Blog

  • மதுரையில் ஆட்டோக்காரர்கள் படுத்தும் பாடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இரண்டு வாரங்களுக்கு முன்னால் மதுரைக்குச் சென்றிருந்தேன்.  தமிழ்நாட்டில் எங்கிருந்து மதுரைக்குச் சென்றாலும் பேருந்திலோ ரயிலிலோதான் செல்வோம்.  அங்கும் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் ஆட்டோவில்தான் போவது வழக்கம்.  இதற்கு முன் எத்தனையோ முறை மதுரைக்குச் சென்றிருந்தாலும் அங்கு ஓடும் ஆட்டோக்களில் மீட்டர் இல்லை என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டிருக்கிறேன்.  மதுரையில் பேருந்திலிருந்து கோரிப்பாளையம் திறுத்தத்தில் இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஓட்டலுக்குப் போகச் சொன்னோம்.  அறுபது ரூபாய் வேண்டும் என்றார் ஆட்டோ டிரைவர்.  “ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவா அறுபது ரூபாய் என்று?” நான் கேட்டேன்.  “ஆமாம்” என்றார் டிரைவர்.  அதன் பிறகு மீட்டர் போடச் சொல்லலாமே என்ற யோசனை எனக்கு வந்தது.  பெரிய உத்தியைக் கண்டுபிடித்துவிட்டதாக நான் நினைத்துக்கொண்டிருந்தபோது “மதுரையில் ஆட்டோக்களுக்கு மீட்டரே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று ஆட்டோ டிரைவர் கேட்டபோதுதான் மீட்டர் இருக்கும் இடம் வெறுமையாகக் காட்சியளித்ததைக் கவனித்தேன்.  “ஏன் மதுரையில் ஆடோக்களுக்கு மீட்டர் வைப்பதில்லை என்று நான் அந்த டிரைவரிடம் கேட்டு முடிப்பதற்குள் இன்னொரு சவாரியை ஏற்றிக்கொண்டு டிரைவர் சென்றுவிட்டார்.  அடுத்து வந்த ஆட்டோ டிரைவரிடமும் மீட்டர் இல்லை.  இவர்களை மீட்டர் போட வைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட நாங்கள் அவர் ஐம்பது ரூபாய் கேட்டதும் உடனேயே அவருடைய ஆட்டோவில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.  மறு நாள், அதற்கடுத்த நாள் என்று மதுரையில் இருந்த இரண்டு நாட்களிலும் எங்கு சென்றாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் இஷ்டப்படி வாடகை கேட்டார்கள்.

    மைசூரிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் எங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.  ஒரு முறை வீட்டிலிருந்து ஒரு இடத்திற்குச் சென்றபோது ஆட்டோ டிரைவர் நாற்பது ரூபாய் கேட்டார்.  திரும்பிவந்தபோது அதே வழியாக வந்தும் அந்த ஆட்டோ டிரைவர் ஐம்பது ரூபாய் கேட்டார்.  இருவரும் மீட்டர் போட்டிருந்தார்கள்.  அப்படியும் இவ்வளவு வித்தியாசம்!  ஐம்பது ரூபாய் கேட்ட டிரைவரிடம், “இதே தூரத்திற்குச் சவாரிபோக இன்னொருவர் இன்று காலையில் நாற்பது ரூபாய்தானே கேட்டார்.  நீங்கள் மட்டும் ஏன் ஐம்பது ரூபாய் கேட்கிறீர்கள்?  உங்கள் ஆட்டோ நம்பரை குறித்துக்கொண்டு புகார் கொடுக்கப் போகிறேன்” என்றேன்.  அவருக்குப் பயம் வந்துவிட்டது.  நாற்பது ரூபாயே போதும் என்று கூறி வாங்கிச் சென்றுவிட்டார்.

    இப்படிச் சரியான மீட்டர் வைத்துக்கொள்ளாத, ஏமாற்றும் குணம் கொண்ட ஆட்டோ டிரைவர்களோடு மல்லாட வேண்டிய சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் மைசூர் ஆட்டோ டிரைவர்கள் எவ்வளவோ நியாயமானவர்கள்; அது மட்டுமல்ல மைசூர் ஆட்டோக்கள் எல்லாவற்றிலும் மீட்டர் பொருத்தியிருப்பார்கள்.  இல்லையென்றால் அது சட்டப்படி குற்றம்.  சில சமயங்களில் ஓடாத மீட்டர் வைத்திருப்போர் இருப்பார்கள்.  அவர்களும் போலீஸ்காரர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களின் ஆட்டோவில் ஏறி அமர்ந்த பிறகு அவர்கள் ஆட்டோவின் மீட்டர் வேலைசெய்யவில்லை என்பதை அறிந்து ஆட்டோவிலிருந்து இறங்கிவிடுகிறோம் என்று கூறினால் நியாயமான ஒரு தொகையாகக் கேட்பார்கள்.  சரி போகட்டும் என்று விட்டுவிட்டு நாங்களும் பயணத்தைத் தொடருவோம்.

    ஒரு முறை மிக நியாயமான ஒரு ஆட்டோ டிரைவர் எங்களுக்குக் கிடைத்தார்.  ஆட்டோ டிரைவர்களில் இப்படிப்பட்டவர்கள்கூட இருக்கிறார்களா என்று அதிசயித்து அவருக்கு எப்போதையும்விட அதிக டிப்ஸ் கொடுத்தோம்.

    கர்நாடகாவில் எல்லா ஊர்களிலும் ஆட்டோக்களில் மீட்டர் உண்டு.  இதற்கு விதிவிலக்கே இல்லை.  மைசூரில் மத்திய பேருந்து நிலையத்திலும் ரயில்வே ஸ்டேஷனிலும் pre-paid auto வசதி உண்டு.  கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஒருவர் இருபத்தி நான்கு மணி நேரமும் பயணிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களுக்கு உதவுவதற்கு இருப்பார்.  பயணிகள் வரிசையில் நின்று தாங்கள் போக வேண்டிய இடத்தை கூறினால் அதற்குரிய சரியான கட்டணத்தை ஒரு கம்யூட்டர் ரசீதில் எழுதிக் கொடுப்பார்.  அதில் எங்களை ஏற்றிச் செல்லவிருக்கும் ஆட்டோவின் பதிவு எண்ணும் இருக்கும். அதை நம்மிடமே வைத்துக்கொள்ளுமாறு ஆலோசனையும் கூறப்பட்டிருக்கும்.  ரசீதில் கூறப்பட்டிருக்கும் தொகையை ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தால் போதும்.  ஆட்டோக்காரர்களும் வரிசையில் நிற்பார்கள்.  தங்கள் முறை வரும்போது அவர்களுக்குரிய பயணியை ஏற்றிக்கொண்டு செல்வார்கள். இப்படி முறைப்படுத்துபவர்கள் இல்லாத இடத்திலிருந்து ஆட்டோ எடுத்தால் இதே தூரத்திற்கு நூறு ரூபாய் கேட்பார்கள்.  ஆனால் பேருந்து நிலையத்திலிருந்தும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்தும் வரும் ஆட்டோ டிரைவர்களுக்கு இதே தூரத்திற்கு 75 ரூபாய்தான் கொடுக்க வேண்டும்.  எனக்குக்கூட எப்படியோ இருக்கும்,  பேருந்து நிலையத்திலும் ரயில்வே ஸ்டேஷனிலும் காத்து நிற்பவர்கள் ஏன் குறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று.  கர்நாடகாவில் குறைந்த கட்டணம் முப்பது ரூபாய்; தமிழ்நாட்டில் குறைந்த கட்டணம் ஐம்பது ரூபாய் என்கிறார்கள்.  மேலும் கர்நாடகாவில் ஒவ்வொரு ஆட்டோவிலும் டிரைவரின் புகைப்படம், அவரின் உரிம எண், அவருடைய முகவரி, அந்த ஆட்டோவுக்கே உரிய எண் ஆகியவை இருக்கும்.

    மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது.  பக்கத்துப் பக்கத்து மாநிலங்களான கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் ஏன் இத்தனை வித்தியாசம்?  தமிழ்நாட்டில் ஆட்டோக்களில் ஏன் மீட்டர் இல்லை என்று பலரிடம் விசாரித்தும் யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை.  பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது ஷேர் ஆட்டோவில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு – எங்கிருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் – பத்து ரூபாய்க்குச் செல்லலாம் என்றார். நான் கேட்ட கேள்விக்கு ஒரு பேராசிரியர் கூறும் பதிலைப் பாருங்கள்.  நான்  கேட்ட கேள்விக்கு அவருக்குப் பதில் தெரியவில்லையா அல்லது உண்மையான பதில் அவ்வளவு நன்றாக இருக்காது என்று சொல்லவில்லையா?  ஒரு பேராசிரியருக்கு கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறத் தெரியவில்லை என்று நான் நினைக்கும் அளவுக்கு ஏன் அப்படி நடந்துகொண்டார்?

    தமிழ்நாட்டைச் சேராத ஒருவர் சொன்னது: ஆட்டோக்கள் பல அரசியல்வாதிகளிடம் இருக்கின்றன; அவர்கள் வைத்ததுதான் சட்டம்.  அவர்கள் ஆட்டோக்களில் மீட்டர் வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டார்கள் என்றும் ஆட்டோ டிரைவர்கள் முடிந்த அளவு பயணிகளிடம் வசூல் செய்துகொள்ளலாம் என்றும் அரசியல்வாதிகளுக்குரிய ‘பங்கை’க் கட்டிவிட்டால் போதும் என்றும் சொன்னார்.  தமிழ்நாடு ஊழலுக்குப் பெயர்போனது என்பது எல்லோருக்கும் தெரியும்.  இருந்தாலும் மத்தியதர மக்களும் ஏழைகளும் பயன்படுத்தும் ஆட்டோக்களுக்கு மீட்டர் வைத்து ஒரு நியாயமான கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டுவரக் கூடாதா?  இதிலுமா அவர்கள் கையை வைக்க வேண்டும்?  தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லையா?

    உண்மையான காரணம் என்ன அல்லது இதுதான் உண்மையான காரணமா என்று யாராவது எனக்கு விளக்கினால் நன்றாக இருக்கும்.

    Share
  • நாஞ்சில் நாடனின் மேற்கோள் ஆளுமை

    -க. குலோத்துங்கன்

    கட்டுரை வரைவதனைக் கலையாக வளர்த்தனர் மேலை நாட்டினர். அடிசன் ஸ்டீல்  ஹாஸ்லிட், லாம்ப் போன்றோர்கள் சான்றாவர். தமிழில் கலைபயில தெளிவும், கட்டுக்கோப்பும் செறிவும் மிக்க கட்டுரைகளைப் பலர் வடித்தனர். மறைமலையடிகள் (சிந்தனைக் கட்டுரைகள், அறிவுக்கொத்து) திரு.வி.க (தமிழ்ச்சோலை) பண்டிதமணி (உரைநடைக் கோவை) டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் (எந்தச் சிலம்பு), சி.பா (கட்டுரை வளம்) கி.வா.ஜ (கன்னித் தமிழ், முல்லை), கல்கி, புதுமைப்பித்தன், அண்ணா போன்றோர்கள் கட்டுரைத் தமிழ் வளர்த்தவர்களாவர். இவர்களின் வரிசையில் நாஞ்சில் நாடன் பதினோரு கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். கட்டுரை இலக்கியம் மூலம் தன் சிந்தனைகளைச் சூழலோடு பொருத்திப் புரிந்துகொள்ளச் செய்கிறார். இவரின் பனுவல் போற்றுதும் (தமிழினி பதிப்பகம்- டிசம்பர் 2011) என்ற கட்டுரை நூல் இங்கு ஆய்வுப் பொருண்மையாகக் கையாளப்பட்டுள்ளது.

    நாஞ்சில் நாடன் தம் கட்டுரைகள்வழிப் பல சமூகக் கருத்துக்களையும், மொழி சார்ந்த தீர்வுகளையும் அறியப்படாத பல படைப்பாளிகளை அறிமுகம் செய்வதையும் இளைய படைப்புலக வாசகர்களை தேடச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு எழுதிவருகிறார். பனுவல் போற்றுதும் என்ற  கட்டுரை நூலில் இருபத்தியோரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள்வழிப் பல்வேறு நூல்களை அறிமுகம் செய்கின்றார். பழந்தமிழ் இலக்கியம் முதல் புதுக்கவிதை வரையிலான பாடல்களை மேற்கோளாகவும் அறிமுகப்படுத்தியுள்ளதைக் காணலாம்.

    சங்க இலக்கியத் தாவரங்கள் – தமிழினி, டிசம்பர் 2010.
    தமிழரும் தாவரமும்  – தமிழினி, டிசம்பர் 2010.
    எனக்கும் என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு – சொல்வனம், ஜீலை 2010.
    செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல்திரட்டு – சொல்வனம், ஜீலை 2010.
    செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப – தமிழினி, டிசம்பர் 2010.
    குணங்குடியார் பாடற்கோவை – சொல்வனம், அக்டோபர் 2010.
    நெடுஞ்சாலை – தமிழினி, டிசம்பர் 2010.
    காப்பிய இமயம் – தமிழினி, செப்டம்பர் 2010.
    நினைவுகளின் சுவட்டில் – சொல்வனம், டிசம்பர் 2010.
    சீதக் குளிர் ஆடி – ‘இரவு’ நூல் டிசம்பர் 2010.
    ஐம்பதாண்டுத் தமிழ்நாவல் – தில்லித் தமிழ்ச்சங்கம் நடத்திய நவீனத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, டிசம்பர் 2010.
    செந்தமிழ்க் காப்பியங்கள் – தமிழினி, ஆகஸ்டு 2011.
    மொழி என்னும் அரண்  – உயிர் எழுத்து, செப்டம்பர் 2011.
    கருப்பு எனப்படுவது – தமிழினி, நவம்பர் 2011.
    துருப்பிடித்த வேலைத் தூர எறி! – விருதுநகரில் 16.09.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில மாநாட்டில் ஆற்றிய துவக்கவுரை.
    திகம்பரம் எனில் அம்மணம் – திகம்பரம் கட்டுரைத் தொகுப்பின் முன்னுரை, டிசம்பர் 2010.
    சூரல் பம்பிய சிறு கான் யாறே – சொல்வனம், மார்ச் 2011.
    சாகித்ய அகாதமி விருது ஏற்புரை –
    நானும் விகடனும் – ஆனந்த விகடன், ஜீன் 2011.
    சிறியன சிந்தியாதான் – சிற்பி பவள விழா மலர், ஜீலை 2011.
    சிறுமீன் சினையினும் நுண்ணிது – ‘மரம்’ நூல் தொகுப்பு, டிசம்பர் 2011.
    மேற்காணும் கட்டுரையின் அறிமுகங்களைக் காண்போம்.

    சங்க  இலக்கியத் தாவரங்கள் எனும் கட்டுரையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், வெளியீட்டு எண்.73, 1987- இல் வெளியிட்ட சங்க இலக்கியத் தாவரங்கள் என்ற நூலை அறிமுகம் செய்துள்ளார். இந்நூல் 23 ஆண்டுகளாக மறுபதிப்பு செய்யாமல் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நூலில் சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுவதாகவும், இவை 150 தாவரங்களையே குறிப்பிடுவதாகவும் இவற்றின் இலக்கியப் பெயர், வேறு பெயர், உலக வழக்குப் பெயர், தாவரக் குடும்பம், தாவரப் பெயர், ஆங்கிலப் பெயர் எனும் அனைத்துத் தகவல்களும் தருவதாக குறிப்பிடுகிறார். (முனைவர் கு. சீநிவாசன், தொல் அறிவியல்துறை).

    தமிழரும் தாவரமும் என்ற கட்டுரையில் பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத்தலைவர், எழுதிய பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2007இல் வெளியிட்ட தமிழரும் தாவரமும் என்ற நூலை அறிமுகம் செய்துள்ளார். இந்நூலில் தாவரங்களைத் தொல்காப்பியத் தாவரங்கள், சங்ககாலத் தாவரங்கள், சங்க மருவியகாலத் தாவரங்கள், பக்தி காலம் கி.பி.600 முதல் கி.பி.1750 வரை, நாயக்கர்காலம் எனக் குறிப்பிடுள்ள தாவரங்கள் என விரிவான அட்டவணை இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

    செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு எனும் கட்டுரையில் திரு.வேங்கடராம சாஸ்திரிகள் தொகுத்த செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள், (2002) ஸ்ரீ ஆனந்த நிகேதன், ஸ்ரீ ஞானானந்த தபோவனம், விழுப்புரம் மாவட்டம் என்ற நூலை அறிமுகம் செய்கிறார். இந்நூலில் ஆவுடையக்காள் வசதியான குடும்பத்து, செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் பிறந்தவர். பாவாடை கட்டத் தெரியாத வயதில் கல்யாணம் ஆயிற்று, மஞ்சள் கயிற்றின் மணம் மாறுமுன் விதவை ஆகிறார். ஊர் வம்பை எதிர்த்து நின்று கல்வி கற்றார். பருவம் அடைந்ததும் தலை முண்டிதம் செய்யப்பட்டு வெள்ளாடை அணிந்து, கைம்மை நோன்பு. ஸ்ரீ வெங்கடேச ஐயாவாள்  ஆசியால் ஞானம் பெறுகிறார் என ஆவுடையக்காளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப எனும் கட்டுரையில் ‘மீன்கள் அன்றும் இன்றும்’ முனைவர் ச. பரிமளா, தமிழ்ப் பல்கலைக்கழகம் (1991) என்ற நூலை அறிமுகம் செய்கிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் மீன் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவராவார். மற்றொரு நூலான ‘சங்க நூல்களில் மீன்கள்’ எனும் பி.எல்.சாமி எழுதிய நூலினையும் அறிமுகப்படுத்துகிறார், மேலும் பள்ளு இலக்கியங்களில் குறிப்பிட்டிருக்கும் மீன்களின் எண்ணிக்கைப் பட்டியலையும் தருகிறார்.

    தென்காசைப் பள்ளு – 26
    பொய்கைப் பள்ளு -10
    பள்ளுப் பிரபந்தம் – 11
    குருகூர்ப் பள்ளு – 22
    கண்ணுடையம்மன் பள்ளு – 8
    செண்பகராமன் பள்ளு – 1
    திருவாரூர்ப் பள்ளு – 20
    முக்கூடற் பள்ளு -38
    வையாபுரிப் பள்ளு -34
    திருமலை முருகன் பள்ளு -34
    சிவசயிலப் பள்ளு -38
    தண்டிகைக் கனகராயன் பள்ளு -37
    கதிரை மலைப் பள்ளு -36
    பறாளை விநாயகர் பள்ளு -68
    கட்டி மகிபன் பள்ளு -28
    என தமது ஆய்வின் முடிவுகளைக் கூறுகிறார் நாஞ்சில் நாடன்.

    குணங்குடியார் பாடற்கோவை எனும் கட்டுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிச் சிவகங்கை அகரம் வெளியீடாக 1980–ஆம் ஆண்டு வெளிவந்த ‘குணங்குடியார் பாடற்கோவை’ என்ற நூலை அறிமுகம் செய்கிறார். இப்பதிவிற்குப் பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் சிறப்புப் பதிப்பும், குறிப்பும் அளித்துள்ளதையும் பதிவு செய்கிறார். அடுத்த கட்டுரையான நெடுஞ்சாலையில் கண்மணி குணசேகரன் எழுதிய ‘நெடுஞ்சாலை’ நாவலை அறிமுகம் செய்கிறார். கண்மணியின் முதல் நாவல் ‘அஞ்சலை’ தமிழ்ப் பெண்களின் அவலங்கள் பேசும் நாவலாகும். இரண்டாவது நாவல் கோரை ஆகும். மூன்றாவது நாவலான ‘நெடுஞ்சாலை’ நாவலைக் குறிப்பிடுகிறார். இந்நாவலில் அரசு போக்குவரத்துக் கழகம் ஒன்றில் தற்காலிகப் பணியாற்றும் மூன்று இளைஞர்களின் பாடுகளை சித்தரிக்கிறார் என்றும் கண்மணி எழுத்தில் எந்தத் துன்பத்திலும் இக்கட்டிலும் குபுக்கென்று கொப்பளித்து வரும் நகைச்சுவை உண்டு என்பதையும் குறிப்பிடுகிறார். காப்பிய இமயம் என்ற கட்டுரையில் வால்மீகி இராமாயணம், கம்பரின் இராமாவதாரம், துளசிதாசரின் இராமசரித மானசம், அத்யாத்ம இராமாயணம், காளிதாசரின் ரகுவம்சம் ஆகிய நூல்களை மூலமொழியில் கற்றுத் தேர்ந்து பேரறிஞர் என்.வி. நாயுடு என அறியப்பட்டவர் அவ்வப்போது எழுதி வைத்த கட்டுரைகளும் குறிப்புகளுமே ‘காப்பிய இமயம்’ எனும் நூலாகும். அவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்துப் பதிப்பித்தார்கள் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி, அருள்நிதி, இராம. இருதப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடாக 2000ஆம் ஆண்டு வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார். மேலும் வ.வே.சு.ஐயரின் ‘Kamban – A Study’ எனும் நூல் உலக அரங்கில் கம்பராமாயணத்தைப் பெருமைக்குரியதாக நிறுவும் முயற்சியில் முனைந்ததைப் போல, ‘காப்பிய இமயம்’ எனுமிந்த நூலும் கம்பராமயணத்தைக் காப்பியங்களில் உன்னதமானது என நிறுவ முயல்வதாகக் கூறுகிறார். மேலும் இக்கட்டுரைத் தொகுப்பு நூல் முழுவதும் பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்துகிறார். பாதசாரியின் மூன்றாவது புத்தகம் அன்பின் வழியது உயிர் நிழல், வெங்கட்சாமிநாதனின் நினைவுகளின் சுவட்டில், கலாப்பிரியாவின் ‘தன் வரலாற்றுக் கட்டுரைகள்’ ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ என நினைவுகளின் சுவட்டில் என்ற கட்டுரையில் அறிமுகம் செய்கிறார். ஐம்பதாண்டு காலத்தமிழ் நாவல் எனும் கட்டுரையில் நாவல் இலக்கியத்தில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான காலகட்ட நாவல்களை அறிமுகப்படுத்துகிறார். தமிழில் நாவல்களானது 1890 முதல் 1925 வரை 1089 நாவல்கள் எழுதப்பட்டன என்ற தகவலையும் கூறுகிறார். இதில் கல்கி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, அகிலன், அநுத்தமா, லக்ஷ்மி, ஜெயகாந்தன், க.நா.சு, ராகம் கிருஷ்ணன், பூமா வாசுகீ, கண்மணி குணசேகரன், எஸ்.செந்தில் குமார், பாமா, சு. வெங்கடேசன், பா.வெங்கடேசன், தி. ஜானகிராமன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், அசோகமித்திரன்,  சா. கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, நீல.பத்மநாபன், ஆ.மாதவன், நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், ஐசக் அருமைநாதன், பொன்னீலன், தோப்பில் முகம்மது மீரான், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், பா. விசாலம், ஜோடி குரூஸ், பூமணி, கோணங்கி, P.A. கிருஷ்ணன், கு. அழகிரிசாமி, டி. செல்வராஜ், கு. சின்னப்ப பாரதி, பெருமாள் முருகன், ராஜ்கெளதமன், யுவன், சிவகாமி, இமயம், தமிழ்ச்செல்வி, சல்மா எனப் பல்வேறு ஆளுமைகளையும் அவர்களின் படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறார். 1875 முதல் 2015 வரையிலான 140 ஆண்டுகால நாவல் வரிசையினைப் பட்டியலிடும் பணியைப் பற்றியும் இன்னும் பல நாவல்கள் நம் மொழியில் எழுதப்படுமா? என்ற வினாவுடனும் கட்டுரையினை முடிக்கின்றனர்.

    இவ்வாறு ‘பனுவல் போற்றதும்’ என்ற கட்டுரை நூலில் பல்வேறு அரிய படைப்புகளையும், ஆராய்ச்சி நூல்களையும் மேற்கோள்களாக நமக்கு அறிமுகம் செய்வதுடன் அந்நூல்கள் எங்கு எவரால் பதிப்பிக்கப்பட்டன என்பது குறித்தும் பதிவு செய்துள்ளார். இன்னும் பல நூல்களையும் இக்கட்டுரைத் தொகுப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    தமது கட்டுரைகள் அனைத்திலும் மேற்கோள்களை மிகுதியாக கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    *****

    துணைநூல்:
    பனுவல் போற்றுதும் – நாஞ்சில் நாடன், தமிழினி பதிப்பகம்

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்),
    தமிழ்த்துறை,
    திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,
    வேலூர்.

     

     

    Share
  • வல்லமையின் சுதந்திர தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    பவள சங்கரி

    நான் எனது சுதந்திரத்தை விரும்பும்பொழுது எப்படி என்னால் உங்களுடைய சுதந்திரத்தை எதிர்க்க முடியும்? – மகாத்மா காந்தியடிகள்

    இன்று 72 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். உண்மையில் நாம் எந்ததெந்தத் துறையில் சுதந்திரம் அடைந்திருக்கிறோம். பொருளாதாரத் தன்னிறைவும், பொருளாதார சுதந்திரமும் அடைந்து விட்டோமா என்றால் இல்லை என்றுதான்இன்றும் வேதனையுடன் கூற முடிகின்றது. ஏனைய மற்ற நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வாழும் நிலைமையால் பொருளாதாரச் சுதந்திரத்தை இழந்து நிற்க வேண்டியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் மிகப்பெரும் மோசடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 200 க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் மோசடியாய் இயங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டுக் காலங்களாக பல ஆயிரம் மாணவச் செல்வங்களின், நம் நாட்டின் வருங்காலத் தூண்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியிருக்கின்றனர். வானளாவிய கட்டிடங்கள் மட்டுமே வெற்றியின் சின்னம் என்று கருதிக்கொண்டு, உலகத்தரம் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கச் செய்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாலந்தா போன்ற உலகத் தரம் வாய்ந்த பல பல்கலைக்கழகங்கள் நம் இந்தியாவில் இருந்துள்ளன என்பதை எவரும் மறுக்கவியலாது. வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறி நடந்துகொண்டால் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைகொள்ளாமல் இருக்க முடியவில்லை. 71 ஆண்டுகள் கடந்த பின்பும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தெருவில் இறங்கிப் போராடும் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறோம். சற்றும் வளர்ச்சியடையாத, அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தியாகாத பல மாநிலங்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களும், பெண் குழந்தைகளும் விற்கப்படும் நிலையும், பாதுகாப்பற்ற சூழலில் உழலும் பெண் குழந்தைகளுக்கு விடிவு காலம் எப்போது என்று விசும்பி குரல் கொடுக்கும் நிலையிலேயே இருக்கிறோம் என்ற எண்ணத்தை மறைக்க முடியவில்லை. கல்விச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என்று கேள்விப்பட்ட நாம்தான் இன்று இளம் பெண்களின் வன் புணர்ச்சி சுற்றுலாக்களும் இயங்கி வருவது பற்றி கேள்விப்படுவது வேதனையின் உச்சம்.

    இந்தியர்கள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறையில் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இன்று நமது இந்தியப் பொருளாதாரமே ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியின் மீதுதான் கட்டமைக்கப்படுவதைக் காண்கிறோம். எத்தனையோ, விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பிறந்து வளர்ந்து தாம் பிறந்த நாட்டிற்கும், தமக்கும் பெருமையை சேர்த்துக் கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம் என்று பள்ளு பாடவும், விண்ணிலே ஆட்சி செய்வோம் என்று கற்பனை கதையும் வேண்டியதில்லை. நிலவில் பாட்டி வடை சுட்ட கதையும் இனி நமக்குத் தேவையில்லை. சூரியனுக்கே விண்கலம் அனுப்பிவிட்ட இந்த காலத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்தாமல் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறோம். அந்தப்பணியில் ஈடுபட்டிருந்த நமது தலைசிறந்த விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு பணி நீட்டிப்பும் வழங்கப்படவில்லை. உண்மையான வளர்ச்சி அடைய ஒரே வழி கட்சிப் பாகுபாடு, அரசியல், சமுதாய பாகுபாடு இன்றி அனைவருக்கும் பணியாற்றும் முழுமையான வாய்ப்பு அளிப்பதும், வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு முழுமையாக வாய்ப்புகளை வழங்குவதும்தான் உண்மையான சுதந்திரம். பொருளாதாரத்தில் தன்னிறைவும், கல்வியில் உயரிய வளர்ச்சியும், பெண்கள் பாதுகாப்பும், தாழ்த்தப்ப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டுவதே உண்மையான சுதந்திரம் ஆகும். சட்டையில் கொடியும், வாயில் இனிப்பும் மட்டும் நமது வளர்ச்சியன்று. வாழ்விலே இனிமையும், வளர்ச்சியில் சுதந்திரமும் காண்பதே உண்மையான சுதந்திரம்! அனைவரும் ஒன்று கூடி இந்தக் குறிக்கோள்களை அடைய பாடுபடுவோம்! அந்த எண்ணம் உருவாவதே உண்மையான சுதந்திரத்தின் கொண்டாட்டம்!

     

    வாழ்க, வளர்க இந்தியா!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180814 – Mahabharatha -Dhritarashtra and Sanjaya -wcol charcoal Strathmore 160 gsm 100dpi lr

    திருதராஷ்ட்ரன் சஞ்ஜயன்சொல் தோல்வியைக் கேட்டு
    திருதிரு ராட்ஷஸனாய் துக்கம்: -கருயிதன்
    காரணம் க்ருஷ்ணையின்(திரெளபதி) கேள்வன்(அகமுடையான்) குறிதப்பா
    வீரனாம் பார்த்தனின் வில்….கிரேசி மோகன்….!

    அந்தக மன்னன் அறிவுசால் மந்திரி
    சஞ்சயன் கண்டதைக் கேட்டனன் -வெஞ்சமரில்
    கூடிநின்று பாண்டவர் கூடா கெளரவரை
    சாடியது கேட்டுஉளச் சோர்வு….கிரேசி மோகன்….!

    Share
  • குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!

     

    சர்கம்- மூன்று
    ——————

    ஆரால் பயனோ அவரன்றி வேறாளைப்
    பாரான் எஜமான் பழகிடினும் -நூறாறு
    நானூறு கண்களால் நோக்கினான் மன்மதனை
    வானூறும் நட்பை விடுத்து….(124)….18-10-2010

    ”அமரிங்கே” என்றன்பாய் ஆசனமும் தந்து
    சமமரி யாதையை செய்ய -அமரர்கோன்,
    புல்லரித்த புஷ்பபாணன் போற்றியெஜ மானரிடம்
    சொல்லலுற்றான் சொந்தச் சரக்கு….(125)….18-10-2010

    மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை
    ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே
    ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும்
    ஆணை எனக்கு அருள்….(126)….18-10-2010

    வானப் பதவி விரும்பித் தவமியற்றும்
    ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம்
    தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப்
    படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127)….18-10-2010

    பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச
    வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை
    நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர்
    பார்க்க மறப்பான் பரம்….(or)
    தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128)….18-10-2010

    சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால்
    அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் -உக்கிரமாய்
    பொங்கும் புனல்கரையைப் பேர்த்தலாய் ஆசையை
    அங்கனுப்பக் கொள்வான் அழிவு….(129)….19-10-2010

    புத்தி புகுந்தவள் பத்தினியே ஆனாலும்
    சித்த சபலத்தில் சேர்த்தவளை -அத்தனுன்மேல்
    இச்சையுறச் செய்வேன் இழுத்தணைக்கச் செல்லுமவள்
    அச்சமட நாணம் பயிர்ப்பு….(130)….19-10-2010

    காமுகரே, குற்றத்தால் காலில் விழுந்தபின்னும்
    தீமுகம் காட்டிய தேவதையார் -பூமுக
    வாளியால் தேகத்தை வாட்டித் தளிர்படுக்கை
    நாளுமவள் நாடவைப்பேன் நான்….(131)….19-10-2010

    வச்சிரம் கண்கள் வளரட்டும் ஓய்வெடுத்து
    இச்சரப் பூக்களை எய்திட -அச்சுறுத்தும்
    உன்னெதிரிக் கூட்டம் உதடு துடித்துறுமும்
    பெண்ணெதிர்க்க ஓடும் பயந்து….(132)….19-10-2010

    பூவென்(று) அலட்சியமாய்ப் பாராய், எனதுகணைப்
    பூவொன்றால் அப்பினாக பாணிக்கே -நோவென்ற
    உள்ளக் குலைவை உதிர்ப்பேன் வசந்தனுடன்
    சொல்லித் தெரிவதில்லை சூது….(133)….19-10-2010

    மடித்து தொடையில் மிடுக்காய்ப் பதித்த
    அடித்தா மரையை அகற்றி – வெடுக்கென
    ஆசன பீடத்தை அங்கீ கரித்தூன்றி
    பேசினான் மாறனைப் பார்த்து….(134)….19-10-2010

    உச்சரித்தக் கீர்த்திகள் நிச்சயமே நண்பனே
    அச்சுறுத்தல் நீங்கி அகமகிழ்ந்தேன் -வச்சிரத்தை
    ஒத்தவனே, உன்படைதான் சித்தமகா யோகியையும்
    தத்தளிக்க வைத்திடும் தைத்து….(135)….19-10-2010

    பூமியை சேடன் பொறுத்தல் திறன்கண்டே
    நேமியன் நாடினான் நீள்துயில் -பூமய
    வில்லாளி நண்பா விறலில் எனையொத்த
    வல்லான் உனக்கோர் வழக்கு….(OR)
    வல்லானுன் வாளிக்கு வாய்ப்பு….(136)….19-10-2010

    காளையார் மீது கணைவிட்(டு) அவர்தவச்
    சோலையை சாய்ப்பதாய் சொன்னதற்கு -வேளைபார்
    வந்தது மன்மதா நொந்திருக்கும் எங்களின்
    அந்தரங்க ஆசி அதற்கு….(137)….20-10-2010

    ஆவலாய் தேவர்கள் அவ்வீசன் சேய்சேனைக்
    காவலாய் வாய்த்திடக் காத்துள்ளார் -ஏவுவாய்
    ஓரம்பால் வேதங்கள் ஆரம்பம் ஆகிடும்
    வேரின்பால் ஆசை விதைத்து….(138)….20-10-2010

    காரியன் நான்முகன் காரணன் ஈசனின்
    வீரியம் தாங்கும் வலுவுடையாள் -கூறினன்
    பார்வதி என்றே புலனடக்கம் பெற்றவளால்
    பார்அவதி உந்தன் பணிக்கு….(139)….20-10-2010

    வெற்பரசன் தந்தை விடுத்ததோர் உத்திரவால்
    சொற்ப சிசுருஷை செய்கின்றாள் -சிற்பமாய்
    உச்சி சிகரத்தில் உள்ளாழ்ந்த ஈசர்க்கு
    எச்சரிக்கை அப்ஸர ஏவு….(140)….20-10-2010

    முப்புறம்மண் சூழ்ந்தும் முளைக்க விதையதற்கு
    அப்புவின் தேவை அவசியம்போல் -ஒப்பறியா
    பார்வதியின் தோற்றப் பொலிவுதவ முற்றுமென்றால்
    நேருவதற்(கு) ஆரம்பம் நீ….(141)….21-10-2010

    சிந்தையில் தோன்றியும் செய்ய முடியாத
    அந்தவோர் காரியத்தை ஆக்குபவன் -விந்தையாம்
    அச்சிவன் மீதுமலர் அம்பெய்தி கீர்த்தியின்
    உச்சிக்குப் போவாய் உயர்ந்து….(142)….21-10-2010

    கொல்வதில்லை ஆனாலும் வில்வதையால் ஆனந்தம்
    கொள்வதனால் காமனுனைக் கூப்பிடுவர் -நல்விதமாய்
    யாசிக்கும் எங்களுக்காய் யோசிக் காதுசெய்வாய்
    பூசிக்கும் பார்மூன்றும் பார்….(143)….21-10-2010

    நாடாது போயினும் நண்பன் வசந்தனுன்
    னோடேதான் நிற்பனென நம்புகிறேன் -ஆடாத
    மொட்டனைய அக்கினியை மூண்டு வளர்த்திட
    கட்டளைக்காய் காக்குமோ காற்று….(144)….22-10-2010

    அனங்கன் அதைக்கேட்(டு) இணங்கி சுரர்கள்
    இனங்கோனின் ஆணையை ஏற்று -வணங்க
    அயிரா வதமடக்கும் ஆஜானு கையை
    தயவோடு வைத்தான் தலை….(145)….23-10-2010

    பயந்த ரதிவசந்தன் பின்தொடர காமன்
    உயர்ந்த இமயம் அமைந்த -நயனனுதல்
    ஆண்டவன் ஆசிரமம் மாண்டாலும் வெற்றியை
    வேண்டியவன் சென்றான் விரைந்து….(146)….23-10-2010

    சிவத்தோடு சேர்ந்தங்கு சித்தம் ஒருமித்த
    தவத்தோர் தரத்தை தகர்க்க -அவித்தைக்(கு)
    இசைந்த களத்தை இயற்றுவோன் ஆனான்
    வசந்த ருதுவாய் வனத்து….(147)….23-10-2010

    மாற்றான் மனைவிரும்பும் மூடனால் பத்தினி
    ஆற்றாமை கொள்ளும் அவலமாய் -மாற்றத்தால்
    விண்முகம் பானு வடக்கேக தென்திசை
    தன்முகம் கொண்டாள் துயர்வு….(148)….23-10-2010

    தளிர்பெண் சிலம்புத் திருவடி பட்டு
    துளிர்க்கும் அசோகமரம் திடுமென்(று) -அளித்த
    வசந்தத்தால் தன்னியல்பை விட்டு மலர்ந்து
    இசைந்ததாம் பூக்கள் இறைத்து….(149)….24-10-2010

    கொய்தமாம் பூவால் கணைக்கு சிறகமைத்து
    செய்திடச்சில் வண்டுகள் சென்றதை -மொய்த்ததைப்
    பார்க்கையில் மன்மதன் பேரையப் பாணத்தில்
    சேர்க்க அமர்ந்ததாய் சாக்கு….(150)….24-10-2010

    கனகமாய்க் கொன்றை குவிந்தும் ரசிகர்
    மணமற்ற தாலே மறுப்பர் -குணமுற்றும்
    கொண்டவனை நான்முகன் கொள்வதில்லை தன்படைப்பில்
    கண்டனம்போல் காளிதாசன் கூற்று….(151)….24-10-2010

    வனமென்ற நங்கை வசந்தனுடன் சேர்ந்த
    கணத்தில் பலாசக் கிளையில் -மினுமினுத்த
    கூன்பிறை மொட்டுக்கள் கீறும் நகமாக
    காண்பது காளிதாசன் கண்….(152)….24-10-2010

    மஞ்சாடி பூக்களவள் செஞ்சாந்து, சுற்றிவரும்
    அஞ்சாத வண்டுகள் ஆங்கேபொட்(டு) -அஞ்சனம்
    மாந்தளிர் வாயதரம் மேவிய செந்நிறத்தால்
    காய்ந்த மதுஸ்ரீ கதிர்….(153)….24-10-2010

    பருவருது கண்டு முரளமர பூக்கள்
    விரவுமது கண்ணிலே வீழ்ந்தும்-திரளும்
    இலையுதிர் காற்றுக் கெதிராக ஓடும்
    கலைமான்கள் கொள்ளும் களிப்பு….(154)….25-10-2010

    தீந்தமிழ்க்(கு) ஈடாக ஆண்குயில் கூவுதல்
    மாந்தளிர் உண்டதால் மட்டுமன்று -தான்திமிர்
    பூரிப்பும் கர்வமும் பெற்றவளை மாற்றிட
    கோரிக்கை காமன் குரல்….(155)….25-10-2010

    குளிர்பனி சென்றதால் கிம்புருடப் பெண்கள்
    தளிரிதழ் தூயவெண் தேகம் -ஒளிர
    நுதற்பொட்டில் கன்னக் கதுப்பு வரியில்
    வெதுவெதுப்பாய் வெய்யிலின் வேர்வு….(156)….26-10-2010

    அகால வசந்தத்தால் அவ்வனம் உற்ற
    தகாத வனப்பால் திகைத்து -எகாலமும்
    உண்மையில் வாழ்வோர் உறுதி குலைந்திடும்
    தன்மையை மாற்றத் தவிப்பு….(157)….26-10-2010

    நாணேற் றியதனுசு நட்புரதி சேர்க்கையில்
    தானேற்ற காரியத்தைத் தீர்த்திட -கானேகி
    நாடிட மன்மதன் ஜோடிகள் காதலாய்க்
    கூடினர் இன்பம் கொழித்து….(158)….26-10-2010

    ஆண்வண்டு காதலியோ(டு) அண்டா மலரமர்ந்து
    தேனுண்டு சொக்கிட தேடிவந்த -மானொன்று
    தீண்டியதால் கண்மூடி தாமதிக்கும் பெண்மானை
    சீண்டியதாம் கொம்பால் சொரிந்து….(159)….26-10-2010

    துதிக்கையால் தாமரைத் தேன்கலந்த நீரை
    மதக்களிறுக்(கு) ஈந்து மடப்பிடி -குதிக்குமாம்
    சாதகமும் தானுண்ட செங்கமலப் பூங்குருத்தை
    பாதியாக்கி பத்தினிக்கு பங்கு….(160)….26-10-2010

    காட்டுமலர் கள்ளுண்டு கண்சுழல கிம்புருட
    வீட்டுமனை பாடுகையில் வேர்த்ததனால் -தீட்டிய
    பூச்சழிய கேள்வனவன் பாட்டுக்(கு) இடையிடையே
    கூர்ச்செறிந்து முத்தமிட்டான் காத்து….(161)….26-10-2010

    கொத்துமலர் கொங்கை, கொடியிடை, கொங்குதளிர்
    முத்தமிடும் வாயிதழ் மங்கையவள் -சுத்தும்
    கரமாம் கிளையால் மரக்கா தலர்க்கு
    அறமாய் அணைப்பு அளிப்பு….(162)….26-10-2010

    அங்குலவும் அப்சர சங்கீதம் கேட்டாலும்
    சங்கரர் யோகத்தை சார்ந்திருந்தார் -தங்களது
    தாவும் மனமதை தடுத்தாண்டு கொன்றவர்மேல்
    ஏவும் கணைகள்தான் ஏது….(163)….26-10-2010

    கொடிமனை வாசலில் கோலூன்றி நிற்கும்
    விடையன் விரலைவாய் வைத்து -அடையாள
    முத்திரை காட்டி முனிவோரை எச்சரித்தான்
    நித்திரையை நீக்கும் நினைப்பு….(164)….26-10-2010

    அசையா மரங்கள் அசலனமாய் வண்டு
    பசையிட்ட வாயாய் பறவை -விசையுறா
    ஊர்வனவாய், அவ்வனம் ஏறவனின் ஆணையால்
    ஓர்வரைவாய் நின்றது ஓய்ந்து….(165)….26-10-2010

    சுக்கிரன் வாழ்கின்ற திக்கினில் செல்வதால்
    விக்கினம் என்று விலக்கலாய் -முக்கணன்
    புன்னை வனத்துள் புகுந்தனன் நந்தியின்
    கண்ணை அனங்கன் கடந்து….(OR)
    கண்ணுக்(கு) அனங்கன் குனிந்து….(166)….26-10-2010

    காலனைக் காணாது காமன் வரிப்புலித்
    தோலனை தேவதாரு தண்டடியில் -கோலமாய்
    வென்று புலனடக்கி வீற்றமுக் கண்ணனை
    சென்று நெருங்கினன் சாவு….(167)….27-10-2010

    வேராய் விறைத்து விருட்சமாய் நீண்டுயர்ந்து
    நேராய் அமர்ந்தார் நமச்சிவாயம் -வீரா
    சனத்தில், விழுதாய் சிவந்தயிரு கைகள்
    பிணைக்கமடி அல்லிப் பிறப்பு….(168)….27-10-2010

    நாகத்தால் கட்டிய நீள்முடியும், நஞ்சுண்ட
    தாகத்தால் காரொத்த தொண்டையால் (OR)
    தாகத்தால் கண்டத்து தேஜசது -தேகமான்
    தோலைக் கருப்பாக்க தோன்றினன் ருத்திராக்ஷ
    மாலையை காதில் முடிந்து….(169)….27-10-2010

    நெறியா புருவம் நகரா இமைகள்
    புரியாதோர் அஞ்சிடும் பார்வை -சரிவாக
    தேசொளி மூவிழியால் நாசி நுனியினை
    ஈசனார் நோக்கு இருப்பு….(170)….27-10-2010

    மின்னலிடி இல்லாத மேகமாய், பொங்கலை
    இன்னதென்(று) அறியாத தண்ணீராய் -விண்ணென
    காற்றற்று நிற்கும் குத்து விளக்காயுள்
    காற்றடக்கி காட்சி கொடுப்பு….(171)….27-10-2010

    முண்டக நூலினை மிஞ்சிடும் மென்மையும்
    கண்டுமதி மங்கும் கிளரொளியும் -மண்டையின்
    உச்சிக்கண் தோன்றும் ஒளிக்குவமை தந்தமர்ந்தான்
    சச்சிதா னந்த சிவன்….(172)….27-10-2010

    ஒன்பது வாயிற்கண் ஓடாது யோகத்தால்
    தன்பதுமை நெஞ்சை தன்னகத்துக் -கண்புதைத்து
    ஆன்றோர் உணர்ந்த அழிவற்ற ஆன்மனில்
    தாந்தோன்றி தன்னுள் திளைப்பு….(173)….27-10-2010

    எண்ணத்தால் கூட எதிர்க்க இயலாமுக்
    கண்ணத்தன் கோலத்தால் காமனஞ்சி -என்னத்தை
    செய்வதென்று சோர்வுற, சொல்லாமல் வில்லம்பு
    மெய்வசத்தை நீங்கி மணல்….(174)….27-10-2010

    உற்சாகம் குன்றி உருக்குலைந்த காமனுக்கு
    நற்சேதி கூறலாய் நேர்ந்தது -தற்செயலாய்
    பொற்சிலை பார்வதி பாங்கியிரு பெண்தொடர
    சிற்சபையில் வைத்தாள் சிலம்பு….(175)….28-10-2010

    ரத்தினப் பூஅசோகம் முத்தாக சிந்துவாரம்
    பத்தரை மாத்துப்பொன் கர்ணிகாரம் -அத்தனை
    போதும் அணியிருந்த போதும் வசந்தத்தின்
    போதணிந்தாள் பார்வதிஅப் போது….(OR)
    போதணிதல் பார்வதியின் போது….(176)….28-10-2010

    மலைப்பூங் கொத்தால் மளுக்கென்று சாயும்
    தளிர்க்கொடி போலத் துவண்ட -மலைப்பெண்
    செங்கதிர் வண்ணத்தில் சேலையில் போந்துகனக்
    கொங்கையாள் ஆனாள் கொடி….(177)….28-10-2010

    மோகமவன் நாணுக்கு மாற்றாய் மகிழம்பூ
    நாகமென மாலையை நுண்ணிடையில் -மேகலையாய்
    பத்திரமாய் வைத்தனன், பார்வதி சாயுமதை
    தத்தளித்தால் தாங்கித் தடுத்து….(178)….28-10-2010

    வாசிவாசி என்றென்றும் நாசி சுவாசிக்கும்
    வாசம் முகர்ந்திட வண்டுவந்து -மூச
    இதழ்கனியைச் சுற்றி, இளங்கமல மொட்டால்
    அதைவிரட்டும் பார்வதி அங்கு….(179)….28-10-2010

    மாசிலா அங்கங்கள் மன்மதன் பத்தினியே
    கூசுவாள் வெட்கி குனிந்துதலை -ஈசன்
    தவதனுசை வெல்ல இவள்மனசே வாளி
    சவமணலில் காமன் செருப்பு….(180)….28-10-2010

    பதியாகப் போகின்ற பாதியின் வாசல்
    சதியாய்ப் பிரிந்தவள் சேர்ந்து -மிதித்தாள் (OR) விதியால்
    உவப்புடன் தன்னுள் சிவபிரான் ஆன்ம
    தவப்பலன் கண்ட தினம்….(182)….29-10-2010

    வாசி அடக்கிய ஈசனார் பாரத்தால்
    காசினியை ஆயிரம் கைத்தலையால் -தூசென
    தாங்கிடும் சேடன் தவித்திட அன்புசிவம்
    ஓங்கு தவம்கலைத்தார் ஓம்….(183)….29-10-2010

    பணிவிடை செய்துவந்த பார்வதியைப் பற்றி
    பனிவிடை ஈசரிடம் போற்ற -கனிவாய்
    புருவத்தைத் தூக்க புரிந்துகொண்ட நந்தி
    வரவேற்றான் கன்றாய் வளைந்து….(OR)
    வரவேற்றான் வாசல் விரித்து….(184)….29-10-2010

    ஆர்வமுடன் அங்குற்ற பார்வதியின் தோழிகள்
    தேர்வுசெய்த பூக்கள் தொகுதியை -நீர்விளங்கும்
    வார்சடையோன் பாதத்தில் வைத்து வணங்கியபின்
    கார்சிதைவாய் தூவிக் களிப்பு….(185)….29-10-2010

    கூந்தலில் சூடிய கோங்குமலர் காதணி
    மாந்தளிர் மண்ணில் மயங்கிவிழ -பாந்தமாய்
    உச்சந் தலைதரையில் உற்றிட பார்வதி
    அச்சிவன் பாதம் அடைவு (OR) அணைப்பு….(186)….29-10-2010

    உன்னையன்றி வேறோர் பெண்ணை மனைவியாய்
    எண்ணாத கேள்வனை ஏற்றிடுவாய் -திண்ணமாய்
    மெய்யதைச் சொன்னான் மகாதேவன், மூத்தோர்கள்
    பொய்யுரைப் பாரோ புகல்….(187)….30-10-2010

    மூளும்தீ வாயில் முழுகப்போம் விட்டிலாய்
    வேளவன் பார்வதி வந்ததால் -தோளின்வில்
    நாணை வருடி நமச்சிவாயர் நெஞ்சென்ற
    தூணை இலக்காய்த் துணிபு….(188)….30-10-2010

    ஆகாச கங்கையில் ஆதவன் கைகளால்
    வேகா(து) உலர்த்திய வாரிசத்தின் -யோகீசர்
    சூடும் மணிச்சரத்தை செய்யகை பார்வதிதென்
    நாடுடையோன் முன்வைத்து நிற்பு….(189)….30-10-2010

    நிச்சயமாய் அன்பர் நிவேதனம் ஏற்றிடும்
    அச்சிவன் மாலையை ஆகம்கொள் -அச்சமயம்
    சம்மோ ஹனஅம்பை தம்வா கனவில்லுக்(கு)
    அம்மால் அனங்கன் அளிப்பு….(190)….30-10-2010

    சந்திரன் தோன்றிட சற்றே கலக்கமுற்று
    வெண்திரை கொந்தளிக்கும் வாரிதியாய் -தன்திரம்
    கொஞ்சம் கலைய ,கனியிதழ் பார்வதியை
    நஞ்சுண்டோன் மூவிழியால் நோக்கு….(191)….30-10-2010

    கேசரங்கள் கொண்ட கதம்பமொத்த அங்கங்கள்
    ஆசையுடன் கூர்ச்செரிந்து ஆர்ப்பரிக்க -நேசமுடன்
    ஓர விழியால், ஒருபக்கம் சாய்ந்தவண்ணம்
    பூரணனைப் பார்வதி பார்ப்பு….(192)….30-10-2010

    புலனடக்கம் செய்வதில் பேர்போன ஈசன்
    நிலநடுக்க மாய்தன் நிலைக்குள் -தலையெடுத்த
    போக்கைத் தகர்த்தெறிந்து தாக்கம் தனையறிய
    நோக்கினார் நாற்திசையும் நன்கு….(193)….31-10-2010

    வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
    காமன் வளைத்துவில்லை கண்வரை -ஆமளவு
    நான்றிட தோளிரண்டும் நாணிழுத்துக் கால்வலதை
    ஊன்றிடப் பார்த்தனன் உற்று….(or)

    வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
    காமன் வளைத்துவில்லை, கண்வரை -ஆமளவு
    நாணிழுத்துக் கால்வலதை ஊனிட தாருக
    கானழித்தோன் கண்ணில் கனல்….(194)….31-10-2010

    அகத்துற்ற உக்கிரம் அச்சமுறும் வண்ணம்
    முகத்தில் புருவ முறிப்பாய் -விதிர்த்திட
    நெற்றி விழிதன்னில் நீண்ட ஒளிபிறப்(பு)
    உற்று வளர்ந்ததாம் ஊழ் (OR) ஓம்….(195)….31-10-2010

    அய்யனே கோபம் அடக்குங்கள் என்றமரர்
    குய்யோ முறையோ குரலொலி -உய்யும்முன்
    சீறும் சிவன்கண் சுடரொளி சூழ்ந்திட
    மாறன் பிடிசாம்பல் மண்….(196)….31-10-2010

    என்ன நடந்ததோ என்றறியா விட்டாலும்
    இன்னலென்றே நெஞ்சு இறைந்திட -தன்னவன்
    சாவை அறியா சதிரதி மூர்ச்சையால்
    பூவெனச் சாய்ந்தாள் புறத்து (OR) புவி….(197)….31-10-2010

    இடிவிழ இற்று ஒடியும் மரமாய்
    இடபர் தவத்திற்க்(கு) இடராய் -விடிந்த
    அனங்கனை சாய்த்து அணங்கினை நீங்கி
    கணங்களுடன் சென்றார் கலைந்து….(198)….31-10-2010

    தந்தை விருப்பமும் தான்சிவன் மேல்கொண்ட
    விந்தையாம் காதலும் வீணாக -நொந்தவள்
    துக்கிரித் தோழியர்முன் தோற்றதால் பார்வதி
    வெக்கமுடன் ஏகினாள் வீடு….(199)….31-10-2010

     

    சர்கம் நான்கு
    ——————–

    ஆங்கு மயக்கத்தில் ஆழ்ந்த அமைதிக்குத்
    தாங்கொணாத் துன்பம் தெளித்திட -தீங்காம்
    விதியெழுப்பிப் ‘பெண்ணே விதவைநீ’ என்று
    ரதியறியச் செய்வு ரசித்து….(200)….1-11-2010

    மயக்கம் தெளிந்து மருண்ட விழியால்
    தயக்கமாய்க் காமனைத் தேடி -இயற்கையை
    எய்து வசந்தமாய் செய்தோன் இறந்தியற்கை
    எய்தியது காணாள் எழுந்து….(201)….1-11-2010

    சாதலால் போனாயா ? சாதா ரணமாயா ?
    காதலா ஆனதேன் காணாமல் -நாதனைத்
    தேம்பி அழுதபடித் தேடியவள் கண்டனள்
    சாம்பலுரு விலோர் ஜடம்….(202)….2-11-2010

    அழுது தரையில் விழுந்து புரண்டு
    புழுதி உடலில் படிய -விழுதாய்
    குவித்தயிருள் கூந்தல் கலைந்திடக் கானும்
    தவித்ததாம் தானும் துணைக்கு….(203)….2-11-2010

    அழகுக்(கு) உவமையாம் அன்பரும் மேனி
    கழுகுக்கும் ஊணாகா கோலப் -புழுதியைக்
    கண்டும்நான் துண்டாகா பிண்டமாய்ப் போனேனே
    பெண்டிர்மனம் பாறை போல்….(204)….2-11-2010

    அணையுற்ற வெள்ளம் அதுவுடைய தன்னில்
    பிணையுற்ற பூவைப் பிரியும் -எனைவிட்டு
    எங்குநீர் போனீர் எதனால் உடைந்தின்று
    முங்கியது காதல் மதகு….(205)….2-11-2010

    என்மனம் கோணா எதையும்நீ செய்ததில்லை
    நின்மனப் போக்கில் நடந்தவள்நான் -மன்மதா
    வ்யாஜ்ஜியம் அற்றுரதி வாடிப் புலம்பநீ
    பூஜ்ஜியம் ஆனதெங்கு போய்….(206)….2-11-2010

    முன்னை எனையழைக்க மாற்றுப் பெயர்கூற
    கண்ணை மகரந்தம் கூசிட -உன்னை
    மேகலையால் கட்டிமலர் முண்டகத்தால் மொத்தியது
    ஆகலையால் அற்றதோ அன்பு….(207)….2-11-2010

    ரதிநீ மனதில் ரமிக்கிறாய் என்று
    பதிநீ புகன்றது பொய்யே -அதுவே
    நிஜமானால் நிற்பேனா நெற்குதிராய் அந்தோ
    எஜமான்தன் அஸ்திக்(கு) எதிர்….(208)….2-11-2010

    மறுவுலகு ஏகிடும் மன்மதா உந்தன்
    அருகிருக்க நானும் அடைவேன் -வெறுவுலகு
    ஆதலால் பூதலம் ஆனதுன் சாதலால்
    காதலுன் கைரேகைக் கோடு….(209)….2-11-2010

    போதிரவு போர்த்திடும் போதிலே காதலியை
    மோதிடும் மேக முழக்கத்தால் -காதலன்
    காத்துக் கிடக்குமிடம் கூட்டிக் கலங்காது
    சேர்த்துவிட யாரினி சொல்….(210)….2-11-2010

    கெண்டை விழிசிவந்து வண்டாய் சுழன்றிட
    விண்டுரைக்கும் பேச்சில் விரகமுற -பெண்டிர்க்கு
    கள்ளால் வரும்மதம் காமன்நீ இன்றி
    கொள்ளாது போகும் களிப்பு….(OR)
    பொல்லா குடிகாரன் பேச்சு….(211)….2-11-2010

    அங்கம் எரித்ததனால் ஆனாய் சரித்திரமாய்
    தங்கும் மதிவிண் தரித்திரனாய்த் -தொங்குகிறான்
    துக்கம் அனுஷ்டித்த தேய்பிறைதன் தன்மையை
    தக்கவைத்துக் கொண்டான் தவித்து….(OR)
    வெக்கமுடன் விட்டான் வளர்ந்து….(212)….2-11-2010

    இச்சையுடன் உண்ண இனிதாக ஆண்குயிலை
    உச்ச சுரத்தில் உருகவைக்கும் -பச்சை
    சிவப்புநிற மாம்பூவை சாகஸ அம்பாய்
    உவப்பரினி யாரிங்(கு) உரை….(213)….2-11-2010

    அனங்கனுன்வில் நாணில் அமர்ந்திடும் வண்டு
    இனங்களின் ரீங்காரம் இன்று -சிணுங்கலாய்
    மாறித், துயரத்தில் ஊறிய என்னையும்
    மீறிப் புலம்புதென் முன்….(214)….3-11-2010

    பயிலா மலேயே ஒயிலாகக் கூவும்
    குயிலாளைக் காதல் கலவி -செயலாளாய்
    பட்டமளிப் பாய்நீ பழையசுகு மாறனாய்
    தொட்டணைத்துத் தீர்ப்பாய் துயர்….(215)….3-11-2010

    போலியாக வெகுண்டயென் காலைநீ கவ்வியது
    ஆலிங்க னித்ததுபின் ஆவிநடுங்க -காளிங்க
    நர்த்தனமாய் கண்ணாநீ நாகமென்மேல் ஆடியது
    அர்த்தமற்று போச்சே அனைத்து….(216)….3-11-2010ம்

    வசந்தருது தந்த உசந்தமலர் கொண்டு
    அசந்திடச் செய்த அழகு -கசந்ததே
    பெண்ணாளும் வித்தையில் பேராண்மை கொண்டவனே
    கண்ணாளா நீயின்றி காண்….(217)….3-11-2010

    பஞ்சான கைகளால் பாதத்தில் நீயெனக்கு
    விண்சார்ந்த தேவர்க்காய் விட்டகன்று -செஞ்சாந்து
    இட்டபோது சென்றாயே ஈவிரக்கம் அற்றோர்க்காய்
    தொட்டகுறை தீரவந்து தீட்டு….(218)….6-11-2010

    ஊர்வசிகள் உன்னழகால் உன்மத்தம் கொண்டுன்னை
    பார்வசியம் செய்வர் பதுங்கியிரு -பார்மிசையில்
    அக்கினிக்(கு) ஆட்பட்(டு) அனங்கனுன் தோள்சாய
    புக்கிடுவேன் சொர்க புரிக்கு….(219)….6-11-2010

    பாரிந்த பாவிரதி பஞ்சணையான் போனபின்பும்
    பாரிருந்தாள் என்ற பரிகாசம் -வேரூன்ற
    கூசுதே அங்கங்கள், கூடநான் வந்திடுவேன்
    தீசிதை தானிதற்கு தீர்வு….(220)….9-11-2010

    அங்கம் இருக்குமே ஆவி பிரிந்தாலும்
    இங்கிரெண்டும் இல்லையே, இவ்வுலகில் -எங்கனம்
    செய்வேன் இறுதியணி செத்த உடலுக்கு
    உய்வேன் உடன்கட்டை உற்று….(221)….9-11-2010

    நாணிழந்த வில்மடியில் நாணிக் கிடந்திருக்க
    கூனடைந்த அம்பின் குறைநிமிர்த்தி -நீநினது
    நண்பன் வசந்தனுடன் வம்படிக்கும் போதென்னை
    என்புறுகப் பார்ப்பாய் எழு….(222)….9-11-2010

    மனதுக்(கு) இனியோன், மலர்வில்லை செய்து
    நினது கரமளிக்கும் நண்பன் -சினந்த
    விழியால் எரிந்து, வசந்தனும் சாம்பல்
    அழிவை அடைந்தானோ அன்று….(OR) ஆள்….(223)….9-11-2010

    கொஞ்சு மொழிரதியாள் கேவல் புலம்பலது
    நஞ்சு கணையை நிகர்த்தெழுந்து -நெஞ்சை
    துளைக்க வசந்தன் துயருற்றோள் முன்னே
    முளைத்தனன் ஆறுதல் மொண்டு….(224)….9-11-2010

    மதகுடைந்த வெள்ளமாய் மங்கையவள் நெஞ்சக்
    கதவுடைந்து கொட்டியது கண்ணீர் -இதுவசந்தன்
    பக்கம் இருக்கையில் உக்கிரம் ஆனது
    துக்கதிற்(கு) ஏதடைக்கும் தாழ்….(225)….10-11-2010

    சுராரிழுத்துச் சென்ற சகாபார் வசந்தா
    புறாகழுத்துச் சாம்பல் பொடியாய் -தராதலத்தில்
    சிந்திக் கிடப்பதை சீறும் வளியெடுத்து
    எண்திசையில் அஸ்தி இறைப்பு….(226)….10-11-2010

    ஆவலுடன் உன்னருமை சேவகன் காத்துள்ளான்
    தாவசந்தன் காண தரிசனம் -பூவுலகில்
    அன்புக்(கு) அணங்கினும் ஆதரவு ஆருயிர்
    நண்பன்தான் நன்கறிவாய் நீ….(227)….10-11-2010

    தாமரைநூல் நாணிழுத்து பூமருவும் அம்பேற்றி
    நீமரமாய் வில்லேந்தி நிற்கையில் -சாமரமாய்
    வீசும் வசந்தனன்றோ வெற்றிக்(கு) உறுதுணை
    நேசன் அவன்பொருட்டு நில்….(OR)
    நீசாம்பல் விட்டு நிமிர்….(228)….10-11-2010

    வாயு அணைத்த விளக்கிருந்த தீபத்தின்
    தேயுவாய் தோழன் தொலைந்தனனே -காயும்
    திரியாய்த் திகழ்ந்து தகிக்கின்ற என்னை
    பரிவாய் வசந்தனே பார்….(229)….10-11-2010

    ஆதிவிதி அன்று அனங்கனைக் கொன்றது
    பாதிதான் சோதரா மீதிநான் -மோதிடும்
    ஆனை முறித்து அடிமரமே சாயஅது
    பூணும் கொடிபடரும் புல்….(OR)
    பூணும் கொடிக்கேது போக்கு….(230)….10-11-2010

    உடனே எனக்கு உறவினர்கள் செய்யும்
    கடனாமிக் காரியம்கை கூட -சுடலை
    நெருப்பை அளித்து பொறுப்பாய் கணவன்
    இருப்பில் இவளை இடு….(231)….10-11-2010

    விண்ணில் நிலவு விரையுமே சந்திரன்பின்
    மின்னல் மறையுமே மேகத்துடன் -எண்ணும்
    அறிவற்ற பெண்பால்தன் ஆண்பாலை நாட
    நெறியற்று நின்றேனே நான்….(232)….11-11-2010

    சதாசிவன் கண்ணால் உதாசீனம் ஆன
    கதாபுருஷன் சாம்பல் குளித்து -இதோநான்
    உதாரமாய்த் தீயில் நிதானமாய் சாய்வேன்
    அதானென் தளிர்பாய் அணைப்பு….(233)….11-11-2010

    நெஞ்சனும் நானும் நோகா(து) உறங்கிட
    பஞ்செனப் பூக்களால் பாய்விரித்து -மஞ்சத்தை
    வண்ணமாய் செய்த வசந்தனே இன்றெனக்கு
    திண்ணமாய்த் தீப்படுக்கை தா….(234)….11-11-2010

    நானின்றி ஓர்கணமும் வீணென்பார் வில்லாளி
    நீநன்(கு) அறிந்ததே நாணமேன்(நல்லதுகேள்)-நானின்று
    தீநின்ற போதுடனே தென்றலால் தூர்த்ததனை
    வான்நின்ற வாறு வளர்….(235)….11-11-2010

    வெற்பனைய நட்பே வசந்தா இருவர்க்கும்
    தர்பணமாய் தண்ணீர் தருவதற்கு -முற்படுவாய்
    மாறனதை ஏந்தி மறுவுலகில் நான்வந்து
    சேரவுண்பான் பங்கிடாது சேர்ந்து….(236)….11-11-2010

    காமரு மாம்பூவின் கொத்தினைக் கட்டாயம்
    காமனின் ஆன்மா களிப்புற -ஈமச்
    சடங்கில் மறவாது சேர்ப்பாய் வசந்தா
    மடந்தை ரதியாள் மனு….(237)….11-11-2010

    காய்ந்த குளத்துமீன் கண்ணீர் துடைத்தது
    மாய்ந்திடாது காக்கும் முதல்மழையாய் -ஓய்ந்துரதி
    காயம் உகுத்திடக் காத்திருந்த போதுஆ
    காயம் பொழிந்ததோர் கூற்று….(238)….11-11-2010

    விதவையென்(று) எண்ணி சிதையில் புகாதே
    மதனன் மலர்ந்தெழுவான் மீண்டும் -இதுவுறுதி
    அன்பே சிவத்தால் அவனழிந்த காரணத்தை
    உன்பால் உரைப்பேன்கேள் உற்று….(OR)
    நின்பால் உரைத்திடுவேன் நான்….(239)….12-10-2010

    நின்படுக்கை நாயகன் தன்துடுக்கால் நான்முகன்
    கண்துடைப்பாய் அம்பெய்து கோதிழைக்க -தன்படைப்பில்
    தாபமுற்ற கோபத்தால், தீக்கண்ணால் சாம்பலாக
    சாபமுற்று ஆனான் சகி (0R) சவம்….(240)….12-10-2010

    தருமவேள் வேண்ட திசைமுகன் பெய்தான்
    வரமழையாய் சாப விமோசனம் (OR) மாற்று வழியை-பருவத
    புத்திரி ஈசனுக்கு பத்தினியாய் ஆகையில்
    புத்துயிராய் காமன் பிறப்பு….(241)….12-10-2010

    கோடையில் அம்மணத்தை கொண்டநதி மாரிவர
    ஜாடையில் மாறும் சமுத்திரமாய் -பாடொழிந்து
    மாறனுடல் கொண்டுன்னை சேரும் வரைசாம்பல்
    நீறிதனைக் காப்பாய் நிதம்….(or)
    நீறுன் மசக்கை நினைப்பு….(242)….13-10-2010

    தேவதையின் வாக்கால் தணிந்து அனுமரண
    தேவைதனை கைவிட்டாள் தேவிரதி -பூவதையோன்
    நண்பன் வசந்தனும் நம்பிஅச ரீரியை
    தென்பளித்தான் தேறுதல் தந்து….(243)….12-10-2010

    சாபம் முடிக்கும் சிவபார் வதிமணமாம்
    தீபவொளிக்(கு) ஏங்கினாள் தேவிரதி -சோபை
    அறவே இழந்து வரவாம் பகலில்
    இரவெதிர் பார்க்குமாம் இந்து….(OR)
    இரவை எதிர்பார்க்கும் இந்து….(244)….12-10-2010

    சர்கம் நான்கு சுபம்….!

    Share
  • நீண்டு நெளிந்த பாதை !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

     ++++++++++++++++++

     

    நீண்டு நெளியும் பாதை

    நின் இல்லம் நோக்கிச் செல்லும் !

    மறையாத ஒரு பாதை !

    முன்னறிந்த பாதை !

    என்னை என்றும் ஆங்கே

    முன்னிழுத்துச் செல்லும் பாதை.

    கடும் காற்று அடிப்பும், இரவைக்

    கழுவிச் சென்ற பேய் மழையும்

    அழுத கண்ணீர்க் குளமும்

    பகலில் காட்சி தந்து

    என்னை நிறுத்துவ தேனோ ?

    எனக்குப் பாதை தெரியும் !

     

    ஏகாந்தனாய் நானும்

    ஒதுக்கப் பட்டேன் பன்முறை !

    ஏங்கி அழுதுள்ளேன் நானும்

    பன்முறை ! நான்

    பயிற்சி செய்த பல வழிகளை

    பலர் அறிய மாட்டார்.

    ஆயினும்

    நீண்ட நெளிந்த பாதைக்கே

    மீண்டும்

    என்னை

    இழுத்துச் செல்வார் .

    நில்லென்று சொல்லி 

    நீ

    நிறுத்திச் சென்றாய்,

    நீண்ட நேர மாக !

    ஒதுக்கி 

     விலகிச் செல்லாதே !

    உன் வீட்டுக் கென்னை

    அழைத்துச்  செல் !

     

    Share
  • குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!

     

    சர்கம் -2
    ————-

    அந்த சமயம், அசுரனாம் தாரகனால்
    நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்
    முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்
    கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010

    சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு
    போததி காலை புலப்படும் -ஆதவன்போல்
    வாடிய வானவர்முன் கூடிய வாசலில்
    பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010

    நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை
    தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து
    தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்
    தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010
    (OR)
    வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை
    நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த
    தேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்
    தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010

    தத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே
    சத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே
    மூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்
    கோர்த்தோம் சரணா கதிக்கு….(63)….8-10-2010

    தண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்
    நண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்
    அசையும் உயிர்கள், அசையா பொருட்கள்
    விசையுறச் செய்யுமுன் வித்து….(64)….8-10-2010

    கற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்
    உற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்
    என்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்
    அன்றசை(வு) இல்லா அயன்….(OR)
    அன்றிருந்தீர் ஏகம் அடைந்து….(65)….8-10-2010

    பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
    உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
    தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
    விந்தை புரிந்தாய் வகுத்து….(66)….8-10-2010

    ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
    காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
    ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
    வாழி விரிஞ்சன் விறல்….(67)….8-10-2010

    காரணனே பாருக்கு, காரணம் பாராத
    பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
    தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
    இல்லை உமக்கிங்கே ஈடு….(68)….9-10-2010

    தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
    காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
    தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
    ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)….9-10-2010

    திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
    அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
    பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
    ஏராள மானஏ கா….(OR)
    ஏராளம் உந்தன் எடுப்பு….(70)….9-10-2010

    ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
    ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
    செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
    பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….10-10-2010

    காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
    சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
    அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
    சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….10-10-2010

    விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
    தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
    அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
    குயவன் களிமண் கரம்….(73)….10-10-2010

    யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
    தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
    தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
    நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)….10-10-2010

    வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
    சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
    ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
    பேசப் புகுந்தான் பதில்….(75)….10-10-2010

    வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
    போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
    நான்கு முகத்தினால் நான்கு முகமாக
    வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)….11-10-2010

    வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
    அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
    கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
    வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….11-10-2010

    காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
    மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
    கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
    பாட்டன் எனக்குப் பகர்….(78)….11-10-2010

    விருத்திரன் மாய வரைகள் சாய
    நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
    வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
    குச்சியாய் ஆனதேன் கோன்….(79)….11-10-2010

    மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
    தன்திறம் விட்டுத் தவழ்வதேன் -உன்தரப்பு காரணம் என்னவோ கார்முகில் காவலா
    வாருணா கூறுவாய் விட்டு….(80)….11-10-2010

    சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
    அபார கதாயுதம் அற்ற -குபேரா
    கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
    களையிழந்தீர் கூறும் கலி….(81)….11-10-2010

    துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
    கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
    தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
    படியாம் எமனேன் பயம்….(82)….11-10-2010

    வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
    கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
    சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
    வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….11-10-2010

    துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்
    செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்
    வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும்
    சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84)….12-10-2010

    ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை
    தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்
    விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது
    கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85)….12-10-2010

    பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே
    இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்
    உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்
    முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86)….12-10-2010

    தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்
    தேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்
    உள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்
    தெள்ளத் தெளிவாகத் தான்….(87)….12-10-2010

    அண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்
    கொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்
    தேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து
    பூவன் பழமாய்ப் பெற….(88)….12-10-2010

    இந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்
    தன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்
    தேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்

    நாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….12-10-2010

    ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே
    எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே
    தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்
    தீங்குளத் தோரால் தவித்து….(90)….12-10-2010

    விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது
    தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி
    உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்
    பொம்மையாய் ஆனோம் பயந்து….(91)….12-10-2010

    பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்
    வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான
    வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க
    கையினால் பொத்துகிறான் கண்….(92)….12-10-2019

    பாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு
    தாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்
    தாரு வனமழித்த தாணு தலையெழுத்தால்
    சேரும் கலைக்கில்லை ஊறு….(93)….13-10-2010

    மாற்றானாம் தாரகன்தன் மாளிகைத் தோட்டத்தில்
    நேற்றலர்ந்த பூவுக்கும் நோவின்றி -காற்றானான்
    வேர்வைக்கு மட்டும் வளியாகி வீசுதலால்
    பார்வைக்குக் கைவிசிறி பார்….(94)….13-10-2010

    ஆறு ருதுக்களும் வேறு வழியின்றி
    தாருகன் தோட்டத்தில் தொங்கிடும் -நூறுவகைப்
    பூக்களைக் காத்துப் பராமரிப்பு செய்திடும்
    ஆட்களாய் ஆயினர் அங்கு….(95)….13-10-2010

    முத்தை பவழத்தைப் பொத்தி ஜலத்திற்குள்
    நித்தம் அவைமுதிர நோன்பிருந்து -கத்தும்
    கடலரசன் தாருகன் காலடியில் கெஞ்சி
    அடபரிசாய் அந்தோ அளிப்பு….(96)….13-10-2010

    வாசுகியும் தோழர்களும் வீசுமொளி ரத்தினத்தால்
    நீசனவன் மாளிகையில் நள்ளிரவில் -தாசியென
    தீபங்கள் தாங்கித் திரிகின்றார் தேவனே
    பாபமென் செய்தோம் புகல்….(97)….13-10-2010

    கற்பகத் தாருதரும் அற்புதங்கள் யாவையும்
    அற்பனவன் ஆட்சி அருள்வேண்டி -நிற்பவனாம்
    இந்திரனே தாரகன் இன்னல் தவிர்த்திட
    தந்தருளி ஆனான் தொழும்பு….(98)….13-10-2010

    காட்டிடும் அன்புக்குக் கட்டுப் படாதவன்
    வாட்டு கிறான்மூ உலகத்தை -போட்டு
    அடியாத மாடு படியாதாம் என்று
    முடிவாகச் சொன்னான் முனி….(99)….14-10-2010

    இந்திர லோகத்து சுந்தரிகள் வாஞ்சையாய்
    வந்து தளிர்களுக்கு வேதனை -தந்திடாது
    நேசமொடு கொய்திடும் நந்தவனம் தாரகனின்
    நாசத்தால் நாணுது நைந்து….(100)….14-10-2010

    மூச்சுவிடும் காற்றளவு வீச்சடக்கி, தம்கண்ணீர்
    பூச்சொரிய தேவகுலப் பாவையர் -கூச்சமொடு
    தாமரைக் கைகளால் தாரகன் தூங்கிட
    சாமரம் வீசி சளைப்பு….(101)….14-10-2010

    இரவிதன் தேரின் புரவிக் குளம்பு
    உரசுமம் மேரு சிரசை -கருவியவன்
    பேர்த்தெடுத்து மாளிகைப் பூங்காவில் குன்றுகளாய்ப்
    பார்ப்பதவன் கேளிக்கைப் போக்கு….(102)….14-10-2010

    அட்டதிக் கஜங்களின் கொட்டும் மதஜலம்
    மட்டுமே கொண்டதால் மாகங்கை -குட்டையாம்
    பொற்றா மரைப்பயிர் போகமவன் வாவியில்
    குற்றப்பேர் மந்தா கினிக்கு….(103)….14-10-2010

    அமானுஷ் யமாக அவன்வந்தால் போகும்
    சமாச்சாரம் ஆகுமே சோகம் -விமானத்தில்
    ஆதலால் தேவர்கள் பூதலம் சுற்றிடும்
    காதலுக்கு வந்ததாம் கேடு….(104)….14-10-2010

    தீயவன் மூலம் தருமவிர் பாகத்தை
    தீயவன் தாரகன் தேவரெம்முன் -மாயமாய்
    வேள்வியில் அக்கினிக்கு வாரிசாய் வந்துண்டு
    தோல்விக்(கு) அளிப்பான் தபஸ்….(105)….14-10-2010

    மிச்சைஸ்வர் யத்தோடு மந்தரம் சுற்றுங்கால்
    இச்சையாய் இந்திரன் ஈட்டிய -உச்சைச்
    ரவஸ்ஸை அபகரித்த ராட்ஷஸனால் காப்பு
    கவஸம் இழந்தாற்போல் கோன்….(106)….14-10-2010

    கபவாத பித்தம் கலந்திடத் தோன்றும்
    அபவாத மாய்சன்னி பாதம் -உபவேதம்
    தீராப் பிணியென்ற தொல்லை யிதற்கீடாம்
    தாரா சுரன்செய்யும் தீங்கு….(107)….15-10-2010

    வெகுவாக நம்பிய விஷ்ணுவின் ஆழி
    புகவாகு இல்லாத பாறை -நிகர்மார்பில்
    மோதியதால் உண்டான ஜோதியதால் ஆரமாய்
    க்ராதகன் கொண்டான் கழுத்து….(OR)
    பாதகன் கொண்டான் புனைந்து….(108)….15-10-2010

    அயிரா வதமஞ்சும் அவ்வரக்கன் ஆனை
    எயிறால், இமையாதோன் என்றும் -உயிராய்
    வலம்வரும் புஷ்கரா வர்த்தக மஞ்சில்
    ஜலம்தெறிக்க முட்டும் சிதைத்து….(109)….15-10-2010

    கர்மத் தளையகற்றி கர்பப் பிணியறுக்க
    தர்மம் தவதானம் தோன்றலாய் -மர்ம
    பலமுடைய தாரகன் பாதகம் தீர
    தளபதியை தேவர்க்குத் தா….(110)….15-10-2010

    பற்றிச் சிறையில் பகைவனால் பூட்டிய
    வெற்றித் திருமகளை விண்ணரசன் -பெற்றிடவோர்
    ஆணைப் படைத்திடுவீர் சேனைத் தலைவராய்
    வானை வலுப்படுத்து வீர்….(111)….15-10-2010

    முனிவனது பேச்சு முடிந்தது கண்டு
    கனிவுடன் மேலே கமலன் -தணிவுடன்
    கூறியது மேகத்தின் கர்ஜனைக்குப் பின்வரும்
    மாரியதை வெல்லும் மகிழ்வு….(112)….15-10-2010

    நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென
    ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய்
    சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது
    தானல்ல என்றான் தாழ்ந்து….(OR)
    நானல்ல என்றான் நகைத்து….(113)….15-10-2010

    நட்ட மரமது நச்சுமர மாயினும்
    வெட்டுதல் வைத்தோன் வழியன்று -கெட்டவன்
    தாரகன் பெற்ற வரமளித்த நானவன்
    தீரவழி செய்தல் தவறு….(114)….15-10-2010

    மூவுலகைத் தீக்குள் முழுகவைக்கும் வேள்வியை
    தீவிரமாய் செய்தனன் தாரகன் -தாவரம்
    என்றதும் தந்தேன் தவத்தைத் தடுத்திட
    அன்றியவன் நன்மைக்காய் அன்று….(115)….17-10-2010(விட்டுப் போன வெண்பா)

    போராளி யாய்யுத்த பூமியில் பூரிக்கும்
    தாரா சுரன்திகைக்கும் தோள்வலியன் -வேறாள்
    தரணிமிசை உண்டோ, திருநீல கண்டன்
    பரமசிவன் மூலம் பிறப்பு….(116)….16-10-2010

    அறியாமைக்(கு) அப்பால் அறிவுக்(கு) அரணவ்
    இறையொளியை ஆரறிவர் இங்கு -அரியோடு
    அடநானும் அவ்வீசர் ஆழமுச்சி தேடித்
    தொடயேகி அன்றடைந்தோம் தோற்பு….(117)….16-10-2010

    காந்தம் இரும்பைக் கவருதலாய், கைலாச
    சாந்தனை யோகத்தில் சார்ந்தனைஏ -காந்தனை
    பார்வதியின் தோற்றப் பொலிவதால் ஈர்த்திருவர்
    சேர்வதில்தான் தேவர்க்கு தீர்வு….(118)….16-10-2010

    நாங்கள் வெளிப்படுத்தும் நல்லாக்க ஆற்றலை
    தாங்கி வளர்க்கும் திறனுடையோர் -ஈங்கிருவர்
    சம்புவதன் சக்தி சதியேற்க வல்லவள்
    நம்புவது நான்படைப்பில் நீர்….(119)….16-10-2010

    நெற்றி விழியோனின் நீலக் கழுத்தனின்
    வெற்றிப் புதல்வனே வானமகளிர் -கற்றைக்
    சிகைவிரித்துக் கொண்ட சிறையிருந்து மீட்டு
    பகையழிக்கும் சேனை பொறுப்பு….(120)….17-10-2010

    பகர்ந்த படைக்கும் பிரமன் மறைந்து
    நகர்ந்தான் சுரர்களை நீங்கி -தகுந்த
    உபாயம் கொடுத்த உறுதியில் சொர்க
    அபாயம் அகன்றது அன்று….(121)….17-10-2010

    சம்புவை ஈர்த்திடும் சாமர்த் தியமுற்ற
    அம்புவில் மாறன் அதிசியத்தை -நம்பியகோன்
    இந்திரன் நெஞ்சால் இருமடங்கு வேகத்தில்
    வந்திடச் சொன்னான் விரைந்து….(122)….17-10-2010

    ரதிவளையல் காயம் பதிவுசெய்த காயம்,
    நதிவளைவாய் சேர்ந்திருக்கும் நங்கை -நுதல்வளைவாய்
    மன்மதன் வில்லேந்தி மாம்பூ வசந்தனுடன்
    விண்முதலோன் முன்பு வரவு….(123)….17-10-2010

    சர்கம் இரண்டு சுபம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 173-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்த் எடுத்த இந்த நிழற்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    அளவில் பெரியது ஆற்றலில் சிறந்தது யானை. அற்றை நாளைய அரசர் தம் படைகளிலேயே பெருமைக்குரியதாய்க் கருதியது யானைப் படையையே. நினைவாற்றல், புத்திக்கூர்மை, குடும்பப்பிணைப்பு என்று எத்தனையோ நற்குணங்கள் யானையிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்வதற்கு இருக்க, அவனோ மதம் பிடிப்பது ஒன்றையே அவற்றிடமிருந்து விருப்பமாய்க் கற்க முனைகின்றான்; அம்மட்டோ? காடுகளில் இச்சையோடு திரிந்துகொண்டிருக்கும் அவற்றைப் பிடித்துப் பிச்சையெடுக்க விடுகின்றான். வேதனை!

    இனி, யானை குறித்த தம் கருத்துக்களைக் கவியருவியாய்ப் பெருகவிட நம் அருமைக் கவிஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களை வரவேற்போம்!

    *****

    உருவில் பெருத்த உயரிய விலங்காம் யானை, பதமாய் மாந்தருடன் பழகினும் மதங்கொண்டால் பாகனையே அதஞ் செய்துவிடும்! மாவிலங்கதற்கு விலங்குபூட்டிப் பிச்சையெடுக்க வைத்தல் மாபெருங்குற்றம் என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    யானையோர் அதிசயம்.!

    உருவில் பெருத்த உயரிய விலங்கு
    இருபுறம் கட்டிய இரும்புச் சங்கிலி.!
    பிணைக்கப் பட்டது பிழைசெய் ததாலா.?
    இணையாய் வந்த இருவரும் யாரோ.?
    மாவிலங் கதனை மாதங்க மென்பார்
    கோவில் வாசலில் கண்டும் தொழுவார்.!
    அகல வாயினால் அனைத்தும் உண்ணச்
    சகலமும் வயிற்றில் செரிக்கும் அதிசயம்.!
    பிளிறும் சத்தமோ பெரிதாய்க் கேட்கும்
    களிற்றின் சினமோ காட்டையே அழிக்கும்.!
    தன்கைப் பிறரின் தலையிலே வைத்து
    தன்னல மின்றித் தரும்நல் லாசியை.!
    விலங்கென் றாலும் விதிவி லக்காய்
    நலம் செய்யும் நல்ல பிராணியே.!
    பதமாய் மனிதருடன் பழகும் ஆனால்
    மதம் கொண்டால் முதல்பலி பாகனாம்.!
    மண்ணில் பிறந்த மாவிலங்(கு) யானை
    கண்ணுக் கின்னும் காட்சிப் பொருளே.!
    அச்சம் உண்டு அருகில் செல்லவும்
    பிச்சை எடுக்கப் பழக்கியது குற்றமே.!

    *****

    ”காட்டுவிலங்கினைக் கட்டுப்படுத்தி மக்களிடம் காட்டிப் பிழைத்தது போதுமையா! அதனைப் பிச்சையெடுக்க வைத்து அதன் பிறப்பைக் கொச்சைப்படுத்தாதீர்!” என்று வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வேண்டாமே…

    காட்டில் பெரிய விலங்கதனைக்
    கட்டுப் படுத்தி சாதுவாக்கி,
    நாட்டில் நல்ல வேலைசெய்ய
    நன்றாய்ப் பழக்கி நலம்பெற்றும்,
    கோட்டை விட்டு விடுகின்றீர்
    குணமது கெட்ட மானிடரே,
    காட்டிப் பிழைத்தது போதுமய்யா
    கையால் பிச்சை வேண்டாமே…!

    *****

    மரக்கிளை ஒடித்துண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்த நான் இன்று கிளையிழந்து வாடுகின்றேன். பாசம் எனும் பெயரில் பாசாங்குக் காட்டி வீழ்த்தும் வஞ்சக நெஞ்சினரே! நகர்வலத்தில் எங்களை வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு எங்கள் விழியோர ஈரம் புரியுமா? என்று வெதும்பும் யானையைத் தன் கவிதைப் பாத்திரமாய் உலவவிட்டிருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    யானை அழிவின் காட்சி!

    வனத் தாயின் கருவறையிலோ சுதந்திரமாக …..
    வாழ்விழந்து நிற்கிறேன் பரதேசியாக …………
    மரக்கிளை ஒடித்த கரங்களில்………..
    என் கிளை(உறவு)யிழந்த சோர்வு…..
    சுதந்திர காற்றில் மகிழ்வாக காட்டின் வாசம்
    சங்கிலியின் பிணைப்பிலோ கைதியின் வாசம்
    குழி தோண்டி குழிதோண்டியே
    குறுக்கு வழியில் கைது செய்வீர்!
    பாசமெனும் பெயரிலே பாசாங்கு செய்குவீர் !
    நேசம் காட்டி வீழ்த்தும் கலையினை
    நேற்று இன்றா கற்றுள்ளீர் !
    ‘களிறு’ என்ற கர்வம் அகற்ற
    ‘பிடி’ யின் உறவில் பிணைந்திடாமல் இருக்க
    மலை போன்ற உருவத்தினை
    மண்டியிட வைத்தீர் !
    அடிமை செய்யும் தொழிலை
    கற்றுத் தெளிந்த மானிடமே !
    பொய்வித்தை காட்டி விந்தை புரியும் ஆறறிவாளனே !
    எம்அறிவு குறைபாடு உமக்கு ஆதாயமானது
    எங்குக் கற்றீர் போலி வித்தை காட்ட

    கலையெனும் பெயரில் ஒப்பனை செய்தீர் !
    கண்ணுறக்கம் தொலைக்க நிம்மதி கெடுத்தீர்
    விலங்கு என்ற ஏளனமா
    மடிந்து போகாமலும் உயிர் வாழ விடாமலும் துயரம் தந்து
    மதம் பிடித்ததாய் புகார் சொல்வீர் !
    மதம் பிடித்த மானிடமே …..

    எம் இன அழிவில்
    உங்கள் சுயநலச் சாயம் தெரிகிறதே ….
    எமை விலை பேசும் மானிடமே !
    நகர்வலத்தில் வீதியுலா வருகையிலே
    வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு
    என் கண்ணின் ஈரம் புரிகிறதா
    யானை அழிவின் காட்சி தெரிகிறதா…………..

    *****

    யானையின் அவல வாழ்வியலை உருக்கமாய்த் தம் கவிதையில் தீட்டியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    யானை – சிறுவர் பாடல்

    வேலை செஞ்சு களைச்சிப்போயி வேழமொண்ணு வருகுது
    காலைச்சுற்றிக் கட்டிப்போட்ட கஸ்டத்தோட வருகுது.
    ஆளுக்கொரு பக்கம் நிண்ணு அங்குசத்தால் குத்தியும்
    அதையும் தாங்கித் துன்பத்தோடு அமைதி காத்து வருகுது.

    மாகரத்த யானை தன்றன் வலியறிந்தும் குறுக்கிடும்
    சூகரத்தைப் போகவிட்டுத் தூரமாக விலகிடும்
    பாகர்செய்யும் துன்பந்தன்னைப் பலமிருந்தும் பொறுத்திடும்
    வேகமுற்று மூர்க்கம்கொண்டால் மட்டுமே அதஞ்செய்யும்

    பூதலத்தில் பொறுமை காக்கும் புனிதர்கூட அற்பரின்
    பொய்புரட்டை வஞ்சச்சூதை புன்மையைப் பொறுப்பதும்
    ஆதரித்து அன்பு செய்து அவரை ஏற்றுக் கொள்வதும்
    ஆனை காட்டும் நற்குணத்திற் கீடு என்பர் மாந்தரே.

    பூதலத்தில் அற்பரின் பொய்புரட்டைப் பொறுத்துக்கொள்ளும் புனிதர்போல, மாகரத்த யானையும் பாகர்செய்யும் கொடுமையைப் பொறுத்துக்கொள்கின்றது என்று வேழத்தின் உயர்குணத்தைத் தக்கவகையில் விதந்தோதுகின்ற இக்கவிதையின் ஆசிரியர் திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • பழந்தமிழக மூவேந்தர்களின் காலவரையறை – 14

    கணியன்பாலன்

     

    அ.சேர வேந்தர்கள்:

    மாமூலனார் பாடல்கள்தான் நமது கால நிர்ணயிப்புக்கான முதல் அடிப்படை ஆதாரங்களை வழங்குகின்றன. பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களில் மாமூலனாருக்கு முன் ஒரு தலைமுறையும், அவரது தலைமுறைக்குப்பின் 8 தலை முறைகளையும் நம்மால் இனங்காண முடிந்தது. முதல் காலகட்ட முதன்மைப் புலவராக குடவாயிற்கீரத்தனாரும் பத்தாம் காலகட்ட முதன்மைப்புலவராக கோவூர்கிழாரும் இருக்கின்றனர். மாமூலனார் இரண்டாம் காலகட்ட முதன்மைப் புலவராகிறார். நமக்குக் கிடைத்துள்ள பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பத்து வரலாற்றுக் கால கட்டங்களும் கி.மு. 350 முதல் கி.மு 50 வரையான 300 வருட காலத்தைக் கொண்டதாகும். கிரேக்கவீரன் அலெக்சாந்தர் இந்தியாவை விட்டு வெளியேறிய கி.மு. 325க்கு ஒரு தலைமுறை முந்தைய காலம்(கி.மு. 350) முதல், சோழமன்னன் நலங்கிள்ளி உச்சயினிவரை படையெடுத்த காலத்திற்கு(கி.மு.75) பிந்தைய ஒரு தலைமுறை(கி.மு. 50) வரையான பத்து வரலாற்றுக் காலகட்டங்களே நமது சங்ககால வரலாற்றுக் காலகட்டங்கள்(கி.மு.350-50) ஆகும்.

    சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள்தான் முதலில் நிர்ணயம் செய்யப்பட்டன. இரண்டாம் காலகட்ட மாமூலனார் காலம் என்பது கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என முன்பே கணிக்கப்பட்டுள்ளது. அதாவது கி.மு. 325- கி.மு. 275 ஆகும். ஆதலால் முதல் காலகட்டம் என்பது கி.மு. 350 இல் இருந்தும், இரண்டாம் காலகட்டம் என்பது கி.மு. 320 இல் இருந்தும் தொடங்குகிறது. இமயவரம்பன் இரண்டாம் காலகட்டம் ஆவான். வின்சென்ட் சுமித் அவர்கள் கி.மு. 325-322 வரை வட இந்தியாவில் கலவரம் நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வட இந்தியாவில் கலவரம் நடந்தது என்பது நந்தர்கள் மௌரியர்களுக் கிடையேயான போர்போக, சேரலாதன் இமயவரம்பனின் படையெடுப்பாலும் இருக்கலாம் எனக்கொண்டு அவன் கி.மு. 325வாக்கில் முதல் காலகட்டத்தின் இறுதியில் வடநாடு படையெடுத்ததாகக் கொள்ளப்பட்டது. ஆதலால் அதற்கு இரு வருடங்களுக்கு முன் கி.மு. 327வாக்கில் அவனது தந்தை உதியன் சேரலாதன் இறந்து இமயவரம்பன் வேந்தனாக ஆனான் எனக் கணிக்கப்பட்டது. கி.மு. 163 என்பது வரலாற்றில் இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டாகும். அந்த வருடத்தில்தான் பத்தாம் பதிற்றுப்பத்தின் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்துபோகிறான். இது ஒரு முக்கிய காலவரையறையாகும்.. ஆதலால் பதிற்றுப்பத்தில் உள்ள சேரலாதன் இமயவரம்பன் முதல் பத்தாம் பதிற்றுப்பத்தின் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் வரையான வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் என்பது சுமார் கி.மு. 327இல் தொடங்கி கி.மு. 163இல் முடிகிறது என கணிக்கப்பட்டது.

    உதியன் முதல் தொடங்கும் குட்டுவர்களின்  இறுதி ஆட்சி ஆண்டு என்பது, சேரன் செங்குட்டுவன், சம்பைக் கல்வெட்டு வெட்டிய ஆண்டில்(கி.மு.220) இறந்தான் எனக்கொண்டும், அதன்பின் 8 ஆண்டுகள் மட்டுமே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சியில் இருந்தான் எனக்கொண்டும் சுமார் கி.மு. 212 என நிர்ணயிக்கப்பட்டது. கி.மு. 212 முதல் கி.மு. 163வரை 4 பொறையர்குலச் சேர வேந்தர்களும் அதன் பின் இறுதியாக 13 ஆண்டுகள் கணைக்கால் இரும்பொறையின் ஆட்சியும், ஆக மொத்தம் ஐந்து பொறையர்குலச் சேரர்களின் ஆட்சி சுமார் 62 ஆண்டுகள் இருந்ததாகக் கொண்டு, பொறையர்குலச் சேரர்களின் ஆட்சி கிட்டத்தட்ட கி.மு. 212வாக்கில் தொடங்கி, கி.மு. 150வாக்கில் முடிந்ததாகக் கொள்ளப்பட்டது.

    உதியனின் மகன் இமயவரம்பன் முதல் ஐந்து குட்டுவர்களின் ஆட்சியாண்டுகள் என்பது கி.மு.327-கி.மு.212 வரை எனவும். ஐந்து பொறையர்களின் ஆட்சி யாண்டுகள் என்பது கி.மு.212-கி.மு.150 வரை எனவும் கணிக்கப்பட்டது. இந்தக் கி.மு. 150வாக்கில் தான் கணைக்கால் இரும்பொறை சிறையிலிடப்பட்டு இறந்து போகிறான். மாக்கோதை வெளியிட்ட நாணயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதாலும், குட்டுவன் கோதையின் நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதாலும், குட்டுவன் கோதை முத்தொள்ளாயிரம் நூலின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், இவன் உச்சயினியை வென்ற சோழன் நலங் கிள்ளியின் சமகாலத்தவன் என்பதாலும், இவனது ஆட்சிக்காலம் கி.மு.70வாக்கில் முடிவதாகக் கொள்ளப்பட்டது. ஆதலால் இறுதி மூன்று கோதை வேந்தர்களின் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 150-கி.மு. 70 வரையான சுமார் 80 ஆண்டுகள் எனக்கணிக்கப்பட்டது.

    குட்டுவகுலச்சேர வேந்தர்கள்:

    கி.மு. 327வாக்கில், இமயவரம்பனின் வேந்தர் ஆட்சி தொடங்குவதாகக் கொள்ளப் பட்டது. அவன் மொத்தம் 58 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகப் பதிற்றுப்பத்து குறிப்பிட்டுள்ளது. அவனது ஆட்சி மௌரியப் படையெடுப்புக்குப்பின், முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் முடிகிறது. அதன் காலம் கி.மு. 275 ஆகும். ஆகவே அவனது மொத்த ஆட்சிக்காலம் கி.மு. 333-275 எனக் கணிக்கப்பட்டது. ஆதலால் இமயவரம்பன் சுமார் 6 ஆண்டுகள் அரசனாகவும் 52 ஆண்டுகள் வேந்தனாகவும்(கி.மு.327-கி.மு.275) இருந்தான் என ஆகிறது. இவனுக்குமுன் இவனின் தந்தை உதியன் சேரலாதன் சேர வேந்தனாக சுமார் 20 ஆண்டுகள் ஆண்டான். ஆகவே அவனது வேந்தர் ஆட்சிக்காலம் கி.மு.347-கி.மு.327 ஆகும். இமயவரம்பனுக்குப் பின் அவனது தம்பி சுமார் 10 ஆண்டுகளும், மூத்த மகன் 15 ஆண்டுகளும் வேந்தர்களாக ஆண்டதாகக் கொண்டு செங்குட்டுவனின் வேந்தர் ஆட்சி கிட்டத்தட்ட கி.மு. 250-220 வரை எனக் கணிக்கப்பட்டது. செங்குட்டுவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் கூறுகிறது. அசோகர் இறந்த ஆண்டு கி.மு. 232 என்பதால், செங்குட்டுவன் கி.மு. 232-228வாக்கில் தனது வடநாட்டுப்படையெடுப்பை நடத்துகிறான். அதன்பின் கிள்ளிவளவனுக்காக கி.மு. 225வாக்கில் நேரிவாயில் போரை நடத்துகிறான். அதன்பின் 5ஆண்டுகள் கழித்து கி.மு. 220வாக்கில் இறந்து விடுகிறான்.

    செங்குட்டுவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆண்டதால் அவன் கி.மு. 275இல் இமயவரம்பன் இறந்தபோது அரசனாக ஆகிறான். அதேகாலத்தில் தான் அவனது தமையன் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரலும் அரசனாகிறான். இமயவரம் பனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், மூத்த மகன் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரலும் மூன்றாவது காலகட்டம் என்பதாலும் அவர்களது மொத்த ஆட்சிகள் பதிற்றுப்பத்துப்படி தலா 25 ஆண்டுகள் என்பதாலும் தம்பி 10 ஆண்டுகளும் மூத்தமகன் 15 ஆண்டுகளும் வேந்தர்களாக ஆண்டதாகக் கொண்டு அவர்களது ஆட்சிகள் கி.மு. 250க்குள் முடியமாறு கணிக்கப்பட்டது. களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் பெண்கொலைபுரிந்த நன்னனை, நன்னனூர் நன்னனை வெற்றி கொள்கிறான் என்பதும், இவன் பாலைபாடிய பெருங்கடுங்கோ இடம்பெற்றுள்ள புகளூர்க் கல்வெட்டுக்கு(கி.மு.295) ஒரு தலைமுறை பிந்தையவன் என்பதும் கணக்கில் கொள்ளப்பட்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 265-250 எனக் கணிக்கப்பட்டது. ஆதலால் இமயவரம்பனுக்கும் இவனுக்கும் இடையே இருந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் வேந்தர் ஆட்சிக்காலம், கிட்டத்தட்ட கி.மு. 275-265 எனக் கணிக்கப்பட்டது.

    அதன்பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 8 ஆண்டுகளும், செல்வக் கடுங்கோ வாழியாதன் 7 ஆண்டுகளும் ஆண்டதாகக் கொள்ளப்பட்டது. இவை வேந்தர் ஆண்டுகள் தானே ஒழிய மொத்த ஆட்சி ஆண்டுகள் அல்ல. இலக்கியக் கணிப்புப் படி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், செல்வக் கடுங்கோவாழியாதனும் 5ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 5ஆம் காலகட்ட நள்ளி என்கிற கடையேழு வள்ளல்களில் ஒருவரைப்பாடிய காக்கை பாடினியார் நச்செள்ளையார்தான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை 6ஆம் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். பேகன், ஓரி, பாரி போன்ற வள்ளல்களின் சமகாலத்தவன் இவன். பதிற்றுப்பத்துப் பதிகப்படி இவனது மொத்தஆட்சி ஆண்டுகள் 38 ஆகும். இவன் சேரன் செங்குட்டுவன் வேந்தன் ஆனபோது (கி.மு.250) அரசனாக ஆக்கப்பட்டான். இவை அனைத் தையும் கணக்கில் கொண்டுதான் இவனது வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 220-212 எனக்கணிக்கப்பட்டது. ஆகவே கிட்டத்தட்ட கி.மு. 347-212 வரை, மொத்தம் ஆறு குட்டுவகுலச்சேரவேந்தர்கள் 135 ஆண்டுகள் ஆண்டனர் எனலாம்.

    பொறையர்குலச்சேர வேந்தர்கள்:

    செல்வக் கடுங்கோவாழியாதனை 7ஆம் பதிற்றுப்பத்தில் கபிலர் பாடியுள்ளார். அவர் 5ஆம் காலகட்டத்தின் முதன்மைப்புலவர் ஆவர். அவர் பாரியின் பறம்புப் போருக்குப்(கி.மு.215) பின் சில வருடங்கள் கழித்துத்தான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் சேர்ந்துதான் பாரியை அழித் தனர். ஆதலால் பறம்புப்போரின்போது செல்வக்கடுங்கோ வாழியாதன் சேர வேந்தனாக இருந்திருக்க இயலாது. குட்டுவன் குலத்தில் வாரிசுகள் இல்லாததால் செல்வக்கடுங்கோவாழியாதன் கி.மு. 212வாக்கில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பின் வேந்தன் ஆகிறான். இவன் கிமு. 230வாக்கில் அந்துவன் சேரலுக்குப்பின் கரூரில் பொறையர்குல சேர அரசன் ஆவதாலும், இவனது மொத்த ஆட்சி ஆண்டுகள் என்பது பதிற்றுப்பத்துப்பதிகப்படி 25 ஆண்டுகள் என்பதாலும் இவன் 205வரை வேந்தனாக இருந்தான் எனலாம். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டுதான், இவனது வேந்தர்ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 212-205 எனக் கணிக்கப்பட்டது.

    அதன்பின் கி.மு. 205வாக்கில் இருந்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையின் ஆட்சி தொடங்குகிறது. அதியமானின் திருக்கோவிலூர் போருக்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் தகடூர் போர் நடக்கிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆட்சியேற்றபின் தான் இப்போர் தொடங்குகிறது. அவன் ஆட்சியேற்ற இரு வருடங்களில் தொடங்கிய இப்போர் சுமார் 3 வருடம் நடக்கிறது(கி.மு.203-கி.மு.200). அதன்பின் புகார்ப் போர் (கி.மு. 199)நடக்கிறது. இலக்கியக்கணிப்புப்படி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், இளஞ்சேரல் இரும்பொறையும் 6ஆம் காலகட்டம் ஆவர். பதிற்றுப்பத்துப்பதிகப்படி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மொத்த ஆட்சிக்காலம் 15 ஆண்டுகள் என்பதாலும், செல்வக்கடுங்கோ வாழியாதன் வேந்தன் ஆன சுமார் இரு ஆண்டுகள் கழித்து(கி.மு. 210) பெருஞ்சேரல் இரும்பொறையை அரசனாக்கினான் என்பதாலும் அவனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது ஏறக்குறைய கி.மு. 205-கி.மு. 195 என ஆகிறது. அதன்பின் ஆட்சிக்கு வந்த 6ஆம் காலகட்ட இளஞ்சேரல் இரும்பொறை கி.மு. 200வாக்கில் தகடூர் போருக்குப்பின் அரசனாக்கப்படுகிறான். சுமார் கி.மு. 195வாக்கில் வேந்தன் ஆகிறான். பதிகப்படி இவனது மொத்த ஆட்சி ஆண்டுகள் 16 என்பதால் இவனது வேந்தர் ஆட்சி கி.மு. 184வாக்கில் முடிவடைகிறது. ஆகவே இவனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கி.மு.195 – 184 ஆகும்.

    கி.மு. 184 முதல் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சி நடைபெறுகிறது. இலக்கியக் கணிப்புப்படி இவன் 7ஆம் காலகட்டம் ஆகிறான். இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டு(கி.மு.163), இவன் இறக்கிறான். ஆதலால், இவனது வேந்தர் ஆட்சிக் காலம் என்பது கி.மு. 184 முதல் கி.பி. 163 வரை ஆகும். இவனைத் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் கி.மு. 182வாக்கில் தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைக்கிறான். இவன் தப்பித்து வந்து மீண்டும் சேர வேந்தன் ஆகிறான். இவன் காலத்தில்தான் முசிறியைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் முற்றுகையிடுகிறான். இவன் இரண்டாம் கரிகாலன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தொண்டைமான் இளந்திரையன் போன்றவர்களின் சமகாலத்தவன் ஆவான்.இவனுக்குப்பின் எட்டாம் காலகட்டக் கணைக்கால் இரும்பொறை கி.மு. 163 முதல் சுமார் 13 ஆண்டுகள் ஆட்சி செய்கிறான். கி.மு. 150வாக்கில் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியிடம் போரில் தோற்று, அவனால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்து போகிறான். இவனைப் பொய்கையார் பாடியுள்ளார். இவன் கிட்டத்தட்ட கி.மு. 163-150வரை சேரவேந்தனாக இருந்தான். இவனே கடைசிப் பொறையர்குலச் சேரவேந்தன் ஆவான். ஆகவே கிட்டத்தட்ட கி.மு. 212-கி.மு. 150வரை 62 ஆண்டுகள், 5 பொறையர்குலச் சேரவேந்தர்கள் ஆண்டனர் எனலாம்.

    கோதைகுலச் சேர வேந்தர்கள்:

    அதன்பின் கோதைகுலச் சேரர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இலக்கியக் கணிப்புப்படி கோக்கோதை மார்பன், மாக்கோதை, குட்டுவன் கோதை ஆகிய மூவரும் சுமார் கி.மு. 150-கி.மு. 70வரை ஆள்கின்றனர். கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை வெளியிட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்கிறார் நடன. காசிநாதன் அவர்கள். ஒரு நூற்றாண்டை தொடக்கப்பகுதி, இடைப்பகுதி, இறுதிப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30-35 ஆண்டுகள் எனக்கொள்ளலாம். அதன்படி கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது கி.மு. 135-கி.மு. 100 வரையான காலம் ஆகும். அதுதான் மாக்கோதையின் ஆட்சிக்காலம் ஆகும். இவனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே இருந்தவன் தான் கோக்கோதை மார்பன் ஆவான். கணைக்கால் இரும்பொறையின் ஆட்சி கி.மு. 150வாக்கில் முடிந்து, மாக்கோதையின் ஆட்சி கி.மு. 135வாக்கில் தொடங்குவதால் இடைப்பட்ட கோக்கோதை மார்பனின் ஆட்சி என்பது கி.மு. 150-கி.மு. 135 ஆகும். கடைசி வேந்தன் குட்டுவன் கோதையின் நாணயங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அதன்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் முதல்பகுதி எனக் கருதப்படுகிறது. மேலும் அவன் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றவன். சோழன் நலங்கிள்ளிக்குச் சமகாலத்தவன். மேலும் பிட்டனின் மகன் பிட்டன் கொற்றன் இவனுக்குப் படைத்தலைவனாக இருந்தவன். இவனது காலத்தைச் சேர்ந்த பிட்டனின் மகள் வெட்டிய கல்வெட்டுக்காலம் சுமார் கி.மு. 85 ஆகும். ஆகவே இவைகளைக் கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக் காலம் கிட்டத்தட்ட கி.மு. 100-கி.மு. 70 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்விதமாகக் கோதைகுலச் சேரவேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டன.

       சேரவேந்தன் இமயவரம்பனின் வேந்தர் ஆண்டு என்பது அவன் வடநாடு படையெடுத்துச்செல்வதற்கு(கி.மு.325) 2 ஆண்டுகள் முன்பு கி.மு. 327வாக்கில் தொடங்குகிறது. அதன் கடைசிச் சேரவேந்தன் குட்டுவன் கோதையின் ஆட்சி யாண்டு கி.மு. 70வாக்கில் முடிகிறது. இந்த இடைப்பட்ட சுமார் 257 ஆண்டு களில் 13 சேர வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் சேர வேந்தன் உதியனையும் சேர்த்து மொத்தம் 14 சேர வேந்தர்கள் ஆண்டுள்ளனர். ஆகவே தனிப்பட்ட சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் வேந்தனான சேரன் உதியன் முதல் இறுதி வேந்தனான குட்டுவன் கோதை வரையான 14 சேர வேந்தர்களின் வேந்தர் ஆண்டுகள் என்பது சுமார் கி.மு.347-கி.மு.70 வரையான 277 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்று சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(221)

     

     

    நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க       

    மென்மை பகைவ ரகத்து.                                                

           -திருக்குறள் -877(பகைத்திறம் தெரிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    உணர்ந்து

    உதவாதர்களிடம் உரைக்காதே

    உன் துன்பத்தை..

     

    உன் வலியின்மையையும்

    உரைத்துவிடாதே வெளியே,

    வயவர் அறியும் வகையில்…!

     

    குறும்பாவில்…

     

    சொல்லாதேயுன் துன்பத்தை உணர்ந்து உதவாதவரிடம்,           

    பகைவரறிய உன் வலியின்மையையும் 

    பகன்றுவிடாதே பிறரிடம்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    துன்ப முனக்கு வருகையிலே

         துன்ப மதனை உணர்ந்தேதான்

    அன்பு கொண்டே உதவாத

         அடுத்தவ ரிடமதைச் சொல்லாதே,

    உன்னால் செய்ய இயலாதெனும்

         உண்மை யான நிலையதுவை

    என்றும் எடுத்துச் சொல்லிடாதே

         எதிரி யறியப் பிறரிடமே…!

     

    லிமரைக்கூ..

     

    உதவாதவரிடம் துன்பத்தை உரைக்காமை நன்று,    

    எதிரியறிய என்றும் சொல்லிவிடாதே உண்மையை              

    உன்னால் வென்றிட முடியாது என்று…!

     

    கிராமிய பாணியில்…

     

    சொல்லாத சொல்லாத துன்பத்த சொல்லாத

    சொல்லாத சொல்லாத உள்ளதச் சொல்லாத..

     

    உண்மதெரிஞ்சி ஒதவாதவன்கிட்ட

    சொல்லாத சொல்லாத

    ஒன் துன்பத்த சொல்லாத..

     

    எதுராளி அறியிறபடி உள்ளதச் சொல்லாத

    ஒன்னால முடியாதுங்கிற உண்மயச் சொல்லாத..

     

    அதால

    சொல்லாத சொல்லாத துன்பத்த சொல்லாத

    சொல்லாத சொல்லாத உள்ளதச் சொல்லாத…!

     

    செண்பக ஜெகதீசன்…

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    வெற்றிகரமான பெண்ணுக்குப்(ஆண்டாள்) பின்னாடி ஆணிருப்பான்(புருஷோத்தமர்)

    180813 -Andal and Krishna – Tiru aadi Pooram – Watercolour A4100dpi -lr

    முன்னணிப் பெண்ணின் பின்னணி ஆணினை
    கன்னிநுண் நோன்பினால் கட்டிய -அண்ணியவள்(அண்ணன் கண்ணன் மனைவி அண்ணி)
    முன்நின்று தப்பாது முப்பதைச்(திருப்பாவை) சொல்வோர்க்கு
    பின்நின்று வெற்றியளிப் பு’’……..கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (274)

    இந்த வார வல்லமையாளராகக் கலைஞர் மு. கருணாநிதி (1924-2018) அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. எளிய இசை வேளாளர் குடும்பத்தில், திருக்குவளை என்னும் சிற்றூரில் பிறந்த கலைஞர் மு.க. தமிழக அரசியலை 60 ஆண்டுகளாக வழிநடத்திய மாபெரும் சக்திகளில் ஒருவராக இருந்தார். எப்பொழுதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும், வன்முறைப் பாதையைத் தூண்டும் அரசியலைக் கையில் எடுக்காதவர் ஆகவும் அண்ணா வழியில் திராவிட இயக்கத்தை அமைத்தார்.

    சமூக நீதியை அனைவர்க்கும் பரப்பிய கருணாநிதி, மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று மாநில அரசில் பணிபுரிவோருக்கும் செய்தார். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் வருமானத்தை வெகுவாகக் கூட்டினார், ரிக்‌ஷா ஒழிப்புத் திட்டத்தை அமல்படுத்தினார்.

    கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம், பூம்புகாரில் இளங்கோ அடிகளின் காப்பியத்திற்கு எழுநிலை மாடம், .. இவரது குறிப்பிடத்தக்க சாதனைகள். கோவையில் கோலாகலமான செம்மொழி மாநாடு, சென்னையில் நிரந்தரமாக செந்தமிழ் ஆய்வுக்கென மத்திய அரசாங்க நிறுவனம் என, பரிதிமாற் கலைஞர் தொடங்கிய செம்மொழி கோரிக்கையை வெற்றியுடன் நிறைவேற்றினார்.

    தமிழர்களில் ஒரு சிலர் வட எழுத்து ஒன்றுகூட இருக்கக்கூடாது என வாதிடுவர். அவரது கல்லறைப்பெட்டியில் ஜூன், ஆகஸ்ட் என்று எழுதிக்காட்டி, மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டு அழைத்தவர். செம்மொழி மாநாட்டில் தான் இன்று செல்பேசிகளிலும், வலைத்தளங்களிலும், எல்லா பத்திரிகைகள், தினத்தாள்களில் வழங்கும் யூனிக்கோடு என்னும் ஐஎஸ்ஓ 10646 குறியேற்றம் தமிழுக்கான அரசாங்கக் குறியேற்றம் என அறிவித்தார். பேரா. வா. செ. குழந்தைசாமி தலைமையில், பேரா. மு. அனந்தகிருஷ்ணன் பொறுமையாகப் பல ஆண்டுகள் தமிழர்களிடம் ஆலோசித்துச் செய்த முடிவு இது. யூனிகோடில் தமிழ்மக்கள் ஹிந்தி, தெலுங்கு போன்ற தமிழல்லாத பிற இந்திய மொழிகள், திருக் குரான், வேதம், … போன்ற சமய சாத்திரங்கள் தமிழ் எழுத்தில் எல்லோரும் எழுதி எளிய வழியில் பயில, ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்த ஐந்து வடவெழுத்துகள் (ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ) இன்று தேவைப்படும்போது பயன்பாட்டில் எல்லா கணினிகளிலும், அச்சிலும், செல்போன்களிலும் உள்ளது. எழுத்துபெயர்ப்பு மூலம் இந்திய மொழிகளின் இலக்கியங்களைத் தமிழர்கள் அதன் உச்சரிப்புடன் ஒலித்துப் பழகத் தமிழருக்கு அளித்ததில் கலைஞருக்கும் பங்குண்டு.

    பெரியார் வழியில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர் கலைஞர். இன்று திராவிட இயக்கத்தின் இரண்டு பெருங் கட்சிகளும் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மூவரும் மறைந்துவிட்டனர். தமிழ்நாட்டின் உரிமைகளை தில்லி அரசாங்கத்திடம் பெறுவதற்கும், நல்ல உயர் அதிகாரிகள், துணைவேந்தர்களாக அறிஞர்கள் நியமனம், தொல்லாய்வுகளுக்கு ஆதரவு, மொழியியல் துறையில் உலக நிபுணர்களுடன் கூடிய மாநாடுகள், … எனச் செய்தலுக்கு வாய்ப்பு. பெரியார் வலியுறுத்திய எழுத்துச் சீர்திருத்தம் முழுமை பெறவில்லை. மலையாளிகள் செய்துவிட்டனர். அதுபோல, விரும்புவோர் உ,ஊ உயிர்மெய்களைப் பிரித்தும் எழுதலாம் என ஆணையை தமிழ்நாட்டு அரசாங்கம் வெளியிட்டால் திராவிட இயக்கம் அளிக்கும் கொடையாகும். இதனைச் செய்யலாம் என்று கி.வா.ஜகந்நாதன், சிலம்புச் செல்வர் மபொசி போன்றோரும் கட்டுரைகள் எழுதி அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுக இரு கட்சித் தலைவர்களும் சேர்ந்து அறிவிக்கலாம்.

    மனோன்மணீயம் பெ. சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து இந்திய மொழியியல் குடும்பங்களைப் பற்றிய அறிவு வந்தவுடன் ஏற்பட்டது. அந்தச் செய்யுளுக்கு அரசாங்கத் தமிழ்த்தெய்வ வணக்கம் எனச் செய்துவிட்டார் கலைஞர். உலகெங்கிலும் தமிழர் கூடும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்ரன. பள்ளிகளில் குழந்தைகள் கற்கின்றனர். வேத காலத்தில் தை 1 புத்தாண்டாக இருந்ததற்கான சான்றுகள் உண்டு. இன்றும் நேப்பாளத்தில் விவசாயிகள் தை 1 (மகர சங்கராந்தி) புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாளை திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டு தினமாக அதிகாரபூர்வமாகச் செய்தவர் கலைஞர் தான். தமிழ்ப் பெருமை, பீடு என்பதனை இந்தியாவின் எல்லா மக்களுக்கும் அறியச் செய்ததில் கலைஞரின் பங்கு அளப்பரியது.

    ஹிந்தி எழுத்தை மைல்கல்களில் கூட திணிக்கும் நிலை ஏற்பட்டுவருகிறது. பல நாடுகளில் ரோமன்/ஆங்கில எழுத்துகள் பல்வேறு மொழிக் குடும்பங்களை எழுதப் பயன்படுகிறது. வியட்நாம், மலாயா, இந்தோனேசியா, ஆப்பிரிக்க நாடுகள், துருக்கி, …. எல்லாவற்றிலும் ரோமன் லிபி. இந்திய பிரதேச எழுத்துக்கள் பல. ஆனால், பாரத மொழிகளுக்குள் பல்வேறு தொடர்புகள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பவை. பொருளாதாரம், கலைகள் (சினிமா, …), வாழ்க்கை, திருமணங்கள், … என்று இந்திய மாநில மக்கள் பிணைந்துவருகின்றனர். வருமானத்தில் மத்திய, உயர் வகுப்பார் விரும்பும் கல்வியாக ஆங்கிலக் கல்வி வளர்ச்சி பெற்றுவருகிறது. கம்பர், சங்கப் புலவர் போன்று எழுதுவோர் இன்று மிகக் குறைவாகவே உள்ளனர். ஆங்கில எழுத்திலும் கூட எல்லா இந்திய மொழிகளும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட வேண்டும். தமிழை, ஹிந்தியை ஆங்கில எழுத்தில் எழுதலாம் என்பதும் கற்பிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் ஸ்கிரிப்ட்டுக்கும் (lipi), மொழிக்கும் உள்ள வித்தியாசம் மக்கள் பரவலாக அறிந்துகொள்வர். ரயிலில், ரயில் நிலைகளில், மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி எழுத்துடன், அதன் ஆங்கில (ISO 15919) வடிவமும் இடம்பெற வேண்டும். பல மாநில மக்களும், வெளிநாட்டவர்களும் படிக்க ஹிந்தி இலிபி மட்டும் போதாது, அதன் ஆங்கில வடிவமும் தரவேண்டும் என்று ஹிந்தி அல்லாத மொழிகள் பேசும் மாநிலங்களின் முதல்வர்கள் டெல்லி அரசிடம் கேட்கவேண்டும். இந்த மாற்றத்திற்கு வருங்கால தமிழ்நாட்டு முதல்வர்கள் தலைமை ஏற்க வேண்டும்,

     

     

    அமெரிக்காவிலே ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான கொடி உண்டு. நாட்டுக் கொடியுடன், மாநிலக் கொடிகளை எப்படி ஏற்ற வேண்டும் என்ற விதிமுறைகளும் உண்டு. அதுபோல் இந்தியாவில் வரவேண்டும். தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி காட்டும் கலைஞர் மு.க.

    இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணனும், மு. கருணாநிதியும்


    அண்ணாதுரை அமைத்த திமுக மந்திரிசபை, 1967

    இந்தியாவில் நடுவணரசு மிகப்பலம் வாய்ந்தது. அதனையும் மீறி, சோனியா காந்தியின் ஆட்சியில் ஈழத்தீவில் தமிழர்க்கு தனிநாடு கலைஞர் அமைத்திருக்க முடியுமா என்பது ஐயமே. ஆனால், டெல்லி சர்க்காரிடம் பதவிகளில் இருந்து விலகி, எம்.பிக்களை ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தால் இலங்கையில் இறுதிப்போரின் போக்கும், தமிழ் உயிர்ச் சேதாரமும் வெகு அளவில் குறைந்திருக்கும் என்பர். இது கலைஞர் மீது உலகத் தமிழர்கள் வைக்கும் விமரிசனங்களுள் முக்கியமானது. அவருக்கு அப்போது என்ன நெருக்கடி எனப் புரியவில்லை என்பர்.
    ———–

    கலைஞரைக் காணாது கலங்கு கின்றான்!

    காலையிலே எழுந்து வந்த கதிரவனும்
          கலைஞரைக் காணாது கலங்கு கின்றான்!
    சோலையிலே பறந்து சென்ற பறவையிடம்
          சொல்லாமல் போனஇடம் எங்கே என்றான்.
    மாலையிலே மறையுங்கால் இருந்த குன்றை
          மறுநாள் காணாது மலைத்து நின்றான்!
    பாலையிலே பாய்ந்து சென்ற நீர்ச்சுனையும்
          பாதியிலே வறண்டதைப் பார்த்துச் சென்றான்!

    “முப்போதும் முப்பாலில் மூழ்கும் நல்ல
          முத்தமிழ் போற்று கின்ற வித்தகரை
    எப்போதும் இனிக்காண இயலா தம்மா!”
          என்றபடி ஏகினான் முன்னே முன்னே!
    தப்பேதும் இல்லாமல் தனித்தமிழ்ப் பேசுவதைத்
          தவறாத வேள்வியாய்த் தக்கபடி செய்தவரை
    இப்போதும் பணிகின்றேன் என்று சொல்லி
          இரங்கலைத் தெரிவித்தான்! என்னே! என்னே!

    -கவிஞர் இனியன், கரூர்.

    ———————

    இனியதமிழ் இருக்கும்வரை அவர் இருப்பார்!

    எப்பொழுதும் தமிழாக இருந்த மேதை
          எடுத்தவுடன் விடையிறுக்கும் புத்திக் கூர்மை
    ஒப்பிடவே ஆளில்லா வகையில் யாவும்
          உடனடியாய் நிறைவேற்றி வைத்த செம்மல்
    இப்படித்தான் வசனத்தை எழுத வேண்டும்
          எனக்கற்றுத் தந்த பெரும் வசன கர்த்தா
    இப்பொழுது மறைந்துவிட்டார் என்ப தில்லை
          இனியதமிழ் இருக்கும்வரை அவரி ருப்பார்.

    அரசியலில் எந்நாளும் வெற்றி ஒன்றே
          அவர்வழியாய் இருந்துளது, மாற்றா ரோடே
    உரசுகிற போதுமவர் இரசிக்கும் வண்ணம்
          உரையாற்றத் தெரிந்திருந்த மொழியின் வேந்தர்
    விரியுமொளிச் சூரியனாய் வெளிச்சம் காட்டி
          வென்றிருந்த சாதனைகள் கொஞ்ச மல்ல.
    பெருமையினைத் தமிழ்நாடு காண வைத்த
          பெருமகனார் கலைஞர் திரு நாமம் வாழ்க!

    – இலந்தை சு இராமசாமி

    —————-

    எப்போதும் போலத்தான் இன்றைய மாலையும்
    தப்பாமல் வந்தது தன்வேலை ஓய்ந்தே
    உதய சூரியன் உச்சியை விட்டான்
    இதயங்கள் எங்கும் இருள்…

    – விவேக் பாரதி

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • ராஜஸ்தானின் கலைநுட்பம் அமெரிக்காவில்!

    பவள சங்கரி

     

    இந்திய கலைநுட்பம் அமெரிக்காவில் மிகச்சிறப்பாக பாராட்டைப் பெறும் வகையில் இத்தாலிய மற்றும் ராஜஸ்தான் பளிங்குக் கற்கள் மூலம், அதி அற்புத கலை வேலைப்பாடுகளுடன், நியூஜெர்சி, ராபின்ஸ்வில்லில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சுவாமி நாராயண ஆலயம், இந்திய அமெரிக்க நட்புறவிற்கு ஒரு சிறந்த பாலமாக அமைந்திருக்கிறது. பல நாட்டவர்களும், குறிப்பாக அமெரிக்கர்களும் மிக ஆர்வமாக வந்து இந்த கலைக்கோவிலை இரசிப்பதுடன் அமைதியாக தியானம் செய்வதும் வரவேற்புக்குரியது!

    Share
  • படக்கவிதைப் போட்டி (174)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    PicturesQueLFS எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • எம் கதியே நீயே தாயே நீலாயதாக்ஷியம்மா

     

    ஆதி சக்தியே அங்கயற்கண்ணியே நாகை
    பதியாம் காரோணன் மனமோகன நாயகியே

    அதிரூப சுந்தரியுன் அழகுமிகு புன்னகை
    நதியாய் ஆனந்தக் கண்ணீர் பெருக்குதம்மா

    மதி சூடிய மாதா, மலை மகளே மா தேவியே
    மதி மயக்கமின்றி நின் பாதமென் மதி பதியம்மா

    வேதியர் வேத கோஷமொடு விழாக் கோல
    வீதியுலாக் காட்சியுன் திருவருள் செப்புதம்மா

    சந்நிதியில் நினைப் போற்று மெமை

    நிதியாக நீயே வந்தருள்வா யம்மா

    விதியெம் வாழ்வில் விளையாடுங் காலத்தே
    ஓதிடுமுன் அபய ஒலி ஓங்கார மாகுதம்மா

    சதி சூழ் பூவுலகில் சந்ததமுனை சிந்தித்தால்
    விதியும் மாறிடும் வேதனையும் மறைந்திடுமே

    உதித்த காலம் முதல் உதிரும் வேளை வரை
    பதித்திட அருளிடு நின் பதமலரடி நெஞ்சமதை

    பதியின் பாதி யுன் பத மலர் போற்று மெம்
    கதியே நீயே தாயே நீலாயதாக்ஷியம்மா

    ஆதி சக்தியே அங்கயற்கண்ணியே நாகை
    பதியாம் காரோணன் மனமோகன நாயகியே

    38/2018
    நாகை வை. ராமஸ்வாமி

    Share