நமது நம்பிக்கை
– முனைவர் கி.இராம்கணேஷ்,
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
பொள்ளாச்சி.-642 107
துவண்டு கிடக்கும் சட்டையும்
உன் தோள்பட்டால் மிடுக்குப் பெறும்…
வாசலில் கிடக்கும் செருப்பும்
உன் பாதம்பட்டால் பீடுநடை போடும்…
வெளுத்து வாங்கும் வெயிலும்
உன் வேகம்கண்டால் வியர்த்துப்போகும்…
சுருண்டு கிடக்கும் பாயும்
உன் உடல்கண்டால் விரிந்து கொள்ளும்…
தோல்வி உன்னைக் கண்டால்
தோள்வலிமை கண்டு ஓடிப்போகும்…
வீசும் தென்றலும் வீறுடன் நடந்தால்
உனக்குக் கவரி வீசும்…
வாசிப்பை உன் வசிப்பிடமாக்கி
வசந்தத் தேரில் உலாப்போ…
வெற்றிடமான வாழ்க்கையை
வெற்றியின் இடமாக மாற்று…
சோம்பல் என்னும் துரோகியை
சாம்பலாக்கிச் சாகசம் செய்…
முயற்சி கொண்டு பயிற்சிபெறு
முடிவில்லா சுகம்பெறு…