Blog

  • என் நாக்கு முனையில் !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்ன சொல்ல வேண்டும்
    என்றெண்ணி
    உன்னோடு பேச விழையும் போது
    சில சமயம் எனக்கு
    ஓரிரு நாட்கள் கூட ஆகும் !
    ஆனால் சொற்கள் வெளி வராமல்
    நின்றுவிடும் நுனி நாக்கில் !
    நீல நிறம் வானில் மங்கும் போது,
    வேலை இருப்ப தில்லை
    எனக்கு !
    உனக்குச் சொல்ல புதிதாய் ஒன்றை
    நினைத்துப் பார்ப்பேன் !
    ஆனால் சொற்கள் வெளி வராமலே
    நின்று விடும் நுனி நாக்கில் !

    மக்கள் சொல்வது : ஏகாந்தனாய்
    நான் இருப்பதாய் !
    அது மெய்யில்லை என்று
    அறிவாய் நீ !
    உன் மீதுள்ள என் காதலை
    உறுதிப் படுத்த
    ஒரு தருணம் காத்திருக்கிறேன் !
    உரைத்தவை, செய்தவை
    நினைவூட்ட
    விரைவில் வரும் எனக்கு அந்நேரம்.
    மணப்பேன் உன்னை
    திருமணத்தில் நாமிருவரும்
    ஒருவராய் வாழ்வோம் !
    சொற்கள் நிற்கா இனிமேல்
    என் நுனி நாக்கில் !
    நிற்கா சொற்கள் இனிமேல்
    என் நுனி நாக்கில் !

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 124

    நிர்மலா ராகவன்

     

    மகிழ்ச்சி எங்கே?

    ஒரு மாலைப்பொழுதில் தெருவில் போக்குவரத்து நெரிசல். காரில் பயணித்தாலும், எல்லோருடைய முகத்திலும் சோர்வு. பிடிக்காத உத்தியோகமா, இல்லை, `வாழ்க்கையில் உல்லாசமே இல்லாமல் போய்விட்டதே!’ என்ற விரக்தியா என்று என் யோசனை போயிற்று.

    முப்பது வயதிற்குமேலும் கலகலப்பாக ஒருவர் இருந்தால், பார்ப்பவர்கள் `சிறுபிள்ளைத்தனம்!’ என்று முகத்தைச் சுளிப்பார்களோ என்று பயந்தே பலரும் கடமை, பொறுப்பு என்று வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு, எப்போதும் ஏதோ பாரம் வந்து தலையில் இறங்கினாற்போல் காணப்படுவார்கள்.

    பெற்றோரின் எதிர்பார்ப்பால் சிலர் – அனேகமாக, குடும்பத்தில் மூத்த குழந்தைகள் – கடமை உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.

    கதை

    “நீதான் மூத்தவள். நீ ஒருத்தி படித்து முன்னுக்கு வந்துவிட்டால் போதுமா? உன் தங்கைகள் உன்னைவிட புத்திசாலிகள்!” என்ற தாயின் வார்த்தைகளை ஏற்றாள் ரெஜினா. அதனால் ஏற்பட்ட வருத்தத்தை நெருங்கிய தோழிகளிடம் மட்டும் பகிர்ந்துகொண்டாள்.

    இரு தங்கைகளும் மருத்துவர்களாக, ரெஜினாவோ, பள்ளிப்படிப்புடன் நிறுத்திக்கொள்ள நேரிட்டது.

    பல வருடங்கள் ஆன பின்னரும், தன் மகிழ்ச்சிக்காக ஏதாவது செய்துகொண்டால் குற்ற உணர்வே மிகுந்தது. வெளியில் எங்காவது போகவேண்டுமானால், அவளுக்குச் சில நாட்களாவது முன்னெச்சரிக்கை கொடுக்கவேண்டும். எது செய்யும் முன்னரும், `விளைவு எப்படி இருக்குமோ!’ என்று சிந்தனை போனதன் விளைவு.

    உல்லாசம், கேளிக்கை இதெல்லாம் சிறுவர்களுக்கு மட்டும்தானா?

    கோலாலம்பூரிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்களில் அடைந்துவிடக்கூடிய கெந்திங் மலை (GENTING HIGHLANDS) `பார்க்க வேண்டிய இடம்!’ என்று வெளிநாட்டுப் பயணிகள் கூடுகிறார்கள். இங்கு வித விதமான கேளிக்கைகள். (காசினோ என்ற சூதாடும் இடத்தைக் குறிக்கவில்லை).

    ராட்டினத்தில் இருந்த குதிரைமேல் சவாரி செய்ய, அது பக்கவாட்டில் தொண்ணூறு பாகையில் (degree) பறந்து, திடீரென கீழே சரிவதுபோல் இருக்கும். தெரியாத்தனமாக நான் ஒரு முறை அதன்மேல் ஏற, ஒவ்வொரு சுற்றிலும் மேலே இருந்து கீழே இறங்கும்போதெல்லாம் கண்ணை இறுக மூடிக்கொண்டேன். புவியின் ஈர்ப்பு இல்லாது இருதயம் தொண்டைக்குள்ளேயே போவதுபோன்ற உணர்ச்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.

    ஆனால், சிலருக்கு அந்த அனுபவம் வேண்டியிருக்கிறது.

    புடவை அணிந்த ஓர் இந்திய மாது ஒவ்வொரு சுற்றிலும் தலையைப் பின்னால் சாய்த்து, வாயைப் பிளந்து சிரித்ததைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஐம்பது வயது இருக்கலாம். `இந்த வயதில் என்ன சிரிப்பும், விளையாட்டும்!’ என்று பிறர் கண்டனம் செய்வார்களே என்று பயந்து, அடக்கமாக இருந்திருக்க வேண்டிய நிலையோ!

    `உல்லாசம் எங்கே?’ என்று தேடுபவர்கள்— குறிப்பாக இளைய வயதினர் – தகாத காரியங்களில், ஆபத்தான விளையாட்டுகளில், ஈடுபடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், தாம் ஓட்டும் வாகனங்களைத் தலை தெறிக்க ஓட்டினால்தான் மகிழ்ச்சி பிறக்கும். இதனால் பிறருக்கும் ஆபத்து விளையும் என்ற முன்யோசனை அவர்களுக்கு ஏன் எழுவதில்லை? `நாம் மகிழ்ந்தால் போதும், பிறர் எப்படிப் போனால் நமக்கென்ன!’ என்ற அசிரத்தை.

    கசப்பான வாழ்க்கை

    `எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை. நினைத்தாலே பூரிப்பு அடையும்படி எதுவும் கிடையாது!’ என்று அரற்றுபவர்களிடம் ஒரு பொதுவான குணத்தைப் பார்க்கலாம். அத்தகையவர்கள் எதிலாவது தோல்வி அடைந்தால் அதையே நினைத்து மறுகிக்கொண்டிருப்பார்கள்.

    தோல்வி ஏன்?

    `யாருமே என்னை உற்சாகப்படுத்ததால்!’ என்றுதான் பலரும் குறைகூறுவார்கள். தன்னிடம்தான் ஏதோ குறை இருக்கிறது என்று எவரும் ஒப்புக்கொள்வதில்லை.

    நாம் செய்வதற்கெல்லாம் பிறரது உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால், அவர்கள் வேண்டுமானால் பெருமையாக உணரலாம். ஆனால் சுயமுயற்சிக்கு மாற்று கிடையாது. உங்கள் முன்னேற்றத்தில் உங்களைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை?

    பிழைக்கத் தெரிந்த சிலரே காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு, மகிழ்ச்சி குன்றாது வாழ்கிறார்கள்.

    நாட்டு நடப்பு

    `விலைவாசி ஏறிவிட்டது, எவரும் நான் விற்கும் பொருளை வாங்குவதில்லை!’ என்று பல வியாபாரிகளும் முனகுவார்கள். பொருளாதாரம் அப்படியே இருக்குமா?

    ஆன்மிகப் புத்தகங்கள் விற்கும் ஒருவர் தன் கடையை வீடியோ விற்கும் கடையாக மாற்றினார். நல்ல லாபம் வந்தது. கள்ள விசிடி விற்பனை செய்து ஒரு முறை மாட்டிக்கொண்டவர், அதையே பலசரக்குக் கடையாக மாற்றினார். மனிதர்கள் உயிர் வாழ சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கித்தானே ஆகவேண்டும்!

    ஆத்திரக்காரன்

    சரியான திசையில் பயணிக்கும் ஒரே ஒருவன் `இதுதான் நியாயம்!’ என்று எல்லாவித அநீதியையும் ஆத்திரத்துடன் எதிர்ப்பான். இவ்வாறு ஆத்திரத்தை மட்டுமே வெளிக்காட்டுபவன் சீக்கிரமே தன் மதிப்பை இழந்துவிடுவான். தகுந்த சமயத்தில் ஆத்திரத்தை வெளிக்காட்டுவது மட்டுமே பலனை அளிக்கும். (உதாரணம்: ஒரு படத்தில் கதாநாயகன் ஆரம்பத்திலிருந்து ஆத்திரத்துடன் பலபேருடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். இறுதிக்காட்சியில் உத்வேகம் சற்று அதிகம். பார்ப்பவர்களுக்கு அலுப்புதான் மிஞ்சியது).

    திறமையே பாரமாகிவிடும் அபாயம்

    நுண்கலை பயிலும் தம் குழந்தைகளை `ஓயாமல் பயிற்சி செய்!’ என்று விரட்டும் தாயோ, அல்லது அடித்தாலும், திட்டினாலும்தான் திறமை அதிவிரைவில் வளரும் என்றெண்ணி அதன்படி நடக்கும் ஆசிரியையோ இதற்கு எதிரான விளைவை உண்டுபடுத்தி விடுகிறார்கள். இதனால் இசை, நடனப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சிறுவர்களுக்குள் போட்டி மனப்பான்மை மிகுந்து, தான் வெல்லவேண்டும் என்ற வெறி வந்துவிடுகிறது. அல்லது, அக்கலையே பிடிக்காமல் போய்விடுகிறது.

    கதை

    குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி நடந்துகொண்டிருந்தபோதே மேடையில் ஒரு நடன நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு சிறுமியின் கவனம் நடனத்தில் போக, பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த தாய் முறைத்தபடி அவள் தலையைத் திருப்பி, ஒரு விரலால் அவள் செய்யவேண்டிய காரியத்தை நினைவுபடுத்தினாள்.

    இன்னொரு தாய், “இங்கே கலர் தீட்டு. அங்கே,” என்று சுட்டியபடி அறிவுறுத்திக்கொண்டே இருந்தாள்.

    இந்த இரு குழந்தைகளுக்கும் சித்திரம் வரைதலினால் கிடைக்கும் மகிழ்ச்சி, சுதந்திர உணர்வு, அமைதி எதுவுமே கிடைக்கப்போவதில்லை. அவர்களுடைய திறமையே பாரமாகவே ஆகிவிடும் அபாயமும் உண்டு.

    தூற்றினால் உயரமுடியுமா?

    மேடையில் உரையாற்றும்போது, தன் துறையில் இருக்கும் ஒருவரை அவர் எதிரிலேயே தூற்றுவது பேசுகிறவருக்கு வேண்டுமானால் உவகை அளிக்கலாம். சிரிப்பாக இருக்கும் என்று நினைத்து வாய்க்குவந்தபடி பேசுகிறார். ஆனால் அதைச் செவிமடுக்க நேர்ந்தவர்களுக்கு தர்மசங்கடமாக இருக்குமே! இதனால் அவர் உயர்ந்துவிட்டார் என்று எவரும் நினைப்பதில்லை.

    பிறரைக் கேலி செய்து நகைப்பது வேடிக்கையா? தமிழ் திரைப்படங்களில், `இதுதான் நகைச்சுவை’ என்று வலியப் புகுத்திவிடுகிறார்களே! பாதிக்கப்பட்டவர் மகிழ்வாரா?

    தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விப்பவர்

    பலர்முன் பாடுவதோ, நாட்டியம் ஆடுவதோ பிறருக்கு உவகை தருவதாக இருக்க வேண்டும். ஆனால் பிறரது மகிழ்ச்சி மட்டுமே குறிக்கோளாக இருப்பவர்களது படைப்பு அக்கலையை நன்கு உணர்ந்த ரசிகர்களுக்குத் திருப்தி அளிப்பதில்லை.

    கும்மியடி பெண்ணே!

    திருமணங்களில், வயது வித்தியாசமில்லாமல், பல பெண்கள் ஒன்றுசேர்ந்து கும்மி அடிப்பார்கள். பார்த்திருக்கிறீர்கள், அல்லவா? ஒவ்வொருவரும் வெவ்வேறுமாதிரி ஆடுவார்கள். அது வேறு விஷயம். ஆனாலும், அவர்கள் சிரித்தபடி வலம் வருவது பார்ப்பவர்களின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும். ஏனெனில், அங்கு போட்டி கிடையாது. மகிழ்ச்சியான வைபவத்தில் எல்லாரும் அகமகிழ்ந்து ஒரே செயலில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் தம் மகிழ்ச்சியைப் பிறருக்கும் அவர்களால் பகிர்ந்து அளிக்க முடிகிறது.

    எந்த ஒருவரும் உற்சாகமாக, அர்ப்பணிப்புடன் செய்யும் காரியங்களால்தான் பிறரது மனதையும் ஈர்க்க இயலும். செய்பவருக்கும் நினைக்கும்போதே மகிழ்ச்சி உண்டாகும்.

    தொடருவோம்

    Share
  • கனடாவில் சந்தவசந்த சந்திப்பு

    கவிஞர் பசுபதி

    கனடா,

    செப்டம்பர் 1 2018

    இன்றுகாலை சந்தவசந்தம் இணையக் குழுவின் சந்திப்பு கனடாவில் உள்ள மிஸ்ஸிஸாகாவில் கவியோகி வேதம் அவர்கள் ஏற்பாட்டில் அவரது மகன் ஸ்வாமிநாதன் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சந்திப்பில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும் அதில் கலந்து கொள்பவர்களைப் பற்றியும், சந்தவசந்தத் தலைவர் “கவிமாமணி இலந்தை ராமசுவாமி அவர்கள் தம் அற்புதக் கவிதைகள் மூலம் எடுத்துக் கூறினார். கவிஞர்களை அவர் வெவ்வேறு சந்த ஓசையில் அழைத்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    அரங்கில், முதல் நிகழ்வாக கவியோகி வேதம், பசுபதி, அனந்த் ஆகிய மூன்று கவிஞர்களுக்குக் “கவிப்பெருஞ்சுடர்” என்னும் சந்தவசந்தக் குழுமத்தின் விருதுகள் வழங்கப் பட்டன. புதுச்சேரியில் இருந்து சிவசிவா என்னும் கவிஞருக்குச் சேர வந்திருந்த பாவலர்மணி விருதுப் பட்டயத்தைச் சந்தவசந்தத் தலைவரே பெற்றுக் கொண்டார். அதற்கடுத்து, “இயலிசை அரங்கம்” மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர்கள் அனந்த், பசுபதி, இலந்தை, வேதம் ஆகியோர் தாங்கள் எழுதிய இசைக் கவிதைகள் பற்றிப் பேசி, அவற்றின் ஒலியையும் (பாடல்மூலம்) இசைத்துக் காட்டினார்கள். மிகஅழகாக, இனிமையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

    அடுத்த நிகழ்வாகக் கவிதையில் சித்திர விசித்திரங்கள் என்னும் மிக அழகிய நூல் புத்தகம் வெளியானது. வெளியீடு செய்து பேராசிரியர் சங்கரன் நகைச்சுவை கூடிய சிறப்பான உரையை வழங்கினார். புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு கவிஞர் சௌந்தர் அவர்கள் மிகஅற்புதமான, விரிவான மதிப்புரை நிகழ்த்தி, அதோடல்லாமல் ஒரு சிறப்பான “மிறைப்பா”வையும் வழங்கினார்.  நல்ல ஆய்வு அது! நேரத்தின் அருமை கருதி இலந்தை, வேதம், பசுபதி ஆகியோர்.. முறையே “விருத்தம் எழுத வருத்தம் எதற்கு?” “கவியோகியின் அற்புதப் படைப்புகள்” “சங்கச்சுரங்கம்” நூல்கள் பற்றி ஒரு நிமிடம் பேசினார்கள். கவிப்பெருஞ்சுடர் அனந்த் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு திருமதி பிரபா ஸ்வாமிநாதன் அவர்களின் மிகச் சுவையான சுவையரங்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது..

    வாழ்க கனடாக் கவியரங்கம்!

    விருதளிக்கும் படங்கள்

    Share
  • படக்கவிதைப் போட்டி 177-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கொள்ளை அழகோடிருக்கும் இந்த வெள்ளைப் புறாக்களைப் புகைப்படமெடுத்து வந்திருக்கின்றார் திருமதி. கீதா மதிவாணன். பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் நனிநன்றி!

    வாழ்வில் இணைபிரியாமல் ஒற்றுமையாய் வாழும் உன்னதக் கலையை இந்த ஐந்தறிவுயிர்களிடம் கற்றுப் பண்பட வேண்டியவனாயிருக்கின்றான் பண்பாட்டில் சிறந்தவன் என்று மார்தட்டிக்கொள்ளும் ஆறறிவு படைத்த மனிதன்!

    புறாக்கள்மீது புதுக்கவிதைகள் பாடக் காத்திருக்கும் புலவர்களை அன்பு பாராட்டி அழைக்கின்றேன். உங்கள் சிந்தனைகளை அழகாய்க் காற்றில் சிறகடிக்க விடுங்கள் கவிதைகளாய்!

    தன் முயற்சியில் சேகரித்த பொருள்களைக் கொண்டு கலைநயத்தோடு பறவைகள் கூடமைப்பதைப் போல மனிதனும் தன்னுழைப்பில் கிடைக்கும் நேரிய செல்வத்தில் சிறுகக் கட்டிப் பெருக வாழ்தல் சிறப்பு என்கிறார் திருமிகு. நாகினி.

    சிறுகூடும் கோபுரம்… 

    ஓரறிவு குறைவான பறவைகள்
    .. ஒழுங்குடன் அமைக்கின்ற சிறுகூடு
    பேரறிவு மிகுந்த மனிதரும்
    .. பெருமையாய்ப் பேசி வியந்திட
    பாரமென நினைக்காத முயற்சியில்
    .. பறந்து சேகரித்த பொருட்களால்
    தீரமாய் அலகினால் பின்னியே
    .. திகைக்க வைக்கும் கலைவீடு! 

    தனக்கென ஒருகூடு அமைப்பதில்
    .. தளராத பறவையின் உழைப்பினை
    வனப்பென நினைத்திட மறந்தவர்
    .. வழியினில் தடையென இருகைகள்
    கனமுடன் உணர வைக்கின்ற
    .. கணப்பொழுதும் நகர்வதில் கடினமாய்
    மனந்தனில் போராடும் மூடத்தன
    .. மயக்கங்கள் குழப்பிடும் தினந்தினம்! 

    ஏழ்மையில் இருந்தாலும் வசிக்க
    .. ஏற்புடைய மனையை உருவாக்க
    வாழ்வினில் அறநெறி தவறாமல்
    .. வளரும் நினைவினை முடக்காமல்
    தாழ்விலா உழைப்பினில் தெம்புடன்
    .. தரணியில் நடைபோடும் முயற்சியால்
    ஆழ்மனம் நினைத்தபடி சொந்தமாய்
    .. அமைக்கும் குடிசை கோபுரமே! 

     *****

    ”கூடுகட்டிக் குடியிருந்த மரம் புயற்காற்றில் போனதால் மீண்டுமொரு கூடமைக்கக் குச்சிகள் சுமக்கும் பறவைகள் யாம்” என்றுரைக்கும் பறவைகளைக் காண்கின்றோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    மறைந்தே…

    மனிதன் வெட்டத் தவறிவிட்ட
    மரம தொன்றில் கூடுகட்டி
    இனிதாய் நாங்கள் வாழ்ந்திருந்த
    இருப்பிடம் போனது புயற்காற்றில்,
    தனிமரம் விழுந்ததை விட்டுவிட்டுத்
    திரும்பவும் பறவையாம் கூடுகட்ட
    மனிதர் வராத இடம்தேடி
    மறைந்தே செல்கிறோம் குச்செடுத்தே…!

    *****
    அமைதியின் சின்னமாய் அகிலத்தோர் கொண்டாடும் அழகுப் புறாக்கள் கூடுகட்டச் செல்வதை வாழ்த்திப் பாடியிருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    அமைதிப் புறாக்கள்!

    மேதினியில் அமைதி நாட்டத்
    தூதுவரும்
    இரட்டைப் புறாக்கள்!
    புத்தர் அனுப்பிய
    வெள்ளைப் புறாக்கள்!
    காந்தியார் ஏவிய
    சாந்திப் புறாக்கள்!
    அன்னை தெரேசா அசுர உலகில்
    சேவை புரிய
    தேவைப் படும்!
    வாளும், வேலும் தீட்டி
    வாட்டப் போகும் வையம்
    கூட்டப் போகும்
    மைய மன்றத்துக்கு
    ஐக்கியம் வேண்டும் ஐக்கியம்!
    கூடு கட்டப் போகும்
    இரட்டைப் புறாக்களே!
    நாடுகள் யாவும்
    ஒன்று சேர்ந்து அமைதியில்
    நின்று நிலவ
    வென்று வருக! வென்று வருக!

    *****

    ”மனிதர் வாழும் பகுதிக்கு வந்துவிட்ட மணிப் புறாக்களே…கவனம்! உம்மைச் சமைத்துண்ணக் காத்திருக்கும் சமையல் சக்கரவர்த்திகளிடம் அகப்பட்டுக்கொண்டீர்களானால் உம்மைக் காக்க எந்த சிபிச் சக்கரவர்த்தியும் இங்கு வரமாட்டான்!” என்று எச்சரிக்கின்றார் திரு(மிகு?). வசந்திமணாளன்.

    மனிதர்கள் ஜாக்கிரதை!

    இரை தேடித்திரியும் பறவைகளே
    இரையாகிவிடாதீர்கள்
    இது மனிதர்கள் வாழும் பகுதி.

    ஆபத்தில் நீங்கள் அகப்பட்டால்
    வேடனிடமிருந்து காக்க
    சிபி சக்கரவர்த்தி வரமாட்டான்.
    தராசின் ஒருதட்டில்
    உங்களை வைத்து அதற்கு ஈடாக
    தன் தொடையின் தசையை அறிந்து
    மறுதட்டில் வைக்கமாட்டான்.

    இவன் சமையல் சக்கரவர்த்தி
    உங்களை கறிசமைத்து
    தன் சாப்பாட்டுத் தட்டில் வைத்துவிட்டு
    வேடனை வெறுங்கையுடன்
    விரட்டியடிப்பான்…
    ஆகவே மணிப்புறாக்களே…
    ஜாக்கிரதை
    இது மனிதர்கள் வாழும் பகுதி.

    *****

    தம் வாழ்வு குறித்து அக்கறையோடு அளவளாவும் புறாச் சேவலையும் பேட்டினையும் படம்பிடித்துக் காட்டி, அவற்றோடு பாரதிப்புலவனின் உளப்பாங்கையும் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா.

    விட்டு விடுதலையோடிருப்போம்…

    சேவல்
    சுள்ளிபொறுக்கிச் சுதந்திரமாய்க் கூடுகட்டி
    கள்ளி உனை வைத்ததில் நான் காதலிக்க வேண்டுமடி.
    முட்டையிட்டுத்தா முழு நாளும் அடைகாப்பேன்.
    குஞ்சைப் பொரித்து விட்டே கூட்டை விட்டுச் செல்வேன்.
    முந்தவுணவு கொண்டுவருதலையே
    சிந்தனையில் வைப்பேன் தேவையற்ற வேலைகளில்
    உள்ளமிழக்கேன் உயிரெமது கூடென்றே
    விட்டு விடுதலையோடிருப்பேன்
    வீணாய் என் நல்வாழ்வு
    கெட்டு நடுத்தெருவில் கிடந்து தவிக்காமல்
    நம் வீடு நம் வாழ்வு நம் குஞ்சுகட் கென்று
    என்னைக் கொடுப்பேன்
    எதற்கெனக்கு வீண்வேலை.

    உண்மை விடுதலையெம் உள்ளத்திலுள்ளதடி
    கண்ணே நமக்கதற்கெம் காதலது போதுமடி.

    பேடு
    அன்பேயும் சொற்கள் ஆனந்த மூட்டுவன.
    என் வாழ்வில் உம் காதல் ஒன்றே பெரிதாகும்.
    சுதந்திரத்திற்கெம் சுகவாழ்வே முன்னோடி
    இதந்தரு மனையே சொர்க்கம்
    இனியெனைக் கவலை தீண்டா
    அன்பொடு வீட்டைக் காக்கும்
    ஆர்வத்திலுள்ளீர் நன்றி
    என்பொடென் யாக்கையாவும்
    இனியுங்கள் சொத்தேயாகும்.

    கவிக் கூற்று
    அன்றெமது பாரதிக்கிவ் வறிவு நிலைத்திருந்தால்
    என்றுமுள அக்கவிஞன் இன்று கிடைத்திருப்பானா?

    *****

    கவிஞர்களிடமிருந்து நல்ல சிந்தனைகளை வாங்கித் தந்திருக்கின்றன புறாக்கள். அவற்றை வாழ்த்துகின்றேன்! கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    மெச்சிட்டோம் உங்க புத்திய!!

    உச்சிக் கிளையிலே கூடு கட்ட
    குச்சி தேடிக் கொண்டு வந்தோம்
    பூச்சி அரிச்ச மரமின்னு சொல்லி
    வெச்சி இருந்த மரத்தை வெட்டிட்டான்
    கச்சிக் காரங்க குத்தகை எடுத்ததாம்
    பச்சிக எல்லாம் பிளாட்டாடா வாங்கும்?

    இயற்கை தந்த வரங்களாம் மரங்களையெல்லாம் மனிதர்கள் தம் சுயநலத்துக்காக ஒன்றுவிடாமல் அழித்துவிட்டால் பறவையினங்கள் கூடுகட்டி வாழ்வதெங்கே வையத்தீர்?! அவையென்ன பிளாட்டா வாங்கி வீடு கட்டும்?” எனும் ’நச்’ கருத்தை நகைச்சுவையோடு பதிவிட்டிருக்கும் திரு. நாராயண் சுவாமிநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • முதலுக்கே மோசம்

    கவியோகி வேதம்

    சிற்பியின் கைகள் நடுங்குமெனில்
       சிலைகளும் எவ்வா றுருவாகும்?
    கற்பவன் கல்வி சிறந்திடுமோ,
       கற்பிப்ப வனுமே அரக்கனெனில்?
    கற்பிலா மாதர் தலைவியெனில்
       கன்னலாய் ஆட்சி நடப்பதெங்கே?
    சொற்களும் இவைபோல் சக்திபெறா,,
       சொலும்காப் பியமே ‘சக்கை’எனில்!

    கதிரவன் சக்தி வராநிலத்தில்
       கனிதராப் புல்லும் முளைப்பதில்லை!
    முதியவர் ‘சோடை’- போம்ஊரில்
       முன்னேற் றமென்றும் இருப்பதில்லை!
    சுதிகளே சேரா வீணைகொண்டால்
       ‘சுக’மெனும் வார்த்தைக் கர்த்தமில்லை!
    கதியிலா ஏழை வாழ்வதெங்கே?
       கருணையே பாயா ஆட்சிதன்னில்!

    பயிற்சியே செய்யா சோம்பல்மனம்
       பகுத்தறி புத்தி கொள்வதில்லை!
    அயற்சியில் உழலும் நெஞ்சத்தில்
       அற்புத ‘ஸித்தி’ வருவதில்லை!
    வயிற்றினில் அடிக்கும் சீமான்கள்
       வாழ்வதும், ”சொல்லும்” தரமில்லை!
    கயிற்றினில் மாயை வாழ்வு‘கட்டும்’
       கடவுளே! உனையான் விடுவதில்லை!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (278)

    இந்த வார வல்லமையாளராக பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சைவமும் தமிழும் தழைக்க வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்த சாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1925 – 2018) வித்துவான் பட்டம் பெற்றவர். பேரூர் தமிழ்க்கல்லூரியைத் திறம்பட நடத்தியவர். கொங்குநாட்டில் மூன்று பழைய ஆதீனங்கள் உள்ளன: பேரூர் வீரசைவ ஆதீனம்,  சிரவணம்பட்டி கௌமார ஆதீனம், பழனி சாது சுவாமிகள் திருமடம்.

     

    தமிழிசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம். எங்கள் இல்லத்தில் தங்கியிருந்தபோது, தமிழ், தமிழர் வரலாறுகளைப் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அவர் மறையும்வரை தொலைபேசியில் தமிழிசை பற்றிக் கேட்பேன். தக்கை இராமாயணம் பற்றியும் சொன்னேன். அதனால், தக்கை என்னும் தாளக்கருவி பற்றித் தாம் தொகுத்த களஞ்சியத்தில் குறிப்பெழுதினார். வீ. ப. கா. சுந்தரம் சொன்ன செய்தி: சி. வை. தாமோதரம்பிள்ளை தன் மகனிடம் தமிழ்நாடு சென்றால் சங்கத்தமிழர் வாழ்வை அறியக் கொங்குநாடு செல் என்று ஆணையிட்டாராம். அங்கே தமிழ்ப் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் வாழ்கிறார். சங்கத் தமிழர் வாழ்க்கை அறிய அவரிடம் பழகு என்று சி.வை.தாமோதரம்பிள்ளை கூறியுள்ளார் என்றார். இதனை. பிலிப் கிங்க்ஸ்பரி எழுதிய ‘நான் ஏன் கிறித்துவன் ஆனேன்’ என்ற அவரது நூலில் காணாலாம் என்றார் வீ.ப.கா. அவரிடம் கொங்குநாட்டில் இன்னும் வழங்கும் சங்க மரபுகளை, பெயர்களைச் சொல்லியுள்ளேன். வஞ்சிக்கொடி என்றும், கற்பினி என்றும், மயிலம்மை, குயிலம்மை, பச்சைநாயகி என்றெல்லாம் பெயர்கள் இருந்தன. இப்பொழுது யாழினி, தமிழினி, நல்லினி, கவினி … என்றெல்லாம் அழகுத் தமிழ்ப்பெயர்கள். அதேபோல, கற்பினி என்ற பழந்தமிழ்ப் பெயரும் பரவினால் நன்று. மறைந்த பேரூர் ஆதீனகர்த்தர் ராமசாமி அடிகளாரின் தாயார் பெயரும் அஃதே. கற்புடைய மாதர் மங்கலகரமாக விளங்க, சங்க காலப் போர் வண்ணமான வெண்மையை கைம்பெண்கள் கொங்குநாட்டில் அணிவது மூவாயிரம் ஆண்டு வழக்கம். இது பிற்காலத்தில் சுவேதாம்பர ஜைனத்தின் தாக்கம் ஆகலாம். தென்கர்நாடகாவிலும், கொங்குநாட்டிலும் துறவுக்கு அடையாளமாக, வெள்ளைச் சீலையை விதவையர் அணிவது நெடுங்கால வழக்கம். பேரூர் அடிகள் விளக்கம் இது. வெள்ளைச்சீலை = சுவேதாம்பரம். இப் பழைய மரபு மாறி மறுமணங்கள், கலர்ச்சீலை என மாறிவருகிறது. புலவர் செ. இராசு தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். ’கொங்குநாட்டில் சமணம்’ அவர் எழுதிய முக்கியமான நூல். அண்மையில் சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி (கரூர்) அருகே பெண்கல்விக்கான சிற்பம் கிடைத்துள்ளது. முக்கியத்துவம் கருதி, வாலைப்பருவப் பேதைச்சிறுமிகள் என்ணும் எழுத்தும் அறிவித்த வாலறிவு பெற்ற முக்குடைக்கீழே நிறும் ஆதிபகவன் ஆகிய தீர்த்தங்கரசாமியிடம் நிற்பதாக மிகப்பழைய சிற்பம். பெண்களுக்கே உரிய தோடு அணிந்து, தாமரை நாளம் தாங்கும் பெண்கள் ஜைந இலக்கியங்கள் ஆதி பிரும்மா என அழைக்கும் ரிஷபநாதரிடம் நிற்கின்றனர். பெண்கள் அருகிருப்பதால் அரைக்கச்சும், அதில் இலிங்கத்தை மூடிய வெள்ளை உள்ளாடையும் கொண்ட நிலை. ஊர்ப் பொதுமக்கள் மொட்டையாண்டவர் என பழனி முருகனாகக் கொள்வர். அருகே உள்ள பெண்கள் வள்ளி தெய்வானை எனக் கும்பிடுகின்றனர் [Ref. 1, 2].

    உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். செங்கோட்டுவேலனுடன் பலமுறை பேரூர் ராமசாமி அடிகளைப் பார்த்துள்ளேன். எப்பொழுதும் இன்முகம். கம்ப்யூட்டரைப் பற்றிப் புலவர் மாணவர்களுக்குச் சொல்லுங்கள் என்பார். அந்த வாரம் அணிவித்த சந்தனமாலை, பொற்சால்வை எனக்குப் போர்த்தி ஆசியளிப்பார்கள். பேரூர் ஆதீனத்தில் தான் புலவர் கம்பராமன் (எஸ். கே. இராமராஜன்) மூலமாக, கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டாரின் காராணை விழுப்பரையன் வளமடலின் ஏடு கிடைத்தது. மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்களின் அரிய சுவடிகளும், நூல்களும் பேரூர் ஆதினத்தில் பேணப்படுகின்றன. தமிழின் ஒரே லோகாயத நூலான காராணை விழுப்பரையன் வளமடலை இங்கே வாசிக்கலாம்:  http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0060.pdf   . விழுப்புரம் என்ற ஊரின் பெயர் விழுப்பரையர் குடியால் அமைந்ததே. மு. இராகவையங்காரும், உ. வே. சாமிநாதையரும் கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டாரின் வளமடலைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் நல்ல முழுமையான ஏடு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பஞ்சமரபு (தமிழின் பழைய இசையிலக்கண நூல்), தந்திவனப் புராணம், கம்பனின் பூர்த்தியான சுவடிகள் பல, திருமுருகாற்றுப்படையின் பரிமேலழகர் உரை, … எனப் பல அரிய சுவடிகளைக் கண்டுபிடித்த மகாவித்துவான் வே. ரா. தெ. காப்பாற்றிய சுவடி பேரூர் அடிகளார் வழியாக எமக்குக் கிடைத்தது. பார்த்தோமேயஸ் ஃசீகன்பால்கு (https://en.wikipedia.org/wiki/Bartholom%C3%A4us_Ziegenbalg ) என்னும் ஜெர்மானிய பாதிரியார் தரங்கம்பாடியில் தமிழ் நூல்களை அச்சிட்டார். அவரது தொகுப்பில் இந்த வளமடல் இருந்ததாம். இன்னும் சில அரிய தமிழ் பிரபந்தங்கள் ஐரோப்பாவின் மூலை முடுக்குகளில் உள்ள பழைய நூலகங்களில், சர்ச்சுகளில் கிடைக்கக்கூடும்.

    கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் சிவ. ராமசாமி அடிகளார் – கற்பினி அம்மையார் தம்பதிக்கு மகனாக கடந்த 1925-ம் ஆண்டு பிறந்தவர் பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி. தன்னுடைய 15-வது வயதில் திருமடப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட, சாந்தலிங்க இராமசாமி திருப்பணிகளோடு நின்றுவிடவில்லை. இளைய பட்டமாக இருந்தபோது பேரூர் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழ் பள்ளியைத் தொடங்கினார். கொங்குநாட்டுக்கு தமிழ்க் கல்லூரி வேண்டுமென்பதற்காக தமிழ்கல்லூரியையும் பேரூருக்குக் கொண்டுவந்தார்.

    மயிலம் கல்லூரியில் தனித்தமிழ் கல்வி பயின்றுள்ள ராமசாமி அடிகளார், 1952-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும் பெற்றிருக்கிறார். 1967-ம் ஆண்டு முதல் பேரூர் ஆதீன மடாதிபதியாக உள்ள இவர், தமிழ் மீது அதிகம் பற்றுடையவர். ஆகையால் பிள்ளையார் வேள்வி, திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு முதலிய அருளியல் நிகழ்வுகள், புதுமனை புகுவிழா, திருமணம் மற்றும் மணிவிழா உள்ளிட்ட வாழ்வியல் நிகழ்வுகளை தமிழ் வழியில் நடத்துவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திப் போராடினார்.

    தமிழகத்தின் வயது முதிர்ந்த மடாதிபதியான ராமசாமி அடிகளார் பேரூர் தமிழ் கல்லூரி, தாய் தமிழ் பள்ளியை நிர்வகித்து வந்தார். காட்டம்பட்டியில், சாந்தலிங்க அடிகளார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டினார்.

    இங்கு படித்த மாணவர்களில் ஏராளமானோர், பெரிய வேலைகளில் இன்று உள்ளனர், அவர்கள் தொழிலதிபர்களாகவும், அரசு, தனியார் நிறுவன உயர் அதிகாரிகளாவும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல, பேரூரில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் மருத்துவமனையும் இயங்கி வருகிறது. கடந்த சில காலங்களாகவே உடல்நலக்குறைவால் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் பாதிக்கப்பட்டிருந்தார்.

    சாந்தலிங்கர் திருமடத்தின் ஆதீனகருத்தர் பட்டம் ஏற்றிருக்கும் தவத்திரு. மருதாசல அடிகளார் தலைமையில் தமிழும் சைவமும் தழைக்குமாக.

    நா. கணேசன்

    (1) அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்: http://www.vallamai.com/?p=87447

    (2) வெறும் சாமரதாரிகளா ஆதிநாத தீர்த்தங்கரர் அருகே?  Eclectic Sculpture of Adinatha near Vanji City

    http://nganesan.blogspot.com/2018/09/eclectic-sculpture-of-adinatha-near.html

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 17

    -மேகலா இராமமூர்த்தி

    நாம் ஓர் அவையில் பேச்சாளராகவோ பார்வையாளராகவோ இருக்கக்கூடிய சூழல் வரும்போது அங்குள்ளோரின் தகுதியறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய முறைகள் என்னென்ன என்பது குறித்து நாலடியார் நவிலும் நல்லுரைகள் சிலவற்றைக் காண்போம்.

    உண்மையான அறிவுடைய கூட்டத்தில் கலந்து அவர்களோடு நின்றொழுகுதலை விடுத்து, அவர்கள்முன் தம்முடைய அறியாமையைப் புலப்படுத்தும் கருத்தையே திரும்பத் திரும்பப் பன்னிப் பன்னிப் பேசும் மயக்கு அறிவை உடையார் எதிரில் உண்மை அறிஞர்கள் தம் ஞானப் பெருமையினைக் காட்டிக்கொள்ளாமல் தளர்த்திக்கொள்ளுதல் வேண்டும்.

    மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
    அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
    கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
    சொன்ஞானஞ் சோர விடல். 
    (நாலடி – 311)

    அறிவினாலே ஒளியுடையோர் முன்பு தாமும் அறிவொளியினர் ஆதல் வேண்டும். அறிவற்றவோர் முன்பு ஏதுமறியதவராய், சுண்ண வண்ணம் கொள்ள வேண்டும் என்பார் வள்ளுவப் பேராசான்.

    ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணங் கொளல். (714)

    செய்யுட்களை அதன் பொருள்நுட்பம் உணர்ந்து இன்புறுதல் அறியாது, வெறுமனே மனப்பாடம் செய்து அருவருக்கத்தக்க உரைகளை மூடர்கள் சொல்லும்போது, என்றும் அழிவிலாச் சிறப்பினையுடைய மெய்ப் புலமைசால் பெரியோர்கள் அம் மூடர்களைப் பெற்றெடுத்த தாய்க்காக, அவள் வருந்துவளே, என்று மிக இரங்கி யாதுங் கூறாது பொறுமையுடையராக இருப்பர் என்கிறது நாலடி.

    பாடாமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
    மூடர் முனிதக்க சொல்லுங்கால் – கேடருஞ்சீர்ச்
    சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை
    ஈன்றாட் கிறப்பப் பரிந்து.  
    (நாலடி – 316)
     

    தன் மகனை ஈன்ற பொழுதைவிட அவனைக் கற்றோரும் மற்றோரும் சான்றோன் என்று புகழும்போதிலேயே பெரிதும் உவப்பாள் அவன் தாய். 

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    (69)
     

    ஆகவே அவைவல்லார் போற்றும் சொல்லாற்றலில்லா மூடர்கள் அவையில் யாதும் பேசித் தம்மை ஈன்றார்க்கு இழுக்குத் தேடலாகாது என்கிறது நாலடியார். 

    ஒருவன் ஒரு நூலைக் குறித்து அவையிலே விளக்கிப் பேசப்புகுமுன் பொழிப்புரை அகலவுரை நுட்பவுரை எச்சவுரை யென்னும் நால்வகையுரைகளாலும் நூலை ஆராய்ந்து தெரி(ளி)ந்து, அதன் விரிந்த பொருட்பெருக்கை விளக்கிக் காட்டவேண்டும். அவ்வாறு காட்டாதவனுடைய சொற்கள், பழித்தலில்லாத காட்டாக்களின் இனத்தைத் தமது செழுமையால் தம்மாட்டு வருவிக்கும் உயர்ந்த மலைகளையுடைய நாடனே! நூலிற்கு உரையாகுமா? என்று கேள்வி எழுப்புகின்றது நாலடியார்.

    பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
    கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
    நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
    உரையாமோ நூலிற்கு நன்கு?
    (நாலடி – 319)

    எனவே ஏதொன்றையும் நால்வகை உரைகளாலும் விளக்கிப் பேசுதலே சிறந்த உரையாகும் என்பது இப்பாடல்வழி நாம் பெறும் செய்தி.

    ஒரு நூற்பொருளைப் பொதுவாக உரைத்தல் பொழிப்பெனவும், வினாவியுரைத்தல் அகலமெனவும், காரணம் நிறுத்தல் நுட்பமெனவும், இவற்றால் ஒரு கருத்தைத் துணிதல் எச்சமெனவும் கருதப்படும்.

    கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் எத்தகு செறிந்த செய்திகளைத் தம் உரையில்காட்டி விளக்கிப் பேசினும் அவற்றின் அருமை உணராப் புல்லறிவினார் அதனைப் பயன்கொள்வதில்லை. அத்தகு புல்லறிவினாரின் இயல்பையும் நாலடியார் விரிவாய் விளக்குகின்றது நமக்கு.

    தோலைக் கவ்வித்தின்னும் புலைஞருடைய நாய்கள் பாலுணவின் சிறப்பை அறியாததுபோல, அழுக்காறு முதலிய மன மாசுகளில்லாதவர் அறநெறி அறிவுறுத்தும்போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங் கேட்கமாட்டார்.

    அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
    செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்
    கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
    செவ்விய கொளல்தேற்றா தாங்கு.
    (நாலடி – 322)

    புல்லறிவுடைய கீழோர் நல்லறிவுடைய சான்றோர் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு, அந்நல்லறிவினார்மாட்டு அஃது இல்லாதவர்க்கிருக்கும் அழுக்காறு(ம்) காரணம் என்பது இதன் குறிப்புப் பொருள்.

    இவ்வுலகில் உயிர்கள் வாழும் நாட்கள் சில; அச்சின்னாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பில்லை; இடையில் பலர்தூற்றும் பழிவேறு! இத்தகு நிலையற்ற, நிம்மதியற்ற வாழ்வில் பலரோடும் சேர்ந்து மகிழ்ந்தொழுகாது விலகி, எதிர்ப்பட்டவரோடெல்லாம் ஒருவன் கடும்பகை கொள்ளுதல் ஏன்? என்கிறது நாலடி.

    உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
    பலர்மன்னுந் தூற்றும் பழியால் – பலருள்ளும்
    கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
    தண்டித் தனிப்பகை கோள்.
    (நாலடி – 324)
     

    ஏதோ பன்னூறாண்டுகள் தான் நிலைத்து வாழ்ந்துவிடப்போவதுபோல் எல்லோரையும் வெறுப்பதும், எதிர்ப்படுவோரிடமெல்லாம் முரணுவதும் மனமுதிர்ச்சியற்ற புல்லறிவின்பாற்பட்ட செயல்களேயன்றி வேறில்லை.

    ”அல்லல்மிகு மானுட வாழ்க்கையை நடாத்துதற்கு வீணே பிறந்து, எல்லோரிடமும் கணக்கிலாப் பிணக்கினில் ஈடுபடாது, வாழ்வின் பயனடைய காழிப்பதிவாழ் ஆனேற்றுச் செல்வனைக் காண வாரீர்” என்று அப்பர் பெருமான் அடியவரை அழைப்பதை இங்கே நாம் பொருத்திப் பார்க்கலாம். 

    அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்துநீர்
    எல்லையில் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்)மினோ!
    பல்லில்வெண் தலையினில் பலிக்கியங்கு பான்மையான்
    கொல்லையேறு அதேறுவான் கோலக்காழி சேர்மினே!

    புல்லறிவினாரின் இயல்புகளை மேலும் பட்டியலிடுகின்றது நாலடியார். அவர்கள் தாமும் இன்புறமாட்டார்; தக்கார்க்கும் நன்மை செய்யமாட்டார்; தம்முயிர்க்கு அரணாய் அமையும் அறவொழுக்கங்களையும் கைக்கொள்ளமாட்டார்; மதிமயங்கி முன்னர்ச் செய்த நல்வினைப் பயனால் கிடைத்த செல்வச் செழுமையில் அழுந்தி வீணே வாழ்நாளைப் போக்குவார் என்கிறது அது.

    தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்
    ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் – தாமயங்கி
    ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
    போக்குவார் புல்லறிவி னார்.  (நாலடி – 327)

    மாந்தர்க்குக் கிடைக்கும் செல்வத்தை அவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினைகளில் பயனென்றே நீதிநூல்கள் பேசுகின்றன. ஏன் சங்க நூலான நற்றிணையுங்கூட,

    ”…நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
    செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே…” என்றே செப்புகின்றது.

    அவ்வாறு முற்பிறவியில் செய்த நல்வினைகளின் காரணமாய்ச் செல்வத்தைப் பெற்றவன், அதனைத் தானும் துய்க்காது, தக்கார்க்கும் ஈயாது வாழும் அற்ப மனநிலையை இப்பிறவியில் எப்படிப் பெறுகின்றான் என்பது சிந்தனைக்குரிய விந்தையான ஒன்றே!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  • ஆய்வேடுகளின் மீதான திறனாய்வு

    முனைவர் அண்ணாகண்ணன்

    தமிழில் முனைவர்ப் பட்ட ஆய்வேடுகளைச் சமர்ப்பித்த பிறகு, பொது வாய்மொழித் தேர்வுக்கு முன், அதனைப் பொதுவில் பார்வைக்கு வைப்பர். அதனைப் படித்து, அதன் மீது யாரும் கேள்வி எழுப்பலாம் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறையில் இவற்றைப் படிப்பாரும் இல்லை; ஆராய்வாரும் இல்லை. கேள்விகள் அனைத்தும் பொது வாய்மொழித் தேர்வு அரங்கில் ஆய்வாளர் பேசுவதை அல்லது தலைப்பை வைத்தே கேட்கப்படுகின்றன.

    சமர்ப்பிக்கப்பெறும் ஆய்வேடுகளின் மென்படி ஒன்றினை இணையத்தில் வைத்தால், அதனை உலகில் எங்கு உள்ளவரும் படித்துக் கருத்துக் கூறலாம். இதற்குக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவும் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

    அதற்கு முன்னதாக, இப்போதுள்ள நடைமுறைப்படியே, நூலகத்தில் வைக்கப்படும் ஆய்வேடுகளை அந்தக் கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பயிலும் சக மாணவரோ, வழிகாட்டி அல்லாத வேறு பேராசிரியரோ ஆராய்ந்து ஒரு கட்டுரை அளித்தால், ஆய்வின் தரம் இன்னும் மேம்படும்.  ஆய்வின் சிறப்பம்சங்களையும் உலகறியச் செய்யலாம்.

    இத்தகைய கட்டுரைகளை வெளியிட, வல்லமை மின்னிதழ் (http://www.vallamai.com) அணியமாக உள்ளது. ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள், பேராசிரியர்களின் ஒத்துழைப்பினை நாடுகிறோம். ஆய்வேடுகளின் மீதான திறனாய்வினை அனுப்ப வேண்டிய முகவரி: vallamaieditor@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180907 Krishnapremi-ShAkamrga wcol 10×14 Arches -lr

    கண்ணபிரான் பொம்மலாட்டம் காட்டுகின்றார் பொம்மைக்கு
    எண்ணபிரான் ஆகின்றார் ஏந்திமனம்(மனம் ஒரு குரங்கு) :- பின்னமுறான்
    வெண்ணைமண் தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான், பின்னமுறா(து)
    எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180906 -New Forever -wcol-100dpi-A4 lr

    பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    150709 Vanvihari wacol 24×32 lr

    ஆன்மக் கண்ணனே நேரில் வந்து வாத்ஸல்யமாய்
    கீதை உரைத்தாலும் காடுறும்(சுடுகாடுறும்)
    ஜீவன் கூழாட்பட்டு மேய்ச்சல் சோத்துக்குத்தான்
    ஓடும் ஐம்புலக் காய்ச்சலில்….யோசிக்க வைத்தமைக்கு நன்றி கலந்த
    சபாஷ் கேசவ்….!

    ”ஓடுற மாட்டுடன் ஓடிக் கறக்கின்றான்
    காடுறும் கன்றுக்குக் கால்கொடுத்து, -பாடுறான்
    காய்ச்சல் பசுவுக்கு கீதையை வாசித்து:
    மேய்ச்சல் விருப்பத்தில் மாடு’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • வடிவாய் கவிசெய்வோம் வா!

    நாகினி

     

    நடித்து மனத்தினுள் நஞ்சை மறைத்து
    கடிக்கும் உறவினி கானலாய் மாற
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    அடித்து எதையும் அபகரிக்கும் எண்ணம்
    மடிந்து புவியில் மனிதம் நிலைக்க
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    தடியை எடுத்து தவறைத் திருத்த
    படிகள் அமைக்கும் பதங்கள் இணைய
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    இடியாய் மனதில் இறங்கிடும் நஞ்சாய்
    தடிக்கும் உரையை தகர்த்தே எறிய
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    படித்த நலமிகு பாதை தவறும்
    துடிக்கும் இளமை துவண்டுவிழா தேற
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    படிக்கல் எடுத்தளவு பாதி கொடுத்து
    மடிக்கும் களவுநிலை மாற்றும் கருத்தில்
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    ஒடித்து மரத்தை ஒதுக்கி அடுக்கு
    மடிப்பில் மனைகளாக்கும் மாற்றம் எதிர்த்து
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    துடித்து பிறருறும் துன்பம் துடைத்தால்
    இடித்து நகைத்திடும் ஈனரைக் கிள்ளி
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    …. நாகினி

    Share
  • தாயா இவள்?

    -திருமதி ராதா

    தாய்மை…….
    கடவுள் கண்டெடுத்த புதையல்
    பிச்சையிட்டு விட்டான்
    பாத்திரம் அறியாமலே…..

    தவறு செய்தது இறைவன்
    பலியானது பச்சிளம் குறுத்துகள்
    ஏங்கும் எண்ணற்ற கருவறை இருக்க
    ஏனோ இட்டான் பிள்ளை வரம் 
    இரக்கமற்ற இவளது கருவறைக்கு

    மிருகத்திற்கும் உண்டு தாய்பாசம்
    இந்த பெண் மிருகத்திற்கு ஏனில்லை
    தன் சதை இன்பத்திற்கு
    விலைபோனது இவளது பிள்ளைகள்

    விலை எதுவானாலும் கொடுக்க
    விலைமாதரையும் மிஞ்சி விட்ட இவள்
    தாயே இல்லை…..
    தாயுருவில் வந்த கசாப்பு கடைக்காரி!

     

    Share
  • தமிழில் இயல்பியல் கலைச்சொற்கள்  மற்றும் பன்முக வளர்ச்சிப்பாதை

    -முனைவர் நா.ஜானகிராமன் 

    தமிழில் அகராதிகள் வளர்ந்து வந்தமை ஒரு நீண்ட நெடிய வரலாற்றினை உள்ளடக்கியதாகும். அகராதிகளின் வளர்ச்சிப்போக்கு காலந்தோறும் மாறும் இயல்பினைக் கொண்டதாகும். மொழிக்கென உருவான அகராதிகள் பின்னாளில் கலைச்சொற்களுக்கென உருவாக்கப்பட்டது. ஒருமொழி, இருமொழி, பன்மொழி என்ற நிலையிலிருந்து மாற்றம் பெற்று கலைச்சொல் துறைக்குத்தாவியது. தமிழ்மொழியில் பல்வேறு துறை அறிவுகள் பெருகுவதற்கு இக்கலைச்சொற்களின் வளர்ச்சியே காரணமாகும். குறிப்பாக, அறிவியலைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதனை இக்கலைச்சொற்களின் வளர்ச்சியே நிரூபணம் செய்கிறது. கலைச்சொல் என்பதற்கு பாரதியார் சங்கேதம், பரிபாஷை, குழுஉக்குறி எனும் சொற்பயன்பாட்டைக் குறிப்பிடுகின்றார். அதாவது, “ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்திரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொது வழக்கமில்லாத சொல்“ என்பது பாரதியார் கலைச்சொல்லிற்குத் தரும் விளக்கமாகும். இவ்வாறான கலைச்சொற்களும் அகராதிகளும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பல தோன்றி வளர்ந்தன. பின்னாளில் வெவ்வேறு துறைகளுக்கு இது சென்றது. இன்று மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் எனப் பற்பல துறைகளுக்கு அறிவியல் அறிஞர்களும், தமிழ் வல்லுநர்களும் சொல்லகராதிகளை உருவாக்கி வருகின்றனர். இத்தகு கலைச்சொல்லகராதிகள் பாடநூல் எழுதுவதற்கும், தமிழில் அறிவியல் சொற்களை இனம்கண்டு அறிந்து கொள்வதற்கும் பயன்படுகின்ற கருவூலமாக விளங்குகின்றன. அவ்வகையில் இயல்பியல் கலைச்சொல்லகராதிகளின் (Physics- Technical Terms Glossary) வளர்ச்சி வரலாறு குறிப்பிடத் தகுந்ததாகும்.

    இயல்பியல் (Physics)

    Physics எனும் துறைக்கான கலைச்சொல்லகராதிகள் தமிழில் பல வெளிவந்துள்ளன. 1932ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் physics என ஆங்கிலத்திலேயே இச்சொல்லைப் பயன்படுத்தியது. 1936-ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் “பூதநூல்” எனக் குறிப்பிட்டது. 1972-ல் காரைக்குடி தமிழியக்கப்பாசறை “பூதவியல்” என்று பெயரிட்டது. 1947-ல் சென்னை அரசாங்கமும், 1960-ல் கல்லூரித்தமிழ்க்குழுவும் “பௌதிகம்” எனப் பெயரிட்டன. 1960, 1975களில் இலங்கைக் குழு வெளியிட்ட தொகுதிகளிலும் பௌதிகவியல் என்றே வழங்கப்பெற்றது. 1971-ல் தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் “இயற்பியல்” என வழங்கியது. அண்டபிண்ட சாஸ்திரம் எனத்தொடங்கி இறுதியில் இயற்பியல் எனும் வரையறைக்குள் வந்தது. இந்த சொல்லுருவாக்கப் பணிகள் முதலில் மருத்துவம், கணிதம் என்ற துறைகளில் அகராதி உருவாக்கப் பணிகளாகத் தொடங்கப்பட்டன.  பின்னாளில் காலமுறை இதழ்களும், தமிழ்ச்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பலவும் இயற்பியல் சொல்லாக்கத்திற்கும் அகராதிகளுக்கும் வித்திட்டன.

    இதழ்ப்பணிகள்

    பெரும்பாலும் கலைச்சொல்லாக்க அகராதிகளுக்கு வித்திட்டவை அறிவியல் இதழ்கள் எனலாம். ஒவ்வொருவரும் அவ்வப்போது உருவாக்கிய கலைச்சொற்களை இதழ்களில் வெளியிட்டனர். அப்போது சொல் தரவாக்கம் நடப்பதற்குரிய விவாதங்கள் தொடங்கின. 1916-ல் கலைச்சொற்களுக்கென்றே ஓர் இதழ் வெளிவந்தது. அதன் பெயர் “சாஸ்திர பரிபாஷை சங்கத்தாரின் பத்திரிக்கை” என்பதாகும். சேலத்தில் உள்ள இராஜாஜி விஞ்ஞானச் சொல் சங்கம் இதனை வெளியிட்டது. “ சாஸ்திர பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் சேலத்தில் வக்கீல் ஸ்ரீ இராசகோபாலாச்சாரியரும் ஸ்ரீ வெங்கடசுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகை தொடங்கியிருக்கின்றார்கள்” என்கிறார் பாரதியார். 1917-ல் தமிழர் கல்விச்சங்கத்தின் தமிழர் நேசன் என்னும் பத்திரிக்கை பத்து ஆண்டுகள் வெளிவந்தது. இதில் பெ.நா. அப்புசாமி பணியாற்றினார். 1933-ல் வெளிவந்த தமிழ்க்கடல் என்னும் பத்திரிக்கையில் இயல்பியல் செய்திகள் வெளிவந்தன. பின்பு, கலைமகள், செந்தமிழ், ஆனந்தபோதினி, தமிழ்த்தாய், தினவர்த்தமானி, பிரசண்ட விகடன், வீரகேசரி, ஈழ கேசரி, சுதேசமித்திரன், தியாக புமி, இளம் விஞ்ஞானி முதலிய இதழ்கள் கலைச்சொல் அகராதிப்பணிக்கு வித்திட்டன. ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நாளிதழ் பணியும் குறிக்கத்தக்க ஒன்றாகும். 1949-ஆம் ஆண்டு பூ.சா.கோ. அறநிலையத்தாரால் தொடங்கப்பெற்ற அறிவியல் திங்கள் இதழ் பல கலைச்சொற்களைத்தாங்கி கட்டுரைகளாக வெளிவந்ததன. (இராதா செல்லப்பன் 2001:29).

    அகராதிகள் (Dictionaries)

    1932-ல் சென்னை அரசாங்கம் கலைச்சொல் குழு ஒன்றினை அமைத்தது. இதில் ஏறத்தாழ 7400 கலைச்சொற்கள் இடம்பெற்றன. இதில் இயல்பியல் கலைச்சொற்கள் 1000 உள்ளன. இவற்றில் பெரும்பான்மை சமஸ்கிருதம்  மற்றும் ஆங்கிலத் தாக்கத்தை உணரலாம்.

    aberration- பேரணம், லங்கணம்
    action – கிரியை, காதம்,
    lens- லென்ஸ்
    accumulator – வித்யுத் சஞ்சாயகம்,  அக்யுமுலேடர்

    என்னும் சொற்கள் குறிக்கத்தக்கனவாகும். பல கண்டனங்களிலிருந்து இந்தச் சொற்கள் தப்பிவந்தாலும் அறிஞர்களால் இது   ஏற்றுக்கொள்ளப்பெறவில்லை. 1940-களில் சென்னை அரசாங்கம் கலைச்சொற்களைத் தொகுக்கும் நோக்கத்துடன் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி தலைமையில் குழு ஒன்றினை அமைத்தது. இக்குழு 1947-ல் ஒரு கலைச்சொல் தொகுதியினை வெளியிட்டது. பௌதிகம் என்னும் தலைப்பில் வெளிவந்த இக்கலைச்சொல் தொகுதியில் ஏறத்தாழ 1500 சொற்கள் இடம்பெற்றிருந்தது. இதன் தலைப்பு – List of Technical Terms ( English- Tamil) Physics- என்பதற்கு இணையாக பௌதிகம் என்று  இடப்பெற்றிருந்தது.  இதனில்,

    aberration – கதி பிறழ்ச்சி, மையப்படாமை
    area – விஸ்தீரணம், பரப்பளவு
    lens – லென்ஸ்
    accumulator – சேமக்கலம், அக்யுமுலேட்டர்

    என்றவாறு சொற்கள் இடம்பெற்றிருந்ததன. சென்னை அரசாங்கம் 1959-ல் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. மாநில மொழியைப் பயிற்றுமொழியாக ஆக்க வேண்டியதன் தேவையை இவ்வாணை வலியுறுத்தியது. கல்லூரித் தமிழ்க்குழுவின் தலைவராக ஜி.ஆர்.தாமோதரன் செயல்பட்டார். 1960-ஆம் ஆண்டு “பௌதிகவியல்” கலைச்சொல் தொகுதி வெளியிடப்பட்டது.

    1971-ல் தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் பல கலைச்சொல் தொகுதிகளை வெளியிட்டது. அவற்றுள் பௌதிகவியல் கலைச்சொல் தொகுதியும் ஒன்றாகும். இதில் ஏறத்தாழ 2800 கலைச்சொற்கள் இடம்பெற்றன.

    1936, 1938ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தமிழ்ச்சங்கம் பல கலைச்சொல் தொகுதியினை வெளியிட்டது. “பூதநூல்” என்னும் கலைச்சொல் தொகுதியினை 1000 சொற்களோடு வெளியிட்டது இச்சங்கம்.

    1960, 1975 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து பல தொகுதிகள் வெளிவந்தன. 1960-களில் இலங்கையின் அரச கரும மொழித்திணைக்களம் பௌதிகவியல் என்னும் தலைப்பில் ஏறத்தாழ 11000 கலைச்சொற்களை வெளியிட்டது. 1975-ல் இலங்கையின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பௌதிகவியல் சொற்றொகுதி என்ற தலைப்பில் 7200 சொற்களை வெளியிட்டது.

    கலைக்களஞ்சியங்கள் பலவும் தமிழில் வெளிவந்தன. 1959-ஆம் ஆண்டு டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கலைக்களஞ்சியங்கள் உருவாக்கும் பணி தொடங்கியது. ஏறத்தாழ 25,000 சொற்கள் இதில் இடம்பெற்றன.

    பல்கலைக்கழக முயற்சிகள்

    பல்கலைக்கழகங்கள் பல கலைச்சொற்களின் வளர்ச்சிக்கு உதவின. மதுரைப் பல்கலைக்கழகம் 2400 கலைச்சொற்கள் அடங்கிய அகராதியினை வெளியிட்டது. aircell- என்பதற்கு காற்றுச்சிமிழ் எனவும், transformer- என்பதற்கு மின்மாற்றி எனவும், சொல்லாக்கம் செய்யப்பட்டன. 1997-ல் ப.க.பொன்னுசாமியைப் பதிப்பாளராகக் கொண்டு “இயல்பியல் களஞ்சியம்” என்ற நூல் வெளிவந்தது. இதில் 642 கலைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு கலைக்களஞ்சியம் போலானது. மேலும், இயல்பியலைப் பதினொரு நுண்பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு சொற்கள் விளக்கப்பெற்றுள்ளன. 1997-ல் தமிழ்ப் பல்கலைக்கழகம் பேரா.இராம சுந்தரம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு,2400 சொற்கள் கொண்ட அகராதியினை  உருவாக்கியது. 

    கலைச்சொல்லகராதிகளை உருவாக்கலும், செம்மைப்படுத்தலும்

    கலைச்சொல்லகராதிகள் பல்வேறு நிலைகளில் உருவாக்கித் தரப்படுத்தம் செய்யப்படும். சொற்களைத் தேர்வு செய்தலும், அதனைத் தரப்படுத்தலும் முக்கியமான பணியாகும். அறிஞர்கள் உருவாக்கும் சொற்கள் பல சமயங்களில் மக்களைச் சென்று சேர்வதில்லை. சில சொற்கள் நெருடலை ஏற்படுத்துகின்றன. சில சொற்கள் ஏற்கப்படுகின்றன. கலைச்சொல்லகராதிகள்  பின்வரும் படிநிலைகளில் உருவாக்கப்படுகின்றன.  அவை, பின்வருமாறு.,

    1. தமிழ்ச் சொற்களுக்கே முன்னுரிமை (only Tamil word)
    2. வழக்குச்சொல்லுக்கு முதன்மை (present use word priority)
    3. இலக்கியச்சொற்களுக்கு முதன்மை (literary usage)
    4. ஒரே சொல் மறித்து வரக்கூடாது (avoid repetition)
    5. கருத்துப்புலக் கூறு (concept categories)
    6. சுருக்கச்சொல் தேர்வு (words economy)
    7. நிலைபெற்ற சொற்களை மாற்றாமை (standard words)

    இத்தகைய கூறுகளை மையமாக வைத்துக் கலைச்சொல்லகராதிகளை உருவாக்குதல் வேண்டும்.

    kinetics – விசையியக்கவியல், knob- குமிழ் என்பன போன்ற கலைச்சொல்லாக்கத்தில் தமிழ்மொழி ஆளுமையினை உணரலாம். lightning conductor – என்பதற்கு மின்னல் கடத்தி எனச் சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ளது. அகராதியிலும், சொல்லாக்கத்திலும் ஒரு சொல் மீண்டும் வருதல் கூடாது. பொருள் மாற்றச் சூழலில் இடம்பெற்றால் தவறில்லை. உருவாக்கத்திற்கான சொல்லமைப்பு எளிமையுடன் இருத்தல் வேண்டும். நீண்டநாள் நிலைத்த சொல்லை மாற்றக் கூடாது என்பன போன்ற வரையறைகளைப் பின்பற்றுதல் அவசியமாகும். absolute expansion – என்பதற்குத்  தனி என சொல்லாக்கம் செய்துள்ளனர். angular magnification – என்பதற்கு கோண உருப்பெருக்கம் என்று ஆக்கம் செய்துள்ளனர். இதில் கருத்துப்புலப்பாட்டுக் கூறு முக்கியமானதாகும். fading – என்பது மங்குதல் என்னும் பொருளைக் குறிக்கும். இது சுருக்கச்சொற்களின் வகைப்பாடாகும். absorption – என்பது உட்கவர்தல் அல்லது உட்கவரல் என்னும் பொருளில் உள்ளது. சொற்சுருக்கத்திற்கு இது சான்றாகும்.

    தரவுருவம் செய்தல் (standardization)

    சொற்களை அகராதிக்கு அனுப்புமுன்  தரவுருவம் செய்தல் வேண்டும். அனைத்துச்சொற்களையும் அகராதியில் செலுத்தி பொருள் வழங்க முற்படுதல் கூடாது. காரணம், அனைத்துச் சொற்களின் அமைப்புநிலையிலும் ஒற்றுமைத்தன்மை வேண்டும் என்பதுவே ஆகும். எனவே தரப்படுத்தம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    1. பணித்தரவுருக்கள்
    2. பயன்பாட்டுத் தரவுருக்கள்
    3. எடையளவுத்தரவுருக்கள்
    4. திட்டத்தரவுருக்கள்
    5. சோதனைத்தரவுருக்கள்
    6. இயல்பறித்தரவுருக்கள்
    7. பாதுகாப்புத்தரவுருக்கள்
    8. பொருள் தரவுருக்கள்
    9. செயல்முறைத்தரவுருக்கள்
    10. தகவல் தொடர்புத் தரவுருக்கள்

    எனப் பல்வகையாகப் பாகுபடுத்தலாம் (2006:148 இராதா செல்லப்பன்) என்னும் வகைப்பாடு அகராதிக்குக் கலைச்சொல்லை ஏற்றும் முன் செய்யப்பட வேண்டிய படிநிலைகளாகும். தரப்படுத்துவதன் வாயிலாக ஒரு சீர்மையை உருவாக்கிட முடியும். கருத்தொருமித்தலுக்கும் பயன்பாட்டுத்தெளிவுக்கும் வழிபிறக்கும். உரைப்பொருளும், உள்வாங்கும் பொருளும் ஒத்து இயங்குதல் வேண்டும். ஒரு கருத்தினை மற்றவருக்கு எடுத்துப்புரிய வைப்பதில் இது முக்கியப்பங்கு ஆற்றுகிறது. புரிதல்களுக்குரிய இயல்புகளில் சிறக்கிறது. தொடர்பு கொள்வோர்களுக்கிடையே கலைச்சொல் தெளிவும் சிறப்பும் அதிகரிக்கும்.  மேலும், பல கருத்து ஒரு சொல்லைத் தவிர்க்கலாம். ஒரு கருத்து பல சொற்களை விளக்கலாம். கலைச்சொற்கொள்கைகளுக்கு ஏற்பப் புதிய சொல்வகைகளை உருவாக்க வழிவகைச் செய்யலாம்.

    கலைச்சொற்களைத் தரவுருக்களாக அறிவிப்பதன் மூலம் கலைச்சொல் சீர்மையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்கலாம். கலைச்சொல்லுக்கும் அது குறிக்கும் கருத்துக்கும் உள்ள தொடர்பை வெளிப்படையாக நிலைநிறுத்துவதன் மூலமும் பயன்பாட்டு ஒருமையைச் சீர்படுத்தலாம். சான்றாக, அளக்கும் கருவி எனும் கருத்தைக் குறிக்கும் “மானி” என்ற கலைச்சொல் எந்தச்சூழலில் பயன்படுத்தப்பட்டாலும் அதே கருத்தையே மாற்றமின்றித் தாங்கி நிற்பதற்குத் தரப்பாடு உதவுகிறது.

    துறை வல்லுநர்கள் தம் துறைசார்ந்த செய்திகளைப் பற்றித்  தம்முள் தொடர்பு கொள்கின்றனர். தெளிவான வரையறைகளையுடைய தரவுருக்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயனுறுத் தொடர்பை உருவாக்கலாம். ஒரு கலைச்சொல்லின் தொடர்பாற்றல் குறிப்பிட்ட குறியீட்டில் அதன் உட்புகுதிறன், ஒத்த கருத்தோடு அதற்குள்ள நேரடித்தொடர்பு, உரைப்பொருளோடு கருத்துள்ள தகவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகிறது. ஒரு கருத்தினை மற்றவருக்குப் புரியவைக்கும் முயற்சியை எளிதாக்குகிறது. ஒரே கருத்தைக் குறிக்கும் அறிவியலாரும், மொழிபெயர்ப்பாளரும் அதனைப் பல்வேறு கண்ணோட்டத்துடன் அணுகும்போது உருவாகும் ஒரு கருத்துப் பலசொற்களிலிருந்து ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தரவுருவாக அறிவிக்கக் கலைச்சொல் தரப்பாடு உதவுகிறது. குறிப்பிட்ட ஒரு பொருளைக் குறிப்பிட்ட ஒருவர் புரிந்துகொள்ளத் தேவையான பண்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதாவது, கலைச்சொல் குறிக்கும் இயல்புகளை வரையறுக்கிறது. பாதுகாப்புத் தரவுருக்களை உருவாக்குவது உயிர்த்தொடர்பான பாதுகாப்பு, சூழல்பாதுகாப்பு ஆகிய இயல்புகளுக்கு ஏற்றம் தருகிறது.

    தரப்பாட்டுக் கொள்கைகள்

    1. தரவுருக்கள் பொது ஒப்புதல் பெற்றவையாக இருக்கவேண்டும். கலைச்சொற்கள் குறிப்பிட்ட அறிவுத்துறை வல்லுநர்களாலும் கலைச்சொல்லியலாராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட சொற்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட கலைச்சொல்லைப் பயன்படுத்துவோரின் பொதுஒப்புதல் பெற்றதன் அடிப்படையில் தரவுருவாக்கம் நடைபெற வேண்டும்.
    2. தரவுருவின் பயன்பாட்டு நோக்கத்தைத் தரப்படுத்துவோர் கவனத்தில் கொள்ளவேண்டும். (காட்டாக.,) வாக்கியங்களில் தரவுருவைப் பயன்படுத்துகையில் அவை ஏற்புடையனவாக அமைதல் வேண்டும். தொடர்புடைய சொல்லாக்கங்களுக்கு வழிவகுக்கும் முறையில் தரவுரு அமைதல் நலம். தரவுருக்கள் எளிமை மற்றும் தரமுடன் இருத்தல் வேண்டும்.
    3. தரப்பாடு திட்டமிடப்படவேண்டும். தரவுருக்களைத் தயாரிக்கவும், வெளியிடவும் பாதுகாக்கவும் ஆகும். செலவோடு சமூகப் பொருளாதாரப் பயனை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். ஏற்கனவே நிலைபெற்ற அல்லது நிலைபெறும் வாய்ப்புடைய சொற்கள் தரவுருக்களாக நிலைப்படும். தரவுரு என்பது முக்கியமான சொல்தேர்வைக் குறிக்கிறது. கலைச்சொற்களில் ஒருமைப்பாடு காண்பதும் அவற்றைத் தரப்பபடுத்துவதும் ஒரு முக்கியமான பணியாகும். தரவுருச்சொற்கள் கலைச்சொற்கோவைகளைக் காட்டிலும் நிலைபேறு உடையனவாகவே இருக்கும். எனினும் அவற்றின் நிலைபேற்றுத்தன்மை முழுமையடைந்ததாகக் கூறமுடியாது. இத்தரவுருக்களைக் குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை மதிப்பீடு செய்வதுடன் அவற்றின் ஒப்புறுதியையும் அறுதியிடவேண்டும். இந்தத் தரவுருக்களை மறுமதிப்பீடு செய்யலாம். புதிய அறிவியல் கருத்துக்களை உருவாக்கவும் இச்செயல்பாடு தேவை.
    4. தரப்பாட்டுப் பணி இரட்டிப்புப் பணியாக இருக்கக் கூடாது. தரப்பாட்டுப்பணி பல்வேறு மட்டங்களிலும் செய்யப்பெறும் நிலை உள. தனிப்பட்டோர், கழகங்கள், பல்வேறு நாடுகள் ஆகியவற்றின் முயற்சி ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். சொற்களைத் தரப்படுத்தும் முயற்சியில் கலைச்சொல் துறையில் ஆர்வமுடைய அனைவருடைய கூட்டு முயற்சியும் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். இலங்கையில் அரச வெளியீட்டுத் திணைக்களம் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைச்சொல் அகராதித் தொகுதிகளை வெளியிட்டுள்ளன. தமிழிலும் பல வெளிவந்துள்ளன. 

    தமிழில் வெளிவந்துள்ள சில இயல்பியல் அகராதிச் சொற்கள்   

    A Activating devise செயலூக்கக் கருவி
      Adiabatic change மாறாவெப்ப மாற்றம்
      Aerial அலைவாங்கி
    B Bell jar மணிஜாடி
      Bench அளவுச்சட்டம்
      Bevel edge சாயுமோரம்
    C Cell கலம்
      Centre of orbit சுற்றுப்பாதை மையம்
      Cavity radiation பொந்துக்கதிர்வீச்சு
    D Dielectric slab மின்கடத்தாப் பாதாளம்
      Destructive test அழிவுச்சோதனை
      Depth of force குவிய ஆழம்

    * இச்சொற்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட இயல்பியல் கலைச்சொல்லகராதியில் இடம்பெற்றுள்ளது.(2001)

     

    நிறைவாக:

    இயல்பியல் கலைச்சொல்லகராதிகள் பல தமிழில் வெளிவந்துள்ளன. அவற்றில் எடுத்தாளப்பெற்றுள்ள சொற்கள் பலதரப்படுத்தப்பட்டவையாகும். சில சொற்கள் நிலைபேறடையாமலும் உள்ளன. சில சொற்கள் நிலைபெற்றுவிட்டன. அகராதியில் இடம்பெறும் சொற்கள் பொதுமைத்தன்மையுடன் இருத்தல் வேண்டும் என்பதில் கலைச்சொல்லறிஞர்கள் கவனம் செலுத்திவருகின்றனர். பலவேளைகளில் சொல்மயக்கங்கள் ஏற்படுவதுண்டு. அத்தகைய சூழலில் தேர்ந்தெடுப்புச் சொற்களை உற்றுநோக்கவேண்டும். வல்லுநர்களின் கூற்றுகள் பொருத்தப்பாடுடையதுதானா என்ற நோக்கில் கலைச்சொல் அகராதி உருவாக்குநர் ஆராயவேண்டும். தமிழ்வழிக்கல்விக்கு கலைச்சொற்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அறிவியலைத் தமிழில் தரவேண்டுமெனில் கலைச்சொற்கள் நிறைய அளவில் படைக்க வேண்டும். தனிநிலையில் மட்டுமன்றி வாக்கிய நிலைகளிலும் அவை பயன்பாடுடையதாக உள்ளதா என்று பரிசீலித்து அகராதிக்குள் நுழைக்கவேண்டும். தற்போதைய காலகட்டங்களில் கணினியைப் பயன்படுத்தி அகராதியை உருவாக்குகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது உகந்ததே ஆகும். இம்முறையில் கூறியதுகூறல் தவிர்க்கப்பெறுகின்றது. கலைச்சொல்லகராதிகளை உருவாக்குவதற்கு முன்பு அகராதி தரும் பொருள்குறித்து விவாதித்துப் பின் சேர்க்க வேண்டும். அகராதியில் சேர்த்த பின்பு வழக்கிழந்த சொற்களாக எதுவும் மாறல் கூடாது. தரவுருக்களைத் தேர்வு செய்வதற்கும், தேர்வு செய்யப்பெற்ற தரவுகளை அகரவரிசையில் இணைத்து உருவாக்கம் செய்வதற்கும் நம் பணி பெரியதாகும். இப்பணி விரிவாகும்போது தமிழ்வழி அறிவியலுக்கும், தமிழ்வழித் தொழில்நுட்பத்திற்கும் மிகுந்த பயனளிப்பாக அமையும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் கூற்று மெய்யாகும்.

    ——————

    கருவி நூல்கள்

    1. இரத்தினம். கா.பொ ( 1974), கலைச்சொல்லாக்கம், கலைக்கதிர், பூ.சா.கோ. அறநிலையம், கோயம்புத்தூர்
    2. இராதா செல்லப்பன் (2006), கலைச் சொல்லியல், தாமரை பப்ளிகேஷன்ஸ், அம்பத்தூர், சென்னை.
    3. இராதா செல்லப்பன் (2001), இயல்பியல் கலைச்சொல் தொகுதி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-24.
    4. சுந்தரம். இராம. (1984), தமிழ்வழி அறிவியல், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    5. பொன்னுசாமி. ப.க (1983), தமிழில் அறிவியல், ஒரு பார்வை, தமிழ்க்கலை, தமிழியல் காலாண்டு ஆய்விதழ், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    6. Thirumalai M.S (1979), Language in Science, Geetha Book House, Mysore.
    7. Shanmugam S.V. (1975), Moderenisation in Tamil, anthropological Linguistics, Indiana University, Bloomington.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி, குரும்பலூர், பெரம்பலூர்- 621 107 janakirambdu@gmail.com
    contact : 9842523869.

     

    Share
  • திருமந்திரத்தில் சிறுநீர் மருத்துவம்

    -பா.சீனிவாசன்

    முன்னுரை:- 

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்
    ”      (குறள் – 948)

    வள்ளுவப் பெருந்தகை இக்குறளில் நோய்கள், அந்நோய்கள் ஏற்படும் விதம், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் போன்றவற்றை நன்கு ஆராய்ந்து அதற்குரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றார். இக்கருத்தோடு இன்றைய அறிவியல் உலகினை உற்றுநோக்கும் பொழுது இவ் உலகினில் நாளுளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக நோய்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. இதற்கான காரணங்களாக இன்றைய வாழ்க்கைச் சூழலையும், நம் பாரம்பரிய பழக்கவழக்கங்களை இழிவாகக் கருதி அவற்றினை மறந்து செயல்பட்டதினையும் கூறலாம். இவ்வாறு நாம் மறந்தது அழிய விட்டுக்கொண்டு இருக்கின்ற நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமானது அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற எளிய மருத்துவ முறைகள் ஆகும். அவர்கள் வாழ்ந்த காலங்களில் ஏற்பட்ட நோய்களுக்கு எவ்வித மருத்துவமனையும் நாடவில்லை. மாறாக இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் கொண்டே பலநோய்களுக்கு தீர்வு கண்டனர்.

    இவ்வாறு நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற மருத்துவமுறைகளில் மிகவும் முக்கியமானது சித்த மருத்துவ முறையாகும். இச்சித்தமருத்துவத்தில் ‘சித்’ என்னும் சொல் எளிமை, தனிமை, தொன்மை, வன்மை, வாய்மை, தூய்மை, முழுமை, மேன்மை எனப் பலவகையாகப் பொருள் தருவதோடு இவை அனைத்தையும் தனக்குள்ளே கொண்ட சிறந்தொரு மருத்துவமுறை ஆகும். இம்மருத்துவம் திருமூலர் முதல் கோரக்கர் வரையுள்ள பதினெண் சித்தர்களால் நமக்கு அளிக்கப்பட்டதாகும். இப்பதினெண் சித்தர்களால் நமக்கு அளிக்கப்பட்ட இச்சித்த மருத்துவமுறைகளுள் ஒன்றுதான் “சிறுநீர் சிகிச்சை’, அல்லது ”சிறுநீர் மருத்துவம்” என்பதாகும்.

    இம் மருத்துவம் ‘’சிவாம்பு’’ ‘’அமுரி’’ ‘’சந்திர புஸ்பகரணி’’ என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இச்சிறுநீர் மருத்துவம் பற்றி பதினெண் சித்தர்களில் ஒருவரான திருமூலரும் கூறத் தவறவில்லை. அவர் இதனை

    வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
     நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்   ……………………………………………………..
    ……………………………………………………..
    சோழி மருந்திது சொல்லவொண் ணாதே.”    (திருமந்திரம்-830)

    என்று தம் திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் அமுரிதாரணைஎன்ற அதிகாரத்தில் சிறுநீர் மருத்துவம் பற்றி ஆறே ஆறு பாடல் வழி எடுத்துரைக்கின்றார். அவர் கூறிய சிறுநீர் சிகிச்சை பற்றியும், சிறுநீர் மருத்துவம் தொடர்பான செய்திகளையும் தக்க சான்றுகளோடு இவ்வுலகறியச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    சிறுநீர் கழிவுப் பொருள் அல்ல:-

    காட்டுப் பூனையின் மலம் எவ்வாறு புனுகு என்ற வாசனை திரவியப் பொருளாக மாறுகின்றதோ அதனைப் போன்று நாம் கழிவுப்பொருள் என்று எண்ணக்கூடிய ‘சிறுநீர்’ சிறந்த மருத்துவக் குணங்கள் நிறைந்தது. வள்ளுவர் தம் திருக்குறளில்,

    கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள
    ”  (குறள் – 1101) அதாவது காமமயக்க நிலையில் இருக்கும் ஒருவன் தன் துணையின் சிறுநீரைப் பருகுவதோடு, உடல் முழுவதும் அதனை பூசிக் கொள்கின்றான் என்கின்றார். சிறுநீர் என்பது கழிவுப்பொருள் அன்று என்பதற்கு இச்சான்றே போதுமானது. இன்றைய காலகட்டத்தில் இச்சிறுநீரின்  மருத்துவகுணம் அறியமால் அதனை கழிவுப்பொருள் என்று நம்மிடையே நம்ப வைத்து கொண்டிருக்கின்றனர். நம் சிறுநீரை கழிவுப்பொருள் என்று எண்ணும் நாம் ஏன் பசுமாட்டின் சிறுநீரைப் பஞ்ச கவ்வியம் என இல்லற சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றோம், அதனை பருக கூடச் செய்கின்றோம். ஏனெனில் சிறந்த மருத்துவ குணம் கொண்டது என்பதால் அவ்வாறு மற்ற உயிரினங்களின் சிறுநீரைப் பருக அனுமதிக்கும் நம் உள்ளுணர்வு நம்முடைய சிறுநீரைப் பருக அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம் கழிவுப்பொருள் என்று நம்மிடையே நம்ப வைத்ததே. இச்சிறுநீரின் மருத்துவக்குணங்கள் அறிந்து நம் முன்னோர்களான சித்தர்கள் இதனைப் போற்றி மருத்துவப்பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை

    செய்யவே பதினெட்டுக்குட்டம் சூலை தீரவே
    சிறுநீரில் கடசங் கேளு, பையவே பேய்த்தேற்றான
    ஒன்று செய்து வைத்துக் கொண்டு நையவே காலைதனில்
    எழுந்திருந்து நன்மையுடன் ஒரு சேர்வாங்கிஎன்று போகர் தம் பாடலில் சிறுநீர் என்பது சிறந்த மருத்துவக்குணம் நிறைந்தது. இச்சிறுநீரை பருகினால் தோல் நோய்கள் குணமாகும் எனக் கூறுகின்றார். 

    அரவக்கடி யகலவங்கு சிறுநீர் சிரங்கை, பரவக்குடி விஷம்படும்

    என்று  மற்றொரு பாடலில் விஷத்தைப் போக்கக் கூடிய அருமருந்து இச்சிறுநீர் என்கின்றார். சித்த வைத்திய நூலான பதார்த்த குணசிந்தாமணியில்,

    காணிக் கடிங்கதித்தெழுந்த வீக்கமத
    காணாது காயசித்தி கைக்குளாம் – பூணே
    பதித்த கொங்கை மாதே பகர் மாந்தருக்குள்
    உதித்த சிறுநீருக்கென்று ஓர் இதுவுமலை
    சர்வ விஷம்
    , விசசுரமும், தவருண்டோடும்
    இங்களைத் தொட்டம்பில் கண்
    , முகம், காது” (பதார்த்த குணசிந்தாமணி -164)

    என்று இச்சிறுநீரினை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கிடைக்கும் என்றும், தோல் நோய்கள் குணமாகும் என்றும் கூறுகின்றது. போகர் கூறியவாறு விஷத்தையும் போக்கக் கூடியது என்ற அதே கருத்தினை இச்சித்த வைத்திய நூலும் கூறுகின்றது. எனவே இக்கருத்துக்களை கொண்டு ஆராய்ந்தால் சிறுநீர் என்பது கழிவுப்பொருள் அல்ல என்பது நமக்கு புலனாகும்.

    பிறக்கும் முன்னரே சிறுநீர் சிகிச்சை:-

    நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும்பொழுது இச்சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்ள தொடங்கிவிடுகின்றோம். ஆம் கருவறையில் பனிக்குடத்தில் சிசுவாக இருக்கும் நாம் அங்கேயே சிறுநீரரைக் கழிக்கின்றோம். அவ்வாறு கழிக்கும் சிறுநீரில் ஒரு பகுதியை பருகுகின்றோம். இக்கருத்துக்களை இன்றைய நவீன மருத்துவம் ஏற்றுக் கொள்கின்றது. அதோடு இது சிசு வளர உதவுவதாகவும் கூறுகின்றது.

    சிறுநீரில் காணப்படும் பொருட்கள்:-

    உயிர்நூல் ஆசிரியர் மருத்துவர் பரன் (Dr.FRHIRN)  தனது உலகப் புகழ் பெற்ற நூலான “Introduction  to Bio- Chemistry” என்ற நூலில் ஆரோக்கியமாக இருக்கக் கூடியவனின் சிறுநீரில் பத்தொன்பது போஷாக்கு தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன என்று கூறுகிறார். இதனை உடல்நூல், இரசாயன நூல் ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக்கொண்டு உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியதே என்று கூறுகின்றனர். மேலும் இச்சிறுநீரில் பத்தொன்பது வகையான மனித உடலுக்கு தேவையான பொருட்கள் அடங்கியுள்ளது என்று தன் ஆராய்ச்சியின் மூலம் தெரிவிக்கின்றார். அப்பொருட்களின் முழுவிவரம் கீழ்வருமாறு.

    வ.

    எண்

    பொருள் மி.

    கிராம்

    வ.

    எண்

    பொருள் மி.

    கிராம்

    1 யூரியா 682.00 10 பொட்டாசியம் 137.00
    2 யூரியா 1459.00 11 கால்சியம் 19.50
    3 கிரிய்டினீன்(நயிட்ரஜன்) 36.00 12 மக்னீஷியம் 11.30
    4 கிரிய்டினீன் 97.00 13 க்ளோராயிட் 314.00
    5 யூரிக் ஆசிட் (நயிட்ரஜன்) 12.00 14 டோடல் சல்பேட் 91.00
    6 யூரிக் ஆசிட் 36.00 15 இனார்கானிக் சல்பேட் 83.0
    7 அமினோ (நயிட்ரஜன்) 9.70 16 இனார்கானிக் பாஸ்பேட் 127.00
    8 அமினோ 57.00 17 P.ர். 6.40
    9 சோடியம் 212.00 18 டோடல் ஆசிடிடி (யளஉஉ)  
          19 Nஃ10 27.80

     

    சிறுநீர் குணமாக்கும் நோய்கள்:-

    10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான “1000 முக்கியமான விஷயங்கள்என்ற நூலின் வழியாகச் சிறுநீர் பயன்படுத்தி குணமடைகின்ற சில நோய்களை அறியலாம்.  இந்நூல் சிறுநீரினை தொடர்ந்து ஒன்பது நாட்கள் ஒவ்வொரு நாள் காலையில் பருகுவதோடு, அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்வதால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும் என்று கூறுகிறது. இக்கருத்தினை உறுதி செய்யும் விதமாக “1695–ஆம் ஆண்டு வெளிவந்த சாலமோன் ஆங்கில வைத்தியம் என்ற நூலிலும் தோல் நோய்களை போக்கக் கூடியது சிறுநீர் என்று கூறப்பட்டுள்ளது.

    பம்பாய் மருத்துவர் பிராக்ஜிபாய் – டி – தேசாய் (pragjibhai D- Desai M.B.B.S Bulsar, Gujarat ) என்பவர் “05.02.1973” அன்று தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தம்மைக் காணவரும் நோயாளிகளுக்கு இச்சிறுநீரினை பயன்படுத்தி சிகிச்சையளித்து வருவதாகவும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் டைபாய்டு, வயிற்றுபுண், காலரா போன்ற நோய்கள் குணமடைந்துள்ளன என்றும், இம்முறையை தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் கையாண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

    சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளுடன் இருந்து சேவை செய்து வந்தவர் ராவுஜீபாய் மணிபாய்படேல் தனக்கு ஏற்பட்ட இருதய நோயை இலண்டனில் வசித்து வந்த  “ஜான் டபிள்யூ ஆர்ம்ஸ்ட்ராங் எழுதிய வாட்டர் ஆப் லைப்என்ற சிறுநீர் சிகிச்சை நூலின் உதவியால் சிறுநீர் சிகிச்சையை மேற்கொண்டு குணமடைந்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் மானவ மூத்திரம் என்று சிறுநீர் சிகிச்சை பற்றிய நூலினையும் வெளியிட்டுள்ளார். திருமந்திர ஆராய்ச்சி” “சித்தர்கள் போற்றிய சிறுநீர் மருத்துவம் போன்ற நூல்களை வெளியிட்ட டாக்டர்.ரா.மாணிக்கவாசகம் இச்சிறுநீரைப் பருகிவருவதாக கூறியுள்ளார்.

    திருமந்திரத்தில் சிறுநீர் மருத்துவம்

    சிறுநீரைப் பருகுங்கள்:-

    உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க்
    கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
    உடல் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
    நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே” (திருமந்திரம் – 845)

    தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
    ஒளிதரும் ஓராண்டில் ஊனம் ஒன்று இல்லை
    வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
    களிதரும் காயம் கனகமது ஆமே” (திருமந்திரம் – 846)

    மேற்கூறிய இவ்விரு பாடல்களில் திருமூலர் சிறுநீர் பருகும் முறையை கூறுகிறார். அதாவது முதல் கடைசியில் வரும் நீரை விட்டுவிட்டு இடையில் வருகின்றவற்றை பருகுகுங்கள் நோய் நொடி அண்டாது, மனம் தெளிவு பெறும் எனக் கூறுகிறார். இதே கருத்தினை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ‘யானை துதிக்கையால் நீரைப்பருகுகின்றது என்று கூறும் அவர் தொடர்ந்து இறைவன் எனக்கு இருகரங்களை அளித்துள்ளான். ஆனால் அதன் மகத்துவம் தெரியாமல் நிறையத் துன்பப்பட்டுவிட்டேன் என்றும் அதன் மகத்துவம் அறிந்தும் துன்பங்கள் பறந்து போயின என்றும் கூறுகின்றார். அதாவது அவர் சிறுநீர் பருகுவதையும், அதன் மூலம் கிடைக்கும் பயன்பற்றியும் மேற்கூறிய கருத்துக்கள் வாயிலாக உலகமக்களுக்கு தெரிவிக்கின்றார். புகழ்பெற்ற தாமர் தந்திரா” (Damar Tantra) சிவாம்புகல்பத்தில் (Shivambukalpa) 107 சுலோகங்கள் உள்ளன. இதில் இரண்டு மாதங்களுக்கு சிறுநீரினைத் தொடர்ந்து பருகினால் அறிவுநுட்பமாகிறது என்று கூறுகிறது. ஜீன மதத்திலும் சிறுநீர்ப் பருகும் முறை இருவேறு விதங்களாகக் கூறப்படுகிறது. இவற்றில் எளிதான முறையின்படிக் கோடைக்கால ஆரம்பத்தில் ஆகாரத்துடன் பருகத் தொடங்கினால் ஆறு பட்டினி நாளிலும் ஆகாரம் இல்லாமல் ஒப்புக் கொள்வானாகில் ஏழு பட்டினிகளுக்குப் பின்னும் நிறுத்த வேண்டும் எனக்கூறுகின்றது.  “The Hundred Thousand Songs of Milarepa, Boulder and London” (1977) என்ற புத்தகத்தின் மூலம் திபெத்திய புத்தமுனிவர்கள், லாமாக்கள் சிறுநீரைப் பருகுவதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்பதனை அறியமுடிகின்றது. 

    உடல், பொன்னிறமாக மாற நரை மயிர் கருக்க:-

    நுறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
    மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
    தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
    மாறும் இதற்கு மறுமயி ராமே
    ”   (திருமந்திரம் – 847)
    தம்முடைய  சிறுநீரை கையளவு பிடித்து ஒவ்வொரு நாளுக்கு நூறு மிளகு வீதம் உட்கொண்டு வந்தால் உடல் பொன்னிறமாகவும், நரைத்த மயிர் கறுக்கும் எனவும் எடுத்துரைக்கின்றார். சாலமனின் இங்கிலீஷ் வைத்தியன்”(1695) என்ற புத்தகத்தில் சிறுநீரைக் கொண்டு உடல் முழுவதும் மாலிஸ் செய்வதால் உடல் பொன்னிறமாக மாறும் என்கின்றது. பைபிளில் சிறு பட்டினியாக இருக்கும் நாட்களில் உன் தலையை சிறுநீரால் தேய்த்தும் முகத்தை அலம்பியும் கொள் என சுருக்கமாக கூறுகின்றது.

    மரணம் இல்லை:-
    கரையரு கேநின்ற கானல் உவரி
    வரைவரை என்பர் மதியில்லா மாந்தர்

    நுரை திரை நீக்கி நுகரவல் லார்க்கு
    நரை திரை மாறும் நமனும் அங்கில்லை
    ”                 

    (திருமந்திரம் – 848)

    முதல் மற்றும் கடைசி நீரை விடுத்து தம் சிறுநீரை தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு இறப்பு என்பது இல்லை. இக்கருத்தினை சிவாம்புகல்பம் ஒன்பது வருடங்கள் தொடர்ந்து இச்சிவாம்வை (சிறுநீர்) அருந்தி வருபவன் இறப்பிலிருந்து விடுபடுகின்றான் என்று கூறுவதோடு விஷம் அவனை ஒன்றும் செய்யாது என்றும் கூறுகின்றது. ஆயுர்வேத நூலான சுசுரூத சம் ஹிதையில்” “மூத்ரம் மானுஷம் ச விஸாபஹம்என்கிறது. அதாவது இச்சிறுநீர் விஷத்தை போக்கி மரணத்திலிருந்து காக்க கூடிய சக்தியினை பெற்றது. பிரான்சு தேசத்தில் பக்ஸ்டர் என்பவர் தொடர்ந்து தன்சிறுநீரையே பருகி தனக்கு இருந்த புற்றுநோயிலிருந்து தன்னை காத்து மரணத்திலிருந்து விடுபட்டு இருக்கின்றார்.

    உடல் இளைப்பதற்கு:-

    அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
    களவு காயம் கலந்த இந்நீரில்
    மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
     இளகும் மேனி இருளும் கபாலமே‘ (திருமந்திரம் – 849)

    என்று இச்சிறுநீரோடு சிறிதளவு மிளகு, நெல்லிக்காய், வேம்பு, மஞ்சள் ஆகியவற்றை கலந்து உட்கொண்டு வந்தால் உடல் இளைக்கும், இளமையாக இருக்கலாம் எனக் கூறுகிறார். திருமூலர். இவர் கூறுவது போல் இந்தியாவில் நாகசாதுக்கள் என்ற பிரிவினர் சிலர் இருக்கிறார்கள். வருடம் முழுவதும் ஆடை இல்லாமல் இருக்கின்ற இவர்கள் தங்கள் உடலை நல்ல நிலையில் ஆரோக்கியமாக வைத்ததுக்கொள்ள இச்சிறுநீரை உபயோகிக்கின்றார்கள். இவர்களில் பலபேர் சாதாரணமாக தங்களுடைய சிறுநீரையே பருகுகிறார்கள். அவர்கள் அதனால் இளமையாக காணப்படுகின்றனர்.

     முடிவுரை:-

    1. நோய்களை தீர்க்க அவர்களின் சொந்த சிறுநீரையே உபயோகப்படுத்த வேண்டும். எத்தனை உடல்கள் இருக்கின்றனவோ அத்தனை மூத்திரங்கள் உள்ளன. அதனால் தான் அவரவர்களின் சிறுநீரையே பயன்படுத்த வேண்டும் என்பது.
    2. எந்த ஒரு வியாதிக்கும் சிறுநீரைப் பிடித்து வைத்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கிச் செய்யும்பொழுது இடர்பாடுகள் தோன்றும் அதற்காக அதனை விடுத்து மற்றொரு சிகிச்சையை நாடக்கூடாது. உதாரணமாக தோல் நோய்களுக்கு சிறுநீரை பயன்படுத்தும் பொழுது சிலருக்கு முதல் வாரத்திலேயே பலன் தெரிந்துவிடும். ஆனால் சிலருக்கோ நான்கு, ஐந்து தினங்களில் உஷ்ணம் வெளியேறி கொப்பளங்கள் தோன்றலாம். அதற்காக இச்சிகிச்சையை விடக்கூடாது. சிறுநீர் கொண்டு தேய்த்தால் பலமாக இரண்டொரு நாளில் மறைந்துவிடும்.
    3. சிறுநீரை உடலில் மாசாஜ் செய்ய ஆரம்பித்த 1 வாரத்திற்கு பின் வேளைக்கு 1 டம்ளர் என்ற முறையில் அருந்தவும். 3 (அல்லது) 4 வேளை போதுமானது. இத்துடன் சாதாரண உணவு உட்கொள்ளலாம்.
    4. கொடிய, தீராத நோய்களினால் அவதிப்பட்டு வருபவர்கள் இச்சிறுநீரை சுத்தமான தண்ணீருடன் சேர்த்து பருகி அன்ன ஆகாரமின்றி அவரவருடைய உடல்நிலைக்கு ஏற்றவாறு 3, 5, 7, 10, 15 நாட்கள் உபவாசமிருக்க வேண்டும்.
    5. முக்கியமாக இரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும், இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்க கூடாது. மாறாக சிறுநீர் குடித்து. மாசாஜ் செய்து லேசான உணவை உட்கொள்ளலாம்.
    6. சிறுநீருடன் உபவாசம் இருப்பதால் இருதயமும், மூத்திரக் காய்களும் அதிகமாக வேலை செய்யும். எனவே இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு அதிகமாகும். உபவாச காலங்களில் பழைய சிறுநீர் கொண்டு மாசாஜ் செய்வது மிக அவசியம்.

    இவ் ஆறு வழிமுறைகளை கடைப்பிடிப்பதோடு, தகுந்த மருத்துவர்களை நாடி தன் உடல் நிலையை அறிந்த பிறகு இச்சிறுநீர் சிகிக்சையை மேற்கொள்வது என்பது நலம் பயக்கும்.

    மேற்கொள் நூல்கள்:- 

    1. திருமந்திரம் –     ஞா.மாணிக்கவாசகர்
    2. மானவ மூத்திரம் –     ராவுஜீபாய்படேல்
    3. சர்வரோக நிவாராணி –     சுவாமி பூமானந்தா
    4. மூத்திர சிகிச்சை –   ஆண்டியப்பன்
    5. சித்தர்கள் கண்ட சிறுநீர் மருத்துவம் – டாக்டர்.ரா.மாணிக்கவாசகம்
    6. திருக்குறள் –     திருவள்ளுவர்
    7. பதார்த்த குணசிந்தாமணி

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
    மருதுபாண்டியர் கல்லூரி, வல்லம், தஞ்சாவூர்.
    அலைபேசி: 9786964680
    மின்னஞ்சல்: sribalu1986@gmail.com

     

    Share