Blog

  • சொந்தச் சிறகுகள்

     

     

    முனைவர் இரா.முரளி கிருட்டினன்

    உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,

    தூய வளனார் தன்னாட்சி்க் கல்லூரி,

    திருச்சிராப்பள்ளி-2

     

    பறக்க முடியவில்லை என்பதற்காக

    எந்தப் பறவையும்

    சிறகுகளை உதிர்ப்பதில்லை

    நீ மட்டும் ஏன்

    தன்னம்பிக்கையை உதிர்க்கிறாய்

    சோம்பலாய்  இருந்தால்

    தனிமை கூட சிறை தான்

    புறப்படு

    தென்றலாகவோ

    புயலாகவோ

    இல்லை

    காற்றாக

    உயிர்மூச்சாக

    இயங்கு…

     

    பூமிப் பந்தைப் பார்

    இயங்கிக் கொண்டு

    இருக்கிறது

    அதன் மேல் ஏன்

    தூங்கிக் கொண்டிருக்கிறாய்…

     

    ஓடும் குதிரையின்

    பிடரி போல

    அங்கும் இங்கும்

    அலையாதே

    சிங்கத்தின் பிடரி போல்

    சிலிர்ப்போடு இரு.

     

    வறுமை யானையென்றால்

    அடக்கும் அங்குசமாய் இரு

     

    வெற்றி கனியென்றால் அதை

    உண்ணும் பறவையாய் இரு…

     

    தோல்வி ஒன்றும் எட்டிக்காயல்ல

    அமிழ்தம் அடைந்து பார்..

     

    சூரியன் சுடும் தான்

    இருந்தாலும் பீனிக்ஸ் விடுவதில்லையே..

     

    நீ மட்டும் ஏன் ….

    சொந்த சிறகுகளை

    அடமானம் வைக்கிறாய்….

     

    இயங்கிக் கொண்டே இருப்போம்

     

    ஒரு வேளை

    மரணித்துப்போனால்

    மண்ணுக்குள்

    விதையாக மட்டும்.

     

    smrmurali@gmail.com

    Share
  • படக்கவிதைப் போட்டி 162-இன்  முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இப்புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. ரகுநாத் மோகனன். இதனை, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    மலர்ந்த முகங்களோடிருக்கும் இவ்விருவரையும் காண்கையில் நம் அகங்களும் மகிழ்ச்சியில் மலர்கின்றன. இவர்கள் மகிழ்வின் பின்னணியை ஆய்ந்து கவியெழுத வல்லமைமிகு கவிஞர்கள் வரிசைகட்டி நிற்பதால், அவர்களை விரைந்தழைக்கின்றேன் நற்கவிகள் வரைந்தளிக்க!

    *****

    வழித்துணையாய் வந்த வாழ்க்கைத் துணையோ முல்லை மல்லிகைபோல் வெள்ளை மனங்கொண்டவள். தில்லையாண்டவன் அருளால் அவளோடு பேணும் இல்லறம் சிறக்கவேண்டும் என வாழ்த்துகின்றார் திரு. சு. பாஸ்கரன்.

    வந்தாய் என் வழித்துணையாய் 

    கண்ணே உன் காதோரக் கம்மல்
    என்னைக் கவிபாடச் சொல்லுதம்மா
    பெண்ணே உன் விழிபேசும் மொழியின்
    மின்சாரத் தாக்கம் என் உயிருக்குள் செல்லுதம்மா

    மன்னனானேன் நானுனக்கு மாலையிட்டு மகிழ்வுடனே
    புன்னகையின் புதுவெள்ளமதில் என்னை நீந்தவைக்கும்
    மென்னகையாளே வாழ்க்கை என்னும் பூவனத்தில்
    என்னோடு வழித்துணையாய் என்றும் வருபவளே

    கொஞ்சும் மழலைச் செல்வங்களிரண்டு
    கொஞ்சி மகிழ்ந்திடத் தந்தாயே – திரைகூப்பி வெண்
    பஞ்சாய்த் தலைநரைக்கும் காலத்திலும்
    நெஞ்சமிரண்டும் அன்புடன் இணைந்திருப்போமே

    வேலைமுடித்து நான் களைத்துவரும்
    வேளையிலே கோலமயிலே நீ என்
    களைப்புத்தீர அன்பு நீர்க் குவளைதனை ஆசையோடு
    வளைக்கரங்களில் தாங்கி வந்து தருவாயே

    கவலை மறந்து சிரித்திருப்போம்
    கதைகள் பலபேசி மகிழ்ந்திருப்போம்
    கருணை மாறாது பல்லுயிர்க்கும் உதவிடுவோம்
    காலங்கள் கடந்தும் வாழ்ந்திருப்போம்

    முல்லை மல்லிகை மலர்களைப் போல
    வெள்ளை மனம்தான் கொண்டவள் நீ
    எல்லையில்லா அன்போடு என்றும் நன்றாய் வாழ்வோம்
    தில்லையாண்டவன் துணையோடு நாம்!

    ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்துவாழும் இல்லறமே பாரோர் போற்றும் நல்லறம் என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

    நல்லறம்…

    சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
    சரிவரா திந்த இல்லறமே,
    அண்டை அயலார் மெச்சிடவே
    அன்பாய்ப் பேசி இருவருமே
    பண்புடன் வாழத் தெரிந்துகொண்டால்
    பார்த்திதைப் பிறரும் தெரிந்திடுவர்,
    பெண்ணும் ஆணும் புரிந்துதம்முள்
    பழகி வாழ்தல் நல்லறமே…!

    மனையறம் சிறக்க மனைவியும் நல்லவளாய் வாய்க்கவேண்டும்; கணவனும் கனிவாய் நடக்கவேண்டும். குலக்கொழுந்தாய் மனைவி தளிர்விட, கணவன் பாசத்தோடு அவளுக்குத் தாசனானாலும் தவறில்லை என்பது பெருவை திரு. பார்த்தசாரதியின் கருத்து.

    பெண்டாட்டி தாசன்..!

    மண்ணுலகில் பிறவியெடுத்து மனிதனாய் வாழ
    ……….மனைவியும் அமைய வேண்டும் நல்லவளாக.!
    கண்ணாளனாக அமைய வேண்டும் கணவனும்
    ……….காலமதற்கு ஓரளவேனும் கைகூட வேண்டும்.!
    எண்ணத்தில் எத்துணையோ ஆசைகள் நிறைய
    ……….ஏங்கும் மனைவியின் தேவையும் அறியவேணும்.!
    வண்ணத் துணிமணிகளை வாங்கித் தருவீர்
    ……….வகையாய் கம்மல் ஜிமிக்கி அன்பளிப்பாக்குவீர்.!

    தவமிருந்து பெற்றதைப்போல் அவளுமே நல்ல
    ……….தாரமாக அமைதல் வேண்டும் இறையருளால்.!
    அவள் கொடுக்கும் அன்புக்கு வெகுமதியாக
    ……….ஆராய்ந்து பரிசளிப்பீர் இல்லறம் செழிக்கவே.!
    தவறென்று அவளெதையும் சுட்டிக் காட்டினால்
    ……….தவறாமலவை நடக்காது பார்த்துக் கொள்வீர்.!
    சுவரை வைத்தே சித்திரமும் என்பதுபோல்
    ……….சுகமாய்க் குறைவிலாமல் கவனித்துக் கொள்வீர்.!

    இலக்கு ஒன்றை நிர்ணயித்து இல்வாழ்க்கை
    ……….இன்பமாக்க இல்லாளின் துணை அவசியமே.!
    அலக்கழித்து அவளை அல்லல் படவைத்தால்
    ……….அத்துணையும் பாழாகும்! வாழ்வு நரகமாகும்.!
    சலசலப்பு இல்லாத சஞ்சலமற்ற வாழ்க்கை
    ……….சம்சாரியின் கையில்தான் என்பதை உணருக.!
    குலக்கொழுந் தாயவள் தளிர்விடக் குடும்பத்தில்
    ……….கட்டியவளுக்கு தாச னானாலும் தவறில்லை.!

    ”மச்சுவீடு கட்ட வேண்டும்; மழலையொன்று பிறக்கவேண்டும்” என்று தன் இல்லற ஆசைகளையெல்லாம் இனிக்கும் சொல்லெடுத்துப் பட்டியலிட்டிருக்கின்றார் திரு. ஆ.செந்தில் குமார். 

    அச்சாரம் போட்டுட்டேன்டி என் அத்த மகளே – இந்த
    மச்சான நீ கட்டிக்கடி என் அத்த மகளே…
    அச்சாணி இல்லாம வண்டி ஓடுமா? .. இந்த
    மச்சானும் இல்லாம உன் வாழ்க்கை இனிக்குமா…?

    ஒட்டியாணம் வாங்கிப் போட்டு அழகு பார்ப்பேன்டி.. கழுத்துக்கு
    ரெட்டவடச் சங்கிலியும் பூட்டிப் பார்ப்பேன்டி…
    மாட்டலோட கம்மலும் வாங்கித் தருவேன்டி. உன்ன
    பட்டணத்து கடைக்கெல்லாம் கூட்டிப் போவேன்டி…!

    சச்சரவு இல்லாத வாழ்க்கை வாழுவோம்.. ஊரார்
    மெச்சும்படி நல்லதோர் குடும்பம் நடத்துவோம்…
    கச்சிதமாய் இருக்குமொரு நெலத்த வாங்குவோம்.. அதிலே
    மச்சிவீடு ஒன்னு நாம பார்த்துக் கட்டுவோம்…!

    உன்ன அச்சில்வார்த்த குழந்தையொன்னு பொறக்கவேணுன்டி.. அந்த
    கண்மணியும் மழலைமொழி பேச வேணுன்டி..
    சின்னச்சின்ன சேட்டையெல்லாம் செய்ய வேணுன்டி.. அதை
    கண்டு நானும் ஆனந்தமாத் துள்ள வேணுன்டி..

    கண்ணெதிரே நின்று கனிமுகத்தைக் காட்டும் பெண்ணைக் கண்டால் கணவனின் கவலை பறக்கும்; மகிழ்ச்சி பிறக்கும்; இல்லறம் சிறக்கும் என்பதைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார்  திரு. ரா. பார்த்தசாரதி. 

    அன்பு உள்ளமே, பொங்கும் புன்சிரிப்பே
    கண் எதிரே நிற்கின்றாய், கனிமுகத்தைக் காட்டுகின்றாய்
    என்னை என்னவென்று உன் கண்ணால் கேட்கின்றாய்
    மாலையிட்ட மணாளனைக் கண்டவுடன் உனக்கு
    மனதிலே பல்வேறு நினைவுகள் தோன்றுதே!
    ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று பெற்றோம்
    கொஞ்சி மகிழ்ந்திட, இதுவே நம்முலகம் என்றோம்
    வேலைமுடித்து வரும்போது களைப்புத் தீர தாகம் தீர்த்து,
    வளைக் கரங்களில் நீ தரும் தண்ணிரே என் பசி தீர்க்கும்!
    வேலை செய்த அன்று, சிரிப்புடன் நடந்ததைப் பகிர்வேன்
    அதனை வேடிக்கையாய்க் கேட்டு உனக்குள்ளே சிரிப்பாய்
    கவலைகள் மறந்து, கதைகள் பேசி இரவினைக் கழித்தோம்
    என்றும் நமது உள்ளமே, பொங்கும் மகிழ்ச்சி என அறிந்தோம்!
    நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனச் சொல்வதுண்டு
    விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே, இல்லறம் கெட்டுப்போவதில்லை
    என்றும் நம்மிடம் பிரிவில்லை, வாழ்க்கையில் ஒன்றானபின்னே
    ஆனந்தம் இன்று ஆரம்பம், அன்பில் பிணைந்தாலே பேரின்பம்
    நான் குடும்பப்பெண் என நினைக்கும் போதினிலே
    என் எண்ணம் என்றும் ஈடேறும் போதினிலே
    உன் முகச்சிரிப்பினை என் அருகினிலே

    கண்டுகொண்டேன் என் ஆசை மணாளனை நேரினிலே!

    இணையரைக் கண்ட எம் இணையிலாக் கவிகள், இல்லறத்தில் வெல்வதற்கான சூக்குமங்களை இனிய கவிதைகளாய்ப் பொழிந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் பாராட்டு!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    மணியோசையவள்! அவள் பின்னே தப்பாமல் வருஞ்சாமான்- எம்
    மணிமாடத்தவை எத்தனை நாள் சாகையோ? அவளொன்றே அதுவறிவள்!
    பணித்தமகனாய்ப் பகட்டத்திறந்து கைத்தலத்து ஒத்தாசை தரவேணும்
    கணித்துக் காசுரைத்தால் எது தெறிக்குமெது பறக்கும் ஏதறியேன் நான்கணவன்!
    துணிக்குக் கூடையா தூக்குப்பெட்டியா பாக்குப்பாயா பிளாஸ்டிக் கட்டிலா ஏன்
    ஏணிக்கும் கூட வீட்டில் எண்ணிக்கையில்லை எம்பரணிலோ இமியிடமில்லை!
    ஆணியடித்து ஓய்ந்து போயிற்று அலமாரிகள் வளர்த்து ஓய்ந்து போயிற்று
    அணியணியாய்ச்சேரும் அட்டைப்பெட்டி வளருதலிங்கே மாபெரும் சாதனை!
    வேணி முடிப்புக்கு மூணு மேசைகள் அரிதாரம் பூச நாலு கண்ணாடிகள் புதுப்
    பாணியென்றே குப்பி-தொப்பிகள்! சந்தைவிரிக்கலாம் சுரிதார்கள் நிஜார்கள்!
    மணிபார்க்க மாத்திரம் பத்துக் கடியாரங்கள் எனினும் நிதமும் தாமதச் சமையல்!
    பணிபாணியிலிங்கே நவீனப்புரட்சி! நான் வீட்டிலிருந்தே வேலைசெய்பவன்!!
    மணிக்குமணியமர்ந்துழைக்கும் மணியன்; வீட்டிற்குமோர் இலவச நாயகன்
    மணியழைப்போயா வாசற்படியில் பணிவிட்டெழுவது எனக்குடற்பயிற்சி!
    கணினிஆடவர் வாழ்க்கை போகுது! வயதேறிப் போனால் சிக்கலே மிஞ்சுது!
    மணியாய்ப் பொறுமை உண்டெனக்கேன்றே பேசிமுடித்த இல்லறபந்தம்
    “மணி!” மனைவிமக்கள் அழைப்பொலி! அவரடிபட நானொரு நல்மணி தானே?
    துணியோ பொன்னோ போக்குவரத்தோ யாதுக்கும் நானொரு சத்தியச் சாட்சி
    துணிந்து சொல்ல வாயிறந்தவன்; துணித்துப்போகவும் மனமில்லாதவன்
    பணியில் நட்டம் எனக்காகாது! நானா அவரை முறைப்பேன்? எதிர்ப்பேன்?
    பணிந்து போவதே பாதுகாப்பென மவுனம் காக்கும் நான் சிரிப்பொலிச் சித்தன்!

    சிரிப்பொலிச் சித்தனாய், பொறுமைமிகு மணாளனாய், இல்லிருந்து உழைக்கும் கணினிப் பணியாளனாய், அனைத்திற்கும் மேலாய் மனையாள் வாங்கிக் குவிக்கும் ஆடம்பரப் பொருள்களுக்கு அட்டியேதும் சொல்லாமல் வட்டிகட்டிக் கொண்டிருக்கும் உத்தமக் கணவனாய்த் திகழ்பவனை நகைச்சுவை இழையோட அழகாய்ப் படம்பிடித்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. அவ்வைமகளை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • புரட்சி எழ வேண்டும்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    புரட்சி எழ வேண்டும் என்று நீ
    முரசு கொட்டுகிறாய்!
    உலகத்தை மாற்ற நாமெல்லாம்
    கலகம் செய்கிறோம்!

    பரிணாம வளர்ச்சி அதுதான் என்று
    விரைவாகச் சொல்கிறாய் !
    உலகத்தை மாற்ற நாமெல்லாம்
    கலகம் செய்கிறோம்!

    ஆனால் அடி, தடி, உடைப்பு, தீ வைப்பு
    கடை அடைப்பு,
    வேலை நிறுத்தம் – இவை என்றால்
    எனக்குப் பிடிக்காதென்று
    உனக்குத் தெரியாதா?

    உடனே என் பெயரை நீக்கிவிடு
    எதிர்க்கும் புரட்சிக் குழுவில்!
    எல்லாம் நல்லதாய் முடியுமென
    உனக்குத் தெரியாதா?

    எல்லாம் இனிதாய் முடியும்!
    இனிதாய் முடியும்!
    மெய்யாகத்
    தீர்வு உள்ளது உன்னிடமெனக்
    கூறுவது நீயே!

    திட்ட மென்ன சொல்வாய்?
    நீயும் பங்கெடு என்றென்னைத்
    தூண்டுகிறாய்.

    முடிந்ததைச் செய்கிறேன்!
    வெறுப்பு மனம் கொண்டோர்க்கு
    கறுப்புப் பணம் தா என்றால்,
    காத்திரு என்று நான் நீங்குவேன்.
    எல்லாம் இனிதாய் முடியும்!
    இனிதாய் முடியும்!

    அரசியல் சட்டத்தை மாற்றுவதாய்
    உரைப்பது நீ!
    நாங்கள் யாவரும் உனது
    மூளையை மாற்ற முனைகிறோம்!

    கல்வெட்டு எழுத்தென்று
    சொல்வது நீ !
    கல்வெட் டென்று நீ கருதினால்
    கற்பனை மனத்தை விட்டு
    மெய் உலகுக்கு வா!

    மாசேதுங் படத்தை தூக்கிக் கொண்டு
    வாசல் முன்னே காட்ட வந்தால்
    வையத்தில் யாரும் உன்னை
    ஏறெடுத்துப் பாரார் !

    தொல்லைகள் மெல்ல நீங்கி
    நல்லதாய் முடியும்,
    எல்லாம் நல்லதாய் முடியுமென
    உனக்குத் தெரியாதா?

    Share
  • புது யுகம் படைத்திட

    முனைவர் இரா.முரளி கிருட்டிணன்
    உதவிப் பேராசிரியர்,
    தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,
    திருச்சிராப்பள்ளி-02

    புறப்படு
    பூமிப் பந்தின்
    முதல் புள்ளியிலிருந்து
    ஆகாயம் நோக்கி…

    இடையூறுகளை எதிர்
    இடைஞ்சல்களை அகற்று
    தடைகளைத் தகர்த்தெறி

    வீறுகொண்டு எழு
    உன்
    ஒவ்வோர் அசைவும்
    முன்னேற்றமாய் இருக்கட்டும்
    பறவையின் சிறகுபோல…

    எதிர்நீச்சல் போடு
    இறந்த மீன்கள்தான்
    மிதந்துசெல்லும்
    எட்டி உதை – உன்
    பூப்பாதம் பட்டு
    பொசுங்கிப் போகட்டும்
    பொய்மைகள்…

    நிமிர்ந்து நட – உன்
    காலடி பட்டு
    சாதிக் கண்ணாடிகள்
    தூள் தூளாகட்டும்…

    மதம் என்பது
    யானைக்குத்தான்
    மனிதனுக்கில்லை

    போராடு …
    கற்பி…
    கட்டளையிடுபவனை
    நெட்டி முறி
    அன்பு செய்பவனை
    அரவணை

    சாதியின் பெயர்
    சொல்லுபவனிடம் – நான்
    விந்துக்குப் பிறந்தவன்
    என்று சொல்…

    செயல் வீரனுக்குக்
    கடிவாளம் தேவையில்லை

    அடங்க மறுக்கும்
    காளைக்கு
    மூக்கணாங்கயிறாய்
    மதம்பிடித்த யானைக்கு
    அங்குசமாய்
    இரு…

    நீ
    நினைத்தால்
    நிலவு உன் காலடியில்
    படுத்தால் நிலவு
    வான்வெளியில்…
    புறப்படு…….

    Share
  • சூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    +++++++++++++

    வெப்ப அணுக்கரு உலை
    சூரியன் !
    வீரியம் மிக்க தீக்கதிர் !
    பீறிட்டெழும் பிழம்பு வீச்சுகள் !
    மீறி வெளிப்படும் காந்தச்
    சீறல்கள் !
    சீறி எழும் சூறாவளி !
    அண்டத்தை உண்டாக்கும் வாயுப்
    பிண்டம் ! பிண்டத்தை
    உலோகக்
    குண்டாக்கும் மூலகங்கள் !
    குதித்தெழும்பும்
    கோரத் தீப்பொறிகள் !
    அண்டக் கோள்களைப் பம்பரமாய்
    ஆட வைக்கும் ஆற்றல் !
    சூடாக்கும் உலகுக்கு  ஒளியூட்டும் விளக்கு !
    உரமூட்டும் உயிர்க்கு ! ஆனால்
    மரண முண்டு பரிதிக்கும்
    மாந்தர் போல் !
    எரிவாயு கரைந்து போய்
    ஒருநாள்
    பால்மய வீதியில் பட்டொளி வீசும்
    அணையாத் தீபம் ஒருநாள்
    அணையும் !
    சுற்றும் பூமியும் ஒருநாள்
    மூச்சு நின்று
    முற்றுப் புள்ளி ஆகும் !

    ++++++++++++++

     
     
    எரிவாயு முழுவதும் தீர்ந்து நமது சூரியன் மரித்தால் கோள்களுக்கு என்ன நேரிடும் ?
    பத்து பில்லியன் ஆண்டுகட்குப் பின் நமது சூரியன் தன் எரிவாயு தீர்ந்து மரித்துவிடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  ஆனால் அதற்குப் பின் என்ன நேரிடும் என்பதில் இதுவரை நிச்சயம் இல்லாமல் இருக்கிறார்.
    உலக விஞ்ஞானக் குழுவினர் சிலருடன், மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆல்பெர்ட் ஜிஜ்லிஸ்டிரா [Albert Zijlstra] இப்போது முன்னறிவிப்பு செய்கிறார் :  அதாவது இறுதியில் நமது பரிதி பேரளவு ஒளிமய வளையமாகி, அண்ட மீன் வாயுத் தூசியாகி ஒரு நிபுளா [A Massive Ring of Luminous, Interstellar Gas & Dust, known as Planetary Nebula] ஆகிவிடும்.  90% விண்மீன்கள் மரித்த பிறகு, அவை அண்டக்கோள் நிபுளாவாக [Planetary Nebula] மாறிவிடும்.
    ஒரு விண்மீன் மரிக்கும் போது, அதன் எரிப் பிண்ட வாயுத் தூசி

    விண்வெளியில் வீசி எறியப்படுகிறது.  அதன் மிச்ச வெப்ப எரிக்கரு சுமார் 10,000 ஆண்டுகள் எரிந்து தணிகிறது.  அதனால் நிபுளா இருப்பது தொலைநோக்கி மூலம் காண முடிகிறது. 25 ஆண்டுகள் சிக்கலாக இருந்த பிரச்சனை தெளிவானது இப்போது.  நமது பரிதிக்கு 1.1 மடங்கு குன்றிய நிறைவுடைய விண்மீன் மங்கலான நிபுளாவாகத் தெரிகிறது.  நமது பரிதி போல் 3 மடங்கு பெரிய விண்மீன் ஒளிபடைத்த நிபுளாவாய்த் தென்படுகிறது.  வெடித்து விரியும் நிபுளா, சுற்றும் கோள்களை
    முறித்துத் தூளாக்கிவிடும்.
    ++++++++++++

    “சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக்கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவிடும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர் வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.”

    ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA)

    அணையாத பரிதியும் ஒருநாள் அணையும் !

    சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே பிரபஞ்சம் தோன்றிய போது பேரளவு வாயுக் கொள்ளளவு திரண்டு உருண்டு “பூரணத் திணிவு” நிறை பெற்று உட்கருவில் அழுத்தமாகி அணுப்பிணைவு சக்தி தூண்டப் பட்டு (Critical Mass to ignite Fusion Reaction) மாபெரும் அசுரத் தீக்கதிர்க் கோளமாய் உருவானது சூரியன் ! அந்தப் பூத சக்தியே சூரியனைச் சுயவொளி விண்மீனாய்ச் சுடர்விடச் செய்தது ! ஆனால் சூரியன் ஒரு சாதாரண விண்மீன். அது தனது அண்டக் கோள்களுக்கு ஒளியும், வெப்பமும் அளித்துப் பூமியில் உயிரனத்தை வாழச் செய்கிறது. இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் கழிந்து அதன் எரிவாயு ஹைடிரஜன் தீர்ந்து போய் வெப்ப அணுக்கரு இயக்கம் (Thermo-Nuclear Reaction) நின்றுபோய்ப் பரிதியின் வடிவம் முடங்கிவிடும் ! அப்போது அது உடல் பெருத்து “செந்நிறப் பூதமாய்” (Red Giant Star) மாறிப் புதன் கோளையும், வெள்ளிக் கோளையும் விழுங்கி விடும் ! பூமியைப் பேரளவு சூடாக்கி அரைத் திரவமாய் உருக்கி விடும் ! சூரியன் மரணமடைந்த பிறகு பெரும்பான்மையான அதன் பிண்டம் சிதைந்து குலைந்து போய் ஓர் நிபுளா அண்டமாகி (Planetary Nebula) விடும் ! விண்வெளியில் சூரியனின் புறத்தோல் விரிவடைந்து “வெண்ணிறக் குள்ளியாக” (White Dwarf) மாறிவிடும் ! பிறகு பரிதி முற்றிலும் குளிர்ந்து போய்க் “கருங் குள்ளியாக” (Black Dwarf) முடங்கி சமாதி நிலை பெற்றுவிடும் !

    பரிதியின் பூத நிறை 333,000 பூமிகளின் மொத்த நிறையை ஒத்தது ! ஆனால் அதன் பூதக் கோளத்தின் கொள்ளளவில் ஒரு மில்லியன் பூமிகளைப் புகுத்தி விடலாம் ! அதே சமயத்தில் சூரியனின் வாயுப் பிண்டம் சராசரி பூமியின் கால் பங்களவு அடர்த்தி உள்ளதே ! பரிதியின் விட்டம் : 1,392,000 கி.மீ. பூமியின் விட்டம் : 12750 கி.மீ. அதாவது சூரியனின் விட்டத்தில் 109 பூமியை அடுத்தடுத்து வரிசையில் நிறுத்தலாம் ! 4000 ஆண்டுகளுக்கு முன்பு விண்மீன் (NGC 2440) தனது எரிவாயு முழுவதும் தீர்ந்து போய் உள்வெடிப்பானது ! ஆனால் அந்த விண்மீன் இருப்பிடம் விண்வெளியில் பல பில்லியன் மைலுக்கு அப்பால் வெகு தூரத்தில் உள்ளதால் அதன் மங்கிடும் ஒளியை ஹப்பிள் தொலைநோக்கித் தற்போதுதான் கண்டிருக்கிறது !

    சூரியன் எரிவாயு தேய்ந்து மரணம் அடையும் போது !

    ஹைடிரஜன் எரிவாயு தீர்ந்து பரிதியில் ஹீலிய வாயு சேமிப்பாகும் போது அதன் பூதக் கொள்ளளவு ஈர்ப்பாற்றலால் பேரளவு சுருங்கிச் சூடேறுகிறது ! முடமான பரிதி அப்போது 100 மடங்கு விரிவாகிறது ! வயிறு பெருத்த பரிதி புதனையும், சுக்கிரனையும், ஏன் பூமியையும் கூட விழுங்கி விடுகின்றது ! வேறோர் விண்மீன் மண்டலத்திலிருந்து பார்போருக்கு உடல் பெருத்த பரிதி ஒரு செந்நிறப் பூதச் செம்மீனாகக் (Red Giant) காட்சி அளிக்கும் ! செம்மீனாகிய பரிதி இப்போது புதுவித நூதன அணுப்பிணைவு இயக்கத்தில் ஈடுபடுகிறது ! அந்தச் செம்மீனின் புறத்தோலில் சிக்கியிருக்கும் ஹைடிரஜன் வாயு வெப்ப அணுக்கரு இயக்கத்தில் மாறி ஹீலிய வாயு விளைந்து அது உள்ளிழுக்கப் பட்டு உட்கரு மேலும் அழுத்தமாகிச் சூடேறுகிறது ! உட்கருவின் உஷ்ணம் 100 மில்லியன் டிகிரி செல்ஸியஸ் ஆகும் போது அந்த ஹீலியத் திரட்சியும் கனல் பற்றிப் பிணைந்து கார்பனாகவும் ஆக்ஸிஜனாகவும் மாறுகிறது !

    ஹீலியம் 4 + ஹீலியம் 4 + ஹீலியம் 4 —> கார்பன் 12 + காமாக் கதிர்

    ஹீலியம் 4 + கார்பன் 12 —> ஆக்ஸிஜென் 16 + காமாக் கதிர்

    இவ்விதமே கார்பன், ஆக்ஸிஜன் இரண்டும் மரண விண்மீன்களால் உற்பத்தியாகி பிரபஞ்சக் கோள்களில் அவை இரண்டும் மிகையாகப் பெருகின ! அவற்றைப் போலவே சிறிய அளவில் மரண விண்மீன்கள் லிதியம், பெரிலியம், போரான் போன்ற மூலகங்களை (Lithium, Beryllium & Boron Elements) உண்டாக்கின !

    ஹீலியம் 3 + ஹீலியம் 4 —> பெரில்லியம் 7 + காமாக் கதிர்

    பெரில்லியம் 7 + எலக்டிரான் —> லிதியம் 7 + நியூடிரினோ + 86 MeV சக்தி [90%].

    ஒளியிழந்த பரிதி சுருங்கிச் சிறுக்க ஆரம்பிக்கிறது ! அடுத்து உஷ்ணம் மிகையாகி 100 மில்லியன் ஆண்டுளுக்கு அது தொடர்ந்து விரிகிறது ! அப்போது அது பன்மடங்கு ஒளிமயமாகி ஹீலிய வாயு எரிப்பு யுகம் முடிவடைகிறது ! பிறகு பரிதியின் புயல் காற்று அதன் மேலடுக்குகளை உதிர்த்து முடிவு வடிவான அண்ட நிபுளாவாகிறது !

    ஒளிமங்கி உருப்பெருத்த பரிதி அகக்கொள்களை (புதன், வெள்ளி, பூமி, நிலவு & செவ்வாய்) உஷ்ணத்தால் உருக்கி அவற்றின் பனித் துருவங்களை நீர்மயமாக்கி பல்கோடி மில்லியன் ஆண்டுகளாய் பாலைவனப் பசுஞ்சோலை ஆக்கும் ! “சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக்கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவிடும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர் வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்,” என்று ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA,) கூறுகிறார். “ஆனால் அந்த நீர்மயம் ஒருசில மில்லியன் ஆண்டுகள்தான் நீடிக்கும். பிறகு பரிதியின் ஒளிமங்கி புது நீர்மய மெல்லாம் குளிர்ந்து பனிப்பாறைகள் ஆகிவிடும் ! இவ்விதம் பல்வேறு சுயவொளி விண்மீன்கள் மரணம் அடைந்து பால்மய மந்தை வீதியில் (Our Milky Way Galaxy) இப்போது 10 பில்லியன் செம்மீன்கள் (10 Billion Red Giants) விண்வெளிக் கல்லறையில் முடங்கிக் கிடக்கின்றன !

    சுயவொளி விண்மீன் சூரியனின் பண்பாடு

    பிரம்மாண்டமான ஈர்ப்பு சக்தியால், மாபெரும் ஒன்பது அண்ட கோளங்களைத் தன்னகத்தே இழுத்து, 4.7 பில்லியன் ஆண்டுகளாய்ச் சுழல்வீதியில் தன்னைச் சுற்ற வைத்து, ஆட்கொண்டுள்ள அசுர விண்மீன் [Star], நாமறிந்த சூரியன்! கதிரவன் மின்காந்த சக்தியில் [Electro-magnetic Enegy] வெள்ளமாய்ப் பரப்பும் பேரளவு கதிர்வீச்சால் [Radiation] நேர்முகமாகவோ, புறமுகமாகவோ வேண்டிய சக்தியை உயிரினங்களுக்கு ஊட்டித் துணையாக இருந்து வருகிறது. கதிரொளி இல்லை யென்றால், உயிரினங்கள் மடியும்! தாவர இனங்கள் உணவுப் பண்டங்கள், எரிபொருள்கள் எதுவும் தயாரிக்க முடியாது.

    1611 ஆம் ஆண்டில் காலிலியோ, தான் படைத்த முதல் தொலை நோக்கியில் பரிதியைப் பார்த்து, அதன் கருமை வடுக்களைக் [Dark Spots] கண்டு படம் வரைந்துள்ளார். அவருக்கும் முன்பு கி.மு.200 இல் சைனாவின் வானியல் ஞானிகள் பரிதித் தேமல்களைக் [Sunspots] கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள். பரிதியின் ஆய்வுக்குக் காலிலியோவின் கண்டுபிடிப்பு ஓர் புதிய பாதையைத் திறந்து விட்டது! விஞ்ஞான ரீதியில் சூரியனை அறிந்து கொள்ள விதை யிட்டதுடன், வெய்யவன் [Sun] கொந்தளிப்பில் வளர்ந்து வரும் ஓர் சுய ஒளி அண்டம் என்பதும் தெளிவானது.

    நமக்கு நெருங்கிய சுய ஒளி விண்மீன் சூரியன், பூமியிலிருந்து 93 மில்லியன் தூரத்தில் உள்ளது! ஒளி வேகத்தில் [வினாடிக்கு 186,000 மைல்] பயணம் செய்யும் பரிதியின் சுடரொளிப், பூமிக்கு வந்து சேர சுமார் 8 நிமிடங்கள் எடுக்கின்றன! உயிரினங்களுக்கு வேண்டிய ஒளி வெப்பத்தை, அளிக்கும் ஒரே ஒரு சுரங்கம், சூரியன் ஒன்றுதான்! பெரும்பான்மை ஹைடிரஜன் [71%], ஹீலியம் [27%] வாயுக்கள், மற்ற கன மூலகங்கள் [2%] நிரம்பிய கோளம், சூரியன். பூமண்டலத்தில் அந்த எளிய வாயுக்களைக் கண்டு கொள்ள முடியாது.

    பரிதி விண்மீனின் உட்புற அமைப்பு

    வெய்யவனின் உட்கரு, வெப்ப அணுக்கரு இயக்கம் கொந்தளிக்கும், பிரமாண்டமான அளவு அணுசக்தி வெளியாக்கும், ஓர் ஹைடிரஜன் குண்டு [Hydrogen Bomb]! அதன் தீவிர உஷ்ணத்தில் வாயுக்கள் வெண்ணிற ஒளியில் மிளிர்ந்து, வெளிச்சத்தையும், வெப்பக் கதிர்களையும் கொட்டுகிறது. உட்கருவின் உஷ்ணம் 15 மில்லியன் டிகிரி C. மேல்தள உஷ்ணம் 6000 டிகிரி C. தெறித்து எழும் தீ வளைவுகளின் [Coronas] உஷ்ணம் 1 மில்லியன் C. அளப்பரிய வெப்ப சக்தி, பரிதியில் நிகழும் அணுப்பிணைவுத் [Nuclear Fusion Reactions] தொடரியக்கங்களால் உண்டாகிறது. உட்கருவில் உள்ள வாயுக்களின் பேரழுத்தமுடன், 15 மில்லியன் டிகிரி C உஷ்ணமும் இருப்பதால் மட்டுமே, அவ்வரிய அணுக்கருப் பிணைவு இயக்கங்கள் நிகழ முடியும்! உட்கரு அணு உலையில் உற்பத்தி யாகும் அளப்பரிய வெப்பசக்தி வெள்ளம், மேலெழுச்சி நகர்ச்சில் [Convection], ஒளிமயக் கோளத்தைக் [Photosphere] கடந்து தீவாயுக்கள் பொங்கி எழுகின்றன. நான்கு ஹைடிரஜன் அணுக்கள் அச்சூழ் நிலையில் ஒன்றாய்ப் பிணைந்து, சற்று கனமான ஹீலியமாக [Helium] மாறுகிறது. அந்த அணுக்கரு இயக்கத்தின் விளைவில் பளு இழப்பு [Mass Defect] நேர்ந்து, அதற்குச் சமமான வெப்ப சக்தி, ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாடு ‘ [Mass Energy Equation] நியதி முறைப்படி உண்டாகிறது.

    (பிணைவு சக்தி = பளு இழப்பு X ஒளிவேகம் X ஒளிவேகம்)

    1.  பரிதியின் உட்கரு (Sun’s Core) மிக்க இறுகிய அழுத்தத்தில் பேரளவு உஷ்ணத்தில் (15 மில்லியன் டிகிரி செல்ஸியஸ்) உள்ளது.  வெப்ப அணுக்கரு இயக்கத்தில் பிரமாண்டமான சக்தியும் காமாக் கதிர்கள், நியூடிரினோ (High Energy Photons & Neutrinos) போன்றவையும் வெளியாகின்றன.

    2.  உட்கருவின் மேலிருக்கும் பரிதியின் கதிர்வீச்சு அரங்கத்தில் (The Radiation Zone) பயங்கரக் கதிர் வீசுகிறது.  உஷ்ணமானது 15 மில்லியன் முதல் ஒரு மில்லியன் டிகிரி செல்ஸியஸ் வரை வேறுபடுகிறது.  ஒளிக்கதிர்கள் (Photons of Radiation) அந்த அரங்கை ஊடுருவி வெளியேற பல மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம் !

    3.  அடுத்துள்ள வெப்பச்சுற்று அரங்கில் உஷ்ணம் (The Convective Zone) ஒரு மில்லியன் முதல் 6000 வரை டிகிரி செல்ஸியஸ் வரை வேறுபட்டுள்ளது.  இதனூடேயும் ஒளிக்கதிர்கள் புகுந்து வெளியேறுகின்றன.

    4. இதுதான் நம் கண்ணுக்குத் தெரியும் ஒளிக்கோளம் (The Photosphere). 300 மைல் தடித்த இந்த அரங்கத்தின் உஷ்ணம்: 5500 டிகிரி செல்ஸியஸ்.

    5. இந்தச் செந்நிற அடுக்கு (The Chromosphere) உஷ்ணம் ஏறிடும் அரங்கம் ! உஷ்ணம் 6000 முதல் 50,000 டிகிரி செல்ஸியஸ் வரைக் கூடும் ! இந்த அரங்கத்தின் தடிப்பு சுமார் 1000 மைல் ! இது செந்நிறமாக இருக்கக் காரணம் : இங்கே ஹைடிரஜன் அணுக்கள் கொந்தளிக்கும் நிலையில் செந்நிறப் பட்டைக் கதிர்கள் (Hydrogen Spectrum in Excited State emitting Radiation) தெரியும்படி வீசும்.

    6. பரிதியின் மேற்தளத் “சுருள்தீ வளைவுகள்” (The Corona). தீ வளைவின் எறிவீச்சு மில்லியன் டிகிரி செல்ஸியஸ் அளவில் விண்வெளியில் மில்லியன் மைல் கணக்கில் தாவிச் செல்பவை !

    பரிதியில் நிகழும் அணுப்பிணைவு இயக்கங்கள்

    ஒரு மெகா டன் ஹைடிஜன் குண்டு, 100 பில்லியன் எண்ணிக்கை கொண்ட சக்தி யுள்ளது, சூரியன்! சூரியன் தன் பணியைத் தவறாது செய்ய, ஒவ்வொரு வினாடியும் 600 மில்லியன் டன் ஹைடிரஜன் மூலக அணுக்களை ஒன்றாய்ப் பிணைத்து, ஹீலிய மாக மாற்ற வேண்டும். அவ்வாறு 4.7 பில்லியன் ஆண்டுகளாக பரிதி தனது அணுக்கரு உலையை [Nuclear Reactor] இயக்கி வந்திருக்கிறது. இதுவரை பரிதி காலி செய்த ஹைடிரஜன் பளு 5% அளவே. ஆதலால் சூரியனில் ஹைடிரஜன் சேமிப்பு சீக்கிரம் தீர்ந்து போய்விடும் என்று பயப்பட வேண்டியதில்லை! இன்னும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு வேண்டிய எரிவாயு ஹைடிரஜன் சூரியன் வசம் உள்ளது!

    ஹைடிரஜன் 1 + ஹைடிரஜன் 1 —> ஹைடிரஜன் 2 + பாஸிடிரான் + நியூடிரினோ [Neutrino].

    இந்த இயக்கத்தில் 42 MeV சக்தியும் நியூடிரினோ துகளும் உண்டாகிறது. இதுதான் முதற் தூண்டு இயக்கம்.

    ஹைடிரஜன் 2 + ஹைடிரன் 1 —> ஹீலியம் 3 + காமாக் கதிர்

    ஹீலியம் 3 + ஹீலியம் 3 —> ஹீலியம் 4 + புரோட்டான் 1 + புரோட்டான் 1

    ஹீலியம் 3 + ஹீலியம் 4 —> பெரில்லியம் 7 + காமாக் கதிர்

    பெரில்லியம் 7 + எலக்டிரான் —> லிதியம் 7 + நியூடிரினோ + 86 MeV சக்தி [90%].

    பெரும்பான்மையான சக்தி இந்த அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் உண்டாகிறது.

    பரிதி வாயுக் கோளத்தின் உள்ளமைப்பு

    பரிதியின் விட்டம் 863,400 மைல், பூமியைப் போல் 109 மடங்கு விட்டம் ! அதன் எடை பூமியைப் போன்று 333,000 மடங்கு கனத்தது. சூரியனின் கொள்ளளவு [Volume] பூமியைப் போல் 1.3 மில்லியன் மடங்கு! கண்ணைப் பறிக்கும் பரிதியின் பெருஞ்சுடர் மேல்தளம் ‘ஒளிமயக் கோளம்’ [Photosphere] என்று அழைக்கப் படுகிறது. அடிக்கடி ஒளிமயக் கோளத்தில் ‘கரும் வடுக்கள்’ [Dark Patches], சில சமயம் 50,000 மைல் அகலத்தில் காட்சி அளிக்கின்றன! அவற்றைப் ‘பரிதித் தேமல்கள் ‘ [Sunspots] என்றும் குறிப்பிடுவதுண்டு. பரிதித் தேமல்களில் உஷ்ணம் [4000 டிகிரி C], மேல்தள உஷ்ணத்தோடு [6000 டிகிரி C] ஒப்பிட்டால் எப்போதும் குறைந்தே இருக்கிறது. ஒளிமயக் கோளத்தை ஒட்டியுள்ளது  ‘செந்நிறக் கோளம்’ [Chromosphere]! செந்நிறக் கோளுக்கு அப்பால் புறத்தே வெண்ணிறத்தில் ஒளிர்வது, ‘சுருள்தீ வளைவுகள்’ [Corona]. செந்நிறக் கோளும், சுருள்தீ வளைவுகளும், சூரிய கிரகணம் [சந்திரன், பூமிக்கும் பரிதிக்கும் நேரிடையில் கடக்கும் சமயம்] நிகழும் போதுதான் காண முடியும்! கண்களுக்குப் புலப்படாதபடி, செந்நிறக் கோளத்திலிருந்து சில சமயங்களில் ஆயிரக் கணக்கான மைல் உயரத்தில் வாயுத்தீ நாக்குகள் [Flares of Luminous Gas] தாவி எழுவதுண்டு!

    பரிதிக்கு நகர்ச்சி உண்டா ? உண்டு. விண்வெளியில் எந்த அண்டமும் நகர்ச்சி இல்லாமல் அந்தரத்தில் நிற்பதில்லை! மற்ற அண்ட கோளங்களைப் போல், சூரியனும் தன்னைத் தானே மெதுவாகச் சுற்றுகிறது. காலையில் கீழ்வானில் உதயமாகும் பரிதி, வான வீதியில் நகர்ந்து மாலையில் மறைவது போல் தெரிகிறது. ஆனால் மெய்யாக நகர்வது பூமி! சூரியன் நகர்வதில்லை! ஆனால் பரிதிக்கு வேறு முறையில் நகர்ச்சி உள்ளது. பரிதி தனது அச்சில் சுற்று போது, மத்திம ரேகைப் பகுதியில் சுற்றுக்கு 25 நாட்களும், துருவப் பகுதியில் 34 நாட்களும் ஆகின்றன. பரிதி பூமியைப் போல் திரட்சிப் பொருள் [Solid] எதுவும் இல்லாமல், வாயுக் கோளமாக இருப்பதால், சுற்றும் காலங்கள் நடுப்பகுதியிலும், இரண்டு துருவங்களிலும் மாறுபடுகின்றன. சுற்றும் சந்திரனைப் பூமி சுமந்து கொண்டு, தானும் தன்னச்சில் சுழன்று கொண்டு, சூரியனைச் சுற்றி வருகிறது. அதைப் போல தன்னைச் சுற்றி வரும் ஒன்பது அண்டக் கோள்களைத் தாங்கிக் கொண்டு, சூரியனும் தன்னச்சில் சுழல சூரிய குடும்பம், பிரபஞ்சத்தில் மற்ற அகிலவெளி ஒளிமய மந்தைகளைப் போல் [Intersteller Galaxy] பால்மய வீதியில் நகர்ந்து கொண்டே போகிறது!

    சூரியனில் தெரியும் கருமை நிற வடுக்கள்

    சூரிய கோளத்தில் தெரியும் கரும் புள்ளிகளை [Black Spots], 2200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சைனாவில் வானியல் ஞானிகள் கண்டு குறிப்பிட்டிருக்கிறார்கள்! அவற்றைப் பரிதித் தேமல்கள் [Sunspots] என்ற பெயரிலும் குறிப்பிடுகிறார். பரிதித் தேமல்களில் கருந் தழும்புகளும் [Umbra], அவற்றைச் சுற்றிச் செந்நிற விளிம்புகளும் [Penumbra] சூழ்ந்துள்ளன! பரிதித் தேமல்கள் இரட்டையாக இணைந்தே, சூரியனில் குறிப்பிட்ட சில வளைய மண்டலங்களில் மட்டுமே தோன்றுகின்றன. ஒடுங்கிய குறுக்கு ரேகைக் [Lattitude] களத்தில் மத்திம ரேகைக்கு [Equator] 35 டிகிரி வடக்கிலும், தெற்கிலும் பரிதித் தேமல்கள் அங்கும் இங்கும் படர்ந்துள்ளன! மத்திம ரேகையை நெருங்க நெருங்க, தேமல்களின் எண்ணிக்கை அதிகமாகி 8 டிகிரி குறுக்கு ரேகையில் ஒன்றும் இல்லாமல் பூஜியமாகிறது. மற்ற வெப்பக் களங்கள் 6000 டிகிரி C உஷ்ணத்தில் கொந்தளிக்க, தேமல்களில் உஷ்ணம் 1500-2000 டிகிரி C குன்றி, களங்கள் கருமை நிறத்தில் தோன்றுகின்றன. அதற்குக் காரணங்கள் இன்னும் அறியப் படவில்லை! ஒரு வேளை காந்த சக்தி கொந்தளிப்பால், பரிதித் தேமல்கள் உண்டாகி இருக்கலாம்! பரிதியில் ஒற்றைத் தேமலைக் கண்பது அபூர்வம். இரட்டை, இரட்டையாகவே தோன்றும் தேமலின் காந்தம் எதிர்முறையில் வட தென் துருவங்கள் போல நடிக்கின்றன. தேமல்கள் 20 நாட்களே நீடித்துப் பின்பு மறைந்து விடுகின்றன. பரிதி தன்னைத் தானே சுற்றும் போது, தேமல்களும் நகர்வதால். பரிதி சுழலும் வேகத்தை பூமியிலிருந்து தொலை நோக்கிகள் மூலம் அறிய முடிகிறது.

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Will Happen to the Sun ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/module=displaystory&story_id=40206291&format=html[சூரியன்]

    16. https://www.sciencedaily.com/terms/planetary_nebula.htm

    17. https://www.sciencedaily.com/releases/2018/05/180507111917.htm  {May 7, 2018]

    18. http://www.spacedaily.com/reports/What_will_happen_when_our_sun_dies_999.html  [My 8, 2018]

    19. Planetary Nebula: Gas and Dust, and No Planets Involved  {May 9, 2018]

    20.  https://en.wikipedia.org/wiki/Planetary_nebula  [May 16, 2018]

    ******************

    [S. Jayasbarathans   [ jayabarathans@gmail.com ] May 27, 2018

    Share
  • படக்கவிதைப் போட்டி (163)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

     கோபி சங்கர் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(215)

    -செண்பக ஜெகதீசன்

     பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப 
    ரலகுடை நீழ லவர்.       (திருக்குறள் -1034: உழவு) 

    புதுக் கவிதையில்… 

    உழவின் பயனாய்
    நெல்லினைப் பெற்றிருக்கும்
    வள்ளன்மை மிக்கோர்,
    பல மன்னர்தம்
    குடைக் கீழுள்ள
    நிலங்களையெல்லாம்
    தம்வேந்தரின் குடைக்கீழ்
    வரக் காண்பர்…! 

    குறும்பாவில்… 

    உழவினால் நெல்விளைவித்த நல்லோரால்
    பிறநாட்டு மன்னர்தம் நிலமெலாம் வந்திடும்
    தன் நாட்டு மன்னர் குடைக்கீழ்…! 

    மரபுக் கவிதையில்… 

    வயலில் உழைத்துநெல் விளைவித்த
         -வள்ளல் தன்மை கொண்டோரெலாம்
    சுயமாய்க் காண்பர் நாட்டினிலே
         -சொத்தாய்ச் சேர்ந்த நிலமெல்லாம்
    அயலுள நாட்டு மன்னர்கள்
         -ஆட்சி விட்டு மாறிவந்தே
    பயனுள வகையில் தம்மன்னர்
         -பாது காப்பில் சேர்ந்திடுமே…! 

    லிமரைக்கூ… 

    நெல்நிறைக்கும் உழவர்தம் உழைப்பு,
    நந்நெஞ்சால் காண்பர் மாற்றரசர் நிலமெலாம்
    தம்மரசர் நிலமாகிட அழைப்பு…! 

    கிராமிய பாணியில்… 

    பாரு பாரு நல்லாப் பாரு
    ஒலகத்தில ஒசந்த தொழிலு
    ஒழவுத் தொழிலு பாரு…
    ஒழவுத்தொழிலச் செய்து
    நெல்லு நெறய வச்சிருக்கும்
    நல்லவனுக்குத் தெரியும்,
    அடுத்த நாட்டு ராசாக்களோட
    நெலமெல்லாம்
    அப்புடியே வந்திடுமே
    அவன் நாட்டு ராசாகிட்ட… 

    அதால
    பாரு பாரு நல்லாப் பாரு
    ஒலகத்தில ஒசந்த தொழிலு
    ஒழவுத் தொழிலு பாரு…!

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 109

    அங்கோர் தேசிய அருங்காட்சியகம், சியாம் ரீப், கம்போடியா

    முனைவர் சுபாஷிணி

    உலகின் பிரமாண்டங்களில் தனக்கெனத் தனியிடம் பெறுவது கம்போடியாவின் அங்கோர்வாட். க்மேர்(Kymer) கலை பண்பாட்டு விழுமியங்கள் ஏனைய ஆசிய கலை வடிவங்களிலிருந்து வேறுபடுபவை. கி.பி.802ல் மாமன்னன் 2ம் ஜெயவர்மன் கம்போடியாவின் அரசாட்சியைக் கைப்பற்றினான். வைணவ பாரம்பரியத்தைப் பின்பற்றியது இந்த அரசு. கி.பி.12ம் நூற்றாண்டில் மன்னன் 2ம் சூரியவர்மன் அங்கோர் வாட் எனும் இந்த விஷ்ணு கோயிலை எடுப்பித்தான். விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் 2ம் சூரியவர்மனின் மறைவுக்குப் பின் சம்பா பேரரசின் தாக்குதலால் பாதிப்பைச் சந்தித்தது. அதன் பின்னர் 7ம் ஜெயவர்மன் புதிய தலைநகரை உருவாக்கி அங்கோர் தோம், பாயோன் என்ற இரு கோயிகளையும் எடுப்பித்து தனது ஆட்சியைத் தொடர்ந்தான். இக்காலத்தில் கம்போடியா பௌத்தத்தைத் தழுவி, ஒரு பௌத்த நாடாகப் பரிணாமம் பெற்றது. அடுத்த நூற்றாண்டில் பௌத்தக் கோயிலாக மாற்றம் கண்டது அங்கோர் வாட். விஷ்ணுவை மையக்கடவுளாக வைத்து அங்கோர் வாட் அமைக்கப்பட்டது. அங்கோர் பகுதியில் முதன்மை சமயமாக இருந்த வைணவம் அதன் புகழ் மங்கி, கி.பி.12ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பௌத்தம் செழிக்கத் தொடங்கியது. இன்று கம்போடியாவின் மக்கள் தொகையில் 95% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களே. தமிழகத்தைச் சில நூற்றாண்டுகள் ஆண்ட பல்லவ மன்னர்களின் தொடர்பு கொண்டவர்கள் பண்டைய கம்போடியாவை ஆட்சி செய்த க்மேர் பேரரசர்கள். பல்லவர்கள் எப்படி தமிழகத்தின் மாமல்லபுரம், காஞ்சி, தொண்டைமண்டலம் ஆகிய பகுதிகளில் தங்கள் நுணுக்கமானக் கட்டுமானக் கலையை வளர்த்தனரோ அதற்குச் சற்றும் குறைவில்லாது கம்போடிய க்மேர் அரசர்களும் பிரமாண்டமான கலை வடிவங்களைப் படைத்திருக்கின்றனர்.

    தமிழகத்தைப் போலவே தொடர்ச்சியாகப் பல போர்களைச் சந்தித்திருக்கின்றது கம்போடியா. கம்போடியாவின் நில அமைப்பைக் காணும் போது அது வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய மூன்று பெறும் நாடுகளை எல்லையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதுவே கம்போடியா தொடர்ச்சியாக இந்த நாடுகளை முன்னர் ஆட்சி செய்த பேரரசுகளினால் போர் தொடுக்கப்பட்டு இன்னல்களை எதிர்கொண்ட அமைதியற்ற நிலையை உருவாக்கியிருந்தது. கி.பி18ம் நூற்றாண்டில் தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவின் மீது யார் ஆட்சி செலுத்துவது என்று பிரச்சனையை கிளப்ப, வியட்நாமிய பண்பாட்டினை கம்போடியர்கள் மீது திணிக்கும் முயற்சிகளும் எழ ஆரம்பித்தன. தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவை இணைந்து ஆட்சி செய்யும் முடிவையும் எடுத்தன. அப்போது பிரெஞ்சுக் காலணியாக இருந்தது வியட்நாம். 1863ம் ஆண்டு தாய்லாந்தினால் கம்போடியாவில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மன்னர் நொரோடொம் ப்ரோம்போரிராக் தாய்லாந்திடம் தனது நாட்டிற்கான பாதுகாப்பிற்காக உதவி கேட்க, தாய்லாந்து மன்னருக்கும் பிரான்சுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆயினும் பிரெஞ்சுக் காலணியாகவே கம்போடியாவின் பெரும் பகுதி இருந்தது. பின்னர் 2ம் உலகப்போரின் காலத்தில் ஜப்பானியப் படைகளின் தாக்கம், அதன் பின்னர் தொடர்ந்த வியட்நாமின் தாக்குதல் என அமைதியின்றி கம்போடிய மக்களின் வாழ்க்கை தொடர்ந்தது.

    1989ம் ஆண்டு அமைதிக்கான முன்னெடுப்புக்கள் தொடங்கின. 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரீசில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சுதந்திர கம்போடியப் பேரரசின் மன்னராக மன்னர் நோரோடோம் சிகானுக் பொறுப்பேற்றார். மாமன்னர் உள்ள நாடு என்ற போதும் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படும் சட்டமன்ற அமைப்புடன் கூடிய ஆட்சி இன்று தொடர்கின்றது. இப்படி தொடர்ச்சியான பலபல அரசியல் மாற்றங்களைச் சந்தித்திருக்கும் நாடுதான் கம்போடியா.

    கம்போடியாவின் முக்கிய மதமாகத் திகழ்வது பௌத்தம். இலங்கையிலிருந்து தேரவாத புத்தம் கி.பி 12ம் நூற்றாண்டில் கம்போடியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கம்போடியாவின் பல பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டன. பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிலைகள் வடிக்கப்பட்டன. பிரம்மாண்டமான அங்கோர் தோம் கோயில் வளாகத்தில் வெவ்வேறு திசைகளில் அமைக்கப்பட்டுள்ள போதிசத்துவர் அவலோகதேஷ்வரரின் வடிவங்கள் உலகின் வேறெங்கும் காணக்கிடையாத அரும்பெரும் பொக்கிஷங்கள். இத்தகைய கட்டுமானக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றினைச் சுற்றி அமைந்த வரலாற்றினைச் சிறப்பாக பதிந்து இன்று கம்போடியா வருகின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு வரலாற்றுத் தகவல்களை வழங்கும் ஆய்வுக்கூடமாகத் திகழ்கின்றது அங்கோர் தேசிய அருங்காட்சியகம்.

    அங்கோர் தேசிய அருங்காட்சியகம் அங்கோர் நகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளின் சேகரிப்புக்களை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சியாப் ரீப் நகரில் உள்ள இந்த அருங்காட்சியகம் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. கீழ்த்தளம் தவிர்த்து மேலும் இரண்டு தளங்களில், எட்டு தனித்தனியான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை
    கண்காட்சி அறிமுகம்
    க்மேர் நாகரிகம்
    சமயமும் நம்பிக்கையும்
    க்மேர் பேரரசுகள்
    அங்கோர் வாட்
    அங்கோர் தோம்
    கல்லின் கதை
    அப்ஸரசுகளின் அழகு
    என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளன.

    சமயமும் நம்பிக்கையும் என்ற கருப்பொருளில் அமைந்திருக்கும் காட்சிக்கூடம் இந்த அருங்காட்சியகத்தின் தனிச்சிறப்பு எனலாம். இந்தக் கண்காட்சிப் பகுதியில் மட்டும் ஆயிரம் புத்தர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் அமைந்த புத்தரின் வடிவங்கள், நின்ற நிலையில், சாய்ந்த நிலையில், அமர்ந்த நிலையில், யோக நிலையில், ஐந்தலை நாகத்தின் குடையின் கீழ் அமர்ந்த நிலையில் என பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிற்பங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


    அங்கோர் வாட் கண்காட்சிக் கூடம் அங்கோர் வாட் கோயிலின் வரலாற்றை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது. கோயிலின் ஆரம்பகால வரலாறு, பேரரசுகள், மன்னர்கள் பற்றிய தகவல்கள் என்பன போன்ற தகவல்கள் இங்குக் கிடைக்கின்றன. இதனை அடுத்து வரும் அங்கோர் தோம் கண்காட்சிப் பகுதி அங்கோர் தோம் பற்றியும் பாயோன் கோயிலைப் பற்றியும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லின் கதை எனும் பகுதியில் பல்லவ கிரந்தத்திலும் சமஸ்கிருதத்திலுமான கல்வெட்டுக்கள் பல இங்குள்ளன. பண்டைய தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. இவை வாசிக்கப்பட வேண்டும்.

    இங்குள்ள சேகரிப்பில் புத்தர் சிலைகள் மட்டுமன்றி போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர், விநாயகர், விஷ்ணு, பிரம்மா, சிவலிங்க சிற்பங்களும் உள்ளன. இவற்றோடு பாயோன், பாந்தே ஸ்ரீ, அங்கோர் சிற்பக் கட்டுமானக் கலைகளை விளக்கும் உடைந்த பகுதிகளில் கண்காட்சிப் பகுதியும் உள்ளது. நுணுக்கமான க்மேர் கலை வடிவத்தின் தனித்தன்மைகளை இப்பகுதியில் கண்டு மகிழலாம்.

    வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம் அளப்பரியது. கம்போடிய மண்ணின் கலைத்திறனையும் அந்நாட்டினை ஆண்ட பேரரசுகளின் ஆளுமைத்திறனையும் படைப்புக்களையும் ஒரு சேர அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த அருங்காட்சியகம் அதற்கு நிச்சயம் உதவும். சியாம் ரீப் நகரில் தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வினை இங்கு செல்கின்ற ஒவ்வொருவருக்கும் தருகின்றது கம்போடியாவின் கோயிற்கலை.

    அருங்காட்சியகத்தின் முகவரி:
    No. 968, Vithei Charles de Gaulle, Khrum 6,
    Phoum Salakanseng, Khom Svaydangum,
    Siem Reap District, Siem Reap Province,
    Kingdom of Cambodia

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  -22

    க. பாலசுப்பிரமணியன்

    செயல்திறன்கள் இருந்தால் மட்டும் போதுமா ?

    “அறிவும் திறனும் உள்ள பலர் வாழ்க்கையில் முன்னேறாமல் எங்கேயோ முடங்கிக்கிடக்கிறார்களே” என்று சிலர் அங்கலாய்ப்பது காதுகளில் விழத்தான் செய்கிறது. அது உண்மையே !  அறிவும் திறனும் இருந்தால் மட்டும் போதாது. வளர்ச்சியும் முன்னேற்றமும் நமது வீடுகளைத் தேடி வந்து வாசல் கதவுகளைத் தட்டுவதில்லை. நாம்தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் ” என்பதுதானே முதுமொழி.

    “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

    இன்மை புகுத்தி விடும்.”

    என்று திருவள்ளுவர் சொன்னதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டாமா?

    வாழ்க்கையில் பல பேர் வெற்றிகளை நோக்கிச் செல்ல முடியாமைக்குக் காரணம் அவர்கள் முயற்சிக்கான வழியில் நடைப்பயணத்தைத் துவக்காததுதான்.

    உண்மையின் பொருளை உணர்ந்து கொள்வதற்கான முயற்சிகளை இளைஞர் நரேந்திரன் எடுத்தார் . அவருக்கு வெற்றி கிட்டியது. மெய்யறிவின் தத்துவத்தை ஆழமாக உணர்ந்த அவர் விவேகாநந்தராக மாறினார். மனித நேயத்தை வளர்த்து சமூக சேவைக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார்

    எத்தனையோ இன்னல்களுக்கிடையே ஏழ்மையால் வாடும்பொழுதும் தன்னுடைய முயற்சிகளை விடாமல் மேரி கியூரி (Marie Curie) தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவருக்கு பெயரும் புகழும் மட்டுமின்றி நோபல் பரிசும் கிடைத்தது.

    மிக ஏழ்மையான நிலையிலும் உண்பதற்குக் பொருளாதாரம் இல்லாத நிலையிலும் கணக்கில் தனது ஆர்வத்தையும் முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்த இராமானுஜம் கணித மேதையாக உலங்கெங்கும் பாராட்டுப் பெற்றார்.

    பல தடங்கல்களும் இன்னல்களுக்குமிடையே தனது மனிதநேய மனப்பான்மையை விட்டுக்கொடுக்காமல் முயற்சி செய்த இளம் பெண்மணி அன்னை தெரேசாவாக உலகெங்கும் போற்றுதலுக்குரியவராக மாறினார்.

    ஒரு சைக்கிளில் துணிகளை ஏற்றி வீடு வீடாக விற்று வந்த திருபாய்  அம்பானி (Dhirubai Ambani) தன்னுடைய விடா முயற்சியால் உலகம் வியக்கும் தொழிலதிபராக மாறினார்.

    இப்படி வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்கு வாழ்க்கையின் தத்துவத்திடை முன்மொழிகின்றன முயற்சி செய்து தோற்றவர்கள் மிகக் குறைவு. அவ்வாறு அவர்கள் தோல்வியைத் தழுவினால் அதற்கு அவர்களுடைய செயல்முறைகளில் இருக்கும் குறைபாடுகளே காரணமாக இருக்க வாய்ப்புண்டு.  “முயற்சி எப்பபோழுதும் நீங்கள் அதை விட்டுவிட மறுக்கும்பொழுதுதான் தன் பலனைக் கொடுக்கும் ” என்பது ஒரு மேலைநாட்டுப் பழமொழி. (Effort will release its reward only after you refuse to quit).

    முயற்சிகள் என்றுமே ஆரம்பத்திலேயே தங்கள் பலன்களை அள்ளிக் கொடுப்பதில்லை. முயற்சிகளை எடுக்கும் பொழுது சோதனைகள், தடங்கல்கள், போட்டிகள், தோல்விகள் ஆகியவை வரத்தான் செய்யும். ஆனால் அவைகளைத் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுதல் வேண்டும்.  ஆகவே முயற்சிகளின் பலன்களுக்குத் தேவை

    1. தன்னம்பிக்கை
    2. துணிவு

    தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வெற்றிப்படிகளுக்கு அறிமுகம் செய்கின்றது. அது நம்முள் உறைந்துள்ள ஆக்க சக்தியை ஒருவழிப்படுத்தி தலை நிமிர்ந்து நிற்கச் செய்கின்றது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகராகக் கருதப்படும் அமிதாப் பச்சன் முதல் முறையாக குரல்வளத்திற்கான சோதனைக்குச் சென்ற பொழுது அவருக்குச் சரியான குரல்வளம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். அவருடைய தன்னம்பிக்கையும் துணிவுமே அவரைத் திரை உலகில் முன்னணியில் நிறுத்தியது.

    “தவறுகளே செய்யாத ஒரு மனிதன் வாழ்க்கையில் எதையுமே முயன்றதாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். (Anyone who has never made a mistake has never tried anything new) “தன்னம்பிக்கையே ஒரு அழகான மனிதனுக்கு முகவரி.” என்று பல மனநல நிபுணர்கள் எடுத்துக்கூறியிருக்கின்றார்கள்.

    ஒரு ஏழை ஆட்டோ ஓட்டுபவரின் மகளும் ஒரு குடிசையில் போதிய மின் வசதியின்றி இருந்தும் படித்தவரும், கூலியாக இரயில் நிலையத்தில் உழைத்து கிடைத்த நேரத்தில் படித்தவரும் IAS தேர்வுகளில் வெற்றி பெறுவது அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் முயற்சிக்கும் முன்னுதாரணமாக அமைகின்றது.

    தன்னம்பிக்கை இல்லாத முயற்சி தடுமாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை முயற்சிகளை முடுக்கிவிட்டு அதன் ஓட்டத்திற்கு வலிமையையும் சக்தியையும் கொடுக்கின்றது.

    சிலருக்கு தன்னம்பிக்கை இருந்தாலும் துணிவு இருப்பதில்லை. வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் சரித்திரங்களை அலசும்பொழுது அவர்களுடைய துணிவு அவர்களின் வெற்றிக்கு எவ்வாறு கைகொடுத்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

    “துணிவு என்பது பயமின்மை அல்ல. அது பயத்தை சந்தித்து அதன்மேல் கொள்ளும் ஆளுமையே ” என்று மிகச் சிறந்த மேதை மார்க் ட்வைன் (Mark Twain) என்பவர் கூறுகின்றார்.  (Courage is resistance to fear, mastery over fear and not absence of fear). இதே கருத்தை வலியுறுத்தி நெல்ஸன் மண்டேலா கூறுகின்றார் “நான் துணிவு என்பது பயமின்மை அல்ல, ஆனால் பயத்தின் மேல் கொள்ளும் வெற்றியே என்பதை அறிந்து கொண்டேன்” (I learnt that courage is not absence of fear, but the triumph over it)

    “துணிந்தவனுக்குத் தூக்குமேடை மெத்தை.” என்ற வசனம் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றதா?

    துணிவோடும் தன்னம்பிக்கையோடும் நமது முயற்சிகளை மேற்கொள்ளலாமே !

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (109)

    நிர்மலா ராகவன்

    உலகில் பிறரும் உண்டு

    ஒரு தாய் தன் மகளுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த இன்னொரு பெண், “ஐயே! இவ என்ன குழந்தையா? ஊட்டி விடறியே!” என்றாள் கேலியாக.

    “என் குழந்தைக்கு ரொம்ப ஜூரம்!” என்று பரிந்தாள் தாய். `குழந்தை என்று அவள் குறிப்பிட்டது எட்டு வயதான பெண்ணை. அக்காட்சியைப் பார்த்து அதிசயித்தவளுக்கோ நான்கு வயதுதான். அவள் பெருமையாக, “எனக்கு ஜூரம் வந்தாலும், நானேதான் சாப்பிடுவேன்!” என்றாள்.

    ஊட்டுவது எப்போதுவரை?

    ஒரு வயதோ, இரண்டு வயதோ ஆன குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டியது தவிர்க்க முடியாதது. அந்த வயதுக் குழந்தைகள் வாயைத் திறக்கவே படுத்தும். அப்போது, பூனையோ, நாயோ அருகில் இருந்தால், அந்தப் பிராணிகளுக்கு ஒரு வாய் போட்டு, குழந்தை வாயிலும் போடலாம்.

    மூன்று வயதானதும், ஒரு ஸ்பூனில் உணவை வைத்து, நாம் கண்ணை மூடிக்கொண்டால், குழந்தை சுயமாகச் சாப்பிடும். பக்கத்தில் மிருகங்கள் படம் போட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு, “ஐயோ! கரடி சாப்பிட்டுப் போயிடுத்து,” என்று அதிர்வதுபோல் பாவனை செய்தால், குழந்தை பெருமையாகத் தன் வாயைச் சுட்டிக்காட்டும். அடுத்த கவளத்திற்கு, குரங்கின்மேல் பழி போடலாம்.

    நான்கு வயதிற்குமேல், ஒரு சிறுமியின் வாயில் போவதைவிட அதிகமாகவே தரையில் விழும். கூடவே அமர்ந்து கதை சொன்னால், சாப்பிடும் பிரக்ஞையே இல்லாமல் சாப்பிட்டு முடித்துவிடுவாள்.

    உதவியா, உபத்திரவமா?

    குழந்தை செய்யக்கூடிய எந்த வேலையும் அரைகுறையாகத்தான் இருக்கும். அதற்காகப் பரிதாபப்பட்டோ, அவனுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டோ, அல்லது தன் அன்பை வெளிக்காட்டும் விதமாகவோ ஒருவர் அந்த வேலையைத் தானே முனைந்து செய்தால், என்றாவது, `எங்கு தவறு செய்தேன்?’ என்று வருந்த நேரிடும்.

    `நான் ஊட்டினால், விரைவாகச் சாப்பிடுவான். அதோடு, சுத்தப்படுத்தும் வேலையும் மிச்சம்!’ என்னும் தாய் தன் சௌகரியத்திற்காகப் பார்க்கிறாள். குழந்தையோ, தன்னைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வான்.

    தன் விருப்பப்படிதான் எல்லாமே நடக்கவேண்டும் என்ற பிடிவாதம் எழுகிறது. அவன் எதிர்பார்த்தபடி ஏதாவது நடக்காவிட்டால், வீட்டில் அதிகாரம் தூள்பறக்கும். பதின்ம வயதில் இப்போக்கு அதிகரிக்கையில், `வயதுக்கோளாறு!’ என்று அலட்சியப்படுத்திவிடுகிறோம்.

    எல்லா பதின்ம வயதினருமே இப்படி நடப்பதில்லையே என்று பார்த்தால், அவர்களுக்கு அந்தந்த வயதுக்கேற்ற வேலையும், சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது புலனாகும்.

    நான்தான் முக்கியம்

    ஒரு கல்யாணத்தை முன்னிட்டு, இருபது பேருக்கு மேற்பட்ட நெருங்கிய உறவினர்கள் கூடியிருந்தார்கள் அந்த வீட்டில். பதினான்கு வயதான ஆனந்த் வீட்டுக்கு ஒரே மகன். தன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்ற எண்ணம் அவனுக்கு. பிறர் வீட்டில் அப்படி நடக்கக்கூடாது என்று அவனுக்குப் பெற்றோர் சொல்லிக்கொடுக்கவில்லை. அதனால், நாள் முழுவதும் தொலைகாட்சியை அலற விட்டான். பிறர் எவ்வளவு சொல்லியும் ஒலியைக் குறைக்கவில்லை. பொறுக்க முடியாமல் போக, எண்பது வயதான தாத்தா எழுந்துபோய், தொலைகாட்சியை நிறுத்தினார்.

    அவ்வளவுதான். ஆத்திரம் பீறிட்டது ஆனந்துக்கு. “நீ டி.வி. பாக்கறச்சே, நான் நிறுத்தறேன் பாரு!” என்று உறுமினான்.

    நான் திகைப்புடன் அவனுடைய தாயை நோக்கினேன். `பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசு!’ என்று சொல்லிக்கொடுக்க மாட்டாளோ, ஒரு தாய்?

    அவளோ, “அவன் நீதிமான் (righteous) என்றாள், பெருமையாக. அதாவது, அவனுக்கு ஒரு நியாயம், அளவுகடந்த ஓசையைச் சகிக்க முடியாத தாத்தாவிற்கு ஒரு நியாயம் என்பதை எதிர்ப்பானாம்!

    லல்லி ஒரே குழந்தை இல்லை. ஆனாலும், உடற்குறையுடன் பிறந்தவள் என்பதால், பாட்டி வீட்டில் வளர்ந்தவளுக்கு விசேட கவனிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

    வேறு இடத்தில் இருந்த தாய்வீட்டுக்கு வந்தபோது, `எல்லாரும் என் தேவைகளைத்தான் கவனிக்க வேண்டும்,’ என்பதுபோல் நடந்துகொண்டாள் லல்லி. அவள் (மிக உரக்க) பேசுவதைத்தான் எல்லாரும் கவனிக்க வேண்டும். பிறருக்குப் பேச வாய்ப்பு கிடையாது. தன் விருப்பப்படி எல்லாம் நடக்காவிட்டால், ஆத்திரத்துடன் கத்துவாள். உடன்பிறந்தவளுடன் எதையும் பங்கு போட்டுக்கொள்ளவும் சம்மதிக்கவில்லை. விளைவு: லல்லிக்கும் பெற்ற தாய்க்கும் அவள் அதிகாரப் போக்கைக் குறித்து ஓயாத சண்டை.

    பகிரப் பழக்குவது

    பிறருடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை இரண்டு வயதிலேயே ஏற்படுத்த முடியும். ஒரு தட்டில் சில பிஸ்கோத்துகளைப் போட்டு, `எல்லாருக்கும் குடுத்துட்டு, நீயும் எடுத்துக்கோ,’ என்று அதை ஒரு சிறுவன் கையில் கொடுத்துப் பாருங்கள். தான் ஏதோ பெரிய வேலை செய்யும் பெருமிதத்துடன் அப்படியே செய்வான். யாராவது எடுத்துக்கொள்ள மறுத்தால், தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று அழுகை வரும்.

    பிறவி நடிகன்

    என் மாணவனான அப்துல் குடும்பத்தில் கடைசிக்குழந்தை. அம்மாக்கோண்டு என்ற ரகம். பள்ளிக்கூட நாடகங்களில் திறம்பட நடிப்பான். `அதனால் பெண்களுக்கு என்னைப் பிடிக்கிறது,’ என்று என்னிடம் வெட்கத்துடன் தெரிவித்திருக்கிறான்.

    பிரச்னை என்னவென்றால், தாயைப்போலவும், உடன் பயிலும் பதின்ம வயதுப்பெண்களையும்போல் எல்லாருமே தன்னைக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனிடம் இருந்ததுதான். யாராவது ஆசிரியர் திட்டிவிட்டால், `மூச்சு விட முடியவில்லை!’ என்று ஒரேயடியாகத் திணறுவதுபோல் நடிப்பான். ஒரு முறை நானே அவனை அவன் வீட்டில் உடனடியாகக் கொண்டுவிட நேர்ந்தது.

    அவனுடைய அண்ணன் உத்தியோகம் பார்ப்பவர். முகத்தில் வெறுப்புடன், `எல்லாம் அம்மா கொடுக்கும் இடம்!’ என்று முணுமுணுத்தார். பதறியவளாக, அருமைப்பிள்ளையின் முதுகைத் தடவிக்கொடுத்தாள் தாய்.

    இம்மாதிரி பல முறை அவன் நடந்திருக்கிறான் என்று பிறகு தெரியவந்தது. பிறருக்குத் தன்மேல் இரக்கம் சுரந்தால், அதை அன்பு என்று நினைப்பவர்கள் இந்தப் பையன் அப்துலைப் போன்றவர்கள்.

    ஒரு குடும்பத்திலோ, பள்ளியிலோ மிக புத்திசாலி என்று கருதி, ஒரு குழந்தைக்கு மட்டும் விசேட சலுகைகள் கொடுத்தால் இப்படித்தான் அதிகாரம் செய்வான். இத்தகையவர்களுக்கு அவர்களுடைய சுகம், சௌகரியம் – இதெல்லாம்தான் முக்கியம். பிறரைப்பற்றிய அக்கறை அறவே கிடையாது.

    அளவு கடந்த சலுகைகளை அளிக்கும் பெற்றோர், அடிப்படை சலுகைகளை மூர்க்கத்தனமாக மறுக்கும் பெற்றோர் – இருவகையினருமே குழந்தைகளுக்குத் தீங்கு இழைக்கிறார்கள், தம்மையும் அறியாது.

    கதை

    மன் லீ என்ற சீனப்பெண்ணின் பெற்றோர் தனியார் பள்ளிக்கூடத்தில் அவளைச் சேர்த்திருந்தார்கள். அவர்களுக்கு அதிகப் படிப்பில்லை. ஆனால் செல்வம் குவிந்திருந்தது. தங்களைப்போல் இல்லாது, மகளாவது கல்வியில் உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அதற்காக, எந்நேரமும் `படி, படி!’ என்றால், என்ன ஆகும்?

    தாம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாத மகளை மூன்று தினங்கள் ஓர் அறையில் பூட்டிவைத்த தாய், மகள் தலையில் இரும்புத்தடியால் அடிக்க முயன்ற தாய் ஆகியோரை நான் அறிவேன். இப்பெண்கள் ஒரு முறை நல்லவிதமாகத் தேர்ச்சி பெற்றுவிட்டால், தாய்க்கு கர்வம் எழும். ஆனால், அடுத்த முறை எல்லாவற்றிலும் மிகக் குறைந்த மதிப்பெண்கள்தாம் வாங்குவாள் மகள். அவ்வளவு மன இறுக்கம்.

    மன் லீக்குத் தன்னைப்போல் அடியோ, திட்டோ வாங்காத பிற மாணவிகளைக் கண்டால் பொறுக்காது. அவர்களுக்கு நேரிலும். இயலாவிட்டால் தொலைபேசிமூலமும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பாள்.

    பாதிக்கப்பட்ட ஒரு பெண் தலைமை ஆசிரியையிடம் புகார் செய்ய, `உனக்கு எதனால் பாதிப்பு?’ என்று அன்புடன் விசாரித்தாள் அவள். அப்பெண் அழுதபடி, தன் அவலக்கதையைக் கூறினாள். (மன இறுக்கத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களிடம் பேசினாலே போதும். தாமும் ஒரு பொருட்டு என்று பிறர் கருதவேண்டும் என்ற ஏக்கம்தான் அவர்களை ஆட்டுவிக்கிறது).

    பொறுப்பாகச் செயல்படுவது

    சில இல்லங்களில், `பெரியவன் ஆனதும், தானே தெரிந்துவிட்டுப்போகிறது!’ என்று எதையும் பழக்கமாட்டார்கள். எந்தப் பழக்கமும் தானே வருவதில்லை.

    தொலைகாட்சியில் நல்ல படம், அல்லது வீடியோ விளையாட்டுகளில் ஆழ்ந்துபோனதில் வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டது என்று காலங்கடந்து உணர்ந்து, ஆசிரியர் திட்டுவாரே என்று பயப்படும் சிறுவனுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்? அவன் தண்டனை பெறட்டும். அப்போதுதான் இன்னொரு முறை மறக்கமாட்டான்.

    `கணினி, நண்பர்களுடன் உரையாடுவது – எதுவாக இருந்தாலும், வீட்டுப்பாடம் செய்த பிறகுதான்,’ என்று ஒரு வரையறை வகுத்திருக்கலாமே!

    தொடருவோம்

    Share
  • ஜென் நிலை – ஜென்னி நிலை

    போராட்டக் காரராக இருப்பது எளிது. போராட்டக் காரரின் மனைவியாக இருப்பது அரிது. போராட்டக் காரரின் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பது அதனினும் அரிது. அதைவிடவும் அரிது போராட்டக் காரரின் நோய்வாய்ப்பட்ட குழந்தையின் தாயாக இருப்பது. அதைவிடவும் கொடிது போராட்டக் காரரின் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு வறுமை வயப்பட்ட தாயாக இருப்பது. அப்படிப் பட்ட ஒரு தாயின் கடிதத்தில் ஒலிக்கும் கதறல் இது.

    எங்களுடைய சிறு குழந்தை பிரான்சிஸ்கா, கடுமையான மார்ச்சளி நோயினால் படுத்துக் கொண்டு விட்டது. அது பாவம். மூன்று நாட்கள் எமனோடு போராடியது. அதனுடைய அவஸ்தை சொல்லி முடியாது. கடைசியில் அதனுடைய ஆயுள் முடிந்து விட்டது. எங்களோடு மற்ற மூன்று குழந்தைகளும் இருந்தன. பிரான்ஸிஸ்கா இறந்து போனதற்காக நாங்கள் அழுது கொண்டிருந்தோம். எங்களுடைய அதிகமான பணமுடை காலத்தில் அந்தக் குழந்தை இறந்து விட்டது. ஜெர்மானிய நண்பர்கள் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாதவர்களாக இருந்தார்கள். எங்களைப் போல தேசப் பிரஷ்டமடைந்து அருகாமையில் வசித்துக் கொண்டிருந்த ஒரு பிரெஞ்சு நண்பரிடம் சென்று என் குறையைத் தெரிவித்தேன். அவர் பெரிய மனது பண்ணி இரண்டு பவுன்டு கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு சவப் பெட்டி வாங்கினேன். அதில்தான் இப்போது என் குழந்தை சாசுவதமான நித்திரை செய்து கொண்டிருக்கிறது. அது பிறந்தபோது, அதற்குத் தொட்டில் இல்லை; இறந்த பிறகு அதற்குச் சவப் பெட்டி கிடைப்பது இத்தனை கஷ்டமாகி விட்டது” இதனை வரைந்தது உலகையே மாற்றி அமைத்த பொதுவுடைமைச் சிந்தனையைக் கொடுத்த கார்ல் மார்க்சின் காதல் மனைவி ஜென்னி மார்க்சு அவர்களின் விரல்களே.

    இன்றைய உலகின் மார்க்சிய தத்துவத்தைத் தந்தவர் கார்ல் மார்க்சு. அவரை தத்துவ மேதையாக ஆக்கித் தந்தவள் ஜென்னி மார்க்சு. ஜென்னியின் பெற்றோரும் கார்ல் மார்க்சின் பெற்றோரும் ட்ரியரில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசித்தார்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் அரசு பிரதம அதிகாரியாக இருந்தார். இவரது சகோதரன் பிரஸ்ஸிய அரசில் பிரதான அமைச்சராக இருந்தார். கார்ல் மார்க்சின் தந்தை பிரபலமான வழக்கறிஞராக இருந்தார். இரு வீட்டுக் குழந்தைகளும் ஒன்றாக உண்பதும் விளையாடுவதுமாக பழகி வந்தனர்.

    ஜென்னி நல்ல அழகி; மார்க்சு. மார்க்சு குழி விழுந்த கண்கள், கருத்த மேனி என்று அழகற்றவன். அவரது குழந்தைகளே மார்க்சை ‘மூர்’  என்று அழைப்பார்கள். அவரது தாடியும் மீசையும் மூர்க்கனாகத் தோன்றியதால் அப்படி அழைத்திருக்கலாம். ஜென்னி நல்ல குணவதி; மார்க்சு மகா முரடன்; ஜென்னியை மணம் புரிபவன் மகா பாக்கியசாலியாக இருக்க வேண்டும்; மார்க்சை மணம் புரிபவள் பாவப் பட்டவள் என்றெல்லாம் பேசிக்கொள்வார்கள். மார்க்சு ஜென்னியை விட நான்கு வயது இளையவன்.  ஆனால் எப்படியோ இந்த இருவருள்ளும் காதல் மலர்ந்து விட்டது.

    சுயமாக சம்பாதிக்கும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்று உறுதியேற்று பெர்லின் சர்வகலாசாலையில் தன் கல்வியில் ஈடுபட்டார் மார்க்சு. திருமணம் ஆகாமல் இருந்த ஜென்னியை, ‘ஜென்னி ஒரு வாழா வெட்டி’ என்று உற்றாரும் உறவினரும் ஏச, அத்தனையையும் செவியில் ஏற்று மார்க்சுக்காகப் பொறுமையாக ஜென்னி ஏழு ஆண்டு காலம் காத்திருந்தாள்.  மார்க்சு பணி நிமித்தமாகப் பாரிசு சென்றான். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மார்க்சு ஓர் பத்திரிகையைத் தொடங்கினார். நிதி நிலை ஓரளவு திருப்திகரமாக இருக்கும் காலத்தில் ஒரு வழியாக 1843 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பெர்த்தா ஜூலியா ஜென்னிக்கும் கார்ல் மார்க்சுக்கும் திருமணம் நடந்தேறியது. அப்போது மார்க்சின் வயது 25; ஜென்னியின் வயது 29.

    இதற்கிடையில் மார்க்சின் தந்தை இறந்து விட்டார். “ஜென்னி உன்னை விவாகம் செய்து கொள்வதன் மூலம் மகத்தான  தியாகத்தைச் செய்தவளாகிறாள்” மார்க்சின் தந்தை மார்க்சுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இது. மணமாகிறது. ஆனால் மார்க்சிடம் மனமாற்றம் இல்லை. எப்போதும் எழுத்து படிப்பு என்று இருக்கிறான். ஜென்னியும் தன் காதல் கணவனின் சிந்தனை சித்தாந்தத்தை ரசித்துக் கொண்டிருக்கிறாள். உலக சிந்தனை என்று ஏதுமற்ற அவனை அப்படிப்பட்ட உயர் சிந்தனையில் புகுத்தியவளே அவள்தானே,

    ஜென்னியின் தந்தை நீங்கள் “இருவரும் தேனிலவு சென்று வாருங்கள் என்று அனுப்புகிறார். தேனிலவுக்குப் புறப்படும் போது மார்க்சு 10 பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டார். ஆல்ப்ஸ் மலையின் அழகிய சிகரங்களில் சுற்றிச் சுழல வேண்டிய காதலர்களின் விழகள் அச்சடித்தப் புத்தகங்களைச் சுற்றி சுழன்று வந்தன. “நாம் இருவரும் சேர்ந்து படிக்கலாம்” என்று ஜென்னியும் மார்க்சின் சிந்தனையில் கலந்து கொண்டாள். இருவரும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து நூல்களைப் படித்துக் கொண்டிருப்பார்களாம்.

    புரட்சித் துறவி வள்ளலார் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க தம் தமக்கையின் மகள் தனக்கோடி அம்மையாரை மணம் முடிக்கிறார். மணமக்களை முதலிரவுக்குத் தயாரிக்கிறார்கள். மணப்பெண் அறையில் காத்திருக்கிறார். வள்ளலாரோ கையில் திருவாசகத்தை ஏந்தி அறைக்குள் புகுகிறார். மங்கலாக எரிந்த விளக்கைத் தூண்டி பிரகாசமாக எரியச் செய்கிறார். தனக்கோடி அம்மையாரை அருகில் அமரச் சொல்கிறார். விடிய விடிய திருவாசகத்தை முற்றோதல் செய்து முடிக்கிறார். வள்ளலார் தனக்கோடி அம்மையாரின் தேனிலவினைத் திருவாசகத் தேனிலவு என்று கூறுவார் ஊரனடிகள். அதே போல ஹெகலின் தத்துவங்களைப் படித்துக் கொண்டிருந்த மார்க்சு ஜென்னியின் தேனிலவினை ஹெகல் தேனிலவு என்று சொல்வது பொருத்தமாகும்.

    ஆனால் வள்ளலாருக்கும் மார்க்சுக்கும் வேறுபாடு உண்டு. வள்ளலார் துறவுக்காக மனைவியைத் தயாரித்தார். மார்க்சு காதலோடு ஜென்னியுடன் இல்லறம் நடத்தினார். ஜென்னி மார்க்சுடன் தத்துவம், சமத்துவம் பேசிக்கொண்டும் மார்க்சு பேசுவதைக் கேட்டுக் கொண்டும் மகிழ்ந்திருந்தாள். இந்த நிலையில் ஏழு குழந்தைகளுக்குத் தாயானாள் ஜென்னி. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஏழைகளின் ஒரே பொழுது போக்கு காமம் என்றாகிவிடுகிறது பல நேரங்களில். இவர்களோ காதல் மணம் புரிந்த ஏழைகள்.

    ஜென்னியின் தந்தை பெரும்பணக்காரர். வீட்டில் எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் வேலைக்கு ஆட்கள். வசதி… வசதி. ஏழ்மையின் அகோரப் பிடியில் சிக்குண்டு நான்கு ஆண் குழந்தைகள் உயிர் இழந்தன என்று ஜென்னி கடிதம் ஒன்றில் எழுதுகிறாள். இத்தனை வறுமையில் கணவனை ஏதாவது வேலைக்குச் சென்று பணம் ஈட்டு என்று அவள் ஒரு போதும் சச்சரவு செய்ததில்லை ஜென்னி. மாறாக…..

    “தினந்தோறும் நாங்கள் எந்த மாதிரியான வாழ்க்கையை அனுபவித்து வந்தோம் என்பதற்கு உதாரணமாக எங்களுடைய ஒரு நாள் வாழ்க்கையை மட்டும் இங்கு வருணித்துக் காட்டுகிறேன். என் குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு  தாதியை அமர்த்திக் கொள்ளலாம் என்றால் அதற்கு இங்கு அபாரமான செலவு ஆகும். பொறுக்க முடியாத மார்பு நோயையும் முதுகு வலியையும் பொறுத்துக் கொண்டு என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அழகும் துரதிஷ்டமும் வாய்ந்த அந்தக் குழந்தை, என்னிடத்திலிருந்து எவ்வளவு பால் குடித்ததோ அவ்வளவு என்னுடைய துக்கத்தையும் சேர்த்துக் குடித்தது. இதனால் அது சதா அரட்டிக் கொண்டே இருந்தது. இரவும் பகலும் எப்பொழுதும் இசிவு, வலிப்பு அதற்கு வந்து கொண்டே இருந்தது. அது பிறந்தது முதல் ஒரு நாளாவது இரவு பூராவும் தூங்கினதே கிடையாது. அது உயிரோடு போராடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அதற்கு வலிப்பு ஏற்பட்டது. வலிப்பு ஏற்படும்போது அது பால் குடித்துக் கொண்டிருந்தது. அதனால் என் மார்பு புண்ணாகி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இப்படி அவஸ்தைப் பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கையில் எங்கள் வீட்டின் சொந்தக்காரி பிரசன்னமானாள். வீட்டு வாடகையான 5 பவுண்டுகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். உடனடியாக எப்படி கொடுக்க முடியும். ஏலம் போடுகிற தரகர்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். எங்கள் துணி மணிகள், கைக்குழந்தையின் தொட்டில் முதல் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான் வரை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் பணத்தைக் கொடுக்க வில்லையென்றால் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விடுவோம் என்று அவர்கள் பயமுறுத்திச் சென்றார்கள். ஏலம் போடும் தரகர்கள் வீட்டில் நுழைந்து விட்டார்கள் என்பதைக் கேட்டு, சாமான்கள் கொடுத்து வந்த எல்லோரும் தங்களுடைய பாக்கிக்காக எங்களை நெருக்கினார்கள். எங்கள் படுக்கைகள் அனைத்தையும் விற்று வைத்தியன், ரொட்டிக்காரன், கசாப்புக்காரன், பால்காரன் முதலியவர்களின் பாக்கிகளை எல்லாம் தீர்த்து விடலாம் என்று தீர்மானித்தோம். பொருட்களைத் தெருவிலே கொண்டு போய் கை வண்டியிலேற்றினோம். அந்தச் சமயம் சூரியன் அஸ்தமித்து விட்ட சமயம். இருட்டாகி விட்டது. இருட்டு வேளையில் சாமான்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வது (இங்கிலீஷ் சட்டப்படி) சட்ட விரோதம். உடனே வீட்டுச் சொந்தக்காரன் சில போலிஸ்காரர்களுடன் வந்து விட்டான். நாங்கள் தப்பித்து வெளிநாடு செல்ல முயல்வதாகவும் அவருடைய சாமான்களும் அந்தக் கை வண்டியில் இருக்கக் கூடுமென்றும் தாறுமாறாகப் பேசினார். அவ்வளவுதான்; ஐந்து நிமிடத்திற்குள் இருநூறு அல்லது முந்நூறு பேருக்கு மேற்பட்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டு முகப்பில் கூடிவிட்டது. படுக்கைகள் திரும்பவும் வீட்டுக்குள் கொண்டு வரப் பட்டன. மறுநாள் பொழுது விடிந்த பிறகுதான் அவைகளை நாங்கள் விற்பனைக்கு அனுப்ப முடிந்தது. இங்ஙனம் எங்கள் தட்டு முட்டு சாமான்களை விற்று கடன்களை அடைத்தோம். ஆனால், இந்தச் சில்லரைத் தொந்திரவுகள் என் மன உறுதியைக் குலைத்துவிட்டனவென்று நீங்கள் கருத வேண்டாம். ஒருவித பாக்கியசாலிகளிலே நான் ஒருத்தி. நான் அதிர்ஷ்டக் காரி, ஏனென்றால் எனது கணவர் எனது வாழ்க்கையின் மூலாதாரம்” என்று எழுதுகிறாள். அவளது காதலின் கம்பீரமும் உலக நேசிப்பின் உயர்வும் இப்படி எழுத வைத்தது.

    வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்கள், மார்க்சின் கோட்,  குழந்தைகளின் பூட்சு அனைத்தையும் அடகு வைத்து வாழும் வாழ்க்கையிலும் மார்க்சின் காதலை மட்டும் எதற்கும் அடகு வைக்காமல் இருந்தாள் ஜென்னி. புழுதி மண்ணில் புரண்டாலும் மார்க்சு வாணுயர்ந்த தத்துவத்தைத் தந்தே தீர்வது என்னும் தன் கொள்கையிலிருந்து மாறவே இல்லை. ஜென்னியும் மார்க்சு அப்படி மாறிவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன் இருந்தாள்.

    ஒரு பெண்ணுக்கு ஆகப் பெரிய சங்கடம் அவளை விபச்சாரி என்று கைது செய்வது. அந்தக்  கொடுமையையும் அனுபவித்தவள் ஜென்னி. அரசுக்கு எதிராகப் புரட்சிக் கருத்துகளை எழுதியும் பேசியும் வந்ததாகச் சொல்லி 24 மணி நேரத்திற்குள் மார்க்சு பெல்ஜியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது பெல்ஜிய அரசு. புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போதே காவலர்கள் சிலர் வந்து மார்க்சை உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி கைது செய்தனர். கணவனைக் காப்பாற்ற முடியாதா என்னும் ஏக்கத்தோடு யாருமற்ற அநாதையாய் பெல்ஜியம் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஜோத்ரானந் என்பவரைப் பார்த்து உதவி கேட்கச் சென்றாள். திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டு வாயிலில் காவலர் ஒருவர் இருந்தார். உங்கள் கணவரைப் பார்க்க வேண்டுமானால் என்னுடன் வாருங்கள் என்று  வாஞ்சையோடு அழைத்தார். ஆசையோடு உடன் சென்ற ஜென்னி அங்கு விசாரனைக்குட்படுத்தப் பட்டு விபச்சாரி என்று சிறையில் அடைக்கப் பட்டார். அவள் செய்த குற்றம் அப்போதும் மார்க்சை மனமாற காதலித்ததும் அவரது செயல்பாடுகள் சரியானது என்று பேசியதுமே. “விசாரனையெல்லாம் முடிந்து அவர்கள் வெளியில் வரும்போது நாட்டை விட்டு வெளியேற கொடுத்திருந்த 24 மணி நேரம் முடிவடைந்திருந்தது. ஆகையால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட எடுத்துக் கொள்ளாமல் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது” என்று மார்க்சு ஒரு பத்திரிகையில் எழுதியிருந்ததைப் பார்க்கும் போது மார்க்சுதான்  வேதனை பட்டார். ஆனால் மார்க்சின் காதலுக்காக ஜென்னி இதனையெல்லாம் சுகமாகச் சுமந்திருந்தாள் என்பதே உண்மை.

    பெல்ஜியத்திலிருந்து பாரிசு மாநகரம் வந்தடைந்து அப்பாடா என்று இழுத்து நீண்டதொரு மூச்சு விட்டிருப்பார்கள். அவ்வளவுதான். 1849 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மார்க்சு பாரிசு வருகின்றார். ஜூலை மாதம் ஜென்னியும் குழந்தைகளும் பாரிசு வந்தடைகிறார்கள். இனி நீண்ட நாட்கள் மார்க்சுடன் சேர்ந்து காதல் வாழ்வு வாழப் போகிறோம் என்று கனவில் மூழ்கி இருந்தாள் ஜென்னி. அடுத்த ஒரு மாதத்தில் அந்தக் கனவும் கலைந்தது. பொழுது புலர்ந்த போது ஜென்னியின் வாழ்வில் மீண்டும் இருள் மண்டியது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் மார்க்சு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்னும் உத்தரவை ஒரு காவலர் கொண்டு வந்து கொடுத்தார். விழி நீருடன் வழியனுப்பி வைப்பதைத் தவிர என்ன செய்வாள் அவள்? 1849 ஆகஸ்டு 24 மார்க்சு பாரிசிலிருந்து கிளம்பி இலண்டன் அடைந்தார். எத்தனை அவமானங்கள்? எத்தனை நாடுகள்? மீண்டும் ஒரு மாதப் பிரிவின் பின் நாடு கடத்தப் பட்ட தன் காதல் கணவனை அடைய குழந்தைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தாள் ஜென்னி. இப்போது இலண்டன். இங்குதான் ஜென்னியின் மூன்று குழந்தைகள் இறந்தன.

    ஜென்னியைப் பற்றி மார்க்சின் நண்பர் ஒருவர் இப்படி கூறுகின்றார். “மார்க்சின் மனைவி ஃப்ருஷ்ய மந்திரியான வெஸ்ட் பாலன் பிரபுவின் சகோதரி, நன்றாகப் படித்தவள். வசீகரமான சுபாவமுடையவள். இந்த அநாகரிக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டு விட்டாள் காரணம் தன் கணவன் மீதுள்ள காதல்தான். இப்போது இவளுக்கு வறுமை வாழ்க்கை என்பது சகஜமாகிவிட்டது”

    மேல் சட்டையை அடகு வைத்துவிட்டு வெளியில் செல்லாமல் இருக்கும் கணவன், சோறில்லாமல் ஒட்டிய வயிற்றோடு குழந்தைகள், பாக்கிக்காக வீட்டின் முன்பு நிற்கும் கடன் காரர்கள், மார்க்சு வீட்டில் இருக்கும் போதே ‘அப்பா வீட்டில் இல்லை’ என்று கடன் காரர்களிடம் பொய் கூறப் பழகி விட்ட குழந்தைகளின் வெள்ளை மனம், கடன் காரர் ஒருவருக்கு அஞ்சி ஊரை விட்டே ஓடிய மார்க்சின் கடன் பிரச்சனை இத்தனையும் ஜென்னியை நோயாளிக்கியது.

    எஞ்சிய நான்கு குழந்தைகளில் ஒர் ஆண் குழந்தையான எட்காரும் இறந்துவிட்டான். மார்க்சுக்கும் கண் வலி, வயிற்றுக் கோளாறு; உடலெல்லாம் கொப்புளங்கள்; காசம் என்று நோயாளியானான். ஜென்னியிடம் பற்றிக்கொண்ட மார்க்சின் ஆழமான காதல் போலவே அவனது நோயும் அவளைப் பற்றிக்கொண்டது. கல்லீரல் புற்று நோயும் பற்றிக்கொண்டது. 1881 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் ஜென்னி பூவுலக நரக  வாழ்க்கையிலிருந்து விடுபட்டாள்.

    ஏங்கெல்ஸ் இல்லை என்றால் மார்க்சின் தத்துவம் உயிர் பெற்றிருக்காது. ஜென்னி இல்லையென்றால் கார்ல் மார்க்சே உயிரோடு இருந்திருக்க மாட்டார். ஆம் ஜென்னி இறந்த போதே மார்க்சும் இறந்து விட்டார். அதன் பின் அவன் வாழ்ந்த பதினைந்து மாத காலங்கள் இறந்த வாழ்க்கையே அன்றி இருந்த வாழ்க்கை இல்லை என்று  மார்க்சின் உற்ற நண்பன் ஏங்கெல்ஸ் கூறுகிறான்.

    தன் காதல் கணவன் மார்க்சினால் தன் ஈமச் சடங்கினைக் கூடச் செய்ய முடியாமல் போகும் என்று எப்படி ஜென்னி நினைத்திருப்பாள். அதற்குக் கூட இயலாத நிலையில் நோய் வாய்ப்பட்டான் மார்க்சு. காதல்….. மார்க்சின் மீது ஆழமான காதல்.. அவனுக்காக எதையும் செய்யும் காதல்… என்று காதலைத் தவிர எதுவும் நினைக்காதவள் ஜென்னி. ஜென் நிலை என்பது எதைச் செய்கிறோமோ அதில் மட்டுமே முழுக் காதலோடு இருப்பது. ஜென்னி மார்க்சைக் காதலிக்க மட்டுமே இவ்வுலகுக்கு வந்தவள். காதலித்தாள். ஆழமாகக் காதலித்தாள்….. அணு அணுவாகக் காதலித்தாள். தீயாய்ச் சுடும் வாழ்க்கையைத் தேனாய் நினைத்தாள்.. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒர் பெண் இருக்கிறாள் என்று கூறுவது வெற்றியாளர் கார்ல் மார்க்சைப் பொறுத்த மட்டில் சத்திய வாக்கு! உயர்ந்த காதலால் உலகுக்கு மாதிரியாக மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ஜென்னி

     ஆதிரா முல்லை

    (முனைவர் ப. பானுமதி)

    உதவிப் பேராசிரியர்

    வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி

    சென்னை 600 102

    Share
  • சொந்தங்கள் எத்தனையோ !

    பருவத்தில் பட்டாம்பூச்சிக் கனவுகள் சொந்தங்களே

    படுக்கையில் பசிக்கின்ற இன்பங்கள் சொந்தங்களே

    பாசத்தில் கருவாகி உருவாகும் சொந்தங்களே

    பாருள்ள உயிரெல்லாம் பார்வைக்குச் சொந்தங்களே !

     

    தோள்தூக்கி வளர்த்த உறவெல்லாம் சொந்தங்களே

    துயர்நீக்க கைகொடுக்கும் நட்பெல்லாம் சொந்தங்களே

    துள்ளியாடும் நேரத்தில் துணையிருந்தோர் சொந்தங்களே

    துணிவோடு வாழவைத்த துயரங்கள் சொந்தங்களே !

     

    நடுவழியில் நல்வணக்கம் சொல்லுபவர் சொந்தங்களே

    நாற்றோடு ஏர்பிடிக்கும் நல்நெஞ்சங்கள் சொந்தங்களே

    நாம்வாழ உழைக்கின்ற தோழமைகள் சொந்தங்களே

    நாலுபக்கம் தோள்தூக்கிக் கதைமுடிப்பார் சொந்தங்களே.

     

    நீர்வளமும் நிலவளமும் நாம்பெற்ற சொந்தங்களே

    நீலவானில் மின்மினிகள் காட்சிக்குச் சொந்தங்களே

    நிகழ்வோடு நேற்றும் நாளையும் சொந்தங்களே

    நிலையாத வாழ்வும் நித்தியமும் சொந்தங்களே

     

    பூமணமும் புலன்வளர்க்கும் காய்கனிகள் சொந்தங்களே

    புள்ளினமும் புவிவளரும் உயிரினங்கள் சொந்தங்களே

    புரியாத மொழிபேசும் பாரனைத்தும் சொந்தங்களே

    புரிந்துவிட்டால் சுமையில்லை சுகமான சொந்தங்களே !

    Share
  • நயமான நான்கு மணிகள்!

    -மேகலா இராமமூர்த்தி

    நான்மணிக்கடிகை எனும் தமிழ் நீதிநூல் ஒன்றிருக்கின்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படும் இது இரத்தினத் துண்டுகள் போல் நான்கு அருமையான நீதிகளைச் சொல்லிச்செல்கிறது. அதனால் பெற்ற காரணப்பெயரே நான்மணிக்கடிகை என்பது.

    அதிலிருந்து ஓர் அழகிய பாடல்!

    கொடுப்பின் அசனங் கொடுக்க – விடுப்பின்
    உயிரிடை யீட்டை விடுக்க வெடுப்பிற்
    கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
    வெகுளி கெடுத்து விடல். 

    ஒருவருக்கு நாம் ஒன்றைக்கொடுக்க விரும்பினால் அவர்கள் வயிறுநிறைய உணவைக் கொடுக்க வேண்டுமாம். ஏன்? போதும் எனும் நிறைவு ஒருவனுக்கு உணவில் மட்டுந்தான் ஏற்படும். மற்ற எதிலும் ஏற்படுவதில்லை!

    ஒன்றை விட்டுவிட வேண்டுமென்றால் உயிர்மீதுள்ள பற்றை விற்றுவிட வேண்டுமாம். நல்ல கருத்துதான்! ஆனால் அஃது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்றே தோன்றுகிறது. பின்னே…நூறுவயது வாழ்ந்தாலும் மனிதர்க்கு வாழ்ந்தது போதும் எனும் எண்ணமும் நிறைவும் வரக்காணோமே! 

    மனிதனுக்கு உயிர்மீதிருக்கும் பற்றினை வள்ளுவப் பெருந்தகை அழகான உவமை ஒன்றின் வாயிலாக விளக்குவார். சூதாடுகின்ற ஒருவன் அதில் எத்தனை முறை தோற்றாலும் அதனைப் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் விருப்பதோடு சூதாடுவதைப் போல, (தருமபுத்திரனைவிடவா இதற்குச் சான்று வேண்டும்?), எத்தனை துன்பம் உயிருக்கு வந்தாலும் உயிர்மீதிருக்கும் பற்றும் காதலும் மனிதர்க்குப் போவதில்லை என்கிறார். 

    இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற் றுயிர். 

    அடுத்து, நாம் ஒருவருக்கு உதவவேண்டும் என்று விரும்பினால் நம் சுற்றத்தாரிலேயே ஏழ்மை நிலையில் இருப்பவர்க்கு உதவ வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை. ஆனால் நடைமுறை என்ன? சுற்றத்தாரில் யார் நம் ’ஸ்டேட்டஸுக்கு’ ஏற்றாற்போல் இருக்கிறார்களோ அவர்களோடு மட்டும் நெருங்கியிருப்பதும், உடன்பிறந்தாரே ஆயினும் ஏழைகளாக இருந்தால் அவர்களைக் கழற்றிவிடுவதுமே இந்நாளில் அதிகம் காணக்கூடியதாய் இருக்கின்றது.

    அவ்வளவு ஏன்…இல்லானை இல்லாளுக்கும் பிடிப்பதில்லை; ஈன்றெடுத்த தாய்க்கும் பிடிப்பதில்லை. அப்புறம் மற்றவருக்கு எப்படிப் பிடிக்கும்?

    ஆனால், அறவழியில் நடக்கவிரும்புவோர் வறுமையில் உழல்வோர்க்கு உதவிசெய்து அவர்களைக் கைதூக்கி விடுவதையே விரும்புவர் என்ற அடிப்படையில்தான் இந்தப்பாடலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    சரி…ஏதாவது ஒன்றை நாம் ஒழிக்க வேண்டுமென்றால் எதை ஒழிப்பது?

    இதற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லக்கூடும். சிலர் கடனை ஒழிக்க வேண்டும் என்பார்கள்; வேறுசிலர் தமக்குத் தொல்லைதரும் எதிரிகள் கூட்டத்தை ஒழிக்கவேண்டும் என்பார்கள். ஆனால் நான்மணிக்கடிகை சொல்வது, நம்மிடம் இருக்கும் சினத்தை நாம் ஒழிக்கவேண்டும் என்பதே.  இந்தச் சினம்தானே எல்லாத் தீச்செயல்களுக்கும் ஆதிமூலமாய் அமைகின்றது?

    ”சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்று அதன் இயல்பைக் கூறும் வள்ளுவர்,

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லும் சினம் என்று எச்சரித்திருப்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    எனவே நம்மை நாடிவரும் இரவலர்க்கு உணவுதந்து, நிலையில்லா மனித உயிர்மீது நாம் கொண்டிருக்கும் பற்றைச் சற்றே குறைத்து, வறுமையில் வாடும் சுற்றத்தார்க்கு நம்மால் இயன்றஅளவில் உதவி, நண்பரையும் பகைவராக்கும் சினத்தை ஒழித்து நன்முறையில் வாழ்ந்தால் வீடும் நாடும்  நலம்பெறும் என்பதே நான்மணிக்கடிகை நமக்குச் சொல்லும் நன்னெறி!

     

     

     

    Share
  • புதிருக்குப் பதில்தேடி ..,,,

    க. பாலசுப்பிரமணியன்

     

    கல்லுக்குள் சிலையாய் கதிருக்குள் ஒளியாய்

    வில்லுக்குள் விசையாய் வித்துக்குள் சத்தாய்

    காற்றுக்குள் இசையாய் கற்பனையில் புதிராய்

    காலத்தின் அசைவாய் உருக்கொண்ட அருவே !

     

    சொல்லுக்குள் பொருளாய் சுவையெல்லாம் புதிதாய்

    வயிற்றுக்குள் பசியாய் வருகைக்குச் செலவாய்

    விடியலுக்கு முடிவாய் முடிவுக்குப்பின் முதலாய்

    குறைவுக்கு நிறைவாய் குடிகொண்ட திருவே !

     

    கோளெல்லாம் உனதோ கும்மிருட்டே முதலோ

    ஒளியாக வந்தாயோ ஒளிர்விட்டு நின்றாயோ

    வளிதன்னை வளர்த்தாயோ வானகத்தில் நின்றாயோ

    மெய்யென்ன யானறியேன் மேய்ப்பவனே நீதானோ?

     

    கற்பனைக்குள் நின்று கதைகள்பல சொல்லிட்டாய்

    கல்லுளிக்குள் மறைந்து கலைகள்பல படைத்திட்டாய்

    கலையாத மோனத்தில் கடவுளென்றே அமர்ந்திட்டாய்

    சிலையாக நான்நின்று சிந்தனையில் தவிக்கின்றேன் !

     

    ஒன்றோ இரண்டோ உருவங்கள் எத்தனையோ

    தாயோ தந்தையோ தனயனோ தூதுவனோ

    அன்றோ என்றோ எங்கிருந்துவந்த நன்றோ ?

    இன்றே வருவாய்அறிவாய் எனையாளும்புதிரே !

    Share
  • தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலை

    சேசாத்திரி பாஸ்கர்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலையைக் காட்டுகிறது. போராட்டம் உச்ச நிலையை எட்டிய நிலையில் காவல்துறை சுதாரித்துக் கொண்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வரத் தவறியது பெரும் தவறு . இரண்டு சாமானியன் சண்டையிட்டுக் கொள்ளும்போது உணர்ச்சி மேலோங்கி வன்முறை நிகழலாம் . ஆனால் காவல் துறையினர் சட்டென உணர்ச்சி வசப்பட்டு பதிலுக்குப் பதில் வன்மத்தில் இறங்கியது கொடூரம் .போரட்டக்காரர்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களா என்ன ? இராணுவத்தில் தான் எதிரி சுடப்பட்டு கீழே வீழ்ந்து மடிய வேண்டும் என்ற நியதி உண்டு . இவர்கள் எல்லோரும் மண்ணின் மைந்தர்கள் .இவர்கள் கோபத்தில் எடுத்த ஆயுதம் கற்களும் பாட்டில்களும் தான் . சில இடங்களில் பெட்ரோல் குண்டு . அவர்கள் செய்ததை ஞாயப்படுத்தவில்லை .அவர்களைச் சமாளிப்பது பெரிய காரியமில்லை என எல்லோருக்கும் தெரியும் . ஆனாலும் உணர்ச்சி மேலோங்கி காவல்துறை இயங்கியது மிகத் தவறு. ஒரு வன்முறை கூட்டத்தில் முதல் பிரயோகம் தடியடி .அதுவும் கால்களில் தான் நிகழ்த்த வேண்டும் . மிஞ்சிப் போனால் பிருஷ்டத்தில் அடிக்கலாம்சே. வன்முறையைக் கட்டுப்படுத்தச் செய்ய வேண்டிய முதல் பாடம் இது . அப்போதும் கூட்டம் கலையவில்லையெனில் டியர் காஸ் என சொல்லப்படும் கண்ணீர் புகைக்குண்டை பிரயோகம் செய்ய வேண்டும் . இதில் பெரும்பாலும் கூட்டம் கலைந்து விடும் . அல்லது பலகீனம் ஆகி விடும் . இதுவும் செய்து வன்முறை அடங்கவில்லை எனில் தான் துப்பாக்கிச் சூட்டை பிரயோகம் செய்ய வேண்டும் . அப்போது கூட ஒலி பெருக்கியில் அறிவித்து விட்டு அதனைச் செய்ய வேண்டும் . அப்படிச் சுடும்போது கூட கால்களை நோக்கித் தான் சுட வேண்டும் . இதை எந்தச் சூழலிலும் கடை பிடிக்க வேண்டிய நிர்பந்தம் காவலர்க்கு என்றும் உண்டு . கலவர பூமியில் இதை எல்லாம் பற்றி அவர்கள கவலைப்படவில்லை . ஒரு பெரிய அதிகாரிகளின் படை இருந்திருப்பின் ஒரு வழிகாட்டுதல் இருந்து இருக்கும் . இதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு என்று யார் காதில் பூ சுற்றுகிறார்கள் ? கால்களை நோக்கிச் சுட வேண்டிய காவலர்கள் ஏன் வண்டியின் மேல் நின்று குறி பார்க்கிறார்கள் ? தீய சக்தியும், எதிர்கட்சிகளும் செய்த சதியெனில் அந்த மாப்பிள்ளை இளைஞன் என்ன நக்சல்பாரியா? வாயில் சுடப்பட்டு இறந்த அந்த இளம் பெண் எந்த கட்சி ? மற்ற எல்லா நேரத்திலும் காவல்துறை எல்லா நிகழ்வுகளிலும் அங்கு பொருத்தப்பட்டு உள்ள காமிராப் பதிவை ஆராயுமே ? அதை ஏன் செய்ய முனையவில்லை ? முடிவுக்கு வந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் சரி, ஆலையின் நூறு நாள் போராட்ட நிகழ்விலும் சரி காவல்துறை சகிக்காமல் செய்த ஒரு காரியம் தான் இந்த எதிர் வினை. எனக்கு என்னவோ இந்த காவல் வன்முறைக்கும் அந்த ஆலைக்கும் சம்பந்தம் இருக்கும் எனத் தோன்றுகிறது .இல்லாவிட்டால் சுமார் அஞ்சாயிரம் கூடிய கூட்டத்தைக் கூட சமாளிக்க முடியாத அளவுக்கா காவல்துறை பலகீனமாக இருக்கிறது ?இந்த வன்முறையை நினைத்துப் பார்க்கும் போது ஒரு வேளை இதே மனப்பான்மை தான் அவர்களுக்கு ஜல்லிக்கட்டிலும் இருந்திருக்கக் கூடும் என நினைக்கத் தோன்றுகிறது. அதிகாரிகளை மாற்றினால் சம்பவம் மறந்தா போய்விடும் . ஒன்று நிச்சயம் .இந்த அரசின் காவல்துறை க்ஷீன நிலையை எட்டி நாளாகி விட்டது . இவர்களுக்குத் தங்க வீடு , சீருடை தொகை, அதிகாரம் , போக்குவரத்துக்கான வண்டி, இவர்களின் ஷூக்களுக்கு பாலிஷ் தொகை எனப் பெரிய கௌரவம் கொடுத்தும் கூட இவர்கள் மக்கள் நண்பர்களாக இன்னும் மாற முடியவில்லை. Tamilnadu has Become a state of Police Raj.

    Share