லாம் கிடையாதா?.. நானும்  எழுதியிருக்கேன்னு சொன்னா இவர் சிரிக்கிறார்.. நீயா.. அப்படி என்ன எழுதுவே.. என்ன இருக்கு எழுத..?’ அப்படின்னு அப்பப்ப கேட்பார்.. இந்தக் காலத்து லவ்வோட கம்பேர் பண்ணறச்சே நாம் எவ்வளோ டீசெண்டா காதலிச்சோம்’னு இவர்கிட்டே சொன்னா இவருக்கு எதுவும் புரியாது. அப்படி என்ன இருக்கு அந்த டீசெண்டான லவ்வுல’ன்னு கேட்டு சிரிப்பார். உங்கிட்டே இப்போ என்னோட லெட்டர் ஏதுனா இருக்கா.. இவருக்குக் காண்பிச்சு எக்ஸ்ப்ளெயின் பண்ணனும்.. சொல்லேன் பிளீஸ்..’

    பன்னிரெண்டு வருடங்கள் கழித்து நான் இவளைப் பார்க்கிறேன்.. அதுவும் அவளுக்குப் பிடித்த லண்டன் மாநகரத்தில்.. அதே குரலினிமை.. அதே அழகு மயில்.. அதே சிரிப்பு.. அதே படபடப்பு..

    இல்லையென தலையாட்டினேன். அவளுடைய காதல் கடிதங்களெல்லாம் படிக்கப்பட்டதால்தான் இந்தக் காதலே நிறைவேறவில்லை.. அவை யாவையும் கருணை காட்டப்படாமல் கொளுத்தப்பட்டன என எப்படி இவளிடம் சொல்வேன். என் மௌனம் அந்த மோகனுக்குப் பிடிக்கவில்லை போலும். பேச்சை மாற்றினான். தன் குடும்பத்தைப் பற்றி சொன்னான். எங்களைப் பற்றி கேட்டான். வீட்டுக்கு ஒரு வார இறுதியில் வந்து இரண்டு நாள் தங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வைக்கப்பட்டது. கொஞ்சநேரம் கழித்து லண்டனையும் சென்னையையும் கம்பேர் செய்த பேச்சுக்குப் பிறகு கிளம்பினோம். அவர்கள் கை குலுக்கி விடை பெற்றார்கள். கையை குலுக்கும்போது சித்ராவின் கை வேகமாக அழுத்தியதோடு ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று சொல்லவும் சொல்லி விட்டு சென்றார்கள்.

    சாரதா என்னைப் போலவே அதிகம் பேசவில்லை. விந்தையாகப் பார்ப்பது போல பார்த்தாலும் இத்தனை நேரம் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாளோ.. வீட்டுக்குத் திரும்பும்போது கூட மௌனமாகத்தான் திரும்பினோம். ‘மாமா, பசங்ககிட்டே நாம் இவங்களையெல்லாம் பார்த்தோம்னு பெருமையா ஏதும் பீத்திக்காதீங்க.. அப்புறமா நாம பேசிக்கலாம்’, சாரதா காரை விட்டு இறங்குமுன் சொன்னவள்தான். அந்த அப்புறமா என்ற வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

    என் சொந்த அக்காவின் ஒரே பெண்தான் சாரதா.. என் அக்காவை எங்கள் வீட்டின் எஜமானியாகத்தான் சிறிய வயதிலிருந்துதான் நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் என் அக்காவுக்கும் பதினான்கு வயது வித்தியாஸம். பெரிய பெண்ணாகவே நான் நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துப் பழகினாலும் என் மீது ஏகப்பட்ட பாசம் வைத்திருப்பவள். அம்மாவை விட அக்காவிடம்தான் அதிகம் வளர்ந்தேன். அவள் கல்யாணம் ஆகி அடுத்த தெருவில்தான் குடித்தனம் போனதால் அவள் வளர்ப்புக்கு எவ்வித பஞ்சமும் ஏற்பட்டதில்லை. அவள் பெண்ணான சாரதாவோடு அதிகம் பழகவிடமாட்டாள். ஏன் என்று எனக்கும் புரியவில்லை அப்போது ஆனால் இனம் புரியாத ஒரு பயம் மட்டும் அவளிடம் உண்டு. என்னை கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பாள். சிகரெட் பிடித்துவிட்டு இரண்டு சாக்லெட் வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்றாலும் கண்டுபிடித்து விடுவாள்.. அக்காவின் ஆணையே இந்த இரண்டு வீடுகளில் செல்லுபடியாகுமென்பது  இன்னொரு விஷயம். . இப்படிப்பட்ட அக்காவிடம்தான் சித்ரா ஒருமுறை சரியாக மாட்டிக்கொண்டு சிக்கினாள்.

    இஞ்ஜினீரிங் கல்லூரியில் சித்ரா எனக்கு இரண்டு வருடம் ஜூனியர். அழகு மயில். ஆமாம்.. ஒருமுறை அவள் மயில்நடனம் ஆடியபோதுதான் அந்த அழகில் மயங்கி விழுந்தேன்.. தைரியமாக அவளிடம் என் காதலைச் சொன்னபோது முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்டவள் பிறகு என்ன நினைத்தாளோ.. முறுவலித்து ஏற்றுக் கொண்டாள். எத்தனையோ நண்பர்களுக்குத் தெரிந்தாலும் எங்கள் காதல் விவகாரம் என் வீட்டுக்குத் தெரியாதுதான். ’கல்லூரி காலத்து பருவ காதலாக இல்லாமல் நம் காதல் காலாகாலத்துக்கும் இனிக்கும் பரிபூரணக் காதல்’ என இவளே ஒவ்வொரு கடிதத்திலும் எழுதுவாள்தான். பளிச்சென இருக்கும் எழுத்துகள் எத்தனை முறை படித்தாலும் சுகமானது. ஒவ்வொரு சமயம் மனப்பாடமாக அப்படியே அவளிடமே சொல்வேன். அவளுக்கு ஆவல் அதிகம் பிறக்கும். அடுத்த கடிதம் இன்னமும் ஆழமாக இருக்கும். கல்லூரி படிப்பு முடிந்து  மேல்படிப்பும் முடித்து நான் வேலைக்குச் சென்றபின்னரும் அவள்தான் என் ஜீவநாடியாக இயங்கிவந்தவள். அவள் அருகே இல்லாத தருணத்தில் அவள் கடிதங்களோடு பேசிக்கொண்டு பைத்தியமாக மாறியிருந்த காலங்கள் அவை. அப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் கதாநாயகி என் அக்கா. வில்லன் நான்.. அகப்பட்டு மாட்டிக்கொண்டு பலியானது சித்ராதான்.

    அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். அலுவலகத்தில் என்னை லண்டன் மாற்றியிருப்பதாக கடிதம் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். இது கூட சித்ராவின் நீண்டநாள் கனவை நனவாக்கத்தான்.. அவளுக்கு லண்டன் மீது கொள்ளை ஆசை. ஆங்கில புதினங்களில் வரும் லண்டன் வர்ணனைகள் அவளை மிகவும் கவர்ந்தவை. ஷேக்ஸ்பியரின் பரம ரசிகை. 221பி, பேகர் ஸ்ட்ரீட் அவளது பிறந்த வீடாக நினைத்துப் பெருமை கொள்ளுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தின் நினைவு வீடான அந்த இடத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்கவேண்டும் என்பது அவள் ஆசை.  கல்யாணம் ஆனபின்னர் லண்டனில் செட்டில் ஆவது என்பது அவள் வாழ்வின் லட்சியம் கூட. அவளுக்காகவே என் அலுவலகத்தில் கொஞ்ச காலமாக கஷ்டப்பட்டு லண்டன் அலுவலகத்துக்கு வேலை செய்ய அனுமதி பெற்றவன். அன்று அந்த அனுமதி கிடைத்த மகா சந்தோஷத்துடன் இல்லம் வந்து சேர்ந்தவனுக்கு அங்கே நான் நேசிக்கும் சித்ராவும், என் பாசத்துக்குரிய அக்காவும், கையில் கடிதங்களுடன் காணப்பட்டார்கள். சித்ராவின் கண்கள் அழுது சிவந்திருந்தன. அக்காவோ அவனைப் பார்த்ததும் ஆக்ரோஷத்துடன் உலகத்தையே அழிக்கப்போகும் இராட்சஸி போல நடுக்கூடத்தில் நின்றிருந்தாள்.

    இந்தக் கோலத்தில் அங்கே என்ன நடந்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது. ஒரு ஓரமாக ஏதுமறியாத குழந்தை போல என் அம்மா நின்றிருக்க அவள் பக்கத்தில் இருந்த சித்ராதான் முன்னால் வந்தாள். ஒரே வார்த்தை.. ஒரு வார்த்தைதான் பேசினாள். ‘குட் பை ஆனந்த்.. இனி நமக்குள் எந்த உறவும் கிடையாது..” அழுதுகொண்டே சொல்லிவிட்டு வெளியே வேகமாக சென்று எங்கள் காரில் அமர்ந்துகொண்டு சென்று விட்டாள்.

    என் அக்கா உடனடியாக ஏதும் பேசவில்லை. அம்மாதான் ஏதோ சமாதானப்படுத்தினாள். வீட்டுக்குள்ளேயே குதிர் போல ஒரு அழகான பெண் எனக்காகக் காத்துக்கொண்டிருக்க ஏன் இன்னொரு பெண்ணை நாடினேன் என்று அம்மா கேட்கும்போது முதலில் புரியவில்லை. பிறகுதான் சாரதாவைப் பற்றிப் பேசுகிறாள் என்பது புரிந்தது. நான் அப்பாவியாக அக்காவைப் பார்த்தேன். காதலைப் பற்றியும் காதலி பற்றியும் எரிச்சல் கொண்டிருந்த அக்காவிடம் எந்தக் கருணையும் இல்லை. கடகடவென சமையலறை சென்றவள் நான் கத்தக் கத்த எந்த இரக்கமும் காட்டாமல் அத்தனைக் கடிதங்களையும் எரியும் ஸ்டவ்வின் நீல நெருப்புக்கு இரையாக்கி தன் எரிச்சலைத் தணித்துக் கொண்டாள். பிறகு என்னிடம் வந்தாள்.

    “சரி, இது இத்துடன் போகட்டும்.. இந்த விஷயம் அப்பாவுக்கும் தெரியவேண்டாம், சாரதாவுக்கும் தெரியவேண்டாம். யாருக்குமே சொல்லக்கூடாது. எம் மேலே சத்தியம்.. சரியா.. அம்மா, இதோ பார்.. நான் என் வீட்டுக்காரரிடம் பேசி நல்ல முகூர்த்தம் பார்க்கிறேன். செய்யவேண்டிய சீர் எல்லாம் குறையில்லாமல் செய்கிறேன்.. உன் பையனை இந்தக் கலியாணம் வரைக்குமாவது நீ ஜாக்கிரதையா பார்த்துக்கோ.. அவ்வளவுதான் சொல்வேன்..’ சொன்னவள் என்னை ஒரு முறை குரோதத்துடன் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள். அம்மாதான் சொன்னாள். முதல்நாள் அவள் வீட்டுக்கு வந்த போது என்னிடம் ஏதோ பேசவந்தாளாம். ஆனால் நான் கவனிக்காமல் ஏதோ கடிதங்களுடன் பேசிக்கொண்டிருந்தேனாம். கொஞ்சநேரம் கோபமாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டாள். காலையில் நான் ஆஃபீஸ் சென்றவுடன் வந்தவள் என் அறையில் நுழைந்து நான் என் பீரோவில் வைத்திருந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் படித்து விட்டு கோபத்துடன் காரில் ஏறி என் நண்பர்களைப் பிடித்து அவர்கள் மூலமாக சித்ராவின் வீட்டுக்குப் போய் சண்டை போட்டு அவளைப் பயமுறுத்தி தன்னுடன் அழைத்துக் கொண்டு  இதோ இப்படிச் சொல்லவைத்துவிட்டாள்.

    வாழ்க்கையே சுக்கு நூறாகி உடைந்துவிட்டதை அன்றுதான் உணர்ந்தேன். அம்மாவிடம் அழுதேன். லண்டன் பயண கடித விவகாரத்தை சொன்னேன். கலியாணம் செய்துகொண்டு சாரதாவுடன் ஜாலியாகப் போயேன்’ என்று அப்பாவித்தனமாகப் பேசினாள் அம்மா.

    அடுத்த சிலநாட்களில் சித்ராவை நான் சந்திக்க எத்தனை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. சே.. என்ன பைத்தியக்காரத்தனம் இது.. ஒரு அக்காக்காரி முறைத்தால் காதல் முறிந்துவிடுமோ. காதல் என்பது என்ன இத்தனை பலவீனமான உணர்ச்சியா? காதல் என்பது எத்தனை பலம் வாய்ந்தது என்பதை எப்படி உணர்த்துவது? அந்த காதல் உணர்வு இல்லையென்றால் கஷ்டப்பட்டு காதலிக்காக லண்டன் பயணம் வரை நான் ஏற்பாடு செய்திருப்பேனா? என் அக்காவுக்குப் பயந்துபோய் சித்ரா இப்படிச் செய்யலாமா.. எவ்வளவு ஆசை ஆசையாக லண்டன் வாழ்க்கையை ஊகித்து வந்தோம்? ஏய் சித்ரா பதில் சொல்லு.. ஒருமுறை என்னிடம் பேசு என்றெல்லாம் அவள் தோழிகள் மூலமாக செய்தி அனுப்பினாலும் அவள் வரவில்லைதான்.

    அடுத்த மாதத்தில் சாரதாவின் கழுத்தில் நான் கட்டிய தாலியுடன் லண்டன் பயணம் செய்யும்போது சாரதா மட்டுமே உண்மையான மகிழ்ச்சியில் இருந்தாள். அம்மாவும் அக்காவும் வெளியே மகிழ்ச்சியைக் காண்பித்தாலும் உள்ளுக்குள் ஏதோ பய உணர்வுடன் இருந்துகொண்டிருப்பது எனக்குத் தெரியும். நான் ஏதாவது எதிர் ஏற்பாடு செய்துவிடுவேனோ என்ற பயம் கடைசி வரையில் அக்காவுக்கு இருந்தது. நான் அப்படித்தான் தயார் நிலையில் இருந்தாலும் சித்ரா அசைந்து கொடுக்கவே இல்லையே.. இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும்.

    ஆனால் அன்றிலிருந்து அக்கா தம்பி உறவு முறை முறிந்து போய்விட்டது என்பது வாஸ்தவம்தான்.. ஒரு புதிய மாமியாரைப் போலத்தான் பழகினேன்.. அக்காவும் அந்த தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே விரும்பினாள் போலும். இந்த இலண்டனில் கடந்த பன்னிரண்டு வருட வாழ்க்கையில் இரண்டு முறை பிரசவத்துக்காக உதவி செய்யவும், ஒருமுறை கணவருடனும் இன்னொருமுறை அம்மா அப்பாவுடன் வந்திருந்தாள். ஒவ்வொரு முறையும் நான்கைந்து மாதங்கள் இருந்தாலும் இருவரும் ஏதோ மாமியார் மருமகன் உறவில் மட்டுமே இருப்பது போல நடந்துகொண்டாமே தவிர பழைய தம்பி நான் என்பதை போகப் போக மறந்துதான் போனேன். ஆனால் சாரதா மட்டும் என் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிகின்றவள். அவள் கூட இரண்டு முறை எங்களிடையே இருந்த தூரத்தைப் பற்றிக் கேட்டவள்தான். ‘என்ன இருந்தாலும் எங்கம்மா உங்களுக்கு சொந்த அக்காதானே மாமா, ஏன் இப்படி வித்தியாஸமா விலகிப் போய் பழகறீங்க’ என்று கேட்டதற்கு நான் சிரித்து மழுப்பி விடுவதால் அவளும் நாளாக நாளாகக் கண்டு கொள்வதில்லைதான். ஆனால் அக்காவைப் பார்க்கும்போதெல்லாம் சித்ராவின் நினைவு தவிர்க்கமுடியாதது என்பதை அக்கா அறிவாள்.. அவள் பெண் அறியமாட்டாள் இல்லையா..

    அதே போல நானாக என் அக்காவைக் கூப்பிட்டு இங்கே அழைத்துக் கொள்ளவும் விருப்பப்படவில்லை. அவளேதான் வருவாள். போவாள். இந்த விஷயத்தில் சாரதாவுக்கு ஏராளமான கோபம் கூட என் மீது உண்டு. அந்த கோபத்தையும் எப்போதாவது என் மீது பிரயோகிப்பாள். நான் கண்டு கொள்வது இல்லை கூட.

    அன்றிரவு பிள்ளைகளுக்கு வழக்கப்படி ஏதோ கதை சொல்லி தூங்க வைத்துவிட்டு படுக்கைக்கு வந்தேன். காத்திருக்கிறாள்.. தூங்காமல் காத்திருப்பாள் அவள் என்பது எனக்கும் தெரியும்தான்.

    கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அவளே ஆரம்பித்தாள்.”மாமா, நமக்கு இந்த முதலிரவு இரண்டாவது இரவுன்னு மூவாயிரம் நாலாயிரம் இரவு வந்தாச்சு.. ஒருநாளாவது அந்தப் பெண்ணைப் பத்திப் பேசலையே ஏன்.. எனக்கு அது மட்டும்தான் பிடிக்கலே.. எங்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லையா.. என்கிட்டே சொல்றதிலே ஏன் பயப்பட்டீங்க.. இப்ப பாருங்க.. அந்த சித்ரா புருஷன் ஹாயா சிரித்துக் கொண்டே எவ்வளோ ஈஸியா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணினான். நீங்க அங்க தவிச்ச தவிப்பு இருக்கே.. நல்லா கவனிச்சேனே..  எனக்கு பயங்கர கோபம் வந்து நானே ஏதாவது சொல்லிடலாம்னு கூட நினைச்சேன்..”

    அவளைப் பார்த்தேன்.. அவளுக்கு என் மேல் பூரண அன்பு சற்றும் குறையவில்லை என்பதும் புரிந்தது. அவள் முன்நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை பின்னுக்குத் தள்ளிக்கொண்டே கேட்டேன்.

    ‘உன்கிட்டே இதெல்லாம் சொல்லாதது என்கிற வரையில் நீ கேட்டது சரிதான். சாரு, நான் இதுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?” அவள் தலையை அழகாக அசைத்தாள்.

    “நீ யாரையாவது கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சிருக்கியா?”

    ”ஓ! இந்த மாமாவைத்தான் சின்னப்பலேர்ந்து மனசுக்குள்ளே காதலிச்சிருக்கேன்.” என்று என்னை இடித்தாள்.. ”ஆனா அது காதல் அது இதுன்னு சொல்லத் தெரியாது. சின்னப்பலேர்ந்து எங்கம்மா  எங்கிட்டே ‘உன் மாமாதான் உன்னைக் கட்டிக்கப் போறான்.. அதனால அடிக்கடி நீ அவனோட கிட்டக்கப் போய்ப் பழகக் கூடாது.. ந்னு ஒரு பயத்தை உருவாக்கிட்டா.. அதனால காதலா உங்ககிட்டே பழகறதுங்கறது என்னால அப்ப முடியலே.. காரணம் எங்கம்மாதான்.. அவ சொல்றதும் சரிதானே.. கல்யாணத்துக்கப்பறம் உங்க மாமா உன் கையிலதானடின்னு அடிக்கடி சொல்வாள். நீங்களும் நானும் ஒருவர் கையில் ஒருவர்தானே..”

    அவள் பேசுவதை ரசித்தேன். ’காதலை வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம் அவள் அம்மாவாம். பைத்தியக்காரி, அதே அம்மாதான் என் காதலையும் உன்னிடம் வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம்’ என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் சாரதா பாவம், மென்மையான மனசு அவளுக்கு.

    ‘சாரதா! இப்போ காலம் எவ்வளோ மாறிப் போச்சு பார்த்தியா.. ஒரு காலத்துல இப்படியெல்லாம் காதல் விவகாரம் இன்னிக்கு ஏற்படற மாதிரி வெளிப்பட்டால் உடனே குடும்பத்துல பெரிய குழப்பம்லாம் வரும்.. ஆனால் நீ எளிதா எடுத்துக்கற.. ஒருவேளை உன் மனசைப் புண்படுத்தக்கூடாதே’ன்னு நான் சொல்லலே’ன்னு இந்த விஷயத்தை எடுத்துக்கோ.. அவ்வளோதான்.”

    “அதெல்லாம் போகட்டும்.. ஆசை ஆசையா உங்களுக்கு ரொம்ப பிடிக்கறாமாதிரி லெட்டர்லாம் எழுதினாளாமே.. நான் சாயங்காலம் வந்ததும் உங்க பீரோவைக் கூட தேடினேன்.. கிடைச்சா அவளுக்கு போன் பண்ணி ரிடர்ன் பண்ணலாம்னு.. போன் நம்பர்லாம் ஷேர் பண்ணிண்டோமே.. ஆனா எதுவும் கிடைக்கலே”

    அடிப்பாவி, இவள் என்னை நம்பவே இல்லை. “என்ன சாரு இது… விட்டுடு’ன்னு சொன்னேன் இல்லே.. விட்டுடேன்..”

    அவள் விடவில்லை. “ஆமா.. அப்படி என்னதான் எழுதிப்பீங்க.. என்ன இருக்கு எழுத?” அந்த மோகன் கூட இதையே சொன்னான். சாரதா கொஞ்சநேரம் ஆழமாக யோசிப்பது போல பார்த்தாள்.

    ”ஆங்.. எனக்கு புரிஞ்சுபோயிடுச்சு மாமா.. இது கணவன் மனைவிக்குள்ள இருக்கற ஒரு ஈகோ பிரச்னை மாமா.. நல்லா யோசிச்சுப் பாருங்க.. எத்தனைதான் காலம் மாறினாலும், சொசைடி’ல ரொம்ப முன்னேற்றம்னு பேசினாலும் யாருமே தன்னோட பழைய காலத்து காதல் தோல்விக் கதையை சொந்தப் புருஷன்கிட்டேயே இப்படி பிரம்மாண்டமா பெருமை அடிச்சுக்க மாட்டாங்க.. அதுவும் பாருங்க சித்ரா அதைப் பத்தியே பேசினாளே தவிர இப்ப இருக்கறவிதத்தையோ என்ன செய்யறேங்கறதையோ எதுவும் பேசலே . எல்லாமே அவ புருஷன் சொன்னதுதான். அதனால சித்ரா உங்களை இன்னைக்கு சந்திச்சதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தியிருக்கா. அதாவது ஒரு பாயிண்ட் புருஷனை விட ஸ்கோர் பண்ணியே ஆகணும்னு வீம்பு.  இப்படி ஒருவேளை இருக்கலாம். சித்ராவின் பழைய காதல் கதையை அந்த மோகன் எப்பவும் கொஞ்சம் கீழ்ப்படுத்தி பார்த்திருக்கலாம். ஒரு வீம்புக்காக இவளும் இதைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இந்தக் கால நாகரீகம்ங்கறதே கல்யாணத்துக்கு முன்னாடி பழகி இருக்கணும்’னு பேசறதுதானே. ஓருவேளை இந்த விஷயத்துல மோகன் இவளைப் புண்படுத்தி இருக்கலாம். அல்லது வேற ஏதாவது சொல்லி நோக அடித்திருக்கலாம். இதை ஒரு சவாலா எடுத்துண்டு சித்ரா சமாளிச்சே ஆகணும்ங்கிற மனநிலைல இருக்கணும். வாழ்க்கைல காதல் என்பது ஒரு வயசுல வருவது சகஜம்தான்.. அதை டீசெண்ட் லவ் இண்டீசெண்ட் லவ் நு எப்படி பிரிக்கிறாங்களோ..  ஆனா ரொம்ப ரொம்ப பிராக்டிகல் வாழ்க்கையா மாறிப்போன இந்த கால கட்டத்துல இந்த கல்யாணத்துக்கு முன்னாடி வந்த காலேஜ் காதல்லாம் ஒரு பெரிய பிரச்னையா மாமா? மக்கு மாமா.. இன்னிக்கு நீங்க நல்லா மாட்டிகிட்டீங்க.. அவ்வளவுதான் சொல்வேன்”. அவள் என் தலையை கலைத்துக் கொண்டே சிரித்தாள்..

    ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்தான் அறிவாளோ.. இந்த பெண்கள்தான் எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறார்கள். இவள் மட்டும் இப்படி ஒரு கோணத்தில் சொல்லாமலிருந்தால் நான் ஏதேதோ பைத்தியக்காரத்தனமாக நினைத்துக்கொண்டு இந்த இரவெல்லாம் முழித்துக் கொண்டிருப்பேனோ என்னவோ.. காதல் என்பது ஒவ்வொருத்தருக்கும் வேறு வேறு வகையில் உதவுகிறதோ.. அன்றைய தினம் அக்காவுக்கு இந்த காதல் என்பது எரிச்சலாகப் பட்டது. ஆனால் அதையே சாக்காக வைத்து எங்கள் கல்யாணத்தையும் உடனடியாக நடத்திவிட்டாள்., இதோ இன்று அவள் வயிற்றில் பிறந்த பெண் மிக அழகாக காதல் என்பதைப் பற்றி காலத்துக்கேற்றவாறு எடுத்துச் சொல்கிறாள். காதலில் விழுந்த சித்ராவோ அதே காதலை வைத்து தன்னைத் தூக்கிக் கொள்ளப் பார்க்கிறாள்.. ஆமாம்.. காலம் அது கழியக் கழிய காதலைப் பற்றிக் கூட ஒரு முதிர்ச்சியான அனுபவத்தைத் தருகிறதுதான். அன்று காதலை மறுத்த அக்கா செய்தது தவறுதான் ஆனால் இன்று அதன் பரிகாரமாக அவள் இப்படி ஒரு அருமை மகளைத் தனக்குப் பரிசாக அளித்திருக்கிறாள் என்றல்லவா படுகிறது.  ஏனோ அக்காவைப் பார்க்கவேண்டும் போலத் தோன்றியது.

    ”சாரு.. இப்பவே அக்காவுக்கு போன் பண்ணி விசாவுக்கு அப்ளை போட்டு இங்கே சீக்கிரம் வரவழையேன்.. ஒரு ஆறு மாசம் இருக்கட்டுமே. எனக்கு என்னவோ எங்க அக்காவிடம் பழைய தம்பியா இருக்கணும்னு ஆசை”

    என் திடீர் மாற்றம் சாரதாவுக்குப் புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் தன் அம்மாவைக் கூப்பிடச் சொல்லும் என்னை ஆச்சரியம் விலகாமல் பார்த்தாள். ஆனால் அவள் எழுந்த துள்ளலில் அவள் மகிழ்ச்சியும் ஏராளமாக இருந்ததை கவனிக்கத்தான் செய்தேன்.

    Share
  • கலித்தொகையில் தொன்மங்கள்

    -முனைவர் தீ. சண்முகப்பிரியா

    முன்னுரை

    ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ என சிறப்பிக்கப்பெறும் செவ்வியல் இலக்கியம் கலித்தொகையாகும்.

    ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல் சான்ற புலனெறி வழக்கம்
    கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும்’
    (தொல்.அகத்.56)

    என்ற தொல்காப்பியர் நெறிக்கேற்ப அமைந்த அக இலக்கியம் கலித்தொகையாகும். பாலைத்திணைப் பாடல்களைப் பெருங்கடுங்கோனும், குறிஞ்சித்திணையைக் கபிலனும், மருதத்திணையை மருதன் இளநாகனாரும், முல்லைத்திணையைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தலை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர்.

    ‘ஏறு தழுவுதல்’ போட்டியில் வென்றவனுக்கே மகளைக் கொடுப்பது;  மகளிர் காளைதனை வென்றவனையே தனக்கேற்ற காளையாக ‘ஏறு தழுவுதல்’ போட்டியின் மூலம் தெரிவு செய்வது – எனும் நிலை தமிழரின் அன்பின் ஐந்திணை நெறிக்கு மாறுபட்டதாக உள்ளது. எனவே, இக்கலித்தொகையிலுள்ள முல்லைக்கலி பாடல்களைக் கொண்டு இத்தொகைநூலைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளுவோருமுளர்.

    சங்கச் சான்றோர்கள் இயற்கைக் காட்சிகளை – நிகழ்ச்சிகளை உற்றுநோக்கி, அவற்றையே தாம் கூறவந்த கருத்துகளை விளக்குவதற்கு உவமையாகப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால், கலித்தொகைப் பாடல்களில் புராண, இதிகாசக் கதைநிகழ்ச்சிக் குறிப்புகளும், சிவன், திருமால், முருகன் முதலிய கடவுளர் பற்றிய கதைக்குறிப்புகளும் காட்சிகளை – நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு உவமைகளாகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கலித்தொகைப் பாடல்களில் காட்சிகளை – நிகழ்ச்சிகளை – கருத்துகளை விளக்குவதற்குப் புராண – இதிகாசக் கதைக்குறிப்புகளும், கடவுளர் பற்றிய கதைக்குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளமையை ஆய்ந்து வெளிக்கொணரும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

    மகாபாரதக் கதைக்குறிப்புகள்

    வீமன் துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்தமை

    முல்லைக்கலியில் ஓர் ஆயன் ஏறு தழுவின காட்சியை விளக்கும்போது, சோழன் நல்லுருத்திரன், மகாபாரதக் கதை நிகழ்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டி விளக்குகின்றார்.

    ஓர் ஆயன் ஏறு தழுவும்போது, எருதின் நோக்கிற்கு அஞ்சாமல், அதனை அடக்க அதன்மேல் பாய்கிறான். அவ்வெருது, அவனைத் தன்னுடைய கொம்புகளுக்கிடையே கொண்டு, அவனுடலைக் குத்திக் குலைத்து, கம்பீரமாக நிற்கின்றது. இந்த நிகழ்ச்சிக்கு உவமையாக,  வீமன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்த துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து, பகைவரின் நடுவில் தன்னுடைய வஞ்சினத்தை நிறைவேற்றிய மகாபாரதக் கதை நிகழ்ச்சியை,

    ‘அம்சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
    நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன்
    வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்’ (101:18-20)
    எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    அசுவத்தாமன் பகைவரின் தலையைத் திருகியமை

    பொதுவன் ஏறு தழுவும்போது, எருதின் சினத்தைப் பொருட்படுத்தாது அதன்மீது பாய்கிறான். அவ்வெருது அவனைச்சாடி, கொம்பின் நுனியினால் அவனைக் குத்திக் குலைக்கின்றது. இக்காட்சியானது, கரிய இருள் என்றும் கருதானாய், நள்ளிரவில் வந்து, தன் தந்தையைக் கொன்றவனைத் தன் ஆற்றலின் வலிமையினால் தலையைத் திருகிய அசுவத்தாமனைப் போன்றிருந்தது என்பதனை,

    ‘ஆர்இருள் என்னான் அருங் கங்குல் வந்து தன்
    தாளின் கடந்து அட்டு தந்தையைக் கொன்றானைத்
    தோளின் திருகுவான் போன்ம்’ (101:30-32)
    எனும் அடிகளில் காட்சிப்படுத்துகின்றார்.

    வீமன் துரியோதனனை வீழ்த்தியமை

    பாரதப்போரில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுதப்போர் நிகழ்ந்தது.  ஒவ்வொருவரும் தன்னுடைய உயிர்நிலை இது என்று கூறிக்கொண்டு போர் புரிந்தனர். துரியோதனன் தன்னுடைய உண்மையாக உயிர்நிலையை மறைத்துக் கூறினான். வீமன் பலமுறைத் தாக்கியும் துரியனை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் கண்ணன் தன் துடையைக் குறிப்பாகத் தட்டிக் காட்டினான். அதனைப் புரிந்து கொண்ட வீமன்,  துரியோதனனைத் துடையிலே அடித்து வீழ்த்தினான். இப்பாரதக் கதை நிகழ்ச்சியைப் போன்று,  யானையினது முறம் போன்ற செவியை மறைப்பாகக் கொண்டு பாய்ந்து,  மாறுபாடு செய்த புலியைச் சினந்து தாக்கிய யானை, தன்னுடைய கூரிய கோட்டினது நுனியால் அப்புலியைக் குத்தி, புலியினது மருமத்தைத் திறந்து மாறுபாடு தீர்த்தது என்பதனை,

    ‘முறம்செவி மறைப் பாய்பு முரண் செய்த புலிசெற்று,
    மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
    குறக்கு அறுத்திடுவான் போல் கூர்நுதி மடுத்து அதன்
    நிறம் சாடி முரண் தீர்ந்த நீள்மருப்பு எழில் யானை’ (52:1-4)
    எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    பாரதப் போர்க்களத் தோற்றம்

    ஏறு தழுவிய பின்னர்த் தொழுவின் தோற்றம், எலும்புகள் முறிந்து முறிந்து,  தசைகள் சிதறிப் பரவிக் கிடந்தன. இடிபோன்ற முழக்குடன் பல்வேறு இசைக்கருவிகள் முழங்கி ஆரவாரத்துடன் காணப்பட்டன. தொழுவின் இத்தோற்றமானது, பாண்டவரும் நூற்றுவரும் போரிட்ட போர்க்களத் தோற்றத்தை ஒத்திருந்தது என்பதனை,

    ‘கோடுஇடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு –
    புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க,
    வரிபுனை வல்வில் ஐவர் அட்ட
    பொருகளம் போலும்,  தொழுஉ’(104:56-59)
    என்று குறிப்பிடுகின்றார்.

    சிவபெருமான் பற்றிய புராணக்கதைக் குறிப்புகள்

    சிவன் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து, குடலைக் கூளிக்கு இட்டமை

    பொதுவன் ஏறு தழுவும்போது, எருதானது பொதுவனைச் சாடி, அவன் குடல் சரியக் குத்திக் குலைத்ததாம். இக்காட்சியானது, சிவபெருமான், ஊழி முடிவிலே, எல்லா உயிரினங்களையும் அழிக்கும் எருமைக்கடாவின்மேல் ஏறிவரும் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து, அவன் குடலைக் கூளிக்கு இட்டு, அதன் வயிற்றை நிரப்புவானாம் – இப்புராணக்கதை நிகழ்ச்சியை ஒத்திருந்தது என்பதனை,

    ‘படர் அணி அந்தி பசுங்கட் கடவுள்
    இடரிய ஏற்று  எருமை நெஞ்சு இடந்து இட்டு
    குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்’(101:24-26)
          எனும் அடிகளிற் குறிப்பிடுகின்றார்.

    சிவன் கூற்றுவனைக் காலால் உதைத்து நெஞ்சைப் பிளந்தமை

    பொதுவன், காற்றைப்போல் விரைந்து வருகின்ற சினமுடைய ஏற்றைக் களத்தகத்தே, அதன் வலிமை அடங்கத் தழுவி, அதனை வருத்தி அதன்மேல் ஏறி நிற்கின்றான். பொதுவனின் இச்செயலானது, சிவபெருமான், எருமைக்கடாவின்மீது இவர்ந்து செல்லுகின்ற கூற்றுவனுடைய நெஞ்சத்தைக் காலால் உதைத்துப் பிளந்திட்டுச் சீற்றத்துடன் அவனுடைய அரிய உயிரைக் கொன்ற செயலோடு ஒத்திருந்தது என்பதனை,

    ‘ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
    சீற்றமோடு ஆர்உயிர் கொண்ட ஞான்று,  இன்னன்கொல்
    கூற்று என உட்கிற்று என் நெஞ்சு’(103:43-45)
    எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    சிவன் மூவெயில்களை அழித்தமை

    ஞாயிறு தன் செறிந்த கதிர்களை எவ்விடத்தும் பரப்பி, சுடுகின்றமையின், அத்தீயானது, காட்டுத்தீப்போல எழுந்து மலையிடத்து எங்கும் பரந்து, விசும்புர ஓங்கி வெம்மையைச் செய்தது. ஞாயிற்றின் இச்செயலானது, கொன்றை மாலையை அணிந்த, இறைவன் அசைகின்ற எயில்களை அழித்தமையினால் தோன்றிய வெம்மை உடைய நெருப்பினைப் போன்றிருந்தது – என்பதனை,

    ‘அயம்திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
    இயங்கு எயில் எயப் பிறந்த எரிபோல எவ்வாயும்’(150:1-2)
         எனும் அடிகளில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

    சிவன் கங்கையைச் சடையில் சூடியமை

    தலைவன் பொருள் ஈட்டுதற்காகத் தலைவியைப் பிரிந்துள்ளான். தலைவனைப் பிரிந்து ஆற்ற இயலாதவளாய் உள்ள தலைவியைத் தோழி ஆற்றுவிக்கின்றாள். அவ்வாறு ஆற்றுப்படுத்தும்போது, தலைவியின் உடல் பசலை பாய்ந்து நிறம்மாறிக் காணப்படுகின்றது. தலைவியின் நிறம், கங்கையைச் சடையிலே மறைத்துள்ள சிவனது அணி போன்று உள்ளதென்றும், இத்தன்மையளாய தலைவியைத் தலைவன் கைவிடமாட்டான் என்றும் கூறி ஆற்றுவித்ததனை,

    ‘அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்
    பிறங்கு நீர் சடைக்கரந்தான் அணி அன்ன நின் நிறம்
    பசந்து  நீ இனையையாய்  நீத்தலும் நீப்பவோ?(150:8-10)
                 எனும் அடிகளில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும், அவளின் நிறமானது, அழகிய வடிவுடைய ஏற்றினை ஊர்தியாக உடையவனின் ஒளிபொருந்திய அணி நகைத்தலைப் போன்றுள்ளது என்பதனை,
    ‘உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன  நின்
    உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ? (150:13-14)
    எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    சிவன் சண்பகப்பூ அணிந்துள்ளமை

    ஆதிரை நாளினையுடைய சிவபெருமானது திருமார்பு அழகுபெறுமாறு, குளிர்ந்த பெரிய சண்பகப்பூ பருவம் பொய்யாது மலர்வதைப்போல, நம் தலைவரும் சொல்லிச் சென்ற பருவம் வந்தமை கண்டு, தவறாது நம்மை வந்தடைவார் என்று கூறி, தோழி ஆற்றுப்படுத்துகிறாள்.  இதனை,

    அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
    பெருந்தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
    பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் (150:19-21)
    எனும் அடிகள் குறிப்பிடுகின்றன.

    சிவன் தலைக்கோலங்களின் தோற்றம்

    தலைவனைப் பிரிந்த தலைவியின் கூந்தல் காய்ந்து காணப்படுதலைக் கண்ட தோழி, அவளின் கூந்தலானது, பிறைத்திங்களைக் கண்ணியிலே சூடியவனின் பொன்னாற் செய்த தலைக்கோலங்கள் தாழ்ந்து தொங்கினாற்போன்று காணப்படுவதாகக் கூறியதனை,

    புதுத்திங்கட் கண்ணியான் பொன்பூண் ஞான்று அன்ன நின்
    கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ?(150:17-18)
    எனும் அடிகள் கூறுகின்றன.

    சிவன் கல்லால மரநிழலில் சனகாதி முனிவர்கட்கு வேதம் உபதேசித்தமை

    சிவன் தான் கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு வேதம் உபதேசித்தபோது, தன்முன் நீர் நிறைந்த குண்டிகை எடுத்து வைத்திருந்தனன். இந்நிகழ்ச்சி நெய்தல்நிலத் துறைவனைக் குறிப்பிடும்போது, மலர்கள் மலர்ந்த வளைந்த தாழையில் பழங்கள் தொங்குகிற காட்சியைப் போன்று இருந்தது என்பதனை,

    சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
    நீர் மலி கரகம்போலப் பழம்தூங்கு முடத்தாழை (133:3-4)
                                        எனும் அடிகளின்மூலம் சிவன் கல்லால மரநிழலில் வீற்றிருந்து, சனகாதி முனிவர்களுக்கு வேதம் உபதேசித்த புராணச் செய்தியை  நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார்.

    திருமால் பற்றிய புராணக் குறிப்புகள்

    திருமால் குதிரையினுடைய வாயைப் பிளந்தமை

    பொதுவன் ஏறு தழுவும்போது, மிகுந்த வேகத்துடன் தன்னை எதிர்த்துவந்த ஏற்றைச் செவியடியிற் பற்றிக் கொண்டு, அதன் வலிமையை அடக்கித் தழுவுகிறான். இக்காட்சிக்கு, பகைவர் விடுத்த பிடரிமயிர் கொண்ட குதிரையினுடைய வாயைப் பிளந்து கொன்ற திருமாலின் செயலினை,

    ‘மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
    வாய்பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன் கொல்
    மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு’(103:53-55)
    எனும் அடிகளில் உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

    திருமால் பாடலோடு யாழிசையும் கேட்டுப் பள்ளி கொண்டிருந்தமை

    தலைவி தலைவனைச் சந்திக்க இயலாத வண்ணம் காவல் மிகுந்தமையால் ஆற்றாத தலைவி, தலைவனிடத்துச் சென்ற நெஞ்சினை நோக்கி, மனம் அழிந்து கூறுகின்றாள். கரிய கொம்புகளையுடைய புன்னை மரத்தின் கிளைகள்தோறும் மலர்கள் மலரும் காலத்தை எதிர்பார்த்து, அதன் தேனை உண்ண சுரும்புகள் ஆரவாரிக்கின்றன. அதனோடு இயைந்து தும்பிகளும் ஊதுகின்றன. இவையிரண்டும் இயைந்து இம்மென்று ஒலிக்கும். இக்காட்சியானது, பாடலோடு யாழிசையும் கேட்டுப் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைப் போன்றுள்ளதென்றும், எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும் பெரிய கடலும் ஒலியடங்கி, உறக்கம் மேற்கொள்வதைப் போன்றிருந்ததென்றும் கூறுவதனை,

    அரும் பொருள் மரபின் மால்யாழ் கேளாக் கிடந்தான் போல்
    பெருங்கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங்கானல்(123:4-5)
      எனும் அடிகளில் ஆசிரியர் கூறுகின்றார்.

    மாயோன் மல்லர்களை அழித்தமை

    மாயோன், பகையாய மல்லர்களின் வலிமையை அழித்தனன். பகைவர் ஒருசேர வந்து சினந்து போரிட்ட காலத்தே அவர் ஓடும்படியாக அவர்தம் கொல்யானையின் அழகிய மத்தகத்திலே சக்கரப்படையை ஆழ்த்தியதைப்போல, கதிரவன் தான் பரப்பிய ஒளிக்கற்றைகளைத் தன்னிடத்தே வாங்கிக்கொண்டு மேற்றிசையில் மறைந்தான் என்பதை,

    ‘மல்லரை மறம் காய்த்த மலர்த்தண்கார் அகலத்தோன்
    ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்
    கொல் யானை அணிநுதல் அழுத்திய ஆழிபோல (134:1-3)
             எனும் அடிகளில் கூறுகின்றார்.

    திருமாலின் மார்பிடத்தே திருமகள் உறைந்துள்ளமை

    தலைவன் வரைவிடை வைத்துப் பிரிவு நீட்டித்த இடத்து, தலைவி பிரிவை  ஆற்றாதாளாகி, நாணம் கடந்து,  உள்ளம் கலங்கி, கூறத்தகாதன கூறி, அறிவு அழிந்து மொழிந்தனள். தலைவன் வந்து சேர்ந்த அளவில் கலக்கம் ஒழியத் தெளிந்து, அவன் மார்பிடத்தே சேர, ஞாயிற்றின் முன் இருள் கெடுமாறுபோல, அவள் வருத்தம் கெட்டது. இக்காட்சி, திருமாலின் மார்பிடத்தே திருமகள் சேர்ந்ததைப் போன்றிருந்தது. இதனை,
    ‘பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு
    மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர
    ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது – என்
    ஆயிழை உற்ற துயர்’ (145:63-66)
    எனும் அடிகளில் கூறுகின்றார்.

    திருமாலின் திரிவிக்கிரம அவதாரம்

    நெய்தல் நிலத்தலைவனாகிய சேர்ப்பனைக் கூறும்போது, திருமாலுக்கு மூத்தவனான பால்நிற மேனியையுடைய பலராமன் அழகுபெற அணிந்துள்ள நீலநிற ஆடையைப்போல, வெண்திரையை உடைய கடல்நீரை உடைய சேர்ப்பன் என வருணிக்கிறார். பலராமனுடைய தம்பியாகிய திருமாலைக் குறிப்பிடும்போது, திருமால் தன் மூன்றடியால் உலகளந்த திரிவிக்கிரம அவதாரச் செய்தியை,

    ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முதுமுறைப்
    பால் அன்ன மேனியான் அணி பெயத் தைஇய (124:1-2)
                   எனும் அடிகளில் குறிப்பிடுகிறார்.

    தொகுப்புரை

    கலித்தொகைப் பாடல்களைப் பாடிய சங்கப்புலவர்கள், நிகழ்ச்சிகளை – கருத்துகளை விளக்குவதற்கு, தாங்கள் சார்ந்திருந்த சமயக்கடவுளர்கள் பற்றிய தொன்மங்களை உவமைகளாகப் பெரிதும் பயன்படுத்தியுள்ளனர். ‘முல்லைக்கலிப் பாடல்களில் திருமால் பற்றிய தொன்மக்கதைகளும், மகாபாரதக் கதைக்குறிப்புகளும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. இத்தொன்மக் கதைகளின்வழி, புலவர்கள் காட்சிகளைச் சித்திரிப்பதால் அவை, கற்போர் மனதில் சித்திரங்களாகப் பதிந்து அக்கருத்துகள் – நிகழ்ச்சிகள் நன்கு விளங்குகின்றன.

    பயன்பட்ட நூல்கள்:

    1. தொல்காப்பியம், NCBH, Chennai.
    2. கலித்தொகை, NCBH, Chennai.

    *****

    கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்,
    அரசு மேனிலைப்பள்ளி,  மேல்கொட்டாய்,
    கிருஷ்ணகிரி மாவட்டம்.
    மின்னஞ்சல் : tspriya.3@gmail.com
    கைப்பேசி எண் : 9488345391

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 19

    -மேகலா இராமமூர்த்தி 

    வேறுபட்ட சிந்தனைகளும் மாறுபட்ட கொள்கைகளும் கொண்ட மனிதர்களைக் கொண்டிலங்குவதே இப்புவி. அவர்களின் எண்ணங்களும் செயல்களும் மற்றவர்க்கும் அவர்க்கும் நன்மை பயப்பதாய் இருந்தால் அவை கொண்டாடத்தக்கவையே; அன்றேல் அனைவர்க்கும் துன்பமே.

    கெட்டாலும் பிறருக்குப் பயன்படுவர் மேலோர்; வாழ்ந்தாலும் பிறருக்குப் பயனிலார் கீழோர். அத்தகு கீழ்மைக் குணங்கொண்ட கயவரின் இயல்புகளை அறிந்துகொள்ள நாலடியார்ப் பாடல்கள் நமக்கு நற்றுணைசெய்கின்றன. 

    நீர் நிறைந்த பெரிய பொய்கையில் வாழ்ந்தாலும் தவளை தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக்கொள்ளும் ஆற்றலில்லாததாகும்; அது போல், பிழையற்ற சிறப்புடைய மெய்ந்நூல்களைப் பயின்றாலும் அவற்றை உய்த்துணரும் நுட்பஞ் சிறிதுமில்லாதவர் தம்மை அதனால் மேம்படுத்திக்கொள்ளும் மாட்சி பெற்றிலர்.

    செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
    வழும்பறுக்க கில்லாவாந் தேரை – வழும்பில்சீர்
    நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
    தேர்கிற்கும் பெற்றி அரிது.
    (நாலடி – 352)

    அறிவெனும் உரமில்லாதவர்கள் கற்றாலும் எத்துணைதான் அறிவைப் பெற்றாலும் தம்மை மேம்படுத்திக்கொள்ளவதை அறியார் என்பதையே இப்பாடல் விளக்குகின்றது.

    நுண்ணறிவு வாய்ப்பதற்கும் நல்லூழின் துணை வேண்டும்; போகூழின் வயப்பட்டோர்க்கு அதற்கேற்ற அறிவுதான் தோன்றும் என்பார் வள்ளுவர். 

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்.
    (373)

    பிறர்க்கு இரங்கும் நல்லியல்புடைய சான்றோர்க்குச் சிறிதும் பயன்படாமல், தமக்குக்கொடுமை செய்யும் இரக்கமற்றோரைப் பெற்றால் மட்டுமே அவர்க்குப் பயன்பட்டு வேலை செய்வர் கயவர். இளந்தளிரின்மேல் நின்றாலும் பிறர் தம் கையால் தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின் இயல்பினைப் போன்றது கயவரின் இக்குணம் என்கிறது நாலடியார்ப் பாடல் ஒன்று.

    தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா
    உளிநீரார் மாதோ கயவர் – அளிநீராக்
    கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
    இன்னாங்கு செய்வார்ப் பெறின். 
    (நாலடி –  355)

    கயவரை வேலைவாங்கும் வழிமுறையை,

    ”சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்”
    (1078) என்பார் வள்ளுவர் சினந்து.

    இன்னொரு பாடலிலும் கயவரின் குணத்தைக் கவினுறக் காட்சிப்படுத்துகின்றது நாலடி.

    ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
    மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் – கோட்டை
    வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி
    செயிர்வேழ மாகுத லின்று.  
    (நாலடி – 358)

    பொருளின்மை முதலிய காரணங்களால் தளர்வுற்ற காலத்திலும் உயர்குடியிற் பிறந்த சான்றோர் செய்யும் நற்செயல்களைச் செல்வமுள்ள காலத்திலும் கயவர்கள் செய்யமாட்டார்கள். ஒளிமிகு கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண்கட்டினாலும் அது போர்ச்சினமுடைய வேழமாய் மாறுவதில்லை.

    கீழ்மக்களுக்கு எத்துணைதான் நன்னிலைமை வந்தாலும், நன்மொழிகளால் பிறர் அவர்தமைப் புகழ்ந்தாலும் அவர்தம் குணத்தில் மாறுபாடு வருவதில்லை என்பதையே மேற்கண்ட பாடல் தெளிவுறுத்துகின்றது.

    பன்னெறி என்ற தலைப்பில் பயன்மிகு நன்னெறிக் கருத்துக்கள் பலவற்றைப் பாங்குறப் பேசுகின்றது நாலடி. அவற்றிலிருந்து சிலவற்றை அறிந்துவருவோம்! 

    குடும்ப விளக்காய் அகத்துக்கு ஒளியூட்டும் இல்லாள் இல்லாத இல்லம் சிறக்காது என்று மனையாளின் மாண்பைப் பேசுகின்றது நாலடியார். 

    மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
    இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம் – விழைதக்க
    மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
    காண்டற் கரியதோர் காடு
    .  (நாலடி – 361)
     

    மேகங்கள் தவழும் உயர்ந்த மாளிகையாய், சிறப்பமைந்த பாதுகாப்புடையதாய், மணிகளால் இழைக்கப்பட்ட விளக்குகள் அங்கங்கு இருந்து ஒளிவிடினும் என்ன பயன்? மாட்சிமை வாய்ந்த விரும்பத்தக்க இல்லக் கிழத்தி இல்லாதவனது வீடு கண்கொண்டு பார்த்தற்கியலாததொரு கொடிய காடே ஆகும்.

    எவை எவை இல்லையானால் மானுடம் பாழாகும் என்று பட்டியலிட வந்த ஔவை,

    ”….பாழே
    மடக்கொடி யில்லா மனை”
    என்றுரைத்து இல்வாழ்க்கைக்கு ’நல்வழி’ காட்டுவார்.
     

    வான்புகழ் வள்ளுவரும், ’வாழ்க்கைத் துணைநலம்’ அதிகாரத்தில், ’இல்லதென் இல்லவள் மாண்பானால்’ என்று வினவி, ’மங்கலம் என்ப மனைமாட்சி’ என்று நன்மொழி நவின்றிருப்பது நாமறிந்ததே.

    மனித இரசனை ஆளுக்கு ஆள் மாறுபடக்கூடியது. அந்த இரசனையின் அடிப்படையில் மனிதர்களைத் தரம் பிரிக்கின்றது நாலடியார். 

    நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடைத்தாய்க் கழிப்பர் தலையாய அறிவினர்; நல்ல பொருள்களைத் துய்த்துக் காலங்கழிப்பர் இடைத்தரத்தினர்; இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெறமுடியவில்லையே என்னும் வெறுப்பினால் இரவிலும் துயில்கொள்ளாது வருந்துவர் கடைத்தரத்தினராகிய கீழ்மக்கள்.

    கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை
    துவ்வாக் கழிப்பர் இடைகள் கடைகள்
    இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
    முனிவினாற் கண்பா டிலர்.  
    (நாலடி – 366)

    கம்பராமாயணத்தில்கூட மனிதர்களின் இரசனையின் அடிப்படையில் அவர்களைக் கடைத்தரத்தினர் முதலாய் முதல்தரத்தினர் ஈறாய்க் கம்பர் வரிசைப்படுத்தியிருப்பதை நாம் இங்கே இணைத்துப் பார்க்கலாம்.

    பொருந்திய மகளிரோடு வதுவையில்
       பொருந்து வாரும்,
    பருந்தொடு நிழல் சென்றன்ன
       இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
    மருந்தினும் இனிய கேள்வி
       செவி உற மாந்துவாரும்,
    விருந்தினர் முகம் கண்டு, அன்ன
       விழா அணி விரும்புவாரும்… (நாட்டுப்படலம் -16)

    ’தாயைப் போலப் பிள்ளை’ என்று நம்மிடம் ஒரு பழமொழி உண்டு.   அதுபோலவே, தந்தையரோடு பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசும் வழக்கமும் நமதே!

    நல்ல செந்நெற்கதிர்களால் தோன்றிய செழித்த விதைகள் மீண்டும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே!, தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும் என்று கிளக்கின்றது கீழ்வரும் பாடல். 

    செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
    செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
    வயனிறையக் காய்க்கும் வளவய லூர!
    மகனறிவு தந்தை யறிவு.
    (நாலடி – 367)

    நல்ல நெல் விதையினால் நல்ல நெல் (மீண்டும்) விளைவது போல, தந்தையினுடைய நல்லறிவினால் மகனுக்கும் நல்லறிவு உண்டாகும்.

    ”தந்தையர் ஒப்பர் மக்கள்” என்று தொல்காப்பியமும் இதே கருத்தைச் சொல்லியிருக்கக் காண்கிறோம்.  பிள்ளைகள் நல்லொழுக்கமும் நற்பண்பும் மிக்கோராய்த் திகழ, அத்தகு நற்குணங்கள் தாய் தந்தையரிடம் இருக்கவேண்டியதன் அவசியத்தை இந்தப் பாடல்களும் பழமொழிகளும் நுட்பமாய் உணர்த்துவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

     [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்  பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share