படக்கவிதைப் போட்டி 171-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
கண்ணைப்பறிக்கும் வண்ண வளையல்களின் அணிவகுப்பை நிழற்படக் கருவியில் எழிலாய்க் கொண்டுவந்திருப்பவர் திரு. மோகன்தாஸ். இதனை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றியறிதல் உரித்தாகின்றது.
”மங்கல அணியாம் வளையலைக் கண்டால்
திங்களைக் கண்ட அல்லியாய்
நங்கையர் முகமும் மலரும்!”
வண்ண வளையல்கள் குறித்த நம் கவிஞர்களின் எண்ணவோட்டத்தையும் அவர்தம் கவிதைகள்வழி கண்டுவருவோம்!
”கல்லுடைக்கும் பெண்ணெனக்குக் கல்லுவளை சரிப்படுமா? இடுப்பொடிய நானுழைத்தால் அல்லவோ என் வீட்டினிலே அடுப்பெரியும்!” என்று வருந்தும் ஏழைக் கர்ப்பிணியின் வேதனையை மனந்தொடும் வகையில் பாவில் பதிவாக்கியிருக்கிறார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா.
ஓர் ஏழையின் குமுறல்
கைநிறையப் போடக்
கலர்கலராக் குவிச்சிருக்கு
பைநிறையப் பணமிருந்தாப்
பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம்.
ஏழைக நம்பளுக்கு
எதுக்கிந்த வளையலெல்லாம்
வாழ வழியில்லையாம்
வளையலொரு கேடா
புதுப் புள்ளத்தாச்சிக்குப்
போடுவாங்க வளைகாப்பு
எட்டு மாதப் புள்ளத்தாச்சி
எம் பொழைப்பு கல்லுடைப்பு
கல்லுடைக்கும் கைக்கு
காப்பு சரிவருமா?
நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான்
ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குளிரும்
சீக்காளி எம்புருசன் செதைஞ்சு கெடக்கையில
காப்பு வந்து என்னோட கையிலதான் ஏறிடுமா
வாணா எனக்கிந்த வளைகாப்பு ஆசையெல்லாம்
வீணாச் செலவழிச்சு வீம்பு பண்ண ஏலாது.
*****
”வளைந்து பருக்கும் வயிற்றின் இரகசியம் சொல்லுமிந்த வளை! கருவின் உயிரும் கேட்டு மகிழுமே வளையல் எழுப்பும் இன்னிசை!” என்று வளைகாப்பின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
வளைகாப்பு:
குலங்கள் தழைக்கக் குடும்பம் மகிழ
பலவிதப் பண்டிகைப் பெரிதாய் உண்டு
நலமுடன் வாழவும் நித்தமும் ஒன்றாய்
விலகா வண்ணம் வருமாம் அழகாய்
விளைந்த நல்திரு விழவில் அணியும்
வளையல் தந்த வகைதான் வளைகாப்பு
பிரிவினை அகற்றப் பாடம் சொன்னது
பிரியாது சேர்ந்தே பெண்ணொடு பழகும்
வட்ட வடிவம் வண்ணத் தோற்றம்
எட்ட விரட்டும் எதிர்வினை ஒழிய
வளைந்து பருக்கும் வயிற்றின் ரகசியம்
வளையலின் மூலம் வருகின்ற உண்மை
சங்கத் தமிழில் சதங்கையும் வளையலும்
பொங்கு தமிழாலே புகழுற்ற வரலாறு
கருவின் உயிரும் கேட்கும் இசையை
ஒருவித வளையல் ஒலியும் சுகம்தான்
மனைவி ஆனதும் மங்கை யர்க்கொரு
வினைகள் வராது வளையல் காப்பது
“வளைகாப்பு”
திளைத்து மகிழத் தருமாம்
வளையல் சத்தம்.! வருவதும் மங்கலமே.!
*****
நற்கவிதைகள் புனைந்த கவிஞர்கட்கு என் வாழ்த்தும் பாராட்டும்!
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…
பேரழகு!
தங்க வளையல் போட்டால்தான்
தனியே வந்திடும் மதிப்பென்றே
அங்கம் முழுதும் தங்கமாக்க
ஆசைப் பட்டிடும் அணங்குகளே,
தங்கம் தராத அழகினையே
தந்திடும் சாதா வளையல்களே,
தங்கிடும் எளிமையும் அடக்கமதுவும்
தானே கொணரும் பேரழகே…!
தங்கத்தின்மீது எப்போதும் அளவற்ற மோகம் நம் நங்கையர்க்கு. தம் செல்வச்செழிப்பைப் பறைசாற்ற, தங்க வளையல்களை முழங்கைவரை அடுக்கிக்கொண்டுவரும் அணங்குகள் ஏராளம்! ஏராளம்! எனினும், தங்கத்தினும் வனிதையர் அங்கத்துக்கு அதிக அழகைக் கூட்டுவது, அவர்களைப் பொலிவாய்க் காட்டுவது இங்கே குவிந்திருக்கும் சாதா வளையல்களே என்று தோதாய் உரைக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.