Blog

  • வ.சுப. மாணிக்கனாரின் கல்விச் சிந்தனைகள்

    -முனைவர். இரா. மூர்த்தி

    தொல்காப்பியர் காலம் முதல் இக்காலம் வரை காலந்தோறும் கல்வியில் பல்வேறு மாறுதல்கள்  நடந்து கொண்டிருக்கிறது. தனியொரு மனிதன் தனது சிந்தனைகள் அனைத்தும் ஒரு பொருளின் மீதும், ஒரு செயல்பாட்டின் மீதும் செலுத்தும்போது அவனுக்குள் பல புரிதல்கள் எழத்தொடங்குகிறது. அப்புரிதல்கள் அதே நிலையிலிருக்காமல் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நகரச் செய்கிறது. இச்செயல்பாடுகளுக்குத் தேவையாக இருப்பது அறிவு. அவ்வறிவே பின்னாளில் கல்வியாக வளர்கிறது. அக்கல்வியே பின்னாளில் தனித்து இயங்குவதோடு தன்னைத் தனிநிலையில் அடையாளப்படுத்தவும் செய்கிறது. தனியொரு மனிதனின் அறிவுப்போக்கு எவ்வாறு அடுத்தடுத்து மாற்றம் கொள்கிறதோ அதைப்போன்றுதான், கல்வியின் தரமும் அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே செல்லும். இக்கல்வி மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் சிந்தனையில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்தின.

    ஏனென்றால் தொடக்ககாலத் தமிழர்கள் மத்தியில் அகத்திணைக் கல்வி, பாலியற்கல்வி, பின்னைய காலகட்டத்தில் தடைப்பட்டு வெறும் அறிவுக்கல்வியாக தமிழ்ச்சூழலில் உலாவியது; உலவுகிறது. இதனால் மொழியின், பண்பாட்டின் மரபுகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் செம்மொழிச் சிறப்பு பெற்ற தமிழ்மொழிக்குள் மதம் சார்ந்த மொழிகளும் உட்புகுத்தப்பட்டன. அதுகுறித்து மூதறிஞர் கூறும் கல்விச் சிந்தனைகளை தொகுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    கல்வி – விளக்கம்

    கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடரும் ஒரு நடைமுறையாகும். இக்கல்வி இறந்த காலத்தைப் புதுமைப்படுத்துகிறது. நிகழ்காலத்தைப் பாதுகாக்கிறது. எதிர்காலத்தில் மனிதனின் முன்னேற்றத்திற்கு வழிகோலுகிறது. அக்கல்வி வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டுவது. இதனை வள்ளுவர்,

    “யாதானும் நாடாமல் ஊராமல் என் ஒருவன்
    சாந்துணையும் கல்லாத வாறு”
    (குறள்:397)

    என்று கூறுகிறார். அத்தகைய சிந்தனைப்போக்கு இன்றைய சூழலில் தளர்ந்து வெறும் போதனைக் கல்வியாகவும், சான்றிதழ் பெறும் பட்டமாகவும், மதிப்பெண் கல்வியாகவும், உயிர்களைக் காவு வாங்கும் உயிர்கல்வியாகவும் மாறிவந்துள்ளது. இதனால் மக்களிடத்தில் சமூகத்தின் மீதான ஈர்ப்புப் போக்கு மாறத்தொடங்கியுள்ளது. இக்கல்வி குறித்து ஹெர்பார்ட் அவர்கள் கூறும்போது, கல்வி என்பது கடைநிலை உட்கிடைக்கைகளை உயரிய நுண்ணறிவால் வெற்றிக் கொள்வதே என்றும், “பிரவுன் என்பவர் கல்வி என்பது நாம் அறிந்து வேண்டுமென்றே கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தும் ஒரு நடவடிக்கை. அதன் மூலம் தனி மனித நடத்தையிலே மாற்றங்களும் தனித்தவர் வாயிலாகச் சமூகத்தில் மாற்றங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன என்றும், கல்வி என்பது பிறர் அறிவுத் தொகுதி, இறந்தகால நிகழ் காலத்துக் கருத்துத் தொகுதி, எள்ளும் பஞ்சும் போல்வது” என்று வ.சுப.மாணிக்கனாரும் கல்விக்கு விளக்கங்கள் கூறுகின்றனர். 

    அகத்திணைக் கல்வி

    தமிழ்ச் சமூகத்தின் தொடக்ககால வாழ்க்கை ஆண் பெண் இணைந்த காதல் வாழ்க்கையாகவே தொடங்கியது. அகத்தை உள்ளம், காதல், மனம், ஞானம், பாவம், உடல், வீடு, நிலம், உயிர், ஆன்மா என்று உடலோடும் உயிரோடும் உள்ளத்தோடும் தொடர்பு படுத்தி, நிலத்துக்கான (நிலம் – பெண்), உயிர் உருவாக்குதல் – பெண் என்ற உருவாக்கச் சூழலில் காதலாக வெளிக்காட்டுகிறது.

    அக்காதல் உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கு நல்லது. ஊருக்கு உலகத்துக்கே நல்லது. அந்நல்ல காதல் எது? காதல் என்பது உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசி, அப்பசி தீர்க்கும் உணவு நெறி எது? அஃறிணையுயிர்களின் காதலாவது கல்லாக் காமம், இயற்கை வீறு. மொழி பேசும் மக்களினத்தின் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கிக் கல்வியில் வளர்வது அவ்வளர்ச்சிக் கல்வியே அகத்திணைக் கல்வியாகும் என்கிறார் மூதறிஞர்.

    அகத்தை ‘அகம்’ என்று கூறும் முன்னர் அதன் உட்பிரிமாணங்களை விளக்கும்போது உள்ளம் என்றும் குடும்பத்தோடு இணையும்போது வீடு, இல், மனை என்று பொருளிடுகிறது என்கிறார். மேற்சுட்டல்களைத் தெளிவுறுத்தும்போது களவு கற்பு வாழ்வாகக் காதல் இலக்கியமாக அகத்திணை வெளிப்படுகிறது. இக்காதல் இன்பத்துப் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல் அடிப்படையுட் பேரடிப்படை, உரிமையுள் எல்லார்க்கும் உரியது, நட்பினுள் இருபாலரையும் இணைப்பது, கல்வியுள் கசடறக் கற்க வேண்டுவது, நாணினுள் நனி நாணுடையது. ஒழுக்கத்துள் விழுமியது. இத்தகைய காதலை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ளவேண்டும். அதன் வீறுகளையும் மாறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அகத்திணை மாந்தர்கள் உய்ப்பித்த அகத்திணை (காதல்) கல்வியை முழுவதும் உய்த்துணர்வது இன்பம் பயக்கும் என்றக் கருத்தினையும் வெளிக்காட்டுகிறார்.

    அகத்திணையறிவு பெண்ணுக்கும் ஆணுக்கும் இன்றியமையாத கல்வியாகும். நம் தமிழ் முன்னோர் அகக்கல்வியைச் செம்மையாகப் பெற்றிருந்தனர். அதனால் அன்னவர் இல்லற வாழ்வு பூசலின்றி இயங்கியது. அகக் கல்வியும் தமிழ்ச் சமுதாயத்தில் நல்லுரம் பெற்றிருந்தது. நல்வளம் தந்தது. இத்தகு கல்வி சங்கப் பிற்காலத்து குறைந்தமையால் தமிழ் நாட்டில் பல்லூறுகள் ஏற்பட்டன. இதனால் அகக்கல்விப் பரவலால் படிப்படியாக குறையத் தொடங்கின. அகத்திணையின் தோற்றமும் நோக்கமும் அமைப்பும் எல்லாம் விளங்காது, விளக்குவாரின்றி மறைக்கப்பட்டன. விளக்க முற்படுவாரும் சமயக் கல்வியாகவும், வீடுபேற்றிற்கு உரிய இலக்கியமாகவும் திரித்து எழுதினர். கற்பித்தனர். அதனால் அகத்திணை தன் உண்மையை இழந்து, மாறான பொய்யேற்றம் கொண்டது. தமிழினமும் உலகினமும் காதற் துறையில் ஆண் பெண் இருவருக்குமிடையில் தாழ்வு மனப்பாண்மை இன்றிப் புத்துயிரும் புது வாழ்வும் பெறவேண்டுமேல் தமிழகச் சூழலில் அகத்திணைக் கல்வியைப் பரப்ப வேண்டும். பொய்களைந்து மெய்ம்மைகளைப் பரப்ப வேண்டும். இந்நோக்கத்தால் ஆண் பெண் இருவரிடையே கொலை, உயிரிழப்பு குறைந்து சாதி, வேத, பாகுபாடின்றி தமிழ்ச் சமூகத்தை வெளிக்கொணர முடியும் என்ற ஆழ்ந்துரைப்பதை இவரது படைப்புகள் வாயிலாகக் காணமுடிகிறது.

    அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர். எடுத்த உடம்பை மதிப்பர். கொண்ட மணத்தை மதிப்பர். ஒருவருக்கொருவர் தம் காம நாடிகளைப் புரிவர். காமக்குறைவு கடமைக் குறைவாம் என்று உணர்வர். வித்தில்லாக் காமப் பழத்தை உண்பர். மெய்யின்பத்தை உயிரின்பமாகப் போற்றி ஒழுகுவர். அகவாழ்க்கை அன்பு வாழ்க்கையாக எண்ணி இல்வாழ்க்கை சிறக்க செய்திடுவர். இத்தகு அகக்கல்வியினால் ஒரு குடும்பானது, ஆண்பாலின் பெருமிதத்தையும், உரனையும் மனைவி மதிப்பதும், பெண்பாலின் அருமையையும் நிறைவையும் நாணத்தையும் கணவன் மதிப்பதும் ஆகிய கல்வியை அகத்தாற் பெறலாம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளார். வாழ்க்கைக்கு அகக் கல்வியின் தேவை பயன்படுவதுபோல் குமரப்பருவத்தினரிடையே பாலியற்கல்வி குறித்த சிந்தனைகள் எழவேண்டும் என்கிறார்.

    பாலியற் கல்வி

    அகத்திணை முழுக்க முழுக்க பெண்ணியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அதனை பெண்ணிலக்கியம் என்று கூறலாம். ஏனென்றால் சங்க காலத்தில் பெண் மாந்தர்களே தொல்காப்பியர் கூறும் வாயில் காப்பாளர்களாக இனங்காணப்பட்டு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளனர். அதனால் பாலியல் கல்வியே முதன்மையாகக் கொள்ளப்பட்டது என்கிறார் மூதறிஞர். இக்காமம் குறித்துக் கூறும்போது, காமம் என்பது பருவவுணர்ச்சி, மெல்லிய உடலுணர்ச்சி, இவ்வுணர்ச்சி பெருகி ஊறுங்காலம் இளமை எனவும், குறைந்து சிறுகுங்கால் முதுமை எனவும் படும். ஆதலின் குறைவு தொடங்குவதற்கு முன்னுள்ள இளமையில் பாலின்பம் தூய்ப்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும் என்கிறார்.

    அகத்திணைக் கல்வி குடும்பமென்ற கருத்தில் இட்டுச்செல்லும் தன்மையில், பாலியற் கல்வி குறித்துக் கூறும்போது பாலியற் கல்வி வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது, இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறார்.  சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணார். ஆகவே, அகக்கல்வியும் பாலியற் கல்வியும் கற்கும் இளைஞர், இளைஞியர் இன்றியமையாத உள்ளப் பண்புகளை கற்பாகவும், இன்றியமையாத உடல் வினையைக் காமம் என்றும் தெளிவாக விளங்கிக் கொள்வர். இதனால் ஒருவர் காமத்தை ஏனையவர் மதித்து ஒழுகுவர். காமநிறைவு மனநிறைவாம் என்று இன்பச்செய்கையில் மீக்கொள்வர், ஞாலத்தைக் காதலுக்குப் பயன்கொண்டு தம் காதலால் ஞாலத்தை வாழ்விக்கச் செய்வர் என்று பாலியல் கல்வியின் உளப்பாங்கை உடல் ரீதியாக வெளிக்காட்டி வாழ்க்கைக் கல்வியிலிருந்து பிரித்தாளுவதைக் உணரமுடிகிறது.

    அறிவுக் கல்வி

    அறிவுக் கல்வி என்பது கற்கக் கற்க பெருகக் கூடியது. வருங்காலத்திற்கான முன்னுணர்வு. தொடர் வளர்ச்சியை ஈட்டக் கூடியது. இது குறித்து வள்ளுவர் கூறும் கருத்தானது,

    “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு” (
    குறள்:396)

    என்கிறார். இதற்கு உரைகண்ட மூதறிஞர் மணற்கேணியகத்து நீர் என்ற ஒரு பொருள் உண்டு. முன்னரே அமைந்து கிடக்கும் அந்நீர் தோண்டுதோறும் புறப்படுகின்றது. அவ்வளவிற்கேயொழியத் தோண்டுகை தண்ணீரைப் படைப்பதின்று. இவ்வுண்மை கல்வியறிவுகளுக்கும் பொருந்தும் என்கிறார். புதிதென ஓரியற்கையைப் படைக்கும் ஆற்றல் மக்கட்கு இல்லை. படைப்புற்றுக் கிடக்கும் ஞாலப் பல்லியற்கைகைக் கண்டு தமதாக்கிக் கொள்ளும் செய்வினையே அன்னோர்க்கு உரித்ததாக அமைகிறது. இக்கல்வி ஒரு தோண்டு வினை. அச்சொல்லே தன் செயலைக் காட்டி நிற்பது. அவ்வினை முன் இல்லாத அறிவை ஒருவர்க்கு உண்டு செய்யும் தன்மையுடையது என உரைகாணுகிறார். இத்தகைய அறிவை,

    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு”
    (குறள்:423)

    என்று அறிவின் செயல்பாட்டைச் சூழ்நிலைக் கல்வியோடு மனிதனை ஒப்பிட்டு மொழிகிறார். கற்ற அறிவை, கல்வியை ஒருவரின் மீது எதிர்நோக்குப் பாய்ச்ச வேண்டும் என்றும் கூறுகிறார். கற்க கல்வியை ஒருவருக்கு பாய்ச்சும்போது அவர் எய்திய இறைத் தன்மையைக் கணித்தற்கு வேறு அளவுகோல் வேண்டாம். அவர்தம் அறிவே அமையும் என்று அறிவின் மையத்தை வள்ளுவர் கூறும் கருத்துகள் வாயிலாக வெளிக்கொணர்கிறார். கல்வியில் அகத்திணைக் கல்வி, பாலியற் கல்வி, அறிவுக் கல்வியின் வினைப்பாடுகள் ஒரு புறம் இருப்பினும், இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழ்க் கல்வி, மொழிக்கல்வியின் பின்னிலைப்போக்கு எத்தகைய மாற்றத்தை சந்தித்து வந்துள்ளது என்பதையும் வெளிக்காட்டியுள்ளார்.

    தமிழகத்தில் தாய்மொழிக்கல்வியின் பின்னிலைப் போக்கு

    மொழி ஒரு மனிதனின் அடையாளத்தை, பண்பாட்டைத் தனித்து வெளிக்காட்டக் கூடியது. அவ்வகையில் வ.சுப. மாணிக்கனார் தமிழ் மொழியின்மீது கொண்ட பற்றினால் தமிழகத்தில் மழலையர் ஆங்கிலப் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்றவேண்டும். தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்று மொழி தமிழாதல் வேண்டும். தமிழகத்தில் மக்கள் மத்தியில் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் பெயரில் தமிழுக்கு ஊறு விளைவிக்காமல் தடுக்க வேண்டுவதுடன், தமிழைப் பயிற்று மொழியாகத் தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற கொள்கையைத் தமது கட்டுரைகள், நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்தவர். தனித்தமிழ் இயக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லா நிலைகளிலும் எங்குந் தமிழ் வளர ஓய்வென்பதறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர்.

    அத்தகையோர் எண்ணத்தில் இந்திய நாட்டின் மீதும் அதிக ஈடுபாடு எழுந்தது. நம் இந்தியப் பெருநாடு ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையறுத்து உரிமைப் பணிபூண்டு நிறைவடைந்த நிலையில், ‘ஆங்கிலேயர் இந்நாட்டு இயல்பு அறிகிலர், மக்கள் உள்ளம் தெரிந்திலர் – தெரியும் நோக்கம் இலர்-  கால்கொள்ளா வேற்றாட்சியால் நம் பண்டைப் பண்பும் மொழிகளும் கலைகளும் மக்கள்போல் நலிவுற்றன. தன்னாட்சி பெறின் எல்லா வளமும் பெருக்குவோம் என்றெல்லாம் நெஞ்சறியப் பறைசாற்றி உரிமைப்போர் தொடுத்தோம். வெற்றி கண்டோம். வெற்றி கண்டபின்பு அதன் நிலை என்னவாயிற்று என்று மக்கள் வெளிக்காட்டினர். மக்களாய்ப் பிறந்தாரெல்லாம் ‘கற்க’ வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறுகிறார். ஆனால் இன்னார் கற்றற்கு உரியர், இன்னார் உரியல்லர் என்று அறவே ஒதுக்கியது சில குடிகள், சில மக்கள், ‘எல்லோரும் கற்க, பெண்டிரும் கற்க என்று கூறிய வள்ளுவரின் வாக்கு விதந்து காணப்பட்டது. பெண்கள் கல்வி கற்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட இவரது காலத்தில் அடிமைகளுக்கும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது என்று தனது நூல் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

    பள்ளி கல்லூரிகளில் மாணக்கர்களுக்குப் பொதுஅறிவுக் கல்வியே அதிகம் கற்பிக்கப்பட்டது; குறியொன்றும் இல்லாமல், எல்லார்க்கும் எல்லா நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறுதிவரை காட்டும் கல்விதான் கற்பிக்கப்பட்டது. ஒரு துறைக் கல்வியைக் கற்கும் மாணாக்கர்கள் வளரவில்லை. இருப்பினும், மக்கள் அனைவரும் பொதுஅறிவினைப் பெற்றுப் பெற்று ஒழிவதால், நாடு வினைச் சிறப்பும் விளைவுப் பெருக்கும் உறாது. இந்தியப் நாட்டின் கீழ்மைக்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது. சில ஆண்டுகள் பொதுஅறிவு பெற்றாலும் பல ஆண்டுகள் துறையறிவு வழங்க வேண்டும். வழங்கும் தொழில் கூடங்களும் பெருக வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.

    மொழிக்கல்வி ஒரு காலத்தில் முறையாக கற்பிக்கப்பட்டதா என்றால் இல்லை. ஆசிரியர் மாணவரிடையே தொடர் ஒப்புவித்தலாகவே இருந்து வந்துள்ளது. குறள் ஒப்புவித்தல் மற்றும் உரைகள் எழுதும்போதும், குறள் குறளாக ஒப்பித்துச் சேறல் வள்ளுவக் கொலையாகும் என்று பிறிதொருவன் அஞ்சி நடுங்குவதும், யாரொருவர் மனத்தையும் புண்ணாக்காமல் அனைத்தும் என்நோக்கம் என்ற குறள் ஆணைப்படி பிறர்க்கு உரைக்கின்றனரோ அவரே உரை செய்ய வேண்டும். அவனே மொழியின் மீது நோக்கம் உடையவன் என்கிறார்.

    அதே நேரத்தில் மாணாக்கர்களின் நிலையும் ஆசிரியர் வாயிலாக தினமும் பாடம் கேட்கும் முறையே உருவாகியுள்ளது. அதற்குத் தகுந்தாற் போன்றே கல்வித் திட்டமும் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது அதன் தன்மை மாறவேண்டும். மாணாக்கர்கள் தேர்வு பித்தினால் ஆளுவதால் அறிவுத் தெய்வம் பெருகுகிறது. தேர்வுப் பூதம் காணீர்! நடைமுறை நோக்குழி, மாணக்கரைத் தேர்வுக்குரியோர் என்றும், ஆசிரியரைத் தேர்வு செய்வோர் என்றும் கல்வி வகுப்பாரை தேர்வு வகுப்பார் என்றும், கல்விக் களங்களைத் தேர்வுக் களங்கள் என்றும், கலைமகளைத் தேர்வு மகள் என்றும் அழைக்கும் மரபு இன்றைக்கு மக்களிடத்தில் பெருக்கெடுத்து வந்துள்ளது. மாணாக்கர்கள் மனத்தில் தேர்வு மூச்சுதான் கல்வி மூச்சாக ஓடுகிறது. இதனால் மாணாக்கர்களின் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. மாணாக்கர்களும் மணனம் என்னும் தன்முனைப்பில் தனது இன்ப துன்பங்கள் அனைத்தையும் தேர்வின் மீதே செலுத்துகின்றனர். அந்நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் கல்வித் திட்டத்தை தொழில் நோக்கில் செயல்படுத்தி வந்துள்ளனர்.

    முடிவுகள்

    தமிழகச் சூழலில் கல்வியானது அகத்திணைக் கல்வியாக தொடக்கம் கொண்ட தமிழ்க்கல்வி, தமிழ்நாடு, பின்னைய காலத்தில் அதுவே பாலியற்கல்வியாகவும் வளரவில்லை, அகக்கல்வியாகவும் தமிழகச் சூழலில் வளரவில்லை. அதன் மூலம் மறைக்கப்பட்டு மாணாக்கர்கள் மத்தியில் வெறும் அறிவுக் கல்வியாகவும், தேர்வுக்கல்வியாகவும் வளர்ந்து நிற்கிறது. இதில் மொழிக்கல்விக்கான தரமும் வெறும் தொடக்க கல்வி நிலையிலே செயல்படுத்தப்படுகிறது. அதுவும் முதல் நிலையில் இல்லாமல் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையாக உள்ளது. மாணாக்கர்களும் ஆய்வாளர்களும் ஆங்கிலக் கல்வியின் மீது வேலை வாய்ப்புப்பெற வேண்டும் என்ற நோக்கில் அடுத்த கட்ட நிலைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் மொழிக்கல்வியின் மோகம் மக்கள் மத்தியில் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகச் சூழலில் மூதறிஞர் கூறியதுபோன்று அகக்கல்விக்கும், மொழிக்கல்விக்கும் ஒருதுறை சார்ந்த கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இதனால் மொழியில் மூலம் தொடர்ந்து நிலைநாட்டப்படும்.

    பார்வை நூல்கள்

    1. வ.சுப.மாணிக்கம் – தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – டிசம்பர்-2012
    2. வ.சுப.மாணிக்கம் – கம்பர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1990.
    3. வ.சுப.மாணிக்கம் – மாணிக்கக் குறள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1991.
    4. இ.பா.வேணுகோபால் – கல்வியியல் புதுமைகள். சாரதா பதிப்பகம், 2013, ஜீவா 4 -வது தளம், ஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ், மோகனூர் ரோடு, நாமக்கல் – 637001.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
    கோயம்புத்தூர் – 641020.
    E-Mail: ramvini2009@gmail.com
    செல் , 9751104241

    Share
  • சேட்படுத்துதல் – துறைக்குறிப்புவழிப் பாடற்பொருண்மை

    -சா. மங்களேஸ்வரி

    தலைமக்களின் காதல் ஒழுக்கம் புறத்தார்க்குப் புலப்பட்டு அலராகுமென அஞ்சிய தோழி, தலைமகனைத் தலைவியிடமிருந்து சேய்மைப்படுத்துவாள். இந்நிகழ்வைச் சேட்படுத்துதல் என இலக்கண நூலார் குறிப்பிடுவர். இச்சேட்படுத்துதல் தலைவிமீது தலைவன் கொண்டுள்ள காதற்பிணைப்பையும், தலைவியின் காதல் ஆழத்தையும், தோழி அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையும். அந்நிலையில் தோழி தலைவனுக்குத் தன் தோழியின் அருமையை எடுத்துரைத்தும், பெருமையைச் சுட்டியும், பேதைமையுடையாள் என விளம்பியும் தலைவியின் இன்றியமையாமையைத் தலைவனுக்குப் புலப்படுத்துவாள். இந்நிகழ்வு, தலைவனின் காதலுறுதியை அறிந்து கொள்வதற்கும், தலைவியின்மேல் உள்ள காதலை அதிகப்படுத்தி, வரைவு முடுக்குவதற்காகவும் தோழி மேற்கொள்ளும் தந்திர உத்தி என்றே எண்ண இடமளிக்கிறது.

    இலக்கண – உரையாசிரியர்கள்வழி சேட்படுத்துதல்

    இச்சேட்படுத்துதலைத் தொல்காப்பியர்,

    “நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி”1
    “இழந்து குறையுற்ற கிழவனைத் தோழி
    நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்”2 எனவும் கூறுவார் களவியல் நூற்பாவிற்கு(99) நச்சினார்க்கினியர் “தோழி இவ்விடத்துக் காவலார் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலிற் றனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து”3 எனவுரை பகர்வார். பொருளியல் நூற்பாவிற்கு(233) இளம்பூரணர்; “இரந்து குறையுற்றி தலைமகனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றி….”4 எனவுரை கூறுவர். தமிழ்நெறி விளக்க ஆசிரியர். பகற்குறியிலேயே. “சேட்ப நிறுத்தலுஞ்”5 நிகழும் என்கிறார்.

    துறைக்குறிப்பு வகைப்பாடு

    சேட்படுத்துதல் நிகழ்வில் ஏழு பாடல்கள் (நற் -45, 75, 80, 301, 377: ஐங்குறு -91: அகநா -58:) அமைந்துள்ளன. இப்பாடல்களின் துறைக்குறிப்புகளின் பொருண்மை கொண்டு ஆராயின், தொல்காப்பியர் குறிப்பிடும் பின்னிற்றலுக்கான எட்டுச் சூழல்களும், மற்ற இலக்கண நூல்கள் சேட்படுத்துதலின் சூழலுக்கான எட்டுச் சூழல்களுடன் பெரும்பான்மை ஒத்துக் காணப்படுகின்றன.  எனினும் நான்கு துறைகளிலே, சங்க இலக்கியப் பாடல்களின் பொருண்மைகள் அமைந்துள்ளன. அவ்வகையில் தோழி பெருமையிற் பெயர்த்தல் துறையில் “குறை வேண்டிய தலைமகனைச் சேட்படுத்தது”6 எனவும், தலைவி அருமை சாற்றல் துறையில் சேட்படுத்தப்பட்ட தலைவன் தன் ஆற்றாமையைத் தோழி கேட்குமாறு கூறும் துறைக்குறிப்பும்(நற்-75), தலைவன் அன்பு மிகுதியால் கொண்ட ஆற்றாமை கண்டு தோழி கூறும் நற் -301ஆம் பாடலின் துறைக்குறிப்பும் வகைப்படுத்தப்படுகிறது.

    பேதைமையூட்டல் துறைக்கு “…. தோழி இவள் இளையள், விளைவு இலள் எனச் சேட்படுத்தது”8 எனவும், தையல் மறுத்தல் துறையில் அகநா-58ஆம் பாடலின் துறைக்குறிப்பும், ஆற்றாமைப் பொருண்மை எல்லாப் பாடல்களிலும் புலப்படுகின்றன. எனினும் சேட்படுத்துதலுக்கான சூழலாக எங்கும் சுட்டப்படவில்லை. ஆயினும், ஆற்றாமைத் துறையில் தலைவனின் ஆற்றாமையைப் புலப்படுத்தும் நற்-80ஆம் பாடலின் துறைக்குறிப்பும், தலைவியின் ஆற்றாமையைத் தலைவன் புலப்படுத்தும் நற்-377ஆம் பாடலின் துறைக்குறிப்பும் அமைவதை வகைப்படுத்தமுடிகிறது.

    சேட்படுத்துதலில் தோழி

    சேட்படுத்தல் பொருண்மையில் சங்க இலக்கியத்தில் தோழி கூற்றில் மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்களில் நற்றிணை 301ஆம் பாடல் தோழி தன்னுள்ளே கூறிக் கொள்வதாக அமைந்துள்ளது. இப்பாடல்கள் துறைக்குறிப்புகளின் பொருண்மை கொண்டு ஆராயின்தலைமக்களிடையே குலவேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் இணைய வேண்டுமென எண்ணுதல், தலைவியின் இளமைத் தன்மை மாறாதவள் ஆதலால், நின்னுணர்வை உணராள் என்றுரைத்தல், தலைவனின் காதலையும், தாயின் பேரன்பையும் ஒருங்கே பெற்ற தலைவியின் காதல் நிலையில் தோழி தடுமாறுதல், என்பன பின்னணிச் சூழல்களாக அமைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே துறையாசிரியர்கள் துறைக்குறிப்பை வரைந்திருப்பர். இதனடிப்படையில் ‘பெருமையிற் பெயர்த்தல் (குலமுறைகூறி மறுத்தல்) (நற்-45), பேதைமையூட்டல் (ஐங்குறு -91), தலைவியின் அருமை உள்ளல் (நற் -301)’ போன்ற துறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    பெருமையிற் பெயர்த்தல் (குலமுறை கூறி மறுத்தல்)

    தலைமக்களின் காதலை உணர்ந்த தோழி, அவர்களின் காதலின் புரிதல் தன்மையைப் புலப்படுத்துவதற்காகச் சிறிது காலம் சேய்மைப்படுத்துவாள். இச்சேய்மைப்படுத்துதலுக்கான காரணங்களில் ஒன்றாகப் ‘பெருமைதனை எடுத்து மொழிதலை’ மேற்கொள்வாள். இப்பெருமையிற் பெயர்த்தல் தலைவியின் பெருமைதனைத் தலைவனுக்கும், தலைவனின் பெருமைதனைத் தலைவனுக்கும் உணர்த்தி, அதனால் நினக்கு ஒப்பானவள் எம் தலைவி அல்லள் எனத் தோழி மொழிவது இத்துறையாகும். இத்துறையில், தலைவனின் பெருமையைப் புலப்படுத்துவதாக ஒரு பாடல்(நற் -45) அமைந்துள்ளது.

    மீனெற் பரதவர் மகள்

    இத்துறையிலமைந்த ‘குறை வேண்டிய தலைமகனைச் சேட்படுத்தியது’ என்னும் துறைக்குறிப்பிற்கு ‘இவளே கானல் கண்ணிய காமர் சிறுகுடி’  எனத் தொடங்கும் நற் -45ஆம் பாடல் அமைகிறது. இப்பாடல், ‘எம் தலைவி பரதவ மகள்; நீயோ மன்னனின் மகன். நும்மால் உண்டாகும் பெருமைக்கு யாங்கள் தகுதியுடையேம் அல்லேம். ஆதலின் நீவிர் செல்வீராக’ எனத் தோழி தலைமகனைச் சேட்படுத்தும் பொருண்மையில் அமைந்துள்ளது.

    ‘மீனெறி பரதவர் மகளே நீயே
    நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
    கடுந்தேர்ச் செல்வர் காதல் மகனே’ (நற் -45:3-5)

    ‘பெருநீர் விளையுள் எம்சிறுநல் வாழ்க்கை
    நும்மொடு புரைவதோ அன்றே
    எம்ம னோரின் செம்மலு முடைத்தே’  (நற் -45:9-11)

    என்ற செய்யுளடிகள், தலைவனின் பெருமையினைச் சுட்டுவதாக அமைந்திடினும், இகழ்ச்சிக்குறிப்பாக, தலைவன் சிறிது காலம் தலைவியை மறந்திருந்ததால் உண்டான தோழியின் சினமொழிகளாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. இதனை “அவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு இவர்களைச் சின்னாள் மறந்திருத்தலானே அவனை இகழ்ச்சிக் குறிப்பாற் தலைவனாகக் கூறினாளெனவுமாம்”9 என விளக்குவர் பொ.வே.சோமசுந்தரனார். இவர் இப்பாடலின் 3,4 அடிகளில்,

    “மீனெறி பரதவர் காதல் மகளே
    நீயே, நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்10

    எனவும் துறைக்குறிப்பில் “குறைவேண்டி நின்ற தலைவனைத் தோழி சேட்பட உரைத்தது”11 எனவும் சிறு மாற்றங்கள் செய்திடினும், பாடலின் பொருண்மையும், துறைக்குறிப்பின் பொருண்மையும் சேட்படுத்துதல் துறைக்குள்ளே அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

    தலைவியின் அருமை உள்ளல்

    களவொழுக்கத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட தலைவனிடம் தோழி ‘தலைவி காண்பதற்கு அரியள். மிக்கோளினும் மிக்கோள். ஆதலின் காண்பதரிது’ எனக் கூறி அவனைச் சேட்படுத்துதல் ‘அருமை சாற்றல்’ துறையாகக் கொள்வர் இலக்கணிகள். மாறாக, சேட்படுத்தும் பொருண்மையிலமைந்த இப்பாடலில் (நற் -301) தலைமகனைச் சேட்படுத்தியப் பின் தோழி, ‘இளமைப் பருவத்தள், குறிஞ்சி மேனியள், குவளைக் கருங்கண்ணள், அழகுமயில் சாயலள், கிளி பேச்சினள்,……. எனப் பலவாறாகத் தம் மகளின் அழகினைப் பாராட்டி மகிழ்கிறாள் அவள் தாய். யான் அத்தலைவியின் மகிழ்விற்காகத் தலைவனுடன் கூட்டுவிப்பதை அறிந்தாள் அத்தாய் என்னாவாளோ?’ எனக் கவன்றுரைப்பதால் இத்துறைக்குத் ‘தலைவியின் அருமை உள்ளல்’ என்னும் துறையாக வருவிக்கப்பட்டுள்ளது.

    இத்துறையிலமைந்த ‘சேட்படுத்து, ‘பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையினான்’ என்று தோழி தன்னுள்ளே சொல்லியது.’ என்னும் துறைக்குறிப்பிற்கு ‘நீன்மலைக் கலித்த கருங்கோற் குறிஞ்சி நாண்மலர் புரையும் மேனி’   எனத் தொடங்கும் நற் -301ஆம் பாடல் அமைகிறது. இப்பாடல் ‘தலைவியின் இளமை, அழகு, சாயல், மொழியினைத் தலைவன் தன் காதற் பெருக்காற் பாராட்டினான். அதே காதலை யாயும், யானும் அவளிடம் கொண்டுள்ளோம். யான் தலைவனுடன் கூட்டுவிப்பது அறிந்தால் தாய் என்னாவாளோ?’ எனத் தோழி தன்னுள் கவன்றுரைப்பதாக, ஔவை.சு. துரைச்சாமிப்பிள்ளையின் பாடலடிக்கேற்ப பொருண்மை உரைத்திருப்பர். மாறாக, ஏனை உரையாசிரியர்கள் தலைவியைத் தாய் பாராட்டுவதாக உரைத்திருப்பர் உரையாசிரியர்கள், பதிப்புக்களின் பாடலடிகள், உரைகள் வேறுபடினும், தோழியின் கவன்றுரைத்தல் பொதுவாக அமைந்துள்ளன.

    இப்பாடலின் துறைக்குறிப்பிலும் ஔவை.சு.துரைச்சாமிப்பிள்ளை “இஃது, அன்பின் இயல்பினால் தகுவதோர் ஆற்றாமையினான் என்று தோழி தன்னுள்ளே யாய் மறப்பருமை சொல்லிச் சேட்படுத்தது” எனப் பாடலடிக்கேற்ப மாற்றியமைத்திருப்பர். எவ்வாறாயினும் இப்பாடல், துறைக்குறிப்புகளின் பொருண்மை ‘தலைவியின் அருமை உள்ளல்’ துறையில் அமைந்துள்ளது.

    தொகுப்புரை

    தலைவனின் காதலுறுதியை அறிவதற்காகவும், தலைவியை அலரிலிருந்து காப்பதற்காகவும் தோழி, தலைவனைச் சில காலம் சேய்மைப்படுத்தும் நிகழ்வு சேட்படுத்துதலாகும். இந்தத்துறையில் ஏழு பாடல்கள் அமைந்திடினும் தோழி கூற்றாக மூன்று பாடல்கள் அமைகின்றன. இச்சேட்படுத்துதல் குறித்து தொல்காப்பிய நூற்பாவழியும், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் ஆகியோரின் உரைவழியும், பின்னிற்றல், பகல் – இரவுக் குறிக் காலங்களிலும், அலர் தோன்றும் காலங்களிலும் நிகழும் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    பெருமையிற் பெயர்த்தல் (குலமுறை கூறி மறுத்தல்) துறையில் ‘எம் தலைவி பரதவ மகள். நீயோ மன்னனின் மகன். நும்மால் உண்டாகும் பெருமைக்கு யாங்கள் தகுதியுடையேம் அல்லேம். ஆதலின் நீவிர் செல்வீராக’ எனத் தோழி தலைமகனைச் சேட்படுத்தும் நற் -45ஆம் பாடலின் பொருண்மை துறைக்குறிப்பினொடும், துறையினுள்ளும் அமைந்துள்ளது நோக்கப்பட்டுள்ளது. நற் -301ஆம் பாடலில் தலைவனின் அன்பிற்கு நிகரான தாயின் அன்பு எண்ணித் தோழி மருளும் பொருண்மை கொண்ட பாடலுக்கு ஔவை.சு. துரைச்சாமிப்பிள்ளை குறிப்பிடும் துறைக்குறிப்பு பாடலின் பொருண்மைக்கேற்ப அமைந்துள்ளது என எடுத்தியம்பப்பட்டுள்ளது.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர், தொல்.பொருள்., 99:19
    2. தொல்காப்பியர், தொல்.பொருள்., 233:1-2
    3. நச்சினார்க்கினியர், தொல்.பொருள்., 403
    4. இளம்பூரணர், தொல்.பொருள்., 350
    5. உ.வே. சாமிநாதையர்(பதி.ஆசி), தமிழ்நெறி விளக்கம், 17:3
    6. அ. நாராயணசாமி, பொ.வே.சோமசுந்தரனார், நற்றிணை நானூறு பா.எ -45
    7. சேட்படுத்துதல்: மூன்று பாடல்கள் (நற் -45, 301: ஐங்குறு -91:)
    8. பொ.வே.சோமசுந்தரனார், ஐங்குறுநூறு பா.எ -91
    9. பொ.வே.சோமசுந்தரனார், நற்றிணை நானூறு, ப -81

    *****

    கட்டுரையாசிரியர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி.

    நெறிப்படுத்துநர் – முனைவர் சு. இராசாராம்
    பேராசிரியர், தமிழ்த்துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (283)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். சில வார இடைவெளியின் பின்னால் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகின்றேன். சிறிய விதையாக மண்ணில் விழும் விதை சீறிய செடியாக, பெரும் செடியாக , மரமாக பல கிளைகளுடன் வளர்ந்து விடுகிறது. அம்மரக்கிளைகளில் இருக்கும் இலையொன்று தான் உருவாகக் காரணமாக இருந்த வேர்களைத் தேடி ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? அது போன்றதொரு அனுபவத்துடன் கூடிய ஒரு பயணத்தை நான் மேற்கொண்டதே எமது சில வார இடைவெளிக்குக் காரணம்.

    ஆமாம் நான் பிறந்து தவழ்ந்து தமிழ் கற்ற என் தாய்மண்ணின் மீது கால் பதித்த ஒரு பயணம். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் என் தாய்மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்தேன். அதன் பின்னால் 1978ம் ஆண்டு எனது மூத்த சகோதரனின் திருமணத்திற்காக யாழ் மண்ணை மிதித்தேன். அதன் பின்னால் சுமார் 35 வருடங்களின் பின்னால் 2013ம் ஆண்டு யாழ் மண்ணை மீண்டும் மிதித்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் இலண்டனில் மாணவனாக இருந்த நான் கணவனாகித் தந்தையாகி வாழ்வின் பல பருவங்களைக் கடந்திருந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த என் மனைவிக்கு அதுவே முதன் முதலாக “யாழ்ப்பாணம்” எனும் என் தாய்மண்ணின் அறிமுகம் கிட்டியது.

    அதன் பின்னால் ஜந்து வருடங்கள் கழித்து மீண்டும் கடந்த 5ம் திகதி ஈழத்தை நோக்கிப் பயணமானேன். உள்ளத்தில் உரசிய உணர்வுகள் ஆயிரம். ஜந்து வருடங்களுக்கு முன்னால் தொட்டுத் தொட்டுப் பார்த்து வந்த தாய்மண்ணை மீண்டும் கொஞ்சம் உற்றுப்பார்க்க ஒரு சந்தர்ப்பம். சரியாக நாற்பது வருடங்கள் கழித்து யாழ் நல்லூர்க் கந்தனின் சப்பரம், தேர், தீர்த்தம், பூங்காவனம் எனும் நிகழ்வுகளைப் பார்க்கப் போகிறோம் எனும் ஆவல் முந்திக் கொண்டது. 1978ம் ஆண்டின் பின்னால் என் பிறந்த நாளை என் தாய்மண்ணில் கழிக்கப் போகிறோம் எனும் எண்ணமும் தலை தூக்கியது. அது மட்டுமல்ல வாழ்வில் முதல் முறையாக எமது திருமணநாளை அதாவது எமது முப்பத்தி ஏழாவது மணநாளை எனது தாய்மண்ணில் கழிக்கக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம். உள்ளம் குறுகுறுப்பால் துள்ளியது.

    6ம் திகதி அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தை அதிகாலை 4.30 மணியளவில் வந்தடைந்தோம். விமானநிலையத்திலிருந்து நேராகவே யாழ்நகருக்குச் செல்வதற்காக அதற்குரிய பேருந்தில் இருக்கையை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். சுமார் காலை ஆறு மணியிலிருந்து முன்பகல் 9.30 வரை விமானநிலையத்திலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. காலைச் சிற்றுண்டியை விமான நிலையத்திலேயே முடித்துக் கொண்டோம். 9.30 மணியளவில் விமான நிலையத்துக்குள் வந்த யாழ்நகருக்கான பேருந்து எம்மையும், மற்றும் சில பயணிகளையும் ஏற்றிக் கொண்டு சென்றது. அந்தப் பேருந்தின் பயண இருக்கைகள் வசதியானவையாகவே இருந்தன. சுமார் 8 மணி நேரப் பேருந்துப் பிரயாணம். உடம்பு ஓய்வுக்காகக் கெஞ்சியது. பத்து மணிக்கு மேலான விமானப் பிரயாணம் அதைத் தொடர்ந்து 8 மணிநேரம் பேருந்தில்,  அப்போதுதான் வயது 60க்கு மேல் ஆகிவிட்டது என்பதை உடம்பு எடுத்துச் சொல்லியது.

    யாழ்நகரில் இறங்கி நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் 7 திகதி நல்லூர்ச் சப்பரத் திருவிழா. சுமார் ஜந்து மணியளவில் கிளம்பி கந்தனின் ஆலயத்தை நோக்கி நடந்தோம். அப்போது நான் எனது பதின்ம வயதுகளில் சைக்கிளில் பவனி வந்த பழைய ஞாபகங்கள் என் நெஞ்சை நெருடிச் சென்றன. அழகாக முருகன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலே பவனி வரும் காட்சியைக் காண அலைபோல திரண்டு வந்த மக்கள் கூட்டம். இங்கிலாந்திலிருந்து எமக்கு அறிமுகமான பலரையும் சந்தித்தோம். அடுத்தநாள் காலை தேர்த்திருவிழா மக்களலை எம்மை அமிழ்த்தித் திக்குமுக்காட வைத்தது. பின்பு தீர்த்தத் திருவிழா அதைத்தொடர்ந்து பூங்காவனம் என அனைத்தையும் அடுத்து வந்த நாட்களில் ரசித்தோம்.

    எனது அம்மாவின் பக்க உறவினர்கள் பலரையும் நான் நன்கறிவேன் ஆனால் தந்தையின் பக்கத்தைத்தான் அதிகமாக அறிந்திருக்கவில்லை. தெரிந்த சிலரின் உதவியோடு வட்டுக்கோட்டை (தந்தையின் தந்தையின் பூர்வீக இடம்), சுதுமலை (தந்தையின் தாயரின் பூர்வீக இடம்) எனும் இடங்களை நோக்கி எனது வேர்களைத் தேடிய பயணத்தில் பலரைச் சந்திக்க முடிந்தது எனது பாக்கியம் என்றே கொள்ள வேண்டும். நான் சந்தித்த பலரும் நான் அவர்களைத் தேடி வந்து சந்தித்ததை ஓர் பெரிய விடயமாக ஆனந்தப்பட்டார்கள்.

    அதைத்தொடர்ந்து நான் படித்த ஆரம்பப் பாடசாலை “மங்கையர்க்கரசி மகாவித்தியாலயம்” மற்றைய கல்லூரிகளான “சென் ஜோன்ஸ்” , “ யாழ் மத்திய கல்லூரி” என அனைத்தையும் சென்று பார்த்து அதிபர்களுடன் கலந்துரையாடியது நெஞ்சை நிறைத்தது. நான் வாழ்ந்த சுற்றுப்புறம், எனது அயல் என பலவற்றையும் பார்த்து மகிழ்ந்தது ஒருபுறம் அவை நான் விட்டுச் சென்ற நிலையிலிருந்து முற்றும் மாறுதலடைந்து இருப்பதைக் கண்டு ஏக்கம் கொண்டது மறுபுறம் என இதயம் கலவையான உணர்வுகளோடு உரசியது.

    சுமார் ஒன்பது நாட்கள் யாழ்நகரில் தங்கியிருந்து விட்டு ஒரு தனியார் வாகனத்தை அமர்த்திக் கொழும்பு வந்து சேர்ந்தோம். கொழும்பிலே இருந்த சில உறவுகளையும், நட்புகளையும் சந்தித்து விட்டு இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கி விட்டு திரும்ப லண்டன் வந்து சேர்ந்து அன்றாட அலுவல்களில் மீண்டும் எம்மைப் புகுத்திக் கொண்டோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்!

    பவள சங்கரி

     

    விவேக் பாரதி, “கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்” துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் “வித்தக இளங்கவி” என்ற பட்டம் பெற்றவர். “மகாகவி ஈரோடு தமிழன்பன்” விருது பெற்றவர். “முதல் சிறகு” என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர்.

    ஆர்வமும் திறனும்:

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதும் திறன்.
    தமிழ் இலக்கியத்திலும் மரபு இலக்கணத்திலும் ஆர்வம்.

    பட்டங்கள், விருதுகள் :

    1) வித்தக இளங்கவி பட்டம் (2015)
    2) தமிழன்பன் – 80 விருது (2015)
    3) பைந்தமிழ்ப் பாமணி பட்டம் (2016)
    4) பைந்தமிழ்ச் செம்மல் பட்டம் (2017)
    5) ஆசுகவி பட்டம் (2017)

    படைப்புகள்:

    1) யானைமுகனான கதை (மின்னூல்) (2015)
    2) முதல் சிறகு (2016)
    3) பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை (2017)
    4) ககனத்துளி (2018)
    5) பேசுபொருள் நீயெனக்கு (2018)

    வல்லமை ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர் விவேக் பாரதியை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    Share
  • கவலைகள் நீக்கும் கணபதி யாகம்

    வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்

    தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு

    கவலைகள் நீக்கும் கணபதி யாகம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் உலக நலன் கருதி “கவலைகள் நீக்கும் கணபதி யாகம்” நடைபெறுகிறது.

    32 கணபதியின் பெயர்கள்:

    நாம் காலம் காலமாக நமக்கு தெரிந்த 32 கணபதியை வழிபட்டு வருகிறோம். மேலும் 33 ஆவது கணபதி கண்திருஷ்டி கணபதியையும் வழிபட்டு வருகிறோம். அவை முறையே பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ருணமோசன கணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பவை ஆகும்.

    ஹோமங்களின் சிறப்பு :

    பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.

    நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் எளிதான முறையில் அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா… என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கணபதி ஹோமத்தின் சிறப்பு :

    ஹோமங்களில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம். தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி – நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.

    கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. மக்கள் அனைவரும் எந்த செயலை தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் வீடுகளில் கிரகப்பிரவேசம் நடைபெறும் பொழுது கணபதி ஹோமம் செய்து, புதுமனை புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது இந்துக்களின் மரபு .

    கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஜபம் செய்து, அவரை ஆராதித்து, மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்வது உத்தமம். மேலும் புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் ஹோமம் அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்து மிகச்சிறந்த பலனை பெறலாம்.

    மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும். ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கணபதி ஹோமத்தை, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு கவலைகள் நீங்கவும், கஷ்டங்கள் விலகவும், கர்மவினை, ஊழ்வினை அகலவும், காரியங்களில் வெற்றி பெறவும் மஹா கணபதியை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.

    இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், அஷ்ட திரவியங்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

    Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

    Email: danvantripeedam@gmail.com

    Share
  • கலீல் ஜிப்ரான் தமிழாக்கங்கள்

    முனைவர் அ.தௌஃபீக் ரமீஸ்

    உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை,

    ஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி), திருச்சி – 20

     

     

          உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வடமேற்கே சியால்கோட்டிலும் வடகிழக்கே வங்காளத்திலும் தெற்கே தமிழகத்திலுமாக தலைகீழ் ஆய்த எழுத்தினைப் போல் சுடர் விட்ட முப்பெருங் கவிகளான இக்பால், தாகூர் மற்றும் பாரதி ஆகியோரின் சமகால மகாகவியாக லெபனானில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவில்  குடியேறி வாழ்ந்தவர் கலீல் ஜிப்ரான். ஏசு நாதரின் தாய்மொழியான அரமி (Aramaic) மொழியிலேயே வழிபாடு நிகழ்த்துகின்ற சிரியன் மரோனைட் கிறித்துவப் பிரிவைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கலீல் ஜிப்ரான் தனது ஆக்கங்களை அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதினார். அகஸ்ட் ரோடின் என்னும் கலைஞரிடம் சிற்பமும் ஓவியமும் பயின்று அத்துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். (குறிப்பு: ஆங்கிலத்தில் Kahlil Gibran என்று எழுதப்படும் பெயரைத் தமிழில் ஜிப்ரான் என்று சிலரும் கிப்ரான் என்று சிலரும் எழுதுகிறார்கள். ஜிப்ரான் என்பதே சரி. மூல மொழியான அரபியில் அப்பெயருக்கு அரபு எழுத்து முறையின் ஐந்தாம் எழுத்தாகிய “ஜீம்” என்னும் எழுத்தே இடப்படுகிறது. எனவே அரபி லிபியில் அது ஜிப்ரான் என்றே உச்சரிக்கப்படும். அதுவே சரி).

    ஜிப்ரான் என்னும் ஆன்மிகக் கவி

    பாரதி, தாகூர், இக்பால் முதலிய மகாகவிகளைப் போன்றே ஜிப்ரானும் ஓர் ஆன்மிகக் கவிஞர். ஆன்மிகப் பார்வை கொண்டே சமூக அரசியல் மாற்றங்களைப் பேசியவர். அதனாலேயே அவரது ஆக்கங்கள் காலங்கடந்து, அவற்றின் சமகால நிகழ்வுகளின் தீவிரம் தேய்ந்த பின்னரும், என்றுமுளதான மானுட மதிப்புக்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்ற ஆன்மிக நோக்கால் இன்றும் தேவைப்படுகின்றனவாக, தாக்கம் செலுத்துகின்றனவாக இருக்கின்றன.

    ஜிப்ரானின் இலக்கியப் படைப்புக்களில் பைபிளின் தாக்கம், அதன் மொழி நடையிலும் கருத்துக்களிலும் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஜிப்ரானை மேலோட்டமாகப் படித்தாலே அதனைக் கண்டுகொள்ளல் எளிது. அவரின் எழுத்துக்களில் காணலாகும் ஆழ்ந்த அக தரிசனங்கள், மெய்ப்பொருட் சேதிகள் ஆன்மிகத் தளமொன்றிலிருந்து அவரது அகத்திற்கு வந்து சேர்ந்தவை என்றே அவர்கள் பார்க்கின்றனர். “அவருடைய பேராற்றல் ஒரு பெரிய ஆன்மிக அணைக்கட்டிலிருந்து வருகிறது. அப்படி இல்லாதிருந்தால் அது அனைவருக்கும் பொதுவாகவும் சக்தி மிக்கதாகவும் இருந்திருக்காது” என்று கிளாட் பிரேக்டன் சொல்கிறார் (தமிழாக்கம்: அப்துல் ரகுமான்; நூல்: “முறிந்த சிறகுகள்”, ஆ.மா.சகதீசன் மொழிபெயர்ப்பு; ப.6). இருந்தபோதும், அக்கருத்துக்களுக்குக் கலீல் ஜிப்ரான் அணிவித்திருக்கும் மொழி நடை என்னும் ஆடை அவருக்கே சொந்தமானது என்றும் அவர் சொல்கிறார் (”His power came from some great reservoir of spiritual life else it could not have been so universal and so potent, but the majesty and beauty of the language with which he clothed it were all his own” – Claude Bragdon; Book: The Prophet”, preface page).

    அனைத்து மகாகவிகளையும் போலவே ஜிப்ரானின் கவிதைகளும் உரைநடையும் ஞானம் பேசுகின்றன. அவரை ஒரு ஞானியாகவே கொண்டாடுகின்ற ரசிகர்களும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஞானம் அடைந்தவர்கள் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். சூஃபிக் கவிஞர் ரூமியைப் போல. அத்தகையோரின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஞானம் அடையாத, ஆனால் ஞானம் பேசுகின்ற கவிஞர்கள் பலருண்டு. அத்தகையோரின் பட்டியலிதான் தாகூரையும் ஜிப்ரானையும் ஓஷோ வைக்கிறார்:

    “வியப்பு என்னவெனில், கலீல் ஜிப்ரான் இன்னமும் விழிப்படையாதவர், எனினும், ஏதோவொரு விசித்திரமான வழியில், ஞானிகளுக்கு மட்டுமே கிடைக்கின்ற ஆழங்கள் மற்றும் உயரங்கள் குறித்து அவர் பேசுகிறார் என்பதே. அதனால்தான் அவர் தன்னளவில் ஒரு தனி வகையைச் சேர்ந்தவர் – ஆத்மஞானியும் கவிஞனுமான ஒரு விசித்திரக் கலவை – என்று நான் சொல்கிறேன். … … … … … அவரது ஆன்மாவில் ஞானி, கவிஞன் இருவருமே இருக்கிறார்கள் – அவர் மிகவும் செழிப்பானவர். கவிஞன் அதிகத் தருணங்களில் விழித்திருக்கிறான், ஞானி எப்போதாவது மட்டுமே. ஆனால் இவ்விருவரின் கலவை ஒரு புதிய வகைமையை உண்டாக்கியுள்ளது. அவ்வகையில் இன்னும் ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார் – ரபீந்திரநாத் தாகூர். இந்த விசித்திர வகைமைக்கு இந்த இருவரை மட்டுமே நான் அறிந்திருக்கிறேன்” (“The surprise is that Kahlil Gibran is not yet an awakened man yet, in some miraculous way, he speaks of those depths and those heights which are available only to the enlightened. That’s why I say he is a category in himself – a strange mixture of the mystic and the poet. … … … … … In his soul the poet and the mystic are both present – he is a very rich man. The poet is more often awake, the mystic once in a while, but the mixture of these two have created a new category to which only one other man, Rabindranath Tagore, can belong. I know only of these two persons who belong to this strange category.” (நூல்: “Reflections on Kahlil Gibran’s The Prophet”, chapter 32: ‘Time remains where it is’)).

    தமிழிலக்கியச் சூழலில் ஜிப்ரானின் தாக்கம்

          இருபதாம் நூற்றாண்டில் தமிழுலகில் சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகாகவி பாரதியின் தாக்கம் என்பது தமிழில் அகத்திருந்து நிகழ்ந்த தாக்கம் என்றால் புறத்திலிருந்து தமிழ் மீது நிகழ்ந்த பெருந்தாக்கம் தாகூர் மற்றும் ஜிப்ரான் ஆகிய இருவரின் ஆளுமைகளுடையதே எனத் துணியலாம். ”பாரதியாரை அறிந்தவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு அவர் ஒரு கவிஞர் என்பதாகத்தான் தெரிந்திருக்கும். புனைகதைகளில் சில சிகரங்களை எட்டியவர் அவர் என்பதை அறிந்த கால்வாசிப் பேரில் நானும் ஒருவன். சீரியஸ் எழுத்தாளர்களிலும், பாப்புலர் எழுத்தாளர்களிலும் அவருடைய எழுத்தின் பாதிப்பு யார் யாரிடம் எந்தெந்த அம்சத்தில் இருக்கிறது என்பதற்கு என்னிடம் ஒரு பட்டியலே உண்டு” என்கிறார் யுவன் சந்திரசேகர் (”ஏற்கனவே”/’விருந்தாளி’, ப.177). கலீல் ஜிப்ரானின் விடயத்திலும் இப்படிச் சொல்லத்தகும்.

          தமிழ்ப் புதுக்கவிதை இயக்கமான ’வானம்பாடி’யின் உறுப்பினர்கள் மற்றும் சார்பாளர்களில் பற்பலரை அறிமுகஞ் செய்த பதிப்பாளரான கவிஞர் மீரா சில காலம் தனது பதிப்பகத்திற்கு ‘சல்மா’ என்று பெயர் வைத்திருந்தார். அப்பெயர் கலீல் ஜிப்ரானுடைய புகழ் பெற்ற குறும்புதினமான ‘முறிந்த சிறகுகள்’-இன் கதாநாயகியின் பெயர். காதலையே தனது அடிநாதமாகக் கொண்டிருந்த கலீல் ஜிப்ரானின் தாக்கத்தை மீராவின் காதற் கவிதைகளில் காணலாம் என்பதற்கு இஃதொரு குறிப்பு ஆகலாம்.

          கலீல் ஜிப்ரானுடைய எழுத்துக்களில் மனம் திரை கொடுத்தோருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். அவர் சொல்கிறார், “நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ! அப்துல் ரகுமான் வந்துவிட்டார். இவருடைய கவிதைகளை வெளியிட்டால் யார் இந்தக் கவிஞன்? என்று உலகம் நிச்சயம் விசாரிக்கும்” (அப்துல் ரகுமானின் ”ஆலாபனை” பின் அட்டை மேற்கோள்).

          கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகள் மட்டுமன்று, அவரது உரைநடையிலும் ஜிப்ரானின் தாக்கமுண்டு. “கலீல் ஜிப்ரானுடைய மந்திரச் சொல் மயக்கமும் ஆஸ்கார் ஒயில்டினுடைய சம எடை தராசு முள் வாக்கிய அமைப்பும் இவர் நடையழகாய் நிமிர்கின்றன” என்றுரைக்கிறார் கவிஞர் சிற்பி (”அவளுக்கு நிலா என்று பெயர்”, முன்னுரை: ‘இருட்டில் ஒற்றை விண்மீன்போல்…’, ப.8).

          ஜிப்ரானின் பாடுபொருளும் அவற்றை வெளிப்படுத்த அவன் மீண்டும் மீண்டும் கையாளும் குறியீடுகளும் (recurring themes and metaphors) அப்துல் ரகுமானிடமும் காணக்கிடைக்கின்றன. காதல், இசை, இறைவன், அழகு ஆகியவை இருவரிடமும் செம்பாகம் காணப்படும் பொருண்மைகள் எனில் கண்ணீர், சிறகுகள், கடல், வானம், பூக்கள் முதலிய குறியீடுகளும் இருவரிடமும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

          உலகத்துக் கவிஞர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் வைரமுத்து எழுதிய கட்டுரை நூல் “எல்லா நதியிலும் என் ஓடம்”. அந்நூலுள் இருபது கட்டுரைகள் உள்ளன. சோவியத் யூனியன், உருது, ஆப்பிரிகா, இந்தி, ஈரான், சிந்தி இத்தியாதி என நாடுகள் மற்றும் மொழிகளின் பெயர்களால் தொடரும் கட்டுரைத் தலைப்புக்களில் 15,16,17 எண்ணிட்ட மூன்று கட்டுரைகள் லெபனான் என்னும் ஒற்றை நாட்டின் இலக்கியம் பற்றி அமைகின்றன. பிற நாட்டு அல்லது மொழி பற்றிய கட்டுரைகளுக்குள் பல கவிஞர்கள் பற்றி எழுதியுள்ள நிலையில், லெபனான் குறித்த மூன்று கட்டுரைகளிலுமே கலீல் ஜிப்ரான் என்னும் ஒரே கவிஞரைப் பற்றித்தான் வைரமுத்து எழுதியுள்ளார்.

          ”என்னைப் பதினேழு வயதிலிருந்து பிரமிக்க வைத்த பிறமொழிக் கவிஞன் அவன்தான். அவனது கவிதை ஏடுகளைக் கைக்குழந்தையாய்க் கக்கத்தில் இடுக்கித் திரிந்திருக்கிறேன். தலையணை இல்லாமல்கூட நான் தூங்கியதுண்டு. ஆனால், அவனது ஏடு தழுவாமல் என் இமைகள் இறங்கியதில்லை” என்பது ஜிப்ரான் தன்னில் நிகழ்த்திய தாக்கம் பற்றி வைரமுத்து வரைந்திருக்கும் வாக்குமூலம் (”எல்லா நதியிலும் என் ஓடம்”, ப.128).

    ஜிப்ரான் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள்

          ”பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்று பாரதி முன்மொழிந்தும், “தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்” என்று பாரதிதாசன் வழிமொழிந்தும் சுட்டிக்காட்டிய பணி இன்றளவும் தொடர்ந்து வருகின்ற ஒன்று. அதன்படி இந்திய மொழிகள் பலவற்றிலுமிருந்து தமிழுக்குப் பற்பலப் பனுவல்கள் மொழிபெயர்ந்து வந்துள்ளன. ஆங்கில வழியே பல உலக மொழிகளிலிருந்தும் பல வடிவங்களிலான இலக்கியங்கள் தமிழிற் பெயர்ந்துள்ளன. அவர்களுள், கலீல் ஜிப்ரானின் நூற்களைப் போல் பரவலாகத் தமிழிற் பெயர்க்கப்பட்ட, பட்டு வருகின்ற ஆளுமை வேறு யாருமில்லை எனலாம்.

          கலீல் ஜிப்ரானைத் தமிழாக்கம் செய்தோருள் ஆ.மா.சகதீசன் அவர்களை முதலிடத்தில் வைக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். “ஆ.மா.சகதீசன் கலீல் ஜிப்ரானின் பித்தர் என்று கூறுவதை விடப் பக்தர் என்று கூறுவதே சரியாக இருக்கும்” என்று சொல்லி, “ஜிப்ரானின் 20 நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஜிப்ரானை அதிகமாக மொழிபெயர்த்தவர் அவர்தாம்” என்று காரணமும் காட்டுகிறார் அவர் (”முறிந்த சிறகுகள்” (நேஷனல் பப்ளிஷர்ஸ்), பக்:7-8). கலீல் ஜிப்ரானின் சிந்தனைகளை வெறுமனே நூற்களாக மட்டும் கண்டு மொழிபெயர்ப்புப் பணி செய்வதோடு அமைவதல்ல ஆ.மா.சகதீசனின் ஈடுபாடு. “வாழ்க ஜிப்ரானிஸம்” என்னும் முழக்கத்துடன் அதனை ஓர் நவீனச் சமயமாகவே அவர் பாவித்துப் போற்றுவதைக் காண்கிறோம்.

          கலீல் ஜிப்ரானை தமிழாக்கம் செய்தோருள் மிக அழகாகவும் செறிவாகவும் செய்தவர் என்று கவிஞர் புவியரசு அவர்களையே நான் கருதுகிறேன். முறிந்த சிறகுகள், தீர்க்கதரிசி, ஞானிகளின் தோட்டம், ஞானக் களஞ்சியம் ஆகிய நூற்களை அவர் தந்திருக்கிறார். மட்டுமன்று, ஜிப்ரானின் கெழுதகை நண்பரும் பெருங்கவியுமான மீக்காயில் நுஐமா எழுதிய ”The Book of Mirdad” (“மீர்தாதின் புத்தகம்”) எனும் ஒப்பரிய ஆத்மஞான நூலினையும் அவரே தமிழிற் பெயர்த்துள்ளார். ஓஷோவின் நூற்களை அதிகமாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் அவர்தாம். ஜிப்ரானும் நுஐமாவும் ஓஷோவைப் பெரிதும் ஈர்த்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார்.

          ஜிப்ரானின் உரைநடைப் பனுவலான “The Prophet” என்னும் தத்துவ ஞான நூலினை வசன கவிதை வடிவில் “பேரறிவாளன்” என்னும் தலைப்புடன் பெயர்த்திருப்பவர் மெஹர்.ப.யூ.அய்யூப். (பேராசிரியர் ஜெனார்த்தனன் என்ற கவிஞர் ஜெனா என்பாரும் இந்நூலை வசன கவிதை வடிவில் தந்திருக்கிறார்). ”கலீல் கிப்ரான் என்ற பன்மொழித் திறன் வாய்ந்த பேரறிவாளனைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் முயற்சியாய் இந்த மொழி பெயர்ப்பை நான் கருதவில்லை. அறிவாளர் பலர் ஏற்கனவே அந்தப் பணியைச் செய்துள்ளனர்” என்கிறார் அவர் (”பேரறிவாளன்”, ப.xii). ஆனால், ஜிப்ரானை மொழிபெயர்த்தோர் பட்டியலில் தம் பெயரும் இடம்பெற வேண்டும் என்னும் ஆசை அவனது எழுத்தின் காதலரை இயக்கும் போலும்.

    முறிந்த சிறகுகள், தீர்க்கதரிசி ஆகிய நூற்களை தமிழாக்கம் செய்துள்ள நலங்கிள்ளி ‘கலீல் ஜிப்ரான் கதைகள்’ என்னும் நூலும் தந்துள்ளார். அதில் நான்கு சிறுகதைகள் உள்ளன. 1908-இல் ஜிப்ரான் அரபி மொழியில் எழுதிய நூல் “அல்-அர்வாஹல் முதமர்ரிதாஹ்”. ஆங்கிலத்தில் இந்நூல் “Spirits Rebellious” என்று மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலில் மூன்று கதைகள் உள்ளன. அதில் உள்ள ”The Cry of the Graves” என்பதை ”தீர்ப்பின் விளைவு” என்னும் தலைப்பிலும், “Madam Rose Hanie” என்பதைத் “தளையற்ற காற்றிலே…” என்னும் தலைப்பிலும், ”Khalil the heretic” என்பதைத் “துறவை மீறிய உறவு” என்னும் தலைப்பிலும் தனது நூலில் நலங்கிள்ளி தந்துள்ளார். “Tears and Laughter” என்னும் ஆங்கில நூலிலுள்ள “The Bride’s Bed” என்னும் கதையினைச் “செந்நீர்ப் பஞ்சணை” என்னும் தலைப்பில் தந்துள்ளார்.

          ”ஞானக் களஞ்சியம்” (புவியரசு), “ஞான தரிசனம்” (ஆ.மா.சகதீசன்), ”மிட்டாய் கதைகள்” (என்.சொக்கன்) ஆகிய நூற்கள் கலீல் ஜிப்ரானின் பன்னூற்களிலிருந்து உரைநடைச் சித்திரங்களையும் வசனக் கவிதைகளையும் எடுத்து மொழிபெயர்த்துத் தந்துள்ள கோவைகளாகும். Fable என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிறிய நீதிக்கதை வடிவத்தில் ஜிப்ரான் எழுதியிருப்பவற்றை மட்டும் தேர்ந்து மொழிபெயர்த்துள்ள என்.சொக்கன், “இந்தக் கதைகளில் வெளிப்பட்டிருக்கும் கிப்ரானின் அலாதியான கதை சொல்லும் பாணிக்காகவே, அவருடைய பல நூற்களிலிருந்து இவற்றைத் தேடித் தொகுத்து மொழிபெயர்த்தேன்” என்று சொல்கிறார் (”மிட்டாய் கதைகள்”, ப.7). இவ்வாறு, அவரவரும் ஒரு நோக்கு வகுத்துக்கொண்டு அதற்படத் தேர்ந்து மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற பெரும்பரப்பாக கலீல் ஜிப்ரானின் படைப்புக்கள் அமைந்துள்ளன.

    ஜிப்ரானின் Forerunner, Madman ஆகிய நூற்களை இளவல் ஹரிஹரன் முறையே ’முன்னோடி’, ’பைத்தியக்காரன்’ ஆகிய நூற்களாகவும், ஜிப்ரான் தனது காதலி மே ஸியாதாவுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான “Love Letters” என்பதை “கடிதங்களில் ஒரு காதல் காவியம்” என்னும் நூலாக ‘க்ளிக்’ ரவியும் மொழிபெயர்த்துள்ளனர் (கண்ணதாசன் பதிப்பகம்). இது போல் கலீல் ஜிப்ரானைத் தமிழாக்கும் நூற்பணி தொடர்ந்த வண்ணமுள்ளது. மேலும், சி.ஜெயபாரதன் (jayabarathan.wordpress.com), மீனாக்ஸ் (tamilgibran.blogspot.com) ஆகியோர் நடாத்தி வருகின்ற வலைப்பூக்கள் ஜிப்ரானைத் தமிழில் வழங்கி வருகின்றன.

    முடிவுரை

     மகாகவிகளின் படைப்புக்கள் மட்டுமே நூற்றாண்டுகள் கடந்தும் ஆற்றல் குன்றாது இயங்கவியலும். அத்தகைய மகாகவிகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் என்பது திண்ணம். மகாகவிகளே தொடர்ந்து ஒரு மொழியில் கவிஞர்கள் உருவாகி வருவதற்கு ஊக்கமாக இருப்பவர்கள். தான் எழுதிய மொழியில் மட்டுமல்லாது பெயர்ப்புச் செய்யப்படுகின்ற மொழிகளிலும் கவிஞர்களை உருவாக்கும் ஆற்றல் மகாகவிகளிலும் சிலருக்கே வாய்க்கின்ற பெரும்பேறு. அந்த நற்பேறு கலீல் ஜிப்ரானுக்கு நிறையவே வாய்த்துளது என்பது உண்மை.

    துணை மூலங்கள்

    அ) கலீல் ஜிப்ரான் நூற்கள்

    1. The Prophet, Shikha Publications, B-30, East Krishan Nagar, Delhi-51 (Year not mentioned).
    2. The Broken Wings, Reprint 1997, UBSPD, 5, Ansari Road, New Delhi-02.
    3. தீர்க்கதரிசி, தமிழில்: கவிஞர் புவியரசு, முதற்பதிப்பு: பிப்ரவரி 1994, கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017.
    4. பேரறிவாளன், தமிழில்: மெஹர் ப.யூ.அய்யூப், முதற்பதிப்பு: 1999, பாத்திமா பதிப்பகம், 163/32, மாதவன் சாலை, கருணாநிதி நகர், திருச்சி -20.
    5. வாழ்வின் தாகம் – தீர்க்கதரிசி, தமிழில்: கவிஞர் ஜெனா, முதற்பதிப்பு ஜூன் 1983, வெளியீடு: திருமதி ஜெ.மல்லிகா, 259, புறநகர் வீட்டுவசதித் திட்டம், இராஜகோபாலபுரம், புதுக்கோட்டை-3.
    6. முறிந்த சிறகுகள், தமிழில்: கவிஞர் புவியரசு,   கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017.
    7. முறிந்த சிறகுகள், தமிழில்: ஆ.மா.சகதீசன், முதற்பதிப்பு டிசம்பர் 2004, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை -17.
    8. சிதைந்த சிறகுகள், தமிழில்: நலங்கிள்ளி, முதற்பதிப்பு: டிசம்பர் 1986, பூம்புகார் பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை – 04
    9. ஞானக் களஞ்சியம், தமிழில்: கவிஞர் புவியரசு, முதற்பதிப்பு: ஜனவரி 1997, கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017.
    10. ஞான தரிசனம், தமிழில்: ஆ.மா.சகதீசன், முதற்பதிப்பு டிசம்பர் 2004, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை -17.
    11. கலீல் ஜிப்ரான் கதைகள், தமிழில் நலங்கிள்ளி, முதற்பதிப்பு டிசம்பர் 1986, கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017.
    12. ”மிட்டாய் கதைகள்”, கலீல் ஜிப்ரான், தமிழில்: என்.சொக்கன், முதற்பதிப்பு: செப்டம்பர் 2005, கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18; ISBN 978-81-8368-079-0.

    ஆ) பிற நூற்கள்

    1. அப்துல் ரகுமான், “ஆலாபனை”, நான்காம் பதிப்பு ஏப்ரல் 2003, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை -17.
    2. அப்துல் ரகுமான், “அவளுக்கு நிலா என்று பெயர்”, மூன்றாம் பதிப்பு ஆகஸ்ட் 1993, திருமகள் நிலையம், 55, வெங்கட்நாரயணா தெரு, தி.நகர், சென்னை-17.
    3. வைரமுத்து, “எல்லா நதியிலும் என் ஓடம்”, நான்காம் பதிப்பு ஜூன் 1993, சூர்யா லிட்டரேச்சர் பிரைவேட் லிமிடட், 15, நான்காம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை – 14.
    4. யுவன் சந்திரசேகர், “ஏற்கனவே”, முதற்பதிப்பு டிசம்பர் 2003, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18.

    இ) இணையத் தளங்கள்

    1. leb.net/gibran
    2. www.gibrankhalilgibran.org
    3. www.osho.com

    Share
  • சேக்கிழார் பா நயம் – 4 

    ====================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி.

    ————————————————-

     

    கைலையில் தொடங்கிய வரலாறே  பெரிய புராணம். கைலை மலையில் சிவபிரான் ஒருநாள், தம்  அழகிய திருமேனியைக் கண்ணாடியில்  கண்டு மகிழ்ந்தார். எல்லாரும் காண இயலாத வகையில் அருவமாக இருந்த பெருமான்,மலையுருவிலும், சிவலிங்கத் திருமேனியிலும் தம்முருவைக் காட்டிய  பின், நாம் காணத்தக்க மனித வடிவில் தம்மையே கண்ணாடியில் கண்டார். இந்த வடிவமே உலகோர் கண்டு மகிழும் நடராசத் திருமேனியாகத்  திருவாலங்காட்டிலும்,சிதம்பரத்திலும்,மதுரையிலும்,நெல்லையிலும், குற்றாலத் திலும், விளங்கின! கைலையில் கண்ணாடியில் கண்ட வடிவம் மிகவும் அழகாகத்  தோன்றியமையால், அதனைச் சிவபிரான், ‘’சுந்தரா வருக!’’ என்று அழைத்தார். கண்ணாடியில் தோன்றிய சிவபிரானின் திருவுருவம் அங்கிருந்து வெளியே வந்தது! அவரே பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை எடுத்துக் கொண்டுவந்து சிவபிரானிடம் அளித்தார்! அதனால் அவர் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப் பெற்றார். அவரே கயிலைமலையில் இறைவனுக்கு அணுக்கத்    தொண்டாற்றி வந்தார்.

    அங்கே இறைவியாகிய பார்வதிக்கு அணுக்கத் தொண்டாற்றிய மகளிர் இருவர் இருந்தனர். உமையம்மைக்கு உரிய மலர்களை கைலைமலை மலர்வனத்தில் அவர்கள் பறித்துச் சென்று இறைவிக்கு அளித்தனர். அதே மலர்வனத்தில் இறைவனுக்குரிய மலர்களை ஆலால சுந்தரரும் பறித்துப் பெருமானுக்கு அளித்தார். அவ்வாறு ஒருமுறை இறைவனுக்கு மலர் பறிக்கச் சென்ற ஆலாலசுந்தரர், இறைவிக்கு மலர் பறிக்கச் சென்ற பெண்களைக் கண்டார்.அப்பெண்களின் தோற்றம் அவரைக் கவர்ந்தது! ஆலால சுந்தரரின் கம்பீரத்தோற்றம் அப்பெண்களை கவர்ந்தது. இறைவடிவில் மட்டுமே எப்போதும்  ஈடுபாடு காட்டிய அம்மூவருள்ளமும் மலர் பறிக்க வந்தவர்களைக் கண்டு மயங்கின!  இங்கே உலகியல் நிகழ்வுகளை நாம் சிந்திக்க வேண்டும். முதலில் ஆடவனே பெண்ணைக் கண்டு மகிழ்வான்; அதன் பின்னரே பெண்கள் இணங்குவர்! கயிலைமலையில், நிலவுலக இயல்பைப் பெற்ற  அவர்களை அங்கே  சிவபிரான் கண்டார். அப்பகுதி சிவன், காமனை எரித்த இடம். ஆதலால் அங்கே நிகழ்ந்த காமநிகழ்ச்சியை இறைவன் ஏற்கவில்லை! உலகியலின்படி, கைலையில்நடந்து கொண்ட மூவரையும் நிலவுலகிற்கே அனுப்ப இறைவன் திருவுளம் பற்றினார்!

    ஆலால சுந்தரரை இறைவன் அழைத்து,’’ நீங்கள் தொடங்கிய காமவின்பத்தை நிலவுலகு  சென்று  நிகழ்த்திய பின், மீண்டும் கைலாயம் வருக!’’ ,என்று கூறியருளினார். அவ்வாறு இறைவன் கூறியதும் அவர் திருவிளையாடல் ஆகும். ஆலால சுந்தரரை உருவாக்கியதும், கமலினி, அனிந்ததை  ஆகியோர் உருவாகி யதும், அவர்கள் காதல் கொண்டதும் ஒரு காரணத்துக்காகவே யாகும்!

    அவர்கள் மூவருள் ஆலால சுந்தரர் நிலவுலகில் தென்னகத்தில் அவதரித்தது அவரால் தென்பாரதம் மேலும் பெருமை பெறுவதற்கே யாகும்! அவ்வாறு அவர் தென் திசையைப் பெருமைப் படுத்தத்   ‘’ திருத்தொண்டத் தொகை’’ என்ற ஒரு நூலை   முதல் நூலாக  அளிப்பதற்கே யாகும்!   இதனைச் சேக்கிழார்,

    ‘’மாதவம் செய்த  தென்திசை  வாழ்ந்திடத்

    தீதி லாத் திருத்  தொண்டத்தொ  கைதரப்

    போது  வார்அவர்   மேல்மனம்  போக்கிடக்

    காதல்   மாதரும்  காட்சியில்  கண்ணினார்!’’

    என்று பாடினார்.

    இந்தியநாட்டின் தென்திசை பெருந் தவங்களை செய்த திசை. இப்பகுதியில் தில்லைத்  திருக்கோயிலில் சிவபிரான் உமையம்மை காண ஆனந்த நடனம் ஆடுகின்றார்! இச்சிதம்பரத்தைப் பெற்றமையால் தென்திசை இணையற்ற திசையாயிற்று, இந்தத் திசையில்  அடியார்களின் பற்றுக்கோடாக விளங்கும் பெரும்பற்றப் புலியூர் ஆகிய தில்லை உள்ளது. இத்தில்லையில்தான் புலிக்கால் முனிவர் எனப்பெறும் வியாக்கிரபாதர் இறைவழிபாடு செய்து நமக்கு வழிகாட்டினார். அனசூயையின் தவத்தால் அவள்தன்  கூப்பிய  கரத்தில் இறையருளால் வந்து தோன்றிய பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம் தில்லையாகும். இந்த இருவரும் இத்தலத்தில் இறைவன் அருள்நடனத்தைக் கண்டு மகிழ்கின்றனர்.

    நிலமகளின் இதயக்கமலம்போல் தோன்றும் திருவாரூரும்  இந்தத் தென்திசையில் தான் உள்ளது. புற்றிடங்கொண்டார் , பூங்கோயில் கொண்ட ஊர் திருவாரூர். இங்கேதான் உலகம் புகழும் கமலாலயக்குளம் உள்ளது. தில்லை தோன்றும் முன்னும் பின்னும் தோன்றிய தலங்களே  திருவாரூரும் , காஞ்சியும் ஆகும். அவற்றை சமட்டிப் பிரணவம், வியட்டிப் பிரணவம் என்பர்.அனைத்தும் ஒடுங்கும்   ஆகாய தத்துவமாகச் சிவன் தோன்றும் இடம் தில்லை. ஆகாயத்தத்துவம் மனத்தால் காணத்தக்கது. அனைத்தும் தோன்றும் மண்ணின் தத்துவமாக விளங்குவன திருவாரூரும் ,காஞ்சிபுரமும் ஆகும்.பிருதிவி தத்துவம் இருகண்களால் காணத்தக்கது. இழந்த தம் இருகண்களையும் சுந்தரர் காஞ்சியிலும் திருவாரூரிலும் பெற்றார்.

    மேலும் சிவபிரானின் திருவருளை  முழுமையாகப் பெற்ற  திருநந்திதேவர் அவதரித்த பெருமை உடையது திருவையாறு. தத்துவ நிலையில் சிவபாத கங்கை, தேவிகங்கை,இடப கங்கை, திருநந்தி தேவரது உவகை நீர், காவிரி ஆகிய ஐந்து நதிகளாலும் பூசிக்கப் பெற்ற  இறைவன் ஐயாறப்பர். காவிரியின் துணைநதிகள் ஐந்தும் பாயும் ஐயாறும் இதுவே!  இங்கே சிவபெருமானின் ஐந்தொழில்ளும் ஐந்து ஆறுகளாய்த் திகழ்கின்றன. சித்தாந்த சந்தான பரம்பரையின் மூத்தவரான திருநந்தி தேவரின் ஊர் திருவையாறு.

    மேலும் சைவ சித்தாந்தத்தை உலகில் தாபித்த பரமாச்சாரியாராகிய திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. இறுதிக் கால வெள்ளத்திடையே ஒரு தோணி மேல் பெருமான் தோன்றிய தலம் சீர்காழி. ஆகவே இது திருத்தோணிபுரம் எனப்பெற்றது. இத்துடன் சிவபரம்  பொருளின் பெருமைகளை வெளிப்படுத்தும் பல தலங்கள் கொண்டது தென்திசை! ஆகவே, சேக்கிழார் ,’’ மாதவம் செய்த தென்திசை’’ என்றார்.

    இந்தத்  தென்திசையின் பெருமைமேலும்ஓங்கிடவே,சுந்தரர்,    ’’திருத்தொண்டத் தொகை’’, என்ற அருள்நூலை, திருத்தொண்டர் புராணத்தின்  முதனூலாக அளித்தார். சிவபிரானின் திருவருளை, மாதவத்தால்  பெற்ற தென்திசை தொண்டர்களின் பெருமையால் மேலும் உயர்ந்தோங்கியது. இதனையே சேக்கிழார் ‘’ தீதிலாத் திருத் தொண்டத் தொகை தர ‘’ என்கிறார். இதற்காகவே இறைவனருளால் உருவான சுந்தரர், கைலாய மலை நந்தவனத்தில் மலர் கொய்யப் போதுவார்  மேல் மனம் போக்கினார்!  இவையனைத்தையும் சொல்லுக்குச்சொல் நயம் தோன்றும் படிச் சேக்கிழார் பாடிய அழகிய பாடலின் திறம் போற்றுதற்கு உரியது!

    ========================================================================

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

       
    Share
  • களியைத் தந்தாய்

    காலை 4 மணிக்கு பெங்களூருவின் ஒரு வீதியில் தங்குமிட விலாசம் தேடிக் கொண்டிருந்தேன். காலைப் பனியும் பயணக் களைப்பும் இப்படியொரு களியை எனக்குக் காட்டியது! காற்றினில் தெரிவதும் நம் குருவே!

    கண்ணை மறைத்திடும் கார்முகில் கூட்டத்தில்
    காலம் கழிந்திருந்தேன்! – ஒரு
    காலையும் மாலையும் பாலகன் ஆசையைக்
    கவ்விப் பிடித்திருந்தேன்,
    எண்ண மனைத்திலும் ஏறிய மோகத்தில்
    எம்பிக் குதித்திருந்தேன் – வந்த
    ஏணியைத் தள்ளி யிகழ்ந்திட நாணின்றி
    எப்படியோ திரிந்தேன்!
    உண்மைப் பொருளை உணர மறுக்கின்ற
    உச்சத்தில் நானிருந்தேன் – சிறு
    ஊறுவந் தாலும் தடுக்குற்று பள்ளத்தில்
    உச்சிவிட் டேவிழுந்தேன்
    வண்ண மறிந்திடா வாழ்வினில் கண்முன்னே
    வானவில் கொண்டுதந்தாய் – குருவே
    வாடு மனத்தினில் தேடல் பயணங்கள்
    வார்த்துக் களியைத்தந்தாய்!

    நீயொரு சத்தியம் நீயொரு தத்துவம்
        நீயே இறைவடிவம் – உன்
    நிழலும் ரகசியம் நீண்டிடும் சிந்தனை
        நீளம் பரமசுகம்
    தீயொரு கண்ணெனக் கொண்ட தலைவன்
        திரட்டிய அன்புமுகம் – ஒரு
    திவ்ய சுருதியில் நெஞ்சில் ஒலித்திடும்
        தீட்சண்ய தேவசுரம்
    வாயொரு தீவினை நெஞ்சொரு தீவினை
        மாற்றி மாற்றித்தொடவே – ஒரு
    வன்மையி லாத வலிக்கரம் சிக்குற்று
        வாட்டத் துழன்றிடவே
    தாயொரு பக்கம் தளிரினைக் கவ்வித்
        தடங்கொண்டு சேர்ப்பதுபோல் – குருவே
    தாவும் மனத்தினில் ஆவல் அறுத்துடன்
        தண்மைக் களியைத்தந்தாய்!

    என்றனை ஓர்கணம் நான்விட்டு நீங்கி
        எடுக்கின்ற பார்வையிலும் – சிறு
    ஏழையின் நெஞ்சம் படும்துயர் கண்டதும்
        ஏந்திடும் வேர்வையிலும்
    குன்றினைப் போலக் குணமற்ற பேதங்கள்
        கூட வருவதிலும், – பல
    குட்டிக் கரணங்கள் இட்டுத் தினமொரு
        குற்றம் இழைக்கையிலும்
    நின்றன் அருட்பதம் தேடிப் பலபல
        நீசரைக் காண்கையிலும் – பின்னர்
    நிம்மதி வேண்டி நிழலில் உறங்கிட
        நீவந்து தொட்டதிலும்
    ஒன்றினைக் கண்டனன் யாவையும் உன்கரம்
        ஓட்டும் திரைகளென்றோ – குருவே
    ஒற்றை மலர்க்கரம் பற்ற மனத்தினில்
        ஓங்குங் களியைத்தந்தாய்!

    வேண்டுவ தின்நிழல் வேண்டுவ துன்குரல்
        வேண்டுவ துன்றன்மடி – பல
    வேகத்திலும் வரும் சோகத்திலும் பட்டு
        வெந்தழி யாதமதி
    ஆண்டகை யேயுன தன்பின் இருக்கையில்
        ஆசையற் றுய்திடுதல் – என
    தாவி முழுதிலும் தேவி திருவுரு
        ஆழ்ந்து பதிந்திடுதல்
    மாண்டு துடிக்க மரணமே சூழினும்
        மாறிடா வுன்நினைப்பு – என்
    மனதுத் தடத்தினில் உனது பதமலர்
        மன்னும் திருச்சிரிப்பு
    காண்டிப னுக்குக் கிடைத்ததைப் போலுன்றன்
        காந்த முழுவுருவை – குருவே
    காட்டித் துயர்களை ஓட்டிக் கவிதையில்
        காலக் களியைத்தந்தாய்!!

    விவேக்பாரதி
    10.06.2018

    Share
  • மீண்டும் வேண்டாம் !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நீ அன்றென்னை அழ வைத்தாய் !
    நினைவி ருக்கும் உனக்கு !
    ஏனென்று சிந்திப்பதில் பயனில்லை !
    நான் அழுதது உனக்காக !
    இப்போது நீ மனம் மாறினாய்.
    என் மனம் மாறுவதில் பயனில்லை !
    நான் அழுது முடித்தேன் .
    பழைய பாடல் வரியே நீ சொல்கிறாய்.
    ஏனென அறியேன் நான்.
    முன்பென்னைக் காயப் படுத்தினாய்.
    மீண்டும் காயப் படுத்து கிறாய் !
    வேண்டாம் !  வேண்டாம் !
    மீண்டும் இரண்டாம் தடவை  
    வேண்டாம் !
    நீ அன்றென்னை அழ வைத்தாய் !
    நினைவில் உள்ளதா ?
    ஏன் அழுதேன் தெரியுமா ?
    என்னை விட்டுச் சென்ற
    உனக்காக அழுதேன் !

    Share
  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 3

    -முனைவர் நா.பிரபு

    வாழ்க்கை வரலாற்று நூல்கள்

    எழுத்தாளர் விந்தன் அவர்கள் திரையுலக மேதைகளான எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஆர். இராதா ஆகியோரின் கலைப்பயண வரலாறுகளை நூலாக்கியுள்ளார். பாகவதரின் மறைவுக்குப் பின்னர் அவரது வரலாறு குறித்த தேவையான தகவல்களின் அடிப்படையில் ‘எம்.கே.டி. பாகவதர் கதை’ என்னும் நூலும் எம்.ஆர்.இராதா வாழும்போதே அவரிடம் நிகழ்த்திய உரையாடலின் மூலமாக உருவாக்கிய ‘நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்’ என்னும் நூலும் என இரண்டு நூல்களை வெவ்வேறு அடிப்படைகளில் உருவாக்கியுள்ளார்.

    பாகவதர் செவ்வியல் இசைப்பாடகராக, நாடக நடிகராக திரைப்படக் கலைஞராகப் புகழின் உச்சிக்குச் சென்றவர். இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்டது. இந்தச் சாதனை இதற்கு முன்பும் பின்பும் நடந்ததில்லை. நல்ல உடலழகும் குரல் வளமும் பெற்றிருந்ததன் காரணமாகத் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இவர் புகழ் பரவியிருந்தது. மலையாள மொழியிலும் இவர் குறித்த நூல்கள் வெளிவந்துள்ளன.

    எம்.ஆர்.இராதா அவர்கள் நாடகக் கலைஞராக அறிமுகமாகி திரைத்துறையில் கலகக்காரராக வலம் வந்தவர். திராவிட இயக்க உருவாக்கத்தின் கலைப்பின்னணியாகச் செயல்பட்டவர். எம்.ஆர். இராதாவின் வாழ்க்கையை அவரது சொந்தக் குரலிலேயே பதிவுசெய்துள்ளார். அவர் குறித்த அறிமுகமே இப்படித்தான் தொடங்குகின்றது.

    சக பத்திரிக்கையாளர் ஒருவர், “உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்” என்கிறார் வினயத்துடன்.

    “என் மனைவியை எதுக்கு கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லை!” என்று இராதா ‘பட்’டென்று பதிலளிக்கிறார்.

    சிறைச்சாலை அனுபவங்கள் என்று இவரது நூலுக்குத் தலைப்பினை வைத்துள்ளார் விந்தன் என்ற போதிலும் சிறைச்சாலைக்கு வெளியில் நிகழ்ந்த அவரது கலையுலக வாழ்க்கை குறித்தே இந்நூலில் மிகுதியும் உரையாடப்பட்டுள்ளது.

    இவ்விருவரது வாழ்முறையும் கலைப்பயணமும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. பாகவதர் தன்வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆழமான இறை நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். நடிப்பிலுங்கூட அதற்கு எதிராகச் செயல்பட மறுத்தவர். அன்று திராவிடக்கட்சியின் வளர்ச்சியில் தீவிரமாக இயங்கிய அண்ணாதுரை இவருக்காக நாடகம் எழுதி நடிக்கக் கேட்டபொழுதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தவர். ஆனாலும் அனைத்து அரசியல் இயக்கத்தவர்களுடன் நட்புமுறையில் பழகியவர்.

    நாடக வரலாற்றையும் சினிமா வரலாற்றையும் மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை இவ்விரு நூல்களும் முன்வைக்கின்றன. தமிழ் நாடகத்தின் தந்தை என்று சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்பல் சம்பந்த முதலியாரையும் குறிப்பிடும் வழக்கம் நாடக வரலாறுகளில் தொடர்கிறது. அவர்களின் பங்களிப்பினை மறுக்க இயலாதென்றாலும், இத்தகைய வரலாற்று கட்டுமானங்கள் பிற கலைஞர்களை நிராகரிக்க அல்லது மறக்கச் செய்துவிடுகிறது. இதிலிருந்து கலைஞர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. ஜகந்நாத அய்யரின் நாடகக் கம்பெனியில் இருந்த ராதாவின் அனுபவங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் போது, சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி விந்தன் கேட்கிறார். அதற்கு,

    “சங்கரதாஸ் சுவாமிகள் வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால் ‘இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா!’ என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.”

    “அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே?”

    அதை நான் ஒப்புக்கொள்ளமட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடையில்லாமல் எழுதுவார்….. அதெல்லாம் சரி. ஆனா இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராகத்தான் இருக்க முடியும். ஏன்னா இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது” (நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், ப:22) என எம்.ஆர்.ராதா கூறியதாகப் பதிவுசெய்துள்ளார்.

    இதே போன்று பாகவதர் வரலாற்றில் கதை-வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கிய இளங்கோவன் குறித்து எழுதும்போது,

    “இவர் உண்மையிலேயே அந்தத் துறைக்கு வேண்டிய தகுதியும் திறமையும் உடையவர். அத்துடன் இப்போது யாரோ வசனத்தில் ‘புரட்சி’ செய்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அந்தப் புரட்சியைக் கண்ணகி படத்தின் மூலம் எப்போதோ மெளனமாகச் செய்துவிட்டு, இன்றும் அதை வெளியே சொல்லாமல் மெளனமாக இருந்துகொண்டிருப்பவர். (எம்.கே.டி. பாகவதர் கதை, ப. 178) எனவும் எழுதியுள்ளார். இவ்விரு ஆளுமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளது உள்ளபடியேயும், எவருக்கும் அஞ்சாமலும் விந்தன் அவர்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    குட்டிக் கதைகள்

    ‘விந்தன் குட்டிக் கதைகள்’ என்னும் தொகுப்பில் விந்தன் எழுதிய குட்டிக் கதைகள், மகிழம்பூ ஆகிய இரு நூல்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன.

    பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியது ஆறாம் அறிவான பகுத்தறிவு என்று சொல்கிறோம். ஆனால் அந்தப் பகுத்தறிவால்தான் மனித சமூகத்தில் தன் தேவையை மீறிய ஆசை, அதன் காரணமாகப் பிறரை ஏய்த்துப் பிழைத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகள் முதலானவை உருவாயின. எனவேதான் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடலில் மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவு மனிதனுக்கு வழங்கப்பட்ட சாபம் என்று கடவுளை விந்தன் கூற வைக்கிறார்.

    ‘ஆறாவது’ என்னும் கதையில் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடல் பின்வருமாறு தொடர்கிறது.

    “எங்களுக்கில்லாத பகுத்தறிவை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத்தான் அவன் ‘ஆறாவது அறிவு’ என்கிறான்!” என்றது சிங்கம்.

    “நாசமாய்ப் போச்சு; அவனுக்கு நான் கொடுத்த சாபமல்லவா அது?”

    “சாபமா!”

    “சந்தேகமென்ன? எதையும் அறிய முயல்வதும், அறிந்தாலும் அதை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் நான் அவனுக்குக் கொடுத்த சாபம்தான்” என்றார் கடவுள் (விந்தன், ப. 13)

    விந்தன் கூறுவது எவ்வளவு உண்மை. இனிப்பு சாப்பிடுவது தனக்குக் கேடு விளைவிக்கும் என்பது ஒரு சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும்; குடிப்பது உடல் நலத்திற்குக் கேடானது என்று குடிகாரர்களுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அறிந்ததை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் பகுத்தறிவுடைய மனிதனுக்கு நடக்கின்றதே!

    மாடுகளைச் சந்தையில் பிறருக்கு விற்பதும், அவ்வாறு விற்கப்பட்ட மாடுகள் பழைய உரிமையாளரின் வீடு தேடி வருவதும் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வுதான். பணத்திற்காகப் பாசத்தை மறக்கும் மனித இனத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்ட ‘மாடும் மனிதனும்’ என்னும் கதையின் மூலமாக விந்தன் இந்நிகழ்வைப் பயன்படுத்துகிறார்.

    ‘ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தன்னை விற்றவனைத் தேடிக்கொண்டு வந்தது மாடு. வாங்கினவனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; “இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா?” என்று அதை ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கிவிட்டான்.

    வீறிட்டலறிய மாட்டை நோக்கி அதனுடன் வசித்த ஆடு கேட்டது:

    “விற்றவன் உன்னை அன்றே மறந்துவிட்டது போல நீயும் அவனை மறந்துவிட்டிருந்தால் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கமாட்டாயல்லவா?”

    கண்ணீரும் கம்பலையுமாக மாடு சொல்லிற்று:

    “அது எப்படி முடியும்? நான் மனிதனாகப் பிறக்காமல் மாடாக அல்லவா பிறந்துவிட்டேன்?”

    தன்னிடம் பாசமுடன் வளர்ந்த ஓர் உயிரை விட வெறும் காகிதமான பணம் மனிதனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் மாட்டுக்கு எத்தனை அடி வாங்கினாலும் தன்னை வளர்த்தவர் மீதான பாசமே பெரிதெனக் காட்டுகிறார்.

    இரவில் வீட்டுக்குக் கடைசியாக வந்த வீட்டுக்காரர் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்கிறார். இதைப் பார்த்த ஜன்னல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறது. ஏன் என்று கதவு கேட்க, மனிதனைக் காற்றில் வாழவைத்ததற்காக. இல்லையென்றால் உன்னைச் சாத்திவிட்டுச் சென்றதுபோல் என்னையும் சாத்திவிட்டுச் சென்றிருப்பார் அல்லவா? என்று ஜன்னல் சொன்னது.

    இதைக் கேட்டதும் “அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்?” என்ற அலுப்பும் சலிப்புமாக ஆரம்பித்த கதவு, திடீரென்று தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “உன்னிடம் நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றது ஜன்னலிடம்.

    “சொல்லு?” என்றது ஜன்னல்.

    “இப்போதெல்லாம் மனிதன் தன்னைப்போல் மனிதனை நம்புவதில்லை; என்னைப்போன்ற கதவைத் தான் நம்புகிறான்!” என்றது கதவு. இவ்வாறு மனிதச் சமூகம் தன் சக மனிதனை நம்பாமல் உயிரற்றப் பொருட்களான கதவு, ஜன்னல், பூட்டை நம்பும் நிலைக்கு வந்ததனை ‘கதவும் மனிதனும்’ என்னும் கதையில் விந்தன் ஏளனத்துடன் பதிவு செய்கிறார்.

    எளியவரிடம் மட்டுமே தம் வீரத்தைக் காட்டி, வலியவரிடம் வளைந்து குழையும் பெரும்பான்மையான மனிதர்களின் மனநிலையை விந்தன் அவர்கள் ‘வீரம்’ என்னும் கதையில் கட்டைவண்டி, மகிழ்வுந்து (கார்), ரயில் ஆகியவற்றைக் கொண்டு சித்தரிக்கிறார். மெதுவாக அசைந்து சென்றுகொண்டிருக்கிறது ஒரு மாட்டுவண்டி. அதன் பின்னால் வந்த மகிழ்வுந்து ஒன்று “ஏய், சனியனே! ஒதுங்கிப் போ! என்று மிரட்டி விரட்டிற்று.

    “மரியாதைக் குறைவாகப் பேசாதே! என்ன இருந்தாலும் உனக்கு நான் மூத்தவன் என்பதை மறந்து விடாதே!” என்றது மாட்டுவண்டி.

    “மூத்தவனாவது, கீத்தவனாவது! யாராயிருந்தாலும் என்னைக் கண்டதும் ஒதுங்கி வழி விட்டால்தான் ஆச்சு; இல்லாவிட்டால் அவர்களை நான் மோதி மிதித்து விடுவேனாக்கும்!” என்று கார் உறுமிற்று.

    “ஐயோ வேண்டாம் அப்பனே! இதோ நான் ஒதுங்கி விடுகிறேன்; நீ போ, கன ஜோராகப் போ!” என்று ஒதுங்கி வழி விட்டுவிட்டது மாட்டுவண்டி.

    அது சொன்னபடியே கன ஜோராகப் போன காரை “எங்கே, என்னை மோதி மிதித்து விடு பார்ப்போம்?” என்பதுபோல் ஒரு ரயில்வே கேட் தடுத்து நிறுத்தியது.

    வேறு வழியில்லாமல் நின்ற காரை நெருங்கி, “அந்த ரயில் மட்டும் உன்னைக் கண்டதும் ஏன் அப்பா ஒதுங்கி வழி விடவில்லை?” என்று மாட்டு வண்டி கேட்டது.

    கார் வாயைத் திறக்கவில்லை!’

    தமக்குக் கிடைக்கும் சில சலுகைகளுக்காக அடிமை வாழ்வில் சுகம் காண்பவர்களை எள்ளி நகையாடும் விதத்தில் ‘சுதந்திரம்’ என்னும் கதையை விந்தன் எழுதியுள்ளார். இக்கதையில் நாயொன்று கட்டப்பட்டிருக்கிறது. அதன் எதிரே கிளி ஒன்று கூண்டில் அடைபட்டிருக்கிறது. இரண்டுமே சுதந்திர வாழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. அப்பொழுது அவ்வழியாக வந்த குரங்கொன்று அவை இரண்டையும் விடுவிக்கின்றது. இரண்டுமே விடுதலை கிடைத்த மகிழ்ச்சியோடு வெளியேறுகின்றன.

    ‘சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தன்னால் விடுதலை செய்யப்பட்ட கிளியைச் சந்தித்த குரங்கு, “எப்படி இருக்கிறது, விடுதலை?” என்று கேட்டது.

    “ஆனந்தம், பரமானந்தம்!” என்றது கிளி, கன குஷியுடன்.

    ‘மகிழ்ச்சி!” என்ற குரங்கு அதனுடன் விடுதலை செய்யப்பட்ட நாயை நோக்கி, “எப்படி இருக்கிறது, சுதந்திரம்?” என்று கேட்டது.

    “சுத்த மோசம்! காலையில் பால், மத்தியானம் இறைச்சி, மாலையில் பிஸ்கெட், இரவு மறுபடியும் பால் – இதெல்லாம் இந்தச் சுதந்திர வாழ்வில் எங்கே கிடைக்கிறது? ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும் ஒரு கவளம் எச்சில் சோற்றுக்கு ஓராயிரம் நாய்களுடன் போட்டியல்லவா போட வேண்டியிருக்கிறது? என்றது நாய், வெறுப்புடன்.”

    அடிமை வாழ்வை நினைத்து ஏங்கும் நாயை நினைத்து “சுதந்திரத்தில் கூட எல்லோருக்கும் சுகம் கிட்டி விடாது போலும்?” என்று குரங்கு சொல்லிற்று என உலக நடப்பியலைப் பதிவு செய்கிறார்.

    நன்றி மறக்கும் தன்மைக்கு குளத்துப் பறவைகளைச் சான்றாகக் காட்டுவர். இதனை வேறொரு கோணத்தில் ‘ஆலமரம்’ என்னும் கதையில் விந்தன் பார்க்கிறார். ஆலமரம் துளிர்த்துப் பூத்துக் குலுங்கும் காலத்தில் பறவைகள் அங்கேயே தங்கி உண்டு மகிழ்ந்தன. மரம் வாடியதும் பறவைகள் இரை தேடி வேறிடத்துக்குப் பறந்தன. அப்போது அருகிலிருந்த அரசமரம் “என்ன நன்றி கெட்ட பறவைகள் அவைகள்! எல்லாம் இருக்கும் வரைதான் அவற்றின் உறவுபோலும்?” என்றது ஆலமரத்திடம். ஆலமரம் சிரித்துச் சொல்லிற்று: “உனக்கும் எனக்கும் உள்ள இடத்திலேயே உணவு கிடைப்பதுபோல் அவற்றுக்கும் கிடைத்தால், அவையும் நன்றியுள்ள ஜீவன்களாய்த்தான் இருக்கும்!”

    மனிதன் வாழும் சூழல், அவனது பொருளாதார நிலைமை, அவனுக்குக் கிடைக்கும் கல்வி போன்ற பல காரணங்கள் ஒரு மனிதனின் குணத்தை, நடத்தையை நிர்ணயிக்கிறது. மனித இனத்தில் சிலர் கொலைகாரர்களாய், போக்கிரிகளாய், விபசாரிகளாய் வாழ்வதற்கு அவர்களின் சூழலும் தேவையுமே காரணம். அவர்களின் பொருளாதாரத் தேவைகள் உயர் வகுப்பினர்போல் நிறைவடைந்தால் அவர்கள் இவ்வாறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை ‘ஆலமரம்’ என்னும் கதை உணர்த்துகிறது.

    ஒரு மனிதன் வாழ இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தூக்கிட்டுக் கொள்கிறான். இதைப் பார்த்த பறவைக் குஞ்சு தனது தாயிடம், “அதெல்லாம் நமக்குக் கிடைக்கும்போது அவனுக்கு மட்டும் ஏன் அம்மா கிடைக்கவில்லை?”

    தாய்ப்பறவை சொல்லிற்று:

    “அவன் அடைந்த நாகரிகம் அப்படி! அவனும் நம்மைப் போல் இந்த உலகத்தில் எதற்கும் உரிமை கொண்டாடாமல் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கும் நமக்குக் கிடைப்பதுபோல் எல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் எப்போது இது உன்னுடையது, அது என்னுடையது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தானோ, அப்போதே அவனுக்கு இங்கே எதுவுமே உரிமையில்லாமல் போய்விட்டது!”.

    மனிதச் சமுதாயம் தனது புராதனப் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பை மறந்து ‘நாகரிகம்’ பெற்ற தனியுடைமைச் சமுதாயமாக மாறியதுதான் சமூகம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்னல்களுக்குக் காரணம் என்பதை ‘நாகரிகம்’ என்னும் இக்கதையில் விந்தன் உணர்த்துகிறார். தனக்கென்று ஒரு காணி நிலம் இருந்தால் கஞ்சிக்கு ஏன் அலையப் போகிறேன் என்று பலர் பெருமூச்சு விடுவதைப் பார்த்த மண் தன்னையொத்த இயற்கைப் பொருட்களான நெருப்பு, காற்று, நீர், வான் ஆகியவற்றை நோக்கி,

    “நீ எல்லோருக்கும் சொந்தமாயிருக்கிறாயே, நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்?” என்று கேட்டது.

    அதற்குப் “போடி பைத்தியமே! உன்னிடம் இருக்கும் பொன்னை நீ ஏன் மனிதனுக்குக் காட்டினாய்? அதனால் தான் எங்களைப்போல் உன்னால் எல்லோருக்கும் சொந்தமாயிருக்க முடியவில்லை!” என்றது வானம்.

    இக்கதையின் மூலம் மனித சமூகம் பொருளாசையால், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் மனிதத்தன்மை இழந்து நிற்பதை விந்தன் உணர்த்துகிறார்.

    விந்தன் கடவுள் நம்பிக்கை கொண்டவரா? கடவுள் நம்பிக்கை அற்றவரா? என்பதை ‘விந்தன் குட்டிக்கதைகள்’ என்னும் நூலின் அடிப்படையில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ‘தன்னம்பிக்கை’ என்னும் கதையில் நாட்டுப் பசுவொன்று குளத்தங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த புலி நாக்கைச் சப்புக் கொட்டிற்று. இதைக் கண்ட பசு “ஏ! அறியாமை நிறைந்த புலியே! நீயும் நானும் ராம ராஜ்ஜியத்தில் எப்படி ஒற்றுமையாய் இருந்தோம் தெரியுமா?” என்று பல்வேறு சான்றுகள் மூலம் ஆராய்ச்சி பூர்வமாகப் வலியுறுத்திக் கூறியது. புலியோ அதன் கூற்றை எள்ளல் செய்து அதனைக் கொன்று தின்ன வருகிறது. இதனைக் கண்ட பசு, “அட ராமா, உன்னை நம்பிய எனக்கா இந்தக் கதி?” என்று புலம்பிற்று பசு.

    “உனக்கென்ன, தன்னை நம்பாத எவனுக்குமே இந்தக் கதைதான்! – நீ மட்டும் அவனை (ஆண்டவன்) நம்பாமல் உன்னையும் உன் கொம்புகளையும் நம்பியிருந்தால் இந்நேரம் என்னை விரட்டியிருக்கலாமே!” என்று அதன்மேல் பாய்ந்துவிட்டது புலி.

    இக்கதையின் அடிப்படையில் விந்தன் அவர்களைக் கடவுள் நம்பிக்கை அற்றவராக மதிப்பிடலாம். ஆனால் அவர் ‘புதிய புராணம்’ என்னும் கதையை நாராயணனுக்கும் நாரதருக்குமான உரையாடலாய் எழுதுகிறார். இக்கதையில் நாரதர் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக நாராயணனிடம் செல்கிறார். நாரதர் ‘ஏழைகளுக்கு வீடு கட்டித் தருபவர்கள் பெயர் நிலைத்து நிற்குமா? அல்லது தங்களுக்கு கோவில் கட்டித் தருபவர்களின் பெயர் நிலைத்து நிற்குமா?’ என்று தன் சந்தேகத்தை நாராயணனிடம் முன்வைக்கிறார்.

    நாராயணன், ‘எவனொருவன் இயற்கையின் உபாதைகளுக்கு அடிக்கடி ஆளாகும் ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏற்றமிகு மாளிகைகளைக் கட்டித் தருகிறானோ, அவன் பூதவுடலை நீத்ததும் என்னை வந்து அடைந்துவிடுகிறான். எல்லாம் வல்ல எனக்காகக் கோயில் கட்டுபவன் எனை வந்து ஒரு நாளும் அடைவதில்லை; என்னுள் ஐக்கியமாவதும் இல்லை. இதனால் ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களைச் சிரிக்க வைப்பவனின் பெயர் மண்ணுலகில் மறைகிறது; விண்ணுலகில் நிலைக்கிறது. எனக்குக் கோயில் கட்டித் தருபவனின் பெயரோ மண்ணுலகில் நிலைக்கிறது; விண்ணுலகில் மறைகிறது. – இதுதான் உண்மை என்றார் நாராயணன். இவ்வாறு இருவேறு தளங்களில் விந்தன் பயணித்திருப்பினும் பெரும்பான்மை அவர் மனிதத்தையே முன்னெடுத்துள்ளார்.

    சாதிய முரண்பாடு, வர்க்க முரண்பாடு குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்கும் ஆண் மனதும் கூட ஒடுக்கப்பட்ட பாலினமான பெண்கள் குறித்துத் தன் நனவிலி மனத்தில் கேலியையும் கிண்டலையும் புதைத்து வைத்துள்ளது. ‘மாட்டுத் தொழுவம்’ என்னும் தன் சிறுகதையில் பெண்ணினம் இந்தச் சமூகத்தில் மாட்டைவிடக் கேவலமாக நடத்தப்படுவதனை நேர்த்தியாகப் பதிவு செய்தவர் விந்தன். அவரே கூட தனது குட்டிக் கதைகளில் பெண்களை ஏளனத்துக்கு உள்ளாக்குகிறார். ‘பெண்ணின் பெருமை’ என்னும் கதையில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையைக் கண்டு பூரிக்கிறாள் எஜமானி. அதற்கு விந்தன் ‘அடடா! என்ன சந்தோசம், என்ன சந்தோசம்! தன் சொந்த புத்திக்கு வேலை கொடுக்காதவர் யாராயிருந்தாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது!’ என்று கூறுகிறார். ‘கடமை’ என்னும் கதையில் பரிசு கொடுத்தால்தான் பெண்கள் புன்னகை பூப்பர் என்று எள்ளல் செய்கிறார். ‘முடியவில்லை’ என்னும் கதையில் குடும்பத் தலைவர் ஒருவர் பொங்கலையொட்டி பழைய சாமான்களை எல்லாம் அகற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது வந்த அவரது நண்பர், “வேலை முடிந்துவிட்டது போலிருக்கிறது; வேண்டாத சாமான்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து விட்டீர்கள் போலிருக்கிறது!” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார்.

    “ஆமா; இன்னும் ஒரே ஒரு சாமான்தான் பாக்கியிருக்கிறது. அதை எடுத்து வெளியே எறிய என்னால் முடியவில்லை!” என்றார் கிரகஸ்தர்.

    “அது என்ன அப்படிப்பட்ட சாமான்?” என்று நண்பர் நெருங்கி ஆவலுடன் கேட்டார். “வேறு என்னவாயிருக்க முடியும்? என் மனைவிதான்!’ என்றார் கிரகஸ்தர் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே.

    அவ்வளவுதான்; “எங்கே அப்பளக் குழவி?” என்று உள்ளே யாரோ உறுமும் சத்தம் கேட்டது. வந்தவர் எழுந்து பிடித்தார் ஓட்டம்!’ இக்கதை விந்தனுடைய எழுத்துகளைப் போல் அல்லாமல் வெகுசனப் பத்திரிக்கைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்கைப் போல இருக்கிறது. வெகுசனப் பத்திரிகையின் தேவைக்கு இம்மாதிரியான தீனியை விந்தன் போன்றவர்களும் போடவேண்டிய சூழல் நெருக்கடி நிலவியது போலும்.

    இந்த உலகத்தில் தன்னால் முடியாத காரியம் என்று எதுவுமில்லை என்று கர்வம் கொண்டிருக்கிறான் ஒரு விஞ்ஞானி. ஒரு முதியவர் அவனிடம் ரோஜா மொட்டு ஒன்றைக் கொடுத்து மலரவைக்கச் சொல்கிறார். அவனும் அன்று முழுவதும் தன் ஆய்வுக் கூடத்தில் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். மறுநாள் காலை இயற்கையாக செடியிலிருந்த ரோஜா மொட்டுக்கள் தானாக மலர்ந்து மணம் வீசின. மணம் வந்த திசையை நோக்கித் திரும்பிய விஞ்ஞானி “இத்தனை மொட்டுக்களையும் இவ்வளவு அழகாக இவற்றுக்கு அருகில்கூட வராமல் மலர வைத்தது யார்?” என்றான் வியப்புடன். முதியவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். இப்படித்தான் மனிதர்கள் அறிவியலில் வளர்கிறேன், நாகரிகம் அடைகிறேன் என்று இறுதியில் இயற்கைக்கும் தனக்குமான சங்கிலியை அறுத்துவிடுகின்றனர். நிலநடுக்கத்தையும், ஆழிப்பேரலையையும் நாயாலும் யானையாலும் உணர முடிகிறது; மனிதனால் முடியவில்லை. இயற்கைக்கும் செயற்கைக்குமான போட்டியில் எவ்வளவு முயன்றாலும் மனிதனால் இயற்கையை வெற்றிக் கொள்ள முடிவதில்லை என்பதை இக்கதையில் உணர்த்துகிறார்.

    விந்தன் எழுதிய ‘செந்தமிழ் நாட்டிலே’ என்னும் கதை வாழும்போது எழுத்தாளனைக் கண்டுகொள்ளாத சமூகம் அவன் இறந்த பின்பு அவனையும் அவன் எழுத்துகளையும் கொண்டாடுவது குறித்த எள்ளலே. வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் கொள்கைக்காகத் தனது எழுத்துப் பணியைக் கடும் வறுமையிலும் தொடர்கிறார் எழுத்தாளர் சதானந்தம். அவரின் எழுத்தைத் கொண்டாடவோ அவருக்கு உதவி செய்யவோ யாருமில்லை. அவர் சூரிய கிரகணத்தன்று கடலில் மூழ்கி இறந்துவிட்டார் என்று தெரிந்தும் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்; ரசிகர்கள் உதவித்தொகைத் திரட்டி அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அவரது சந்ததியார்களைப் பற்றி எழுதிப் பணம் சேர்க்கின்றனர். ஆனால் பிறரை இறந்த பிறகும் வாழவைக்கும் சதானந்தமோ இறக்கவில்லை; அவர் தமிழ் நாட்டில் பிழைக்க முடியாமல் வட நாட்டுக்குச் சென்று இந்தியில் நாவல் எழுதுகிறார்; அது மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வருகிறது. இவ்வாறு ஒரு எழுத்தாளரின் வாழ்வையும் வலிகளையும் எள்ளலுடன் தம் கதையில் பதிவு செய்தவர் விந்தன். அதேபோல் மற்றொரு கதையான ‘சமதர்மம்’ என்னும் கதையில், கடைத்தெருவைக் கூட்டம் வந்து மொய்க்கும் நேரம். தன் கடையிலிருந்த பழங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் கடைக்காரன்.

    புது மெருகு ஏற்றப்பட்ட ஆரஞ்சுப் பழம் ஆற்றாமையுடன் பொருமிற்று.

    “நம்மையெல்லாம் துடைத்து வைப்பதோடு சரி; அந்த ஆப்பிள் பழத்துக்கு மட்டும்…..”

    “என்னவாம்?” என்று இடைமறித்துக் கேட்டது திராட்சை.

    “வெள்ளைக்கலை உடுத்தி, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளை அரியாசனத்தில் ஏற்றி……”

    ‘ஓ’ அதைச் சுற்றி வைத்திருக்கும் அந்த மெல்லிய வெள்ளைக் காகிதத்தைச் சொல்கிறாயா? ஆமாம்! ஆமாம்!, அதற்கு எப்போதுமே ஒரு தனி அலங்காரம்தான்! என்று அது சொன்னதைத் திராட்சை ஆமோதித்தது.

    “ஏன், இருக்கக் கூடாதா? அது உன்னைப்போல் கன்னங் கரேலென்றா இருக்கிறது? எப்போதுமே அது தன் அழகிலும் தனி, மதிப்பிலும் தனி! என்றது அன்னாசி. மாதுளை திரும்பி, “யாரது, பைன் ஆப்பிள் சாரா? யு ஆர் கரெக்ட்! முள்ளம்பன்றி போல் இருக்கும் உமக்குச் சாதாரண பன்றிபோல் இருக்கும் ஆப்பிள் தன் அழகிலும் தனியாய்த்தான் தெரியும்! மதிப்பிலும் தனியாய்த்தான் தெரியும்” என்றது எரிச்சலுடன்.

    அப்போது அழுகிப்போன ஆரஞ்சுப்பழம் ஒன்றோடு, கன்றிப்போன ஆப்பிள் பழம் ஒன்றையும் எடுத்துக் கடைக்காரன் குப்பைத் தொட்டியில் விட்டெறிய, “வாழ்க, சமதர்மம்!” என்றது வாழைப்பழம்.

    “ஸ்…. பேசாதே! மனிதர்களுக்குச் சமதர்மம் சுடுகாட்டில் கிட்டுவதுபோல், நமக்குக் குப்பைத் தொட்டியிலாவது கிட்டட்டும்!” என்று சொல்லி அதன் வாயை அடக்கிற்று திராட்சை” என்று இவ்வுலகின் சமதர்ம நிலையினை காட்டுகிறார்.

    ‘புகழரசி’ என்னும் குட்டிக் கதையிலும் எழுத்தாளரின் வாழ்வே மையம். காலதேவனுக்கும் புகழரசிக்கும் இடையிலான உரையாடலாக இக்கதையை விந்தன் அமைத்துள்ளார். இந்தத் தொகுப்பில் இருக்கக் கூடிய கதைகளிலே அதிகப் பக்கங்களைக் கொண்ட கதையும் இதுதான். எழுத்தாளர்கள் வாழும்போதே புகழ் அவர்களை ஏன் அடையவில்லை என்று காலதேவன் கேட்பதே இக்கதையின் மையம். இதற்குக் “கலைஞன் உயிரோடிருக்கும்போது அவனுடைய குற்றங்கள் பெரிதாகவும் கலைத்திறன் சிறிதாகவும் ஜனங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே, என்னுடைய அருள் ஒரு கலைஞனுக்கு அவனுடைய ஜீவிய காலத்தில் நியாயமாகக் கிடைத்தாலும், ஏதோ காரியார்த்தமாக நாலுபேர் சேர்ந்துகொண்டு அவனைத் தூக்கி விடுவதாக ஜனங்கள் புறம் பேசுகிறார்கள். அசூயையும் பொறாமையும் சேர்ந்து அவர்களுடைய உள்ளத்தை அவ்வாறு மாசுபடுத்தி விடுகின்றன!” என்று புகழரசி பதில் கூறுகிறாள். விந்தனின் இவ்விரண்டு கதைகளும் அவர் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை போலவே உள்ளன; வாழும்போது பாட்டாளியாய் வாழ்ந்து பாட்டாளிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவுமே வாழ்ந்தவர்; அவர் இறந்தபிறகு தன் எழுத்துகளால் பிறரை வாழவைக்கிறார். 

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    ***** 

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

    Share
  • செங்கம்  வட்டார நடுகற்களில் பாணரசர்கள் – வரலாற்று நோக்கு

    -முனைவர். இரா. மூர்த்தி

    பண்டைய காலத்தில் வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழ் நிலப்பரப்பில் பாணர்கள் எனும் பிரிவினர் வாழ்ந்து வந்தனர். இடம்விட்டு இடம் நகர்ந்து தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டதால் இவர்களது வாழ்வு அலைகுடி வாழ்வாகக் கருதப்பட்டது என்று சங்கப்பாடல் வாயிலாக விளங்கிக் கொள்ள முடிகின்றது.

    இப்பாணர்களில் பலர் சிற்றசர்களையும், பேரரசர்களையும் வாழ்த்திப் பாடி, ஆடி மகிழ்வித்து தமக்குத் தேவையான பொன்னும் பொருளும் பெற்று வந்தனர். பாண்மகளிர்கள், விறலியர்கள் அரசர்கள் முன்னிலையில் பாடிக்கொண்டு ஆடவும் செய்துள்ளனர். அத்தகைய ஆடல்களைக் கண்டு அரசர்கள் நாணயங்கள், பொன்னலாகிய ஆபரணங்கள், உடைகள்,  நாடுகள், ஊர்கள், கள் (உணவு) ஆகியன வழங்கி சிறப்பித்து மகிழ்ந்ததோடு முறையாகச் சென்று வழியனுப்பவும் செய்துள்ளனர்.

    பாணர்களில் சிலர் அரசர்கள் மட்டுமின்றி நிலக்குடிகளிடம் சென்று பாடி, ஆடி மகிழ்ந்து தேவையான தானியங்களையும், உணவினையும் பெற்று வந்துள்ளனர். பாணர்களில் சிலர் திணைக்குடிகளிடம் சேர்ந்து மக்களோடு மக்களாக வீதிகளில், தனி வீதிகளில் வாழ்ந்து வந்துள்ளதை ஆற்றுப்படை வெளிக்காட்டுகிறது.

    இருப்பினும், பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களது ஆட்சிக் காலத்தில் பாணர்களில் ஒரு பிரிவினர் சிற்றரசராகவும், படைத்தளபதியாகவும், போர்வீரராகவும், அரசர்களுக்கு ஆலோசனைகள் கூறுபவராகவும் இருந்துள்ளனர். அவை குறித்துக் செங்கம் கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளன. மேற்கூறிய கருத்தாக்கத்தைக் கொண்டு சங்க இலக்கியங்கள் பதிவு செய்யும் பாணர்கள், பாண அரசர்களின் வாழ்வு, அவர்களது ஆட்சிப் பகுதியினைச் செங்கம் கல்வெட்டில் கூறும் பாணஅரசர்களின் வாழ்வு மற்றும் செங்கம் பகுதி களஆய்வு மூலம் கிடைத்த தரவுகள் வாயிலாகப் பாணர்களின் வாழ்வினை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் மையமாகும்

    பாணர்கள் – விளக்கம்

    பாணர்கள் என்போர் தமிழ்க் குடியின் தொல்குடியினராவர். இப்பாண் மரபினர் பல திறப்பட்ட இனமக்களின் கூட்டுக் கலைஞர்களாவர். அவர்களைப் “பாணர், பொருநர், கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர் எனச் சுட்டுகின்றனர். வீரயுகக் காலத்தில் முதன்மையான கலைஞர்களாகப் பாண்மரபினரே முன் வைக்கப்பட்டனர். இப்பாணர் என்ற சொல் புறநானூற்றில் மட்டும் இருபத்தாறு இடங்களில் வருகின்றது.”1 (க.காந்திதாசன்-சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல்.ப.15) என்கிறார். தொல்காப்பியத்தில், “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்”(தொல்.புறத்.36)” 2 என்றும்,

    “துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
    இந்நான் கல்லது குடியுமில்லை”
    3 (புறம்.335:7-8)

    என்று புறநானூற்றுப்பாடலும் புலப்படுத்துகின்றது. ஆற்றுப்படைகள் பாணர்களில் சிலரை,

    1. சீறியாழ்ப்பாணர் – சிறுபாணர்
    2. பேரியாழ்ப்பாணர் – பெரும்பாணர்
    3. மண்டையாழ்ப்பாணர் – மண்டைப்பாணர்
    4. இசைப்பாணர் – பனுவல்பாடுநர் என்று வகைப்பத்திக் கூறவும் செய்துள்ளன. 

    இலக்கியங்களில் பாணர்கள்

    சங்க காலத்தில் பாணர்கள் அரசியல் தூதுவர்களாகவும், அரசர்களுக்குள் போர் மூளாமல் போரினைத் தடுத்தும், துன்பம் நிகழாமல் காக்கவும் முயற்சி செய்துள்ளனர். அதே நேரத்தில் நாடாளும் மன்னர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்துள்ளனர். இதனை,

    “விழவு அயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
    எழாஅப் பாணன் நன்னாட் டும்பர்”
    4 (அகம்.113)

    என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. அப்பாணன் நாடு தமிழகத்திற்கு வடபுலம் சார்ந்திருந்தது என்பதை “வடாஅது பல்வேற் பாணன் நன்னாடு” 5 (அகம்.325) எனும் பாடல் வாயிலாக அறியமுடிகிறது. அந்நாடானது பாலியாற்றின் வடகரையில் இருந்ததென்றும், அங்கிருந்த பாண்மலை குறித்த செய்தி கல்வெட்டின் வழியாக அறிய முடிகிறது. அந்நாட்டினர் வாணர், வாணாதிராயர், வாணதரையர் என்று பெயர் சுட்டப்பெறுகின்றனர். இப்பெயர்களே பல்லவர்களுக்கு உட்பட்ட பல்லவர்களது ஆட்சி காலத்தில் வழங்கவும் படுகிறது.

    உரையூர் வெளியன் தித்தன் என்பான் நாட்டில் பாணன் ஒருவன் இருந்தான். கங்க நாட்டுக் கட்டி என்பான் அப்பாணனோடு மோதவந்து தித்தனும், பாணனும் கட்டிய பறையார்ப்பு, படையார்ப்பு இரண்டையும் கண்ட ‘கட்டி’ தோற்று ஓடிவிட்டான் இதனை,

    வலிமிகு முன்பின் பாணனொடு மலிதார்த் தித்தன் ஆர்ப்பு” 6 (அகம்.226)

    “பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி
    எதிர் தலைக் கொண்ட ஆரியப் பொருநன்” 7 (அகம்.386) என்று குறிப்பிடுகின்றது அகநானூறு.

    ஆரிய நாட்டைச் சேர்ந்த பொருநன் ஒருவனும் குட்டை நாட்டைச் சேர்ந்த கணையன் ஒருவனும் ஒன்றுகூடி அப்பாணனோடு போருக்கு வந்து தோற்றுள்ளனர். இப்பாணர்கள் தம்முடைய திறனாலும் சிறப்பாலும் வேந்தர்களிடமிருந்து நாடுகளைப் பெற்றுள்ளனர். பாண்டிய நாட்டில் மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதனைப் பாணனுக்கு வழங்கியுள்ளனர். அந்நாட்டுத் தலைவன் வாணன் மதுரையைக் கைப்பற்றி அதனைப் பாணனுக்கு வழங்கியுள்ளான்.

    “பொன்னி வளநாடு பாணன் பெறப் புரிந்தான்
    பாணன் மதுரைப் பதியினை வைத்த பிரான்”
    8  (பெருங்.188-191)

    என்ற பாடல் வரி சுட்டுகிறது. அகநானூற்றில் சொல்லக்கூடிய பாணன் நன்னாடு, பாலியாறு, பாண்மலை கல்வெட்டில் செல்லக்கூடிய வாணவர், வாணாதிராயர், வாணதரையர், ஆரிய நாட்டுப் பொருநன், குட்டநாட்டுக் கணையன் பாண்டிய மன்னன் பொன்னி வளநாடு (சோழநாடு), பாணன் மதுரைப்பதி இவைகள் அனைத்தும் பாணர்களின் வாழ்வு வெளிப்பாட்டை, அரசாட்சியை, போர்த்திறத்தைச் காட்டுகிறது. இப்பெயர் சொல்லாட்சிகள் செங்கம் பகுதியில் கிடைக்கும் நடுகற்களிலும் கிடைக்கிறது. ஆக, பாணர்கள் சங்க காலத்தில் தமிழ்நிலம் முழுவதும் இருந்துள்ளது தெரிய வருகிறது.

    இதில் பல்லவர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குறுநில மன்னர்களாகவும் சோழர், பாண்டியர்களுக்கு மத்தியில் போர்வீரர்களாவும், படைத்தளபதியாகவும், பசுக்களைக் கவர்ந்து மீட்டுவரக்கூடியவர்களாகவும் இருந்துள்ளனர்.

    செங்கம் வடஆர்க்காடு, தருமபுரி – பெரும்பாணஅரசர்கள், போர்வீரர்கள்
    மதுரை, நெல்லை   – இசைப்பாணர்கள்
    தஞ்சை (சோழநாடு)   – குறுநில மன்னர்கள், படைத்தளபதியாக இருந்துள்ளனர்.

    கல்வெட்டுகளில் பாணரசர்

    வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட வீராணம் என்னும் ஊரில் ஆய்னாரப்பன் கோயில் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. இக்கல் கி.பி.9 – ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கம்பவர்மனின் 14-ஆம் ஆட்சி ஆண்டில் நடப்பட்டது. இங்குள்ள கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் ஏந்திய நிலையில் உருவத்தின் மேற்பகுதியிலும், வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இக்கல்லில் “பல்லவ மன்னன் கம்பவர்மனது பதினான்காவது ஆட்சி ஆண்டில், பாண அரசன் வயிரமேகன் வாண கோட்டியையும், இலாடைப்பாடியையும், மிலாட்டையும், சோழ நாட்டைச் சேர்ந்த காவிரியின் வடகரையிலுள்ள பகுதிகளையும் ஆள்கின்றபோது, வேணாடு முந்நூரையும், எயில்நாடு ஐந்நூரையும் ஆண்டு வந்த நந்திப் பெருமானார் மகன் அக்கழி மல்லன் என்பார் வெண்ணத்தையும், சாத்தனூரையும் ஆண்டு வந்தார். அச்சமயம், மங்கள நாட்டைச் சேர்ந்த மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கியது. அப்போது வெண்ணத்தைச் சேர்ந்த மழநாடன் மொடப்பன் பின்பு சென்று போரிட்டு வேணாட்டெல்லையில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.” 9(செ.நடு: ப.9)

    “சோழ மன்னன் முதலாம் பராந்தகனின் நான்காம் ஆட்சி ஆண்டில் பாண அரசர் வேட்டுவதிரையரின் ஆளும் மேற்கோவலூர் நாட்டைச் சேர்ந்த அளவில் பாடியில் வாழும் ஆந்தைப்பொன்னி என்பானுடன் போரிட்டு வீரமரணம் அடைந்துள்ளான்.”10 (செ.நடு.ப.8) இச்செய்தி செங்கம் வட்டத்திலுள்ள அய்த்தாம்பாளையம் எனும் ஊரில் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. இதன் பெயர் தற்போது வேடியப்பன் கோவிலாகும்.

    பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனின் இராண்டாம் ஆட்சி ஆண்டில் பாண அரசரின் சேவகரும் மேல் கொன்றை நாட்டைச் சேர்ந்த மேல் வேளூரை ஆள்பவருமான பனையாமாரியார்”11 (செ.நடு.ப14) என்பார் ஆநிரைகளைக் கவர்ந்தபோது வீரமரணம் அடைந்துள்ளார். இங்கு ஆட்சி செய்த மன்னன் பாணர் ஆவர். அவர்களுடைய ஆட்சிப் பகுதி வேளூராக இருந்துள்ளது.

    பாணர்கள் ஆநிரைகளை மீட்டலுக்காக இறத்தல்

    செங்கம் வட்டம் சே.கூடலூர் ஏரிக்கரையிலுள்ள சுடுகாட்டின் அருகில் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாணர்களின் நடுகல் நடப்பட்டுள்ளது. இதில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் முப்பத்தெட்டாவது ஆட்சி ஆண்டில் பாண அரசருடைய மருமக்களான கந்த விண்ணனார் கூடலில் ஆநிரை கவர்ந்தபோது பொன்னாரம்பணார் கொல்லச் சேவகன் காகண்டி அண்ணாவன் என்பவன் அவ்வாநிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்துள்ளான்.” 12 (செ.நடு.ப.12)

    பாண அரசர்கள்

    தருமபுரி பகுதியிலும் அதனை அடுத்த செங்கம் பகுதியிலும் கிடைக்கின்ற நடுகற்கள் கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.8-ஆம் நூற்றாண்டுவரை பாண அரசர்களைப்பற்றி பேசுகிறது. இப்பாண அரசர்கள் குறுநில மன்னர்களாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களது ஆட்சி மரபு பல்லவர்கள், கங்கர்கள் ஆளுகைக்கு உட்பட்டே நடந்துள்ளது தெரியவருகிறது.

    பல்லவர்கள் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளனர். ஆட்சிப் பரப்பு தொண்டை நாட்டுப் பகுதி மட்டுமின்றி தகடூர்ப் பகுதியிலும் பரவி இருந்தது. இவர்களுடைய கல்வெட்டுகள் ‘கோவிசையை’ என்று தொடங்குகின்றன.

    செங்கம் பகுதியில் கிடைத்த நடுகற்கள் பெரும்பாலனவற்றில் ‘கோவிசையை’ கொண்டே தொடங்குகின்றன. ஆதலால் பாணஅரசர்கள் பல்லவர்களுக்கு உட்பட்ட இடங்களிலே ஆட்சி செய்துள்ளனர்;. கங்கர்களது ஆட்சியும் தகடூர்ப் பகுதிகளுக்கு உட்பட்டே இருந்துள்ளன. இவர்களுடைய நடுகற்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். கங்க மன்னர்களின் கீழ் ஆட்சி செய்த ‘அரிமிறை மாவலி வாணராயர்’, ‘மாவலி வாணராயர்’ போன்ற பாண அரசர்களின் கல்வெட்டுகள் செங்கம் பகுதியில் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் போரில் மாண்ட வீரார்களின் நினைவாகவும், பசுக்களை மீட்டு அதன் நினைவாக இறந்த தன்மையையும் சுட்டிக் காட்டுகின்றன.

    செங்கம் பகுதியில் கிடைக்கும் இக்கல்வெட்டுகள் அனைத்தும் இன்று வெவ்வேறு பொதுப்பெயர்களைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கல்வெட்டுகள் ஆற்றோரப் பகுதிகளிலும் சில கல்வெட்டுகள் சுடுகாட்டுப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. இதன் பெயர்கள் அனைத்தும் வழக்கில் மாற்றப்பட்டு பொதுப்பெயர்களாக வழங்கப்படுகின்றன.

    அப்பொதுப் பெயர்களே அவர்களின் தற்கால அடையாளம் ஆகும். அதில் வேடியப்பன், கரிவேடியப்பன், கரிய வேடியப்பன், வேடர், சிலைக்காரன், வீரக்காரன், முனியப்பன், ஐயனாரப்பன், ஐயனார், கிருணராயப்பன், மீனாரப்பன் என்றும், மொசவேடியப்பன், நொண்டி வேடியப்பன், ஓட்டைவேடியப்பன் எனச் சில பட்டப் பெயர்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. சில பேர்கள் அவை காணப்படும் இடம் சார்ந்து “சாவுமேட்டு வேடியப்பன், நத்தமேட்டு வேடியப்பன், ஏரிக்கரை வேடியப்பன்” எனவும் குறிக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இப்பெயர்கள் அனைத்தும் வீரன் என்பதுடன் தொடர்புடையவானகவே உள்ளன. இப்பெயர்கள் செங்கம் பகுதியில் வழங்கப்பட்டு வந்தாலும் இவை பாணர்களின் வாழ்வினையே அதிகம் வெளிக்காட்டுகின்றன.

    ஆனால் இன்று, சங்ககாலப் பாணர்கள் வடஇந்தியாவில் தொல்குடியினராக இருக்க கூடிய “கோண்டுப்” பழங்குடியினரின் மரபாக இருந்து வருகின்றனர். தமிழகத்தில் ‘சாதிப்பிள்ளைகள்’ அல்லது ‘குடிப்பிள்ளைகளாகத் தொடர்கின்றனர்.”13 என்று பக்தவத்சல பாரதி (பாணர்கள் இனவரைவியல், ப.1) கூறுகிறார்.

    அதே நேரத்தில் 1901ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கையில் தமிழ்ப் பாணர்கள் “மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் தையல் தொழில் செய்து வருகின்றனர். திருநெல்வேலிப் பாணர்களை மேஸ்திரி என்றும், ஒரு சில பாணர்கள் தங்களைப் பாண்டிய வேளாளர் என்றும் கூறிக்கொள்கின்றனர்.  தூத்துக்குடி, பாளையங்கோட்டை, தென்காசி, செங்கோட்டை, நயினாகரம், கோவில்பாட்டி, நாகர்கோவில், கயத்தாறு, மதுரை, திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், குற்றாலம்,  ஸ்ரீவில்லிப்புத்தூர், புளியம்பட்டி போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களைப் பாணர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாணர் சமூகத்தினர் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் ஆண்கள் 60 சதவீதமும், பெண்கள் 40சதவீதமும் இருப்பதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது.

    முடிவுகள்

    பாணர்கள் என்ற பிரிவினர் சங்க காலம் முதல் இன்றுவரை அதே பெயரைத் தாங்கி நின்று கலைப்பிரிவிலிருந்து மாறி இன்றைய நிலையில் தையல் தொழில் செய்யும் மக்களாக வாழ்கின்றனர். இத்தகைய தொழில் மாற்றத்திற்கு வறுமை, போதிய வருமானம் இன்மையே காரணம் என்கின்றனர். பல்லவர், சோழர், கங்கர், பாண்டியர்கள் காலத்தில் போர்வீரர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், அரசர்களாகவும், ஆநிரைகளை மீட்கும் வீரர்களாகவும் இருந்த பாணர்கள் அவர்களது நினைவாக மாற்றுப் பெயருடன் சிறுதெய்வக் கடவுள்களாகச் செங்கம் பகுதியில் பல்வேறு பொது இடங்களில் வைத்து வழிபடப்படுகின்றனர். அதே நேரத்தில் சங்க இலக்கியங்கள் ஆற்றுப்படை நூல்கள் அனைத்திலும் இப்பாணர்கள் கலைஞர்களாக வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. ஆகவே பரந்து விரிந்த தமிழக நிலப்பரப்பில் பாணர்களின் வாழ்வானது வெவ்வேறு நிலையில் இருந்துள்ளதை இதன்வாயிலாக அறிய முடிகிறது. மேலும் இப்பாணர்களின் வாழ்வியலைத் தொல்லியல், கல்வெட்டுகள் வாயிலாக விரிவாக ஆராய முற்பட்டால் பாணர்கள் பூர்வீக வாரலாற்றினை வெளிக்கொணர முடியும்.

    துணைநூற்பட்டியல்

    1. க. காந்திதாசன் – சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல். ப.15, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, தரமணி, சென்னை.06
    2. தொல்காப்பியம், புறத்திணையியல், ப.36
    3. புறநானூறு – கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. பாடல்.335:7-8
    4. அகநானூறு – கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. பாடல்.113
    5. மேலது நூ. பாடல்.325
    6. மேலது நூ. பாடல்.226
    7. மேலது நூ.பாடல்.386
    8. பெருங்கதை.பக்.188-191
    9. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப.9
    10. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப.8
    11. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப14
    12. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972.ப.12
    13. பக்தவத்சல பாரதி – பாணர் இனவரைவியல், ப.1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, சென்னை.-06

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
    கோயம்புத்தூர் – 641020.
    E-Mail: ramvini2009@gmail.com
    செல் , 9751104241

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 179-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கிறார் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    கடல்வாழ் உயிரினங்களில் ஓடுகளான இந்தச் சோழிகள், பழுப்பும் வெளுப்பும் கலந்த பளீர் வண்ணத்தில் மின்னி நம் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவருகின்றன. பகடை ஆடவும் சோதிடம் பகரவும் பயன்படும் இச்சோழிகளை நம் கவிஞர் பெருமக்கள் தம் கவிதைகளில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்!

    *****

    ”அமரர்கள் அமுதம் எடுக்கையில் கிடைத்த ஆழியின் கொடையோ? பாரதப் போரில் பார்த்தசாரதி ஊதிய பாஞ்சசன்னியமோ? கடல்நங்கையின் காதல் மகவோ?” என்று வரிசையாய்க் கேள்விகளை அடுக்கி நம்மை இரசிக்க வைக்கிறார் திரு. ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி.

    ஆழியின் கொடை!!   

    கவர்ச்சி இளமங்கை
    கழுத்தும்குமிண்வாயும்
    கழன்று கிடக்கிறதோ?
    அமுதம் எடுப்பதற்காய்
    ஆழ்கடல் கடைகையில்
    அமரர்கள் எடுத்துவோ?
    அரிசிக்குள் புதைத்தாலும்
    அலுங்காமல் மேல் வரும்
    அதிசய வலம்புரியோ?
    பாரதப்போரில் கண்ணன்
    பாங்குடன் ஊதிய
    பாஞ்சசன்னியமோ?
    கடல்நங்கை களிப்போடு
    கதிரவனைக் காதலித்து
    ஆழத்தில் ஈன்றெடுத்த
    ஆழியின்நன்கொடையோ?
    முற்றிய சிப்பிகளோ?
    மூத்த நண்டு ஓடுகளோ?
    மூச்சடக்கித்தேடினாலும்
    முத்து எதில்? யாரறிவார்?
    ஐந்தும் கிடப்பது போல்
    ஐம்புலன்கள் அடங்க
    ஐயமின்றி முக்தி வரும்!!!

    *****

    ”உப்பைத் தரும் கடலில் விளைந்த சோழிகளால் செப்பிடத்தகு பயனின்மையின் விளையாட்டுப் பொருளாய் மாறிப்போயின” என்று சோழிகளின் கதையைக் கவிதையாய் வடித்துள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    விளையாடவே…

    சிப்பி யென்றால் முத்திருக்கும்,
    சீதரன் ஊதும் சங்கென்றால்
    எப்படி யாயினும் ஏற்றிடுவர்
    எல்லா வகையாம் பூசைக்கே,
    உப்பைத் தந்திடும் கடல்நீரும்,
    உதிரியாய்ச் சோழிகள் எங்களாலே
    செப்பிடத் தகுந்த பயனிலாததால்
    சேர்ப்பர் பலரும் விளையாடவே…!

    *****

    ”காலக் கணக்கைக் கண்டுணரவும், ஞால வாழ்க்கையின் புதிரறியவும் உபாயம் நல்கும் மாயக் கயிறாம்  சோழிகள் இவை” என வியக்கிறார் முனைவா் ம. இராமச்சந்திரன். 

    காலம்

    ஓடி ஓடி உட்கலந்த
    காலக்கணக்கை,
    கண்டுகொண்ட மகத்தான
    கண்டுபிடிப்பு,
    எண்கள் வாழ்க்கையின்
    புதிா்களைக் கட்டவிழ்க்கும்
    அற்புத மாயக்கயிறு இவை.

    *****

    ஆழி அளித்த சோழிகளைப் பல்வேறு கோணங்களில் நுணுக்கமாய் அணுகி, அரிய கவிதைகள் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    உன் நினைவாய்…

    கடற்கரை மணற்பரப்பில்
    கையிரண்டைக் கோத்தபடி
    கதைபேசி நடக்கையிலே
    திடுக்கென்று உதறிவிட்டு
    ஓடிப்போய் ஒவ்வொன்றாய் – நீ
    குனிந்தெடுத்த சோழிகள் தாம்

    விடைபெற்றுப் போகையிலே
    எதன்பொருட்டோ என்கையில்
    வெடுக்கென்று திணித்துவிட்டு
    வேகமாய் நீ மறைந்தாய்!

    நீ நகர்ந்துப் போனபின்னும்
    உன் கரத்தைப் பிடித்தபடி
    நடப்பதுபோல் ஓர் உணர்வு
    ஐவிரலாய் அவை எனக்குள்…

    விரல்களை வருடிக்கொண்டே
    வீடுவந்து சேர்ந்தேன் நான்!
    முகம் கழுவி உடைமாற்றி
    உணவருந்திப் படுத்தபின்னே
    உறக்கம் துளிர்க்கும் நொடி
    சோழிகளை நினைத்திட்டேன்

    மேசைமீது வைத்திருந்த – உன்
    விரல் நிறத்துச் சோழிகளை
    கைப்பேசி ஒளிபாய்ச்சிக்
    கண்கொட்டப் பார்த்திருந்தேன்

    உயிரற்றக் கூடுகள் போல்
    உருவத்தில் தெரிந்தாலும்
    உயிர்ப்போடு உள்ளிருந்து
    உன் நினைவு நெளிகிறது!

    ஈரமாய் இருப்பதன்
    காரணம் உணர்ந்திட்டேன்
    உன் காதல் கடல் திரண்டு
    அதிலிருந்து வழிகிறது

    இன்னமும் உதிராமல்
    அதன்மீதிருக்கும் மணல் துகள்போல்
    உன் நினைவுகளில்
    ஒட்டிக்கொண்டிருக்கின்றன என் பொழுதுகள்!

    காதலியின் கைவிரல்களாய்ச் சாலம் காட்டும் சோழிகளை, அதிலிருந்து கடலாய்ப் பொங்கி வழியும் காதலை, சோழிமீதிருக்கும் மண்துகள்போல் காதலியவளின் நினைவுகளில் ஒட்டியிருக்கும் தன் வாழ்வின் பொழுதுகளை இக்கவிதையில் சொன்மாலையாக்கிக் காதல்மணம் பரவ விட்டிருக்கின்றார் திரு. புதுவைப் பிரபா; அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • The ravens caw -அண்டங்காக்கையின் கரைவு

    பவள சங்கரி

     

    கொரிய தமிழ் கலாச்சார உறவு!

     

    நம் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற கொரிய கவிஞர் கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச் சிறந்த கொரியக் கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர். வல்லமையாளரான [http://www.vallamai.com/?p=78004] அவர்தம் கவிதையும் என் மொழிபெயர்ப்பும்… [http://www.vallamai.com/?p=84392 – நூல் வெளியீட்டு விழா]

    The ravens caw

    In swooping, metallic cacophony
    the ravens caw.
    With primary colors
    flowers bloom on the thick branches.
    Yet they appear as countless
    hungry eyeballs.

    From the beginning,
    holding firm to the inevitable cycle of life,
    millions of souls shall come into being
    as already have been in the world.

    In my worldly forties
    I stepped on the land of karma.
    Only by stepping out of this parched land
    will I extinguish my burning sentiment of wrath.

     

    அண்டங்காக்கையின் கரைவு

     

    திடீர்த் தாக்குதலால் அண்டங்காக்கைகள்
    அசூயையான உலோகக் குரலில் கரைகின்றன.
    ஆரம்பக்கால வண்ணங்களுடன்
    அடர்ந்த கிளைகளில் அழகாக மலரும் மலர்கள்.
    இருப்பினும் அவை எண்ணற்ற
    பசித்த கருவிழிகளாகவே காட்சியளிக்கின்றன.

    ஆரம்பக் காலத்திலிருந்தே,
    வாழ்வின் தவிர்க்க இயலாத சுழற்சியிலும் உறுதியைக் கடைப்பிடிப்பது,
    ஏற்கனவே உலகில் இருந்து கொண்டிருப்பதைப்போன்று
    மில்லியன் கணக்கான ஆன்மாக்கள் வரக்கூடும்.

    என் உலகின் நாற்பது வயதில்
    கர்மாவின் களத்தில் நுழைந்தேன் நான்.
    இந்த வறண்ட நிலத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே
    கொழுந்து விட்டெரியும் என் கோபத்தை அணைப்பேனோ நான்.

     

    பி.கு. கவிஞர் முக்கியத்துவம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ள அண்டங்காக்கை எனும் பறவை நம் புராணக் காலந்தொட்டு இன்றுவரை மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகளைப் பரவவிடுவதாகவே உள்ளது. மனிதருக்குக் கோபம் என்ற குணம் எத்தகைய மோசமானது என்பதன் குறியீடாகவே இக்கவிதையைக் காண முடிகின்றது.

    காகங்கள், புத்திக் கூர்மையுடைய பறவைகள். தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நாம் தெருவில் வீசியெறியும் மாமிசக் கழிவுகள், இறந்து போன உயிரினங்களை உட்கொண்டு நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதனாலேயே இவை இயற்கைத் துப்புரவாளர்களாகக் கருதப்படுகின்றன. நம் வாழ்வோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த ஒரு பறவையினம் இது. நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை. “விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகைப் பாடலின் மூலம் இதை அறியலாம். இப்பாடலை இயற்றிவர், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர். காகத்தைப் பற்றிப் பாடியதாலேயே அவர் இப்பெயரைப் பெற்றார். இதுபோன்றே அண்டங்காக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிஞர் வரைந்துள்ள கவியும் சுவை ஊட்டுகின்றது. அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கு உண்டு.

    புனைவுகள் மற்றும் இலக்கியங்களில் அண்டங்காக்கைக்கு பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள் மற்றும் புனைவுகளின் படைப்பாளர்களுக்குத் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகிறது.

    அண்டங்காக்கை மரணம் மற்றும் இறப்புக்கு இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாத கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையதாக ஆனது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும் நம்பப்படுகின்றது.

    இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்கு படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    மிகுந்த சக்தி வாய்ந்த இந்து தெய்வமான சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மாபெரும் கலைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்து தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்திரிக்கப்படும் இத்தெய்வம், பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின் மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.

    Share
  • கருவறை

    Image result for clipart of toilets

    -முனைவர் கி. இராம்கணேஷ்

    கழிவறை சென்று திரும்பினேன்
    யாரோ கூப்பிடுவது போல் கேட்டது
    திரும்பிப்பார்த்தேன்
    கழிவறைக்குள் இருந்து ஒலி கேட்டது.
    யாரது? என்றேன்
    நான்தான் கழிவறை என்றது.
    உன்னிடம் எனக்குப் பேச நேரமில்லை
    சொல்லித் திரும்பினேன்…
    எனக்காக ஒருநிமிடம் என்றது
    சொல்லித் தொலை என்றேன்
    மகனே! என்றது
    அடச்சீ நான் உன் மகனா?
    சொல்ல வந்ததைச் சொல்…
    ஒருமுறையாவது என்னைப்பற்றிச் சிந்தித்தாயா?
    உன் கழிவுகளை உன்தாய் வயிற்றில் சுமந்தாள்
    அதுவும் பத்துமாதங்கள் மட்டுமே!
    நானோ ஒவ்வொரு நாளும் சுமக்கிறேன்
    நீங்கள் தூய்மையாக, நான் அழுக்காகிறேன்
    என்னைப் பார்த்தவர்கள்
    முகம் சுழிக்கிறார்கள்
    மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடுகிறார்கள்…
    துர்நாற்றம் என்னிடம் எப்படி வந்தது
    உங்களால் தானே!
    கருவைச் சுமந்த கருவறை போல்
    கழிவைச் சுமக்கும் கழிவறை நான் என்றது.
    பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை
    மகனே எனக் கழிப்பறை சொன்னது
    நியாயமாகவே பட்டது…

    Share
  • இந்த வார வல்லமையாளர் (280)

    இந்த வார வல்லமையாளராக கரிசல் மண்ணின் புதல்வர் கி. ராஜநாராயணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. அரிய படைப்புகளைப் படைத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டியுள்ளார். தம் ஊர் இடைசெவல், அங்கே பிறந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமியுடன் சேர்ந்து திருநெல்வேலியில் ‘வட்டத்தொட்டி’யில் இணைந்து தம் கலைரசனைகளை வளர்த்துக் கொண்டவர். சங்கீதத்தை, நாதஸ்வரம் போன்ற கருவிகளை வாசிக்கும் இசைவாணரை வர்ணிப்பதில் கி.ரா. அவர்களுக்கு இணை அவரே தான். சிறுகதைகள் ஆகட்டும், கட்டுரைகள் ஆகட்டும், சுமார் 70 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருகிறார். இப்போது 96 வயது ஆகிறது. செப்டம்பர் 16, 1922-ல் பிறந்த கி.ரா. நூற்றாண்டுக்கு மேல் வாழ வாழ்த்துகிறோம்.

    வட்டார வழக்குகளில் தமிழ் இயல்பாக வாழ்கிறது, வளர்கிறது. அகராதிகளிலும், இலக்கியங்களிலும் ஏறாத தமிழ்நடைகள் இன்னும் பல உயிர்ப்போடு உள்ளன எனக் காட்டும் ’முன்னத்தி ஏர்’ அவர். கரிசல்காட்டு இலக்கியத் தந்தை. நல்ல கதைசொல்லி. வட்டார வழக்குச் சொல் அகராதிகளை எப்படி உருவாக்கவேண்டும், அதன் உழைப்பு என்ன என்றெல்லாம் காட்டியவர் கி. ராஜநாராயணன்.

     

    இந்த வாரம் புதுவையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், கி.ரா. தனது உரையை வாசகர்களுடனான உரையாடலாக உலகில் யுத்தம் இல்லையென்றால் எல்லா மக்களுக்கும் அரசே இலவசமாக உணவு ஊட்டலாம் என்றார்.

    “காலம் நகர்ந்துபோகுற இந்த வேகத்துல, கரிசல் பூமிக்குக் கதிமோட்சம் உண்டானு வருத்தமும் சந்தேகமும் இருக்குற உங்கள மாதிரியே எனக்கும் இருந்துருக்கு. ஆனா, கொடிய பஞ்சம் வருவதற்கான வாய்ப்பு கெடையாது.

    ஒரு காலகட்டத்துல நம்முடைய விவசாயிகளப் பாத்து அரசு, நீங்க விவசாயமே செய்ய வேண்டாம், உங்களுக்குச் சாப்பாடுதான வேணும், நாங்க ரேஷன் கடைல உங்களுக்கு வேண்டியதெல்லாம் கொடுக்குறோம்னு சொன்னுச்சு. ரேஷன் கடையில அரிசி கொடுக்குறது ஒரு அக்கறைதான். சாப்பாட்டுக்கான எல்லாத்தையுமே கொடுக்கலாம்.

    கேக்குறதுக்கு ஒரு மாதிரியா இருந்தாலும் அரசாங்கத்தால அது முடியும். அரசாங்கம் ராணுவத்துக்கு எவ்வளவு செலவு பண்ணுது? அது தேவையில்லையே? யுத்தம் செஞ்சா இவனுக்கும் நஷ்டம், அவனுக்கும் நஷ்டம். உலக மகா யுத்தங்கள் ரெண்டு நடந்துருக்கு. புராணங்கள்ல, இதிகாசங்கள்லேயும் நடந்துருக்கு. மகாபாரதத்துலயும் நடந்துருக்கு, ராமாயணத்துலயும் நடந்துருக்கு.

    யுத்தங்கள் சொல்கிற விஷயங்கள் என்ன? சாகுறதத் தவிர ஒண்ணுமே கெடையாதே. ஜனங்களுக்கு ஒண்ணு மாத்திரம் சொல்றேன். நல்லவங்களத் தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான்!” https://tamil.thehindu.com/opinion/columns/article24983670.ece

    கி.ரா. புத்தகங்கள்:
    https://www.youtube.com/watch?v=FMAt2ugz8iQ

    கி.ரா. -வின் சில எழுத்துகள்:

    https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/

    இனக்குழு அழகியலின் முன்னோடி: ஜெயமோகன்

    கி.ராஜநாராயணன் படைப்புகள்-ஜெயமோகன்

    https://tamil.thehindu.com/general/literature/article24960385.ece

    கி.ரா.- நம் காலத்தின் பெருமிதம் https://tamil.thehindu.com/general/literature/article24960385.ece

    வெடித்துக் கிடக்கும் பருத்திக் காடு https://tamil.thehindu.com/opinion/columns/article19689388.ece

    கரிசலின் உன்னதக் கதைசொல்லி கி.ரா.
    http://azhiyasudargal.blogspot.com/2011/02/blog-post_18.html
    https://www.thehindu.com/news/cities/puducherry/rural-dialects-folk-tales-helped-develop-tamil-literature/article19704363.ece

    தங்கர் பச்சான் – கி.ரா. உரையாடல்:
    https://www.youtube.com/watch?v=mp-6Iiu5cZI

    கி. ரா. உரை:
    https://www.youtube.com/watch?v=vUAfEiniUhk

    கழனியூரன் – நான் கண்ட கி.ரா.:
    https://www.youtube.com/watch?v=tflKjUo7cPM

    நாஞ்சில் நாடன்:
    https://www.youtube.com/watch?v=4EMkVUMjFeA

    பவா செல்லதுரை:
    https://www.youtube.com/watch?v=PDmR4Z2co0Q

    கி.ரா. படைப்புலகம் – எஸ் ராமகிருஷ்ணன்
    https://www.youtube.com/watch?v=O8bEt50uGl4

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share