[ம. ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா]

நன்றி   எனும்   வார்த்தையினை
நாம்  சொல்லத்  தயங்குகிறோம்
” தாங்ஸ் ” அங்கே வந்துநின்று
தான்  நிமிர்ந்து  நிற்கிறது
மன்னிக்க  என்று  சொல்ல
மனம்  எமக்கு  வருகுதில்லை
” வெரிசாறி ” என்று  சொல்லி
வேற்று  மொழி  உதிர்க்கின்றோம்  !

வந்து    நிற்கும்   விருந்தினரை
” விசிட்டர் ” என அழைத்திடுவோம்
காலை  நேர  உணவதனை
” பிரேக்பாஸ்டாய் ” ஆக்கி  நிற்போம்
மாலை  நேரம் உண்ணுவதை
” டிபன் ” என்று மாற்றிவிட்டு
மனமகிழ்வை ” ஹப்பி ”  என்று
வாயாரச் சொல்லி  நிற்போம்    !

அம்மாவின்  தங்கை  வீட்டில்
” அன்ரியாய் ”  ஆகி  நிற்பார்
அப்பாவின்  தம்பி  அங்கே
” அங்கிளாய் ”  பெயர் பெறுவார்
பெரியப்பா  பெரிய  அம்மா
எனும் அருமை வார்த்தையெலாம்
” அங்கிளெனும் ” பெயர்  பெற்று
அன்னைத் தமிழ் ஒழிந்துகொள்ளும்   !

பிறந்த     நாள்    விழாதன்னில்
பெருங்  குரலால்  யாவருமே
” ஹப்பிபர்த்டே ”  எனப்   பாடி
கைதட்டி  மகிழ்ந்து  நிற்போம்
தமிழ்  மொழியில்  வாழ்த்திருக்க
அதைத் தவிர்த்து விட்டுவிட்டு
அன்னியத்தை பாடி நிற்றல்
அருவருக்கும் செயல் அன்றோ   !

தொலைக் காட்சி  நிகழ்ச்சிகளில்
தொகுத்து நிற்க வருபவர்கள்
” ஸோவென்பார் ”  ” சொரி ”   என்பார்
சுவையதனை ” சுவீற் ”  என்பார்
மூச்சுக்கு ஒரு  தடவை
பேசி நிற்பார்  ஆங்கிலத்தை
முன் வந்து  நிற்பதோ
முக்கியமாய்  தமிழ் நிகழ்வே  !

தமிழ் அவையில் பேசவரும்
பேச்சாளர் பல பேரும்
சரளமாய் ” சிம்பிள் ” என்பார்
” சக்சஸ்தான் ”  வாழ்க்கை என்பார்
அமுதான தமிழ் பேச
வந்து நிற்கும் அவர்களுமே
ஆங்கிலத்தை அணைத்து நிற்றல்
அசிங்கமாய் இருக்கும் அன்றோ !

நம் தமிழை வளர்ப்பதற்கு
நாம் அன்றோ முயலவேண்டும்
நம் தமிழின் வரலாறு
நமக்கென்றும் பெருமை அன்றோ
நம் மொழியை புறந்தள்ள
நாம் வலிந்து நின்றுவிடின்
நாம் தமிழர் என்றுசொல
நம் மனது ஏற்றிடுமா  !

நல்ல  தமிழ்  பேசுதற்கு
நாம் மனதில் நினைத்திடுவோம்
சொல்ல வல்ல சொற்கள்பல
நிறைந்திருக்கு நம் மொழியில்
அன்னியத்தை நம் பேச்சில்
அணைப்பதனை விட்டு விட்டு
அழகு தமிழ் பேசிநின்றால்
அன்னைத் தமிழ் அகமகிழும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *