-மேகலா இராமமூர்த்தி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெற்றிட விரும்புவது மனித மனம். அதற்கு அடிப்படைத் தேவை முயற்சியும் உழைப்பும்.

”உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?” என்பார் பட்டினத்தடிகள்.

”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்” எனும் வள்ளுவம், விடாது முயலும் மக்கள் தமக்குச் சாதகமாயில்லாத விதியையும் வென்று சாதனை படைப்பர் என்கிறது.

அத்தகு ’தாளாண்மை’யின் தகைமையை நாலடியும் விதந்தோதவே செய்கின்றது.

துவள்கின்ற இளங்கொம்பாகி வழியிடையே நின்ற சிறுமரங்கூட உள்வயிரங் கொண்டு முற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரிய கட்டுத்தறியாக உதவும். ஒருவன் தன்னுடைய முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற் செய்துகொண்டு வாழ்க்கையிற் பெருமை கொள்ளுதலும் அத்தகையதே.

ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.
       (நாலடி – 192)

எளிய நிலையிலுள்ளோரும் தம் விடாமுயற்சியால் தம்மை ஆற்றலுடையவராகச் செய்துகொள்ளல் வேண்டும் என்பதே இதன்வாயிலாய் நாமறியும் உண்மை.

பிறப்பின் அடிப்படையில் நல்ல குலம், தீய குலம் என்பதெல்லாம் வெறும்  சொல்லளவில் தானேயன்றி அதற்குப் பொருளில்லை என்கிறது நாலடியார். பின் நல்ல குலம் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது எனும் நம் ஐயத்திற்கும் அதுவே தக்கதொரு விடை பகர்கின்றது.

 நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை – தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.
     (நாலடி – 195)

நல்ல குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையுடைய செல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும். ஆகலின், தவம் கல்வி ஆள்வினை முதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால் நேயங்கொள்ளுதற்குரிய உயர்குலத்தோராவர் என்பது நாலடியின் துணிபு.

ஒரு செயலில் ஈடுபட்டு உழைப்போர் தம் முயற்சி திருவினையாகும்வரை, தம் அறிவுத்திறத்தை அவசரப்பட்டு வெளிப்படுத்த மாட்டார்கள்; அடக்கமாகவும் மனவெழுச்சியுடனும் அதனைச் செய்துமுடிப்பர். மேலும் தமது ஆற்றலைத் தம் கண் முதலிய உறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கேற்ற அறிவு விளக்கமுடையவராகவும் இருப்பர். அத்தகைய திறன்மிகு தாளாண்மையுடையோரின் குறிப்புவழிப் பட்டதே இவ்வுலகு.

ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் – ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.
    (நாலடி – 196)

சுருங்கக் கூறின், நல்லறிவுடையாரின் முயற்சிகள் உள்ளுணர்வோடும் அறிவு விளக்கத்தோடும் நடைபெறுதல் வேண்டும். அதுவே முயற்சிக்கு வெற்றி தரும்; முயல்வோர்க்கும் பெற்றி தரும்.

முயற்சி என்பதை ஒருவன் தன் சொந்த நன்மைக்காகவும் செய்யலாம்; தன்னைச் சார்ந்தோரின் நன்மைக்காகவும் செய்யலாம். வயதான தாய் தந்தையரை வீழாது காப்பதற்குப் பிள்ளைகள் செய்கின்ற முயற்சி இரண்டாம் வகையில் அடங்கும்.

இளமையில் தன் அயராவுழைப்பால் குடும்பத்தை இடும்பையின்றிக் காத்த தந்தைக்கு முதுமை வரும்போது அவரைக் கைவிடாது கருத்தோடு காப்பதுதானே நல்ல பிள்ளைகட்கு அழகு? 

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்
.     (நாலடி – 197)
 

கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அதன் விழுது தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றி நிற்றல்போலத் தன் தந்தையிடத்தில், முதுமை காரணமாக, தளர்ச்சி தோன்றும்போது அவன் பெற்றெடுத்த புதல்வன் அவனைப் பாதுகாக்க அது நீங்கும். ஆதலால் தந்தையின் தளர்ச்சியைப் போக்கும் முயற்சியுடையவனாய் மைந்தன் இருத்தல் வேண்டும்.

அந்நாளைய வழக்கங்கருதி தந்தை தாய் பேணல் புதல்வன் கடன் என்றது நாலடியார். அதனால், புதல்வியர்க்கு அப்பொறுப்பில்லை என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளும் இன்றைய சமூகத்தில் புதல்வியர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வது நனிசிறந்தது!

மேற்கண்ட நாலடியார்ப் பாடலின் கருத்தை எடுத்தியம்பும் சீவக சிந்தாமணிப் பாடலிது… 

தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகும்….  (சீவக சிந்தாமணி) 

நன்முயற்சியால் செல்வத்தைச் சேர்ப்பதும், செழுங்கிளை தாங்குவதும் மனிதர்க்குச் சிறப்பும் மதிப்பும் கூட்டுவதாகும். இதனைச் சுற்றந்தழால் எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பேராசான் அற்புதமாய் விளக்கியிருப்பார். 

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்”
என்பது செந்நாப்போதாரின் சீரிய எண்ணமாகும்.
 

சுற்றஞ்சூழ வாழ்வதன் சிறப்பை நாலடியாரும் நவிலத் தவறவில்லை. 

கருவுற்றபோது தோன்றிய துன்பமும், இடையிற் கருசுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த காலத்தில் உண்டான இன்னலும் ஆகியவற்றைத் தாய் தன் மகவின் முகங்கண்ட அளவில் மறந்துவிடுதல்போல, முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பம், ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக் கண்ட அளவில் நீங்கிவிடும்.

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்
.     (நாலடி – 201)

வாழ்வில் நாம் தளர்ச்சியுறும் காலத்தில் தைரியம் சொல்லி ஊக்கமும் உற்சாகமும் தருவதற்கு நல்ல சுற்றம் உடனிருப்பது பெரும்பேறு. அத்தகு சுற்றம் வாய்க்க நாம் அவர்களைத் தழுவி ஒழுகுதல் அவசியம் என்பதே இப்பாடலால் நாம் அறியும் அருங்கருத்து.

வெயிலின் அழல்மிகுந்த வேனிற்காலத்தில் தன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் நிழல்தரும் மரத்தைப்போல், வறுமையின் அழல்மிகுந்த காலத்தில் தன்னை நாடி வந்தவர்களையெல்லாம் ஒத்தவகையில் காத்து, பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள்தந்து உதவுதல்போல், பலரும் பயன்நுகரப் பொருள் உதவி, தான் மேன்மேலும் பொருளீட்டும் முயற்சியோடு உழைப்பாளனாய் வாழ்வதே நல்ல ஆண்மகனுக்குக் கடமையாகும் என்று குடிதாங்கும் ஆடவனின் கடனை வகுத்துரைக்கின்றது நாலடியார். 

அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.     
(நாலடி – 202)
 

அதுமட்டுமன்று! உறவினர்கள் இன்புறும் வேளையில் நாமும் இன்புறுவதும், அவர்கள் துன்புறும் வேளையில் நாமும் துன்புறுவதுமே நல்லோர் இயல்பாய் இருத்தல் வேண்டும். அதைவிடுத்துச் சுற்றத்தார் மறுபிறவி எடுத்த பின்னரா நாம் அவர்களுக்காகப் பரியப்போகிறோம்  என்று வினவுகின்றது நாலடி. நல்ல கேள்வி! 

நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ – இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.    
(நாலடி – 209)
 

சுற்றஞ்சூழ வாழ்ந்து பெற்றேம் இன்பம் என்றலே நானிலத்தார்க்கு குற்றமறு நலம் பயப்பது!

 [தொடரும்]

 *****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.