Blog

  • நலம் .. நலமறிய ஆவல் – 122

    கலாசாரக் குழப்பங்கள்

    “கோலாலம்பூரில் எங்கே குடியிருக்கிறீர்கள்?”

    என் பதிலைக் கேட்டவள் சற்று அதிர்ச்சியுடன், “அது மலாய்க்காரர்கள் இருக்கும் இடமாயிற்றே!” என்றாள்.

    இந்தியர், சீனர், மலாய் மட்டுமின்றி, பலர் வாழும் நாடு மலேசியா. அவர்கள் ஒவ்வொருவரின் கலாசாரமும் வித்தியாசமாக இருக்கலாம். இருந்தாலும், பிறருடன் பழகினால்தானே நம் கண்ணோட்டம் விரிவடையும்? பின் எப்படித்தான் முன்னேற்றம் அடைவது?

    மலாய்க்காரர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். சீனர்கள் கிறிஸ்துவர்கள். அல்லது, புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். இந்தியர்கள் பெரும்பாலும் இந்துக்கள். சில கிறிஸ்துவர்களும் உண்டு. எப்படியெல்லாம் பிறர் வேறுபடுகிறார்கள் என்றே கவனித்துக் கொண்டிருந்தால், யாருக்கும் நிம்மதியில்லை.

    இன்று உலகம் சுருங்கிவிட்டது. வேலை நிமித்தம் பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், பலருக்கும். அங்கு வெவ்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்க நேர்வதைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், தம்மை ஒத்தவர்களுடன் மட்டுமே தொடர்புகொள்வதுதான் பலருக்கு நிம்மதி, மகிழ்ச்சி.

    தம்மைப் பிறர் தாழ்வாக எடை போட்டுவிடுவார்களோ, இல்லை, தமது கலாசாரத்தை இழக்க நேரிடுமோ என்ற பயமே இவர்களது போக்கிற்குக் காரணம்.

    என்னைப்போலவே இரு!

    தன்கீழ் வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் வேலை செய்யும்போது அவர்களை அதட்டியோ, மட்டம் தட்டியோ நடத்தினால், வேலை நடக்காது.

    ஒரு முறை, நான் மலாய்க்கார பெண்கள் அணிவதுபோல் ஸாரோங் அணிந்து பள்ளிக்கூடத்திற்குப் போனேன். எப்போதும் எல்லாரையும் பார்த்துச் சிடுசிடுக்கும் தலைமை ஆசிரியை, “இன்று ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்!” என்று முகமெல்லாம் சிரிப்பாகப் பாராட்டினாள்.

    இவளைப் போன்றவர்கள் தலைமைப் பதவியில் இருக்கவே தகுதியில்லை. தானும், தன்னைப்போல் இருப்பவர்களும்தான் உயர்த்தி, வித்தியாசமானவர்கள் மாற்றுக்குறைவு என்று சிந்தனை போனால், யார் அவளுக்கு அடங்கி வேலை செய்வார்கள்? அவளை எப்படி ஏமாற்றுவது என்றுதான் மனம் போகும்.

    ஒரு பிரபல மலாய் பெண் எழுத்தாளர் எழுதியிருந்தது நினைவில் எழுகிறது: “நான் படித்தது எல்லாம் கான்வென்டில். அங்கு சிஸ்டர்ஸ் கூறுவார்கள், `கிறிஸ்தவர்கள்தான் சொர்க்கம் செல்ல முடியும்,’ என்று! விவரம் புரியாத வயதில் நான் எவ்வளவு பயந்தேன், தெரியுமா?”

    அண்மையில், இங்கு ஒரு தனியார் பள்ளியில், அதேபோன்ற ஓர் ஆசிரியை, “எங்கள் இஸ்லாமிய மதம்தான் மிக உயர்வானது,” என வகுப்பில் கூற, பிற இனத்தையும் மதத்தையும் சார்ந்த மாணவ மாணவிகள் தாங்கள் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்கள்.

    அவர்கள் தம் பெற்றோரிடம் கூற, புகார் தலைமை ஆசிரியைக்குப் போயிற்று. அந்த ஆசிரியை உடனே வேலையிலிருந்து நீக்கப்பட்டாள் – மாணவர்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தாள் என்று.

    வித்தியாசமாக இருக்கிறான், முட்டாள்!

    தன்னைப்போல் இல்லாதவர்கள் அனைவரும் தரக்குறைவானவர்கள் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள், `நாம்தான் உயர்த்தி. எங்கள் கலாசாரம்தான் மேல்!’ என்று கர்வமாக நடந்துகொண்டால், இறுதியில் தோல்வி அவர்களுக்குத்தான்.

    சிலருக்குத்தான் தம் இழப்பு என்னவென்று புரிகிறது.

    தனித்துப்போய்விட்டோமே!

    “TALK TO US, LAH! (எங்களுடன் பேசுங்களேன்!)” என்றார் ரிதுவான். லண்டனில் படித்து, பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகிய அனுபவம் உள்ளவர். ஏன் வித்தியாசமான பிறர் தங்களையெல்லாம் ஏற்கவில்லை என்ற ஏக்கத்துடன், கெஞ்சலாக ஒலித்தது அவர் குரல்.

    நாங்கள் இருவரும் ஆசிரியர்கள் பொதுவறையில் எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். நிறையப் பேசினோம் – அரசியலைப்பற்றி, எங்கள் கலாசாரத்தைப்பற்றி. நான் அலைந்து திரிந்து, வாசகசாலைகளிலிருந்து எடுத்துவரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிப் படிப்பார்.

    “அந்த லைப்ரரி எங்கு இருக்கிறது?” என்று ஒவ்வொரு முறையும் கேட்பாரே ஒழிய, அங்கு போகவே இல்லை. இப்படியே ஈராண்டுகள் கழிந்தன.

    ஒரு சமயம், “அரசாங்கம் உங்களைக் கெடுத்து வைத்திருக்கிறது. விசேட சலுகையால் உங்கள் சுயமுயற்சியை அறவே இழந்துவிட்டீர்கள்!” என்றேன், எரிச்சலுடன். கூறியபின், அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று தோன்றியது.

    முதலில் அதிர்ந்த ரிதுவான், நான் கூறியதன் உண்மை புரிந்து, பெரிதாகச் சிரித்தார். நானும் அவரது சிரிப்பில் பங்குகொண்டேன். நினைத்து, நினைத்து, வெகு நேரம் சிரித்தோம்.

    கலாசாரம் வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஏன், ஒரே நாட்டில், ஒரே ஊரில்கூட மாறுபடுமே!

    நான் கல்லூரிக்குப் போகையில், பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அக்காலத்தில் பெங்களூரில் எந்தப் பெண்ணும் ஓர் ஆணின் பக்கத்து இருக்கையில் உட்காரமாட்டாள்.

    ஒரு சமயம், என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த தாய், “அங்கே உட்காரேன்!” என்று காட்டினாள்.

    அங்கு ஒருவர் உட்கார்ந்திருந்ததை நான் சமிக்ஞையால் குறிப்பிட, அம்மா, “அதனால் என்ன! ஒட்டிக்கவா போறது!” என்றாள் அலட்சியமாக.

    நான் அப்படி அமரும்போதெல்லாம் பிற பெண்கள் கேலியாகப் பார்ப்பார்கள். எந்த ஆணும் பேச முயற்சித்ததுமில்லை, தகாத முறையில் நடக்கவுமில்லை.

    ஆண்களுடன் சரிசமமாக அமர்ந்து, சிரித்துப் பேசினாலே கற்பு பறிபோய்விடும் என்பதுபோல் எண்ணம் கொண்ட பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் பின்தங்கியவர்கள்.

    இன்னொரு பாலருடன் பழகியே இராதவர்கள் திருமணமானபின் வாழ்க்கைத்துணையைப் புரிந்துகொள்வது சிரமம்.

    “என்னால் என் அண்ணனுடன் நிறையப் பேச முடிகிறது. கணவருடன் அப்படிப் பேசி, நெருங்க முடிவதில்லையே!’ என்று ஒரு மாது ஏக்கத்துடன் தெரிவித்தாள்.

    பழகுவது என்றால் ஓடி வந்து இடுப்பில் ஏறுவதோ, கட்டி அணைத்துக்கொள்வதோ இல்லை. சரி சமமாக உட்கார்ந்து பேசினாலே போதுமே, மற்றொருவரது கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள!

    தென்கிழக்காசியாவில் மூத்த பெண்டிருக்கு மிகுந்த மரியாதை. மேல்நாடுகளிலோ, இதற்கு நேர் எதிரிடை. அதனால், எப்போதும் இளமையாகவே இருந்து தொலைக்க வேண்டும். நடக்கிற காரியமா!

    பிற கலாசாரங்களைப்பற்றி அறிய

    புத்தகங்களின் மூலம் ஓரளவு அறிந்தாலும், பிறருடன் பழகுவதும், பயணங்கள் மேற்கொள்ளுவதும் நம் அறிவை விசாலமாக்குகிறது.

    `நீ எங்களைப்போல் இல்லையே!’ என்று இளக்காரம் செய்பவர்களும் எதிர்ப்படுவார்கள். பிறரை அவர்கள் இருக்கிறபடியே ஏற்பதால் தாமும் நன்மை அடைகிறோம் என்பது புரியாத மூடர்கள் அவர்கள்.

    `நீ மட்டும் என்னைப்போல் இருக்கிறாயோ?’ என்று மனத்துக்குள் திட்டி, சமாதானம் அடைய வேண்டியதுதான்!

    ஒரே மொழியானாலும், உச்சரிப்பு மாறுபடுகிறது. புரிந்தால் சரி. அதற்குத்தானே மொழி? கேலி எதற்கு? அவரவர் பழகிய விதத்தில் பேசினால்தான் கற்பனையில் தடங்கல் இருக்காது.

    நான் மேடையில் பேசும்போது, செந்தமிழில் ஆரம்பித்துவிட்டு, எனக்குப் பழக்கமான `மெட்ராஸ் ஐயர் பாஷை’யில் வேகமாகப் பேசுவேன்.

    “எத்தனை பேர் ஔவை ஷண்முகி பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்பேன். அரங்கத்திலிருக்கும் அனைவரின் கைகளும் உயரும்.

    “அப்போ, நான் பேசறதும் புரியும்!”

    யாரும் மறுத்ததில்லை.

    பிறரை, அவர்கள் வாழும் முறையை அறிவது என்றால் நம் பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுப்பது என்றில்லை. அவர்களுக்கு அளிக்கும் மரியாதையை நமக்கும் கொடுத்துக்கொள்ள வேண்டாமா?

    நாம் நாமாகவே இருக்க, அவர்களையும் மாற்ற முயலாது இருந்தால் நம்பிக்கை எழ, நட்பு பலப்படும். அறிவும் விசாலமாகும்.

    தொடருவோம்

    Share
  • பழந்தமிழக வரலாறு – 16

     

     

    இ.பாண்டிய வேந்தர்கள்

    முதல் கரிகாலனின் ஆசிரியராக இருந்த, கரிகாலனைவிட இருதலைமுறைகள் மூத்த இரும்பிடர்த்தலையார், கருங்கை ஒள்வாள் பெரும்பெயெர்வழுதி என்கிற பாண்டிய வேந்தன் குறித்துப்பாடியுள்ளார். இவன் சேரன் உதியன், சோழன் பெரும்பூட்சென்னி ஆகியவர்களின் காலத்தவன். இவனது ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 350-கி.மு.320 வரையாகும். இவனுக்குப்பின் வந்தவன் இரண்டாம் காலகட்ட முதுகுடுமிப் பெருவழுதி. இவன் குறித்து மூன்று சங்கப்புலவர்கள் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளனர். அதுபோக ஏழாம் காலகட்டத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடவந்த மாங்குடிமருதனார் அவனை, முதுகுடுமிப் பெரு வழுதி போன்று புகழ்பெற வாழ்த்துகிறார். முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட ‘பெருவழுதி’ நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆகவே மேற்குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டும், இவன் மிக நீண்டகாலம் ஆண்டவன் எனக்கொண்டும் இவனது ஆட்சிக் காலம் கி.மு.320-கி.மு.290 எனக் கணிக்கப்பட்டது.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன் இளைஞனாக இருந்தபோது பாண்டியர்படைக்கு தலைமை தாங்கி மௌரியப்படையின் ஒரு பகுதியை எதிர்த்துப் போரிட்டு(கி.மு.290) வெற்றிபெற்று இப்பெயர் பெற்றான். இவன்தான் சிலப்பதிகாரப் பாண்டிய வேந்தனும் ஆவான். இவன் சேரன் செங்குட்டுவனைவிட மூத்தவன். மூன்றாம் காலகட்டத்தைச்சேர்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் காலம் சுமார் கி.மு. 250-கி.மு. 220 வரையாகும். கி.மு. 270 வாக்கில் வேந்தன் ஆன இவன் சேரன் செங்குட்டுவன் காலத்திலும் சிறிதுகாலம் ஆண்டான். இவனுக்குமுன் நம்பி நெடுஞ்செழியன் என்பவன் ஆண்டான். அவனைப் பேரெயின் முறுவலாரும், பரணரும் பாடியுள்ளனர். பரணர் அவனை இறந்த காலத்தில் பாடியுள்ளார். இவைகளை வைத்து நம்பி நெடுஞ்செழியன் சுமார் கி.மு.290-கி.மு.270 வரை 20 ஆண்டுகள் ஆண்டான் எனவும் அதன்பின் ஆட்சியேற்ற ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், சுமார் கி.மு.270-கி.மு.245 வரை 25 ஆண்டுகள் ஆண்டதாகவும் கணிக்கப்பட்டது.

    ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியனுக்குப்பின் ஆட்சிக்குவந்த, கொற்கையை ஆண்டுவந்த வெற்றிவேற் செழியன் சேரன்செங்குட்டுவன் காலத்தைச் சேர்ந்தவன். அவனது ஆட்சிக்காலம் என்பது சுமார் கி.மு.245-கி.மு.235 வரையான 10 ஆண்டுகள் ஆகும். தினமலர் ஆசிரியரும், நாணயவியலாளரும் ஆன இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கொற்கையில் தனிப் பாண்டிய அரசு இருந்ததாகவும் அவர்கள் செழியன் என்கிற பெயரில் நாணயங்களை வெளியிட்டனர் எனவும் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் கூறியுள்ளார். கொற்கையில் மட்டு மல்ல ஈழத்தின் தம்பப்பண்ணி, மோகூர், ஒல்லையூர் போன்ற பல இடங்களில் பாண்டியர்கள் தனி ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்த கொற்கை, மோகூர், தம்பப்பண்ணி போன்ற இடங்களில் இருந்தவர்கள் பாண்டியர்களின் கிளை அரசர்களாவர். அவர்கள் தான் பின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆண்டனர். வெற்றிவேற்செழியன் கொற்கையில் இருந்தும் பழையன் மாறன் மோகூரிலிருந்தும் வந்து மதுரையை ஆண்டனர் என்பதைச் சங்க இலக்கியம் தெரிவிக்கிறது.

    சுமார் கி.மு.290-கி.மு.235 வரை 55 ஆண்டுகள் மதுரையை ஆண்ட நம்பி நெடுஞ்செழியன், ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் ஆகிய இவர்கள் மூவரும் கொற்கையை அரசர்களாக இருந்து ஆண்டபின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆனார்கள். இந்த மூன்றுபேரும் கொற்கையில் அரசர்களாக இருந்தபோது வெளியிட்ட நாணயங்கள்தான் இந்த ‘செழிய’ நாணயங்கள் ஆகும். இவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இந்த நாணயங்களின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இவர்கள்தான் இந்த செழிய நாணயங்களை வெளியிட்டனர் எனலாம். இந்த நாணயங்களில் ஒருபக்கம் ‘செழிய’ என்கிற பெயரும் மறுபக்கம் யானைச்சின்னமும் இருக்கின்றன. இவை வெள்ளீய வெண்கல நாணயங்கள் ஆகும். இவைகளுக்கான வெள்ளீயம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து கடல்மூலம் வந்ததாக இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவிக்கிறார்1 வெற்றி வேற்செழியனுக்குப்பின் வந்த பசும்பூண் பாண்டியன், ஐந்தாம் காலகட்டம் ஆவான். நான்காம் காலகட்டப் பரணரும் ஏழாம் காலகட்ட நக்கீரரும் இவனைப் பாடியுள்ளனர். நக்கீரரின் தந்தை மதுரைக்கணக்காயர் இவனைப்பாடியுள்ளார். அதில் கொல்லிமலையைச் சேரர்களுடையதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓரியிட மிருந்து காரியினால் பறிக்கப்பட்டு கி.மு. 220க்குப்பின் அது சேரர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அது சில காலம் கழித்துத்தான் சேரர்களுடையதாகப் புலவர்களால் கருதப்பட்டது. ஆதலால் அப்பாடல் கி.மு. 220க்குப்பின் சில காலம் கழித்துப் பாடப்பட்டிருக்கவேண்டும். மதுரைக்கணக்காயர் மகன் நக்கீரரின் காலம் என்பது சுமார் கி.மு. 240-160 வரையாகும். நக்கீரர் பசும்பூண் பாண்டியனை தனது 25 வயதில் பாடியதாகக் கொண்டால், கி.மு. 215 வாக்கில் அவர் அவனைப்பாடியிருக்க வேண்டும். அதன்பின்னர் 5 வருடம் கழித்து அவன் இறந்தான் எனக் கொண்டால் அவனது வேந்தர் ஆட்சிக்காலம், என்பது கிட்டத் தட்ட கி.மு.235-கி.மு.210 வரை எனலாம்.

    பசும்பூண் பாண்டியனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் ஆறாம் காலகட்டப் பாண்டியன் அறிவுடை நம்பி ஆவான். இவன் பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் காலத்தவன். இவர்களின் இறுதிக் காலத்தில் இருந்தவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறை ஆவான். அறிவுடை நம்பி காலத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை ஆள்கிறான். நம்பி சுமார் 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொண்டு இவனது காலத்தைத் கிட்டத்தட்ட கி.மு.210-கி.மு.200 வரை எனலாம். இவனுக்குப்பின் வந்தவன் பழையன் மாறன் ஆவான். இந்தப் பழையன் மாறனை கிள்ளிவளவன் கி.மு. 193வாக்கில் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றுகிறான். இந்தப்பழையன் மாறன் காலத்தில் வாழ்ந்த இளஞ்சேரல் இரும்பொறை இளம்பழையன் மாறனையும், கோப்பெருஞ் சோழனின் புதல்வர்களையும் தோற்கடிக்கிறான். பழையன் மாறன் சுமார் 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான் எனக்கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலத்தை சுமார் கி.மு.200-கி.மு.185 வரை எனக் கணிக்கலாம்.

    மாங்குடிமருதனார் தனது மதுரைக்காஞ்சியில் பழையன் மாறனை இரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்குமுன் ஆட்சியில் இருந்தவன் பழையன் மாறன் ஆவான்.  பாண்டியர் களில் மிகவும் புகழ்பெற்ற நெடுஞ்செழியனது தலையாலங்கானப் போர் கி.மு. 183வாக்கில் நடக்கிறது. இப்போர் மூலம் பாண்டியர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக ஆகின்றனர். இப்போரால் தமிழகமே தலைமயங்கியது என்கிறார் குடபுலவியனார். இப்பாண்டியனால் கி.மு. 182வாக்கில் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்டுப் பின் அதிலிருந்து தப்பி வந்து வேந்தனாக ஆகிறான்.

    அதன்பின் கி.மு. 175 வாக்கில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் முசிறி முற்றுகையிடப்படுகிறது. சுமார் 20 வருடங்கள் ஆண்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு.185-கி.மு.165 வரை எனலாம். சோழன் இரண்டாம் கரிகாலனும், சேரன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் இவனது சமகால வேந்தர்கள் ஆவர். இரண்டாம் தூமகேது தோன்றிய கி.மு. 163 என்கிற காலவரையறையும், கலிங்கமன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டுக் காலமும்(கி.மு. 165) இவர்கள் மூவருக்கும் இறுதிக்காலமாக ஆகிறது எனலாம். இவர்களது காலத்தில் வடக்கே சாதவாகனர்களின் சதகர்ணியும் (கி.மு.180-கி.மு.124), கலிங்க மன்னன் காரவேலனும்(கி.மு.180-கி.மு.165) ஆண்டனர். கி.மு.187இல் மௌரியர்கள் வீழ்ந்து, மகதம் சுங்கவம்சத்து(கி.மு.187-கி.மு.75) புசுய மித்திரனால் ஆளப்படுகிறது.

    தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனையும் நக்கீரர் பாடியுள்ளார். ஆதலால் இந்த நெடுஞ்செழியனுக்குப்பின்(கி.மு.165) பாண்டிய வேந்தனாக ஆட்சிக்கு வந்தவன் இந்த நன்மாறனே ஆவான். இவன் எட்டாம் காலகட்டம் ஆவான். இதேகாலத்தில் உக்கிரப்பெருவழுதி அரசனாக ஆகிறான், வேந்தனாக அல்ல. உக்கிரப்பெருவழுதி வெளியிட்ட தலைவடிவ நாணயங்கள் கிடைத்துள்ளன. அவைகளின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, அதாவது கி.மு. 135-கி.மு.100 ஆகும். இந்த நன்மாறனை ஏழாம் காலகட்ட நக்கீரர், எட்டாம் காலகட்ட மதுரை இளநாகனார், ஒன்பதாம் காலகட்ட ஆவூர் மூலங்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். ஆகவே இவன் கிட்டத்தட்ட கி.மு.165-கி.மு.145 வரை, சுமார் 20 ஆண்டுகள் வேந்தனாக இருந்தான் எனலாம்.

    இவனுக்குப் பின் உக்கிரப்பெருவழுதி கிட்டத்தட்ட கி.மு.145-கி.மு.130 வரை சுமார் 15 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அக்காலத்தில்தான் இந்தத் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவன் அகநானூற்றைத் தொகுத்தவன். அதன் காரணமாகவே இவனுக்குப்பின் வந்த புலவர்கள் அகநானூற்றில் பாடவில்லை என்பதோடு 9ஆம், 10ஆம் காலகட்ட வேந்தர்கள், அரசர்கள் இதர ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் அகநானூற்றில் பாடப்பட வில்லை. 9ஆம், 10ஆம் காலகட்ட ஆட்சியாளர்கள் பெரும்பாலும் புறநானூற்றில் தான் பாடப்பட்டுள்ளனர். இவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆவான். அவன் சுமார் கி.மு.130-கி.மு.120 வரை 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். இவன் 9ஆம் காலகட்டம் ஆவான். இவனை சீத்தலைச் சாத்தனார் என்கிற புலவர் மட்டுமே பாடியுள்ளார். இவனுக்குப்பின் வந்தவன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி ஆவான். இவனும் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் நண்பர்களாக இருந்துள்ளனர். இவன் சுமார் கி.மு.120-கி.மு.105 வரை 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான். இவனும் தலைவடிவப் பெருவழுதி நாணயங்களை வெளியிட்டவன் ஆவான். இவனும் 9ஆம் காலகட்டமே ஆவான். உக்கிரப்பெருவழுதியும், இவனும் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது ஒரு மிகமுக்கியமான கால வரையறையாகும்.

    இவனுக்குப்பின் வந்த கூடகாரத்துஞ்சிய மாறன் வழுதிதான் சங்ககாலத்தின் கடைசிப்பாண்டியவேந்தன் ஆவான். இவன் முத்தொள்ளாயிரப் பாடலில் இடம் பெற்றவன். சோழன் நலங்கிள்ளி, குட்டுவன் கோதை ஆகியவர்களின் சமகாலத்தவன். ஆதலால் இவன் காலம் 10ஆம் காலகட்டம் ஆகும். முத்தொள்ளாயிரம் கி.மு. 75வாக்கில் எழுதப்பட்டதாகும். அதன்பின் இவன் 5ஆண்டுகள் இருந்தான் எனக் கொண்டும், இவன் எட்டாம் காலகட்ட மதுரை மருதன் இளநாகனாராலும், 9ஆம் காலகட்ட ஐயூர் முடவனாராலும் பாடப்பட்டவன் என்பதாலும் இவன் காலத்தை சுமார் கி.மு.105-கி.மு.70 எனக்கொள்ளலாம். இவனுக்கு முந்தைய பெருவழுதி நாணயங்களின் காலமும், இவனது சமகாலச் சோழன் நலங்கிள்ளியின் வடநாட்டுப் படையெடுப்புக்காலமும், குட்டுவன் கோதையின் நாணயங்களின் காலமும் இவனது காலத்தை உறுதிப்படுத்துகின்றன.

    தமிழகத்தின் மீதான மௌரியப்படையெடுப்புக்கு முன்பின் ஆண்ட பாண்டியன் முதுகுடுமிப்பெருவழுதியின் ஆட்சி தொடங்கும் கி.மு. 320 முதல், உச்சயினியை வென்ற சோழன் நலங்கிள்ளியின் காலத்தில் பாண்டியநாட்டை ஆண்ட மாறன் வழுதியின் ஆட்சிமுடியும் சுமார் கி.மு. 70 வரையான 250 ஆண்டுகளில் 13 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியையும்(கி.மு.350-கி.மு.320) சேர்த்து மொத்தம் 14 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதுகுடுமியின் பெருவழுதி நாணயங்கள், கொற்கைப்பாண்டியர்கள் வெளியிட்ட செழியன் நாணயங்கள், இறுதிக்காலப் பாண்டியர்கள் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், இலக்கியக் கணிப்புகள், சமகால சேர, சோழ வேந்தர்களின் உறுதிப்படுத்தப்பட்ட காலவரையறை ஆகியவைகள் இந்த கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகளில் ஆண்ட 14 பாண்டிய வேந்தர்களின் காலத்துக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன. ஆகவே தனிப்பட்ட வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி முதல் இறுதிப்பாண்டியன் மாறன் வழுதி வரையான 14 பாண்டிய வேந்தர்களின் காலம் என்பது சுமார் கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

    பார்வை:

    1.செழிய, செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிசர்ஸ், ஏப்ரல்-2014, பக்: 54-57.

    Share
  • புறநானூற்றுப் பாடல்களில்  அறவாழ்வியல்  கூறுகள்

    -முனைவர் பெ.தனலட்சுமி

    புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே கூற்று என்றும் மக்களும் அரசனும் நம்பி வந்தனர். அறம் எங்கிருந்து வருகின்றது என்றால் அது வாழ்வியலில் இருந்துதான் என்கின்றனர் அறிஞர்கள். ஒருவன் அன்றாட வாழ்வில் அறநெறி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் , எதிர்கால இலட்சியப்பாதையைச் சரிவர அமைத்துக்கொள்ளலுக்கும் அறம் துணை செய்கின்றது. இம்மை மாறி மறுமையிலும் ஒருவனுக்குப் பிறப்பறுப்பது அறமே ஆகும். அறமின்றி வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகின்றது.  ஆற்று மணலினும் பலவே என்பது  வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கையைக்  குறிக்கின்றது. நல்லவன் தீயவன் என்பது அவனது அறத்தின் அளவுகோலே ஆகும். அறமில்லாத வாழ்க்கை மரத்தினுக்கு ஒப்பானதாகும். அறத்தாறு இதுவென நுவலும் மறத்தாறு என்பது அற வழியில் நடப்பதுவே ஆகும். மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தலும் உணவு படைத்தலும் உறையுள் தருதலும் மட்டும்தானா அறம் என்ற கேள்வி எழுகின்றது. அறம் என்பது அதுமட்டுமன்று. அறத்துக்கு விளக்கம் தருகையில் வாழும் வாழ்வில் நெறிபிறழாமல் வாழ்வதே அறத்துடனான வாழ்வு என்கிறது சான்றுகள். ஆனாலும் அறத்தினை இந்த அளவுகோல் மட்டுமே வைத்து அளந்துவிடமுடியாது.  அது நெகிழ்வுத்தன்மை வாய்ந்தது ஆகும். வாழும் நாள் சிலவே வாழும் மனிதர்களும் சிலவே. அதுவரை உற்றார் உறவினரோடு வாழ்தலும் உயிர்க்கொலை தவிர்த்து வாழ்தலும் வாழ்க்கை எனலாம். உயிர்க்கொலை புரியாமை உற்றாருக்குக் கெடுதல் நினையாமை போன்றன மேலும் சில வாழ்வியல் அறங்களுக்கு உதாரணமாகும். இவற்றையெல்லாம் வைத்துப் புறநானூற்றை மதிப்பீடு செய்து ஆராயலாம்.

    புறநானூற்று வாழ்வியலும் அறமும்

    ‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்ற பாடல் உணவே இந்த உலகத்திற்கு முதன்மையானது என்பதை உணர்த்துகின்றது. அரசர்களுக்கும் புலவர்களுக்கும் உள்ள உறவு மனவுணர்வு அடிப்படையிலானதாக இருந்தது. எத்திசைச் செலினும் அத்திசைச்சோறே என்று மழுவுடைக் காட்டகத்து கையில் வாளொடு செல்லும் எவருக்கும் விறகு கிடைப்பது போலவே புலமையுள்ள எவருக்கும் எங்குச் சென்றாலும் வேண்டிய பொருள் கிடைக்கும் என்ற கோபத்துடன் புலவர் ஒருவர் பாடுகின்றார். மற்றொரு புலவர் அரசன் காலம் நீட்டித்தாலும் யானையின் கோட்டிடை வைத்த கவளம் போன்றது எமது பரிசுப்பொருள் என்று கூறுகின்றார். மானமும்  அறிவும் மனிதனுக்கு அழகு என்பது போல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யவும் நம்பி வந்தவர்களுக்கு நன்மை செய்யவும்  நம்பிக்கையை எஞ்ஞான்றும் காப்பாற்றுவதும் புறநானூற்றின் பாடுபொருளாக இருக்கின்றது. வாய்மையன்றி ஒரு போதும் வாக்கில்லை. பொய்மை ஒருபோதும் எழவில்லை. உணர்வும் அறிவும் இணைந்த வாழ்க்கையும், அன்பும் அறிவும் ஆழ்ந்த பண்பும் பகைதவிர்ப்பும் பொன்னும்  பொருளும் போகத்திற்கு அடுத்தும் இருந்த காலம் சங்க காலம். மாணெழில் சிதையாமல் இருந்தது என்பது வாழ்க்கையின் அறிவூற்றிலும் பண்பின் மறக்காற்றிலும்தான் என்பது பாடல்கள் காட்டும் உண்மைத் தத்துவம். ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்கருதிச் செயலுக்குரிய திட்டமும் படைவீரமும் கொடுத்தல் தொழிலும், கோடான கோடி கொடுப்பினும் தன்னுடைய நா கோடாமையும் புறப்பாடலின் அகக்கூறாகும் (தமிழண்ணல் (2009:75). வானும் வையமும் மாறிய போதிலும் தம் வாழ்நாள் கொள்கையும் குறிப்பும் மாறாமையே சங்கப்பாடலின் சொத்தாக விளங்குகின்றது.

    நல்லதும் அல்லதும்

    நல்லதும் அல்லதும் இரண்டு பிரிக்கவியலாத நாணயப் பக்கங்களாகும். சான்றோர்கள் என்பவர்கள் யார் என்ற வினாவிற்கு விடையளித்தலில் நல்லது செய்யாவிடினும் அல்லது செய்யாதவர்களே யென்று பாடல் பகர்கின்றது. 

    ”நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
    எல்லாரும் உவப்பது அன்றியும்
    நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே” (பாடல்-195)

    அனைவரும் வாழ்ந்து முடிந்தபின்பு வரவுசெலவு கணக்கைப் பார்க்கின்றோம். நாம் பார்க்காவிட்டாலும்  மேலுலக நம்பிக்கையில் உள்ளோர் பார்க்கின்றனர். அவ்வாறு பார்க்கின்றபோது நீங்கள் நன்மை செய்திருக்காவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இருந்திருந்தால் அதுவே உங்களை நன்மைப் பாதையில்  கொண்டுசேர்க்கும் என்பதைப் பாடல் பகர்கிறது. ஈகையில் இரண்டு விதம் உண்டு. தன்னிடம் உள்ள பொருளைத் தருகிறேன் என்பதும், தன்னிடம் இல்லாதபொருளையும் தருகின்றேன் என்பவையும் அவை. உன்னிடம் உள்ள பொருளைத்தருகின்றேன்  என்றால் அதில் ஓர் அறம் உண்டு. உன்னிடத்து இல்லாத பொருளை எப்படித்தரமுடியும் அவ்வாறு தருகிறேன் எனச் சொன்னபின்பு தராமல் காலம் நீட்டித்தல் அறமாகாது.

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
    ஆள்வினை மருங்கின்  கேண்மைப்பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
    இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
    இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்... (பாடல்-196)

    தம்மால் கொடுக்கவியன்றதைக் கொடுக்க முடியும் எனச்சொல்லிக் கொடுக்கவேண்டும். கொடுக்கவியலாததை இல்லையென்று சொல்லி மறுக்கவேண்டும் இதுவே அறத்தின் வழியாகும். அதுவன்றி மேற்சொன்னது போல் இயலாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி ஏமாற்றுவது பொய்ப்புகழால் போற்றுவது தூற்றவதற்குச் சமமாகும். ஆக, வலியறிந்து முடியும் என்பதை முடியும் எனவும்  இயலாது என்பதை இயலாது எனவும் கூறினால் அது தர்மம். அறநெறி. ஆனால் வைத்துக்கொண்டே இல்லையென்று சொல்கின்ற நபர்களும் உண்டு. அவர்கள்  செய்வதும் வாழ்வியல் அறத்திற்கு எதிரானது என்கிறது புறநானூறு.  வேந்தனின் அறம் முக்கியமானதாகும். பிசிராந்தையாரை நுமக்கு ஆண்டுபலவாகியும் நரைவரவில்லையே எனக் கேட்கின்றபோது மாண்ட என்மனைவியோடு மக்கள் நிரம்பினர்; என் வழிகாட்டுதலின் படி நடந்தோரும் எனது ஏவல் படியே நடந்தனர்.  எங்கள் ஊரில் சான்றோர் பலர் வாழ்கின்றனர்; எனது மன்னனும் அல்லவை செய்யாதவன் என மொழிகின்றார்.

    …அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
    ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர்  யான்வாழும் ஊரே (பாடல்-191)

    தனிமனிதன் அல்லவை செய்தால் குடும்பம் குலையும். அரசன் அல்லவை செய்தால் நாடு நல்வழியில் சேராது என்பதற்குப் புறநானூற்றில் பல காட்டுகள் உள்ளன.

    ஊரும் உறவும், வியத்தலும் இகழ்தலும்

    யாவரும் ஓரினம் யாவரும் ஓர் நாடு. யாவரும் ஓரின மக்கள் என்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி. இன்ப துன்பம் என்பது நமக்கு நாமே விளைவிக்கும் ஓர் விளைபொருள். இதற்கு மற்றவர்கள் காரணம் கிடையாது. வாழ்க்கை இனிமையானது என்ற சொல்வதற்கும் இல்லை. துன்பமானது என்ற தூற்றுவதற்கும் இடமில்லை. எனவே அனைத்தும் சமமானதே ஆகும். பணத்திலும் பதவியிலும் பெரியவர் என்பதற்காக ஒருவனைப் புகழ்வதும், இது இவனிடம் இல்லை என்ற இகழ்வதும் தமிழ்ப்பண்பாடு அல்ல. வாழ்க்கை என்பது அதுவதன் ஓட்டத்தில் செல்லக்கூடியதாகும். அது வருகின்றபோது வந்தவழி தெரியவில்லை. போகின்றபோது சென்றவழியும் தெரிவது இல்லை (பெ.மாதையன் (2004) எனவே, அனைத்தையும் ஒன்றாகக் கருதவேண்டும் என்ற மனநிலையைத் தருவது புறப்பாடல்.

    …காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (பாடல்-192)

    எனவே, யாவரோடும், சுற்றத்தோடும் சேர்ந்து வாழும் வாழ்க்கை இனிதானது.  துறவு வாழ்க்கையைவிட இல்வாழ்க்கையே சிறந்தது என்று குறிக்கின்றது. இந்த  உலகம் இறைவனால் மிக அற்புதமாகப் படைக்கப்பட்டுள்ளது. வாழும் ஊர்ப்பகுதியில் ஓரிடத்தில் மணமலர்கள் சுபகாரியங்களுக்குப் படைக்கப்படுகின்றது. மற்றொரு வீட்டில் பிணத்திற்காகப் படைக்கப்படுகின்றது. இவையிரண்டும்  ஒரே நேரத்தில் நிகழ்கின்றது இதனைப்பார்த்தாவது வாழ்க்கையில் சில அறங்களைக் கடைப்பிடிக்கவேண்டும் என வழிகாட்டுகிறது புறநானூறு.

    ஈகையில் சிலர் கருமிகளாக இருப்பர். இவர்களது வாழ்வு பயன்றது. சில எலிகள் தாம் உண்பதற்காக நெல்லினை சேமித்துவைக்கும். அதுபோல மனிதர்களும் நெல்மணிகளாகச் சேர்த்துவைப்பர்.  இச்செயலைச் செய்பவர்கள் சிறியர். ஆனால், புலி தாம் தாக்கிப் பன்றி வலப்பக்கமாக வீழ்ந்தால் மட்டுமே உண்ணும் பண்பு கொண்டவை. இடப்பக்கமாக வீழ்ந்தால் அதனை உண்ணாமல் சென்றுவிடும். மாறாக, மலைப்பக்கத்தில் சென்று  அங்குவரும் களிற்றைத்தாக்கி அதுவும் வலப்பக்கத்தே வீழ்ந்தால் மட்டுமே உண்ணும் பண்புகொண்ட புலியினை ஒத்ததாக இருக்கும் பண்பு மனிதர்களிடத்துத் தேவைப்படுகின்றது. எனவேதான், புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது எனும் பழமொழி உருவாயிற்று. எனவேதான், தமிழர்களின் வீரத்தைப் புலிக் கூட்டம் என்று வருணனை செய்கின்றனர். இங்கே வியக்கும்படி வாழ்ந்த வாழ்வு தமிழர்களுடையது. எனவே, அறவாழ்வு, மறவாழ்வு என்றிரண்டிலும் தமிழர்கள் சிறந்து நின்றார்கள் என்பதற்கு இப்பாடல் சான்றாகிறது.(க.காந்தி (2003)

    உயிர் வாழ்வின் சிறப்புகள்

    உயிர் வாழ்க்கையனது பலவகைகளில் சிறப்புறுகின்றது. உயிரின் தன்மையறிந்த பின் மற்றொரு உயிரை மதிக்கவேண்டும் என்பதும், உயிர்களின் இழப்பு எத்தகைய வாட்டத்தை உண்டாக்கும் என்ற செய்தியும் புறநானூற்றில் உள்ளது. தொல்காப்பியர் உயிர்ப்பாகுபாட்டை ஆறு வகையாகப் பகுத்துள்ளார். எனினும் உயிரின் மதிப்பு அனைத்திற்கும் ஒன்றுதான். (வ.சுப.மாணிக்கம்(2007). நீரின்று அமையா யாக்கை, உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோர் உண்டிமுதற்றே உணவின் பிண்டம், உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே (பாடல்-18) என்றது புறம். உயிர் பிறத்தலும் உயிர்காத்தலும் உயிர் போக்கலும் உயிர் வாங்குதலும் என அனைத்து நிலைகளையும் புறநானூறு பேசுகின்றது. உயிர் வாழ்ந்தால் போதுமா? போதாது. காரணம் ஆயிரம் பொருட்கள் அனைத்து பதவிகள் இருந்தும் ஓர் மழலைச்செல்வம் இல்லையென்றால் வாழ்க்கை முழுமையாகாது. மழலைச்செல்வமே சிறந்த அறமாக்கத்திற்கு எடுத்துக்காட்டாகின்றது.  பயக்குறை இல்லாத வாழ்வு என்பது மழலைச்செல்வமற்றது.

    “படைப்புப் பலபடைத்துப் பலரேடு உண்ணும்
    உடைப்பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்ப்படவிதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” (பாடல்-188)

    என்கிறது புறநானூறு. மழலை இல்லாத வாழ்வு மரம்போன்றதாகும். மேலும், நாழி அரிசிச்சோறும் உடுக்கின்ற இரண்டு உடையும் மட்டுமே யாவர்க்கும் பொதுவானது. மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் படியுள்ள பாடல் நிலையாமைத் தத்துவத்தை எடுத்துரைத்து வாழ்வு அறத்தைப் போதிக்கின்றார். செல்வத்துப்பயன் என்பது ஈதலின் அடிப்படையாகும். தனக்கென மட்டும் சேமிக்கும் பொருள் தனக்கேகூடப் பயன்படாமல் போய்விடும். என்ற கருத்தை எடுத்துரைத்துப் பிறர்க்கென வாழும் வாழ்க்கையைக் கற்றுக்கொடுப்பது புறம். நாடெல்லாம் கட்டியாளும் அரசனாக இருந்தலும், வேட்டையாடித் திரியும்  வேடனாக இருந்தாலும் இருவருக்குள் உள்ள தேவை என்பது ஒன்றதான். இதற்குள் மேல் கீழ், என்ற பாகுபாட்டை விதித்து வேறுபடுத்தும் நோக்கு தேவைதானா? என்ற வினாவை எழுப்பி வாழ்க்கை அறம் கூறுகின்றது.

    உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே
    செல்வத்துப்பயனே ஈதல்,
    துய்ப்போம் எனின் தப்புந பலவே (பாடல்-189) எனவே, நிலையாமைத் தத்துவம், மழலைச்செல்வச் சிறப்பு போன்றவற்றை மிகத்தெளிவாக எடுத்துச்சொல்லி வாழ்க்கை அறம் புகட்டும் இந்த புறநானூற்று வரிகள் என்றும் நிலைத்திருப்பனவாகும். 

    கல்வி அறமும், உலக நியதியும்

    பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் அரசன் புலவனாக இருந்து பாடுகின்றான். அப்பாடல், கல்வியின் சிறப்பைப் போற்றிநிற்கின்றது. ஒருவருக்கொருவர் உதவி வாழ்தல் வேண்டும். தன்னிடம் உள்ள பொருளை மற்றவர்கள் கேட்கையில் கொடுத்து வாழ்தல் வேண்டும். தன் ஆசிரியரிடம் வெகுளாது, ஆசிரியரின் வெகுளிக்கும் முனியாது இருந்து கற்றல் வேண்டும். இது கற்றலுக்குரிய அறமாகும் (மு.சண்முகம் பிள்ளை(2004). அவ்வாறு கற்றுத்துறைபோகிய ஒருவனை அரசனும் விரும்புவான்.  ஒருகுடியில் பிறந்தாலும் மூத்தோன் என்றால் மதிப்பு வராது. அவருள் யார் கல்வியில் சிறந்து விளங்குகின்றார்களோ அவர்களுக்குத்தான் கற்றவர்கள் அவையில் சிறப்பு உண்டாகும். பல்வேறு வகையில் வேறுபாடுகளை இந்தச் சமூகம் சுமந்திருந்தாலும் கல்வியால் கீழ் உள்ளவன் மேலாக கருதப்படுவதும் கல்வி என்ற கருவியால் தான் என்பதை உணரமுடிகிறது.

    “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
    பிறப்பு ஓர்அன்ன உடன் வயிற்றுள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
    ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக என்னாது அவருள்
    அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (பாடல்-183) என்ற பாடலடிகள் உணர்த்துகின்றது. அரசனுக்குச் செவியறிவுறூஉவாக எண்ணற்ற பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டியன் குடிமக்களிடம்  நிறைய வரி வசூலிக்கின்றான் என்பதை  இலைமறைகாயாக உணர்த்துகின்றார். ‘அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே, கோடி யாத்து நாடு பெரிது நந்தும்’ வயல் நிறைய நிறைந்துள்ள நெல்மணிகளை யானைகள் கூட்டாய்ச் சென்று அழிப்பதைப்போல வரி என்ற யானையை அவிழ்த்துவிட்டால் நாட்டுமக்கள் நிம்மதியிழப்பார்கள் என்ற கருத்தைப்  பாண்டியன் அறிவுடை நம்பியிடம் பிசிராந்தையார் பாடுகின்றார். மக்களது வாழ்வு சிறக்க அதிக வரிச்சுமையற்ற நாடு தேவைப்படுகின்றது. அதிக வரி விதிக்காமல் நாட்டை ஆள்வதே மக்களைத் துன்புறுத்தாத அறவழியாகும்.

    புகழ் அறம்

    புகழில் புதைந்த வாழ்க்கையை மக்கள் விரும்புவர். தோன்றிற் புகழொடு தோன்றுக அதுவல்லாமல் தோன்றாமல் இருப்பதே நன்று என்றார் வள்ளுவர். இளையோர் என்று இகழக்கூடாது என்றார் ஔவையார். அவன் வீரத்தில் சிறந்தவன். மைந்து என்ற சொல்லிற்கு இலக்கணமானவன். ஒருவர் இறந்தும் உயிர்வாழ்தல் புகழுக்கே உரியது. பாரி என்ற மன்னனை மக்கள் எல்லோரும் ஏத்திப்புகழ்கின்றனர். அந்த பாரி மட்டும்தானா இவ்வுலகில் உள்ளான். அவனை விட வள்ளல் ஒன்று உண்டு. அதுதான் இந்த உலகைக் காக்கும் மழை. அந்த மழையைவிடவா பாரி சிறந்தவன் என்கிறார் கபிலர்.  ஆனால் மழையைப் போன்றவன் பாரி. அதனால்தான் பாரிவள்ளல் என்கின்றோம். மாரி எவ்வாறு கைம்மாறு கருதாது மக்களுக்கு மழைதருகின்றதோ அதனைப்போன்ற பண்புள்ளவன் பாரி.

    ‘பாரி பாரி என்ற பலர் ஏத்தி
    ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்
    பாரி ஒருவனுமல்லன்
    மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே’ (பாடல்-107)

    ஈதல் இசைபட வாழ்தல் மனிதர்களுக்கு அழகு. அதனைப்போன்று ஈத்துவக்கும் குணம் இருந்தால் மட்டுமே வாழ்நாளில் புகழின் உச்சியைச் சென்றடைய முடியும். அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பின்வருமாறு புகழ்கிறார். அவனை இளையன் என்று எண்ணாதீர்கள். அவன் பார்ப்பதற்கு இளையனாக இருந்தாலும் வீரத்தில் உங்களையெல்லாம் விடச் சிறந்தவன். பெரிய யானையாக இருந்தாலும் அதனைத் தண்ணீரில் எளிதில் வீழ்த்தும் தன்மை முதலைக்கு உண்டு. அதனைப் போல உருவு கண்டு  எள்ளாதீர்கள். உருவத்தால் ஒருவரை இகழ்வாக எண்ணுதல் கூடாது. இவனை மதியாது போர் தொடுப்பீராயின் முதலை தாக்கும் யானையைப் போல் ஆகிவிடுவீர்கள் என்பது ஔவையார் கொடுக்கும் செய்தி.

    “போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
    ஊர்க்குறுமாக்கள் ஆடக்கலங்கும்
    தாள்படு சில்நீர்க் களிறுஅட்டு வீழ்க்கும்
    ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை
    நுண்பல் கருமம் நினையாது
    இளையன் என்றுஇகழின் பெறல்அரிது ஆடே” (பாடல்-104) உருவு கண்டு எள்ளாமை இந்தப் பாடலில் ஒலிக்கின்றது. இளைய வயதில் புகழ்அடைந்தவர்கள் பலர் உளர். அவ்வகையில் பல புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் நிற்கின்றனர். அதியமான் போன்ற அரசர்கள் சிறுவயதில் புகழ் அறத்தைத்  தொட்டவர்கள். நீரினும் இனியசாயலோடு நினைப்பினில் வாடும் அரசன், காட்டினில் வாழும் முனிவன் என அனைவரும் பொன்னுடம்பு மறைந்தாலும் புகழுடல் மறைவதில்லை.

     

    அறம்புரி கொள்கை நான்மறை

    அறம்புரி கொள்கையோடு வாழ்தல் மிகவும் அரிது. நான்மறையில் சிறந்தது அறம்புரி கொள்கையாகும். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் நடக்கவிருப்பதை அறிந்த ஔவையார் அதனைத்தடுக்க முற்படுகின்றார் . இது பாடாண்திணையில் அமைந்த பாடல் வாள்மங்கலத்தில் வைக்கப்பெறுவது. தொண்டைமானிடம் சென்ற ஔவையார் அவனது படைக்கலக் கொட்டிலைக் காட்ட அதனைக்கண்டு பாடுகின்றார். இங்கு தூது செல்லலின் உண்டான அறம் காட்டப்படுகின்றது. அதியமான் பேரில் உண்டான அன்பால். தொண்டைமானின் படைக்கலக்கொட்டிலில் உள்ள கருவிகள் புதியதாக உள்ளன. மாறாக அதியமானின் உலைக்கருவிகளோ, பகைவர்களைக் குத்தியும் கோடுநுனி சிதைந்தும், முனைமழுங்கியும் காணப்பெறுகின்றது என்கிறார்.

    ‘இவ்வே பீலியணிந்து மாலைசூட்டி
    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்அணிந்து
    கடியுடை வியல் நகரவ்வே அவ்வே
    பகைவர்க் குத்தி கோடு நுனி சிதைந்து
    கொல் துறைக் குற்றிலமாதோ- என்றும் ‘(பாடல்-95)

    செல்வம் அதிகமாய் இருக்கையில் நிறைய வழங்கும் வள்ளல். செல்வம் குறைவாக இருக்கையில் இருப்பதை பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்ணும் தன்மை கொண்டவன் அதியமான் என்று ஔவையார் அதியனைப் புகழ்கின்றார். இந்த அறநெறி வாழ்வு என்பது என்றும் மேலுலகம் செல்வதற்கு வழிவகுக்க கூடியதாகும். (புலவர் ஆ.பழனியப்பன் 2001). எத்தகைய விழாவாக இருந்தாலும் படை அரசர்களுக்கு ஊன்கொடுத்துப் பரிமாறும் பண்புடையவன்.

    தொகுப்புரை

    புறநானூற்றுப் பாடல்கள் வாழ்வியல் அறங்களை எடுத்தோதுகின்றன. வாழ்வியலும் போர்மறமும், குழந்தைச்செல்வச் சிறப்பும் சங்கப்பாடல்கள் காட்டுவன போல் எவையும் காட்டுவனவல்ல. நல்லது செய்வதும் அல்லது செய்வதும் அதனால் வருகின்ற விளைவும் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. சமுதாயமும் வாழ்வியலும் ஒருங்கிணைந்து செல்ல அறம் முக்கியமானதாகும். அறத்தின் வழியே வாழ்க்கை பயணிக்கவேண்டும். மறந்தும் பிறன்கேடு சூழக்கூடாது. தீமை பயத்தல் என்றும் தீமையே தரும் என்பதை விளக்கப் புறப்பாடல்களில் சான்றுகள் பல உள்ளன. புகழ்அறம், கல்விஅறம் போன்றவை வாழ்வியல் அறத்தை மெருகூட்டுவனவாகும்.  அரசர்களிடையே மூளும் சண்டையும் அதனைச் சந்துசெய்துவைத்தலும் பண்பாட்டு அறமாக இருந்து வந்தது. இதனை நாளும் வளர்த்தும் வளர்வித்தும் வருவது நமது பண்டைய இலக்கியமாகும்.

    ——————–

    சான்றாதாரங்கள் 

    1. சங்கமரபு (2009), தமிழண்ணல், சிந்தாமணிப் பதிப்பகம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
    2. சங்கத் தமிழர் வாழ்வியல் (2004), மு.சண்முகம் பிள்ளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
    3. சங்கத்தமிழ் (2009), ச.அகத்தியலிங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
    4. சங்க கால இனக்குழு சமுதாயமும், அரசு உருவாக்கமும் (2004), பெ.மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
    5. தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் (2003), க.காந்தி, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
    6. தமிழ்க்காதல் (2007), வ.சுப.மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்
    7. பழந்தமிழ் இலக்கியம் ஓர் ஆய்வு (2001), புலவர் ஆ.பழனியப்பன், நியூ செஞ்சுரி பதிப்பகம், சென்னை

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை
    சாரதாமகளிர்  கல்லூரி
    சேலம்
    தமிழ்நாடு
    drdhanalakshmi.p@gmail.com
    contact No : +91-9578420292

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 33

    கூட்டமைப்புக்களில் நமது பங்கு

    உலகத்தில் உள்ள அனைத்துத் தொழில் நிறுவனங்களும் ஒரு தனி மனிதனுடைய திறமைகளை அறிந்து, உபயோகித்து மற்றும் பாராட்டுவதில் பின் தங்குவதில்லை. அதே நேரத்தில், அந்தத் தனி மனிதன் ஒரு தீவாக இல்லாமல் மற்றவர்களோடு தோள் சேர்த்து உழைப்பதையே விரும்புவது மட்டுமின்றி அதையே ஒரு சிறப்பாகக் கருதுகின்றன. எவ்வாறு ஒரு இயந்திரத்தின் ஒரு தனிப்பகுதி மட்டும் சிறப்பாக இருந்தாலும் அந்த இயந்திரம் முழுதாகச் செயல்பட்டாலன்றி அதன் உற்பத்தித்திறன் முழுமையாக வெளிப்படாதோ அதேபோல் எந்தத் தொழிலும் அதைச் சார்ந்த அனைவரும் எண்ணத்தால், உணர்வுகளால் மற்றும் செயல்களால் ஒன்றி இணைந்து வேலை பார்க்கும்பொழுதே அதன் சிறப்பும் உற்பத்தித்திறனும் மேன்மையாகி ஒளிர்விடுகின்றன. ஆகவே இந்த கூட்டுச் சிந்தனையையும் இணைந்து வேலைபார்க்கும் திறனையும் எப்படி வளர்ப்பது என்பது பற்றிய பல ஆராய்ச்சிகள்  செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கள் தொழிற்கூடங்களுக்கு மட்டுமின்றி கூடி வாழும் குடும்பங்களுக்கும் பொதுவாகக் கருதப்படுகின்றன.

    இந்தக் கூட்டு முயற்சிகளுக்கு மிகவும் அத்தியாவசியமாகக் கருதப்படுபவை:

    1. நம்பிக்கை (Trust): நாம் கூட்டாக வேலைபார்க்கும் பொழுது நம்முடன் வேலைபார்ப்பவர்களை நம்முடன் சரி சமமாகக் கருதி நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் சந்தேகக் கண்களுடன் தோள் கொடுக்கும் பொழுது அவர்கள் சரியாக வேலை பார்த்தாலும் நமது சந்தேகங்கள் நம்மை வீழ்த்திவிடும். சந்தேகங்கள் பல நேரங்களில் நம்முடைய இயலாமையின் பிரதிபலிப்புகளாகக் கருதப்படுகின்றன. சந்தேகங்கள் பல நேரங்களில் நம் உள்மனதில் உள்ள பயங்களின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன. சில நேரங்களில் நம்முடைய சந்தேகங்கள் மற்றவர்களின் தன்னம்பிக்கையின் ஆணிவேர்களைக்கூட அசைத்து அவர்களை பலவீனமாக ஆக்கும் வாய்ப்புக்களை உருவாக்கவும் செய்யும் “மற்றவர்கள் நம்பிக்கைக்குரியவர்களா என்பதை கண்டுபிடிக்க மிகச் சிறந்த வழி அவர்களை நம்புவதுதான் .” என்று நாவலாசிரியர் எர்ன்ஸ்ட் ஹெமிங்ஸ்வே கூறுகின்றார். ஒருவனை நேசிப்பதைவிட அவனை நம்புவது அவனுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்று மனநல வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் கூட இருப்பவர்களை நம்பாவிட்டால் கூட்டுத்தொழிலில் பிணைப்புகள் எளிதாகப் பிரிந்துவிடும்.
    1. அகந்தையின்மை (Absence of Ego): கூட்டுத்தொழில் செய்யும் இடங்களிலும் நேரங்களிலும் நான் என்ற அகந்தையை வெளிப்படுத்துதல் மிகவும் கொடியது மட்டுமின்றி அற்பமானதும் கூட. “தான்” என்ற அகந்தை இல்லாத மனிதனே இல்லை என்பது உண்மைதான். இது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பரிமாணத்தில் ஒவ்வொரு வகையில் வெளிப்படுகின்றது.  ஆனால் கூட்டுத் தொழில் செய்யும் இடங்களிலும் கூட்டாக வாழும் இடங்களிலும் இந்த உணர்வு மற்ற எல்லாத் திறன்களையும் ஓரங்கட்டி அந்தப் பிணைப்பில் உள்ள அனைவரின் உள்ளத்திலும் வெறுப்பையும் போலித்தனத்தையும் வளர்க்கின்றது. நம்முடைய திறமைகள் முழுமையாக வெளிப்படாவிட்டாலும் மற்றவர்களுடைய திறமைகளையும் ஆக்கத்  திறன்களையும்  உணர்வுகளையும் மதித்து நடத்தல் மிக்க அவசியம். பல நேரங்களில் இந்த அகந்தை நம்மை உயர்வாகக் கருத்துவதற்குப் பதிலாக மற்றவர்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் நினைக்கத் தூண்டுகின்றது.  (Ego is not thinking too high of one’s own self, but too little of others ) ஆகவே தொழிற்கூடங்களில் அகந்தை உடையவர்கள் கூட்டுப் பொறுப்புக்களை நிர்வகிப்பதற்கும் தலைமை ஏற்பதற்கும் உகந்தவர்களாகக் கருதப்படுவதில்லை.. கூட்டுக் குடும்பங்களிலும் அகந்தை உள்ளவர்கள் அந்த அருமையான கூட்டமைப்பின் அழிவிற்கு ஆணிவேராக அமைகின்றார்கள்
    1. பகிர்ந்த பார்வை: (SHARED VISION) கூட்டுக்குடும்பமும் கூட்டுத்தொழில்களும் சிறப்படைய அதில் பங்கேற்கும் அனைவருக்கும் பகிர்ந்த பார்வையும் ஒருமித்த கருத்தும் தேவை. ஒரு அமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த வேலையில் சற்றும் முன்னேற்றம் ஏற்படாது என்பது மட்டுமின்றி அதற்க்குச் செலவழித்த பொருள்களும் (Resources) நேரமும் வீணாகிவிடும். அது மட்டுமின்றி அந்த நிலை பல கருத்துவேறுபாடுகளுக்கு வழிவகுத்து அந்த கூட்டமைப்பின் அடித்தளங்களை ஆட்டிவிடும். பகிர்ந்த பார்வை என்பது ஒருமித்த நோக்கமும் கருத்தும். அந்தப் பகிர்ந்த பார்வையின் சில கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் நமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். அந்தப் பகிர்ந்த பார்வையை நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது தனிப்பட்ட முறையில் நாம் அதை வெறுக்கலாம். ஆனாலும், அது அந்தக் கூட்டுச் செயலுக்கும் கூட்டமைப்பிற்கும் பொதுவானதாக இருப்பதால் நாம் முழுமனதோடு அதில் ஈடுபடுதல் அவசியமாகின்றது. அவ்வாறு முழு மனதோடு நாம் பகிர்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளாதபோது அந்தக் கூட்டமைப்பிற்கு நாம் ஒர முட்டுக்கட்டையாகி விடுகின்றோம். பகிர்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளுதல் நமது வளர்ச்சியின் பண்பாட்டின் அறிகுறி. அது நம்முடைய வாழ்க்கை வழிகளை எளிதாக்கவும் மகிழ்ச்சியானதாக ஆக்கவும் உதவுகின்றது. ஒரு கூட்டமைப்பில் பகிர்ந்த பார்வையை வளர்ப்பதில் திறனுடையவர்கள் அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்களுக்குத் தகுதி உடையவர்களாக வளர்கின்றார்கள்.
    1. பங்கு அறிதல் (Role play): கூட்டமைப்பில் பங்கேற்கும் பொழுது அனைவரும் ஒரே விதமான வேலையைச் செய்தல் என்பது மிகவும் அரிது. பல நேரங்களில் ஒரே கூட்டமைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான செயலைச் செய்ய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு வேலையை மேன்மையானதாகவோ அல்லது மற்ற வேலைகளை விடச் சிறந்ததாகவோ அல்லது தரக்குறைவானதாகவோ கருத வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கூட்டுச் செயலில் பல வித பங்குகள் இருக்கும். ஒவ்வொரு பங்கின் பரிமாணங்கள் ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே கூட்டுத் தொழிலில் நமது பங்கினை அறிதல் மிக அவசியம். அந்தப் பங்கிற்கு அப்பால் நம்முடைய திறன்களையோ அல்லது கருத்துக்களையோ வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நம்முடைய கருத்துக்கள் தேவைப்படும்பொழுது மாட்டும் நாம் ஈடுபட்டால் போதும். பல நேரங்களில் நம்முடைய பங்கை சரியாக அறியாத பொழுதிலும் அல்லது அந்தப் பங்கிற்கு அப்பால் நாம் அவசியமின்றி ஈடுபடும் பொழுது கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. நம்முடைய பங்கிற்கு அப்பால் நாம் தலைநீட்டும் பொழுது நமக்கு அவப்பெயர்களும் தலைகுனிவும் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒரு கூட்டமைப்பின் வெற்றி ஒவ்வொரு பங்குதாரரும் தன்னுடைய பங்குகளை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் செய்வதிலேயே அமைந்துள்ளது.

    நம்முடைய கூட்டுப் பொறுப்புக்களில் நாம் இவைகளை பற்றி சற்றே சிந்திக்கலாமே !

    (தொடருவோம்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(223)

    முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா     

    வஞ்சரை யஞ்சப் படும்.                                                

           -திருக்குறள் -824(கூடா நட்பு)

    புதுக் கவிதையில்…

    முகத்தின் முன்

    இனியவராய் சிரித்து,

    அகத்தில்

    வஞ்சனை வைத்துப்

    பழகுவோரின் நட்புக்கு

    அஞ்சவேண்டும்…!

    குறும்பாவில்…

    கண்முன்னே இன்முகம்காட்டிச் சிரித்து             

    உள்ளத்தில் கள்ளம்வைத்துப் பழகுவோரின்   

    நட்பு யென்றும் அஞ்சத்தக்கதே…!

    மரபுக் கவிதையில்…

    காணு மிடத்தில் கண்முன்னே

         கண்ணிய மிக்க வகையினிலே

    நாண மேது மில்லாதே

         நல்லவர் போல நகைத்திருந்து,

    காண முடியா இதயத்திலே

         கள்ளம் வைத்துப் பழகுவோரிடம்

    வீணாய்க் கொள்ளும் நட்பதுவை

         வேண்டா மெனவே அஞ்சுவாயே…!

    லிமரைக்கூ..

    நெஞ்சிலே கொண்டிடுவார் நஞ்சு,    

    நேரிலே சிரித்திடுவார் நன்முகம் காட்டி,                

    அவர்நட்பு வேண்டாமென அஞ்சு…!

    கிராமிய பாணியில்…

     

    வேண்டாம் வேண்டாம் நட்பு வேண்டாம்

    நல்லவராயில்லாத

    பொல்லாதவங்கக்கிட்ட நட்பு வேண்டாம்..

    கண்ணுமுன்னால நல்லவன்போலச்

    சிரிச்சிப் பேசி நடிச்சிக்கிட்டே

    மனசுக்குள்ள வஞ்சனய

    மறச்சிவச்சிப் பழகுறவன்

    நட்பு நமக்கு வேண்டாமே,

    அத

    நஞ்சா யெண்ணி

    பயந்து ஒதுங்கிக்கோ..

    அதால

    வேண்டாம் வேண்டாம் நட்பு வேண்டாம்

    நல்லவராயில்லாத

    பொல்லாதவங்கக்கிட்ட நட்பு வேண்டாம்…!

    செண்பக ஜெகதீசன்…

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    160225 Lakshmi Hayagreeva 24×32 watercolour lr

    கீழ் கொவள செட்டிப் புண்ணியத்தில் கோயில் கொள்ளப் போகும் ‘’அயக்ரீவர்’’ வந்தார் எதிர் வீட்டுக்கு….அவரை ஏளப் பண்ணும்
    பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது….!

    கீழ்கொவள வீடில் குடியேறப் போகின்ற
    ஆழ்கல்விக்(கு) ஈசா அயக்ரீவா -கூழ்கவலை
    போக்கதனைப் போக்க பிராட்டியுடன் ஏளினோய்
    காப்பெனக்கு உந்தன் குளம்பு….!

    ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
    வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
    பெண்பால் பாரதியே பார்….!

    நிகமாந்த தேசிகன் நாவில் அமர்ந்து
    புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி -அகமகிழ்ந்த,
    எண்ணியதை நல்கும் ஏற்றம் தரும்செட்டிப்
    புண்ணியத்தில் வாழும் பரி….!

    புண்ணியச் செட்டியில் புண்ணாக்(கு) அளித்தனரோ
    நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில் -கண்ணனே
    பாரதப் போரில் பழகிய நன்றியோ
    நீரதைப் போலின் நிலத்து….!

    கொள்ளுக்(கு) அடங்காய் கவிதே சிகன்கூறும்
    சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே -கல்விக்கு
    வாய்த்த கடவுளே வாணி அரிதாரா
    போய்த்தவம் செய்யப் பழக்கு….!

    கட்டுக்(கு) அடங்காது செட்டிக்குப் புண்ணியத்தை
    கொட்டுமருள் கல்விக் குதிரையே -குட்ட
    குளம்பால் தலையில் குருவே வருக
    தளும்பா அறிவைத் தர….!

    புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
    அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
    தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
    பலனெட்டெட் ஆயகலை போடு….!

    சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
    நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
    வருவாய் அருகே குருவாகிக் காட்டு
    பரிமேல் அழகா பரிவு….!கிரேசி மோகன்….!

     

    Share
  • நடுவண் அரசின் சிறப்பான நடவடிக்கை!

    பவள சங்கரி

    மத்திய அரசு மக்கள் நலனுக்காக எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டுகள்! இதுவரை தங்கம், வெள்ளி போன்ற பொருட்களுக்கு மட்டும் இருந்த தரக்கட்டுப்பாடு சென்ற வெள்ளிக்கிழமை முதல் சேவைத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாடு தங்கத்திலிருந்து, குடிக்கும் நீர் வரை, தொலைத்தொடர்புத் துறையிலிருந்து, விமானச்சேவை, இணையம் மூலமான வர்த்தகம், மருத்துவ சேவை போன்ற 12 வகையான சேவைகளும் தரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுற்றுலா, தங்கும் விடுதி, உணவு விடுதி, போக்குவரத்து, நிதி நிறுவனச் சேவை மற்றும் வழக்கறிஞர் சேவை போன்ற அனைத்தும் இதற்குள் அடங்கும்!

    Share
  • இந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்

    p

    osted on August 25, 2018
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     

    ++++++++++++

    சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி சேமிக்க,
    நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள
    ஓரரும் பெரும் மின்கலம்
    தாரணியில் உருவாகி விட்டது
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    தட்டாம்பூச்சி போல் பறக்க
    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் உதித்தது !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்களில்  உலகைச் சுற்றியது.
    ஒளிக்கதிர் தட்டுகள்  அனுதினம்
    பராமரிக்கப் படுமா ?  
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    magazine
    ++++++++++++++++++++++++++++
    இந்தியச்  சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்
     
     
     சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும்  உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்”  [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது.  தற்போதைய  பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும்,  அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு  [Climate, Improper Installation, Lack of Maintenance]  ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல !
    இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து  [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத்  ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை  வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது.  ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.  அதற்கு  புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம்  [Ministry of New & Renewable Energy (MNRE)]  &   [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டது.
    ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை
     
    +++++++++++++++++++
    உலக நிறுவன அரங்குகளில்  சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில்  [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று    [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds]  யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin]  கூறுகிறார்.  குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது.  இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில்  சிரமாக உள்ளது.
    சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.
    கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு
     
     
    +++++++++++++
    +++++++++++++++++

     சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.
     
    2013 -2014 ஆண்டுகட்கி இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
     
    அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்து சூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters] விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.
    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையகக்  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

     

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலி யாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலி யாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    SPOUSE(S)
    CHILDREN 6
    PARENT(S)
    RELATIVES
    SIGNATURE

    Image result for Lithium Ion Research

    Image result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion Technology

    Elon Musk’s Tesla Roadster
    Tesla Roadster in Falcon Heavy fairing.jpg

    The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation
    OPERATOR SpaceX
    MANUFACTURER Tesla
    INSTRUMENT TYPE Inert mass
    FUNCTION Dummy payload
    WEBSITE spacex.com
    PROPERTIES
    MASS Approximately 1,300 kg (2,900 lb)
    HOST SPACECRAFT
    LAUNCH DATE January 2018
    ROCKET Falcon Heavy
    LAUNCH SITE Kennedy LC-39A
    ORBIT Heliocentric

    Image result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw battery

    Image result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel Cell

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Image result for Lithium Ion Research

    1.  http://www.solardaily.com/reports/PI_Berlin_examines_risks_facing_PV_projects_in_India_999.html  [August 2, 2018]
    2. https://natgrp.wordpress.com/tag/renewable-energy-certificates/  [October 19, 2016]
    3. https://solarpowermanagement.net/home
    4. http://www.solardaily.com/reports/Denver_takes_big_step_on_renewables_999.html [July 18, 2018
    5. http://www.solardaily.com/reports/KYOCERA_TCL_Solar_Completes_28MW_Solar_Power_Plant_in_Miyagi_Prefecture_Japan_999.html [August 2, 2018]
    6. https://www.marketscreener.com/KYOCERA-CORP-6492472/news/Kyocera-finishes-28-MW-solar-power-plant-in-Taiwa-Japan-26991864/  [July 25, 2018]

    Posted in சூரியக்கதிர் கனல்சக்திசூழ்வெளிசூழ்வெளிப் பாதிப்புபொறியியல்மின்சக்திவிஞ்ஞானம் 1 Reply

    Share
  • திருவோணத் திருமால்….!

     

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
    வாத புரீசன் வடமதுரா மன்னவன்
    கீதகோ விந்தந்தாள் காப்பு….!

    களித்தெமுனா தீரத்தில் கோபியர் சூழ
    குளித்தவர் காமத்தைக் கொன்று -அளித்தனன்
    ஞானத்தை; அந்தநந்த நீலத்தை நாம்வணங்கி
    ஓணத்தில் கொள்வோம் உவப்பு….!

    வானத்தை மண்ணை வரமாய் பலிதந்த
    தானத்தை அன்றளந்த தெய்வத்தை -ஓணத்து
    வாமனக் குட்டனை வாத புரீசனை
    நீமனக் கட்டில் நிறுத்து….!கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180825 – MAya darshan to Markandeya. wcol -A4 100dpi lr

    வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
    நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
    அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
    ஊழியி லுண்டு களைத்தவா -வாழிநீ
    உன்னை நினைந்து ருகியுறங்கு மென்னைநீ
    உன்கனவில் காண உறங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • அறிவா் யார்

    முனைவா் க. இந்துமதி

    உதவிப்பேராசிரியா் (தமிழ்த்துறை)

    கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

    கிருஷ்ணன்கோவில்

    முன்னுரை

                மனிதன் தான் வாழும் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஒருவரிடமிருந்தோ, ஏதேனும் ஒன்றிடமிருந்தோ கற்றுக் கொண்டே இருப்பவனாகிறான். இக்கற்றுக் கொள்ளும் பண்பு மனிதனின் குழந்தைப் பருவத்திலேயே துவங்குகிறது. கேட்டல், பார்த்தல், உணர்தல் என்பன கற்றலின் முக்கிய நிலைகளாகும். இக்கற்றலின் வழியே மனிதனின் சிந்தனையானது வளர ஆரம்பிக்கிறது. மனிதனின் பரிணாம வளா்ச்சியைப் போலவே அறிவும், சிந்தனையும் மாற்றம் பெற்று மனித குலம் வளா்வதற்கு உறுதுணையாகத் திகழ்கின்றன. இவ்வறிவும் அறிவு சார்ந்த பதிவுகளும் தொல்காப்பியத்தில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் இலக்கிய, இலக்கணங்களில் அறிவா் எனக் குறிப்பிடப்படுபவா் யார்? என்ற வினாவிற்கு விடை தேடும் முகமாகவும் இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது.

    தொல்காப்பியத்தில் அறிவு

                தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் காலத்தால் முற்பட்டதால் மட்டும் பெருமையுடையதல்ல. 21-ஆம் நூற்றாண்டு ஆகியும் இன்றும் இதில் உள்ள களங்கள் பல்வேறு ஆய்வுப்பரப்பை உண்டாக்கிவருவதாலும் பெருமை உடையதாகிறது. எழுத்தும் சொல்லும் மட்டுமன்றி பொருளுக்கும் வரையறை தந்த தனிச்சிறப்பை உடையது தொல்காப்பியம். இப்பொருளதிகாரப் பகுதி, இலக்கிய வகைமையை, வடிவம் மற்றும் உத்தி முறைகளை விரிவாக்க கூறுகிறது. இவற்றில் இலக்கியப் படைப்பாக்க மாந்தா்களில் அறிவா் என்றொரு மாந்தா் குறிப்பிடப்பட்டுள்ளார். இவா் யார் என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதற்கு முன் தொல்காப்பியம் அறிவு என்ற சொல்லின் விளக்கமாகக் கூறுவனவற்றைக் காண்போம்.

    தொல்காப்பியத்தில் அறிவு

                தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அறிவு, அறிதல், அறிவன் என்ற பொருளிலான சொல்லாட்சிகள் அமைந்துள்ளன. அதில் சிலவற்றைக் காண்போம்.

                                        ”நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

                                        கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்”           (தொல்காப்பியம், 1042)

    ”அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

                                        ஐவகை மரபின் அரசா் பக்கமும்

                                        இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

                                        மறுவில் செய்தி மூவகைக் காலமும்

                                        நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”         (தொல்காப்பியம், 1021)

    ”நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்

                                        …………………………………………….

                                        ……………………. அவள் அறிவுறுத்துப்

                                        பின் வா என்றலும் ……………………”      (தொல்காப்பியம், 1060)

    ”கிழவோன் அறியா அறிவினள் இவள் என”  (தொல்காப்பியம், 1063)

    ”தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும் ”   (தொல்காப்பியம், 1084)

    ”தொல்லவை உரைத்தலும் நுகா்ச்சி ஏத்தலும்

                                        பல்லாற்றானும் ஊடலின் தணித்தலும்

                                        உறுதி காட்டலும் அறிவு மெய் நிறுத்தலும்”   (தொல்காப்பியம், 1114)

    ”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

                                        அறிவும் அருமையும் பெண்பாலான”      (தொல்காப்பியம், 1155)

    ”வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்

                                        முனைவன் கண்டது முதல் நூலாகும் ” (தொல்காப்பியம், 1594)

    இவ்வாறாக தெரிந்து கொள்ளுதல், உண்மை அறிதல், தெரிவித்தல், காதலிலும் அறிவால் உடன்படுதல், காலம் அறிந்த அறிவன், அறிவித்தல், அறிவினை மெய்ம்மை நிறுத்தல் என்ற உணர் பொருளில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அறிவு என்ற சொல் அமையப் பெற்றுள்ளது. மேலும் முனைவன், பெரியவா், சான்றோர், தொல்லோர் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவை 1594, 1022, 1092, 1059, 1096 என்ற நூற்பாக்களில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் சுட்டும் அறிவுசார் பொருளுடைய சொற்கள், அறிதல் பொருளிலும் வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் சிறந்து விளங்குபவரைக் குறிக்கும் நிலையிலும் அமைந்துள்ளன.

    தொல்காப்பியம் சுட்டும் அறிவர்

                பன்னிரு வாயில்களில் ஒருவராக அறிவரைச் சுட்டுகிறது தொல்காப்பியம். (தொல்காப்பியம், 1139). இளம்பூரணர், ‘அறிவர் எனப்படுவோர் மூன்று காலமும் தோன்ற நன்குணா்ந்தோரும், புலன் நன்குணா்ந்த புலமையோரும் ஆகலானும் காலத்தையும் ஐம்புலன் உணர்வையும் கண்டுணர்ந்தோர் அறிவா்’ என்று உரை விளக்கம் தருகிறார்.

    கூற்று நிலையில் அறிவா்

                அக வாழ்வில் செவிலிக்குரிய கூற்று முறைகள், அறிவா்க்கும் உரியது எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது. தலைவன்-தலைவி கற்பு வாழ்வில் இருவரின் மகிழ்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவா் என்பதும், அறிவா் என்போர் தலைவியிடத்து தலைவனின் புறத்தொழுக்கத்தினைக் கூறுதல் இல்லை (தொல்காப்பியம்,1111) என்பதும் கூறப்பட்டுள்ளன.

                                        “எல்லா வாயிலும் இருவா் தேஎத்தும்

                                        புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப”     (தொல்காப்பியம், 1124)

    என்று வாயில்களின் பொதுவான பண்புகளைக் கூறும் போது அறிவரின் கூற்றும் உணா்த்தப்படுகிறது. கற்பினில் கூற்றுக்குரியவா்களில் அறிவரை, ‘நற்பொருள் உணரும் அறிவா்’ என்று பேராசிரியா் உரை கூறுகிறார். ‘தலைமகள் கூற்றைக் கேட்போருள் அறிவரும் ஒருவா். அறிவா் கூற்றை தலைவி, தோழி, செவிலி, நற்றாய் கேட்பா் என்றும் அகம் புறத்தில் அறிவா் கிளவி ஏற்கும்’ என்றும் பேராசிரியா் உரை அமைகிறது. நாவலா் சோமசுந்தர பாரதியார், ‘நாளும் கோளும் கண்டது போலக் கூறுபவர். கேட்போர் விரும்பும் எதிர்கால விளைவுகளை எடுத்துக்கூறும் கணிகன்; மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவா்; அறிவோடு அமையாது ஆற்றுதலும் கூறுதலால்’ என்று விளக்கம் தருகிறார். இதன் வழி அறிவா் எனப்படுவோர், அக வாழ்வில் நல் அறிவுரை கூறும் அறிவோராகவும் புற வாழ்வல் காலம் கணித்து உரைக்கும் கணியராகவும் இருந்திருக்கூடும். ஆனால் தொல்காப்பியப் பிரதியில் புறத்தில் அறிவர் என்ற சொல்லோ, கூற்றோ இடம் பெறவில்லை. இருப்பினும் உரையின் வழி கணியராகவும் வாழ்ந்திருப்பா் என்று கருத முடிகிறது.

                மேலும் தொல்காப்பிய உரைவளம், ‘அறிவா் என்பார் தம் அறிவால் மக்கள் அறிவைத் தீதின் நீக்கி நன்றின்பால் உய்ப்பவா் என்றும் துறவு உள்ளத்தை உடையவர் என்றும் தலைவனிடம் தலைவியை நீங்காது ஒழுகுக என நெறிப்படுத்துபவர்’ என்றும் விளக்கம் தருகிறது.

    பிற இலக்கண நூல்களில் அறிவர்

                தொல்காப்பியக் கூற்று மரபின் வளர்ச்சியாக அமையும் நம்பியகப்பொருளில் அறிவரின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

                                        “அறிவர் கிழவோன் கிழத்தி என்று இருவர்க்கும்

                                        உறுதி மொழிந்த உயர் பெருங்குரவர்”     (நம்பியகப்பொருள், 112)

    ‘தலைவனுக்கும் தலைவிக்கும் உறுதியைப் பயக்கும் உபதேசங்களைச் சொல்லும் மேம்பட்ட குருக்கள்’ என்று உரை கூறுகிறது. நீதி, உலகியல் அறிவு போன்றவற்றை தெளிவுற எடுத்துச் சொல்வர் எனக் கூற்று நிலையில் விளக்குகிறது. இதில் செவிலிக்குரிய கூற்று நெறி அறிவர்க்கும் பொருந்தும் என அகக் கூற்று மாந்தர்களின் வரிசையின்படி செவிலிக்கு அடுத்த நிலையில் அறிவா் கூற்று இடம் பெறுகிறது.

                                        “மறையோன் கூற்றும் அறிவா் கூற்றும்

                                        இறையோன் முதலா அனைவரும் கேட்ப”    (நம்பியகப்பொருள், 226)

    மறையோன் அதாவது வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு அடுத்த நிலையில் அறிவரை இடம் பெறச் செய்து, அவரின் கூற்றை தலைவன் முதலாக அனைவரும் கேட்பர் என விளக்குகிறது. இதன் வழி அறிவர் என்போர் கூற்றுரைக்கும் நிலையில் செவிலி, அந்தணா் வரிசையில் இடம் பெறுபவராகிறார்.

                மாறனகப்பொருளும் அறிவரை ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒருவராக, கற்பில் கூற்றுரைப்போருள் ஒருவராக, தலைவன்-தலைவி அக வாழ்வில் பேரின்ப அருள் வழங்கும் பெருங்குரவராக இயம்புகிறது. இலக்கண விளக்கம் அறிவா் தொழில்களாக,

    • இல்லறம் நிகழ்த்தும் நெறிமுறை கூறல்
    • தலைவியைக் கூடுதற்குரிய நாள் நிமித்தம் கூறல்
    • இல்வாழ்க்கை சிறக்கும் தன்மை எடுத்துரைத்தல்
    • வாயில் வேண்டல்

    என்பனவற்றைக் குறிப்பிடுகிறது. அத்துடன் தலைவி, தலைவனோடு வாய்ப்பு நிகழும் போதெல்லாம் கூற்று நிகழ்த்துவா் என்று விளக்கமளிக்கிறது. ‘மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவா்; அவரே குரவர் ஆவதற்கு உரியவா்’ என்றும் கூறுகிறது.

                முத்துவீரியம், அறிவா் என்ற தனிச்சொல்லைக் குறிப்பிடாது வாயிலவா் என்ற மரபார்ந்த சொல்லை மட்டுமே குறிப்பிடுகிறது. தனித்தனியாக வாயில்கள், அவா்களின் தொழில்கள் முதலியன முத்துவீரியத்தில் காணப்படவில்லை.

                சுவாமிநாதம், கூற்றுக்குரியோருள் அறிவரைச் சுட்டிச் செல்வதோடு நோய் அறிவோர் என்றும் அறிஞா் என்றும் இரு சொல்லைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆனால் பொருளதிகாரம் சுட்டும் அறிவர் வேறு; அறிஞா் வேறு என்பதைக் குறிப்பிட்டுக் காட்டாமல் இருவரையும் ஒன்றே எனக் குறிப்பிடுகிறது. ஏனெனில் 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணமான சுவாமிநாதம், அறிஞர் என்ற சொல்லை அறிவில் சிறந்தவா் என்ற பொருளில் குறிப்பிட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.

    சங்க இலக்கியங்களில் அறிவர்

                தொல்காப்பியப் பதிவுகள் பலவற்றின் இலக்கியச் சான்றாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் அறிவர் கூற்றுப் பாடல்கள் இல்லை. குறுந்தொகையின் 190-வது பாடலில் “அறிவர் கொல் வாழி தோழி” என அறிந்தவர் என்ற வினைப்பொருளில் அறிவர் என்ற சொல் அமைந்துள்ளது. ஐங்குறுநூற்றில் அந்தணர், அயலோர், கண்டோர் என்போரின் கூற்றுப்பாடல்கள் உள்ளனவே அன்றி, அறிவர் கூற்றுரைக்கும் பாடல்கள் இல்லை. பதிற்றுப்பத்தின் 4-வது பாடலில் “ஈா் அறிவு புரிந்து” என்ற வரிகளுக்கு, ‘இருவகை அறிவும் அமைந்து……….அருமறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்ப’ என்று உரை கூறுகிறது. கலித்தொகையிலும் அகநானூறிலும் அறிவா் கூற்றுப் பாடல்கள் இல்லை. “அறிவா் கேட்ப” எனவும், “அறிவா் உறுவிய அல்லல் கண்டருளி” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக சங்க இலக்கிய அகப் பாடல்களில் அறிவர் கூற்று பற்றி செய்திகள் ஆங்காங்கே அமைந்துள்ளனவே தவிர கூற்றுரைத்தல் நிலையில் முழுமையான பாடல் பதிவுகள் இல்லை.

    முடிவுரை

                மேற்கூறிய கருத்துக்களின் வழி அறிவா் என்போர்,

    • தலைவன்-தலைவி கற்பு வாழ்வில் இடம் பெறக்கூடிய மாந்தர் ஆவார்.
    • கற்பு வாழ்வில் இருவரின் ஊடலைத் தீர்க்கும் வாயில்களில் ஒருவர் ஆவார்.
    • இல்வாழ்வின் கடமைகளை இடித்துரைக்கும் நிலையில் செவிலிக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்படுகிறார்.
    • வயதில் அனுபவத்தில் அறிவில் சிறந்தவராகவும், நாள், கோள்களை கணக்கிட்டுக் கூறும் கணியராகவும் இருந்திருக்கக் கூடும் எனலாம்.
    • அக வாழ்வானது பெரும்பாலும் பெண்ணைச் சுற்றியே பதிவு செய்யப்பட்டவையாக இருப்பதால் தோழி, செவிலி, நற்றாய் முதலிய பெண் மாந்தா் கூற்றுப் பாடல்கள் மிகுதியும் கிடைத்துள்ளன. அதனால் தொல்காப்பியக் கூற்று நிலையில் இருக்கும் அறிவரின் கூற்றுப்பாடல்கள் சங்க அக இலக்கியங்களில் காணப்படவில்லை. மாறாக வாயில்கள் என்ற பொது மாந்தர் கூற்றுப் பாடல்களே உள்ளன. இதன் வழி இனக்குழுச் சமுதாயத்தில் பெண் மையக் குடும்ப அமைப்பு நிலவியுள்ளதை அறிய முடிகிறது.
    • அந்தணருக்கு அடுத்த நிலையில் அறிவரின் கூற்றை அனைவரும் கேட்பர் என்பதன் மூலம் இனக்குழுச் சமுதாயத்தில் ஊா்ப்பெரியவர் என்ற முறையில் மக்களின் அக வாழ்விலும் சமுதாய நலன் கருதியும் அறிவுரைப்போராக அறிவா் விளங்கியுள்ளனா் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

    ***********************************

    பயன்பட்ட தரவுகள்

    1. ச.வே. சுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள் முழுவதும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், இரண்டாம் பதிப்பு ஜூலை 2009.
    2. இணையதள முகவரி, தமிழ் இணையக் கல்விக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை. www.tamilvu.org
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180824-Aghasura -Bhagavatham A4-wcol charcoal – Agha is sin. -lr

    அகம்பாவ பாம்புள்ளே ‘ஆ’இடையர் சென்று,
    சுகம்பார்க்க சோதனை செய்ய -முகுந்தர்,
    புகுந்தார் அங்கு பசுபாசம் மேய்த்தார்,
    உகந்தார் சுகபிரம்ம மாய்*….!
    (அல்லது ஈற்றடி)
    பகல்பத்து ராப்பத்து பத்து(பத்மநாபர்)….கிரேசி மோகன்….!

    * -பிரம்மா ஆக்களை, இடையர்களை ஒளித்து வைக்க கண்ணன் ஒருவருடம் ஆவாய், இடையராய் ஆயிரம் வடிவெடுத்து
    அகத்திற்கு(வீட்டுக்கு) செல்ல, பிரம்ம மாயை சரண்புகல் ’’(கேசவ் உவாச)’’….!

    Share
  • ”ஹேப்பி வரலஷ்மி விரதம்’’….!

     

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்,
    பத்தும் செய்யா பணமுடிப்பில், -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்,ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….!

    ”நல்லவெள்ளி இன்று, நலம்புகழ் செல்வத்தை
    இல்லத்தில் அம்பாள் இறைத்திடுவாள், -(கற்பக)வல்லியவள்
    ஆடி பராசக்தி, அண்ணனோ ஆயர்தம்
    பாடிமுராரி வெள்ளியைப் பொன்(தங்கம்)’’….கிரேசி மோகன்….

    Share
  • வெண்பாகவதம்(தொடர்ச்சி….!)

     

    கூர்மாவதாரம்….!
    ——————–

    துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட
    கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி
    காரத்தால் பெற்ற கடுத்தமுனி சாபத்தின்
    பாரத்தால் வானத்தோன் பாழ்….!

    சாப விமோசனத்தை, சாகரப் பாற்கடலை
    மாபெரும் மந்தார மத்தினால், -நீபெருவாய்
    வாசுகி தாம்பால் வளைத்துக் கடைந்திட;
    வாசுதேவன் விண்ணுக்கு வாக்கு….!

    வாசுகி உச்சியை வானோர் பிடித்திழுக்க
    ஆசு அசுரர் அதன்வாலில் -கோஷமிட
    மந்தார வெற்பன்று மூழ்குதலைத் தாங்கிட
    வந்தாராம் ஆமையாய் விஷ்ணு….!

    அப்போது பீறிட்ட ஆலகால நெஞ்சினை
    துப்பாது உண்ணாது தொண்டையில் -எப்போதும்
    கொண்டனன் சம்பு; கிளர்ந்த இலக்குமியைக்
    கொண்டனன் கூர்மம் கரத்து….!

    தன்வந்த்ரி தந்த திருக்கண் அமுதருந்த
    முன்வந்த தானவரை மோகினிப் -பெண்வந்து
    ஆசையைக் காட்டியவர் மோசமுற, விண்ணோரை
    ஈஷியிட்டார் விஷ்ணு இலை….!

    வராகாவதாரம்….!
    ——————-

    ஏன உருவெடுத்து ஈன இரணியாக்ஷன்
    ஊனை ஒழித்து உலகத்தை -கோண
    எயிறேந்தும் பாகவத எம்பிரானை ஏத்த
    உயிரேந்தும் நெஞ்சுக்(கு) உவப்பு….(OR)
    எயிறேந்தும் பாகவத எம்பிரானால் ஞானப்
    பயிரேந்தும் ஆன்ம வயல்….!

    மண்வாசம் மூக்கால் முகர்ந்த வராகம்பார்
    பெண்வாசம் செய்யும் பரவைக்குள் -மின்வீசும்
    கொம்பை நுழைத்து குவலயத்தை மீட்டபின்
    வம்பை அழைத்தார் விலைக்கு….!

    ”மண்ணின்தன் மைந்தன்நான் மாயப் பிசாசுநீ
    எண்ணி முடிப்பதற்குள் ஏகிப்போ” -சொன்ன
    முரணானோன் மேனியில் மோதிட ஏனம்
    இரணியாக்ஷன் வாழ்வுக்(கு) இழவு….

    ஏனத்தால் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த
    மானத்தை வாங்கும் மகனபி -மானத்தால்
    தந்தை மகாவிஷ்ணு தாள்வைத்து பூதேவி
    விந்தையாய் வேண்டினள் வாழ்த்து….!

    நாரண அம்பை நரகனுக்கு தந்தபின்
    வேறென்ன வேண்டுமென்ற விஷ்ணுவிடம் -பூரணத்வம்
    தாவென்ற பிள்ளைக்கு தாயன்றி யாராலும்
    சாவில்லை என்றார் சிரித்து….!

    ”மத்தவர் யாருமேதான் மாதவன் மீதுவைத்த
     பக்திக்(கு) இணையாமோ !” பீற்றிய -உத்தவர்
     கோவர்த் தனக்கற்கள் கண்ணனைக் காணாது
     பூவொத்து வாடியதைப் பார்ப்பு….!

    கண்ணனின் பாதக் கமலச் சுவடுகள்
    இன்னமும் கோபியர் இல்லத்தில் -வண்ணமாய்
    உள்ளதைக் கண்டுள்ளம் உத்தவர் வெட்கினார்
    கள்ள மிலாஅன்பைக் கண்டு….!
    ——————————————————————-
    நரசிம்மாவதாரம்….
    ————————
    அல்லில் பகலில் அகத்துள் அதன்வெளியில்
    புல்புழு பூச்சி பறவையால் -கொல்லும்
    மனிதனால் காட்டு மிருகத்தால் சாகா
    தனதுயிர் கேட்டுத் தவம்….!

    இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
    வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
    மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
    தோன்றினன் நாரணத் தொண்டு….!

    ”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
     பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
     கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
     நற்கதியை நாரதன் நன்கு….!

    அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
    அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
    இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
    மறையென நின்றான் மகன்….!

    முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
    முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
    காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
    கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….!

    பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
    பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
    மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
    சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….!

    விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
    மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
    பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
    கோரையைப் போலெழுந்தான் குஞ்சு….(or)
    பேரலை போலெழுந்தான் பிஞ்சு….!

    கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
    நாவின்தன் மென்மையாய் நைந்தது -சாவிந்த
    பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
    நொள்ளையான ஆட்கள் நமுத்து….!

    ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
    கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
    நாரண சக்திக்கு பூரண பக்தியே
    காரணம் என்றான் கொழுந்து….!

    காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
    போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
    ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
    கூடத்து தூணுக்கே கை….!

    பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
    சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
    தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக 
    வேகமாய் வைகுண்டம் விட்டு….!

    கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
    உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
    பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
    காதுசிகை கோதி குதிப்பு….(OR)
    காதுபுடைத் தாங்கே குதிப்பு….!

    சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
    சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
    இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
    கரநுனியால் கீறிக் கிழிப்பு…..!

    ஆவேச மான அரியை அடக்கிட
    பூவாசத் தாயே பயந்திட -சாவாச
    மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
    தேகம் தழுவத் தணிவு….!

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
    குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….!

    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….!

    துருவ சரித்திரம்
    ———————
    உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
    சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
    சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
    சக்களத்தி மாதுசுரு ஸி….!

    சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
    தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
    தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
    பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!

    கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
    துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
    அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
    சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!

    மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
    ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
    பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
    கரனை தரிசித்தான் கண்டு….!

    வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
    தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
    தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
    ஆசன தர்ப்பை அமர்ந்து…!

    கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
    பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
    குடைசாய மூன்று குவலயங்கள் காலை
    திடமாக ஊன்றி தவம்….!

    ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
    பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
    மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
    வேதங்கள் மூக்கில் விரல்….!

    கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
    உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
    வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
    ஆண்டவன் காட்சி அளிப்பு….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!

    மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
    ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
    வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
    ஆணில் சிறந்தோன் அளிப்பு….!

    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!

    வாமனாவதாரம்….
    ————————

    யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
    ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
    சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
    சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
    புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
    மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
    தாவலில் நெஞ்சம் திளைத்து….!

    தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
    வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
    உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
    எச்சரித்தும் மாபலி ஏற்பு….!

    அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
    தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
    வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
    மண்டல வாயை மறைப்பு….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….!

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட
    சேதாரம் இன்றியவன் சேர்பு….!

    தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
    வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
    பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
    மீனாமை சிம்ம மறுப்பு….!

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு….!

    —————————————————————-
    கபிலாவதாரம்
    ——————–
    தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
    காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
    தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
    ஊன்றினார் பக்தி உலகு….!

    கபில உவாச….
    ———————–
    இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
    பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
    ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
    நாரா யணனில் நிலைப்பு….!

    மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
    வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
    பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
    நெஞ்சார உன்னுள் நிறுத்து….!

    காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
    நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
    கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
    இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!

    பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
    சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
    முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
    இத்தனை கஷ்டமேன் இங்கு….1

    நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
    தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
    சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
    சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!

    பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
    பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
    இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
    முத்தியூர் சேர்க்கும் முடிவு….!

    தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
    சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
    ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
    தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!

    ————————————————————————————-
    Vதுருவ சரித்திரம்
    ———————
    உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
    சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
    சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
    சக்களத்தி மாதுசுரு ஸி….!

    சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
    தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
    தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
    பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!

    கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
    துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
    அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
    சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!

    மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
    ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
    பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
    கரனை தரிசித்தான் கண்டு….!

    வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
    தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
    தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
    ஆசன தர்ப்பை அமர்ந்து…!

    கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
    பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
    குடைசாய மூன்று குவலயங்கள் காலை
    திடமாக ஊன்றி தவம்….!

    ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
    பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
    மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
    வேதங்கள் மூக்கில் விரல்….!

    கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
    உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
    வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
    ஆண்டவன் காட்சி அளிப்பு….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!

    மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
    ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
    வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
    ஆணில் சிறந்தோன் அளிப்பு….!

    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!

    வாமனாவதாரம்….
    ————————

    யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
    ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
    சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
    சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
    புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
    மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
    தாவலில் நெஞ்சம் திளைத்து….!

    தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
    வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
    உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
    எச்சரித்தும் மாபலி ஏற்பு….!

    அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
    தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
    வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
    மண்டல வாயை மறைப்பு….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….!

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட
    சேதாரம் இன்றியவன் சேர்பு….!

    தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
    வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
    பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
    மீனாமை சிம்ம மறுப்பு….!

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு….!

    —————————————————————-
    கபிலாவதாரம்
    ——————–
    தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
    காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
    தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
    ஊன்றினார் பக்தி உலகு….!

    கபில உவாச….
    ———————–
    இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
    பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
    ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
    நாரா யணனில் நிலைப்பு….!

    மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
    வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
    பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
    நெஞ்சார உன்னுள் நிறுத்து….!

    காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
    நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
    கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
    இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!

    பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
    சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
    முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
    இத்தனை கஷ்டமேன் இங்கு….1

    நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
    தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
    சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
    சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!

    பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
    பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
    இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
    முத்தியூர் சேர்க்கும் முடிவு….!

    தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
    சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
    ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
    தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!

    ————————————————————————————-

    Share
  • வெண்பா கவதம் -தொடர்ச்சி

     

    கோன்சத் தியவிரதன் கையபி ஷேகநீரில்
    மீன்சுத் திவந்து மிகப்பெரிதாய் -வான்பொத்தல்
    ஆகத் திமிங்கலமாய் ஆக அரசனும்
    தாகமென்ன கேட்டான் திகைத்து….()….13-09-2011

    ஞானியர்கள், ஜீவர்கள், தானியங்கள் ஜோடியாய்
    தோணியிட்டு வாசுகித் தாம்பினால் -ஆணியிடு
    உச்சியுள்ள கொம்பென்(று) உரைத்தது பாகவத
    மச்சா வதாரத்து மீன்….()….13-09-2011

    மனவா சுகியால் மனித கலத்தை
    வினையூழி நாளில் வலிக்க -உனைமீன்
    உருவில் இழுத்து உயர்நலம் சேர்க்கும்
    குருவின் மகிமை கருத்து….()….13-09-2011

    வருவித்த வெள்ளம் வடியும் வரையில்
    பிறவித் தலைவர் பிரமன் -தருவித்த
    தூக்கமவர் கண்மூட சாக்கென்று தானவன்
    தூக்கிச்சென் றான்வேதத் தை….()….13-09-2011

    தானவன் குதிரைத் தலையைத் துணித்தபின்
    மீனவன் மீட்டான் மறைநான்கை -மானவகேள்
    தூங்குமயன் தாமசம், தீயரக்கன் ஆணவம்
    தாங்குமீன் ஆன்மா துணை….()….13-09-2011

    Share