Skip to content

வல்லமை

    • Blog Page
    • Columns
    • Edit UPG Post
    • Home
    • LightBox
    • Login Required
    • Manage Subscriptions
    • Multiple Pages
    • My Gallery
    • Newsletter
    • Photo of the day
    • Pick Your Card
    • Post Image
    • SHORTCODES
    • Sample Page
    • Shop
    • Subscription Settings
    • Tabs and Toggles
    • Test
    • Test2
    • User’s Post Gallery
    • Video and Audio
    • oEmbed URL
    • text and lists
    • இந்த வார வல்லமையாளர்!
    • முகப்பு

Blog

  • படக்கவிதைப் போட்டி 174-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    முகம் முழுவதையும் முக்காடிட்டு மறைத்து விழிவழியே கவிபாடும் காரிகையின் நிழற்படத்தை எடுத்து வந்திருப்பவர் PicturesQueLFS. இதனை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

    துணியிட்டு முகத்தை மறைத்தாலும் கள்ளமற்ற மணிவிழிகள் அகத்தின் அழகைத் தெற்றெனக் காட்டுகின்றனவே!  

    இப்படத்திற்குப் பொருத்தமாய்க் கவியெழுத கவிஞர்களை அழைக்கின்றேன்!

    *****

    ”ஆயிழையே! வாய்வழியே சொல்லவேண்டிய மொழிகளையெல்லாம் உன் எழில் விழிகளே அழகாய்ச் சொல்லிவிடுவதால் அதற்குப் போடவேண்டாம் திரை” என்று நிழற்படப் பெண்ணிடம் நளினமாய் உரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    விழியே…

    முகத்தை மூடிக் கொண்டாலும்
    மொழிகள் பலவும் பேசுகின்ற
    வகையில் உள்ளன உன்கண்கள்
    வாயின் வேலையைத் தான்செய்தே,
    நகையில் உடையில் வந்திடாத
    நல்ல வுந்தன் அழகினையே
    மிகையாய்ப் பார்வை தருவதாலே
    மூட வேண்டாம் கண்களையே…!

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு இக்கவிதை மட்டுமே வந்திருப்பதால் போட்டி ஏதுமின்றி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வாகின்றார் திரு. செண்பக ஜெகதீசன். விடாமுயற்சியோடு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து படக்கவிதைப் போட்டியில் பங்கேற்றுவரும் அவரின் ஆர்வத்தையும் அயரா உழைப்பையும் பெரிதும் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
    August 20, 2018
  • இந்த வார வல்லமையாளர் (275)

    முனைவர் நா.கணேசன்

    இந்த வார வல்லமையாளராக பாரத ரத்தினம் அடல் பிகாரி வாய்பாய் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    அடல் பிகாரி வாஜ்பாய் (டிசம்பர் 25, 1924 – ஆகஸ்டு 16, 2018) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


    வாஜ்பேயி

    தூய்மைக்குப் பெயர்பெற்ற தலைவர்,  வெற்றி
    தோல்விகளை ஒருநிலையாய்க் கொண்ட மேதை
    வாய்மையிலே வழுவாதார்,  மோசம் என்றே
    வாய்வார்த்தை கூடயிவர் பற்றி நெஞ்சில்
    நோய்தவழும் மனத்தோரும் பேச மாட்டார்
    நுட்பமுடன் பேசுகிற ஆற்றல் மிக்கார்
    தாய்மனத்தர், சுதந்திரப்போர் தன்னில் முன்னர்த்
    தடியடியடியும் சிறைவாழ்வும் பெற்ற வீரர்.

     கவிஞரிவர், எழுத்தாளர், பிரம்மச் சாரி
    கண்ணியவான் , அவர்பேச எழுந்து விட்டால்
    அவையிலுள்ள எதிர்க்கட்சிக் காரர் கூட
    ஆர்வமுடன் கேட்பார்கள், இன்று நாட்டில்
    உவகையுடன் இடங்களுக்குச் சாலை மூலம்
    உலாச்செல்ல முடியுமென்றால் அரிய திட்டம்
    நவையிலதாய் அளித்ததுதான், ஆமாம் தங்க
    நாற்கரமாம் திட்டம்மிகப் பெரிய வெற்றி!

    போக்ரானில் அணுத்திட்டம் செயல்படுத்தி
    புவியறிய வைத்தார் நம் நாட்டின் மேன்மை
    தாக்கத்தான் பாக்கிஸ்தான் முனையக் கார்க்கில்
    சாதனையைச் சரித்திரமாய் மாற்றித் தந்தார்
    வாக்குக்கும் செய்கைக்கும் மாறு பாடு
    வழங்காத நேர்மைக்குச் சொந்தக் காரர்
    தேக்குபுகழ் நம் அப்துல் கலாமை ஏற்றுச்
    சிறப்புடனே ஜனாதிபதி ஆக்கிவைத்தார்.

    இனிமேலே வாஜ்பேயி போலே இங்கே
    எவரைத்தான் பார்க்கிறது? வாழ்வு முற்றும்
    தனியில்லாத் தனிமனிதன், சமர்த்தர், வெற்றிச்
    சாதனைகள் செய்தமகான் இன்றைக் கில்லை
    நனைகின்ற நம்கண்கள் அன்னார் வாழ்வின்
    நாணயத்தை இங்கெடுத்துச்  சொல்லும், என்றும்
    நினைத்திடுவோம் வாஜ்பேயி நாமம் வாழ்க!
    நீநிலத்தில் வரலாறாய் வாழ்க வாழ்க!

                                                                                     – இலந்தை இராமசாமி

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
    August 20, 2018
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180820 Yashoda Krishna -A4 watercolour graphite 100 dpi lr

    “என்னதவம் செய்தாய் யசோதையார் கண்ணனே
    வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே
    கோவிலுக்கு லீவுவிட்டு கேசவ்இல்ல வாயிலின்
    காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….!

    Share
    August 20, 2018
  • படக்கவிதைப் போட்டி (175)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சாந்தி வீஜே எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
    August 20, 2018
  • தற்கால மக்களிடையே நிலவும் சாதி சமயச் சிந்தனை

    -பேரா.பீ. பெரியசாமி

    முன்னுரை

    மனிதன் தன்னை நெறிப்படுத்திக் கொள்வதற்குத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட அமைப்புதான் மதம்.  தன்னை மீறிய ஒரு சக்தி இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்று ஆதி மனிதன் கருதினான்.  இதற்குக் கடவுள் என்று பெயரிட்டான்.  நாளடைவில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் என்று பெயரிட்டான். கடவுளரின் செயல்பாடுகளை வரையறுத்து மதத்தைத் தோற்றுவித்ததான்.  அந்த மதம் சமயம் என்னும் வடிவில் இந்த பூமிப்பந்தை ஆக்கிரமித்த நிகழ்வை உலக வரலாறு வெவ்வேறு கோணங்களில் சித்தரிப்பதன் மூலம் பெற்றது.  அதன் பின்பு சமணம், பௌத்தம், சைவம், வைணவம், சீக்கியம் என்று பல பிரிவுகள் தோன்றின.  மேலை நாட்டு வரவுகளான இஸ்லாமும், கிறித்துவமும் உலகின் பல பிரிவுகளாகத் தோன்றின. இந்தியாவிலும் தமது ஆதிக்கத்தைச் செலுத்தின.  அரசுகளை அரியாசனத்தில் அமர்த்துவதும், அகற்றுவதுமான விந்தைகள் புரியும் ஆற்றலை அவைகள் பெற்றன.  நாடாள்பவன் மன்னனாக இருந்தாலும் அவனையும் சேர்த்தாள்கின்ற சக்தியாக மதங்கள் பவனி வந்தன.

    சாதி மற்றும் சமயம்

    மனிதனை மனிதநேயத்துடன் வாழத் துணைசெய்வது சமயமாகும். சமயங்களனைத்தும் அன்பையும், பொறுமையையும், மன்னிக்கும் மனப்பான்மையையுமே வலியுறுத்துகின்றன. இறைவன் ஒருவனே என்பது அனைத்துச் சமயங்களுக்கும் அடிப்படையான கொள்கையாகும் எனினும் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்பப் பல சமயங்கள் தோன்றின.  சமண மதம், புத்த மதம், இந்து மதம், இசுலாம் மதம், கிறித்துவ மதம், சீக்கிய மதம் என அவை பலவகைப்பட்டன. வாழ்க்கையை நெறிப்படுத்துவதும் தியாக உணர்வை வளர்ப்பதுமே அவற்றின் உள்ளீடாக விளங்கியது. புத்த சமயம் விளக்கும் இரக்கவுணர்வும் வாழ்விற்கான நன்னெறிகளே. இந்து சமயம் கூறும் அன்புணர்வும், கிறித்துவ சமயம் வலியுறுத்தும் மன்னிக்கும் மனப்பான்மையும், இசுலாம் சமயம் எடுத்துரைக்கும் சகோதரத்துவமும், சமயங்களுடன் சடங்குகள் இணைந்த போதே புதிய சிக்கல்கள் தோன்றின.

    சமயச் சடங்குகளே சமயம் எனும் அளவிற்கு அவை வளர்த்தபோது சமுதாயச் சிக்கல் உருவாகின. சடங்குகளுக்கு எதிராகத் தோன்றிய சமயங்கள் சடங்குகளாலேயே மறைக்கப்பட்டன. பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு என அனைத்து நிலைகளிலும் அவற்றின் செல்வாக்கு மிகுந்தது.  சமயத்தைப் பற்றி அம்பேத்கர்,

    “பிறப்பு முதல் இறப்பு வரை மத ஆசாரங்களே மனிதனின் வாழ்க்கையில் ஊடுருவி நிற்கின்றன. மத சம்பந்தமில்லாதது என்று கூறுவதற்கு வாழ்க்கையில் எதுவுமே இல்லை” (பெ. தங்கராசு, அண்ணல் அம்பேத்காரின் அரும்பணி ஓர் ஆய்வு, ப – 147.)

    என்கிறார்.  எனினும் ஒருவர் பின்பற்றும் சமயச் சடங்குகளைப் பிறரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியபோது முரண்பாடுகள் தோன்றின. பிற சமயத்தைப் பின்பற்றுபவர்களை எதிரிகளாக சமயப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பான்மை வளர்ந்தது.  இதனால் சமயப் பூசல்களும் சண்டைகளும் உருவாகின. இச்சிக்கல்கள் மனித உணர்ச்சியுடன் தொடர்புடையவையாகவே காணப்படுகின்றன. சமயத்தின் பெயரால் பல சிக்கல்களும் போரட்டங்களும் தோன்றிய போது பெரியார்,

    “இன்று மதமானது ஒருவரையொருவர்      ஏய்க்கவே பயன்படுத்தப் பெறுகின்றதே அல்லாமல் தொல்லையில்லாதிருக்க, நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக இல்லை போலி வாழ்க்கைக் காரருக்குத் திரையாகவே மதமும், பக்தியும் உதவுகின்றன” (டாக்டா; ந. சுப்புரெட்டியார், தந்தை பெரியார் சிந்தனைகள், ப – 40.)

    என்று கடிந்து கூறுகிறார்.  மதம் மனித வாழ்க்கையில் ஆழ வேரூன்றி விட்டது.  மதங்களின் தோற்றத்திற்குக் காரணமாய் இருந்தவை அச்சமும் நம்பிக்கையின்மையுமேயாகும். இவற்றின் காரணமாகவே வழிபாடுகள் தோன்றின. தொடக்ககால மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அச்சத்தின் காரணமாகவும் இயற்கையை வழிபடத் தொடங்கினான்.  நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனும் ஐந்தும் மனிதனுக்கு வியப்பினையும் ஆர்வத்தினையும் தூண்டியமையால் வழிபாடு அவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இயற்கை வழிபாடே மனிதனின் முதல் இறை வழிபாடாக இருந்துள்ளது.

    “அச்சமும் பதற்றம் கலந்த எதிர்பார்ப்பும் மதத் தோற்றத்திற்குக் காரணம்” (க.ப. அறவாணன், தமிழர் தம் இலக்கியம், பண்பாடு, அறிவியல், கல்வி, ப – 40.) என்கிறார் கார்ல் மார்க்சு.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஆரியம், சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் பரவியிருந்தன.  சங்க காலத்தில் சமயத்தின் பெயரால் பூசல்கள் சிக்கல்களும் காணப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை.  தொல்காப்பியர் தமிழர் சமயமாகக் குறிப்பிடும் போது,

    “மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புணல் உலகமும்
    வருணன் மேய பெருமண லுலகமும்” (தொல், பொருள், நூ – 5.) 

    என்று முதற் பொருளான நிலத்தின் அடிப்படையில் தெய்வத்தையும் வாழ்க்கையையும் குறிப்பிட்டுள்ளார்.  எனவே, தமிழரின் தொடக்க கால வழிபாடாக, இறை வழிபாடு, முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு போன்றவைச் சிறப்பிடம் பெறுகின்றன.

    கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரமும் சமய ஒற்றுமையையே வலியுறுத்துகின்றது.  இளங்கோ அடிகள் சைவ சமயத்தவர் என்று கூறப்பட்ட போதிலும் சைவ, வைணவ சமயக் கருத்துகள் சிலம்பில் மிகுந்து காணப்படுகின்றன.  கோவலன் அருக சமயத்தவன்; மாதவியும் மணிமேகலையும் பௌத்தத் துறவிகள்.சேரன் செங்குட்டுவன் சிவபக்தன்.  ஆய்ச்சியர் குரவை வைணவ  வழிபாட்டையும், குன்றக் குரவை முருக வழிபாட்டையும் எடுத்துரைக்கின்றன. சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து நோக்கும்போது அதில் சமயப் பூசல்கள் சிறப்பிடம் பெறவில்லையென்பதும் சமய ஒற்றுமையை நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதும் புலனாகின்றது. எனவே, குறிப்பிட்ட காலம்வரை வெளிவந்த இலக்கியங்கள் அனைத்தும் சமயக் காப்பியம் என்று கருதப்படுகின்ற மணிமேகலை கூட பௌத்த சமயக் கருத்துக்களை விட அறநெறிக் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. சமூகப் புரட்சியைக் காண வேண்டும் எனும் விழைவு மணிமேகலையில் மிகுந்து உள்ளது.  மதுவொழிப்பு, சிறையொழிப்பு, பரத்தையர் ஒழிப்பு, மக்களின் பசிப்பிணி நீக்குதல் போன்றவையே மணிமேகலையில் பெரும்பாலும் வலியுறுத்தப் படுகின்றன.  சைவமும் வைணவமும் மத ஒற்றுமையையே வலியுறுத்துகின்றன.

    இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்த கிறித்துவ சமயமும் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனும் வேதங்களைக் கொண்டு மக்களுக்கு நன்னெறிகளைப் புகட்டியது கிறித்துவ மதத்தை அருட்கொடையாக மக்களுக்குக் கொடுத்த இயேசுபிரானும் தாம் மரிக்கும் முன்பு சீடர்களை நோக்கி மன அமைதியே ஆண்டவனை அடையும் வழி என்று கூறுகிறார். இங்ஙனமே இசுலாம் மதமும் தனது முதன்மை நோக்கமாக அமைதியையும் கீழ்ப்படிதலையும் வலியுறுத்துகின்றது.  உலகில் தோன்றிய  சமயங்களுள் தொன்மை வாய்ந்த மதமாகக் கருதப்படும் சமண மதமும் புத்த மதமும் கூட அன்பையும் சகிப்பு தன்மையையுமே வலியுறுத்துகின்றன. தோன்றிய எல்லாச் சமயங்களும் அன்பையும் அமைதியையுமே வலியுறுத்தியுள்ளன. சமூகத்தில் இதன் விளைவுகளோ முரண்பட்டவையாகக் காணப்படுகின்றன.  மதக் கலவரங்களும் இன மோதல்களும் சமயம் இன்றுவரை மக்களைச் சரியாகச் சென்று அடையவில்லை என்பதை உணர்த்துகின்றன.  தனி மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் சமயம் இன்றியமையாத ஒன்றாக விளங்கி வருகிறது.

    சமயத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கப் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்றவைத் தோன்றின. மிகச் சிறந்த ஞானியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இராமலிங்க அடிகளார் கூட சமயம் என்பது ஆன்ம நேய ஒருமைப்பாடே என்று கூறுகிறார். 

    “எல்லா உயிர்களையும் இறைவனுடைய பிள்ளைகளாகவே கருதும் சர்வ சகோதர தத்துவமே ஆன்மநேய ஒழுக்கம்” (இராமலிங்க அடிகளார், வள்ளலாரின் வாயமுதம் – சன்னதி மாத இதழ், ப – 66.)

    என்று இராமலிங்கர் எடுத்துரைக்கிறார். மதம் என்பது ஒழுக்க முறைகளையும் சமூக ஒற்றுமையையும் நிலைநிறுத்தவே தோன்றியது. இலக்கியங்கள் பெரும்பாலானவற்றுள் மதத்தின் செல்வாக்கு மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.  சாதியும் மதமும் சமூகத்தில் தவிர்க்க இயலா நிலையை அடைந்திருக்கிறமையை அறிய முடிகின்றது.

    சாதி, சமயத் தோற்றத்திற்கானக் காரணங்கள்

    சமூகச் சூழல்களே சாதியும் சமயமும் தோன்றக் காரணமாயின.  தொடக்க கால மக்களின் வாழ்க்கையில் எந்தவிதப் பிரிவுகளும் காணப்படவில்லை. வேளாண்மையும் பொருட்களின் உற்பத்தியும் தொழில்களின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தின. இதன் காரணமாக மக்கள் நான்கு வருணத்தவராகப் பிரிக்கப்பட்டனர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். இவற்றுள் வழிபாட்டு உரிமை அந்தணனைச் சென்றடைந்தது, நிர்வாகம் அரசனுக்கும், வணிகம் வணிகனுக்கும், உடல் உழைப்பு வேளாளருக்கும் விதிக்கப்பட்டது.  இதனை மேன்மேலும் உறுதிப்படுத்த யாகங்களும் மந்திரங்களும் துணை புரிந்தன.  இதன்  காரணமாகத் சாதிய அடிப்படையிலான சமுதாயம் உருவாகியது.  சாதிப் பிரிவுகள் படிப்படியாக வளர்ச்சியடைந்தன.  நில உடைமையும் நிலப் பிரபுத்துவமும் இதனை மேலும் வளர்த்தன.  சாதிப் பிரிவினையை நிலைநிறுத்த குலத்தொழில் முறை வலியுறுத்தப்பட்டது.  சாதி வரையறையினைப் பற்றி அம்பேத்கார் குறிப்பிடும் போது,

    “சாதி என்பது ஒரு பொதுப்பெயர் கொண்ட குடும்பங்களின் திரட்சியையோ அல்லது அவ்வாறான குடும்பங்களை உள்ளடக்கும் குழுக்களையோ குறிக்கும் இப்பொதுப் பெயரானது ஒரு குறிப்பிட்ட அலுவலைக் குறிப்பதாகவோ ஒரு குறிப்பிட்ட அலுவலலோடு தொடர்புடையதாகவே இருக்கும்.” (அரங்க மு. முருகையன், தமிழர் பண்பாட்டில் சாதியம், ப – 138.)

    என்று கூறுகிறார்.  உடல் உழைப்பில் ஈடுபட்டவன் தாழ்ந்தவனாகக் கருதப்பட்டான். பொருளாதார நிலையிலும் அவனது வாழ்க்கை துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டது. செல்வந்தர்களும் செல்வாக்குப் பெற்றவர்களும் உயர்சாதியினராகப் போற்றப்பட்டனர். குறிப்பிட்ட தொழிலைச் செய்தவன் குறிப்பிட்ட சாதிக்கு உரியவனாகக் கருதப்பட்டான்.

    இது மக்களின் மீது வலிந்து திணிக்கப்பட்டதாக உருமாறியது. இவர்கள் கல்வியிலிருந்து வாழ்க்கை உயர் நிலைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டனர்.  தீண்டத் தகாதோராக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  சாதி பற்றிய ஏ. உல்குரொபர் கருத்தினை அரங்க முருகையன் எடுத்துரைக்கும்போது,

    “ஒரு வகுப்பாருக்கும் இன்னொரு வகுப்பாருக்கும் இடையே காணப்படும் சமூக மரியாதையை ஒப்பிடும்போது தோன்றும் உயர்வு, தாழ்வு நிலையே சாதி.”(மேற்படி,ப – 141.)

    என்கிறார். மேலும், ஒரு சாதியானது மற்றொரு சாதியினைச் சடங்குகளின் பெயராலும் கடவுளின் பெயராலும் அடக்கி ஒடுக்கும் நிலையும் உருவாகியது. சாதிப் பிரிவினைகள் பரம்பொருளால் உருவாக்கப்பட்டது என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டமையால் மக்கள் அதனை எதிர்க்கத் தயங்கினர். சாதிப் பிரிவினைகளும் அவற்றால் ஏற்பட்ட சடங்குகளும் மதமாற்றங்கள் உருவாகக் காரணமாயின.

    இங்ஙனம் தோன்றிய பல்வேறு சமயங்களும் தமக்கென சில வரையறைகளை வைத்துக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்த முயன்றன.  எனினும் மக்களின் தவறான அணுகுமுறையால் சமுதாயத்தில் மதப் போராட்டங்களே மிகுந்தன. இவற்றை நீக்க காலந்தோறும் பல சமயத் தலைவர்கள் தோன்றிச் சமய ஒற்றுமையை நிலைநாட்ட முயன்றனர். சாதியையும் மதத்தையும் சரியான முறையில் அணுகும்படி வலியுறுத்தினர். மனிதநேயம் மதங்களில் முதல் நோக்கம்  என்று எடுத்துரைத்தனர்.  ஒரு சாராரின் மதப்பற்றும் உணர்வும் இன்னொரு மதத்தவரைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று உரைத்தனர்.  மதம் எது என்பதை டி.ஆர்.பரமேசுவரன் விளக்கும்போது,

    “மதம் பிரதானமாக இரண்டு அம்சங்களைக் கொண்டது; ஒன்று இயற்கையைப் புரிந்துக் கொள்வதற்கான முயற்சிகளில் உருவான நம்பிக்கைகள்; இரண்டு இயற்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுடன் சம்பந்தப்பட்ட சடங்குகள்.” (பி.ஆர். பரமேஸ்வரன், இந்திய சமுதாயத்தில் சாதி, மதம், வர்க்கம், ப – 48.)

    என்று கூறுகிறார். எனினும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகள் மதங்களின் கொள்கைகளைப் பெருமளவு பாதித்தன. மக்களை ஒன்றுபடுத்தும் வலிமைவாய்ந்த சாதனம் மதம் என்பது மாறி, மதவெறியே மதத்தின் கோட்பாடாகியது. இதனால் மதக் கலவரங்களும் போர்களும் மூண்டன.

    முடிவுரை

    சாதி என்பது செய்கின்ற தொழிலால் ஏற்பட்ட ஒன்று. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சமய மாற்றத்திற்குக் காரணமாகின. சாதிப் பிரிவுகள் சமுதாய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தின. மரபுப் பிடிக்குள் ஆட்பட்ட முதிய சமுதாயம் சாதீயப் பிரிவுகள் நிலைபெறத் துணைபுரிந்தன. சாதிப் பிரிவுகளே தீண்டாமைக்கு வழிவகுத்தன. மதக் கோட்பாடுகள் மக்களிடையே பிரிவினையை வளர்த்து வருகின்றன.  மனிதநேய உணர்வுகள், ஒவ்வொரு மனிதனுக்கும் வறுமை, உயர்வு, தாழ்வு, அன்பு, பண்பு, அடிமை உணர்வு ஆகிய நிலைகளில் திகழ்கின்றது. தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே மனிதநேயம் என்பதையும், சாதி, இன ஒடுக்குதல்கள் ஒழிந்து, சமுதாயத்தில் சமத்துவம் நிலவுவதே மத நல்லிணக்கம் என்பதையும் நாம் அனைவரும் உணர வேண்டும்.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர்
    டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    தத்திரவாடி, விளாப்பாக்கம் – 632501
    வேலூர் மாவட்டம்.

                                                                                     

    Share
    August 20, 2018
  • நலம் .. நலமறிய ஆவல் – 121

    நிர்மலா ராகவன்

    தூற்றுவார் தூற்றட்டும்

    எல்லா அவயவங்களும் சரிவர இயங்கும் பலர் எதையோ இழந்தவர்கள்போல் இருக்கிறார்கள். ஆனால், உடற்குறையுடன் இருப்பவர்கள் அதையே எண்ணி வருந்திக்கொண்டிராது, தம்மால் இயன்ற ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதில் வெற்றியும் பெறுவது ஆச்சரியப்படத்தக்க சமாசாரமா, இல்லை, நமக்குத்தான் முறையாக வாழத் தெரியவில்லையா?

    குறை யாரிடம்?

    “சிலர் எதையும் எதிர்மறையாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அது அவர்களுடைய குறைபாடு!” இப்படிக் கூறியிருப்பவர் மார்லா ரன்யான் (MARLA RUNYAN) என்ற அமெரிக்க பெண்மணி.

    பிறரைக் குறைகூற இவருக்கு என்ன தகுதி?

    சட்டபூர்வமாக பார்வையற்றவர் மார்லா. 2,000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தடகளப் பந்தயத்தில் பார்வை உள்ளவர்களுடன் கலந்துகொண்ட முதல் பெண்மணி. 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றவர். மாரதானில் பல முறை ஓடியுள்ள மார்லா கல்வித்தகுதியையும் விட்டுவைக்கவில்லை. முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார்.

    இவரைப்போல் மனோதிடம் படைத்தவர்கள் இன்னும் சிலர். இன்னொரு வெற்றியாளரைப் பார்ப்போம்.

    நடக்க முடியாவிட்டால் என்ன!

    கை, கால் இரண்டுமின்றிப் பிறந்தவர் நிக் (NICK VUJICIC). பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, பிறரது கேலிக்கு ஆளானார். சிறுவர்கள் தம்மை ஒத்தவர்களையே விட்டுவைப்பதில்லையே! உடற்குறை இருந்தால் சும்மா இருப்பார்களா?

    `பிறரிடம் என்ன குறை என்றே ஆராய்பவர்களின் வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது!’ என்று அலட்சியம் செய்யும் அறிவு அப்போதே இருந்தது இவருக்கு. முடியும், முடியாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டார். மார்லாவைப்போலவே, `மனிதர்களின் மனதில்தான் குறையிருக்கிறது!,’ என்ற முடிவுக்கு வந்தார்.

    `ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் முன்னேறலாமே! தன்னால் என்ன முடியும்?’ என்று யோசித்தார் நிக். அதன் விளைவாக, பத்தொன்பது வயதிலிருந்தே தன்முனைப்பைப்பற்றி மேடைகளில் முழங்கினார். `நீ ஒரு நாள் நன்றாகப் பேசப்போகிறாய்!’ என்று பள்ளிப்பருவத்தின்போது ஒருவர் தன் `கையை முறுக்கியதாக,’ தன்னையே கேலி செய்துகொள்ளவும் தவறவில்லை நிக். கேட்பவர்களுக்குத்தான் அதிர்ச்சி.

    குறைகளுடன் தன்னை ஏற்றதால் நிக் புகழ் வாய்ந்தவராகத் திகழ்கிறார். ஈராண்டுகள் கழித்து, பட்டமும் பெற்றார்.

    `நடக்க முடியாதது ஒரு பெரிய குறையா!’ என்று நினைக்கத் தூண்டும் பிறரைக் காண்போமா?

    அண்மையில் கோலாலம்பூரில் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நடனமணிகள் சக்கர நாற்காலியின் உதவியோடு நகர்பவர்கள்.

    `நடக்கவே முடியாதவர்கள் எப்படி ஆட முடியும்?’ என்கிறீர்களா?

    கை அசைவாலேயே ராமாயணம், (தமிழில்) கீதோபதேசம் ஆகிய இரு காவியக் கதைகளையும் திறம்பட விளக்கினார்கள். சக்கர நாற்காலியையோ, கைத்தடியையோ சுழற்றியபடி மேடையை எளிதாகச் சுற்றிவந்தார்கள். காட்சி அமைப்புகள் பிரமாதமாக இருந்தன.

    சிலிர்த்துப்போய் அரங்கத்தினர் அனைவரும் கைதட்ட, தில்லியில் முப்பது ஆண்டுகளாக இப்பயிற்சியை அளித்துவருபவர் கூறினார், “இவர்களில் யாருக்கும் நீங்கள் கைதட்டுவது கேட்காது. ஏனெனில் இவர்களுக்குக் காது கேட்காது!”

    அதிர்ச்சியுடன் அரங்கமே மௌனமாகிவிட, சைகை மொழி தெரிந்த ஓரிருவர் இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தியபடி வேகமாக ஆட்டி, தம் பாராட்டைத் தெரிவிக்க, மேடையிலிருந்தவர்களின் முகம் மலர்ந்தது. அவர்களும் அப்படியே செய்து, தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். (கைதட்டுவது, மகிழ்ச்சி இரண்டையும் தெரிவிக்க ஒரே சைகைதான்).

    செவிப்புலன் இல்லாமல் தாளத்திற்கேற்ப நகர்வதும், மொழி புரியாவிட்டாலும் தக்கவாறு அவர்கள் ஆடுவதும் விந்தை. உலகிலேயே முதன்முறையாக இங்கு அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சி அது. கிருஷ்ணன், சீதை ஆகிய இரு பாத்திரங்களையும் ஏற்று, மெய்சிலிர்க்க வைத்தவர் இருபது வருடங்களாகப் பயின்றவராம். (சில “மாதங்களே நாட்டியம் பயின்ற மகளுக்குத் தனியாக ஆடச் சந்தர்ப்பம் வேண்டும் என்று ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் தாய்மார்களை நினைத்துக்கொண்டேன். பத்து ஆண்டுகளாவது பயிலவேண்டாமா!)

    உடலில் குறைபாடுகள் இருந்தாலும், இவர்களிடம் மனோதிடம் இருந்தது. `எவ்வளவு பிரயாசைப்பட்டு உழைத்திருப்பார்கள்!’ என்ற பெருவியப்பு பார்த்தவர்களிடம் ஏற்பட்டது. `நாமும் இருக்கிறோமே, ஒன்றுமில்லாததற்கெல்லாம் துவண்டு போய்க்கொண்டு!’ என்று அன்று சிலருக்கு ஞானோதயம் வந்திருக்கலாம்.

    காது கேட்காவிட்டால் என்ன! இசைத்திறன் போதாதா!

    காது கேட்காத நிலையிலும் இசையில் நிலைத்திருந்தவர் ஜெர்மானியரான பீதோவன். (பிறந்த வருடம்: 1770). குடிகாரரான தந்தை இவரது முதல் குரு. சிறு பையனான மகனை பியானோ வாசிக்கும்படி பலவந்தப்படுத்தி, தவறிழைத்தால் கடுமையாகத் தண்டிப்பாராம்.

    பன்னிரண்டு வயதிலேயே ஆர்கன் வாத்தியம் வாசித்தும், இசையமைத்தும் பொருளீட்டி, குடும்பத்தைக் காக்கவேண்டிய பொறுப்பு ஏற்பட்டது பீதோவனுக்கு.

    `புதுமையான கண்டுபிடிப்பு!’ என்று இவரது சிம்பொனி இசையமைப்பு பாராட்டப்பட, பிறரும் அவ்வழியைப் பின்பற்ற ஆரம்பித்தனர். ஆனால், மேடையில் இவர் வாசித்தபின் ரசிகர்களின் கரகோஷம் செவியில் விழாததுதான் பரிதாபம்.

    பழகத் தெரியாவிட்டால் என்ன! கணிதமே போதும்

    மூன்று வயதுவரை பேச்சு வராமல், ஆடிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, பிறருடன் பழகத்தெரியாது ஒரு குழந்தை இருந்தால் `முட்டாள்!’ என்று பழிக்கத் தோன்றுகிறதா?

    யோசிக்கவேண்டிய விஷயம்.

    ஐன்ஸ்டீன் அப்படித்தான் இருந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், தனக்கு இயலாததைப்பற்றி எண்ணி வருந்தவில்லை அவர். கணிதம், பௌதிகம் இரண்டு மட்டும் அவர் உயிர்மூச்சாக இருந்தன. 1921-ல் நோபல் பரிசு பெற்றார்.

    தன்னம்பிக்கை போதுமே!

    நம் ஒவ்வொருக்குள்ளும் ஏதாவது திறமை ஒளிந்துதான் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது நம் கையில்தான் இருக்கிறது.

    பிறரது எள்ளலை உண்மையென நம்பித் தளர்ந்துவிடக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் நம்மிடம் காணப்படும் திறமையால் எழும் பொறாமையை மறைத்து, கேலி பேசுவார்கள்.

    என் பாதையை மறித்தவர்கள்

    `இவள் எழுதுவதெல்லாம் ஆபாசம்! இல்லை, புரட்சி!’

    `நம்மால் முடியாததை இவள் சாதித்துவிடப் போகிறாளே!’ என்ற அச்சம் அந்த பயங்கொள்ளிகளுக்கு.

    வேறு சிலர், நயமாகப் பேசியே நாம் முன்னேறுவதைத் தடுக்க முனைவார்கள். (`இந்தமாதிரி பிறரைத் தாக்கி எழுதினால், மாட்டிக்கொள்வாய்! ஜாக்கிரதை!’)

    இப்படிப்பட்டவர்களின் மனம் புரிந்தால், நம்மை எவ்வழியிலாவது தாக்கும் சொற்களை அலட்சியம் செய்யலாம். அவர்களுடைய ஆத்திரம் அதிகரிக்கும். பிறரிடம் நம்மைப்பற்றித் தாறுமாறாகப் பேசுவார்கள். பிறர் பொறாமைப்பட நம்மிடம் விஷயம் இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

    இவ்வளவு இடர்பாடுகளைத் தாண்டி தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதனைகள் புரிய ஒருவருக்குப் பல ஆண்டுகள் ஆகலாம். விடாமுயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் இருந்தால் போதும். எவரும் பிரகாசிக்கலாம்.

    தொடருவோம்

    Share
    August 20, 2018
  • பழந்தமிழக வரலாறு – 15

    கணியன்பாலன்

     

    ஆ.சோழவேந்தர்கள்

    முதலில் சேரவேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப் பட்டு அதன்பின் அவர்களின் சமகாலச் சோழ, பாண்டிய வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள், பதிற்றுப்பத்துப்பதிகத்தில் உள்ள சேர வேந்தர்களின் மொத்த ஆட்சி ஆண்டுகளைக் கொண்டும், தூமகேது தோன்றியதைக்கொண்டும், புகளூர்க் கல்வெட்டு, அந்துவன் கல்வெட்டு, சம்பைக்கல்வெட்டு, கொல்லிப்பொறைக் கல்வெட்டு, பிட்டந்தைமகள்கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளைக் கொண்டும், மாக்கோதை, குட்டு வன் கோதை போன்றோரின் நாணயங்களைக் கொண்டும் ஓரளவு முறையான வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆதலால் சேர வேந்தர்களுக்கான ஆட்சி ஆண்டுகள் பிற சமகாலச் சோழ, பாண்டிய வேந்தர் களின் ஆட்சியாண்டுகளை நிர்ணயிக்கப் பெருமளவு பயன் பட்டன எனலாம்.

    மௌரியப் படையெடுப்பு கி.மு. 297வாக்கில் தீவிரப்படுத்தப் படுகிறது. கி.மு. 295வாக்கில் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி சோழன் இளஞ்சேட்சென்னி தலைமையில் வலுப்படுத்தப் படுகிறது. அதற்குச்சுமார் 10 ஆண்டுகளுக்குமுன் சோழன் இளஞ்சேட் சென்னி வேந்தன் ஆகிறான் எனவும், அதற்கு முன் அவனது தந்தை பெரும்பூட்சென்னி வேந்தனாக சுமார் 30 வருடங்கள் இருந்தான் எனவும்கொண்டு அவனது ஆட்சிக் காலம் என்பது ஏறக்குறைய கி.மு.335-305 வரை எனக்கணிக்கப்பட்டது. இளஞ்சேட்சென்னி செருப்பாழிப் போருக்குப் (கி.மு.288) பின், சிறிதுகாலத்தில் இறந்துவிடுகிறான் என்பதால் இளஞ்சேட் சென்னியின் ஆட்சிக்காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு. 305-285 வரை எனக் கணிக்கப்பட்டது.

    கி.மு. 285 வாக்கில் அவனது மகன் முதல் கரிகாலன் பெரும்போராட்டத்துக்குப்பின் முதல் வெண்ணிப்பறந்தலைப்போரை நடத்தி புகாரின் அரசன் ஆகிறான். இலக்கியக் கணிப்புப்படி, அவன் முதல், இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போர்களையும், இறுதியாக வாகைப் பறந்தலைப் போரையும் நடத்தி சுமார் 35 ஆண்டுகள் வேந்தனாக இருந்து கி.மு. 250வாக்கில் இறக்கிறான். அவனது இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப்போர் கி.மு. 275 வாக்கில் சேரலாதன் இமயவரம்பனோடு நடக்கிறது. அவனது வாகைப் பறந்தலைப்போர் பிந்துசாரன் இறந்தபின் கி.மு. 270 வாக்கில் நடைபெறுகிறது. ஆதிமந்தி அவனது மகள் ஆவாள். அவள் வளர்ந்து அவனது கணவன் ஆட்டனத்தியை மணந்த பின்னும் சிலகாலம், முதல் கரிகாலன் அரசாண்டு வந்துள்ளான் என்பது பரணரின் பாடல் மூலம் தெரிகிறது(அ-376). அவன் புகாரின் அரசன் ஆன போது(கி.மு. 285) இளவயது இளைஞனாக இருந்தான். ஆகவே அவன் அதன்பின் 35 ஆண்டுகள் ஆண்டான் எனக்கொண்டு அவனது ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 285-250 எனக்கணிக்கப்பட்டது. இவனது சமகாலத்தில் இமயவரம்பனும், பல்யானைச்செல்கெழு குட்டுவனும், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் சேர வேந்தர்களாக இருந்தனர் என்பதால் அவர்களின் வேந்தர் ஆட்சி ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.

    முதல் கரிகாலனது மகன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி 4ஆம், 5ஆம் காலகட்டங்களில் வேந்தனாக இருந்து, சுமார் 40 ஆண்டுகாலம் ஆண்டு, கி.மு. 210வாக்கில் இறக்கிறான். இவனது சமகால சேர வேந்தர்கள் சேரன் செங்குட்டு வனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவர். பெருங்குன்றூர் கிழார் கி.மு. 184வரை வாழ்ந்த சேரன் இளஞ்சேரல் இரும்பொறை குறித்த 9ஆம் பதிற்றுப் பத்தைப்பாடியவர். அவராலும் 5ஆம் பதிற்றுப்பத்தைப்பாடிய பரணராலும் இவன் பாடப்பட்டவன் என்பதால் இவன் நீண்டகாலம் ஆண்டவன் என ஆகிறது. சேரன் செங்குட்டுவனின் நேரிவாயில் போருக்குப்(கி.மு. 225) பின்னர் சிலவருடங்கள் கழித்துத்தான் இவனுக்கு இரண்டாம் கரிகாலன் பிறக்கிறான். ஆதலால் நேரிவாயில் போருக்குப்பின் இவனது ஆட்சிக்காலம் சுமார் 15 ஆண்டு கள் இருந்துள்ளது எனக்கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 250-210 எனக் கணிக்கப்பட்டது.

    சேரன் செங்குட்டுவன் கி.மு. 225வாக்கில் நேரிவாயிலில் போர் நடத்தி சோழன் கிள்ளிவளவனை உறையூர் அரசனாக ஆக்குவதோடு, உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னிக்குப்பின் கிள்ளிவளவன் சோழவேந்தனாக ஆவதற்கும் ஏற்பாடு செய்கிறான். அப்பொழுது உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னிக்கு மகன் இல்லை. அதன் காரணமாக கி.மு. 210வாக்கில் கிள்ளிவளவன் புகாரில் சோழவேந்தனாக ஆகிறான். இவன் 6ஆம் காலகட்டம் ஆவான். கி.மு. 199வாக்கில் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையால் புகாரை இழந்த அவன் அதனை மீட்டு, கோசர்களோடும் அதன்பின் பாண்டியன் பழையன் மாறனோடும் போரிட்டு மதுரையைக் கைப்பற்றுகிறான்(கி.மு. 193). அதன்பின் ஓரிரு வருடங்களில், அதாவது கி.மு. 190வாக்கில் இறந்துவிடுகிறான். அவன் கிட்டத்தட்ட கி.மு. 210-190வரை 20 ஆண்டுகள் வேந்தனாக இருந்துள்ளான்.

    அதன்பின் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகனான ஏழாம்காலகட்ட இரண்டாம் கரிகாலன் புகாரின் அரசனாக ஆகிறான். கி.மு. 188வாக்கில் நடந்த மூன்றாம் வெண்ணிப் பறந்தலைப் போரின் மூலம் இவன் சோழ வேந்தனாக ஆகிறான். இவன் தொண்டைமான் இளந்திரையன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை போன்றவர்களின் சமகாலத்தவன். இவனது காலத்துக்கு முன்னரே கடையேழு வள்ளல்களும் இறந்து விடுகின்றனர். அவர்களைப்பாடிய பெருஞ்சித்தரனாரும் அவர்களுக்குப்பின் வந்த குமணனும் இவன் காலத்தவர்களாக இருந்துள்ளனர். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையிலும், முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப்படையிலும் பாடியுள்ளனர். இவன் பெருவேந்தனாக இருந்து காவிரியில் கல்லணை கட்டியவன். கி.மு. 180 வாக்கில் இவன் வடதிசை படையெடுத்து தக்காணப்பகுதியை தமிழரசுகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். அது சாதவாகன அரசன் சதகர்ணி, கலிங்கமன்னன் காரவேலன் ஆகியவர்களின் தொடக்க ஆண்டுகள் ஆகும். ஔவையார் தனது 90ஆம் வயதில் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சேரன் மாரிவெண்கோ ஆகிய மூவரையும் கி.மு. 165வாக்கில் வாழ்த்திப்பாடியுள்ளார். ஔவையார் பாடியதற்குச் சில வருடங்களுக்கு முன்பே, அதாவது கி.மு. 170 வாக்கில் இரண்டாம் கரிகாலன் இறந்துவிடுகிறான்.  ஆதலால் அவனது ஆட்சி ஆண்டுகள் கிட்டத்தட்ட கி.மு. 190-170 எனக்கொண்டு, கி.மு. 170 வாக்கில் எட்டாம் காலகட்டச் சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி சோழ வேந்தன் ஆனான் எனலாம்.

    இந்த இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி கி.மு. 168வாக்கில் மலையமானின் உதவியோடு யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைத் தோற்கடிக் கிறான். ஔவையார் கி.மு. 165வாக்கில் இவன் வேந்தனாக இருந்தபோதுதான் இவனையும் உக்கிரப்பெருவழுதியையும் மாரிவெண்கோவையும் வாழ்த்திப் பாடி யுள்ளார். இவன் கணைக்கால் இரும்பொறையைக் கைதுசெய்து சிறையில் அடைத்த ஆண்டு என்பது சுமார் கி.மு. 150 ஆகும். இவனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் கோக்கோதை மார்பன் சேரவேந்தனாக இருந்துள்ளான். பொறையர்குலச் சேரர் களின் இறுதி ஆண்டான கி.மு. 150க்குப்பின் 5 ஆண்டுகள் இவன் ஆண்டதாகக் கொண்டால், மொத்தம் 25 ஆண்டுகள் ஆண்ட இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி யின் வேந்தர் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 170-145 ஆகும்.

    அதன்பின் 9ஆம் காலகட்ட குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் வேந்தன் ஆகி சுமார் 25 ஆண்டுகள் ஆள்கிறான். அவன் சிறுகுடிகிழான் பண்ணன் என்கிற 8ஆம் காலகட்டப் பாண்டியர் தலைவனைப் பாடியுள்ளான். இவன் கி.மு. 135வாக்கில் கரூரை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றிக் கொள்கிறான். சேரன் மாக்கோதை அதேஆண்டில் அதாவது கி.மு. 135வாக்கில் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தச் சோழனோடு சமாதானம் செய்துகொண்டான். குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை,

    பெரும்புலவர் கோவூர்கிழார் அவர்களையும் சேர்த்து ஒன்பது புலவர்கள் பாடியுள்ளனர். இவனுக்குப்பின் வந்த பெருந்திருமாவளவன் என்பவன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியின் சமகாலத்தவன் ஆவான். வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி வெளியிட்ட நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(கி.மு.120-100) ஆகும். ஆதலால் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிக்குப் (கி.மு.170-145) பின்பும் பெருந்திருமாவளவனுக்கு(கி.மு.120) முன்பும் ஆண்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் வேந்தர் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 145-கி.மு.120 ஆகும். அதன்பின் ஆட்சிக்கு வந்த குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை 9ஆம் காலகட்ட உறையூர் மருத்துவர் தாமோதரனாரும், 10ஆம் காலகட்டக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனாரும் பாடியுள்ளனர். அதுபோக இந்தப்பெருந்திருமாவளவனும், வெள்ளியம்பலத்துத்  துஞ்சிய பெருவழுதியும் ஒன்றாக இருந்தபொழுது 8ஆம் காலகட்டக் காவிரிப் பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் பாடியுள்ளார். ஆதலால் இவன் சுமார் 20 ஆண்டுகள்(கி.மு.120-100) வேந்தனாக இருந்தான் எனலாம்.

    இறுதியாக 10ஆம் காலகட்டச் சோழன் நலங்கிள்ளி, சுமார் கி.மு. 85-கி.மு.80 வாக்கில் மகத அரசை ஆண்ட சுங்கவம்சத்தின் உச்சயினி மீது படையெடுத்து வெற்றி கொள்கிறான். முத்தொள்ளாயிரம் நூல் இவனது உச்சயினி படையெடுப்பு குறித்துப் பேசுகிறது. டி.டி. கோசாம்பி அவர்கள் தனது பண்டைய இந்தியா என்கிற நூலில் தந்த தகவல் இந்தப் படையெடுப்பை நடத்தியவன் சோழன் நலங்கிள்ளி தான் என்பதை உறுதி செய்கிறது. இவன் சேரன் குட்டுவன் கோதையின் சம காலத்தவன். இவன் கி.மு. 100வாக்கில் தனது ஆட்சியைத் தொடங்கி சுமார் 25 ஆண்டுகள் ஆண்டான் என்பதால் இவனது ஆட்சியாண்டுகளை கி.மு.100-கி.மு.75 எனலாம். இவனுக்குப்பின் இவனது மகன் இளஞ்சேட்சென்னி, நலங்கிள்ளி சேட்சென்னி எனப்பெயர்கொண்டு சுமார் கி.மு.50வரை ஆள்கிறான். அவனது வேந்தர் ஆட்சியாண்டுகள் கிட்டத்தட்ட கி.மு.75-கி.மு.50 ஆகும். அவனே கடைசிக்காலச் சங்ககாலச்சோழ வேந்தன் ஆவான்.

    மௌரியப்பேரரசு கி.மு. 297இல் தமிழகத்தின் மீதான படையெடுப்பைத் தீவிரப்படுத்தி கி.மு. 295வாக்கில் பாழிநகரைக் கைப்பற்றியது. அதனால் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை வலுப்படுத்தி மௌரியப்படையை கி.மு. 288வாக்கில் தமிழகத்திலிருந்து துரத்தியடிக்கிறான். இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 305-கி.மு.285 ஆகும். இவை மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்களின் மூலமும் மௌரியப் பேரரசின் வரலாற்றிலிருந்தும் இன்னபிற பல்வேறுதரவுகளின் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்றே கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில் சுங்கவம்சத்தின் இறுதிக்காலத்தில் தெற்கேயிருந்து படையெடுத்த சோழன் நலங்கிள்ளி கி.மு.85-கி.மு.80 வாக்கில் உச்சயினியைத் தாக்கி வெற்றி கொண்டான். முத்தொள்ளாயிரம் நூலும், டி.டி. கோசாம்பியின் கூற்றுக்களும் இன்னபிற தரவுகளும் இதனை உறுதி செய்கின்றன. இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 100-கி.மு. 75 வரையாகும். இவனுக்கு முன்னும், இவனுக்குச் சமகாலத்திலும் ஆண்ட சேர, பாண்டிய வேந்தர்கள் வெளியிட்ட நாணயங்களின் காலங்களும் இவனது ஆட்சிக்காலத்தை உறுதி செய்கின்றன. இவனுக்குப்பின் இவனது மகன் நலங்கிள்ளி சேட்சென்னி கி.மு. 75-50 வரை வேந்தனாக ஆண்டுள்ளான்.

    ஆகவே இரண்டாம் காலகட்டச் சோழன் செருப்பாழிஎறிந்த இளஞ்சேட் சென்னியின் ஆட்சி கி.மு. 305வாக்கில் தொடங்குகிறது. 10ஆம் காலகட்ட சோழன் நலங்கிள்ளியின் ஆட்சி கி.மு. 75வாக்கில் முடிகிறது. இந்த இரண்டு ஆண்டுகளும் இந்திய, உலக வரலாற்று காலங்களைக் கொண்டு உறுதியான அடித்தளத்தின் மீது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கி.மு. 305க்கு முன் முதல் சோழ வேந்தன் பெரும்பூட் சென்னியும்(கி.மு.335-305), கி.மு.75க்குப்பின் இறுதி வேந்தன்  நலங்கிள்ளி சேட்சென்னியும்(கி.மு.75-50) ஆண்டுள்ளனர். இந்த இரு சோழ வேந்தர்களையும் சேர்த்து மொத்தம் உள்ள 11 சோழ வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை நிர்ணயிப் பதில் பல்வேறு கல்வெட்டுகள், நாணயங்கள், வரலாற்றுக்குறிப்புகள் முதலியன கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே தனிப்பட்ட சோழ வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒரு சில ஆண்டுகள் முன்பின் வேறுபாடுகள் இருந்தாலும், முதல் வேந்தனான பெரும்பூட் சென்னி முதல் இறுதி வேந்தனான நலங்கிள்ளி சேட்சென்னி வரையான 11 சோழ வேந்தர்களின் வேந்தர் ஆட்சி ஆண்டுகள் என்பது சுமார் கி.மு.335-கி.மு.50 வரையான 285 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையவை எனலாம்.

    தொடருவோம்

    Share
    August 20, 2018
  • வாழ்ந்து பார்க்கலாமே 32

     க.பாலசுப்பிரமணியன்

    கூடி வாழ்ந்தால் …

    பல்லாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி… ஒரு  நகரத்தின் வெளிப்பகுதியில்  ஒரு  கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருந்த ஒரு தொழிலாளி அங்கிருக்கும் ஒரு மிகப்பளுவான பொருளை த்  தூக்குவதற்காக முயற்சி செய்துகொண்டிருந்தான். அவனால் அந்தப் பளுவை நகர்த்தக்கூட முடியவில்லை. அந்த இடத்தில அவன் வேலையை மேற்பார்த்துக்கொண்டிருந்த  ஒரு மேலாளர்  அவனைப் பார்த்துக் கண்டித்துக்கொண்டிருந்தான். அந்த வழியாக குதிரையில் வந்த  ஒருவர் இந்தக் காட்சியைக் கண்டு அந்த மேலாளரிடம்  கேட்டார்: “அந்தத் தொழிலாளி அந்தப் பளுவை நகர்த்துவதற்கு இவ்வளவு முயற்சி செய்துகொண்டிருக்கிறாரே  நீங்கள் அவருக்கு ஒரு கைகொடுக்கக் கூடாதோ?”

    சற்றே இவரை முறைத்துப் பார்த்த அந்த மேலாளர் “நான் அவனுக்கு கைகொடுப்பதா? அவன் ஒரு தொழிலாளி. நான் மேலாளர். அவனிடம் வேலை வாங்கத்தான் நான் நியமிக்கப் பட்டிருக்கின்றேன்.” என்று சொல்ல  குதிரையில் வந்த அந்த நபர் ஒன்றும் பேசாமல் கீழே இறங்கி அந்தத் தொழிலாளியிடம் சென்று அவருக்குக் கைகொடுக்கின்றார். அந்த வேலை முடிந்தபின் அந்த மேலாளரிடம் எதுவும் கூறாமல் தன்னுடைய குதிரையில் ஏறுகின்றார். அதைக் கண்ட அந்த மேலாளர் “இவனுக்கு உதவி செய்த நீங்கள் யார்?” எனக் கேட்டிடவே, வந்தவரோ “என் பெயர் ஜார்ஜ் வாஷிங்க்டன் . இந்த நாட்டின் அதிபதி.” என்று சொல்லிவிட்டு மேலே செல்கின்றாராம்.

    இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கருத்து என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    பல தொழில் நடக்கும் இடங்களில்  வேலை பார்ப்பவர்கள் கூட்டாகச் சேர்ந்து வேலை பார்க்க்காமல் தங்களுடைய பதவி, தகுதி போன்ற பல காரணங்களுக்குக்காக தங்களுடன் கூட வேலை பார்பவர்களுடன் கூட்டாக வேலை பார்க்காமல் பிரிந்து  நின்று தனியாக வேலை பார்க்கும் காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். பதவி என்பது நமக்கு வேலைகளை மேர்பார்ப்பதற்கும் சிறப்பாக ஒழுங்குபடுத்திடுவதற்கும் புதிய உத்திகளால் நம்முடன் வேலை பார்ப்போரை வழிநடத்துவதற்கும் கொடுக்கப்படும் ஒரு தகுதி. அது நம்மை நம்முடன் வேலை பார்ப்பவர்களிடம் பிரித்து நம்மை ஒரு புதிய வர்கத்தினராக ஆக்கும் செயல் அல்ல. எனவே நம்முடன் உழைப்பவர்கள் திறன் மற்றும் உணர்வு நிலைகளை புரிந்து அவர்களுடன் கைகோர்த்துச் செல்வதே சிறந்த தொழில் தர்மமாகும்.

    அது மட்டுமல்ல.. கீழ்காணும் சில காட்சிகளை நாம் பல தொழில்  நடக்கும் இடங்களில் பார்க்கின்றோம்..

    1. “அவனுக்கும் சம்பளம் கிடைக்கின்றது. எனக்கும் சம்பளம் கிடைக்கின்றது. அவன் ஒரு வேலையைத் தவறாகச் செய்தானென்றால் எனக்கென்ன? அவனுடைய தவறுகள் என்னுடைய மேன்மையை வெளிப்படுத்துவதுதானே – என்ற தவறான நோக்கமும் சிந்தனையும்.
    2. “தம்பி, நீ நேற்றுதான் வேளையில் சேர்ந்தவன், நானோ இருப்பது ஆண்டுகளான உழைப்பவன். எனக்கு உன் ஆலோசனை தேவையில்லை. உன் வேலையை மட்டும் நீ பார்.” என்ற ஆணவத்தனம்.
    3. ‘நான் வேலை பார்பதற்குத் தான் சம்பளம் கொடுக்கிறார்கள். அவனுக்கு உதவி செய்வதற்க்கோ அல்லது அவனோடு சேர்ந்து செய்வதற்கோ அல்ல.” என்ற சுயநலச் சிந்தனை
    4. ” நான் அவனுக்கு உதவி செய்து அதனால் அவனுக்குச் சிறப்புக் கிடைத்து விட்டால் எனக்கு என்ன ஆவது?” என்ற கீழ்நோக்குச் சிந்தனை.

    சமுதாயம் என்று ஒன்று உருவானதே எல்லோரும் சேர்ந்து கூடி வாழவும், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தேவைப்படும் பொழுது கைகொடுக்கவும், நம்மைப் போல் மற்றவர்களின் நலனையும் முன்னேற்றத்தையும் பாதுகாக்கவுமே ! இந்தக் கூடி வாழும் உணர்வு காகம் போன்ற பறவைகளிருந்து எத்தனையோ விதமான விலங்குகளின் சமுதாயங்களில் காணப்படுகிறது. மற்றவர்களை அடித்துத் துன்புறுத்திக் கொன்று தான் உண்ணும் உணர்வுகள் விலங்கினங்களில் காணப்பட்டாலும் பொதுவாக அவைகள் தங்கள் இனங்களை அழிப்பதில்லை. கூடி வாழ்தல் என்பது ஒரு நேயச் செயல். அது மனித இனத்தில் மிகவும் சிறப்பாக விளங்கி வருகின்றது. ஆனால் காலப்போக்கில் தங்களுடைய சுயத்தேவைகளுக்காக இந்த உணர்வுகளை நாம் நழுவ விட்டுக்கொண்டிருக்கின்றோம்.

    கூட்டுக்குடும்பங்கள் இந்த நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டும் வளப்படுத்திக் கொண்டும் இருந்தன. அவைகள் மறையத் தொடங்கிவிட்டன. தொழில் செய்யும் இடங்களில் கூட்டாக வேலைபார்த்தால் உற்பத்தித்திறனை வளர்ப்பதற்கும் தொழில்  தரத்தை உயர்த்தவும் மிக அவசியமானவை. தற்போதைய நிர்வாகத் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளில் கூறப்படும் கருத்துக்கள்:

    1. குழுவாகவும் அணியாகவும் வேலைசெய்தல் (Team work)
    2. பகிர்ந்த பார்வைகளை ஏற்றுக்கொள்ளுதல் (Shared vision)
    3. ஒத்துழைப்பு (cooperation)
    4. மோதல்களைத் தவிர்த்தல் (Conflict Resolution)
    5. குழுவைச் சார்ந்த கடமைகள், பொறுப்புக்கள் (Commitment to Team)
    6. கருத்து வேறுபாடுகளை மதித்தல், ஏற்றுக்கொள்ளுதல் (Respecting differences in perception)

    இந்தக் கருத்துக்கள் பொதுவாக எல்லாவிதமான கூட்டுப் பொறுப்புகளுக்கும் உண்மையானவை – அது குடும்பமாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது தொழில்கூடங்களாக இருந்தாலும் சரி.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதானே !

    சற்றே நமது வாழ்விலும் இவைகளை பற்றிச் சிந்தினைக்கலாமே !

    தொடருவோம்

    Share
    August 20, 2018
  • “சூர்யகாந்தன் சிறுகதைகளில் விளிம்புநிலை மாந்தர்கள்”      

    -முனைவர் அரங்க. மணிமாறன்

    முன்னுரை:

    தமிழ் இலக்கியம் பரந்துபட்ட  இலக்கிய வடிவங்களைக் கொண்டது. சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள், கதை இலக்கியங்கள் என காலத்திற்கேற்ற, தேவைக்கேற்ற வடிவப் பரிணாமங்களைப் பெற்று வளர்ச்சியடைந்துள்ளது. மொழிக்கு இலக்கணம் வகுத்ததோடு மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தவர்கள் தமிழர்கள் மட்டுமே! அம்மக்களின் பொருளாதார அடிப்படையிலான வகையில் விளிம்புநிலை மாந்தர் படைப்பு எழுத்தாளர் சூர்யகாந்தன் கதைகளின் வழி இக்கட்டுரை ஆய்கிறது.

    சூர்யகாந்தன்:

    கொங்குமண்டலமான செம்மண்பூமியாம் கோவைக்கருகிலுள்ள இராமசெட்டிப்பாளையத்தில் மாரப்பன்-சின்னம்மாள் எனும் விவசாயத் தம்பதியருக்கு 1953 சூலை-17 இல் பிறந்தவர். இயற்பெயர் மருதாசலம் என்பதாகும். கோவை அரசுக் கல்லூரியில் பயின்ற காலம்முதல் தமிழின்பால் ஆறாக்காதல் கொண்டவர். தீபம், தாமரை, வானம்பாடி முதலிய இதழ்களை வாசித்துக் கவிதை ஆர்வத்தை உருவாக்கிக்கொண்டார்.

    கனல் மணக்கும் பூக்கள்’என்ற இவரது முதல் கவிதை 1973இல் ‘மனிதன்’இதழில் அன்றைய விவசாயப் போராட்டத்தை கருவாகக் கொண்டதாய் வெளியானது. வாழ்க்கை அனுபவம், சகமனிதர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், துயரங்கள் ஆகியவற்றைக் கதைகளாக்கினார். இவரது முதல் சிறுகதை ‘தண்டிக்கப்படாத குற்றவாளிகள்’1974 இல் ‘தாமரை’ இதழில் வெளியானது. அதுமுதல் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் அமுதசுரபி, சுபமங்களா, புதிய பார்வை உள்ளிட்ட பல இதழ்களில்  படைப்புப் பல படைத்து வருகிறார். செம்மண் இலக்கிய வகைமையை ஏற்படுத்தியவர். மானாவாரி மனிதர்கள், விதைச்சோளம் முதலிய நாவல்கள் சிவப்பு நிலா, இவர்கள் காத்திருக்கிறார்கள் எனும் கவிதைகள் கோவை மாவட்டத்துக் கோயில்கள் எனும் கட்டுரை மண்ணின் மடியில், விடுதலைக் கிளிகள் முதலிய சிறுகதை நூல்களைப் படைத்த இவர் இலக்கியச் சிந்தனை, இலக்கிய வீதி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது, அகிலன் விருது உள்ளிட்டவற்றை பெற்ற பான்மையர். ‘மண்ணையும் மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாகக் கிடைத்தது மண்ணுக்கு கொடை, மொழிக்குப் பரிசு, இலக்கியத்துக்குக் கிடைத்த பேறு’என்று இவரைப் பாராட்டுகிறார் கவிஞர் புவியரசு1. தற்போது கோவையில் கல்லூரியொன்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

    கதைமாந்தர் படைப்பு:

    பெரும்பான்மையான இலக்கியங்களில் ஒப்பற்ற வீரமும்  கொடைப்பண்பும் கொண்ட மாந்தர்கள் படைக்கப்படுகின்றனர். சங்க நூல்களில் தலைவன் தலைவி எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் மன்னர்களின் வாழ்வியலே பெரும்பான்மை பேசப்பட்டிருக்கிறது. காப்பியக் காலத்திலும் ஒப்பற்ற வீரனே கதைத்தலைவனாகப் படைக்கப்பட்டுள்ளான். இதிலிலிருந்து சற்று மாறுபட்டு சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி எனும் வாணிகக் குடும்பத்து மாந்தர்கள் கதைமாந்தர்களாய் படைக்கப்பட்டுள்ளனர். இதனால் இக்காப்பியம் ‘குடிமக்கள் காப்பியம்’எனப் புகழப்படுகிறது. எனினும் கோவலனும் மாதவிக்குச் சோழ மன்னனால் அளிக்கப்பட்ட விலையுயர்ந்த முத்துமாலையை மிக அதிக விலைகொடுத்து வாங்குமளவு பணக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

    புராணம், சிற்றிலக்கியங்களிலும் உயர்வர்க்கத்தினரே மாந்தர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். குறவஞ்சியில் குறவர் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளது. பள்ளு இலக்கியங்களில் உழவர் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளது.

    கதை இலக்கியங்களிலும் பெரும் பணக்காரர்களின் வாழ்வியல் சரித்திரமாக விளக்கப்பட்டுள்ளது.

    புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி போன்ற படைப்பாளிகள் ஏழை எளிய மக்களின் வாழ்வியல் துன்பங்களைத் தங்களது கதைகளில் வெளிப்படுத்தினர்.

    பலர் இதனை இருண்மைச் சிந்தனை என விமர்சித்தனர். எனினும் புதுமைப்பித்தன் போன்றோர் ‘ஏழை விபசாரியின் ஜிவனோபாயத்தை வர்ணிப்பதால் சமுதாயத்தின் தெம்பு இற்றுவிடப்போவதில்லை 2 என்று துணிச்சலாக எழுதிவந்தனர்.

    விளிம்பு நிலை மாந்தர்கள்:

    இறைவனின் படைப்பில் அனைத்து மனிதர்களும் சமம். ஆனால் கல்வியினாலும் தத்தமது உழைப்பினாலும் பெற்ற ஊதியத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவதாலும் மனிதர் தம் தேவைகளைப் பெற்று வாழமுடியும்.சிலர் அப்பன் பாட்டன் காலத்து வசதிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்கின்றனர். சிலர் ஏழைகளைச் சுரண்டி ஏமாற்றி ஆதிக்கத்தால் அடிமைப்படுத்தி பணக்கார வாழ்வு வாழ்கின்றனர். சிலர் நடுத்தர வர்க்கத்தினராய்த் திரிசங்கு வாழ்க்கை வாழ்கின்றனர்.

    தமக்கான உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவையே ஒவ்வொரு மனிதரின் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. இவ்வடிப்படை வசதிகளே இல்லாமல் வாழும் மக்கள் ஏழைகளாகின்றனர்.

    அடுத்த வேளை உணவு நிச்சயமில்லாமல், வாழ்வதற்குச் சொந்தமாக இருப்பிடம் இல்லாமல், உடுக்கச் சரியான ஆடையில்லாமல் மனிதருக்குரிய அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களை விளிம்புநிலை மக்கள் என விளிக்கலாம்.

    இவ்விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைச் சூர்யகாந்தன் கதைகளின் வழி ஆய்வோம்.

    விதவையும் மாற்றுத்திறனாளியும்:

    ரங்கசாமிக்குப் பிறவியிலேயே இரண்டு கால்களும் முழங்கால் மூட்டுக்கு கீழே மெலிந்து குச்சிபோல் சூம்பிபோய் மாற்றுத்திறனாளியானவன். வேறு எந்தத் தொழிலும் செய்யமுடியாமல் பிச்சைக்காரனாய்ச் சக்கரவண்டியில் உக்கார்ந்து காண்போரையெல்லாம் கையெடுத்துக்கும்பிட்டு யாசித்து வயிற்றைக் கழுவி வருகிறான். ஆனால் தான் ஈயென இரந்து வாழ்வதை இழிந்தது என வெறுக்கிறான்.

    ‘…ச்சீ ஒவ்வொருத்தருங்கிட்டயும் கெஞ்சி அழுது கூக்குரல் போட்டு இந்த ஒரு சாண் வவுத்தக்காக ஈனப்பொழப்ப பொழச்சிட்டிருந்தமே எத்தென அசிங்கம்’3 (வாழப்பிறந்தவர்கள் ப.10) என்று கூசி வாழ்கிறான்.

    விபத்தில் இறந்துவிட்ட கணவனை இழந்து விதவையாகக் கைக்குழந்தையுடன்  செருப்புத் தைக்கும் தொழில்செய்து வாழ்கிறாள் சரசா. இரண்டு ஏழைகளும்  சந்தித்து ஒருவருக்கொருவர் பச்சாதாபத்தினால் நட்பாகின்றனர். இருவரின் ஏழ்மையும் பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. ஒரு சூழலில் இருவரும் சேர்ந்து வாழத் தலைப்படுகின்றனர். அவளின் குழந்தையைத் தன் குழந்தையாக நினைக்கிறான்.

    பிச்சையெடுப்பதை விட்டு செருப்புத் தைப்பதைச் சரசாவிடம் கற்றுக்கொண்டு உழைத்து வாழத் தலைப்படுகிறான். ஆனால் விதி அவளின் மச்சினன் வடிவில் வந்து சதிசெய்கிறது.

    சரசா கணவணை இழந்து கைக்குழந்தையுடன் வாழ வழியற்று நிற்கும்போது உதவிக்கு வராதவன் ரங்கசாமியோடு வாழத்தொடங்கும்போது புரளிக்காரர்களின் பேச்சைக்கேட்டு எதிர்த்துத் தாக்க இயலாத ரங்கசாமியை அவள் இல்லாத நேரத்தில் குடித்துவிட்டு வந்து அடித்து விரட்டிவிடுகிறான்.

     திரும்பி வந்த சரசா ரங்கசாமி இல்லாததையும் மச்சினன் அடித்து விரட்டிவிட்டதையும் எண்ணித் தவித்துப் போகிறாள்.

    எங்கெ போயி எப்பிடித் தடுமாறுதோ…எனச் சஞ்சலத்தோடு பரக்கப்பரக்கத் திரிந்தாள்.4 (ப.16)

    அண்ணன் செத்தபின் அவனுடைய உடமைகளைத் திருடிக்கொண்டு இவளை அநாதையாகத் திரியவிட்ட அவனைச் சபிக்கிறாள். ரங்கசாமியைத் தேடித்திரிந்து இறுதியில் கோவை காந்திபுர பஸ் ஸ்டாண்டக்கு அருகில் ஒரு சின்ன துணிமூட்டையைப் போல ரங்கசாமியைக் கண்டு தன்னோட வர அழைக்கிறாள். அவன் மறுக்கிறான்.

    ‘உன்னெ விட்டுட்டு நாங் கஞ்சி குடிச்சேன்னா அது என்ர தொண்டைக்குள்ளதா எறங்குமா?’5 (ப.17)

    என்று ஆறுதல் சொல்லி அழைத்துப்போகிறாள். இருவரும் ஒரு புதிய வாழ்வைத்தேடிப் பயணமாகின்றனர். கால் சூம்பிப் போன ஒருவனும், கணவனை இழந்து தவிக்கும் ஒருத்தியும் அன்பினால் இரக்கத்தினால் ஒருவரையொருவர் சார்ந்து வாழத்தலைப்படுதலை விவரிக்கும் சூர்யகாந்தன், விதியின் சதியையும் ஏழ்மையையும் தம் உழைப்பாலும் நம்பிக்கையாலும் அன்பாலும் வென்று வாழும் விளிம்புநிலை மாந்தரைப் படைத்துக்காட்டியுள்ளார்.

    தன்னாசியின் வறுமை:

    தன்னாசி கிணறு வெட்டும் கூலித்தொழில் செய்யும் ஏழைத்தொழிலாளி. அதன்மூலம் கிடைக்கும்  எட்டு ரூபாய்க்கூலி ஒரு நாளைக் கடத்துவதற்கே மூச்சுமுட்ட வைக்கிறது. மனைவி ராமாயியின் மருத்துவச் செலவு வேறு. குழந்தை குட்டிகள் வேறு. வீடு பாதி சுவர் விழுந்த ஓட்டைக்கூரை வீடு. குழந்தைகளின் பசியை ஆற்ற முடியாத வறுமை வாழ்வு அவனுடையது.

    ஊர்ப்பொதுவிடத்தில் கூடிய கூட்டம் பெருமாள்கோயில் குடமுழுக்கு திருவிழாவுக்காக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரண்டு மாதத்திற்குள் நூறு ரூபாய் வரியாகக் கொடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுக்கிறது.

    தான் ஏழையாக இருந்தாலும் ஊரில் மானத்தோடு வாழவேண்டுமென்றால் காலக்கெடுவுக்குள் பணத்தைக் கட்டிவிடவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகிறான். கொடை வசூலிப்புத் தொடங்கி நடந்து வருகிறது. தன்னால் தரமுடியவில்லை. கிணற்று வேலையும் நின்றுவிடுகிறது. வயல் வேலைகளிலும் நான்கு ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை.  கோவில் கட்டும் பணியில் கூடுதல் நேரங்களில் உழைத்தாலும் அது அவர்களுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. கொடைப்பணம் தராததையே குத்திக்காட்டிப் பேசுகின்றனர்.

    காலக்கெடு முடிந்ததும் ஊர்ப்பெரியவர்கள் அவமானப்படுத்துகின்றனர். கும்பாபிஷேக நாளும் வருகிறது. பணம் கட்டவில்லையென்றால் ஊரைவிட்டே தள்ளிவைத்துவிடுவர். வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளமாட்டர்கள். ஊர்ச்சம்பிரயதாயத்திற்குக் கட்டுப்படாதவன் என்று முத்திரைக்குத்திவிடுவர் என அஞ்சுகிறான்.

    ‘அனாதை போன்ற இந்த தண்டணையை நினைத்துப் பார்க்கையில்  தன்னாசி அன்று மௌனமாய் வருவதைத் தவிர வேறு எதைச் செய்திருக்கமுடியும்’6.( தன்மானம் ப.23 )

    திருவிழாவைப் பார்க்கச்சென்ற குழந்தைகளை ‘உங்க அப்பனாத்த சுண்டி குடுத்த காசுலெ ஆனதுன்னு இங்கே வெளையாட வந்தீங்களா? மருவாதியா இங்கேயிருந்து ஓடிப்போயிடுங்கடா கருமாந்திரம் புடுச்ச பூடைகளா…? 7 ப.25 ‘என்று திட்டி அவமானமாகப் பேசி அனுப்பிவிடுகின்றனர்.

    நள்ளிரவில் தன்னாசி ஓர் இறுக்கமான முடிவை எடுக்கிறான். இரவோடு இரவாகத் தன் குடும்பத்தோடு ஊரைவிட்டே வெளியேறிப் போய்விடுகிறான். ஓர் ஏழை ஊரின் கட்டுப்பாட்டுக்காகப் பயந்து தன் பாட்டன் பூட்டன் காலத்திருந்து ஊரோடு ஒட்டிக்கொண்டு வாழ்ந்த பிணைப்பை விட்டுப் பிரிவதை தன்னாசி எனும் விளிம்பு நிலை மாந்தர் வழி படைக்கிறார்.

    கல்வி கற்க முடியாத சரஸ்வதி:

    சரஸ்வதி ஓர் ஏழைக்குடும்பத்து சிறுமி. அப்பா வேலப்பன் சரியான குடிகாரர். அம்மா குப்பம்மா நோயாளி. சரஸ்வதிக்கு படிப்பின்மீது அதிக தாகம். ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பின்மூலம்  தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவு நிரம்ப அவளுக்குண்டு. பள்ளிக்குப் புதிதாக வந்துள்ள டீச்சர் எதிலும் கண்டிப்பானவர். ‘பொஸ்தகங்களெ வாங்காமெ கடனுக்கு இங்கெ வந்து உக்காந்துட்டு இறக்கிறாபிடித்தா அர்த்தம் …’8 (கொழுந்துகளை நறுக்கும் வேர்கள் ப.27) என்று கண்டிக்கிறார்.

    அவள் சில புத்தகங்களைப் பத்து நாட்களுக்குள் வாங்கிவிட வேண்டும். அப்பா படிப்புக்கு உதவாதவர். சரஸ்வதி மே மாத விடுமுறை நாட்களிலும் வார இறுதி விடுமுறை நாட்களிலும் ஊரை அடுத்த காடுகளில் வேப்ப மரங்களிலிருந்து வேப்பங்கொட்டை சேகரித்து வைக்கிறாள். ஒரு படி ஐம்பது பைசாவிலிருந்து எழுபத்தைந்து பைசா வரையில் கோயம்பத்தூர் வியாபாரிகள் வாங்கிச் செல்வர். அவள் முடிவெடுத்துவிட்டாள். எப்படியாவது பத்து பன்னிரண்டு ரூபாய்க்கு சேகரித்து வெள்ளிக்கிழமைக்குள் டீச்சரிடம் கொடுத்தால்தான் திங்கட்கிழமை புத்தகம் வாங்கி வந்துதருவார் படிப்பும்கெடாது.

    பள்ளியை விட்ட மாலைநேரம் மதிய நேரம் எனக் கஷ்டப்பட்டு இருப்பத்தைந்து படி சேர்த்துவிட்டாள். வியாபாரியை நோக்கி காத்திருந்தாள். இந்த நேரம்பார்த்து யாரும் வரவில்லை. வெள்ளிக்கிழமை மதியம் வரை காத்திருக்கிறாள். தன்தோழி சரோஜாவிடம் சொல்லி வைத்திருக்கிறாள். அவள் வியாபாரி வடக்கு வீதியில் வருவதாகக் கூறியவுடன் அவனிடம் ஓடிச் செல்கிறாள்.

    ஐயா..ஐயா வாங்க! எங்க வூட்லே வேப்பங்கொட்டைக கொண்டாந்து நெறைய வெச்சிருக்கேன்!9 (ப.32) என்று அழைக்கிறாள்.வியாபாரி தனக்கு அவசரம் இன்னொரு நாள் வந்து வாங்கிக்கொள்வதாகக் கூறியும் விடாமல் அழைத்துச் செல்கிறாள். வீட்டுக்குக்குள் சென்று கோணிப்பையை தேடுகிறாள். அது நான்காக  மடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதைக் கண்ட சரஸ்வதிக்கு கால்கள் ஒரு நிலையில் நிற்கவில்லை. ஆத்திரமும் ஏமாற்றமும் வருத்தமும் அவளைப் பந்தாடுகின்றன.

    அப்பா வேலப்பன் ஏற்கெனவே அவற்றை விற்றுவிட்டுப் பத்து ரூபாய்க்கு நன்றாக குடித்துவிட்டார். மூணு ரூபாய்க்கு சாக்கணா தின்றுவிட்டு ரெண்டு ரூபாயை அவளிடம் தருகிறார். வியாபாரி அவசரத்தில் இருக்கும் தன்னை அவள் ஏமாற்றிவிட்டதாகத் திட்டிவிட்டுச் செல்கிறான். ‘அங்கிருந்து விலகிச்சென்று குமுறிக்குமுறி அழத்தொடங்கினாள் சரஸ்வதி! கொளுத்தும் வெயிலின் உக்கிரம் அந்த கண்ணீரில் இருந்தது.’10 (ப.34)

    குடிகாரத் தந்தை: நோயாளி அம்மா என்ற குடும்பச்சூழலிலும் வன்பாடுபட்டாவது படித்து முன்னேற நினைத்த அவளுக்கு அப்பாவின் குடிப்பழக்கம் தடையாகிறது. அவள் பெயர் சரஸ்வதி கல்விக்கு அதிபதியின் பெயர். ஆனால் இவளால் படிக்கவே முடியவில்லை என முரண்பாட்டு நிலையில் வாழும் சரஸ்வதி எனும் விளிம்புநிலை மாந்தரை படைத்துள்ளார் சூர்யகாந்தன்.

    முடிவுரை:

    சூர்யகாந்தன் தன் சிறுகதைகளில் வறுமை ஊர்க்கட்டுப்பாடுகள் பணக்காரர்களின் ஆதிக்கம் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு என பல்வேறு காரணங்களினால் விளிம்பு நிலையில் வாழும் மனிதர்களைப் படைத்து மனிதர்களாகப் பிறந்த அவர்களும் சக மனிதர்களைப்போல எல்லா உரிமைகளும் பெற்று வாழவேண்டும் என்ற தவிப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளமை தெளிவாகிறது.

    அடிக்குறிப்புகள்:

    1. எழுத்தாளர் சூர்யகாந்தன் – கட்டுரை. கட்டுரையாளர்: அரவிந்த்-தென்றல் இணைய இதழ்-சனவரி-2018.
    2. தமிழ் இலக்கிய வரலாறு – எம்.ஆர்.அடைக்கலசாமி கழக வெளியீடு-1976 ப.121.
    3. சூர்யகாந்தன் சிறுகதைகள்- (வாழப் பிறந்தவர்கள் சிறுகதை ப.10)- தனலட்சுமி பதிப்பகம்- எஸ்-2 அரவிந்த் நரேன் என்கிளேவ் -8 மாசிலாமணித் தெரு தி.நகர்- சென்னை-17. முதற்பதிப்பு- டிசம்பர் 2004.
    4. மேலது ப.16
    5. மேலது ப.17.
    6. மேலது நூல்-தன்மானம் சிறுகதை ப.23.
    7. மேலது ப.17
    8. மேலது நூல்- கொழுந்துகளை நறுக்கும் வேர்கள் சிறுகதை ப.27
    9. மேலது ப.32
    10. மேலது ப.34.

    *****

    கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்
    அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
    செங்கம்-606701.
    பேசி:99430-67963.

     

    Share
    August 20, 2018
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 111

    நூபியன் அருங்காட்சியகம், அசுவான், எகிப்து

     

    முனைவர். க.சுபாஷிணி

     

    எனது எகிப்துக்கான பயணத்தில் அதன் தலைநகராகிய கைரோவில் உள்ள பிரமிட்களைப் பார்க்க சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தேன். கட்டணம் செலுத்தும் இடத்தில் இருந்த இளம் வயது எகிப்திய ஆண்கள் ஓரிருவர் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நூபியன், நூபியன் என எகிப்திய மொழியில் என்னிடம் ஏதோ பேசினர். அப்போது எனக்கு அவர்கள் என்னைப் பார்த்து என்ன சொல்லி பேசி சிரித்துக் கொள்கின்றனர் எனப் புரியவில்லை. அதே பயணத்தில் நைல் நதியில் பயணித்து எகிப்தின் தெற்கு எல்லையை அடைந்து வடக்கு சூடான் நாட்டின் எல்லைப்பகுதியில் இருக்கும் அசுவான் அணைப்பகுதிக்கு வந்த போது நூபியன் என்பதன் பொருளை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.


    நூபியன் என்னும் இனத்தோர் இன்றைய சூடான் நாட்டிலும் தெற்கு எகிப்திலும் தோன்றிய இனம். மனித இனத்தின் நாகரிகக்காலம் தொடங்கியபோதிலிருந்து அடையாளம் காட்டப்படும் சில இனக்குழுக்களில் நூபியன் இனமும் ஒன்று. எகிப்தில் பாயும் நைல் நதியினை ஒட்டியவாறு வாழ்ந்த ஒரு இனம் நூபியன் இனம். பண்டைய எகிப்தில் ஆட்சி செலுத்திய இனம் என்றும் கி.மு.7000 ஆண்டில் இன்றைய வடக்கு சூடான் நகரான வாடிஹல்வா (Wadi Halfa) நகரில் பேரரசினை நிறுவிய ஒரு இனக்குழு என்றும் அறிகின்றோம் (http://www.ancientsudan.org). கி.மு 8ம் நூற்றாண்டு வரை எகிப்திலும் அதன் பின்னர் படிப்படியாக சூடான் நாட்டில் மட்டிலுமே என்ற வகையிலும் நூபியன் இனக்குழுவின் ஆளுமை விளங்கியது. இன்று நூபியன் இனக்குழு மக்கள் எகிப்தின் தெற்குப் பகுதி நகர்களான லுக்சூர், அசுவான் ஆகிய பகுதிகளிலும் சூடானிலும் வாழ்கின்றனர்.

    சூடான்-எகிப்து எல்லைப் பகுதிக்குப் படகுப் பயணம் மேற்கொண்டு வந்த போது கைரோவில் ஏன் அந்த இளைஞர்கள் என்னைப் பார்த்து நூபியன் என்று அழைத்து கேலி பேசி சிரித்தனர் என்பது எனக்குப் புரிந்தது. இங்கு வசிக்கும் நூபியன் இன மக்களின் தோற்றம் எனது தோற்றத்தை ஒத்திருந்ததைக் காண முடிந்தது. எங்கள் பயண வழிகாட்டியும் அப்பயணத்தில் இணைந்து வந்திருந்த ஏனைய ஜெர்மானிய சுற்றுப் பயணிகளும் என்னிடம் இதையே கூறினர். ஆப்பிரிக்க கண்டத்து மக்களில் அதிலும் குறிப்பாக, சூடான், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாட்டு மக்களின் உடல் கூறுகள் தமிழ் மக்களின் உடற்கூறுகளுடன் ஒத்திருப்பதைப் பலமுறை அவதானித்திருக்கின்றேன். நேரில் சூடான் நாட்டின் எல்லையில் இருந்த போது நானும் அந்நாட்டு மக்களின் தோற்றத்துடனேயே இருப்பதை ஆழமாக உணர்ந்தேன்.

    இந்த நூபிய இனக்குழுவின் பிரத்தியேக செய்திகளைக் காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் தான் நூபியன் அருங்காட்சியகம். இது சூடான் நாட்டின் எல்லையில் அசுவான் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரத்தியேகமானதொரு அருங்காட்சியகம். நூபிய மக்களின் வரலாற்று, பண்பாட்டுச் செய்திகளை விவரிப்பதற்காகவும், நூபிய இனக்குழுவின் நாகரிகத்தையும் தொன்மைச் சிறப்புக்களையும் பதிந்து வைப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும்.

    எகிப்து ஒரு பாலைவனம். எங்கு நோக்கினாலும் வெளிர் ஆரஞ்சு நிறத்து மணல் துகள்கள் தான் நிறைந்திருக்கும். இங்கு குன்றுகளைப் பார்ப்போம். ஆனால் அவை மணல் குன்றுகளாகத்தான் இருக்குமே தவிர மரங்களை அங்கு காண்பது அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பேரீச்சம் பழ மரங்களைக் காண்போம். ஆனால் இந்த அருங்காட்சியகத்தினைச் சுற்றி பசுமையை உருவாக்கியிருக்கின்றனர். நல்லதொரு பூந்தோட்டம் இந்த அருங்காட்சியகத்திற்கு அழகு சேர்க்கின்றது.

    வறண்டப் பாலைவனத்தில் மணலின் நிறத்திலேயே எழுப்பப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் இந்த அருங்காட்சியகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான புராதனச் சின்னங்கள் இங்குக் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ஒரு நூலகமும் இந்த அருங்காட்சியக வளாகத்தின் உள்ளே இயங்கி வருகின்றது. வரலாற்று ஆர்வலர்களுக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கும், மாணவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் சிறந்த சூழலை ஏற்படுத்தி வழங்கியிருக்கின்றது என்பதை இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்த சில நிமிடங்களில் அறிந்து கொண்டேன். எகிப்து பழமையான பாரம்பரியத்திற்குச் சொந்தமான ஒரு நாடு. வரலாற்றுச் செழுமை எனும் போது உலக நாடுகளில் முதல் இடம் வகிக்கும் அளவிற்கு மிக நீண்ட மனித நாகரிகத்திற்கும், பேரரசுகளுக்கும், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களுக்கும், புராணக் கதைகளுக்கும், பிரமிடுகளுக்கும், மம்மிக்களுக்கும் புகழ் பெற்ற நாடு எகிப்து. இன்று அயல் நாட்டு அருங்காட்சியகங்களிலேயே ஏராளமான எகிப்திய அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களை காண்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் எகிப்திலேயே இருக்கும் அருங்காட்சியகங்களில் சொல்லவும் வேண்டுமா?

    இந்த நூபியன் அருங்காட்சியகத்தில் நான் சென்றிருந்த 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மூவாயிரத்திற்கும் குறையாத நூபியன் இனக்குழு தொடர்பான புராதன சின்னங்கள் சேகரிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. நூபியன் பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்கள் தவிர இப்பகுதியில் ஆளுமை செலுத்திய கிரேக்க, இசுலாமிய சின்னங்களும் இங்குச் சேகரிப்பில் இடம்பெறுகின்றன.

    நூபியன் அருங்காட்சியகத்தினைப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது என்பதோடு இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் பகுதியில் பயணிப்பதற்கும் இப்பகுதியின் இயற்கை அழகை ரசிப்பதற்கும் குறைந்தது ஒரு வார காலம் நிச்சயம் தேவை. நைல் நதியிலேயே பயணம் செய்து இந்த அருங்காட்சியகப் பகுதிக்கு வந்து விடலாம். நைல் நதியில் சிறு படகில் பயணம் மேற்கொள்ளும் போது நாம் பயணம் செய்யும் படகுகளை நோக்கி வியாபாரிகள் படகிலேயே வந்து தங்கள் விற்பனைப் பொருட்களை விலை பேசி விற்கின்றனர். வாசனை திரவியங்கள், துணி வகைகள், மருந்துகள், மசாலா பொடிகள் என்பன இத்தகைய படகு வியாபாரிகள் கொண்டு வருகின்ற பொருட்களில் முக்கியமானவை.

    1997ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூபியன் அருங்காட்சியகம் வார நாட்கள் அனைத்திலும் திறந்திருக்கின்றது. எகிப்தில் இருக்கின்ற முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இணைந்திருக்கும் ஒரு அருங்காட்சியகம் இது. இதன் முகவரி Assuan, Sheyakhah Oula, Qism Aswan, Aswan Governorate, Egypt. எகிப்திற்குப் பயணம் செய்பவர்கள் குழுவாக பயணம் செய்வதே சாலச் சிறந்தது. தீவிரவாத நடவடிக்கைகள் எகிப்தில் தொடர்ந்து நிகழ்வதால் குழுவாகப் பயணிப்பது சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பிற்கு மிக அவசிமானதாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த அருங்காட்சியகத்திற்கான உங்கள் பயணத்தை திட்டமிடலாம்.

    Share
    August 20, 2018
  • பாணாற்றுப்படைகளில் உணவுப்பண்பாடு

    -மு.மங்கையர்க்கரசி

    ஒரு சமுதாயத்தில் உள்ள மக்கள் தம் வாழ்க்கையை நடத்தும் முறையிலிருந்து பெறக்கூடிய வாழ்வியல் நெறியே பண்பாடு. நாம் உண்ணுகின்ற உணவினைப் பொறுத்துத்தான் பழக்க வழக்கம், மன உணர்வுகள் அமைகின்றன. மனித வாழ்க்கைக்கு ஏற்ப உணவு வகைகள் மாறிக் கொண்டே வருகின்றன. உணவின் சுவைகளும் இடத்திற்கேற்ப, செய்முறைக்கேற்ப மாறுபடுகின்றன. உண்ணுகின்ற உணவிலும் பண்பாட்டைக் கடைப்பிடித்தவர்கள் பழந்தமிழர்கள்.

    விருந்தினரை வரவேற்றல்

    கரிகாலன் வீரமும் இரக்க குணமும் ஒன்றாக அமையப் பெற்றவன். அவன் அரண்மனை வாசலில் பொருநர்கள் வந்து கூடியவுடன், வாயில் காவலனிடம் அனுமதி பெறாமல் அரண்மனைக்குள் பொருநர்கள் செல்வர். அப்பொருநர்கள் இனிய பாடல்களைப் பாடுவர். அதனைக் கேட்ட அளவில் கரிகால் வளத்தான் எழுந்து வந்து நெருங்கிய நண்பரைப்போல் கருதி இனிய முகத்துடன் வரவேற்பான். குளிர்ந்த பார்வையோடும், இனிய சொற்களோடும் பொருநர்களுடன் கரிகாலன் உரையாடுவான். இவ்வாறு கரிகாலன் விருந்தினரை வரவேற்கும் பாங்கினைப் பின்வரும் அடிகள் தெளிவுபடுத்தும்,

    “…. …. ஒன்றிய
    கேளிர் போல கேள்கொளல் வேண்டி,
    கண்ணின்காண நண்ணுவழி இரீஇ
    பருகு அன்ன அருகா நோக்கமோடு,
    உருகுபவை போல், என்புகுளிர் கொளீஇ”1 

    விருந்தினர்களை வரவேற்பது என்பது தமிழரின் முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது. இப்பண்பினைக் கரிகாற் பெருவளத்தான் பெற்றிருந்தான் என்பதை மேற்கூறிப் பாடல் அடிகளிலிருந்து அறிய முடிகிறது.

    உணவு கொடுத்து ஓம்பிய முறை

    கரிகாலன் பொருநரை வரவேற்றுப் பொருநர்கள் உண்ணுதற்குரிய நேரத்தை அறிந்து செம்மறியாட்டின் இறைச்சியையும், இரும்பு நாராசத்தில் கோத்துச் சுடப்பட்ட தசைத் துண்டத்தினையும் ‘உண்ணுங்கள் என்று பலமுறை வற்புறுத்தியதால் பொருநர்கள் அவற்றின் வெப்பத்தை ஆற்றுதற் பொருட்டு வாயின் இடப்பக்கமும் வலப்பக்கமும் மாற்றி மாற்றி ஆற்றி உண்டதோடு மட்டுமல்லாமல் பல இனிய சுவையுடைய தின்பண்டங்களை உட்கொள்ளும்படி கரிகாலன் உபசரித்தான். இச்சிறப்பினைக் கீழ்க்கண்ட அடிகளின் வழியாக அறியலாம்.

    “துராஅய் துற்றிய துருவைஅம் புழுக்கின்
    காழின் சுட்ட கோழ்ஊன் கொடுங்குறை
    ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி,
    ஆவை அவை முனிகுவம் எனினே, சுவைய
    வேறு பல் உருவின் விரகுதந்து இரீஇ”2

    என்ற பாடலின் வழியாகப் பொருநர் உண்ணுதற்குரிய நேரத்தை அறிந்து கரிகாலன் விருந்தோம்பினான் என்பதை அறியமுடிகிறது. கரிகாலனின் விருந்தோம்பலின் இறைச்சியை உணவாகப் பெற்ற பின் ‘முல்லை முகைபோன்று உமியற்ற இடைமுறியாத அரிசியால் விரல்போன்று நெடுகின அளவொத்த சோற்றையும் அவற்றொடு பருக்கைக்கற்கள் போன்று நன்கு பொறிக்கப்பட்ட பொறிக்கறிகளையும் பிறவற்றையும் கழுத்து நிரம்புமாறு உண்டோம் என்று பொருநன் குறிப்பிடுவதை

           “…….முகிழ்த்கை
    முரவை போகிய முரியா அரிசி
    விரல்என நிமிர்ந்த நிரல்அமை புழுக்கல்
    பரல்வளைக் கருணை, காடியின் மிதப்ப
    அயின்றகாலை, பயின்று இனிது இருந்து”3

    என்ற பாடல் அடிகளிலிருந்து அறிய முடிகிறது.

    ‘கரிகாற் பெருவளத்தானின் செல்வச் சிறப்பு மிகுந்து உயர்ந்துள்ள மாளிகையில் ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையும்படிப் பலமுறை கள்ளினை ஊற்றித்தர நாங்களும் நிறையப் பருகினோம்| என்று பொருநன் குறிப்பிடுவதைக் காணலாம்.

    “மழை மருளும் மகிழ்செய் மாடத்து,
    இழைஅணி வனப்பின் இன்நகை மகளிர்,
    போக்குஇல் பொலங்கலம் நிறையப் பல்கால்,
    வாக்குபு தரத்தர வருத்தம் வீட
    ஆரஉண்டு பேரஞர் போக்கி”4

    என்ற பாடல் அடிகளிலிருந்து கரிகாற் பெருவளத்தானின் விருந்தோம்பலில் இடம் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.

    பாலைநில மக்கள் அளித்த விருந்து

    வள்ளல்களையும், மன்னர்களையும் காண நெடுந்தொலைவு செல்லும் பாணருக்கும் அவர்தம் சுற்றத்துக்கும் அந்தந்த நிலத்தில் கிடைக்கும் உணவுகளை மக்கள் மிகுந்த விருப்போடு அளித்ததனைப் பல பாடல்கள் எடுத்தியம்புகின்றன. பத்துப்பாட்டினுள் அமைந்த ஆற்றுப்படை நூல்கள் இதனை மிக விரிவாக எடுத்துக்காட்டுகின்றன.

    முல்லை நில மக்கள் விருந்து

    முல்லை நிலத்தைச் சார்ந்த மகளிர் சமைத்த இனிய புளிங்கறி இட்ட சோற்றினை, மானினது சூட்டிறைச்சியுடன் பாணனின் பசி தணியுமாறு நிரம்பக் கொடுத்து விருந்தோம்பினர் என்பதனை,

    “எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
    தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
    ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்”5

    என்ற பாடல் அடிகளிலிருந்து முல்லைநில மக்களின் விருந்தோம்பலை அறிய முடிகிறது.

    நெய்தல் நில மக்கள் அளித்த உணவு

    கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல் நிலத்தின் முதல் பொருளாக அமைந்துள்ளது. கடலால் ஒதுக்கப்பட்ட அகில் மர விறகைக் கொண்டு நுளைமகளால் காய்ச்சப்பட்ட தேறலை எயிற்பட்டினத்துப் பரதவர் பாணர்களுக்கு அளித்தனர். அவற்றைப் பெற்று மகிழ்ந்ததோடு நல்லியக்கோடனைப் புகழ்ந்து தம் விறலியருடன் சூடான குழல் மீனையும் பெற்று மகிழ்ந்து உண்டனர். இதனை,

    “நெய்தல் நெடுவழி மணிநீர் வைப்பு மதிலொடு
     பெரிய பனிநீர்ப் படுவின் பட்டினம் படரின்
     ஓங்குநிலை ஒட்டகம் துயில் படிந்தன்ன
     வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகின்
     அறற்குழல் பாணி தூங்கி யவரோடு
     வறற்குழற் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்”6

    என்னும் சிறுபாணாற்று பாடல் மூலம் அறியமுடிகின்றது.

    நெய்தல் நிலத்திற்குரிய எயிற்பட்டினத்தில் உபசரிப்பவர்கள் பரதவர்கள் ஆவர். அப்பரதவர்கள் அகில் மர விறகால் தீயினை எரித்துக் காய்ச்சிய தேறலையும் சூடான குழல் மீனையும் கொடுத்து விருந்து உபசரித்தனர் என்பதை,

    “பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
    வறற்குழல் சூட்டின் வயின் வயின் பெறுகுவீர்
    ”7

    எயினர் அளித்த விருந்து

    பாலைநில மக்களாகிய எயினரும் பாணரை போற்றி ஒம்பியுள்ளனர். எயிற்றியர் புளிக்கறியையும் வரும்பத்தக்க சோற்றையும் மானுடைய சூட்டிறைச்சியையும் மாந்தளிர் போன்ற மேனியையுடைய வளையணிந்த பெண்கள் விருந்தினருக்கு இட்டு மகிழ்ந்தனர். இதனை,

    “எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
    தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
    ஆமான் சூட்டின் அமைவரர் பெறுகுவீர்
    ”8

    என்னும் பெரும்பாணாற்றுப்படையில் எயினர் பானையில் சமைத்த சோற்றோடு உலர்ந்த இறைச்சிப் புழுக்கலைத் தேக்கு இலையில் வைத்து பாணரின் சுற்றத்தினருக்கு வழங்கியுள்ளனர்.

    மருதநில உழவர் அளித்த விருந்தின் சிறப்பு

    வயல்சார்ந்த இடமாக மருதம் அமைந்துள்ளது. மருதநிலத்தில் வாழ்வோரான உழவர்கள் வெள்ளிய சோற்றைப் கோழிப் பெடை கொண்டு சமைத்த பொரியலோடு தருவர். இதனை,

    “வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
    மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவீர்”9

    என்ற பாட்டின் மூலம் அறியமுடிகின்றது. இவையன்றி உழவர் மகளிர் வெள்ளிய அரிசியால் ஆகிய சோற்றோடு நண்டின் குழம்பையும் சேர்த்துப் பாணருக்கு அளித்துள்ளனர்.

    குளிர்ந்த வயல்களையும், சான்றோரையும், அகழியையும் உடைய மருத நிலத்தை அடையந்தால் அங்குள்ள உழவர்கள் அமலை வெண்சோற்றினை நண்டினது கலவையொடு கொடுத்து விருந்தோம்பினர் என்பதை,

          “அந்தணர் அருள அருங்கடி வியன் நகர்
           அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்
           அமைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
           கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவீர்”10

    என்ற பாடல் அடிகளிலிருந்து உழவரின் விருந்தோம்பலை அறிய முடிகிறது.

    தண்டலை உழவர் அளித்த உணவு

    உழவுத்தொழிலின் மேன்மை உணர்ந்த தண்டலை உழவர்களின் குடியிருப்பில் இனிய சுவை நிறைந்த மிகப் பெரிய பலாப்பழம், தெங்கு வாழைப்பழம்,  பனைநுங்கு முற்றிய நல்ல கிழங்கு போன்றவற்றை விருந்தினருக்குக் கொடுத்தனர் என்பதை,

    “தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்
     தாழ்கோட் பலவின் சூழ்களைப் பெரும்பழம்
     திம்பல் தாரம் முனையிற் சேம்பின்
     முனைப்பலும் முதிர்கிழங்கு ஆர்குவிர்”11 என்னும் பெரும்பாணாற்றுப் பாடல் அடிகளின் மூலம் அறிய முடிகின்றது.

    முடிவுரை

    பண்டைத் தமிழர் தாம் வாழ்ந்த நிலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற நெல், வரகு, தினை, புல்லரிசி, மா, பலா, வாழை, கிழங்கு வகை, இளநீர், முதலிய தாவர உணவுகளையும் மீன், நண்டு, முயல், உடும்பு, காட்டுப்பன்றி, ஆடு, கோழி, மான் முதலிய இறைச்சி உணவுகளையும் உண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    சான்றெண்கள்:

    1. பத்துப்பாட்டு, ஞா. மாணிக்கவாசகன், பொருந பா.அ.79-83, ப.61
    2. மேலது, பொருந பா.அ.79-83, ப.61
    3. மேலது, பொருந பா.அ.103-108, பக்.63,64
    4. மேலது, பொருந பா.அ.112-116, பக்.64,65
    5. மேலது, பொருந பா.அ.84-88, ப.61
    6. மேலது, பா.அ.235-236, பக்.115,116
    7. மேலது, பா.அ.560-562, பக்.433,434
    8. மேலது உரை பா. 63
    9. மேலது, பா.அ.159-163, ப.103
    10. பெரும்பாணாற்றுப்படை பா-99,100 ப-213
    11. மேலது ப-214
    12. மேலது, பா.அ.187-195, ப.107
    13. மேலது ப-219
    14. பெரும்பாணாற்றுப்படை பா-116,118 ப-65

    *****

    கட்டுரையாளர் – தமிழாய்வுத்துறைத்தலைவர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
    விழுப்புரம்.
    mangaiselva28@gmail.com

     

    Share
    August 20, 2018
  • குறுந்தொகையில் பண்பாட்டுக் கூறுகள்

    -கி. ரேவதி

    உலகின் உன்னத மொழிகளுள் முதன்மையானது தமிழ்மொழி. தமிழில் பல இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் ‘சங்க இலக்கியங்கள்’ தனிச்சிறப்புடையன. இவ்விலக்கியங்கள் காதலையும், போரையும் பெரும்பான்மையாக மொழிவன. சங்க இலக்கியங்களில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாடு பற்றிய பல சான்றுகள் உள்ளன. அவற்றில் குறுந்தொகையில் உள்ள பண்பாட்டுக் கூறுகளைத் தேடித் தொகுப்பதில் தனியின்பம் இருக்கிறது.

    பண்பாடு – விளக்கம்

    பண்படுவது பண்பாடு, மனித இனத்தைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி தமக்குரிய செம்மையையும், உயர்வையும் எடுத்தியம்பும் சிந்தனை வெளிப்பாடாக இலங்குகிறது.

    “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” (கலி.)

    கலாசாரம் என்ற சொல்லையும் பண்பாட்டோடு தொடர்புபடுத்த முடிகிறது. பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்க வழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும் என்று பக்தவத்சல பாரதி கூறுகிறார்.

    மறுபிறவியில் நம்பிக்கை

    இப்பிறவி மட்டுமல்லாமல் மறு பிறப்பும் உண்டு என்ற நம்பிக்கை பழங்காலத் தமிழர்களிடம் இருந்தது. இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் தான் மணந்த தலைவனே தனக்கு கணவனாக அமைதல் வேண்டும். ஆவன் நெஞ்சு நேர்பவளாகத் தான் மட்டும் அமைதல் வேண்டும் என்பதை,

    “இம்மை மாறி மறுமை ஆயினும்
    நீ ஆகியர் எம் கணவனை
    யான் ஆகியர் நின்நெஞ்சு நேர்பவளே” (குறு -49) என்ற அடிகளால் அறியமுடிகிறது.

    தொழில்கள்

    சங்க காலத்தில் பல தொழில்கள் சமுதாய மேம்பாட்டிற்குக் காரணமாக இருந்தன. அக்காலத்தில் கழைக் கூத்தாடிகளின் தொழில் முறையை,

    “ஆரியர்
    கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி”    (குறு-7)

    மூங்கிலின் மேலே கயிறு கட்டி ஏறி ஆடும் போது ஒலிக்கின்ற பறை என்ற வரிகளில் அறியமுடிகிறது.

    “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை”     
    (குறள்-1031)

    என்ற குறளுக்கேற்ப சங்க காலத்தில் உழவுத் தொழில் சிறப்புற்று இருந்தது என்பதை,

    தரிசாகக் கிடந்த நிலத்தை உழுததனாலாகிய நிறைந்த மகிழ்ச்சியையுடைய உழவர் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்றனர் என்ற செய்தியும், “உழவர் வாங்கிய” (குறு-10) என்ற வரிகளில் உழவர்கள் பற்றியும், சங்கினை அறுத்து வளையல் செய்கின்ற பொற்கொல்லர் தொழில் முறையும் கூறப்படுகிறது. மேலும்,

    “உலைக்கல் அன்ன பாறை ஏறி” (குறு-12)

    என்ற செய்தியில் இரும்புக் கொல்லன் தொழில் முறையும் காட்டப்படுகிறது.

    “உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின்” (குறு-124)

    இப்பாடலில் அக்காலத்தில் உமணர்கள் உப்பு வணிகத்தில் ஈடுபட்டதை அறியமுடிகிறது.

    தெய்வ நம்பிக்கை

    சங்க காலம் முதற்கொண்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை குடி கொண்டிருந்தது. உலகம் கடவுளால் காக்கப்படுகிறது என்ற உண்மையை,

    “சேவல் அம் கொடியோன் காப்ப
    ஏம வைகல் எய்தின்றால் உலகே”
    (குறு-1)

    என்று குறுந்தொகையின் முதல் பாடலே கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. தலைவன் களவுக் காலத்தில் சூளுரை செய்தல்(குறு-25), தலைவிக்கு வரும் காதல் நோய்க்கு கடவுள் காரணம் என்று நம்புதல், தெய்வங்களின் உறைவிடம் மலை (குறு-105), போன்ற செய்திகளின் மூலம் அக்கால மக்களின் தெய்வ நம்பிக்கையை அறியலாம். மேலும்,

    “மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
    கொடியோர்த் தெறூஉம்” (குறு-87)

    என்ற பாடலில் தெய்வமானது கொடியவரை வருத்தும் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.

    பழக்க வழக்கங்கள்

    சூழ்நிலையின் தேவைக்கேற்ப தனிமனிதனிடம் வேர்விடுகின்ற செயல்பாடுகளே பழக்கம் எனப்படும். பல தனி மனிதர்களின் பழக்கங்கள் ஒரு குழுவின் இனத்தின் சமுதாயத்தின் தொடர் பழக்கங்களாக வளர்ந்து வழக்கம் என்ற நிலைக்கு உயர்கிறது.

    அக்காலப் பெண்கள் கூந்தலில் இட்டு, நீராடுவதற்காக எருமண்ணை பயன்படுத்தியுள்ளனர் என்பதை,

    “கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்
    ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே”
    (குறு-113)

    என்ற பாடல் தெரிவிக்கிறது. மேலும் தினையில் கிளிகளை விரட்ட தலைவி செல்கிறாள். சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து அவற்றை மாலையாகக் கட்டி செல்கிறாள். சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து அவற்றை மாலையாகக் கட்டி தினைப்புனத்தில் கதிரை உண்ணவரும் கிளிகளை ஓட்டுகின்ற பழக்கம் உண்டு என்ற செய்தி,

    புனக்கிளி கடியும்’ (குறு-142), ‘படுகிளி கடிகம்’ (குறு-198) ‘தினைகிளி கடிதலின்’ (குறு-217) என்ற பாடல்கள் முன் வைக்கின்றன.

    தலைவி காதலுற்றபோது அதனைச் செவிலி உடல் நோய் எனக் கருதி வெறியாட்டு நிகழ்த்தும் பழக்கமும் அக்கால மக்களிடம் காணப்பட்டது.

    “மென்தோள் நெகிழ்ந்த செல்லல், வேலன்
    வென்றி நெடுவெள்”
    (குறு-110)

    அக்கால மகளிர் முல்லை, குவளை, காவி, வேங்கை போன்ற மலர்களைச் சூடுவதையும், அணிகலன் அணிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை பல பாடல்கள் பறைசாற்றுகின்றன. தயிர் உறை ஊற்றும் வழக்கம் (குறு-167) கட்டுவிச்சியிடம் குறி கேட்டல் (குறு-26), பெண்கேட்டல் (குறு-146) போன்ற பழக்கங்கள் காணப்பட்டன. ஆய மகளிர் தலைவியுடன் கடல் நீராடி மலர்பறித்து மாலை தொடுத்து, வண்டல் அயர்ந்து விளையாடும் பழக்கமும் இருந்தது எனலாம்.

    பழந்தமிழ் மக்களின் வாழ்நிலைப் பண்பட்டு மேன்மை நிலையில் இருந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மெய்ப்பிக்கின்றன.

    “பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
    மண்புக்கு மாய்வது மண்”
    (குறள்-996)

    என்ற குறளுக்கேற்ப பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் மதிப்பினை அளந்தறிய உதவும் கருவியாகத் திகழ்கிறது. அத்தகைய பண்பாட்டு நிலையில் தனிச்சிறப்புடையவர்களாகவும், தன்னிகரற்றவர்களாகவும் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

    பார்வை நூல்கள்

    1. க.கோ. வேங்கடராமன், தமிழ் இலக்கிய வரலாறு, கலையக வெளியீடு, 275டீ5, பாலாஜி நகர், பரமத்திவேலூர், நமக்கல், நான்காம் பதிப்பு, சூன், 2006.
    2. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், 4-ம் பதிப்பு, 2009.
    3. முனைவர் அ.மா. பரிமணம், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், (பதி) கலித்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-வி, சிட்போ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, மூன்றாம் அச்சு.2007.
    4. பதிப்பக ஆசிரியர் குழு, திருக்குறள், சூப்பர் ஸ்டார் பதிப்பம், சென்னை.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி),
    விழுப்புரம்.
    revathikrish201990@gmail.com

     

    Share
    August 20, 2018
  • குறளின் கதிர்களாய்…(222)  

     

     

    உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்     

    தலகையா வைக்கப் படும்.                                                

           -திருக்குறள் -850(புல்லறிவாண்மை)

     

    புதுக் கவிதையில்…

     

    உயர்ந்தோர் பலரும்

    உலகில் உண்டென

    உணர்ந்து உரைத்ததைத்

    தன் சிற்றறிவால்

    இல்லையென இயம்புபவன்,

    மக்களிடையே நன்மகனென

    மதிக்கப்படாமல்

    பேயென இகழப்படுவான்…!

     

    குறும்பாவில்…

     

    உண்டென உலகறிஞர் உணர்ந்துரைத்ததை            

    இல்லையெனச் சொல்பவன் உலகில்  

    பொல்லாப் பேயென இகழப்படுவான்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    உலகினில் சான்றோர் ஆய்ந்தறிந்தே

         உண்டென உறுதியாய் உரைத்ததையே

    இலகுவா யெண்ணியே புல்லறிவால்

         இல்லை யென்று கூறுபவன்,

    பலனே யில்லாப் பதராகப்

         பயப்பட வைக்கும் பேயெனவே

    உலகோர் ஒன்றாய்த் தூற்றிவிடும்

         உதவாக் கரையாய் ஆவானே…!

     

    லிமரைக்கூ..

     

    உலகோராய்ந்தே அறிந்துரைத்தார் உண்டு,    

    அதையே இல்லையென்பானை இகழும் உலகம்               

    பேயவனென்றே கருத்தினில் கொண்டு…!

     

    கிராமிய பாணியில்…

     

    பேசாதே பேசாதே

    அறிவேயில்லாமப் பேசாதே..

     

    சொல்லாதே சொல்லாதே

    இல்லயிண்ணு சொல்லாதே,

    நல்லாப் படிச்சி அறிஞ்சவுங்க

    எல்லாந்தெரிஞ்சி உண்டுண்ணத

    இல்லயிண்ணு சொல்லாதே..

     

    அப்புடி

    அறிவில்லாம சொல்லுறவன

    அடிச்சித்தின்னும் பேயிண்ணுதான்

    ஒலகமெல்லாஞ் சொல்லிடுமே..

     

    அதால

    பேசாதே பேசாதே

    அறிவேயில்லாமப் பேசாதே…!

     

    செண்பக ஜெகதீசன்…

     

     

     

    Share
    August 20, 2018
  • பேஷ்! பேஷ்! சீரீஸ்

    சுருங்கச்சொல்வது நாகரீகமாகி விட்டது. ஒரு பக்கக்கதை, ஒரு வரி தத்துவம், படம் போட்டு ஃபிலிம் காட்டுவது, கேலிச்சித்திரம் வரைந்து மூக்கொடைப்பது எல்லாம் தற்கால வைர, முத்து, பவள ரத்னங்கள். ‘பேஷ்! பேஷ்!’ சீரீஸ் நாட்டுநடப்பு, நடவாத உடைப்பு, நடை, உடை, பாவனைகளில் புதைந்து இருக்கும் அவல நிலை, கோக்கு மாக்கு, செரிமான போக்கு, ‘கர்மம்’ என்று தலையில் அடித்திக்கொள்ளவேண்டிய மர்மம், ‘நாயை கடித்த மனிதன்’ போன்ற விந்தை செய்திகள் வகையறாவை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ‘பளிச்’ என்று பதிவு செய்யும். வாசகர்கள் இதை தந்தி போல் பாவித்து சிந்தனைப்பகிர்வு செய்து கொண்டால், துரித கதியில் கடுமா ( துரகம். சரி, குதிரை)

    போல் நானும் ஓடலாம். இல்லையெனில் திருமால் போல படுத்துக்கிடக்கலாம்.

    இன்னம்பூரான்

    18 08 2018

    பேஷ்! பேஷ்! [1]

    மதுரை நகராட்சி மன்றம் வருடாவருடம் தந்தி அனுப்பிய செலவுகளை பதிவு செய்து இருக்கிறது.

    2015-16 – ரூ.4,44,685/-

    2016-17 – ரூ.1.74,132/-

    பெரிசா சொல்றதுக்கு ஒன்றும் இல்லை.ஆனால், சார், தந்தி சேவையை தபால் துறை நிறுத்தியது ஜூலை,15, 2013 அன்று.

    பேஷ்! பேஷ்!

    இன்னம்பூரான்

    18 08 2018

    Share
    August 20, 2018
  • 2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது

    Posted on August 18, 2018

     

    1984 இல் ரஷ்ய விண்ணூர்திப் பயண விமானி 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++++++++

    சந்திரனைச் சுற்றுது
    இந்தியத் துணைக் கோள் !
    மந்திர மாய மில்லை !
    தந்திர உபாய மில்லை !
    சொந்த மான, நுட்ப மான
    இந்திய சக்தி !
    பிந்திப் போயினும்
    முந்தைய சக்தி ! யுக யுமாய்ச்
    சிந்தையில் செழித்த
    எந்தையும் தாயும்
    தந்திடும் சக்தி ! ஆதி
    அந்த மில்லாத சக்தி !
    இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்
    விந்தை யுக்தி ! பலர்
    நிந்தனை புரியினும்
    வந்தனை செய்வோம்
    இந்தியர் நாமெலாம் !
    உந்திப் பயணம் செய்து சுற்றிய
    சந்திரயான் வாழ்க !
    இந்தியக் கொடி ஓங்குக !
    எத்திசையும் புகழ் மணக்கும்
    அப்துல் கலாம் வாழ்க !
    2022 ஆண்டுக்குள் புதிய பயணத் திட்டம்
    இந்திய  அகில்வெளி விமானி ஓர்
    விண்ணூர்தி  இயக்குவார்.

    ++++++++++++++

    Space Capsule Gaganyaan to carry three Astronughts

    ++++++++++++++

    http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/

    http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm

    https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project

    +++++++++++++++

    2018 ஆகஸ்டு 15 இல் சுதந்திர தின விழாவன்று, இந்திய விண்வெளித் தேடல் மையம்  2022 ஆண்டுக்குள் மனிதர் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் ஒன்றை ஏவி, பூமியைத் தணிந்த சுற்றுப் பாதையில் சுற்றிவரும் என்று ஆரவாரத்துடன் அறிவித்தார்.  ஏழாண்டுகள் விருத்தியாகித் தயாரிக்கப்படும் அத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கு ரூ. 12,400 கோடி. [1.8 பில்லியன் டாலர்].   அதற்காக உருவாகும் புதிய விண்சிமிழின் பெயர் : ககநியான் [Gaganyaan].

    Cosmonaut Rakhesh Sharma

     

    2007 ஆண்டில் இத்திட்டப் பயிற்சிகள் ஆரம்பமாயின.  அதற்காக முதல் மாடல் 600 கி.கிராம் பளுவுள்ள குழுவினர் சுமக்கும்  சிமிழைத் துருவத் துணைக்கோள் ஏவும் [Polar Satellite Lauch Vehicle (PSLV Rocket] ஏவுகணை தூக்கிச் சென்றது.  அது பூமியைத் தணிவு சுற்றுப்பாதையில் சுற்றிவந்து, 12 நாட்கள் கடந்து மீண்டது.  அதைத் தொடர்ந்து 2018 இல் அடுத்த குழுச்சிமிழ் புவியின் பயங்கர ] மீள் நுழைவு விளிம்பில் [Re-entry] பதுகாப்பாக இயங்கி வெற்றிகரமாக மீண்டது.  இந்த நுட்பமான பயிற்சி இந்தியாவுக்கு வெப்பத் தவிர்ப்புக் கவச உலோகங்கள் விருத்திக்கும், மனித விமானிகள் பாதுகாப்பாய் மீள்வதற்கும் உறுதி அளித்தது.

    Space Capsule with Escape Tower

    “India will send into space — a man or a woman — by 2022, before that if possible,” Modi said in a marathon address at the Red Fort in New Delhi for the country’s Independence Day, August 15, 2018.

    மனித இயக்கு விண்சுற்றுச் சிமிழில் பயணம் செய்ய 200 பேர் சோதிக்கப் பட்டதில் 4 பேர் தேர்வானர்.   விண்வெளி விமானிகள் பயிற்சி பெறத் தற்போது ரஷ்ய விண்வெளிப் பேரவை வசதி பண்ணித் தருகிறது.  உலகிலே ரஷ்ய, அமெரிக்க நாடுகளுக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகளே இதுவரைப் புவியைச் சுற்றி வந்துள்ளார்.  இந்திய விண்வெளித் தேடல் மையம் செய்துள்ள திட்டப்படி, ஶ்ரீகரி கோட்டாவிலிருந்து ஏவுகணை [GSLV MK III ROCKET] மூவர் இயக்கும் ககநியான் விண்சிமிழைத் தூக்கிச் சென்று 16 நிமிடங்கள் கழித்து, பூமிக்கு மேல்  300 கி.மீ – 400 கி.மீ. [180 மைல் – 240 மைல்] உயரத்தில் சுற்றிவர விட்டுவிடும்.  சில நாட்கள் சுற்றி வந்து, விண்சிமிழ் வங்காள விரிகுடாவில் பாராசூட் குடைகள் தாங்கி விழும்.

    ++++++++++++++++

    +++++++++++++++++

    நிலவின்  நீர்மயக் கரும் படிவுகள் பல தளங்களில் பரவியுள்ளன. அவற்றிலிருந்து தெரிவ தென்ன ?  அப்பெலோ -15 & -17 பயணத்தில் அமெரிக்க விண்வெளி விமானிகள் கொண்டு வந்த நீரியல் மாதிரிகள் ஒருதடவை நேர்ந்தவை அல்ல.  நிலவின்  எரிமலைக் கரும்படிவு மாதிரிகள்  [Lunar Pyroclastics] யாவும், நிலவின் உட்தள நீர்மயச் செழுமையைக் காட்டுகின்றன.

    ரால்ஃப்  மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

    அப்பொலோ மாதிரிகள் நிலவின் உட்தளம் வெளியேற்றிய எரிமலைச் சாம்பல்கள்.  அவை ஆழ்ந்து சோதிக்கப் பட வேண்டியவை. ஆனால் சோதிக்கப் படாதவை.  ஏறக்குறைய மாதிரிகள் அனைத்தும் நீர்த்தடம் உள்ளதாகக் காட்டியுள்ளவை. ஆதலால் நிலவின் உட்தளம் ஈரமானது என்பது இப்போது ஆய்வு மூலம் அறியப் படுகிறது.

    ரால்ஃப்  மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

    நிலவின் உட்தளத்தில் நீர்மய இருப்புக்கு  மிகுந்த ஆதாரங்கள், எப்படியோ சந்திரனில் நீர் வெள்ளம் நீடித்துப் பிழைத்துள்ளது என்பதைக் காட்டுகின்றன.  மோதலில் தோன்றிய நிலவை, முரண்கோள், வால்மீன்கள் தாக்கி நீர் மேவி உடனே உறைந்து போயுள்ளது.  நிலவின் உட்பகுதியில் எப்படி நீர்வெள்ளம் புகுந்தது என்பதுதான் நமது இப்போதைய பெரிய கேள்வி !

    சூவாய் லி  : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்

    Evidence from ancient volcanic deposits suggests that lunar magma contained substantial amounts of water, bolstering the idea that the moon’s interior is water-rich.
    Credit: Olga Prilipko Huber

     

    நிலவின் குளிர்ந்த துருவங்களில் உள்ள  ஒளிமறைவுக் குழிகளில் நீர்ப்பனிக்கட்டிகளை விண்ணுளவிகள் படமெடுத்துள்ளன. ஆனால் நிலவின் மேற்தளத்தில் காணும் எரிமலைச் சாம்பல் படிவுகளை [Pyroclastic Deposits] எடுத்து ஆய்வு செய்வது எளிது. எதிர்கால விண்வெளி விமானிகட்கு பூமியிலிருந்து ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதைத் தவிர்க்கும் எந்த நீர்மயக் கண்டுபிடிப்பும் ஒருபெரும் முன்னடித் தடவைப்பே !  எமது ஆய்வு விளைவும் ஒரு புதிய மாற்று வழியைக் காட்டுகிறது.

    சூவாய் லி  : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்

     

    [Click to Enlarge]

    நிலவின் தளம் மீது நீர்மயப் பாறைகள் கண்டுபிடிப்பு

    நிலவின் குளிர்ந்த துருவப் பகுதிகளில் உள்ள ஒளிபுகா உச்சக்குளிர் ஆழக் குழிகளில் [Shackleton Crater in South Pole] பேரளவு நீர்ப்பனிக் கட்டிகள் இருப்பதை நாசா விண்ணுளவி [Lunar Reconnaissance Orbiter (LRO)], இந்திய விண்ணுளவி சந்திரியான் -1 ஆகிய இரண்டும் கண்டுபிடித்துள்ளன.  இந்த நீர்வளம் நிலவிலிருந்து திரவமாய் எடுக்கப்பட்டால் அம்முயற்சி சிக்கன முறையில் எதிர்கால அண்டவெளிப் பயணங்கள் தொடர்ந்து திட்டமிடப் பேருதவி புரியும்.

    அந்த உச்சக்குளிர் ஆழ்குழியில் எத்தனைத் டன்  நீர்ப்பனிக் கட்டிகள் உள்ளன என்று தெரியாது.  ஆழ்குழி முழுவதும் நிரம்ப வில்லை. சாக்கிள்டன் ஆழ்குழி 12 மைல் [20 கி.மீ.] விட்டம் உள்ளது, 3 மைல் [4.4 கி.மீ.] ஆழம் கொண்டது.  அது நிலவில் உள்ள மிகப்பெருங்குழி என்று அறியப் படுகிறது.  நிலவின் வட துருவ  ஆழ்குழிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் நீர்ப்பனிக் கட்டிகளில் சுமார் 600 மில்லியன் மெட்ரிக் டன் நீர் வெள்ளம் இருப்பதாகக் கணிக்கப் படுகிறது.  அந்த நீர்க் கொள்ளளவை மின்சாரம் மூலம் பிரித்தெழும் வாயுக்களைத் திரவ ஹைடிரஜன்/ திரவ ஆக்சிஜென் ஆக மாற்றினால் 2200 ஆண்டுகளுக்கு தினமொரு விண்வெளி மீட்சிக் கப்பலை [NASA Space Shuttle] ஏவிட முடியும்.  விண்வெளிப் பயணத்தின் போது விமானிகள் குடிக்க ஏராளமான நீர்ப்புட்டிப் பாட்டில்களை மிகுந்த செலவில் சுமந்து செல்ல வேண்டாம். விண்வெளி விமானிகள் தங்கவும், ராக்கெட் எரிசக்தியை மீண்டும் நிரப்பிக் கொளவும் நிலவுக் குடியிருப்புக் கூடாரங்கள் நிறுவ ஏதுவாக இருக்கும்.

     

    “நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை !  இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும்.  நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.  முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.

    டெட்லெஃப் கோஸ்சினி (ESA Chandrayaan -1 Project Scientist)

    “நிலாவில் நீர் இருப்பதாக நாசா உறுதி செய்திருக்கிறது.  விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”

    மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)


    “வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ?  நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது.  ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன.  அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C).  அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”

    டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.

    “நிலவில் கண்ட (LCROSS Spacecraft) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”

    கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)


    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)



    நிலவின் இருதுருவங்களிலும் பனிநீர் ஏரிகள் இருப்பது உறுதியானது

    2010 அக்டோபர் 22 தேதி மலர்ந்த ஆங்கில விஞ்ஞான வெளியீட்டில் (Journal of Science) பதிவாகியுள்ள ஆறு தனித்தனி அறிக்கைகள் நாசாவின் சோதனை விளைவுகளை மீளாய்வு செய்ததில் தென் துருவத்தில் இருக்கும் காபியஸ் ஆழ்குழியில்  (Cabeus Crater) மட்டும் பில்லியன் காலன் அளவு நீர் இருப்பதாக கணித்துள்ளன.  நாசா ரேடார் கருவி மூலம் இப்போது நிலவின் வட துருவ ஆழ்குழிகளிலும் பனிநீர் ஏரிகள் இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளது.  ஓராண்டுக்கு முன் (அக்டோபர் 9, 2009) நாசா லகிராஸ் விண்ணுளவி (LCROSS – Lunar Crater Observation & Sensing Satellite) நிலவில் மோத விடப்பட்டு பரிதி ஒளிபுகாத ஆழ்குழிகளில் பனிநீர் ஏரிகளும் மற்ற உலோக மூலக்கூறுகளும் இருப்பது உறுதி செய்யப் பட்டது.  முதல் சோதிப்பில் நாசா, மோதலில் எழுந்த தூசி, துணுக்குகளில் நீரோடு மற்றும் சிறிதளவு ஹைடிரஜன், கார்பன் மானாக்சைடு, அம்மோனியா, மீதேன், மெர்குரி, கந்தகம், வெள்ளி, மெக்னீசியம், சோடியம் ஆகிய உலோகக் கூட்டுகளையும் கண்டுள்ளது.  மோதலில் வெளியேறிய தூசி, துணுக்குகளில் குறிப்பாக பனிநீர் மட்டும் 5.6% பகுதி என்று நாசா அறிவித்துள்ளது.  2009 அக்டோபரில் வெளியான முதல் அறிவிப்பில் நாசா 200 பவுண்டு நீர் வெளியேறியது என்று கூறியது.  இப்போது (2010 அக்டோபர்) வந்த விஞ்ஞான வெளியீட்டில் நாசா துல்லியமாக 341 பவுண்டு என்று தன் அளவை மிகைப் படுத்தியுள்ளது.

    நிலவில் ஓரளவு நீர் இருப்பதாக வந்த முதல் நாசா அறிக்கை இப்போது நிலவில் உறைந்து கிடக்கும் நீர் ஏரிகள் பற்பல இருப்பாதாக மிகைப்படுத்தி, விஞ்ஞான வெளியீட்டில் ஆறு அறிக்கைகள் புதிய தகவலை எழுதியுள்ளன. இந்த அறிவிப்பு நிலவுக்குப் படையெடுக்கும் பல நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, ஜப்பான், இந்தியா) மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சி.  1960 -1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் அமெரிக்க அபொல்லோ விமானிகளுக்கு விண்கப்பலில் ஒரு பவுண்டு நீர் சுமந்து செல்ல 50,000 டாலர் செலவானது.  இப்போது நீர்ச் சுமக்கும் நிர்ப்பந்தம், பணச் செலவு அதிகமில்லை என்பதாகி விட்டது ! ஹைடிரஜன், ஹீலிய-3 எரிவாயு நிலவில் கிடைப்பதால் விண்கப்பலுக்கு எரிசக்தியும் கிடைக்கிறது.  அதாவது செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டுகளில் செல்லும் உலக நாடுகளுக்கு நிலவு ஓர் ஒப்பற்ற ஓய்வுத் தளமாக இருக்கக் எல்லாத் தகுதியும் பெறுகிறது.  1960 -1970 ஆண்டுகளில் உலவிய அமெரிக்க விமானிகள் சுகத் தளங்களில் மட்டும் ஆய்வு செய்து, வெகு பயன் அளிக்கும் ஆழ்குழிகளை ஆராயத் தவறி விட்டனர் !


    2009 ஆகஸ்டில் நிலவுக்குப் பயணம் செய்த சந்திரயான் -1 இந்திய விண்ணுளவியில் அமைக்கப் பட்ட “சாரா” கருவி (SARA -Sub-keV Atom Reflecting Analyzer) நிலவுத் தளத்தில் மனித வசிப்புக்குத் தேவையான நீரிருப்பதைக் காட்ட வழி வகுத்துள்ளது.

    நிலவின் துருவ ஆழ்குழிகளில் நீர் எப்படி உண்டானது ?

    சமீபத்தில்தான் வானியல் விஞ்ஞானிகள் நிலவில் எப்படி நீர் தோன்றியது என்பதற்கு விளக்கம் அறிவித்துள்ளார்.  சந்திரன் ஒருவித “உறிஞ்சு சேமிப்பியாக” (Sponge) இயங்குகிறது. நிலவின் மேற்தளம் “ரிகோலித்” என்னும் “தூசிப் பரல்கள்” (Dust Grains Called Regolith) தாறுமாறாக மேவிய தளப்பகுதி.  ரிகோலித் பரல்கள் பொதுவாக பரிதியிலிருந்து வெளியேறும் மின்னேற்றத் துகள்களை (Electrically Charged Particles) உறிஞ்சும்.  அந்தத் துகள்கள் ஏற்கனவே நிலவுத் தூசியில் (Dust & Voila) கலந்துள்ள ஆக்சிஜனோடு இணைந்து நீர் உண்டாக்குகின்றன.  தூசிப் பரல்களில் பரிதியின் புரோட்டான்கள் பிடிபட்டு ரிகோலித்தில் உள்ள ஆக்சிஜனோடு இணைத்து ஹைடிராக்சியல் (HO) மற்றும் நீர் (H2O) உருவாகின்றன.

    சந்திரயான் -1 இல் அமைக்கப் பட்ட சாரா கருவி நமது பரிதி மண்டலக் கோள்களைச் சீராக அறிய உதவுகிறது.  பரிதியி லிருந்து வரும் புரோட்டான்கள், விண்வெளியில் திரியும் எலக்டிரான்களுடன் சேர்ந்து ஹைடிரஜன் வாயுவாக மாறுகின்றன.  அதை நிலவின் ரிகோலித் பரல்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன.

    நிலவில் இப்படித்தான் ஹைடிரஜன், ஹைடிராக்சியல், நீர் ஆகியவை உருவாகின்றன.  சாரா கருவி மூலம் நிலவின் மேற்தளத்தில் உள்ள மூலகங்களையும், மூலக் கூறுகளையும் நேரிடையாக அறிய முடிகிறது.  சந்திரயான் -1 இல் பணிசெய்த சாரா கருவி அமைப்பில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு (சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா) உள்ளது.  சமீபத்தில் நாசாவின் சந்திரயான் ரேடார் கருவி நிலவின் வடதுருவக் குழிகளில் குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிநீர்க் கட்டி இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளது.

    வால்மீன்கள் நிலவில் மோதி நீரைக் கொட்டி இருக்கலாம் என்னும் ஒரு கோட்பாடு இருப்பினும், தற்போது விஞ்ஞானிகள் நிலவின் நீர் “உள்நாட்டுச் சரக்கு” தவிர புற அண்டப் பொழிவில்லை என்று ஊகிக்கிறார்.  வானியல் ஆய்வாளி டாக்டர் யாங் லியூ இதைத்தான் மேலும் வலியுறுத்துகிறார் : “வால்மீன் போன்ற பிற அண்டங்கள் நீரை வாரி நிலவில் இறைத்திருந்தால் இப்போது காணப்படும் நிலவின் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எளிதில் ஆவியாகாத மூலகங்கள் (Less Volatile Elements) ஏன் மிகவும் சுருங்கிப் (Strongly Depleted) போயிருக்க வேண்டும் ?” என்று கேட்கிறார்.

    காபியஸ் போன்ற நிரந்தரமாய் பரிதி ஒளி பாயாத ஆழ்குழிகளின் உஷ்ணம் – 387  F (-233 C).  இந்தக் கடுங்குளிரில் நீர் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேர்ந்து திண்ணிய பனிப்பாறை யாகப் படிந்துள்ளது. சூரிய மண்டலத்தில் நிலவின் ஒளிமறைவுக் குழிகள் கடுங்குளிர்ப் பகுதிகளாக மாறிவிட்டன !  இந்தப் படுபாதாளக் பனிப் பாறைகளை இருட்டில் உருக்கி நீரை மேலேற்றிக் கொண்டு வருவது 21 நூற்றாண்டின் பெரும் சவாலான அசுர சாதனையாக இருக்கும் !

    வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தி உள்ளது

    2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது.  லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது.  உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலைகளின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.


    அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது.  லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது.  நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A).  25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.

    இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து செய்த நிலவுச் சோதனை

    2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !  அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

    அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !

    நிலவு பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்

    நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே !  அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும்.  இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை :  பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி !  அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி !  அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத்துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி !  அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.  அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் !  இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !

    தகவல்:

    Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites

    1. Indian Space Program By: Wikipedia

    2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html(இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

    3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html(இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

    4. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

    5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

    6 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

    7.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

    8.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

    9  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

    10. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

    11 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

    12 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

    13 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

    14 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

    15 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

    16. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

    17 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

    18 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)

    19. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)

    20.  Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)

    21. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)

    22  Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)

    23. Scientific American :  LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)

    24 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)

    25.  National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)

    26.  International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)

    27 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)

    28 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)

    29 https://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)

    30. ESA News – Hydrogen Offers a New Way to Study the Moon, Detlef Koschny, ESA Chandrayaan -1 Project Scientist (October 16, 2009)

    31 Space.com – Moon Craters Could Be Coldest Place in Solar System By Andrea Thompson (September 18, 2010)

    32. Daily Mail – Scientists Find Even More Evidence of Water on the Moon (July 22, 2010)

    33. Space.com – Tons of Water Ice Found on Moon’s North Pole By Tarq Malik (March 1, 2010)

    34. Space.com – Moon Crater Has More Water than Parts of Earth By Mike Wall (October 21. 2010)

    35. Daily Galaxy – Craters of the Moon – Huge Reservoirs Discovered By Casey Kazan & Rebecca Sato (October 25, 2010)

    36. https://www.technologyreview.com/s/428030/soviet-moon-lander-discovered-water-on-the-moon-in-1976/  [May 30, 2012]

    37.  https://www.theverge.com/2017/7/24/16020132/moon-water-rock-samples-mining-missions  [July 24, 2017]

    38.  https://www.sciencedaily.com/releases/2017/07/170724114125.htm  [July 24, 2017]

    39.  https://www.scientificamerican.com/article/scientists-spot-water-rich-rocks-on-moon/?WT.mc_id=SA_DD_20170725  [July 24, 2017]

    40. http://earthmysterynews.com/2017/07/27/scientists-spot-water-rich-rocks-on-moon/  [July 27, 2017]

    41. https://en.wikipedia.org/wiki/Indian_Space_Research_Organisation[Augst 18, 2018]

    42. http://www.spacedaily.com/reports/India_to_send_manned_mission_to_space_by_2022_Modi_999.html  [August 15, 2018]

    43..  https://indianexpress.com/article/explained/simply-put-how-to-send-an-indian-into-space-isro-maned-mission-5308964/  [August 16, 2018]

    44. https://en.wikipedia.org/wiki/Indian_Human_Spaceflight_Programme  [Augut 18, 2018]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (August 18, 2018) [R-1]

    Share
    August 20, 2018
←Previous Page
1 … 362 363 364 365 366 … 1,141
Next Page→

வல்லமை

  • Blog
  • About
  • FAQs
  • Authors
  • Events
  • Shop
  • Patterns
  • Themes

Twenty Twenty-Five

Designed with WordPress