Blog

  • அன்னையர் தின வாழ்த்து!

    ஶ்ரீ ஶ்ரீமதி ஜெயராமசர்மா
    தம்பதியர்

     

    அனைவருமே பணிந்து நிற்போம் !

    ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    கண்கண்ட தெய்வமாய் காருண்யக் கடவுளாய்
    மண்மீது வந்திருக்கும் மாதாநம் வரமாகும்
    எண்ணிநாம் பார்த்துவிடா இன்னல்களை அனுபவித்தும்
    எமைப்பற்றி நினைத்திருப்பாள் என்னாளும் அன்னையவள் !

    இரவுகண் விழித்திருப்பாள் எம்மருகே அவளிருப்பார்
    குளிர்சுரங்கள் வந்துவிட்டால் கொடுத்திடுவாள் பலமருந்தை
    அவளுணவை நினைக்காமல் அழுமெம்மை அவள்பார்ப்பாள்
    ஆசையுடன் எமையணைத்து ஆறுதலைப் பெற்றுநிற்பாள் !

    நாம்சிரிக்கும் நாளெல்லாம் தான்சிரிப்பைக் காட்டிடுவாள்
    நாமழுது விட்டுவிடின் தானுமே சேர்ந்தழுவாள்
    ஓர்நொடியும் எமைவிட்டு அவளுணர்வு ஒதுங்கிவிடா
    வேராக அவளிருந்து வீழாமல் காத்துநிற்பாள் !

    அம்மாபோல் பொறுப்புள்ளார் இப்புவியில் யாருமுண்டோ
    அம்மாவின் மடியிருத்தல் அனைவருக்கும் பெருமையன்றோ
    அம்மாவை அணைத்துநிதம் அவழடியைத் தொழுதுநிற்றல்
    அம்மாவை அகம்வைப்பார் அனைவருமே ஆற்றிடுவார் !

    காப்பகத்தில் தாயைவிடும் காட்சியினை மறந்திடுவோம்
    கர்ப்பத்தில் காத்தவளை காப்பகத்தில் விடலாமா
    மூப்புவரும் முடுக்குவரும் மூச்சுவிடக் கஷ்டம்வரும்
    காத்துயெம்மை வளர்த்தவளை காப்பாற்றல் கடமையன்றோ !

    அம்மாவின் அழுகுரலை ஆருமே விரும்பாதீர்
    அம்மாவை நோகவிட ஆருமே நினைக்காதீர்
    அம்மாவின் தினமதிலே அன்னைதெய்வம் எனநினைப்போம்
    அத்தெய்வம் தனைநாங்கள் அனைவருமே பணிந்துநிற்போம் !

    Share
  • புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?

     

    Posted on 

     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    +++++++++++++
     
    +++++++++++++++++

     

    ++++++++++++

    சூரிய மின்சக்தி சேமிக்க,
    நூறு மெகாவாட் பேராற்றல் உள்ள
    ஓரரும் பெரும் மின்கலம்
    தாரணியில் உருவாகி விட்டது
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    தட்டாம்பூச்சி போல் பறக்க
    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதியின் சக்தியால் பறக்கும் !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் உதித்தது !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்கள் தொடர்ந்து பறந்து
    உலகைச் சுற்றி  இறங்கியது !
    விலை மலியுது சூரிய சக்தி !
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

     
     
    சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.
     
    2013 -2014 ஆண்டுகட்கி இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
     
    அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்து சூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]
    விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.
    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையகக்  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

     

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    SPOUSE(S)
    CHILDREN 6
    PARENT(S)
    RELATIVES
    SIGNATURE

    Image result for Lithium Ion Research

    Image result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion Technology

    Elon Musk’s Tesla Roadster
    Tesla Roadster in Falcon Heavy fairing.jpg
    The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation
    OPERATOR SpaceX
    MANUFACTURER Tesla
    INSTRUMENT TYPE Inert mass
    FUNCTION Dummy payload
    WEBSITE spacex.com
    PROPERTIES
    MASS Approximately 1,300 kg (2,900 lb)
    HOST SPACECRAFT
    LAUNCH DATE January 2018
    ROCKET Falcon Heavy
    LAUNCH SITE Kennedy LC-39A
    ORBIT Heliocentric

    Image result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw battery

    Image result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel Cell

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Image result for Lithium Ion Research

    சூரிய சக்தியில் மின்சேமிப்பியோடு இயங்கி  ஒரு நாளில் உலகம் சுற்றிய முதல் வானூர்தி

    (ஜூலை 8, 2010)


    “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”

    பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab)

    “நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன்.  பூரிப்படைகிறேன் !  (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு !  இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம்.  நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”

    சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)

    “எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது.  நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது.  தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”

    கிளாடி நிக்கலியர் (Flight Director & Former Space Shuttle Astronaut)


    வரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி

    2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது.  எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி.  பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது.  ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன.  ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள்.  ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது.  சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும்  சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது.  வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி).  வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.

     

    சோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.

    இதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன..  இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும்.  நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது.  மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது !

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது.  காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் !  அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.

    சூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது !  திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர்.  பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர்.  அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் :  சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport).  புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51.  கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00.  ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி).  பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம்.  பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது.  இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது.  63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன.  ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.

    இரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது !  ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.  சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் :  1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி.  2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது.  3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது !  2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது.  இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் !  ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.

    2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது.  12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை.  அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை.  ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது.  நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி).  அவை மெதுவாகச் சுற்றின.  ஊர்தியின் நீளம் 72 அடி.  இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி.  மொத்த எடை 1.6 டன்.   தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph.  பறக்கும் வேகம் 43 mph.  உச்ச வேகம் 75 mph.   பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.

    சுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர்.  அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது.  உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது.  ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.

    சூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :

    1.  2007 மே 22 :  பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார்.  அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.

    2. 2009 ஜூன் 26 :  சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்பு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.

    3. 2010 ஏப்ரல் 7 :  சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.

    4. 2010 ஜூலை 7 :  சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.

    5. 2010 ஜூலை 8 :  சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது.  ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).

    6. 2011 ஆண்டில் :  இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.

    7. 2012 ஆண்டு வரை :  ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து
    விமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.

    8.  2013 -2014 :  விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது,  உலகத்தைச் சுற்றி வருவது.


    +++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites

    1.  BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)

    2.  Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)

    3.  Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)

    4.  BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)

    5.  Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity  coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.

    6. http://www.bbc.com/news/world-australia-40527784  [July 7, 2017]

    7. http://www.onenewspage.com/video/20170707/8359018/Tesla-to-Build-World-Biggest-Battery-in.htm

    8.  http://solarpv.tv/index.php/2016/08/10/solarstorage-in-india-seci-publishes-tender-for-100-mw-grid-connected-solar-pv-projects-along-with-large-scale-battery-energy-storage-system-at-kadapa-solar-park-andhra-pradesh/ [August 10, 2016]

    9.  http://www.cnbc.com/2017/07/07/tesla-largest-battery-system-in-the-world-elon-musk-says.html [July 7, 2017]

    1. https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power
    2. https://www.hgtv.com/remodel/mechanical-systems/exploring-solar-energy-options
    3. https://www.hgtv.com/remodel/mechanical-systems/before-going-solar
    4. https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-evolution-of-solar-power
    5. https://www.hgtv.com/remodel/mechanical-systems/solar-power-101
    6. https://www.hgtv.com/remodel/mechanical-systems/real-experiences-with-solar-power
    7. https://www.hgtv.com/remodel/mechanical-systems/getting-started-with-diy-solar-power
    8. http://homeguides.sfgate.com/positive-negative-effects-solar-energy-79619.html
    9. https://gcep.stanford.edu/pdfs/assessments/solar_assessment.pdf
    10. https://en.wikipedia.org/wiki/Solar_power  [April 30, 2018]
    11. https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power  [May 1, 2018]
    12. https://en.wikipedia.org/wiki/Solar_cell  [May 4, 2018]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [May 5, 2018] [R-2]

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 1

    -மேகலா இராமமூர்த்தி

    அறத்தோடு வாழ்வதில்தான் மனித வாழ்வு சிறக்கின்றது; மன நிறைவும் பிறக்கின்றது. ஆனால், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதத்தையும் மனிதன் அறிந்துகொள்வது யாங்ஙனம்?

    தன் முன்னோரிடமும் மூத்தோரிடமும் கேட்டு அவன் அவற்றை அறிந்துகொள்ளலாம். எனினும், அவர்கள் தாமறிந்தவற்றை மட்டுமே அவனுக்கு அறியத்தர முடியும். ஆகவே, அறம் குறித்தும் இன்னபிற வாழ்வியல் விழுமியங்கள் குறித்தும் ஒருவன் கசடறக் கற்றுத்தெளியவும் தேரவும் வேண்டுமெனில் அதற்கு அறநூல்களே சிறந்த துணையாவன.

    அத்தகு அறநூல்களுக்கு அழகுதமிழில் பஞ்சமில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை மானுட அறங்களை வகுத்தும் தொகுத்தும் செம்மையாய்ச் செப்புகின்றன. அவற்றில் முதன்மையானவை திருக்குறளும், நாலடியாரும் ஆகும்.

    ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி
    நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” எனும் சொலவடையை நாமறிவோம். இங்கே நாலு என்று குறிக்கப்படுவது நாலடியார்; இரண்டு என்று குறிக்கப்படுவது திருக்குறள். இவ்விரு நூல்களையும் ஒருவன் கற்றால் சொல்லுறுதி பெறுவதோடு மட்டுமின்றி அறவாழ்விலும் வழாது நிற்பான் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

    உலகப்பொதுமறை எனும் உயர்வோடு ஞாலம்போற்ற வலம் வரும் திருக்குறளோடு ஒப்பவைத்து எண்ணத்தக்கது நாலடி. நான்கு அடிகளால் அமைந்த வெண்பாக்களால் இயன்ற இந்நூல் ’ஆர்’ எனும் சிறப்பு விகுதிபெற்று ’நாலடியார்’ என்று நவிலப்படுகின்றது.

    திருக்குறள், சூத்திரம் போன்று சுருங்க உரைக்கும் பொருளை அழகிய உவமைகளோடும் தக்க உதாரணங்களோடும் கற்போர் உளங்கொளும் வகையில் சற்றே விரித்துரைக்கின்றது நாலடியார்.

    நானூறு பாடல்களைக் கொண்டிருப்பதால் ’நாலடி நானூறு’ எனும் பெயர்பெற்ற இந்நூலுக்கு ’வேளாண் வேதம்’ எனும் மற்றொரு பெயரும் உண்டு என்பதை ஒரு தனிப்பாடல் வாயிலாய் அறிகின்றோம்.

    வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்
    எல்லாரும் கூடி எடுத்துரைத்த  – சொல்லாய்ந்த
    நாலடி நானூறும் நன்கினிதா என்மனத்தே
    சீலமுடன் நிற்க தெளிந்து.

    ஆயினும் இந்நூலில் நுவலப்படும் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானவை என்று கொள்வது பொருத்தமற்றது  என்பதனை இதனைக் கற்றோர் நன்குணர்வர்.

    சமண முனிவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாய்க் கருதப்படுகின்ற இந்நூலும் திருக்குறளைப் போலவே அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என முப்பகுப்பாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்குப் பதுமனார் எனும் புலவர் பெருந்தகை உரைசெய்தார் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அவ்வுரை இப்போது கிடைத்திலது.

    சொல்நயமும் பொருட்செறிவும் மிக்க நாலடியாரில் இடம்பெற்றுள்ள சுவையான பாடல்கள் சிலவற்றைச் சிந்திப்பதை இக்கட்டுரைத்தொடர் தன் இலக்காய்க் கொண்டிருக்கின்றது.

    இனி நூலுக்குள் நுழைவோம்!

    அறத்துப்பாலின் முதல் அதிகாரமான ’செல்வம் நிலையாமை’யில் அமைந்துள்ள பாடல்கள் செல்வத்தின் நிலையில்லாத் தன்மையையும், செல்வத்தை அடைந்தோர் செய்யவேண்டிய கடமைகளையும் தெளிவுறுத்துகின்றன.

    குற்றமற்ற சிறந்த செல்வம் ஒருவனுக்கு வாய்த்தேபோதே, பகடு வயலின்கண் நடந்ததனால்(உழுததனால்) கிடைத்த உணவை, அவன் விருந்தினரோடும் (புதியவர்), தமரோடும் (சுற்றம், நட்பு) சேர்ந்துண்ணல் வேண்டும்.

    ஏனெனில் ஓரிடத்தில் நிலைத்து நில்லாது சகடக்கால்போல் மாறிமாறிப் புரளும் இயல்புடையது செல்வம். ஆதலால் அச்செல்வத்தின் பயனை முழுமையாய்த் துய்க்கவேண்டுமானால் அது கையத்தே இருக்கும்போதே விரைந்து செயலாற்ற வேண்டும் என்கிறது இப்பாட்டு.

    துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்.  
    (நாலடி – 2)

    பொருளை ஈட்டுவது பெரிதன்று! அதனை நல்வழியில் ஈட்டுவதே மாணப் பெரிது. அதைத்தான் ’துகள்தீர் பெருஞ்செல்வம்’ எனும் தொடர் ஈண்டுச் சுட்டிநிற்கின்றது.

    பகடு என்பது எருதைக் குறிக்கும். எருதில்லையேல் உழவில்லை என்ற நிலையிருந்த காலமது! உழவனின் உற்ற நண்பனாய்த் திகழ்ந்த எருதுகள், அவனுக்கு நெல்லை விளைவித்துக் கொடுத்துவிட்டுத் தாம் (அதன் சக்கையான) வைக்கோலைத் தின்று வாழ்பவை. எருதின் இந்த அருங்குணத்தை, ’உழுத நோன்பகடு அழிதின் றாங்கு’ என்று புகழ்கின்றது புறநானூறு.

    தம்மிடம் இருப்பதைப் பகுத்துண்ணும் அறப்பண்பை வள்ளுவமும் விதந்தோதுவது இங்கே நினையற்பாலது.

    ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (322)

    காலையில் தோன்றும் பகலவனை, பொழுதை அளக்கும் நாழி எனும் கருவியாய்க் கொண்டு, மாந்தரின் வாணாளைத் தானியத்தை உண்பதுபோல் ஒவ்வொரு நாளும் அளந்துண்ணும் இயல்புடையது கூற்றம். ஆதலால், வையத்து மாந்தர் எவ்வளவு அறச்செயல்களைச் செய்ய முடியுமோ அவ்வளவையும் விரைந்துசெய்து அருளுடையராதல் வேண்டும். அவ்வாறு அறஞ்செய்யாது மரம்போல் வாழ்வார் பிறந்தும் பிறவாதாரே என்கிறது மற்றொரு நாலடியார் பாடல்.

    தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
    கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ஆற்ற
    அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் யாரும்
    பிறந்தும் பிறவாதா ரில்.
    (நாலடி – 7)

    இதையே,

    ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாரும் வைக்கப் படும்
    என்று வேறுவார்த்தைகளில் நறுக்கென்று சொன்னார் செந்நாப்போதார்.

    ”நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
    கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” என்று அறம் செய்யவேண்டியதன் அவசியத்தை மட்டுமல்லாது அவசரத்தையும் விளக்கிப் போந்தது நெஞ்சையள்ளும் சிலம்பு.

    ”செல்வத்துப் பயனே ஈதல்” என்று ஆன்றோரும் சான்றோரும் திரும்பத் திரும்பச் சொன்னபோதிலும்கூடச் சிலர் எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டார்கள்; சரி…! மற்றவர்களுக்குத்தான் எதுவும் கொடுப்பதில்லை; தன்னளவிலாவது தாராளமாக உண்டும் உடுத்தும் வாழ்கின்றனரா என்று பார்த்தால் அதுவும் செய்யமாட்டார்கள்.

    இத்தகு மனிதர்கள் வருந்தித் தொகுத்த செல்வத்தால் ஆய பயன்தான் என்ன எனும் கேள்விக்குத் தக்கதோர் பதிலிறுக்கின்றது பின்வரும் பாடல்.

    உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
    கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது
    வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட
    உய்த்தீட்டும் தேனீக் கரி.
    (நாலடி – 10)

    தேனீக்கள் மிகுந்த சிரமப்பட்டுத் தேனைச் சேகரிக்கின்றன. ஆனால் அத்தேனால் அவற்றுக்கு எவ்விதப் பயனும் விளைவதில்லை. மாறாக, மனிதர்கள் அந்தத் தேனிறாலை எவ்வித உழைப்புமின்றித் தமதாக்கிக் கொண்டுவிடுகின்றார்கள். அதுபோல், பிறர்க்கும் ஈயாது தானும் துய்க்காது வாழ்வோனும் தன் செல்வத்தைப் பிறரிடம் இழப்பான்; அதற்கு இத்தேனீக்களே தக்க சான்று என்கிறது இப்பாடல்.

    ஈத்துவக்கும் இன்பம் அறிந்தோரே வாழ்வைப் பொருளோடு வாழ்வோர் ஆவர். ஏனையோர் வாழ்வை நன்முறையில் வாழத்தெரியாது செல்வத்தை வைத்திழக்கும் வன்கணவரே.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    நாலடியார் பாடலும் உரையும் – திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை.
    திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்.

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (272)

     

     

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

     

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலிலே உங்களுடன் உரையாடுவதில்பெருமகிழ்வடைகிறேன். பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் எந்தவிதமாகவோ நிச்சயம் நடந்தேறும் ஒரு நிகழ்வாகும். ஆனால் எப்போது பிறக்கிறோம் என்பதும் எப்போது மடிகிறோம் என்பதும் நாம் திட்டமிட்டு நடப்பதல்ல. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் “வாழ்ந்தோமா?” என்பதுவே கேள்வி. என்ன இவன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறானே ! வாழ்க்கை என்று ஒன்று இருக்கும்போது அதை வாழ்ந்துதானே முடிக்கிறோம் எனும் கேள்வி எழுவது இயற்கையே ! வாழ்ந்தோமா? எனும் என் கேள்விக்குள் புதைந்திருப்பது ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல் மனதுக்குத் திருப்தியாக வாழ்ந்தோமா? என்பதுவே !

     

    நமது மூதாதையர் வழியாக வந்த நாம் பல தலைமுறைகளைத் தாண்டி வந்துள்ளோம்.தலைமுறைக்குத் தலைமுறை வாழ்க்கை முறையில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.இம்மாற்றங்களின் தாக்கம் நாம் வாழும் முறையிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.இத்தாக்கங்களின் சில வாழ்வின் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கின்றன, சில வாழ்வின் முறைகளுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவைகளைத் தடுத்து நிறுத்துவது என்பது நமது கைகளில் இல்லை. பெரும்பான்மையாக இவை நம்மீது திணிக்கப்படுகின்றன என்றே சொல்ல வேண்டும். ஒரு தலைமுறை எடுக்கும் முடிவுகளின் தாக்கம் அவர்களைத் தொடர்ந்து வரும் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்துவது என்பது யதார்த்தமானது.

     

    சுமார் 43 வருடங்களுக்கு முன்பாக பதின்ம வயதுகளின் எல்லையில் இங்கிலாந்துக்கு மாணவனாகப் புலம் பெயர்ந்த நான் எனது தாய், தந்தையரின் வாழ்க்கை முறையின் தாக்கத்தை எனது கலாச்சாரப் பரிமாணமாகச் சுமந்து கொண்டு இந்நாட்டுக்குள் கால் பதித்தேன்.அதைத்தொடர்ந்து வந்த அனுபவப்பதிவுகளும், வாழ்க்கைச் சவால்களும் பலமுறைகள் எனது கலாச்சாரப் பின்னணிக்கும், இந்நாட்டின் கலாச்சாரப் பின்னணிக்கும் இடையில் பல பனிப்போர்களை நிகழ்த்தியிருக்கின்றன. வாழ்க்கையை நோக்கிய ஒரு பரந்து பட்ட பார்வையை எனது பாதுகாப்பு வட்டத்தினை விட்டு வெளியே செலுத்தக்கூடிய ஒரு வாய்ப்பினை இங்கிலாந்து வாழ்க்கை நல்கியது. அன்றைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டினை இருவேறு நாடுகளின் கலாச்சாரப் பின்னணி எனும் சாளரத்தின் வழியாக நோக்கும் போது அவைகளுக்கிடையே அந்தந்த நாடுகளுக்கு எற்ற வகையில் அவர்களின் தலைமுறை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது என்பது நன்றாகப் புரிக்கிறது.

     

    எதற்காக இந்த ஒரு ஆழமான அலசல் என்று எண்ணுகிறீர்களா ?

     

    இன்றைய ஊடகங்களில் பரவலாக அடிபட்டுக் கொண்டும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டும் இருக்கும் ஒரு சிக்கலான விடயத்தை உங்களுடனான உரையாடலில் இங்கு முன்வைப்பதற்காக ஒரு பொதுவான அலசலுடன் மடலை ஆரம்பிக்கும் நோக்கமே அதற்குக் காரணம். இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்து மண்ணிலே பொருளாதாரச் சூழல் பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக “ப்ரெக்ஸிட்” எனும் அந்தச் சொல் பல பொருளாதார நிபுணர்களின் வயிற்றிலும், பல முன்னனி அரசியல் அவதானிகளின் வயிற்றிலும் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சித் தகவலின் முடிவு நான் மேற்சொன்ன விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

     

    இங்கிலாந்தின் 1940, 50 களில் பிறந்தவர்கள் தற்போது பெரும்பான்மையாக இங்கிலாந்தின் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கைத்தரம் திருப்திகரமானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் இவர்களது காலத்தில் இவர்கள் எதிர்கொண்ட இவர்களுக்குச் சாதகமான பொருளாதாரச் சூழல். அத்துடன் அத்தகைய பொருளாதாரச் சூழலின் அடிப்படையில் இவர்கள் அப்போதிருந்தே தமது ஓய்வுகால வாழ்க்கைக்கான புரிதலின் அடிப்படையில் எடுத்துக் கொண்ட தனியார் ஓய்வூதியக் காப்புறுதியும் அதன் இன்றைய முதிர்ச்சியின் இலாபமுமாகும். இன்றைய இங்கிலாந்தில் வீடு வாங்குவது அதுவும் குறிப்பாக வேலை வாய்ப்புகள் அதிகம் நிறைந்த லண்டனும் அதனையொட்டிய தென்கிழக்கு பகுதிகளிலும் படு சிரமமான விடயமாகிறது. காரணம் வீட்டு விலைகள் கோடைகால வெப்பம் போல கிடு,கிடுவென உயர்ந்து கொண்டு செல்வதுதான்.அன்றைய சூழலில் ஒரு நடுத்தர ஊதியம் பெறும் ஒருவர் தனது ஊதியத்தின் அடிப்படையில் கிடைக்கும் வங்கிக் கடனின் மூலம் வாங்கக்கூடிய அளவில் வீட்டு விலைகள் இருந்தன. ஆனால் இன்றோ அது நிறைவேறமுடியாத கனவாக இருக்கிறது. இதற்குக் காரணம் பொருளாதாரத்தில் விரைவாக முன்னேறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரச் செழிப்பின் விளைவாக அப்பகுதிகளைச் சேர்ந்த பலர் போட்டி போட்டுக் கொண்டு லண்டனையும், அதனைச் சார்ந்த பகுதிகளிலும் வீடுகளை வாங்கி முதலீடு செய்வதும், வீட்டு விலையின் அதிகரிப்புக்கிணங்க இங்கிலாந்து நடுத்தர வர்க்கத்தினரின் ஊதியம் அதிகரிக்கப்படாததுமே என்று கூறப்படுகிறது.

     

    இதற்குத் தீர்வாக அந்த ஆய்வு முன்வைத்த விடயமே இன்றைய முதியவர்களின் விசனத்துக்கும்,விவாதங்களின் முன்னெடுப்புக்கும் காரணமாகிறது. இன்றைய இருபதுகளின் நடுப்பகுதியில் இருக்கும் வாலிப சமுதாயம் தமக்கென ஒரு இருப்பிடத்தை வாங்கி தமது வாழ்வை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் முகமாக இவர்களுக்கு இருப்பிடம் வாங்குவதற்கு உதவியாக 10000பவுண்ஸ் வரையில் அரசாங்கம் உதவிப்பணம் கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக அரசாங்கம் செலவிடும் பணத்தை இன்றைய ஓய்வு பெற்ற முதியவர்களில் வசதியாக வாழ்வோரிடத்தில் இருந்து கூடுதல் வரிப்பணமாக வசூலிக்க வேண்டும் என்றும் இவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.இது இன்றைய வயதானவர்கள் மத்தியில் ஒருவித அரசியல் அதிர்வலைகளை உண்டு பண்ணியிருக்கிறது. இது பலமுனைக் கேள்விகளையும் கிளப்பி விட்டிருக்கிறது.

     

    அன்றைய பொருளாதரச் சூழல் இன்று ஓய்வு பெற்று வாழ்பவர்களின் வாழ்வில் தமக்கென இருப்பிடம் வாங்குவதற்கு இலகுவாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அதை யாராவது இனாமாகக் கொடுத்தார்களா? தமது வாழ்வில் எத்தனையோ செளகரியங்களைத் தியாகம் செய்துதான் தமது வாழ்வை அவர்கள் செப்பனிட்டார்கள். ஆனால் இன்றைய தலைமுறையோ இன்று விதை விதைத்து நாளை மழை பொழிந்து நாளை மறுநாள் அறுவடை செய்ய வேண்டும் எனும் மனப்பான்மையோடு வாழ்வது மட்டுமின்றி தமது வாழ்வில் எதையும் தியாகம் செய்யாமல் தமது மனம் போன போக்கில் தாராளமாகச் செலவு செய்து கொண்டு தமது தாய் தந்தையர் இன்று வாழ்வது போல் வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இவர்களின் இந்தத் தான்தோன்றித்தனமான வாழ்வுக்கு நம்மையா தண்டிக்க வேண்டும் என்கிறது பல முதியோர்களின் அமைப்புகள். இந்த விடயத்தில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் நீங்கள் எண்ணுகிறீர்கள். நாம் எல்லோரும் ஊதாரித்தனமாக வாழவில்லை எவ்வளவோ சிக்கனமாக, அவதானமாக வாழ்ந்தும் வீடு வாங்கும் நிலையை எட்ட முடியாதிருக்கிறது நமக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்னும் வாதம் நியாயமானதே என்கிறது பல இளையோருக்கான அமைப்புகள். இல்லை நாம் மிகவும் கடினமாக உழைத்து நமது இலட்சியத்தை அடைவதுதான் முறை இதற்காக நமக்கு முந்தைய தலைமுறையினரை வருத்துவது முறையல்ல என வாதிடும் இளையோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     

    இன்றைய இங்கிலாந்து கன்சர்வேடிவ் அரசாங்கத்தை அரசுக் கட்டிலில் அமர்த்தியதற்கு பல முதிய தலைமுறையின் வாக்குகளே காரணம் என்பது அரசியலை நன்றாக அவதானித்து வரும் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தமக்குச் சாதகமான வாக்கு வங்கியை முற்றிலும் நிறைந்த தண்ணீர்ப்பானையை தாகத்தில் இருக்கும் ஒருவன் ஒற்றைக்கல்லால் குறிவைத்து உடைப்பது போல் இவ்வரசு செயற்படுமா? இல்லை மேற்புறம் சத்தும் அடியில் சக்கையுமாக இருக்கும் பாத்திரத்தில் ஒரு கரன்டிய வைத்து சமமாக கலக்கி விடுவதைப் போல ஒரு அதிரடி திட்டத்தை முன்னெடுத்து செயற்படப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

     

    ஓ ! இளைய தலைமுறையக் கடந்து நானும் ஓய்வுபெற்றோர் எனும் முதிய தலைமுறையின் வாயிலுக்குள் நுழைந்து விட்டேனோ ?

     

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (107)

    நிர்மலா ராகவன்

    தாம்பத்தியத்தில் தோழமை

    கல்யாணம் எதற்கு?

    நான் இக்கேள்வியைக் கேட்டபோது, ஆண் ஒருவர்,   `முறையான உடலுறவுக்கு,’ என்ற பதிலை அளித்தார், தர்மசங்கடத்துடன். (“Let us face it. I can’t think of having sex any other way!”) பெண்களோ, “பாதுகாப்பு’ என்றார்கள்.

    நிற்பது,  நின்றிருந்தால் உட்கார்வது, நடப்பது எல்லாமே முதுமையில் பெருமுயற்சியாகிவிடுமே! அப்போது, `காமத்துக்குத் துணைபோகாத வாழ்க்கைத்துணையால் என்ன பயன்?’ என்று யோசனை போகுமா?

    திருமணம் செய்துகொள்வது எதற்கு என்பதில் மட்டுமல்ல, மணமுடித்தபின், ஆண்களின் எதிர்பார்ப்பும், பெண்களின் எதிர்பார்ப்பும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஒரு பெண் கணவன் தன்னுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். ஆணுக்கோ, அந்நிலை மூச்சுமுட்டுவதுபோல் இருக்கும்.

    இயன்றவரை பிற ஆண்களுடன் பொழுதைக் கழிப்பதுதான் ஆணுடைய சுபாவம். இதைப் பெண்கள் புரிந்துகொண்டாலே போதும். பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

    தம்பதிகள் என்றால், கணவன் சொற்படி மனைவி நடக்கவேண்டும், தனக்கென ஆசைகள் இருந்தால் அவற்றை அவள் மறந்துவிட வேண்டும் என்பது போல்தான் கடந்த சில தலைமுறைகளில் நடந்துவந்தது. அதைப் பார்த்து இக்காலப் பெண்கள் மிரள்கிறார்கள். அதனாலேயே ஏதேதோ நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

    “எனக்கு வரப்போறவரோடு Companionship (தோழமை)  இருக்கணும் என்கிறாள் அபி. அப்படின்னா என்ன?” என்று என்னைக் கேட்டாள் நடுத்தர வயதான ஒரு மாது. முப்பது வயதாகியும் மணம் செய்துகொள்ளத் தயங்கிய மகளின் நிபந்தனை அவளுக்குப் புரியத்தானில்லை. “நாங்களெல்லாம் அப்படியெல்லாம் பார்த்தா கல்யாணம் செய்துகொண்டோம்?” என்று பொருமினாள். ஒரே பார்வையில் எவருடனும் நட்பு பெருகிவிடாது என்பது சில இளம்பெண்களுக்குப் புரிவதில்லை.

    புதிதாக மணமான தம்பதிகள் ஒன்றாக வாழ நேரிடும்போது மற்றவரின் வேற்றுமைதான் பூதாகாரமாகத் தெரிகிறது. அதைப் பழிப்பதால் இடைவெளி விரிவடையும் என்பதைப் புரிந்துகொள்ளாது, கேலி செய்பவர்களும் உண்டு.

    நண்பர்கள் கேலி செய்தால் பொறுத்துப்போகலாம். ஆனால் கணவனோ, மனைவியோ பழிப்பதை ஏற்க முடிவதில்லை. மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் கூறினால், பாதிக்கப்பட்டவர் சிறுமைப்படுத்தப்படுகிறார். ஆத்திரம் பெருகுமே!

    `தாம்பத்தியத்தில் ஒரு நாளைக்கு ஆறு முறையாவது சொல்ல வந்ததைச் சொல்லாமலிருக்க வேண்டும்,’ என்கிறார் திரு.அனுபவசாலி. `நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!’ என்று திரைப்படத்தில் காதலர் பாடலாம். நடைமுறையில், `soulmate” என்ற ஒருவருடன்தான் இது சாத்தியம். உரிய காலத்தில் அப்படி ஒருவரைச் சந்திப்பதே துர்பலம். வாழ்க்கைத்துணையாக அடைவதோ..!

    ஒருவர் தன் மனைவியிடம், “உன்னை என்னைப்போலவே மாற்றிவிட இந்த இருபத்து ஐந்து வருடங்களாக முயன்று பார்த்துவிட்டேன். அது நடக்காத காரியம் என்று இப்போதுதான் புரிகிறது!” என்று கூறினார், அனுபவம் அளித்த விவேகத்துடன். “எல்லாம் இந்த தமிழ்சினிமாவால் வந்த வினை!” என்று காலங்கடந்து நொந்து கொண்டார்!

     அப்பாமாதிரி இல்லையே!

    இளம்பெண்கள் தம் தந்தையுடன் கணவரை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள்.

    `அப்பா எப்படி அம்மா சொல்வதைக் கேட்பார்! இவர் என்ன, பிடிவாதமாக இருக்கிறாரே!’ என்று ஆத்திரப்படுவது வீண். திருமணமான புதிதில் அப்பா இப்படியேவா இருந்திருப்பார்? அம்மாவை மாற்ற முயன்றிருப்பார். பிறரை மாற்றுவதைவிட தன்னையே மாற்றிக்கொள்வது எளிது என்று முடிவெடுத்திருக்கலாம்.

    `இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது! மனைவி என்பவள் ஒரு பிரச்னை இல்லை, அவள் இருப்பதுபோலவே ஏற்றுக்கொண்டால்தான் வாழ்க்கையில் அமைதி நிலவும்,’ என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கும். கணவரை மாற்ற முயலும் பெண்களும்  தம் முயற்சியில் வெற்றி பெறமுடியாது.  ஆத்திரப்பட்டால், அவர்கள் உடல்நிலைதான் கெடும். நிலைமை என்னவோ மாறப்போவதில்லை.

    உத்தியோகம் முதல் மனைவியா?

    விவாகரத்து கோருவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

    கணவர் தங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்குவதில்லை, எப்போதும் உத்தியோகமேதான் நினைப்பு என்பது அவர்கள் வாதம். வேலை கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்நாளில் கடிகாரத்தைப் பார்த்தபடி வேலை செய்பவன் எப்படி முன்னேற முடியும்? இரவு நெடுநேரம் உழைக்க வேண்டியிருக்கும். அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டிய உத்தியோகமும் அமையலாம்.

    செலவச்செழிப்பான வாழ்க்கை அமைய வேண்டும், ஆனால் கணவனுடைய அருகாமையும் எப்போதும் வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? (ஒரேமாதிரியான உத்தியோகத்தில் இருப்பவர்கள் கணவன் அல்லது மனைவியின் இக்கட்டான நிலையை ஓரளவு புரிந்துகொள்ளக்கூடும்).

    எங்கும் பிரச்னைதான்

    வீட்டிலோ, வெளியிலோ, பிரச்னை இல்லாத இடமே கிடையாது. வீட்டில் நாள்பூராவும் வேலை செய்து, குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் பெண்ணானவள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும்போதே குற்றப்பத்திரிகை படித்தால், அவனுக்கு எப்படி இருக்கும்?

    அவன் அலுத்துச் சலித்து வீடு திரும்பும்போது, இன்முகமாக வரவேற்க வேண்டாமா? அப்படி இல்லாவிடில், தன் பங்குக்கு அவனும் கத்துவான், இல்லை, உடனே வெளியில் போய்விடுவான். 

    பாராட்டுங்கள்!

    பொதுவாக, பெண்கள்தாம் உணர்ச்சிபூர்வமானவர்கள். தம் இயலாமையை வெளிப்படுத்த சண்டை பிடிப்பார்கள், இல்லையேல் அழுவார்கள். அவ்வப்போது, `மௌன விரதமும்’ உண்டு! (ஒரு சிறு பெண்ணிடம்கூட இந்தக் குணத்தைக் காணலாம்).

    இது புரிந்து, ஆண்கள் மனைவிக்கும் சிறிது நேரத்தை ஒதுக்கி, பாராட்டுதலால் தம் அன்பை வெளிக்காட்டினால் பிரச்னையே கிடையாது. நண்பர்களிடம் கூற நினைப்பதை மனைவியிடமும் கூறலாமே!

    அதைவிட்டு, `நான் நம் குடும்பத்திற்காகத்தானே உழைக்கிறேன், என்னை நீ பாராட்டுவதே இல்லையே!’ என்று குற்றம் சாட்டுவது அவர்களிடையே உள்ள இடைவெளியை இன்னும் பெரிதாக்கும்.

    வாயை மூடு, செவியைத் திற!

    தம்பதிகளின் உரையாடல் நடக்கையில்: “கணவன் காதில் வாங்கிக்கொள்வது பாதி, புரிந்துகொள்வது கால் பங்கு, சிந்திப்பது பூஜ்யம், பதிலளிப்பதோ இரு மடங்கு!” (திரு. அனுபவசாலி).

    மனைவி அன்றைய தினம் தன்னைப் பாதித்த சமாசாரங்களைப்பற்றிக் கூறிவருகையில், `நான் நீயாக இருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லி இருப்பேன், தெரியுமா?’ என்று கணவன் ஆரம்பித்தால், எந்த மனைவிக்குத்தான் எரிச்சல் வராது?

    `நான் நீங்களில்லையே!’ என்று சொல்லத்தான் தோன்றும், தன் பிரச்னைகளைத் தனக்குத் தோன்றிய விதத்தில், தானேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பாளவள்.

    அம்மாதிரி சந்தர்ப்பங்களில், எதுவும் பேசாது கேட்பது உத்தமம். தீர்வை எதிர்பார்த்து அவள் சொல்லவில்லை. சும்மா பகிர்ந்துகொள்கிறாள். அவ்வளவுதான். அத்துடன், பெண்களும் ஆண்களைப்போலவே யோசிக்கமாட்டார்களே!

    பிரச்னையா, துணையா?

    திருமணமான புதிதில், ஒருவரது வாழ்க்கை முறையை மற்றவர் புரிந்துகொண்டு, அதன்படி நடப்பது எளிதல்ல. ஆனால், வாழ்க்கைத்துணையைவிட பிரச்னை முக்கியமானதல்ல என்று புரிந்துகொண்டு, அதைப் பற்றிப் பேசினாலே போதும். தீர்த்துவிட முடியும்.

    ஐம்பது வயதுக்குமேலாகிய, மெத்தப் படித்த  ஒரு மாது என்னிடம் கூறினார், “நானும் என் கணவரும் தினமுமே சண்டை போடுவோம்!” அவர் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. அதில் வருத்தமோ, கோபமோ இருக்கவில்லை.

    அவள் `சண்டை’ என்று குறிப்பிட்டது கைகலப்பில்லை. அபிப்ராயபேதம். இருவரும் ஒரேமாதிரி யோசிக்க முடியுமா? ஒரு பொருளைப்பற்றி விவாதித்து, யார் கூறுவதில் உண்மை இருக்கிறது என்று ஆராய்கிறார்கள்.  

    கல்யாணமாகி சுமார் முப்பது வருடங்களாகியும் வாய்ச்சண்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறதென்றால், அவர்கள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

    `நாங்க ரெண்டுபேரும் அதிகமா பேசிக்கறதே கிடையாது!’ என்று அலட்சியமாகச் சொல்வது  வெறுப்பைக் காட்டுவதைவிட மோசமானது. `நீ எப்படியோ தொலை!’ என்பதற்குச் சமானம். கசப்பை ஏன் அவ்வளவு தூரம் வளரவிட வேண்டும்?

    Share
  • தொன்மக் கதைகள் மீட்டுருவாக்கம்

    -முனைவர் வீ. மீனாட்சி

    தொன்மம் என்பது பழமை என்பதைக் குறிப்பதாகும். இதனை ஆங்கிலத்தில் ‘MYTH’ என்பர். இச்சொல்லானது ‘MYTHYS’’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது ஆகும். தொன்மங்கள் இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்பான காலத்தில் தோன்றியவை எனக் கருதப்படுகின்றன. இத்தொன்மங்கள் ஒரு சமூகத்தின் பண்பாட்டின் ஒட்டுமொத்த பதிவுகளாக அமைகின்றன. சமூக நியதிகளை இவை எடுத்துரைக்கின்றன.

    காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் இராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மக் கதைகள் சமூகத்தில் மக்கள் வாழ்வோடு ஒன்றி இருக்கின்றன. இவற்றை மக்கள் வாழ்வை விட்டுப் புறந்தள்ளிவிட முடியாது. இத்தொன்மங்கள் என்பவை தனிமனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல. பல்வேறு மனிதர்களால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சமூக அமைப்பு முறையினை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டவை. இத்தகைய தொன்மங்கள் மனித மனத்தில் ஆழப்படியும் வலுவினைப் பெற்றவை என்பதை, ‘தொன்மங்கள் உயிர்பொருளாக விளங்குகின்றன. சமூகத்துடன் துடிப்புள்ள உயிர்த்தொடர்பு கொண்டு விளங்குகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு நுண்கூறுக்குள்ளும் நுழைந்து ஊடுருவிச் செல்கின்றன’ எனும் கார்டுவெல்லின் கூற்றும்,

    ”இத்தொன்மங்கள் இவ்வாறு விளங்குவதற்கு, ‘இத்தொன்மங்கள் மானுட இனத்திற்கே பொதுவான நனவிலிக் கூட்டுமனத்தில் (collective unconscious) தொல்படிவங்களாகப் படிந்து கிடப்பவைகளின் வெளிப்பாடு’ எனும் உளவியல் அறிஞர் யுங்வின் கூற்றும் உறுதிசெய்கின்றன.

    பெரும்பாலும் இத்தொன்மங்கள் ஆண் உயர்வு என்ற நிலைப்பாட்டை ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மனத்திலும் ஆழப்பதியும்படிச்செய்து பாலின வேறுபாட்டை (gender discrimination) பேணுவதாக அமைந்துள்ளன. இத்தகைய நிலைப்பாட்டை மாற்றிச் சமூகத்தில் ஆண் பெண் இருவரும் சரிநிகர் என்ற சிந்தனையை வலியுறுத்தும் வகையில் இன்றைய தமிழிலக்கியப் படைப்பாளிகள் கவிதை, சிறுகதை, புதினம் போன்ற தளங்களில் தொன்மங்களை மறுவாசிப்பு செய்து மீட்டுருவாக்கம் என்ற இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகிவருகின்றனர்.

    சமூக மாற்றத்தை ஏற்படுத்த விளையும் இத்தகு படைப்பாளிகள் தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்யும்பொழுது கதை அமைப்பு மாறுபடுவதில்லை. ஆனால் கதைமாந்தர்களின் கூற்றுக்களை மாற்றியமைத்து படிப்பவர்களின் சிந்தனையை விழிப்படையச் செய்து வருகின்றனர். பெரும்பாலும் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் பறைசாற்றும் வகையில் இவர்களது படைப்புகள் அமைந்துள்ளன. இவற்றால் பெண்ணடிமை குறித்த சிந்தனைகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மத்தியிலும் சமூகக்கட்டமைப்பு குறித்த மாற்றுச் சிந்தனையினை ஏற்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் அகலிகை, சீதை, பாஞ்சாலி, நளாயினி, கண்ணகி, மாதவி, குந்தி, சந்திரமதி குறித்த தொன்மங்கள் இலக்கியங்களில் எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறித்து ஆராய்வதாக பின்வரும் பகுதி அமைகின்றது.

    அகலிகை – மீட்டுருவாக்கம்

    பெண்ணின் கற்பு குறித்த கருத்தாக்கத்தை வலியுறுத்தும் அகலிகை கதை தொன்மக்கதைகளில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தொன்மத்தை இக்காலப் படைப்பாளிகள் பல்வேறு தளங்களில் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர்.

    புதுமைப்பித்தனின் ‘அகல்யை’ சிறுகதையில் வேதகாலத்தில் இந்திரனின் செயலால் அகல்யைக்குச் சாபம் இட்ட கௌதம முனிவரின் சிந்தனை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ‘உணர்ச்சி தேவனையும் மிருகமாக்குகிறது. மனத்தூய்மையில்தான் கற்பு, சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்’ என்று காலம் காலமாக பின்பற்றி வந்த கற்பு என்ற கற்பிதத்திற்குப் புதுமைப்பித்தன் கௌதமரின் சிந்தனையை மாற்றி தொன்ம மீட்டுருவாக்கத்தின் வழி புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்திரனின் செயலுக்கு அன்று அகலிகைக்கு தண்டனை கொடுக்க கௌதமரை கற்பு என்பது மனம் சார்ந்தது என்ற சிந்தனை ஓட்டம் கொண்டவராக புதுமைப்பித்தன் மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.

    கவிப்பேரரசு வைரமுத்துவின் ’திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ கவிதைத் தொகுதியில் இடம்பெறும்,

    ‘ஏடி அகலிகை
    எப்போதடி பெண்ணாவாய்?
    கானகத்தில்
    அன்று
    கதைக் கல்லாய்க்
    கிடந்த நீ
    சமூக சந்நிதியில்
    இன்று
    சதைக் கல்லாய்க கிடக்கிறாய்’

    எனும் கவிதை சமூகத்தில் பெண் என்பவள் ஆணின் உடைமையாகப் பார்க்கப்படும் அவலநிலையை காட்டுவதோடு ‘அகலிகை’ குறியீட்டின் வழி பெண் தன்னை உணர வேண்டும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

    சீதை – மீட்டுருவாக்கம்

    பெண்ணின் வரலாறு என்பது ஒரு சமூகத்தின் வரலாறு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர்களின் மீட்சி குறித்த புதிய சிந்தனைகளைத் தனது படைப்பில் வலியுறுத்தும் பிரபஞ்சன் தனது, ’நானும் நானும் நீயும் நீயும்’ புதினத்தில் இராமாயணக் கதையில் வரும் சீதையின் அக்னி பிரவேசத்தினை மீட்டுருவாக்கம் செய்துள்ளார். இக்கதையில் இடம்பெறும் அரசு என்ற கதைமாந்தர் கல்லூரியில் பணிபுரியும் தமிழ்ப் பேராசிரியராக உள்ளார். அவர் இராமாயணக் கதையை தன் சிந்தனை வடிவில் காலமாற்றத்திற்கேற்ப புதிய முறையில் படைக்கின்றார். அக்கதை பின்வருமாறு:

    ‘ராமன் இராவணவதம் முடித்துத் திரும்புகிறான். தன் தம்பியைப் பார்த்து, தம்பி ஓர் ஆழமான பள்ளம் வெட்டு, அதிலே நெருப்பை எரிய விடு. சீதை அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டும். அயலார் வீட்டில் பல மாதங்கள் இருந்தாள் அல்லவா? அவள் கற்பை நிரூபிக்க வேண்டும். உலகத்திற்கு என்றான். இது எல்லோருமே எழுதியதுதான். நான் கொஞ்சம் மாற்றி எழுதினேன். இராமன் சொல்லி முடிச்சதும் சீதை சொல்கிறாள்,

    ‘தம்பி இன்னொரு பள்ளம் வெட்டு’ ‘ஏன் அண்ணி?’ என்றான் லட்சுமணன்.

    ‘நான் ஊரில் இல்லாத சமயத்தில், ராமனின் சுத்தத்தையும் உலகத்துக்கு நிரூபிக்க வேணும் இல்லையா, அதுதானே நியாயமாக இருக்கும்’ என்கிறாள்.

    இவ்வாறு கற்பு என்ற கருத்தாக்கம் ஆண்-பெண் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற புதிய சிந்தனையை அரசு என்ற கதைமாந்தர் வெளிப்படுத்துகின்றார். இங்குப் பாலின வேறுபாடு களையப்பட்ட சமூகம் உருவாக ஆண்பாலினத்தின் சிந்தனை மாற்றப்பட வேண்டும் என்பதை சீதை சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பதன் வழி உணர்த்துவதாக பிரபஞ்சன் தனது விழைவை அரசு என்ற ஆண்கதைமாந்தர் வழிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    பாஞ்சாலி மீட்டுருவாக்கம்

    பெண்ணினத்தின் பிரச்சனைகளைக் களைய பெண் தனது சுயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் படைப்புகளைத் தரும் வாஸந்தி தனது ‘வேர்களைத் தேடி’ புதினத்தில் மகாபாரதத்தில் பாஞ்சாலியின் பாத்திரத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.

    ‘பாஞ்சாலி வருகிறாள், விக்கித்து, அதிர்ந்து துயரத்தின் எல்லையைக் கடந்து, செத்துப் போனவர்களைப் போல ஒடுங்கிப் போன கணவன்மார்களைப் பார்க்கிறாள். ‘சட்’டென்று நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். சிறுமியின் முகத்தில் தோன்றியது அதிர்ச்சி மட்டும் இல்லை; இளக்காரம் ‘சீ பேடிகளா’ என்கிற வெறுப்பு, ரோசமுள்ளவர்களாக இருந்தால் அந்தப் பார்வையிலேயே பாண்டவர்கள் சாக வேண்டும். என்னை நானே காப்பாற்றிக் கொள்வேன் என்கிற வீம்பு தெரிகிறது; சிறுமியின் கண்களில். எனக்குச் சிலிர்த்துப் போயிற்று. துச்சாதனன் சேலையை இழுக்கிறான். டி.வி. பாஞ்சாலிபோல் இவள் கண்ணீர் விடவில்லை. ‘இழு’ என்கிறாள் கம்பீரத்துடன். உனக்குதாண்டா அவமானம், எனக்கு இல்லை. கண்ணை மூடிக்கொண்டு கிருஷ்ணா கிருஷ்ணா என்பது வெறும் பாவனை என்று தோன்றுகிறது……. வியாசர் காணாத பரிமாணங்களை உணர்ந்த குழந்தைச்சாமி. இது வெறும் ஞானம் இல்லை. பெண்மையின் விழிப்பு’  என்று இக்கதையில் மைதிலி என்ற கதைமாந்தர் காணும் மகாபாரதக் கதையில் வாஸந்தி நவீன சிந்தனைகளைப் புகுத்தியுள்ளார்.

    பெண்ணினத்திற்கு ஏற்படும் அவமானம் என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு ஏற்படும் அவமானம் என்பதை அனைவரும் உணர வேண்டும். பெண் பிறரைச் சார்ந்து வாழாமல் சுயச்சார்பு உடையவளாக மிளிர வேண்டும் என்பதை பாஞ்சாலி மீட்டுருவாக்கத்தின் வழி வலியுறுத்தியுள்ளார்.

    மேலும்,

    ‘இலக்கியப் பெண்கள் மட்டும்
    உயிர்பெற்று வாழ்ந்திருந்தால்
    காவியமும், காப்பியமும்
    இலக்கியமும், இதிகாசமும்
    கதைமாறி போயிருக்கும்.
    ஆம்…
    கண்ணகி விழித்திருந்தால்
    கோவலனைக் சுட்டிருப்பாள்!
    மாதவி மயங்காதிருந்தால்
    மணிமேகலையை மாய்த்திருப்பாள்
    குந்தியவள் நினைத்திருந்தால்
    கர்ணனையே கலைத்திருப்பாள்
    சீதையவள் கொதித்தெழுந்தால்
    இராமனையே எரித்திருப்பாள்.
    சந்திரமதி வெகுண்டிருந்தால்
    அரிச்சந்திரனைப் புதைத்திருப்பாள்’

    எனும் செல்வகுமாரியின் ’இலக்கியத்தில் பெண்கள்’ எனும் தொன்ம மீட்டுருவாக்கக் கவிதையானது காலம்தோறும் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒட்டுமொத்தப் பெண்ணினத்தின் எழுச்சிக் குரலாக ஒலிக்கிறது.

    தொகுப்புரை

    இவ்வாறு ஆண்டாண்டு காலமாக மனித சமூகத்தில் நிலவி ரும் தொன்மக் குறியீடுகள் மக்கள் மனத்தில் நீங்காது நிலைத்துவிட்டவை. இவற்றின் வழி ஆண் உயர்வு என்ற கற்பிதம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது என்பதை அகலிகை, சீதை, பாஞ்சாலி, கண்ணகி, மாதவி, குந்தி, சந்தரமதி போன்ற தொன்மங்கள் காட்டுகின்றன. இத்தகைய தொன்மங்களை மீட்டுருவாக்கம் என்ற இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் நோக்கியுள்ள படைப்பாளிகள் பெண் இனத்தின் உரிமைக்குக் குரல் கொடுப்பதற்கு ஆண் – பெண் இருவரும் சமூகக் கட்டமைப்பு குறித்த சிந்தனையில் தெளிவுபெற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் தொன்மக் கதைகளை இக்காலத் தமிழ்ப் படைப்பாளிகள் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர்.

    பார்வை நூல்கள்

    1. வீ.நிர்மலாராணி – பெண்ணியத் திறனாய்வு-காவ்யா-சென்னை-2003
    2. க.பஞ்சாங்கம் – தொன்மத் திறனாய்வு -அன்னம் – தஞ்சாவூர் – 2005
    3. வைரமுத்து – திருத்தி எழுதிய தீர்ப்புகள் – சூர்யா லிட்ரேச்சர் லிமிபுட்டர்  சென்னை – 2013
    4. ஜெ.செல்வகுமாரி – பெண்ணியம் பேசுகிறாள் – நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் – சென்னை – 2012
    5. http://wwwsirukathaigal.com/tag
    6. வாஸந்தி – வேர்களைத் தேடி – வானதி பதிப்பகம் – சென்னை – 1995
    7. பிரபஞ்சன் – நானும் நானும் நீயும் நீயும் – கலைஞன் பதிப்பகம் – சென்னை – 1998.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    தமிழாய்வுத்துறை
    பிஷப் ஹீபர் கல்லூரி
    திருச்சிராப்பள்ளி – 620 017.

     

     

     

     

     

     

    Share
  • அனைவருமே வாருங்கள்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

    இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை
    தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை
    கொடுத்துதவும் மனப்பாங்கைத் தொலைத்துவிட்டு நிற்பதையே
    நிலத்திலுள்ள பலரிடத்து நிலைத்துநிற்கக் காணுகிறோம்!

    அறம்செய்ய விரும்பென்று அவ்வைகூறிச் சென்றதனை
    ஆருமே மனமதனில் அமர்த்தியதாய்த் தெரியவில்லை
    அதிகசெல்வம் சேர்ப்பதிலே ஆசைகொண்டே அலைகின்றார்
    அல்லலுடன் இருப்பார்க்கு அவருதவின் அறம்மகிழும்!

    பொருள்தேவை என்பதனால் அருளதனை ஒதுக்குவதா?
    மருளோடு வாழுவதால் வாழ்வுவளம் ஆகிடுமா?
    அருளான வழிசென்று பொருளதனைப் பயனாக்கின்
    மருளகன்று வாழ்வினிலே அருள்வெள்ளம் பெருகிடுமே!

    பலகற்று உயர்நிலையில் இருக்கின்ற பலபேர்கள்
    பல்லக்கில் பவனிவரும் பதவியுடை பலபேர்கள்
    பணந்தேடி பணந்தேடி பதராக மாறுகிறார்
    பாங்காக அவர்வாழின் பண்பு தடுமாறிடுமா!

    பூமித்தாய் பலவற்றைப் பொறுமையுடன் தாங்குகிறாள்
    சாமியெனச் சூரியனும் பூமிக்கு உதவுகிறான்
    வான்மழையும் மண்ணினுக்கு வளங்கொடுத்தே நிற்கிறது
    மனம்மாறா மனிதரெலாம் மாறிவிட்டால் மகத்துவமே!

    பலகற்றோம் என்பதனால் பண்புநிலை மாறுவதா?
    பக்குவத்தைத் தொலைத்துவிட்டு பதவிகளை நாடுவதா?
    புவிமீது ஆற்றுதற்குப் பொறுப்பான பலவிருக்கு
    அதையாற்றி அகநிறைவோம் அனைவருமே வாருங்கள்!

     

     

    Share
  • நீ கண்சிமிட்டினால்..!

     

    -பெருவை பார்த்தசாரதி

    பெண்களென்றாலே பிதற்று கின்ற இவ்வுலகில்
    -பெண்மீது எனக்குள்ளொரு கொள்கை யுண்டு..!
    கண்களால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காத
    -கண்ணியம் கடமையோடு கட்டுப்பாடு முண்டு..!
    வண்ணமலர் வாசனை யோடொருத்தி ஒருநாள்
    -வளையவந்து வசமாய் மனத்துளே புகுந்தாள்..!
    கெண்டை விழியாலவள் கண்சிமிட்டினாள்..நான்
    -கொண்ட கொள்கையுமன்றே காற்றில் பறந்தது..!

    விண்மீனுமவள் கண் முன் தோன்றினாலதன்
    -விழிமூடி வெளிச்சம் தருவதையும் மறந்துவிடும்..!
    கண்ணாடி முன்னவள் முகம்பார்க்கையில் தான்
    -கண்டவழகை கண்ணாடியும் கவிதை யாக்கிடும்..!
    கொண்டையிலே வீற்றிருக்கும் தாழம்பூ… தான்
    -கொண்ட பெருமிதத்தால் மணம்வீச மறக்கும்..!
    கண்சிமிட்டி கருவிழிப் புருவமுயர்த்து மழகால்
    -கட்டான காளையருமவள் காலடியில் வீழ்வார்..!

    சும்மாயவளைப் பார்த்தாலே சிந்தனை பிறக்கும்
    -சொற்களெலாம் ஒன்றுகூடி கவிதைகள் ஆகும்..!
    எம்மாடி? எவ்வளவு அழகென வியக்கும்போது
    -எழுத்துக்கள் எல்லாம் காவியமாகக் கைகூடும்..!
    செம்மாதுளை பிளந்த சிவப்புதடைக் காட்டிச்
    -சிரித்து விட்டாலது சிறந்த காதலோவியமாகும்..!
    அம்சமான அழகுக்கவள் அற்புதப் படைப்பாக
    -அந்தப் பிரம்மனுமே பெருமூச்சு விடக்கூடும்..!

    கண்மூடி அவள் தியானத்தில் இருந்தால்
    -காதலர் களுக்குக் கனவினைக் கொடுப்பாள்..!
    கண்விழித்து அவள் சற்றேயுற்று நோக்கின்
    -காமன் விடும் பாணமும் எதிர்கொள்ளாது..!
    கண்ணின் கருவிழியை உருட்டும் போது
    -கனியும் கன்னக் குழியாலவள் அழகுகூடும்..!
    கண்சிமிட்டிக் காதல் வலை வீசினாலோ
    -கலையோவியம் கூட உயிர் பெற்றெழுமாம்..!

    ******

    நன்றி தினமணி வெளியீடு:: 30 ஏப்ரல் 2018
    நன்றி படம்:: கூகிள் இமேஜ்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180510 – Krishna Leela-Nataraja -lr -29.5×42 cms (11.5×16.5 inch)

    பாஞ்சாலி கூப்பிட்டது கண்ணனை….வந்தது மூவர்….!

    ”முயலகன் எங்கே! மால்நட ராஜா
     கயலாமை பன்றியாய் கோரசீயப் -பயலாய் (பயல் -வாமனர்)
     மூணுராம கண்ணனாய் முந்திவந்தோய், த்ரோபதைக்கு
     தாணுமால யன் (மும்மூர்த்திகள்) கை துகில்’’

     .…கிரேசி மோகன்….!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (270)

    இவ்வார வல்லமையாளராக அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    டொனால்ட் டிரம்ப் வடகொரியாவில் அமைதியை ஏற்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்படலாம் என ஊடகங்களில் கூறப்படுகிறது. அத்துடன் வடகொரியாவில் மாட்டியிருந்த மூன்று அமெரிக்கர்களையும் விடுதலை செய்து அனைவராலும் பாராட்டுபெற்றார். இவரது உலக அமைதிக்கான முயற்சிகளுக்காக இவரை வாழ்த்தி, இவ்விருதை வல்லமை வழங்குகிறது

    அமெரிக்காவின் மிகபெரிய பணக்காரர்களில் ஒருவர் டொனால்ட் டிரம்ப். ஆனால் ஏழை எளிய மக்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தார். குறிப்பாக மிச்சிகன், விஸ்கான்ஸின், பென்சில்வேனியா, வடவர்ஜினியா, கென்டக்கி
    போன்ற உற்பத்திதொழில் சார்ந்த மாநிலங்களில் ப்ளூகாலர் எனும் உழைக்கும் வர்க்கத்தின் பேராதரவே இவரை “சுதந்திர உலகின் தலைவர்” என அழைக்கபடும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்த்தியது.

    ஒரு பணக்காரரை போல இவர் சிந்திக்காமல் ஒரு அமெரிக்க குடிமகனாக சிந்தித்தார். அமெரிக்க தொழிற்சாலை வேலைகள் வேறுநாடுகளுக்கு செல்வதை கண்டித்தார். சுதந்திர பொருளாதாரம் எனும் பெயரால் நடக்கும் மோசடி வேலைகளை எதிர்த்தார். நிலக்கரி சுரங்க தொழிலாளருக்காக குரல் கொடுத்தார். ப்ரைமரியில் இவரை எதிர்த்த 16 ரிபப்ளிக்கன்களும் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் பெருச்சாளிகள். கோடி, கோடியாக பணம் வைத்திருந்தவர்கள். அனைவரையும் அனாசயமாக ஊதித்தள்ளி ஜெயித்தார். அதன்பின் இலரி க்ளின்டன் அம்மையாரை பொதுத்தேர்தலில் சந்தித்தார்.

    இலரி முதல் பெண் வேட்பாளர் என்பதாலும், அவரது அரசியல் அனுபவத்தாலும், பில் க்ளின்டனின் மனைவி, முன்னாள் முதல் பெண்மணி, முன்னாள் செக்ரடரி ஆஃப் ஸ்டேட் (வெளியுறவுத்துறை அமைச்சர்) என்பதாலும் எளிதில் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கபட்டது. ஓபாமா, ஆலிவுட் நடிகர்கள், வாரன் பப்பட், பில்கேட்ஸ் போன்ற கோடீசுவரர்கள், கூகிள், பேஸ்புக் போன்ற பெரும் கம்பனிகள், நடிகர்கள், ஊடகங்கள் என அதிகாரவர்க்கம் முழுக்க இலரி க்ளின்டன் பக்கம் நின்றது. ஆயிரம் பேய்களை ஒற்றை வேப்பிலையால் அடித்து விரட்டும் மாரியம்மன் கோயில் பூசாரி போல ட்விட்டர் எனும் ஒற்றை ஆயுதம் கொண்டு அனைவரையும் வீழ்த்தி, மாபெரும் மக்கள் ஆதரவை பெற்று ஆட்சியை பிடித்தார் வெற்றித்திருமகன் டொனால்ட் டிரம்ப்.

    Image result for donald trump thumbs up

    ஆட்சியை பிடித்தபின் மக்கள் நலனே முக்கியம் என கருதி இவர் நடத்திய நல்லாட்சியின் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவில் குறைந்து, வரிகள் குறைந்து, தொழில் செய்ய இருக்கும் கட்டுப்பாடுகள் குறைந்து பெண்கள், சிறுபான்மையினர் நலன் மேம்பட்டு நாடு வளமாக இருந்து வருகிறது.

    இவரை போல ஆட்சிபொறுப்புக்கு வந்து உலக அமைதிக்கு பாடுபட இளைஞர்களுக்கு இவ்விருது ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது

    வல்லமையாளர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆகண்ணன், ஆஹா அசோதை வளர்கண்ணன்
    ’ஆ’அடி மேய்ந்திடும் ஆனந்த – சேய்க்கண்ணன்
    கட்டிப் பிடிடாக்டர் காதல் கசிந்திட
    கட்டிப் பிடிகண்ணன் காப்பு.’’  

                  ….கிரேசி மோகன்….!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (160)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    Padak kavithai pOtti

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • சைவ பக்தி இயக்கமும் வேளாளர் எழுச்சியும்

    -ர. சுரேஷ்

    பக்தி இயக்கம் வேளாளர் தலைமையிலான இயக்கம் என்பதை பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். வைணவ ஆழ்வார்கள்களில் நம்மாழ்வார் எனும் வேளாள சமூகத்தைச் சார்ந்தவரே பெரிதும் கொண்டாடப்படுகிறார். அவரது பாடல்களே திராவிட வேதம் என்று வைணவர்கள் போற்றுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக சைவ சமயத்தில் திருநாவுக்கரசருக்கு அத்தகைய சிறப்பைச் சைவர்கள் அளிக்கத் தவறிவிட்டார்கள். வைணவத்தில் உள்ளதைப் போன்று தேவாரத் தமிழ்ப் பாடல்களை வேதங்களாக உரிமை கொண்டாடும் போக்கு சைவத்தில் இல்லை எனலாம்.

    தமிழ்ச் சைவ பக்தி இயக்கம் வேளாளர்களால் முன்னெடுக்கப்பட்டமைக்கு அக்காலச் சமூக வரலாற்றுக் காரணங்களே அடிப்படையாக அமைந்திருந்தன. சங்ககாலப் பிற்பகுதியில் இனக்குழுக்கள் அழிந்து பேரரசுகள் தோற்றம் பெற்றதையொட்டியே விவசாய விரிவாக்கமும் மருத நிலம் சார்ந்த பண்பாட்டு கட்டமைப்புகளும் உருவாகத் தொடங்கின. பேரரசுகள் பல்வேறு இனக்குழுக்களை வெற்றிகொண்டு அந்நிலங்களை விவசாய விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதோடு அம்மக்களை மருதநில விவசாய உள்ளூர் ஆதிக்கச் சக்திகளின் கீழ் ஒரு பகுதியாக விளிம்புநிலைத் தொகுதிகளாக இணைத்துக் கொள்ளுகின்ற போக்கு காணப்பட்டது. அரச ஆதரவோடு விவசாய வர்க்கம் தோன்றி வேளாளத் தலைமையைப் பேணிக் கொண்டிருந்தது.

    ஆளும் வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் தாங்களாகவே முன்வந்து அதிகாரத்தின்முன் பணிந்து அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யும் தத்துவக்களமாகவும் இனக்குழு நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் வழக்காறுகள் போன்றவற்றை இப்புதிய சமூக உருவாக்கத்தின்கீழ் இணைப்பதற்கும் வைதீக கலாசாரமும் இதன் தாத்பரியங்களும் பக்கபலங்களாக வந்து சேர்ந்தன. வர்ண ஒழுங்கிற்குட்பட்டுச் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டை வைதீகம் வலியுறுத்தியது.

    இப்புதிய சமயப் பண்பாட்டுருவாக்கம் ஆரியரல்லாத தொல்நிலை மக்களின் சமய வழிபாட்டு மூலப்படிவங்களின்வழி நிகழ்ந்தேறியது. தாந்த்ரீகம், தாய்த்தெய்வம், ஆகமம் போன்றவை வேளாண் பண்பாட்டை மையமிட்டதாகவும் அடித்தள மக்களுணர்வில் ஆழப்பதிந்து ஒரு மரபுத் தொடர்ச்சியினைப் பேணிவருவதாலும் வேளாள பக்தி இயக்கத்திற்கு இவற்றையெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் தேவையிருந்தது. கோயிலை அடியொற்றியெழுந்த பக்தி இயக்கப் பண்பாட்டில் இவையனைத்தும் தவிர்க்கவியலாக் கூறுகளாக இணைவாக்கம் பெற்றிருந்தன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பின்பற்றிய காமிய பக்தி என்பதற்குள்ளாக தாந்திரீக மரபின் பல்வேறு கூறுகளைக் காணலாம். களவு ஒழுக்கப் பாடல்களுக்கு முன்மாதிரியாகச் சங்க அகமரபையும் (சில மீறல்களோடு) காமப்பாடல்களுக்கு முன்மாதிரியாக தாந்திரீக, சாக்த மரபையும் பின்பற்றியிருப்பதை அனுமானிக்க முடிகிறது.

    இக்காலகட்டத்திய சமூகச் சூழலையும் சமய நிலையையும்  அ.மார்க்ஸ்’ பின்வருமாறு கூறுகிறார்.

    “வேள்விகளும் யாகங்களும் தழைத்தோங்கிய ஒரு விவசாயப் பண்பாடும் உருக்கொள்கிறது. இது பின்னாளில் ஆலயம் சார்ந்த ஆகமவழிபாடுகளாகப் பரிணாமம் பெறுகிறது. விவசாயமயமாதல் என்பது இவ்வாறு வைதீகத்துடன் இணைந்தபோது இதனால் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குடிமக்களாகவும் அடிநிலைச் சாதியினராகவும் உட்செரிக்கப்பட்ட மக்கள் குழுவினர் அவைதீக மரபுகளோடு இனம் காண்பது தவிர்க்க இயலாததாயிற்று. புத்தர், மகாவீரர் இருவருமே இமயமலைச் சரிவிலுள்ள சாக்கியம் என்னும் இனக்குழுவில் உதித்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சங்ககால வேந்துருவாக்கங்களையும் அவர்தம் விவசாய விரிவாக்க முயற்சிகளையும் வேள்வி முதலான சடங்குகளில் அவர்க்கிருந்த ஈடுபாட்டையும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட தானங்களையும் இதன் விளைவாக விளிம்பிற்குள் தள்ளப்பட்டவர்களுக்கும் விவசாயச் சமூகத்திற்குமிடையே விளைந்த முரண்களையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். ஸ்டெய்ன் குறிப்பிடுவது போல இந்த முரண்கள் மற்றும் தொடர்ந்த போராட்டங்களில் விவசாயம் சாராத அடிநிலை மக்கள் மேலாண்மை பெற முயற்சித்த காலமாகவே களப்பிரர் காலத்தைப் பார்ப்பது தகும். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் இறக்கப்பட்டதென்பது இத்தகைய அடிநிலை மக்களது மேலாண்மையின் விளைவேயாகும்.”1

    இந்நிலையில் மக்கள் வேளாள-வைதீக அதிகாரத்தினை ஏற்றுக்கொண்டு ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்த நிலையில் சமண பௌத்த வருகை அவற்றின் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கெதிரான குரல் வைதீக தர்மங்களுக்கு எதிரான குரல் இனக்குழு ஆதரவு போன்ற நிலையில் மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்து மாற்று அறிவுருவாக்க முயற்சியைத் தமிழகச் சூழலில் ஏற்படுத்த விழைந்தன. உடைமை வர்க்கங்களுக்கெதிராகவும் அடித்தள மக்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட சமண-பௌத்த மதங்கள்பால் மக்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். இச்சூழலில் வேளாள வைதீக மதங்களின் மேலாதிக்கமும் செல்வாக்கும் குறைந்தன. வேளாளர்கள் தங்களின் வைதீகச் சாய்வும் அடித்தள மக்களை அரவணைத்துக் கொள்ளாதபோக்கும் தற்போதைய சமய கலாசார பின்னடைவிற்குக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டனர்.

    ஒருபுறம் சமண-பௌத்த நெறிகளுக்கு எதிராகவும் மற்றொருபுறம் வைதீக பிராமணிய மேலாண்மையைக் கீழிறக்கி சமயஅதிகாரத்தைக் கைப்பற்றவும் ஒரு புதிய மாற்றீடான மார்க்கத்தைக் கட்டமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சூழலில் வேளர்களுக்குப் பக்திமார்க்கத்தில் தமிழ் சைவ அடையாளம் அன்றைய கலாசாரத் தேவையாக இருந்தது. இப்புதிய சமயப் பண்பாட்டுருவாக்கம் ஆரியரல்லாத தொல்நிலை மக்களின் சமயவழிபாட்டு மூலப்படிவங்களின்வழி நிகழ்ந்தேறியது. தாந்த்ரீகம் ,தாய்த்தெய்வம், ஆகமம் போன்றவை வேளாண் பண்பாட்டை மையமிட்டதாகவும் அடித்தள மக்களுணர்வில் ஆழப்பதிந்து ஒரு மரபுத் தொடர்ச்சியினைப் பேணிவருவதாலும் வேளாள பக்தி இயக்கத்திற்கு இவற்றையெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் தேவையிருந்தது.

    கோயிலை அடியொற்றியெழுந்த பக்தி இயக்கப் பண்பாட்டில் இவையனைத்தும் தவிர்க்கவியலாக் கூறுகளாக இணைவாக்கம் பெற்றிருந்தன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பின்பற்றிய காமிய பக்தி என்பதற்குள்ளாக தாந்திரீக மரபின் பல்வேறு கூறுகளைக் காணலாம். களவு ஒழுக்கப்பாடல்களுக்கு முன்மாதிரியாக சங்க அகமரபை (சில மீறல்களோடு)யும், காமப் பாடல்களுக்கு முன்மாதிரியாகத் தாந்திரீக, சாக்த மரபையும் பின்பற்றியிருப்பதை அனுமானிக்க முடிகிறது.

    இவ்வாறு விவசாய விரிவாக்கத்திற்கும் வேளாள உள்ளூர்த் தலைமை மற்றும் பார்ப்பன மேலாண்மைக்கும் அவர்களின் சமய நிலைக்கும் எதிராகத் திணைக்குடி மக்களின் எதிர்ப்புணர்வைக் கீழ்வரும் சங்கப்பாடல் தெளிவாக உணர்த்துகின்றது.

    “அடலருந் துப்பின்….
    …துருந்தே முல்லையென்று
    இந்நான்கல்லது பூவுமில்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் திணையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் வெரையொடு
    இந்நான் கல்லது உணவு மில்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
    இந்நான்கல்லது குடியுமல்ல
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
    கல்லே பரவின் அல்லது
    நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”2

    என்பது அப்பாடல். எனவே இவ்வெதிர்ப்புணர்வைச் சமாளிக்க வேண்டி பக்தி இயக்கவாதிகள் புதிய வழிமுறைகளைக் கையாண்டனர்.

    சைவத்தைத் தமிழ்நிலத்தோடும் தமிழ்மொழியோடும் தமிழ் இனத்தோடும் இணைத்துத் தமிழ் சைவம் எனும் அடையாளத்தின்கீழ் கொண்டுவந்தனர். தமிழ்த்திணை மரபுகளுக்குள் அடங்காத சிவபரம்பொருளை ஐந்திணைக்கும் பொதுவாக்கி பக்தி நனி சொட்டச்சொட்ட பாடல்கள் வழி பிரவாகமெடுத்து ஓடவிட்டனர். சமண-பௌத்த மதங்களிலிருந்த சிறந்த கூறுகளைப் பெற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய சலுகைகளைத் தாமும் வழங்குவதாகக் கூறி மக்களாதரவைத் திரட்டினர்.

    அடித்தள மக்களுக்கு சமயம்சார்ந்த வைதீகத் தடைகளை அகற்றிப் பிராமண மேலாண்மையை அதன் சமூக அதிகாரத்தைப் புறக்கணித்து வேளாளர்கள் சைவ சமயத்தின் மீதான தங்களுடைய அங்கீகாரத்தையும் தொன்று தொட்டு வந்த உயர்குடி மரியாதையையும் திரும்பப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இத்தகு சீரிய முயற்சிக்கு உறுதுணையாகத் தமிழ்த் திணை மரபு சார்ந்த அகப்புற ஒழுகலாற்றுச் சிந்தனைகளையும் திணைக்குடி மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைமைகள் பழக்கவழக்கங்கள் பண்பாட்டு வழமைகள் போன்றவற்றைச் சைவம் என்னும் ஒற்றை மையத்தில் பிணைத்துக்கொண்டனர். இவ்வாறாக வேளாள நிலவுடைமைச் சமூகத்திற்கும் திணைக்குடிகளுக்குமான முரண்பாட்டைச் சமரசப்படுத்தும் வேலையை வேளாள பக்தி இயக்கம் திறமையாகச் செய்தது.

    வேளாள பக்தி இயக்கத்தின் இத்தகைய போக்குகள் குறித்து சி. அறிவுறுவோன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

    “தமிழ்ச் சைவம் திணைச்சமூகக் காலகட்டத்தில் உருவாகித் திணை சமூகத்துக்கும் நிலவுடைமைச் சமூகத்துக்கும் இடையிலான உடன்பாட்டின் காரணமாக வேதியச் சைவம் போல் வளராமல் சாதிக்கும் வர்ணத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரானதாக வளர வேண்டியிருந்தது. வடநாட்டில் வைதீக மதத்திற்கு எதிராகச் சமணமும் பௌத்தமும் செய்த வேலையைத் தமிழகத்தில் சைவமும் மேற்கொண்டது”3. என்று குறிப்பிடுகிறார்.

    இக்கூற்று வேளாள சைவம் வைதீகத்திற்கும் வர்ணாசிரம நெறிகளுக்கும் எதிராகச் செயல்பட்டது என்பதை விளக்குகிறது. அதே வேளையில் சமண-பௌத்த எதிர்ப்பென்பதும் அதன் முக்கியச் செயல்பாடாய் இருந்தது. மொத்தத்தில் வேளாளத் தமிழ் சைவ பக்தி இயக்கம் வர்ணஅரசனடிப்படையில் வேளாளர்-பிராமணர் முரண்பாடாகவும் வர்க்க அடிப்படையில் நிலவுடைமையாளர்-வணிகர் முரண்பாடாகவும் சமய அடிப்படையில் சைவம்-சமணபௌத்த முரண்பாடாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்திருந்தது. அதேபோல சைவ- வைணவ முரண்பாடும் அதன் உட்தளத்தில் இழையோடிக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    பக்தி இயக்கத்தில் வேளாள-பிராமண முரண்பாடுகள்

    சமண பௌத்தத்திற்கெதிராக வேளாளர் முன்னிறுத்திய தமிழ்ச் சைவ அடையாளத்துள் இயல்பாகவே வைதீக பிராமணியத்திற்கு இடமில்லாமல் போனது. புதிய சமூக அமைப்பில் வேளாளர்கள் சமூக அதிகாரத்தைப் பெறுவதற்குப் பிராமணிய மேலாண்மையைத் தகர்ப்பது அல்லது  வேளாளர்க்கு அடுத்த நிலையில் இடமளிப்பது. என்பது அவசியமாக இருந்தது. எனவே சைவ சமயத்தின் மீதான வேளாள அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பதில் வேளாள பக்தி இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டது. திருநாவுக்கரசரே வேளாள வர்க்கத்தின் பிரதிநிதியாகப் பக்தி இயக்கத்தை முன்னின்று நடத்தியவராகவும் இருந்திருக்கிறார்.

    திருநாவுக்கரசர் கையில் உள்ள உழவாரம் வேளாள வர்க்கத்தின் குறியீடாகும். ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’ என்று மன்னனையும் எதிர்த்துக் கலகக் குரல் எழுப்பும் திருநாவுக்கரசரின் பின்னால் வேளாள வர்க்கப் பின்னணியும் அவ்வர்க்கச் சார்பாளராக அவருக்கு இருந்த தலைமைத் தகுதியையும் எளிதில் புறந்தள்ள முடியாது. திருநாவுக்கரசரின் இவ்வேளாளப் பின்னணியே வைதீக பிராமணியத்தை எதிர்த்தும் கேள்வியெழுப்பச் செய்கிறது. இது திருநாவுக்கரசரின் எதிர்ப்பு என்பதைக் காட்டிலும் தமிழ்ப் பக்தியை மையமிட்ட வேளாள எழுச்சியின் விழைவு என்று தான் கொள்ள வேண்டும். திருநாவுக்கரசர்,

    “வேதமொதி லென் சாத்திரங் கேட்கிலென்?
    நீதிநூல் பல நித்தல் பயிற்றி லென்?
    ஓதியங்கம் ஓரானும் உணரில் என்?
    ஈசனை உள்குவார்க்கு அன்றியில்லையே”4

    என வேதம் ஓதுகிறவர்கள் ஆறங்கம் ஓதுபவர்களாகிய பிராமணரை நோக்கி கேள்வியெழுப்புகிறார். சிவபெருமானை வேதநாயகன் எனக் கூறும் திருநாவுக்கரசருக்கு வேதம் ஆறங்கம் ஓதுகிறவர்கள்மேல் ஏன் இத்தனை வெறுப்பு என்ற கேள்வி அதன் பின்னாலுள்ள பிராமண எதிர்ப்பு அரசியலை எளிதில் புரிந்து கொள்ள உதவும். மேலும்

    “கோயில் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமுந்
    தோலும் பூண்டு துயரமுற்றென் பயன்?
    நீலமா மயிலாடு துறையனேன் நூலும் வேண்டுமோ
    நுண்ணுணர்ந்தோர் கட்கே?”5

    கோலும் (தண்டமும்) புல்லும் கையில் கூர்ச்சமும் கொண்டிருப்பவர்கள் பிராமணர்கள். அந்தக் கோலத்தினால் என்ன பயன் என்று கேட்கிறார். அடுத்து “நூலும் (பூணூல்) வேண்டுமோ நுண்ணுனர்ந்தோர்கட்கு? என்று கேட்கிறார். இக்கேள்விகள் பிராமணர்க்கு எதிரான குரல்கள் என்பதில் ஐயமில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று பிராமணரைக் கடுமையாகச் சாடும் மற்றொரு பாடல்

    “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
    கோத்திரமும் குலமுங் கொண்டென் செய்வீர்
    பாத்திரம் சிவனென்று பணிந்தீரேல்?”6

    பிராமணர்களைச் சழக்கர்கள் எனும் அளவிற்கு திருநாவுக்கரசருக்கு ஒரு வெறுப்பு இருந்திருக்கிறது. பிராமணரான திருஞானசம்பந்தரின் சமகாலத்தவராகச் சொல்லப்படுகிற திருநாவுக்கரசர் இத்தகைய வசைமொழிகளை உமிழ்ந்திருக்கிறார் என்றால் வேளாள-பிராமண எதிர்ப்புணர்வு எந்தளவு கூர்மையடைந்திருந்தது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். சாத்திரமும், கோத்திரமும், குலமும் பேசிக் கொண்டிருந்தவரும் திருநாவுக்கரசரின் காலத்தவரும் பக்தி இயக்கத்தில் தலைமைப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ள  கௌணிய கோத்திரத்து அந்தணரே திருஞானசம்பந்தர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் பிராமணர்கள் செய்யும் வேள்வியையும் எதிர்க்கிறார்.

    “எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது
    உருவருக்கமாவது உணர்கிலார்”7
    என்றும்
    ஆலை வேள்வி அடைந்தது வேட்கிலென்
    ஏல ஈசன் என்பார்க்கன்றி இல்லையே”8

    பிராமணத் தகுதியாலும் அவர்கள் செய்யும் சடங்குகளாலும் அறியவொண்ணாதவன் ஈசன் என்றும் பக்தி நிலைப்பட்ட தூய அன்பினாலேயே சிவபரம்பொருளை அடையமுடியும் என்றும் நாவுக்கரசர் கூறும் கூற்று, பிராமண வைதீக எதிர்ப்பையும் வேளாள சைவ பக்தி இயக்கத்தின் தன்மையினையும் உயர்த்துவதாக அமைந்துள்ளது. அதோடு,

    “மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
    விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறு ஆய் நின்றான்”9

    என்று பாடுகிறார். அந்தணர்களின் வர்ணாசிரம விதிப்படி வேளாளரான சூத்திரர்கள் நான்காம் வர்ணத்தைச் சார்ந்தவர்களாக உள்ள நிலையில் அப்பர் வேளாளர்களுக்கு முதலிடத்தை வழங்கியிருப்பது சிந்திக்கத் தக்கதாகும்.

    பிராமணீய வெறுப்பு, வேள்வி நிராகரிப்பு என்பவை வேளாளத் தமிழ் சைவத்தில் முக்கியக் கூறுகளாக இடம்பெற்றிருந்தாலும் வேதம் என்பதை அதன் பயன் மதிப்பு கருதி ஏற்றுக்கொண்டனர். வேதம் ஒரு புனிதக் குறியீடு என்ற நிலையில் மட்டுமே அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். வேதத்திற்கு எழுதப்பட்ட பாஷ்யங்கள் கி.பி. 9 நூற்றாண்டு முதலாகவே வழங்கப்பட்டுவந்த நிலையில் வேதத்தின் உட்பொருளை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. வேதம் வடமொழியில் இயற்றப்பட்டதனால் தமிழுக்கு நிகராக வடமொழியையும் புனிதமாகப் போற்றுகின்ற தன்மையை வேளாளத் தமிழ் சைவப் பாடல்களில் காணமுடிகிறது. இதேபோல பக்தி இயக்க காலத்தில் சுந்தரர் என்ற பிராமணரோடு தொடர்புடைய விறண்மிண்டர், ஏயர்கோன் கலிக்காமர் ஆகிய வேளாளர்கள் பற்றிய பெரியபுராண வரலாற்றுச் செய்தியையும் ஆராய்ந்து பார்த்தால் அக்காலத்தில் நிலவிய வேளாள-பிராமண முரண்பாடு எளிதில் விளங்கும். சுந்தரர் தில்லைவாழ் அந்தணர்கள் தம் அடியவர்க்கும் அடியேன் எனத் தொடங்கும் திருத்தொண்டத் தொகை பாட நேர்ந்த சந்தர்ப்பத்திற்குக் காரணமானவராக விறன்மிண்ட நாயனார் புராணம் புனையப்படுகிறது.

    ‘ஒரு சமயம் விறன்மிண்ட நாயனார் தலயாத்திரைப் புறப்பட்டு மலைநாட்டைக் கடந்து பல சிவத்தலங்களையும் வணங்கிப் பிறகு திருவாரூக்கு வந்து சேர்ந்தார். அந்த ஊரில் அவர் சிலகாலம் தங்கியிருந்து தியாகராசப் பெருமானை நாள்தோறும் வணங்கி வந்தார். ஒருநாள் நம்பியாரூரனான சுந்தரமூர்த்திநாயனார் அத்திருக்கோயிலில் தியாகேசரை வணங்குவதற்காக வந்தார். வந்த வன்தொண்டர் இறைவனை நோக்கிச் செல்லும்போது தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களை முதலில் வணங்கிச் செல்லாமல் ஒருபுறமாக ஒதுங்கிச்செல்வதை விறன்மிண்ட நாயனார் கண்டார். உடனே விறண்மிண்டர் வாய்திறந்து “அடியார்களை வணங்காமல் செல்லும் வன்றொண்டர் இவ்வடியார்களின் திருக்கூட்டத்திற்குப் புறம்பு” அவனை வலிய வந்தாட் கொண்ட சிவபெருமானும் புறம்பு என்று கூறினார்.

    அதைக் கேட்ட சுந்தரர் திகைப்புற்று சிவனடியார்களிடம் விறன்மிண்டர் கொண்டிருக்கும் அன்புறுதியைக் கண்டு வியந்தார். உடனே அவர் தில்லைவாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கும் திருத்தொண்டத்தொகை எனும் திருப்பதிகத்தைப் பாடிச் சிவனடியார் திருக்கூட்டத்தைத் தொழுது வணங்கினார். அதனால் விறண்மிண்டர் மகிழ்ந்து “இனி ஆரேனும் ஆண்டவனும் அடியார் கூட்டத்தில் உள்ளவராவர் என்று கூறினார். சிவபெருமான் மகிழ்ந்து விறன்மிண்டருக்குக் கணநாதர் பதவியை வழங்கியருளினார். இவ்வாறே சுந்தரர் வரலாற்றோடு தொடர்புடைய மற்றொரு புராணம் ஏயர்கோன் கலிக்காமர் புராணமாகும். இக்கதையும் மேற்கூறிய கதை அம்சத்தோடு ஒருசில கூறுகளில் பொருந்தி வருவதை உணரமுடியும். சேக்கிழார் கூறும் கதைப்பகுதி,

    ‘பரவைநாச்சியாரிடம் சிவபெருமானை நம்பியாரூரர் தூதனுப்பிய செய்தி திருப்பெருமங்கலம் என்னும் ஊரிலுள்ள ஏயர்கோன் கலிக்காம நாயனார் எனும் வேளாளருக்கு எட்டியது.”கேவலம் பெண்ணொருத்தியை முன்னிட்டு ஆண்டவனையா அடியான் தூது அனுப்புவது, அவ்வாறு சிவபெருமானையே தூதாக ஏவிய நம்பியாரூரனும் ஒரு திருத்தொண்டனா? என கலிக்காம நாயனார் கோபம் கொண்டார். இதையறிந்ததும் நம்பியாரூரான சுந்தரர் தம்பிரானான சிவபெருமானிடமே சென்று முறையிட்டார். சிறந்த சிவனடியார்களான அவர்கள் இருவரையும் ஒருமைப்படுத்த சிவபெருமான் திருவுள்ளம் கொண்டு கலிக்காமருக்குக் கடும் சூலை நோயை உண்டாக்கி ‘உன்னை வாட்டும் இந்த நோய் நம்பியாரூரன் தீர்த்தாலன்றி வேறு எந்த வழியாலும் தீராது என்று கூறினார். ஏயர்கோன் கலிக்காமரோ மனங்குமுறி “அந்த வன்தொண்டன் வந்து என் நோயைத் தீர்ப்பதைக் காட்டிலும் என் உயிரை வாட்டி வதைக்கும் அந்நோயை என் வயிற்றோடு கிழித்தெறிந்து நான் சாவேன்! என்று கூறி அவ்வாறே தன் உடைவாளால் தம் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிர் நீத்தார்.

    “எம்பிரான் எந்தைதந்தை தந்தைஎங் கூட்டமெலாம்
    தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்துவாழும்
    இம்பரின் மிக்கவாழ்க்கை என்னைநின் றீருஞ் சூலை
    வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான்வந்து
    மற்றவன் தீர்க்கில் தீரா தொழிந்தெனை வருத்தல் நன்றால்.”10

    இவ்வாறு வேளாளரான ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு சிவபரம்பொருளை வழிவழி சார்ந்து ஒழுகும் தொன்றுதொட்டு வந்த மரபிலிருந்து வந்தவர் என்பதை உணர்த்தி பிராமண வெறுப்பை வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்துள்ளது. இவ்விரு கதைகளையும் ஒருசேர நோக்கும்பொழுது இவை வேளாள-பிராமணர்களுக்கிடையே நிலவிய ஆன்மீக அதிகாரப் போட்டியின் அடிப்படையில் ஏற்பட்ட முரண்பாடாகக் கருதமுடிகிறது. “பக்தி இயக்கம் என்பது வேளாளக் குடியானவர்கள் – பிராமணர்கள் ஆகியோர்க்கிடையே ஏற்பட்ட அதிகாரப் போராட்டமேயாகும்”11 என்ற பார்டன் ஸ்டெயினின் கூற்று இங்கு சிந்திக்கத்தக்கது. பார்ப்பன அதிகாரத்தோடு மோதியும்,முரணியும் செயலாற்றிய வேளாள சமூகத்தின் கலகக் குரலாகச் சேக்கிழார் கூறும் மேற்கண்ட வரலாற்றை வாசிக்க இயலும். திருஞானசம்பந்தர் காலத்தில் திருநாவுக்கரசரிடமிருந்து ஒரு மனத்தாங்கல் என்ற அளவில் வெளிப்பட்ட இம்முரண்பாடு சுந்தரர் காலத்தில் பெரும்கலகக் குரலாக வெடித்துள்ளது. இவ்வெதிர்ப்புணர்வின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவே பின்னாளில் சித்தர்களின் குரலாகப் பிராமண மேலாண்மைக்கு எதிரான பிராமணரல்லாதோர் கலக மரபாக உருக்கொண்டிருக்கக் கூடும்.

    நூற்பட்டியல்

    1.அ. மார்க்ஸ். களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பிற்சேர்க்கை-1,அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி    அவர்களின் களப்பிரர் ஆட்சியில்  தமிழகம் ஒரு பார்வை. பக்.155-156

    1. புறநாநூறு பா.335
    2. சி. அறிவுறுவோன். முற்காலத்து சைவமும், தற்காலத்து தாண்டவபுரமும்.ப.34
    3. திருநாவுக்கரசர் தேவாரம், பாவநாசத் திருக்குறுந்தொகை.5:4
    4. திருமயிலாடுதுறை திருக்குறுந்தொகை..8
    5. திருமாற்பேறு-திருக்குறுந்தொகை..3
    6. திருநாவுக்கரசர் தேவாரம்,4:12:5
    7. திருக்குறுந்தொகை.100.8.
    8. பாவநாசத்திருக்குநற்தொகை.99.5.
    9. சேக்கிழார்,பெரியபுராணம்.பா.3546
    10. தி.சு.நடராசன்,மு.நூல்.ப.172.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்
    கோயம்புத்தூர்

     

    Share
  • தொல்தமிழர் ஈகையின் மகத்துவம்

    -முனைவர் ம. தமிழ்வாணன்

    தொல்தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனைத் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பதிவு செய்து வந்துள்ளனர். செவ்விலக்கியங்கள் அக்கால மக்களின் இயல்பான வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மனித சமுதாயத்தில் அன்றாட வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நலம் விளையக்கூடிய செயல் எதைச் செய்தாலும் அது அறச்செயலாகும். அறம் என்றால் தொண்டு, தூய்மை என்பது பொருளாகும். இத்தொண்டை எக்காரணம் கொண்டும் சுயநலம் கருதாமல், பொதுநலம் கருதியே செய்ய வேண்டும். என்பதை வலியுறுத்தும் விதமாக, ‘அறம் செய விரும்பு’ என்று ஔவையாரும், ‘அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க’ என்று வள்ளுவரும் கூறியுள்ளனர். தொல்தமிழர் அறத்தில் சிறந்தது ஈகையே என்பர். செவ்விலக்கியத்தை ஆய்வு செய்கின்றபோது அவர்களது ஈகைத்தன்மையை ஆங்காங்கே காணலாம். இத்தகைய தொல்தமிழரின் ஈகையின் மகத்துவத்தைச் சுருக்கமாகக் கீழே காண்போம்.

    ஈகை விளக்கம்

    ஈகை என்றால் கொடுத்தல்; இல்லாதவர்க்குக் கொடுத்தல். இரப்போர்க்கு இல்லையென்னாது கொடுப்பது சிறந்த அறமாகும். ஈகை என்பது பொருள் உடையவர்கள், இல்லாதவர்களுக்கு வழங்குவது. இது எவ்வித எதிர்பார்ப்பும், திரும்பப் பெறும் தன்மையும் அற்றது. உலகத்தாற் போற்றும் அறங்களில் முதன்மை இடம் பெறுவது, அறங்களில் சிறந்தது, மனித நேயத்தின் அடிப்படையாகத் திகழ்வது ஈகைப் பண்பாகும்.

    செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே
    (புறம்.189:7-8) என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

    பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்டு வாழ்வதே வாழ்க்கையாகும். ஈகை குணம் தனிமனிதச் சிந்தனையில் தோன்றிச் சமுதாயப் பயனுடையதாக அமைகின்றது. வறுமையில் வாடும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும் போது அச்செயல் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆதலால் தான் உலக இன்பங்களில் ஈகை இன்பம் உயர்ந்ததாக உலகத்தார் போற்றி வருகின்றனர்.  வறுமையில் வாடும் புலவரான பெருஞ்சித்திரனார் தான் பெற்றுவந்த பொருளைத் தன் மனைவியிடம் கொடுத்து, அதனைத் தம் சுற்றத்தாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொல்கிறார். இது தான் ஈகையின் மாண்பாகும்.

    இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது,
    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
    எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே! (புறம்.163.5-7)என்ற பாடலின் வழி விளக்குகிறார் அவர்.

    சங்க காலத்திலும் சிறுகுடி பண்ணன் போன்ற வண்மையாளரை புலவர் பசிப்பிணி மருத்துவன் என்று கூறிப் புகழ்ந்தனர். அக்காலத்தில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, குறள் காலத்தில் வறியவனின் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது என்பர். விருந்தோம்பல் என்பதும் அன்று ஈகையைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது. ஈகை என்பது தனி உயிர்த் துன்பம் நீக்கும் சிறப்புக் கொடையாகக் கருதப்படுகிறது.

    ஈகை என்று வள்ளுவர் சிறப்பித்து உரைப்பது வறியவர்க்குப் பசிபோக்கும் ஈகைக்(வயிற்றீகை) குணமாகும். இத்தகைய பண்பு இயல்பான நிலையில் உண்டாவதாகும். தன்னிடம் இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்கப்படுவது. அது எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. ‘இம்மைச் செய்தது மறுமைக்காம்’ என்று புதிதாய் அன்று கூறப்பட்ட வினைக் கொள்கையைப் புலவர் மரபு ஏற்றதில்லை. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடலைக் காண்போம்.

    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
    அற விலை வணிகன் ஆஅய் அல்லன்
    பிறரும் சான்றோர் சென்ற நெறி என
    ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே (புறம். 134)

    இப்பாடலில், ஆய் அறம் செய்யும் வணிகம் அல்லன். தன் பணத்தை இந்த உலகில் முதலீடு செய்து மறு உலகில் அதன் ஊதியத்தைப் பெறுவதில்லை. சான்றோர்களின் மரபார்ந்த வழியில் அவன் வாரி வழங்குகின்றான் என்கிறார் புலவர். அறம் அறத்திற்காகச் செய்யப்படவேண்டும். ஈகை ஈர உள்ளத்துடன் ஈகைக்காகச் செய்யப்படுவதாகும்.

    வறியவர்க்குக் கொடுப்பதில் ஒரு மகிழ்ச்சியான இன்பம் இருக்கின்றது; இதை ஏன் ஈயாதவன் உணர்வதில்லை என வியக்கிறார் வள்ளுவர். ஈயாமல் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர் இகழப்படுகிறார். நிரப்பிய உணவைத் தனித்து உண்பது, இரப்பதைவிட பார்வைக்கு அருவருப்பானது என்று கூறப்படுகிறது. சாதலை எவரும் விரும்புவதில்லை; ஆனால் கண்முன் பசித்தவன் இருக்க அவன் துயர் தீர்க்க முடியாத நிலையில் சாதலை ஒருவன் விரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.

    ஈகைக்குரிய இலக்கணம்

    கொடைப் பண்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பண்புடையது ஈகையாகும். திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளமை சிறப்பாகப் பேசப்படுகிறது.

    வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
    குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (குறள்.221)

    என்ற குறளின் பதிவில் திரும்ப உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன்எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்குப் பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்து வந்துள்ளனர்.

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள்.231)

    வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

    ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர். ஈயாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண்பனையைப் போன்று பயன் தராதவர். மேலும் அணுக இயலாத இடம் என்று பனை மரங்களின் இயல்புகளை மக்களின் பண்புக்கு உவமையாக்கும் நயம் சிறப்பிற்குரியதாகும்.

    நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
    படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
    குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை.            (நாலடி.96)

    முரசின் ஒலி ஒரு குறிப்பிட்ட தூர அளவுக்குக் கேட்க இயலும். இடியின் ஒலி இன்னும் அதிக தூரம் கேட்கும். சான்றோர் ஒருவர் யாசித்தவர்க்கு ஒன்றைக் கொடுத்தார் என்ற சொல் மூன்று உலகங்களிலும் கேட்கப்படும் சிறப்பை உடையது என்று ஈகையின் சிறப்பைச் சுவைபடச் சொல்கிறது நாலடியார்.

    கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
    இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
    அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
    கொடுத்தார் எனப்படுஞ் சொல் (நாலடி.100)

    ஒரு சிறிய அரிசியின் அளவாவது – நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர் என்பதைக் கீழ்க்குறிப்பிட்ட நாலடியார் பாடல் விளக்குகிறது.

    இம்மி யரிசித் துணையானும் வைகலும்
    நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்
    கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
    அடாஅ அடுப்பி னவர். (நாலடி.94)

    வறியவர்க்கு உணவளித்தல்

    பூவுலகில் தானத்திலே சிறந்த தானம் அன்னதானம்; அது மட்டும்தான் போதும் என்று சொல்லக் கூடியது மற்ற எது கொடுத்தாலும் போதும் என்று மனம் வராது அதனால்தான் அதை சிறந்த தானம் என்கிறோம். அன்னதானத்தை வள்ளுவரும் போற்றுகிறார். ஈகை என்ற  இருபத்தி மூன்றாம் அதிகாரம் பொதுவாக ஈகையைப் பற்றிச் சொன்னாலும் அதில் நான்கு குறட்பாக்கள் அன்னதானச்  சிறப்பையே எடுத்துரைக்கின்றன.

    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள்.225)

    தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவுக் கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்.226)

    வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள்பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

    பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது. (குறள்.227)

    தான்பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல். (குறள்.229)

    பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.

    தேடிய உணவைத் தாமே தனித்து உண்ணும் தன்மையானது, பிச்சையெடுத்தலை விடவும் தீயது. சங்க காலத்தில் ஒரு  சேரமன்னன், உதியன் சேரலாதன் என்பவன். மகாபாரதப் போரில் பங்குகொண்ட இருதரப்புப் படை வீரர்களுக்கும் உணவளித்ததாகச் சங்கச் செய்தி சொல்கிறது. (சங்க காலம், மகாபாரதப்  போர்க்காலத்தை ஒட்டிய  தொன்மை வாய்ந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கிறார்கள்.) அதனாலேயே அவன் ‘பெருஞ்சோற்று உதியன்  சேரலாதன்’ என வழங்கப்பட்டான் என்று நம்பப்படுகிறது.

    பெருஞ்சோறு படைத்த அவனது மாபெரும் அன்னதானம், இலக்கியப் புகழ் பெற்றுவிட்டது. வானவரம்பன் என்றும்  அவனுக்கு ஒரு பட்டம் உண்டு. வானவரம்பன் என்கிற வகையில் வானத்தையே எல்லையாகக் கொண்டு பேரரசாட்சி  கண்டவன் என்பது இந்தப் பட்டத்திற்கான பொருளாகும்.

    ஈதலின் தனிச்சிறப்பு

    ஈதலின் அவசியத்தை உணர்த்துகின்ற வகையில் ஐந்து குறள்கள் விளக்கம் தருகின்றன.

    நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்எனினும் ஈதலே நன்று (குறள்.222)

    பிறரிடமிருந்து பொருள்பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

    இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலன்உடையான் கண்ணே உள (குறள்.223)

    `யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.

    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகம் காணும் அளவு. (குறள்.224)

    பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.

    சாதலின் இன்னாது இல்லை இனிதுஅதூஉம்
    ஈதல் இயையாக் கடை. (குறள்.230)

    சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

    ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
    வைத்துஇழக்கும் வன்க ணவர்? (குறள்.228)

    தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ? என்று ஈகையின் சிறப்பைக் குறள் மெய்ப்பிக்கின்றது.

    இல்லறவியலின் புகழ் அதிகாரத்திலும் ஈதல் அவசியத்தை உணர்த்திய வள்ளுவர் மூன்று குறள்களில் தனது மிகச் சிறப்பான பதிவினை இட்டுள்ளார். அத்தகைய குறளையும் விளக்கத்தையும் கீழே காணலாம்.

    உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள்.232.)

    புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதுஒன்று இல்.  (குறள்.233)

    உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

    போற்றாது புத்தேள் உலகு. (குறள்.234.)

    நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

    ஈகைக்காகவே செல்வம் எனச் செல்வம் நியாயப்படுத்தப்படுகிறது. உபரி உணவும் சொத்தும் பொருளும் அறத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால் குற்றமற்றதாகி விடுகின்றன.

    ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் (குறுந்.63:1)

    என்றும் பொருளைத் தேடுவதே பிறருக்குக் கொடுக்கத்தான் என்னும் பொருளில்,

    பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
    காமர் பொருட் பிணி போகிய
    நாம் வெங் காதலர் சென்ற ஆறே. (நற்.186:8-10)

    என்றும் செவ்விலக்கியங்கள் அறத்தின் பேரால் ஈகையின் சிறப்பை விளக்குகின்றன.

    மனித குலத்தின் சிறப்புகளில் ஈகையும் ஒன்று. அது பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். அந்த வகையில் எழுந்த செயலே ஈகையாக மலர்ந்துள்ளது. வாழ முடியாதவர்களையும், வாழத் தெரியாதவர்களையும், வாழ்வை இழந்தவர்களையும் ஏற்றுக் காப்பது சமுதாய நலத்தைக் காக்கும் நற்செயலாகும். எல்லோரும் ஈகையை மேற்கொள்ள வேண்டும். அவரவர் தங்கள் உழைப்பின் பலனில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.(தென்கச்சி கோ.சுவாமிநாதன், வானொலியில் இன்று ஒரு தகவல், பாகம் – 8, பக். 106-108) அவ்வாறு உதவும் போது மனமும் எளிதாகும், ஏற்பவரின் வாழ்வும் வளமாகும்.

    மேற்கண்ட செய்திகளால் ஈகை என்னும் வறியவர்க்கு உதவும் அரும்பெரும் பண்பு தொல்தமிழர்களிடையே அக்காலத்திலேயே இருந்தமை வியப்பிற்குரியதாக உள்ளது. இத்தகைய ஈகைப் பண்பால் அம்மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டுச் சிறப்பு வெளிப்பட்டு நிற்பதை உணரமுடிகிறது. மேலும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தமிழ்மன்னர்கள் வறியவர்க்கு உணவளிக்கும் அன்னசாலைகளை நிறுவி பசியாற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. தற்காலத்திலும் கிராமங்களில் கோயில் திருவிழா, சல்லிக்கட்டு, விளையாட்டுப்போட்டி போன்ற பொதுநிகழ்ச்சிக்கு வருகின்ற யாவர்க்கும் உணவு அளித்து இன்புறுவதைக் காணமுடியும். எனவே நாமும் வறியவர்க்கு உதவி நற்பேறுகளைப் பெறுவோம்.

    கருவிநூற்கள்

    1. திருக்குறள், மணக்குடவர் உரை, கோ. வடிவேலுசெட்டியார் பதிப்பு 1925
    2. திருக்குறள், பரிமேலழகர் உரை, ஏ.ரங்கசாமிமுதலியார் & சன்ஸ் பதிப்பு, மதராஸ் 1931
    3. திருக்குறளுக்கு மிக எளிய உரை, சாமி சிதம்பரனார் உரை, திருவள்ளுவர் வரைகலையகம், சென்னை 2001
    4. திருக்குறள், வ.உ.சிதம்பரனார் உரை, இரா.குமரவேலன் பதிப்பு, பாரிநிலையம் சென்னை 2008
    5. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008

    *****
    கட்டுரையாளர் – முதுநிலை ஆய்வு வல்லுநர்
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை – 113

     

    Share
  • ’ஆடிப்பாவை போல’  நாவலில் திணையின் செம்மாந்த நிலை

    -சு.இராமர்

    உலகமயச் சூழல் மனித நெருக்கடிக்கு வித்திட்டிருக்கிறது. சுயசார்பான உண்மை வெளிகள் மூர்க்கமடைந்திருக்கின்றன. நுகர்வுக் கலாசாரப் பின்புலம் மனிதர்களை அவசர கதியில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. தீவிர மனப்பான்மை கொண்ட தேசிய அடையாள உருவாக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழல் இதுவரை எதிர்கொள்ளாத வகையில் இடர்பாட்டுக்குரியதாகி இருக்கிறது. மனித உணர்வுகள் மேலெழும்பி, ததும்பி வழியும் நிலைகள் இன்று இயல்பானதாகி இருக்கிறது. அக உணர்வுகள் எதிர்கொள்ளத் தகாதனவாக மாறியிருக்கின்றன. ஆண், பெண் உறவுகள் பற்றிய புரிதலைக் காலங்கடந்து இன்றும் பேசு பொருளாக்கி வருகின்றமையைக் காணமுடிகின்றது. பன்மைச் சூழலைப் பற்றிய சிந்தனை இந்திய அளவில் இருந்ததை ஒன்றாக்கிவிடத் துடிக்கும் அபாயகரமான சூழலில் தமிழ்ச் சிந்தனை அதற்கு வழிகாட்டியாக இருப்பதைச் சுட்டும் வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

    தொல்காப்பியம் பாயிரத்தில் வடவேங்கம் தென்குமரி என்று குறிப்பிட்டு தமிழ் நிலத்தைப் பொதுவான நிலமாகக் கூறவில்லை. மொழியால் ஒன்றிணைந்ததே அன்றி அதன் உட்பிரிவுகள் பலவாக இருப்பதைத் திணைப் பகுப்பில் சுட்டுகிறது. நானிலங்கள் என்று கூறப்பட்டாலும் ஐந்திணைகளே மரபாகக் கொள்ளப்படுகின்றன. திணைகளைக் கண்டுணர்தல் என்பது இன்று சுற்றுலாத் தலங்களைக் கண்டுணர்வதாக மாறிப் போயிருக்கிறது. வயல்வெளிகள் அடைந்திருக்கும் மாற்றம் அச்சம் கொள்ளும் வகையில் நம் வாழ்வை மாற்றி வைத்திருக்கிறது. மருத நிலத்தினை அடியொற்றியதாகப் பிற திணைகள் அனைத்தும் கட்டுப்பட்டிருக்கின்றன. நீர் நிலைகள் காணாமல்போன சூழலை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் அச்சத்தை இடுப்பில் சுமந்து கொண்டிருப்பது போலான சூழல் நிலவுகிறது. பின்காலனிய மனநிலையானது திணைவாழ்வை மீட்டெடுப்பதாக இருக்கிறது. இயற்கை வேளாண்மைக்கு அழைக்கும் போக்கை அவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும். காலனியப்படுத்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் பண்பாட்டு தாக்கத்திற்கு ஆளாவது இயல்பாகும். ஆனால் தமிழ் மரபின் தொடர்ச்சி ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடந்து மேலெழும்பி வருவதை இலக்கியங்கள் வழி அறிந்து கொள்ள முடியும். திணைசார்ந்த உணர்வென்பது இயல்பூக்கமாக வெளிப்படும். பசி, தூக்கம், காதல் என்பது போல இயல்பூக்க நடவடிக்கையாகத்தான் திணை சார்ந்த உணர்வுகள் வெளிப்படும்.

    திணை என்ற சொல் புதிய தொழில்நுட்பச் சமூகத்தில் அனைத்து உயிர்ம சூழலும் மாறியிருக்கும் நிலையில் பெரிதும் அர்த்தப்பாடுடையதாக மாறியிருக்கிறது. பண்டைய தமிழ்ச் சமூகத்தின் மனம் தன் தொடர்ச்சியை எச்சூழலிலும் மறைத்துக் கொள்வதில்லை. அது பண்டைய படைப்புகளிலும் சூழல் சார்ந்து வெளிப்படுவதாக இருந்தது. தொழில்நுட்பச் சமூகத்திலும் துலக்கமாக வெளிப்படுகிறது. தொழில்நுட்பச் சமூகமென்பது முற்றிலும் நகர்மயமான சூழலாகும். திணையுணர்வின் வெளிப்பாட்டினை அகத்திணை சார்ந்தோ, புறத்திணை சார்ந்தோ படைப்புமனம் வெளிப்படுத்தத்தான் செய்கிறது. திணை ஒரு செம்மாந்த செம்பொருளாகத் தமிழில் காணப்படுகிறது. இன்றைய சூழலும் அகத்திணை, புறத்திணைக் கூறுகளைக் கொண்ட வாழ்வியலை உடையவர்களாகத் தமிழர்கள் காணப்படுகிறார்கள். நிலைபேறுடைய ஒன்றாக திணை வாழ்வு காணப்படுகிறது. அதற்குச் சான்றாகவே ஆடிப்பாவை நாவலின் காட்சியமைப்புகள் அமைகின்றன.

    திணை என்ற சொல்லுக்கு, குடி, ஒழுக்கம், குடும்பம் போன்ற பொருள்கள் தரப்படுகின்றன. ஒழுகலாறுகள் என்பதாகவே பெரிதும் அர்த்தப்படுகின்றது. சூழலையும், வெளிகளையும் கூடத் திணை என்ற சொல் குறித்து நிற்கிறது. “திணை என்ற சொல்லின் மூலப் பொருளான குடும்பம், குடியிருப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. பல நிலப்பகுதிகளின் நடத்தை முறைகளை விளக்கும் சொல்லாகப் பரிணமித்த வரலாற்றை அவை குறிப்பிடுகின்றன”1 என்று சிவத்தம்பி நிலப்பகுதிகளின் நடத்தைமுறைகளை திணை என்ற சொல் குறிப்பதாகக் கூறுகிறார். திணைசார்ந்த வாழ்வியலைத் தமிழர்கள் காலந்தோறும் பெறுவதானது. உள்ளத்தளவில் மாறுபாடடையாத வாழ்வியலைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. ஆயினும் இன்றைய சூழல் பண்டைய தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத் தன்மையுடன் விளங்குகிறது.

    நகர்த்திணைப் பெருக்கமும், தொழில்நுட்பச் சமூகமும் மனிதர்களின் இயந்தர வாழ்க்கையும், அகப் புற மன உணர்வுகளில் ஏற்படும் சிற்சில மாற்றங்களுமெனக் காணப்படுகிறது. புறவெளிகள் கலைந்து போயிருக்கின்றன. ஆயினும் திணை சார்ந்த பார்வை காலகட்டம் சார்ந்ததாக அமையாது. சங்கக் கவிதை மட்டுமே திணைக் கவிதை கிடையாது. அனைத்து காலப் படைப்புகளிலும் திணையோர்மை வெளிப்படவே செய்யும். நவீன இலக்கியங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. “திணைக் கண்ணோட்டமென்பது, நிலம், காலம் மற்றும் சமூகச் சூழல்கள் மனித வாழ்வை எவ்வாறு மாற்றுகிறது அல்லது அச்சூழலுக்குள் மனிதன் தன் வாழ்விருப்பை எவ்வாறு கண்டடைகிறான் என்று கொண்டால் தமிழ் இலக்கியப் பரப்பு நெடுகிலும் இதனைக் காண இயலும்”2 என்று இன்றைய சூழலுக்கும் திணைக்கோட்பாடு பொருத்தப்பாடுடையதை வெளிப்படுத்துகிறார் க.ஜவகர். நவீனச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவையை ஐயப்பப் பணிக்கர் போன்ற ஆய்வாளர்கள் முன்னெடுத்தனர். தனிநாயகம் அடிகள் போன்றோர் தமிழின் கவிதை மரபை நிலம் சார்ந்தவொன்றாகப் பரிணமிக்க வைத்தனர். “ஒவ்வொரு திணையும் இடம், கால நிலைகளின் இணைவே.

    தொல்காப்பியர் தம் காலத் தென்னக நிலவியற்கையின் அடிப்படையில் ஏழு அகத்திணைகளையும் ஏழு புறத்திணைகளையும் வகை செய்துள்ளார்”3 என்று குறிப்பிடும் ஐயப்பப் பணிக்கரின் கூற்றானது. அதற்கும் மேலாகவும் திணைகள் பெருகலாம். இடத்திற்கும் சூழலுக்கும் இயைந்தவாறு அமையலாம் என்று கூறுகிறார். இன்றைய சூழல் மருத நிலப் பெருக்கமே காணப்படும் சூழலில் ஐந்திணைகளின் உரிப்பொருள்களும் பெரிதும் மருத நிலத்துப் பண்புகளாக வெளிப்படுவதை நாவல்களில் காணலாம். அந்த அடிப்படையிலேயே நகர்களில் காதல் வாழ்வும், ஊடலும், கூடலும், பிரிதலும், இரங்கலும், காத்திருத்தலும், திருமண உறவில் இணைதலுமாக அகம் என்னும் பகுதியின் நாவல் பகுதிகள் ஆடிப்பாவை நாவலில் காணப்படுகின்றன.

    திணையவியல் என்பது இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளது என்பதையே தமிழவனின் ’ஆடிப்பாவை போல’ நாவல் உணர்த்துகின்றது. நாவல் இரண்டு விதமாய்ப் பகுக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அகம் பிறிதொன்று புறம். இவ்வாறு பிரித்து எழுதுவதற்கானத் தேவை அவருள் ஒளிந்து கொண்டிருக்கும் தமிழ் மரபினை மேலெழுந்து வரச் செய்த திணையோர்மைதான் என்றால் அது மிகையில்லை. காதலைப் பேசாத கலைகளே இல்லை என்று கூறலாம். காதல் பற்றிய விளக்கங்கள், விமர்சனங்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. காதல் பற்றிய உணர்வை இளைய வயதில் எதிர்கொள்ளும் யாருக்கும் சாதிய, மத இடர்பாடுகள் வந்து மோதி அதைக் கடந்து செல்வது பற்றிய உணர்வு இருப்பதில்லை. காதல் என்பது திருமணத்தை நோக்கி நகர நகர இன அடிப்படை பற்றிய அச்சங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. தம் சாதிப் பெருமைக்கு இழுக்கு நேரும்போது மட்டுமே சாதியை எதிர்க்கும் வல்லடித்தனம் வெளிப்படுகிறது.

    கிருபாநிதி, ஹெலன் காதல் பற்றிய சித்திரிப்புகளில் கிருபாநிதியின் அண்ணியோ, அம்மாவோ, அப்பாவோ அவன் காதலிக்கும் பெண் நல்லவள் என்று அனைவராலும் கூறப்பட்ட பின்னணியிலும் சாதியை அறிந்து கொள்ளத் துடிக்கும் மனப்பாங்கை அது சாதிய இழிவை இன்றும் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுவதாக அமைகிறது. ஹெலன் கிறித்தவள் என்பது ஒரு பொருட்டில்லை. அவளது சாதி என்ன என்பதை அறிவதுதான் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. தொல்காப்பியம் கூறும் இரண்டு பேர் விதிவசத்தால் ஒன்றிணைவது தெய்வத்தின் செயல் என்பது சாதிய அடிப்படையில் ஒத்த இருவர் என்பதாக மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும். கிருபாநிதியும் ஹெலனும் இறுதியில் ஒரே சாதியினர் என்பதில் அமைதி கொண்டு வரப்படுகிறது.

    வழக்கமான சினிமா பாணியிலான முடிவாக இருந்தாலும் சாதிய இழிவைச் சுமந்து கொண்டு வாழ்ந்திருத்தல் என்பது அடிப்படையில் இயலாத ஒன்று. எனவேதான் சந்தோஷம் தீ வைத்துக் கொல்லப்படுகின்றான் என்று கூட கூறலாம். சாதிய அடிப்படையைத் திணை சார்ந்த வாழ்வியல் ஒப்புக் கொள்கிறதா என்று அறியமுடியவில்லை.

    காதல், வீரம் அல்லது அரசியல் என்பதாக தமிழ்ச் சமூகம் கட்டமைந்துள்ளது. நவீனச் சமூக உருவாக்கமும் காலனிய இடர்ப்பாடுகளும் தமிழ் மனத்தின் மரபுத் தொடர்ச்சியை பாதித்து விடுவதில்லை. திணைகள் கலைந்து போயிருக்கக் காண்கிறோம்.  மொழியினால் ஒன்றிணைந்தவர்களே காதலர்கள். சாதிய, மத இடர்ப்பாடுகள் அவர்களுக்குள் இல்லை. அதனால்தான் சாதியைப் பற்றிக் கேட்கும்போது அவர்களுக்குள் தயக்கம் ஏற்படுகிறது. உதவித் தொகைக்கான மாணவர்களை எழுந்திருக்கச் சொல்லும் போது வகுப்பறையில் ஏற்படும் மனச் சங்கடங்கள் அளப்பரியன என்பதை நாவல் சுட்டுகிறது. நாடகத்தில் நடிக்கும்போது கூட உயர்வு, தாழ்வு கடைப்பிடிக்கும் மனிதர்கள் தீண்டாமை, இழிவு ஆகியவற்றைக் கடந்து செல்லுவதை விரும்பாத நிலையே சுட்டப்படுகிறது. நாடகமாயினும், அரசியலாயினும், சினிமாவாயினும் சாதிய அணுகல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நாவலில் தொல்காப்பிய அகத்திணைக் கூறுகள் ஆங்காங்கு இருக்கக் காண்கிறோம்.

    காதலர் இருவர் தற்செயலாகச் சந்தித்துக் கொள்வதைத்தான் தொல்காப்பியம்,

    ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
    ஒன்றி உயர்ந்த பால தாணையின்
    ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
    மிக்கோ னாயினும் கடிவரை இன்றே”
    (தொல்.களவு.2)

    என்ற நூற்பா சுட்டுகிறது. ஒத்த கிழவனும் கிழவியும் ஒன்றிணைதல் என்பது விதி வசமானது என்பதைப் போல நாவலில் வின்சென்ட் ராஜாவும், காந்திமதியும் சந்தித்துக் கொள்வது தற்செயலான நிகழ்வாகக் காட்டப்படுகிறது. அவர்கள் ரயிலில் சந்தித்துக் கொள்கிறார்கள். கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் இருவரும் கலை சார்ந்த நிகழ்வில் பங்கேற்றுப் பரிசில் பெற்று விட்டுத் திரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். இருவரையும் இணைத்தது நல்லூழின் ஆணை என்று குறிப்பிடுகிறது. அவர்கள்தான் இணையப் போகிறார்கள் என்பதைச் சுட்டும் விதம்தான் நாவல் தொடங்கும் போதே இருவரது அளவளாவல். ஆணின் தவிப்பும் பெண்ணின் பரிதவிப்பும் எனக் காட்சியை வடிவமைத்திருக்கிறார். இருவருக்குள்ளும் ஏற்படும் இனம்புரியாத ஈர்ப்பு, அடுத்தடுத்த அக இயல்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. தமிழ் மரபில் பாங்கனும், பாங்கியும் இல்லாது காதல் நடைபெறாது என்பதைச் சுட்டுவதற்காகவே இரு பாத்திரங்கள் வின்சென்ட் ராஜாவையும், காந்திமதியையும் சுற்றிக் கொள்கின்றன. கிருபாநிதி, ஹெலன் என இருவரும் பாங்கியர் கூட்டம் நடைபெறக் காரணமாக சுட்டப்படுகின்றனர். காந்திமதி – வின்சென்ட் இடையே உள்ள மத வேறுபாடு போலவே கிருபாநிதி – ஹெலன் இடையேயும் காணப்படுகிறது. அது ஒரு பிரச்சினையாகச் சுட்டப்படவில்லை.

    காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் சங்க காலத்தில் குறியிடங்கள் எனப்பட்டன. குறிஞ்சி என்றால் தினைப்புனம், முல்லை, நெய்தல் நிலங்களில் நிலம் சார்ந்த சோலைகள், மணற்பாங்கான இடங்களில் சந்திப்பு நிகழ்கிறது. நாவலில் திணை சுட்டும் குறியிடங்கள் துலக்கமாகக் காணப்படவில்லை. ஆனாலும் காலத்திற்கேற்றாற் போல குறியிடங்களும் மாறுவது இயல்பென்ற வகையில் பாலர் விடுதியைச் சுற்றி நிகழ்தல், திரையரங்குகளில் நிகழும் சந்திப்புகள் ஆகியன குறியிடங்கள் என்பனவாகக் கொள்ளலாம். வின்சென்ட்டுக்கு கிருபாநிதியும், காந்திமதிக்கு ஹெலனும் உதவி செய்பவர்களாக வந்து அவர்களும் காதலர்களாக மாறுகிறார்கள்.

    தலைவன், தலைவி என்ற அகத்திணை சுட்டும் அடையாளமற்றத் தன்மையை நகர் சார்ந்த பகுதிகள் அடையாளமற்றுப் போகச் செய்கின்றன. அதாவது கிராமத்திற்குள்தான் பெயர்கள் குறித்த அடையாள ஓர்மை குறித்த அச்சம் காணப்படும். நகர்களில் பலவிடங்களிலிருந்தும் மனிதர்கள் வந்து சேர்வர். அங்கு அடையாளம் காண்பதரிது. எனவே நகர்களில் பெயர் இருந்தாலும் பெயர் சுட்டா மரபே கதையாடலில் இயங்குகிறது எனலாம்.

    பகற்குறியிடங்கள் மட்டுமே நாவலில் சுட்டப்படுகின்றன. அதிலும் தியேட்டர் போன்ற காலனியச் சூழலில் உருவான பொதுவெளிகளில் சந்தித்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாத இடமாக திரையரங்குகள் காணப்படுகின்றன. சில நேரங்களில் விடுதிக்கு வெளியில் சந்தித்துக் கொள்வதும். திரையரங்கிற்குச் சென்று விட்டு விடுதி மூடுவதற்குள் சென்று விடுவதுமென பாதுகாப்பான காதல் வெளிப்பாடுகளே காணப்படுகின்றன.

    வின்சென்ட், காந்திமதி காதலை விடவும் கிருபாநிதி, ஹெலன் காதல் வேகமெடுப்பதை நாவலில் காணலாம். கிருபாநிதியின் அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டிக்கக் கூடியவர்களாக காந்திமதியும், வின்சென்ட்டும் இருக்கிறார்கள். காந்திமதி வின்சென்ட்டிற்குக் கடிதம் எழுதுகிறாள். அதில் கிருபாநிதியின் செயல்பாடுகள் குறித்த அசூயையை வெளிப்படுத்துகிறாள். வின்சென்ட் இது குறித்துக் கிருபாநிதியிடம் கூறுகிறான். இவ்வாறான காதல் சார்ந்த பிரச்சினைகளும் நண்பர்களால் தீர்க்கப்படுகின்றன. தோழியின் துயரை தலைவி தீர்ப்பதற்கும், தலைவனின் துயரைப் பாங்கன் தீர்ப்பதற்குமான இடங்களாக இவை காணப்படுகின்றன.

    குறியிடங்களில் அல்ல குறிப்படுதல் என்பது திணைசார்ந்த வாழ்வில் காணப்படும் ஒன்றாகும். அல்ல குறிப்படுதல் என்பதைக் குறித்து தொல்காப்பிய பொருளதிகாரம் குறிப்பிடுகின்றது. இயற்கையான நிகழ்ச்சிகளால் தலைவன் வந்துவிட்டான் என்று கருதி வந்து பார்த்து ஏமாற்றமடைந்து சென்று விடும் தலைவி பின்பு தலைவன் வந்து திரும்பி விடுதலை அறியாதாளாக அடுத்த நாள் தலைவன் செய்த குறிகண்டு கலங்குவதைக் கூறுகின்றன. இவ்வாறான அல்ல குறிப்படுதல் என்பதை நாவலில் காணமுடிகிறது. காந்திமதி வின்சென்ட்டிற்காகக் காத்திருந்து அவன் வராமல் ஏமாற்றமடைந்து செல்வதை அல்ல குறிப்படுதலாகக் கொள்ளலாம். அல்ல குறிப்படும்பொழுது தலைவன் கொள்ளும் மன அவசங்களைத் தலைவனாக வின்சென்ட்டும் அடைகின்றான் என்பதைக் காணமுடிகின்றது.

    காதல் குறித்த அச்சம் பெற்றோருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும் என்பதை இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் மனிதன் அறிந்திருந்தாலும் காதலிப்பதைத் தவிர்த்ததில்லை. ஆண், பெண் ஒன்றிணைதல் என்பது பசி, தூக்கம் போல ஓர் இயல்பூக்கமான செயல்பாடானாலும். பண்பாடானது பாலியலை அற நடத்தையாக்கி விடுகிறது. பாலியலைக் கட்டுப்படுத்துதல் என்பது உயர்வான மதிப்பினையும் பாலியல் ஒடுக்கமின்மைத் தாழ்வான நடத்தையாகவும் சுட்டப்பட்டு வளர்க்கப்படுகின்ற ஆண்,  பெண் மனத்தில் பாலியல் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் இயல்பூக்கமே வென்று விடுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் விசாலாட்சியின் காதல் உடன்போக்கில் முடிகிறது. தாய், தந்தையின் எதிர்ப்பினை பொருட்படுத்தாத நிலையிலும் தந்தை மேல் கொண்ட அன்பின் மிகையைப் பதிலி செய்ய முடியாத நிலையில் இறந்து போய் விடுகிறாள். விசாலாட்சியின் இறப்பு காந்திமதியின் வாழ்வின் திசையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அவள் தன் காதலை வெளிப்படையாக வின்சென்ட்டிடம் வெளிப்படுத்தாத நிலையிலும் இக்கட்டான சூழலில் அவனோடு பயணிக்கும்போது அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்வதன் மூலம் தன் காதலை வெளிப்படுத்த விழைகிறாள். இது போன்ற சூழல்களே காதலை புனிதப்படுத்தும் வகையில் நாவலில் காணப்படுகின்றன.

    கிருபாநிதியின் அண்ணி, வின்சென்ட்டிடம் ஹெலனைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறாள். அவளது குணநலன்கள் எத்துணை சிறப்பானவை என்றாலும் அவளது சாதியை அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வம் கற்பு வாழ்விற்கான வெளிகள் அதாவது தாய் தந்தை  செய்து வைக்கின்ற திருமணத்தில் இது போன்ற சாதியப் பிரச்சினைகள் எழாத காரணம். அவர்களால் ஒரு போதும் அகமணமுறையைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது. கட்டுத்திட்டான குடும்பப் பாங்கான, தலைவியின் இயல்புகள் காதலித்தலைத் தவிர்த்தல் என்பதாகவே தமிழ்ச் சமூகம் கற்பித்து வந்திருக்கிறது. நிலவுடைமைப் பண்புகள் இன்றைய மனத்திலும் வியாபித்து இருக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே சாதியை அறிந்துகொள்ளும் வேட்கையாக வெளிப்படுகிறது. அவளது சாதியை அறிந்து கொள்ளும் பிரயத்தனத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில்தான் வின்சென்ட்டும் இருக்கின்றான். அவளிடம் நேரடியாகக் கேட்டு விடும் வலிமையும் இருப்பதில்லை. சாதியைப் பற்றிய அறிதல்கள் அகமணமுறையின்பாற்பட்ட இன அடையாளத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இன அச்சமே அகமண முறைக்குக் காரணம். அதுவே இன்றுவரை கௌரவக் கொலைகளை சாத்தியப்படுத்தி இருக்கிறது.

    நாவலிலும் சந்தோஷம் தன் பால்ய காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்வதைக் காணமுடிகிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவன் எக்காரணம் கொண்டு உயர்ந்த சாதி என்று கருதக் கூடிய பெண் பிள்ளையின் கையைத் தொடக் கூடாது என்று  விதிக்கப்படுவதை அகமணமுறை அழுத்தமாக இருப்பதைச் சுட்டும் காட்சியாகக் கொள்ளலாம். சாதியப் படிநிலையில் கீழிருக்கும் மக்கள் உயர்சாதியினரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதன் நீட்சியாகவே சந்தோஷம் எரித்துக் கொல்லப்படுதல் நிகழ்கிறது. அகத்தில் ஓர் எரித்தல் போலவே புறத்திலும் ஓர் எரித்தல் நிகழ்கிறது. அது மொழியின்பாற்பட்ட வெறியினால் நிகழ்கிறது. ஆண்கள், பெண்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதற்கான இடங்களாக நாவலில் பள்ளிகள், கல்லூரிகள் காணப்படுகின்றன. கல்லூரிக் காலத்தில் பெரும்பாலும் நகர்சார்ந்த வாழ்வை மேற்கொள்ளும் ஆண், பெண் மனத்தில் சாதிய, அகமணமுறை பற்றிய சிந்தனைகள் இருப்பதில்லை. வாழ்தலின் அவசம் மட்டுமே வெளிப்படுகிறது. ஆனால் பள்ளிகளில் படிக்கும் போது பிள்ளைகள் சாதியப் பிரிவினையைத் துலக்கமாகக் காணும்படிக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விசாலாட்சியின் மரணம் அன்பின் மிகை என்றே நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். அன்பென்றாலும் ஓர் அளவிற்குத்தான் வைக்க வேண்டும் என்பதாகக் கொள்ளலாம்.

    ஊடல் என்பது மருதத் திணையின் உரிப்பொருள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஊடல் நிகழாத சூழல் இருப்பதில்லை. ஊடல் குடும்பம் நடத்தத் தேவையான வஸ்து போல நாவலாசிரியர் குறிப்பிடுகின்றார். விசாலாட்சியின் தந்தை இராணுவத்தில் பணிசெய்த போது அங்கு ஒரு பெண்ணோடு தொடர்பாய் இருந்தார் என அவரது மனைவி சந்தேகங் கொள்வதும் அதற்காக அவளை கடிந்து கொள்வதுமாக மருதத் திணையின் உரிப்பொருள் வெளிப்படுகிறது. தலைவனுக்கு இருக்கும் பரத்தைத் தொடர்பு பற்றிய தலைவியின் கவலையாக இது வெளிப்படுகிறது. சந்தேகங்கொண்டாலும் அதைப்  பெரிதுபடுத்தி சண்டையிட்டுக் கொள்வதில்லை. பரிகாசம் செய்வதோடு நின்று விடுகிறாள்.

    பிரிவும் உரிப்பொருளாக பாலைத்திணையில் காணப்படுகின்றது. நாவலிலும் பிரிவு கடுமையானதாகக் காணப்படுகின்றது. காதலித்தவர்கள் ஆயினும் அதைத் துலக்கமாக வெளிப்படுத்தாக வின்சென்ட்டும், காந்திமதியும் மீண்டும் ஊழ்த் தெய்வத்தின் வினையால் சந்திக்கின்றனர். இம்முறை விமான நிலையத்தில் சந்திக்கின்றார்கள். இருவருக்குள் நடைபெறும் சம்பாஷணை கடந்த காலத்தை மறுபடியும் நினைவு கூர்வதாக அமைகிறது. முன்னர் நடந்தவை பற்றிய நிகழ்ச்சிகளை நிகழும்போது இருக்கும் சுவாரசியம் மறந்து அவை ஓர் செய்தியாக எஞ்சியிருப்பது போல அளவளாவிக் கொள்கிறார்கள். இருவரும் இணைந்து கொள்வதற்கான சூழல்கள் ஏற்பட்டு விட்டன என்பதை இருவரது சம்பாஷணையிலும் அறிந்து கொள்ள முடிகிறது. நாவலாசிரியர் கிருபாநிதி மற்றும் ஹெலனின் காதலை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத நிலையில் ஹெலனையும் கிருபாநிதியின் சாதியாகவே குறித்து விடுகிறார் எனலாம்.

    புறத்திணை என்று கொள்வதற்கு சங்க இலக்கியத்தின் கடல் கடந்த போர் நிகழ்ச்சிகளை மனத்திற் கொண்டு இந்தி மொழிக்கு எதிரான கொந்தளிப்பான சூழல்கள் வழித் தமிழர்கள் அரசியல் ரீதியாக பலவீனமானவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தும் காட்சிகள் அமைகின்றன. அதே வேளையில் பிழைப்புவாதிகள் அரசியலில் நிறைந்து விடும் ஆபத்தும் இருப்பதைப் புறத்திணையில் ஆசிரியர் சுட்டுகின்றார். மொழியைக் காக்க உயிர் துறக்கும் அளவிற்குச் செல்லும் மாணவர்களின் போராட்டத்தைத் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்குப்பயன்படுத்திக் கொண்ட வல்லடித்தனத்தை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். சொத்து சேர்த்தல் போன்றவற்றில் பொன்வண்ணன் பழனி என்ற தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு அரசியல் பிரவேசம் செய்வதிலிருந்து அவரது செயல்களும் நடப்பு அரசியலை சுட்டுவதாகக் காணமுடியும். மொழிக்காக பொதுச்சொத்தைத் தீக்கிரையாக்கும் செயலை சங்க காலத்தின் எதிரிப் படையினரை கொன்றொழித்து அவர்தம் உடைமையினை அழித்து நிர்மூலமாக்குவதைப் பதிலி செய்யும் வகையில் இருக்கின்றன எனலாம்.

    இந்தி எதிர்ப்பு பற்றிய விவரணைகள் மிகச் சொற்பமாகவே நாவலில் காணப்படுகின்றன. அரசியல்வாதிகள் தங்கள் நலனையே பெரிதும் விரும்புவர்களாக இருப்பதைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார். ஆசிரியர் அதில் வான்மிகநாதன், காமாட்சி ஆகியோரைப்பற்றிய சித்திரிப்புகள் அடிப்படையில் பொருள் சார்ந்த வாழ்விற்கான எவ்வகையான சமரசத்தையும் செய்து கொள்வதைக் காணமுடிகிறது. திராவிடக் கட்சியில் பிராமணர் என்ற வகையில் அவர் புறந்தள்ளப்படுவதாகவும் ஆனால் வாணி என்ற நடிகை திராவிடக் கட்சியில் ஊடுருவப் போவதாகவும் அவளுக்கே எதிர்காலம் என்று ஆசிரியர் முன்தீர்மானமான கருத்தைக் கதையில் வெளிப்படுத்துகின்றார்.

    இவ்வாறு அகத்திணையும் புறத்திணையும் கலந்து தமிழரின் இரண்டாயிரமாண்டு வாழ்வியலில் மாறாதவற்றை இயல்பூக்கமாகப் பகிர்ந்து கொள்வதாகத் தமிழவனின் நாவல் அமைந்திருக்கிறது.

    *****

    அடிக்குறிப்புகள்

    1. கார்த்திக்கேசு, சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம், ப.24
    2. க.ஜவகர், திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும், ப.275
    3. ஐயப்பப் பணிக்கர், இந்திய இலக்கியக் கோட்பாடுகள், ப.111

    *****

    கட்டுரையாளர் – முதுமுனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழியற்புலம்
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    மதுரை – 21

     

    Share