Blog

  • படக்கவிதைப் போட்டி 172-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    பச்சைப்பசும் வயல்வெளியின் நடுவே தென்படும் இந்த மண் பாதையைக் கண்டவுடன் இது மன்பதைக்கு நல்லதா தீயதா என்றொரு பதைபதைப்பு நம்முள் தோன்றத் தொடங்கிவிடுகின்றது!  எட்டுவழிச் சாலைத் திட்டம் ஏற்படுத்திய உளவியல் தாக்கமிது!

    இந்தக் காட்சிக்குப் பொருத்தமாய்க் கவியெழுதக்  கவிவலாரைக் கனிவோடு அழைக்கின்றேன்.

    *****

    பச்சைவயல் பக்கத்திலே வரப்போகும் அகலப் பாதை, தமக்கு அகலாத் துன்பத்தைத் தந்திடுமோ என்று அஞ்சும் விவசாயிகளின் உள்ளக் குமுறலைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பாதிப்பு…

    பச்சை வயல்கள் நடுவினிலே
    பாதை போட்டான் விவசாயி,
    நிச்சயம் உதவும் தனக்கென்றும்
    நன்றாய்த் தொழிலை மேம்படுத்த,
    அச்சம் வந்ததே இப்போது
    அகலப் படுத்தும் பாதையிலே
    நிச்சயம் வந்திடும் பாதிப்பு
    நம்பி யிருக்கும் பாமரர்க்கே…!

    *****

    சிந்தனைக்கு விருந்தான கவிதையைப் படைத்தளித்திருக்கும் கவிஞர் திரு. செண்பக ஜெகதீசனுக்கு என் பாராட்டு!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    வினை விதைப்பார்…விளை நிலமழிப்பார்…!

    விளைநி லமெலாம் விலைநிலங்கள்
    ………………..விளைந்த தெல்லாம் கட்டிடங்கள்..!
    வளைத்துப் போட்டார் வயலனைத்தும்
    ………………..வகையாய் விற்று நிலமழித்தார்..!
    இளைத்து விட்ட பசுமைவயல்
    ………………..இதன் நடுவே நெடுஞ்சாலை..!
    களைத்து விட்டான் விவசாயி
    ………………..கத்திக் கத்தி ஓய்ந்துவிட்டான்..!

    சாலை போடச் சதித்திட்டம்
    ………………..ஜாலம் செய்த மாயவலை..!
    ஆலைக் கழிவைக் கொட்டுவார்கள்
    ……………….. அதன் பிறகு பழிசொல்வார்..!
    வேலை இல்லை நிரந்தரமாய்
    ……………….. விதியும் இல்லை வழிசொல்ல..!
    மேலை நாட்டுக் கலாசாரம்
    ………………..மேன்மை அடைய வைக்காது..!

    விளை நிலங்களையெல்லாம் விலை நிலங்களாக்கிவிட்டோம்; காட்டு வளத்தையும் கழனி வளத்தையும் அழித்து நாட்டுநலத்துக்குத் திட்டம் வகுக்கின்றோம். மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தேனும் அகலப்பாதை அமைப்பதென்பது பேதைமையே என்று இக்கவிதையில் உரைக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி, தன்னுடைய இன்னொரு கவிதையில் சாலை விரிவாக்கத்தால் மண்ணின் இயற்கை அழகு மடியும்; மாசு எங்கும் படியும் என்ற தன் நியாயமான வருத்தத்தையும் பதிவுசெய்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180806 DWA Antaryami -watercolour-charcoal -A4 100dpi lr

    உள்ளேயோ அந்தராத்மா உட்கார்ந்து கீதைகேள்
    புள்வா கனரோ புராணவிஷ்ணு, -வெள்ளேயோ
    அந்தராம் கோதெண்டம் கொண்டுள்ளார் கொல்நூறை
    பந்தர்வான் ஈசர்(அனுமார் ருத்ராம்சம்) பறப்பு….கிரேசி மோகன்….!

    அங்கிருஷ்டாப்யாம் அந்தரிதாயி’’…..!
    ————————————————————————————

    வீணாய் இலைகளும் வேர்களும் இல்லாது
    தானாய் முளைக்கும் மரமிவர் -நானார் ?
    உரலில் தலைவிட்டு ஓவென்(று) அழுதால்
    விரலளவு ஆகும் வியப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180805-Gajendra and grAh-watercolour- charcoal -strathmore 9×12 300dpi lr

    பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலர்
    கடிக்கும் கராமதன்(முதலை) காதில்பூ வைக்க
    துடிக்கும் துதிக்கை(கஜேந்திரர்) தொடுப்பு….!

    (அல்லது)

    பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலர்
    பழகிடப் பூனையே, பாய்ந்தால்(போருக்கு) புலியே
    அழகிய சிங்கா அருள்….கிரேசி மோகன்…..!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (273)

    முனைவர். நா.கணேசன்

    இந்த வார வல்லமையாளராக ஸ்டான்போர்ட் பல்கலை பேரா.  அக்‌ஷய் வெங்கடேஷ்  அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    “மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்றார் பைந்தமிழ்ச் சாரதி பாரதியார். உலகம் புகழும் கணிதவியல் நிபுணர் ஒருவரை இந்த வார வல்லமையாளர் எனத் தெரிவுசெய்கிறோம்.

    இந்தியாவில் கணிதத்தில் சாதனை புரிந்தவர்கள் பலர். தொல்லியலாளர்கள் சிந்து சமவெளியிலேயே நீளம், எடை போன்றவற்றை அளக்கும் அளவைகள் தரப்படுத்தியிருக்கிறார்கள் என்பார்கள். தமிழ்நாட்டில் எண்கணித வரலாறு பற்றிய கட்டுரை: வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்.   பாரத தேசத்தில் பிறந்து மேற்கு ஆஸ்திரேலியா பல்கலையில் இளங்கலைப் பட்டம் 17 வயதில் முடித்து, 21 வயதில் பீட்டர் சார்னாக் என்னும் பேராசிரியர் நெறியாளராக இருந்து கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் அக்‌ஷய் வெங்கடேஷ். இப்பொழுது ஸ்டான்போர்ட் பல்கலை, கலிபோர்னியாவில் கணிதப் பேராசிரியர், அக்‌ஷய் தன் கணக்குப் பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறார்: https://www.youtube.com/watch?v=p7iXVQxvM00

    இன்போசிஸ் கம்பெனியின் பரிசை அக்‌ஷய் வெங்கடேஷ் பெற்றபோது நடந்த விழா: https://www.youtube.com/watch?v=IWHb_STZvzA

    அண்மைக் காலத்தை எடுத்துக்கொண்டால், சீனிவாச ராமானுஜன் நினைவுக்கு வருகிறார். கனடாவைச் சேர்ந்தவர் ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் (1863 – 1932) 1924இல் சர்வதேசக் கணிதவியலாளர்கள் அமைப்பை உருவாக்கிய இவர், கணிதத் துறையில் சாதிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன் விளைவாக, ஃபீல்ட்ஸ் பதக்கம் என்ற பரிசு உருவானது. கணிதத்துக்கான நோபல் பரிசு எனப் புகழ் பெற்றது இப்பரிசு. 2014இல் முதன்முதலாக இந்தியாவைச் சேர்ந்த மஞ்சுள் பார்க்கவா, ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்றார். இப்பொழுது தமிழர் அக்‌ஷய் வெங்கடேஷ் வென்றுள்ளார். Synthesis of analytic number theory, homogeneous dynamics, topology, and representation theory துறைகளில் பங்காற்றும் வெங்கடேஷுக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

    இவர்தம் தாயார், ஆஸ்திரேலியாவில் டீக்கின் பல்கலையில் கணினியியல் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வெற்றியாளரும் 15,000 கனடா டாலர் பரிசுத் தொகையைப் பெறுகின்றனர். இந்த ஆண்டு நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அக்‌ஷய என்றால் தமிழில் கேடிலி. தேவாரத்தில் கீழ்வேளூர் தலப்பாடல்களில் இத் தமிழ்ப்பெயரைப் பார்க்கலாம். இந்தியப் பல்கலைகளிலே பணிபுரியும் கணிதப் பேராசிரியர்களும் நல்ல ஆய்வுகளின் மூலம் மஞ்சுள், அக்‌ஷய் போலவே ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றெடுக்க வாழ்த்துகிறோம்.

    எண் கணித வல்லுநர் அக்ஷய் வாழ்த்துப் பதிவில் தமிழ்நாட்டின் எண்வரலாற்றைப் பார்க்கலாம்: வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள் (http://www.vallamai.com/?p=29153)

    வலமிருந்து இடமாகப் பேரெண்களை வர்ணித்தல் (வாமகதி முறை):

    ஸ்ரீபுராணத்தில் வலப்பக்கத்தில் இருந்து எண்கள் வளர்ந்தன எனப்படும் கதையை பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழின் 2000 ஆண்டு இலக்கியங்கள் வழியாகப் பார்க்கலாம். பிராமியில் எண்களை எழுத வாமகதித் தத்துவம், அதாவது வலப்புறம் சிற்றெண்ணில் தொடங்கி பேரெண்களை ஒன்றன் பின் ஒன்றாக இடப்புறமாக எழுதிச் செல்லும் வழிமுறை பயன்படுகிறது. இப் பண்டைய வாமகதி முறையை “அங்காநாம் வாமதோ கதி” என்று சிற்றெண்ணை முதலில் வலப்புறம் எழுதி இடப்புறத்தில் அடுத்தடுத்த பெரிய எண்களை எழுதுதலை வடமொழி கணித சாஸ்திரங்களில் குறிப்பிடுகின்றனர். இந்த வாமகதி முறையைத்தான் ஸ்ரீபுராணத்தில் அழகான கதையாகச் சொல்லியுள்ளனர்.

    புள்ளி உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்களின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடும் தொல்காப்பியர் தன் காலத்தில் புழங்கிய பேரெண்களை வாசிக்கும் வாமகதி முறையைப் பல சூத்திரங்களில் தந்துள்ளார்.  உதாரணமாக, தொல்காப்பியம் (புணரியல்) முதல் நூற்பா:

    ”மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்

    இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது

    அறுநான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும்”

    தொல்காப்பியர் காலத்தில் பூஜ்யம் இல்லை. தசமகணித முறையும் கண்டுபிடிக்கப் படாத காலம். ஆனால், 10, 100, 1000 இவற்றுக்குத் தனிச் சின்னங்கள் இருந்தன. 3 (10) 3 = 33. சிறிய எண் 3ஐ வலப்புறம் அமைத்து (மூன்று தலையிடுதல்), அதற்கு இடமாக 3(10) எழுதுதலைச் சுட்டுகிறார். அதுபோலவே,  2 (10) 2 = 22 என்பதையும் வாமகதி முறையில் தொல்காப்பியர் எழுதிக் காட்டியுள்ளார். தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் நூற்பா ஒன்று பேரெண் 13699-ஐ வாமகதி முறையில் தருகிறது. வாமகதி முறையை அறிந்துகொள்ளாமல் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிழைபட எண்களைத் தம் உரைகளில் தருகின்றனர். ஆனால் தொல்காப்பிய முதல் உரைகாரர் இளம்பூரண அடிகளும் யாப்பருங்கல விருத்தியிலும் சமணர்கள் வாமகதி முறையைப் பயன்படுத்திக் காப்பியரின் 13699 எண்ணைச் சரியாக விளக்கியிருப்பது அறிந்து இன்புறத்தக்கது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோள் வெண்பா (மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ள பதிப்பு) இதுதான்:

    ஆறிரண்டோ டைந்தடியை ஐந்நான் கிருதொடையான்
               மாறி நிலமைம்பத் தொன்றகற்றத் – தேறும்
               ஒருபதின்மூ வாயிரத்தோடொன்றூன மாகி
               வருமெழுநூ றென்னும் வகை.

    சீவக சிந்தாமணி, புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கணவிளக்கம் போன்ற பிற்கால நூல்களிலும் இந்த வாமகதி முறை உள்ளது. ’ஓரேழ் தலையிட்ட இருபான் மைந்தர் ’ – குசேலர் மைந்தர் 27  பேர் என 19-ஆம் நூற்றாண்டில் கூடக் குசேலோபாக்கியானம் குறிப்பிடுகிறது.  ”ஆறு தலையிட்ட அந்நாலைந்தும்” (= 26, தொல். செய்யுளியல், 310), “நாலைந்தும் மூன்று தலையிட்ட” (=23, தொல். சொல். 210)  – இவை போல வாமகதியில் எழுதும் பானையோடு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து அழகன்குளம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் கிடைத்துள்ளது அருமை.  ஐராவதம் மகாதேவன் மருங்கூர்ப்பட்டினம் (அழகன்குளம்) அளித்த சங்ககாலப் பானையோட்டை இந்து நாளிதழில் 29.12.2011-ல் வெளியிட்டுள்ளார். அந்த ஓட்டில் (படம் 3), 804 என்ற எண் தான் எழுதப்பட்டுள்ளது என இலங்கை பிராமிக் கல்வெட்டு எண் மதிப்பை (படம் 4) வைத்துத் தெளிந்தோம்.  தொல்காப்பியம் அதன் பின்னர் எல்லா நூற்றாண்டுக் கல்வெட்டுகள், இலக்கியங்கள் தரும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால், மருங்கூர்ப் பட்டினப் பானையோட்டுப் பேரெண்ணை “நான்கு தலையிட்ட எட்டின் நூறு”(=804) என்று வாசிக்கவேண்டும். வலப்புறத்தில் நான்கு எனும் எண்ணை எழுதி அதற்கு இடப்புறமாக 8 (100) எழுதப்பட்டுள்ளது. 100 என்பதன் சின்னமாக ஸ (=ஸதம்) உள்ளது. ஐராவதம் வாமகதி முறையை விளக்கியுள்ளார். ஆனால், எண்ணின் மதிப்பு என்று பார்த்தால் 804 தான், 408 அன்று. இதற்கு ஆதாரம். தொல்காப்பியத்தின் நான்கு எடுத்துக்காட்டுகளும், படம் 4-ம் (விக்கிரமசிங்கே, 1901, JRAS). 1996-ல் ஐராவதம் அவர்கள் அரிகமேடு அகழாய்வில் பெரிய எண்களுடன் கிடைத்த பானை ஓடுகளை வெளியிட்டார்.  அருகமேட்டுப் பானையோட்டில் 855 = = ௮௱ ௫௰ ௫ என்ற எண் உள்ளது. அதை “ஐந்து தலையிட்ட ஐம்பதிற்று எண்ணூறு” என்று வாமகதி முறையில் எழுதி வாசிக்கவேண்டும்.  குறளில் “பத்து அடுத்த கோடி” என்பதை ௰ (C) என்றிருக்கும். அதாவது, (10), (100), (1000) மாத்திரம் இப்போது உள்ளது. வள்ளுவர் காலத்தில் லட்சம் (L), கோடி (C) இரண்டுக்கும் தனிச் சின்னம் (symbol) இருந்திருக்கும்.

    ———–

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • ஜார்ஜ் வாஷிங்டன் தொங்கு பாலம், நியூயார்க்

    பவள சங்கரி

    அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் ஜார்ஜ் வாஷிங்டன், இராணுவத் தளபதியாக இருந்தார். 1776 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் ஆக்கிரமிப்பைத் தடுக்க முயற்சித்தபோது, ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் அவரது அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்ட வாஷிங்டன் கோட்டை (நியூ யார்க்கில்) மற்றும் ஃபோர்ட் லீ (நியூ ஜெர்சி) ஆகிய இடங்களுக்கு அருகே இந்த பாலம் அமைந்துள்ளது. அமெரிக்கப் புரட்சிப் போர். தோல்வியுற்ற நிலையில், வாஷிங்டன் தமது படைகளுடன் மன்ஹாட்டனை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு கோட்டைகளுக்கு இடையே கடந்து சென்றார்.

    20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் வரை, கீழ் ஹட்சன் ஆற்றின் குறுக்கே பயணிக்க கப்பல் மட்டுமே சாத்தியமானது. 1900 களில் ஹட்சன் மற்றும் மன்ஹாட்டன் இரயில் மற்றும் பென்சில்வேனியா இரயில் ஆகியவை ஆறு சுரங்கங்களைக் கட்டின. ஹட்ஸன் ஆற்றின் குறுக்கே முதல் வாகனப் போக்குவரத்திற்காக 1927 இல் கீழ் மன்ஹாட்டனை ஜெர்சி நகரத்துடன் இணைக்கும் பாலம் திறக்கப்பட்டது.

    மலைக்க வைக்கும் பொருட்செலவில் உருவான இந்த சஸ்பென்ஷன் பிரிட்ஜ், பல கிலோமீட்டர்கள் தரை வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டிய இடங்களை, சில நூறு மீட்டர்களாக சுருக்கி விடுகின்றது. நெரிசல் மிகுந்த சந்திப்புகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள இந்த இடத்தில் போக்குவரத்தை மிக எளிதாக்கும் விதத்திலும், தரை வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், எரிபொருள் சிக்கனம், நேர விரயம் போன்றவற்றை தவிர்க்க பெரிதும் உதவுகின்றன.
    உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் நியூயார்க். அந்த நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில், இந்த ஜார்ஜ் வாஷிங்டன் தொங்கு பாலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஹட்சன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் இந்த தொங்கு பாலம் நியூஜெர்சியிலுள்ள மான்ஹட்டன் நகரை இணைக்கிறது. 4 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட தொங்கு பாலம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 7,000 கோடி மதிப்புடையது. ஹட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாகச் செல்லும் ஆறு. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் இந்த ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள். ஆண்டுதோறும் 60 மில்லியன் வாகனங்கள் இதன் மூலம் செயல்படுத்த முடியும்.

    இந்த வாஷிங்டன் பாலத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் ….

    2009 ஆம் ஆண்டு ஜனவரி 15, ஒரு குளிர்காலத்தின் வியாழக்கிழமை. ஏர் பஸ் 1549 A320 விமானத்தில் 150 பயணிகளும் ஐந்து விமானச் சிப்பந்திகளும் பயணிக்கிறார்கள். லகுவார்டியாவிலிருந்து US ஏர் பஸ் 1549 A320 என்கிற விமானம் நார்த் கர்லோநியாவில் உள்ள சார்லோட்டி விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகிறது. இதன் பைலட்டின் பெயர் செஷ்லே சுல்லேன்பெர்கர் (Chesley Sullenberger). வயது 57. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், கனடா கீஸ் வகைப் பறவைகள் விமானத்தின் எஞ்சின் பகுதியில் மோதுகின்றன. பறவைகள் மோதியதில் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் பழுதாகின்றன. விமானியின் அறிவார்ந்த செயல்பாட்டின் மூலமாக விமானம் ஹட்சன் ஆற்றில் பாய்கிறது. பின்னர் இந்த விமானம் கடற்படையின் படகுகள் கப்பல்கள், பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள், படகுகள் என மிகப்பெரிய படையினரால் அத்துணை பயணிகளும் (மிகச்சிலருக்கே பெரிய காயங்களும், ஒருவருக்கு பார்வை இழப்பும் தவிர) உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து ‘சல்லி (Sully)’ டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்த என்றொரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது!

    Share
  • படக்கவிதைப் போட்டி (173)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 110

    ஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா

    முனைவர் சுபாஷிணி

     

    ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா? பல விஷயங்களில் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய முடியுமா? தன் சுய வாழ்க்கையில் பல இறக்கங்களையும் தாக்குதல்களையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆய்வு, கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியுமா? ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு என மாறி மாறிப் பயணித்து அனுபவங்களைச் சேகரிக்கும் போதே சிறைவாசங்களையும் அனுபவித்து, பின் அவற்றிலிருந்தெல்லாம் மீறி வந்து ஆய்வுலகில் இன்பம் காண முடியுமா? இவை சாத்தியமே என்பதற்கு உதாரணம் தான் ஜேம்ஸ் ஸ்மித்சன் (James Smithson).

    இவர் பிறந்த போது இவருக்கு பிரஞ்சு பெயர் அளிக்கப்பட்டது. Jacques-Louis Macie என்பது அவரது தந்தையாரால் அவருக்கு அளிக்கப்பட்ட பெயர். பழமைவாதம் முழுமையாகக் குடிகொண்டிருந்த அன்றைய ஐரோப்பாவில், இங்கிலாந்தின் விதவைப்பென்ணான James Macieக்கும் பிரஞ்சு பிரபு Hugh Percyக்கும் மகனாக 1765ம் ஆண்டு பாரீஸ் நகரில் இவர் பிறந்தார். இவரது பிறந்த தேதியும் மாதமும் ஆவணப்படுத்தப்படாமல் ரகசியமாக மறைக்கப்பட்டது. இளம் வயதிலேயே பெற்றோரை இழக்கும் நிலை இவருக்கு ஏற்பட்டது. பெற்றோரின் குடும்பச் சொத்துக்கள் இளம்வயதிலேயே இவருக்குச் சொந்தமாகின. தனது குடும்பப்பெயரை இவரது தந்தையின் குடும்பப்பெயரான ஸ்மித்சன் என்ற பெயருக்கு மாற்றிக் கொண்டு ஜேம்ஸ் ஸ்மித்சன் என அமைத்துக் கொண்டார். பாரீசிலிருந்து இங்கிலாந்திற்குத் தனது தாயாரின் குடும்பத்தினர் பாதுகாப்பில் தம் இளம் பிராயத்திலேயே குடிபெயர்ந்தார்.


    இங்கிலாந்தில் இவரது கல்வி தொடர்ந்தது. 1782ம் ஆண்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பெம்ப்ரோக் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கி, 1786ம் ஆண்டு முதுகலைப்பட்டமும் பெற்று வெளிவந்தார். கல்விப்படிப்பு மட்டும் தனது சுயவளர்ச்சிக்குப் போதாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இவர் புவியியல் சார்ந்த துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமது. நெப்போலியன் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை பயணத்தில் இருக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது உறவினர்கள் நண்பர்களின் உதவியால் சிறையிலிருந்து மீண்டு வந்தார்.

    இங்கிலாந்து தாயாருக்கும் பிரஞ்சு தந்தைக்கும் பாரீஸில் பிறந்து, பின் இங்கிலாந்தில் உயர்கல்வி பெற்று, ஐரோப்பாவெங்கும் சுற்றிய ஸ்மித்சன், இத்தாலியில் 1829ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி காலமானார். பல பிரபுக்களைப் போல இவரது வாழ்க்கையும் பொருளாதார வளத்துடன் அமைந்திருந்தது. ஆனால் இவரது கவனமும் ஆர்வமும் பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் மூழ்கிப்போய் கிடந்தன. எளிய விசயமானாலும் சரி, மிக நுணுக்கமான புவியியல், வானியல் சார்ந்த ஆய்வானாலும் சரி, இவர் முழு கவனத்துடன் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.

    ஸ்மித்சன் தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இல்லாமையால் இவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது எல்லா சொத்துக்களையும் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசி நகரில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என தனது உயிலை ஏற்பாடு செய்து வைத்தார் ஸ்மித்சன். அவரது இறப்புக்குப் பிறகு அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் அனைத்தும் அமெரிக்காவில் ஆய்வுக்குப் பயன்படும் வகையில் அருங்காட்சியகத் தொகுதியினை அமைக்கப் பயன்படுத்தப்பட்டது.

    அவர் தனது உயிலில் “I then bequeath the whole of my property, . . . to the United States of America, to found at Washington, under the name of the Smithsonian Institution, an Establishment for the increase & diffusion of knowledge among men.” என எழுதி வைத்தார். ஸ்மித்சன் இறந்தபோது அவரது உடல் இத்தாலியின் கெனோவா நகரிலேயே புதைக்கப்பட்டது. ஆனால் அலெக்சாண்டர் க்ரஹெம் பெல் அவர்கள் ஸ்மித்சன் அவர்களின் உடல் வாஷிங்டன் டிசியில் ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டும் என முயற்சி மேற்கொண்டு இத்தாலியிலிருந்து அவரது உடலைக் கொண்டு வந்து இந்த ஆய்வுக்கூடத்திலேயே அவ்வுடலைப்பதித்து வைத்து ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பினார்.

    ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு வாஷிங்டன் டிசியில் உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் நிறுவனம் 1846ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி தொடங்கப்பட்டது. மனிதகுலத்தின் அறிவுப் பரவலை அதிகரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு அருங்காட்சியகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் உள்ளடக்கிய வகையில் ஸ்மித்சோனியன் வளாகம் அமைக்கப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித்சனின் பெயரை நினைவூட்டும் வகையில் ஸ்மித்சோனியன் நிறுவனம் என்றே இது அன்று முதல் அழைக்கப்படுகின்றது.

    ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் இதன் தலைமை அலுவலக வளாகத்தைச் சுற்றி பத்தொன்பது அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்குகின்றன. இதைத் தவிர்த்து அரிசோனா, மேரிலாண்ட், மெசாசூசெட்ஸ், நியூயோர்க், பிட்ஸ்பெர்க், டெக்ஸாஸ், வர்ஜீனியா மாநிலங்களில் என அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 200 நிறுவனங்கள் ஸ்மித்சோனியன் பெயரால் இந்த ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. வட அமெரிக்கா மட்டுமன்றி பனாமா, போர்டோ ரிக்கோ ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் சேவை இயங்கி வருகின்றது.

    இந்த நிறுவனங்களில் வந்து பார்த்து பயன்படுவோரின் எண்ணிக்கை ஒரு ஆண்டிற்கு 30மில்லியனாகும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வாஷிங்டன் டிசி சென்றிருந்த போது இந்நிறுவனத்தின் பல அருங்காட்சியகங்களை நேரில் சென்று பார்த்து குறிப்பெடுத்து வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஸ்மித்சனின் கைப்பட எழுதிய ஆவணங்களை நேரில் பார்த்ததும் ஸ்மித்சனின் வரலாற்றை புகைப்படங்களோடு வாசித்ததும், அவரது சேகரிப்புக்களை நேரில் கண்டதும் எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.

    கி.பி.18ம் நூற்றாண்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மாமனிதராக ஸ்மித்சன் நமக்குக் காட்சியளிக்கின்றார். ஆராய்ச்சியும் ஆய்வுத்தகவல்களும் மனித குலத்தை மேம்படுத்தும் என்பதை அவர் முழுமையாக நம்பினார். அவர் காலத்தைய எல்லா ஆய்வறிஞர்களையும் அவர் அறிந்திருந்தார். அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் அவருக்கிருந்த ஆர்வம் விரிவான நட்புச் சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மக்களின் மேம்பாட்டிற்கு ஆய்வுகள் அடிப்படை என்பதை அவர் உணர்ந்திருந்தார். தனது வாழ்க்கையை மட்டுமன்றி தனது சொத்துக்கள் அனைத்துமே மனித குல அறிவு மேம்பாட்டிற்குப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வாழ்ந்து செயல்பட்டவர் ஸ்மித்சன். பூவுலகை விட்டு மறைந்தாலும் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் செயல்பாடுகளால் அழியா புகழ்பெற்று வாழ்கின்றார் ஸ்மித்சன்!

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 119

    உலகைக் காக்கும் பொறுப்பு

    அம்மாணவன் பிறருடன் தோழமையுடன் பழகினான். கவர்ச்சிகரமாக இருந்தான்.

    எங்கள் பள்ளிக்கூடத்தில் நான் பொறுப்பேற்றிருந்த சங்கத்திற்குப் பிறர் ஏகமனதாக அவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். (அதற்காகத்தானே அவ்வளவு சிநேகிதமாக இருந்தான்!) பல சங்கங்களிலும் அவனே தலைவனாக இருந்தான்.

    வருட இறுதியில், மாணவத் தலைவர்களுக்கெல்லாம் சான்றிதழ் அளிக்கும் வைபவம் நடந்தது. நான் கையெழுத்திட்ட சான்றிதழ் அவனுக்குக் கிடைக்கவில்லை.

    குழப்பத்துடன் என்னிடம் வந்தான். “டீச்சர்! நம் சங்கத்தின் சான்றிதழ்..?”

    நான், “நீ எதுவுமே பண்ணவில்லையே?” என்றபோது, அவன் அதிர்ந்தான்.

    பெரும்பாலான தலைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பதவி, அது அளிக்கும் அதிகாரம், பெருமை எல்லாம் வேண்டும். ஆனால், பொறுப்பாக நடக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

    செய்யவேண்டுவதைத் தாமே கவனித்துச் செய்பவர்கள்தாம் தலைவர்களாகும் தகுதி பெறுகிறார்கள். வீடு, சங்கம், நாடு – இவற்றில் எதன் தலைவராக இருந்தாலும் சரி, அவர் தன் கடமையைச் சரிவர ஆற்றாவிட்டால் அது ஆட்டங்கண்டுவிடும்.

    கதை

    “எங்கப்பா எப்பவும் குடிச்சுட்டு, கத்திக்கிட்டே இருப்பார். படிச்சதெல்லாம் மறந்து போயிடுது!” என்றாள் என் மாணவி மீனா.

    “ஏதாவது வாசகசாலைக்குப் போய் படி. பள்ளிக்கூடத்திலேயே ஓய்ந்த நேரத்தில் சில தோழிகளுடன் கலந்து படி. அதிகம் பேசாதே!” என்று ஆலோசனை கூறினேன். “அப்பாவை விடு! இது உன் வாழ்க்கை. நன்றாகப் படித்து முன்னுக்கு வருகிற வழியைப் பார்! இல்லாவிட்டால், உன் அப்பாவைப்போலவே ஒருவனை மணந்து, அவனிடம் அடிபட்டுச் சாகவேண்டும்!” நான் கூறியது கடுமையாக இருந்தபோதிலும், மீனா அதில் பொதிந்திருந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஏற்றாள். தனக்கென ஓர் இலக்கை வகுத்துக்கொண்டாள்.

    `இந்தமாதிரி ஒரு குடும்பத்திலே பிறந்துட்டு, நீயெல்லாம் உருப்பட்டுவிட முடியுமா?’ என்று அக்கம்பக்கத்தினர் பழிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தாள். பிறர் தன் மனத்தைத் தளர வைப்பது பொறாமையால் என்று புரிந்தபின், அவர்களின் கேலியை அலட்சியம் செய்தாள்.

    சிறு வயதிலேயே நிறைய துன்பம் அனுவித்திருந்ததால், தன் வாழ்க்கை நல்லவிதமாக மாறவேண்டும் என்ற துடிப்பு மீனாவிடம் இருந்தது. பொறுப்புடன் தன் இலக்கை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தாள் அப்பெண்.

    எப்போதும் பிறர் சொன்னபடியே நடந்து, அவர்களை மகிழ்விப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ, தமக்குரிய பொறுப்பை ஏற்க மறுப்பவர்கள். பின், எப்படித்தான் தம் செயலால் விளைந்த வீழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்காது, பிறரைக் குற்றம் சாட்டுவது!

    வித்தியாசமாக இருந்தால் தனித்துத் தெரிவோம் என்ற பயத்தில், `நான் பயந்தாங்கொள்ளி, சோம்பேறி!’ என்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்ப்பதுண்டு. எல்லாருமாகச் சேர்ந்து, தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலிசெய்து சமாதானம் அடைவார்கள்.

    கதை

    என் சக ஆசிரியை மேரி, “எனக்கு ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும். அதிகம் படித்தால் தலைவலி வரும்,” என்று தெரிவித்தாள்.

    `நீ அதிகம் படிப்பதில்லையா?’ என்று நான் அவளைக் கேட்டிருக்கமாட்டேன். அவளுக்கே ஏதோ தாழ்மை உணர்ச்சி — ஆங்கில ஆசிரியையாக இருந்துகொண்டு தான் இவளைப்போல் படிப்பதே இல்லையே, பத்திரிகைகளில் எழுதுவதும் கிடையாதே என்று.

    “ஒரு வரி எழுதி முடித்தவுடன், இதை இப்படி எழுதியிருக்கலாமோ என்று பல முறை திருத்துவேன். அதுதான் எழுதுவதில்லை,” என்று மேலும் கூறினாள்.

    எடுத்த எடுப்பில் நமக்குப் பிடித்தமாதிரி எழுதுவது, (ஏன், எதையும் செய்வது) இயலாத காரியம். தோன்றுவதையெல்லாம் எழுதி முடித்துவிட்டு, அதன்பின் பல முறை திருத்த வேண்டியதுதான்.

    கனவு பலிக்க

    பல ஆண்கள், `நாற்பது வயதுக்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்,’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், பொறுப்புடன் அதற்கான முயற்சியில் இறங்கமாட்டார்கள்.

    கனவு கண்டால் மட்டும் போதுமா? முதலில், அதை எப்படி நிறைவேற்றுவது என்று யோசிக்க வேண்டும். பல இடைஞ்சல்கள், எதிர்ப்பு, வரத்தான் செய்யும். எதற்கும் தளராது, முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்தான் வெற்றி கிட்டும்.

    பிற நல்ல பழக்கங்களைப்போல, பொறுப்புணர்ச்சியையும் சிறு வயதிலேயே பழக்கமுடியும்.

    குட்டிக்கதை

    சுமார் பத்து சிறு குழந்தைகளைப் பகல் வேளைகளில் பார்த்துக்கொண்ட இல்லத்தரசி ஸிதி (SITI) தான் ஓயாமல் குனிந்து, நிமிர்ந்து இடுப்பை ஒடித்துக்கொள்ளாமல் இருக்க ஓர் உபாயத்தைப் பின்பற்றினாள். கையை ஒரு முறை ஓங்கி தட்டி, “ஒழுங்குபடுத்து” என்று கூவுவாள்.

    அவள் கண்காணிப்பிலிருந்த என் மகன் எங்கள் வீட்டுக்கு வந்தபின்னரும், தன் விளையாட்டுச் சாதனங்களை எடுத்து வைக்க ஸிதி செய்ததுபோலவே கையைத் தட்டி, “KEMAS!” என்று மலாய் மொழியில் ஆணையிட்டுக்கொள்வான்!

    `குப்பையைக் கண்ட இடத்தில் வீசாதே!’ என்று பள்ளிக்கூடங்களில் விதி இருந்தாலும், சிலர் வீடுகளிலும் அதைப் பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். `நம் வீடுதானே!’ என்ற தம் பொறுப்பை அலட்சியம் செய்வார்கள். அத்தருணங்களில், மூத்தவர்கள் பரிவு காட்டாது, ஆனால் குரலை உயர்த்தாது கண்டித்தால் பொறுப்பு வரும்.

    வீட்டை மட்டுமல்ல, இப்பரந்த உலகையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி மிக்க ஒருவரைச் சந்திப்போமா?

    62 வயதான ராபர்ட் ஸ்வான் (ROBERT SWAN) என்ற ஆங்கிலேயரை உலகம் `பைத்தியக்காரன்’ என்று கேலி செய்தது. யாராவது வடதுருவம், தென்துருவம் இரண்டு இடங்களிலும் நடந்து போவார்களா?

    தென்துருவமான அன்டார்ட்டிகாவில் நாம் அறிந்தபடி நிலம் கிடையாது. பனிப்பாறைதாம். அங்கு வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வசதியும் கிடையாது.

    அதன்மேல் கால்நடையாக தனது இருபதாவது வயதில், மற்றும் இருவரின் துணையுடன் போனார் ராபர்ட். அதற்கான செலவை (அமெரிக்க டாலர் 50 லட்சம்) சேகரிக்க ஏழாண்டுகள் பிடித்தன.

    900 மைல் நடந்தார்கள். ஒரு நாளைக்கு ஒன்பது மணி என்று 70 நாட்கள்! ஒவ்வொருவரின் முதுகிலும் 180 கிலோகிராம் எடைகொண்ட சாமான்கள்! _77 டிகிரி செல்ஷியஸ் குளிரில் வியர்வை உறைந்துவிடுமாம். (குளிரில் வியர்க்குமா என்ற யோசனை வருகிறதா? உடலை இந்தப் பாடுபடுத்தினால்?) ஒருவருக்குக் குதிகால், இன்னொருவருக்கு கால் பெருவிரல் இரண்டும் சிதைந்துவிட்டன. ராபர்ட்டின் எடையில் 33 கிலோ குறைந்தது. கண்களின் நீல நிறம் வெளிறியது. முகத்தின் சதை பிய்ந்தது.

    கடந்த பதினைந்து வருடங்களில், 3,500 பேரை (இந்தியா. சீனா போன்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்தவர்கள்) 22 முறை இத்துருவங்களுக்கு அழைத்துப்போயிருக்கிறார். பல பெண்களும் இதில் அடங்குவர். பல்வேறு தாவர, விலங்கினங்களைத் தன்னிடத்தே அடக்கியிருக்கும் அழகான அன்டார்ட்டிகாவை ரசிப்பதுடன், அதைக் காக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

    சரி, இதில் பொறுப்பு எங்கே வந்தது, என்கிறீர்களா?

    உலகின் 90% சுத்தமான நீர் அன்டார்ட்டிகாவில்தான் உள்ளது, பனி வடிவில். 4,500 மீட்டர் நீளத்திலுள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பித்தால்..?

    இவ்வாறு உலகம் அழியாது காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராபர்ட் ஸ்வான். எட்டு ஆண்டுகள் பிரயத்தனப்பட்டு, 1,500 டன் (TON) எஃகு குப்பையை அகற்றி, அதை மறுசுழற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். (இந்த `குப்பை’ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் விட்டுப்போனது).

    நம்மால் பிறரது நலனுக்கென இப்படியெல்லாம் உழைக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், பிளாஸ்டிக் சாமான்களையும், தகர டப்பாக்களையும் அதற்கென வைக்கப்பட்டு இருக்கும் குப்பைத்தொட்டிகளில் போட்டு மறுசுழற்சிக்கு அனுப்பலாமே!

    தொடருவோம்

    Share
  • முத்திக்கு வித்தாகும், திருவிடைக்கழித் திருப்புகழ்

    முனைவர் இரா. மதன் குமார்

    முன்னுரை

    அறுமுகச்சிவமாகிய திருமுருகப்பெருமானுக்கு, ‘மாத்ருகா புஷ்பமாலை’ என்னும் திருப்புகழ்ப் பாமாலை சூட்டிச் சிறந்தவர், ‘திருஅருணகிரிநாத சுவாமிகள்’.  ‘மாத்ருகா புஷ்பமாலை கோலப்ரவாள பாதத்தில் அணிவோனே’ என்பது அவர்தம் அருள்உவகைப் பெருவாக்கு. சுவாமிகள் பாடிப்பணிந்த, திருப்புகழ்த் திருத்தலங்கள் அனைத்திலும் முத்தித்தலமாகவும், திருவடித்தலமாகவும் விளங்குகின்ற சிறப்புடையது, திருவிடைக்கழித் திருத்தலமாகும். ‘எத்தலத்தவரும் மருவ முத்தியைத் தரு திருவிடைக்கழி’ என்று இத்திருத்தலத்தைச் சுவாமிகள் பாடியுள்ளார்.  அவ்வகையில், சுவாமிகள் திருவிடைக்கழியினை எட்டுத் திருப்பாடல்களால் போற்றியுள்ளார். அத்திருப்பாடல்களில், திருமுருகன் திருப்புகழும், சுவாமிகளின் பக்திப்பெருக்கும், மாந்தர்தம் அறியாமைக் குறைகளைத் தமது குறைகளாக ஏறிட்டுக்கொண்டுள்ள கருணையும், நமக்கென, அவர் பெருமானிடத்தில் வேண்டிய அருளியல் விண்ணப்பங்களும், தம்மையே ஞானகுருவாகத் தந்து நம்மை ஆட்கொள்கின்ற அருள்நிலையும் அமைந்துள்ள திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    ஞானக் கடலாகிய திருவிடைக்கழி

    அறுபடைவீட்டுத் திருப்புகழில், ‘திருத்தணிகைத் திருப்புகழ்’ தனிச்சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.  சுவாமிகளின் மந்திரமொழிகளாகிய பல திருவருள் ஆணைகளும், அருளியல் விண்ணப்பங்களும் இத்திருத்தலத்துத் திருப்புகழில் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில், திருப்புகழை ஓதுவதன் அருட்பயனை விளக்குவதாக, ‘இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்’ (திருப்புகழ்:242) எனச் சுவாமிகள் உறுதிபடச் சாற்றியுள்ளார்.  அவர் உரைத்தவகையில், திருப்புகழை உண்மையுடன் ஓதிப் பயன்பெறுவதற்கு, உற்ற குருநாதரின் அருள்துணை நாளும் இன்றியமையாததாகும். அப்பெருநோக்கத்தின் பொருட்டு, நாம் பற்றி உய்யவேண்டிய பெருமானாக, சுவாமிகள் நமக்கு, திருவிடைக்கழிப் பெருமானைக் காட்டியருளியுள்ளார்.  இத்தகைய அருள்சிறப்பினை உணர்ந்தே ஒன்பதாம் திருமுறை அருளாளர்களில் ஒருவராகிய சேந்தனாரும் மிகுந்த அருள்விருப்புடன், திருவிடைக்கழிப் பெருமானைப் போற்றிப் பணிந்துள்ளார்.  அறியாமை மிக்க ஆருயிர்கள் அனைத்துக்கும் முத்தி தரவல்ல வித்தகத் துறையோனாக, ஞானக்கடலாகத் திருவிடைக்கழிப் பெருமான் விளங்கவல்ல அருளனுபவத்தைச் சுவாமிகளும்,

    “வித்தகத் துறையோனே
    தருமருவு எத்தலத்தவரும் மருவ முத்தியைத்
    தருதிருவிடைக்கழிப்… பெருமாளே” (திருப்புகழ்: 795) எனக் குறித்தருளியுள்ளார். 

    அடியும் – நடுவும் – முடியும்:

    திருப்புகழ்த் திருத்தலங்களில், ‘அறுபடைவீடுகள்’ என்னும் அருள்தொடர்புத் தலவரிசை  போல விளங்குபவை, திருவிடைக்கழியும், சிறுவாபுரியும், திருப்போரூருமாகும். திருமுருகப்பெருமானின் திருவடி முதலாக, திருமுடி ஈறாக அமைந்தவையாக இத்திருத்தலங்கள் போற்றப்பெறுகின்றன. திருக்கடவூருக்கு அருகே அமைந்துள்ள இத் திருத்தலத்தின் கருவறையில், சிவலிங்கத் திருமேனிக்கு முன்பாக, திருமுருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது, ‘தாமே அறுமுகச் சிவம்’ என்பதனை நமக்கு உணர்த்தவே எனலாம்.

    “கொந்துவார் குரவு அடியினும் அடியவர்
    சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
    கொண்ட வேதநன் முடியினும் மருவிய குருநாதா”  (திருப்புகழ்:268) இத்திருத்தொடர்களில், ‘கொந்துவார் குரவுஅடி’ என்பது, ‘தேன் சிந்துகின்ற திருக்குரா மரத்தின் அடி’ என்பதாகிய திருவிடைக்கழியைக் குறிக்கும். ‘திருவிடைக்கழிப் பெருமானுக்கு, அடியவர்களின் சிந்தையெனும் தாமரையே இருப்பிடம்’ என்பதனை உணர்த்த, ‘சிந்தை வாரிஜ நடுவினும்’ எனக் குறித்தருளியுள்ளார். பெருமான், அடியாரின் சிந்தையில் இடம்கொண்டு, மெய்ஞ்ஞானம் அருளி, ‘வேதப்பொருளாகத் தானே விளங்கவல்ல பெருந்திறத்தையும் உணர்த்தியருள்வான்’. அதனையும் அறிவுறுத்தவேண்டி, ‘வேதநன் முடியினும் மருவிய குருநாதா’ எனக் குறித்துள்ளார். இவ்வாறு,   திருவிடைக்கழிப் பெருமானின் திருவடிகளில் சரண்புகுந்தால், அவன் நமது உள்ளத்தாமரையில் நீக்கமற நிறைந்திருந்து, வேதப்பொருளாகிய ஓங்காரமாகவும் தானே விளங்குகின்ற அருந்திறத்தையும் உணர்த்தியருள்வான்’ என்பது சுவாமிகளின் அருளனுபவத் திருவாக்கு எனலாம்.

    குறை உயிர்க்கும் குருவாகின்ற சுவாமிகள்

    உயிர்களுக்கு, மெய்ஞ்ஞானப்பேற்றினை பெருமானே குறைவின்றி வழங்கியருள்கின்றான். அதற்கேற்ப ஞானகுரு வாய்ப்பதும் உயிரின் பரிபக்குவத்துக்கு ஏற்பவே நிகழ்கிறது.  ‘பிரணவப்பொருளாகிய பெருமானே ஊழிகள்தோறும் திருவிடைக்கழியில் குருவாக வீற்றிருக்கின்றான். பல்லூழிக் காலங்களிலும் தோன்றுகின்ற அரனும், அரியும், பிரமர்களும், தமது முந்தை வினைப்பயனாகிய பூசனைப்பேற்றினால்,  திருவிடைக்கழிப் பெருமானைக் குருவாகப் பெற்றுச் சிறக்கின்றனர். பெருமானும் அவர்களுக்கு உவகையுடன், பிரணவப்பொருளாகிய தனது பரத்துவத்தை உணர்த்தியருள்கின்றான். அக்கருணைகூர் அறுமுகனே, பாண்டியநாட்டில் சைவ நீதியை நிலைநாட்ட, திருஞானசம்பந்தரெனவும் எழுந்தருளினான்’ என்று சுவாமிகள் பாடியுள்ளார்.

    “அலை நெருப்புஎழ வடவரை பொடிபடச் சமணர்கள் குலம்
    அணி கழுப்பெற நடவிய … மயில்வீர
    அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும்வர
    அவரவர்க்கு ஒரு பொருள் புகல் … பெரியோனே” (திருப்புகழ்: 799) எனச் சுவாமிகள், மேற்கண்ட திருப்புகழில் குறித்தருளியுள்ளவாறு,  ஞானகுருநாதனாகிய திருவிடைக்கழிப்  பெருமானின் பரத்துவத்தை உணர, சுவாமிகளின் கருணையுள்ளம் வழிகாட்டுகிறது. 

    குருவாகி வந்த பெருமான்

     பெற்ற மனிதப் பிறப்புக்குரிய பேரறிவின் பயனாகப் பதிப்பொருளை உணர இயலாத நமது அறியாமையினைச் சுவாமிகள்,

    “அனல்அப்பு அரிபுக்க குணத்ரயம் வைத்த
    அடர்பொய்க் குருதிக் … குடில்பேணா
    அவலக் கவலைச் சவலைக் கலைகற்று
    அதனிற் பொருள்சற்று … அறியாதே”   (திருப்புகழ்: 792) எனக் கலங்கிப் பாடியுள்ளார்.

     பல அறிவு நூல்களைக் கணக்கில்லாமல் கற்றும், அதன் மெய்ப்பொருளை அறிய முயலாமல், குறைஅறிவால் துயரடைவதே மக்களின் ஞானத்தேடலாக முடிகிறது. இத்தகைய அறியாமையாகிய அவலக்குழியிலிருந்து மீள்வதற்கு வகை தெரியாமல், அறிவில் சிறந்தோர் எனச் சிலரை நாம் நாடுகிறோம். அவர்கள், பதிஞானத்தால் பக்குவமுற்றவர்களாக இல்லை. வீணே பழங்கொள்கைகளைப் பிதற்றுவதன்றி, எள்முனை அளவு ஞானத்தையும் பெற்றுத் தருவதில்லை. அவர்களது  வழிகாட்டுதலால், அறிவுக்கண் திறக்கும் என்ற நம்பிக்கையும் என்றும் மெய்யாவதில்லை. அவர்களது பழங்கொள்கைப் பிதற்றலால், அறிவு துருப்புபோல் இளைத்து, மேன்மேலும் துன்புறவே நேருகிறது.

    “படுகுழி புக்கு இனி தேறும் வழிதடவித் தெரியாது
    பழமை பிதற்றிடுலொக … முழுமூடர்
    உழலும் விருப்புடன் ஓது பாசவலைக் கலைதேடி
    யொரு பயனைத் தெளியாது”        (திருப்புகழ்: 796)  எனத் தெளிவில்லாமல், ஞானகுருவைத் தேடிக் கலங்குகின்ற நமக்கு, தாமே ஞானகுருவாகி இரங்கியருள்பவராகத் திருவிடைக்கழித் திருப்புகழைச் சுவாமிகள் தந்துள்ளார்.

    குருவாகி வந்தருள்கின்றார்:

    உயிரின் பரிபக்குவம், வினைவலிமையினை மாய்க்கிறது. ‘பெருமானே பரம்பொருள்’ என்று உணர்த்தவல்ல நற்குருவைக் காட்டியருளி, மெய்ஞ்ஞானப்பேற்றுக்கும் ஆட்படுத்துகிறது. வினைவலிமையால், நம் அறிவானது, நற்குருவைக் கண்டடைகின்ற பேரறிவாக விரிவடைவதில்லை. ‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்று பாடிய சுந்தரர்பெருமானின் திருவாக்கு, நமக்கு மிகவும் பொருத்தமுடையதாகும். அன்று அவர், சித்தவடமடத்தில் தம்மைத் தாமே நொந்தழுத நிலையில், திருவருளே அவருக்குக் கண்ணாக இருந்து சிவத்தைக் காட்டியருளியது. அதுபோன்றே, ஊனக்கண்கொண்டு, சிற்றறிவால் சிவத்தை உணரஇயலாத நம்மைப் போன்றவர்களுக்கும் குருவருளே கண்ணாக விளங்கிக் காட்டியருளவேண்டும். அத்தகைய அருள்நோக்கத்துடன் சுவாமிகளே நமக்கு ஞானகுருவாக இரங்கியருள்கின்ற வகையில், நமது அறியாமைக் குற்றங்களையும் தன்னுடையதாக ஏறிட்டுக்கொண்டு, பெருமானிடத்தில் பல அருளியல் விண்ணப்பங்களைப் பணித்துள்ளார்.

    நற்பதம் காட்டுகின்றார்

    நமது ஐம்புலச் சேட்டைகள் நீங்கி, சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும், பெருமானது திருப்புகழில் ஒன்றுகின்ற ஆன்மபலத்தினைத் திருவிடைக்கழிப் பெருமானிடத்தில் வேண்டுகின்றார்.

    “உனகமலப் பதநாடி உருகி உளத்து அமுதூற
    உனது திருப்புகழ் ஓத … அருள்வாயே”          (மேலது பாடல்)

    என்பது அவர்தம் விண்ணப்பம். பதிஞானமாகிய பேரறிவு வாய்த்தாலும், நமது ஆணவமல வாசனை, நாம் உணர்ந்த இறைபொருளை, எடுத்த மொழியாலும், ஏதுக்களாலும் சோதித்தறிய முற்படுகின்ற அறியாமைக்கே தலைப்படும். ஞானப்பொருளாகிய பெருமான், தன்னை உணர்ந்தாரின் கல்மனத்தையும் கரையச் செய்கின்ற அருளே நிலையாக விளங்குபவன். அவனை அன்புக்கண்கொண்டு பார்ப்பவர்தம் உள்ளத்தை உருக்கி, அதில் ஊற்றென எழுகின்ற அருள்வெள்ளமென விளங்குபவன். எனவே, நமது ஞானத்தேடலின் படிநிலையில், அறிவால் அல்லாமல், அன்பால் பெருமானைத் தேடுகின்ற நெறியைச் சுவாமிகள் மேற்கண்ட திருப்புகழ் பாடலில் அறிவுறுத்தியுள்ளார்.

    குற்றமில்லாத பேரறிவுக்கு வழிகாட்டல்:

    சுவாமிகளையே ஞானகுருவாகப் பெறினும், நமது முந்தை வல்வினை அவரால் உணர்த்தப்பெறுகின்ற இறைபொருளை முழுமையுற இயலாதவண்ணம், அறியாமையாகிய மறைப்பினையே மேன்மேலும் விளைவிக்கும். இதையே சான்றோர், ‘மலமறைப்பு’ என வழங்குவர். மலமறைப்பாகிய அறியாமையை நீங்கி, பெருமானின் திருவடிகளில் சரண்புகுவதாகிய ஞானத்தைச் சுவாமிகள், ‘புகரில் புத்தி’ (குற்றமில்லாத பேரறிவு) எனக் குறிக்கின்றார்.

    குற்றமில்லாத நிறைஅறிவு, பெருமானை உணர்ந்து, அவனை அணுப்பொழுது அகலாது பற்றியிருக்கச் செய்யும். அவ்வறிவு வாய்க்கச் செய்தலும், அதன்வழி அடியவரை ஆட்கொள்ளுதலும், பெருமானின் அறக்கருணை எனப்படும். அதற்கு, ‘வள்ளி சன்மார்க்கம்’ குறியீடாகும். அடாதவற்றைச் செய்தொழுகுவோரையும் பெருமான், அடியவராக ஆட்கொள்ளத் தவறுவதில்லை. அவர்களையும் பெருமான், மறக்கருணையால் ஆட்கொள்வதனைத் திருவிடைக்கழித் திருப்புகழில் சுவாமிகள் அருளிச்செய்துள்ளார். சூரர்கள், நிகரில்லாத அனைத்து வகைப் பெருவாழ்வையும் பெற்றிருந்தனர். ஆயினும், அவர்கள்தம் அறிவு, பெருமானை உணர்கின்ற பேரறிவாக விளங்கவில்லை. அத்தகைய அவலம், நம்மனோர்க்கு நிகழாத வண்ணம், குற்றமில்லாத பேரறிவை வாய்க்கச் செய்வதாகிய, ‘வள்ளி சன்மார்க்கத்தையும், சூரன் அருள்பெற்றதையும் திருவிடைக்கழித் திருப்புகழில் உரைக்கின்றார்.

    வள்ளி சன்மார்க்கம்:

    திருவிடைக்கழித் திருப்புகழில், வள்ளியம்மையைச் சுவாமிகள், ‘குறத்திரு’ எனக் குறித்தலால், ‘அவள் உள்ளமும் அழகியவள்’ என்பது பெறப்படும். பெரும்பெயர் முருகன் என்னும் அழகனும், அடியாரின் உள்ளத்தாமரையினையே தனக்கு இடமாகக் கொள்கின்றான். இதனை உணர்த்தவே சுவாமிகள், திருவிடைக்கழிப் பெருமான், ‘அடியார்தம் சிந்தை வாரிஜ நடுவிலும் குடிகொண்டவன்’ என்றருளிச் செய்தார். இதனைக் குறித்தே மணிவாசகரும், ‘சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை’ என்றருளினார். வேடுவர்தம் குடிவாழ்க்கை வாய்த்தபோதிலும், வள்ளிக்குறத்தி, தன்னை உணர்ந்தவளாக, பெருமானை மட்டுமே தனது சித்தத்துள் நிறைத்தவளாக, நிறைதவத்தினை மேற்கொண்டாள். அவளது பக்குவத்தினை நோக்கியே பெருமான், தானே இரங்கி அவளை நாடித் தினைப்புனத்திற்கு வந்தான்.

    “தினை வித்தின நற்புன மறத்தியை
    தழுவு பொற்புயத்…திருமார்பா’            (திருப்புகழ்: 792)

    என்பது, திருவிடைக்கழித் திருப்புகழ். இங்கு,  ‘புனம்’ என்பது, விளைச்சல் தருகின்ற வயல்வெளியைக் குறிக்கும். மானுடராக உரு தாங்குகின்ற அனைவர்க்கும், அவர்தம் உள்ளமே பக்திப்பயிர் வளர்க்கின்ற நல்வயலாகவும், உடம்பே அதைக் காக்கின்ற வேலியாகவும் அமைகின்றன. பெருமானைப் பெற்றுய்ய வேண்டும் என்கின்ற மெய்யுணர்வே, ஞானப்பயிருக்குரிய உரமாகவும் அமைகின்றது. வள்ளிக்குறத்தி தன் உள்ளமாகிய வயல்வெளியில், அன்பென்னும் பக்திப்பயிரினை நாளும் தழைத்து வளரச்செய்தவள். மாறாக, ‘ஆணவம்’ என்கின்ற நச்சுமரமாக நாளும் ஓங்கி வளர்ந்தவன், சூரன். ‘தாம் வளர்த்ததோர் நச்சு மரமாயினும் கொல்லார்’ என்பதுபோல, பெருமானும் சூரனுக்கு இரங்கியருளினான். சூரனைத் தனது திருவடியில் பணியச்செய்த பெருமான், வள்ளிக்குறத்தியின் உயர்ந்த அன்பின் பக்குவத்தை  நமக்கு உணர்த்தவேண்டி, அவளது திருப்பாதங்களில் தான் பணிந்ததாக நயமுறப் பாடியுள்ளார்.  “தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று, சிறுபேதை கால்பணிந்த குமரேசா’ என்பது திருப்புகழ் (பொதுப்பாடல் வரிசை-மனநூறு கோடி). 

    வள்ளியாகி, பேரின்பக்காதல்:

    வள்ளி சன்மார்க்கத்தைப் பேரின்பக் காதலாகக் குறிக்கவேண்டிச் சுவாமிகள், தானே வள்ளிக்குறத்தியின் நிலையினை ஏற்றுப் பாடியுள்ளார். திருவிடைக்கழிப் பெருமானும், தானும் மட்டுமே இருந்து  துய்ப்பதாகிய பேரின்பக் காதலைக் காட்டி, உலகியலில் நமது சிற்றின்பபோகத்தை மறக்கச்செய்கின்றார். வள்ளிக்குறத்தி,  திருவிடைக்கழிப் பெருமானிடத்தில் மாலை வேண்டி ஊடல் கொள்கின்றாள்.

    ‘பெருமானே!, உனது அடியவரின் துயரினை நீக்குவதற்காகவே, வீரவேல் தாங்கி, மயில் மீதிலேறி,  ஓடோடி வருபவன் நீ; உனது மென்மையான உள்ளத்தின் குறியீடாகவே, நீயும் மென்மையான கடம்ப மலர் மாலையினை மிக விரும்பிச்  சூடிக் களிக்கின்றாய். கடம்பமாலை சூடி, குராமர நிழலில் உறைகின்ற நீயே, எனக்குப் பேரின்ப மையலை ஊட்டினாய். நோய் தந்த நீயே அந்நோய்க்கு மருந்தும் ஆவாய். இதனை அறியாத என் பெற்றோரும், உற்றோரும் மற்றோரும் உன்னைப் பலவாறு நொந்துரைப்பதனை கேட்டு என்னால் பொறுக்க இயலவில்லை. அதனால், எனது பேரின்பக்காதல் நோயினைத் தீர்க்கவேண்டி, நீயே மயில்மீது உடன் வந்து அருளுவதே முறையாகும்;  ஆயினும், எனது வல்வினையால் நீ எனக்கு அருளக் காலம் தாழ்கின்றவேளையில், நீ சூடிக் களைந்த கடம்பமலர் மாலையினையாவது தந்து என்னைக் காக்கவேண்டும்’  என்று சுவாமிகள்,  தலைவி நிலையிலிருந்து பாடியுள்ளார்.

    “மருக்கு லாவிய மலரணை … கொதியாதே
    வளர்த்த தாய்தமர் வசையது… மொழியாதே
    கருக்கு லாவிய அயலவர் …  பழியாதே
    கடப்ப மாலையை இனிவர … விடவேணும்
    தருக்கு லாவிய கொடியிடை … மணவாளா
    சமர்த்தனே மணிமரகத … மயில்வீரா
    திருக்கு ராவடி நிழல்தனில் … உறைவோனே
    திருக்கைவேல் வடிவழகிய … பெருமாளே” (திருப்புகழ்: 798)

    மேற்கண்ட பாடல், வள்ளிக்குறத்தி, திருவிடைக்கழிப் பெருமானைப் பெற்று இன்புறுவதற்கு, ‘கடம்ப மாலை’ கருவியாக வேண்டுவதைக் குறிக்கின்றது.   வள்ளிக்குறத்தியின் வகையில் நின்று நாமும் திருவிடைக்கழிப் பெருமானிடத்தில்,  என்றும் அகலாத அருள்காதல் கொள்ளவேண்டியே, சுவாமிகள் மேழும் ஏழு திருப்புகழ்ப் பாடல்களை இத்திருத்தலத்துக்கு அருளியுள்ளார். அவை நமது அன்றாட வாழ்வியல் மந்திரங்களானால், உலகியலாகிய சிற்றின்பநாட்டமும்,  அண்டங்களையும் கடந்த பேரளவுடைய, சொல்லுக்கும் அடங்காத நம் சிற்றின்பச் சூரத்தனங்களும் நம் சிற்றறிவுக்கு விளங்கும். நமது சூரத்தனங்கள் அகன்று நன்னிலையினை வாய்க்கச்செய்யவே, ‘ஞானச்சூரியனாகிய பெருமான், சூரன் முதலானோரின் அறியாமைச் செயல்களை, ஞானவேல் கொண்டு அடர்த்தருளிய திறத்தையும் சுவாமிகள் குறித்துள்ளார். 

    ஞானவள்ளியும் அகந்தைச் சூரனும்

    வள்ளிக்குறத்தியும் நம்மைப் போன்றே, உடம்பெடுத்து மண்ணுலகில் வாழ்ந்தவளே. அவள், உள்ளமாகிய வயல்வெளியில், குறிஞ்சிக் கிழவனுக்கு உகப்பாகிய தினைப்பயிரை விளைவித்தவள். ஐம்புல வேலியால் அதனை உரியவாறு காப்பதும், அதனைப் பெருமானுக்குப் பணிப்பதும், அவளது பெருநோக்கமாக  இருந்தது. அவள், சித்தத்துள் குறிஞ்சிக்கிழவனையே நிறைத்திருந்ததால், அவளது செயல் அனைத்தும், பெருமானுக்கு உரியவையாகவே அமைந்தன. அவை பதி புண்ணியங்களாக விளைந்து, அவள் விரும்பியவாறே, பெருமானைப் பெறச்செய்தன. குறவரால் வளர்க்கப்பட்ட வள்ளிக்குறத்தி, தனது வாழ்வின் பெருநோக்கத்தைத் தெளிவுற அறிந்திருந்தமைக்கு, அவளது முந்தை வினைப்பயனே துணையாக விளங்கியது.

    நாமும், நமது முந்தை வினைப்பயனின் துணையினாலேயே பெறுதற்கு அரிய பிறப்பாகிய மனிதப்பிறப்பினைப் பெற இயன்றது’ என்பதனை உணர இயலவில்லை. இப்பிறப்பின் பெரும்பயன், ‘செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே’ என்ற மெய்யுணர்வுக்குத் தலைப்படுவதுமில்லை. நம்மிடமுள்ள அறியாமையின் குறியீடாகவே சூரன் வாழ்ந்திருந்தான். வெற்றிப் பெருவாழ்வு வாழ்கின்ற பேறு வாய்த்திருந்தபோதிலும், அதன் பயன், பிறப்பினை வெற்றி கொள்வதாகிய முத்திப்பேற்றினை விரைவில் பெற்றுய்வதற்கு அவனது நல்லறிவு துணைசெய்யவில்லை. அதனாலேயே, தாயினும் சாலப்பரிகின்ற பெருமான் அவனை ஆட்கொள்வதற்கு, பதினெட்டு ஆண்டுகள் போரிட்டார். அங்கு, சூரனின் ஆணவப்போர் மாய்ந்து, பெருமானின் அருள்போரே வெற்றிகண்டது.

    வள்ளிக்குறத்தியைப் போன்று, சூரனும், மனிதனாக உடல்தாங்கிய போதும், உள்ளத்தில் பெருமானைக் குடியேற்ற அவன்பால் அன்பென்னும் அறச்சிந்தனைச் சிறிதும் இல்லை. அதனாலேயே அவனால், ‘அறுமுகச்சிவமே தன்னை ஆட்கொள்ள வந்துள்ளது’ என்பதனை உணர இயலவில்லை. அவனது அறிவளவிற்கு எட்டுகின்ற வகையில், மறக்கருணையால் பெருமானும் அவனை ஆட்கொண்டருளினார். அப்பெருமானே, திருவிடைக்கழியிலும் எழுந்தருளியுள்ளதாகச் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

    “நெருக்கியே வரும் அவுணர்கள் குலமற
    உறுக்கியே மயில் முதுகினில் விசைகொடு
    நிலத்திலே சமர்பொருதவர் உயிர்பலி … கொளும்வேலா’ (திருப்புகழ்: 797)

    என்று பாடி, சூரனைப் போன்று அறியாமை மயக்கில் ஆட்படாமைக்கு, பெருமானது திருவடிகளில் நம்மைச் சுவாமிகள் சரண்புகுத்துகின்றார்.

    “முடுக்கியே உனது இருகழல் மலர்தொழ … அருள்தாராய்”     (மேலது பாடல்)

    மேற்கண்ட தொடரில், ‘முடுக்கி’ என்பது விரைவாக எனப் பொருள்படும். சூரனுக்கருள நீண்ட பதினெட்டாண்டுகள் அமைந்ததைப் போன்று, இம்மண்ணுயிர்களுக்கு அருளவும் மிக நீண்ட காலம் அமைவதே அவ்வவ் உயிர்களின் விதியாயினும், அதனை மதியால் வெல்கின்ற பேறாக, ‘உடனே உனது திருவடியைப் பணிகின்ற பேற்றினை வழங்கியருள்க’ என்று பெருமானிடத்தில் நமக்காகச் சுவாமிகள் பரிந்துரைக்கின்றார்.

    அறஉள்ளம் வேண்டும் எனல்:

    பெருமானை உணரத்தக்க அன்புக்கு, அறமே அடிப்படை. அதனால், அடியாரின் அறவாழ்க்கையையே, பக்திவாழ்வியலாகச் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். திருவிடைக்கழிப் பெருமானின் திருவடித்தாமரைகளை வேண்டுகின்ற அடியார்க்கு, பிறர் துயர் தீர்த்தலாகிய அன்புள்ளமே அடிப்படைத் தேவையாகும். ‘தமக்குப் பெருமான், பெறற்கரிய திருவருளைத் தந்தருளவேண்டும்’ என்று சிந்திப்போர், தம்மால் இயன்றதைப் பிறருக்குத் தருகின்ற அன்புள்ளம் கொண்டவராக இருத்தலைச் சுவாமிகள் பிற தலங்களின் திருப்புகழிலும் வலியுறுத்தியுள்ளார்.

    தம் பொருளைப் பிறருக்கு ஈயாத கீழோரின் அவலத்தைத் தம்பால் ஏறிட்டுக்கொண்டு, திருவிடைக்கழித் திருப்புகழில் சுவாமிகள் பாடியுள்ளார். நெறியல்லாத நெறிகளில் பொருளைத்தேடி, இன்பங்களில் தலையாயது பெண்ணின்பமே என நாடி, ஓடியோடி இளைக்கின்ற அறியாமை நீங்கி அறவாழ்வு வாழ்வதற்குத் துணையாகத் திருவருளை வேண்டுகின்றார்.

    “இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும்

    அற்ற எனக்கு”…………………………………………………
    …………………….ப்ரபுத்துவம் உற்று…………………………….
    ……சளப்பம் இடும் இப்பவக் கடலைக் கடக்க இனிக்
    குறித்து இரு பொன்கழல் புணையைத் தருவாயே”                 (திருப்புகழ்: 793)

    என்ற தொடர்களில், உயர்வில்லாத வகையில் உலகியலிலேயே உழன்று, தாமே தனித்தலைவர் என்ற செருக்குடன் வாழ்ந்து, இதுகாறும் இப்பிறப்பில்  துன்பத்தையே  சேர்த்துள்ளோம்’ என்று கழிவிரக்கம் கொள்கின்ற மனிதர்களின் அறியாமையினை, ‘ப்ரபுத்துவம் உற்று, சளப்பம் இடும் இப்பவக் கடல்’ என்று குறிக்கின்றார். ‘துன்பம் தருவதாகிய உடம்பைப் பேணி, நாளும் அதனை வளர்ப்பதற்கே தீனியிட்டு, உடல் கொண்ட நோக்கத்தை உணர்கின்ற அறிவற்று, நாயினும் கீழாக வாழ்கின்ற வாழ்க்கை’ என மனித வாழ்க்கையின் அவலத்தைச் சுட்டுகின்றார்.

    “பசிபடு நிணச்சடக் … குடில் பேணும்
    உடலது பொறுத்த அறக்கடை பெறு பிறப்பினுக்கு
    உணர்வுடைய சித்தமற்று … அடிநாயேன்
    உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து
    உனது தமர் ஒக்க வைத்து … அருள்வாயே’     (திருப்புகழ்: 795)

    பிறப்பின் பெருநோக்கத்தினை உணராத அறியாமை, பகுத்தறிவுபெற்ற மனிதப் பிறப்புக்கு அறமன்று; ஆதலால், அத்தகைய பேரறிவுக்குத் தலைப்படுவதற்குரிய சூழலாக, அடியார்களுடன் இருத்தலாகிய பெரும்பேற்றினைப் பெற்றுய்ய சுவாமிகள் வழிகாட்டுகின்றார்.

    முடிவுரை

    திருப்புகழை வாழ்வியல் நெறியாக உடையவர்தம், திருவடிகளைத் தாம் வணங்குவதாகச்சுவாமிகள் குறித்துள்ளார். ‘உனைப் பலநாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார்தம் குளிமேவி உணர்த்திய போதம் தனைப் பிரியாது, ஒண்பொலச் சரணானும் தொழுவேனோ (திருப்புகழ்: 249)’ எனப் பாடி, திருப்புகழை ஓதுகின்ற குருநாதரின் அறவுரைக்குத் தம்மை ஆற்றுப்படுத்துமாறு முருகப்பெருமானிடம் பணிகின்றார். மேற்கண்ட இத்தொடரானது, பிறப்பினைக் கடந்த சுவாமிகள் நம்மைப்போன்ற ஆருயிர்களின்பால் கொண்ட கருணையால் விளைந்ததாகும். அக்கருணையின் வெளிப்பாடே,

    “புகரில் புத்தியுற்று அரசு பெற்றுறப்
    பொலியும் அற்புதப் … பெருவாழ்வும்
    புலன் அகற்றிடப் பல விதத்தினைப்
    புகழ் பலத்தினைத் … தரவேணும்”         (திருப்புகழ்: 794)

    என்றமைந்த திருவிடைக்கழித் திருப்புகழாகும். இத்திருப்பாடல், ஐம்புலச் சேட்டைகள் மாயவும், யாவர்க்கும் தலைவராகி, கற்பகப் பெருவாழ்வு வாய்க்கவும், பதிஞானம் நிலைக்கவும் ஓதவேண்டியதாகும். இத் திருத்தலத்துக்குரிய பிற திருப்பாடல்களும் நமது வாழ்வியல் நெறியானால், சொல்லுக்கும் அடங்காத நம் சூரத்தனங்கள் மாயும். வள்ளிக்குறத்தி கொண்ட அயராஅன்பு நமக்கும் வாய்க்கும். அவ்உயர்ப்பேற்றினால், திருக்குராவடியில் உறைகின்ற பெருமானின் திருத்தாள் நிழலுற்று உய்யலாம்.

    (மேற்கோள் பாடல் எண்கள், WWW.KAUMARAM.ORG இணையத்தில் உள்ளபடி குறிக்கப்பட்டுள்ளன.)

    ஆய்வுத் துணைநூல்களும் இணையமும்: 

    1.ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மாலை,
    அடியார் திருக்கூட்ட இறைபணி மன்றம்., சென்னை.
    கிரி ட்ரேடிங் ஏஜென்ஸி, சென்னை. 15-ஆம் பதிப்பு: ஏப்ரல் – 2014.

    2. இணையம்: WWW.KAUMARAM.ORG

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

     

     

    Share
  • தமிழில் முதல் சமையல்கலை நூல்

    -முனைவர் இரா.வெங்கடேசன்

    தமிழில் சமையல்கலை தொடர்பான பல நூல்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. சைவம், அசைவம், குழம்பு, பருப்பு வகைகள், சிற்றுண்டி, காய்கறி உணவு, அசைவத்தில் சிக்கன், மீன், ஆடு, கடல் உணவுகள் என்று தனித்தனியாக பல நூல்கள் விதவிதமான சமையல் நுணுக்கங்களை மையமிட்டு எழுதப்பட்டுள்ளன. இவ்வளவு உணவு வகைகளை சமைப்பதற்குத் தனித்தனியாக நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இதற்கெல்லாம் அடிப்படை நூலாக இருக்கும் நூல் இந்துபாக சாஸ்திரம் எனும் நூலாகும். முதற்பதிப்பு 1891ஆம் ஆண்டு வெளிவந்து இரண்டாயிரம் பிரதிகள் விற்றுதீர்ந்தன. இரண்டாம் பதிப்பு 1900 ஆண்டில் வெளிவந்துள்ளது. இந்நூலை சேலம் தொ.க. இராமசந்திரன் எழுதியுள்ளார். தமிழில் சமையல்கலை குறித்து எழுதப்பட்ட முதல் நூலாக இதனைக் கொள்ளலாம்.

    தமிழ்ச் சமூகத்தில் உணவு சமைத்தல் என்பதனை தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களில் முழுமையாகக் காணமுடிகிறது. தமிழ்ச் சிந்தனை மரபில் குறிஞ்சியில் உணவுகளைச் சுடுவதும் முல்லையில் வேகவைத்தலும் நெய்தல் மருதத்தில் பொரித்தல் சமைத்தல் எனும் வகையில் பண்பாட்டு வளர்ச்சி காணப்பெறுகிறது. தமிழ் இலக்கியங்கள் விலங்குகள் உணவுக்கும் மனிதர்களின் உணவுக்கும் வேறுபாட்டைக் காட்டுகின்றன. விலங்குகள் உண்ணும் உணவு சமைக்கப்படுவதன்று. மனிதர்களோ உணவைச் சமைக்கின்றார்கள். சமையல் கண்டுபிடிப்பே பண்பாட்டின் தோற்றத்திற்கு மிக முக்கியமான அடித்தளமாகும். (பக்தவத்சலபாரதி 2011:27 இந்தப் பண்பாட்டின் முழுமையைச் சங்க இலக்கியங்கள் முழுமையாகப் பதிவு செய்துள்ளன. சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ள உணவு சார்ந்த மரபுகளை அறிந்துகொள்வதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.

    சங்க இலக்கியம் வழியாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்து நிலங்களில் சமைக்கப்பட்ட உணவு குறித்த பதிவுகளின் வழியாக உணவு சமைக்கப்பட்ட வரலாற்றினை அறிந்துகொள்ள இயலும். கிழங்கு, தேன், வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் என்பவற்றில் உணவு வரலாறு தொடங்குகிறது. இறைச்சிதான் முதலில் சமைக்கப்பட்ட உணவாக இருக்கலாம். காட்டுத்தீயில் அகப்பட்டுக் கருகிய விலங்குகள் உணவாகப் பயன்படுத்தப்பட்டதன் விளைவே சமையலும் நெருப்பின் பயன்பாட்டை உணர்ந்தமையும் எனலாம் (ஞா.ஸ்டீபன் 2017:34). இறைச்சியை நெருப்பில் நேரடியாகச் சுடுவதே தொன்மையான சமையல் முறையாக இருந்திருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து சமைக்கும் முறை அறிமுகமாயிருக்க வேண்டும்.

    தமிழ்ச் சமூகத்தின் உணவுச் செழுமை என்பது உணவு வரலாற்றில் முக்கியமானதாகும். பசி இயற்கையானது. ருசி என்பது மனித குலத்தின் தேடல். இந்தக் காலம்வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான உணவு வகைகளும் அந்தத் தேடலின் விளைவே. எண்ணி எழுதவோ பட்டியலிடவோ முழுமைப்படுத்தவோ வழியே இல்லை. ஆயிரம் பல்லாயிரம் விதமான உணவு வகைகள் பிராந்தியம் தோறும் காலந்தோறும் உதித்துக்கொண்டே இருக்கிற விஷயம். மனிதகுலத்துக்கு மட்டுமேயான கலையுணர்வு என்பது உணவில்தான் தொடங்குகிறது (பா.ராகவன் 2012:251). எனவே உணவு குறித்த தேடல்கள் தமிழ்ச் சமூக வரலாற்றில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் உணவு வரலாறு தனித்தன்மை கொண்டதாகவே உள்ளது.4

    உணவுப் பண்பாட்டில் தனித்தன்மை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்தல் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் நகர்ப்புறமயமாதல், தொடர்புச்சாதனங்களின் விளம்பரத்தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் தமிழர்களின் உணவுமுறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது. நிகழ்கால உணவுப் பழக்க வழக்கங்களில் உடல்நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது. எனவே இன்னும் சில மிச்ச சொச்சங்களோடு இருக்கும் பழைய உணவுப் பழக்க வழக்கங்களைத் தொகுத்துக் காணுவது நல்லது (தொ. பரமசிவன் 2014:19). ஏனென்றால் உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதாரச் சூழல் போன்றவற்றைப் பொறுத்து அமைவதால் உணவுப் பண்பாடு குறித்த பதிவுகளை முறைப்படுத்த வேண்டும்.

    உணவுப் பண்பாடு குறித்த பதிவுகளை இரண்டு வகையாக மேற்கொள்ளலாம். ஒன்று இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உணவு குறித்த நுட்பம். மற்றொன்று சமையல்கலை சார்ந்த நூல்களின் வழியாக இலக்கியத்தை ஓரளவு நாம் பகுத்தாய்ந்துள்ளோம். ஆனால் சமையல் நூல்களை பகுத்தாராயவில்லை. சமையல்கலை சார்ந்த நூல்கள் பல நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன என்பது முக்கியமான தகவலாகும்.

    1891ஆம் ஆண்டு வெளிவந்த இந்துபாக சாஸ்திரம் எனும் தமிழ் சமையல் நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த உணவு பழக்க வழக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட நூலாகும். இந்த நூலை எழுத வேண்டியதன் தேவை குறித்து ஆசிரியர் குறிப்பிடும்போது நமது பெண்கள் பெரியவளாகும்போது தங்களுடைய கணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு யாதொரு முயற்சியுஞ் செய்யப்படவில்லை என்பதேயாம். அவர்களுக்குப் பாடசாலைகளில் வாசிப்பு, எழுத்து, கணிதம், சரித்திரம், பூகோளம், சுகாதார விளக்கம், தையல் வேலை முதலிய பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனாலும் பெண் பிள்ளைகளுக்கு மேற்கூறிய விஷயங்களைக் காட்டிலும் அதிக அவசியமும் முக்கியமான சமைதொழில் நாடோடி வைத்தியம் ஆகிய இரு விஷயங்களில் தேற்சியுண்டாக்க இதுவரையில் யாதொரு முயற்சியுஞ் செய்யப்படவில்லை. சமைதொழிலில் அதிக தேற்சியடைந்திருந்தவர்களுடன் அவ்விஷயமாய்ச் சம்பாஷிக்கறம் சந்தற்பம் நேர்ந்தது. இவ்விதமான அநுகூலங்கள் ஏற்றபடியால்தான் எனக்கு இக்கிரந்தத்தை எழுத துணிவுண்டாயிற்று (தொ.க.இராமசந்திர ராயர் 1900:IX) என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்நூலை எப்படிச் சமைப்பது, எந்த உணவு உடலுக்கு நல்லது, யார் எந்த உணவை எடுத்துக்கொள்வது, உணவுகளின் குணங்கள், சமைக்கும் முன் செய்வன. அடுப்புகள், தண்ணீர் பற்றிய கண்ணோட்டம், அளவு, எந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது போன்ற அரிய குறிப்புகளைத் தருகின்றார். இன்றைக்கு வெளிவருகின்ற சமையல்கலை நூல்களெல்லாம் இந்நூல் போன்று நுட்பமான அடிப்படையான தகவல்களைத் தரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

    சமையல் குறிப்புகளைத் தருவதற்கு முன்பாகப் பல குறிப்புகளைத் தருகின்றார். அத்தனையும் பயனுள்ளவை. குழந்தை வளர்ப்பு பெண்களோடு தொடர்புடையதால் உணவை எப்படிச் சமைப்பது உணவின் தன்மை குறித்து விளக்கமாகப் பேசியிருக்கிறார். உணவோடு சேர்க்கும் பொருள்கள் நல்லவையாக இருத்தல் வேண்டும்7 என்று குறிப்பிடுகின்றார். சமைப்பதற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே பயிரிட்டு பயன்படுத்த வேண்டும் என்கிறார். உணவு சக்கை, சத்து, சுவை, தோஷம், குணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பசி எடுத்தபின்பே உணவு உட்கொள்ளவேண்டும். ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனிப் பண்புகள் உண்டு. கசப்பு தரும் காய்களாக பாகற்காய், சுண்டைக்காயைக் குறிப்பிடுகிறார். இந்தச் சுவை உடலுக்கு நன்மை செய்யும் எனக் குறிப்பிடுகிறார்.8 இப்படியாக ஒவ்வொரு சுவைக்குமான நன்மை, தீமைகளைப் பதிவு செய்கிறார்.

    வாதம் – சோளம், சாமை, மொச்சை, பலாக்காய், மாங்காய், கடலை, வள்ளிக்கிழங்கு, பித்தம் – கஞ்சா, அபினி, புகையிலை, கொத்தவரங்காய், சீதாப்பழம், பீர்க்கங்காய், சிறுபயறு, எள்ளு, வேர்க்கடலை.  கபம் – வெள்ளரிக்காய், கொளிஞ்சிக்காய், கம்பு, வெண்டைக்காய், சாம்பாற் பூசணிக்காய் போன்றவற்றால் இவைகள் உண்டாகும். இவற்றையெல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். உணவை உட்கொண்டால் காமம், குரோதம், பலவீனம், ரோகம், சஞ்சலம், பேராசை, கபடம் முதலியவற்றை உண்டாக்கக்கூடிய உணவை உண்ணாமல் பலம், ஆரோக்கியம், மனோதைரியம், தயை, சாந்தம், சத்தியம், பக்தி முதலிய நற்குணங்கள் எந்த உணவு தருகிறதோ அந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

    உடலுக்கு நலம் தரும் உணவுகள் எனக் குறிப்பிடும்பகுதி முக்கியமானதாகும். அரிசி வகைகளைக் குறிப்பிடும்போது கருங்குறவை, ஈர்க்குச்சம்பா, புழுகுச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்லுண்டைச்சம்பா, குண்டுச்சம்பா, மல்லிமைகச்சம்பா, இலுப்பைப்பூச்சம்பா, மணிச்சம்பா, வளைதடிச்சம்பா, கொரைச்சம்பா, குறுஞ்சம்பா, சீரகச்சம்பா, மிளகுச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கொடைச்சம்பா, காடைச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி என்று பலவகை அரிசிகளைக் குறிப்பிடுகின்றார். இவர் குறிப்பிடும் இந்த அரிசி வகைகள் இன்று காணாமல் போயின. இந்த அரிசி வகைகள் நமது பண்பாட்டின் அடையாளமாய் இருந்தவை என்பதை உணர வேண்டும். நன்றாகச் சிந்திப்பதற்கும் மிடுக்காக இருப்பதற்கான குணங்களைக் கொண்ட உணவு வகைகளைக் கொடுக்கின்றார். இந்தக் குறிப்புகளெல்லாம் மிக முக்கியத்துவம் கொண்டவை. எந்த அரிசியை உண்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று குறிப்பிடும் குறிப்புகள் முக்கியமானவை. காடைச்சம்பா – இதனால் பிரமேகசுரமும் சில அற்பநோய்களும் நீங்கும். சுக்கிலதாது விருத்தியும் பலமும் உண்டாகும். தினை, கோதுமை, உழுந்து, பச்சைப்பயறு, பொரி, அவல், எள்ளு, சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளம், கற்கண்டு, தேன், ஜாதிக்காய், ஏலரிசி, எண்ணெய் போன்ற 267 பொருள்களின் மருத்துவக் குணங்களையும் அவற்றை உண்டால் கிடைக்கும் பயன்களையும் விரிவாகவே பேசியுள்ளார். இந்தக் குறிப்புகள் முக்கியமானவை.

    சமைப்பதற்கு முன் செய்யக்கூடியவற்றை விரிவாகப் பேசுகிறார். அவற்றிற்கான பல விளக்கப் படங்களைக் கொடுக்கின்றார். பயன்படுத்தும் பொருட்கள், அளவைகள், தயார் செய்யும் முறை போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். இந்நூலில் சாப்பாடு, களி, அடை, ரொட்டி, குஷ்கா, ரொட்டிகள், பொங்கல், பருப்புகள், பச்சடிகள், குழம்புகள், கூட்டுகள், ரசம், கறிகள், பொடிகள், பாயாசங்கள், ஊறுகாய், வற்றல், வடங்கள், அப்பளங்கள், தோசை, வடை, போளி, இனிப்பு வகைகள், காபி, டீ போன்றவற்றைச் செய்யும் முறை குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமைக்கப்பட்ட உணவுகளை எவ்வாறு இலையில் பரிமாற வேண்டும் என்பதை விளக்கப்படத்தோடு கொடுக்கின்றார். சாதாரண நாட்கள், விழா நாட்கள், பித்ருதோச நாளில் எவ்வாறு எப்படி எந்த முறையில் இலையில் பரிமாற வேண்டும் எனக் குறிப்பிட்டு அதற்கான காரணத்தையும் பதிவு செய்துள்ளார்.

    396 பக்கங்கள் கொண்ட இந்நூல் சமையல் செய்யும் முறைகுறித்து விரிவான பதிவைக் கொண்டுள்ளது. இந்நூல் குறிப்பிடும் உணவு முறைகள் பெரும்பாலும் உணர் சமூகத்தினர் உண்ணும் உணவுக்கான தயாரிப்பு அட்டவணையாக உள்ளது. என்றாலும் இந்நூல் தரும் பல தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. சமையல் பெண்களோடு தொடர்புடையதாக இருந்தாலும் தமிழில் முதலில் சமையல் நூலை எழுதியவர் என்கிற பெருமையை இந்நூல் ஆசிரியர் பெறுகிறார். சமைக்கும் முறை குறித்து பேசியது மட்டுமல்ல அவ்வுணவால் என்ன நன்மை உண்டாகும் என்று சொன்ன விதத்தில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இறுதியாக விலைப்பட்டியல் ஒன்றைத் தருகிறார். 1900 காலகட்டத்தில் உணவுப் பொருட்கள் எந்த விலை விற்றது என்ற அந்தக் குறிப்புகள் முக்கியமானதாகும். அரிய குறிப்புகளைக் கொண்ட இந்நூல் மறுபதிப்பு வருமானால் ஆரோக்கியமாக நாம் வாழலாம். 

    சான்றெண் விளக்கம்

    1. பக்தவத்சலபாரதி (தொகுப்பாசிரியர்), 2011, தமிழர் உணவு, காலச்சுவடு பப்ளிகேசன்ஸ் நாகர்கோவில்
    2. ஞா.ஸ்டீபன், 2017 தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
    3. பா.ராகவன், 2017, உணவின் வரலாறு, மதிநிலையம், சென்னை.
    4. சமைத்தல்/உண்ணுதல், சைவம்/அசைவம், சாதாரண உணவு/விருந்து உணவு, விருப்பம்/விலக்கு, புனிதமானது/புனிதமற்றது என்பன போன்ற பண்புகளாக இருப்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு சமூகத்தின் உணவு முறையானது பொதுத்தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதனதன் தனித்துவத்தைக் காலங்காலமாக நிலைநிறுத்தவும் வந்துள்ளது. தமிழ்ச்சமூகம் போன்ற நீண்ட நெடிய பழமைச் சமூகங்களில் உணவு வரலாறும் உணவுப் பண்பாடும் தனித்துவமான மரபுடையது (பக்தவத்சலபாரதி, 2012:17)
    5. தொ.பரமசிவன் 2014, பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு, பப்ளிகேசன்ஸ், நாகர்கோவில்
    6. தொ.இ. இராமச்சந்திரகவிராயர் (இ.ப.) 1900, இந்து பாக சாஸ்திரம், வைஜயந்தி பிரஸ் புரொபரைமா, சென்னை.
    7. இப்போஷணைக் காதாரமான ஆகாரத்தின் பொருட்டு உதவுகின்ற வஸ்துக்கள் அவற்றின் பாகபேதங்கள், சுவை முதலியவைகள் கெடுதியாயிருந்தால், அப்போஷணையைப் பெறும் இச்சரீரத்துவங்கள் நிலைபிரித்து மிதமிஞ்சிக் கெட்டு சரீரத்திற்கும் பலவாறு துன்பங்களை விளைவிக்கின்றன. (தொ.சி.இராமச்சந்திரராயர் 1900:4)
    8. இந்தச் சுவையானது சீக்கிரத்திற் சீரணிக்கச் செய்யுஞ் சக்தியுடையது. அரோசிகஹரம், மிதமாய் புசித்தால் சுரம், மூர்ச்சை, கிருமி, குஷ்டம் இவைகளைப் பரிகரிக்கும் உடம்பெரிச்சலைக் குறைக்கும் பகலைச் சுத்தப்படுத்தும். (தொ.இ. இராமச்சந்திரராயர் 1900:18)

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
    இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

     

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 13

    பதிற்றுப்பத்தும், பதிகமும், சேர வேந்தர் ஆண்டுகளும்

          பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அரசனாக இருந்த ஆண்டுகள், வேந்தனாக இருந்த ஆண்டுகள் என இரு பகுதிகளாகக் கணிக்கப்பட்டன. இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மகன்கள் களங்காய் கண்ணி நார்முடிச் சேரல், சேரன்செங்குட்டுவன் ஆகியோர் முறையே 25, 25, 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் குறிப்பிடுகிறது. இவை அவர்கள் அரசனாகவும் வேந்தனாகவும் இருந்த மொத்த ஆட்சி ஆண்டுகள் ஆகும். இமயவரம்பன் கிட்டத்தட்ட கி.மு. 275வாக்கில் இறக்கிறான். இமயவரம்பனுக்குப் பின் கி.மு. 275இல் வேந்தனாக ஆன அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன்  10 ஆண்டுகள் வேந்தனாகவும், 15 ஆண்டுகள் அரசனாகவும்(கி.மு.290 முதல்) இருந்தான் எனக் கணிக்கப்பட்டது. இமயவரம்பன் இறந்த போது கி.மு. 275வாக்கில், அவனது மகன்கள் களங்காய்கண்ணி நார்முடிச்சேரல், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் அரசனாக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து, அவனது தம்பி இறந்தபின் இமயவரம்பனின் மூத்த மகன் கி.மு. 250 வரை, 15 ஆண்டுகள் வேந்தனாக இருக்கிறான். அதன்பின் இமயவரம்பன் இறந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு. 250இல் சேரன் செங்குட்டுவன் வேந்தனாக ஆகி 30 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அதன்பின் அவனது கடைசிமகன் ஆடுகோட்பாட்டு சேரலாதன் 8 ஆண்டுகள் மட்டுமே வேந்தனாக இருந்தான். பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்ட, அரசர், வேந்தர் ஆட்சி ஆண்டுகள் குறித்த கீழ்க்கண்ட அட்டவணை, இக்கணிப்பு குறித்த ஒரு தெளிவைத்தரும்.

     

    வேந்தன்பெயர்        மொத்தஆண்டு   அரசர்ஆண்டு    வேந்தர்ஆண்டு

    1.இமயவரம்பன்       333-275=58       333-327=6        327-275=52

    2.அவனதுதம்பி        290-265=25       290-275=15       275-265=10

    3.மூத்தமகன்          275-250=25       275-265=10       265-250=15

    4.செங்குட்டுவன்       275-220=55       275-250=25       250-220=30

    5.கடைசிமகன்         250-212=38       250-220=30       220-212=8

    மொத்த ஆண்டுகள்    201             86              115

    பொறையர் குலச்சேர வேந்தர்கள்:

    1.செல்வக்  வாழி.           230-205=25       230-212=18       212-205=7

    2.பெருஞ்   பொறை    210-195=15       210-205=5        205-195=10

    3.இளஞ்    பொறை    200-184=16       200-195=5        195-184=11

    மொத்த ஆண்டுகள்    56              28              28

         உதியனின் மகன்கள் இருவரும்(இமயவரம்பனும் அவனது தம்பியும்), அவனது பேரன்கள் மூவரும்(இமயவரம்பனின் மகன்கள்) சேர்ந்து பதிற்றுப்பத்துப்படி மொத்தம் 201 ஆட்சி ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இதில் ஒருவன் வேந்தனாக இருந்த போது மற்றவர்கள் அரசர்களாக இருந்துள்ளனர். இவர்களது வேந்தர் ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட 115 ஆண்டுகள் ஆகும். இந்த வேந்தர் ஆட்சி ஆண்டுகளைத்தான் காலக் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளமுடியும். இமயவரம்பன் சோழன் மகள் மணக்கிள்ளியை இரண்டாவது மனைவியாக மணந்தபின்,  அவனது 50ஆவது வயதில் சேரன் செங்குட்டுவன் அவனுக்கு மகனாகப் பிறக்கிறான். அதன் பின் ஆடுகோட்பாட்டு சேரலாதன் பிறக்கிறான்.

            கி.மு. 232 வாக்கில் அசோகர் இறந்தார் என்பதாலும், கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவினர் என்பதாலும் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பு என்பது கி.மு. 232-228 வாக்கில்தான் நடந்தது எனலாம். சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப்படையெடுப்பு, சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவக் காரணமாக அமைந்தது. பரணரால் சேரன் செங்குட்டுவன் பாடப்பட்டவன்; அதியமான் காலத்தில் வாழ்ந்தவன்;  வடநாட்டுப் படையெடுப்புக்குப் பின்னரே சோழன் கிள்ளிவளவனுக்கு உதவ நேரிவாயில் போர் இவனால் நடத்தப்பட்டது; அவன் இறந்த ஆண்டும், சம்பை கல்வெட்டின் ஆண்டும் கிட்டத்தட்ட கிமு. 220 ஆகும். கொல்லிமலை கைப்பற்றப் படுவதற்கும் திருக்கோவிலூர்போர் நடப்பதற்கும் சிறிது காலத்துக்குமுன் அவன் இறந்துவிடுகிறான்.

           7ஆம் காலகட்டம் வரையான சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை நிர்ணயிப்பதில் பதிற்றுப்பத்தின் மொத்த ஆட்சி ஆண்டுகளும், சங்கப்பாடல்களும் போக, நந்தர்கள்-மௌரியர்கள் ஆட்சிமாற்றம் கி.மு. 323 வாக்கில் நடந்தது; இந்தியாவின் வடபகுதியில் கி.மு. 325-322 வரை கலவரங்கள் நடந்தன; கி.மு. 272 வாக்கில் பிந்துசாரன் இறந்தான்; அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து அசோகன் கி.மு. 268 வாக்கில் முடி சூடினான்; கி.மு. 256 வாக்கில் அசோகன் கல்வெட்டுகள் வெட்டப்பட்டன; கிமு. 232 வாக்கில் அசோகர் இறந்தார்; கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி அரசை அமைத்தனர்; கி.மு. 220 வாக்கில் சம்பைக்கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 165 வாக்கில் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 163 வாக்கில் இரண்டாவது தூமகேது தோன்றியபோது யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இறந்தான் என்பன போன்ற வரலாற்றுச் செய்திகள், கி.மு. 327 முதல் கி.மு. 163 வரையான 2ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையிலான சேரஆட்சியாளர்களின் ஆண்டுகளை வரையறை செய்து அவைகளை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கை வகித்தன.

          சிலப்பதிகாரக் காப்பியம் மூலம் சாதவாகனர்களுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் தொடர்பு இருந்ததை,  அதில் சேரன் செங்குட்டுவன் பெரு வேந்தனாகவும், சாதவாகனர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டு, அவன் சொல்படி செயல்படுபவர்களாகவும் காட்டப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. மேலும் சேரன் செங்குட்டுவன் தனது இறுதிக்காலத்தில்தான் வடநாடு படையெடுத்தான் என்பதையும் அறிய முடிந்தது. இமயவரம்பன் தனது வேந்தர் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே வடநாடு படையெடுத்தான் என்பதை 2ஆம் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. இந்த ஒவ்வொரு செய்தியும் காலக்கணிப்பிற்கு பயனுள்ளதாக இருந்தது எனலாம்.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(220)

     

     

     

    உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து      

    மட்பகையின் மாணத் தெறும்.                                                

           -திருக்குறள் -883(உட்பகை)

     

    புதுக் கவிதையில்…

     

    வாழ்வுதனில்

    தற்காத்துக்கொள்ள வேண்டும்,

    உட்பகைக்கு அஞ்சி..

     

    இல்லையெனில்

    அது

    அறுத்தழித்துவிடும்

    மண்பாண்டம் அறுக்கும்

    கருவிபோல…!

     

    குறும்பாவில்…

     

    மண்பாண்டமறுக்கும் கருவிபோல்          

    அறுத்தழிக்கும் வாழ்வை, உட்பகைக்கு 

    அஞ்சித் தற்காத்துக்கொள்ளாவிடில்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    உடனிருந் தழிக்கும் உட்பகையை

         உணர்ந்தே யஞ்சி யதுவாழ்வில்

    இடரது யேதும் தந்திடாமல்

         இயல்பாய்த் தற்காத் திடல்வேண்டும்,

    தொடர்ந்திடும் பகையிது அறுத்தழிக்கும்

         தூய தாம்நல் வாழ்வினையே,

    குடமதில் மண்ணை அறுத்தெடுக்கக்

         குயவன் கைக்கொளும் கருவிபோலே…!

     

    லிமரைக்கூ..

     

    தற்காத்திடு உட்பகைக்கு அஞ்சி,    

    மண்பாண்டமறுக்கும் கருவியாய் அறுத்தழிக்கும்             

    அதுவே வாழ்வினில் மிஞ்சி…!

     

    கிராமிய பாணியில்…

     

    கொடியது கொடியது உட்பகதான்

    கூடயிருந்தே கெடுக்கும் உட்பகதான்..

     

    தற்காத்துக்கோ தற்காத்துக்கோ

    உட்பகக்கிப் பயந்து

    ஒன்ன நல்லாத் தற்காத்துக்கோ..

     

    இல்லயிண்ணா அது

    பச்சமண்ணு பானய அறுக்கும்

    அருவாபோல அழிச்சிப்புடும்

    வாழ்க்கயயே அழிச்சிப்புடும்..

     

    அதால

    கொடியது கொடியது உட்பகதான்

    கூடயிருந்தே கெடுக்கும் உட்பகதான்..!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

     

    Share
  • துயரம் நேர்கையில்

    பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    துயரம்  நேரும் போதெல்லாம்
    துணை கிட்டும் எனக்கு
    அன்னை மேரியின்
    உன்னத  அறிவுரை மொழிகளாய் !
    இருள் மூண்டு காலம் கடுக்கும் போது
    என்னெதிரிலே வந்து நிற்கிறாள்,
    அன்னை மேரி
    உன்னத அறிவுரை சொல்லி !

    முணு முணுப்பாள் என் காதிலே
    நுணுக்க மான அறிவுரைகள்.
    மாநிலத்தில் வாழும்
    மனம் உடைந்து போன மனிதர்
    ஒப்புக் கொள்வார்.
    ஒரு பதில் உண்டு அதற்கு.
    மரித்துப் போனாலும்
    மீண்டும் காண வாய்ப்புண்டு.
    ஒரு பதில் இருக்க வேண்டும்.

    முகில் மூட்டத்தில் இரவு உள்ள போது
    ஒளிக்கதிர் என்மேல் மினுக்கும் !
    அடுத்த நாளும் மினுக்கும் !
    விழித் தெழுவேன்
    ஒலிக் கீத விளிப்புக்கு !
    அன்னை மேரி அருகில் வருவாள்,
    பொன்மொழி களைப் பொழிந்து கொண்டு !
    ஓர் அறிவுரைப் பதில் கிடைக்கும்
    உறுதி யாகச் செவிதனில்
    ஓதப்பட்டு !

    Share
  • இரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன

    Posted on August 3, 2018

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    ++++++++++++++++
    மோதும் இரண்டு விண்மீன்கள் ஒன்றாய் ஒளிவீசி கதிரியக்க மூலக்கூறுகளை வெளியேற்றும்.
    நமது சூரியன்போல் இரண்டு விண்மீன்கள் மோதிக் கொண்டால்,  அதன் விளைவுக் காட்சி : உன்னத ஒளிமய வெடிப்புக் காட்சி !  முடிவாகப் பெரியதோர் புதிய விண்மீன் ! அப்படி ஒரு காட்சி 1670 இல் தோன்றியது.  கண்டோருக்குச் செந்நிறத்தில்  தெரிந்தது ஒரு புதிய சூரியன்.  ஆரம்பத்தில் நேராக வானில் கண்ணுக்குத் தெரிந்த அந்த ஒளிக்காட்சி, பின்னர் உடனே மறைந்து, இணையும் நிகழ்ச்சி மங்கலாகி, தற்போது நுணுக்கமான தொலைநோக்கி மூலம்தான் காண முடிகிறது. இப்போது அதைச் சுற்றிலும் மங்கிய ஓர் கசிவு முகில் வளையமே தென்படுகிறது.
    இந்நிகழ்ச்சி நேர்ந்து சுமார் 348 ஆண்டுகள் கடந்து [1670 + 348 = 2018]   2018 ஆம் ஆண்டு ஜூலையில், அகிலநாட்டு வானியற் குழுவினர் <<அல்மா>> &  நோயிமா கருவிகள் மூலம் [ ALMA – ATACAMA Large Millimeter Array] &  [NOEMA –  Northern Extended Millimeter Array]  ரேடியோ தொலை நோக்கி வழியாக, நடந்த வெடிப்புக் காட்சி விளைவை [Known as CK Vulpeculae (CK -Vul)]  ஆய்வுகள் செய்ததில்  உறுதியாக கதிர்வீசும் அலுமீனியம் [26 AL]  [Radio Isotope of 26AL] இருப்பது அறியப் பட்டது.  அதாவது 26AL மூலகத்தின் கதிர்வீசும் ஏகமூலம் [13 புரோட்டான் + 13 நியூட்ரான்] ஃபுளோரின் [Fluorine] சேர்க்கையுடன், அலுமினியம் மானோ ஃபுளூரைடு [26ALIF] ஆகக் காணப்பட்டது.  இதுவே முதன்முதல் பூமிக்கு 2000 ஒளியாண்டு தூரத்தில், நமது சூரிய மண்டலம் கடந்த புற விண்வெளியில் காணப்பட்ட கதிரியக்க மூலக்கூறு [Radioactive Molecule] என்று வரலாற்று முதன்மை பெறுகிறது.
    ++++++++++++++++++

     luminosity-of-birth-star-1

    http://slideplayer.com/slide/1374764/

    பெருநிறை விண்மீன்கள் பிறப்பு இன்னும் மர்மமாகத் தெரிகிறது நமக்கு. காரணம் இந்த விண்மீன்கள் தீவிரமாய்த் திண்ணிய வாயுத் தூசிகள் ஈடுபாடு கொண்டவை.  இந்த ஒளிபுகாச் சூழ்புறம் [Opaque Envelope] நவீனத் தொலை நோக்கிகள் மூலம் ஆயும் நேரடி நோக்குதலுக்கும் கடினமாய் உள்ளது.  சொல்லப் போனால்,  இவ்வகை விண்மீன்கள் பிறக்கும் தாலாட்டு ஊஞ்சல் மட்டும் நமக்குத் தெரிகிறதே தவிர, அந்த விண்மீன்கள் தென்படு வதில்லை.

    ரால்ஃப் கியூப்பர் [ Emmy Noether Research Group for Massive Star Formation, Germany]

    protostar-formation

    குளிர்தேசக் கணப்பு அடுப்பில் மரத் துண்டுகளை எறிந்தால் குப்பெனத் தீப்பற்றுவதுபோல், பெருநிறை விண்மீன்கள் எழுப்பும் தீவிரப் பேரொளி வெடிப்புகள்  நூறாயிரம் சூரியன்கள் உண்டாக்கும் கூட்டு ஒளிமயத்தைக் காட்டுகின்றன.  இம்மாதிரி ஒளி வெடிப்பு நிகழ்ச்சிகள், பிரபஞ்சத்தில் சிறுநிறை கொண்ட நமது சூரியன் போல், பூர்வப் பரிதிகள் தோன்றிய போதும் நேர்ந்துள்ளன.

    எட்வேர்டு வொரோபையோவ் [ஜெர்மன் ஆய்வக அறக்கட்டளை]

    முன்னுரை:  பிரபஞ்சத்தில் சூப்பர்நோவா ஒன்று விளைவித்த கொந்தளிப்பில் அல்லது பளுமிக்க விண்மீன் ஒன்று வெடித்த கொந்தளிப்பில் புதிய விண்மீன் ஏற்பாடுகள் (New Star Systems) உருவாகுகின்றன. நமது சூரிய மண்டலமே பால்மய வீதி காலக்ஸியின் சுருள் ஆரத்தில் மரித்த ஒரு சூப்பர்நோவா வீசி எறிந்த மிச்சத்திலிருந்து தோன்றி யிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஒரு கோட்பாடை ஊகிக்கிறார்கள். சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது வெளியேற்றிய கூண்டு விண்வெளியில் உலவி வீதி வழியே தூசி துணுக்குகளை வாரிக் கொண்டு, வழி நெடுவே திண்ணிய தீக்கனலுடன், எரியும் வாயுக்களில் நீல நிறத்தில் எக்ஸ்ரே கதிர்களை எழுப்பிக் கொண்டு சென்றது !

     luminosity-of-stars-1

    பெருநிறை விண்மீன்கள் பிறக்கும்போது பேரொளி வெடிப்பு நேர்கிறது

    பெருநிறை விண்மீன்களின் பிறப்பானது, வானியல் விஞ்ஞானி களுக்கு இன்னும் புதிராகவும், மர்மமாகவும் இருக்கிறது.  அதற்குக் காரணம் : அந்த வகை விண்மீன்கள் பேரடர்த்தி வாயுத் தூசிகள் கலந்த அரங்குகளில் அடைபட்டுக் கிடக்கின்றன.  அந்த ஒளிபுகாச் சூழக நிகழ்ச்சிகளை தொலை நோக்கிகள் மூலம் காண்பதும் கடினமாய் உள்ளது. இந்த விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவது, ஜெர்மன் ஆய்வு அறக்கட்டளை [GRB – German Research Foundation] [Emmy Noether Research Group for Massive Star Formation] தலைமை விஞ்ஞானி ரால்ஃப் கியூப்பர் [Rolf Kuiper].

    ஜெர்மன் ஆய்வாளர் ஒரு கணினி இலக்கப் போலி மாடலில் [Computer Numerical Simulation] இட்டு அதன் விளைவுகள் வெளியிட்டுள்ளார்.  அதற்கு அதிகத் திறனுள்ள கணினிகள் [High Performance Computers]  பயன்படுத்தப் பட்டன.  அந்த மாடல்கள் சுய ஈர்ப்பியல் இறுக்கி அழுத்தப்படும் வாயுத் தூசி முகிலில் ஆரம்பமாகிறது.  அதுவே முடிவில் கொந்தளிக்கும் இளம்பரிதி ஒன்றைச் சுற்றிவரும் சுழற் தட்டாகி [Accretion Disk] உருவா கிறது.  அந்த சுழற் தட்டுப் பிண்டம் ஒரு மையப் பரிதியைச் சுற்றிவந்து, மெதுவாக வாயுத் தூசிகளை மையத்தை நோக்கி இழுக்கிறது.

    [https://www.youtube.com/watch?v=9j1AKzICLts?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [https://www.youtube.com/watch?v=0wP5GPFALCg?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    Life cycle of a Star

    வெடிப்பு நிகழ்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வெடியலைகள், குளிர்ந்து போன கருமை முகிலோடு முட்டி முனையில் செந்நிற ஹைடிரஜன் மின்னிட மோதியது ! இந்தப் பின்புலத்திலே மோதலுக்குப் பிறகு வாயுக்கள் குளிர்ந்து திணிவும் (Density) உஷ்ணமும் மாறி பல்வேறு வண்ணப் பட்டைகள் (Muli-colour Bands) தெரிந்தன. குளிர்ந்து திரண்ட ஆரஞ்சு நிறத் திரட்டுகள் விண்மீனின் வடிவாயின ! சிதைவுக் குப்பைகள் ஈர்ப்பு ஆற்றலில் மேலும் அழுத்தமாக்கப் பட்டன. காலம் செல்லச் செல்ல ஈர்ப்பு விசையே வலுத்து வாயுக்களையும், தூசி துணுக்குகளையும் சுருக்கித் திரட்டி சுழற்றுத் தட்டுகளாய் ஆக்கின ! பிற்காலத்தில் அத்தட்டுகளே “முன்னோடி விண்மீன்களாகவும்”, முன்னோடிக் கோள்களாகவும் (Protostars & Protoplanets) விண்மீன் ஏற்பாடுகளுக்கு அடிப்படையாயின (Steller System Forerunners).

    luminosity-of-stars-2

    இந்திய அமெரிக்க வானியல் விஞ்ஞான மேதை சுப்ரமணியன் சந்திரசேகர் (1910-1995) விண்மீன்களின் தோற்ற பௌதிகத்தையும், கருந்துளைகள் (Black Holes) பற்றிய ஆராய்ச்சிகளையும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் செய்தவர். அவர் விண்மீன்களின் பளுவுக்கும் அவற்றின் சிதைவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். ஒரு விண்மீனின் பளு சூரியனைப் போல் 1.4 மடங்கானால் அது சிதைவடைந்து மடியும் போது நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது ஒரு கருந்துளையாகவோ (Neutron Star or Black Hole) மாறிவிடும் என்று கூறினார். அந்தக் குறிப்பிட்ட 1.4 விகித எண்ணிக்கையே “சந்திரசேகர் வரம்பு” (Chandrasekher Limit) என்று வானியல் விஞ்ஞானிகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் “வெண்குள்ளி” விண்மீன்களின் (White Dwarf Stars) பளு வரம்பையும், உள்ளமைப்பையும் சந்திரசேகர் விளக்கினார்.

    luminosity-of-stars-3

    விண்வெளியில் கண்சிமிட்டும் விண்மீன்களின் தோற்றமும் சிதைவும்!

    பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் வல்லுநர்கள், மின்மினிபோல் வானிருளில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பரிதியின் பரம்பரைச் சேர்ந்த அண்டங்களோ என்று ஐயுற்றார்கள்! விண்மீன்களின் இடம்மாறிய பிம்பங்களை [Stellar Parallaxes] முதலாகக் கண்டு, 1838 இல் அந்த ஐயம் மெய்யான தென்று உறுதியானது. மேலும் அந்நிகழ்ச்சி விண்மீன்களின் இயற்கைத் தன்மைகளை ஆழ்ந்து அறிய அடிகோலியது. சுயவொளி வீசும் சூரிய வம்சத்தைப் போல் தோன்றினாலும், பல விண்மீன்கள் முற்றிலும் வேறுபட்டவை!

    கோடான கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy]! தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல! பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று  அண்ட வெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது! இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம்! சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை! சில வடிவத்தில் சிறியவை!

    luminosity-of-stars

    கொதிப்போடு கொந்தளிப்பவை சில! குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில! ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில! ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில! பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சிதைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பெளதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்து கொண்ட விளக்கங்களே!

    ஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது. அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது! அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது. சூப்பர்நோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்ட தாகவும் கருதப்படுகிறது!

    Supernova & White Dwarf

    பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவ தில்லை என்று சந்திரசேகர் கூறினார். [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தி யற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம். அது வடிவத்தில் சிறியது! ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது!] அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, சூப்பர்நோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது. பரிதியைப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து நொறுங்கி, இறுதியில் ஒரு கருந்துளை [Black Hole] உண்டாகிறது. சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் சூப்பர்நோவா, நியூட்ரான் விண்மீன், மற்றும் கருந்துளை ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

    சந்திரசேகரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு

    இந்தியராகப் பிறந்து அமெரிக்காவில் குடிபுகுந்த சுப்ரமணியன் சந்திரசேகர் பிரிட்டிஷ் இந்தியாவில் 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் லாகூரில் அவதரித்தார். 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்று உலகப் புகழடைந்த விஞ்ஞானி ஸர் சி.வி. ராமனின் மருமான் [Nephew] சந்திரசேகர், என்பது இந்தியர் பலருக்குத் தெரியாது! தந்தையார் சுப்ரமணிய ஐயர் அரசாங்க நிதித்துறையகத்தில் வேலை பார்த்து வந்தார். தாயார் சீதா பாலகிருஷ்ணன் பிள்ளைகள் பிற்காலத்தில் பேரறிஞர்களாக வருவதற்கு ஊக்கம் அளித்தவர். பத்துக் குழந்தைகளில் சந்திரசேகர் மூன்றாவதாகப் பிறந்த முதற் பையன்! 1918 இல் தந்தையார் சென்னைக்கு மாற்றலானதும், சந்திரசேகர் சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து [1922-1925] படித்துச் சிறப்பாகச் தேர்ச்சி அடைந்தார்.

    Star Life cycle

    பிறகு பெரியப்பா சி.வி. ராமன் அவர்களைப் பின்பற்றிச் சென்னை பிரிசிடென்ஸிக் கல்லூரியில் படித்து, 1930 இல் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் B.Sc. பட்டதாரி ஆனார். கல்லூரியில் சிறப்புயர்ச்சி பெற்று முதலாகத் தேறியதால், அரசாங்கம் அவர் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல உதவிநிதிப் பரிசளித்தது. அங்கே கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடிக் கல்லூரியில் படித்துப் 1933 இல் பெளதிகத்தில் Ph.D. பட்டத்தைப் பெற்றார். 1936 செப்டம்பரில் கல்லூரியில் சந்தித்துக் காதல் கொண்ட லலிதா துரைசாமியை மணந்து கொண்டார். கேம்பிரிட்ஜில் ஸர் ஆர்தர் எடிங்டன் [Sir Arthur Eddington], மில்னே [E.A. Milne] போன்ற புகழ் பெற்ற வானியல் வல்லுநர்களின் நட்பைத் தேடிக் கொண்டார்.

    Sun’s Evolutionary Tracks

    அதற்குப் பிறகு சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1937 இல் ஆய்வுத் துணையாளர் [Research Assistant] பதவியை ஒப்புக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்றார். 1938 இல் சந்திரசேகர் வானியல் பெளதிக [Astrophysics] உதவிப் பேராசிரியராகி, ஒப்பற்ற வானியல் பெளதிகப் பேராசிரியர் மார்டன் ஹல் [Morton Hull] அவர்களின் கீழ் பணியாற்றினார். அவர் பணி யாற்றிய இடம் விஸ்கான்சின், எர்க்ஸ் வானியல் நோக்ககம் [Yerks Observatory, Williams Bay, Wisconsin]. சந்திரசேகர் 1953 இல் அமெரிக்கப் பிரஜையாக மாறினார். 1952 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆக்கப் பட்டுப் பல ஆண்டுகள் வேலை செய்து, ஓய்வுக்குப் பின்பு கெளரவப் பேராசிரிய ராகவும் 1986 வரை அங்கே இருந்தார். சந்திரசேகர் வானியல் ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட, விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு [Theory on the Later Stages of Stellar Evolution] என்னும் பெளதிகப் படைப்பிற்கு 1983 இல் நோபெல் பரிசை, அமெரிக்க விஞ்ஞானி வில்லியம் ·பவ்லருடன் [William Fowler] பகிர்ந்து கொண்டார். அந்தக் கோட்பாடு அண்டவெளியில் நியூட்ரான் விண்மீன்கள் [Neutron Stars]. கருந்துளைகள் [Black Holes] ஆகியவற்றைக் கண்டு பிடிக்க உதவியது.

    H-R Diagram

    அண்டவெளியில் சூப்பர்நோவா, வெண்குள்ளி விண்மீன்கள்

    இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் டேனிஸ் விஞ்ஞானி ஐஞ்சர் ஹெர்ட்ஸ்புருங் [Einjar Hertzsprung] அமெரிக்க விஞ்ஞானி ஹென்ரி ரஸ்ஸெல் [Henri Russell] இருவரும் முதன் முதல் விண்மீன்களின் ஒளிவீச்சையும், உஷ்ணத்தையும் சேகரித்து, ஒரு வரைப்படத்தில்

    புள்ளியிட்டு அவற்றின் இணைச் சார்புகளைக் காட்டினார்கள். அந்த ஹெர்ட்ஸ்ப்ருங்-ரஸ்ஸெல் [Hertzsprung-Russell, H-R Diagram] வரைப்படமே வானியல் பெளதிகத்தில் விண்மீன்களின் தன்மைகளை எடுத்துக் காட்டும் ஒரு முக்கிய ஒப்புநோக்கு வரைப்பட மாகப் பயன்படுகிறது. ஒளித் திரட்சியை நேரச்சிலும் [Luminosity in Y-Axis], உஷ்ணத்தைக் மட்ட அச்சிலும் [Temperature in X-Axis] குறித்து, ஆயிரக் கணக்கான விண்மீன் களின் இடங்களைப் புள்ளி யிட்டுக் காட்டப் பட்டுள்ளது. ஹைடிரஜன் 10% கொள்ளளவுக்கும் குறைந்து எரிந்த பெரும்பான்மையான விண்மீன்கள் முதலக வீதியில் [Main Sequence] இடம் பெற்றன. ஒளிமிக்க விண்மீன்கள் இக்கோட்டுக்கு மேலும், ஒளி குன்றியவை கோட்டுக்குக் கீழும் குறிக்கப் பட்டன. பேரொளி வீசுவதற்கு விண்மீன் பெருத்த பரப்பளவு கொண்டிருக்க வேண்டும்! அவைதான் பெரும் பூத விண்மீன்கள் [Super Giants] ! அவற்றுக்கும் சிறியவைப் பூத விண்மீன்கள் [Giant Stars]! பிறகு வாயுக்கள் எரிந்து எரிந்து அவைச் செந்நிறப் பூதங்களாய் [Red Giants] மாறுகின்றன! போகப் போக வாயு விரைவில் காலி செய்யப் பட்டு, ஈர்ப்பு விசையால் குறுகி விண்மீன்கள் வெண்குள்ளியாய் [White Dwarfs] சிதைவாகின்றன.

    Supergiants & White Dwarfs

    பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுப் பரிதியும், ஒரு வெண்குள்ளியாகச் சிதைவடைந்து மடியப் போவதாய்க் கருதப் படுகிறது! அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒரு செந்நிறப் பூதமாகி [Red Giant] புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களை வெப்பக்கடலில் மூழ்க்கி, அடுத்து பூமியின் வாயு மண்டலத்தை ஊதி வெளியேற்றிக், கடல்நீரைக் கொதித்துப் பொங்க வைத்து, உயிரினம் யாவும் மடிந்து மீண்டும் எதுவும் வாழ முடியாத வண்ணம், பூமி ஓர் நிரந்தர மயான கோளமாய் மாறிவிடும்! ஏறக்குறைய முழுப்பகுதி ஹைடிரஜன் வாயுள்ள விண்மீன், ஈர்ப்பு விசையால் பேரளவில் அமுக்கப் பட்டுச் சுருங்கி உண்டானது. வாயுக்கள் கணிக்க முடியாத பேரழுத்தத்தில் பிணைந்து, பல மில்லியன் டிகிரி உஷ்ணம் உண்டாகி, வெப்ப அணுக்கரு இயக்கம் [Thermonuclear Reaction] தூண்டப்பட்டு அவை ஹீலியமாக மாறுகின்றன. அந்த நிகழ்ச்சியின் போது அளவற்ற வெப்பமும், வெளிச்சமும் எழுந்து பிணைவு இயக்கம் [Sustained Fusion Reaction] தொடர்கிறது!

    1930 ஆரம்ப ஆண்டுகளில் விஞ்ஞானிகள், ஹைடிரஜன் சேமிப்பு யாவும் எரிந்து ஹீலியமாகி வற்றியதும் விண்மீன்கள் சக்தி வெளியீட்டை இழந்து, தமது ஈர்ப்பு ஆற்றலால் அமுக்கப் பட்டுக் குறுகி விடுகின்றன என்று கண்டார்கள். பூமியின் வடிவுக்குக் குன்றிப் போகும் இவையே வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுபவை. வெண்குள்ளி கொண்டுள்ள அணுக்களின் எலக்டிரான்களும் அணுக்கருத் துகள்களும் [Nuclei] மிக மிகப் பேரளவுத் திணிவில் [Extremely High Density] அழுத்தமாய் இறுக்கப் பட்டு, எண்ணிக்கை மதிப்பில் நீரைப் போல் 100,000-1000,000 மடங்கு அதன் திணிவு ஏறுகிறது என்று பின்னால் கணிக்கப் பட்டுள்ளது!

    Structure of a Star

    சந்திரசேகர் எழுதிய விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு

    சந்திரசேகரின் சிறப்பு மிக்க ஆக்கங்கள் விண்மீன்களின் தோற்ற மூலம் [Evolution of Stars], அவற்றின் அமைப்பு [Structure] மற்றும் அவற்றுள் சக்தி இயக்கங்களின் போக்கு [Process of Energy Transfer], முடிவில் விண்மீன் களின் அழிவு ஆகியவற்றைப் பற்றியது. வெண்குள்ளிகளைப் [White Dwarfs] பற்றிய அவரது கோட்பாடு, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ரால்·ப் பவ்லர் [Ralph Fowler], ஆர்தர் எடிங்டன் [Arthur Eddington] ஆகிய இருவரும் தொடங்கிய வினையைப் பின்பற்றி மேற்கொண்டு விருத்தி செய்தது.

    சிதைவுப் பண்டங்கள் [Degenerate Matter] சேர்ந்து பேரளவுத் திணிவு [Extremely High Density] பெருத்த வெண்குள்ளியில், எலக்டிரான்களும் அணுக்கருத் துகள் மின்னிகளும் [Ionized Nuclei], விண்மீனின் ஈர்ப்பு விசையால் இறுக்கிப் பிழியப் படுகின்றன என்று 1926 இல் ரால்ஃப் பவ்லர் விளக்கிக் கூறினார்.

    Image result for subramanian chandrasekher

    அதே ஆண்டு ஆர்தர் எடிங்டன் ஹைடிரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியமாக மாறி, சக்தியைச் சுரக்கும் மூலமாக விண்மீன்களில் இருக்கலாம் என்று எடுத்துக் கூறினார். சந்திரசேகர் தனது ‘விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு ‘ [An Introduction to the Study of Stellar Structure] என்னும் நூலில், விண்மீன் தனது எரிவாயுவான ஹைடிரஜன் தீரத் தீர முன்னைப்போல் ஒளிக்கதிர் வீசத் தகுதி யற்று, அதன் ஈர்ப்பு விசை சிறுகச் சிறுக அதே விகிதத்தில் குன்றிச் சுருங்குகிறது என்று எழுதியுள்ளார். ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசை அதன் பளுவைச் [Mass] சார்ந்து நேர் விகிதத்தில் மாறுகிறது! பளு குன்றினால், அண்டத்தின் ஈர்ப்பு விசையும் குறைகிறது! ஈர்ப்பு விசைச் சுருக்கத்தின் [Gravitational Collapse] போது, விண்மீனின் பளு ஒப்புமை நிலைப்பாடு [Relatively Constant] உள்ளது என்று சந்திரசேகர் அனுமானித்துக் கொண்டார். அந்தச் சுருக்கத்தை நிறைவு செய்ய, பேரமுக்க முள்ள எலக்டிரான்கள் [Highly Compressed Electrons] பொங்கி எழுந்து, விண்மீன் நொறுங்கிச் சிதைவடைந்து, சிறுத்துப்போய் முடிவில் வெண்குள்ளியாக [White Dwarf] மாறுகிறது என்பது அவர் கருத்து!

    What is a White Dwarf ?

    சந்திரசேகர் ஆக்கிய வெண்குள்ளிக் கோட்பாடு கூறுவது என்ன ?

    1936 முதல் 1939 வரை சந்திரசேகர் வெண்குள்ளிகளின் கோட்பாட்டை [Theory of White Dwarfs] உருவாக்கினார். அந்தக் கோட்பாடு வெண்குள்ளியின் ஆரம், பளுவுக்கு எதிர்விகிதத்தில் மாறுவதாக [Radius is inversely proportional to Mass] முன்னறிவிக்கிறது! பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு பெருத்த எந்த விண்மீனும் வெண்குள்ளியாக மாற முடியாது! வெண்குள்ளியா சிதைவடை வதற்கு முன்பு பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு மிகுந்த விண்மீன்கள் தமது மிஞ்சிய பளுவை, முதலில் நோவா வெடிப்பில் [Nova Explosion] இழக்க வேண்டும்! சந்திரசேகரின் மேற்கூறிய மூன்று முன்னறிவிப்புகளும் மெய்யான விதிகள் என்று விஞ்ஞானிகள் உறுதிப்பாடு செய்துள்ளனர்! ஏற்கனவே தெரிந்த ஒரு வெண்குள்ளிகளின் சரிதையைத் தவிர, இவற்றைத் தொலை நோக்குக் கருவிகள் மூலம் கண்டு ஒருவர் நிரூபிப்பது மிகவும் கடினம்! வானியல் வல்லுநர்கள் இதுவரை அறிந்த எந்த வெண்குள்ளியும் நிறையில் 1.4 மடங்கு பரிதியின் பளுவை மிஞ்சி யுள்ளதாகக் காணப்பட வில்லை! விண்மீன்களின் நிறையை இனம் பிரித்திடும் அந்த வரையரைப் பளு எண்ணைச் [1.4] ‘சந்திரசேகர் வரம்பு ‘ [Chandrasekar Limit] என்று வானியல் விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

    Red Giant turning to White Dwarf

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய சிறப்பு ஒப்பியல் நியதி [Special Theory of Relativity] மற்றும் குவாண்டம் பெளதிகக் கோட்பாடு [Principles of Quantum Physics] ஆகிய இரண்டையும் பயன்படுத்திச் சந்திரசேகர், ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ‘பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு நிறை யுடைய ஒரு வெண்குள்ளி விண்மீன், சிதைவுற்ற வாயுவில் உள்ள எலக்டிரான்களின் உதவியை மட்டும் கொண்டு நிலைப்பாடு கொள்ள முடியாது. அப்படிப் பட்ட ஒரு விண்மீன் தனது வெப்ப அணுக்கரு எரு [Thermonuclear fuel] முழுதையும் எரித்துத் தீர்க்கா விட்டால், அதன் பளு சந்திரசேகர் வரம்பை விடவும் மிகையானது என்று அறிந்து கொள்ள வேண்டும்’.

    தொலைநோக்கியில் காணப் பட்ட மெய்யான வெண்குள்ளி விண்மீன்களின் பளுவைக் கணித்ததில், அவை யாவும் சந்திரசேகர் வரம்புக்குக் [1.4] குறைந்த தாகவே அறியப் பட்டன! அந்த வரம்புக்கு மேற்பட்ட பளுவை உடைய விண்மீன், தனது அணுக்கரு எரிப்புக் காலம் [Nuclear-Burning Lifetime] ஓய்ந்தபின், ஒரு வேளை நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] ஆகலாம்! அல்லது ஒரு கருந்துளையாக [Black Hole] மாறலாம்! சந்திரசேகர் ஆராய்ந்து வெளியிட்ட வானியல் சாதனைகள் விண்மீன்களின் இறுதி ஆயுள் நிலையை எடுத்துக் காட்ட உதவி செய்கின்றன. மேலும் ஏறக் குறைய எல்லா விண்மீன்களின் பளுக்களும் சந்திரசேகர் வரம்பு நிறைக்குள் அடங்கி விட்டதால், அகில வெளியில் பூதநோவாக்கள் [Supernovas] எதுவும் இல்லாமைக் காட்டுகின்றன. [நோவா என்பது உள்ளணுக்கரு வெடிப்பு (Internal Nuclear Explosion) ஏற்பட்டுப் பேரளவில் சக்தியை மிகைப்படுத்தி வெளியாக்கும், ஒரு விண்மீன்].

    Star turning to Black Dwarf

    ஈர்ப்பியல் நொறுங்கலில் தோன்றும் கருந்துளைகள்!

    1968 இல் கருந்துளை என்று முதன் முதலில் பெயரிட்டவர், அமெரிக்க விஞ்ஞானி ஆர்ச்சிபால்டு வீலர் [Archibald Wheeler]. ஆயினும் அவருக்கும் முன்பே கருந்துளையைப் பற்றிப் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வேதாந்தி [John Mitchell (1783)], மற்றும் பிரென்ச் கணித வல்லுநர் பியரி ஸைமன் லாபிளாஸ் [Piere Simon de Laplace (1796)] ஆகியோர் இருவரும் கருந்துளையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

    கருந்துளை [Black Hole] என்பது விண்வெளியில் பேரடர்த்தி [Highly Dense] கொண்டு, நியதிப்படி இருப்பதாகக் கற்பனிக்கப் பட்ட ஓர் அண்டம்! அகில வெளியில் ஈர்ப்பு விசைப் பேராற்றலுடன் உட்புறம் இழுத்துக் கொண்டிருக்கும் ஓர் குழிப் பகுதி. அப்பகுதியில் எதுவும், ஏன் ஒளிக்கதிர் வீச்சு, மின் காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic Radiation] கூட அதன் அருகே நெருங்க முடியாது!

    star-formation-cycle

    ஒளிமந்தை விண்மீன்கள் தோற்றம்

    அதன் அருகே புகும் ஒளிக்கதிர்கள் நேராகச் செல்ல முடியாமல் வளைக்கப் படும்; அல்லது ஈர்ப்பு மையத்துக் குள்ளே கவர்ந்து இழுக்கப் படும்! ஆகவே கருந்துளையின் பக்கம் ஒளி செல்ல முடியாத தால், அதன் இருப்பிடத்தைத் தொலை நோக்கி மூலம் காண்பது அரிது! கருங்குழியிலிருந்து எழும் எக்ஸ்ரே கதிர்களை [X-Rays], பூமியில் உள்ள வானலை நோக்கிகள் [Radio Telescopes] நுகர்ந்து கண்டு பிடிக்க முடியும். பபெருத்த ஒரு விண்மீன் தனது எரிபொருள் யாவும் தீர்ந்த பின், அதன் நிறையால் சிதைந்து, ஈர்ப்பாற்றல் [Gravitation] மிகுந்து அதன் உருவம் குறுகிக் கருந்துளைஉண்டாகிறது! அதன் வடிவம் ஒரு வளைவான கோள விளிம்பில் [Spherical Boundary] சூழப் பட்டுள்ளது. அந்தக் கோள விளிம்பின் ஊடே ஒளி நுழையலாம். ஆனால் தப்ப முடியாது! ஆதலால் அது முழுக்க முழுக்கக் கருமை அண்டமாக இருக்கிறது. ஈர்ப்பியல் நொறுங்கல் [Gravitation Collapse] நிகழ்ச்சி ஆக்கவும் செய்யும்! அன்றி அழிக்கவும் செய்யும்! ஒரு விண்வெளி அண்டத்தில் அல்லது விண்மீன் கோளத்தில் ஈர்ப்பாற்றல் விளைவிக்கும் உள்நோக்கிய சிதைவை ஈர்ப்பியல் நொறுங்கல் என்று வானியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது. அண்டவெளிக் கோள்களும், விண்மீன்களும் ஈர்ப்பியல் நொறுங்கல் நிகழ்ச்சி யால் உருவாக்கப் படலாம்; அல்லது அவை முழுவதும் அழிக்கப் படலாம்.

    our-sun

    Star Structure

    சிறு விண்மீன்களில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவுகள்

    சில சிறு விண்மீன்களில் இந்த ஈர்ப்பியல் நொறுங்கல் மெதுவாக நிகழ்கிறது! சில காலத்திற்குப் பிறகு நின்று விடுகிறது! வெப்பம் படிப்படியாகக் குறைந்து, விண்மீன் வெளிச்சம் மங்கிக் கொண்டே போகிறது! வானியல் நோக்காளர்கள் அந்த மங்கிய விண்மீனையும் தொலைநோக்கி மூலம் காணலாம்! அவைதான் வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுகின்றன. நமது சூரியனும் உதாரணமாக பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு வெண்குள்ளியாகத்தான் தனது வாழ்வை முடித்துக் கொள்ளப் போகிறது!

    சில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடீரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டி விடலாம்! பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம்! ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது! அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும்! எஞ்சிய நடுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும், வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது!

    Steller Formation seen By Hubble Telescope

    நியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன! ஓர் இளைய நியூட்ரான் விண்மீன் துடிப்பி [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பியின் குறுக்களவு சுமார் 9 மைல்! ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்!

    பூத விண்மீனில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவு ! கருந்துளைகள் !

    பேரளவு பளு மிகுந்த ஒரு விண்மீன் சிதையும் போது அழுத்தமோ, அணுக்கரு வெடிப்போ இறுதி நொறுங்கலை நிறுத்துவ தில்லை! அந்த விண்மீனின் ஆரம் [Radius] சிறுக்கும் போது, அதன் விளிம்பின் வளைவில் ஈர்ப்பு விசைப் பெருக்கம் அடைகிறது!

    Star formation process

    முடிவில் ஆரம் மிகச் சிறியதாகி, ஈர்ப்பு விசை பிரம்மாண்ட மாகி, விளிம்பின் வளைவு உள்நோக்கி இழுக்கப்பட்டு கருந்துளை உண்டாகிறது! அப்போது கருந்துளையின் அருகே ஒளிக்கதிர் சென்றால் அது வளைக்கப் பட்டு, உள்நோக்கி இழுக்கப் பட்டு விழுங்கப் படுகிறது!

    ஒளிக்கதிர் யாவும் விழுங்கப் படுவதால் கருந்துளையைத் தொலை நோக்கியில் காண முடியாது! கருந்துளை பிரபஞ்சத்தில் இன்னும் ஓர் மர்ம அண்டமாய், மாய வடிவத்தில் இருக்கிறது. நமது ஒளிமய வானிலும் [Galaxy] பால்மய வீதியிலும் [Milky Way], எண்ணற்ற கருந்துளைகள் இருக்கலாம்! ஆனால் இதுவரை யாரும் அவற்றின் இருக்கையைக் கண்டு பிடித்து உறுதிப் படுத்தியதில்லை! கருந்துளையின் அளவு அதன் உட்பளுவைப் பொறுத்து நேர் விகிதத்தில் மாறுகிறது. நமது பரிதியின் பளுவைக் கொண்டுள்ள ஒரு கருந்துளையின் ஆரம் சுமார் 1 மைல் [1.5 km] இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது! ஆனால் மற்ற ஒளிமய மந்தைகளில் [Other Galaxies] கருந்துளைகளை விஞ்ஞானிகள் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது!

    The Spinning Black Hole

    பிரபஞ்சத்தில் வெண்குள்ளி இறுதியில் கருங்குள்ளி ஆகிறது

    செந்நிறப் பூத [Red Giant] நிலையிலிருந்து விண்மீன் முடிவான வடிவுக்குத் தளர்வது ஒரு நேரடிப் பாதை!  குன்றிய பளுவுடைய விண்மீன்கள் பலவற்றில், பரந்த வெளிப்புற அரண் அண்டவெளியில் விரிந்து கொண்டே போக, அவற்றின் நடுக்கரு மட்டும் ஒளித்திறம் [Luminosity] வற்றி வெண்குள்ளியாய் தங்கி விடுகிறது. பல மடங்கு பரிதி நிறை கொண்டுள்ள விண்மீன்கள் பெருநோவா வாக [Supernova] வெடித்து விடும். அவற்றிலும் சந்திரசேகர் வரம்புக்கு [1.4 மடங்கு பரிதியின் பளு] உட்பட்ட நடுக்கரு மிச்ச அண்டமும் வெண்குள்ளி யாக மாறும். அவ்வாறு உண்டான வெண்குள்ளியில் தாய்மூலக அணுக்களிலிருந்து [Parent Atoms] எலக்டிரான் யாவும் பிடுங்கப் பட்டு, அதன் பிண்டம் [Matter]அனைத்தும் சிதைவான வாயுவாகத் [Degenerate Gas] திரிவடைகின்றது! அந்த விபரீத வாய்க்கள் வெப்பக் கடத்தி யாகி, பொதுவான வாயு நியதிகளைப் [Gas Laws] பின்பற்றுவ தில்லை! அவ்வாயுக்கள் பேரளவு நிலையில் அழுத்தம் அடையலாம்! அவற்றைப் போன்ற வெண்குள்ளிகள் சக்தி அளிக்கும் சுரப்பிகள் எவையும் இல்லாமல், நிரந்தரமாய்க் குளிர்ந்து, அடுத்து மஞ்சல்குள்ளியாகி [Yellow Dwarf], பிறகு செங்குள்ளியாகி [Red Dwarf], அப்புறம் பழுப்புக்குள்ளியாகி [Brown Dwarf] இறுதியில் முடிவான கருங்குள்ளியாக [Black Dwarf] கண்ணுக்குத் தெரியாமல் இருந்தும் இல்லாத உருவெடுக்கிறது!

    Supernova turning to a Black Hole

    சந்திரசேகர் எழுதிய வானியல் விஞ்ஞான நூல்கள்

    1952 முதல் 1971 வரை வானியல் பெளதிக வெளியீடு [Astrophysics Journal] விஞ்ஞானப் பதிவின் ஆசிரிய அதிபராகப் [Managing Editor] பணி யாற்றினார். பிறகு அந்த வெளியீடே அமெரிக்க வானியல் பேரவையின் [American Astronomical Society] தேசீய இதழாய் ஆனது. 1953 இல் ஆண்டு ராயல் வானியல் பேரவை [Royal Astronomical Society] சந்திரசேகருக்குத் தங்கப் பதக்கம் அளித்தது. 1955 ஆம் ஆண்டு தேசீய விஞ்ஞானப் பேரவைக்குத் [National Academy of Science] தேர்ந்தெடுக்கப் பட்டார். சந்திரசேகர் பத்து நூல்களை எழுதியுள்ளார். விண்மீன் சூழகத்தில் கதிர்வீச்சால் நிகழும் சக்தி கடத்தல் [Energy Transfer By Radiation in Stellar Atmospheres], பரிதியின் மேல்தளத்தில் வெப்பச் சுற்றோட்டம் [Convection in Solar Surface], விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு [An Introduction to the Study of Stellar Structure (1939)], விண்மீன் கொந்தளிப்பின் கோட்பாடுகள் [Priciples of Stellar Dynamics

    (1942)], கதிர்வீச்சுக் கடத்தல் [Radiative Transfer (1950)], திரவ இயக்க & திரவ காந்தவியல் நிலைப்பாடு [Hydrodynamic & Hydromagnetic Stability (1961)], கருங்குழிகளி கணித நியதி [Mathematical Theory of Black Holes (1983)]. மெய்ப்பாடும் எழிலும் [Truth & Beauty], விஞ்ஞானத்தில் கலைத்துமும் வேட்கையும் [Aesthetics & Motivation in Science (1987)]. விண்மீன் ஒளியின் இருமட்ட இயக்கம் [The Polarization of Starlight], காந்த தளங்களில் வெப்பச் சுற்றோட்ட வாயுக்கள் [Convection of Fluids in Magnetic Fields].

    Solar Sytem formation

    1999 ஆம் ஆண்டு ஏவப்பட்ட மனிதரற்ற விஞ்ஞானத் துணைக்கோள் [Premier Unmanned Scientific Satellite] ஓர் எக்ஸ்ரே நோக்ககத்தைக் [X-Ray Observatory] கொண்டது. அது ஒரு முற்போக்கான எக்ஸ்ரே வானியல் பெளதிக ஆய்வுச் சாதனம் [Advanced X-Ray Astrophysics Facility]. “சந்திரா எக்ஸ்ரே நோக்ககம்” என அழைக்கப்படும் அந்த துணைக்கோள், இந்திய அமெரிக்க வானியல் மேதை, சுப்ரமணியன் சந்திரசேகரைக் கெளரவிக்க வைத்த பெயராகும். அத்துணைக்கோள் எக்ஸ்ரேக் கதிர்கள் எழுப்பும் விண்மீன்களின் கூர்மையான ஒளிநிறப் பட்டைகளை எடுத்துக் காட்டும். அது பூமியின் சுழல்வீதியில் சுற்ற ஆரம்பித்ததும், ஒரு நண்டு நிபுளாவின் பொறிவீசி விண்மீனையும் [Pulsar in Crab Nebula], காஸ்ஸியோப்பியா பூதநோவாவையும் [Cassiopeia A Supernova] படமெடுத்து அனுப்பியுள்ளது.

    Image result for subramanian chandrasekher

    சந்திரசேகர் தனது 84 ஆம் வயதில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் தேதி காலமானார். இறப்பதற்கு முன் 1995 இல் அவர் எழுதிய இறுதிப் புத்தகம்: ‘பொது நபருக்கு நியூட்டனின் கோட்பாடு’ [Newton ‘Principia’ for the Common Reader]. அவரிடம் படித்த இரண்டு சைனா பெளதிக விஞ்ஞானிகள் [Tsung-Dao Lee, Chen Ning Yang] 1957 இல் துகள் பெளதிகத்திற்கு [Particle Physics] நோபெல் பரிசு பெற்றார்கள்! இரண்டாம் உலகப் போர் நடந்த போது, சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் முதல் அணுக்கருத் தொடரியக்கம் புரிந்த இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணியாற்றினார்! குலவித்தைக் கல்லாமல் பாகம்படும் என்னும் முதுமொழிக் கேற்ப நோபெல் பரிசு பெற்று உலகப் புகழ் அடைந்த ஸர். சி.வி. ராமனின் வழித்தோன்றலான, டாக்டர் சந்திரசேகர் வானியல் விஞ்ஞானப் படைப்பிற்கு பெளதிகத்தில் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டதும் போற்ற தகுந்த ஆற்றலாகும்!

    ++++++++++++++++++

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. http://www.nasa.gov/audience/forstudents/9-12/features/stellar_evol_feat_912.html

    6. http://ezinearticles.com/?A-Star-From-Birth-to-Death&id=8981207  [April 1, 2015]

    7.  http://sc663drk.weebly.com/birth-and-death-of-the-stars.html

    8.  https://www.khanacademy.org/science/cosmology-and-astronomy/stellar-life-topic/stellar-life-death-tutorial/v/birth-of-stars

    9.  http://www.esa.int/esaKIDSen/SEM976WJD1E_OurUniverse_0.html

    10.  http://science.nasa.gov/astrophysics/focus-areas/how-do-stars-form-and-evolve/

    11. http://www.innovations-report.com/html/reports/physics-astronomy/the-birth-of-massive-stars-is-accompanied-by-strong-luminosity-bursts.html [November 7, 2016]

    12. https://www.sciencedaily.com/releases/2016/11/161107112423.htm  [November 7, 2016]

    13. http://phys.org/news/2016-11-birth-massive-stars-accompanied-strong.html  [November 7, 2016]

    14.  https://en.wikipedia.org/wiki/Star  [November 6, 2016]

    15.  https://www.eurekalert.org/pub_releases/2016-11/uov-tbo110716.php  [November 7, 2016]

    16. https://phys.org/news/2018-07-pair-colliding-stars-radioactive-molecules.html [July 30, 2018]

    17.  https://phys.org/news/2018-07-pair-colliding-stars-radioactive-molecules.html [July 30, 2018]

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  August 3, 2018 [R-2]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180804-Govinda pattabhishekam -watercolour- charcoal -graphite -strathmore 160gsm 9x12inch lr 100dpi

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,

      சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,

      வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,

      காட்டிய கேசவ் கவி”….

     

    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவர்க்கு,

     நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,

     பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,

     மால்பிறப்பு பாகவத மாச்சு”….!

    Share