-மேகலா இராமமூர்த்தி

மனித மாண்புகளில் தலையாய ஒன்று மானம். ’தன்னிலையில் தாழாமையும் தாழ்ந்தபின் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்’ என்று அதற்கு இலக்கணம் வகுத்தனர் தமிழர். மானத்தின் சிறப்பை,

“இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு” என்று போற்றுகின்றார் வள்ளுவர். அஃதொப்ப, நூல்களில் சிறந்த நாலடியும் மானத்தின் மாண்பைப் பரக்கப் பேசுகின்றது. 

மறுமைக்குத் தீவினையையும் இம்மைக்குப் பெரும்பழியையும் உருவாக்கும் செயல்களைச் சான்றோர் ஒருநாளும் செய்யார்; ஏனெனில், இறத்தல் என்பது ஒருநாள் துன்பந்தான்; ஆனால் பழியும் பாவமும் ஒருவனிடம் சேர்ந்தாலோ  வாழ்நாள் முழுவதுமே அவை மாற்றுதற்கு அரியவை என்பது கருதியே.

பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார் – சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.  (நாலடி – 295)
 

குன்றின் அனையாரும் குன்றிப்போவதற்குக் குன்றி (குன்றிமணி) அளவிலான தரந்தாழ்ந்த செயல்களே போதுமானவை. எனவே அவற்றைத் தவிர்த்தல் அவசியம்.

நற்குடியில் பிறந்த மக்கள் தம் வாழ்வில் இன்மைவந்து அதன் காரணமாய் இன்னல் வந்துற்றபோதும் தம் குணம் மாறுபடாது வாழவே விரும்புவர். அப்படிப்பட்டவர்கள் வறுமை காரணமாக, வேறுவழியின்றி, செல்வர்களிடம் பொருள்வேண்டி நிற்கும் நிலையில், அச்செல்வர்கள், “இவர்கள் மிகவும் நல்லவர்கள், கனிவுடையவர்கள், ஆயினும் வறுமையுற்றிருக்கிறார்கள்” என்று இந்நன்மக்களின் உயர்பண்புகளை இகழ்ச்சிக்குள்ளாக்கி ஏளனப் பார்வை பார்க்கும்போது, கொல்லனின் உலையில் ஊதும் தீயைப் போல இச்சான்றோர் மனம் உள்ளுக்குள் வேதனையில் கனலும் என்கிறது நாலடியார்.

நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ
தலையாய சான்றோர் மனம்.  (நாலடி – 298)
 

எனவே பணம் படைத்தவர்கள், தம்மிடம் பொருள்வேண்டி வரும் நன்மக்களிடம் அவர்கள் மனம் வருந்தும்படியான புன்மொழிகளைப் பேசாதிருப்பது நன்று. செருக்கின்றி அடக்கத்தோடு நடந்துகொள்ளுதல் எல்லார்க்குமே நன்மை பயக்கும்; எனினும் அது செல்வரிடம் அமைந்தால் அவர்க்கு மேலும் ஒரு செல்வமாய்ச் சிறப்புறும் என்றாரே நாயனார் அதனை அவர்கள் ஓர்ந்துபார்க்க வேண்டும். 

”எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.”

இனி, புலியின் குணத்தோடு பெரியோரின் குணத்தை ஒப்பிட்டுப் பேசும் நாலடியார்ப் பாடலொன்றைப் பார்ப்போம்.

மதம் பொருந்திய யானையை அதன் வலிமை ஒழித்து வீழ்த்திய காட்டிலுறையும் புலியானது, தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த அந்த யானையை, தான் பசி மிகுதியால் உயிர்துறக்குந் தறுவாயிலிருப்பினும் உண்ணாது உயிரைவிடும். அதுபோல், தன்மானமும் நற்குணமும் நிரம்பிய பெரியோர் செல்வந்திகழ் சொர்க்கமே கையகம் வருவதாயினும் அது தமது மானம்கெட வருவதாயின் அதனை ஒருசிறிதும் விரும்பார்.

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் – இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் மழுங்க வரின்.  (நாலடி – 300)
 

வறுமையிலும் புரவலரிடம் இரந்துநிற்கும் சிறுமைக்குக் கூசும் மேன்மக்களின் சால்பை வள்ளுவரும், 

”இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு” எனப் பகர்வதை நாம் மேற்கண்ட நாலடியோடு ஒப்பவைத்து எண்ணலாம்.

புலி குறித்த செய்திகள் சில நம் சிந்தனைக்கு… 

காட்டுவிலங்குகளில் புலியின் வீரத்தைப் பற்றியும் அதன் உணவுப்பழக்கத்தைப் பற்றியும் நம் தமிழ் இலக்கியங்கள் பலவிடங்களில் பேசுகின்றன. அவற்றில், ”புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்பதும், ”புலியானது தான் வீழ்த்திய இரை தனக்கு இடப்பக்கம் வீழ்ந்தால் அதனை உண்ணாது” என்பதும் குறிப்பிடத்தக்கவை. புலி மாமிசங்களையே விரும்பி உண்ணும் ’மாமிசபட்சிணி’ (Carnivore) என்பதால் அது புல்லைத் தின்னாது என்பது ஏற்புடைத்தே. ஆயினும் அடுத்ததாகச் சொல்லப்படும் இடப்பக்கம் வீழ் இரையை அஃது உண்ணாது என்பதை மெய்ப்பிப்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆகவே, இது புலியைச் சிறப்பிப்பதற்காகச் சுட்டப்படும் உயர்வுநவிற்சி மொழியாகக்கூட இருக்கலாம். அல்லது ”இடம் வீழ்ந்த/ இடம்பட வீழ்ந்த” என்ற தொடர்களுக்கு இடப்பக்கம் அல்லாத வேறுபொருள் இருக்கிறதா என்று ஆராய்தலும் புதிய உண்மைகளைக் கண்டறிய உதவலாம். 

புலி இடம்பட வீழ்ந்த இரையை உண்ணாது என்றியம்பும் சங்கப் பாடல்கள் சில: 

…இடம் படின்
வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம்…. (அகம் – 29) 

…கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றவண் உண்ணா தாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்
திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி…  (புறம் – 190)
 

’கொடிது கொடிது வறுமை கொடிது’ என்பது மூத்தோர்மொழி. வறுமையால் வாழ்க்கை வெறுமையாகி, பிறரிடம் இரந்துநிற்கும் அவலம் வார்த்தைகளில் வடிக்கவொண்ணாதது. எனினும் வறுமையைச் சாக்காக வைத்து முறையற்ற வழிகளில் முயன்று வயிற்றை நிரப்புவதும் சரியாகாது. இக்கருத்தைப் பேசுகின்றது ஓர் நாலடியார்ப் பாடல். 

இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு. (நாலடி – 302)

இழிக்கத்தக்க மானக்குறைவான செயல்களைச் செய்து ஒருவன் வயிறார உண்ணுவதைவிட, உலகம் பழிக்கத்தக்க அச்செயல்களைச் செய்யாமல் வறுமையாற் பசியோடிருத்தல் தவறாகுமோ? ஆகாது!ஏனென்றால், அழிக்கப்பட்டு ஒருவன் பிறக்கும் இப்பிறப்பு, இமைத்துப் பின் கண்திறக்கும் நொடிப்பொழுதே அன்றோ?

இதே கருத்தையே நம் குறளாசானும் வேறு சொற்களில்,

”ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை” என்று எச்சரித்திருப்பதை எண்ணுக.

உலகில் எல்லாருமே தீயவர்கள் அல்லர். இரவலரிடம் இன்சொல் இயம்பி, ஈதல் செய்யும் நல்லவர்களுக்கும் நானிலத்தில் பஞ்சமில்லை. அவ்வாறு தமக்கென்று ஒளியாத உறுதியான மெய்யன்பினையுடைய கண்போன்ற அன்பர்களிடத்தும்கூட இரவாது வாழ்வதே நல்வாழ்க்கையாகும். இரத்தலாகிய செயலை நினைக்கும்பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றதே… அப்படியாயின், பிறரிடம் ஒன்று ஏற்குங்காலத்தில் அங்ஙனம் ஏற்பவரது மனந்தான் எப்படி நைந்துபோகும் என்று கவல்கின்றது பின்வரும் பாடல்.

கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.  (நாலடி – 305)
 

அன்போடு ஈவோரிடமும் இரப்பது துன்பமானது என்பதே இதன்வாயிலாய் நாம் உணரும் உண்மை. 

இதே கொள்கையுடைய நம் தெய்வப்புலவரும், 

”கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்” என்று இரத்தலின் இ(ளி)ழிவை எடுத்தோதுகின்றார்.
 

பிறரிடம் சென்று ஒன்றை ஈயென இரந்துபெறும் இழிநிலை எத்துணை வருந்தத்தக்கது என்று கண்டோம். அவ்வாறு இரப்போர்க்கு ஈயாதிருப்பதும், அவர்கள் உளம் புண்படும்படி ஏளனச்சொல் உதிர்ப்பதும் அதினும் வருந்தத்தக்கதாகும். ஆகலின், செல்வமுடையோர் நல்மனமுடையோராயும் இருந்து ஈகை செய்தால் நிலைத்த புகழை இந்நிலவுலகில் பெறலாம்.

[தொடரும்]

*****

துணைநூல்கள்

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.