Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180831Asatoma Sadgamaya-DWA mixed media 100dpi lr

    அஸத்தே எழுந்திரு,ஆதிஸத்நான் சொன்ன
    உஸத்தியான கீதையால் உள்ளம் -அஸங்கலையா:!
    வேண்டும் சமத்துவம், வீரன் அவனழியான்
    காண்டீபம் தானுன் களிப்பு”….!

    ”பேடித்தனம் காண வேடிக்கை யாயிருக்கு
    வாடிய அக்கினியே(அஸதோமா) வீரியம்கொள்(ஸத்கமய) -சூடிய
    உள்ளத் தளர்ச்சி ஒழிக, எழுந்திரு
    கொல்லத் துணிவதே கடன்”….

    ‘’சாத்திரங்கள் எல்லாமே சாதா ரணர்க்காகும்,
    தோத்திரம் போதும் துரீயமாம் -பாத்திரம்
    ரொம்பி வழிய ரங்கன் உபதேசம்
    நம்பினோர்க்கு நீராம் நெருப்பு’’.

    “ஆச்சரியம் கொண்டதால் பேச்சிழந்து போய்விடல்,
    மூச்சிரைக்க கர்மத்தில் மூழ்குதல், -கூர்ச்செரிந்து,
    பார்க்கையில் ஆனந்த பாஷ்பம் பெருகுதல்,
    நீர்க்குமிழி ! நீயோ நதி !”….!

    .
    ”இல்லாத தென்றும்மெய் இல்லை, இருப்பது
    இல்லா ததாகாது, இவ்வுண்மை -அல்லாது
    வேறொன்று மில்லையென, கூறுவோர் ஞானியர்:
    நூறொன்று மில்லாது செய்”….!….கிரேசி மோகன்….!

    .

    Share
  • ரமணாயனம்…..தொடர்ச்சி….அமுத சுரபியில் வெளிவந்தது…..!

     

    தவரச காண்டம்
    —————-

    சீதைக்(கு) இருப்பிடம் ஸ்ரீராமன் தங்குமிடம்
    கீதைக்(கு) இருப்பிடம் கண்ணனே -தாதையும்
    கூடியிருந்து அன்பருடன் காகுத்தன் ராமனாய்
    தேடிவந்தோர்(கு) ஊட்டினார்கீ தை….(299)

    பனியோ, குளிர்மழையோ பல்துலக்கும் நேரம்
    தனியேவோர் பாறையில் தாவி -கனிவாய்
    செளபாக்கியம்மா கீழிருந்து சாமியைக் காண
    தவபாக் கியத்தார் தயவு….(300)

    கண்கெட்ட பின்னுமேன் காணவந்தாய் என்னையென
    பண்பட்ட சாமி பரிந்திட -உன்பட்டு
    பார்வை முதலியார் பாட்டியிவள் மேல்பட்டால்
    தீர்வைத் தருமென்றாள் தாய்….(301)

    இந்தநேரம் பார்த்திந்த ஏழையிடம் ஏதுமில்லை
    வந்தய்யர் நொந்தவண்ணம் வாடிட -‘’இந்தரோஷம்
    சுந்தரேசா ஏனுனக்கு உந்தனையே நீயெனக்கு
    தந்தபின்னும்’’ என்றார் தவர்….(302)

    தேசூரைச் சேர்ந்த துலுக்கப்பெண் தித்திப்பை
    ஆசான்தன் அன்னைக்(கு) அளித்திட -ஆசாரம்
    போய்விடும் என்றுரைக்க ‘’ பாரபட்சம் உண்டெனில்
    போய்விடு’’ என்றார்ஊர் பார்த்து….(303)

    அரிசனமோ அன்றி அரசனோ அங்கு
    தரிசனம் தந்தோர்க்குத் தன்னை -சரிசமமாய்
    காட்டுவார் ஆன்மீக காந்தியாம் கண்களால்
    நீட்டுவார்நால் வர்ண நிழல்….
    நீட்டுவார்நால் வர்ணக் கொடி….(304)

    நேரெதிர் நிற்பவர் நினைவின்றி நெக்குருக
    பாரதியார் பாடலைப் பாடிட -நாரதர்கள்
    கோளுரைக்க கோபித்துக், கூப்பிட்(டு) அருட்ப்ரகாசம்
    பாலுரைத்தார் பாடப் பரிந்து….(305)

    ஆணென்ன பெண்னென்ன ஆன்மீகப் பாற்கடலில்
    ஜாணென்ன மைலென்ன சாந்தியாம் -ஆன்மாவில்
    பேதமற்று போனபின்பு ஏதுபால் ஆதலால்
    ஓதலாம் பெண்களும் ஓம்….(306)

    வாட்டியொரு வெள்ளைமூ தாட்டியிரு கால்களை
    நீட்டிட கோபித்தார் நிர்வாகி -காட்டினார்
    சம்மணம் இட்டமர்ந்து, சட்டம் பொதுவென்று
    தம்மடக்கு வாதத்தாள் தொட்டு….(307)

    வந்தராஜ வாரிசு வந்தனித்தோர் சாதுவிடம்
    தந்தகாசு கண்டு துடித்தவர் -எந்தடா
    பேறுபாயப் பிச்சை பெறவந்தோன் போட்டயிந்த
    நூறுரூபாய் நோட்டு நகைப்பு….(308)

    அகப்பட்ட(து) ஆடு அபாயப் பாறை
    முகப்புற்ற மாபிளவில் மாட்டி -சுகப்ரும்மம்
    அன்றந்த ஆடுபிடித்(து) ஆயுள் அதற்க்களந்தார்
    நின்றழும் பெண்ணுக்காய் நேர்ந்து….(309)

    விதுரர் குடில்சென்ற விஷ்ணுகண்ணன் கூழை
    சிதறாது நாலுகை சேர்த்து -அதரத்தால்
    உண்டாற்போல், ஆட்டிடையன் அன்போ(டு) அளித்ததை
    மண்டியிட்டு உண்டார் மகான்….(310)

    தீண்டாமை காலத்தில் தாயன்புக் கேணியர்
    தோண்டியில் தண்ணீர் தளும்பிட -வேண்டிடும்
    புல்லறுக்கும் பெண்கள் புறமுதுகில் பெய்வாராம்
    கொள்ளிரக்கம் கீழோர்பால் கொண்டு….(311)

    தானிருக்க முன்போர் திண்ணையும் கூரையும்
    ஊணியப் பாட்டி உகந்ததோசைத் -தீனியின்முன்
    தேவா மிருதமும் தலைகுனியும் என்றாராம்
    மூவா அவளன்பு மொக்கு….(312)

    பட்ஷணம் மேலல்ல பாட்டியிவள் பக்தியின்
    லட்ஷணமே அன்பின் லஹரியென்றார் -அஷ்ஷணமே
    தின்றாராம் வேகாத தோசையை விண்டுவிண்டு
    அன்றாயர் கண்ணனிவர் அன்பு….(313)

    அம்பதாம் ஆண்டு அவரருணை வந்தநாள்
    ரொம்பதான் பாரபட்சம் அன்பர்கள் -உண்பதில்
    சாப்பாடு கொள்வேன் சமபந்தி போஜனமாய்
    சாப்பாடு வென்றவரின் சொல்….(314)

    போளூர் நடேசன் பவுர்ணமி பட்ஷத்தில்
    மாளூர் ஜெயித்தோர் முடியிறக்கும் -நாளில்வெண்
    கோவணம் மண்ணமர நாவிதர்நாற் காலியுற
    ஓவியம் தீட்டவர்மா ஓடு….(315)

    தமையந்தி நேரத்தில் தேடிவரு வோர்க்கும்
    சமையல் செய்தன்னம் தூதாய் -அமைய
    நளபாகர், சிந்தைசூழ் ‘நான்’சனி ஓட்டி
    உளபாகம் தேற்றும் உணவு….(316)

    அதிகாலை வேளை அடுப்படியில் வேலை
    கொதிசாம்பார் கூட்டு கறிகாய் -புதினாவில்
    சட்டினி என்று சமையல் படிதாண்டா
    பத்தினி யாம்பகவான் பார்….(317)

    தொப்பலாய் வேர்த்த தவத்திற்(கு) இதமாக
    சுப்பரா மய்யா விசிறிவிட -செப்பினார்
    ‘’காற்றுள்ள போதேநீ தூற்றிக்கொள் ஆன்மாவை
    மாற்றமில்லா மாற்றதுவே மெய்’’….(318)

    இங்கிலாந்து கேரட்டும் இந்தியக் கத்திரியும்
    எங்கு விளைந்தாலும் எந்தோட்டம் -பொங்கலை
    ஆழிசூழ் பூமியே ஆசிரமத் தோட்டம்தான்
    வாழிய ஏக உணர்வு….(or)
    வாழிய ஏக வழுத்து….(319)

    ஆக்கிய சாம்பாரில் தூக்கல் புளிப்பிருக்க
    நாக்கில் ருசிபார்த்த நாயன்மார் -வாக்குரைத்தார்
    ‘’எத்தைநாம் தின்றால்நம் பித்தம் தெளியுமென்று
    ஒத்தைக்கால் நிற்போர்க்கு ஊத்து….(320)
    மீதமான மோர்நீரை மூடிடாத சாக்கிட்டு
    போதுமென்றார் சமையலுள் பொல்லாப்பு -ஏதுமிதில்
    கோபமில்லை சாதுக்கு, கொள்ளுவதும் தள்ளுவதும்
    ஆபரண மாட்டல் அவிழ்ப்பு….(321)

    கிஷ்கிந்தா காண்டம்
    ——————–

    நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை
    பார்க்கும் எவற்றிலும் பேதமில்லை -காக்கை
    கருநாகம், மந்தி, கொடுஞ்சிறுத்தைக் கூட்டம்
    குருரமண சீடர் குழு….(322)

    முதுகில் குரங்கு ,முழந்தாளில் ஆடு
    எதிரில் அணிலெனக்(கு) என்று -புதிராகப்
    பார்த்திருக்க ஒவ்வொன்றாய் வேர்க்கடலை ஊட்டியதைப்
    பார்த்திருந்தால் பாரதியார் பாட்டு….(323)

    மேனியில் நாகம் மெதுவாக ஊர்ந்திடும்
    ஞானிமுன் சித்திரமாய் நின்றிடும் -கானின்
    புலிவந்து திண்ணையில் பொய்யுறக்கப் பூனையாய்
    மெலிதாக சொல்லும் மியாவ்….(324)

    அமெரிக்க அன்பர் அகாஸ்டோ கேட்டார்
    சமரசம் சாத்தியமா சொல்வீர் -அமரிக்கை
    மேவ அமர்ந்த மனிதரே உம்மைப்போல்
    தாவும் குரங்குமொன்று தான்….(325)

    நாமொழிக்க நாமிங்கு ஞானிதான் என்கிறீர் ?
    ஏனுமக்கு சந்தேகம் என்றவர் -நானிருந்தும்
    நீரிருந்தும் ஆங்கே நமதுபணி யாளிருந்தும்
    ஓரிருப்பு தானிங்(கு) உணர்வு….(326)

    விலங்கு, மனித, விருட்ச விதங்கள்
    விளங்கும் பலவான வீம்பு -விலங்காய்
    ஒருமை உணர்வை ஒதுக்கிடப் பூட்டும்
    வெறுமை விடுதலைசா வி….(or)
    வெறுமை விடுதலை வீடு….(327)

    வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார்
    பாடுமப் பண்பே பவித்திரம் -ஓடும்
    உயிரடையும் ஓர்நாள் ஒருமைக் கடலை
    தயிர்கடைய வெண்ணெய்த் திரள்….(328)

    மந்திமொட்டைப் பையனை மற்ற குரங்குகள்
    தொந்திரவு செய்ய தவம்செய்து -வந்தவனைக்
    கண்டால் மிரண்டு கவிகள் நடுங்கியதாம்
    உண்டாம் அதற்க்கும் உணர்வு….(329)

    பட்சணம் தன்னை பறிகொடுத்த வர்க்குமந்தி
    லட்சணம் சொன்னார் லயித்துமகான் -லட்சிய
    நோக்கிது போலவே நோக்குமிருந் தால்ஞானம்
    பார்க்கலாம் தாவிப் பறித்து….(330)

    நொண்டிக் குரங்குவெகு நட்பாம் ரமணருக்கு
    சண்டித் தனம்செய்ய சாப்பிட -கண்டித்த
    வர்கரத்தைப் பாய்ந்து வாயால் கடித்திட
    தற்பரம் தண்டனை தீர்ப்பு….(331)
    தீர்ப்பாக ஓரிருநாள் பார்க்கா திருந்திட
    ஆர்பாட் டமடங்கி அம்மந்தி -பார்ப்போர்
    வியக்கக் குழைந்தவர் வீராப் படங்க
    புயத்தில் அமர்ந்தது போய்….(332)

    பணியாய் மனிதர்க்கு போன குரங்கு
    இனிவனம் சென்றால் எதிர்ப்பு -எனினும்
    ஆரண்யம் சென்றரசன் ஆனவன் வந்தனன்
    காருண்யர் விஸ்வாசம் கொண்டு….(333)

    கொண்ட மனையாள்கள் குட்டிகள் சூழ்ந்திட
    நொண்டி ரமண தரிசனம் -கொண்டதைக்
    கண்டவர்கள், ராமனை கிஷ்கிந்தா காண்டத்தில்
    கண்டபலன் கொண்டார் களித்து….(334)

    கல்லெறிந்தோர் அன்பர் குரங்கொன்றைக் கொன்றிட
    சொல்லறியா சோகத்தில் சூழ்ந்தயினம் -சொல்லியதாம்
    போன சிதையை பகவானின் முன்வைத்து
    ஆன கதையை அழுது….(335)

    அழுத குரங்குகள் ஆறுதல் பெற்று
    தொழுது வணங்கித் திரும்ப -பழுது
    விளைவித்த அன்பர் விழுந்தாராம் நோயில்
    கிளைசுற்றம் கேட்டது காப்பு….(336)

    காப்புத் திருநீறாய் பாப்பார சாமியிவர்
    சாப்பாட் டடுப்படி சாம்பலிட -ஆ!பார்
    அசலான அற்புதம் முசல்மான் அன்பரெழுந்(து)
    அசலாமா லேகும் அழைப்பு….(337)

    தாகம் தவமாக ,தண்ணீர் ரமணராக
    காகம் கிணற்றங்கால் கொம்பில் -யாகமாய்
    மூன்றுநாள் மூச்சடக்க மோட்சம் அளித்தெடுத்தார்
    சான்றாய் சமாதியும் செய்து….(338)

    செய்யுமோ மெய்த்தவம் சிந்தை அதற்குண்டோ
    உய்யுமோ மோட்ச உலகுக்கு -அய்யமாய்
    சொன்னவர்க்கு சொன்னார் சிறகுடைய காக்கைக்கும்
    தன்னான்மா பொன்னான்மா தான்….(339)

    அன்பர் குளிக்கும் அடவிக்கு நீரருந்த
    வன்புலி வந்திட வாஞ்சையாய் -நண்பரே
    இன்றுபோய் நாளைவா என்றதும் அச்சிறுத்தை
    கன்றுபோல் சென்றதாம் கான்….(340)

    வாதுமைக் கண்களால் வாத்சல்ய மாய்ரமண
    சாதுவைப் பார்க்குமாம் சாப்பிடும் -போதினில்
    கோவிந்த லஷ்மி கடாட்சத்தால் ஆசிரமம்
    ஓவென்(று) உயர்ந்ததென்பார் தேவு….(341)

    ஆவென்று வாய்பிளந்து ஆசிரமம் பார்த்திருக்க
    ஆவன்று தேவன் அனுக்ரகத்தால் -சாவென்ற
    சூட்சுமம் தாண்டி சுயநினை வோடுமுக்தி
    மோட்சம் புகுந்ததுடல் மாய்த்து….(342)

    ஆயி சமாதிக்(கு) அருகே பசுவுக்கு
    கோயில் எழுப்பினார் குருநாதர் -ஆயினும்
    ஏனைய பேருக்காய் ஆனை கஜேந்திரன்
    வானை அடைந்ததாய் வாக்கு….(343)

    உருவுனார் துண்டை உருண்டதாம் முட்டை
    குருகுருவிக் குஞ்சின் கதிக்காய் -பரிவுடன்
    ஈரத்துணியில் முட்டையிட்டு ஈன்றவள் போல்காத்து
    வாரம் முழுக்கஅதை வேவு….(344))

    வேவுக்கு காரணம் வேதனையும், தாய்க்குருவி
    கோவிக்கும் என்ற கிலியுமாம் -சாவிற்கே
    அஞ்சாத அஞ்சலவர் அஞ்சினார், அஞ்சாம்நாள்
    குஞ்சான போது குதிப்பு….(345)

    குதித்தன்பர் மாதவனைக் கூப்பிட்டுக் குஞ்சை
    இதைப்பார் உயிரோ(டு) இருக்கு -பதித்தார்பின்
    அக்குஞ்சை ஆன்ம அருணைசேய் நெஞ்சத்தில்
    அக்கினிக்குஞ் சான தது….(346)

    வேட்டுவப் பையன் வறுமை களைந்தவனால்
    காட்டுப் புறாகொண்ட குற்றுயிரை -நீட்டுவித்தார்
    பச்சை திராட்சை பிழிந்ததன்மேல் பத்திட்டு
    இச்செய்கை யாறரிவார் இங்கு….(347)

    மரமண்டை தொண்டர்கள் மாமரத்தை தாக்கி
    கரம்கொண்ட கொம்பினால் கொய்ய -பரம்பார்த்து
    ‘’போதும் நிறுத்தும் பழத்துக்கு நன்றியாய்
    தீதிழைத்தல் பாவம் திருந்து’’….(348)

    எச்சம்மா நேர்ந்தாளாம் லட்சம் இலைபறித்து
    அர்ச்சனை சாமிக்(கு) அளிப்பதாய் -அச்சச்சோ
    சொல்லி விளித்தாராம் சாமிக்(கு) உனதுடலை
    கிள்ளிக் கொடுப்பாயோ கூறு….(349)

    கூறியது கேட்ட கிழவி முழித்தாளாம்
    மீறியதைச் சொன்னார் மகரிஷி -பாரினில்
    புல்லிலை காய்கனி பூச்சி புழுவினில்
    உள்ளவனே உள்ளானுன் னுள்….(350)

    ஆசிரம காண்டம்
    —————–

    வெப்பம் குடிதண்ணீர் சொற்பம், விருபாட்ஷி
    அப்பனைக் காண்போர்க்(கு) அவஸ்தையாம் -தப்பிட
    மாசிரமப் பட்டு மகானுக்காய் கந்தனென்போன்
    ஆசிரமம் கட்டினான் அங்கு….(219)

    கண்ணை மறைக்கின்ற கள்ளிப் புதரகற்றி
    தென்னை மரம்வைத்து தோட்டமிட்டான் -மண்ணிலவன்
    ராமன் குகனாய் ரமணருக்கு வந்தகந்தன்
    நாமம் நினைவில் நிலைப்பு….(220)

    கந்தன் குடிலுக்கு வந்தாறாம் ஆண்டினில்
    தன்தாய் தளர்ந்திடத் தாயுமானார் -தந்தார்
    நடுபுகுந்த கூற்றை நகர்ந்திடக் கூறி
    மடிசுமந்து மோட்ச மகிழ்வு….(221)

    கொப்பளமாய்த் தோன்றும்நான் சொப்பனமே ஆராய
    அப்புளுகன் ஆட்டம் அடங்குமாம் -அப்பளப்
    பாட்டினால் அன்னைக்கு ஊட்டினார் ஞானச்சாப்
    பாட்டினை சூடாய்ப் பொரித்து….(222)

    விலாநோக தன்னை வயிற்றில் சுமந்தோள்
    உலாவந்த தேகம் உதிர்ந்திட -பலாக்கொத்தில்
    மூர்த்தியாய் மாபலி தீர்த்தக் கரைதனில்
    சேர்த்தார் சமாதி சமைத்து….(223)

    உன்னை வெறுக்கலாம் தன்னை மறக்கலாம்
    அன்னை துறத்தல் அவமன்றோ -கண்ணை
    இமைகள் அணைக்க நமையாள் உறக்கம்
    சுமையா சுவர்கமா சொல்….(224)

    அராப்பள்ளி மாலன் சிராப்பள்ளி ஈசன்
    இராப்பகல் நூற்போன் இணைந்த -இராப்பள்ளி
    நாதன்தன் தாய்க்களித்தான் பாதுகாவ லாய்மாத்ரு
    பூதனை லிங்கம் பிடித்து….(225)

    தாயார் சமாதி தரிசிக்க வந்தவர்க்கு
    ஆயாச மாலும் அடியார்ள் -பாயாசம்
    நோக்கி எறும்புகள் போக்காய்ப் படையெடுக்க
    ஆக்கினார் ஆசிரமம் அங்கு….(226)

    எந்தசக்தி என்னை எமனெதிர்க்க வைத்ததோ
    அந்தசக்தி தானிங்(கு) அழைத்தது -வந்தபின்
    அங்கிங்(கு) ஆசிரமம் ஆனாற்போல் ஆனதென்றார்
    தங்குமிடம் தாயார் தயவு….(227)

    ஓலை சமாதியின் ஓரமாய்க் கட்டிய
    சூளையில் வேகாத செங்கல்லால் -ஆலயச்
    சுற்றுச் சுவரெழுப்பக் கற்றுக் கொடுத்தாராம்
    முற்றும் துறந்த முனி….(or)
    அற்றைக்கு ஞானச்சித் தாள்….(228)

    ஆகமச் சொற்படி அடிக்கல் , புனிதநீர்
    சாகர கங்கை அபிஷேகம் -ஸ்ரீகரர்
    நேராய் நுழைந்து நிறுவிஸ்ரீ சக்கிரத்தை
    ஆராதித் தாரங்(கு) அமர்ந்து….(229)

    ஆயிரம் ஆலயம் ஆயினும் அண்ணலின்
    தாயிற் சிறந்ததோர் கோயில்லிலை -தூயயிச்
    சேதியைச் சாதகர் சாட்விக் எனப்பட்ட
    சாதரு ணாசலா சொல்….(230)

    ஆசான் அனுமதிக்க ஆசிரம அன்பர்கள்
    காசோலை தந்திட கட்டுமானம் -கோசாலை
    சான்றோர்க்கு நூற்சாலை சாதக சாதுக்கள்
    போன்றோர் புகலிடம் பின்பு….(231)
    விருந்து சமைக்க விருந்தினர் தங்க
    விரிந்திட ஆசிரமம் விண்ணாய் -நிரஞ்சனா
    நந்தர் பொறுப்பேற்று நிர்வாகம் செய்யநிச்
    சிந்தையாய் நாதர் சதம்….(232)

    முகவையார் கண்ண முருகனார் பிள்ளை
    அகவையில் ஆசு கவியாய் -பகவனை
    தேனிக்(கு) இணையாய் திருவாச கித்தானார்
    மாணிக்க வாசக மாய்….(233)

    மணமாலை தந்த க்ஷரமண மாலை
    மனமாயை கொண்டுழலும் மாந்தர் -குணம்மாய்க்கும்
    நானாரை தன்மருக நானார்க்(கு) அளித்தமாம
    னானாரால் மாற்றம் நிகழ்வு….(234)

    எதானாலும் என்றும் யதார்த்தத்தில் நீந்தும்
    சதாசர்வ சாந்த சிவனை -கதாநாத
    காந்தனைக் கண்ட கனிமம் முருகனார்
    நான்தனைத் வென்றதன் நாள்….(235)

    கையிலென்ன காயிதம் கேட்ட ரமணரிடம்
    அய்யநின் பேரில் அடியேனின் -செய்யுளென்ற
    ஆசுகவி வாக்கினை அங்கீ கரித்தவரை
    ஆசிகவி ஆக்கினார் அன்று….(236)

    மாசிகரம் மாதுமையாள் பூசிக்கும் ஆசுரரை
    வாசகர்தம் பாசுரத்தால் விட்டன்று -ஈசன்
    பெருந்துறை வந்தாற்போல் பேதையிவன் பாக்காய்
    இருந்தயிறை யேரமணா இன்று….(237)

    திருவெம்பா வையைப்போல் தீந்தமிழில் ஞான
    குருவெம்பா வையை முருகாநீ -தரவுன்பால்
    மாணிக்க வாசகரின் மேதமை உள்ளதென்றார்
    சீனிக்(கு) எறும்பால் சிறப்பு….(238)

    சாதுவாய் வந்த சிவனை அறியாது
    வேதியர் அன்றானை வன்புலியை -மோதவிட
    தோலுரித்த ஈசன் திருவாய் உபதேசம்
    மாலறுக்கும் உந்தியார் நூல்….(239)

    பகவான் திருவாய் புலர்ந்த அமுதை
    அகவாய் மலர்ந்து அருந்தி -முகவை
    முருகனார் செய்யுள் முகமாய்க் கொடுத்தார்
    குருவா சகக்கோவை காண்….(240)

    ‘’அய்யே அதிசுலபம் ஆன்மவித்தை’’ பல்லவியை
    மெய்யன் முருகனார் முன்மொழிய -அய்யன்
    சரணமைந்து சொன்னார் சரளமாய் அன்று
    வருணன் ரமணகவி வாக்கு….(242)

    அன்பர்கள் கேள்விக்கு அய்யன் பதில்களை
    மண்பெற கோர்த்த முருகனார் -தன்பதிவில்
    எள்ளதில் எண்ணையாய் ஏற்றிக் கொடுத்ததே
    ‘’உள்ளது நாற்பதின்’’ உரு….(243)

    உள்ளதை உள்ளபடி உள்ளது நாற்பதை
    உள்ளம் அறிதற்க்(கு) உவமானம் -சுள்ளிக்
    கழியால் கடலைக் கடத்தல், ரமண
    வழிநாற் பதுஅவ் வகை….(244)

    ரமண வழி நாற்பது வெண்பாக்கள்….245 to 284….!
    ——————————————————___________________

    ரமண வழி வெண்பாக்கள்
    ——————————-

    உடலுயிர் நானா ? உணர்ச்சிகள் நானா ?
    நடைமுறை வாழ்க்கையில் நானார் ? -திடமாய்க்
    குடைந்த மனமாம் குகைதனில் ஆன்மா
    கடைந்த நவநீதம் காண்….(1)….3-12-2008

    மருந்துண்ணும் வேளை குரங்கெண்ணம் கொள்ளும்
    விருந்துண்ணச் சொன்னால் விலகிப் -புறம்சென்று
    இஷ்டமில்லா தோரிடம் ஏந்திப் பிழைத்திடும்
    துஷ்டநெஞ்சை தூர விரட்டு….(2)….3-12-2008

    ஆழ்ந்த உறக்க மதிலே அமைதியாய்
    வாழ்ந்து களிப்பவன் யாரென்று -தாழ்ந்து
    அகங்காரம் விட்டந்த ஆன்மனைத் தேடி
    சுகம்காணும் நாள்வரை சுற்று….(3)….3-12-2008

    எமனை எதிர்த்து மரணம் அளித்த
    ரமண ரகசியம் கற்றோர் -அமண
    உலகிலே ஆன்ம உடையணிந்து வாழ்வர்
    அலகிலா இன்பம் அடைந்து….(4)….3-12-2008

    நோய்நாட வேண்டாம் அதன்முதல் நாடவேண்டாம்
    ஆய்வாம் ரமண வழி ஆன்மீகம் -ஓய்வாம்
    மருந்தால் உடலின் மயக்கம் விலக்கும்
    விருந்தாம் உணர்வை வடித்து….(5)….3-12-2008

    சொப்பனத்தில் கண்ட சொகுசான தூக்கமது
    அப்படியே போச்சு அடரமணா ! -அப்புறம்
    எப்படியோ என்னை எவனோ எழுப்பினான்
    இப்படித் தானா இறப்பு….? (6)….3-12-2008

    காட்சிபல கண்டேன் கண்டதெல்லாம் இல்லையென்று
    சாட்சி சிரிக்கின்றான் சொல்ரமணா ! -ஆட்சி
    அவனிடமா என்னிடமா ஆராயும் சக்தி
    எவனிடம் உண்டென்(று) இயம்பு….(7)….3-12-2008

    ஈரம் தெரிகிறது ஏதோ இருக்கின்ற
    சாரம் அறிந்தேன் சரிரமணா -தீரம்
    அளித்திடு ஆழத்தில் ஆன்மாவில் மூழ்கி
    குளித்திட நானும் களித்து….(8)….3-12-2008

    சர்க்கரை தேடிச் சுவைக்கும் எறும்பதின்
    அக்கறை பொங்க அடரமணா !- அக்கரை
    சேர்ந்திட வேண்டும் சுமையாம் மனக்கழுதை
    தேய்ந்திடச் செய்கட் டெறும்பு….(9)….4-12-2008

    தானே கழுத்தில் தரித்தப்பொன் மாலையை
    காணோமென் றாளாம் கதைரமணா !-வீணே
    புதையலைத் தேடிடும் பூதமே மாயை
    அதையழித்தல் ஆன்ம அடைவு….(10)….4-12-2008

    வினையால் அணையும் பெயரும் புகழும்
    எனையாள லாமோ ரமணா ! -தனியாய்
    அணையாத ஆன்ம அகலாய் ஜொலிக்க
    நினைவாகும் நீயே நெருப்பு….(11)….4-12-2008

    நால்வர் பொறுப்பேற்று நாமே தலைமுதல்
    கால்வரை தூக்கி கனக்கின்றோம் -மால்வினை
    தேடல் விசாரத்தில் கூடிக் களிக்கும்முன்
    ஊடல் உணர்வே உடல்….(12)….5-12-2008

    எடுப்பார்கைப் பிள்ளை எதிர்ப்போர்க்குத் தொல்லை
    எடுத்துரைக்கப் போனால் இல்லை -கொடுப்பாய்
    திருடன் மனக்கையில் தேடலாம் சாவி
    திருடன் புருடனாய்த் தேர்வு (OR) தீர்வு….(13)….5-12-2008

    உச்சரிக்கும் மந்திரம் உற்பத்தி ஆகுமிடம்
    எச்சரிக்கை யோடுபார்க்க ஏகாந்தம் -நச்சரிப்பாய்
    நானில்லை என்ன நமதில்லை என்னபின்
    ஜாண்பிள்ளை ஆன்மா ஜனிப்பு….(14)….6-12-2008

    பார்ப்பான் அகத்தில் புலித்தோல் பசுவாக
    ஆர்ப்பரிக்கும் ஆணவத்துள் ஆன்மனாய் -தோற்பான்
    அவனே ஜெயிப்பான் அவனே சமர்த்த
    சிவனே அருணா சலத்து….(15)….5-12-2008

    கயமை அகந்தை கடமை பலனை
    நயமுறக் கூறி மயக்கும் -சுயமாய்
    இருந்த இடத்தில் பொருந்தி இருந்து
    அருந்து அருணா சலம் (OR) ஜலம்….(16)….5-12-2008

    முப்பதில் வாழ்க்கையில் மூப்பதில் மூழ்கையில்
    அப்பவும் இப்பவும் ஆசைதான் -தப்பிட
    மேனி நமதென்ற மாய மனப்படி
    ஏணியில் ஏறா(து) இறங்கு (OR) இரு….(17)….6-12-2008

    உட்புகும் உள்ளம் உணரும் உவகையை
    கட்புலனை கைகோர்க்கும் காயமாம் -மட்பாண்டம்
    நோயில் ஒடுங்கிபின் பாயில் முடங்கிடும்
    தாயில்லா சேயாய்த் தவித்து….(18)….6-12-2008

    சயனத்தில் தோன்றுகின்ற சொப்பனத்தை மூடும்
    நயனத்தால் காண்கின்ற நானார் -அயனொத்து
    தூக்கம் கனவு விழிப்பைப் படைத்திடும்
    போக்கே மனதின் பழுது….(19)….6-12-2008

    ஆவிற்(கு) ஒருகோயில் ஆயிக்(கு) ஒருகோயில்
    காவிக்குள் வாழ்ந்த கிரஹஸ்த்தா -சாவிற்கே
    சஞ்சலம் தந்த சமர்த்த ரமணரே
    தஞ்சமுன் பாதம் தயவு….(20)….7-12-2008

    வானகம் வீழ்ந்தாலும் வையகம் ஓய்ந்தாலும்
    நானகம் தோயநவ நீதமாம் -கானகம்
    போகாதே கண்மூடி சாகா வரம்காண
    வாகா னதாம்ரமண வழி….(21)….9-12-2008

    நந்த வனம்மாயை நாலாறு மாதம்பொய்
    வந்ததோர் ஆண்டி வெறும்புளுகு -விந்தையை
    வீணே ரசிக்கும் விளையாட்டு ஓயமனம்
    காணோம் எனஓடும் காண்….(22)….9-12-2008

    கண்டது காயாம் கவர்ந்தற்று , கைகூப்பி
    கண்டதை விண்ட கனிரமணர் -உண்டதில்
    சோறுண்டு மெல்ல சுகப்பானை விட்டான்ம
    ஊரொன்றில் உய்யும் உயிர்….(23)….22-12-2008

    வினையளவு கர்மம் திணையளவு தேடல்
    பனையளவு ஆனந்த பானம் -முனையளவு
    ஊசி நிலத்திலும் உல்லாச வாசியாம்
    வாசி ரமண வழி….(24)….23-12-2008

    கள்ளதில் போதையாய் கண்ணனில் ராதையாய்
    உள்ளதே ஆன்மா உணர்ந்திடு -உள்ளது
    நாற்பது சொன்ன நமது ரமணனை
    ஏற்பவர்(கு) இல்லை இறப்பு….(25)….2-1-2009

    உடலுறவு கொண்டு உணர்வை மறைக்கும்
    மடமனதின் மாயா வினோதம் -அடஅதை
    அப்படியே ஏற்று அருணா சலரமணன்
    சொற்படி செல்ல சுகம்….(26)….2-1-2009

    காண்போன் அழிய ககனம் ஒழிந்திடும்
    நான்போய் உதிக்கும் நமச்சிவாயம் -ஆண்பெண்
    அபேதம் அதையுணர்ந்து ஆன்ம வெளியில்
    உபாதிகள் அற்று உலவு….(27)….2-1-2009

    எதிராக வந்த எமனை எதிர்த்து
    பதினாறில் வென்ற பகவான் -பதிலாக
    ”நானார்” வினாவை நமக்களித்தார் நாமுய்ய
    தேனாறான் மாவில் திளைத்து….(28)….3-1-2009

    அய்யே அதிசுலப ஆன்ம விசாரணையை
    கையில் கனியாய் கவர்ந்தவராம் -அய்யன்
    ரமண வழியில் ரகசியங்கள் இல்லை
    நமனே துணையாம் நமக்கு….(29)….5-1-2009

    உடலதற்(கு) இல்லை உபாதிகள் ,ஆன்ம
    கடலதற்(கு) இல்லை கரைகள் -வடிவெடுத்து
    வந்துவந்து போகும் வினையுரு வானவன்
    தொந்தரவு நெஞ்சைத் துரத்து….(30)….6-1-2009

    மானாபி மானம் மதிநுட்பம் மாட்சிமைகள்
    நானாகி வந்த நயவஞ்சம் -தானாகி
    தன்னந் தனியாய் தவத்தில் திளைப்பவர்கு
    எண்ணம் எதிலே எதற்கு….(31)….7-1-2009

    மனோமயம் ஆளும் மமதை அரசன்
    கனாநனா காணும் குடிகள் -வினாவிட
    பூஜ்ஜியம் தோன்றிடும் ராஜ்ஜியம் ஆகிடும்
    ”நான்”ஜெயம் ஆன்மா நிகழ்வு….(32)….7-1-2009

    குப்பன்தன் சொப்பனத்தில் சுப்பனாய் மாறுகிறான்
    குப்பென வேர்த்து விழிக்கின்றான் -தப்பிதில்
    குப்பனாய் சுப்பனாய் கோலங்கொள் நானைநீ
    துப்புர வாக்கத் தெளிவு….(33)….9-1-2009

    தீதாளும் நெஞ்சு திரையிட்டு மூடிடும்
    பாதாள லிங்க பரவசத்தை -வேதாந்தம்
    செப்பரிய ஆன்மாவை சோதித்(து) அளித்தனன்
    அப்பளப் பாட்டில் அடைத்து….(34)….10-1-2009

    ரமண ஜயந்தி அன்று எழுதியது
    —————————————

    அருணா சலமமர்ந்த ஆதிரைக்குப் பின்னே
    மறுநாள் பிறந்த முனியே -திருநாள்
    ஜயந்தியில் மீண்டும் ஜகத்தின் மரண
    பயந்தீ அணைக்கப் பிற….(35)….11-1-2009

    முற்றும் உணர முழுதும் துறயிதில்
    சற்று குறைந்தாலும் சம்சாரம் -பற்றில்
    ஒருகாலும், சத்தில் ஒருகாலும் வைப்போர்
    ஒருகாலும் காணார் ஒளி….(36)….17-1-2009

    வெள்ளித் திரைக்கு வரலாமோ வெட்கம்தான்
    கள்ளத் தனமான காட்சிகளால் -உள்ளத்
    திரையதில் தோன்றி மறைகின்ற(து) எல்லாம்
    கரைவந்து மாயும் திரை….(37)….17-1-2009

    தானாய்ப் படர்க்கையாம் தன்மையின் முன்நிலை
    நானாய் ஒளிந்திடும் நம்மகந்தை -தூணாம்
    அதனை உதைக்க அரியுரு வான
    முதலாய் உதிக்கும் முடிவு….(38)….21-1-2009

    ஊணறியா, ஓடும் உயிரறியா, உள்ளுறையும்
    கோனறியா வண்ணமுன் கண்மூடும் -நானறிய
    வெள்ளமாய் வெண்பா வடித்த ரமணரின்
    உள்ளது நாற்ப(து) உரைத்து….(39)….21-1-2009

    முகமது தேடும் மலைபோல ஆன்ம
    அகமதில் வாழும் அருணை -புகலாய்
    இருந்த இடத்தில் இறைவனைக் காண
    விரைந்து வருமாம் விழிப்பு….(40)….21-1-2009

    Share
  • நமது நம்பிக்கை

     

    – முனைவர் கி.இராம்கணேஷ்,

    உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,

    பொள்ளாச்சி.-642 107

     

    துவண்டு கிடக்கும் சட்டையும்

    உன் தோள்பட்டால் மிடுக்குப் பெறும்…

    வாசலில் கிடக்கும் செருப்பும்

    உன் பாதம்பட்டால் பீடுநடை போடும்…

    வெளுத்து வாங்கும் வெயிலும்

    உன் வேகம்கண்டால் வியர்த்துப்போகும்…

    சுருண்டு கிடக்கும் பாயும்

    உன் உடல்கண்டால் விரிந்து கொள்ளும்…

    தோல்வி உன்னைக் கண்டால்

    தோள்வலிமை கண்டு ஓடிப்போகும்…

    வீசும் தென்றலும் வீறுடன் நடந்தால்

    உனக்குக் கவரி வீசும்…

    வாசிப்பை உன் வசிப்பிடமாக்கி

    வசந்தத் தேரில் உலாப்போ…

    வெற்றிடமான வாழ்க்கையை

    வெற்றியின் இடமாக மாற்று…

    சோம்பல் என்னும் துரோகியை

    சாம்பலாக்கிச் சாகசம் செய்…

    முயற்சி கொண்டு பயிற்சிபெறு

    முடிவில்லா சுகம்பெறு…

     

    Share
  • ஐங்குறுநூற்றில் விளையாட்டுக்கள்

    -பி.சந்தனமாரி

    முன்னுரை:

    பண்டைக் காலத் தமிழ் வாழ்க்கை நிலையைப் பிரதிபலித்துக் காட்டுவது சங்க இலக்கியங்கள் ஆகும். இவ்விலக்கியங்கள் தமிழ் மக்களின் உணர்வையும் பாரம்பரிய வாழ்வையும் உணர்த்துவதாக அமைகின்றன. சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தினர். வாழ்க்கையைச் செம்மையாக வாழவிரும்பிய பழந்தமிழர் ஓய்வு நேரங்களைக் கழிக்கத் தேவையான பொழுதுபோக்குகளையும், விளையாட்டுக்களையும் உருவாக்கிக் கொண்டனர் அவ்வகையில் ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்களைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    பழந்தமிழரின் விளையாட்டுக்கள்:

    ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப அவர்தம் விளையாட்டுக்கள் அமைந்திருந்தன. முல்லைநில மக்கள் புனலாடுதல்,பொழிலாடுதல் போன்ற விளையாட்டுக்களையும். நெய்தல் நில மக்கள் கடல், பொய்தல் விளையாட்டுக்களையும்.மருதநில மக்கள் அலவனாட்டல் என்ற விளையாட்டையும்,பாலைநில மக்கள் பைஞ்சாய் விளையாட்டையும் விளையாடியதாக ஐங்குறுநூற்றுப் பாடல்கள் சுட்டுகின்றன.

    விளையாட்டு சொற்பொருள் விளக்கம்:

    தமிழில் ஆடல், ஆட்டு, ஆட்டம், விளையாட்டு போன்ற சொற்கள் விளையாட்டைக் குறிக்கின்றன. விளை என்று கூறி விளையாட்டு என்ற சொல் ஒலிமாற்றம் அடைந்த பின்னர் விளையாட்டு என மாறியிருக்கலாம் என்று விளக்குகிறார் மு.வை. அரவிந்தன்.

    விளையாட்டுப் பொருள்கள்:

    ஐங்குறுநூற்றில் மகளிர் விளையாடிய விளையாட்டுக்களே பெருபான்மையாகச் சுட்டப்படுகின்றது. இளம் பெண்கள் பந்தாடுல், பாவையை வைத்து விளையாடுதல், கழங்காடுதல் முதலிய பொழுது போக்குகளில் பெரிதும் இன்பம் கணடனர் என்பதை,

    நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
    இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
    சென்றனள் மனற்,என் மகளே
    பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.  
    (ஐங்.377)

    என்ற பாடல் மூலம் அறியலாகிறது. இங்கு பந்தாடல் என்பது பந்தை நூல்களால் வரிந்து காட்டப்படுவதாகும். கழங்கு என்பது கழற்சிக்காய் அல்லது சிறு கற்றுண்டுகளாகும். பாவை என்பது மரப்பாச்சி போன்ற பொம்மை வகைகளில் ஒன்றாகும். இளமகளிர் விளையாட்டுப் பொருள்களை வைத்துத் திண்ணையில் உட்கார்ந்து விளையாடுவதாக ஐங்குறுநூறு சுட்டுகின்றது.

    புனலாடல்:

    கார்காலம் தொடங்கியதும் தலைவனும் தலைவியும் புதுப்புனலில் ஆடி வருவதே புனலாடுதல் எனப்படும். இதனை நீர் விளையாட்டு என்றும் கூறுவர். தலைவன் தலைவியோடு புனலாடுவது மட்டுமல்லாமல் பரத்தையரோடும் புனல் விளையாட்டினை விளையாடி வருகின்றான். கார்காலத்தில் முதன்முதலாகப் பொழியும் மழையின் காரணமாக வரும் வெள்ளத்தில் நீராடி வருவது சிறப்பானதாகும். அவ்வெள்ளத்தில் தலைவன் தலைவியோடு ஆடாமல் பரத்தையரோடு நீராடி வருவதை,

    தலைப் பெயற் செம்புனல் ஆடித்
    தவநனி சிவந்தன முகிழ்ந! நின் கண்ணே.   (ஐங்.80) என்ற பாடல் மூலம் காணமுடிகின்றது. இங்கு தலைவன் பல பெண்களோடு நீராடி மகிழ்கின்றான். என்ற செய்தியை ஐங்குறுநூறு சுட்டகின்றது.

    கடல் விளையாட்டு:

    கடல் விளையாட்டு என்பது இளமகளிர் அவர்தம் தோழியாரோடு இணைந்து கடலில் இன்பத்தோடு விளையாடக் கூடியதாகும். இவ்விளையாட்டினை விளையாடும் மகளிர் அனைவரும் ஒன்று சேர்ந்து மணலில் பாவை செய்து, அப்பாவைக்கு மலர்களால்ஆன மாலைகளாகக் கோத்துச் சூடி மகிழ்ந்தனர். இப்பெண்கள் தம் விளையாட்டுப் பொம்மைக்கு பிறர் கொடுக்கும் மாலைகளைச் சூட மாட்டார் என்பதை,

    நொதுமலாளர் கொள்ளார் இவையே
    எம்மொடு வந்துகடல் ஆடு மகளிர்
    நெய்தல் அம்பகைத் தழைப் பாவை புனையார்.  
    (ஐங். 187)

    என்ற பாடல் வரிகள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விளையாட்டு மகளிர் அனைவரும் ஒன்றுகூடி விளையாடும் விளையாட்டாகும்.

    பொழிலாடுதல்:

    தலைவன் தலைவி இருவரும் களவு, கற்பு என்ற இருவகைக் காலங்களிலும் புனலாடதலும். பொழிலாடுதலும் என்பது இயல்பான ஒன்றாகும். பொழிலாடுதல் என்பது பல வகையான மலர்கள் மலர்ந்துள்ள சோலையில் தலைவனும் தலைவியும் மலர்களைப் பறித்து விளையாடுதலாகும்.  காயா, கொன்றை, நெய்தல், செம்முல்லை, பிடவம் போன்ற மலர்கள் மலர்ந்நு அழகுபெற்று விளங்குகின்றன. இதனை,

    காயா கொன்றை நெய்தல் முல்லை
    போதவிழ் தளவமொடு பிடவு அலர்ந்து கவனிப்
    பூ அணி கொண்டன்றால் புறவே
    பேர் அமர்க்கண்ணி ஆடுகம் விரைந்தே.  
    (ஐங். 412)

    என்ற பாடல் மூலம் காணலாகிறது. இங்கு ‘ஆடுகம் விரைந்தே’ என்று கூறுவது தலைவனுக்கும் தலைவிக்கும் பொழிலாடுதலில் மிகுதியான ஆர்வத்தை ஏற்படத்துகின்றன. என்பதைக் கூறலாம்.

    அலவனாட்டம்:

    பண்டைய மகளிர் நண்டுகளை அவை வாழும் வளையினின்றும் வெளிப்படச் செய்து அவற்றை அலைத்து விளையாடுவது மரபாகும். இதனை அலவனாட்டல் என்பர்.

    முள்ளிவேர் அளைக் களவன் ஆட்டி
    பூக்குற்றி எய்திய புனல்அணி ஊரன்.   
    (ஐங்.23)

    என்ற பாடலின் வழி அறியலாம். பண்டைய கால இளமகளிர் அனைவரும் ஒன்றுகூடி முட்செடியின் வேர்களுக்குகிடையே இருக்கும் வளைகளில் வாழும் நண்டுகளைப் பிடித்தும், பூக்களைப் பறித்தும் விளையாடி மகிழ்ந்தனர்.

    இலக்கு வளை தெளிர்ப்ப அலவ னாட்டி
    மகளிர் கடற்கரைக்குச் சென்று நண்டுகளைப் பிடித்து விளையாடிச் சென்றனர்.

    பைஞ்சாய் விளையாட்டு:

    பைஞ்சாய் என்பது கோரை வகையில் ஒன்றாகும். இக்கோரையாய் பாவை செய்து அதற்கு மலர்அணிந்து அழகு பார்ப்பதும். பாலுட்டுவதும் உண்டு. இது பேதைப் பருவ மகளிர் விளையாட்டுற்குரிய செயல்களாகும். மகப்பேறு அடைவதற்குகாக, தலைவி தலைவனோடு சேர்ந்துவாழ வேண்டும் என்று தோழி தலைவியிடம் கூறினாள். தலைவி அதனை மறுத்து ‘மகப்பேறு’ என்பது நான் இனிமேல் தான் அடைய வேண்டுமோ! நான் களவுக்காலத்திலேயே தலைவனுக்கும் பைஞ்சாய்க் கோரைப் பிள்ளையைப் பெற்றுதுண்டு என்று கூறினாள். இதனை

    ஓதமொடு பெயரும் துறைவற்கும்
    பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.   (ஐங்.155)

    என்ற பாடல்வழி அறியமுடிகின்றது. பைஞ்சாய்ப் பாவைக்கு மாலைகள் அணிவதற்காக தலைவி தனித்தனியே மலர்களைக் கட்டுகின்றாள் என்று இதில் சுட்டப்படுகின்றது.

    பொய்தல் விளையாட்டு.

    பொய்தல் விளையாட்டு என்பதை காமக் குறிப்பில்லாத விளையாட்டு என்று கூறுவர். காமக்குறிப்பில்லாத போதை மகளிர் பலர் கூடி இவள் கணவன். மனைவி என்று தம்முள் கூறிக் கொண்டு சிறு வீடு கட்டிச் சோறாக்கியும்.உண்டு அடுகின்ற ஆட்டம் என்று கூறுவதும் உண்டு. இவ்விளையாட்டை ஆடும் மகளிர் ஆட்டம் சலிப்படைந்தால் குரவையும் ஆடுவர் என்பதை,

    நெய்தல் உண்கண் நேர்இறைப் பணைத் தோள்
    பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்.     
    (ஐங்.181)

    என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது. தாம் கண்டதை, கேட்டதை சிறிதும் மறைக்காமல் வெளிப்படையாகக் கூறும் பருவத்தர் ஆதலின் பொய்தலாடிய மகளிர் பொய்யா மகளிர் எனப்பட்டனர்.

    விளையாட்டு முறை:

    புழந்தமிழ் மக்கள் எப்பொருளினை வைத்து விளையாடினர் என்பதனை ஐங்குறுநூறு உணர்த்துகிறது. தலைவி விளையாடிய பொருள்களைப் பார்த்து நற்றாய் வருந்தவதாய்ப் பல இடங்களில் வருகின்றன.

    நீர்நசைக் கூக்கிய உயவல் யானை
    இயம்புணர் தும்பினு யிர்க்கு மதிதம்
    சென்றனள் மன்ற வென்மகளே
    பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே.

    என்ற பாடல் வழி அறியலாம். பந்து, கழங்கு, வைத்து விளையாடி மகிழ்வது அவர்களுடைய பழக்கமாக உள்ளது. இதே போன்று தலைவனுக்கும் தலைவிக்கும் பிறக்கும் மகன் சிறுதேர்இனை உருட்டி விளையாடுகிறான் எனக் கூறப்படுகிறது.

    முடிவுரை:

    விளையாட்டு என்பது மகிழ்விற்கான செயல்பாடேயாகும். அவ்விளையாட்டு பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, உடல்நலம், மனநலம்,    பேணுபவையாகவும் அமைகின்றது. இதில் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டு முறை, விளையாட்டின் வகைகள் போன்றவற்றை எடுத்துக் காட்டப்படுகின்றது. இவ்விளையாட்டுக்களை மக்கள் ஓய்வு நேரங்களைக் கழிப்பதற்கு விளையாடி மகிழ்கின்றனர்.

    பார்வை நூல்

    1. ச.வே. சுப்பிரமணியன் – ஐங்குறுநூறு
    2. புலியூர்க் கேசிகன் – சங்க இலக்கியம் எட்டுத்தொகை

    *****

    கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
    அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
    சிவகாசி

     

    Share
  • ஜெயமோகன் சிறுகதைகளில் புலப்படும் நிலைக்கலன்கள்           

    -போ.சக்திஜோதி

    முன்னுரை

    இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுகதைப் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜெயமோகன். இவர் நாகர்கோயில் வட்டார மக்களின் வாழ்க்கை முறைகளையும், மொழிநடை, பழக்கவழக்கங்களையும் தனது சிறுகதையில் கையாண்டுள்ளார். மேலும் இவரது படைப்புகள் யதார்த்தச் சித்திரிப்பு, மிகையான புனைவு, புராணச்செய்திகளின் புனைவு, கட்டுரை அமைப்புக்கொண்ட கதைகள், படிமங்கள் முதலியவற்றை நிலைக்கலன்களாகக் கொண்டுள்ளமையை இக்கட்டுரை விளக்க இருக்கின்றது.

    மொழிநடை:

    உள்ளத்து உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்த மொழி இன்றியமையாததாகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் “சிறுகதையில் இடம்பெறும் மொழியானது, கருத்து வெளியீட்டையும் உணர்ச்சிப் புலப்பாட்டையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறுகதையினை ஆராயுங்கால் ஆசிரியரது படைப்பு நோக்கு வெற்றி காண அவர்    தேர்ந்தெடுத்த மொழிநடை உறுதுணையாக ஆக்கம் தருகிறதா அல்லவா என்பதனை ஆராய வேண்டும்”1  என்ற மேற்கோளுக்கு இணங்க ஜெயமோகன் தன் சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ள மொழிநடையின் அவசியத்தை அறியமுடிகின்றது. சான்றாக,                                                                                                                                                      ‘பெயல எழுப்பி தெக்குக் கண்டத்தில போயி மட்டையோ தேங்காயோ விழுந்து கெடக்கா என்னு பாக்கச்சொல்லு; சின்வள எழுப்பாண்ட…’
    ‘காலம்பற  என்ன திண்ணிய? மரச்சீனி உப்புக்கண்டம் போட்டு கடுங்காப்பி எடுக்கட்டா? என்றாள்.                                                  இவ்வரிகளின் மூலம் ஆசிரியர் அப்பகுதி மக்களின்  மொழியை அப்படியே பயன்படுத்தும் வட்டாரப்போக்கு புலப்படுகிறது. வேறு வட்டாரத்தைச் சார்ந்தவர்களாக  இருப்பினும் இம்மொழிநடையை விரும்பி வாசிப்பவர்களாகவே இருந்தனர்.

    யதார்த்தச் சித்திரிப்பு:

    தேவகிச்சித்தியின் டைரி’ என்ற சிறுகதையில் இரண்டு தம்பதியர் இருக்கின்றனர். இளையவனின் மணைவியான தேவகிக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது. அதை யாரும் அறியாதவாறு எழுதி வருகின்றாள். ஒரு நாள் அந்நிகழ்வு தெரிந்தவுடன் அந்த டைரியை யாரிடமும் காண்பிக்கும் முன்பு எரித்து விடுகிறாள். அதில் மறைக்கப்பட  வேண்டியவை எவையும் இல்லை என்று கூறுகிறாள். இருப்பினும் அவளை விவாகரத்து செய்யுமளவிற்குச் சென்றுவிட்டது. இந்நிகழ்வினை ஆராயும்பொழுது, ஒரு பெண் தனக்கென்று ரகசியமான கருத்துக்கள் என்று எதையும் மறைத்து வைப்பதற்கென்று இச்சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற கருத்தைப் புலப்படுத்துவதை உணரமுடிகின்றது.

    வழிகாட்டி:

    பார்வையற்ற ஒருவர் தன்னுடைய கடுமையான பயிற்சியினாலும் முயற்சியினாலும் சிறந்தவராகத் திகழ முடியும் என்பதனை ஜெயமோகன் தன் சிறுகதை வழியே விவரித்துள்ளார். ‘மன்மதன்’ என்ற தலைப்பின் கீழுள்ள சிறுகதையில் பார்வையற்ற ஒருவர் கோயில் சிற்பங்களைப்பற்றி எடுத்துக்கூறும் வழிகாட்டியாக உள்ளார். அவரைக் கண்டவர்கள், இவரால் எவ்வாறு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் என்று எண்ணுபவர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், கோயில் சிற்பங்களின் வறலாறுகளை தெளிவாக எடுத்துக்கூறுகின்றர். இதன் மூலம் திறமைக்குத் தடைகள் கிடையாது என்ற கருத்தை பார்வையற்றோர்  வழி  மெய்ப்பித்துக்காட்டியுள்ளார்.

    புனை கதைகள்:

    ஜெயமோகன் பன்முகத்தன்மை கொண்ட சிறுகதைகளை ஒரே காலகட்டத்தில் எழுதியுள்ளமை சிறப்பிற்குரியது. இதன் காரணம் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அல்ல என்றும், அப்பொழுது என்ன தோன்றியதோ அதைப் படைப்பாகப் படைத்துக் காட்டியுள்ளதாகவும் அவரே குறிப்பிட்டுள்ளமையை அறிய முடிகின்றது. ஆசிரியர். புனைகதைகளில் மிகையான கற்பனைப்புனைவைப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ‘நாகம்’ சிறுகதை சான்றாக அமைந்துள்ளது. நாகத்திற்கும்  ஒரு பெண்ணின்மீது காமம் ஏற்பட்டு அவளைத்தேடி வருகிறது. அப்பெண்ணும் அதை ஒரு நாகம் எனக் கருதி அச்சம் கொள்ளவில்லை. அவள் அந்நாகத்தை ஒரு விஷமுள்ள மண்புழு என்றே நினைக்கின்றாள். எனவே ஒரு நாகத்திற்கும் மானிடப் பெண்ணுக்குமான காம உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் ஜெயமோகனின் புனைவுத்திறன் மிகையை நம்மால் உணர முடிகின்றது.                                                                                                                        பேச்சிப்பாறையின் வளங்களைப் பற்றிச் சிங்கனும் சிங்கியும் குறிப்பிடுகையில், சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற இயற்கை வளங்களோடு ஒப்பிடக்கூடியதாக உள்ளது. ‘படுகை’ என்ற தலைப்பிலமைந்த சிறுகதையில் மழை வளங்களினால் மக்கள் அனுபவிக்கும் செல்வச் செழிப்பினையும், மழை பொய்த்துப்போன காலத்தில் அம்மக்கள் படும் இன்னல்களையும் ஆசிரியர் படம்பிடித்துக் காட்டியுள்ளமையை அறியமுடிகின்றது.

    சமுதாயச் சூழல்:                                                                   ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழக்கூடிய மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படும். படைப்பாளி தன் சமூக வளர்ச்சிக்கான இலக்கியங்களையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னலம் கருதாமல் தொண்டு செய்யும் மனம் படைத்தவராகவும் திகழ்கிறார். சமுதாய வாழ்க்கை என்பது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நிலையை பெரும்பான்மை குறிப்பிட்டிருந்தாலும், பிற வட்டார மக்களின் நிலையையும் எடுத்துக் கூறுவதாக இருத்தல் வேண்டும். அவ்வகையில் ஜெயமோகன் சிறந்து விளங்குவதை அவரது படைப்புக்களின் வழி நம்மால் உணரமுடிகின்றது. படைப்பாளி என்பவன் சாதாரண மக்களிடமிருந்து தனித்துவம்பெற்றுத் திகழ்வதால்  வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சமுதாயம் தரும் பட்டறிவுகளை அப்படியே தம் படைப்புகளில் பதிவு செய்கிறார். இவ்வடிப்படையில் நோக்கும்பொழுது  படைப்பிலக்கியம் என்பது பலருடைய கூட்டு உற்பத்தியாகும். “நினைவானது மனத்தின் ஆசைகள், அபிலாசைகள், விருப்பு வெறுப்புகள் எப்படி தன் மனத்தில் தாங்கிப் பின் கனவு வழி வெளிப்படுமோ அப்படியே முத்திரை குத்தப்பெற வேண்டும்”2 என்ற கூற்று சமதாயத்திற்கும் படைப்புக்கும் உற்ற உறவை விளக்குகின்றது. சமுதாயத்தை நீக்கிவிட்டுப் படைப்பாளியை மட்டும் தனித்துப் பார்க்க இயலாது. சமுதாயம் கொடுக்கும் பட்டறிவு, மற்றும்அனுபவ அறிவு, அவனுக்குச் சமுதாயத்தின் மீதான வெளிப்பாடுகள், இவையே படைப்பாக உருவெடுக்கின்றன. ஜெயமோகன் தன்னுடைய பிறப்பிடமான நாஞ்சில் வட்டாரச்சமூகத்தின் தாக்கங்களையே பெரும்பான்மை படைத்திருப்பினும் மற்ற பகுதி மக்களின் வாழ்க்கை நிலையையும் படைத்துக் காட்டியுள்ளமையை மறுக்க இயலாது.

    ‘ஓலைச்சிலுவை’ என்னும் சிறுகதையில் நாகர்கோயில் பகுதியிலுள்ள பனையேறி நாடார்களின் வாழ்க்கை முறையைக் குறிப்பிட்டுள்ளார். அச்சமுதாயத்தில், ஒரு குடும்பத்தலைவன் தன்னுடைய தொழிலான பனையேறும் தெழிலில் ஈடுபடும்பொழுது,  பனைமரம் வழுக்கிக் கீழே விழுந்து இறந்துவிடுகின்றான். அவ்விழைவு அவனுடைய குடும்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றது. அவனுடைய குழந்தைகளின் வாழ்க்கையானது  செம்மைபெறாமல் திசைமாறிச் செல்வதினை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் குழந்தைகள் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கும் நிலையினையும், ஆரம்பக் கல்வியினைக்கூடப் பெறமுடியாமல் படும்  இன்னல்களையும் படைப்பாளி பதிவு செய்துள்ளார்.

    ‘சேறு’ என்ற சிறுகதையில் பிள்ளைமார் சமுதாயத்தில் வசதியாக வாழ்ந்த குடும்பம், சிறிது காலகட்டத்தில் மிகுந்த வறுமையில் வாடுகின்றது.  ஒரு வீட்டில் கணவன் இறந்துவிட்டான், அவனுக்கு இரண்டு ஆண்குழந்தைகள். வீட்டுத்தலைவியானவள்  வேலைக்குச் சென்றும் பழக்கம் கிடையாது. சிறு பொருட்கள் வாங்கக்கூட கடைக்குச்சென்று பழக்கப்படாதவள். சூழ்நிலை காரணமாக வயல்வேலைக்குச் செல்கின்றாள். அந்த வேலையைச் சரியாகச் செய்யாத காரணத்தால், அவளுடன் வேலை பார்ப்பவர்களின் எள்ளலுக்கு ஆளாகின்றாள். இதனால் மனமுடைந்து வேலைக்குச் செல்லமுடியமால், தன் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதினை நம்மால் உணரமுடிகின்றது.

    முடிவுரை:                                                                                           ஜெயமோகன் மார்க்சியச் சிந்தனைவாதியாகவும், சமூகச் சிந்தனைகளையும் கொண்டு  இலக்கியத்தில் தனக்கென ஒரு தனித்த இடத்தினைப் பிடித்தவர்.  இவருடைய சிறுகதைகளின் நிலைக்கலன்களாகப்  பொதுவுடைமைச் சிந்தனையும், யதார்த்தமும்,  புனைவும் வெளிப்பட்டுள்ளமையை  இக்கட்டுரையின் வழி  விளங்கிக்கொள்ள முடிகின்றது.

    அடிக்குறிப்பு:

    1.மீனாட்சி முருகரத்தினம், கல்வியின் சிறுகதைக்கலை,

    2.தமிழவன்,மு.நூ.,ப.61

    *****

     கட்டுரையாளர் –  தமிழ்  முனைவர்பட்ட ஆய்வாளர் ,
    அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
    சிவகாசி.

    Share
  • திருக்குறளில் ஆளுமை மேம்பாடு

    -இரா.சத்தியலட்சுமி

    முன்னுரை

    மக்களுடைய வாழக்கையை அகம் புறம் என்று பாகுபாடு செய்து அதன் பல்வேறு இயல்புகளை நுட்பமாக ஆராய்ந்த சங்க காலத்தையொட்டிப் புறப்பொருளின் ஒரு பகுதியாகிய அறத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் அறநூல்கள் பல இயற்றப்பட்டன. அவை அமைப்பு முறையாலும்  அறிவுறுத்தும் கருத்துக்களாலும் தனிப்பட்டதோர் இலக்கிய வகைமையாகச் சிறப்புற்று விளங்குகின்றன. அவற்றைப் பிற்காலச் சான்றோர்கள் நீதி நூல்கள் என்னும் பெயரால் அழைக்கலாயினர். அவற்றுள் திருக்குறளும் ஒன்று.

    ஆளுமை

    ஆளுமை உணர்வு அனைத்து உயிர்களிடமும் காணப்படுகின்றது. அது அறிவு  உள்ள மனிதனிடம் மேலோங்கி நிற்கிறது. ”யுங்” முழுமையான ஆளுமையைத் தற்பவம் (self) என்று புலப்படுத்துகிறார்.

    ஃப்ராய்டு ஆளுமை குறித்து உணர்த்துகையில் நடத்தையியலும் (behaviourism) ஆளுமையியலும் இயைபுத்துறைகள் (associates) ஆகும் என்கிறார். நடத்தைகளுக்கான காரணிகளைக் கண்டறியும் போக்கில் ஆளுமை உளவியல் தோன்றிற்று என்பர். நனவிலியே மனித ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்று ஃப்ராய்டு குறிப்பிடுகிறார். குழந்தைப்பருவ அனுபவங்கள் மனித ஆளுமையின் பெரும்பங்கு வகிப்பதாகக் குறிப்பிடுவார்.

    மேலும் ஆளுமை மனிதனிடம் காணப்படும் ஒட்டுமொத்த குணங்களின் தொகுப்பாக அமைவது. இத்தகைய ஆளுமையைக் கொண்டு ஒருவரை அடையாளப்படுத்திட முடியும். இதனை ஒரு மனிதன் மனிதனாக வாழவும் மாமனிதனாக மேம்படவும் அவனுக்கு அடிப்படைத்தேவை ஆளுமைத்திறனாகும். (personality) இத்திறனை மேம்படுத்த (developement) மனிதன் பல களங்களில் செயல்பட வேண்டும். ஆளுமைத்திறன் என்பது ஒரு மனிதனுடைய குணங்களின் (characters) திறமைகளின் (talent) தொகுப்பாகும். 

    திருக்குறளின் தனிச்சிறப்பு:

    இலக்கியம் என்பது மனித இனத்தின் அனைத்துலக மொழியாகும். அது குறிப்பிட்ட பண்பாட்டு வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்து அனைத்துலக நோக்கோடு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளையும் எண்ணங்களையும், எழுச்சிகளையும், வேட்கைளையும் குறிக்கோள்களையும் பிரதிப்பலிக்கிறது. இலக்கியத்தின் சிறப்பினை இலக்கியம் அளிக்கும் இன்ப நிலைபேறுடையதாக இருக்க வேண்டுமானால் மனித வாழ்க்கையை மேம்பாடுடையதாக்கும். அறநெறிக் கருத்துக்களும் அனுபவ உண்மைகளும் அதில் பெற்றுத்தான் ஆக வேண்டும். அப்பொழுதுதான் அது வாழும் இலக்கியமாக விளங்க முடியும் என்று டி.எஸ். எலியட் குறிப்பிடுகிறார். படைக்கப்பட்ட இலக்கியத்தில் முக்காலத்திற்கும் பயனுடையதாக முக்காலத்திற்கும் பொருந்துவதாக  திருக்குறள்  உள்ளது. 

    திருக்குறளில் ஆளுமை:

    திருக்குறள் மனிதனது ஆளுமைப்பண்பை மேம்படுத்துவதற்குத் தக்க வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனிடத்தும் இறை அம்சம் பொருந்தியுள்ளது. அவன் தன்னை விலங்குகள் போன்றோ குற்றம்புரிந்தவன் என்றோ எண்ணி தாழ்த்திக் கொள்ள வேண்டியதில்லை நம்பிக்கையோடு வாழ வேண்டும்.  இதனை,

    வையத்திள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.     (குறள்.50)

    என்று கூறினார் திருவள்ளுவர். எனவே வாழ்வாங்கு வாழ அவன் தன் ஆளுமைப் பண்பை மேம்படுத்திக் கொள்வது அவசியம். அப்பொழுதுதான் அவன் தன்னிடம் உள்ள உயர்ந்த இறைப்பண்பை உணர்ந்து உயர்நிலையை அடைய முடியும்.

    ஒருவர் நமக்குத் தீங்கிழைத்ததாக நாம் கருதினால் உடனே அவருக்குப் பன்மடங்கு தீங்கிழைக்க விரும்புகிறோம். எவ்வளவோ நல்ல செயல்கள் சாதனைகள் செய்வதில் நம் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு அவருக்குத் தீமை செய்வதிலேயே நமது சிந்தனையையும் செயல்திறனையும் வீணாக்கும்போது நமது மன அமைதி சீர்குலைகிறது.

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்.      (குறள்.314)

    என்றார் வள்ளுவர். நன்மை செய்ய நமக்கு மனம் வராவிட்டாலும் பழிவாங்கும் எண்ணத்தை விட்டுவிடுவதாலே நம் மனம் அமைதி பெற முடியும். நம் மனத்தைப் பிற செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். 

    கல்வி சிறப்பு:

    கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் வாக்கிற்கிணங்க கல்வியின் அவசியத்தைப் பற்றி வள்ளுவரும்,

    கற்க கசடறக் கற்பவை கற்றப்பின்
    நிற்க அதற்குத் தக.    (குறள். 391) என்று குறிப்பிட்டதோடு, எண்ணும் எழுத்தும் வாழும் மனிதர்ளுக்கு உயிர். கல்வியினால் அறிவு பெருகும். ஆகையால் அனைவரும் கல்விகற்று வாழ்க்கையில் உயர வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

    சீரிய ஆளுமைப் பண்பு உடையவர்கள் எந்த ஒரு பிரச்சனையையும் துணிவோடு சமாளிக்க வேண்டும் என,

    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு  (குறள்-382)

    என்ற குறளில் தான் எதிர்கொள்ளும் எந்த ஒரு பிரச்சினையைக் கண்டும் அஞ்சி ஒளிந்துவிடாது துணிவோடு சமாளிப்பது  சிறந்த பண்பு எனக் கூறுகிறார். 

    மன ஒழுங்கு:

    தான் மேற்கொண்டிருக்கின்ற செயல்திட்டத்தின் மீது மனதை ஒருமுகப்படுத்தி அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்ற தன்மை ஒரு தலைவனுக்குத் தேவையானதாக இருக்கிறது .இதனை,

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.        (குறள்.666)என்ற குறளில் எண்ணியார் என்ற சொல் ஒருவரின் மன உறுதியைக் குறிக்கிறது. ஒரு செயலைச் செய்ய நினைப்பவர் மன உறுதிஉடைய ஆளுமைப் பண்பு கொண்டவராகத் தான் எண்ணிய எல்லா இலக்குகளையும் திட்டமிட்டப்படி தவறாது செய்து முடிப்பார்கள் என்று கூறுகிறார். மேலும்,

    கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கம் கடிந்து செயல்.     (குறள்.668) ஏற்றுக் கொண்ட தொழிலை மனங்கலங்காமல் காலந்தாழ்த்தாமல் சோர்வில்லாமல் முயற்சியோடும் தன் மன உணர்வோடும் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் தன் குறள்வழி எடுத்துக் கூறுகிறார்.

    மாபெரும் செயலைச் செய்துமுடிப்பதற்கு மனவலிமைதான் அடிப்படைக் காரணமாக அமைகிறது. எத்தகைய சூழலிலும் தளராத மன வலிமையை

    உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னும் செருக்கு.  (குறள்.598) என்னும் குறளில் ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் உயர்ந்த நிலையை அடைந்து விட்டோம் என்னும் பெருமையை ஒருபோதும் அடைய மாட்டார்கள் எனக் கூறுகிறார்.

    ஒருவர் ஆளுமைப்பண்பில் சிறந்து விளங்கினால் சமூகம் அவனைப் பாராட்டும். சமூகத்திற்கேற்ற முறையில் பண்புகள் சிறந்திருத்தல் நலம்.   இதனை,

    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.      (குறள்.140) 

    என்னதான் பல துறைகளில் தேர்ச்சிபெற்று கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும் உலகத்தோடு ஒத்துவாழக் கற்றிருக்க வேண்டும் என வள்ளுவர் எடுத்துக் கூறுகிறார். 

    தலைமைப் பண்பு:

    தனக்குக் கீழ் செயல்படுவர்களின் தனித்திறனை அறிந்து அவர்களுக்குரிய பணிகளை ஒதுக்கீடு செய்வது தலைமைக்குரிய தனித்திறனாகும். இதனை வள்ளுவர்,

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.      (குறள்.517) என்ற குறளில் இந்தச் செயலை இந்த முறையில் இவன் செய்து முடிப்பான் என்று தெரிந்து அச்செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

    சோர்வு இல்லாது அஞ்சாது சொல்வதற்கு வல்லனாகச் சொல்லின் செல்வனாக ஒருவன் திகழ்வானேயானால் அவனை யாராலும் வெல்ல இயலாது என்று அறுதியிட்டு கூறுகிறது குறள். இதனை,

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.     (குறள்.647)

    என்ற குறளில் ஒருவன் பேச்சுத் திறனோடு விளங்கினால் எதையும் வெல்ல இயலும் எனக் குறிப்பிடுகிறார்.

    உறவு மேம்பாடுக்கான வழிகள்:

    மனித உறவுகளை மேம்படுத்த வேண்டிய ஒருவர்  சினம் என்னும் தீய பண்பை அறவே ஒழிக்க வேண்டும். சினம் என்னும் தீய குணம் உடையவர்களை தீய குணமே அழித்து விடும். அதுமட்டும் இல்லாமல் நீண்ட நாட்களாகப் பாசம் கொண்ட உற்றார் உறவினர் நண்பர் ஆகியோர் அவர்களிடம் இருந்து பிரித்து விடும் இதனை வள்ளுவர்,

    சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
    இனம்என்னும் 
    ஏமப் புணையைச் சுடும்.       (குறள். 306)

    என்ற குறளில் எடுத்துக் கூறுகிறார். மேலும் தீய செயல்கள் பிறர்க்கு மட்டும் இன்றி நமக்கும் தீய விளைவுகளையே ஏற்படுத்தும்; எனவே தீய எண்ணம் தீய செயல் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும் இதனைத்

    தீயவை தீய  பயத்தலால்  தீயவை
    தீயனும் அஞ்சப் படும்.    (குறள்.202) என்று தன் குறள்வழி வள்ளுவர் எடுத்துக் கூறுகிறார். 

    முடிவுரை:

    மனிதன் ஆளுமைப் பண்போடு வாழ்வதற்குத் திருக்குறள் ஒரு வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது. அவற்றில் மனிதன் இறைத்தன்மை உடையவனாகவும், அவனுடைய சிந்தனையின் செல்வாக்கு, மனப்பாங்கு, கற்கும் கல்வியின் பெருமை, மனம் கலங்காத தன்மை, மன உறுதி, ஊக்கமுடைமை, பேச்சுத்திறன் போன்றவற்றில் ஆளுமை மேம்பாடு உடையவனாக விளங்க வேண்டும் என வள்ளுவர் தன் குறள்வழி எடுத்துக் கூறுகின்றார்.

    பார்வை நூல்

    1. எஸ். சுந்தரசீனிவாசன் – ஆளுமை மேம்பாடு
    2. பரிமேலழகர் உரை – திருக்குறள்

    *****

    கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
    அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
    சிவகாசி

     

    Share
  • பொருநராற்றுப்படையில் மனிதவள மேம்பாடு

    -மு.சுமதி

    முன்னுரை:

    மனிதவள மேம்பாடு எனப்படுவது இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், முறையாகக் கையாண்டு தன் ஆற்றல்களைப் பயன்படுத்தி,  மேலும் விரிவடையச் செய்வதாகும். நாட்டில் உள்ள மக்களின் கல்வி, விவசாயம், தொழில், மருத்துவம், மக்களின் ஒற்றுமை, தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், ஒழுக்கம், நிதி, நீதி, போர்வெற்றி, பெருந்தன்மை, விருந்தோம்பல் ஆகியவற்றை விளக்குவதாகும்.

    தேவைக் கோட்பாடு:

    மனித வளமானது பணியாளார்களின் உள்ளார்ந்த திறமைகள், அவர்கள் பெற்ற அறிவு மற்றும் ஆற்றல்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. மனித இனம் மேம்பாடு அடைய வேண்டுமெனில் மனித உறவுகள் மேம்பட வேண்டும். மனித உறவுகளை மேம்படுத்த ஒவ்வொருவரின் மனமும் மேம்பட வேண்டும். ஒரு மனிதன் தன்னை மேம்படுத்திக் கொண்டு சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டுமென்றால் முதலில் அவன் உடல் நலத்துடன் இருப்பது இன்றியமையாததாகும். ஒரு மனிதன் பசியோடு காணப்பட்டால் அவன் திறமைகளை வெளிக்காட்ட முடியாது. எனவே பொருநர்கள் கரிகாற் பெருவளத்தானிடம் சென்று இசையை மீட்டிப் பாடல் பாடி அவனை இன்புறச் செய்து தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள முற்படுகிறார்கள்.

    பழுமரம் உள்ளிய பறவையின் யானுமவன்
    இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்  (பொருநர்-65) பழுமரத்தைப் பறவைகள் நாடிச் செல்வதைப் போலப் புரவலர்களை நாடி மக்கள் செல்வது இயல்பு என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார் இதனை,

    பயன் மரம் உள்ளப் பழுத்தற்றாற் செல்வம்
    நயனுடை யான்கட் படின்.    (குறள்.216) என்று விளக்குகிறது குறள். 

    பொருநர்களுக்கு விழாக்காலங்களில் மட்டுமே யாழை மீட்டி ஆடிப்பாடும் வேலை இருக்கும். திருவிழாக் காலங்களில் மட்டுமே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். திருவிழா முடித்தபின் அவர்கள் வள்ளலை நாடிச் செல்வர். அவ்வாறு கரிகாலனிடம் பெரும்பரிசு வாங்கி வந்த பொருநர் மற்றொரு பொருநரை ஆற்றுப்படுத்தி அவரின் வறுமை நிலையினை மாற்றிச் செல்வச் செழிப்போடு வாழ வழிகாட்டுகிறார். 

    விருந்தோம்பல்:

    மனிதவள மேம்பாட்டில் அடிப்படைக் கூறே தேவைக் கோட்பாடு தான். மனிதனின் முதல் தேவையே அவனுடைய வயிற்றுப் பசியை நீக்குவதாகும். விருந்தினர்களைப் போற்றுதல் சமுதாய உறவுநிலை செம்மையடைய வழிவகுக்கும். விருந்து என்ற சொல்லைத் தொல்காப்பியர் புதுமை என்று குறிப்பிடுகிறார். நமக்கு அறிமுகமல்லாத புதியவர்களுக்கு அதாவது விருந்தினர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் இடம் போன்றவற்றைச் செய்வதே விருந்தோம்பல் தம்மைநாடி வருபவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தல் தமிழ் மரபு ஆகும்.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.    (குறள்-322) என்ற குறள்வழி நின்று வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள். பரிசில்பெற வேண்டி வந்த பொருநரைக் கரிகாலன் அரண்மனையில் கண்டஉடன் விரைந்து வருகிறான். அவர் பாடலைக் கேட்ட  கரிகாலன் அவருக்கு வெகு அருகில் அமர்ந்தான்; தன் கண்களால் பொருநரை விழுங்கிவிடுவது போல் அன்புடன் பார்த்தான்; அந்தப் பார்வை பாணரின் உள்ளத்தைக் குளிர வைத்தது.

    பருகு அன்ன அருகா நோக்க மோடு
    உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ (பொருநர் 78-79)ஒரு மனிதனின் தன்னிறைவுத்  தேவையென்பது பிறிதொரு மனிதனின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றுவதாகும்.

    தொழில்வள மேம்பாடு:

    ஒரு மனிதன் செய்யும் தொழிலால் மனிதவள மேம்பாடு ஏற்படலாம். ஆயர், உழவர், கூத்தர், கொல்லர்,  கம்மியர், வணிகர்.  தச்சர் ஆகியவற்றுள் தலையாயத் தொழிலாகக் கருதப்படுவது உழவுத் தொழில் ஆகும்.

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.    (குறள்.1033)என்று வள்ளுவரும் உழவுத் தொழிலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். காவிரியின் நீர் வளமையால் கரிகாலனின் நாடு செழுமையோடு காணப்படுகிறது. அங்கு விவசாயம் மேலோங்கி நெற்பயிர்களின் குவியல் மேருமலை போல காட்சியளிக்கிறது.

    “   கூனிக் குயத்தின் வாய்நெல் அரிந்து
    சூடு கோடாகப் பிறக்கி நாள்தோறும்
    குன்று எனக்குவைஇய குன்றாக் குப்பை
    கடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும்
    சாலி நெல்லின், சிறைகொள் வேலி,
    ஆயிரம் விளையுட்டு ஆக ,
    காவிரி புரக்கும் நாடு கிழவோனே” வற்றாத காவிரி நீர்ப்பாசனத்தால் உழவர் நல்ல விளைச்சலைக் கண்டு பெருமைப்படுகின்றனர். காவிரி நாடு தன் நாடு என்று வீரமுழக்கம் அடையும் அளவிற்குக் கரிகாலனின் நாட்டு மக்கள் தொழிலால் மேம்பட்டுக் காணப்படுகிறார்கள்.

    பொருநர்கள் தம் யாழை மீட்டிப் பாட்டுப் பாடும் வல்லமை படைத்தவர்கள். பாணர்கள் தங்கள் தொழில் கருவியான யாழின் மேல் அதிக பற்றுடையவர்கள். பாலையாழ் மூலம் இசைக்கப்படும் இசையை அனைவரும் இரசிப்பர். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட யாழின் இசையைக் கேட்டதும், தங்கள் கொலை, கொள்ளைத் தொழிலை மறப்பர். தங்கள் கைகளில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக் கீழே போட்டு விடுவர்.

    ஆறுஅலை கள்வர் படைவிட அருளின்
    மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை. (பொருநர் 21-22) என்ற பாடலின் மூலம் பொருநர்கள் தம் தொழிலில் மேம்பட்டுக் காணப்பட்டதை அறிய முடிகிறது.

    புலமை மேம்பாடு:

    பொருநர்கள் இசைக் கலையை நன்கு அறிந்தவர்கள் அக்காலத்தில் கலைஞர்கள் பிற கலைஞர்களையும் மதித்தனர்.

    கோடியர் தலைவ கொண்டது அறிந
    அறியாமையின் நெறிதிரிந்து ஒராஅது
    ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே
    போற்றிக் கேண்மதி புகழ் மேம்படுந (பொருநர் 57-60) பரந்த உள்ளம் கொண்ட பொருநர்கள் தாம் பெற்ற நன்மையைப் பிற பொருநர்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த மேம்பாட்டுடன் காணப்பட்டனர். இவ்வாறு தனிமனிதன் உடல், உள்ளம், தொழில், புலமை, ஆகியவற்றால் மேம்பாடு அடையும்போது சமுதாயமும் தானாகவே மேம்படும் நிலை உருவாகும்.

    சமுதாய உணர்வினால் ஏற்படும் மனிதவள மேம்பாடு:

    ஒருவனுக்குத் தான் வாழும் சமுதாயத்தின் மேல் பற்றும், பாசமும், தன் சமுதாயத்தில் வாழும் மக்கள் மீது அக்கறையும் இருக்க வேண்டும். கரிகாற் சோழனக்குத் தன் நாட்டில் வாழும் மக்களிடம் மட்டுமல்லாமல் தன்னை நாடி வரும் வறிய கலைஞர்கள் மீதும் அக்கறை காணப்படுகிறது.

    வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
    குறிஎதிர்ப்பை நீர துடைத்து.   (குறள்.221)என்ற குறளுக்கேற்ப வறியவார்களிடம் ஈகைப் பண்போடு செயல்படும் ஆளுமைத் திறன் உடையவனாகக் கரிகாலன் காணப்படுகிறான்.

    வறியவர் செல்வந்தராக மேம்படுதல்:

    ஒரு மனிதர் வறுமை உடையவரா, செல்வந்தரா, என்ற நிலையினைப் பிரித்துக் காட்டுவது அவர்களுடைய ஆடை அணிகலன்களே ஆகும். பொருநர் கரிகாலனைக் காண வரும்போது கிழிந்த வேர்வையால் நனைந்த ஆடைகளுடன் வந்தார்.

    ஈரும் பேனும் இருந்து இறைகூடி
    வேரொடு நனைந்து வேற்றுஇழை நுழைந்த
    துன்னற் சிதாஅர் துவர நீக்கி  (பொருநர் 79-81) வறுமையால் வாடிநின்ற பொருநர்களின் ஆடைகளைக் களைந்து அதி அற்புதமான நூலிழையால் செய்யப்பட்ட புத்தம்புது ஆடைகளைக் கொடுத்து அணியச் செய்தான்; அந்த ஆடையில் பூ வேலைப்பாடு நெய்து தரத்தில் பாம்பின் தோலை ஒத்திருந்தது.

    நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
    அரவுஉரி அன்ன, அறுவை நல்கி,
    மழைஎன மருளும் மகிழ்செய் மாடத்து,
    இழைஅணி வனப்பின் இன்நகை மகளிர்
    போக்குஇல் பொலங்கலம் நிறைய பல்கால்
    வாக்குபு தரத்தர வருத்தம் வீட
    ஆர உண்டு பேரஞர் போக்கி
    செருக்கொடு நின்ற காலை (பொருநர் 82-89)

    விருந்தினர்களுக்கு ஆடைகள் மட்டும் நல்காமல் அரண்மனையில் உள்ள பணிப்பெண்களை நடனமாடி விருந்தினர்களின் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அவர்களுக்குப் பொன்னால் ஆகிய கிண்ணத்தில் கள் நிறையக் கொடுப்பார்கள். அவர்களின் கவலை அனைத்தும் மறந்து மனம் இன்பமடையும் பாணர்கள் இன்பமுற்று தங்கள் ஊருக்குப் புறப்படுகிறோம் என்று கூறினால் இன்னும் சிறிது நாள் தங்கும்படிச் சொல்வான் கரிகாலன். யானைகளையும் அதன் குட்டிகளையும் பரிசில்களையும் கொடுத்து அனுப்புவான்; விருந்தினர் கிளம்பும்போது அவர்களுடன் ஏழு அடி பின் சென்று இன்முகத்தோடு வழியனுப்புவான்.

    கரிகாலனின் நுண்ணறிவு மேம்பாட்டுத் திறன்:

    கரிகாலன் தன் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசாளும் தகுதி பெற்றவன். கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி அவன் பிறப்பதற்கு முன்பே உயிர்நீத்தார். ஆகவே கரிகாலனுக்கு கருவில் வளரும் போதே அரசருக்குண்டான தகுதி கிட்டியது. பெரும்பாலான உளவியலாளர்கள், மரபுத்தன்மை, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் நுண்ணறிவு வளர்ச்சிக்கு உதவுவதாக நம்புகின்றனர். ஒருவரின் நுண்ணறிவுக்கு மரபுப்பண்பு மட்டும் 80 சதம் பொறுப்புடையது. மீதமுள்ள 20 சதம் நுண்ணறிவு வளர்ச்சியைப் புற உலகில் கல்வி, சூழ்நிலை இவற்றிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். எனவே கரிகாலன் மன்னர் பரம்பரையை உடையவன் ஆதலால் சிறு வயதிலேயே அவனிடம் நுண்ணறிவு வெளிப்பட்டுக் காணப்படுகின்றது.

    கரிகாலனிடம் ஒரு வழக்கு தீர்ப்புக் கேட்டு வருகின்றது. வழக்கை உரைக்க வந்தவர்கள் இவன் சிறுவன் இவனால் எப்படி தீர்ப்பு கூற முடியும் என்று ஐயம் கொள்வதை அறிந்த கரிகாலன் வயது முதிர்ந்தவர்போல் வேடம் புனைந்து கொண்டு அறங்கூறு அவையத்து இருந்த வழக்கை ஆராய்ந்து முடிவு கூறினான். அம்முடிவு நீதியோடு பொருந்தி ஒத்திருந்ததைக் கண்டு அவ்வழக்காளரும் பிறரும் மகிழ்ந்தனர் என்ற செய்தியை,

    இளமை நாணி முதுமை எய்தி
    உரை முடிவு காட்டிய உரவோன் மருக   (மணிமேகலை.107- 108) என்று மணிமேகலையிலும்

    ‘உரை முடிவு காணான் இளமையோன் என்ற
    நரைமுது மக்கள் உவப்ப – நரை முடித்து
    சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
    கல்லாமற் பாகம் படும்’ (பழமொழி -21) என்ற பழமொழி நானூற்றில் வரும் பாடலாலும் அறிய முடிகிறது. 

    கரிகால் வளவனது பேராண்மை:

    தன் நாட்டு மக்களையும், இயற்கை வளங்களையும், பாணர்களையும் பாதுகாக்கும் கரிகாலன பிற மன்னர்களோடு போரிடும்போது அவனின் முகம் சீற்றம் அடையும்; கரிகாலனின் சீற்றத்திற்கு அசுரர்களை வென்ற முருகக் கடவுளின் சீற்றம் உவமையாகக் கூறப்படுகிறது.

    பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
    வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு
    பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன்
    நாடு செகிற் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப (பொருநர் 135-138) கதிரவன் காலையில் உதித்ததும் கடலின்மீது தன் சுடர்களைப் பரப்புவான் பின்னர் மெல்ல வானுக்குச் சென்று அங்கும் தன் கதிர்களைப் பரப்பி உலகிற்கு ஒளியைத் தருவான். கதிரவன் போன்று கரிகாலனும் பிறந்து தன் தாய்நாட்டைத் தன் பேராண்மையால் காத்தவன். பிற நாட்டையும் தன் வீரத்தால் தமக்குரிய நாடாக்கிக் கொண்டவன். பொருநர் ஆற்றுப்படையில் முடத்தாமக் கண்ணியார் கரிகாலனின் வீரத்திற்கு முருகனையும் அவனின் ஆட்சி எல்லைக்கு கதிரவனின் கதிர்களையும் உவமையாகக் கூறுவதிலிருந்து அவன் பேராண்மை படைத்தவன் என்பதை உணர முடிகிறது.

    கரிகாலன் சிறுவயதிலேயே போரில் பகைவரை வென்றவன் என்பதற்குத் தாய்ப்பால் அருந்தும் குட்டிப் பருவத்தில் இருக்கும் யாளி உவமையாகக் கூறப்படுகிறது. யாளி (அரிமா சிங்கம்) குடடிப் பருவத்திலேயே பெரிய யானையை வேட்டையாடிவிடும் அதைப் போலவே கரிகாலனும்

    வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
    கண் ஆர்கண்ணி, கரிகால் வளவன்
    தாள்நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
    தொழுதுமுன் நிற்குவிர் ஆயின்      (பொருநா் 147-150 ) பனம்பூ மாலையை அணிந்த சேரனையும் வேம்பு மாலையை அணிந்த பாண்டியனையும் வெண்ணி என்ற இடத்தில் போரிட்டு அவர்களை வென்றவன்; ஆத்தி மாலையை அணிந்த கரிகாலன் பகைவரின் சதியால் அவனின் கால்கள் தீக்கிரையாயின ஆகவே அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான்.

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சுஆணி அன்னார் உடைத்து. (குறள்.667) உருவத்தால் சிறியவர்கள் என்று யாரையும் இகழக் கூடாது. கரிகாலன் சிறு வயதிலிருந்தே நுண்ணறிவு கொண்டும் சேரர், பாண்டியர்களை அழித்துத்தன் நாட்டைக் காக்கும் பேராண்மை படைத்தவனாகவும் காணப்படுகிறான். கரிகாலன் சிறுவயதிலேயே பெரிய வினைகளைக் கொண்டு உய்க்கும் திட்பம் உடையவனாக, ஆளுமைப் பண்போடு சங்க இலக்கயங்களில் தனக்கென ஓர் இடம்பிடித்துள்ளான் என்பதில் ஐயமில்லை

    படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு     (குறள். 381)

    அரசருள் தலைவன் ஆவதற்குத் தகுதி உடையவனிடம் நல்லபடை, நல்ல குடிமக்கள், நல் உணவு, தேவையான அளவுக்கு உற்பத்தி ஆகும். சூழல், நல்ல அமைச்சர் நம்பிக்கைக்குரிய நண்பர்கள், நல்ல இயற்கை அரணும், செயற்கை அரணும் இருத்தல் வேண்டும். இப்பண்புகள் அனைத்தும் ஒருசில மன்னர்களிடம் மட்டுமே காணப்படும். சங்க இலக்கியமான பொருநராற்றுப் படையில் கரிகாற் பெருவளத்தானிடம் திருக்குறள் கருத்தில் உள்ள அனைத்துப் பண்புகளும் நிறைந்து காணப்படுவதை அறிய முடிகிறது.

    முடிவரை:

    இவற்றான், கரிகாற் சோழன் என்ற மன்னன் தன்னை மட்டும் அல்லாமல் தன்னுடைய சமுதாயத்தையும் மேம்படுத்துபவனாகக் காணப்படுகிறான் என்பதையும், மனிதவள மேம்பாடு பற்றிய கோட்பாடு சங்க இலக்கியமாகிய பொருநராற்றுப்படையில் இடம் பெற்றிருப்பதால் அக்கால மக்களின் பண்பட்ட மனநிலையையும் நம்மால் அந்நூல்வழி அறிந்துகொள்ள முடிகிறது.

    பார்வை நூல்கள்

    1.பத்துப்பாட்டு மூலமும் உரையும் – முனைவர் இரா.மோகன்

    2. சங்க இலக்கியத் தேன் துளிகள் – சி.டி.சங்கர நாராயணன்.

    3. இலக்கியமும் நவீன வாசிப்பும் – சி.சரவணஜோதி

    *****

    கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
    அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
    சிவகாசி.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (282)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில், அடுத்தொரு மடலுடன் உங்களிடையே உலவ வருகிறேன். ஓடி,ஓடிக் களைக்கவில்லை உலகம், பாடிப் பாடிச் சலிக்கவில்லை குயில், பேசிப் பேசி ஓயவில்லை கிளி, வீசி, வீசி ஓயவில்லை காற்று, பொழிந்து, பொழிந்து வற்றவில்லை மழை, ஒளிர்ந்து, ஒளிர்ந்து அழியவில்லை ஆதவன், தேய்ந்து, தேய்ந்து தன்னை முழுவதுமாய் முடிக்கவில்லை நிலா. ஆம் இவையெல்லாம் எமக்கு இயற்கையன்னை தந்த பரிசு. இவைகளெல்லாம் தமக்களிக்கப்பட்ட கடமைகளை காலத்தோடு நிறைவேற்றிக் கொண்டேயிருக்கின்றன. யாருக்கு தம்முடைய தேவை இருக்கிறதோ? அன்றி யாருக்குத் தேவைப்படவில்லையோ? எனும் கவலையின்றி ஓய்வின்றி தமது கடமைகளை ஆற்றிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் . . . . உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

    ப்ரெக்ஸிட் எனும் அந்தப்பெரிய குழி தோண்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதைச்சுற்றிய வாதங்களும், பிரதிவாதங்களும் ஓயாமல் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இதுவரை அந்த ப்ரெக்ஸிட் எனும் சுழியினுள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த எமது பிரதமர் தெரேஸா மே அவர்கள் அதற்போது அந்தச் சுழலுக்குள் இருந்து மெதுவாக தனது தலையை உயர்த்தியுள்ளார். அவரது தலை மட்டுமே தெரிகிறது உடல் இன்னமும் அந்தச் சுழிக்குள் தான் அகப்பட்டு இருக்கிறது. அப்படியே உள்ளே இழுபட்டு விடும் அபாயம் அவரை விட்டு இன்னமும் அகலவில்லை. இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனது கோடைகால விடுமுறையைக் கழித்துக் கொண்டிருப்பதால் அவர் இன்னமும் கடித்துக் குதறப்படாமல் இருக்கிறார். இந்த நிலையில் தான் அவரது கால் முதன்முறையாக ஆபிரிக்க கண்டத்தினுள் பதிந்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நைஜீரியா நாட்டினுள் நுழைந்திருக்கிறார். அவரது இந்த விஜயம் பற்றி அவர் ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு முடிந்த பின்னால் ஜக்கிய இராஜ்ஜியம் தனது எதிர்கால வியாபார விஸ்தரிப்புகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அமையும் எனும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

    பிரதமர், அடுத்த வருடம் மார்ச் 29ம் திகதி ஐக்கிய இராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக முற்றாக வெளியேறிய பின்னால் அதிககாலம் தனது பதவியில் நீடித்திருக்க வாய்ப்பில்லை என்பது கணிசமான அரசியல் அவதானிகளின் கணிப்பாகும். அதற்கு ஏதுவாக சமீபத்தில் பிரதமரின் ப்ரெக்ஸிட் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யப்போகும் உடன்பாட்டைப் பற்றிய அறிக்கையை எதிர்த்து தனது பதவியை இராஜினாமாச் செய்த முன்னால் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜான்சன் தொடர்ந்து பிரதமருக்கு எதிரான பல பத்திரிக்கை அறிக்கைகளை வெளியிட்ட வண்ணமிருக்கிறார். வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் பிரதமரின் அரசியல் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் வருடாந்தர மகாநாட்டின் போது பிரதமருக்கு எதிரான சவால் பொரிஸ் ஜான்சனிடமிருந்து வரலாம் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் நமது பிரதமரும் சளைத்தவரல்ல ! இந்த வெளிநாட்டுப் பயணத்தின் போது உடன் சென்ற ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டியில் எவ்வகையான எதிர்ப்பு எவரிடமிருந்து வரினும் அதனை நான் எதிர்கொண்டு வெற்றிகொள்வேன் என்றும் எமது இந்த அரசியல் பயணம் எனது நாட்டு மக்களின் வாழ்வைச் சுபீட்சமாக்கும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவில் அவரை வரவேற்ற ஒரு பாடாசலை மாணவர்களின் நடனத்தில் தானும் இணைந்து ஆடிவிட்டாரே ஒரு நடனம் பாருங்கள் ! பார்த்த பொரிஸ் ஜான்சன் கூடக் கலங்கியிருப்பாரோ ?

    இதுவெல்லாம் இப்படியிருக்க எமது ட்ரம்ப் அண்ணா எப்படியிருக்கிறார் ? ஐக்கிய அமெரிக்காவின் ஒரு இராணுவக் கதாநாயகர் என்று வருணிக்கப்படும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் முன்னால் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மக்கெயின் அவர்களின் மறைவின் போதும் சர்ச்சையைக் கிளப்ப எமது அண்ணா தவறவில்லை. அமெரிக்க வியட்நாம் யுத்தத்தின் போது போரில் ஈடுபட்டிருந்த ஜான் மக்கெயின் அவர்கள் இரு இராணுவக் கைதியாக பிடிபட்டு பல சித்திரவதைகளுக்குள்ளாக்கபட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட போது அமெரிக்கா முழுவதனாலுமே நாட்டுத் தியாகியாக மதிக்கப்பட்டவர். அவர் பின்பு அரசியலில் ஈடுபட்டு ஓபாமா அவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். எப்போதும் தமது கருத்துக்களை அது தனது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட துணிந்து உரைத்து வந்தவர் ஜான் மக்கெயின். அவர் எமது ட்ரம்ப் அண்ணாவின் பல செய்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஒரு சமயம் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் ட்ரம்ப் அண்ணா அவர்கள் எதிரிகளால் கைப்பற்றப்படாமல் போரிடும் வீரர்களே தியாகிகள் , கைப்பற்றப்பட்ட ஜான் மக்கெயின் அல்ல என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். கடந்தவாரம் ஜான் மக்கெயின் அவர்கள் புற்றுநோய் காரணமாக இயற்கையெய்தியது அனைவரும் அறிந்ததே. அப்போது அமெரிக்காவில் அனைத்து முக்கிய ஸ்தலங்களில்லும் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டிருந்தது. ஆனால் ட்ரம்ப் அண்ணாவின் வெள்ளை மாளிகையில் ஒரே ஒருநாள் மட்டுமே அரைக்கம்பத்தில் பறந்தது. கொதித்தெழுந்தனர் அமெரிக்கர்கள். ஊடகங்கள் அனல் கக்கின. பயந்து விட்டார் ட்ரம்ப் அண்ணா என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! இறக்கி விட்டார் கொடியை மீண்டும் அரைகம்பத்தில்.

    போகப் போகத் தெரியும். . . . இந்தப் பூவின் வாசம் புரியும் . . . .

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180830 Dialogue with Arjuna A4 watercolour graphite 100dpi lr

    பாரங்கே பர்த்தனே, போர்ரதம் காத்திருக்கு
    யார்கண்கள் பட்டதோ யாமறியோம் -தேரின்
    கொடியுச்சி நீலகண்டர்(அனுமார் ருத்திரன் அம்சம்) கொக்கரிப்புகரிப்பு வெற்றி!
    மடியுச்சி கொண்டதேன் மண்டு….!

    ”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
    நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
    பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே
    பார்த்தால் புசிக்கும் பகை”….கிரேசி மோகன்….!

     

    Share
  • ரமணாயனம்…..தொடர்ச்சி….அமுத சுரபியில் வெளிவந்தது…..!

     

    ஞான காண்டம்
    —————-

    பிறவிப் பிணியை அறவே அகற்றி
    துறவுக்கும் அப்பால் திகழ்ந்த -பரிசுத்த
    ஆவியைக் கண்டதால் அர்ச்சிப்பீர் ‘’பகவானாய்”
    காவிய கண்டமுனி கூற்று….(26)

    இகவாழ்வின் அச்சம் இயலாமை கோபம்
    புகவொண்ணா சாத்வீகம் பெற்றும் -பகவானை
    மண்ணிட்ட மீனாக மாற்றியது , தண்ணீராம்
    அண்ணா மலையார் அழைப்பு….(27)

    நானாட்சி போனதால் நாடுடல் நாட்டம்போய்
    வானாச்சு, மண்ணாச்சு வீரமெலாம் -மீனாட்சி
    சுந்தரேஸர் முன்பு சிலிர்த்துகுக்கும் கண்ணீரை
    இந்தரோஷம் ஆன்மன் இயல்பு….(28)
    வந்தான்ம வெள்ளத்தில் தன்தேகம் ஆட்டமுற
    சந்தேகம் கொண்டார் சுரமென்று -பிந்தையோர்
    போதில் ‘’ இருந்துட்டு போகட்டும் என்றிருந்தேன்
    ஏதோ சுகமிருந்த(து) என்று….(29)

    விளக்கெண்ணை போன்ற இலக்கண பாடம்
    கலக்கிட வேம்பாய்க் கசந்து -இலக்கில்லா
    நீண்ட வெளிதனில் மூண்ட பரவசத்தில்
    ஆண்டவன் போலானான் ஆழ்ந்து….(30)

    தம்பியின் மேல்வைத்த நம்பிக்கை பொய்த்திட
    வெம்பிய அண்ணன் வெகுண்டுரைத்தான் -கொம்பையும்
    சொம்பையும் ஏந்திடும் சாமியார் வாழ்க்கைக்கு
    சம்பளக் கல்வி செலவு….(31)

    அன்பால் உரைத்தது அம்பாய் உறுத்திட
    கண்பாரா காட்சி குருடனுக்கேன் -தன்போர்வை
    ஆவணக் கல்வியல்ல கோவணச் செல்வமென்றான்
    மூவிழிக் காரன் மகன்….(or)
    மூவிழியோன் தத்து மகன்….(32)

    அண்ணனே முன்வந்து அஞ்சுரூ பாதந்து
    தின்னது போதுமெனத் திட்டிவிட்டு -தன்னுடைய
    கல்லூரி சம்பளமாய் கட்டென்(று) உரைத்தது
    செல்அருணை ஆச்சு செவிக்கு….(33)

    நானென் தகப்பனை நாடியவர் உத்திரவால்
    காணப் புறப்பட்டேன், ஏனென்று -வீணாய்
    விசனமேதும் வேண்டாம் வெகுநல்ல கார்யம்
    அசலம்தான் இஃதுக்(கு) அகம்….(or)
    அசலம்தான் இதுக்கிங்(கு) அகம்….(34)

    என்று கடிதம் எழுதியதும் இப்படிக்கு
    ஒன்றுமே போடா(து) உணர்ந்தவன் -இன்றண்ணன்
    சம்பளம் கட்டவில்லை என்பதைப் பின்குறித்து
    தன்பலம் நோக்கித் தவம்….(35)

    தாதை தெரிந்தாலும் கீதை புரிந்தாலும்
    பாதை அறியாத பார்த்தனாய் -ஏதோ
    ரயிலேறிச் சென்றான் ரகசியமாய்த் தன்னை
    கயிலாயன் கையில் கொடுத்து….(36)

    வண்டி ரயில்போகும் திண்டிவனம் தானென்று
    பண்டித முஸ்லீம் பயணிசொல்லி -அண்டி
    அருகமர்ந்து இஸ்லாமை ஆராயக் ,கற்றான்
    குருவருவார் எவ்வடிவும் கொண்டு….(37)

    விழும்புறத்தை வென்றோன் தொழும்முஸல்மான் தோளில்
    விழுப்புணர்வு நீங்க விழித்தான் -விழுப்புரத்தில்
    விள்ளல் பேரிக்காய் வள்ளலாய்ப் போக்கியது
    பிளைப் பசிக்கொடுமை பார்த்து….(38)

    பட்டுச் சிவப்பாக கட்டுக் குடுமியில்
    நிட்டையில் நின்றவரின் ஞானத்தில் -கட்டுண்டு
    முட்ட உணவிட்டு மாம்பழப் பட்டுசெல்ல
    துட்டைத் திணித்ததவர் தொண்டு….(39)

    தரைவழி சென்றோன் இருள்வரும் நேரம்
    அறையணி நல்லூர் இறைவன் -கருவறை
    முன்வாசல் மண்டபத்தில் கண்கூசும் ஜோதியில்
    தன்கோசம் தான்மறந்தான் துய்த்து….(40)

    உண்ணா மயக்கமது அண்ணா மலைத்தொண்டு
    பண்ணோர்க்கும் உண்டோ பகவானே -என்னாச்சு
    பாழும் பசியால் பகவான் விழலாமா
    கீழனூர் காரணத்தைக் கேள்….(41)

    புடமிட்ட பொன்னாய் பகவானை மாற்ற
    படமிட்ட பாம்பின் விடத்தை -மிடறுற்றோன்
    செய்த விளையாடல் சேயும் உணர்ந்தான்’தான்’
    எய்த சிவதனுசின் அம்பு….(42)

    பாகவதக் கண்ணன் பகவான் ரமணராய்
    தாகம் பசியில் தவிப்பதை -பாகவதர்
    முத்துக் கிருஷ்ணருக்கு சித்தம் உரைக்கத்தன்
    பத்தினியிடம் கொண்டான் பகிர்ந்து….(43)

    ஆய்ப்பிள்ளை கண்ணனுக்(கு) அன்று பிறந்தநாள்
    தாய்க்குலமும் தர்மத்தில் தாராளம் -பாய்ந்தவனை
    இல்லம் இழுத்துப்போய் அள்ளக் குறையாத
    வெள்ளமாய் இட்டாள் விருந்து….(44)

    கரும்பு விருந்துக்குக் கூலியாய் காதில்
    இருந்த கடுக்கனை ஈடாய் -வருந்தி
    செலுத்தியவன் கையில் செலவுக்கு நான்கை
    அளித்தனன் பாகவதன் அன்று….(45)

    கடுக்கன் அடகுவைத்த காகிதத்தை ஞானி
    இடுக்கண்ணாய் எண்ணி எறிந்து -மிடுக்காய்
    அதிகாலை வேளையில் அண்ணா மலையில்
    குதிகாலை வைத்தான்சத் குரு….(46)

    அருணை காண்டம்
    ——————-

    அருணாசல மகிமை
    ——————–

    அவனியின் கர்வம் அருணையாம் பர்வம்
    சிவனிதய மர்ம ஸ்தலமாம் -புவனத்தின்
    ஆன்மீக நெஞ்சமாம் , அண்ணா மலைதீபம்
    ‘’நான்’’மோகம் நீக்கும் நெருப்பு….(47)

    ஆரூர் பிறந்தோர்க்கும் அக்காசி மாய்ந்தோர்க்கும்
    பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும் -நேரும்
    திருநாளாம் முக்தி அருணா சலத்தை
    ஒருநாள் நினைத்தாலே உண்டு….(48)

    பூசை புரியாது , ஈசன் திருநாமம்
    ஓசை செவியில் ஒலிக்காது -ஆசை
    பலவசம் போயும் மலைவலம் செய்ய
    இலவசம் முக்தி இணைப்பு….(49)

    மின்னிடும் பொன்னாய் , மிளிரும் வயிரமாய்
    திண்ணிரும்பாய் பாறையில் தத்துவமாய் -மண்ணில்
    யுகந்தோறும் மாறும் முகங்கொண்ட ஈசன்
    புகுந்திருக்கும் ஜோதிப் பிழம்பு….(50)

    அருணா சலத்தோன் அடிமுடி தேடி
    திருமால் அயனன்று தோற்க -உருவாய்
    உயர்ந்து விசும்படைந்த ஊன்றி உலகைப்
    பெயர்ந்த பரமே பொருப்பு….(51)

    சம்பந்தாண் டானன்பில் சிக்கியதால் தம்மகனை
    அம்பிகை தன்ணைப்பில் ஆட்கொண்டும் -கம்பத்தில்
    கந்தனொடு காளி கடவுள்கள் ஆடினர்
    சந்தம் அருணகிரி சொல்….(52)

    சந்திரன் வெண்குடையாய் சூரியன் கைவிளக்காய்
    இந்திரன் பூக்களை இறைத்திட -வந்து
    கரவலம் தந்து கயிலாயம் சேர்க்கும்
    கிரிவலம் வந்தோர்க்(கு) அறம்….(53)

    குளித்து மடியாய் வெளுத்த நுதலாய்
    உளத்தில் அரனை உடுத்தி -களைத்த
    நிறைகர் பிணியாய் நிதானம் காத்து
    வரைசுற்ற வாழ்வில் வளம்….(54)

    வந்த மகனை வரவேற்க கோவிலில்
    தந்தை இருந்தான் தனியாக -சிந்தை
    ஒருமித்(து) இருவரும் ஒன்றியதின் சாட்சி
    அறுவத்தி மூவராம் அங்கு….(55)

    ‘’அய்யா குடுமியைக் கொய்யவா’’ கேட்டவனை
    அய்யனின் சித்தமாய் ஆதரித்து -அய்யன்
    குளப்படியில் குந்தி கெளபீணம் சூடி
    தலைபடிந்து ஏற்றார் துறவு….(56)

    நாவிதர்க்கு நன்றிசொல்லி சாவிதந்த பொம்மையாய்
    கோவிலுக்கு சென்றோன்மேல் கொட்டியது -வாவியாய்
    வானத்து மேகமொன்று ஞானிக்(கு) அபிஷேகமாய்
    நானொழித்த மேனி நனைத்து….(57)

    ஆயிரங்கால் மண்டபத்தில் போயமர்ந்து தேகமாம்
    நோய்மறந்து ஆழ்ந்திருந்தான் நிஷ்டையில் -வாய்மலர்ந்து
    சேஷாத்ரி சாமிகள் பாசத் துடன்’’சின்ன
    சேஷாத்ரி’’ என்றளித்தார் சீர்….(58)

    உய்யும் தவம்கலைக்கும் பையன்கள் தொந்திரவால்
    அய்யன் இடமாற்றம் செய்தனன் -மையிருளாம்
    சாதா ரணர்களால் செல்ல முடியாத
    பாதாள லிங்க குகைக்கு….(59)

    பூரான் கறையான் புழுபூச்சி பல்லிகள்
    ஆரா அமுதாய் அவரெதிர் -பாரா
    உடலை ருசித்தும் கடவுள் நினைப்பில்
    ஜடமாய் இருந்தான் ஜெயித்து….(60)

    ஜாடியில் வைத்த சிவகடாட்ச ஊறுகாய்
    வாடாது பாதாள வாயிலுக்கு -மூடியாய்
    தானுகந்தான் தன்னை தவத்திரு சேஷாத்ரி
    ஞானியின்கால் ஞானம் அறிந்து….(61)

    வேதாளப் பையன்கள் விக்கிர மாதவத்தை
    சேதாரம் செய்ய சகியாது -பாதாளம்
    போன முதலியார் பார்த்தார் இருளிலும்
    ஞானக் கதிரவனை நன்கு….(62)

    பிராமண சாமியை பத்திரமாய்த் தூக்கி
    கிராமத்து மக்கள் கொணர்ந்து -பராமரிப்பாய்
    புண்ணான மேனிக்கு பாலா பிஷேகமாய்
    உண்ணா முலையாள் உணவு….(63)

    வாகன மண்டபத்தில் வில்வ மரத்தடியில்
    பூகனக்கும் நந்த வனப்புதரில் -மோகனமாய்
    யாகாவா ராயினும் நாகாத்(து) இருந்தனன்
    தேகான்ம பாவம் தொலைத்து….(64)

    சிவகங்கைத் தீர்த்தம் கவனத்தை ஈர்க்க
    அவனங்(கு) இலுப்பை இடத்தில் -தவசிங்கம்
    ஒத்திருந்த வேளையில் மெத்தப் படித்தவராம்
    உத்தண்டி சீடர் உறவு….(or)….
    உத்தண் டிநயினார் உற்று….(65)

    உய்யென்று வீசி உறையவைக்கும் காற்றுக்கு
    கையென்ற கம்பளியால் மெய்போர்த்தி -அய்யன்
    நயினார் நவில்கின்ற நூல்களின் ஞான
    வெயிலில் விடுத்தார் விறைப்பு….(66)

    வாசித்தார் கைவல்யம் வாசிஷ்ட யோகங்கள்
    ஆசிரிய ருக்கே அறிவுரையாய் -தேசிகன்
    கூடலில் பெற்றதைக் கற்றான் அருணையில்
    தேடல் தொலைந்தபின் தேர்வு….(67)

    தேவாரம் ஓதும் திருவருணைத் தம்பிரான்
    நாவார வேண்ட நயினாரும் -ஏ,வாரும்!
    ஆசானே என்றுரைக்கப் பேசாது போயமர்ந்தார்
    வாசம் குருமூர்த்தம் வந்து….(68)

    தென்முகத்தோன் , நந்தி தொடர்ந்து சனத்குமாரர்
    மண்ணில் பரஞ்சோதி மெய்கண்டார் -சொன்ன
    சிவஞான போதத்தைச் சேர்ந்தகுரு மூர்த்தம்
    தவமானோர் தங்கும் தரு….(69)

    பழைய சினேகிதனைப் பார்த்தகுரு மூர்த்தம்
    உழலும் எறும்புகள் ஊர்ந்து -கழலைப்
    பிடித்து பகவானின் பேரருளை வேண்டி
    கடித்ததில் கூலி கரும்பு….(70)

    முக்காலி போட்டு முழுமுதலை அவ்வறையில்
    உக்கார வைத்தாலும் ஊர்வனகள் -நிக்காது
    அண்டைச் சுவரேறி அய்யனின் குண்டலினித்
    தண்டில் வடம்பிடித்த தாம்….(71)

    தம்பிரான் பாலெண்ணை தேனென்(று) அபிஷேகச்
    சொம்புடன் வந்தங்கு சேர்ந்ததை -எம்பிரான்
    கண்டு சுவற்றில் கரியால் ‘’இதற்க்கென்றும்
    தொண்டிதுவே’’ என்றார் தடுத்து….(72)

    கோலத்து மாவுண்ண கூடும் எறும்புகளாய்
    பாலொத்த சேயை பெருந்திரளாய் -கால்இத்துப்
    போனாலும் கண்டார் , பிராமண சாமிமுகம்
    கோணாமல் வீற்றிருந்தார் கொலு….(74)

    அய்யன் குளப்பிள்ளை ஆனை முகனார்க்கு
    பையனாய் வாழ்ந்த பழனிசாமி -மெய்யன்பு
    பூண்டு ரமண பணியே பலனாக
    ஆண்டிருபத் தோரிருந்தார் அங்கு….(75)

    ஆன்மா ருசிகண்ட ஆனை ரமணர்க்கு
    ஊண்மா ருசியொழிந்து ஓய்ந்ததால் -வான்மேவும்
    ஊட்ட அமிழ்தையும் உண்பார் அடியார்தம்
    கூட்டான் சோறில் கலந்து….(76)

    கண்ணணைக்கும் ஆர்வமும் பெண்ணைக்கும் ஆசையும்
    உன்ணிணக்கம் சோற்றில் உழலுவதால் -சொன்னார்(அன்னமய)
    அழகாய் குமர குருபரர் கூற்றைப்
    பழக பகவான் பிறப்பு….(77)

    விடாக்கண்ட அய்யரென்ற வேங்கட ராமன்
    தொடாக்கண்டு அன்னத்தை , பேச்சு -கொடாக்கண்டர்
    ‘’வேங்கட ராமன் திருச்சுழி’’ என்றெழுதி
    ஆங்கிலத்தில் வைத்தார் அவர்க்கு….(78)

    குருமூர்த்தம் ஆண்டி ஒருமுகூர்த்தம் ஆண்டார்
    வரும்கூட்டம் வானாய் விரிய -அருகிருந்த
    தோப்பில் தனிமையைத் துய்த்தார் தனிமரமாய்
    தாப்பாள் தவத்தைத் திறந்து….(79)

    பரத்தை அறிந்த பகவான் ரமணர்
    மரத்துப் பரணில் மறைந்து -புறத்தை
    மறந்து வசித்தார் மலையாள சீடர்
    புரிந்த பணிவிடை பார்த்து….(80)

    மத்யான வேளையில் மாந்தோப்(பு) இனிமையில்
    அத்யந்த சீடன் பழனிசாமி -அத்யாத்ம
    ராமா யணத்தை ரசிக்க, மலையாள
    நாமா வளியுணர்ந்தார் நன்கு….(81)

    மதுரையில்
    ————–
    எங்கெங்கு தேடியும் வெங்கட ராமனின்
    தங்குமிடம் காணாத தாயார்தன் -சங்கடத்தில்
    சோர்ந்த சமயத்தில் சஞ்சீவி போலங்கு
    சேர்ந்தவர் சொன்னார் சுபம்….(82)

    ராவண நானொழித்து கோவண ஆடையில்
    சாவன மெய்யடக்கி சாந்தத்தில் -மேவிட
    மாமரத் தோப்பில் மாதவனாய் வேங்கட
    ராமனைக் கண்டேனென் றார்….(83)

    அருணை
    ———-

    சித்தப்பா நெல்லையப்பர் சோணையில் கண்டது
    சித்தப்பன் ஆன்மனின் சிந்தையாய் -எப்போதும்
    எங்கும் இருப்பதை இங்கே இழுத்தான்ம
    சிங்கத்தோல் போர்த்திய சிசு (or) சேய்….(84)

    மதுரையில்
    ————-

    தவமென்ன செய்தனை தாயழ கம்மே
    சிவனன்ன சேயை சுமக்க -அவனிருப்பு
    எல்லையிலா ஆன்மாவின் ஏகாந்த ஊரிலென்று
    நெல்லையப்பர் சொன்னார் நெகிழ்ந்து….(85)

    மகனெனப் பார்த்தேன் மகானாகப் பார்த்தான்
    புகழாய் இருக்கானுன் பிள்ளை -தகவலை
    மைத்துனர் சொன்னார் மதுரை மதனிக்கு
    பொய்த்தது தாயெதிர் பார்ப்பு….(86)

    அருணையில்
    ————–

    பிச்சை எடுக்க பிராமண சாமியை
    லஜ்ஜை தடுத்திட லேசாக -முச்சந்தி
    வாசியாய் கையேந்தி ஊசிய கஞ்சியை
    நாசிமுகர நானொழித்தார் நன்று….(87)

    உண்டு முடித்து உதறி கரங்களை
    சிண்டில் தடவிவெகு சந்தோஷமாய் -பண்டிதர்கள்
    வந்திருக்க சக்கர வர்த்திபோல் சந்திப்பார்
    தன்செருக்கை வென்று திமிர்ந்து….(88)

    பேசா மடந்தை பகவானை ஈசான்ய
    ஆசான் மடாதிபதி அன்போடு -வா,சாமி!
    தட்டாதே என்று தலைவாழை போட்டளித்தார்
    கட்டாய பிட்சை கொடுத்து….(89)

    மதுரையில் வந்த மரண பயமாம்
    புதிரவிழ்ந்து ஆன்மா பதிலாய்க் -குதிர
    எமாதி கணங்கள் எதிர்வர அஞ்சும்
    சமாதியில் நின்றார் சுகித்து….(90)

    வந்த அனுபூதி தந்த அமைதியில்
    எந்த சாதனையும் ஏற்க்காது -தந்தை
    அரனார் அகநானூற் றில்மூழ்கி விட்டொழித்தார்
    புறநானூ ரில்வாழ் பிறப்பு….(or)
    அரனக நானூற்றில் ஆழ்ந்தவர்க்கே விட்டார்
    புறநானூ ரில்வாழ் பொறுப்பு….(91)

    இடைச் செருகல்
    ——————-
    கண்ணன் கதைக்கு கிடைத்த சுகமுனிபோல்
    அண்ணல் பகவான் அவதார -எண்ணத்தை
    நால்வருணம் தாண்டிய பால்பிரண்டன் தீட்டினான்
    நூல்வடிவில் நானார் நிகழ்வு….

    கலப்பிலா ஆன்மக் கலப்பற்று ஊறும்
    உலப்பிலா ஆனந்தத் தேனை -அலுப்பிலா(து)
    உண்டு களித்தவரை ஊர்மக்கள் மொய்த்திட
    கொண்ட குகன்பவழக் குன்று….(92)

    ஈரைந்து மாதம் இடுப்பு வலியேற்று
    பாரம் தனைசுமந்து பெற்றவள் -சீரைந்து
    ஈசன் மலைமுடியில் ஆசை மகனிவரின்
    வேஷம் தனைக்கண்டாள் வேர்த்து….(93)

    சுருட்டையில் கண்ணன் சிகையொத்த ராமன்
    பரட்டையில் இன்று பகவான் -இருட்டை
    பகலாக்கும் தெய்வ மகனாக ஏற்க
    இகலோக தாய்க்கோ இருள்….(94)

    அழுதாள் அடம்பிடித்தாள் அங்கிருந்தோர் காலில்
    தொழுதாள் அழைத்தாள் துணைக்கு -எழுதிடும்
    ஏதேனும் என்றுரைத்தார் காதோரம் பச்சையப்பர்
    மாதா மனம்குளிர மாற்று….(95)

    பெற்றெடுத்த தாய்மல்லும் பச்சையப்பர் வாய்ச்சொல்லும்
    முற்றும் துறந்த முனிவரை -சுற்றிவர
    புன்முறுவல் பூத்து பகவான் எழுதினார்
    பின்வரு மாறு பணித்து….(96)

    பகவான் உவாச
    —————-

    சுவரென்ற சக்தி சுழற்றித் திருப்பும்
    கவணெறி வேகத்தில் கர்மம் -அவரவர்
    ப்ராரப்தம் என்று பணிந்தேற்றுக் கொள்வீர்
    வேறர்த்தம் எல்லாமே வீண்….(97)

    நடவாத ஒன்றை நமது முயற்சி
    நடத்தா ததுபோல் நிகழ்வும் -தடையாய்
    எவனென செய்தும் எழுவது திண்ணம்
    மவுனக் கிடக்கையே மட்டு….(98)

    செயல்புரியும் மோகம் ,செயல்பலன் தாகம்
    அயலாக எண்ணல் தியாகம் -வயலாம்
    விசாரம் விடுத்து விழலான வாழ்வின்
    அசாதா ரணத்திற்க்கேன் அப்பு….(99)

    சிந்தை விளையாட்டு செப்ப வினையாகும்
    விந்தையாம் ‘’ நானார்’’ விசாரணை -வந்ததோர்
    ஆணவத்தைக் கூண்டில் அமர்த்தி வினவிட
    நானவஸ்த்தை ‘’நான்’’என்பான் நைந்து….(100)

    மாயநான் மார்பில் மணிகட்ட பூனையாம்
    தூயநான் தோன்றிடும் தூண்பிளந்து -சீயமாய்
    ஆன்மா அதற்கிரை ஆனால் அதுஇறையாய்
    ‘’நான்’’போன நம்முள் நுழைந்து….(101)

    அன்பர்கள் காண்டம்
    ——————–

    தாய்வந்து போனதும் தட்சிணா மூர்த்தியிவர்
    வாய்திறந்து கண்டார் வெளியுலகை -போய்தினமும்
    பிட்சை எடுத்துண்பார் போதிப்பார் அன்பர்க்கு
    கொச்சை மழலையில் குரு….(102)

    விருபாட்சி தேவமுனி வீற்ற குகையில்
    அரசாட்சி செய்யவந்த அமலர் -திருநீற்றால்
    அங்கிருந்த மேடையில் லிங்கப் பிரதிஷ்டை
    தங்கக் கரங்களால் தொட்டு….(103)

    விதேகமுக்தி கண்ட விருபாட்ஷ தேவர்
    அதேகணத்தில் தற்சோதி ஆகி -சதாசிவத்துள்
    பாய்ந்த குகையில் பதினேழு ஆண்டுகள்
    வாழ்ந்த விருந்தினி வாய்க்கு….(104)

    அன்பர்கள் கூட்டம் அதிகரிக்க கட்டணம்
    வம்பர்கள் வாங்க விரும்பாத -நம்பவர்
    வேறுயிடம் செல்ல விருபாட்ஷி தேவனில்லா
    தேரடியாய் மாறவசூல் தீர்வு….(105)

    நானை ஜெயித்தவர்க்கு சேனை பரிவாரம்
    பானை பிடித்த பழனிசாமி -பூணும்
    அணிகலன் கோவணம் ஆஸனம் பாறை
    முனிகணமும் நாணுமிவர் முன்….(106)

    வீதி எறிந்த வெறும்தாள்கள் சேகரித்து
    ஆதிகுரு சங்கரர் ஓதியதை -ஆதரித்த
    சீடனுக்கு தட்ஷிணையாய் சீர்மலை யாளத்தில்
    ஏடெடுப்பார் ஏழ்மையை ஏய்த்து….(107)

    வாய்ஜபம் இல்லை வழுத்தலில்லை ருத்ராஷக்
    காய்முகம் இல்லை கழுத்தில்,மான் -பாய்விரிப்பும்
    இல்லை படுக்க இருந்தும் பரசிவ
    எல்லைக்கு காவல் இவர்….(108)

    மனத்திருடன் கையில் கனச்சாவி தந்து
    எனக்கென்ன என்றிருந்த ஏழை -தனிக்குகை
    இல்லத்தை மூடிவிட்டு செல்வமாம் ஞானமொடு
    செல்வாராம் பிட்ஷைக்கு சேர்ந்து….(109)

    கொள்ளைநோய்க் காலம் குடிபுகுந்தார் பச்சையம்மன்
    பிள்ளையாய் கோயில் பிரகாரம் -வெள்ளமாய்
    காவல் துறைக்கு கொடுத்ததை கொண்டவர்க்கு
    சேவகம் செய்தார் சமைத்து….(110)

    பங்கிட்டு உண்ண பிளேக்நோயால் அன்பர்கள்
    அங்கிட்டு செல்வதற்கு அஞ்சியதால் -வெங்கிட்டு
    ராமன்போல் உண்ட ரமணர் உடல்தேறி
    பீமன்போல் கொண்டார் பலம்….(111)

    பிணித்தொல்லை நீங்க பின்னர் பிறவிப்
    பிணித்தொல்லை நீங்க பகவான் -கனிச்சொல்லை
    ஆசையாய் கேட்கவரும் அன்பர்க்காய் மேற்கொண்டார்
    பேசும் விரதத்தைப் பூண்டு….(112)

    ஒன்றான ஞானம் ஒருநாளும் மாறாது
    கொன்று மனதைக் கொளுத்தியபின் -என்றார்
    மவுனம் கலைத்த மகரிஷியைக் கேட்க
    கவனம் கலையா சிவன்….(113)

    ஆனைவரும் முன்னே மணியோசை யாம்போலே
    நானறிந்த நம்மவர்க்கு முன்னமே -சோணையில்
    சென்றலைந்த சேஷாத்ரி சாமிகள் உற்சவராம்
    குன்றமர்ந்த மூலவர்க்கு காப்பு….(114)

    தாயார் மரகதம் தந்தை வரதராஜர்
    சேயாய்ப் புவிவந்த சேஷாத்ரி -மாயா
    அருள்சக்தி அம்சமெனில் அன்பே சிவத்தின்
    பொருளாம் ரமண பொருப்பு….(115)

    நடைபாதை பொம்மை நவநீதக் கண்ணன்
    கடைகாண சேயிவர் கேட்க -தடையின்றி
    தந்ததும் பொம்மைகள் தீர்ந்ததாம் விற்றுப்போய்
    அந்தக்கை தங்கக்கை ஆச்சு….(116)

    காசெறிந்து வீச கடைபுகுந்த சாமியை
    பேசா(து) எஜமானர் பார்த்திருப்பார் -மாசறு
    தங்கக்கை தொட்டு துலக்கியபின் தந்ததை
    அங்குண்பார் நாயோ(டு) அமர்ந்து….(117)

    எதிர்படுவோர் எண்ணம் எடுத்துரைக்கும் சாமி
    புதிர்பட மாந்தோப்பில் பார்த்தார் -‘’குதிருக்குள்
    அப்பன் இருக்கானா ? அப்படி என்னதான்
    இப்பயல் உள்ளத்(து) இயல்பு’’….(118)

    தன்னுணர்வு பெற்ற தவசீலர்க்(கு) எல்லாமே
    மண்ணில் பிரம்ம மலர்ச்சியென்று -சொன்னதாம்
    அன்னைக்கு கூடல் அறிவுரையாய் காஞ்சிக்கு
    அன்னைக்கு சேயாய் அமைந்து….(119)

    ‘’ என்னமோ சொல்றே எனக்கொண்ணும் தோணல
    பண்ணுவேன் பூஜை புனஸ்காரம்’’ -சொன்னபின்
    சேஷாத்ரி போட்டாராம் சாஷ்டாங்க சேவிப்பு
    மீசையில் மண்ணாய் மலைக்கு….(120)

    ரமணர் மனவாசி ராமசாமி அய்யர்
    சமணமிட்டு கேட்கையில் சொன்னார் -சமனமிவர்
    சேஷாத்ரி சிந்தையுள் சித்தராம், பித்தராய்
    வேஷாத்ரி சேட்டை வெளிக்கு….(121)

    சேஷாத்ரி சாமிகள் சித்தி தினத்தன்று
    ஆசான் அருகிருந்தார் அஞ்சலியாய் -நேசமிது
    நட்புறவா ? நன்றியா ? நல்லுணர்வா ? நாமறியோம்
    கட்புலன்கள் நீத்தார் கடன்….(122)

    தாளா வயிற்றுவலி தான்தீர தென்பழனி
    வேலா யுதன்மீது வர்ஷித்த -பாலாக
    உண்டர்த்த நாரி உடல்தேறி கந்தனின்
    தொண்டர்த்தம் கண்டார் தெளிந்து….(123)

    தீவனம் தேடிடும் ஆவினம்போல் அர்த்தநாரி
    மேவினார் அண்ணா மலைப்புரத்தில் -கோவணம்
    பூண்ட மகரிஷி வேண்டிய தென்பழனி
    ஆண்டவனாய்க் காட்சிதந்தார் அங்கு….(124)

    வந்தார் ரமணவழி வள்ளிமலை சாமிகள்
    சந்தத் திருப்புகழை சன்னதியில் -அந்தநாள்
    அர்த்தநாரி கூற அதைபகவான் கேட்டவர்க்கு
    அர்த்தமூற வைத்தார் அகத்து….(125)

    கூடி கிரிவலம் பாடி வருகையில்
    வேடச்சி காவல் வகுப்பினை -வாடி
    பசியுற்ற பக்தர்க்காய் பின்வரு மாறுரைப்பார்
    ருசியாய் ரமணர் ரசித்து….(126)

    ‘’எந்தெந்தா காவலனே ஏமேமி காவலனே’’
    சுந்தரமாய் ஸ்ரீபகவான் செப்பிட -மந்திரம்போல்
    இட்டிலி காவலனே கம்பளிச் சாமிசொல்ல
    சட்டினியும் வந்ததாம் சேர்ந்து….(127)

    நேச ரமணர்த்த நாரியை போவென்றார்
    ஆசிரமம் விட்டு அடிவாரம் -ஈசனின்
    இட்டமென்று போய்க்கண்டார் குட்டையில் சேஷாத்ரி
    கட்டிய வாறெருமைக் கன்று….(128)

    செங்கமல சேஷாத்ரி சேற்றில் புரண்டெழுந்து
    அங்கர்த்த நாரியைஆ ரத்தழுவ -எங்கெங்கும்
    வந்ததாம் சந்தன வாசம் திருப்புகழாய்
    எந்தரோம கானுபா வுலு….(129)

    சொச்சநச்சம் இல்லாது சொந்தங் களையிழந்த
    எச்சம்மா பாட்டி எஜமானர் -இச்சரிதை
    ஞானிக்கும் அங்கே தியானிக்கும் அன்பர்க்கும்
    வாயினிக்க இட்டாள் விருந்து….(130)

    கட்டிய கோவணமாய் கைகளில் செங்கல்லாய்
    கட்டுமான வேலையில் கண்டவரை -கிட்டவந்து
    ‘’கூலி!சொல் சாமியெங்கே?’’ கேட்க பகவானும்
    கேலியாய் செய்தார் குறும்பு….(131)

    எல்லாம் அறிந்தவர் சொல்லாமல் சொன்னாராம்
    நல்லாப்போய் தேடிடுவீர் ‘நான’னறிய -பொல்லாத
    இச்செய்கை ஏனென்ற எச்சம்மா கேள்விக்கு
    அச்சாரச் சொற்கள் அடுத்து….(132)

    ‘’நானொழித்த நானேபோய் நான்தான் பகவானென்(று)
    ஏன்மொழிய வேண்டும்சொல் எச்சம்மா’’ -வீணன்றோ
    நெற்றி யிலெழுதி நாமம் சுமப்பதும்
    பற்றென்றார் பாட்டியைப் பார்த்து….(133)

    தத்தெடுத்த செல்லம்மா பெத்தெடுத்து செத்திட
    வித்ததற்கு நாமம் ரமணனென்று -முத்தரிடம்
    கூறிக் கொடுத்திட பேரன் பகவான்கண்
    நீரினால் ஞான நனைப்பு….(134)

    தொடரும் அமைதிக்குத் தொய்வாம்இக் கண்ணீர்
    இடருமக்கு எப்படி என்றோர்க்(கு) (or)
    இடரருளை நீக்காதா என்றோர்க்(கு) -உடனே
    மடையா! அருளிங்கு மாபெரும் அன்பு
    அடைக்கும்தாள் இல்லை அதற்கு….(135)

    வினைகள் பயனாய் விளைவது கர்மம்
    அணைப்பும், அடியும் அதனால் -நினைத்திருப்பாய்
    ஈசனை நன்றியாய் இவ்வாழ்வில் வெல்வோம்நாம்
    வாசனை போக்கு வரத்து….(136)
    முப்பத்தெட்(டு) ஆண்டுகள் மூதாட்டி எச்சம்மா
    உப்பையுண்(டு) ஆண்டார் உடல்பகவான் -இப்பணிக்கு
    ஈடாம் சபரி இராமனுக்கு செய்தது
    வீடுற்றாள் தொண்டால் விரைந்து….(or)
    வீடாம் பதவிகிழ விக்கு….(137)

    சொத்தினை விற்றதில் சேர்த்த பணம்நூறு
    உத்தண்டி யார்குரு தட்ஷிணையில் -புத்தகமாய்
    செந்தமிழில் சங்கர சூடா மணிபதிப்பு
    தன்கரத்தால் செய்தார் தவம்….(or)
    தன்கரத்தால் செய்தார் தொகுப்பு….(138)

    காட்சிகள் ,காணும் கருவிழிகள் ,காணுதல்
    ஆட்சியில் சிக்காத ஆண்மகன் -சாட்சியாய்
    சந்திப்போர் புந்தியில் சிந்தித் தவருள்ளம்
    வந்திக்கும் தெய்வமா வார்….(139)

    காத்மண்டு பாண்டே கருவறை லிங்கத்தில்
    ஆத்மார்த்த அண்ணல் அருள்முகத்தை -பார்த்தவர்
    நூற்றுக் கணக்கில் நிமலர் சிரித்தவண்ணம்
    தோற்றம் கொடுக்கத் திகைப்பு….(140)

    சாத்திர வாரிதி சம்ஸ்கிருத சாகரம்
    பாத்திரம் பொங்காத பாற்கடல் -நாத்திறன்
    காவிய கண்டர் கணபதி சாஸ்திரி
    சாவிலான் பாதம் சரண்….(141)

    விருபாட்ஷிப் பொந்தில் வினாயகர் போன்ற
    சொரூபத்தைக் கண்டகண்டர் சொன்னார் -அருளாட்சி
    முக்காலம் செய்யும்இக் கோலம் கணேசர்
    சுக்லாம் பரதரம் செப்பு….(142)

    வெள்ளை அரைத்துணியில் பிள்ளை பிரம்மமாய்
    விள்ளல் நிலாவின் வசீகரத்தில் -உள்ளோன்
    மனம்புத்தி, சித்தம், மமகாரம் நான்கை
    இனம்கண்டு வென்றோன் இவன்….(143)

    பாதாதி கேசமாய் வேதாந்தம் பார்த்திருந்தும்
    ஆதார குண்டலினி ஆஸ்ரயித்தும் -மேதா
    விலாசத்தால் ஆசுகவி விற்பன்ன ராயும்
    கலாசித்தர்க்(கு) இல்லை களிப்பு….(or)
    கலாசித்தர் நெஞ்சில் குறை….(144)

    காண்டீபர் காவிய கண்ட கணபதி
    வேண்டினார் கண்ண பகவானை -ஆண்டவா
    ஏட்டுச் சுரைக்காய்நான் ஏகப் பழம்பொருள்நீர்
    காட்டும் கனியுதிர் கா….(or)
    காட்டும் கனியாகும் கற்பு….(145)

    ஜபதபம் செய்தேன் சபைதனில் வென்றேன்
    உபமானம் இல்லா(து) உயர்ந்தேன் -அபலையாய்
    கெஞ்சினார் கண்டர் கருணைக் கடலிடம்
    விஞ்சும் தவப்பயனை வீழ்ந்து….(146)

    பகவான் உவாச
    —————

    நானென்ற ஓசை நவில்வது யாரென்று
    ஊணுறக்கத் திற்க்கீடாய் உன்னிப்பாய் -காணென்றும்
    ஒன்றிவிடும் உள்ளம்நான் ஊறும் இடத்தினில்
    மன்றமது மெய்த்தவக் குன்று….(147)

    விழிப்பு, கனவு, விழுங்கும் சுழுத்தி
    கழிக்கும் அதுவே’நான்’ காண்பாய் -உழைப்பாய்
    உடலான்ம பாவம் ஒழிக்கும் விதத்தை
    அட!ஆன்மத் தேடல் அதற்கு….(148)

    வெட்டியான்போல் நின்று விசாரணைக் கோல்கொண்டு
    சுட்டும் எழும்பும் சவமனம்மேல் -பட்டென்(று)
    அடித்திட ‘நானும்’ அடித்திடும் ‘நானார்’
    தடிக்கொம்பும் சாம்பலாம் தீக்கு….(149)

    மந்திர ஓசையுள் ளெங்கிருந்து தோன்றுதென்று
    எந்திரமாய்ப் பார்க்க எழுவாய்க்குள் -வந்தடங்கும்
    உந்தன் மனது ஒடுங்கிட மிஞ்சிடும்
    விந்தை மவுனம் விளைந்து….(150)

    ஆடி அசைந்திடும் ஆனை துதிக்கையாய்
    நாடிச் சலித்திடும் நம்மனப் -பேடிக்கு
    சங்கிலியாய்த் தந்திடுவீர் சத்வ குணங்களை
    பொங்கியெழும் பாரான்மா பூத்து….(or)
    அங்கொளிரும் ஆன்மா அலர்ந்து….(151)

    உப்புபுளி காரம் உணவில் தவிர்த்திடுவாய்
    செப்பிறைவன் நாமம் , சரணென்று -ஒப்படைப்பாய்
    உன்னையொரு மூர்த்தியிடம் உள்ளே தியானித்து
    தொன்னைமனம் நெய்யான்மா தொப்….(152)

    காவிய கண்டர் கருணைக்கை தூரிகையால்
    ஓவியம் போலவர்முன் உட்கார்ந்தார் -மேவிய
    சந்தேகம் ஓய்ந்திட சஞ்சலம் மாய்ந்திட
    தன்தேக பாவம் தொலைப்பு….(153)

    இராமனம் வென்று மராமரம் போல்வாழ்
    பிராமண சாமிபெயர் சீடர் -சிறாருரைக்க
    வேங்கட ராமனுக்கு வேறுபெயர் கண்டரிட்டார்
    ஈங்கிவர் ஸ்ரீரமணர் என்று….(154)

    திருவொற்றி யூரில் தவமிருந்த போது
    உருவொத்து வந்த ரமணர் -சிரமொத்தி
    தன்சாரம் தீட்சையாய் தந்தாராம் கண்டர்க்கு
    மின்சாரப் பாய்வு முனிக்கு….(155)

    சுமாரோர் மாதத்தில் செய்ய நினைத்தகண்டர்
    உமசஹஸ்ரம் பெய்தாரோர் நாளில் -தமாஷாக
    ‘’என்ன கணபதி சொன்னது போதுமா’’
    கண்சிமிட்டிக் கேட்டார்சத் குரு….(156)

    பச்சையம்மன் கோயில் பகவான் இருக்கையில்
    உச்சிமுகர்ந்து சென்றதாம் நட்சத்திரம் -இச்சரியை
    ஆறுமுறை ஆக அங்கிருந்த சாஸ்திரியார்
    ஆறுமுகன்தான் என்றார் அடித்து….(157)
    விருபாட்ஷி மாடத்து வேழன்மேல் வெண்பா
    உருவாச்சு ஓர்நாள் பகவான் -திருவாக்கால்
    வேடிக்கை வெண்பாவை பாடி கணபதிக்கு
    கோடிட்டுக் காட்டியதைக் கேள்….(158)

    பகவான் சொன்ன வெண்பா
    —————————

    பிள்ளையாப் பெற்றவனைப் பிச்சாண்டி யாக்கியெங்கும்
    பிள்ளையாப் பேழ்வயிற்றைப் பேணினீர் -பிள்ளையான்
    கன்னெஞ்சோ மாடத்துப் பிள்ளையாரே கண்பாரும்
    பின்வந்தான் தன்னைநீர் பெற்று….(159)

    மாடத்துப் பிள்ளையே வேடன் விருத்தனாம்
    நாடகத்தில் நீரண்ண னானீர்காண் -பூடகமாய்
    அன்னைக்(கு) அறிந்தனை பின்னை மறந்தனை
    தொன்னைக்குள் நெய்யான தால்….(160)

    பெற்றதனால் ஆயபயன் பாமர ஞானிக்கு
    கற்றுக் கொடுத்தார் வடமொழி -முற்றும்
    மறந்தகுரு சீடனை மிஞ்சினார் நூல்கள்
    பிறந்தமொழி தன்னில் பெயர்த்து….(161)

    உபாசித்த வித்தை உடலை வதைக்க
    கபாலம் அனலாய் கொதிக்க -ப்ரபோவென்று
    கூவிட கண்டருச்சி தீவிடும் குண்டலினி
    தாவிட வைத்தாராம் தொட்டு….(or)
    தாவிடச் செய்தார் தணித்து….(162)

    ஆன்மீகம் தாண்டிய ஆத்மார்த்த கேள்விக்கு
    வான்மேகம் போல்பதில் வர்ஷிக்க -‘’நான்’’மீக
    பாதையைக் கண்டர் பதிவெடுத்து ஸ்ரீரமண
    கீதையாய் செய்தார் குறித்து….(163)

    சிவப்பிர காசமென்ற சைவத்துப் பிள்ளை
    தவப்பிர காசத்தில் தோய்ந்து -உவப்புற
    தானார்வக் கேள்விக்கு தந்த பதில்களால்
    ‘’நானார்’’நூல் தோன்றியதன் நாள்….(164)

    ஈரேழு கேள்விக்(கு) இவர்பதில் சொல்கையில்
    ஈரேழு ஏழாம் இவர்வயது -மாறாத
    மோனத் திருந்த மகானன்று மண்ணிலே
    மோனத் திருந்த மகானன்று மண்ணளைந்தார்
    ஞானத்தைக் கோலமிட்டார் நன்கு….(or)
    ஞானத்தைக் கோலம் இழைத்து….(or)
    ஞானத்தைக் கோலம் நுழைத்து….(165)

    பிள்ளைக்குக் கல்யாணப் பிள்ளையாய் மாறிடும்
    கள்ளம் கருத்ததிவர் உள்ளத்தில் -வெள்ளை
    முனியிடம் கேட்க முனைந்து வருகையில்
    வினையிடம் விட்ட(து) இனி….(166)

    நூற்றுக் கணக்கில் நிலவொளி வீசிட
    தோற்றம் ஸ்படிகத் திரளாக -சீற்றப்
    பிரகாச ஜோதி பகவானாய்க் கண்டுசிவப்
    பிரகாசம் கொண்டார் ப்ரமிப்பு….(167)

    பேரின்பம் கண்டதில் பிள்ளைவாள் மாறினார்
    வேறின்பம் வேண்டாம் ரமணரடி -யாரின்பம்
    போலுலகில் இல்லையென்று பெற்ற அனுக்கிரக
    நூலகவல் தந்தார் நிறைந்து….(168)

    பிணிவாசி ஆன மனவாசி அய்யர்
    குணவாசி ஆக குகையில் -மனவாசம்
    விட்டான்ம மேடையில் வீற்றோனை வேண்டினார்
    கட்டாயம் காப்பாற்றக் கேட்டு….(169)

    தயிர்சாதம் ,சுண்டல், புளியோ தரையை
    வயிறுவாத அய்யரின் வாயில் -துயர்நீங்க
    போட்டு விரட்டினார் வாட்டும் வயிற்றுவலி
    ஆட்டம் முடிந்ததாம் அன்று….(170)

    தீர்த்தர் வயிற்றுவலி தீர்த்தபின் அய்யர்க்கு
    கீர்த்தனைகள் கற்றுக் கொடுத்தாராம் -ஈர்த்தவர்
    சீனியுண்ண தந்தாராம் சம்பளமாய் சங்கீதம்
    ஞானியவர் நேசம் நெகிழ்வு….(171)

    கதராடை பூண்ட காந்திய வாதி
    பதறாது பக்த்ர்க்(கு) உதவும் -இதவாதி
    ராமனாதன் ராமன் ரமணர்க்(கு) அனுமனாம்
    சாமதான பேததண்ட சாது….(172)

    ராமனாத ப்ரம்மசாரி ராத்திரி பகலாக
    தாமுகந்து நூற்பாராம் தக்களியில் -கோமணமாய்
    தேசூரின் மஸ்தானிடம் தைக்கக் கொடுப்பாராம்
    ஆசான் மகிழ்வார் அணிந்து….(173)

    அருணா சலம்பிள்ளை ஆக்கன்(று) இரண்டை
    ஒருநாள் கொடுக்க ரமணர் -முரணாக
    ஆ!சிரமம் சொல்லாமல் ஆசிரமம் ஏற்றதாம்
    ஆசிரம ராமனாதர் அன்பு….(174)

    ஈன்ற பொழுதின் பெரிதுவந்தாள் லட்சுமிதாய்
    சான்றோன் பகவான்பால் சேர்ந்ததால் -தோன்றின்
    புகழோடு தோன்றும் பசுவுக்கு ஞானி
    புகலாக வாழ்ந்தார் பிறகு….(175)

    ஆங்கிலேய ஹம்ப்ரீஸ் அமானுஷ்ய ஆர்வமுற்று
    தூங்கிட சொப்பனத்தில் தோன்றியதாம் -ஆங்கொரு
    குன்றும், குளமும், குகையும், குருவொருவர்
    நின்று தவமாய் நிலைப்பு….(176)

    கண்ட கனவினை விண்டு வரைந்தவர்
    தொண்டர் நரசிம்மய் யாகுரு -கண்டருக்கு
    ஓவியத்தைக் காட்ட உடனழைத்துச் சென்றாராம்
    காவியத்தைக் காட்ட குகைக்கு….(177)

    ‘’உன்னையவர் பார்க்கையில் உன்கண் இருக்கட்டும்
    அன்னையவர் பார்வை அகலாது’’ -சொன்னமுனி
    தெம்பளிக்க தெய்வத்தின் அன்புவிழி ஆனந்தம்
    ஹம்பரீசின் வாக்கில் அடுத்து….(178)

    ஆழ்மன ஆற்றல் அவர்கண் வழியாக
    ஊழ்கண வெள்ளத்(து) உவமையாய் -சூழ்ந்திட
    மெய்யது கோயிலாய் தெய்வம் சுடர்விட்டு
    உய்வதைக் கண்டேன் உணர்ந்து….(179)

    நானார் விளக்கம் நமக்கே புரியாது
    ஆனாலும் சேய்கள் அவர்முன்பு -தூணாக
    ஆழப்புதைந்து காக்கும் அமைதியில் கண்டுகொண்டேன்
    வாழுமவர்க்(கு) இல்லை வயது….(180)

    பெண்ணழகு பூவழகு என்பர் பகவானின்
    புன்னகையைக் காணாத பேதைகள் -என்மனம்
    மட்டும் அறிந்ததோர் மர்மத்தைக் கூறினார்
    பட்டென்(று) எனதுள்ளே பாய்ந்து….(181)

    புத்தகத்தில் பாம்பாய் புகுந்து பிறரெண்ணம்
    புத்தகமாய்ப் பார்த்துப் படிக்கவல்ல -புத்தரவர்
    ஹம்ப்ரீஸ் வினவிட அன்போ(டு) உரைத்ததினி
    எம்பிரான் வாக்காய் எழுத்து….(182)

    பகவான் உவாச
    ——————

    ஞானம் நிரந்தர கானம் குழந்தைக்கு
    ஏனென்றால் ‘நானங்’(கு) எழவில்லை -பேணிடுவீர்
    பிள்ளைப் பருவத்தை பேசா விருப்பத்தை
    வெள்ளை மனதை வலிந்து….(or)
    உள்ளின் உவப்பை உகந்து….(183)

    உனக்குதவும் செய்கை உலகளாவும் சேவை
    பிணக்கிதில் நீவேறாய்ப் பாரை -நினைப்பது
    ஆன்மாவில் ஒன்றிட ஆளே(து) உதவிட
    வீண்பேதம் காணல் விலக்கு….(184)

    கண்ணனும் ஏசுவும் பண்ணிய அற்புதங்கள்
    என்னளவில் ஆகுமா என்கிறீர் -முன்னமவர்
    செய்யவந்த செய்கையை செய்வதாய்ச் செய்யவில்லை
    கைவந்தோர்க்(கு) ஈதியற்கை காண்….(185)

    சித்தி வலைதனில் சிக்கிடாது நீந்திடுவாய்
    சத்திய மெய்ஞான சாகரத்தில் -உத்தியாய்
    பூரண சரணத்தில் பூத்திருப்போர்க்(கு) இல்லைகாண்
    காரண காரியக் கட்டு….(186)

    மனவிளிம்புக்(கு) அப்பால் மனமுவந்து சென்று
    குணமளிக்கும் ஆன்மாவில் கூடு -நினைவளிக்கும்
    புத்தியோடு நில்லாமல் சத்தியத்தைப் பார்த்திட
    கத்தி விசாரணையால் கொத்து….(187)

    சூதாடி உள்ளமதன் மீதாடும் எண்ணமுடன்
    வாதாடி மாய்த்துமனம் வென்றிடுவாய் -ஆத்தாடி
    சித்தம் சிவமாகும் பித்தம் பிணமாகும்
    அத்தை உரைத்தல் அறிது….(188)

    கும்பிடும் தெய்வம் கிருத்துவோ கண்ணனோ
    நம்பிட நாமதுவாய் எம்பிடுவோம் -என்பதற்கு
    மாதிரியாய் வாழ்ந்த மகான்விடை பெற்றகன்றார்
    பாதிரியாய் ஹம்ப்ரீஸ் பணிக்கு….(189)

    சிவய்யாவும் மற்றும் சிலரே இருந்த
    அவைக்குள் நுழைந்ததும் அங்கு -தவய்யா
    நேரவர் உட்கார்ந்தார் நேரம் ஒருமணி
    யாரவர் பாரதி யார்….(190)
    அங்கிருந்த போது அறியார் ரமணரவர்
    பொங்குதமிழ் ஞானப் புயலென்று -எங்கிருந்தோ
    வந்தார் ,இடைச்சாதி நானொழித்த ராமனுக்கு
    தந்தார் அணிலாய்த் தமிழ்….(191)

    வாழ்க மஹரிஷியார்,வாழ்க பாரதியார்
    வாழ்க தமிழ்த்தவ வல்லார்கள் -வாழ்க
    திருவருணைக் குன்று திருவல்லிக் கேணி
    குருவருள் கொஞ்சுதமிழ் காப்பு….(192)

    crazy mohan
    Aug 29, 2018, 8:27 AM (22 hours ago)
    to crazy, bcc: me

    Translate message
    Turn off for: Tamil
    சுந்தர காண்டம்
    —————
    அருந்தவப் பிள்ளை அருகிருக்க அன்னை
    திரும்பவும் வந்தவள் நோயால் -வருந்திட
    வேண்டுதல் வேண்டாமை தாண்டியவர் ஆண்டவனை
    வேண்டினார் வெண்பா விடுத்து….(193)

    பகவான் தன் தாயார் குணமாக
    சொன்ன நான்கு வெண்பாக்களில் ஒன்று
    ————————————–
    காலகா லாவுன் கமல பதம்சார்ந்த
    பாலன் எனைஈன்றாள் பாலந்தக் -காலன்தான்
    வாரா வகையுன்கால் வாரிசமே காட்டுவா
    யாராயினும் காலனுமே யார்….(194)
    (வாரிசம்-தாமரை)

    பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
    எதிராக வந்த எமனை -குதிகாலால்
    மாய உதைத்த மகாதேவா மைந்தனென்
    தாயை அவன்நெருங்கத் தடு….(195)

    சாகா வரம்பெற்ற சேயால் உரமுற்று
    போகாத தாயாரைப் புண்படுத்த -ஆகாதோர்
    ‘’இங்கில்லா விட்டால் இடம்வேறு எங்கேனும்
    தங்கிடலாம் வாவென்றார் தாய்க்கு’’….(196)

    ஆகாதோர் அச்சமுற்று அண்ணல் அடிபணிந்து
    போகாதீர் என்று புலம்பிட -த்யாகேசன்
    ஆதரிக்கத் தானே அமர்ந்துள்ளேன் நானென்றப்
    போதுரைத்தார் புன்முறுவல் பூத்து….(197)

    முன்காவி சங்கரர் பின்கரும்பு பட்டினத்தார்
    தன்தாயார்க்(கு) ஈமத்தீ தந்தனரே -என்கோவில்
    பாசமிகு அன்னை புழங்கும் இடமென்றார்
    கோசல ராமனாய்க் கோன்….(198)

    அன்னைக்கு மிக்கதோர் ஆலயம் ஏதுதந்தை
    சொன்னசொல்லுக்(கு) ஈடாய் சுருதியுண்டோ-பின்னர்
    பிதாவுக்குப் போடாத பிட்ஷையை ஏற்க
    கதாபுருஷன் கொண்டார் கடுப்பு….(199)

    ராமனாத சாமி ரமணபிட்ஷை ஆனபின்பு
    தாமதமாய் தந்தைக்(கு) உணவளிப்பார் -கோமணத்தார்
    அப்பனுக்கு இட்டபின்பு அப்புறம் மீந்ததையிச்
    சுப்பனுக்கு போடென்றார் சோறு….(200)

    அப்பனாய் லட்ஷணமாய் அன்பு மகள்பசிக்கு
    உப்பிடாத உன்ஞானம் எப்பவும் -தப்புடா
    சுப்புரா மய்யா சிசுதெய்வ ரூபேண
    செப்பினார் சம்சார சத்து….(201)

    தலைகாயும் வெய்யில் தரையெல்லாம் முட்கள்
    மலைப்பாதை சுற்றும் மடையா -இளைப்பாறி
    சும்மா இருந்து சுகம்காண மாட்டாதுன்
    இம்மாம் தொலைவு இழுக்கு….(202)

    கல்லினில் முள்ளினில் காய்கின்ற வெய்யிலில்
    பிள்ளைநீ வந்தது பேதமை -சுள்ளி
    பொறுக்கும் கிழவி உருவத்தில் வந்து
    பொருப்புத் தகப்பன் உரைப்பு….(203)

    திட்டாய் இருந்தாலும் தீக்கண் இறையோனின்
    திட்டம் இதுவாய்த் தெளிந்து -மட்டம்
    அடித்தார் மலைசுற்றல் அன்றுமுதற்க் கொண்டு
    படித்தார் இகத்தில் பரம்….(204)

    போட்டி இடுவார்கள் பிட்ஷை இடுவதற்கு
    பாட்டிகள் சேர்ந்து பகவானுக்கு -ஏட்டில்
    எழுத இயலாது ஏழைக் கிழங்கள்
    தொழுத விதம்தான் தவம்….(205)

    முதலாக எச்சம்மா, மூன்றில் நடுவே
    முதலியார் பாட்டி, முடிவில் -உதவியாய்
    சோறை ரமணருக்(கு) சேகரித்து வந்தவள்
    கீரைக் கிழவியாம் காண்….(206)

    வயணமாய் அன்னம் வடித்தஅம் மூவர்
    அயனரி தீவாய் நயனன் -பயணமாய்
    பூமி உகந்தகுரு சாமிக்(கு) உதவிட
    நேமி,நூல், சூலத்தின் நட்பு….(207)

    சதியனு ஸூயா துதிசெய்ய ,வந்த
    பதிமூவர் தத்தகுரு பாலர் -அதுபோலே
    தத்த ரமணருக்கு தாய்மை பரிந்தனர்
    பித்தனயர் மால்பாட்டி போல்….(208)

    மலங்கா ரமணர் முதலியார் பாட்டி
    அலங்காரத் தம்மாவின் அன்பாம் -விலங்கில்
    அகப்பட்(டு) இருமுறை அன்னத்தை உண்டு
    உகப்பார் அவள்வார்த்தைக்(கு) உற்று….(209)

    பானையும் ஒன்று பகவானும் ஒன்றுதான்
    ஸ்நானமும் சோறுமதில் ஆனபின் -ஞானமாம்
    பானை பிடித்திடும் பாக்கிய சாலியாய்
    ஊனைக்கீ ரையாள் உதிர்ப்பு….(210)

    பசலையாம் கீரை பகவான் அகத்துக்
    குசலமாம் கீரைக் கிழவி -அசலமாய்
    நின்றாள் இறந்தும் நிமலர் வளர்த்தஆக்
    கன்றாய்ப் பிறந்தாள் கனகு….(211)

    பரத இரத்தினம்மா பால முனிக்கு
    விரதமாய் சோறிடுவாள் வாயில் -உறுதியாய்
    அண்டம் மறந்தமர்ந்து ஆன்மா லயித்ததால்
    கண்டம் இறங்காதாம் காற்று….(212)

    தாசியா னாலுமவள் ஆசிரம வாசியே
    பாசப் படிதாண்டா பத்தினி -ஆசியாய்
    ரத்தினம் மாளின் ரகசிய பக்திக்கு
    இத்தரையில் இல்லையென்றார் ஈடு….
    இத்தரையில் ஈடே(து) இயம்பு….(213)

    கம்மாள மீனாட்சி அம்மாள் அதிகாரம்
    கும்மாள மிட்டதைக் கூறியவர் -‘’அம்மா!
    பகவானை வாழும் பரிதாபம் இந்த
    பகவானுக் கேதான் பகல்’’….(214)
    (‘பகலை’ வெளிச்சம் என்ற வகையில்
    பயன்படுத்தியுள்ளேன்….okதானே….!)

    மடிந்தால் மகனுன் மடியில்தான் என்று
    கிடந்த அழகம்மை கொண்ட -அடம்தன்னை
    பாரா முகமாய் பகவான் இருந்தடக்க
    நீராய்ச் சொரிந்தாள் நிலத்து….(215)

    அம்மா அழுகைக்கும் ஆகாத் தியத்திற்கும்
    சும்மா இருந்தபின் செப்பினார் -எம்மால்
    உனக்குமட்டும் சேயாய் உறவாடல் ஆகாது
    தனக்கெல்லாப் பெண்களுமே தாய்….(216)

    கோசலையாய் ராமன்தாய் கைகே கியைமாற்ற
    ஆசிரமம் சேர்ந்தாள் அழகம்மை -தேசுடை
    காவி அணிந்துமகன் காரியாம் யாவிலும்
    மேவிக் கரமளித்தாள் மாது….(217)

    அன்னையன்(று) இட்ட அடுப்புதீ வேள்வியில்
    இன்னமும் ஆசிரமம் உண்கிறதாம் -அண்ணனுடன்
    தம்பிநாக சுந்தரமும் தங்க நிரஞ்சனனாய்
    தும்பிகள் சேர்ந்தனவாம் தேன்….(218)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180829-Govinda pattabhishekam 9×12 watercolour 100dpi Arches cover page lr

    ’’அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
    மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
    காட்டிய கேசவ் கவி”….!

    மந்தாகினி -ஆகாஸகங்கை….!

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • எழுத்து – 8

     

    அக்கினியும் அக்கிரமமும் தாங்கவியலாது விசிறலாம்.
    அற்புதமும் ஆனந்தமும் ஓங்கிடப் பாவெழுதலாம்.
    உக்கிரமாய் சிலர் தனித்தமிழ் தமிழென
    அக்கறையாய்க் குரலெழுப்புகிறார்! எத்தனை மொழிகளோடு
    முக்குளித்த தமிழ் எழுத்துகளைப் பிரிக்கவியலுமா!
    பரிபூரணமாய் மூச்சிலும் பேச்சிலும் பின்னிப்
    பிணைந்ததை வேறு வேறாக்கல் அசாத்தியம்.
    இணைந்த கலப்பு எழுத்தாகவே எழுதுகிறோம்.

    வடமொழித் தழுவலின்றி முதற் காப்பியமாய்
    இடம் பெற்ற பெருமை சிலப்பதிகாரத்திற்காம்.
    வடம் பிடிக்குமென் தூரிகைக்குள் கடல்
    வானம் என்று ஆச்சரியங்கள் பலவுண்டு.
    தேங்கி நிற்கும் சிந்தனை வெள்ளம்
    பாங்காகக் காகிதப் பள்ளத்தில் பாய
    ஓங்கிய தேசமெனும் நதிக்கரையில் படகோட்டி
    ஓங்கிடுமென் எழுத்து தமிழ் உல்லாசபுரியில்

    வெற்று மண்ணில் பிறந்தேன் இன்று
    வெற்றியில் பயணிக்கிறேன் தமிழ் வயலில்
    சுற்றும் குதிரைச் சவாரி இது
    பற்றறுத்து வெட்ட முடியாத தமிழ்
    அற்பமல்ல! வீரியச் சிறகுடைய பாரம்பரியம்.
    வெற்றுக் கல் அல்ல! பிரமாண்டக்
    கற்பாறை! நாளும் செதுக்குகிறேன் சிற்பம்.
    அற்புதம்! அனந்தம்! அவசியம்! அனுகூலம்!

    இயற்கையெனும் பச்சையங்களில் நீந்தி இன்ப
    மயற்கையில் எழுத்துப் பூ மலரும்
    வயற்காட்டுத் தமிழரசி யான்! கவிதை
    முயற்கொம்பல்ல! நாளும் சுவாசிக்கும் பூப்பாத்தி.
    வியத்தகு வெண்மாளிகையில் முத்துக்களாய் உருளும்
    நயமிகு ஆர்மோனிய இசையாய் தவழும்
    கயமையாய்த் திமிறியும் நழுவும் எழுத்தை
    சுயமாய் பொறுமையாய் கட்டி இழுப்பேன்.

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 30-8-2018

    Share
  • பாதுகாப்பற்ற காப்பகங்கள்?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவிலுள்ள மொத்த 2874 குழந்தைகள் காப்பகங்களில் 54 காப்பகங்கள் மட்டும் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லம் போன்றவைகள் ஒற்றை இலக்கத்தில் உள்ளவைகளே குழந்தைகள் முழுமையான பாதுகாப்புடன் வாழ்வதற்குரிய அனைத்து ஆவணங்கள் வைத்துள்ளனர் என்று உச்சநீதி மன்றத்தில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை தேசிய ஆணையம் (NCPCR) அறிவித்துள்ளது வேதனைக்குரியது. ஒழுங்கான கணக்கு, வழக்குகள் வைத்திருந்தாலே பீகாரில் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயமரான நிகழ்வுகள் ஏற்படாது என்றும் காப்பகங்கள் பற்றி யாருக்கும் எந்த விதமான அக்கறையும் இல்லை என்றும், இது குறித்து நீதி மன்றமே கையறு நிலையில் உள்ளது என்றும் உச்சநீதி மன்ற நீதிபதி லோகூர் அவர்கள் வாய் மொழியாகத் தெரிவித்துள்ளார் .. 🙁

    Share
  • சர்வதேச நட்பின் சின்னம்! சுதந்திர தேவி சிலை!

    பவள சங்கரி

    எல்லீஸ் தீவு அருங்காட்சியகம்  நியூயார்க், அமெரிக்கா

    சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாட்டின் நுழைவாயிலாக உள்ள சுதந்திர தேவி சிலை 1880 ஆம் ஆண்டில் பாரீசியர்களால் கட்டமைக்க ஆரம்பிக்கப்பட்டு, 1886 இல் நியூயார்க் நகரின் உன்னத படைப்பாகவும், உலகின் மிக உயரமான சிலை வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மீது பிரான்சு நாடு கொண்ட நட்பின் அடையாளமாக, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா பரிசாக அளிக்கப்பட்ட அதிசயம்! ‘Libertas’ என்ற உரோமாபுரி கடவுளின் உருவில் வடிவமைக்கப்பட்ட சிலை என்றும் கூறப்படுகிறது.

    Liberty Enlightening The World என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சுதந்திர தேவி சிலையைக் காணவேண்டும் என்ற ஆவலில் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.


    1865இல் எடுவர்ட் டி லெபோலயி என்பவரின் தலைமையில் ஒரு அறிஞர் குழு, தங்கள் சொந்த நாட்டின் அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாட்டிற்கு, சுதந்திரம் மற்றும் விடுதலையின் குறியீடாக ஒரு நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்க முடிவு செய்தனர். அதற்கான சரியான நேரமாக அது அமைந்தது. ஆம், உள் நாட்டுப் போர் நிறைவடைந்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, நாடு தமது நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியிருந்தது. ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.


    தேசியவாதம், செழிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவைகள் இந்த நினைவுச் சின்னத்தின் ஒரு சகாப்தத்தை தோற்றுவித்தது. லெபோலேயியின் இளம் சிற்பி நண்பன் அகஸ்டி பர்தோல்டிக்கு, பிரம்மாண்ட நவீன சிற்பம் உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சமுத்திரத்தைத் தாண்டி நியூயார்க் துறைமுகத்தில் உலகிற்கு சுதந்திர விளக்கேந்தி நெடிதுயர்ந்து இன்றும் நிலையாக நின்று கொண்டிருக்கின்றது. 1886 இல் அமெரிக்காவிற்கு அர்ப்பணம் செய்த பின்பு பிரான்சு நாட்டுப் பிரதமர், இந்த சுதந்திரதேவி கடல்களுக்கு அப்பாலும் வெகு தொலைவிற்குச் சென்று நம் பிரான்சு நாட்டை மேலும் பிரமாண்டமாக்கப்போகிறாள் என்பதில் ஐயமில்லை என்று அறிவித்தார்.

    ஆனால் சுதந்திர தேவியின் உருவம் ஏற்கனவே எண்ணற்றோரின் உள்ளத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிற்கால 1800களின் பெருவாரியான குடியேற்றங்களுக்கு இடையில், வளர்ந்துவரும் கடுமையான குடியேற்றத் தடைச் சட்டத்தையும் மீறி, சுதந்திர தேவியின் திருவுருவம், ‘புலம் பெயர்ந்தோரின் தாய்’ என்ற ஆழமான உணர்வுகளால் ஆன கருத்தாக்கமாக, அவர்தம் இதயங்களில் ஊடுறுவிக் கொண்டிருந்தது.


    சனவரி 1, 1892 ஆம் ஆண்டில் அமெரிக்க எல்லீஸ் தீவு குடிவரவு நிலையம் மூலமாக, அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த அமெரிக்காவின் முதல் குடிபெயர்வாளராக உள் நுழைந்தவர் 15 வயது அன்னி மூர் என்பவர். இவருக்கு அப்போதைய அமெரிக்க குடியேற்ற கண்காணிப்பாளர் ஜான் வேபர் மூலமாக பத்து டாலர் தங்க காசுடன் வரவேற்பளிக்கப்பட்டதாம்! அதன் பிறகு 1895இல் இவர் ஜோசப் ஆகஸ்டஸ் என்பவரை மணம் புரிந்து, நியூ யார்க் நகரில் குழந்தைகளுடன், 47 வயது வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.


    முதலாம் உலகப் போரின் சமயத்தில் குடியேற்ற எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதால் சுதந்திர தேவியின் பங்கு பரிணாமம் பெற்றது. போர் பத்திரங்கள் வாங்க வேண்டியும், இராணுவத்தில் பங்கு பெறவும் குடிகளை கேட்டுக்கொள்ளும் பளபளக்கும் சுவரொட்டிகள் அனைத்திலும் சுதந்திர தேவியின் திருவுருவமே மொத்த அமெரிக்கா என்பதாக உருவகப்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் சுதந்திர தேவி சிலையின் பிம்பமே அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் தலைமை வகித்தது. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஈர்த்துக் கொண்டும் இருக்கிறது.

    வலது கரத்தில் தீப்பந்தமும், இடது கரத்தில், “சூலை 4, 1776” என்று எழுதப்பட்ட, அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கும் புத்தகமும் உள்ளன. சுதந்திர தேவியின் சிலையின் தலையில் உள்ள 7 முனைகள் கொண்ட கிரீடம் 7 கண்டங்களையும், 7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர் என்பதோடு சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். இந்த புகழ்மிக்க சிலை தாமிரத்தில் செய்யப்பட்டுள்ளது. இச்சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.

    சுதந்திர தேவியின் சிலை குறித்து அதன் படைப்பாளர் பர்தோல்டியின் கருத்து:

    அந்த பிரம்மாண்டமான சிலை வெறுமனே ஒரு சரணாலயமாக மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஆழமான உணர்வை உருவாக்க வேண்டும். அதுவும் அது அதன் அளவின் காரணமாக அல்ல, ஆனால் அதன் அளவைப் புரிந்துகொள்வது, அது ஆக்கிரமித்துள்ள இடத்தின் அளவிற்கு அதன் உன்னதமான தத்துவத்தை உள்வாங்கி, தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அற்புதமாக இருக்க வேண்டும்.


    இந்த கருத்தாக்கமே, இச்சிலையைக் கண்டுகளிக்க வரும் உலக மக்கள் அனைவரின் மனத்திலும் சுதந்திரம் தன் உயிர் மூச்சு என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறுவதில்லை என்பதை முழுமையாக உணர முடிகின்றது! இதன் காரணமாகவே இச்சிலை உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்வதாகக் கொள்ள முடிகின்றது என்பதும் நிதர்சனம்!

    Share
  • கம்புள்

    சற்குணா பாக்கியராஜ்

     

    “வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை
    தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்’”
    ஓரம்போகியார், ஐங்குறு நூறு, 85: 1-2

    சுருக்கமான உரை: வெண்மையான நெற்றியையும் விட்டு விட்டு ஓசை எழுப்பும் குரலையும் உடைய பெண் கம்புள், தன் சுற்றத்தோடு குளிர்ந்த பொய்கையிலிருந்து மகிழ்ந்து விளையாடும்..

    நாமக் கோழிகள் கூட்டம்

    சங்க இலக்கியத்தில் “கம்புள்” என்ற பறவையின் பெயர் நான்கு பாடல்களில் காணப்படுகிறது (ஐங்குறுநூறு 85, 60, அகநானூறு 356, புறநானூறு 297). மேற் கண்ட ஒரே ஒரு பாடலில் மாத்திரமே “வெண் நுதல் கம்புள்” என்று இந்தப் பறவையைச் சங்கப் புலவர் ஓரம்போகியார் மருதத் திணையின் பின்னணியில் வர்ணித்துள்ளார்.
    கம்புள் என்றால் அது எந்தப் பறவை?

    திரு. பி. எல். சாமி, தன்னுடைய “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” என்ற நூலில் “கம் என்றால் நீர் என்று பொருள். நீர்ப்புள் என்ற பொருளில் கம்புள் என்று வந்திருக்கலாம்” என்கிறார்.

    நாமக் கோழி, கன்யாகுமரி மாவட்டம்

    ஆகவே கம்புள், நீரில் வாழும் பறவை என்ற அடிப்படையில் பறவையியலை ஆராயும் போது தமிழகத்தில் ஏழு வகை நீர்க் கோழிகள் காணப்படுகின்றன. இவை குளக் கோழி (Common Moorhen), நீலக் கோழி (Purple Moorhen), வெண் நெஞ்சு நீர்க்கோழி (White-breasted Waterhen), தண்ணீர்க் கோழி (Water Cock), நாமக் கோழி(Coot), தாழைக் கோழி (Moorhen), இலைக் கோழி (Jacana) என்பவையாகும்.

    இந்தப் பறவைகள் Rallidae குடும்பத்தைச் சார்ந்தவை. இவை பொதுவாகக் குளம், குட்டைகள், ஏரிகள் அருகில் வளரும் நாணல் போன்ற புல் புதர்களில் மறைந்து வாழுபவை. இவைகளால் நீரில் வேகமாக நீந்தவும் முடியும். தண்ணீர்க் கோழியைத் (Water Cock) தவிரப் பிற நீர்க்கோழிகளுக்குப் பால் வேறுபாடு கிடையாது.

    இந்த ஏழு வகைக் கோழிகளிலும் இரண்டு வகை நீர்க் கோழிகளுக்கு மட்டுமே நெற்றியில் வெண்மை நிறம் உண்டு. அவை: நாமக் கோழி (Common Coot- Felica atra), வெண் நெஞ்சு நீர்க்கோழி (White breast Waterhen -Amaurornis phoenicurus).

    இந்த இரண்டு நீர்க் கோழிகளிலும் நாமக் கோழி ஒன்றிற்கு மட்டுமே நெற்றியில் வெண்மையான பட்டை போன்ற கவசமும் (frontal shield) வெண்மையான அலகும் காணப்படுகின்றன. பிற உடல் பாகங்கள் கறுப்பு நிறம். இந்தப் பறவை வாத்துப் போல் தோற்றமளித்தாலும் இது வாத்து அல்ல.

    நாமக் கோழிகள், இனப் பெருக்கமல்லாத காலங்களில் நீர் வளமுடைய பகுதிகளில் இரண்டு முதல் இருபது வரையிலும் சில சமயங்களில் நூற்றிற்கும் மேலாகக் கூட்டமாகக் காணப்படுகின்றன. நிலத்தில் காணப்படுவதை விடத் திறந்த நீர்பரப்புகளில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன.

    வெண் நெஞ்சு நீர்க்கோழிக்கு, வெண்மை நிறம் நெற்றியில் மட்டுமல்லாமல் நெற்றியிலிருந்து தொடங்கி, தலையின் இரு பக்கங்களும் மார்பும் அடி வயிறும் வெண்மையாகக் காணப்படும். முதுகுப் பகுதிக் கரும் சாம்பல் நிறமாகவும் வாலின் அடிப்பகுதி செம்பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

    வெண் நெஞ்சு நீர்க் கோழி தனித்தோ அல்லது இணையாகவோ காணப்படும். கூட்டமாகக் காணப்படுவதில்லை. நீர்க் கரையோரங்களிலும் வயல் பகுதிகளிலும் பூங்காவனங்களிலும் காணப்படும். எதிரிகளைக் கண்டால் புதர்களில் மறைந்து கொள்ளும்.

    இரண்டு பறவைகளின் குரல்களும் கரகரப்பானவை. இனப் பெருக்கக் காலங்களில் ஆண் பெண் இரண்டு பறவைகளும் குரல் எழுப்புகின்றன. வெண் நெஞ்சு நீர்க் கோழி விட்டு விட்டுக் குரல் கொடுப்பது தொலைவில் கேட்கும்.

    வெண் நெஞ்சு நீர்க் கோழி

     

    வெண் நெஞ்சு நீர்க்கோழி—– நாமக் கோழி
    ஒற்றுமைகள்:

    1. இரண்டு பறவைகளும் நீர்க் கோழிகள் இனத்தைச் சார்ந்தவை
    2. இனப் பெருக்கக் காலத்தில் இரண்டு பறவைகளும் இரவும் பகலும் கரகரப்பான குரல்களை எழுப்புகின்றன.
    3. பால் வேறுபாடு கிடையாது.

    வேற்றுமைகள்:

    1. வெண் நெஞ்சு நீர்க் கோழி, தனித்தோ இணையுடனோ காணப்படும்.
    கூட்டமாகக் காணப்படுவதில்லை.
    நாமக் கோழி இனப் பெருக்கம் அல்லாத காலங்களில் கூட்டமாகக் காணப்படும்
    2. வெண் நெஞ்சு நீர்க் கோழியின் நெற்றி மட்டும் வெண்ணிறமாக இல்லாமல் முகம், மார்பு, வயிற்றுப் பகுதியும் வெண்ணிறமாக இருக்கும்.
    நாமக் கோழிக்கு நெற்றிப் பட்டையும் அலகும் வெண்மை நிறம்.

    மேற் கண்ட தகவல்களைக் கொண்டு பாடலை ஆராய்ந்தால் புலவர் ஓரம்போகியார் வர்ணித்துள்ள “வெண் நுதல் கம்புள்” நாமக் கோழியாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

    References:
    The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)
    திரு.. பி.. எல்.. சாமி, பி எசி, 1976. “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” pp.112- 113.

    Share