சர்கம் ஆறு
————–

என்னை எனக்களித்த என்தந்தை சம்மதித்தால்
என்னை அவர்க்களிப்பேன் என்றுரை -பின்னை
இறையோன்தான் ஆனால் முறைமீறல் தோழி
சரியாகேள் பாம்புச் செவிக்கு….(331)….9-12-2010

தாவிடும் மாங்கொடி மேவும் வசந்தத்தை
கூவும் குயில்மூலம் கொஞ்சுதலாய் -சேவகியை
பாலமாக பேசவிட்டு பார்வதி மோனத்தை
ஆலமர்ந் தோர்க்கே அளிப்பு….(332)….10-12-2010

முந்தித்தன் முக்கண்ணால் மன்மதனை மாய்த்தவன்
சிந்தித்தான் சப்தரிஷி சங்கமத்தை -இந்தப்பெண்
ஆசை மிகுந்தவள் அப்பனிடம் பெண்கேட்க
ஈசனே ஆயினும் ஈர்ப்பு….(333)….10-12-2010

தேசொளி வானில் திகழஆ காசமது
கூசிடும் வண்ணம் கிளர்ந்திட -மாசிலா
அந்தணர்கள் ஏழ்வர் அருந்ததி முன்வர
உந்தெருதோன் முன்பு உதிப்பு….(334)….11-12-2010

அட்டதிக் ஆனைகள் கொட்டும் மதஜலத்தால்
மட்டிலா வாசமுடன், மந்தார -மொட்டதை
தீரம் ஒதுக்கும்மந் தாகினியில் ஏழ்வரும்
ஊறிக் குளித்தங்(கு) உதிப்பு….(335)….11-12-2010

முத்துடை முப்புரியும், பத்தரைப் பொன்னுரியும்
ரத்தின ருத்திராக்ஷ ரக்ஷ்ஷையும் -உத்தரித்த
கேட்டன நல்கிடும் கற்பகச் சோலையாய்
ஊட்டமுடன் ஏழ்வர் உதிப்பு….(336)….11-12-2010

தேரழுந்தூர் மார்கத்தைத் தாழ்த்திக் கொடிக்கம்பன்
வேரழுந்த வைத்து விரைகையில் -சூரியன்
தன்நமஸ் காரத்தை அண்ணாந்து செய்திட
உன்னுதல்கண் டேழ்வர் உதிப்பு….(337)….12-12-2010

ஊழியில் ஏன உருவில் உலகினை
ஆழியுள் போந்தெடுத்த ஆதிநாள் -ஊழியனின்
கோரையில் பூதேவி கூடக் களைப்பாறிய
ஊறைப்பல் ஏழ்வர் உதிப்பு….(338)….12-12-2010

பாதி படைத்து பிரமன் களைப்புற
மீதி முடிக்கும் முனிவர்கள் -வேதம்
தொகுத்த வியாசரே தோத்தரித்து வாழ்த்தை
உகுத்தஅவ் ஏழ்வர் உதிப்பு….(339)….12-12-2010

கற்பனைக்கு எட்டாத அற்புத வேள்விகள்
பற்பல செய்து பலனுற்றும் -அற்பமாய்
தள்ளி எமக்குத் தொழில்தவம் என்றிருக்கும்
உள்ளத்தவர் ஏழ்வர் உதிப்பு….(340)….12-14-2010

வெண்பல் தவத்தர் வசிட்டர் பலன்யாவும்
பெண்கொள் வடிவெடுத்தாற் போலங்கு -கண்கள்
பொருந்திடக் கேள்வர் பதத்தில் குனிந்த
அருந்ததியைப் பார்த்தான் அரன்….(341)….12-14-2010

புறத்துப்பால் பாரா பெரியோர்கள் போற்றல்
அறத்துப்பால் வாழ்வோரே ஆவர் -புரத்தின்பால்
தீவைத்தோன் ஏற்றான் தவத்தேழ்வர்க்(கு) ஒப்பாக
பூவைத்தப் பத்தினிப் பெண்….(342)….12-15-2010

அருந்ததி பார்த்த அரன்மனதில் ஆர்வம்
பிறந்ததாம் இல்லறம் பேண -சிறந்த
தொழிலாம் அறத்தைத் துணையின்றி செய்தல்
விழலுக்(கு) இறைத்த வளம்….(343)….12-17-2010

இல்லறமே நல்லறம் என்றெழில் பார்வதியை
வெள்ளியிறை ஏற்க விருப்பமுற -கள்ளமதை
முன்பிழைத்தக் குற்றத்தால் மண்புதைந்த மன்மதன்….(OR)
முன்பிழைத்து ஓய்ந்து மனம்துவண்ட மன்மதன்
தன்பிழைப்பில் கண்டான் தடம்….(OR)
தன்பிழைப்பில் கொண்டான் தெருள்….(344)….12-17-2010

அங்கம் புளககிக்க ஆரணம் நான்கினை
அங்கங் களோடறிந்த அவ்வேழு -சிங்கங்கள்
ஏசிவா சங்கரா என்றீசர் தாள்பணிந்து
பேசவாய் பொத்தினர் பின்பு….(345)….12-17-2010

வேதவழி போனதால் வேள்விகள் செய்ததால்
மாதவத்தில் முக்குளித்து மூழ்கியதால் -ஆதவனாய்
ஏழ்வரெங்கள் முன்பு எழுந்தருளி நிற்கின்றீர்
வாழ்வெமக்கு வந்ததிவ் வாறு….(346)….12-19-2010

எட்டாத கொம்புத்தேன் ஈசன் தரிசனம்
கிட்டாதா சொட்டேனும் காத்திருந்தோம் -இட்டாயின்(று)
ஏழுமுனி எங்களையுன் ஏகாந்த நெஞ்சில்ஈர்
ஏழவனி நாயகா ஏற்று….(347)….12-19-2010

உம்மை நினைப்போன் உலகிலுயர் பாக்கியவான்
அம்மா மறைகளின் ஆரம்பம் -உம்மால்
நினைக்கப் படுமளவு நாங்களுற்ற பேறை
நினைக்க நயனத்தில் நீர்….(348)….12-19-2010

ஆதித்தன் அம்புலிக்(கு) அப்பாலுள் அந்தரத்தில்
ஆதிக்கம் கொண்டோம் அதைவிடுங்கள் -ஜோதிக்கண்
தென்னவனுன் நெஞ்சில் திளைத்ததால் நாங்களின்று
உன்னதம் உற்றோம் உயர்ந்து….(349)….12-19-2010

வாயால் வசிட்டனின் வாழ்த்தைப் பெறுவதற்கே
நேயன் கவுசிகன் நாட்டமுற்றான் -தூயனே
ஆதரித்(து) எங்களுக்(கு) அந்தஸ்(து) அளித்ததால்
காதலித்தோம் எங்களைநாங் கள்….(350)….25-12-2010

காதலர்க்கு சந்தோஷம் காணக் கிடைத்திடுமே
ஆதலால் அங்கே(து) அளவளாவல் -சேதனர்கள்
யாவிலும் நீரந்தர் யாமியாய் நிற்பதால்
நாவுரைக்கும் நன்றி நனி….(351)….25-12-2010

நேரில் தரிசித்து நாங்கள் அறிந்தது
சோறின் பருக்கைச் சமானமே -வேரில்
பழுத்த பலாவாயெம் புத்திக்(கு) உறைக்க
முழுத்தன்மை கூறேழ் முனிக்கு….
தழைத்தோங்க வேண்டும் தயவு….(352)….26-12-2010

பார்த்துப் பரவசமாய்ப் போற்றிப் பணிந்தயிம்
மூர்த்தியம் முத்தொழிலின் மொத்தமெனில் -வார்த்தலை
காத்தலை, தீர்த்தலைக் கண்மூன்றால் செய்வீரோ
வேத்தியர் ஏழ்வர் வியப்பு….(353)….28-12-2010

விடையவரே எங்கள் வினாக்களுக்குத் தக்க
விடையருள்வீர், நாங்களிங்கு வந்த -கடமையை
செய்து முடித்தபின் ,சொல்வீர் அதற்க்குமுன்
எய்தகணை யாகஅவ் ஏழு….(354)….7-1-2011

எழுவர் வினாக்களுக்(கு) ஏற்ற பதிலை
மழுமான் உடைத்தோன் மலர்ந்த -பொழுது
தரித்த மதியதன் தண்ணொளியைக் கூட்டும்
சிரித்தமுல் லைகள் ஜொலித்து….
சிரித்தவெண் பற்கள் ஜொலித்து….(355)….12-2-2011(இது வரையில் எழுதியுள்ளேன்….இன்னும் சில பாடல்களே உள்ளன….சிவ, பார்வதி திருக்கல்யாணம்…காளிதாசர் ஒரிஜினலில் முதலிரவு(குமார சம்பவம்)…..லிஃப்கோவில் இல்லை….காஞ்சிப் பெரியவா ஆஞ்ஞைபடி….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *