சொந்தச் சிறகுகள்
முனைவர் இரா.முரளி கிருட்டினன்
உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சி்க் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி-2
பறக்க முடியவில்லை என்பதற்காக
எந்தப் பறவையும்
சிறகுகளை உதிர்ப்பதில்லை
நீ மட்டும் ஏன்
தன்னம்பிக்கையை உதிர்க்கிறாய்
சோம்பலாய் இருந்தால்
தனிமை கூட சிறை தான்
புறப்படு
தென்றலாகவோ
புயலாகவோ
இல்லை
காற்றாக
உயிர்மூச்சாக
இயங்கு…
பூமிப் பந்தைப் பார்
இயங்கிக் கொண்டு
இருக்கிறது
அதன் மேல் ஏன்
தூங்கிக் கொண்டிருக்கிறாய்…
ஓடும் குதிரையின்
பிடரி போல
அங்கும் இங்கும்
அலையாதே
சிங்கத்தின் பிடரி போல்
சிலிர்ப்போடு இரு.
வறுமை யானையென்றால்
அடக்கும் அங்குசமாய் இரு
வெற்றி கனியென்றால் அதை
உண்ணும் பறவையாய் இரு…
தோல்வி ஒன்றும் எட்டிக்காயல்ல
அமிழ்தம் அடைந்து பார்..
சூரியன் சுடும் தான்
இருந்தாலும் பீனிக்ஸ் விடுவதில்லையே..
நீ மட்டும் ஏன் ….
சொந்த சிறகுகளை
அடமானம் வைக்கிறாய்….
இயங்கிக் கொண்டே இருப்போம்
ஒரு வேளை
மரணித்துப்போனால்
மண்ணுக்குள்
விதையாக மட்டும்.
smrmurali@gmail.com