Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180803 -Krishna leela-watercolour, charcoal- A4 lr 100dpi

    நாமதேயம்(யாகாதிகளுக்குப் பெயரிடும் வேத வாக்கியவகை) பாற்கடல், நாரணர் காலடியில்,
    சாமதான தெண்ட சரண்புக -காமதேனு:
    கண்ணனாய் ராமாய் குவலயம் வந்தவிஷ்ணு
    அண்ண(ல்)அந்த அவளுக்(கு)(காமதேனு) அரண்(காப்பு)….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 12

    -மேகலா இராமமூர்த்தி

    ஒருவரை வாழ்த்தும்போதும் சரி, ஏதேனும் நன்னிகழ்வுக்கு வரவேற்கும்போதும் சரி, ‘சுற்றமும் நட்பும் சூழ’ என்ற சொற்றொடரை நாம் பயன்படுத்துகின்றோம். சுற்றம் எத்துணை முக்கியமானதோ அதற்கிணையாக நட்பும் முக்கியமானது என்பதையே இது விளக்குகின்றது.

    களிப்பூட்டும் இன்பத்தை மிகுதியாக்குவதிலும், கருத்தழிக்கும் துயரத்தைக் குறைப்பதிலும் சுற்றத்தினும் நட்பின் பங்களிப்பே அதிகம் என்பது மாந்தர் பலரும் தம் வாழ்வில் கண்ட அனுபவ உண்மையாகும். ஆதலால், நண்பர்களைத் தேர்ந்தெடுக்குமுன் அவர்களின் ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து நட்புகொள்ளல் வேண்டும் என்கிறது நாலடியார்.

    எப்படிப்பட்டவரின் கேண்மை நன்று? எவருடையது தீது? என்பதற்கு நாலடி நவிலும் விளக்கத்தைக் காண்மின்!

    யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.
      (நாலடி – 213)

    யானையை ஒத்த இயல்புடையாரது நட்பை நீக்கி, நாயை ஒத்த இயல்புடையாரது கேண்மையைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டும்; ஏனெனில், யானை பலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையே குற்றங்கண்டு கொல்லும்; ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல் தன் உடம்பில் உருவி நிற்கும்போதினும் அவன்பால் கொண்ட அன்பால் வால்குழைத்து நிற்கும்.

    பிழை பாராட்டாத இயல்புகொண்ட பண்பாளரையே அறிந்து நட்புச் செய்தல் வேண்டும் என்பதே இதனால் பெறப்படும் கருத்து.

    நண்பருள் முதல் தரத்தினர், இரண்டாம் தரத்தினர், மூன்றாம் தரத்தினர் யாவர் என்று வகை பிரித்துக் காட்டுகின்றது மற்றொரு நாலடியார்ப் பாடல்.

    நட்பில் கடைத்தரமானவர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்; இடைத்தரமானவர் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனை உயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, மதிப்புமிகு பனை மரத்தின் இயல்புபோன்று நேயம் ஊன்றியபோது ஊன்றியதேயாம். அது மாறாது!

    கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கி னனையர் – தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
    தொன்மை யுடையார் தொடர்பு.
       (நாலடி – 216)

    தினமும் நீரூற்றிக் கவனித்தலால் பாக்குமரமும், இடையிடையே நீரூற்றிக் கவனித்தலால் தென்னை மரமும், முதலில் விதையிட்ட அளவோடு நீரூற்றாவிட்டாலுங்கூடப் பனைமரமும் வளர்ந்து பயன்தரும் இயல்புடையவையாதலால், அவ்வகையில் கவனித்தால் மட்டுமே நேயம் காட்டும் மக்கள் இயல்புக்கு அவை உவமைகள் ஆயின.

    ”நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன்” என்று நாயனார் சொன்னதை ஈண்டு எண்ணுக.

    நண்பரைப் பல்லாற்றானும் ஆய்ந்து தெளிதல் வேண்டும். அப்போதுதான் அந்த நட்பு நம்பிக்கைக்குரியதாயிருக்கும்; இல்லையேல் பின்னாளில் வெம்பி வருந்தவேண்டி வரும்.

    தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
    விளியா அருநோயின் நன்றால் – அளிய
    இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
    புகழ்லின் வைதலே நன்று.
       (நாலடி – 219)

    ”நம்பத் தகாதவரது நட்பினைக் காட்டிலும் அவரது பகை நலந்தருவதாகும்; தீராத கொடிய நோயோடு போராடி வாழ்வதினும் சாதல் நலம் பயப்பதாகும்; பிறரை நெஞ்சு புண்ணாகும்படி கடுஞ்சொற்களால் இகழ்தலினும் அவரைக் கொல்லுதல் நல்லது; ஒருவரிடம் இல்லாத குணங்களையெல்லாம் இருக்கின்றன என்று கூறிப் பொய்ப்புகழ்ச்சி செய்தலினும் அவரைப் பழித்துவிடுதலே நன்மையாம்” என்று வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளையெல்லாம் வரையறுத்துச் சொல்லிவிடுகின்றது நாலடி.

    ”புலவர்காள்! வலியும் வீரமுமில்லாதானை விறலில் வீமனே! வீரத்தில் விசயனே! என்று புகழ்ந்தாலும், கொடுக்கும் குணம் இல்லாதானைப் பாரியே என்று போலியாய்ப் புகழ்ந்தாலும் உமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை” என்று புலவர்களின் வெற்றுரையை வெறுத்துரைக்கும்  தம்பிரான் தோழரின் தேவார அடிகள் இத்தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகின்றன!

    மிடுக்கி லாதானை வீம னேவிறல்
    விசய னேவில்லுக் கிவனென்று
    கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
    கூறி னுங்கொடுப் பாரிலை…
    (தேவாரம் – ஏழாம் திருமுறை)

    சில நேரங்களில் நாம் மிகவும் ஆராய்ந்து நட்புக்கொண்ட நல்லோரிடத்தும் விரும்பத்தகாத குணக்கேடுகள் தோன்றக்கூடும்.  அத்தகு சங்கடமான வேளைகளில் நாம் செய்யவேண்டுவது என்ன?

    நல்லவர் என்று நாம் பலகால் ஆராய்ந்து மிகவும் நேசித்துக் கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர் நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப் பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கமாய் வைத்துக்கொள்ளல் வேண்டும்; ஏனென்றால், பயன்பாடுடைய நெல்மணிக்கு அதிலிருந்து நீக்குதற்குரிய உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு.

    ஆக, குறையற்ற மனிதர்கள்தாம் நண்பராய் வேண்டும் என்று நாம் குவலயத்தில் தேடினால் ஒருவரும் தேறமாட்டார்; இருப்பவர்களில் நற்குணம் மிக்குள்ளோரை, அவரிடம் உள்ள குறைபாடுகளோடு, ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை என்கிறது நாலடியார்.

    நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
    அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
    நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
    புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
        (நாலடி – 221)

    அதுமட்டுமன்று!  நம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள் செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியான ஒன்றே! நிறமான கோங்கமலரில் அழகிய வண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்த மலைநாட! ஒருவர் பொறுத்துப்போவதால் இருவரிடையே உள்ள நல்ல நட்பு நீடிக்கும் என்கிறது நாலடியார்.

    இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
    பொறுத்தல் தகுவதொன் றன்றோ – நிறக்கோங்கு
    உருவவண் டார்க்கு முயர்வரை நாட!
    ஒருவர் பொறையிருவர் நட்பு.
      (நாலடி – 223)

    ”விட்டுக்கொடுத்தார் கெட்டுப்போவதில்லை” என்று நம்மவர் நாட்டு வழக்கில் சொல்வதும் இதைத்தானே?

    இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
    துன்னாத் துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர்
    விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ
    கண்குத்திற் றென்றுதங் கை.
        (நாலடி – 226)

    ”அணுகுதற்கரிய சிறப்பினையுடைய, வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களையுடைய மலைநாடனே! தவறுதலாகத் தம் கண்ணைக் குத்திற்றென்று தமது கையை மக்கள் நீக்கி விடுவரோ? ஆகவே, அறியாமையால் தீமைகள் செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நல்ல நட்பினரை நெருங்காமற் கைவிட்டுவிடுதல் தகுந்ததாகுமா? ஆகாது!” என்று நமக்கு நல்லறிவு கொளுத்துகின்றது நாலடி.

    வாழ்வில் முடிவெடுக்க முடியாமல்  நாம்  தடுமாறும் தருணங்களில் நல்லறிஞர்களின் இதுபோன்ற நல்லுரைகள் நமக்குக் கைவிளக்கென வழிகாட்டுகின்றன எனில் மிகையில்லை.

     [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(279)

    அன்பினியவர்களே!

    அன்புநிறை வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் இங்கிலாந்திலிருந்து உங்களுடன் மனந்திறக்கிறேன். நேற்றிருந்தோர் இன்றில்லை, இன்றிருந்தோர் நாளையில்லை இதுதான் உலக யதார்த்தம். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்போக்கிலே தனது சக்கரத்தை உருட்டிக் கொண்டேயிருக்கிறது. சிரிப்போர் சிலர், அழுவோர் சிலர் சிரித்துக்கொண்டே அழுவோர் பலர். இப்படித்தான் வாழவேண்டும் என வாழத் தொடங்குவோர் எப்படியும் வாழ்ந்து முடிப்பதும் உண்டு. எப்படியும் வாழ்வோம் என்று வாழத் தொடங்குவோர் இப்படித்தான் என்று வாழ்ந்து முடிப்பதும் உண்டு.

    வகுத்த பாதை நினைத்த இடத்தில் கொண்டு சேர்ப்பது சிலருடைய வாழ்வில் தான் சாத்தியமாகிறது. இப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டே சமுதாய நிகழ்வுகளில் ஒரு கண்ணோட்டம் செலுத்த வேண்டியுள்ளது.

    சரி இனி இங்கிலாந்தில் நிகழ்ந்த சமீப நிகழ்வுகளில் சிறுதுளிகளை அலசுவோமா?

    அரசியல் அரங்கத்தில் பல காட்சிகள் நடந்தேறினாலும் முக்கியப் பங்கான ப்ரெக்ஸிட் எனும் காட்சி கொஞ்சம் தொய்வு கண்டிருக்கிறது. காரணம் தற்போது இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனது கோடைக்கால விடுமுறையை அமுல்படுத்தியுள்ளது. பிரதமர் கூட இச்சிக்கல்களில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெற இத்தாலியை விடுமுறைக்குத் தேர்ந்தெடுத்துச் சென்றுள்ளார். ஓ! அது கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடோ? பிரதமரைப் போட்டு துவைத்து எடுத்துவிட்ட சக பாராளுமன்ற அங்கத்துவர்கள் அவருடைய கட்சியினர் உட்பட பிரதமர் கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கொடுத்துள்ளார்கள் போலத் தென்படுகிறது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ப்ரெக்ஸிட்டுக்கான எதிர்பார்ப்புகளை கொஞ்சம் அனுசரணையோடு ஐரோப்பிய ஒன்றியம் நோக்குகிறது எனும் செய்தியோடு அவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் எனும் செய்தியும் வயிற்றில் புளியைக் கரைக்கத்தான் செய்கிறது. பொறுமை, பொறுமை, பொறுமை என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள்.

    அதைத்தவிர லேபர் கட்சியைப் பிடித்த சனிதோஷம் இன்னும் நீங்கிய பாடில்லாதது போலத் தோன்றுகிறது. யூத இன மக்களுக்கு எதிரான இனத்துவேஷக் கருத்துகளை கொண்டவர்கள் பலர் லேபர் கட்சியில் இருப்பதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு அனைத்து ஊடகங்கள் உட்பட பல முன்னணி யூத மதத் தலைவர்களால் சில மாதங்களாக லேபர் கட்சியை உலுக்கி வந்திருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். இக்குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் ஜெர்மி கோபனும் உட்படுத்தப்பட்டிருக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை நாம் எதிர்க்கிறோமேயொழிய எமது எதிர்ப்பு யூத மக்களுக்கு எதிரானதல்ல என்பது இக்கட்சியில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரின் வாதம். சரி, அப்படியாயின் உலகின் அனைத்துப் பொது ஸ்தாபனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட “யூத எதிர்ப்பு” எனும் அடைமொழிக்கான பொது வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்ள ஏன் லேபர் கட்சி தயங்குகிறது என்கிறார்கள் குற்றஞ்சாட்டுவோர். இதற்கிடையில் வந்ததடா மற்றுமோர் தலையிடி லேபர் கட்சிக்கு “பீட்டர் வில்ஸ்மன் (Peter Wilsman)“ எனும் பெயரில். எப்படி என்கிறீர்களா? பீட்டர் வில்ஸ்மன் லேபர் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவில் ஓர் அங்கத்தினர். அத்தோடு இவர் தலைவர் ஜெர்மி கோபனின் நெருங்கிய ஆதரவாளர். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் லேபர் கட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள  “யூதர் எதிர்ப்பு”  எனும் குற்றச்சாட்டு “ட்ரம்ப் (அமெரிக்க அதிபர்)அவர்களின் மீது வெறித்தனமான ஆதரவு கொண்ட விஷமிகளினால் சுமத்தப்படுக்கிறது என்று எகிறிக்குதித்த பேச்சு ஒலிப்பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளிவந்துவிட்டது. சும்மா விட்டு விடுவார்களா? நமது ஊடகங்கள், பின்னி எடுத்து விட்டார்கள் போங்கள் ! இதன் விளைவுகளை அடுத்தடுத்த வாரங்களில்தான் பார்க்க வேண்டும்.

    அதுதவிர சில வாரங்களாக இங்கிலாந்தை கொளுத்தும் வெயில் வாட்டி வதக்கிக் கொண்டிருந்தது. மேமாதம் இறுதிக்குப் பின்னால் கடந்த யூலை மாதம் 27ஆம் திகதி தான் இங்கிலாந்தின் தென்பகுதி (அடியேன் வசிக்கும் பகுதி) மழையையே கண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 1976ஆம் ஆண்டுக்குப் பின்னால் 33 டிகிரிகளை வெப்பம் அதிகநாட்களுக்குத் தாண்டியது இவ்வருடம்தான் என்கிறார்கள். 1976ஆம் ஆண்டு கோடை நான் லண்டன் வந்து சுமார் 18 மாதங்களின் பின்னால், அப்போதுதான் சமீபத்தில் நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்திருந்ததினால் அப்போது இருந்த வெப்பம் எனக்கு சும்மா “ஜூஜூபி “. ஆனால் இப்போதோ சுமார் 42 வருடங்களின் பின்னால் வாட்டி வதக்கி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  பச்சைப் பசேல் என்றிருந்த புல்வெளிகளெல்லாம் வைக்கோல்போலக் காட்சியளிக்கிறது. பின்புலங்களில் உலவுவது போல இங்கும் கால்நடைகள் உள்ளன என்றால் அவைகளுக்குத் திருவிழாதான் போங்கள்!

    இந்த ட்ரம்ப் அண்ணா இருக்கார் பாருங்கோ! அவருக்குச் சும்மா விளையாட்டுன்னா பாத்துக்கோங்களேன். விட்டேனா பார் அடித்து நொறுக்கி விடுவேன் என்று ட்வீட்டர் மூலம் வெருட்டி விட்டு பின்னர் சிரித்துக் கொண்டே சந்தித்து விட்டு வந்தார் தென்கொரிய அதிபரை. அமெரிக்க நாட்டு ஜனநாயகத்தின் அத்திவாரத்திலேயே கைவைத்து விட்டார் என்று அமெரிக்க அரச உளவு நிறுவனம் குற்றம் சாட்ட, சிரித்துக் கொண்டே சென்று கைகுலுக்கி விட்டு வந்தார் ரஸ்ய நாட்டு அதிபருடன். ஈரானா? காட்டுகிறேன் பார் அவர்களுக்கு நான் யாரென்று என்று கூறி முன்னணி மேற்குலநாடுகள் அனைத்தும் சேர்ந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறியது மட்டுமல்ல சில நாட்களின் முன்னால் ட்வீட்டர் வலைத்தளத்தின் மூலம் ஈரானுக்கு எச்சரிக்கை கூட விட்டிருந்தார் ட்ரம்ப் அண்ணா. அடிச்சார் பாருங்கோ ஒரு பல்டி ” எதுவித முன்நிபந்தனைகளுமின்றி ஈரான் நாட்டு அதிபருடன் பேசத்தயார்” என்று எதுவித முன்னறிவித்தலுமின்றி எதேச்சையாக ஓர் அறிவித்தலைச் செய்தார். புரியவில்லை ஒருவருக்கும். ஓ! ஒருவேளை இதைத்தான் “ராஜதந்திரம்” என்கிறார்களோ? என்ன செய்வது? சாணக்கியர் இருந்திருந்தால் கேட்டறிந்திருக்கலாம். எதையும் கேட்ட மாத்திரத்திலேயோ அன்றி பார்த்த மாத்திரத்திலேயோ அதைப்பற்றி முடிவு கட்டி விடக்கூடாது. ஒருவேளை அவரது இந்த யுக்திகள் தான் இன்றைய உலகிற்கு உகந்ததோ? காலம்தான் விடைபகர வேண்டும்.

    மீண்டும் மற்றுமோர் மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180802 -Krishnapremi-watercolour- A4 300dpi lr
    (Gita 7:14 “Only those who surrender to me, can free themselves from my Maya, which is divine.”)

    எங்கிருந்தோ வந்தென்னை ஏக்கத்திற்க்(கு) உள்ளாக்கி
    அங்கிங் கெனாதே அலைக்கழித்து -தொங்கிடும்
    மந்தியே, நெஞ்சே, மனமே உனக்கேனோ
    புந்தியே(புத்தியே) இல்லாமல் போச்சு….கிரேசி மோகன்….!

    நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
    அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
    போட்டாலும் வைகுண்டம் போனாலும் புத்திக்கு
    மாட்டாது மாயா மனம்….!

    Share
  • நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி!

    பவள சங்கரி

     
    இதுவரை இலஞ்சம் வாங்கினால் மட்டும் தண்டனை என்று இருந்தது, இனி இலஞ்சம் கொடுப்பவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று பாராளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    அதெல்லாம் சரிதான் … இதே சட்டம் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு இலஞ்சமாகக் கொடுப்பதற்கும் பொருந்துமா? அப்படியென்றால் அந்தப் பணம், பரிசுப் பொருள் என எந்த வகையில் பெற்றாலும் அந்த வாக்காளர்களும் தண்டனைக்குரியவர்கள்தானே?
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180801 -Vanvihari (on a yaLi) -watercolour -A4- lr 100dpi

    யாளிமேல் உட்கார்ந்து, காளியின் சோதரர்(சகோதரர்),
    காளிய நர்த்தனர் கட்டளை -போயொளி
    தூண்மறைவில் பிற்பாடு நான்வருவேன் சிங்கமாய்
    தான்மறைய பிராக்டீஸ்நெட்(NET-PRACTICE) தூண்….கிரேசி மோகன்….!

    Share
  • அவுஸ்திரேலியாவில் தமிழரது வாழ்க்கை முறை

    ம. ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
    முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்
    M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS

    அவுஸ்திரேலியா பல்லின கலாசாரம் கொண்ட நாடாக விளங்குகிறது .இங்கு வந்த தமிழர்கள் தமக்குரிய வாழ்க்கை முறையினத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களும் வாழ்கிறார்கள்.இவர்களுக்குள் பெரும்பாலும் மொழியும், சமயமும், பாலமாக இருப்பதனையே முக்கியமான தொடர்பென்று கருதலாம்.

    இலங்கையில் இருந்து வந்த தமிழர்களிலே பல பிரிவுகளும் காணப்படுகிறது.ஆதாவது உயர் கல்வித்தகைமைகளுடன் ஆரம்பத்தில் வந்தவர்கள், பின்பு இங்கு வந்து படித்து தகைமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், பின்னர் நாட்டின் பிரச்சினைகள் காரணமாக இடம் பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வந்து சேர்ந்தவர்கள், மற்றும் முகவர்கள் ஊடாக எப்படியோ இந்த நாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்கள்.

    ஆனால் இந்தியத் தமிழர்கள் மத்தியிலோ சிங்கப்பூர் மலேசியத் தமிழர்கள் மத்தியிலோ இந்த நிலையினைக் காணமுடியாது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் படிப்பதற்கும், கல்வித் தகைமைகளுடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுமே வந்திருப்பபதைக் காணமுடிகிறது.

    சங்கங்கங்கள் வைப்பது, கோவில்கள் கட்டுவது, அரசியல் செய்வது என்று பார்த்தால் அது பெரும்பாலுமே இலங்கைத் தமிழர்களாகவே காணப்படுவர்.இலங்கைத் தமிழர்கள் பலர் இந்த நட்டில் குடியுரிமை பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பல இழப்புகளின் மத்தியில் வந்ததாலும் உறவினர்கள் பலர் பல்வேறு நாடுகளில் குடிபுகுந்து விட்டதாலும் இலங்கைக்குப் போவது பல தமிழர்களுக்கு அவசியமானதாகப்படவே இல்லை. ஆனால் இந்தியத் தமிழர்கள் நிலை அப்படி அல்ல. அவர்களில் பலர் வசிப்பிட உரிமையுடன் இருக்கவே விரும்பி இந்த நாட்டின் குடியுரிமையில் ஆசையில்லாத வர்களாகவே விளங்குகிறார்கள்.

    இலங்கைத் தமிழர்களில் முன்னர் வந்தவர்வர்கள் தாங்கள் வெள்ளைக்காரர் என்ற பாவனையில் முற்றும் முழுதாகவே ஆங்கிலக் கலாசாரத்தினையே தமது வாழ்வாக்கிக் கொண்டு வாழ்கின்றவர்களாகவே இன்றுவரை விளங்குகின்றார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு பெரும்பாலும் வெள்ளைக்காரரின் தொடர்பினையே விரும்பியவர்களாய் அவர்களின் பக்கமே தம்மைப் பார்க்கும்படி ஆக்கிக்கொண்டு வாழுகின்றார்கள்.

    இன்னுமொரு சாரார் இங்கு வந்து உயர்கல்வியைக் கற்று அதனால் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.வைத்தியர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் எனலாம்.

    அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் கூடுதலாக வாழும் மாநில மாக விளங்குவது நியூசவுத் வேல்ஸ் ஆகும்.அதுவும் தலைநகரான சிட்னியில் நிறையத் தமிழர்கள் வாழுகிறார்கள். வசதியுடனும் ஒரளவு அடிப்படையான வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.அதற்கு அடுத்ததாக விக்ரோறிய மாநிலமான மெல்பேணை எடுத்துக் கொள்ளலாம்.சிட்னிக்கு அடுத்து தமிழர்கள் கூடுதலாக மெல்பேணில்த்தான் வாழுகிறார்கள்.

    ஆண்களும் பெண்களும் வேலைசெய்யுமொரு நிலை இங்கு அவசியமாகிறது. பிள்ளைகள் இருந்துவிட்டால் படிப்புக்கு அதிக பணமும் , வீட்டுவாடகைக்கு அதிக பணமும் தேவைப்படுவதால் உழைக்க வேண்டிய கட்டாயம் இங்கிருக்கிறது.இதனால் இரவும் பகலும் எந்த வேலை ஆனாலும் குடும்பமே உழைக்க வேண்டிய ஒரு கட்டாயம் இங்கு அவசியம் ஆகிவிட்டது.

    தொடர்ந்து வேலைசெய்வதனால் மன ஆறுதலுக்கு ஏதாவது கொண்டாட்டங்களும் அவசியம் தேவைப்படுகிறது. அவற்றை சனி ஞாயிறு தினங்களிலேயே அனேகம் பேர் வைக்கின்றார்கள். பிள்ளைக்ளுக்குப் பாடசாலை விடுமுறை யானதாலும் தங்களுக்கு ஓய்வு கிடைப்பதாலும் இந்த நாட்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

    இங்குவாழும் இலங்கைத் தமிழர்களிடையே அவர்கள் வாழ்ந்த மண்ணின் நினைவுகள் இன்னும் போகவில்லை.அதே வேளை அந்த மண்ணுக்கே உரித்தான போட்டி மனப்பாங்குகளும், பொறாமைக் குணங்களும், குறைகள் சொல்லுவதும், ஒருவரை ஒருவர் தூற்றித்திரியும், மனப்பாங்குகளும் கூட மாறவில்லை என்றே சொல்லக் கூடியதாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலுக்குள் மற்றைய இடத்துத் தமிழர்கள் சேர்ந்துவிடுவதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதே.தாங்கள் வாழ்ந்த மண்ணில் எப்படியான வகுப்புப் பிரிவுகள் காணப்பட்டதோ அவைகள் இங்கு வந்த பின்னரும் மாறுவது என்பது மிகவும் சிரமான தாகவே இருக்கிறது. கூட்டங்களில் என்னதான் சமத்துவம் பற்றி வீராவேசமாகப் பேசினாலும் திருமணம் என்று வரும்பொழுது பேச்சுகள் யாவுமே வெறும் பேச்சுகள் ஆகவே போயிருக்கும். என்னதான் படித்து உயர் பதவியில் இருந்தாலும் இலங்கையின் பார்ம்பரியப் பழக்க வழக்கங்கள் பதுங்கிய படியேதான் இருப்பதை இங்கு காணமுடிகிறது.

    வெள்ளைக்கார நாட்டுக்கு வந்துவிட்ட படியால் வெள்ளைக் காரர்களாகவே இருக்கப் போகிறோம் என்று எண்ணி அதற்கு ஏற்ப தங்கள் குடும்பத்தையே மாற்றுகின்ற தமிழர்கள் ஒருபுறம். தங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் தங்கள் நட்டுக்கா போகப் போகிறார்கள் ? இந்த நாடுதானே அவர்களுக்குச் சொந்தம் என்று பிள்ளைகளை முழுக்க முழுக்க ஆங்கில மயமாக்கும் பெற்றோர்கள் ஒருபுறம். யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன வேலையாவது செய்து நல்ல வீடு, நல்ல கார், நல்ல வசதியான வாழ்க்கையினை வாழ்ந்துவிட வேண்டும் என்று எண்ணுகின்ற வர்கள் ஒருபுறம். இவர்களுக்கு மத்தியில் பண்பாடு, கலாசாரம், மொழி, சமயம், சமூகம், தனது சொந்த நாட்டின் துன்பம் பற்றிய நினைப்பு, அதற்காக எப்படி நிவாரணங்களைப் பெற்று வழங்கலாம், என்று அதற்காகவே பல செயற்பாடுகளை அல்லும் பகலும் செய்து கொண்டிருக்கும் மனோ பாவம் மிக்க குடும்பங்கள் ஒரு புறம் என்று இங்குள்ள தமிழர்கள் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது.

    இவற்றைப்பற்றி எல்லாம் இங்குள்ள பிள்ளைகளுக்கு எதுவுமே விளங்குவதே இல்லை.ஏனென்றால் அவர்கள் அனைவருமே ஆங்கிலச் சூழலில் ஆங்கிலப் பிள்ளைகளுடன் ஆங்கில மொழியிலேயே படிக்கிறார்கள்.வயது வந்தவர்கள் தங்களுக்குள் முரண்பட்டு பிரிவுண்டு பிளவுடன் நடப்பதை அவர்கள் அறியும் நிலையில் இல்லை. அவர்களின் எண்ணங்கள் யாவுமே இந்த அன்னிய கலாசரத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.

    வருங்கால தமிழ்ப்பிள்ளைகள் தமிழ்வழி கலாசாரம் பண்பாடுகளுடன் வருவார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருகிறது எனலாம்.இதனால் இங்குள்ள பெரியவர்கள்தான் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றி உணர்த்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன. ஆனால் தங்களின் சுயத்தை இழந்து விடாமல் கிடைத்த இந்த அருமையான நாட்டையும் அதன் வாய்ப்புகளையும் உரியமுறையில் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து வாழ இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒருமித்து நினைக்கும் நாள் மிகவும் உன்னதமான உயர்வுடைய நாளாக இருக்கும்.

    Attachments area

    Share
  • கவனம் பெறாத அகராதி

    -முனைவர் இரா.வெங்கடேசன்

    எந்த மொழிகளிலும் அகராதிகளின் பணி முக்கியமானதாகும். சமூகத்தையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்வதற்கும் நுட்பமான மையங்களைக் கணிப்பதற்கும் அகராதிகள் தேவைப்படுகின்றன. அகராதிகள் மொழியின் வளத்தைச் சொல்லும் கருவியாக உள்ளன. அகராதிகள் இல்லையென்றால் மொழியின் வளர்ச்சியை கவனத்திற் கொள்ளமுடியாது. தமிழ்மொழியின் செழுமையை எடுத்துரைப்பதற்குத் தமிழில் தோன்றிய அகராதிகள் முக்கியக் காரணிகளாக உள்ளன. தமிழில் தொல்காப்பியத்தில் சுட்டிக்காட்டப்பட்ட அகராதிக்கான முன்னெடுப்புகள் இன்று பரந்து விரிந்து வளர்ந்துள்ளன. தமிழில் ஏராளனமான அகராதிகள் இருப்பதைப் பெருமையாகக் கொண்டாலும் சில அகராதிகள் கவனம் பெறாமல் போனது துரதிர்ஷ்டமானதாகும். 1911ஆம் ஆண்டு ஏ.சி.கிலேற்றன் ஐயர் அவர்கள் உருவாக்கிய வேத அகராதி பைபிளுக்கென உருவாக்கப்பட்ட அகராதியாகும். பைபிளில் இடம்பெற்றுள்ள சொற்களையும் சொற்களுக்கான பொருளையும் விளக்கியுரைக்கும் இவ்வகராதி குறிப்பிட்ட காலம்வரை மிக முக்கியமான அகராதியாகவே இருந்துள்ளது. காலம் செல்லச்செல்ல இவ்வகராதி கவனம் பெறாமல் போனது எதனால் என்ற காரணம் தெரியாமல் உள்ளது. இவ்வகராதி குறித்த பதிவுகளைப் பற்றிச் சொல்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    ஏ.சி.கிலேற்றன் ஐயர் அவர்களால் உருவாக்கப்பட்ட வேத அகராதியின் (A TAMIL BIBLE DICTIONARY) தேவை ஏற்பட்ட சூழலைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

    கிறிஸ்தவ போதனையின் ஆதார நூலாக இருக்கக்கூடியது ‘வேதம்’ அல்லது ‘வேதாகமம்’ (BIBLE) ஆகும். இந்தப் பைபிள் தமிழில் வந்த வரலாறு முக்கியமானதாகும். கி.பி. முதற் சில நூற்றாண்டுகளில் ரோம தேசத்தில் பலர் கிரேக்க மொழியைப் பேசியதால் அவர்களுக்காகப் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. இதன்பின்னர் சீரியாக், கொப்திக், கோதிக், ஆர்மீனியன் மொழிகளில்1 மொழிபெயர்க்கப்பட்டது.

    இதே காலக்கட்டத்தில் கிரேக்கத்தில் ரோமரின் சொந்த மொழியான இலத்தீனில் மொழியாக்கம் பெற்றது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பைபிள் திருப்புதலை ஜெரோம் என்பவர் செய்தார். பி.பி.386இல் புதிய ஏற்பாடு முழுவதையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். கி.பி. 404இல் ஜெரோம் வேதம் முழுவதையும் மொழிபெயர்த்து முடித்தார். இலத்தீனில் அமைந்த இம்மொழிபெயர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதனால் இதற்கு ‘வல்கத்தா’ (vulgage) பொது ஜனத்துக்குரிய எனப் பொருள் கொள்ளக்கூடியதாக இந்நூலை ஏற்றுக்கொண்டனர். இந்நூலை மூலப்பிரதியாகவே கொண்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலைத் தவிர வேறு நூல்களைப் பயன்படுத்த தடைகள் விதிக்கப்பட்டன.2 இலத்தீன் மொழியில் இருந்த வல்கத்தா தவிர வேறு மொழிகளில் மொழிபெயர்க்கத் தடையிருந்தது. புரோட்டஸ்தாந்து சபையின் முயற்சியால் 1521வரை மார்ட்டின் லுத்தர் இரகசிய காவலில் இருந்தபொழுது ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். இவரின் முயற்சியில் ஜெர்மனியில் புரோட்டஸ்தாந்து மதம் வேரூன்றியது. இதன்பின்னர் இங்கிலாந்தில் 1525இல் தின்டேல் (Tyndale) 1538இல் கவர்டேல் (Coverdale) மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. இருவருடைய பெயர்ப்பையும் அடிப்படையாகக் கொண்ட அத்தியட்சர்மாருடைய மதம் (Bishops Bilble) என்னும் பெயருடன் 1538இல் வெளிவந்தது. இதே காலகட்டத்தில் ரோமன் சபையினர் ஆங்கிலமொழியில் 1582இல் பிரெஞ்சு தேசத்தில் ரேமஸ் நகரில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். இந்நூல் 1857இல் புதுச்சேரியில் தமிழில் பிரசுரமானது. மற்றொரு மொழிபெயர்ப்பு 1890இல் திருச்சியில் வெளிவந்தது.

    1611இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸ் கட்டளைப்படி மொழிபெயர்க்கப்பட்ட அதிகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு (Authorized version) முக்கியமானதாகும். இந்நூல் ஜேம்ஸ் அரசனின் திருப்புதல் என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் செல்வாக்கு மிகுந்த நாடுகளில் இந்நூலே முதன்மை பெற்றிருந்தது.

    இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழில்தான் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு இலங்கையில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இலங்கையில் அச்சகம் இல்லாததாதல் பல்தேயுஸ் மொழிபெயர்த்த மத்தேயு சுவிசேஷம் அச்சில் வரவில்லை. பலரால் திருத்தம்பெற்று 1741இல் கொழும்பில் வெளிவந்தது. இலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் சீகன்பால்கு அப்பணியைச் செய்யத்தொடங்கினார். புதிய ஏற்பாட்டில் 1714இல் முதல் பாகமும் 1715இல் இரண்டாம் பாகமும் வெளியிட்டார். பழைய ஏற்பாட்டை முடிக்கவில்லை. பின் அதனை பெஞ்சமின் பி.சூல்ட்ஸ் மொழிபெயர்த்து 1778இல் வெளியிட்டார். இவரே சீகன்பால்கு செய்த புதிய ஏற்பாட்டைத் திருத்தி 1776இலும் பழைய ஏற்பாட்டைத் திருத்தி 1777இலும் வெளியிட்டார்.

    இவர்களுக்குப் பின் டாக்டர் ஜான் 1809இலும் கல்கத்தா பைபிள் கழகம் 1811 இல் புதிய ஏற்பாட்டினையும் இரேனியஸ் ஐயர் எச். பவர், பெர்சீவல், ஹன்டின், ஹென்றி பவர், லார்சன் C.H.மோனஹன் போன்றோர் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்த பலரும் தமிழ் மற்றும் இருமொழி, மும்மொழி அகராதிகளை உருவாக்கியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    தமிழில் புதிய ஏற்பாட்டின் முதல் மொழிபெயர்ப்பு 1714இலும் கடைசி மொழிபெயர்ப்பு 1943இல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைவிட தமிழிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் வந்த கிறிஸ்தவ மதத்தின் மூலநூலாக விளங்கக்கூடிய பைபிளைத் தமிழில் அதிகமான அளவில் மொழிபெயர்க்க வேண்டிய தேவை என்னவென்றால் தமிழில் மொழிபெயர்க்கும்போது பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. பைபிளை மொழிபெயர்க்கும்போது கட்டுப்பாடுகள்3 விதிக்கப்பட்டன.

    பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தபொழுது கிரேக்கம், இலத்தினில் உள்ளவாறு அணுக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கைக்கொண்டு மொழிபெயர்த்தனர். தமிழில் மொழிபெயர்க்கும்போது மூன்று விசயங்களைக் கவனத்தில் கொண்டுள்ளனர். 1. சொல்லும் முறையில் அழகு, 2. இலக்கிண விதிகள், 3. தெளிவு. மற்றொன்று பைபிளை மொழிபெயர்ப்பவர்களுக்கு இரண்டு மொழிகளில் தெளிவு இருத்தல் வேண்டும். பைபிளை முழுமையாக அறிந்தவராக மூலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் தமிழிலும் உரிய தெளிவைப் பெற்றவர்கள்தாம் பைபிளைத் தமிழில் மெழிபெயர்த்துள்ளனர். ஆனால் தமிழில் மொழிபெயர்க்கும்போது பல்வேறு சிக்கல்களை மொழிபெயர்ப்பாளர்கள் பெற்றுள்ளனர்.

    “கிரேக்கம், இலத்தின், ஆங்கிலம் போன்ற மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட பின்னரே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் மொழிபெயர்ப்பதற்குப் பல மொழிகளில் இருக்கக்கூடிய பைபிள் பெயர்ப்புகள் ஒன்றாக உள்ளனவா அல்லது வேறுபட்டிருக்கின்றன என்பதனைக் கண்டறிந்து மொழிபெயர்க்க வேண்டிய தேவை இருந்தது. சில பிரதிகளில் ‘கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்றும் சிலவற்றில் ‘காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்றும் ஸ்திரீயின் சரித்திரத்தில் ‘நாங்கள் தொடவில்லை’ என்று எல்லாரும் சொல்லவே’ என்னும் வார்த்தைகள் சில பிரதிகளில் இல்லை. ‘சில பிரதிகளில் ஆசாரியரும் சேனைத்தலைவர்களும் வந்தார்கள் என்றும், சிலவற்றில் பிரதான ஆசாரியர் என்று மட்டுமே இருக்கின்றது’” 4 (சபாபதி குலேந்திரன் 1967:23)

    இப்படியான வித்தியாசங்கள் தமிழுக்கு முன்னரே பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்களில் காணப்படுகின்றன. எது ஆதியில் எழுதப்பட்டதென கவனமாகவும் நுட்பமாகவும் ஆராய்வது அவசியம். மற்றொன்று தமிழில் பேச்சுமொழி, எழுத்து மொழி என்ற வேறுபாடு உண்டு. சீகன்பால்கு மக்களின் பேச்சு வழக்கையும் இலக்கிய வழக்கையும் கலந்து பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார். சீகன்பால்கு மக்களின் பேச்சுவழக்கை அதிகமாகக் கையாண்டார். அதனை வீரமாமுனிவர் கேலியும் கிண்டலும் செய்தார்.5 சீகன்பால்குவிற்கு பின்னால் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் கூடுதலாக கவனம் செலுத்தி மொழிபெயர்த்தனர்.

    தமிழில் பைபிளை மொழிபெயர்த்தபின் அதனை மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. சமயம், வழிபாடு, மொழி, பண்பாடு, அரசியல், உணவு, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் அன்னியமாகிநின்ற தமிழர்களிடம் பைபிளை ஏற்றுக்கொள்ள வைப்பது சவாலாக இருந்தது. தமிழகத்தில் தொடக்ககாலத்தில் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். அதற்கான காரணத்தைச் சீகன்பால்கு,

    “ஐரோப்பியர் வாரந்தோறும் அவர்களது சீயோன் என்னும் திருச்சபையில் டேனிசு (Danish) மொழியிலும் செர்மன் மொழியிலும் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்றார்கள். ஆனால் அத்திருச்சபையிலிருந்து வெளியே வந்தவுடனே மது அருந்தினார்கள். பெருந்தீனிக்காரர்களாய் இருந்தார்கள். விபசாரமும் விவாகரத்தும் செய்தார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடனமாடினார்கள்; அவர்கள் சூதாடினார்கள்; பிறரை சபித்தார்கள்; சத்தியம் பண்ணினார்கள்; இறைவனை தினந்தோறும் நினைப்பதற்கு அடையாளமாக அவர்கள் எந்தவிதமான வெளிப்படையான காரியங்களையும் செய்யவில்லை. அவர்கள் இறைவனைப் பற்றிய அறிவில்லாத புத்தியீனராய் வாழ்ந்தார்கள்; தமிழரைக் கருப்பு நாய்கள் என்று திட்டினார்கள். இந்த தீச்செயல்களை அவர்கள் தங்களுடைய ஆலய வழிபாட்டிற்குப் பின் செய்ததால் அவர்களுடைய ஆயர்கள் இந்த இழிவான காரியங்களைச் செய்யத் தூண்டினார்கள் என்று பல தமிழ் மக்கள் நினைத்தார்கள். இந்த ஐரோப்பியரே வீடுபேறு அடைவார்கள் என்று கிறித்தவர்கள் நம்பினால், நன்னடத்தையுள்ள தமிழர் நிச்சயமாக ஈடேற்றம் பெறுவது உறுதியான காரியம் என்று தமிழ் மக்கள் எண்ணினார்கள். மேலும் இப்படிப்பட்ட இழிவான ஐரோப்பியருடன் மோட்சத்தில் இருப்பதைவிட தங்கள் சொந்த முன்னோர்களுடனும் வீட்டாருடனும், இனத்தாருடனும் நரகத்தில் இருப்பது சிறப்பென்று தமிழர்கள் நினைத்தார்கள்.” 6 (பெ.டேனியல் ஜெயராஜ் 2017:82)

    என்று கூறியுள்ளார். தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய புரிதலைச் சீகன்பால்கு கொண்டிருந்ததால்தான் 1714இல் மக்கள் பேசிய பேச்சு மொழியை அடிப்படையாக வைத்து பைபிளை மொழிபெயர்க்கின்றார்.

    1708ஆம் ஆண்டு சனவரியில் சீகன்பால்கு தமிழர்களிடம் கிறிஸ்தவ மதத்தின் சிறப்பினை விளக்க முயல்கிறார். அப்போது தமிழர்கள் மறுமொழி கூறிய விதம் மிகுந்த வேதனையைக் கொடுத்தது.7 சீகன்பால்குவிற்கு தமிழர் பலர் கடிதங்கள் வாயிலாக கிறித்துவ மதத்தைப் பற்றியும் ஐரோப்பியர்கள் குறித்தும் எழுதினர்.

    சீகன்பால்கான “நீங்கள் எங்கள் சாதியைச் சேர்ந்தவராய் இல்லாமலிருப்பது வருத்தமான காரியம். நீங்கள் எங்கள் சாதிக்காரராய் இருந்தீர்களானால் எங்கள் நாட்டு மன்னர்களும் பெரியோர்களும் உங்களை மதித்திருப்பார்கள். கணக்கற்ற சீடர்கள் உங்களைப் பின்பற்றியிருப்பார்கள். ஆனால் நீங்கள் ஐரோப்பிய சாதியைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வெறுக்கப்பட்டிருக்கும் கிறித்தவத்தை எங்களுக்கு அறிமுகம் செய்வதையே உங்களுடைய மேலான நோக்கமாகக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் எங்கள் மத்தியில் வாழும் (ஐரோப்பியர்) கிறித்தவர்கள் நன்மைகளைச் செய்யாமல் அதிகமான தீமையையே செய்கின்றனர். எனவே நீங்கள் கூறும் ஞானமும், புத்தியும் எங்கள் நாட்டிற்குப் பயன்படாது.” (Hallt Reports. 1716, 1897) என்று கூறியுள்ளனர். மேலும் ஐரோப்பியர்கள் நீதியையும் கற்பையும் அறச்செய்கையையும் அறியாதவர்கள். அவர்கள் உதவிகள் செய்யமாட்டார்கள். உடலைத் தூய்மையாக வைக்காதவர்கள். கோபம், தன்னலம், ஆணவம், உலோபித்தனம், காமம், பகை, பெருந்தீனி, சோம்பல் போன்ற தீய செயல்களின் மொத்த உருவமாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

    சீகன்பால்குவிற்குப் பிறகு தமிழகம் வந்த ஐரோப்பியப் பாதிரிமார்களைத் தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலைதான் இருந்தது. இதே காலகட்டத்தில்தான் (1711) பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அதனை முழுமையாக மக்கள் வாசிப்பதற்கான நூலாக மாற்ற வேண்டிய தேவை இருந்தது. சரியாக 200 ஆண்டுகள் கழித்து பைபிளுக்கென்று தனியாக வேத அகராதியை (A TAMIL BIBLE DICTIONARY) ஏ.சி.கிலேற்றன் ஐயர் உருவாக்கியுள்ளார்.

    பைபிளைப் புரிந்துகொள்வதற்கான ஆதார நூலாக வேத அகராதியைக் கொள்ளலாம். 1911ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வகராதி உருவாக்கத்திற்கு A.பெல்பெர்க், H.E. பிலிப்ஸ், ட்ரைகார்ட், H.சொமேரஸ் போன்ற வேதசாஸ்திரிகளின் உதவியோடு ஏ.சி.கிலேற்றன் ஐயர் உருவாக்கியுள்ளார். இவ்வேத அகராதியை உருவாக்குவதற்கு இதற்கு முன்னால் இருந்த வேத அகராதி (H.பவர்), வேத வியாக்கியானங்கள் முதலிய நூல்களை ஆதாரமாகக் கொண்டுள்ளனர். இந்த நூலின் முன்னுரையில் வேத அகராதியை உருவாக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிடும்போது,

    “தமிழில் முழு வேதாகம சொல்லகராதி இல்லாததினால் கதைப் போலும் உதவுமாறு அநேக பதங்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த வேத அகராதியை வாசிப்போர் இதில் சொல்லியிருக்கும் ஒவ்வொரு நிபந்தத்தின் பொருளை முழுதும் அறிய வேண்டும் என்று விரும்பினால் அந்தந்த நிபந்தத்தில் குறித்த வாக்கியங்களை எல்லாம் வேதத்தில் பார்ப்பது அவசியம். பல பதங்களைப் பற்றிய விசேஷம் அவ்வளவு இல்லாமையால் அவைகளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அடங்கியிருக்கும் ஒரே வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது.” (ஏ.சி. கிலேற்றன், 1911:v)

    என்று குறிப்பிடுகின்றார். 1911இல் இந்த அகராதி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அகராதி உருவாவதற்கு முன்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் அனைத்திற்கும் ஒரே அகராதியாக இதனை உருவாக்கியுள்ளார். அதாவது தமிழ் பைபிளில் ஒரே ஆளின் பெயர் இடத்தின் பெயர் வெவ்வேறு வசனங்களில் வித்தியாசமான முறையில் எழுதியுள்ளனர். அதனையெல்லாம் இவ்வகராதியில் கிலேற்றன் ஐயர் முறைப்படுத்துகிறார். அதாவது யெகு – ஏழு, எத்சேர்-ஏசெர், ஏசேர், ஏத்சேர், -எசேர், ஏனாக்கீம்-ஆனாக்கீம்-வாசியா-உசியா என முறையாக மாற்றுகிறார். நிபந்தங்களில் எழுதியிருக்கும் பெரிய எண்கள் அதிகாரங்களையும் அவ்வெண்களுக்கு முன் மேலிருக்கும் சிறு எண்கள் வசனங்களையும் காட்டுகின்றன. (ப.5)

    இன்றைக்கு அகராதி உருவாக்கப்பணிகள் தலைச்சொல்பகுதி, அகராதிச்சொல், கட்டிலா வடிவங்கள், கட்டுடை வடிவங்கள், திரிபுகள், ஆக்கச்சொல், தலைச்சொல் இணைப்பு, எழுத்துப்பெயர்ப்பு, இலக்கணக்குறிப்பு, துணைப்பதிவு, ஒப்புருச்சொல் பதிவு, தொடர்பதிவு, பொருள்விளக்கப்பதிவு, பொருள் விளக்கம், இணைச்சொல், மொழிபெயர்ப்பு, இணைச்சொல், எடுத்துக்காட்டு, குறிப்பான்கள், கலைக்களஞ்சிய விளக்கக் குறிப்புகள், குறுக்கு நோக்கீடு, எதிர்மறை, நிறுத்தக்குறிகள், விளக்கப் படங்கள், சொல்மூலம் போன்ற பல்வேறு கோணங்கள் கவனம் பெறுகின்றன. 1911ஆம் ஆண்டு வெளிவந்துள்ள வேத அகராதி மேற்சொன்ன பலவற்றைப் பயன்படுத்தியுள்ளது கவனத்திற்குரியதாகும்.

    தலைச்சொல் இணைப்பு

    அகராதிகளில் ஒருசொல் மட்டுமே தலைச்சொல்லாகத் தரப்பட்டு அதற்குப் பொருள் விளக்கம் தரப்படும். எனினும் அகராதிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் அல்லது இணைப்புச்சொற்கள மூலம் தலைச்சொற்களாகத் தரப்படுவதுண்டு. இதனை தலைச்சொல் இணைப்பு என்பர். இதனை இவ்வகராதியில் பல இடங்களில் காணமுடிகிறது.

    அசபியா
    அஙபியா
    அஷபியா
    அஷாபியா (Hashabiah) (p.6)
    அசரியேல்
    அசரெயேல் (Azared) (ப.7)

    தலைச்சொல் தருவதன் மூலம் பக்க எண்ணிக்கை, பன்மொழிக்கான மாற்று வடிவங்கள் தவிர்க்கப்படுகின்றன. 

    எழுத்துப்பெயர்ப்பு

    ஒருமொழிச் சொல்லைப் பிறமொழி எழுத்துக்களில் எழுதுவது எழுத்துப் பெயர்ப்பாகும். பிற மொழியினரின் பயன்பாட்டிற்காக இது செய்யப்படுகிறது. மேலும் ஒப்புருச் சொற்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுகிறது. இதனை வேத அகராதியில் காணமுடிகிறது.

    அகசாய் (Ahazai)
    அகசியா (Ahaziah) (p.1) 

    பொருள் விளக்கப் பகுதி

    தலைச்சொல்லிற்குரிய பொருளையும் அதனோடு தொடர்புடைய செய்திகளையும் விளக்கங்களையும் கொண்டிருப்பது பொருள்விளக்கப் பகுதியாகும். தலைச்சொல்லின் பொருளை எளிமையாகவும் விளக்கமாகவும் தருவது ஓர் அகராதித் தொகுப்பாளரின் கடமையாகும். பொருள் உத்திகள் மொழித்தொடர்புடைய உத்திகள் (Linguistic techniques) என்றும் மொழித் தொடர்பிலா உத்திகள் (Extr Linguistic techniques) என்றும் இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மொழியின் உட்கூறுகளைச் சார்ந்து அவற்றின் உதவியால் தரப்பெறும் பொருள் விளக்கம் முதல்வகை விளக்கமாகும். குறியீடுகள், நிறுத்தக்குறிகள், படங்கள், படப்பகிர்வு, பத்தி அமைப்பு போன்றன இரண்டாம் வகையினைச் சார்ந்த விளக்கமாகும். (சரளா ரங்கநாதன், 2009:32). பொருள் விளக்கத்தில் அடங்கும் பொருள் வரையறை, இணைச்சொல், எடுத்துக்காட்டு, குறிப்பான்கள், விளக்கக் குறிப்புகள், குறுக்கு நோக்கீடு, நிறுத்தக்குறிகள், விளக்கப்படங்கள் போன்றவற்றை இவ்வேத அகராதி தந்துள்ளது. இவ்வகராதி பல சிறப்புகளைப் பெற்று அமைந்துள்ளது.

    அண்ணகன் – Enunch என்ற சொல்லுக்கு விளக்கம் தரும்போது ஆண்மை இல்லாதவன் (ஏசா563) ‘இயல்பாகவே ஆண்மை இல்லாதவர்களும் அப்படிச் செய்யப்பட்டவர்களுமாகிய இவர்களை அரண்மனை அந்தப்புரத்தில் ஊழியர்களாக ராஜாக்கள் வைத்தார்கள்.’ இந்த விளக்கத்தில் கவனிக்கவேண்டியது இயல்பாக ஆண்மை திரிந்தவர்களால் சிக்கல் இல்லை என்பதைக்கூறிவிட்டு ஆண்மை கெடும்படி செய்துவிட்டு அவர்களை அரண்மனை அந்தப்புரத்தில் பணிக்கு வைத்தார்கள் என்று சொல்லும் பதிவிலிருந்து அன்றைய சமூகத்தில் இராஜாக்களின் அதிகார மையத்தைக் காட்டுவதாக உள்ளது. இதே போன்ற பல நிகழ்வுகளை அதிர்வுகளாகப் பல இடங்களில் தந்துள்ளார்.

    பல இடங்களில் விவாதங்களை முன்வைக்கிறார். அதிசயமானவர் (Wonderful) என்ற பதத்திற்கு விளக்கம் சொல்லும்போது இப்பதம் ஆலோசனைக்கர்த்தர் என்பதோடு சேர்க்கப்பட வேண்டும். ஆரியர் படையெடுத்து வந்து யூதாவின் ஜனங்களைத் தண்டித்த பிறகு உண்டான அமைதியான காலத்தில் கடவுள் அவர்களை நடத்தும்படி அதிசயமானவைகளைப் பாதிக்க ஒருவரை அனுப்புவார் என்பது ஏசாயாவின் அர்த்தம். யூத சாஸ்திரிகள் அதிசயமானவர் என்பது மோசியாவைக் கருதுகிறதென்றும் கிறிஸ்தவர்கள் இது இயேசுவைக் கருதுகிறதென்றும் சொல்கிறார்கள். (சபாபதி குலேந்திரன், 1967:18) என்று விவாதம் செய்து தீர்வு சொல்கிறார். பல இடங்களில் விரிவாக விளக்கம் தந்து விவாதத்தை பகிர்கின்றார்.

    இந்த நூலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அளவை என்ற பகுதியில் நீட்டல் அளவை விபரத்தைக் கொடுத்துள்ளார். விரற்கடை, உள்ளங்கை, சாண், முழம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டில் பாகம், மைல் போன்றவற்றிற்கான அளவைகள் தரப்பட்டுள்ளதைத் தந்துள்ளார். மேலும் மரக்கால், ஒன்றரைக்கலம், எப்பா, குடம், படி, ஓமர், காற்படி, ஆழாக்கு, இடம், படி, கலம், கோரா, ஜல், சேக்கல், கிறாத்தல், தாலந்து போன்ற அளவைகள் குறித்து விளக்கமாகக் கூறியிருப்பது கவனத்திற்குரியதாகும்.

    அகராதியில் ஏராளமான விளக்கப்படங்கள் தரப்பட்டுள்ளன. ப.9, 10, 11, 12, 15, 16, 20, 22, 30, 31, 55, 57, 63, 64, 68, 71, 73, 76, 77, 198, 200, 193, 188, 179, 171, 176 இந்தப் படங்கள் கவனிக்கத்தக்கன. ஏனென்றால் பைபிள் சொல்லும் கதைகள், நிகழ்வுகள் தமிழர்களுக்குத் தொடர்பில்லாதது அதனால் விளக்கப்படங்கள்வழி கருத்துக்களை இவ்வகராதி விளக்க முன்வந்துள்ளது சிறப்பு.

    வேத அகராதியின் அட்டையில் ஒரு வாசகம் தரப்பட்டுள்ளது.  ‘இதை வாசிப்போர், அதாவது விசேஷமாய் அதிக அளவிலான சிறுகிராமங்களிலும் பட்டிக்காடுகளிலும் வசிக்கும் பிரசங்கிமார் சுவிசேஷகன்மார் உபாத்திமார் முதலியோர் இதிலிருந்து நல்உதவியும் தேர்ச்சியும் அடைவார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த வாசகங்கள் உண்மையானவை. பைபிள் தெரியாத ஒருவர் இந்த அகராதியை வாசித்தபின் பைபிளைப் படித்தால் பைபிள் முழுமையாக விளங்கும்.

    வேத அகராதி என்பதைத் தாண்டி வேதத்திற்கு விளக்கம் தருவதாக அமைந்துள்ளது. வரலாற்றுச் செய்திகள், காலம் பற்றிய நுட்பமான தகவல்கள், பின் விவரணைக் குறிப்புகள், தொன்மக்கதைகள், அரசியல் செய்திகள், அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு, உடை, நாடுகளைப் பற்றிய தகவல்கள், உபதேசங்கள், போதனைகள், அரிய தகவல்கள் எனப் பல நுட்பமான தகவல்களை வைத்துள்ளது. இந்த நூலைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதானால் அத்தேனே என்ற சொல்லுக்கு விளக்கம் தரும்போது ‘கிரேக்க தேசத்திலுள்ள நகரங்களின் சிரேஷ்டமான இந்நகரம் துறைமுகத்திலிருந்து மூன்று மைல் தூரம் ஒரு சமவெளியிற் கட்டப்பட்டிருந்தது. இதன் மத்தியில் ஒரு மலையிலே கல்விக்குச் சரஸ்வதி போலச் சொல்லப்படும் இத்தேனே தேவிக்கும் இந்த மலைக்கு அடுத்த மார்ஸ் மேடை என்னும் குன்றின்மேல் முருகக்கடவுளைப் போல ‘மார்ஸ்’ என்னும் தேவனுக்கும் கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன (ப.20) என்ற மாற்றுமதமான இந்து மதக்கடவுள்கள் பற்றிய குறிப்புகளைத் தரக்கூடிய நுட்பமான நூலாக இதனைப் பார்க்கலாம். வேதத்திற்கு அகராதியாகிய இருக்கக்கூடிய இந்நூல், தமிழ் உயிர் எழுத்துக்களுக்கான அகராதியாக உள்ளது. உயிர்மெய் எழுத்துக்களுக்கு அகராதி வரும் என்று ஆசிரியர் கூறியுள்ளார். அது வந்ததா எனத் தெரியவில்லை. பைபிளைத் தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் தேவையான நூல் இவ்வகராதி. இது கவனம் பெறாமல் போனது துரதிர்ஷ்டமானது. 

    குறிப்புகள்

    1. கி.பி. முதற் சில நூற்றாண்டுகளில் ரோம சாம்ராச்சியத்தில் பலர் கிரேக்க பாஷையைப் பேசியபோதும் அதைப் பேசாதவர்களின் நன்மைக்காக அவர்கள் பாஷைகளில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டது. சீரியாக் (Syriac), பாஷையில் இரண்டாம் நூற்றாண்டிலும் கொப்திக் (Coptic) பாஷையில் மூன்றாம் நூற்றாண்டிலும் அடுத்த நூற்றாண்டுகளில் கோதிக் (Gohthic) ஆர்மீனியன் (Armenian) பாஷைகளிலும் திருப்புதல்கள் எழுந்தன (சபாபதி குலேந்திரன், ப.7)
    2. 1545-1563இல் ரோமான் சபையின் மகாசங்கங்கள் திரெந்து (Trent) நகரில் கூடி கிறிஸ்தவர்கள் வேறு திருப்புதல்களை உபயோகிக்கக்கூடாதெனக் கட்டளையிட்டது (சபாபதி குலேந்திரன், ப.9)
    3. வேத நூல்கள் உன்னத விஷயங்களைப் பாராட்டும். இவைகள் சொல்வனவெல்லாம் அவ்வச் சமயத்தவர்களுக்கு முக்கியமானவை. இவைகளின் வசனங்கள், சொற்கள் மாத்திரமன்றி உருபுகள், இடைச்சொற்கள், முதலியனவும் முக்கியமானவை. ஆகவே, வேத நூல்களை மொழிபெயர்ப்பவருடைய சுயாதீனம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகும். (ப.14
    4. சபாபதி குலேந்திரன், 1967, பைபிள் மொழிபெயர்ப்பு வரலாறு, ப.23
    5. சீகன்பால்க் கற்றோரை இடையிடையே சந்தித்தாலும் இவருடைய நடவடிக்கைகளையெல்லாம் பாமரரோடுதான் இருந்தன. இவர்கள் பழைய தமிழ் இலக்கியங்களையும் பண்பாட்டையும் அறிந்தவர்களல்லர். இவர்கள் மத்தியிலே அவர் வசித்து வந்தார். இப்படிப்பட்டவர்களே அவருடைய சபையார்; இவர்களையே தமது மனத்தில் வைத்து தமது திருப்புதலைச் செய்தார். சீகன்பால்கு 1. கொரி, 3:2 நீங்கள் இன்னும் மாம்சத்தாராயிருக்கிறீர்கள் எனத் திருப்பியிருந்தார். அதை உடலாசையில் தாழ்ந்த உணர்வினர்களாயிருக்கிறீர்கள்’ எனத் திருப்பியிருக்க வேண்டுமென்றார் முனிவர்.” (சபாபதி குலேந்திரன், ப.51)
    6. பொடேனியல் ஜெயராஸ், 2017 தமிழ் கிறித்தவ அறம் சீகன்பால்கு எழுதிய தன்மவழி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    7. ஐரோப்பியர் அனுதினமும் செய்யும் அக்கிரமங்களை நாங்கள் எங்கள் சொந்தக் கண்களால் பார்க்கின்றோம். அவை எங்களுக்கே அருவருப்பாய் இருக்குமானால் கடவுளுக்கு அவை எவ்வளவு அதிகமாக அருவருப்பாய் இருக்கும் என்பதை யோசிக்க எங்களால் இயலவில்லை என்றார்கள்.” Halle Reports, (i.e., Der Konig, missionaries Ours Ost Indien eingesandter Ausfuhrlicher Berichten, Vol.I, halle, I – Verlegung des waysen – Hausen – p.544
    8. Halle Reports, 1716. p.897
    9. ஏ.சி.கிலேற்றன், 1911 வேத அகராதி, The Christian Literature Society for India, madras, Colombo and London.
    10. சரளா ரங்கநாதன், தமிழ் அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு வேறுபாடும், ஸ்ரீ முருகன் பிரிண்டர்ஸ், சென்னை.

    *****

    கட்டுரையாசிரியர் – இணைப்பேராசிரியர்
    இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர்.

     

     

    Share
  • கலப்படங்கள் கல்வியிலுமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவில் மொத்தம் 277 போலியான பொறியியல் கல்லூரிகள் தற்போது இயங்கிக் கொண்டுள்ளன. தலைநகர் தில்லியில் மட்டும் 66 கல்லூரிகளும், கர்நாடகாவில் 23 கல்லூரிகள், உத்திரப் பிரதேசத்தில் 22 கல்லூரிகளும், ஹரியானாவில் 18, மகாராஷ்டிராவில் 16, தமிழ் நாட்டில் 11 கல்லூரிகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பாராளுமனறத்தில் மனித வளத்துறை மேம்பாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார். தெலுங்கானாவிலும், மேற்கு வங்கத்திலும் முறையே 35, 27 போலி கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன … இவைகள் அனைத்தும் AICTE யின் அனுமதி இல்லாமல் போலியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கல்லூரிகள் அனைத்தும் முறையான அனுமதி பெற்று இயங்க வேண்டும், அல்லது ஒரேயடியாக மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு கண்காணித்து வருகிறது . UGC 24 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக தன்னுடைய இணைய தளத்தில் பெயர்களோடு அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.ugc.ac.in/page/Fake-Universities.aspx

    வங்கிகளில் நடையாய் நடந்து கல்விக்கடன் பெற்று தங்கள் குடும்பத்தை தூக்கி நிறுத்தப்போகும் கனவுடன் தங்கள் வாரிசுகளை கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது .. கலப்படங்கள் கல்வியிலுமா?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180731 -Dialogue with Arjuna-watercolour-lr- A4 100 dpi

    சந்தேகம் தீர்ந்ததா சவ்யஸாஸி ! கீதையால்
    உன்தேக வீரம்கொள்! உற்றார்கள் -மந்தமாய்
    ஆகார், அனவரதர், சாஸுவதர் மெய்போயின்
    சாகார் இவரென்றும் சார்”….கிரேசி மோகன்….!

    Share
  • ”சமணமும் சங்கதமும்”

    தேவ் ராஜ்


    ‘சங்கதம் பார்ப்பனர்க்கு மட்டுமே உரிய மொழி. பவுத்த – சமண சமயங்கள் சங்கதத்தை ஆதரிக்கவில்லை. சாமானியப் பேச்சு வழக்கு மொழிகளையே கையாண்டு வந்தன’ என்பது
    பரவலான ஆழ்ந்த புரிதல். ஆனால் சமண வரலாறும், சான்றுகளும் இக்கருத்தைச் சற்றும் ஏற்க முடியாமல் அமைந்திருக்கக் காண்கிறோம். பஞ்ச பரமேட்டிகளைப் போற்றும் சமண மந்திரமான ணமோகார மந்திரம் பாகதத்தில் அமைந்திருப்பதும் உண்மையே. ஆனால் ஜைனம் பிரணவத்தை, பீஜாக்ஷரங்களை மறுக்கவில்லை. சமணக் கோட்பாட்டுக் கலைச்சொற்கள் அமைந்திருப்பது ஸம்ஸ்க்ருதத்தில்.

    அடிப்படையில் பௌத்தம், ஜைநம் என்பவை சங்கதப் பெயர்களே;
    தீர்த்தங்கரர் பெயர்கள் சங்கதத்தில், கணதரர் பெயர்கள் சங்கதத்தில். சமணக் கல்வெட்டு சொல்லும் சில சமணத் துறவியருக்கு அழகான சங்கதப் பெயர்கள் –
    ப₄த்₃ரோ ப₄த்₃ரஸ்வபா₄ஶ்ச த₄ரஸேநோ யதீஶ்வர:||
    பூ₄தப₃லி: புஷ்பத₃ந்தோ ஜிநபாலிதயோகி₃ராட்|
    ஸமந்தப₄த்₃ரோ தீ₄த₄ர்மா ஸித்₃தி₄ஸேநோ க₃ணாக்₃ரணீ:||

    புகழ்பெற்ற கணதரர் சிலர் –
    வ்ரு’ஷப ஸேன, கேசி, சுபதத்த, ஆர்யகோஷ, வசிஷ்ட, ப்ரஹ்மசாரி, ஸோம, வீரபத்ர, ஸ்ரீதர, இந்த்ரபூதி கௌதம, ஸுதர்ம ஸ்வாமி. இவர்கள் தீர்த்தங்கரர்க்கு அணுக்கமாக இருந்து கோட்பாடுகளைப் பரப்பினர். ஆநந்தகனர் என்ற வெள்ளாடைத் துறவியார் சிறந்த கவிதைகளைப் படைத்தார். இருபெரும் சமணப்பிரிவினரும் பின்பற்றும் ‘தத்வார்த்த ஸூத்ரம்’ அமைந்திருப்பது சங்கதத்தில்.

    சமணத் துறவியர் நந்தி கணம், ஸேன கணம், ஸிம்ஹ கணம், தேவ கணம் என நான்கு கணத்தவராக இருந்தனர். வஜ்ர நந்தி மதுரையில் சமண சங்கத்தை நிறுவினார். பவணந்தி முனிவர் [நன்னூல்] நந்தி கணம் சார்ந்தவர்; அப்பரடிகளார் தாய்ச் சமயம் திரும்புமுன் சமணத்தின் ஸேன கணத்தைச் சேர்ந்தவராக இருந்தார்; ‘தர்மஸேனர்’ அவர்தம் பெயர். திருஞான ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளின் ‘திருவாலவாய்ப் பதிகம்’ பார்த்துத் தெளிவு பெறலாம். தமிழ்க் காப்பியமான நீலகேசிக்கு உரை எழுதியவர் ஸமய திவாகர முனிவர்.

    இன்றளவும் சமணத் துறவியர் சங்கதப் பெயர்களோடுதான் இருக்கின்றனர்; இன்றைய சமண உலகின் புகழ்பெற்ற துறவியார் ‘தருண ஸாகர முனி’. இவரது சொற்பொழிவுகளை யுட்யூபில் கேட்கலாம்.

    சமணரின் தொன்மையான ஆகம நூலான ஷட்கண்டாகமத்தின் தவள டீகை அருமையான சங்கத சுலோகங்களுடன் திகழ்கிறது, மாதிரிக்கு ஒன்று-
    பூர்வாபரவிரோதா₄தே₃வ்ர்யபேதோ தோ₃ஷஸந்ததே:|
    த்₃யோதக: ஸர்வபா₄வநாமாப்தவ்யாஹ்ருʼதிராக₃ம:||

    சந்திரகுப்த மௌரியர் காலத்தில் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த சமணர் குழாம் கருநாடகத்தில் நிலைபெற்று வளர்ந்தது; தென்னக மொழிகளில் சமயப் பரவல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் சங்கதம் ஒதுக்கப்படவில்லை. ‘மஹா புராணம்’ கருநாடகச் சமணர் தந்த முக்கியமான சங்கத நூல். சமணர் தம்மில் வாதுவல்ல அறிஞர்க்கு ‘வாதீப ஸிம்ஹ’, ’வாதி கண்டீரவ’ எனும் பட்டங்களை அளித்துக் கவுரவித்தனர். பாரதத்தில் விருதளிப்புச் சடங்கை முதலில் தொடங்கி வைத்தது சமணராகவே இருக்க வேண்டும்.

    தென்னகத்தின் மிகுந்த புகழ் படைத்த குந்தகுந்த ஆசார்யரும் சங்கதத்தில் நூல்கள் செய்துள்ளார். இவரது தீக்ஷா நாமம் – பத்ம நந்தி. மாநதுங்க முனி, ரிஷப தீர்த்தங்கரர் குறித்து ‘பக்தாமர ஸ்தோத்ரம்’ இயற்றினார்; இத்துதி நூல் சமணரால் மிகவும் மந்திர சக்தி பொருந்தியதாகக் கருதப்படுகிறது. பன்முக ஆற்றல் படைத்த ஹேமசந்த்ர முனியின் சங்கதப் படைப்புகள் பற்றித் தனியாக எழுத வேண்டும்.

    ப்ராஹ்மி லிபியை ஜைனரின் பழைய பகவதி ஸுத்தம் “ணமோ பம்பியே லிவியே” என்று போற்றி வணங்கினாலும், இன்றைய பாகதச் சமண நூல்கள் அச்சேற்றப்படுவது தேவநாகரியில்தான். அதைப் பார்த்துவிட்டுப் பாகத மொழிக்கெனத் தனியான எழுத்துருக் கிடையாது என முடிவுகட்ட இயலாது, இதே நிலைதான் சங்கதத்துக்கும். அன்றைய கால கட்டத்தில் எல்லா மொழிகளுக்கும் ப்ராம்மி லிபி பொது எழுத்துருவாக இருந்திருக்க வேண்டும். இன்றைய தேவநாகரி 120 மொழிகளுக்கு ஒரே எழுத்துருவாக விளங்குவதுபோல. அதே காரணத்தால் சமணமும் அந்த லிபிக்கு மரியாதை தந்திருக்கலாம்.

    அருமையான சங்கத நிகண்டு செய்தளித்த அமரசிம்மர் பார்ப்பனரல்லர்.

    அருகர் சமயப் பரப்புரைக்கு பேச்சுமொழிகளைக் கையாண்டனரே தவிர, சங்கத வெறுப்பு அவர்களிடம் கிடையாது. அர்த மாகதி, சூரஸேனி மொழிகளில் அவர்கள் எழுதினாலும் கூடவே ஸம்ஸ்க்ருதத்திலும் சாயை காட்டியே எழுதியுள்ளனர்.

    சமயவாதிகளின் நோக்கம் சமயப்பரவல் மட்டுமே; மொழி வளர்ப்பது அவர்களது நோக்கமன்று. தம் கோட்பாடுகளை விரைவில் பரப்பப் பிராந்திய அளவில் பெரும்பான்மையோர் பேசும் மொழிகளை ஊடகமாக்கிக் கொண்டனர். கோட்பாடுகளைச் செந்தரமாக்கிப் பொதுப்புரிதலுக்கு ஆக்கும்போது சங்கதத்தைத் துணை கொண்டனர். சமணக் கோட்பாடுகள் நூற்பா ஆகும்போது சங்கதமே துணை செய்கிறது. சமணர் தொடர்பில்லாத இந்திய மொழிகள் இல்லை; ஆனால் அவர்களின் சங்கதப் பங்களிப்பும் மிகுதி, இதுவே உண்மை. சமணம் சமயம் தவிரப் பிறதுறைகளிலும் அவர்கள் நூல்கள் யாத்துள்ளனர்.

    “What would be the condition of the Indian Sanskrit literature if the contribution of the Jains were removed? The more I study Jain literature the more happy and wonderstruck I am.”
    – Dr Hertel, Germany

    ஜப்பானிய அறிவியலார் தம் ஆய்வுரைகளை உலக அளவில் முற்செலுத்தும்போது ஆங்கில மொழி வல்லுநரைத் துணை கொள்வர், தம் கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்துக்கு இடமில்லாதபோதும். ஆங்கிலம் இன்றைய உலகில் இன்றியமையாத மொழியாக விளங்குவதுபோல், அன்று தெற்காசியாவைப் பொருத்த மட்டில் சங்கதம் இன்றியமையாத மொழியாக இருந்தது.

    Share
  • கிரகணம்

    பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி சொன்னது….!
    ———————————————————————————
    சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு…..!
    —————————————————————————————–

    பந்தியில் ராகுவைப் பார்த்துவிட ஜாடையாய்
    சந்திர சூரியர்கள் சாமியை , -மந்தஹாஸ
    மூவா(மூப்பு இல்லா மால் -அபிராமி அந்தாதி பிரயோகம் -மோகினி அவதாரம்….!) முகுந்தரை, மூட்டிவிட, ஆப்பாப்பாய்(ஆப்பு -பறிமாறிய அகப்பை சுதர்ஸன சக்கிரமா மாறி ராகுவுக்கு ஆப்படித்து விட்டது)
    moveவாக ராகுகாலம் மூச்….கிரேசி மோகன்….!

    Share
  • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு …

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    அசாமில் சமீபத்தில் NRC – தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1200 கோடி உரூபாய் செலவில், 5 ஆண்டுகள் உழைப்பில் இந்தக் கணக்கெடுப்பு எடுத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அசாமின் மொத்த மக்கள் தொகையான 3,29,91,384 பேர்கள் இதற்குப் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 2,89,83,677 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 40,7707 விண்ணப்பங்கள் விடுபட்டுள்ளன. இவர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் தங்களுடைய குறைகளைக் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தமது கருத்தாக மம்தா பானர்ஜி அவர்கள் இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாகக் கூறுகிறார். நமது உள்துறை அமைச்சர் இது விரைவில் சரி செய்யப்படும் என்றும் சமாதானம் கூறியுள்ளார். சுமாராக 15% பேர்கள் விடுபட்டுள்ளது சந்தேகம் ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஆம், 40 இலட்சம் பேர் விடுபட்டுள்ளது அரசியல் நோக்கர்களின் பார்வையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரு . அஜ்மால் மற்றும் அவருடைய சகோதரர் திரு. சிராஜூதின் அஜ்மால் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விடுபட்டு மீண்டும் இணைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • படக்கவிதைப் போட்டி 171-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கண்ணைப்பறிக்கும் வண்ண வளையல்களின் அணிவகுப்பை நிழற்படக் கருவியில் எழிலாய்க் கொண்டுவந்திருப்பவர் திரு. மோகன்தாஸ்.  இதனை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றியறிதல் உரித்தாகின்றது.

    ”மங்கல அணியாம் வளையலைக் கண்டால்
    திங்களைக் கண்ட அல்லியாய்
    நங்கையர் முகமும் மலரும்!”

    வண்ண வளையல்கள் குறித்த நம் கவிஞர்களின் எண்ணவோட்டத்தையும் அவர்தம் கவிதைகள்வழி கண்டுவருவோம்!

    ”கல்லுடைக்கும் பெண்ணெனக்குக் கல்லுவளை சரிப்படுமா? இடுப்பொடிய நானுழைத்தால் அல்லவோ என் வீட்டினிலே அடுப்பெரியும்!” என்று வருந்தும் ஏழைக் கர்ப்பிணியின் வேதனையை மனந்தொடும் வகையில் பாவில் பதிவாக்கியிருக்கிறார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா.

    ஓர் ஏழையின் குமுறல்

    கைநிறையப் போடக்
    கலர்கலராக் குவிச்சிருக்கு
    பைநிறையப் பணமிருந்தாப்
    பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம்.
    ஏழைக நம்பளுக்கு
    எதுக்கிந்த வளையலெல்லாம்
    வாழ வழியில்லையாம்
    வளையலொரு கேடா
    புதுப் புள்ளத்தாச்சிக்குப்
    போடுவாங்க வளைகாப்பு
    எட்டு மாதப் புள்ளத்தாச்சி
    எம் பொழைப்பு கல்லுடைப்பு

    கல்லுடைக்கும் கைக்கு
    காப்பு சரிவருமா?

    நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான்
    ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குளிரும்
    சீக்காளி எம்புருசன் செதைஞ்சு கெடக்கையில
    காப்பு வந்து என்னோட கையிலதான் ஏறிடுமா
    வாணா எனக்கிந்த வளைகாப்பு ஆசையெல்லாம்
    வீணாச் செலவழிச்சு வீம்பு பண்ண ஏலாது.

    *****

    ”வளைந்து பருக்கும் வயிற்றின் இரகசியம் சொல்லுமிந்த வளை! கருவின் உயிரும் கேட்டு மகிழுமே வளையல் எழுப்பும் இன்னிசை!” என்று வளைகாப்பின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வளைகாப்பு:

    குலங்கள் தழைக்கக் குடும்பம் மகிழ
    பலவிதப் பண்டிகைப் பெரிதாய் உண்டு

    நலமுடன் வாழவும் நித்தமும் ஒன்றாய்
    விலகா வண்ணம் வருமாம் அழகாய்

    விளைந்த நல்திரு விழவில் அணியும்
    வளையல் தந்த வகைதான் வளைகாப்பு

    பிரிவினை அகற்றப் பாடம் சொன்னது
    பிரியாது சேர்ந்தே பெண்ணொடு பழகும்

    வட்ட வடிவம் வண்ணத் தோற்றம்
    எட்ட விரட்டும் எதிர்வினை ஒழிய

    வளைந்து பருக்கும் வயிற்றின் ரகசியம்
    வளையலின் மூலம் வருகின்ற உண்மை

    சங்கத் தமிழில் சதங்கையும் வளையலும்
    பொங்கு தமிழாலே புகழுற்ற வரலாறு

    கருவின் உயிரும் கேட்கும் இசையை
    ஒருவித வளையல் ஒலியும் சுகம்தான்

    மனைவி ஆனதும் மங்கை யர்க்கொரு
    வினைகள் வராது வளையல் காப்பது

    “வளைகாப்பு”

    திளைத்து மகிழத் தருமாம்
    வளையல் சத்தம்.! வருவதும் மங்கலமே.!

    *****

    நற்கவிதைகள் புனைந்த கவிஞர்கட்கு என் வாழ்த்தும் பாராட்டும்!

     இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    பேரழகு!

    தங்க வளையல் போட்டால்தான்
    தனியே வந்திடும் மதிப்பென்றே
    அங்கம் முழுதும் தங்கமாக்க
    ஆசைப் பட்டிடும் அணங்குகளே,
    தங்கம் தராத அழகினையே
    தந்திடும் சாதா வளையல்களே,
    தங்கிடும் எளிமையும் அடக்கமதுவும்
    தானே கொணரும் பேரழகே…!

    தங்கத்தின்மீது எப்போதும் அளவற்ற மோகம் நம் நங்கையர்க்கு. தம் செல்வச்செழிப்பைப் பறைசாற்ற, தங்க வளையல்களை முழங்கைவரை அடுக்கிக்கொண்டுவரும் அணங்குகள் ஏராளம்! ஏராளம்! எனினும், தங்கத்தினும் வனிதையர் அங்கத்துக்கு அதிக அழகைக் கூட்டுவது, அவர்களைப் பொலிவாய்க் காட்டுவது இங்கே குவிந்திருக்கும் சாதா வளையல்களே என்று தோதாய் உரைக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share