-மேகலா இராமமூர்த்தி

திரு. ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கிறார் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

கடல்வாழ் உயிரினங்களில் ஓடுகளான இந்தச் சோழிகள், பழுப்பும் வெளுப்பும் கலந்த பளீர் வண்ணத்தில் மின்னி நம் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவருகின்றன. பகடை ஆடவும் சோதிடம் பகரவும் பயன்படும் இச்சோழிகளை நம் கவிஞர் பெருமக்கள் தம் கவிதைகளில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்!

*****

”அமரர்கள் அமுதம் எடுக்கையில் கிடைத்த ஆழியின் கொடையோ? பாரதப் போரில் பார்த்தசாரதி ஊதிய பாஞ்சசன்னியமோ? கடல்நங்கையின் காதல் மகவோ?” என்று வரிசையாய்க் கேள்விகளை அடுக்கி நம்மை இரசிக்க வைக்கிறார் திரு. ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி.

ஆழியின் கொடை!!   

கவர்ச்சி இளமங்கை
கழுத்தும்குமிண்வாயும்
கழன்று கிடக்கிறதோ?
அமுதம் எடுப்பதற்காய்
ஆழ்கடல் கடைகையில்
அமரர்கள் எடுத்துவோ?
அரிசிக்குள் புதைத்தாலும்
அலுங்காமல் மேல் வரும்
அதிசய வலம்புரியோ?
பாரதப்போரில் கண்ணன்
பாங்குடன் ஊதிய
பாஞ்சசன்னியமோ?
கடல்நங்கை களிப்போடு
கதிரவனைக் காதலித்து
ஆழத்தில் ஈன்றெடுத்த
ஆழியின்நன்கொடையோ?
முற்றிய சிப்பிகளோ?
மூத்த நண்டு ஓடுகளோ?
மூச்சடக்கித்தேடினாலும்
முத்து எதில்? யாரறிவார்?
ஐந்தும் கிடப்பது போல்
ஐம்புலன்கள் அடங்க
ஐயமின்றி முக்தி வரும்!!!

*****

”உப்பைத் தரும் கடலில் விளைந்த சோழிகளால் செப்பிடத்தகு பயனின்மையின் விளையாட்டுப் பொருளாய் மாறிப்போயின” என்று சோழிகளின் கதையைக் கவிதையாய் வடித்துள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

விளையாடவே…

சிப்பி யென்றால் முத்திருக்கும்,
சீதரன் ஊதும் சங்கென்றால்
எப்படி யாயினும் ஏற்றிடுவர்
எல்லா வகையாம் பூசைக்கே,
உப்பைத் தந்திடும் கடல்நீரும்,
உதிரியாய்ச் சோழிகள் எங்களாலே
செப்பிடத் தகுந்த பயனிலாததால்
சேர்ப்பர் பலரும் விளையாடவே…!

*****

”காலக் கணக்கைக் கண்டுணரவும், ஞால வாழ்க்கையின் புதிரறியவும் உபாயம் நல்கும் மாயக் கயிறாம்  சோழிகள் இவை” என வியக்கிறார் முனைவா் ம. இராமச்சந்திரன். 

காலம்

ஓடி ஓடி உட்கலந்த
காலக்கணக்கை,
கண்டுகொண்ட மகத்தான
கண்டுபிடிப்பு,
எண்கள் வாழ்க்கையின்
புதிா்களைக் கட்டவிழ்க்கும்
அற்புத மாயக்கயிறு இவை.

*****

ஆழி அளித்த சோழிகளைப் பல்வேறு கோணங்களில் நுணுக்கமாய் அணுகி, அரிய கவிதைகள் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

உன் நினைவாய்…

கடற்கரை மணற்பரப்பில்
கையிரண்டைக் கோத்தபடி
கதைபேசி நடக்கையிலே
திடுக்கென்று உதறிவிட்டு
ஓடிப்போய் ஒவ்வொன்றாய் – நீ
குனிந்தெடுத்த சோழிகள் தாம்

விடைபெற்றுப் போகையிலே
எதன்பொருட்டோ என்கையில்
வெடுக்கென்று திணித்துவிட்டு
வேகமாய் நீ மறைந்தாய்!

நீ நகர்ந்துப் போனபின்னும்
உன் கரத்தைப் பிடித்தபடி
நடப்பதுபோல் ஓர் உணர்வு
ஐவிரலாய் அவை எனக்குள்…

விரல்களை வருடிக்கொண்டே
வீடுவந்து சேர்ந்தேன் நான்!
முகம் கழுவி உடைமாற்றி
உணவருந்திப் படுத்தபின்னே
உறக்கம் துளிர்க்கும் நொடி
சோழிகளை நினைத்திட்டேன்

மேசைமீது வைத்திருந்த – உன்
விரல் நிறத்துச் சோழிகளை
கைப்பேசி ஒளிபாய்ச்சிக்
கண்கொட்டப் பார்த்திருந்தேன்

உயிரற்றக் கூடுகள் போல்
உருவத்தில் தெரிந்தாலும்
உயிர்ப்போடு உள்ளிருந்து
உன் நினைவு நெளிகிறது!

ஈரமாய் இருப்பதன்
காரணம் உணர்ந்திட்டேன்
உன் காதல் கடல் திரண்டு
அதிலிருந்து வழிகிறது

இன்னமும் உதிராமல்
அதன்மீதிருக்கும் மணல் துகள்போல்
உன் நினைவுகளில்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன என் பொழுதுகள்!

காதலியின் கைவிரல்களாய்ச் சாலம் காட்டும் சோழிகளை, அதிலிருந்து கடலாய்ப் பொங்கி வழியும் காதலை, சோழிமீதிருக்கும் மண்துகள்போல் காதலியவளின் நினைவுகளில் ஒட்டியிருக்கும் தன் வாழ்வின் பொழுதுகளை இக்கவிதையில் சொன்மாலையாக்கிக் காதல்மணம் பரவ விட்டிருக்கின்றார் திரு. புதுவைப் பிரபா; அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 179-இன் முடிவுகள்

  1. எனது கவிதையினை சிலாகித்துப் பாராட்டி எனது முயற்சியினை ஊக்கப்படுத்தி , தொடர்ந்து இயங்க உற்சாகம் ஊட்டியிருக்கிற தோழி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும் வல்லமை இணைய குழுவிற்கும் என் உள்ளப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் .

    அன்புடன் …
    புதுவைப் பிரபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *