-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. நித்தி ஆனந்த் எடுத்த இந்த நிழற்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

அளவில் பெரியது ஆற்றலில் சிறந்தது யானை. அற்றை நாளைய அரசர் தம் படைகளிலேயே பெருமைக்குரியதாய்க் கருதியது யானைப் படையையே. நினைவாற்றல், புத்திக்கூர்மை, குடும்பப்பிணைப்பு என்று எத்தனையோ நற்குணங்கள் யானையிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்வதற்கு இருக்க, அவனோ மதம் பிடிப்பது ஒன்றையே அவற்றிடமிருந்து விருப்பமாய்க் கற்க முனைகின்றான்; அம்மட்டோ? காடுகளில் இச்சையோடு திரிந்துகொண்டிருக்கும் அவற்றைப் பிடித்துப் பிச்சையெடுக்க விடுகின்றான். வேதனை!

இனி, யானை குறித்த தம் கருத்துக்களைக் கவியருவியாய்ப் பெருகவிட நம் அருமைக் கவிஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களை வரவேற்போம்!

*****

உருவில் பெருத்த உயரிய விலங்காம் யானை, பதமாய் மாந்தருடன் பழகினும் மதங்கொண்டால் பாகனையே அதஞ் செய்துவிடும்! மாவிலங்கதற்கு விலங்குபூட்டிப் பிச்சையெடுக்க வைத்தல் மாபெருங்குற்றம் என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

யானையோர் அதிசயம்.!

உருவில் பெருத்த உயரிய விலங்கு
இருபுறம் கட்டிய இரும்புச் சங்கிலி.!
பிணைக்கப் பட்டது பிழைசெய் ததாலா.?
இணையாய் வந்த இருவரும் யாரோ.?
மாவிலங் கதனை மாதங்க மென்பார்
கோவில் வாசலில் கண்டும் தொழுவார்.!
அகல வாயினால் அனைத்தும் உண்ணச்
சகலமும் வயிற்றில் செரிக்கும் அதிசயம்.!
பிளிறும் சத்தமோ பெரிதாய்க் கேட்கும்
களிற்றின் சினமோ காட்டையே அழிக்கும்.!
தன்கைப் பிறரின் தலையிலே வைத்து
தன்னல மின்றித் தரும்நல் லாசியை.!
விலங்கென் றாலும் விதிவி லக்காய்
நலம் செய்யும் நல்ல பிராணியே.!
பதமாய் மனிதருடன் பழகும் ஆனால்
மதம் கொண்டால் முதல்பலி பாகனாம்.!
மண்ணில் பிறந்த மாவிலங்(கு) யானை
கண்ணுக் கின்னும் காட்சிப் பொருளே.!
அச்சம் உண்டு அருகில் செல்லவும்
பிச்சை எடுக்கப் பழக்கியது குற்றமே.!

*****

”காட்டுவிலங்கினைக் கட்டுப்படுத்தி மக்களிடம் காட்டிப் பிழைத்தது போதுமையா! அதனைப் பிச்சையெடுக்க வைத்து அதன் பிறப்பைக் கொச்சைப்படுத்தாதீர்!” என்று வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

வேண்டாமே…

காட்டில் பெரிய விலங்கதனைக்
கட்டுப் படுத்தி சாதுவாக்கி,
நாட்டில் நல்ல வேலைசெய்ய
நன்றாய்ப் பழக்கி நலம்பெற்றும்,
கோட்டை விட்டு விடுகின்றீர்
குணமது கெட்ட மானிடரே,
காட்டிப் பிழைத்தது போதுமய்யா
கையால் பிச்சை வேண்டாமே…!

*****

மரக்கிளை ஒடித்துண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்த நான் இன்று கிளையிழந்து வாடுகின்றேன். பாசம் எனும் பெயரில் பாசாங்குக் காட்டி வீழ்த்தும் வஞ்சக நெஞ்சினரே! நகர்வலத்தில் எங்களை வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு எங்கள் விழியோர ஈரம் புரியுமா? என்று வெதும்பும் யானையைத் தன் கவிதைப் பாத்திரமாய் உலவவிட்டிருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

யானை அழிவின் காட்சி!

வனத் தாயின் கருவறையிலோ சுதந்திரமாக …..
வாழ்விழந்து நிற்கிறேன் பரதேசியாக …………
மரக்கிளை ஒடித்த கரங்களில்………..
என் கிளை(உறவு)யிழந்த சோர்வு…..
சுதந்திர காற்றில் மகிழ்வாக காட்டின் வாசம்
சங்கிலியின் பிணைப்பிலோ கைதியின் வாசம்
குழி தோண்டி குழிதோண்டியே
குறுக்கு வழியில் கைது செய்வீர்!
பாசமெனும் பெயரிலே பாசாங்கு செய்குவீர் !
நேசம் காட்டி வீழ்த்தும் கலையினை
நேற்று இன்றா கற்றுள்ளீர் !
‘களிறு’ என்ற கர்வம் அகற்ற
‘பிடி’ யின் உறவில் பிணைந்திடாமல் இருக்க
மலை போன்ற உருவத்தினை
மண்டியிட வைத்தீர் !
அடிமை செய்யும் தொழிலை
கற்றுத் தெளிந்த மானிடமே !
பொய்வித்தை காட்டி விந்தை புரியும் ஆறறிவாளனே !
எம்அறிவு குறைபாடு உமக்கு ஆதாயமானது
எங்குக் கற்றீர் போலி வித்தை காட்ட

கலையெனும் பெயரில் ஒப்பனை செய்தீர் !
கண்ணுறக்கம் தொலைக்க நிம்மதி கெடுத்தீர்
விலங்கு என்ற ஏளனமா
மடிந்து போகாமலும் உயிர் வாழ விடாமலும் துயரம் தந்து
மதம் பிடித்ததாய் புகார் சொல்வீர் !
மதம் பிடித்த மானிடமே …..

எம் இன அழிவில்
உங்கள் சுயநலச் சாயம் தெரிகிறதே ….
எமை விலை பேசும் மானிடமே !
நகர்வலத்தில் வீதியுலா வருகையிலே
வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு
என் கண்ணின் ஈரம் புரிகிறதா
யானை அழிவின் காட்சி தெரிகிறதா…………..

*****

யானையின் அவல வாழ்வியலை உருக்கமாய்த் தம் கவிதையில் தீட்டியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

யானை – சிறுவர் பாடல்

வேலை செஞ்சு களைச்சிப்போயி வேழமொண்ணு வருகுது
காலைச்சுற்றிக் கட்டிப்போட்ட கஸ்டத்தோட வருகுது.
ஆளுக்கொரு பக்கம் நிண்ணு அங்குசத்தால் குத்தியும்
அதையும் தாங்கித் துன்பத்தோடு அமைதி காத்து வருகுது.

மாகரத்த யானை தன்றன் வலியறிந்தும் குறுக்கிடும்
சூகரத்தைப் போகவிட்டுத் தூரமாக விலகிடும்
பாகர்செய்யும் துன்பந்தன்னைப் பலமிருந்தும் பொறுத்திடும்
வேகமுற்று மூர்க்கம்கொண்டால் மட்டுமே அதஞ்செய்யும்

பூதலத்தில் பொறுமை காக்கும் புனிதர்கூட அற்பரின்
பொய்புரட்டை வஞ்சச்சூதை புன்மையைப் பொறுப்பதும்
ஆதரித்து அன்பு செய்து அவரை ஏற்றுக் கொள்வதும்
ஆனை காட்டும் நற்குணத்திற் கீடு என்பர் மாந்தரே.

பூதலத்தில் அற்பரின் பொய்புரட்டைப் பொறுத்துக்கொள்ளும் புனிதர்போல, மாகரத்த யானையும் பாகர்செய்யும் கொடுமையைப் பொறுத்துக்கொள்கின்றது என்று வேழத்தின் உயர்குணத்தைத் தக்கவகையில் விதந்தோதுகின்ற இக்கவிதையின் ஆசிரியர் திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 173-இன் முடிவுகள்

  1. எனது கவிதையைப் பாராட்டித் தெரிவு செய்ததற்கு மேகலா இராமமூர்த்திக்கும் வல்லமை ஆசிரியர் குழுமத்திற்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *