
-100dpi -A4 -lr
குஞ்சுஅணில் காட்டியதாம் கண்ணனுக்கு, சேதுவில்
அஞ்சுவிரல் அண்ணலின்(ஸ்ரீராமர்) ஆதுரத்தை -மஞ்சுவண்ணர்
NOசொல்லா மால்மூன்றை(மூன்று கோடுகள்-மகாபலிக்கு மூன்று அடிகள்) நோக்க, அடிகாணா
கோமாதா செய்தாள் கனைப்பு….கிரேசி மோகன்….!

சந்திரனையும் சூரியனையும் தந்தது யார்
=====சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.!
எந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம்
=====எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.!
மந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது
=====மாயமாய் மறைந்து மீண்டும் திரும்புகிறது.!
தந்திரத்தால் அங்கே போகமுடியுமா?நிரந்-
=====தரமாய் நிலையா யங்கே தங்கமுடியுமா.?
தருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும்
=====தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.!
இருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா
=====இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.!
ஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை
=====உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.!
வருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும்
=====வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.!
ஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும்
=====உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.!
கருவிலே இருக்கும் போதே நாங்களும்
=====கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.!
இருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத
=====உன்னொளியால் மலர்கள் கூட மலர்கிறது.!
உருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த
=====உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.!
===================================================
நன்றி தினமணி கவிதைமணி:: 25-06-2018
நன்றி கூகிள் இமேஜ்.
நா. கணேசன்
இந்த வார வல்லமையாளராகத் திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப. அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் பெட்னா திருவிழா கோலாகலமாக நிகழ்ந்தது. பல முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டில் இருந்துவந்து கலந்துகொண்டனர். என்றுமில்லா வகையில் 5000 பேர்கள் பங்கேற்பு.
இந்திய வரலாற்றில் தமிழின் ஆழமான பங்கு வியத்தற்குரியது. இந்தியப் பல்கலைகளில் மட்டுமன்றி மேலை உலகத்திலும், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் உயராய்வுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஊக்குவிக்குமுகமாக, பேராசிரியர் பதவிகள் நல்ல பல்கலைகளில் ஏற்பட்டுவருகின்றன. பெர்க்கிலியிலும், ஹார்வர்டிலும் நிறுவப்பட்ட தமிழ்ப் பீடம் போல, தென் மாநிலம் ஆகிய டெக்சாஸின் பெருநகர் ஹூஸ்டன் பல்கலையிலும் தமிழ்ப்பீடம் அமைக்க இருப்பதற்கான முயற்சித் தொடக்கத்தை ‘சாம்’ சொ. கண்ணப்பன் அறிவித்தார். முனைவர் நா. கணேசன் “தமிழ்த்தாய் கொலுவிருக்கும் கல்விச்சாலைகள் எங்குமிருக்கலாம். ஆனால் அவ்வன்னையின் திசை தென்திசை. அங்கே ஹூஸ்டனில் தமிழ்த்தாய் அமர்ந்து ஆய்வுகளை அலங்கரிக்க உதவுங்கள்” என்றார்.

மேலைநாடுகளில் 20+ தமிழ்ப் பீடங்கள் உயர்பல்கலைக் கழகங்களில் அமையும்போழ்து தமிழகப் பேராசிரியன்மார் வந்து ஆய்வுகளைக் கற்பிக்கவும், கற்கவும் வாய்ப்பு ஏற்படும்; அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் பிறக்கும் தமிழ் வமிசாவளியினர் தமிழ், திராவிட மொழியியல், கலாச்சாரம், தொல்லியல், கலைவரலாறு, மாந்தவியல், சமூகவியல், நிகழ்த்துகலைகள்… எனப் பல்வேறு துறைகளில் பேராசிரியர்களாய் புதிய பார்வை தரும் நூல்களை வாழையடி வாழையென வருங்காலத் தலைமுறையினர் எழுதத் துணை செய்யும். அமெரிக்க இளந்தமிழர்:

இவற்றை எல்லாம் உணர்ந்தே மனோன்மணீயம் பெ. சுந்தரனார் மேற்குலக – கிழக்குலக ஆய்வுகள் காரணமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தந்தார். இன்று தமிழ்நாட்டிலும், அரசாங்க விழாக்களிலும் உலகெங்கும் தமிழ்ப் பள்ளிகளிலும், தமிழ் மன்றங்களிலும் எந்த நிகழ்ச்சி ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது.
பெட்னா திருவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து:
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

இந்த வார வல்லமையாளர்: திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப (I.A.S)
ஃபெட்னா விழாவில் அனைவர் மனத்தையும் கவர்ந்தது இந்திய ஆட்சியாளர் பதவியில் மேற்கு வங்கத்தில் பணியாற்றிய கோ. பாலச்சந்திரன். இனிமையாகப் பழகும் அவர் தமிழ்மரபில் ஆழங்கால் பட்டவர். சிவகாசியைச் சார்ந்த இவர் ஹார்வர்ட் தமிழ்ப்பீடத்திற்கு அமெரிக்க டாலர் 50000-க்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பாலச்சந்திரன் சொற்பொழிவுகளை யுட்யூப் போன்ற தளங்களில் கேட்டு மகிழலாம். https://www.youtube.com/watch?v=ciS3Rg3XI5A&
ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்துக்குச் சிறப்பு விருந்தினராக இந்த வாரம் திரு. பாலச்சந்திரனை அழைத்தோம். “அற்றைத் தமிழர் நோக்கும், இற்றைத் தமிழர் போக்கும்” என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார். பின்னர், ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் $-ல் தமிழ்ப் பல்கலை அமைக்கும் பூர்வாங்கக் கூட்டத்தில் பல்கலை உயர் அதிகாரிகள், Academic Dean Dr. Tillis போன்றவர்களோடு பேசக் கலந்துகொண்டார். பியர்லாந்து நகர மேயர், டாம் ரீட் கலந்துகொண்டு பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ் தொடர்பான, அதன் ஆய்வுகள் கல்வி உலகிலும், இணைய உலகிலும் வேரூன்ற திரு கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப. என்றும் உதவ வேண்டும் என வாழ்த்தி அன்னாரை இந்த வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை மின்னிதழ் பெருமை அடைகிறது.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
முடிவில்லாப் பேய் மழை போல்
வார்த்தைகள் பறக்கும்
காகிதக் குவளைக் குள்ளே !
தாறுமாறாய் நடப்பர், கடப்பர் அவரெலாம்
உலகத்தின் ஊடே நழுவி !
துயர்க் கடல் ! இன்ப அலைகள்
தடுமாறிச் செல்லும்,
என்னைக் கட்டித் தழுவி,
வெளிப்படை யான என் மனத்தின் ஊடே !
ஜெய் குருதேவா ! ஜெய் ஓம் !
எதுவும் மாற்றா தென் உலகை !
எதுவும் மாற்றா தென் உலகை !
கிழிந்த ஒளிக்காட்சி கோடி
விழிகளாய்
துள்ளும் என்கண் முன்னால் !
அவை விளிக்கும் என்னை
மீண்டும்
மீண்டும் உலகத்தின் ஊடே !
நினைவுகள் தாறு மாறாய்த் திரியும்,
நிலையிலாக் காற்று போல்,
ஒரு கடிதப் பெட்டிக் குள்ளே !
தடுமாறுவார் கண்ணிலாதது போல்
உலகத்தின் ஊடே அவர்கள்
செல்லும் போது.
ஜெய், குருதேவா ! ஜெய் ஓம் !
எதுவும் மாற்றா தென் உலகை !
எதுவும் மாற்றா தென் உலகை !
நகைப்பொலிகள், புவிக்கரு நிழல்கள்
எதிரொலிக்கும்
வெளிப்படை யான என் சொல்லைக்
கடக்கும் போது !
என்னையும் விளிக்கும் !
முடிவிலாக் காதல், மடிந்திடாக் காதல்
எதிரொலிக்கும்
என் வெளிப்படைக் கருத்தின் ஊடே
எனை விளிக்கும் !
கோடிக் கணக்கில் பரிதிகள் சுற்றி
ஒளிகாட்டும் எனக்கு !
எனை விளிக்கும் மீண்டும்,
மீண்டும்,
மேதினியில் நடமாட !
ஜெய், குருதேவா ! ஜெய் ஓம் !
எதுவும் மாற்றா தென் உலகை !
எதுவும் மாற்றா தென் உலகை !
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
க. பாலசுப்பிரமணியன்
மகிழ்வும் திறனும் தொழிலுக்குத் தேவை
பல நேரங்களில் நமக்கு நாம் விரும்பிய தொழிலோ அல்லது வேலைகளோ கிடைப்பதில்லை. எவ்வளவுதான் ஆர்வம் நமக்கு இருந்தாலும் குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகள் இல்லாததாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நாம் விரும்பிய தொழில்களில் ஈடுபட முடிவதில்லை. ஆனாலும் நம் உள்மனதில் அந்தத் தொழிலைப் பற்றிய ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருந்துகொண்டே இருக்கின்றது. நாம் அந்த விருப்பங்களுக்கும் ஆர்வங்களும் மாறுபட்ட நிலையில் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு விடுகின்றோம். சில சந்தர்பங்களில் இந்த மாதிரியான நிர்பந்தங்கள் குடும்பச் சூழ்நிலைகளாலோ அல்லது பொருளாதாரச் சூழ்நிலைகளாலோ அல்லது சமுதாய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாகவோ அமையக்கூடும். அந்த நேரங்களில் பலருக்கு ஒரு தோல்வி மனப்பான்மையோ அல்லது ஏமாற்றமோ ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இந்தச் சூழ்நிலைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மை, மன அமைதியின்மை. மன அழுத்தங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தலாம். இதிலிருந்து மீண்டு நாம் எந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோமோ அதையே ஒரு பரிசாக ஏற்று அந்தத் தொழிலை மகிழ்வுடனும் சிறப்பாகவும் செய்ய கற்றுக்கொள்ளவும் முயலவும் வேண்டும்.
எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் மகிழ்வும் ஈடுபாடும் இல்லாமல் செய்யும் பொழுது அது நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றது. அதையே மகிழ்வோடு செய்யும் பொழுது அது நல்வாழ்வுக்கு உரமாக மாறிவிடுகின்றது. உலகின் மிகப் பெரிய தத்துவ மேதை அரிஸ்டாட்டல் கூறுகின்றார் “மகிழ்வோடு செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகின்றது.”
சில நேரங்களில் நாம் தொழிலில் நமக்கு அதைச் செய்வதற்கான வெகுமானமும் சம்பளமும் கிடைக்காததால் நம்முடைய ஈடுபாடுகளையும் மகிழ்வையும் குறைத்துக்கொள்கின்றோம். அது மட்டுமல்ல, நாம் நம்மைப் போன்ற பலருடன் நம்மை ஒப்பிட்டு நம்முடைய தரத்தை உயர்த்தியோ குறைத்தோ மதிப்பீடு செய்கின்றோம். இது ஒரு தவறான நோக்கு. இந்த ஒப்பீடுகள் ஓரளவிற்கு நம்முடைய திறனுக்கு அளவுகோலாக இருக்குமேயன்றி எல்லா நேரங்களிலும் நம்முடைய ஈடுபாட்டிற்கும் திறனுக்கும் நிரந்தரச் சான்று அல்ல. எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடோடு செய்யும் பொழுது நமது திறன் ஒளிர்கின்றது. அதில் கிடைக்கும் மகிழ்வே அந்தச் செயலை சரியாகச் செய்வதற்கான கூலியாக அமைகின்றது. இதையே பகவத் கீதையின் கர்மயோகத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. “கர்மண்யேவாதிகாரஸ்தே; மா பலேஷு கதாசன” என்ற கூற்றில் கண்ணன் அர்ச்சுனனுக்கு கூறுகின்றார் “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்.”
சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் சென்று “நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா” என்று தங்களுடைய திறன்களையும் தொழில் வளர்ச்சியையும் பற்றி தற்பெருமையுடன் சொல்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். சிறப்பாகத் தொழில் செய்பவர்களுக்கு இதற்கான அவசியம் இல்லை. “ஒரு சிறந்த வேலைக்காரனுக்கு அவன் தொழில் திறனே முகவரியாக அமைகின்றது” என்று சொல்லப்படுகின்றது. அறிவுசால் சமுதாயத்தில் அறிவும் திறனும் உள்ளவர்களைத் தேடி உலகம் செல்கின்றது. இது நடைமுறை உண்மை. அவர்களுக்கு ஒரு விளம்பரமோ அல்லது பரிந்துரையோ தேவையில்லை. விளம்பரமும் பரிந்துரைகளும் கொண்டு தொழிலிலும் வாழ்விலும் முன்னேறுபவர்கள் அவர்களுடைய ஒவ்வொரு படியின் முன்னேற்றத்திலும் யாரையாவது தேடிக்கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடைய தயவும் ஒத்துழைப்பும் இல்லாமல் தங்களுடைய முன்னேற்றத்தின் சரித்திரத்தை அவர்களால் எழுத முடியாது.
பல நேரங்களில் நல்ல திறனுள்ளவர்கள் என்ன திறமையிருந்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்’ என்ற ஒரு பிற்போக்கான கருத்தை மனதில் நிறுத்தி தாங்கள் செய்யும் வேளையிலும் தொழிலும் தங்களுடைய முழுமையான உழைப்பை செலுத்தாமல் இருப்பார்கள். இவர்கள் அநேகமாகத் தோல்வியையே சந்திப்பார்கள். காரணம்- என்னதான் திறமையிருந்தாலும் கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை. அமெரிக்க மனநல மற்றும் சமூகச் சிந்தனையாளர் மால்கம் கிளாட்வெல் என்பவர் கூறுகின்றார். “திறன்கள் மட்டும் போதுமானதல்ல. அந்தத் திறன்கள் அமைதியாக இருக்கும் பொழுது உங்களுடைய கடின உழைப்பு உங்களுக்காகப் பேசுகின்றது.” சில சமயங்களில் நாம் நம்முடைய திறன்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன் “உங்களுக்கு இந்தத் திறன்களெல்லாம் உண்டென்று உங்கள் மேற்பார்வையாளருக்குத் தெரியுமா?”
அவர் அளித்த பதில் என்னைத் திகைப்படையச் செய்ததது. “இல்லை அய்யா. நான் அதெல்லாம் தெரியும் என்று சொன்னால் என்னை அதையெல்லாம் செய் என்று சொல்லுவார்கள். கொடுக்கின்ற சம்பளத்திற்கு அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டுப் போகவேண்டும்.” இந்த நோக்கு சரியானது அல்ல. நம்முடைய திறன்களை சரியான நேரங்களில் நாம் வெளிக்காட்டாவிட்டால் அவைகளின் பயன் என்ன? நமக்கு நம்மைத் தவிர யார் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்?
நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யலாமே !
கணியன்பாலன்
தமிழக வரலாற்றுக்கான காலவரையறைகள்
நமது பழந்தமிழக வரலாறு இங்கு தரப்பட்டுள்ள இருபத்தொரு காலவரையறைகளைத் தனது வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை வரலாற்று ஆதாரங்களையும், நமது சங்க இலக்கிய ஆய்வுகளையும் இணைத்து, இவை இரண்டின் அடிப்படையில் பல புதிய கணிப்புகள் கண்டுணரப்பட்டு, நமது முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆண்டுகளும், காலகட்டங்களும் கணிக்கப்பட்டன.
1.கிரேக்கவீரன் அலெக்சாந்தர் கி.மு. 326 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்து, 19 மாதம் கழித்து கி.மு 325 வாக்கில் வெளியேறுகிறான்-(1).
2.அலெக்சாந்தர் காலத்திலும் அவனுக்கு முன்னும் மகதத்தை நந்தர்கள் ஆண்டு வந்தனர். நந்தர்களில் மகாபத்ம நந்தன் இந்திய அளவில் புகழ்பெற்றவனாக இருந்தான்-(2).
3.கி.மு.325-322 வரையான காலங்களில் வட இந்தியாவில் கலவரங்களும் குழப்பங்களும் நடைபெற்றது என்கிறார் வின்சென்ட் சுமித்-(3).
4.மௌரியர்கள் சுமார் கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். வட இந்தியாவில் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட அவர்கள் கி.மு. 300 வாக்கில் தக்காணத்தின் மீது படையெடுக்கின்றனர்-(4).
5.கி.மு. 297இல், பிந்துசாரன் பதவியேற்றபின் தக்காணத்தின்மீதான படையெடுப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. கடலுக்கு இருபகுதிகளிலும் இருந்த தக்காணப்பகுதிகளைக் கைப்பற்றியவனாக அவன் கருதப்படுகிறான்-(5).
6.சங்கப்பாடல்கள், வடுகர்கள், கோசர்கள் துணையோடு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்தும், வல்லம்போர், செருப்பாழிப்போர் ஆகியவற்றில் வடவடுகர், வம்பவடுகர், ஆரியர் எனப்படுகிற மௌரியர்கள் இளஞ்செட்சென்னியால் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் பேசுகின்றன-(6).
7.இப்படையெடுப்புக்குப்பின் மௌரியர்களின் தெற்கெல்லை, மேற்கே கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கே வடபெண்ணை நதியின் முகத்துவாரத்தில் இருந்த நெல்லூர் வரையிலும் பரவியிருந்ததாக வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார்-(7).
8.வின்சென்ட் சுமித் தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள் பராமரித்து வந்துள்ளன எனவும் ஆனால் மௌரியப்பேரரசில் கடற்படை இராணுவத்தின் ஓர் அங்கமாக இருந்தது பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்-(8).
9.மாமூலனார் தமிழ் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டில் மொழிபெயர்தேயம் எனப்படும் தாக்காணப்பகுதி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்(9).
10.முதுகுடுமிப்பெருவழுதி வெளியிட்ட நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கருத்து, கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிற பிரித்தானிய-ஜெர்மன் குழுவினர், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் கணிப்பு-(10).
11.புகளுர்கல்வெட்டின் காலம் பட்டிப்பொருளு கல்வெட்டுக்கு(கி.மு.290-270) முந்தைய கி.மு. 4ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கணிப்பு-(11).
12.சேரலாதன் இமயவரம்பன் குறித்தப் பதிற்றுப்பத்துப்பாடல்கள், அதன் பதிகம், அவன்குறித்த மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்கள் ஆகியன, அவன் 58 ஆண்டுகள் ஆட்சியாண்டதையும், வேந்தன் ஆனவுடன் இமயம்வரை அவன் படையெடுத்துச் சென்று வென்றதையும், கடம்பர்களையும், யவனர்களையும் வென்றதையும் தெரிவிக்கின்றன-(12)
13.கி.மு. 256ஆம் ஆண்டைய அசோகன் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேரளபுத்ர அரசுகள் இடம்பெற்றுள்ளனர். சோழர்கள் முதன்மை பெற்றுள்ளார்கள். அதியன்கள் இடம் பெற்றுள்ளார்கள்-(13).
14.கி.மு. 232இல் அசோகர் இறந்துபோகிறார். சாதவாகனர்கள் கி.மு.230இல் தனி அரசாக ஆகின்றனர்-(14).
15.சம்பை கல்வெட்டின் காலம் கி.மு.270-230; அதில் இடம்பெற்ற ‘சதியபுதோ’ என்பதில் உள்ள எழுத்துக்கள் பண்டைய எழுத்தியல்-கல்வெட்டியல் (palaeography-orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருப்பது போன்றே இருப்பது-(15).
16.காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டின்படி, கி.மு. 165க்கு முன் 1300 வருடங்களாக தமிழரசுகளின் ஐக்கியகூட்டணி இருந்து வந்துள்ளது. தமிழரசுகளின் காவல் அரணாக இருந்த, புத்துண்டா என்கிற கலிங்கநாட்டின் இரண்டாவது பெரிய துறைமுக நகரம் காரவேலனால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஆண்டு பாண்டிய வேந்தன் பரிசுப்பொருட்களை காரவேலனுக்கு அனுப்பியுள்ளான்-(16).
17.பதிற்றுப்பத்துப் பாடல்களின் தரவுகளும், அதன்பதிகங்கள்தரும் வேந்தர்களின் ஆட்சியாண்டுகளும்-(17).
18.வரலாற்றுக்கால இரண்டாம் தூமகேதுவின் ஆண்டும்(கி.மு.163), யானைக் கண்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்தஆண்டும் ஒன்றாக இருப்பது. பத்தாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இவனே என்கிற தமிழறிஞர்களின் கணிப்பு-(18).
19.தலைவடிவப் பெருவழுதி நாணயங்களின் காலம்-கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(சுமார்கி.மு.130-100) என்கிற தினமலர் ஆசிரியர், நாணயவியலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கணிப்பு-(19).
20.மாக்கோதை வெளியிட்ட தலைவடிவ நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு சிறிது முந்தைய காலப்பகுதி(130-100) என்கிற அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் கணிப்புக்கள்-(20).
21.கி.மு. முதல் நூற்றண்டில், சுங்க வம்ச ஆட்சியாளர்களின் இறுதிக் காலத்தில்(கி.மு.75), அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த உச்சயினி மீது தெற்கத்திய சாதவாகனர்களின் படையெடுப்பு நடந்தது என்கிற கோசாம்பி அவர்களின் கருத்து. சோழன் நலங்கிள்ளி உச்சயினி மீது படையெடுத்தான் என சங்ககால இறுதிக்கால “முத்தொள்ளாயரம்” நூல் கூறும் செய்தி-(21).
வரலாற்றுக் காலவரையறைக்கான ஆதாரங்கள்
1.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா, தமிழில் மாஜினி, வெளியீடு, ஜூன்-2004, பக்: 187.
2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 101.
3.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 56.
4, 5. பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 111, 112.
6.மாமூலனார் – அகம்: 251, 265, 281; பாவைக்கொட்டிலார் – அகம் 336; இடையன் சேந்தன் கொற்றனார் – அகம்: 375; ஊன்பொதிபசுங்கொடையார்- புறம்: 370, 378; கள்ளில் ஆத்திரையனார்-புறம்: 175; உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்- அகம்: 69.
7.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 64.
9.மாமூலனாரின் அகநானூற்றுப்பாடல்: 31.
10.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45; தமிழகக் கடல்சார் வரலாறு, பதிப்பாசிரியர்கள்-ந.அதியமான் & பா.ஜெயக்குமார், தமிழ்ப்பல்கலைக்கழகம், ஐப்பசி-நவம்பர்:2006, பக்:24; ஆர். கிருஷ்ணமூர்த்தி, செழிய செழியன் நாணயங்கள், பக்: 125-128.
11.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 25.
12.இரண்டாம் பதிற்றுப்பத்துப்பாடல்கள் & பதிகம் – குமட்டூர் கண்ணனார்; மாமூலனாரின் அகப்பாடல்கள்: 127, 347.
13.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, அசோகர் ஆணைகள், பக்: 123, 124, 139, 140.
14.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 310, 311.
15.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 26-28.
16.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.
17.சங்ககால பதிற்றுப்பத்தும் அதன் பதிகமும்.
18.க.ப. அறவாணன், “தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும்” டிசம்பர் 2009, பக்: 54-61 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 580-582.
19.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், பக்: 81-91.
20.சங்ககால சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு, சில வரலாற்றுச்செய்திகள், ஆர். கிருஷ்ணமூர்த்தி, 2009, பக்: 31, 32. & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45.
21.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, செப்டம்பர்-2006, பக்: 388. & கவிஞர் தெசிணி அவர்கள், ‘கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்’, டிசம்பர் 2004, பக்; 180;
நிர்மலா ராகவன்
பதவி போதுமே, பண்பு எதற்கு?
“ஏ குரங்கே!” ஒரு சிறுவன் இன்னொருவனை நோக்கிக் கூவினான்.
அவனும் அதேபோல் கூவினான். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது என்றாலும், கெட்ட வார்த்தை என்று அவர்கள் நினைத்ததைப் பிரயோகிப்பதில் தனி மகிழ்ச்சி அந்த மூன்று வயதுச் சிறுவர்களுக்கு. அவர்களைப் பொறுத்தவரை, `ஹலோ!’ என்று சொல்வதற்கு ஒப்பான முகமன் இம்முறை.
சிறு வயதில் மட்டுமில்லாது, இக்குணம் ஆண்கள் வளர்ந்தபின்னும் தொடரும். தாங்கள் ஏசிப் பேசுவதை நண்பர்கள் தப்பாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். எந்த வயதானாலும், சற்றும் யோசியாது, ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள்.
ஒருவரது பேச்சிலிருந்து குணத்தை அறிந்துகொள்ளலாம் என்றாலும், அவர்கள் இப்படி ஒருவரையொருவர் பழித்துக்கொள்வதில் உள்ளர்த்தம் எதுவும் கிடையாது. இது ஒருவர் மற்றொருவரை நெருங்கும் உத்தி. நற்பண்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
பெண்கள் இப்படிப் பேசிப்பார்த்தால் தொலைந்தார்கள்.
“ஒன்னோட பாவாடை (அல்லது வளை) அழகா இருக்கு!” என்பதுபோல் ஏதாவது புகழ்ந்தால்தான் இன்னொருத்தி அப்படிக் கூறுபவளை சிநேகிதியாக ஏற்பாள்.
என்னுடன் வேலை பார்த்த ஓர் ஆசிரியை, தினமும்,`உன் புடவை அழகாக இருக்கிறது!’ என்பாள், என்னிடம். ஏதோ ஒரு நாள் கூறினால், அவள் கூறுவதில் உண்மை இருக்கிறதென்று நம்பலாம். ஆனால், தினமுமேவா?
நான் ஏன் மகிழ்ந்து புன்னகைக்கவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. போலியான புகழ்ச்சியால் நம்மை அடிமைப்படுத்த நினைப்பவர்களை எப்படி நம்பமுடியும்?
கதை: யாரிடம் பணிவு?
எங்கள் பகுதியிலிருக்கும் கறிகாய் மார்க்கெட்டில் பூனைக்குட்டிகள் வளைய வந்துகொண்டிருக்கும். அதை ஒட்டி இருக்கும் சாப்பாட்டுக்கடையில் மிகுந்துபோன உணவைச் சாப்பிட்டு, அவை காலந்தள்ளிக்கொண்டிருந்தன.
கறிகாயைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒருவன், தன் காலருகே வந்த பூனைக்குட்டியை உதைத்தான். அதற்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று புரியவில்லை. அவனருகிலேயே நின்று, உதை வாங்கிக்கொண்டிருந்தது. அவ்வளவு சிறியது – பிறந்து இரண்டு, மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். (அவன் வீட்டுச் சிசுவை இப்படி உதைப்பானா?)
அருகிலிருந்த பிறர் அவன் செயலைத் தவறாக எண்ணவில்லை. `யாருக்கும் சொந்தமில்லாத பிராணிதானே!’ என்ற அலட்சியமாக இருக்கலாம். அல்லது, பிறர் செயலில் குறுக்கிடக்கூடாது என்ற `நாகரிகம்’ கருதி சும்மா இருந்தார்கள்.
அருகில் திகைத்து நின்றிருந்த என் பேரனை, “இதைத் தூக்கி வெளியில் விடு,” என்றேன், கடுமையாக. (எரிச்சல் பூனைமேல் இல்லை).
எதிர்க்க முடியாத பிராணிகளையும் மனிதர்களையும் அலட்சியமாக நடத்துபவர்கள் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம், `இவர்களால் எனக்கு ஆதாயம் கிடைக்கும்,’ என்று தோன்றினால், அப்படி நடப்பார்களா?
கதை
மட்டமானவர்களிடம் நேர்மையை, நற்குணத்தை எதிர்பார்க்க முடியாது. எப்படியாவது பெரிய பதவிக்கு உயர்ந்தால் போதும் என்று கணக்குப்போட்டு, அதன்படி செயலாற்றுபவர்கள் இவர்கள்.
பதின்ம வயது மாணவன் ரஃபி ஒரு கூட்டத்திற்குமுன், நாற்காலிகளை வரிசையாக எடுத்துப்போட்டு, இன்னும் பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான்.
`ஆகா! என்ன சுறுசுறுப்பு!’ என்று அங்கிருந்த ஆசிரியைகள் பாராட்ட, சில நாட்களில் PREFECT (நிர்வாகம் செய்பவர்) என்ற பதவி அளிக்கப்பட்டது. பிற மாணவர்களின் கட்டொழுங்கை கவனிக்க வேண்டிய பெருமையில், அவனுடைய சுறுசுறுப்பும் ஒழுங்கும் காணாமல் போய்விட்டதுதான் பரிதாபம். படிப்பு சம்பந்தமாக அளிக்கப்பட்ட வேலைகளைக்கூடச் செய்யாது, அலட்சியமாக இருந்தான். தன்னைப்பற்றிய அலாதி கர்வத்தில் எல்லோருடனும் சண்டை போட்டான்.
முதல் முறை கிடைக்கும் வெற்றி திறமையால் ஆனாலும், அது நிலைத்திருக்க நற்குணம் அவசியம் என்று அவனுக்குப் புரியவில்லை.
அவனுடைய பொறுப்பாசிரியரிடம், `ரஃபியை அடக்கிவைங்கள். `எனக்குப் பாடம் கற்பிக்கிறவர்களைவிட நான் உயர்ந்தவன்!’ என்பதுபோல் மரியாதை இல்லாமல் பேசுகிறான்!” என்றேன்.
மூத்தவர்களிடம் மரியாதையாக நடக்கவேண்டுவது மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியம். `இன்றைய தலைமுறை இப்படி இல்லையே!’ என்று பெரியவர்கள் அரற்றுகிறார்கள்.
அடுத்த முறை என் வகுப்பில் ரஃபியின் தலை நிமிரவேயில்லை. குரலும் எழும்பவில்லை. பதவி பறிபோய்விடுமோ என்று அவ்வளவு பயம்!
எந்த வயதிலும், மமதையாலோ, பொறாமையாலோ பிறரை இழிவுபடுத்தி, வலுச்சண்டை போடுவது சிலரது வழக்கமாக இருக்கிறது.
வேறு சிலருக்கு இது நல்ல பொழுதுபோக்கு. பேரக்குழந்தைகள் பெற்றுவிட்ட இந்த தம்பதியைப் பாருங்கள்.
கணவர்: “உன்னைக் கல்யாணம் செய்துகொண்டதால்தான் எனக்கு இவ்வளவு வியாதிகள்!”
மனைவி (அயராது): “நம் கல்யாணத்தின்போது உங்களுக்கு எழுபது வயதா?”
குணமும் குழந்தைத்தனமும்
மகிழ்ச்சிகரமாக வளர்க்கப்படும் சிறுகுழந்தையின் கண்களைப் பார்த்தால், அதில் அப்பாவித்தனம், உண்மை தெரியும். (பயமோ, வருத்தமோ இருக்காது). அதற்குப் போலியாக நடிக்கத் தெரியாது.
வளர, வளர பல்வித இன்னல்களை அனுபவிக்க நேர்கிறது. வெளியுலகில் பழக்கமில்லாத அனுபவங்கள் வேறு. இதையெல்லாம் எப்படி ஒருவர் எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது குணாதிசயம் அமைகிறது. வயதானாலும் தன்னைச் சுற்றி நடப்பதில் அவருடைய ஆர்வம் குன்றாது இருக்கும்.
குழந்தைத்தனம் மாறாது இருப்பவர் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருக்கிறார். இது சிறுபிள்ளைத்தனம் இல்லை. எவ்வளவு சறுக்கினாலும் தன்னைத்தானே ஏற்பது.
கதை: கர்வம் குணக்கேடு
கண்ணபிரான் தலைமைப்பொறுப்பில் இருந்தார். பல கலைகளில் பாண்டித்தியம் உண்டு. அவரது புகைப்படம் பல முறை பத்திரிகையில் வெளிவந்திருந்தது.
அத்துடன் திருப்தி அடையாது, பத்திரிகை ஆசிரியரைக் கூப்பிட்டு, `அடுத்த இதழில் இந்த இடங்களில் என் படத்தைப் போடுங்கள்!’ என்று பணித்துவிட்டு, மூன்று முறை வந்த தன் படத்தைப் பார்த்து பெருமகிழ்ச்சியும் கர்வமும் அடைந்தார்.
அவரைப்போல் தன் பெயரையும் புகழையுமே பரப்பும் முயற்சிகளில் இறங்குகிறவர்கள் விரைவில் அவற்றை இழக்கிறார்கள். (`இவரா பண்பாளர்!’ என்று ஆசிரியர் வருந்தி எழுதியிருந்தார்).
“குணம் மரம் என்றால், நற்பெயர் நிழலாகும்” (ஆப்ரஹாம் லிங்கன்). ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.
கண்ணபிரானைப் போன்றவர்கள் தன்னைவிட சிறப்பானவர்கள் இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவும் விரும்புவதில்லை. பிறர் இவரிடம் காட்டும் மரியாதை பயத்தால் இருக்குமே தவிர, அன்பினால் இருக்காது.
பிறரை ஊக்குவித்து, அவர்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடையும் ஒருவரே தன்னைப்போன்ற நல்ல தலைவர்களை உருவாக்குகிறார்.
தொடருவோம்
-சற்குணா பாக்கியராஜ்
உலகத்தில் 330 வகை ஹம்மிங் பறவைகள் உண்டு. இவை வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் வாழ்கின்றன. இவைகளில் ஐந்து சதவிகிதம் மெக்ஸிக்கோவின் வட பகுதியில்
காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் பறக்கும் போது சிறகுகள் “ஹம்” என்ற ஒலியை எழுப்புவதால் “Hummingbirds” என்ற பெயரைப் பெற்றுள்ளன.
உலகத்திலுள்ள மிகவும் சிறிய பறவை, கியூபாவில் காணப்படும் Bee Hummingbird. இதன் எடை: 1/15 of an ounce நீளம்: அலகிலிருந்து வால் வரை- 1”. இதன் முட்டை காப்பிக் கொட்டையின் அளவு. ஹம்மிங் பறவையில் மிகப் பெரியது Giant Hummingbird. நீளம்: 8¼”
இந்தப் பறவைகளால் மாத்திரமே நீண்ட நேரம் சிறகுகளை முன்னும் பின்னும் வேகமாக அடித்துப் பூக்களிலிருந்து தேனை
எடுக்கவும் (hovering), பின்நோக்கிப் பறக்கவும் முடியும். இந்தப் பறவைகள் ஒரு நொடிக்கு இறக்கை அடிக்கும் எண்ணிக்கை ஒவ்வொரு வகையிலும் (species) வேறுபடுகிறது. உதாரணமாக Bee hummingbird ஒரு வினாடிக்கு 50-80 முறையும் Giant hummingbird வினாடிக்கு 16 முறையும் இறக்கைகளை அடிக்கின்றன.
ஹம்மிங் பறவைகள் பறக்கும்போது அதிக energy செலவிடப்படுவதால் பெரும்பான்மையான நேரம் மரக்கிளைகளிலும் மரக்குச்சிகளிலும் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றன. சில நேரங்களில் (உ.ம். குளிர்காலத்தில் இரவு நேரம்) physical activityஐக் குறைப்பதன் மூலம் (torpor) உடல் வெப்பத்தையும் இதயத் துடிப்பையும் குறைத்துக் கொண்டு energy-ஐ சேமித்து வைத்துக்கொள்கின்றன.
ஹம்மிங் பறவைகள் பூக்களிலுள்ள தேனை மட்டும் உண்ணாமல் சிறு பூச்சிகளையும் சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துசெல்லும் நேரங்களிலேயே சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு தடவை உணவு உண்கின்றன.
ஹம்மிங் பறவைகளின் உச்சந்தலை, தொண்டை, மார்பு
பகுதிகளில் மினுமினுப்பான இறகுகள் (iridescent) காணப்படுகின்றன. தொண்டையில் காணப்படும் மினுமினுப்பான இறகுகளை ”Gorget” என்று அழைக்கின்றனர். இந்த நிறங்கள் பார்ப்பவர்களின் கோணத்தைப் பொறுத்தது (angle). ஆண் ஹம்மிங் பறவை, தலையைப் பக்கவாட்டில் திருப்பும்போது இந்த நிறங்கள் சூரிய ஒளியில்பட்டுக் கண்ணைப் பறிக்கும் அழகுடன் மிளிருகின்றன. சூரிய ஒளிபடாத நேரங்களில் கறுப்பாகத் தோன்றும். ஏனென்றால் இந்த மினுமினுப்பான நிறம் (iridescence), இறகுகளிலுள்ள pigment-ஆல் ஏற்பட்டதல்ல இறகின் அமைப்பால் (structural) ஆகும். இந்த நிறங்கள் பெண் பறவைகளைக் கவருவதற்கும், எதிரிகளை எச்சரிப்பதற்கும் பயன்படுகின்றன.
ஆண் ஹம்மிங் பறவை, உணவு கிடைக்கும் இடங்களில் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக் கொண்டு பிற ஹம்மிங் பறவைகளையும் எதிரிகளையும் அருகில் நெருங்க விடுவதில்லை.
இனப்பெருக்கக் காலத்தில் ஆண் ஹம்மிங் பறவைகள் பெண் பறவைகளைக் கவர உயரத்தில் பறந்து சடுதியில் கீழ்நோக்கிப் பாய்ந்து (diving) வினாடிக்குள் மேல் நோக்கிப் பறந்தோ பெண் பறவையின் முன்நின்று முன்னும் பின்னும் பறந்தோ தொண்டைப் பகுதியில் உள்ள நிறத்தைக் காட்டுகின்றன.
ஆண் ஹம்மிங் பறவைகள் கூடு கட்டுவதிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் பொறுப்பு எடுப்பதில்லை. பெண் பறவை, சிலந்தி
வலை, மெல்லிய நார்கள், மிருகங்களின் ரோமங்களைக் கொண்டு கூடுகட்டி, இரண்டு முட்டைகள் இட்டு அடைகாக்கின்றன. இரண்டு வாரங்களில், கண்கள் திறக்காத நிலையில் குஞ்சுகள் வெளிவந்த பின் குஞ்சுகள் வளர்ந்து கூட்டைவிட்டு வெளியேறும் வரையிலும் தாயே உணவு ஊட்டி வளர்க்கிறது.
வலசைபோகும் ஹம்மிங் பறவைகள் கூட்டமாகப் பறப்பதில்லை. பிற பறவைகளின் முதுகில் அமர்ந்து செல்வதில்லை. தனியாகவே தங்கள் பயணத்தைத் தொடங்கி முடிக்கின்றன. பயணத்தைத் தொடங்கும்முன் பல நாட்கள் பெரும் அளவில் உணவு அருந்தி எடையை அதிகப்படுத்திக் கொள்கின்றன.
இந்த அழகிய பறவைகளுக்குப் பூனை, வல்லூறுகள் போன்ற எதிரிகள் உண்டு. இவைகளில் மனிதன்தான் பெரிய எதிரி!! பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காகப் பறவைகளின் இறகுகளைப் பயன்படுத்தினர். அந்தச் சமயம் தென் அமெரிக்காவில் கோடிக்கணக்கான ஹம்மிங் பறவைகள் கொல்லப்பட்டு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் சில வகை ஹம்மிங் பறவைகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டன.
பறவைகளின் இறகுகளை ஏற்றுமதிச் செய்ய அரசாங்கம் தடை விதித்ததால் இன்று தென் அமெரிக்காவில் ஹம்மிங் பறவைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
Within my garden Rides a Bird
Within my Garden, rides a Bird
Upon a single Wheel—
Whose spokes a dizzy Music make
As ’twere a travelling Mill—
He never stops, but slackens
Above the Ripest Rose—
Partakes without alighting
And praises as he goes
Emily Dickson (1862)
இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
-திருக்குறள் -900(பெரியாரைப் பிழையாமை)
புதுக் கவிதையில்…
அளவற்ற
ஆள் துணையுடையோராயினும்
அழிந்தொழிவர்,
சிறந்த தவநெறிமிக்க
பெரியோர்
சினம் கொண்டால்…!
குறும்பாவில்…
தவநெறிமிக்க பெரியோர் கோபமுற்றால்,
தாங்கிக்கொள்ளாது அழிந்திடுவர்
அளவற்ற ஆளுதவி கொண்டோரும்…!
மரபுக் கவிதையில்…
குறைவே யில்லா அளவினிலே
கூடும் உதவி ஆளிருந்தும்,
முறையே யில்லாச் சிறியோரெலாம்
முற்றிலும் சிதைந்தே அழிந்திடுவர்,
மறைகள் பலவும் கற்றாங்கே
முறைப்படி தவநெறி கொண்டோராம்
குறையிலா வாழ்வுடைப் பெரியோரவர்
கொள்ளும் அரிய கோபத்தாலே…!
லிமரைக்கூ..
தவநெறி பெரியோர்தம் கோபம்,
தக்க துணையாய்ப் பலரிருப்போரையும்
தாக்கி அழித்தொழிக்கும் சாபம்…!
கிராமிய பாணியில்…
நடந்துக்க நடந்துக்க
நல்லமொறயில நடந்துக்க,
நாலுந்தெரிஞ்ச பெரியவங்கக்கிட்ட
நல்லமொறயில நடந்துக்க..
ஒழுக்கம் நல்லதாக்கொண்ட
ஒயர்வான பெரியவங்க
கோவப்பட்டா,
அது
ஒதவிக்கு ஆள் நெறய
உள்ளவனயும்
ஒண்ணுமில்லாம அழிச்சிப்புடும்,
அவன்
உசிரயே எடுத்துப்புடும்..
அதால
நடந்துக்க நடந்துக்க
நல்லமொறயில நடந்துக்க,
நாலுந்தெரிஞ்ச பெரியவங்கக்கிட்ட
நல்லமொறயில நடந்துக்க…!
-செண்பக ஜெகதீசன்…
காவிரிமைந்தன் வணக்கமுடன் வரையும் மடல். நலம்.. நலமே நாடுகிறேன்!
வல்லமை இணைய தளத்தோடு இணைந்து நான் நடத்திய போட்டிகள் மூன்று..
1. என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று நூறு கட்டுரைகள் ஆக.. அவை ஒவ்வொன்றுக்கும் எனது பின்னூட்டம் சேர்த்து.. இந்தப் புத்தகத்தை..
01.07.2017ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் பிறைசூடன் வெளியிட்டார் கடந்த 29.06.2018ல் துபாயில் நடைபெற்ற கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் மறு வெளியீடு நடந்தது.

01.07.2018ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் பிறைசூடன் வெளியிட்டார் கடந்த 29.06.2018ல் துபாயில் நடைபெற்ற கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் மறு வெளியீடு நடந்தது.
2. மனதில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியை கமலம் ஷங்கர் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் சில பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று ஐம்பது கட்டுரைகள் ஆக.. எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு உருவான இந்த நூல் துபாயில் 12.01.2018 அன்று வெளியிடப்பட்டது.
3. கர்மவீரர் காமராஜர் – கட்டுரைகள் பெறப்பட்டு தமிழறிஞர் தமிழருவி மணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் சில கட்டுரைகள் பெற்று 45 கட்டுரைகள் ஆக.. உருவான இந்த நூல் துபாயில் 13.07.2018 அன்று வெளியிடப்பட இருக்கிறது.
வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நமது வல்லமை இணையதள நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
மூன்று புத்தகங்களும் இணைப்பில் உண்டு..
உங்கள் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றி உடையவனாக ஆவேன்.
கூடிய விரைவில் உங்களோடு இணைந்து மீண்டும் வல்லமையில் வலம் வருவேன்…
https://drive.google.com/file/d/1NwDBJXrFXeJ6DUT03MMPQYUSdqZZ9Xsg/view
https://drive.google.com/file/d/1ALNzy9SvabIpSNkqlh2EpaoIM-sJNTFJ/view
அன்புடன்…
காவிரிமைந்தன்
துபாய்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++++++++++++++++++++++
பிரபஞ்சத்தில் உயிரின மூலவிகள் பிறப்பு
உயிரினத் தோற்றத்தின் மூலவியான ஆரென்யே [RNA] உண்டாக பொரேட்ஸ் [Borates] முக்கிய பங்கு வகிக்கிறது. செவ்வாய்க் கோளில் போரான் [Boron] மூலகக் கண்டுபிடிப்பு உயிரினம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் என்பதற்கு மேலும் வழி காட்டு கிறது. பொரேட்ஸ் எளிய ஆரென்யே மூலக்கூறுகள் தோன்ற ஒருவகைப் பாலமாகக் கருதப் படுகிறது. ஆரென்யே இல்லை என்றால், உயிரனத் தோற்றமே உருவாக முடியாது. போரான் இருப்பு சொல்வது என்ன வென்றால், செவ்வாய்க் கோளில் கரி மூலக இரசாயனக் கலவை [Organics] காணப் படுவது, இவ்வித இரசாயன இயக்கங்கள் நடந்திருக்கலாம் என்பதே.
பாட்டிரிக் காஸ்டா [Postdoctoral Research Leader, Los Alamos National Laboratory]
செவ்வாய்க் கோளின் “கேல் ஆழ்குழியில்” [Gale Crater] போரான் மூலகக் கண்டுபிடிப்பு, உயிரினத் தோற்றம் ஒரு காலத்தில் இருந்துள்ளனவா என்று விஞ்ஞானிகளுக்கு சிறு ஆதாரங்கள் காட்டியுள்ளன.
3.8 பில்லியன் ஆண்டு வயதான செவ்வாய்க் கோளின் கேல் ஆழ்குழியில் நாங்கள் பொரேட்ஸ் [Borates] கண்டுபிடித்தோம். பூமியில் தோன்றிய உயிரினத்துக்கும் இளமையான உயிரினமே செவ்வாயில் இருந்திருக்க வேண்டும். முக்கியமாக இதன் மூலம் நாம் அறிவது என்ன வென்றால், செவ்வாய்க் கோளின் காலச் சூழ்வெளி அமைப்பு, பூமியோடு இணையாது, உயிரின வளர்ச்சி உருவாகத் தனி வசதி அளித்தது என்பதே.
பாட்டிரிக் காஸ்டா [Postdoctoral Research Leader, Los Alamos National Laboratory]
செவ்வாய்க் கோளில் கண்ட போரான் மூலகம் கால்சியம் ஸல்ஃபேட் தாதுவில் கண்டுபிடிக்கப் பட்டது. அதாவது போரான் செவ்வாய்க் கோளின் தரை நீரகத்தில் [Ground Water] இருக்கிறது. அதைக் கண்டுபிடித்த கருவி : ரோவர் தளவுளவியின் கெம்காம் [ChemCam] [chemistry & Camera]. 2020 ஆண்டில் நாசா ஏவப் போகும் செவ்வாய்த் தளவுளவி சுமந்து செல்லும் சூபர்காம் [SuperCam] & [SHERLOC] கருவிகள் பூர்வீக உயிரின மூல வசிப்புகள் வளர்ந்தனவா என்று ஆழமாக ஆராயும்.
பல்லாண்டுகளாக பல்வேறு விண்ணுளவிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி இந்தப் புதிரை விடுவித்துள்ளோம். இப்போது இந்தக் குளிர்மயப் பாலை நிலத்தில் திரவ நீர் ஓடுவதை, உறுதியாக நாங்கள் அறிந்து கொண்டோம். செவ்வாய்க் கோளைப் பற்றி மென்மேலும் ஆய்ந்து அறிவது, ஆங்கே உயிரின வாழ்வுத் தகுதி ஆதரவுக்கு வழி உள்ளதைக் கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத் தேடலில் எங்கே உயிரின வாழ்வுத் தகுதி வசதிகள் உள்ளன என்றும் தெரிந்து கொள்கிறோம்.
மைக்கேல் மேயர் [நாசா தலைமை விஞ்ஞானி, செவ்வாய்க் கோள் தேடல் திட்டம்]
செவ்வாய்க் கோள் நீரைப் பற்றிப் பெரும்பாலோர் சொல்லும் போது, அங்கே உறைந்திருக்கும் நீர் அல்லது பூர்வீகப் பனித்தள நீரைத்தான் குறிப்பிடுகிறார். இப்போது மேம்பட்ட வரலாறு உள்ளது தெரிகிறது. நாங்கள் மீளும் சரிவுப் போக்கு நீரோட்டங்கள் மூலமாக முதன்முதல் ஒளிப்பட்டைக் காட்சியாய் [Spectral Detection] திரவ நீரை ஐயப்பாடின்றி கண்டோம்.
லுஜேந்திரா ஓஜா [Lujendra Ojha, Georgia Institute of Technology, Atlanta, USA]
எமது செவ்வாய்க் கோள் வேட்கைக் குறிப்பணி, பிரபஞ்சத்தில் உயிரின மூலவிகள் இருப்பதை உளவு செய்ய நீரைத் தேடிச் செல்வதே. இப்போது நாங்கள் நீடிய காலம் ஐயுற்ற நீரிருப்பை உறுதியாக விஞ்ஞானச் சான்றுடன் அறிந்து கொண்டோம். செவ்வாய்ச் சரிவில் இன்று ஓடும் உப்பு நீரோட்டமாக இருந்த போதினும் இதுதான் இப்போது குறிப்பிடத் தக்க சிறப்பு கண்டுபிடிப்பாகக் கருதப் படுகிறது.
ஜான் கிருன்ஸ்ஃபெல்டு [நாசா விஞ்ஞானத் திட்ட ஆளுநர்]
நாங்கள் பருவகால நிகழ்ச்சியாகப் பரவிய ஈரடிப்பு உப்பு [Hydrated Salts] நீரோட்டங்களை மலைச் சரிவுகளில் மீளும் நேர்போக்கில் செல்லக் [Recurring Slope Lineae] கண்டோம். இந்தக் கருநிற நெளிவுச் சிற்றாறுகள் ஈரடிப்புக் காரணமாக [Dark Streaks are sources of Hydration] இருக்கக் கூடும்.
லுஜேந்திரா ஓஜா [Lujendra Ojha, Georgia Institute of Technology, Atlanta, USA]

சூனியச் செவ்வாய்க் கோளில் வேனிற் கால உப்பு நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு
2015 செப்டம்பர் 28 ஆம் தேதியில் நாசாவின் மேவன் விண்ணுளவி [MAVEN Spacecraft] முதன்முதல் உறுதியாகச் செவ்வாய்க் கோளின் மலைச் சரிவுகளில் மீளும் வேனிற் காலத்து உப்பு நீரோட்டச் சிற்றோடைகளைப் [Recurring Slope Lineae] படமெடுத்துக் காட்டியுள்ளது. பல்லாண்டுகளாக பல்வேறு விண்ணுளவிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி இந்தப் புதிரை விடுவித்துள்ளார். இப்போது அந்தக் குளிர்மயப் பாலை நிலத்தில் திரவ நீர் ஓடுவதை, உறுதியாக அறிந்து கொண்டுள்ளார். செவ்வாய்க் கோளைப் பற்றி மென்மேலும் ஆய்ந்து அறிவது, ஆங்கே உயிரின வாழ்வுத் தகுதி ஆதரவுக்கு வழி உள்ளதைக் கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத் தேடலில் எங்கே உயிரின வாழ்வுத் தகுதி வசதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ளவும் வழி வகுக்குகிறது.
குறுகிய பல திரவ நீரோட்டங்கள் கருமை நிறத்தில் சுமார் 100 மீடர் [300 அடி] நீளத்தில் செவ்வாய்க் கோள் சரிவை நோக்கிப் பாயும் சிற்றோடை களாய்க் காணப்பட்டன. நீரோட்டமே செதுக்கிய நீரோடைகள் அவை. சமீபத்தில் அண்டக்கோள் விஞ்ஞானிகள் [Planetary Scientists] ஹேல் பெருங்குழிச் சரிவுகளில் [Hale Crater Slopes] ஈரடிப்பு உப்புகள் [Hydrated Salts] இருப்பதைக் கண்டனர். அவையே சிற்றோடைகள் திரவ நீரோட்டத்தால் செதுக்கப் பட்டவை என்பதை எடுத்துக் காட்டின. ஒளிப்பட்டை நீல நிறமாகத் தெரிவதின் காரணம், பைராக்சின் தாதுக்கலவை [Pyroxene Mineral]. அவை ஒருவிதப் பெர்கோலேட் தாதுக்கள் [Magnesium Percholate or A Mixture of Magnesium & Sodium Percholates]. கோடைக் காலத்தில் திரவ நீரோட்டம் பொங்கித் தணிவதும் தெரிந்தது. குளிர் காலத்தில் நீரோட்டம் அடங்கிச் சிற்றோடைகள் வெறுமையாயின. அவ்விதம் நீரோடும் சிற்றோடைகள் செவ்வாய்க் கோளின் பல இடங்களில் மைனஸ் 10 F [- 23 C] டிகிரிக்கு மேலாக உள்ள போது தெரிந்து, குளிர் காலத்தில் மறைந்து போயின. தற்போது [அக்டோபர் 2015] செவ்வாய்க் கோளில் பல டஜன் தளங்களில் கோடைக் காலத்தில் இம்மாதிரித் திரவ நீரோட்டச் சிற்றோடைகள் காணப் பட்டுள்ளன. அடுத்து செவ்வாய்த் தள ஆய்வுகள் இதுபோன்ற ஈரடிப்பு ஓடைகளில் உயிரின இம்மிகள் உள்ளனவா என்பதாக இருக்கும்.
+++++++++++++++++++++
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
http://article.wn.com/view/

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.
ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]
செவ்வாய்க் கோளின் பனித்திரட்சி [Mars Glacier] அளவைக் கணித்ததில் அதன் கொள்ளளவு 150 பில்லியன் கியூபிக். செ.மீ. என அறிந்தோம். அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்பினால் 1.1 மீடர் [3 அடி] தடிப்பு பனித்தள வடிவம் பெறும். இந்த பனிக்கடி ஏரிகள் யாவும் செவ்வாய்க் கோளின் வடதென் பகுதிகளின் நடுப்புறத்தில் அமைந்துள்ளன.
நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர்]
செவ்வாய்க் கோள் தளத்தில் ரேடார் கருவி மூலம் சேகரித்த பத்தாண்டுக் கால பனிக்களத் தடிப்பையும், அதன் நடப்பையும் ஆழ்ந்து ஆராய்ந்தோம். பனித்திரட்சி [Glacier] என்பது ஒரு பெரும் பனிக்குன்று. அதற்கென தனித்த பனித்தள ஓட்டத் தடமும், தோற்ற வரி வடிவமும் உண்டாகி, எமக்கு அதன் மென்மைத் தன்மையைக் காட்டுகிறது. இவ்வரிப் படங்களை பூமியின் பனித்திரட்சி [Earth’s Glaciers] வரை படங்களோடு ஒப்பிட்டு, நாங்கள் பனித்தள ஓட்ட கணினி மாடல்களை அமைக்கிறோம்.
நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர், நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்.
செவ்வாய்க் கோள் தளத்தில் செய்த புதிய ஆய்வு அறிவிப்பு
2015 ஏப்ரல் 9 ஆம் தேதி “இயற்கை” [Nature] விஞ்ஞான இதழ் அறிவிப்பு மூலம் டென்மார்க் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகக் காலநிலை அறிவியல் பனித்திரட்சி நிபுணர் [Climatologist & Glacier Expert ] நன்னா கார்ல்ஸன் தெரிவிப்பது : செவ்வாய்க் கோளில் புதைந்துள்ள பனிதிரட்சிக் குன்றுகள் [Mars Buried Glaciers] பேரளவு பனிக்கட்டியைக் கொண்டுள்ளன. அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்ப முடிந்தால், பனி மூன்றடி [1.1 மீடர்] உயரம் தடிப்பாகும் ! மேலும் மூடிய தூசிக்குக் கீழிருக்கும் பனித்திரட்சி வளையங்களில் [Glacier Belts] உள்ளது உறைந்த நீரே [Frozen Water] தவிர அது உறைந்த கார்பன் டையாக்சைடு இல்லை [Not Frozen CO2] என்பது தெளிவானது. செவ்வாய்க் கோளின் செந்நிறத் தூசி, பனித்திரட்சியை மூடி, உறைந்த பனிநீர் பரிதி வெப்பத்தில் ஆவியாக மறைய விடாது தடுத்து வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.

“நீர் இருப்பு உயிரின வளர்ச்சிக்கு மிக முக்கிய மென்று நாமறிவோம். செவ்வாய்க் கோளில் நாங்கள் இப்போது கண்டிருப்பது வெறும் நீர் மட்டுமில்லை; அதற்கும் மேற்பட்ட பொருட்கள்: நமது உடலில் காணும் உயிர் வளர்ச்சிச் சத்துக்களான ஸோடியம், பொட்டாஸியம், மெக்னீஸியம், ஃபுளுரைடுகள் ! ஆயினும் உயிரின விருத்திக்கு ஆதாரமான ஆர்கானிக் மூலக்கூறுகள் இன்னும் செவ்வாயில் காணப்பட வில்லை ! இனிமேல் திட்டமிடும் நாசாவின் அடுத்த பயணம் செவ்வாயில் உயிரினம் வாழ்ந்து வந்திருக்கிறதா என்று கண்டறியச் செல்லும்.”
“மேலும் இந்த தளப்பகுதி செவ்வாயில் எதிர்காலப் பயணிகள் குடியிருக்கத் தகுதி உள்ளதா என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியும். அது நாசாவின் எதிர்காலப் பயணத் திட்டத்தில் ஒன்றாக இருக்கும்.”
பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.
“இறுதியில் நாங்கள் செவ்வாய்த் தள மண்ணை ஆராய முடிந்து அதில் ஒட்டி இருப்பது உறைந்த நீரென்று உறுதிப் படுத்தினோம். மேலும் நீரான அதைத் தொடவும், சுவைக்கவும் முடிந்தது ! இதற்கு முன்பு சாதிக்காத ஒரு சோதனை அது ! அதன் சுவை மிக்க இனிமையானது ! இதைக் கண்டதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம்.
வில்லியம் பாய்டன், ஃபீனிக்ஸ் விஞ்ஞானி, அரிஸோனா பல்கலைக் கழகம். [ஜூன் 2, 2008]
“ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது. தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது. ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது.”
டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

“செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம். எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன் படுத்தவும் முடியுமென நினைக்கிறேன். அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன். செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை! முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”
மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]
21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் மகத்தான விண்வெளிக் கண்டுபிடிப்பு
ஆகஸ்டு முதல் தேதி செவ்வாய்க் கோள் தளத்தில் உள்ள பனித் திரட்டுகளை உருக்கி நீரென்று நிரூபித்து நாசாவின் ஃபீனிக்ஸ் விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் ஒரு மகத்தான பொன் மைல் கல்லை நிலைநாட்டினார் ! இதுவரை அது நீர்ப்பனிக் கட்டியா அல்லது உறைந்த கார்பன் டையாக்ஸைடு வாயுக் கட்டியா என்னும் குழப்பத்தில் இருந்தது. இப்போது அந்து ஐயமின்றி 100% நீர் என்பது உறுதியானது ! ஃபீனிக்ஸ் தளக்கருவி பனிக்கட்டியை உருக்கி நீரென்று சுவைத்துப் பார்த்து விட்டது என்று விஞ்ஞானிகள் பீடும், பெருமிதமும் கொள்கிறார் ! இந்த மகத்தான வெற்றி நாசாவுக்கு ஃபீனிக்ஸின் ஆய்வுக் காலத்தை இன்னும் ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டாலர் செலவில் நீடிக்க (செப்டம்பர் 30 தேதி வரை) அனுமதி கிடைத்துள்ளது ! செந்நிறக் கோள் செவ்வாயில் நீர் இருப்பது மெய்ப்பிக்கப் பட்டாலும் ஆங்கே உயிரினம் விருத்தி அடைந்ததற்குரிய சான்றுகள் இன்னும் கிடைக்க வில்லை !
ஓராண்டு முன்பு ஏவப்பட்ட ஃபீனிக்ஸ் தளவுளவி விண்கப்பல் செவ்வாய்க் கோளில் நீர் இருக்கிறதா என்று அறியவும், உயிரின மூலவிகளை வளர்க்கும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் (Complex Organic Molecules) உள்ளனவா என்று தெரிந்து கொள்ளவும் அனுப்பப் பட்டது. அதற்கும் முன்னால் சென்று செவ்வாய்க் கோளைச் சுற்றிய ஆடிஸ்ஸி விண்கப்பல் (Odyssey Spacecraft) ஃபீனிக்ஸ் தளவுளவி இறங்கப் போகும் களத்தில் பனிக்கட்டிகள் உருகுவதைப் படமெடுத்து அனுப்பியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாய் இறங்கிய ஃபீனிக்ஸ் தளவுளவி செவ்வாய்த் தள மண்ணை அள்ளி இரசாயன ஆய்வுக் கருவியில் இடும் அகப்பையைக் கொண்டது.
ஃபீனிக்ஸ் தளவுளவி நச்சு மூலக்கூறு (Toxic Molecule) கண்டது
நாசா விண்தேடல் விஞ்ஞானிகள் செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவியின் மெக்கா கருவி [Microscopy, Electrochemistry, Coductivity, Analyzer (Meca)] ஒரு நச்சுப் பொருளைக் கண்டுள்ளதாகக் கூறினார். ஆகஸ்டு 5 ஆம் தேதி தளவுளவியின் அகப்பை எடுத்த மாதிரி மண்ணில் இரசாயனத் தீவிர இயக்கமுடைய பெர்குளோரேட் (Perchlorate) உப்பு கலந்திருப்பதாகக் கண்டது. மேலும் அந்த இரசாயனப் பொருள் மற்ற இடத்திலும் பரவி உள்ளதா என்று அறியப்படும். பூமியில் மிக்க வறட்சியான பாலைவனப் பகுதிகளில் பெரும்பாலும் அந்த பெர்குளோரேட் இரசாயனம் காணப்படுகிறது. செவ்வாய்த் தளத்தை ஒத்த தென் அமெரிக்கா சில்லியின் அடகாமா பாலைவனத்தில் (Atacama Desert, Chille) அது இருப்பதாக அறியப்படுகிறது.
பெர்குளோரேட் உப்பு உயிரினத்தை விருத்தியும் செய்யாது, சிதைக்கவும் செய்யாது. அது ஓர் ஆக்ஸிடைசிங் அயான் (Oxydising Ion). அதில் ஒரு குளோரின் அணுவை, நான்கு ஆக்ஸிஜென் அணுக்கள் சுற்றி உள்ளன. அது இரசாயன இயக்கத்தில் ஆக்ஸிஜன் வாயுவை வெளியாக்குகிறது. ஆனால் அதிலிருந்து குளோரின் வாயு வரவில்லை. சில உயிரினச் செல்கள் பெர்குளோரேட்டைத் தீனியாய் எரிக்கின்றன. சில பயிரினங்கள் அதனைத் தம்முள்ளே சேமித்து வைக்கின்றன. முக்கியமாக பூமியில் ராக்கெட் உந்திச் செல்ல பெர்குளோரேட் இரசாயனம் எரிசக்தியில் (Used in Rocket Fuel) பயன்படுகிறது.
பூமியில் வாயுத் தூசிகள் சூரிய ஒளியில் பட்டு பெர்குளோரேட் மூலக்கூறு உருவாக்கப் படுகிறது. பிறகு அது வரண்ட தளத்தின் மீது தங்கி விடுகிறது. ஈரமான அரங்குகளில் அது மண்ணுக்குள் இறங்கிக் கொள்கிறது. பூமியில் சில வித பாக்டீரியாக்கள் தமது உயிர்ச்சத்து மாறுபாடுக்கு (Metabolism) பெர்குளோரேட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன ! “பெர்குளோரெட்டுகள் செவ்வாய்க் கோளின் தளங்களில் நீரிருந்த வரலாற்றைச் சொல்லும்,” என்ற் ஃபீனிக்ஸ் ஆய்வாளர் ரிச்சர்டு குயின் (Richard Quinn) கூறினார்.
செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவி கண்ட முதல் பனித்திரட்டு !
2008 மே மாதம் 30 ஆம் தேதி சமீபத்திலே 420 மில்லியன் டாலர் திட்டமான செவ்வாய்க் கோளில் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி புதியதோர் விந்தைத் தகவலைப் பூமிக்கு அனுப்பியிள்ளது ! “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி ! மெய்யாக ஃபீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப் பட்டது. அதாவது விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி ஃபீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது ! மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்ட முள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அடுத்து ஃபீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது. அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி ! அதனுடைய வடிவத்தைக் கண்டு, அது காணப்பட்ட காலநேர உஷ்ண நிலையை [-300 C (-220 F)] ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மாதிரிப் பனிக்கட்டி நீராக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.
ஃபீனிக்ஸ் எதிர்த்தள்ளி உந்துகள் இயங்கிக் கீழே மெதுவாக இறங்கிய போது மேலாகக் கிடந்த செம்மண்ணை வெளியேற்றித் தோண்டிய 6 செ.மீ. (~2.5 அங்குலம்) ஆழப் பள்ளத்தில் பனிக்கட்டி மாதிரி எடுக்கப்பட்டது. அவ்விதம் தளவுளவியின் கரத்தில் எடுக்கப்பட்டு முதன்முதலில் கண்களில் தெரிந்த பனிக்கட்டி விஞ்ஞானிகளிடையே உற்சாகக் கொந்தளிப்பைத் தந்திருக்கிறது. புதிய உலகில் குளிர்ந்த சுத்தமான நீர்க் கண்டுபிடிப்பு மனிதப் பயணத்துக்கும், குடியேற்றத் துக்கும் மிகவும் உதவிடும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அதிசயச் செய்தியாகும். திட்டமிட்டபடித் தளவுளவி பனித்தளத்தில் தடம் வைக்காது வேறு வேண்டாத பாறைத் தளத்தில் பாதம் பதித்து விட்டதோ என்றோர் ஐயப்பாடு முதலில் எழுந்தது ! அடுத்து அறிந்த தகவலில் தளத்தின் எதிரொளிப்புத் தன்மைகள் உளவப் பட்டு வெண்ணிறப் பனித்தளம் பளிச்செனத் தலைகாட்டி விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தது. அந்தப் பனித்திரட்டு பனிநீர்க்கட்டியாக இருக்கக் கூடும் என்று தீர்மானிக்கப் பட்டது ! “இன்று என்ன சேதி” என்று கேட்டால் எந்த நாசா விஞ்ஞானியும் “செவ்வாயில் நீர்ப்பனிக் கட்டியைக் கண்டோம்” என்றுதான் சொல்கிறார். இந்த பனித்தள இடத்தைதான் நாசா விஞ்ஞானிகள் உன்னதப் படமெடுப்புக் காமிரா மூலம் [High Resolution Imaging Science Experiment (HiRISE Imager of Mars Orbiter)] முன்னால் விண்ணுளவிக் கப்பல் மூலம் தேர்ந்தெடுத்தனர்.
செவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன. துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும். நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது. ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப்படுகிறது. துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.
பனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம். செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது. அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே !
செவ்வாய்க் கோளின் துருவப் பனிப் பாறைகள்
செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது! துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வறட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.
அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அளவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வறட்சிப்பனி [Dry Ice or Frozen Carbon dioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

(தொடரும்)
***********************
தகவல்:
Picture Credits: NASA, JPL, ESA & Wikipedia
1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
4 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
6 http://www.thinnai.com/?
[Author’s Article on Mars Missions]
7 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
8 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
9 Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
10 http://www.Space.com/
11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007]
15 Phoenix Mission Control Team Poised for Epic Landing on Mars Planet – The Dailey Galaxy (www.dailygalaxy.com/) [May 23, 2008]
16 http://www.thinnai.com/?
17 http://www.thinnai.com/?
18. BBC News – Mars Lander is in Good Health [May 27, 2008]
19 The New York Times – Mars Lander Transmits Photos of Arctic Terrain [May 27, 2008]
20 RedOrbit News – Phoenix Lander Spotted from Mars Orbiter (www.redorbit.com) [May 28, 2008]
21 Future Mission to Mars – Follow on Mars Missions / Mars Sample Return [May 28, 2008] (www.vectorsite.net/tampl_08.
22 CNN News : Pictures Boost Hopes for Mars Ice Discovery [May 31, 2008]
23 NASA’s Phoenix Lander Robotic Arm Camera Sees Possible Ice [May 30, 2008]
24 Twittering from Mars – The Phoenix (Mars Lander Probe) on Ice [June 3, 2008]
25 Phoenix Lander’s Robotic Arm Grabs a Scoop of Mars (Soil) [June 2, 2008]
26 VOA News : Phoenix Spacecraft Confirms Water on Mars By : Art Chimes Washington DC [Aug 1, 2008]
27 VOA News : NASA’s Phoenix Lander Finds Toxic Chemical on Mars [Aug 5, 2008]
28 Phoenix Mars Team Opens Window on Scientific Process [Aug 5, 2008]
29 BBC News : Open Science Promised for Phoenix [Aug 6, 2008]
30 The New York Times : Alkaline Soil Sample from Mars Reveals Presence of Nutrients for Plants to Grow [June 27, 2008]
31 http://www.thinnai.com/?
32 http://www.thinnai.com/?
33 ABC News : Phoenix Lander Finds Water on Mars [Aug 1, 2008]
34 Water on Mars Discovered by Phoenix Mission [Aug 5, 2008]
35 Sky & Telescope Magazine – Phoenix Digs in By : Kelly Beatty [September 2008]
36. http://www.sciencedaily.com/
37. http://www.marsdaily.com/
38. http://www.onenewspage.
39. http://www.sciencedaily.com/
40. http://phys.org/news/2015-04-
41. http://www.marsdaily.com/
42. http://www.marsdaily.com/
43.http://www.marsdaily.com/
44. http://www.dailygalaxy.com/
45. http://www.dailygalaxy.com/
46. http://www.mhttp://
47. http://www.dailygalaxy.
48. https://en.wikipedia.org/
49. http://www.dailygalaxy.com/
50. http://mars.jpl.nasa.gov/mro/
51. https://en.wikipedia.org/
52 http://www.poandpo.com/in-
53. https://www.space.com/
54. http://ca.pressfrom.com/
55. http://www.dailygalaxy.
57. http://www.spacenewsfeed.
58. http://spaceref.com/mars/
59 https://www.wsj.com/
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] [July 29, 2018 [R-2]

பூதனை ஈமத்தீ பாலனருள் கொண்டெழ
வேதனைக்கு கண்ணபிரான் வைகுண்டம் -மாதவள்
நஞ்சுப்பால் தந்தும் நவனீதம் போலேற்று
வஞ்சகிக்கும் மோட்ஷ விருந்து….!
(அல்லது)
நச்சுப்பால் தந்தும் நவனீதம் போலேற்று
அச்சுதர் மோக்ஷம் அளிப்பு….கிரேசி மோகன்….!
காப்பு
——–
சைவதிற்(கு) ஆண்டாள், சிவனின் மனம்புரிந்த
மொய்விரித்தக் கூந்தலால் மேனிமூடும் -தெய்வத்தாய்
அக்கமகா தேவியே அம்மல்லி கார்ஜுனரை
சொக்கவைத்தத் தோழி சரண்….(0)….23-9-2010
——————————————————————
மனத்தலையைக் கொய்து மயானத்தில் நித்தம்
தனித்தலையும் தேவாதி தேவன் -பனிதலையன்
சென்னமல்லி கார்ஜுனன் சேவடி சேர்ப்பிக்க
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(1)….23-9-2010
கோலுக்குக் குரங்காக நூலுக்கு பொம்மையாய்
தோலுக்குள் ஆடுகிறான் தாண்டவம் -மேலுக்கு
சென்னமல்லி கார்ஜுனன் சொன்னபடி ஆடினால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(2)….23-9-2010
கரங்களில் ஓடு கிராமத்தில் பிச்சை
கிறங்கிட பாழடைந்த கோயில் -குரங்கென
சென்னமல்லி கார்ஜுனனை சிக்கென்(று) அணைத்திட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(3)….23-9-2010
கணுவில் கசப்பாய் கரும்பில் இனிப்பாய்
அணுவிற்குள் அண்டத்தை ஆளும் -குணவானாம்
சென்னமல்லி கார்ஜுனனை என்னசொல்லிச் சேர்ந்தாலும்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(4)….23-9-2010
மன்ணில் புதையலாய் மாங்கனியில் தீஞ்சுவையாய்
உன்னில் உணர்வாய் ஒளிந்தமுக் -கண்ணனவன்
சென்னமல்லி கார்ஜுனரின் சர்வ வியாபகமே
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(5)….23-9-2010
புல்லினோடு பச்சையாய் பூவினோடு வாசமாய்
கல்லினோடு கெட்டியாய்க் குந்தியவன் -‘எல்லிநோடு’
சென்னமல்லி கார்ஜுனரை சிந்தை நினைந்திட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(6)….23-9-2010
மன்றாடி வாழ்வோர்க்கும், அன்றாடங் காய்ச்சிக்கும்
தின்றாடி தீர்ந்தபின் துக்கம்தான் -மன்றாடி
சென்னமல்லி கார்ஜுனராம் அன்னமள்ளி உண்டிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(7)….23-9-2010
சாவில் பறிபோகும் சாசுவதம் எல்லாமே
ஆவி பிரியும்முன் அக்கமகா -தேவியின்
சென்னமல்லி கார்ஜுனரை சென்னியள்ளிச் சூடிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(8)….23-9-2010
கூத்தாடும் வேளையில் கோவணம் போனது
தோத்தாடும் நேரத்தில் தான்தெரியும் -மாத்தாடு
சென்னமல்லி கார்ஜுனரின் கன்னலொலி நாமத்தை
உன்னையள்ளுக் கொள்ளும் உவப்பு….(9)….23-9-2010
திகம்பர ஆடை திருநீறு வாடை
அகம்புறத்தில் நீராடும் மேடை -சுகம்பெறும்
சென்னமல்லி கார்ஜுனரின் சாரணர்க்கு சேவகம்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(10)….23-9-2010
சூரணம் ஆயிரம் சூழப் படுக்கையில்
தேறணும் தேகமென்று தேம்பிடாது -நீறணி
சென்னமல்லி கார்ஜுனனின் எண்ணிலாத பேர்சொல்ல
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(11)….24-9-2010
உமிக்குநீர் ஊற்ற உயருமோ நெல்லாய்!
குமித்த பழவினைகள் குன்றும் -நிமித்தமாய்
சென்னமல்லி கார்ஜுனரின் எண்ணமல்லி வாசத்தால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(12)….24-9-2010
வாழை வனம்புகுந்து பாழும் வினைகளைந்து
ஆழ வசனித்த அக்கம்மா -தோழனாம்
சென்னமல்லி கார்ஜுனரை சிந்திக்க சித்திக்கும்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(13)….25-9-2010
தேடிக் களைத்துள்ளம் வாடி வதங்கிட
கோடிக்கை கொண்டாலும் காட்டிடுவான் -வேடிக்கை
சென்னமல்லி கார்ஜுனரின் சேவடி ஜோடிதான்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(14)….25-9-2010
நெய்தடவும் மீசையும் பொய்தடவும் பாஷையும்
மைதடவும் மங்கையும், மூப்புற -கைவிடுமே!
சென்னமல்லி கார்ஜுனரால் சின்னவய சாகிடுவாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(15)….26-9-2010
உடம்பை வளர்த்து உயிரை தளர்த்த
இடம்பிடிப்பாய் ஸ்ரீசைல ஈசன் -குடும்பத்தில்
சென்னமல்லி கார்ஜுனம் சொன்னவண்ணம் ஊர்ஜிதிக்க
உன்னயள்ளிக் கொள்ளும் உவப்பு….(16)….26-9-2010
வெக்கமென்ன மானுடா அக்கமகா தேவியின்
சக்களத்தி ஆகிநீ சண்டையிடு -அக்கணமே
சென்னமல்லி கார்ஜுனம் என்னதிது என்றுவர
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(17)….26-9-2010
காமனிடம் கால்பிடித்துக் கெஞ்சாதே, கையேந்தி
சோமனிடம் பிச்சைக்குச் செல்லாதே -ஷேமமாய்
சென்னமல்லி கார்ஜுனர்முக் கண்ணசையக் காதலாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(18)….27-9-2010
பொய்யடைத்துப் பேசி பொருள்குவித்துப் போகுங்கால்
கையெடுத்துப் போகுமோ கூன்முதுகா -உய்படுத்து
சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் நிம்மதியாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(19)….27-9-2010
ஆர்ப்பரித்து ஓடிவந்த ஆகாச கங்கையின்
நீர்பரப்பை வார்சடையால் நேர்படுத்தி -பார்விடுத்த
சென்னமல்லி கார்ஜுனரின் சீதளம் சீர்படுத்த
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(20)….27-9-2010
திருநீறு மஞ்சள், திகம்பரம் ஆடை
குருபாத தீர்த்தம் குளியல் -மறுநாளை
சென்னமல்லி கார்ஜுனரின் சித்தமென்று சாய்ந்திருக்க
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(21)….28-9-2010
சொப்பன வாழ்விது கொப்பள நேரம்தான்
எப்போ(து) உடையுமென்(று) யாறிவார் -அற்புதம்
சென்னமல்லி கார்ஜுனன் சுண்டு விரலசைய
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(22)….28-9-2010
வசமான லிங்க எசமானன் மீது
பசவண்ணன் சிஷ்யை புகன்ற -வசனத்தை
சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் செப்பிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(23)….28-9-2010
மாற்றான் வனச்சென்ன மல்லியே ஆனாலும்
நோற்றாளக் கம்மா நமக்காக -போற்றுஅச்
சென்னமல்லி கார்ஜுனரை சொன்ன வசனத்தால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(24)….28-9-2010
ஏகனை, தேவியுமை பாகனை, தேவாரப்
பாகனை, அக்கம்மா ராகனை, -மோகனை
எண்ணியிரு பத்தைந்து பண்ணிசைக்கச் சொன்னவனை
சென்னமல்லி கார்ஜுனனைச் சூடு….(25)….29-9-2010
—————————————————————————————