Blog

  • ஊதாப்பூக்கள்!

    சீனிவாசன் கிரிதரன் 

                                         

                                                தளர்ந்துபோன மரப்படிகளில் கால் வைத்தபோது அதன் வயது உணர்வுகளின் ஊடாக நெஞ்சை வருடியது. குழந்தையாக இருந்தது முதல் ஏறி ஓடிவிளையாடியதும், அதில் ஏறி  சாகசம் செய்த மற்றைய பருவங்களையும் உள்வாங்கிக்கொண்டு….இன்று தலை நரைத்த என் வயதையும்  தாண்டி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றும் விலத்திக்கொள்ளாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பல நினைவுகள் கூடவே என்னுடன் படி ஏறிக்கொண்டிருக்கின்றன. மேலே ஏறி பழுப்பேறிய  அந்த முதிரை மர கதவினை திறந்து கொண்டு உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தபடி கதவின் பின்புறத்தில் ஒட்டியிருந்த பழுப்பேறிய காகிதத்தில் வரைந்திருந்த ஆவர்த்தன அட்டவணை கண்ணில்பட்டது. பல வருடங்கள் கடந்தும் இன்னும் கழற்றி ஏறிய மனமில்லாமல் அதனை விட்டுவைத்திருக்கும் அக்கா, காலம் எவ்வளவு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது, திறந்திருந்த யன்னலினுடாக பரபரப்புடன் இயங்கத்தொடங்கியிருக்கும் வீதியையும் கடை தெருவையும் பார்வையிட்டேன்.

                                            “தம்பி” என்று அம்மாவின் குரல் பாசத்தோடு ஒலித்தது. “என்னால ஏறிவரமுடியாது; இறங்கிவா. இறங்கிவந்து, ..முதலில குளித்து சாப்பிடு, அதற்கு முதலில இந்த டீ யை குடி” என்று நிறுத்தல் இல்லாமல் தொடர்ந்தார். எனக்கு நன்கு தெரியும், அவரால் இப்போது  மேலே ஏற முடியாது, வயதோடு கூடவரும் எலும்பு தேய்மானம் முழம் கால் சில்லில் வலியை கொடுத்திருந்தது.  இல்லையேல் மேலே வந்து மேசையில் தேநீரை வைத்துவிட்டு எனதருகில் அமர்ந்து தலையை தடவியபடி சுகம் விசாரித்திருப்பர்.

    “தங்கம், இதை மேசைல வை; தம்பி வந்து குடிக்கட்டும், என்னால இப்பெல்லாம் முடியாது, நான் இருக்கப்போறன்” என்றபடி அம்மாவின் குரல் மேலும் கேட்டது.

                                               படியால் இறங்கிக்கொண்டிருக்கும்போது ” வாங்க தம்பி ” என்றபடி தங்கம் என்றழைக்கப்படும் தங்கநேசம் மேசையில் தேநீர் கோப்பையை வைப்பது கேட்டது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே எமது பூர்விக கிராமத்தில் இருந்து எங்களது தூரத்து உறவினர் என்றவகையில் வந்துபோகும் உறவுகள், தங்கமும் அவளின் அப்பாவும்தான். கிராமத்திலிருந்து எங்களது நிலபுலம்களை பராமரிப்பதில் இருந்து அவற்றை பொறுப்பாக கொண்டு சேர்ப்பது வரை அவர்கள் என்றைக்கும் பின்நின்றதில்லை, அவ்வளவு நேர்மையாக அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். இடைக்கிடையே நாங்களும் பாடசாலை விடுமுறை நாட்களில் அங்கு தங்கியிருந்து வந்தது இன்றும் நல்ல ஞாபகமாகவே உள்ளது. பெரிய காணில் அமைந்த  அம்மாவின் நாற்சார வீடும், அதனை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரங்களும், மா மரங்களும், வீட்டின் பின்புறமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலும், பசைப்பசேலென கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியும் நெல் வயல்களும் இன்றும் மனதை விட்டு அகலாது.

                                                அப்பாவின் மரணத்தின்பின் அம்மாவிற்கு  துணையாக வந்தவள், தனக்கென வாழ்க்கையொன்றை அமைத்து கொள்ளாமலே அம்மாவுடன் தங்கிவிட்டாள்,  அம்மா எவ்வளவோ வற்புறுத்தியும்  அவள் ஒத்துக்கொள்ளவில்லை, தனக்கு ஒதுங்கிக்கொள்ள ஓரிடமும் பாதுகாப்பும்தான் தேவை என்றபடி ஒதுங்கிக்கொள்வாள், அம்மா பலதடவை கேட்டும் அவளிடம் அதே பதில்தான் விடையாகக் கிடைத்தது , இது அவளுடைய விருப்பம் என்றபடி அம்மாவும் விட்டுவிட்டார்.

                                                 மேசையில் இருந்த தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு அம்மா இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தேன். என்னை பார்த்தபடி ” மெலிஞ்சி போய்விட்டா போலிருக்கு , எத்தனை நாள் லீவு போட்டிருக்கு, எப்படி மருமகள், பிள்ளைகள் எல்லாம், ஒருத்தியையாவது கூட்டி வந்திருக்கலாம்தானே, சின்னவளை பார்க்க ஆசையாயிருக்கு, நீங்க இங்க எங்கயும் பக்கத்தில இருந்தா எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும், அதுகளுக்கும் அப்பம்மாட பாசம் தெரியும், எல்லாம் கொடுப்பினைதான்….ம்ம்ம் ” என்றபடி எனது பதிலை எதிர்பார்த்தார். “எனக்கென்ன ஆசை இல்லையா உங்களுக்கு பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள, பிள்ளைகள்ர படிப்பும் என்ட வேலையும், கொஞ்சம் தொலைவுலதான் இருக்க வேண்டி இருக்கு, அங்க எல்லாரும் சுகம், அடுத்த விடுமுறைக்கு கூட்டிவாறன், கொஞ்ச நாள் நிண்டு அப்பம்மாவோட சந்தோசமா இருந்தா போய்ச்சு, எனக்கு இரண்டு நாள் தான் டூட்டி லீவு,” என்றபடி தேநீர் அருந்தியபடி அம்மாவைப் பார்த்தேன். ஒரு மென்மையான சிரிப்புடன் என்னை பார்த்து ” என்னடா நான் சொல்லுறதில என்ன பிழை, எனக்கும் உங்கள்ல பாசம் இல்லையா, சொல்லு பார்ப்பம்” என்றார். ” ஓம் , சரிதான், அடுத்தமுறை பார்ப்பம்” என்றபடி எழுந்தேன் . ” பிரயாணம் ..சரியான களைப்பாக இருக்கும், ஒருதரம் நல்லா தலையில முழுக்கிற்று  வா, வந்து சாப்பிடு ” என்றபடி எனது தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தார். நடந்து சென்ற அம்மாவை உற்றுப்  பார்த்தேன், நன்கு நரைத்த தலைமுடி முதுகுவரை பின்னப்பட்டு இருந்தது.

                   தோளில் மாற்றுடைகளுடன் வெளியே வந்தேன்,  சுற்று சூழலில் நவீன மாற்றங்கள் எவ்வளவோ வந்திருந்தாலும், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அதே கம்பீரத்துடனும் பழமை மாறாத தோற்றத்துடனும் இன்னும் வீடு இருந்தது. அப்பா தன் முயற்சியால் கட்டிய வீடு,  அந்த நேரம் சிறிய கடைத்தெருவை கொண்ட ஒரு நகரமாக இருந்ததால் வீட்டுடன் இரண்டு கடைகளும் சேர்த்தே கட்டியிருந்தார். திருமணம் முடித்த கையுடன் அம்மா புகுந்த வீடாகவே இங்கு வந்திருந்தார். கடைகளின் குத்தகை அப்போது பெரிதாக இல்லாவிட்டாலும் இப்போது அது அம்மாவிற்கு யாரிலும் பெரிதாக தங்கியிருக்காமல் தனது செலவுகளை பார்க்கக்கூடியதாக உள்ளது. அப்பாவின் முழு நினைவாக, எந்த ஒரு மாற்றமும் செய்யாமல், பழைமை மாறாமல் முறையாக பராமரித்து வருகிறார். இதன் பின்னர் எழுந்த வீடுகள் எல்லாம் சந்தை மதிப்பின்படி பார்த்து, உடைத்து புதிய கடைகளாவும் வீடுகளாவும் மாறியிருந்தன.  இந்த விடயத்தை பெரிது படுத்தாமல் அக்காவும் , அத்தானும் அம்மாவின் கனவுகளை சிதைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது மனதுக்கு நிறைவாகவே இருந்தது. பழைமை மாறாத வீடுகள் நினைவு சின்னங்களாக சில சமயங்களில் அமைந்து போய்விடுகின்றன, வீடு என்பது எப்போதும் எம் கூடவே வருவது, வீட்டின் ஒவ்வொரு இடமும் மறக்க முடியாத பல நினைவுகளால் நிறைந்து போயிருக்கும். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும், அப்பாவின் மரண நிகழ்வும், அக்காவின் திருமணமும், அக்காவின் மக்கள் பிருந்தாவின் பிறப்பும் ஏன் எனது திருமண வரவேற்பும் இன்னும் பசுமையாகவே உள்ளது.

                                          வீட்டுப் படிக்கட்டுகளால் இறங்கி பின்புறமாக நடந்து கிணற்றடியை அடைந்த போது அதனை சுற்றி வளர்ந்திருந்த கமுகு மரங்கள் பச்சையும், மஞ்சளுமாக பாக்கு குலைகளைத் தாங்கி இருந்தன, சிறு வயதில் கமுகு மரத்தில் நெஞ்சில் காயம் வரும்வரை ஏறுவதும் பின்னர் சறுக்கிக்கொண்டு வருவதும் நினைவுக்குவந்தது, பழுத்துவிழுந்த கமுகு ஓலையில் அக்காவை இருத்தி இழுத்தி சென்றதும் ஞாபகங்களாக வந்தது. ” கவனம்! கல்லிலே பாசி கொஞ்சம் பிடிச்சிருக்கு, சறுக்கும்” என்ற எச்சரிக்கை தங்கத்திடமிருந்து வந்தது. ” அதை கொஞ்சம் தேய்த்து கழுவி விடு என்று சொன்னனான் மறந்து போய்விட்டதா தங்கம் ..” என்று கண்டிப்பான குரலுடன் அம்மா வெளியே வந்தார். ” எனக்கு பழக்கம்தானே அம்மா, நீங்க உள்ள போய் இருங்க ” என்றபடி சவரம் செய்துவிடு குளிக்க ஆரம்பித்தேன். கமுகு மரம் கிணற்றை சுற்றியிருந்தால் கிணற்று நீர் நல்ல குளுமையாக இருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.

                                                 சாப்பாட்டு மேசையின் கதிரையை இழுத்து அமர்ந்தபோது அம்மாவும் அருகேவந்து அமர்ந்துகொண்டார், ” சாம்பாரும், உனக்குப்பிடித்த பச்சமிளகாய்ச் சாம்பலும் செய்திருக்கிறன், இட்லியோட சாப்பிடு, பிருந்தாவிற்கு செய்த கொஞ்சம் தோசையும் இருக்கு, நல்லாயிருக்கும்; இரண்டுபேரும் வேலைக்கு போறதுதானே, அநேகமா எல்லாம் கடைலதான் என்ன?, அவன் என்ன, யாருக்கு என்று செய்கிறானோ இல்ல யாருக்கோ என்று செய்கிறானோ, சொல்லு பார்ப்பம், எல்லாம் வீட்டு சாப்பாடுக்குப்பிறகுதான் என்ன?” என்றபடி  எனக்கும் தனக்குமாக மெதுவாக சொன்னார். மல்லிகை பூ போன்ற இட்டலி, மிக மிருதுவாக இருந்தது, என் முன்னே இருந்த தட்டில் இட்லியை எடுத்து வைத்தபடி ” அம்மாடா கையால சாப்பிடுறதெண்டா ஒரு சந்தோசம்தான் என்ன “, என்றபடி இரண்டு தோசைகளையும் தட்டி வைத்துவிட்டு ” வயிறார சாப்பிடு” என்றபடி எனது முகத்தினை பார்த்தார். காலம் எவ்வளவு கடந்து போனாலும் அவற்றின் சுவையும் மணமும் மாறவேயில்லை, அம்மாவின் முகத்தை நிமிர்ந்துபார்த்தேன், ” என்னடா உப்பேதும் கூடிவிட்டதா?”, என்றார். “இல்லம்மா , எப்படி அதே கைப் பக்குவம்,  கொஞ்சம்கூட மாற்றமில்லாமல், எப்படி?”,

    என்றேன்.  “எல்லாத்துக்கும் மனம்தான் கரணம், யாருக்காக செய்றம் என்ற கேள்விக்கு பதில் இருந்தால் சரி”, என்றபடி ,தண்ணீர் கிளாஸினை அருகில் வைத்தபடி சமையல் அறை பக்கம் சென்றார்.

                                        ஒரு பதினைந்து பதினெட்டு வயது வரைக்கும்தான் ஒழுங்கான வீட்டு சாப்பாடு, பாசத்தோட இருத்தி பரிமாறுவதெல்லாம், கடந்து போனால் வெறும் நினைவுகளோடுதான் காலங்கள் கழிந்துபோகும். படிப்பு, கல்லூரி விடுதி,வேலை என்று வெளியே நகரும்போது தொலைக்கப்படும் வரம்கள் அதிகம். எனது சக நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது அடிக்கடி சொல்வேன், பத்து வயதில தொடங்கிய பார்சல் சாப்பாடு ( மதிய உணவு ) இன்றுவரைக்கும் இருக்கு, ஆறுதலாக, வீட்டில் ஒரு வேளை  தட்டில் சாப்பிடும் திருப்தி  எங்கும் கிடைப்பதில்லை, ஒரு கறியாக இருந்தாலும் அது அமிர்தம்தான்.

                        தங்கம் கூடையை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போக ஆயத்தமானாள், “அம்மா , தம்பிக்கு என்ன சமைக்க ” என்றவள், எனதருகே வந்து, ” நாட்டு கோழி வாங்கிவரவா, அம்மா நல்லா அரைச்சி சமைப்பா, தம்பியும் முதல்ல நல்லா விரும்பி சாப்பிடுறதானே, என்ன சரியா” என்றபடி எனது பதிலை எதிர்பாத்துக்கொண்டு நின்றாள். “ம் ” என்றபடி தலையை ஆட்டினேன். ” அவனிடம் என்ன கேள்வி இருக்கு , நீ வாங்கிவா, என்ர கையால அவனுக்கு சமைக்கணும்” என்றபடி அம்மா உள்ளேயிருந்து எனதருகே வந்தார். தங்கம், வாசல் வழியாக வீதிக்கு இறங்கினாள்.

                                         “ஏனப்பா….. சரியா மெலிஞ்சி போய்ர போலிருக்கு…. சரியா உடம்ப கவனிக்கிறல்லபோல” என்று  நீண்டநேரம் அடக்கிவைத்திருந்த  தனது ஆதங்கத்தை வெளிவிட்டார். ” அப்படி ஒன்றுமில்லை , இப்ப வயது என்ன, ஐம்பதை நெருங்குதுதானே, மெலிவாஇருக்கிறது, ஆரோக்கியம்தானே அம்மா “, என்றேன். ” உங்களுக்கேதும் ” என்றபடி முகத்தினை பார்த்தேன். “எனக்கென்ன, இந்த  முழங் கால் வருத்தம் மட்டும்தான், சீனியோ, அந்த பிரசரோ…ஒன்றுமில்லை”, உடம்ப சரியா கவனிச்சிக்கொள்…குடும்பம் ஒன்று இருக்கல்லவா , அதுகளும் உன்ன நம்பித்தானே இருக்குதுகள்”, என்றபடி பெரு மூச்சொன்றை விடுத்தார். ” பிள்ளை வர எப்படியும் மாலையாகிரும், வங்கி வேலை என்றால் இப்படித்தான், பிருந்தாவும் பள்ளிக்கூடம் விட்டுவர எப்படியும் இரண்டு மணியாகிரும், அவரும் வெளிநாட்டில, வாறமாதம்தான் வாறதாம் என்று பிள்ளை சொல்லிற்று, நீ கொஞ்சம் போய் ஆறுதலாக படுத்துக்கொள்ள, எதனை மணிக்கு கூட்டம்” என்றபடி சமயலறைக்கு செல்ல எழுந்தார். ” எனக்கு பின்னேரம் 3  மணிக்குத்தான், சரி ” என்றபடி எனது அறையை நோக்கி படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கினேன்.

                                     மொத்தம் 27 படிக்கட்டுகள், சிறுவயதில்,பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் சிறிய சோக் துண்டுகளை கொண்டுவந்து படிகளில் ஒன்று முதல் இருபத்தேழு வரை எழுதியதை நினைக்கும்போது சிரிப்புதான் எழுகிறது. இறுதி படிக்கு கால்வைக்கும்போது கால்களில் வலுவற்றதன்மையும், நெஞ்சில் எதோ கனப்பதும், ஆழமாக மூச்சுவாங்குவதுமாக இருந்தது. எத்தனைதடவை ஏறி இறங்கியிருப்பன் புதிதாக என்ன?, விடை காணமுடியாமல் கதவை திறந்தபடி கட்டிலில் அமர்ந்தேன். பிரயாண களைப்பாக இருக்கும், வயதும் போய்க்கொண்டுதானே இருக்கிறது என்ற உணர்வுடன், திறந்திருந்த யன்னல்களூடாக மெதுவாக சூடேறிக்கொண்டிருக்கும் காலை வேளையை உள்ளேநுழைந்த காற்று உணர்த்தியது. வீட்டு வாசலுக்கும் வீதிக்கும் இடையே  இருந்த சிறிய நிலப்பரப்பில் நன்கு வளர்ந்திருந்த  கத்தா  மரத்தின் பரந்த நிழல் ஒரு குளுமையான சுற்று சூழலை ஏற்படுத்தி இருந்தது. இந்த கத்தா மரத்தை வைத்துக்கொண்டு அம்மாவும் தங்கமும் ஒருபாடமே நடத்தி முடித்து போடுவார்கள். முதலில் தங்கம்தான் தெடங்குவாள் ” ஏன் அம்மா, இந்த கத்தா மரத்த வெட்டிவிட்டால், இந்த காகம் கொக்கு எல்லாம் கூடு கட்டி, இந்த நிலத்தில எல்லாம் எச்சம் போடுறதெல்லாம் இல்லாமப்போய்விடும் என்னே “, என்று. அதற்கு அம்மா ” இந்த உலகம் நமக்கு மட்டும் இல்லையே, அதுகளுக்கும்தானே, எந்த சூழலில பாதுகாப்பும், சாப்பாடும் கிடைக்குதோ அங்கதான் அது கூடு கட்டும். அதுக்கு மரத்த வெட்டுறதுதான் வழியில்லை, அதையும் சேர்த்து வாழ பழகிக்கொள்ளுறதுதான் அதற்கு வழி” என்பார். ” என்னம்மா நீங்க, ஒவ்வொருநாளும் இந்த நிலத்தை கழுவி துப்பரவாக்கிற எனக்குத்தான் தெரியும் கை நோவு” என்பாள். “அது சரி, நீ கழுவி    துப்பரவாக்கிற தண்ணி எல்லாம் அங்க இருக்கிற பூ மரங்களுக்குப் பசளையாகப் போறது உன்ட கண்ணுக்கு தெரியாது, கைவலியும் கால்வலியும்”, என்றபடி பாடத்தை முடிப்பார். அம்மா, அப்பாவைப் போன்று படித்தவரில்லை என்றாலும், கிராமத்தில் இயற்கையுடன் கூடின வாழ்கை அவரை நன்கு வளர்த்தெடுத்திருந்தது.

                                       கடை தெருவின் அரவரங்களும், வீதியில் வாகனங்களின் இரைச்சல்களும் மெதுவாக கூடியிருந்தது. கட்டிலில் மெதுவாக சாய்ந்தாலும் மனம் நிற்றல் நிறுத்தல் அற்று ஓடிக்கொண்டே இருக்கிறது, எந்த கணத்தில் என்ன விடயம் வரும் என்ற கணக்கில்லாமல், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டும் தொடர்பில்லாமலும், ஏன் இப்போது இந்த எண்ணம் என்ற கேள்விக்கு விடை இல்லாமலும் , அலைந்து கொண்டே இருக்கும்.  அப்பா இருக்கும்போது பின்னேரங்களில்  இங்குதான் ஓய்வாக இருந்து புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பர், படித்த புதிய விடயங்களை சில சமயம் அம்மாவுக்கு விளகிக் கொண்டிருப்பார். அநேகமாக அவர் ஓய்வெடுப்பது இந்த அறையில்தான், “அப்பா” என்றபடி படியேறிக்கொண்டு தேநீர் கோப்பையுடன் உள்ளே  நுழையும்போது, கனிவாக ” வாப்பா” என்றபடி அருகில் இருத்தி முதுகை தடவியபடி எனது படிப்பு மற்றும் தேவைகளை கேட்ப்பார். “இந்தா உனக்கு பிடித்த மாதுளம் பழம், அணில் கடிக்காமல் நல்லா சேலையால சுத்தி கட்டி வைச்சிருந்தனான், நல்ல நிறமாயிருக்கு, நீயும் சாப்பிட்டு அக்காவுக்கும் கொடுத்து சாப்பிடு,” என்பர்.  தான் வாசித்த நல்ல கதைகளை எங்களுக்குப் பொருந்தக் கூடியமாதிரியும் அறிவுரையாகவும் சொல்வர். அவர் எங்களை கடிந்து பேசியது கிடையாது, ” ஏன் அப்பா,………இந்தப்  பிள்ளைகளோட கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கோ, சொல்லு கேட்காமல் இருந்திரப் போகுதுகள், பிறகு எனக்குத்தான் கஷ்டமெல்லாம்” என அம்மா சொல்லும் போது, சிரித்த படி அவர் , ” இயற்கைக்கு யாரும் இதை செய் அதை செய் என்று கட்டளை சொல்லுறதில்லை, அது தன்ர நியதிக்கு அது நடந்துகொண்டே இருக்கும், நாம அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்ல,  நாங்க கூடின அளவு அக்கறை காட்டிடத் தொடங்கினால்தான் அது தான் உண்மைல போகவேண்டிய பாதையை மாத்தி போடும், பிறகு எல்லாம் சிக்கலாகிடும்,  அவங்கட ஒவ்வொரு செயலையும் கவனமாக கரிசினையாக உற்றுப் பார்த்துக்கொள், அதுக்குள்ள அவங்க உனக்கொரு செய்தியை வைத்திருப்பாங்க, அதக் கவனமாக அறிந்துகொள் அது போதும், திருத்த வேண்டிய இடத்தில மட்டும் திருத்த வெளிக்கிட்டு, அதையும் எப்படி பாதிப்பில்லாமல் செய்யவேணும் என்பதையும் தெரிந்து கொள்ளணும்” என்பர். நாங்கள் அருகில் நிற்கிறோம் என்றெல்லாம் கவலைப் படமாட்டார், அதற்கு சிரித்தபடி ” இதை போய் உங்களிட கேட்டனே, நீங்களாச்சு பிள்ளைகளாச்சு, பிறகு வந்து இப்படி செய்து போட்டுதுகள் என்று கவலைப்பட போறிங்க” என்றபடி நகர்ந்து விடுவார். “அப்பா சொல்லுறது சரிதானே, எனக்கு இப்படிதான் சிந்திக்கேலும்….நீங்க சரியாய் நடப்பீங்க  என்று அப்பாவுக்கு தெரியும், பிறகேன் கவலை” என்பார். அப்பாவின் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி, இவர் எப்படியெல்லாம் சிந்திக்கிறார், என்று  ஆச்சரியமாக பார்ப்பேன். அப்பாவின் பாதுகாப்பு வலயம் ( Safe  zone  ) பெரியது, அதனால் அவரால் அப்படி சிந்திக்க முடிந்தது, அம்மாவுக்கு அப்படியில்லை மிக சிறியது; குடும்பம், மரியாதையை என்ற சிறிய வலயத்தை விட்டு வெளியில் பாதுகாப்பாக சிந்திக்க முடியாதிருந்ததை இப்போதுதான் உணர முடிகிறது.

                                                சிறிது தூக்கம்தான், உடன் கலைந்துவிட்டது. வீட்டைச்  சூழவும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தே இருக்கின்றன. சூழ இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களும், இந்த வீட்டினுள் வந்த வரலாறோடுதான் இருக்கின்றன. தேவையில்லை என்று வெளியேற்ற மனமும் இடம் கொடுப்பதில்லை. அது அங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும், எமக்கென்ன இடைஞ்சலா தருகிறது,  எப்பவோ ஒரு நாளைக்கு உதவும்,  என நாட்களை நகர்த்துவதுமுண்டு. பொருட்கள் என்றும் தனியாக இருப்பதில்லை அவற்றுடன் நினைவுகளும், கனவுகளும் சேர்ந்துதான் இருக்கின்றன, ஒரேபொருள் ஒவ்வொருவருக்கும் வேறான பார்வையைத்  தருவதுடன்,அந்த   நினைவுகளும், கனவுகளும் ஒவ்வொருவருக்கும்  வேறாகத்தான்  இருக்கின்றன.

                    எழுந்து சென்று,  திறந்திருந்த யன்னலூடாக வீதியைப் பார்வையிட்டேன். பார்த்துப்  பழகிய இடமென்றாலும், ஒவ்வொருகணமும் ஏதோ ஒரு மற்றம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு நாளைப் போல் இன்னொருநாள் இருப்பதில்லை. இருந்தாலும், இன்றுபோலவே நாளையும் இருந்துவிடாதா என ஏங்கிய கணங்கள், நாட்கள் எத்தனையோ. கண்கள் எதிலும் குறிப்பான பார்வையை தவிர்த்து, அன்று ஏங்கிய கணங்களையும், நாட்களையும் மனம் நாடிக்கொண்டே இருந்தது.

                                                 எவ்வளவோ மாறிப் போய்விட்ட சூழல்களும், அவற்றினுள் தம்மை மாற்றிக்கொள்ள முடியதுபோன சூழல்களும் சேர்ந்தே இருந்தன. மாற்றமடையாமல் இருந்த சூழல்கள்தான், எம்மோடு அதிக கதைகளைப் பேசும்,  வீதியின் எதிர் பக்கத்தில், என் பார்வையில் எப்போதும் படும் அந்த பஸ் தரிப்பிடம், பலதடவைகள் புதிய புதிய மாற்றங்களை கண்டாலும், அங்கு நின்று செல்லும் அநேகமானவர்கள் எமது சூழலுக்குரியவர்கள்தான்,  அவர்களின் வயதுக்கும் அதன் மாற்றத்துக்கும் நிறையவே தொடர்பிருந்திருக்கும். அவர்களின் வாழ்க்கைக்கும் நிறைவேறிய மற்றும் நிறைவேறாத பல எண்ணங்களுக்கும் தொடர்பிருந்திருக்கும்.

                      கண்கள் மீண்டும் வீதியின் மறுபக்கம் நோக்கியது, இன்னும் கடைத்தெருக்கள் முழுமையாக திறக்கப்படாமல், அன்கொன்றும்  இன்கொன்றுமாக திறந்திருக்கிறது, எனது கண்கள் அங்கு பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த குமரன் சில்க்ஸ் கடையில் நிலைத்துநின்றது. இன்னும் திறக்கவில்லை, திறக்க பத்து மணியாகும், மூடுவதற்கு எப்படியும் இரவு ஒன்பதுமணிக்கு மேலாகும். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில்தான், கடையின் அழகு நன்றாக விளங்கும். சிறிய கட்டிடமொன்றில் ஆரம்பித்த கடை,  நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது. அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டமும் என்னை ஒருவகையில் இணைத்தே இருந்தது.

                                                 அக்காலத்தில் உயர்தர வகுப்புகளுக்கு செல்வதாக இருந்தால், இங்கிருந்து   அடுத்த நகரத்துக்குப் பஸ் மூலம்தான் செல்லவேண்டும்.           போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையும் அப்போது  குறைவு, பஸ்களில் ஆட்களும் அதிகம். தனியார் பஸ் சேவைகள் அப்போது இல்லை. எல்லாம் அரச சேவையாகவே இருந்தது. போக்குவரத்தில் இடர்பாடுகள் இருந்தாலும், பாடசாலைக்கான பஸ் சேவை திருப்திகரமாக இருந்தது. அப்போது இரண்டு நேர பாடசாலை , மலை மூன்று மணிக்கு பின்னர்தான் பாடசாலை விடும். அங்கிருந்து பஸ் நிலையத்துக்கு வந்து, ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ஏறி இருக்கைகளை பிடிப்பதென்றால் அது ஒரு தனிப்பட்ட திறமைதான் வேண்டும். அந்த காலத்தில் புத்தக  பைகள் அதிகமாக  பாவனையில்  இல்லை, ஒருசிலரிடம்தான் இருக்கும், ஏனையோர் எல்லாவற்றையும் கைகளில்தான் வைத்திருப்பர், நானும் கூட.

                  ஒருநாள்  பாடசாலை முடிந்து, வந்து ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு  ஏறும் போதுதான் எனது கொம்பாஸ் பெட்டி கை தவறி நிலத்தில் விழுந்து மிதிபட்டபோது, கீழே இறங்கி எடுக்கமுடியாமல் தவித்தேன், கீழே இறங்கி வருவதென்பது முடியாதகாரியம். ஒருவாறு பஸ்சின் யன்னலினூடாக வெளியே எட்டி யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று முனைந்தபோதுதான்,   கொம்பாஸ் பெட்டியின் உள்ளே இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து, பெட்டியினுள் அடுக்கியபடி அவள்  என்னிடம் நீட்டினாள். அந்த கண்களில் இருந்த குழந்தை தானம் ,இந்த நினைவுபோல பசுமையாக உள்ளது, அவள் என்னுடைய நகர் பகுதியை சேர்ந்தவள்தான், வழமையாக ஒரே பஸ் நிலையத்தில் இருந்துதான் பாடசாலைப் பிரயாணம். அவளுடைய அந்த பொறுப்பான செயல் எதோ ஒருவகையில் என்னை ஈர்த்திருந்தது. ” தேங்க்ஸ் ” என்றபடி வாங்கிக்கொண்டேன். பின்னர்  அவளை எங்கு  காணும் போதும் ஒரு நன்றி உணர்வே மேலோங்கி நிற்கும். அப்போது அவள் சிறிய ஒரு பிள்ளை , ஒரு பத்தாவது தரத்தில்தான் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அழகிய கண்கள் எடுப்பான மூக்கு, நல்ல நிறம், மொத்தத்தில் திரும்பி ஒருதரம் பார்க்க வேண்டும் போல் தோன்றும் அழகு. நான் எதனையும் பெரிதாக பொருட்படுத்தாது எனது படிப்பிலே தீவிரமாக இருந்ததால், காலம் உரிய பாதையில் என்னை கொண்டு சென்றது, இருந்தாலும் எனது மேசையில் இருந்த அந்த கொம்பாஸ் பெட்டி அந்த காட்சியையும் அவளின் குழந்தைத்தனமான அந்த பார்வையும் எப்போதும் நினைவுக்கு கொண்டுவரும். ம்ம்ம்ம் …” நல்ல ஒரு பிள்ளை” என்ற வார்த்தை மனதில் உருவாகி மூச்சுக்காற்றில் வெளியேறும். சிறிது காலங்களின் பின் அவளை எங்கும் என்னால் காணமுடியாது போனது, அவளை பற்றி யாரிடமும் விசாரிக்கவும் அப்போது எனக்கு தோன்றவில்லை. ஆனால் அந்த கொம்பாஸ் பெட்டி மாத்திரம் எனது புத்தக அலுமாரியில் கிடக்கிறது  , பழையதாக்கிப் போய் பின்னர் புதியவை சில வாங்கியிருந்தாலும் , அது எதோ ஒரு நினைவு சின்னம் போல் கண்ணில் படும், எறிவதுக்கு மனமின்றி.

                                          கேட் திறக்கும் சத்தம் கேட்க ,  பஸ் நிலையத்தின் மீதிருந்த பார்வை மீண்டு  வீதியை ஒட்டியிருந்த வாசலை நோக்கியது. தங்கம் சந்தையிலிருந்து திரும்பியிருந்தாள். ” என்ன, நாட்டு கோழி வாங்கப்போறன் என்று போனாய், கிடைச்சுதா?, என்றபடி அம்மா வாசல் கதவுவரை செல்வது புரிந்தது. “தம்பிர அதிஷ்டம், நல்ல பாணி சேவல் ஒன்று கிடைச்சுது, அங்கேயே வெட்டி எடுத்து கொண்டுவந்தான்”, என்றபடி சமயலறைப் பக்கம் போவது புரிந்தது. ” தம்பி , தேத்தண்ணீ ஏதும் போட்டுத்தரையா?, சம்சாவும் வாங்கிவந்திருக்கன்”, என்ற படி கூடத்திட்க்குள் வந்தபடி கேட்டள்.  “இது என்ன கேள்வி, அவன் நித்திரையோ என்னவோ, சாப்பிட்டு எவ்வளவு நேரம், நீ தேத்தண்ணியை போடு, அவன் குடிப்பான், போட்டுவிடு சொல்லு”  என்றார் அம்மா. என்தொடர்பாக அவர்களின் சம்பாஷணை….. அவர்களே விடயத்தை முன்வைப்பார்கள் பின்னர் அவர்களே தீர்மானத்திற்கும் வந்துவிடுவார்கள்.  சிறிது நேரத்தின் பின் அம்மாவின் ” தம்பி” என்று கூப்பிடும் சத்தம் கேட்டது. “ஓம் வாறன்” என்றபடி கீழே இறங்கி வந்து, அம்மாவின் அருகில் அமர்த்தபடி , அவரின் மடியில் இருந்த சுழகில் நன்றாக தீட்டிடப்பட்டிருந்த கைக்குத்தரிசி இருந்தது, ” தம்பிக்கு கைக்குத்தரிசி இப்ப விருப்பமா, இப்பவும்  நாங்கதான் அவிச்சசு, காயவைத்து, குத்தி எடுக்கிறது. எனக்கென்னவோ இந்த தவிடதரிசித்தான் விருப்பம், வேணுமெண்டா போகக்குள்ள கொண்டுபோ, நேற்றுதான் பக்கத்தில குத்தியெடுத்த, இந்த காகத்துக்கு காவல் பாக்கிறதான் போதும் போதும் என்றகிரும்”, என்றபடி அரிசியினுள் கற்களை தேடிக்கொண்டிருந்தார். நான் சிறுவனாக இருந்த போது எமது வீட்டின் கிணற்றடிக்கு பக்கத்தில்தான் நெல்லினைக் கழுவி, பெரிய தாச்சியினுள்வைத்து , விறகடுப்பில் அவிப்பார்கள், நெல்லினை காயவைக்கும் போது, காகத்திற்கு காவல் பார்ப்பதற்கு,  கையில் ஒரு கம்பினை   தந்து,   என்னைத்தான் அம்மா வீட்டு விறாந்தையில் இருத்தி விடுவார். ஓடி விளையாட முடியாது. ஓரிடத்தில் இருந்தபடியே, அம்மாவை திட்டிக்கொண்டே இருப்பேன், இப்போது நினைக்கும்போது என்னவோ போலிருக்கிறது, எதிர்காலத்தை என்னவென்று அறிந்துகொள்ளாமல் எல்லாமே நடந்துகொண்டிருக்கிறது, தெரிந்துகொண்டால் வாழ்க்கையில் சுவாரசியம் எதுவும் இருக்காது, அன்று காகத்திற்கு காவல் வைத்ததை நினைத்து அம்மாவை எதிர்க்க முடியாவிடினும் மனதுக்குள்ளே திட்டிக்கொண்டதை நினைக்க, இப்போது கண்கள் நனைகின்றன.

                                         அப்பாவின் மறைவின்பின், அம்மாவின் தனிமை எங்கள் இருவராலும்தான் ஓரளவு தீர்க்கப்படக்கூடும் என்பதை உணர்ந்துகொள்ள அவ்வளவு காலம் தேவைப்படவில்லை. அம்மாவின் சிறிய சிறிய கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஊடகங்களாக எங்களை நாங்களே மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கால ஓட்டத்தில் சந்தர்ப்பங்களும், அனுபவங்களும், சூழ்நிலைகளும் வாழ்க்கையின் புரிதலை நன்றாகவே கற்றுத்தந்திருந்தது. சூழ்நிலைகளும், அனுபவங்களும் மாற்றமடையும் போதுதான், தான் ஒரு தனியனல்ல என்பதும், முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில்   சில சமயம் மற்றயவரின் முடிவுகளை எம் முடிவுகளாக ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும்  என்பதை அறியமுடிகிறது.

     சுழகில் இருந்த அரிசியை கிள்ளி வாயில் போட்டபடி , ” நல்லா காய்ந்திருக்கு , கொஞ்ம் இடிந்துபோய் இருக்குமே” என்றபடி அம்மாவின் முகத்தினை பார்த்தேன். “காகத்துக்கு காவல் பார்த்த அனுபவம் இருக்கத்தானே செய்யும்”, என்றபடி சிரித்தார். ” ம்… ம்….. ..கொஞ்சங் கூடத்தான் காய்ந்து போய்ற்று”, என்றபடி அவர் சமையலறை  பக்கம் நகர, தங்கம் தேநீருடன் சம்சாவையும் தட்டில் ஏந்தியபடி வந்து ” தம்பி ஆறிவிட போகுது , சூடா குடியுங்க ” என்று மேசையில் வைத்துவிட்டு அவளும் சமயலறைக்குள் சென்றாள்.

                                               தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, வாசலைத்  தாண்டி வெளியே வந்தபோது கத்தா மரத்தின் நிழல் வாசலை முற்றாக நிரப்பி, ஒரு குளுமையைப் பேணி இருந்தது, வெளவால்கள் கடித்துப் போட்டிருந்த கத்தா பழங்கள் சிதறி கிடந்தன. இப்போது அதை யாருமே தொட விரும்புவதில்லை, என்பது தெரிந்தது. அந்த நாட்களில் அவற்றை பொறுக்கி கல்லில் வைத்து உடைத்து அதன் விதையினை உண்டது இன்னும் ஞாபகமாகவுள்ளது. பாதாம் பருப்பின் சுவையினை ஒத்ததாக இருக்கும். வீதி வரை நீண்டிருக்கும் சீமெந்து தரை மீதிருந்த கத்தா பழங்களை கால்களால் தட்டிவிட்டபடி, கேட் வரைக்கும் நடந்து சென்று, வீதியின் எதிரே இருந்த பஸ் தரிப்பு நிலையத்தில் கண்கள் பார்வையை நிலை நிறுத்தின.

                                  அன்றொருநாள், வீதியில் அதிக நடமாட்டமில்லை, காலை 8  மணியளவில் இருக்கும், வெயில் வீதியை நிறைத்திருந்தது. பிராயணப் பையினை காலருகில் வைத்தபடி, இதே பஸ் தரிப்பிடத்தில் எனது பல்கலைக்கழக விடுதிக்கு செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தேன். பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருடத்தில் படித்துக்கொண்டிருந்த காலம். சற்று தொலைவில் கறுப்பு நிற, மடிக்கும் குடையினை பிடித்தபடி விரைவாக யாரோ  நடந்து வருவது உணரக்கூடியதாக இருந்தது. எனது கவனம், அது யாராக இருக்கலாம் என அறிந்துகொள்ள திரும்பியபோது, அவள் மிக அருகில் வந்திருந்தாள். யார் என தீர்மானித்துக்கொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை, நன்றாகவே வளர்த்திருந்தாள், வயதுக்கேற்ற முதிர்ச்சி அவளின் முகத்தில் தெரிந்தது, ஒரு ஐந்து அல்லது ஆறு வருட இடைவெளிகள்  இருக்க வேண்டும், அன்று பார்ததன்பின் இன்றுதான் மிக அருகில் பார்க்கிறேன், ” மதிச்சிற்றிங்களா?”, என்றபடி எனது முகத்தினை ஆவலோடு, எனது பதிலை எதிர்பார்பதைபோல்,  முகத்தைப் பார்த்து கொண்டிருந்தாள்.” ம்ம்ம்ம், என்றபடி எனது தலையினை அசைத்தபடி , கொம்பாஸ் பாக்ஸ் ….” என்றேன். தலையை குனிந்தபடி ” ம் ம் ம்  இன்னும் அது ஞாபகம் இருக்குது போல” என்றாள். ” சின்ன காலத்தில கண்டதிற்கு பிறகு இப்பதான் காணுறான், நல்ல வளந்திற்றீர், இவ்வளவுகாலமும் எங்கபோய் இருந்தீர், இப்ப என்ன செய்யிறீர்”, என்றபடி அவளின் பதிலை எதிர்பார்த்தேன். ” அப்பாவிற்கு  இடமாற்றம் வந்ததோடு நாங்களும் அவரோடு போய்டம், உயர்தரம் வரைக்கும் படித்தான், அதுக்குமேல போகல, படிக்கவேணும் …., இப்ப யூனிவசிட்டி போய்விட்டதா கேள்விப்பட்டன், இப்ப நாங்க எல்லாரும் இங்க, ஊருக்கே வந்துவிட்டம்”, என்று, எதோ என்னிடம் ஒப்புவிக்கவேணும் போல சொல்லிக்கொண்டே போனாள். ” நான் இப்போ இரண்டம் வருடம், பொறியியல் படிக்கிறான்,  கொஸ்ட்லுக்கு போறதுக்குத்தான் நிற்கிறன், பஸ் வரவேண்டிய நேரம், இன்னும் காணல்ல, எப்படியும்  போய்சேர மலையாகிரும்”, என்றபடி அவளை பார்த்தேன், அதே குழந்தைத்தனமான அழகிய கண்கள், எந்த மாற்றமும் காணமுடியவில்லை, ” வீட்டுக்கு, லீவு விட்டல்தான் வாறதா”, என்றபடி எதோ ஒரு எதிர் பார்ப்புடன், கேட்டாள். “ம் ம் ..”.என்றபடி, தலையை அசைத்தபடி, அவளை பார்த்தேன். எதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டதை போலும், அதிகமாக எனது தனிப்பட்ட விடயங்களுக்குள் வந்துவிட்டோமா  என அவள் உணர்வது தெரிந்தது. ” ஏதாவது மேலும் படிக்கப் பாருங்கள், பின்னுக்கு உதவும்” என்றுவிட்டு பஸ் வரும் திசையை பார்த்ததபின். ” இப்ப எங்க போக வந்தனீங்க” என்றபடி அவளைப் பார்த்தேன். எனக்கு பதில் கூறுவதற்கு அவசரப்படுவதும், ஏன் இவ்வாறு கேட்கமாட்டேனா என அவள் எதிர்பாத்திருந்ததை போல் இருந்தது அவள் முகம். “கடைக்கு வந்தனான், நீங்க வீட்டில இருந்து ரோட்டை குறுக்கறுத்து போறது தெரிந்தது, அதுதான் , கதைக்கவேணும் போல இருந்தது, ஓட்டமும் நடையுமாக வந்தான்”, என்றாள்.  “ஏன் “, என்று கேட்கவேணும் போல் இருந்தது, ஆனால் அது முறையல்ல என உணர்ந்துகொண்டேன். பஸ் வந்து நின்றது, ஏறி யன்னலோரம் வந்து அமர்ந்து, யன்னலுக்கூடாக அவளை பார்த்தேன், அதே பார்வை , கையில் கொம்பாஸ் பொக்ஸ் இல்லை, ஆனால் நிறைய கனவுகள் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

                                                     பஸ் பிரயாணம் முழுவதிலுமே அவள் நிறைந்திருந்தாள். குட்டித்  தூக்கங்களிடையே  தெளிவற்ற கனவுகள் மீட்டுப் பார்க்கமுடியாதவையாக இருந்தன. பல்கலைக்கழகத்தின் வாசலில் பஸ் நின்றதும், பஸில் இறங்கி பனிமூட்டம் நிறைந்த மலைப் பாதை ஊடாக நடந்து சென்றபோது, பின்னே சென்ற இருளில் மூழ்கிய பாதையைப் போல், அவளின் நினைவுகளின் ஆக்கிரமிப்பும் கரைந்து சென்றது.

                      தற்போதைய தொலைத்தொடர்பு வசதிகளை போல் எந்த முன்னேறிய வசதிகளும் அப்போது இல்லை, தபால்க் கடிதத்  தொடர்பு ஒன்றுதான் எமக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒன்று. தொலைபேசி வசதி பற்றி பேசவேண்டியதில்லை, அவை வெறும் நான்கிலக்கங்களை மட்டுமே கொண்டிருந்தன. சிறு நகரங்கள் வரை மட்டுமே இவ் வசதி மட்டுப்படுத்தி இருந்தது. எப்போதோ இருந்துபோட்டு வரும் அம்மாவின் கடிதங்கள், அவரின் கையால் எழுதி அனுப்புவதனால், அவரின் கையெழுத்தும், எழுத்துப்  பிழைகளும் அவரே முன்னுக்கு நிற்பதைப்போல் உணர்வை தரும். வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் அமையாமல் போய்  கல்வியில் பின்தங்கி இருந்தாலும், அவர்களிடம் இயல்பாகவே அமைந்த முகாமைத்துவப் பண்பு, எங்களை கல்விக்கூடாக உயர்த்த வேண்டும் என்ற உந்தல்கள் என்பன, அப்பா இல்லாத போதும், தனியாக  இருந்து   இவற்றைச்  செயற்படுத்தியிருக்கிறார். அம்மாவுடன் பேசிக்கொள்வதாக இருந்தால் வீட்டுக்குத்தான் வரவேண்டி இருக்கும், அப்படி வந்தாலும் மணிக்கணக்காக அருகில் இருத்தி எனது தலையை கோதியபடிதான் முழு கதைகளும் பேசப்படும், இருந்த இடத்தை விட்டு எழமனமில்லாமல், பிடிக்குதோ பிடிக்கல்லையோ அவரின் பேச்சினை கேட்டுக்கொண்டே இருக்கவேணும் போல் இருக்கும், இவ்வாறு கட்டிப்போடும்  பாசம் எவ்வாறு  ஊப்படுகிறது என்பதை உணர்ந்து, அறிய மிக நீண்டகாலம் எமக்குத் தேவைப் படுகிறது.

                       வீட்டுக்கு திரும்பி இருந்த ஒரு சமயம்,  அவளை ஒரு தடவை தற்செயலக புத்தக கடை ஒன்றினுள் சந்திக்க கூடியதாக இருந்தது. நான் கடைக்குள் வந்த நேரம் அவள் என்னை கண்டிருக்க வேண்டும், இருந்தாலும் என்னை காணாததுபோல் பாவனை செய்துகொண்டு, ஏதோ புத்தகங்களைத் தேடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தாள். அவளுடைய பார்வையில் இருந்து விலகி, அவளுக்கு பின்புறமாக வந்த போது, புத்தகத் தேடுதலை விட்டு என்னை தேடுவது புரிந்தது.  தவறவிட்டுவிட்ட உணர்வும் ஏதோ வேதனை கலந்த கண் சுருக்கிய பார்வையும்  முகத்தில் வெளிப்பட்டது. “ஹலோ, என்ன புத்தகம், தேடவேணும் என்றால் , நானும் சேர்ந்து தேடித்தாறன்” என்றேன். எனது குரலை கேட்டு திரும்பியவள், தலையை தாழ்த்தியபடியே நின்றாள். “என்ன , என்ன புத்தகம்….” என்றேன். ” குமுதம், போன வார புத்தகம் கிடைக்கல, அதுதான் தேடிக்கொண்டு நின்றனான்” என்றாள். ‘அவ்வளவு என்ன விசேடம் அதில “என்றேன்.” என்ன? …குமுதம் படிக்கிறது இல்லையா” என்றாள். ” இல்ல , நேரம் இல்ல என்பதை விட , ஆர்வம் இல்ல, எல்லாம் படிப்போடு மட்டும் தான் ” என்றேன். ” எனக்கு நேரம் போகவேணும், அதுதான், இதுல   ‘சுஜாதா’ எழுதுற  ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற கதை  தொடராக வருது, நல்ல படியா போகுது, எனக்கு மதுமிதா என்ற பாத்திரம் பிடிச்சிருக்கு, ஒரு குழந்தை தனமான பாத்திரம், அடுத்தவாரம் என்னவரும், எப்படி போகும் என்று ….ஒரே  …” என்றபடி நிமிர்ந்து பார்த்தாள். இப்போது பழைய நிலைக்கு திரும்பியிருந்தது முகம், ” கிடைசிற்றுதா..” என்றேன். ” ம்..ஓ …இப்பதான் இங்கதான் கிடந்தது, ஒரு பிரதிதான் இருந்தது.” என்றாள். ” எப்ப வந்த, இப்படி எங்காவது சந்திச்சால்தான் கதைப்பிங்களாகும்”, என்றபடி எனது முகத்தினை பார்த்தாள். ” நேற்றுதான், வந்தான், அம்மா பேப்பர் எடுத்து வர சொன்ன , அதுதான் வந்த நான்” என்றபடி அவளை பார்த்து சிரித்து கொண்டு, வெளியே வந்தேன். என் பின்னல் வந்தவள் ,” எப்ப திரும்பி போறிங்க, டெலிபோன் கதைக்க அங்க வசதி ஏதும் இருக்கா”, என்றாள். ” ம்..ம் ஹு ம் …சாதாரணமா கிடைக்காது….கொஞ்சம்  அதுக்காக மினக்கடவேணும்…..ஏன் “, என்றபடி அவளை பார்த்தேன். ” இல்ல ..சும்மாதான் கேட்டனான், முடியும் என்றா ..இந்த தொடர் கதையை படிச்சு பாருங்க” என்றாள். ” பார்ப்பம் என்றபடி வெளியே வந்தேன். ” போயிற்றுவரன் ” என்றபடி வீதியில் இறங்கி நடந்தாள். திரும்பி ஒருதடவை பார்த்து சிரித்துவிட்டு ” அடுத்த முறை வந்தால், கதையைக் கேட்பன்” என்றாள். ” ம்.. பார்ப்பம்” என்றபடி வீட்டை  நோக்கி  நடந்தேன்.

     தொடர்சியாக அந்த கதையை படிக்கமுடியவில்லை,அதற்கேற்ற சுழலும் எனக்கு கிடைக்கவில்லை. மிக அண்மையில்தான் அந்த கதை திரைப்படமாக “ஆனந்த தாண்டவம்” என்றபெயரில் வந்திருந்தது. அவளுக்கு பிடித்த அந்த கதாபாத்திரம் ” மதுமிதா”,வை தமன்னா ஏற்றிருந்தார், மிக பொருத்தமான தேர்வு, தமன்னா. படத்தை பார்த்தபின்தான் கதையை, ஈ-புத்தகத்தில் படித்தேன். இந்தக் கதையின் தொடரின் முடிவுக்காக எவ்வளவு நாள் அந்த புத்தக கடையை ஏறி இறங்கி இருப்பாள்.

                                   “தம்பி” என்ற அம்மாவின் குரல் கேட்டு திரும்பினேன், “தோடம்பழம் கரைச்சனான், உள்ள வந்து, இருந்து குடி, கன நேரமா அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாய், கால் நோக்கப்போகுது, நல்ல நிழலா இருக்குது என்ன” என்றபடி அருகே வந்து, “கதிரை ஒன்றை எடுத்துவந்து போட்டுத்து, இருந்து குடியன் மகன், முந்தநாள் பெய்த மழைல நிலம் நல்ல குளிந்துபோய் இருக்கு” என்றபடி மீண்டும் உள்ளே சென்றார். அவர் பின்னல் நானும் நடந்தேன். அம்மா தந்த தோடம்பழச் சாறினை குடித்துவிட்டு , ஒரு பிளாஸ்டிக் கதிரையுடன் வெளியே வந்தேன். அன்றய தினசரி பத்திரிகையை என்னிடம் தந்துவிட்டு ” நேரம் போகல்லேண்ட இதை படிச்சுக்கொண்டு இரு, சமையல் இந்தா முடிந்திரும்” என்றபடி உள்ளே சென்றார். பத்திரிகையில்  நாட்டிலுள்ள அனைத்து வகையினருக்கும் தேவையான விடயங்கள் நிரப்பப்பட்டிருக்கும், எனக்காக மட்டும் என்ன இருக்கக்கூடும், ஓரிரு பக்கங்களில் தனிப்பட்ட எனக்கானவை முடிந்துவிடும், சிலர் பரீட்சைக்கு படிப்பதை போன்று ஓரெழுத்து விடாமல், கொடுத்த காசுக்கு நிறைவாக வசித்து  முடித்து விடுவார்கள்.            நிழலின் குளுமை இன்னும் இருந்தது, சீமெந்து தரையில் கதிரையினை போட்டு வீதியினை பார்த்தபடி அமர்ந்துகொண்டு பத்திரிகையினை புரட்டினாலும் அதில் நாட்டம்  இல்லாமல் இருந்தது. மடித்து மடியில் வைத்துவிட்டு,கதிரையில் சாய்ந்துகொண்டேன்.

                                     அன்று ஒருநாள் பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பி இருந்தேன். பிரயாணத்தில் நல்ல தூக்கம் இருக்கவில்லை, சோர்வினால் ஒரே தூக்கமாக இருந்தது, எழும்பும்போது காலை ஒன்பதுக்கும் மேலாக இருந்திருக்கும், காலைச் சூரியனின் ஒளி கண்ணாடி யன்னலை சூடாகிக்கொண்டிருந்தது, எழுந்து சென்று யன்னலை திறந்தபோது சூரிய ஒளியுடன் மரநிழலில் தேங்கியிருந்த குளுமையான காற்றும் உள்ளே நுழைந்தது. கண்களை கசக்கி சோம்பல் முறித்தபடி மீண்டும் கட்டிலில் அமர்ந்தபோது மேசையில் வைக்கப்பட்டிருந்த தேநீர் கோப்பை கண்ணில் பட்டது, அம்மாதான் வைத்துவிட்டு போயிருக்கவேண்டும். எனது நித்திரையை குழப்பாமல் வைத்துவிட்டு சென்றிருக்கவேண்டும், அக்கா என்றால் நிட்சயமாக ” டேய் இன்னும் என்ன நித்திரை வேண்டிக்கிடக்கு ” என்றபடி எழுப்பிவிட்டுதான் சென்றிருப்பாள், தான் எனக்கு மூத்தவள் என்ற இடத்தினை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டாள், அவளுக்கு அப்படி ஒரு குணம்,

                                     இந்தநேரம்  அநேகமாக அவள் தனது வேலைக்கு புறப்பட்டிருப்பாள்; உயர்தர கல்வி முடிந்ததும் மேற்கொண்டு  படிப்பதை நிறுத்திவிட்டு, தான் வேலைக்கு போகவேண்டும் என்பதிலே குறியாக இருந்தவள்,  அவள் எதிர்பார்த்ததைப்போல் வங்கியிலும் வேலை கிடைத்திருந்தது. அது அம்மாவிற்கு பெரிய ஆறுதலாக இருந்தது. வீட்டு நிருவாகத்துக்கு போதியளவு வருமானம் இருந்தாலும், எனது படிப்பு செலவிற்கு அவளின் வருமானம் ஒரு பெரிய துணையாக இருந்தது. ” என்னதான் இருந்தாலும் உனது படிப்புக்கு நான்தான் செலவழிகிறான், விளங்கினால் சரி” என்பாள். “அக்கா தானே ” என்றதும், ” அது….” எனும்போது ஒருவித பெருமை அவளது முகத்தில் இழையோடும்.

                                      தேநீரை அருந்திவிட்டு அறையில் இருந்து வெளியே வந்து படிக்கட்டுகளால் இறங்கும்போது அம்மாவும் தங்கமும் எதோ உணர்வு பூர்வமாக கதைத்துக் கொண்டிருப்பது கேட்டது. எனது கால்கள் இறங்குவதை தவிர்த்து அவர்களின் கதையை கேட்பதிலே  கவனம் சென்றது. காலை உணவுக்கான ஆயத்தங்கள் முடிவடைந்து, சற்று ஆறுதலாக முன் மண்டபத்தில் அமர்ந்துகொண்டு அன்றய பத்திரிகையை பார்த்தபடி அவர்களிடையே புதினங்களும் , உள்ளக்கிடக்கைகளும் அலசல்களாக வெளிவரும். “இவரும் போய் பதினைந்து வருடம் ஆயிற்றுது, எதோ என்னால முடிந்த வரைக்கும் இருக்கிறதைக்கொண்டு படிப்பிக்கிறன், அவள் பெண்பிள்ளை, இப்ப வேலைக்கும் போறாள், காலாகாலத்துக்கு ஒரு கல்யாணம் காட்சிய அவளுக்கு செய்திட்டா, ஒரு பாரம் இறங்கிரும். இவன்ட படிப்பும் முடிய மூண்டுவருசம் எடுக்கும், பிறகு வேலதேட …..ம்” என்று தனது மனப் பாரத்தையும் , சலிப்பையும் வெளிவிட்டார். ” ஏன் அம்மா அதுகளுக்கென்ன, நல்லா ஒழுங்காதானே  வளத்திருக்கீங்க, உங்கட எண்ணத்தையும் சொல்லையும் மீறி அதுகள் என்னசெய்ய போகுதுகள்” என்று சமாதானப்ச் படுத்தினாள் தங்கம். ” இல்லடி , எல்லாம் சொல்லியா கிடக்குது, ஒன்றிருக்க ஒன்று நடந்திட்டா நான் தனியா இருந்து என்னசெய்வான், அவள் வீட்டோட  இருக்கிறதால எனக்கு ஒரு பயமும் இல்ல, இவன்தான் தூரத்தில போய் இருக்கிறவன், யார் எவர் எண்டு  தெரியாத பிள்ளையாரையும் பார்திற்றால்தான் எல்லாம் தவறா போயிரும், வளந்திற்றுகள் என்ர சொல்லுக்குள்ள நிக்குங்களோ தெரியாது” என்றபடி வசனத்தை முடிக்க முடியாமல் இருப்பதும், மூக்கு சிந்துவதுமாக இருந்தார்.  ” ஏனம்மா இந்தநேரம் இதுவெல்லாம் யோசித்து …..” என்றபடி

                                                 “தம்பியக் கூப்பிடட்டா “என்றாள். ” இல்ல இராப் பிரயாணம், சோர்வாயிருக்கும், இன்னும் கொஞ்ம் தூங்கட்டும், எழுப்பவேணாம் விடு”, என்றபடி பெருமூச்சொன்றை விட்டார். ” தம்பி , அவன் பொறுப்பான பிள்ளை அம்மா, நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்கொள்ளுறீங்க, பாருங்க , அவனுக்கு நீங்கதான் பேசி கல்யாணம் செய்விப்பீங்க”,  என்று நம்பிக்கையாகச்  சொன்னாள். ” அவளுக்கொரு கல்யாணம் நடந்து முடியிறவரைக்கும் எல்லாம் சரியா இருந்திரவேணும், இதைத்தான் அவர்ர படத்தைப்பார்த்து ஒவ்வொருநாளும் நான் கேட்டுகொள்ளுறது, யார் தலைல என்னென்ன எழுதிஇருக்கோ”, என்றபடி பத்திரிகையை மடிக்கும் சத்தமும், கதிரையை விட்டுஎழும் சத்தமும் கேட்டது.

                                 திரும்பவும் எனது அறைக்குச்  சென்று, கட்டிலில் சாய்ந்தபடி, அம்மாவின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும், எதிர்காலத்தை எதிர்கொள்ள அவர் முன்னே இருக்கின்ற சுமைகளும், என்னை எதோ செய்துகொண்டிருந்தது. அப்பா இல்லாமல் அவரின் தனியானதும் தனித்துவமுமான வழிநடத்தல் எந்த ஒரு தடையும் இல்லாமல் , அவரின் எண்ணப்படி நடந்துகொண்டிருந்தது. நிச்சயமாக எதிர்கால வாழ்கை தொடர்பாக எங்களின் சுய தீர்மானங்கள் அவரின் பாதையில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும். நட்பாகப் பழகும் பலரின் முகங்கள் ஞாபகத்தில் வந்து போய்க்கொண்டிருந்தன, பார்வைகள், கதை பேச்சுக்கள் , சந்தர்ப்பங்கள் எவ்வளவோ விடயங்களை மனம் சேமித்து வைத்திருந்து அசைபோட்டது, யாருமே அவ்வளவுதூரம் என்னுள் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கவில்லை, அந்த கொம்பாஸ் பெட்டி பெண்ணைத் தவிர. சில மதங்களுக்கு முன் அந்த புத்தக கடையில் சந்தித்ததன் பின் அவளைக் காணமுடியவில்லை. அம்மாவின் கனவுகளுக்கு எந்தொருவகையிலும் நான் தடையாக இருக்கக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள மனம் ஏனோ அச்சப்பட்டது. நான் ஏதும்  தவறக்கூடிய  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனா?, உறுதியாக எதையும் முடிவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  அம்மாவைச் சாதாரணமாக எதற்கும் எதிர்க்க முடியாது, அவரின் பாசத்தின் முன், எல்லாமே அடங்கிப்போய்விடும். எங்களைக் கட்டிப்போடும் ஆயுதம் , அது மட்டும்தான் அவரிடமிருந்தது.

                   இருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் அவளின் முகம் ஒழிந்துகொண்டு அடிக்கடி வந்து போனது. அழகிய அந்த கண்களும், அதற்கூடாக சொல்ல துடிக்கும் எண்ணங்களும், எனக்கு புரிந்திருந்தாலும் , வேண்டுமென்றே தற்காத்துக்கொள்ளும் நானும், சமநிலை படுத்த முடியாமல் எண்ணங்களும் ஏதோ ஒருவித மனச் சோர்வைத்  தந்திருந்தது.  என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனா?,விடை காணமுடியாது, தவிப்பாக இருந்தது. எழுந்து சென்று யன்னலுக்கூடாக வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டு நின்றேன், கூட்டமாக பறந்த பறவைகள், கலைந்து, இரட்டையாகப் பறந்து, ஒற்றையாய் தனியே பறந்துசென்றது.   வீசிய காற்றில் மடியில் கிடந்த பத்திரிக்கையின் பக்கங்கள் பட படத்தன, எண்ணங்கள் மீளவும் நியத்திற்கு திரும்பின.

                மடியில் இருந்த பத்திரிகையை கதிரையில் வைத்துவிட்டு எழுந்து, கேட் வரை நடந்தேன், வீட்டுக் கேற்றினை ஒட்டியதாய் அமைந்த ஒரு பொது நடை பாதையும் அதனை அடுத்து அமைந்த பிரதான பாதையும், நடை பாதை நெடுகிலும் சிறிய நிழல் மரங்களும்  பரபரப்பான இடமாக இருந்தாலும் , ஒரு அமைதியான அழகினை அவ்விடத்துக்கு தந்திருந்தது. எனது சிறுவயதிலிருந்தே  ஒரு ஆழமான நெருக்கத்தை    இந்த சூழல் என்னுடன் பேணி வந்தது , ஒரு    வருடத்தின், சில மாத காலா இடைவெளியினுள், ஊதா நிற பூக்களை இலை தெரியாமல் பூக்கும், ஒரு நிழல் மரம், அந்த நடை பாதைக்கு அருகே இருந்தது. நாள் முழுவதும் அப்  பூக்கள் விழுந்தவண்ணமே இருக்கும். தரை முழுவதும் பூக்கள் நிறைந்து கிடப்பது மிகுந்த அழகு. பாடசாலை செல்லும் நாட்களில் , அம்மரத்தின் அருகே நின்று பஸ் ஏறுவதற்குள், மரத்திலிருந்து விழுந்துகொண்டிருக்கும் பூக்களை ஓடி ஓடி கைகளால் பிடிப்பது அப்போது  ஒருவித சந்தோஷத்தைக் கொடுக்கும். சில வருடங்களின் முன்னர்தான் பிரதான வீதியின் விஸ்தரிப்பின் போது அதனை வெட்டி அகற்றப்பட வேண்டியதாயிற்று, ஆனாலும் அந்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.

                                          அந்த மரமிருந்த இடத்தினை  ஒருதரம் பார்க்கவேண்டும்போல் இருந்தது. அவ்விடத்தில்தான் அவளை, இறுதியாக சந்தித்தது ஞாபகமாக உள்ளது. பல்கலைக்கழக விடுதியில் இருந்து விடுமுறை ஒன்றிக்காக வந்திருந்த நேரம், ஒரு காலை நேரம், பொழுது போக்காக வீதி புதினம் பார்ப்பதற்காக கேட் அருகில் நின்றிருந்த வேளையில், அம் மரத்தின் அருகில் அவள் நடந்து வருவது தெரிந்தது, “ம் ..கண்டால் எதாவது கதைக்காமல் விடமாட்டாள்” என்று மனதுக்குள் எண்ணியபடி, என்முன்னால் நடந்து செல்லும்வரை காத்திருந்தேன். எதிர்பார்த்த அந்த கணங்களுக்குள் அவள் வரவில்லை, கேட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, அந்த மரத்தடியில் நின்றவண்ணம் என்னை பார்த்து என்னை அவ்விடம் வருமாறு தலையை அசைத்து, சைகை செய்தாள். என்னவாக இருக்கும் என என்னால் எதையும் யூகித்துக்கொள்ள முடியவில்லை. கேட்டை திறந்துகொண்டு வெளியே வந்து, அவளருகில் சென்று “என்ன?” என்றேன். வழமையான அந்த குழந்தைத்தனமான முகபாவம் காணாமல் போயிருந்தது, நிறைய நாள்கள் துங்காதவள்போல் இருந்தாள். ” எப்பாவந்தனீங்க?” என்றாள், அதுவும் அதிக யோசனையின் பின் வருவதுபோல் இருந்தது. ” நேற்று…ஏன்?” என்றேன். ” இல்ல …ஒரு மூணுநாளா ….உங்களோட கதைக்கும் போல இருந்தது ….நேற்றும் வந்தான் ..காணல்ல”, என்றாள். “ம்…” என்றபடி , மதிலில் ஒரு காலினைஊன்றியபடி சாய்ந்து ” என்ன ஏதும் அவசரமோ?” என்றேன். கை விரல்களை இணைத்தபடி ,பெருவிரலால் உள்ளங்கையை அமர்த்தியபடி அவள் இருந்தது, ஏதோ ஒரு மனக்  குழப்பத்தில் அவள் இருப்பதை உணர்த்தியது .  “பிரயாண களைப்பில நான் வெளிய எங்கேயும் வரல, ம்……..என்னெண்டு சொன்னால் தானே எனக்கு தெரியும்.” என்றேன். ” எனக்கு என்னென்று சொல்ல தெரியல்ல…..சொல்லவும் வருகுதில்ல… உங்களுக்கு என்னப் பிடிக்குமா?.”, என்றுவிட்டு  தலையை தாழ்த்திக்கொண்டாள், என்னை நிமிர்ந்து பார்க்க முடியாதவளாய் மிகவும் தவித்தாள்,  ” பிடிக்கும் , ஒரு நட்பு என்ற நிலையில, ஏன்? …இப்ப இந்த கேள்வி” என்றேன். ” இல்ல …ஒன்றுமில்லை …” என்றபடி நடக்க முட்பட்டாள், கண்கள் சற்று சிவந்திருந்தன. ” பொறும்..இப்படி ஒன்றுமில்லை என்று போனா, நான் , எதை யோசிக்கிறது “, என்றேன்.  ” வீட்டில கல்யாணம் பேசுறாங்க,.. வெளில அனுப்பவாம்,..என்னக்கு போக பிடிக்கல்ல..” என்றபடி என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய பார்வையை எதிர் கொள்ள முடியாமல், பார்வையை தவிர்த்துக்கொண்டேன். அவளுக்கு என்ன பதிலை சொல்வதென்று முடிவெடுக்க முடியவில்லை. எந்தொருவகையிலும் அவளுக்காதரவான ஒரு பதிலையும் கொடுக்கவும் முடியவில்லை. அந்தக் குழந்தைத் தனமான பார்வையும், சிரிப்பும் எங்கோ மறைந்து போயிருந்தன, இந்த சூழ்நிலைக்குள் இருந்து எவ்வாறு வெளியே வருவதென்ற தவிப்புத்தான் இவ்வாறு என்னிடம் கேட்க தோன்றியதோ என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.  மீண்டும் அவள், ”  உங்களுக்கு என்னப்   பிடிக்குமா ?”, என்றாள். ” இல்ல எண்டு சொல்லமாட்டான், பிடிக்கும் , ஆனா என்னால, உனக்கு என்ன சொல்லுறதென்று சொல்ல முடியல்ல” என்றேன். ” மன்னிக்கணும், நான் சொல்லுறத சரியாய் புரிந்து கொள்ளுங்க, நான் எந்த நிபந்தத்தையும் உங்களுக்கு தரல்ல, மிக நீண்ட காலமாக ஒருவருக்கொருவரை தெரியும், சந்திச்சிருக்கிறம், கதைச்சிருக்கிறம் ……உங்களை எனக்கு பிடிக்கும், உங்களுக்கு சிலசமயம் என்னில் விருப்பம் இருந்திருந்தா , அத என்னட்ட சொல்ல சந்தர்ப்பம் இல்லாம போய் இருந்தா அதுதான் ……கேட்டனான், நான் கேட்டது பிழை என்றா மன்னிச்சிகொள்ளணும்.” என்றாள். எதோ என்னிடம் முழுவதும் ஒப்பித்துவிட்டது போல மூச்சு வாங்கினாள். என் மீது கவனம் இருந்தாலும் என்னை பார்வையை எதிர் கொள்ள முடியாதவளாய் இருந்தாள். என்னிடம் தெரிந்த  சிறு அசைவுகளுக்கும், நான் ஏதும் சொல்ல முயற்சிக்கிறேனா என எதிர் பார்த்தாள். “யோசித்து சொல்லுறன் என்றா, அது எனக்கு தேவையான பதில் இல்லை, அதுல நான் எதிர்பார்த்த உண்மையான உங்களுடைய விருப்பம் இருக்காது. உங்களுடைய வாழ்க்கைல எனக்கொரு சந்தர்ப்பம் இருக்குமா? இருக்காதா?, என்ற ஒரு ஆசை, அவ்வளவுதான்” என்றாள், எனது கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. எதுவும் பேச முடியாதவனாய் நின்றேன். ” வரவா , வாறன் , நான் இப்படி வந்து கேட்டதுக்கு மன்னிக்கணும், எனக்கு வேறுவழி தெரியல்ல , வீட்டில உங்கட நிலைமை என்னென்று என்னக்கு விளங்கும், எங்கட வீட்டில என்னென்னவோ எல்லாம் சொல்லிப் பாத்திட்டான், அவங்க யாருக்கும் அக்கறை இல்லை…..” என்றபடி கண்களை துடைத்துவிட்டு, என்னை பார்த்தாள், அந்த அழகிய கண்களை நான் உற்றுப் பார்த்தபடி கண்களை மூடிகொண்டேன்.  தலையை மெதுவாக அசைத்து ” சாரி ” என்றேன், ” ம் ” என்றபடி , அவ்விடத்தை விட்டு மெதுவாக என்னை திரும்பி பார்க்காமலே நடந்து சென்றாள். தெரு வளைவில் அவள் மறைந்துகொள்ளும் வரை பார்த்தபடியே இருந்தேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, துடைத்து விட்டாலும், மீண்டும் கண்கள் கண்ணீரால் நிறைந்துகொண்டது, மூச்சு சூடாக வெளியேறியது. நான் இவ்வளவு இறுக்கமானவனா?, என்னாலே என்னை நம்பமுடியவில்லை, கேட்டை  திறந்துகொண்டு உள்ளேவந்தேன். சமையல் அறையில் அவர்கள் உள்ளது தெரிந்தது, மாடிப் படிகளில் கால் வைக்கும் போது, என்னை அறியாமலே அழுகை வந்தது. அறைக்குள் வந்து கட்டிலில் சாய்ந்துகொண்டபோதும் , நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்தது. ” உன்னை எனக்கு நன்றா பிடிக்கும், ஆனா நான் கொடுத்துவைக்கல்ல” என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். எதோ யாருக்கும் தெரியாமல் கொலை ஒன்று செய்ததுபோல இருந்தது. பலநாட்கள் கனவுகளில் இந்த நிகழ்வு பலவடிவங்களில் என்னை பயமுறுத்திக்கொண்டிருந்தது.

    இந்நிகழ்வின்பின் அவளை எங்கும் காணமுடியவில்லை, மீண்டும் ஒரு விடுமுறை காலத்திட்க்கு  வீடிற்கு வந்தபோது அக்காதான் சொன்னால்,” அந்த போஸ்மாஸ்டர்ட மகளுக்கு இந்தியாவில பதிவு நடந்து , போனகிழமைதான் டென்மார்க் போனவளாம், உனக்கும் தெரியும் டா அந்த பிள்ளையை, இதாலதான் அடிக்கடி போய்வருவாள், நல்ல அடக்கமான பிள்ளை. அம்மாவுக்கும் அந்த பிள்ளையில ஒருகண் இருந்தது, உனக்கு குடுத்துவைக்கலையோ இல்ல அவளுக்கு   குடுத்துவைக்கலையோ தெரியாது, இருந்தா நல்ல சோடிபொருத்தமாக இருக்கும் என்ன? ” என்றபடி என்னைப் பார்த்தாள். ஒருகணம் உலகமே இருண்டு வருவது போல இருந்தது.என்னை கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் கடினமாக இருந்தது, அருகில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டு , ” ம்” என்றேன் எந்த ஒரு உணர்வும் இல்லாமல். ” ஏன் டா, நான் இவ்வளவு கதைக்கிறேன், நீ என்னவோ ம் சொல்லுறாய், அப்ப உனக்குத்தான் கொடுத்துவைக்கல்ல” என்றபடி நகர்ந்தாள்.

                                             கசக்கி மூலையொன்றில் எறியப்பட்ட காகிதம்போல் , தேடுவராற்று கிடப்பதுபோல் இருந்தது. மீளத் திருத்தி எழுதமுடியாது, ஏறுக்கொள்வதில்தான் பிழைத்தல் தங்கியுள்ளது. எதிர்காலம் தனக்கொரு வழியை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. முடிந்தால் சுத்தகரித்துக்கொண்டு சேர்ந்து செல்வது இல்லையேல் மடிந்துபோவது, எமக்காக அது ஒருதடவையேனும்  தனிப்பட்ட முறையில் திரும்பிகூடப்பார்க்காது.

                                   “ஏன்டா ஒருமாதிரி இருக்கிறாய், என்ன?, நான் சொன்னது பிடிக்கலையா, சும்மா விடுடா ஸ்ரீதேவி இல்லாட்டி ஸ்ரீபிரியா, உனக்கென்ன, இனியா பிறந்து வர போகுதுகள், இங்க, உன்ட சேர்ட் எல்லாம் பழசாப் போய்கிடக்கு, பின்னேரம் வா , ஒருதரம் குமரனுக்கு போய்வருவம்” என்றாள். ” கொண்டுவந்த   சேர்ட் எல்லாம் கழுவி போட்டுத்தன், பழசு பட்டு போய்கிடக்கு, இரண்டு மூண்டு வாங்கி குடு பிள்ளை, அவன் வாயத் திறந்தொண்டும் கேக்கமாட்டான்”, என்றபடி அம்மா, எனது  காயப்போட்டிருந்த  சேர்ட்களை எடுத்துக்கொண்டு கிணற்றடி பக்கம் இருந்து,  மண்டபத்திற்குள் வந்தார். ” இப்ப நேரம் இருந்தா இரண்டுபேரும்  போயிற்றுவங்க” என்றார். எனக்கும் வெளியே எங்காவது போகவேணும் போல இருந்தது.” இப்ப போவமா”  என்றேன். ” வாடா, இப்பவும் நாங்கதான் தேடி தர வேணும், இண்டைக்கு நீயேதான் தெரிஞ்சி எடுக்கவேணும்.”, என்றபடி ஆயத்தமானாள்.

                              “குமரன் சில்க்ஸ்”, வீட்டின் முன்னுள்ள பிரதான வீதியின் மறுகரையில் இருந்தது, அந்த வீதியிலே ஒரு பெயர் சொல்லக்கூடிய அளவில் விலாசமான காட்சி அறையுடன் அமைந்திருந்தது. நீண்டகாலமாக எங்களது குடும்பத்தை அறிந்தவர்கள் என்பதால், போகும்போது தனிப்பட்ட வரவேற்பும் நல்ல தெரிவுகளை எடுத்து போடுவதிலும் பின்னிற்கமாட்டார்கள். தீபாவளியை முன்னிட்டு நிறைய ஆடைகள் வந்திருந்தன, எனக்கான   சேர்ட் தெரிவுகளில் அக்காதான்  முன்னின்றாள், ” நீ எப்பவும் இந்த மங்கின கலர்தான் எடுப்பாய், கொஞ்ம் வெளிப்பன கலராபோட்டுப்பார் எவ்வளவு எடுப்பாக இருக்கும். வந்து வாய்க்கணும் எனக்கொரு மச்சாள், உனக்கு பார்த்து பார்த்து எடுத்துத்தர” என்றபடி என்னை பார்த்து சிரித்தாள். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.”பிடிச்சிருக்கடா,  நீ இப்படியெல்லாம் எடுக்கமாட்டாய்” என்றாள். ” ம் ” என்றபடி அவளுக்கு பின்னால் நடந்தேன். “ஒரு சாறி எடுக்கிறதென்ற நூறு சாறிய எடுத்து குலைச்சு போடுவம், எடுக்கிறத சரியாய் தெரிஞ்சி எடுத்திரவேணும்,” என்று தனக்குள் கூறிக்கொண்டே நடந்தாள். அவள் பின்னே விரைவாக நடந்து செல்லும்போது யாரோ கையால் தட்டுவது போன்று தெரிந்தது. திரும்பிப்பார்த்தேன். காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த மெலிந்த உயரமான ,அழகான சுடிதார் அணிந்த மனிதப் பொம்மை, அழகாக அபிநயித்தபடி, ஆடிட்க் கொண்டிருந்தது, விழுந்துவிடுமோ என்றபடி அதன் கையை பிடித்து நிறுத்தியபடி , அதன் முகத்தினை பார்த்தேன், என்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது போலிருந்தது, அதே கண்கள், அதே பார்வை , எப்படி இது சாத்தியமானது, கண்களில் கண்ணீர்முட்டிக்கொண்டு வந்தது, தலையை குனிந்த படி மன்னிச்சிக்கொள் என்று வாய் முணுமுணுத்தது , பொம்மையின் பாதத்தில் கண்ணீர் துளியாய் துளித்துளியாய் விழுந்து கொண்டிருந்தது. ” என்னடா , அங்கேயே நிற்கிறாய் , வா போகலாம்”, என்ற அக்காவின் குரல், தூரத்தே ஒலித்தது, மீண்டும் பொம்மையை பார்த்துவிட்டு , தலையை குனிந்து கண்களை துடைத்தபடி வெளியேவந்தேன்.  திரும்பி பார்த்தேன், கண்ணாடி அறைக்குள் இருந்து என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை போல் இருந்தது. ” நான் எங்கும் போகல்ல உனக்காக இங்கே இருக்கிறேன்”, என சொல்வதுபோல் இருந்தது.

                                      அம்மா        வெளிவாசலுக்கு வந்தபடி ” அங்கென்ன செய்கிறாய் , சமையல் முடிஞ்சிது, வாவன்… சாப்பிட்டுத்து..கொஞ்சம் கண் அயர்ந்தா, நல்லா இருக்கும்” என்றார். அம்மாவின் குரலை கேட்டு திரும்பி, என்னை சுத்தகரித்தபடி ” வாறன் “, என்றேன். இவ்வளவு நேரமும் கேட் அருகே இருந்து வீதியை பார்த்துக்கொண்டிருந்ததால், தார் வீதியில் எழுந்த வெப்பக்காற்றில் முகம் சூடாகியிருந்தது. கத்தா மர   நிழலில் குளிர்ந்துபோய் இருந்த சீமெந்து தரையில் நடந்து வீட்டுக்குள் வரும் போது,  மெதுவாக வீசிய காற்றில் குளிர்ச்ச்சி  இருந்தது. “நேரம் இப்பதான் பன்னெண்டாகுது, உனக்கு பிடிச்சமாதிரித்தான் தங்கம் சமைச்சிருக்காள், நல்ல குஞ்சுத் திராயும் கீரிமீனும் சேர்த்து சுண்டலும் செய்திருக்கிறாள், சின்னன்ல உன்னக்கு இது சரியான விருப்பம், தெரிஞ்சி வைத்துக்கொண்டுதான் வாங்கிவந்திருக்கிறாள், அங்க ரவுணிலை இதெல்லாம் எங்க கிடைக்கப்போவுது, இப்படிவந்ததான் உண்டு “, என்றபடி  சாப்பாட்டு மேசையின் கதிரை ஒன்றை இழுத்தபடி , ” போய் முகத்தை கொஞ்சம் அலம்பி கழுவித்து வா , அலுப்பு தெரியாம நல்லா சாப்பிடலாம்” என்றார். உண்மைதான்  சாப்பிடமுன் கொஞ்சம் முகம் கை கால்  கழுவிற்று இருந்தால் நன்றாகவே இருக்கும். இது அவரின் அனுபவம். எமக்கும்தான். எவ்வளவோ மணமும் சுவையும் சாப்பாட்டில் இருந்தாலும், யாருக்காக சமைக்கிறார்கள் என்பதிலேயும் கை பக்குவத்திலும்தான் அதன் உள்ளடக்கம் தங்கிருக்கும், இங்கு அதற்கு எந்த குறையும் இருக்காது. இன்று என்னவோ என்னை அறியாமல் ஏற்படட மனக்குழப்பங்கள் வீட்டு சூழலுடன் ஒட்டிக்கொள்ளாமல் இருந்தது. ” எப்படிடா …நாட்டுக்கோழி கறி, நல்லா அரச்சாக்கியிருக்கு …நல்லமா  , திராய் எப்படி , போகக்குள்ள கொஞ்சம் கட்டித்தாறன் .. மருமகளுக்கும் பிள்ளைளுக்கும் கொடு, அங்க எல்லாம் இதுக்கு எங்க நேரம் இருக்கப்போவுது, கிடைக்கிறத அவிச்சு போட்டுத்து போறதான் என்ன, ஆ …அப்படித்தானே.”, என்றார் அருகில் வந்து அமர்ந்தபடி. ” எல்லாம் நல்லா இருக்கு அம்மா,   கட்டித்தாங்க கொண்டுபோறன்,” என்றேன் ஒரு ஒப்புதலுக்கு. உண்மையிலே சமையலில் எந்த குறையும் இல்லை குறை என்னில்தான் என்பதை உணர்ந்துகொண்டேன். ” என்ன மூன்று மணிக்கா கூட்டம் இங்கைருந்து போக ஒரு பதினைஞ்சு நிமிடம் போதும் என்ன .. நீ மேல போய் படு …ஒரு ரெண்டேகால் போல எழுப்பி விடுறன், ” என்றபடி எனது தட்டினை எடுத்துக்கொண்டு சமையலறை பக்கம் சென்றார்.

                          படிகளில் ஏறி அறையை அடைந்ததும் , திறந்துகிடந்த யன்னலூடாக காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது, அம்மா சொன்னதுபோல கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்றபடி கட்டிலில் சாய்ந்துகொண்டேன், வீசிய காற்றில் என்னை அறியாமலே அயர்ந்துவிட்டேன். ” மாமா ” ..என்ற சத்தம் , தூக்கத்தினை நகர்த்தியது. எதிரே அக்காவின் மகள் பிருந்தா நின்றுகொண்டிருந்தாள், ” அம்மம்மாதான் எழுப்பிவிட சொன்ன மாமா ….காலைலயா வந்த …வருவீங்க என்று தெரிஞ்சிருந்தா ஸ்கூலுக்கு போகாம நின்றிருப்பான் “, என்றபடி அங்கிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள். ” இப்பதான் வந்ததா …எப்படிப்போகுது …படிப்பெல்லாம்.” என்றேன், ” நல்லம்…மாமா.. எக்ஸாமில் நல்லா மாக்ஸ் எடுத்திருக்கிறேன்  ” என்றாள். ” அம்மா உயர்தரத்தோட படிப்பை நிறுத்திட்டா …அது அந்த காலம் …இப்ப இங்க எல்லாவசதியும் இருக்குதானே ..நல்லா படிக்கவேணும்…என்ன” என்றேன், தலையை ஆட்டி” ஆம்” என்பதுபோல சைகை செய்தாள். ” வரக்குள்ள மாமியையும் பிள்ளைகளையும் கூட்டி வந்திருக்கலாம்தானே…எவ்வளவு காலம் நேர்லபார்த்து….அடுத்த முறை  வரக்குள்ள …கட்டாயம் கூடிவரனும் என்ன” என்றபடி தலையை சரித்தபடி இரங்கிக் கேட்டாள். “சரி ..கட்டாயம் கூட்டிவா றன்”, என்றதும் , “ம்..” என்றுவிட்டு ,படிகளில் துள்ளித் துள்ளி இறங்கி ஓடுவது கேட்டது. குழந்தை பருவம் …கவலைகள் இல்லாமல் அமைந்துவிடவேண்டும் ,  சமூகம் தொடர்பான அக்கறையான  பார்வை  அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும், கிடைத்ததைதானே வழங்கமுடியும்.

    புறப்படுவதற்கு ஆயத்தமானேன், யன்னலை மூடிக் கொள்வதற்கு யன்னல் அருகே நெருங்கி எதிரே இருந்த” குமரன் சில்க்ஸ்” இன் அந்த பிரமாண்டமான காட்சி அறை தெரிந்தது, எனது கண்கள் அந்த காட்சி பொம்மையை தேடியது. என்னால் மிக இலகுவாக அதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும், அந்த அபிநயம் , அந்த உடல் வாகு, எனது கண்கள் உன்னிப்பாக தேடிக்கொண்டு வந்தது. சற்று நேரத்தில்  கண்கள் அந்த காட்சியில் நிலைத்து நின்றது.  உயரமாக அழகிய உடை அணிந்த ஆண் பொம்மை  அதனருகே நன்றாக சேலை அணிந்து நின்றது அந்த  பொம்மை , இரண்டினதும் காலருகே ஆணும் பெண்ணுமாக இரண்டு சிறு குழந்தை பொம்மைகள், ஒருகுடும்பமாக ……….ஆச்சரியமாக இருந்தது, எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன் …அந்த பெண் பொம்மையின் பார்வை அந்த ஆண் பொம்மையை நோக்கி இருந்தது.  யன்னலை மூடிக்கொண்டு படிக்கட்டுகளால் இறக்கிவந்தேன், மனம் நன்கு தெளிவாக இருந்தது…….

      ( முற்றும்)

    Share
  • நலுங்கு மணம்

     

     

     

    நான்கு காலிடா பந்தலில்

    நடந்த திருமணம்  – இல்லை

    நான்கு சுற்றிற்குள் மாலை மாற்றிய

    நலுங்கு மணம்…

    கருப்பனைச் சாட்சியாக வைத்து நடந்த

    சாதியம் மில்லா  முதல்மணம்…..

     

    கருக்கலைப்பு நிகழ முடியாததால்

    கண்டுணராத புது மணம்

    மாலை மாற்று இல்லை – ஆனால்

    தாலி மாற்று அவசியம்….

     

    மாதம் நான்கை விழுங்குவதால்

    தாயின் தாலியே

    தான மிடுகிறது..

    காவல் எப்போது காலை

    கவ்வும் என்பதற்காக…

     

    நாங்கள்

    வீடு இல்லா வானம்பாடி பறவைகள்

    வாடகைக்கு வீடு தேடுகிறோம்

    வெளியேற மனமில்லாமல்….

     

    வாரிசு எங்களுடையது

    வயிற்றுக்குள் இருந்தாலும் – நீ

    வயிற்று எரிச்சல் பட்டாலும்,

    வாயும் வயிரும் எங்க

    வகையறா தானே?

    வெண்மை நிறத்தில்.

     

     

     

    மூன்று திங்களுக்கு முன்பு நிகழ்ந்த

    முரசறையா திருமண மாச்சே….

     

    உறவுகள் உதாசினப் படுத்தவில்லை – ஆனால்

    ஊருக்குள் வராதே என்கிறது.

    ஓரிரு திங்களும்

    ஒரு சுவற்றுக்குள்ளே

    முகம் பார்த்தேன்.

     

    பஞ்ச பாண்டவா்கள்

    படுத்திருந்த படுக்கையை

    பாதி இரவுக்கு பழக்கப்படுத்தினேன்

    படுக்கையும் எலிக்குஞ்சு

    சத்தமே எதிர்ப்பட்டன.

    அவ்வப்போது பகலும் இரவாகின

    பாண்டவா்கள் இல்லா நிலையில்.

     

    காதல் எனும் புனிதத்தில்

    காமம் இழந்து

    நலுங்கு மணத்தில் தாலி ஏற்கிறேன்

    தாய்மை எனும் பெயரோடு….

    முனைவர். இரா. மூர்த்தி

    உதவிப் பேராசிரியர்

    தமிழ்த்துறை

    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி

    கோயம்புத்தூர் – 641020.

    E-Mail : ramvini2009@gmail.com

     

    Share
  • வேரில் பழுத்த பலா புதினத்தில் சாதிய அரசியலின் உளச்சிக்கல்கள்

    – முனைவர் கி. இராம்கணேஷ்

    சு. சமுத்திரம் தமிழ் இலக்கிய உலகில் தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவர். பல்வேறு காலகட்டங்களில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொண்டு போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு போராடியவர். சமூகத்தில் தானும் தன்னைப் போன்ற பலரும் அனுபவித்த துன்பங்களையும் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் பொருண்மைகளாகக் கொண்டு புதினங்களில்; கருக்களை உருவாக்கி உருவங்களாக சமூக வீதிகளில் உலவ விட்டவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவராக விளங்குகிறார். சிறுவயதில் அனுபவித்த வறுமையும் அநியாயங்களும் இவரை எழுதத்தூண்டி சோஷலிசவாதியாக உருவெடுக்க வைத்தது. முற்போக்குச் சிந்தனை கொண்டு சாதிய அநீதிகளையும் சாமானியர்களின் வறுமையையும் ஆதிக்க வர்க்கத்தின் அடையாளங்களையும், பெண்ணடிமைத்தனத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுவதைத் தலைசிறந்த பணியாகக் கொண்டு காட்சிப்படுத்தியவர். புதினங்களில் பிரச்சினைகளைச் சொல்லித் தீர்வு காட்டுவதினும் மேலாக நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு போராட்டங்களில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு சொல்வதை மட்டுமே கடமையாகக் கொண்டு செயல்களில் ஈடுபடாதவர்களைப் போல் இல்லாமல் சொல்வதைச் செய்து காட்டி சமூகத்தினைச் சீர்திருத்த பல்வேறு வழிகளைக் கையாண்டவர். பல விமர்சனங்களை எழுப்பி, பல விமர்சனங்களுக்கு உள்ளானவர். இவரது புதினங்களின் வழி,  சாதிய அரசியலின் உளச்சிக்கல்களையும் வர்க்க முரண்பாடுகளையும் ஆராய்ந்து விளக்குவதாகக் கட்டுரை அமையவிருக்கிறது.

    சு. சமுத்திரத்தின் வாழ்வும் பணியும் 

    சு. சமுத்திரம் 1941-ஆம் ஆண்டு பிறந்தவர். நெல்லை மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தன்னுடைய பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தவர். பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றி, இறுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் தமிழ் சேவைப்பிரிவிலும் செய்தி வாசிப்புப் பிரிவிலும் பணிபுரிந்தார். பிறர் இரசித்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுத்துலகில் பயணிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கிவளரத் தம் பங்களிப்பினைப் புதினங்கள், சிறுகதைகளின் வழி மேற்கொண்டார். 15 புதினங்கள், 8 குறும் புதினங்கள், 500 சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், நாடகம் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள்,“மார்க்சிய சிந்தனைக் களஞ்சியங்கள்”  எனக் கூறின் சாலப் பொருந்தும். நா.வானமாமலை, க. கைலாசபதி, தி.சு. நடராசன், தோதாத்திரி, தொ.மு.சி. இரகுநாதன், ராஜம் கிருஷ்ணண் போன்ற சிந்தனையாளர்களின் வரிசையில் இடம்பெற்றவர். பல்வேறு இடங்களில் தான் பணியாற்றிய அனுபவங்கள், தான் சந்தித்த மனிதர்கள், தன்னோடு பழகியவர்கள், சமூக அவலங்கள், அடிமட்ட மக்களின் பல்வேறு  துன்பங்கள் ஆகியவற்றை முன்னிறுத்திப் படைப்புகளை வெளியிட்டவர். கற்பனைக்கும் ஒப்பனைக்கும் இடம் தராமல்  உண்மைக்கு முதலிடம் கொடுத்து எழுதிய சிந்தனைவாதி.

    திருநங்கைகளின் பிரச்சினை குறித்த  ‘வாடாமல்லி’, எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய ‘பாலைப்புறா’, தேவதாசி முறையைக் களைய வேண்டும் என்ற நோக்கில் ‘சாக்கம்மா’ போன்ற புரட்சிமிக்க புதினங்களைப் படைத்தவர். இவை மட்டும் அல்லாமல் பிறர் எழுதத் தயங்கும் கருத்துக்களையும் புதியகோணத்தில் புதினமாக்கிக் காட்டியுள்ளார். “என் எழுத்து ஏழ்மையின் வெற்றியாகாது; ஏழைகளின் வெற்றியாக வேண்டும்” என்ற போக்கிலிருந்து இம்மியளவு கூட மாறுபடாமல் செயல்பட்டவர். அரசியலில் நடக்கும் குளறுபடிகளைச் சிறிதும் தயக்கமின்றி ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தவர். இருப்பினும் கொள்கைகளிலிருந்து பின்வாங்காத ஒப்பற்ற மனிதர். பெருந்தலைவர் காமராசரிடம் பாராட்டுப் பெற்றவர். வலியவரிடமிருந்து எளியவரை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டவர் எனப் பல அடையாளங்களைக் கொண்டு திகழ்ந்தவர். மொத்தத்தில் இவரை  உப்புக்கரிக்கும் தண்ணீரையுடைய சமுத்திரம் போன்று பலரது கண்ணீரை உள்வாங்கிப் பொங்கிய சமுத்திரம் என்று கூறின் சாலப் பொருந்தும். 1974 முதல் எழுதத் தொடங்கியவர். பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவரின் ‘வேரில் பழுத்த பலா’ என்ற புதினத்திற்கு 1990ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகம் ‘தமிழன்னை விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது. சிறுகதைக்காக ‘இலக்கியச் சிந்தனைப் பரிசு’ பெற்றுள்ளார். இவரது மறைவுக்குப் பின் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டில் சென்னையில் நேர்ந்த  சாலைநேர்ச்சியொன்றில் காலமானார்.

    வேரில் பழுத்த பலா

    படைப்பாளி எதார்த்த உலகில் தான்கண்ட காட்சிகளைக் கருவாகக் கொண்டு எழுதும்போது படைப்பானது வெற்றி பெறும். ஒப்பனைப்படுத்தாமல் கண்டதைக் காட்சிப்படுத்தும் படைப்பு எழுத்துக்கு மேலும் வலுசேர்க்கும். அவ்வகையில் ‘வேரில் பழுத்த பலா’ என்ற நாவல் அரசாங்க அலுவலகமொன்றில் நடக்கும் சாதிய அரசியலைத் தோலுரித்துக் காட்டுவதாக அமைகிறது. மேலும் சாதிய அரசியலில் சிக்குண்டு தவிக்கும் பெண்ணொருத்தியின் உள்ளக் குமுறலையும் எதார்த்த உலகில் நின்று புதினம் விளக்குகிறது.

    புதினத்தின் தலைமைப் பாத்திரமான சரவணன், முறைப்படி படித்துப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிகாரியானவன். கிராமப் பின்னணியில் வளர்ந்து, படித்து சென்னையில்  அரசு அலுவலகங்களுக்கான எழுது பொருட்களைத் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து அனுப்பி வைக்கும் அலுவலகத்தில் அவனது பணி அமைந்திருந்தது. இப்புதினத்தின் பல்வேறு திருப்புமுனைகள், உரையாடல்கள் பெரும்பான்மையாக நடக்கும் இடம் இவ்வலுவலகமே ஆகும். அதிகாரிப் பணியில் இருந்தாலும் உடைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவன். செய்யும் தொழில் கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் மனதைச் செலுத்தியவன். வேலைக்குச் செல்பவர்கள் எதிரே, கணவனை இழந்தவர்கள்முன் வரக்கூடாது என்ற மூடநம்பிக்கையை அறவே வெறுப்பவனாகப் படைக்கப்பட்டுள்ளான். கணவனை இழந்த பெண்ணான தன் அண்ணி எதிரே வந்தபோது கண்டித்த தாயிடம் அண்ணிக்கு ஆதரவாகப் பேசுகிறவன். மேலும் அண்ணி தனக்கு மற்றொரு தாயாக விளங்கி, தன் கல்விக்காகப் பாடுபட்டதை நினைத்துப் பார்ப்பவன். இதன்வழி செய்ந்நன்றி மறவாப் பண்புடையவனாக சரவணனைக் கருத முடிகிறது. அதிகாரிப் பணியில் இருப்பவர்கள் தாமதமாக அலுவலகத்திற்குச் சென்று வேலை நேரம் முடிவதற்கு முன்பாகவே கிளம்பி விடுவார்கள். ஆனால் சரவணன் இச்செயல்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாகத் திகழ்ந்தவன்.  சரவணனிடம் நிர்வாக அதிகாரி ஒரு முறை, “சார் நீங்க … கெஜட்டட் ஆபிஸர்… உங்க அந்தஸ்துல இருக்குற அதிகாரிங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்துல வரணுமுன்னு ஆபிஸ் விதி கிடையாது… ஆனா நீங்க என்னடான்னா ஆபிஸ் டைமுக்கு முன்னாலேயே வந்துடறீங்க…” எனச் சொன்னபோது,“ கெஜட்டட் ஆபிசருக்கு நேரம் கிடையாதுன்னு ரூல்ஸ்ல சொல்றது எதுக்குன்னா, அவங்க ஆபிஸ் நேரத்துக்கு முன்னாலயும், பின்னாலயும் கூட வேலை பார்க்கணுமுன்னு அர்த்தப் படுத்திக்கணுமே தவிர, இதுக்கு இடையில், எப்போது வேணுமுன்னாலும் வரலாமுன்னு அர்த்தப்படுத்திக்கக் கூடாது…” எனக் கூறி அதிகாரி பதவிக்கான இலக்கணத்தினை எடுத்துக் கூறியவன். வெறும் வாய் வார்த்தைக்காக கூறாமல் சொன்னபடி நடந்து காட்டியவனாகக் குறிப்பிடலாம்.

    சரவணனின் தாய், தங்கை வசந்தாவிற்குப் பரிந்துரை செய்து வேலை வாங்கிக் கொடுக்கக் கேட்டபோது மறுத்து, குறுக்கு வழியில் வேலை வாங்குவது நிலைக்காது எனக் கூறியதோடு, “நான், போட்டிப் பரீட்சை எழுதித் தேறி… வேலைக்கு வந்தேன். வேலைக்குன்னு பேனாவைத் தான் தொட்டேன். எவன் காலையும் தொடல… இவளுக்கும் தொடமாட்டேன்” என்கிறான். நேர்மையும் தன்மானமும் ஒருங்கே பெற்றதால் சரவணனின் பதில் இவ்விதம் வெளிப்படுகிறது. உழைப்பினால் கிடைக்கும் வெற்றியே நிரந்தரமானது என்பதைப் பூரணமாக நம்பியவன். சரவணன் ஒரு முறை வாகனத்தில் அவசரமாகச் சென்று கொண்டிருந்தபோது மஞ்சள் கோட்டைத் தாண்டியதற்காக போக்குவரத்துக் காவலரால் தடுத்து நிறுத்தப்பட்டான். அப்போது அந்தக் காவலர் வாகன ஓட்டிகளிடம்  வசை பாடியதையும் கையூட்டுப் பெற்றதையும் கண்டான். “ டயரிக் காகிதமோ… அசோகச் சக்கரம் பொறித்த காகிதமோ… அசோக சக்கரத்தில் மூன்று சிங்கங்கள் நிற்குதே சிங்கம் விடுமோ… ஜெயித்து விட்டது” எனப் படைப்பாளி  சரவணன் கதாபாத்திரத்தின் வழிக் கூறுவது எதார்த்த உலகில் நடப்பதை எள்ளலோடு விமர்சிப்பதாக அமைந்துள்ளது. காவலர் தன்னிடம் வந்து பேசியபோது,“இந்த சரவணன் கேஸுக்குப் போவானே தவிர… கேஷூக்கு போகமாட்டான்… உம்… எழுதறதை எழுதிட்டு, மெமோ கொடுங்க… எப்போ கோர்ட்டுக்கு வரணுமோ… அப்போ வாரேன்” எனச் சொன்னது அநியாயத்திற்கு எதிரான  கருத்தாய் வெளிப்படுகிறது. காசு கொடுக்கமுடியாத ஏழைகளைப் பார்த்து காவலர் திட்டியதைப் பார்த்து ,“கோளாறான சமூக அமைப்பில் ஏழைகள் தங்களோட தன்மானத்தை விலையாகக் கொடுத்தால்தான், சுதந்திரத்தோடு நடமாட முடியும்” என்பதிலிருந்து சமூக அவலங்களை உணரமுடிகிறது.

    சரவணன்  உயர்பொறுப்பில் பணியாற்றும் அரசு அலுவலகத்தில்  சௌரிராஜன், உமா, பத்மா, ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேரும் அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களின் செயல்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டவள் அன்னம். முறைப்படி தேர்வெழுதி வந்தவள். அவள் தகுதிக்குரிய வேலையைக் கொடுக்காமல் சாதாரண வேலையைக் கொடுத்துத் திட்டி வேலை வாங்குகிறார்கள். எந்நேரமும் அவள் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவள் என்பதைச் சுட்டிக் காட்டிக் காலனிப் பொண்ணு எனச் சொல்லி அவள் திறமையை வெளிக்காட்ட விடாமல் மட்டம் தட்டுகிறவர்கள். மேலும் இதை அறியாத சரவணனிடம் வேலையை அன்னம் சரியாகச் செய்யவில்லை எனச் சொல்லி  மெமோ கொடுக்க காரணமாய் இருக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அலுவலகத்திற்காக வாங்கி காண்ட்ராக்டரிடம் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்பவர்கள், அலுவலகத்தில் சரிவர வேலை செய்யாதவர்கள் , காண்ட்ராக்டரிடம் அலுவலக இரகசியங்களைச் சொல்பவர்கள் எனப் பல முகங்கள் கொண்ட வேடதாரிகள். இவர்களின் செயல்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அன்னத்தின் பங்களிப்பு ஓரிடத்தில் நிகழ்கிறது. அதுவும் வேலை போய்விடும் என்ற சூழலில் தன்னைத் தற்காத்துக் கொள்ள, அலுவலகத்தில் நடக்கும் சில அநியாயங்களுக்கு தான் காரணமில்லை என்பதை உணர்த்துவதாக அமைகின்றது. சாதி என்பது சதி செய்து பிறர் மனக் கதவைத் திறந்து அவர்களைச் சுட்டெரிக்கும் கொள்ளியாக உணர்த்தப்படுகிறது.

    நேர்மையின் வடிவமான சரவணன் உண்மையறிந்து அன்னத்தின் தகுதிக்குரிய வேலையைக் கொடுக்கச் சொன்னபோது, அவள் திறமையற்றவள் எனப் பலவாறு சௌரிராஜனால் கூறப்படுகிறது. அப்போது சரவணன்,“ ஒங்களுக்கு ஹரிஜனப் பெண்ணுன்னால், ஒன்றும் தெரியாதுன்னு நினைக்கிற சட்டவிரோத சமூக விரோத சிந்தனை.” என்கிறான். இதன் வழி சாதியப் போக்குக்கு எதிர்ப்பைக் காட்டுவது புலப்படுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனக் கூறிய வள்ளுவரின் சிந்தனையைப் படித்தவர்களும் உணராதது வேதனையளிக்கிறது. மேலும்,“படித்த ஹரிஜனங்களோட திறமை. வெட்டியெடுக்கப்படாத தங்கம் மாதிரி…” எனச் சரவணன் கூறுவது தீண்டாமைக்கு எதிரான முழக்கமாகவும், தாழ்த்தப்பட்டவர்களின் திறமை வெளிக்கொணரப் படாததையும்  பொதுவுடைமைக் கருத்தையும் உணர்த்துகிறது. மேலும் தானும் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவன் என சரவணன் கூறுவதின் வழி சௌரிராஜன் போன்ற சாதிவெறி கொண்டவர்களுக்கு சரியான சம்மட்டியடியான கருத்தாக இஃது விளங்குகிறது.

    அன்னத்தை ஒரு நாள் மாலை ஏழு மணி வரைக்கும் இருக்கமுடியுமா எனச் சரவணன் கேட்டதை அறிந்த உமா, “இருக்கியான்னு கேட்டால், நீ படுக்கிறேன்னு சொல்லி இருப்பே” எனக் கேட்டது அவளை உளவியல் ரீதியாகப் புண்படுத்துவதாக அமைகிறது. மேலும் இஃது சொல்லம்பாய் மனதை ரணமாக்குகிறது. சாதியும் பெண்மையும் சேர்ந்து சமூக அநீதியை அன்னத்திற்குக் காட்டுகிறது. “பாவம் காலனிப் பொண்ணுனு பார்த்தா…” எனச் சொல்லிச் சொல்லியே அவளின் திறமை முடக்கப்படுகிறது. ஒரு சமயம் அலுவலக வேலையைச் சொல்லித் தரும்படி  உடன் பணியாற்றும் ஒருவனிடம் அன்னம் கேட்டபோது, அவன் அவ்வளவு பகிரங்கமாகவா கற்றுக் கொடுக்க முடியும் எனச் சொல்லி பெண்மைக்கு இன்னல் இழைப்பதை அறியமுடிகிறது. இஃது பணியாற்றும் இடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் சுயநலக் கூட்டம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் மற்றவர்களை மட்டம் தட்டவும் சாதியை ஆயுதமாகக் கொண்டிருப்பதைப் புதினம் உணர்த்துகிறது.

    அரசு விதிமுறைகளை மீறிச் செயல்பட்டவர்களைக் கண்டித்தபோது, அஃது சரவணனுக்கு எதிரானதாக அமைகிறது. காண்ட்ராக்டர் மூலமாக நேர்மையின் உருவமான சரவணன் மீது மேலிடத்திற்குத் தவறான தகவல் பறக்கிறது. சரவணனிடம் பதில்கேட்டுக் கடிதமும் வருகிறது. ஆனால் சரவணன் எழுதும் கடிதங்களுக்கு எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. ஆளுகின்ற வர்க்கத்தின் சர்வாதிகாரப் போக்கை இச்செயல்பாடு காட்டுகிறது. இதற்குக் காரணமாக சரவணன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவன் என்பதால் இவ்விதம் நிகழ்கிறது எனலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் சரவணன், அன்னம் போன்றோரின் கருத்துகள் அலுவலகத்தைத் தாண்டிக் கூட செல்லவில்லை. நீதியின் குரல் ஒடுங்குகிறது. அநீதியின் குரல் அடக்குகிறது. உடல் உழைப்பு மேற்கொள்பவர்களைத் தாழ்ந்த சாதியாகக் கருதிய சமூகம் அவர்கள் படித்து முன்னேறினால் முட்டாள்களாகக் கருதுகிறது  என்பதைப் புதினம் பதிவு செய்துள்ளது.

    ஒரு கட்டத்தில் சரவணன்  ஊழலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்தபோது சிலர் பயப்படுகின்றனர். அப்போது சௌரிராஜன் நடுங்கிக் கொண்டிருந்த அக்கௌண்டண்டைப் பார்த்து, தைரியமாய் இருக்கும்படிச் சைகை செய்து, ”இது யோக்கியன் பயப்பட வேண்டிய காலம்; நீ பயப்பட வேண்டாம் என்பதைக் காதில் போடப் போனார்” என இடம்பெற்றுள்ள செய்தி நீதியின் குரல்வளை வெட்டப்பட்டதையும் அநியாயத்தின் குரல் ஓங்கி ஒலிப்பதையும் காட்டுகிறது.  மேலிடத்திலிருந்து வந்த கடிதத்தில் தரமற்ற பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் வழங்கும்படியும் சென்ற ஒப்பந்த காலத்தில் திறம்பட செயல்பட்ட அந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும்படியும் எழுதியிருக்கிறது. இதைப் போன்ற  மேலிடத்தின் போக்குகள்  அவலத்திற்குரியதாகிறது. வெளியே சொல்ல முடியாத கவலைக்கு உள்ளான சரவணனுக்கு தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வுவதாக அமைகிறது. இனியும் பணி செய்தால் அசிங்கம் எனக் கருதி சரவணன் அன்னத்திடம் பணியிலிருந்து விலகக் கடிதம் தயாரிக்கச் சொன்னபோது, அன்னம் மறுத்துப் பலவாறு சொல்லிப் போராடத் துணிச்சல் தேவை என்பதாகக் கூறிப் புண்ணான சரவணன் உள்ளத்திற்கு மருந்தாகிறாள்.

    அப்போதுதான், “அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில் அணில் கடித்த பழங்களையும் பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய் இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய்விட்டதே” எனச் சரவணனுக்குத் தோன்றியது. மனதால் இணைந்த இருவரும் போராடவும் தயாராயினர் என்பதாகப் புதினம் நிறைவுறுகிறது.

    சாதிய அரசியலின் உளச்சிக்கல்களைப் புலப்படுத்துவதாக இப்புதினம் அமைகிறது. திறமையும் தகுதியும் வளர்ந்தாலும் சாதிப் பேய் ஒழியாவிட்டால் நாட்டில் வாழ்பவர்கள் நன்னிலை எய்த இயலாது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் இத்தகைய இழிநிலை முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதை இப்புதினம் வலியுறுத்துகிறது.

    ‘வேரில் பழுத்த பலா’ புதினம் ஒடுக்கப்பட்டவர்கள் போராட்டக்களத்தில் குதித்தால் மட்டுமே வாழமுடியும் என்பதை விளக்கி நிற்கின்றது. திறமையற்றவர்களின் செயல்பாடே பிறரை அடிமைப்படுத்தக் காரணமாகிறது. மொத்தத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வுரிமையைக் காத்துக்கொள்ளவும் பொதுவுடைமையை நிலைக்கச் செய்யவும் போராடிய சுதந்திரப் போராட்டமாக புதினம் படைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. எல்லோரும் மனிதர்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே மனித சமுதாயம் தலைநிமிர்ந்து மனிதநேயமிக்கதாக உருவாக முடியும்… என்பதை சு.சமுத்திரம் தமது படைப்பின் வழி புலப்படுத்தியுள்ளார்.

    குறிப்புதவி நூல்கள்

    1. வேரில் பழுத்த பலா- சு.சமுத்திரம்
    2. வாடாமல்லி – சு. சமுத்திரம்
    3. பாலைப்புறா – சு. சமுத்திரம்
    4. சாக்கம்மா – சு. சமுத்திரம்

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி – 642 107
    அலைபேசி – 9715984239, 9677374239.

    Share
  • மரபுவழிச் சுவடிப் பாதுகாப்பு

    -முனைவர் த. ஆதித்தன்

    மிகவும் தொன்மையான காலம் தொட்டே சுவடிகளின் பயன்பாட்டினை அறிந்தவர்களாகத் தமிழர்கள் திகழ்ந்துள்ளனர்.  அச்சுவடிகளுக்கு அழிவோ, சிதைவோ வராதவாறு பாதுகாப்பதற்குரிய செயல்முறைகள் குறித்தும் நன்கு ஆராய்ந்து முடிவுகளைக் கண்டுள்ளனர்.  அறிவியல் பூர்வமான பாதுகாப்பு நெறிமுறைகளையும் அக்காலத்திலேயே மரபுவழியாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.  அம்மரபுவழிச் சுவடிப் பாதுகாப்பு நெறிமுறைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    மரபுவழிப் பாதுகாப்புக் குறித்து ப.பெருமாள், “தொன்று தொட்டு காலங்காலமாகச் செய்யப்பட்டுவரும் பாதுகாப்பு முறைகளை மரபுவழிப் பாதுகாப்பு என்பர்.  சுவடிகள் இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் அழிவதைத் தடுக்க பல முறைகளை நம் முன்னோர்கள் கடைப்பிடித்துள்ளனர். அவற்றில் முக்கியமாகச் சுவடிகள் வைக்குமிடம், கையாளும் முறை, பூஞ்சை மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாத்தல், காலமுறை கண்காணித்தல், செப்பனிடுதல் மற்றும் படியெடுத்தல் போன்றவை மரபுவழிப் பாதுகாப்பு முறைகளாகும்”1 என்கிறார்.

    சுவடிகளைப் பாதுகாப்பதில் அவற்றை வைக்கும் இடங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.  மரப்பெட்டி, ஜாடி போன்றவற்றில் சுவடிகளை வைப்பது பழங்காலந்தொட்டே மரபாக உள்ளது.  அதே போன்று கோயில், பூமிக் கடியில் உள்ள நிலவறை போன்ற இடங்களில் சுவடிகளைப் பாதுகாத்து வைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

    சுவடிகள் வெப்பமாற்றம், ஒளி, தூசு போன்றவற்றால் எளிதில் பாதிப்படையும். வெப்பமாற்றத்தில் இருந்து சுவடிகளைக் காப்பற்ற காற்றின் ஈரப்பதத்தினை ஒரே சீராகப் பராமரிக்க வேண்டும்.  குறிப்பிட்ட நிலையில் இருந்து வெப்பம் மிகவும் குறையும் போதும் கூடும்போதும் சுருங்கி விரியும்.  அது நம் கண்களுக்குப் புலனாகாமல் இருக்கலாம்.  இருந்தாலும் நாளடைவில் அது சுவடிகளைப் பெரிதும் பாதிக்கும்.  எனவே முடிந்த அளவு அவற்றைப் பாதுகாக்கப் பழங்காலத்தில் இருந்தே பலமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

    ஈரப்பதத்தில் இருந்தும் பூஞ்சை மற்றும் பூச்சிகளின் பாதுகாப்பில் இருந்தும் சுவடிகளைப் பாதுகாக்க மஞ்சள், சிவப்பு அல்லது காவித் துணிகளில் அவற்றைக் கட்டிவைக்கும் வழக்கம் இருந்துள்ளது. சுவடிப் பாதுகாப்புக் குறித்து மோ.கோ.கோவைமணி, “சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளான  தூசு, ஒளி, காற்றில் உள்ள ஈரம் மற்றும் வெப்பத்தினால் சேதமடையக்  கூடாது என்ற எண்ணத்தால் துணிகளில் கட்டிவைத்துள்ளனர்.  முக்கியமாகப் பட்டு மற்றும் பருத்தித் துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  பூஞ்சை மற்றும் பூச்சிகளின் பாதிப்பு ஏற்படா வண்ணம் மஞ்சள் அல்லது சிவப்பு வண்ணத்துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  சில முக்கிய சுவடிகளைத் துணிகள் மட்டுமின்றி மான் தோலினால் சுற்றிவைத்தும், மற்ற மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட பைகளில் வைத்தும் பாதுகாத்துள்ளனர் 2  என்கிறார்.

    எகிப்து, கிரேக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட மூடிகளுடன் உள்ள ஜாடிகள் ஆரம்பகாலச் சுவடிப் பராமரிப்பில் முதன்மை இடத்தினைப் பெற்றுள்ளன.      நமது நாட்டில் கோயில் கோபுரங்களிலும், கர்ப்பக்கிருக மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கம் பரண் போன்ற பகுதிகளிலும் சுவடிகளைப் பாதுகாத்து வந்துள்ளனர்.  வீடுகளிலும் பூஜையறையில் வைத்துப் பாதுகாக்கும் பழக்கமும் இருந்துள்ளதாக முனைவர் ப. பெருமாள் குறிப்பிடுகிறார்.3 இதன்மூலம் பூஜை செய்யும் பொழுது ஏற்றப்படும் கற்பூரம் மற்றும் தூபம் ஆகியவற்றால் உண்டாகும் புகை அவ்வறையில் வைக்கப்பட்டிருக்கும் சுவடிகளுக்கு ஒரு வகையில் பாதுகாப்பைத் தருகின்றது.  மேலும் சுவடிகளை முக்கிய பூஜை தினங்களில் பிரித்துப் படித்துக் கட்டி வைப்பதினாலும் ஓரளவு சுவடிகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன  எனவும் அவர் கூறுகிறார்.

    ஆரம்ப காலங்களில் மூங்கில் மரம் அதிகமாக வளரும் இடங்களில் அவற்றிலான குழாய்களில் சுவடிகளை வைத்துப் பராமரிக்கும் பழக்கம் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.

    வட இந்தியாவில் உள்ள சில கோயில்களில் உள்ள உள்பிரகாரங்களில் பிரமிட் போன்ற சிறு அறைகளை ஏற்படுத்தி அங்கு சுவடிகளைப் பாதுகாத்து வந்துள்ளனர் எனவும் அதனை இறந்த சமாதி என அழைப்பர் எனவும் சுவடி ஆய்வளார்கள் குறிப்பிடுகின்றனர்.

    சுவடிகளின் முக்கியத்துவத்தை நம்மவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைத் தன்மையைப் பொருத்தியுள்ளனர் நம்முன்னோர் இதனை, “நம் முன்னோர்கள் பிற்காலச் சந்ததியினருக்குச் சுவடிகளின் முக்கியத்துவத்தை அறிவிக்க தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, பிரம்மா, ஹயக்கிரிவர் போன்ற கல்விக்கான கடவுளர்களின் கைகளிலும், திருவள்ளுவர், அவ்வையார், மாணிக்கவாசகர் போன்ற பெரும் புலவர்களின் கைகளிலும் சுவடி வைத்திருப்பதைப் போன்று உருவாக்கியுள்ளனர்.  சுவடிகள் சேதமுறா வண்ணம் ஒரு குழந்தை போன்று கையாண்டுள்ளனர்.  மேலும் அதனைப் படிக்க ஞானபீடம் என்றழைக்கப்படும் சுவடித் தாங்கி அல்லது சிக்குப் பலகை வைத்துப் படிக்கும் பழக்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.”4 என மோ.கோ. கோவைமணி கூறுவதன் மூலம் அறியலாம்.

    சுவடிகளைக் கையாளும் முறையும், சுத்தம் செய்யும் முறையும் பாதுகாப்பில் முதன்மை இடம்பெறுகின்றன. பூஞ்சை, பூச்சி, தூசு போன்றவற்றால் சுவடிகள் பாதிக்கப்படுவதில் இருந்து காக்க முறையான தூய்மைப்படுத்துதல் அவசியமாகும்.  மெல்லிய தூரிகை, மென்மையான துணி அல்லது பஞ்சு போன்றவற்றால் சுவடிகளைச் சுத்தம்செய்வது வழக்கமாக உள்ளது.

    இவ்வாறு தூய்மைசெய்யப்பட்ட சுவடிகளில் உள்ள நீர்த்தன்மை வெப்பமாறுபாட்டால் வெளியேறி விடுவதுண்டு.  அவ்வாறு நீர்த்தன்மை வெளியேறி விடும்போது அவை உடையக்கூடும், எனவே அப்பாதிப்பில் இருந்து காக்க எண்ணெய் பூசப்படும்.  இத்தகைய எண்ணெய்ப் பூச்சிற்குத் தொடர்ந்து ஒரே வகையான எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் பூச்சிகள் அதற்கு பழக்கப்பட்டுவிடும்.  எண்ணெய்ப் பூச்சையும் தாண்டிப் பூச்சிகள் தாக்கக்கூடும்.  எனவே ஒவ்வொருமுறை புதிதாக சுத்தம்செய்து எண்ணெய்ப் பூச்சுச் செய்யும்போதும் புதிய வகை எண்ணெய் பயன்படுத்துவது அவசியமாகிறது.

    சுவடிகளைப் பாதுகாத்து வைக்கும் அறைகளில் பல்வேறு வகையான பூச்சி எதிர்ப்பு மணம் (வாசனை) கொண்ட பொருள்களை வைக்கும் வழக்கம் உள்ளது.  வேப்ப மரத்தின் உலர்ந்த இலை, பூ, கொட்டை போன்றவையும், நொச்சி இலை, புங்க மர இலை, கிராம்பு, கற்பூரம், வெட்டிவேர், மிளகு, இலவங்கம், மஞ்சள், கருஞ்சீரகம் போன்றவையும் பூச்சி எதிர்ப்புப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பொடித்து முடிச்சுகளாகத் துணிகளில் கட்டி சுவடி அறைகளில் வைக்கும்போது அதில் எழும் மணம் பூச்சிகளை எதிர்த்து அழிக்கும் என்பர். பாம்பானது தமது உடலில் இருந்து கழற்றிய தோலை பாம்புச்சட்டை என்பர்.  அதனைச் சுவடி அறைகளில் வைத்தால் பூச்சிகள் வராது என்கிறார் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பணியாற்றிய மோடி அறிஞர் அ. பாலசுப்ரமணியன்.  மேலும் அவர் மயில் இறகுகளில் இருந்து எடுக்கப்படும் அதன் முடிகளைப் புத்தகங்களுள் வைப்பதும் ஒரு பாதுகாப்பு முறையே என்கிறார். மயில் இறகுக்கும் பூச்சிகளை விரட்டும் பண்பு உண்டு என்பது அவர் கருத்து.

    இவ்வாறு காலம் காலமாகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு சுவடிகளைப் பாதுகாத்து வந்துள்ளனர்.  சுவடிப் பாதுகாப்பில் இயற்கை சார்ந்து பல பொருள்களைப் பயன்படுத்தியதில் நாம் உலகிற்கே முன்னோடி எனலாம்.

    அம்முறைகளை அறிவியல் ரீதியாக ஆய்வுகளுக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை உலகிற்கு வழங்குதல் வேண்டும்.  அவ்வாறு செய்யும் பொழுது நம்பெருமையினை மீண்டும் உலகிற்கு உணர்த்தலாம். மேலும்  புதிய அறிவியல் ரீதியிலான முடிவுகளும் கிடைக்கக்கூடும்.

    சான்றெண் விளக்கம்:

    1. பெருமாள் ப. , சுவடிப் பாதுகாப்பு வரலாறு, கோவிலூர் மடாலாயம், கோவிலூர் – 630 307., இரண்டாம் பதிப்பு: மார்ச் 2014, பக்கம் எண்:119-120.
    2. கோவைமணி. மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூ- 613 010, ,இரண்டாம் பதிப்பு செப்டம்பர் 2016. பக்கம் எண்:143.
    3. பெருமாள், ப., சுவடிப்பாதுகாப்பு வரலாறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் – 630 307, இரண்டாம் பதிப்பு, மார்ச் 2014, பக்கம் எண்
    4. கோவைமணி. மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூ- 613 010, ,இரண்டாம் பதிப்பு செப்டம்பர் 2016. பக்கம் எண்:148.

    *****

    கட்டுரையாளர் – இணைப் பேராசிரியர்,
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர் 613 010
    கைப்பேசி:9841152393
    Email:kumaritathithan@gmail.com

     

    Share
  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 1

    -முனைவர் நா.பிரபு

    சுயமரியாதை எழுத்தாளர் விந்தன் அவர்கள் தம் எழுத்துலக வாழ்வில் பல்வேறு தடங்களில் பயணித்தவர். அஃதாவது நாவல்கள், சிறுகதைகள், குட்டிக்கதைகள், கவிதைகள், திரையிசைப்பாடல்கள், கட்டுரைகள் எனப் பன்முக ஆளுமையோடு விளங்கியவர். சிறந்த எழுத்தாளனாகவும் கவிஞனாகவும் தன்னை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்ட விந்தனின் படைப்புகளை இக் கட்டுரை ஆய்கின்றது. 

    நாவல்கள்

    விந்தன், கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம், தெருவிளக்கு ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘தெருவிளக்கு’ முற்றுப்பெறவில்லை. விந்தன் அவர்கள் சில நாவல்களை மட்டுமே எழுதி இருப்பினும் அவை அனைத்தும் சமுதாயத்தில் எழுச்சிகளையும் எண்ணக் கிளர்ச்சிகளையும் உண்டாக்கியன.

    கண் திறக்குமா?

    அரசியல் சார்பற்ற இலக்கியவாதியாக விளங்கிய விந்தன், ஒரு பேரியக்கத்தின் பெயரால் நடைபெற்ற மோசடிகளைக் காணப்பொறுக்காமல் தவறுகளைச் சுட்டி சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பும் பணியில் பெரிதும் தம்மை ஆட்படுத்திக்கொண்ட பொன்னி இதழில் ‘நக்கீரன்’ என்னும் புனைபெயரில் எழுதிய நாவல் கண் திறக்குமா?.

    “தவறுகளை வெளியே நிறுத்திக் கதவைத் தாழிடுவாயானால், உண்மையும் வெளியே நின்றுவிடும்!” என்னும் மகாகவியின் சிந்தனையோடு தொடங்கும் இந்நாவலில் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு தம் தங்கை மற்றும் உடமைகளை எல்லாம் இழந்து நிற்கும் செல்வம், போலியான அரசியலும் பொய்யான தத்துவங்களும் நாட்டில் வரவேற்கப்படுவதைக் கண்டு வேதனையுற்று இறுதியில் பொய்யெல்லாம் மெய்யென்றும், போலியெல்லாம் உண்மை என்றும் நம்பி அதற்குத் தம்மையே ஈடுபடுத்திக்கொள்வதாகக் காட்டியுள்ளார்.

    ஏழை எளிய பெண்களின் கற்பைச் சூறையாடிய கயவன் சிவகுமார், ஒரு நாள் வீராங்கனை ஒருத்தியால் கொலை செய்யப்பட்டதும் சிவகுமார் இந்த தேசத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்தான் என்று செல்லுமிடமெல்லம் பரப்புரை மேற்கொண்டு தன் மகனைத் தியாகியாக்க நினைக்கும் ‘பாரிஸ்டர் பரந்தாமன்’ செயல்களையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்நாவலில் காந்தியின் பெயரால், பணத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கண்மூடிக் கிடக்கும் சமூகமே! உன் கண் திறக்குமா? என்று கேட்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

    இந்நாவலில் சூத்திரர்-பார்ப்பனர் பேதத்தை இவ்வாறு காட்டுகிறார்: “அப்பொழுதெல்லாம் இவனுக்கு நான் சூத்திரச்சி என்றும் இவனுடைய அப்பா பிராமணரென்றும் தெரியாது. ஆகவே, எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் என்னுடன் பழகுவான். அதெல்லாம் அந்தக்காலம். இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இருக்க முடியுமா?” என்றாள் செங்கமலத்தின் தாயார் பாலுவை நோக்கி.

    “ஏன் முடியாது சித்தி? நிச்சயம் முடியும்!” என்றான் பாலு.

    “எப்படி முடியும்? புனிதம் மிக்க உங்கள் மனுதர்மம் அதற்கு இடம் கொடுக்காதே!” என்றேன் நான் சிரித்துக் கொண்டே.

    “மனுதர்மமாவது, மண்ணாங்கட்டியாவது?” என்னைப் பற்றி நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். மனித தர்மத்தைத் தவிர வேறொரு தர்மத்தையும் நான் ஒப்புக்கொள்வதில்லை” என்றான் பாலு ஆவேசத்துடன்.

    “நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கவில்லை. சட்டம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அழகான உலகத்தில் எந்தக் காலத்திலாவது மனுதர்மராஜன் என்றொரு புண்ணியவான் இருந்தானோ இல்லையோ, அவன் பெயரால் ‘இந்து’ லா (Hindu Law) என்றொரு சட்டம் மட்டும் இன்றுவரை இருப்பது உண்மை. அந்தச் சனியன் பிடித்த சட்டம் இல்லாமலிருந்தால் உன் சித்திக்கு இந்தக் கதி வந்திருக்குமா? என்றேன் நான்.

    பிராமணப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்ட சூத்திரன் இறந்துவிட்டால் அந்தச் சூத்திரனின் சொத்தில் பங்குகொள்ள அந்தப் பிராமணத்திக்கு உரிமையுண்டாம். ஆனால்…சூத்திரப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட பிராமணன் இறந்து விட்டால், அவனுடைய சொத்தில் பங்கு பெறச் சூத்திரப் பெண்ணுக்கு உரிமை இல்லையாம்” எனக் காட்டுவதன் மூலம் இந்து திருமண சட்டம் சூத்திரர்களுக்கு எதிரானது என்பதைக் காட்டி விமர்சிக்கின்றார்.

    “எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும் என்பது, நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை. இவை இரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்?” (நாவல் பிறக்கிறது, கட்டுரை) என்று கேள்வி எழுப்பும் விந்தன், தம் முதல் நாவலான கண் திறக்குமா? கதையை உணர்ச்சியோடும் துடிப்போடும் எழுதியுள்ளார். 

    பாலும் பாவையும்

    1950–இல் கல்கி இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல் பிற்காலத்தில் விந்தனை ‘பாலும் பாவையும் விந்தன்’ என அடையாளாப்படுத்துமளவிற்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. பாலும் பாவையும் என்னும் நாவல் ‘அகல்யா’ என்னும் பாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. இக்கதையில் வரும் அகல்யா இந்திரன் என்பவனைக் காதலிக்கிறாள். அவனும் அவளைக் காதலித்து ஏமாற்றுகிறான். அவனிடம் தன்னை இழந்த அகல்யா ஒரு சூழலில் கனகலிங்கம் என்பவனைச் சந்தித்து அவனைக் காதலிக்கிறாள். அகல்யாவின் சித்தப்பா செய்த சூழ்ச்சியால் கனகலிங்கம் கொல்லப்படுகிறான். இந்நிலையில் அகல்யாவிற்கு தசரதகுமாரன் என்பவன் அடைக்கலம் தந்து அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அப்பொழுது வேலைக்காரன் ‘நீங்கள் வரத் தாமதமானதால் பால் கெட்டுவிட்டது’ எனக் கூறுகிறான். அதைகேட்ட தசரதகுமாரன் பாலும் பாவையும் கெட்டால் பயன்படாது என அகல்யாவைக் கைவிடுகிறான். கெட்டுப்போன பாலும் பாவையும் ஒன்றா? என நினைத்துக்கொண்டு, இந்த மனிதர்களைவிட இந்தச் சமூகத்தைவிட ஆயிரமாயிரம் மடங்கு பெரியதும் பரந்து விரிந்ததுமான கடல், யார் கைவிட்டாலும் அது தன்னைக் கைவிடாது; யார் கதவைச் சாத்தினாலும் அது கதவைச் சாத்தாது என்கிற எண்ணம் அகல்யாவிற்குப் பளிச்சிடவே அவள் கடலை நோக்கி ஓடுகிறாள். கடல், கெட்டுப்போனவள் என்று நெட்டித் தள்ளவில்லை. ஓடிப்போனவள் என்று ஒதுக்கிவிடவில்லை; பழியைச் சுமந்தவள், பாதிக்கப்பட்டவள் என்னும் பரிவோடும் பாசத்தோடும் வங்கக் கடல் அகல்யாவை வாரியணைத்துக் கொண்டது.

    “நல்லவர்கள் வாழ்வதில்லை
    நானிலத்தின் தீர்ப்பு” என்று முடித்துள்ளார்.

    இந்நாவலில் விந்தன் “கடவுளைத் துணைக்கு அழைப்பவர்கள், கடவுளுக்கு பயப்படுகிறவர்களெல்லாம் யார் என்று நினைக்கிறீர்கள்? அவர்களில் பெரும்பாலோர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவர்கள். தோலிருக்கச் சுளை விழுங்கிகள். கன்னக்கோல் திருடர்கள். தூங்கும்போது கழுத்தை அறுப்பவர்கள், படுமோசக்காரர்கள், பாவிகள், நயவஞ்சகர்கள் ஆகியவர்கள்தான்” என்று கனகலிங்கம் அகல்யாவிடம் கூறுவதாக ஓர் உரையாடலை அமைத்துள்ளார். “பொழுதை வீணாகப் போக்காதே, அப்படிப் போக்குவதாயிருந்தால் எந்தச் சமயத்திலும் உன்னைக் கைவிடாத நண்பர்களான புத்தகங்களைப் படிப்பதில் போக்கு” என்று பிறிதொரு சூழலில் கனகலிங்கம் அகல்யாவுக்குக் கடிதம் எழுதி வைத்திருப்பான். காதலனால் கைவிடப்பட்ட அகல்யாவிற்கு, எந்தச் சமயத்திலும் ‘உன்னைக் கைவிடாத நண்பர்கள்’ என்று புத்தகங்களைச் சுட்டுகிறார்.

    இலங்கைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பாலும் பாவையும் நாவல் பற்றிப் பதிவுசெய்துள்ள கருத்து இந்நாவலின் சிறப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கதாகும். “பாலும் பாவையும் ஆசிரியர் வேண்டுமென்றே இராமாயணப் பாத்திரங்களையும் கதா சம்பவங்களையும் குறிப்பிடுகிறார். இதனால் இதிகாசமும் நவீன கதையும் ஒன்றையொன்று ஒட்டவும் வெட்டவும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர் பழைய கருத்துக்களைக் கொள்ளும்போதும், தள்ளும்போதும் நின்று நாம் கவனிக்குமாறு இசைவுப்பொருத்தங்களை உணர்த்திக்கொள்கிறார்.” என்று தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

    “பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியே பெரும்பாலும் கதை எழுதிக் கொண்டு வந்த தாங்கள், காதலைப் பற்றி ஏன் எழுத வேண்டும்?” என்று பெண் வாசகர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு, “காதல் தோல்வியுறுவதற்குக்கூடக் காரணம் பொருளாதார நிலைதான்; அதைத்தான் இந்தக் கதையில் வரும் கனகலிங்கம் அகல்யாவுக்குச் சுட்டிக் காட்டுகிறான்” என்று விந்தன் முன்னுரையில் சொல்லியிருப்பது, ஏதோ சமாதானத்திற்காகச் சொன்னதுபோல் இல்லாமல் மிகுந்த பொறுப்புடனும் சமூக நோக்குடனும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையே இந்நாவல் உணர்த்துகின்றது. மேலும், “பெண்குலத்தை மாசுபடுத்துவதற்காக நான் இந்தக் கதையை எழுதவில்லை; தூய்மைப்படுத்துவதற்காகவே எழுதியிருக்கிறேன். இந்தக் கதையில் வரும் அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை. அவள் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிடும்போது மட்டும் எனக்கு அந்த இனத்தின் மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டியிருக்கிறேன் -அவ்வளவுதான்” இத்தகைய அழுத்தமானக் கருத்துக்களைக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    “கெளரவம் தகுதியைப் பொறுத்தது. அது நம்மைத் தேடிக்கொண்டு வரவேண்டுமே தவிர நாம் அதைத் தேடிக்கொண்டு செல்லக்கூடாது. அப்படித் தேடிச்சென்று அடையும் கெளரவம் நிலைக்கவும் நிலைக்காது. பொன்னுக்கும், பொருளுக்கும் உள்ள மதிப்பு இந்தக் காலத்தில் பெண்ணுக்கு ஏன், அவள் கற்புக்குக்கூட இல்லைதான்” (பாலும் பாவையும்) என்று கருதியவர் விந்தன். அதனை இந்நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.   

    அன்பு அலறுகிறது

    1957 ஆம் ஆண்டு ‘அமுத சுரபி’ இதழில் ‘அன்பு அலறுகிறது’ என்னும் தொடர்கதையை எழுதினார். “பிறர்மனை நோக்காத பேராண்மை – சான்றோர்க்கு அறனன்றோ ஆன்ற ஒழுக்கு” என்னும் குறளைக், கேட்டும் படித்தும் அறியாத பாமரர்கள் – ஏழை எளியவர்கள் ‘பிறர்மனை நோக்காத பேராண்மை’யாளர்களாக வாழ்ந்துவந்த போதிலும், படித்தவர்கள் அதிலும் தமிழைப் படித்தவர்கள் குறளுக்குப் புதிய புதிய உரைகளைக் கண்டுபிடித்தார்கள்! எப்படி? ‘பிறர்மனை நோக்குதலே பேராண்மை!’ என்னும் போக்கில்!

    இத்தகைய புதுமைகளும் புரட்சிகளும் புற்றீசல்கள் போல் பெருகி வளர்ந்து தமிழர்களின் வாழ்க்கையை, பண்பாட்டைச் சீர்திருத்தம் என்கிற பேரால் சீரழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், இருபது வயது நிறைந்த லலிதாவுக்கும், அறுபது வயது நிறைந்த பணக்காரருக்கும் திருமணம் நடக்கிறது; அதுவும் இரண்டாம் தாரம் என்கிற சமூக முத்திரையோடு. தாய் – தந்தையை இழந்து அத்தையின் ஆதரவில் வளர்ந்த லலிதா, தனக்கு வாய்த்த இரண்டாந்தாரத் திருமணத்தை மிகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறாள்.

    இவளின் திருமணத்தையும், வயோதிகக் கணவரையும் கண்டு அனுதாபப்பட்ட ‘சிநேகிதி’களுக்காக இவள் ரொம்பவும் அனுதாபப்படுகிறாள்! ஏனெனில், வாழ்க்கைக்கு உயிர்போன்ற அன்பே பெரிதென்றும், அத்தகைய அன்பு எங்குக் கிடைத்தாலும் சரி அதற்கு வாலிபம், வயோதிகம் என்கிற வேறுபாடு கிடையாது என்றும் மெய்யாகவும் நம்புகிறாள். ஆம், அந்த அளவிற்கு வயோதிகக் கணவர் அவள் பேரில் அன்பைப் பொழிகிறார்; அந்தரங்கச் சுத்தியோடு நடந்துகொள்கிறார்.

    ஆனால், முதலிரவோடு அந்த முழு நிலவுக் காட்சி முடிந்து விடுகிறது! அடுத்து ஒரே இருட்டு. எதிர்பாராமல் ஏற்படுகிறது. ஒரு விபத்து! அந்த விபத்தில், ‘ஆண்மை’யை இழந்து விடுகிறார் வயோதிகர்; அத்துடன் அவள் மெய்யாக நம்பிய ‘அன்பு அலறுகிறது!’

    எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் தன் கணவர் ‘ஆண்மை’யை மட்டும்தான் இழந்தார் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவரோ சகல பண்புகளையும் இழந்து மிச்சச் சொச்சம் ஏதும் இல்லாதவராய்ப் பேச ஆரம்பித்தார். அதற்கு முன்னுதராணமாகத் தம் மனைவியை எவனுக்காவது தாரை வார்த்துக் கொடுத்திட வேண்டும் என்கிற முடிவுதான்!

    இந்தப் ‘புரட்சி’கரமான முடிவிற்கு எழுத்தாளன் ஒருவன் துணைசேர்கிறான்; அவளுக்கு அத்தான் முறையான மற்றொருவனும் அவளைச் சுற்றி வருகிறான். கடைசியில் அந்தப் பணக்கார வயோதிகன் தன் மனைவியை எழுத்தாளனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்குப் பயணமாகி விடுகிறார்!

    கணவனின் முடிவைக் கேட்டு அவள் உள்ளம் அலறுகிறது! எழுத்தாளனும், அத்தானும் ஒவ்வொரு நிமிடமும் போட்டி போட்டுக் கொண்டு அவளை அடைவதற்கும், அந்தஸ்தை அனுபவிப்பதற்கும் ‘தெருச்சண்டை’ போட்டுக் கொள்வதைக் காணப் பொறுக்க முடியாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போகிறாள்.

    முடிவில் ‘பிறன்மனை நோக்குதலே பேராண்மை….!’ என்னும் வெறியோடு வாழும் மனிதர்களை வெறுத்து, அவர்கள் எதைச் செய்தாலும் ‘அன்பு’ என்றும் பண்பு என்றும் மூடிமறைக்கும் சமூகத்தைத் துறந்து, தன் உயிரை முடித்துக் கொள்ளத் துணிகிறாள். அதற்கு முன்… எவரும் ‘அன்புப் பணி’ செய்யாமல் அமைதியாகயிருப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாகவும், அதற்குத் தன்னுடைய சொத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்து இவ்வுலகத்தை விட்டு விடுதலை பெறுகிறாள். அவளுடைய முடிவைக் கண்டு ‘சிநேகிதி’ அலறுகிறாள்; அன்பு அலறுவது போல்! 

    காதலும் கல்யாணமும்  

    தினத்தந்தி நிறுவனத்தின் ‘இராணி’ இதழில் ‘கனவிலே வந்த கன்னி’ என்னும் தலைப்பில் தொடர்கதையை எழுதினார். அக்கதையை ‘காதலும் கல்யாணமும்’ என்னும் தலைப்பில் க.நா.சுப்பிரமணியம் முன்னுரையுடன் காவேரி புத்தக நிலையம் 1965 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளது. விந்தன் எழுதிய நாவல்களில் அதிகப் பக்கங்களைக் கொண்டது இந்நாவல்.

    மோகன் என்கிற திருமணமாகாத இளைஞன், ‘கனவு காண்பது என் வாழ்க்கை’ என்கிற மாதிரி பருவ வயதுக் கனவுகளிலே உழன்று கொண்டிருக்கிறான். ஒரு கனவுக் கன்னி அவனுடைய கனவுகளில் வந்து அவனைத் தொடர்ந்து சீண்டியபடி இருக்கிறாள். கனவில் வரும் அதே சாயலுள்ள பெண்ணை ஒருநாள் பஸ் நிறுத்தத்தில் மோகன் பார்க்கிறான். அவள் பெயர் பாமா. பிறகென்ன, அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். முதலில் முரண்டு பிடிக்கும் அவள் எல்லாக் காதல் கதைகளின் இலக்கணத்தை மீறியா நடந்து கொள்ளப் போகிறாள்? காதலிக்கிறாள். இடையில் வழக்கம்போல பல பிரச்சினைகள். இறுதியில் திருமணம் நடைபெறுவதாக முடிகிறது. 

    “கலைஞன் என்பவன் தன் நாட்டைப் பற்றிய உணர்வுடனும், தன்னுடைய சமுதாயத்தின் செவியாகக், கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தில் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன்” (விந்தன், ப.76) என்னும் மார்க்சிம் கார்க்கியின் வாசகத்தில் பற்றுக் கொண்டிருந்த விந்தன், தான் வாழும் காலத்தின் உண்மைகளை, அவ் உண்மைகளை மறைக்க போலியாய் நடத்தப்பட்டப் போராட்டங்களை எப்பொழுதும் தம் எழுத்துக்களின் வழியே வெளிப்படுத்த தயங்கியதில்லை என்பதற்கு இந்நாவலே சான்றாகும். “வாழ்க்கையின் பலப் பிரச்சனைகளுக்கிடையே பிறந்தும் வளரமுடியாத என் நாவல்களை சர்வ வல்லமையுள்ள காசால்தான் காப்பாற்ற முடியுமா? கடவுளே உன்னால் காப்பாற்ற முடியாதா?” என்று விந்தன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலச்சூழலில் எழுதப்பட்ட இந்நாவலில், சர்வ வல்லமையுள்ள பணத்தால்தான் எதையும் சாதிக்கவும் மூடி மறைக்கவும் முடியும் என்பதை மிகவும் ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார். 

    மனிதன் மாறவில்லை

    1961 –இல் ‘அமுதசுரபி’ இதழில் ‘மனிதன் மாறவில்லை’ என்னும் தொடரை எழுதினார். இத்தொடர் பலரின் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளானது. காரணம் வள்ளுவரின் பெயரைச்சொல்லி வளமாக வாழும் தமிழ்ப்பேராசிரியர் ஒருவரின் மறுப்பக்கத்தை வெளிப்படுத்துகிறது என்று பலராலும் பேசப்பட்டதேயாகும்.

    ‘மனிதன் மாறவில்லை’ ராமமூர்த்தி என்னும் விரிவுரையாளரையும் அவருடைய பேராசிரியர் நெடுமாறனாரையும் முன்னிறுத்தி புனையப்பட்டுள்ளது. ராமமூர்த்தியின் வீட்டுவாசலில், பெற்றவர் யாரென்றே தெரியாமல் கிடத்தப்படும் குழந்தையிலிருந்து ஒரு கமுக்க உத்தியுடன் கதையை நகர்த்துகிறார்.

    இந்நாவலில் விந்தன் பொதுவுடைமைக் கொள்கையுடையவராகவும் போலிப் பகுத்தறிவை விமர்சிப்பவராகவும் காட்சியளிக்கிறார். அதாவது டாக்டர் நெடுமாறனார், ராமமூர்த்தியிடம் “எல்லாம் அந்தக் குருச்சேவ்வால் வந்த வினை. செத்த பிறகும் தன்னுடைய செல்வாக்குக்குத் தடையாயிருந்து வந்த ஸ்டாலின் புகழை மறைப்பதற்காக ‘தனிநபர் வழிபாடு கூடாது’ என்று அவன் புதிய இயக்கத்தை தொடங்கி வைத்தாலும் தொடங்கி வைத்தான், மாணவர் உலகம் இப்போதெல்லாம் யார் எதைச் சொன்னாலும் எடை போட்டுப் பார்க்கவும், எதிர்க்கேள்வி கேட்கவும் தொடங்கிவிட்டது” (மனிதன் மாறவில்லை, ப.37) இவ்வாறு கூறுவதாக அமைத்துள்ளார்.

    மேலும், இக்கதையில் வரும் நறுமணத்திற்கும் கிழவனுக்கும் நடக்கும் உரையாடலிலும் பொதுவுடைமையை வலியுறுத்துகிறார்.

    “ஏன் தாத்தா, நீங்கள் படிக்கவில்லை என்றாலும் தாழம்பூவைப் படிக்க வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?”

    “அந்தக் குற்றத்தை நான் செய்யவில்லை அம்மா. செய்தவன் அவளுடைய அத்தான்.”

    “அத்தான் வேறு இருக்கிறாரா, தாழம்பூவுக்கு?”

    “இருக்கிறார், இருக்கிறார்.”

    “என்ன வேலை அவருக்கு”

    “வேலையா, இப்பொழுது ஒன்றுமில்லை. ஏதோ திராவிட நாடாமே, அது கிடைத்தால்தான் அவருக்கு வேலை கிடைக்குமாம்”

    “அதுவரை தின்னச் சோறு?”

    “திராவிட நாடு கிடைத்தால்தானாம்”

    “கட்டத் துணி?”

    “அதற்கும் திராவிட நாட்டைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்”

    “இருக்க இடம்?”
    “திராவிட நாடு கிடைக்கிற வரை, எங்கே கிடைக்கிறதோ, அங்கே”

    “அப்படியானால் இப்போது….”

    “எப்படி உயிர்வாழ்கிறார் என்று கேட்கிறாயா? அவருடைய கைகள் செய்யவேண்டிய வேலையையும் சேர்த்து இந்தக் கைகளே செய்கின்றன. அதனால் அவரைப் பொறுத்தவரை திராவிட நாட்டுக்கு அப்படியொன்றும் அவசரமில்லை” (மனிதன் மாறவில்லை, ப.56,57).

    வாழ்க்கை என்னும் தளத்தில் நடந்து முடிந்த கதைகளை எடுத்துக்கொண்டு அதற்கு இல்லாத பண்புகளெல்லாம் இருப்பதாகச் சொல்லி யாரையும் ஏமாற்றுவதில்லை; தன்னையும் ஏமாற்றிக்கொள்வதில்லை. மாறாக நடந்துகொண்டிருக்கின்ற கதைகள் – வாழ்க்கையைத் தேர்வுசெய்து அதில் காணப்படும் பண்பற்ற அதிலும் குறிப்பாக தமிழர்தம் மரபிற்கு அப்பாற்பட்ட செயல்களைச் சிறிதும் அஞ்சாமல் எடுத்துரைத்து பலரின் தூற்றுதலுக்கு உட்பட்டு இன்னலுற்றபோதும் விந்தன் தன் பண்பை, பழக்கத்தை, தன் பாடுபொருளை மாற்றவில்லை என்பதற்கு ‘மனிதன் மாறவில்லை’ நாவல் சிறந்த சான்றாகும்.

     சுயம்வரம்

    இந்த நாவலின் முன்னுரையில் விந்தன் கூறுகிறார்: “இது டீன் ஏஜர்களுக்கு எழுதப்பட்ட நாவல்தான் என்றாலும், இதில் வரும் ஆனந்தனைப் போலவோ அருணாவைப் போலவோ வேறு யாரும் ஆகிவிடக்கூடாது என்பதே என் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுவாகத்தான் இப்போதும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

    பெண்களை பல வகையிலும் தெய்வமாகப் போற்றி வந்தது இந்த நாடு; ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!’ என்று பாரதியைப் பொங்கியெழுந்து பாடச்செய்தது இந்த நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை வெறும் ‘போகப்பொருள்’களாகக் கருதி, அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், ஒளிந்துகொள்ளாமலும் சில ஆண்கள் கவர்ச்சிகரமாக, வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் கதைகள் அவற்றைக் கூசாமல் வெளியிடும் ஏடுகள் – கண்ணராவி, கண்ணராவி!

    அந்த ரகத்தில் சேராத இந்த நாவலை அவர்கள் சொல்லும் ‘டீன்ஏஜர்’சாரும் படிக்கலாம்.” (சுயம்வரம், முன்னுரை) இன்றைய தமிழ் எழுத்து மரபில் படைக்கப்படும் படைப்புகளை யார் வாசிக்கின்றார்களோ இல்லையோ படைப்பாளனின் மனைவி மக்கள்கூட வாசிக்க முடியாத நிலையில் பெண்களை இழிவாக எழுதும் சூழலில் “இந்நாவலை எவரும் படிக்கலாம்” என்று விந்தன் உறுதிபடக்கூறுவதிலிருந்து அவர் எழுத்தின் கண்ணியம் புலப்படுகிறது.

    [தொடரும்]

    *****

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180920 Yogakshema A4 100 dpi lr

    கனைத்திடும் மாடு,கிளியானை என்று
    அனைத்துயிர் மாட்டுக்(கு) அரியின் -அணைப்புண்டு:
    எண்ணத்தில் பேதமில்லா யாதவ ரங்கனைக்
    கண்ணனை நெஞ்சே கருது…கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180919 Gajendra -wcol A4 300 dpi lr

    ஆரத் தழுவுகின்றார் ஆவைப்போல் ஆனைக்கும்
    சீராயர் வாத்ஸல்யம், பாரபட்ஷம் -பாரா
    புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
    கஜேந்திரரைக் காத்த கரி(கண்ணனும் கருப்பு,யானைக்கு வேறு பெயர் ‘கரி’)….கிரேசி மோகன்….!

    Share
  • வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    பூமியை  நெருங்கும் வால்மீன் சுழற்சி தளர்ச்சி அடையும்.

    ++++++++++++

    கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,
    பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
    திரிந்து வருபவை
    பூர்வீக வால்மீன்கள் !
    பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு 
    வலையில் சிக்கிய
    வால்மீன் மீது கவண் வீசிக்
    காயப் படுத்தி
    ஆய்வுகள் புரிந்தார் !
    வால் நெடுவே வெளியேறும்,
    வாயுத் தூள்களை
    வடிகட்டியில் பிடித்து
    வையகத்தில் சோதித்தார் !
    தற்போது சுழலும் வால்மீன்
    புவி நெருங்கின்
    சுழற்சி தளரக் கண்டார் !
    நிலச்சரிவு, பனிமலை வீழ்ச்சி
    வால்மீன் நீடித்த இயக்கத்தின் 
    மூல காரணி  !
    வால்மீன்  ஒளிக் கிளர்ச்சியை
    ஈசாவின் ரோசெட்டா
    முதன்முதல் பதிவு செய்து
    தகவல் அனுப்பும் !

    ++++++++++++++++++

    வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி வால்மீன் நீடிப்பு  இயக்கத்தைக் காட்டுகிறது

    ஈசா  ஐரோப்பிய விண்தேடல் ஆணையகம்  [ESA – European Space Agency] கடந்த சில ஆண்டுகளாக வால்மீனின் சுழற்சி, விழிப்பு, ஓய்வு, நீடிப்பு ஆகிய  அதிசய, அபூர்வ நிகழ்ச்சிகளைத் தமது ரோஸெட்டா விண்ணுளவி, தளவுளவி மூலமாகத் தொடர்ந்து ஆய்வுகள் செய்துவந்தார்.  வால்மீன் 67 பி / சூரியுமோ – ஜெராசிமென்கோவை [67P/ Churyumov- Gerasimenko] ஆராய்ந்து  2016 செப்டம்பர் 30 ஆம் தேதி ரோஸெட்டாவின் குறிப்பணி முடிந்தது. அந்த ஆய்வுகளில் கிடைத்த ஏராளமான புதிய தகவல், வால்மீன் உறக்கத்தில் ஓய்வாகச் சூரியனுக்கு வெகு தொலைவில் இருந்து,  மீண்டும் விழித்துச் சூரியனை நெருங்கும் போது, பனித்தலை நீர் ஆவியாகி, வாயுக்கள் வெளியேற்றம் ஆகும் போது தெரியும் விளக்கங்களைப் பதிவு செய்தன.   அவற்றை எழுதி ஐகாரஸ்   [ICARUS] என்னும் விஞ்ஞான இதழில் வெளியிட்டவர் :  ஜார்டன் ஸ்டெக்லாஃப் & நளின் ஸமரசிங்கா [Jordan K. Steckloff & Nalin H. Samarasinha] [Planetary Science Institute].


    வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி வால்மீன் நீடித்த இயக்கத்தைக் காட்டுகிறது

    வெளிவந்த கட்டுரைகளில் ஒன்று 2017 மார்ச்சு “வானியல் இயற்கை” [Nature Astronomy] இதழில் முக்கியமான செய்தி வந்தது. 67P வால்மீனின் உட்கரு அஸ்வான் பகுதியில் உள்ள பாறைச் சிகரம்  [Comet Nucleus] [Aswan Rocky Cliff] விந்தையாக சில நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சிகள் [Landslides & Avalanches]  இருப்பதைக் காட்டியுள்ளது.  அவை இரண்டும் வால்மீன் பெருநிறைக் கழிவை [Mass Waste in Comet] உண்டாக்குகிறது.  அதாவது வால்மீன் வாயுக் கிளர்ச்சி, வால்மீன் இயக்க நீடிப்புக் காலத்தைக் [Comet’s Period of Activity] காட்டுகிறது. அதாவது நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்பட்டு, கீழுள்ள பனித்தளம் வெளியே தெரிகிறது.  இரண்டு விஞ்ஞானிகளும் தனித்தனி முறைகளில் இவற்றை ஆய்வு செய்து, முடிவில் ஒரே விளைவைக் கண்டுள்ளார்.  இந்த ஆராய்ச்சிகளில் வால்மீன் சுழற்சிக்கும், அதன் இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு முக்கிய மானது.

    பூமியை நெருங்கும் வால்மீனின் புதிரான மாற்றியக்கம்

    அரிசோனா லோவெல் வானோக்கு ஆய்வகத் தொலைநோக்கி மூலம்  டேவிட் ஸ்லைச்சரும் அவரது சக விஞ்ஞானிகளும் சென்ற வசந்த காலத்தில் கண்ட வால்மீன் [41P /Tuttle-Giacobini-Kresak] சுழற்சி புவியை நெருங்கும் போது விரைவாகத் தளர்வதை முதன்முறை வெளியிட்டுள்ளார்.  வால்மீனின் சுயச் சுழற்சி 24 மணி நேரத்தி லிருந்து 48 மணி நேரமாய், ஆறு நாட்களுக்குள் விரைவாய் நீட்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.  இன்னும் தொடர்ந்து சுழற்சி குறைந்து வருவதாகவும், முற்றிலும் நின்று, அடுத்து வால்மீன் மறு திசையில்  சுழலத் துவங்கும் என்றும் தெரிவித்துளார்.

    Image result for Comet 41P Tuttle-Giacobini-Kresak Orbit

    வால்மீன் [41P /Tuttl…] சூரியனை வெகு வேகமாக 5.4 ஆண்டுக்கு ஒருமுறையாகச் சுற்றி வருகிறது.  அந்தப் புதிரான வால்மீனை 1858 இல் முதலில் வானில் கண்டுபிடித்தவர் ஹெச். டூடுல் [H. Tuttle] என்பவர்.  பிறகு அது பல்லாண்டுகள் தென்படாது, மீண்டும் 1907 இல் எம். கையகோபினி [M. Giacobini] என்பரால் கணப் பட்டது.  மறுபடியும் அது தென்படாது, மூன்றாம் முறையாக 1951 இல் கே. கிரிஸாக் [K. Kresac] என்பவர் கண்ணில் பட்டது,  இப்போது அந்த வால்மீன் அம்மூவர் பெயராலும் அழைக்கப் படுகிறது.

    2017 ஆண்டுவரை வானியல் விஞ்ஞானிகளால் அந்த வால்மீனை ஆழ்ந்து அறிந்து கொள்ள இயலவில்லை.  பூமிக்கு அருகே13 மில்லியன் மைல் [21 மில்லியன் கி.மீ.] வந்த போது அதைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.  அதன் தலைக்கரு [Comet Nucleus]  ஒரு மைலுக்கும் [1.4 கி.மீ] குறைந்தது.  இறுதியில் அந்த வால்மீன் காணும் அளவு ஒளி வீசியது.

    2017 மார்ச்சு மாதம் முதல் மே மாதம் வரை எட்டு வாரங்கள் காணப் பட்ட அந்த வால்மீன் பூமியிலிருந்து சுமார் 18 மில்லியன் [30 மில்லியன் கி.மீ] தூரத்திலும், சூரியனிலிருந்து சுமார் 93 மில்லியன் மைல் [150 மில்லியன் கி.மீ] தூரத்திலும் இருந்தது. சூரிய குடும்பக் கோள்கள் உருவான பிறகு மிஞ்சிய பிண்டத்தில் 4.5 பில்லியன் ஆண்டுகளாய் வடிவம் பெற்றவை வால்மீன்கள்.  பரிதிக்கு அருகில் வரும் போது, வால்மீனின் பனிப்படிவுகள் சூடாகி, ஆவியாகி வாயுக்களும் தூசிகளும் ஆயிரக் கணக்கான மைல் நீட்சியில், தலை உருவாகி  ஒளிவாலுடன் தோற்றம் அளிக்கிறது.

    வால்மீனில் முக்கியமாகக் காணப்படும் வாயு சையனோஜென் [Cyanogen].   அரிசோனா ஆய்வாளிகள் வால்மீன் தலையிலிருந்து [Coma]  இரண்டு உந்து வீச்சுகள் [Jet Streams]  எழுந்தன என்று கூறுகிறார்.  அந்த உந்து வீச்சுகள் மூலம் தான் வால்மீன் சுழற்சி நேரம் கூடுவதைக் கணிக்க முடிந்தது.  அதாவது மார்ச்சு மாதத்தில் அறிந்த 24 மணி நேரச் சுழற்சி, ஏப்ரலில் 48 மணி நேரச் சுழற்சியாய் நீண்டது.  மே மாதக் கடேசியில் சுயச் சுழற்சி மேலும் மெதுவானது.  இந்த ஆய்வு முன்னோடி முடிவுகள், யூடாவில் 49 ஆவது அமெரிக்கன் வானியல் குழு – கோள் விஞ்ஞானப் பிரிவகத்தின் வெளியீடாக வெளிவரும்.

    Halley's comet -1

    Comet Halley

    ++++++++++++++
    Comet Outbursts -2
    Comet Outbursts -1

    கடந்த ஆண்டில் [2015] ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் பயணக் காலத்தை நீடிக்க முடிந்தாலும், உறங்கும் உறைந்த வால்மீன் எப்போது வெடித்தெழுந்து ஒளிக்கிளர்ச்சி வால் நீளும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.  ரோஸெட்டாவின் இந்த திடீர் வால்மீன் ஒளிக்கிளர்ச்சிப் பதிவு எதிர்பாராத அதிர்ஷ்டக் காட்சி.

    ஒருங்கொத்த மகிழ்ச்சி நிகழ்வாக ரோஸெட்டாவின் பெரும்பான்மைக் கருவிகள் வால்மீன் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.  ஒரே சமயத்தில் ஒளித்தூசி எழுச்சியை அளவெடுத்த கருவிகள் ஒருங்கே முழுமையான தகவலை அனுப்பியுள்ளன.

    மாத்தியூ டெய்லர் [ESA Rosetta Project Scientist]

    Halley's comet -2
    ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் நாங்கள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டம் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குத லோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறோம்.
     எபெர்கார்டு குருயன் [Eberhard Grun, Nuclear Physics, Max-Plank Institute, Heidelberg, Germany]
     
     

    Which Instruments saw outbursts

     
     2015 ஆம் ஆண்டில் நேர்ந்த ரோஸெட்டா விண்ணுளவியின் பதிவு ஆய்வுகள்
     
    ரோஸெட்டா எதிர்பாராத விதமாக 2015 பிப்ரவரி 19 இல் வால்மீன் சூரியுமோவ்-ஜெராசி மெங்கோவில் [Comet Name :  67P/Churyumov-Gerasimenko] உறைந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுந்த ஒளிக்கிளர்ச்சியை [Comet Outburst] பதிவு செய்து படமெடுத்தது. 20 மைல் தூரத்தில் விண்ணுளவி பறந்து பதிவு செய்த வரைப் படங்களை ஒன்பது கருவிகள் [காமிராக்கள், தூசி சேர்ப்பிகள், வாயு, ஒளிப் பிழம்பு ஆய்வு மானிகள்] [Cameras, Dust Collectors, Gas & Plasma Analysers] ஒரே சமயத்தில் உடனே அனுப்பியுள்ளன.  இந்த நிகழ்ச்சி வால்மீன் விண்வெளித் தேடல் ஆராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.  வால்மீன் ஒளிக் கிளர்ச்சிப் பதிவுகள் முதன்முறையாக ராயல் வானியல் குழுவினரால் [Royal Astronomical Society] ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது மாத அறிவிப்பு இதழில் வெளிவரப் போகிறது.  அதன் தலைமை விஞ்ஞானி ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடல்பர்க் நகரின் மாக்ஸ் பிளங்க் ஆய்வுக் கூடத்தின் எபர்ஹார்டு குருயின் [Eberhard Grun, Max-Plank Institute, Heidelberg, Germany].
    Comet Halley
    ரோஸெட்டின் விரிகோணக் காமிரா 2016 பிப்ரவரி காலை 9:40 மணிக்கு [GMT] நிழலில் உறங்கும் உறைப்பனித் தூசித் தலையிலிருந்து [Comet Dusty Coma] மிக்க வெளிச்சத்தில் பளிச்சென எழும் ஒளிக்கிளர்ச்சி உண்டாவது ஓர் அரங்கில் தெரிந்தது.  அடுத்த இரண்டு மணிப் பொழுதில் ரோஸெட்டா 100 மடங்கு வெளிச்சமுள்ள ஒளிக்கிளர்ச்சிப் பதிவுகளை அலிஸ் [ALICE] கருவி மூலம் காட்டியது. அவற்றில் சூரியனின் புறவூதா வெளிச்சம் வால்மீன் தலைக்கரு பிரதிபலித்தது [Ultraviolet Brightness of the Sunlight Reflected by the Comet Nucleus].  வால்மீன் தூசிக் கிளர்ச்சி ஒளியுடன் 6 மடங்கு வெளிச்சத்தில் தெரிந்தது.  ரோஸினா, ஆர்பிசி கருவிகள் [ROSINA & RPC] பெருத்த அளவில் [1.5 TO 2.5 மடங்கு] வாயு வீச்சு, ஒளிப்பிழம்பு வீச்சுகளைக் காட்டின.  மேலும் மைரோ [MIRO] கருவி சூழ்ந்த வாயுவின் உஷ்ணம் 30.C ஏறிடக் காட்டியது.  சாதாரணமாக 3 முதல் 10 வரை காட்டும் கியாடா கருவி [GIADA] 200 துகள்களைக் கண்டுபிடித்தது.  ரோஸெட்டா விண்ணுளவியில் குறுங்கோணக் காமிரா ஒளிக்கிளர்ச்சியில் தூசித் துகள்கள் [Dust Grains] வெளியாகப் படம்பிடித்தது.  புவி மீதுள்ள வானியல் விஞ்ஞானிகள் வால்மீன் ஒளித்திரள் திணிவு [Comet Coma Density] மிகையாகக் கண்டனர்.
    ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் விஞ்ஞானிகள்  நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டும் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்துதான் நேர்ந்திருக்க வேண்டும் என்பது.
    விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குதலோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறார்.  வால்மீன் நிழலிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் மேற்தளத்தில் வெப்ப அழுத்தப்பாடு [Thermal Stress] உந்தியே தளச்சரிவு தூண்டப்பட்டு நீர்ப்பகுதி நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும்.  உடனே நீர் ஆவியாகி அருகில் எழும் தூசியோடு கலந்து வால்மீன் ஒளிவாலாய் உருவாகி இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.
    ++++++++++++++++
    Rosetta launch

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0

    http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo

    http://www.bbc.com/news/science-environment-30058176

    +++++++++++++++++++++++

    Difficult landing

    ஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது.  பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும்.  இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள்  யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.

    பார்பரா கொஸ்ஸோனி  [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்] 

    240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.

    எல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்] 

    Rosetta probe landing

    “எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது.  ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது.  ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”

    ஜான் ஜேக்கஸ் டோர்டயின்   [ESA Director General]  [November 12, 2014]

    “விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”

    அல்வாரோ கிமென்னிஷ்  [ESA  Director of Scince & Robotic Exploration]  [November 12, 2014]

    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?  வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது!  நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    Roetta Probe on comet -1

    Mothership Rosetta  Drops Lander on the Comet

    முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி

    2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் !  அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது.  1969  ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது.  2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து,  6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும்.   ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh]  வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது.  சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

    First comet image from Philae

    வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது.   மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர்.  “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும்.   அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார்.  தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph].  பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும்.  ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித்  திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]

    வால்மீனில் இறங்கிய தளவுளவி  ஃபிலே

    தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது.  மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும்.  வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே ! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை.  மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது.  சூரியனை    வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது.  சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன.  அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும்.  மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.

    ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Comet chasing probe

    2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள்.  அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”

    டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

    Rosetta Mission

    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?

    ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது!  அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்!  வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!

    வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!  ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும்.  விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும்.  பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா?  மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.

    Philae Lander parts

    ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்]  ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை.  அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம்.  மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன.  பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.

    ESA Control Room -2

     விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:

    1.  “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]

    2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]

    4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]

    5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]

    6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]

    7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

    Rosetta Program -1

    8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]

    9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]

    10 “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]

    11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]

    வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:

    தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:

    1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]

    2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]

    3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    Philae Lander 

    <p style=”border:0px;font-family:inherit;font-style:inherit;font-weight:inherit;margin:0px 0px 1.625em

    Share
  • இந்திய ஜனநாயகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இன்றைய தேதியிட்ட (செப்டம்பர் 18) ‘இந்து’வில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்திருக்கிறது.  இந்தச் செய்தி வேறு எந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன்; ஒரு பொறுப்பான பத்திரிக்கையான இந்துவிலிருந்து வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அதை நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

    பீகார் மாநில ஜார்கன்டில் உள்ள கோத்தா மாவட்டத்தில் நடந்த ஒரு செயலை நினைத்துப் பார்க்கவே குமட்டுகிறது.  கோத்தா மாவட்ட, பி.ஜே.பி.யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துபே அங்கு ஒரு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டச் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது.  நிகழ்ச்சி முடிந்து துபே தன் பேச்சை முடித்துக்கொண்டதும் ஒரு பி.ஜே.பி. கட்சித் தொண்டர் ஒருவர் ஒரு பித்தளைத் தட்டில் தண்ணீர் கொண்டுவந்து துபேயின் பாதங்களைக் கழுவி ஒரு துண்டால் துடைத்துவிட்டுப் பிறகு அந்தத் தண்ணீரை குடித்தாராம்!  அதைக் கண்டு அங்கு கூடியிருந்த கூட்டம், ‘பவான் பாய் ஷா வாழ்க’ என்று கரகோஷம் செய்து அந்தத் தொண்டரை வாழ்த்தியதாம்.  “நான் தவறு எதுவும் செய்யவில்லையே.  அவர் என்னுடைய அண்ணன் போன்றவர், அவரிடம் எனக்கிருக்கும் மரியாதையை இப்படிக் காட்டுகிறேன்” என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினாராம் ஷா. அந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், “இதில் என்ன தவறு? அவர் அப்படிச் செய்து என்னிடம் அவருக்குள்ள மரியாதையைக் காட்ட விரும்பினால் எந்தத் தவறும் இல்லை” என்றாராம்.  குடியாட்சி இருந்த காலத்தில்கூட மன்னர்களிடம் மரியாதையை இப்படி யாரும் காட்டினார்களா என்று தெரியவில்லை.  இந்தியாவில் குடியாட்சி மலர்ந்து 68 வருடங்கள் ஆகிவிட்டன.  இன்னும் முடியாட்சியில் கூட இல்லாத இந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறோம்.  நம் மக்களுக்குக் குடியாட்சி தேவைதானா என்ற கேள்வி எழுகிறது?

    இந்தியாவின் இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு செய்தி.  சொத்துக் குவிப்பு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றதாலேயே குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல வேண்டியவர். சில அரசியல் காரணங்களுக்காக எழுதப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டதால் அவர்  சிறைக்குச் செல்லாமல் தப்பித்துக்கொண்டவர்.  இவருக்கு இந்தியாவின் குடிமக்களுக்குக் கொடுக்கப்படும் உச்ச விருதான ‘பாரத ரத்னா” விருதை வழங்க வேண்டும் என்று இப்போது தமிழ்நாட்டை ஆண்டுவரும் அம்மையாரின் கட்சியைச் சேர்ந்த அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.   இப்படிப் பரிந்துரைப்பதின் மூலம் தமிழ்நாடு அரசு என்ன சொல்ல முயற்சிக்கிறது?  அம்மையார் செய்த ஊழல் அப்படியொன்றும் பெரிய ஊழல் அல்ல; அதை மன்னிப்பதோடு கௌரவிக்கவும் செய்ய வேண்டும் என்கிறதா?  அப்படியானால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறியதை யாரும் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்கிறதா?  இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அம்மையாருக்குப் ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அம்மையாரின் கண்மூடித் தொண்டர்களின் ஓட்டுக்கள்தான்.  அது எப்படிக் கிடைத்தால் என்ன.

    அம்மையாருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஊழல் புரிந்துள்ள பீகாரைச் சேர்ந்த லாலு பிரசாத்திற்கு மன அழுத்தமாம்!  மருத்துவமனையில் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இரவில் தெரு நாய்கள் குரைக்கும் தொல்லை தாங்க முடியாததால் தன்னுடைய தூக்கம் கெடுகிறது என்று குறை கூறிக்கொண்டும் வாழ்ந்துவரும் லாலுவுக்கு இப்போது மன அழுத்தமாம்.  அரசியலில் இருக்கும், ஒருவரொடொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் தன்னுடைய இரண்டு மகன்களைப் பற்றிக் கவலைப்படுகிறாராம்.  இந்தக் கவலைகளினால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு இவருக்கு மனநோய் மருத்துவர்கள் உதவப் போகிறார்களாம்.  பல லட்சங்கள் அரசுப் பணத்தைக் கையாடி அரசுக்கும் மக்களுக்கும் பெரும் நஷ்டம் விளைவித்த இவருக்கு ராஜ வைத்தியம் நடக்கிறது.

    இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் ஊழல் புரியலாம்; அரசுப் பணத்தைக் கொள்ளையடித்து சொகுசாக வாழலாம்.  யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை . இதுதான் இந்தியச் சுதந்திரம் கற்றுக்கொடுக்கும் பாடமா?

     

    Share
  • நீதி, நெறி நழுவாமல்…1

    இன்னம்பூரான்

    2018-09-18

    மக்களை கட்டி மேய்ப்பது எளிது அன்று. உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் கட்டுப்பாடு இல்லையெனில் ஊரையே மேயும்.கரையை கரைக்கும். மரையை கழட்டும். கூறையை பிரிக்கும். சூறையாடும். கூறு போடும், பொது சொத்தை.

    சிங்கம், புலி, புரவி, எருது, பசு மாடு எல்லாவற்றின் மீதும் ஆளுமை செலுத்தும் மனிதனை அவனுடைய தனயன் கூட மதிக்காததைக் கண்கூடாக பர்க்கிறோம். மனித இனம் கூடி வாழ்வதை விரும்புகிறது. அதற்காக, தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைக்கவும் கற்றுக்கொள்கிறது. அது சமுதாய நலன் பொருட்டு இன்றியமையாத தியாகம் என்று தோன்றினாலும், உண்மையில் தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும் தந்திரம் எனலாம். சமுதாய நலனும், சுயநலமும் ஒரே பாட்டையில் பயணிக்க இயலவில்லை என்றால், உதட்டளவில் சமுதாய நலம் நாடி, செயலில் சுயநலம் தேடி இயங்குபவர்களை சமூக விரோதிகள் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. நீதி அவர்களை இனம் கண்டு தண்டிக்கவேண்டும். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது கூட ஒரு உருவகம் தான். பாரத தேசமும், குறிப்பாக தமிழகமும் தொன்மையானவை, அவற்றின் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவை போற்றத்தக்கவை என்பது போல கிரேக்க/ ரோமானிய வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவையும் போற்றத்தக்கவை என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.

    ஜஸ்டியா அகஸ்டா என்ற ரோமானிய நீதி தேவதை ஒரு அலங்கரிக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பது ஜனவரி மாதம் 8ம் தேதி 13 கி.மு. முதல் ஒரு ஆலயத்தைல் துவக்கப்பட்டதாக ரோமானிய தொன்மை கூறுகிறது. அகஸ்டஸ் என்ற ராஜாதி ராஜன் தான் நீதி தேவதையை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவள் திறந்தக் கண்ணிளாள். கி.பி. 16ம் நூற்றாண்டில் தான் அவளது கண்மலர்கள் மூடப்பட்டன, பாரபக்ஷமில்லால் இயங்குபவள் என்பதை முன்னிறுத்த. அவளுக்கு செல்வம், அதிகாரம், பதவி ஆகியவற்றுக்கு முக்கியத்வம் கொடுக்கத் தெரியாது. கண்கட்டுடன் காணப்படும் நீதி தேவதை முதலில் ஸ்விட்சர்லாந்தில் பெர்ன் நகரில் 1543ல் அவதரித்தாள். லண்டனில் இருக்கும் ஓல்ட் பெய்லி நீதி மன்றம் பழமையானது மட்டுமல்ல; பிரபல வழக்குகள் அங்கு மன்றாடப்பட்டன. அங்கு அருள் பாலிக்கும் நீதி தேவதைக்கு ‘கண்மூடி’ கிடையாது. அந்த கோர்ட்டாரின் தலபுராணம் நல்லதொரு விளக்கம் தருகிறது. புராதன ரோமானிய தேவதை விழிப்புடன் தான் இருந்தாள். அவள் ஒரு கன்னிகை தேவதை என்பதால் பாரபக்ஷமின்மைக்கு உத்தரவாதம் உளது என்கிறது. இப்போது தேவதா விசுவாசத்தை சற்றே நகற்றி வைத்து விட்டு, நீதி பரிபாலனத்தைப் பற்றி சில வரிகள்.

    மக்களை கட்டி மேய்க்க சமுதாய விதிகள் தேவை. அவற்றில் சில வேலியை மேய்க்கும் என்பது வரலாறு

    அடிக்கடி கூறும் கசப்பான உண்மை. கட்டை பஞ்சாயத்து முரட்டுத்தனமாக குருட்டு நீதி வழங்குவதை ஊடகங்கள் அவ்வப்பொழுது சன்னமான குரலில் எடுத்துரைக்கின்றன. பிறகு யாவரும் மறந்து விடுவார்கள். சில சமுதாயங்கள் சட்டம் அனுமதிக்கும்/ வரவேற்கும் கலப்பு மணங்களை தடை செய்யும், சட்ட விரோதமான வன்முறை எதிர்ப்புக்களை கண்டு கொள்ளாது. அரசாங்கம் என்றதொரு அதிகார மையம் இருந்தால், சமுதாய நலன் அக்கறையுடன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. விதிகள், அதற்கேற்ப இயற்றப்படும்; அவற்றை அரசு நிர்வகிக்கும்; நீதி மன்றங்கள் சட்டத்தை பாதுகாக்கும். மாண்டெஸ்கோ என்ற சிந்தனையாளர் Separation of Powers என்று எழுதிய அரசியல் கோட்பாடுகளை இதற்கு முந்திய ஒரு வரியில் அடக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தொடரவேண்டி இருக்கிறது. இது ஒரு முகாந்திரம் மட்டுமே.

    (தொடரும்)

    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/NewarkJustice1.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • வல்லமை மின்னிதழ் இணைந்து நடத்தும் நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்-பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்

    காஞ்சிபுரம், ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

    மலேசியா, மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை,

    மலேசியா, உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்,

    விருபா . காம்

    வல்லமை – ஆய்வு மின்னிதழ்

    இந்து தமிழ் திசை நாளிதழ்

    இணைந்து நடத்தும்

    நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்

     

    பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கமும்

    படைப்பரங்கமும்

     

     

    பேரன்புடையீர் வணக்கம்.

     

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டு   வெள்ளிவிழா கண்ட ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிரந்தர இணைப்புப் பெற்றுள்ளதுடன் 2014 முதல் தன்னாட்சிப் பெற்ற நிறுவனமாகவும் விளங்கிவருகிறது. மேலும், தேசிய தரமதிப்பீட்டுக்  குழுவால் ‘A’ உயர்தரத் தகுதியும், AICTE குழுவினால் அங்கீகாரமும் பெற்றுள்ளதுடன்  ISO 9001-2008 தரச்சான்று பெற்ற கல்லூரியாகவும் திகழ்கின்றது. இத்தகு பெருமைமிகு கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில்  தமிழாய்வுக்கு வளம்சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் பன்னாட்டுக் கருத்தரங்குகள்  நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இவ்வாண்டு மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், விருபா.காம், வல்லமை ஆய்வு மின்னிதழ், இந்து தமிழ் திசை நாளிதழ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நதிகளும் தமிழ்ச் சமுதாயமும் என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கையும் படைப்பரங்கையும் நடத்துகிறது.

    நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்

                உலக நாகரிகங்கள் நதிக்கரைகளைத் தொடர்புப்படுத்தியே அறியப்படுகின்றன.  இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள பாரத தேசத்திலும் தொன்மங்கள், புராதனச் சடங்குகள், நம்பிக்கைகள், புனித பயணங்கள் யாவும் பெரும்பான்மையும் நதிகளோடு தொடர்புடையன. இன்றைக்கு மனித சமூகம் நதிகளிடமிருந்து அந்நியமாகி வந்தபோதும் அவர்களது வாழ்வோடும் ஆழ்மனத்தோடும் தொடர்ந்து நதிகள் ஆட்சிபெற்றுவருகின்றன. எனவே, நதிகள் அவர்களது படைப்புகளிலும் செயல்களிலும்  காலந்தோறும் வெளிப்பட்டுவந்துள்ளன. இந்த சூழலில் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் 144 ஆண்டுகளுக்கு  ஒருமுறை வரும் தாமிரபணி  மஹாபுஷ்கரம் என்னும் புனித நீராடல் பெருவிழா நடைபெற இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்என்ற பொதுத்தலைப்பில் இந்த ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கையும் படைப்பரங்கையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தமிழ்ச்சமூகம் நதிகளோடு கொண்டிருந்த உறவையும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும் அதன்வழி பண்பாட்டு விழுமியங்களையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். இது தமிழரின் நீர்மேலாண்மை அறிவையும் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் வெளிப்படுத்துவதோடு எதிர்கால சிந்தனைகளையும் விதைக்கும் என நம்புகிறோம்.

    பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்

                இக்கருத்தரங்கில் பேராளர்கள் சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நெடும்பரப்பு முழுவதிலிருந்தும் நதிகள் சார்ந்த பதிவுகளைத் தொகுத்தும் பகுத்தும் தனித்தும் ஆராய்வதாகவும் அவற்றின் வழி தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களை ஆராய்வதாகவும் கட்டுரைகள் எழுதலாம். மேலும், தொல்லியல் ஆய்வுகள் வழி அறியலாகும் நதிகள் குறித்த செய்திகள் தொடங்கி, நதிகளோடு தமிழர்கள் கொண்டிருந்த சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் சார்ந்த பொருண்மைகளோடு நதிகளின் இன்றைய நிலை வரையிலான கருத்தாக்கங்களில், பல்துறை அணுகுமுறைகளில் கட்டுரைகள் அமையலாம். இதற்கு பதிவுக் கட்டணமாக ஆய்வாளர்கள் உரூ. 500ம், பேராசிரியர்கள், பிறர் உரூ. 700ம் செலுத்தவேண்டும். தேர்வுபெறும் அனைத்துக் கட்டுரைகளும் கருத்தரங்க நாள் அன்று சான்றிதழுடன் நூலாக்கம் செய்யப்பெற்று அளிக்கப்பெறும்.

    வரைவோலை எடுக்க வேண்டிய முகவரி

     

    PRINCIPAL

    Sri Sankara Arts & Science College, AUTONOMOUS

                                                 Enathur, Kanchipuram.

                நூலாகும் ஆய்வுக் கட்டுரைகளில் அமைப்புக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் மட்டும், கட்டணம் ஏதுமின்றி இந்திய தேசிய பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழான வல்லமை இணைய இதழிலும் வெளியிடப்பெறும்.

    பன்னாட்டு படைப்பரங்கம்

     

              நதிகளும் தமிழ்ச் சமுதாயமும் என்ற பொருண்மையில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்குவது போலவே, தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நதிகள், நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில்  கட்டுரைகள், கவிதைகள் எழுதி அனுப்பலாம். இதற்குத் தனியே கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு செய்யப்பெறும் படைப்புகள் மட்டும் நூலாக்கி படைப்பரங்க நாளில் வழங்கப்பெறும்.

                வந்து சேரும் இருவகை படைப்புகளிலும் அறிஞர் குழுவால் தேர்வு செய்யப்பெறும் முதல் மூன்று படைப்புகளுக்குப் பரிசுகளும் விழா மேடையிலேயே வழங்கப்படவுள்ளன.

    அனுப்பும் முறை

                ஆய்வுக் கட்டுரைகளும் படைப்புகளும் ‘யுனிகோடு’ எழுத்துருவில் (UNICODE FONT) 12 என்ற எழுத்தளவில் 1.5 வரி இடைவெளியுடன் தட்டச்சு செய்து A4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கணினித் தட்டச்சு செய்து  அதன் மென்படியை thamirabaranisankara@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

    அதன் காகிதப் படியைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.

    ஜெ.இராதாகிருஷ்ணன்

    கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறைத் தலைவர்

    ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

    தன்னாட்சி,

    ஏனாத்தூர்,  காஞ்சிபுரம் –  631561.

    தொலைபேசி : 044 – 27264066 (Ex 42)

    thamirabaranisankara@gmail.com

    www.sankaracollege.edu.in

    கைப்பேசி : 9486150013, 9786985451

     

    Share
  • இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில் சங்க இலக்கியத் தாக்கம் – ஒரு திறனாய்வு

    -முனைவர் கல்பனா சேக்கிழார்
    உதவிப்பேராசிரியர், இவ்வாய்வேட்டின் திறனாய்வாளர்
    தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    திறனாய்வுக்கான ஆய்வேட்டின் தலைப்பு:
    இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில்   சங்க இலக்கியத் தாக்கம் 

    ஆய்வாளர்: கோ. வாசுகி,
    தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பெற்ற  ஆய்வேடு இது.

    *****
    சங்க இலக்கியங்கள் முன்வைக்கும் அகம் புறம் மரபுகளின் தாக்கம் இல்லாமல் பிற்கால இலக்கியங்கள் தோன்றவில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில்  இலக்கிய வடிவங்களில் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் உள்ளடக்கத்தில் பெரும் மாறுதல்கள் நிகழவில்லை என்றே கூறலாம். பாரதியுடன் தொடங்கும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலகட்ட  இலக்கியங்களிலும் அகம் புறம் மரபின் தாக்கம் தொடர்வதை அவதானிக்கலாம். அரசியல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் சமூகக் காரணங்களால் மனித வாழ்வு மாற்றம் அடைந்தாலும், அன்பு, அறம், மறம், ஈகை முதலிய பண்பாட்டுக் கூறுகளில் பழங்கால வாழ்வியல் தாக்கம் இடம் பெற்றுள்ளது என்பதைக் ஆய்வுக் கருதுகோளாகக்  கொண்டு ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாய்வேடு ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

    1. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் அகச்செய்திகள்
    2. பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் அக இலக்கியத் தாக்கம்
    3. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் புறச்செய்திகள்
    4. பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் புற இலக்கியத் தாக்கம்
    5. பாரதி, பாரதிதாசன் கவிதைகளும் சங்க இலக்கியங்களும் – ஒப்பீடு

    முதல் இயலில் அகத்திணை ஒழுகலாறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. களவு, கற்பு குறித்தும் களவுக்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒழுக்கம் குறித்தும், இயற்கைப்புணர்ச்சி, வரைவுகடாதல், தோழியிற் புணர்வு, பாங்கொடு தழால் எனத் தொல்காப்பியர் பகுத்துள்ளவற்றைச் சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பட்டுள்ள திறம், களவுக்காலத்தில் மேற்கொள்ளப்படும் குறியிடங்கள், இற்செறிப்பு, அலர், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, அறத்தொடு நிற்றல், உடன்போக்கு போன்ற நிகழ்வுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. கற்பிற்குப் பிறகான வாழ்க்கை முறை, வினையினை நோக்கமாகக் கொண்டு தலைவன் செயல்பட்டுள்ளதையும், பெண் இல்லத்தைப் பேணி பாதுகாப்பவளுமாக எவ்வாறு விளங்கினர் என்பது சங்க இலக்கியப் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் இயலில் சங்க இலக்கியங்களில் காணப்படும் கைக்கிளைக் காதல், அன்பின் ஐந்திணைக் காதல், பெருந்திணைக் காதல் ஆகியவை குறித்துப் பாரதி, பாரதிதாசன் பாடியுள்ளனர் என்பதும், காதலின் வலிமையை, மேன்மையை, இவ்வுலக இயக்கமாக இருப்பதை இருவருமே எடுத்துக்காட்டியுள்ளனர் என்பதும்  ஆராயப்பட்டுள்ளது. களவுக் குறித்த பாடல்கள் இருவர் படைப்புகளிலும் காணப்படுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதியார் பழைய மரபுப்படி காதலர்கள் ஊழின் வலியாகச் சந்திப்பதாகப் பாடுவதையும், திராவிட இயக்கக் கோட்பாட்டை உள்வாங்கிய பாரதிதாசன், ஈர்ப்பினால் இருவரும் இணையும் சூழல் உருவாவதும் ஆராயப்பட்டுள்ளது. தோழன், தோழியர் காதலருக்கு உதவுவது பற்றியும் அலர், இற்செறிப்பு ஆகியவற்றையும் பாரதி, பாரதிதாசன் பாடியுள்ளது விளக்கப்பட்டுள்ளது. சங்க அக இலக்கியக் கூறுகள் பாரதி, பாரதிதாசனின் பாடல்களில் காணப்படும் நிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    தொல்காப்பியம் வரையறுத்துள்ள புறத்திணை விதிகள் சங்க இலக்கியங்கள் கூறும் புற வாழ்வியல், போர் சார்ந்த வாழ்க்கை முறையியல், போரில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள், அது சார்ந்த நம்பிக்கைகள், அரசன், அரசாட்சிமுறை, நாட்டிற்காக மக்களின் கடமை உணர்வு, பெண்களின் கடமைகள் போன்றவை குறித்து மூன்றாவது இயலில் ஆராயப்பட்டுள்ளது.

    நான்காம் இயலில் சுதந்திரப்போராட்ட காலத்தில் வாழ்ந்த பாரதி பாரதிதாசன் பாடல்களில் புறம் சார்ந்த பாடல்களின் தாக்கம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது குறித்து  விவாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பாடல்கள் அடிமைப்பட்டுக்கிடக்கும் நாட்டு மக்களின் உள்ளத்தில் வீர எழுச்சியை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளன என்பதும் திணை அடிப்படையில் போர் நிகழவில்லை என்றாலும் மண்ணாசை, எல்லைப் பிரச்சனை, தாய்நாட்டு உரிமை, அரசியல், சமூகப் பொருளாதாரக் காரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போர் ஏற்பட்டாலும் திணை அடிப்படையில் பொருந்தி வருவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

    சங்க கால மன்னர்கள் வஞ்சின மொழியினைக் கூறியுள்ளது போலவே பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியை பாரதத் தாயாக உருவகித்து வஞ்சினம் கூறியதும், பாண்டியன் பரிசில் கண்ணுக்கினியாள், அன்னம் வஞ்சினம் பேசியதும் கூறப்பட்டுள்ளது. போர் அறங்கள் குறித்தும் காந்தியடிகள் மேற்கொண்ட அறவழிப் போராட்டம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. முடியாட்சி முறையை வெறுத்து மக்களாட்சி முறையை இருவரும் முன் வைக்கின்றனர். வீறு கொண்ட இளைய சமூகம் நாட்டிற்குத் தேவையென வற்புறுத்துகின்றனர். போருக்கு வழியனுப்புபவர்களாக மட்டும் பெண்கள் இல்லாமல் பங்கேற்பவர்களாகவும் படைத்துக்காட்டுகின்றனர் அச்சம், மடம், நாண் தவிர்த்த புதுமைப் பெண்களே நாட்டிற்குத் தேவையெனப் பாடுகின்றனர் என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஐந்தாம் இயலில் சங்க இலக்கியத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் அடிப்படையாக வைத்து, பாடல்கள் புனைந்தது போலவே பாரதியாரும் பாரதிதாசனும் காதல் குறித்த பாடல்களைப் பாடும் பொழுதும் பாடியுள்ளனர் என்பது விளக்கப்பட்டுள்ளது. சாதி, சமயம், உயர்வு, தாழ்வு போன்றவை சங்க இலக்கயத்தில் காணப்படவில்லை அதுபோலவே பாரதி பாரதிதாசன் பாடல்களிலும் இவற்றின் தாக்கம் காணப்படவில்லை. சங்க காலக் காதல் இயல்பான ஒன்றாக இருந்தாலும், தற்காலத்தில்  அவ்வாறு பார்ப்பதில்லை என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றனர். சங்க கால வீர வாழ்க்கை போன்று தற்காலத்திலும் இளைஞர்கள் வீர வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதைப் பாடுகின்றனர். சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட கொடை குறித்தும் இருவர் பாடல்களிலும் காணப்படுகின்றது என்பவை குறித்து விளக்கயுரைக்கப்பட்டுள்ளது.

    இருபதாம் நூற்றாண்டில் சமூக, அரசியல், பொருளாதார நிலைகள் சங்க காலத்தில் இருந்து வேறுபட்டிருந்தாலும், அகம், புறம் சார்ந்த பாடல்களைப் புனையும்பொழுது சமகால நிலையினை உட்செறித்தும், மரபினை உள்வாங்கியும் ஆக்கப்பட்டுள்ளதை இவ்வாய்வேட்டின் மூலம் அறியமுடிகின்றது. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த சூழலில் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஊட்டவேண்டிய நிலையிருந்தாலும் மரபு வழுவாமல் அவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வதில் பாரதியார், பாரதிதாசன் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். ஆனாலும் பெண் குறித்து, தொல் சமூகம் முன்வைக்கும் விதிகளில் இருந்து வேறுபட்டுப் புதுமைப் பெண்களே நவீன சூழலுக்குத் தேவை என்பதை முன்வைக்கின்றனர்.

    பெண்ணுக்கான வெளி இல்லத்தோடு முடிவடைவதில் இருவரும் விருப்பம் கொண்டிலர். சமூக வெளியிலும் பெண் மதிப்புமிக்கவளாக விளங்கவேண்டிய தேவையுள்ளதை இருவரும் தங்களது படைப்பின் வழி வெளிப்படுத்தியுள்ளதை இவ்வாய்வு எடுத்துக்காட்டியுள்ளது. சங்க இலக்கியம் முன்வைக்கும் அகம், புறம் சார் மதிப்பீடுகளோடு, இருபதாம் நூற்றாண்டு பாரதியார், பாரதிதாசன் பாடல்களோடு ஒப்பிட்டு  நிகழ்த்தப்பட்டுள்ள இவ்வாய்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றியுள்ள இலக்கியங்களில்  தொல்சீர் மரபின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்யத் துணைசெய்யும்.

     

     

    Share
  • பெருகும் அன்பின் பேரன்பர் இருவர்  

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை

    திருஞானசம்பந்தப்பெருமான், மொழியே மலராக, பதிகமே பாமாலையாக, ஞானமே மணமாகச் சொல்மாலை சூட்டிச் சிறந்தவர்; அரனடியை அடைதற்குரிய நன்னெறிகளைத் திருக்கடைக்காப்பாக அருளிச்செய்தவர்; அவர், ‘அன்பு நிறைந்த சிந்தையராவர்’ என அடியவர்களை ஏற்றிப் போற்றியவர்; அடியார்களின் மண்ணுலக மயக்கம் நீக்கிப் பிறவிப்பிணி தீர்க்கின்ற ஞானத்துணைவராகவும் வந்தருளியவர். அவரை நேரில் கண்டறிந்திராத நிலையிலும், அவர் மீதான அடிமைத்திறத்தில் சிறந்திருந்தவர், திருமயிலைச் சிவநேசர். அவரது அன்பின்மேன்மை, பிள்ளையாரின் செயற்கரிய சாதனைக்குக் கருவியாகின்ற தனித்தகுதியாக விளக்கம்பெற்றிருந்தது. ஆளுடைய பிள்ளையார், அதனை உலகறியச் செய்வதற்குப் பூம்பாவையை உயிருடன்  மீட்டருளிய அற்புதத்தைப் பெரியபுராணம் விளக்கியுரைக்கிறது. அப்புராணத்தைப்  பயில்கையில், பிள்ளையாரின் அருள்திறமும், சிவநேசரின் அடிமைத்திறமும் சைவப்பெருநெறியாக விளங்கவல்ல திறத்தினை உணரலாம். அவ்விரு பெருமக்களும் கொண்ட கொள்கையும், நின்ற நிலையும், புரிந்த சாதனையும், பெற்ற பேறும், ‘எம்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற சைவப்பெருநெறிக்கு நிலைக்களமாகின்ற திறத்தினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    பேரன்பர் வழியே பெருஞ்சாதனை

    சிவநேசர், தாம் சிவமெனவே போற்றுகின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையாரை கண்ணால் கண்டதில்லையாயினும், அவரது திருப்புகழைக் கேட்டு நாளும் திருஞானசம்பந்தம் பெற்றுய்ந்த சீர்மிகு அடியவராக விளங்கியவர்.

    அடியார்த் திருக்கூட்டத்தின் வாயிலாக அவர்களது திருப்புகழைக் கேட்டு, ஞானப்பாலுண்ட பிள்ளையின்பால் சிவநேசர் மீளா அடிமைத்திறம் பூண்டார். திருமுகத்தைக் காணாமலேயே அடிமைத்திறம் பூண்ட அவரது உருகும் அன்பின் மனநிலையினை, ‘தாயாய் முலையைத் தருவானே’ (ஆனந்தமாலை: 5) என்னும் திருவாசகத்தொடரின் வழியே விளக்கலாம்.

    பிறந்த பிள்ளையானது தாயின் அன்பினைப் பெறுவதற்கு, அதன் உள்ளிருந்து எழுகின்ற பசியுணர்வே தகுதியாகிறது. முகம் அறியாத அக்குழந்தையானது திருமுலைகளையே பற்றுக்கோடாகக் கொண்டு  பாலினைப்பெற்று,  உயிர்வாழ்கிறது. அத்தகைய குழந்தையாகவே சிவநேசர் விளங்கினார்.   ‘தனது ஞானாசிரியரது திருமுகத்தைக் கண்ணுற்றதில்லை’ என்ற நிலையிலும், அவர் காட்டிய  தொண்டுநெறியினைத் தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு, ‘அன்புநெறியே, சைவநெறி’ என்பதனை உலகுக்கு உணர்த்திக்காட்டினார். அம்மேன்மைநிலையே, திருமயிலையில் திருஞானசம்பந்தர்,  மாண்டவரையும் உயிருடன் எழுப்புகின்ற பெருஞ்சாதனைக்குச் சிவநேசர் கருவியாகின்ற பேற்றினைத் தந்தருளியது.

    பெருகும் அன்பின் சிவநேசர்

    திருமயிலை நகரின்கண் கடல் வணிகத்தில் சிறந்திருந்த சிவநேசர், இருநிதிச் செல்வமுடன், அருள்நிதிச் செல்வமும் தம்பால் குறைவற நிறைகின்ற பேறுபெற்றிருந்தார். அத்துடன், ‘தம்மை உள்ளவாறு அறிந்திருந்தார்; பொய்ம்மை நீக்கி, மெய்ப்பொருள் கொள்கின்ற உள்ளத்தராயிருந்தார்; சங்கரற்கு அடியவராகவும் செம்மையே புரிகின்ற மனத்தினராகவும், பிள்ளையாரிடத்தில் நீங்காத அடிமைத்திறமும் பூண்டிருந்தார்’.

    தம்மை உள்ளவாறு அறிந்து தெளிதலாவது, ‘பகுத்தறிவின் பயன்கொண்டு, தமக்குரிய உண்மைச்சார்பினை அறிந்து தெளிதல். பசுக்களாகிய ஆன்மவர்க்கம், பதியாகிய பெருமானைச் சார்வதும், அச்சார்பினால் வீடுபேறடைவதும், அப்பெருநோக்கத்திற்காக வகுக்கப்பட்டவையே புவனபோகங்களும்’ என்று தெளிதலாகும். பொய்ம்மை நீக்கி, மெய்ப்பொருள் கொள்ளுதலாவது, ‘உலக மயக்காகிய பொய்ப்பொருள்களின் சார்பு நீங்கி, அடியார்ப்பணி முதலானவற்றின் வழியே, அரனடிக்கு அன்புபெருக்குதல்’. சங்கரற்கு அடிமை செய்தலாவது, ‘நிலைத்த பேரின்பப்பொருளாகிய பெருமானைப் பெற்றுய்வதற்குக் கருவியாகிய நிலைத்த பேரன்பிலிருந்து பிறழாமல் நிற்றல்’. இத்தகைய பெருங்குணச் செல்வராகிய சிவநேசரைத் தெய்வச் சேக்கிழார்பெருமான்,

      ‘தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை
       மெய்மை யேசெயும் விருப்புடன் மிக்கதோ ரன்பாற்
       பொய்ம்மை நீக்கி மெய்ப்பொருளிது வெனக்கொளு முள்ளச்
       செம்மை யேபுரி மனத்தினர் சிவநேச ரென்பார்’ (திருஞான. புராணம்: பா.எண்: 1035) என்றுக் குறித்தருளியுள்ளார்.

    உண்மை அன்பால் உருகிப் பெருகுவார்

    சிவத்தின்பால் நிலைத்த பேரன்பின் அடையாளமாக, அடியாரிடத்தில் உருகுதலும், நெறியல்லாத நெறிகளில் மக்களை அலைக்கழிக்கின்ற பரசமயத்தாரின் அறியாமை கண்டு வெறுப்பு உடைமையும் சிவநேசரின் இயல்பாயின.

               ‘கற்றை வார்சடை முடியினா ரடியவர் கலப்பில்
                உற்ற செய்கையி லொழிவின்றி யுருகிய மனமும்
               பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றுஞ்
               செற்ற மேவிய சீலமு முடையராய்த் திகழ்வார்’ (மேலது புராணம்: பா.எண்: 1036)

    சிவநேசரது இல்லத்தில் பொருள்செல்வமும், இடையறாது பிள்ளையார்பால் உருகுகின்ற அடிமைத்திறமும் நிறைந்து பெருகின. அம்மையிடத்தில் ஞானப்பாலுண்டும், தென்பாண்டி நாட்டில், சமண் சாய்த்தும், சைவம் தழைக்கப் பாடுகின்ற பிள்ளையாரின் பெருஞ்சிறப்பினை நாளும் அடியார்த் திருக்கூட்டத்தின் வழியே கேட்டு, அவர்பால் காதலாகிக் கசிபவரானார். அவர்தம் திருமுகத் தரிசனப்பேறு பெற்று, திருவடியிலேயே தொண்டு பூண்டிருக்க வேண்டும்’ என்ற பக்குவநிலைக்கு உயர்ந்தார்.

           ‘செல்வ மல்கிய சிரபுரத் தலைவர்சே வடிக்கீழ்
            எல்லை யில்லதோர் காதலி னிடையறா உணர்வால்
            அல்லு நண்பக லும்புரிந் தவரருட் டிறமே
            சொல்ல வுஞ்செயல் கேட்கவுந் தொழிலின ரானார்’.   (மேலது புராணம்: பா.எண்: 1038) 

    பூமகள் எனவொரு பெண்கொடி உதித்தார்

    ‘பெருகும் அன்பில் மனம் விளங்கிச் சிறந்திருந்த சிவநேசர், மனை விளங்கத் தமக்கு மகவு வாய்க்கவேண்டும்’ என்று பெருமானைப் பணிந்தார். அதற்கு, நடமாடும் கோயிலென விளங்குகின்ற அடியவர்பால் ஆராத அன்பு பெருக்கிப் பெருந்தவம் புரிந்தார். என்றும் குறையாத அன்பில் அரனடியரைப் பேணிக்காத்தார். அன்பும், தொண்டும் அவர்தம் தவமாகிச் சிறந்தன. அத்தவப்பயனே, அவருக்குப் பூமகளை ஒத்த பெண்மகவு வாய்க்கும்படி அருளியது. அதற்கேற்ப, அப்பெண்பிள்ளைக்கு, ‘பூம்பாவை’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். அப்பெண்பிள்ளையும் சிவனன்பில் நாளும் தழைத்து வளர்ந்தது.

           ‘யாவ ரும்பெரு மகிழ்ச்சியா லின்புறப் பயந்த
            பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலா நோக்கி
    பூவி னாளென வருதலிற் பூம்பாவை யென்றே
          மேவு நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க’ (மேலது புராணம்: பா.எண்: 1044) என்றமைந்த பாடல் அடிகளில், சிவநேசர், பெண்பிள்ளைக்கு, ‘பூம்பாவை’ எனப் பெயரிட்டார் என்ற குறிப்பினை தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘புவிமேல் விளங்க’ என்னும் தொடரால் நிறைவுசெய்துள்ளார்.

    ‘இனி வரும்நாளில், பிள்ளையார், சிவநேசரின் குலம் முழுமைக்கும் ஞானத்துணைவராக எழுந்தருளவுள்ளார்; அத்துடன், பூம்பாவையின் பொருட்டுச் செயற்கரும் சாதனையும் பிள்ளையாரல் நிகழவுள்ளது. அவ்வருள் சிறப்புகளினால், ‘பூம்பாவை’ என்னும் திருப்பெயரும் புவி உள்ள அளவும் நின்று நிலைக்கவுள்ளது’ என்பது அவர் உணர்த்தக் கருதிய திருக்குறிப்பாகும்.

    பெருகும் அன்பே பெருங்காப்பு

    பொருள்செல்வம் பெருகுகின்றவேளையில், உலக இன்பங்களைத் துய்த்துத் திளைப்பதே உயிரியற்கை. ஆனால், சிவநேசரிடத்தில் பெருகிய செல்வம், பிள்ளையார்பால் பேரன்பாகவும், அரனடியார்பால் அடிமைத்தொண்டாகவும் மிளிர்ந்தன. நாளும் சிவஞானச்செல்வரை முன்னிட்டு, சிவநேசரின் சிந்தையில் நிறைந்த அடிமைத்திறம், அவர் வெல்லுதற்கு இயலாத உலகமயக்கங்களையும் வென்றேறத் துணையானது; உண்பனவும், உடுப்பனவும், உற்றசெல்வங்களும், பெற்ற மகளாகிய பூம்பாவையும், தாமும் இனி, ‘பிள்ளையாருக்கே அடிமை’ எனப் பணிந்துய்கின்ற பெரும்பற்றினை அவரிடத்தில் நிலைப்பெறச்செய்தது. வீடும் வேண்டாத விருப்பினராகிய சிவநேசர், பிள்ளையாரிடத்தில் கொண்ட அடிமைத்திறமானது,

           ‘சுற்ற நீடிய கிளையெலாஞ் சூழ்ந்துடன் கேட்பக்
           “கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன்
           பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும்
           முற்று மென்னையுங் கொடுத்தனன் யா” னென்று மொழிந்தார். (மேலது புராணம்: பா.எண்: 1053)

    சிந்தையால் மகிழ்ந்த சிவநேசர்

    மேற்குறித்த பாடலில், சிவநேசரின் அடிமைத்திறத்தினைப் பாடியருளிய தெய்வச் சேக்கிழார்பெருமான், அடுத்த பாடலிலும் அவர்தம் அன்பின்திறத்தை அறிவுறுத்தியுள்ளார். ‘தம்மையும், தமது பெருஞ்செல்வமாகிய பூம்பாவையையும், பிள்ளையாரே ஆட்கொள்ள வல்லவர் என்ற அடிமைத்திறத்தில் சிவநேசர் சிந்தை மகிழ்ந்திருந்தார்’ எனச் சுட்டியுள்ளார்.

           ‘எல்லை யில்பெருங் களிப்பினா லிப்பரி சியம்பி
            முல்லை வென்ணகை முகிழ்முலை யாருடன் முடியா
            மல்கு செல்வத்தின் வளமையு மறையவர் புகலிச்
            செல்வ ரேயுடை யாரேனுஞ் சிந்தையான் மகிழ்ந்தார்’ (மேலது புராணம்: பா.எண்: 1054)

    குமரகுருபரர், ‘செல்வம் என்பது, சிந்தையின் நிறைவே’ (சிதம்.மும்.கோவை:26) என்றார்.  அதற்குத் தமது வாழ்க்கையையே இலக்கணமாக்கித் தந்தவர், சிவநேசர். அவர், பிள்ளையாரிடத்தில் பெருகும் அன்பின் சீர்மையராகி,   ‘இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உமதுகழலே மறவாது பணிந்தெழுவேன்’ என்ற நிலைநின்றார்; அன்பகலாத அடிமைத்திறமென்னும் அருள்செல்வம் கொண்டு, தனது உயிரைப் பிணித்த பிறப்பு என்னும் வறுமையினை  நீக்கிச் சிறந்தார்.  

    சிவநேசர் பொருட்டு பெருஞ்சாதனை

    நம்மைப்போன்று குறிக்கோளற்று உலகியலில் திளைப்போருக்கே இறப்பென்பது துன்பம் தருவதாகின்றது. மாறாக, சிவநேசரைப் போன்று, உலகியலை வென்ற அடியவர்களால் மரணத்தையும் வெல்லமுடிகிறது. ஆயினும், அவரைப் போன்ற கொள்கைச் சான்றோரின் இடர்களைக் களைவதையே பெருமான் தனது திருவருள் கொள்கையாகக் கொண்டவன்.
    ‘கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே’ (1:52:1) என்பது, ஞானப்பிள்ளையாரின் திருவாக்கு. அது பொய்க்காதவண்ணம், மாண்டு, எலும்பாகி மிஞ்சிய பூம்பாவையையும் பிழைக்கச் செய்கின்ற பேரருளாடலை பெருமான், பிள்ளையாரைக் கொண்டு திருமயிலையில் நிகழச்செய்தான்.

          ‘எங்கொங்கை நின்னப்ப ரல்லார்தோள் சேரற்க
            எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க (திருவெம்பாவை: 19) என்று பூம்பாவையைப் பிள்ளையாருக்கு உரியவராகக் கொடுத்துய்வதே தமது பெருங்கடமையாக வாழ்ந்தார்.

    அப்பெண்பிள்ளையும் அந்நாளில், ஏழாண்டு பருவத்தினளாக இருந்தாள். ஒருநாள், தனது வளமனையிலிருந்த மாதவிப் பந்தலிலிருந்து மலர்க் கொய்ய முயன்றாள். அவ்வேளையில், முள் எயிற்று அரவொன்று அவளது தளிர்க்கரத்தில் பல்பதித்தது. விடவேகம் அவள் உடலில் பாய்ந்ததனால், அவளும் சோர்ந்து வீழ்ந்தாள். பெற்றோரும், உற்றோரும் சூழ்ந்திருந்து விடம் நீக்கப் பல்வகைச் செயலாற்றினர்.  ‘அருமருந்தால் ஆவி மீட்டு அவளைக் காப்போருக்கு அருஞ்செல்வம் பரிசாகும்’ எனப் பறையும் அறிவித்தனர்; மூன்று நாள்கள், அவளுடலினை மாடத்தில் வைத்துக்காத்தனர்.  ஆயினும், பிள்ளையாரின் திருவாக்கினால் அன்றி, அவள் மீண்டெழுதல் இல்லை என்ற நிலையினால், சிவநேசரின் பிற முயற்சிகள் பயனற்றுப் போயின.

    பெற்றபிள்ளையினை இழந்தது சிவநேசருக்குப் பெருஞ்சோகமே. அத்துன்பத்திலும் அவர், ‘நாள்தவறாது, பிள்ளையாரின் அரும்புகழைப் பேசியும், கேட்டும், சிந்தித்தும் அன்பு பெருக்கத் தவறவில்லை; அவளுக்கு ஏற்பட்ட பெருந்துன்பத்திலிருந்து மீண்டுவரத் திருவருள் துணைநிற்காது போயிற்றே’ என்றும் கலங்கவில்லை.

    இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
    நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே’            (குழைத்தபத்து: 7) என்ற ஞானத்தெளிவுடன் விளங்கினார். பூம்பாவைக்கு,  ஞானப்பிள்ளையாரை நாயகனாக்குகின்ற  திருநோக்கத்திற்கு முட்டுப்பாடு நிகழ்ந்ததாகவே கருதிச் சிவநேசர் கவலையுற்றார்.

      ‘துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
       இன்பம் பயக்கும் வினை’   (திருக்குறள்: வினைத்திட்பம்: 9)

    என்பதற்கு இலக்கணமாக, ‘பூம்பாவையின் பொருட்டு இனித் தாம் கலங்குவதில்லை’ எனத் தெளிந்தார்; சொல்லிய வண்ணமே செய்கின்ற அடிமைத்திறத்தில் நிலைமாறாதிருந்தார்.

    ‘பிள்ளையாரே, பூம்பாவையின் எலும்பினையும் ஆள்வதற்கு உரிமை உடையவர்’  எனத் தெளிந்த சிந்தையில், எலும்பினைக் குடத்திலிட்டு, அதனைப் பூம்பாவை என்றே பேணத் துணிந்தார். ‘பூம்பாவை மாண்டபோதில், பிள்ளையாரின் திருவருள் நின்று காக்கவில்லையே’ என்றோ, ‘அவளது எலும்பையும், சாம்பலையும் பலநாளும் பாதுகாத்தற்கு வாய்ப்பில்லை; ஆதலால், தாமே பிள்ளையாரைத் தேடிச் சென்று அதனை அவர்பால் பணிப்பேன் என்றோ, சிவநேசர் தன்முனைப்புக் கொள்ளவில்லை. மாறாக, ‘பூம்பாவையின் இறப்பும் திருவருளாணை வழியே நிகழ்ந்தது’ என்பதையும், ‘அவளது சாம்பலினைப் பிள்ளையாரிடத்தில் ஒப்படைத்தற்குரிய காலமும், திருவருள் வழியே வாய்க்கும்’ என்பதும் அவர்தம் ஞானத்தெளிவாக விளங்கின. அதனால் சிவநேசரை, தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘சீரின் மன்னிய சிவநேசர்’ எனப் போற்றியுரைத்துள்ளார்.

           ‘சீரின் மன்னிய சிவநேசர் கண்டுள மயங்கிக்
            காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர்
            சாரு மவ்வள வும்முட றழலிடை யடக்கிச்
            சேர வென்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார்’ (மேலது புராணம்: பா.எண்: 1065)

    சிவநேசர் தந்தையாக இருந்து கொண்டிருந்த பிள்ளைப்பாசம் என்கின்ற மயக்கத்தை, ‘கண்டு உளம் மயங்கினார்’ என்பதனை, மேற்கண்ட பாடலின் முதல் அடி குறிக்கிறது; அவரே, பிள்ளையார்பால் பெருகும் அன்பின் சீரடியவராகி, சிந்தைதெளிந்த ஞானத்தெளிவைப் பாடலின் இறுதியடியும் குறிக்கிறது.

    இன்னருள் விளைகின்ற காலம்

    சிவநேசர், தனது உடற்பிள்ளையாகிய பூம்பாவையின் முகம்காண இயலாத சோகத்தை, உயிர்ப் பிள்ளையாகிய திருஞானசம்பந்தரின் திருமுகத் திருக்காட்சியால் போக்கியருளத் திருவருள் கூட்டியது. பிள்ளையார், திருப்பாண்டி நாட்டில் சமணத்தின் வேரறுத்து, திருநீற்றுச் செல்வத்தால் சைவத்தை நிலைக்கச் செய்து, தொண்டைநாட்டின் திருப்பதிகளில் திருவொற்றியூரை வணங்கிய பின்னர், திருமயிலைக்கு எழுந்தருளத் திருவருள் கூட்டுவித்தது.  அடியவர்கள், அவர்தம் வருகையினைக் குறித்துக் கூறக்கேட்ட சிவநேசர், அளவிலா மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அவ்வருஞ் செய்தியினை வாயாரப் புகன்ற அடியவர்களுக்குப் பொன்னும், மணியும் பரிசளித்தார்.  திருவொற்றியூர் முதலாக, திருமயிலை வரையில் அலங்கரித்தார். இருநகரங்களுக்கிடையிலும், பத்து நாழிகையளவு பயணத் தொலைவு உண்டு. ஒருநாழிகை, இருபத்துநான்கு நிமிடங்கள் கொண்டது.  அவ்வகையில், பிள்ளையார் பயணிக்கவுள்ள நான்கு மணிநேரப் பயணத்தொலைவுக்கும், பந்தலும், விதானமும் அமைத்து அவரை வரவேற்பதற்குச் சிவநேசர் ஆணையிட்டார். நீண்ட இத்தொலைவு, பிள்ளையாரை எண்ணுங்கால், சிவநேசரின் உள்ளத்தில் நீள்கின்ற அடிமைத்திறத்தின் அளவுக்குச் சான்று என்பார், உரையாசிரியர் சிவக்கவிமணி.

    திருவொற்றியூரளவும்–திருமயிலாபுரியினின்றும் திருவொற்றியூர் வரையும்; இது பத்து நாழிகையளவு கொண்ட தூரம்; இவரது அன்பு நீண்டுசெல்லும் தன்மை குறித்தது’ (பக்.: 667) என்னும் உரைவிளக்கம், அடியார்செய்கைகள், ஆடம்பரத்தின் வெளிப்பாடாக அல்லாமல், அன்பின் வெளிப்பாடாகின்ற வகையில் மேம்பட்ட பக்திகொள்ளுதலை வலியுறுத்துகிறது.

    ஆறு சூடினாரின் திருமகனால் அருஞ்சாதனை

    ஆறுசூடியின் மகனாகிய பிள்ளையார், பரசமயத் தூரறுத்து, சைவப்பெருநெறி காட்ட வந்தவர். அவர், அடியார்த் திருக்கூட்டத்துடன் திருமயிலையை நோக்கி எழுந்தருளி வருவதனை அறிந்து இன்புற்ற சிவநேசர், அவர்தம் வருகை நிகழ்கின்ற திருத்திசையில் வீழ்ந்து அடிவணங்கினார். அவ்விடத்தை நோக்கிச் சிவிகையில் பயணம் மேற்கொண்டிருந்த பிள்ளையாரின் திருவுள்ளத்திலும் சிவநேசரின் அடிமைத்திறம், பெருகும் அன்பிலான  பூரிப்பினை விளைவித்தது. சிவநேசருக்கு அருள்புரிகின்ற பெருநோக்கு, பரசமயத் தூரறுப்பினைத் தொண்டைநாட்டிலும் பிள்ளையார் நிகழ்த்திக்காட்டுவதாகிய, செயற்கரும் சாதனையாக மலர்ந்தது.

    இன்னருள் வணிகர்மேல் விளைதல்

    ’கூற்றடர்த்தவர் கோயில்’ என்றும்,  ‘பெருமயானத்து நடம் புரிவார் பெருங்கோயில்’ என்றும், திருப்பெயர்க்கொண்ட கபாலீச்சரத்தில், பிள்ளையார் காலனையும் பழிக்கின்ற அருளாடல் நிகழ்வதற்குரிய காலம் வாய்த்தது. பிள்ளையார், திருமயிலையின் கபாலீச்சரத்தை வணங்கி, அதன் மதில்புறத்தே வந்தணைந்தார். அவ்வேளையில், பிள்ளையாரின் திருநோக்கம், சிவநேசர்பால் சென்றது. அவ்வருள் நோக்கத்துடன், சிவநேசரை நோக்கி, ‘அடியாரிடத்திலான அடிமைத்திறமே, தவம் பெருக்குகின்ற சிவவாழ்வு’ என நிலைத்திருக்கின்ற நல்லுணர்வீர்!,  ‘மகளது சாம்பல் அடங்கிய குடத்தினை, உலகறிய இவ்விடத்தில் கொண்டுவந்து வைக்கவும்!’ என ஆணை வழங்கினார்.

    மண்ணில் பிறந்தார் பெறும் பயன்

    அடியவர்கள், சைவப்பெருநிதியாக விளங்க வல்லவர்கள். அவர்களின் நடுவே, என்றும் நீங்காத இடம்கொண்டு பெருமானும், அருள்நிதியாக விளங்கியருள்கின்றான். பற்று ஒழித்தல், பக்திநெறியின் அடிப்படையாயினும், சிந்தையை மடைமாற்றி அதில் நிலைத்திருக்க, அணுப்பொழுதும் இறைவனை மறவாமை என்பதே அடிப்படையாகும். அதற்கு, அடியாருடனான சூழலே களமாகும். அடியவர்களே, பெருமானின் பெரும்புகழைப் பேசிப்பேசி, ‘அன்பர்பணியே அரன்பணி’ என்று பண்படுவர்.

     ‘சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை
    விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்        தரிப்பார்’          (கோயில் மூத்த திருப்பதிகம்: 9)

    என்று பண்பட்ட அடியாருடனான நன்நெறியினை வலியுறுத்தவேண்டி மணிவாசகப்பெருமான்,

    ’இறைசீர் கற்று ஆங்கு அவன், கழல் பேணினரொடும் கூடுமின் கலந்தே’ (உயிருண்னிப்பத்து: 5) என்றார். அத்துடன் அப்பேறு தமக்கும் வாய்த்தருள வேண்டி இறைவனிடத்தில்,

    ‘உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்’ (கோயில் மூத்த திருப்பதிகம்: 1) என்று வேண்டினார்.

     மாகேச்சுர பூசையும்,  விழாப்பொலிவும்

    மாகேச்சுரர்களாகிய அடியவர்களை நிந்தித்தல், ‘பெருநரகில் உழல்கின்ற  பெருந்துன்பத்தினைத் தரும்’ (திருமந்திரம்: 520) என்பதனைத் திருமூலர் விளக்கியுள்ளார். அத்துடன், ‘உண்மையான சிவஞானிபால் நம்மை ஒப்புக்கொடுத்த நொடிப்பொழுதிலேயே சிவபோகம் வாய்க்கும்’ (மேலது, பாடல்: 521) என்பார். ‘அடியார்’ எனப் பொய்வேடம் பூண்டு வந்தாரிடத்திலும், உண்மை அன்புகொண்டு பணிந்த மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் திருவடிப்பேறு பெற்றுய்ந்த அருஞ்சிறப்பு, அடியாரைப் பணிவதன் அருள்சிறப்பினை விளக்கும். அவ்வண்ணம், அடியார்த் திருத்தொண்டால் அளவிலாத அருள்பெற்ற அன்பர்கள் எனப் பெரியபுராணமும், பத்தொன்பது அடியவரைப் போற்றியுரைக்கிறது.

    அளவில்லாத பெருமையுடைய அடியவர்க்கு உணவிடுதலாகிய நன்னெறியும், அவர்களுடன் கூடியிருந்து, பெருமானைக் கண்ணாரக் கண்டுய்வதற்குமான விழாக்களை, ‘நல்விழா’ என்பார் தெய்வச் சேக்கிழார்பெருமான். ‘சிவபெருமானது விழா ஒன்றே எஞ்ஞான்றும் பெருநலமாகிய வீடுபேற்றுக்கு உதவுவது என்பார் நல்விழா என்றார்’ என்பது உரையாசிரியர் சிவக்கவிமணி அவர்களின் குறிப்பு (பக்.,: 687).

    திருவிழாவில் அடியாருடன் கூடி, பெருமானின் திருக்காட்சியைக் கண்ணாரக் காண்பதே, ‘மகிழ் செல்வம்’ (திருநாவு. புராணம்: 235) என்பார் தெய்வச் சேக்கிழார்பெருமான்.  இக்கருத்துடைய பிள்ளையாரும், தாம் காணுதற்குத் திருவருள் கூட்டாத, திருவாரூர் திருவாதிரைத் திருவிழாச் சிறப்பினைத் தமக்குக் கூறியருள  அப்பர்பெருமானை வேண்டினார். அப்பெருவிழாச் சிறப்புக்கு, ‘முத்துவிதான மணிப்பொற்கவரி’ (4:21) என்னும் தேவாரம் திருச்சான்றாகிறது. அவ்வாறு பெருமானின் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்க்கின்ற அடியவர்கள்,  வினையொழிந்து, சிந்தைமகிழலாம்’ என்பது பிள்ளையாரின் திருவருளாணை.

      ‘இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி
       லாளர்விழ மல்கச்
       செடிகொள்வினை யகலமன மினியவர்கள்’       (3:83:5)

    ‘அடியவர்கள், திருவிழாப் பொலிவு கண்டார்த்து,  சித்தம் அழகிய பெருமக்கள்’ என மிளிர்வர் எனப் பிள்ளையார் போற்றியுள்ளார். அடியவர்களுக்கு உணவிடுதலாகிய மாகேச்சுரப் பூசைக்கு முட்டுப்பாடு நேர்ந்தநிலையில், திருவீழிமிழலைப் பெருமானிடத்தில் படிக்காசு பெற்று அதனைச் சிறப்புறச் செய்தருளிய சிறப்பும் பிள்ளையாருக்கு உண்டு.

    மேற்சுட்டப்பெற்ற நன்னெறிகள், இந்நாளிலும் சைவம் தழைக்கப் பிள்ளையாரின் அருளாணையாக அருளப்பட்டவை. அப்பெருநெறியினை உலகவர்க்குச் சாற்றுகின்ற திருவருள் ஆணையாக, பூம்பாவைப் பாட்டு எழுந்த வரலாற்றினை தெய்வச் சேக்கிழார்பெருமான் புராணத்தில் குறித்தருளியுள்ளார்.

          ‘மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
         அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல்
         கன்ணி நாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
      உண்மை யாமெனி லுலகர்முன் வரு” கென வுரைப்பார்’  (திருஞான. புராணம்: பா.எண்: 1087)

    காணாது, “போதியோ” பூம்பாவாய்

    கபாலீச்சரத்துத் திருக்கோயிலின் மதில்புறத்துத் திருவாயிலின் முன்னே வைக்கப்பெற்றிருந்த சாம்பற் குடத்தின் மீது பிள்ளையார் தமது திருக்கண் நோக்கம் செலுத்தினார்;  ‘மட்டிட்ட புன்னை’ எனப் பாடத் தொடங்கினார். கபாலீச்சரத்துத் திருக்கோயிலில் பொலிவுற நிகழ்வதாகிய திருவிழாக்களில், அடியார்க்குத் திருவமுது படைத்தலாகிய மாகேச்சுரபூசையானது ஏற்றம் பெற்று நிகழ்வதனைப் போற்றி முதல் திருப்பாட்டினைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, கபாலீச்சரத்துப் பெருமான், தம்மடியார் கண்டுய்வதன்பொருட்டுக் கொண்டருள்கின்ற பெருவிழாக்களை ஒவ்வொரு திருப்பாடலிலும் வரிசைப்படுத்தினார். ‘அப்பெருவிழாக்களைக் காணாது போதியோ பூம்பாவாய்?’ எனப் பூம்பாவையை வினவினார்.  ஐப்பசித் திருவோணத் திருவிழா, திருக்கார்த்திகைத் திருவிளக்கீடு, மார்கழித் திருவாதிரைத் திருவிழா, தைப்பூசப் பெருவிழா, மாசிமகக் கடலாடல், பங்குனிஉத்திரப் பெருவிழா, சித்திரை அட்டமித் திருவிழா, வைகாசி ஊஞ்சலாட்டுப் பெருவிழா மற்றும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் பெருஞ்சாந்திப் பெருவிழாக்கள் எனப் பெரும்பொலிவுடன் நிகழ்கின்ற திருவிழாக்களின் உயர்வும், அவற்றில் அடியார்களின் ஆரவாரச் சிறப்பும் விளங்கத் திருப்பதிகத்தை எடுத்துரைத்தார். ‘இத்திருவிழாக்களின் அருள்காட்சிகளைக் காணாமல் நீ மறைந்ததும் முறையோ?’  எனத் திருவருளை முன்னிட்டுப் பூம்பாவையிடத்தில் முறையிடுபவராகப் பாடல்கள்தொறும், ‘காணாது போதியோ பூம்பாவாய்!’ என்னும் விளியமைத்துப் பத்தாம் பாடலையும் பிள்ளையார் நிறைவு செய்தருளினார்; பிள்ளையார் பூம்பாவையை எழுப்புதலும் இயலாது’ என்று அதுகாறும் எண்ணியிருந்த சமண, பௌத்தரின் எண்ணம் பொய்த்தது. அவ்வேளையில், பத்துத் திங்கள், தாயின் கருவிலிருந்து வளர்ந்து வெளிவருகின்ற பிள்ளையைப்போல, பூம்பாவை மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்தாள். சாம்பல் குடம் உடைந்து, பன்னிரண்டாண்டு பருவத்தின் அருள்பேரழகுடையவளாக வெளிப்பட்டுவந்த அவளது எழிற்கோலப் பொலிவினைப் புராணத்தின் வழி உணரலாம்.

    மெய்த்திரு வாக்கு என்னும் அமுதம்

    சிவஞானச்செல்வராகிய பிள்ளையார், ‘அடியாரின் அடிமைத்திறம், மாண்டாரையும் மீட்டருளவல்லது’ என்னும் சைவப்பெருநெறியினைப்  பரசமயத்தார் உள்ளிட்ட உலகத்தாருக்கும் எடுத்துரைக்கப் பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்தருளினார். செயற்கரிய அச்செயலுக்கு, பெரும்பொருளல்லாத எலும்பும், சாம்பலும் கருவியாயின. அதுபோன்றே, திருவருளை முன்னிட்டுப் பிள்ளையார் பாடியருளிய திருப்பாடல்களில் எழுந்த, ‘போதியோ’ என்னும் சொல்லானது  மந்திரமாகச் செயல்பட்டுப் பூம்பாவையை உயிருடன் எழுப்பியது. அவ்வுயர்வு கருதியே, தெய்வச் சேக்கிழார்பெருமானும் ‘போதியோ’ என்னும் சொல்லை, ‘மெய்த்திரு வாக்கென்னும் அமுதம்’ எனப் போற்றியுள்ளார். அது, இரண்டு பக்கத்திலும், ‘ஓம்’ என்னும் பிரணவத்தைக் கொண்டெழுந்த ‘மூவெழுத்து மந்திரம்’ என்பார் உரையாசிரியர் சிவக்கவிமணி. ‘அதுவே வருக என்ற ஆணையாகிய சிவசிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமையால் என்க’ (பக்.,: 688) என்பது உரைக்குறிப்பு.

     ‘மன்னு வார்சடை யாரைமுன் றொழுது “மட் டிட்ட”
      என்னு நற்பதி கத்தினிற் “போதியோ” வென்னும்
      அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதமவ் வங்கந்
      துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள்’ (மேலது புராணம்: பா.எண்: 1088)

    முடிவுரை

    பெருகுகின்ற செல்வமும், பேரன்பின் திறமும் அடியவர்களுக்காக அமையுமாயின், அதுவே அன்பு மாறாத அடிமைத்திறமாகும். அதன்வழியே, உலகத்து இயற்கையாகிய மரணத்தையும் வென்றேறலாம். அதற்கு, சிவநேசர் பிள்ளையாரிடத்தில் கொண்ட அடிமைத்திறம் சான்றாகிறது.  பூம்பாவையை மீட்டருளத் தாம் கருவியான நிலையிலும், தன்முனைப்பற்று, திருவருளாணை வழியே பெருமானைப் பணிந்துநின்றவர், பிள்ளையார்.  ‘தம்பிரான் கருணையின் பெருமையே கருதி’யும்,  (1085); ‘மன்னு வார்சடையாரை முன்தொழுது’ம் (1088) செயற்கரிய சாதனையை நிகழ்த்தினார். அவரின் செயல்பாடு, மெய்ஞ்ஞானத்தால் நிகழ்கின்ற அருள்வன்மைக்குச்  சான்று. அவ்வாறு, சிவநேசருக்கு வாய்த்த அடிமைத்திறத்துடன், பிள்ளையார் முதலான ஞானாசாரியார்களது அருள்திறமும் ஒருங்கே பெருகுகின்ற சிவஞானப்பேற்றுக்கு, ‘பூம்பாவைப்பாட்டு’ துணையாகிறது. அத்திருப்பதிக நன்னெறி நமது வாழ்வியலானால், ‘வீடுபேறுற்று, சிவகணத்தவரோடும் கூடி நிலைத்து வாழலாம்’ என்பது பிள்ளையாரின் திருவாக்கு.

    ஆய்வுத்துணை நூல்கள்

    1. பெரியபுராணம்- தொகுதி:5 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உ.ஆசி.,),  பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21. பதிப்பு ஆண்டு: ஏப்ரல், 2018.
    1. பெரியபுராணம்- தொகுதி:3 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உ.ஆசி.,),  பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21. பதிப்பு ஆண்டு: திசம்பர், 2017.
    1. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.
    1. திருமந்திரம் – திரு ப. இராமநாத பிள்ளை (உ.ஆசி.,), கழக வெளியீடு-எட்டாம் பதிப்பு: செப்டம்பர், 1992.
    1. திருவாசகம் – சென்னை சைவசித்தாந்தப் பெருமன்ற வெளியீடு, நான்காம் பதிப்பு: 1999.
    1. திருக்குறள் – சிற்பி பாலசுப்பிரமணியனார் (உ.ஆசி.,), தாமரை பதிப்பகம், சென்னை.  இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 2014.
    1. ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 2004.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

     

     

    Share
  • பொன்னணி வேண்டாப் பெண்மணி

    அ. இராஜகோபாலன்

                     ‘பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை’  (குறள் 252) என்கிற வள்ளுவரின், சொற்கோவைக்குப் பொருளெழுதுகிற பரிமேலழகர் பொருள் பயனிழத்தற்குக் காரணம் காவாமை என்கிறார்.

            வள்ளுவர் கூற்றை ஆழ்ந்து சிந்திக்கிறவர்க்கு , ‘பொருளாட்சி’ என்பதும், ‘பொருள் போற்றல்’ என்பதும், மிக்க பொருளாழம் கொண்டவை என்பது  புலப்படும். பொருளை ஆக்குகிற வழிகளும், அதனைப் போற்றிக்காக்கிற முறைகளும், பொருளைப் பயன் கொள்ளுதலும் ஆகிய எல்லாம் அவற்றுள் அடங்கும். போற்றுதல் என்பது, காத்தலை மட்டுமின்றி, அதை வளர்த்து அதிகரிக்கச் செய்தலையும் உள்ளடக்கியதே. பொருளைப் போற்றுதல் பற்றி வேறோரிடத்தில் பேசுகிற வள்ளுவர்,

                        ‘ஆற்றின் அளவறிந்து ஈக, அது பொருள்

             போற்றி வழங்கும் நெறி’

    என்று ஈதலுக்குக் கூடக் கட்டுப்பாடு விதிக்கிறார்.

    ஒரு ஆய்க்குலப் பெண். இன்னும் இருள் விலகாத விடியற்காலை நேரம். அப்போதே எழுந்து, நன்கு உறைந்த தயிரை வெண்ணெய் திரண்டு வருகிற வரை, மத்து கொண்டு கடைகிறாள். பின்பு, தலையில் சும்மாடு அணிந்து, தயிரும், மோரும், வெண்ணையும், நெய்யும், எடுத்துக்கொண்டு வீதிகளில் சென்று, விற்று வருகிறாள்.. அந்த வருமானத்தில் வாழ்கிற நல்லதொரு வாழ்க்கையை அமைத்துகொண்டிருக்கிறாள்.

    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

    போற்றினும் பொத்துப் படும்.

    என்கிறார் வள்ளுவர். அப்படியல்லா த,  அவளின் ஆற்ற வருந்தும் வருத்தம் பலராலும் பாராட்டப்படக்கூடியது. அனுபவம் மிகுந்தவளாக அந்தத் தொழிலை அவள் மிகுந்த நேர்த்தியுடன் நடத்திவருவது பெரும்பாணாற்றுப்படைப் பாடல் வரிகளில் காட்சிப்படுத்தப்படுகிறது.

    நள்ளிருள் விடியல் புள் எழப் போகி

    புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி

    ஆம்பி வால்முகை யன்ன கூம்புமுகிழ்

    உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து

    புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ

    நாள் மோர் மாறும் நன்மா மேனிச்

    சிறுகுழை துயல்வரும் காதின் பணைத்தோள்

    குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்

    அளைவிலை யுணவின் கிளையுடன் அருத்தி

    நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

    எருமை நல்லான் கருநாகு பெறூஉம்

    மடிவாய்க் கோவலர் குடி…

    ஏற்படுகிற  செலவினங்களையும், வருமானத்தையும், எஞ்சுகிற லாபத்தையும் கணக்கில் கொண்டு,  செய்து  வரப்படுகிற தொழில் .

    அழிவதூவு மாவதூவு மாகி வழிபயக்கும்

    ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

    என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முறையாகச் செய்துவருகிற தொழில். லாபம் கிடைக்கிறது. கிடைக்கிற லாபத்தைக் கொண்டு இல்லறம் நடக்கிறது. ஈதலும் துய்த்தலும் ஆக,  ‘அளைவிலை யுணவின் கிளையுடன் அருத்தி’  சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகி,  செல்வத்தின் பயன் நுகரப்படுகிறது. அதிலும் போகாறு அகலாதபடி நடத்தப்படுகிற இல்லற நிதி  நிர்வாகம்.  அளவறிந்து வாழ்கிற வாழ்க்கை.

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

    றுண்டாகச் செய்வான் வினை.

    என்ற குறளில் வள்ளுவர், ‘தன் கைத்து ஒன்று’  என்று தன் கைப்பொருளாகிய (Owned Funds) மூலதனத்தை பற்றிப் பேசுகிறார். ‘தன்கைத்து எல்லாம் உண்டாகச் செய்வான் வினை’ என்னாது ‘தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை. என்றதால் மூலதனத்தில் தன் கைப்பொருள் ஒரு பகுதியாகவும்,  பிறர் கைப்பொருள் (Borrowed Funds) ஒருபகுதியாகவும் கொண்டு வினையாற்றுதல் வள்ளுவருக்கு உடன்பாடு என்றும். வள்ளுவர் இந்தக் குறளில் கடனுக்கும் மூலதனத்துக்குமான  விகிதம் (Debt – Equity Ratio) பற்றிப் பேசியிருப்பதாக. பேராசிரியர் எஸ். வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்.  நெய் விற்றுக் கிடைப்பதில் உற்பத்திச் செலவு போக எஞ்சுகிற வருவாயை எதிர்காலத்தில் பயன்கொள்ளுகிற வகையில் சேமித்து வைக்கிறாளாம். வியாபாரத்தின் விரிவாக்கத்திற்குத் தேவையான முழுத்தொகையையும் தற்காலத்து  வங்கிகளில் கூடக் கடனாகப் பெறமுடியாது.  கடன் பெறுவதற்குக், கைமுதலாக (Margin money ) ஒரு தொகை செலுத்தப்பட வேண்டியதிருக்கும். ‘தன் கைப்பொருளாகிய’  பணத்தைப் பெரும்பகுதியாகக் கொண்டே தொழில் விரிவாக்கம் நிகழுமானால் நன்மை பயக்கும். சேமித்து வைத்திருக்கிற தொகை அதற்குப் பயன்பட வேண்டும் என்பதே நோக்கம்.

                    பெண்கள் பொதுவாக நகைகள் வாங்கி அணிந்து கொள்வதில் மகிழ்ச்சி யடைவார்கள். ஆனால் இவள் வித்தியாசமானவள். சேர்த்துவைக்கிற பணத்தில் பொன் நகைகள் வாங்காமல், அந்தப்பணத்தைக் கறவை மாடுகள் வாங்குவதற்கு வைத்திருக்கிறாளாம். வியாபாரத்தின் விரிவாக்கத்திற்கு மேலும் பல கறவை மாடுகள் வாங்க வேண்டியிருக்குமே.  சேமித்த பணம் பொன் நகைகளில் இடப்படுகிற போது அது தோற்றப்பொலிவைத் தருமே யல்லாது தொடர்ந்து வருமானத்தை ஈட்டிதருவதாக இராது. செல்வம் பொன் நகைகளில் முடங்கிப் போய், அதனால், கூடுதலாக வருவாய் ஈட்டுவது சாத்தியமில்லாது போகுமல்லவா?

                      நிதி மேலாண்மை பற்றிப் மிகப் பழங்காலத்திலேயே ,ஆழ்ந்த அறிவுடையவர்களாக, இருந்த தமிழ் மக்களின் வாழ்வைப் புலவன் மிக அழகாகப் பாடிச்சென்றிருக்கிறான்.

    அ. இராஜகோபாலன்.

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 3

    திருச்சி புலவர் இராமமூர்த்தி.

    ————————————————–

     

    திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருந்தகையின் பேரறிவுத் திறனை  வெளிப்படுத்தும்  பேரிலக்கியமாகும். இந்நூலின்  பல பாடல்கள்  சேக்கிழாரின் கற்பனைத் திறனை நமக்கு அறிவிக்கின்றன. பெரிய புராண வரலாறு , கைலை மலையில் தொடங்கி கைலை மலையில் நிறைவுறும் காப்பியம் ஆகும். அக்கைலை மலையின் சிறப்பைத்  தொடக்கத்தில் பலவாறு உரைக்கிறார் புலவர். கைலை மலையைச் சென்று சேர்ந்த கரியநிறக்  காக்கையும் பொன்னிறம் பெற்றுப் பொலியும்  என்று யாப்பருங்கலக் காரிகை கூறும்.

    ‘’ கனகமலை யருகே  போயின காக்கையுமன்றே படைத்தது பொன்னிறமே!’’ என்பது  பொன்வண்ணத்தந்தாதி. அவ்வகையில் கைலைமலையைச் சென்று  சேர்ந்த எல்லாப்பொருள்களும் பனிநிறமாகிய வெண்ணிறமும் . கதிரவன் ஒளி பெற்ற பனிமலை அடையும்,  பொன்னிறமும் பெற்று விடுகின்றன!

    இங்கே பேரிமயத்திற்குச் சென்ற திருமால் , சிவபிரானைக்  கண்டு வணங்குவ தற்குரிய செவ்வி பார்த்துக் காத்திருக்கிறான். அங்கே ஒளி பொருந்திய வெண்பனிமலையின் அடிவாரத்தில் உள்ள குகைக்குள் , விநாயகப் பெருமானின்  ஊர்தியாகிய  பெருச்சாளி நிற்கிறது. அதன் பெரிய வடிவம் காண்போருக்கு, வெண்பனி மலையின் ஒளியில் அது வெண்ணிறப் பன்றி போல்தெரிகிறது. அந்தப் பகுதியில் திருமாலைத் தேடி அவர் வாகனமாகிய கருடன் பறந்து வருகிறது.

    முன்னொரு காலத்தில் நெருப்புத் தூணாக வானளாவி நின்ற சிவபெருமானின்  திருவடியைத் திருமாலும் , திருமுடியை பிரமனும் தேடித் தேடி இளைத்தார்கள். அப்போது திருமால் கருநிறப் பன்றி உருவெடுத்து பூமியைத் தோண்டிக் கீழே சென்றார். அப்போது அவர் வராக அவதாரம் எனப்பட்டார். வெள்ளிநிறத்தூண்  போல நிற்கும் மலையடிவாரத்தில் நிற்கும் பெருச்சாளி , வெண்ணிறம் பெற்று வெண்பன்றி போல  நிற்பதை,  கருடன் கண்டு திகைக்கிறார்! ‘’ஓ! நம் தலைவர்தான் மீண்டும் சிவபிரானின் திருவடியைத் தேடிப்  பன்றி உருவெடுத்து நிற்கிறாரோ?’’ என்று திகைக்கிறாராம். அதாவது வெண்ணிறப் பெருந்தூண் அருகே வெண்ணிறம் பெற்றுத் திருமாலே வெண்பன்றி வடிவில் நிற்கிறார் என்று கருடன் பிறழ வுணர்ந்ததாம். அங்கே தன்  தலைவர்  நினைப்பதாக எண்ணி அவரை  நாடிப்போய் கருடன் நின்றது  என்று சேக்கிழார்  கற்பனை செய்கிறார்.

    சிவபிரான் திருமால் பிரமன் ஆகியோரால் அளந்தறிந்து கொள்ள இயலாத பெரியவர் என்பதும், அவரை தரிசனம் செய்து   அருள் பெற, கைலை மலையருகே சென்று திருமால் காத்திருப்பார் என்பதும், அங்கே  வெண்பனி மலையடியில்  நிற்கும் பன்றி, வெண்பனியால் மூடப் பெற்று  வெண்ணிறம் பெற்று , ‘ஸ்வேத வராகமாய்’க்  கட்சி தருகிறது என்பதும், கருடன் அதனைத் திருமால் என்று நினைப்பதும்  மிக பொருத்தமான கற்பனை! கைலை மலையை அடைந்த பொருள்கள், புது நிறம் பெற்று விளங்குவது அம்மலையை அடைந்த அனைத்தும் பெறுகின்ற சிறப்பைப் புலப்படுத்துகின்றது. அங்கே பிள்ளையாரின் ஊர்தி , பெரும் வெண்பன்றி உருவெடுத்து, வராகமாய்  நிற்பதாக கருடன் எண்ணுவது கருடன்,தலைவர் மேல் கொண்ட மரியா தையைப் புலப்படுத்துகிறது. இதோ அந்தப் பாடல்!

    ’காதில் வெண் குழையோன்  கழல் தொழ  நெடியோன்

                    காலம்பார்த்  திருத்தலை  அறியான்

    சோதிவெண்   கயிலைத்  தாழ்வரை  முழையில்

                     துதிக்கையோன்   ஊர்தியைக்   கண்டு

    மீதெழு   பண்டைச்  செஞ்சுடர்   இன்று

                    வெண்சுடர்   ஆனதென்   றதன்கீழ்

     ஆதிஏ னம்அதாய்  இடக்கலுற்  றானென்

                    றதனைவந்   தணைதரு  கலுழன்!’’ 

    இவ்வகைக் கற்பனை சேக்கிழார் சுவாமிகளின் சிவபக்தித்  திறத்தினைப்

    புலப்படுத்தி, சிவபரம்பொருளின் பெருமையையும் உணர்த்துகின்றது.

     

     

    Share