ஜெயமோகன் சிறுகதைகளில் புலப்படும் நிலைக்கலன்கள்           

0

-போ.சக்திஜோதி

முன்னுரை

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுகதைப் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜெயமோகன். இவர் நாகர்கோயில் வட்டார மக்களின் வாழ்க்கை முறைகளையும், மொழிநடை, பழக்கவழக்கங்களையும் தனது சிறுகதையில் கையாண்டுள்ளார். மேலும் இவரது படைப்புகள் யதார்த்தச் சித்திரிப்பு, மிகையான புனைவு, புராணச்செய்திகளின் புனைவு, கட்டுரை அமைப்புக்கொண்ட கதைகள், படிமங்கள் முதலியவற்றை நிலைக்கலன்களாகக் கொண்டுள்ளமையை இக்கட்டுரை விளக்க இருக்கின்றது.

மொழிநடை:

உள்ளத்து உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்த மொழி இன்றியமையாததாகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் “சிறுகதையில் இடம்பெறும் மொழியானது, கருத்து வெளியீட்டையும் உணர்ச்சிப் புலப்பாட்டையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறுகதையினை ஆராயுங்கால் ஆசிரியரது படைப்பு நோக்கு வெற்றி காண அவர்    தேர்ந்தெடுத்த மொழிநடை உறுதுணையாக ஆக்கம் தருகிறதா அல்லவா என்பதனை ஆராய வேண்டும்”1  என்ற மேற்கோளுக்கு இணங்க ஜெயமோகன் தன் சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ள மொழிநடையின் அவசியத்தை அறியமுடிகின்றது. சான்றாக,                                                                                                                                                      ‘பெயல எழுப்பி தெக்குக் கண்டத்தில போயி மட்டையோ தேங்காயோ விழுந்து கெடக்கா என்னு பாக்கச்சொல்லு; சின்வள எழுப்பாண்ட…’
‘காலம்பற  என்ன திண்ணிய? மரச்சீனி உப்புக்கண்டம் போட்டு கடுங்காப்பி எடுக்கட்டா? என்றாள்.                                                  இவ்வரிகளின் மூலம் ஆசிரியர் அப்பகுதி மக்களின்  மொழியை அப்படியே பயன்படுத்தும் வட்டாரப்போக்கு புலப்படுகிறது. வேறு வட்டாரத்தைச் சார்ந்தவர்களாக  இருப்பினும் இம்மொழிநடையை விரும்பி வாசிப்பவர்களாகவே இருந்தனர்.

யதார்த்தச் சித்திரிப்பு:

தேவகிச்சித்தியின் டைரி’ என்ற சிறுகதையில் இரண்டு தம்பதியர் இருக்கின்றனர். இளையவனின் மணைவியான தேவகிக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது. அதை யாரும் அறியாதவாறு எழுதி வருகின்றாள். ஒரு நாள் அந்நிகழ்வு தெரிந்தவுடன் அந்த டைரியை யாரிடமும் காண்பிக்கும் முன்பு எரித்து விடுகிறாள். அதில் மறைக்கப்பட  வேண்டியவை எவையும் இல்லை என்று கூறுகிறாள். இருப்பினும் அவளை விவாகரத்து செய்யுமளவிற்குச் சென்றுவிட்டது. இந்நிகழ்வினை ஆராயும்பொழுது, ஒரு பெண் தனக்கென்று ரகசியமான கருத்துக்கள் என்று எதையும் மறைத்து வைப்பதற்கென்று இச்சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற கருத்தைப் புலப்படுத்துவதை உணரமுடிகின்றது.

வழிகாட்டி:

பார்வையற்ற ஒருவர் தன்னுடைய கடுமையான பயிற்சியினாலும் முயற்சியினாலும் சிறந்தவராகத் திகழ முடியும் என்பதனை ஜெயமோகன் தன் சிறுகதை வழியே விவரித்துள்ளார். ‘மன்மதன்’ என்ற தலைப்பின் கீழுள்ள சிறுகதையில் பார்வையற்ற ஒருவர் கோயில் சிற்பங்களைப்பற்றி எடுத்துக்கூறும் வழிகாட்டியாக உள்ளார். அவரைக் கண்டவர்கள், இவரால் எவ்வாறு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் என்று எண்ணுபவர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், கோயில் சிற்பங்களின் வறலாறுகளை தெளிவாக எடுத்துக்கூறுகின்றர். இதன் மூலம் திறமைக்குத் தடைகள் கிடையாது என்ற கருத்தை பார்வையற்றோர்  வழி  மெய்ப்பித்துக்காட்டியுள்ளார்.

புனை கதைகள்:

ஜெயமோகன் பன்முகத்தன்மை கொண்ட சிறுகதைகளை ஒரே காலகட்டத்தில் எழுதியுள்ளமை சிறப்பிற்குரியது. இதன் காரணம் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அல்ல என்றும், அப்பொழுது என்ன தோன்றியதோ அதைப் படைப்பாகப் படைத்துக் காட்டியுள்ளதாகவும் அவரே குறிப்பிட்டுள்ளமையை அறிய முடிகின்றது. ஆசிரியர். புனைகதைகளில் மிகையான கற்பனைப்புனைவைப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ‘நாகம்’ சிறுகதை சான்றாக அமைந்துள்ளது. நாகத்திற்கும்  ஒரு பெண்ணின்மீது காமம் ஏற்பட்டு அவளைத்தேடி வருகிறது. அப்பெண்ணும் அதை ஒரு நாகம் எனக் கருதி அச்சம் கொள்ளவில்லை. அவள் அந்நாகத்தை ஒரு விஷமுள்ள மண்புழு என்றே நினைக்கின்றாள். எனவே ஒரு நாகத்திற்கும் மானிடப் பெண்ணுக்குமான காம உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் ஜெயமோகனின் புனைவுத்திறன் மிகையை நம்மால் உணர முடிகின்றது.                                                                                                                        பேச்சிப்பாறையின் வளங்களைப் பற்றிச் சிங்கனும் சிங்கியும் குறிப்பிடுகையில், சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற இயற்கை வளங்களோடு ஒப்பிடக்கூடியதாக உள்ளது. ‘படுகை’ என்ற தலைப்பிலமைந்த சிறுகதையில் மழை வளங்களினால் மக்கள் அனுபவிக்கும் செல்வச் செழிப்பினையும், மழை பொய்த்துப்போன காலத்தில் அம்மக்கள் படும் இன்னல்களையும் ஆசிரியர் படம்பிடித்துக் காட்டியுள்ளமையை அறியமுடிகின்றது.

சமுதாயச் சூழல்:                                                                   ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழக்கூடிய மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படும். படைப்பாளி தன் சமூக வளர்ச்சிக்கான இலக்கியங்களையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னலம் கருதாமல் தொண்டு செய்யும் மனம் படைத்தவராகவும் திகழ்கிறார். சமுதாய வாழ்க்கை என்பது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நிலையை பெரும்பான்மை குறிப்பிட்டிருந்தாலும், பிற வட்டார மக்களின் நிலையையும் எடுத்துக் கூறுவதாக இருத்தல் வேண்டும். அவ்வகையில் ஜெயமோகன் சிறந்து விளங்குவதை அவரது படைப்புக்களின் வழி நம்மால் உணரமுடிகின்றது. படைப்பாளி என்பவன் சாதாரண மக்களிடமிருந்து தனித்துவம்பெற்றுத் திகழ்வதால்  வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சமுதாயம் தரும் பட்டறிவுகளை அப்படியே தம் படைப்புகளில் பதிவு செய்கிறார். இவ்வடிப்படையில் நோக்கும்பொழுது  படைப்பிலக்கியம் என்பது பலருடைய கூட்டு உற்பத்தியாகும். “நினைவானது மனத்தின் ஆசைகள், அபிலாசைகள், விருப்பு வெறுப்புகள் எப்படி தன் மனத்தில் தாங்கிப் பின் கனவு வழி வெளிப்படுமோ அப்படியே முத்திரை குத்தப்பெற வேண்டும்”2 என்ற கூற்று சமதாயத்திற்கும் படைப்புக்கும் உற்ற உறவை விளக்குகின்றது. சமுதாயத்தை நீக்கிவிட்டுப் படைப்பாளியை மட்டும் தனித்துப் பார்க்க இயலாது. சமுதாயம் கொடுக்கும் பட்டறிவு, மற்றும்அனுபவ அறிவு, அவனுக்குச் சமுதாயத்தின் மீதான வெளிப்பாடுகள், இவையே படைப்பாக உருவெடுக்கின்றன. ஜெயமோகன் தன்னுடைய பிறப்பிடமான நாஞ்சில் வட்டாரச்சமூகத்தின் தாக்கங்களையே பெரும்பான்மை படைத்திருப்பினும் மற்ற பகுதி மக்களின் வாழ்க்கை நிலையையும் படைத்துக் காட்டியுள்ளமையை மறுக்க இயலாது.

‘ஓலைச்சிலுவை’ என்னும் சிறுகதையில் நாகர்கோயில் பகுதியிலுள்ள பனையேறி நாடார்களின் வாழ்க்கை முறையைக் குறிப்பிட்டுள்ளார். அச்சமுதாயத்தில், ஒரு குடும்பத்தலைவன் தன்னுடைய தொழிலான பனையேறும் தெழிலில் ஈடுபடும்பொழுது,  பனைமரம் வழுக்கிக் கீழே விழுந்து இறந்துவிடுகின்றான். அவ்விழைவு அவனுடைய குடும்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றது. அவனுடைய குழந்தைகளின் வாழ்க்கையானது  செம்மைபெறாமல் திசைமாறிச் செல்வதினை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் குழந்தைகள் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கும் நிலையினையும், ஆரம்பக் கல்வியினைக்கூடப் பெறமுடியாமல் படும்  இன்னல்களையும் படைப்பாளி பதிவு செய்துள்ளார்.

‘சேறு’ என்ற சிறுகதையில் பிள்ளைமார் சமுதாயத்தில் வசதியாக வாழ்ந்த குடும்பம், சிறிது காலகட்டத்தில் மிகுந்த வறுமையில் வாடுகின்றது.  ஒரு வீட்டில் கணவன் இறந்துவிட்டான், அவனுக்கு இரண்டு ஆண்குழந்தைகள். வீட்டுத்தலைவியானவள்  வேலைக்குச் சென்றும் பழக்கம் கிடையாது. சிறு பொருட்கள் வாங்கக்கூட கடைக்குச்சென்று பழக்கப்படாதவள். சூழ்நிலை காரணமாக வயல்வேலைக்குச் செல்கின்றாள். அந்த வேலையைச் சரியாகச் செய்யாத காரணத்தால், அவளுடன் வேலை பார்ப்பவர்களின் எள்ளலுக்கு ஆளாகின்றாள். இதனால் மனமுடைந்து வேலைக்குச் செல்லமுடியமால், தன் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதினை நம்மால் உணரமுடிகின்றது.

முடிவுரை:                                                                                           ஜெயமோகன் மார்க்சியச் சிந்தனைவாதியாகவும், சமூகச் சிந்தனைகளையும் கொண்டு  இலக்கியத்தில் தனக்கென ஒரு தனித்த இடத்தினைப் பிடித்தவர்.  இவருடைய சிறுகதைகளின் நிலைக்கலன்களாகப்  பொதுவுடைமைச் சிந்தனையும், யதார்த்தமும்,  புனைவும் வெளிப்பட்டுள்ளமையை  இக்கட்டுரையின் வழி  விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அடிக்குறிப்பு:

1.மீனாட்சி முருகரத்தினம், கல்வியின் சிறுகதைக்கலை,

2.தமிழவன்,மு.நூ.,ப.61

*****

 கட்டுரையாளர் –  தமிழ்  முனைவர்பட்ட ஆய்வாளர் ,
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
சிவகாசி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.