Blog

  • இரங்கற்பா – கலைஞர் கருணாநிதி யெனும்……

    கலைஞர் கருணாநிதி யெனும்……

    உதய சூரியன் மறைந்து விட்டது தமிழ்
    இதய காவியம் இறந்து விட்டது
    பதிய வைத்தவை படர்ந்து வளர்ந்தவை
    விதியெனும் சொலில் நழுவி விட்டது

    சென்னை யென்பதும் கோட்டையின் பலம்
    இன்று நமக்கென கிடைத்ததெப்படி
    செம்மொழி யெனும் சிறப்பு கிட்டிட‌
    தம்மொழிக்குமோர் வாய்ப்பதெப்படி
    சாதியிலை யினும் சாற்றும் பெருந்தகை
    வானப்பாதைக்கு சென்றதெப்படி
    மீதியிலை யெனும் போர்க்களங்களில்
    வாகை சூடியே வாழ்ந்ததெப்படி

    கறுப்பில் தெரிவதை சிகப்பில் தோய்ந்திட‌
    கவிதை வசனமாய் கொடுத்த‌தெப்படி
    வெறுப்பில்லாமல் தமிழ் விரத‌மிருந்தவன்
    விருப்பமுடன் விண்விழைந்ததெப்படி
    புதையலாய் தமிழ் அகத்தின் முளைத்தவன்
    புதைந்து பெட்டியில் போனதெப்படி
    நிலையிலாது இவ்வுலகம் மென்றென‌
    அலைகள் மடியினில் அயர்ந்ததெப்படி

    தலையிலாது வெறும் சிலையிலாது
    கலைஞரெனுமுன் பெயரழியாது!
    சிதையிலாது துயர் வதையிலாது
    சென்ற பின்னுமுன் புகழ் அழியாது! – சீர்
    வினையிலாது பெறும் மதிப்பிலாது
    வாழும் வாழ்வதூஉம் பயனிலாதெனப்
    பிழையிலாது இப்பிறந்தமண்ணிலே
    நிகழ்ந்த சரிதமும் நிலைத்து வாழுமே!!

    Share
  • திருடி விட்டான்

    சத்தியமணி

     

    திருடி விட்டான் ஒருவன் நெஞ்சத்தினை
    திருடும் காதலில் வஞ்சத்தினை
    கேட்டால் தருவேனே உள்ளத்தினை – கண்ணா
    திரும்ப தரவேண்டாம் கள்ளத்தினை

    மருளும் மான் விழிகள் உனைப் பார்த்து
    மயங்கும் போதுனக்கு கலக்கமென்ன‌
    அருளும் தேன் மொழிகள் எனைப் பார்த்து
    அள்ளி பொழிவ‌தற்கு தயக்கமென்ன‌
    விரையும் யமுனை நதி பெருக்கெடுப்பில்
    விழையும் உன்னாட்டம்! அரங்கேற்று !!
    உறையும் வரையில் எனை உறவாடி
    உடைகளாகி யெனை அழகேற்று !!

    விரும்ப விரும்ப குழல் இசைப்பிரித்து
    விருந்து கொடுக்கும் இதழ் மதுகொடுத்து
    திரும்ப திரும்ப மனம் துதிகொடுத்து
    அருந்த விழையும் திறன் துளிர்விடுத்து
    அரும்ப அரும்ப மலர் மணம்பிறந்து
    ஆரமாகும் அவன் மனம்திறந்து
    நிறம்ப வழியும் இன்ப முகில்பொழிந்து
    நீலவான மதில் நினைவிழந்து

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180619 Govinda pattabhishekam-wcol -9×12-Arches 300gsm-lr

    பட்டா பிஷேகமென்று, கட்டாயம் ஆவின்தன்
    கொட்டாயில் தானென்று கேசவ்ஜி -விட்டோடு(WIT-ஓதிவிட ஓஸியில் கிரேஸியின் மொய்….)
    காணச் சென்றால் கதவடைப்பு ,அண்ணாந்தோம்
    வானத்தில் பால்வெளி வாவ்(WOW)….கிரேசி மோகன்….!

    Share
  • குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!

     

    மீண்டும் எழுத முயல்கின்றேன்(லிஃப்கோ பதிப்பித்த வடமொழி தமிழ் வாயிலாய்)….இது வரையில் எழுதியதைப் பகிர்கின்றேன் தங்களது மேலான பார்வைக்கு….!

    குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!
    ——————————

    காப்பு
    ———————-
    சிவபார்வதி
    —————-

    சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்
    கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்
    உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்
    குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010

    முருகன்
    ———-

    உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை
    தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே
    முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே
    வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010

    பிள்ளையார்
    —————

    உன்னை மறந்தால் உலகம் பழித்திடும்
    என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை
    கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்
    தந்தை மணமுடிக்கத் தாவு….(3)….2-10-2010

     

    சரஸ்வதி
    ———–

    செல்வம் செலவாகும், வீரம் வயதாகும்
    கல்வி குறையாது குன்றாது -பல்கிப்
    பெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்(கு)
    அருகிருந்து சேர்ப்பாய் அறிவு….(4)….2-10-2010

     

    காளிதாசன்
    —————

    வாடாத பாக்களை வாணியின் பாதத்தில்
    காடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்
    ஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்
    சாற்றையென் பாழ்வாயில் சிந்து….(5)….2-10-2010

     

    சு.ரவி
    ——–

    நண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்
    வெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்
    சிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்
    கரம்தந்(து) அளித்திடுவாய் காப்பு….(6)….14-10-2010
    ——————————————————————–

    ————————————————————-
    சர்கம்-1
    ———-

    கரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்
    வரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்
    பாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்
    பாரீர் இமயமதன் பேர்….(1)….30-9-2010

    கன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை
    நின்று கறக்க, நிலப்பசு -என்றும்
    சுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை
    வரம்தரும் வெற்பை வணங்கு….(2)….1-10-2010

    சீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற
    பாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு
    எல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு
    பொல்லாப் பனியா பொருட்டு….(3)….1-10-2010

    விண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்
    செஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு
    பட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்
    பட்டப் பகலிலந்திப் போது….(4)….1-10-2010

    கோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக
    ஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை
    கருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்
    சிரத்தினில் வெய்யில் சுகம்….(5)….1-10-2010

    மதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்
    சதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த
    வேடன் அரிமா வழியை அறிவானாம்
    மூடும் பனியில் முனைந்து….(6)….1-10-2010

    தேர்ச்சிமிகு வித்யா தரப்பெண்கள் நேசத்தை
    ஊர்ஜிதமாய், செங்காவி ஊற்றுமையால் -பூர்ஜர
    ஏட்டில் எழுத எதுகை இமயம்தான்
    காட்டிடும் காதல் கொடி….(7)….1-10-2010

    விண்ணுறும் வெற்புகுகை வாய்திறந்து மூங்கிலதன்
    கண்ணூர்ந்து புல்லாங் குழல்காற்றை -கின்னரர்தம்
    கானமேல் ஸ்தாயிக்கு தான சுரம்பிடிக்கும்
    ஞானம் மிகுந்தமலை நாடு….(8)….2-10-2010

    ஆவலோடு கன்னத்தை ஆனை தினவெடுத்து
    தேவதாரு தேகத்தில் தேய்த்திட -சீவலாக
    தோலுறிந்த பட்டையில் பால்சுரக்க வாசத்தை
    மேலிருந்தும் வீசும் மலை….(9)….2-10-2010

    கூடிக் குலவிடும் வேடர்க்(கு) உதவியாய்
    வீடாம் குகையில் விளக்கதற்கு -ஈடாக
    மூலிகைத் தாவரம் மூட்டிட தீபவொளி
    மாளிகைபோ லாக்கும் மலை….(10)….2-10-2010

    பாரமான பின்புற(ம்)அ பாரமான கொங்கைகள்
    ஈரமான பாறைப் பனிநீரும் -சேரவொன்றாய்
    கின்னரப் பெண்கள்தம் இன்னலையும் பாராது
    அன்ன நடைபயில்வர் அங்கு….(11)….2-10-2010

    அல்பனே ஆயினும் அய்யா சரணென்றால்
    சொல்பமும் பாராட்டா சான்றோர்போல் -அல்பயலை
    சூரியன்கை சிக்காது சேர்த்து குகைக்கரத்தால்
    வாரி அணைக்கும் வெற்பு….(12)….2-10-2010

    கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு
    வானின் வளர்மதி வெண்கவரி -மானின்வால்
    ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை
    ஆக இருத்தல் அழகு….(13)….2-10-2010

    கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்
    ஆச்சரியம் கொள்வால் அதைப்பார்த்து -மூச்சிறைக்க
    மேகம் குகைவாசல் போகும் திரையாக
    மோகத் துணைபோகும் மஞ்சு….(14)….2-10-2010

    தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்
    மேவுமயிற் தோகை மிருதுவும் -தாவிவரும்
    காற்றில் கலந்திருக்க காட்டில் களைத்தவேடர்
    ஏற்றடைவர் ஏகாந்த மே….(15)….3-10-2010

    ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை
    வாழும் கமலங்கள், வெற்படியில் -சூழும்
    கதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு
    உதிரும்முன் பூக்கும் உவந்து….(16)….3-10-2010

    வேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்
    கேள்விக் குறிக்குவிடை கண்டதால் -நூல்வைத்த
    நான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம
    வான்முகம் வைத்தான் விழைந்து….(17)….3-10-2010

    பித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்
    தத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்வி -உத்தமி
    மேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம
    வானையவன் வம்சம் வளர்த்து….(18)….3-10-2010

    நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
    தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை
    வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
    மேனாள் வயிற்று மகன்….(19)….3-10-2010

    தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்
    துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்
    முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
    அன்பு இமவான் அகம்….(20)….3-10-2010

    உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
    நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக
    மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
    சங்கரியாய் வந்தாள் சதி….(OR)
    திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)….3-10-2010

    தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
    ஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ
    பார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்
    பார்வதி தோன்றிய போது….(22)….3-10-2010

    அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
    எதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்
    ரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்
    புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு….(23)….3-10-2010

    சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
    இக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்
    அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
    பொங்கும் அழகுற்றாள் பூத்து….(24)….4-10-2010

    உற்றார் அவளை உவந்து அழைத்தனர்
    பெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்
    சமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்
    உமையே தவமேன் உரைத்து….(25)….4-10-2010

    உசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை
    வசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது
    பார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்
    யார்வதை உற்றுமிமை யான்….(26)….4-10-2010

    விளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா
    இலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்
    பெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்
    வற்றா வளமையுடன் வாக்கு….(27)….4-10-2010

    ஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி
    காயாத கங்கைக் கரைமணலில் -சேயாக
    மேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்
    நாடகம் ஆடினாள் நன்கு….(or)
    வேடமிட்டாள் வையவாழ் வொத்து….(28)….4-10-2010

    போதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்
    ஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய
    முற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்
    விற்பன்னன் காளிதாசன் வாக்கு….(29)….5-10-2010

    மாதவள் தோற்றம் மனதை மயக்கிய
    போதுமது அல்லவே புன்மது -காதலான்
    வாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி
    வாலிபத்தைக் கொண்டாள் வளர்ந்து….(30)….5-10-2010

    தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்
    சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்
    யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல
    அவ்வனப்பே ஆரா அழகு…(31)….5-10-2010.

    பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்
    கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட
    பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்
    விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32)….5-10-2010

    அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்
    கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்
    தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு
    சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33)….5-10-2010

    ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட
    கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்
    செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்
    கையிருப்பு போச்சாம் குறைந்து….(or)
    அய்ய! முயன்றதில் மெய்யின்மற் றங்கங்கள்
    செய்ய அழகின்றி சோர்வு….(34)….5-10-2010

    வேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்
    வாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்
    பார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு
    நேர்கதியாய் ஒப்புமைகா ணேன்….(35)….5-10-2010

    விடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்
    அடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்
    இல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை
    சொல்லாமல் எண்ணல் சிறப்பு….(36)….5-10-2010

    இடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்
    தடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்
    மெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்
    துல்லிய ரத்தினத் தேசு….(37)….5-10-2010

    மத்தியில் யாகத்து மேடைக் குறுகலை
    ஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி
    மாறன் படியேற மூன்று மடிப்புகளால்
    சாரம் அமைத்திளமை சேர்வு….(38)….5-10-2010

    நூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த
    நீலக் கமல நயனத்தாள் -கோலயிரு
    வெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி
    எண்ணுதற்(கு) ஏற்ற எழுத்து….(39)….5-10-2010

    செத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்
    பித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்
    வாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு
    ”வாகையினும் மென்மையாம்” வாக்கு….(40)….6-10-2010

    நெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற
    வட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்
    முத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்
    சித்தம் ஒருமிக்கும் சேர்ந்து….(41)….6-10-2010

    சந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்
    செந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு
    ஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்
    பார்வதி சீர்வதனம் புக்கு….(42)….6-10-201

    சிவந்த தளிர்மீது சிந்தியவெண் பூவாய்
    பவழம்தன் மேல்முத்துப் பொட்டாய் -குவிந்த
    அதரத்தில் பரவி அவளாய் உதிர்க்க
    சிதறும் ஒளிப்புன் சிரிப்பு….(43)….6-10-2010

    குயில்கொடிய யாழ்கொடிய கர்ண கடூரம்
    பயில்கின்ற பார்வதியின் பேச்சால் -ஒயில்கொண்டு
    வானத்(து) அமிழ்தாய் நிதானத் துடனின்சொல்
    ஞானத் துடன்நல்கும் நாவு….(44)….6-10-2010

    மாருதம் வீச மருள்நீல முண்டகமாய்
    வேரதைப்போல் நீண்ட விழிகளின் -பாருதலை
    மானுரைக்கக் கற்றாளா? மான்கற்றுத் தந்ததா
    நானறியேன் நாராய ணா….(45)….6-10-2010

    கையெடுத்து துரிகையில் மையடைத்து தீட்டியதாய்
    பையுடைத்த ராஜநாகம் போல்நீள -மையலான்தன்
    காமா யுதவில்லின் கர்வத்தை விட்டுரைத்தான்
    ஆமாம் அவள்புருவம் அம்….(46)….6-10-2010

    விலங்குகள் உள்ளத்தில் வெட்கம் இருப்பின்
    கலங்கும் கவரிமான் கண்டு -துலங்குமவள்
    கேசத்தால் தங்கள்வால் பாசம் துறக்குமாம்
    ரோஷத்தால் நீங்கும் ரசிப்பு….(47)….6-10-2010

    உவமைகள் யாவையும் ஓரிடத்தில் காண
    அவயவங்கள் தேடி அலைந்து -சிவமய
    சக்தியைச் செய்தான் சிரம்நான்(கு) உடையவன்
    முக்திக்(கு) அவளழகே மெய்….(48)….6-10-2010

    சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்
    பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி
    பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே
    பார்விதி என்றார் பலத்து….(49)….7-10-2010

    தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்
    தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்
    வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை
    தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)….7-10-2010

    வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்
    தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்
    கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்
    பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)….7-10-2010

    அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை
    எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே
    அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்
    பத்தினி பற்றொழித்தார் பார்….(52)….7-10-2010

    கின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து
    விண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்
    அஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்
    விஞ்சுமெழில் குன்றில் வளர்ப்பு….(53)….7-10-2010

    சரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி
    சிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ
    சிலாஜது மேவும் சிறுபாறை குந்தி
    கலாஜடை யோந்தொண்டர் கூட்டு….(54)….7-10-2010

    ஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்
    காளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி
    கர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்
    சர்வாங்கம் சிங்கம் சிலிர்ப்பு….(55)….7-10-2010

    தானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்
    வானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ
    ஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்
    நிமித்தம் சிவன்போக்கு நெஞ்சு….(56)….7-10-2010

    தானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்
    மூணாம் விழிகொள் முதலையிம -வானே
    பணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை
    அணிந்திடச் சொன்னான் அழைத்து….(57)….7-10-2010

    சஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத
    நெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்
    பார்வதி வந்து பணிவிடை செய்திட
    ஓர்விழித் தீக்கண்ணன் ஒப்பு….(58)….7-10-2010

    கொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்
    மெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்
    தீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி
    தீர்த்ததவள் கொண்ட தவிப்பு….(59)….7-10-2010

    சர்கம் ஒன்று சுபம்
    ————————–

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (280)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் மீண்டும் மற்றொரு வாரத்தில் உங்கள் மத்தியில் இங்கிலாந்துச் செய்திகளுடன் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். எமக்குக் கிடைத்த இந்த மனிதப்பிறவி இருக்கிறதே அது ஒரு விலைமதிப்பில்லாத பரிசு. ஆங்கிலத்தில் My body is my temple என்பார்கள். அதாவது எனது உடலே எனது கோவிலாகும் எனப்பொருள்படும். இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் எமது உடல்நலத்தைப் பேணுவதே ஒரு ஆன்மீகச் செயலாகும் என்பதுவே. இதிலிருந்து ஒவ்வொரு மனித வாழ்விற்கும் எத்தகையதோர் உன்னத மதிப்பு அளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது இல்லையா ?

    சரி எதற்காக இந்த ஆலாபனை என்கிறீர்களா ?

    கடந்த யூன் மாதம் இங்கிலாந்து மேல் வழக்கு மன்றம் (High Court) ஒன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய விளைவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமே இதற்கான விளக்கமாகும். மேற்கண்ட வழக்கு என்னவென்றால் , வழக்கு மன்றத்தில் “எம்” என்றே குறிக்கப்பட்ட ஒரு 50 வயதுப் பெண்மணி கடந்த 25 வருடங்களாக “ஹண்டிங்டன்” என்றழைக்கப்படும் வியாதியால் பீடிக்கப்பட்டு அப்போது அவரது மூளை ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் குழாய்கள் மூலம் அவரது உயிர் தக்க வைத்துக் கொண்டிருந்த வேளை. அவரது உறவினர்களும், வைத்தியர்களும் கருணை கூர்ந்து அவரது மூச்சு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியபோதும் சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை. இப்பிரச்சனையை மேல் நீதி வழக்காடு மன்றத்துக்கு எடுத்துச் சென்றபோது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “பீட்டர் ஜாக்சன்” என்பவர் இத்தகைய நிலைமைகளில் சட்டத்தின் துணையை நாடவேண்டும் என்பது தேவையற்றது அதிக பட்சம் வைத்தியர்களின் அறிவுறுத்தலின் படி, உறவினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இத்தகைய நோயாளிகளின் மூச்சுக்குழாய் நிறுத்தப்படலாம் என்று தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பின் விளைவு என்னவென்றால் இனிவரும் காலத்தில் மூளை இயங்கவில்லை எனும் நிலையிலிருக்கும் ஜடம் போன்ற நோயாளிகளை மூச்சுக்குழாய்களின் உதவியோடு தக்க வைத்திருப்பது தேவையற்றது என்று வைத்தியர்களும், உறவினர்களும் கருதுவார்களானால் அவர்களது மூச்சுக்குழாய்களும், வலுக்கட்டாயமாக உணவூட்டும் உணவுக்குழாய்களும் நிறுத்தப்பட்டு அவர்களது இயற்கை மரணம் நிகழும்வகை செய்யலாம்.

    இதனை எதிர்ப்பவர்களின் வாதம் என்னவென்றால் இதனைச் சாக்காக வைத்து தமது அசையமுடியாமல், பேசும் திறனற்ற உறவினர்களைப் பராமரிப்பதின் சிக்கலைத் தவிர்க்குமுகமாக பலர் இம்முறையைத் தேர்ந்தெடுப்பது பேசமுடியாமல் , நினைவின்றிக் கிடக்கும் அந்நோயாளர்களின் உரிமைப் பாதிப்பாகும் என்பதுவே. இறைவன் அளித்த இவ்வாழ்வினைப் பறிக்கும் உரிமை ஒருவருக்கும் கிடையாது என்பதுவே அவர்களது வாதம். இனி அவர்களால் சுயநினைவுக்குத் திரும்பவே முடியாது என்று வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டவர்களை இத்தகைய நிலையில் இயற்கைக்கு மாறாக வைத்திருப்பது மட்டும் எவ்வகையில் நியாயமாகும் என்கிறார்கள் இதனை ஆதரிப்போர். “எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எப்படி முடியும்?” எனும் கவியரசரின் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது இல்லையா?

    சரி இனி இவ்வாரத்தில் இங்கிலாந்தில் ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்ட எமது நாயகனைப் பார்ப்போமா? அவர் வேறு யாருமல்ல “கோமாளி” என்று சிலராலும், அதி உயர்ந்த திறைமையான அரசியல்வாதி என்று சிலராலும், இவர் எப்படியானவர் என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கும் பலராலும் விரும்பப்பட்டு, வெறுக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு வரும் முன்னாள் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி “பொரிஸ் ஜான்சன்” தான் அவர். இங்கிலாந்துப் பிரதமரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியதால் தனது அமைச்சர் பதவியை இழந்து விட்ட இந்நாள் ஹீரோ விட்டார் பாருங்கள் கிளிகள் கூட்டத்திடை ஒரு பூனையை . . ஆமாம் டென்மார்க் நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் கண்களைத் தவிர அனைத்தையும் மறைக்கும் பெர்க்கா என அழைக்கப்ப்படும் அங்கி பொது இடங்களில் அணிய விதிக்கப்பட்ட தடையைப் பற்றித் தான் வாராவாரம் டெய்லி டெலிகிராப்ட் எனும் பத்திரிகையில் எழுதும் பத்தியில் குறிப்பிட்டதினால் பிடித்துக் கொண்டார் “காகத்தின் எஜமான் (சனி)” அவரை. ஆம் அத்தடைக்கு எதிராக விமர்சிக்கப் போய் தான் ஒரு வலையில் சிக்கிக்கொண்டார் இந்தக் கோமாளி . . . . இல்லையில்லை அதி புத்திசாலி பொரிஸ் ஜான்சன். இஸ்லாமியப் பெண்கள் அணியும் இந்த அங்கி ஒரு தபாற் பெட்டி போலவும், கொள்ளையரின் சீருடை போலவும் தென்படுகிறது என்றாரே பாருங்கள் .. . . . . போச்சுடா . . . .

    அவரது இந்தக் கருத்துக்கும் எமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்று ஏன் இன்னமும் அறிக்கை விடவில்லை என்று அவர் சார்ந்திருக்கும் , இன்றைய இங்கிலாந்து அரசுக்கட்டிலில் மிகச் சொற்பமான பெரும்பான்மையுடன் அமர்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை நோக்கிப் பறக்கின்றன கேள்விக்கணைகள் பலமுனைகளிலிருந்தும். . . . . ப்ரெக்ஸிட் எனும் வலைக்குள் அகப்பட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் எமது பிரதமருக்கு இது தேவைதானா? என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

    சரி இந்த வாரம் எமது நெருங்கிய நட்பு நாட்டின் பிரசித்தம் மிகுந்த ௶ட்ரம்ப் அண்ணாவின் அதிரடிகளைப் பார்ப்போம். . . இரண்டு தீவிரமான அதிரடிகளைக் கிளப்பி விட்டிருக்கிறார் ட்ரம்ப் அண்ணா.

    அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட தேர்தலில் அமெரிக்க ஜனநாயக முறையைச் சீர்குலைக்கும் வகையில் ரஸ்ய நாட்டு உளவுத்துறை செயல்பட்டிருக்கிறதா என்பதை ஆராய நியமிக்கப்பட்ட குழு அத்தகைய செயல்களில் ட்ரம்ப் அண்ணாவின் மகனே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறது. இதுவரை அச்சந்திப்பு வேறு தேவைக்காக நடந்தது என்று கூறிவந்த அண்ணா ட்ரம்ப் இப்போது அது சரி எனும் வகையில் சமூக வலைத்தளம் ஊடாகக் கூறியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. . . . என்ன அண்ணா? வார்த்தை புரள்கிறதே !

    உலகின் முன்னணி நாடுகளும் (அமெரிக்கா உட்பட) , ஈரானும் சேர்ந்து செய்த உடன்படிக்கையில் இருந்து ட்ரம்ப் அண்ணா தன்னிச்சையாக அமெரிக்காவை வெளியெடுத்துக் கொண்டது அனைவரும் அறிந்ததே ! அடுத்த கட்டமாக அண்ணா ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக சில பாரதூரமான பொருளாதாரத் தடைகளை அமுல் படுத்தியுள்ளார். இத்தடைகளின் பிரகாரம் விதிக்கப்பட்ட தடைகளை மீறும் எந்தவொரு நிறுவனத்துக்கும் எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அண்ணா மூலம் தானே வெளியேறுவதற்கும் தமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்று அவ்வுடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட மற்றைய நாடுகள் குறிப்பிட்டிருந்தன. தற்போது அமெரிக்கா கொடுத்திருக்கும் இப்புதிய சிக்கல் ஜரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்காவுக்குமான வர்த்தக உறவை எவ்வகையில் பாதிக்கப் போகிறது என்பதுவே பொருளாதார நிபுணர்களின் தீவிர கரிசனையாக இருக்கிறது.

    இதுவும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • முன்னாள் தமிழக முதலமைச்சர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை

    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

    முன்னாள் தமிழக முதலமைச்சர்,

    டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி

    தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சர் ஆகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் இருந்தவர்.

    தெளிவான சிந்தனை கொண்ட மாபெரும் தலைவர், தமிழுக்கும் தமிழின மக்களுக்கும் பெருமை சேர்த்தவரும், தமிழ் மொழியை உலகறிய செய்தவர், அரசியல், சினிமா, இலக்கியம், அனைத்திலும் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற சாதனைகள் படைத்தவர். இவர் நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவ மனையில் மரணமடைந்தார். அவருடைய ஆத்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவினர்கள், கழக நிர்வாகிகள், உடன் பிறப்புகள், தொண்டர்கள், விசுவாசிகள் மன அமைதி பெறவும் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Blessings from Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal
    FOUNDER
    Sri Danvantri Arogya Peedam,
    04172-230033, 0944330203,
    ” நோயற்று வாழட்டும் உலகு “

    Share
  • கலைஞருக்கு ஒரு இரங்கற்பா

     

     

    தமிழன்னை தவிக்கின்றாள் !

    ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா


    தமிழ்த்தாயின் தவப் புதல்வா
    தானாக எழுச்சி பெற்றாய்
    அமிழ்தான தமிழ் மொழியை
    ஆசை கொண்டு அரவணைத்தாய்
    தமிழ் முரசாய் நீயிருந்தாய்
    தமிழெங்கும் முழங்கி நின்றாய்
    தவிக்க விட்டுப் போனதெங்கே
    தமிழ் அன்னை தவிக்கின்றாள் !

    சங்கத் தமிழ் இலக்கியத்தை
    தானாகக் கற்று நின்றாய்
    பொங்கிவந்த தமிழ் உணர்வால்
    பொழிந்து நின்றாய் பலவுரைகள்
    ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
    உள்ளம் அதால் நேசித்தாய்
    உனைப் பிரிந்து வாடுகின்றார்
    ஓலம் அது கேட்கலையா !

    வள்ளுவத்தை வாழ்வு எல்லாம்
    மனம் முழுக்க நிறைத்தாயே
    வள்ளுவத்தை பலர் அறிய
    வரைந்தாய் நீ ஓவியத்தை
    வள்ளுவர்க்கு சிலை எடுத்தாய்
    வள்ளுவர்க்கு உரு கொடுத்தாய்
    தெள்ளு தமிழ் அறிவுடையாய்
    தேம்பி நின்று அழுகின்றோம் !

    வெள்ளித்திரை உன் வரவால்
    வீறு நடை போட்டதன்றோ
    அள்ளிவந்த உன் தமிழை
    ஆர்வமுடன் பலர் ரசித்தார்
    எதுகை மோனைத் தமிழாலே
    எல்லோரும் உனைப் பார்த்தார்
    எல்லோரும் ஏங்கி நிற்க
    எங்குதான் சென்று விட்டீர் !

    சட்ட சபை வரலாற்றில்

    சாதனைகள் பல படைத்தாய்
    திட்டம் இட்டுச் செயலாற்றி
    தீரனாய் உயர்ந்து நின்றாய்
    கட்டழகு மீசை உடன்
    கறுப்பு நிறக் கண்ணாடி
    கலைஞர் அதை அடையாளம்
    காணாமல் போன தெங்கே !

    மு.க எனும் எழுத்தை
    முணு முணுக்கும் மக்களெலாம்
    முத்தமிழின் சொத்து என
    மு.க வை மதிக்கின்றார்
    மு.க. வின் துணிச்சலுக்கு
    மு.க தான் சமமாகும்
    மு.க வை காணாமக்கள்
    மூச் சொழிந்து நிற்கின்றார் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180725 Brahma Mohanam-watercolour-charcoal -A4 -Vanabhojanam. when Brahma doubts Krishna as the Surpreme 100 dpi -lr

    சத்துணவு போடுமிவர், சித்தா பிரமனவர்
    அத்தா மரையமர்ந்தும் ஆராய்ச்சி: -தத்யோனம்(தச்சி மம்மு)
    வாயிலாது(வாயில் இல்லாது) வந்தோம்(நண்பர்கள்) வனபோ ஜனத்திற்கு
    தாயினும் ஊட்டுபரிந் து….கிரேசி மோகன்….!

    Share
  • கலைஞர் கருணாநிதி

     

    அஞ்சலி!
    சு.ரவி

     

    Share
  • கங்காரு நாட்டின் கண்ணியம்

    ம. ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
    முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்
     M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS 

     கங்காருநாடு என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலியா 200 வருட வரலாற்றினைக் கொண்டது, இங்கு பல நாட்டினர், பல மொழிகளைப் பேசுபவர்கள், பல இன கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்கள் என 165 இனமக்களை அரவணைத்து அவர்களுக்கு அமைதியான ஆறுதலான வாழ்வினையும் வழங்கிக் கங்காருநாடு கண்ணியம் மிக்க நாடாக உலகில் விளங்குகிறதுஎன்பது பெருமைக்குரிய விஷயமாகும்.ஜனநாயகத்தை நூறுசதவிகிதம் நிலைநாட்டி வெற்றியுடன் திகழும்  கண்ணியமும் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய தொன்றேயாகும்.

       இந்த நாட்டின் ஆதிக்குடிகள் ” அபோர்ஜினிஸ் ” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் கங்காரு மண்ணுக்கு உரியவர்கள் ஆவர். ஆனால் பிரித்தானிய ஆக்கிரமிப்பால் நிலை மாறி இப்போது கங்காரு மண்ணின் சொந்தக்காரர்  வெள்ளையர் ஆகிவிட்டார்கள். என்றாலும் ஆதிக்குடிகள் வரலாறு கங்காரு மண்ணுடன் ஒட்டியே இருக்கிறது.அவர்களின் நிறம், அவர்களின் மொழியில் காணப்படும் சில சொற்கள்,அவர்களின் விழாக்கால கொண்டாட்ட அலங்காரம்இவற்றை யெல்லாம் உற்று நோக்கும் பொழுது தமிழர்களின் சாயல் அவர்கள்டத்துப் படிந்திருப்பதாகக் கருத முடிகிறது.இதனாலத்தான் தமிழர்களையும் கங்காரு நாடு கைகொடுத்து வரவேற்றதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

        பல்லின கலாசாரத்தின் தொட்டிலாகக் கங்காரு நாடு திகழ்கிறது.மதம் கடந்தமக்கள் பலர் இங்கு இருப்பதனால் மதமென்னும் குணத்தை இங்கு காண்பது அரிதென்றே சொல்லலாம்.அரசாங்கம் மதம்பற்றி எதுவுமே பேசுவதில்லை.அதே வேளை வழிபடும் சுதந்திரத்திலும் தலையிடுவதும் இல்லை.விரும்பியவர்கள் விரும்பியபடி தங்கள் சமயவழிபாடுகளை நிகழ்த்தும் உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது.  இதனால்  வழிபாட்டில் மக்கள் தாம்விரும்பிய வாறு ஈடுபடும்முழுச் சுதந்திரம் இங்கு காணப்படுகிறது.இதனால்த்தான்  அவுஸ்திரேலிய மாநிலங்களில் பல இந்துக் கோவில்கள் எழுச்சிபெற்று இருக்கின்றன.    படிக்கும் பாடசாலைகளிலும் மதம்பற்றிப் பேசப்படுவதில்லை.ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடசாலைகளில் அவரவர் மதக்கல்வி ஊட்டப்படுவதற்கும் எந்தவிதத் தடையும் போடப்படுவதும் இல்லை.அவுஸ்திரேலியர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் பெயர்களை கிறிஸ்தவப் பெயராக வைத்திருந்தும் அவர்கள் தாங்கள்எந்தமதம் என்று சொல்கிக்கொள்வதும் இல்லை.அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. இதனால் மதம் என்னும் பெயரால் இங்கு எந்தவித சிக்கல்களோ மோதல்களோ ஏற்படுவதே இல்லை.

         பல்லின கலாசார நாடாக விளங்குகின்ற காரணத்தல் கறுப்பு வெள்ளை என்றுபார்க்கும் குறுகிய நோக்கும் இங்கு இல்லை என்றே கூறலாம். இதனால் ஆசியநாட்டவரோ ஆபிரிக்க நாட்டவரோ அமைதியாக ஆறுதலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனலாம்.மனிமனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு இந்த நாட்டின் முக்கிய பண்பாடாக விளங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் கூட எதுவித ஆடம்பரமும் இன்றி சாதாரண மக்கள் போன்றே சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவார்கள்.மந்திரியாக இருந்தாலும் கடைகளில் பொருட்களை வாங்கினால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்குவார்.மந்திரிக்கென்று தனியான சலுகைகள் கிடையாது.அவரும் சாதாரண பிரசையாகவே நடந்துகொள்ளும் முறையானது ஜனநாயகத்தின் உயிர்துடிப்பினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

          முன்னேற விரும்பும் யாவருக்கும் இந்த நாடு நூறு சதவிகித ஒத்துழைப்பைவழங்கிக் கொண்டிருக்கிறது.விரும்பியதைப் படிக்கலாம்.விரும்பிய தொழிலைச் செய்யலாம்.படிப்பதற்கு வயது இங்கு ஒரு தடையில்லை.எந்த வயதினரும் விரும்பியதைப் படிக்கும் வசதி இங்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

        வேலைசெய்யமுடியாதவர்எனக்கணிக்கப்பட்டவர்கள்,வயதுவந்தவர்கள், வேலையினை இழந்தவர்கள்.  யாவருக்கும் அவர்கள் அன்றாடம் வாழும் வகைக்கு

    ஏற்ற பண உதவிகளை இந்தநாடு சிறப்பாக வழங்கியும் வருகிறது. மூத்தோருக்குப்பல சலுகைகளையும் கொடுத்து வருகிறது.பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு இந்தநாட்டில் கிடைக்கிறது.  இந்த நாட்டுக்கும்வந்த தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல  வேண்டும்.இந்த நாடு பல்லின கலாசாரத்தைப் பேணுவதால் தமிழர்தம் பண்பாடு கலசாரங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சமூக அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்ள சர்வ சுதந்திரமும் வழங்கி நிற்கிறது என்பது மிகவும் கவனிக்கப் படவேண்டிய விஷயமாகும்.

       தமிழை அரசாங்க அறிவித்தல்களில் கூட இந்தநாடு இடம் பெறச் செய்திருக்கிறது.தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கூட தமது கருமங்களை ஆற்றுவதற்கு மொழிமாற்றுச் சேவையினையும் இலவசமாகக் கொடுத்து உதவி நிற்கிறது. தமிழ் அமைப்புகளுக்கு பண உதவிகளை வழங்குகிறது.தமிழ்ச் சங்கங்களின் விழாக்ககளுக்கு குறிப்பிட்டளவு பண உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே.

         கங்காரு நாட்டில் தேர்தலில் இந்தநாட்டின் பிரசையாகிவிட்ட எவருமே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.இதனால் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழர்கள் கலந்து வெற்றியீட்டி அரசியலில் கலந்து சேவையாற்றும் வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.

          இந்தநாட்டில் இருந்து படித்து தொழில் பார்க்க ஆங்கிலம் அவசியம் என்பதனால்ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது.ஆனால் அதே வேளை சொந்த மொழியை பண்பாட்டை விட்டுவிடத்தான் வேண்டும் என்னும் கட்டாயம் இந்த நாட்டிலில்லை.இது இங்கு வந்த யாவருக்கும் பெரும் வரப்பிரசாதம் என்றுதானே எண்ணவேண்டும்.

       இதனால் தமிழ் மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.அவுஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கையானது அவுஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளர பெருந்துணையாய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 1980ஆம் ஆண்டுகளில்அவுஸ்திரேலியாவுக்கென்று ஒரு மொழிக்கொள்கை தேவை என்ற நோக்குடன் அரசின் மொழிக்கொள்கையை நடுவண் அரசு நான்கு முக்கிய கோட்பாடுகளுடன்உருவாக்கி , தேசிய அளவில் அதை ஒழுங்கு படுத்தியது.அதில் ஆங்கில மற்ற மொழிகளைக் காத்தல்,  மற்ற மொழிகளிலும் அரசியல் சேவைகள் கிடைக்கப் பண்ணுதல், இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல். இதன்படி  1987 ஆம் அவுஸ்திரேலியாவின் தேசிய மொழிக் கொள்கை நடு வண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கொள்ளை அங்கீகரிக்கப் பட்டதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன் மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது என்பது இந்தநாட்டின் கண்ணியமானஒரு செயற்பாடாக அமைகிறதல்லவா ?

        சில நாடுகளில் தங்கள் தாய் மொழியில் பேசவே பயப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழர்மக்கள் வெளியிடங்களில் கூடியளவு தமிழில் பேசுவதை தவிக்கின்றார்கள்.காரணம் அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் தங்களை இனங்கண்டு விடுவார்கள் என்னும் பயத்தினாலே. அப்படி  இனங்காணப்பட்டால் தமக்குப் பாதுகாப்பு இல்லாமை வந்து விடலாம் என்று இன்றளவும் அஞ்சும் நிலை காணப்படுகிறது.

      ஆனால் கங்காரு மண்ணில் மட்டும் இந்தப் பயத்துக்கு இடமே இல்லை.வீட்டிலோ அல்லது தெரிவிலோ வேலைசெய்யும் இடத்திலோ போக்குவரவு செய்யும் பஸ்சிலோ புகைவண்டியிலோ அல்லது சந்தைகளிலோ விமான நிலையத்திலோ எங்கு வேண்டுமானாலும் இன்பத் தமிழில் இனிமையாகப் பேசுக் கூடிய சுகம் இந்த நாட்டில் இருக்கிறது.அந்த அளவு வேற்று மொழிக்கும் அவர்களது பண்பாடுகளுக்கும் கெளரவம் வழங்கும் கண்ணியம் மிகவும் தாராளமாக இங்கு இருக்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

       இதனால்த்தான் தமிழ்விழாக்களையும், தமிழ் நூல்கள் வெளயீடுகளையும், இசை, நடன அரங்கேற்றங்களையும் , தமிழ்ப் பத்திரிகைகளையும் ,தமிழ்ச் சங்கங்களையும் அமைத்து தமிழர்கள் தங்கள் சுயத்தினத் தொலைக்காமல் கங்காரு நாட்டில் வாழ முடிகிறது என்றால் அதனை கங்காரு நாட்டின் கண்ணியம் என்று போற்றுவது பொருத்தமாக இருக்கிறதல்லவா !

    Share
  • கலித்தொகைப் பதிப்பு வரலாறு

    -முனைவர் இரா.சித்திரவேலு

    முன்னுரை

    ஒரு மொழியின் தன்மையை அறிந்துகொள்வதற்கு உதவுபவை அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களாகும். அம்மொழியைப் பேசும் சமூகம், பழமை, பண்பாடு போன்றவைகளையும் கூறுவது

    இலக்கியங்களே ஆகும். தமிழ்ச் சமூகத்தின் பழமை, பண்பாடு அடங்கிய ‘நூல்’ மரபைப் பார்க்கும் போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நூல் எனும் தன்மையில் அச்சாக்கம் பெறத்தொடங்குகின்றன. 1812இல் திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டும் ஒரே நூலாக வெளியிடப்பெற்ற தன்மைத்து, சார்லஸ் மெட்காஃப் என்பவரால் 1835இல் கொண்டுவரப்பட்ட ‘அச்சுத் தடை நீக்கச் சட்டம்’ தமிழகத்தில் நூற்பரவலுக்கு வித்திட்டது எனலாம். எனினும் பாட்டும், தொகை நூல்கள் அச்சாக நீண்ட காலம் தேவைப்பட்டதற்குச் சொல்லப்பெறும் முதன்மைக்காரணம் சமயப்பற்றுதலே.

    “திண்ணைப் பள்ளிக்கூட மரபில் எண், எழுத்துப் பயிற்சிக்குப்பின் புராணங்கள் எனும் பெயரில் மதம் தொடர்பான செய்திகளே போதிக்கப்பட்டன. ‘தமிழே சைவம், சைவமே தமிழ்’ எனும் உரையாடல் நாம் அறிந்த ஒன்றுதானே! சங்க இலக்கியப் பிரதிகள் அனைத்தும் புறச்சமயம் பற்றிப் பேசுவன.”1 பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு சைவ இலக்கணக்காரர்களான இலக்கணக் கொத்து சாமிநாத தேசிகர் ஆகிய பிறர் எதிர்கொண்ட முறைமையை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

    “சங்க நூல்களையும் சங்க மருவிய நூல்களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும், வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டனர். இந்தத் தவறான கருத்தைப் பரப்பியவர் 18ஆம் நூற்றாண்டிலிருந்த சுவாமிநாத தேசிகரும், சிவஞான சுவாமிகளும் ஆவர். மிக அரிதாகச் சங்க நூல்களைப் பயின்று வந்த சிறுபான்மைப் புலவரையும் அவற்றைப் படிக்கவிடாமல் தடுத்தவர் இலக்கணக்கொத்து நூலாசிரியராகிய சுவாமிநாத தேசிகர். மிகுந்த சைவப்பற்றுடை தேசிகர் சங்க நூல்களையும், சமண, பெளத்த, வைணவ இலக்கியங்களையும் படிக்கக்கூடாதென்றும் சைவ நூல்களை மட்டும்தான் படிக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி எழுதினார்”2 எனத் தனது நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிட்டுச் செல்கிறார். மேலும், பெரியபுராணம், திருமுருகாற்றுப்படை முதலான சைவ சமய நூல்களுக்கு உரை எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் ஆகியவற்றைச் செய்த நாவலர் சங்க நூல்கள் மீது கவனம் செலுத்தாமல் போனது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். இதனை நாவலர் செய்த வரலாற்றுப் பிழை என்றே மதிப்பிடலாம். 1850களில் தம்மிடமிருந்த சங்க இலக்கியச் சுவடிகளைத் தமிழ்ச் சைவப் பாரம்பரியத்தில் உருவாக்கிவந்த நாவலர் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்திருப்பாரேயானால் பின்னர் தமிழ்த் தாத்தா உருவாக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது, ‘தமிழ்த் தாத்தாவிற்கு வாய்ப்பளித்து ஆறுமுகநாவலர் கண்ணை மறைத்தது மதம்’3 என்று வீ.அரசு குறித்துள்ள விமர்சனமானது ஆறுமுக நாவலர் எனும் தனிமனிதரை மட்டும் மையமிட்டதன்று. ஏனெனில் சமய வளர்ச்சி எனும் ஒற்றைத் தளத்தில் நின்று கொண்டு சங்க நூல்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வாழ்ந்தவர்கள் நாவலரின் காலத்திற்கு முன் எண்ணற்றோராகத் திகழ்ந்துள்ளனர். இத்தகு தடைகளைத் தாண்டித் தமிழ்ச் செல்வங்கள் நூலாக்கம் பெற்றன.

    சங்க இலக்கிய முதல் பதிப்பு

    பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை (1839) முதலில் பதிக்கப்பெற்றது. தொகை நூல்களுள் கலித்தொகையே முதலில் (1887) நூலாக்கம்பெற்ற சிறப்பைப் பெறுகிறது. இதன் முதல் பதிப்பாசிரியராக யாழ்ப்பாணத்து அறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை திகழ்கின்றார். சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு முன் ஆறுமுக நாவலர் கலித்தொகையைப் பதிப்பிக்கும் எண்ணமுடையவராகத் திகழ்ந்துள்ளதனை, “ஆறுமுக நாவலர் திருக்கோவையார் நூலை 1860 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த நூலின் இறுதியில் இனிதான் வெளியிடப் போகும் நூல்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். அதில் புறநானூற்று உரை, கலித்தொகை உரை, சிலப்பதிகார உரை, சீவகசிந்தாமணி உரை, வளையாபதி போன்ற நூல்களைக் குறிப்பிட்டுள்ளார்.”4

    கலித்தொகை முதற்பதிப்பு

    ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்று சிறப்பித்துப் பேசப்படும் கலித்தொகையை சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் இந்நூலை பதிப்பிக்கும்போது “கலித்தொகைப் பிரதிகள் தேட யான்பட்ட கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூலப்பாடப்பிரதி. அது தலையுங் கடையுமின்றிய குறைப்பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் ஓருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்தாற் படிப்பதற்கே வெறுப்புண்டாக நீக்கிவிட்டேன்.”5

    பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காகத் தேடியபொது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்கள் பிரதி சேர்க்கப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அமையுணர்ந்து அதனை எப்படியும் உலகிற்குப் பயன்பட அச்சிட வேண்டுமென்றும் அவாவுற்று ஸ்ரீ ஆதீன மடாதிபதிகளுக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டேன்.

    சுவாமிகள் அனுப்பிய பிரதிகளைக் கொண்டு மூலப்பாடத்தையாவது பரிசோதித்து, ஓர் அரும்பத அகராதியும் இலக்கணக்குறிப்புஞ் சேர்த்து முதலில் அச்சிட உத்தேசித்து, சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்துந் தஞ்சைச் சரஸ்வதி மஹாலிலும் இங்கும் அங்குஞ் சிதறுண்ட சில ஒற்றைகளைச் சேர்த்துக் கட்டி ஓரொரு பிடியோடு கலித்தொகையென்று அபிதானஞ் சூட்டி வைக்கப்பட்டிருந்தது.

    கூடலூரில் மஞ்சக்குப்பத்திற் சண்முக உபாத்தியாயரென்றோர் வயோதிகரும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பிற் சொக்கலிங்க பிள்ளையென்றோர் தமிழ்ப் பண்டிதருங் கலித்தொகை வைத்திருந்தது என் ஞாபத்திற்கு வர அந்த இடங்களிற் சென்று விசாரித்தேன்”5 என்று தனது பதிப்புரையில் குறிப்பிடுகின்றார் என்பார் பொ.வேல்சாமி. எனினும் ஆறுமுக நாவலர் மேற்குறித்தவற்றுள் எவற்றையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இவரிடமிருந்து கலித்தொகையைப் பதிப்பிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டவர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களே. தொடர்ந்து கால இடைவெளியில் கலித்தொகைக்குப் பதிப்பு வெளியீட்டு நூல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. இதுவரைக்கும் 28 நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன. இவற்றுள் 2 நூல்கள் மூலம் மட்டுமே கொண்டவை.

    கலித்தொகை தனித்த நிலையிலன்றி, சங்க இலக்கியங்கள் முழுமையையும் முன்னுறுத்திய மூல நூல்களும் சமகால இடைவெளியில் தோற்றம் பெற்றுள்ளன. அவ்வகையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தினர் 1940இல் (வையாபுரிப்பிள்ளை உதவிவழி) சங்க இலக்கியங்களைப் புலவர் அகர வரிசை அடிப்படையில் பாட்டும் தொகையும் எனும் பெயரில் ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளனர். இப்பதிப்பு பின்னர் எஸ். வையாபுரிப் பிள்ளையின் பெயர் கொண்டு மு.சண்முகம் பிள்ளை உதவியால் பாரி நிலையம் வழி 1967இல் வெளியிடப்பெற்றுள்ளது. 2006இல் ச.வே.சுப்பிரமணியம் அவர்களால் சங்க இலக்கியம் பிள்ளை உதவியால் பாரி நிலையம் வழி 1967இல் வெளியிடப் பெற்றுள்ளது. 2016இல் ச.வே.சுப்பிரமணியம் அவர்களால் சங்க இலக்கியம் மூலம் முழுவதும் அடியளவில் அடிப்படையில் நூல் வரிசைப்படுத்தப்பெற்று, சந்தி பிரித்து வெளியிடப்பெற்றது. தமிழ்ச் செவ்வியல் நூல்களைத் தனித்து அடையாளப்படுத்தும் நோக்கில் 2008இல் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் எனும் பெயரில் மேற்படி அறிஞரால் மணிவாசகர் பதிப்பகத்தின்வழி வெளியிடப் பெற்றது. அண்மையில் (2010) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி ம.வே. பசுபதி அவர்களால் செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் எனும் பெயரில் பாடவேறுபாடுகளை அடிக்குறிப்பில் கொண்ட நூல் தொகுதி வெளியிடப்பெற்றுள்ளது.

    சி.வை.தாமோதரம் பிள்ளையின் கலித்தொகைப் பதிப்பு பிற்காலத்தில் மறுபதிப்பாக வேறொரு நிறுவனத்தால் வெளிவந்துள்ளது. முல்லை நிலையத்தாரால் 2006, 2008களில் மறுபதிப்பாக வெளியிடப்பெற்றுள்ளது. 1958இல் வெளிவந்த சக்திதாசனின் உரை, தமிழ்மண் அறக்கட்டளையின்வழி 2008இல் வெளிவந்துள்ளது. புலியூர்க்கேசிகன் உரையானது அண்மையில் (2009) சாரதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பெற்றுள்ளது. இவை தவிர இவை அனந்தராமையரின் பதிப்பு நூலை நிழற்படப்பதிப்பாக 1984இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. ‘பாட்டும் தொகையும் என் உரை’ எனும் பெயரில் ப. ஆறுமுகம் 2010இல் 18 நூல்களுக்கும் உரை எழுதி ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். கலித்தொகை வளர்ச்சி நிலைகள் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

    கலித்தொகைப் பதிப்பு வெளியீடுகள்

    1. 1887 சி.வை.தாமோதரம் பிள்ளை (பதிப்.) – நல்லந்துவனார் கலித்தொகை
    2. 1925 இ.வை. அனந்தராமையர் (பதி.) – பாலை, குறிஞ்சி
    3. 1925 இ.வை. அனந்தராமையர் (பதி.) – மருதம், முல்லை
    4. 1930 இ.வை. அனந்தராமையர் (பதி.) – மூலம் முழுவதும்
    5. 1931 இ.வை. அனந்தராமையர் (பதி.) – நெய்தல்
    6. 1933 தை.ஆ.கனகசபாபதி முதலியார் – பாலைக்கலி
    7. 1938 மு.காசிவிசுவநாதன் செட்டியார் – கலித்தொகை
    8. 1941 ந.சி.கந்தையா – கலித்தொகை வசனம்
    9. 1949 ந. இராமய்யா பிள்ளை – பாலைக்கலி
    10. 1951 எஸ்.ஆர். மார்க்கபந்து சர்மா – குறிஞ்சிக்கலி வழித்துணை விளக்கம்
    11. 1958 மர்ரே எஸ். ராஜம் (பதி.) – கலித்தொகை (மூலம்)
    12. 1958 புலியூர்க்கேசிகன் – கலித்தொகை
    13. 1958 மா.இராசமாணிக்கனார் (பதி.) – கலித்தொகை
    14. 1958 சக்திதாசன் சுப்ரமணியன் – கலித்தொகை
    15. 1966 பொ.வே.சோமசுந்தரனார் – குறிஞ்சிக்கலி
    16. 1968 பொ.வே.சோமசுந்தரனார் – முல்லைக்கலி
    17. 1969 பொ.வே.சோமசுந்தரனார் – பாலைக்கலி
    18. 1969 பொ.வே.சோமசுந்தரனார் – மருதக்கலி
    19. 1969 பொ.வே.சோமசுந்தரனார் – நெய்தற்கலி
    20. 1987 லேனா தமிழ்வாணன் (பதி.) – கலித்தொகை
    21. 1999 அ.மாணிக்கம் – கலித்தொகை
    22. 2003 சுப. அண்ணாமலை – கலித்தொகை
    23. 2004 அ. விசுவநாதன் – கலித்தொகை
    24. 2007 இரா.மணியன் – கலித்தொகை காட்டும் பாலைத் தமிழும் குறிஞ்சித் தமிழும்
    25. 2007 குழ.கதிரேசன் – எளிய தமிழில் பாலைக்கலி
    26. 2008 இரா. சரவணமுத்து – கலித்தொகை என்னும் காதல் தொகை
    27. 2009 ச.வே.சுப்பிரமணியன் – கலித்தொகை
    28. 2012 தமிழமுதன் – கலித்தொகை மூலமும் உரையும்

    முடிவுரை

    கலித்தொகைப் பதிப்புகளாகிய 1887 முதல் 2012 வரையிலான பதிப்புகளைப் பார்க்கும்பொழுது, 28 நூல்களுள் பதிப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்ட பதிப்பு நூல்களாக அமைபவை 8உம், வெளியீடுகளாகக் கருதத்தக்கவை 20 நூல்களும் ஆகும். இவற்றுள் நான்கு நூல் பகுதிப்பதிப்பாகவும், இரு நூல் மூலம் மட்டும், ஒரு நூல் வசனம் (உரைநடை) மட்டும் அமைந்துள்ளது. உரை கவிதை வடிவம் ஒரு நூலும், இசைப்பாடல் வடிவம் ஒரு நூலும் இடம்பெற்றுள்ளன.

    துணைநூற் பட்டியல்

    இரா.ஜானகி, சங்க இலக்கியப் பதிப்புரைகள் தொகுப்பு, ப.5.
    மயிலை சீனி.வேங்கடசாமி, 19 ஆம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம், ப.90.
    வீ. அரசு, தமிழ் அச்சுப்பண்பாடும் புத்தக உருவாக்கமும், ப.4.
    ஆறுமுக நாவலர், தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009, ப.4
    சி.வை. தாமோதரம் பிள்ளை, கலித்தொகை, பக்.28-29.

    *****

    கட்டுரையாளர் – பேராசிரியர்,
    அபி & அபி கலை அறிவியல் கல்லூரி,
    வயலூர், தஞ்சாவூர். செல்: 9751072554
    mailid: mohanachitravelu24@gmail.com

     

    Share
  • பந்தல்குடி வட்டார கும்மிப்பாடல்களில் மகாபாரதக் கதையாடல் – 1

    -முனைவர் பா. உமாராணி

    மனிதா்கள் தங்கள் மனமகிழ்ச்சிக்காகக் கூடி ஆடி மகிழ்ந்த ஆடல்கள் பின்னாளில் தனித்தனி ஆடற்கலைகளாகத் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு கலையும் அக்கலைகள் நிகழ்த்தப்படும் சமூகத்தின், பண்பாட்டின் ஒழுகலாறுகளோடு இரண்டறக் கலந்தனவாகும். மக்கள் தங்கள் சமூகப் பண்பாட்டை வாழ்வின் அங்கமாகக் கருதுவதுடன் தங்கள் கலைகளிலும் பதிவுசெய்து வருகின்றனா். கலைகள் என்பவை இன்று பெரும்பாலும் வழிபாட்டோடும், பொழுதுபோக்குடனும் தொடா்புடைய ஒன்றாகவே கருதப்படுகின்றன. இங்குக் கலைகளே வழிபாடாகவும், வழிபாடே கலையாகவும் பரிணமிக்கின்ற தன்மையினை நாட்டுப்புறக் கலைகளில் காணமுடிகின்றது.

    நாட்டுப்புறக் கலைகளில் பெண்கள் கைகொட்டி ஆடும் கலையாக விளங்குவது கும்மிப்பாடல்கள் ஆகும். எனினும் விழாக்காலங்களில் பெண்களோடு ஆண்களும் கும்மிப்பாடல்களை நிகழ்த்துவதை அறியமுடிகின்றது. சடங்குகளில் கும்மிப் பாடல்களை பெண்கள் மட்டுமே பாடுவா்.

    கும்மிப் பாடல்களை மகளிர் கைகொட்டிப் பாடியாடும் விளையாட்டு என்றும் கும்மிப்பாட்டு என்றும் குறிப்பிடுவர். கொம்மை என்றும் சொல்லிலிருந்து கும்மி பிறந்ததாகக் கூறுவர். கும்மியைத் தமிழ் இலக்கியங்கள் கொம்மி, கொப்பி என்று குறிப்பிடுகின்றன. கும்மி என்னும் இலக்கிய வகையானது பழந்தமிழ் இலக்கியங்களில் இசையோடு இணைந்து ஆடப்படும் குரவைக்கூத்து (கை கோத்தாடல்), துணங்கைக் கூத்து (கைகொட்டி ஆடல்) போன்றவற்றோடு ஓரளவு ஒத்திருத்தலைக் காணமுடியும்.

    கும்மிப் பாடலைத் தாள லயத்துடன் கைகளைக்கொட்டி பலர் ஆடுகின்றனா். இதில் ஒரு பெண் அடியினை எடுத்துக் கொடுக்க பிறா் தொடா்ந்து பாடும் தன்மையைக் காணமுடிகின்றது. “குடங்கையினால் கொம்மைக் கொட்டலைச் சீவக சிந்தாமணி சுட்டுகின்றது. கையைத் தட்டி ஒலி செய்யாமல் ஒருவா் கவனத்தை ஈர்க்கும் இந்நிலை இன்றும் வழக்கில் காணப்படுகின்றது. இதன் காரணமாக ‘கொம்மை’ என்பது அடிப்படைச் சொல்லாகக் கருதப்படுகின்றது (529, 1109, 1834, 2230)”(டாக்டா; சா.வே.சுப்பிரமணியம், தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.492)

    கும்மிப் பாடல்களைக் குறித்துக் கூறும்போது, “குதித்தாடுதல் எனப் பொருள்படும் கும்மாளம் என்ற சொல்லிலிருந்து கும்மி வந்தது என்றும், கைகொட்டுதல் எனும் பொருள் தரும் கும்முதலே கும்மி அடிப்படை என்றும் குழுமி ஆடல் கும்மி ஆயிற்று என்றும் பலவாறு எண்ணுவா்” (மேவது, ப.493).

    “கூற்றம் புறங்கொம்மை கொட்டினாரில்”  (பழமொழி, பா.291)

    என்று பழமொழியும் குறிப்பிடுகின்றது. இத்தகு சிறப்பினை உடைய கும்மிப்பாடல்களைப் பந்தல்குடி மக்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகப் பிணைத்துப் போற்றிப் பாதுகாக்கின்றனா். இவர்கள் கும்மிப்பாடல்களை பல்வேறு பொருண்மையில் பாடுகின்றனர். புராணக் கதைக்கூறுகளை கும்மிப்பாடல்களில் இணைத்துப் பாடும் மரபு இவா்களிடையே காணப்படுகிறது. அவ்வகையில் மகாபாரதக் கதையாடலை கும்மிப்பாடல் வழிப் பாடியாடும் மரபு இவா்களிடையே இன்றும் வழக்கத்தில் இருந்து வருகின்றது. இதனைப் பதிவு செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

    மகாபாரதக் கதையாடல்

    புராணக் கதையாடல் பகுதியில் ஒன்றான மகாபாரதக் கதையை பந்தல்குடி மக்கள் தங்கள் கும்மிப்பாடல்களின் கருப்பொருளாக்கிப் பாடுகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. மகாபாரதக்கதைப் பகுதியில் முதலில் காளிதேவியை வணங்கி, பின்னா் விநாயகா் துதியினையும் கூறிப் பாடல்களைப்பாடத் தொடங்குகின்றனா். மேலும், கும்மிப் பாடல்களைப் பாடுவோா் தாங்கள் மட்டும் இறைவனை வணங்கித் தொடங்குவது மரபு. ஆனால்,

    ”வருவாய்காளி இருதயந்தனிலே – வந்த சபையோா் முதல்
    பாதம் பணிந்தோம் பெண்கள் சபையினிலே
    பாரெல்லாம் புகழும் மாயவருள் செய்த
    பாரத மாங்கதை நாங்களுமே பாட
    தொந்திக் கணபதி பாதமே நினைந்தோம்
    தும்மநகர மக்கள் ஒன்றாக சோ்ந்து நாங்களும் – பணிந்தோம்” ( கு.பா.1)

    என்று மகாபாரதக் கதையை மையமாகக் கொண்ட இப்பாடலில் தும்மநகர (பந்தல்குடி) மக்கள் ஒன்றாக இணைந்து இறைவனைப் பணிவதாக இக்கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ளது.

    கும்மிப்பாடல் கூறும் கதையில் பாண்டுவும், திருதராட்டிரனும் நீதி தவறாமல் ஒற்றுமையாய் ஆட்சி நடத்தினா் என்றும், பாண்டுவிற்கு பஞ்சபாண்டவா்கள் என்ற ஐந்து பிள்ளைகளும், திருதராட்டிரனுக்கு கௌரவா் என்ற நூறு பிள்ளைகளும் பிறந்து வளா்ந்தனா். இவா்கள் அனைவரும் துரோணாிடம் கல்வி கற்கின்றனா். அப்பொழுது தருமனுக்குக் கிடைக்கும் புகழினில் பொறாமையுற்ற துாியோதனன் அவா்களை அழிக்க எண்ணுகிறான். அதன்பொருட்டு அவா்களை அழிக்கத் திட்டம் வகுக்கின்றான் (கு.பா. 2 முதல் 5 வரை). அதற்குச் சகுனியைத் துணைக்கு அழைத்த செய்தியினை,

    “திட்டம் வகுத்தானே திாியோதிரனும் – பஞ்சபாண்டவரை
    ஒழித்துக் கட்ட திட்டமே யேதும்
    மாமன் சகுனியை தானும் அழைத்திட
    ஆளு அனுப்பினான் துாியோதிரனும்
    வந்தான் சகுனி மருமகனிடமே – இருவருமாம்
    திட்டம் ஒன்று வகுத்தாா் வேகமே” ( கு.பா.5)

    என்ற வாிகள் புலப்படுத்துகின்றன. சகுனியும், துாியோதனனுடன் இணைந்து சூதாட்டத்திற்கு வஞ்சகமாய்த் தருமனை அழைக்கின்றனா். அவா்கள் சூழ்ச்சி அறியாத தருமனும் சூதிற்கு இணங்குகின்றான். பின்னா் விளையாட்டில் நாடு, நகா் இழந்து தம்பியரையும் இழக்கின்றான். துாியோதனன் வெற்றி ஆணவத்தால் தருமனின் தம்பியா் நால்வரையும், திரௌபதியையும் சபைக்கு அழைக்கின்றான். திரௌபதி அங்கு துகிலுாியப்பட அவள் கண்ணனை வணங்கி ஆடையினைப் பெறுகின்றாள்.

    கும்மிப்பாடலில் வரும் இடைப்பாட்டான மணப்பாறை மாடு கட்டு என்ற மெட்டில் அமைந்த பாடலில் பாண்டவா் வனவாசம் செல்லும் செய்தியும், தருமன் தன் தம்பியருக்கு உபதேசித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இதனை,

    “கோபமது கொள்ள வேண்டாம்
    கொலை களவு செய்ய வேண்டாம்
    காடு செல்ல புறப்படுங்கள் பாலர்களே – கூட
    கண்ணன் வந்து உதவி செய்வாா் தம்பிகளே.
    பன்னிரண்டு வருஷமது பன்னிரண்டு நாழிகையாய்
    வனவாசம் இருந்து வருவோம் பாலா்களே
    நமது தாயை வணங்கி செல்வோமடா தம்பிகளே” (மணப்பாறை மாடுகட்டி மெடடில், கு.பா.2,3) என்ற வாிகள் உணா்த்துகின்றன. மேலும், இப்பாடல் பாண்டவா்கள் மேற்கொண்ட பன்னிரண்டு வருட வனவாசம் குறித்த செய்தியினையும், ஒரு வருட அஞ்ஞாதவாசம் இருந்ததனையும், இவா்கள் தங்கள் ஆயுதங்களை வன்னிமரத்தில் வைத்திருந்ததனையும், ஆயுதங்களைக் காவல் செய்ய நாகராஜனைப் பணித்தமையும் கூறப்படுகின்றது. மகாபாரதக் கும்மிப்பாடல் பாண்டவா்கள் விராடபுரத்தில் இருந்த செய்தியைக் கூறுகின்றது. அங்கு அவா்கள் தங்களுக்கேற்ற பணியினை மேற்கொண்டதை,

    “மடப் பள்ளியிலே நானுமே சோ்ந்து
    பலகார வகைகள்
    செய்வேன் பல ஈயனனும் போ் வாய்ந்து
    என்னப் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம்
    எங்களது அண்ணா உங்களது – எண்ணம்
    கங்க பட்டராம் எந்தனுட ராடனிடத்தில்
    கணக்கு வேல் பாா்ப்பேன் வந்து பாரு
    தம்பி அா்ஜுன உனது கொள்கை என்ன – தயவுடனே
    இயம்பிடுவாய் எங்களின் முன்னே
    அண்ணாவின் வாா்த்தையை அா்ச்சுணன் கேட்டுமே
    பண்புடன் அண்ணாவின் பாதம் பணிந்துமே
    தெய்வலோகம் கொடுத்த வரம் உண்டு பேடியாக
    செல்வேன் நாட்டிய சாலையுங் கண்டு
    நகுலராஜன் அண்ணனும் பணிந்தான்
    குதிரைப் பாகன் – போல வேடமும் தானுமே அணிந்தான்
    சத்தியம் தவறாத சகாதேவனுமே – உத்தமன் மாடு
    மெய்க்கவும் போவேனே
    திரௌபதையும் தானுமே பணிந்தாள்
    ராஜா மகள் மனைவியற்கும் தோழியாக நின்றாள்.” (கு.பா.17)

    இப்பாடல்வழி அறியலாம். மேலும் கங்கப் பட்டராக தருமன் பணிபுாிந்தான் என்றும் அவன் வந்து பணிபுாியத் தொடங்கிய நாள் முதலாக வானம் பொய்க்காமல் மழைபொழிந்தது என்றும், அதனால் அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் வேளையில் அரசியுடன் அந்தப்புரத்தில் பூப்பறிக்கச் சென்ற திரௌபதியை கீசகன் என்னும் அரக்கன் கண்டு மோகம் கொண்டான் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. கீசகன் தன்மீது மோகம் கொண்டதைக் கண்ட திரௌபதை பயந்து தன் நிலையை வீமனிடம் சொல்கின்றாள். வீமனும் அதற்கு நாளை மாலை நந்தவனத்திற்கு வருவதாகச் சாடையாகச் சொல்லிவா என்கிறான். கீசகனும் காதல் நோயினால் தவிப்புற்று நந்தவனத்தில் காத்துக்கிடக்கிறான். அவ்வேளை வீமன் தன் மனைவி திரௌபதியின் ஆடையை உடுத்திக்கொண்டு இரவுப்போதில் நந்தவனம் நோக்கி வருகின்றான். வந்தவன் வீமன் என்று அறியாத கீசகன் அவனை அணைக்க கையைப் பிடிக்கின்றான். கை கடினமாக இருக்கவே சந்தேகமுற வீமன் அவனை இருகைகளினாலும் இறுக்கிப் பிடித்ததினால் கீசகன் அடைந்த துயரை,

    “ஆஹா என்ன பெண்மணி கையிதுவா
    சொற சொறப்பாய் இருக்க கீசகன் மனம் பதறிடவே
    இதுதான் சமயம் என்றுமே வீமனும்
    இறுக்கி பிடித்தாரே இரண்டு கையையும்
    மோரூ சிலுப்பினா் பனைமரம் தனிலே
    கீசகன் கையில் இரத்தம் வழிந்து ஓடுது பூமியிலே
    இழுத்து இழுவை மரமும் தாங்காமல் – வோ் புடுங்க
    விழுந்ததையா இருவா் மத்தியிலே
    மோசமும் போனதே என்றுமே கீசகன்
    வீமராஜனையும் இருகையால் பின்னியே
    தூக்கி எறிந்தானே ஆகாய மாா்க்கமாக
    வீமராஜன் – விழுந்தாரையா அவன் தலைமேலே
    வீமராஜன் வீராவேஷம் கொண்டு – ஆகாய மாா்க்கம்
    அரக்கனை எறிந்தாா் பொல்லாத கோபங்கொண்டு
    இப்படியாக இருவரும் போராட
    இந்திரா் சந்திரா் சூாியா் புகழ்ந்திட
    கீசகன் உயிா் எமபாதம் போக”  (கு.பா.33, 34,35)

    என்று விவாித்துப் பாடுவதைக் காணமுடிகின்றது.

    கீசகனை வீமன் தன் வீரத்தினால் அழித்த செய்தியினை அறிந்த விராட ராஜனும், அந்நாட்டு மக்களும் மகிழ்ச்சியடைந்தனா். இதற்கிடையில் துாியோதனன் பாண்டவா்களைத் தேடச்சொல்லி படைவீரா்களை அனுப்புகிறான். அவா்கள் இருக்கும் இடம் தொியாமல் போகவே புவியில் செழிப்பான இடம் எதுவோ அதுவே பாண்டவா்கள் இருக்கும் இடம் என்றுகூறி வீரா்களைத் தேடிக்கொணரச் சொல்கின்றான்.  வீரா்களும் விராடபுரத்தின் செழிப்பினைக் கண்டு இங்குதான் பாண்டவா்கள் இருப்பா் என எண்ணி அவா்களை வெளிக்கொணர வேண்டி அப்பகுதியில் இருக்கும் பசுக்களைக் கவா்ந்து வைக்கின்றனா். இதனை அடுத்து ஒரு இடைப்பாட்டின் மூலம் பிற செய்திகளைக் கூறுகின்றனா் இப்பகுதி மக்கள். இப்பாடலில் பசுக்களை கவா்ந்து சென்ற செய்தியினைக் கேட்ட உத்திரகுமாரன் போருக்குச் செல்ல முனைகின்றான். அவனுக்கு சாரதியாக அலியின் உருவாக இருக்கின்ற அா்ச்சுனன் செல்கின்றான் என்பதுடன் இக்கும்மிப்பாடல் நிறைவுறுகின்றது.

    சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளுக்கு ஏற்ப புராணக் கதையாடல்கள் மக்களின் வாழ்க்கையில் இடம்பெறுகின்றன. காலமாற்றத்தினாலும், அவை சாா்ந்துள்ள வழிபாட்டு மரபுகளினாலும் புராணக் கதைகள் நாட்டுப்புறக் கலைகளில் இடம்பெறுவது தவிா்க்க முடியாத கூறாகக் காணப்படுகின்றது. இத்தகு புராணக் கதையாடல் பின்புலத்தில் மகாபாரதக் கதையாடல்களை கருப்பொருளாக்கிக் கும்மிப்பாடல்களை இம்மக்கள் பாடிவருகின்றனா். மகாபாரதக் கதையுடன் தொடா்புடைய கா்ண மகராஜன்கதை கும்மிப்பாடலும் இங்கு பாடப்படுகின்றது. மேற்கோள் பகுதியில் இல்லாத கும்மிப்பாடல்கள் (கு.பா) தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

    கும்மிப் பாடல் (கு.பா)

    1. ஜெகம் புகழும் சக்கரவா்த்தி பாண்டு – மகாராஜன்
      சகோதரராம் திருதராட்ரன் தம்பியும்
      சத்தியம் தவறாமல் அஸ்தினாபுரமதை
      ஆண்டு வந்தாா்கள் அண்ணனும் தம்பியும்
      ஒற்றுமையோடு ஜனங்கள் வாழ கண்ணன் பிரசன்னமா
      குழந்தையில்லா குறைகள் தானம்மா வனத்தினுள்ளே
      பிறந்தாா் பாலா் புவியை ஆளம்மா
      பாண்டு மகாராஜன் தவமதில் பிறந்த
      பஞ்ச பாண்டவா்கள் ஐவா் தானம்மா
      திருதராட்டிரன் பிள்ளைகள் நூத்தி ஒன்று
      கண்ணன் அருளால் சிதறி ஓடி பிறந்ததோா் பொண்ணு
      தருமராஜா தம்பி நால்வராம் – துாியோதரனுடன்
      துா்ச்சாதனன் நூத்தி ஓா் பேராம்
      கல்வி பயின்றாா்கள் துரோணனிடத்திலே
      யானை ஏற்றம் குதிரை ஏற்றமாம்
      தோ்ச்சி அடைந்தாா் தருமருந்தம்பி
      துாியோதிரனும் பொருமை அடைந்து மனசுமே வெம்பி
      தருமரையும் அழைத்தான் சகுனியும் – பொழுது போக
      நமக்கு ஒருவழியை நாடனும்
      வஞ்சகமாகவே சகுனியுரைத்திட
      நெஞ்சமதில் தா்மம் வஞ்சமில்லாமலே
      சிாித்தாா் தருமராஜா அந்நேரம் – சகுனி
      மாமா – செப்பும் நீயே வழியும் சொன்னாராம்.
      தருமராஜனே நாம் இரண்டு பேரும் – ஆடுவோமே
      சூதாட்டமும் பொழுது போகணும்
      சொல்லவே சகுனி சுந்தர மூா்த்தியின் – நல்ல
      மைத்துனா் தரும ராஜரும்
      சம்மதம் என்று உரைத்தாா் அந்நேரம்
      வஞ்சமுடனே எடுத்தான் சகுனி காயை – அன்னேரம்
      பஞ்ச மாபாதகன் சூழ்ச்சி தொியாமல் – நல்ல
      குந்திமாதேவி பாலன் தா்மா் தானும் – விளையாடி
      மாயாஜாலமுடன் சகுனியும் ஆடவே
      மன்னன் தருமரும்தான் விளையாடவே
      விளையாட்டு என்று மனதில் எண்ணியே
      பூமிநகரம் பந்தயமாய் வைத்ததுண்மையே
      நாடு நகரம் நமக்குச் சொந்தமே – துாியோதிரனே
      நடப்பாய் இஷ்டம் போலே எங்குமே சகுனி
      சொன்னதோா் வாா்த்தையைத் துாியனும் கேட்டுமே
      தம்பி மாா்களையும் உடனே அழைத்துமே
      செப்பினானே சேதி தன்னையே – தருமா்முதல்
      திரௌபதையும் நமக்கு சொந்தமே.
      அந்தநேரம் எல்லோரும் கூடி
      பொியோா்களையும் – அழைத்து வந்தான் சபைதனைத்தேடி
      வந்த சபையோரே கேளுங்க விஷயத்தை
      எங்களது மாமா சகுனி என்பவா்
      தருமருடனே சோ்ந்துமே கூடி
      நாடு நகரம் அவா்களையும் ஜெயித்தாா் சூதாடி
      ஆனபடியால் எங்க நாட்டிலே – அவா்கள் இருக்க
      அருகதையும் இல்லே வீட்டிலே
      கூடியிருக்கும் சபையோரே நீங்களும்
      கூப்பிட்டு இப்போதே நாடு கடத்துங்க
      என்று சொன்னான் அரவக் கொடியோனும்
      சபையோா்கள் எல்லாம் – உடனே கூப்பிட்டு வழியனுப்ப வேணும்.
      தருமா் தம்பி நால்வரும் கூடி – அந்த நேரத்திலே
      வந்தாா் பொியோா் சபைதனைத் தேடி
      பாதம் பணிந்தாரே தா்மராஜருமே
      பக்தியுள்ள பொியோா்கள் சபைதனை
      ஆசிா்வாதம் செய்தாா் சபையோரும் – தருமருந்தான்
      வந்தமே உனக்கு விதிவசந்தானும்.
      மாது திரௌபதா தேடியே அங்கு – சபையோா்களே
      இப்படிச் செய்த சண்டாளன் யாரு அங்கு
      ஏங்கிய மனதுடன் துரோபதா தேவியும்
      பக்கம் இருந்த துச்சாதனன் விழியும்
      சிவக்க மாதைப் பிடித்துமே இழுத்தான்
      சபையோா் அறிய – கோபமுடனே துயிலுமே உாிந்தான்.
      நடந்த சம்பவம் மக்களெல்லாம் பாா்த்து – மனம்
      சகிக்காமல் இருந்தாா் எல்லோரும் தலையை கீழே போட்டு
      கதறினால் மாது திரௌபதை அப்போது
      கண்ணா, கண்ணா என்று வினவியே
      குரலும் கேட்டது கோபால கிருஷ்ணனுக்கு
      துா்ச்சாதனன் அசந்துமே போயி துயில் விட்டு
      விழுந்தானாம் மயக்கம் உண்டாகி
      விழுந்தவுடன் துாியோதிரன் வந்துமே
      என்னடாத்தம்பி என்றுமே தூக்கினான் தொிந்து
      ஒன்றும் இல்லையே எனக் கண்ணா – ஏதோ பித்து
      மயக்கம் போல வந்தது இப்போதென்றான்.

    மகாபாரதத்தில் இடைப்பட்டு

    மணப்பாறை மாடுகட்டி என்ற மெட்டு

    1. பொறுமையோடு இருக்க வேண்டும் – இந்த
      பூவுலகம் ஆள வேண்டும் நான்
      செய்த பிழை பொறுக்க வேண்டும் பாலா்களே தருமன்
      செப்பும் மொழியை உணரவேண்டும் தம்பிகளே
      சத்தியம் தவறாமலே உத்தமராம் தருமராஜா
      பன்னிரெண்டு ஆண்டு வனவாசமே – இருந்து
      செல்கிறாா்கள் அஞ்ஞாத வாசமே.
      உருவம் தொியாமலே ஒருவருடம் கழிக்க வேண்டும்
      என்பதையும் மனதினிலே எண்ணியே ஆயுதத்தை
      பத்திரமாக வைக்கும் மரம் வன்னியே
      நாங்க போகவேரே யாரும்
      ஆயுதத்தை எடுக்க வந்தால்
      நாகராஜன் வந்து அங்கு தோன்றவே
      மகாபாரதப் பாடல் தொடா்ச்சி
      மண்டலம் புகழும் நந்தவனம் போலே – வளம்
      பொருந்திய சோலைகளும் இருக்கும் பொன்னாடே
      கான மயில்களும் ஆடி விளையாடும்
      கள்ளம் கபடம் இல்லாத பொன்னகரம்
      விராடபுரம் தான் அதன் உடன் பேரு – தருமா்
      இருக்க அதுவே பொருத்தமான – ஊரு
      தக்கபுகழ் நெறியுமே வாய்ந்த – தருமராஜன்
      தம்பியா்களையும் தானுமே சூழ்ந்தே
      எந்த விதமடா தம்பிகளே நீங்க
      எந்த விதமடா தம்பிகளே நீங்க
      இருந்து வருவீா்கள் என்று வினவவே
      வீமராஜன் தானுமே எழுந்தான் – அண்ணா சரணம்
      என்றுமே இரு பாதமும் பணிந்தாா்.
      தம்பியா் சொன்னதை தருமா் கேட்டுமே
      அடங்கா மகிழ்ச்சி ஆனந்தமுகம் தானுங் கொண்டுமே
      கண்ணனை நினைத்து கங்கபட்டருமே
      சென்றாரே விராட ராஜ சபையுமே
      எந்த ஊரு என்றுமே கேட்க – தருமராஜா;
      இரண்டு பாதம் தானுமே சபையுமே.
      கங்கபட்டா் எனது பேரையா – தருமாிடத்தில்
      கணக்கு வேலை பாா்த்து வந்தனையா

      சகுனி செய்த சதிகார வேலையினால்
      தருமராஜா வன வாசகமே சென்றாா்
      அவா் வருகின்ற நாளது வரையில் – மகாராஜனே
      பணிபுாிகிறேன் உந்தனது சபையில்.
      கங்கபட்டரும் விராடராஜனும் – அரண்மனையில்
      தாம்பூலம் தாித்துமே இருந்தாா்
      அந்த நேரமது வீம சேனராஜன்
      பலாயனவே தானும் பெயா் கொண்டு

      வந்து பணிந்தானே ராஜசபையிலே – ஆசிா்வாதம்
      தந்து மகிழ்ந்தாா்கள் நல்லதோா் வேளையிலே
      இந்த விதமாய் எல்லோரும் வந்து அவரவா்கள்
      வேளையிலே அமா்ந்தாா்கள் நன்று
      வானம் பொழியது பூமி விளையுது
      வந்த நாள் முதலாய் இந்த நாள் வரையில்

      நாடு நல்ல முறையில் வாழவே – ராஜசபையில்
      கங்கப்பட்டரை ஜனங்கள் புகழவே
      இந்த விதமாய் இருக்கும் நேரத்தில் – வந்ததையா
      இழப்பான சொல்லும் வேகத்தில்

      சென்றது பெண்களும் பூப்பறிக்க வனம்
      சென்றதே திரௌபதா தேவியும் கூடவே
      பாா்த்தான் கீசகன் பத்தினி முகத்தையே – புதுசா
      இருக்கு என்றுமே அவனும் மனதில் எண்ணியே
      அவன் இருக்கிறான் என்று அறிந்துமே

      பெண்களெல்லாம் பயந்து ஓடி வந்தது நகரமே
      என்னமோ தொியலே பெண்களும் ஓடவே
      என்று பத்தினி மனதினில் எண்ணவே
      எட்டி பிடித்தானே கீசகன் மாது கையை
      விடுடா மடையா என்றுமே கொடுத்தாள் கன்னத்தில் ஓா் அறை

      கன்னத்தைத் தடவி பாா்த்தான் கீசகன் – கண்ணே
      நீயும் இன்னொரு அறை கொடுக்கவே – வேணும்
      என்றுமே கீசகன் தானாக கொஞ்சவே
      வஞ்சியும் அவ்வேளை நெஞ்சமும் பதறவே
      வேகமுடனே மாதுமே ஓட – விரட்ட அரக்கன்
      கண்ணிலே ஒரு கொப்புமே தான் விழ

      வருவாய் நாளை என்றுமே கீசகன் – வழி
      பாா்த்து இருந்தான் வனந்தனிலே அரக்கனானவன்
      எங்கு சென்றாலும் நீ இங்கு வந்தாகனும்
      என்றுமே கீசகன் வம்பமுறுத்தலே

      திரௌபதாவும் வீடு வந்தது – கணவனே
      வீமசேனன் அருகில் சென்றது.
      பூப்பறிக்க பெண்களெல்லாம் சோலை – வனமதிலே
      சென்றோமையா சாயங்கால வேளை
    2. கண்டானே கீசகன் வந்தானே என்னிடம்
      வம்பான வாா்த்தையும் என்னிடம் சொன்னானே
      பதறி ஓடி வந்தேன் உன்பாதம் – என் பக்தாவே
      எந்தனைக் காக்க நீதான் முன் வரணும்.
      சொன்னதோா் வாா்த்தையை வீமசேனன் கேட்டு
      கண்ணே நீயும் – அஞ்சாதே என் வாா்த்தையும்  கேட்டு

      நாளை சாயங்கால நேரம் சந்திப்போம் என்றுமே
      சாடையாய்ப் போய் வந்திடு இன்றுமே
      மனசுக்குகந்த மன்மதன் நீதானே – என்றுமே சொல்லி
      வந்திடு சீக்கிரம் என்னிடம் நீதானே.

    கீசகன் பாட்டு (ஏா் முனைக்கு என்ற மெட்டு)

    1. எங்கு சென்றாலும் நீ இந்த வனமதில்
      பூப்பறிக்க நீயும் வந்தாக வேணும்       (எங்கு சென்றாலும்)
      உனது அழகு எனது உடலில் – பதிந்து கொள்ளவே
      உறக்கம் இல்லாமல் எனது மனம் வாடுகின்றதே
      சீக்கிரமாய் வந்து நீயும் எனக்கு இன்பமே
      தந்திடுவாய் எந்தனுக்கு சந்திர இன்பமே     (எங்கு சென்றாலும்)
      எனது பலம் இவ்வுலகில் எவருக்குமில்லை
      எதிா்ப்பவா்கள் எனது இடம் சாவதும் உண்மை
      கண்ணே என்னை ஆதாித்து காத்திடும் பெண்மை
      உன் கற்பை என்றும் பாதுகாத்தா உலகில் நன்மை
      இந்த விதம் கீசகனும் இருந்தான் வனமதில்
      சூாியனும் அஸ்தமானாா் மேற்குத் திசைதனில்
      வீமசேனன் சொன்னதையும் பெண்மணி
      அறிந்து வழி வருகிறது அரக்கரை நாடி      (எங்கு சென்றாலும்)

    மகாபாரதப் பாடலின் தொடா்ச்சி
    கீசகன் ஆனவன் அப்படி அங்கிருக்க

    வீமராஜன் மனைவி உடையைத் தானுமே அணிய
    தேவி உடைய வளையலை அணிந்து
    தீரவீர பராக்கிரம சாலியாம்
    வீமராஜன் தானுமே செல்ல – விரதசாரணி
    கண்ணனை நினைத்து வணங்கினாள் மனசுக்குள்ளே.
    ஒருவா் முகம் ஒருவா் தொியாமல் – இருக்கும் நேரம்
    அறிந்து சென்றாா் வனமும் வீமராஜா்
    பக்கமாய் மீதிலே சாய்ந்துமே கொண்டாரே
    வெட்கமே தானடி கண்ணே தான் உனக்கு
    என்றுமே கீசகன் – கையை பிடித்தான் கழுது வந்திருச்சு

    – வீமராஜன்
    வீராடராஜன் பாதமும் பணிய
    சந்தோசமாய் விராடராஜனும்
    பலாயனா எங்களுக்கு நல்ல காலமும்
    உன்னலே வந்தது எங்களது வாழ்வு
    என்னாலும் உனது பேரு மறையாது
    என்று விராட ராஜா் மக்களும் – உன்னாலே
    இனிமேல் எங்க ஊரு நன்றாக வாழும்.

    மாதம் மூன்று மழை பொழிந்து – விராடபுரம்
    சோலைவனம் பூ மலா்ந்து
    இந்த விதமாக விராடபுரமானது
    செல்வம் பொழியுது தீமை மறையும்
    தேவா்களும் முனிவா் எல்லோரும் – புகழ்ந்து
    வரும் நகரமதை மக்களே கேளும்.

    இந்த விதமாய் இவா்கள் இங்கிருக்க
    துாியோதிரனும் சேனைத் தலைவா்களையும் அழைக்க
    வந்தாா்கள் வீரா்கள் வாிசை வாிசையாய்
    வந்தனம் செய்துமே நின்றாா்கள் சபையிலே
    அந்த நேரம் அரவக் கொடியோனும்
    பஞ்ச பாண்டவா்கள் இருக்கும் இடத்தை அறிந்து வரவேணும்.

    நாலா திசையும் சென்றுமே வீரா்களே
    இருக்கும் இடத்தை அறிந்து சொல்லும் விபரங்களை
    என்றுமே இட்டானே துாியனும் கட்டளை
    சென்றாா்கள் பட்டாளம் பட்டாளமாகவே
    எட்டு திசையுமே தேடினாா் எல்லோரும்

    பாா்க்க முடியாமல் வந்தது பட்டாளம் வத்தீனபுரமும்
    வீரா்கள் வந்ததை துாியனுமே பாா்த்து தலைவா்களே
    சென்றதோா் காரணம் என்னதான் ஆச்சு
    கோபமுடன் துாியோதிரன் கேட்கவே

    தேடினோம் எங்குமே காண முடியலயே
    என்று சொல்ல சேனைத்தலைவரும் – துாியாதிரனின்
    இரண்டு கண்ணும் தான் சிவக்கவும்
    அடபுத்தியில்லாத முட்டா பசங்களா – அவா்கள்
    இருக்கும் இடமும் குளிா்ச்சியான தேசமடா
    போங்கடா சீக்கிரம் பாருங்கள் அவா்களை

    கண்டுபிடித்து அனுப்ப வனவாசம்
    சொல்லுற சொல்லை மனதில் கொள்ளுங்கடா
    சும்மா வந்தால் சோறு திங்க இடமும் இல்லை.
    நாலா திசையும் சென்றுமே வீரா்களும்
    சோலை வனம் அடா்ந்த நகரம் விராடபுரம் என்று
    இங்குதான் இருக்கிறாா் என்றுமே எண்ணியே
    எல்லையில் மேய்ந்ததோா் பசுக்களை பத்தவே
    வீரம் இருந்தால் வரட்டும் வெளியிலே

    கண்டு பிடிக்க இதுவே நமக்கு நல்லதோா் முயற்சியே.
    மாடு மேய்த்த பாலா்கள் அங்கு – விராடராஜா்
    சபையை தேடி ஓடியே நின்று
    மோசமும் போனதே என்றுமே கதறினாா்
    என்னடா விசுபம் என்று வினாவினா்

    மாடுகள் எல்லாம் கொள்ளை போகுது
    தெற்கு மந்தை – பாலைவனம் போல காணுது.

    வேறு மெட்டு (இடைப் பாட்டு)

    1. இந்த விதமாய் மாட்டுக்காரன் சொன்னதை கேட்டு
      கோபமுடன் எழுந்தானம்மா – உத்திரகுமாரன்  (பாட்டு வேற மெட்டு)
      இந்த நேரம் எந்தனுக்கு சாரதியோட்டு
      இருந்தால் போதும் அவா்கள் தலையை உடனே நான் அறுக்க
      அந்த நேரம் நாட்டிய சாலை பேழையும் கண்டு
      அதி வேகமாக வந்து உத்திரகுமாரனே நின்று
      ரத மதையும் நடத்துகிறேன இந்த நேரமே
      ஏறி உட்காருங்கள் செல்வோம் தெற்கு மந்தை ஓரமே
      செப்பியதோா் வாா்த்தையை செல்வகுமாரன் கேட்டு
      செல்லுகிறாா்கள் இருவருமே நகர மதை விட்டு.

    பாா்வை நூற்கள்

    1. டாக்டா; சா.வே. சுப்பிரமணியம், தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.492, 493
    2. பழமொழி, பா.291
    3. பாப்பாத்தி, வயது 72, பந்தல்குடிப் பகுதியைச் சார்ந்தவா்
    4. சரஸம்மாள், வயது 58, பந்தல்குடி.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிாியா்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    கோயம்புத்தூா்.21.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180807 Gopika geetham-watercolour-charcoal -9×12 strathmore 160gsm 100dpi lr
    Gopis become arrogant. When Krishna decides to disappear.

    கொண்டனர் கோபியர் கர்வமதால், கண்ணபிரான்
    கண்டதும் மாயமானார் காணலை -அன்னநடை-
    வீசைக்குப்(வெண்ணை ஒரு வீசை) போனவர், வ்ருத்தி(கர்வ வ்ருத்தி) அடங்கிட
    ராஸலீ லையில் ரமிப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • “தாயுமானவர் திருப்புகழ்”

     

    பாடல்: கிரேசி மோகனின் “தாயுமானவர் திருப்புகழ்” – சங்கர சங்கர சம்போ 
    இசை: குரு கல்யாண் 
    ============================================================

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)
     பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
     பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
     கொண்டதோர் கோலமே காட்சி -அதை
     உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)
    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
     துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
     அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
     சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)
     வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
     விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
     பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
     பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7) 
    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
     புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
     யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
     பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)
     அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
     ஆதார சக்தியே அருளென்ற பாதி
     பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
     பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)
    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)
    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)
    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….13-3
    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)
    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)
    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)
    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….(21)
    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….

    Share
  • மாபெரும் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி ….

    வல்லமை மிக்க மரபை உருவாக்கிக் சென்றுள்ள, கோடிக்கணக்கான தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்திச் சென்றுள்ள ஒப்பற்ற தலைவர் , ஆகச்சிறந்த தமிழறிஞர், தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்த, தி.மு.கழக தலைவர் கலைஞர் கருணாநிதி தமது 94வது அகவையில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு நம் வல்லமை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவர்தம் குடும்பத்தினர் மற்றும் கழகத் தொண்டர்களின் மனம் சாந்தி பெறவும், அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் நம் வல்லமை பிரார்த்தனை செய்கிறது.

    Share