Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180914 Vanvihari 10×14” watercolour lr (Padmavanalaya. )

    காட்டினில் புல்லாங் குழல் இசைத்திடும்,
    மாட்டுக்கார் மாலர் மகானாக -வேட்டையாய்
    கால்களை மேய, COWபீன பீதகத்தில்(பீதாம்பரம்)
    பால்கண்ணன் பத்மநா பர்….!

    காட்டுப் பகுதியில் கீதம் இசைத்திடும்,
    மாட்டுத் தொழுவத்தில் மண்ணுண்டு -கேட்டிடும்
    அன்னைக்கு வாய்க்குள் அகிலத்தைக் காட்டிடும்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்

    Share
  • பொலிவாக அமையும் அன்றோ !

     

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

    மகிழ் வோடு வாழுதற்கு
    வழிகள் பல இருக்கிறது
    அவை மனதில் எடுக்காமல்
    அல்லல் பட்டு நிற்கின்றோம்
    கோபம் எனும் குணமதனை
    குறைத்து நாம் வாழ்ந்தாலே
    குவலயத்தில் எம் வாழ்வு
    குதுகலமாய் அமையும் அன்றோ !

    கோபமது வந்து விடின்
    குறை சொல்லத் தொடங்கிடுவோம்
    கோபமது மேல் எழுந்தால்
    கொலை கூடச் செய்திடுவோம்
    கோபம் எனும் நெருப்பாலே
    குடும்பம் கூட பொசுங்கிவிடும்
    ஆதலினால் கோபம் அதை
    அனைவருமே ஒதுக்கி வைப்போம் !

    கோபம் அது வந்துவிடின்
    குணம் யாவும் மாறிவிடும்
    குழந்தை என்றும் பாராமல்
    குரூரம் அங்கே அரங்கேறும்
    பவமதை செய்க என்று
    கோபமது தூண்டி நிற்கும்
    ஆதலால் கோபம் அதை
    அண்டாமல் செய்து நிற்போம் !

    கோபமெனும் குணம் பெருகின்
    குறைகள் பல உருவாகும்
    சாபம் இட்டு மற்றவரை
    சஞ்சலத்தில் ஆழ்த்தி நிற்போம்
    பாவம் செய்யத் தூண்டுகின்ற
    கோபம் அதை ஒழித்துவிடின்
    பூதலத்தில் எம் வாழ்வு
    பொலிவாக அமையும் அன்றோ !

    Share
  • தொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)

    முனைவர் பா. ஜெய்கணேஷ்

    தொல்காப்பியரின் பொருளிலக்கண உருவாக்க முறை

    தொல்காப்பியம் எழுதப்பட்டது எவ்விலக்கியங்களின் வரையறையை வைத்து என்று முழுமையாகக் கூறமுடியவில்லை என்றாலும் தொகுக்கப்படாத பல சங்க இலக்கியப் பாடல்களின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும் தொல்காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்று கூறமுடியும். தொகுக்கப்படாத சங்க இலக்கியப் பாடல்களின் முதல் ஆய்வாளராக இன்று அறியப்படுபவர் தொல்காப்பியரே. இவர் வாசகர் என்ற நிலையினைக் கடந்து சங்கப் பாடல்களைத் தொடக்கக் காலங்களில் மதிப்பிட்டறிந்த முதன்மை இலக்கணியாகவும் அறியப்படுகின்றார்.

    இவர் காலத்தில் தனிநிலைச் செய்யுள் உருவாக்க முறையே அதிகம், தொடர் நிலைச் செய்யுள் பாடல் உருவாக்கமுறை என்பது குறைவு. எனவே இவரது பொருளதிகார இலக்கணமும் தனிநிலைச் செய்யுளை முதன்மைப்படுத்திப் பெரிதும் வரையறுக்கப்பட்டது என்று கூறமுடியும்.

    தொல்காப்பியப் புறத்திணையியல்

    சங்க இலக்கியப் பாடல்களில் அகப்பாடல்கள் எண்ணிக்கை அதிகளவு இருப்பதுபோல் தொல்காப்பியத்தில் அதற்கேற்ப இயல் எண்ணிக்கையும் கூடுதலாக உள்ளது. புறப்பாடல் எண்ணிக்கை குறைவு என்பதால் அதற்கேற்பப் புறத்திணையியல் மட்டுமே உள்ளது. இருந்தபோதிலும் தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒவ்வோர் இயலையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துகின்றார்.

    குறிப்பாக அகத்தையும், புறத்தையும் தனித்துப் பிரித்து அவர் பார்க்கவில்லை. இரண்டையும் பொருளிலக்கணம் என்ற ஒரே இணையில் ஒன்றுக்கொன்று தொடர் புடையதாக வலுவாகக் கருதுகிறார்.

          ”அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்,
          புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்…” (புறத்திணையியல்  -நூ. 1)

    இத்தொடர்பு இன்னும் வலுவாக இயங்குவதை இளம்பூரணர் தன்னுடைய அகத்திணையியல் அறிமுக உரையில் விரிவாக விளக்குகிறார். மேலும் ஒருபடி சென்று, அகத்திணை யியலுக்குப் பிறகு அதனோடு தொடர்புடைய களவியல் கற்பியல்தானே வரவேண்டும் ஏன் புறத்திணையியலை வைத்தார் என்ற கேள்வியெழுப்பும் மாணவனுக்குப் பதிலாக,

    இது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே என்னும் மாட்டேறு பெறாதாம். அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க ( களவியல் முகப்பு).

    தொல்காப்பியர் வகுக்கும் புறத்திணைகள்

    தொல்காப்பியர் புறத்திணையியலை அமைத்துள்ள முறை குறித்து,

    தொல்காப்பியர் அகப்பொருள் இலக்கணத்தில் (களவியல், கற்பியல்) நிகழ்ச்சி முறையாக இலக்கணத்தைக் கூறிச் செல்லாமல் கூற்றுகளுக்கே முதன்மை கொடுத்து இலக்கணம் இயம்பியுள்ளார். ஆனால் புறத்திணையியலில் திணை வாரியாக இலக்கணத்தைத் தொகுத்துத் துறைகளாக அமைத்துள்ளார். இது தொல்காப்பிய அமைப்பின் முக்கியப் பகுதியாகும்.( தமிழ் இலக்கண மரபுகள், ப. 175)

    என்னும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது. தொல்காப்பியர் அகத்திணைகளை ஏழு என்று வரையறை செய்வது போன்று புறத்திணைகளையும் ஏழு என்றே வரையறை செய்கின்றார்.

    வெட்சி     –  நிரை கவர்தல், நிரை மீட்டல்

    வஞ்சி      –  மாற்றாரை நோக்கிப் பகைமேற் செல்வது

    உழிஞை   –  பகைவர் கோட்டையை முற்றுகை இடுவது

    தும்பை    –  இருவர்க்கிடையிலான போர்

    வாகை     –  முதலில் போர் வெற்றி, பின்னர் ஒருவர் தம் திறன்களால் வாழ்விலுறும் வெற்றியைக் கொண்டாடுவது

    காஞ்சி     – முதலில் போரின் துயரங்களையும் பின்னர் வாழ்வின்              நிலையாமையைக் கூறுவது.

    பாடாண் – முதலில் வெற்றிப்புகழ், பின்னர் குறிக்கோள் வாய்ந்த மனிதன், அவன் வாழ்க்கை ஆகியவற்றைப் பாடுவது.

    இவ்வாறு வரையறை செய்வதோடு மட்டுமல்லாமல் அவை இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாகக் காட்டுகின்றார்.

    வெட்சி தானே குறிஞ்சியது புறனே, (புறத்திணையியல்  -நூ. 1)

    வஞ்சி தானே முல்லையது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 6)

    உழிஞை தானே மருதத்துப் புறனே, ( புறத்திணையியல்  -நூ. 8)

    தும்பை தானே நெய்தலது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 12)

    வாகை தானே பாலையது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 15)

    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே,( புறத்திணையியல்  -நூ. 18)
    பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே ( புறத்திணையியல்  -நூ. 20).

    ஆனால் இத்தொடர்பு எவ்வகையில் எல்லாம் அமைந்தது என்று எந்த விதமான விளக்கமும் தொல்காப்பியரால் வழங்கப்படவில்லை. உரையாசிரியர்களே இதற்கான விளக்கத்தை அளிக்கின்றனர்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற் கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறனாம். (புறத்திணையியல், நூ. 1, இளம்பூரணர் உரை)

    களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுங் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். (புறத்திணையியல், நூ. 1, நச்சினார்க்கினியர்உரை)

    இவ்விணைவில் இறுதியாக இருக்கக்கூடிய காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் சிக்கல்களைத் தமிழண்ணல்:

    உரையாசிரியர்கள் காஞ்சித்திணை என்பது பெருந்திணையின் புறமென்றும், பாடாண் கைக்கிளையின் புறமென்றும் இலக்கணம் கூறுவதை விளக்குகின்றனர். எனினும் தொல்காப்பியரும் அவர்க்கு முற்பட்டோரும் இவ்விரு அகத்திணைகளைப் புறத்திணையியலில் இறுதியாக அமைந்த இருதிணைகளோடு ஏன் இணைத்தனர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள இயலவில்லை. அகத்திணைகள் ஏழாக வகுத்தபின் புறத்திணைகளையும் ஏழாக வகுக்க முயன்றிருக்க வேண்டும். இவ்வகத்திணைகளும் புறத்திணைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்வன என அவர்கள் கருதியிருக்கின்றனர். எனவே இயற்கைக் காரணங்களின்றிச் செயற்கைக் காரணங்களும் இவற்றை இணைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். (சங்க மரபு – 135)

    இவ்வாறு உரையாசிரியர்கள் சொல்கின்ற காரணங்களைத் தமிழண்ணல்,

    உரையாசிரியர்கள் அகத்திற்கும் புறத்திற்குமான தொடர்பு குறித்து இசையத்தக்க விளக்கங்களைத் தர முயன்றுள்ளனர். அவர்கள் விளக்கங்களிற் சில பொருந்துவன; சில செயற்கையும் கற்பனையும் உடையன.  (சங்க மரபு – 133)

    இந்தக் காரணங்களில் கற்பனை இருந்தாலும் தொல்காப்பியர் உருவாக்கிய இணைவு என்பது பொருளதிகாரம் என்ற அவரின் இலக்கண உருவாக்க முறைக்கு நியாயம் சேர்ப்பதாகவே உள்ளது. (இன்றைய நவீன இலக்கிய விமர்சகர்களும் பெண்ணியச் சிந்தனையாளர்களும் இவ்விணைவின் விளக்கத்தை வேறொரு நிலையில் அளிக்கின்றனர்.)

          தொல்காப்பியப் பொருளதிகாரம் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ப தனித்தனித் இலக்கணங்களாக உருவாக்கம் பெறத் தொடங்கின, அல்லது நெகிழத் தொடங்கின. இந்த மரபு மாற்றம் எல்லா நிலையிலும் நிகழத் தொடங்கியது. தனி அகப்பொருள் இலக்கண நூல்கள், யாப்பிலக்கண நூல்கள் என்ற வரிசையில் புறப்பொருளுக்கென்றும் இலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின.

    இத் தனிநூல் உருவாக்க முறைகள் பெரிதும் தொல்காப்பியத்தைப் பின்பற்றியும் சமகால இலக்கிய உருவாக்கத்திற்கேற்பவும் அமைந்தன. இவ்வாறு உருவாக்கம் பெற்ற தனிநூல்களில் புறத்திணையியல் சார்ந்து அமைந்தவை பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையுமே ஆகும்.

    பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை

    பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டு நூல்களில் பன்னிருபடலம் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைக்கக்கூடிய நூல் புறப்பொருள் வெண்பாமாலை மட்டுமே. புறப்பொருள் வெண்பாமாலை நூல் உருவாக்க முறையில் பன்னிருபடலத்தைப் பின்பற்றியுள்ளது என்பதைப் பல சான்றுகளின் வழி அறியமுடிகிறது. அதே சமயம் பல இடங்களில் விலகியும் இருப்பதோடு தொல்காப்பியத்தையும் பல நிலைகளில் முதல் நூலாக இந்நூல் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. பன்னிருபடலத்தில் அகப்புறம் என்று சொல்லப்பட்டவற்றைப் புறப்பொருள் வெண்பாமாலை அவ்வாறே பின்பற்றாமல் அதை வேறு நிலையில் அணுகுகிறது.

    தொல்காப்பியத்திலிருந்து இந்நூல்கள் மாறிய தன்மை:

    • தொல்காப்பியர் வகுத்தளித்த பொருளிலக்கண மரபிலிருந்து புறத்திணையியலைப் பிரிப்பது.
    • அகத்தோடு அவற்றைத் தொடர்புபடுத்தாதது.
    • ஏழு என்ற எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்று விரிப்பது முதலானவை இந்நூல்களில் நிகழ்ந்த மாற்றங்களாகும்.

    தொல்காப்பியர் வகுத்தளித்த ஏழோடு புதியதாகச் சேர்ந்தவை ஐந்து

    கரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை

    தொல்காப்பியப் புறத்திணையியலிலேயே இருந்தவை இரண்டு

          கரந்தை – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று), (நிரை மீட்டல்)

          நொச்சி – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று),

    கோட்டையைக் காத்தல் என்னும் தனித்துறையாகத் தோற்றம் பெறல்

    தொல்காப்பியரின் வேறொரு திணையிலிருந்து இடம்பெயர்ந்தவை

    கைக்கிளை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)

    பெருந்திணை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)

    கைக்கிளையும் பெருந்திணையும் இவ்வாறு புறத்திணையியலில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்துத் தமிழண்ணல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

    ஐந்து திணைகளில் இயற்பெயர்கள் இடம்பெறக்கூடா என்பது தொல்காப்பியர் வகுத்த விதியாகும். இது கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் விரிவுபடுத்தப் பெற்றது. கைக்கிளை பெருந்திணையில் இயற்பெயர்கள் இடம்பெறுமாயின் அவை அகத்திணை வகுப்புள் இடம்பெறா. எனவே பிற்கால வளர்ச்சியை அவர்கள் கருத்திற் கொண்டு, அவர்கள் இவ்விரண்டையும் புறத்திணையின் இறுதியிற் சேர்த்தனர். (சங்க மரபு – 149)

    தொல்காப்பியரின் பலதுறைகளில் இருந்து சேர்த்து உருவாக்கப்பட்டது

    பொதுவியல்  – புதியதாகச் சேர்க்கப்பட்ட திணை. தொல்காப்பியத்தின் வெட்சி, காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் உட்பிரிவுகள் அல்லது துறைகள் இப்புதுத் திணைக்குரியனவாகச் சேர்க்கப்பெற்றன.

    பொருள்வகையில் மாற்றம் பெற்றவை, வேறோர் இலக்கணம் பெறல்     

    காஞ்சி –  தொல்காப்பியத் திணையில் நிலையாமை குறித்துப் பேசிய காஞ்சி பிற்கால இலக்கண நூல்களில் வஞ்சியின் இன்னொரு பிரிவாக மாற்றம் பெற்று எதிரூன்றல் காஞ்சி என அமைந்தது.

    இந்நூல்களில் ஒவ்வொரு திணைக்கும் இடையே ஓர் இணை உருவாக்கப்பட்டது.

    வெட்சி – கரந்தை, வஞ்சி – காஞ்சி, உழிஞை – நொச்சி

    இவ்வாறு இணை உருவாக்கப்பட்டதோடு ஒவ்வொரு திணைக்கும் இடையே ஒரு தொடர்ச்சியும் உருவாக்கப்பட்டது.

    சில ஆய்வாளர்கள் தொல்காப்பியத் திணைகளையும் இந்தப் பின்புலத்திலேயே புரிந்து கொண்டனர். இந்தக் கருத்து தொல்காப்பியப் புறத்திணையியலைப் பொறுத்தவரை தவறான கருத்து என்றும் அவ்வாறு கட்டமைப்பது திணைச் செய்யுளுக்கு எதிரானது என்றும் தமிழண்ணல் கூறுகிறார்.

    புறத்திணைகள் ஒன்றற்கொன்று உறவுடையன அல்ல; தலைவன் தலைவியின் காதல் தொடர்பில் ஒரு நிகழ்வு அல்லது சூழலை அகத்திணைகள் குறிப்பது போலவே புறத்திணைகளிலும் போரில் ஒரு வீர நிகழ்வைக் குறிக்கின்றன. ஒரு கதைத்தொடர்ச்சி போலவோ ஒழுங்கான நிகழ்ச்சிகளின் கோவையான ஒரு நாடகம் போலவோ செய்யுட்களை இயற்றுவது திணைச் செய்யுளின் மரபுக்கு அடிப்படையிலேயே மாறுபட்டதாகும். (சங்க மரபு, ப. 147)

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை ஆகியவற்றைத் தனித்தனித் போர்களாகவே காட்டுவர். ஆனால் பிற்காலத்தில் இவை ஒரே போரின் நான்கு வேறுநிலைகளாகக் கருதப்பட்டு விட்டன. உண்மையில் இப்போர்கள் தமக்கெனக் குறித்த நோக்கையும் போரிடும் பாங்கையும் உடையன. (சங்க மரபு, ப. 143)

    இனக்குழுச் சமூகத்தில் வெவ்வேறு போர்முறைகளாக இருந்தவற்றைத் தொல்காப்பியர் வரிசைப்படுத்திய முறையிலிருந்து, அரண்மனையும் அரசமரபும் தோற்றம்பெற்ற காலத்தில் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் முயற்சியினைப் பிற்கால இலக்கண நூல்களான பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையும் மேற்கொண்டன. இவ்வித்தியாசத்தை அறியாத ஆய்வாளர் பலரும் தொல்காப்பியத்திலேயே போரின் தொடர்ச்சி இருப்பதாக விளக்கத் தொடங்கிவிட்டனர். இது தவறான பொருள் கோடல் முறையாகும் என்பதைத் தமிழண்ணலின் மேற்சொல்லப்பட்ட கூற்றுகள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

    பன்னிருபடலத்தைப் பின்பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை இத்திணைகளை மூன்றாகப் பகுக்கிறது: புறம், புறப்புறம், அகப்புறம்

    புறம்: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை

          புறப்புறம்: வாகை, பாடாண், பொதுவியல்

    அகப்புறம்: கைக்கிளை, பெருந்திணை

    என்று வகைப்படுத்த அவிநயமோ ஒருசார் கூற்றாக அகத்திணை, புறத்திணை, அகப்புறத்திணை என்று வரையறை சொல்கிறது. இவ்விரண்டைத் தொடர்ந்து வீரசோழியம் வகைப்படுத்தும் தன்மையினைப் பின்வரும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது.

    புறப்பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் போல பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கூறியிருந்த போதிலும் புறத்திணை இலக்கணம் சொல்லிய முறையில் பிற்கால மரபுகளையே பின்பற்றுகிறது. புறமும், புறப்புறமும் புறப்பொருள் வெண்பா மாலையை அப்படியே பின்பற்றியிருந்த போதிலும் அகப்புறத்திணையில் மட்டும் மாறுபடுகிறது. இது பன்னிருபடலத்தைப் பின்பற்றுகிறது.

    வீரசோழியத்தில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை ஆகியவற்றிற்கே துறைகள் கூறப்பட்டுள்ளன. நொச்சி, தும்பை ஆகியவற்றிற்குத் துறைவிளக்கம் இல்லை. துறைகளும் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள அளவுக்கு இல்லாமல் குறைவாகவே உள்ளன. விளக்கம் உரையிலேயே உள்ளது. (தமிழ் இலக்கண மரபுகள் – ப.171)

    இவற்றிலிருந்து தொல்காப்பியரின் புறத்திணை இலக்கணம் பிற்காலங்களில் எவ்வாறெல்லாம் வளர்ச்சியடைந்தது என்பதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள்

    இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இளம்பூரணர் உரையும், நச்சினார்க்கினியர் உரையும் கிடைக்கின்றன.

    இவ்விருவரும் ஏழு புறத்திணைகள் பன்னிரெண்டு திணைகளாக வளர்ச்சி பெற்ற காலத்திலும், பல பகுப்புகளாக அவை மாறிய காலத்திலும், துறைகள் வளர்ந்தும் வீழ்ந்தும் முறைமாறிய தன்மையில் அமைந்த காலத்திலும் தமது உரைகளை எழுதுகின்றனர். இதே தன்மையைச் செய்யுளியல் உரை எழுதும் போதும் காணமுடிகிறது.

    • பலநிலைகளில் புறப்பொருள் மரபு மாற்றமடைந்த காலத்தில் உரை எழுதும் இவ்வுரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாக்களை மட்டும் கவனத்தில் கொண்டு தமது உரையை வகுக்கின்றனரா? அல்லது பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனரா?
    • பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கின்றனரா? அல்லது மறுக்கின்றனரா?
    • இளம்பூரணருக்கும் நச்சினார்க்கினியருக்கும் புறத்திணையியலை விளக்குவதில் மாறுபாடு உள்ளதா? இல்லையா?

    என்ற கேள்விகளை எழுப்பிப் பார்க்கும்போது சிலவற்றை நாம் கண்டறிய முடிகின்றது.

    இளம்பூரணரும் புறத்திணையியலும்

    இளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு உரைஎழுதும் போது தொல்காப்பியரின் இலக்கண உருவாக்க முறைக்குப் பல நிலைகளில் வலுசேர்க்கிறார். அவரின் பின்வரும் விளக்கங்கள் அதற்குச் சான்று:

    பொருளதிகார அறிமுக உரையில், புறப்பொருளை உரிப்பொருள் என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி எழுப்பி அதற்கு,

    புறமாவது, நிரை கோடற் பகுதியும், பகைவயிற் சேறலும், எயில் வளைத்தலும், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும் வென்றி வகையும் நிலையாமை வகையும், புகழ்ச்சி வகையும் என எழுவகைப்படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின்,

          வெட்சி தானே குறிஞ்சியது புறனே

    எனவும், பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின் அவையும் உரிப்பொருள் ஆம் என்க (அகத்திணையியல் அறிமுகம்).

    என்று விளக்கமளிக்கின்றார்.

    தொல்காப்பியப் பொருளதிகாரம் எவ்வகையில் பயனுடையது என்பதை விளக்க வந்த இளம்பூரணர் அவ்விலக்கணம் உறுதிப்பொருட்கள் நான்கையும் விளக்குகிறது என்று கூறுகிறார்.

    அஃதற்றாக அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினும் அடங்கும் என்னை? வாகைத்திணையுள்,

    ”அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” (புறத்.16)என இல்லறத்திற்கு உரியவும்,

    ”காமம் சான்ற கடைக்கோட் காலை” (கற்பு. 51)என நான்கு வருணத்தார் இயல்பும்,

          ”நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்‘’ (புறத். 17) எனவும்,

          ”காமம் நீத்த பாலினானும்’‘ (புறத்.17)

    எனவும், புறமாகிய வீடுபேற்றிற்குரிய வானப்பிரத்த சந்நியாசிகள் இயல்பும் கூறுதலின், அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈறாகக் கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒருசாரனவும் காஞ்சிப் படலத்து நிலையாமையும், பாடாண் பகுதியிற் கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவை எல்லாம் பொருளின் பகுதியாதலின், அப்பொருள் கூறினாராம். அகத்திணையியலானும் களவியலானும் கற்பியலானும் இன்பப் பகுதி கூறினாராம். அஃதேல் இந் நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின், காமப் பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும், பொருளானே அறஞ்செய்யும் ஆகலானும், இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க.

    இதே பகுதியை நச்சினார்க்கினியரின் பின்வரும் விளக்கமும் உறுதிசெய்கிறது.

    அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. ( அகத்திணையியல் நூ. 1)

    வெட்சி முதலா வாகை யீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும் என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறினார். இந்நிலையாமையானும் பிறவாற் றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூறினாராயிற்று.( அகத்திணையியல் நூ. 1)

    இவ்விருவரும் தம் உரை வழி தொல்காப்பியப் பொருளதிகார உருவாக்கம் ஒரு பயனுடைய இலக்கணம் என்று கூறுகின்றனர். அதில் புறத்திணையியலே மூன்று உறுதிப் பொருள்களையும் விளக்கும் இலக்கணம் என்பதை இவர்கள் தம் உரைகளின் வழி உறுதிப்படுத்துகின்றனர்.

    இளம்பூரணர் புறத்திணையியலில் தொல்காப்பியரின் இலக்கண வரையறைப்படி ஏழு என்பதைக் கூறியிருந்த போதிலும் வெட்சியையும் உழிஞையையும் பிற்கால மரபுப்படி இரண்டிரண்டாகப் பிரிக்கிறார்.

    அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க அவை:-

    மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரை கோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும்.

    காடுறையுலகாகிய முல்லைப்புறம் மண்நசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும்.

    புனலுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும், எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும்.

    பெருந்திணைப்புறம் நிலையாமையாகிய நோம்திறப்பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும். (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை )

    இவ்விளக்கத்தில் வஞ்சி, காஞ்சியை அவர் இணையாகப் பார்க்கவில்லை, வெட்சி, கரந்தை, உழிஞை, நொச்சி என அவர் இரண்டு கூறாகப் பகுத்தாலும் அவை குறிஞ்சி, மருதம் என்ற ஒரே திணைக்கண் நிகழ்வதால் அவற்றையும் அதனுள் அடக்க முடியும் என்று கூறுகிறார். இவரைப் பொறுத்தவரை திணை ஏழு என்பதில் உறுதியாக நிற்கிறார்.

    இதனை மேலும் வலியுறுத்தும் விதமாகப் பன்னிரண்டு என்று பிற்காலத்தார் திணை கூறுவதை மறுக்கிறார்.

    புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண் டாகில்,

    ‘மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்” (மரபு.112) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி

          “மிகைபடக் கூறல்”:

    தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்” (மரபு. 110) என்னும் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமையாதலானும், பொதுவியல் என்பது,

          ”பல் அமர் செய்து படையுள் தப்பிய
    நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்
    திறப்பட மொழிந்து தெரிய விரித்து
    முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே’‘ எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற் கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க. (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை)

    பன்னிருபடலத்தை எழுதியவர்களுள் தொல்காப்பியர் ஒருவர் என்னும்  கருத்தை இளம்பூரணர் மறுக்கிறார். இதனை,

    பன்னிருபடலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று, அன்ன இரு வகைத்தே வெட்சி, என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால் அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது.

    என்று கூறி,

    ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை – மரபு, 100

    சிதைவெனப் படுபவை வசையற நாடின் – மரபு, 110

    என்ற நூற்பாக்களை எடுத்துக்காட்டி,

    எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக் கூறல், பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினாரென வருமாகலான். (புறத்திணையியல் நூ. 2, இளம்பூரணர் உரை)

    என்ற விளக்கத்தின் வழி அறியலாம். இவ்விளக்கத்தை நச்சினார்க்கினியர் எங்கும் தம் உரையில் முன்வைக்கவில்லை.

    ”தும்பை தானே நெய்தலது புறனே” எனத் தொடங்கும் புறத்திணையியல் நூற்பா உரையில் இதனானே எதிரூன்றல் காஞ்சி ( பிங்க. அநுபோக :1474) என்பாரை மறுத்தவாறு அறிக. (புறத்திணையியல் நூ. 12, இளம்பூரணர் உரை ).

    என்று இளம்பூரணர் மேலும் தம் மறுப்பை வலியுறுத்துகிறார்.

    நச்சினார்க்கினியரும் புறத்திணையியலும்

    இளம்பூரணர் போலவே நச்சினார்க்கினியரும் தம் விவாதங்களைப் புறத்திணையியல் உரையில் நிகழ்த்துகிறார்.

    நூற்பா வைப்புமுறை

    ”தும்பைதானே நெய்தலது புறனே” என்னும் நூற்பாவை எஞ்சா மண்ணசை எனவரும் வஞ்சித்திணை நூற்பாவிற்கும், உழிஞைதானே என்னும் உழிஞைத்திணை நூற்பாவிற்கும் அடுத்து வைத்த காரணத்தை,

    இதுவும் மைந்து பொருளாகப் ( புறத் – 15) பொருளாதலின், மண்ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும், மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார். (புறத்திணையியல் நூ. 14, நச். உரை ).

    ”காஞ்சிதானே பெருந்திணைப் புறனே” என்னும் நூற்பா வைப்புமுறையை,

    இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி இஃது உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது என்கின்றது. இதனை வாகைக்குப்பின் வைத்தார், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு. (புறத்திணையியல் நூ. 22, நச். உரை). என்று விளக்கம் தருகின்றார்.

    துறை என்பதற்கான சிறப்பு விளக்கம்

    நச்சினார்க்கினியர் துறை என்பதற்கு சிறப்பு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். இவ்விளக்கம் குறிப்பிடத்தக்க விளக்கமாக அமைகின்றது.

    மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறை போலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகும் மார்க்கமாதலிற் துறையென்றார்:

    அகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறையென்பது உறுப்பாகக் கூறினார்.

    புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார்.

    இதனானே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒரு செய்யுள் பலபொருள் விராய் வரினும், ஒரு துறையாயினாற்போலப், புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதியும் ஒரு துறை யாதலும், ஒரு செய்யுள் பலதுறை ஒருங்கு வந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியன வெல்லாம் புறத்திணைக்குங் கொள்க.(புறத்திணையியல் நூ. 1, நச். உரை ).

    என்று விளக்கமளித்துச் செல்கின்றார்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறன் என்பதன் சிறப்பு விளக்கம்

    நச்சினார்க்கினியர் வெட்சித்திணை குறிஞ்சித்திணைக்குப் புறனாக எவ்வாறு அமைகின்றது என்று விளக்கமளிக்கின்றார்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவு கூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத் திணைக் கண்ணுங் களவு நிகழ்ந்தாற் போலப் புறத்திணை ஏழற்குங் களவு நிகழுங்கொலென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).

    நச்சினார்க்கினியர் பிற்கால மரபுகளை மறுத்துக்கூறும் இடங்கள்

    நச்சினார்க்கினியர் பிற்கால மரபுப்படி திணைவகை பன்னிரண்டு என்பதை மறுக்கின்றார். இம்மறுப்பிற்குச் சிறந்ததோர் பழமொழியையும் காட்டுகின்றார்.

    பிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுள வென்றாவாறாயிற்று. எனவே இப் பதினான்கு மல்லது வேறு பொருளின்றென வரையறுத்தாராயிற்று. அகப் புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று ( அகத்திணையியல் நூ. 1)

    ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணை யேழென்ற தென்னை யெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாய வாறுபோல, அகத்திணை யேழற்குப் புறத்திணை யேழென்றலே பொருத்த முடைத்தாயிற்று.எனவே அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந் நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமை யாதவாறாயிற்று. ( அகத்திணையியல் நூ. 1)

     இளம்பூரணர் கரந்தை என்று சொல்வதை மறுத்தல்

    இளம்பூரணர் புறத்திணையியலில் வரக்கூடிய வெட்சித்திணைக்குத் துறையாகக் கூறிய இரண்டு நூற்பாக்களில் இரண்டாவது நூற்பாவை (வெறியறி சிறப்பின் ) கரந்தை என்று கூற நச்சினார்க்கினியரோ அதை எல்லாத் திணைகளுக்கும் உரிய வழுவமைதி என்று கூறி மறுக்கிறார்.

    கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின் வேறு திணையாகாது.

    இருவர்க்குங் கோடல் தொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் மீட்டல் கரந்தை என்பரால் எனின், அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).

    என்று கூறுவதன் மூலம் நச்சினார்க்கினியர் வெட்சித் திணையின் முதல் துறைசார் (படையியங்கு அரவம்) நூற்பாவையே நிரை கோடலுக்கும் நிரை மீட்டலுக்கும் கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சித்திணை மறுப்பு

    நச்சினார்க்கினியர் காஞ்சித்திணை என்பது நிலையாமையை பற்றியே கூறுவது. எனவே அது வஞ்சியின் இணையாக மாறாது என்று கூறுகின்றார். இதேபோல் புறப்புறம் என்னும் பிற்கால வகைப்பாட்டையும் மறுகின்றார்.

    ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தராவரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின் காஞ்சியென்பது நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மையாற் கூறலாகாமை உணர்க (புறத்திணையியல் நூ. 7, நச். உரை ).

    புறப்புறம் மறுப்பு

    கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய், ஏழனையும் அகமென்றலின் அவ்வகத்திற்கு (பெருந்திணைக்கு) இது (காஞ்சி) புறனாவதன்றிப் புறப்புற மென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (புறத்திணையியல் நூ. 22, நச். உரை ).

    துறைகள் பிற்கால இலக்கண நூல்களில் விரிவதை மறுத்தல்

    திணைகளைத் தொடர்ந்து துறைகள் பிற்காலங்களில் பலநிலைகளில் விரிவதையும் மறுக்கின்றார்.

    இத்திணைக்கும் (வஞ்சி) பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப்படுத்தலுங் கொள்க. அவை – கொற்றவை நிலையும், குடைநாட்கோலும், வாணாட்கோலும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவை போல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும். (புறத்திணையியல் நூ. 8, நச். உரை ).

    இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறுவராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் தமிழ் கூறு நல்லுலகத்தன அல்லனவென மறுக்க. இனி முரசுவுழிஞை வேண்டுவாருளர் எனின் முரசவஞ்சியும் கோடல் வேண்டுமென மறுக்க. இனி ஆரெயிலுழிஞை முதலரணம் என்றதன்கண் அடங்கும் (புறத்திணை யியல் நூ. 22, நச். உரை ).

    இது போன்று பல இடங்களில், பிற்கால நூல்களில் குறிப்பாகப் புறப்பொருள் வெண்பா மாலையில் விரித்துக் கூறப்பட்ட துறைகளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் துறைகளுக்குள் அடக்கி அவற்றை மறுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிறைவாக

    • இளம்பூரணரின் விளக்கங்கள் வழியாக அவர் தொல்காப்பியப் புறத்திணை யியலைத் தம்சமகால வாசிப்பிற்கேற்றவாறு எளிமைப்படுத்துவதோடு பிற்கால இலக்கணக் கொள்கைகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் என்பதை அறியமுடிகிறது.
    • நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் காலத்திற்கே சென்று தம் உரையை வகுக்க முற்பட்டிருப்பதோடு (அல்லது முற்படுவதாக அவர் நினைத்தல்) இளம்பூரணரைக் காட்டிலும் பல இடங்களில் விரிவான விளக்கங்களை அதிகம் தருகின்றார். மறுப்புரை வழங்குமிடங்களில் பிற்கால இலக்கண நூல்களின் கோட்பாடுகளை மறுப்பதோடு தொல்காப்பியரின் இலக்கண நூலாக்கத்திற்கு அவை எந்த விதத்திலும் இடையூறாக இல்லாதவாறு தமது உரையை வகுத்துச் சென்றுள்ளார்.
    • தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரை எழுத வந்த இவ்வுரையாசிரியர்கள் அதற்கு மட்டும் உரிய பொருளை எழுதாமல் பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனர். பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கவில்லை, அவற்றைத் தொல்காப்பியத்திலிருந்து விலக்கி மறுக்கின்றனர்.
    • இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் புறத்திணையியலை விளக்குவதில் சிறிதளவே மாறுபாடு கொள்கின்றனர். இவ்விரு உரையாசிரியருமே புறத்திணை யியலைப் பொறுத்தவரையில் தொல்காப்பியரின் சிந்தனை வழிப்பட்டே தமது உரையை வகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
    • இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கும் பிற்காலப் புறப்பொருள் மரபுகள் வளர்ச்சி பெற்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு வகுக்கப்பட்ட திணை, துறைகள் குறித்துப் பல விவாதங்கள் உரையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
    • நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் வழிப்பட்டே துறை வகுக்க வேண்டும் என்று கூறுகின்றார். இதனை “தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாற் துறைகூற வேண்டுமென்றுணர்க.”( நச்சினார்க்கினியர் உரை, நூ.35) என்னும் கூற்றின் வழி அறியலாம்.
    • இதனாலேயே இளம்பூரணர், நச்சினார்க்கினியர் புறத்திணையியலில் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடல்களின் துறைகளுக்கும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள துறைகளுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

    துணைநூற் பட்டியல்

    1. இந்திரா மனுவேல், செவ்வியல் ஆய்வுக்களங்கள், கிரேஸ் – வேதம் பதிப்பகம், திருச்சி, 2009
    2. சண்முகம், செ.வை., இலக்கண உருவாக்கம் – 1, (பல்லவ – பாண்டியர் காலம்) மணிவாசகர் பதிப்பகம், சென்னை,  மு.ப., 1994.
    3. சீனிவாசன், இரா., தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800 – 1400, இலக்கண நூல்களும் உரைகளும், தி பார்க்கர், சென்னை, மு.ப., 2000.
    4. தமிழண்ணல், சங்க மரபு ( தமிழாக்கம், கு.வெ. பாலசுப்பிரமணியன்), சிந்தாமணிப் பதிப்பகம், மதுரை, 2009.
    5. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரையுடன், கழக வெளியீடு, சென்னை, 1969.
    6. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் முன்னைந்தியல்களும், நச்சினார்க்கினியர் உரையும் (முதல் பாகம்), கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007.

    *****

    கட்டுரையாளர்- துறைத்தலைவர்,
    தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
    எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603203
    ilamarantamil@gmail.com
    9884277395, 9566197141

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180913 – Vinayaka -Watercolour -10×14” Arches 300gsm lr

    சித்திபுத்தி வேழத்தை சாஷ்டாங் கமாய்வணங்க
    அத்தைக்கு மீசமுளைச்(சு) ஆவாள்பார் -சித்தப்பா(சித் அப்பா)
    தோத்தாலும் பாஸாவோம்(பரிட்சையில்) தோப்புக் கரணமிட
    கூத்தாடும் பிள்ளையார் காப்பு…கிரேசி மோகன்…!

    பிள்ளையார் பதினாறு
    —————————-
    ஷோடஸ நாயகர்
    ———————-
    பெரியா அருள் வாக்கில் ‘’ஷோடஸ நாயகரைப்’’ பற்றி எழுதியதை
    வாசித்ததால் விளைந்த வெண்பாக்கள் தங்கள் மேலான பார்வைக்கு….!(முன்பு(2012ல்) எழுதியது…..!

    ஸுமுகர்
    ———–
    சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
    விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
    இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
    அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….06-03-2012

    ஏகதந்தர்
    ———–
    சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
    யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
    காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
    பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)….06-03-2012

    கபிலர்
    ——–
    சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
    தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
    கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
    வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)….06-03-2012

    கஜகர்ணகர்
    —————
    கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
    நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
    ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
    பகர்அப லைக்கும் பலன்….(4)….07-03-2012

    லம்போதரர்
    ————–
    சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
    லம்போ தரனால் லகுவாக -வம்போடு
    தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
    நம்பாள் கஜகர் ணகர்….(5)….07-03-2012

    விகடர்
    ———–
    மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
    சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
    லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
    எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)….08-03-2012

    விக்கினராஜர்
    —————-
    சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
    இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
    ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
    பூஜா பலனாய் பவிஷு….(7)….08-03-2012

    வினாயகர்
    ————
    வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
    மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
    விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
    சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)….08-03-2012

    தூமகேது
    ———–
    சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமா
    சாமகாதன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
    தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
    தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
    வாக அவதரித்து வெற்றியை சூடிய
    வாகை வினாயகனை வாழ்த்து….(9)….08-03-2012

    கணாத்யஷர்
    —————
    அனாதியாதி அச்சன் அரசவை பூத
    கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
    தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
    சாமகீதம் சம்சார சிந்து….(10)….09-03-2012

    பாலசந்த்ரர்
    ————–
    நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
    பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
    கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
    தனாக்ஷர தீரம் தரும்….(11)….11-0302012

    கஜானனர்
    ————-
    அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
    கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
    கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
    பாலசந்த்ரன் பாதம் புகு….(12)….11-03-2012

    வக்ரதுண்டர்
    —————
    வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
    நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
    சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
    விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)….12-03-2012

    சூர்ப்பகர்ணர்
    —————-
    வரம்தரும் போதே முறம்போல தீதை
    புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
    ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
    சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)….12-03-2012

    ஹேரம்பர்
    ————-
    பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
    பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
    ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
    நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)….12-03-2012

    ஸ்கந்தபூர்வஜர்
    —————–
    சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
    சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
    முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
    பின்வந்து நிற்கும் பிடி….(16)….

    பலஸ்ருதி
    ————-

    பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
    பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
    அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
    மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….()….05-03-2012…கிரேசி மோகன்….!

    Share
  • குறுந்தொகையில் அகப்புற மணங்கள்

    -முனைவர் க. இராஜா

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பர். ஆயினும் அத்திருமண உறவு நெடுங்காலம் வரை நிலைத்திருப்பதில்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் அவ்வுறவு தொடர வேண்டும் எனத் திருமண முறைகளில் பல சடங்குகளை முன்னிறுத்தி நிகழ்த்தப்பெறுகின்றன. அவ்வகையில் குறுந்தொகையில் இடம்பெறும் அகம் மற்றும் புறம் சார்ந்த திருமண முறைகளை மானிடவியல் நோக்கில் ஆய்ந்து விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    லெவிஸ்ட்ராஸ் கோட்பாடு

    அமைப்பியல் அணுகுமுறைப்படித் திருமண விதிகளைக் கட்டமைத்தவர் லெவிஸ்ட்ராஸ் ஆவார். மணவுறவு, கொண்டு – கொடுத்தல், திருமணம் இவற்றின் அமைப்புகள் உலகந்தழுவிய பண்பாடுகளின் உறவுமுறையில் காணப்படும் வேறுபாடுகளிலிருந்து காணமுடியும் எனக் கண்டறிந்ததே லெவிஸ்ட்ராஸின் மிகப்பெரும் கண்டுபிடிப்பாகும்.

    திருமண உறவு என்பது மணமகன், மணமகள் ஆகிய இரண்டு தனி மனிதர்களைத் தாண்டி அவர்களின் குடும்பத்தினர், அவர்கள் சார்ந்த கால்வழியினர் ஆகியோரை இணைத்துக் கொள்ளும் ஒரு விரிவான பொருளாதாரப் பிணைப்பைக் கட்டமைக்கிறது. இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகத், “திருமணமானது மணமகன், மணமகள் என்னும் இரு தனி மனிதர்களை இணைக்கும் நிகழ்வன்று. இது ஒரு தொடர் வரிசையிலான பொருளாதாரப் பரிவருத்தனையை ஆரம்பித்து வைக்கிறது. திருமணத்திற்குப் பின் மணவுறவால் இணைந்த குடும்பங்களுள் சடங்கு/சமூக நிகழ்வுகளின்போது உணவு, பணம், பொருள், துணிமணி போன்றவை மாறி மாறிப் பரிவருத்தனை செய்து கொள்ளப்படுகின்றன” (எடுத்தாளப்பட்டது, பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், ப.117) என்னும் லெவிஸ்ட்ராஸின் கருத்து அமைகின்றது.

    உலகம் தழுவிய நிலையில் உறவுமுறையின் வகைகளைத் தொகுத்து ஆராய்ந்த லெவிஸ்டராஸ், பின்வரும் இரண்டு தனிப்பெரும் நிலைகளில் அவற்றின் வேறுபாட்டினைக் கண்டறிந்தார் (மேலது, பக்.118-119).

    1. எளிய அமைப்புகள் (elementary structures)
    2. சிக்கலான அமைப்புகள் (complex structures)

    லெவிஸ்ட்ராஸ் கூறும் எளிய அமைப்புகள் மனித சமுதாயத்தின் தொடக்க நிலையில் தோன்றிய மணவுறவு (alliance) முறையைக் குறிப்பதாகும். மனிதச் சமூகத்தில் தொடக்கத்தில் விரும்பத்தக்க மணமுறைகள் (preferential marriages) தோன்றின. இவ்விரும்பத்தக்க மணமுறையின் சிறப்புத் தன்மைகள் அனைத்தையும் எளிய அமைப்புகள் என்னும் தொடரால் குறிக்கிறார்.

    விரும்பத்தக்க மணமுறையானது ஒருவர், யாரை மணம்செய்து கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றது. இதனால் மணத்துணையின் வட்டம் வரையறுக்கப்பட்டுவிடுகின்றது. அதோடு மணத்துணையின் வட்டம் விரிய வாய்ப்பில்லை என்பதால் இது மூடிய வட்டம் (closed circle) என்ற தன்மையைப் பெறுகிறது.

    தமிழர்களிடம் விரும்பத்தக்க மணமுறை என்பது முறை, உரிமை போன்ற கருத்தாக்கங்களில் புதைந்துள்ளது. அத்தை பெண், தாய்மாமன், அக்காள் பெண் ஆகியோர் முறைப்பெண்கள் ஆவர். மேற்கூறியோரின் மகன்கள் முறைப் பையன்கள். இவர்கள் திருமணத்திற்காக உரிமை கொண்டாடுவார்கள். யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முறை அல்லது உரிமை தமிழ்ச் சமூகத்தில் உள்ளதால் உறவு முறையில் விரும்பத்தக்க மணவுறவில் அடங்கும் உறவினர்கள் தனிப்பட்ட உறவுமுறைச் சொற்களால் அழைக்கப்படுகின்றனர்.

    எளிய அமைப்புகளுக்கு நேர்மாறானவை சிக்கலான அமைப்புகள்  ஆகும். சிக்கலான அமைப்புகள் உள்ள சமூகங்களில் இரத்த வழியில் நேரடியாகத் தொடர்புடைய உடன் பிறந்தவர்களுடன் திருமணம் செய்யக்கூடாது என்பதே அவ்வகைச் சமூகங்களில் உள்ள திருமண விதியாகும். இவ்வகை உடன் பிறந்தவர்களை முழு உடன் பிறந்தவர்கள் (flll siblings) என அச்சமுதாயத்தினர் வரையறை செய்கின்றனர்.  இவ்வகைச் சமுதாயங்களில் ஒருவர் யார் யாருடன் மணவுறவு கொள்ளக் கூடாது என்ற விதி மட்டுமே சுட்டப்படுவதால் இதனை எதிர்மறை விதிகள் (negative rules) என்று கூறுகிறார் லெவிஸ்ட்ராஸ். யாருடன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை இவ்விதிகள் சுட்டிக் காட்டுவதில்லை.

    இவ்வமைப்புகளில் விரும்பத்தக்க மணவுறவினர் யார் என்ற சுட்டுதல் இடம்பெறாததால் மணத்துணையின் வட்டம் அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும் வகையில் திறந்து கிடக்கும். இதனால் உறவுமுறைச் சொற்களும் மணவுறவினர்கள் யார் என்னும் சுட்டுதலைத் தெளிவுப்படுத்துவதில்லை. இவ்வமைப்புகளில் இடம்பெறும் ஒரேயொரு திருமண விதி ஒருவர் யார் யாருடன் திருமணம் செய்யக்கூடாது என்பது மட்டுமே. இதனாலேயே இம்மணமுறை எதிர்மறை விதிகள் என்னும் பெயரைப் பெறுகின்றன.

    அகமணம்

    அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. இவ்வகை மணம் லெவிஸ்ட்ராஸின் எளிய அமைப்புகள் என்னும் வகையில் அடங்கும். சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் சாதி ஓர் அகமணக் குழுவாகச் செயல்படுகின்றது. தமிழர்களும்கூடப் பெரும்பான்மை சாதிப்பிரிவுகளாகச் செயல்படுகின்றனர். சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில் வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணமுடிகின்றது.

    அகமணமுறை அச்சமூகத்தைச் சார்ந்த குழுவுக்குள் நெருக்கத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்துகின்றது. பண்டைக் காலத்திலிருந்தே புலம் பெயர்ந்து வாழும் சமுதாயங்களில் அகமணமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இது குழுவுக்குள் ஒற்றுமையை ஊக்குவித்து அக்குழுவுக்குள் உரிய வளங்கள் மீதான கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றது. இருவேறு பெரும்பான்மைக் குழுக்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களுடன் நீண்ட காலம் புதிய இடங்களில் தாக்குப் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தருகின்றது.

    ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்கள் தங்களுக்குள் மணம் புரிந்து கொள்ளும் முறை நிலப்பரப்பு சார்ந்த அகமணம் (Territorial Endogamy) எனப்படும். ஒரு சில ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு வெளியே மணம் செய்துகொள்வதில்லை. இது ஊர் அகமணம் (Village Endogamy) எனப்படுகின்றது.

    சங்ககால மக்கள் திணைச் சமுதாயமாக வாழ்ந்தார்கள். தங்கள் நிலப்பரப்பிலேயே, தம் ஊரிலேயே தம் மக்களைத் திருமணம் செய்யும் அகமண முறைகளைக் கடைபிடித்துள்ளனர். இதனை,

    தலைவியும் தலைவனும் ஓர் ஊரினர்     (தொல்.கள.23)

    என்னும் நச்சினார்க்கினியர் விளக்கம் குறிப்பிடுகின்றது. மேலும், தலைமக்கள் தங்கள் ஊரில் இளமைக் காலத்தில் விளையாடும்போது சிறு சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்; பின்னாளில் அவர்கள் இருவரும் உள்ளத்தால் நீங்காதவாறு நட்பாகி காம்புகளைச் சேர்த்து இரட்டையாகச் சேரத்தொடுத்த மாலையை போல் சிறு பூசலும் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் உடன்போக்கு மேற்கொண்டு மணம் முடித்துக் கொள்கின்றனர் என்பதனை,

    இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன்
    புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
    காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
    தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
    நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்
    றுணைமலர்ப் பிணைய லன்ன விவர்
    மணமகி ழியற்கை காட்டி யோயே          (குறுந்.229)

    என்னும் குறுந்தொகை அடிகள் விளக்குகின்றன.

    அம்பல், அலர் என்பவற்றின் மூலம் குறிஞ்சி நிலத் தலைமகனிடம் காதல் வயப்பட்ட தலைமகளின் மாற்றத்தைக் காணும் பெற்றோர் அவளது மாற்றத்தை வினவியபொழுது தோழி அறத்தொடு நிற்றலால், இற்செறிப்பு செய்தமையும் தலைமக்கள் வேற்றுவரைவு கண்டு உடன்போக்கு மேற்கொண்டமையும்  வேற்று ஊர் மக்களைத் தம் பெண்கள் மணப்பதைப் பெற்றோர் விரும்பவில்லை என்பதும் தம் ஊருக்குள்ளேயே மணம் முடிக்கும் தன்மை உடையோர் சங்ககால மக்கள் என்பதையும் குறுந்தொகை காட்டுகின்றது.

    புறமணம்

    புறமணம் (Exogamy) என்பது ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழுவுக்குள்ளேயே மணம்செய்து கொள்ளாமல், வேறு குழுவைச் சேர்ந்தவர்களை மணம்செய்து கொள்ளும் முறை ஆகும். இம்முறையில் இரத்த உறவு கொண்டவர்களையும், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களையும் மணம்செய்து கொள்வது தடை செய்யப்படலாம். ஒரே கால்வழி, குடிவழி என்பவற்றைச் சேர்ந்தவர்கள் இரத்த உறவு கொண்டவர்கள் என்பதால் பல சமுதாயங்களில் இக்குழுக்களுக்கு உள்ளே திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தமிழ்நாட்டில் குலம், கோத்திரம், வம்சம் போன்ற பிரிவுகளும் இத்தகைய உறவுக் குழுக்களே ஆகும்.

    புறமண முறைகள் லெவிஸ்ட்ராஸ் குறித்த சிக்கலான அமைப்புகள் என்னும் பிரிவில் சேரும். சங்க கால மக்கள் தமர் என்னும் உடன் பிறந்தோர் திருமண முறையை மட்டும் குறிப்பிடவில்லை. முல்லை நிலத் தலைவி காதலிக்கும் தலைவனாக மலைநாடனொடு நட்பு கொண்டமையை,

    நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
    நீரினு மாரள வின்றே சாரற்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே      (குறுந்;.3)

    மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
    கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
    கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்      (குறுந்.87)

    என்னும் பாடல்களிலும் மருதநில ஊரனை மணந்து இல்லறம் நடத்தியதை,

    கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
    பழன வாளை கதூஉ மூரன்
    எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
    கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
    ஆடிப் பாவை போல
    மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே      (குறுந்.8)

    என்னும் பாடலிலும் நெய்தல் நிலத் துறைவனிடம்; நட்பு கொண்டதை,

    சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி
    ஒருநாட் டுறைவன் றுறப்பின்                      (குறுந்.326)

    என்னும் பாடலிலும் அறியமுடிகின்றது. இவர்கள் அனைவரும் அயலூரைச் சேர்ந்தோர். அதேபோன்று குறுந்தொகைப் பாடலில் (குறுந்.229) ஒரே ஊரைச் சேர்ந்தோர் உடன்போக்கு மேற்கொண்டு செம்மையாக இல்லறம் நடத்தியமையையும் அறியமுடிகின்றது. ஆகவே சங்ககால மக்களிடம் உடன்போக்கில் எந்த முறைமையும் பின்பற்றப்படவில்லை. ஆகவே இன்னாரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முறையான விதிகள் சங்க இலக்கியங்களில் காணவில்லை. உடன்பிறந்தோரை மணத்தல் குறுந்தொகையில் இல்லையாதலால் அவ்வுடன்பிறந்தோர் உறவு தகாத உறவாகக் கருதப்பட்டதனை உணரமுடிகின்றது.

    தாய், தந்தை வழி முறைமணம்

    லெவிஸ்ட்ராஸ் குறிப்பிடும் முறை, உரிமை ஆகியவை முறைமணத்தையே குறிப்பிடுகின்றன. இன்னார் இன்ன முறைமையில் திருமணம் செய்ய உரிமை பெற்றுள்ளனர் என்பதே முறைமணமாகும். இம்முறைமணம் சங்ககாலத்தில் தாய்வழி, தந்தைவழி ஆகிய இருவழிகளிலும் கடைப்
    பிடிக்கப்பட்டிருக்கின்றன.

    சிறுசிறு குழுக்களாக வாழ்ந்த மக்கள் கூட்டத்தில் நடந்த திருமணங்கள் அவ்வக் கூட்டத்தாரிடையே நடந்தனவையாகக் கருதத்தகும். அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவராகவும், தம்முள் உறவு உடையவராகவும் விளங்கியிருப்பர். அவ்வுறவு இரு வகையில் அமையும். அது தாய்வழி உறவும், தந்தைவழி உறவும் ஆகும். தாய்மாமன் மகளையும் அத்தை மகளையும் மணக்கும் வழக்கமே நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் உள்ளது. சங்க காலத்தில் தாய்வழி மற்றும் தந்தைவழி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு முறையில் திருமணம் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்குக் குறுந்தொகையிலுள்ள செம்புலப் பெயல்நீரார் பாடல் சான்றாக உள்ளது.

    யாயு ஞாயும் யாரா கியரோ
    எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
    யானு நீயு மெவ்வழி யறிதும்
    செம்புலப் பெயனீர் போல
    அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே        (குறுந்.40)

    என்னும் இப்பாடலில் தாய்வழியிலும் முறை இல்லை, தந்தை வழியிலும் முறை இல்லை. நாம் இருவரும் காதலால் மணந்தோம் என்று தலைவன் கூறுகிறான். இக்கூற்றிலிருந்து கணவன் மனைவியாக வாழ்வதற்கு அக்கால வழக்கப்படித் தாய், தந்தை உறவு அடிப்படையானது என்பது உணரப்படுகின்றது.

    திருமணம் பற்றிய லெவிஸ்ட்ராஸ் கருத்துப்படி எளிய அமைப்புகள், சிக்கலான அமைப்புகள் என்று திருமணக் குழுக்கள் இருவகைப்படுகின்றன. சங்ககால மக்கள் ஒரே குழுவுக்குள், நிலப்பரப்பு அல்லது ஊருக்குள் அகமண முறையிலும், விதிமுறைக்கு உட்படாத முறையில புறமணக் முறையிலும் திருமணம் செய்தனர். சங்ககாலச் சமுதாயத்தில் திருமணம் தாய், தந்தை ஆகிய இரு வழியிலும் செய்யப்பட்டமையும், அம்முறையை மீறிச் சுதந்திரமாய் உலாவும் காதல் வாழ்வைக் கொண்டமையும் அறியமுடிகின்றது.

    *****

    இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
    ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டினகிரி (மா.).
    அலைபேசி: 9994740908, மின்னஞ்சல்: rajavmctamil@gmail.com

     

    Share
  • நல்ல நெறி!

    பவள சங்கரி

    கொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;
    வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி
    தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
    நீங்குவதே நல்ல நெறி

    (நீதிவெண்பா)

    (வெம்புகரி = மதயானை
    வம்புநெறி = தொல்லைமிக்க)

    கொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள்.

    Share
  • எம்.ரிஷான் ஷெரீபின் நூலுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது

    இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம், 11 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘அரச இலக்கிய விருது வழங்கல் – 2018’ பிரமாண்டமாக நடைபெற்றது.

     

    இந்த விழாவில் இலங்கை ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் நூலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 2300 நூல்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுள் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Share
  • ”கீழ் திருப்பதி சாட்சி கணபதி பெருமாள்’’….!

     

    ’’சாட்சி கணபதி பெருமாள்’’….
    —————————————————

    ‘’காட்சி அளிக்கின்றார் கீழத் திருப்பதியில்
    மாட்சிமை மாம(ன்)அல மேலுமண, -சாட்சியாய்:
    நாம கணபதியை நாம வணங்கினால்,
    ஷேமம் ஜரகண்டி ஸ்பீட்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ’’சக்தி கொழுக்கட்டை’’….!

    படமும் பாடலும்….!
    ——————————————–

    பிஸியாகப் பார்வதி பூரணம் செய்ய
    பசியோடு பிள்ளையார் பார்க்க -ருஸியான
    மோதகம் ஏனுனக்கு மைந்தா பஸியென்றால்
    போதகப்பன் கையில் பழம்….கிரேசி மோகன்….!

    பூரணத்தை தாயார் பூரணமே செய்திடும்
    காரணத்தைக் காணும் கணேச -வாரணமே
    நாளை சதுர்த்தி நலமாய் நிகழ்ந்ததும்
    வேலையில்(கடலில்) மூழ்த்துவோம் வா….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180912- Sudama-wacol 10×14 Arches 300gsm -lr

    சுதாமன் அவலுக்கு சொத்தை அளித்த
    கதாதரன் கண்ணன் பரம -பிதாவாம்
    அலர்மேல் அன்னை அரியின் சிபார்சால்
    மலரும்நாள் காசின் பிறப்பு….!

    அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
    அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு,
    கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு
    தாதை அளிப்பான் துடைப்பு….!

    திகட்டும் அளவு திரவியம் தந்தாய்
    புகட்டிய நஞ்சை புசித்தாய் -நகத்தால்
    உரித்தெறிந்த உற்சாகம் இன்றெங்கு போயிற்று
    தரித்திரநா ராயணா தா….!

    வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
    குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
    பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
    போடுநீ ஆமாம்சா மி….!

    அந்தரங்க சுத்தியுடன் அந்தணங்கு ஆண்டாள்போல்
    அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
    வைகுண்டம் வாவென்று கைகொடுத்து தூக்கிவிடும்
    பைகொண்ட நாகமுற்ற பொற்பு….!

    தீனர்க்(கு) அருளூற்றாய் ஈனர்க்(கு) இருள்கூற்றாய்
    மீனமாய் ஏனசிம்ம வாமன -மூணான
    ராம கிருஷ்ண கலிபுருஷ னாய்வந்த
    நாம சகஸ்ரனாய் நாடு….கிரேசி மோகன்….!

    Share
  • பிள்ளையார் பிறப்பு

     

    நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
    ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
    மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
    ஞானி வினாயக னை….!

    ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
    பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
    தள்ளிய பிள்ளைத் தலையைத் தகப்பனீசர்
    கிள்ளியங்கு வைத்தார் கஜம்…கிரேசி மோகன்….!

     

    அட்வான்ஸ் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்….!

     

    பிள்ளையார் வெண்பாக்கள்
    ———————————————

    சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
    சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
    சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
    வக்கிர துண்டனை வாழ்த்து….(1)

    தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
    தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
    ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
    காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)

    தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
    முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
    அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
    முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)

    ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
    சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
    தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
    ஊன்றிய வேழா உதவு….(4)

    அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
    உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
    அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
    உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)

    கணபதி ராயா மனிதச காயா
    பனிபதி கைலாசப் பையா -தனபதி
    மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
    கோல வினாயகனே காப்பு….(6)

    கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
    மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
    பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
    அள்ளித் தருவான் அவன்….(7)

    அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
    மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
    நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
    ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)

    cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    mouseயிக வாகனா மோதகா -houseனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு….(9)

    மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
    பாஷைகள் போற்றும் ப்ரணவனை -வேஷமாய்
    வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
    ஏழைகள் ஈசனை ஏத்து….(10)

    அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
    உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
    எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
    சதிராக யாதுமருள் வான்….(11)

    கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
    சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
    செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
    சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)…..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180910 – Krishna deepa -wcol -charcoal-10×14 arches -lr

    “மயிலிறகு சூடும் முடிகொண்ட கண்ணன்
    DAILYயொரு கோலத் திகழ்வு; -வெயிலுருகும்
    சித்திரை மாதத்தை சீதக் களபமாயுன்
    சித்திரம் மாற்றுதுகே சவ்”….!

    மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக
    உய்யும் ஒரேஆன்மன் ஒளியாக -அய்யநின்
    ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத
    சீரான வாழ்வில் செலுத்து….கிரேசி மோகன்….!

    மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
    பீதகப் பட்டாடை பாழாக -காதினை
    கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியைக்
    கொய்தகோ பாலனே காப்பு….!(வருகின்றது வினாயக சதுர்த்தி….!)

    ஆவின் விளக்காகும், ஆயர் விளக்காகும்
    தாவிக்(தேவகி விட்டு யசோதை) குடல்விளக்கும் தாமு(தாமோதர்) -சேயெந்தன்,
    மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
    வேறிருள் போக்க விளக்கு….!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 178

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 2

    ========================

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

    —————————————————-

     

    சிவபெருமான்  என்ற பரம்பொருள்  சொரூபம் , தடத்தம்  என்ற இருநிலைகளில் இருப்பார். அவற்றுள்  சொரூபம்  என்பது  உலகத்தாரால்  உணர்ந்து  கொள்வதற்கு  அரிய உயர்நிலை.  அருவம்  உருவம்  அருவுருவம்  என்ற வடிவங்களுடன் எங்கும் நீங்காமல் உறைபவன் சிவன்.அவ்வாறு எங்கும்  உறைகின்றார்  சிவபெருமான்  என்று அனைவரும் வழி படும் போது, பெருமானே  நீ   ஒளித்திருமேனி  தாங்கி அருட்பெருஞ்ஜோதியாய் விளங்கி  அருவமும் இல்லை,  உருவமும்இல்லை  அருவுருவமும் நான் கொள்ளவில்லை என்று விளங்குகிறாய்!அதனை    ”ஒருநாமம்  ஓர் உருவம்  ஒன்றும் இலார்க்கு ” என்று மணிவாசகர் அடையாளம் காட்டுகிறார்.

    இவ்வாறு  இறைவன் அருவவடிவத்துடன்  புலன்களுக்கு  எட்டாமல்  ”உலகெலாம்  உணர்ந்து ஓதற்கரியவனாகவும்”,  உருவத்திருமேனி கொண்டு, ”நிலவுலாவிய நீர்மலி வேணியனாகவும், அருவுருவத் திருமேனி கொண்டு ‘சிவலிங்க வடிவிலும்,   மூன்று வகையிலும் ‘அலகில் சோதியனாகவும்” விளங்குவதைச் சேக்கிழார் பெருமான், திருத் தொண்டர்  புராணத்தில் குறிப்பிட்டருளுகிறார், ‘’அலகில்சோதியன்’’ என்பதனால்,  சிவபிரானின் வெளிப்பட்ட நிலையில்  ஒடுங்கிய சிவ இயல்பும்,‘’அம்பலத்தாடுவான்’’ என்பதனால் அவனது வெளிப்பட்ட அதிகார சிவ இயல்பும் , ‘’நிலவுலாவிய நீர் மலி வேணியன் என்பதனால்  வெளிப்பட்ட சிவபிரான் அனைத்துயிர்க்கும்  இன்பந்தரும் சிவ இயல்பும் கொண்டு விளங்குவதைச்  சைவ சித்தாந்தம் விளக்குகிறது.   .

    அச்சிவபிரானின்  சடையில் தங்கிய கங்கையைத்  தென்னாட்டின் காவிரியுடன் ஒப்பிட்டுச் சேக்கிழார் பாடுகிறார். பெருமை மிக்க தென்திசையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தோன்றிய சிறப்பினைக்  கூறும்போது,  கங்கைக்கு நிகரானது காவிரி என்று பாடுகிறார். அப்பாடலில்  காவிரியாறு  தான்  தோன்றிய சைய மலைத் தொடரில்  நிலவு திகழும் முடியாகிய  சிகரத்தின்   உச்சியில்  , வெண்மையான  நுரையுடன் அருவியாகிப் பொங்கிக் கீழ் நோக்கிப் பாய்ந்து மோதிப் புனிதம் மிக்க பொன்னி நதியாகித் தென்னாடெங்கும்   பாய்கிறது எனப் பாடுகிறார்.  அதனை,

    ‘’திங்கள்சூ  டிய முடிச்  சிகரத்து   உச்சியில்

    பொங்குவெண்   தலை நுரை   பொருது  போதலால்’’

    எனப்பாடுகிறார்.    இந்தப் பாடற்பகுதிக்கு ,  கங்கை  யாறு  தான் தோன்றிய இமய மலைச் சிகரமாகிய முடியில், வானத்திலிருந்து வெள்ளிய நுரை பொங்கும் நதியாகப் பாய்ந்து மோதிப்  பின்  மெதுவாக வழிந்து வடதிசையில் புனித நதியாகப்  பாய்கிறது  என்றும் பொருள் கொள்ளலாம்.  மேலும் சேக்கிழார்,

    ‘’எங்கள் நாயகன் முடி மிசை  நின்று ஏய்ந்து இழி கங்கை !’’ எனப்  பாடுகிறார். இதற்கு ’இந்த கங்கை எங்கள் இறைவனாம் சிவபிரானின்  சடைமுடியில் பாய்ந்து ஓர் ஓரத்தில் தேங்கி, புனித நதி என்ற சிறப்புடன் பாய்கிறது  என்பது பொருள்.  இந்த கங்கையே  அகத்திய முனிவரின் கமண்டலத்தில் அடங்கியது.  தேவேந்திரன் சீர்காழியில் அமைத்த நந்தவனத்தில் பாய்வதற்காக,  விநாயகன் காக வடிவெடுத்து அக்கமண்டலத்தைக் கவிழ்த்தமையால் காவிரியாகிப் பெருகியது. இதனைக்  கந்தபுராணம் விரிவாகப் பாடுகிறது. இதனைப் பிரபுலிங்க லீலை ,

    ‘’சுரகு    லாதிபன்     தூய்மலர்    நந்தனம்

    பெருக   வார்கடல்   பெய்தவ   யிற்றினோன்

    கரக      நீரைக்       கவிழ்த்த     மதகரி

    சரணம்   நாளும்  தலைக்கணி  யாக்குவாம்!’’

    என்று பாடுகிறது. ஆகவே   கங்கையே  காவிரி, காவிரியே  கங்கை என்று இருபொருள் பட  இப்பாடல் அமைந்துள்ளது.  கம்பரும் காவிரி நாடன்ன கழனி நாடு  என்று கோசல நாட்டைப்  பாடுகிறார்.

    இவ்வாறு  வடதிசைக்  கைலையில்  தோன்றிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் தென்திசையில் தோன்றித்  தம் பாடல்களால் சைவ சமயத்தை வளர்த்தார்.  அவ்வாறே வடதிசை கங்கையும் காவிரிக்கு நிகராகத்  தென்னாட்டில்  பாய்ந்து, வளம் செய்கிறது என்ற கருத்தில்  சேக்கிழார் பாடிய பாடல் ,

    ‘’திங்கள்சூ         டியமுடிச்        சிகரத்         துச்சியில்

      பொங்குவெண்   டலைநுரை  பொருது  போதலால்

      எங்கணா     யகன்முடி     மிசைநின்     றேய்ந்திழி

       கங்கையாம்   பொன்னியாங்  கன்னி  நீத்தமே!’’

    நயத்துடன்  விளங்குகிறது,

    Share
  • தேசிய கருத்தரங்கம் – அழைப்பிதழ்

     

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையும் தஞ்சைஅனன்யா பதிப்பகமும் இணைந்து நடத்தும் தேசிய கருத்தரங்க அழைப்பிதழ்.

    Share