Blog

  • மீனாட்சி திருக்கல்யாணம்….!

     

    ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
    பூசலா நாயனார் போலவே -யோசனையில்
    கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
    குண்டு குமாரனே(பிள்ளையார்) காப்பு….(1)….

    ———————————————————-
    கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
    —————————————————-

    சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
    அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
    மீண்டுமவன் காண மதுரையில் மீனாட்சி
    ஆண்டவன் கல்யாணம் ஆம்….(2)….

    பெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்
    ———————————————————–

    மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
    மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
    மேனாள் இமவான் மகளான மாதங்கி
    மீனாளாய் வந்த மலைப்பூ….(3)….

    நிச்சயதார்த்தம்
    ———————

    சித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு
    இத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,
    தத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,
    முத்தண்ணா செய்தார் மணம்….(4)….

    கல்யாணப் பத்திரிகை
    ——————————–

    சித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்
    இத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு
    பின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு
    கன்னிகா தானம்சொக் கர்க்கு….(5)…

    கல்யாணச் சத்திரம்
    ————————-

    அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
    சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
    பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
    வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(6)….

    சீர் வரிசை
    ————–

    பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
    வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
    குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
    மச்சினர் மல்லாந்த மால்….(7)….

    வரதட்சிணை
    —————

    குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
    அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
    மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
    பாலாழிக் கண்ணஅம் பேல்….(8)….

    ஜான்வாசம்
    ————–

    சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
    நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
    அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
    உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(9)….

    கண்ணூஞ்சல்
    —————–

    கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
    விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
    மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
    கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(10)….

    மாப்பிளைக் கண்ணுக்கு மையிடுதல்
    ———————————————-

    மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
    தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
    மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
    வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(11)….

    காசியாத்திரை-மாப்பிள்ளைத் தோழன்
    ———————————————-

    யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
    மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
    காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
    ஈசன் விளையாடல் இது….(12)….

    சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
    விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
    மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
    ஆலவாய் காசிநகர் ஆச்சு….(13)….

    சம்பந்தி சண்டை
    ———————

    சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
    விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
    கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
    தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(14)….

    மாப்பிள்ளை-முறுக்கு
    ————————-

    குனித்த தலையாய், குதிகால் நடையாய்
    பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
    புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
    முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(15)….

    மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
    மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
    ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
    மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(16)….

    கன்னிகாதானம்
    ——————-

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு….(17)….

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து….(18)….

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(19)….

    அம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்
    ————————————————

    சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
    வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
    அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
    விம்மிஆ னந்தநீர் விட்டு….(20)….

    கல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்
    ————————————————

    கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
    கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
    பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
    இல்லையொண் ணாத இனிப்பு….(21)….

    கல்யாணச் சாப்பாடு
    —————————-

    உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
    தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
    கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
    வைகை விரைந்தாள் வளைந்து….(22)….

    மொய் எழுதுதல்
    ——————–
    மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
    காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
    மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
    பையேந்தி நிற்பார் பணிந்து….(23)….

    நலங்கு
    ———

    விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
    விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
    கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
    அண்டத்துக் கோளை அளிப்பு….(24)….

    மாலை வரவேற்பு
    ——————–

    மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
    அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
    ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
    கூடலுக்குக் கூடுதல் கூத்து….(25)….

    சாந்தி முகூர்த்தம்
    ———————–

    முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
    மதுரைவாழ் மக்களின் மாண்பு –
    பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
    மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
    வீட்டோட மாப்பிள்ளை வாள்….(26)….

    இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
    நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
    என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
    அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(27)….

    பாலிகை கரைப்பு
    ———————–

    மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
    பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
    மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
    கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(28)….

    கட்டுச் சாதக் கூடை
    —————————

    கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
    அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
    கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
    கட்டுச்சா தக்கூடை கண்டு….(29)….

    மலயத்துவசன் பிரிவோபசாரம்
    —————————————

    கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
    அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
    துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
    கவசமே கூடலைக் கா….(30)….

    சிவசிவ என்று சிரத்தில் மலையத்
    துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
    கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
    நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(31)….

    கோயிலுக்குல் புகுதல்
    —————————-

    சித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்
    சுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்
    கருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை
    அரஹர சம்போவென்(று) ஆர்ப்பு….(32)….

    பல ஸ்ருதி
    ————-

    மாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த
    போதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி
    கொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்
    விண்டதெலாம் வாணியவள் வாக்கு….(33)….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 11

    -மேகலா இராமமூர்த்தி

    எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெற்றிட விரும்புவது மனித மனம். அதற்கு அடிப்படைத் தேவை முயற்சியும் உழைப்பும்.

    ”உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?” என்பார் பட்டினத்தடிகள்.

    ”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்” எனும் வள்ளுவம், விடாது முயலும் மக்கள் தமக்குச் சாதகமாயில்லாத விதியையும் வென்று சாதனை படைப்பர் என்கிறது.

    அத்தகு ’தாளாண்மை’யின் தகைமையை நாலடியும் விதந்தோதவே செய்கின்றது.

    துவள்கின்ற இளங்கொம்பாகி வழியிடையே நின்ற சிறுமரங்கூட உள்வயிரங் கொண்டு முற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரிய கட்டுத்தறியாக உதவும். ஒருவன் தன்னுடைய முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற் செய்துகொண்டு வாழ்க்கையிற் பெருமை கொள்ளுதலும் அத்தகையதே.

    ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
    காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்
    வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
    தாழ்வின்றித் தன்னைச் செயின்.
           (நாலடி – 192)

    எளிய நிலையிலுள்ளோரும் தம் விடாமுயற்சியால் தம்மை ஆற்றலுடையவராகச் செய்துகொள்ளல் வேண்டும் என்பதே இதன்வாயிலாய் நாமறியும் உண்மை.

    பிறப்பின் அடிப்படையில் நல்ல குலம், தீய குலம் என்பதெல்லாம் வெறும்  சொல்லளவில் தானேயன்றி அதற்குப் பொருளில்லை என்கிறது நாலடியார். பின் நல்ல குலம் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது எனும் நம் ஐயத்திற்கும் அதுவே தக்கதொரு விடை பகர்கின்றது.

     நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
    சொல்லள வல்லாற் பொருளில்லை – தொல்சிறப்பின்
    ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
    என்றிவற்றான் ஆகும் குலம்.
         (நாலடி – 195)

    நல்ல குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையுடைய செல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும். ஆகலின், தவம் கல்வி ஆள்வினை முதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால் நேயங்கொள்ளுதற்குரிய உயர்குலத்தோராவர் என்பது நாலடியின் துணிபு.

    ஒரு செயலில் ஈடுபட்டு உழைப்போர் தம் முயற்சி திருவினையாகும்வரை, தம் அறிவுத்திறத்தை அவசரப்பட்டு வெளிப்படுத்த மாட்டார்கள்; அடக்கமாகவும் மனவெழுச்சியுடனும் அதனைச் செய்துமுடிப்பர். மேலும் தமது ஆற்றலைத் தம் கண் முதலிய உறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கேற்ற அறிவு விளக்கமுடையவராகவும் இருப்பர். அத்தகைய திறன்மிகு தாளாண்மையுடையோரின் குறிப்புவழிப் பட்டதே இவ்வுலகு.

    ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
    ஊக்கம் உரையார் உணர்வுடையார் – ஊக்கம்
    உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
    குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.
        (நாலடி – 196)

    சுருங்கக் கூறின், நல்லறிவுடையாரின் முயற்சிகள் உள்ளுணர்வோடும் அறிவு விளக்கத்தோடும் நடைபெறுதல் வேண்டும். அதுவே முயற்சிக்கு வெற்றி தரும்; முயல்வோர்க்கும் பெற்றி தரும்.

    முயற்சி என்பதை ஒருவன் தன் சொந்த நன்மைக்காகவும் செய்யலாம்; தன்னைச் சார்ந்தோரின் நன்மைக்காகவும் செய்யலாம். வயதான தாய் தந்தையரை வீழாது காப்பதற்குப் பிள்ளைகள் செய்கின்ற முயற்சி இரண்டாம் வகையில் அடங்கும்.

    இளமையில் தன் அயராவுழைப்பால் குடும்பத்தை இடும்பையின்றிக் காத்த தந்தைக்கு முதுமை வரும்போது அவரைக் கைவிடாது கருத்தோடு காப்பதுதானே நல்ல பிள்ளைகட்கு அழகு? 

    சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
    மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
    குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
    புதல்வன் மறைப்பக் கெடும்
    .     (நாலடி – 197)
     

    கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அதன் விழுது தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றி நிற்றல்போலத் தன் தந்தையிடத்தில், முதுமை காரணமாக, தளர்ச்சி தோன்றும்போது அவன் பெற்றெடுத்த புதல்வன் அவனைப் பாதுகாக்க அது நீங்கும். ஆதலால் தந்தையின் தளர்ச்சியைப் போக்கும் முயற்சியுடையவனாய் மைந்தன் இருத்தல் வேண்டும்.

    அந்நாளைய வழக்கங்கருதி தந்தை தாய் பேணல் புதல்வன் கடன் என்றது நாலடியார். அதனால், புதல்வியர்க்கு அப்பொறுப்பில்லை என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளும் இன்றைய சமூகத்தில் புதல்வியர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வது நனிசிறந்தது!

    மேற்கண்ட நாலடியார்ப் பாடலின் கருத்தை எடுத்தியம்பும் சீவக சிந்தாமணிப் பாடலிது… 

    தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
    ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
    தாங்கல்கட னாகும்….  (சீவக சிந்தாமணி) 

    நன்முயற்சியால் செல்வத்தைச் சேர்ப்பதும், செழுங்கிளை தாங்குவதும் மனிதர்க்குச் சிறப்பும் மதிப்பும் கூட்டுவதாகும். இதனைச் சுற்றந்தழால் எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பேராசான் அற்புதமாய் விளக்கியிருப்பார். 

    சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்”
    என்பது செந்நாப்போதாரின் சீரிய எண்ணமாகும்.
     

    சுற்றஞ்சூழ வாழ்வதன் சிறப்பை நாலடியாரும் நவிலத் தவறவில்லை. 

    கருவுற்றபோது தோன்றிய துன்பமும், இடையிற் கருசுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த காலத்தில் உண்டான இன்னலும் ஆகியவற்றைத் தாய் தன் மகவின் முகங்கண்ட அளவில் மறந்துவிடுதல்போல, முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பம், ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக் கண்ட அளவில் நீங்கிவிடும்.

    வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
    கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
    அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
    கேளிரைக் காணக் கெடும்
    .     (நாலடி – 201)

    வாழ்வில் நாம் தளர்ச்சியுறும் காலத்தில் தைரியம் சொல்லி ஊக்கமும் உற்சாகமும் தருவதற்கு நல்ல சுற்றம் உடனிருப்பது பெரும்பேறு. அத்தகு சுற்றம் வாய்க்க நாம் அவர்களைத் தழுவி ஒழுகுதல் அவசியம் என்பதே இப்பாடலால் நாம் அறியும் அருங்கருத்து.

    வெயிலின் அழல்மிகுந்த வேனிற்காலத்தில் தன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் நிழல்தரும் மரத்தைப்போல், வறுமையின் அழல்மிகுந்த காலத்தில் தன்னை நாடி வந்தவர்களையெல்லாம் ஒத்தவகையில் காத்து, பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள்தந்து உதவுதல்போல், பலரும் பயன்நுகரப் பொருள் உதவி, தான் மேன்மேலும் பொருளீட்டும் முயற்சியோடு உழைப்பாளனாய் வாழ்வதே நல்ல ஆண்மகனுக்குக் கடமையாகும் என்று குடிதாங்கும் ஆடவனின் கடனை வகுத்துரைக்கின்றது நாலடியார். 

    அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
    நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழுமரம்போல்
    பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
    நல்லாண் மகற்குக் கடன்.     
    (நாலடி – 202)
     

    அதுமட்டுமன்று! உறவினர்கள் இன்புறும் வேளையில் நாமும் இன்புறுவதும், அவர்கள் துன்புறும் வேளையில் நாமும் துன்புறுவதுமே நல்லோர் இயல்பாய் இருத்தல் வேண்டும். அதைவிடுத்துச் சுற்றத்தார் மறுபிறவி எடுத்த பின்னரா நாம் அவர்களுக்காகப் பரியப்போகிறோம்  என்று வினவுகின்றது நாலடி. நல்ல கேள்வி! 

    நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
    மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ – இறுமளவும்
    இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
    துன்புறுவ துன்புறாக் கால்.    
    (நாலடி – 209)
     

    சுற்றஞ்சூழ வாழ்ந்து பெற்றேம் இன்பம் என்றலே நானிலத்தார்க்கு குற்றமறு நலம் பயப்பது!

     [தொடரும்]

     *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

     

     

     

     

    Share
  • ’’கிரகணம்’’….!

     

     

    ”சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!, -சிவந்ததுமூன்(BLOOD MOON)
    போக்கில் தடம்மாற, பூமி புகுந்ததால்
    காக்காஊஷ் ஆச்சு கலை(சந்திரன்)’’….!
    (அல்லது)
    ‘சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!,-உவந்திடும்,
    அஞ்ஞானக் கேள்விக்(கு) அட!பதில் என்னவோ!,
    விஞ்ஞானம் விட்ட வழி’’….!

    ’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
    புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
    நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடுமே:
    சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ஸ்ரீ ரமண வசனாம்ருதங்கம்…..!

    ’பாலக்காட்டு மணி அய்யர்’’(காந்து )….!

    —————————————————

    குரு எத்துனை அவசியமோ, சீடன் அத்துனை முக்யம்….!
    ————————————————————————————————————-
    எங்கள் குழு(கிரேசி கிரியேஷன்ஸ்) இயக்குனர், நண்பன் காந்துவுடன் டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன்….அப்போது அவர் ‘’பாலக்க்காட்டு மணி அய்யரைப்’’ பற்றி சிலாகித்து சுவையான அனக்டோட்ஸை பறிமாறினார்….மிருதங்கம் பலா மரத்தால் செய்வார்களாம்….உடனே நான் அப்ப அவர் ‘’பலாக்காட்டு மணி அய்யர்’’ என்றேன்….காந்து ரஸித்தார்….நிற்க இல்லை அமர்க….
    உடனே பாரதிதாசரின் ‘’வேரில் பழுத்த பலா’’ நினைவுக்கு வந்தது….வெண்பாவுக்கு நல்ல ஈற்றடியாகப் பட்டது….இருந்தாலும் ‘’வேரில் பழுத்த விலா’’ என்று இருந்தால் மோனை சரியாக இருக்குமே, ஆனால் பொருள் சரியில்லையே என்று மூளையைக் கசக்கியபோது தோன்றிய வெண்பா….மாவீரன் அருச்சுனன் பேரில்….எண்ணங்களின் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்வதை ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி ‘’சேஷ்டை’’ என்கிறார்….வாழ்வதே சும்மா இருக்கத் தெரியாத ‘’சேஷ்டைதான்’’….’’சேஷ்டை’’ வெண்பாவைப் பார்ப்போம்….!

    ‘’தோள்வலி மிக்கவன், தீரன் தனஞ்ஜெயன்
    கேள்விக் கணைதொடுத்துக் கீதையை, -வேள்வியாய்,
    தேரில் அமர்ந்தவன் தாஸனாய்ப்(சீடனாய்ப்) பெற்றதால்,
    போரில் பழுத்த பலா’’….கிரேசி மோகன்….!

    ”மதிய உதயம்”….
    ———————————

    சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….!
    பகவானுக்கு மிகவும் பிடித்த நூல்கள், ”யோக வாசிஷ்டம்”,
    ”ரிபு கீதை”, ”திரிபுரா ரஹஸ்யம்”…..!

    ”பூத,வர்த்த மான, பவிஷ்யத், இவைமூன்றும்,
    ஈதனை ஒத்த இடையூறாம், -சாதகனை,
    மொய்த்து மொசுக்கிடும், முக்திப் பழம்தனை,
    வைத்தியம்”வா சிஷ்ட வகுப்பு”….கிரேசி மோகன்….!

    வகுப்பு என்று முடித்தமைக்கு காரணம், ”என்னதான் புத்தகத்தில்
    படித்தாலும், குருமூலம்(TEACHER) அறிந்து கொள்வதே சிலாக்கியம்….பூதப் பிரதிபந்தம்-இறந்தகால பந்தங்களினால் ஏற்படும் இடையூறு….வர்த்தமான, பவிஷ்யத்-முறையே -நிகழ்கால,
    எதிர்கால இடையூறுகள்….வாசிக்கவும் வித்யாரண்யர் எழுதிய ”பஞ்சதசீ”….இதை உறுதி செய்வது ”வாசுதேவ மனனம்”….!

    AVM RAAJU வுக்கு பதில் மெயில் வழி….!
    —————————————————————————–

    .ராஜு, இந்தக் குழப்பம்(திருக்கு) எனக்கும் உண்டு….இதை நான் வேடிக்கையாக எழுதியுள்ளேன்….!
    குரு எத்துனை அவசியமோ, குருவை சீடன் தேடிக் கண்டு பிடித்தல் அத்துனை முக்யம் என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி அவர்கள்….!இதை நான் வேடிக்கையாக எழுதியுள்ளேன்….!
    ZENபா….!
    —————————-
    ஒரு சீடன் குருவைத் தேடிப் போனான்…குருவைக் கண்டதும் சீடன்….
    சீடன் -குருவே எனக்கு வழி காட்டுங்கள்….
    குரு -என்னைத் தொடர்ந்து வா….
    (சீடன் குருவைத் தொடர்ந்து செல்ல….திடீரென்று நரகம் வந்தது….சீடன் அதிர்ந்து போய்….)

    சீடன் -குருவே தாங்கள் ZEN தானே….(கேட்க)
    குரு -(பயங்கரமாய் சிரித்து…) நான் YAMAHA டா குருமுட்டை….(என்றார்)….

    ரமணர் சொல்லுவார் யாருடைய சன்னிதியில் உனக்கு நிம்மதி ஏற்படுகிறதோ(எந்த உபதேசமும் இல்லாமல்)அவரே குரு….

    ”சன்னிதி மாத்திரத்தில் சத்குருவைக் கண்டறிவாய்
    அன்நிதி கண்டபின் ஐம்புலனை, -கொன்னுதீர்:
    யாதுஊ ரேதான் யாவரும் கேளிர்தான்
    தீதொடு நன்றும் திருக்கு’’….கிரேசி மோகன்….

    Share
  • தத்த குரு வெண்பாக்கள்….!

     

    தத்த குரு வெண்பாக்கள்….!
    ———————————-

    அத்திரி இல்லாள் அனுசூயா தொட்டவுடன்
    மொத்தவுரு ஆனார்கள் மூவிறையும் -இத்தரையில்
    தத்தகுரு போலாமோ மத்தகுரு மார்களெலாம்
    சித்தமொரு மித்தவரைச் சேர்….(1)….!

    அத்தையுரு வற்ற அருவ சொரூபமாய்
    சித்தமொரு மித்தென்றும் சிந்திக்க -தத்தகுரு
    சூலம், டமருகம், சங்காழி ஏந்தியமூ
    மூலம் முனியாய் முளைப்பு….(2)….!

    வேதங்கள் நான்கும் விளையாடும் நாய்களாய்
    பாதங்கள் பற்றிப் பணிந்திருக்க -ஓதுமயன்
    தாணுமால் சேர்க்கையாய் தத்தகுரு தேவரை
    காணமால் கொள்வீர்கண் காள்….(3)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180727 Yoga Vasishta – Guru PurNima – watercolour – charcoal -A4 -100 dpi lr

     

    லகு வாசிஷ்டம்
    ——————–

    வந்ததில் பற்றும் வருவதில் ஆர்வமும்
    அந்தநாள் ஞாபக ஆசையும் -தொந்தரவாம்
    ஆகவே மாயைக்(கு) அடங்காது ஆட்டத்தை
    ராகவா ஆடு ரசித்து….!

    ஆர்பரித்து ராகவா மேற்புரத்தில் ஆடுநீ
    பார்ப்பவர் கண்ணுக்குப் பற்றுதல்போல் -நீர்பரப்பாய்
    அஞ்சின்(ஐம்புலன்) அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
    பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு….!

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    ராகவா, ஆகவே மோகவாய் போகாது
    யோகமாம் வாசிஷ்டம் எய்து….கிரேசி மோகன்….!

    குரு பஞ்சகம்….!
    ———————

    ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம்
    ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1)

    திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள்
    தங்கவோ மாளிகை தாயாதி உறவினர்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2)

    மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய்
    உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(3)

    அருகாமை அண்டை அசலூர் அனைத்திலும்
    மருவிலா மதிப்புடன் மாசற்றிருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(4)

    ஈற்றடியில் ஈரேழு உலகாளும் மன்னர்கள்
    போற்றிடப் புலமையில் ஆற்றல் இருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(5)

    Share
  • தொல்தமிழரின் உழவும் கலைச்சொற்களும்

    -முனைவர் ம. தமிழ்வாணன்

    இறைவனை வணங்கி வழிபடுவதை மரபாக கொண்டிருந்ததைப் போல, தங்கள் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கும் இயற்கைப் பொருட்களைப் போற்றி வழிபடுகின்ற மனப்பாங்கும் தமிழர்க்குத் தொன்றுதொட்டு வந்த நற்பண்பாகும். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தினரும் இன்றைக்கு இருப்பது போலவே உழவுத் தொழிலையே தங்கள் வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டிருந்தனர் என்பதனை ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனப் புறநானூறு விளக்குகின்றது. அவ்வகையில் வேளாண்மைச் செயல்முறைக்கு அடிப்படையாக விளங்கும் நிலம், நீர் இவற்றின் மேலாண்மையை அறிதல், வேளாண்மைக்குக் களம் அமைத்துப் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டதாக அமையும். நாடு உய்வதும், உயர்வதும் பொருளாதாரம் உறுதிநிலை பெறுதலையும் வேளாண்மையின் வளர்ச்சியையும் பொறுத்து அமைவது. வேளாண்மையில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? விரைந்து முன்னேறிவரும் வேளாண் நுணுக்கங்களைத் தெரிந்து பரிந்துரைகளைச் செயலாற்றிச் செம்மைப்படுத்துவது வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு உழவனின் முக்கியக் கடமையாகும். இதற்குத் துணைநிற்பது வேளாண் செயல்முறைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லக் கை கொடுப்பது நல்ல கலைச்சொற்கள் தான்.

    பண்டைய விவசாயம் கடுமையான உழைப்பிலும் அனுபவ இயற்சியிலும் அமைந்தது. ஆனால், இத்தகைய உழைப்புடன் வேளாண்மை விஞ்ஞான முறைகளைப் புள்ளி விவரங்களுடன் இணைக்கும்போது ஒரு பெரும் சக்தியாக மாறிப் புரட்சிகரமாகவும் காலச் சூழ்நிலைக்கேற்பவும் மாறுபாடடைந்து மக்களுக்குப் பயன்படுகிறது. பழையன கழிந்து புதியன புகுந்ததால்தானே இன்று நாம் பசுமையில் புரட்சி செய்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவினையும் காண நேர்ந்துள்ளது?

    நாடும் மொழியும் வளர்ந்தால்தான் வாழும் மக்களும் வளமான வாழ்வு பெறுவர். இதற்கேற்ப நமது இந்திய வேளாண்மையுடன் விஞ்ஞான அடிப்படையில் அமைந்த உண்மைக் கூறுகளை இணைந்த யாவரும் அறிந்துகொள்ளும் வகையில், தொழில்நுட்பங்களை எளிதில் புரிந்து செயல்படுத்திடும் வகையில் தாய்மொழியில் உணர்த்துதல் மிகவும் அவசியம், அறிவியல், கலைச்சொற்களைப் பொருள் சிதையாமல் பெயர்த்துத் தமிழில் வழங்க வேண்டும் என்ற வேட்கை நாளும் வளர்ந்து வருகின்றது. தமிழில், புதிய கலைச்சொல்லாக்கங்களைச் செய்தற்கு முன்னர், இலக்கியப்பழமை சார்ந்த அறிவியல் கலைச்சொற்களைப் பேணிக்காக்க வேண்டிய கடமையும் தமிழுக்கு உரியது.

    மொழிபெயர்க்கும்போது பிறமொழி சொற்களுக்கு இணையான பொருத்தமுடைய சொற்களை ஆய்ந்து காட்டி நல்ல சொற்களைக் கண்டெடுத்து உறுதிப்படுத்துவது சிறந்தது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது சொல்லுக்குச் சொல் நேரிடையாகவே மொழி பெயர்க்காமல் பொருளுக்குப் பொருள் பொருந்தி வரும் வகையில் மொழி பெயர்ப்பது சிறந்தது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ‘கலை’ யாவும் வெறும் சொல்லால் மட்டும் சிறப்பதல்ல. சொல்லிய பொருளும், வழங்கும் மரபும் பயன்பட்டு வந்த வகையில் அறிந்தோராலேயே இக்கலை ஒளிர்வதாகும். சொற்பொருளை வழுவற உணர்ந்தோரே, புதிய சொற்களைத் தகுதியுடையாத ஆக்கவல்லவர். நாம் கடமையாற்றும் வகையில் எவரையும் சிந்திக்க வைக்கும் நிறந்த கருவூலமாக அமைதல் அவசியம். நம் பழைய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கணக்கற்ற சொற்கள் காணக்கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பயன்படுத்திட, இல்லாத இடங்களில் புதிய சொற்களை உருவாக்கிடத் தளராத தமிழார்வமும் அயராத தமிழ்ப்பணித் திறனும் வேண்டும். கணக்கற்ற வேர்ச்சொற்களைப் பெற்றிருக்கும் தமிழ்மொழியில் புதிய சொற்கள் புனைவதில் தொல்லை இருக்காது. எனவே முனைப்புடன் செயல்படுவது சிறந்ததாக அமையும்.

    வேளாண்வளத்தில் கலைச்சொற்கள்

    வேளாண்மை இன்று நாடெங்கும் சிறப்புற்று வளர்ந்துவரும் ஓர் அறிவியல் துறை. வளமான மண்ணும் அளவான நீரும் உழவியலுக்கு இன்றியமையாத இரு கண்கள். உணவென்று சிறப்பித்துச் சொல்வது நிலத்தையும், நீரையும். மண்ணியல், உழவியல், நீர்வள இயல், வித்தியல், தாவரவியல், தாவர வினையியல், பயிர் நோயியல், நுண்ணுயிரியல், பூச்சியியல், உயிர் வேதியியல், மீன்வள இயல், வானவியல் என்றின்னோரன்ன முறைகள் பலவற்றையும் உள்ளடக்கிய அறிவியல் கலையாக வேளாண்துறை இன்று வீறுபெற்று நாளும் வளர்ந்து வருகின்றது.

    நிலவளத்தில் கலைச்சொற்கள்

    நிலப்பகுதிகள் மக்கள் வாழ்விற்கும் இயக்கத்திற்கும் பயிர் விளைச்சலுக்கும் உரியவை. எனினும் நிலப்பகுதிகள் அனைத்தும் ஒரே இயல்பும் தன்மையும் வாய்ந்தவை இல்லை. சில பகுதிகள் பண்படுத்தப்பட்டுப் பயிர் விளைவுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உரியவையாக, உகந்தவையாக இருக்கும். மேலும் இந்நிலப் பகுதிகள் சமமட்டமாக இல்லாமல் மேடு பள்ளம் நிரம்பியவையாகவும் இருக்கக்கூடும். நிலப்பகுதியில் அமைந்த இவ்வேறுபாடுகளைச் சுட்டும் கவிஞர் அந்த இடத்தில் வாழும் மக்களின் இயல்புக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப நல்ல நிலம், தீய நிலம் என்று நிலப்பகுதி பெயர் பெறுகின்றது. இக்கருத்தை எடுத்துக்கூறுவதாக,

    “நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ” (புறம்187)

    என்ற புறநானூற்றுப் பாடலில். பள்ளத்தை வழங்க அவல் என்ற சொல்லும், மேட்டைக்குறிக்க மிசை என்ற சொல்லும் பழங்காலம் முதற்கொண்டு வழங்கிய கலைச்சொற்கள் என்ற குறிப்பை அறியமுடிகிறது.

    நிலம் என்பது அனைத்துவகை நிலப்பகுதிகளையும் குறிக்கும் பொதுச்சொல். மாநிலம், நிலவரை என முன்னும் பின்னும் ஒட்டுச் சேர்த்தும் இப்பெயர் வழங்கப்பெறும். ஞாலம், உலகம், வையம் என்பனவும் நிலத்தைக் குறிக்கும் பிறசொற்களாக உள்ளன.

    நிலத்தை வன்புலம் மென்புலம், விடுநிலம் என்று பிரித்தரிந்து விவசாயம் செய்துள்ளனர். மேலும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்ற நானிலத்தின் விளைநிலங்களையும் பிரித்தறிந்து பார்த்துள்ளனர். நிலங்களைக் குறிக்கும் சொற்கள் பல நிலைப்பெற்ற கலைச்சொற்களாக உள்ளன. விவசாயத்தில் தமிழர்கள் தலைசிறந்தவர்கள் என்பதனையும், தமிழனால் எதையும் செய்யமுடியும் என்பதனையும் இது எடுத்துரைக்கின்றன.

    1.குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியுமாகும். இந்நிலத்தில் புன்செய் பயிரிடும் நிலத்தைத் துடவை (பெரும்.201) என அழைத்துள்ளனர். மரங்களை அழித்து விளைநிலமாக்கப்படும் புதிய புனத்தை ‘இதை’ என்றும் பழமையான விளைநிலத்தை ‘முதைபுனம்’ என்றும் அழைத்துள்ளனர்.

    2.முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகும். இங்குள்ள நிலத்தைக் கொல்லை எனவும், மரங்கள் நிறைந்த பகுதியைப் புறவு, கானம், பாட்டம், தோட்டம் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர். மேலும் முல்லை நிலத்தைக் குறிக்கச் “சங்க இலக்கியங்களில் காடு, கானம், குறும்பொறை, கொல்லை, செந்நிலம், செஞ்சுவம், புறவு, புனம், புன்புலம், மென்புலம், முரம்பு, வன்புலம்” போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  (வி.சி. சசிவல்லி, பண்டைத்தமிழர் தொழில்கள்) இச்சொற்களில் பல இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.

    3.மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியுமாகும். கழனி, வயல், பழனம், செறு ஆகிய சொற்கள் மருத நிலத்தைக் குறிக்கும் சொற்களாகும். கழனி என்பது சேற்றுவயலையும், பழனம் என்பது நெல்வயலையும் குறிக்கும் சொற்களாகும். வயல் என்பது விளைநிலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கழனி என்ற சொல் 67 இடங்களிலும், பழனம் என்பது 16 இடங்களிலும், வயல் என்பது 52 இடங்களிலும் வந்துள்ளது. இச்சொற்கள் பரவலாக தமிழகத்தில் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

    1. நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலமாகும். இந்நிலத்தில் மழைபெய்தால் நெல்விளையும், மழை பெய்யாவிட்டால் உப்பு விளையும். இந்நிலத்தில் உள்ள நிலப்பகுதிகளை அடைகரை, எக்கர், பரப்பு, கழி, கழனி, கானம் என்றெல்லாம் அழைத்துள்ளனர். எக்கர் என்ற சொல் 54 இடங்களிலும், பரப்பு என்பது 62 இடங்களிலும், கழனி என்பது 171 இடங்களிலும், கானம் என்பது 130 இடங்களிலும் வந்துள்ளது.

    மேற்கண்ட சொற்கள் நானிலங்களிலும் பயன்பாட்டின் அடைப்படையில் குறிக்கப்பட்டுள்ளன. இவை விவசாயத்தில் தமிழர் ஆழங்கால் பட்டுள்ளதைக் காட்டுவதாக உள்ளது.

    தமிழகத்து நிலப்பகுதிகளை மண்ணியல் அடிப்படையில் இன்றைய அறிவியலார் ஐந்து கூறுகளாக வகுத்துரைக்கின்றனர்.

    செம்மண்                     – Red Soil
    கரிசல் மண்                         – Black Soil
    வண்டல் அல்லது அடை மண்     – Alluvial Soil
    செம்புறை மண்              – Laterite Soil
    மணற்பாங்கான மண்       – Sandy Soil

    இங்கு குறிக்கப்பெற்ற வண்டல் மண் மருத நிலத்தில் ஆற்றுப்படுகைகளில் மிகுதியாக உள்ளது. செம்புறை மண் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் அதாவது குறிஞ்சி நிலத்தில் அமையும். மணற்பாங்கான மண் கடற்கரைப் பகுதிகளாகிய நெய்தல் நிலத்துக்குரியது. முல்லை நிலப்பகுதிக்குச் செம்மண் அமைப்பு உரியது. எஞ்சிய கரிசல் மண் மிகுதியான அளவு நன்புலத்துக்கும் சிறுபான்மை புன்புலத்துக்கும் உரியதாகக் கொள்ளலாம். நன்புலம் இயற்கை நீர்வளம் உடைய நிலப்பகுதிகள், புன்புலம் செயற்கை நீர்வளம் உடைய நிலப்பகுதிகள். இன்றைய அறிவியல் செய்தியை அறிவியல் என்று அறியாமல் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவான உண்மையாகும்.

    நீர் மேலாண்மையில் கலைச்சொற்கள்

    நாட்டு வளத்திற்கு அடிப்படைக் காரணியாக விளங்குவது நீர்வளம், நீர் வளத்தைத் தரும் வற்றாத பேராறுகள் நாட்டின் செல்வமாகத் திகழ்பவை. உயிர்களுக்கு அமுதாய்த் தாய்ப்பால் விளங்குவதுபோல் பயிர்களுக்கு நீர்வளம் இன்றியமையாதது. பிள்ளையின் வளர்ச்சிக்கு உரிய பாலாக விளங்குவது தாய்ப்பாலே. ஆவின் பாலும் பிறவகைப் பாலும் உயிர் வளர்க்கும் ஆற்றல் உடையவை எனினும், தாய்ப்பாலை நோக்க அவற்றிற்கு அடுத்த இடமே பொருந்தும். அதுபோல் பயிரின் வளர்ச்சிக்கும் பிறவகை நீர்ப்பாசன முறைகள் இருப்பினும் ஆற்றுப் பாசனமே சாலச்சிறந்தது. ஆற்று வெள்ளத்தில் பலவிடங்களில் அமைந்த வளங்கள் ஒருசேர அடித்து வரப்பட்டுச் சேர்க்கப்படுவதால் பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து வளமனைத்தும் கொண்டுள்ளன. எனவே ஆற்றுப் பாசன முறையே உயர்ந்தது என்று வேளாண்மை அறிவியல் நுட்பத்தைச் சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. தமிழ்நாட்டின் எல்லைக்குள் மொத்தம் 33 ஆற்றுப் படுகைகளும், அந்த ஆறுகளுக்கு எண்ணற்ற துணையாறுகளும் உள்ளன. காவிரியும் வைகையும் சங்க இலக்கியத்தில் பெரிதும் இடம்பெற்றுள்ளன. அடுத்து ஆன்பொருநையும், பொருநையும், பெரியாறும் இடம் பெறுகின்றன. அரிசிலாறு, காஞ்சி, குமரி, சிலம்பாறு, சுள்ளியம், பேரியாறு, சேயாறு, பஃறுளி, பெண்ணை, வாணி என்ற ஆறுகளும் இடம்பெற்றுள்ளன. கங்கை, நர்மதா போன்ற வட இந்திய ஆறுகளுடன் ஒப்பிடும்போது நமது ஆறுகளின் நீர்வளம் மிகக்குறைவு. எனவே நீர்வளத்தைக் கருத்திற்கொண்டு கிடைக்கிற நீரை விரயமின்றிச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் நீர் மேலாண்மையில் ஒரு சிறந்த தொழில்நுட்பம். இலக்கியச் சிறப்புப்பெற்றிருந்தாலும் நீர் மேலாண்மை ஆய்வுக்கு ஆறுகள் பற்றிய விவரம் இன்றியமையாதது. மருத நிலம் ‘விழைவுஅறா வியன் கழனிகளை’ பெற்றிருந்ததற்கு இந்த ஆறுகளே காரணமாகும். நிலத்தில் நீர் அதிகமாகத் தேங்கி இருந்தாலும் அல்லது நிலத்தில் நீர் இல்லாமல் இருந்தாலும், பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூலைத் தருவதில்லை. இவை இரண்டுக்கும் இடையே, பயிர்களின் இக்கட்டு நிலையறிந்து, நீர்த்தேவையைக் கருத்திற்கொண்டு பாசனம் செய்வது நல்லது.

    ஒரு நாட்டின் வளமும் நலமும் நீர்வளத்தைப் பொருத்தே அமையும் என்பது பண்டைத் தமிழர் கொண்ட கொள்கையாகும். விதைத்துவிட்டு வானத்து மழையை நோக்கும் புன்செய் நிலம் மிகப்பெரிய அளவினதாயினும் ஓர் அரசனது வெற்றிக்கு அது பயன்படாது. அதனால் பள்ளமான பகுதிகளில் நீர் நிலைகளை உருவாக்கியோரே இவ்வுலகில் தம் புகழை நிலைநிறுத்தியோராவர்.

    “வித்தின் வான்நோக்கும் புன்புலம் கண்ணகல்
    வைப்பிற்று ஆயினும் நண்ணி யாளும்
    இறைவன் தாட்கு உதவாதே” (புறம்.18;24-26)

    என்று புலவர்கள் மன்னர்கட்கு நீர்நிலைகளை அமைக்க வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துரைத்தனர். ஆதலால் நிலையான வேளாண்மைக்குக் குறைவில்லா நீர்வளம் தேவை என்பதைப் பண்டைநாள் தொட்டே மக்கள் உணர்ந்து வந்துள்ளனர். இத்தகைய நீர்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது மன்னர்கள் கடமையாகும். அத்தகையவனே உடம்பையும் உயிரையும் படைத்தவனாகவும் கருதப்பட்டான் என்பதனை

    “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும் உயிரும் படைத்தசி னோரே” (குடபுலவியனார்)

    என எடுத்துரைத்துள்ளனர். நீர் நிலைகள் மன்னர்கள் அமைக்கவேண்டும் என்பது தலையாயக் கடமையாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களை வாழ்த்தும்போதும் நாட்டின்  நீர்வளம் பெருக்கவேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் ‘சோறும் நீரும் ஆகிய இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருந’ என்றும் ‘நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென ஆளும் வேந்தே’ என்றும் விளித்துப் பாடியது குறிப்பிடத்தக்கது. ‘தீம்புனல் உலகம்’என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த மருத நிலத்தில் வளம்சான்ற ஆறுகள் பாய்ந்து வேளாண்மைக்கு வளம் சேர்த்தன.

    நீர்ப்பாசனத்தைப் பொறுத்தவரை, நிலத்தின் மேல்மட்ட நீரேயன்றி, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் முறை பற்றிய ஆராய்ச்சியும் கிடைக்கும் நீரைச் சேதமின்றிப் பயன்படுத்தப் பல்வேறு நீர்ப் பாதுகாப்பு முறைகளும் அறிவியல் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தட்பவெப்பநிலை, பயிர்வகை, நில இயல்பு ஆகியவற்றைப் பொறுத்து நீர்ச் சேதத்தைத் தவிர்க்க மேற்பரப்புப் பாசன முறை (Surface irrigation), வேரின் கீழ்மட்ட நீர்ப்பாசன முறை (sub/surface irrigation), தெளிப்பு நீர்ப்பாசனம், சொட்டுநீர்ப் பாசனம், ஆடல்ஸ் ஆகிய பல்வேறு நவீன நீர்ப்பாசன முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    உழவியற் கலைச்சொற்கள்

    உழவியல் செயல் முறைகளில், உழுதல், உரமிடுதல், களை மேலாண்மை, நீர்ப்பாய்ச்சுதல், பயிர்ப்பாதுகாப்பு என்ற ஐந்து கோணங்கள் இன்றியமையாதவை. இந்த ஐவகைக் கோணங்களையும் விளக்கும் வகையில்,

    “ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
    நீரிலும் நன்றதன் காப்பு” (குறள்.1038)

    என்ற திருக்குறள் அமைந்துள்ளது. உழுவதைக் காட்டிலும் உரமிடுதல் சிறந்தது. களை நீக்கியபின் நீர்ப்பாய்ச்சுவதைக் கட்டிலும் பயிர்ப் பாதுகாப்பு முக்கியமானது என்பது இக்குறள் காட்டும் கருத்து.

    இலக்கியங்களில் உள்ள உழவுச் சொற்கள் பாரம்பரியத்தை விளக்குகின்றன. அதேபோல் பள்ளு இலக்கியங்களில் உள்ள உழவுச்சார்ந்த சொற்கள் வட்டார மணம் கொண்டதாக உள்ளதையும் காணமுடிகிறது. பண்டைத் தமிழர்களிடம் வழக்கிலிருந்த உழவுத் தொழில் சார்ந்த சொற்கள் கலைச்சொல்லாக்கத்திற்கு முதல் படியாக அமைந்திருப்பதைக் காணலாம்.

    உழவுத்தொழில் சார்ந்த சில சொற்கள்

    நம் தமிழர்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் உழவுத்தொழில் சார்ந்த சில சொற்கள் கலைச்சொற்களாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவ்வகையான சொற்கள் இங்கு பொருள் விளக்கத்துடன் கொடுக்கப்படுகின்றன.

    1. நல்லேர் கட்டுதல், பொன்னேர் கட்டுதல்- நல்லேரு கட்டுதல், பொன்னேரு கட்டுதல்- வருடத்தின் முதல் நாள் நல்லநாள் பார்த்து கட்டும் ஏர்.
    2. சேடை வைத்தல்- சேடெ வெக்கிறது- உழுவதற்கு முதல்முதலில் வயலுக்கு தண்ணீர் வைத்தல்.
    3. தொளி கலக்குதல், தொளியடித்தல்- தொளிமிதித்தல்- ஏர் பூட்டி உழுதபின்னர் விதைப்பிற்கு ஏற்ற வகையில் சரிசெய்தல்.
    4. விதையிடுதல்- வெதெவுடுதல்- உழுது பண்படுத்தப்பட்ட வயலில் விதையைத் தெளித்தல்.
    5. தெளியடித்தல்- தெளியடித்தல்- விதையிடுவதற்கு முன் கலங்கல் நீர் வடிகட்டுதல்.
    6. நாற்று முளைத்தல்- நாத்து மொளச்சிடுச்சி- விதைத்த விதை முளைவருதல்.
    7. சிலுப்பு நீர்க்கட்டுதல்- மிகக்குறைந்த அளவு மட்டுமே நீர்க்கட்டுதல்.
    8. கங்களவு நீர்ப்பாய்ச்சுதல்- கங்கு நீர்ப் பாச்சுதல்- நாற்று முளையின் அளவிற்கேற்பச் சீராக நீர்ப்பாய்ச்சுதல்
    9. வெட்டிவிட்டுச் சரித்தல்- வெட்டிவுடுதல்- நாற்றங்காலில் நீர் வடியவிடுதல்.
    10. நாற்றுக் குருத்தல்- நாற்று இளைத்து செறிந்து வளர்தல்
    11. நாற்று சமைத்தல்- நாத்துச் சமைத்தல்- நாற்றங்காலில் முளைத்த நாற்றுக்கள் பிடுங்கி நடுவதற்குரிய பருவத்தில் இருத்தல்
    12. தரிசடித்தல், முதல் ஓட்டு, தரிசு ஓட்டு – மொதெ ஓட்டு – நடுவதற்குரிய வயல்களை முதல்முறையாக உழுதல்.
    13. மறித்தடித்தல்- மரிச்சடித்தல்- இரட்டித்தல், மறுத்தடித்தல், இரண்டாவதுமுறை உழுதல்.
    14. இரண்டாஞ்சால் – ரெண்டாஞ்சாலு – நிலத்தை இரண்டாவது முறை உழுதல்.
    15. கிடை கட்டுதல்- கெடெ கட்டுதல் – உழவிற்கு முன்னை ஆடு, மாடுகளைக் கூட்டமாக இரவு முழுவதும் வயலில் அமர்த்துவது. நிலத்துக்கு வளம்சேர்க்கச் செய்யப்படும் செயல்.
    16. வேரூன்றல்- பயிர் புடிச்சிடுச்சி- பயிர்களை நட்ட பின்னர் மண்ணில் வேர்பிடித்து உறுதியாதல்.
    17. குறுத்துச் செறிதல், கிளை கொள்ளல், கணு வைத்து எழுதல், குளை இளைத்தல், தூர் கட்டுதல், தூர்வெடித்தல் – கப்பும் கிளையுமாகப் பயிர் வளர்தலைக் குறிக்கும் சொற்கள்
    18. மத்தாளித்தல், திமிரிப்போதல், அக்கிரோகமாக இருக்கு – மத்தலித்தல், அக்ரோமா இருக்கு – கதிர் விளைச்சல் வந்தும் மகசூல் கிடைக்காமலிருக்கும் பசுமை நீங்கிய நிலையில் காணப்படும் கதிர்.
    19. கருக்கொள்ளுதல், சூல் கொள்ளுதல், சூல் கட்டுதல் – கதிர் சூல் கொண்டு உருவாகுதல்.
    20. பொதி நீட்டுதல், பொதி கட்டுதல், பொதி பயிர், சூல் பயிர் – சூல் கொண்ட கதிர்கள் மெல்லத் தலை நீட்டுதல்.

    மேற்கண்ட வேளாண்மைக் கலைச்சொற்கள் தமிழின் கலைச்சொல் வளத்திற்கு எடுத்துக்காட்டாகும். எனவே தமிழில் முடியாது எனச் சொல்ல முடியாது. தமிழிலியே முயன்றால் தமிழில் கலைச்சொற்கள் பெருகும் என்பது உண்மையாகும்.

    துணைநூற்கள்

    1.சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) 1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு.

    2.இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2-ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.

    3.சுப்பிரமணியன்.ச.வே. (ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முதுநிலை ஆய்வு வல்லுநர்
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை – 600113.

     

    Share
  • காலனிடம் ஒரு கேள்வி!

    -மேகலா இராமமூர்த்தி

    காலா…!    
    பயனிலா மாக்களே பல்லாண்டு வாழ்வதும்
    பயனுடை மக்களோ சில்லாண்டில் வீழ்வதும்   (சில்லாண்டு – சில ஆண்டு)
    முறையா தகுமா என்றே வினவினேன்!  
    கூர்ந்தெனை நோக்கிய காலனும் கூறினான்
    ஓர்ந்துதான் செய்கிறேன் நானுமே என்பணி   (ஓர்ந்து – ஆய்ந்து)
    செப்புவேன் அதனைநான் செவிமடு சற்றுநீ

    என்றுரைத்த காலனும் சொல்லிய கருத்திது…

    ”அறிவுடைச் சான்றோர்கள் எவருக்கும் பயனுளார்
    அறிவற்ற வீணரோ எமனுக்கும் பயன்படார்!
    ஆதலின் நானுமே பயனுளாரைக் கொள்ளுவேன்
    கோதனைய வீணரைப் பற்றிடாது தள்ளுவேன்  (கோது – சக்கை)
    என்தொழில் சூட்சுமம் புரிந்ததா நங்கையே…
    என்றெனைக் கேட்டனன் நகைப்புடன் காலனும்
    என்சொல அவனிடம் திகைக்கிறேன் நானுமே!!??

    *****

    மேற்கண்ட கவிதை பின்வரும் நாலடியார்ப் பாடலின் எளிய வடிவம்:

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
    கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்
    சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
    கோதென்று கொள்ளாதாம் கூற்று.  (நாலடி – 106)

     

     

    Share
  • தகழியின் இரண்டுபடி நாவலில் எதார்த்த வாதம்

    -மு.சண்முகப்பிரியா

    தகழி சிவசங்கரப்பிள்ளை ‘பிரதிபலம்’ என்ற நாவல் மூலம் மலையாள இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.  இவர் ஆலப்புழை மாவட்டத்தில் ‘தகழி’ என்ற சிற்றூரில் பிறந்தவர்.   தகழி ‘பதித்பங்கஜம்’, ‘சங்கதி’, ‘நித்தியகன்னிகை’ போன்ற புதினங்கள் படைத்துள்ளார்.  இவை அனைத்தும் இடதுசாரிச் சிந்தனைகள் உடையவை.  ‘தோட்டியின் மகன்’ (1947) தோட்டிகளின் வாழ்க்கையை சொன்ன மலையாள இலக்கிய உலகில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய புதினம் ஆகும்.  ‘இரண்டடங்கழி’ (1948) குட்ட நாட்டில் பண்ணை வேலை செய்யும் புலையரின் வாழ்வியல் பற்றியது.  சாகித்ய அகாதெமி விருதுபெற்ற ‘செம்மீன்’ (1956) பரதவ மக்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கையையும் பதிவிட்டது.  ‘ஓசோபின்ட மக்கள்’ (1959 )கிறித்துவக் குடிகளை பதிவு செய்தது.  கேரளநாட்டு வரலாற்றையே உள்ளடக்கிய ‘கயிறு’ (1980) இலக்கிய உலகில் மிக உயரிய விருதான ஞானபீடப் பரிசும் பெற்ற புதினம் ஆகும்.

    ‘இரண்டுபடி’ சேற்று நிலம் நிறைந்த குட்டநாட்டில் பண்ணை முறை ஒழிந்து உடலுழைப்புக்கேற்ற கூலி என்ற நிலை ஏற்பட்ட காலத்தில் சொந்த நிலம் இல்லாத ஏழைப் பண்ணைத் தொழிலாளர்களின் வாழ்க்கைநிலையைக் கூறுகிறது.  நிலப்பற்று, தொழிற்பற்று, பண்ணையார் பக்தி ஆகிய மயக்கங்களோடு வாழ்க்கை நடத்துகிறவர்கள் குட்டநாட்டு விவசாயத் தொழிலாளர்கள்.  இந்த மயக்கத்தில் இருந்து விடுபடும் கோரன், சமூக அமைப்பின் கொடுமை குறித்தும் நடைமுறையில் இருக்கும் பொருளாதார நிலைமை குறித்தும், இதன் அநீதி குறித்தும் மெல்ல மெல்ல விழிப்படைய அவனுக்குச் சங்கங்கள் உதவி செய்கின்றன.

    கதையின் தலைவனான கோரன், தன் திருமணத்திற்குப் பெண்வீட்டிற்கு ஐம்பது ரூபாயும், இருபத்தைந்து பறநெல்லும், சீர்கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டிய சூழலில் புஷ்பவேலி பண்ணையாரிடம் ஓணப்பணியாளாக வேலைக்கு சேர்கிறான்.  முழுமையான பண்ணைத்தொழில் மட்டுமே தெரிந்த கோரன் முதலாளிகளால் தானும், தன்னைச் சார்ந்த தொழிலாளர்களும் சுரண்டப்படுகின்றனர் என்று தெரிந்தபோது அதை எதிர்க்கிறான்.  அங்கு உரிமை மறுக்கும்போது போராட்டக்களம் உருவாகத் தொடங்குகிறது. 1950-களில் சங்கம் தொடர்ந்து ஒன்றிணைந்து போராடுவதாக நாவல் புனைவாக்கம் செய்யப்படுகிறது.

    குட்டநாட்டுச் சமூகம்:

    எட்டித்துறையில் வாழும் காளிச்சம்பான் தன் மகள் சிருதயை திருமணம் செய்ய வருபவர்கள் 25 பறநெல்லும், ஐம்பது ரூபாயும் தட்சணை கொடுத்துத் திருமணச்  செலவு செய்து கொண்டு போக வேண்டும் என நிபந்தனை போட, சிருதைக்குத் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

    ‘‘கல்யாண விருந்து, ஊர்ப் பணம், உடை, தாய்மாமானுக்கு உடை, பெண்ணின் தாய்க்கு உடை,  50 ரூபாய் 25 பறநெல்””1  இது கோரன் கொடுக்கவேண்டிய தட்சணை.  இதற்காகக் கோரன், புஷ்பவேலி பண்ணையாரிடம் ஓணப்பணியாளாக வேலைக்குச் சேர்ந்தான்.  வருடம் 180 நாள் வேலை. ஒருநாள் கூலி  5 கூலியேன், இரண்டுபடி நெல், ஓணம், அமாவாசை, மகம் நாட்களில் வேலை இல்லை.  அறுவடைக்காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாளாகக் கதிர்க்கட்டு கிடைக்கும்.  கோரன் குடும்பத்தினர் குஞ்சப்பு வீட்டில் ஒரு தரைபோட்டுத் தங்கிக் கொண்டனர்.  கடுமையான ஐப்பசி மாதக் குளிரில் தண்ணீரில் இறங்கிச் சகதிக்கட்டுகளைத் தோண்டி எடுத்து கரையில் போடுவது அவர்களின் முதல்வேலையாக இருந்தது.

    அங்குள்ள மக்கள் உரிஅரிசி இருந்தால் என்றாவது ஒருநாள் அரிசிச் சோறு வடிப்பார்கள்.  அங்கு ஊப்பைமீன்கள் கொண்டு குழம்பு வைப்பார்கள்.  ஆனால் மரவள்ளிக்கிழங்குதான் பெரும்பாலும் உணவாக இருக்கும்.

    தொழிலாளர்கள் நிலை:

    ஐப்பசி மாதம் ஒருநாள் அனைவரும் முதலாளியின் வீட்டில் ஒன்றுகூடுவார்கள்.  அன்று பண்ணையாரால் ஒருநேர விருந்தும் மதுவும் வழங்கப்படும்.  அதில் பலர் அடக்கி வைக்கப்பட்டுள்ள உண்மையைப் புலம்பலாக வெளியிடுவர்.  அன்று சமையல் சாம்பான் ‘‘பள்ளனும் பறையனும் வேலை செய்தான் நெல் உண்டாக்கினான் அதை, பண்ணையார் அறையில் வாரி போட்டாவ, சாம்பனும் குடும்பனும் வேலை செய்து தரையை உண்டாக்கினான், சகதிக்கட்டை போட்டு உயர்த்தி தோட்டமுண்டாக்கினான், தென்னம்புள்ள நட்டான், பண்ணையார் தேங்காய் பறிக்கிறாவ””2  என்று கூறுவதன் மூலம் அந்த ஊர் உருவாகக் காரணமானவர்களே அடித்தட்டு தொழிலாளி மக்களே ஆவார் என்பது புலனாகிறது. பண்ணையார் அடிக்கும்போது வாங்கிக்கொள்வது பெருமையாகவே இருந்தாலும் தொழிலாளர்கள் தம்மைப் பண்ணையார் அடித்தால் அந்த அடியை வாங்கிக் கொண்டால் பின் நன்மை செய்வார் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். முதலாளிகள் தன்னிடம் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுப்பார்.

    புஷ்பவேலிப்  பண்ணையாள் அந்த வயலில் உழுது, விதையிட்டு, பயிர் செய்து அறுவடை தொடங்கும் முன்வரை அவனே அதற்கு முழுப் பொறுப்பாவான்.  ஆனால் அறுவடை தொடங்கியதும் அந்த நிலத்திற்கும் அறுவடைக்கும் அவனுக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை.  உழைப்பும், விளைச்சலை உண்டாக்குவதும் தொழிலாளியுடையது.  ஆனால், அந்த விளைச்சலும் அதன் உரிமையும் அவனுக்கில்லை.  ‘‘கோரனுக்குத் தன் பொறுப்பில் உள்ள வயலின் அறுவடை வந்ததும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.  ஒரு மணிகூட சிந்தாமல் சிதறாமல் அறுக்கவேண்டும் என வேலை செய்யும் பெண்களிடம் கூறினான்.  தன் உழைப்பின் பயனைப் பார்த்துப் பார்த்து வியந்து  மகிழ்ச்சியால் ஒரு கதிரெடுத்து புட்டிலில் வைத்தான்.  அதைக் கவனித்த பண்ணையார் கதிரைக் கீழேபோடச் சொல்லி அதட்டினார்.  கோரன் அசைவற்று நின்றுவிட்டான்.””3  கோரன் போராடியும் ஒரு பிடி நெல் கேட்டபோது அவனைக் கடுமையாகப் பார்த்தார்.  பண்ணையாரின் சகதிக்காடு கோரனால் விளைநிலமாகியது.  அவன் உழைப்பால் உருவானது. ஆனால், அந்த விளைநிலத்தில் விளைந்த விளைச்சலைத் தொட அவனுக்கு அனுமதியில்லை.  பண்ணையார் தான் எடுத்த கதிர்க்கட்டைக் கீழேபோடச் சொல்லிய உடன் அவன் வெதும்பிபோய் தனக்கு உரிமையில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.  இது அங்கிருந்த ஓணப்பணியாள் அனைவருக்கும் பொதுவான நீதியாக இருந்தது.

    வறுமையும் உணவும்:

    புஷ்பவேலியில் வாழும் தொழிலாளிகளுக்கு அதிகபட்சமான ஆசை சகதிக்காட்டை சரிசெய்து குடிசையிடுவதும், உணவாக நெல்லரிசிச் சோறும் சிறுமீன் குழம்பும் மரவள்ளிக்கிழங்கும் உண்பதுமாக இருந்தது. அதோடு புதுத்துணி அணிந்து ஆலப்புழைக்கு சென்று ஒரு திரைப்படம் பார்ப்பதுமாக இருந்தது.

    விவசாயத் தொழிலாளர்களின் அன்றாட உணவு என்பது நாழிக்கஞ்சியும் நாலு துண்டு கிழங்கும்தான் இருந்தது.  வெளுதை தன் மகன் குடிசைக்கு வந்திருந்தான்.  உடல் முழுவதும் வீக்கம்.  ‘‘அரிசி போட்டுக் கொதிக்கவச்ச தண்ணி குடிச்சு நாள் பத்தாச்சு, அதுதான் இந்த விதர்ப்பு என்று கூறினான்.””4  இதன்மூலம் நெல்லரிசிக்கு ஏங்கியிருந்தனர் என்பதை நம்மால் உணரமுடிகிறது. அறுவடைக் காலம் முழுவதும்  முதலாளிகள் கூலி நெல்லுக்கு பதில் காசு கொடுக்க ஆரம்பித்தனர்.  கூலி நெல்லைக் கொண்டு உணவருந்திப் பசிபோக்கிய குடும்பங்கள் குறைவான கூலிப் பணத்தைக் கொண்டு தங்களின் அடிப்படையான உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யமுடியவில்லை. கோரனின் எண்ணம் முழுவதும் தன் தந்தையைக் கவனிக்க வேண்டும் என்றே விரும்பியது.  தந்தை தன் வீட்டிற்கு வந்தபோது தன் மனைவி அரிசிக் கஞ்சிக் கொடுத்தாள் என்ற செய்தி கோரனை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

    சரியான உணவு இல்லாமலும், குளிராலும் கோரனின் தந்தை இறந்தான்.  புதைக்க இடம் இல்லை.  குடியிருப்புப்பகுதி முழுவதும் ஈரமான தரை.  எனவே புதைத்தால் பிணம் மேலே வந்துவிடும்.  கிறித்துவர் ஆக இல்லாதால் கல்லறைப்பகுதிகூட இல்லை.  பிணத்தைக் கல்லால் கட்டி ஆற்றில் போட்டான்.  தன் தோட்டியின் மகன் புதினத்தில் கூட ‘‘சுடலையின் தந்தை இசக்கிமுத்து தோட்டியைப் புதைக்க இடமில்லால் புதைக்கப் பணம் இல்லாமலும் மலக்கிடங்கில் புதைத்தனர். இரண்டு நாளில் நாய் பிணத்தை எடுத்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டது.””5 என்று அடித்தட்டு மக்களின் வாழ்வியலை எதார்த்ததோடு சுட்டுகிறார்.

    போராட்டங்களும் தீர்வும்:

    உழைத்துப் பழகிய மக்கள் அதற்கான கூலி கிடைக்காமல் பட்டினியால் வருந்தினர்.  ‘‘பண்ணைத் தொழிலாளர்களுக்குச் சம்பளமாக ஒவ்வொரு ரூபாய் கொடுத்துவிட்டு யோசேப்பு கர்வத்தோடு வேணுமென்றால் கொண்டு போ இங்கு நெல்லும் புல்லும் ஒன்றுமில்லை.  வேலை வேண்டாம் என்றால் பற்றுள்ளதை வைத்துவிட்டு போ””6 என்றான்.  குட்டநாட்டில் பண்ணையார்கள் இரகசிய தீர்மானம் போட்டு யாருக்கும் நெற்கூலி இல்லை என்று முடிவெடுத்தனர்.

    முதல் முறையாகப் பத்திலிருந்து அறுபது பறையர்கள் கூடினர்.  தங்களைப் பற்றிய பிரச்சனைகளைப் பேசினர்.  ஒன்றுசேர்ந்து நிற்கவேண்டும் என்றனர். தங்களுக்குக் கூலி கொடுக்க நெல் இல்லை என்று சொன்ன பண்ணாயார்களின் நெல்லை லாரியில் ஏற்றும்போது அங்கிருந்த விவசாயக்கூலிகள் அந்த லாரியை மடக்கிப் பிடித்துத் தங்களின் முதல் எதிர்ப்புக்குரலை ஒலித்தனர்.  சங்கம் ஆரம்பித்தனர், சிறுசிறு சங்கங்களைச் சேர்த்த நிர்வாகமும் மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கிய காலகட்டம்.  கோயில் திருவிழாக்களில் சங்கம் குறித்தும் உழைப்புக்கேற்ற கூலி வாங்கவேண்டும் என்றும் பேசினார்.  இது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் ‘‘ஒரு எசமான் எல்லோரும் சமமுனு சொன்னார்.  அப்ப நம்மளும் பண்ணையாரும் சமமா?  நமக்குக் கூலி கூடுதல் வேணமின்று கேட்டா பண்ணையாரிடம் இருந்து வாங்கி தருவாங்களா?””7 என்று அறியாமை நிறைந்த மக்களாகவே இருந்தனர்.  அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டது.  அதில் சாதி, மத, பேதமின்றி கட்சியில் அனைவரும் இணைந்தனர்.

    சங்கமானது தொழிலாளர்கள் பேசவும் அவர்கள் கருத்துக்களைக் கூறவும் அவர்களுக்குத் துணிவுடன் கூடிய உரிமையைக் கொடுத்து இருந்தது.  இந்த அரசாங்கம் நமக்கு என்ன செய்யபோகிறது என்று பேசும் அளவிற்கு வளர்ந்து இருந்தனர்.  இவர்களின் இந்த எதிர்ப்பால் அரசு இவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்தது.

    ‘‘தினந்தோறும் இரண்டு கூலியேன் நெல்லும், மீதி அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் என்றும் கூலிவிகிதம் மாறிவிட்டது.  இது சங்கத்தின் முதல் வெற்றியாகும்.  இந்த வெற்றி கோரனை இன்றும் சங்க செயல்களில் தீவிரப்படுத்தியது.  தன் மனைவி  தடுக்கும்போது அவள் தனக்கு முட்டுக்கட்டைப் போடுகிறாள் என்று கூறும் அளவிற்கு அவன் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டான்.  சங்கமே அவனுக்கு உயிர் மூச்சாகவும் இருந்தது.  அவனின் ஈடுபாட்டைப் பார்த்து தானும் கணவனுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சங்கத்தில் சேர்வதாக கூறுகிறாள்.  அப்போது சங்கம் பற்றிக் கோரன் தன் மனைவிக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான்.””8 ‘‘இனி நமக்கு முன்னால் இருக்கும் காலம் அபாயகரமானது.  அதோடு இந்தப் போர் குட்டநாட்டுப் பண்ணைக்கு மட்டுமன்று; ராஜ்யத்தை  ஆளுகிறவர்களுக்குக் கூட யூனியனையும் அதில் பணியாற்றுபவர்களையும் எதிர்ப்பார்கள்.  இவர்கள் பண்ணையார்களின் மச்சான்களே.  எனவே நமக்கு வேண்டியதைப் பிடிச்சு வாங்கனும், ஜெயிலுக்கு போகவோ அடிபட்டு சாகவோ எல்லாம் நடக்கும்””9 என்ற நிலையினை எடுத்துச் சொன்னான்.

    குட்டநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் அவர்களுக்குத் தேவையான சிறு சிறு உரிமைகளை யூனியன் வழியாகப் பெற்றனர்.  அவர்களின் மோதல் பண்ணையார்கள் மட்டுமின்றி அரசாங்கமும்தான். அங்கு இருக்கும் தாழ்த்தப்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் சற்று வளர்ந்தனர்.  ஆதலால், அவர்களின் குரலில் கனம் கூடியது. அவர்கள் இட்ட நிபந்தனைகளை ஏற்று கூலி தரப்பட்டது.  ‘‘கூலியை அவர்கள் முன்னால் அளக்கவேண்டும்.  நிலத்தில் விளைவதில் ஒரு பங்கும், மற்றும் பண்ணையாளர்களின் இலாபத்தில் ஒரு பங்கும், வேலைக்கேற்ற கூலி, அதோடு பண்ணையார்களின் கட்டுக்குத்தகையை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றனர்.””10 இதனால் சில பண்ணையார்கள் ஏழை நாயரையும் கிறித்துவர்களையும் ஈடுபடுத்தினர்.  பின் இவர்களே இதைச் சரியென்று ஒப்புக்கொண்டு போய்விட்டனர்.  நாடெங்கும் விவசாயத் தொழிலாளர்களின் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. தொழிலாளர்கள் முத்திரைமொழிகள் முழங்குகின்றனர்.  பல இடங்களில் வேலைநிறுத்தம் நடந்தது.  சில இடங்களில் கேட்ட கூலி வாங்காமல் வேலையாட்கள் கலைந்து போகவில்லை.  இரவில் வீட்டின் முன்னே நின்று உறுதிச்சொற்கள் உரைத்துக் கூவினர்.  அரசுக்கு எச்சரிக்கை செய்தனர்.  குட்டநாட்டில் உணவுப்பஞ்சம் உச்சத்தில் இருந்த காலத்தில் எல்லைமீறி பொது அமைதியை உடைத்தனர் என்று அரசு பலர்மீது வழக்குத் தொடர்ந்தது.  அதில் முக்கிய தலைவர்கள்  தலைமறைவாகிவிட்டனர்.  இதேபோல் டி.செல்வராஜின் ‘தோல்’ புதினத்தில் தோல் தொழிலாளர் போராட்டமும், ‘மலரும் சருகும்’ புதினத்தில் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டமும் வர்க்கப் போராட்டத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ‘‘1948-1955 காலகட்டத்தை இடதுசாரி இயக்கங்களின் தலைமறைவுக் காலம்””11 என்றே பா. ஆனந்தகுமார் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார். வகைமாதிரியான சூழல்களில் வகைமாதிரியான கதை மாந்தர்களைப் படைத்துக் காட்டுவதுதான் எதார்த்தவாதம் என்னும் ஏங்கல்ஸ் கூற்றுக்கேற்பக் கோரன் இங்குப் படைக்கப்படுகிறார்.  போராட்டத்தில் சிலர் பிடிபட்டனர்.  சிலர் ஒடுக்கப்பட்டு அடிக்கப்பட்டு அடைக்கப்படுகிறார்கள்.  கோரன் தலைமறைவாக இருக்கிறான்.  சிருதையை ஓர் இரவில் திடீரென சந்தித்திப் பேசிவிட்டுச் செல்கிறான்.

    தகழியின் இந்தப் புதினத்தில் புரட்சியான ஆனால் எதார்த்தமான காட்சியாக கோரன் தன் வாழ்க்கையைத் தொழிலாளர்கள் நலன், சங்கம் என்று அர்ப்பணித்துவிட்டதால் சிருதையை விரும்பிய சாத்தனிடம் ஒப்படைக்கிறான்.  அதோடு சிருதைக்குத் துன்பத்தைக் கொடுக்கும் புஷ்பவேலி சாக்கோவை அடித்துக் கொன்றான். ஆனாலும், தொழிலாளர்களின் நலனுக்காகத் தலைமறைவாக இருந்தான்.  விவசாயத்தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுவதால் ‘‘முதலாளி இனத்தார் மிகவும் பயந்து சங்கடப்பட்டனர்.   மாதா கோவில்களிலும் மிக நீண்ட பிரார்த்தனையும் இந்து கோவில்களில் திவ்ய ஹோமங்களும் நடந்தன.  கம்யூனிஸத்திலிருந்து உலகைக் காப்பாற்றுமாறு இவையெல்லாம் நடந்தது.””12 இவ்வாறு போராட்டத்தின் தன்மையைப் பார்க்கும்போது சிருதையும் மற்ற பெண்களும் போராட்டத்தில் தாங்களும் ஈடுபடவேண்டும்  என்று விரும்பினர்.

    முடிவுரை:

    விவசாயப் போராட்டங்களின் எழுச்சியானது அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.   குட்டநாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.  பொதுமக்களின் விருப்பங்கள் மதிக்கப்படவேண்டும் என்று சங்கங்கள் கூடிப் பேசி முடிவெடுத்தனர்.  சங்க உறுப்பினர்கள் அனைவரும் சமமான சீரான முன்னேற்றம் அடையவேண்டும் என முடிவெடுத்து விவசாயத் தொழிலாளர்களின் இந்த கலகக்குரலானது உரிமைக்குரலாக ஒலித்து வெற்றியடைந்தது.

    அடிக்குறிப்பு:

    1.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 20.
    2.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 33.
    3.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 53.
    4.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 71.
    5.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 98.
    6.தோட்டியின் மகன் தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 30.
    7.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 100.
    8.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 115.
    9.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 120.
    10.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 121.
    11.கட்டுரை டி.செல்வராஜ் தால் நாவல் வரலாறும் எதார்த்தவாதமும் பா. ஆனந்தகுமார், பக்.51.
    12.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 113.

    பயன்பட்ட நூல்:

    சிவசங்கரம்பிள்ளை, தகழி. இரண்டுபடிகள், சாகித்ய அகாடமி, தலைமை அலுவலகம், இரவீந்தரபவன், 35, பெரோஷா சாலை,புதுதில்லி-1.

    *****

    கட்டுரையாளர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
    அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி),
    சேலம் – 636 007.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    KRISHNA FOR TODAY….!
    ————————————————

    180721 Yashoda watercolour, conté and charcoal A4 scan 300dpi wm

    கண்ணனின் வாய்க்குள்ளே கண்ணனைக் கண்டதும்
    அன்னை இழுத்தாள் அவசரமாய் -மண்ணுக்கு:
    மாதாவின் கண்களுக்கு மாயத் திரையிட்ட
    கீதா உபதேசா காப்பு….!

    சூர்பணகை ஆனாலும் சுந்தரி ஆனாலும்
    பார்ப்பன எல்லாம் பரம்பொருளே -தாற்பரியம்
    தன்னை உணர்ந்து தவறா(து) இருந்திட
    கண்ணனை நெஞ்சே கருது….!

    சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
    இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
    மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கோதா மணாளனே காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 29

    க. பாலசுப்பிரமணியன்

    தொழிலின் சிறப்பு

    மாற்றங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை என்பதை நாம் புரிந்துகொண்டால் மாற்றங்களைச் சந்திப்பதற்கும் வாழ்வை வளமுடன் வாழ்வதற்கும் தேவையான சக்தியும் எண்ணங்களும் கருத்துப் பரிமாணங்களும் நமக்கு எளிதில் கிடைக்கும். இதற்குத் தகுந்தவாறு நமது அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வடித்துக்கொள்ளவும் உபயோகித்துக்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும்.

    எந்த ஒரு பிரச்சனையையும் நமது அணுகுமுறைகளால் சமாளித்து விடலாம். நமது அணுகுமுறைகள் நேர்மையானதாகவும் பரிசுத்தமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருத்தல் அவசியம். இவைகளில் எந்தவிதமான குறைகள் இருந்தாலும் நமக்கு கிடைக்கும் பலன்களில் அவைகளின் தாக்கமும் பாதிப்பும் இருக்கும்.

    உதாரணமாக மாணவப் பருவத்தில் சிலர் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் பொழுது ‘இதெல்லாம் தேர்வில் வராது’ என்றோ ‘இந்த மாதிரிக் கேள்விகள் வந்தால் அவைகளை தயாரிப்பின்றியே சமாளித்து விடலாம் ‘ என்ற கருத்தும் அணுகுமுறையும் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்குத் தேர்வில் பாதிப்புக்கள் ஏற்படும். கற்றலின் சிறப்பே அறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்வதேயன்றி வெறும் தேர்வில் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாரிப்பில் ஈடுபடுதல் அல்ல. இது ஒரு கட்டிடத்திற்கு அடிவாரம் இல்லாமல் மேலே கட்டிடங்களைக் கட்டுவது போல.

    இதேபோல எந்த ஒரு தொழிலிலும் நாம் ஈடுபடும் பொழுது அந்தத் தொழிலுக்குத் தேவையான திறனும் கண்ணியமும் ஈடுபாடும் தேவையானது. மேலெழுந்தவாரியாக வெளிப்பூச்சு செய்வதுபோல மற்றவர்களுக்காக ஒரு வேலையைச் செய்யும் பொழுது நமது உள்மனதிற்க்குத் தேவையான நிறைவும் மகிழ்வும் கிடைக்காதது மட்டுமின்றி அந்தத் தொழிலின் மீதே நமக்கு ஒரு வகையான வெறுப்பும் பிடிப்பின்மையும் ஏற்பட்டுவிடும். தொடர்ந்து ‘எப்பொழுது இந்த வேலையை நாம் விட்டுவிடுவோம் என்ற எதிர்பார்ப்புக்களும் அதைச் சார்ந்த மனச் சோர்வும், அதன் பலனாக மன-உடல்நல பாதிப்புக்களும் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகமாக அமையும்.

    “செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனப்பான்மை வேண்டும். எந்தத் தொழில் செய்தாலும் அது நாம் இறைவனுக்குச் செய்யும் ஒரு படைப்பாகக் கருதிச் செய்யும் பொழுது அதில் ஒரு நிறைவும் மகிழ்வும் ஏற்படும். நிறவெறியை எதிர்த்துப் போராடிய தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர் கூறினார்”  ஒரு மனிதன் தெருவைச் சுத்தம் செய்யும் பொழுது, மைக்கெல் அஞ்சேலோ ஒரு சிற்பம் வடித்ததைப் போலவோ அல்லது செகப்பிரியர் ஒரு கவிதை புனைந்தது போலவோ அல்லது பீத்தோவன் ஒரு பாடலுக்கு இசை அமைத்தது போலவோ நினைத்து அந்தத் தொழிலைச் செய்யவேண்டும். அதைச் செய்யும் பொழுது மண்ணிலும் வானிலும் இருக்கும் தேவதைகள் சற்றே நின்று வியந்து ‘இதோ இங்கே தெருக்கூட்டுபவன் தன் தொழிலை எவ்வாறு சிறப்பாகச் செய்கிறான் பாருங்கள் ” என்று தங்களுக்குள் உரையாடிக்கொண்டு செல்ல வேண்டும்.”

    தொழிலைச் செய்யும் பொழுது அது ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த தொழில் அல்ல. எல்லாமே ஒருவர் இந்த மனித இனத்திற்கும் இந்த மண்ணிற்கும் தாங்கள் செய்யும் ஒரு சேவையாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற ஒரு மனிதனுக்கு இந்த உலகில் உள்ள அனைவரும் தலை வணங்குவர்.  சில ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு மிகப் பெரிய தொழிலதிபரின் வண்டி ஓட்டுநர் அவரிடம் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தபின் மாரடைப்பால் காலமாகின்றார். அடுத்த நாள் அவர் உடலுக்கு இறுதி மரியாதை அளிக்க பலர் கூடியிருந்த வேளையில் அந்தத் தொழிலதிபர் எந்தக்காரில் அவர் ஓட்டுநராக இருந்தாரோ அதை அலங்கரித்து அவருடைய சவ ஊர்வலத்திற்க்காகக் கொண்டு வந்தது மட்டுமின்றி அதைத்தானே மயானம் வரை ஒட்டிச் சென்றார். பலரின் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம் அந்தத் தொழிலதிபர் கூறியதாவது. “முப்பது ஆண்டுகள் இவர் என்னை பத்திரமாகக் காப்பாத்தி இந்த வண்டியை ஒட்டியிருக்கின்றார். அவருடைய தொழில் திறனுக்கும்கடமை உணர்வுக்கும்  நான் கொடுக்கும் சிறிய மரியாதை அவரைக் கடைசி ஊர்வலத்தில் நானே அழைத்துச் செல்வதுதான்.” பல இடங்களில் தங்கள் தொழிலில் நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டவர்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் வரலாற்றுச் சிறப்புப் பெற்றவை.

    சில நேரங்களில் நாம் செய்கின்ற தொழிலுக்கும் அதில் நாம் காட்டும் ஈடுபாட்டிற்க்கும் நம்முடைய சிறப்பான திறன்களுக்கும் சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அல்லது நாம் சிறப்பாகத் தொழில் செய்தாலும் பல வித காரணங்களால் நமக்கு மற்றவர்களோடு நிகரான அங்கீகரிப்புக் கிடைப்பதில்லை. இவைகள் நம்முடைய தொழில் தர்மத்தையோ`அல்லது ஈடுபாட்டையோ, திறன்களையோ அல்லது கடமை உணர்வினையோ பலி  வாங்க அனுமதிக்கக்கூடாது. நமக்குப் பல நேரங்களில் நிகரான அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. அது நம்முடைய திறனுக்கோ  அல்லது தனித்தன்மைக்கோ விமரிசனம் அல்ல. அவைகளுக்கு அப்பாற்பட்டு நாம் செய்கின்ற தொழில் இந்த மனித இனத்திற்கும் இறைவனுக்கும் நாம் செய்கின்ற ஒரு தோத்திரமாக இருந்தால் அதுவே நமது வாழ்க்கையின் பொருளும் வெற்றியும் ஆகும்.

    முயன்று பார்க்கலாமே !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
    காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
    அதியற் புதமான ஆன்ம உலகில்:
    துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….(1)

    ’’அமளி இலாத அமைதி லயத்தில்,
    ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
    பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
    வேண்டி யுறங்க வரம்’’….(2)

    ‘’காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
    யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
    வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
    பாலா நவராத்ரிப் பெண்’’….(3)

    ’’வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள்’’….(4)

    ’’சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
    தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
    ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்’’,
    வாலைபா லாஅருள் வாக்கு’’….(5)

    ‘’மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
    கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
    திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
    ஹரிசோ தரியே அரண்’’….கிரேசி மோகன்….(6)

    ”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
    கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
    நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
    பாலாம் பிகையவள் பேர்”….கிரேசி மோகன்….(7)

    விடிகாலை வெளிச்சம்”….
    ———————————–

    “மாலை மயக்கம், மதிய உதயம்அதி
    காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
    திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
    எரிபவை கூட எழில்”…..கிரேசி மோகன்….(8)

    ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
    மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
    யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
    சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….கிரேசி மோகன்….(9)

    ’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
    நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
    வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
    பாலை திரிபுரையின் போக்கு’’….கிரேசி மோகன்….(10)

    ஞமலி -நாய்

    ”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….கிரேசி மோகன்….(11)

    ”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
    லயமடைய பாலா, லலிதை -மயமான,
    ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
    ஆபத்(து) உதவி அவள்”….கிரேசி மோகன்….(12)

     

    ‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
    பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
    சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
    மாதவத்தில் மூழ்கயென், மனு’’….கிரேசி மோகன்….(13)

     

    ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
    பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
    தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
    ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….கிரேசி மோகன்….(14)

     

    ‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
    சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
    குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
    அமுதத்தன் தங்கை அவள்’’….கிரேசி மோகன்….(15)

     

    ‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
    தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
    மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
    காலேல கண்மலர்ந்து கா’’….கிரேசி மோகன்….(16)

    கா -காப்பாய்….

     

    ‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
    அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
    கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
    பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….கிரேசி மோகன்….(17)

     

    ‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
    தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
    கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
    பெண்ணிமய பாலா படு’’….கிரேசி மோகன்….(18)

     

    ’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
    ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
    படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….கிரேசி மோகன்….(19)

     

    ”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
    நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
    நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
    அஞ்சேல் அபயம் அளிப்பு”….கிரேசி மோகன்….(20)

     

    ‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
    நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
    வீற்றவளே பாலா , வருக வருகநான்
    சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….கிரேசி மோகன்….

     

    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180725 Kaliamardhana A4 wcol charcoal – with the nagapatnis scan 300 -wm

    புகுந்தன்று, பொய்கை படமெடுத்த ஐந்து
    முகம்கொண்ட காளியன் மீது -வெகுண்டெழுந்(து)
    ஆடிய ஆட்டம், அதற்கீடாய் ஐம்புலன்கள்,
    ஆடா(து) அடங்கநீ ஆடு….கிரேசி மோகன்….!

    Share
  • அன்னைத் தமிழ் அகமகிழும்!

    [ம. ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா]

    நன்றி   எனும்   வார்த்தையினை
    நாம்  சொல்லத்  தயங்குகிறோம்
    ” தாங்ஸ் ” அங்கே வந்துநின்று
    தான்  நிமிர்ந்து  நிற்கிறது
    மன்னிக்க  என்று  சொல்ல
    மனம்  எமக்கு  வருகுதில்லை
    ” வெரிசாறி ” என்று  சொல்லி
    வேற்று  மொழி  உதிர்க்கின்றோம்  !

    வந்து    நிற்கும்   விருந்தினரை
    ” விசிட்டர் ” என அழைத்திடுவோம்
    காலை  நேர  உணவதனை
    ” பிரேக்பாஸ்டாய் ” ஆக்கி  நிற்போம்
    மாலை  நேரம் உண்ணுவதை
    ” டிபன் ” என்று மாற்றிவிட்டு
    மனமகிழ்வை ” ஹப்பி ”  என்று
    வாயாரச் சொல்லி  நிற்போம்    !

    அம்மாவின்  தங்கை  வீட்டில்
    ” அன்ரியாய் ”  ஆகி  நிற்பார்
    அப்பாவின்  தம்பி  அங்கே
    ” அங்கிளாய் ”  பெயர் பெறுவார்
    பெரியப்பா  பெரிய  அம்மா
    எனும் அருமை வார்த்தையெலாம்
    ” அங்கிளெனும் ” பெயர்  பெற்று
    அன்னைத் தமிழ் ஒழிந்துகொள்ளும்   !

    பிறந்த     நாள்    விழாதன்னில்
    பெருங்  குரலால்  யாவருமே
    ” ஹப்பிபர்த்டே ”  எனப்   பாடி
    கைதட்டி  மகிழ்ந்து  நிற்போம்
    தமிழ்  மொழியில்  வாழ்த்திருக்க
    அதைத் தவிர்த்து விட்டுவிட்டு
    அன்னியத்தை பாடி நிற்றல்
    அருவருக்கும் செயல் அன்றோ   !

    தொலைக் காட்சி  நிகழ்ச்சிகளில்
    தொகுத்து நிற்க வருபவர்கள்
    ” ஸோவென்பார் ”  ” சொரி ”   என்பார்
    சுவையதனை ” சுவீற் ”  என்பார்
    மூச்சுக்கு ஒரு  தடவை
    பேசி நிற்பார்  ஆங்கிலத்தை
    முன் வந்து  நிற்பதோ
    முக்கியமாய்  தமிழ் நிகழ்வே  !

    தமிழ் அவையில் பேசவரும்
    பேச்சாளர் பல பேரும்
    சரளமாய் ” சிம்பிள் ” என்பார்
    ” சக்சஸ்தான் ”  வாழ்க்கை என்பார்
    அமுதான தமிழ் பேச
    வந்து நிற்கும் அவர்களுமே
    ஆங்கிலத்தை அணைத்து நிற்றல்
    அசிங்கமாய் இருக்கும் அன்றோ !

    நம் தமிழை வளர்ப்பதற்கு
    நாம் அன்றோ முயலவேண்டும்
    நம் தமிழின் வரலாறு
    நமக்கென்றும் பெருமை அன்றோ
    நம் மொழியை புறந்தள்ள
    நாம் வலிந்து நின்றுவிடின்
    நாம் தமிழர் என்றுசொல
    நம் மனது ஏற்றிடுமா  !

    நல்ல  தமிழ்  பேசுதற்கு
    நாம் மனதில் நினைத்திடுவோம்
    சொல்ல வல்ல சொற்கள்பல
    நிறைந்திருக்கு நம் மொழியில்
    அன்னியத்தை நம் பேச்சில்
    அணைப்பதனை விட்டு விட்டு
    அழகு தமிழ் பேசிநின்றால்
    அன்னைத் தமிழ் அகமகிழும் !

    Share
  • எல்லைச்சாமி

    ராதா விஸ்வநாதன்

     

    கிழக்கு வெளுத்திடுச்சு
    சேவலும் கூவுது
    தூக்கத்தில துக்கத்தை
    தொரத்த நினைச்சேன்
    தோத்துதான் போயிட்டேன்

    பாயும் தேஞ்சு போச்சு
    படுத்தா தூக்கம் வருதா என்ன
    துக்கம்தான் வருது மச்சான்
    இந்த துக்கத்திலேயும் சுகம் இருக்குது
    நாட்டை காக்க என் மச்சான்

    நாலு வருசமா நிக்கிறே
    எல்லையிலே நீ அங்கனே இருக்க
    எல்லைச்சாமி காவல் இருக்கு இங்கனே
    என் நினைப்பு வரக்கூடாது மச்சான்
    நாட்டு மண்ணை காக்கணும் மச்சான்

    ஏமாந்து போக வேணாம் மச்சான்
    எதிரியே கொன்னு போடு இல்லே
    மார்லே குண்டு பட்டு வா
    என் மாராப்பு சேலை வீராப்பை காட்ட
    எதிர் பார்த்து நிப்பேன் நிலப்படியிலே

    Share