திருக்குறளில் ஆளுமை மேம்பாடு

0

-இரா.சத்தியலட்சுமி

முன்னுரை

மக்களுடைய வாழக்கையை அகம் புறம் என்று பாகுபாடு செய்து அதன் பல்வேறு இயல்புகளை நுட்பமாக ஆராய்ந்த சங்க காலத்தையொட்டிப் புறப்பொருளின் ஒரு பகுதியாகிய அறத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் அறநூல்கள் பல இயற்றப்பட்டன. அவை அமைப்பு முறையாலும்  அறிவுறுத்தும் கருத்துக்களாலும் தனிப்பட்டதோர் இலக்கிய வகைமையாகச் சிறப்புற்று விளங்குகின்றன. அவற்றைப் பிற்காலச் சான்றோர்கள் நீதி நூல்கள் என்னும் பெயரால் அழைக்கலாயினர். அவற்றுள் திருக்குறளும் ஒன்று.

ஆளுமை

ஆளுமை உணர்வு அனைத்து உயிர்களிடமும் காணப்படுகின்றது. அது அறிவு  உள்ள மனிதனிடம் மேலோங்கி நிற்கிறது. ”யுங்” முழுமையான ஆளுமையைத் தற்பவம் (self) என்று புலப்படுத்துகிறார்.

ஃப்ராய்டு ஆளுமை குறித்து உணர்த்துகையில் நடத்தையியலும் (behaviourism) ஆளுமையியலும் இயைபுத்துறைகள் (associates) ஆகும் என்கிறார். நடத்தைகளுக்கான காரணிகளைக் கண்டறியும் போக்கில் ஆளுமை உளவியல் தோன்றிற்று என்பர். நனவிலியே மனித ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்று ஃப்ராய்டு குறிப்பிடுகிறார். குழந்தைப்பருவ அனுபவங்கள் மனித ஆளுமையின் பெரும்பங்கு வகிப்பதாகக் குறிப்பிடுவார்.

மேலும் ஆளுமை மனிதனிடம் காணப்படும் ஒட்டுமொத்த குணங்களின் தொகுப்பாக அமைவது. இத்தகைய ஆளுமையைக் கொண்டு ஒருவரை அடையாளப்படுத்திட முடியும். இதனை ஒரு மனிதன் மனிதனாக வாழவும் மாமனிதனாக மேம்படவும் அவனுக்கு அடிப்படைத்தேவை ஆளுமைத்திறனாகும். (personality) இத்திறனை மேம்படுத்த (developement) மனிதன் பல களங்களில் செயல்பட வேண்டும். ஆளுமைத்திறன் என்பது ஒரு மனிதனுடைய குணங்களின் (characters) திறமைகளின் (talent) தொகுப்பாகும். 

திருக்குறளின் தனிச்சிறப்பு:

இலக்கியம் என்பது மனித இனத்தின் அனைத்துலக மொழியாகும். அது குறிப்பிட்ட பண்பாட்டு வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்து அனைத்துலக நோக்கோடு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளையும் எண்ணங்களையும், எழுச்சிகளையும், வேட்கைளையும் குறிக்கோள்களையும் பிரதிப்பலிக்கிறது. இலக்கியத்தின் சிறப்பினை இலக்கியம் அளிக்கும் இன்ப நிலைபேறுடையதாக இருக்க வேண்டுமானால் மனித வாழ்க்கையை மேம்பாடுடையதாக்கும். அறநெறிக் கருத்துக்களும் அனுபவ உண்மைகளும் அதில் பெற்றுத்தான் ஆக வேண்டும். அப்பொழுதுதான் அது வாழும் இலக்கியமாக விளங்க முடியும் என்று டி.எஸ். எலியட் குறிப்பிடுகிறார். படைக்கப்பட்ட இலக்கியத்தில் முக்காலத்திற்கும் பயனுடையதாக முக்காலத்திற்கும் பொருந்துவதாக  திருக்குறள்  உள்ளது. 

திருக்குறளில் ஆளுமை:

திருக்குறள் மனிதனது ஆளுமைப்பண்பை மேம்படுத்துவதற்குத் தக்க வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனிடத்தும் இறை அம்சம் பொருந்தியுள்ளது. அவன் தன்னை விலங்குகள் போன்றோ குற்றம்புரிந்தவன் என்றோ எண்ணி தாழ்த்திக் கொள்ள வேண்டியதில்லை நம்பிக்கையோடு வாழ வேண்டும்.  இதனை,

வையத்திள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.     (குறள்.50)

என்று கூறினார் திருவள்ளுவர். எனவே வாழ்வாங்கு வாழ அவன் தன் ஆளுமைப் பண்பை மேம்படுத்திக் கொள்வது அவசியம். அப்பொழுதுதான் அவன் தன்னிடம் உள்ள உயர்ந்த இறைப்பண்பை உணர்ந்து உயர்நிலையை அடைய முடியும்.

ஒருவர் நமக்குத் தீங்கிழைத்ததாக நாம் கருதினால் உடனே அவருக்குப் பன்மடங்கு தீங்கிழைக்க விரும்புகிறோம். எவ்வளவோ நல்ல செயல்கள் சாதனைகள் செய்வதில் நம் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு அவருக்குத் தீமை செய்வதிலேயே நமது சிந்தனையையும் செயல்திறனையும் வீணாக்கும்போது நமது மன அமைதி சீர்குலைகிறது.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.      (குறள்.314)

என்றார் வள்ளுவர். நன்மை செய்ய நமக்கு மனம் வராவிட்டாலும் பழிவாங்கும் எண்ணத்தை விட்டுவிடுவதாலே நம் மனம் அமைதி பெற முடியும். நம் மனத்தைப் பிற செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். 

கல்வி சிறப்பு:

கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் வாக்கிற்கிணங்க கல்வியின் அவசியத்தைப் பற்றி வள்ளுவரும்,

கற்க கசடறக் கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக.    (குறள். 391) என்று குறிப்பிட்டதோடு, எண்ணும் எழுத்தும் வாழும் மனிதர்ளுக்கு உயிர். கல்வியினால் அறிவு பெருகும். ஆகையால் அனைவரும் கல்விகற்று வாழ்க்கையில் உயர வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

சீரிய ஆளுமைப் பண்பு உடையவர்கள் எந்த ஒரு பிரச்சனையையும் துணிவோடு சமாளிக்க வேண்டும் என,

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு  (குறள்-382)

என்ற குறளில் தான் எதிர்கொள்ளும் எந்த ஒரு பிரச்சினையைக் கண்டும் அஞ்சி ஒளிந்துவிடாது துணிவோடு சமாளிப்பது  சிறந்த பண்பு எனக் கூறுகிறார். 

மன ஒழுங்கு:

தான் மேற்கொண்டிருக்கின்ற செயல்திட்டத்தின் மீது மனதை ஒருமுகப்படுத்தி அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்ற தன்மை ஒரு தலைவனுக்குத் தேவையானதாக இருக்கிறது .இதனை,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.        (குறள்.666)என்ற குறளில் எண்ணியார் என்ற சொல் ஒருவரின் மன உறுதியைக் குறிக்கிறது. ஒரு செயலைச் செய்ய நினைப்பவர் மன உறுதிஉடைய ஆளுமைப் பண்பு கொண்டவராகத் தான் எண்ணிய எல்லா இலக்குகளையும் திட்டமிட்டப்படி தவறாது செய்து முடிப்பார்கள் என்று கூறுகிறார். மேலும்,

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.     (குறள்.668) ஏற்றுக் கொண்ட தொழிலை மனங்கலங்காமல் காலந்தாழ்த்தாமல் சோர்வில்லாமல் முயற்சியோடும் தன் மன உணர்வோடும் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் தன் குறள்வழி எடுத்துக் கூறுகிறார்.

மாபெரும் செயலைச் செய்துமுடிப்பதற்கு மனவலிமைதான் அடிப்படைக் காரணமாக அமைகிறது. எத்தகைய சூழலிலும் தளராத மன வலிமையை

உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.  (குறள்.598) என்னும் குறளில் ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் உயர்ந்த நிலையை அடைந்து விட்டோம் என்னும் பெருமையை ஒருபோதும் அடைய மாட்டார்கள் எனக் கூறுகிறார்.

ஒருவர் ஆளுமைப்பண்பில் சிறந்து விளங்கினால் சமூகம் அவனைப் பாராட்டும். சமூகத்திற்கேற்ற முறையில் பண்புகள் சிறந்திருத்தல் நலம்.   இதனை,

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.      (குறள்.140) 

என்னதான் பல துறைகளில் தேர்ச்சிபெற்று கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும் உலகத்தோடு ஒத்துவாழக் கற்றிருக்க வேண்டும் என வள்ளுவர் எடுத்துக் கூறுகிறார். 

தலைமைப் பண்பு:

தனக்குக் கீழ் செயல்படுவர்களின் தனித்திறனை அறிந்து அவர்களுக்குரிய பணிகளை ஒதுக்கீடு செய்வது தலைமைக்குரிய தனித்திறனாகும். இதனை வள்ளுவர்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.      (குறள்.517) என்ற குறளில் இந்தச் செயலை இந்த முறையில் இவன் செய்து முடிப்பான் என்று தெரிந்து அச்செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

சோர்வு இல்லாது அஞ்சாது சொல்வதற்கு வல்லனாகச் சொல்லின் செல்வனாக ஒருவன் திகழ்வானேயானால் அவனை யாராலும் வெல்ல இயலாது என்று அறுதியிட்டு கூறுகிறது குறள். இதனை,

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.     (குறள்.647)

என்ற குறளில் ஒருவன் பேச்சுத் திறனோடு விளங்கினால் எதையும் வெல்ல இயலும் எனக் குறிப்பிடுகிறார்.

உறவு மேம்பாடுக்கான வழிகள்:

மனித உறவுகளை மேம்படுத்த வேண்டிய ஒருவர்  சினம் என்னும் தீய பண்பை அறவே ஒழிக்க வேண்டும். சினம் என்னும் தீய குணம் உடையவர்களை தீய குணமே அழித்து விடும். அதுமட்டும் இல்லாமல் நீண்ட நாட்களாகப் பாசம் கொண்ட உற்றார் உறவினர் நண்பர் ஆகியோர் அவர்களிடம் இருந்து பிரித்து விடும் இதனை வள்ளுவர்,

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம்என்னும் 
ஏமப் புணையைச் சுடும்.       (குறள். 306)

என்ற குறளில் எடுத்துக் கூறுகிறார். மேலும் தீய செயல்கள் பிறர்க்கு மட்டும் இன்றி நமக்கும் தீய விளைவுகளையே ஏற்படுத்தும்; எனவே தீய எண்ணம் தீய செயல் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும் இதனைத்

தீயவை தீய  பயத்தலால்  தீயவை
தீயனும் அஞ்சப் படும்.    (குறள்.202) என்று தன் குறள்வழி வள்ளுவர் எடுத்துக் கூறுகிறார். 

முடிவுரை:

மனிதன் ஆளுமைப் பண்போடு வாழ்வதற்குத் திருக்குறள் ஒரு வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது. அவற்றில் மனிதன் இறைத்தன்மை உடையவனாகவும், அவனுடைய சிந்தனையின் செல்வாக்கு, மனப்பாங்கு, கற்கும் கல்வியின் பெருமை, மனம் கலங்காத தன்மை, மன உறுதி, ஊக்கமுடைமை, பேச்சுத்திறன் போன்றவற்றில் ஆளுமை மேம்பாடு உடையவனாக விளங்க வேண்டும் என வள்ளுவர் தன் குறள்வழி எடுத்துக் கூறுகின்றார்.

பார்வை நூல்

  1. எஸ். சுந்தரசீனிவாசன் – ஆளுமை மேம்பாடு
  2. பரிமேலழகர் உரை – திருக்குறள்

*****

கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
சிவகாசி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *