Blog

  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 3

    -மேகலா இராமமூர்த்தி

    இளமையும் செல்வமும் இந்த உடம்பும் நில்லாது அழியும் இயல்புடையன. ஆகையால், செல்வமும் அதைக்கொண்டு நற்செயல்கள் செய்வதற்கான உடல்வன்மையும் இருக்கும்போதே வண்மையில் (வள்ளன்மை) ஈடுபடவேண்டும் என்பதை நாலடியார் தொடர்ந்து வலியுறுத்துகின்றது.

    அடைதற்கரிய இந்த மானுட உடலைப் பெற்றவர்கள், அதன் பயனாகக் கொள்ளத்தக்க அறச்செயல்களை தம்மால் இயன்ற அளவில் செய்துமுடிக்கவேண்டும். எப்படியெனில், கரும்பை ஆட்டி அதன் சாற்றை எடுத்துச் சக்கையை விட்டுவிடுதல்போல், இந்த உடலை வருத்திப் பிறர்க்கு இயன்ற அளவில் அறச்செயல்களைச் செய்தல் வேண்டும். இல்லையேல் கரும்பின் சக்கைபோல் இவ்வுடம்பும் பயனின்றிக் கழியும் என்கிறது இப்பாடல்.

    அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
    பெரும்பயனும் ஆற்றவே கொள்க – கரும்பூர்ந்த
    சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
    கோதுபோல் போகும் உடம்பு.
    (நாலடி – 34)

    எனவே பெறற்கரிய மக்களுடம்பைப் பெற்றவர்கள், கரும்பைப் போல் தம்முடலை வருத்தி, நற்செயல்களைச் செய்துமுடித்தல் வேண்டும்.

    இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
    பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
    ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
    மருவுமின் மாண்டார் அறம்.
    (நாலடி – 36)

    எனும் நாலடியார், எமன் வருவது இன்றோ அன்றோ என்றோ என்று ஐயப்பட்டுக்கொண்டிருப்பதில் நாளைக் கடத்தாமல் அவன் நம் பின்னாலேயே இருக்கிறான் என்பதை உணர்ந்து, தீய செயல்களை நீக்கி மாட்சிமைப்பட்ட அறச்செயல்களை ஒல்லும் வகையிலெல்லாம் மருவிச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.

    இளையோர் முதியோர் பார்த்தோ, நாள் கிழமை பார்த்தோ மறலி வருவதில்லை. எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பற்றிச் செல்லும் அறனில் கூற்றுவன் அவன். ஆகையால் அவன் வரவு குறித்து ஆராய்ச்சி செய்வதினும், நற்செயல்கள் ஆற்றுவதில் காலத்தையும் பொழுதையும் பயனுறக் கழிப்பதே அறிவுடையார் செயல் என்பதையே இந்தப் பாடல் நமக்குப் புலப்படுத்துகின்றது எனலாம்.

    ஆலம் விதையை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? எத்துணைச் சிறிய விதை அது! அதிலிருந்து தழைக்கும் ஆலமரமோ வானளாவி நின்று மன்னுயிர்களுக்கெல்லாம் நிழல்தந்து காக்கும் தன்மைத்து. அஃதொப்ப, தக்கார்க்குச் செய்யும் உதவி மீச்சிறிதாயினும் அஃது அவர் கையிற் சேர்ந்தால் வானளாவிய மீப்பெரு புண்ணியப் பயனை உதவி செய்தார்க்குத் தந்துவிடும் என்கிறது நாலடி.

    உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
    இறப்ப நிழற்பயந் தாஅங் – கறப்பயனும்
    தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
    வான்சிறிதாப் போர்த்து விடும். 
    (நாலடி –  38)

    தரமான மனிதர்களுக்குத் தக்க காலத்தில் செய்த உதவியின் மாட்சியை ஆலம் விதையின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுக்கூறியிருப்பது இரசிக்கத்தக்கதாய் உள்ளது.

    இதனையே வான்புகழ் வள்ளுவமும்,

    ”உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து”
      என்று வரையறுத்துச் செல்கின்றது.

    அடுத்து, மனித உடலின் தூய்மையற்ற தன்மையைப் பேசுகின்றது நாலடியாரின் ஓர் அதிகாரம். இதிலும் பெண்டிரின் அழகை நயந்துசெல்லும் ஆடவருக்கு அறிவுகொளுத்தும் விதமாகவே பாடல்கள் காணக் கிடைக்கின்றன.

     தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
    பொய்க்கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
    உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
    கண்டுகை விட்ட மயல்.
    (நாலடி – 43)

    தாம்பூலம் முதலிய மணப்பொருள்களை மென்று, தலைநிறையப் பூச்சூடி செயற்கையாக அழகுசெய்துகொண்டாலும், உணவை உண்பதனால் மனித உடலில் கழிவும் அழுக்கும் மிகுந்துகொண்டேதான் இருக்கும்; அஃது குறையாது! ஆகலின் அழுக்குடம்பின்மீது விருப்பங்கொள்வதில் பயனில்லை என்கிறது மேற்கண்ட பாடல்.

    சோற்றால் அடித்த பிண்டந்தானே இந்த மனித யாக்கை! அதனால்தான் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று உயிரைக் காக்கும் உண்டியின் பெருமையை நம் தமிழ் நூல்கள் உ(ப)ரக்கப் பேசுகின்றன. உண்டியால் நிரப்பப்படும் உடலை எத்துணை முறை கழுவினாலும் அதில் சேரும் அழுக்குகளுக்குப் பஞ்சமில்லை. ஆதலால் நெஞ்சமே! துர்நாற்றமிகு இவ்வுடலை – பெண்ணுடலைக் காமக்கண் கொண்டு நோக்காதே என்பதே இந்தப்பாடல் நமக்குத்தரும் நற்செய்தி.

    குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
    தொடரும் நரம்பொடு தோலும் – இடையிடையே
    வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
    எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். 
    (நாலடி – 46)

    என்பது மற்றொரு நாலடியார் பாடல்.

    குடலும் கொழுமையும் குருதியும் எலும்பும் தசைநாரும் நரம்பும் தோலும் இடையிடையே வைத்த தசையும் கொழுப்புமாய் இருக்கின்ற இந்த உடற்பொருள்களில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள் இனிய பூமாலை அணிந்த இந்தப் பெண் என்று வினா எழுப்புகின்றது இப்பாடல்!

    சிந்தனையைத் தூண்டும் சீரிய கேள்வியே அல்லவா!

    குடலும் குருதியும் எலும்பும் இன்னபிற உடற்பாகங்களும் அப்பெண்ணைச் சார்ந்தவையே என்றாலும் அவை மட்டுமே அவள் அல்லள். அதனைத் தாண்டிய உள்ள உணர்ச்சியும்  உயிரறிவும் அவள்மாட்டு உண்டன்றோ? எனவே பெண்மையை உடலில்மட்டும் தேடுவது மடமை! என்பதையே இப்பாடல் நுட்பமாய் விளக்குகின்றது என்பது உரையாசிரியர்கள் கருத்து.

    ஆணென்ன பெண்ணென்ன? எல்லா மனித உடல்களும் பால் வேறுபாடின்றி நரை திரை மூப்பு பிணி சாக்காடு ஆகியவற்றிற்கு உட்பட்டே தீரவேண்டும் என்பதே இயற்கையின் நியதி. ஆகவே அளவற்ற உடற்பற்றும், காரிகையர்பால் காமப்பற்றும் களையப்பட வேண்டியவை என்று நாலடியார் சொல்வது சாலவும் பொருத்தமுடைய கருத்துதானே?

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • உயிரில்  கலந்த உறவே….

    கண்தோன்றிய காலத்திலேயே

    கற்பனையின்

    கதைக்களமாக

    வீறுகொண்டு

    காதலித்தவளே…

    குறிஞ்சியில்

    குளித்து,

    முல்லையில்

    முகிழ்ந்து,

    மருதத்தில்

    ஊடல் கொண்டாய்….

    வேப்பங்காயாய்

    வெந்து தம்பியது

    இணையிலா – நமது

    காதல்….

    பாண்டியனின்

    துணையொடு,

    குமரியிலிருந்து

    குதூகலமாய்

    வேங்கடத்திற்கு

    பல்லக்கில் வந்த

    மருமகளே….

    சற்றும் எதிர்பார்க்காத

    தருணத்தில்

    இமயம் வரை

    போர்புரிந்து,

    பெண்மையின்

    வன்மையையும்

    மென்மையையும்

    திண்மையையும்

    உலகறியச்செய்தவளே……

    உறக்கமில்லாத

    இரவுகளில்

    கால்களால் நடந்த கதையைக்கூறி

    குமுறுவாய்…..

    தொல்காப்பியனையும்

    வள்ளுவனையும்

    தோளில் சுமந்து,

    நடைபயில்வித்து,

    தலைசால் சான்றோன் ஆக்கியவளே….

    பக்தியின்

    பொருட்சுவையைச்

    சுவைத்துச் சுவைத்து,

    பரம் பொருளை

    அறிந்தவளே…..

    சிற்றின்பத்தேனை

    சிற்றிலக்கியங்களில்

    வழி நுகர்ந்தவளே….

    பாரதிக்கும்

    பாரதிதாசனுக்கும்

    ஊன்றுகோலாய் நின்று,

    எழுத்தாணியாய்

    உருமாறி

    வையம் முழுதும்

    உலா வந்தவளே…..

    மின்னூடகங்களிலும்

    தகதகவென மின்னி,

    ஒளிமயமாய்

    ஒய்யாரியாய்

    வாழ்பவளே…..

    காற்றோடு

    கை கோர்த்து,

    நாமிருவரும்

    கவி புனைந்த,

    பல தருணங்களில்,

    முரண்பட்டாலும்

    நீயே – எந்தன்  பிம்பத்தின் பிரதி….

     

    குமறும் எரிமலை

    எல்லையற்ற

    தருணங்களில்

    கட்டுக்கடங்காத

    மௌனங்கள்

    குமுறுகின்றன

    எரிமலைகளாய்…..

    வசந்தத்திற்கான

    போக்குகளெல்லாம்

    வாய்ப்பினையெண்ணியே

    தவம் இருக்கின்றன….

    தனக்கான

    தன்மானங்களெல்லாம்

    கடன்வாங்கப்பட்டு

    கந்துவட்டியினால்,

    குட்டிமேல் குட்டி

    போடுகின்றன..

    சுயமரியாதையில்….

    அசாதாரண மனிதர்களெல்லாம்

    குகைக்குள் புகுந்த

    புலிகளாய் உருமாறி

    மென்று தின்று

    தண்ணீர் குடிக்கின்றனர்

    எலிகளை….

    விண்ணப்பங்களை

    கையில் ஏந்தியபடியே

    இனம்புரியாத

    தவிப்புகளும்

    தழைகளும்

    கைமீறி,

    கடலைக்கடந்து

    சென்றுவிட்டது

    மௌனத்தைத்தேடி….

    வலுவான வன்மங்கள்

    சங்கமிட்டு,

    கூட்டுக்கிளிகளாய்

    குதூகலிக்கின்றன

    தானும் பறந்துசெல்வதை மறந்து….

    அலைக்கழிக்கின்ற

    பொழுதுகளெல்லாம்

    அதீத பிரியங்களோடு

    இணையலாய்

    தொற்றிக்கொள்கிறது

    பாதங்களை….

    மென்மையான

    எண்ணங்களும்

    வன்மையான

    தருணங்களில்

    கருத்தறித்து,

    கூட்டுக்கிளிகளாய்

    அடைபடுகின்றன….

    தொட்டுவிடும்

    தூரங்களைத்

    தொடமுடியாதபடி

    நிதமும்

    களவாடப்படுகிறது

    ஒவ்வொரு நம்பிக்கையும்….

     

    முனைவர் வே. சுமதி,

    உதவிப்பேராசிரியர்,

    தமிழ்த்துறை,

    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.

    Share
  • எம் மண்ணை எங்கே புதைப்பாய் …

     

     

     

    தொலைக்காட்சியில்

    தொலைந்து போன

    சொந்தங்களுக்கு

     

    பதினோரு வயது

    பாலசந்திரனின்

    மடல்….

     

    எம் குலம்

    எம் பிறப்பு

    மானமும் வீரமும்

    மண்டியிடாது

    பகைவனிடம்…

    எம் வீரம்

    பீரங்கி செல்களுக்கு

    மார்பு காட்டும்….

     

    நாங்கள்

    போராளிகள்

    மண்ணிற்கும்

    மானத்திற்குமான

    போராட்டம்…

     

    சொந்தமென்று

    நினைத்ததுண்டு

    உங்களை

    நேற்றுவரை…

     

    சிங்களக் காடையர்கள்

    சிதைத்தார்கள்

    சிரித்துக் கொண்டிருந்தீர்கள்

    எம் இனத்தின் எதிரிகளாய்…

    இதுவா

    இனமானம்?

    இதுவா

    இனப்பற்று?

    துரோகம்

    இனத்துரோகம்…

    கல் தோன்றி

    மண் தோன்றாக் காலத்தே

    தோன்றிய தமிழினம் – ஈழத்தோடு

    இறுதிப் பயணம்…

     

    தமிழக மக்களே…

    எம் இனம்

    எம் மக்களென்ற

    வாய்ப் பேச்சு

    வீரத்தை நிறுத்துங்கள்

     

    மரணத்திலும்

    என் ஆன்மா

    மன்னிக்காது

     

    மரணத்தின் முன்

    மண்டியிடவில்லை

    மரணம் தான் என்னிடம்

    மண்டியிட்டுருக்கிறது

     

    போராளியின் பிள்ளை

    வீராதி வீரன்

    என் மார்பில்

    துப்பாக்கித்

    தோட்டாக்கள்

    உங்கள்…?

     

     

    வீரன் என்பதை

    என் சாவு சொல்லும்

    நீங்கள்…

    கோழை என்பதை

    வரலாறு சொல்லும்…

     

    மண்ணைக் காப்பதற்காக

    இனமானத்தைக் காப்பதற்காக

    மரணத்தை முத்தமிட்டு

    மண்ணில் புதைந்தோம்

    மண் அபிமானிகளாய்….

    அபிமானமின்றி

    அலைகழிந்தவர்களாய்

    பண வெறிகொண்டு

    பண்பிழந்து

    பக்குவமிழந்து

    தரணியில்

    பவனிவரும்

    பதர்களே….

    கவனமாக இருங்கள்

    உங்கள் மண்ணும்

    களவாடப்படும்…

    சாபமல்ல…

    சத்தியம்…

    வரலாற்றின் மறுபக்கம்….

    வரலாற்றின் அடையாளமாய்

    இறுதியாய்

    சிங்களக் காடையனே

    என்னை மண்ணில் புதைப்பாய்

    எம் மண்ணை

    எங்கே புதைப்பாய்

    பி. பாலசந்திரன்

     

     

    Smrmurali@gmail.com

    புலவர் இரா.முரளி கிருட்டினன்,

    உதவிப்பேராசிரியர்,

    தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,

    திருச்சிராப்பள்ளி

    Share
  • அவலக்குரல் கேட்கலையா !

     

     

    ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    பொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார்
    வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார்
    இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார்
    அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் !

    ஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார்
    அதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார்
    காவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார்
    காலந்தோறும் மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் !

    பொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார்
    பூமியின் வளமனைத்தும் காசாக்க விளைகின்றார்
    மேடையேறி வாய்கிழிய விதம்விதமாய் பேசுகிறார்
    பாதகத்தை மனம்முழுக்க பதுக்கியே வைக்கின்றார் !

    சாதிகூறிச் சாதிகூறி தமக்குலாபம் தேடுகிறார்
    சமயத்தை பலமாக்கி தன்பக்கம் ஆக்குகின்றார்
    நீதிகூட நடக்காமல் கொடுக்கின்றார் பணத்தையெல்லாம்
    நிம்மதியை அவர்பெற்று நிம்மதியை அழிக்கின்றார் !

    சாமியினை நம்பிநின்று சனங்களெல்லாம் அழுகின்றார்
    சாமிவரம் கொடுப்பதிலே தாமதமே ஆகிறது
    ஆர்வந்து காத்திடுவார் என்றுமக்கள் நோக்குகிறார்
    ஆண்டவனே மக்களது அவலக்குரல் கேட்கலையா !

    Share
  • கொசத்தலை ஞாயிறு

    நீரின்றி எவ்வாறு உலக வாழ்க்கை அமையாதோ அவ்வமே ஞாயிறுக் கீற்று மண்ணில் விழாமல் உயிர்ப்பு நிகழாது. புல், பூண்டு, பயிர், பச்சை, பாசி என யாவும் கதிரொளியால் உயிர்க்கின்றன. இந்த கதிரொளியான எல்லிக்கீற்று மண்ணில் விழாவிட்டால்.பயிர், பச்சை, பாசிகளை நம்பி வாழும் உயிர்கள் எத்தனை பெருமை மிக்கதானாலும் மாண்டு போகும். நீரும் ஒளியும் உயிர் நிலைப்பிற்கும் பெருக்கத்திற்கும் இன்றியமையாதன.

    கோள்கள் கதிரோனைச் சுற்றிவருவதால் இக்கோள்களின் தாக்குறுத்தம் தம் எதிர்கால வாழ்வை பாதிப்படைய செய்யும் என்பதால் அதைத் தவிர்க்க. இந்த உருள் கோள்களை மனித வடிவில் வடித்து அவற்றுக்கு கழுவாய்ப் பூசனை ஆற்றுகின்றனர் மக்கள். பூசனையால் அந்த தாக்குறுத்தத்தில் இருந்து தப்பலாம் என நம்புகின்றனர், நம்புவிக்கப்படுகின்றனர்

    தஞ்சை திருவாரூர் மாவட்ட கோவில்கள் பலவற்றில் கோள்களுக்கான கழுவாய் (பரிகார) பூசனைகள் ஆற்றப்படுகின்றன. இந்த நம்பிக்கையால் நாடு முழுவதும் இருந்து அக்கோவில்கள் திரளான மக்களை நாள்தோறும் ஈர்க்கின்றன. அதனால் அக்கோவில்கள் வளமாக, செழிப்பாக உள்ளன.

    கொசத்தலை ஆறு சென்னைக்கு அருகே சோழவரத்தைக் கடந்த பின் கொசத்தலை ஆற்றில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இஞ் ஞாயிறு என்னும் கிராமத் திருத்தலம் அமைந்து உள்ளது. கொசத்தலை ஆற்றில் இறுதியாக அமைந்த பழமையான கோவில் இந்த ஞாயிறு கோவிலே. இக்கால் வேயப்பட்டுள்ள வெளி வட்டச் சுற்று சாலை (outer ring road) இக்கோவிலை எளிதில் விரைந்து அடைய உதவுகிறது. செங்குன்றம் – மீஞ்சூர் வரை நீளும் இச்சாலையில் அருமந்தை கூட்டு சாலை அமைந்த இடத்தில வடக்காக 3 கிலோமீட்டர் சென்றால் இக்கோவிலை அடையலாம். செங்குன்றம் வழி செல்லாமல் மாதவரம் > வடபெரும்பாக்கம் > விளாங்காடுபாக்கம் > பெருங்காவூர் > அருமந்தை கூட்டுச் சாலை வழியாக செல்வது தொலைவைக் குறைக்கும்.​

    வழிநெடுகலும் பச்சைப் பசுமை போர்த்திய வயல்களைக் கடந்தால் ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேசுவரர் கோவிலை அடையலாம். அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் காணப்படும் கோவில் இது. ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கழுவாய் தேடி வழிபடுகிறார்கள். இத்தனைக்கும் இங்கு கதிரோனுக்கு என்று தனி சன்னதி கூட இல்லை. ஈசுவரருக்கு தென்கிழக்கு மூலையில் கதிரவன் புஷ்பரதேசுவரரை நோக்கி நின்ற நிலையில் இரண்டடி சிலையாகக் காட்சிப்படுகிறார்.


    அம்மன் சன்னதி முதல் இன்றுள்ள தெற்கு வாயில் வரையான தலைவாயில் நோக்கிய தூண் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. மண்டபம் கட்டியவர் நுழைவு வாயிலில் தனது உருவத்தை சிலையாக வடித்து தன்பெயரை தெலுங்கில் பொறித்துள்ளார். ஆக நாயக்கர் ஆட்சிக்கு முன் மண்டபம் கட்டியிருக்கவில்லை என்பது புலனாகிறது. சன்னதியை விட்டு வெளியே வரும் போது இருதூண் மண்டபம் உள்ளது. அவற்றில் எதிர் எதிராக மராத்திய அதிகாரிகளின் (அண்ணன் தம்பிகள் போலும்) புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பாகை அவர்கள் மராத்தியர் என்று அடையாளப்படுத்துகிறது. அவர்களுக்காகவே கட்டப்பட்ட இருதூண் மண்டபம் என்று தெரிகிறது. ஏற்கெனவே திருக்கழுக்குன்றம், திருவொற்றியூர் கோவில்களில் மராத்திய அதிகாரிகளின் சிற்பம் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளதை நான் குறிப்பிட்டுள்ளேன். இது குறுகிய கால மராத்திய ஆட்சியில் வடதமிழ்நாட்டில் சைவம் புத்தெழுச்சி பெற்றதைக் காட்டுகிறது. கோவிலில் சுந்தரரை மணந்த சங்கிலி நாச்சியாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது, அவர் இவ்வூரினர் என்பதால்.

    ​​ ​

    கோவில் கருவறையின் மேற்கு, தெற்கு புறச்சுவரில் சில தெளிவில்லாத கல்வெட்டுகள் தேய்ந்த நிலையில் காணக்கிடக்கின்றன. ஆனால் சன்னதியை விட்டு வெளியே வரும் போது கிழக்கு வலப்புறத்தில் மண்டபத்தை ஒட்டிய கருங்கல் சுவற்றில் நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. இது கோவிலின் பழமைக்கு சான்றாக உள்ளது என்றாலும் கல்வெட்டு ஆழமாக வெட்டப்படாததால் அல்லது தேய்த்து மெறுகேற்றியதால் எழுத்துகளை படத்தில் படிக்க முடியவில்லை. எனவே மைசூர் நடுவண் தொல்லியல் துறையிடம் இருந்து மைப்படி வாங்கப்பட்டு அதன் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. தென்புற கல்வெட்டு மிக தேய்ந்துள்ளதால் அப்போதே ASI மைப்படி எடுக்கவில்லை. கருவறையின் மேற்கு குமுதம் கிழக்கு சுவரில் உள்ள கல்வெட்டுகளை மட்டும் படியெடுத்துள்ளனர். ஜடவர்மன் சுந்தர பாண்டியன் காலத்து முடிவுறாத கல்வெட்டுப் பலகை ஒன்று இருந்துள்ளது. இப்போது இல்லை என்றாலும் இக்கோவில் அவன் காலத்தது என்பது தெளிவு.

    படம்

    1. தலைவாயில்.

    2. அருள்பாலிக்கும் கதிரவத் தேவன்.

    3. 15 ஆம் நூற்றாண்டில் தலைவாயிலை நோக்கி தூண் மண்டபம் கட்டியவர்.

    4. மராட்டிய அதிகாரி சிலை.

    5. மராட்டிய அதிகாரியின் உடன்பிறந்தவர்.

    6. சங்கிலி நாச்சியார் சன்னதி.​

    7. திருவோடு மரம்.

    8. கண்கவரும் தாமரைக் குளம்.

    சங்கிலியார் சன்னதி

     

    திருவோடு மரம்

    தாமரைக்குளம்


    9. ஒயிலாக அமர்ந்த பெண் இன்னும் சிலையாகாமல் ஓவியமாய் நின்றுவிட்டாள்,என்றாலும் எழில் நங்கை தான். ஏன்இப்படி? சிற்பி கத்துக்குட்டியா? அல்லது மண்டபம் அமைத்த தெலுங்கர் குறைந்த கூலி கொடுத்தாரா? தெரியவில்லை. பல தூண் சிற்பங்கள் ஓவியமாகவே நின்றுவிட்டன இங்கு.

    10. கோவில் விமானம்.

    11.கொடிமர நோக்கு.



    ​ ASI 1916 ஆம் ஆண்டு அறிக்கையில் பொன்னேரி வட்டம் ஞாயிறு கிராமம் புஸ்பரதேசுவரர் கோயில் கல்வெட்டுகள் பற்றி

    12 . கல்வெட்டின் மைப்படியில் இருப்பது கிழக்கு சுவர் கல்வெட்டு.

    13 & 14 கிழக்கு சுவர் கல்வெட்டின் இரு பாதி ஒளிப்படங்கள் அடுத்தடுத்து


    கொசத்தலை ஆறு ஞாயிறை அடுத்து மீஞ்சூர், விச்சூர், மணலி புதுநகர் கடந்து எண்ணூர் உப்பங்கழியில் கலக்கிறது.

    ஞாயிறு கல்வெட்டு பாடம் / விளக்கம் > திரு. சுந்தரம் (கோவை)

    முதல் படம்: இரண்டாவது படம்

    1 ………ஸ்ரீமஹாமண்டலேசுர ராஜாதிராஜ ராஜ…………….. வீரப்ரதாப பூர்வதெக்ஷிண………………
    2 ய நம ………..ஆளாநின்ற ஸ்ரீ வீர அச்சுந்தை ய தேவ ய தேவ ………….ராஜ்யம் பண்ணி அருளாநின்ற
    3 மஹாராயர் …………செல்லாநின்ற விசய வருஷம் மாசி மாதம் சிவராத்ரி புண்ணியகால………………….
    4 னமந ய …..குமாரன் நாகம நாயக்கர் சமற்பித்த கிறாம தர்ம்ம சாஸ நம் ……………………..ந்தன்ம..
    5 ப…ம……க்குள கிறாமம் பூதேரி விளாகம் நாயற்று பூ…. ………………..அங்கரங்க வைபோகத்துக்கும் சுவாமி
    6 தேவ ம. ….ற்கு புண்ணியமாக தந்தனவோலு வொந்நப்ப நாய க்கர் குமாரன் நாகம நாயக்கர்…….கிறாமம் பூதேரி விளாகம்
    7 முதல் ……………வயிபவமும் நடத்த கடவதாகவும் யிந்த தறுமத்துக்கு யாதொருத்தர் அஹிதம் பண்ணினார்கள்
    8 கெங்கை கரயிலே கோஹத்தி பிறம்ம ஹத்தி பண்ணின பாவத் திலே போக கடவனாகவும்

    விளக்கம்:

    கிராம தர்ம சாசனம் என்று கல்வெட்டு குறிக்கிறது. ஒரு கிராமத்தின் ஒரு பகுதியான பூதேரி விளாகம் என்னும் பகுதி கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்படுகிறது. கொடையாளி நாகம நாயக்கர் என்பது “நாகம நாயக்கர் சமற்பித்த கிறாம த்ர்ம்ம சாஸனம்” என்ற கல்வெட்டுத்தொடரால் அறிந்துகொள்ள இயலுகிறது. கல்வெட்டின் தொடக்கத்தில், ஆட்சியிலிருக்கும் விஜய நகர் மன்னர் பற்றிய குறிப்பு தெளிவாயில்லாதது கொண்டு அரசர் பெயரை உறுதிப்படுத்த இயலவில்லை.. “அச்சுந்தை…ய தேவ” என்பது யாரைக் குறிக்கிறதுஎனத் தெரியவில்லை. அரசர் பெயரை முன்னிறுத்தி அவருக்குப் புண்ணியமாகக் கொடை அளிக்கப்பட்டுள்ளது. கொடையாளி தந்தனவோலு என்னும் ஊரினர் என்பதாகப் பொருள் கொள்ளலாம். ஆந்திரத்தில், பட்டிபுரோலு என ஓர் ஊர் உண்டு. அது போன்றஓசையமைப்பில் இந்த தந்தனவோலு ஊர் அமைந்திருக்கலாம். கொடையாளியின் பெயர் நாகம நாயக்கர் என்றாலும், அவருடைய தந்தை பெயர் வொந்நப்ப நாயக்கர் என்பதை பொன்னப்ப நாயக்கர் எனவும் படிக்க வாய்ப்புள்ளது. “வொ” எழுத்து கிரந்தமாயின் பொந்நப்ப நாயக்கர் எனப் படிக்கலாம். கொடை கோயிலில் அங்கரங்க வைபோகத்துக்கும், சுவாமியின் (பூசைக்கும்?) மற்றும் சிலவைபவத்துக்கும் அளிக்கப்படுகிறது. அங்கரங்கவைபோகம் என்பதற்கு விக்கிரக அலங்காரம், பூசை, படைப்பு முதலிய அனைத்துத் தேவைகள் என்று கல்வெட்டுச் சொல்லகராதி கூறுகிறது. 7-ஆம் வரியில் வருகின்ற வயிபவம், வைபவம் ஆகலாம். இச்சொல் கல்வெட்டுச் சொல்லகராதியில் காணப்படவில்லை. மாதம் ஒரு முறை நடத்தப்பெறும் சில குறிப்பிட்ட நிகழ்வாயிருக்கலாம். கல்வெட்டின் இறுதியில், கல்வெட்டு மரபுப்படி (ஓம்படைக்கிளவி), மேற்படி தர்மத்துக்கு கேடு செய்பவர்கள் கங்கைக் கரையில்,
    பசுவையும், பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்னொருவர் தந்த பாடம்:

    வரி 1. ஸ்வஸ்தி ஸ்ரீ மஹா மண்தலேசுர ராஜாயிராஜ ராஜ வீரபிரதாப பூர்வதெக்ஷிண உத்

    வரி 2. த்த ஸமுத்ராதிபதி ஆளா நின்ற ஸ்ரீ வீர அச்சுதைய தேவ மகாராயர் பிரிதிவிராஜ்யம் பண்ணி அருளா நின்ற — –

    வரி 3. சூசளசயஅ (1448) த[ன்] மேல் செல்லா நின்ற விசய வருஷ மாசி மாதம் சிவராதிரி புண்ணிய காலத்திலே நா[ய]ற்று பூதே{ரி] அப்ப[னுக்]கு தந்தன்ம – – – – –

    வரி 4. ன்ம நாயக்கர் குமா[ரர்] நாகமநாயக்கர் சமற்பித்த கிறாம தர்ம்ம சாஷநம் அச்சுதராய மஹாரா[யர்] நாயக்க- – த்தனமாக பண்ணி – – –

    வரி 5. – – க்கு – – ள கிறாமம் பூதேரி வளாகம் நாயற்று பூதேரி அப்பற்கு அ – – – தைக்கும் அங்கரங்க வைபோகத்துக்கு[ம்]

    வரி 6. தேவ மஹாராயற்கு புண்ணியமாக கந்தனவோலு பொந்நப்ப நாயக்கர் குமாரர் நாகம நாயக்கர் விட்ட கிறாமம் பூதேரி விளாகம். இந்த கிறாமத்தி – – –

    வரி 7. ட முதல் பூசையும் அங்கரங்க வயிபவமும் நடத்த கடவதாகவும் இந்த தருமத்து[க்கு] யாதொருத்தர் அஹிதம் பண்ணிநார்கள்

    வரி 8. [கங்]கை கரையிலே கோ ஹத்தி பிரம்ம ஹத்தி பண்ணின பாவத்திலே போவானாகவும்

    கட்டுரையாளர் பின் குறிப்பு:

    கல்வெட்டில் இடம் பெறும் நாகம நாயக்கர் என்பவர் இன்று கர்னூல் என மருவிவிட்ட அன்றைய கந்தெனவோலுவை வாழிடமாகக் கொண்ட பொன்னப்ப நாயக்கருடைய மகன் ஆவார். இவர் புண்ணியம் கருதி ஞாயிற்று கிராமத்தில் கோவில் கொண்ட பூதேரி அப்பனான புஷ்பரதேசுவரருக்கு (பூந்தேர் = புஷ்பரதம்) தன்னை நாயக்கனாக ஆக்கியதற்கோ அல்லது அச்சுதராயர் அரசராக பொறுப்பேற்றதற்கோ கொடையாக தந்த கல்வெட்டு ஆவணம் யாதெனில் “பூத்தேரி அப்பன் கோவிலில் முதல் பூசைக்கும் விழாக்காலத்தில் தெய்வத்திருமேனிக்கு அலங்காரம் செய்யவும் ஒரு கிராமத்தை தந்தார்” என்பதே. இந்த கிராமக் கொடையை 1533 ல் நடக்கின்ற விஜய வருடம் மாசி மாதம் சிவராத்திரி நன்னாளில் வழங்குகிறார். ஆனால் 1448 உடன் சக ஆண்டு 78 ஐ சேர்த்தால் 1526 என்ற ஆண்டில் வந்து நிற்கிறது. அப்போது கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசை ஆண்டு கொண்டிருக்கிறார். அவரது தம்பி அச்சுதராயர் அப்போது அரச பொறுப்பில் இல்லை என்பது காலக்குறிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளதை காட்டுகிறது. இந்த கொடைக்கு யாரொருவர் கேடு (அஹிதம்) செய்கின்றானோ அவன் கங்கைக் கரையில் பசுக்கொலையும் பிராமணக்கொலையும் புரிந்த பாவத்தை அடைவான் என்று கல்வெட்டு முடிவுறுகிறது.

    தமிழ்ச் சொல்லை அகற்றி சாசனம், அஹிதம், ஹத்தி ஆகிய சமற்கிருத சொற்கள் இடம்பெற்றுள்ளன. பூந்தேர் இன்னும் பிற்காலத்தில் புஷ்பரதம் என்றாகியுள்ளது. .

    இத்தலம் பற்றிய செய்தி தரும் பிற தரவுகள்:

    http://templesoftamilnadu.co.in/gnayiru-gramam-suryan-sthalam/

    Share
  • திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல்

    -பேரா.பீ. பெரியசாமி       

    முன்னுரை:

    இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னதாகச் கருதப்படும் தொல்காப்பியம் மனிதர்களின் மன உணர்ச்சிகளைக் கோட்பாடுகளாக வடித்தெடுக்கும் முயற்சி எடுத்துள்ளது. தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் இலக்கியப் படைப்பிற்கான உத்திகளையும் கோட்பாடுகளையும் வகுத்துள்ளது. அவற்றுள் மனித மனஉணர்வுகளைப் பேசும் இயலாக மெய்ப்பாட்டியல் உள்ளது. அவற்றைக் குறித்து, திறனாய்வாளர்கள் கூறும் கருத்துக்களைத் திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல் எனும் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    இந்தியத் திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல்

    மெய்யின்கண் தோன்றும் குறிப்புகள் கருத்தில் கொண்டு புலப்படுத்தவல்லன. அக்குறிப்புகள் புறத்தாரால் புலன்களின்வழி அறியப்பட்டு வெளிப்படுகின்றன. அகப்பொருள் புலப்பாட்டு நெறியில் கேட்பவரை உளப்படுத்தி மெய்ப்பாட்டியலை படைத்துள்ளார் தொல்காப்பியர். இதனைக் குறித்து பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இந்திய ஆய்வாளர்கள் கூறுவது,

    “மெய்ப்பாட்டியல் பழந்தமிழ் மக்களின் உளநூல்”1 என புலவர் குழந்தை எடுத்துரைக்கின்றார். “மெய்ப்பாட்டியலைப் பொதுவாக ‘மெய்ப்பாடு’ என வழங்குவர். ‘மெய்ப்பாட்டியல்’ என்பது, மெய்மை + பாடு+ இயல் என பிரியும். ‘மெய்ம்மை’ என்பது, உண்மை எனவும், ‘பாடு’ என்பது தோற்றம், வெளிப்பாடு எனவும், ‘இயல்’ என்பது இலக்கணம் எனவும் பொருள்படும்.”2 என டாக்டர் இரா. சந்திரசேகரன் கூறுகின்றார். “மெய்ப்பாடு, மெய் + பாடு. மெய் – உடம்பு, படுதல், தோன்றுதல். படு எனும் முதனிலைத் தொழிற்பெயர் ‘பாடு’ என நீண்டு மெய்ப்பாடாயிற்று. இது மெய்யின்கண் படுதல், தோன்றுதல் என்ற பொருள்படும்.”3 எனப் பொருள் கூறுகின்றார். “பேச்சுமொழி தோன்றும் முன்னரே தம் கருத்தைப் பிறருக்கு உணர்த்த மனிதனுக்குப் பயன்பட்டவை மெய்ப்பாடுகளேயாகும்”4 என க. வெள்ளைவாரணன் மெய்ப்பாட்டியலை சைகைமொழியோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

    “தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் 244 -ஆவது நூற்பா எட்டு மனஉணர்ச்சிகளைப் பற்றி கூறுகின்றது. அவைகள் உடல்வழியாக வெளிப்படும்போது மெய்ப்பாடுகள் என்று சொல்லப்படுகின்றன. உடலின் புறக்குறிகளால் காண்பவருக்குப் புலனாகும் இந்தத் தன்மைகள் மெய்ப்பாடு எனப்படும். மெய்ப்பாடு என்பது மனத்தில் இருப்பவை உடல் உறுப்புகளின் வழியாக வெளியே தென்படுவதாகும். உள்ளத்தில் தோன்றும் எண்ண அலைகள் வெளியே மெய்ப்பாடாக வருகின்றன.”5 என யோகி மெய்ப்பாட்டை மனஉணர்ச்சிகளோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார். “செய்யுளில் படைக்கப்படும் தலைவன் தலைவி முதியோர் தம் உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் பேச்சுக்களையும் மெய்ப்பாடாகத் தொல்காப்பியர் கொண்டார்.”6 என சுந்தரமூர்த்தி கூறுகின்றார்.

    “உள்ளுணர்வுகளின் தொகுதியாகத் தோன்றும் அனுபவங்களின் அடிப்படையில் எழும் முப்பத்திரண்டு உணர்ச்சிகளும் முறையே நான்கு நான்காகத் தொகுத்துக் காணின் எட்டுவகை மெய்ப்பாட்டிற்கும் காரணமாக அமையும்”7 என தா.ஏ, ஞானமூர்த்தி கூறுகின்றார்.  “இலக்கியத்துள் அமையும் உணர்ச்சிகளை, அவை புலனாகும் மெய்ப்பாடுகளை விளக்கும் வகையில் இதனை எடுத்துரைத்தார் தொல்காப்பியர்.”8 என மு.வரதராசனார்; கூறுகின்றார். “மெய்ப்பாடு என்பது வாழ்க்கையிலும் அமைகிறது; நாடகத்திலும் வெளிப்படுகிறது; இலக்கியத்திலும் உணரப்படுகிறது.”9 எனத் தமிழண்ணல் கூறுகின்றார். “மெய்ப்பாடு என்பது உண்மைத் தோற்றம், உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறும். உலகிலுள்ள எந்த ஒன்றிலும் இம்மெய்ப்பாடு காணப்படுதல் இயல்பு. ஆனாலும், மனிதரிடத்திலே சிறந்து காணப்படுகிறது.”10 என்று புலவர் செந்துரை முத்து கூறுகின்றார். “எண்வகை மெய்ப்பாடுகள் அல்லாத பிற மெய்ப்பாடுகள் இலக்கியத்திலும் நாடத்திலும் இடையிடையே வெளிப்படுத்தப்படும். இவை பெரும்பாலும் உலக வாழ்க்கையை ஒட்டி அமைந்த மெய்ப்பாடுகளாகும்.”11 என மு.ஹம்ஸா கூறுகின்றார்.

    இதன்வழி மெய்ப்பாடென்பது இலக்கியத்தில் மட்டுமல்லாது நாடகத்திலும், வாழ்வியலும் காண முடியும். உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் மெய்ப்பாடு என்பது இயல்பாய் அமைந்திருக்கக் கூடியது என்பதை அறிய முடிகிறது.

    மேலைநாட்டுத் திறனாய்வாளர்களின் பார்வையில் மெய்ப்பாடுகள்

    “அனுபவத்தின் தன்மையை ஒட்டி உண்மையும் ஆழமும் வாய்ந்த உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவ்வுணர்ச்சிகள் உடலின்கண் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.”12 என்பது ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் அவர் தம் கருத்தாக உள்ளது. “கவிதை நல்கும் உள்ளுணர்வு மறைமுகமானது; இந்த உள்ளுணர்வினால் உடலின்கண் தோன்றும் மாற்றங்களைவிட அக்கவிதையினின்றும் பெறும் உணர்ச்சியினால் ஏற்படும் உடல் மாற்றங்கள் மிகுதியானவை.”13 என வில்லியம் கே. விம்சாட் கூறுகின்றனர். “உறக்க நிலையிலுள்ள உள்ளத்திலிருந்து உடற்கூறு வாயிலாக எழுகின்ற உணர்ச்சிகள் பல திறப்பட்டன. மெய்ப்பாடுகளாகப் புறஉடலில் வெளிப்படுகின்றன.”14 என ஆங்கில அகராதி கூறுகின்றது. “கிரேக்க மெய்ப்பாட்டியல் சிந்தனையும் இந்திய மெய்ப்பாட்டியல் சிந்தனையும் சற்றேறக்குறைய ஒத்துள்ளது. குறிப்பாகத் தமிழ் மெய்ப்பாட்டியல் கோட்பாடுகள் ஒத்துள்ளது எனலாம். தொல்காப்பியரின் மெய்ப்பாட்டுக் கொள்கையும் அரிஸ்டாட்டிலின் கொள்கையும் மிக நெருக்கமான நிலையில் அமைந்து கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே ஒத்த சிந்தனைப் பாலமாக அமைகின்றது என்ற கருத்து சுட்டத் தகுந்தது.”15 என நடராசன் அவர்கள் கூறுகின்றார். இதன்வழி தமிழில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலும் மெய்பாட்டியல் பற்றிய கோட்பாடுகள் சிறந்து விளங்கியுள்ளன என்பதை அறிய இயலுகின்றது.

    முடிவுரை

    மன உணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடாகும். இது தமிழில் தனி இயலாக தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது. பின்னர் வந்த மேலைநாட்டு இலக்கியவாதிகளும் தங்கள் மொழிகளில் மெய்ப்பாட்டின் வெளிப்பாடு குறித்து பல்வேறு சொற்களில் குறித்துள்ளனர் என்பது இக்கட்டுரையின் முடிபு.

    அடிக்குறிப்புகள்

    1. புலவர் குழந்தை, தொல்காப்பியர் காலத் தமிழர், ப.
    2. டாக்டர் இரா.சந்திரசேகரன், தமிழச்சிற்றிலக்கியங்கள், பக்.66-67.
    3. கண்ணகி கலைவேந்தன் (தொ.ஆ), தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும், ப.
    4. க. வெள்ளைவாரணன், தொல்காப்பியச் சிந்தனைகள்,ப.
    5. யோகி, மனதின் இயல்புகள், ப.
    6. Sundaramoorthy, Early literary Theories in Tamil,p.91.
    7. தா.ஏ. ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.
    8. மு.வரதராசனார், இலக்கியமரபு, ப.
    9. தமிழண்ணல், தொல்காப்பிய இலக்கிய கொள்கைகள், ப.
    10. புலவர் செந்துரை முத்து, மெய்ப்பாடு, ப.
    11. மு.ஹம்ஸா, தொல்காப்பிய பொருளிலக்கணக் கோட்பாடுகள் – 2, ப.
    12. A.Richards, Principles of Literary Criticism, pp.77-78.
    13. William K.Wimsatt Jn. & Cleanth Brooks, Literary Criticism, A Short History, p.290.
    14. Dictionary of Behavioural Science, p.118.
    15. Natarajan, (Essay), Beyond Meaning affective aesthetic of Anandavardhana and I.A.Richards, p.10.

    *****

    கட்டுரையாசிரியர் – தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    வேலூர்.

    Share
  • என்றும் என் இதயத்தில்

     

     

    என்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே

    உன்னருகில் நான் இருந்தால் உன் இதயம் சிறகடுக்குதே

    காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே

    என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னகையிலே !

    காதலுக்கு தேவை கனிவான பார்வையே

    இருவிழிகள் சந்திப்பின் காந்த பார்வையே

    இரு இதயங்கள் சேர்ந்து இணையம் சுகமே

    இரு மனங்கள் ஒரு மனமாய் திகழ்ந்திடுமே !

    காதலியே, நீ என் இதயவானில் ஓர் வெண்ணிலா

    உன் அழகை எண்ணி பாடுவேன் கவிதை உலா

    உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே

    இன்பம் எனும் சுவர்க்கம் தோன்றிடும் வாசலிலே !

    நான் சந்திரன் என்றால் நீ மலர்ந்திடும் அல்லிப் பூ

    நான் இமை என்றால் நீ என் கண்

    நான் உடல் என்றால் நீ என் உயிர்.

    நான் பேச்சு என்றால் நீ என் மூச்சு .

    காதல் எனும் மொழி பேச வருவேன் உன் வாசலுக்கே

    விழி நிறைய நீர் சுமந்து வழி நனைய உன்னை காண்பதற்கே

    உன்னை நான் பார்க்கும்போது நான் ஊமையாகின்றேன்

    உன்னை சிறை வைப்பேன் என்றும் என் இதயத்தில் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (274)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் மற்றொரு மடலில் உங்களுடன் இணைவதில் மனமகிழ்வடைகிறேன். எம்முள்ளத்தில் ஆசைகள் எழுவது இயற்கை. ஆசைகளில்லா மனம் மனித மனமாக இருக்க முடியாது. ஆசைகளற்ற உலகம் இயக்கமின்றி போய்விடும். ஆசைகளே மனித மனத்தின் ஆராய்ச்சிகளைத் தூண்டி பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அத்திவாரமிடுகிறது. அதற்காக ஆசைகள் அனைத்துமே அர்த்தம் நிறைந்தவைகளாக இருக்க முடியாது. அவ்வாசைகள் நியாயம் எனும் வரம்புமுறையைக் கடந்து விடும்போது பேராசைகளாகின்றன.

    இப்பேராசைகளின் வழி ஓடும் மனித மனம் அடைய முடியாதவைகளை அடைய முற்படும் பிராயத்தனத்திலும், அனைத்தையும் நினைத்த மாத்திரத்தில் அடைந்து விட வேண்டும் எனும் அவசரத்துக்குள்ளும் தம்மை நுழைத்துக் கொள்கின்றன.

    நியாயமான ஆசைகள் கொண்டவர்களும், பேராசைகள் கொண்டவர்களும் இணைந்தே சமுதாயங்கள் உருவாகின்றன. இதுவே நடைமுறை யதார்த்தமானது. எங்கே பிரச்சனை உருவாகிறது என்றால் இவர்கள் இருவர்களுக்குமிடையில் இருக்கும் விகிதாசாரம் மாற்றமடையும் போதுதான். இன்றைய இங்கிலாந்து சமுதாயத்தைக் கொண்டால் இவ்விரு மனப்பான்மை கொண்ட மக்களின் விகிதாசாரம் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டு நிற்பது போல் தென்படுகிறது. அதன் அடிப்படையையே இன்றைய அரசியல், மற்றும் பொருளாதார நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது. அரசியல் எனும் இரயிலின் தன்டவாளம் எப்போதும் மையத்தில் இருக்கும் போதுதான் நாட்டின் நிலை சீராக இருக்கும். அத்தண்டவாளம் ஏதாவது ஒரு திசையில் ஓரளவு தீவிரவாதத்தைத் தழுவிக் கொண்டால் அங்கே சிக்கல்கள் உருவாகின்றன.

    இரண்டாவது உலக மகாயுத்தத்தின் அழிவுகள் இங்கிலாந்தை மிகவும் பாதித்திருந்தது. போரில் உயிரிழந்தோரின் தொகை பன்மடங்காகவிருந்தது. யுத்தத்தின் முடிவின் பின்னால் நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய தேவை மிகுந்திருந்த வேளையில் அதனைச் செயல்படுத்தப் போதியளவு ஆள்பலம் அவர்களுக்கு இருக்கவில்லை. விளைவாக தம்முடைய பெரிய பிரித்தானிய எனும் குடையின் கீழ் தம்மால் ஆளப்பட்டு வந்த கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து மக்களை தம் நாட்டிற்கு குடியேற வருமாறு அறைகூவல் விடுத்தார்கள். அவ்வாறு 40,50,60 களில் இங்கிலாந்துக்கு வந்து குடியேறியவர்கள் ஏராளம். இன்றைய இங்கிலாந்துக்கான அத்திவாரம் அவர்களின் உதவியுடனேயே இடப்பட்டது என்றால் அது மிகையாகாது. ஆனால் அதே சமயம் எழுபதுகளில் அளவு கணக்கின்றி வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறும் மக்களின் கலாச்சார வேறுபாடுகள் இந்நாட்டில் எதிர்காலத்தில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்றைய முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதிகளில் ஒருவரான “இனொக் பவல் (Enoch Powel) “ என்பவர் போன்ற சிலரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதைய மிதவாத அரசியல்வாதிகள் நிறைந்த கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து நிறப்பாகுபாடு கொண்டவகையில் பேசினார் எனும் குற்றம் சாட்டினால் அவர் கட்சியினின்றும் நீக்கப்பட்டார். இன்று அவர் மறைந்து சில வருடங்களாகின்றன.

    இங்கிலாந்தைக் கட்டியெழுப்ப தமது வாழ்நாளில் உழைத்த புலம் பெயர்ந்த மக்கள் அனைவரும் இங்கிலாந்தும் முதலாந்தரப் பிரஜைகளாக மதிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே ! இங்கிலாந்து அரசினைப் பொறுத்தவரையிலும், அரச சட்டங்களைப் பொறுத்தவரையிலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் இங்கிலாந்தினைப் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வாழ்ந்து வரும் வெள்ளை இன இங்கிலாந்து தேசத்தவர் அனைவரினதும் மனதில் இத்தகைய சமத்துவம் நிலவுக்கிறதா? என்பது கேள்விக்குறியே ! அதேசமயம் அனைத்து மக்களின் மனங்களும் ஒரேமதிரியாகவோ அன்றி அனைவரும் ஒரே உணர்வினைக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுவதோ யதார்த்தமன்று. ஆனால் இதுவரை அவர்களில் பெரும்பான்மையினர் புலம்பெயர்தோர் அன்றி வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் என்போரின் மீது கொண்டிருக்கும் பார்வை அனுகூலமானதாகவே இருக்கிறது. அதேசமயம் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கெதிரான கோஷம் முன்னையை விட வலுவடைந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    இத்தகைய ஒரு நிலைக்கு இன்று நாம் வந்தடைந்திருப்பதன் காரணம் என்ன? இங்கிலாந்து நாட்டுக்குள் வெளிநாட்டுக்காரர் வந்து குடியேறுவதன் தாக்கத்தை விவாதிப்பதை நிறத்துவேஷம் என்று வர்ணிக்கத் தலைப்பட்டமையும் அத்தகைய விவாதத்தை முன்னெடுப்பவர்களின் குரல்கள் அதனால் மெளனிக்கப்பட்டதும் முக்கியமானதொன்றாகும். இங்கிலாந்தின் இன்றைய வீட்டு வசதியின்மை, தேசிய சுகாதார சேவையின் மீது ஜனத்தொகை அதிகரிப்பால் ஏற்படும் அழுத்தங்கள், பாடசாலைகளில் அதனைச் சுற்றி வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு இடப்பற்றாக்குறை எனும் பல காரணங்கள் இந்த வெளிநாட்டவரின் வருகையின் மீது தீவிரமான பார்வையை ஏற்படுத்தக் காரணிகளாகின்றன. இப்போது வெள்ளை இனத்தவர்கள் மத்தியில் அல்ல இரண்டு, மூன்று தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் ஆபிரிக்க, ஆசிய மக்களின் மத்தியில் இருந்தும் இத்தகைய விவாதங்கள் கிளம்புவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

    அதேசமயம் இந்த சமுதாய பேதலிப்புகளைச் சாதகமாக்கிக் கொண்டு உண்மையான இனத்துவேஷம் கொண்ட வெள்ளை இனத்தவர்கள் வெளிநாட்டவருக்கெதிரான கோஷத்தை எழுப்பிக்கொண்டு பயணிப்பதும் உண்மையே ! இத்தகைய விளைவுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் எம்மைப் போன்றீரின் நடவடிக்கைகளும் காரணமாக அமைந்து விடுக்கின்றன. கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் எனும் 4ண்ணத்தில் எமக்குக் கிடைக்கும் சலுகைகளை சலுகைகள் என்று பார்க்காமல் உரிமைகள் எனும் பெயரில் இந்நாட்டில் வாழும் மக்கள் மீது சிலசமயங்களில் திணிக்கிறோமோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது. நாம் வாழும் நாட்டில் எமது மொழியையும், கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவன் நான் ஆனால் அதேசமயம் அவற்றின் எல்லைகள் எவை என்று நிர்ணயிக்க வேண்டிய காலக்கட்டாயத்தையும் உணர்ந்தவன்.

    எமது எதிர்கால புலம்பெயர் தலைமுறை சமதளத்தில் இந்நாட்டு மக்களாகிய வெள்ளையர்களுடன் வாழ்வுப்போராட்டத்தில் ஜெயிக்க வேண்டுமெனில் அதற்கான சரியானதளமைப்பை நாம் முன்னெடுக்கத் தவறக்கூடாது. அனைவருடனும் இணைந்து வாழும் வாழ்வே வெற்றியளிக்கும் பிரிவு அல்ல.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இந்தியாவின் பொருளாதாரம்?

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    இன்று உலகளவில் பொருளாதாரத்தில் ஆறாவது வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியப் பொருளாதாரம் விரைவில் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கக்கூடிய அபாயம் இருப்பதை பரவலாக இன்று வரக்கூடிய செய்திகள் மூலமாக அனுமானிக்க முடிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டாலரின் மதிப்பைவிட உரூபாயின் மதிப்பு அதிகமாக இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்றைய நிலையில் அமெரிக்க டாலரைவிட உரூபாயின் மதிப்பு எந்த அளவிற்கு சரிவைச் சந்தித்து வருகிறது என்பதையும் கண்கூடாகக் காண்கிறோம். பல ஆண்டுகளாக 45 முதல் 50 உரூபாயாக இருந்த டாலரின் மதிப்பு இன்று 70 உரூபாயைத் தாண்டியுள்ளதே நம் பொருளாதார வீழ்ச்சிக்கு எடுத்துக்காட்டு. இன்று 1கிலோ கத்தரிக்காய் 30 /40 உரூபாய்க்கு வாங்கினால், நாளை அதே காய் 60/70 உரூபாய் ஆகலாம். இப்படியேச் சென்றால் ஆப்பிரிக்க நாடுகள் போல ஒரு கட்டு பணம் கொடுத்து ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்கும் நிலையும் கூட ஏற்படலாம்.

    வங்கித் துறையில் காலாண்டு அறிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பஞ்சாப் தேசிய வங்கி இந்த காலாண்டில் மட்டும் 3500 கோடியும், மாநில வங்கி 7700 கோடியும் அறிவித்துள்ளது. இது போன்று அனைத்து வங்கிகளின் அறிக்கைகளையும் ஆய்வு செய்தால் இந்த வாராக்கடன் தொகையானது பல ஆயிரம் கோடி என்ற உச்சத்தைத் தொடும் என்பதில் ஐயமில்லை. இதே காலகட்டத்தில் தனியார் வங்கிகள் மட்டும் சிறப்பாகச் செயல்படுவதன் காரணம் என்ன என்று பார்த்தால், தங்கள் வங்கியிலிருந்து 100 உரூபாய் வெளியே சென்றால் 105 உரூபாய் உள்ளே வரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதுதான். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் நலனுக்காக முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது அதே மக்களால் ஏமாற்றப்படும்போது தனியார் வங்கிகளாக ஏன் மாற்றப்படக்கூடாது. இப்படி மக்களால் வங்கிகள் சீரழிக்கப்படும்போது அதற்கு உடந்தையாக இருக்கும் பொறுப்பாளர்களான வங்கி மேலாளர்களையும், வங்கிகளின் தணிக்கையாளர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். வாராக்கடனுக்கு ஈடாகக் கொடுக்கப்படும், கையகப்படுத்தப்படும் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி வங்கிகளுக்கு இழப்பில்லாமல் உபரி வருவாயை ஏற்படுத்துவது ஆக்கப்பூர்வமான தீர்வாக அமையலாம்.

    நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாக மின் சக்தியையும், எல்.என்.ஜி. என்று சொல்லக்கூடிய இயற்கை எரிவாயுவை போக்குவரத்துத் துறைக்கு உடனடியாக அமல்படுத்தினால் விலை உயர்வால் துண்டு விழும் 15 பில்லியன் டாலர்களை சேமிப்பதோடு அந்நிய செலாவணியைக் குறைப்பதால் நம்முடைய உரூபாயின் மதிப்பும் உயரக்கூடும்.

    ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியை குறைப்பதற்கான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கக்கூடிய ஊக்கத் தொகையைக் குறைப்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதும் பொருளாதார சீர் குலைவிற்கு வழிவகுப்பதாக அமைந்துவிடுகிறது. இது போன்று பல்வேறு விசயங்களையும் கவனித்து நிர்வகிக்க வேண்டிய நிதியமைச்சகம் இன்று சரியாக நிர்வகிக்கப்படாமல் முடங்கும் அபாயத்தில் உள்ளதும் வேதனைக்குரியதாக உள்ளது.

     

    Share
  • ஏன் இந்த கொடுமை

     

     

    முத்துக்குளிக்கும் ஊரில் ஓர் கொடுமை நடந்தேறியதே

    அப்பாவி மக்களை காவல் துறை கொன்று குவித்ததே

    அரசின் பயங்கர வாதத்தை எதிர்க்க துணிவு இல்லையே

    மக்களுக்காக அரசா, இல்லை அரசுக்காக அரசா தெரியவில்லையே !

    இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினால் மட்டும் போதுமா

    வேலையும் தருவதாக போக்கு காட்டுவதும் நியாயமாகுமா

    யூனியன் கார்பைட் போல் இங்கும் ஸ்டெரிலைட் செயல்படுகின்றதே

    சுற்றுபுற சூழலை மாசு படுத்தி மக்கள் உயிரை வாங்குதே!

    மக்கள் துன்பத்தை போக்காமல், அழிவிற்கு துணை போகிறதே

    துரித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி செயல் படுதே

    அரசு ஆணை இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தமுடியுமா !

    கல்நெஞ்சு கொண்டவர்கள், தன்னை ஹிட்லர் என நினைக்கலாமா !

    அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தேறியதே !

    சுதந்திரம் பெற்ற பின்பும் ஜனநாயகப்படுகொலை நடக்கின்றதே

    மக்கள் உயிரை துச்சமாக மதித்து அரசு ஆட்சி செய்யுதே

    பின்விளைவுகள் பற்றி கவலைப்படாத அரசாக நிலவுதே !

    பாட்டாளிகளையும், மக்களையும் துன்புறுத்தி அடக்குவதா

    அவர்களின் போராட்டம் நியாயம் என் தெரியாமல் ஒடுக்குவதா

    மின்னல் போல் பளிச்சென்று வந்து உண்மையை உணர்த்துங்கள்

    போராட்டம் எனும் புரட்சியில் இறங்கி வெற்றி பெற்றிடுங்கள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • மறைமுக உரைசெயல் நோக்கில் ஐங்குறுநூறு

    -த. சிவக்குமார்

    கருத்தாடலில் நாம் பயன்படுத்தும் உரைத்தொடர்கள் கேட்போர் அல்லது வாசிப்போருக்கு எத்தகைய நோக்கத்தை அல்லது செயலை உணர்த்த கையாளப்படுகிறதோ அதனையே உரைக்கோவையின் உரைசெயல் எனலாம்.

    இவற்றில் மறைமுக உரைசெயல் என்பது ஒரு கருத்தை நேரடியாகக் கூறாமல் பிரிதொன்றன் மூலம் தன் உள்ளக்கருத்தை உணர்த்த முனையும் செயலை மறைமுக உரைசெயல் எனலாம். ஐங்குறுநூற்றுச் செயுள்களில் தோழி, செவிலி மற்றும் நற்றாயிடம் அறத்தோடு நிற்கும் சூழலில் மறைமுக உரைசெயல் நிகழ்த்தித் தலைவியின் காதலை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தினாள் என்பதை இக்கட்டுரை ஆய்கிறது

    மறைமுக உரைசெயல்

    அறத்தொடு நிற்றல் துறைசார்ந்த சில பாடல்களும் வரவுரைத்த துறையில் அமைந்த சில பாடல்களும் மறைமுகமாகக் கருத்தை உணர்த்தும் நோக்கில் அமைந்து கருத்துப் புலப்பாட்டை நிறைவு செய்கின்றன.

    நேரடி உரைசெயல்

    உரைக்கோவை உருவாக்கத்தில் கருத்தைத் தெரிவிப்போர் கருத்துப் பெறுபவரிடம் நேரடியாகப் பொருள் உணர்த்தும் நோக்கில் அமைக்கும் உரைசெயலை நேரடி உரைசெயல் என்பர்.

    தோழி நேரடியாக உரைத்தல்

    தலைவியைப் பெண்கேட்டு வரும் சூழலில் தோழி, தலைவியின் காதலை நேரடியாகவே நற்றாய், செவிலித்தாய்க்கு வெளிப்படுத்துவது நேரடி உரைசெயல் வகையில் அமைக்கப்பட்டள்ளது. பொன்னிறமுடைய பூக்கள் விரியும் துறையை உடையவனே நம் தலைவன் என்றும், தலைவியின் மெலிவிற்குக் கடவுள் காரணம் அல்ல தலைவனே என்றும், தலைவனின் பெயரைக் கூறியும் தலைவனுடனான களவுப் புணர்ச்சியினை வெளிப்படுத்தியும் தலைவியின் காதலை வெளிப்படுத்துவதை ஐங்குறுநூற்றுப் பாடல்களில் காணமுடிகிறது.

    துறைவன் என் தலைவன்

    நொதுமலர் வரவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் சூழலில் அன்னையே! முன்பு தலைவன் தலைவியைக் கூட்டுவித்த ஊழே மீண்டும் கூட்டுவிக்கும்; மேலும் புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனே என் தலைவன். இது அறியாமல் இவர்கள் பெண்கேட்டு வந்தனர் எனும்பொழுது,

    அன்னை, வாழி! வேண்டு அன்னை! – புன்னை
    பொன்னிறம்
    விரியும் பூக்கெழு துறைவனை
    என்னை என்றும், யாமே; இவ்வூர்
    பிறிது
    ஒன்றாகக் கூறும்,
    ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே!” (ஐங் – 110)

    ’ஆங்கும் ஆக்குமோ பாலே’ ஊழானது பிரிக்குமோ பிரிக்காது என்று நொதுமலர் வரவைத் தடுக்கும் பொருட்டுத் தலைவியின் காதலை நேரடியாகப் போட்டு உடைத்து விடுகிறாள் தோழி. இங்கு ஊழைக் குறிக்கப் ‘பால்’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கதாகும்.

    தலைமக்களை ஊழே கூட்டுவிக்கும் எனும் போது,

    பால் வரைந்து அமைத்த வல்லது அவர்வயின்
    சால்பு
    அளந்து அறிதற்கு யாம் யாரோ” (குறுந் – 366) என்கிறது குறுந்தொகை.

    அணங்கு அல்ல தலைவன்

    தலைவியின் மெலிவுக்குக் காரணம் நீர்த்துறையில் உறையும் அணங்கே காரணம் என்று நினைத்து பூசனை செய்ய முற்பட்டனர். அப்பொழுது தோழி இவள் மெலிவுக்குத் தெய்வம் காரணமல்ல ஒரு மனிதனே காரணம். அவன் தான் அணங்கியது என்கிறாள்.

    இதனை,

    “…………………………….

    கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
    அருந்திறக்
    கடவுள் அல்லன்
    பெருந்துறைக்
    கண்டு இவள் அணங்கியோளே” (ஐங் – 182)

    என்று வெளிப்படையாகவே கூறிவிடுகிறாள். இதில் தலைவன் அருந்திறக் கடவுள் அல்லன் அருந்திறல் கொண்ட மனிதனே என்று தலைவனின் சிறப்பையும் உணர்த்துகிறாள்.

    தலைவன் மார்பில் துயில் கொள்ள விரும்புகிறாள்

    நொதுமலர் வரவறிந்த தலைவி வருத்தப்பட, அக்காரணத்தை செவிலி வினவுகிறாள். தலைவியின் காதலை உணர்த்தி அறத்தொடு நிற்கும் பொழுது, என் தோழியானவள் மிகுதியான நாணமுடையவள்; மேலும் நின்பால் அச்சமும் கொண்டுள்ளாள். மேலும் அவள் விரும்புவது மலைநாடனின் மார்பில் துயில் கொள்வதையே. நானும் அவள்பால் வருந்தி இதை உனக்கு உரைக்கின்றேன் என்று கூறுகிறாள்.

    இது,

    “…………………………………………….
    ஒலி வெள்ளருவி ஓங்குமலை நாடன்
    மலர்ந்த
    மார்பிற் பாயல்
    தவநனி
    வெய்யள் நோகோ யானே” (ஐங் – 205)

    என்று சுட்டப்படுகிறது. உனக்கு அஞ்சுவதால் அவள் கூறவில்லை; நான் கூறுகிறேன் என்றாள். இதனை, அகநானூறு 52-வது செய்யுளும் உணர்த்துகிறது.

    அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்ற குறளுக்கேற்பத் தலைவியின் செயல் உள்ளது.

    நொதுமலர் வரவறிந்த தோழி தலைவி கற்புக்கடம் பூண்டதைச் செவிலிக்கு உணர்த்த,‘இவள் முன்பே பலகாலும் மலைநாடனின் மார்பை முயங்கி இன்புற்றாள். அவ்வாறு முயங்காத நாட்களில் கண்கள் நீர் சொரியும். இதை உணர்ந்து செயல்படுங்கள்  என்று நேரடியாகவே தலைவியின் களவுப் புணர்ச்சியை உணர்த்தி விடுகிறாள்.

    இதனை,

    “………………………………..
    முயங்காது கழிந்த நாள், இவள்
    மயங்கு
    இதழ் மழைக்கண் கலிழும்” (ஐங் – 220) என்கிறாள் தோழி.

    தலைவியின் களவுப் புணர்ச்சியை வெளிப்படுத்தல்

    நொதுமலர் வரவின்கண் தலைவியின் காதலை செவிலிக்கு உணர்த்தப் புகும் தோழி இவள் உயிரானது, கான்யாற்று வெள்ளத்தில் மெய்தொட்டுக் காப்பாற்றியவன் பேரொடு சென்றுவிட்டது எனும் பொழுது,

    “……………………..
    விரவு மலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்
    தேரொடு
    குறுக வந்தோன்
    பேரொடு
    புணர்ந்தன்று – அன்னை இவள் உயிரே” (ஐங் -367)

    என்ற தலைவியின் காதலை உணர்த்துகிறாள் தோழி.

    இதில் ‘தேரொடு குறுக வந்தான்’என்பதால் முன்பின் அறியாதவன் என்ற பொருளும் இவள் உயிர் அவன் பேரொடு புணர்ந்தது என்பதால் உயிரை மீட்டுத் தந்தவன் என்ற பொருளும் தருகிறது. இச்செய்யுள், இதனை புனல்தரு புணர்ச்சி என்பர்.

    வெள்ளத்தினின்று மீட்ட தலைவனை, தலைவிப் புணர்ந்தாள் என்று செவிலியிடம் கூறும் பாங்கை, ‘காமர் கடும்புனல் கலந்தெம் மோடாடுவாள்’(39) என்கிறது கலித்தொகை.

    தோழி மறைமுகமாக உரைத்தல்

    தலைவியின் மெலிவு கண்டு வருந்திய நற்றாய் அவளுக்கு வேலனைக் கொண்டு வெறியாட்டு நடத்தும்பொழுது தலைவி அறத்தொடு நிற்கிறாள். மேலும், தலைவியின் காதலை நற்றாய் மற்றும் செவிலித்தாய்க்கு அறிவிக்கும் வகையில் தோழி, தலைவனின் தண்ணந்துறை, மலை, கடல், நாடு, களவுப்புணர்ச்சி போன்றவற்றையும் தலைவனுடனான பூத்தரு புணர்ச்சியினை கோங்க மலரோடு தொடர்புபடுத்தித் தலைவியின் காதலை மறைமுகமாக தெரிவிக்கிறாள்.

    தலைவனின் நீர்த்துறையை கூறுதல்

    நொதுமலர் வரவை அறிந்த தலைவி உணவும் உறக்கமும் இன்றி மெலிய அதுகண்ட செவிலி தோழியை வினவுகிறாள். அப்பொழுது தோழி தலைவியின் காதலை மறைமுகமாகச் செவிலிக்கு உணர்த்த அறத்தொடு நிற்றல் என்ற உத்தியைக் கையாள்கிறாள். அப்பொழுது,

    “………………………….
    தண்ணந் துறைவன் நல்கின்
    ஒண்நுதல்
    அரிவைபால் ஆரும்மே” (ஐங் – 168)

    என்கிறாள். இதன்மூலம் தண்ணந்துறைவனாகிய தலைவன் அருள் செய்தால் பாலாவது அருந்துவாள். இல்லையெனில் இறந்துபடுவாள் என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது. மேலும் தலைவி கொண்ட காதல்நோயின் மிகுதியும் புலப்படுத்தப்படுகிறது.

    களவுப் புணர்ச்சியினை கூறுதல்

    தலைவியின் மெலிவு கண்டு வருந்தி அவளுக்கு வெறியாட்டு நிகழத்த ஏற்பாடு செய்தனர் செவிலியும் நற்றாயும். அப்பொழுது தலைவியின் காதலை மறைமுகமாக உணர்த்தி வெறியாட்டை தடுத்தற் பொருட்டு,

    “……………………….
    கழனி ஊரன் மார்பு உறமரீஇ
    திதலை
    அல்குல் நின்மகள்
    பசலை
    கொள்வது எவன்கொல்” (ஐங்– 29)

    தலைவனது மார்பைத் தழுவி இன்புற்ற பிறகும் இவள்பசலை கொள்வது எதனாலோ? என வினவி மறைமுகமாக அவள் காதலையும் களவில் புணர்ந்த நிலையையும் எடுத்துரைக்கிறாள்.

    மேலும், ஐங்குறுநூறு 30-வது செய்யுளும் இதே கருத்தை உணர்த்துகிறது.

    தலைவனின் சிறப்பினை எடுத்துரைத்தல்

    அறத்தொடு நின்றதற்குத் தலைவன் தலைவியை மணக்காமல் பிறிதொரு பெண்ணை மணந்தால் என் செய்வது என்று ஐயுற்று வருந்திய செவிலியின் குறிப்பை உணர்ந்த தோழி,

    “………………. தண்கடற் சேர்ப்பன்
    எம்தோள்
    துறந்தனன் ஆயின்
    எவன்கொல்
    மற்று அவன் நயந்த தோளே?”  (மே – 108)

    எம்தோளைப் புணர்ந்த சேர்ப்பன் எம்மை விடுத்து மற்றொரு பெண்ணினை மணக்கமாட்டான் என்பதையும், அவ்வாறு மணந்தால் (தோள் துறந்தால்) தலைவி இறந்துபடுவாள் என்பதையும் இதன்மூலம் குறிப்பால் உணர்த்துகிறாள். ‘எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே’என்பது அத்தோள்கள் என்னாகும், அழியும் என்று மறைமுகமாகச் சுட்டப்படுகிறது.

    தலைவனின் கடலைக் கூறுதல்

    தலைவியின் மெலிவுகண்டு வருந்திய செவிலி அதற்கு என்ன காரணம் ஏதேனும் நோயுற்றாளோ? என வினவ,

    “…………………………….
    தண் கடற் படுதிரை கேட்டொறும்
    துஞ்சாள்
    ஆகுதல் நோகோ யானே” (ஐங்– 107)

    அதற்குக் கடலலையே காரணம் அதனாலேயே உறக்கமின்றி நோயுற்றாள். நானும் வருந்துகிறேன் என்கிறாள். இதன்மூலம் தண்கடல் படுதிரைக்குரியவனே நோய்க்குக் காரணம் என்று மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

    தலைவனின் குன்றைக் கூறுதல்

    தலைவி இற்செறிக்கப் படுவதோடு அவளின் மெலிவுகண்டு இது தெய்வத்தால் ஆனது என்று கூறி அன்னையர் வெறியாட்டு ஏற்பாடு செய்ய அதனைத் தடுக்கும் பொருட்டுத் தோழியானவள் மெலிவுக்குக் காரணம் காதல் நோயே என்பதையும், அது தணியும் விதத்தையும்,

    “……………………….

    புலவுசேர் துறுகல் ஏறி, அவர்நாட்டுப்
    பூக்கெழு
    குன்றம் நோக்கி நின்று
    ………………………………..
    தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே” (ஐங்– 210)

    இங்குத் தலைவனின் சிறப்பைப் பற்றி உணர்த்த ‘பூக்கெழுகுன்றம்’என்ற சொல்லும் தலைவியின் துயரை வெளிப்படுத்த ‘புலவுசேர் துறுகல்’ என்ற சொல்லும் மேலும் அவனைச் சேர்ந்தால் நோய்தீரும் என்று தலைவியின் காதலை உணர்த்த ‘தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே’என்று ஒவ்வொன்றையும் மறைமுகமாக உணர்த்தும் பாங்கு பாராட்டுக்குரியது.

    தலைவனின் குன்றம் கண்டால் தலைவி நலம் பெறுவாள் என்று குறுந்தொகைத் தலைவியின் காதலை வெளிப்படுத்தும் தோழியும் இவ்வாறு மறைமுகமாக கூறுகிறாள்.

    இதனை,

    அவர்நாட்டுக் குன்றம் நோக்கினென் தோழி
    பண்டை
    யற்றோ கண்டிசின் நுதலே” (குறுந் – 249)

    தலைவனின் மலையைக் கூறுதல்

    வெறியாட்டைத் தடுத்து தலைவியின் காதலை உணர்த்தும் தோழி தலைவியின் நோய்க்கான காரணத்தை மணங்கமழும் மலைநாட்டுத் தலைவனிடம் கொண்ட நட்பு என்பதை வேலன் அறிவானா? என்கிறாள்.

    இதனை,

    “……………. அவ்வேலன்
    வெறிகமழ்
    நாடன் கேண்மை
    அறியுமோ
    தில்ல
    ……………………………..”
                   (ஐங் – 241)

    என்று தொடர்புபடுத்துகிறது. மேலும் அன்னையின் இவ்வறியாமையால் மேலும் துயரமே. தலைவியின் மழைக்கண் புலம்பு நோய்க்கு வெறியே சிறந்தது என்று நீ கருதினால் உன்னைப்போல் அறியாமையுடையோர் எவரும் இலர் என்கிறாள் தோழி.

    இதனை,

    “…………………………
    அறியா வேலன் வெறி எனக்கூறும்
    அதுமனம்
    கொள்குவை, அனை இவள்
    புதுமலர்
    மழைக்கண் புலம்பிய நோய்க்கே” (ஐங் – 243)

    என்கிறாள். இதற்குக் காரணம் அவள்கொண்ட களவொழுக்கமே என்பதை மறைமுகமாக உணர்த்தும் தோழியின் பாங்கு சிறப்புக்குரியது.

    இதுபோலவே அன்னையின் அறியாமையைக் கூறி தலைவியின் களவை மறைமுகமாக உணர்த்தும் போது,

    அறியா வேலன் அன்னைக்கு வெறியென
    வேலன்
    உரைக்கும் என்ப” (நற் – 273) என்று நற்றிணையும்,

    வெறியென உணர்ந்த வேலன் நோய் – மருந்தறியான்” (குறுந் – 360) என்று குறுந்தொகையும் உணர்த்தி நிற்கின்றன.

    தலைவியின் மெலிவிற்குக் கூர்மலை நாடன் காரணம் என்றறியாமல் ‘முருகு’ காரணம் என்று மணலில் கழற்சிக்காயைப் பரப்பிக் கூறிய வேலன் வாழ்க என்று வேலனின் பொய்யுரையையும், அவன் மெய் கூறினால் தாயின் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், தலைவியின் காதலையும் புலப்படுத்தும் நோக்கில்,

    “…………………………….
    பெய்ம்மணல் வரைப்பில் கழங்குபடுத்து அன்னைக்கு
    முருகு
    என மொழியும் வேலன்; மற்றுஅவன்
    வாழிய –
    இலங்க ருவி
    சூர்மலை
    நாடனை அறியாதோனே!” (ஐங் – 249)

    வேலன் நோய் மருந்து அறியான் எனும்பொழுது,

    வெறியே உணர்ந்த வேலன் நோய் மருந்து
    அறியா
    னாகுதல் அன்னை காணிய” (குறுந் – 360)

    என்று குறுந்தொகையிலும் மற்றும் அகநானூற்றில் 242-வது செய்யுளிலும் வேலனின் பொய்யுரையும் தலைவியின் காதலும் மறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது. பெய்மணலில் கழங்கு படுக்கும் முறைதான் சோழி பரப்பி எண்ணிக்கூறும் முறையாகத் தொன்மமாக இன்றும் நம்மிடையே எஞ்சி நிற்கிறது.

    தோழி அறத்தொடு நிற்கும் சூழலில் மறைமுக உரைசெயல் நிகழ்த்தி எவ்வாறெல்லாம் தன் கருத்தைப் புலப்படுத்தினாள் என்பதைச் சுருக்கமாக இக்கட்டுரையில் ஆய்ந்தோம்.

    *****

    பயன்படுத்திய நூல்கள்

    1. உரைக்கோவை பண்பும் பயனும் (கி.கருணாகரன், சோ.சுப்பிரமணி)
    2. ஐங்குறுநூறு
    3. அகநானூறு
    4. நற்றிணை
    5. குறுந்தொகை

    *****

    கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர் (ப.நே)
    பாரதியார் பல்கலைகழகம்
    தமிழ்த்துறை
    கோவை-46.

     

     

     

    Share
  • ஆற்றுப்படைகளில் துன்பவியல் மெய்ப்பாடுகள்

    -கி. ரேவதி

    அகவுணர்வு மெய்த்தோற்றம் கொள்ளுதலை மெய்ப்பாடு என அறியலாம் அது காதல் உணர்வை மட்டுமல்லாமல் வாழ்வின் நிகழ்வுகளைக் காணும் தோறும் உள்ளுக்குள் எழும் உணர்வுகளை மெய் பிரதிபலிக்கின்றது. அதனைக் காண்பார்க்குக் காட்சியளிக்கின்றது. தமிழர் பண்பாட்டில் காணப்பட்டுவந்த ஒவ்வொரு நிகழ்வும் அக்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், சுவடிகள் முதலியவற்றில் மெய்ப்பாடுகள் குறித்த பதிவுகளாக அதிக அளவில் காணப்படுகின்றன என்று துணியலாம்.

    பரிசில் பெறாதவரின் வறுமை நிலை

    வறுமை என்பது வெறுமையைக் குறிக்கும். ஒருவனிடம் பொருள், கல்வி, அறிவு இவைகள் இல்லையென்றால் அவன் வறியவன் ஆவான். கொடியது வறுமை. வறுமைக்கு உவமை சொல்ல வந்த வள்ளுவருக்கு வறுமையே உவமையானது வறுமையின் அழுத்தச் சித்திரம்.

    ‘இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னாதது’1
    (திருக்.1041)

    என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய வறுமைநிலையை விளக்குமுகத்தான் பொருநராற்றுப்படையில் மன்னனிடம் பரிசில் பெறாதவரின் வறுமை நிலையும், பரிசில் பெற்றவரின் முன்னர் வறுமைநிலையும் சித்தரிக்கப்படுகிறது.

    ‘ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு
    நீடுபசி ஓராஅல் வேண்டின், நீடு இன்று
    …………………………………………………

    இருசீர்ப் பாணிக்கு ஏற்ப, விரிகதிர்
    வெள்ளி முளைத்த நள்இருள் விடியல்
    ஒன்றுயான் பெட்டா அளவையின்’2
    (பொருந.61-74)

    என்ற பாடல் வரிகளின் மூலம் மிகுந்த புகழுடைய நான் கூறுவதைக் கேள்! கொல்லுகின்ற பசித்துயரால் வருந்துகின்ற உன் சுற்றத்தாருடைய நீண்டநாள் பசியைத் தீர்க்க நீ விருப்பம் உடையவனானால் இன்றே புறப்படு! ஏழிசை யாழ் நரம்புக்கு உரிமையுடையனே உடனே செல்!

    பழுத்த பழமரங்களை விரும்பித் தேடிச்செல்லும் பறவைபோல நானும் முன்பு உன்னைப் போல வறுமையுற்றிருந்தபோது இழுமென்னும் ஓசையுடன்  முரசொலித்துக் கொண்டிருக்கும் கரிகாற்பெருவளத்தானை அணுகித் தன் வறுமைதீர உண்பதாகப் பரிசில்பெற்ற பொருநன் தன் வறுமை நிலையையும் பரிசில்பெறாப் பொருநன் வறுமை நிலையையும் உரைப்பதை அறியலாம். வறுமை மிகும்போது அழுகை மெய்ப்பாடு தோன்றியுள்ளது. பெரும்பாணாற்றுப்படையில் பரிசில்பெறாப் பெரும்பாணனின் வறுமை நிலையினை,

    ‘வெந்தெறற் கனலியொடு மதிவலம் திரிதரும்
    தண்கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது
    பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
    பழுமரம் தேரும் பறவை போல,
    கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரித்தரும்
    புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண’3
    (பெரும்.17-22)

    என்ற பாடல் வரிகளில் ஞாயிறும் திங்களும் வலம் வருகின்ற கடல்சூழ் உலகில், மழை வறந்தமையால் புகை எழுகின்ற மலையின்கண், நின்னைப் புரப்பாரைப் பெறாமையால், பழுத்த மரத்தை நாடித்திரியும் பறவைபோன்று, அழுது புலம்பும் சுற்றத்தினருடன், ஓரிடத்து இல்லாமல் பயனின்றி ஓடித் திரிகின்ற பொலிவிழந்த வடிவினையும், கற்ற கல்வியை வெறுத்துப் பேசுகின்ற வாயினையும் உடைய பாணனே! என்று பாணனின் வறுமையைக் கூறி அவனை விளிக்கிறான். வறுமை வருமிடத்து அழுகை என்பது இயல்பாக தோன்றுகிறது.

    வழி நடந்த சோர்வால் அடைந்த வருத்தம்

    ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பம் வரும் பொழுது தான் வருத்தப்படுவான். மனிதன் வறுமையால் வருத்தம் அடைகின்றான், வழி நடந்த சோர்வால் வருத்தம் அடைகின்றான். இவ்வருத்தம் பொருநர் ஆற்றுப்படையில் ஓரிடத்திலும், சிறுபாணாற்றுப்படையில் இரு இடங்களிலும் இடம் பெறுகின்றது.

    பொருநராற்றுப்படையில் காடுறை தெய்வங்களை வணங்கி, கடன்செய்து செல்லுங்கள் என்று கூறவந்த பொருநன் பாடினி பாடின தாளத்திற்கு பொருந்துமாறு, நாள்தோறும் வழி செல் வருத்தம் தாங்கி இருப்பவன் என்று பொருநனை உரைக்கிறான். ஆறு என்பது வழியை குறிக்கும். தினந்தோறும் நடந்த வருத்தத்தை குறிக்கும் இதனை,

    ‘பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தோறும்
    …………………………………………
    இலைஇல் மராஅத்து, எவ்வம் தாங்கி’4
    (பொருந.48-50)

    என்ற பாடல் வரிகளின் வழி அறியலாம்.

    சிறுபாணாற்றுப்படையில் விறலியரையும் பாணரையும் விளிக்க, விறலியர்க்கு வருணனை அளித்த பாணன் வறுமை ஆற்றுப்படுத்தலால், வழி நடந்த வருத்தம் தீர்ந்திருந்த அறிவு வளர்த்தற்கு உரிய தொழிலினையுடைய இரவலனே! என்கிறான் இவ்வருத்தம் என்பது பாடலில் பயின்று வந்துள்ளது இதனை,

    ‘துனிகூர் எவ்வமொடு துயர்ஆற்றுப் படுப்ப
    முனிவு இகந்திருந்த முதுவாய் இரவல’5
    (பொருந.39-40)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் சிறுபாணன் தன் வருத்தம் போக்கிய வன்மை சிறப்பிர் வருத்த நிலையை

    ‘……………இந்நாள்
    திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
    கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

    ……………………………………………
    ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
    வளைக்கை, கிணைமகள் வள்உகிர்க் குறைத்த
    குப்பை வேளை உப்புஇலி வெந்ததை
    மடவோர் காட்சி நாணி, கடைஅடைந்து
    இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் மிசையும்
    அழிபசி வருத்தம் வீட……………………
    …………………………………………………….
    பால் அவன் நின்றும் வருதும்’6
      (சிறுபாண்.129-140)

    என்ற வரிகளில் விழிக்காத கண்ணையும், சாய்ந்த செவிகளையும் உடைய குட்டிகள், பிறரால் கறக்கப்படாத பாலினை உடைய முலையை உண்ணுதலைத் தன் பசிமிகுதியால் பொறுக்க இயலாது. அண்மையில் ஈன்ற நாய் குரைக்கின்ற, கழிகள் கட்டற்று வீழ்ந்து கிடக்கும் பழைய சுவர், அச்சுவரில் தோன்றிய கறையான் அரித்துச் சேர்த்த புழுதியிடத்துக் காளான் பூத்துவியங்கும் அட்டில், இத்தகைய நல்குரவினால், இளைத்த உடலை உடைய நுண்மருங்குல் கிணைமகள் கடும்பசிக்கு ஆற்றாது குப்பையில் நின்ற வேளைக் கீரையை நகத்தால் கிள்ளி வந்தாள். சுவை பயத்தற்கு இடும் உப்பும் இல்லாத வறுமை, உப்பின்றி அட்டிலிலே பக்குவம்செய்து கீரையைப் புறங்கூறுவோர் காணுவதை நாணித் தலைவாசற் கதவை அடைத்து எம் சுற்றத்தோடு பகிர்ந்து உண்போம், இத்தகைய வறுமை என்னை விட்டு அகலவும் அறிவு முதலியன அழிதற்குக் காரணமாகிய பசியால் உளதாகிய வருத்தங்கள் அறவே ஒழிந்தது என்று உரைக்கிறான்.

    பொருநனின் வழிநடை வருத்தம்

    மென்மை என்பது வலிமையின்மை ஆகும். வலிமை இல்லாத ஒருவன் செயல்கள் (வேலை) செய்வது கடினமான ஒன்றாகும். பொருநர் ஆற்றப்படையில் அரசனின் விருந்தோம்பல் சிறப்பினைக் கூறவந்த பொருநனின் வழிநடை வருத்தம் போகும்படி கள்ளினைப் பருகி மன வருத்தம் நீங்கும்படி அரசன் இருந்தான் என்று உரைக்கிறான் அதனை,

    ‘வாங்குபு தரத்தர வருத்தம் வீட
    ஆர உண்டு பேரஞர் போக்கி’7
       (பொருந.87-89)

    என்ற வரிகளின் வழி அறியலாம். வருத்தம் என்பதற்கு வழிநடையாலும் பசியாலும் உண்டான துன்பம் என்பது பொருள். இது வலிமையின்மையின் ஏற்பட்ட துன்பம் ஆகும்.

    இளந்திரையினது காவல் சிறப்பு

    விலங்கு என்பது ஐந்தறிவு உயிரினம், விலங்கு மனிதனாகிய விலங்கைக் கண்டு அச்சம் கொண்டு அவனை தாக்கும் போது அவன் விலங்கின் மீது அச்சம் கொள்கிறான். பெரும்பாணாற்றுப்படையில் இளந்திரையினது காவல் சிறப்பினைக் கூறுமிடத்து விலங்குகளால் ஏற்படும் அச்சம் குறித்து இடம்பெறுகிறது.

    ‘உருமும் உரறாது அரவும் தப்பா
    காட்டு மாவும் உறுகண் செய்யா’8
    (பெரும்பாண்.42-43)

    என்ற வரிகளின் மூலம் பாம்புகளும் கொல்லும் தொழிலைச் செய்யா; காட்டு விலங்குகள் கூட யாருக்கும் வருத்தம் செய்யமாட்டா. ஆதலால் அவ்வறம் நிகழும் நாட்டில், விரும்பிய இடத்து அச்சமின்றிச் செல்லலாம் என்று உரைக்கிறான் பெரும்பாணன் என்பதை அறியலாம். சங்க காலத்தில் காட்டு வழியினைக் கடந்தே செல்ல வேண்டும் புதியதோர் இடத்திற்கு செல்லும் பாணன் அச்சம் கொள்வது இயல்பு.

    கரிகாலனது கொடைச்சிறப்பு

    கொலை என்பது அறிவு முதலானவற்றைக் கொல்லுதல் என்பது பொருளாகும். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும், பறவைகளும்கூட இந்த உணர்ச்சிக்கு ஆளாவதை பார்க்கின்றோம். நகைச்சுவை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம். இந்தக் கோபம் செடிகொடிகளுக்கும்கூட உண்டாம். நம்மைத் துன்புறுத்துபவர்கள் அருகில் வந்தால் அவை கூடக் கோபத்தோடு விலகிக் கொள்கின்றனவாம்.

    விலங்காகிய கொலைத் தொழிலைச் செய்யக்கூடிய யானை வெளியுடையது என்று பொருநராற்றுப்படையில்,

    ‘வெருவரு செலவின் வெகுளி வேழம்’  11(பொருந.172)

    என்ற வரியில் கரிகாலனது கொடைச்சிறப்பினை கூறவந்த பொருநன் கரிகாலன் அளித்த பொருட்களை அதன் பண்புகளோடும் வருணனையோடும் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வகையில் கரிகாலன் அளித்த யானையின் சிறப்பை அச்சம் தரும் பறைகள் முழங்கி செல்லும் செலவினையுடய பரிய பெரிய வனைந்த கையினையும் வெகுளியையும் உடைய நல்ல பல யானைகளையும் தரும் தொழிலை உடையவன் என்று உரைக்கிறான். யானையின் இயல்புகளில் ஒன்றாக வெகுளியை உரைக்கிறான்.

    தொகுப்புரை

    பத்துப்பாட்டு ஆற்றுப்படைகளில் சிறுபாண், பெரும்பாண் ஆகியவற்றில் தொல்காப்பிய எண்வகை மெய்ப்பாடுகளில் அழுகை, இளிவரல், பெருமிதம், மருட்கை, அச்சம், உவகை, வெகுளி ஆகிய ஏழு வகையான மெய்ப்பாடுகள்  விளக்கப்பட்டுள்ளன; இன்பமும் துன்பமும் சேர்ந்ததே மனித வாழ்வு என்பதை இவை குறிக்கின்றன என்பதை அறியலாம்.

    அடிக்குறிப்புகள்

    1. மாணிக்கவாசகன்.ஞ(உ.ஆ), பத்துப்பாட்டு(தொகு), பொருந. பா.அ,61-74,ப.59
    2. மேலது, பெரும், பா.அ. 17-22, ப.120
    3. மேலது, பொருந, பா.அ. 48-50, ப.57
    4. மேலது, பா.அ. 39-40 ப.56
    5. மேலது, சிறுபாண், பா.அ. 129-140, பக்.100-101
    6. மேலது, பொருந, பா.அ. 87-88, ப.61
    7. மேலது, பெரும், பா.அ. 42-43, ப.124
    8. மேலது, பொருந. பா.அடி,131,ப.66
    9. மேலது, பா.அடி,168,ப.71
    10. மேலது, பா.அடி,172,ப.71

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
    விழுப்புரம்.

     

    Share
  • சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    கதிரவனின் சினம் எல்லை மீறி
    கனல் நாக்குகள் நீளும் !
    கூர்ந்து நோக்கின் பரிதியும்
    ஓர் தீக்கனல்
    போர்க் கோளம் !
    நெற்றிக் கண்கள் திறந்து
    கற்றைச் சுடரொளி பாயும் !
    பொல்லாச் சிறகை விரித்து
    மில்லியன் மைல் தாவும் !
    வீரியம் மிக்க தீக்கதிர்கள் !
    பீறிட்டெழும் ஒளிப் பிழம்பு !
    மீறி வெளிப்படும்
    மின்காந்தப் புயல்கள் !
    குதித் தெழும்பும் தீப்பொறிகள்
    வட துருவ வான் திரையில்
    வண்ணக் கோலமிடும்
    வையகத்தில் !
    வடுக்களே முகத் தேமல்கள்
    சுடுங் கொப்புளம் !
    இரு விண்ணுளவி நெருங்கிச் சென்று
    பரிதியின் பண்பா டறியும் !
    புவியைச் சூடாக்குவதும்
    குளிராக் குவதும்
    கதிரவன் நெற்றிக் கண்ணே !

    ++++++++++++++++++++++

    ++++++++++++++++++
    +++++++++++++++++
    +++++++++++++++++
    2020 ஆண்டில் நிகழப் போகும் இரு சூரிய விண்ணுளவித் திட்டங்கள்
    இதுவரைச் சூரியனை நெருங்கிச் செய்யாத நேர்முகத் தேர்வு விண்ணுளவிகளை முறையே அமெரிக்க நாசாவும், ஐரோப்பிய ஈசாவும் அனுப்பத் திட்டமிட்டுள்ளன.  நாசா ஏவும் விண்ணுளவி யின் பெயர் :  நாசா பார்க்கர் பரிதி உளவி, ஈசா   [NASA  Parker Solar Probe] ; ஈசாவின் சூரியச் சுற்றுளவி   [ESA Solar Orbiter].  இவை இரண்டும் சூரியனின் சிக்கலான இயக்கங்களையும், புரியாத தனித்துவப் பண்பாடுகளையும் ஆராயும்.  அவற்றின் மூலம் பிற சூரியன்களைப் பற்றி விபரங்கள் அறிய முடியும்.  உலக வானியல் விஞ்ஞானிகள் பல்லாண்டுகளாய் நமது சூரியனின் உட்புற இயக்கங்களைப் பற்றி ஆழ்ந்தறிய  இந்த இரு விண்ணுளவிகள் விளக்கம் அளிக்கும்.
    புவியில் வாழும் மனிதருக்கும், உயிரினங்களுக்கும், சூரிய ஒளிக்கதிர்களே வினையூக்கியாக சக்தி கொடுக்கிறது.  பூமியிலும், மற்ற கோள்களிலும் பருவக்கால சுற்று நிகழ்ச்சி களை உண்டாக்குவதும் சூரியனே.  அந்தப் பருவக் காலப் பாதிப்பே வானலைத் தொடர்பு, துணைக்கோள் இயக்கம்,  நமது மின்சாரப் பரிமாற்று இணைப்பு போன்றவற்றில் பிறழ்ச்சியை உண்டாக்குகிறது.
    ஈசாவின் சூரியச் சுற்றுளவி, பரிதியின் துருவங்களைக் கூர்ந்து ஆராயும்.  நாசாவின் பார்க்கர் சூரிய உளவியுடன், பரிதிப் புயலைச் [Solar Wind] சோதிப்பதில் ஈசாவின் சூரியச் சுற்றுளவியும் ஒத்து ஆராயும். பரிதியின் பல்வேறு மட்டரேகைகளில்  [Solar Latitudes]  வாயு அமைப்பு, புயலின் வேகம் எப்படி மாறுகின்றன என்பதும் பதிவு செய்யப்படும்.  முக்கியமாக பரிதியின் காந்த தளச்சக்தி துருவங்களில் திணிவு அடர்த்தியாக உள்ளதை ஈசாவின் சூரியச் சுற்றுளவி பதிவு செய்யும்.  நாசா, ஈசா இரண்டு விண்ணுளவிகளும்  சூரியனின் தீவிர இயக்கச் சூழ்வெளியை [Solar Dynamic Corona] ஆழ்ந்து ஆராயும்.

    +++++++++++++++++


     

    “சூரிய சக்தி வெளியேற்றம் குன்றிப் போகிறதென்றால் பரிதி சுருங்கி வருகிறது என்பது தெளிவாகிறது.  பரிதியின் விண்ணுளவிகள் அனுப்பிய தகவல் அதை உறுதிப் படுத்தினாலும் அந்த முடிவில் இன்னும் முரண்பாடு காணப்படுகிறது.”

    ஜெரார்டு துயில்லியர் (Pierre & Marie Curie University, Paris)

    “பரிதியின் தீ வீச்சுகள் (Solar Flares) விண்வெளிப் புயலாய் எப்போதாவது ஒருமுறைப் பூமியைத் தாக்கினால் நெடுங்காலம், துணைக் கோள்களின் தொலைத் தொடர்பு சமிக்கைகள் யாவும் தடைப்படும் !  பூமியில் மின்சக்திப் பரிமாற்றம் நிறுத்தமாகி நகரங்களில் இருட்டடிப்பு உண்டாகி மக்களுக்குப் பேரிடர்கள் நேர்ந்திடும்.”

    ரிச்சர்டு ஃபிஸ்ஸர் (Director NASA’s Heliophysics Division)

     


    “பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை !  பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம்.  யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது.  ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    “கடவுள் படைக்கும் போது நான் இருந்திருந்தால், பிரபஞ்சத்திற்கு மிகச் செம்மையான ஒழுங்கமைப்பு பற்றிப் பயன்படும் சில குறிப்புகளைக் கூறி இருப்பேன்.

    மேதை அல்ஃபான்ஸோ (Alfonso The Wise)

    “பிரபஞ்சம் புதிரான தென்று மட்டும் நான் ஐயப்பட வில்லை.  அது புதிருக்குள் புதிரானது என்று நான் கருதுகிறேன். மேலும் விண்வெளியிலும் பூமியிலும் கனவில் கண்டவற்றை விட இன்னும் மிகையான தகவல் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன்.”

    ஜே.பி.எஸ். ஹால்தேன் (J.B.S. Haldane, British-born Indian Geneticist & Evolutionary Biologist) (1892-1964)


    1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியில் அநேக சம்பவங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் நிகழ்ந்தன !  அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும்.  ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன !  அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூரணச் சூறாவளியை உருவாக்கின !

    புரூஸ் சுருடானி (Bruce Tsurutani, NASA Plasma Physicist, JET Propulsion Lab)

    “சூரியப் புயல் உண்டான சமயத்தில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,.  எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை.  தீவீச்சுகள் பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும்.  ஒரே ஒரு தீவிர தீவீச்சு மட்டும் 17 மணி 40 நிமிடத்தில் விரைவாகப் பூமியைத் தாக்கி விட்டது.”

    புரூஸ் சுருடானி (NASA Plasma Physicist)


    “சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.”

    ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA)

    சிறுகச் சிறுகப் பரிதியின் சக்தி சுருங்கி வருகிறதா ?

    நாசாவின் “சோகோ” (SOHO -Solar & Heliospheric Observatory) என்னும் பரிதிக் கோள விண்ணுளவி இரண்டு பரிதி வடுக்கள் சுழற்சிகளைப் (Sun Spots Cycles) பதிவு செய்தது. 1996 இல் தன் விர்கோ (Virgo) கருவியால் “பரிதியின் மொத்தக் கதிரூட்டம்” (Total Solar Irradiance -TSI) அதாவது சூரியன் வெளியேற்றிய சக்தியை அளந்தது.  30 வருடப் பதிவுகளை எடுத்துக் கொண்டால் சூரியனின் தணிவுச் சுழற்சி சமயத்தில் (Solar Minimum Cycle) அதன் சக்தி வெளியேற்றம் முந்தய தணிவுச் சுழற்சி சமயத்தை விட 0.015 % குன்றி இருந்ததாக அறியப்பட்டது.

    பின்னத்தின் அளவு சின்னதாகத் தோன்றினும் சக்திக் குறைவு மொத்தத்தில் பேரளவானது.  நாமெல்லாம் பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறாது என்று நினைப்போம்.  1980 இல் நாசாவின் பரிதி உச்சத் திட்டவுளவி (Solar Maximum Mission) ஏவிய பிறகு அந்தக் கருத்து மாறியது.  அதன் தகவல்படி ஒருசில நாட்களில் அல்லது ஒரு சுழற்சி சமய வாரங்களில் பரிதியின் சக்திப் படைப்பு 0.1 % அளவு மாறுபடும் என்று விஞ்ஞானிகள் கண்டுள்ளார்.

    சக்தி வெளியேற்றத்தில் மாறுபாடுகள் இருந்தாலும் மூன்றாண்டு காலம் சூரிய நீச்ச சமயத்தில் (Solar Minima) பரிதியின் மொத்தக் கதிரூட்ட (Total Solar Irradiance -TSI) வெளியேற்றம் அதே அளவு (0.015 %) குறைந்தது.  ஆனால் தற்போதைய நீண்ட சூரிய நீச்ச நிலையில் அவ்விதம் நேரவில்லை.  குன்றிய அளவு மிகச் சிறிதாயினும் அந்தக் குறைவு பரிதியில் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப் பட்டது.  பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறினால், அதன் உஷ்ணமும் ஏறி இறங்கும் ! பரிதியின் மேற்தளம் எத்துணை அளவு குளிர்ந்து போகிறதோ அத்துணை அளவு சக்தி வெளியேற்றமும் குன்றும்.  சூரியனின் வெப்ப வீச்சுப் பரிமாணத்தில் குழி விழும்போது, பரிதி சுருங்கி வருகிறது என்பது அறியப் படுகிறது.

    பரிதி முக வடுக்கள் மிகையாகும், குறைவாகும் விந்தைகள்

    நாமிந்த பூகோளத்தில் ஒவ்வொரு விநாடியும் உயிர்வாழப் பரிதி ஒளியுடன் கதிர்கள் வீச விநாடிக்கு 600 மில்லியன் டன் ஹைடிரஜன் வாயுப் பிழம்பைப் (Plasma) பிணைத்து ஹீலியமாக்க வேண்டும்.  இந்த வெப்ப சக்தி இழப்பு வீதத்தில் பரிதி இன்னும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்க அதனிடம் எரிவாயு உள்ளது என்று கணிக்கப் படுகிறது.  பரிதியில் முகத் தேமல்கள் (Sun Spots) தெரியும், மறையும். கூடும், குறையும்.  இது இயற்கை விதி.  சமீபத்தில் முக வடுக்கள் பெரும்பான்மையானவை பரிதியில் மறைந்து போயின.  பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பரிதியின் மீது கருந் தேமல்கள் எப்போது தோன்றும், சில நாட்களிலா, சில வாரங்களிலா அல்லது சில மாதங்களுக்குப் பிறகா எப்போது மறையும் என்று தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்திருக்கிறார்.  இப்போது விஞ்ஞானிகள் பரிதியின் முக வடுக்களின் எண்ணிக்கை ஏறி இறங்கும் ஒவ்வோர் பதினோர் ஆண்டு கால நீடிப்புக்கும் பதிவு செய்திருக்கிறார்.  சூரியனின் மின்காந்த சக்தி ஏற்ற இறக்கச் சுழற்சி (Magnetic Energy Cycle) 22 ஆண்டுக்கு ஒருமுறை உச்சமடையும்.

    விரிந்து போகும் இந்தப் பிரபஞ்சம் ஒருபோதும் முறிந்து போகாது.  அதனுள் இருக்கும் கோடான கோடி காலாக்ஸிகள் தமது ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்திப் பிரபஞ்ச விரிவைத் தடுக்க முடியாது.  விண்வெளியே விரிவை விரைவாக்கும் ஒருவித விலக்கு விசையுடன் (Repulsive Force) இணைந்து கொண்டுள்ளது.  பிரபஞ்சம் எப்போதும் விரிவதோடு விரைவாக்கம் மிகுதியாகி குளிர்ந்து போன இருட்டை நோக்கிச் செல்கிறது.  அதன் விளைவு வானியல் விஞ்ஞானிகளின் சூனிய எதிர்காலம் !  அடுத்த 150 பில்லியன் ஆண்டுகளில் 99.9999 சதவீத காலாக்ஸிகள் பிரபஞ்சத்தில் காட்சியிலிருந்து நழுவிப் போய்விடும் !

    சூரியனைப் பற்றிச் சில வானியல் பண்பாடுகள்

    சூரிய குடும்பத்தில் பரிதியே ஏறக்குறைய 98.8% பரிமாண நிறையைக் கொண்டுள்ளது. 4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே வாயு முகிலிலிருந்து சூரிய நிபுலாவாக (Solar Nebula) பேரளவுக் கோளமாய் வடிவான பரிதி அசுர ஈர்ப்பு விசை பெற்று பல பில்லியன் மைல் தூரத்தில் உள்ள அனைத்து அண்டங்களையும், பிண்டங்களையும் தன்வசம் இழுத்துக் கொண்டது ! உருண்டு திரண்ட ஒழுங்குக் கோள்களும், ஒழுங்கற்ற முரண் கோள்களும், உடைந்த பாறைகளும், சிதறிய துணுக்குகளும் பரிதியைச் சுற்றிவரத் துவங்கின.  வியப்பாகச் சூரிய குடும்பத்தின் “தொகுப்பு மையம்” (Barycenter) புறத்தே விழாமல் பரிதியின் சூழ்வெளியிலே அடங்குகிறது.

    பரிதி பேரளவு உஷ்ணமுள்ள ஓர் அசுர பிளாஸ்மா பந்து (Ball of Plasma).  மின்னூட்டம் ஏறிய பேரளவு ஹைடிரஜன், சிறிதளவு ஹீலிய வாயுக்கள் நிரம்பிய கோளம். பரிதியின் விட்டம் 864,000 மைல் (1391,000 கி.மீ).  பூமியைப் போல் 333,000 மடங்கு பெரியது பரிதி.  ஒரு மில்லியன் பூமியைத் தன்னுள் அடக்கும் பூதப் பரிமாணம் கொண்டது பரிதி.  பூமியில் 100 பவுண்டு (45 கி.கி.) கனமுள்ள ஒரு மனிதன், பரிதியில் நிற்க முடிந்தால் 2800 பவுண்டு (1270 கி.கி) பளுவில் இருப்பான்.  பூமியிலிருந்து பரிதியின் தூரம் : 93 மில்லியன் மைல் (150 மில்லியன் கி.மீ).  நமது சூரியன் ஒரு நடுத்தர விண்மீன்.  அதன் எரிவாயு சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு நீடிக்கும் அளவுக்குப் பெரிய விண்மீன்.  இதுவரை வானியல் விஞ்ஞானிகள் நமது பரிதி போல் 3500 மடங்கு பெரிய ஒரு விண்மீனைக் கண்டு பிடித்துள்ளார்.

    அணுப்பிணைவு சக்தியே சூரியனை ஒரு பெரும் அசுரத் தீக்கோளமாய் ஆக்கி மின்காந்த சக்தியை உற்பத்தி செய்து வருகிறது.  அதன் உட்கரு உலையில் விநாடிக்கு அரை பில்லியன் டன் ஹைடிரஜன் அணுக்கரு பிணைந்து ஹீலியமாக மாறி வருகிறது.  உட்கரு உலையின் உஷ்ணம் : 15.7 மில்லியன் டிகிரி கெல்வின் (28 மில்லியன் டிகிரி ·பாரன்ஹீட்).  பரிதியின் மேற்தள உஷ்ணம் : 5800 டிகிரி கெல்வின் (10,000 டிகிரி ·பாரன்ஹீட்).  சூரியனின் ஈர்ப்பு விசை பரிதி மண்டலத்தைத் தாண்டி 200,000 AU (1 AU = Sun – Earth Distance) (1 Astronomical Unit) தூரத்தில் உள்ள வால்மீன் ஓர்ட் முகில் வரை (Oort Cloud of Comets) நீடிக்கிறது.

    பரிதியால் பூமிக்கு ஒளிமயமான எதிர்காலம் !

    4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சூரியன் நியதிக்கு உட்பட்டுப் பூமிக்குத் தொடர்ந்து ஒளியும் வெப்பமும் அளித்து வருகிறது.  பரிதியின் மையமே ஹைடிரஜன் எரிவாயுவை ஹீலியமாக்கும் அணுப்பிணைவு இயக்கத்தில் இந்த அசுர சக்தியை உண்டாக்கி வருகிறது.  புதிதாக இருக்கும் பரிதியில் பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயும், அணுப்பிணைவில் விளைந்த சிறுபான்மை ஹீலியமும் சேர்ந்துள்ளன.  ஆனால் மையத்தில் எரிவாயு எரிந்து தணிவதால், சூரிய ஒளி மெதுவாக மிகை யாகிறது !  இப்போது பரிதியின் ஒளிமயம் 40% அளவு தோன்றிய காலத்து ஒளியை விட அதிகரித்துள்ளது.  இது ஒரு பெரும் வியப்பே !

    பரிதிக்கு வயதாக வயதாக ஒளிகுன்றாமல் மிகையாகிறது !  இவ்விதம் இடைத்தர விண்மீனான நமது சூரியனின் சுடரொளி மிகுவது தொடரும்.  இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளில் நமது பரிதியின் ஒளித்திரட்சி தற்போதைய ஒளிவீச்சை விட 10% அளவு மிகைப்படும் !  அத்தகைய ஒளிச் சூடேற்றம் மெதுவாகப் பூமியில் கடல் வெப்பத்தை அதிகமாக்கி முடிவில் கடல் வெள்ளம் கொதிக்க ஆரம்பிக்க லாம்.  அவ்விதமே வெள்ளிக் கோளின் தள உஷ்ணம் 860 டிகிரி F (460 C) வரை ஏறிச் சென்று நீர் வற்றி அது ஒரு பாலை வெளியானது.  பூமியில் உயிரினத்துக்கு உயிரூட்டும் ஒளி வெப்பமே இறுதியில் அவற்றை முற்றிலும் அழிக்கிறது !

    6 பில்லியன் ஆண்டுகள் கழித்து நமது பரிதி மிகப் பெரும் மாறுதல்களில் சிதை வடையும்.  கடல் வெள்ளக் கொதிப்போடு மானிட வசிப்புக்கே நிரந்தமாய்ப் பெருங் கேடு உண்டாகும்.  சூரிய மையக் கருவில் உள்ள எரிவாயு ஹைடிரஜன் தீர்ந்து போய்க் கருவுக்குக் கவசமாய் உள்ள எரிவாயு அடுத்து எரியத் துவங்கும் ! அதன் விளைவு : சூரியன் உடல் உப்பிடும் ! ஒளி பெருகிடும் ! ஆனால் உஷ்ணம் குளிர்ந்திடும் !  முடிவில் ஒரு செம்பூத விண்மீனாய் (Swelling into a Red Ginat Star) உடல் பெருக்கும் !  விரியும் செம்மீன் 100 மடங்கு ஒளிமயத்தில் அருகில் சுற்றிவரும் புதன் கோளைத் தின்றுவிடும் ! ஏன் சுக்கிரனையும் விழுங்கலாம்.  அப்போது பூமிக்கு என்ன நேரும் என்று நினைத்துப் பார்க்க முடியாது !  கொதிக்கும் பரிதி பூமியை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடும் !  பூமியின் உயிரினங்கள் பிழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பூமி சனிக் கோள் இருக்கும் சுற்றுப் பாதைக்குத் தள்ளப்பட வேண்டும் !

    சூரியனுக்கு அடுத்து என்ன நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஊகிக்க முடியாது !  பெரும்பான்மையான விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டில் நேர்ந்தது போல் பரிதித் தேமல் ஏற்ற இறக்க சுழற்சியைத் (Sun Spots Cycles) தொடரும் என்று சொல்கிறார்.  மேலும் சூரியன் தேமல்கள் உண்டாக்கும் சக்தியின்றிப் போகிறது என்பதற்குச் சான்றுகள் தோன்றியுள்ளன !  2015 ஆண்டுக்குள் எல்லாத் தேமல் வடுக்களும் மறைந்து புதிய “மாண்டர் வடுக்கள் நீச்சம்” (Maunder Sun Spots Minimum) உண்டாகி ஏன் புதிய சிறு பனியுகம் பூமியிலே தோன்றலாம் !

    *********************

    தகவல் & படங்கள் :

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American, The New Scientist & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What will Happen to the Sun ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 National Geographic Magazine : Sun Bursts – Hot News from Our Stormy Star (July 2004)
    25 Scientific American Magazine : The Paradox of the Sun’s Hot Corona By : Bhola N. Dwivedi & Kenneth Philips (June 2001)
    26 Scientific American Magazine : The Steller Dynamo By Elizab eth Nesme-Ribes (2004)
    27 Solar Superstorm – A NASA Report (Oct 23, 2003)
    28 Scientists Worry About Solar Superstorm By : Leonard David (www.Space.com) (May 2, 2006)
    29 Solar Storms Strip Water in Mars – Planetary Geology – Geotimes By : Sara Pratt
    30 The Science Behind Solar Storms By : Noelle Paredes\
    31 Bracing for a Solar Storm – http://www.unexpected-mysteries.com/
    32 What Causes Irradiance Variations ? (http://sdo.gsfc.nasa.gov/missiom/irradiance.php)
    33 The Solar Spectral Irradiance & Its Vaiations.
    34 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html(திண்ணைக் கட்டுரை – சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ?
    35 http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006272&format=html((திண்ணைக் கட்டுரை – சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ?
    36 New Scientist : Exodus on the Exploding Earth (April 17, 2010)
    37 Astronomy Magazine : Is the Sun an Oddball Star ? (June 2010)
    38 New Scientist Magazine – What is up Sunshine ? By : Stuart Clark (June 12, 2010)
    39 Daily Galaxy (The Daily Telegraph, UK) : Huge Solar Storms to Impact Earth NASA Warns By : Casey Kazan (June 17, 2010)
    40 Reader’s Digest – The Universe & How to see it By : Giles Sparrow (2001)
    41 The Universe at Midnight – Observations Illuminating the Cosmos By : Ken Croswell (2001)
    42. The National Geographic – The New Universe Here, Now & Beyond (August – November Issue 2010)

    43. https://phys.org/news/2018-05-views-sun-missions-closer-star.html  [May 10, 2018]

    44. http://scienceofcycles.com/tag/two-missions-will-go-closer-to-our-sun-than-ever-before/  [May 17, 2018]

    45.  https://www.nasa.gov/feature/goddard/2018/new-views-of-sun-2-missions-will-go-closer-to-our-star-than-ever-before  [May 16, 2018]

    46. https://www.nasa.gov/content/goddard/parker-solar-

    47. probehttps://en.wikipedia.org/wiki/Solar_Orbiter

    ******************

    S. Jayabarathan [ jayabarathans@gmail.com] (May 20, 2018)
    https://jayabarathan.wordpress.com/

    Attachments area

    Preview YouTube video Parker Solar Probe

    Preview YouTube video BREAKING: NASA Sending a Mission to TOUCH the SUN

    Preview YouTube video This NASA Probe Will Fly Closer to The Sun Than Anything Ever Before

    Preview YouTube video Naked Science – Death of the Sun

    Preview YouTube video NASA’s Parker Solar Probe Will Fly Fast and Close to Sun

    Preview YouTube video Heliospheric Future: Solar Probe Plus & Solar Orbiter

    Share
  • சற்றே சிந்தித்துப்பார் மனிதா

    சற்றே சிந்தித்துப் பார் மனிதா !

    பலத்த காற்றிலும் நாணல் வளைந்து கொடுக்கின்றதே
    மனிதா வளைந்து கொடுக்க கற்றுக்கொள் !

    காகங்கள் கற்றுக்கொடுக்கின்றன ஒற்றுமையுடன் கூடி வாழ
    எறும்புகள் கற்றுக்கொடுக்கின்றன சேமிப்பின் சிறப்பை !

    தேனீக்கள் கற்றுக்கொடுக்கின்றன சுறு சுறுப்பின் சூட்சமத்தை
    ஆமைகள் கற்றுக்கொடுக்கின்றன விடாமுயற்சி எனும் பண்பை !

    நாயும், பசுவும் செய்ந்நன்றி என்ன என்பதை அறிவுறுத்துகின்றன
    எருதுகள் தனது கடினஉழைப்பை உதாரணமாக காட்டுகின்றது!

    சிங்கமும்,யானையும், வீரத்திற்கும்,பலத்திற்கும் உவமையாகின்றன
    மயிலும், குயிலும் அழகுக்கும், குரலுக்கும் எடுத்துக்காட்டாகின்றன!

    ஐந்தறிவு ஜீவன்களே நமக்கு நல்லவைகளையே கற்றுக்கொடுக்கின்றன
    ஆறறிவு உள்ள மனிதனே, நீ மட்டும் கெட்டதையே கற்றுக்கொடுக்கின்றாய்!

    ரா.பார்த்தசாரதி

    Share
  • படக்கவிதைப் போட்டி 161-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    உழைப்பின் உயர்வை உலகுக்குணர்த்தும் உழைப்பாளர் சிலையைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. வெங்கட்ராமன். எம். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    ”காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கியும்
    கல்பிளந்து மலைபிளந்து கனிகள்வெட்டித் தந்தும்
    ஆலைகள் மலர்ச்சோலைகள் கல்விச்சாலைகள் அமைத்தும்
    நாட்டையும் வீட்டையும் நலமடையச் செய்வோர் உழைப்பாளிகள்!”

    அவர்தம் பெருமையை மேலும் தம் கவிதைகளில் விரித்துரைக்கக் கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

    ”பாட்டாளிக் கூட்டத்தால் உருவானோரே பெரும் பணக்காரர்கள்! ஆகவே வீட்டுக்கு வீடு கூட்டாய் உழைப்போம்; சோம்பல் எனும் கேட்டை ஒழிப்போம்!” என்று பாட்டாளிகளின் பலத்தைத் தன் பாட்டால் விளக்குகின்றார் ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி.

    பாட்டாளிகளே பலம்!!!!

    எட்டாத தூரமந்த இமயமலை _ அதைக்
    கிட்டால கொண்டுவர தொடர்ந்து உழை!
    பட்டாளத்தார் பணியில் நாட்டின் எல்லை
    கெட்டியாயிருப்பதினால் ஏது தொல்லை!
    வெட்டி முறித்தபின்பு கரம் விரித்தால்
    கொட்டிக்கிடக்கிறது கமல வண்ணம்!!
    சட்டங்களைப் போடுகிற அரசாங்கமும்
    சிட்டாயாயுழைப்போரால் பேறுபெரும்!
    விட்டாத்திரும்பிடாத நேரங்காலத்தை
    முட்டாளாயில்லாமல் செயலாற்றினால்
    துட்டு ஏராளம் சம்பாத்தியம் பெற்று
    இட்டு நிரப்பிடலாம் இல்லச் சுமையை!!
    எட்டும் அறிவினில் ஆணும்பெண்ணும்
    கூட்டாயியங்கையிலே வெற்றிபெறலாம்!
    காட்டைவெட்டி நிலமாக்கிப் பயிரிடுவோர்!
    ராட்டைநூத்துத் தறியாலே நெய்திடுவோர்!
    போட்டிபோட்டுத் தொழிற்சாலைதோறும்
    ஈட்டுகிற பொருள்களை அள்ளிவழங்கி
    நாட்டுக்கு வளம்தரும் தொழிலாளிகள்!!
    டாட்டா பிர்லாக்கள் நிறையப் பேர்கள்
    பாட்டாளிக் கூட்டத்தால் உருவாகுவார்!!
    ஓட்டாண்டி இல்லாத உலகமைப்போம்
    வீட்டுக்கு வீடு உழைப்பாலுயர்வோம்!!!
    சூட்டிடுவோம் மகிழ்வினை மக்களுக்கே!

    ”ஊழலை ஒழிக்க ஏற்றவழி உழைப்பவர் குரலை மதிப்பதே! உழைக்கும் கரங்கள் மன்பதைக்குக் கிடைத்த வரங்கள்!” என்று உழைப்பாளிகள் புகழ்பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உழைக்கும் கரங்கள்…

    உழைக்கும் கரங்களை உழைக்கவிடு
    உதவிக் கரங்களாய்ச் சேர்ந்துவிடு,
    மழையைத் தந்திடும் மேகம்போல்
    மன்பதை காத்திடும் கரங்களவை,
    உழைப்பைச் சுரண்டிடும் கூட்டத்தினர்
    உண்மை நிலையைக் காட்டிவிடு,
    உழைப்பவர் குரலதை மதித்திருந்தால்
    ஊழல் உலகினில் வாராதே…!

    ”வாய்ப் புரட்டை வெட்டிப்போடு! ஊழல்செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு! உழைக்கும்வர்க்கம் ஆளவும், ஆளும்வர்க்கம் உழைக்கவும் வழிதேடு!” என்று நடைமுறைப்படுத்தவேண்டிய நல்ல மாற்றங்களைத் தன் கவிதையில் பட்டியலிடுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    பெயர்த்துப்போடு புரட்டிப்போடு புரட்டியதை வகுத்துப்போடு
    வகுத்துப்போட்ட தத்தனையும் வாரிவாரி நிரவிப்போடு – நீ
    மேடறுத்துச் சமனம் நாட்டு! மேடறுத்துச் சமனம் நாட்டு!வீழ்ந்தவற்றை நிமிர்த்திப்போடு நிமிர்ந்தவற்றைப் பதித்துப்போடு
    பதிப்புகளை மாற்றியாக்கி ஏழை மதிப்புயர வாய்ப்புச் சேரு – நீ
    வாய்ப்புரட்டை வெட்டிப்போடு! வாய்ப்புரட்டை வெட்டிப்போடு!
    தளங்கள் போட்டுக் களங்கள் கூட்டு களங்களிலே மக்கள் கூட்டு

    கூட்டம் போட்டு அத்தனைக்கும் காட்டமான திட்டம்போடு – நீ
    திட்டங்களை முழுச் செயலிலாக்கு! திட்டங்களை முழுச் செயலிலாக்கு!
    உழைப்பவர்க்கு ஊதியத்தை உண்மையாக வழங்கலாக்கு

    வழங்கலிலே ஊழல் செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு – நீ
    தட்டும் தடைகள் இடித்துப்போடு! தட்டும் தடைகள் இடித்துப்போடு!
    வாட்டம் போக்கு கட்டம் போக்கு வேலைவாய்ப்பு பெருகலாக்கு

    பெருத்தப் பணமுதலைகளை, ஈனர்களை வளைத்து வீழ்த்து – நீ
    வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு! வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு!
    அரசியலைப் புரட்டிப்போட்டு புரட்டி அதை நிறுத்திப்போடு
    நிறுத்திப்போட்டு உழைக்கும் வர்க்கம் ஆளுமாறு மாற்றிப்போடு – நீ
    ஆளவந்தார் உழைக்கக் கோரு! ஆளவந்தார் உழைக்கக் கோரு!
    எஃகு உடல் வைரமனம் மானுடர்க்கு நல்பாடம் காட்டு
    காட்டுமாறு கட்டுடலை வாட்டமாக வளர்க்கக்காட்டு – நீ
    வளர் நலவாழ்வை வளமையாக்கு! வளர் நலவாழ்வை வளமையாக்கு!
    பாறைகாத்து தரையைக் காத்து, மேகம் காத்து, மாரி காத்து

    மாரிசேரும் நீர் நிலைகள் காத்து – நீ
    காத்துத் தூய்மை பாதுகாப்புச் சேரு! காத்துத் தூய்மை பாதுகாப்புச் சேரு!

    தன் பிறிதொரு கவிதையில், ”உழைப்பின் கானமே உதிர கானம்! உழைப்பாளர் உறுதிமுன்னே பெரும்பாறையும் பணியுது; கருங்கடலும் கைத்தட்டுது! இத்தகு உழைப்பாளர் வாழ்வுயர உதவிகள் புரிந்திடுவோம்!” என்று நன்மொழிகள் பகர்ந்திருக்கின்றார் அவர்.

    ஏஏய்———! ய்—–ஏஏய் –! ம்ம்ம்ம்ம்!
    இன்னும் போடு! வலிடா! இசுடா! டேய் நிறுத்து!

    உழைப்பின் கானம் உதிர கானம்
    வேர்வை ஊற்றம் நாற்றம் பாடுது
    பாரம் தூக்குமவர் கானம்தானே
    பாரைக்கூட நகர்த்தி இயக்குது

    உடலின் உரமும் மனதின் பலமும்
    இணைந்தசைந்திசைந்தோர் அபிநயம்
    எலும்பு தசை நரம்பு சிரைதமனி
    புருவ கண்நெளிவின் சுருதிலயம்

    நெம்புகோல்கள் நெட்டித்தள்ள
    அவர் மூச்சு சுவாசம் தேங்குது
    விலாக்குள்ளே முணுக்குமிதயம்
    நொடித்தவாறுயிரும் சேர்ந்தியங்குது

    பெரும்பாறையங்கே பணியுது
    பெருங்கடலும் கைதட்டி மகிழுது
    சேர்ந்தியக்கும் அவர் தவநிலையைக்
    கருடன் சேர்ந்து வந்து வணங்குது

    அமர்ந்தவாறு பணமுதலையங்கே
    பல குட்டிபோட்டுப் பெருக்குது
    சிம்மாட்டு கோவணாண்டியாக இவர்
    மறைவர் நீதியெங்கிருக்குது?

    உழைப்பு மட்டும் மூலதனம்
    உடைக்கலமாய்ப் போகவிடுவதா?
    உழைக்கும் மாந்தர் வாழ்வினிக்க
    மேலும் பெருக்கிடுவோம் உதவிகள்!

    ”வாழ்வில்சூழ் தீவினைகளை ஊழ்வினை என்றெண்ணி மருளாமல், உடலுழைப்பால் உயரவேண்டும்! புல்லர்களின் பேச்சால் பொன்னான வாழ்வை இழக்கக்கூடாது” என்று உழைப்பின் உயர்வைச் சிறப்பாய் உரைக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழைப்பின்றி இல்லை உயர்வு..!

    சூழ்ந்திருக்குது நம்மைச் சுற்றி வட்டமாய்
    ……சூழ்ச்சி வலைகளெங்கும் சிதறிக் கிடக்குது..!
    வாழ் வனைத்தும் துன்பங்கள் வினைகள்
    ……வஞ்சனை நிறைந்த வழியாகவே தெரியுது..!
    ஊழ்வினை இதெல்லாம் என்று நினையாது
    ……உடலுழைப்பால் உயரும் வகை அறிவீர்..!
    ஏழ்பிறப்பும் மனிதனாய்ப் பிறந்து வாழ்வில்
    ……ஏற்றமுற நித்தமுமே உழைக்கமுன் வருவீர்..!

    இரும்புக் கரங்களால் உழைத்து உருவாகி
    ……எழுந்து நிற்கிறது விண்முட்டும் கோபுரம்..!
    இருநூறடிக்கு மேல் எண்பதாயிரம் கிலோ
    ……எடையை உழைப்பிலே காணும் அதிசயம்..!
    அரும் பெரும் உழைப்பால் உருவானது
    ……ஆயிர மாண்டாக அதிசயமாய்த் திகழ்கிறது..!
    பெரு வுடையார் கோவிலின் புகழாலதற்குப்
    ……பெரிதாய் உழைத்த வரின்றும் வாழ்கிறார்..!

    எல்லாமிங்கே இனாமாகக் கிட்டும் போது
    ……எதற் குழைக்க வேணுமென எண்ணாதே..!
    புல்லர்களின் பயனற்ற பேச்சில் மயங்கிப்
    ……பொன்னான வாழ்வையும் நீஇழந் திடாதே..!
    பொல்லாப்பு யாரிடமும் வேணாம் தம்பி
    ……பொறுப்பாக நடந்து கொள்ள முயலுவாய்..!
    நல்லொழுக்கம் ஒன்றுதான் நாமுயர வழி
    ……நாட்டில் இன்றிது முக்கியத் தேவையப்பா..!

    பாட்டாளியின் உழைப்பே முதலாளியின் உயர்வு! ஆதலால் உழைக்கும் கரங்களே! நீங்கள் உங்கள் உரிமைக்குக் குரல்கொடுங்கள்! வெற்றியைப் பெற்றிடுங்கள்!” எனப் பாட்டாளி மக்களின் உழைப்பைத் தன் கவிதையில் உருக்கமாய் உரைத்திருக்கின்றார் திரு. ரா.பார்த்தசாரதி. 

    பாட்டாளி மக்கள்!

    நான்குபேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
    நம் மனதில் அவன்படும் துன்பத்தைக் காண்கின்றோம்
    மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும் மிக கஷ்டம்
    நான்காம் நெம்புகோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே
    அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
    உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை
    பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
    பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்
    படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
    நேரம் காலமின்றிக் கடுமையாக உழைக்கின்ற கூட்டம்
    உழைத்தால்தான் ஊதியம் பெறமுடியும்

    உழைப்பாளியின் வேர்வைக்கு என்ன பலன்?
    […]
    அறிவுத்திறன் கொண்டு உழைப்பவனுக்கு ஊதியம் அதிகம்

    உடல் உழைப்பைக் கொண்டு உழைப்பவனுக்கோ ஊதியம் குறைவு
    இமயமலைப் பனிமலையில் நின்று
    அயல்நாட்டு ஊடுருவலைத் தடுத்து நிறுத்தும்

    பட்டாளத்துப் பாட்டாளி மக்களையும் நினைவு கொள்ளுங்கள்
    நம் பசியைத் தீர்க்கும் விவசாயியும் ஒரு பாட்டாளிதான்

    அவன் அருமை தெரியாமல் நசுக்க முற்படுவதும் அரசுதான்!
    உழைக்கும் கரங்களே, உரிமைக்குக் குரல் கொடுங்கள்

    அடக்குவோரை எதிர்த்துநின்று வெற்றி வாகை சூடுங்கள்! 

    ”விதிக்கே விதி செய்த தேசம்; இன்று விக்கித் திணறுவது மோசம்! கறுப்புப்பணமே நாம்கண்ட வளர்ச்சி; அதைவைத்துச் செய்கிறாரே வெற்றுப் புரட்சி!” என்று நாட்டுநடப்பைத் தன் கவிதையில் போட்டுடைத்திருக்கின்றார் திரு. சத்தியமணி. 

    தடைக்கல் த‌டைகளைப் புறம் சாய்ப்போம் – அது
    சாயாதிடின் உடைத்தெறிவோம்!
    உடைகல் உடைகளை உடன்கிழித்தால் – அது
    கரையும்வரை வியர்த்துழைப்போம்!

    கரிகள் பூசி நமைச் சேர்ப்பார் – பெரும்
    வரிகள் விதித்து நலம் கேட்பார்
    நரிக ளாளும் இந்த நாட்டில் – எங்கு
    நியாயம் தர்மங்களைப் பார்ப்பார்?
    உழைக்கும் சிலையதற்கு மாலை, பின்னர்
    ஊழல் அணிவகுப்பில் சாலை!
    விதிக்கும் விதிசெய்த தேசம் – இன்று
    விக்கித் திணறுகிற மோசம்!

    வானங் கறுக்கவில்லை வறட்சி – சிலர்
    மனத்தில் கற்பழிக்கும் உணர்ச்சி!
    கறுப்புப் பணக்குவியல் வளர்ச்சி அதைக்
    காட்டி நடத்தும் இவர் புரட்சி!
    தனக்குத் தேவை வருமானம் அதை
    மடக்கிப் பிடுங்கும் அவமானம்!
    கிடைத்த பேர்க்கு வெகுமானம் – அது
    கிட்டாவிடின் ஏது பிரமாணம்?

    ”ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை; வேளாண்மை இல்லையேல் வாழ்வே இல்லை. ஆதலால் கனிவுமிக்க மனிதராய்க் கழனிகளில் பயிர்த்தொழில் செய்து உயிர்கள் காப்போம்” என்று உழவின் பெருமையை உரக்கப் பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன். 

    ஏர் முனைக்கு நேரில்லை

    அங்கிங்கு எனாதபடி எங்குநாம்
    நோக்கித் தொழிற்துறைச்
    சாதனங்களைச்
    சீர்தூக்கிப் பார்த்தால்
    ஏர் முனைக்கு நேராக
    எதுவுமே இல்லே!
    வேளாண்மை இல்லையேல்
    வாழ்வே இல்லை
    தலை அறுக்கும் கூரிய
    வாளை எல்லாம் நெளித்து
    ஏர் முனை ஆக்கு!
    வேலை எல்லாம் வளைத்து
    ஏர் முனை ஆக்கு!
    மடிவெடித் தட்டி அப்பாவிக்
    குடிகளைத் துண்டாக்கும்
    மூர்க்கரைப் பற்றிச் சிறையில்
    சேர்க்காது,
    ஏர்முனை பிடித்து, நிலம்
    உழுது பயிரிட்டு
    உயிர்களை வளர்க்கும்,
    கனிவு மனிதராய் ஆக்கு!
    இனிமேல் அதுவே
    பணி நமக்கு! பாசம் நமக்கு!
    பாதை நமக்கு!

    உழைப்பாளர் சிறப்பை உயரிய வகையில் விதந்தோதியிருக்கும் கவிஞர்கள் குழாத்துக்கு என் கனிவான பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுசெய்யப்பட்டிருப்பது இனி…

    வெற்றியின் வேதம்

    முடிவதில்லை எதுவும் முயலாமல் தன்னாலே
    முடியாததில்லை எதுவும் முயன்றாலே
    முடியுமென்று முன்னேறு – உன்னாலே
    முடிந்து உடையும் தடைகள் பல பின்னாலே

    கடமையை மட்டும் செய் கவனமாய்
    கடுமையின் கொடுமைகள் கட்டளையிடும்
    கடைசி வாய்ப்பாயினும் கைவிட்டுவிடாதே
    கடினமாய்ப் போராடி வாழ்வை உனதாக்கி உயர்வுகொள்!

    வெம்மை காட்டும் சுடுபொழுதில் உடல்
    வெளியேற்றிய உப்புக்கரிக்கும் வியர்வைக்கிடையில்
    வளைந்த முதுகின் வலிமையால்
    விளைந்த வெற்றியே உழைப்பின் பெருமை!

    காடு மலை மேடு எல்லாம் உன்
    கடும் உழைப்பால் காட்சிபெறும்!
    கழனியாய், காய் கனி விளையும் சோலையாய்க்
    காலம் கடந்தும் நிற்கும் உன் உழைப்பு வெற்றி மாலையாய்!

    நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை
    தெம்புகொண்டு எழுந்து நட நம்பிக்கையோடு!
    நம்பு நீ ஒரு நெருப்புக்கோள் – சிற்றுளி
    அம்புகள் பிளக்கும் பெருமலைப் பாறைகள் ஏராளம்!

    உழைத்துக் களை! உடல் இளைக்க உழை! யாருக்கும்
    சளைத்தவனல்ல நீ – உன்னால் முடியாது என்றதை எல்லாம்
    விளைவித்துக் காட்டு என்னாலும் முடியும் என்று – ஓங்கி உயர்ந்த உழைப்பாளர் சிலை போதிக்குமே உனக்கு வெற்றியின் வேதத்தை!

    ”நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை! தெம்புகொண்டு போராடினால் உப்புக் கரிக்கும் வேர்வைக்கிடையில் வெற்றிகள் வேர் வைக்கும்! ஓங்கி உயர்ந்த உழைப்பாளர் சிலை வெற்றியின் வேதத்தை மேதினிக்குப் போதிக்கும்!” என்று உழைப்பினால் கிட்டும் உறுதிகளைச் சுவைபடத் தன் கவிதையில் இழைத்துத் தந்திருக்கும் திரு. சு. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share