Blog

  • படக்கவிதைப் போட்டி – 177

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(224)

    செண்பக ஜெகதீசன்

     

    பகையகத்துச் சாவா ரெளிய ரரிய      

    ரவையகத் தஞ்சா தவர்.                                                

           -திருக்குறள் -723(அவை அஞ்சாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    பகைவர் அஞ்சும்வகையில்

    களம் புகுந்து போரிட்டுச்

    சாவதற்கும் அஞ்சாத

    வீரராய்

    உள்ளனர் பலர்..

     

    கற்றோர்

    அவையில் சென்று பேச

    அஞ்சாதவர்

    ஒரு சிலரே…!

     

    குறும்பாவில்…

     

    பலருளர் போர்க்களம் சென்று             

    போரிட்டுச் சாக அஞ்சாதவர், சிலர்தானுளர்    

    கற்றோரவையில் கலங்காது செல்ல…!

     

    மரபுக் கவிதையில்…

     

    பகைவர் நிறைந்த போர்க்களத்தில்

         பயமது நெஞ்சில் ஏதுமின்றி

    பகைவர் வியக்கப் போரிட்டும்

         பலனாய்ச் சாகவும் அஞ்சிடாத

    வகையில் வீரர் பலரிருந்தும்,

         வழுவிலாக் கல்வி கற்றோரவை 

    புகவே அஞ்சிடார் சிலரேதான்

         புவியி லுண்டென அறிவீரே…!

     

    லிமரைக்கூ..

     

    அஞ்சிடா வீரர்களுண்டு பலர்,    

    சாவுவரினும் போரிடுவர், கற்றோரவையில்                 

    அஞ்சிடாமல் செல்பவரோ சிலர்…!

     

    கிராமிய பாணியில்…

     

    பயப்படாதே பயப்படாதே

    சபயேறப் பயப்படாதே..

     

    சண்டயில சாவுவந்தாலும்

    பயப்படாம சண்டபோடும்

    வீராதிவீரரெல்லாம் கொஞ்சமில்ல,

    நெறயநெறய உண்டு..

     

    ஆனா

    படிச்சவங்க சபயில

    பயப்படாம போறவங்க

    அதிகமில்ல,

    ரெம்பக் கொறவாத்தான் உண்டு..

     

    அதால

    பயப்படாதே பயப்படாதே

    சபயேறப் பயப்படாதே…!

     

    செண்பக ஜெகதீசன்…

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 123

    நிர்மலா ராகவன்

     

    பணம்தானா எல்லாம்?

    “ஏண்டா வேலைக்கு வருகிறோம் என்றிருக்கிறது,” என்று தினமும் சலித்துக்கொள்வாள் ஆசிரியையான சுசீல் கௌர். “வீட்டில் குழந்தைகளை அழ விட்டு, அப்படியாவது என்ன வேலை!”

    “பின் ஏன் வருகிறாய்?” என்று நான் கேட்டபோது, “பணத்திற்காகத்தான். வேறென்ன!” என்ற பதில் வந்தது அவளிடமிருந்து.

    வெவ்வேறு துறையில் இருப்பவர்களை இதே கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

    `நீங்கள் ஏன் நடிக்க வந்தீர்கள்?’

    `புகழ், பணம்!’ என்ற அந்தப் பிரபல நடிகை புகழும், பண வரவும் நிலைத்திருக்க கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் புரிந்து வைத்திருந்தார். அதனால் நினைத்தது கிடைத்தன. மகிழ்ச்சியும் உடன் வந்ததோ? தெரியவில்லை.

    `ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள் மேற்கல்விக்கு?’

    `இந்த உத்தியோகத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?’

    எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்: பணம்!

    மன நிறைவுக்குப் பணம் மட்டும் போதுமா?

    போதுமான ஊதியம் கிடைத்தாலும், தலைமை அதிகாரியின் அசிரத்தையான, அல்லது கொடுமையான போக்கால் சலிப்பு எழக்கூடும். எவ்வளவு திறம்பட உழைத்தாலும் பதவி உயர்வு கிட்டாது என்ற நிலை ஏற்படும்போது இயந்திரகதியில் வேலை பார்க்கத் தோன்றுமே! பணத்தால் அந்த வெறுமையை ஈடுசெய்ய முடியுமா?

    பணத்தை மட்டுமே இலக்காக வைத்துக்கொண்டு செயல்படுபவர்களுக்கு எதிலும் பூரண திருப்தி கிடைப்பதில்லை.

    `தந்தை பார்த்த பரம்பரை உத்தியோகம். அதனால் நானும் அதையே செய்ய வந்துவிட்டேன்!’ என்பவர்களுக்கு அத்துறையில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வமும் சேர்ந்திருக்க வேண்டாமா?

    வேறு வழியில்லாது கிடைத்த வேலையில் நிலைத்திருக்க வேண்டியபோது, விரக்தி ஏற்பட்டுவிடுகிறது. என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்துதான் நாம் ஒவ்வொன்றையும் செய்கிறோம். இலக்கை மனதில் உறுதியாக வைத்துக்கொண்டால், எந்த இடர்பாடும் பெரிதாகத் தோன்றாது. பொழுதுபோக்குகளும் அவசியம்.

    கோடீஸ்வரர்கள் கூறுகிறார்கள், “பணத்தைச் சம்பாதிக்கும்போது விளையாடுவதுபோல் சுவாரசியமாக இருக்கிறது! பணம் பெரிதாகத் தோன்றவில்லை”.

    பல எழுத்தாளர்கள் நம் பெயர் நான்கு பேருக்குத் தெரியவரும், புகழ் கிடைக்கும், பணமும் கிடைக்கும் என்றுதான் எழுத வருகிறார்கள். இப்படி யோசனை போனால், எழுத்தில் முழுமனதாக ஈடுபட முடியுமா? `எழுதும்போதே ரம்மியமாக இருக்கிறது!” என்று புரிந்தவர்கள்தாம் நிலைத்து நிற்கிறார்கள். இவர்களது குறிக்கோள் பணமில்லை. ஆத்ம திருப்தி.

    எதை நோக்கிப் போகிறோம்?

    எவருக்கும் குறிப்பிட்ட ஒன்றை அடையவேண்டும் என்ற ஆசை முதலில் எழும். அது மட்டும் போதுமா? வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்ற உந்துதல் அவசியம். திறமைகூட இரண்டாம்பட்சம்தான்.

    `பள்ளிக்கூடத்திற்குப் போகமாட்டேன்! ஏன் போகணும்?’ என்று அடம்பிடிக்கும் குழந்தைகளே கிடையாது எனலாம்.

    `படிச்சாதான் பணக்காரனா ஆகலாம்! வேணும்கிற சாமானை எல்லாம் வாங்கிக்கலாம்!’ இப்படி எவ்வளவுதான் விளக்கினாலும், என்றோ நடக்கலாம் என்பது அந்த வயதில் புரியாது.

    `சனி, ஞாயிறில் பீச்சுக்குப் போகலாம், சினிமா பார்க்கலாம்,’ என்று குழந்தைக்குப் புரியும்படி ஏதாவது ஆசை காட்டினால் அதையே இலக்காகக்கொண்டு படிக்க இசைவான்.

    இலக்கற்றவர்கள்

    வசதி குறைந்த சிறுவர்களுக்கு உணவு, உடை, ஆகாரம் எல்லாமே போதிய அளவு கிடைக்காது. சில சமயம், இவர்களுக்கென நேரம் ஒதுக்காத, அல்லது புரிந்துகொள்ளாத பெற்றோரும் வாய்ப்பார்கள். அதனால் உடல், மனம் இரண்டிலும் சோர்வு எழும். எந்தக் காரியத்தையும் முழுமனதுடன் செய்யும் ஆர்வத்தை இவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

    படிப்புதான் ஏறாவிட்டாலும், இசை, நாட்டியத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் பலர். ஆனந்தி இவர்களுள் ஒருத்தி. ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கே பணமில்லாதபோது, கலைகளுக்காக எப்படிச் செலவழிக்க முடியும்?

    இதெல்லாம் புரியாத ஆசிரியர்கள் இருப்பதால், பள்ளிக்கூடத்திலும் அனேகமாக வசவுதான். சிறுவர்கள் மேலும் தளர்ந்துபோய்விடுவார்கள்.

    ஒரு சிலரே இவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் புரிந்துவைத்து, தம் சக்திக்கு மீறி உதவவும் முன்வருகிறார்கள்.

    சிறுவர்களுக்கு உதவும் கரங்கள்

    மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் ஆசிரியர்கள் சிலர், `படிப்பில் மனம் போகாவிட்டால் என்ன! இந்த ஏழைச்சிறுவர்களிடம் கலைத்திறன் இருக்கிறது,’ என்று உணர்ந்து, அத்திறமையை வெளிக்கொணர்கிறார்கள்.

    முதலில் சிறிது உணவைப் படைத்து வரவழைப்பார்கள். அதுதானே அடிப்படைத் தேவை! கலையைக் கற்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே, `நம்மாலும் உருப்படியாக எதையோ செய்ய முடிகிறது!’ என்று ஆச்சரியத்துடன் உணர்வார்கள் சிறுவர்கள். அப்போது ஏற்படும் மகிழ்ச்சியில் அவர்களது தன்னம்பிக்கை வளர்கிறது.

    இத்தகைய மாணவர்களிடம் கூடுதலான கவனம் அவசியம். கண்டிப்பாக இருந்தாலே போதும். கட்டொழுங்கு வரும் – மெல்ல மெல்ல.

    இப்படிப்பட்டவர்கள் தோல்வியால் துவளமாட்டார்கள். அவர்கள் படாத துயரமா?

    கலை விருந்து

    மேற்குறிப்பிட்ட நாடுகளிலுள்ள இளம் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு ஆசிய நாட்டில் கலை விருந்தினைப் படைக்கிறார்கள்.

    அண்மையில் கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில், உள்நாட்டு பரதநாட்டியக் கலைஞர்களுடன் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஆடினார்கள், மேற்கத்திய பாணியில்! ஒரே இசை. இரு பாணிகள்! சமையலில் வெவ்வேறு சுவை கலந்திருப்பதுபோல்தான். பார்வையாளர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது அந்த ஆட்டம்.

    போதனையாளர்கள் ஒரே வாரத்தில் நாள் முழுவதும் உழைத்துக் கற்பித்துவிட்டு, ஒதுங்கிவிட்டார்கள்.

    சிறுவர்களுக்காக சிறுவர்களே இணைந்து படைக்கும் இம்மாதிரியான நிகழ்ச்சியில் கிடைக்கும் சன்மானத்தை ஏதாவது ஒரு நாட்டில் தம்மைவிட ஏழ்மையில் உழலும் சிறுவர்களுக்குக் கொடுத்து நிறைவு காண்கிறார்கள் இள வயதினர்.

    `இவர்களையெல்லாம் முன்னுக்குக் கொண்டுவரவே முடியாது!’ என்று பல ஆசிரியைகள் தன்னை ஒத்தவர்களைப் பாதியிலேயே கைவிட்டதாகக் கசப்புடன் கூறுகிறாள் ஆனந்தி. ஒரே ஒரு ஆசிரியை மனந்தளராமல் போதிக்க, பதினேழு ஆண்டுகள் பரதநாட்டியம் பயின்று சிறந்திருக்கிறாள்.

    தன்னிடம் இயற்கையாக அமைந்த கலைத்திறனை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, பன்னிரண்டு வயதிலிருந்து நான்கு மணி நேரம் இடைவிடாது பயிற்சி செய்திருக்கிறாள். விடாமுயற்சியால் கலை மட்டுமின்றி, பிற துறைகளிலும் பிரகாசிக்கிறாள். அவளுடைய நாட்டியத் திறமையால் கல்லூரியில் உபகாரச் சம்பளம் கிடைத்திருக்கிறது.

    ஆரோக்கியத்தின் அவசியத்தையும் புரிந்து வைத்திருக்கிறார்கள் இவர்களைப் போன்றவர்கள். வசதி இருந்தும், `காணாததைக் கண்டதுபோல்’ அளவுக்குமீறி சாப்பிடுவதில்லை. உடல் ஒத்துழைத்தால்தானே ஆட முடியும், பார்ப்பவர்களும் ரசிப்பார்கள்?

    பிறர் தமக்களித்ததைப் பகிர்வது

    ஆனந்தியை ஒத்தவர்கள் தாம் எப்படி முன்னுக்கு வந்தோம் என்பதை மறக்கவில்லை. கல்வியும், உத்தியோகமும் ஒருபுறமிருக்க, தம்மைப்போன்ற ஏழைக் குழந்தைகளை தேடிப்போய், தாம் கற்றதைக் கற்றவிதத்திலேயே, இலவசமாக, பொறுமையுடன், அவர்களுக்குப் போதிக்கிறார்கள்.

    `எல்லாரும் திட்டினா, பாவம், அதுங்க எங்கே போகும்?’ என்கிறாள் ஆனந்தி.

    வேறு சிலர், முதியோர் இல்லத்திற்குச் சென்று தம் வாத்திய இசையை வழங்கி, அவர்களை மகிழ்விக்கிறார்கள்.

    இவர்கள் யாருக்கும் தாம் நீண்ட காலம் சிரத்தையாகக் கற்ற வித்தையால் பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுவதில்லை.

    நம்மாலும் பிறருக்கு உதவ முடிகிறது, நாம் செய்யும் காரியத்தால் பிறர் வாழ்க்கையில் சிறிது மகிழ்ச்சி கூடியிருக்கிறது என்ற நிதரிசனமே செய்யும் நற்காரியத்தில் அவர்களைத் தொடர்ந்து ஈடுபட வைக்கிறது.

    ஒரு ஆனந்தி தன்னைப்போன்ற பத்து ஆனந்திகளை உருவாக்குவாள்.

    தொடருவோம்

    Share
  • புறநானூற்றுப் பாடலில் தொழிற்சார் குடிகள் மானிடவியல் பார்வை  

    -த. ஷெர்ளின் எமிலெட்

    முன்னுரை 

    சங்க காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெவ்வேறு இடத்தில் தங்கி வாழ்ந்து வந்தனர். இவர்களிடம் சாதிப் பிரிவினைகள், குலப்பாகுபாடு உள்ளிட்டவை காணப்படவில்லை. இவர்கள் தங்களுக்கான உணவு தேடுவதையே முக்கியப் பணியாகக் கொண்டிருந்தனர். நிலவுடைமைச் சமுதாயம் தோன்றிய பின்னர் ஏற்பட்ட உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியால் தொழில் பிரிவினைகள் தவிர்க்க முடியாதவை ஆயின. அந்த தொழில் பிரிவினைகளே காலப்போக்கில் தொழில்சார் குடிகளாகவும் சாதிகளாகவும் உருவாகக் காரணமாயின எனலாம். இவை மானுடவியல் நோக்கில் புறநானூற்றுப் பாடல்களில் எங்ஙனம் இடம்பெற்றுள்ளன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    தொழிற்சார் குடிகள்

    தொழில் அடிப்படையில் பிரிந்துசென்ற மக்கள் நாகரிகம் வளர வளரத் தத்தம் இனத்திற்கென்று வாழிடங்களையும் அகப்புற வாழ்வியல் கூறுகளையும் வரையறைச் செய்துகொண்டு தங்களை அடையாளப் படுத்திக்கொண்டனர். “சங்க காலத்தில் மக்களின் தொழில் அடிப்படையில் குலங்கள் அமைந்திருந்தன. அந்தணர், ஆயர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், துடியர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், வண்ணார், வள்ளுவர், வாணிகர், வேடர், வேளாளர் என்பவர் சங்ககாலக் குலமக்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்” (இராமகிருஷ்ணன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கிய பண்ணை, 2012.) என்று ஆ. இராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். சமூகப்படி மலர்ச்சியின் வழியாக நிலம், மக்கள்,தொழில் என்பதன் பேரில் விரிந்து சூழல் சார்ந்த தேவை சார்ந்த வெவ்வேறான தோற்ற முகத்தினைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

    குயவர்

    பண்டைய மக்களின் வாழ்வியலோடு இருந்தது மண்பாண்டமாகும். பிறப்பு முதல் இறப்பு வரை மக்கள் வாழ்வில் மண்பாண்டம் தேவைப்பட்டது. மண்பாண்டம் செய்வோர் குயவர் என்னும் பெயரில் அழைக்கப்பட்டனர். அன்றாடப் பயன்பாட்டிலான வட்டில், குழிசி, அடுகலம், பானை, குடம், தானியக் கலன்களாகக் குதிர், மஞ்சிகை, இறந்தவர்களை உள்ளிட்டுப் புதைக்கும் ஈமத்தாழி என மனித வாழ்வில் நீட்சியாகக் குயவனின் உற்பத்தி நீள்கிறது. மண்ணை உருவாக்கும் மனித வாழ்வியல் நோக்கிலான பரந்த பண்பாட்டு அறிவு நுட்பத்தினைப் பெற்றவர் குயவர். பசிய மண்ணைத் திகிரியிலிட்டு கலன்களை வனைவதிலும், வனைந்த கலன்களைச் சூழையிட்டுத் திடப்படுத்துவதிலும் கைதேர்ந்தவராகக் குயவர்கள் இருந்தனர் என்பதைப் புறப்பாடல் வழியாக அறிய முடிகிறது.

    “கலம்செய் கோவே! கலம்செய் கோவே!
    இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
    அகல்இரு விசும்பின் ஊன்றும் சூளை
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!”  (புறம் : 228:1-4)

    இவர்கள் பிணமிட்டுப் புதைக்கும் ஈமத்தாழிகள் செய்யப் பணிக்கப்பட்டிருக்கின்றனர் தாழிகளுக்கான அளவு, வடிவம் தேவையின் அறிவு என்பது குயவரைச் சார்ந்து அமைகிறது. பெரிய கலன்களைச் செய்யும் குயவர்கள் ஊர்களிலிருந்து பல்வேறு தேவைகளை நிவர்த்திச் செய்தனர் என்பதை அறிய முடிகிறது. இன்றும் குயவர்கள் மண்பாண்டத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் மண்பாண்டத் தொழில் நலிவடைந்த நிலையிலையே உள்ளது. அலுமினியம், சில்வர் போன்ற பாத்திரங்கள் நீடித்து உழைக்கும் என்ற காரணத்தால் தற்போது மண்பாண்டப் பொருள்கள் மக்கள் வாழ்வில் தேவை இழந்து வருவதைக் காணலாம். மக்கள் பயன்பாட்டில் தேவை உள்ளவரை மட்டுமே நிலைப்பெற்றிருக்கும் பொருட்கள் தேவையில்லாதபோது வழக்கிழந்து விடுகிறது என்பதையும் மானுடப் பண்பாட்டின் மூலம் நாம் உணரமுடிகிறது. தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் குயவர்களின் தொழில் நலிவடைவது ஒருபுறம் இருக்கக் கொடிய வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊர்புறங்களில் மண்பாண்டங்களினால் செய்த பாத்திரங்களிலேயே உணவு சமைத்துக் கொடுப்பதையும் காணமுடிகிறது. 

    கொல்லர்

    உலோகப் பொருட்களிலான கருவிகளைச் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்பட்டனர். பொன்னாலான அணிகலன்கள் மற்றும் உபயோகப் பொருட்களைச் செய்வோர் ‘பொற்கொல்லர்’ என்றும், இரும்புக் கருவிகளைச் செய்வோர் கருங்கைக் கொல்லர் என்றும் அழைக்கப்பட்டனர். உற்பத்தியைத் தரும் எண்ணத்தோடு தீயில் உழலும் “கருங்கைக் கொல்லரை” வன்மையானவராகப் பாடப்பட்ட பல பாடல்களின் வழி கொல்லர்களின் அனுபவம் சார்ந்த வாழ்வியலை உணரமுடிகிறது.

    “வில்உழுது உண்மார் நாப்பண், ஒல்லென
    இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப”  (புறம் 170:4-5) தீயின் உக்கிரத்துடனான வன்தொழில்தனைக் கருங்கைக் கொல்லர் வாழ்வியல் தொழிலாக மேற்கொண்டனர். இன்று பொன்னை உருக்கி ஆபரணம் செய்வோர் தட்டார் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். பொன்னை உருக்கி ஆபரணம் செய்யும் தொழில் பரவலாக காணப்படுகின்றது. இரும்பை உருக்கிக் கருவிகள் செய்பவர்களை கருமான் என்றழைக்கின்றனர். இயந்திரத்தின் உதவியுடன் கருவிகள் செய்வதின் மூலம் கருமான் தொழில் அழிந்து வருவதை தற்போது காணமுடிகிறது. 

    தச்சர்

    உழைப்பு, ஓய்வு எனும் வாழ்க்கை முறைமையினின்று விலகி ஓய்வற்ற நிலையில் மரத்தாலான சமுதாயத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு உழைக்கும் ஒரு சமூக அச்சாகத் தச்சரைக் கொள்ளலாம். “தச்சர்கள் மக்கட்கு வேண்டிய தட்டுமுட்டுச் சாமான்களையும், வண்டிகளையும், தேர்களையும் செய்து கொடுத்தனர். தேர் செய்வது அன்றைய தச்சர்களின் தலைமையான கடமையாயிருந்தது” என்று அ.தட்சிணாமூர்த்தி கூறுகின்றார். அரசின் படைகளுக்கு வேண்டிய பொருட்கள், உழவுக்கு வேண்டிய பொருட்களைச் செய்தனர். மாதம் ஒன்றில் தேர்கள் எட்டு செய்ய வல்ல தச்சன் ஒருவன் ஒருமாதம் முயன்று வலிமையாகச் செய்த ஒரு தேர்க்காலை போல என்று தச்சரின் பெருமையை பின்வரும் புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.

    “…………வைகல்
    எண்தேர் செய்யும் தச்சன்
    திங்கள் வலித்த கால்அன் னோனே”  (புறம் : 87: 3- 5) இன்றும் தச்சர்கள் ஆசாரி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். மக்களுக்கு வேண்டிய மரச்சாமான்களைச் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்கின்றனர். தச்சர்கள் தங்களது வேலையைக் குலத்தொழிலாகச் செய்து வருகின்றனர். தற்காலச் சமூகத்தில் பல்சாதிப் பிரிவினரும் தச்சு வேலை செய்கின்றனர்.

    நெசவர்

    பண்டைத் தமிழர்களின் முக்கியத் தொழில்கள் வேளாண்மையும், துணி நெய்தலுமாகும். கலிங்கம், அறுவை என்ற சொற்களால் சுட்டப்பெறும் ஆடை உற்பத்தியை மேற்கொள்பவர்கள் காருகர், நெசவர், துன்னர் என்றழைக்கப்பட்டனர். “ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் இயற்கையில் கிடைத்த இலைகளையும், தழைகளையும் ஆடையாகப் பயன்படுத்தியுள்ளான். காலம் மாற மாற மக்களின் நுண்மையான அறிவினால் பருத்தியிலிருந்து பஞ்சை எடுத்து நூற்று ஆடையாக நெய்யும் முறையைக் கற்றுக் கொண்டான். ஆடைதான் மனிதனின் அடையாளமாகவும், பண்பாட்டு நாகரிகச் சின்னமாகவும் விளங்குகின்றது. நெசவுத் தொழில் வீட்டுத் தொழில்களில் முக்கியமானது. பண்டையத் தொழில்களுள் விவசாயத்துக்கு அடுத்து மக்கள் நாகரிகம் அடையத் தொடங்கியதும் கையாண்ட முதற் கைத்தொழில்” என்று கலைக்களஞ்சியம் கூறுகின்றது. அயராது இரவிலும், பகலிலும், நூல் நூற்கும் பணியில் நெசவர் குடிப்பெண்கள் இருந்தனர். இவர்களைப் புலவர்கள் “பருத்திப் பெண்டீர்” என்றழைத்தனர் என்பதை

    “பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து” (புறம்: 326-5)

    “பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன” (புறம்;: 125 -1) எனும் புறநானூற்றுப் பாடலடிகள் வாயிலாக அறியலாம். ‘மரவுரி’ ஆடை தொடங்கி அரவுரியன்ன ஆடை என்ற மரபு வளர்ச்சியின் தொடர்ச்சியாகப் பருத்தி, பட்டு, எலிமயிர் முதலியவற்றால் ஆடை நெய்தனர். மேலும் கைம்பெண்களும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் என்பதைக் கீழ்வரும் நற்றிணைப் பாடல்வாயிலாக அறியலாம்.

    “ஆள்இல் பெண்டிர் தாளின் செய்த
    நுணங்குநுண் பனுவல் போல” (நற் 353: 1-2) தற்காலத்தில் நாகரிக வளர்ச்சியின் காரணமாகத் தொழிற்கூடங்களில் இத்தொழில் நடைபெறுவதால் நூல் நூற்கும் பணியை வீடுகளில் மேற்கொண்டு வந்தவர்கள் வறுமைகோட்டுக்கு உள்ளாகியுள்ள நிலைமையைக் காணமுடிகிறது.

    சங்குத் தொழில்

    சங்கு வேலைச் செய்தவர்கள் நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்தனர். யாகம் புரிதல் முதலிய தமக்குரிய கடமைகளை நிறைவேற்றாத அந்தணர்கள் சிலர் இத்தொழிலில் ஈடுபட்டனர். சங்குகளை வளையாக அறுத்து தொழில் செய்பவர்க்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர் கொடுத்து அழைத்துள்ளனர் என்பதைப் பின்வரும் பாடல் சுட்டிநிற்கின்றது.

    “வேளாப் பார்ப்பான் வாள்அரம் துமித்து
    வளைகளைத் தொழித்த கொழுந்து”  (அகம் : 24:1-2)

    “வேளாப்பார்ப்பான் என்பதன் பொருள் வேள்விச் செய்யாத பார்ப்பான் என்பதாகும். அதாவது விசுவ பிராமணர். சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர் நாகரிகமாகக் கருதினார்கள். அன்றியும் அது மங்கலாமாகவும் கருதப்பட்டது. கைம்பெண்கள் தவிர ஏனைச் சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் சங்கு வளை அணிந்தார்கள்” என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறியுள்ளார். அரண்மனையில் வாழ்ந்த அரசகுமாரிகள் முதல் குடிசையில் வாழ்ந்த ஏழைமக்கள் வரை அனைவரும் சங்குவளை அணிந்தனர். கண்ணன் ருக்மணியை மணந்து கொள்ள விரும்பினான் ஆனால் ருக்மணியின் குடும்பத்தினர் அவளைச் சிசுபாலனுக்கு மணம்செய்து தருவதில் பிடிவாதம் காட்டினர். அத்திருமணம் நடைபெற இருக்கும் சமயத்தில் கண்ணன் ருக்மணியைத் தூக்கிச் சென்று அவள் கரத்தில் சங்கினாலான வளையல் ஒன்றினை அணிவித்தாதாகவும் செய்திகள் உள்ளன. தற்காலத்தும் இத்தொழில் விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    வண்ணார்

    வண்ணார் என்றழைக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் ஆறுகளின் கரைகளிலிருந்த வண்ணார்த்துறை என்றும் பகுதிகளில் பணிபுரிந்தனர். “வண்ணாருக்குக் ‘காழியர்’ என்னும் பெயரும் வழக்கத்தில் உள்ளது. வண்ணாரப் பெண் ‘புலைத்தி’ எனச் சுட்டப்படுகிறார். இதனால் அன்று இவர்கள் புலையர்களோடு ஒத்தவர்களாக் கருதப்பட்டமை தெளிவாகும்” என்று அ. தட்சிணாமூர்த்தி சுட்டிக்காட்டுகின்றார். இவர்கள் சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ள குடிகளாகக் காணப்பட்டனர். இவர்கள் சலவைச் செய்த துணிகளை கஞ்சியில் நனைத்துக் காய்ச்சி விறைப்புடன் காய வைத்தமையை அகநானூற்றுப் பாடல் வாயிலாக அறியலாம்.

    “பசைவிரல் புலைத்தி நெடிதுபிசைந்து ஊட்டிய
    பூந்துகில் இமைக்கும்” (அகம் 387.5-6).

    வண்ணார்கள் மிகவும் வறுமையில் வாடினார்கள். அவர்கள் களர் நிலத்தில் ஊற்றுக் கிணறுகளைத் தோண்டித் துணி வெளுக்கும் தொழிலில் ஈடுபட்டனர் என்பதை,

    “வளன் புலைத்தி எல்லித் தோய்த்தப்
     புகார்ப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு” (நற்: 90: 3-4) எனும் பாடலடிகள் புலப்படுத்தி நிற்கிறது. ஆடைகளைத் துவைக்கும் செயலில் இருந்து ஓய்வுப் பெறாத வறுமையுற்ற புலத்தி என்று அவர்களின் வறுமை நிலையையும் இப்பாடல் எடுத்துக் கூறுகிறது. இன்றைய சமுதாயத்திலும் வறுமைக்கோட்டின் கீழ் இச்சாதி மக்கள் உள்ளனர். 

    புலைத்தி

    தொழில்முறையை அடிப்படையாகக் கொண்டு கீழ்நிலை மக்களாக்கப்பட்ட புலைத்தியர் உடை, ஆடை, துகில், கலிங்கம் எனப் பல்வேறு வகையான ஆடைகளை வெளுக்கும் தொழிலினை மேற்கொண்டிருந்தனர். இத்தொழிலுடன் இவர்கள் ஆடைகளுக்கு வண்ணமிடும் தொழிலையும் செய்து வந்தனர். அரசர், வணிகர், அந்தணர் ஆகியோர் செல்வ நிலையில் காணப்பட்டனர். தங்களுயை துணிகளை வேலையாட்கள் மூலமாகச் சலவை செய்து அணிந்து கொள்ளும் வசதி அவர்களிடமே காணப்பட்டது. சங்க காலத்தில் ஒரு பிரிவினர் மாளிகையிலும், ஒரு பிரிவினர் மழையில் நனைந்த சுவரைக் கொண்ட பழங்கூரைகளிலும் வாழ்ந்தனர். புலைத்தியர் அனைத்து நாட்களிலும் சலவை செய்யப் பணிக்கப்பட்டனர். ஆடையை வெளுத்தவுடன் சாயமிட்டுச் சுருக்கங்கள் நீக்குமாறு ஆடையினை உதறிக் காயவைத்தனர் என்பதை,

    “நலந்தகைப் புலைத்தி பசைதோய்த்து எடுத்துத்
    தலைப்புடைப் போக்கித் தன்கயத் திட்ட”  (குறு: 330:1-2) என்ற குறுந்தொகைப் பாடல்வாயிலாக அறியலாம். புலைத்தியர் செய்த தொழிலுக்கு எவ்வாறான ஊதியம் பெற்றனர் என்பது இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. இழிந்த குடியினர் என்ற பொருளிலேயே அவர்கள் வழங்கப்பட்டனர். முல்லை, மருதம், பாலை ஆகிய நிலப்பகுதியில் வாழ்ந்தனர். புலைத்தியர் சமூகத்தில் இழிந்தவராக கருதப்பட்டனர் என்பதை திவாகர நிகண்டு முன்வைக்கிறது.

    “குணுக்கர் வங்கர்  கவுண்டர் கனகதர்
    இழிஞர் கொலைஞர் புலைஞர் கன்றாங்கு
    இசையும் பெயர் சண்டாளர்க்கும் எய்தும்” (திவாகரம்: 212)

    தொடக்க காலத்தில் துணிவெளுக்கும் தொழிலினை மட்டுமே செய்துவந்த இவர்கள் பின்னர் இழவு வீடுகளில் இறுதிச்சடங்கு செய்பவர்களாகவும், திருமணச் சடங்குகளில் மனைவிரித்தல் முதலான பணியிலும் பிறப்பு, மற்றும் சடங்குவீடுகளில் தீட்டுக்கழிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

    புலையன்

    சங்க இலக்கிய இனக்குழு சமுதாயத்தில் புலையன் என்ற இனம் காணப்படுகின்றது. புலையர்கள் பிணஞ்சுடும் தொழிலைச் செய்து வந்துள்ளனர். பிணஞ்சுடு களத்தின்கண் பாடையை நிறுத்திய பின்பு பரப்பிய புல்லின்மேல் கள்ளுடன் படைக்கப்பட்ட உணவைப் புலையன் பிணத்திற்கு படைப்பான் என்ற செய்தியைப் புறநானுற்றுப்பாடல் வாயிலாக அறியலாம்.

    “கள்ளி போகிய களரி மருங்கின்,
     வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளோடு
     புல்லகத்து இட்ட சில்அவிழ் வல்சி
    புலையன் ஏவ புல்மேல் அமர்ந்து உண்டு” (புறம்: 360:16-19)

    இன்று சுடுகாடுகளில் பிணத்தைச் சுட நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி வருவதால் இச்சாதிமக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக இல்லை. இதனால் தங்கள் வாழ்வியலுக்கான வசதியைத் தேடி பிற வேலைகளுக்குச் செல்கின்றனர். இந்நிகழ்வு மானிடவியலின் வளர்ச்சிப் படிநிலையைக் காட்டுகிறது.

    முடிவுரை

    சங்ககாலத் தொழில்முறைகள் இயற்கையைச் சார்ந்ததாகவே அமைந்திருந்தன. தொழிற் கருவிகளின் வருகை அதனைக் கையாளுதலின் அடிப்படையில் மனிதனுக்கு மனிதன் தொழிற்சார் பிரிவினைகள் ஏற்பட்டுள்ளதை எட்டுத் தொகைப் பாடல்களில் ஒன்றான புறநானூற்றின் மூலம் அறியமுடிகிறது. இதனை மானுடவியல் ஆய்வாளர்களான பக்தவத்சல பாரதி போன்றோர்கள் உறுதிசெய்கின்றனர்.

    பார்வை நூல்கள்

    • இராமகிருஷ்ணன் – தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 2012.
    • தட்சிணாமூர்த்தி – தமிழர் நாகரீகமும் பண்பாடும், யாழ் வெளீயீடு, சென்னை – 600041, 1999.
    • கலைக்களஞ்சியம் தொகுதி – 12, தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை, 1968.
    • மயிலை சீனி. வேங்கடசாமி – சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை : 600014, 2005.
    • எட்கர் தர்சன் – தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி – II, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
    ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி),
    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

     

  • கொங்கு வேளாளர்களின் சடங்குகளில் பெண்களுக்கான  உரிமைகள்

    -த.ஜோதிமணி

    முன்னுரை

    பண்டைய காலத்தில் மனிதன் தன் வாழ்வில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடத் தொடங்கினான். அவற்றில் கண்ணேறு கழித்தல், புனிதமாக்குதல், பெரியவர்களிடம் ஆசி பெறுதல், உற்றார் உறவினர்களுக்கு மதிப்பளித்தல் போன்ற காரணகாரியத்துடன் கூடிய பல்வேறு செயல்களைச் செய்தான். அதுவே காலப்போக்கில் சடங்குகளாக மாறியது.

    “பரம்பரை வழக்கமாகச் செய்துவரும் செயல்களே சடங்குகளாம். இவை நூல் முறையானும் சான்றோர் நெறியாலும் வழிவழி வருவன. இவற்றை அறிந்த முதியோர் ஏனையோற்கு வழிகாட்ட இவை பின்பற்றப்படுபவை.”1 என்று சங்கத்தமிழரின் வழிபாடும் சடங்குகளும் என்னும் நூலில் மு.சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.

    சடங்குகள் நம் முன்னோர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக  தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவது. அதில் ஒவொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு உண்டு. சில சடங்குகளில் பெண்களின் பங்கும் இன்றியமையாததாக உள்ளது. சடங்குகளில் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் கொடுக்கப்படுகிறது  என்பதை ஆராய்வதன் மூலம், அவர்களுக்கான   உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமையாக நடத்திய காலத்தில் அவர்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறியமுடியும். எனவே சடங்குகளின் மூலம் கொங்கு வேளாளர் இனப்  பெண்களின் முந்தைய நிலையை வெளிப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    சடங்குகளில் பெண்கள் பங்கேற்கும் உரிமை

    கொங்கு வேளாளர்கள் தங்கள் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் குறிப்பிட்ட சடங்குகளை வகுத்து வைத்துள்ளனர். பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, வளைகாப்புச் சடங்கு, எழுதிங்கள் சீர், இறப்புச் சடங்கு போன்ற அனைத்துச் சடங்குகளும் கொங்கு வேளாளர்களால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகின்றன. அவைகளுள் சில தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இச்சடங்குகள் அனைத்திலும் பெண்களும் பங்கு பெறுகின்றனர்.

    இவர்களின் சடங்குகள் அனைத்திலும் ‘எழுதிங்கள் சீர்’ எனப்படும் மங்கலச் சடங்கினைச் செய்துகொண்ட பெண்களே முன்னுரிமை வகிக்கின்றனர். இப்பெண்கள் ‘எழுதிங்கள் காரி’ அல்லது ‘சீர்க்காரி’ என்று அழைக்கப்படுகின்றனர். திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் இருக்கும் சுமங்கலிப் பெண்களே இச்சீரினை செய்துகொள்ளமுடியும். அதன் பின்னரே இப்பெண்கள் அனைத்துச் சடங்குகளிலும் முன்னின்று செய்யும் உரிமையைப் பெறுகின்றனர்.

    பிறப்புச் சடங்குகளில் பெண் பெண்களுக்கான உரிமை

    குழந்தை பிறந்ததும் முதல் சடங்காக ‘சேனை ஊட்டுதல்’ மேற்கொள்ளப்படுகிறது. சேய் + நெய் + ஊட்டுதல் =  சேனை ஊட்டுதல் என வழங்கப்படுகிறது. சர்க்கரைத் தண்ணீர், தேன், தாய்ப்பால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் குழந்தையின் நாக்கில் தடவுதல் சேனை ஊட்டுதல் அல்லது சேனை தொடுதல் எனப்படுகிறது. சில இடங்களில் இதனை ‘செவ்வெண்ணை வைத்தல்’ என்றும் கூறுவர். சேனை ஊட்டுபவரின் குணநலன்கள் குழந்தைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதால், நற்குணங்கள் நிறைந்த சுமங்கலிப் பெண்களே இதற்குத் தகுதி உடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

    பூப்புச் சடங்குகளில் பெண் பெண்களுக்கான உரிமை

    பூப்புச் சடங்குகளை, பூப்பெய்திய உடன்செய்யும் சடங்குகள், ஏழு அல்லது ஒன்பதாம் நாள் சடங்குகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பூப்புச் சடங்கில் தாய்மாமன் முன்னுரிமை பெற்றாலும் அது பெண்ணுக்கான சடங்கு என்பதால் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இச்சடங்கு முழுவதும் எழுதிங்கள் செய்துகொண்ட சுமங்கலிப் பெண்களே செய்கின்றனர். தாய் மாமன் மனைவி மட்டும் எழுதிங்கள் செய்துகொள்ளாமல் இருந்தாலும் பங்கேற்கலாம்.

    பூப்பெய்திய உடன் செய்யும் சடங்கு 

    பூப்பெய்திய பெண்ணை மூன்று அல்லது ஐந்து அத்தை முறையுடைய சீர்காரப் பெண்கள் மஞ்சள் கலந்த நீரினைக் கொண்டு நீராட்டுவர். பின்னர் தாய்மாமன் வீட்டினர் எடுத்து வந்த புத்தாடையை அணிவித்து, கையில் சிறிய இரும்புத் துண்டு, வேப்பிலை, மைகோதி போன்றவற்றைக் கொடுத்து தாய்மாமன் கட்டிய குடிசையில் விடுவர். அப்போது வாழைப்பழம், நெய், சர்க்கரை, பால் போன்றவற்றை தாய்மாமன் கொண்டுவந்த புதிய வட்டிலில் போட்டுப் பிசைந்து உண்ணக் கொடுப்பர். தேன், தினைமாவு அல்லது பொட்டுக்கடலையுடன் வெல்லம் சேர்த்த உருண்டை ஆகியவற்றை பூப்பெய்திய பெண்ணுக்கும் விருந்தினருக்கும் கொடுக்கின்றனர்.

    ஏழு அல்லது ஒன்பதாம் நாள் சடங்கு

    ஏழு அல்லது ஒன்பதாம் நாள், பூப்பெய்திய பெண்ணை புனித நீராட்டி வீட்டிற்கு அழைக்கும் சடங்கு நடைபெறும். நீராட்டுவதற்காக நிறைகுடம் நீரை அத்தை முறையுடைய சுமங்கலிப் பெண்கள் கொண்டுவருவர். பின்னர் பூப்பெய்திய பெண்ணைக் கிழக்குப் பார்த்தவாறு முக்காலியின் மீது அமரச்செய்து, எள் சலிக்கப் பயன்படும் இரும்புச் சல்லடையை தலைக்கு மேல் மூன்று பெண்கள் பிடிக்க ஒரு பெண் இரும்புப் படியில் நீரை எடுத்துக்  கொடுக்க மற்றொரு பெண் அதனை வாங்கி மூன்று முறை ஊற்றியபின்  மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்த செஞ்சோற்று உருண்டைகளை இடம் வலமாகச் சுற்றி மூன்று திசைகளில் போடுவர்.

    ‘சருவச்சட்டி’ எனப்படும் வாயகன்ற பாத்திரத்தில் மஞ்சள் கலந்த நீரையெடுத்து அதனை தலைக்குமேல் இடம் வலமாக மூன்று முறை சுற்றியபின் ஊற்றுவர். அப்போது வண்ணார் பந்தம் பிடிப்பார். நாவிதர் உடனிருந்து சடங்குகளில் பங்கேற்பார். இதனைச் ‘சோறு சுற்றிப்போட்டு தண்ணீர் ஊற்றுதல்’ என்று கூறுகின்றனர். மஞ்சளும், சுண்ணாம்பும் கிருமி நாசினி  என்பதால் நச்சுக் கிருமிகளை அகற்றும் பொருட்டும் கண்ணேறு  கழிக்கும் பொருட்டும் மங்கலப் பெண்களால் இச்சடங்கு செய்யப்படுகிறது.

    தாய்மனைக் கூடை சுற்றுதல் 

    தாய்மாமன் வீட்டிலிருந்து நிறைய சீர்கள் வந்தாலும் தன் வீட்டுச்சீர் ஒன்றாவது இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் பூப்பெய்திய பெண்ணுக்குத்  தாய்மனைக் கூடை சுற்றப்படுகிறது. இதில் அரிசி, வாழைப்பழம், தேங்காய், அச்சு வெல்லம், வெற்றிலை பாக்கு, பூ போன்றவை இருக்கும். தாய் வீட்டுச் சீராக இருந்தாலும் அதனையும் அத்தை முறையுடைய எழுதிங்கள் செய்துகொண்ட பெண்களே சுற்றுகின்றனர். இக்கூடையை மூன்று அல்லது ஐந்து பெண்கள் சேர்ந்து பெண்ணின் தலைமீது இடம் வலமாகச் சுற்றி ஆசீர்வதிக்கின்றனர்.  பின்னர் வீட்டிற்கு அழைத்துவந்து வாழைப்பழம், நெய், சர்க்கரை, பால் போன்றவற்றை தாய்மாமன் கொண்டுவந்த வட்டிலில் போட்டுப் பிசைந்து உண்ணக் கொடுப்பர்.

    இதே போன்று மங்கலப் பெண்கள் தாய்மாமன் வீட்டுச்சீர்களையும் பூப்பெய்திய பெண்ணைச் சுற்றியபின் பூ, பொட்டு வைத்து ஆசீர்வதிக்கின்றனர். இவ்வாறு பூப்புச் சடங்குகள் முழுவதிலும் பெண்களே முன்னுரிமை பெறுகின்றனர்.

    திருமணச் சடங்குகளில் பெண்களுக்கான உரிமை

    மனிதனின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெறுவது திருமணம் ஆகும். திருமணத்தின்போது ஆண், பெண், இருவருக்கும் சடங்குகள் செய்யப்படுகின்றது. சில சடங்குகள் இருவருக்கும் பொதுவானதாகவும் சில மாறுபட்டதாகவும் இருக்கும்.

    நிச்சயதார்த்தம்

    நிச்சயதார்த்தம் அல்லது நிச்சய தாம்பூலம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வில் எழுதிங்கள் செய்துகொண்ட மணமகனின் பங்காளி வீட்டுப் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர். நிச்சயதார்த்த நிகழ்வின்போது   வண்ணார் தரையில் விரிக்கும் மாற்றுத் துணியின்மீது மணமகன் வீட்டில் இருந்து கொண்டுவந்த பட்டுப்புடவை, பழ வகைகள், மிட்டாய்கள், வெற்றிலைப் பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பூலத் தட்டுகள் ஏழு அல்லது ஒன்பது என்னும் ஒற்றைப் படை எண்ணிக்கையில் வைக்கப்படுகிறது. அதன் முன்னர் மணப்பெண்ணை கிழக்குப் பார்த்தவாறு அமரச்செய்து, பூசை செய்த பின்னர்க் கொண்டுவந்த பட்டுப்புடைவையை மணமகளை உடுத்தச்செய்வர். பின்னர் மணப்பெண்ணின் கன்னத்திலும் கைகளிலும் சந்தனம் பூசி, குங்குமம், பூ போன்ற மங்கலப் பொருட்களை வைத்து சீர்காரப் பெண்கள் ஆசீர்வதிப்பர். மணமகன் வீட்டில் இருந்து கொண்டுவந்த தாம்பூலத் தட்டுக்களை மணப்பெண்ணின் தலையை இடம் வலமாகச் சுற்றியபின் இப்பெண்ணை உறுதியாக திருமணம் செய்துகொள்கிறோம் என்பதற்கு அடையாளமாக ‘உறுதி நகை’ எனப்படும் பொன் நகையை மாப்பிள்ளையின் சகோதரி  அணிவிப்பார். பின்னர்த் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு போன்றவற்றைப்  பெண்ணின் மடியில் கட்டி வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களிடம் கும்பிடு வாங்குவர். இச்சடங்குகள் அனைத்தும் எழுதிங்கள் செய்துகொண்ட பெண்களால் செய்யப்படுபவையாகும்.

    சீர் அரிசி

    திருமணச் சீருக்குத் தேவையான அரிசியை மணமகன் வீட்டு மங்கல மகளிர் தயார் செய்வர். பழங்காலத்தில் நெல்லை வேகவைத்து, உலர்த்தி, குற்றி அரிசியாக்குவதை ஒரு சடங்காகவே செய்தனர். இன்றளவும் இச்சடங்கு செய்தாலும் காலம் மாறிவருவதற்கேற்பத் தற்போது வீட்டில் பயன்படுத்தும் அரிசியே சீருக்காக சீர்காரப் பெண்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    முகூர்த்தக்கால் நடுதல்

    திருமணத்திற்கு இருநாட்களுக்கு முன்பு நடைபெறும் இந்நிகழ்வினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்குவேளாளர்கள்  கருதுகின்றனர். அருமைக்காரர் மற்றும் பிற ஆண்களால் கொண்டு வரப்பட்ட அரசு அல்லது வெப்பாலை போன்ற பால் உள்ள மரங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறு கிளையை எழுதிங்கள்சீர் செய்துகொண்ட மங்கல மகளிர் மூன்று அல்லது ஐந்து பேர் பிடித்துக்கொள்ள அருமைக்காரர் அதில் நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து மணப்பந்தலின் ஈசானிய(வட கிழக்கு) மூலையில் உள்ள பந்தல்காலில் கட்டுவார்.

    சீர் தண்ணீர் கொண்டு வருதல் 

    கொங்கு வேளாளர்களின் திருமணம் பெண் வீட்டில்தான் நடைபெறும். எனவே மணமகன் வீட்டில் இருந்து வந்த பெண்கள் திருமணச் சீருக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவருவது ஒரு சடங்காகவே செய்யப்படுகிறது. “மணமகன் வீட்டு எழுதிங்கள்சீர் செய்துகொண்ட மங்கல மகளிர் ஐந்து அல்லது ஏழு பேர் பெண் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து மேளதாளத்துடன் ஊர் எல்லையில் உள்ள பிள்ளையார் கோயிலில் வைத்துப் பூசைசெய்த பின்னரே மணப்பந்தலுக்குக் கொண்டுவருவர். இந்த நீரைக் கொண்டு மணமகன் வீட்டில் இருந்து கொண்டுவந்த சீர் அரிசியைச் சமைத்து மணமக்களுக்குக் கொடுப்பர். மீதம் உள்ள தண்ணீரைச் சீருக்குப் பயன்படுத்துவர்.”2

    இன்று திருமணங்கள் மண்டபத்தில் நடைபெறுவதால் அதனைப் பெண் வீடாகக் கருதி, மண்டபத்திற்கு அருகில் சென்று சீர் தண்ணீர் கொண்டு வருகின்றனர். தற்போது சில இடங்களில் இச்சடங்கு இல்லாமல் போய்விட்டது.

    நீராட்டுதல்

    அனைத்து இன மக்களின் திருமணங்களிலும் மணமக்களுக்கு நீராட்டுதல் ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. கொங்கு வேளாளர்களின் திருமணத்தின்போது நடைபெறும் இச்சடங்கினை ‘செஞ்சோறு அஞ்சடை கழித்தல்’ என்கின்றனர். இது மணமகன், மணமகள் இருவருக்கும் தனித்தனியாக செய்யப்படும் ஒத்த சடங்கு ஆகும். எழுதிங்கள் சீர் செய்துகொண்ட சீர்காரப் பெண்களே நீராட்டும் சடங்கினைச் செய்கின்றனர்.

    நாட்டுக் கல்லிற்கு கங்கணத்துடன் வெற்றிலையும் சேர்த்துக் கட்டி அதன் முன்னர்  நெல் நிரப்பி தார்க்கருது செருகப்பட்ட நிறைநாழியை வைத்துப் பூசை செய்வர்.  பின்னர் மணமகனை கிழக்குப் பார்த்தவாறு முக்காலியின் மீது அமரச் செய்வர். அதன் பின்னர் நாவிதர் கொடுக்கும் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்த செஞ்சோற்று அடைகளை மணமகனின் இரு கால்கள், கைகள், தலை போன்றவற்றின் மீது வைத்து பூசை செய்த பின்னர் அதனை இடம் வலமாகச் சுற்றி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு திசையில் போடுவர். பின்னர் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டி வண்ணார் தரும் மாற்று உடையைக் கொடுப்பர். இந்நிகழ்வின்போது வண்ணார் பந்தம் பிடிப்பார். மணமகளுக்கும் இவ்வாறே செய்யப்படுகிறது. இவ்வாறு சீர்காரப் பெண்கள் மணமக்கள் இருவருக்கும் புனித நீராட்டும் உரிமையைப் பெறுகின்றனர்.   

    இணைச்சீர்

    இணைச்சீர் என்பது மணமகனுக்கு இணையான உரிமையை அவனின் சகோதரிக்கும் கொடுப்பதற்காகச் செய்யப்படும் சடங்கு ஆகும். அரசாணி, பேய்க்கரும்பு போன்றவை வைக்கப்பட்டு மணவறை போன்றே அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மணமகனை கிழக்குப் பார்த்து அமரச் செய்வர். அதன் வலது புறத்தில் பேழையில் மணமகனின் சகோதரியை நிறுத்தி அருமைக்காரர் பூசை செய்ய, அடுத்ததாக சீர்காரப் பெண்கள் பூசை செய்வர். மணமகளின் கூரைப்புடவையை கொசுவம் போல் மடித்து அதன் ஒருபுரத்தை சகோதரியின் கையிலும் மறுபுரத்தை மணமகனின் இக்கத்தில் கொடுத்து பூசை செய்வது இச்சடங்கின் சிறப்பு ஆகும். இச்சீரில் மணமகனின் சகோதரி மட்டுமின்றிப் பிற சீர்காரப் பெண்களின் பங்களிப்பும் இருக்கும். “மணமகன் – சகோதரி தொடர்பு திருமணத்தால் குறையாது; சீர் வரிசையில்  சமபங்கு அளிப்பேன் என்பதைக் குறிக்கவே இணைச்சீர் செய்யப்படுகிறது. பெண்ணுக்குச் சம உரிமை இல்லாத அந்தக் காலத்திலேயே கொங்கு வேளாளர்கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுத்தனர். ஆணிற்கு இணையாகப் பெண்ணிற்கும் உரிமையுண்டு என்பதை உணர்த்தும் சடங்கே – சட்ட விதியே இணைச்சீர் எனலாம்.”3   

    தாய்க்கான உரிமை

    கொங்கு வேளாளர் திருமணங்களில் மணமகனின் தாய்க்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்ணை மணம் முடிக்கச் செல்லும் மணமகன் தாயுடன் சேர்ந்து ஒரே தட்டில் பால் சோறு உண்பார். இனிமேல் மனைவியின் கையால் சாப்பிடப்போகும் மணமகனுக்கு இது தாயின் கையால் போடப்படும் கடைசி உணவாகக் கருதப்படுகிறது. மணப்பெண்ணை மணம் முடிப்பதற்காக மணமகன் தாயிடம் ஆசிபெற அவளும், பூங்கொடிக்கு மாலையிடப் போய் வா மகனே என வாழ்த்தி வழியனுப்பி வைப்பாள்.

    “மாதாவுடனே மகனாரும் வந்திருந்து
    போதவே பால்வார்த்துப் போசனமும் தான் அருந்தி”4
                                          

    சட்டுவச் சாதம்

    திருமணத்திற்கு முன் தாயின் கையால் பால் சோறு உண்ட மணமகனுக்குத் திருமணம் முடிந்ததும் மணமகள் போடும் முதல் சாதம் சட்டுவச் சாதம் ஆகும். தன் வாழ்வில் புதிதாக வந்த மணப்பெண்ணுக்கும் முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இச்சடங்கு செய்யப்படுகிறது.

    வளைகாப்பு சடங்குகளில் பெண்களுக்கான உரிமை 

    வளை + காப்பு = வளைகாப்பு`, கருவுற்ற பெண்களுக்கு ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் கண்ணாடி வளையலும் வேம்பு காப்பும் அணிவிக்கும் சடங்கே வளைகாப்புச் சடங்கு ஆகும். இதில் வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் சந்தனம், குங்குமம், பூ போன்ற மங்கலப் பொருட்களைக் கொண்டு கருவுற்ற பெண்ணை ஆசீர்வதித்து கண்ணாடி வளையல்களை அணிவிப்பர். பின்னர் ஐந்து அல்லது ஏழு உணவு வகைகளை கருவுற்ற பெண்ணுக்கு உண்ணக் கொடுத்த பின்னர் உற்றார் உறவினர்களுக்கும் விருந்தளிக்கப்படுகிறது. இச்சடங்கு பெண்ணுக்கான சடங்கு என்பதால் பெண்களே அனைத்துச் சடங்குகளையும் செய்கின்றனர்.

    எழுதிங்கள் சீரில் பெண்களுக்கான உரிமை

    எழுதிங்கள் சீர் என்பது கொங்கு வேளாளர் இனப் பெண்களுக்கு அவர்களின் தாய் வீட்டுச் செலவில் நடைபெறும் சடங்கு ஆகும். திருமணம் செய்துகொடுத்த பெண் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வாழும்போது, அவள் குடும்பத்தில் முதல் சுபகாரியம் நடக்கும் முன்பு இச்சடங்கினைச் செய்வர்.

    “கொங்கு வேளாளர் இனத்தில் மிக உயர்வான ஒழுக்கமாகப் போற்றப்படும், பெண்ணின் கற்பு நெறிக்கு சான்றாக விளங்கும் சாமி செய்தல் என்ற சீரினைப் போன்றே எழுதிங்கள் என்ற சீரும் சிறப்புத் தன்மை வாய்ந்ததாகத் திகழ்கின்றது. பெண்ணின் பிறந்த வீட்டாரால் செய்யப்படும் இச்சீரானது கொங்கு வேளாள பெண்களின் கற்பு நிலையை மெய்ப்பிக்கின்றது.”5  திருமணம் போன்றே நல்ல நாள் பார்த்தல், பந்தல் போடுதல், முகூர்த்தக்கால் நடுதல், அருமைக்காரர், வண்ணார், நாவிதர் போன்றோரை அழைத்தல், ஊர் அழைத்தல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது இச்சடங்கு ஆகும்.

    எழுதிங்கள் சீரானது பெண்ணுக்கான சடங்காக இருந்தாலும் இதனை அருமைக்காரர், வண்ணார், நாவிதர் போன்றோர் முன்னிருந்து நடத்துவர். அவர்களுடன் முன்பே எழுதிங்கள் செய்துகொண்ட பெண்கள் இருவர், தற்போது எழுதிங்கள் செய்துகொள்ளும் பெண்ணின் கணவனுடைய சகோதரி ஒருவர் ஆகிய மூன்று பெண்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

    நீராட்டுதல்

    திருமணத்தின்போது மணப்பெண்ணை நீராட்டிப் புனிதமாக்குவது போன்றே எழுதிங்கள் சீரின் போதும் பெண்ணை நீராட்டுகின்றனர். இதனை ‘ஆக்கை போட்டுத் தண்ணீர் ஊற்றுதல்’ என்பர். “சீர் செய்துகொள்ளும் பெண்ணைக் கிழக்குப் பார்த்து முக்காலியின் மீது அமரச்செய்து மூன்று செம்பு தண்ணீர் ஊற்றி நெய்யுடன் சேர்த்து பிசைந்த சோற்றை நெற்றியில் மூன்று முறை தேய்த்து, தண்ணீரை இடம் வலமாக மூன்று முறை சுற்றிப் போடுவர். பின்னர்  மூன்று செம்பு தண்ணீர்  ஊற்றிச் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்த செஞ்சோற்று உருண்டைகளை இடம் வலமாக மூன்று முறை சுற்றி மூன்று திசைகளில் போடுவர். அருமைக்காரர் மற்றும் முன்பே எழுதிங்கள் செய்துகொண்ட பெண்கள் இருவர் ஆகிய மூவரும் இச்சடங்கைச் செய்கின்றனர்.”6 செஞ்சோறு சுற்றிப்போட்டவுடன் புளியமரத்தின் இளங்குச்சியாகிய விளாரை இரண்டாகப் பிளந்து அதனை அருமைக்காரர், சீர்ப்பெண்கள் இருவர் ஆகிய மூவரும் எழுதிங்கள் செய்துகொள்ளும் பெண்ணின் தலையை இடம் வலமாக மூன்று முறை சுற்றியபின் ஒவ்வொன்றாகத் தலையில் இருந்து பாதம் வரை இறக்கி அதனை தாண்டச் செய்வர். பின்னர் மஞ்சள்பூசிக் குளிக்கச் செய்து சருவச் சட்டியில் பழம், சர்க்கரை, சாதம் போன்றவற்றை அருமைக்காரர், நாவிதர், சீர்காரப் பெண் ஆகிய மூவரும் பெண்ணின் தலையை சுற்றுவர். பின்னர் வண்ணார் கொடுக்கும் மாற்றுத் துணியை அணியச் செய்வர். அதன் பின்னர் பெண்ணைப் பேழையில் நிறுத்தி பூசை செய்தல், குழவி எடுத்தல், தினை மாவில் அச்சு வெல்லம் வைத்து ஒரே வகையான விறகினால் அடுப்பெரித்து வேகவைக்கப்பட்ட கோதை மாவினைக் கோடரியால்  பிளத்தல், நெற்றியில் சிகப்பிடல்,  போன்ற அனைத்து சடங்குகளிலும் எழுதிங்கள் செய்துகொண்ட சுமங்கலிப் பெண்களுக்குத் தனி உரிமை உண்டு.

    இறப்புச் சடங்குகளில் பெண்களுக்கான உரிமை

    கொங்கு வேளாளர்களின் அனைத்துச் சடங்குகளிலும் பெண்கள் முன்னிலை படுத்தப்படுவது போன்றே சில இறப்புச் சடங்குகளிலும் பெண்கள் பங்குபெறும் உரிமையைப் பெற்றுள்ளனர். இறந்தவருக்குப் பூசை செய்தல், எண்ணெய் அரப்பு தேய்த்துக் குளிப்பாட்டுதல், கூறை மீது சோறு போடுதல் போன்ற பொதுவான சடங்குகளை அங்குள்ள ஆண்களுடன் பெண்களும் செய்கின்றனர்.

    கோடி அழைத்தல்

    இறந்தவருக்கு இறுதியாகப் போடப்படும் புத்தாடையைக்  கோடி என்பர். இவ்வாறு கோடி கொண்டு வருபவர்களை ஊர் எல்லையில் நிறுத்தி ஒவ்வொரு கோடியாக மேளத்துடன் அழைத்து வருவர். அப்போது கோடி எடுத்து வருபவரை கிழக்குத் திசை பார்த்தவாறு நிறுத்தி மாலை போட்டு நெற்றியில் திருநீறு பூசி, சந்தனம் வைத்துப் பேழையில் கோடியை வைப்பர். அப்பேழையைக் கோடி கொண்டு வருபவரின் தலையில் வைத்து கையில் நிறை செம்பு நீர் கொடுத்து அழைத்துச் செல்வர். இவ்வாறு கோடி கொண்டு வந்தவர்கள் அனைவரையும் அழைத்துச் செல்வர். இச்சடங்கு ஆண்களுக்கான சடங்கு என்றாலும் எழுதிங்கள் செய்துகொண்ட பெண்களே செய்கின்றனர். 

    கருமாதி

    கருமாதி செய்யப்படும் நாளன்று கொள்ளி வைத்த மகனுக்குச் செஞ்சோறு சுற்றிப் போட்டுத் தண்ணீர் ஊற்றித் திருநீறு பூசுதல், இறந்தவரின் மனைவிக்கு தண்ணீர் சுற்றிப் போட்டு, குளிப்பாட்டி தாய் வீட்டார் எடுத்து வந்த புத்தாடையை உடுத்தி, கஞ்சிப் புடவை எனப்படும் வெண்மை நிற ஆடையை  தலையின் மீது முக்காடு போடுதல், போன்ற சடங்குகளை எழுதிங்கள் சீர் செய்துகொண்ட பெண்கள்  செய்கின்றனர். இதன் மூலம் மங்கலச் சடங்குகளில் மட்டுமின்றி அமங்கலச் சடங்குகளிலும் பெண்களின் பங்களிப்பு உள்ளதை அறியமுடிகிறது.

    முடிவுரை

    கொங்கு வேளாளர்கள் ஏராளமான சடங்குகளைச் செய்து வருகின்றனர். அவைகள் இன்று காலமாற்றத்திற்கு ஏற்ப மாறியும் சில மறைந்தும் போனாலும் முக்கியமான சடங்குகள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அச்சடங்குகள் அனைத்திலும் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்களுக்கான சடங்குகளில் பெண்கள் முன்நின்று செய்வது மட்டுமின்றி பிற பொதுவான சடங்குகளிலும் முன்நின்று செய்வதிலிருந்து  பண்டைக் காலத்தில் இருந்தே கொங்கு வேளாளர்கள், பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

    திருமணத்தின்போது தாயிடம் ஆசி பெற்றுச் செல்வது, சகோதரியை தனக்கு இணையாக மதிக்கும் பொருட்டு இணைச் சீரினைச் செய்வது, மனைவிக்கும் உரிமை கொடுக்கும் பொருட்டு சட்டுவச் சாதம் உண்பது போன்றவற்றை ஒரு சடங்காகவே செய்துவருவது ஆண்மகன் தன் வீட்டுப் பெண்களை உயர்வாகக் கருதியதைக் காட்டுகிறது.

    மங்கலச் சடங்குகள் மட்டுமின்றி அமங்கலச் சடங்குகளிலும் பெண்கள் பங்கு கொள்வதிலிருந்து கொங்கு வேளாளர்கள் தங்களின் வாழ்வில் பெண்களுக்கும் உரிய மதிப்பளித்துள்ளனர் என்பதை அறியலாம்.

    அடிக்குறிப்புகள்

    1. 1. சங்கத்தமிழரின் வழிபாடும் சடங்குகளும், மு.சண்முகம் பிள்ளை (ப.232)
    2. 2. தகவலாளர்: பழனிவேலு, சங்ககிரி
    3. 3. கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும், செ. இராசு, ப.24, 25
    4. மங்கல வாழ்த்து, வரிகள் 127, 128
    5. 5. கொங்கு வேளாளர் வரலாறு, நல்.நடராசன், ப.463
    6. தகவலாளர் பாப்பாத்தி, சிங்காரப்பேட்டை

    துணை நின்ற நூல்கள்

    1. கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும், செ. இராசு
    2. கொங்கு வேளாளர் வரலாறு, நல்.நடராசன்
    3. 3. கொங்கு நாட்டு மகளிர், செ. இராசு
    4. சங்கத்தமிழரின் வழிபாடும் சடங்குகளும், மு.சண்முகம் பிள்ளை
    5. கொங்கு நாட்டுப்புறச் சடங்குகளில் கண்ணேறு கழித்தல், தா. க. அனுராதா

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பெரியார் பல்கலைக்கழகம்
    சேலம் – 636 011

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 112

    ஃப்ராம் அருங்காட்சியகம், ஓஸ்லோ, நோர்வே

    முனைவர். க.சுபாஷிணி

    மிக அண்மையில் நான் பயணம் மேற்கொண்ட நாடு நோர்வே. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்ல்லோவில் 106 அருங்காட்சியகங்கள் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. அதில் ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்திகளை இந்தப் பதிவில் வழங்குகின்றேன்.

    ஃப்ராம் அருங்காட்சியகம் (Fram Museum) பொதுவான அருங்காட்சியகங்களிலிருந்து மாறுபட்டதொரு அமைப்பைக் கொண்டது. 1936ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் உலகின் வடக்கு-தெற்கு துருவங்களுக்குப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த மூவரைச் சிறப்பிப்பதற்காகவும் உலகின் வடக்கு தெற்கு துருவங்களுக்குப் பயணம் செல்லப் பயன்படுத்திய ஃப்ராம் என்ற பெயர்கொண்ட மரக்கலத்தைச் சிறப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்டது.

    இந்த அருங்காட்சியகத்தின் அமைப்பை முதலில் காண்போம். அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் ஃப்ராம் மரக்கலம் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று தளங்களில் கண்காட்சி சுவர்ப்பகுதியை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஃப்ராம் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று அதனை முழுமையாகப் பார்த்த பின்னர் படிகளில் இறங்கி கப்பலின் இரண்டாம் தளத்திற்கு வரலாம். அங்கு மாலுமிகள், ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கான அறைகள் உள்ளன. அங்கேயே சமையலறை, உணவருந்தும் பகுதி, ஓய்வெடுக்கும் பகுதி, நூலகப் பகுதி ஆகியன அமைந்திருக்கின்றன. இதற்கு அடுத்த கீழ்த்தளத்தில் கப்பலின் இயந்திரம் உள்ளது. இங்கு சமையல் பொருட்கள், பயணத்தில் தேவைப்படும் கருவிகள், போன்றவை வைக்கும் பகுதி உள்ளது.

    உலகின் வடதுருவத்திற்குப் பயணம் சென்று அறிந்து வரவேண்டும் என்ற எண்ணத்துடன் 1891ம் ஆண்டு நோர்வே அரசும் தனியாரும் சேர்ந்து இவ்வாய்வுப் பயணத்திற்கானப் பொருளாதாரத்தைச் சேகரித்துக் கொடுக்க, திரு.நான்சன் ( Fridtjof Nansen ), கோலின் ஆர்ச்சர் (Colin Archer) என்ற கப்பல் கட்டும் பொறியியலாளரை அமர்த்தி இக்கப்பலை உருவாக்கச் செய்தார். இந்தப் பிரத்தியேகக் கப்பலே உலகின் துருவங்களுக்குச் சென்ற ஆய்வுப்பயணங்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட கப்பல் என்ற பெருமையைப் பெறுகின்றது.

    உலகின் துருவங்களுக்குப் பயணித்தோர் என்று குறிப்பிடும் போது இதில் முதன்மையாகப் பட்டியலில் இடம் பெறுவோர் நோர்வே நாட்டினர் மூவர். அவர்கள் திரு. பிரிட்ஜோவ் நான்சன் ( Fridtjof Nansen ), திரு.ஓட்டோ சுவேதுருப் (Otto Sverdrup) மற்றும் திரு. ரோல்ட் அமுண்ட்சன் ( Roald Amundsen) ஆகியோர்.

    திரு. பிரிட்ஜோவ் நான்சன் (10 அக்டோபர் 1861 – 13 மே 1930) நோர்வே நாட்டைச் சேர்ந்தவர். ஒரு ஆய்வாளர், சமூக நல செயற்பாட்டாளர், அரசப்பிரதிநிதி, விஞ்ஞானி என்ற பன்முக ஆளுமையாக அறியப்படுபவர். இவரது சாதனைகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசினை 1922ம் ஆண்டு இவர் பெற்றார் என்பதை நினைவு கூர்வது தகும்.

    திரு.நான்சன் இன்று உலக வரைபடத்தில் நாம் அறியும் க்ரீன்லாந்து எனும் நாட்டின் உட்பகுதியை ஸ்கீ பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யச் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கியவர். ஆயினும் 1893லிருந்து 1896 வரையிலான ஆய்வுப்பயனத்தில் வடதுருவத்தின் 86°14′ அடைந்து செய்த சாதனை இவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. இந்தப் பயணத்திற்குப் பின்னர் பயணங்களிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு தனது ஆய்வுகளிலும் தனது சமூக நலப்பணிகளிலும் நோர்வே நாட்டின் அரசியல் அமைப்புப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

    திரு. ஓட்டோ சுவேதுருப் (31 அக்டோபர்1854 – 26 நவம்பர் 1930) வடதுருவத்திற்கான திரு.நான்சனின் முதல் பயணத்தில் அவரோடு இணைந்து ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவர். அப்பயணத்தின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவராக அமர்த்தப்பட்டு பின் திரு.நான்சன் கப்பலை விட்டு ஸ்கீ செய்து வடதுருவத்திற்குச் சென்ற போது ஃப்ராம் கப்பலை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். 1898ம் ஆண்டு திரு. ஓட்டோ சுவேதுருப் வடதுருவத்திற்கான இரண்டாவது பயணத்தை நிகழ்த்தினார். ஃப்ராம் கப்பலிலேயே இந்த இரண்டாவது பயணமும் நிகழ்ந்தது. இப்பயணம் 1902ம் ஆண்டு வரை நீடித்தது. க்ரீண்லாந்து நாட்டைக் கடந்து மேலும் பல தீவுகளைக் கண்டுபிடித்து அவற்றை வரைபடத்தில் இணைக்கும் பணியைச் செய்தார். இவற்றுள் பல சிறு தீவுகள் கண்டறியப்பட்டன, பெயரிடப்பட்டன, வரைபடத்தில் இணைக்கப்பட்டன. இந்தத் தீவுத் தொகுதிகளுக்கு இவரது பெயரிலேயே சுவேதுரூப் தீவுகள் (Sverdrup Islands) என்ற பெயரும் வழங்கப்பட்டது. இவருக்கு அந்நாளைய ஜெர்மனியின் பெரூசியன் அரசின் விருது 1917ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் 2ம் உலகப்போரில் ஜெர்மானியப் படை நோர்வேயின் மீது தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையை எதிர்த்து இந்த விருதை திரு. ஓட்டோ சுவேதுருப் ஜெர்மனிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். பல தனியார் அமைப்புக்களினாலும் பல்கலைக்கழகங்களினாலும் இவர் கவுரவிக்கப்பட்டார். இவரது பிறந்த ஊரான சாண்ட்விகா நகரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திரு. ரோல்ட் அமுண்ட்சன் (16 ஜூலை1872 -18 ஜூன் 1928) வரலாற்றில் தனக்கெனத் தனியிடத்தைப் பெறுபவர். இவரே உலக வரைபடத்தில் தென்துருவத்தை முதலில் அடைந்து ஆராய்ந்து அதனைப் பதிவு செய்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவரது தென் துருவத்திற்கானப் பயணத்திலும் ஃப்ராம் மரக்கலமே பயன்படுத்தப்பட்டது. இவர் 1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் நாள் தென்துருவத்தை அடைந்து சாதனை நிகழ்த்தினார். கடல் மார்க்கமாகவும் நில மார்க்கமாகவும் வடதுருவத்தை இவருக்கு முன்னரே திரு.நான்சன் சென்றடைந்து சாதனைப் படைத்திருந்தார். இவர் விமானம் வழிப்பயணித்து வடதுருவத்தை 1926ம் ஆண்டு சென்றடைந்தவர் என்ற சிறப்பும் பெறுகின்றார். முதலில் ஆர்க்டிக் பகுதியில் அதாவது வடமேற்குப் பகுதிப் பயணத்தை (1903-1906) நிகழ்த்தியவர் என்ற சிறப்பும் இவருக்குச் சேர்கின்றது. இத்தகைய ஒரு பயணத்தில் 1928ம் ஆண்டு ஈடுபட்டிருக்கும் போது காணாமல் போன தமது குழுவின் சிலரை கண்டுபிடிக்கச் சென்றபோது இவர் சென்ற அவசரக்கால பாதுகாப்பு விமானம் தொலைந்து போனதில் இவரும் காணாமல் போய்விட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

    வட துருவம் என்பது உலக உருண்டையின் வடக்கின் கடைக்கோடியில் உள்ள புள்ளி. அதே போல தென்துருவம் என்பது உலக உருண்டையின் தெற்கே கடைக்கோடியில் உள்ள புள்ளி. இப்பகுதிகள் பனிக்கட்டிகளாலும் பனித்துகள்களாலும் சூழப்பட்டு கடுங்குளிருடன் ஆண்டு முழுக்க இருக்கும் நிலப்பகுதிகளாக அறியப்படுபவை. இவற்றிற்குப் பயணம் மேற்கொள்வது என்பது ஒரு அசாதாரணக் காரியமே. கடலில் பயணிக்கலாம் என்றால் நீர்மட்டம் பனிக்கட்டிகளால் இறுக்கமாகச் சூழப்பட்டு கப்பல் பயணத்தைத் தடுத்துவிடும் சூழல் உண்டு. ஆக இப்பகுதிகளில் ஆய்வு செய்யச் சொல்வோர் ஓரளவிற்குக் கடலில் கப்பல் வழி பயணித்து பின்னர் பனியில் சருக்கிச் செல்லும் ஸ்கீ வகை கருவிகளைப் பயன்படுத்திச் சென்றே ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதே போன்று பிரத்தியேக விமானங்களின் வழி பயணம் மேற்கொள்வதும் இவ்வகைப் பயணங்களைச் சாத்தியப்படுத்துகின்றன.

    வடதுருவங்களிலும் தென் துருவங்களிலும் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இன்று நமக்குக் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் வடதுருவத்தில் இன்றைக்கு ஏறக்குறைய 4500 ஆண்டுகள் வாக்கிலேயே மனித இனம் இங்கு வாழ்ந்துள்ளது என்ற தகவல்கள் ஆராய்ச்சிகளின் வழி கிடைத்துள்ளன. குளிரான தட்பவெட்ப நிலையினால் இங்கு மக்கள் குடியேற்றம் என்பது மிகக் குறைவாகவே அமைந்திருக்கின்றது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இக்குளிரான தட்பவெட்ப சூழலிலும் இங்குள்ள சூழலுக்கேற்ற வகையில் தாவரங்களும் விலங்குகளும் இங்கு உயிர்வாழ்கின்றன. இவற்றைப்பற்றிய தொடர் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளில் குறிப்பாக ஸ்கேண்டினேவியன் நாடுகள் என நாம் குறிப்பிடும் நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியவற்றோடு கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

    மனிதனின் தேடுதல் எல்லைகள் அற்றது. அத்தகைய ஒரு செயலே மனிதன் உலக உருண்டையின் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பயணம் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை. உலகின் அறியப்படாத விடயங்கள் பல இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிவதில் அறிவியல் முயற்சிகள் ஒவ்வொரு நாளும் முன்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது. அத்தகைய அறிவியல் சாதனைகளில் பங்கு எடுத்துக் கொண்ட ஃப்ராம் கப்பல் பாதுகாக்கப்படும் ஃப்ராம் அருங்காட்சியகம் உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது!

    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    Dr.K.Subashini
    http://www.subaonline.net – எனது பக்கங்கள்
    http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
    http://www.heritagewiki.org/- மரபு விக்கி

    Share
  • மேலாண்மை பொன்னுச்சாமியின் மனப்பூ சிறுகதைத் தொகுப்பில் வாழ்வியல்

    -முனைவர் ச.கோபிநாத் 

    முன்னுரை

    சமுதாயம் என்பது மக்கள் தொகுதிகளின் இணைப்பு ஆகும். அதாவது, மக்கள் கூடி வாழ்வதாகும். அவ்வாறு கூடிவாழும் மக்கள் தங்களுக்குள் உறவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக்கொள்ளும் சமுதாயம் உயிருள்ள சமுதாயமாகும். மக்கள் கூட்டம் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பே சமூகமாகும். இச்சொல்லிற்குச் சொல்லகராதி ‘மக்கள் திரள்’ என்று பொருள் தருகின்றது.

    “சமுதாயம் பொதுநல ஸ்தாபனம், சங்கம், கழகம்”1 என்று ஆங்கில அகராதி கூறுகின்றது. இத்தகைய சமுதாயத்தில் மனிதன் எவ்வாறான சிக்கல்களையும் விளைவுகளையும் எதிர்கொண்டு வாழ்கிறான் என்பதையும் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுகிறான் என்பதையும் ‘மனப்பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    வறுமை

    மனிதனின் வாழ்க்கையில் மிகவும் கொடுமையானது வறுமையாகும். மனிதனுக்கு வறுமை வந்துவிட்டால் அவனின் எண்ணம், செயல்கள் மாற்றம் பெறுகிறது.

    “வறுமையே பாவங்களில் பொல்லாதது என்றும், வறிய நிலையில் வாழ்வதே கொடிய பாவ வாழ்க்கை என்றும் அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்வதே முதல் கடமையாகக் கொள்ளவேண்டும்”2 என்பர். இதனால் வறுமையினை ஒழித்தல் அவசியம். ஆனால், இன்றைய அளவிலும் வறுமை என்பது ஒழிக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    ”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்”3

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லம் தலை”4

    அதாவது, தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த உலகத்தை அழிக்க வேண்டும் என பாரதியும், அவ்வுணவைப் பகுத்து உண்ணுதல் வேண்டும் என்பதை வள்ளுவனும் நமக்கு எடுத்துக்கூறுகின்றனர். ‘மானத்தீ’ என்ற சிறுகதையில் ஆவுடைச்சி என்பவள் தன் மகனுக்கு ஒரு முறுக்குக்கூட வாங்கிக்கொடுக்க முடியாத அளவிற்கு வறுமை அவளைச் சூழ்ந்துள்ளது. வறுமையினைப் பயன்படுத்தி அவளைத் தன் வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்று ஒருவன் நினைக்கிறான். ஆனால் ஆவுடைச்சி அவனை, “ச்சீ நாயே…. ஓடிப் போயிரு. இல்லேனா ஒரே போடுதான். அருவா ஒன்னை வகுந்துடும்”5 என்று அடித்துவிரட்டித் தன் மானத்தினைக் காத்துக்கொள்கிறாள்.

    சாதி

    சாதி, சமூகத்தின் கேடு எனலாம். அந்த அளவிற்கு நம் நாட்டில் சாதியின் உச்சம் உள்ளது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் “தன்னை உயர்ந்த சாதியாகவும் இன்னொரு மனிதனைத் தாழ்ந்த சாதியாகவும் கருதுபவன் மனநோயாளி”6 என்கிறார். இப்படித்தான் மனிதர்கள் மனிதர்களுக்குள் சாதியம் பார்க்கின்றனர். இந்த சாதிய முரணைத் ‘தீண்டாதே’ என்ற சிறுகதையில் ரெங்கலட்சுமி என்பவள், ஒரு வெள்ளத்தில் சிக்கிக்கொள்கிறாள். கீழ்ச்சாதியினைச் சேர்ந்த மாடத்தியின் மகன் ராக்கப்பன் காப்பாற்றப் போகிறான், அப்போது அவள்,

    “கையை மட்டும்தான் நீ தொடணும் அதுவும் முனிக்கையைத் (நுனிக்கையை) தீண்டணும்.

    ’அதெப்படிமா….. முடியும்?’
    ‘அது அப்படித்தான். என்னோட ஒடம்பைத் தீண்டாதே’

    வெள்ளத்திற்குள் நீந்துகிற அவனுக்குள் பற்றி எரிகிற நெருப்பு அவமான நெருப்பு, சாவின் விளிம்பிலுமா…. சாதி?7 என்ற நினைப்புடன் அவளை நெருங்கிச்செல்கிறான். ஆனால் ரெங்கலட்சுமி பிடித்திருந்த விளாரை நழுவவிட்டு உயிரினை விட்டுவிடுகிறாள்.

    உயிரைவிடச் சாதிதான் முக்கியம். அதிலும் கீழ்ச்சாதிக்காரன் நம்மைத் தொடக்கூடது என்பதை மனதில் நினைத்துக்கொண்டு உயிரை விட்டுவிடுகிறாள். இந்தச் சமூகத்தில் பெண்களைக்கூட சாதி வெறியராக மாற்றிவைத்து இருப்பதுதான் மிகப் பெரிய கொடுமையான நிகழ்வாகும். ஆனால் பெண் என்பவளை இந்தச் ‘சாதி, மதம்’ இரண்டும் காப்பாற்றாது என்பதுகூடத் தெரியாமல் பெண்கள் இவ்வாறு இருப்பது அறியாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

    குழந்தைத் தொழிலாளர்கள்

    குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராகப் பல வகையான சட்டங்களைக்கொண்டு வந்தாலும் அதனை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. நம்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 75% பேர் வறுமைக்கோட்டிற்கும் கீழ் இருப்பதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்த வறுமைதான் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குகின்றது. குழந்தைத் தொழிலாளர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை ’ஏழாப்பு’ என்ற சிறுகதையில் ஆசிரியர் நேர்த்தியாகக் கூறியுள்ளார். ராசாத்தி என்பவர் ஏழாவது படிக்கும் போது தந்தையை இழந்துவிடுகிறாள். இதனால் தன் படிப்பினை இடையிலேயே நிறுத்திவிட்டு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குச் செல்கிறாள்.

    “வாய் நிறைய சோறு. கன்னம் புடைத்திருக்கிறது. பதற்றமாய்க் கைகழுவினாள் ராசாத்தி. பாவாடையில் ஈரக்கையைத் துடைக்கிறாள். சுண்டெலியாய் ‘குடு குடு’ வென்று ஓடுகிறாள். மஞ்சள் பிளாஸ்டிக் டப்பாவையும், சிட்டையும் எடுக்கின்றாள்”8 அவள் தன்னை அறிந்துகொள்ளும் முன்னரே தொழிலாளியாக மாறிவிட்டாள் என்று தோன்றுகிறது.

    போதைப்பொருள்

    நம் சமூதாயத்தில் பல மனிதர்கள் உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் போதை இல்லாமல் வாழ முடியாத அளவிற்கு மனிதர்கள் உருவாகியுள்ளனர். ‘போதை இல்லையெனில் வாழ்க்கை இல்லை’ என்ற நிலைதான் இங்கு உள்ளது. ஒருவன் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டால் அவனின் எண்ணங்கள் மாற்றம் பெறுகின்றன.

    போதைக்கு அடிமையானவர்கள் குற்றங்களைச் செய்பவர்களாகவும் தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களாகவும் மாறிவரும் போக்கினை நம்மால் பார்க்க முடிகின்றது. போதைக்கு அடிமையான ஒருவன் என்னமாதிரியான செயல்களைச் செய்கிறான் என்பதை ‘குறுக்கு’ என்ற சிறுகதையில் கணேஷ் புகையிலைக்கு அடிமையாக, பூபாண்டி என்பவன் இருக்கிறான். சாதிக் கலவரம் அவ்வூரில் ஏற்படுகிறது. அதனால் கடைகள் அடைக்கப்படுகின்றன. புகையிலை வாங்க முடியாமல் கிறுக்கு பிடித்தவன் போல் திரிகிறான். எப்படியோ தேடிப்பிடித்து புகையிலை தின்று போதையினை ஏற்றிக்கொள்கிறான். பூபாண்டியன் சாதியினர் மாற்றுச் சாதியினர் வீட்டில் ஒரு கொலையாவது விலுக வேண்டும் என்று பேசிக்கொள்கின்றனர். இதனைக் கேட்ட பூபாண்டி,

    “ஓடிப்போய்….. பின்பக்கமாய்த் தழுவி, இடதுகையில் கழுத்தைச் சுற்றி, ஒரு கவ்வு கவ்வு கவ்வி…. இறுக்கிய வேகத்தில் வலதுகைச் சூரிக்கத்தியால் ஓங்கி… ஒரு சொருகு…. உருவிக்கொண்டு, ‘ச்சதக்,சதக்’ கென்று ரெண்டு குத்தி”9 கொலை செய்துவிடுகிறான்.

    போதைக்கு அடிமையான ஒருவன் எவ்வாறு நடந்துகொள்வான் என்பது இக்கதை மூலம் தெரியவருகிறது. சுய சிந்தனை, தன்னை இழத்தல், கையேந்தல் போன்றவை இவர்களைத் தொற்றிக்கொள்ளும் என்பது அறியமுடிகிறது.

    முடிவு

    நம் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், வறுமை, சாதி, குழந்தைத் தொழிலாளர், போதை பொருட்கள் இவற்றினை ஒழிக்க எந்த மாதிரியான நடவடிக்கையினை எடுத்துவருகின்றன எனக் கேள்விக்கு உட்படுத்தினால் மிஞ்சுவது கேள்வி மட்டுமே. அந்த அளவிற்கு இதனைப் பற்றிய விழிப்புணர்வை நாம் சரியாகச் செய்யவில்லை எனலாம். ஒரு நாடு வளர்ச்சி நாடாக வரவேண்டுமென்றால் இந்த நான்கில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமின்றி பெண் முன்னேற்றமும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த நான்கிலும் பெண் என்பவள் அவளுக்குத் தெரியாமலும், தெரிந்தும் இதில் அகப்பட்டுக்கொள்கிறாள். பெண் சிக்கலையும் சேர்த்துப் பார்த்தால் மட்டுமே சமுதாயத்தில் மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமையும். அதன் மூலம் அந்நாடும் நல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடுமில்லை.

    குறிப்புகள்:

    1. இரா.மோகன், (ப.ஆ) இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் ஆய்வு மன்றம், ஆய்வுக்கோவை. ப.1956
    2. மு. வரதராசன், அறிஞர் பெர்னாட்ஷா. ப.80
    3. பாரதியார் கவிதைகள். ப.150
    4. திருக்குறள்.332
    5. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.138
    6. quotes.mowval.in
    7. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.62
    8. மேலது, ப.82
    9. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.43

    *****

    கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,இராமநாதபுரம்.

     

     

    Share
  • தாவரங்களை சித்திரப்படுத்தும் – தமிழன்பன் கவிதைகள்

                                   ஆ. பிந்து,

                                   முனைவர்பட்டஆய்வாளர்,

                                       தமிழ்த்துறை,

                                   ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி,

                                    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

                                             

    முன்னுரை

        கவிஞர் தமிழன்பன் 1933-ம் ஆண்டு சென்னிமலையில் பிறந்தவர்.  ‘ஈரோடு’ என்பதை தனது குறியீட்டு பெயராகக் கொண்ட தமிழன்பன் தொடக்க காலத்தில் மரபுக்கவிதையையும் பின்பு புதுக்கவிதைகளையும் எழுதி தமிழ்கவிதை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர். இவர் தனது கவிதைகளில் தாவரங்கள் குறித்து நிரம்ப பதிவு செய்துள்ளார். அவை குறித்து விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

       சிறிய புல் பூண்டுகள் முதல் மரங்கள் வரை தாவர வகையில் அடங்குகின்றன. தாவரங்கள் சூரிய ஒளி, நீர், காற்று ஆகிய மூன்றையும்  தங்கள் வளர்ச்சிக்கு வேண்டிய அளவில் பெற்று தம்மை வளர்த்துக் கொள்கின்றன. தாவரங்களின் உலகம் என்பது ஒரு தனி உலகம் என்றே கூறலாம். புல், பூண்டு, செடி, கொடி, மரம் எனும் பசுமையான இவ்உயிரினத்தை ஆங்கிலத்தில் “Plant’ என்ற சொல் குறிக்கும்” என்பார் வேங்கடசாமி. (செடிகளின் செயலியல் பண்புகள், ப.1.)

    மரங்கள்

       மரங்களைத் ‘தரு’ என்றும் ‘விருட்சம்’ என்றும் கூறுவர். இவை பூ, காய், கனி, இலை, நிழல், பசுமை, என மரங்கள் தங்களுடைய ஒவ்வொரு அவயங்களையும் மக்களுடைய பயன்பாட்டிற்கு அளிக்கின்றன. இத்தகைய மரத்தின் மீது கவிஞர் அன்பு வைத்துக் கவிதைகளைப் படைத்துள்ளார். மரத்தை கடவுளை விட மேலானது என்று தமிழன்பன் தமது கவிதையில் குறிப்பிடுகின்றார்.

                “கேட்காமலே

                நிழல் தருகிற மரத்தை விடக்

                கடவுள் எப்படி மேலானவன்”

                                          (தமிழன்பன் ஆயிரம், ப.875).

          மரம் என்றாலே ஞாபகத்திற்கு வருவது கனிகள் தான். மரங்களை மனிதர்கள் அழிக்கின்றனர். எனினும் மக்களுக்கு நிழலையும், உணவுகளையும் அளித்து உதவுகின்றதென்பதை,

                “கொம்பனும் கம்பிகள்மேல்

                 குளிரிலைத் துணியைப் போர்த்தே

                 எம்மிடம் வருக வென்றாய்

                 எழிற்குடை மரமே ! எய்தி

                 உம்முடல் வெட்டி னோர்க்கும்

                 உதவினை நிழலே!  

                                         (தமிழன்பன் கவிதைகள் தொகுதி-2, ப-99)

    என்று எடுத்துரைத்துள்ளார்.

          கவிஞர் மரத்தின் மீது பாசம் கொண்டவராக காணப்படுகின்றார். தனது கவிதையில் வேப்பமரம், தென்னை மரம், அசோக மரம், கருங்காலி, ஆலமரம் என்று பல மரங்களை சுட்டிக்காட்டுகின்றார். காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வளரக்கூடிய கருங்காலி மரத்திலிருந்து குழல் கருவிகள் செய்து பாட்டு இசைப்பர். இதனை,

                “கருங்காலி குழல் செய்து பாட்டிசைக்கக்

                காடுதெரு நல்லமரம் !

                                   (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, ப.104)

    என்றும் தம் கவிதையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

    செடி கொடிகள்

          செடிகள் சிறிய அளவில் மட்டும் வளரக்கூடியவை. கொடிகள் என்பவை வேறு மரங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு படர்ந்து வளருபவை. கவிஞர் செடி கொடிகள் நன்கு செழிப்பாக வளர்ந்து காற்றில் ஆடுவதை,

                “பருவச் செழிப்பும் உருவக் கொழிப்பும்

                 மருவிய தங்க மணிச்சிலை மங்கையர்

                 நூற்றுக் கணக்காய் நுண்ணிடை ஒசியக்

                 காற்று வெளியில் களிநட மாடினர் !

                 ஆடிய மங்கையர் அங்குள கொடிகள் !”

                                     (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, ப.171)

     என்று அழகுறச் சித்திரப்படுத்துகிறார்.

          மேலும் தனதுக் கவிதையில் எருக்கஞ் செடியைச் சுட்டிக் காட்டுகின்றார். அச்செடி வீடுகளில் வளர்ப்பதில்லை என்றும் வீதிகள் மற்றும் சுடுகாடு போன்ற இடங்களில் தானாக வளர்ந்து நிற்பதை,

                “தாவரக் குற்றவாளியா

                 காடு கடத்தப்பட்டு அடுக்கு வீடுகளுக்கிடையே

                 என் வீட்டெதிரில் இருக்கும்

                 இந்த எருக்கஞ் செடி ?

                 எல்லாச் செடிகளுக்குப் பாய்ச்சியபின்

                 மிஞ்சிய பச்சையை

                 இயற்கை

                 தண்ணீர் விட்டு விளாவியிருக்கிறது

                 இந்த எருக்கில்”

                               (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, பக்.623- 624)

    என்று விளக்கியிருக்கிறார். அந்தச் செடியிலுள்ள இலையின் பச்சை நிறம் மற்றச் செடிகளின் இலைகளில் காணப்படுவதை விட குறைவாகவே இருப்பதையும் பதிவு செய்கின்றார்.

    புல்

          தரையில் தானாகவே முளைத்து வளரும் செடி வகைகளில் ஒன்று.  “பச்சைப்பசேல்” என்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஸ்ரீநிவாசன் என்பவர், “புல் என்றால் ஏதோ ஒரு சாதாரண தாவரம் என்று தான் அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. தாவர வகைகளில் புல் மிக முக்கியமான ஒன்று. தாவரவியலில் புல் இனத் தாவரங்கள் ஒன்றாக்கப்பட்டுப் புல் குடும்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குடும்பத்தில் 4500 இனங்கள் உண்டு” (தாவரஉலகில்! 100, ப.43) என்கிறார். தமிழன்பன் புல்லின் அழகை மக்கள் ரசித்துப் பார்ப்பதை,

                 “தான்

                 பூப்பதில்லை புல் …

                 தன்னைப்

                 பார்ப்பவரைப் பூத்துவிடச் செய்கிறதே

                 போதாதா?

                                     (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -4, ப.170)

    என்று கூறியுள்ளார்.

    தாவரங்களின் உறுப்புகள்

          மரம், செடி, கொடிகளில் வேர் தண்டு, இலை,பூ, காய், கனி போன்ற உறுப்புகள் காணப்படுகின்றன. இவற்றுள் வேரும் தண்டும் இலையும் தாவரங்களின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாக அமைவது பூக்கள், ஏனென்றால் தாவரங்கள் விதையின் மூலம் தான் இன்னொரு தாவரத்தை உண்டாக்குகின்றன.

          ஒரு செடி முளைத்து வளருவதற்கு அவசியமானது விதை. ஸ்ரீனிவாசன் என்பவர். “செடியின் ஆதி மூலம் விதை. செடியே விதைக்குள் இருக்கிறது என்றாலும் குற்றமில்லை தாவரத்தின் சிசுவிதையில் இருக்கிறது” (தாவரங்களின் இல்லறம், ப.35) என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். இலக்கியத்தில் விதையானது ‘காழ்’ மற்றும் ‘அரிசி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழன்பன் பூமியில் புதைந்த விதை அழிந்து தாவரமாக வளரும் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

          “விதையின் இறப்பே செடியின் பிறப்பு!

                                  (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -4,ப.453).

    என்று தனது கவிதையில் பதிவு செய்துள்ளார்.

          தாவரங்கள் வளர்வதற்கு மிகவும் முக்கியமானவை வேர்கள். வேர்கள் பூமிக்கு அடியில் ஆழமாக சென்றால் தான் தாவரங்கள் பலமாக இருக்கும். இதனைத் தமிழன்பன்,

                      “விண்முட்டும் மரங்களுக்கும்

                       வேர்களில்தான் பலமெல்லாம்”

                                       (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -2,ப.327).

    என்று கூறியுள்ளார்.

          பூக்களின் அழகுக்கும் வாசனைகளுக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை மயங்கி நிற்பவர். இதன் வாழ்நாட்கள் என்பது மிகவும் குறைவு. அந்த நாட்களிலே அவற்றின் மணம், அழகு, நிறம் போன்றவை மக்களைக் கவர்ந்து விடுகின்றன. இதனை வர்ணிக்கும் தமிழன்பன்,

                “கொடியின் வீட்டில் பிறந்தது !

                 குறைந்த நாட்கள் வாழ்ந்தது !

                 மடிந்து வீழும் முன்னரே

                 மதிப்பு பெற்றுக்கொண்டது!”

                                       (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -2,ப.572).

    என்று கூறி, மலரை போல மனிதனும் மதிப்புடன் வாழ வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.

    முடிவுரை

          இயற்கை என்பது மனிதனுக்கு கிடைத்த வரம் இந்த இயற்கையினுள் இருக்கின்ற தாவரங்கள் என்பது மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதனால் தான் தமிழன்பன் தனது கவிதையில் இவைகளின் அழகினை, பயனை திறம்பட பதிவு செய்கின்றார். அவை இக்கட்டுரையில்ஆராயப்பட்டுள்ளது.

    துணைநூற்பட்டியல்

    1. அமிர்தகணேசன். தி., (தொ.ஆ) –       ஈரோடு தமிழன்பன் ஆயிரம்

                                              விழிகள் பதிப்பகம்

                                              8/எம் 139, 7 ஆம் குறுக்குத்

                                              சென்னை- 41. மு.பதிப்பு – 2016.

    1. சக்கரவர்த்தி ராஜகோபால் ஆச்சாரியார் – தாவரங்களின் இல்லறம்

                                               அல்லயன்ஸ் பிரஸ்

                                              எம்.எஸ் 109, பிராடீஸ்ரோட்

                                              மயிலாப்பூர். மு.பதிப்பு -1947

    1. வேங்கடசாமி – செடிகளின் செயலியல் பண்புகள்                                            நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிட்.

                                          41-B சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,                                        அம்பத்தூர், சென்னை – 98.

                                                மு.பதிப்பு – 2012.

    1. ஜெயதேவன். வ.(தொ.ஆ)        –     ஈரோடு தமிழன்பன் கவிதைகள்                                            பூம்புகார் பதிப்பகம்,                                                       127 ப. எண்: 63,                                                          சென்னை- 108. மு.பதிப்பு – 2012.
    1. ஸ்ரீநிவாசன். N – தாவர உலகில்! 100

                                              70-தி. ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி

                                              மந்தை வெளி, சென்னை- 600 028.

    Share
  • அப்பா

    சேசாத்திரி பாஸ்கர்

    பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான் விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி பள்ளிநாட்கள் ஒரு கூட்டு வாழ்க்கை. அதுவும் இரண்டு மாத விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் எல்லோரும், புதுஇடத்தில கூடும்போது ஏற்படும் சந்தோஷம் எந்த சினிமாவும், பணமும் , கொடுக்க முடியாதது.சின்ன சட்டை , அதில் பிய்ந்த பொத்தானை தைய்க்க வேண்டாம். அதனை அப்பாவோ , அம்மாவோ உள் வழியாக பின்னை வைத்து குத்தி ( தலையை குனியாதடா) ஊக்கு மாட்டி அனுப்பும் போதே தெரியும். ஒரு விளையாட்டில் அது படக்..

    இருந்தாலும் அவர்களின் அன்பு இன்றும் என் கண்ணில் நீர் வரவழைக்கும்.எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத செயல்

    .இங்கு மாதாவும் பிதாவுமே குருவும் தெய்வமும். அறுபதுகளில் மயிலாப்பூரில் அம்பிகா ஸ்டோர்ஸ் புத்தக கடை மிக பிரசித்தம். அங்கு லேபில் வாங்கி அதனை கட்டு கட்டாய் வைத்து கொண்டு வகுப்பில் பீத்திகொள்ள அவ்வளவு ஆசை.என் தந்தை புத்தககங்களுக்கு நேர்த்தியாய் அட்டைபோட்டு நாலு பக்கமும் அதனை சோற்று பருக்கை வைத்து ஒட்டி அதனை வெயிலில் காய வைத்து அடுத்த நாள் அந்த அட்டையில் பெயரை கூர்ப்பான பௌண்டைன் பேனாவில் எழுதி துணிப்பையில் போட்டு கொடுப்பார் எனக்கு எந்த பக்கம் கிழிந்தாலும் கவலை இல்லை . அப்பா ஒட்டின லேபிளும் அவர் கையெழுத்தும் ஒன்றும் ஆக கூடாது. இன்று என் அலுவல் பணி சம்பந்தமாய் ஒரு புத்தக கடைக்கு சென்ற போது அந்த கடை வாசம் என் நினைவுகளை பள்ளிக்கு அனுப்பியது ஒரு புது புத்தகம் எடுத்து அதனை அழகாய் மடித்து சீட்டுகட்டு போல பக்கங்கள் புரட்டி வாசக்காற்று முகர்ந்தேன்.என் தந்தை வாசம் காற்றில் மலர்ந்தது.

    Share
  • செம்பதிப்பு வரிசையில் ஐங்குறுநூறு

    கல்பனா சேக்கிழார்

    உதவிப்பேராசிரியர்

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    காலத்தை வென்று நிற்பவை சங்கப் பனுவல்கள். அவை தமிழ் மொழியின் அடையாளமாய், பண்பாட்டுக் கருவூலமாய்த் திகழ்வதால் காலம் தோறும் வெவ்வேறு வாசிப்புக்கு உட்பட்டுள்ளன. சுவடியில் இருந்தவை, அச்சு ஊடக வருகைக்குப் பிறகு மூலமாகவும், உரையோடு இணைத்தும் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இருப்பினும்  செம்பதிப்பு (மூலப்பாடத் திறனாய்வு) அடிப்படையில் பதிப்பிக்கும் நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திட்டத்தினை வகுத்து, தமிழ் அறிஞர் பெருமக்களிடம் அப்பணியை ஒப்படைத்தது. அந்த வரிசையில் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு, பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியம் அவர்களைப் பதிப்பாசியராகக் கொண்டு வெளிவந்துள்ளது.

    இப் பதிப்பு தொகுத்தோர், தொகுப்பித்தோன், ஐங்குறுநூறு – பதிப்பும் உரையும், மூலம், பாடத் தேர்வு, சுவடி விளக்கம், பதிப்பு விளக்கம், பாடல் – சிதைவும் முறிவும், கூற்றுகள் – சிதைவும் முறிவும், பாடல்கள் – சுவடித் திறப்பு, கூற்றுகள் – சுவடித் திறப்பு, பாடல்கள் – பிழைப்பாடப் பட்டியல், கூற்றுகள் – பிழைப்பாடப் பட்டியல், சங்க இலக்கியம் தொடரொப்புமை, பிற பதிப்புகள் – ஒப்பீடு, சொல்லடைவு, தொடரடைவு, கலைச் சொற்கள், கூற்றுகள் – பாடல் தொகை, பழைய உரை இடம் பெறாத பாடல்கள், மெய்ப்பாடுகளும் பயன்களும், தொல்காப்பிய இயைபுகள், மன்னர்களும் நாடுகளும் என்னும் தலைப்புகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுப்பிலும் அதற்கான தரவுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

    இவற்றுள் பாடத்தேர்வு என்னும் பகுதி அரிதின் முயன்று பல்வேறு சுவடிகளுடனும், கையெழுத்துப் பிரதிகளுடனும் ஒப்பிட்டு, பாடவேறுபாட்டில் எப்பாடம் சரியானது எனத் தேர்ந்து சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. சான்றாக ஐங்குறுநூற்றின் பதினோராவது பாடலின் முதலடியில் ‘மனைநடு’ ‘மனைநெடு’ என இரு வேறுபட்ட பாடம் உள்ளது. இப்படத்தினை எடுத்துக்காட்டி, மனைநடு வயல் என்பது மனைக்கண் நடப்பெற்ற வயலைக் கொடி என்னும் பொருளுடையது. சங்க இலக்கியங்களில் பதினோரு இடங்களில் வயலை இடம்பெறுகிறது. இஃது இல்லத்தில் நட்டு வளர்க்கப்படும் கொடியாகும். வேலியிலும் பந்தரிலும் படர்வது. மேற்கண்ட நூல்களில் இல்லெழு வயலை, மனைநெடு வயலை, மனைநடு வயலை என்றே பாடங்கள் உள்ளன. தழையாடையகச் சுற்றிக் கொள்ளுவதற்குரிய இக்கொடி தலைவியால் இல்லத்தில் நடப்பெற்று வளர்க்கப்பெறுவது. இங்கு நெடுமைப் பொருளினும், நடு வயலை என்னும் வினைப் பொருண்மையே, செய்யுளில் உள்ளுறை அமையப் பொருந்தும். மனையின்கண் நட்ட வயலை புறத்தே சென்று வேழக் கரும்பைச் சுற்றினாற் போல மனைக்கு உரியனாகிய தலைவன் பரத்தையரைச் சார்ந்தான் என்ற உள்ளுறையை, நடு வயலை என்னும் பாடமே அளித்தலின் இதுவே ஏற்புடையது எனத் தரவுகளின் வழியாகவும் இலக்கண குறிப்பு அடிப்படையிலும், வாழ்வியலோடு இயைத்துப் பார்த்தும் இது சரியானப் பாடம் என நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்களைக் கொண்டுள்ள ஐங்குறுநூற்றிணை, திணைவாரியாக ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஐந்து நூலாகப்  பதிப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு நூலும் 700 பக்க அளவில் அமைந்துள்ளன. ஆய்வு நிலையில் இப்பதிப்பு ஆகச் சிறந்த பல்வேறு  பதிப்பு நுட்பங்களை உள்வாங்கியப் பதிப்பாக அமைந்துள்ளது.

    ஐந்து தொகுதிகள்

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

    எண் 40, நூறடிச் சாலை, தரமணி

    சென்னை – 600113

    2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180902 -Radha Mala – watercolour-charcoal 10×14” raw -lr

    மாலை(திருமாலை) இராதைப்பொன் மாலையில்(சாயங்காலம்) சந்தித்து
    மாலையாய்(பூ மாலை) சங்கை(சங்குக் கழுத்தை) மருவிடும்(தழுவிட) -வேளையில்,
    அக்காள்(இராதை -ஆவின் சக்களத்தி) வருகையில் அக்காரக்(தித்திப்பு) கண்ணபிரான்
    அக்கால் கிடையாதம் ‘மே’(பொறாமைக் கனைப்பு)…..கிரேசி மோகன்

    Share
  • ரமணாயனம்-சுபம்,முடிவு,மங்களம்….!

     

    முக்தி காண்டம்
    ——————

    திருச்சுழி தோன்றி திருக்கூடல் காய்த்து
    திருவருணை நின்ற தருவாம் -குருச்சுவை
    ஞானப் பழத்தை நுகர நினைப்பது
    வானத்தை வில்லாய் வளைப்பு….(351)

    அருந்தி, உறங்கி, அளவளாவும் அன்பு
    நெருங்கி இருப்போர்க்கே ஞானம் -பெருந்தீ
    அருணை ரமணர் அணைப்பில் குளிர
    அருகதை அன்பே அரன்….(352)

    மேடிட்ட நெற்றியில் மேதமை இட்டவர்
    தோடுற்ற காதோன் திருவுரு -சாடுவிக்கின்
    ‘’கைகளால் பேசுவார் செய்கையால் சிந்திப்பார்’’
    பொய்கையாம் வர்ணிப்பைப் பார்….(353)

    சாது சிரிப்பிற்கிங்(கு) ஏது உவமானம்
    பாதுகாப் பேயதன் பாவமாம் -வேத
    மறைபொருளாய் வார்த்தை மனயிருளைப் போக்கும்
    கரைபுரளும் ஞானக் கடல்….(354)

    காந்த விழியிரண்டும் காணும் அடியார்க்கே
    காந்தம் பொழிந்தவரின் காமத்தால் -காந்தும்
    மனக்கருமை நீங்க குணச்சலவை செய்து
    வினைக்கதவை மூடும் விரல்….(355)

    நரேனை பரமஹம்ஸர் நிர்விகல்பம் தன்னில்
    சரேலென சேர்த்தாற்போல் சேர்ப்பீர் -பிரானென
    ‘’இந்த வினாவுக்(கு) இளைஞனே நீவிவேகா
    நந்தனாசொல் என்றார் நகைத்து….(356)

    தொட்டால் துலங்கிட, சுட்டால் பொரிந்திட
    பட்டால் பலித்திட பக்குவம் -கட்டாயம்
    வேண்டும் அதனோடு யாண்டும் குருவடியைத்
    தீண்டும் சரணா கதி….(357)

    ஒரா யிரமாசை தேறா மனதுக்குள்
    பாரா முகமேன் பகவானே -சீராக
    சாதகம் செய்ய சமர்த்தில்லை தேவராஜன்
    தீதாம் தன்னைத் திருத்து….(358)

    எல்லாம் எனதென்றே என்னிடம் விட்டுவிட்டு
    செல்லாத காசாய் சரணடை -கொள்ளலிது
    சக்திக்(கு) உகந்த சகாயமான சாதகம்
    முக்திக்கு முன்னுதிர்த்த முத்து….(359)

    நாணுர்வு நிஷ்டையில் நிற்க சவிகல்பம்
    நானொடுங்க நீடித்தால் நிர்விகல்பம் -வானுயர்ந்து
    வாயு பலூன் வெடித்துள்ளே வான்புக
    சாயும் நிலைசகஜம் சேர்….(360)

    இயல்பாக தன்னில் இருத்தலிங்கு முக்தி
    கயல்போல நீரில் கலந்து -செயலும்
    உடலில் உறுத்தும் உபாதிகள் எல்லாம்
    கடலில் அலையாகக் காண்….(361)

    புற்றில் தவமாய் புராணத்தோன் வான்மீகி
    புற்றே தவமாய் பகவானைப் -பற்றியது
    சார்கோமா தன்னை சுயம்புலிங்கம் என்பாராம்
    யார்கைக்கோ வந்தாற்போல் பார்த்து….(362)

    ரமணனே சத்குரு ராயனென்று பாடும்
    அமளியில் சேர்ந்தநம் அய்யன் -சுமுகமாய்
    ‘’ஏனென்னை இச்சிறிய மேனிக்குள் பார்க்கின்றீர்
    நானும்தான் நம்மெல்லோர் நான்….(363)

    அண்ணலை விட்டு அமெரிக்கா செல்கின்ற
    எண்ணத்தால்பெண் பக்தை எலினார் -கன்னத்தில்
    தங்கும்கண் ணீரை துடைத்துத் தகப்பன்நான்
    எங்குநீ சென்றாலும் அங்கு….(364)

    அன்பெனும் கட்டில் அகப்படும் பர்வதம்
    நண்பனாய் அன்பனாய் ஞானியாய் -வன்பகையால்
    கூடார் தமக்கும் குளிரடி வாரத்தில்
    கூடார மாகும் குரு….(365)

    ஆசுபர்ன் ஆர்தரின் பாசமிகு பெண்கிட்டி
    தேசம் திரும்பிடத் தேம்பினாள் -பாசமாய்
    என்னை மறவாதே என்றும் நினைவில்கொள்
    உன்னைநான் கொள்வேன் உளம்….(366)-

    எண்ணா(து) இருந்திடல் எவ்வளவு கஷ்டமோ
    எண்ணலவர்(கு) அவ்வளவு ஏதமாம் -அண்ணளுலம்
    தாம்புக் கயிறென்ற தோற்றப் பிழையாமே
    சாம்பல் அதற்கில்லை சத்து….(or)
    சாம்பலதால் ஆகாது சுற்று….(367)

    பற்றிலாத பற்றும் பழகப் பெருநெருப்பாய்
    பற்றிடும் ஆகவே முற்றுவை -வெற்றிலை
    சாப்பிட்டுப் போடுவதை சாக்கிட்டு விட்டாராம்
    கூப்பிட்ட ஆள்வராக் கண்டு….(368)

    பேஷ்கூறி பண்டிதர் சாஷ்டாங் கமாய்க்கேட்டார்
    காஷ்மீரி யாரிடம் கற்றதென்று -ஹாஸ்யமாய்
    ‘’ஆசையாய் கேட்டவும் ஆசாமி கேள்விக்கு
    பேசாமல் சொன்னேன் பதில்’’….(369)

    சன்யாஸி ஆகலாம் சம்சாரி வீட்டுக்குள்
    தன்யோ சனையால் தடம்புரண்டு -சன்யாஸி
    காட்டில் க்ரகஸ்த்தனாய் மாட்டித் தவிக்கலாம்
    ஆட்டுக்கு வாலிங்(கு) அளந்து….(370)

    மெய்யாம் துறவு மனதைத் துலக்குதல்
    பொய்யாம் துறவென்ற பாத்திரம் -உய்யாய்
    குடும்பஸ்த்தன் சன்யாசி கொள்கை அளவில்
    கடும்பித்தம் நானைக் களை….(371)

    தன்னைப் பராமரிக்கும் தாகம் துறந்திட
    உன்னைப் பராமரிக்கும் உன்னான்மா -கண்ணை
    மறைக்கின்ற மோகங்கள் மாயப் பிசாசு
    குறைக்கின்ற நாய்கடிக் காது….(372)

    உக்ராண உள்ளிலே ஒன்றுமில் லாதலால்
    அக்ரா சனர்சொன்னார் ஆட்குறைப்பு -அக்குரவர்
    வற்றாக் கருணையால் வந்ததாம் பண்டங்கள்
    பற்றாக் குறைதீர்க்கும் பற்று….(373)

    இதயம் வலது இடத்தில் விளங்கும்
    புதிய விளக்கம் புகன்றார் -உதயம்
    உலகெனும் கோலம் ஒடுங்கிடும் புள்ளி
    கலகநான் காரியின் கை….(374)

    சக்தி சிவனிடப் பக்கம் இருந்தாலும்
    முக்திவலம் செய்தல் வலப்புறமே -பக்தி
    இறையுணர்வு போதும் இடவல மையம்
    திரையவிழும் நாள்வரை தான்….(375)

    நெருப்புக்கு பஞ்சாக நிஷ்டைக்கு நெஞ்சு
    விருப்பிருந்தால் பற்றும் விரைவாய் -கிறுக்குத்
    தனமாய் இதயமிடம் தேடி அலைந்தால்
    மனமாய் மயக்கிடு மது….(376)

    என்ணெய்க் குளியல் எடுத்தாமைப் பாறைக்கு
    அண்ணல் வரமீண்டும் அந்திமத்தை -முன்னம்
    மதுரையில் பார்த்த புதிராகப் பார்த்தார்
    அதையவர் வாக்கில் அடுத்து….(377)

    வெள்ளம் புகுந்தாற்போல் வெள்ளைப் பிழம்பொன்று
    மெள்ளப் படர்ந்தியற்கை மேய்ந்தது -தெள்ளத்
    தெளிவாய் வளியாய் ஒளியாய் வெளியாய்
    களியாய் மரணக் கலப்பு….(378)
    கலப்புத் திருமரணம் கொண்டமுகூர்த் தத்தில்
    களைப்பாக சாய்ந்தேனோர் கல்லில் -வலப்பக்க
    மார்பி னிலிருந்தோர் மின்னல் புறப்பட்டு
    சார்ந்த திடப்பக்கம் சேர்ந்து….(379)

    சேர்ந்தென் னுடன்வந்த சாஸ்திரியார் ஓலமிட்டார்
    நேர்ந்தயென் சாவால் நடுநடுங்கி -தேர்ந்தேன்
    அதிதியாம் கூற்றை அழையா விருந்தை
    கதிகலங்க வைக்கும் கலை….(380)

    கலையாத அல்லி மலரதன் மொக்காய்
    வலமார் பிலிருவிரல் விட்டு -இலகும்
    இதயத் துளையில் இருளும் ஒளியும்
    உதயமாம் உண்மை உணர்….(381)

    உணரும் ஒளியை உலகியல் நாட்டம்
    புணர இருளாம் பிறப்பு -திணரும்
    திருட்டுமனக் கையில் திணித்திடு ‘’நானார்’’
    திறக்குமது ஆன்மாவின் தாழ்….(382)

    தாழுடைத்த கள்ளன் திரைகடல் ஆன்மாவில்
    மூழ்கடித்துப் போதல் மனோநாசம் -பாழுடல்
    பற்றின்றி வெற்றியாய் பேரின்ப சாம்ராஜ்ய
    கொற்றவனாய் இவ்வுலகில் சுற்று….(383)

    பெருநகர தம்பதியர் பேரார்வம் கொண்டு
    பெருமகன் ஏசு பிரானின் -மறுபிறப்பாய்
    எண்ணி வணங்கிட அண்ணலும் அற்புதமாய்
    சொன்னது கேட்டு சிலிர்ப்பு….(384)

    உங்கள் பெருநகர உப்புநீர் முற்புறத்தில்
    திங்கல் சலவைத் திடலுண்டு -அங்கங்கு
    தென்னை மரங்களும் திண்ணைகளும் உண்டைந்தாம்
    எண்ணில் அமர்வீர் என்று….(385)

    காலதேச வர்த்தமானக் கோலங்கள் தாண்டிய
    மூலமாம் ஆன்ம முனைப்புடையோன் -ஞாலத்தை
    கண்டிடுவான் கையளவில், எண்டிசையும் அண்டமும்
    உண்டில்லை ஆவதவன் உள்….(386)

    கொண்டுசென்ற வாழையில் விண்டு வினாயகர்க்கு
    துண்டுகூட வைக்காது தந்தவரை -கண்டித்தார்
    செம்மலை நீங்காது சுற்றுப் புறமறியும்
    செம்மலை யாரறிவார் சொல்….(387)

    சந்யாசம் வேண்டி சலித்துவந்த அன்பர்க்கு
    உன்ந்யாயம் உத்தமமா உன்னிப்பார் -அந்யாயம்
    தைக்க அரும்பாடு தையலிலை போல்வாழ்வு
    துய்க்கும்முன் தள்ளல் திமிர்….(388)

    எம்பிரான் கேட்டார் எழுதிட நோட்புக்கை
    நம்பியார் சொப்பனத்தில் நைச்சியமாய் -அன்பரதை
    மாதவம் முன்வைக்க ‘’ மாதவா நீமறந்த
    போதிலும் வந்ததுபார் புக்….(389)

    ராஜகோபால் பேரனை நாகராஜன் தீண்டிட
    மேஜைமேல் வைத்திறைஞ்சி வேண்டினார் -ராஜ
    சிகிச்சையாய் சேயைத்தன் சொர்ணக்கை யால்வருட
    மகிழ்ச்சியாய் பாலன் முழிப்பு….(390)

    அற்புதம் கண்டோர் அதிசியக்க அண்ணலோ
    அற்பமாய் சொல்வாராம் ‘’அப்படியா !’’ -நற்கதி
    நானாக செய்ததில்லை தானாக நேர்ந்திடும்
    சோணேசன் கையில்நாம் சொப்பு….(391)

    தொண்டர் மயக்கத்தால் உண்டு களைத்தவர்
    விண்டார் இனிவுப வாசமென்று -அண்டும்
    அடியார்கள் அன்புப் பிடிவாதம் தப்ப
    வடிவான வெற்பை வலம்….(392)

    வலம்வரும் வேளை வனிதையர் ஏழ்வர்
    பலமாய் படையல் படைக்க -சிலையாய்
    சமைந்தவர் அன்பாய் சமைத்ததை உண்டு
    சுமந்தார் உபவாசச் சோறு….(393)

    சோறன்று போட்டது யாரென்று கேட்டதற்கு
    ஊரொன்றி வாழ்ந்திடும் சப்தகன்னி -மாரென்று
    சோதித்தவர் சொன்னார் சமையலுக்கு வேண்டிய
    ஏதுமின்றி வந்தனரவ் வேழு….(394)

    இந்து கிருத்துவம் இஸ்லாம் இவைமூன்றும்
    அந்த பரத்திற்(கு) அணுகுமுறை -சொந்த
    முயற்சியே மெய்யுணர்வில் மொய்த்திட சாதனம்
    பயிற்சியாய்த் தேடல் பழகு….(395)

    எந்தவழி போனாலும் ஏகம்தான் மிஞ்சிடும்
    உந்துகின்ற உத்தமரை உன்மார்க -பந்துவாய்
    ஏற்கத் தடையில்லை, என்பதனால் இங்குபல
    தீர்க தரிசிகள் பார்….(396)

    அந்தணப் பண்டிதர் அக்பர் சபையிருந்து
    தந்தநூல் அல்லா உபநிஷத் -இந்தநற்
    சேதியை அண்ணலும் சையது டாக்டரும்
    ஓதிக் களித்தனரோர் நாள்….(397)

    ஏதுமே பேசாத சாதுவின் மேனிக்குள்
    வாதம் புகுந்தெதிர் வாதமிட -பாதமாயூர்
    வேதம் புகன்றிடும் வேப்பெண்ணை சாறுண்டால்
    சேதம் குறையுமாம் சற்று….(398)

    சற்றெண்ணை பூசிடும் சாக்கில் பதத்தினைப்
    பற்றிடப் போட்டியாம் பக்தர்க்குள் -முற்றும்
    துறந்தவர் கேட்பார் துளிக்கால் அளிப்பீர்
    கறந்துகொள்வேன் புண்ணியம்கால் பங்கு….(399)

    காலன் புறமுதுகு கண்டமுக் காலர்க்கு
    தோளின் எலும்புகள் தேய்ந்திட -மேலும்
    அணிலுக்காய் நாயை அடிக்கப்போய் தோளில்
    பிணியுற்றார் பட்டை பிளந்து….(400)

    வாம முழங்கை வழியாய் புகுந்தன்று
    ஆமையாம் கான்ஸர்நோய் அண்ணலிடம் -சாமியே
    காலடியின் கூட்டத்தால் கையடியில் வந்தநானும்
    போலடியார் தானென்றான் புற்று….(401)

    ஆடா(து) அசங்கா(து) அமர்ந்திருந்த உங்களை
    மேடையென் றெண்ணிமேல் ஏறிவிட்டேன் -ஆடிடுவோன்
    வாய்க்கெட்டும் ஆலம்நான் கைக்கேட்டும் மூலமும்
    நோய்க்கட்டி ஆனதென்நன் நாள்….(402)

    மாதுமையாள் கண்டத்தில் மாலையாய் சாய்கின்ற
    போதெம்மை பூஜைக் கரடியென்றாள் -ஆதலால்
    உய்ய வழியின்றி உம்மில் புகுந்தேன்நான்
    அய்ய அடைக்கலமுன் கை….(403)

    சிற்றின்பம் ஓடியது பேரின்பம் நாடியது
    உற்றன்பு கொண்டூ டுறுவுமிப் -புற்றின்பம்
    ஏற்றுப் பொறுத்து எமக்களிப்பீர் முக்தியை
    தூற்றுமூர் மூக்கை உடைத்து….(404)

    கொல்லும் கணைக்கூட்டம் காகுத்தன் தோளிருப்பு
    சொல்லும் வசவும் சரஸ்வதிதான் -அல்லும்
    பகலுமிங்கு சேர்ந்திருக்க புண்ணியத்துள் இப்புண்
    புகுதலென்ன பாவம் புகல்….(405)

    கர்கடக ராசிநான் கைராசி ஆனேனே
    சற்குரு உந்தன்கை சேர்ந்ததனால் -தற்பரமே
    கையடித்து சொன்னாலுன் கைவலிக்கும் வாக்களித்தேன்
    மெய்யடியார் மெய்யுண்ணேன் மெய்….(406)

    கொப்பளநோய் தன்னை குணமாக்க நீர்மனம்
    ஒப்பிடத் தூளாகும் அப்பளமாய் -சுப்பரா
    மய்யாவாள் வேண்ட மகானுரைத்தார் மெய்யாமை
    பொய்யாம் மனமுயல் போக்கு….(407)

    நேரிசை வெண்பாவில் சீரசைவு போனதற்கு
    நேரிசை வானநோய் மேனியின் -வாரிசே
    நானசம் பாவிதத்தை நன்குணர்ந்த ஞானிக்கு
    மானச சஞ்சார மேது….(408)

    அஸ்திரத்தை நோவானேன் அர்ஜுனன் எய்ததற்கு
    சஸ்திர வைத்தியம் செய்வதேன் -வஸ்திர
    மேனிக்கு வந்ததே ஹானி எனக்கல்ல
    ஞானிக்(கு) ஏதுடல் நெஞ்சு….(409)

    நோய்சிரமம் ஏற்று நொடிந்த ரமணரிடம்
    ஆசிரமம் அண்டி அறுவைக்காய் -பேச
    மயக்க மருந்தின்றி மாசை அகற்ற
    தயக்கமில்லை என்றார் தவர்….(410)

    தொண்டையில் ஹம்ஸரும் தோளில் கிருத்துவும்
    கொண்டனர் தொண்டர்தம் கர்மத்தை -பண்டை
    வினைப்பயன் ஏது விதிவசம்தான் ஏது
    தனிப்பெரும் வாஞ்சை தனக்கு….(or)
    கணித்திடும் தெய்வங் களுக்கு….(411)

    பாவியென்று வந்தவரின் பூர்வஜென்ம கர்மமேற்று
    கோவிலாய் மாற்றினார் கோட்டானை -தாவிய
    அப்பாவம் புற்றாக அண்ணலிடம் சேர்ந்திட
    அப்பிரா ரப்தம் அழிவு….(412)

    வண்டி அமர்ந்தவன் கொண்டுவந்த மூட்டையை
    மண்டை சுமத்தல் மதியீனம் -அண்டியோர்
    தேசிகன் தாளிடை தஞ்சம் புகுந்துவிடு
    நீசுக துக்க நினைப்பு….(413)

    வாமனனாய் வந்தகட்டி விக்கிரம னாய்வளர்ந்து
    கோமணத்தர் கையில்கை கூப்பியது -சாவினை
    போவென சொன்னவர்மேல் போயின்று நாளைவந்த
    ராவணனாய் நின்றான் ரணம்….(414)
    கள்ளுண்டோன் ஆடைமேல் கொண்ட உணர்வேயாம்
    உள்ளுண்ட சித்தன் உடலுணர்வு -புல்லுண்டு
    மண்ணுண்டு பூச்சி புழுவுண்டு போகுமிதை
    புண்ணுண்ட போதேன் பதைப்பு….(415)

    பலியுண்ட ஆட்டுக்கு பீடம் நெருங்கியும்
    கிலியின்றி போகும் கதையாய் -வலியுண்டு
    கூறுவார் வாய்தவறிக் கூட வலிக்கிறது
    கூறாராம் ஊராருக் காய்….(416)

    வேள்வியாய் மூலிகை வைத்தியர் பார்த்தது
    தோல்வியாய்ப் போக துவண்டாராம் -கேள்வியாய்
    கூனியவர்(கு) ஆறுதலாய் கூறினார் ‘’அன்பரே
    நானிருப்பேன் உம்மால் நிலைத்து’’….(417)

    ஜனவரியில் அண்ணல் ஜனித்த தினத்தில்
    ஜனவரிசை கூட்டத்தில் சேர்ந்து -அனைவரையும்
    போல்யானை நட்புடன் தாள்வணங்கிச் சென்றதாம்
    பால்யத்து தோழனைப் பார்த்து….(418)

    தேவை நமக்கு தயவு அனைத்திற்கும்
    சாவை நமக்காக சுமப்பாரோ -பாவை
    உடலிதை நால்வர் திடல்வரை சேர்ப்பர்
    இடைவெளியில் நானேன் இதற்கு….(419)

    பண்டங்கள் நூறு பறிமாறி நாலுமிலை
    உண்டபின் ஓரம் ஒதுக்கத்தான் -பிண்டமாம்
    வாழுமிலை மேனியிது வாழ்விலை ஆனபின்
    வாழையிலை போலெறியும் வீடு….(420)

    இல்லாத துன்பம் இருப்பதாய்த் தோன்றவைக்கும்
    பொல்லாத மாயையை போக்கிவிட்டு -எல்லாமும்
    சாட்சியாய்ப் பார்க்கின்ற சாஸ்வத மெய்யுணர்வே
    மோட்சமாம் நீயதில் மூழ்கு….(421)

    மணியென்ன கேட்ட மகானுடனே சொன்னார்
    இனியென்ன காலக் கணக்கு( இழுப்பு) -பணியாக
    அன்பர்க்(கு) அளித்தார் அமைதியாய் த்யானத்தை
    நண்பகல் வேளைஅந் நாள்….(422)

    ஆதவன் சாய்கின்ற அந்திப் பொழுதினில்
    மாதவம் சாய்ந்தது மஞ்சத்தில் -ஓதும்
    அருணா சலசிவத்தை அண்மையில் காண
    மரணாவஸ் தைக்கு முடிவு….(423)

    எட்டுநாப் பத்தேழு ஏப்ரல் பதினாலில்
    விட்டுடல் ஜோதி விரைவாக -முட்டக்
    கறுத்தவிரி வானை எரித்துவிண் மீனாய்
    பரத்திடம் முக்தி பறப்பு….(424)

    சுபம்(சத்யம்)
    முடிவு(சிவம்)
    மங்களம்(சங்கரம்)
    ——————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180901 Penance of Devaki and Yashoda 14×20” arches 300 gsm wcol lr

    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்த நிறக்கண்ணன் நின்போல் -பிறப்பில்
    அனாதை ஆனாலும் ஆய்ச்சியர் அன்பால்
    அனாதி அவன்கதை ஆச்சு….!

    திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
    விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
    பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
    ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!

    வேண்டுதல் வெண்பா….!
    ———————————————————————

    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்தநிறக் கண்ணனனே, கோட்டை – திருச்சியில்
    மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
    தாதவிழ் பூவாய் மலர்….!

    எங்குநாம் சென்றாலும் அங்கவன் முன்னம்போய்
    தங்கு தடைகள் தவிர்த்திடுவான் -செங்கண்மால்
    தாளிரெண்டைப் பற்றித் துதிப்போர்தம் தீவினை
    தாளிரெண் டாகும் தெறித்து….!

    கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட காரணம்
    அன்னையின் அன்பினாலா அல்லது -கண்ணனே
    ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு
    ஆயாசம் ஆனதா லா….!

    திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
    விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
    பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
    ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!

    பள்ளிதனைக் கொண்டதால் பிள்ளை பெறுவதால்
    வெள்ளலைப் பாற்கடல் உள்ளமால் -புள்ளேறும்
    கார்மேக வண்ணனும் ஓர்மகன் அன்னையும்
    நேர்நிகர் ஆவார் நமக்கு….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 16

    -மேகலா இராமமூர்த்தி

    மனித மாண்புகளில் தலையாய ஒன்று மானம். ’தன்னிலையில் தாழாமையும் தாழ்ந்தபின் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்’ என்று அதற்கு இலக்கணம் வகுத்தனர் தமிழர். மானத்தின் சிறப்பை,

    “இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழுது ஏத்தும் உலகு” என்று போற்றுகின்றார் வள்ளுவர். அஃதொப்ப, நூல்களில் சிறந்த நாலடியும் மானத்தின் மாண்பைப் பரக்கப் பேசுகின்றது. 

    மறுமைக்குத் தீவினையையும் இம்மைக்குப் பெரும்பழியையும் உருவாக்கும் செயல்களைச் சான்றோர் ஒருநாளும் செய்யார்; ஏனெனில், இறத்தல் என்பது ஒருநாள் துன்பந்தான்; ஆனால் பழியும் பாவமும் ஒருவனிடம் சேர்ந்தாலோ  வாழ்நாள் முழுவதுமே அவை மாற்றுதற்கு அரியவை என்பது கருதியே.

    பாவமும் ஏனைப் பழியும் படவருவ
    சாயினும் சான்றவர் செய்கலார் – சாதல்
    ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
    அருநவை ஆற்றுதல் இன்று.  (நாலடி – 295)
     

    குன்றின் அனையாரும் குன்றிப்போவதற்குக் குன்றி (குன்றிமணி) அளவிலான தரந்தாழ்ந்த செயல்களே போதுமானவை. எனவே அவற்றைத் தவிர்த்தல் அவசியம்.

    நற்குடியில் பிறந்த மக்கள் தம் வாழ்வில் இன்மைவந்து அதன் காரணமாய் இன்னல் வந்துற்றபோதும் தம் குணம் மாறுபடாது வாழவே விரும்புவர். அப்படிப்பட்டவர்கள் வறுமை காரணமாக, வேறுவழியின்றி, செல்வர்களிடம் பொருள்வேண்டி நிற்கும் நிலையில், அச்செல்வர்கள், “இவர்கள் மிகவும் நல்லவர்கள், கனிவுடையவர்கள், ஆயினும் வறுமையுற்றிருக்கிறார்கள்” என்று இந்நன்மக்களின் உயர்பண்புகளை இகழ்ச்சிக்குள்ளாக்கி ஏளனப் பார்வை பார்க்கும்போது, கொல்லனின் உலையில் ஊதும் தீயைப் போல இச்சான்றோர் மனம் உள்ளுக்குள் வேதனையில் கனலும் என்கிறது நாலடியார்.

    நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
    செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
    உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ
    தலையாய சான்றோர் மனம்.  (நாலடி – 298)
     

    எனவே பணம் படைத்தவர்கள், தம்மிடம் பொருள்வேண்டி வரும் நன்மக்களிடம் அவர்கள் மனம் வருந்தும்படியான புன்மொழிகளைப் பேசாதிருப்பது நன்று. செருக்கின்றி அடக்கத்தோடு நடந்துகொள்ளுதல் எல்லார்க்குமே நன்மை பயக்கும்; எனினும் அது செல்வரிடம் அமைந்தால் அவர்க்கு மேலும் ஒரு செல்வமாய்ச் சிறப்புறும் என்றாரே நாயனார் அதனை அவர்கள் ஓர்ந்துபார்க்க வேண்டும். 

    ”எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.”

    இனி, புலியின் குணத்தோடு பெரியோரின் குணத்தை ஒப்பிட்டுப் பேசும் நாலடியார்ப் பாடலொன்றைப் பார்ப்போம்.

    மதம் பொருந்திய யானையை அதன் வலிமை ஒழித்து வீழ்த்திய காட்டிலுறையும் புலியானது, தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த அந்த யானையை, தான் பசி மிகுதியால் உயிர்துறக்குந் தறுவாயிலிருப்பினும் உண்ணாது உயிரைவிடும். அதுபோல், தன்மானமும் நற்குணமும் நிரம்பிய பெரியோர் செல்வந்திகழ் சொர்க்கமே கையகம் வருவதாயினும் அது தமது மானம்கெட வருவதாயின் அதனை ஒருசிறிதும் விரும்பார்.

    கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
    இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் – இடமுடைய
    வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
    மானம் மழுங்க வரின்.  (நாலடி – 300)
     

    வறுமையிலும் புரவலரிடம் இரந்துநிற்கும் சிறுமைக்குக் கூசும் மேன்மக்களின் சால்பை வள்ளுவரும், 

    ”இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு” எனப் பகர்வதை நாம் மேற்கண்ட நாலடியோடு ஒப்பவைத்து எண்ணலாம்.

    புலி குறித்த செய்திகள் சில நம் சிந்தனைக்கு… 

    காட்டுவிலங்குகளில் புலியின் வீரத்தைப் பற்றியும் அதன் உணவுப்பழக்கத்தைப் பற்றியும் நம் தமிழ் இலக்கியங்கள் பலவிடங்களில் பேசுகின்றன. அவற்றில், ”புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்பதும், ”புலியானது தான் வீழ்த்திய இரை தனக்கு இடப்பக்கம் வீழ்ந்தால் அதனை உண்ணாது” என்பதும் குறிப்பிடத்தக்கவை. புலி மாமிசங்களையே விரும்பி உண்ணும் ’மாமிசபட்சிணி’ (Carnivore) என்பதால் அது புல்லைத் தின்னாது என்பது ஏற்புடைத்தே. ஆயினும் அடுத்ததாகச் சொல்லப்படும் இடப்பக்கம் வீழ் இரையை அஃது உண்ணாது என்பதை மெய்ப்பிப்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆகவே, இது புலியைச் சிறப்பிப்பதற்காகச் சுட்டப்படும் உயர்வுநவிற்சி மொழியாகக்கூட இருக்கலாம். அல்லது ”இடம் வீழ்ந்த/ இடம்பட வீழ்ந்த” என்ற தொடர்களுக்கு இடப்பக்கம் அல்லாத வேறுபொருள் இருக்கிறதா என்று ஆராய்தலும் புதிய உண்மைகளைக் கண்டறிய உதவலாம். 

    புலி இடம்பட வீழ்ந்த இரையை உண்ணாது என்றியம்பும் சங்கப் பாடல்கள் சில: 

    …இடம் படின்
    வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
    தாழ்வு இல் உள்ளம்…. (அகம் – 29) 

    …கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
    அன்றவண் உண்ணா தாகி வழிநாள்
    பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்
    திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி…  (புறம் – 190)
     

    ’கொடிது கொடிது வறுமை கொடிது’ என்பது மூத்தோர்மொழி. வறுமையால் வாழ்க்கை வெறுமையாகி, பிறரிடம் இரந்துநிற்கும் அவலம் வார்த்தைகளில் வடிக்கவொண்ணாதது. எனினும் வறுமையைச் சாக்காக வைத்து முறையற்ற வழிகளில் முயன்று வயிற்றை நிரப்புவதும் சரியாகாது. இக்கருத்தைப் பேசுகின்றது ஓர் நாலடியார்ப் பாடல். 

    இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
    பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
    விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
    அழித்துப் பிறக்கும் பிறப்பு. (நாலடி – 302)

    இழிக்கத்தக்க மானக்குறைவான செயல்களைச் செய்து ஒருவன் வயிறார உண்ணுவதைவிட, உலகம் பழிக்கத்தக்க அச்செயல்களைச் செய்யாமல் வறுமையாற் பசியோடிருத்தல் தவறாகுமோ? ஆகாது!ஏனென்றால், அழிக்கப்பட்டு ஒருவன் பிறக்கும் இப்பிறப்பு, இமைத்துப் பின் கண்திறக்கும் நொடிப்பொழுதே அன்றோ?

    இதே கருத்தையே நம் குறளாசானும் வேறு சொற்களில்,

    ”ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை” என்று எச்சரித்திருப்பதை எண்ணுக.

    உலகில் எல்லாருமே தீயவர்கள் அல்லர். இரவலரிடம் இன்சொல் இயம்பி, ஈதல் செய்யும் நல்லவர்களுக்கும் நானிலத்தில் பஞ்சமில்லை. அவ்வாறு தமக்கென்று ஒளியாத உறுதியான மெய்யன்பினையுடைய கண்போன்ற அன்பர்களிடத்தும்கூட இரவாது வாழ்வதே நல்வாழ்க்கையாகும். இரத்தலாகிய செயலை நினைக்கும்பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றதே… அப்படியாயின், பிறரிடம் ஒன்று ஏற்குங்காலத்தில் அங்ஙனம் ஏற்பவரது மனந்தான் எப்படி நைந்துபோகும் என்று கவல்கின்றது பின்வரும் பாடல்.

    கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
    இரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை
    உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ
    கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.  (நாலடி – 305)
     

    அன்போடு ஈவோரிடமும் இரப்பது துன்பமானது என்பதே இதன்வாயிலாய் நாம் உணரும் உண்மை. 

    இதே கொள்கையுடைய நம் தெய்வப்புலவரும், 

    ”கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்” என்று இரத்தலின் இ(ளி)ழிவை எடுத்தோதுகின்றார்.
     

    பிறரிடம் சென்று ஒன்றை ஈயென இரந்துபெறும் இழிநிலை எத்துணை வருந்தத்தக்கது என்று கண்டோம். அவ்வாறு இரப்போர்க்கு ஈயாதிருப்பதும், அவர்கள் உளம் புண்படும்படி ஏளனச்சொல் உதிர்ப்பதும் அதினும் வருந்தத்தக்கதாகும். ஆகலின், செல்வமுடையோர் நல்மனமுடையோராயும் இருந்து ஈகை செய்தால் நிலைத்த புகழை இந்நிலவுலகில் பெறலாம்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

    Share
  • பேரூர் சுவாமிகளின் ஆன்மா இறையடி நிழலில் …

    சைவமும் தமிழும் இரு கண்களென போற்றி தொண்டாற்றிய பெருந்தகை தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஐயா அவர்களுக்கு நம் இதய அஞ்சலியை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஆன்மீகவாதியும், பெரிய புராணத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அடியாரின் ஆன்மா இறையடி நிழலில் சாந்தி பெற உளமாரப் பிரார்த்திக்கிறோம்.

    Share