கூட்டமைப்புக்களில் நமது பங்கு

உலகத்தில் உள்ள அனைத்துத் தொழில் நிறுவனங்களும் ஒரு தனி மனிதனுடைய திறமைகளை அறிந்து, உபயோகித்து மற்றும் பாராட்டுவதில் பின் தங்குவதில்லை. அதே நேரத்தில், அந்தத் தனி மனிதன் ஒரு தீவாக இல்லாமல் மற்றவர்களோடு தோள் சேர்த்து உழைப்பதையே விரும்புவது மட்டுமின்றி அதையே ஒரு சிறப்பாகக் கருதுகின்றன. எவ்வாறு ஒரு இயந்திரத்தின் ஒரு தனிப்பகுதி மட்டும் சிறப்பாக இருந்தாலும் அந்த இயந்திரம் முழுதாகச் செயல்பட்டாலன்றி அதன் உற்பத்தித்திறன் முழுமையாக வெளிப்படாதோ அதேபோல் எந்தத் தொழிலும் அதைச் சார்ந்த அனைவரும் எண்ணத்தால், உணர்வுகளால் மற்றும் செயல்களால் ஒன்றி இணைந்து வேலை பார்க்கும்பொழுதே அதன் சிறப்பும் உற்பத்தித்திறனும் மேன்மையாகி ஒளிர்விடுகின்றன. ஆகவே இந்த கூட்டுச் சிந்தனையையும் இணைந்து வேலைபார்க்கும் திறனையும் எப்படி வளர்ப்பது என்பது பற்றிய பல ஆராய்ச்சிகள்  செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கள் தொழிற்கூடங்களுக்கு மட்டுமின்றி கூடி வாழும் குடும்பங்களுக்கும் பொதுவாகக் கருதப்படுகின்றன.

இந்தக் கூட்டு முயற்சிகளுக்கு மிகவும் அத்தியாவசியமாகக் கருதப்படுபவை:

  1. நம்பிக்கை (Trust): நாம் கூட்டாக வேலைபார்க்கும் பொழுது நம்முடன் வேலைபார்ப்பவர்களை நம்முடன் சரி சமமாகக் கருதி நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் சந்தேகக் கண்களுடன் தோள் கொடுக்கும் பொழுது அவர்கள் சரியாக வேலை பார்த்தாலும் நமது சந்தேகங்கள் நம்மை வீழ்த்திவிடும். சந்தேகங்கள் பல நேரங்களில் நம்முடைய இயலாமையின் பிரதிபலிப்புகளாகக் கருதப்படுகின்றன. சந்தேகங்கள் பல நேரங்களில் நம் உள்மனதில் உள்ள பயங்களின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன. சில நேரங்களில் நம்முடைய சந்தேகங்கள் மற்றவர்களின் தன்னம்பிக்கையின் ஆணிவேர்களைக்கூட அசைத்து அவர்களை பலவீனமாக ஆக்கும் வாய்ப்புக்களை உருவாக்கவும் செய்யும் “மற்றவர்கள் நம்பிக்கைக்குரியவர்களா என்பதை கண்டுபிடிக்க மிகச் சிறந்த வழி அவர்களை நம்புவதுதான் .” என்று நாவலாசிரியர் எர்ன்ஸ்ட் ஹெமிங்ஸ்வே கூறுகின்றார். ஒருவனை நேசிப்பதைவிட அவனை நம்புவது அவனுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்று மனநல வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் கூட இருப்பவர்களை நம்பாவிட்டால் கூட்டுத்தொழிலில் பிணைப்புகள் எளிதாகப் பிரிந்துவிடும்.
  1. அகந்தையின்மை (Absence of Ego): கூட்டுத்தொழில் செய்யும் இடங்களிலும் நேரங்களிலும் நான் என்ற அகந்தையை வெளிப்படுத்துதல் மிகவும் கொடியது மட்டுமின்றி அற்பமானதும் கூட. “தான்” என்ற அகந்தை இல்லாத மனிதனே இல்லை என்பது உண்மைதான். இது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பரிமாணத்தில் ஒவ்வொரு வகையில் வெளிப்படுகின்றது.  ஆனால் கூட்டுத் தொழில் செய்யும் இடங்களிலும் கூட்டாக வாழும் இடங்களிலும் இந்த உணர்வு மற்ற எல்லாத் திறன்களையும் ஓரங்கட்டி அந்தப் பிணைப்பில் உள்ள அனைவரின் உள்ளத்திலும் வெறுப்பையும் போலித்தனத்தையும் வளர்க்கின்றது. நம்முடைய திறமைகள் முழுமையாக வெளிப்படாவிட்டாலும் மற்றவர்களுடைய திறமைகளையும் ஆக்கத்  திறன்களையும்  உணர்வுகளையும் மதித்து நடத்தல் மிக்க அவசியம். பல நேரங்களில் இந்த அகந்தை நம்மை உயர்வாகக் கருத்துவதற்குப் பதிலாக மற்றவர்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் நினைக்கத் தூண்டுகின்றது.  (Ego is not thinking too high of one’s own self, but too little of others ) ஆகவே தொழிற்கூடங்களில் அகந்தை உடையவர்கள் கூட்டுப் பொறுப்புக்களை நிர்வகிப்பதற்கும் தலைமை ஏற்பதற்கும் உகந்தவர்களாகக் கருதப்படுவதில்லை.. கூட்டுக் குடும்பங்களிலும் அகந்தை உள்ளவர்கள் அந்த அருமையான கூட்டமைப்பின் அழிவிற்கு ஆணிவேராக அமைகின்றார்கள்
  1. பகிர்ந்த பார்வை: (SHARED VISION) கூட்டுக்குடும்பமும் கூட்டுத்தொழில்களும் சிறப்படைய அதில் பங்கேற்கும் அனைவருக்கும் பகிர்ந்த பார்வையும் ஒருமித்த கருத்தும் தேவை. ஒரு அமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த வேலையில் சற்றும் முன்னேற்றம் ஏற்படாது என்பது மட்டுமின்றி அதற்க்குச் செலவழித்த பொருள்களும் (Resources) நேரமும் வீணாகிவிடும். அது மட்டுமின்றி அந்த நிலை பல கருத்துவேறுபாடுகளுக்கு வழிவகுத்து அந்த கூட்டமைப்பின் அடித்தளங்களை ஆட்டிவிடும். பகிர்ந்த பார்வை என்பது ஒருமித்த நோக்கமும் கருத்தும். அந்தப் பகிர்ந்த பார்வையின் சில கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் நமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். அந்தப் பகிர்ந்த பார்வையை நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது தனிப்பட்ட முறையில் நாம் அதை வெறுக்கலாம். ஆனாலும், அது அந்தக் கூட்டுச் செயலுக்கும் கூட்டமைப்பிற்கும் பொதுவானதாக இருப்பதால் நாம் முழுமனதோடு அதில் ஈடுபடுதல் அவசியமாகின்றது. அவ்வாறு முழு மனதோடு நாம் பகிர்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளாதபோது அந்தக் கூட்டமைப்பிற்கு நாம் ஒர முட்டுக்கட்டையாகி விடுகின்றோம். பகிர்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளுதல் நமது வளர்ச்சியின் பண்பாட்டின் அறிகுறி. அது நம்முடைய வாழ்க்கை வழிகளை எளிதாக்கவும் மகிழ்ச்சியானதாக ஆக்கவும் உதவுகின்றது. ஒரு கூட்டமைப்பில் பகிர்ந்த பார்வையை வளர்ப்பதில் திறனுடையவர்கள் அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்களுக்குத் தகுதி உடையவர்களாக வளர்கின்றார்கள்.
  1. பங்கு அறிதல் (Role play): கூட்டமைப்பில் பங்கேற்கும் பொழுது அனைவரும் ஒரே விதமான வேலையைச் செய்தல் என்பது மிகவும் அரிது. பல நேரங்களில் ஒரே கூட்டமைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான செயலைச் செய்ய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு வேலையை மேன்மையானதாகவோ அல்லது மற்ற வேலைகளை விடச் சிறந்ததாகவோ அல்லது தரக்குறைவானதாகவோ கருத வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கூட்டுச் செயலில் பல வித பங்குகள் இருக்கும். ஒவ்வொரு பங்கின் பரிமாணங்கள் ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே கூட்டுத் தொழிலில் நமது பங்கினை அறிதல் மிக அவசியம். அந்தப் பங்கிற்கு அப்பால் நம்முடைய திறன்களையோ அல்லது கருத்துக்களையோ வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நம்முடைய கருத்துக்கள் தேவைப்படும்பொழுது மாட்டும் நாம் ஈடுபட்டால் போதும். பல நேரங்களில் நம்முடைய பங்கை சரியாக அறியாத பொழுதிலும் அல்லது அந்தப் பங்கிற்கு அப்பால் நாம் அவசியமின்றி ஈடுபடும் பொழுது கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. நம்முடைய பங்கிற்கு அப்பால் நாம் தலைநீட்டும் பொழுது நமக்கு அவப்பெயர்களும் தலைகுனிவும் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒரு கூட்டமைப்பின் வெற்றி ஒவ்வொரு பங்குதாரரும் தன்னுடைய பங்குகளை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் செய்வதிலேயே அமைந்துள்ளது.

நம்முடைய கூட்டுப் பொறுப்புக்களில் நாம் இவைகளை பற்றி சற்றே சிந்திக்கலாமே !

(தொடருவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.