Blog

  • ஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன்  வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளியிலிருந்து சிற்றடிகளை எடுத்து வைத்து, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்போது 2018 மே 16 அன்று ஒன்பதாம் ஆண்டில் வல்லமை நுழைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் வல்லமை, 14,276 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 12,551 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

    Vallamai in 9th Year

    வல்லமை, 2017 மே மாதம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் [University Grants Commission (UGC) (யுஜிசி)] அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழாக அறிவிக்கப்பெற்றது. 2018 மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பெற்ற பட்டியலிலும் வல்லமை தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், 4305 ஆய்விதழ்களைப் பட்டியலிலிருந்து யுஜிசி நீக்கியுள்ளது. ஆயினும் தமிழ்ப் பிரிவில் வல்லமை நீடிக்கிறது.

    இந்தக் காலக் கட்டத்தில் சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை பதிப்பித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆக்கங்களை வல்லமை வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், இலக்கணம், சமூகவியல், பக்தி, வரலாறு, உளவியல், அறிவியல், இணையம், மொழிபெயர்ப்பு, ஒப்பீடு, பறவையியல், இன வரைவியல், நாட்டுப்புறவியல், கல்வி, இசை… எனப் பற்பல துறைகள் சார்ந்த கூர்நோக்கும் புதிய பார்வையும் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

    இவை மட்டுமின்றி, கனடாவிலிருந்து ஜெயபாரதன், அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 700க்கும் மேலான படைப்புகளை நல்கியுள்ளார். கேசவ் அவர்களின் கிருஷ்ணர் ஓவியங்களுக்குக் கிரேசி மோகன், நாள்தோறும் நவரசங்களில் வெண்பா விருந்து படைத்து வருகிறார். தொடர்கள் எழுதி வரும் இன்னம்பூரான் (இந்தியா), நிர்மலா ராகவன் (மலேசியா), அவ்வை மகள் (அமெரிக்கா), நாகேஸ்வரி அண்ணாமலை (அமெரிக்கா), மேகலா இராமமூர்த்தி (அமெரிக்கா), சக்தி சக்திதாசன் (இங்கிலாந்து), ஜெயராம சர்மா (ஆஸ்திரேலியா), முனைவர் சுபாஷிணி (ஜெர்மனி), கல்வியியல், வாழ்வியல் தொடர்களைச் செம்மையாக வழங்கி வரும் க.பாலசுப்பிரமணியன், செண்பக ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் வல்லமையின் படைப்புச் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள். ஆசிரியர் பவளசங்கரியின் தலையங்கங்கள், நம் கவனத்தை ஈர்ப்பவை. பெரும்பாலான தமிழ் மின்னிதழ்களில் தலையங்கம் என்ற பகுதி இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்கலாம்.

    மேலும், படக்கவிதைப் போட்டி 161 வாரங்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது. உலகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் பங்கேற்க, மேகலா இராமமூர்த்தி நடுவர் பொறுப்பில் திறம்படச் செயலாற்றி வருகிறார். இந்த வார வல்லமையாளர் விருதினை 270 வாரங்களாக வழங்கி வருகிறோம். கடந்த 50 வாரங்களாகச் சிறப்புறத் தேர்ந்தெடுத்த பேராசிரியர் செல்வன் விடைபெற, அந்தப் பொறுப்பினை இளைஞர் கௌதம் ராஜ் ஏற்றுள்ளார். அத்துடன் வல்லமை ஆசிரியர் குழுவில் முனைவர் விஜய ராஜேஸ்வரி, கவிஞர் ராமலட்சுமி ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர்களை வரவேற்கிறோம்.

    வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பினைத் தமிழ் இன்று – கேள்வியும் பதிலும் என்ற தலைப்பில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேமொழி தேர்ந்தெடுத்த வல்லமையாளர்கள் 100 பேர்களின் தொகுப்பும் மின்னூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் வல்லமையாளர்கள் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பெஞ்சமின் லெபோ, முனைவர் சுபாஷிணி, ஜெயராம சர்மா, சுப்ரபாரதி மணியன் உள்ளிட்டோர், தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வென்றதில் உள்ளம் உவக்கின்றோம்.

    ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். வல்லமையின் ஆண்டிராய்டு செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android விரைவில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பினை மாற்ற உள்ளோம். வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதியும் திட்டம் உள்ளது. மேலும் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

    இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் விஜய ராஜேஸ்வரி, சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறோம்.

    உங்கள் அனைவரின் ஆதரவுடன் இன்னும் பல முத்திரைகளைப் பதிப்போம். முயற்சி திருவினையாக்கும்.

    Share
  • சேக்கிழார் அடிகள் குருபூஜை – வைகாசி பூசம் – ஞாயிற்றுக்கிழமை 20.05.2018

    முனைவர் ப.திருஞானசம்பந்தம்

    மதுரை

    சேக்கிழாரின் கவின்மிகு கட்டளைக் கலித்துறை

    தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

       திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

    என்று அடியவருக்கு அடியவராகத் தன்னைக் கருதி திருத்தொண்டத்தொகை எழுதியவர் சுந்தரர் பெருமான். அவர்தம் தொகையை ஒரு காப்பியமாக்கி ‘பெரிய புராணம்’ என்ற பொற்சுரங்கத்தைத் தமிழுக்குத் தந்தவர் சேக்கிழார் அடிகள். அருண்மொழித் தேவர் என்ற இயற்பெயர் கொண்ட சேக்கிழார் பெருமான் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். அருண்மொழித் தேவர் இளமையிலேயே கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினார். இதனை அறிந்த சோழ மன்னன் அவரைச் சோழநாட்டின் அமைச்சராக நியமித்தான். உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையும் தந்து சிறப்பித்தான். அருண்மொழித்தேவர் சிறந்த சிவ பக்தர். சோழநாட்டுச் சைவக் கோயில்களில் ஒன்றாகிய திருநாகேசுவரம் கோயிலின் இறைவனிடத்தில் மிகுந்த பக்தி உடையவர். இக்கோயில் போன்றே தனது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரில் கோயில் ஒன்றைக் கட்டினார்..

                இறைவனே ‘உலகெலாம்… என அடியெடுத்துக் கொடுக்க இவர் பெரியபுராணத்தை இயற்றினார் என்பர். பெரியபுராணம் தமிழின் இரண்டாவது தேசியக்காப்பியம் என்ற புகழைப் பெற்றது. பல இன, குல அடியார்களின் வாழ்க்கையை ஒருங்கே வைத்துப் பேசுகின்றது பெரியபுராணம். மேலும் தமிழின் முதல் கள ஆய்வு நூல் என்ற பெருமையும் இதற்கு உண்டு. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனது சேக்கிழார் பிள்ளைத்தமிழ் நூலில் பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சிறப்பித்துள்ளார். பெரிய புராணத்தின் சரித்திரத்தன்மை மற்றும் சிறப்புகளை விவரித்து மா.இராசமாணிக்கனார் பெரியபுராண ஆராய்ச்சி என்ற ஆய்வுநூலை எழுதியுள்ளார். அ.ச.ஞானசம்பந்தனும் பெரியபுராணம் ஓர் ஆய்வு என்னும் அரிய நூலை ஆக்கியுள்ளார். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பெரியபுராணத்தை உலகப் பொதுநூல் என்று சிறப்பித்து இருக்கின்றார். பெரியபுராணம் காப்பியமா, பெருங்காப்பியமா என்ற விவாதங்கள் காலந்தோறும் தமிழ்ச்சூழலில் எழுப்பப்பட்டு விடையும் காணப்பட்டுள்ளன.

                திருமலைச் சருக்கம் தொடங்கி வெள்ளானைச் சருக்கம் முடிய பதின்மூன்று சருங்கங்களில் 4286 பாடல்களைக் கொண்ட காப்பியம் இது. சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் பெருங்காப்பியமாக மட்டுமன்றித் தமிழ்ச்சுவையில் உயர்ந்த காப்பியமாகவும் விளங்குகின்றது. வடிவச்சிறப்பிலும் பிற்கால காப்பிய மரபிற்கு பெருங்கொடையளித்துள்ளது. 1762 அறுசீர் ஆசிரிய விருத்தங்கள், 92 எழுசீர் விருத்தங்கள், 256 எண்சீர் விருத்தங்கள், 344 கலிவிருத்தங்கள், 545 கலித்துறைகள், 1205 தரவுகொச்சகங்கள், 52 கட்டளைக் கலிப்பாக்கள், 11 அறுசீர் வண்ண விருத்தங்கள், 8 வண்ணக் கலிவிருத்தங்கள் 6வண்ண வஞ்சிவிருத்தங்கள் என ஒப்பற்ற யாப்பியல் விருந்தையே சேக்கிழார் சமைத்துள்ளார். மேலும் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய அடியார்களின் வரலாற்றைப் பாடும்போது அவர்கள் பயன்படுத்திய பாவடிவத்திலேயே அவர்களின் வரலாற்றினைச் சேக்கிழார் பாடியிருப்பது அவர்தம் புலமைத்திறத்திற்குச் சான்றாகின்றது. திருக்கொடிமாடச் செங்குன்றூரில் தம்முடன் வந்த அடியார்களுக்குச் சுரம்பற்ற அதனைத் தீர்க்க திருஞானசம்பந்தர் திருநீலகண்டர் பதிகம் பாடினார். பாடல் ஒன்று வருமாறு,

    அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

    உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

    கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

     (திருநீலகண்டப் பதிகம்.1)

    இப்பாடல் கட்டளைக் கலித்துறை யாப்பிலானது. நேரசையில் தொடங்கி அடிதோறும் பதினாறு எழுத்துக்களைப் பெற்றுவருவது. இச்சூழலைத் தமது காப்பியத்தில் பாடிய சேக்கிழார் இதே கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடித் தம் புலமைத்திறத்தினைப் பறைசாற்றுகின்றார். அப்பாடல் வருமாறு,

    “அவ்வினைக் கிவ்வினை” என்றெடுத் “தைய முரசெய்த

    வெவ்விடம் முன்றடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்

    எவ்விடத் துமடி யாரிடர் காப்பது கண்ட” மென்றே

    “செய்வினை தீண்டா திருநீல கண்ட” மெனச் செப்பினால்

    (பெரியபுராணம் 2233)

    இப்பாடலும் மேற்குறித்த கட்டளையொழுங்கினையே பெற்றுள்ளது. அவ்வாறே திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூர் உறைகின்ற இறைவனைத் தனக்கு ஈன்றவளாய், எந்தையாய் விளங்குகின்றாய். பகீரதனின் தவத்தினால் பூவுலகிற்கு வந்த கங்கையைச் சூடியவனே என்று இறைவனைப் புகழ்ந்து பாடிய நிகழ்வினைச் சேக்கிழார் பாடும்போதும் இவ்வுத்தியைப் பயன்படுத்தியுள்ளார். நாவுக்கரசரின் பாடல் வருமாறு,

     

    ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்

    மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க

    ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்

    தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

     (திருப்பாதிரிப்புலியூர்.1)

    இந்நிகழ்வை விவரிக்கும் சேக்கிழாரின் பாடல்வருமாறு,

     

    “ஈன்றாளு மானெயக் கெந்தையு மாகி” எனவெடுத்துத்

    “தோன்றாத் துணையாயி ருந்தனன் றன்னடி யோங்கட்” கென்று

    வான்றாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்குஞ்

    சான்றா மொருவனைத் தண்தமிழ் மாலைகள் சாத்தினரே

    (பெரியபுராணம்.1399)

    இவ்வாறு காப்பியந்தோறும் புதுமையும் வளமையும் கொண்டு திகழ்வது பெரியபுராணம். இந்த ஒப்பற்ற காப்பியத்தைப் படைத்த சேக்கிழாரின் குருபூஜை இன்றளவும் வைகாசிமாதம் பூச நட்சத்திரத்தில் குன்றத்தூரில் உள்ள வடதிருநாகேஸ்வரம் திருக்கோயிலில் நடைபெறுகின்றது. இக்கோயிலில் சேக்கிழாருக்குத் தனிக் கருவறையும் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகிலேயே சேக்கிழாரின் பிறந்த வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேக்கிழாரின் நாமம் போற்றுவோம்.

    சான்று நூல்கள்

    சேக்கிழார், பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர்புராணம் (பன்னிரண்டாம் திருமுறை), சைவசித்தாந்த மகாசமாஜம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1987

    சம்பந்தர், திருஞானசம்பந்தர்சுவாமிகள் தேவாரப்பதிகங்கள், திருமுறை (1,2,3), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப்பெற்றன, கழகம், 1973.

    நாவுக்கரசர், திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரப் பதிகங்கள், திருமுறை (4,5,6), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப் பெற்றன, கழகம், 1973

    Share
  • ஒரு தாயின் ஏக்கம்

       ரா.பார்த்தசாரதி

     

    நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !

    நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !

    இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !

    இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

     

    தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !

    உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்ததே !

    பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !

    மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றதே  !

     

    என்று உன்னை ஸ்கைப்பிளும்,  ஹாங் ஹௌட்டில் காண்பேனோ

    உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,

    ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !

    நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,

    என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,

    உனது  ஈமெயில், ஸ்கைப்பும்,ஹாங் ஹௌட்டிலும்

    என்  உ டலைக் காட்டும்மா !

    நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,

    பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !

     

     

     

    Share
  • சிறுதெய்வ வழிபாட்டின் மேனிலையாக்கம்

    -ப.காளீஸ்வரமூா்த்தி

    ஆதிமனிதனிடத்தில் உண்டான அச்சம், எதிர்பார்ப்பு உணர்வெழுச்சிகளால் தோற்றம் கண்ட தெய்வ வழிபாட்டு முறையில் ஒவ்வோர் இனக்குழுச் சமூகமும் தனக்கு அன்றாடம் கிடைக்கும் வேட்டை மற்றும் உற்பத்தி சார்ந்த உணவுவகைகளைத் தனது தெய்வத்திற்குப் படையலாக்கி வழிபட்டுவந்தது. இந்த வழிபாட்டுமுறை, காலவோட்டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களாலும் மனித நாகரிகத்தின் பரிணாம வளா்ச்சியாலும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி, சடங்குகளாக இன்றைக்கும் புழக்கத்தில் இருந்துவருகின்றது. இந்த வழிபாட்டு முறையிலான “சடங்கென்பது சிரத்தைக்குரிய வாழ்வில் குறியீட்டளவில் உந்துதலைப்பெற அல்லது நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்ளப் பொருத்தமான நடத்தை முறைகளுடன் தன்னார்வமாக நிகழ்த்தும் ஒரு நிகழ்வாகும்” என்று மானுடவியல் அறிஞா் பக்தவச்சலபாரதி குறிப்பிடுகின்றார்

    மனித சமுதாயத்தின் முதல்நிலையான வேட்டைச்சமூகத்தில் கிடைத்த இறைச்சியைப் பங்கிட்டுக் கொண்டதோடு, இயற்கையாகிய தெய்வத்திற்குப் படைத்து வணங்கினான். வேட்டைச் சமூகத்தில் தொடா்ந்த இவ்வழிபாடானது வேளாண் நிலப்பகுதி மக்களால் காடுறை தெய்வமாக மாற்றம் பெற்றது. சங்க இலக்கியங்களில் காடுறை தெய்வவழிபாடு நிகழ்ந்தமைக்கான சான்றுகள் பல இருப்பது யாவரும் அறிந்ததே.

    இத்தெய்வங்கள் வேட்டைச் சமூகத்தில் இருந்து வேளாண்மை சமூகத்திற்குள் நுழைந்து வேளாண் நிலம் சார்ந்த காவல் தெய்வங்களாகவும், வனதேவதைகளாகவும் குறிப்பிட்ட எல்லைவரை ஆற்றல் செலுத்தக்கூடிய எல்லைக்காவல் தெய்வங்களாகவும், தொடா்ந்து இன்றுவரை வழிபடப் படுகின்றன.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு தோன்றிய மனிதன் விலங்காண்டி நிலையிலிருந்து காட்டாண்டி நிலைக்கும், காட்டாண்டி நிலையிலிருந்து தற்கால நாகரிக நிலைக்கும் முறையாக வளர்ந்து வந்துள்ளான். இப்படி மலர்ச்சியில், ஆதிமனிதனின் விலங்காண்டி நிலையில் தோற்றம் கொண்ட தெய்வ வழிபாட்டுமுறை, தற்கால நாகரிக வாழ்வு வரையில் எத்தகைய மாற்றங்களை அடைந்துவந்துள்ளது என்பதையும் அவ்வழிபாட்டுமுறையில் நிகழ்த்தப்படும் சடங்குமுறைகள் காலமாற்றங்களுக்கேற்பவும், பிற சமயங்களின் ஊடுருவல் காரணமாகவும், எத்தகைய மாற்றங்களை அடைந்து வந்துள்ளது என்பதனை ஆராயும் விதமாக  இக்கட்டுரை அமைந்துள்ளது.

    இத்தெய்வத்திற்கு வழிபாடு செய்வோர் அந்தந்த நிலப்பகுதியின் உரிமையாளா்களாகவும் அவா்களுடைய வம்சாவளியினராகவும் இருக்கின்றனா். அதாவது முன்னோர்களாக வாழ்ந்து இறந்தவா்களை அவா்களின் கால்வழியினா் (உறவுமுறையினா்) தெய்வமாகப் போற்றி வழிபட்டு வருகின்றனா்.   தொடக்க காலத்தில் இரத்த உறவுமுறை கொண்ட நிலப்பகுதியின் உரிமையாளா்கள் வழிபாடு செய்து வந்தனா். இவ்வழிபாட்டுமுறை மாதத்தின் ஒருசில தினங்களிலும் பின்னா் வருடத்திற்கு ஒருமுறை இரத்தபலி கொடுத்தும் வழிபாடு நடைபெற்று வந்துள்ளது. பிற்காலத்தில் ஏற்பட்ட வழிபாட்டு மாற்றங்களாலும் பிறசமயங்களின் ஊடுருவல்களாலும் மேல்நிலையாக்கத்தின் மூலமாகவும் வழிபாட்டுமுறையில் மாற்றம் ஏற்பட்டது, நிலவுடைமையாளர்களைத் தொடா்ந்து மாதாந்திர ஊதிய அடிப்படையில் பண்டாரம் எனும் பூசைசெய்யும் பூசாரி இனத்தவா் பூசைசெய்கின்றார். ‘தற்காலத்தில் ஏற்பட்ட சமஸ்கிருதவயமாக்கலின் மூலம் அந்தணா்கள் பூசாரிகளாகத் தொல்பழஞ் சமூகத்தின் தொடா்புகளைப் புறக்கணிக்கும் வகையில் தங்களுடைய சமயத்தினை முன்னிறுத்திவருகின்றனர். இதனால் பழந்தமிழரின் தெய்வ வழிபாட்டுமுறைகள் மாற்றம் பெற்ற வருகின்றன. இதற்கு முதன்மைக் காரணம் பிறசமயவாதிகள் தங்களுடைய சமயங்களை உயா்வாகக் காட்டவும் தொல்பழந்தமிழரின் தனித்துவமான தெய்வ வழிபாட்டுமுறைகளை அழித்தொழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனா். அதே சமயத்தில் காரணிகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட வேண்டும்.

    மனுதா்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமானால் வா்ண பாகுபாடு அடிப்படையில் பிராமணரே மேலானவர்கள் என்றும் பிற வா்ணத்தார் அவா்களுக்குக் காவலாகவும், கீழ்ப்படிந்து பணிபுரிபவா்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தமிழ்மக்களின் வாழ்வியல் கூறுகளோடு ஒப்பிட்டுக் காணும்போது இச்சமூகத்தில் வா்ணப் பாகுபாடு என்ற பிரிவினை சுட்டிக்காட்டப்படவில்லை. இத்தமிழ்ச் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தப்படவில்லை, தொழில் சார்ந்தே ஒருசில பாகுபாடுகள் இருந்ததை மட்டும் பழந்தமிழ் நூல்களின் வழி அறிய முடிகின்றது.

    ஏனெனில் சங்க இலக்கியங்களில் மனிதர்கள் சாதிய அடிப்படையில் பிரித்துக் கூறப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. மனிதா்கள் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே அரசன், அந்தணா், வணிகா், வேளாளா், பாணா், கூத்தா், விறலியா் என்ற தொழிற்பாகுபாட்டைத் தோற்றுவித்தனா்.

    இத்தகைய முறையில் அந்தணர்கள் ஆளும் வா்க்கத்தினரோடு ஒன்றி இருந்துகொண்டு அரசா்களின் ஆதரவோடு நிலங்களையும், பொருட்களையும், தன்வயமாக்கிக் கொண்டு மக்களை அடிமைகளாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.  தமிழ்ச்சமூகத்தில் அதுவரை இல்லாத பிறப்பினடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்தனா். அத்தகைய காலகட்டங்களில் தங்களை உயா்ந்தோராகவும் மற்ற மனிதர்கள் அனைவரையும் தாழ்ந்தவா்களாகவும் கருதிச் சாதியப் பாகுபாட்டை முன்னிறுத்தினார்கள்.

    தொடக்க காலத்தில் மனிதன் மனிதனாகவே வாழ்ந்துவந்தான். விலங்குகளைப் போன்று கூட்டம் கூட்டமாகவும் குழு இனக்குழு வாழ்வினை மேற்கொண்டுவந்தான். இரண்டாம் காலகட்டத்திலும் வளா்ச்சி நிலையிலும் ஏற்பட்ட மாறுதல்களின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் மனிதா்களைப் பிரித்தறிந்துள்ளனா்.

    இத்தகைய பிரிவினை அதிகாரவா்க்கமும் ஆதிக்கவா்க்கமும் ஒன்றிணைந்து  தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கின. மக்களை அடக்கி ஒடுக்கி மக்களின் பண்பாட்டு வடிவங்களில் தங்களின் கருத்தியலைப் புகுத்தினா்.

    தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் படையெடுப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. கி.பி 3முதல் கி.பி 6 வரையிலான காலகட்டம் மிக முக்கியமான காலகட்டமாகும். சேர, சோழ, பாண்டிய அரசா்கள் ஆட்சியை முறியடித்து களப்பிரரும், பல்லவா்களும் தமிழகத்தை ஆண்ட காலப்பகுதியாக வரலாற்றறிஞர்கள் இக்காலகட்டத்தை குறிப்பர். இக்காலகட்டத்தில்தான் பக்தி இலக்கியம் உருக்கொண்டு பரவலாகத் தொடங்கியது. களப்பிரரும், பல்லவ அரசா்களில் சிலரும் சமண-பௌத்த சமயத்தை ஆதரித்ததனால் மக்களில் பெரும்பான்மையினர் இம்மதத்தினையே பின்பற்றினர். சைவ நாயன்மார்களுள் முக்கியமாகக் கருதப்பெறும் நாவுக்கரசா் சமண சமயத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கதாகும். சமண-பௌத்தத்தின் தாக்கம் இங்கு மத  அடிப்படையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சைவ மதத்திற்கும் சைவ-வைணவ, பிராமண-வேளாள நிலவுடைமையினா்க்கும் பெரும் ஆபத்தை விளைவித்துக் கொண்டிருந்தது. ஆனால் மக்கள் களப்பிரா் பல்லவா் ஆட்சிக்காலத்தில் சாதி இழிவிலிருந்தும் மத அதிகார வா்க்கத்தின் அடக்கு முறைகளிலிருந்தும் விடுபட்டுச் சுதந்திரமாக வாழ்ந்தனா். இக்களப்பிரா்கள்; காலத்தை சைவ சமய ஆய்வாளா்கள் வரலாற்றின் இருண்ட காலம் என்று குறிப்படுவா். அத்தகைய காலகட்டம் சைவா்களுக்கு இருண்ட காலமாகவும் மக்களுக்குப் பொற்காலமாகவும் இருந்து வந்தது. இதனை எதிர்கொள்ளும் விதமாக சைவர்களும் வைணவா்களும் இயக்கமாகத் திரண்டனா். சைவத்தை வீழ்ச்சியிலிருந்து காக்க சமண-பௌத்ததை கடுமையாக எதிர்த்தனா். அதோடு சைவ மதத்திலிருந்து ஆதிக்கக் கூறுகளைத் தற்காலிகமாக அகற்றி மக்களைத் தன்வயப்படுத்தினா். மக்களின் மரபான வழிபாட்டு முறைகளைத் தொன்றுதொட்டு வழிபடப்பட்டுவரும் தெய்வங்களோடு மேனிலையாக்கம் செய்து சைவ மதத்தோடு இணைத்தனா்; சைவம் வெற்றி பெற்றது. மீண்டும் வர்ண சாதி அமைப்பை வலுப்படுத்திக் கொண்டனா். தொன்றுதொட்டு வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப்பட்டு ஒரு புதிய வழிபாட்டுமுறை தோன்றியது.

    தற்காலத்தில் மக்கள் பாரம்பரியமிக்க தரவுகளை விட்டும், திராவிடதெய்வங்களின் உண்மைத் தரவுகளை மறைக்கும் வகையிலும் வழிபாட்டு முறைகளை தெய்வம் சார்ந்தபுராணக் கதைகளையும் கட்டுக்கதைகளையும் கூறி மக்களைத் திசைதிருப்பிப் புதியபாதையை நோக்கி இட்டுச் செல்கின்றார்கள்.

    இதனால் மக்களின் இயற்கை வாழ்வியலும், நிலம் மற்றும் நிலம் சார்ந்ததொடா்புகளை அழிக்கும் விதமாகப் பிற சமயத்தவரின் ஊடுருவல்களும் நிலவுகின்றன. சிறுதெய்வ வழிபாட்டில் சாதியமும் ஆதிக்கவா்க்கமும் ஊடுருவி அதன் தனித்தன்மைகளை அழித்துவரும் அவலநிலை பரந்துவிரிந்து காணப்படுகின்றது.

    *****

    பார்வை நூல்கள்:

    1)பக்தி இலக்கியம்  –  ப. அருணாச்சலம், பாரி புத்தக நிலையம், 1970,    சென்னை.

    2)மதமும் பண்பாடும் –   எஸ். இராதாகிருஷ்ணன் (மொழிபெயர்ப்பாளர்  -வி.எஸ். வி. ராகவன்), வள்ளுவர் பண்ணை, 1977, சென்னை.

    3)தமிழர் சமய வரலாறு – அ. வேலுப்பிள்ளை, பாரி புத்தகப் பண்ணை, 1985, சென்னை.

    4)தமிழர் சமுதாய வரலாறு –  க. ப. அறவாணன், மொழிக்கோட்டம், 1992, பாண்டிச்சேரி.

    5)மானிடவியல் கோட்பாடுகள் –  பக்தவச்சலபாரதி, வல்லினம், 2005, பாண்டிச்சேரி.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூர்.

     

     

    Share
  • வல்லமை ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்!

    வல்லமை நிர்வாகக்குழு – 2018

    ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இன்று புதிதாக பொறுப்பேற்கும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக, மொழிபெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். விஜயராஜேஸ்வரி அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். தமிழ் மலையாள மின் அகராதி உருவாக்கம், கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project, Govt.of India ) , மொழியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், பேரா. முனைவர். ச.இராசேந்திரன். 2. கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு, கணினிக்கான இலக்கண வரைவு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project , With Professor Uma Maheshwar Rao at Centre for Applied Linguistics and Translation Studies, Central University of Hyderabad and IIIT-Hyderabad ) உதவி ஆய்வாளர் ( Junior Research Fellow ), முதுமுனைவர். வ.அய்.சு நினைவு திராவிட மொழிகள் பள்ளி, (International School of Dravidian Linguistics, Thiruvananthapuram) திருவனந்தபுரம், போன்ற மிகச்சிறந்த பணி அனுபவங்கள் கொண்ட முனைவர் விஜய ராஜேஸ்வரி நம் வல்லமை இதழ் மென்மேலும் சிறப்புற தம் ஒத்துழைப்பை முழுமையாக நல்குவார் என்று உளமார வாழ்த்தி வரவேற்கிறோம்.

    நம் வல்லமை இதழின் முதல் வல்லமையாளரான திருமதி ராமலட்சுமி அவர்கள் நம் ஆசிரியர் குழுவில் இன்று இணைகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி ராமலட்சுமி அவர்களின் சிறப்பான பங்களிப்புகளையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 160-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்தின் கை வண்ணத்தில் காணக்கிடைக்கும் புகைப்படம் இது! மாடும் மங்கையும் இணைந்து நடமாடும் காட்சி கண்ணுக்கும் கருத்துக்கும் கவினைத் தருகின்றது. இந்தப் படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

    மாடே செல்வம் என்று மக்கள் வாழ்ந்த காலமொன்றிருந்தது. பின்பு நகரமயமாதலின் விளைவால் விவசாயமும் மாடுவளர்ப்பும் கிராமப்புறத் தொழில்களாய்த் தேங்கிப் போயின. இன்றோ… மாட்டை வைத்துப் பாடுபடுவதும் பராமரிப்பதும் வெகுசிலரே!

    ”ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்கும் கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடில்லை” என்று ஆநிரை காக்கும் கோவலர் வாழ்வைப் புகழ்வார் இளங்கோவடிகள். அதுபோல் ஆவொடு செல்லும் ஆரணங்கைப் போற்றிடப் பாவொடு வருக எனக் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன். 

    *****

    வைக்கோற் பிரியென வறள்முடி ஊசலாட, செருப்பில்லா வெறும் பாதத்தோடும் வெறுப்பில்லா கால்நடை நேசத்தோடும் செல்லும் இப்பெண்ணின் தோழமை கண்டு நெஞ்சு நெகிழ்கின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    விசித்தவொன்றெனப் பூட்டிய கயிறு
    அசித்தையேறா சித்திநன்றிருந்தும்
    வசித்தவாறே வசப்படும் விலங்கு
    தசித்தவாறே அது அசைபோட்டயரும்!
    நாசினிகளின் அங்குலப் (போ)பார்வை
    பசிக்கு என் போகம் நீ என்றாள்
    துசிவெறியிம்சையில் இசியும் நல்தேகம்
    தூசி நீயென சொற்செயல் ரோதனை
    ஊசித்தைதனம்; பாலியலிடுக்கண்
    உசித்தம் வாலைப் பசுவெனப் பகர்ந்து
    பூசித்தவாறே புசிக்கும் மும்மாமிசம்
    ருசித்து ருசித்து ருசுவேறியதால்
    ரசித்து ரசித்து ரணகள வன்முறை
    ஏசித்து வேசித்து தொழுவினம் தாழ்முறை!
    பிரசித்துக் கன்னிகை பசுபதிபாச முழக்கு
    நிசித்தபடியே திருமகள் பசுவதை வழக்கு
    ஒசித்துப்போட்ட அவளாசைகள் ஆயிரம்
    மசித்துமசித்து விழுங்கிய பதினாயிரம்
    முசித்த நெல்லின் வைக்கோற்பிரியென
    திசித்த அவள் குஞ்சத்து வறள்முடி ஊசல்
    கசித்தவாறே அவளெடுத்த வெறும்பாதம்
    பிசித்தமனதுடன் கால்நடைப்பா(ர்)வை
    ஓசித்து ஓசித்து உள்ளுள் உதிர மகோசம்
    ரோசித்துச் சேர்ந்த இத்தோழமை நெகிழுதே!

    *****

    தன் இன்னொரு கவிதையில் காமதேனுவாய்த் திகழும் பசுவின்  வள்ளன்மையை, அதன் தெய்வத்தன்மையைப் பாங்குறப் பேசியிருக்கிறார் அவர்.

    மடியில் தனம் புடைக்கும் காம்பில் வகிர்ந்தளிக்கும்
    முடியில் கொப்புடைக்கும் காலில் பிள்ளை விளையாடும்
    கெடிவாலைத்தெய்வமென்பர் உணர்வில் வசப்படுமே
    துடி நங்கை காமதேனு வெனவோது.

    *****

    ”பள்ளிசெலினும் பசுவை மறவாத உன் அன்பும் அருட்பண்பும் உன் வாழ்வில் ஏற்றத்தைத் தரும் பெண்ணே!” என்று இச்சிறுமியை வாழ்த்துகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பெண்ணே பெண்ணே…

    பள்ளிசெலினும் பசுமாட்டை மறவாப் பெண்ணே
    பண்பிதுதான் பேர்சொல்ல வைக்கும் உன்னை,
    உள்ளம்நிறை அன்புடைய பசுவைப் பேணல்
    உன்வாழ்வின் வழிகாட்டி யாவதைப் பாராய்,
    கள்ளமில்லை கபடமில்லை கன்றுக் கூட்டும்
    கருணையது உன்வாழ்வின் வழியைக் காட்டும்,
    எள்ளளவும் வெறுப்பின்றி இதையே செய்வாய்
    ஏற்றமுந்தன் வாழ்விலுண்டு காண்நீ பெண்ணே…!

    *****

    ”ஆறறிவு மனிதனை நம்புவதினும் ஐந்தறிவு மிருகங்களை நம்புவது நன்மை பயக்கும். கிடேரியை ஓட்டிச்செல்லும் பெண்ணே! விரைவில் இந்தப் பசுவும் கன்றுதந்து உன்னைப் புரக்கும் கண்ணே!” என்று நல்வார்த்தை நவில்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    பெண் பிள்ளையும், பெண் கன்றும்!

    விவசாயத்தின் இன்றியமையாத பிராணிகள் எருதும் பசுவும்
    விவசாயியின் பெண்ணே தன் இளம் கிடேரிக் கன்றை அழைத்துச் செல்கிறாள்!
    அவள் பச்சை நிறச் சீருடையுடன் பச்சைப் புல்மேய கூட்டிச் செல்கிறாள்!
    எதிர்காலத்தில் கன்றுஈந்து நன்மை பயக்கும் என எண்ணிச் செல்கிறாள்!
    அது அவளுக்கும் நடைப்பயிற்சி, கூட வரும் கிடேரிக்கோ மேய்வதற்கு முயற்சி!
    போறாளே போறாளே பள்ளிக்கூடப் பெண் மேய்க்கப் போறாளே!
    அக் கிடேரி எதிர்காலத்தில் பால்தருமே என நினைந்து ஓட்டிக்கொண்டு செல்கிறாளே!
    மனிதனை நம்புவதைவிட ஐந்தறிவுப் பிராணியை நம்பலாமே!
    நாயும், பசுவும் செய்ந்நன்றிக்கு என்றும் ஓர் உதாரணமே!
    இன்னும் ஓராண்டில் பசுவும் கன்றுமாய் அழகாய்க் காட்சியளிக்குமே!
    ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் நிறைந்து தோன்றுமே!

    *****

    ”யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை” என்றார் புரட்சிச் சித்தர் திருமூலர். தலைமுதல் வால்வரை தெய்வத்தன்மை நிறைந்த பசுவிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களுமே மனிதர்க்குப் பயனளிப்பவை. கால்நடை அபிவிருத்தியால் வீட்டிலே நிறையுமே பொருள்விருத்தி” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    ஆய்க்குலப் பெண்ணும் ஆநிரையும்..!

    திருமூர்த்தி மூவரின் தெய்வத் தன்மையை
    ……….தன்னுள் கொண்டுள்ள தெய்வீகப் பசுவாம்..!
    திருப்பணிகள் நடக்கு மிடத்தில் தர்மத்தின்
    ……….உருவாய் உனக்கு உண்டு முதல்மரியாதை..!
    திருமூலரும் சொன்னார் அறம் வளர்க்கவே
    ……….அருகம்புல் கொடுங்கள் பசுவுக் கென்றார்..!
    திருக் கோவிலுள் தெய்வத்திற் கிணையாக
    ……….திருமகளாம் பசுவுக்கு மங்கே இடமுண்டு..!

    வசுதேவன் மகனால் பசுவுக்குப் புகழதன்
    ……….வால்முதல் தலைவரையில் தெய்வீக முண்டு..!
    பசுவென்றால் பெண்பாலே!அது கொடுக்கும்
    ……….பெருங் கொடையதுவாம் பாலும் நெய்யும்..!
    அசுத்தத்தைச் சுத்தமாக்கும் அதன் சாணம்
    ……….அது கழிக்கும் சிறுநீரும் அருமருந்தாகும்..!
    விசுவாசம் கொண்டே அதனை வளர்ப்பார்
    ……….வீட்டில் அதுவுமொரு செல்லப் பிராணியே..!

    மாநிலம் தழைக்க மாடுகன்றைக் காக்கவும்
    ……….மகத்தான திட்டமொன்றை வகுக்க வேணும்..!
    ஆநிரை அழித்தலைத் தடுத்திட நீங்களும்
    ……….அறிவுப் பூர்வமாய்ச் சிந்தித்திடல் வேணும்..!
    கைநிறையப் பொருளீட்ட ஒரு வகையில்
    ……….கால்நடை அபிவிருத்தியும் மிக வேணும்..!
    ஆநிரை மேய்க்கப் போகுமிளம் பெண்ணே
    ……….ஆய்ச்சிய ராவதற்கு ஆனாயனருள் வேணும்..!

    *****

    பசுவும் பாவையும் நம் கவிஞர்தம் உள்ளத்துள் நுழைந்து, நல்ல கவிதைகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறப்புக்குரிய கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    கனவின் நிதர்சனம்!!

    மருத்துவர்..பொறியாளர்..
    மகத்துவப் படிப்புக்கள் என
    மாரடிக்கும் நவீன காலத்தில்
    மாடுவளர்ப்பும் விவசாயமும்
    மாண்புமிக்கவை என்பதை
    மாணவியின் நிமிர்ந்த நடை
    மனிதருக்குணர்த்துகிறது!!
    மட்டில்லாப் படிப்பினிடையே
    மாலைதோறும் கிடாரியோடு
    மாறாத அன்பைப்பொழிந்து
    மற்றவர்க்கு உதாரணமாய்
    மகிழ்விக்கும் பெண்பிள்ளை
    மதியாலே விதி வெல்லும்
    மார்க்கமதை அறிந்தவரே!!
    மண்வாசம் மறந்துவிட்டால்
    மற்றெதுவில் வளர்ந்தாலும்
    மறுமலர்ச்சி கிடைத்திடுமா??
    மழலையைப்போல் கால்நடை
    மவுனமாய்க் குலம் காக்கும்…
    மாயவனின் கோத்திரமுதித்த
    மடிப்பால் பசு வளர்த்திட்டால்
    மனை வளரும்…நம் மரபுயரும்!
    மங்காத செல்வம் தங்கும்!
    மக்களுக்கு வளம் பெருகும்!!

    ”மருத்துவர், பொறியாளர் படிப்புக்களுக்காக மல்லாடும் மாணாக்கர் மத்தியில், மாடு வளர்ப்பை மகிழ்வோடு நாடிநிற்கும் இந்தச் சிறுமி, பெருமைக்குரியவளே! மடியின்றித் (சோம்பல்) தன் மடியில் பால்சுரக்கும் பசுவினைப் பாசத்தோடு வளர்த்தால் மனை உயரும்; நம் மரபுயரும்; மாங்காத செல்வம் தங்கும்” எனும் பொருள்செறிந்த வார்த்தைகளைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் திரு. ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (161)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட்ராமன், எம். எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குட்டி இளவரசன் (வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்)

    கே.எஸ்.சுதாகர்

     

    கூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.

     

    அதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன?’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.

     

    எத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலட் ஆகிவிடுகின்றார்.

     

    கதைசொல்லி ஆறு வயதாக இருக்கும்போது, இரையை சப்பிப் சாப்பிடாமல் முழுதாக விழுங்கும் பாம்பு (boa constrictor) ஒன்றின் படத்தைக் காண்கின்றான். அதன்பின்னர் அப்பிடியானதொரு படத்தை அவனும் வரைகின்றான். அது ஒரு மலைப்பாம்பு, யானையை விழுங்கிவிட்ட ஓவியம். அதை வயது வந்தவர்களுக்குக் காண்பிக்கின்றான். அவர்கள் அதனைத் தொப்பி என்கின்றார்கள். பின்னர் அவன் தான் கீறிய படத்திற்குள் ஒரு யானையை வரைந்தபோது அவர்கள் அவனது படத்தைப் புரிந்து கொள்கின்றார்கள். கூடவே அவனுக்கு ஒரு ஆலோசனையும் சொல்கின்றார்கள். அந்தப் படம் கீறும் வேலையை ஒருபுறம் போட்டுவிட்டு  வர         லாறு, பூமிசாஸ்திரம், கணிதம், இலக்கணம் போன்றவற்றைப் படிக்கும்படி சொல்கின்றார்கள். அதன்பின்னர் அவன் தனது ஓவியனாக வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகின்றான். வயது வந்தவர்கள் பொதுவாக, எதையும் தங்கள்பாட்டில் புரிந்து கொள்வதில்லை என்றும்  சலிப்பின்றி எப்போதும் சிறுவர்களுக்கு தமது கருத்துகளைத் திணித்து விடுகின்றார்கள் என்றும் சொல்கின்றார் கதைசொல்லி.

     

    எனது மகன் காட்டிய ஓவியம் அதுதான். யானையை விழுங்கிவிட்ட மலைப்பாம்பின் ஓவியம்.

     

    Antoine de_Saint Exupery பிரான்ஸ் தேசத்தில் 1900 ஆம் ஆண்டில் பிறந்தவர். இரண்டாம் உலகமகாயுத்தத்தின் போது இராணுவ உளவு விமானியாகப் பணியாற்றியவர். 1940களில் ஜெர்மனியர்கள் பிரான்சிற்குள் புகுந்தபோது அமெரிக்காவிற்கு தப்பியோடினார். 1943களில் வடக்கு ஆபிரிக்காவில் மீண்டும் விமானப்படையில் இணைந்தார். 1944 ஆம் ஆண்டு மத்திய தரைக்கடல் மேலாக உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெர்மனிய விமானப்படையினரால் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்தார். ‘Southern Mail’, ‘Night Flight’, ‘Wind, Sand and Stars’ என்பவை இவர் எழுதிய ஏனைய புத்தகங்கள்.

     

    ‘The Little Prince’ அமெரிக்காவில் இருந்தபோது இவர் எழுதிய நாவல் ஆகும். சிறிய கோள் ஒன்றிலே தனித்து வாழ்ந்த சிறுவனைப் பற்றிய கதை இது. ஒருதடவை ஆபிரிக்காவில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இவரது விமானம் சகாராப் பாலைவனத்தில் விபத்திற்குள்ளாகியது. இவரும் சக விமானியும் அதில் தப்பிப் பிழைத்தார்கள். அந்தச் சம்பவமே ‘குட்டி இளவரசன்’ எழுதுவதற்கு காரணமாகியது.

     

    நாவலின் பெயரும் – அந்தப் புத்தகத்திற்கான ஓவியங்களும் – குட்டி இளவரசன் ஒரு சிறுவர் இலக்கியமே என அடித்துச் சொல்கின்றன. அப்படியாயின் எப்படி இது வயது வந்தோர்க்கான இலக்கியம் ஆகும்? புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போதே, ‘குட்டி இளவரசன்’ வயது வந்தோர்க்கான சிறுவர் இலக்கியம் என்பது தெரிந்து விடுகின்றது. எல்லா வயது முதிர்ந்தோரும் ஒருகாலத்தில் சிறுவர்களாகத்தானே இருந்திருக்கின்றோம். அப்படியென்றால் எப்படி ஒரு சிலரால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது?

     

    பிரெஞ்சு மொழியில் (அந்துவான் து செந்த் எக்சுபெரி) வெளிவந்த இந்தப்புத்தகம் இதுவரை 180 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலே அதிகமாக அச்சேறிய பைபிள், மார்க்கிரட் மிக்சல் எழுதிய Gone With The Wind இற்கு அடுத்தபடியாக உள்ள நூல் குட்டி இளவரசன். தமிழில் வெ.ஸ்ரீராம் + மதனகல்யாணி மற்றும் யூமா வாசுகி என்போரால் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இதன் ஆங்கில வடிவத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கிப் படித்துக் கொள்ளலாம்.

     

    ஒருதடவை மனித சஞ்சாரமற்ற சகாராப் பாலைவனத்தில், கதைசொல்லி தன்னந்தனியாகப் பறந்து கொண்டிருக்கும்போது விமானம் பழுதடைந்து விபத்திற்குள்ளாகின்றது. ஒருவாரத்திற்குப் போதுமான தண்ணீர் கையிருப்பில் இருந்தது. இரவு மணலில் படுத்துறங்குகின்றார். அதிகாலை சூரிய உதயத்தின்போது ஒரு குரல்,

    ”உங்களால் முடியுமானால் ஒரு ஆட்டின் படம் கீறித் தரமுடியுமா?”

     

    யாருமற்ற வனாந்தரத்தில் குட்டி இளவரசன் அறிமுகமாகின்றான். கதை தொடங்குகின்றது. குட்டி இளவரசனுக்கு விமானம் புதுமையாக இருக்கின்றது. தனது இருப்பிடத்தில் எல்லாம் சின்னதாக இருப்பதாகச் சொல்கின்றான். ஒரு பூ, மூன்று எரிமலைகள் மாத்திரமே அவனது உலகில் இருக்கின்றன. அவனே அந்த உலகத்தைச் சுத்திகரிக்கின்றான். அவனே பூவிற்கு நீர் ஊற்றுகின்றான். ஒவ்வொருநாளும் குட்டி இளவரசனின் உலகம் பற்றி புதிது புதிதாக அறிகின்றார் கதைசொல்லி. ஒருநாளில் 44 தடவைகள் சூரிய அஸ்தமனம் நிகழ்வதாகவும், தனது உலகில் புலிகள் இல்லை எனவும் கூறுகின்றான். தனது உலகிற்கு ரோசாச்செடி வந்தது எப்படி என்பது பற்றியும், தான் அந்த உலகத்தை விட்டுப் பிரிந்தது பற்றியும் கதை கதையாகச் சொல்கின்றான்.

     

    ஒவ்வொரு உலகத்திற்கு பயணம் செல்லும்போதும், குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் புதிர்த்தன்மை வாய்ந்ததாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன. அரசன், தற்பெருமை கொண்ட மனிதன், மது அருந்துபவன், வியாபாரி, விளக்கேற்றுபவன், பூகோளசாஸ்திரி என ஒவ்வொரு கிரகத்திலும் அவன் சந்திப்பவர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. அவனது சிந்தனைகள் வளர்ந்தோரைக் காட்டிலும் வேறுபட்டவை. அவர்களது பதிலில் திருப்தியுறாத குட்டி இளவரசன், தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, ஒவ்வோர் உலகாகச் செல்கின்றான். எந்த உலகை நான் தரிசிப்பது நல்லது என பூகோளசாஸ்திரியிடம் ஆலோசனை கேட்கின்றான்.

     

    அதன்பின்னர் பூகோளசாஸ்திரியின் ஆலோசனைப்படி பூமிக்கு வருகின்றான். அவன் வந்து சேர்ந்த இடம் ஆபிரிக்கா. பாம்பு, மலர், நரியென்று ஒவ்வொன்றாகச் சந்திக்கின்றான். கண்களால் பார்க்க முடியாததை இதயத்தால் பார்க்க முடியும் என்கின்றது நரி. ஓர் அரசனின் விரலைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவன் தான் என்கின்றது பாம்பு. அதன் பின்னர் விமான ஓட்டியான கதைசொல்லியைச் சந்திக்கின்றான். நட்புக் கொள்கின்றான். பாலைவனத்தின் தனிமையை குட்டி இளவரசனுடன் போக்கிக் கொள்கின்றான் கதைசொல்லி. வானில் தோன்றும் நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல, அவை சிரிக்கின்றன, அதை உணருங்கள் என்று கற்றுத் தந்துவிட்டு பிரிந்து விடுகின்றான் குட்டி இளவரசன்.

     

    எப்பொழுதாவது ஆபிரிக்கா பாலைவனத்திற்கு பிரயாணம் செய்ய நேரிட்டால், அவனை நீங்கள் சந்திக்கக்கூடும் என்ற ஏக்கத்துடன் நாவல் முடிவடைகின்றது.

     

    நாவலை வாசிக்க வாசிக்க விரிந்து செல்கின்றது உலகம். குட்டி இளவரசன் ஒவ்வொரு உலகத்திலும் சந்திக்கும் அவர்கள், நாம் தினமும் காணும் மனிதர்களா? பூடகமாக அப்படித்தான் சொல்கின்றார்.

     

    இந்த நாவலையும், அந்துவான் து செந்த் எக்சுபெரியையும் கெளரவிக்கும் முகமாக பிரெஞ் தேசம் தமது ஐம்பது பிராங் நோட்டில் – குட்டி இளவரசன், மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு போன்ற படங்களை வெளியிட்டுள்ளது.

     

    இந்த நாவலை மையமாக வைத்துக் காலத்துக்குக் காலம் பல திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித்தொடர்கள் வந்துள்ளன.

     

    சிறுவர் இலக்கியங்கள் பொதுவாக வளர்ந்தவர்களால் தான் எழுதப்படுகின்றன. சிறுவர்கள் வாசிப்பதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்கும் என இவை எழுதப்படுகின்றன. அதன் மூலம் சிறுவர்கள் இவற்றைக் கிரகித்துக் கொண்டு தமது மனவளத்தைப் பெருக்கிக் கொள்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறுவர் இலக்கியங்களே அருகிவிட்டன.  வளர்ந்தோருக்கான ‘சிறுவர் இலக்கியம்’ பற்றிச் சொல்லத் தேவையில்லை.

     

    Share
  • அழுகுரலைத் தடுத்திடுவோம் !

    எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

     

            இல்லறத்தின் நல்லறமே இனிமையுடன் வாழுவதே

                 இல்லறத்தில் பிள்ளைச்செல்வம்  எல்லோர்க்கும் பெருவரமே

           இல்லறத்தில் இணைவார்க்கு பிள்ளையில்லை எனும்பொழுது

                  இல்லறமே இணைவார்க்கு இன்பமதை அளிக்காதே !

     

           மணமான மறுவருடம் மழலையினைக் காண்பதுதான்

               மகிழ்ச்சியது உச்சமாய் வையகத்தில் இருக்கிறது

           மழலையது முகம்பார்த்து மனமெல்லாம் நிறைவுபெறும்

                 வாழ்வுதனை யாவருமே வாஞ்சையுடன் விரும்புகிறார் !

     

         இனிமையுடை வாத்தியங்கள் இசைகொடுத்து நின்றாலும்

               மழலைமொழி வள்ளுவர்க்கு மாவிசையாய் இருந்ததுவே

         கனிவுநிறை மழலைமொழி காதினிலே நுழைந்துவிடின்

                  புவிமீது வேறின்பம் புலனேற்க  மறுத்திடுமே  !

     

        பிள்ளைவரம் வேண்டுமென்று பிராத்தனைகள் பலவாற்றி

                நல்லபடி தானதர்மம் நாளுமே ஆற்றிநின்று

         எல்லரிய விரதமெல்லாம் எப்படியோ கடைப்பிடித்து

               நல்லதொரு பிள்ளைவேண்டி நாளுமே வேண்டிடுவோம் !

     

         மழலையில்லாப் பெற்றோர்க்கு மலடுவெனப் பெயர்சூட்டி

              மாநிலத்தில் சமூகமது மறைமுகமாய் தூற்றிநிற்கும்

         சபைநடுவே அவர்வந்தால் சற்றொதுக்கி  வைத்திடுவார்

               அதைக்கண்டு மழலையிலார் அலமந்தே நின்றிடுவார் !

     

            சமூகத்தில் திருமணத்தால் சமூகநிலை உயர்கிறது

                 சந்தோசம் குழந்தையினால் தானங்கே நிலைக்கிறது

           குழந்தையில்லா வாழ்வுதனை குறையெனவே கருதுகிறோம்

                  குறைபோக்கி நிறைவுதரக் குழந்தயெமக் குதவுதன்றோ !

     

            பிள்ளைதனைப் பெற்றாலும் பேணிநிற்கும் நிலையினிலே

                 பெற்றோர்கள் சிலரிப்போ பேயாக மாறியுள்ளார்

            மழலைமொழி அவர்கேட்டு மாறிடுவார் அரக்கர்களாய்

                  மடிவைத்த மழலைகளை மரணதுக்கே கொண்டுசெல்வார் !

     

            பாசநேசம் அத்தனையும் பஞ்சாகப் பறக்கவிட்டு

                பாலகராய் இருப்பாரை பதைபதைக்க வதைத்திடுவார்

            ஓலமிடும் பாலகரை ஒருகணமும் பார்க்காமல்

                   உன்மத்தம் பிடுத்தபடி உருக்குலைப்பார் இரக்கமின்றி !

     

          பெற்றபிள்ளை தனையங்கே பித்தேறி அடிப்பாரின்

              பேய்த்தனத்தை முகநூலில் பதிவேற்றி விட்டிடுவார்

         அத்தகைய செயல்கண்டு அனைவருமே கொதித்தெழுந்தும்

               அநியாயம் செய்தவரோ அவர்பாட்டைப் பார்த்துநிற்பார் !

     

         நித்தமும் நாம் இவ்வாறு பலவற்றைப் பார்த்திடினும்

             சட்டப்படி நடவடிக்கை ஏனெடுக்கத் தயங்குகிறோம்

         மொத்தமுள்ள பாசமதை முழுதாக அழித்தொழிக்கும்

               மூர்க்கர்தமை விட்டுவைத்தால் நாட்டுநிலை என்னாகும் !

     

          பிஞ்சுமனம் அழுதாலும்  கெஞ்சியவர் துடித்தாலும்

              கொஞ்சமேனும் இரக்கமுறா கொடுமைக்குண முடையார்கள்

          அஞ்சிநிற்க வழிசெய்து அவர்க்குப் புத்தி ஊட்டுதற்கு

               அனைவருமே புறப்படுவோம் அழுகுரலைத் தடுப்பதற்கு !

    Share
  • பதிற்றுப்பத்தில் போர்மறவன்!

    -சி.வித்யா            

    உலகில் மிகவும் தொன்மையான மொழி நம் தமிழ்மொழி என்பது அறிந்த ஓன்று. இன்றும் நம் தமிழ்மொழி உலகளவில் பேசப்பட்டு அனைவராலும் வியக்கும் வகையில் உள்ளதென்றால் தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்களே முதற்காரணம். எவ்வாறெனில் வாழ்வினை அகம், புறம் என இருகூறாகப் பிரித்து இயல்பான நடைமுறையினைக் கொண்டு காட்டிச் செல்லும் ஓரு யதார்த்தமான நடையினைக் காணலாம்.

     

     அகவாழ்வினைப் பேசும்போது இயற்கையுடன் இயைந்த வாழ்வு மேற்கொண்டனர். புறவாழ்வுக் கொண்டால் வீரம் பேசும்; தன் உயிரினும் மேலாக வீரத்தினைக் கருதினார்கள். தன் நாட்டுக்காகவும் தன் மன்னன் வெற்றி பெறுவதற்காகவும் காலம் கருதாமல் பாசறையிலிருந்து வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு போர் புரிவர். இவ்வாறு வீரமும் ஈரமும் செறிந்த தமிழ் இலக்கியங்களில் பதிற்றுப்பத்தினை கொண்டால் வீரகாவியம் எனலாம். சேரர்களை மட்டும் பேசும் சேரர் காவியம். மன்னன் புலவர் உறவுமுறைகள் மேம்பட்டுக் காணப்படும் நூல். போர்ச் சிறப்பினை எடுத்தியம்பும் வரலாற்று நூல். இத்தகைய சிறப்புப் பெற்ற பதிற்றுப்பத்தில் போர்மறவன் பற்றிய செய்திகளை எடுத்தியம்பும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

    மறவன் சிறப்பு

    மறவர் என்பவர் போரில் இறப்பினும் மார்பில் விழுப்புண்பட்டு இறப்பதை பெரிதெனக் கருதினர். போருக்குச் செல்பவர்கள் தங்கள் நாட்டிற்காகத் தம்மை இழந்தாலும் நாட்டின் மானம் இழக்கக்கூடாது என்பதற்காக உயிர்கொடுத்துப் போராடுவர். இத்தகைய வீரச்சிறப்பினை தமிழிலக்கியங்களில் காணப்பெறும் போர்க்களக்காட்சிகள் நமக்குப் பறைசாட்டும். இதனைத்தான் பாரதியார்,   “வீரம் செறிந்த தமிழ்நாடு” என்று பாடுகிறார்;. போர்களத்தில் மறவன் இல்லாமல் சிறப்பு இல்லை மறவனின் வீரத்தன்மையை பாரதி இப்படிப் பாடுகிறார் எனலாம்.

    பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் என்னும் மன்னன் பகைமன்னனின் காவல்மரத்தை வெட்டிக்கொண்டு வருமாறு தன் படைகளை ஏவிவிடுகிறான் படைகளுடன் படைவீரர்களும் சென்று பகைவர்களைப் போர்செய்து கொன்று அம்மரத்தினை வெட்டிக் கொண்டு வருவர். அம்மரத்தில் முரசுசெய்து முழங்குவர். இதன்மூலம் அறிவது மன்னன் என்பவன் ஓரிடத்தில் நின்று ஆணையிட்டதும் மறவர்கள் அச்செயலை செய்து முடிக்கின்றனர். இந்நிலையில் காணும்போது மறவன் இல்லையேல் மன்னன் இல்லை அதுமட்டுமின்றி வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு மறவன் செய்யும் செயலும் தெரியவருகிறது. மறவன் இதில் முக்கியத்துவம் அடைகிறான். இதனை,

                  பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
    கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்” ( பதிற்-11 )

    என்ற பாடல் வரிகள் உணர்த்திற்று.  மேலும், பகைநாடுகளில் மன்னனும் மறவனும் ஓராண்டுக்காலம் தங்கிப் போர் மேற்கொண்டனர் என்பது பதிற்றுப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனில் தனது வளத்தைப் பெருக்குவதில் குறிக்கோளாக இருந்தனர். யானைப்படையானது பகைவரின் உயரமான மதில்களின் கதவுகளை அழித்து உள்ளே செல்லும், பிற படைகளும் வெள்ளம்போல் அப்பகைவர் நாட்டிற்குள் செல்லும். பகை மன்னர்களோ எண்ணிக்கையில் பலர். இவ்வாறு, எண்ணிக்கையில் அடங்காத பகைமன்னர்கள் சேனை முதலிய அரசியல்சுற்றத்தைச் சேரன் படைகள் அழிக்கும். இவ்வாறு பகைமன்னர்கள் அழியச் சேரனின் படை போர் புரியும் இச்செயலில் மறவன் என்பவன் போர்புரியும் தன்மையாலே மன்னர் வெற்றிப் பெறுகின்றனர். இதனை,

                  “யாண்டு தலைப்பெயல் வேண்டுபுலத்து இறுத்து” ( பதிற் –15 )

    என்ற பாடல் மூலம் அறியலாம். மேற்காணும் கருத்தோடு தொடர்புடைய தகவலைத் தமிழர்சால்பு என்ற நூலில் சு. வித்தியானந்தன் காட்டிச் செல்கிறார்.“அளவுகடந்த மண்ணாசையால் தன்னாட்டில் வாழும் குடிகள் வளத்துடன் வாழ்வதற்குப் போதிய இடமில்லததினால் மன்னர் போர் தொடுப்பர்.” இவ்வாறு மன்னன் போர் செய்யும் காரணம் மறவனின் நிலையினையும் காணமுடிகிறது.

    படைப்பெருமை:

        போரினைப் பற்றிப் பேசுமிடத்தில் படைப்பெருமை பேசாமல் இருக்க முடியாதல்லவா? பதிற்றுப்பத்தில் காணலாகும் குட்டுவன் என்னும் சேர மன்னின் படையானது தலையாட்டத்தால் பொலிவுபெற்ற குதிரைகளோடும் நெற்றிப்பட்டம் முதலிய அணிகளாற் பொலிவுப் பெற்ற ஆண் யானைகளோடும் தேர்ச்சீலைகள் பரந்து விளங்குகின்ற தேர்களோடும் போர் எதிர்நோக்கும் விருப்பத்தோடு மறவர்களும் பகைவர்நாட்டின் மீது படையெடுத்துச் சென்றால் பகைவர்நாடு பாழ்நிலமாகும் என்றுக் கூறப்படுகிறது. இதில் நான்குவகைப் படையுடன் மறவர் படையும் பேசப்படுகிறது. இதனை,

                                     “ உளைப் பொலிந்த மா” ( பதிற்- 22 )

    என்ற இப்பாடல் வரி உணர்த்துகிறது. படைப் பெருமை பேசுமிடத்தில் மறவன் பேசும் இயல்பினை மேலும் காணலாம் புலித்தோலால்  செய்யப்பட்ட உறையானது  எடுக்கப்படும் புலால்நாற்றம் வீசும் முனையுடைய வேலானது ஆகாயத்தில்  தோன்றும் ஓளி வீசும் மின்னல் போல மின்னும் இத்தகைய வேலினைக் கொண்டு அரசனின் ஏவலில் வலப்பக்கம் உயர்த்திப் பிடித்து பகைவரின் படையினை வெற்றிகொள்ளும் பெரும்படையின் தலைவனே என்று கூறுமிடத்தில் மறவனின் புகழினைக் காணமுடிகிறது. இதனை

                     பீடுகொள் மாலைப் பெரும் படைத் தலைவ” ( பதிற் – 24 )

    என்ற பாடல் மூலம் காணலாம். மறவனின் போர் ஆயுதமான வாளும் புகழப்படுகிறது. போருக்கு முக்கியமாகக் கருதப்படும் ஆயுதம் வாள் என்பதும் அறியலாம்.

     குதிரைப்படையானது பகைவருடைய வயல்களில் கலப்பைகள் உழவேண்டாதவையாயின, யானைப் படையானது  போர்செய்த வயல்களில் வளம் ஓழிந்தன. காலாட்படையிலுள்ள போர் வீரர்கள் போர்புரிந்த மன்றங்கள் கழுதைகள் சென்றுமேயும் பாழிடங்களாயின இவ்வாறு, சேரனின் படையானது பகைவரின் வயல்களை அழித்த செய்தியும் மறவனின் வீரநிகழ்வினையும் காணலாம். இதனைப் பதிற்றுப்பத்தில் 25வது பாடல் காட்டிச்செல்லும். படையைப் பேசுமிடத்தில் கொடிகள் கட்டப்பட்ட தேர்களையுடைய பெருமானே! ஆழமான குளங்கள்  துறைகள் கலங்கும்படி மொய்த்துச் சென்ற உன் பரந்த படைதங்கும் பகைவர் நாடு கெடும்படி உன் எல்லையற்ற வெள்ளம் போன்ற படை செல்லும் அப்படையைக் கண்ட பகைமன்னர்கள் போர்புரிய நிற்காமல் புறங்கொடுத்து ஓடுவர். பகைவீரர்களின் வலிமை அழியவும் முரசங்களையுடைய பெரிய போர் தோற்கும்படி உன் வீரர்களது ஆரவாரம் கண்டு பகையரசர் அழிவர். என்பதை,

                            “ மாறா மைந்தர் மாறு நிலை தேய” ( பதிற் -34)

    இப்பாடல் கூறுகிறது. இதன்மூலம் அறிவது படையுடன் படைவீரர்களின் நிலையினைக் காணலாம். புறநானூறும் இதைப்பதிவு செய்கிறது.  குதிரையுடன் கேடயங்களைப் பரப்பியபடி போர்முனை கலங்குமாறு படை சென்றது; பகைவர் விளைநிலங்களைக் கொள்ளையிட்டது; இனிஇடம் இல்லை எனும் அளவிற்குப் பெரும்படையை உடையவன் மன்னன். இதனை,

                          வினை மாட்சிய விரை புரவியொடு’ ( புறம்- 16)

    என்ற பாடல் காட்டிச் செல்லுகிறது.

    மறவனின் செயல்கள்

    போருக்குச் செல்லும் முன் மறவனின் முரசொலி கேட்கும். மறவன் என்பவன் ஆரவாரத்துடன் போருக்குச் செல்லும் காட்சிகளைப் புறப்பொருள் வெண்பாமாலை நமக்கு எடுத்துக்காட்டும். போருக்குச் செல்வதைக் கடமையாக எண்ணுவதோடு, மகிழ்வாகவும் கொண்டனர். இதுதான் பதிற்றுப்பத்தில் காட்டப்பெறுகிறது. அச்சமூட்டும் போர்க்களம்; அலறும்படி குறுந்தடியை எடுத்துப் படைவீரர் போருக்குச் செல்லும் ஆயுத்தமாக முரசானது இடியைப் போல அதிர்ந்து ஒலிக்கிறது. இதிலிருந்து உணர்வது முரசு ஒலியுடன் மறவன் போருக்கு ஆயுத்தமாகின்றான் என்பது. இதனை,

                               “கறுத்த தெவ்வர் கடிமுனை”  ( பதிற் 39 )

    என்ற  பாடல் உணர்த்துகிறது. இதுதான் தழிழர்சால்பு நூலில் கூறப்பட்டுள்ளது. “போருக்குச் செல்லும் முன் நிமித்தம் பார்த்ததும் அரசன் தண்ணுமையை முழக்கித் தன் போர் வீரரை அழைப்பான்”என்ற கருத்தினைக் காணலாம்.   அடுத்தகட்ட நிலையில் அமைவது முரசு ஓலித்தபின் போர் செய்தலால் புண்ணையுடைய தோளினையுடைய படைவீரர் போர் முனையிடத்தே வந்து தங்கினர். இதனை,

                 “ இன்இசை இமிழ் முரசு இயம்பக்”  ( பதிற் – 40 )

     என்ற பாடல் காட்டிச் செல்லுகிறது. மேற்கண்டவை மூலம் அறிவது போருக்குச் செல்லும்முன் முரசு ஒலிப்பதும் பிறகு போர்க்கள முனையில் தங்குவதும் முதன்மைச் செயலாக அமைகிறது.

    மறவர் போருக்குச் செல்லும்போது வீரக்கழல் அணிந்து செல்கின்றனர். மன்னனிடத்தில் வீரக்கழல் உடைய உன் படைவீரர் என்ற வரிகள் ஆராயும்போது மறவனை ஏற்றிப் போற்றும் நிலை காணப்படுகிறது. இதனை,

                    “இரும் பனம்புடையல் ஈகை வான்கழல்”( பதிற்- 42)

    எனும் வரி காட்டிச் செல்லுகிறது. இதேபோன்று மற்றோர் இடத்திலும் சிறந்த கழலை அணிந்த வீரர்களையுடைய தலைவனே என்று காட்டப்பெறுகிறது.

                   “வலம்படு வான் கழல் வயவர்” ( பதிற் – 70 )

    என மறவர்கள் போருக்குச் செல்லும் காட்சி பேசப்படுகிறது. வலிமை மிக்க பகை வீரரொடு பிற மன்னர்கள் ஏத்தும்படி சேரனின் படைவீரர்கள் தேரோடு வரும் காட்சியானது உலக முழுவதும் ஒருங்கே காணப்பெறும் கரிய பெரிய தெளிந்த கடலினது அலைகளைக் காட்டிலும் பல. இதில் மறவன் என்பவன் தன் மன்னன் வெற்றிபெறுவதற்கு பரந்துசெல்லும் காட்சியினை உணர்த்திற்று எனலாம்.  போர்க்களத்தில் மறவன் என்பவன் தம்மைத் தடுத்து நிற்கும் வளைந்த துதிக்கையுடைய யானையினது கொம்பினை வெட்டும் வாளையுடையவன்.

    மேகத்தை ஓத்து எழுகின்ற கரிய பெரிய உடலை மூடுகின்ற கவசத்தையும் வேல்களைத் தாங்கிப் போர்க்களத்தின் முன்னே புறப்பட்டுச்செல்லும் வீரர்கள் தும்பைப் பூ சூடிப் போர்புரிவர். வெற்றி பெற்றபின் மன்னனுடன் போர்க்களத்தில் ஆடுவர். பதிற்றுப்பத்தில் போர்க்களத்தில் ஆடும் மன்னனாக சிறப்பிக்கப் பெறுபவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

    போர்க்களத்தில் வெட்டப்பட்ட பிணங்களில் உண்டான இரத்தத்தால் சிவந்த கறையை உடைய குளம்பினைக் கொண்ட குதிரைக்கு விரிந்த தலையாட்டம் சூட்டிப் பகைவரது வீரம் கெடும்படி எதிர்ப் நின்ற வீரர்களின் தலைவனே என்று மன்னனைப் புகழுமிடத்தில் மறவனை அடைமொழியாகக் கொண்டு அழைப்பது அறியமுடிகிறது. இதனால் மறவனை உயர்த்தும் பண்பும் காணப்பெறுகிறது. இதனை,

                     “காஞ்சி சான்ற வயவர் பெரும” ( பதிற் – 65 )

    என்ற வரி காட்டுகிறது. இதன் மூலம் மறவனின் செயல்கள் காட்டப்பெறுகிறது.

    தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு மிக்கவர். போரென்று கேட்டால் அதனை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்ணை உடைய வீரர் தமிழர். பதிற்றுப்பத்தில் மன்னன் பெரும்பான்மையாகப் போற்றப்படுகிறான். மறவன் பெருமையினைக் காட்டும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    *****

    துணை நூல்கள்

    பதிற்றுப்பத்து – ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,1950.

    புறநானூறு – கு.வெ.பாலசுப்பிரமணியன்(உ.ஆ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2004.

    தமிழர்சால்பு – சு. வித்தியானந்தன், குமரன் புத்தக நிலயம், சென்னை,2014.

    பாரதியார் கவிதைகள்- சாரதா பதிப்பகம்,சென்னை, 2003.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பெரியார் பல்கலைக்கழகம்
    சேலம் – 636 011.

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(213)

    -செண்பக ஜெகதீசன்

    நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொற் பல்லா ரகத்து. (திருக்குறள் -194 பயனில சொல்லாமை)

    புதுக் கவிதையில்… 

    பயனேதும் சாராத
    பண்பிலாச் சொல்லைப்
    பலரிடத்தும் பேசுதல்,
    ஒருவனை
    நீதி நேர்மையுடன் சாராமல்
    நன்மை பெறவிடாமல்
    நீக்கிவிடும்…!

    குறும்பாவில்… 

    பயனற்ற பண்பிலாச் சொல்லை
    பலரிடமும் பேசுதல், அவனை நீதிநேர்மையுடன்
    சாராது நன்மைபெறாமல் தடுத்துவிடும்…!

    மரபுக் கவிதையில் 

    பயனது ஏதும் தாராத
    -பண்பே யில்லாச் சொல்லதனை,
    அயலார் அறியப் பேசிடுதல்,
    -அறியா ததனைப் பேசியோனை,
    உயர்ந்த நீதி நேர்மையெலாம்
    -உடைமையாய் வந்து சேராமல்
    பயன்படும் நன்மை பெற்றிடாமல்
    -பாழாய்ப் போக விட்டிடுமே…!

    லிமரைக்கூ… 

    பேசாதே பயன்சாராப் பண்பிலாச் சொல்லை,
    பிறரறியயிதனைப்  பேசுவோர் தமக்கு என்றும்
    நீதி நேர்மையொடு நன்மையேது மில்லை…!

    கிராமிய பாணியில்… 

    பேசாத பேசாத
    பயன்தராத சொல்ல
    எப்பவுமே பேசாத…

    பண்பேயில்லாம
    பயன்தராத சொல்ல
    பெறரறியப் பேசாத,
    அப்புடிப் பேசுறவனுக்கு
    நீதி நேர்மயோட
    நன்ம எதுவும் கெடைக்காதே…

    அதால,
    பேசாத பேசாத
    பயன்தராத சொல்ல
    எப்பவுமே பேசாத…!

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 20

    வாழ்வின் வளத்திற்கு ஆக்கபூர்வமான சிந்தனைகள்

    சிந்தனை என்பது நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு செயல். உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் சிந்திக்கும் திறன் மாறுபாட்ட அளவுகளிலும் மாறுபட்ட வகைகளிலும் இருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சிந்தனை ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான சக்தியையும் உணர்வாற்றல்களையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சிந்தனை ஆக்கபூர்வமாக அமையும் பொழுது அது வாழ்வின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகின்றது. இதே சிந்தனை ஆக்க பூர்வமாக இல்லாதபொழுது அது வாழ்வின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் தேக்கமாக அமைவது மட்டுமின்றி பல வெற்றிப்படிகளுக்குத் தடைக்கல்லாகவும் அமைகின்றது. எனவே சிந்தனையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அதன் வேகத்தையும் போக்கினையும் நடையையும் வழிப்படுத்துதல் அவசியமாகின்றது. பொதுவாக சிந்தனைகளில் நல்ல சிந்தனைகள் என்றும் தீய சிந்தனைகள் என்றும் ஏதும் இல்லை என்றும் ஒரு தனி மனிதனின் சமுதாய கலாச்சார பொருளாதார மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாரும் அவருடைய தனித்த சூழ்நிலைகள் வாழ்வாதாரங்கள் மற்றும் உணர்வு நிலைகளுக்கேற்றவாருமே அவைகள் நல்லவைகளாகவும் தீயவைகளாகவும் அமைகின்றன என்று பல ஆன்றோர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

    ஆங்கிலத்தின் மிகச் சிறந்த கவிஞரான செகப்பிரியர் (Shakespeare)கூறுகின்றார் “நல்லவை தீயவை என்று ஒற்றுமில்லை, நமது சிந்தனைகளே ஒன்றை நல்லதாகவும் தீயதாகவும் உருவகிக்கின்றன.” (“There is nothing either good or bad, only thinking makes it so”).  இதற்கு மாறுபட்ட கருத்துக்களும் வழக்கத்தில் இருக்கின்றன.

    இளம் பிரயாத்திலிருந்தே சிந்தனைகளை ஆக்க பூர்வமாக வளர்க்க பழகிக்கொள்ள வேண்டும். ஆக்க பூர்வமான சிந்தனைகள் ஒருவரின் ஆளுமை, மேலாண்மை மற்றும் சமுதாயப் பேராண்மை ஆகியவற்றிற்க்கு வழிவகுப்பது மட்டுமின்றி, அவர்களுடைய தனித்தன்மையை (individuality)போற்றுவித்து பேணிக்காக்கவும், அவர்களுடைய திறன்களை முறைப்படுத்தி ஊக்குவித்து படைப்பாற்றலை (Creativity)  வளர்த்து செம்மைப்படுத்தவும் உதவுகின்றது. மனநல உளவியல் வல்லுநர்கள் ஆக்க பூர்வமான சிந்தனைகள் மேலும் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படையாகவும் சாரமாகவும் அமைவதாகக் கூறுகின்றனர். ஆக்கபூர்வமான சிந்தனைகள் நேர்மறையாகவும் இருத்தல் அவசியம். எதிர்மறையான இந்தச் சிந்தனைகள் குழப்பங்களையும் மனஅழுத்தங்களையும் வளர்ப்பது மட்டுமின்றி ஒருவரின் ஆளுமை மற்றும் மேலாண்மைத் திறன்களுக்குச் சவாலாக அமைகின்ற்ன.

    எனவே ஒருவரின் சிந்தனைகளின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கின்றது. அதன் வேகம், இயக்கவியல் மற்றும் வழிமுறைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதே அந்தச் சிந்தனைகளின்  எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.

    சிந்தனைகளை ஒரு கோப்புக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைப்பது சற்று கடினமான செயல். இவைகளே காலப்போக்கில் எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் குறிக்கோள்களாகவும் பல பரிமாணங்களில் வடிவெடுக்கின்றன.

    சிந்தனைத் திறன்களை பற்றி வெகுவாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியுள்ள டேனியல் கோலமான்(Daniel Golemaan) என்ற உளவியல் வல்லுநர் கூறுகின்றார் “சிந்தனைகள் உணர்வுகளோடு உறவாடுபவை. எனவே பல நேரங்களில் சிந்தனைகளின் மீது உணர்வுகளின் தாக்கம் ஏற்பட்டு அதனால் சிந்தனைகளின் போக்கு, வழித்தடங்கள் மற்றும் வேகப் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.” சிந்தனைகளின் பரிமாணங்களை பற்றி விளக்கும் பொழுது அவைகளை பக்கவாட்டுச் சிந்தனை, (Lateral Thinking) இணையான சிந்தனை, (Parallel Thinking) பகுத்தாய்வுச் சிந்தனை,(Analytical Thinking) படைப்பாற்றல் சிந்தனை,(Creative Thinking) மற்றும் விமர்சனச் சிந்தனை(Critical Thinking) என்று பல வகைகளாக எடுத்துரைக்கின்றார். இத்தகைய சிந்தனைத் திறன்கள் ஒருவருடைய வளர்ச்சிப் பாதையிலும் தொழில் முன்னேற்றத்திற்கும் பல விதங்களில் உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சமுதாயத் சிந்தனை’ ஒரு தனி மனிதனின் சமுதாய உணர்வுகளை வளர்ப்பதற்கும் கூடி வாழ்வதற்கும் இன்றியமையாதது.

    இந்த மாதிரியான சிந்தனைத் திறன்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. காலந்தொட்டு இந்தச் சிந்தனைத் திறன்கள் நம்முடைய வாழ்வில் முக்கிய பங்கேற்றது மட்டுமின்றி நம்முடைய வாழ்வியலை முடுக்கிக் கொண்டிருந்தன. இந்தச் சிந்தனைத் திறன்களும் பள்ளி மற்றும் மேல் பட்டப்படிப்புகளுக்கும் தற்போது அதிகமான தொடர்பு இல்லாததே இந்தச் சமுதாயத்தின் மிகப் பெரிய சாபக்கேடு. பண்டைய காலத்தில் இந்தச் சிந்தனைகள் நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தன. தற்போது வெறும் “நினைவாற்றலை’ மட்டும் வளர்க்கும் கல்விமுறையில் இந்தத் திறன்களை வளர்ப்பதற்கான வழிவகுத்தல் அவசியமாகின்றது. வெறும் மதிப்பெண்களால் மட்டும் ஒரு மாணவனின் திறனையும் தகுதியையும் மதிப்பீடு செய்வது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது.

    இளமைப் பருவத்தில் தெனாலி இராமன் கதைகள், மரியாதை இராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் விடுகதைகள், புதிர்கள் போன்ற பல உள்ளீடுகள் கற்பவரின் சிந்தனைத் திறன்களை வளர்த்துக்கொண்டிருந்தன. தற்போது தொழில்நுட்பத் தாக்கத்தில் வருகை தந்துள்ள பல உள்ளீடுகள் இளைஞர்களின் உணர்வுகளின் ஊக்க நிலைகளை அளவுக்கு அதிகமாக வளர்த்து சிந்திக்கும் திறன்களோடு மன அழுத்தம், வெற்றியை நோக்கிய வெறித்தனம், ஆக்கிரமிப்பு மனப்பான்மை, பொறுமையின்மை, மற்றும் சுயநலத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியையும் அதன் தாக்கங்களையும், அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்களையும் நம்மால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாவிட்டாலும், ஒரு சமுதாய அளவில் நமக்குச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

    விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும். அது இயற்கையின் விளையாட்டு. ஆனால் இந்த மாற்றங்களை நமது சமுதாயத்திற்கும் தனி மனிதனின் வாழ்வின் வளத்திற்கும் நல்லதொரு உள்ளீட்டாக அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

    சற்று சிந்திக்கலாமே !

    (தொடரும்)

    Share
  • உள்ளொளி விளக்கு!

    உள்ளொளி  விளக்கு!
    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

     வாசலைத் தாண்டி வெளியே றாது
    காசினியில் நடப்பதை அறிவேன்!
    பலகணி வழியே எட்டிப் பாராது,
    வானுலகு நடப்பு எனக்குத் தெரியும்!

    எத்தனை தொலைவுக் கப்பால் போயினும்
    கற்றுக் கொள்வது ஒருவன் சொற்பமே!
    கற்றுக் கொள்வது ஒருவன் சொற்பமே!
    கதவுக்கு வெளியே போகாது, நீ
    காசினி நடப்பை அறிய முடியும்!

    சாளரம் வழி நீ எட்டிப் பாராது,
    வானத்து நடப்பை அறிய முடியும்!
    வரம்பு தாண்டி ஒருவன் போயினும்
    அறிவது என்னமோ சிறிது தான்!
    அறிவது என்னமோ சிறிது தான்!

    பயண மின்றிப் போகுமிடம் வந்துசேர்!
    பார்த்து விடு நீ யாவும் நோக்கா மலே!
    பார்த்து விடு நீ யாவும் நோக்கா மலே!

     

    Share
  • எங்கள் தாய்!

    -சி. ஜெயபாரதன், கனடா

    இல்லத்தில் அம்மாதான் ராணி!
    ஆயினும்
    எல்லோருக்கும் அவள் சேவகி!
    வீட்டுக் கோட்டைக்குள்
    அத்தனை ஆண்களும் ராஜா!
    அம்மாதான் வேலைக்காரி!
    அனைவருக்கும் பணிவிடை செய்து
    படுத்துறங்க மணி
    பத்தாகி விடும்!
     

    நித்தமும்
    பின்தூங்குவாள் இரவில்!
    சேவல் கூவ
    முன்னெழுவாள் தினமும்!
    அம்மாவைத் தேடாத
    ஆத்மாவே இல்லை வீட்டில்!
    அம்மா இல்லா விட்டால்
    கடிகாரத்தின் முட்கள்
    நின்று விடும்!
     

    எந்தப் பிள்ளைக்கும் அவள்
    பந்தத் தாய்!
    பால் கொடுப்பாள்
    பாப்பாவுக்கு!
    முதுகு தேய்ப்பாள்
    அப்பாவுக்கு!
    சமையல் அறைதான்
    அவளது ஆலயம்!
    இனிதாய் உணவு சமைத்துப்
    பரிமாறி
    எனக்கு மட்டும் வாயில்
    ஊட்டுவாள்!
     

    வேலையில் மூழ்கி
    வேர்வையில் குளிப்பாள்!
    எப்போ தாவது அடி வாங்குவாள்
    அப்பாவிடம்!
    தப்பாது மிதி வாங்குவாள்
    மூத்த தமயனிடம்!
    காசு கேட்டுக்
    கையை முறிப்பான்
    கடைசித் தம்பி!
    கடன்காரன் வாசலில் திட்டுவான்!
    கலங்கும்
    கண்ணீரைத் துடைப்பது
    கனலும் காற்றும்!
     

    இல்லத் தரசி தாரமாய்
    வந்த பிறகு,
    செல்லத் தா​ய் வேண்டாத​
    தொல்லைப் பிறவி!
    ​தாயிக்கும் தந்தைக்கும்
    ​சேய்கள் தரும்
    ​ஆயுள் தண்டனை
    ​ஓய்ந்து உய்வோர் இல்லம்​​​!

    ஓய்வைக் கொடுப்பது
    தாயிக்கு
    நோயும் வலியும்;
    ஆயினும் சோறு பொங்கும்
    அடுப்பினில்!
    ஆயுளை நீடிக்க வைப்பது
    தாயுள்ளம்!
    வாழும் போது எவராலும்
    வணங்கப் படாது,
    செத்த பிறகு
    தெய்வ மாகிறாள்!

     

     

    Share
  • பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது

     

     

    சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++

     

    சூரியத் தீக்கோளம்  சுற்றிக் கட்டிய
    சிலந்தி வலைப் பின்னலில்
    சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை
    ஒன்பது கோள்கள் !
    எல்லைக் கோடு தாண்டி,
    இப்புறமோ அப்புறமோ நகன்று,
    தப்பிக்க முடியாது !
    திசைமாற இயலாது !
    வேகம் சிறிதும் மாற முடியாது !
    சாகாது, எல்லை மீறாது !
    மோதாது ஒன்றோ டொன்று !
    சூரிய எரிவாயு தீர்ந்து போய்
    சூனிய மானால்
    சிலந்தி வலைப் பின்னல்
    அறுந்து விடும் !
    கோள்கள் முறிந்து
    தூள் தூளாய்ச் சிதறும் !
    முடிவுப்  பிரளயம் அதுதான் !
    விடிவுப்  பேரழிவு அதுதான் !


    +++++++++++++

     

    மாறி மாறி வரும் பூமியின் சூழ்வெளிக் காலநிலைப் பருவ மாற்றங்கள்

    தொடர்ந்து ஓர் சீர்மைக் கால இடைவெளியில், நமது புவியின் காலநிலைப் பருவங்களில் பெருத்த மாற்றங்கள் நேர்ந்து வருவதைப் பூகோளத் தளவியல் விஞ்ஞானிகள் நன்கு அறிவர்.  கடந்த 200 மில்லியன் ஆண்டுகளில் நான்கு பெருத்த பூதளவியல் காலநிலை யுகங்கள் நிகழ்ந்துள்ளன.  அவை திரியாஸிக், ஜுராஸிக், கிரிடேசியஸ், செனோஸாயிக் யுகங்கள்  [Triassic, Jurassic, Cretaceous, cenozoic Periods].  அத்துடன் ஒருபெரும் பனியுகம் [Pliocene – Quaternary Glaciation ] 10,000 – 15,000 ஆண்டுகட்கு முன் சென்றுள்ளது.  இந்த ஐந்து யுகங்களில் புவிதளம் தீவிரமாய்ப் பாதிக்கப்பட்டு, விலங்குகளின் வாழ்வு, உயிரின விருத்திகளின் போக்கு மாறிவிட்டன !

    கடந்த சில பத்தாண்டுகளாய் புவித்தளவியல் விஞ்ஞானிகள் இந்த மாற்றங்கள், வியாழன் – வெள்ளி ஈர்ப்பால் சிறுகச் சிறுக நகர்ந்த புவிச் சுற்றுப் பாதை நீட்சியால் என்றும் புரிந்து கொண்டுள்ளார்.   அந்த வட்டத்தை ஒட்டிய சுற்றுப் பாதை 5% நீட்சியாகி, 405,000 ஆண்டுகட்கு ஒருமுறை மீட்சியாகிறது.  ஆனால் இதுவரைப் புவித்தள விஞ்ஞானிகள் யாரும் ஆதாரம் காட்ட முடியவில்ல.  இப்போதுதான்  விஞ்ஞானிகள் அவற்றுக்கு  பாறைகள் & படிவுமண் மாதிரிகள் [Rocks & Sediments] காட்ட முடிந்தது.  தோண்டி எடுத்த மாதிரிகள் புவித்தளவியல் பதிவாக, எப்போது, எப்படி, இந்த மாற்றங்கள் தோன்றின என்று காலத் தோடு காரணம் கூறுகின்றன.

    இந்தப் புதிய அறிவிப்பு சமீபத்தில் “405,000 ஆண்டு வியாழன் – வெள்ளி மையத்திரிபு நிலைப்பு மீட்சி” [Empirical Evidence for Stability of the 405,000 year Jupiter – Venus Eccentricity Cycle]  என்ற தலைப்பில் அமெரிக்க தேசீய விஞ்ஞானக் கழகத்தின் வெளியீடாக  [Proceedings of the National Academy of Sciences of the USA] வந்துள்ளது.  இந்த ஆய்விதழ்க் குழுவினரின் தலைவர் : டெனிஸ் பென்ட்,  [Professor, Rutgers University–New Brunswick is the flagship home of Rutgers, The State University of New Jersey.] [ Members from Lamont – Doherty Eath Observatory, Berkeley Geochronology Center, and Petrified Forest National Park in Arizona] 

    ஒரு நூற்றாண்டுக்குள் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டது :  புவிக்கோள் பருவக் காலநிலை மாறுவதற்கு, புவிச் சுற்றுப் பாதை நீட்சி, சுருக்கம், மற்றும் மீட்சியே என்பது.  புவிச் சுற்றுப் பாதை மாற்றம் உண்டாக்குபவை எவை ?

    1. மிலாங்கோவிச் சுழற்சிகள்  [Milankovitch cycles] –  இது 100,000 ஆண்டுக்கு ஒருமுறை புவிச்சுற்றுப் பாதையில் மையத்திரிபு [Eccentricity in Earth’s Orbit]  உண்டாக்கி மீளும்.
    2. பூகோள அச்சின் சுழல் திரிபு மீட்சி.  [Tilt of Earth’s Axis].  இது 41,000 ஆண்டுக்கோர் முறை, சுற்றுப் பாதை மட்டத்துக்கு ஏற்ப  மீளும், சுழல் அச்சுக் கோணத் திரிபு.
    3. 21,000 ஆண்டுக்கோர் முறை மீளும் புவிக்கோளின் சுழல் அச்சு சாய்வு.
    4. இவற்றுடன் 405,000 ஆண்டுக்கோர் முறை வியாழன் – சுக்கிரன் இழுப்பால், சுற்றுப்பாதை நீட்சியாகி, சூரியக் கதிர்களின் பொழிவு பூமியில் கூடிக் குறைந்து, காலப் பருவ நிலையில் மாற்றங்கள் தோன்றுகின்றன.

    இவற்றை அறியப் படத்தைப் பார்க்கவும்.

     

    இவற்றின் விளைவுகளை ஆழ்ந்து ஆராய பேராசிரியர் டெனிஸ் கென்ட்,  நியூ ஜெர்ஸி மாநில அகற்சிக்கு நீண்ட பூர்வீக ஏரியின் பீடத்தில் [Newark Basin]  உள்ள படிவுமண் மாதிரி சோதிக்க 518 மீடர், [1700 அடி] ஆழத்தில் 6.35 செமீ [2.5 அங்குலம்] விட்டக் குழி தோண்டி  எடுத்தார்.  [மேலே படத்தைப் பார்க்கவும்].   அதேபோல் அரிசோனா தேசீயப் பூங்காவிலும் மாதிரி படிவுமண் எடுத்தார்.  அவற்றின் கால யுகம் “டிரையாசிக்கைச்  [Triassic Period] சேர்ந்தது.  அதாவது  200 – 250 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை.  மாதிரிப் படிவமண் மூலம் அறிந்தவை என்ன ?  405,000 ஆண்டு புவிச் சுற்றுப் பாதை நீட்சி – சுருக்க மீட்சிகள் பல நூற்றாண்டுகள் நிலைத்துக் காலநிலை தொடர்ந்து மாறி வந்துள்ளது.  அதனால் உயிரின வளர்ச்சி, விருத்தியிலும் மாற்றங்கள் உண்டாகி யுள்ளன.

    ++++++++++++++

    https://youtu.be/z8aBZZnv6y8

    https://youtu.be/HJIB0zCc4tg

    https://youtu.be/82p-DYgGFjI

    ++++++++++++++

    Cover Image

    ஜொஹானஸ் கெப்ளர்

    (1571-1630)

    ஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை  ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.   தன் அகத்திலும், புறத்திலும் இடர்ப்படுகளால் இன்னல் உற்றாலும், உன்னத குறிக்கோளில் வெற்றி பெற்றவர்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [ஜொஹானஸ் கெப்ளர் நூல் வெளியீட்டு முகவுரை 1949] 

    “எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

    ஜொஹானஸ் கெப்ளர்

    விண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க விஞ்ஞானிகள் 

    2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார்! அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார்! ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள்! கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார்! கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது! கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது! அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது! கோள வடிவில் பூமி இருந்தால்தான் நிலவில் அம்மாதிரி வளைவு நிழலை உண்டாக முடியும்!

    பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஊகித்தவர்களில் அவரும் ஒருவர்! அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு! கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்! அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது! பரிதி நிலவை விட மிகப் பெரிதென்றும், அது சந்திர தூரத்தை விட வெகு தொலைவில் உள்ளதென்றும் கூறினார். ஒரு கோள உருண்டையைத் தயாரித்து, அதனுள்ளே சூரியனை மையத்தில் வைத்து, விண்மீன்களை அப்பால் விளிம்பில் இட்டு, பிரபஞ்ச அமைப்பைக் காட்டினார்.

    Planetary Motions

    கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, வானியலில் ஒரு மைல் கல்லை நிலை நாட்டினார். எகிப்தில் அலெக்ஸாண்டிரியா, ஸைன் [அஸ்வான்] என்னும் இரு நகரில் உள்ள நிழல்களை உச்சிப் பொழுதில் ஒப்பிட்டு, அவ்விரு நகரங்களின் இடைத் தூரத்தைக் கணித்தார்! அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார்! மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார். கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வான வெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்புகளைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை! அடுத்து விண்கோள் அளப்புக் கோளம் [Astrolabe] ஒன்றையும் அமைத்தார். கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கிரேக்க வானியல் ஞானிகளின் இளவரசர் [Prince of Astronomers] என்று போற்றப்படும் மேதை!

    Chart -1

    அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth centered] அமைப்பான பிரபஞ்சத்தை டாலமி கடைப்பிடித்தார்! ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது! அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அந்த வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு!

    Fig 2 Geo-Centric System

    புவி மையச் சுற்று ஏற்பாடு

    பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞான வளர்ச்சி

    கி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.  வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம்.  அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது.  ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் வானியல் கணிப்பு மூலம் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங்களில் காணலாம். முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி.

    1.  சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.

    2.  பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது

    3.  ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.

    4.  பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.

    கி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார்.  அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.   ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார்.  பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500 /57,753,336 =27.396) துல்லியமாகக் கணித்தார்.

    Fig 3 Geocentric Systemஅமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது.  அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது.  பரிதி உதிப்பது மில்லை !  அத்தமிப்பது மில்லை ! யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார்.  அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புமைத் தூரங்களை அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர்.   இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.

    பரிதி மையமானதா ? அல்லது பூமி மையமானதா ?

    கி.பி. 476-550 இல் வாழ்ந்த இந்திய கணித வானியல் மேதை ஆரியபட்டா, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் ஐந்தாம் நூற்றாண்டிலே தான் எழுதிய ‘ஆரியபட்டியா ‘ என்னும் சமஸ்கிருத நூலில் கூறி யிருக்கிறார். சூரிய கிரகணத்திற்கும், சந்திர கிரகணத்திற்கும் ஆரியபட்டா தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார்! அண்டக் கோள்கள் சூரியனை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றி வருகின்றன என்றும் அப்போதே அறிவித்திருக்கிறார்! விண்வெளியில் கோள்களின் இடத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் கணித்துப் பஞ்சாங்க அட்டவணை தயாரித்துப் பாரதத்தில் ஜோதிடம் வளர்ச்சி அடைய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்! ஆரியபட்டாவை அரேபியர் நன்கு அறிந்து கொண்டு, அவரை ‘அர்ஜெஹீர் ‘ [Arjehir] என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்! கி.பி. 1473-1543 ஆண்டுகளில் வாழ்ந்த போலந்து மேதை நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] பல்லாண்டுகள் வானோக்கி ஆய்வு செய்து, ‘பரிதி மைய அமைப்பின் ‘ [Sun-centered or Helio-centric System] சீரொழுங்கை நிலைநாட்டியவர். அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன என்று விளக்க மாகக் கூறினார்!

    அரிஸ்டாடில், டாலமி போன்ற கிரேக்க ஞானிகள் பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth centered] உறுதிப் படுத்தி இருந்ததால், ஐரோப்பிய நாடுகளின் கிறித்துவ மதாதிபதிகள் பல நூற்றாண்டுகளாய் அக்கோட்பாடை எடுத்துக் கொண்டு, மக்களையும் நம்பும்படிக் கட்டாயப் படுத்தினர்! பூமைய அமைப்பை நம்பாதவரைச் சிறையில் இட்டும், சித்திரவதை செய்தும், சிரச் சேதம் செய்தும் துன்புறுத்தியதை உலக வரலாற்றில் காணலாம்! காபர்னிகஸ் கிறித்துவ மதாதி பதிகளிடம் நட்பும், மதிப்பும் நீண்ட காலம் கொண்டிருந்ததால், ‘பரிதி மையக் கோட்பாடை ‘விளக்கும் அவரது, ‘அண்டக் கோள்களின் சுற்றலைப் பற்றி ‘ [Concerning the Revolutions of the Heavenly Orbs (Six Volumes)] என்னும் நூலை மதப்பலியீடுக்குப் பயந்து மறைத்து வைத்துத், தான் சாகும் வரை அதை வெளியிட அனுமதி தரவில்லை!

    Fig 4 Heliocentric Systemடென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] தொலை நோக்கிகள் தோன்றாத காலத்திலே, மற்ற முற்போக்கான கருவிகளைக் கொண்டு சூரியன், சந்திரன், விண்மீன்கள், மற்ற கோளங்களையும் கண்டார்! பரிதி மட்டும் பூமியைச் சுற்றுகிறது என்றும், பிற அண்டங்கள் யாவும் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் பிராஹே நம்பினார்! 1572 இல் வந்த நோவாவின் [Nova] நகர்ச்சியைத் துல்லியமாகக் கூறினார். 1577 இல் தெரிந்த வால்மீன் [Comet] போக்கைக் கண்டு அது பூமண்டலத்தைச் சேராதது என்றும், விண்வெளியில் அப்பால் போகிற தென்றும் அறிவித்தார்! டென்மார்க் தீவில் அவர் கட்டிய யுரானிபோர்க் வானோக்ககம் [Uraniborg Observatory] பின்னால் பல வானோக்காள வல்லுநருக்குப் பயன்பட்டது. 1600 ஆம் ஆண்டில் ஜெர்மன் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் [Johan Kepler] என்பவர் டைசோ பிராஹேயிடம் பணி புரியச் சேர்ந்தார்.

    கெப்ளர் வானியலில் செய்த ஒப்பற்ற சாதனைகள்

    அண்டக் கோள்களின் நகர்ச்சி விதிகளை [Laws of Planetary Motion] முதன் முதல் ஆக்கிய வானியல் மேதை ஜொஹான் கெப்ளர்! பூர்வீக ‘வரைவடிவ ‘ விளக்கத்திலிருந்து [Geometrical Description] மாற்றிப் பெளதிக விசையைப் [Physical Force] புகுத்தி அதை நவீன விண்ணியக்கவியல் [Dynamical Astronomy] கோட்பாடாக்கி, வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை கெப்ளர் ஒருவரையே சாரும்! நவீன ஒளியியல் [Modern Optics] துறைக்கு வித்திட்டு அதை விஞ்ஞானமாய்த் துவக்கியரும் கெப்ளரே! தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு உலவுகிறது என்பதை முதலில் ஆய்வு செய்து, ஒருவிதமான முதல் தொலை நோக்கியையும் அமைத்தவர், கெப்ளரே! அவரைப் பின்பற்றி, இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்! கெப்ளரின் ஒளியியல் நூலே, ஸர் ஐஸக் நியூட்டனின் (1642-1726) அடிப்படைக் கருத்தாகி, ஒளித்துறைக் கண்டு பிடிப்புகளுக்கு வழி காட்டியது! கெப்ளர் கணிதத் துறையில் மிகச்சிறு எண் கணக்கியலை [Infinitesimals in Mathematics] ஆரம்பித்துக் கால்குலஸ் [Calculus] துறையைத் துவக்கியவர். அதுவே நியூட்டன் கால்குலஸ் கணித விருத்தி செய்ய ஏதுவானது! ஜெர்மன் கணித ஞானி வில்ஹெம் லெப்னிஸ் [Wilhem Leibniz (1646-1716)] தனியாக கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி செய்தார்!Fig 6 Geo-centric & Helio-centric Systems1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டு பிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்! அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசையே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு சீரிய ஓர் ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் கூறினார். சூரியனை நடுவாய்க் கொண்டு விண்கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், காபர்னிகஸின் ‘பரிதி மையக் கோட்பாடே ‘ மெய்யான தென்ற உறுதியில் மேற்படுத்திப் ‘பிரபஞ்சம் ஓர் ஆட்ட அரங்கம் ‘ [Dynamic Universe] என்று விளக்கிக் காட்டினார். கெப்ளரது ஒப்பற்ற நகர்ச்சி விதிகளையும், அவர் கருதிய அண்டக்கோள் களின் காந்த விசைகளையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச யந்திர இயக்கவியலை மேலும் விருத்தி செய்தவர், ஸர் ஐஸக் நியூட்டன்!

    chart -2

    ஜொஹான் கெப்ளரின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

    1571 டிசம்பர் 27 ஆம் தேதி ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] ஜெர்மனியில் வைல் டெர் ஸ்டாட், ஊட்டம்பெர்க் [Weil der Stadt, Wuttemberg] என்னும் ஊரில் நலிந்த, வேண்டப் படாத, முன்முதிர்ச்சிக் குழந்தையாய் [Premature Baby] ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். பணத்துக்கு வேலை புரியும் ஒரு பட்டாளத் தந்தைக்கும், விடுதியாளர் [Innkeeper] மகளான ஒரு தாயிக்கும் நோஞ்சான் பிள்ளையாய்த் தோன்றினார்! எலும்பும் தோலுமாய் மெலிந்த சிறுத்த தோற்றம்! ஜொஹான் கெப்ளர் ஐந்து வயதான போது, போருக்குப் போன அவனது தந்தை திரும்பி வரவே யில்லை! தாத்தாவின் விடுதியில் தாயுடன், ஜொஹான் ஓர் பணிப் பையனாக வேலை செய்து வந்தான்! சிறுவனாக உள்ள போதே, ஜொஹானின் உன்னத ஞானம் வெளிப் பட்டது! விடுதியில் தினமும் உண்ண வந்த வாடிக்கையாளர்கள், சிறுவன் ஜொஹான் கணக்கு வல்லமையைக் கண்டு பிரமித்துப் போனார்கள்! உள்ளூர் பள்ளிப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, உள்ளூர்ச் செல்வந்தர் அளித்த உபகார நிதியில், 1587 இல் டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Tubingen] சேர்ந்தார்.

    Fig 7 Geocentric & Heliocentric Systems

    பல்கலைக் கழகத்தில் கெப்ளர் படித்தவை, கணித விஞ்ஞானம் [Mathematical Science]. அவற்றில் கணக்கு, வரை வடிவியல் [Geometry], வானியல் [Astronomy], பிறகு இசை ஆகியவற்றை ஒருவர் கற்க வேண்டும்! அத்துடன் அவர் கிரேக்க, ஹீப்ரூ மொழி களையும் படித்தார். மேலும் கணிதம், வானியல் ஆகியவற்றைப் பயின்ற முக்கிய மொழி லாட்டின். அவருக்குக் கணிதமும், வானியலும் கற்பித்த ஆசிரியர், மைக்கேல் மேஸ்ட்லின் [Michael Maestlin]. கெப்ளர் முதல் வருடம் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் ‘A ‘ மதிப்பு வாங்கினார்! அப்போது மேஸ்ட்லின் புகட்டிய முற்போக்கு வானியலான ‘காபர்னிகஸின் பரிதி மையப் பிரபஞ்ச அமைப்பைப் ‘ புதிதாகக் கற்ற மாணவர்களில், கெப்ளரும் ஒருவர். ‘சூரியனை நடுவாகக் கொண்டு, அண்ட கோளங்கள் அதைச் சுற்றி வருகின்றன ‘ என்னும் காபர்னிகஸ் கோட்பாடை, முதலில் மேஸ்ட்லின் வாயிலாய் கெப்ளர் கற்றுக் கொண்ட உடனே, அக்கோட்பாடு மெய்யான தென்று அவருக்குப் பளிச்செனத் தெரிந்தது!

    Kepler First Two Laws

    1588 ஆம் ஆண்டில் கெப்ளர் B.A. பட்டத்தையும், 1591 இல் M.A. பட்டத்தையும் பெற்று, லூதெரன் கோயில் பாதிரியாராக [Lutheran Church Minister] விரும்பி, மதக்கல்வி [Theology] பயிலச் சேர்ந்தார். கெப்ளர் இறுதி ஆண்டில் படிக்கும் போது, ஆஸ்டிரியா லூதரன் உயர்நிலைப் பள்ளியில், கணிதப் பேராசிரியர் பதவி காலியாகவே மதக்கல்வியை முடிக்காமல் விட்டு விட்டு, 1594 இல் அப்பதவியை மேற்கொண்டார். பிறகு 1612 இல் ஆஸ்டிரியா லின்ஸில் [Linz, Austria] கணித ஆசிரியர் பணியையும் செய்தார். ஜொஹானின் முதல் மனைவி பார்பரா [Barbara] இறந்ததும், 1613 இல் இரண்டாவது மனைவி சுசானாவை [Susanna] மணந்து கொண்டார். திருமண விழாவிற்கு வந்திறங்கிய ஒயின் கொப்பரைகளில் [Wine Barrels] இருந்த ஒயின் கொள்ளளவைக் [Volume of Wine] கணக்கிட, கோல் ஒன்று நெடு நீளத்தில் [Diagonally] துளை வழியாக விட்டு அளக்கப் பட்டது! இப்படிக் கொள்ளளவை அளக்க முடியுமா ? என்று கெப்ளர் ஐயுற்றார்! அவர் கணித மூளை வேலை செய்ய ஆரம்பித்தது! அதன் அரிய விளைவுதான் ‘திடவ உருளைகளின் கொள்ளளவுக் ‘ [Volumes of Solids of Revolution] கண்டு பிடிப்பு! அம்முறையே பின்னால் போனவென்ச்சரா காவலேரி [Bonavetura Cavalieri (1598-1647)], ஐஸக் நியூட்டன் [1642-1726] ஆகியோரால் விருத்தி செய்யப் பட்டு, கால்குலஸ் [Calculus] கணித மானது!

    Fig 8 Kepler's Three Laws

    பிரபஞ்ச ஆட்ட அரங்கத்தின் சீரொழுங்கு!

    ஜொஹான் கெப்ளர் வாழ்க்கை முழுவதும் மதவாதியாக, கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்தார். அவரது படைப்புகள் யாவற்றிலும் கடவுளைப் பற்றி எழுதாத தலைப்பே யில்லை! கடவுளின் படைப்பைப் பற்றிப் புரிந்து கொண்டு எழுதிய தனது நூல்கள், ‘ஒரு கிறித்துவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்தன ‘, என்று கூறினார். கடவுளின் பிம்பத்தில் படைக்கப் பட்ட மனிதன், கடவுள் உண்டாக்கிய பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும், என்று கெப்ளர் நம்பினார்!   ‘பிரபஞ்சத்தை மேலும் கடவுள் ஒரு கணித அமைப்பாட்டில் [Mathematical Model] ஆக்கி யுள்ளார் ‘, என்பது அவரது உறுதியான கருத்து! அதே கருத்தைக் கிரேக்க மேதைகள் பித்தகோரஸ், பிளாட்டோ ஆகியோர் ஆக்கிய நூல்களிலும் காணலாம்! தனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு அடிக்கடி நன்றி கூறினார், ஜொஹான் கெப்ளர்!

    அவர் அறிந்த அகிலத்தின் மர்மத்தை விருத்தி செய்து, 1619 இல் கெப்ளர் எழுதி வெளிட்ட நூல் ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [The Harmony of the World (Cosmos)] என்பது! இந்நூலில் கெப்ளர் மிக விபரமான விளக்கத்தில் ஓர் பிரபஞ்சக் கணித அமைப்பைக் [Mathematical Model of Cosmos] காட்டுகிறார். மேலும் பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கில் அவரது மூன்றாவது அண்டக்கோள் விதி [Kepler ‘s Third Law] விளக்கப் படுகிறது! அதாவது எந்த இரண்டு கோள்களின் சுற்றுக் கால ஈரடுக்கின் விகிதமும் [Ratio of Squares of their Periods], அவற்றின் சுழல் வீதி ஆரங்களின் மூவடுக்கு விகிதமும் [Ratio of Cubes of their Radii] ஒன்றாகும்! பதினேழு ஆண்டுகள் டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹேவுடன் ஆய்வுகள் செய்து, முதலில் கனவுபோல் தென்பட்ட மூன்றாவது விதி, பின்னால் முற்றிலும் மெய்யென்று உறுதிப் படுத்தப் பட்டது!

    Planetary Laws of Motion

    கெப்ளர் கணித்த முப்பெரும் அண்டக்கோள் விதிகள்

    பிரபஞ்சத்தில் விண்கோள்கள் சுற்றி வரும் வீதிகள், அவற்றின் வேகம், பரிதியை அவை நெருங்கும் போது ஏற்படும் வேக வளர்ச்சி, பரிதியை விட்டு அவை அகலும் போது நிகழும் வேகத் தளர்ச்சி, அவை மேவும் விண்பரப்புக்கும் [Spatial Setup] காலத்திற்கும் உள்ள உறவு, அவற்றின் தூரத்திற்கும், சுற்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற கணிதக் கோட்பாடுகளைக் கூறுவது, கெப்ளரின் மூன்று விதிகள் [Kepler ‘s Laws]. 1609 இல் அவர் எழுதிய ‘புதிய வானியல் ‘ [New Astronomy] என்னும் நூலில் கெப்ளரின் முதலிரண்டு விதிகள் வெளியாயின! அவர் எழுதிய ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [Harmony of the World (Cosmos)] என்னும் அடுத்த நூலில் மூன்றாம் விதி 1619 இல் வெளி வந்தது! முதல் விதி:- அண்டக் கோள்கள் பரிதியை ஓர் குறிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல! அண்டங்கள் பரிதியைச் சுற்றும் வீதிகள் நீள்வட்டம் என்று வலுயுறுத்துகிறது, முதல் விதி! இரண்டாம் விதி:- ஓர் அண்டம் பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது அண்டத்தையும், பரிதியையும் சேர்க்கும் ஓர் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி! அதாவது, கோள் பரிதியை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகை யாகிறது! பரிதியை விட்டு அப்பால் செல்லச் செல்ல அதன் வேகம் குறைகிறது!

    Fig 10 The Present System

    மூன்றாம் விதி:- பரிதியிலிருந்து ஓர் அண்டம் கொண்டுள்ள தூரத்தின் மூவடுக்கு [Cube of the Distance], அந்த அண்டம் பரிதியைச் சுற்றும் காலத்தின் ஈரடுக்கிற்கு [Square of the Period] நேர் விகிதத்தில் உள்ளது. சுருங்கக் கூறினால், அண்டத்தின் தூர மூவடுக்கு/அண்டத்தின் சுற்றுக் கால ஈரடுக்கு விகிதம் ஓர் நிலை யிலக்கம் [(Cube of the Distance)/(Square of the Period), Ratio is a constant]. கெப்ளரின் மூன்று விதிகளும் அவர் கண்ணோட்டத்தில் சிந்தித்த விதிகளே [Empirical Laws]! கணித விதிகள் ஆயினும், காரண அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல! அண்டக் கோளப் பாதை, வேகம் ஆகியவற்றை விதிகள் காட்டினாலும், கோள்கள் ஏன் அவ்வாறு நகர்கின்றன என்ற காரணங்களை அவை கூறமாட்டா! அவ்விதிகளைப் பயன் படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை மட்டுமே முன்னறிவிக்கலாம்! 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம் ‘ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்! கெப்ளரின் இந்தக் கோட்பாடு அண்டங்களின் கட்டமைப்பு ஒழுங்குள்ள காபர்னிகஸின் பரிதி மையக் கொள்கையை விளக்க ஏதுவாகிறது!

    Copernicus Tycho Brahe & Galileo

     

    கெப்ளரின் குரு டென்மார்க் மேதை டைசோ பிராஹே

    டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Astronomer Tycho Brahe (1546-1601)] சூரிய மண்டலத்தின் அண்ட கோளங்களையும், 700 மேற்பட்ட விண்மீன்களையும் பல்லாண்டுகள் நோக்கி விளக்கமாக, துல்லியமாக அளந்து எழுதி வைத்தவர். 17 ஆம் நூற்றாண்டில் தொலை நோக்கிகள் கண்டு பிடிப்பதற்கு முன்னே, அவர் சேகரித்த துல்லிய வானியல் விளக்கங்கள் மிகையானவை! ஒரு கோளம், இரு திசைகாட்டி மானிக் கருவிகளை [One Globe & Two Compasses] மட்டும் பயன்படுத்திப் பண்டைய வானியல் அட்டவணையில் [Astronomical Tables] இருந்த பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தினார்! 1572 இல் அவர் ஓர் உன்னத நோவாவைக் [Supernova] கண்டு பிடித்தார். டென்மார், நார்வே மன்னரிடம் உதவி நிதி பெற்று, 1576 இல் ஓர் வானியல் நோக்ககத்தைக் [Observatory] கட்டி, அதில் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வந்தார். பிராஹே காபர்னிகஸின் பரிதி மையக் கோட்பாடு முழுவதையும் ஒப்புக் கொள்ள வில்லை!

    Events and people

    அவர் டாலமியின் பூமைய அமைப்பையும் [Earthentered System], காபர்னிகஸின் பரிதி மைய அமைப்பையும் [Sun-centered System] ஒன்றாக இணைத்து, புதிதாக ‘பிராஹே ஏற்பாடை ‘ [Brahe System] உண்டாக்கினார்! பிராஹே அமைப்பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் மட்டும் சூரியனைச் சுற்றுவதாகவும், பிறகு அந்தச் சூரிய குடும்பம் சந்திரனைப் போல் பூமியைச் சுற்றி வருவதாகவும் யூகித்தார்! அதைப் போன்று விண்மீன்களும் ஒரு நாளில் பூமியைச் சுற்றி வருவதாய்க் கருதினார். அவரது பிரபஞ்சக் கோள்களின் கோட்பாடு பிழையானாலும், அவரது துல்லிய கோள் அட்டவணைப் பலருக்குப் பயன்பட்டது! 1600 இல் பிராஹேக்கு துணையாளியாகச் சேர்ந்த ஜொஹான் கெப்ளர், அவரது ஆராய்ச்சி களையும், அட்டவணையும் உபயோகித்து, முப்பெரும் அண்ட விதிகளைப் படைத்தார்! 1601 இல் பிராஹே காலமானதும், கெப்ளர் அவரது ஆய்வுக் கூடத்தின் அதிபதியாகி, வானியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பேரரசர் ரூடால்ஃப் [Emperor Rudolf II] அரசவையில் பிராஹே வகித்த, அரசவை வானியல் நிபுணர் பதவியை, அடுத்து கெப்ளர் ஏற்றுக் கொண்டு அரசருக்கு ஆலோசனை கூறும் ஜோதிடராகவும் பணி செய்தார்!

    Fig 11 Ptolemy Geo-Centric System

    கெப்ளர் வானியல் சாதனைகளைக் கூறும் நூல்கள்

    கெப்ளர் எழுதிய அரிய வானியல் நூல்கள்: பிரபஞ்ச வரைவமைப்பு மர்மம் [Cosmographic Mystery (1596)], புதிய வானியல் [New Astronomy (1609)], பரிதியைச் சுற்றும் தூதன் [The Sidereal Messenger (1610)], ஒளியியல் [Optics (1611)], வியாழத் துணைக்கோள் பற்றி விரிவுரை [Narration Concerning the Jovian Satellites (1611)], பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு [Harmony of the World (1619)], காபர்னிக்கன் வானியல் உன்னதம் [Epitome on Copernican Astronomy (1621)], ரூடால்ஃப் கோள் அட்டவணை [Rudolfine Planetary Tables (1628)]. ஜொஹான் கெப்ளர் வானியல் மற்றும் பயிலாது, அத்துடன் ஜோதிடமும் கற்றார்! கெப்ளர் ஜோதிடத்தை நம்பினார்! சூரியன் பூமியில் கால நிலைகளை மாற்றுவது போல், சந்திரன் கடலில் அலை உயர்ச்சி, அலைத் தாழ்ச்சி [High & Low Tides] உண்டாக்குவது போல், கிரகங்கள் மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று விளக்கம் தந்தார்!

    டால்மியின் பூமையக் கொள்கையை நம்பாத கெப்ளர், கிறிஸ்துவ மதப் பலியீட்டுக்குப் பயந்து அடிக்கடித் தன் வேலையை மாற்றிக் கொண்டே இருந்தார்! கெப்ளர் கால்குலஸ் [Calculus] கணிதத்திற்கு வழி வகுத்த முன்னோடி நிபுணர். தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதையிட்ட வல்லுநர். பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஸர் ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், கோட்பாடுகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தன் உன்னத ‘ஈர்ப்பு விசை நியதியைப் ‘ [Theory of Gravitational Force] உருவாக்கினார்!

    Fig 12 Tycho Brahe

    ஒப்பற்ற வானியல் மேதை கெப்ளரின் மறைவு

    கிறிஸ்துவ மத வேதாந்தியான கெப்ளர், ‘பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிவ தென்றால், அதைப் படைத்த கடவுளின் மகிமையைப் புரிந்து கொள்வதும் அத்துடன் சேரும் ‘ என்று கூறுகிறார்! கெப்ளர் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த வானியல் மேதை காலிலியோவிடம் அவர் தொடர்பு கொண்டிருந்தார். காலிலியோ தான் அமைத்த தொலை நோக்கியில் வியாழனைச் சுற்றிடும் சந்திரன்களைக் கண்டு பிடித்ததும், கெப்ளர் மகிழ்ச்சி அடைந்து மூன்று கடிதங்கள், அவருக்கு எழுதினார். வியாழனின் அந்தச் சந்திரன்களுக்குத் ‘துணைக்கோள்கள் ‘ [Satellites] என்னும் ஓர் புதிய பெயரைக் கடிதத்தில் எழுதி அனுப்பி யிருந்தார்!

    நேபியர் [Napier] 1614 இல் ஆக்கிய லாகிரித அட்டவணையை [Logarithm Tables] வெளியிட்டதும், கெப்ளர் அவற்றைப் பயன் படுத்தித் தன் ரூடால்ஃபைன் கோள் அட்டவணையை [Rudolphine Planetary Tables] 1628 இல் பல தசமத் துல்லியத்தில் தயாரித்தார்! வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் தனது 59 ஆம் வயதில், சில நாட்கள் நோயுற்று 1630 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் காலமானார். பரிதி மையக் கோட்பாடை ஊன்றிய காபர்னிகஸின் சீடரான, வானியல் மேதை கலிலியோவின் தோழரான, ஐஸக் நியூட்டனின் ஈர்ப்பியல் படைப்புக்கு முன்னோடி யான ஜொஹான் கெப்ளர், பதினேழாம் நூற்றாண்டு வானியல் வளர்ச்சியில் ஓர் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்திருக்கிறார்! 1604 ஆம் ஆண்டில் அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு ‘கெப்ளர் சூபர்நோவா ‘ [Kepler ‘s Supernova] என்று  நாசா இப்போது பெயரிட்டுள்ளது !

    Fig 14 Kepler Telescope in Solar Orbit

    புதிய பூமிகளைத் தேடி நாசா ஏவிய கெப்ளர் விண்ணோக்கி

    2009 மார்ச் 6 ஆம் தேதி நாசா விண்வெளித் தேடல் ஆணையகம் பிளாரிடா கேப் கெனவரல் ஏவு தளத்திலிருந்து டெல்டா -2 ராக்கெட்டை (Delta II Rocket) உந்த வைத்து, இதுவரை அனுப்பாத மிகப் பெரிய காமிராவைத் தாங்கிய கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியை (Kepler Space Telescope) வெற்றிகரமாக அனுப்பியது. ஜெர்மன் வானியல் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) நினைவாக ஏவப்பட்ட அந்த நூதனத் தொலை நோக்கி பூமியைத் தொடர்ந்து பரிதி மையச் சுற்று வீதியில் (Earth-Trailing Heliocentric Orbit) சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் தொலைநோக்கி பூமியைப் போல் பரிதியிலிருந்து அதே தூரத்தில் (1 AU Miles) 372.5 நாட்களுக்கு ஒருமுறைச் சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் சுமார் மூன்றரை ஆண்டுகள் விண்வெளியைக் கண்ணோக்கி வரும். மூன்றே காலடி விட்டமும் 1039 கி.கிராம் எடையும் கொண்டது. கெப்ளர் தொலைநோக்கியை நாசா அனுப்பியதின் குறிக்கோள் இதுதான் : மூன்றரை அல்லது நான்கு ஆண்டுகளாய் விண்வெளியில் உள்ள 100,000 விண்மீன்களை உளவிப் பூமியைப் போலுள்ள மித வெப்பமான, மீறிய குளிரற்ற உயிரினம் வாழத் தகுதியுள்ள புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும்.

    ***********************

    தகவல் :

    1. A Biography of Johannes Kepler (The Watershed)  By : Arthur Koestler (1960)

    2. Kepler By : John Banville (1999)

    3. Indian Astronomy (Internet Collections)

    4. Wikipedia : Delelopment of Helio-centrism

    5.  The Wonder That Was India By : A.L. Basham (1959)

    6.  http://www.physicsclassroom.com/class/circles/u6l4a.cfm

    7.  http://csep10.phys.utk.edu/astr161/lect/history/kepler.html

    8.  http://www.physicsplanet.com/articles/johannes-kepler-and-his-laws-of-planetary-motion

    9.  http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/kepler.html

    10.  http://kepler.nasa.gov/Mission/JohannesKepler/

    11.  http://www.famousscientists.org/johannes-kepler/

    12.  http://www.space.com/15787-johannes-kepler.html

    13.  http://www.britannica.com/EBchecked/topic/315225/Johannes-Kepler

    14.  http://www.10-facts-about.com/Johannes-Kepler/id/332

    15.  http://www.kidsastronomy.com/kepler.htm

    16.  http://www.einstein-website.de/biographies/kepler_content.html

    17. https://www.sciencedaily.com/releases/2018/05/180507153109.htm [May 7, 2018]

    18. https://news.slashdot.org/story/18/05/08/0433233/orbits-of-jupiter-and-venus-affect-earths-climate-says-study  [May 8, 2018]

    19. https://www.religiousforums.com/threads/gravitational-pull-from-venus-and-jupiter-influence-earths-climate-life-forms.208029/  [May 9, 2018]

    20.  https://www.universetoday.com/139198/jupiter-and-venus-change-earths-orbit-every-405000-years/  [May 10, 2018]

    +++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  May 11, 2018 [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Attachments area

    Preview YouTube video Solar System Video

    Preview YouTube video Solar System Planets Orbit: Concerns and Explanation (Education) [igeoVision]

    Preview YouTube video Earth’s motion around the Sun, not as simple as I thought

    Share