சர்கம் ஐந்து
—————–

தன்முன்னெ காமன் தவிடுபொடி சாம்பலாய்
கண்மூன்று கொண்டோரால் காட்சியுற -தன்பெண்மை
தோற்றதாய் பார்வதிக்கு தோன்றமகா தேவனவன்
தோற்றதால் பார்வதி தூற்றினாள் ஈசனவன்
போற்றாத அழகை பழித்து….(OR)
போற்றாத அழகை பழிப்பு….(245)….12-10-2010

அன்புச்சிவன் பாலில் அழகுப் பழம்நழுவி
பெண்பிறப்பு பேறாய் பயனுற -முன்பெவரும்
காணாத் தவம்புரிந்து காண்போன் கரம்பிடிக்க
மேனாள் குமாரி முடிவு….(246)….13-10-2010

பவச்சுவை நீங்க பெரியோர் புரியும்
தவச்சுமை தாங்காய் தளிரே -அவத்தையேன்
தானாய் வருவான் தகப்பன் சுவாமியவன்
மேனாள் உரைத்தாள் மகட்கு….(247)….13-11-2010

பலனளிக்க வீட்டில் பலதெய்வம் கொண்டும்
தலையெழுத்தாய் ஏற்கும் தவமேன் -மலைமகளே
வாகை மலர்தாங்கும் வண்டதன் மேலமர்ந்தால்
தோகை மயிலமர்ந்தால் தத்து….(248)….13-11-2010

பள்ளத்தில் பாய்ந்திடும் வெள்ளமும், நிச்சயித்த
உள்ளத்(து) உறுதியும் ஓயுமோ -மெள்ளத்தன்
பெண்மனதை மாற்ற பெருமுயற்சி செய்தஅன்னை
தன்மனதில் ஏற்றனள் தோற்பு….(OR)
பின்முடிவில் தோற்றாள் பணிந்து….(249)….14-11-2020

விசுவாச தோழியின் வாயிலாய், அந்த
பசுவீசர் பாகம் பெறக்கான் -மிசைவாசம்
ஆண்டுபல ஆயினும் ஆரா தவம்செய்ய
வேண்டினள் தந்தையின் வாழ்த்து….(250)….14-11-2010

குன்றெனக் கொள்கையில் நின்றிடும் பார்வதியை
வென்றிட வெற்பரசன் வாழ்த்திட -சென்றடைந்தாள்
பின்னால் அவள்பெயரைப் பூண்ட சிகரத்தை
வண்ண மயில்சூழ்ந்த வாறு….(251)….14-11-2010

இட்டிழைத்த சந்தனத்தைப் பட்டழித்து பொன்னாய்கண்
கொட்டுமணி முத்தைக் களைந்தெறிந்தாள் -கட்டுடலில்
கோலயெழில் பாரத்தால் நூலிழைகள் நீங்கிய
சேலை மரவுரி சேர்ப்பு….(252)….14-11-2010

மூசுசில் வண்டு முளரிக்(கு) அழகென்றால்
பாசியின் சேர்க்கையும் பேரழகே -தேசுடையாள்
காரணமாய்க் கூந்தல் களைந்துசடை கொண்டாலும்
பூரணத்திற்க்(கு) ஏது பழுது….(OR)
பூரணமாய் நின்றாள் பொலிந்து….(OR)
பூரணத்தின் பின்னமும் பொற்பு….(253)….14-11-2010

ஒப்புயர்வாய் ஏற்ற ஒழுக்கத் தவத்திற்காய்
முப்புரி முஞ்சப்புல் மேகலையை -சொப்பிடை
வேதனையில் ஆழ்ந்து வலித்துச் சிவந்தாலும்
சோதனையைக் கொண்டாள் சகித்து….(254)….15-11-2010

தந்தனத்து சந்தனத்தை வந்தெடுத்து செல்கின்ற
பந்துவிளை ஆடல், பவழவாய் -மென்னதர
வண்ணமிடல் விட்டுதர்ப்பை விள்ளுகையில் கீறிய
சன்ன கரத்தால் ஜபம்….(255)….15-11-2010

பட்டுப் படுக்கையும் பார்வதியை நோகடிக்கும்
கட்டுக் குழலுதிர்க்கும் மொட்டுறுத்த -கட்டாந்
தரைவிரித்துக் கையைத் தலையணையாய்க் கொண்டு
இறைவணக்கம் பாடுகிறாள் இன்று….(256)….16-11-2010

மடமானின் கண்ணில் மருட்சியைக், காட்டு
கொடிமா லதிக்கு குதிப்பை-(OR)
கொடிமேல் அழகுக் குலுங்கல் -அடமானம்
வைத்தாள் கொடையாய் விரத இறுதிவரை
மெய்த்தாள் சரணடைந்த மாது….(257)….16-11-2010

பின்நாள் பிறந்தவிழிப் பிள்ளையைக் காத்ததுபோல்
முன்நாள் வளர்ந்த மரங்களுக்கும் -தண்ணீரால்
கொங்கை நிகர்த்தக் குடமேந்தி ஊட்டினாள்
அங்கையால் தாயாய் அவள்….(258)….16-11-2010

மானினப் போட்டியாய் மேனைப்பெண் கண்ணுற்றும்
தானினிக் கானினத் தோழியென -பேணிட
நாணிஅம் மான்களவள் நீட்டிய கையிலுற்ற
தானியத்திற்(கு) அச்சமின்றி தாம்….(259)….16-11-2010

மூடு பனியிலும் முக்கால தீர்த்தமாடி
ஆடை மரவுரியில் அக்கினி -மேடை
வடித்தோமம் செய்தாள், வயதேதும் பாரா
படித்தோர்கண் உற்றார் பனிப்பு….(260)….16-11-2010

முந்தை பகைமறந்து மேஷம் புலியோடு
விந்தையாய் ஆட, விருட்சங்கள் -வந்தவர்க்கு
வாரிப் பழம்வழங்க ,வானெழு அக்கினியால்
பூரித்த(து) ஆசிரமப் பொற்பு….(261)….16-11-2010

வேண்டும் பலன்வராத வேதனையால் பார்வதி
மீண்டும் தவம்புரிந்தாள் மும்முரமாய் -தூண்டும்
தளிர்மேனித் தன்மை தனைமறந்து செய்தாள்
களிறாடை பூண்டோன் குறித்து….(262)….17-11-2010

தன்தேகம் வாட்டும் தவத்தோர் விரதத்தை
பந்தாட சோர்வுறும் பார்வதி -முந்தினாள்
மென்மையும் திண்மையும் பெண்மையாய் வந்ததோ
பொன்மயத் தாமரை போல்….(263)….17-11-2010

கோடையில் நாற்புறமும் கூடிய அக்கினி
மேடையின் மத்தியில் மூரலுடன் -ஆடாது
அஞ்சா விழிகளை ஆதித்தன் பால்வைத்து
பஞ்சாக் கினித்தவப் பேறு….(264)….17-11-2010

சூரியன் சுட்டெரித்தும் சூமந் திரக்காளி
நேரிசைவாய் சோபையுடன் நின்றனள் -வாரிசமாய்
மையிட் டதுபோல மங்கை கடைக்கண்ணில்
கையெழுத் திட்டான் கதிர்….(265)….17-11-2010

அமுதமதை ஊட்ட அழகுநிலா, மேகம்
சுமுகமழை ஊணாய் சொரிய -சமதையாய்
காட்டு மரங்கட்கு போட்டியாய் நின்றனள்
ஆட்டுவிக்கும் ஈசர்க்காய் அங்கு….(266)….17-11-2010

தேகான்ம பாவம் தொலைத்தும் தகித்தனள்
ஆகாயம் மற்றும் அவள்வளர்த்த -தீகாய்வால்
மாரி முதல்மழையில் மன்னிக் கிடந்தவெப்பம்
பீறிட்டதாம் கோரி பலன்….(OR)
பீறிட்டுக் கோரும் பலன்….(267)….17-11-2010

அசையாள் இமையை, அதன்பின் உதடை
இசைவாய் தனங்கள் இணைப்பை -விசையாய்
மடிப்பு வயிற்றை மழைநீர் கடந்து
குடித்ததாம் உந்திக் கனல்….(268)….18-11-2010

கொட்டும் மழையில் குளிர்காற்றில் பார்வதி
வெட்டவெளிப் பாறையில் வீழ்ந்துறங்க -பட்டுடல்
கொண்ட தவத்திற்கு கங்குலே சாட்சியாய்
கண்டதாம் மின்னற்கண் கொண்டு….(269)….18-11-2010

சீதளக் காற்றடித்தும் சில்லென்ற வெள்ளத்தில்
போதிரவில் நீராடும் பார்வதி -சாதகப்புள்
கூவி நடுயிரவில் கூப்பிடப் பேடையை
ஈவிரக்கம் கொள்வாள் இணைத்து….(270)….18-11-2010

வாசத்தால் வாரிசம், வாயதரம் பங்கயம்
ஆசில்லா தேகம் அரவிந்தம் -வீசும்
உறைபனிக் காற்றால் உலர்ந்த குளத்தின்
குறைதணிக்கக் கொண்டாள் குளிப்பு….(OR)
உறைபனிக் காற்றால் உலர்ந்த குளத்தை
நிறைவுசெய்ய தாமரையாய் நிற்பு….(271)….18-11-2010

முதிர்ந்த தவத்தோர் மரத்தி இருந்து
உதிர்ந்த சருகுகளை உண்பர் -புதிரிவளோ
உண்ணா மலையாய் உறுதியுடன் நின்றடைந்தாள்
பின்நாள் அபர்ணா பெயர்….(272)….18-11-2010

முளரிக் குருத்தன்ன மென்மையாம் மேனி
தளர வருத்தித் தவத்தால் -ஒளிர
முனியினத்தோர் செய்த மகத்துவம் எல்லாம்
இனியிதற்கு முன்னால் இழிவு….(OR)
இனியிதற்கு ஈடில்லை இவ்வுலகில் என்று
முனியினத்தோர் கொண்டார் முடிவு….(273)….18-11-2010

பலாசதண்டம் ஏந்தி கலைமான்தோல் பூண்டு
விலாசத்தில் வேதாந்தம் வீச -இலாசமமாய்
யாரோ ஒருபிரமச் சாரி சடையோடு
நேராய் குடிலுள் நுழைவு….(274)….18-11-2010

நோற்ற தபோகுணத்தால் வேற்றுமை காட்டாதோள்
தோற்றத்தில் கம்பீரம் தோரணையில் -ஏற்றமுமாய்
வந்தவரை வேண்டி விருந்தோம்பல் செய்தனள்
அந்தரங்கத் தானென்(று) அறிந்து….(275)….19-11-2010

விருந்தோபல் ஏற்று வருஞ்சோம்பல் போக்கி
கருந்தாடி கோதிக் கனைத்து -அருஞ்சொற்கள்
நேரெதிராய்ப் பார்வதியை நோக்கிப் பகர்ந்தனன்
நீறுதிரா நெற்றிக்கண் ணன்….(276)….19-11-2010

புனிதப்புல் தர்ப்பை புரசமரக் குச்சி
நினது குளியலுக்கு நன்நீர் -வனிதையே
இங்குண்டோ கேட்டவர் இத்தவத்தால் மேனியுற்ற
பங்கமென்ன கேட்டார் பரிந்து….(277)….21-11-2010

நங்காய்நீ நின்கையால் நீறூற் றியகொடிகள்
நன்காய் துளிர்கிறதா நித்தியமும் -சிங்கார
சுன்னம் இடாமலே செக்கச் சிவந்தயிதழ்
வண்ணம் தளிரின் வனப்பு….(278)….21-11-2010

தர்ப்பயை நட்பாக நிர்பயமாய் மான்கவ்வ
அற்பமாய் கோபம் அடையாது -நிற்பாயா
நீலக் கமலம் நிகர்த்தநின் கண்களைப்
போலசைவை கொள்ளஅவை பார்ப்பு….(279)….21-11-2010

தேசுடையோர் செய்யார் தவறான காரியம்
வாசகம் மெய்ப்பிக்க வந்தவளே -பேசா
உபதேசம் உந்தன் உறுதியும் போக்கும்
தபசால் உயர்ந்தோர் தமக்கு….(280)….22-11-2010

ஆகுதியாய் அவ்வேழ்வர் அர்பணிக்கும் பூவேந்தும்
பாகி ரதியால் பரிசுத்தம் -ஆகிறது
என்பர் அறியார் இமவான் மகளுந்தன்
பண்பால் பெறுமிப் பொருப்பு….(281)….22-11-2010

தர்மார்த்த காமத்தில் தர்மமே மேலென்று
கர்மமாய் ஏற்ற கவினுறு -நிர்மலமே
பொன்னால் புகழால் பயனில்லை என்பதை
நின்னால் உணர்ந்துகொண்டேன் நான்….(282)….22-11-2010

அன்பாய் உபசரித்தாய் அன்னியனாய் எண்ணாதே
பெண்பாவாய் நண்பனாய்ப் பாரென்னை -பண்பாளர்
நேசமேழு வார்த்தைகளால் நேர்ந்திடும் என்றறிவாய்
பேசிடுவாய் நெஞ்சைப் பகிர்ந்து….(283)….22-11-2010

எந்த நிலையையும் ஏற்கும் பொறையுடைத்தோய்
அந்தணர்க்கே உண்டான ஆர்வமுற்ற -இந்தநான்
கேட்பேன் உனையொன்று கூறுவாய் உன்பதிலை
ஆட்ஷேபம் இன்றேல் அதற்கு….(284)….22-11-2010

குன்றிமய மேட்டுக் குடிப்பிறப்பு, மூவுலகு
சென்றாலும் காணா சிலைவடிவு -குன்றாத
கவ்விடும் யவ்வனம் கொண்டும் தவமேற்று
இவ்வனம் கொண்டதேன் ஈர்ப்பு….(OR)
இவ்வனம் ஏனோ இருப்பு….(285)….24-11-2010

ஆற்றொணா துக்கம் அடைந்தசில மங்கையர்
மாற்றாய்க் கடுந்தவம் மேற்கொள்வர் -ஆற்றதன்
நீரோட்டம் போன்ற நினதுயர் வாழ்க்கையில்
போராட்டம் என்னயிப் போது….(286)….24-11-2010

அக்கறையாய்த் தந்தை அருகிருக்க ஆருன்னை
துக்கமுறச் செய்வர் துணிந்திங்கு -உக்கிரமாய்
சீறும் அரவ சிரசிருக்கும் ரத்தினத்தை
ஆரிங்(கு) எடுப்பர் அசைத்து….(287)….24-11-2010

பூப்பிளமைக் காலத்தில் பொன்னணிகள் பூணாமல்
மூப்படைந்தோர் ஏற்கும் மரவுரியேன் -தோப்பிரவில்
தாரகைகள் பூக்க தவழ்மதி காய்த்திட
ஏறுகிழக் கோனங்(கு) எதற்கு….(288)….24-11-2010

விண்ணோர் விரும்பிடும் வாசத் தலமிருந்து
நண்ணுதல் சொர்கம் நகைப்பன்றோ -எண்ணுதல்
கேள்வனெனில் கேலியே, கல்ரத் தினம்போமோ
ஆளெவன் என்று அலைந்து….(289)….25-11-2010

வெப்பப் பெருமூச்சால் வேதனை நானறிந்தேன்
அப்புறமோர் சந்தேகம் அம்மணிநீ -இப்புவியில்
வேண்டத் தகுந்தவரார் வேண்டி வராதவரார்
ஆண்டவ னுக்கே அகல்….(290)….25-11-2010

காதணி நீலக் கமலம் குலாவிடும்
சீதள கன்னத்தில் செஞ்சடை -மோதவைத்த
நெஞ்சென்ன பாறையோ, நீலகண்டன் போலிவனும்
நஞ்சுண்டா னானோ நமுத்து….(291)….26-11-2010

நிராபரண பாணியாய் நிற்க அருக்கன்
சரோருகம் என்றெண்ணி சூழ -இராவரும்
சந்திரன் காலையில் சோபை இழந்தாற்போல்
நின்திரம் காண்போர் நெகிழ்வு….(292)….26-11-2010

குடையாய் இமைகள் குவிந்த விழித்தேர்
படைக்கடிமை ஆக பயந்த -தடைதானா
அன்றியழ கென்றகர்வம் ஆமெனில் அம்மனிதர்க்(கு)
இன்றியமை யாத இழப்பு….(293)….26-11-2010

பங்காய்த் தவப்பலனில் பாதியுனக்(கு) ஈந்திடுவேன்
நங்காய் அடைந்திடுநின் நாயகனை -சங்காய்
இருந்தவுன் நெஞ்சை எடுத்தூதும் ஆளை
அறிந்திடச் செய்வாய் அடுத்து….(294)….27-11-2010

தன்னிதயம் போலறிந்த அன்னிய அந்தணர்தம்
பின்னிய பேச்சால் பதிலிழந்து -உன்னியதைக்
கூறுமாறு மையிடா கண்களால் பார்வதி
ஆருயிர் தோழிக்(கு) அழைப்பு….(295)….27-11-2010

வெய்யில் தடுப்பாக வெண்தா மரைக்குடையை
கையில் எடுத்த கதையாக -தையலிவள்
கொண்டதவக் காரணத்தைக் கூறுகிறேன் வேதியரே
உண்டெனில் ஆர்வம் உமக்கு….(296)….27-11-2010

தேவேந் திராதிகளை திக்பாலர் நால்வரை
போவென்று நெஞ்சால் புறந்தள்ளி -பூவம்பன்
மாள வழியின்றி மாற்றாய்த் தவமேற்றாள்
காளை அமர்ந்தவர்க் காய்….(297)….28-11-2010

ரீங்காரம் செய்த ரதிமாறன் அம்புசிவன்
ஹூங்காரத் தாலஞ்சி ஒத்தயினப் -பூங்கோதை
தையலிவள் நெஞ்சில் திசைமாறித் தைத்திட
மையலாள் வாடுகிறாள் மாது….(298)….29-11-2010

நெற்றிக் களபமும் நீறாய் உதிர்ந்தது
பற்றிய தாபத்தால் பார்வதிக்கு -சுற்றியுள்ள
மூடு பனியிவள் மூச்சுஷ்ணத் தாலுருகி
ஓடுநதி ஆனதே ஓய்….(299)….30-11-2010

சம்புவின் சாகஸ சங்கீதம் பாடுகையில்
தெம்பிழந்து போவாள் தழுதழுத்து -உம்பரின
கின்னரத் தோழிகளிவ் இன்னலைக் கண்டழுவர்
தன்னறமாம் கானம் தவிர்த்து….(300)….30-11-2010

மூன்றாவது ஜாமத்தில் மூடிய கண்திறந்து
தோன்றாத ஈசனிரு தோளணைத்து -சான்றாக
”போகாதீர்” என்று பிதற்றுமிவள் நோய்தன்னில்
வேகாதீர் பெண்காள் வீழ்ந்து….(301)….30-11-2010

”எங்குமே உள்ளவரென்(று) ஏற்றத்தோர் சொல்வதால்
இங்கென் மனத்தும் இருப்பதாவீர் -அங்குறையும்
காதலைக் காணாமுக் கண்ணுற்றீர்” என்றிடுவாள்
பேதை வரைந்தசிவன் பார்த்து….(302)….30-11-2010

ஈசனைக் கைப்பிடிக்க ஏற்றவழி யோகமென்று
யோசனை செய்தெடுத்து இவ்விமய -ராசனாம்
பெற்றவர் ஆதரவைப் பார்வதி பெற்றபின்பே
உற்றோமிக் கானில் உவந்து….(303)….1-12-2010

வனிதையிவள் நட்ட விருட்சங்கள் கூட
புனித தவத்தினைப் போற்றி -கனிதர
ஏங்குமிவள் முந்தோன்ரி ஏற்காது ஆலமரம்
தூங்குமூஞ்சி ஆச்சேயந் தோ….(OR)
தூங்கு முகமான தே….(304)….2-12-2010

தவத்தால் இளைத்தனள் தோழிமார் வாட
அவத்தை அடைந்தனள் அய்யா -சிவத்தினால்
காய்ந்த விளைநிலத்தில் கொட்டும் மழையாக
பேய்ந்திடுமோ ஈசன் பரிவு….(305)….2-12-2010

தோழியின் சொல்கேட்டு ஊழிநாள் ஊர்த்தவர்
ஆழமாய்ப் பார்வதியின் அன்புணர்ந்தும் –
ஆழமான அன்புணர்ந்தும் அப்பார்வதியை -சோழியன்போல்
சும்மா இருந்தபின் சோதித் தறியயெண்ணி
சும்மா இருந்தபின் சோதிக்கச் சீண்டினார்
இம்மா மவுனம் எதற்கு….(or)
இம்மா மவுனமேன் என்று….(306)….2-12-2010

மொக்குவிரல் ஐயிரெண்டும் மூசக் குவித்ததில்
தொக்கி ஜமாலை தொங்கிட -நெக்குருக
நின்றனள் பார்வதி நீண்டபேச் சின்மையால்
மன்றாடும் அந்தணர் முன்….(307)….3-12-2010

உண்மைதான் தோழி உரைத்ததெலாம் வேதியரே
சின்மயத்தை சேரதவம் செய்தனளிப் -பெண்மை
அரும்பொருள் ஏதுமிலை ஆசைதனக்(கு) எட்டா
பரம்பொருள்மேல் பார்வதிக்குப் பற்று….(308)….4-12-2010

அறிவேன் அரனை அரைநிறை ஆக
வெறியாய் அவனை விரும்பாய் -நெறியாக
கூசும் அமங்கலக் காரியத்தைக் கொண்டாடும்
ஈசனவன் மேலுனக்கேன் ஈர்ப்பு….(OR)
ஈசன்மேல் ஈர்ப்பு இழிவு….(309)….4-12-2010

அற்பப் பொருளில் அதிகபற்(று) உற்றவளே
பொற்காப்பு சூடியவுன் பூங்கரம் -சர்பத்தால்
கங்கணக் காப்பணிந்த காபா லியின்கையை
எங்கணம் ஏற்கும் இசைந்து….(310)….4-12-2010

உரித்துப் புதிதாய் உடுத்திய ஆனைக்
கரித்தோல் குருதியைக் கொட்ட -பொருத்தமாய்
அன்னம் வரைந்தவெண் அம்பரப் பட்டெழில்
என்னமாய் ஏற்கும் எதிர்….(311)….4-12-2010

சேவடி செஞ்சாந்து பூவிரித்த மாளிகையில்
தூவிடுமுன் கால்சுவட்டைத் தாவிடுங்கால் -சாவடைந்தோர்
வாழும் தலத்தில் வலதுகால் வைப்பதா
பாழப் பரமசிவன் போக்கு….(312)….4-12-2010

சீதக் களப சுகந்த தனங்களில்
மோதிக் களித்து மருவிடும் -போதவர்
மார்பினில் பூசிய மாண்டோர்தம் சாம்பலுன்
சார்பிலும் வீசுமட சட்….(313)….4-12-2010

உந்து மதகளிற்றில் உட்கார்ந்து புக்ககம்
வந்திடாமல் அந்த வயோதிக -நந்தி
முதுகமர்ந்து சென்றால் முறுவலிப்பர் மக்கள்
இதுமிகுந்த கேலிக்(கு) இடம்….(OR)
இதுவுகந்து போவாயோ இல்….(314)….5-12-2010

சந்திரன் கெட்டானாள் சம்பு தலைக்கேறி
அந்தவழிக்(கு) ஆளாகாய் அம்மணி -இந்தபுவிக்(கு)
இன்பம் தருமிருவர்க்(கு) ஈசான்ய மூலையா
துன்பத் தவத்தைத் துற….(315)….6-12-2010

நேத்திரம் மூன்றுடையோன் நோக்க விகாரமாய்
கோத்திரம் பெற்றோர் கிடையாதோன் -போர்த்திடுவான்
திக்கெட்டால் மூடி, திருமணம் கொண்டால்நீ
திக்கற்றப் பார்வதி தான்….(316)….6-12-2010

பூவனம் நீயெங்கே, தீவனத்தோன் தானெங்கே
ஈவனம் விட்டகல், இட்டியின் -காவணக்
காலேற்கும் பூசையை காட்டுப் பிணஞ்சுடு
கோலேற்க்க லாகுமோ கூறு….(317)….6-12-2010

அந்தணர் கூற்றால் அதரம் துடிக்கயிரு
கண்தணல் கொள்ளக், கொடிப்புருவம் -கொந்தளிக்க
பார்த்தனள் கோபமாய் பார்வதி பின்தொடர்ந்து
வார்த்தைகள் சொன்னாள் வெகுண்டு….(318)….7-12-2010

ஆரணம் போற்றிடும் பூரணப் பெம்மானின்
காரணக் காரியம் நீரறியீர் -சாரணரே
கத்தும் கடலாழம் காணுமோ குச்சிஅற்ப
சித்தத்திற்க்(கு) எட்டார் சிவன்….(319)….7-12-2010

குறையொன்றும் இல்லா குணத்தோன் அரனுக்(கு)
அறம்பொருள் இன்பம் எதற்கு -பகர்கின்ற
மங்களங்கள் எல்லாமே மாண்டு பிறப்போர்க்கே
எங்களவர் ஆசைக்(கு) எமன்….(320)….7-12-2010

பிச்சை புகினும் பணக்கா ரணக்காரர்
இச்சை இடுகாடாய் ஏற்பினும் -முச்சகத்தின்
மூர்த்தியவர் அச்சத்தை மூட்டினும் காந்தமாய்
ஈர்த்திடும் ஈசன் இரும்பு….(321)….7-12-2010

குஞ்சர அம்பரம் கொண்டாலும், ஆபரணம்
நஞ்சுமிழ் பாம்பாய் நெளிந்தாலும் -நெஞ்சில்
கபாலங்கள் கோர்த்துக் கிடந்தாலும் என்ன
சபாபதிக்கு மேனி ஜகம்….(322)….7-12-2010

ஈசனுடல் மேவி இடுகாட்டுச் சாம்பலும்
தோஷம்போய் ஆனது தூய்மையாய் -தூசெனில்
ஆடலின் போது அபிநயத்தால் சிந்துவதை
சூடுவரோ விண்ணோர் சிரம்….(323)….7-12-2010

வாரண வாகனன் வானவகோன் வந்தயெதிர்
ஏறதன் வாகனரை ஏத்துதலாய் -பூரணனின்
பாதம் சிவக்க புனைந்தசென்னி மந்தார
தாதவிழ வீழ்வான் தொழுது….(324)….7-12-2010

குற்றம் உரைப்பதையே கொள்கையாய்க் கொண்டாலும்
அற்றை மறந்துநீர் ஆதரவாய் -சற்றே
சகத்தைப் படைத்த சதுர்முகனை ஈன்றோன்
தகப்பன்தாய் இல்லாதவன் தான்….(325)….7-12-2010

போதும் விவாதம்நீர் மூதரித்த வண்ணமீசன்
தீதாய் இருப்பினும் தித்திக்கும் -மாதெனக்கு
ஆதலால் ஏதுமிப் பேதைபால் ஓதாதீர்
காதலுக்குக்(கு) இங்கில்லை காது….(326)….8-12-2010

தோழியே துடிக்கின்ற தாடையார் மீண்டுமேதோ
கோழிமூட்டக் காத்துள்ளார் காதுகொடாய் -பாழிழுத்து
பேசம் மகான்களைப் பாவமென்றால் அப்பேச்சை
ஆசையுடன் கேட்டல் அழிவு….(327)….8-12-2010

முத்தாய்ப்பாய்ச் சொல்லி மரவுரி மண்நழுவ
கித்தாய்ப்பாய் பார்வதி கூறியோட -சத்தாய்க்க
இன்று புறம்மறைத்தோன், அன்று புரமெரித்தோன்
என்றரனாய் நின்றான் எதிர்….(328)….8-12-2010

அந்தரத்தில் கால்வைத்து மந்திரித்தாற்ப் போல்நின்று
சந்திர சூடனை சந்தித்தாள் -இந்தநிலை
செல்ல முடியாமல் நில்ல மனமின்றி
கல்லணையால் காவிரிகால் கட்டு….(329)….9-12-2010

சவுந்தர்ய லாஹிரியே செய்த தவத்தால்
சிவந்தன்னைச் செய்தாய் சேவகனாய் -உவந்தென்னை
கொள்ளடிமை என்றதும் துள்ளுகையில் குத்திய
முள்ளெடுத்த மானானாள் மாது….(330)….9-12-2010

சர்கம் ஐந்து சுபம்
————————
——————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *