Blog

  • புறநானூற்றில் கருவிகள்

    வி.அன்னபாக்கியம் 

    முன்னுரை

    வேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்நிலையில்தான், இரும்புக்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் போருக்காகவும் பிற தொழிலுக்காகவும் பயன்படுத்திய கருவிகளின் தன்மையைச் சங்க இலக்கியம் மூலமே அறிய வாய்ப்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழந்தமிழர் பயன்படுத்திய போர்க்கருவிகளைத் தவிர பிற கருவிகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. 

    கருவி விளக்கம்

    எந்த ஒரு செயலையும் செய்வதற்குத் துணையாகத் தூண்டுதலாக இருக்கும் சாதனம் கருவியாகும். கருவி என்பதற்கு, ”ஆயுதம், சாதனம், கேடகம், குதிரைமேலிருக்கும் தவிசு, குதிரைச் சம்மட்டி, உடை, துணைக்காரணம், யாழ்க்கருவி” என செந்தமிழ் அகராதி விளக்கம் தந்துள்ளது. தமிழ்மொழி அகராதி, ”ஆயுதப்பொது, உபகரணம், கவசம், காரணம், குதிரைக் கல்லணை, கூட்டம், தொடர்பு, நட்பு, மெய், வாய் முதலிய கருவி, மேகம், யாழ், வாச்சியம், வீணை” என விளக்கம் தந்துள்ளது.

    பொதுவாகக் கருவி என்ற சொல்லுக்கு, “ஆயுதப் பொதுப்பெயர்” என்ற பொருளையே எல்லா அகராதிகளும் தந்துள்ளன. பழந்தமிழர்கள் போர்க்கருவிகளைத் தவிர பிற தொழிற்கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை,

    1. தொழில் பயன்பாட்டுக் கருவிகள் (கலப்பை, அரிவாள்)
    2. வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகள் (ஊசி, உலக்கை)
    3. பிற பயன்பாட்டுக் கருவிகள் (அடார், சேறுகுத்தி, தட்டை, கரும்பின் எந்திரம்) என வகைப்படுத்தலாம்.

    தொழில் பயன்பாட்டுக் கருவிகள்

    நாட்டின் இன்றியமையாத தொழில்களுள் ஒன்று பயிர்த்தொழிலாகும். நிலத்தை உழுவதற்கும், தோண்டுவதற்கும் நெற்கதிர்களை அரிவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் கலப்பை மற்றும் அரிவாள் பற்றிய குறிப்பு மட்டும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. 

    கலப்பை

    நிலத்தை உழுவதாகிய உழவுத்தொழிலுக்கு மிகவும் முக்கியமான கருவி “ஏர்” என அழைக்கப்படும் கலப்பை ஆகும். கலப்பை என்பதற்கு “உபகரணம், உழுபடை, கலப்பையுறுப்பு, யாழ்” 1 எனத் தமிழ்ப்பேரகராதி விளக்கம் தந்துள்ளது. தற்காலத்தில் உழவுத்தொழில் இயந்திரமயமானாலும்கூட நாட்டுப்புறங்களில் சில விவசாயிகள் இன்னும் கலப்பையையே பயன்படுத்தி வருவதைக் காணலாம். புறநானூற்றில் கலப்பையைக் குறிக்க, “உழுபடை, நாஞ்சில்“ என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ”பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
    ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே”       (புறம். 35 25-26)

    ”நாஞ்சில் அல்லது படையும் அறியார்”                (புறம். 20) என வரும் புறநானூற்றுப் பாடலடிகள் விளக்குகின்றன.

    போர்க்களத்தில் அம்பு தைத்து யானைகளின் துதிக்கையும், வாயும் துண்டாகி வீழ்ந்த காட்சியை நிலத்தை உழும் கலப்பைக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளதை,

    ”அம்புசென்று இறுத்து அரும்புண் யானைத்
    தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
    நாஞ்சில் ஒப்ப நிலம்மிசைப் புரள”        ((புறம். 19  9-11)என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இதனால் கலப்பையின் முனைப்பகுதியானது யானை வாயின் கீழ்ப்பகுதி போலக் கூர்மையாக இருந்தமை தெரியவருகின்றது. இவ்வாறாக நிலத்தை உழுவதற்கு உழவர்களால் பயன்படுத்தப்படும் கலப்பைக்கு உழுபடை, உழவர்படை, நாஞ்சில் என்ற வேறு பெயர்கள் இருப்பதையும் கலப்பையின் உருவ அமைப்பினையும் அறிய முடிகின்றது.

    அரிவாள்

    பழந்தமிழர்கள் தாங்கள் பயிரிட்ட பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்வதற்காக ஒருவகை கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். அக்கருவியே அரிவாள் எனப்படும். அரிவாள் என்பதற்கு, வின்சுலோ அகராதியில், ”கொய்யுமாயுதம் மற்றும் ஈர்வாள்” 2 என்றும், பெருஞ்சொல்லகராதியில், ”நெற்கதிர் முதலியன அரியும் பிடியுள்ள கத்தி” 3 என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன.

    அரிவாள் ஆமையின் முதுகு போன்று வளைந்த வடிவமுடையதை,

    ”நெல்அரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
    பிள்ளை மறத்தோடு அரிய, கல்செத்து
    அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்”       (புறம். 379. 3-5) என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

    இந்த அரிவாள் நெல் அறுவடை செய்வதற்கும், பழங்களை அறுப்பதற்கும் பசுக்களின் பசியைப் போக்கும் புல் மற்றும் இலை, தழைகளை அறுப்பதற்கும் பயன்பட்டமையை,

      ”அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட” (புறம். 246 4)

    ”பசித்த ஆயத்து பயன்நிரை தருமார்
      பூவாக் கோவலர் பூவுடன் உதிரக்”     (புறம். 224 14-15)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இவ்வாறாக புறநானூற்றுப் பாடல்கள் அரிவாளின் வடிவத்தையும் அதன் கூர்மையினையும் எடுத்துரைக்கின்றன. 

    வீட்டுப்பயன்பாட்டுக்கருவிகள்

    பழந்தமிழர்கள் வீட்டுப் பயன்பாட்டிற்காகக் கத்தரிக்கோல், விளக்கு, கத்தி, ஊசி போன்ற பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். புறநானூற்றில் ஊசி, உலக்கை பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. 

    ஊசி

    பழங்காலத்தில் “ஊசி” என்னும் சொல் தைக்கும் கருவியைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஊசி என்பதற்கு, ”இழைவாங்கி, கண்டூசி, நிறைகோலின் நடுமுள், கடிகாரத்தின் முள் மற்றும் எழுத்தாணி” 4 என வின்சுலோ அகராதி விளக்கம் தந்துள்ளது.

    புறநானூற்றுப்பாடல் ஒன்றின் வாயிலாக ஊசி என்னும் கருவி கட்டில் கட்ட பயன்படுத்தப்பட்ட உண்மை தெரிய வருகின்றது.

    ”சாறுதலைக் கொண்டென பெண்ஈற்று உற்றென
    பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
    கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
    போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ”      (புறம். 82)

    என்ற பாடல் வாயிலாக ஊசி என்னும் கருவி கட்டில் கட்டுவதற்கும் பயன்பட்டமையை அறியமுடிகின்றது. 

    உலக்கை

    வீட்டுப்பயன்பாட்டுக் கருவிகளில் ஒன்று உலக்கையாகும். உரலில் ஏதாவது பொருட்களை இடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கருவியாகும். இதன் இரு முனைகளிலும் இரும்பாலாகிய பூண்கள் மாட்டப்பட்டிருக்கும். இதனை இரும்புலக்கை எனலாம். பொதுவாக நெல் குற்றுவதற்கு உலக்கையைப் பயன்படுத்தியுள்ளனர்.

    வெண்ணிற நெல்லை பூண் கட்டப்பெற்ற பருத்த உலக்கையால் குற்றிய பின் கிடைத்த அரிசியால் உணவு சமைத்த செய்தியை,

    ”அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடிமாண் உலக்கைப் பரூஉக்குற்று அரிசி”    (புறம். 399 1-2)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்கு உலக்கை சமைப்பதற்குத் தேவையான அரிசியை உரலில் இட்டு குற்றுவதற்குப் பயன்பட்டதால் இது வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

    பிற பயன்பாட்டுக் கருவிகள்

    பழந்தமிழர்கள் அடார், சேறுகுத்தி, தட்டை, கரும்பின் எந்திரம் போன்ற  இரும்பாலாகிய சில கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். 

    அடார்

    விலங்குகளை அகப்படுத்தும் கருவி பொறி அடார் எனப்படும். அடார் என்பதற்கு, ”புலி முதலியவைகளை அகப்படுத்தும் பொறியாகிய கல்லடார்” 5 எனத் தமிழ்மொழி அகராதி விளக்கம் தந்துள்ளது. புறநானூற்றில் குடபுலவியார் எனும் புலவர் ”அடார்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

    பெரிய புலியைப் பிடிக்கும் வேடன் அதற்காக அமைத்த பெரிய கல் அடார் பற்றிய குறிப்பை,

    ”இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
    பெருங்கல் அடாரும் போன்ம்” (புறம்.19 5-6)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இப்பாடலுக்கு உரை எழுதிய ஔவை சு.துரைச்சாமிப்பிள்ளை, அடார் என்பது கற்பாறைகளின் இணைப்பாகும். மலை நாட்டவர் பாறைகள் நிறைந்த குன்றுப் பகுதியில் பொறி அமைத்து, அதன் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதனைத் தின்னவரும் புலி உள்ளே நுழைந்து ஆடுகளைத் தாக்கும்போது, வாயில் கதவாகிய கற்பலகை விரைவாக தானே மூடிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அடாரைப் புலிகளைப் பிடிப்பதற்காக மட்டுமின்றி மழை, வெயில், காற்று போன்ற சமயங்களில் வேட்டுவர்கள் மறைந்திருப்பதற்கும் பயன்படுத்தியுள்ளதாக விளக்கம் தந்துள்ளார். இதன்மூலம் வேட்டையாடும் பொழுது வேடன் பயன்படுத்தும் கருவியாக அடார் இருந்தமையை அறியமுடிகின்றது.

    சேறுகுத்தி

    புறநானூற்றில் சேறுகுத்தி என்னும் கருவி “தளம்பு“ என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை உடைத்துச் செம்மை செய்யும் கருவியாகும். சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை உடைக்கச் செல்லுங்கால் சேற்றில் கிடக்கும் வாளைமீன் அக்கருவியின் இடையே விழுந்து அறுபட்டுத் துண்டாகிவிடும் என்பதை,

    ”மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந்து இட்ட
    பழன வாளைப் பரூஉக்கண் துணியல்”         (புறம். 61 3-4) என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

    சோழன் நலங்கிள்ளியின் மகன் சேட்சென்னியின் நாட்டு இயல்பைப் பற்றிக் கூறும் போது தளம்பு என்ற கருவி இடம்பெற்றுள்ளது. 

    தட்டை

    குறிஞ்சி மற்றும் மருதநிலப் பகுதியில் விளையும் நெற்பயிரைப் பறவை இனங்கள் வந்து சேதப்படுத்தும்போது அவற்றை விரட்டுவதற்காகத் தினைப்புனம் காக்கும் காவலர் “கிளிகடி கருவி“ எனும் ஒரு வகையான கருவியைக் கையாண்டனர். புறநானூறு இக்கருவியைத் “தட்டை“ என்னும் சொல்லால் சுட்டியுள்ளது. தட்டை என்பதற்கு, ”அரிதாள், கவண், கிளிகடி கோல், திணைத்தாள், தீ பரந்த வடிவுள்ளது, மூங்கில், மொட்டை” 6 என தமிழ்மொழி அகராதி விளக்கம் தந்துள்ளது. மூங்கிலைக் கணுக்குக் கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாக ஒன்றிலே தட்டுகின்ற கருவியே தட்டையாகும். அவ்வாறு தட்டி ஓசையெழுப்பிய பொழுது நிகழ்ந்ததை,

    ”புனவர் தட்டை புடைப்பின் அயலது
    இறங்குகதிர் அலமரு கழனியும்
    பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே”      (புறம். 49 4-6)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. அதாவது குறிஞ்சி, மருத நில வயல்களில் உள்ள பறவையினங்களும் அதனை அடுத்து நெய்தல் நிலத்தில் உள்ள பறவையினங்களும் அஞ்சி எழுந்துள்ளன. இதன் வாயிலாக தட்டை என்பது மூங்கிலால் செய்யப்பட்டதையும், வயல்களின் விளைச்சலைப் பறவையினங்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இக்கருவியைப் பயன்படுத்தியதையும் அறிய முடிகின்றது. 

    கரும்பின் எந்திரம்

    தற்காலத்தில் கரும்பின் எந்திரம் என்பது கரும்பின் சாறு பிழியும் எந்திரத்தைக் குறிக்கும். ஆனால் கரும்பின் எந்திரம் என்பதற்குக் கரும்பை ஆட்டும் ஆலை என புறநானூற்றுப் பழைய உரையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

    ”மன்றில் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சீலைப்பின் அயல” (புறம்.322 5-6)

    என வெள்வேல் வீரனொருவனின் நாட்டுவளத்தைப் பற்றிப் பாடும்போது ஆவுர்கிழார் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

     முடிவுரை

    புறநானூறு பழந்தமிழர்களின் புறவாழ்க்கையைச் சிறப்பாக எடுத்துரைக்கும் நூலாகும். இந்நூலில் போருக்குப் பயன்பட்ட கருவிகளைத் தவிர அன்றாட வாழ்க்கையில் பயன்பட்ட தொழிற்கருவிகள், வீட்டுப்பயன்பாட்டுக் கருவிகள் மற்றும் பிற கருவிகள் பற்றிய செய்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன.

    அடிக்குறிப்புகள்

    1. நெல்லை.எஸ்.சங்கரலிங்க முதலியார், தமிழ்ப்பேரகராதி, ப.340
    2. எம். வின்சுலோ, தமிழ் ஆங்கில அகராதி, ப.36
    3. பெருஞ்சொல்லகராதி,(தொகுதி 1), ப.360
    4. எம். வின்சுலோ, முந்நூல், ப.163
    5. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ப.35
    6. மேலது., ப.732

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிாியர்,
    தி ஸ்டாண்டர்டு  ஃப்யா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி.

     

    Share
  • சங்க இலக்கியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்

    -த. ஆதித்தன்

    உலகில் தாம் வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களும் சில பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர்.  ஒரே பகுதியில் வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். அவ்வாறு வெவ்வேறு சமுதாய மக்கள் சேர்ந்து நெடுங்காலம் வாழ்ந்து வரும்போது அப்பகுதி மக்களின் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் சில பொதுமைக் கூறுகள் ஏற்படுவதுண்டு.  இருப்பினும் சமுதாயம் சார்ந்த சில நம்பிக்கைகளை அவர்கள் தனித்தன்மையோடு பின்பற்றி வருவதையும் அறிய முடிகிறது.  சமூகத்தோடு பின்னிப் பிணைந்துள்ள மக்களின் நம்பிக்கைகளும் அதைச்சார்ந்த சடங்குகள் பலவும் ஏதேனும் ஒரு வடிவத்தில் மக்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இச்சடங்குகள் குறித்து, “வாழ்வின் தகுதிப் பெயர்வினை அடையாளப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் முறையான செயல் முறைகளே சடங்குகள்.  இச்செய்முறைகள் ஒவ்வொரு தகுதிப் பெயர்வின் போதும் பல்வேறுவிதமான காரணங்களை நிலை நிறுத்திச் செல்கின்றன.  முன்னோரிடமிருந்து பெற்ற ஒவ்வொரு சடங்கும் அடுத்தடுத்த தலைமுறைக்காக மாற்றியளிக்கப்படுகின்றது.

    இம்மண்ணில் பிறக்கும் குழந்தைக்கு முன்னோர் மேற்கொண்ட பழக்கங்களைப் பெற்றோர் செய்வதும் பின்னர் அக்குழந்தை வளர்ந்து தான் புரிந்து கொண்டவற்றைத் தன் சந்ததிகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் மாறாத செய்முறையாகவே தொடர்கின்றது.  குழந்தை பிறந்தது தொடங்கி ஒவ்வொரு பருவ மாற்றத்தின்  அடையாளமாக அதன் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் தொடர்புடைய சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என ஓர் உலகம் நேர்க்கோட்டில் சென்று ஒட்டுமொத்தமாக அழிந்து விடுவதில்லை.  மாறாகப் பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு, மீண்டும் பிறப்பு… எனச் ‘சுழலேணி’ முறையில் வட்டமிட்டு உயர்ந்து செல்லும் இயங்கியலைக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தும் தம் குலங்கள் தழைத்து வாழவேண்டும் என்ற மனித வளத்தை முதன்மைப்படுத்தியே செய்யப்படுகின்றன.  அதனால்தான் மனிதனின் பிறப்பையும், வாழ்தலையும் மையமாகக் கொண்டு வாழ்க்கை என்ற வினைச்சொல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது”1 என்று க.அ. ஜோதிராணி குறிப்பிடுகிறார்

    பொதுவாக மனிதன்,  பிறந்தது முதல் இறப்பது வரையிலும் பல்வேறு வகையான சடங்குகளைப் பின்பற்றுகிறான்.  அச்சடங்குகளைச் சமய நம்பிக்கை சார்ந்த சடங்குகள், வாழ்வியல் பழக்கவழக்கங்கள் சார்ந்த சடங்குகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.  இத்தகைய சடங்குகளும், நம்பிக்கைகளும் அந்த அந்தக் காலக் கட்டத்தில் தோன்றும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதைக் காணலாம்.  அவ்வகையில்  நமது சங்க இலக்கிய நூல்களில் இருந்து சில சடங்குகளையும், நம்பிக்கைகளையும்  எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    நம்பிக்கைகள்

    பழங்காலம் தொட்டே மக்கள் பல்வேறு வகையான நம்பிக்கைகளைக்  கொண்டிருந்தனர். இயற்கையைப் போற்றி வழிபடுவதும் அந்த நம்பிக்கையின் பால்பட்டதே.  தொடர்ந்து மனித மனம் நம்புபவையே காலப்போக்கில் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் மாறிவிடுகின்றன.  இந்நம்பிக்கை குறித்த செய்திகள் சங்ககாலம் தொட்டு இன்று வரையிலும் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. இந்நம்பிக்கைகள் குறித்து, “ஒவ்வொரு மனிதனும் ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளின் குவியலாகக் காணப்படுகின்றான்.  நன்மையைத் தேடும் மனதின் பற்றுக்கோடாக நம்பிக்கை துணைநிற்கிறது.  கடலிலே அகப்பட்டுத் தவிக்கும் ஒருவனுக்குக் கையில் கிடைத்த சிறிய மரக்கட்டையும் தெப்பமாகத் தெரியும்.  அதுபோல் அலைக்கழிக்கப்படும் மனது, நம்பிக்கைகளைப் பற்றிக் கொள்ளும்பொழுது புத்துணர்ச்சி பெறுகிறது”2 என்கிறார் எஃப் பாக்கியமேரி.

    இந் நம்பிக்கை தொடர்பான செய்திகள் சங்க இலக்கியங்கள் முதல் இன்று வரையிலான இலக்கியங்கள் வரை காணக் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று கடவுள் நம்பிக்கை.  உலகின் மிகத் தொன்மையான காலத்தில் இயற்கை வழிபாடே இருந்திருக்க வேண்டும்.  அதாவது இயற்கையின் சீற்றங்களுக்குப் பயந்த மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எண்ணி அவ்வியற்கையை வழிபடத் தொடங்கினான் என்பர்.  சூரிய வழிபாடு, பிறைவழிபாடு போன்றவையும் இத்தகைய இயற்கை வழிபாட்டின் கூறுகளே ஆகும்.  சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான குறுந்தொகையிலும் பிறைவழிபாடு குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது.

    “வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ
    செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
    இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,”3 என்னும் பாடல் குறுந்தொகையில் அமைந்துள்ள கடம்பனூர்ச் சாண்டிலியனின் பாலைத் திணைப்பாடல் ஆகும்.  இப்பாடலில் பிறைத்திங்களுக்கு வண்ணத்தாலும் வடிவாலும் ஒத்ததாக உள்ள உடைந்த சங்குவளை உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது.  இத்தகைய பிறைநிலா மாலையில் செவ்வானத்தில் தோன்றும். அப்பொழுது பலராலும் தொழப்பெறும் பெருமையுடையது என்று கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் பிறை நிலவை வழிபடும் நம்பிக்கை பழங்காலத்திலேயே தமிழ் மக்களிடம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

    முற்பிறப்பு மற்றும் விதி என்பன மீதும் மக்களுக்குப் பரவலாக நம்பிக்கை உள்ளது.  இன்று தலைவிதி என்று கூறப்படுவதையே அன்றைய காலத்தில் ஊழ் என்று குறிப்பிட்டுள்ளனர் எனலாம்.  நல்வினை நல்ல ஊழினை அதாவது விதியினைக் கொடுக்கும் என்றும் தீவினை தீய விதியினைக் கொடுக்கும் என்றும் மக்கள் நம்பி வருகின்றனர்.  இந்நம்பிக்கை அன்று முதல் இன்றுவரை மக்களிடையே காணப்படுகிறது.

    பதினெண் மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மட்டுமன்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களிலும் இத்தகைய செய்திகள் இடம்பெற்றுள்ளன.  முற்பிறப்புப் பற்றியும் ஊழ்பற்றியும் இடம்பெற்றுள்ள செய்திகளை மட்டும் தனி ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்கிற அளவிற்குப் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

    சிறுவயதில் பகைவர்கள் போன்று இருந்தவர்கள் தலைவனும் தலைவியும், வளர்ந்த பின்னர் அவர்களுள் காதல் உருவாக ஊழ்வினையே காரணம் என்னும் கருத்தமைந்த பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

    “இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
    புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
    காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
    ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
    நல்லைமன் றம்ம பாலே- மெல் இயல்
    துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
    மணம்மகிழ் இயற்கை காட்டி யோயே”4

    தலைவன் தலைவி இருவரும் இளம் வயதில் தெருவில் விளையாடும்போது அவளின் ஐவகையாகப் பின்னப்பட்ட தலைமுடியினை அவள் அறியாதவாறு அவன் பிடித்து இழுப்பான்.  அதனை அறிந்து அவள் அவனின் வெட்டப்பட்ட தலைமுடியினை வளைத்துப் பிடித்த வண்ணம் ஓடுவாள்.  இவ்வாறு அவர்கள் அயலாரைப் போன்று பகைபாராட்டி நிற்பர்.  அவர்கள் மீது அன்பு கொண்ட செவிலியர் அவர்களின் சண்டையை விலக்குவர்.

    இப்பொழுது இவர்கள் உள்ளத்தால் வெறுத்ததை அறவே மறந்து தொடுக்கப்பட்ட மாலை போல இணைந்து மகிழ்ச்சியுடன் இருப்பது விதியே என்பதாக மோதாசனார் குறுந்தொகையில் கூறியுள்ளார்.

    இதேபோன்று பல்லியின் ஓசையை வைத்துப் பலன்களைக் கணிக்கும் பழக்கமும் மக்களிடையே தொன்மையான நம்பிக்கையாக உள்ளது.  காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பதும் அத்தகைய நம்பிக்கையே ஆகும்.  இத்தகைய ஏராளமான நம்பிக்கைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே காணப்படுகின்றன.  அவை தொடர்ந்து மரபு வழியாகத் தொடரும் போது சடங்குகளாக மாறிவிடுகின்றன எனலாம்.

    திருமணச் சடங்கு

    திருமண அறிவிப்புத் தொடங்கித் திருமணம் முடியும் வரையிலும் பல சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

    தம் மகள் திருமணத்தை ஊரார் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகப் பெற்றோரால் செய்யப்படும் சடங்கு ஒன்று கயமனார் பாடியுள்ள அகநானூற்றுப்  பாடலில் இடம் பெற்றுள்ளது.

    “ நனைவிளை நறவின் தேறல் மாந்தி,
    புனைவினை நல்இல் தருமணல் குவைஇ,
    ‘பொம்மல் ஓதி எம்மகள் மணன்’ என,
    ‘வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,அரும்புகளில் இருந்து பெறப்பட்ட கள்ளின் தெளிவை உண்டு மகழ்ந்திருந்தனர்.  வீடானது நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.  நல்ல சிறந்த வேலைப்பாடுகள் அமைந்தாகவும் அவ்வீடு காணப்பட்டது.  அங்குப் புதிதாகக் கொண்டு வரப்பட்ட மணலைக் குவித்துப் பரப்பி வைத்திருந்தனர்.  பொலிவான கூந்தலை உடைய தமது மகளுக்குத் திருமணம் என்ற உறுதியை அறிவிக்கும் விழாச் சடங்கு அவ்விடத்தில் நிகழ்ந்தது என இவ் அகநானூற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.

     கலித்தொகைப் பாடல் ஒன்று திருமணம் நடைபெறப்போகும் வீடு குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மணப்பந்தல் குறித்தும்,

          “தருமணல் தாழப்பெய்து, இல் பூவல் ஊட்டி,
          எருமைப் பெடையோடு, எமர் இங்கு அயரும்
                           பெரு மணல் எல்லாம்…”6 என்று குறிப்பிடுகின்றது அதாவது கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த புதிய மணலைத் தரை முழுவதும் நன்றாகப் பரப்பினர்.  வீடு செம்மண்ணால் பூசப்பட்டிருந்த்து.  பெண் எருமையின் கொம்பினைத் தெய்வமாக வைத்து வழிபாடும் செய்யப்பட்டது.  இவ்வாறாகத் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது என இக்கலித்தொகைப் பாடல் தெரிவிக்கிறது.

    இறப்புச் சடங்கு

    உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் உயிர் துறப்பது இயற்கை.  விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் தனது கூட்டத்தைச் சார்ந்த உயிரின் மறைவைக் கண்டு துயரப்படுவதைக் காணமுடிகிறது.  மனித சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல.  ஒவ்வொரு பகுதியிலும் வாழ்கின்ற மனிதர்கள் இந்த இறப்பினை ஒட்டி ஒவ்வொரு வகையான சடங்குகளைப் பின்பற்றி வருகின்றனர்.  இவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன.

    சங்க இலக்கியங்களுள் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகப் போற்றப்படுவது புறநானூறு ஆகும்.  அதில் சிறுகுழந்தைகள் மரணம் அடைந்தால் உடலை வாளால் பிளந்து அடக்கம் செய்தல், வீரர்களின் மரணத்தைப் போற்றும் வகையில் நடுகல் அமைத்தல் போன்ற பல மரணச் சடங்குகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை போரில் தோல்வியடைந்தான்.  வெற்றி பெற்ற சோழன் செங்கணான், சேரனைக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான்.  அப்பொழுது கடுமையான நீர்த்தாகத்தால் சிறைக்காவலரிடம் தண்ணீர் கேட்டான் இரும்பொறை.  அவன் காலம் தாழ்த்தித் தண்ணீர் கொண்டு வந்ததால் வருந்திய சேரன் தண்ணீர் அருந்தாமலேயே உயிர் நீத்தான் அப்போது தன்னுடைய நிலைக்குத் தானே இரங்கிப் பாடியதாக இப் புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது.

    “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்,
    ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
    தொடர்ப் படுஞமலியின் இடர்ப்  படுத்து இரீஇய
    கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
    மதுகை இன்றி, வயிற்றிதுத் தீத் தணிய,
    தாம் இரந்து உண்ணும் அளவை
    ஈன்மரோ, இவ் உலகத்தானே?”7

    இப்பாடல் பழங்காலத்தில் மன்னர்கள் போரின்போது விழுப்புண்பட்டு மடிவதையே பெருமையாகக் கருதினர் என்பதற்குத் தகுந்த சான்றாகத் திகழ்கிறது.  மேலும் சேரன் கணைக்கால் இரும்பொறையின் மானமிகு வாழ்வையும் எடுத்தியம்புகிறது.

    பாடலில், ‘பிள்ளை  இறந்து பிறந்தாலும் – தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் – அல்லது பிறந்த குழந்தை இறந்தாலும் அதனையும் ஒரு நபராகவே கருதி உயர்வு தருவர்.  அந்த இறந்த குழந்தையின் உடலையும் வாளால் பிளந்து வடுப்படுத்தி அடக்கம் செய்வர்.  அதேபோன்றே மன்னராக இருப்பவர் போரில் பகைவரின் வாளால் வடுப்பட்டு இறந்திடல் வேண்டும்.  அவ்வாறு இன்றிப் பிழைத்து விட்டால் நாயைச் சங்கிலியால் பிணைப்பதைப்போன்று விலங்கு பூட்டித் துன்புறுத்துவர் பகைவர்.  அத்தகைய பகைவரிடம் நீரை இரந்து கேட்டு வயிற்றுத் தீயை தணிக்க வேண்டாம்.  இவ்வுலகில் அத்தகைய இழிந்த இயல்புடையவரைஅரசர்களும் பெறுவார்களோ! என்று பாடியுள்ளார் சேரமான் கணைக்கால் இரும்பொறை.

    இதன்மூலம் சிறு குழந்தை இறந்தாலும் சரி, குழந்தை இறந்து பிறந்தாலும் சரி இறுதிச் சடங்கின்போது அவற்றிற்கு வடு ஏற்படுத்திப் புதைக்கும் முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்துள்ளமையை அறியமுடிகிறது.

    வழிபாடு தொடர்பான சடங்குகள்

    மனிதன் ஆரம்பத்தில் இயற்கையை வழிபட்டிருக்கக்கூடும்.  பின்னர்ப் படிப்படியாகக் கடவுள் வழிபாடு வரை வந்துள்ளது.  இவ்வழிபாடுகள் அனைத்தும் என்று தொடங்கியது என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவிற்கு மிகத் தொன்மையானதாக உள்ளன.

    உலகம் முழுவதும் உள்ள இலக்கியங்களில் புராணக்கதைகள், கடவுள் வழிபாடு போன்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன.  தமிழ்மொழியில் இன்று கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழமையான சங்க இலக்கியங்களிலும் இறைவழிபாடு குறித்தும் அவை தொடர்பான சடங்குகள் குறித்தும் சில செய்திகள் இடம் பெற்றுள்ளன.

    பத்துப்பாட்டில் முதலில் வைத்து எண்ணக் கூடியதாக,  திருமுருகாற்றுப்படை உள்ளது.  நலம் வேண்படுபவர்களை முருகக் கடவுளிடம் ஆற்றுப்படுத்துவதாக நக்கீரரால் படைக்கப்பட்ட நூலே திருமுருகாற்றுப்படை.  இதில் இறைவழிபாட்டுச் சடங்கு குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    “ பைங்கொடி, நறைக்காய் இடை இடுபு, வேலன்
    அம்பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு
    வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்;
    நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
    கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
    நீடுஅமை விளைந்த தேக்கண் தேறல்
    குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
    தொண்டகச் சிறுபறைக் குரவை அயர”8 என்னும் அடிகளில், முருகக்கடவுளுக்குப் பூசை செய்யும் வேலன் பச்சிலைக் கொடியால், நல்ல மணமுடைய சாதிக்காயை இடை இடையே சேர்த்துக் கட்டுகிறான்.  அதனோடு அழகிய புட்டியைப் போன்ற வடிவுடைய தக்கோலக்காயையும் கலந்து காட்டு மல்லிகைப்பூ, வெண்டாளிப்பூ ஆகியவற்றையும் சேர்த்துக் கட்டுகிறான்.  இம்மாலையை அணிந்தவனாக வேலன் நிற்கிறான்.  அங்குவரும் குறவர்கள் நல்ல வாசனை வீசும் சந்தனத்தைப் பூசிய மார்பை உடையவர்கள்.  வேட்டை காரணமாகக் கொலைத் தொழிலைச் செய்பவர்கள் அந்தக் குறவர்கள்.  அவர்கள் நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கள்ளின் தெளிவைத் தமது சுற்றத்தாரோடு சேர்ந்து உண்டு மகிழ்ந்திருந்தனர்.  தம் குறிஞ்சி நிலத்திற்குரிய வாத்தியக் கருவியாகிய  ‘தொண்டகம்’ எனப்பெறும் சிறுபறையை அடித்தனர்.  அதனது தாளத்திற்கு ஏற்பக் குரவைக் கூத்தாடினர் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் முருக வழிபாட்டுச் சடங்கில் குரவைக் கூத்து இடம் பெறுவது, குறவர்கள் அந்த ஆட்டத்தின்போது சிறுபறையை அடிப்பது, கள்அருந்தி மகிழ்ந்திருப்பது போன்ற செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    சங்க இலக்கியங்களுள் ஒன்றான நெடுநல் வாடையிலும் இறைவழிபாடு பற்றி குறிப்பு உள்ளது.  மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குவது குறித்துக் குறிப்பிடும் போது,

    “மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
    செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,
    அவ்விதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து
    இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
    நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
    மல்லல் ஆவணம் மாலை அயர”9  என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். நெடுநல்வாடையில் குளிர்கால வர்ணனை இடம் பெறும் பகுதியிலேயே இவ்வடிகள் இடம்பெற்றுள்ளன.  பகலிலும் மழைமேகம் சூழ்ந்து இருளாகக் காட்சித் தருவதால் மாலைக் காலத்தை அறிய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.  அப்பொழுது மகளிர் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லை அரும்புகளை அழகிய பூந்தட்டுகளில் இட்டு வைக்கின்றனர்.  அவை மலர்ந்து மணம் வீசுவதைக் கொண்டு மாலை நேரம் வந்துவிட்டது என்பதனை அறிந்துக் கொள்கின்றனர்.

    இம்மாலைப் பொழுதில் இறைவனை வழிபடுகின்றனர்.  அதற்கு இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில், நெய்தோய்ந்த திரியைக்  கொளுத்துகின்றனர்.  நெல்லையும் மலரையும் தூவிக் கைக்கூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபடுகின்றனர்.  வளம்பொருந்திய ஆவண வீதிகளில் உள்ள வீடுகளில் இவ்வாறு இறை வழிபாடானது மாலை வேளையில் இடம் பெறுகிறது.  இவ்வாறு நெல்லையும் மலரையும் தூவிக் கைகளைக் குவித்து விளக்கேற்றி வழிபடும் முறையை நெடுநல்வாடை விவரிக்கின்றது.

    பழங்காலம் முதல் இன்றுவரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும், பின்பற்றி வருகின்ற சடங்குகளையும் இலக்கியங்கள் வாயிலாகவே தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

    இவற்றின் மூலம்,  மக்கள் தங்களுடைய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்தே தத்தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் உணரலாம்.  இவ்வாறு தொடர்ந்து பின்பற்றிவரும் அதாவது மரபு வழியாகத் தொடரும் நம்பிக்கைகள் காலப்போக்கில் சடங்குகளாக மாறுகின்றன.

    சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்ற மக்களின் நம்பிக்கைகளையும், சடங்குகளையும் குறித்து நுணுகி ஆராய்ந்து மேலாய்வுகளை மேற்கொள்ளலாம்.  அவ்வாறு ஆராயும்போது சங்ககால  மக்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

    சான்றெண்விளக்கம்

    1.ஜோதிராணி.க.அ, தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சடங்குகள், தன்னனானே, கோடம்பாக்கம், சென்னை-34, முதல் பதிப்பு – டிசம்பர் 2004,  பக்கம் எண்:9-10

    2.பாக்கியமேரி.எஃப், தமிழர் பண்பாடும் பயன்பாடும், அஞ்சனச்சிமிழப் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை- 600 004, இரண்டாம் பதிப்பு – 2013. பக்கம் எண்:23

    3.குறுந்தொகை,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 307

    4. குறுந்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 229

    5. அகநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 221

    6. கலித்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 114

    7.புறநானூறு,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 74

    8.பத்துப்பாட்டு-பகுதி1 (திருமுருகாற்றுப்படை, அடி:190-197),  பகுதி1 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பக்கம் எண்: 13

    9. பத்துப்பாட்டு – பகுதி 2(நெடுநல்வாடை, அடி:39-44, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பக்கம் எண்: 178

    *****

    கட்டுரையாசிரியர் – இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    பேச:9841152393
    மின்னஞ்சல்:kumaritathithan@gmail.com

     

     

    Share
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் – தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

    -முனைவர் கல்பனா சேக்கிழார்

    தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுக நிலையில் அறியப்பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம், 20ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்  சமூகத்தின் வரலாற்றுப் பிரதியாக, பண்பாட்டுப் பிரதியாக, மொழிப் பிரதியாக, தமிழிரின் அடையாளத்தைக் கொண்டுள்ள தொல்பழம் பிரதியாக உருப்பெறுகிறது. அதன் காரணமாகத் தொல்காப்பியம் தேடித்தேடி மூலப் பதிப்புகளும், உரையோடு கூடிய பதிப்புகளும் பெருமளவு பதிப்பிக்கப்படுகிறன. அதன் தொடர்ச்சியாகப் பதிப்பித்த பிரதியின் மீதான விவாதங்களும் தொடங்குகின்றன.

    இதனை மூன்று வகையாக நாம் பிரித்து நோக்கலாம்.

    1. இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
    2. தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள்
    3. தொல்காப்பியம் தொடர்பாகக் கல்விப்புலங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள்

    இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்

    சி.வை. தாமோதரன் பிள்ளையால் 1885-இல்  வெளியிட்டப்பட்ட, பொருளதிகார உரைப்பதிப்பு முழுதும் நச்சினார்க்கினியருரையல்ல, பின்னான்கு இயல்கள் பேராசிரியரால் உரை எழுதப்பட்டது, என்னும் விவாதத்தை இரா. இராகவையங்கார் 1902-இன் இறுதியில், முதல் இதழாக வெளிவந்த செந்தமிழ் இதழில் அச்சிட்ட தொல்காப்பியச் செய்யுளியலுரைகாரர் பேராசிரியரென்பது என்னும் தலைப்பில் பதிவு செய்கிறார்.

    அச்சிடப்பட்ட தொல்காப்பியச் செய்யுளியலுரைக்காரர் பேராசிரியர் என்பது என்னும் கட்டுரை தொடங்கி தொல்காப்பிய உரை குறித்த கருத்தாடலைத் தொடர்ந்து ரா. ராகவையங்கார் முன்வைக்கிறார். இதுவே தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்குக் கிடைக்கும் நச்சினார்க்கினியர் உரை முதல் ஐந்து இயலுக்கும் செய்யுளியலுக்கும் கிடைக்கிறது என்பதும், பின்னான்கு இயலுக்குப் பேராசிரியர் உரை கிடைக்கிறது என்பதும் அறிய வருகிறது. இந்த புரிதல் இல்லாது பதிப்பித்த சி.வை.தா.வை அவர் எங்கும் விமர்சனம் செய்யவில்லை.  அத்துடன் இன்னும் நச்சர். பேராசிரியர் உரை இல்லாது பழைய உரையொன்று தொல்காப்பியத்திற்குக்(பொருளதிகார செய்யுளியலுக்கு) கிடைக்கிறது என்று ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

    இதுகாறும் வெளிவராத தொல்காப்பியச் செய்யுளியற் பழைய உரையொன்று இச் சங்கத்திற்கியான் ஏடு தேடிச் சென்றபோது கிடைத்து. அதனை யுற்று நோக்கின் இத்தகைய வேற்றுமை பெரிதும் புலனாவது. அவ்வுரை பேராசிரியர், நச்சினார்க்கினியருரைகளின் வேறாகும். இவ்விரண்டாசிரியர்களாலும் குறிப்பிடப்படாத பேதங்கள் அப்பழைய வுரைக்கண்ணே காணப்படுகின்றன[1]

    இதனைத் தொடர்ந்து தொல்காப்பிய நூலின் அமைப்பு, அதன் ஆசிரியர், காலம், சமயம், உரையாசிரியர் மரபு ஆகியன குறித்த விவாதங்கள் மேலெழுப்பப்பட்டன. செந்தமிழ் இதழோடு 1923 – இல் தொடங்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வி இதழும் 1925 – இல் தொடங்கப்பட்ட தமிழ்ப்பொழில் இதழும் தொல்காப்பிய ஆய்வை வளப்படுத்தின.

    இம்மூன்று இதழ்களிலும் இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், அ. குமாரசாமிபிள்ளை, நாராயணயங்கார், டி. என். அப்பனையங்கார், எஸ். வையாபுரிப் பிள்ளை, வே. முத்துசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கே.எஸ். நவநீதகிருஷ்ணபாரதி, மயிலை சீனி. வேங்கடசாமி, நாராயணயங்கார், டி.என். அப்பனையங்கார், பி.சா.சுப்பிரமணியம், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், நீ. கந்தசாமிப்பிள்ளை உள்ளிட்ட பலரும் மேற்கொண்ட ஆய்வுகள் தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வில் புதிய பாதைகளை உருவாக்கித்தந்தன.

    1904–இல் செந்தமிழ் இதழில் அச்சிட்ட தொல்காப்பிய மரபியலுரை என்னும் தலைப்பில் ரா. ராகவையங்கார் தொடர்ச்சியாக நச்சர் உரை அல்ல வேறு உரை என எழுதுகிறார்.

    வே. முத்துசாமி ஐயனும், மு. இராகவையங்காரும் தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக 1912-இலிருந்து எழுதியுள்ளனர். அவை தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழ்அறிவு புலத்தில் அறிவதற்கான கட்டுரைகளாக அமைகின்றன. அன்று பதிப்பிக்கப்பட்ட உரைகளிலிருந்தும், பின் வந்த இலக்கண நூல்களிலிருந்தும் விளக்கமாக உரைநடை வடிவிலும், தேவைப்படும் இடங்களில் நூற்பாக்கள் எடுத்தாளப்பட்டும் எழுதப்பெற்றன.

    1919–இல் செந்தமிழ் இதழில் தொகுதி-18, பகுதி – 3 – இல் அ. குமாரசாமிப் பிள்ளை உவமப் போலி என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுகிறார். அதே ஆண்டு அடுத்த இதழில் திரு. நாராயண அய்யங்கார் பிள்ளை அவர்கள் காட்டிய உவமைப்போலி பக்கப்போலிகளின் பெயர்களிலும் உரைகளிலும் உள்ள பிழைகளைத் திருத்தியும், பெயர்கள் அளவிலேயே விடுப்பட்டவைகளை உதாரணங்காட்டி விளக்கியும், உரை வேறுபாட்டிற்குச் சமாதானம் கூறியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    தொல்காப்பிய அகத்திணை, உவமை, யாப்பு, தொல்காப்பியரின் சமயம் குறித்து எனச் செந்தமிழில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியத்தை அடிப்படையாக கொண்டு தமிழிரின் வாழ்வியல் முறைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, தமிழ் இலக்கணமும் தமிழ் நாட்டின் இல்லற வாழ்க்கையும், பண்டைய தமிழர் மணமுறை, இன்பச்சுவை, தொல்காப்பியக் கடவுள், தமிழ்நெறி விளக்கவாராய்ச்சி, புறப்பொருள் மக்கள் என்னும் நிலைகளில் தமிழ்ப்பொழிலில் கட்டுரைகள் அமைந்துள்ளன. செந்தமிழ்ச் செல்வியில் பெரும்பான்மையான கட்டுரைகள் இளவழகனார் கட்டுரைகளாக அமைந்துள்ளன. அவை அகப்புறத் துறைகளை ஆய்வு செய்வனவாக அமைந்துள்ளன. ஒருவழித்தணத்தல், பாங்கற் கூட்டம், பொருள்வயிற் பிரிவு, மடற்திறம், மதியுடம்படுத்தல், சேட்படை, நொச்சித்திணை, பாடாண்திணை, வஞ்சித்திணை, பொதுவியல், தும்பைத்திணை, வெட்சித்திணை, கரந்தைத்திணை, காஞ்சித்திணை, கைக்கிளைத்திணை என்பனவாகும்.

    பூரணலிங்கம் பிள்ளை அவர்களால் 1927-இல் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு – 5, பரல்-9 இல் பொருளதிகாரம் என்னும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.  பொருளதிகாரம் ஒன்பது இயல்களின் அமைப்பு குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள்

    தொடக்கக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்து திரு. முத்துசாமி ஐயன், பெயர் தெரியாத ஒருவர், திரு. மு. இராகவையங்கார், பேராசிரியர் கா.சு. பிள்ளை, திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் விவரணை நிலையில் தங்களுடைய ஆய்வுகளை முன்னெடுத்தனர். இவ் ஆய்வுகள் தொல்காப்பியத்தின் ஒரு பகுதியாக அமைந்த பொருளதிகாரத்தினைத் தமிழர் வாழ்வியலோடு இணைத்து விவாதிப்பதாக அமைந்துள்ளன. மு. இராகவையங்கார் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் தொடர்கட்டுரை 1922 – இல் நூலாக்கம் பெற்றது.

    கொழும்பினைச் சேர்ந்த கு. ஸ்ரீகாந்தன் 28.8.1012 – இல் மு. இராகவையங்காருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தில், அறிவிப்புப் படி மு. இராகவையங்காரின் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் நூலில் சில மாதங்களுக்குமுன் பத்திரிகைகளிற் பிரசுரஞ்செய்திருந்தபடி, எனக்கு வந்த தொல்காப்பியப் பொருளதிகார வியாசங்களைத் தக்க மத்தியஸ்தர்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் தாங்கள் எழுதியதே முதன்மை பெற்று விளங்குவதாகத் தெரிந்தமையின், முன்பு பரிசு கொடுப்பதாக வாக்குத்தத்தஞ்செய்திருந்த ரூ. 200 – ஐயும் இன்று மணியாடர் மூலந் தங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்[2] என்று எழுதியுள்ளார். தொல்காப்பியம் பொருளதிகாரம் குறித்து விவரண நிலையில்  எழுதப்பட்ட அந்நூல் 1922-இல் வெளிவருகிறது அதன் முகவுரையில்…

    ”நான் எழுதி முடித்து பத்து வருஷங்களாகியும், இதுவரை அச்சிடப்படாமல் தாழ்க்கும்படி நேர்ந்தது என் துரதிருஷ்டமே. இவ்வாறு தாமதிக்க நேர்ந்ததற்கு – இதனை எழுதுவித்த பிரபுவினிடம் இருந்த சுத்தப் பிரதியை அவர் நண்பரொருவர் பார்வையிடும் பொருட்டு இட்டாலி தேசத்திற்குக் கொண்டுபோகும்படி நேர, அப்போது ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கி அத்தேசத்தையும் பீடித்ததே முக்கியகாரணமாகும். அப்பெரும்போர் முடிந்த பின்னே இதன் கையெழுத்துப் பிரதியை அவர்கள் பெறும்படியாயிற்று. பிரதி கிடைத்ததும் என் விருப்பத்திற்கிணங்கி யானே அச்சிட்டுக்கொள்ளுமாறு அப்பிரபு அவர்கள் அன்பு கூர்ந்து அதனை அனுப்பினார்கள்[3] என்று குறிப்பிடுகிறார்.

    இந்நூலுள் மூலப்பிரதியுடன் சில திருத்தங்கள் செய்தும், நூல் வெளியீட்டின் போது இளம்பூரணர் எழுதிய அகத்திணை, புறத்திணைப் பகுதிகள் வெளிவந்திருந்த காரணத்தால், அவ்வுரையில் காணப்பட்ட சிறப்புக் குறிப்புகளை இணைத்தும் வெளியிட்டுள்ளார். இந்நூல் பற்றிக் குறிப்பிடும்போது,

    பரிசுத்தொகைக்காக 100 பக்கங்களுக்குள் அனுப்பப்பட்டது என்றும், சி.வை.தா அவர்கள் பதிப்பித்த பொருளதிகாரப் பதிப்பினையும் அந்நூற்பாக்களின் வரிசை எண்ணையும் இந்நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கிறார். இந்நூலுள் அகப்பொருள் குறித்து வெவ்வேறு இயல்களில் எழுதப்பட்டுள்ளவற்றை தொகுத்தும் எளிதில் விளங்குமாறு எழுதியுள்ளார். புறப்பொருள் குறித்து விரிவாகவும், உவமையியல், மெய்ப்பாட்டியல், செய்யுளியல் குறித்து சுருக்கமாகவும் எழுதியுள்ளார். அத்துடன் இறுதியல் பொருட்குறிப்பு அகராதியும் தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 1928 – இல் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. அதன் முன்னுரையில்,

    இற்றைக்குப் பதினாறாண்டுகளுக்குமுன் என்னால் எழுதப்பெற்ற தொல்காப்பியப் பொருளதிகாரவாராய்ச்சி வெளிவந்தது முதல் தமிழ் மக்களால் அது விருப்புடன் ஏற்றுப் படிக்கப்பெற்று வருவதற்கும், சென்னைச் சருவகலாசங்கத்தாரால் உயர்தர ஆங்கிலப்பரீக்ஷைகட்கும் வித்துவான்பரீக்ஷைக்கும் பலமுறை பாடமாக வைத்துக் கௌரவிக்கப்பெற்று வருவதற்கும் நான் பெரிதும் உவப்பும் ஊக்கமும் அடைகிறேன். இதன் முதற்பதிப்பு முழுவதும் செலவாயினமையால், இரண்டாம் முறையாக இப்பதிப்பு இப்போது வெளியிடப்பெறுகிறது. பெரிய மாற்றங்களின்றிப் பெரும்பான்மை முன்னமைந்த முறையே இப்பதிப்பு கொண்டுள்ளது. ஆயினும், இன்றியமையாத திருத்தங்களும், புதிய செய்திகளும், கீழ்க்குறிப்புகளும் ஆங்காங்கு அமைத்துள்ளேன். இறுதியில் உள்ள பொருட்குறிப்பகராதி புதிதாகவே சித்தஞ்செய்யப்பட்டது[4] என்னும் குறிப்பிலிருந்து, இந்நூல் அன்று பாடசாலைகளில் பாடமாகவிருந்ததும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழ் மக்களின் வாழ்வியல் நூலாகவும் கற்றனர் என்பதையும் அறியமுடிகிறது. பேராசிரியர் க. வெள்ளைவாரணன் இந்நூல் பற்றி கூறும்பொழுது, நச்சினார்கினியர் அடியொற்றி விளக்கியுரைக்கப்பட்டு, வடமொழி சார்புடைத்து என்று கூறியிருந்தாலும் அன்றைய சூழலில் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய நிலையில் இந்நூல் முக்கியம் வாய்ந்ததாகவே உள்ளது.

    வே. முத்துசாமி ஐயன் அவர்கள் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை நூலாக்கம் பெறவில்லை. ஆனால் அவருடைய கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.  அக்கட்டுரையில் தொல்காப்பியத்தின் சிறப்பு பொருளதிகாரத்தின், அப் பொருளிலக்கணம் இத்தகைத்து என்பதும், அப் பொருளிலக்கணம் கருவியாக அறியப்பெறும் பண்டைக்காலத்தாரது வழக்கங்களும் நடையுடை பாவனை முதலியவைகளும் இவைஇவை என்பதும் மற்றும் இவைபோல் நுணுகி அறியப்படுவன இன்ன இன்ன என்பதும், பிறவும் ஒருவாறு இவ் வியாசத்தின்கண்ணே விளக்கிக்காட்டப்படும்[5] என்று குறிப்பிடுட்டுள்ளார்.

    வேங்கடராஜலு ரெட்டியாரின் இலக்கணக் கட்டுரைகளில் செய்யுளியலில்  உறுப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அசை, சீர் இவற்றை ஆராயும்போழ்து இளம்பூரணருரையும் படிக்க எண்ணினேன். அக்காலத்தில் (1922) அவ்வுரை அச்சாகவில்லை. ஆயின், அதன் திருத்தமான ஏடு திருவாளர் S.வையாபுரிப்பிள்ளையிடம் (தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்) இருந்ததையறிந்து, அவர்களை வேண்டிக்கொண்டேன். அவர்கள் அவ்வுரைப் பிரதியை அன்புடன் உவந்துதவினார்கள்[6].

    1938–இல் வெளிவந்த இளவழகனாரின் இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம் என்னும் நூலின் அணிந்துரையில் பேராசிரியர் கா.சு. பிள்ளை அவர்கள், இந்நூலின் பொருளதிகாரத்தை யாவர்க்கும் எளிதாக விளங்கும் பொழிப்புரையுடனும் செவ்விய கருத்து விளக்கத்துடனும் கண்கவர் வனப்புடைய, கைக்கு அணியாதற்குரிய பத்துச் சிறு புத்தகத் தொகுதியாக வெளியிடுவதற்குப் பொருளுதவி புரிய முன்வைத்துள்ளவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை சைவத் திருவாளர் ஆ. மாணிக்க செட்டியாரவர்களாவர். வணிகத் துறையிற் சிறந்து தமிழன்பே உருவாயிலங்கும் அவ் வீரர் கூலவணிகன் சாத்தனாரை இற்றை நாளில் நினைவுறுத்துஞ் சீர் வாய்ந்தவராவர். அவர்கட்குத் தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடுள்ளது[7] என்று குறிப்பிடுகிறார்.

    இந்நூல் அகத்திணையியல் நூற்பாக்கள் அவற்றுக்கு விளக்கம், அகத்திணையியலின் கருத்துக்கள், உயர்ந்த இன்ப வாழ்க்கை, அகத்திணையால் அறியப்படுகிற தமிழ்நாட்டுக் குறிப்புகளிற் சில, அகத்திணையியல் அகராதி என்னும் நிலையில் அமைந்துள்ளது. இக்கருத்துக்களின் மையம் தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலை நாகரிகத்தை முன்வைப்பதாக வாதிடுகிறது. அதற்கான  சான்றுகள் விவரணைகளுடன் அமைகிறது.

    1939இல் கா. சுப்பிரமணிய பிள்ளையின் பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து என்னும் நூல்  ஆ. மாணிக்கம் அவர்களால் தமிழ்நெறி விளக்கப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. மறுபதிப்பாகச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1968-இல் வெளியிட்டுள்ளது.

    இதன் முன்னுரையில் சிறப்பு வாய்ந்த நூலாகிய தொல்காப்பியமானது இக்காலத்தில் எளிதிற் பொருள் விளங்கப் பெறாமையால் கற்கப்படுவது இல்லை. அதன் சிறந்த கருத்துகளனைத்தையும் இது தொல்காப்பியப் பெருநூலைக் கற்றறிவதற்கும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஆய்தறிவதற்கும் தக்க தோற்றுவாயாக அமைந்துள்ளது[8] என விளக்கமளிக்கிறார்.

    நூலின் தொடக்கத்தில் சேர்க்கை என்று திருக்கோவையாரில் உள்ள 24 துறைகள் குறித்த துறைவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தொல்காப்பியப் பொருளதிகார அகப்பொருட் சார்பான இயல்களில், துறை வரிசை கூறப்படாது, தலைவன் தலைவி முதலியோர் கிளவி நிகழும் இடங்களே தொகுக்கப்பட்டிருத்தலின், அவற்றைக் கற்பதற்கு முன், துறை வரிசை அறிதல் அவசியம். திருச்சிற்றம்பலக் கோவையாருள் காணப்படும் துறை வரிசையைக் கற்றுக்கொள்ளுவது போதிய துணைபுரியும் ஆகலின், அவ்வரிசைகளை இங்கே தொகுத்துத் தருகிறேன்[9] என்று விளக்கம் தருகிறார்.

    இப்பிரதியுள் தொல்காப்பியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், தொல்காப்பியக் காலம் குறித்த செய்திகளைக் கொடுப்பதுடன், தொல்காப்பியத்தின் சில பகுதிகள் பிற்காலத்தவென்னில், அப்பகுதிகள் பிற்காலத்தே சேர்க்கப்பட்டனவென்று கொள்ளுவதே பொருத்தமாகும் என்ற கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.  பொருளிளக்கணத்தின் சிறப்புகள் கூறப்பட்டப்பிறகு, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல், புறத்திணையியல் என்னும் வரிசையில் ஒவ்வோர் இயல் குறித்த விளக்கம் கூறப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் நூற்பாக்களையும் உரையாசிரியர்கள் கருத்துகளையும் எடுத்துக்காட்டியும், சான்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

    1945–இல் பண்டைய தமிழர் இன்பியல் வாழ்க்கை என்னும் தலைப்பில் இளவழகனார்  எழுதியுள்ளார். நூல் எழுதப்பட்டதற்கான காரணம் குறித்து, தமிழெனவொரு தனிமொழி யுளதா வெனக் கேட்கப்படும் காலம் மாறி தமிழும் உயர் தனிச் செம்மொழியே என்றும் உயர்தனிச் செம்மொழிகள் யாவற்றினும் தமிழ் தலை சிறந்தது என்றும்,  உலக மொழிகளனைத்திற்கும் தமிழ் தாய்மொழி என்றும் உவந்து கூறுங் காலமன்றோ விது. இற்றைநாள் ஆராய்ச்சியாளர் இம்முடிவுக்கு வர ஏதுவாயிருந்தன புதைபொருளும், மொழிமூல ஆய்வுமேயாகும். தண்டமிழ்ப் பண்டைப் பனுவல்களும், இவ்வாய்வுக்கு மேற்கொள்ளப்படின் பெரிதும் சிறக்கும். ஆகவே, பண்டைத் தமிழ்மக்களின் நாகரிக வாழ்வை மக்கட்குக் காட்டுதற் பொருட்டாம், பண்டைத் தமிழ்நாடு, மக்கள், மொழி ஆய்வுகட்குப் பண்டைத் தமிழ்ப் பனுவல்கள் பெரிதும் பயன்படும் என்பதை விளக்குதற் பொருட்டும், பண்டைத் தமிழ்நூல்கள் கற்கும் அவாவை மக்கட்கு ஊட்டுதற் பொருட்டும், அவை கற்பதற்கு இஃது ஓர் ஏணியாக உதவுதற் பொருட்டும் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது[10] எனப் பகர்கிறார்.

    இந்நூலூள், இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், மதியுடம்படுத்தல், மடற்றிறம், சேட்படை, பகற்குறி, இராக்குறி, ஒருவழித்தணத்தல், அறத்தொடு நிற்றல், திருப்பொன்னூசல், பொருள்வயிற் பிரிவு, இல்லற வாழ்க்கை எனப் பன்னிரண்டு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. நூல் தொடக்கத்தில் 12 தலைப்புத் தொடர்பான சித்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கண இலக்கியங்களை ஆய்ந்து கோவைப்படுத்தி தொகுத்து ஆராயப்பட்டுள்ளது. இளவழகனார் அவர்களால் செந்தமிழ்ச் செல்வியில் எழுதப்பட்ட கட்டுரைகளை அரிய திருத்தங்களுடனும், அவ்வத் தலைப்புகளை விளக்கும் குறிப்புகளுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

    தொல்காப்பியம்  பொருளதிகாரம் ஆய்வேடு

    1942–இல் அ. சிதம்பரம் செட்டியார் அவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு, ADVANCED STUDY IN TAMIL PROSODY என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டினை வழங்கியுள்ளார். 2015–இல் இவ்வாய்வேட்டின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இவ்வாய்வேடே தமிழில் யாப்பியல் குறித்து நிகழ்த்தப்பட்ட முத்ல முனைவர்பட்ட ஆய்வேடாகும்.  தொல்காப்பியம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு பின்வந்துள்ள இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பெற்றுள்ளது.

    தொல்காப்பியப் பொருளதிகார இடைக்கால ஆய்வுப்போக்குகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.

    • 1902-இல் தொடங்கப்பட்ட தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வுகள், தொடர்ச்சியாக ஆய்வுநிலைகளில் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் உள்ளன.
    • தொடக்கத்தில் பதிப்பு குறித்த ஆய்வுகளாக இருந்தாலும், அகத்திணைக் குறித்தும், புறத்திணை குறித்தும், செய்யுளியல் குறித்துமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்வுகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ளுதலும், முன்வந்துள்ள ஆய்வுகளை மறுப்பதும் போன்ற நிலைகளில் காணப்படுகின்றன. அவ்வக் காலங்களில் அச்சுப் பதிப்பில் கிடைத்த பொருளதிகார உரையாசிரியர்களின் உரையடிப்படையில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.
    • 1912 – இல் தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த புரிதலைச் தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தும் விதமாக மு. இராவையங்கார் செந்தமிழில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
    • 1922 – இல் அப்பொழுது கிடைத்த இளம்பூரணர் உரையும் ஒப்பிட்டு நூலாக்கம் செய்கிறார். இந்நூல் தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களை உள்வாங்கி, அகம், புறம் குறித்த புரிதலை உருவாக்குவதற்கான நூலாகவும், கல்வித் தளத்தில் புழங்கும் நூலாகவும் அமைந்துள்ளது. வே. முத்துசாமி ஐயன் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த கட்டுரைகள் அகம் குறித்த அறிமுகநிலையில் அமைந்துள்ளன.
    • 1939 – இல் கா.சு. பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து திருக்கோவையார் கூறும் அகத்துறைகளை முன்னிறுத்தி, தொல்காப்பியத்தை அணுகியுள்ளார். உரையாசிரியர்களின் கருத்துக்களையும் உள்வாங்கியும், பழந்தமிழர் வாழ்வியல் முறைகளுக்கு ஒவ்வாத சில சூத்திரங்களை எடுத்துக்காட்டி வேறுபாடம் இருக்கலாம் என்பதனையும், பொருந்தாத சில சூத்திரங்கள் பிற்காலத்தில் இடைச்செருகலாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். மட்டுமல்லாமல் அவர் சார்ந்த சைவக் கொள்கைகள் அடிப்படையில் பல சூத்திரங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அன்றைய சூழலுக்கு தமிழர் அறியாத பழந்தமிழ் நாகரிகத் துறைகளை எளிதில் அறிந்து கொள்ளுமாறு தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என்று கருதலாம்.
    • 1945 – இல் வெளிவந்த பண்டையத் தமிழர் இன்பியல் வாழ்க்கை என்னும் நூல் அகத்துறையை மட்டும் பன்னிரண்டு தலைப்புகளில் விளக்கியுள்ளது. அதற்குத் துணையாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைகளைப் பயன்படுத்தி, அனைவரும் அகத்திணை குறித்து அறியும் நோக்கில் எழுதப்பட்டதாக அமைகிறது.
    • 1942 இல் யாப்பு குறித்து நிகழ்த்தப்பெற்ற ஆய்வே முதல் தமிழ் முனைவர்ப்பட்ட ஆய்வாக அமைகிறது. இவ்வாய்வு தமிழியல் யாப்பு குறித்த அறிமுகநிலையிலும் ஒப்பிட்டுநிலையிலும் அமைந்துள்ளது.

    உசாத்துணை:

    1. இராகவையங்கார் இரா. 1917. தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை உரையாசிரியருரையுடன், மதுரை: தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு.
    2. இராகவையங்கார் மு. 1929, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, மதுரை: தமிழ்ச்சங்கம்.
    3. இளவழகனார்.,1938. இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம், சேலம்: தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம்.
    4. இளவழகனார்.,1956. பண்டைத் தமிழர் இன்பவியல் வாழ்க்கை, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    5. கனகசபாபதி பிள்ளை எஸ். ( ப.ஆ ) 1934, தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் ( நச்சினார்க்கினியம்) சென்னை: சாது அச்சுக்கூடம்.
    6. கனகசபாபதி பிள்ளை எஸ். ( ப.ஆ ) 1935, தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாம் பாகம் ( நச்சினார்க்கினியம்) சென்னை: சாது அச்சுக்கூடம்.
    7. சிதம்பரம் பிள்ளை வ.உ. ( ப.ஆ ) தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல், சென்னை.
    8. சிதம்பரம் பிள்ளை வ.உ. ( ப.ஆ ) தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல், சென்னை: இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட்ஸன்ஸ்.
    9. சுப்பிரமணிய பிள்ளை கா. 1968. பழந்தமிழர் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    10. நாகமணி ம.ஆ. 1935. தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன, முதற்பதிப்பு, சென்னை: சாது அச்சுக்கூடம்.
    11. பரமசிவானந்தம் அ.மு. 1944. பழந்தமிழ் கவிதைகளின் வளர்ச்சி, சென்னைப்பல்கலைக்கழகம்.
    12. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1916, தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியம் (அகத்திணையியல், புறத்திணையியல்), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.
    1. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1916, தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்      ( களவியல், கற்பியல் ), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.
    1. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1917, தொல்காப்பியம் பொருளதிகாரம்.
    2. பேராசிரியம்    (மெய்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழியல்துறை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

     

    Share
  • ”ரமணாயனம்’’….!அமுத சுரபியில் வெளிவந்தது….!

     

    ரமணாயனம்’’….!
    ————————–
    ”பால காண்டம்”
    ————————

    திருவா திரையில் திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு….(1)

    பேரூழி காலத்தில் பாராழி புக்காது
    நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
    திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை கருக்குழியில் கர்மம் கழித்து….(2)

    மகப்பேறு கண்ட முழியற்ற மாது
    சுகப்ரஸவம் ஆனதும் சொன்னாள் -தகப்பனார்
    சுந்தரம் அய்யரிடம் ஜோதியைக் கண்டதாய்
    வந்தசேய் வானத் துறவு….(3)

    அன்னாளில் சுந்தரம் அய்யரின் முன்னோர்க்கு
    சன்யாசி இட்டதோர் சாபத்தால் -பெண்ணாசை
    துச்சமென்றோர் பிள்ளை துறவறம் பூண்டது
    இச்சிறுவ னால்வரமா யிற்று….(4)

    முன்நாக சாமியும் பின்நாக சுந்தரமும்
    அண்ணனாய் தம்பியாய் ஆயினர் -கண்ணான
    தங்கை அலமேலு, நான்கில் ஒருவராய்
    வெங்கட ராமன் வளர்ப்பு….(5)

    ஆறுவது கோபம் அறியாத ராமன்தன்
    ஆறா வதுவயதில் அப்பனுடன் -ஏறுக்கு
    மாறாக பேசி மனைதுறந்தான், கொண்டான்பின்
    கூறாமல் கோவணக் கட்டு….(6)

    தந்தையிடம் சொன்ன தகாத வசனத்தால்
    நொந்த தனயன் நெகிழ்ச்சியால் -உந்த
    சகாயவல்லித் தாயார்முன் சென்றமர்ந்து வண்டாய்
    முகாரவிந்தம் மொய்த்தான் மகிழ்ந்து….(7)

    கோயில் குளத்தில் குளித்தபின் ஊரெல்லை
    வாயில் கவுண்டின்யம் வற்றிட -சாயும்
    பொழுதுவரை நீந்தி பிடித்துவைத்த நீரை
    மொழுகிடுவான் காளையார் மேல்….(or)….நீரால்
    தொழுதிடுவான் காளையார் தாள்….(8)

    தொடக்கப் படிப்பு திருச்சுழியில் பின்னர்
    தொடர்ந்தது திண்டுக்கல் தங்கி -முடிக்கும்முன்
    வீட்டில் தகப்பன் விபரீதம், ஞானிக்கு
    ஏட்டுச் சுரைக்காய் எதற்கு….(9)

    தகப்பன் மறைவால் திகைத்த குடும்பம்
    மிகப்பெரும் துக்கத்தை மீள -புகுந்தது
    தாய்மா னாமதுரை சேயிருவர் சொக்கப்பன்
    தாய்மீனாள் கூடும் தலம்….(10)

    வைகையில் நீச்சல், வலியாரை வீழ்த்திட
    கைவைக்கும் மல்யுத்தம், கோல்சுற்றல் -பொய்யாம்
    உடலை வளர்த்தான் உலகை அழைக்க
    கடலின் அலையாய் குதித்து….(11)

    சகாவான அப்துல் வகாபுடன் சேர்ந்து
    சகோதரன் போலூரைச் சுற்றும் -மகானிவன்
    அத்தனை ஜீவனும் ஆன்மன்தான் என்றுரைக்க
    ஒத்திகை பார்த்தான் உணர்ந்து….(12)

    சொப்புக் கரங்களால் சித்தி இடப்போகும்
    அப்பளத்து மாவை அவன்தொட -உப்பலாய்
    பொங்கிப் பொரிந்திடுமாம் வெங்கட ராமனை
    ‘’ தங்கக்கை” என்பர் துதித்து….(13)

    எங்கிருந்து வரேளென்று அங்கிருந்த அன்பரிடம்
    வெங்கட ராமன் வினவிட -எங்கவூர்
    அண்ணா மலையாம் அருணா சலமென்று
    சொன்னாராம் மந்திரச் சொல்….(14)

    இதய குகையில் இதுநாள் வரையில்
    பதுங்கிக் கிடந்த புலியை -புதியவர்
    அண்ணா மலையென்(று) அறிமுகம் செய்திட்டார்
    உண்ணா பசிக்கோர் உணவு….(15)

    காலம் கனிந்திடும் வேளை வரும்வரை
    காளை கிடந்தது கன்றாக -நாளும்
    அருணா சலத்தப்பன் ஆட்கொள்வான் என்று
    மரணாவஸ் தையில் மகன்….(16)

    நாயன்மார் போல்நானும் தூயன்பைத் துய்த்திடும்
    மாயம்நம் வாழ்வில் மலராதா -ஓயாமல்
    சேக்கிழார் சொன்ன சிவனடியார் போலிருக்க
    நோக்கியவன் நேர்ந்திட்டான் நோன்பு….(or)
    நோக்கினான் நேர்ந்திடும் நாள்….(17)

    புத்தகம் கையிலே புத்தியோ மெய்யிலே
    பித்தனைப் போல்வானம் பார்த்திருந்து -அத்தன்
    புலனாகக் காத்ததில் போனதாம் கல்வி
    இளமையில் கல்லாய் இவன்….(18)

    அராவணை நம்பி இராவணன் தம்பி
    மராமரம்போல் தூங்கி மகிழும் -சிறானிவன்
    எட்டாத பேரின்ப தொட்டிலேறப் போவதற்க்காய்
    கட்டுண்டான் சும்மா கிடந்து….(19)

    நரசிம்ம சாமி ஒருசமயம் கேட்க
    கரிசனமாய் ‘நான்’ஒழிந்த கூத்தை -சிரிசிரிக்க
    சொன்ன பகவானின் சொற்பானை சோற்றிலினி
    என்நா ருசித்தளவு எள்….(20)

    சொக்கப்ப நாய்க்கர் மதுரை சந்தில்இ
    லக்கம் பதிணொன்னில் லீலையாய் -மிக்கதோர்
    அச்சமாம் காலனை துச்ச மெனவுதைத்த
    அச்சிறுவன் தாளே அரண்….(21)….(காப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்)….

    பகவான் உவாச
    ——————————
    சித்தப்பா வீட்டில்நான் செத்தப்பா ஆனதும்
    முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை -வத்தாத
    ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை
    சாவதனை ஏற்றேன் சகித்து….(or)
    சாவதனில் கொண்டேன் சுகம்….(22)

    வந்தது சாவு வரட்டுமே சாவென்றால்
    எந்தஎது சாகிறது என்றவினா -தந்த
    பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
    களத்தில் இறந்தது கூற்று….(23)

    வந்த இறப்பை வரவேற்று வாசியின்றி
    அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய் -இந்த
    உடலை எடுத்து சுடலை நெருப்பில்
    விடுவதைப் பார்த்தேன் வியந்து….(24)

    உடல்போன பின்பும் உயிர்போன பின்பும்
    கடல்போல என்னிருப்பைக் கண்டேன் -மட’நான்’போய்
    தான்குவித்த குப்பையை தானே களைந்தது
    நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….(25)
    ————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180828-VatsalyamAla 9×12 strathmore 160g 100dpi wcol-charcoal-conté lr

    அன்னையைக் காப்பி அடிக்கின்றார், ஆவையும்
    தன்னையும் வாத்ஸல்யத் தார்கொண்டு(மாலை) -கன்னையும்(கன்னுக் குட்டியை)
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டுகிறார் முராரிமணி
    வண்ணனுக்(கு)இம் மாதம் வளர்ப்பு(ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணன் கோகுலாஷ்டமி வருது)
    …..கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 175-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஒய்யாரமாய்ச் சாய்ந்து படுத்திருக்கும் இந்த அய்யாவைப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. சாந்தி வீஜே. வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இதனைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    இந்த மனிதரின் கிடந்த திருக்கோலத்தைக் காண்கையில் சங்க இலக்கிய நூலான ‘முல்லைப்பாட்டில்’ தலைவன் பாசறையில் ஒரு கையைப் பள்ளியில் ஊன்றி, மறு கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்தபடி, சிந்தித்திருக்கும் நிகழ்வே என் சிந்தையில் எழுகின்றது.

    ”…ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை
    முடியொடு கடகம் சேர்த்தி நெடிதுநினைந்து…” என்ற முல்லைப்பாட்டின் அடிகளுக்கு நல்ல ’மாடலாக’க் காட்சியளிக்கிறார் இவர்! 

    இனி, கவிஞர்களின் முறை! தம் சிந்தனைக் குதிரையில் பயணித்துத் திரட்டும் கருத்து முத்துக்களை இங்கே கவிதைகளாய்க் கொட்டிச் செல்ல அவர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    ”பழுதாகி நொண்டியாய்ப் போன வண்டியைப்போல் பயனற்ற உடலோடு படுத்துக்கிடக்கின்றார் இந்த மனிதர்” என்று தன் கவிதையில் அவலச்சுவையை அள்ளித் தெளித்திருக்கின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

    கழித்த பொருள்!

    இழுக்க முடியாதபடிப்
    பழுதான சக்கரங்களால்
    நொண்டியாகிப்போன வண்டிக்குப் பாரமாய்,
    ஓரஞ்சேர்ந்து,
    இடம்பெயராதபடி,
    பயனற்ற கை கால்களோடு
    படுத்துக்கிடக்கிறது உடல்.

    *****

    ”சொந்தமாக வண்டியோட்டி வாழும் வாழ்க்கையிலே, அயலவரை அண்டிப்பிழைக்கும் அவலமில்லை” என்று சுயதொழிலின் மேன்மையை நயமாய்ச் செப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அமைதியான…

    வண்டி யோட்டி ஓய்வெடுக்கும்
    வண்டிக் காரர் வாழ்க்கையிலே
    அண்டிப் பிழைக்கும் அவலமில்லை
    அலைந்து பெற்ற கடனுமில்லை,
    பண்டிகை மற்றும் பிறநாளும்
    பார்வைக் கவர்க்கே ஒன்றேதான்,
    உண்டே உழைத்துபின் உறங்குவதால்
    உளதே வாழ்வில் அமைதியொன்றே…!

    *****

    ”சந்துமுனையில் காத்திருப்பார்; அழைத்தவுடன் சட்டென்று வந்திடுவார்” என்று வண்டிக்காரரின் நல்லியல்புகளைத் தன் சொல்மாலையில் அழகாய்த் தொகுத்தளித்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வண்டிக்காரன்

    எந்தி ரமாக உழைத்துவிட்டு
    ……….இயல்பாய்ச் சிரிக்கும் இம்மனிதர்.!
    சந்தி ரய்யா நாயுடுவாம்
    ……….சகல கலா வல்லவராம்.!
    சந்து முனையில் காத்திருப்பார்
    ……….சட்டென்று வருவார் அழைத்தவுடன்.!
    எந்த வேலை என்றில்லை
    ……….எல்லாமும் செய்ய இசைவார்.!

    பொருட்கள் ஏதும் கொண்டுசெலல்
    ……….பொறுமை யாய் வண்டியோட்டல்.!
    விருப்ப முடனே செயல்படுதல்
    ……….வினை ஏதும் செய்யமாட்டார்.!
    விரும்பி எதையும் கொடுத்தபோது
    ……….வேண்டா மென்று சொல்லமாட்டார்.!
    பொருத்த மான வாடகையைப்
    ……….புரிந்து கொண்டு பணம்கேட்பார்.!

    *****

    சிந்தனைச் செறிவுள்ள கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் வந்தனங்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது இனி…

    சந்திரய்யா நாயுடு எந்திரய்யா சீக்கிரம்!

    ”காலங் காத்தால நல்ல போணியாகப் போகுது
    காலநீட்டிப் படுக்காமக் கடமைக்கு நீ புறப்படு!
    வண்டியில படுத்திருந்தா வருமானம் கெடைக்குமா?
    உண்டுப்பிட்டு உறங்கிப்புட்டா உழைப்பு வந்து சேருமா?
    சந்திரய்யா நாயுடு….

    பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் போலவே
    வேர்க்கடலை யாவாரி விழுந்து கெடக்க முடியுமா?
    நித்திரையே நினைவாக நீட்டிக் காலை வச்சுக்கிட்டு
    புத்தரைப் போல் நாம் படுத்தா பொழைப்பு வந்து தேறுமா?
    இத்தரையில் காசில்லாம எதுவுமில்லை நாயுடு
    எத்தனையோ பொழைப்பிருக்கு எந்திரிச்சிப் போயிடு.
    சந்திரய்யா நாயுடு….”
    என்று வாழ்வில் உழைத்துப் பிழைக்கவேண்டியதன் அவசியத்தை நகைச்சுவையோடு, இரசிக்கும்படியாக, நவின்றிருக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 15

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதர்கள் தம் வாழ்வைச் சிறப்பாக நடத்தப் பொருளிருக்க வேண்டும்; அதேவேளை அவர்கள் நடத்தும் வாழ்க்கையிலும் பொருளிருக்க வேண்டும். பிறந்தோம்; இருந்தோம்; செத்தோம் என்று வாழ்வதில் பொருளில்லை. எனவே செல்வத்தைத் தேடித் தொகுப்பவர்கள் அதனால் தாமும் பயன்கொள்ளவேண்டும்; அப்பொருளால் மற்றையோர்க்கும் பயன்நல்க வேண்டும். ஆனால் அத்தகு நல்ல மனம் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எச்சில் கையால் காகம் ஓட்டாத கருமிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைக் கருமிகள் என்று சொல்வதைக் காட்டிலும் நன்மையே செய்யா விடக்கிருமிகள் என்று சொல்வது பொருந்தும். அத்தகைய ஈயாதாரின் இழிகுணத்தைப் பேசுகின்றது பின்வரும் நாலடியார்.

    துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ கலான் 
    வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
    பொருளும் அவனை நகுமே உலகத்து

    அருளும் அவனை நகும்.   (நாலடி – 273)

    தான் துய்த்துச் செலவழிக்காமலும்,  துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும் செல்வத்தை வீணாய்த் தொகுத்துவைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதானின் அறியாமை கண்டு அவன் அவ்வாறு தொகுத்து வைத்த பொருளும் நகையாடும்; அவன் அப் பிறவியில் தொகுக்காத அருளும் நகையாடும்.

    ”உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்பதை அறியாத மன்பதையோர் சிலர் பொருளிருந்தும் பொருளற்ற வாழ்வு வாழ்ந்து மாய்கின்றனர்.

    பிறர்க்கொன்று உதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாத வறுமையாளர்களே பிழைத்துக்கொண்டவர்கள்; ஏனென்றால், பொருளை வீணே தொகுத்துவைத்துப் பின் ஒருங்கே இழந்து போனார் என்று உலகோரால் பழிக்கப் படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்; வருந்தித் தேடிய பொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்; அதனைப் புதைத்து வைக்கும் பொருட்டுக் குழி தோண்டுதலில் இருந்தும் தப்பினர்; தம்முடைய கைகள் நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலில் இருந்தும் தப்பினர்; இன்னும் இவ்வாறு அவர்கள் தப்பிக்கொண்ட வகைகள் பலவாகும்.

    வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் 
    இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக்
    காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
    யாப்புய்ந்தார் உய்ந்த பல. (நாலடி – 277)

    ஆகலின் ஈயாமையாற் பயனில்லாமையோடு இன்னலும் பல இருப்பதனால், செல்வத்தின் இன்னலை எய்தாத வறியவர் ஈயாத செல்வந்தரினும் பலவகையில் நிம்மதியானவர் ஆகின்றார் என்று நகைச்சுவையாகக் கூறி நமக்கு ஈதலின் அவசியத்தைத் தெருட்டுகின்றது நாலடியார்.

    பொருளைத் திரட்டுவதில் துன்பம், திரட்டிய நற்பொருளைப் பாதுகாத்தலும் பெருந்துன்பம்; அங்ஙனம் பாதுகாத்த பொருள் தன் அளவிற் குறைந்துபோகுமாயின் அதுவும் துன்பம்; இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்துபோகுமானால் அது பின்னும் துன்பம்; ஆக, துய்க்காது சேமித்துவைக்கும் பொருள் துன்பங்களெல்லாவற்றிற்குந் தங்குமிடமாய்த் தாயகமாய் அமைந்துவிடுவதைச் சுட்டுகின்றது நாலடியார்.

    ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
    காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
    குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
    உறைபதி மற்றைப் பொருள்.  (நாலடி – 280)

    எனவே துன்பங்களுக்கெல்லாம் மூலமாய்த் திகழும் ஒண்பொருளை நன்முறையில், காலத்தில், பயன்படுத்தி வாழ்தலே அறிவுடைமை.

    ”ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு” என்றுதானே குறளாசானும் சாற்றியுள்ளார்.   அதனைப் போற்றி வாழ்தலே சிறப்பு!

    பொருளுடையார் செய்யவேண்டியனவற்றையும் அவ்வாறு செய்யாமல் பொருளைப் பதுக்குவதால் ஏற்படும் இன்னல்களையும் கன்னல் தமிழில் கவின்பெற விளக்கிய நாலடியார், பொருளின்மையின் இழிவினையும், பொருளிலார் அடையும் சிறுமையையும் தெளிவாய் நமக்கு விளக்கிச் செல்கின்றது.

    அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
    பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
    ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
    செத்த பிணத்திற் கடை.   (நாலடி – 281)

    துவர் ஊட்டிய ஆடையை இடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில் வாழ்ந்தாலும் (பத்தானும் எட்டானும்) பொருளுடைமை பலரிடத்திலும் பெருமையடையும்; ஏற்ற உயர்குடிக்கண்ணே பிறந்தாலும் பொருளில்லாதார் செத்த பிணத்தினுங் கடைப்பட்டவராவர் என்பது இதன் பொருள்.

    உண்மைதானே? ஒருவன் பணக்காரனாக இருந்துவிட்டால் போதும்; அதுவே அவனுக்குச் சகல மரியாதைகளையும் மக்களிடம் பெற்றுத்தந்து விடுகின்றது. அவன் பின்புலம் குறித்தோ, அவன் செல்வம் தேடிய முறை குறித்தோ யாரும் இங்கே கவலுவதில்லை. அதுவே ஒருவன் நற்குடியில் பிறந்திருந்தாலுங்கூட வறிஞனாக இருந்தால் அவனை அவன் நெருங்கிய உறவினரேகூட மதிப்பதில்லை.

    ”பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்லது இல்லை பொருள்” என்று இதனைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்டார் தெய்வப்புலவர்.

    வறுமையாளனின் தன்மையை நம் நெஞ்சுருகும் வகையில் இயம்புகின்றது நாலடியார்ப் பாடலொன்று!

    நீரினும் நுண்ணிது நெய்யென்பார் நெய்யினும்
    யாரும் அறிவர் புகைநுட்பம்- தேரின்
    நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
    புகற்கரிய பூழை நுழைந்து.  (நாலடி – 282)

    நெய்யானது நீரைக் காட்டிலும் நுட்பமானது என்று அறிந்தோர் கூறுவர்; நெய்யைக் காட்டிலும் புகை நுட்பமானது என்பதை அனைவரும் அறிவர். ஆராய்ந்தால் வறுமையாகிய துன்பமுடையோன் அப் புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய புழையிலும் நுழைந்து புகுந்துவிடுவான் என்கிறது நாலடி.

    பசிப்பிணியும் ஏழைமையும் ஒருவனை பூழையிலும் நுழைந்து இரக்கும் அளவுக்கு நிலையில் இறக்கிவிடுகின்றன என்பதை அறியும்போது நம் மனம் வேதனையில் ஆழ்கின்றது.

    பத்து வகையான நற்குணங்களும் பசிவந்திடப் பறந்துபோகும் என்ற ஔவையின் மூதுரையை இங்கே நாம் இணைத்துப் பார்க்கலாம்.

    மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
    தானம் தவம் உயர்ச்சி தளன்மை – தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்திட பறந்து போகும். (மூதுரை)

    பசிப்பிணி எனும் பாவியின் இயல்பை மணிமேகலைக் காப்பியமும் அணிபெற எடுத்துரைக்கின்றது. அப்பாடல்…

    பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
    நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
    பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
    பசிப்பிணி எனும் பாவி” (மணிமேகலை)

    ஆதலால், நிலவுலகில் வாழ்வோர் தம் நிலையில் தாழாமல் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாயின் பொருளைத் திரட்டவேண்டும்; திரட்டிய பொருளை நன்முறையில் துய்த்தும் பிறர்க்கீந்தும் மகிழவேண்டும். அத்தகு வாழ்வே பொருளுள்ள நல்வாழ்வாகும்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180827 New Forever A4-wcol 100 dpi lr

    ”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
    (எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
    உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

    முரளி -வேணுகானம்….

    Share
  • கடவுளைக் கண்டேன்….!

     

    காணாத காட்சியில் நானாக நானின்றி
    தோணாத சிந்தையில் தோய்ந்திட -தானாக
    கையில் கனியாய்க் கடவுளைக் கண்டேன்நான்
    நெய்யிருக்கும் பாலில் நுழைந்து….(1)….!

    எய்த அம்பிலும் ,கொய்த தலையிலும்
    பெய்த மழையிலும், பத்தினியாள் -வைதலிலும்
    செய்த செயல்களிலும், சிந்தனைப் போக்கிலும்
    தெய்வதம் கண்டேன் திகைத்து….(2)….!

    ஏழை சிரிப்பிலும் ,கோழை சிலிர்ப்பிலும்
    வாழ வழியற்றோர் வாகையிலும் -பாழும்
    கொடுவினை வந்தும் கலங்காதோர் நெஞ்சில்
    கடவுளைக் கண்டேன் களித்து….(3)….!

    காலை மழலையில் ,மாலை கிழவனில்
    சேலை இரவு சுகத்தில் -தோலாம்
    உறையைத் துறக்கும் உயிரினில் கண்டேன்
    இறையின் இரவல் இருப்பு….(4)….!

    சேற்றில் முளைத்திடும் செங்கமலம் ,வீசும்நற்
    காற்றில் கலந்திடும் கந்தகம் -ஏற்றம்
    இகழ்ச்சியின்றி ஈசன் இருப்பதைக் கண்டேன்
    மகிழ்ச்சியில் துக்கம் மறந்து….(5)….!கிரேசி மோகன்….!!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (276)

    இந்த வார வல்லமையாளராக கேரள மாநிலம் பெருமழையால் பாதிக்கப்பட்டு மீளும் வேளையில் ”இயற்கையை நாம் பாழ்படுத்தினால், அது நம்மைத் திருப்பியடிக்கும்” என்னும் சூழலியல் போராளி, ஆசிரியர், மலையாளக் கவிஞர் சுகதகுமாரியை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    சுகதகுமாரி கேரளாவின் சூழலியலுக்கு ஓர் அடையாளம். பெண்களின் உரிமைகளுக்குப் போராடியவர். மனநோய் மருத்துவமனைகளில் கொடிய நடவடிக்கைகள் தடுக்கப்பட முயற்சிகளில் முனைந்தவர். அமைதிப் பள்ளத்தாக்கு என்னும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் இயற்கையைக் காப்பதில் 1982-ல் ’மரத்தின்னு சுதிதி’ என்னும் கவிதை அந்தப் போராட்டத்திம் முரசகீதம் ஆனது. சுகதகுமாரியின் செவ்வியை பிபிசி வெளியிட்டுள்ளது. அதனை வாசிப்போம்.

    ‘வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும்” – சூழலியலாளர் சுகதகுமாரி
    பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ். https://www.bbc.com/tamil/india-45261753

    ”பிரகிருதி திருச்சடிக்கும்”(இயற்கை திருப்பியடிக்கும்) இரண்டே வார்த்தைகளில் கேரளா வெள்ளம் பற்றி பட்டென பதில் தருகிறார் பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதகுமாரி(84).

    1980-களில் கேரளாவின் முக்கிய காடான அமைதி பள்ளத்தாக்கில் (silent valley) புனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக சுகதகுமாரி எழுதிய ‘மரத்தின் சுதுதி’ என்ற கவிதை போரட்ட கீதமாக உருவெடுத்தது.

    கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கவிதைகள் வாயிலாகவும், அறப் போரட்டங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவிரமாக பேசிவரும் சுகதகுமாரி, வரும் காலங்களிலும் கேரளா இது போன்று தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார்.

    இந்தியாவின் தென்பகுதியில் உள்ள இந்த சிறிய மாநிலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது என நம்பிக்கை குறைந்தவராக பேசுகிறார்.

    இயற்கையின் சமநிலையை குலைத்துவிட்டோம்

    ”கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும் நாசமாகிவிட்டபின் இந்த நாடு எப்படி கடவுளின் சொந்த நாடாக இருக்கும் என்று கேள்விஎழுப்புகிறார் அவர். இடுக்கி மலையில் பாருங்கள். மலைகள் மீது பெரிய வீடுகள், கேளிக்கை விடுதிகள் கட்டப்பட்டது. தற்போது மலையின் ஒரு பகுதியே நிலச்சரிவில் அழிந்துவிட்டது. இதை எப்படி சரி செய்வீர்கள்? இந்த சிறிய மாநிலத்தில் எத்தனை இயற்கை வளம் நசிந்துபோனது? 44 நதிகள் இங்குள்ளன. பல நதிகள் ஆலைக்கழிவு, வீட்டுக்கழிவுகளை சுமந்து, நோய்வாய்ப்பட்டுப்போனது. முடிந்தமட்டும் மணலை தோண்டி நதிகளின் ரத்தநாளங்களை துண்டித்தாகிவிட்டது. இதை சரிசெய்ய முடியுமா?,” என்று அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார்.

    ”பல ஆண்டுகளாக நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்களாக இருந்தோம். இதுவரை இதுபோல வெள்ளம், நிலநடுக்கம், மதச்சண்டைகள், போர் என எதுவுமற்ற அமைதியான மாநிலமாக கேராளா இருந்து வந்தது. அதனால்தான் அது கடவுளின் சொந்த தேசமாக இருந்தது. தற்போது எல்லாமே மாறிவருகிறது. இயற்கையின் சமநிலையை நாம் குலைத்துவிட்டதால் நாம் நிலைகுலைந்து நிற்கிறோம்,” என்றார்.

    வடநாட்டில் ஏற்பட்டது போல பட்டினிச்சாவுகள் கேரளாவில் நடக்கவில்லை. வறட்சி ஏற்படவில்லை. ஆனால் ஆடம்பரமாக வாழவிரும்புகிற காரணத்தால் கேரளா மக்கள் தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே வெட்டிக்கொள்கிறார்கள் என்கிறார் சுகதகுமாரி.

    இயற்கை அன்னை காளியாக மாறிவிட்டாள்

    ”இயற்கை நமக்கு உயிர்கொடுத்தாள். அவள் அன்னை. ஆனால் தொடர்ந்து நாம் சுயநலம் மிக்கவர்களாக, அவளுக்கு ஆலைக்கழிவுகளைக் கொண்டு நஞ்சூட்டி, நதிகளை பாழ்படுத்தி, அவளது உடலை துண்டாடி நாசப்படுத்தும்போது அவள் மகாகாளியாக மாறி நம் உயிரை எடுத்துச்செல்கிறாள். வெள்ளம் வரும்போது சதுப்புநிலக்காடுகள் மற்றும் நெல்வயல்கள் மட்டுமே அந்த நீரை உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை. தற்போது அந்த நிலங்களில் வீடுகளும்,வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், எஸ்டேட்களும் அமைத்துவிட்டதால், இயற்கை பாழானது.”என்கிறார்.

    கேரளாவுக்கு கிடைத்த தண்டனையாக மட்டும் இதைப்பார்க்காமல் ஒவ்வொருவரும் செய்த பிழையை நினைத்துபார்க்கவேண்டும் என்று கூறும் அவர், ”இந்த அழிவை நாம் சந்தித்திருக்கிறோம். தற்போது வந்த வெள்ளம் வெறும் மழை அல்ல. மலைப்பகுதி, இடை நாடு, கடல் நாடு என்ற மூன்று விதமான நிலப்பகுதிகளாக அமைந்துள்ள இந்த சிறிய நிலப்பகுதிகள் பெரும்பாலும் நகரங்களாக மாறிவிட்டதால், இதுவரை பாய்ந்துவந்த நதியின் தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. குறைந்தபட்சம் வெள்ள நீர் வடிவதற்காவது நாம் இடம் அளித்திருக்கவேண்டும்,” என்கிறார்.

    பெருமூச்சோடு அவரது கவிதையை நமக்கு வாசித்துக்காட்டினார். ஆகஸ்ட் மாத வெள்ளத்தில் கேரளா மக்களுக்கு நேர்ந்த அவலத்தை அது எடுத்துரைத்தது. இக்கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் க. வானமாமலை.

    மேற்கு மலைத்தொடர்

    பசுமைமிகு மலையடிவாரங்களில் தீநாளங்கள்.

    திவ்யமான பர்வதங்களின் தோள்களில் கருத்தப்புகை எழுகின்றது. வெடிமருந்து வைத்து வெடித்து சிதறிய நூறு மலைக்குன்றுகள் அலறி உடைந்து வீழ்கின்றது.

    ஊற்றுகள் வற்றி நடுநடுங்கி உலருகின்றது. நூறாயிரம் கூக்குரல்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் ஓய்கின்றது. நெஞ்சில் காயங்கள் ரணங்களாய் நிறையும். கெளரவத்துடன் தலை நிமிர்ந்து நிற்கும் சஹ்யமலை.

    மலையை உடைப்பதும், அதன் மேல் தீவைப்பதும் செய்யும் கைகளே காலம் மிகவும் நெருங்கி விட்டது. அறிவீரோ!

    காயமுற்ற மாமலையோ நமக்கு விதித்திடும் பட்டினியும் மரணமும். எரிந்தும் பொரிந்தும் போகும்… சிறு துளி நீர்கூட தாகத்திற்காக கேட்க வேண்டி வருமே.

    இல்லையெனில் கோபம் வந்த கிரிகளின் கல்லும் மரமும் பிரளயமாக இறுதி சாபமென விரைந்து வரும் போதுவேதனையுடன் கேட்கிறேன் – எங்கே நாம் போகிறோம்?

    தெய்வீகமான சஹ்யமலைத் தொடரே – புண்ணிய கங்கையை அழைத்து வரும் உன் திருப்பாதங்களுக்கு நான் காணாத மழலைகளை நினைத்துக் கொண்டு எந்தன் நாட்டிலுள்ள பள்ளிவாளைப் போல் மின்னும் உந்தன் திருவடிகளில் குன்றளவு நிறைந்த பூக்களால் என் சங்கடங்களை வாரி வழங்கி அர்ச்சிப்பேன்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி (176)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முத்துக்குமார் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்!

    பவள சங்கரி

    அமெரிக்கா, அயோவா நகரத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு யூ-பிக் – நீங்களே பறித்துக் கொள்ளுங்கள் – ஆப்பிள் பழத்தோட்டம் வில்சன் தான். பழைய ஓக் காடுகளால் சூழப்பட்ட இந்த பண்ணை, பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும், ராபீட் கிரீக் நிலத்தை சூழ்ந்துள்ளது.


    வில்சன் ஆர்ச்சர்ட் ஐயோவா நகரில் ஒரு பெரிய பழத்தோட்டம். மிகப்பெரிய பரப்பளவில் பெரியவை, சிறியவை, பச்சை நிறங்கள், மஞ்சள் நிறங்கள் என பல வகையான ஆப்பிள்கள் விளைகின்றன. அதனோடு ஊடு பயிராக மஞ்சள் பூசணியும் விளைவிக்கிறார்கள். இந்த விவசாயத்தை இவர்கள் குடும்பத் தொழிலாக செய்கின்றனர். இங்கு அமெரிக்காவில் ஆப்பிள் தோட்டம் வைத்திருப்பவர்கள் ஆப்பிள் பிக்கிங், அதேபோல் ஸ்டிராபேர்ரி, செர்ரி பிக்கிங் என்றும் விவசாயிகளும் பொது மக்களும் சந்திக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துகின்றனர். தேன் சேமிப்பும், விற்பனையும் கூட உண்டு. இங்கு ஆப்பிள் பறிக்க வருபவர்களைக் கவரும் விதமாக ஆப்பிள் மூலம் தயாரிக்கக்கூடிய இரசாயணக் கலவை கலப்படமற்ற சுத்தமான ஆப்பிள் பழக்கூழ் மட்டுமல்லாமல் மற்றும் பல வகையான இனிப்புப் பண்டங்களையும் செய்து விற்கின்றனர். குறிப்பாக ஆப்பிள் ஜாம், டோ நட், பழ ரசம், ஆப்பிள் டர்ன் ஓவர், ஆப்பிள் – பை போன்றவைகள். அந்த பழத்தோட்டத்தை சுற்றிப்பார்க்க டிராக்டர் கூட உண்டு .. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அனைத்துப் பணிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரித்துக்கொண்டு திறம்பட நிர்வாகம் செய்வது சிறப்பு. அமெரிக்க விவசாயிகள் இப்படி பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்து சிறப்பாக வளர்ச்சியடைவது மகிழ்ச்சிக்குரியது ..

    நமது விவசாயிகள் நம் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் பொது மக்களோடு நேரடித் தொடர்பு ஏற்படும் வகையில் நம்ம ஊர் விளை பொருட்களாகிய கத்தரி, முருங்கை, தக்காளி, மற்ற பழங்கள் போன்றவைகளை இது போன்று பொது மக்கள் நேரடி கொள்முதல் செய்யும் வகையிலும் அதோடு இது போன்று சார்புடைய பொருட்களை தயார் செய்யும் தொழிலகமும் கூட்டுறவு முறையில் உற்பத்தியும், பொருளாக்கமும் செய்தால் நம் விவசாயிகளின் வாழ்க்கையும் எங்கோ உயர்ந்து நிற்க வழி வகையாக அமையுமே! தர்மபுரி, கிருட்டிணகிரி பகுதிகளில் வாழக்கூடிய நமது விவசாயிகள் மாம்பழத் தருணத்தில் இது போன்று பல வகைப் பொருட்களை தயார் செய்தும் விற்பனை செய்தால் எத்தனை இலாபம் சம்பாதிக்கலாம் .. விவசாயிகளின் பார்வையே மாறுபட்டு தொழிலதிபர்களாகவும் திகழலாம்! பொன் விளையும் பூமி என்று இதற்குத்தான் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்களோ !

    ஆப்பிள் தோட்டத்தில் வேண்டும் அளவு சாப்பிட்டுவிட்டு வரலாம். அதற்கு விலை இல்லை. கையில் எடுத்து வரும் பழங்களுக்கு மட்டும் விலையுண்டு. சீசனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே விலைதான்.. அதனால்தானோ என்னவோ இங்கு விவசாயிகளின் வாழ்க்கை ஒரே சீராக நல்ல நிலையிலேயே இருக்கிறது. நம் ஊரில் தக்காளி ஒரு தருணத்தில் கிலோ 50 காசுகளுக்கும், விளைச்சல் குறையும் காலங்களில் 60 உரூபாய் கூட விற்கிறார்கள். இந்த முறை மாற்றம் அடைய வேண்டும். சந்தைப்படுத்தும் முறையில் பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்படைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்!

    Share
  • குறுந்தொகைப் பாடல்களில் இயற்கை

    -கு. பூபதி 

    பழங்காலம் முதலே மனிதன் சூழலியலைப் பற்றி அனுபவப்பூா்வமாக அதிக கவனம் கொண்டிருந்திருக்கிறான். நாகரிகம் வளராத காலந்தொட்டே சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், உயிர் வாழ்வதற்கு இயற்கையின் ஆற்றலையும் அவனைச்சுற்றியுள்ள தாவரங்கள், விலங்குகள் போன்ற சூழ்நிலைகளைப் பற்றிய அறிவும் இன்றியமையாததாகக் காணப்பட்டது. மனித சமுதாயத்தின் நாகரிகக்களம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் சிக்கல்களும், சிக்கல்களிருந்து கண்ட தீா்வுகளால் பெற்ற அறிவும் என படிமலா்ச்சி எய்த அது இலக்கியங்கள் வழியாகக் காலம்கடந்த ஆவணங்களாக பரிமாணம் கொண்டது, கொள்கின்றது. தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைப் பாடல்கள் வழி  இயற்கை குறித்த பழந்தமிழா் பார்வையை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

    பல்லுயிர் ஓம்புதல்

    ஓம்புதல் என்பது பாதுகாத்தல் என்பது மட்டுமின்றி, உயிர்நேயத்தோடு பிற உயிர்களைப் போற்றுதலாகும்.

    “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்து வந்து ளெலாம் தலை” என உயிர் ஓம்பலை நாகரிக சமூகத்தின் தலைமைக் குணமாக்கிக் காட்டுகிறது வள்ளுவம். 

    தம்முயிர் போல நோக்கல்

    ஆண்குரங்கு இறந்த கைம்மைத் துன்பத்தைப் போக்க வழியறியாப் பெண் குரங்கு உயிர்விடத் துணிந்த போதும், தந்தயையிழந்த தன்குட்டி தாயையும் இழந்தால் தவிக்குமே என மனிதா்போலவே குரங்குக்கும் பிரிவுத்துன்பமும், குட்டிகளுக்காக உயிர்வாழும் தியாக உணர்வும் உள்ளதைக் குறுந்தொகைப் பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.

    “கருங்கட்தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
    கைம்மை யுய்யாக் காமர் மந்தி
    கல்லா வன்பறழ் கிளைமுதற் சோ்த்தி
    ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
    சார னாட  நடுநாள்
    வாரல் வாழியோ வருந்துதும் யாமே”. (குறுந்-69)

    மரமேறுதல் முதலான தம் தொழிலைக் கல்லாத தன் குட்டியைச் சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கிய மலைப்பகுதியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் என பிற உயிர்களும் மனிதா்போலவே உயிரும், வலியும், உணர்வும் கொண்டவை என அழுத்தமாகக் கூறுகிறது இப்பாடல்.

    இயற்கை – இயைபுப் புலம்

    தலைவன் கடந்து செல்லும் நிலம், தலைவி ஆற்றியிருக்கும் சூழல் போன்ற பல உணா்வுப் பின்னணிகள், இயற்கைக் காட்சிகளுடன் காட்டப்படும்போது  அவை உணா்வினைப் பிறா் புரிந்துகொள்ள ஏதுவாகவோ, உணா்ச்சிகளை மிகுத்துக் காட்டவோ இயைபுப்புலமாக அமைகின்றன.  மனிதரின் உணா்வுக்கு ஒத்துச்செல்லும் பின்புலமோ அதற்கு எதிராக அமைந்து உணா்வை மிகுவித்துக் காட்டும் முரண் பின்புலமாகவோ அமையலாம்.

    காதலன் பிரிவால் தனிமை கொண்டு, நெஞ்சம் துன்பத்தால் ஓலமிடும் நெய்தல் தலைவிக்கு இணைப் பின்புலமாகிய அலையோசை எழுப்பும் இரவு நேரக்கடல் குறுந்தொகைப் பாடலில் காட்டப்படுகிறது.

    “யாரணங் குற்றனை கடலே பூழியா்
    சிறுதலை வெய்யைத் தோடுபரந் தன்ன
    மீனார் குருகின் காலைப் பெருந்துறை
    அவள்வீத் தாழைத் திரையலை
    நள்ளென் கங்குலுங் கேட்குறின் குரலே” (குறுந்-163)

    தாழையின் மலர் திரையால் அலைக்கப்படுவது தலைவன் உள்ளம் துன்பத்தால் அலைக்கழிக்கப்படுவதை உருக்காட்சியாக்குகிறது. தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் என எண்ணிய தோழியை நோக்கித் தலைவி கூற்றாய் அமைந்த பாடலில் இது போலவே துன்பத்தில் உழலும் தலைவியின் மனத்தை அலைகளால் மோதப்படும் தாழையின் வெண்பூ பின்புலமாக அமைக்கப்பட்டுள்ளது.

    “பூவோடு புரையும் கண்ணும் வேயென

    வாரல் வனப் பெய்திய தோளும் பிறையென
    மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
    நல்லமன வாழி தோழி யல்கலும்
    தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
    குருகென மலரும் பெருந்துறை
    விரிநீா்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே”. (குறுந்-226 )

    தாமரை மலரை ஒத்த கண்களும், மூங்கிலைப்போன்ற திரண்ட அழகைப் பெற்ற தோள்களும், பிறை என்று கருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும் உடைய பெண்ணே! இரவுதோறும் இடைவிடாது அலைக்கின்ற கடலைகளால் மோதப்பட்ட தாழை மலா்களின் வெள்ளிய பூவானது கரைகள் தோறும் வெள்ளை நாரைகள் நிறைந்திருப்பதைப் போன்ற பரந்த இடமாகிய பெரியதுறைகள் கொண்டது அந்நிலை இப்பொழுது கழிந்தது அன்றோ!

    “மானிட உணா்வுகளோடு இயற்கையின் எழிலை இயைபுறச் செய்தது பண்டைத் தமிழிலக்கிய மரபு” என்ற மு.வரதராசனாரின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

    மரத்தை நட்பாய் எண்ணல்

    சூழல் கட்டமைப்பு எனப்படுவது ஒரு சிக்கலான ஒருமைப்பாடு என்றும், அதில் தாவரங்களும், விலங்கினங்களும் ஓரே வாழிடத்தில் கூட்டமாக ஒருமித்து வாழ்வதோடு மூலப்பொருட்களும் சக்தியும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்று உட்பரி என்னும் அறிஞா் விளக்குகிறார்.

    உயிர் வாழ்வதற்கும் உணவுச்சுழற்சிக்கும் தகவமைப்புக்கும் இத்தகைய ஒருமித்து வாழ்தல் இன்றியமையாததாயினும் உள்ளத்து உணா்வுகளையும் பிற உயிர்களுக்கும், தாவரங்களுக்கும்  ஏற்றிக் கருதுவது சங்கப்புலவா்களின் சூழல் பார்வையையும் உயிர்ம நேயத்தையும் காட்டுகிறது.

    “நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
    றின்னா விரவி னின்றுணை யாகிய
    படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
    துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. ” (குறுந்-266 )

    எனத் தலைவன் வரைந்து கொள்ளாமல் பிரிந்த காலத்தில் தனக்குத் தூது அனுப்பாவிட்டாலும் இரவுக்குறி வந்தொழுகிய காலத்தில் நம்மோடு இனிய துணையாக இருந்த வேங்கை மரத்திற்காவது புள்வாய்த் தூது அனுப்பலாகாதோ என ஏங்கும் தலைவியின் நிலை சுட்டப்படுகிறது. வேங்கை மரத்தை அஃறிணைப் பொருள் என எண்ணாமல் தனக்கும் தலைவனுக்கும் இனிய துணையென உயிரோடு உணா்வும் ஏற்றிக் கூறுவதுடன் வேங்கைக்குத் தூதாகப் பறவையைத் தோ்தல் சூழலியையும் நேயமும் வெளிப்படக்காட்டுகிறது.

    பல்லுயிர்க்கும் உலகுரிமை

    “ஆா்னியாஸ் என்ற அறிஞா், மாந்தன் இயற்கை உருவாக்கிய உணவுத் தொடரில் ஒரு கண்ணிதான். பிற கண்ணிகளுக்கு ஏதாவது ஊறு ஏற்படுமானால் அது மாந்தர் குலத்தையும் பாதிக்கும் என்கிறார். உலகும் அதில் உள்ள உயிர்களுமான இந்தச் சூழல் மண்டலம் மாந்தனுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அந்த அளவிற்கு உரிமை மற்ற உயிர்களுக்கும் உண்டு”.என்கிறார்.

    “கான மஞ்ஞை யறையீன் முட்டை
    வெயிலோடு முசுவின் குருளை யுருட்டும்”  (குறுந்-38 )

    என்ற பாடல் மயில் அடைகாத்தற்குரிய அதன் முட்டையை பாறையின் மேல் நின்று கொண்டு குரங்குக் குட்டியானது முட்டையை உருட்டி விளையாடுகிறது. அந்நிலைகண்ட மயிலின் உயிர் ஊசலாடுகிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக மயிலின் தவிப்பு உள்ளது, அந்நிலையே தலைவியின் நிலையும். தலைவன் பிரிவில் மைதீட்டப்பெற்ற கண்களினின்றும் பெருகும் நீரோடு இருக்கும் தலைவியின் நிலை அவளின்  மனவலிக்குப் பின்புலமாக மயிலின் அடைகாக்கப்படாத முட்டையைக் காட்டுவது, அம்முட்டை பொறிக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தைக் காட்டுவாகக் கொள்ளலாம். 

    பெயா்நெறி

    பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், மனிதா்களுக்கும் ஆண்பால், பெண்பால் மற்றும் இளமைப் பெயா்களை விளக்கித் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. திணை ஒழுங்கு பேணி இயற்றும் பாடல்களில் அஃறிணை உயிர்களுக்கு மனிதா்களுக்கு ஒப்பாகப் பெயரிடுதல் இலக்கண வழூஉ  அல்லாமல் நேயம் போற்றும் உத்தியாகவே குறுந்தொகைப் பாடல்களில் அமைகின்றது.

    “வங்காக் கடந்த செங்காற் பேடை
    எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
    குழலிசைக் குரல குறும்பல வகவும்
    குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது
    மறப்பருங் காதலி யொழிய
    இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே”. (குறுந்-151 )

    என்ற பாடல் வழி, ஆண்வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால், தன்னுடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல் தவிக்கும் பெண் பறவை எனக் காட்டப்படுகிறது. பறவையின் இணையைப் பாவையின் துணைவா்போலக் “கணவர்” என்ற சொல்லால் சுட்டிக்கூறுவது சிறுபறவையின் வலியும் தன்வலியை ஒத்ததே எனத் தலைவனின் உள்ளக்கிடக்கையைக் கூறுவதாக அமைகின்றது. மேலும்,

    “நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
    தூற்றுந் துவலைப் பனிக்கூடுந் திற்கட்
    புலம்பயி ரருந்த வண்ண வேற்றோடு
    நிலத்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்.      (குறுந்-344 )

    என்ற பாடலில் விலங்குகளையும் “அண்ணல்” எனப் போற்றும் இயற்கையியந்த வாழ்வு போற்றும் பழந்தமிழ்ப் பண்பினைக் காட்டுகிறது.

    இயற்கைக்கும் உணா்ச்சிகள்

    உலகம் மனிதா்க்கானது. மனிதா்களுக்காகவே பிற உயிர்கள் யாவும் படைக்கப்பட்டன என்ற மயக்கத்தில் திளைக்கும் சுயநலம் ஓங்கக் கற்பிக்கும் இன்றைய மனிதா்களுக்கு சூழலியலாளா் கூறும் உண்மை நோக்கத்தக்கது.

    “இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களும் மதிப்பிற்குரியவை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் அம்மதிப்பு அமைய வேண்டும் என்பதில்லை. அவை அவற்றிற்காகவே மதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இப்புவியில் பல உயிர்களின் பங்களிப்பை மனிதா்கள் இன்னும் அறிந்து கொள்ளவே இல்லை”. என்ற திரு சஞ்சீவராஜ் அவா்களின் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.

    உயிரற்ற பொருட்களுக்கும் உயிர் கொடுத்துப் பார்ப்பதுடன் உணா்ச்சியையும் ஏற்றிக் காட்டியுள்ளனா் சங்கப்புலவா்கள்.

    “யாரணங் குற்றனை கடலே பூழியா்
    சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
    மீன்ஆர் குறுகின் கானலம் பெருந்துறை
    வெள்வீத் தாழை திரையலை
    நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே”.

    என்ற பாடல்வழி கடலுக்கும் உணர்ச்சியுண்டு எனக்கருதும் தலைவியின் கூற்றைச் சுட்டுகிறது. தலைவனைப் பிரிந்த மயக்கத்தால் இரவும் பகலும் உறங்காமல் துயருரும் தலைவி, ஓயாமல் அரற்றும் கடலை நோக்கி நீ யார் பிரிவு பற்றி வருந்துகிறாய் என தன் நிலையோடு ஒப்ப, கடலின் நிலைக்கும் கலங்குகிறாள் தலைவி.

     

    முடிவுரை

    சூழல்பார்வை, சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ள இயற்கைப் புனைவுகள் வழி அக்கால மாந்தரின் இயற்கையோடியைந்த வாழ்வு விளக்கப்பட்டுள்ளது. மனிதா்களைப் போல பிற உயிர்களுக்கும் வாழ இவ்வுலகு உரிமையுடையது என்னும் அறிவியல் உண்மையை உள்வாங்கிக் கொண்டு, அதற்கும் மேலாக மரங்களைத் தோழமையாகவும், விலங்குகளையும் மாந்தரோடு ஒப்ப நோக்கியமையும், உயிரற்ற பொருள்களை உயிருள்ள பொருள் போல எண்ணுவதோடு, அவற்றுக்கு உணா்ச்சிகளையும் வழங்கிக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்கள் இயற்கை போற்றும் பாடல்களாகவும் திகழ்கின்றன.

    *****

    பயன்பட்ட நூற்கள்

    1. சங்க இலக்கியக் கட்டுரைகள், தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, எப்ரல் 1984. பக்16.
    2. உயிர்ம நேயம், பாமயன், தமிழினி ஜீலை 2008, பக்.66. M.Woodbury (1954).
    3.Principles of General Ecology, MC Grew Hill Book Co, page.503.
    4. P. T. Sanjeeva Raj, Beware the loss of biodiversity, The Hindu, Sep 23, 2012. page.10

    *****

    கட்டுரையாளர் – பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
    முனைவர் ஆறுச்சாமி.செ. – நெறியாளர்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.

     

    Share
  • பேஷ்! பேஷ்! [4]

    இன்னம்பூரான்

    ஆகஸ்ட் 26, 2018

    காவேரியும் கொள்ளிடமும் கரை புரண்டு பாய்ந்தோடுகிறமாதிரி தான் ஏழையின் காசு செல்வந்தனின் திரவியமாக நமது சோஷலிஸ்ட் குடியரசில் பாய்ந்தோடுகிறது, நாட்தோறும் பலவருடங்களாக. முப்பது வருடங்களுக்குள் இந்தியாவின் படா கோடீஸ்வரர்கள் (பில்லினையர்ஸ்) இரண்டு நபர்களிலிருந்து 120 நபர்களாக அதிகரித்துள்ளனர்(ஜேம்ஸ் க்ரேப்ட்ரீ).இந்த நதி கீழிருந்து மேலே பாயும். அதற்கு முந்திய முப்பது வருடங்களில் இத்தனை மோசமில்லை. அதாவது, பொது ஜனங்களாகிய நாம் வருமான வரி கட்டுகிறோம்; ஜிஎஸ்டி கட்டுகிறோம்; செல்வந்தர் வரி கட்டுகிறோம்; லஞ்ச வரி கட்டுகிறோம்.

    ஒரு செய்தி: ‘இனி யாமார்க்கும் குடியல்லோம்.’ என்று சபதமிடுவது போல் ‘இனி அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு கமிஷன் தரப்போவதில்லை’ என்று பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் மதுரையில் கூடி முடிவு எடுத்துள்ளனர். கசிந்த கமிஷன் ரேட் பட்டியல்: தி.மு.க.ஆட்சியில் 3% கொடுத்தோம்; ஜெ. ஆட்சியில் அது 5 ஆனது. தற்பொழுது உள்ளூர் அமைச்சருக்கு 9%, எம்.எல்.ஏவுக்கு 5%ம், மாவட்ட செயலருக்கு 5%ம் கொடுக்கவேண்டியிருக்கிறது என்ற காண்டிராக் மகாஜனங்கள் ஜி.எஸ்.டி 12% கட்ட வேண்டியிருக்கிறது என்றும் அங்கலாய்த்தார்கள். அவர்களின் சங்கத்தலைவர் திரு. சுதர்ஷன் அவர்கள் பராமரிப்புப்பணி லஞ்சம் 35% என்றும், புதிய கட்டுமானப்பணி லஞ்சம் என்றும் கூறி இருக்கிறார். மேல்நோக்கி பாயும் இந்த கமிஷன் வெள்ளம், ஏழையை பரம ஏழையாக்கி, சீமானுக்கு அளப்பதற்கரிய செல்வத்தை வாரி வழங்கி…!

    ஆமாம். லஞ்சம் கொடுப்பதும் தப்பாச்சே! அப்போ இவங்களை ஜெயிலில் போட்டு விட்டால், கண்மாய் தூர்ப்பரது ஆரு?, ரோடு போட்றது ஆரு. இது ஒரு துளி நஞ்சு; பத்திரப்பதிவு செய்யப்போனால், வீட்டைக்காணோம்💣 காரோட்ட லைசன்ஸ் வாங்கப்போனால் காரைக்காணோம்.🔕

    கமிஷனுக்கு லகான் போட்டதால், லஞ்சத்துக்கு அழறப்பணத்தை கட்டுமானத்தில் போட்டு, லாபம் ஈட்டலாம். சட்டரீதியான வரியை கட்டலாம். நாடு கடைத்தேறும். மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள், ஓட்டுக்குத் துட்டு வாங்காவிட்டால். ( படித்தது: தினமலர்:ஆகஸ்ட் 23, 2018 +).

    -#-

    வால்:

    ராஜாஜி பொதுப்பணித்துறையை தனது ஒண்ணாம் நம்பர் விரோதி என்று அசெம்பிளியில் கூறினார். ஹூம்! போய்ச்சேர்ந்த்தார் மஹானுபாவன்👺

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share