Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    KRISHNA FOR TODAY….
    ———————————————

    கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

    180609 Makhan chor A4 watercolour sketch 180403/coloured on 180609 wm

    “மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
    தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
    இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
    மன்னார்AND COCHOR மனது”….
    மன்னாரண்ட் கோசோர் மனது”….

    ”மாடுமேல ஏறிநின்று கோடிவீட்டு கோபாலர்
    பாடுபட்ட கொள்ளையில் பங்குபெற -கோடுவம்ஸ(கோடு -சந்திரன் -சந்திரவம்ஸ)
    மன்னனர் மணிவண்ணர் மாட்டிடம் ’’ஆகாட்டு’’
    வெண்ணையந்த வள்ளலின் வாய்க்கு’’….

    கிரேசி கிரியேஷன்ஸ் ”சாக்லேட் கிருஷ்ணா” 777வது ஷோ போட்ட போது எழுதியது….!(1000த்துக்கு இன்னும் கிட்டத்தட்ட 25 ஷோக்களே பாக்கி)….!
    ————————————————————————————————————————————————————

    “எம்பியுறி வெண்ணை எடுப்பார்கைப் பிள்ளையவன் –
    தம்பி பலராம தேவர்க்கு -நம்பீசன் –
    எட்டான் புலனுக்கு ,எட்டுவான் பக்த்திக்கு –
    எட்டினான் ஏழேழு ஏழு (777 )….கிரேசி மோகன் ….நன்றி கிரேசி கிரியேஷன்ஸ் AND கேசவ் ….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”முதலாதி என்று முதலைவாய் சிக்கி
    கதறும் கஜேந்திரனைக் காக்க -முதலாக
    புள்ளாண்டான் மாலர் பதறினார், வாகனப்
    புள்ளூர்ந்து வந்தனர் பார்’’….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 5

    -மேகலா இராமமூர்த்தி

    சினத்தை கைவிடுதலும் மனத்தை அடக்கிப் பொறுமையைக் கைக்கொள்வதும் மனித வாழ்வைச் செம்மையாக்கும். ”பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது முன்னோரின் பொன்மொழி அன்றோ?

    அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
    உறுவ துலகுவப்பச் செய்து – பெறுவதனால்
    இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
    துன்புற்று வாழ்தல் அரிது.
    (நாலடி – 74)
     

    அறிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து, அடக்கமுடையவராய், அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சி, தமக்குத் தகுதியான செயல்களை உலகம் மகிழும் வண்ணஞ்செய்து, இன்பத்தோடு வாழும் இயல்பினர், என்றும் வாழ்வில் துன்புறுதல் இல்லை.

    அடக்கமும், பொறுமையும், கிடைக்கும் வருவாயில் மனநிறைவோடு வாழும் பெற்றியும் மட்டும் ஒருவனுக்கு வாய்த்துவிடுமேயானால், அவன் வாழ்க்கை வெற்றிதான்!  ”பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி” வாழும் தமிழ்ப் புலவோரின் பொருள்பொதிந்த வாழ்வு குறித்துக் கோவூர்கிழார் கூறுவதை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

    மனிதரில் இருவகையினர் உளர். சிலர் உள்ளத்தே நஞ்சைவைத்துச் சொல்லில் தேனைக் குழைத்துப் பேசுவார்கள்; வேறுசிலர் உள்ளத்து அன்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமொழிகளால் அறிவுறுத்துவார்கள். இவ்விருவரில் யார் சொல்லை நாம் மனங்கொள்ளவேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது நாலடியார்.

    ”பேரரும்புகளிலெல்லாம் விருப்பத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும் வளம்நிறைந்த கடலையுடைய குளிர்ச்சிபொருந்திய கடற்கரைத் தலைவ! தமக்கு முன்னேற்றம் தருவதை அறிந்து செய்வாரைப் பெற்றால், அவர்கள் உள்ளன்பினால் நன்மை கருதிச் சொல்லும் கடுஞ்சொல், மனமகிழ்ந்து கூறும் அயலவர் இன்சொல்லினுந் தீதாகுமா? ஆகாது!” என்கிறது நாலடியார்.

    காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
    ஏதிலார் இன்சொலின் தீதாமோ – போதெலாம்
    மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
    ஆவ தறிவார்ப் பெறின். 
    (நாலடி – 73)

    இனிக்க இனிக்கப் பேசினாலும் பகைவரின் சொற்கள் தள்ளத்தக்கன. கடுமையாய் மொழிந்தாலும் நட்டாரின் சொற்கள் தள்ளாது கொள்ளத்தக்கன. இனிப்புப் பண்டங்கள் வாய்க்குச் சுவை தந்தாலும் உடலுக்குத் தீங்கையும், கசப்புப் பண்டங்கள் வாய்க்குக் கைத்தாலும் உடலுக்கு நன்மையையும் தருவனவன்றோ? எனவே சொற்களின் சுவையில் மயங்குவதைக் காட்டிலும் அவை நமக்கு நல்கும் பயனறிந்து தெளிதலே நல்லது.

    பொறையுடைமையைப் பல்வேறு தருணங்களில் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தவேண்டிய கடப்பாடு சான்றோர்க்கு உண்டு. காட்டாக,  அறிவுடையோர் பேதையர்க்கு நல்லறிவு கொளுத்த எத்துணை முயன்றாலும் அதனை விளங்கிக்கொள்ளும் அறிவும் திறனும் பேதையர்க்கின்மையால் அவர்கள் அறிவுடையோர் கருத்துக்கு முரண்பட்டு ஏறுமாறாக ஏதேனும் பிதற்றிக்கொண்டுதான் இருப்பர். எனவே ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பேதையரோடு உரையாடுவதைத் தவிர்த்து அவ்விடத்தைவிட்டு வழுக்கிக் கழிதலே நல்லது என்கிறது நாலடியார்.

    கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
    பேதையோ டியாதும் உரையற்க – பேதை
    உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
    வழுக்கிக் கழிதலே நன்று.
    (நாலடி – 71)

    ”பழமொழி நானூறும் இதே பொருள்பட,

    ”கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
    பொல்லாத(து) இல்லை ஒருவற்கு…” என்று சொல்லிச் சென்றிருப்பதை இங்கே நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    மானுட வாழ்வில் ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது. ’ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை’ என்பது ஆன்றோர் வாக்கு. மனிதரை விலங்கினின்றும் வேறுபடுத்திக்காட்டும் அவ்வுயர் பண்பை மானுடர் உயிரினும் மேலாய் ஓம்பவேண்டும்.

    ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று வள்ளுவரால் விதந்தோதப்படும் இல்லறமாம் நல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் ஆடவன் ஒருவன், தன் மனைவியைத் தவிர பிற பெண்டிரை நயப்பதும், அவர்கள்மாட்டுக் காமம்துய்க்க நினைப்பதும் மிகவும் தீது. அந்த இழிசெயலை – பழிசெயலைச் சான்றோர் என்றுமே விரும்பமாட்டார்கள்; ஏன்? புண்ணியம், புகழ், தக்கார் நேயம், பெருமிதம் தரும் ஆண்மை என்ற இந்நான்கும் பிறன்மனை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா; பகை, பழி, பாவம், அச்சம் எனும் நான்குமே அவர்களிடம் சேரும் என்பதால்.

    அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
    பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா – பிறன்தாரம்
    நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
    அச்சத்தோ டிந்நாற் பொருள். 
    (நாலடி – 82)
     

    இதையே குறளாசான்,

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
     (பிறனில் விழையாமை – 146) என்றறைந்தார்.

    திருமணம் ஆகா இளைஞன் ஒருவன் பிறன்மனை நயப்பதே கண்டிக்கத்தக்க தீயொழுக்கமாகும். அவ்வாறிருக்க, நல்லநாள் கேட்டறிந்து, அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டித் திருமணம்செய்து தன் காவலிற் புகுந்த மெல்லியளான அன்புடை மனையாட்டியும் அகத்திருக்க, ஒருவன் அயலான் மனைவியை அடையக் கருதுவது ஏன்? என்று வியந்து வினாவெழுப்புகிறது நாலடி.

    பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
    கல்யாணஞ் செய்து கடிப்புக்க – மெல்லியற்
    காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
    ஏதின் மனையாளை நோக்கு. 
    (நாலடி – 86)

    ஆகவே இல்லறத்தானாயினும் சரி, மணமாகா இளைஞனாயினும் சரி இன்னொருவனின் இல்லக்கிழத்திபால் காமம்கொள்வது அவன் குடிக்குப் பெருங்கேடாய் முடியும். அதனால்தான் கீழான நெறியில் ஒழுகுகின்றவன் அனைவரினும் கடையன் – அறிவிலி, பிறனில் விழைந்து அவள் வீட்டு வாயிலில் காத்துக் கிடப்போன் என்று வெகுண்டுரைத்தார் தெய்வப் புலவர்.

    அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்.  (பிறனில் விழையாமை – 142)

    முறையற்ற பெண்ணாசையை ஒழித்தலே பேராண்மை என்பதே மேலோர் கருத்து.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
    3. பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

     

     

    Share
  • கருவாகி உருவாகி கவினுலகைக் காணும் வரை…

    ஆ. செந்தில் குமார்.

    தந்தையின் உயிரணு ஆற்றலைப் பெற்று…
    தாயின் கருமுட்டை சுவற்றைத் துளைத்து…
    உட்புகுந் ததனுள் ஒன்று கலந்து…
    உயிரின் கருவாய் மாற்றம் பெற்றது…!

    மாற்றம் பெற்ற அச்சிறு கருவும்…
    மெல்ல நகர்ந்து கருப்பையை அடைந்து…
    கருப்பை சுவற்றில் ஒட்டிக்கொண்டு…
    குழந்தை உருவாய் மாறத் துடித்தது…!

    செல்களின் பகுப்பு வேகமாய் நடந்து…
    செல்களின் வளர்ச்சி துரிதமாய் நடந்து…
    செல்களின் பகுப்பும் துரித வளர்ச்சியும்…
    சேர்ந்தொரு சதையின் பிண்டமாய் ஆனது…!

    நஞ்சுக்கொடி யொன்று வளரப் பெற்று…
    பிஞ்சுக் குழந்தைக்குத் தேவையான…
    சுவாசக் காற்று சத்துப் பொருட்கள்…
    சடுதியில் தாயிடம் பெற்றுக் கொடுக்கும்…!

    மூன்றாம் நான்காம் வாரத்திற் குள்ளே…
    முதுகுத் தண்டு மூளை தோன்றி…
    இரத்த அணுக்கள் நாளங்கள் தோன்றி…
    இதயம் தோன்றி துடித்திடத் துவங்கும்…!

    உள்ளுறுப் பனைத்தும் மெல்லத் தோன்றி…
    உடலில் கைகால் குருத்துகள் தோன்றி…
    காது மடல்கள் எலும்புகள் நரம்புகள்…
    கருக் குழந்தைக்கு வளர்ந்திட லாச்சு…!

    எட்டாம் வார இறுதிக்குள் எல்லாம்…
    எலும்புகள் தசைகள் நரம்புகள் கொண்ட…
    ஒற்றை அங்குல நீளக் கருவில்…
    உறுப்புகள் மொத்தமும் தோன்றி யிருக்கும்…!

    குரல் தசைநார்கள் வளரத் துவங்கும் …
    புறப் பாலுறுப்பு தோன்றத் துவங்கும்…
    கைகால் நகங்கள் வளரத் துவங்கும்…
    கைரேகை எல்லாம் தோன்றத் துவங்கும்…!

    பன்னிறு வாரங்கள் கடந்த பிறகு…
    பல மடங்காக எடையும் கூடும்…
    சிசுவின் வாயுள் இருக்கும் நாவில்…
    சுவையை உணரும் அமைப்புகள் தோன்றும்…!

    தோல் அடுக்கெல்லாம் முதிரத் துவங்கும்…
    தலைமுடி யனைத்தும் வளரத் துவங்கும்…
    காற்றை சுவாசிக்கும் திறமை தோன்றும்…
    கேட்கும் திறமை எல்லாம் தோன்றும்…!

    கருப்பை திரவத்தில் மிதக்கும் கருவில்…
    கழுத்தைத் திருப்பும் தலையை அசைக்கும்…
    திடுக்கிடும் கைகால் அசைவுகள் பலவும்…
    துடிப்புள்ளதாக உணர்ந்திட முடியும்…!

    இருபத்து நான்கு வாரங்கள் கழித்து…
    இமைக ளிரண்டும் மெல்லத் திறக்கும்…
    சிசுவின் தோலில் சுருக்கங்கள் குறையும்…
    சிசுவின் மூளை துரிதமாய் வளரும்…!

    சுவாச மண்டலம் எலும்பு மண்டலம்…
    செரிமான மண்டலம் தசை மண்டலம்…
    நரம்பு மண்டலம் குருதியோட்ட மண்டலம்…
    நிணநீர் மண்டலம் அனைத்தும் வளரும்…!

    முப்பத்தாறு வாரம் கழிந்தப்பின்…
    முழுதாய் வளர்ந்த அக்கருக் குழந்தை…
    நாற்பதாம் வார இறுதிக்குள் பிறந்து…
    நம்மைத் தாங்கும் உலகைக் கண்டது…!

    குறிப்பு :-
    நிணநீர் மண்டலம்
    நிணநீர் என்பது என்ன? சிவப்பணு நீங்கிய குருதி. வெளிர்ப் பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது. உடல் பாதுகாப்பிற்குப் பயன்படுவது. நிணநீர் மண்டலத்திலுள்ள உறுப்புகள் யாவை? நுண்ணிகள், குழாய்கள், முண்டுகள், நிணநீர்ச் சுரப்பிகள் ஆகியவை.
    நிணநீர் ஒட்டம் எவ்வாறு ஏற்படுகிறது, தசை அசைவுகளாலும் மூச்சு அசைவுகளாலும் நிணநீர் ஒட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலத்தின் வேலைகள் யாவை? 1. ஊட்டப்பொருள்களையும் உயிர்வளியையும் திசுக்களுக் களித்தல். 2. திசுக்கள் உண்டாகும் கழிவுகளை மீண்டும் குருதி யோடு சேர்த்தல். 3. உயிரணுக்களுக்கிடையே நிரம்பி அவற்றை உயிர் வாழச் செய்தல். 4. குடற் பால் குழலில் தங்கிக் கொழுப்பை உறிஞ்சுதல். 5. இதிலுள்ள வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்லுதல்.

    Share
  • கவர்ச்சி ஊர்வசி

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++++++

    கவர்ச்சி மேனகா !

    என்ன காரியம் செய்தாய் ?

    முட்டாள் ஆக்கினாய் ஒவ்வோர் ஆணையும் !

    முட்டாள் ஆக்கினாய் !

    கவர்ச்சி ஊர்வசி !

    என்ன காரிய செய்தாய் ?

    எல்லா விதிகளை மீறினாய் !

    விதிகளை மிதிப்பதை

    அனைவ ருக்கும் காட்டினாய் !

    கவர்ச்சி மேனகா !

    என்ன காரியம் செய்தாய் ?

    எல்லா விதிகளை முறித்தாய் !

    பொழுது வெளுத்த ஓர்நாள்

    உலகு காத்தி ருந்தது,

    ஓர் கவர்ச்சிக் கன்னி வருகைக்கு

    ஓவ்வோர் ஆணையும் மயக்கி

    அடிமைப் படுத்தி

    மூடனாய் ஆக்கிட !

    உலகு அனைத்திலும் உன்னதக்

    கவர்ச்சிப் பாவை நீதான் !

    எப்படித் தெரியும் உரைப்பாய்

    இப்புவி காத்துள துனக்காய் ?

    இப்புவி காத்துள துனக்காய் ?

    கவர்ச்சி மாதே !

    எப்படி அறிவாய் நீயும்

    தப்பா தெல்லாம் வீழும் என்று ?

    கவர்ச்சிக் கன்னி

    உன்பீடச் சிகரம் எட்டா உயரம் !

    உன்காலில் வீழும் உலகு !

    பொன் பொருள் யாவும் ஈந்தோம்

    உன்னருகே அமர,

    உன் புன்னகை காண,

    உன்னிழலில் குளிர !

    கவர்ச்சி அணங்கே !

    புவிப் பேரழகி !

    புதுப் பேரழகி !

    உன்னழ குக்கு ஈடில்லை

    உலகில் !

    ஒவ்வோர் ஆணையும்

    உலகில்

    முட்டாள் ஆக்கினாய் நீ !

    முடவன் ஆக்கினாய் நீ !

    முதிர்ச்சி

    அறிவில் லாத நீ !

    +++++++++++++

    Share
  •  கருவூரார் திருவுள்ளம்

    முனைவர் இரா. மதன் குமார்

    முன்னுரை

    ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய கருவூரார் அருளிச்செய்த திருப்பதிகங்கள், பத்து. ‘கருவூர் சித்தர்’ என்ற பெயரால், மக்களால் நன்கறியப்படுகின்ற அவர்தம் திருப்பதிகங்கள், மெய்யியல் அனுபவப் பதிவுகளாகவும், இறைவனால் அவர் ஆட்கொள்ளப்பெற்ற அருளியல் பதிவுகளாகவும் விளங்குகின்றன. சீரிய உவமைநயங்களால் பாடுபொருளை எடுத்துரைக்கின்ற பாங்கினையும், சைவநெறிகளைத் தத்துவநோக்கில் எடுத்தாளுகின்ற போக்கினையும் அவர்தம் திருப்பாடல்களில் காணலாம். தமது திருப்பதிகங்கள் வழியே,  அவர் பக்திநெறி காட்டுகின்ற திறமானது இக்கட்டுரையில் ஆய்ந்துரைக்கப்பெறுகிறது.

    கருவூரார் திருப்பதிகப் பொருள்நிலை

    தில்லைத் திருத்தலத்தில், இறைவன் கோயில் கொண்டுள்ள நிலையினை, அதன் இயற்கைச் சூழலுடன் கோயில் திருப்பதிகமாகப் பாடியுள்ளார். இறைவனின் திருஅழகினை உருக்காட்சியாகக் காட்டுவதாக, திருக்களந்தை ஆதிச்சேச்சரத்துத் திருப்பதிகம் விளங்குகிறது.  இறைவனார், தமக்கு அருளியவகையினை திருமுகத்தலைத் திருப்பதிகத்திலும், கங்கைகொண்ட சோளேச்சரத்துத் திருப்பதிகத்திலும் குறித்தருளியுள்ளார். திருப்பூவணத் திருப்பதிகம், பல்பொருள் பதிகமாகவும், திருச்சாட்டியக்குடித் திருப்பதிகம், இறைவரது பெருமையையும், அத்தல அந்தணர்க்குப் பெருமான் அருளுதலையும் விளக்குகின்றன. திருஇடைமருதூர் திருப்பதிகத்தில், தமக்கு ஞானக்கண் விழிப்பருளி, உயிர்களை வாழ்விக்கப் பாமாலை பாடுதற்கு வரமருளிய சிறப்பினைக் குறித்துள்ளார். அத்துடன், ‘அகத்துறை வழியே, அருள்துறையைப் பாடுதல்’ என்னும் நோக்கில்,  திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்,  திரைலோக்கிய சுந்தரம் மற்றும் தஞ்சை இராசராசேச்சரம் ஆகிய திருப்பதிகங்களையும் அருளியுள்ளார்.  இவற்றுள் மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை ஆகியன, அரனை அடைதற்குரிய வகையில் அமையக் கருவூரடிகள் அறிவுறுத்துகின்றார்.

    கருவூரார் திருவுள்ளம்

    முக்கண் பரமனார், பிச்சை உகக்கின்ற பெருமானாக வந்து, அடியார்தம் வினைகளைத் தமது கையோட்டில் ஏற்றருள்கின்றார் என்பது தத்துவநோக்கு. ‘வானவர் அனைவரும், பெருமானின் ஆணையின்வண்ணம் சேவை செய்யக் காத்திருக்கின்ற வேளையில், பெருமானோ, மண்ணுலகில் உயிர்கள் உய்யும்பொருட்டு, அவற்றின் தீவினைகளைப் பிச்சையேற்று அவற்றை உய்விக்க இரங்கியருள்கின்றான்’ என்கின்றார் கருவூரடிகள்.

    ‘இந்திர லோக முழுவதும் பணிகேட்டு

                                  இணையடி தொழுதெழத் தாம்போய்

                          ஐந்தலை நாக மேகலை யரையா

                                  அகந்தொறும் பலிதிரி யடிகள்’                            (9ஆம் திருமுறை:17: 2)

    பெருமானது மெய்யடியாராகிய கருவூரரும் உயிர்கள்தம் வினைகளைப் பிச்சையாக ஏற்று,  அவை பிறவிப்பிணி நீங்கி உய்ய, தமது அருஞ்சொல் மாலைகளைத் தந்தருளியுள்ளார். ‘அங்கை ஓடு ஏந்தி பலிதிரி கருவூர்’ என்பது, திருப்பதிகத்தின்வழி, கருவூரடிகள் தம்மைச் சுட்டியுள்ள அகச்சான்றாகும். பக்திநெறியினை வாழ்வியலாக அல்லாமல், வெற்றுச் சடங்குகளாகவும், வீண் பயிற்சிகளாகவும் மேற்கொள்கின்ற பொய்யர்தம் அறிவு, சிற்றறிவாகவே விளங்கும்.       அருள்கடலாக விளங்கவல்ல இறைவனைச் சிற்றறிவுடைய உயிர்களால் நிறைவாக ஆய்ந்தும், அறிந்தும், இன்புற இயல்வதில்லை. அதனால்,  ‘நாடகத்தால் உன் அடியார் போல நடிக்கின்றேன்’ என்று கலங்கி பல்லுயிர்களும், பிறவியென்னும் பெருஞ்சுழியில் பட்டு மாய்கின்றன.  உயிர்கள், அறியாமை என்னும் பெருஞ்சுழியிலிருந்து விடுபட்டு, பிறவி என்னும் பெருங்கடல் நீந்திக் கரையேறுதற்குக் கருவூரர்தம் திருப்பதிகங்கள் சிறந்த வழித்துணையாகின்றன.

     ‘அங்கையோடேந்திப் பலிதிரி கருவூர்

                                          அறைந்த சொன்மாலையால், ஆழிச்

                                  செங்கையோ டுலகில் அரசுவீற்றிருந்து

                                         திளைப்பதுஞ் சிவனருட் கடலே’                     (9ஆம் திருமுறை:8: 2)

    என்று கருவூரடிகள், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, பேரின்பமாகிய அருள்கடலில் திளைக்க வழிகாட்டுகின்றார்.

    உடல் என்னும் உத்தமனார் விமானம்

    ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’ என்றமைந்த கடுவெளிச் சித்தர்தம் பாடல், உடலிடத்தே இடம்கொண்ட உத்தமனை மறந்து, நிலையில்லாச் சிற்றின்பச் சேற்றில் உழல்கின்ற உயிர்களின் அவலத்தைச் சுட்டியுரைப்பதாகும். அத்தகைய அவலம் தமக்குத் திருவருள் துணையால் நேரிடாத வகையினைக் கருவூரடிகள் விளக்கியுரைக்கின்றார்.

    ‘மனித வாழ்க்கையோ, சிற்றின்பச் சேறு; அதற்கென அமைந்த உடம்போ, பச்சை மண்ணாக, வாழ்நாள் என்னும் பெருமழை வெள்ளத்தில் கரைந்து அழியக்கூடியது. இதுவே சிற்றறிவுடைய மனிதர் வாழ்க்கை. ஆனால், தமது வாழ்க்கையால், மண்ணுலகு முழுமையும் பயன்பெறும்படி முகத்தலைப் பெருமான், முப்புராதியர்க்கும் அருளிய பாங்கினோடு, தனக்கும் அருள்செய்தார்’ என்று கருவூரார் அருளியுள்ளார். ‘முப்புரமாவது, மும்மல காரியம்’ என்பது திருமூலரின் திருநோக்கு. அவ்வகையில், அளவுகடவாத மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை எனப் பண்பட்டால், உயிர்கள் இறைவனை உணர்ந்துய்யலாம். அதற்கு, ‘ஐம்புலன்களால் ஆன உடம்பே கருவி’ என்கின்றார்.

    திருவருள் துணையால், தமது ஐம்புலநாட்டம் அளவுகடக்கவில்லை. அதனால்,  ‘இறைவனைச் சார்தல்’ என்னும் அகத்தீ தம்முள் மேலெழுந்தது; அத்தீயானது மெல்லப் பெருகி, உடலைச் சுட்டு, உத்தமனுக்குரிய விமானமாக்கியது’ என்கின்றார்.

     ‘புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்

                                  பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்

                         வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்

                                  மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே

                         முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே

                                  முகத்தலை யகத்தமர்ந் தடியேன்

                         வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்

                                  விழுமிய விமானமா யினதே’                                                (9:11:6)

    திருவருள் துணையால் உயிர்கள் இத்தகைய அரும்பேற்றுக்கு ஆட்படுதற்கு, தம்மியல்பினை உணர்தலாகிய மெய்யுணர்வுக்கு நாளும் தலைப்படவேண்டும்’ அதனைக் கருவூரார், ’திருந்துயர் பருவத்து அறிவுறுதல்’ என்று குறித்தருள்கின்றார்.

    திருந்துயர் பருவத்து அறிவுறுதல்

    இறைவன், இன்பமே  வடிவானவன். அனைத்துயிர்க்கும் இன்பம் அருள்கின்ற அவனது அளப்பருந்தன்மையால் அவன், ‘சங்கரன்’ எனப்பெறுகின்றான். அவனால் பிறப்பூட்டப்பெறுகின்ற உயிர்கள், இன்பநுகர்ச்சியே தமது இயல்பாக விளங்கவல்லவை. கருவெனத் தோன்றுகின்ற நொடி முதலாகவே அனைத்துயிரினுள்ளும் இறைவன் நிறைந்திருந்து அவற்றை, தனது நிலையாகிய பேரின்பத்துக்கு ஆற்றுப்படுத்த வல்லவன். பெற்றதாயினும் இனிய பெருமானின் கருணையாகி பெருந்திறத்தைக் கருவூரடிகள், ‘தாயின் நேர் இரங்குபவன்’ (9:8:3), ‘அன்னை ஒக்க அமுதூட்டுவான்’ (9:8:8), ‘தாயினும் நல்ல முக்கணான்’ (9:9:1) என்று போற்றியுள்ளார். பெருமானின் இத்தகைய பெருந்திறத்துக்கு ஆட்படுதற்கு, உயிர்க்கு மெய்யறிவு வாய்த்தல் வேண்டப்படும். அறிவாய், அறிதத்துவமாய், அறிபொருளாய், அதன்வழியான இன்பம் என அனைத்துமாக விளங்கவல்ல பெருமான், தன்னை அறிவித்து, தன்னிலையாகிய இன்பத்தை அனைத்துயிர்க்கும்  அருளவேண்டி,  அணுப்பொழுதும் உயிருக்குள் உயிராக இருந்து அவற்றை இயக்குகிறான். ஆனால், உயிர்களின் அறியாமையால், அவை மலச்சார்பில் கட்டுண்டு, இறைவனை உணர இயலாதவகையில், கீழ்நிலையில் செல்கின்றன. ஆணவம் முதலான மும்மலங்களின் உருவாகி, அவமே புரிந்து திரிந்த முப்புராதிகளின் அறியாமையைப் பெருமான் பொறுத்தருளி, அவர்களைத் தமது அடியவர்களாகவும் ஏற்றருளிய பெருந்திறத்தைக் கருவூரார்,

     ‘நிசிசரர் இருவரோ டொருவர்

    காதலிற் பட்ட கருணையாய்’                                     (9:13:7)

    என்று குறித்தருளியுள்ளார். வினைவயத்தால் தம்மை மறந்த திரிபுராதியரிடத்திலும் காதல் கொண்டு கருணைசெய்த பெருமான், உயிர்க்குயிராக, உயிரில் கலந்திருத்தலை உயிர்கள் கணப்பொழுதும் கருதுவதில்லை. மாறாக, உடன்தோன்றி, அறியாமைக்கு வாயிலாகி, உயிரறிவைக் கீழ்நிலைக்குத் தள்ளுகின்ற ஐம்புலன்களையே, நாளும்நாளும் உறுதியாக நம்பி, வாழ்வைக் கீழ்நிலையில் செலுத்துகின்ற சிற்றின்பத்தில் ஆழ்கின்றன. பெறுவதற்கு அரிய மனிதப் பிறப்பினைப் பெற்றிருந்தும்கூட, அறியாமையால் உயிர்கள், சிற்றின்பச் சார்பே தமது நிலையென விளங்குகின்றன. அதனால், ஐம்புல இன்பத்தில், சிந்தை மயங்குகின்றன. ஐம்புலப் பகைமை அகற்றி, அகவொளி ஏற்றுகின்ற பாங்கில்,

    ‘இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்

                                 ஏழையேற் கென்னுடன் பிறந்த

                         ஐவரும் பகையே’                                                                     (9:8:2)

    எனக் கருவூரார் நன்னெறி உரைக்கின்றார். இவ்வாறு,  உயிர்களுக்கு ஐம்புலச் சேட்டைகளால் விளைகின்ற பெருந்துன்பங்களைத் தாமுற்ற துன்பமாகக் கருதிப் பாடுகின்றார்.

    வினைகளாம், பாசப் பெருங்கடல்

    பொருளல்லாதவற்றைப் பொருளென மயங்கி, நிலையில்லாத சிற்றின்பச்சேற்றில் உழல்கின்ற உயிர்கள்,  திருவருளால் மீட்சி பெறுகின்ற நன்னிலையினைச் சிவஞானபோதம், நயம்மிக்க உவமையால் விளக்கியுரைக்கிறது. ‘அரசன் மகனொருவன், தனது அறியாத பருவத்தில் கானகத்தில் தனது தந்தையைப் பிரிந்தான். கானகத்தில் இருந்த வேடுவர் கூட்டத்தால் அவன் கண்டெடுக்கப்பட்டு, அன்று முதலாக வேடர் குலப் பிள்ளையாகவே வளர்ந்தான். ஆயினும், திருவருளால் உரியகாலம் வாய்க்கப்பெற்று, கானகத்தில் தன் மகனைக் கண்ட அரசன், அவனது உயர்ப்பிறப்பு முதலானவற்றை உணர்த்தி, அவனைத் தன்பால் மீளக்கொண்டு இளவரசன் என்ற உண்மைநிலையாகிய உயர்வளித்தான்’ எனச் சிவஞானபோதம் விளக்குகிறது.

    ‘அரசன், கானகத்தில் பிரிந்த தன் மகனை உடனே கண்டு பிடித்திருக்கலாமே?; அவனது செல்வாகினால் ஆகாத ஒன்றில்லை என்னும்நிலையில், பல காலம் கழிந்து அவன், தன்மகனைக் காணநேரிட்டது ஏன்?’ என்னும் வினா எழுகிறது. ‘அவன் அரசனே என்றாலும், அவன் பிள்ளையைப் பிரிந்து வாடவேண்டும்’ என்பதும், அப்பிள்ளையும், ‘தனது பெற்றோரைச் சில காலங்கள் பிரிந்து, தனது செல்வாக்கினை மறந்து, வேடனென வாழவேண்டும்’  என்பதும் அவர்களது வினைப்பயனாக அமைந்தது எனலாம். இராமாவதாரத்தில், தசரதன் பிள்ளைக்காக ஏங்கியமையும், பெருவரமாகப் பரம்பொருளையே பிள்ளையாகப் பெற்றும்கூட, கண்பார்வைத் திறனற்ற பிள்ளை மீது அறியாமல் அம்பெய்திய தீவினைப்பயனால் அவன், இராமனைப் பிரிந்து, அவன் பொருட்டு உயிர்த் துறக்கவும் நேரிட்டதை இவ்விடத்தில் நினையலாம்.

    பல பிள்ளைகளுக்கும் தாயொருத்தியே என்றாலும், அவற்றின் குணமும் அறிவும் நடத்தையும் வேறுபடக் காண்கிறோம். அந்நிலையில், ஒவ்வொரு குழந்தைக்குமான வளர்ப்பும், அணுகுமுறையும் அவளிடத்தில் வேறுபடுகின்றன. ஆயினும், குழந்தைகளிடத்தில் அவள் கொள்கின்ற தாயன்பு ஒரு நாளும் மாறுபடுவதில்லை. காட்டாக, சமயக்குரவர் நால்வர்க்கும் இறைவனார்,  தாயாக நின்றருளினார். திருஞானசம்பந்தப்பெருமானுக்கு, அறக்கருணையாகப் பாலைத் தந்து ஆட்கொண்ட பெருமான், திருநாவுக்கரசுப் பெருமானுக்கு, மறக்கருணையாகச் சூலையைத் தந்து ஆட்கொண்டார். அதுபோன்றே சுந்தரர்பெருமானுக்கு, இருவகைக் கருணையாலும் ஓலை தந்து அருள்செய்தார். மணிவாசகர் பொருட்டு, தாமே ஞான குருவாகிவந்து ஆட்கொண்டார். ‘தமதுரை, சிவனுரைத்தவையாக, பாடிப் பாடி, தேடித் தேடி உருகுதற்குப் பேறுபெற அவர்களது முந்தை வினைப்பயனே காரணம் எனலாம்.  ‘ஏடுடைய மலரால், அரனைப் பூசித்ததன் பெரும் பயனே, திருஞானசம்பந்தர்தம் மறுபிறப்பில், அம்மையால் ஞானப்பாலமுதூட்டும் வகையில் ஆட்கொள்ளப்பெற்றார். இவ்வாறே பிற குரவர் பெருமக்கள்தம் மண்ணுலகவாழ்வும், உலகம் உய்ய அமைந்த சைவப் பெருவாழ்வாக அமைந்திலங்க அவர்கள்தம் மெய்யறிவே வகைசெய்தது எனலாம். அவர்கள் பாடிப்பரப்பிய பெருநெறியே, அறுபத்துமூவர் முதலானோரின் மண்ணுலக வாழ்வும் அருளுடைய திருவாழ்வாக மலரத் துணைசெய்தது. அம்மேன்மக்கள் இறைவனை உணரத் துணைநின்ற வாழ்க்கைச்சூழலையே  கருவூரடிகள்,  ‘திருந்துயர் பருவம்’ என்று அறிவுறுத்துகின்றார்.

    அறிவுற்றோர் திருவாழ்க்கை

    மனிதராகப் பிறந்த அனைவருக்கும் அத்தகைய வாய்ப்பினைப் பெருமான் அருளவல்லவன்; ஆயினும், அதனை உணர்கின்ற அறிவுநிலையிலான பக்குவத்தை நாம் அனைவரும் பெற விழைவதில்லை. ‘தமது மனைவியார், திருநீலகண்டத்தின் மீது உரைத்த ஆணையின் வண்ணம், அவரைத் தீண்டாத திருநெறியினராக வாழ்ந்திட்ட திருநீலகண்டரைப் போன்றோ, செல்வம் அனைத்தாலும் அடியார்க்கு அன்றாடம் அன்னமிடுகின்ற திருத்தொண்டு புரிந்துயர்ந்த இளையான்குடிச் செல்வரைப் போன்றோ, திருநாவுக்கரசரது தொண்டின் உரைப்பினைக் கேட்டு அவர்க்கே அடிமையாகி, தொண்டு செய்ய விழைந்து, வாசிப்பதும், நேசிப்பதும், சுவாசிப்பதும், ‘திருநாவுக்கரசு’ என்னும் திருநாமமென்று விளங்கி உயர்ந்த அப்பூதி அடிகள் போன்றோ, ‘யான் பெற்ற இன்பம்; பெறுக இவ்வையகம்’ என்று வாழ்ந்த திருமூலரைப் போன்றோ, அனைத்தையும் நாம் துறந்து, துறவுநிலை வாழ்க்கையினை மேற்கொள்ள வேண்டும்’ என்று கருவூரடிகள் வலியுறுத்தவில்லை. மாறாக, ‘பெருங்கடலிற் காயம் கலந்த செய்கை’ யெனப் பயனற்றுச் செயல்புரியாது, கொண்ட மனிதப்பிறப்பினைப் பெரும்பயன் உள்ளதாகப் பண்படுத்திக் கொள்வதற்கு அறிவுறுத்துகின்றார்.

    இறைவனைச் சார்தலாகிய மெய்யுணர்வும், மெய்யுணர்வின் நிலைப்பினால் பெறப்படுவதாகிய மெய்யறிவும் வாய்ப்பதற்கு, ‘தன்னை உணர்ந்து, தன்னுள் தெளிதல்’ என்னும் பக்குவநிலையினைக் கருவூரடிகள் வலியுறுத்துகின்றார். ‘சிவத்தைச் சார்தலே தனது உண்மை நிலை’ என்று தெளிந்து, தன்னுள் சிவத்தின் இருப்பினை உணர இயலாத உயிர்களின் அவலம் சொல்ல ஒண்ணாதது. ‘ஓடி ஓடிச் சேர்க்கின்ற செல்வம், கனவு போல உடனே மறையக் கூடியது; அச்செல்வத்தைக் கருவியாக்கி, சிவத்தைச் சார்ந்து அறம் புரிவதில்லை. அச்செல்வத்தின் பயன் பெண்ணின்பம் துய்த்தலே’ என்றவாறு, பயனற்று வாழ்கின்றீர்கள்’ என உயிர்களின் அறியாமைக்காக இரங்குகின்ற அடிகள், ‘நிலையில்லாத செல்வத்தைச் சேர்ப்பதிலும், பெண்ணின்பத்தைப் பேணுவதிலும் கொள்கின்ற ஆர்வத்தில், இலட்சத்தில் ஒரு பங்கைச் சிவத்தைச் சார்வதற்குக் கொண்டால், அமரருலகப் பேற்றுக்குஉயரலாம்’ என்றுரைக்கின்றார்.

     ‘அக்கனா அனைய செல்வமே சிந்தித்

                                 தைவரோ டென்னொடும் விளைந்த

                         இக்கலாம் முழுதும் ஒழிய’                                       (9 :11: 5) என்றும்,

                         ‘தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த

                                 தயாவைநூ றாயிரங் கூறிட்டு

                          அத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக்

                                 அமருல களிக்கும்நின் பெருமை’                 (9 :11: 5) என்றும்

    அமைந்த நன்னெறிகளை ஏற்காத உள்ளத்தை, ‘கருங்கல்லும் பார்த்து நகைக்கின்ற இழிவுடையது’ என்கின்றார்.

    ‘கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்

                       கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்

                முன்னகா வொழியேன்’                                         (9:11:3)

    என்றமைந்த தொடர்கள், ‘பெருமானை நினைந்துருகாத உள்ளம் கொண்ட உடலும் பயனற்றதே’ என்றுணர்த்துவன.

    காலம் இதுவே; விரையுங்கள்

    ‘பிறப்பானது, இலை தளிர்ப்பது போன்றது; இறப்பு, தளிர் இலை, பழுத்து உதிர்வது போன்றது. இடைப்பட்ட சிறிது காலமே வாழ்க்கை. அச்சிறு நாளில், உடல்கொண்டு உத்தமனைச் சாராது, ஐம்புலச் சார்பின் அறியாமையால், காலத்தை அவமே போக்குகின்றீர்கள்; பின், இறப்பு நேரிடுங்கால் பெருமானை நினைந்து எவ்விதப் பயனும் இல்லை’ என்பதனை,

     ‘தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்

                                          தளிர்இறப் பிலையுதிர் வென்றால்

                                   நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்

                                          நெஞ்சிடிந் துருகுவத தென்னோ’               (9:16:7)

    என்று அறிவுறுத்தியுள்ளார். ‘பிண்டமே, அண்டத்தின் விரிவு’. அதை உணராத சிற்றறிவினால், உடல் வீணே மண்ணுக்கு இரையாவதைத் தவிர்க்க இயலாது. உயிர்களின் இவ்வறியாமை நிலையினை, தலைவியின் நிலையாகப் பதிவுசெய்கின்றார்.

    ‘முழுவதும்நீ யாயினும்இம்

                                          மொய்குழலாள் மெய்ம்முழுதும்

                                   பழுதெனவே நினைந்தோராள்’                      (9:12:6)

     

     

     

    பேரறிவால்  சிவத்தையே சார்கின்ற பெற்றி

    ’வாய்த்தது நந்தமக்கு ஈதோர் மனித்தப் பிறவி மதித்திடுமின்’ என்பது, திருநாவுக்கரசுப் பெருமானின் அறிவுரை. முந்தைய நல்வினைப் பயனே நமக்குப் பெற்றகரிய மனிதப்பிறப்பைப் பெற்றுத்தருகிறது. அப்பிறப்பினைக் கருவியாகக் கொண்டு, நாம் பிறவாமை என்னும் பெருநிலையினைப் பெற்றுய்யவேண்டும். காரணம், ஈ, எறும்பு முதலான குறையறிவுடைய உயிர்களும்கூட இறைவனைப் பணிந்து, பெறற்கரும் பேறுபெற்றுச் சிறந்தமைக்கு முறையே திருஈங்கோய்மலையும், திருஎறும்பியூரும் சான்றாக உள்ளன. ஆனால், ஆறறிவால் பண்பட வேண்டிய நாமோ, உண்டு, உடுத்து, உயிர் வளர்க்கின்ற சிற்றின்பமே பெரிதெனக் கருதி, மனிதப் பிறப்பினைப் பயனின்றிக் கழிக்கின்றோம். உயிர்களை, தொடர்ந்த பல்பிறப்புகள் என்னும்  பிறவிச்சுழலுக்கு ஆட்படுத்துகின்ற வினையின் அவலத்தைக் கருவூரார்,

    ‘கடுவினைப் பாசக் கடல்’                              (9: 14: 5)

    என்று உருவகிக்கின்றார். இவ்வாறு, அறிவு மயங்கிய வாழ்க்கையினைக் கருவூரடிகள், ‘மைக்கடா அனைய கிடக்கின்றோம்’ என்று இடித்துரைக்கின்றார்.

    உணர்வற்று, தன்னை மறந்து, அறியாமைச் சேற்றில் உழல்கின்ற எருமைக்கடாவைப் போன்று வாழ்கின்ற நமது அறியாமையாகிய அவலத்தை அடிகள் தம்பால் ஏறிட்டுக்கொள்வது, அவர்தம் கருணையுள்ளத்தின் வெளிப்பாடு. அந்நிலை அகன்று, மண்ணில் நல்ல வண்ணம் வாழ, பக்திநெறி துணையாக வேண்டும். ‘காய்ச்சப்படுகின்ற பாலிலிருந்து நீர் முதலில் அகன்று, தூயபால் மட்டும் எஞ்சிநின்று  பயன்தரும். அதுபோன்றே,  பல பிறப்புகளிலும் உயிரின் தீவினைப் பயன்கள் துய்த்தொழிக்கப்படுகின்ற நிலையில், எஞ்சிய நல்வினைப் பயனால் உயிர்க்கு,  பெறுதற்கு அரிய மனிதப்பிறப்பும் வாய்க்கும். அப்பிறப்பில் மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களாலும் புரிகின்ற சிவபுண்ணியங்களாகிய நல்வினைகள், திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதத்தையும், மலபரிபாகத்தையும் உயிரறிவில் விளங்கச்செய்து,  சரியை முதலான தவங்களுக்கு ஆட்படுத்தும்’ . இத்திருநெறியினைக் கருவூரடிகள்,

    ‘பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்

                                          பாவமுன் பறைந்துபா லனைய

                                  புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்

                                          புகுந்ததோர் யோகினிற் பொலிந்து’                (9:13:9)

    என்று அறிவுறுத்துகிறார்.  அன்றாட வாழ்வின் அனைத்துச் செயல்களும் சிவபுண்ணியங்களாக விளைவதற்கு, உண்பதும், உடுப்பதும், கேட்பதும், பார்ப்பதும், நுகர்வதும், திருவருளாணையால் நிகழ்வனவே என்றுணர்கின்ற மெய்யுணர்வில் நிலைக்கவேண்டும். செய்கின்ற செயலிலும், அதன் பயனிலும், பற்றொழிக்க வேண்டும். காரணம், செயலின்பால் கொள்கின்ற ஈர்ப்பு, தன்முனைப்பையும், ‘யான்’,‘எனது’ என்னும் ஆணவப்பற்றையும், ‘யான் மட்டுமே வெற்றிகொண்டு அனைத்தையும் ஆளவேண்டும்’ என்றவழி, தீராத வினைத்தொடர்பையும், அதைத் துய்த்துத் தீர்க்கின்ற துன்பப்பிறவிகளையும் அடுக்கடுக்காகத் தரும். எனவே, பற்றொழித்த உள்ளத்தால் பரமனுக்குப் பணிசெய்க’ என்பவராக,

    ’உண்ட ஊண் உனக்காம் வகை’                        (9:13:6)

    எனப் பாடுகின்றார். ‘அன்றாடம் உண்ணுகின்ற உணவானது, வீணே உடலை வளர்ப்பதற்கு என்றில்லாமல், சிவப்பணியாகிய அறப்பணிக்காக அமைதற்குத் திருவருள் கூட்டவேண்டும்’ என்று பணிகின்றார்.

    பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி

    அரும்பொருளான இறைவனைப் பெறுவதற்கு இயைந்த நன்னெறியாகிய சரியை முதலானவற்றுக்குத் தலைப்பட, அடியார் இணக்கமே கருவியாகும்.  அவ்வடியார்கள், தொண்டில் நிலைப்புடையவர்கள். அவர்களே உண்மையடியார்கள். அவர்கள், வாழினும், தாழினும், தொண்டிலிருந்து ஒருபொழுதும் நிலைப்பெயராதவர்கள். அவர்கள், ‘அவமே புரியார்’ என்பது கருவூரடிகள்தம் திருவாக்கு. அவர்களைச் ‘செம்மனக் கிழவோர்’ என்று கருவூரடிகள் போற்றுகின்றார். ‘அவர்களுடன் கூடி பணிசெய்வதே பெருமானைப் பெற்றுத்தரும்’ என்று சாற்றுகின்றார். ‘பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி’  என்பது, கருவூரடிகளின் உறுதித்திருவாக்கு. பெருமான்,  தம்மையும் செம்மனக் கிழவோராகிய அடியார்களுடன் கூட்டுவித்தருளிய அருள்சிறப்பினைக் கருவூரடிகள்,

     ‘கண்பனி  அரும்பக் கைகள் மொட்டித்தென்

                                 களைகணே ஓலமென் றோலிட்

                        டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்

                                 தென்னையும் புணர்ப்பவன்’                                               (9:8:5)

    எனப் போற்றியமைகின்றார்.

     

    முடிவுரை

    அளவு கடவாத ஐம்புல நாட்டமும், அடியவர்களை என்றும் இணைபிரியாதத் தொண்டுள்ளமே,  நம்மை அன்புநெறிக்கு ஆட்படுத்தும். அன்புநெறி, அனைவரையும் உறவாகக் கருதுகின்ற இன்பத்தைத் தந்தருளும். அனைவரும் உறவாக விளங்குகின்ற சுற்றுப்புறமே, சிவனிருப்பாக நம்மால் உணரப்படும். அந்நிலையில், உயிருள் பொருளும், உயிரில் பொருளும் சிவனிருப்பாக விளங்குதலை உணரலாம். அவ்வாறு பண்பட்ட கருவூரடிகளது கருணைத் திருநோக்கமே, போகத்துயில் கொண்ட புன்மக்களாகிய நமது அறியாமைக்கு மருந்தாகிய திருப்பதிகங்களைத் தந்துள்ளது.

     ‘ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்

                                            உறங்கிருள் நடுநல்யா மத்தோர்

                                   கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்

                                            கனந்தெனக் கலந்துணர் கருவூர்’                    (9: 17: 10)

    என்று பாடி கருவூரார், தமது பதிகச் சொல்மாலைகளின் திருநோக்கத்தைத் தலைக்கட்டியுள்ளார். அவர்தம் திருப்பதிக  நெறிவழியே,   அனைத்துயிரும் பிறவாமைக்குத் தலைப்படுவதே, அடிகளின் திருவுள்ளம்.

     

    ஆய்வுத் துணைநூல்கள்:

    1. ஒன்பதாம் திருமுறை, வசந்தகுமார்.இரா.,டாக்டர்., (ப.ஆ).,

    பன்னிரு திருமுறை ஆய்வுமைய வெளியீடு,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    1. சிவஞானபோதம், திருநெறி வரிசை, www.thevaaram.org

    கட்டுரையாளர்

    முனைவர் இரா. மதன் குமார்., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • அகநானூறும் பாலையின் முப்பொருளும்

    முனைவர் ம. தமிழ்வாணன்

    உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

    அகநானூறு

    சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:

    1. களிற்றியானை நிரை (1 – 20)
    2. மணிமிடை பவளம் (121 – 300)
    3. நித்திலக்கோவை (301 – 400)

    என்பனவாகும். இப்பகுப்பினை,

    களித்த மும்மதக் களிற்றியானை நிரை

              மணியொடு மிடைந்த அணிகினர் பவளம்

              மேவிய நித்திலக் கோவை என்றாங்கு

              அத்தகு பண்பின் முத்திறமாக

              முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை

    என்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது. இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.

    திணையும் பாடலும்

    அகநானூற்றைப் பொறுத்தவரை பாடலின் எண்ணைக் கொண்டு இன்ன திணைப்பாடல் எனச் சுட்டிக்காட்ட முடியும். அந்த வகையில் புலவரின் தொகுப்புத்திறனும் பகுப்புத்திறனும் பாராட்டிற்குரியன. இதனை,

    ஒன்றுமூன்று ஐந்து என்பதன் பாலை; ஓதாது

              நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே

              ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு

              கூறாதவை குறிஞ்சிக் கூற்று

    என்னும் வெண்பாப் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அதன் திணைப் பகுப்பு விவரம் வருமாறு,

    1. 1, 3, 5… 399 – பாலைத்திணைக்கு உரியவை
    2. 4, 14, 24… 394 – முல்லைத்திணைக்கு உரியவை
    3. 6, 16, 26 …. 396 – மருதத் திணைக்கு உரியவை
    4. 10, 20, 30…. 400 – நெய்தல் திணைக்கு உரியவை
    5. 2, 8…. 392, 398 – குறிஞ்சித் திணைக்கு உரியவை

    எண் அடிப்படையில் அகநானூற்றில் குறிப்பிட்டுள்ள திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை வருமாறு,

    பாலைத்திணைப் பாடல்கள் – 200

    முல்லைத்திணைப் பாடல்கள் – 40

    மருதத்திணைப் பாடல்கள் – 40

    நெய்தல் திணைப்பாடல்கள் – 40

    குறிஞ்சித்திணைப் பாடல்கள் – 80

    தொகுத்தவர் – உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்

    தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

    பாயிரம் இயற்றியவர் – இடையல நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்ல தரையனார்.

    கடவுள் வாழ்த்து – பாரதம் பாடிய பெருந்தேவனார்.

    பாலைப் பாடிய புலவர்கள்

    அகநானூற்றில் இடம்பெற்றுள்ள 200 பாலைத்திணைப் பாடல்களில் இரண்டினைப் பாடியோர் பெயர் தெரியவில்லை. எஞ்சியுள்ள 198 பாடல்களைப் பாடிய புலவர்களின் வரிசையைக் காண்போம். ஒரு புலவரால் பாடப்பட்ட 62 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று பாடல்களைப் பாடியோர் மூவரும் இரண்டிரண்டு பாடல்களைப் பாடியோர் எண்மரும் நான்கு பாடல்களைப் பாடியோர் நால்வரும் இடம் பெற்றுள்ளனர்.    குடவாயிற் கீர்த்தனாரும் நக்கீரரும் தலா ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளனர். கல்லாடனார் எழு பாடல்களைப் பாடியுள்ளார். எயினந்தை மகனார் இளஞ்கீரனார் அவர்கள் ஒன்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, கயமனார், மருத இளநாகன் போன்ற மூவரும் தலா 12 பாடல்களைப் பாடியுள்ளனர். சிறப்பிற்குரிய மாமூலனார் 27 பாடல்களைப் பாடியுள்ளார். இதில் பாலை பாடுவதில் வல்லவரான பெருங்கடுங்கோவை விட மாமூலனார் அகநானூற்றில் மிகுதியான பாடல்களைப் பாடியமை அறியத் தகுந்த செய்தியாகும்.

    பாலைத் திணை

    தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தில் திணைகள் ஐந்தெனச் சுட்டப்பட்டுள்ளது. அகத்திணைகள் ஏழு என்று பகுத்துச் சொல்லும் தொல்காப்பியர் இடைநிற்கும் ஐந்து திணைகளை அன்பின் ஐந்திணை என்று கூறுகிறார்.

    நடுவண் ஐந்திணை நடுவணது வொழிய

              படுதிரை வையம் பாத்திய பண்பே” (அகத்.2)

    இதில் பாலைத்திணை நீங்கலாக நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு.

    பாலைத்திணை என்பது சுரமும் சுரஞ் சார்ந்த நிலமும் ஆகும். இதன் உரிப்பொருளாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் திகழ்கிறது (அகத்.14). இத்தகைய பாலைத்திணைக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுது பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர்,

    நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

              முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (அகத்.9)

    பின்பனி தானும் உரித்தென மொழிப” (அகத்.10)

    என்று சுட்டுவதைக் காணலாம். இதனால் வேனிற் காலத்துப் பெரும்பொழுதும் நண்பகளாகிய சிறுபொழுதொடு பின்பனிக்காலமும் பாலைக்குரிய பொழுதுகளாகும் என்பது பெறப்பட்டது. பாலை நிலம் என்பது நிலையானதல்ல என்பதை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இக்கருத்தினைப் பற்றி இளங்கோவடிகள் ‘

    முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

    நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலம்பு.64-66)

    என்று சுட்டுவதைக் காணலாம்.

    முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

    நுவலுங்காலை முறைசிறந்தனவே

    பாடலுள் பயின்றவை நாடும் காலை” (அகத்.3)

    தொல்காப்பியத்தில் ஒவ்வொரு திணைக்கும் மூவகைப் பொருள்கள் இருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவை,

    1. முதற்பொருள் – நிலமும் பொழுதும்
    2. கருப்பொருள் – கருவாய் அமைந்தவை (தெய்வம், உணவு, விலங்கு…)
    3. உரிப்பொருள் – தனிச்சிறப்பு, ஒழுக்கம்

    என்னும் பொருள்களாகும்.

    பாலையின் முதற்பொருள்

    பாலைத்திணையின் மணலாகிய (சுரவழி) முதற்பொருளை அகநானூற்றுப் பாடல்கள் வறண்ட நிலமாகவே காட்டுகின்றன. இந்நிலத்தை அடைசேர்த்தும் சேர்க்காமலும் அருஞ்சுரம் (பா.17,203,275) கோட்சுரம் (பா.27), சுரம் (பா.721,353), வியன்சுரம் (பா.361), வெஞ்சுரம் (பா.327,385) போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர்.

    சூரிய கதிர்களால் நிலப்பகுதி வெப்பத்தைப் பெற்றுப் பாலை நிலமானதைக் “கோடை நீடிய அகன்பெருங் குன்றம்” (அகம்.45) என்னும் பாடலடி விளக்குகிறது. மேலும் நிழற்கவின் இழந்த நீர்இல் நீளிடை அழல்அவிர் அருஞ்சுரம் (அகம்.213). கவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம் (அகம்.325). ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர் (அகம்.267) என்னும் அடிகள் பாலைநிலம் பற்றி எடுத்துரைக்கின்றன.

    கருவூர் நன்மார்பன், மலையும் மலைசார்ந்த இடமும் மிகுந்த வெப்பத்தின் தாக்குதலால் ஈரமற்றுச் சுரமாவதை “ஈரமில் வெஞ்சுரம்” (அகம்.277) என்கிறார். மாமூலனார் பாடிய,

    எரிகவர் உண்ட கரிபுறப் பெருநிலம்

              பீடுகெழு மருங்கின் ஒடுமழை துறந்தென

              ஊன்இல் யானை உயங்கும் வேனில்” (அகம்.233:3-5)

    என்ற பாட்டினால், ‘குறிஞ்சி நிலத்தைத் தமக்குரிய வாழிடமாகக் கொண்டது யானை. அது நெருப்பினால் எரிந்து நாசமாகியதால் கரிந்த பெரிய நிலத்தில் வாழ்ந்தது. இங்குள்ள வெப்பத்திற்கு அஞ்சிய மேகங்கள் வேறிடத்திற்குச் சென்றமையால் அங்கு மழையில்லை. அதனால் அங்கு வாழ்ந்த யானை உணவின்றி மேலிந்து காணப்பட்டது’ என்னும் செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகள் இரண்டு அவை இளவேனில், முதுவேனில் காலங்களாகும். பின்பனி காலமும் உரியது என்பதால் முக்காலங்கள் உரியன.

    இளவேனிற்காலம் – சித்திரை, வைகாசி

    முதுவேனிற்காலம் – ஆனி, ஆடி

    பின்பனிக்காலம் – மாசி, பங்குனி

    பண்டைக் காலத்தில் கோடை காலத்தை என்றூழ் என்றும் அழைப்பர். இதனை,

    என்றூழ் நின்ற புன்தலை வைப்பு” (அகம்.21:14)

    ஈந்து குருகு உருகும் என்றூழ் நீளிடை” (அகம்.55:2)

    எறிபருந்து உயவும் என்றூழ்” (அகம்.81:9)

    என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. மேலும் வேனிற்காலத்தை யானர் வேனில் (அகம்.317) காமர் வேனில் (அகம்.341) என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.

    சேரமான் இளங்குட்டுவன், வேனிற் காலத்தில் இலைகள் உதிர்ந்து பின்னர்த் தடுத்துப் பூவோடு பொலிவாய் விளங்கும் இக்காலத்தில் கதிரவனின் வெப்பத்தால் காடு காய்ந்து கிடக்கும் அங்குப் பெருங்காற்று வீசி மூங்கிலைத் தாக்கும். அதனால் சிதறி விழுந்த தீப்பொறியின் நெருப்பால் பசுமை இழந்த மலை உச்சிகள் உடைய பயனற்ற சுரவழிகள் காணப்படுவதைச் சுட்டிச் செல்கிறார். பாலைத்திணைக்குரிய பின்பனிக் காலத்தை அற்சிரம் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இதனை,

    அற்சிரம் நீங்கிய அழும்பத வேனில்” (அகம்.97:17)

    மழைகால் அற்சிரம் (அகம்.205:15)

    புகைநிற உருவின் அற்சிரம்” (அகம்.317:3)

    என்னும் சொற்றொடரால் அறியலாம். வாடைக்காற்று கூதிர் காலத்திற்கும் முன்பனிக் காலத்திற்கும் உரியது. அந்தக் காற்று பிடாவினது இனிய மணத்தை எங்கும் பரவச் செய்யும். இக்காலத்தில் தோன்றுகின்ற பனியானது நம்மை வருத்துகிறது. இதனைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியுமா? எனத் தோழியிடம் தலைவி கூறினாள். இச்செய்தியைக் கருவூர்க் கலிங்கத்தார் பாடுகின்றார்.

    வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்

              கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற

              பனிஅலைக் கலங்கிய நெஞ்சம்” (அகம்.183:12-15)

    கருப்பொருள்

    கருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குக் கருவால் அமைந்த பொருட்களைக் குறிக்கும். இக்கருப்பொருட்களாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும் பிறவும் ஆகும். பிறவும் என்பதற்கு இளம்பூரணர் தனது உரையில் (அகத்.20 உரை) யாழின் பகுதிகளாகிய பண், நீர் போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார்.

    பாலைத்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம் – கொற்றவை. உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள். மா – வலியழிந்தயானையும், வலியழிந்த புலியும், வலி அழிந்த செந்நாயும். மரம் – பாலை, இருப்பை, கள்ளி, சூறை கொண்ட பாறையும். செய்தி – ஆறலைத்தல். பண் – பாலை பிறவும் என்றதனால் பூ – மராம்பூ. நீர் – அறுநீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும் (அகம்.20 உரை) என இளம்பூரணர் குறிப்பிடுகிறார். இந்நிலத்திற்குரிய தெய்வமான கொற்றவையைக் குடவாயிற் கீரத்தனார் “கானமர் செல்வி” (அகம்.345) என்று கூறுவதைக் காணமுடிகிறது. நிலத் தலைவனை மீளி, விடலை, காளை, எனக் குறிப்பிடுவதை,

    மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி” (அகம்.93:18)

    மீளி உள்ளம் செலவு வலி உறுப்ப” (அகம்.373:7)

    வெள்வேல் விடலை” (அகம்.7:12)

    கூர்வேல் விடலை” (அகம்.315:14)

    திருந்துவேல் விடலை” (அகம்.195:2)

    வன்கண் காளை” (அகம்.263:9)

    வயக்களிற்று அன்ன காளை” (அகம்.55:5)

    கடுங்கண் காளை” (அகம்.321:12)

    என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. பாலை நிலத்தினுடைய மக்கள் நீருக்காகக் கிணற்றை நம்பி இருந்தனர். அக்கிணறுகள் நீரற்றுக் காணப்பட்ட நிலையை, ஓலைக் கூவல் (அகம்.21) அகலிடம் குழித்த அகல்வாய்க் கூவல் (அகம்.295) என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.

    மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனின் பாட்டில், ‘யானை நீர்வேண்டித் துழாவித் பார்த்த கிணற்றினைத் தலைவன் ஆழமாகத் தோண்டினான். அதிலிருந்து குறைகுடமாக வெளிப்பட்ட உப்பிநீரைத் தலைவி குடித்தாள்’ (அகம்.207) என்று சொல்லப்பட்டுள்ளது.

    பறை, மா

    பாலை நில எயினர் அச்சத்தைப் பிறருக்கு மிகுதியாகத் தரும் துடி என்னும் தோற்கருவியைப் பயன்படுத்தினர். இதனை, உருள்துடி (அகம்.19) கடுந்துடி (அகம்.79) என்னும் சொற்கள் எடுத்துரைக்கின்றன. மதுரைக் காஞ்சியில் மறவர்கள் துடிகளை முழங்கியபடி வணிகக் கூட்டத்தோடு போரிட்டு வென்று பெறுதற்குரிய அணிகலன்களைப் பெற்றனர் (அகம்.89) என்று கூறப்பட்டுள்ளது. இம்மக்கள் பாலை யாழையும் பாலைப் பண்ணையும் பயன்படுத்தியதைத் தங்கால் பொற்கொல்லனார் (அகம்.335) பாடலின் மூலம் அறியலாம்.

    விலங்குகளில் யானை, புலி, மான், புறா, பருந்து, எருவை, கழுகு போன்றவையும் தாவரங்களில் ஓமை, இரும்பை, குராம்பூ, மராம்பூ போன்றவையும் அகநானூற்றில் மிகுதியான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலைநில விலங்காக அறியப்படுவது செந்நாயாகும். இந்நாய் வன்மையான பற்களைக் கொண்டது. இதனை,

    வல்லையிற்றுச் செந்நாய்” (அகம்.53:6)

    திண்நிலை எயிற்ற செந்நாய்” (அகம்.199:9)

    என்னும் அடிகளால் அறியலாம்.

    உரிப்பொருள்

    அந்தந்த திணைகளுக்கு உரிமையுள்ள தனிச்சிறப்பு, ஒழுக்கம் பற்றி எடுத்துரைப்பது. அதாவது பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருளாகும். இத்தகைய உரிப்பொருளை உணர்த்துவனவாகப் பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன. அகநானூற்றில் இளங்கீரனார், ‘தலைவன் நாடிடையிட்டும் காடிடையிட்டும் நெடுந்தூரம் பிரிந்து செல்கிறான். அவனுடைய நெஞ்சமோ தலைவியைச் சூழ்ந்து கொண்டே இருக்கிறது’ என்கிறார். இச்செய்தியை,

    கடுங்குரல் குடிஞைய நெடும்பெரும் குன்றம்

              எம்மொடு இறத்தலும் செல்லாய் பின்நின்று

              ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது

              செல்இனிச் சிறக்க நின்உள்ளம்” (அகம்.19:5-8)

    என்னும் பாடல் வெளிப்படுத்துகிறது. மாமூலனார், ‘தலைவன் பொருளுக்காகக் கொடிய தன்மையுள்ள பாலை நிலத்தையும் வேற்றுமொழி பேசுகின்றோர் நாட்டையும் கடந்து சென்றுள்ள நிலையை,

    “…………. நோன்சிலைத்

              தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்

              பிழியார் மகிழர் கழிசிறந்து ஆர்க்கும்

              மொழிபெயர் தோம் இறந்தனர்” (அகம்.295:14-17)

    என்னும் பாட்டினால் உணர்த்துகிறார். தலைவன் தலைவியை விட்டுப் பொருளுக்காக நெடுந்தூரம் பிரிந்து செல்வதை,

    “………….. சேய் நாட்டுப்

              பொலங்கல வெறுக்கை தருமார்” (அகம்.1:8-9)

              வெம்முனை அருஞ்சுரம் நீந்தித் தம்வயின்

              ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்” (அகம்.103:10-11)

    என்னும் பாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.

    அகநானூற்றில் அதிகப் பாடல்களைக் கொண்ட திணை பாலைத்திணை என்பது அறியத்தகுந்தது. இந்நூலில் அமைந்துள்ள பாலைத்திணைப் பாடல்களில் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கே பயின்று வருவதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம். மேலும் அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களை மிகுதியாகப் பாடியவர் மாமுலனாரே என்பதும் பொருள்வயின் பிரிந்து பொருளீட்டும் கடமை தலைவனுக்கே இருந்தது என்பதும் பாலைநில தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைகள் எவ்வாறு இருந்தன என்பதும் நன்கு வெளிப்பட்டு நிற்கின்றன.

    துணைநூற்கள்

    1. தாமோதரம்பிள்ளை சி.வை.(ப.ஆ),1885, தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சர் காட்டிஸ் பிரஸ் சென்னை.
    2. சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ) 1920, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரை.
    3. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு
    4. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.
    5. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.  கட்டுரையாளர், முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்தரமணி, சென்னை – 600113
    Share
  • கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிழ்த்தப்படும் புனித அலேசியார் நாடகம்

    முனைவர் பா. உமாராணி

    சமூக வாழ்வியலையும், இனம் சார்ந்த வழக்காறுகளையும், அதனோடு தொடா்புடைய பண்பாட்டுக் கூறுகளையும் படம்பிடித்துக் காண்பிப்பன நாட்டுப்புற கலைகள் ஆகும். நாட்டுப்புறக் கலைகள் என்பது பொழுதைக் கழிக்கும் ஒரு செயலாக அல்லாமல் அது அம்மக்களுடைய உணா்வுகளோடு தொடா்புடைய ஒரு கூறாகவுமே இயங்கி வருகின்றது. அப்பொழுதுதான் காலம் கடந்தும் அக்கலைகளை மக்கள் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இல்லையெனில் அக்கலைகள் தோன்றிய சமூகச் சூழல் மாற்றம் அடைந்ததும் அழிந்தொழிந்துவிடும். எனின் அக்கலைகள் நிலைத்தத் தன்மையுடையதாய் அமைய வேண்டுமெனில் அது அப்பாண்பாட்டோடு நெருங்கிய தொடா்புடையதாயும், அம்மக்களின் நம்பிக்கைகளோடு ஒன்றிணைந்து செல்வதாயும் அமைந்திருக்க வேண்டும்.

    நாட்டுப்புறக் கலைகளில் பெரும்பான்மையும் நம்பிக்கையோடு தொடா்புடையதெனினும் மதம் சார்ந்து நிகழ்த்தப்படும் சில நிகழ்த்துக் கலைகள் அவற்றிலிருந்து வேறானதொரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது என்பதற்குச் சான்றாக புனித அலேசியார் நாடகம் அமைந்துள்ளது.

    அந்நிய ஆதிகத்தின் தாக்கம் காரணமாகவும், மதத்தை வளா்க்கும் நோக்கத்துடன் செயல்படும் மிஷனரிகளின் பாதிப்பும் இன்னும் குறிப்பிட்ட சில பகுதி மக்களிடையே காணப்படுகிறது. மிஷனரிகளின் வளா்ச்சி, அதிகம் கல்வியறிவில்லாத மக்களிடையே எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், அவா்கள் பிற சமூகத்தினரின் பழக்கவழக்கங்களோடு ஒன்றிணைந்து தங்களுடைய மத நம்பிக்கைகளையும் ஒன்றிணைத்துச் செல்வதையும் கேரள எல்லையோரத்தில் வாழ்கின்ற கொழிஞ்சாம்பாறை வட்டார மக்களிடையே காணமுடிகிறது. கொழிஞ்சாம்பாறை வட்டாரம் குறித்த செய்திகள் முன்னைய மூவரசா் நாடகம் என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

    இந்துக்களின் பண்பாட்டை தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டிருகின்ற தமிழ் இலத்தின் கிறித்துவா் தம்முடைய இறைவழிபாட்டு முறைகளிலும் அத்தகையதொரு நம்பிக்கை சார்ந்த வாழிபாட்டு முறைகளைக் கையாளுவதைக் காணமுடிகிறது. இக்கட்டுரை சுருக்கமாக புனித அலேசியார் நாடகம் குறித்த செய்தியைப் பதிவு செய்துள்ளது.

    புனித அலேசியார் நாடக வரலாறு

    பாலக்காடு பகுதியில் வாழ்கின்ற தமிழ் இலத்தின் கிறித்துவா் வாழும் பங்குத் தளங்களில் நடிக்கப்பட்டு வரும் நாடகங்களில் மிகப் பழமையானதாக புனித அலேசியார் மற்றும் புனித எஸ்தாக்கியார் நாடகங்கள் அமைந்துள்ளன. “Flos Sanctorum” என்ற போர்த்துகீசிய நூலினை 1586-ஆம் ஆண்டு ஆண்டிறிக் என்னும் அடிகளார் தமிழ்மொழியில் மொழிபெயா்ப்புச் செய்தார். புனிதா்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளையும், விவிலியம் சார்ந்த விழாக்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் உள்ள 25-வது தலைப்பில் “க. அலேசு நடந்த நடபடிகள் வருமாறு“ என்று புனித அலேசியாரை பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டே இந்நாடகம் நடிக்கப்பட்டு வருகின்றது.

    புனித அலேசியார் நாடகம்

    புனித அலேசியார் நாடகம் 18- கூறுகளாக அமைந்து புனித அலேசியாரின் கதையை மொழிகின்றது. சிலுவை விருத்தம் தொடங்கி மாதா கொச்சகம் வரையிலான இப்பதினெட்டு பகுதிகளில் கவிநயமும், இலக்கிய நயமும் இணைந்து சிறந்தொரு நாடகமாக இது அமைந்துள்ளது. 15-ஆம் நூற்றாண்டின் நாடக அமைப்புகளை உள்ளடக்கியதாக அமைந்திருப்பதோடு அன்றைய மக்களின் வழிபாட்டு முறைகளை, வாழ்வியல் சார்ந்த பழக்கவழக்கங்களையும் இந்நாடகம்  எடுத்தோதியுள்ளது. நாடக அமைப்பின் கூறுகளை (கட்டியங்காரன் தொடக்கம், குருவணக்கம் போன்றவை) உள்ளடக்கியுள்ளதோடு பல இனிய காட்சி அமைப்புகளையும் கொண்டுள்ளது இந்நாடகம்.

    1. சிலுவை விருத்தம்

    பாலக்காட்டுப் பகுதியில் நிகழ்த்தப்படும் பல நாடங்களின் தொடக்கப் பாடல் சிலுவை விருத்தப்பாடலாகவே அமைந்துள்ளது.

    ”அா்ச்சிய சிலுவை வைத்தேன் அதினுட அடையாளத்தால்

    கா்ச்சி சத்துருவிலின்று கனிவதாய் ரெட்சிவென்று

    உச்சித சருவேயேகன் யுகந்திடும் பிதாச்சுதன்பால்

    நற்புமிஸ்ப் பிரிந்து சாந்துனாமத்தாலாமென் சேசு”

    என்ற சிலுவை விருத்தப்பாடல் புனித கனுகொந்தம்மாள் கீா்த்தனை நாடகம் என்ற பகுதியில் வரும் சிலுவை விருத்தமாக அமைந்துள்ளதோடு, அப்பாடல் புனித அலேசியார் நாடகத்தின் சிலுவை விருத்தப் பாடல் போலவே அமைந்துள்ளது வியப்பிற்குரியது.

    1. சேசு வணக்கம்

    சிலுவை விருத்தத்தை அடுத்து வரும் பகுதி சேசு வணக்கமாகும். இதில் கல்வாரி இறைவனை தன் பாடலுக்குத் துணையாக அழைக்கும் செய்தி இடம்பெற்றுள்ளது.

    1. தேவதாய் வணக்கம்

    கன்னி மரியாளிடம் தம்முடைய பண்ணோடு கூடிய தம் சொற்களுக்கு கண்ணேரு வராமல் காக்கவேண்டும் என்ற காப்புப் பாடலாக அமைத்துள்ளது. இதுவும் ஒரு வெண்பா அமைப்பில் இடம்பெறும் பாடலே.

    1. நூலின் பெருமை

    புனித அலேசியார் நாடக நூல் தோற்றம் பற்றிய செய்தியினை விளக்குவதாக அடுத்த பகுதி அமைந்துள்ளது. இதில் பாயிரம் முதலாக நூல் தோன்றிய செய்தியினை, ”கற்கடக மாதம் என்பது மளையாள மாதம். இதற்கு நிகரான தமிழ் மாதம் ஆடிமாதம். 1806-ஆம் ஆண்டு ஜூலை, மாதத்தில் புனித அலேசியார் கதையை நாடகமாக்கப் பேசினார்கள். அடுத்து வரும் பாடல், தூயதா்மநாதபுரம் தன்னில் மேவுஞ் சூசை பிரான்சீஸ்கு வெனும் குருசுவாமி, துலா மாசத்தில் பாயிரத்தை முதல் துவக்கி ஆறாம் தேதி நாடகமாய் செய்துமுடித்தார் என்ற செய்தியினை கூறுகிறது. இதிலும், துலாம் மாதம் மலையாள மாதம். இதற்கு நிகரான தமிழ்மாதம் ஐப்பசி. 1806-ஆம் ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி நாடகத்தை முதலாகத் தொடங்கி பாடி முடித்தார்.” (டாக்டர் A. சோசப் பெஸ்கி, புனித அலேசியார் நாடகம், ப.44) என்ற காணமுடிகிறது. இதனை,

    ”ஆயிரத்தியெண்ணூற்றி ஆறாமாண்டில்

    அன்பொடு பாடிவைத்தலேசு காதை

    தூயதர்மநாதபுரம் தன்னில் மேவுஞ்

    சூசை பிரான்சீஸ்கு வெனும் குருசுவாமிதான்

    நேயமுடன் யேற்படுத்த வுரைத்த தாலே”

    என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

    1. குருவணக்கம்

    கொழிஞ்சாம்பாறையை அடுத்துள்ள அத்திகோடு என்ற பகுதியில் வாழும் அப்பாவு அந்தோணிமுத்து என்ற பண்டிதகார் குடும்பத்தவரான இவரைப் பற்றி பெருமையாக குருவணக்கப் பாடல் அமைந்துள்ளது. மேலும்,

    ”தார்பொருஞ் சங்கீத சுருதிக்கேற்ற

    தாளமொடு நவரசங்கள் குறைவில்லாமல்

    ஏர்பொருத்த யெனுக்குரைத்த குருசு சின்னப்பன்

    இருபதத்தை யான் வணங்கி யிரைஞ்சுனேனே”

    என்று நாடகத்தின் சிறப்பினையும் அதனை இயற்றியவரின் சிறப்பினையும் எடுத்துமொழிவதாக குருவணக்கப்பாடல் அமைந்துள்ளது.

    1. அந்தோணியார் வணக்கம்

    நாடகத்தை சிறப்புற எடுத்துப்பாடிய அந்தோணியாரின் துணை வேண்டுவதாக அமையும் பகுதி அந்தோணியார் வணக்கப் பகுதி.

    இதுவரையுமான ஆறு கூறுகளும் நாடகத்திற்கான தொடக்கக் கூறுகளாக அமைந்துள்ளது. அதனை அடுத்துவரும் பகுதிகள் அலேசியார் நாடகக் கதை தொடங்கும் பகுதியாக அமைகிறது.

    1. புனித அலேசியார் நாடகம்

    நாடகத்தின் தொடக்கம் வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ளது. இதனை ஆரம்பனே தொடங்கி வைக்கிறான். இதில் இறைவனையும், மற்றுள்ளோரையும் வாழ்த்திப்பாடுகின்றனா். நாடகத்தின் தொடக்கக் காட்சியில் கட்டியங்காரன் தோன்றி உரோமை நாட்டரசனின் வருகையை அறிவிக்கின்றான்.

    ”இராசாதிராசன் வந்தார் எம்பரதோர்

    ராசன் கொலுவில் வந்தார்

    …………………………….

    மிக்கசபை மகிழ வேந்தர் புடை சூழ

    பக்கமிருந்து மதிபகரும் அமைச்சருடன்”

    என்று அரசன் வரவை கட்டியங்காரன் உரைக்கிறான். இதில் “எம்பரதோர்“ என்ற சொல்லாட்சியானது ரோமப் பேரரசா்களைக் குறிக்க வழங்கும் போர்த்துக்கீசிய சொல்லாகும்.

    கட்டியங்காரன் வரவு கூறி முடிந்ததும் அரசன் அரங்கில் தோன்றுகிறான். தன் மந்திரியான பெமியானை அழைக்க கட்டளையிடுகிறான். இதில் வரும் மந்திரியான பெமியான் பெயரினை, ”நாடகத்தின் மந்திரி பெயர் பெமியான். ஆனால் க.அலேசு வரலாற்றில் பெமியோன் என்ற பெயா், எபேமியானு (Euphemian) என்னும் பட்டணசுமாமி என்பதாகும். பட்டணசுமாமி என்பது உரோமை நகா் மேயர் பதவியைக் குறிக்கும் சொல்” (மேலது, ப.46) குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார் சோசப் பெஸ்கி அவா்கள்.

    மந்திரியின் வரவினை அடுத்து அரசன் மந்திரிக்குப் பணிக்கும் பணிகளைக் குறிப்பிடுகிறான். அதனை அடுத்து அரசன் அவையை விட்டு வெளியேற பெமியான் தன் மனைவி அகிலமாதுவை அழைக்க உத்தரவிடுகிறான். அகிலமாது வந்தவுடன் தங்களுக்கு குழந்தையில்லாத நிலையினைக் கூறி வருந்தும் காட்சி இடம்பெறுகிறது. தங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டி பல ஊர்களிலுமுள்ள கோயில்களில் வழிபட செல்கிறார்கள்.

    1. வரங்கேட்கும் தரு

    வரங்கேட்கும் தருவில் பத்து வரிகளை உடைய பாடல் உள்ளது. ஆனால் சாத்தன் குளம் அலேசு நாடகச்சுவடியில் இப்பாடல் இல்லை. அழகிய நடையோட்டத்துடன் இப்பாடல் அமைந்துள்ளது. ”தரு” என்பது ஓா் இசைப்பாட்டு.

    1. திருச்சிலுவைக் கோவில்

    புனித அலேசியார் நாடகத்தில் வரும் ”திருச்சிலுவை கோயில்” என்பது கொழிஞ்சாம்பாறையை அடுத்துள்ள மேனோன்பாறை பங்கு தளத்திற்கு உட்பட்ட திருச்சிலுவைக் கோயிலையே குறிக்கின்றது. இக்கோவிலில் அகிலமாது இறைவனை வேண்டி பிள்ளைவரம் பெற்றதாக நம்பப்படுகிறது.

    1. புத்திர பாக்கியம்

    திருச்சிலுவைக் கோயில் இறைவனால் சில காலத்தில் அகிலமாது பிள்ளை வரம் பெறுகிறாள். அதனை மருத்துவச்சி பெமியானிடம் தெரிக்கிறாள். பெமியான் மிக்க மகிழ்ச்சியடைந்து,

    ”எத்திசைப் புகழும் கீர்த்தி இறைவனார் கொலு முன்பாக

    நித்தமும் கார்த்து நிற்கும் நெறியு்ள சேவுகோனே

    அத்தனருளினாலே அகிலெனும் மாதுக்கு இப்போ

    உத்தமன் பிறந்தானென்று ஊரெங்கும் அறிவிப்பீரே”

    என்ற பகுதி அமைந்துள்ளது. இதில் பெமினான் தொழும்பர்களை (பணியாட்கள்) அழைத்து மகன் பிறந்த செய்தியினை அறிவிக்கச் செய்கிறான். அரசனும் மற்றுள்ள அனைவரும் வந்து கண்டு காணிக்கைகள் செலுத்திச் செல்கின்றனா்.

    ஞானஸ்தானம் மற்றும் கல்வி முதல் அர்ச் பாப்பு தேவாலாயம் வருதல் ஈறாக

    ஞானஸ்தானம் மற்றும் கல்வி, உறவுமுறை விருத்தம், திருமணம், கந்தார்த்தம் (கந்தார்த்தம் என்பது ஓா் இசைப்பாட்டு. நாடக அரங்கில் கந்தார்த்தப் பாடலுக்கு ஆடவேண்டும்.)  தேவதாய் அழைப்பு, திராசுப் பயணம் மற்றும் அர்ச் பாப்பு தேவாலாயம் வருதல் ஈறாக உள்ள பகுதிகளில் அலேசியாரின் வாழ்க்கை  படிப்படியாக எடுத்தோதப்படுகின்றது. அலேசுவுக்கு மோட்சவழிகளைக் குறித்தும், சிலுவை மந்திரங்களைக் குறித்தும், இன்னும் பிற இறைவழிபாட்டுடன் தொடா்புடைய கல்வியினை குறித்தும் குருக்கள் கற்பிக்கின்றார். காலங்கள் செல்ல அலேசு 16 வயது அகவையினை அடைகிறான். அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்ப அலேசுவும் சம்மதிக்கிறான். பெரியோர்கள் அனைவரும் சேர்ந்து பரினாள் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து அலேசுவுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனா். (அகிலமாது மற்றும் பரினாள் குறித்த செய்திகள் மூலச் சுவடி நூலில் இல்லை)

    திருமணம் முடிந்து அலேசுவும் பரினாளும் இல்லற வாழ்வினைத் தொடங்க முனைகின்றனா். இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. சிற்றின்ப ஆசையை துறந்து இறைவனை அடைதலே சிறந்த இன்பம் என்று கூறுகின்றான் அலேசு. அதற்கு,

    ”மன்னா் மதிக்க வந்த றோமை நகா்

    மந்திரிதன் சுதனே

    சொர்ணமுடிபுனை மன்னாதி மன்னவா

    துறையே சிகாமணியே

    என்னமொழி யுரைத்தீா் மன்னா் திரு

    வாக்காலெதிர்மொழி தானுண்டோ

    வர்ணமலா் சூட்டும் மங்கையைத் தங்கையென்று

    வாக்காலுமுரைப்பார்க்களோ”

    என்று உரைக்கின்றாள் பரினாள். ஆனால் அலேசுவோ,

    ”வாக்கல்லவோ தங்கையே மதுரமே

    வாழ்மலரென்யங்கமே மோட்ச

    பாக்கிய யோக்கியம் சேர வழியிது

    பந்தையந் தான் தங்கையே”

    என்று மனைவியைத் தங்கையே என்று அழைத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வீட்டிலிருந்து புறப்பட்ட அலேசு தரைவழியாக நடந்து சென்றபோது பூவில்லா வனங்கள் திடீரென்று பூத்துக் குலுங்கின. அன்னம், மயில் போன்ற உயிரிகளெல்லாம் இவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாக இந்நாடகப் பாடல் அமைந்துள்ளது.

    கடற்கரையை அடைந்த அலேசு மரக்காயரைக் கண்டு தன்னையும் யாத்திரை அழைத்துப்போகச் சொல்லுகிறான். அங்ஙனம் கடல் பயணத்தை மேற்கொண்ட அலேசு சென்ற கப்பல் பெரும்புயலில் அகப்பட்டு தீசு என்ற பட்டணத்திலே கரையொதுங்குகின்றது அங்கு தாம் கொண்டுவந்த விலையுயா்ந்த பொருட்களை தானமாக அளித்து மகிழ்கிறான். இதற்கிடையில் அகிலமாது பரினாளிடம் அலேசுவைப் பற்றி விசாரிக்க அவள் நடந்தவற்றைக் கூறுகின்றாள். தாங்கொண்ணாத் துயர் அடைந்த அகிலமாதுவும், பெமியானும் அலேசுவைத் தேட ஆட்களை அனுப்புகின்றனா்.

    தீசு நகரில் 17 ஆண்டுகள் வாழும் அலேசு பரதேசி போல இரந்துண்டு வாழ்கிறார். அவா்மேல் கருணை கொண்ட தேவதாய் கோவில் பணிவிடைக்காரரிடம் கூற கோவில் பணியாட்கள் அலேசு அவா்களுக்கு பணிவிடை புரியத்தொடங்குகின்றனா். இதனை ஏற்காத அலேசு இன்னும் இங்கே தங்கியிருந்தால் மக்கள் தன்னைப் புகழத்தொடங்க விடுவா் என்று எண்ணி அங்கிருந்து மேலும் கடற்பயணத்தை மேற்கொள்கின்றார்.

    அலேசு தீசு நகரை விட்டு திராசு பட்டணத்தை அடைய கப்பல் மரக்காயரை அணுகிறார். அவரிடம் பொருளின்மையைக் கூற, அவா் நீண்ட கடல்பயணத்தில் ஆபத்து வராமலிருக்கு நீா் செபம் செய்ய வேண்டும் என்று கேட்கின்றார். அதனை ஏற்றுக் கொண்டு செபம் செய்ய கடற்பயணம் தொடங்குகிறது. ஆனால் இடையில் ஏற்பட்ட புயலின் காரணமாக திராசு பட்டணத்தை அடையமுடியாமல் உரோமை நகரில் இறங்குகின்றார். அங்கு தன்னுடைய தாய், தந்தை, மனைவி போன்றோர் தன்னை அடையாளம் கண்டுவிடாமல் இருக்க இறைவனை வேண்டுகிறார். அதனை ஏற்றுக் கொண்ட இறைவன் அவரை உருமாற்றுகிறார். தன்னுடைய வீட்டிலேயே பரதேசியாக தங்க வைக்கப்படுகிறார். பெற்றோருக்கு இவா் யாரென்று தெரியவில்லை. எனினும் அத்தவசிக்கு வேண்டுவனவற்றை அளிக்குமாறு ஏவலா்களிடம் கூறுகிறான் பெமியான். ஆனால் வேலையாட்கள் அவரை அவமானப்படுத்துகின்றனா். அவா்களுக்காவும் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கின்றார் அலேசு. இந்நிலையில் அகிலமாதுவும், அவன் மனைவியும் புலம்புவதைக் கேட்க,

    ”இந்தவுலகாசை போதும் யான் பொறுத்திட்டேன்

    இனியேகரிடம் சேர யான்மனம் குறித்திட்டேன்”

    என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

    உரோமை நகருக்கு அப்போது வருகைதந்த “அா்ச்சிஷ்ட விநோசி பாப்பும்“ தேவாலயத்திற்கு எழுந்தருளுகின்றார். வேதமொழி உபதேசத்தினிடையே வேத வாக்கியம் சித்திக்கப்படுகிறது. அலேசு இறக்கப்போகும் செய்தியை “ஒரு திவ்ய பலி நிகழும் இன்றிலிருந்து  ஆறு நாட்களுக்கு பின்னா்“ என்று குறிக்கின்றார் பாப்பு. அதனைச் செவியுற்ற அரசன் அப்புண்ணியவாளன் மரணமடைந்த செய்தியை அறிய வேண்டி அவ்வேதவாக்கியச் செய்தியை பட்டிணத்தில் அறிக்கை விடுக்கிறான்.

    புனிதர் அலேசுவும் தன் மரணநாள் இன்று எனத் தெரிந்து வேலையாட்களிடம் ஒரு கடுதாசியும் மைகுடுவையும் பெற்று தன் வரலாற்றை எழுதி முடித்துவிட்டு இறந்துவிடுகிறார். பின் எங்கு தேடியும் புண்ணியாளனைக் காணமுடியாமல் இருக்க அரசன் இறைவனை வழிகாட்டும்படி இறைஞ்ச, இறைவன் அலேசியார் இறந்துகிடக்கும் இடத்தை காண்பிக்கிறார். கையில் கடிதத்துடன் மண்டியிட்ட நிலையில் இறந்து இருப்பதைக் கண்ணுற்று அவரைச் சிவிகை ஏற்றி, பொற்சரிகைச் சேலை போர்த்தி, மலா்சூட்டி கானங்கங்கள் முழங்கிட கல்லறை தன்னில் வைத்து அடக்கம் செய்தனா் என்று அலேசியார் நாடகம் முற்றுப்பெறுகிறது.

    அலேசியார் நாடகத்தில் குறிக்கப்பெரும் கற்பனைகள், வாழ்வியல் உண்மைகள் போன்றவை இலக்கியத்தரம் மிகுந்தவையாக உள்ளன. பிற மதத்தினரின் வாழ்வியல் நம்பிக்கைகளோடு அக்காலச் சூழலுக்கு ஏற்ப இந்நாடகம் புனையப்பட்டுள்ளது என்பது உண்மை. முழுமையும் மதம் தொடா்பான நாடகம் என்பதால் விவிலியக் கருத்துக்கள் மிகுதியும் காணப்படுகின்றன. நீண்ட வசனங்கள் இல்லாமல் குறுகிய வடிவத்தில் வேதக்கருத்துகளை இந்நாடகம் முன்மொழிகிறது. மதம் பரப்புதலை நோக்கமாகக் கொண்ட மிஷனரிகள் அம்மதக்கருத்துக்களை பரப்புரை செய்ய தேர்ந்தெடுத்த நாடக இலக்கிய வகைமையில் ஒன்றாகவே இது அமைந்துள்ளது. அன்றைய மக்களின் மொழிநடையில், அவா்களின் வாழ்வியல் பின்புலத்தோடு இக்கதை மொழியப்பட்டுள்ளது.

    பயன்பட்ட நூற்கள்

    1. புனித அலேசியார் நாடகம், Dr.A. Joseph Besky, Center  For Chiristian Research (CCR), St. Jesoph’s College (Autonomous), Trichy, First Edition-2013.
    2. புதிய சுல்தான்பேட்டை மறைமாவட்ட வரலாறு, Dr. A.Joseph Besky, LIVIA ARAN ANBHAGAM, Athicode, Chittur, Palakkad, kerala. First Edition-2014.
    3. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், பூரணச்சந்திரன்.
    4. பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து.

    கட்டுரையாளர்

    முனைவர் பா. உமாராணி, உதவிப்பேராசிரியா், கற்பகம் உயா்கல்விக் கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

     

     

     

     

     

     

    Share
  • அணைக்கட்டும் ஆத்தங்கரை ஓர மக்கள் வாழ்வும்

    முனைவர் வீ. மீனாட்சி  

    வளரும் நாடுகளில் நாட்டின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் பல ஐந்தாண்டு திட்டங்கள் பிற வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் பல அணைகள், தொழிற்சாலைகள் கட்டும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. இத்தகைய வகையில் அணைகள்,          தொழிற்சாலைகள் அமைக்கும் பகுதியானது கிராமப்பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் வாழும் பாமரமக்களை அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையும், மாற்று இடமும் கொடுத்து வேறு பகுதிகளுக்கு குடிபெயர்த்துகிறது. இத்தகைய குடியமர்வுகள் இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது. இதனடிப்படையில் வெ.இறையன்புவின் ஆத்தங்கரை ஓரம் புதினத்தில் அரசின் வளர்ச்சி திட்டமான அணைக்கட்டுவதால் ஏற்படும் மக்கள் குடிபெயர்ப்பு நிகழ்வால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    சிந்தூர் என்ற கிராமப்பகுதியில் அரசாங்கம் அணைகட்டத் திட்டம் இடுவதால் அப்பகுதி மக்களை குடிபெயர்த்த ஆணை பிறப்பிக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதியினை அழித்து அணை கட்டுவதை எதிர்த்து மக்கள் போராடுவதையும், இயற்கை அழிவால் ஏற்படும் பாதிப்புகளையும் கதைக்கருவாகக் கொண்டு இப்புதினம் அமைக்கப்பட்டுள்ளது.

    கிராமப்பகுதிகளில் கூட்டுச் சமுதாயமாக வாழும் பழங்குடி மக்கள் பல்வேறு இடங்களில் இடம்பெயர்த்தப்படும்பொழுது உளவியல் பாதிப்பு, உறவுகள் சிதைவு, வாழ்க்கைச் சிதைவு, கிராமிய பண்பாடு அழிவு, கிராமியத் தொழில் அழிவு, கிராமியக் கலைகள் அழிவு போன்ற பலவிதமான வாழ்வியல் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ளுகின்றனர். இதனை பின்வரும் பகுதி எடுத்துரைக்கிறது.

    உளவியல் பாதிப்பு

    அணைகட்டுவது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் வரும்போது அவர்களை அன்பாக உபசரிக்கும் சிந்தூர் பகுதி மக்கள் அரசாங்கம் தங்களை வேறு இடத்திற்குக் குடியமர்த்தப்போகிறது என்று கேட்டவுடன் அதிர்ச்சியடைகின்றனர் என்பதை ‘வாசித்தறிந்தவர்களுடைய எதிர்ப்பு எப்பொழுதும் கணக்கிடப்பட்டதாய் இருக்கும், ஆனால் பாசாங்குகளை அறிந்திராத அவர்கள் இந்த தகவல் தெரிந்ததும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள். புலம்பித் தீர்த்தார்கள் சில பெண்கள் மாரில் அடித்துக் கொண்டார்கள். எங்கே போகப் போகிறோம் எப்படிப் போகப் போகிறோம்’ எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கின இடத்தில்தான் தங்க முடியும், முழு கிராமத்துக்கும் ஒரே இடத்தில் ஒதுக்கமாட்டார்கள் இப்படியாய் அவர்கள் தயக்கங்கள் தாரை தாரையாய் வழிந்து நின்றன’ என்று பழங்குடிமக்கள் அடையும் பாதிப்பு பற்றி ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மேலும் அரசாங்கத்தால் குடிபெயர்த்தப்பட்டவர்களின் மனநிலையை ‘சில குடிசைகள் காலி செய்யப்பட்டிருந்தன. அவர்கள் எங்க சென்றார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பலர் அந்தப் புதிய வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாமல் எப்பொழுது வேண்டுமானாலும் நெருங்கவிருக்கின்ற மரணத்திற்காகக் காத்திருந்தனர்’ என்றும் பாதிப்படையும் மக்களிடம் சுதிர் என்ற கதைமாந்தர் பேசும்பொழுது

    ‘நிறைய பேரோடு சுதீர் பேசினார். அவர்கள் யாரும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவில்லை. எங்கள் சந்தோஷத்தையெல்லாம் நீங்கள் திருடி விட்டீர்கள் என்று சொல்லுவதைப் போல் அவர்கள் மனநிலை இருந்தது’ என்று இறையன்பு காட்சிப்படுத்துவதன் வழி பழங்குடி மக்கள் உளவியல் அடிப்படையில் பாதிப்படைவதை உணர முடிகிறது. இப்புதினத்தின் முன்னுரையில் ‘நாகரிகம் நடந்து வந்த பாதை எங்கணும் இவ்விதம் நொறுங்கிப் போன மனித இதயங்கள், வராலறு நெடுகிலும் எவ்வளவு எவ்வளவோ?’ எனும் ஜெயகாந்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    மனித உறவுகள் சிதைவு

    பழங்குடியினர் கூட்டம் கூட்டமாக வாழ்பவர்கள். அவர்கள் குடியமர்த்தப்படும் போது ஒரே இடத்தில் முழு கிராமத்துக்கும் இடம் ஒதுக்கப்படுவதில்லை. இதனை, ‘அந்த நாநூறு குடும்பங்களும் இருபது கிராமங்களில் தங்கியிருக்கிற மாதிரி நிலத்தை ஒதுக்கீடு செஞ்சிருக்கோம் சார்’ என்று கதைமாந்தர் படேலின் கூற்றாக நில ஒதுக்கீட்டு முறைபற்றிக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இதன் மூலம்  ஒரு கூட்டுச் சமுதாயமாக வாழும் மக்கள் வௌ;வேறு இடங்களுக்குக் குடிபெயர்த்தப்படும் போது அவர்களது உறவுமுறை சிதைவடைவதை அறிய இயலுகிறது.

    வாழ்க்கை முறை சிதைதல்

    விவசாய தொழில் மட்டுமே தெரிந்த பழங்குடிமக்கள் வேறு இடங்களுக்குப் போகும் போது அவர்களது வாழ்க்கை முறை சிதைவு அடைகிறது. அதைப்பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது

    ‘இந்தப் பகுதியை விட்டுக் காலடி வெளியே எடுத்து வச்ச நொடியிலேயே நம்ப சந்தோஷம் மறைஞ்சி போயிடும். நம்ப ஒண்ணுமேயில்லாம ஆயிடுவோம். நகரத்துல இருக்கிறவங்க கிட்ட நம் மக்கள் ஏமாந்து எல்லாத்தையும் இழந்திருவாங்க கடைசியில கையில் ஒண்ணுமில்லாம கூலிக்காரங்களாக் குறைஞ்சிடுவோம்’ என கதைமாந்தர் சிமனின் கூற்றாக எடுத்துரைத்துள்ளார். இதன்வழி சொந்த கிராமங்களில் சிறிதளவு நிலங்களில் சுயமாக தொழில் செய்து வாழ்ந்த மக்கள் அணைகட்டுவதின் காரணமாக நகரங்களை நோக்கி செல்லும்போது கூலியாட்களாக நிலைதாழ்வடையும் சூழலை ஆசிரியர் இனம் காட்டுகிறார்.

    கிராமியத் தொழில்கள் அழிதல்

    பழங்குடி மக்களை அரசு இழப்பீட்டுத் தொகை கொடுத்து குடிபெயர்த்தாலும் அவர்களுக்காக ஒதுக்கப்படும் பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக அமைவது இல்லை. எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களையே அரசாங்கம் ஒதுக்குகிறது. இதனால் கிராமிய தொழிலான விவசாயத் தொழில் அழிகிறது. இதனை,

    ‘அந்தப் பகுதியில் கண்டங்கத்திரி என்ற களை மட்டும்தான் அபரிமிதமாக வளர்ந்திருந்தது. வெட்டி எடுத்தாலும் எஞ்சியிருக்கிற வேர் துளிர்த்துப் படரும் பயங்கரமான விஷக்களையாய் விரிந்திருந்த அதனுடன் போராடி அரசு தங்களுக்கு அளித்திருந்த பணத்தை இழந்திருந்தனர். பாசன வசதி எதுவுமில்லை. அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தபடி பள்ளிக் கட்டிடமோ, குடிநீர் குழாய்களோ தரப்படவில்லை. குடிபெயர்ந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே நிர்கதியாய் அவர்களை நிறுத்தியிருந்த நிலைமை கொடூரமானதாய் இருந்தது’ என்று சுதிர் எனும் கதைமாந்தரின் மனவோட்டமாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

    கிராமிய பண்பாடு அழிவு

    நகர்மயமாதலால் கிராம மக்கள் குடிபெயர்த்தப்படும்போது அவர்களுக்கு வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக சொல்லி அரசாங்கம் அதனை ஏற்படுத்தி தராத நிலையில் அவர்களது பண்பாட்டுக் கூறுகள் அழியும் நிலையினை

    ‘இங்கு மட்டுமல்ல, அணை கட்டுகிறபொழுது, தொழிற்சாலைகள் உருவாகிற பொழுது, எண்ணை கிணறுகள் தோண்டப்படுகிற பொழுது என எந்த முன்னேற்றம் (உங்கள் பாஷையில்) நிகழ்ந்தாலும் பாதிக்கப்படுகிறவர்கள் எல்லோரும் பழங்குடியினராகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவுமே இருக்கிறார்கள். பழங்குடியினர்களுக்கு அளிக்கப்படுகிற நிவாரணங்கள் எதுவுமே சரியாக நிர்வகிக்கப்படுவதுமில்லை. பழங்குடியினரது பண்பாட்டை ஒட்டுமொத்தமாகச் சிதைப்பது தவிர வேறெந்தப் பெரிய மாற்றமும் அவர்களது வாழ்வில் நிகழ்வது இல்லை’ என்று சுதிரின் கூற்றாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் அவர்களது பாரம்பரிய விளையாட்டு, சடங்கு முறைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் அழிவுறுகின்றன என்பதை கதைப்போக்கில் பல்வேறு இடங்களில் இனம் காட்டப்பட்டுள்ளது.

    இயற்கை பாதிப்பு

    சிந்தூர் பகுதியினை அழித்து அணைகட்டுவதால் ஏற்படும் இயற்கை சீரழிவு குறித்து ஆழ்ந்த நோக்குடன் ராதாபடங்கர் எனும் கதைமாந்தரின் கூற்றாக      ‘இந்த நாட்டின் சுற்றுப்புறச் சூழல் மொத்தமாகப் பாதிக்கப்படக்கூடாது என்பதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பாரம்பரிய சொத்துக்களையும் பண்பாட்டையும் தாரை வார்த்து விடக்கூடாது’ என்று இயற்கை நிலப்பரப்பை அழிப்பதால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைவது பற்றிக் குறிப்பிடுகிறார்.

    முன்னேற்றம் என்ற பெயரில் நாம் இயற்கையை அழிப்பது பற்றி கூறுகையில், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் சுற்றுப்புற சூழலை சீரழித்து அவற்றை வளர்ந்த நாடாகவே மாற முடியாத நிலைக்கு தள்ளி விடுகின்றன என்கிறார். மேற்கத்திய நாடுகளுக்கு கட்டில்களும் மரச்சாமான்களும் செய்வதற்கு நம் நாட்டின் தேக்கு மரங்கள் தேவைப்படுவதால் உலக வங்கிகள் நாம் இயற்கையை அழித்து அணை கட்ட எவ்வளவு கடன் வேண்டமானாலும் தர தயாராக இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறார். இது ஆசிரியரின் சமூக நல அக்கறை நோக்கினையும் நுண் அறிவையும் புலப்படுத்துவதாக அமைகிறது.

    இதனை ‘இதெல்லாம் வளர்ச்சி என்கிற பெயரில் நாம் காவு கொடுக்கிற சீதனங்கள்’ என்று குறிப்பிடுகிறார். அணைகட்டுகிற பொழுது இழப்பு ஏற்படுகிற வனத்துக்கு பதிலா புதிய வனத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் அறிவிப்பது செயற்கை தனம் அது இயற்கை தருகிற வனத்திற்கு ஒப்பாகாது என்கிறார்.

    ‘இந்தியாவில் இருக்கிற வனம் கொறச்சல். கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு மண்டலத்துல அதிகரிச்சா Green house effect நடக்கும் பல கடலோரக் கிராமங்கள் தண்ணில ழூழ்க வேண்டியதாயிருக்கும்’             என்று குறிப்பிடும் இடத்தில் ஆசிரியர் விஞ்ஞான பூர்வமான பாதிப்பினை எடுத்துக்காட்டுகிறார்.

    ‘மூழ்கப்போற பரப்பளவுக்கு ஏத்த மாதிரி 1 லட்சம் ஹெக்டேர் வனம் அமைப்பதற்கு நிலமே கிடையாதுன்னு சொல்லறாங்க. மஹாராஷ்டிராவில் அழிஞ்சி போற காட்டுக்கு மாற்றா ராஜஸ்தானில் காடுகளை உண்டாக்கறது முட்டாள் தனம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆந்தைகளோட எண்ணிக்கை குறைஞ்சதனால தான் எலிகளோட எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியல. இயற்கையை அழிச்சா யாராலேயும் சமத்தன்மையைச் சமன் செய்ய முடியாது புரிஞ்சிக்க’ என்ற இயற்கையை மனித முயற்சியால் சமன் செய்ய முடியாது என்பதை சுதரின் கூற்றின் மூலம் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

    சிந்தூர் பகுதியில் அணை கட்டப்படுவதால் மூழ்கவிருக்கிற கிராமங்கள், அழிக்கப்பட விருக்கிற வனங்கள், உயிரினங்கள், தாவர இனங்கள், தண்ணீர் தேங்கி உலர் நிலமாகப் போக இருக்கிற விவசாய நிலப் பரப்பு பற்றிய குறிப்புகளை ஆசிரியர் திறம்பட குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வாறு கிராமங்களை அழித்து அணைக்கட்டுதல் என்பது அப்பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தினாலும் ‘அணை என்பது தேசீய கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்படுவது. இதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பினைக் கூறுவதாக பதிவு செய்யும் ஆசிரியர் ‘அணை கட்டுவது என்பது உற்பத்தியைப் பெருக்கக் கூடியது என்பதில் நாங்கள் முரண்படவில்லை. ஒரு அணை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதும், பெரிய அணைகள் நம் நாட்டு நலனுக்கு எந்த அளவிற்கு உகந்தன என்பதும் தான் என்னுடைய கேள்விகளாக இருக்கின்றன. நம் நாட்டில் கட்டப்பட்ட பல பெரிய அணைகள் முக்கால்வாசிக்கு தூர்ந்துபோய் இருக்கின்றன. சீனத்தில் சின்ன சின்ன அணைகளாக கட்டப்பட்டு நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்படி சின்ன அணைகளாகக் கட்டப்படும்பொழுது நீர்த்தேங்குதல்   உலர்நிலமாதல்   போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு அணை கட்டப்படும்போது எத்தனை ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களில் உள்ள இயற்கை வனங்கள் அழிக்கப்படுகின்றன? நம் அறிவிற்கே அகப்படாத எத்தனையோ தாவரங்களும், உயிரினங்களும் தண்ணீரில் மூழ்கி மறைந்துபோகின்றன தெரியுமா? ஒரு அணை பெரிய அளவிலே கட்டப்படும்பொழுது எந்த அளவிற்கு சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது தெரியுமா? நம் நாட்டில் ஏற்கனவே போதிய அளவில் வனங்கள் இல்லை. நம்மால் செயற்கையாக இந்த இயற்கைச் செல்வங்களையெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும்?’ என்று ராதா படங்கரின் கூற்றாக இறையன்பு நம்முன் வைக்கும் கேள்விகள் சிந்தனைக்குரியதாக உள்ளது.

    நாட்டின் வளர்ச்சி இலக்கினை நோக்கி உருவாக்கப்படும் இதுபோன்ற அணைக்கட்டும் திட்டத்தினால் வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்படும் மக்களுக்கும் தகுந்த இழப்பீட்டுத் தொகையினையும், அவர்கள் சுயமாக தொழில்செய்து பிழைக்கும் வகையில் நல்ல நிலங்களையும் அமைத்துக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்பதையும் இப்புதினம் அறிவுறுத்துகிறது.

    மேலும் ஒருபுறம் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப அரசாங்கத்தால் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் மறுபுறம் இயற்கை வளங்களை பாதுகாப்பதும் இன்றியமையாதது என்பதையும் இப்புதினத்தின் வழி ஆசிரியர் வலுவாக எடுத்துரைப்பதை உணர முடிகிறது.

    துணைநூற்பட்டியல்

    1.ஆத்தங்கரை ஓரம் – வெ.இறையன்பு – தாகம் சென்னை – 1997

    2.தமிழில் வட்டார நாவல்கள் – சு.சண்முகசுந்தரம் – காவ்யா பெங்களுர் 1991

    3.நாவலும் வாழ்க்கையும் – க.சிவதம்பி – தமிழ் புத்தகாலயம் – சென்னை 1978

    கட்டுரையாளர்
    முனைவர் வீ. மீனாட்சி,  உதவிப் பேராசிரியர், முதுகலைத் தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 017.

     

    Share
  • சிறுவர் பாடல்களில் மருத்துவச் செய்திகள்

    ஜே.அனிற்றா ஜெபராணி

    ஸ்காட் கிறித்தவக் கல்லூரி ,

    மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

     

    நாட்டுப்புற மருத்துவம்:- 

     

    இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இம்மருத்துவ முறையில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ அதேபோல அவைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.

    நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், நினைவாற்றல் அபாரமாக இருக்கும். சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை வரலாறு மூலம் அறிய இயலும். பழங்கள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. இதில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்க முடியும். மேலும் புற்றுநோய், இருதய நோய், மறதி, மாரடைப்பு போன்றவை வராமலும் தடுக்கலாம். அத்தோடு மன அழுத்தம் நீங்கும்.

    ஆரோக்கியமான உணவிற்குக் காய்கறிகள் சேர்க்கப்படுதல் நல்லது. அப்படிச் செய்வதால் இதய நோய்கள் வராது. இதில் இலை வகை, பூக்கள் வகை, வேர்வகை எனப் பலவகைகள் உண்டு. மனிதனின் உண்மைச் செல்வம் உடலும் உயிருமே ஆகும். நாம்வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மிகமிக இன்றியமையாதது உடல்நலம் ஆகும். உண்ணும் உணவில் எடுத்துக் கொள்ளும் அக்கறைதான் நோய் நொடியில்லாமல் வாழ வழிவகுக்கும்.

    மூலிகைச் செடி 

    உலக அளவில் இந்தியாவில்தான் அதிக மூலிகைகள் உள்ளன. மேலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகள் மனிதனுக்கு பயனளிக்கிறது. மேலும் அனைத்துத் தாவரங்களிலும் ஏதாவது ஒரு வகை மருத்துவ குணம் உள்ளது என்பதை,

    ”மருத்துவப் பயன்கள் இல்லாத
    மரம் செடி இல்லையே
    உயிர்களுக்காய் வளர்ந்தே” என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

    கீரை

    உடலுக்குக் குளிர்ச்சியையும், சத்துக்களையும் அளிக்கும் கீரையினைப் பற்றிப் பின்வரும் பாடல் உள்ளது. மேலும் கீரைகள் சிறந்த மூலிகைகளாகவும் உள்ளன.

    கீரை நல்ல கீரை
    கிடைக்கும் எங்கும் கீரை
    பேரைச் சொன்னால் போதும்
    பெருமை தெரியும் கீரை

    முருங்கைக்கீரை

    முருங்கைக்கீரை மருத்துவப் பொக்கிஷம் என்றழைக்கப்படும்; எண்ணற்ற வியாதிகளுக்கு இது மருந்து. வாரம் இருமுறை இதனைச் சாப்பிட்டால் உடல்சூடு தணியும். முடி உதிர்வதை தடுக்கும். தோல் நோயினை தடுக்கும். முடி நீண்டு வளரும். இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து கணிசமாக உயரும். அதோடு உடலுக்கு நல்ல வலிமையினைக் கொடுக்கும். மேலும் சிறுநீரகம் பலப்படும் கோழை அகற்றும். பல் வலிமை அடையும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணுக்கு உகந்த மருந்து. காய்ச்சல் மூட்டுவலியினையும் போக்கவல்லது. இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். இரத்த விருத்திக்கும் நல்ல உணவு.

    கீரை கீரை கீரை
    முருங்கை இலை கீரை
    முடி வளர உதவும்
    மருத்துவ குணம் கீரை
    உணவில் சேர்த்து உண்பீர்
    நோயின்றி வாழ்வீர்

    பழங்கள்: 

    நாம் சாப்பிடும் உணவே நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதால் புற்றுநோய், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், இதய நோய்கள் போன்றவை நெருங்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    சிவப்பு வண்ண தக்காளி/சிரிக்கும் நல்ல பப்பாளி
    தினமும் தின்ன ஆப்பிள்/இரவில் உண்ண வாழை
    திராட்சை முந்திரி மா பலா/மாதுளை கொய்யா சப்போட்டா
    நாள்தோறும் இவற்றைச் சாப்பிட்டா/எல்லா நோய்க்கும் டாட்டா

    நோயின்றி வாழ பழங்களை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகிறது.

    பப்பாளி 

    இயற்கையின் கொடை பப்பாளி. வீட்டின் பக்கம் தோட்டம் போன்ற சாதாரண இடங்களிலும் வளரக்கூடியது. இதில் பல நன்மைகள் உள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த பழம். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ளன. இது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். மிகுந்த செரிமானத்துக்கு ஏற்றது. தோலில் ஏற்படும் குறைபாடுகளைக் களையவல்லது. கண் குறைபாடுகளை நீக்கும். கேன்சர் வராமல் தடுக்கும். எல்லாப் பழங்களை விட விலையும் குறைவு. எளிதாக கிடைக்கக் கூடியது.

    ”பப்பாளி பப்பாளி
    தங்க நிறப் பப்பாளி
    பார்வை அளிக்கும் பப்பாளி
    பார்க்கக் கிடைக்கும் பப்பாளி
    பொலிவைத் தரும் பப்பாளி
    ஜொலிக்கச் செய்யும் பப்பாளி” என்ற பாடல் பப்பாளியையும் அதன் சிறப்பையும் விவரிக்கிறது.

    மாதுளம் பழம்: 

    மாதுளம்பழம் இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலை வளர்க்கும். அறிவுத்திறனை அதிகரிக்கும். மாரடைப்பு, நெஞ்சு எரிச்சல், இரத்தக் கொதிப்பு, அல்சர், முடக்குவாதம், அஜீரணம், இவைகளைக் குணப்படுத்தும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு. மலச்சிக்கல் நீக்கும். தோலை அம்மியில் அரைத்து உண்பதால் சீதபேதி நிற்கும். மாதுளம் பழம்பற்றிய,

    மாதுளம் பழமாம் மாதுளை
    மகிமை கூறும் மாதுளை
    வரிசையான முத்துடன்
    வளங்கள் தரும் மாதுளை
    ரத்த சுத்தம் செய்ய
    சித்த மருந்தாகும்
    வயிறு வலி நீக்கும்
    மலத்தை வசமாக்கும்…

    இந்தப் பாடல் மாதுளையையும் அதன் மருத்துவ குணத்தையும் அறிமுகம் செய்கிறது.

    திராட்சைப்பழம் 

    திராட்சைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் வறட்சி நீங்கி தோல் மென்மையாகி, உடல் அழகாகும். குரல் இனிமையாகும். மலச்சிக்கலை நீக்கி, வீரியத்தை விருத்தி செய்யும். நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தைச் சீர் செய்யும். மெலிந்தவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பு பருமனாகும். இருதய நோய்களைக் குணப்படுத்தும். குடல் கோளாறு, வாய்ப்புண், தொண்டைப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

    ”திராட்சைப்பழம் நல்ல திராட்சைப்பழம்
    தின்ன தின்ன இனிக்கும்
    கொத்துக் கொத்தாய் இருக்குமாம்
    கொடியின் மேல் தொங்குமாம்
    பார்க்க பார்க்க எட்டியே/பறித்து தின்னத் தூண்டுமாம்” என்ற பாடல் இதனைத் தெளிவு படுத்தும்.

    கொய்யா: 

    கொய்யாப்பழத்தில் வேறு எந்த பழத்திலுமில்லாத அளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கொய்யாப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்த உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இரத்தச்சோகை நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் குணம்பெற முடியும். தொண்டையில் உண்டாகும் புண்களை ஆற்றும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். சொறி சிரங்கு குணப்படுத்தும். விஷக் கிருமிகளைக் கொல்லும் சக்தி இதற்கு உண்டு. இது ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது.

    ”அய்யா வீட்டு கொய்யாப்பழம்
    ஆசையாக தந்த பழம்
    கையில் வைத்து வாயில் வைத்து
    திங்க திங்க அவை தரும்
    மருத்துவ குணமும் இதிலுண்டு
    இரத்தத்தினையும் சுத்தப்படுத்தும்
    சொறி சிரங்கினையும் தடுத்து நிறுத்தும்” என்ற பாடல் கொய்யாவின் மருத்துவ குணங்களை விவரிக்கிறது.

    மாம்பழம் 

    மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படும். இதனை உட்கொள்வதால் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலுக்குப் பலம் கிடைக்கும். மேலும் உடலுக்கு நோய்எதிர்ப்புச் சக்தி அளிக்கிறது. இதயத் தசைக்குப் பலம் தருகிறது. இனிய மாம்பழத்தினைப் பற்றின பாடல்,

    மாம்பழமாம் மாம்பழம்
    அழகான மாம்பழம்
    தித்திக்கும் மாம்பழம்
    அல்வா போன்ற மாம்பழம்…

    வாழைப்பழம்

    முக்கனிகளில் ஒன்று வாழை; வாழைப்பழம் சாப்பிடுவதால் மூல நோயிலிருந்து விடுபடலாம். நல்ல ஜீரண சக்தி உண்டாகும். வாழை வாழ வைக்கும்; இரத்த சோகை நீங்கி, இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்திலுள்ள புருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. மலச்சிக்கலை நீக்கும்.

    ”வாழைப்பழத்தை நாள்தோறும்
    வகையாய் உண்ண வேண்டுமே
    ஏழை கூட வாங்கியதை
    எளிதில் உண்ணலாகுமே” புகைப்பிடித்தலால் ஏற்படும் நிக்கோட்டினை வெளியேற்ற உதவும்.”

    அவரைக்காய் 

    புரதம், நார்ச்சத்து இதில் அதிகம் காணப்படுகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தைப் பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    ”கொடியில் தொங்கும் அவரைக்காய்
    காய்க்கக் காய்க்கக் கொத்துக்காய்
    புரதம், நார்ச்சத்து நிறைந்தது
    சாப்பிட்டால் நன்மை பயக்குமே” இப்பாடலில் அவரைக்காயின் தன்மை பற்றி கூறப்பட்டுள்ளது.

    சூரியகாந்தி 

    ஒரே செடியில் ஒரு பூ அது சூரியகாந்திப் பூ ஆகும். இதன் விதைகள் எண்ணெய் கொடுக்கும். புகைப்பழக்கம் உள்ளவர்கள் தினமும் ஒரு விதை உட்கொண்டால் அப்பழக்கம் மறந்துவிடும். இதில் வைட்டமின் ஏ, டி, பி அதிகம் காணப்படுகிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தினைக் கொடுக்கும். விதையில் காணப்படும் மெக்னீசியம் நரம்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். பக்கவாதம், சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

    ”வண்ணப் பூவும் நீதானே
    வட்டப்பூவும் நீதானே
    சூரியப் பெயரைக் கொண்டாலும்
    சூடாத பூவும் நீதானே
    சூரியகாந்திப் பூ மட்டுமே
    எண்ணெயாய் மாறி உணவாவாய்
    மருத்துவப் பயனும் கொண்டு நீ
    நிறைவாய் வருமானம் தந்திடுவாய்” மேல் தரப்பட்ட பாடல் சூரியகாந்தியின் மருத்துவ குணத்தை விளக்குகிறது.

    தாமரை

    தாமரை மலர் இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வெப்பத்தைக் குறைக்கும். விதை, உடலைப் பலமாக்கும். தாமரைக் கிழங்கு உள்ளுறுப்புகளின் புண்களைக் குணமாக்கும். விதையைத் தேனுடன் அரைத்து நாக்கில் தடவினால் வாந்தி விக்கல் குணமாகும். விதையை அரைத்துச் சாப்பிட்டால் பார்வை மங்கல் குணமாகும்.

    செண்பகப்பூ 

    கண்ணைக் காக்கும் செண்பகம். உடல் வலுவடையவும் உடல்பலம் பெறவும் உதவும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். கஷாயம் செய்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். பித்தம், வாதம், கபம் நீங்கும். ஆண்மை குறைவைப் போக்கும்; பொடிசெய்து உண்டால் வெள்ளைப் படுதல், நீர்சுருக்கு, சிறுநீர் வெற்று எரிச்சலுடன் வெளிப்படுதல் குணமாகும். வயிறு வலி மாறும். பாலியல் நோய்களை குணப்படுத்தும். பொடுகு தொல்லை நீங்கும்.

    ”செண்பகப்பூ/சிறப்பான பூ
    மரத்தில் பூக்கும்/மணத்தால் கவரும்
    இலைகளின் ஊடே/இரவில் மலரும்
    இனிய மணம் வீசும்
    மலரின் மணத்தால் மாசு நீக்கி காக்கும்
    தெய்வங்கட்கும் கட்டுவர்/செண்டாகவும் மாற்றுவர்.”

    ரோஜா 

    ரோஜா மலர்கள் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குணமாக்கும். ரோஜாப் பூக்களிலிருந்து அத்தர் எனப்படும் நறுமணம் பொருந்திய எண்ணெய் பெறப்படுகிறது. ரோஜா இதழினை நீரில்போட்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும். நீரினைக் புண்ணில் கழுவினால் புண் குணமாகும். ரோஜா இதழினைக் காயவைத்து எடுப்பதற்குப் பெயர் குல்கந்து. இதனைச் சாப்பிட்டால், இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதி அடையும். ரோஜாப்பூவினைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள புண்கள் ஆறிவிடும் ரோஜாவிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏறப்படும் முகப்பருக்களைக் குறைக்கு உதவும். ரோஜா இதழினைத் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவினால் முகம் பொலிவடைந்து பிரகாசிக்கும்.

    ”ரோசப் பூவாம் ரோஜாப்பூ
    வாசமுள்ள ரோசாப்பூ
    கொத்து கொத்தாய் ரோசாப்பூ
    நறுமணமுள்ள ரோசாப்பூ
    இதழ்கள் தின்று மென்றாலே
    மருத்துவ குணமும் கொண்டது” இப்பாடலில் ரோஜாவின் சிறப்பினை கூறுகின்றன.”

    மல்லிகை

    மல்லிகைப் பூவும் மருத்துவ குணம் கொண்டது. நான்கு பூக்களை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால் வயிற்றிலுள்ள கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை அழியும். பூச்சிவெளியேற மருந்து இதுவே. பூவினைக் காயவைத்து பொடியாக்கி தண்ணீரிலே கலந்து உண்டால் சிறுநீரக கற்கள் தானாகவே கரையும். நோய் எதிர்ப்புச்சக்தி கூட்டும்.

    ”வெள்ளை நிற பூவிது/எல்லோரும் விரும்பும் பூவிது
    மகிழ்வு தரும் பூவிது/மலிவான பூவிது
    நறுமணம் வீசும் பூவிது/மருந்துக்கு ஏற்ற பூவிது”

    வேப்பமரம்: 

    வேம்பு மருத்துவக்குணமுடையது. வேப்பிலைச்சாறு குடித்தால் குடல் பூச்சிகள் நீங்கும். மலேரியா காய்ச்சல் குணமாக தோல்நோய் நீங்கப் பயன்படுகிறது. வேப்ப மரத்தின் காற்றே மருத்துவ குணம் உடையது. இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தி கொண்டது. உடல் உபாதைகள் குறையும். சஞ்சீவி என்றழைக்கப்படுகிறது. வேர், பட்டை, மரக்கட்டை, வேப்பங் கொட்டையின் மேல் ஓடு உள்ளிருக்கும் பருப்பு, பால், பிசின், காய், பழம், பூ, இலை, ஈர்க்கு, வேப்பங்கொழுந்து போன்றன சித்தா, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருத்துவப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. நுண்ணிய விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. நீரழிவு, சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்தும். பாம்புகடி, விக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

    ”கண்ணா வேப்பமரத்தை நீ/எண்ணிப் பார்த்து நடப்பாய்
    பயன்தரும் என்றிதனைப்/பகவான் வள்ளுவர் கூறினார்
    திருவள்ளுவர் சொன்ன நீதி/திருவாக்கே ஆகும் என்றும்
    எத்தனை பெரிய மரத்தில்/இத்தனை சிறிய காய்கள்
    அத்தனையும் மருந்தாம்/பித்தனுக்கும் உகந்ததாம்
    முடக்கு வாதம் கூட/படக்கென நடக்க வைக்கும்
    மக்கள் மாக்கள் மரமென/மருந்தாகும் மரமிது.”

    வேப்பம் பூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளைக் கொண்டது. இலை, தோல் நோய் மருந்து, நாள்பட்ட புண், கட்டி மீது பூசினால் குணமாகும். வேப்பம்பூ, வாயுத்தொல்லை ஏப்பம் அதிகமாக வருவதால் பசியின்மை போன்றவற்றினை குணப்படுத்தும். காய் -வைரஸ் காய்ச்சல், தொழுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். பழச்சாற்றினைச் சொறி, சிரங்கு, புண்களில் பூசக் குணமாகும்.

    முடிவுரை 

    மூலிகைகள், காய்கனிகள், கீரைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற்போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. உடலுக்கு ஊட்டத்தை தருவதில் காய்கறிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. காய்கறிகளை அதன் மருத்துவ குணம் அறிந்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயற்ற வாழ்வு சாத்தியமாகும். கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல், வண்டிக்கு அச்சாணி போல், மனிதனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவப் பெரிதும் உதவுவது உடல்நலமே. இயற்கை உணவுகளை உண்டு தீராத நோய்களையும் தீர்த்துக் கொள்ள இயலும்.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவி,
    ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி,
    நாகர்கோவில்.

     

     

    Share
  • சங்க இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்

     முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்,

    பேராசிரியர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம், 695 581.
    முன்னுரை

    சங்க இலக்கியம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினையும் எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாகவும் அழியாச்சான்றாகவும் விளங்குகின்றது. பழந்தமிழர் வாழ்வில் இடம் பெற்ற காதல் , மறம், புகழ் ஆகிய மூன்றும் ஆராயப்பட்ட அளவிற்கு அறிவியல் செய்திகள் ஆராயப்படவில்லை. அவை அறிவியல்  பூர்வமகாக ஆரயப்பட்டால் பழந்தமிழரின் ஆழமான அறிவியல் அறிவை அறிந்து கொள்ள  முடியும்.

    சங்க இலக்கியத்தில் தாவரங்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர் .பி.எல்.சாமி ‘’சங்க இலக்கியங்களில் செடி கொடி மரங்கள்’’ பற்றிப் பல செய்திகள் விளக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் செடி நூலார் (Botanist)     கண்டுபிடித்தவையோடு  ஒத்திருக்கின்றன என்ற கூறுவார்.

    தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம் ,வானவியல் ,சோதிடம், கணிதம் போன்ற கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது. மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தேல்ஸ் (கிமு 639-544), அனாக்ஸி மாண்டர் (611-547) ஷீனோபான்ஸ் (கிமு 576-480) எம்படோகில்ஸ் (கிமு 504-433) அரிஸ்டாட்டில் ( கிமு 384-322) போன்றோர் வெளியிடாத பல  அறிவியல் கருத்துக்களைத் தனது இலக்கண நூலில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அவற்றை உயிரியல் சிந்தனைகள், மருத்துவச்சிந்தனைகள், சார்பியல் கோட்பாட்டுச்சிந்தனைகள், தகவல் தொடர்பியல் சிந்தனைகள், வானவியல் சிந்தனைகள் எனப் பிரிக்கலாம். உயிரினப்பாகுபாட்டை உலகில் முதன்முதலில்  தொல்காப்பியர் பின்வருமாறு விளக்குகிறார்.

    ‘’ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

    இரண்டறிவதுவே அதனொடு நாவே

    மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

    ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

    ஆறறி வதுவே அவற்றொடு மனனே’’

    என்ற நூற்பாவால் (தொல்.., பொருள், மரபு, நூ.26-27 ) விளக்குகின்றார். உயிர்களின் பரிணாம வளர்ச்சியை உயிர்களின் உடம்பினோடும் அதனோடு இணைந்த மெய்,வாய், மூக்கு,கண்,செவி என்னும் ஐம்பொறிகளும், மனமும் ஆகிய ஆறுவகை வாயில்களையும்  பெற்று அறிவினால் சிறந்து விளங்கும் இயல்பினை அறிவியல் நோக்கில் குறிப்பிட்டுள்ள தொல்காப்பியரின் திறம் போற்றத்தக்கது.

    ‘’செஞ்ஞாயிற்றுச் செலவும்

    அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

    பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

    வளி திரிதரு திசையும்

    வறிது நிலைஇய காயமும் என்றிவை

    சென்றளந்து அறிந்தோர்போல என்றும்

    இனைத்து என்போரு முளரே  (புறம் 30.1-7)

    செஞ்ஞாயிற்றின் வீதியும் அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமும் காற்றியங்கும் திசையில் ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் ஆகிய இவற்றை அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையவென்று எடுத்துக்கூறும் கல்விடையோரும் இருந்தனர் என்ற அறிவியல் குறிப்பினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

    சூரியக்குடும்பம்

    சூரியக்குடும்பத்தின் ஒரு கிரகத்திலிருந்து வந்தவர்கள் தான் மக்கள் என்ற வானியல் அறிஞர்களின் கருத்திற்கு ஏற்றவாறு சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியும் பின்வரும் பாடலில் கூறுகிறது.

    ‘’சென்ற காலமும் வரூஉம் அமயமும்

    இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து

    வானமும் நிலனும் தாம் முழு துணரும்

    சான்ற கொள்கைச்சாயா யாக்கை

    ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்’’( மதுரை 477-481 )

    பழங்காலத்தில் வாழ்ந்து வந்த சைனர் வானம் ஏறுதல், கடலில் நடத்தல் போன்ற அறிவியல் செயல்களைச் செய்வதில் திறம் பெற்றிருந்தனர் என்பதை குறுந்தொகை 130 –வது பாடல் விளக்குகிறது.

    ‘’நிலம் தொட்டுப் புகா அர்வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்’’ என்ற பாடலில் தோழி தலைவியிடம் உன் தலைவன் நிலத்தில் புக மாட்டார் வானத்தில் ஏறார் கடலின் மீது நடவார் கவலைப்படாதே என்ற தேற்றுவதாக  அறிவியல் செய்தி வருகின்றது.

    வான வெளிப் பயணம் 

    வான வெளிப் பயணம் முன்னோர்கள் அறிந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் விமானிகளே இல்லாத விமானங்களை வானவெளியில் செலுத்தமுடியும் என்ற அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது இக்கருத்தினை

    ‘’ வலவன் ஏவா வானவூர்தி

    எய்துப………….(புறம் பா 27)

    என்ற பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். சிறந்த அரசர்கள் விண்ணில் பாகனால் செலுத்தப்படாத தானே இயங்குகின்ற திறன் வாய்ந்த வானவூர்தியில் சென்றனர்எ ன்ற குறிப்பின் வழி தமிழர்கள் விமான ஓட்டும் கலையில் வல்லவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

    கணிதவியல் சிந்தனைகள்

    வாழ்வியலோடு ஒட்டியதாகும் கணிதம். அதன் உதவியின்றி எதுவும் நடைபெறாது. இதை உணர்ந்தே

    ‘’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

    கண்ணென்ப வாழும் உயிர்க்கு ( குறள் 392)

    என்று வள்ளுவரும் கூறினார். ஔவையும்

    ‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்

    மைஇல் கமலமும் வெள்ளமும் (பரி 2.13-14) இப்பாடலில் எண் கணிதம் கூறப்பட்டுள்ளது.

    கணக்கற்ற பல ஊழிகள் பல கோடி ஆண்டு காலத்தைக் குறிக்கின்றது. இதில் ஆம்பல் என்பது பழந்தமிழர் கணக்கிட்ட ஆயிரம் கோடி என்ற  பேரியல் எண் வெள்ளம் என்பது கோடி கோடியைக் குறிக்கின்றது. கோடியை விடவும் பெரிய எண்களுக்கும் தமிழில் பெயர் இருப்பது தமிழரின் தனிச்சிறப்பை உணர்த்தும் குறிப்பாகும்.

    மருத்துவச் சிந்தனைகள்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நலமுடன் வாழ முடியும். நீர்வேட்கைத் தீர்க்கும் பொருட்டு அக்காலத்தில் மூவகை மருந்தாக நெல்லிமரம் பயன்பட்டது. நெடுந்தூரம் வந்த நீர்வேட்கை மிக்க புதியவர்கள் உயிரைப் போகாது தடுக்க நெல்லிக்காயை சுவைத்தனர். நீர்ச்சத்து நிறைந்த தாவரங்களுள் நெல்லிமரம் ஒன்றாகும்.

    -கோட்கரம் நீந்தி

    நெட்ஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்

    செல்லுயிர் நிறுத்த சிவைக்காய் நெல்லி (புறம் 271 5-7)

    இந்நெல்லிக்கனியை நீண்ட நாள் உயிர்வாழும் பொருட்டு ஒளவைக்கு அதியமான் வழங்கினான் (புறம் 97)

    மண்ணறிவியல் சிந்தனைகள்

    பழந்தமிழர்கள் மண்ணின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். நீர் வற்றாத வைகை ஆற்றில் காணப்படும் மணல் செம்பழுப்பு அல்லது கருப்பாக இருக்கும் . இம்மணல் பயிர் செய்வதற்கு ஏற்றதாக இருந்ததை

    வரும்புனல் வையை வார்மணல் அகன்றுறைத்

    திருமருதோங்கிய விரிமலர்க்   காலின் ( அகம் 36.9-10)

    இங்கு ஆற்று நீர் கொண்டு வந்த வெண் மணலின் தன்மையை அறிய முடிகிறது.

    புவி வெப்பமடைதலும் பருவ மழை மாறுதலும்

    புவி வெப்ப மாற்றத்தால் பாலை நிலம் பாதிக்கப்படுவதை பின்வருமாறு புறநானூறு பாடல் விளக்குகிறது.

    கதிர் கையாக வாங்கி ஞாயிறு

    பைதரப் பெறூதலின் பயங்கரந்து மாறி

    விடிவாயப்பட்ட வியன்கண் மாநிலம் (அகம் 164.!-3)

    என்ற பாடல் அடிகள் ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைக் கவர்ந்த்தையும் பசுமையற்ற நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதையும் இலைகள் வாடிப்போய் உதிர்ந்ததையும் விளக்குகிறது.

    நீர்க்கடிகாரம்

    நல்ல காரியம் செய்வதற்கு முன் நேரத்தைப் பார்ப்பது உண்டு. சங்க காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன் நேரத்தைப் பார்ப்பதற்காக நாளிகைக் கணக்கர்கள் கோவில்களிலுள்ள கிடாரமாகிய நீர்க்கடிகாரத்தைக் கண்டு அதிலுள்ள நீரின் அளவைக் கொண்டு நாளிகையைக் கணக்கிட்டுக் கூறினர் என்பதை

    ‘’எறிநீர் வையகம் வெலீஇய செல்போய் நின்

    குறு நீர்க்கன்னல் இனைத்து என்று இசைப்ப’’- (முல்லைப்பாட்டு 57-58)

    இதே கருத்தை மாங்குடி மருதநாரும் குறிப்பிடுகின்றார்.

    அக்கால மகளிர் நேரத்தை வட்டிலைக்கொண்டுதான் கணக்கிட்டனர்.

    கதிரவனைக் கொண்டு அல்லது.

    குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது

    கதிர் மருங்கறியா தஞ்சு வரப்பா அய்  (அகம் 43;6,7)

    தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் தலைவி தன்னிலையில் துயிலாமல் இருப்பவர்கள் யார் என்று எண்ணும் போது நாளிகை வட்டில் அவள் கண்முன் தோன்றுகிறது. இரவெல்லாம் துயிலாமல் நாளிகை வட்டிலையே கூர்ந்து நோக்கியிருப்பது போல நானும் தலைவன் வரவையே எதிர்பார்த்து இருக்கிறேன் என்பதை குறு 261 ஆம் பாடல் விளக்குகிறது.

    ‘’ அஞ்சு வருபொழுதினானும் என்கண்

    துஞ்சா வாழி தோழி காவலர்

    கணக்கு ஆய் வகையின் வருந்தி என

    நெஞ்சு புண்ணுற்ற விழுமந்தானே’’ (குறு 261)

    நியூட்டனின் விதி

                                  ‘’வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

    ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்

    வல்வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்’’ (புறம் 152)

    எய்த வில்லானது யானை , புலி, புள்ளிமான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்திய வில்லின் வேகம் குறைந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தாக்கி விசை நிலைப் பெற்றதாகக் கூறுமிடத்து நீயூட்டனின் விதி உணர்த்தப்படுகிறது.

    ஆற்றின் வழியாக மிதந்து செல்லும் தெப்பமானது நீரின் விசையை மட்டும் பெற்றுச் செல்கிறது. இந்தத் தெப்பத்தினை வேறு எந்த விசையும் தாக்குவதில்லை. அதைப்போல வாழ்க்கை ஒரேச் சீராகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட புறப்பாடலும் நீயூட்டனின் இரண்டாவது விதிக்குப் பொருந்தியுள்ளது.

    ‘’பேர்யாற்று

    நீர்வழிப்படுஉம் புணைபோல் ஆருயிர்

    முறைவழிப்படுஉம் என்பதும் ‘’ (புறம் 192 .8-10)

    விண்மீன்கள் பற்றிய அறிவு

    விண்மீன்கள் பற்றி அக்கால மக்களுக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. வருணனைப் பாங்கில் விண்மீன்கள் தோன்றுதலை ‘’ வெள்ளி முளைத்தல் ‘’ என்றே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதை அறிகிறோம்.

    ‘’ வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய ‘’ (பொரு – 72)

    கண்ணுக்கு அழகுபட விளங்குவதன் காரணமாக விண்மீன்கள் தோன்றுவதை பூத்தல் என்று குறிப்பதும் இலக்கிய வழக்காக உள்ளது.

    ‘’ மீன் பூத்தன்ன உருவ ‘’ ( புறம் 21;4)

    ‘’வான்மீன் பல பூப்ப’’ ( புறம் 129;7)

    விண்மீன்கள் அன்றன்று புதிதாக முளைப்பனவல்ல கதிரவனால் மறைக்கப்பட்டே பகலில் தோன்றாதுள்ளன என்ற அறிவியல் உண்மை அக்காலத்து மக்களுக்கு விளங்காமல் இல்லை.

    விண்மீன்கள் என்பனவும்; நிலவும் சூரியனும் போல வானில் சுடர் விட்டுப் பிரகாசிப்பனவே ஆயினும் விண்மீன்களின் பிரகாசம் வேறுபடுகிறது. விட்டு விட்டுப் பிரகாசிப்பன அவை. அதனை காற்றில் அலைந்து அலைந்து எரியும் தீப்பந்தங்களுக்கு இலக்கியங்கள் ஒப்பிட்டுள்ளது பொருத்தமானதாகும்.இது பற்றியே இலக்கியங்கள் விண்மீன்கள் ஒளிவிடுவதை- இமைத்தல் என்றும் குறிக்கின்றன. ‘’ வானமின்னின் வயின் வயின் இமைக்கும்’’ (குறு 150; 2)

    மின்னலிலிருந்து வேறுபடுத்துவதை அதனை மீன் என்றனர். மீன் பூத்தன்ன தோன்றலர் ( திரு 169)

    ‘’சிறுமீன் புரையும் கற்பின் ‘’(பொரு 303)

    ‘’கைம்மீன் புகையிலும் ‘’(புற 117 ;1)

    ‘’வடமீன் புரையும் கற்பின் ‘’ (புற 122 ;8)

    ‘’மீன்றிகழ் விசும்பின் ‘’ (புற 25;1)

    பழந்தமிழ் இலக்கியங்களில் மீன் என்பது வானத்து மீனையும் வையத்துக் கயங்களின்  மீனையும் குறித்து வருகின்ற இருபொருள் காரணமாக அழகிய வருணனைகள் விளங்குகின்றன. மின்னுகின்ற காரணத்தால் மீன் என்று விண்மீன் குறிக்கப்பட்டதோடன்றி வெள்ளொளி அதன் ஒளி ஆதலின் ஒளிநிறத்தை வைத்து வெள்ளி என்றும் வழங்கப்பட்டது.

    ’’வெள்ளிஏர்தர ‘’(புறம்  398;1)

    ‘’வெள்ளி ஓடினும் ‘’ (புறம்  117;2)

    ‘’இலங்கு கதிர் வெள்ளி’’( புறம்  35;7)

    வானத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் போன்ற கோள்களும் நட்சத்திரக் கூட்டங்களும் இவற்றுக்கெல்லாம் அப்பால் அழகிய மண்தளங்களும் உண்டு என்பது மாங்குடி மருதனாரின் அறிவியல் சிந்தனை

    ‘’ அங்கண்மால் விசும்பு புகையவளி போழ்ந்து (மதுரை 384)

    பூமியிலிருந்து 200 மைல்களுக்கு மேலே காற்று மண்டலம் கிடையாது என்பதை புறப்பாடல் விளக்குகிறது ‘’வழியிடை வழங்கா வானஞ்சூடிய’’

    சங்கப்புலவரின் பாடல்கலெல்லாம் அவர்களின் பட்டறிவே என்பதும் உள்ளதை உள்ளவாறே விளக்குவதும் அவர்களின் அறிவியல் சிந்தனையாகும். ஊர்வன. பறப்பன, நீர்வாழ்வன தாவர விலங்கு பற்றிய அறிவியல் சிந்தனைகளை உணர முடிகிறது.

    உலகம் சுழல்கின்ற சுழற்சியை உலகம் தன் சுழற்சியினால் நல்ல இசையை உண்டாக்கும் தன்மை படைத்தது என்பதை                             ‘’மலையும் சோலையும் மாபுகழ் கானமும் தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப’’ என்கிறது மலைபடுகடாம் (170-171)

    வானம் அளவிட முடியாததாகவும் காற்று நுழைந்து செல்லாத காற்றற்ற வெளியாகவும் விளங்குவதனை

    ‘’மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

    இயங்கிய இரு சுடர்

    கண்ணெனப் பெயரிய ‘’ என்ற புறப்பாடல் விளக்குகின்றது (365)

    நெம்புகோல், தராசு பற்றிய அறிவை புறம் 131 ஆம் பாடல் விளக்குகிறது. ஆய் என்ற வள்ளலை முடமோசியார் வட திசையில் மேரு மலைக்கு சமமாக ஆய் வள்ளலின் பெருங்குடி தென் திசையில் விளங்குவதால் தான் உலகம் ஒரு பக்கம் சரிந்து நிற்கிறது என்பதனை தராசு கோலுடன் உவமையாக விளக்குகிறார்.

    குறிஞ்சிப்பூ பற்றிய விளக்கம்

      குறிஞ்சி என்ற சொல்லின் விளக்கம் சங்கத்தொகை நூல்களில் 19 இடங்களில் இச்சொல் ஆளப்பட்டிருந்தாலும் இவற்றில் ஏழு இடங்உகளில் மட்டுமே குறிஞ்சி மலர் பற்றிய விளக்கம் இடம் பெறுவதாக பேராசிரியர் இர. குளோரியா சுந்தரமதி குறிப்பிடுகிறார்.

    ஒரு மலைத்தலைவனது நாட்டைச் சிறப்பித்துகூறும் ஒரு தலைவி

    ‘’கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு

    பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே ’(குறு .3 )’

    என்கிறாள்.

    குறிஞ்சிப்பூவின் தேனை மிகவும் அரியதாக கருதியதை இப்பாடல் வரிகள் சுட்டுகின்றன. குறிஞ்சித்தேன் பிறத் தேனை விடச் சிறப்புடையது. பல்லாயிரக்கணக்கில் பூப்பதாலும் தேனீக்கள் நிறையத் தேனைத்தொடுக்க வாய்ப்புண்டாகிறது.பொதுவாகத் தேன் கூடுகளில் பல வகைப்பூக்களின் தேன் காணப்படும் . ஆனால் குறிஞ்சிப்பூக்களின் தேனால் இழைக்கப்படும் கூட்டில்  பிற பூக்களின் தேன் கலப்பதில்லை ஏனெனில் குறிஞ்சி செடிப் பூக்க ஆரம்பித்தால் தேனீக்கள் குறிஞ்சித்தேனையே கூடுகளில் சேர்க்கின்றன. இத்தகைய தேனைத் தாவரவியல் அறிஞர்கள் தனிப்பூத் தேன்( Unifloral Honey ) என்று கூறுகின்றார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது ஆதலின் இதன் மலரில் சுரக்கும் தேன் அதாவது மலரின் செல்களில் உள்ளச் சாறு மிக முதிர்ந்து தேன் சுரப்பிகளின் வழியாக வெளிப்படுவது இனிதாக இருப்பதில் வியப்பில்லை.

    முடிவுரை 

    சங்க இலக்கிம் ஒரு கடல். கற்பவருக்குப் பல்துறை அறிவு இருந்தாலன்றி சங்க இலக்கியத்தின் முழுப்பொருளையும் அறிதல் சற்றுக் கடினமே. கருங்கோர் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருத்தேன் இழைக்கும் நாடன் என்ற ஒரு குறுந்தொகைப்பாடலை விளங்கிக் கொள்வதற்கே சில துறை அறிவுகள் வேண்டும்.அறிவியல் ஆய்வு முறையில் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து பொருளை வெளிக்கொணர்ந்தால் செம்மொழியின் செவ்வியல் இலக்கியங்களை உலகு உணர்ந்து பாராட்டும் என்பதில் ஐயமில்லை

     பார்வை நூல்கள்

    சங்க இலக்கியங்கள்

    தமிழியல் புது நோக்கு ; முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

    தமிழ்ப்புதுக்கவிதைகளில் அறிவியல் ; முனைவர் க.முருகேசன்

    அகநானூறு ஆய்வுக்கோவை ; குறிஞ்சிப்பதிப்பகம்

    நற்றினை ஆய்வுக்கோவை   : விழிச்சுடர் பதிப்பகம்

    `

    Share
  • பொருநராற்றுப்படையில் மெய்ப்பாடுகள்

    -கி. ரேவதி                                                              

    முன்னுரை

     தமிழில் இலக்கண இலக்கியப் படைப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத பிணைப்புகளாய் மெய்ப்பாடுகள் அமைந்துள்ளன. இலக்கணங்களுக்குச் சான்றுகளாய் இலக்கியங்களும், இலக்கியங்களின் இலக்கணங்களை கூறுபவையாக இலக்கணங்களும் அமைந்துள்ளன. இவ்வகையில் தொல்காப்பியம் என்பது இலக்கணம். ஆற்றுப்படை என்பது ஓர் இலக்கிய வகை. தொல்காப்பியத்தில் கூறப்படும் இலக்கணங்களில் ஒன்றான மெய்ப்பாடுகள் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படும். இவ்வகையில் பத்துப்பாட்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் பொருநராற்றுப்படையில் தொல்காப்பிய எண்வகை மெய்ப்பாடுகளைக் கோட்பாடாகக் கொண்டு அவற்றில் பொருத்தி பார்ப்பதே நோக்கமாகும்.

    தறுகண்ணால் ஏற்படும் பெருமிதம்:

    தறுகண் என்பது ஒருவர் வளர்த்துக் கொண்ட தனித் தகுதி (அல்லது) திறமையைக் குறிக்கும். ஒருவரின் தனித்திறனை, சிறப்பை எடுத்துக் கூறும்போது கூறுபவருக்கும், கேட்பவருக்கும் பெருமிதம் உண்டாகும். பொருநர் ஆற்றுப்படையில்,

    கோடியர் தலைவ கொண்டது அறிந
    அறியாமையின் நெறிதிரிந்து ஓராஅது
    ஆற்றுஎதிர் படுதலும் நோற்றதன் பயனே
    போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந!1     (பொருந.57-60)

    என்ற வரிகளில் கூத்தர்களுக்குத் தலைவனே! நீ மிடற்றுப் பாடலைப் பாடுதலில் வல்லமை உடையாய்! அந்த இருவகைப்பட்ட இசைக்கும் ஒப்பக் கூத்து ஆடவும் நீ வல்லாய்! பாட்டிசையும், யாழிசையும், கூத்தாட்டமும் தம்முள் ஒத்து இருக்கும் காட்சி மூவேந்தரும் ஒருங்கே இருக்கும் காட்சியை ஒத்த இன்பம் தருகின்றது.

    பிறர் தம் மனத்தில் கொண்ட கருத்தினைக் குறிப்பால் அறிய வல்லவனே! நீ வழி அறியாமையால் வேறு வழி போகாமல் இவ்வழியே வந்து என்னை இவ்வழியிடத்தே காண்பதும் நீ முற்பிறவியில் செய்த நலிவினையின் பயனே காண்பாயாக! புகழால் மேம்பட்டவனே! பிறர் புகழை அரசவையில் மேம்படுத்துபவனே! என்று பாணனின் தறுகண்ணைக் குறிப்பிட்டு நான் கூறுவதைக் கேட்பாயாக என்று பெருமித்தோடு உரைக்கிறான் பரிசில் பெற்ற பாணன்.

    புதுமையில் தோன்றும் மருட்கை

    கட்புலனாகும் எந்தப் பொருளுக்கும் கவர்ந்திழுக்கும் புதுமைப் பொலிவு உண்டு. ஆனால் அதன் நிலைப்புத் தன்மை நீடித்திருப்பது அரிது. எனவே புதுமைக்குத்தான் இளமைப் பொலிவு இருக்க முடியும். புதுமை பற்றி அறியும்போது அதன் விரிவு மேலும் பெரியதாய் விரிய விரிய அதுவே புதிதுபுதிதாய்ப் பொலிவதை அறிகின்ற பொழுது வியப்பு எழுகிறது; இதுவே புதுமையாகும்.

    இக்காலத்தில் கடவுளைக் காண்பதும், கொடை செய்வாரைக் (அரசன்) காண்பதும் புதுமையாகும். கொடையால் உயர்ந்த நிலையை அடைவதும் புதுமையாகும். இதுவரை அனுபவிக்காத செல்வ நுகர்ச்சியை அணுபவிக்கும்போது மனத்தில் நடப்பதெல்லாம் கனவோ என மருட்கையாகிய வியப்புத் தோன்றும். கரிகாலனின் உபசரிப்பால் பெரும் செல்வ நுகர்ச்சியை பெற்ற பொருநன்,

    ”………………………………………………………………காலைக்
    கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்
    கனவுஎன மருண்டஎன் நெஞ்சு ஏமாப்ப
    வல்அஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்ப
    கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட”2 (பொருந.96-100)

    என்ற பாடல் வரிகளில் கரிகாலனைக் கண்ட அன்றைய காலை என்னைக் கண்டவர் நேற்று வந்தவன் இவன் அல்லன் என்று மருண்டு கூறுதற்குக் காரணமான என் தோற்றப்பொலிவான நிலையினையும் கண்டேன். அன்று விடியலில் நிரம்ப உண்ட கள்ளின் மணம் என்னை விட்டு நீங்காதிருந்தமையால் வண்டுகள் இடையறாது என்னை மொய்த்து கொண்டிருந்தன.

    இப்பொலிவு கனவிற்கண்ட காட்சிதானோ என்று என் மனம் மருண்டது. என் பக்கத்தில் அரசனுடைய ஏவல் இளைஞர்கள் நின்றுகொண்டிந்தனர். அவர்கள் இது கனவு இல்லாமைக்குரிய காரணங்களை எடுத்துக்காட்டினர் என்று பரிசில் பெற்ற பொருநன் பரிசில் பெறாப் பொருநனிடம் தாம்பெற்ற விருந்தின் நுகர்ச்சியைக் கனவோ என்று வியப்பை அடைந்த நிலையை கூறுகின்றான்.

    உவகை மெய்ப்பாடு

    உவகையானது மனமகிழ்ச்சியை குறிக்கும். மனமகிழ்ச்சியே ஒருவனின் மன அழுத்தத்தைக் குறைத்து தன் கவலைகளை மறக்கடிக்கும் மருந்தாகும். இம்மகிழ்ச்சி ஒருவனின் வாழ்வில் இல்லையெனில் அவன் தன் வாழ்வின் பிடிமானத்தைவிட்டு மனத் தளர்ச்சி அடைவான். எனவே மகிழ்ச்சியே மனிதனை வாழ வைக்கும் ஆயுதமாகும். இவ்வுவகை செல்வ நுகர்ச்சி, ஐம்புல நுகர்ச்சி, காம நுகர்ச்சி, விளையாட்டு ஆகிய நான்கு சூழலில் தோன்றும்.

    செல்வ நுகர்ச்சியால் ஏற்படும் உவகை

    செல்வம் என்பது மனித வாழ்வின் தேவைகளில் ஒன்றாய் உள்ளது. செல்வத்தை நோக்கியே மக்கள் பயணிக்கின்றனர். செல்வம் அளவோடு இருந்தால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பர். இப்பழமொழி செல்வத்திற்கும் பொருந்தும். இதனைக் கருதியே அரசர்களும் செல்வத்தைக் கொடையாக வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். அவற்றைப் பெறும் கலைஞர்களும் பகிர்ந்துண்டு வஞ்சகம், குரோதம் முதலியவை இல்லாமல் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

    செல்வத்தை கொடுப்பதால் ஏற்படும் உவகை எனில் பெறுபவரும் எய்தும் பேரின்பத்தை திருவள்ளுவர்,

    “இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து”3       (திருக்.1051)

    என்கிறார். இவ்வாறான மகிழ்ச்சியை ஆற்றுப்படைப் பாடல்வரிகளிலும் காணலாம். பொருநராற்றுப்படையில் பொருநனை உபசரிக்கும் கரிகால் பெருவளத்தான் கன்னிப் பெண்களிடம் கள்ளினைக் கொடுத்து அருந்தும்படிச் செய்தான். அப்பெண்களின் தோற்றத்தை காட்சிப்படுத்த வந்த பொருநன் அம்மகளிர் தங்கியுள்ள செல்வத்தால் நிறைந்த மாளிகையினை,

    “மழையென மருளும் மகிழ்செய்மாடத்து”4 (பொருந.84)

    என்று உரைக்கிறார். இதன் வழி மகிழ்ச்சி தரும் மேனிலை மாடத்தே உறைவார் என மகளிர் தங்கியுள்ள இடத்தின் தன்மையை அறியலாம். மகிழ்செய் பதம் என்பது மகிழ்ச்சி செய்விக்கும் இடம் என்று பொருள் மேலும் கரிகாலனின் உபசரிப்பை சிறப்பித்துக் கூற வந்த பொருநன் அவர்களின் ஒருத்தியாகிய விறலியர் மன்னனைக் களிப்பூட்டினர் என்றும் கள்ளின் நுகர்ச்சியில் பல நாள் கழித்த பின் கரிச்சோறு உண்டதாக உரைகிறான் இதனை,

    மண்அமை முழவின் பண்அமை சீறியாழ்
    ஒண்நுதல் விறலியர் பாணி தூங்க
    மகிழ்பதம் பல்நாள் கழிப்பி ஒருநாள்
    அவிழ்ப்பதம் கொள்க என்று இரப்ப5 (பொருந.109-112)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். மகிழ் பதம் என்பதற்கு மகிழ்தற்கு உரிய மகிழ்ச்சியை உடைய கள் என்று பொருள்படும் செல்வத்து பயன் ஈதல் அதனால் கொள்வோரும் கொடுப்போரும் எய்தும் இன்பம். இது செல்வத்தால் ஏற்படும் இன்ப நுகர்ச்சியாகும்.

    புலன்களால் ஏற்படும் உவகை

    உவப்பாவது கல்விப் பயனாகிய அறிவுடைமையில் கனிந்து தோன்றுவது. புலமையால் ஏற்படும் அறிவுமுதிர்ச்சியால் புலப்படுவது ஆகும். புலன் என்பது ஐம்புலன்களையும் குறிக்கும். ஒருவன் தன் ஐம்புலன்களைக் கொண்டும். இன்ப நுகர்ச்சியை பெறுவான்.

    அறிவுடையார் கூறும் சொற்களை செவிகளின் வழி கேட்கும்போது மட்டுமின்றி கலைஞரின் கலை நுட்பங்களால் உருவான கலைச்சிற்பங்களை கண்களின் வழி காணும் போதும் உள்ளம் ஓர்வித பரவசம் (அ) மகிழ்ச்சி அடைகிறது.

    பரிசில் பெற்ற பொருநன் விறலியின் கேசாதி பாத வருணனையைக் கூறுமிடத்து விறலியின் பேச்சும் வாயும் பற்றிக் கூறுகிறான். விறலியின் பேச்சும் ஓசையானும் பொருளாலும் கேட்போர்க்கு இன்பம் தரும் சொல் என்று உரைக்கிறான் இதனை,

    அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதல்
    கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
    இலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்6    (பொருந.25-27) என்ற பாடல் வழி அறியலாம். ஐம்புலன்களில் ஒன்றாகிய செவிகளின் வழிப் பெரும் இன்ப நுகர்ச்சியை குறிக்கும் சொல்லாக இன்மொழி என்ற சொல் அமைந்துள்ளது.

    முடிவுரை:

    பாணர்களின் வாழ்வானது இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை பிரதிபலிப்பவையாக இவை அமைந்துள்ளன. பாணர்களின் வாழ்வில் ஒருவரின் நிலைகண்டு எள்ளி நகையாடல் என்பது கிடையாது. என்பதால் நகை தோன்றுவது அரிதாகும். ஒவ்வொரு மனிதரிடமும் நகை முதலா உவகை ஈராக உள்ள எண்வகை மெய்ப்பாடுகளும் தோன்றுதல் இயல்பாகும்.

    அடிக்குறிப்புகள்

    1. மாணிக்கவாசகன்.ஞ (உ.ஆ), பத்துப்பாட்டு(தொகு), பொருந. பா.அ.56-60-ப.58
    2. மேலது – பா.அ. 109-112 – ப.64
    3. மேலது – பா.அ. 25-27 ப.54
    4. மேலது – பொருந> பா.அ. 54-56 – ப.59
    5. கோ.சேதுபதி – திருக். 1050
    6. மேலது – பொருந – பா.அ. 48-50 – ப.57

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    தெய்வானை அம்மாள் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) விழுப்புரம்

     

     

    Share
  • கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது !

    நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு – எம்.ரிஷான் ஷெரீப்

    (இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.)

    கேள்வி : நீங்கள் தமிழ்மொழியில் ஆக்கங்களை எழுதி வரும் படைப்பாளியாக இருப்பதோடு, சிங்கள இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பின் மீதான ஈடுபாடு எவ்வாறு தோன்றியது?

    பதில் : அது வேண்டுமென்றே செய்தவொன்றல்ல. தானாக நிகழ்ந்தது. பணி நிமித்தம் பிற நாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அதுவரைக்கும் நான் இலங்கையில் வசித்த காலத்தில் வாசித்துக் கொண்டிருந்த சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை இழக்க நேரிட்டது. எனவே எனது சகோதரி கவிஞர் பஹீமா ஜஹான், இலங்கையில் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மாத்திரமல்லாது அரசியல் கட்டுரைகளையும் கூட மின்னஞ்சல் வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றிலுள்ள நல்ல, தீய விடயங்கள் குறித்து நாங்கள் வாதிட்டோம். தர்க்கித்தோம். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலக்கியத்தைக் குறித்தும், ‘சிங்களவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்களல்ல’ என்பதையும், யுத்தத்தையும், இன மத வேறுபாடுகளை எதிர்க்கும் சிங்களவர்களும் இலங்கையில் வசிக்கிறார்கள் என்பதையும் தமிழ் வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற முடியும் எனப் புரிந்தது. மொழிபெயர்ப்புப் பயணம் அப்போதிலிருந்து அவ்வாறுதான் தொடங்கியது.

    கேள்வி : தமிழ் மொழி மூலமாகக் கல்வி கற்ற நீங்கள் சிங்கள மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? சிங்கள சமூகத்தோடு சிறுபராயம் முதல் தொடர்பேதும் இருந்ததா?

    பதில் : எனது ஊர் மாவனல்லை. எனவே சிறுபராயம் தொட்டு நான் வளர்ந்தது சிங்கள மக்களுடன்தான். சந்தையில், மைதானத்தில், வைத்தியசாலையில், கடைத்தெருக்களில் என அனைத்து இடங்களிலும் என்னைச் சூழ இருந்தவர்கள் சிங்கள மக்கள். அக் காலத்திலேயே அனைவரும் சிரமம் எனக் கூறும் சிங்கள மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது. பாடசாலையில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைத் தேர்ந்தெடுத்தேன். பிற்காலத்தில் கணினி வகுப்பில் சேர்ந்ததுவும் ஒரு சிங்கள ஆசிரியையிடம்தான். பல்கலைக்கழகத்திலும் என்னுடன் படித்தவர்கள் சிங்கள மாணவர்கள். இவ்வாறாக சிங்கள மொழி சிறுபராயம் தொட்டு என் கூடவே வந்ததால் சிங்கள மொழி எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

    கேள்வி : படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறு பராயம் மற்றும் நீங்கள் வெளியிட்டுள்ள இலக்கிய படைப்புக்கள் பற்றி?

    பதில் : எனது சிறுபராயம் தொட்டு புத்தகம் வாசிக்கும் சூழல் எமது வீட்டிலிருந்தது. அம்மா முதற்கொண்டு வீட்டிலிருந்த அனைவரும் புத்தகங்களை வாசித்தார்கள். ஆகவே எனக்கும் அந்தப் பழக்கமே தொற்றியிருக்கிறது என்று கூறலாம். பாடசாலைக் காலங்களில் நிறைய இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றிருக்கிறேன். பாடசாலைக் காலத்துக்குப் பிறகும் நிறைய எழுத அவையும் பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் அளித்தன. உயர்தரக் கல்வியை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இலக்கியப் பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கியிருந்தேன்.

    ‘இந்த வயதில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கற்று, வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தை எட்டியதன் பிறகு எழுதத் தொடங்குங்கள். அப்போதுதான் அந்த எழுத்து ஆழமாகவும், காத்திரமாகவும் அமையும்’ என தக்க சமயத்தில் சகோதரி அறிவுறுத்தினார். ஆகவே உத்தியோகம் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் திரும்பவும் எழுதத் தலைப்பட்டேன். கல்வி கற்றுக் கொண்டிருந்த காலங்களில் எதுவும் எழுதாமலிருந்த போதும் அக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதை நிறுத்தவில்லை. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சிறந்த நூல்கள் எனக் கூறப்படுபவற்றைத் தேடி வாசித்திருக்கிறேன்.

    பிறகு திரும்பவும் நான் எழுதத் தொடங்கியது எனது வலைத்தளத்தில்தான். அவை தமிழ் வாசகர்கள் இருந்த அனைத்து நாடுகளையும் சென்று சேர்ந்தமையால் எனது வலைத்தளத்தில் பதிவிட்ட எனது கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், அரசியல் கட்டுரைகள் என்பவற்றை அச்சு நூல்களாக வெளியிடத் தீர்மானித்தோம். அவ்வாறு கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கள், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கள், அரசியல் கட்டுரைத் தொகுப்புக்கள் போன்றன இதுவரைக்கும் அச்சு நூல்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தில் எனது புதிய கவிதைத் தொகுப்பையும், சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பொன்றையும் வெளியிடத் தீர்மானித்திருக்கிறோம்.

    கேள்வி : முப்பது வருடங்களாக நிலவிய யுத்தத்தின் காரணமாக தமிழ் மொழியில் எழுதி வரும் எழுத்தாளர்கள் பலருக்கும் இலங்கையை விட்டும் புலம் பெயரை நேர்ந்திருக்கிறது. மேலும் பல எழுத்தாளர்கள் யுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. இவற்றால் தமிழ் இலக்கியத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் ?

    பதில் : யுத்தமானது, தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்தது என்பதே உண்மை. 1983 கலவரத்துக்கு முன்பு இலங்கையின் தமிழ் சினிமாவும், தமிழ் இலக்கியமும் வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தவை. நிறைய எழுத்தாளர்கள் உருவாகியிருந்தார்கள். 1983 கலவரத்தில் அனைத்தையும் இழக்க நேரிட்டது. ஆசியாவின் பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகமும், பல்லாயிரக்கணக்கான நூல்களும் எரிக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு அவை இல்லாமலாகின. அது சாதாரண விடயமல்ல.

    யுத்தம் தொடங்கியது. யுத்தத்தின் காரணமாக போர்க்கால இலக்கியம் உருவானது. யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்களும், யுத்தத்தின் காரணமாக தமக்குரியவற்றை இழந்தவர்களும் தமிழ் மொழியில் எழுதியதெல்லாம் யுத்தமானது தமிழ் மக்களுக்கு உரித்தாக்கியிருக்கும் துயரத்தையும், கண்ணீரையும், இழந்த ஜீவிதங்களையும், துயருறும் மக்களையும் பற்றித்தான். அவ்வளவு காலமும் தமிழ் இலக்கியம் என்றால் அது இந்தியத் தமிழ் இலக்கியம்தானென ஏற்றுக் கொண்டிருந்த உலகத்தில் போரிலக்கியமாக இலங்கைத் தமிழ் இலக்கியம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அது தனிப்பட்டு எழுந்து நின்றது.

    யுத்த தேசத்தில் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தினால் நிறைந்திருக்கும் இலக்கியம். அதை எழுதியவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், போர்க்களத்தில் இருந்தவர்களும்தான். அவ்வாறுதான் யுத்தமானது தமிழ் இலக்கியத்தைப் பாதிக்கச் செய்தது. இன ஒடுக்குமுறை மேலோங்கி, தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற அனைத்தும் யுத்தங்களின் போது இல்லாதொழிக்கப்படுகின்றன. அந்தப் புள்ளியிலிருந்து இலக்கியமானது அத் துயரங்கள் குறித்த படைப்புக்களால் பூரணத்துவம் அடையத் தொடங்கி விடுகின்றது. ‘‘Protest literature’ என அழைக்கப்படும் அந்த இலக்கியம் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாக பிறப்பெடுத்தது அப்போதுதான்.

    இப்போதும் கூட பொதுவாக தமிழ் இலக்கியம் எனும்போது இந்தியத் தமிழ் இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் தமிழ் இலக்கியம், தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கியம் என ஒவ்வொரு படைப்பையும் வகைப்படுத்த முடிகிறது. யுத்தத்துக்கு முன்னர் இந்தளவு பிரிவுகள் இருக்கவில்லை.

    கேள்வி : இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்திலும் இந்திய ஆக்கிரமிப்பைத் தவிர்க்க முடியாதுள்ளது. இலங்கைக்குள் தரமான தமிழ் இலக்கிய படைப்புக்கள் குறைவாகத்தான் பதிப்பிக்கப்படுகின்றன. அநேகமான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்புக்கள் இந்தியாவில்தான் பதிப்பிக்கப்படுகின்றன. உங்களுடையதும் கூட அப்படித்தான் இல்லையா? அதன் காரணத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

    பதில் : நான் முன்பே கூறியது போல இலங்கைத் தமிழ் இலக்கியம் எனும்போது அதிலிருந்து யுத்தத்தையும், சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடியாது இல்லையா? யுத்த காலத்திலும், தற்போதும் யுத்தத்தைக் குறித்தும், தற்காலத்தில் நிகழ்த்தப்படும் இனக் கலவரங்கள் குறித்தும் எழுதப்படும் இலக்கியப் பிரதிகளை தமது பதிப்பகத்தினூடாக பிரசுரிக்க பல தமிழ்ப் பதிப்பகங்கள் தயங்குகிறார்கள். ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என அவர்கள் பயப்படுகிறார்கள். அந்தப் பயம் சாதாரணமானது தான்.

    அண்மையில் கூட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை முன்னட்டையில் கொண்டிருந்த ஒரு இந்தியத் தமிழ் சஞ்சிகையை இலங்கையில் தனது புத்தகசாலையில் விற்பனைக்கு வைத்திருந்தார் என்பதற்காக தமிழ் பதிப்பகத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்து விளக்க மறியலில் அடைத்தது. எனவே தான் உணர்வதை எழுதுவதற்கு, எழுதியதைப் பதிப்பிப்பதற்கு இலங்கைக்குள் சுதந்திரம் இல்லை எனும்போது அப் படைப்புக்களை வெளிநாட்டில்தான் பதிப்பிக்க நேர்கிறது. அதுதான் எனக்கும் நேர்ந்தது. எமது நாட்டின் எமது இலக்கியத்தை நாம் எழுதி இன்னொரு நாட்டிடம் பதிப்பிக்கக் கொடுக்க வேண்டியிருக்கிறது. காரணம் இலங்கையில் அதற்கான சுதந்திரம் இல்லை என்பதோடு அவ்வாறு பதிப்பித்தாலும் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் அதிகம் என்பதால்தான். ஆகவே இலங்கையில் ஒரு தொகுப்பை பதிப்பித்து விட்டு சிறைக்குச் செல்லவும், அதன் பிறகு இலக்கியமே வேண்டாமென்று வீட்டிலிருந்து பெருமூச்சு விடவும் விரும்பாததால்தான் இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரும் இந்தியாவில் தமது புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்.

    கேள்வி : பிற நாடுகளில் பதிப்பிக்கப்படும் தமிழ் நூல்களின் பிரதிகளை இலங்கைக்கு தருவித்துக் கொள்ளும்போதும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருவதாக அறியக் கிடைக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அனுபவம் எவ்வாறிருக்கிறது?

    பதில் : அது உண்மைதான். தமிழ்ப் புத்தகங்கள் தபால் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்படுமாயின், அப் புத்தகங்களின் அட்டைப்படம் முதற்கொண்டு முழுமையான உள்ளடக்கம் வரைக்கும் தபாலதிகாரிகளிடம் விவரித்த பிறகுதான் அப் புத்தகங்கள் எமக்கு கிடைக்கும். அட்டைப்படத்திலோ, உள்ளடக்கத்திலோ யுத்தம் சம்பந்தப்பட்ட ஏதேனும் இருப்பின் புத்தகங்களைப் பெற்றுச் செல்ல வந்தவரின் பாடு முடிந்தது. எவரும் அவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்ள விரும்ப மாடடார்கள், அல்லவா?

    எனது அனுபவத்தைப் பற்றிக் கூறுவதானால், ஒரு தடவை நானும் கவிஞர் பஹீமா ஜஹானும் இணைந்து சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் கவிதைத் தொகுப்பொன்றை மொழிபெயர்த்து ஒரு நூலாக வெளிநாட்டில் பதிப்பித்து வெளியிட்டிருந்தோம். அப் பதிப்பகம் அதன் பிரதிகளை எமக்கு அனுப்பியிருந்தது. புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள தபாலகத்துக்குச் சென்றால் புத்தகப் பொதியைப் பிரித்துப் பார்த்திருந்தார்கள். அத் தொகுப்பைப் பற்றிய விபரங்களை விசாரித்தார்கள். இராணுவ வீரர்களின் ஓவியம் அட்டைப்படத்தில் அச்சாகியிருந்தது. அதைக் கவனித்தவர்கள் அப் பொதியை எம்மிடம் ஒப்படைக்கவில்லை. ‘புத்தகங்களைத் திரும்பவும் கொழும்புக்கு அனுப்புகிறோம். அங்கு விசாரணைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு கடிதம் வரும். பிறகு அங்கே சென்று உங்கள் புத்தகப் பொதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்கள். அக் கடிதம் வரும் வரைக்கும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இன்று வரையில் அக் கடிதம் வரவேயில்லை. இது நிகழ்ந்து தற்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன.

    இது எனது அனுபவம் மாத்திரமல்ல. பிற நாடுகளிலிருந்து இலங்கையில் பெற்றுக் கொள்ள தமிழ்ப் புத்தகங்களை கொள்வனவு செய்யும் பலரும் இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

    கேள்வி : ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களினூடாக மத்திய ஆசிய இஸ்லாமியக் கலாசாரப் பின்னணி குறித்துக் கூறப்படும் பல படைப்புக்களை நாங்கள் வாசித்திருக்கிறோம். இலங்கையில் இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்று சேர்ந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லாவிட்டால் அதற்கான காரணமென்ன?

    பதில் : இலங்கையின் இஸ்லாமிய இலக்கியமானது சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்றடையவில்லை. இலங்கையின் இஸ்லாமிய இலக்கியம் எனும் போது அதைக் கூட போர் பாதித்திருக்கிறது.

    யுத்த காலத்தில் கூட இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் பலவும் அதிகளவில் கிழக்கு மாகாணத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. யுத்தத்தின் காரணமாக அவை குறித்து பெரிதளவில் பேசப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்படும் தரமான சிறந்த இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்ப்பதை விட்டு விட்டு, நன்றாக விற்பனையாகக் கூடிய இரண்டாந்தர தொகுப்புக்களை மொழிபெயர்ப்பு செய்து இலங்கையில் புத்தக வியாபாரிகளிடம் சேர்ப்பிப்பதைத்தான், தமிழ்மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் அனேகமானவர்கள் செய்து வருகிறார்கள். எனவே அவற்றை வாசிக்கும் சிங்கள வாசகர்கள் இவ்வளவுதான் தமிழ் இலக்கியம், இவ்வளவுதான் இஸ்லாமிய இலக்கியம் என அந் நூல்களைக் கொண்டு வரையறுத்துக் கொள்கிறார்கள். இந் நிலைமை மாற்றப்பட வேண்டும்.

    கேள்வி : இலங்கையில் 1950 களிலிருந்து அதிகளவில் இனக் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அண்மையில் கூட இஸ்லாமிய சமூகத்தினருக்கெதிராக அவ்வாறானதொரு இனக் கலவரம் மூண்டது. இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கமும், மன அழுத்தமும் ஒரு படைப்பாளியாக உங்களைப் பெரிதும் பாதிக்கும். இன ஒற்றுமையை வலியுறுத்தி பல படைப்புகள் வருகின்றபோதிலும், இப்போதும் கூட இலக்கியவாதியாகவோ, படைப்பாளியாகவோ நாங்கள் இருக்கும் இடம் குறித்து உங்களால் திருப்திப்பட முடிகிறதா? இன ஒற்றுமைக்காக ஒரு இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்குள்ள பொறுப்புக்கள் எவை?

    பதில் : தற்கால இலங்கையானது, இரு புறமும் வெட்டக் கூடிய கத்தி போன்றிருக்கிறது. ஒரு புறம் இன வாதம். மறு புறம் சிறுபான்மை மக்களை அடக்கியாளக் கூடிய அரசியல் வியாபாரம். அரசியல்வாதிகள் எவ்விதத் தயக்கமுமின்றி தமது இலாபங்களுக்காக வேண்டி சந்தர்ப்பங்களுக்கேற்ப கத்தியின் இரு புறங்களையும் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளிடையே எவ்வித இன மத வேறுபாடுகளுமில்லை. இந்த விடயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுதான். அவர்கள் உசுப்பேற்றி விடும் மக்கள் குறித்தும், அதன் காரணமாக தற்காலத்திலும், எதிர்காலத்திலும் இந் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் எவருமே கவனத்தில் கொள்வதில்லை.

    அண்மையில் வெளிவந்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற ‘கூம்பியோ (எறும்புகள்)’ எனும் சிங்களத் தொலைக்காட்சி நாடகத்தின் ஒரு பாகத்தை நானும் பார்த்தேன். அதில் பொட்டு வைத்திருக்கும் ஒரு தமிழ்ச் சிறுமி ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்கிறாள். அவ் வீட்டுக்கு பொருட்களை வினியோகிக்க வரும் ஒரு சிங்கள இளைஞனைக் கண்டு அவள் புன்னகைக்கிறாள். அவனோடு கொஞ்சிக் கதைக்கவும், தனது தொலைபேசி இலக்கத்தை அவனுக்குக் கொடுக்கவும் அவள் விரும்புகிறாள். அதற்கு முன்பு ஆண்கள் எவரையுமே கண்டதில்லை போல அவளது நடவடிக்கையின் மூலம் கேவலமாக அத் தமிழ்ச் சிறுமி சித்தரிக்கப்படுகிறாள்.

    இக் காட்சியை நாடகத்தின் இயக்குனர் நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கக் கூடும். கடந்த காலத்திலும் அப்படித்தான் இருந்தது. அனேகமான சிங்களத் திரைப்படங்களிலும், சிங்கள நாடகங்களிலும் பார்வையாளர்களை சிரிப்பூட்டுவதற்காக வேலைக்காரியாகவும், தோட்டக்காரனாகவும் தமிழ்க் கதாபாத்திரங்களை நுழைத்திருப்பார்கள். அவர்களை கேவலமாக சித்தரிப்பார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னரும் இந்த நிலைமைதான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இவ்வாறான படைப்புக்களை பார்க்கும், வாசிக்கும் பெரும்பான்மை சமூகமானது, சிறுபான்மை சமூகத்தை கேலிக்குரியதாகத்தான் கருதுகிறது. அவர்களை வெறுப்போடு பார்க்கிறது.

    இன ஒற்றுமைக்காக உருவாக்கப்படும் இவ்வாறான படைப்புக்களில் கூட சிறுபான்மையினரை கேலியாகச் சித்தரிக்கும்போது இலங்கையில் பெரும்பான்மை சமூக கலைஞர்களைப் போலவே இலக்கியவாதிகளும் இன ஒற்றுமை என வரும்போது அவர்கள் இருக்குமிடத்தைக் குறித்து திருப்திப்பட முடியாது. இன ஒற்றுமை குறித்துச் சிந்திக்கும் எந்தவொரு கலைஞருக்கும், எந்தவொரு இலக்கியவாதிக்கும் இருக்க வேண்டிய பொறுப்பு என்பது சிறுபான்மையினரை கேலிக்குரியவர்களாக்காமல், அவர்களை மோசமானவர்களெனச் சித்தரிக்காமல் படைப்புக்களை உருவாக்குவதாகும்.

    அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போதும் அதுதான் நடந்தது. ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும்போது கூட இனவாதக் கும்பலுக்கு அவ்வளவு மோசமான தாக்குதல்களையும், தாம் விரும்பியவாறு நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதாவது, அரசையும், சட்டத்தையும் கவனத்திலேயே கொள்ளாது தெருவிலிறங்கி பகிரங்கமாக சிறுபான்மையினரைத் தாக்கி, அவர்களது சொத்துக்களையும், உயிர்களையும்  அழிக்க முடியுமாக இருக்கும் ஜனநாயக நாடு இது என்பதுதானே? இது எவ்வாறு சாத்தியமானது?

    அனேகமான கலை, இலக்கியப் படைப்புக்களில் இலங்கையில் ஒரு இன சமூகத்தினரை, ஏனைய இன சமூகத்தினரை விடவும் சிறந்தவர்களாக சித்தரித்துக் காட்டுவதால் வந்த வினைதான் இல்லையா? எனவே இன ஒற்றுமை குறித்து இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்கு இருக்கும் பொறுப்புதான் ஏனைய மக்களையும் கௌரவமாக, அவர்களது மனித உரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் தமது கலை, இலக்கியப் படைப்புக்களை சமூகத்துக்கு வழங்குவதாகும்.

    கேள்வி : நீங்களும், உங்கள் சகோதரியும் சிங்கள மொழிப் படைப்புக்கள் பலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அவற்றுக்கு தமிழ் வாசகர்களிடையே எவ்வாறான வரவேற்பிருக்கிறது?

    பதில் : யுத்த காலத்தில், போரில் சிக்கித் துயருற்ற அப்பாவித் தமிழ் மக்கள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றையே நாங்கள் மொழிபெயர்த்திருக்கிறோம். அவற்றை எழுதியவர்கள் சிங்கள இலக்கியவாதிகள். எனவே அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு படைப்புக்களை உலகம் முழுவதுமிருக்கும் தமிழ் வாசகர்கள் வாசித்துவிட்டு எம்மிடம் எழுப்பிய முதல் கேள்வி, ‘பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரலெழுப்பும் சிங்களவர்களும் இலங்கையில் இருக்கிறார்களா?’ என்பதுதான்.

    அது வரையில் சிங்களவர்கள் அனைவருமே, இலக்கியவாதிகளும் கூட தமிழர்களை எதிர்ப்பவர்கள், தமிழர்களை வாழ விடாதவர்கள் என்றுதான் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனவே இன ஒற்றுமையை வலியுறுத்தி சிங்களத்தில் எழுதப்பட்ட சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வழங்கி அந்த எண்ணத்தை மாற்ற எம்மால் முடிந்தது. இந்தியாவிலும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் வாசகர்கள் சிங்களத்தில் எழுதப்படும் இலக்கியப் படைப்புக்களை வாசிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். மொழிப் பிரச்சினைதான் இங்கு சிக்கலாக இருக்கிறது. தற்போது எமது மொழிபெயர்ப்புக்களின் மூலம் அச் சிக்கலை ஓரளவு தீர்க்க முடிந்திருக்கிறது எனக் கூறலாம். எதிர்காலத்திலும் அதனை ஒரு சேவையாகச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.

    ******

    Share
  • கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் …. 2

    ஆகாயம், வெண்ணிலவு, கடலலைகள், ஆதவன் இவையனைத்தும் தத்தம் கடமைகளைச் சரியான நேரத்தில் சரியான வகையில் புரிகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைத்த சக்தி எது? எனும் கேள்வி பல சமயங்களில் எமது உள்ளங்களில் எழுவது சகஜம்.

    இவற்றை நடைமுறைப்படுத்த ஒரு சக்தி தேவையில்லையே! இவைகள் இயற்கையின் நிகழ்வுகளே என ஒரு சாரார் வாதிடக் கூடும்.

    அவ்வியற்கையையே நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எண்ணிக் கொள்வோமானால் அச்சக்தியை வழிபடுவதும் ஒரு இயற்கை நிகழ்வே ! .

    இத்தகைய விளக்கங்களைக் கவியரசர் மிக எளிமையான தனது பாடல்களில் புகுத்தி விடுவது அவரது அபாரமான திறமைக்கு எடுத்துக் காட்டு.

    இதோ இவ்வாரம் மற்றுமொரு இனிய கவியரசரின் பாடலுடன் உங்கள்

    முன்னே !

    சாந்தி நிலையம் என்னும் திரைப்படத்தில் பி.சுசீலாவின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்.

    இறைவன் வருவான் அவன்

    என்றும் நல்வழி தருவான்

    இறைவன் வருவான் அவன்

    என்றும் நல்வழி தருவான்

    அறிவோம் அவனை – அவன்
    அன்பே நாம் பெறும் கருணை
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    நம்பிக்கையின் ஆதாரத்திலேதான் மனிதன் வாழ்கிறான். நம்பிக்கையற்றவர் வாழ்க்கை பாலைவனத்தைப் போன்றது. வாழ்க்கையில் பசுந்தளிர்கள் துளிர்க்க வேண்டுமானால் நிச்சயம் அங்கே நம்பிக்கை எனும் நீர் வார்க்கப்பட வேண்டும்.

    அந்நம்பிக்கையை வாரி வழங்குவது ஆன்மீக உணர்வுகளே இவ்வான்மீக உணர்வுகளின் உற்பத்தி இறைநம்பிக்கையாகும்.

    அவ்விறை நம்பிக்கையை எத்தகைய இனிமையான வரிகளுள் எளிமையாகப் புகுத்தி விட்டார் எம் கவியரசர்.

    எம் துயர் களைய இன்றைய அவலம் நீங்கி நல்லதோர் நாளை மலர நிச்சயம் இறைவன் வருவான் என்றோர் நம்பிக்கையுடன் கைகோர்த்து அவ்விறைவன் எமக்கு நல்வழியைக் காட்டுவான் என்னும் நம்பிக்கையும் சேர்ந்தே நடைபோடுகிறது.

    அவ்விறைவன் எமக்கு அருள் புரிகிறான் என்று எப்படி அறிவது எனும் கேள்விக்கு அற்புத விளக்கத்தை வாரி வழங்குகிறார் கவியரசர். எமது மனதில் துலங்கும் கருணையே இறைவன் எமக்கு அருள் புரிந்ததிற்கு அடையாளம் என்கிறார் பாருங்கள். மனிதர் மீது மனிதர் வைக்கும் அன்பின் அடிப்படையே தெய்வம் என்று கவியரசர் கூறும் எளிமையான ஆன்மீக விளக்கத்திற்கு எது ஈடாக முடியும் ?

    வண்ண வண்ணப் பூவினில்
    காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவே
    முத்தை வைத்தவன்
    வண்ண வண்ணப் பூவினில்
    காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவே
    முத்தை வைத்தவன்
    சின்னச் சின்ன நெஞ்சினில்
    பாசம் வைத்தான்
    நெஞ்சில் வரும் பாசத்தை
    பேச வைத்தான்
    சின்ன சின்ன நெஞ்சினில்
    பாசம் வைத்தான்
    நெஞ்சில் வரும் பாசத்தை
    பேச வைத்தான்
    அன்பே என்பது கோயில்
    ஆசை என்பது நாடு
    பாசம் என்பது வீடு

    இறைவன் என்பவன் தன்னை எவ்வாறு வெளிக்காட்டிக் கொள்கிறான் என்கிறார் கவியரசர், அழகான வண்ண மயமான மலர்களின் வழியே காயைக் காட்டுகின்றான், கடலின் அடித்தளத்தில் மூடியிருக்கும் சிப்பியின் உள்ளே அழகான முத்தையல்லவா காட்டித் தன் ஆதிக்கத்தை நிரூபிக்கிறான்.

    சின்னக் குழந்தைகளின் சிறிய நெஞ்சினில் பாசத்தை வைத்து தனது கோயிலை அடையாளம் காட்டுகின்றான். கள்ளமில்லா மழைகளின் வார்த்தைகளின் வழியே தனது அன்பை வெளிக்காட்டுகிறான்.

    அது மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் ஆன்மீக உணர்வு பொதுவானதே என்பதை எடுத்துக் காட்டுவதற்காக அன்பே கோவில் என்றும், ஆசையை நாட்டின் மீதும், பாசத்தை வீட்டின் மீதும் வைப்பதன் மூலம் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் எனத் தெளிவாகப் புரிய வைக்கிறார்.

    பாசம் என்பது வீடு
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    உள்ளம் என்னும் கோயிலைக்
    கட்டி வைத்தவன்
    கண்கள் என்னும் வாசலை
    தந்து வைத்தவன்
    உள்ளம் என்னும் கோயிலைக்
    கட்டி வைத்தவன்
    கண்கள் என்னும் வாசலை
    தந்து வைத்தவன்
    கண்ணில் வரும் பாதையை
    காணச் சொன்னான்
    நல்ல நல்ல பாதையில்
    போகச் சொன்னான்
    கண்ணில் வரும் பாதையை
    காணச் சொன்னான்
    நல்ல நல்ல பாதையில்
    போகச் சொன்னான்
    கண்கள் அவனைக் காண்க
    உள்ளம் அவனை நினைக்க
    கைகள் அவனை வணங்க

    உண்மையாக மனிதன் வாழ்ந்து விட்டால், அடுத்தவருக்குத் தீங்கு நினைக்காமல் வாழ்ந்திருந்தால், பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் கருணை கொண்டிருந்தால், கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? அவன் உள்ளமே கோவிலாகி விடாதா?

    அந்த உள்ளம் எனும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண்பது எப்படி? ஓ அதுக்குத்தானே வாசலாகக் கண்களைக் கொடுத்துள்ளான். அக்கண்களிலே வழியும் அன்பு மிகுந்த கருணை உள்ளம் எனும் கோவிலில் உள்ள தெய்வத்தைன் தரிசனத்தை கொடுத்து விடுமே !

    அப்பப்பா ! கவியரசரின் ஆழ்ந்த ஆன்மார்க வழியிலமைந்த சிந்தனையின் ஆழம் தான் என்ன?

    கண்களை கொடுத்து விட்ட ஆண்டவன் எம்மிடம் கேட்பதெல்லாம் என்ன? அக்கண்களினால் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து எம் வாழ்க்கைப் பயணத்தை எநல்ல வழியில் ஓட்டி விட வேண்டும் என்பது தானே !

    என் மந்தில் வாழும் இறைவனை கண்களை மூடித் தியானித்து , கைகளை கூப்பி வணக்கினால் உள்ளம் நல்லதையே எண்ணும், அது நல்ல வழியிலேயே செல்லும்.

    கைகள் அவனை வணங்க
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்
    அறிவோம் அவனை – அவன்
    அன்பே நாம் பெறும் கருணை
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    அன்பினிய நெஞ்சங்களே ! அனைவர்க்கும் பொதுவான இறைவன் அன்பு மனங்களில் தான் வாழுகிறான். கருணையுள்ள உள்ளங்களில் தான் கோயில் கொள்கிறான். இறைவனை வெளியே எங்கும் தேடாதீர்கள் உங்கள் உள்ளங்களிலேயே தேடுங்கள் என்பதை எளிமையாகப் பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவியரசர் தனது வரிகளில் ஆன்மீக உணர்வுகளைப் புதைத்து வைத்தது அற்புதமே !

    (மீண்டும் அடுத்த பாகத்தில்)

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (276)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். வாரமொன்று என்பது வாழ்வின் காலத்தின் அளவினைக் குறுக்கிக் கொண்டே போகும் அளவுகோல் போன்று தோன்றுகிறது. ஒவ்வொரு வாரமும் வந்து போக வேண்டியது தமது காலக்கட்டாயக் கடமை போன்று யார் விரும்பினாலும் அன்றி விரும்பாவிட்டாலும் தன்பாட்டுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் சரித்திரத்தில் அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பதிவுகளைத் தமது சார்பில் விட்டுத்தான் சென்றிருக்கின்றன என்பதுவே உண்மையாகிறது.

    அப்படியான ஒரு சரித்திர நிகழ்வின் நூற்றாண்டு இவ்வாண்டில் இம்மாதத்தில் நிகழ்வதென்பது இப்போது பலவகைகளில் இங்கிலாந்தில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியான அந்நிகழ்வுதான் என்ன? இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து இவ்வாண்டு தூற்றாண்டாகத் திகழ்கிறது. இங்கிலாந்தில் பெண்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது 1918ம் ஆண்டேயாகும். இவ்வாக்குரிமையை இங்கிலாந்திலுள்ள மக்கள் மிக இலகுவாகப் பெற்று விடவில்லை. அதற்காக இங்கிலாந்திலுள்ள பெண்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய தேவையிருந்தது.

    இங்கிலாந்தில் 1865ம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் எனும் போராட்டம் வலுப்பெற்று பல வடிவங்களெடுத்து முற்றிலுமாக 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தேர்தல்களில் வாக்களிக்கலாம் எனும் உரிமை இறுதியாக 1928 ம் ஆண்டுதான் அளிக்கப்பட்டாலும். பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது 1918ம் ஆண்டேயாகும். இத்தருணத்தில் இன்றைய பெண்களின் நிலையைப் பற்றிய ஒரு கேள்வி பலரது மனங்களிலும் எழுவது இயற்கை. இன்றைய உலகில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பல நாடுகளின் தலைவர்களாக அந்நாட்டின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தகமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மையாகிறது.

    ஆனால் அதேசமயம் பெண்கள் தமக்கு கலாச்சாரக் கட்டுப்பாடு எனும் பெயரில் இடப்பட்ட தடைகளை உடைத்தெறியக் கூடிய சந்தர்ப்பங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கிறார்களா ? என்பது கேள்விக்குறியே ! இங்கு மிக முக்கியமாக நாம் நோக்க வேண்டிய பதம் “காலாச்சாரம்” எனும் சொல்லே. இதன் முழுஅர்த்தமும் சரியான வகையில் உள்வாங்கப்பட்டிருக்கப் பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே ! இன்றைய இந்த நவீன உலகில் கலாச்சாரம் எனும் பதத்தின் உபயோகத்தைப் பெண்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக உபயோகிக்கும் பல ஆண்கள் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமே ! பெண்களுக்கென சில குறிக்கப்பட்ட வேலைகளை நிர்ணயித்து அவர்களை அந்த எல்லைகளை விட்டு வெளியே வரவிடாதபடி கதவுகளை ,ஊட்டி வைத்து சமுதாய அமைப்புகளை ஏற்படுத்தி வைத்திருப்பதை பல இடங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஒரு பெண் பிரதமரைக் கொண்ட இந்த இங்கிலாந்து நாட்டில் கூட இன்றும் பெண்களுக்கான முன்னேற்றக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதுவே கசப்பான உண்மையாகிறது.

    இன்றும் பலரால் பெண் என்பவள் தமது தாய், சகோதரி, மனைவி எனும் நிலைகளில் இருந்தாலும் பெண்களை காமப்பொருளாகக் கண்டு சிலாகிக்கும் பலரைக் காணும்போது நெஞ்சம் கொஞ்சம் வருந்தத்தான் செய்கிறது. அதேசமயம் பாரதி கண்ட புதுமைப்பெண் என்பவளின் உண்மையான சமுதாயப் பங்களிப்பின் முழுஅர்த்தத்தையும் விளங்கிக் கொண்டிருக்கிறோமா? என்பது சந்தேகமே ! இதன் அர்த்தத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் விளங்கிக்கொள்ளவில்லை என்பதுவே உண்மை. தம்மை கவர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவதற்க்குச் சாதகமாக புதுமைப்பெண் எனும் விளக்கத்தை உபயோகப்படுத்தும் சில பெண்களினால் வரம்புகளை மீறும் ஆண்கள் தம்மை நியாயப்படுத்தும் பல நிகழ்வுகளைக் காண்கிறோம்.

    அன்னை எனும் ஸ்தானத்தில் எமது பிறப்புக்கும் இன்று நாம் சமுதாயத்தில் நடமாடும் நிலைக்கும் காரணமாக இருந்த பெண்ணின் திறமை இல்லம் எனும் நான்கு சுவர்களுக்குள் மட்டும் விளங்குவது எந்தவொரு சமுதாயத்திலும் முன்னேற்றத்துக்கு ஏற்ற ஒரு செயலாக அமையாது. இராணுவம், போலிஸ் போன்ற பணிகளில் பெண்கள் அமர்வது முடியாத ஒன்று எனும் நிலைமாறி இன்று அத்தகைய பணிகளில் பெண்களுக்கும் முன்னிடம் கொடுப்பது நிகழாமல் இல்லை. இங்கிலாந்தின் மெட்ரோபோலிடன் போலிஸ் இலாகவின் தலைமைப்பதவியில் இப்போது ஒரு பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றும் இங்கிலாந்தில் முன்னனி ஸ்தாபனங்களில் நிர்வாக இயக்குனர்களாக அவற்றை வழிநடத்துபவர்களில் பென்களின் விகிதாசாரம் குறைவாகவே உள்ளது.

    இங்கிலாந்தில் ஒரே பணியில் இருக்கும் ஆண்களின் ஊதியத்துக்கும் பெண்களின் ஊதியத்துக்கும் வித்தியாசமிருப்பது பெண்களின் நிலை இன்னமும் குறைவாக மதிப்பிடப்படுவதையே காண்பிக்கிறது. இதைப்பற்றிய கரசாரமான விவாதங்கள் முன்னனி ஊடகங்களில் நிகழாமல் இல்லை. இருப்பினும் இதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் இன்னமும் மந்தமாக இருக்கிறது என்பதுவே உண்மை. பெண் பிரதமரின் வழிநடத்தலில் இயங்கும் நாட்டில் இந்நிலை இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள். அதேசமயம் நானொரு பெண் எனக்கு இப்போது கிடைத்திருப்பதுவே பெரும் விடயம் என்று தம்மைக்குறித்த தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களின் பங்களிப்பும் இம்முன்னேற்றத்துக்கு தடையாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    ஆண், பெண் எனும் இருவரிமே மனிதர்கள் தான் காலத்தோடு உலகம் சந்தித்த மாற்றங்கள் பல . அவற்றோடு பெண்களை நோக்கிய சமுதாயப் பார்வைகளும் மாற்ற வேண்டியது அவசியமே ! அம்மாற்றங்கள் எங்கெங்கே, எவ்வாறு நிகழ வேண்டும் என்பது முக்கியம். பெண்கள் தமக்கு இணையாக அனைத்துப் பணிகளையும் புரியும் ஆற்றல் கொண்டவர்கள் என்று ஆண்களும், தாம் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பெண்களும் புரிவது எத்தனை முக்கியமோ கலாச்சார மாற்றத்தின் உண்மையான புரிதலையும், நாகரீகம் என்பதின் முழுஅர்த்தத்தையும் ஆண்கள், பெண்கள் இருவருமே புரிந்து கொள்வதும் அத்தனை முக்கியம். அன்னை என்பவளின் உறவு அன்றும், இன்றும், என்றும் அன்னையே ஆனால் அவளின் அறிவின் ஊடுருவல் குடும்பம் எனும் எல்லைகப்பாலும் விரிவடைவது அன்றை விட இன்று மாற்றமடைந்திருக்கிறது.

    பெண்மையைப் போற்றுதும் !

    பென்மையைப் போற்றுதும் !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share