Blog

  • போராட்டம்!

    எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா


    நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம்
    சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம்
    போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம்
    போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே!

    கோவில்சிலை போகுதென்று போராட்டம் ஒருபக்கம்
    கோவிலையே தகர்ப்போமென்று போராட்டம் மறுபக்கம்
    சாமியில்லை சாமியில்லை என்றுசொல்லிப் போராட்டம்
    சன்மார்க்கம் காத்திடுவார் தம்பாட்டில் போராட்டம்!

    மருத்துவர்கள் வசதிக்காய் வகைவகையாய் போராட்டம்
    மருந்திலே கலப்படத்தை தடுத்துவிடப் போராட்டம்
    நோயாளி சுகம்பெற்று வருவதற்கும் போராட்டம்
    போராட்டம் மருத்துவத்தைப் பொறிவைத்தே நிற்கிறது!

    கற்றறிந்தார் காசுக்காய் போராட்டம் நடத்துகிறார்
    கல்விகற்கும் மாணவரும் போராட்டம் நடத்துகிறார்
    அற்பத்தனம் கொண்டுநிற்கும் அனைத்துக் கல்விமுதலைகளும்
    ஆதாயம் தேடுதற்கும் போராட்டம் நடத்துகிறார்!

    ஊழலென்னும் பேயதனை ஒழித்துவிடப் போராட்டம்
    உணர்வதனை இழக்கவைக்கும் மதுவொழிக்கப் போராட்டம்
    வாழ்வதற்குத் தொழில்தேடும் மக்களது போராட்டம்
    மாற்றுத் திறனாளிகளும் போராட்டம் நடத்துகிறார்!

    கதிரையினைப் பிடிப்பதற்கும் போராட்டம் நடக்கிறது
    கதிரையிலே இருப்பாரும் போராட்டம் நடத்துகிறார்
    போராட்டம் என்பதற்கே அர்த்தமின்றிப் போகிறது
    போராட்டம் தனையொழிக்கப் போராட்டம் தேவையன்றோ!

    Share
  • கருங்குயிலே!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    காரிருளில் நள்ளிரவில்
    ஒளிந்து பாடிக் கொண்டிருக்கிறது
    ஓரிளம் கருங்குயில் !

    முறிந்து கிடக்கும் சிறகுகளைச்
    சேர்த்து நீ
    பறக்கப் பயின்றிடு !

    பிறந்த பின்பு
    இத்தருண வரவுக்குத் தான் நீ
    காத்திருந்தாய் !

    கருங்குயில்
    காரிருளில் பாடிக் கொண்டுள்ளது.
    கிடக்கும் விழிகளை
    எடுத்துக் கொள்,
    கூர்ந்து நோக்கப் பயின்றிடு !

    இத்துணைக் காலம்
    இந்த விடுதலைக் குத்தான் நீ
    காத்திருந்தாய் !

    பறந்து போ கருங்குயிலே !
    பறந்து போ !

    காரிருள் வழியே நடந்து
    வெளிச்சத் துக்குள்
    நுழைவோம் !

    இத்தருண விடுதலைக் குத்தான் நீ
    காத்திருந்தாய் !

    பறந்து போ கருங்குயிலே !
    பறந்து போ !

    ++++++++++++

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”வாழையடி வாழையாய் வீரமுற்ற வாரிசுனை
    கோழையென இவ்வுலகோர் கூறிடுவர் -தோழனே
    சாதலினும் தீதன்றோ சூழும் அவமானம்
    ஊதிடச் சங்கிருக்கே ஓய்”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (164)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

     வனிலா பாலாஜி எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 110

    நிர்மலா ராகவன்

     

    எழுதப்படாத விதிமுறைகள்

    ஒரு கணவனாக, மனைவியாக, பெற்றோராக, பொதுவாக, எந்த பொறுப்பான நிலையிலும் செய்யக்கூடாதவை பொய், பித்தலாட்டம், வன்முறை ஆகியவை. ஆனால், எத்தனை பேர் இதையெல்லாம் கடைப்பிடிக்கிறார்கள்?

    முப்பது ஆண்டுகளுக்குமுன்

    ஓயாமல் சண்டை பிடித்துக்கொண்டு, பின்பு விவாகரத்து பெற்றனர் அத்தம்பதி. மூத்தவளான டெய்ஸி தந்தையுடன் வளர, இளையவள் தாயின் பொறுப்பில் விடப்பட்டாள். அதற்கு முன்னர் பாசம் என்றால் என்னவென்றே அறியாது வளர்ந்திருந்தனர் இருவரும். பெற்றோர் மறுமணம் செய்துகொண்டார்கள்.

    டெய்ஸி காதல் வயப்பட்டு மணந்துகொண்டாள் — தன்னையும் அறியாது, தந்தை தாயை வதைத்ததுபோன்று வன்முறையைக் கைப்பிடிக்கும் ஒருவனை. சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவனது கொடுமை தாங்கமுடியாதுபோக, மீண்டும் தந்தையின் வீட்டில் சரண் புகுந்தாள். சிற்றன்னை அவளது நிலைமையைப் புரிந்துகொண்டு, அன்புடன் ஆதரவு அளித்தாள்.

    `இவள் வேறு எங்கு போயிருக்கப் போகிறாள்!’ என்று அவளைத் தேடி வருவதை வழக்கமாகக் கொண்டான் அவள் கணவன். வன்முறை தொடர்ந்தது.

    டெய்ஸியின் மனநிலை பெரிதும் பாதிப்படைய, எதைக் கண்டும் அஞ்ச ஆரம்பித்தாள். காற்றில் கதவோ, ஜன்னலோ ஆடினால்கூட, கணவன்தான் வருகிறான் என்ற படபடப்பு ஏற்பட்டது.

    அவளைப் பார்க்க வந்த தங்கை, “என் அக்காளுக்கு இங்கு போதிய பாதுகாப்பு இல்லை. நான் அவளை என் தாய் வீட்டுக்கே அழைத்துப் போகிறேன்,” என்று சிற்றன்னையுடன் வாதாடினாள்.

    சிற்றன்னை சம்மதிக்கவில்லை. இருவருக்கும் பலத்த வாக்குவாதம் நடக்க, ஏற்கெனவே குழம்பியிருந்த டெய்ஸிக்கு நடப்பது என்னவென்றே புரியவில்லை. ஒரு கத்தியால் சிற்றன்னையைக் குத்திக் குதறினாள் – இருபது தடவைக்குமேல். `கொலையாளி!’ என்று சட்டம் அவளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. (இக்கதையை எனக்குச் சொன்னவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்).

    இப்போது, `அன்பான சிற்றன்னையை நானே கொன்றுவிட்டேனே!’ என்று டெய்ஸி வருந்தாத நாளில்லை.

    இதில் யார் குற்றவாளி?

    சிறுவயதில் அன்போ, அரவணைப்போ அளிக்காது வளர்த்த பெற்றோரா?

    `மனைவி’ என்றால் தன் மனம் போனபடி அவளை நடத்தலாம் என்றெண்ணிய கயவனா?

    இவர்கள் தம் பொறுப்பிலிருந்து வழுவிவிட்டதால்தான் எத்தனை விபரீதம்!

    அலட்டல் ஏன்?

    அலுவலங்களில் அதிகமாக அலட்டிக்கொள்பவர்கள் பெரிய பதவிகளில் இருப்பவர்களாக இருக்காது. இவர்கள்தாம், `எனக்கும் அதிகாரம் இருக்கிறது!’ என்று தம்மையே ஏமாற்றிக்கொண்டு, அதைப் பிறருக்கும் உணர்த்த விரும்புகிறவர்கள்போல் நடப்பார்கள். தம்மைத் தாமே தாழ்வாக நினைப்பதால் வந்த வினை!

    கதை

    செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்கு வேலை செய்ய வந்தபோது, வேணி சிரித்தமுகமாய், சுறுசுறுப்பாக இருந்தாள். அவளை மிக மிக மரியாதையாக நடத்தியது அக்குடும்பத்தினர் செய்த பெரிய பிழை.

    `இவர்களுக்கு நம்மைவிட்டால் வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள்’ என்ற திமிர் ஏற்பட்டது வேணிக்கு. பத்து வருடங்களுக்குப்பின், தனக்குச் சம்பளம் கொடுப்பவர்களையே அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். தன் கவனிப்பில் இருந்த முதியவளுடன் ஓயாமல் தொலைகாட்சி பார்த்ததில், கையையும், தலையையும் ஆட்டிக்கொண்டு, `வீராங்கனை’போல் பேசும் பழக்கம் வந்தது.

    விருந்தினர் ஒருவர் அந்த வீட்டுக்குப் போய் தங்கியபோது, `நான்தான் இந்த வீட்டு எஜமானி!’ என்பதுபோல் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டாள்.

    அவர் ஏன் பொறுப்பார்? “சும்மா வாயாடாதே! உள்ளே போய், வேலை இருந்தா பாரு!” என்று பதிலுக்குக் கத்த, பயந்து, உள்ளே ஓடினாள் வேணி.

    “அம்பது வயசுக்குமேல எனக்கு வாயாடிப் பட்டம்!” என்று முனகினாள், தன்னிரக்கத்துடன்.

    அக்குடும்பத்து இளைஞனும் துணிந்து அவளை எதிர்க்க, “நான் வேலையை விட்டுப் போயிடுவேன்..,” என்று மிரட்ட ஆரம்பித்தாள்.

    “நீ போனா, ரெண்டு நாள் கஷ்டப்படுவாங்க. அப்புறம் வேற ஒருத்தி கிடைக்காமலா போவா? யார் போனாலும், உலகம் நடக்காம போறதில்லே. வேண்டியவங்க போயிட்டா, நாம்ப சாப்பிடறதில்லையா, புதுத்துணி வாங்கறதில்லையா?” என்று யாரோ உணர்த்தினார்கள். (அது நானில்லை என்றால், நம்பவா போகிறீர்கள்?)

    வெகு காலத்திற்குப் பிறகு, வேணி தன் உண்மை நிலையைப் புரிந்துகொண்டாள். எண்ணையில் போட்டு எடுத்ததும் பூரி உப்பியிருக்கும். சிறிது நேரத்தில் அமுங்கிவிடும். அதுபோல் வேணியின் பூரித்திருந்த செருக்கு அடங்கியது. அதன் பின்னர், “நான் இந்த வீட்டிலே வேலை செய்யறவதான். எதுவா இருந்தாலும், ஐயாகிட்ட கேளுங்க,” என்று கம்மிய குரலில் கூறப் பழகிக்கொண்டாள்.

    மருத்துவர்கள்

    ஆரோக்கியக் குறைவால் அவதியுறும் நோயாளிகளைப் பார்த்து, `வேடிக்கை!’ என்று சிரிக்கும் டாக்டரைப் பார்த்திருக்கிறீர்களா?

    கோலாலம்பூரில் அப்படி ஒருவர் இருந்தார். பெயரா? கம்சன் என்று வைத்துக்கொள்ளலாம். `என்னால் எந்த வியாதியையும் குணப்படுத்திவிட முடியும்!’ என்ற செருக்குடன் செயல்பட்டார்.

    `தோளில் வலி,’ என்று அவரிடம் போனேன், யாரோ செய்த சிபாரிசை நம்பி. ஒருமாதக் குழந்தைக்கும் அவரிடம் ஒரே வகை வைத்தியம்தான். உடலில் பல பாகங்களில் மெல்லிய மின்சாரத்தைச் செலுத்துவார். அதிர்வு உண்டாகும்.

    வரிசையாக எட்டு பேரை உட்காரவைத்து, கம்சன் தனது `வைத்தியத்திறனை’ காட்டும்போது, `டாக்டர்! நான் பயந்தவள்!’ என்று சிலர் கெஞ்ச, பெரிதாகச் சிரிப்பார். மின்னதிர்ச்சி தாக்கியதும், சிரிப்பு இன்னும் பலக்கும்.

    ஒரு முறை, என் அனுமதியைப் பெறாது தலையில் சற்று அதிகமான மின்சாரத்தைச் செலுத்த, எதிர்பாராத அதிர்ச்சியாலும், வலியாலும் அலறித் துடித்தேன். எந்தச் சிறிய சிகிச்சைக்கு முன்னரும் நோயாளிக்கு அதன் தன்மையை விளக்கவேண்டும் என்பது விதி.

    இம்மாதிரி வைத்தியத்திற்கு இந்நாட்டில் அனுமதி கிடையாது என்று தெரிந்துபோனதும், மருத்துவத்துறையினரிடம் நான் புகார் செய்ய, ஐந்தாண்டுகள் வழக்கு நடந்தது. முதலில் இறுமாப்பாக நடந்துகொண்டார் கம்சன். அவர் சம்பாதித்திருந்த லட்சங்களெல்லாம் வக்கீல்களுக்குப் போயிற்று.

    `எனக்கு வக்கீல் கிடையாது!’ என்றுவிட்டேன். நான் உண்மையே பேசுகிறேன் என்று புரிந்து, அவருடைய வக்கீல், “என் தொழிலைத்தான் செய்கிறேன்,” என்று தனிமையில் என்னிடம் மன்னிப்பு கோரினாள்.

    போகப்போக, அவர் பிறருக்கு விளைவித்த அச்சம் அவரையே தாக்கியது. அந்த நடுக்கத்தைக் கண்டு எனக்குள் அலாதி திருப்தி பிறந்தது. இறுதியில், அவரது உரிமம் ஓராண்டு காலத்திற்கு பிடுங்கப்பட்டு, மருத்துவமனைக்கு `சீல்’ வைத்தார்கள்.

    `நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள்?’ என்று என்னை நன்கு அறிந்த சிநேகிதி ஒருத்தி ஆச்சரியப்பட்டு, பிறகு, `ஓ! உங்களால்தான் அவருடைய நாட்பட்ட, அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்ட முடியும் என்றே இப்படி நடந்திருக்கிறது!’ என்றாள். நன்மை விளைந்தாலும், எனக்கு ஏற்பட்ட தாக்கத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகள் வக்கீல், வழக்கு சம்பந்தப்பட்ட எந்த ஆங்கிலப் புதினங்களையும் படிக்க முடியவில்லை.

    இங்கு அரசாங்க மருத்துவமனைகளில் மிக நல்ல கவனிப்பு. ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களை மிக மரியாதையாக நடத்துவார்கள். ஏழையோ, பணக்காரரோ, எல்லாரும், `அங்கிள், ஆன்ட்டி’தான். எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும், `நாம் செய்யும் வேலை இழிவானது,’ என்ற தாழ்வு மனப்பான்மை இல்லாது, சிரித்த முகத்துடன் நம்முடன் பேசுவார்கள். அவர்களுடைய தலைவர் பொறுப்பானவராக இருக்கவேண்டும்.

    அந்த மனிதர் கம்சனின் போதாத காலம், நான் அங்கு சென்றிருக்கிறேன். இனி, தன்னிச்சைபோல் நடக்கத் துணியமாட்டார்.

    அரசியல்வாதிகள்

    அரசியலில் பெரிய பதவி வகித்து, `மக்கள் பணம் என் பணம்’ என்பதுபோல் நடந்துகொள்பவர்கள்… போதும், போதும். உங்களுக்குத் தெரியாததா!

    எந்த ஓர் உத்தியோகத்திலும், எந்நிலையிலும் செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்று சில எழுதப்படாத விதிமுறைகள் இருக்கின்றன. அவைகளைக் கடைப்பிடித்தால்தான் நிம்மதியும் மரியாதையும் நிலைக்கும்.

    இது ஏன் பலருக்கும் புரிவதில்லை?

    பிறரைப் பார்த்தும் இவர்கள் ஏன் கற்பதில்லை?

    சரித்திரம் மீண்டும் மீண்டும் தலைதூக்கும் என்பது இதுதானோ?

    தொடருவோம்

    Share
  •   வாழ்ந்து பார்க்கலாமே  23

    க. பாலசுப்பிரமணியன்

    துணிவுக்கு வரும் சவால்கள்

    துணிவு முன்னேற்றத்திற்கான ஒரு  அறிகுறி. துணிவு இல்லாமல்  நம்மால் எதிலும் முன்னேற்றம் காணமுடியாது. துணிவுக்கு எதிர்மறையானதே பயம். துணிவு இருளில் ஒளியைத் தேடுகிறது. பயம் ஒளியில் இருளைக் காண்கிறது. துணிவு சாதனைக்கு வழியைத் தேடுகின்றது. பயம் சாதனைப் பாதையில் உள்ள தடைக்கற்களை கண்டு தயங்கி நிற்கிறது. துணிவு தோல்வியைக்கண்டு அஞ்சுவதில்லை. பயம் வெற்றிப்பாதையில் தோல்வியின் தடயங்களைக்கண்டு மலைக்கின்றது.

    துணிவால் கிடைக்கின்ற சிறிய வெற்றிகூட அடுத்த முயற்சிக்கு வேண்டிய துணிவை நமக்கு அள்ளித்  தருகின்றது.இந்திய கடற்படையைச் சார்ந்த ஆறு பெண்மணிகள் Lt  கமாண்டர் விருத்திகா ஜோஷி அவைர்கள் தலைமயில் உலகம் முழுவதையும் ஒரு இயந்திர படகின் மூலமாக சுற்றி வருவதற்கான துணிவான முயற்சியை மேற்கொண்டார்கள், உலகின் பல்வேறு கடலலைகளின் தாக்கங்ககளையம் தாக்கல்களையும் முறியடித்துக்கொண்டு எட்டு மாதங்கள் தங்களுடைய பின்னடைவுகளுக்கு இரையாகாமல் துணிவோடு பயணித்தார்கள். எட்டு மாதங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன் அவர்கள் இந்தியா திரும்பியபோது இந்தப் பெண் வீராங்கனைகளை இந்திய துணைக்கண்டம் மற்றுமின்றி உலகத்தின் பல்வேறு நாடுகளும் புகழ்ந்தன .”

    இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர் திரு சத்யேந்திர வர்மா தனது பள்ளியில் படிக்கும் பொழுதே வாழ்க்கையில் ஏதாவது புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார். விமானப் படையில் சேர்ந்ததும் விமானத்திலிருந்து கீழே விமானக்குடைகள் (parachute) மூலமாக குதிப்பதில் வல்லமை பெற்றார். அவருடைய சாகசங்கள் அவருடைய துணிவை மேலும் வளர்த்தன. அதன் பின் உலகின் பல உயரமான கட்டிடங்களிருந்து எவ்வாறு பாதுகாப்பான முறையில் கீழே குதிப்பது என்பதற்கான முயற்சிகளைத் துணிவுடன் மேற்கொண்டு பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டினார். இந்தியாவிலேயே இந்த சாகச விளையாட்டுக்களில் மிகத் தேர்வு பெற்றவராக விளங்கி இந்திய அரசின் பாராட்டுதல்களையும் பட்டங்களையும் இந்திய ஜனாதிபதியிடமிருந்து  பெற்றார். இளைஞர்களுக்கு அவர் கொடுத்த ஒரு செய்தியில் “துணிவு என்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது. அதைத் தொடர்ந்து நாம் ஈடுபடும் செயல்களில் நமக்கு போதிய அறிவும் திறன்களும் அந்த சாகசங்களை போதுமான தற்காப்புக்களுடனும் செய்வதற்கான திட்டங்களும் தேவை. துணிவுடன் செயல் படுவது என்பது ஒரு கண்மூடித்தனமான செயல் அல்ல

    ஆழம்தெரிந்து .காலைவிடு என்பது பழமொழி மட்டுமல்ல ஒரு சிந்திக்கவைக்கும் அறிவுரை. பலபேர்கள் தொழில்களைத் தொடங்கும் பொழுது தங்களிடம் போதுமான பணம் இருக்கின்றது என்ற ஒரே ஆணவத்தில் தொழிலில் ஈடுபட்டு அதை முறையாகச்  செயல்படுத்துவதற்கோ அல்லது நடத்துவதற்க்கோ தேவைப்படும் திறன்கள் இல்லாமல் தோல்விகளில் தங்களை இழந்து விடுகின்றார்கள். மேலும் சில பேர் தங்களிடம் அறிவும் திறனும் இருப்பதால் மட்டும் தொழில்களில் மூலதனமின்றி ஈடுபட முடியும் என்ற ஒரு குருட்டு தைரியத்தில் தங்கள் பொன்னான நாட்களை இழந்து நிற்கின்றார்கள். இந்த இரண்டு வகையினரும் துணிவைத் தவறாக எடை போட்டவர்கள். அறிவு துணிவுக்குக் கண்கள். திறன்கள் துணிவுக்குக் கைகள். ,மூலதனமும் வளங்களும் துணிவுக்குக் கால்கள். இவை அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் துணிவுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

    அறிவும் திறனும் இருந்து விருப்பமில்லாத பாதையில் துணிவாகச் செல்ல முயல்வது முட்டாள்தனம். பல நேரங்களில் பல படித்த துணிவான இளைஞர்கள் தங்களுடைய முன்னோர்கள் செய்த தொழிலை குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக விருப்பமின்றிச் செய்து பின்னடைவு ஏற்படுத்திய நிகழ்வுகள் பலவற்றைக் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு முறை மருத்துவப் படிப்பிற்கான தேர்வுகள் நடந்துகொண்டிருந்த மையத்தில் தேர்வின் முடிவில் ஒரு மாணவனை நேர்கண்டபோது அவரிடம் எப்படி எழுதியிருக்கின்றீர்கள் என்று கேட்ட பொழுது “மிக நன்றாகத் தான் எழுதியிருக்கின்றேன். முதல் நூறு பேருக்குள் உறுதியாக வந்துவிடுவேன். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு மருத்துவத்தில் விருப்பமில்லை. என் தாய் தந்தை இருவரும் மருத்துவராக இருப்பதினால் நான் இந்தத் தொழிலில் தான் வரவேண்டும் என்று விருப்பப்படுகின்றார்கள். எனக்கோ இலக்கியத்தில் தான் விருப்பம்.” என்று சொன்னபோது சில சமுதாய பார்வைகள் நமது வருங்காலத்தோடு எவ்வாறு விளையாடிக்கொண்டிருக்கின்றன என்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

    துணிவோடு செயல் படுபவர்கள் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அவர்கள் மாற்றங்களுக்கு வித்திடும் பொழுதும் புதிய சிந்தனைகளை முன்வைக்கும் பொழுதும் அதற்கான ஏற்புக்கள் குறைவாகவும் எதிர்புக்கள் அதிகமாகவும் இருக்கத்தான் செய்யும். இந்த எதிர்ப்புக்களை அவர்கள் தங்கள் ஆக்க சக்திக்கு உரமாக்கிக்கொண்டு முன்னேறுவதில் தங்கள் சாதனைகளுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பார்கள். முதல் முறையாக கிராமபோனை நியூட்டன் கண்டுபிடித்த பொழுது அமெரிக்காவின் ஒரு முன்னணிப் பத்திரிகை அவரை மிகவும் சாடியது மட்டுமின்றி தரக்குறைவாக விமர்சித்தது. அவரின் கண்டுபிடுப்பு பைத்தியக்காரத்தனத்தின் எல்லை என்றும் அது அமெரிக்காவின் நாகரீகத்தின் அடிப்படைகளைச் சிதைத்து விடுமென்றும் கூறியது.. ஆனால் நியூட்டன் துணிவும் விடாமுயற்சியும் இந்த விமர்சனங்களை புறக்கணித்து தன்னுடைய ஆராய்ச்சிகளின் வெற்றிகளின் பாதைகளை வகுத்துக்கொண்டிருந்ததன.

    உங்கள் துணிவு பலபேரின் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். உங்கள் துணிவு மற்றவர்களின் கருத்து ஆதிக்கங்களுக்குச் சவாலாக இருக்கலாம் உங்கள் துணிவு பழக்கத்தில் உள்ள பல நெறிமுறைகளுக்கும் செயல்களுக்கும் முடிவுரையாக இருக்கலாம். ஆனால் துணிவுதான் சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கல். அதற்கு நீங்களும் நானும் ஏன் முன்னுரை எழுதக்கூடாது ?

    துணிந்து வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • குறளின் கதிர்களாய்…(216)

    -செண்பக ஜெகதீசன்

    நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்  
    சொற்பொருள் சோர்வு படும்.   (திருக்குறள் -1046: நல்குரவு)

     புதுக் கவிதையில்… 

    நல்ல பொருளை
    நன்கு அறிந்துணர்ந்து
    சொன்னாலும்,
    வறியவரின் வாய்ச்சொல்
    கருதப்படும்
    பொருளற்றதாகவே…! 

    குறும்பாவில்…

    உயர்ந்த நூற்களின் கருத்துக்களை
    ஆய்ந்தறிந்து சொன்னாலும், பொருளற்றதாகிவிடும்
    வறியோர்தம் வாய்ச்சொல்…! 

    மரபுக் கவிதையில்…

    நல்ல நூற்கள் கற்றுணர்ந்தே
         -நயமுடன் அவற்றின் பொருளதனைச்
    சொல்லும் வகையில் சொன்னாலும்
       -சேர்ப்ப தில்லை பொருளுளதாய்,
    நல்லதாய் அதையே ஏற்பதில்லை
    -நவில்வோர் தமையும் மதிப்பதில்லை,
    செல்வம் ஏதும் இல்லாத
    -சோர்ந்த வறியோர் சொன்னாலே…! 

    லிமரைக்கூ…

    நல்ல சொல்லும் தேறாது
    நற்பொருளை ஆய்ந்தறிந்து சொன்னாலும்,
    ஏழைசொல் அரங்கம் ஏறாது…! 

    கிராமிய பாணியில்… 

    கொடிது கொடிது வறும கொடிது
    ஒலக வாழ்க்கயில வறும,
    கொடிது கொடிது மிகக் கொடிது…
    நல்லாப்படிச்சி எல்லாந் தெரிஞ்சி
    எதச்சொன்னாலும் எடுபடாது…
    பொல்லாத வறுமயில
    இல்லாதவன் எடுத்துச்சொன்னாலும்
    எதச் சொன்னாலும் எடுபடாது,
    ஏறாது சபயினிலே… 

    தெரிஞ்சிக்கோ,
    கொடிது கொடிது வறும கொடிது
    ஒலக வாழ்க்கயில வறும,
    கொடிது கொடிது மிகக் கொடிது…!

     

     

    Share
  • கொடுத்த அல்வா போதும்!

    சேசாத்திரி பாஸ்கர்

    தமிழிசை பற்றி எழுதியதற்காக சூர்யா தேவி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டு உள்ளார் . ஜாமீன் மறுக்கப்பட்டும் எஸ் வீ சேகரை காவல்துறை நெருங்க முடியவில்லை .ஒன்று தமிழக அரசு இதில் ஞாயம் பார்த்து காவல் துறையை பணித்து கைது செய்து இருக்கலாம் .பா ஜ க வினர் அரசியல் நேர்மையை கருதி அவரை சரண் அடைய சொல்லியிருக்கலாம் .குறைந்த பட்சம் சட்டத்தின் மாண்பினை மதித்து சேகராவது நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கலாம் . இதை எல்லாம் தாண்டி அவர் பழைய மோடியுடன் ஆன சந்திப்பை- நிகழ்வை கணினியில் உலவ விட்டு தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்டிகொண்டு சிறையை தவிர்க்க நினைப்பது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது .நேற்று கூட ஒரு வழக்கில் பிரியா என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து இருக்கிறது . ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் சரண் அடைய வேண்டும் என்று ஒரு விதியை நீதிபதி சொல்லிருக்கிறார்.–கடைசி வரை அவர் சிறைக்கு செல்லாமல் ஏதேனும் ஒரு வழியில் தன்னை விடுவித்து கொள்ள நினைப்பது பெரிய தவறு . ஒரு பிரபல நடிகர் , முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இப்படி செய்வது அடுத்தவர்க்கு முன் உதாரணமாகி விடும் சட்டத்தின் முன் பிரியா , சூர்யா , சேகர் எல்லாம் சமம்.சட்டம் அதை செய்யாமல் அவர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறது .ஒரு சாமான்யனுக்கு இதை எல்லாம் பார்த்தால் ஏன் கோபம் வராது ?இது பற்றி அவருக்கு மூன்று முறை மின்னஞ்சல் அனுப்பினேன் . இரண்டு முறை பதில் சொன்ன அவர் மூன்றாம் முறை பதில் அளிக்கவில்லை — சட்டத்திற்கு பயந்து அல்ல , மதிப்பளித்து அவர் சரண் ஆகியிருந்தால் அவர் மேல் இருக்கும் மதிப்பு அதிகமாகி இருக்கும் .அவர் கொடுத்த அல்வா போதும் .அல்லது அவர் தனது அலுவலக இருக்கைக்கு பின் உள்ள “When God is with me why there should be fear” என்ற வாசகத்தை எடுத்து விட்டால் குறைந்த பட்சம் என்னை போன்ற அரை குறைகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் .

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180529 Hrishikesh-lord of the senses -icam

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….!

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”….!

    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….!
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் -கிரேசி எண்ணம்

    180528 – Goverdhana -lr -watercolour – A4

    ”தாமரை நீரிலையில் தத்தளிக்கும் தத்துவமாய்
    ’’ஆ’’மருவி அப்பன் அதைக்காக்க -சோமழையில்
    கோவர்த் தனமேந்தி கோன்இந்த்ரன் கர்வபங்கம்(இதுபோல்)
    நீவர்த்த மானம் நிகழ்த்து’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    180530 Tvameva mAtha – A4 lr

    ’’அம்மாவும் நீரேதான், அப்பாவும் நீரேதான்,
    சும்மாவே நீரேதான் சைதன்யம், -பெம்மானாம்
    கண்ணபிரான் நீரேதான், கல்லினுள் தேரைக்கும்
    நீரேதான் வார்த்திடும் நீர்(WATER)”….கிரேசி மோகன்….!

    Share
  • விண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது

    அணுப்பிளவு சக்தி உந்துவிசை விண்ணுளவி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    நீண்ட காலம் பயணம் செய்து,
    நெடுந்தூரம் கடக்க,
    நிரந்தர உந்துவிசை தீராது ஊட்ட 
    அணுப்பிளவு சக்தி இயக்கும்
    ஏவுகணை தயாரிப்பாகி
    சோதனைத்
    தேர்வும் வெற்றிகரமாய் முடிந்தது ! 
    பரிதி ஒளிக்கதிர் இன்றி
    நிலவின் இராப் பொழுது 
    பதினைந்து நாட்கள் நீடிக்கும் 
    காரிருளில் ! கடுங்குளிரில் ! 
    அத்தருணம்
    விண்ணுளவி, விமானி கட்கு
    மின்சக்தி அளிப்பது 
    சிக்கன அணுப்பிளவுச்  சிற்றுலை !
    ஏவுகணைத் 
    தளவாசலில் தயாராக உள்ளது, 
    நாசாவின் கைவசம். 

    +++++++++++++

    விண்வெளித் தேடல் திட்டங்களுக்கு அணுப்பிளவு சக்தி பயன்பாடு

    நாசா விண்வெளித் தேடல் ஆணையகமும்,  அமெரிக்க எரிசக்தி துறையகத்தின் அணுவியல் பாதுகாப்பு ஆணையகமும் சேர்ந்து வெற்றிகரமாகச் சோதனை செய்து,  புதிய சிற்றுலை கொண்ட  ஓர் அணுசக்தி ஏற்பாடு [A New Small Nuclear Reactor Power System ]  நிலவு, செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத் திட்டங்களுக்கும், அவற்றுக்கு அப்பால் போகும் குறிப் பயணங்க ளுக்கும் பயன்படும் என்று  சமீபத்தில் [மே மாதம்  3, 2018]  செய்து காட்டியுள்ளன.  நாசா அந்த புதிய ஏற்பாட்டுக்கு இட்ட பெயர்:  “கிலோபவர் சிற்றுலை” [Kilopower Reactor, Using Stirling Technology (KRUSTy)].  சோதனை நடந்த நாட்கள் 2017 நவம்பர் – 2018 மார்ச்சு. அந்த அணுசக்தி சாதன ஏற்பாடு பாதுகாப்பானது, இயக்கத் திறன் மிக்கது, ஏராளமான சக்தி.   அந்த சாதனம் நாசாவின் எதிர்கால மனிதரற்ற / மனிதருற்ற விண்கப்பல் நகர்ச்சி உந்துவிசையாகும்.  

    கிலோபவர் சிற்றுலையில் பயன்படும் அணுக்கரு உலோகம் யுரேனியம் -235, உற்பத்தி செய்யும் மின் ஆற்றல் : 10 கிலோ வாட்ஸ்.  சாதனத்தின் ஆயுள் : 10 ஆண்டுகள்.  சிற்றுலையின் உயரம் சுமார் 12 அங்குலம். விட்டம் சுமார் : 4 அங்குலம். வெப்பக் கடத்தி முடத்துவ சோடியம் [Passive Sodium] வெப்ப திரவத்தை திறன் மிக்க ஸ்டர்லிங் எஞ்சினுக்கு அனுப்பும். அதுவே வெப்பசக்தியை மின்சக்தியாக மாற்றுகிறது.

    https://youtu.be/DhpvNLJgtUc

    Kilopower Reactor Assembly

    1. Kilopower
      Kilopower experiment.jpg

      Prototype NASA 1kW Kilopower nuclear reactor for use in space and planet surfaces
      Generation Experimental
      Reactor concept Stirling engine
      Status In development
      Main parameters of the reactor core
      Fuel (fissile material) HEU235U
      Fuel state Solid (cast cylinder)
      Primary control method Boron carbidecontrol rod
      Neutron Reflector Beryllium oxideradial reflector
      Primary coolant Sodium heat pipes
      Reactor usage
      Primary use Long-duration space missions
      Power (thermal) 4.3–43.3 kWth
      Power (electric) 1–10 kW
      Website www.nasa.gov/directorates/spacetech/kilopower

    ++++++++++++++++



    (NASA Space Probe Dawn is leaving Vesta to the next Asteroid Ceres)

    ++++++++++++++

    நிலவினில் தடம் வைத்தார்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆராயத்
    தளவுளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் உளவ இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    வால்மீனை விரட்டிச் சென்று
    தூசியைப் பற்றிக்
    காசினியில் இறக்கினார் !
    வக்கிரக் கோள் ஒன்றின்
    மாதிரி மண்ணை
    வையத்தில் இறக்கியது
    ஜப்பான் விண்ணுளவி !
    அயான் எஞ்சினை இயக்கி
    பில்லியன் மைல்கள்
    பயணம் செய்து
    முரண் கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டு
    நாசா விண்ணுளவி ஏகும்
    செரிஸ் குள்ளக் கோள்  நோக்கி,
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !

    +++++++++++

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

    “புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.

    அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் செல்கிறது.

    முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

    2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனிலிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.

    இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

    நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

     

    2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

    வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

    பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.

    பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :

    1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

    2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

    3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

    4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

    புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html(Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
    By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp [Dawn Update]
    26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
    27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
    28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp [October 31, 2012]

    29. https://www.sciencedirect.com/science/article/pii/S0306454917303055  [January 2018]

    30.  https://www.nasa.gov/press-release/demonstration-proves-nuclear-fission-system-can-provide-space-exploration-power  [May 2, 2018]

    31. http://www.nuclearpowerdaily.com/reports/Demonstration_proves_nuclear_fission_system_can_provide_space_exploration_power_999.html  [May 3, 2018]

    32. https://www.nasa.gov/directorates/spacetech/kilopower  [May 11, 2018]

    33.  https://en.wikipedia.org/wiki/Stirling_engine [May 11, 2018]

    34. https://en.wikipedia.org/wiki/Kilopower  [May 17, 2018]

    35. https://en.wikipedia.org/wiki/Nuclear_thermal_rocket  [May 26, 2018]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (June 2, 2018)

    Share
  •  நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 4

    -மேகலா இராமமூர்த்தி

    வாழ்வில் எல்லா நலன்களும் ஒருவனுக்குக் குறைவற வாய்த்தாலும், அவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரைத் துய்த்துவிட்டுப் பின் அவற்றின்பால் உள்ள பற்றைச் சிறிது சிறிதாகப் படநாகம் சட்டையை உரிப்பதுபோல் துறத்தல் வாழ்க்கையைச் சிறக்கச் செய்யும்.

    எவ்வெவற்றின்பால் கொண்ட பற்றை நாம் துறக்கின்றோமோ அவ்வவற்றால் ஏற்படும் தொல்லை நமக்கில்லை என்பதுதான் வள்ளுவப் பேராசான் சொல்லிய நன்னெறியுமாம்!

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
    (341)

    கற்றனைத்தூறும் அறிவு என்ற பொய்யாமொழிக்கிணங்கப் பல நூல்களைக் கற்பதால் அறிவு உண்டாகுமென்றாலும் அவற்றால் மெய்யுணர்வும் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்துகொள்ளும் திறமும் எல்லார்க்கும் கிட்டும் என்று சொல்வதற்கில்லை. எனவே இலக்கண நூல்களிலும், எதிர்காலம் குறித்து அறிந்துகொள்ளும் சோதிட நூல்களிலும் காலத்தைப் போக்கும் பித்தரினும் பேதையார் இவ்வுலகில் இல்லை; வாழ்வின் உண்மைப் பயனை நல்கும் அறச்செயல்களில் சிந்தை செலுத்துவோரே தம் கருமமாகிய தவமுயற்சியைச் சரியாகச் செய்வோராவர் என்கிறது நாலடியார்.

    நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
    தலையாயார் தங்கருமம் செய்வார் – தொலைவில்லாச்
    சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
    பித்தரின் பேதையார் இல்.
    (நாலடி – 52)

    இவ்விடத்தில் தவம் என்றால் என்ன என்றோர் ஐயம் நமக்கு எழலாம். “தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருப்பதுமே தவம்” என்பது தவத்தின் வடிவு குறித்துக் குறளாசான் சொல்லும் விளக்கம். 

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு. (261)

    மனத்தை உலகப் பற்றுக்களிலிருந்து விடுவித்த சான்றோர், தம்மைப் பிறர் இகழ்வதைக் கண்டு வெகுளாமல் அவற்றைப் பொறுத்துக்கொள்வதோடன்றி, அவ்வாறு தம்மை இகழ்ந்தவர்கட்கு அத்தீவினையால் எரிவாய் நரகத்துக்குச் செல்லும் துன்பநிலை வாய்க்குமோ என்றெண்ணி வருந்தவும் செய்வர் என்று தவச் சான்றோரின் உயர்பண்பை அவனிக்கு அறியத் தருகின்றது நாலடியார்.

    தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
    றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
    எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
    பரிவதூஉம் சான்றோர் கடன்
    . (நாலடி – 58)

    மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணுவதும், அவை தவறு செய்யும்போது அதற்காக வருந்துவதும் குணங்களிலேயே மிக உயர்ந்த கல்யாண குணங்கள் ஆகும். அன்பும் அருளும் தம் இயல்புகளாய்க் கொண்ட அருந்தவத்தோர்க்கே அஃது இயலும்.

    வாழ்வில் துன்பங்களே மேன்மேலும், பனையளவாய், மிகுந்துவருதல் கண்டும், நெஞ்சு தெளியாது, தினையளவினதாய் அவ்வப்போது தோன்றி மறையும் சிற்றின்பத்தின் பாலிருக்கும் பற்றொழித்திலர் மனவலியற்றோர். என்னே அவர்தம் அறியாமை! ஆனால் இன்பங்கள் வரும்போதுங்கூட அதனைத் தொடர்ந்துவரும் துன்பங்களை உள்ளும் மேலோர், இன்பத்தின்பால் விருப்பங்கொள்ளார்; அவற்றிற்காக ஏங்கிநில்லார்.

    துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
    இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
    இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
    பசைதல் பரியாதாம் மேல்.   
    (நாலடி – 60)

    நம் வள்ளுவப்பேராசானோ,

    இன்பங்களை விரும்பாதவனாய், துன்பமே வாழ்வின் இயல்பென்பதை உணர்ந்த உத்தமனை அத்துன்பங்கள் ஏதும் செய்யாதென்று உறுதியுரைக்கின்றார்.

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன். (628)

    அத்துணை மனப்பக்குவம் சாமானியர்க்கு வாய்ப்பது அரிதெனினும், மின்னலெனத் தோன்றிமறையும் இன்பங்கள்மாட்டுக் கொள்ளும் அளவிறந்த பற்றையும், அவை நிரந்தரமானவை என எண்ணும் பேதைமையையும் அவர்கள் சற்றுக் குறைத்துக்கொள்ளலாம்.

    வாராதுபோல் வந்த மாமணியாய், வாழ்வில், அவ்வப்போது அரும்புகின்ற இன்பத் தருணங்கள்கூட மக்களிடம் தோன்றுகின்ற சினமென்னும் தீக்குணத்தால் பொசுங்கிப் போகின்றன.

    ஒருவன் சினத்தைக் காவாது வெகுளியின் மிகுதியால் சொல்லிய சுடுசொல் என்றைக்கும் தன்னெஞ்சில் ஆறா வடுவாய்த் தங்கி வருத்துதலால், ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் பிறர் மனம் புண்படும்படியான சுடுமொழிகளைச் சினந்துசொல்ல மாட்டார்கள். 

    காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
    ஓவாத தன்னைச் சுடுதலால் – ஓவாதே
    ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
    காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.   
    (நாலடி – 63)

    எனவே ஒருவன் வாழ்வில் வெல்ல விரும்பினால் தன்னையே கொல்லும் சினம் தன்னிடம் எழாமல் காத்துக்கொள்ளவேண்டியது மிக அவசியம்.

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே சொல்லும் சினம். (305) 

    நாய் தன்னைக் கடித்துவிட்டது என்பதற்காக யாரேனும் நாயைத் திருப்பிக் கடிப்பதுண்டா? அஃதொப்பவே, கீழ்மக்கள் அறிவற்றவகையில் தம்மை ஏதேனும் தகாதசொல் சொல்லிவிட்டாலும் அதற்காக மேன்மக்கள் சினந்து வன்மொழிகளால் அவர்களைத் திருப்பித் திட்டுவதில்லை என்பது  நாலடியார் நவிலும் நன்னெறி. 

    கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
    பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
    கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
    மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
     (நாலடி – 70)

    இதே கருத்தை, உவமை மாறாது பழமொழி நானூறு எனும் நூலும் கழறுவதைக் காண்க.

    நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின்
    கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் – சான்றவர்க்குப்
    பார்த்(து) ஓடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின்
    பேர்த்துநாய் கவ்வினார் இல்.
    (பழ. நானூறு – 375)
     

    வள்ளுவமோ, நமக்கு இன்னாசெய்தார்க்கு இன்னல்செய்யாமல் இருப்பது மட்டும் போதா; அவர்களுக்கு இனியவற்றையும் செய்துவிட்டுப் போவதே சால்பு என்றுகூறி நம்மைப் பெருவியப்பிலாழ்த்துகின்றது. வள்ளுவரை விஞ்சிய உயர்ந்த சிந்தனையாளர் யாங்கணுமே பிறக்கவில்லையோ என்றெண்ணி நாம் மலைக்கும் இடங்கள் வள்ளுவத்தில் பல.  அவற்றில் இதுவும் ஒன்று!

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு. (987)

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
    பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    HE is the PLAY
    HE is the PLAYER
    HE is the PLAYGROUND
    HE PLAYS for HIMSELF….BAGAWAN SRI AUROBINDO….

    ”ஆட்டம் அவர்தான், அதைக்காணும் ஆடியன்ஸ்
    கூட்டம் அவர்தான், களமுமவர், -நாட்டமோ
    சண்டிக் குதிரையாய் சச்சிதா னந்தராட்டம்
    ஒண்டிக்கே ஒண்டியாம் ஓய்’’….கிரேசி மோகன்….!

    Share