க.பாலசுப்பிரமணியன்

கூடி வாழ்ந்தால்

பல்லாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி… ஒரு  நகரத்தின் வெளிப்பகுதியில்  ஒரு  கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருந்த ஒரு தொழிலாளி அங்கிருக்கும் ஒரு மிகப்பளுவான பொருளை த்  தூக்குவதற்காக முயற்சி செய்துகொண்டிருந்தான். அவனால் அந்தப் பளுவை நகர்த்தக்கூட முடியவில்லை. அந்த இடத்தில அவன் வேலையை மேற்பார்த்துக்கொண்டிருந்த  ஒரு மேலாளர்  அவனைப் பார்த்துக் கண்டித்துக்கொண்டிருந்தான். அந்த வழியாக குதிரையில் வந்த  ஒருவர் இந்தக் காட்சியைக் கண்டு அந்த மேலாளரிடம்  கேட்டார்: “அந்தத் தொழிலாளி அந்தப் பளுவை நகர்த்துவதற்கு இவ்வளவு முயற்சி செய்துகொண்டிருக்கிறாரே  நீங்கள் அவருக்கு ஒரு கைகொடுக்கக் கூடாதோ?”

சற்றே இவரை முறைத்துப் பார்த்த அந்த மேலாளர் “நான் அவனுக்கு கைகொடுப்பதா? அவன் ஒரு தொழிலாளி. நான் மேலாளர். அவனிடம் வேலை வாங்கத்தான் நான் நியமிக்கப் பட்டிருக்கின்றேன்.” என்று சொல்ல  குதிரையில் வந்த அந்த நபர் ஒன்றும் பேசாமல் கீழே இறங்கி அந்தத் தொழிலாளியிடம் சென்று அவருக்குக் கைகொடுக்கின்றார். அந்த வேலை முடிந்தபின் அந்த மேலாளரிடம் எதுவும் கூறாமல் தன்னுடைய குதிரையில் ஏறுகின்றார். அதைக் கண்ட அந்த மேலாளர் “இவனுக்கு உதவி செய்த நீங்கள் யார்?” எனக் கேட்டிடவே, வந்தவரோ “என் பெயர் ஜார்ஜ் வாஷிங்க்டன் . இந்த நாட்டின் அதிபதி.” என்று சொல்லிவிட்டு மேலே செல்கின்றாராம்.

இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கருத்து என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பல தொழில் நடக்கும் இடங்களில்  வேலை பார்ப்பவர்கள் கூட்டாகச் சேர்ந்து வேலை பார்க்க்காமல் தங்களுடைய பதவி, தகுதி போன்ற பல காரணங்களுக்குக்காக தங்களுடன் கூட வேலை பார்பவர்களுடன் கூட்டாக வேலை பார்க்காமல் பிரிந்து  நின்று தனியாக வேலை பார்க்கும் காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். பதவி என்பது நமக்கு வேலைகளை மேர்பார்ப்பதற்கும் சிறப்பாக ஒழுங்குபடுத்திடுவதற்கும் புதிய உத்திகளால் நம்முடன் வேலை பார்ப்போரை வழிநடத்துவதற்கும் கொடுக்கப்படும் ஒரு தகுதி. அது நம்மை நம்முடன் வேலை பார்ப்பவர்களிடம் பிரித்து நம்மை ஒரு புதிய வர்கத்தினராக ஆக்கும் செயல் அல்ல. எனவே நம்முடன் உழைப்பவர்கள் திறன் மற்றும் உணர்வு நிலைகளை புரிந்து அவர்களுடன் கைகோர்த்துச் செல்வதே சிறந்த தொழில் தர்மமாகும்.

அது மட்டுமல்ல.. கீழ்காணும் சில காட்சிகளை நாம் பல தொழில்  நடக்கும் இடங்களில் பார்க்கின்றோம்..

  1. “அவனுக்கும் சம்பளம் கிடைக்கின்றது. எனக்கும் சம்பளம் கிடைக்கின்றது. அவன் ஒரு வேலையைத் தவறாகச் செய்தானென்றால் எனக்கென்ன? அவனுடைய தவறுகள் என்னுடைய மேன்மையை வெளிப்படுத்துவதுதானே – என்ற தவறான நோக்கமும் சிந்தனையும்.
  2. “தம்பி, நீ நேற்றுதான் வேளையில் சேர்ந்தவன், நானோ இருப்பது ஆண்டுகளான உழைப்பவன். எனக்கு உன் ஆலோசனை தேவையில்லை. உன் வேலையை மட்டும் நீ பார்.” என்ற ஆணவத்தனம்.
  3. ‘நான் வேலை பார்பதற்குத் தான் சம்பளம் கொடுக்கிறார்கள். அவனுக்கு உதவி செய்வதற்க்கோ அல்லது அவனோடு சேர்ந்து செய்வதற்கோ அல்ல.” என்ற சுயநலச் சிந்தனை
  4. ” நான் அவனுக்கு உதவி செய்து அதனால் அவனுக்குச் சிறப்புக் கிடைத்து விட்டால் எனக்கு என்ன ஆவது?” என்ற கீழ்நோக்குச் சிந்தனை.

சமுதாயம் என்று ஒன்று உருவானதே எல்லோரும் சேர்ந்து கூடி வாழவும், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தேவைப்படும் பொழுது கைகொடுக்கவும், நம்மைப் போல் மற்றவர்களின் நலனையும் முன்னேற்றத்தையும் பாதுகாக்கவுமே ! இந்தக் கூடி வாழும் உணர்வு காகம் போன்ற பறவைகளிருந்து எத்தனையோ விதமான விலங்குகளின் சமுதாயங்களில் காணப்படுகிறது. மற்றவர்களை அடித்துத் துன்புறுத்திக் கொன்று தான் உண்ணும் உணர்வுகள் விலங்கினங்களில் காணப்பட்டாலும் பொதுவாக அவைகள் தங்கள் இனங்களை அழிப்பதில்லை. கூடி வாழ்தல் என்பது ஒரு நேயச் செயல். அது மனித இனத்தில் மிகவும் சிறப்பாக விளங்கி வருகின்றது. ஆனால் காலப்போக்கில் தங்களுடைய சுயத்தேவைகளுக்காக இந்த உணர்வுகளை நாம் நழுவ விட்டுக்கொண்டிருக்கின்றோம்.

கூட்டுக்குடும்பங்கள் இந்த நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டும் வளப்படுத்திக் கொண்டும் இருந்தன. அவைகள் மறையத் தொடங்கிவிட்டன. தொழில் செய்யும் இடங்களில் கூட்டாக வேலைபார்த்தால் உற்பத்தித்திறனை வளர்ப்பதற்கும் தொழில்  தரத்தை உயர்த்தவும் மிக அவசியமானவை. தற்போதைய நிர்வாகத் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளில் கூறப்படும் கருத்துக்கள்:

  1. குழுவாகவும் அணியாகவும் வேலைசெய்தல் (Team work)
  2. பகிர்ந்த பார்வைகளை ஏற்றுக்கொள்ளுதல் (Shared vision)
  3. ஒத்துழைப்பு (cooperation)
  4. மோதல்களைத் தவிர்த்தல் (Conflict Resolution)
  5. குழுவைச் சார்ந்த கடமைகள், பொறுப்புக்கள் (Commitment to Team)
  6. கருத்து வேறுபாடுகளை மதித்தல், ஏற்றுக்கொள்ளுதல் (Respecting differences in perception)

இந்தக் கருத்துக்கள் பொதுவாக எல்லாவிதமான கூட்டுப் பொறுப்புகளுக்கும் உண்மையானவை – அது குடும்பமாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது தொழில்கூடங்களாக இருந்தாலும் சரி.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதானே !

சற்றே நமது வாழ்விலும் இவைகளை பற்றிச் சிந்தினைக்கலாமே !

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *