Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கடவுள்(விஷ்ணு) மனிதனாக பிறக்க வேண்டும் -அவன்
    காதலித்து(ராதை) வேதனையில்(பூ பாரம்) மூழ்கவேண்டும் -கவி கண்ணதாஸன் வரிகளால் உந்தப் பட்டு….!

    180819 -Radha Krishna -A4-lr wcol

    ராதையா! பார்த்தியா! காதலா! கீதையா!
    பாதைபா ரதத்தினை பூட்டிய -தாதையவர்,
    விற்களம், ராஸலீலை, விஷ்ணுகண்ணன் வேதனை:
    தற்கொலைக்கு ராதை தயார்….கிரேசி மோகன்…!

    அடிவானம் ராதை அலைகடல் கண்ணன்
    பிடிவாதம் இல்லா பிணைப்பு -முடிவாக
    ஜீவன் அலைந்து ஜகன்நாத னோடிணையும்
    பாவம் பரிகாரம் போகும்….!

    Share
  • படமும், பாடலும்….!

    தங்க சரிகைசேலை அங்கம் அணிந்தபத்மா,
    பொங்கும் கடல்கடைந்தோன் பத்தினி, -சிங்கன்
    மடியமர்ந்து சீற்றம் முடித்தவளே, வாழி!
    படியளந்தோம் தாங்களே பட்டு(தங்கம் -செல்வம்)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180616 – Upendra -wcol-lr

    ”ஆனைக்(ஐராவதம்)கால் மேய்ந்த்திட,ஆவினம் போலாக
    மோனைகோன் இந்திரன் மன்னிப்பு , -ஓணத்தோன்
    உம்பர்கோன் பட்டத்து உச்சைஸ்வ ரஸ்பூண்டார்
    நம்பிய ’ஆ’வுக்(கு)உபேந்(த்ர்) ‘ஆ’(உபேந்த்ரா)’’….கிரேசி மோகன்….!

    கண்ணன் எதுகை(யதுகை),பின்செல்லும் ஆயிரம்கண்ணன்(இந்த்ரனுக்கு உடம்பெல்லாம் கண்) அண்டர்கோன் மோனை (அல்லது) கேணை…..!

    ”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
    சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
    கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
    மர்மமே கண்ணனாய் மால்’’…!

    Share
  • கேரளாவிலே பேய்மழை

    சி. ஜெயபாரதன், கனடா

    பூகோளச் சூடேற்றம்
    ஆகாவென்று எழுந்தது பார் !
    ஏராளமான வெள்ளம்
    பேய்மழைப்
    பூத வடிவில் வாய் பிளந்து
    தாகம் தீர்த்து
    விழுங்கியது கேரளாவை !
    வீடுகள் சரிந்தன !
    வீதிகள் நதியாயின !
    பாதைகள் மறைந்தன !
    பாலங்கள் முறிந்தன !
    நாடு, நகரம், வீடு யாவும்
    ஓடும் நீரில்
    மூழ்கிப் போயின !
    சீர்வளச் செல்வம் யாவும்
    நீர் வெள்ளம்
    அடித்தோடுது !
    கண்ணீர் விடுவோம் !
    கவலைப் படுவோம்,
    நிதி அளிப்போம்,
    உதவி தருவோம்,
    ஆனால்
    ஈர நெஞ்சம் கொண்டு
    கேரளா
    நீர் விடுமா
    நிலமாய்க் காய்ந்து போன
    வைகைக்கு ?

    +++++++++++++++

    https://www.bing.com/images/search?q=kerala+flood&FORM=HDRSC2

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180818 -DWA-9×12 Strathmore 160gsm wcol charcoal 100dpi lr

    உள்ளங்கை நெல்லியாய் உட்கார அர்ஜுனன்
    தெள்ளத் தெளிவாக தேர்கீதை -மெள்ள
    விளம்புகிறார் வில்லுக்கு விஸ்வரூபம் பார்ட்-டூ
    குளமல்லிக் கேணி(திருவல்லிக் கேணி) களம்….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 14

    -மேகலா இராமமூர்த்தி

    வாழ்விலே நாம் வறுமை என்று கருதுவது பொருளின்மையை. ஆனால் அறிவில் குறைவுபட்டுப் போதலே உண்மையான வறுமை என்கிறது நாலடியார். ஏனெனில் ஒருவன் தன் அறிவின் திறங்கொண்டு எதனையும் சாதிக்கலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பேதையோ கைப்பொருளையும் தொலைத்துவிட்டுக் கலங்கிநிற்பான்.

    இளமைக் காலத்தில் தன் தந்தை ‘படி’ என்று இடித்துக் கூற, அதனை ஒரு நற்சொல் என்று ஏற்காமல் இகழ்ந்து கல்லாது விட்டவன், பின்பொருகால், எழுத்தெழுதிய கடிதமொன்றைப் பலர் முன்னிலையில் ஒருவர் இதனைப் படியுமென்று மெல்லத் தன் கையிற் கொடுக்கத் தனக்கு அது இயலாமையால் நாணத்தாற் சினந்து கூவி அவமானத்தால் ஓவென்று அழுதுவிடுவான் என்று கல்லாப் பேதையின் நிலையினை விளக்குகின்றது நாலடி.

    கல்லென்று தந்தை கழற அதனையோர்
    சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் – மெல்ல
    எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
    வழுக்கோலைக் கொண்டு விடும். 
    (நாலடி – 253)

    அறிவின்மை பலர் முன்னிலையில் மானக் குறைவைத் தருமாகையால் மாந்தர் கல்வியறிவு பெறுதல் வேண்டற்பாலது.

    பொதுவாகக் கற்றுத்தெளிந்த நாவன்மையினையுடைய அறிஞர்கள் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டுவிடக்கூடுமோ என்று அஞ்சி மிகுதியாகப் பேசமாட்டார்கள். ஆனால், கற்றறிவில்லா ஏனையோர் சொற்குற்றம் பொருட்குற்றம் நேர்வதற்கு அஞ்சாமல் ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பர். இஃது, பனைமரத்தில் நீர்வற்றிய உலர்ந்த ஓலை எப்போதும் கலகலவென்று ஓசையிட்டபடியிருக்க நீர்ப்பசையோடு கூடிய பச்சை ஓலையோ எவ்வித ஆரவார ஒலியும் எழுப்பாமலிருக்கும் நிலையை ஒத்தது.

    கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
    மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
    வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
    பச்சோலைக் கில்லை யொலி. 
    (நாலடி – 256)

    ”நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்” என்று மக்கள் சொல்வதும் இதனையே.

    சொல்லின் தொகையறிந்த தூய அறிஞர்கள், கற்றோர் அவையில் பேசப்புகுமுன், அவையின் தன்மையறிந்து, ஆராய்ந்து சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்று வள்ளுவர் கூறியிருப்பது ஈண்டு சிந்திக்கற்பாலது. 

    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
    (குறள் – 711)
     

    தரமறிந்து பயன்கொள்ளும் வகையறியாத இழிகுணங்கொண்ட பேதையர், தேன்சொரிந்து இனிது மணந்தாலும் மலரை உண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையே விரும்பும் ஈயைப்போல், தகுதியுடையார் வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்த அறிவுரைகளின் பயனை நுகரமாட்டார்கள் என்கிறது நாலடியார்.

    பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
    இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் இழிந்தவை
    தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
    தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.  
    (நாலடி – 259)

    என்ன செய்வது…? அவரவர் தரத்திற்கும் அறிவுக்கும் ஏற்பவே இரசனையும் சுவையும் அமைகின்றது. அத்தகையோரை மாற்றுதல் மிகக் கடினம்!

    மனிதவாழ்வில் நாம் கண்கூடாகப் பார்க்கின்ற இன்னோர் அதிசயம் கீழோரிடம் செல்வம் நிறைந்திருப்பதும், மேலோர் வறுமையில் வாடுதலும்.

    இத்தகைய கீழோரிடம் இருக்கும் செல்வம் சா(ய்)க்கடையில் கொட்டிக்கிடக்கும் மூவா மருந்தாகிய அமிழ்தத்தைப் போலப் பிறருக்குப் பயன்தரா ஒன்றாகவே இருக்கும். அந்தப் பயனில் செல்வத்தை யாரும் நயக்கவும் மாட்டார்கள்.

    பலவாக நிறைந்த அலைகளையுடைய கடற்கரையில் தாம் தங்கியிருந்தாலும், வலிதின் நீருறுதலுடைய உவர்ப்பில்லாத கிணற்றைத் தேடிச்சென்றுதான் மக்கள் நீர் பருகுவர்; அதுபோல் கீழ்மக்கள் அருகிலேயே மிகுந்த செல்வத்தோடு இருப்பினும் தக்கோரின் பொருள் விருப்பம் மிகத் தொலைவு சென்றும் உதவுவார் கண்ணதேயாகும் என்பது பின்வரும் நாலடியார் நவிலும் நற்கருத்து.

    மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்
    வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்
    செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
    நல்குவார் கட்டே நசை.    
    (நாலடி – 263)
     

    இதே கருத்தைக் கழைதின் யானையார் எனும் புலவர் பெருந்தகையும் புறப்பாட்டொன்றில் சிறப்பாய் விளக்கியிருப்பதை இங்கே எண்ணி மகிழலாம்.

    ”…தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணா ராகுப நீர்வேட் டோரே
    ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
    சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
    உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்…”
      (புறம் – 204)

    ”கடல் நாற்புறமுஞ் சூழ்ந்து பொருந்தியிருக்கும் இவ்வுலகத்தில் நல்வினை என்பது தனி நிலைமையுடையதாயிருக்கின்றது. ஏனெனில், நல்லனவற்றை உணர்ந்தொழுகும் உயர்ந்தோர் வளமின்றியிருக்க, அவ்வுணர்வொழுக்கமில்லாரான கறிமுள்ளியுங் கத்தரியும் போன்ற கீழோர், பட்டும் உயர்ந்த ஆடைகளும் உடுத்துக்கொண்டு வளமாக வாழ்கின்றனர்” என்று நுண்ணறிவும் நூலறிவும் உடைய நாலடியின் ஆசிரியர்களே வியக்கின்றனர்.

    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
    உணர்வ துடையா ரிருப்ப – உணர்விலா
    வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
    பட்டும் துகிலும் உடுத்து.  
    (நாலடி -264)

    இதே ஐயம் நம் ஐயன் திருவள்ளுவருக்கும் எழுந்ததால்தான்,

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்” என்று குறளெழுதினார்.

    இதுபோல் விடைதெரியா வேறுபல் வினாக்களுக்கு ’வினைப்பயன்’ எனும் நம்பிக்கையே நம் மக்களுக்கு ஆறுதலளிக்க வருகின்றது.

    உண்மையான கல்வியாளர் யார்? உண்மையான செல்வந்தர் யார்? என்பதற்கு மனங்கொளத்தக்க விளக்கங்களைத் தருகின்றது ஓர் நாலடியார்ப் பாடல். அதனைக் காண்போம்!

    இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும் அவர் ஓதாதவரேயாவர் (கல்லாதவர்), இயற்கையறிவுடையார் நூல்களை ஓதாதிருந்தும் ஓதினாரோடொப்ப விளங்குவர் (கற்றவர்). வறுமையுற்றும், மனத்தூய்மையோடிருந்து பிறரை ஒன்று இரவாதவர் செல்வரேயாவர்; செல்வரும் பிறர்க்கு ஒன்று உதவாரென்றால் வறுமையாளரேயாவர்.

    ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
    ஓதி யனையார் உணர்வுடையார் – தூய்தாக
    நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்
    நல்கூர்ந்தார் ஈயா ரெனின். 
    (நாலடி – 270)

    செல்வம் என்பது என்ன? ”அது சிந்தையின் நிறைவு” என்றார் குமரகுருபரர். அந்த நிறைவும், பிறருக்கு உதவும் உதார குணமும் இல்லாதவர்கள் மனவறுமை கொண்ட ஏழையரே என்று கொள்வதில் பிழையொன்றுமில்லை!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
    3. புறநானூறு மூலமும் உரையும் – ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை

     

    Share
  • கருத்தலெப்பை, மீன்குகை வாசிகள் நாவல்கள் புலப்படுத்தும் – சாதி

    -ஜா. கிருஷ்ணாகுமாரி

    முன்னுரை

    கீரனூர் ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை, மீன்குகை வாசிகள் நாவல்களில் ராவுத்தர், லெப்பை, சாதிய  ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை இக்கட்டுரைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தியா போன்ற பல் சமயத்தவர் வாழும் நாட்டில் சாதியப் பிரச்சனை மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது.  வெவ்வேறு மதங்களுக்கு இடையேயான மோதல்களும் ஒரே மதத்தைச் சேர்ந்த வெவ்வேறு சாதியினரின் மோதல்களும் சமூக நல்லிணக்கத்தைக் கலங்கடித்து வன்முறைகளைத் தூண்டிவிடுகின்றன. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் நடைப்பெற்ற குஜராத் கலவரம், பீஹார் கலவரம், மாலைகானி ஏற்படுத்திய கலவரங்கள் பேசப்படுகின்றன. உலக அளவில் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்து ஷியா, ஷன்னி போன்ற பிரிவுகள் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் மோதிக்கொள்வதைச் சாதியப் பிரச்சனைகளுக்கு உதராணமாக நாம் கருத்தில் கொள்ளலாம்.

    சாதியப் பிரச்சனைகள்

    தமிழகத்தில் ஒரே மதத்தவரைப் பிறந்த குலம், பின்பற்றப்படும் கொள்கை, அவர் சார்ந்து இயங்கும் கோட்பாடு, அவர் மேற்கொண்டுவரும் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பதைக் காணமுடிகிறது.  “ஒரு சமுதாயத்தில் வாழும் மக்களை நாம் மேல்தட்டு பணக்காரப் பிரிவினர், மத்தியதர வர்க்கத்தினர், வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள அடித்தட்டுப் பிரிவினர் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.” என்று பொருளியல் சார்ந்த பகுப்பியலை கௌரி குறிப்பிடுகிறார்.” (கௌரி. ஜி. நாகராஜன், சிறுகதைகளில் சமுதாயப் பார்வை, ப.26)

    தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமுகத்தில் ராவுத்தர், மரைக்காயர், லெப்பை என்னும் மூன்று பெரும் பிரிவினர் வாழந்து வருகின்றனர்.  இவர்கள் செய்யும் தொழில் மற்றும் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படையில் பிரிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

    ராவுத்தர்

    தொன்மைக் காலங்களில் தமிழக இஸ்லாமிய அரபுகளுக்கு ராவுத்தர் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.  நாளடைவில் குதிரைவணிகம் மட்டுமல்லாமல், அரசு சேவையில் குதிரை வீரராகவும், குதிரை அணியின் தளபதியாகவும் இந்தச் சொல் பயன்பட்டுள்ளது.  திருப்பெருந்துறையில் குதிரைவணிகராக வந்து,  தனது துயர்களைந்த இறைவன். ‘துய்ய பேருலகிற்கெல்லாம் துலங்கிய ராவுத்தராயன்’ என வாயார வாழ்த்துகிறார் வாதவூர் அடிகள்.  இராமய்யன் அம்மானை குதிரையணி தளபதியை ‘ராவுத்த கர்த்தன்’ எனக் குறிப்பிடுகிறது.”  ராவுத்தராயன், ‘ராவுத்தகர்த்தன்’ என்ற வழக்குகள் இஸ்லாமியத் தமிழர்களைச் சுட்டுவதற்காக எழுந்த சொற்களாகும், இந்தச் சொற்களுக்கான வேர், எந்த மொழியில் ஒட்டியுள்ளது என்பது ஆய்வுக்குரியதாகும்.” (எஸ்.எம். கமால், தமிழகத்தில் முஸ்லிம்கள், ப.32.)

    பெரும்பாலான முஸ்லிம்கள், இன்றும் ‘ராவுத்தர்’ என்ற விகுதியைத் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வதுபோலத் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு மொழிபேசும்  நாயக்கர்களில் ஒரு சிறுபிரிவினர் தங்கள் பெயருடன் ‘ரவுத்’ என்ற விகுதியையும் இணைத்து வழங்குகின்றனர்.  “தென்னகத்தில் நிலவும் சாதிகளையும் குடிகளையும் முழுமையாக ஆய்வுசெய்து பல தொகுதிகளாகத் தமது ஆய்வை ’தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்னும் நூலாக எழுதிய எட்கார் தர்ஸ்டன், ராவுத்தர் என்பவர்கள் இஸ்லாமிய மக்களான லெப்பை, மரைக்காயர் மற்றும்  சோனகர் பயன்படுத்தும் விருதுப்பெயர் என்றே குறிப்பிட்டுள்ளார்.” (மேலது. ப.33)

    தங்களுடைய தொன்மையை இவ்விதம் நினைவுகூறும் வகையில் தமிழக ராவுத்தர் இன்றும் மணவிழாக்களின்பொழுது,  மணமகனை நன்கு அலங்கரித்துக் குதிரை மீது ஏற்றிவைத்து,  மணமகள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர்.  இந்தப் பழக்கம், தமிழக  முஸ்லிம்களிடையே நானூறு  ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்து வந்தது என்பது பெரும்புலவர் உமறுவின் பாடல்களில் இருந்து புலப்படுகிறது.  இறைமறையை வெளிப்படுத்தி விவரிக்கும் சீறாப்புராண காவியம், தமிழ்நாட்டில் இயற்கைப் பின்னணி, பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகப் புனையப்பட்டுள்ளது. மணமகனாகிய முஹம்மமுநபி (ஸல்) அவர்கள் மணக்கோலத்துடன் பரியில் அமர்ந்து பவனியாகப் மணமகள் இல்லம் சென்றதை.

    “தாவியபரிமேற் சேனைத் தளத் தொடும் விதிவாயின்
      மேவியவள்ளலார் தம் மெய் எழில் நோக்கி-
      கடுநடைப் புரவமேலாய் கவிகைமாநிழற்றவந்த
      வடிவடைமுகம்மதின் தன் வனப்பலால்  வனப்புமில்லை-
      திரையின்றி பிறந்மொழியார் செழுமனித் தீபங்களேந்த      இருபுறநெருங்கிஅயினிநீர் கழற்றவெண்ணில் ஆலத்திஎடுப்ப  பாவையின் மறையில் குரவையுஞ் சிலம்பபரியை  விரட்டிரங்கின என்றே” எனவும் அவர் பாடியுள்ளார்.” (மேலது. ப.33).

    மரைக்காயர், இராவுத்தர் என்பது அவர்கள் செய்துவந்த தொழில்களின்  அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருக்கிறது.  “தமிழ் மொழியில் இராவுத்தர் என்றால் குதிரைஓட்டி என்று பொருள்.  குதிரை வணிகம்  செய்துவந்தவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டனர்.  மரைக்காயர் என்றால் கப்பல்மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.  அரபுமொழியில் ‘ரா. இத் என்றால் குதிரைவீரன் என்று பொருள்.  வடமொழியில் ‘ராஹீத்’ என்றும் தெலுங்கில் ‘ராவுத்து’ என்றும் பொருள்.” (மேலது, ப.79).

    கருத்தலெப்பை என்னும் நாவலில் இராவுத்தர்கள் பள்ளிவாசல்களில் லெப்பையர்களுக்கு உரிமை வழங்கப்படாமையை எடுத்துரைக்கிறார்.  “நிலத்துக்கும் இறை இல்லத்துக்கும்  இறை இல்லத்துக் என்னடா சம்பந்தம்? வெள்ளைக்காரனின் ஈனப்புத்தியை மிஞ்சிவிட்டானடா ராவுத்தன். ஊருக்குள் முணுமுணுப்புக் கிளம்பாமலில்லை, முணுமுணுக்கிற வாய்க்கு எதிர்த்தும் கேட்கத் துப்பில்லை.  இது முழுக்கமுழுக்க ராவுத்தர்கள் சேர்த்துக்கட்டிய பள்ளிவாசல் லெப்பையோ மீன்காரனோ, சொந்தம் கொண்டாடமுடியாது” (கீரானூர் ஜாகிர்ராஜா, கருத்தலெப்பை நாவல்கள் ப.,44) என்று ராவுத்தர்கள் கூறும் செய்தி விளிம்பு நிலைகளான லெப்பையர்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    லெப்பை என்ற சொல் தமிழகத்திலும் எல்லைப்பகுதிகளிலும் பரந்து வாழும் இஸ்லாமியரைக் குறிப்பிடும் பொதுச்சொல்லாக உள்ளது.  அரபுத் தாயகத்திலிருந்து வந்து நாளடைவில் தமிழ் முஸ்லிம்களாக மாறிய பொழுதும், அவர்களுடைய தலையாயக் கடமை ஓதுவதும் பிறருக்கு ஓதுவித்து  உணர்த்துவதுமே என்றாலும்,  இவர்களுடைய வாழ்க்கைநிலை, நெசவாளியாக, விவசாயியாக, கடல் தொழிலாளியாக இருந்து வந்தது.  ஆனால் இவர்கள் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுவரை லெப்பைகள் என்ற பொதுப்பெயரிலேயே வழங்கப்பட்டனர்.

          சொல்லவேநால்வேதம் லெப்பைமார்கள்
          சொற்பெரியஉலகத்தில் கர்மிதன்னை
          மெல்லவேஆண்டவனைக் காட்டுமென்பார்
          மேதியினிற்  பணம்பொன்னுக் காசைவைத்து
          நல்லவேசொல்லியிட்டுப் பணம்பிடுங்கி
          நலமாகஉன்னையவரேய்பாரப்பா.
    “உல்லவேநால்வேதம் காரணக்கு

          உண்மையுள்ள ஆண்டவனுக்கு மெய்யுமாமே”. 

    (மு.முகம்மது உவைஸ், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, ப.127)

    யாக்கோபு வகாரகளங்கு என்னும் வாத வைத்தியம் (300 – 79) என்னும் யாக்கோபு சித்தரின் பாடல் ஒன்றில் லெப்பைமார் என்ற சொல் இடம் பெற்றுள்ளதைக்  காணமுடிகிறது.

    கருத்தலெப்பை நாவலில்,” நாலெப்பைக் கூட்டத்துல்ல பொறந்தவன்… நீங்க?  கருத்தலெப்பைக் கேட்டதும் அபுபக்கருக்கு மூக்குமேல் கோபம் வழிந்தது. செருப்புபிஞ்சிடும் நாயே… யாரப் பார்த்து என்ன கேள்வி கேட்ட? நா அக்மார்க் லெவக் கூட்டமாக்கும்.  ஒன்னமாதிரியில்லை…. “அவன் மேல பாய்ந்து வந்தார்.  கருத்தலெப்பை அவரை அதே வேகத்தில் முஷ்டியால் தள்ளிவிட்டான்.  நிலைகுலைந்து போனார் அபுபக்கர். அமீது பதற்றமாகிச் டேய் டேய் வேண்டாம். “என்று தன் இருப்பைவிட்டு எழுந்தார். “பெரியமனுஷனா இருக்குறியேன்னு விடுறேன்  இல்லேன்னா. “கருத்தலெப்பை கொக்கரித்தான்”  என்பதாக நாவலாசிரியர் முன்வைக்கும் செய்திகள் மூலம் இன உணர்வு மேலோங்கி இருப்பதைத் தெளிவுப்படுத்த முடிகிறது.” (கீரனூர் ஜாகிர்ராஜா, கருத்தலெப்பை, ப.45)

    சாதிய ஏற்றத்தாழ்வு

    இஸ்லாம் என்னும் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘பாய்’ என்னும் சொல்லை அதிக அளவு பயண்படுத்துகின்றனர்.  பாய் என்னும் உருது சொல்லுக்கு ‘சகோதரன்; என்னும் பொருள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளான தலீத் சமூகத்தவர் பெருமளவு இஸ்லாம் என்னும் சமயத்தை ஏற்றுக்கொண்டதாகத் தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

    வழிபாட்டு முறையிலும்,  தொழுகை நிலையிலும் வேறுபாடுகள் காணப்படாவிட்டாலும் இஸ்லாமியக்குள்ளும் சாதிய ஏற்றத்தாழ்வு மனோநிலை இருப்பதை மீன்குகைவாசிகள் நாவல் தெரிவிக்கிறது.  “என்னத்தான் பம்பாய்க்கு போய் தொழில் செய்து பணம் சம்பாதித்து ஒரு முஸ்லிம் பெண்ணை மணம் புரிந்திருந்தாலும் பள்ளி வாசலுக்குள் நுழையும் போதே “இவன் துருத்தி மகன் நாசுவன்” என்பார்கள்  பள்ளிவாசல் முத்தவல்லி இருக்கிறரே அவரில்லையானலும் அவருடைய பிரபலமான மலைத்தொப்பை முன்வந்து இவளை விரட்டும்.  “போ போ நாசுவனே! உனக்கென்ன இங்கே வேலை?” என்று திண்டுக்கல்லிலிருந்து வந்து குடியேறியிருக்கிற நிஜாம்தீன் தன் உருண்டு சிவந்த விழிகளால் “அம்பட்டையா! போய்விடு இங்கிருந்து” என்பார்.  வேண்டாம் விட்டுவிடலாமென்று இஸ்லாத்தை கைவிட்டால, நர்கீஸ் வேண்டுமானால் இஸ்லாம் வேண்டும். இஸ்லாம் வேண்டுமானால் தனக்கு அங்கு சம அந்தஸ்து வேண்டும். என்ன செய்ய? இருதலை எறும்பாய்த் தவித்தான்.” என்று இஸ்லாம் என்னும் சமயத்தை ஏற்றுகொண்ட நாவிதரை ஒரு சமூகம் ஏற்றத்தாழ்வு கருதி விலக்கி நிறுத்துவதைத் தம் நாவல் வழியாகப் புலப்படுத்துகிறார். (கீரனூர் ஜாகிர்ராஜா, மீன்குகைவாசிகள், பக்.191-192).

    முடிவுரை

    முஸ்லிம் காலத்தில் ராவுத்தர் என்றால் உயர்ந்தவர்கள் என்றும், லெப்பை என்றால் தாழ்ந்தவர்கள் என்றும் நினைத்து அவர்களுக்குள்ளாகவே பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் முஸ்லிம் பெண்ணை நாவிதர் திருமணம் செய்தால் அவனுக்கு சம அந்தஸ்து கொடுக்காமல் விலக்கி வைக்கும் சாதியச் சூழலும் இக்கட்டுரையில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது.

    துணைநூற்பட்டியல்

    1. கமால் எஸ்.எம் – தமிழகத்தில் முஸ்லிம்கள் அடையாளம்                1205/ கருப்பூர் சாலை, புத்தாந்தம் – 621310, 2016
    2.  கீரனூர் ஜாகிர்ராஜா – கருத்தலெப்பை, மருதா பதிப்பகம், சென்னை. 2007
    1. கீரனூர் ஜாகிர்ராஜா – மீன்குகை வாசிகள்,   ஆழி பப்ளிஷர்ஸ். சென்னை. 2010
    1. ம. முகம்மது உவைஸ் – இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. 1983.

    *****
    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவி
    ஸ்காட் கிறித்தவக் கல்லூரி
    மனோன்மணீயம் சுந்தரனார்  பல்கலைக்கழகம்

     

     

    Share
  • ஆகச்சிறந்த ஆன்மாவிற்கு புகழஞ்சலி!

    முன்னாள் பிரதமர், உயர்திரு அதல் பிகாரி வாஜ்பாயி, தமது 93ஆம் அகவையில், இன்று (16/8/2018) மாலை 5 மணிக்கு இயற்கை எய்தினார். தேசிய சனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக, 1999 முதல் 2004 வரை கடமையாற்றிய காலத்தில், இந்தியா சந்தித்த பல சோதனைகளை மிகத் திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய ஒப்பற்ற அரசியல்வாதி. இவற்றுள் பொக்ரான்-2 அணு பரிசோதனை, பாக்கித்தானுடனான கார்கில் யுத்த வெற்றி, போன்றவை குறிப்பிடத் தக்கவை !

    ஆகச்சிறந்த கவிஞரான திரு வாஜ்பாய் , ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாகக் கட்டுரை வடிக்கவும், சொற்பொழிவாற்றும் திறனும் படைத்தவர். 2014 ஆம் ஆண்டில் பாரத ரத்னா பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகள் நடுவண் அரசின் அரசியலில் பங்கு பெற்று, 10 முறைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2 முறைகள் மேலவை உறுப்பினராகவும் 3 முறைகள் பிரதமராகவும் சேவை புரிந்தவர். நாடாளுமன்றத்தில் இவருடைய நேர்மறையான, ஆணித்தரமான விவாதங்கள் பலராலும் வரவேற்கப்பட்டன. வாஜ்பாய் கொண்டுவந்த தங்க நாற்கரம் சாலைத் திட்டம் போற்றத்தக்கது!

    எதிர்கட்சித் தலைவர்களையும் பேதமின்றி அவர்தம் நற்செயல்களை உளமார பாராட்டக்கூடிய பண்பாடு மிகுந்தவர். அதேபோன்று வன்மையான பேச்சிலும், எழுத்திலும் எதிராளிகளை நிலை குலையச் செய்யும் வித்தகர். மிகச்சிறந்த நகைச்சுவையாளரும் கூட ! ஐ.நா.விலும், நமது நாடாளுமன்றத்திலும் திருக்குறளையும், பாரதியாரின் பாடல்களையும் தமிழில் அழகாக எடுத்துரைத்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தினரும், நண்பர்களும், கட்சியினரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்க்கிறோம். இந்திய வரலாற்றில் நிலையான இடம் பிடித்த அவர்தம் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (281)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் மீண்டுமொரு வாரத்தில் மடல் வரைய விழைகின்றேன். இம்மடல் வரையும் நாளான 14ம் திகதி செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் காலையில் மீண்டும் ஒரு பரபரப்பு, பதைபதைப்பு. காலைவேளையில் தமது கடமைகளைச் செய்யச் சென்று கொண்டிருந்த ஏதுமறியா அப்பாவி மக்கள் காயப்பட்ட ஒரு கனத்த காலையாகி விட்டது . மனதை ஆணவத்திற்கும், மிருக உணர்ச்சிக்கும் விலையாக்கி விட்ட மிலேச்சத்தனம் கொண்ட சிலருள் ஒரு கயவன் தான் மோட்டார் கார் கொண்டு நடைபாதையில் சென்று கொண்டிருந்தோரின் மீது மோதியதில் அப்பாவியான சைக்கிள் பிரயாணிகள் சிலர் காயமடைந்தார்கள். அக்கோரச் செயலைப் புரிந்தவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் யார் என்பது போலீசாருக்குத் தெரிந்திருந்தும் அவனது நோக்கத்தை அவன் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று தெரிய வருகிறது. நடைபெற்ற இந்நிகழ்வுகள் ஒரு பயங்கரவாதியினால் நடத்தப்படுத்தப்பட்டிருப்பதற்குரிய அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் அது இன்னமும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

    இன்றைய இங்கிலாந்தில் நடைபெறும் இத்தகைய செயல்களால் தமது இருப்பினை நியாயப்படுத்திக் கொள்ள முனையும் சிறுபான்மை சமூகத்தின் முயற்சிகள் மேலும் பின்னோக்கித் தள்ளப்படுமேயல்லாது வேறு பயனில்லை. தமது நாடுகளில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சி இங்கிலாந்தில் தஞ்சம் கோரி வந்த உண்மையான அகதிகள் அனைவருமே ஒருவிதமான சந்தேகக் கண்ணோட்டத்துடன் நோக்கப்படுவதே இதனால் இத்தகைய மூடர்கள் சாதிக்கக்கூடிய விடயமாகிறது. ஜனநாயகத்தின் கருவறை எனக் கருதப்படும் இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்திற்கு மிக அருகாமையில் நடைபெற்றிருக்கும் இச்செயலானது இங்கிலாந்தின் ஜனநாயக நீரோட்டத்தையே நிலைகுலைய வைத்திருக்கிறது,. இங்கிலாந்தின் அரசியல் நீரோட்டத்தில் சிலதுளிகளாக இருக்கும் அதீத வலதுசாரப் போக்குக் கொண்ட மிதவாத இனத்துவேசம் கொண்ட அரசியல்வாதிகளின் பலத்தை பெருக்குவதற்கே இத்தகைய செயல்கள் துணை போகும் என்பதுவே உண்மையாகும். இதன் விளைவுகளை இனிவரும் நாட்கள்தான் எமக்கு உணர்த்தும் என்பதும் உண்மை.

    இனி அடுத்தொரு செய்தியினைப் பார்ப்போம். டாக்டர்கள் எனப்படுவோர் உயிர்களைக் காப்பாற்றப் போராடுவோர் என்பதுவே பொதுவான கருத்து.. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு லெஸ்டர் ஹாஸ்பிட்டலில் கொண்டு செல்லப்பட்ட ஆறு வயதான ஜாக் எனப்படும் சிறுவனை அன்றைய டாக்டர்கள் பற்றாக்குறையினால் சேவையில் குறைந்த அனுபவமுள்ள டாக்டர் ஹடிசா பாவா-ஹாபா எனும் பெண் வைத்தியரினால் பரிசோதிக்கப்பட்டார். தனக்குள்ள அனுபவத்துடனும் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையினாலும் கிடைக்கப்பட்ட வசதிகளின் படி தன்னாலான வகையினில் பரிசோதனை செய்து வைத்தியமளித்தும் பயனளிக்காமல் அவ்வாறு வயதான பையன் உயிரிழந்தான். மனமுடைந்த பெற்றோர்கள் அந்த டாக்டர் மீது குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தார்கள். அவ்வழக்கில் அந்த டாக்டர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டார். விளைவாக அந்த டாக்டர் அந்த வைத்தியசாலையில் தனது பதவியை இழந்ததோடு இனி இங்கிலாந்தில் டாக்டராக பணியாற்ற முடியாது என்று இங்கிலாந்தின் டாக்டர்கள் கவுன்சிலின் அங்கத்தினர் அந்தஸ்திலிருந்தும் விலக்கப்பட்டார்.

    இது ஏனைய இங்கிலாந்து டாக்டர்கள் பலருக்கு அதிர்ச்சியளித்தது. டாக்டர்களும் மனிதர்கள் தானே அவர்கள் அ|றியாமல் இழைத்த தவறுக்காக அவர்களின் ஜீவாதாரத்தையே குலைக்கும் வகையில் தண்டிக்கலாமா? கூடாது என்றனர். அந்த டாக்டருக்குச் சார்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள் விளைவாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த டாக்டர் இனி டாக்டராக பணியாற்றக் கூடாது எனும் தடை நியாயமற்றது என்று தீர்ப்பளித்தது. அந்த டாக்டர் இனி டாக்டராக பணியாற்ற வகை செய்தது. இந்தத் தீர்ப்பினால் மகிழ்ந்த அந்த டாக்டர் தனது வைத்தியத்தின் போது உயிரிழந்த அந்த குடும்பத்தின் துயரையும், கோபத்தையும் தான் நன்கு உணர்வதாகவு,ம், இச்சம்பவத்தில் தான் மட்டுமன்றி அந்த வைத்தியச்சாலையின் நிர்வாகத்தினரின் தவறும் எத்தனையோ இணைந்திருப்பதாகவும் இனியாவது இத்தகைய தவறுகள் நடக்காவண்ணம் நிர்வாகத்தினர் தமது பணியாற்றுவோர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அப்பையனின் பெற்றோர் அந்த டாக்டரை மன்னிப்பதற்கு தாம் இன்னமும் தயாரில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

    சரி இனி எமது ட்ரம்ப் அண்ணாவின் விளையாட்டுக்களைப் பார்ப்போம். அவரது அரசியல் அந்தரங்க ஆலோசகராக அவர் தான் தொலைக்காட்சியில் “அப்பிரண்டிஸ்” எனும் நிகழ்ச்சியை நடத்தும்போது பங்கு பற்றிய ஒரு கறுப்பு இன பெண்ணை நியமித்திருந்தார். பின்பு அப்பெண்மணி ட்ரம்ப் அண்ணாவின் நிர்வாக அதிகாரியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அந்தப் பெண்மணி தனது நினைவுப் பதிவுகளை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதிலே எமது ட்ரம்ப் அண்ணாவைப் பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். தான் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது அதைப்பற்றி ட்ரம்ப் அண்ணாவுக்கு தெரியவே தெரியாது என்று அவர் தன்னோடு உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவை ஊடகங்களுக்கு கையளித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் அண்ணாவின் பதில் ” அந்தப் பெண்மணி ஒரு தோல்வியின் உதாரணம், கீழ்த்தரமானவர்” என்பதுவே. அதுமட்டுமல்ல இன்றுகாலை இங்கிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல் எனும் நம்பப்படும் செயல் ட்ரம்ப் அண்ணாவுக்கு தனது இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரத்துக்கு கிடைத்த ஒரு துருப்புச் சீட்டுப் போல உள்ளது.. அதைப் பற்றியும் தனது சமூக ஊடகத்தளத்தில் வெளியிட்டுள்ளார்,

    சுண்டெலிக்குத் திண்டாட்டம்
    பூனைக்கு கொண்டாட்டம் . . . . . . ம் , , , , , இருந்து பார்ப்போம்
    மீண்டும் அடுத்த மடலில்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • என்னதவம் செய்தனையோ!-இரங்கற்பா

    சத்தியமணி

     

    அன்னல் அட்டல் பிஹாரி !!

    சினத்தையும் சிரிப்பால் சொன்னவர் இன்றுயில்லை
    சிரத்தையும் சிரசில் கொண்டவர் இன்றுயில்லை
    சிறப்பிலும் அமைதிக் காத்தவர் இன்றுயில்லை
    இறப்பிலும் எளிமை யேற்றவர் இன்றுயில்லை

    ஆட்சிகள் கவிழும்போதும் கலவரம் எழுப்பவில்லை
    காட்சிகள் கனத்தபோதும் நம்பிக்கை நழுவவில்லை
    கட்சிகள் அத்துணைக்கும் கலங்கரை விளக்கமாக
    மாட்சிமை பெற்றுயர்ந்தார் மதிநலம் பிறழவில்லை

    வன்முறை தூண்டவில்லை வாக்குகள் மாற்றவில்லை
    பன்முறை பரிகசிப்பில் பாரதம் சாய்க்கவில்லை
    மொழிவெறி இனவெறி பேசிடும் தலைவரில்லை
    குலவெறி கொண்டு ஆளும்குண வெறி கொள்ள‌வில்லை.

    ஏளனம் செய்தவர்க்கும் தண்டனை கொடுக்கவில்லை
    நூதனம் மாற்றம்செய்ய என்றுமே தயங்கவில்லை
    அரசாங்க கூட்டம் தன்னில் அவரிடம் கண்டதென்னில்
    அரவணைத்த நகைச்சுவைதான்! ஆணவம் கடுகுமில்லை!!

    எண்ணிய இன்பமெல்லாம் கவிதையாய் விளம்புபோதும்
    கண்ணிய மாககட்சி தலைவர்கள் வாழ்த்தும்போதும்
    விளம்பரம் செய்யவில்லை வெறுப்பினில் பேச்சுமில்லை
    புண்படு ம்படிபேசும் சுயநலக் காரரில்லை.

    இலஞ்சமுடன் இலாவன்ய ஊழல்கள் செய்துவிட்டு
    இலவசம் ஆட்சி கேட்டு ஏந்திடும் தலைவனில்லை.
    சொத்துகள் குவித்தாங்கே சொகுசினில் வாழுமந்த‌
    வித்தையும் அறியவில்லை!! விண்ணேகி சென்றாரே!!

    அட்டலின் கர்ஜனைக்கும் அவரிடும் கட்டளைக்கும்
    அணுகுண்டு போக்ரானில் அந்நியர் அச்சம்கொண்டார்
    சதியினில் வீழவைக்க எத்தனை எதிரியிங்கே
    விதியினில் சென்றபோதும் மீண்டிது ஆளுமென்றார்

    இப்படியோர் தலைவன் இனிமேலும் கிடைப்பாரோ!!
    இப்படியோர் கவிஞன் இனிமேலும்     பிறப்பாரோ!!
    இப்படியோர் மகனை பெற்றவளே ! பாரதமே ! – பெற்று
    இவனுறங்க உன்மடியில் என்னதவம் செய்தனையோ!!

    Share
  • குமார சம்பவம்….!

     

    சர்கம் ஆறு
    ————–

    என்னை எனக்களித்த என்தந்தை சம்மதித்தால்
    என்னை அவர்க்களிப்பேன் என்றுரை -பின்னை
    இறையோன்தான் ஆனால் முறைமீறல் தோழி
    சரியாகேள் பாம்புச் செவிக்கு….(331)….9-12-2010

    தாவிடும் மாங்கொடி மேவும் வசந்தத்தை
    கூவும் குயில்மூலம் கொஞ்சுதலாய் -சேவகியை
    பாலமாக பேசவிட்டு பார்வதி மோனத்தை
    ஆலமர்ந் தோர்க்கே அளிப்பு….(332)….10-12-2010

    முந்தித்தன் முக்கண்ணால் மன்மதனை மாய்த்தவன்
    சிந்தித்தான் சப்தரிஷி சங்கமத்தை -இந்தப்பெண்
    ஆசை மிகுந்தவள் அப்பனிடம் பெண்கேட்க
    ஈசனே ஆயினும் ஈர்ப்பு….(333)….10-12-2010

    தேசொளி வானில் திகழஆ காசமது
    கூசிடும் வண்ணம் கிளர்ந்திட -மாசிலா
    அந்தணர்கள் ஏழ்வர் அருந்ததி முன்வர
    உந்தெருதோன் முன்பு உதிப்பு….(334)….11-12-2010

    அட்டதிக் ஆனைகள் கொட்டும் மதஜலத்தால்
    மட்டிலா வாசமுடன், மந்தார -மொட்டதை
    தீரம் ஒதுக்கும்மந் தாகினியில் ஏழ்வரும்
    ஊறிக் குளித்தங்(கு) உதிப்பு….(335)….11-12-2010

    முத்துடை முப்புரியும், பத்தரைப் பொன்னுரியும்
    ரத்தின ருத்திராக்ஷ ரக்ஷ்ஷையும் -உத்தரித்த
    கேட்டன நல்கிடும் கற்பகச் சோலையாய்
    ஊட்டமுடன் ஏழ்வர் உதிப்பு….(336)….11-12-2010

    தேரழுந்தூர் மார்கத்தைத் தாழ்த்திக் கொடிக்கம்பன்
    வேரழுந்த வைத்து விரைகையில் -சூரியன்
    தன்நமஸ் காரத்தை அண்ணாந்து செய்திட
    உன்னுதல்கண் டேழ்வர் உதிப்பு….(337)….12-12-2010

    ஊழியில் ஏன உருவில் உலகினை
    ஆழியுள் போந்தெடுத்த ஆதிநாள் -ஊழியனின்
    கோரையில் பூதேவி கூடக் களைப்பாறிய
    ஊறைப்பல் ஏழ்வர் உதிப்பு….(338)….12-12-2010

    பாதி படைத்து பிரமன் களைப்புற
    மீதி முடிக்கும் முனிவர்கள் -வேதம்
    தொகுத்த வியாசரே தோத்தரித்து வாழ்த்தை
    உகுத்தஅவ் ஏழ்வர் உதிப்பு….(339)….12-12-2010

    கற்பனைக்கு எட்டாத அற்புத வேள்விகள்
    பற்பல செய்து பலனுற்றும் -அற்பமாய்
    தள்ளி எமக்குத் தொழில்தவம் என்றிருக்கும்
    உள்ளத்தவர் ஏழ்வர் உதிப்பு….(340)….12-14-2010

    வெண்பல் தவத்தர் வசிட்டர் பலன்யாவும்
    பெண்கொள் வடிவெடுத்தாற் போலங்கு -கண்கள்
    பொருந்திடக் கேள்வர் பதத்தில் குனிந்த
    அருந்ததியைப் பார்த்தான் அரன்….(341)….12-14-2010

    புறத்துப்பால் பாரா பெரியோர்கள் போற்றல்
    அறத்துப்பால் வாழ்வோரே ஆவர் -புரத்தின்பால்
    தீவைத்தோன் ஏற்றான் தவத்தேழ்வர்க்(கு) ஒப்பாக
    பூவைத்தப் பத்தினிப் பெண்….(342)….12-15-2010

    அருந்ததி பார்த்த அரன்மனதில் ஆர்வம்
    பிறந்ததாம் இல்லறம் பேண -சிறந்த
    தொழிலாம் அறத்தைத் துணையின்றி செய்தல்
    விழலுக்(கு) இறைத்த வளம்….(343)….12-17-2010

    இல்லறமே நல்லறம் என்றெழில் பார்வதியை
    வெள்ளியிறை ஏற்க விருப்பமுற -கள்ளமதை
    முன்பிழைத்தக் குற்றத்தால் மண்புதைந்த மன்மதன்….(OR)
    முன்பிழைத்து ஓய்ந்து மனம்துவண்ட மன்மதன்
    தன்பிழைப்பில் கண்டான் தடம்….(OR)
    தன்பிழைப்பில் கொண்டான் தெருள்….(344)….12-17-2010

    அங்கம் புளககிக்க ஆரணம் நான்கினை
    அங்கங் களோடறிந்த அவ்வேழு -சிங்கங்கள்
    ஏசிவா சங்கரா என்றீசர் தாள்பணிந்து
    பேசவாய் பொத்தினர் பின்பு….(345)….12-17-2010

    வேதவழி போனதால் வேள்விகள் செய்ததால்
    மாதவத்தில் முக்குளித்து மூழ்கியதால் -ஆதவனாய்
    ஏழ்வரெங்கள் முன்பு எழுந்தருளி நிற்கின்றீர்
    வாழ்வெமக்கு வந்ததிவ் வாறு….(346)….12-19-2010

    எட்டாத கொம்புத்தேன் ஈசன் தரிசனம்
    கிட்டாதா சொட்டேனும் காத்திருந்தோம் -இட்டாயின்(று)
    ஏழுமுனி எங்களையுன் ஏகாந்த நெஞ்சில்ஈர்
    ஏழவனி நாயகா ஏற்று….(347)….12-19-2010

    உம்மை நினைப்போன் உலகிலுயர் பாக்கியவான்
    அம்மா மறைகளின் ஆரம்பம் -உம்மால்
    நினைக்கப் படுமளவு நாங்களுற்ற பேறை
    நினைக்க நயனத்தில் நீர்….(348)….12-19-2010

    ஆதித்தன் அம்புலிக்(கு) அப்பாலுள் அந்தரத்தில்
    ஆதிக்கம் கொண்டோம் அதைவிடுங்கள் -ஜோதிக்கண்
    தென்னவனுன் நெஞ்சில் திளைத்ததால் நாங்களின்று
    உன்னதம் உற்றோம் உயர்ந்து….(349)….12-19-2010

    வாயால் வசிட்டனின் வாழ்த்தைப் பெறுவதற்கே
    நேயன் கவுசிகன் நாட்டமுற்றான் -தூயனே
    ஆதரித்(து) எங்களுக்(கு) அந்தஸ்(து) அளித்ததால்
    காதலித்தோம் எங்களைநாங் கள்….(350)….25-12-2010

    காதலர்க்கு சந்தோஷம் காணக் கிடைத்திடுமே
    ஆதலால் அங்கே(து) அளவளாவல் -சேதனர்கள்
    யாவிலும் நீரந்தர் யாமியாய் நிற்பதால்
    நாவுரைக்கும் நன்றி நனி….(351)….25-12-2010

    நேரில் தரிசித்து நாங்கள் அறிந்தது
    சோறின் பருக்கைச் சமானமே -வேரில்
    பழுத்த பலாவாயெம் புத்திக்(கு) உறைக்க
    முழுத்தன்மை கூறேழ் முனிக்கு….
    தழைத்தோங்க வேண்டும் தயவு….(352)….26-12-2010

    பார்த்துப் பரவசமாய்ப் போற்றிப் பணிந்தயிம்
    மூர்த்தியம் முத்தொழிலின் மொத்தமெனில் -வார்த்தலை
    காத்தலை, தீர்த்தலைக் கண்மூன்றால் செய்வீரோ
    வேத்தியர் ஏழ்வர் வியப்பு….(353)….28-12-2010

    விடையவரே எங்கள் வினாக்களுக்குத் தக்க
    விடையருள்வீர், நாங்களிங்கு வந்த -கடமையை
    செய்து முடித்தபின் ,சொல்வீர் அதற்க்குமுன்
    எய்தகணை யாகஅவ் ஏழு….(354)….7-1-2011

    எழுவர் வினாக்களுக்(கு) ஏற்ற பதிலை
    மழுமான் உடைத்தோன் மலர்ந்த -பொழுது
    தரித்த மதியதன் தண்ணொளியைக் கூட்டும்
    சிரித்தமுல் லைகள் ஜொலித்து….
    சிரித்தவெண் பற்கள் ஜொலித்து….(355)….12-2-2011(இது வரையில் எழுதியுள்ளேன்….இன்னும் சில பாடல்களே உள்ளன….சிவ, பார்வதி திருக்கல்யாணம்…காளிதாசர் ஒரிஜினலில் முதலிரவு(குமார சம்பவம்)…..லிஃப்கோவில் இல்லை….காஞ்சிப் பெரியவா ஆஞ்ஞைபடி….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180816 – Gitamrita -Krishnapremi -wcol -A4 -100dpi lr

    முணுமுணுப்பாய் முன்னால், தொணதொணப்பாய் பின்னால்,
    சினமெடுத்து சீறுவாய் சொன்னால் -அணுஅணுவாய்
    கொல்லாதெனைக் கொல்கின்ற பொல்லா மனமேநீ!,
    இல்லாத பேரிடம் செல்….!

    தானாய் நிகழ்வதை நானாய் நினைத்திட
    வீணாய்க் கழிந்திடும் வாழ்நாளே -பூணாய்
    எதையும் மனமே இதயக் கனியாய்
    கதையின் முடிவில் கசப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • குமார சம்பவம்….!

     

    சர்கம் ஐந்து
    —————–

    தன்முன்னெ காமன் தவிடுபொடி சாம்பலாய்
    கண்மூன்று கொண்டோரால் காட்சியுற -தன்பெண்மை
    தோற்றதாய் பார்வதிக்கு தோன்றமகா தேவனவன்
    தோற்றதால் பார்வதி தூற்றினாள் ஈசனவன்
    போற்றாத அழகை பழித்து….(OR)
    போற்றாத அழகை பழிப்பு….(245)….12-10-2010

    அன்புச்சிவன் பாலில் அழகுப் பழம்நழுவி
    பெண்பிறப்பு பேறாய் பயனுற -முன்பெவரும்
    காணாத் தவம்புரிந்து காண்போன் கரம்பிடிக்க
    மேனாள் குமாரி முடிவு….(246)….13-10-2010

    பவச்சுவை நீங்க பெரியோர் புரியும்
    தவச்சுமை தாங்காய் தளிரே -அவத்தையேன்
    தானாய் வருவான் தகப்பன் சுவாமியவன்
    மேனாள் உரைத்தாள் மகட்கு….(247)….13-11-2010

    பலனளிக்க வீட்டில் பலதெய்வம் கொண்டும்
    தலையெழுத்தாய் ஏற்கும் தவமேன் -மலைமகளே
    வாகை மலர்தாங்கும் வண்டதன் மேலமர்ந்தால்
    தோகை மயிலமர்ந்தால் தத்து….(248)….13-11-2010

    பள்ளத்தில் பாய்ந்திடும் வெள்ளமும், நிச்சயித்த
    உள்ளத்(து) உறுதியும் ஓயுமோ -மெள்ளத்தன்
    பெண்மனதை மாற்ற பெருமுயற்சி செய்தஅன்னை
    தன்மனதில் ஏற்றனள் தோற்பு….(OR)
    பின்முடிவில் தோற்றாள் பணிந்து….(249)….14-11-2020

    விசுவாச தோழியின் வாயிலாய், அந்த
    பசுவீசர் பாகம் பெறக்கான் -மிசைவாசம்
    ஆண்டுபல ஆயினும் ஆரா தவம்செய்ய
    வேண்டினள் தந்தையின் வாழ்த்து….(250)….14-11-2010

    குன்றெனக் கொள்கையில் நின்றிடும் பார்வதியை
    வென்றிட வெற்பரசன் வாழ்த்திட -சென்றடைந்தாள்
    பின்னால் அவள்பெயரைப் பூண்ட சிகரத்தை
    வண்ண மயில்சூழ்ந்த வாறு….(251)….14-11-2010

    இட்டிழைத்த சந்தனத்தைப் பட்டழித்து பொன்னாய்கண்
    கொட்டுமணி முத்தைக் களைந்தெறிந்தாள் -கட்டுடலில்
    கோலயெழில் பாரத்தால் நூலிழைகள் நீங்கிய
    சேலை மரவுரி சேர்ப்பு….(252)….14-11-2010

    மூசுசில் வண்டு முளரிக்(கு) அழகென்றால்
    பாசியின் சேர்க்கையும் பேரழகே -தேசுடையாள்
    காரணமாய்க் கூந்தல் களைந்துசடை கொண்டாலும்
    பூரணத்திற்க்(கு) ஏது பழுது….(OR)
    பூரணமாய் நின்றாள் பொலிந்து….(OR)
    பூரணத்தின் பின்னமும் பொற்பு….(253)….14-11-2010

    ஒப்புயர்வாய் ஏற்ற ஒழுக்கத் தவத்திற்காய்
    முப்புரி முஞ்சப்புல் மேகலையை -சொப்பிடை
    வேதனையில் ஆழ்ந்து வலித்துச் சிவந்தாலும்
    சோதனையைக் கொண்டாள் சகித்து….(254)….15-11-2010

    தந்தனத்து சந்தனத்தை வந்தெடுத்து செல்கின்ற
    பந்துவிளை ஆடல், பவழவாய் -மென்னதர
    வண்ணமிடல் விட்டுதர்ப்பை விள்ளுகையில் கீறிய
    சன்ன கரத்தால் ஜபம்….(255)….15-11-2010

    பட்டுப் படுக்கையும் பார்வதியை நோகடிக்கும்
    கட்டுக் குழலுதிர்க்கும் மொட்டுறுத்த -கட்டாந்
    தரைவிரித்துக் கையைத் தலையணையாய்க் கொண்டு
    இறைவணக்கம் பாடுகிறாள் இன்று….(256)….16-11-2010

    மடமானின் கண்ணில் மருட்சியைக், காட்டு
    கொடிமா லதிக்கு குதிப்பை-(OR)
    கொடிமேல் அழகுக் குலுங்கல் -அடமானம்
    வைத்தாள் கொடையாய் விரத இறுதிவரை
    மெய்த்தாள் சரணடைந்த மாது….(257)….16-11-2010

    பின்நாள் பிறந்தவிழிப் பிள்ளையைக் காத்ததுபோல்
    முன்நாள் வளர்ந்த மரங்களுக்கும் -தண்ணீரால்
    கொங்கை நிகர்த்தக் குடமேந்தி ஊட்டினாள்
    அங்கையால் தாயாய் அவள்….(258)….16-11-2010

    மானினப் போட்டியாய் மேனைப்பெண் கண்ணுற்றும்
    தானினிக் கானினத் தோழியென -பேணிட
    நாணிஅம் மான்களவள் நீட்டிய கையிலுற்ற
    தானியத்திற்(கு) அச்சமின்றி தாம்….(259)….16-11-2010

    மூடு பனியிலும் முக்கால தீர்த்தமாடி
    ஆடை மரவுரியில் அக்கினி -மேடை
    வடித்தோமம் செய்தாள், வயதேதும் பாரா
    படித்தோர்கண் உற்றார் பனிப்பு….(260)….16-11-2010

    முந்தை பகைமறந்து மேஷம் புலியோடு
    விந்தையாய் ஆட, விருட்சங்கள் -வந்தவர்க்கு
    வாரிப் பழம்வழங்க ,வானெழு அக்கினியால்
    பூரித்த(து) ஆசிரமப் பொற்பு….(261)….16-11-2010

    வேண்டும் பலன்வராத வேதனையால் பார்வதி
    மீண்டும் தவம்புரிந்தாள் மும்முரமாய் -தூண்டும்
    தளிர்மேனித் தன்மை தனைமறந்து செய்தாள்
    களிறாடை பூண்டோன் குறித்து….(262)….17-11-2010

    தன்தேகம் வாட்டும் தவத்தோர் விரதத்தை
    பந்தாட சோர்வுறும் பார்வதி -முந்தினாள்
    மென்மையும் திண்மையும் பெண்மையாய் வந்ததோ
    பொன்மயத் தாமரை போல்….(263)….17-11-2010

    கோடையில் நாற்புறமும் கூடிய அக்கினி
    மேடையின் மத்தியில் மூரலுடன் -ஆடாது
    அஞ்சா விழிகளை ஆதித்தன் பால்வைத்து
    பஞ்சாக் கினித்தவப் பேறு….(264)….17-11-2010

    சூரியன் சுட்டெரித்தும் சூமந் திரக்காளி
    நேரிசைவாய் சோபையுடன் நின்றனள் -வாரிசமாய்
    மையிட் டதுபோல மங்கை கடைக்கண்ணில்
    கையெழுத் திட்டான் கதிர்….(265)….17-11-2010

    அமுதமதை ஊட்ட அழகுநிலா, மேகம்
    சுமுகமழை ஊணாய் சொரிய -சமதையாய்
    காட்டு மரங்கட்கு போட்டியாய் நின்றனள்
    ஆட்டுவிக்கும் ஈசர்க்காய் அங்கு….(266)….17-11-2010

    தேகான்ம பாவம் தொலைத்தும் தகித்தனள்
    ஆகாயம் மற்றும் அவள்வளர்த்த -தீகாய்வால்
    மாரி முதல்மழையில் மன்னிக் கிடந்தவெப்பம்
    பீறிட்டதாம் கோரி பலன்….(OR)
    பீறிட்டுக் கோரும் பலன்….(267)….17-11-2010

    அசையாள் இமையை, அதன்பின் உதடை
    இசைவாய் தனங்கள் இணைப்பை -விசையாய்
    மடிப்பு வயிற்றை மழைநீர் கடந்து
    குடித்ததாம் உந்திக் கனல்….(268)….18-11-2010

    கொட்டும் மழையில் குளிர்காற்றில் பார்வதி
    வெட்டவெளிப் பாறையில் வீழ்ந்துறங்க -பட்டுடல்
    கொண்ட தவத்திற்கு கங்குலே சாட்சியாய்
    கண்டதாம் மின்னற்கண் கொண்டு….(269)….18-11-2010

    சீதளக் காற்றடித்தும் சில்லென்ற வெள்ளத்தில்
    போதிரவில் நீராடும் பார்வதி -சாதகப்புள்
    கூவி நடுயிரவில் கூப்பிடப் பேடையை
    ஈவிரக்கம் கொள்வாள் இணைத்து….(270)….18-11-2010

    வாசத்தால் வாரிசம், வாயதரம் பங்கயம்
    ஆசில்லா தேகம் அரவிந்தம் -வீசும்
    உறைபனிக் காற்றால் உலர்ந்த குளத்தின்
    குறைதணிக்கக் கொண்டாள் குளிப்பு….(OR)
    உறைபனிக் காற்றால் உலர்ந்த குளத்தை
    நிறைவுசெய்ய தாமரையாய் நிற்பு….(271)….18-11-2010

    முதிர்ந்த தவத்தோர் மரத்தி இருந்து
    உதிர்ந்த சருகுகளை உண்பர் -புதிரிவளோ
    உண்ணா மலையாய் உறுதியுடன் நின்றடைந்தாள்
    பின்நாள் அபர்ணா பெயர்….(272)….18-11-2010

    முளரிக் குருத்தன்ன மென்மையாம் மேனி
    தளர வருத்தித் தவத்தால் -ஒளிர
    முனியினத்தோர் செய்த மகத்துவம் எல்லாம்
    இனியிதற்கு முன்னால் இழிவு….(OR)
    இனியிதற்கு ஈடில்லை இவ்வுலகில் என்று
    முனியினத்தோர் கொண்டார் முடிவு….(273)….18-11-2010

    பலாசதண்டம் ஏந்தி கலைமான்தோல் பூண்டு
    விலாசத்தில் வேதாந்தம் வீச -இலாசமமாய்
    யாரோ ஒருபிரமச் சாரி சடையோடு
    நேராய் குடிலுள் நுழைவு….(274)….18-11-2010

    நோற்ற தபோகுணத்தால் வேற்றுமை காட்டாதோள்
    தோற்றத்தில் கம்பீரம் தோரணையில் -ஏற்றமுமாய்
    வந்தவரை வேண்டி விருந்தோம்பல் செய்தனள்
    அந்தரங்கத் தானென்(று) அறிந்து….(275)….19-11-2010

    விருந்தோபல் ஏற்று வருஞ்சோம்பல் போக்கி
    கருந்தாடி கோதிக் கனைத்து -அருஞ்சொற்கள்
    நேரெதிராய்ப் பார்வதியை நோக்கிப் பகர்ந்தனன்
    நீறுதிரா நெற்றிக்கண் ணன்….(276)….19-11-2010

    புனிதப்புல் தர்ப்பை புரசமரக் குச்சி
    நினது குளியலுக்கு நன்நீர் -வனிதையே
    இங்குண்டோ கேட்டவர் இத்தவத்தால் மேனியுற்ற
    பங்கமென்ன கேட்டார் பரிந்து….(277)….21-11-2010

    நங்காய்நீ நின்கையால் நீறூற் றியகொடிகள்
    நன்காய் துளிர்கிறதா நித்தியமும் -சிங்கார
    சுன்னம் இடாமலே செக்கச் சிவந்தயிதழ்
    வண்ணம் தளிரின் வனப்பு….(278)….21-11-2010

    தர்ப்பயை நட்பாக நிர்பயமாய் மான்கவ்வ
    அற்பமாய் கோபம் அடையாது -நிற்பாயா
    நீலக் கமலம் நிகர்த்தநின் கண்களைப்
    போலசைவை கொள்ளஅவை பார்ப்பு….(279)….21-11-2010

    தேசுடையோர் செய்யார் தவறான காரியம்
    வாசகம் மெய்ப்பிக்க வந்தவளே -பேசா
    உபதேசம் உந்தன் உறுதியும் போக்கும்
    தபசால் உயர்ந்தோர் தமக்கு….(280)….22-11-2010

    ஆகுதியாய் அவ்வேழ்வர் அர்பணிக்கும் பூவேந்தும்
    பாகி ரதியால் பரிசுத்தம் -ஆகிறது
    என்பர் அறியார் இமவான் மகளுந்தன்
    பண்பால் பெறுமிப் பொருப்பு….(281)….22-11-2010

    தர்மார்த்த காமத்தில் தர்மமே மேலென்று
    கர்மமாய் ஏற்ற கவினுறு -நிர்மலமே
    பொன்னால் புகழால் பயனில்லை என்பதை
    நின்னால் உணர்ந்துகொண்டேன் நான்….(282)….22-11-2010

    அன்பாய் உபசரித்தாய் அன்னியனாய் எண்ணாதே
    பெண்பாவாய் நண்பனாய்ப் பாரென்னை -பண்பாளர்
    நேசமேழு வார்த்தைகளால் நேர்ந்திடும் என்றறிவாய்
    பேசிடுவாய் நெஞ்சைப் பகிர்ந்து….(283)….22-11-2010

    எந்த நிலையையும் ஏற்கும் பொறையுடைத்தோய்
    அந்தணர்க்கே உண்டான ஆர்வமுற்ற -இந்தநான்
    கேட்பேன் உனையொன்று கூறுவாய் உன்பதிலை
    ஆட்ஷேபம் இன்றேல் அதற்கு….(284)….22-11-2010

    குன்றிமய மேட்டுக் குடிப்பிறப்பு, மூவுலகு
    சென்றாலும் காணா சிலைவடிவு -குன்றாத
    கவ்விடும் யவ்வனம் கொண்டும் தவமேற்று
    இவ்வனம் கொண்டதேன் ஈர்ப்பு….(OR)
    இவ்வனம் ஏனோ இருப்பு….(285)….24-11-2010

    ஆற்றொணா துக்கம் அடைந்தசில மங்கையர்
    மாற்றாய்க் கடுந்தவம் மேற்கொள்வர் -ஆற்றதன்
    நீரோட்டம் போன்ற நினதுயர் வாழ்க்கையில்
    போராட்டம் என்னயிப் போது….(286)….24-11-2010

    அக்கறையாய்த் தந்தை அருகிருக்க ஆருன்னை
    துக்கமுறச் செய்வர் துணிந்திங்கு -உக்கிரமாய்
    சீறும் அரவ சிரசிருக்கும் ரத்தினத்தை
    ஆரிங்(கு) எடுப்பர் அசைத்து….(287)….24-11-2010

    பூப்பிளமைக் காலத்தில் பொன்னணிகள் பூணாமல்
    மூப்படைந்தோர் ஏற்கும் மரவுரியேன் -தோப்பிரவில்
    தாரகைகள் பூக்க தவழ்மதி காய்த்திட
    ஏறுகிழக் கோனங்(கு) எதற்கு….(288)….24-11-2010

    விண்ணோர் விரும்பிடும் வாசத் தலமிருந்து
    நண்ணுதல் சொர்கம் நகைப்பன்றோ -எண்ணுதல்
    கேள்வனெனில் கேலியே, கல்ரத் தினம்போமோ
    ஆளெவன் என்று அலைந்து….(289)….25-11-2010

    வெப்பப் பெருமூச்சால் வேதனை நானறிந்தேன்
    அப்புறமோர் சந்தேகம் அம்மணிநீ -இப்புவியில்
    வேண்டத் தகுந்தவரார் வேண்டி வராதவரார்
    ஆண்டவ னுக்கே அகல்….(290)….25-11-2010

    காதணி நீலக் கமலம் குலாவிடும்
    சீதள கன்னத்தில் செஞ்சடை -மோதவைத்த
    நெஞ்சென்ன பாறையோ, நீலகண்டன் போலிவனும்
    நஞ்சுண்டா னானோ நமுத்து….(291)….26-11-2010

    நிராபரண பாணியாய் நிற்க அருக்கன்
    சரோருகம் என்றெண்ணி சூழ -இராவரும்
    சந்திரன் காலையில் சோபை இழந்தாற்போல்
    நின்திரம் காண்போர் நெகிழ்வு….(292)….26-11-2010

    குடையாய் இமைகள் குவிந்த விழித்தேர்
    படைக்கடிமை ஆக பயந்த -தடைதானா
    அன்றியழ கென்றகர்வம் ஆமெனில் அம்மனிதர்க்(கு)
    இன்றியமை யாத இழப்பு….(293)….26-11-2010

    பங்காய்த் தவப்பலனில் பாதியுனக்(கு) ஈந்திடுவேன்
    நங்காய் அடைந்திடுநின் நாயகனை -சங்காய்
    இருந்தவுன் நெஞ்சை எடுத்தூதும் ஆளை
    அறிந்திடச் செய்வாய் அடுத்து….(294)….27-11-2010

    தன்னிதயம் போலறிந்த அன்னிய அந்தணர்தம்
    பின்னிய பேச்சால் பதிலிழந்து -உன்னியதைக்
    கூறுமாறு மையிடா கண்களால் பார்வதி
    ஆருயிர் தோழிக்(கு) அழைப்பு….(295)….27-11-2010

    வெய்யில் தடுப்பாக வெண்தா மரைக்குடையை
    கையில் எடுத்த கதையாக -தையலிவள்
    கொண்டதவக் காரணத்தைக் கூறுகிறேன் வேதியரே
    உண்டெனில் ஆர்வம் உமக்கு….(296)….27-11-2010

    தேவேந் திராதிகளை திக்பாலர் நால்வரை
    போவென்று நெஞ்சால் புறந்தள்ளி -பூவம்பன்
    மாள வழியின்றி மாற்றாய்த் தவமேற்றாள்
    காளை அமர்ந்தவர்க் காய்….(297)….28-11-2010

    ரீங்காரம் செய்த ரதிமாறன் அம்புசிவன்
    ஹூங்காரத் தாலஞ்சி ஒத்தயினப் -பூங்கோதை
    தையலிவள் நெஞ்சில் திசைமாறித் தைத்திட
    மையலாள் வாடுகிறாள் மாது….(298)….29-11-2010

    நெற்றிக் களபமும் நீறாய் உதிர்ந்தது
    பற்றிய தாபத்தால் பார்வதிக்கு -சுற்றியுள்ள
    மூடு பனியிவள் மூச்சுஷ்ணத் தாலுருகி
    ஓடுநதி ஆனதே ஓய்….(299)….30-11-2010

    சம்புவின் சாகஸ சங்கீதம் பாடுகையில்
    தெம்பிழந்து போவாள் தழுதழுத்து -உம்பரின
    கின்னரத் தோழிகளிவ் இன்னலைக் கண்டழுவர்
    தன்னறமாம் கானம் தவிர்த்து….(300)….30-11-2010

    மூன்றாவது ஜாமத்தில் மூடிய கண்திறந்து
    தோன்றாத ஈசனிரு தோளணைத்து -சான்றாக
    ”போகாதீர்” என்று பிதற்றுமிவள் நோய்தன்னில்
    வேகாதீர் பெண்காள் வீழ்ந்து….(301)….30-11-2010

    ”எங்குமே உள்ளவரென்(று) ஏற்றத்தோர் சொல்வதால்
    இங்கென் மனத்தும் இருப்பதாவீர் -அங்குறையும்
    காதலைக் காணாமுக் கண்ணுற்றீர்” என்றிடுவாள்
    பேதை வரைந்தசிவன் பார்த்து….(302)….30-11-2010

    ஈசனைக் கைப்பிடிக்க ஏற்றவழி யோகமென்று
    யோசனை செய்தெடுத்து இவ்விமய -ராசனாம்
    பெற்றவர் ஆதரவைப் பார்வதி பெற்றபின்பே
    உற்றோமிக் கானில் உவந்து….(303)….1-12-2010

    வனிதையிவள் நட்ட விருட்சங்கள் கூட
    புனித தவத்தினைப் போற்றி -கனிதர
    ஏங்குமிவள் முந்தோன்ரி ஏற்காது ஆலமரம்
    தூங்குமூஞ்சி ஆச்சேயந் தோ….(OR)
    தூங்கு முகமான தே….(304)….2-12-2010

    தவத்தால் இளைத்தனள் தோழிமார் வாட
    அவத்தை அடைந்தனள் அய்யா -சிவத்தினால்
    காய்ந்த விளைநிலத்தில் கொட்டும் மழையாக
    பேய்ந்திடுமோ ஈசன் பரிவு….(305)….2-12-2010

    தோழியின் சொல்கேட்டு ஊழிநாள் ஊர்த்தவர்
    ஆழமாய்ப் பார்வதியின் அன்புணர்ந்தும் –
    ஆழமான அன்புணர்ந்தும் அப்பார்வதியை -சோழியன்போல்
    சும்மா இருந்தபின் சோதித் தறியயெண்ணி
    சும்மா இருந்தபின் சோதிக்கச் சீண்டினார்
    இம்மா மவுனம் எதற்கு….(or)
    இம்மா மவுனமேன் என்று….(306)….2-12-2010

    மொக்குவிரல் ஐயிரெண்டும் மூசக் குவித்ததில்
    தொக்கி ஜமாலை தொங்கிட -நெக்குருக
    நின்றனள் பார்வதி நீண்டபேச் சின்மையால்
    மன்றாடும் அந்தணர் முன்….(307)….3-12-2010

    உண்மைதான் தோழி உரைத்ததெலாம் வேதியரே
    சின்மயத்தை சேரதவம் செய்தனளிப் -பெண்மை
    அரும்பொருள் ஏதுமிலை ஆசைதனக்(கு) எட்டா
    பரம்பொருள்மேல் பார்வதிக்குப் பற்று….(308)….4-12-2010

    அறிவேன் அரனை அரைநிறை ஆக
    வெறியாய் அவனை விரும்பாய் -நெறியாக
    கூசும் அமங்கலக் காரியத்தைக் கொண்டாடும்
    ஈசனவன் மேலுனக்கேன் ஈர்ப்பு….(OR)
    ஈசன்மேல் ஈர்ப்பு இழிவு….(309)….4-12-2010

    அற்பப் பொருளில் அதிகபற்(று) உற்றவளே
    பொற்காப்பு சூடியவுன் பூங்கரம் -சர்பத்தால்
    கங்கணக் காப்பணிந்த காபா லியின்கையை
    எங்கணம் ஏற்கும் இசைந்து….(310)….4-12-2010

    உரித்துப் புதிதாய் உடுத்திய ஆனைக்
    கரித்தோல் குருதியைக் கொட்ட -பொருத்தமாய்
    அன்னம் வரைந்தவெண் அம்பரப் பட்டெழில்
    என்னமாய் ஏற்கும் எதிர்….(311)….4-12-2010

    சேவடி செஞ்சாந்து பூவிரித்த மாளிகையில்
    தூவிடுமுன் கால்சுவட்டைத் தாவிடுங்கால் -சாவடைந்தோர்
    வாழும் தலத்தில் வலதுகால் வைப்பதா
    பாழப் பரமசிவன் போக்கு….(312)….4-12-2010

    சீதக் களப சுகந்த தனங்களில்
    மோதிக் களித்து மருவிடும் -போதவர்
    மார்பினில் பூசிய மாண்டோர்தம் சாம்பலுன்
    சார்பிலும் வீசுமட சட்….(313)….4-12-2010

    உந்து மதகளிற்றில் உட்கார்ந்து புக்ககம்
    வந்திடாமல் அந்த வயோதிக -நந்தி
    முதுகமர்ந்து சென்றால் முறுவலிப்பர் மக்கள்
    இதுமிகுந்த கேலிக்(கு) இடம்….(OR)
    இதுவுகந்து போவாயோ இல்….(314)….5-12-2010

    சந்திரன் கெட்டானாள் சம்பு தலைக்கேறி
    அந்தவழிக்(கு) ஆளாகாய் அம்மணி -இந்தபுவிக்(கு)
    இன்பம் தருமிருவர்க்(கு) ஈசான்ய மூலையா
    துன்பத் தவத்தைத் துற….(315)….6-12-2010

    நேத்திரம் மூன்றுடையோன் நோக்க விகாரமாய்
    கோத்திரம் பெற்றோர் கிடையாதோன் -போர்த்திடுவான்
    திக்கெட்டால் மூடி, திருமணம் கொண்டால்நீ
    திக்கற்றப் பார்வதி தான்….(316)….6-12-2010

    பூவனம் நீயெங்கே, தீவனத்தோன் தானெங்கே
    ஈவனம் விட்டகல், இட்டியின் -காவணக்
    காலேற்கும் பூசையை காட்டுப் பிணஞ்சுடு
    கோலேற்க்க லாகுமோ கூறு….(317)….6-12-2010

    அந்தணர் கூற்றால் அதரம் துடிக்கயிரு
    கண்தணல் கொள்ளக், கொடிப்புருவம் -கொந்தளிக்க
    பார்த்தனள் கோபமாய் பார்வதி பின்தொடர்ந்து
    வார்த்தைகள் சொன்னாள் வெகுண்டு….(318)….7-12-2010

    ஆரணம் போற்றிடும் பூரணப் பெம்மானின்
    காரணக் காரியம் நீரறியீர் -சாரணரே
    கத்தும் கடலாழம் காணுமோ குச்சிஅற்ப
    சித்தத்திற்க்(கு) எட்டார் சிவன்….(319)….7-12-2010

    குறையொன்றும் இல்லா குணத்தோன் அரனுக்(கு)
    அறம்பொருள் இன்பம் எதற்கு -பகர்கின்ற
    மங்களங்கள் எல்லாமே மாண்டு பிறப்போர்க்கே
    எங்களவர் ஆசைக்(கு) எமன்….(320)….7-12-2010

    பிச்சை புகினும் பணக்கா ரணக்காரர்
    இச்சை இடுகாடாய் ஏற்பினும் -முச்சகத்தின்
    மூர்த்தியவர் அச்சத்தை மூட்டினும் காந்தமாய்
    ஈர்த்திடும் ஈசன் இரும்பு….(321)….7-12-2010

    குஞ்சர அம்பரம் கொண்டாலும், ஆபரணம்
    நஞ்சுமிழ் பாம்பாய் நெளிந்தாலும் -நெஞ்சில்
    கபாலங்கள் கோர்த்துக் கிடந்தாலும் என்ன
    சபாபதிக்கு மேனி ஜகம்….(322)….7-12-2010

    ஈசனுடல் மேவி இடுகாட்டுச் சாம்பலும்
    தோஷம்போய் ஆனது தூய்மையாய் -தூசெனில்
    ஆடலின் போது அபிநயத்தால் சிந்துவதை
    சூடுவரோ விண்ணோர் சிரம்….(323)….7-12-2010

    வாரண வாகனன் வானவகோன் வந்தயெதிர்
    ஏறதன் வாகனரை ஏத்துதலாய் -பூரணனின்
    பாதம் சிவக்க புனைந்தசென்னி மந்தார
    தாதவிழ வீழ்வான் தொழுது….(324)….7-12-2010

    குற்றம் உரைப்பதையே கொள்கையாய்க் கொண்டாலும்
    அற்றை மறந்துநீர் ஆதரவாய் -சற்றே
    சகத்தைப் படைத்த சதுர்முகனை ஈன்றோன்
    தகப்பன்தாய் இல்லாதவன் தான்….(325)….7-12-2010

    போதும் விவாதம்நீர் மூதரித்த வண்ணமீசன்
    தீதாய் இருப்பினும் தித்திக்கும் -மாதெனக்கு
    ஆதலால் ஏதுமிப் பேதைபால் ஓதாதீர்
    காதலுக்குக்(கு) இங்கில்லை காது….(326)….8-12-2010

    தோழியே துடிக்கின்ற தாடையார் மீண்டுமேதோ
    கோழிமூட்டக் காத்துள்ளார் காதுகொடாய் -பாழிழுத்து
    பேசம் மகான்களைப் பாவமென்றால் அப்பேச்சை
    ஆசையுடன் கேட்டல் அழிவு….(327)….8-12-2010

    முத்தாய்ப்பாய்ச் சொல்லி மரவுரி மண்நழுவ
    கித்தாய்ப்பாய் பார்வதி கூறியோட -சத்தாய்க்க
    இன்று புறம்மறைத்தோன், அன்று புரமெரித்தோன்
    என்றரனாய் நின்றான் எதிர்….(328)….8-12-2010

    அந்தரத்தில் கால்வைத்து மந்திரித்தாற்ப் போல்நின்று
    சந்திர சூடனை சந்தித்தாள் -இந்தநிலை
    செல்ல முடியாமல் நில்ல மனமின்றி
    கல்லணையால் காவிரிகால் கட்டு….(329)….9-12-2010

    சவுந்தர்ய லாஹிரியே செய்த தவத்தால்
    சிவந்தன்னைச் செய்தாய் சேவகனாய் -உவந்தென்னை
    கொள்ளடிமை என்றதும் துள்ளுகையில் குத்திய
    முள்ளெடுத்த மானானாள் மாது….(330)….9-12-2010

    சர்கம் ஐந்து சுபம்
    ————————
    ——————————————————————————————-

    Share
  • காத்துநிற்போம் !

     

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    வெள்ளம் ஒருபக்கம் விபத்துகள் ஒருபக்கம்
    தெள்ளுதமிழ் நல்லறிஞர் பிரிவுத்துயர் ஒருபக்கம்
    நல்லநட்பு என்றுசொல்லி நம்பவைத்த நாடுகளும்
    நரிகளாய் மாறிநின்று நாசம்செய்யும் ஒருபக்கம்
    உள்ளூரில் அரசியலார் ஊழல்கொள்ளை ஒருபக்கம்
    உயர்கல்வி உடையாரின் உன்மத்தம் ஒருபக்கம்
    நல்லபல இருக்கின்ற நற்பாரத நாட்டினிலே
    தொல்லை எலாம் தொலைந்து நிற்க
    சுதந்திர நாள் வேண்டி நிற்போம் !

    பாரதத்தாய் மடிமீது பலதலைவர் இருந்தார்கள்
    பாரதத்தாய் துயர்துடைக்க பாடுபட்டார் பலவகையில்
    பாரதத்தாய் கண்ணீரை பார்ப்பதற்கு விரும்பவில்லை
    பாரதத்தாய் முகமலர்ச்சி பார்ப்பதற்கே விரும்பிநின்றார்
    பாரதத்தாய் துயர்படவே பலரிப்போ இருக்கின்றார்
    பாரதத்தாய் பக்குவத்தை பார்த்துவிட மறுக்கின்றார்
    பாரதத்தாய் பெருமைதனை பார்முழுக்க பார்ப்பதற்கு
    பாரதத்தின் மக்களெலாம் காத்துநிற்போம் சுதந்திரத்தை !

    மகான்களின் ஆசிபெற்று மகத்துவத்தைக் கண்டநாடு
    மாபெருந் தத்துவங்கள் வாழ்வுக்கு தந்தநாடு
    இலக்கியங்கள் இலக்கணங்கள் இங்கிதங்கள் சொன்னநாடு
    இமயம்முதல் குமரிவரை எல்லையினை கொண்டநாடு
    சிற்பமொடு ஓவியமும் சிறந்தபல கோவில்களும்
    எத்திசையில் பார்த்தாலும் எங்குமே நிறைந்தநாடு
    இத்தனையும் நிறைந்துநிற்கும் ஏற்றமிகு பாரதத்தின்
    எழிலான சுதந்திரத்தை எல்லோரும் போற்றிநிற்போம் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180815 – Bhagavatha -Trinavarta-wcol charcoal -Strathmore 160gsm tinted paper 100dpi -lr
    (After Krishna senses the approaching TriNavarta approaching, Krishna becomes heavy in Yashoda’s lap – She places him down : Trinavarta is the gathering worries, which become aggressive with repeated thought of it, Bhakti cannot give full attention to Krishna. Krishna takes care of the worries, before Yashoda places him back on the lap again).

    சகடா சுரனை சுமந்தனர்ஆ காய
    முகடில் முறித்த முகுந்தா -பகடையில்
    தோற்றவர்க்காய் தேரேறி நூற்றவர் மாய்ந்திட
    கூற்றவனாய் நின்றவனே காப்பு….கிரேசி மோகன்

    Share