கழிவறை சென்று திரும்பினேன் யாரோ கூப்பிடுவது போல் கேட்டது திரும்பிப்பார்த்தேன் கழிவறைக்குள் இருந்து ஒலி கேட்டது. யாரது? என்றேன் நான்தான் கழிவறை என்றது. உன்னிடம் எனக்குப் பேச நேரமில்லை சொல்லித் திரும்பினேன்… எனக்காக ஒருநிமிடம் என்றது சொல்லித் தொலை என்றேன் மகனே! என்றது அடச்சீ நான் உன் மகனா? சொல்ல வந்ததைச் சொல்… ஒருமுறையாவது என்னைப்பற்றிச் சிந்தித்தாயா? உன் கழிவுகளை உன்தாய் வயிற்றில் சுமந்தாள் அதுவும் பத்துமாதங்கள் மட்டுமே! நானோ ஒவ்வொரு நாளும் சுமக்கிறேன் நீங்கள் தூய்மையாக, நான் அழுக்காகிறேன் என்னைப் பார்த்தவர்கள் முகம் சுழிக்கிறார்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடுகிறார்கள்… துர்நாற்றம் என்னிடம் எப்படி வந்தது உங்களால் தானே! கருவைச் சுமந்த கருவறை போல் கழிவைச் சுமக்கும் கழிவறை நான் என்றது. பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை மகனே எனக் கழிப்பறை சொன்னது நியாயமாகவே பட்டது…