-பி.சந்தனமாரி

முன்னுரை:

பண்டைக் காலத் தமிழ் வாழ்க்கை நிலையைப் பிரதிபலித்துக் காட்டுவது சங்க இலக்கியங்கள் ஆகும். இவ்விலக்கியங்கள் தமிழ் மக்களின் உணர்வையும் பாரம்பரிய வாழ்வையும் உணர்த்துவதாக அமைகின்றன. சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தினர். வாழ்க்கையைச் செம்மையாக வாழவிரும்பிய பழந்தமிழர் ஓய்வு நேரங்களைக் கழிக்கத் தேவையான பொழுதுபோக்குகளையும், விளையாட்டுக்களையும் உருவாக்கிக் கொண்டனர் அவ்வகையில் ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்களைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பழந்தமிழரின் விளையாட்டுக்கள்:

ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப அவர்தம் விளையாட்டுக்கள் அமைந்திருந்தன. முல்லைநில மக்கள் புனலாடுதல்,பொழிலாடுதல் போன்ற விளையாட்டுக்களையும். நெய்தல் நில மக்கள் கடல், பொய்தல் விளையாட்டுக்களையும்.மருதநில மக்கள் அலவனாட்டல் என்ற விளையாட்டையும்,பாலைநில மக்கள் பைஞ்சாய் விளையாட்டையும் விளையாடியதாக ஐங்குறுநூற்றுப் பாடல்கள் சுட்டுகின்றன.

விளையாட்டு சொற்பொருள் விளக்கம்:

தமிழில் ஆடல், ஆட்டு, ஆட்டம், விளையாட்டு போன்ற சொற்கள் விளையாட்டைக் குறிக்கின்றன. விளை என்று கூறி விளையாட்டு என்ற சொல் ஒலிமாற்றம் அடைந்த பின்னர் விளையாட்டு என மாறியிருக்கலாம் என்று விளக்குகிறார் மு.வை. அரவிந்தன்.

விளையாட்டுப் பொருள்கள்:

ஐங்குறுநூற்றில் மகளிர் விளையாடிய விளையாட்டுக்களே பெருபான்மையாகச் சுட்டப்படுகின்றது. இளம் பெண்கள் பந்தாடுல், பாவையை வைத்து விளையாடுதல், கழங்காடுதல் முதலிய பொழுது போக்குகளில் பெரிதும் இன்பம் கணடனர் என்பதை,

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மனற்,என் மகளே
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.  
(ஐங்.377)

என்ற பாடல் மூலம் அறியலாகிறது. இங்கு பந்தாடல் என்பது பந்தை நூல்களால் வரிந்து காட்டப்படுவதாகும். கழங்கு என்பது கழற்சிக்காய் அல்லது சிறு கற்றுண்டுகளாகும். பாவை என்பது மரப்பாச்சி போன்ற பொம்மை வகைகளில் ஒன்றாகும். இளமகளிர் விளையாட்டுப் பொருள்களை வைத்துத் திண்ணையில் உட்கார்ந்து விளையாடுவதாக ஐங்குறுநூறு சுட்டுகின்றது.

புனலாடல்:

கார்காலம் தொடங்கியதும் தலைவனும் தலைவியும் புதுப்புனலில் ஆடி வருவதே புனலாடுதல் எனப்படும். இதனை நீர் விளையாட்டு என்றும் கூறுவர். தலைவன் தலைவியோடு புனலாடுவது மட்டுமல்லாமல் பரத்தையரோடும் புனல் விளையாட்டினை விளையாடி வருகின்றான். கார்காலத்தில் முதன்முதலாகப் பொழியும் மழையின் காரணமாக வரும் வெள்ளத்தில் நீராடி வருவது சிறப்பானதாகும். அவ்வெள்ளத்தில் தலைவன் தலைவியோடு ஆடாமல் பரத்தையரோடு நீராடி வருவதை,

தலைப் பெயற் செம்புனல் ஆடித்
தவநனி சிவந்தன முகிழ்ந! நின் கண்ணே.   (ஐங்.80) என்ற பாடல் மூலம் காணமுடிகின்றது. இங்கு தலைவன் பல பெண்களோடு நீராடி மகிழ்கின்றான். என்ற செய்தியை ஐங்குறுநூறு சுட்டகின்றது.

கடல் விளையாட்டு:

கடல் விளையாட்டு என்பது இளமகளிர் அவர்தம் தோழியாரோடு இணைந்து கடலில் இன்பத்தோடு விளையாடக் கூடியதாகும். இவ்விளையாட்டினை விளையாடும் மகளிர் அனைவரும் ஒன்று சேர்ந்து மணலில் பாவை செய்து, அப்பாவைக்கு மலர்களால்ஆன மாலைகளாகக் கோத்துச் சூடி மகிழ்ந்தனர். இப்பெண்கள் தம் விளையாட்டுப் பொம்மைக்கு பிறர் கொடுக்கும் மாலைகளைச் சூட மாட்டார் என்பதை,

நொதுமலாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்துகடல் ஆடு மகளிர்
நெய்தல் அம்பகைத் தழைப் பாவை புனையார்.  
(ஐங். 187)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விளையாட்டு மகளிர் அனைவரும் ஒன்றுகூடி விளையாடும் விளையாட்டாகும்.

பொழிலாடுதல்:

தலைவன் தலைவி இருவரும் களவு, கற்பு என்ற இருவகைக் காலங்களிலும் புனலாடதலும். பொழிலாடுதலும் என்பது இயல்பான ஒன்றாகும். பொழிலாடுதல் என்பது பல வகையான மலர்கள் மலர்ந்துள்ள சோலையில் தலைவனும் தலைவியும் மலர்களைப் பறித்து விளையாடுதலாகும்.  காயா, கொன்றை, நெய்தல், செம்முல்லை, பிடவம் போன்ற மலர்கள் மலர்ந்நு அழகுபெற்று விளங்குகின்றன. இதனை,

காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவமொடு பிடவு அலர்ந்து கவனிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி ஆடுகம் விரைந்தே.  
(ஐங். 412)

என்ற பாடல் மூலம் காணலாகிறது. இங்கு ‘ஆடுகம் விரைந்தே’ என்று கூறுவது தலைவனுக்கும் தலைவிக்கும் பொழிலாடுதலில் மிகுதியான ஆர்வத்தை ஏற்படத்துகின்றன. என்பதைக் கூறலாம்.

அலவனாட்டம்:

பண்டைய மகளிர் நண்டுகளை அவை வாழும் வளையினின்றும் வெளிப்படச் செய்து அவற்றை அலைத்து விளையாடுவது மரபாகும். இதனை அலவனாட்டல் என்பர்.

முள்ளிவேர் அளைக் களவன் ஆட்டி
பூக்குற்றி எய்திய புனல்அணி ஊரன்.   
(ஐங்.23)

என்ற பாடலின் வழி அறியலாம். பண்டைய கால இளமகளிர் அனைவரும் ஒன்றுகூடி முட்செடியின் வேர்களுக்குகிடையே இருக்கும் வளைகளில் வாழும் நண்டுகளைப் பிடித்தும், பூக்களைப் பறித்தும் விளையாடி மகிழ்ந்தனர்.

இலக்கு வளை தெளிர்ப்ப அலவ னாட்டி
மகளிர் கடற்கரைக்குச் சென்று நண்டுகளைப் பிடித்து விளையாடிச் சென்றனர்.

பைஞ்சாய் விளையாட்டு:

பைஞ்சாய் என்பது கோரை வகையில் ஒன்றாகும். இக்கோரையாய் பாவை செய்து அதற்கு மலர்அணிந்து அழகு பார்ப்பதும். பாலுட்டுவதும் உண்டு. இது பேதைப் பருவ மகளிர் விளையாட்டுற்குரிய செயல்களாகும். மகப்பேறு அடைவதற்குகாக, தலைவி தலைவனோடு சேர்ந்துவாழ வேண்டும் என்று தோழி தலைவியிடம் கூறினாள். தலைவி அதனை மறுத்து ‘மகப்பேறு’ என்பது நான் இனிமேல் தான் அடைய வேண்டுமோ! நான் களவுக்காலத்திலேயே தலைவனுக்கும் பைஞ்சாய்க் கோரைப் பிள்ளையைப் பெற்றுதுண்டு என்று கூறினாள். இதனை

ஓதமொடு பெயரும் துறைவற்கும்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.   (ஐங்.155)

என்ற பாடல்வழி அறியமுடிகின்றது. பைஞ்சாய்ப் பாவைக்கு மாலைகள் அணிவதற்காக தலைவி தனித்தனியே மலர்களைக் கட்டுகின்றாள் என்று இதில் சுட்டப்படுகின்றது.

பொய்தல் விளையாட்டு.

பொய்தல் விளையாட்டு என்பதை காமக் குறிப்பில்லாத விளையாட்டு என்று கூறுவர். காமக்குறிப்பில்லாத போதை மகளிர் பலர் கூடி இவள் கணவன். மனைவி என்று தம்முள் கூறிக் கொண்டு சிறு வீடு கட்டிச் சோறாக்கியும்.உண்டு அடுகின்ற ஆட்டம் என்று கூறுவதும் உண்டு. இவ்விளையாட்டை ஆடும் மகளிர் ஆட்டம் சலிப்படைந்தால் குரவையும் ஆடுவர் என்பதை,

நெய்தல் உண்கண் நேர்இறைப் பணைத் தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்.     
(ஐங்.181)

என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது. தாம் கண்டதை, கேட்டதை சிறிதும் மறைக்காமல் வெளிப்படையாகக் கூறும் பருவத்தர் ஆதலின் பொய்தலாடிய மகளிர் பொய்யா மகளிர் எனப்பட்டனர்.

விளையாட்டு முறை:

புழந்தமிழ் மக்கள் எப்பொருளினை வைத்து விளையாடினர் என்பதனை ஐங்குறுநூறு உணர்த்துகிறது. தலைவி விளையாடிய பொருள்களைப் பார்த்து நற்றாய் வருந்தவதாய்ப் பல இடங்களில் வருகின்றன.

நீர்நசைக் கூக்கிய உயவல் யானை
இயம்புணர் தும்பினு யிர்க்கு மதிதம்
சென்றனள் மன்ற வென்மகளே
பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே.

என்ற பாடல் வழி அறியலாம். பந்து, கழங்கு, வைத்து விளையாடி மகிழ்வது அவர்களுடைய பழக்கமாக உள்ளது. இதே போன்று தலைவனுக்கும் தலைவிக்கும் பிறக்கும் மகன் சிறுதேர்இனை உருட்டி விளையாடுகிறான் எனக் கூறப்படுகிறது.

முடிவுரை:

விளையாட்டு என்பது மகிழ்விற்கான செயல்பாடேயாகும். அவ்விளையாட்டு பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, உடல்நலம், மனநலம்,    பேணுபவையாகவும் அமைகின்றது. இதில் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டு முறை, விளையாட்டின் வகைகள் போன்றவற்றை எடுத்துக் காட்டப்படுகின்றது. இவ்விளையாட்டுக்களை மக்கள் ஓய்வு நேரங்களைக் கழிப்பதற்கு விளையாடி மகிழ்கின்றனர்.

பார்வை நூல்

  1. ச.வே. சுப்பிரமணியன் – ஐங்குறுநூறு
  2. புலியூர்க் கேசிகன் – சங்க இலக்கியம் எட்டுத்தொகை

*****

கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
சிவகாசி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.