கவியோகி வேதம்

சிற்பியின் கைகள் நடுங்குமெனில்
   சிலைகளும் எவ்வா றுருவாகும்?
கற்பவன் கல்வி சிறந்திடுமோ,
   கற்பிப்ப வனுமே அரக்கனெனில்?
கற்பிலா மாதர் தலைவியெனில்
   கன்னலாய் ஆட்சி நடப்பதெங்கே?
சொற்களும் இவைபோல் சக்திபெறா,,
   சொலும்காப் பியமே ‘சக்கை’எனில்!

கதிரவன் சக்தி வராநிலத்தில்
   கனிதராப் புல்லும் முளைப்பதில்லை!
முதியவர் ‘சோடை’- போம்ஊரில்
   முன்னேற் றமென்றும் இருப்பதில்லை!
சுதிகளே சேரா வீணைகொண்டால்
   ‘சுக’மெனும் வார்த்தைக் கர்த்தமில்லை!
கதியிலா ஏழை வாழ்வதெங்கே?
   கருணையே பாயா ஆட்சிதன்னில்!

பயிற்சியே செய்யா சோம்பல்மனம்
   பகுத்தறி புத்தி கொள்வதில்லை!
அயற்சியில் உழலும் நெஞ்சத்தில்
   அற்புத ‘ஸித்தி’ வருவதில்லை!
வயிற்றினில் அடிக்கும் சீமான்கள்
   வாழ்வதும், ”சொல்லும்” தரமில்லை!
கயிற்றினில் மாயை வாழ்வு‘கட்டும்’
   கடவுளே! உனையான் விடுவதில்லை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *