‘‘தாமரையி லைத்தண்ணீர் தாமோதர் ,தூங்குகிறார்,
நாமறை நாயகர் நாபியின்றி – வாமறை
கீதையே கண்ணனின் காதில் மெலிதாக
ஓதுநீ பார்த்தனுக்காய் ஓம்’’
….கிரேசி மோகன்…!
‘‘தாமரையி லைத்தண்ணீர் தாமோதர் ,தூங்குகிறார்,
நாமறை நாயகர் நாபியின்றி – வாமறை
கீதையே கண்ணனின் காதில் மெலிதாக
ஓதுநீ பார்த்தனுக்காய் ஓம்’’
….கிரேசி மோகன்…!
நிர்மலா ராகவன்
எல்லைகள்
இரண்டு வயதானதும் ஒரு குழந்தை `எனக்கு நடக்கத் தெரியவில்லையா, பாட்டிலில் பால் குடிக்கிறேனா?’ என்றெல்லாம் தான் பெரியவனாக வளர்ந்துவிட்டதைப்பற்றிப் பெருமை கொண்டிருக்கும். சுயமாகச் சாப்பிடக்கூட முடியும், கீழே வாரி இறைத்தாலும்!
தன்னை ஏன் அம்மா இன்னும் குழந்தைமாதிரி நடத்துகிறாள்? வெளியில் அழைத்துப்போனால், சில சிறு குழந்தைகள் டயாபரை அவிழ்த்துப்போடுவார்கள். ஆத்திரத்தை எப்படித்தான் காட்டுவது!
இரண்டு வயதில் முரண்டு
என் மகளுக்கு இரண்டு வயதானபோது, “அம்மா குளிக்கச் சொல்றா!” என்று சுயபரிதாபத்துடன் தன் பாட்டியிடம் முறையிடுவாள், என்னமோ நான் அவளைக் கொலை செய்ய ஆயத்தமாவதுபோல்.
அனேகமாக எல்லாக் குழந்தைகளும், `குளி’, `சாப்பிட வா!’ என்று என்ன ஆணை பிறப்பித்தாலும், `மாத்தேன், போ!’ என்று முரண்டு பிடிக்கும்.
`இவன் என்னை இப்படி எதிர்க்கிறானே!’ என்று தாய் அயர்ந்து, `ஏன் இப்படிப் படுத்தறே!’ என்று திட்டுவாள். இம்முறை பயனில்லாவிட்டால், கெஞ்சலிலும் இறங்குவாள். ஆனால், தனக்கு யார் மிக நெருக்கம் என்று குழந்தை கருதுகிறானோ, அவர்களிடம்தானே தன் `கைவரிசை’யைக் காட்ட முடியும்?
தாயின் அதிகாரத்தை எதிர்ப்பதில்லை குழந்தையின் நோக்கம். தன்னுடைய சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் முயற்சி அது. தான் இன்னும் அம்மாவின் இன்னொரு அங்கம் இல்லை என்று உணர்த்தும் செய்கை.
இது புரிந்து, தாய் சில விஷயங்களில் குழந்தையே தனக்கு எது வேண்டுமென்று நிச்சயிக்கும் வாய்ப்பை அளிக்கிறாள். `உனக்கு இன்னிக்கு சிவப்பு சட்டை வேணுமா, இல்லை, சூபர்மேன் சட்டை போட்டுக்கறியா?’ என்று கேட்டால் போதும், அவனுக்குப் பெருமையாகிவிடும், தன்னையும் மதிக்கிறார்களே என்று.
வெளியில் அழைத்துப் போனாலோ, சிறு குழந்தையாகிவிடுவான். அம்மாவின் இடுப்பிலிருந்து இறங்க மறுத்துவிடுவான். இந்த சமயங்களில், `நான் இறக்கிவிடறபோது, நீ நடக்கப்போறியா, ஓடப்போறியா?’ என்று முடிவை அவனுக்கே விட்டால், அந்த தாய்க்கு வெற்றி கிடைக்கும். இரண்டில் ஒன்றைத் தானே தேர்ந்தெடுப்பான்.
“இது என் சட்டை! நானேதான் ம(டி)ச்சு வெப்பேன்!” என்னும் மூன்று வயதுக் குழந்தையை அதன் போக்கில் விடுங்கள். கையில் துணியைச் சுற்றிச் சுற்றி, சும்மாடுபோல் ஆக்கிவிட்டு, பெருமையாகச் சிரிக்கும். அப்போது புகழ வேண்டியதுதான்.
`ஐயோ! கசக்கறியே!’ என்று பதறுவது அவன் பெருமுயற்சியெடுத்து செய்த காரியத்தைச் சிறுமைப்படுத்துவதுபோல் ஆகிவிடாதா!
கோபத்தின் வெளிப்பாடு
நம்மைப்போல்தான் குழந்தைகளுக்கும் அவ்வப்போது கோபம் எழும். அதை எதன்மேலாவது காட்டுவார்கள்.
`இந்த துப்பாக்கி அசடு. தூக்கிப் போடு!’ என்று தன் விளையாட்டுச் சாமானை குப்பையில் போடும் குழந்தை அறியாது அதை ஒளித்துவைத்தால், `அம்மா! என் துப்பாக்கி இங்க ஒளிஞ்சுண்டு இருக்கு!’ என்று சில நாட்கள் கழித்து பெருமகிழ்ச்சியுடன் கொண்டுவந்து காட்டுவான்!
சுதந்திரத்தை நாடும் குழந்தை, `அம்மா! மழையிலே விளையாடப் போகட்டா?’ என்று கேட்பான். அனுமதி கிடைக்காது என்று தெரியும். இருந்தாலும், அம்முயற்சி எந்தவரை வெற்றி அளிக்கும் என்று ஆராயும் ஆவலால் எழும் கேள்வி அது.
`போ. ஜூரம் வரும். டாக்டர்கிட்ட அழைச்சுண்டு போய், பெரிய ஊசியா குத்தச் சொல்றேன்!’ என்று தாய் சிரித்தால், அதன்பின் அந்த முயற்சி கைவிடப்படும்.
இதெல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைகிறது என்பதற்கான அறிகுறிகள். தன்னால் எவ்வளவு தூரம் போகமுடியும் என்று தன் எல்லையைப் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சிகள். நமக்கு அயர்ச்சியாக இருந்தாலும், மகிழ வேண்டியதுதான். எப்போதுமே கைக்குழந்தைபோல் இருந்தால் எப்படி இருக்கும்?
சிறு குழந்தைகள் நாம் சொல்வதற்கு எதிரான பொருளைப் புரிந்துகொள்வார்கள். உதாரணத்திற்கு, “மெத்தைமேல் ஏறிக் குதிக்காதே!” என்று எச்சரித்தால், முதலில் அந்த எண்ணமே எழாவிட்டாலும், ஏறிக் குதிப்பார்கள்.
“சொல்லிக்கொண்டே இருக்கிறேனே!” என்று வைதால், அவர்களுக்கு குழப்பம்தான் விளையும்.
இதைத் தவிர்க்க, அவ்வப்போது அணைத்து, குழந்தையால் செய்ய முடிந்த (அல்லது முடியாத) சிறு வேலைகளைக் கொடுக்கலாம். ஐந்து வயதுக்குழந்தையால் கீரை நறுக்க முடியும். பெரிதும் சிறிதுமாக இருந்தாலும் வேகாதா, என்ன!
எல்லையைக் கற்பிக்க
மெல்ல மெல்ல எல்லையைக் கடக்க கற்றுக்கொடுத்தால், அதை மீறமாட்டான். நாம் செய்யும் சில வேலைகளில் குழந்தையையும் `உதவி’ செய்ய அழைத்தால், அவனுடைய சுயமதிப்பு பெருகும்.
நான் தெரியாத்தனமாக, என் மூன்று வயதுப்பிள்ளையிடம் “பூரி இட்டுக் கொடுக்கிறாயா?” என்று சொல்லப்போக, அவன் பெருமையுடன் அப்பளக்குழவியைப் பலகையில் அழுத்தித் தேய்த்தபடி இருந்தான். `போதும், போதும்,’ என்று கெஞ்சியபோதும், `இன்னும் கொஞ்சம் பண்ணணும்!’ என்று உற்சாகமாக, நிறுத்தாது வேலை செய்தான். அவற்றை சுத்தப்படுத்துவது பெரும்பாடாகிவிட, அடுத்த முறை ரகசியமாகச் செய்தேன்!
வயதுக்கேற்ற காரியம் கொடுத்தால் இத்தகைய தொல்லையெல்லாம் வராது.
அதைவிட்டு, `இதைச் செய்யாதே! இதை இப்படிப் பண்ணு,’ என்று ஓயாமல் தொணதொணத்தால், அடுத்த முறை எதுவும் செய்ய முன்வர மாட்டார்கள். இல்லையேல், வேண்டுமென்றே ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள். இது பொதுவான மனித குணம்.
புக்ககம் செல்லும் சில பெண்கள் அவர்களுக்குப் பழக்கமான விதத்தில் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது, மாமியாரோ, நாத்தனாரோ பழிக்கும்போது எரிச்சல்தான் உண்டாகும்.
நன்றாக வேலை செய்யும் மருமகளைப்பார்த்து, `உனக்கு ஒரு வேலையும் தெரியவில்லையே!’ என்று பழிப்பார்கள், தம் மேலான நிலையை நாட்டிக்கொள்ள. இவளோ, அதன்பின் எதுவும் முனைந்து செய்யமாட்டாள், எப்படியும் கண்டனம்தானே கிடைக்கப்போகிறது என்ற எரிச்சலில்!
எல்லை ஏன்?
`இது என் எல்லை!’ என்று புரிந்துகொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். ஆறு வயதுக்குமேல் எல்லா வயதினருக்கும் இது பொருந்தும். பிறர் ஒருவரது எல்லையை தம் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயலும்போதுதான் தகராறு வருகிறது.
கதை
மலேசியாவில் மிகப் பிரபலமான கார்ட்டூன் வரைபவர் ஒருவரை `சிடுமூஞ்சி’ என்று பலரும் பழித்தார்கள். (இவரது சித்திரங்கள் விமானங்களைக்கூட அலங்கரிக்கின்றன).
அவருடைய வாதம்: “சிரிக்க வைக்கும் படங்களை வரைவதால், என்னைச் சந்திக்க வருகிறவர்களையெல்லாம் நான் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க முடியுமா?” பலரது எதிர்பார்ப்பும் இப்படியே இருக்க, அவருக்குக் கோபம் எழுந்திருக்கிறது.
தன் எல்லையைக் கடக்காது, அல்லது கடக்கவைக்கும் பிறரது முயற்சிகளுக்கு இடங்கொடுக்காது அவர் இருந்திருக்கிறார். இது அவருடைய துணிச்சலைக் காட்டுகிறது. இம்மாதிரி நிலையில், கோபத்தை வெளிக்காட்டாது, அல்லது பிறர்மேல் பழி சுமத்தாது மெல்ல விலகிவிடலாம்.
பிறர் நம்மை மதிக்க வேண்டுமேயென்று நம் எல்லைகளிலிருந்து விலகினால், நம்மையே நாம் மதித்துக்கொள்ளத் தவறுகிறோம்.
ஒரு குடும்ப நிகழ்ச்சியில், நான் கலகலப்பாக எல்லாரிடமும் பேசினேன். (எப்போதாவதுதான் இந்த `மூட்’ வரும்). `நன்னாப் பேசுவா!’ `நன்னாப் பழகறா!’ என்று முணுமுணுத்தபடி, எல்லாரும் ரசித்தபடி இருந்தார்கள்.
அதன்பின் ஒவ்வொரு முறையும் அதேபோல் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். எனக்கு ஓய்ந்துவிட்டது. நான் வாயே திறக்கவில்லை. “மாறிட்டா!” என்ற விமர்சனம் வந்தது, ஏமாற்றத்துடன்.
என் சக்தியின் எல்லையை, என்னால் எது முடியும், முடியாது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். பிறரை மகிழவைக்க அதை மீறுவதில் எனக்கு உடன்பாடில்லை.
(பாடகிகள் கச்சேரிக்குமுன் அதிகம் பேசாது இருந்தால்தான் குரல் ஒத்துழைக்கும். இனிமையாக இருக்கும். இது புரியாது, அவர்களுடன் பேச்சுக்கொடுத்து, அவர்கள் மௌனம் சாதித்தாலோ, இல்லை, ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தாலோ, `கர்வி’ என்று நிச்சயிக்க முடியாது. இது அவர்களின் எல்லை).
குட்டிக்கதை
ஒரு சாயந்திர வேளையில், “பாட்டு கத்துக்க வா,” என்று எங்கள் வீட்டிலிருந்த என் பேத்தியை அழைத்தேன்.
இருமணி நேரம் தாமதமாக வந்தாள்.
“உன் நேரம் முடிந்துவிட்டது. நான் காத்திருந்தேன். அவ்வளவுதான்!” என்றதும், அதிர்ச்சியுடன் தன் தாயைப் பார்த்தாள் சிறுமி.
பெரியவள் தலையை அசைத்தாள், என்னை ஆமோதிப்பதுபோல்.
இளம் வயதிலேயே பிறருடைய எல்லையை மதிக்கக் கற்றுக்கொடுத்தால், தானே தன் எல்லையையும் புரிந்து, நிர்ணயிக்கும் குணம் வரும். தன்னம்பிக்கையும் வளரும்.
`பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமோ?’ என்று பயந்து, விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பவர்களுக்குத் தம் எல்லை எது என்பதே தெரிய வாய்ப்பில்லை.
நமக்குப் பிடிக்காததை, நம்மால் முடியாததை, செய்தாவது பிறரது பாராட்டைப் பெறவேண்டுமா?
எது முக்கியம்? தன்னம்பிக்கையா, பிறரது ஆமோதிப்பா?
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்தவார மடல் வரையும் பொழுது இது. அரசியல்களத்திலே ஒருவாரம் என்பதே மிகப்பெரும் காலமாகும் என்று காலஞ்சென்ற முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் ஹெரால்ட் வில்ஸன் அவர்கள் ஒரு சமயம் கூறியிருந்தார். நாட்டில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் நிலவரங்களும் மாறிக்கொண்டேயிருக்கும். அனைத்தும் அமைதியாக தம்சார்பில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அரசாங்கக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத திசையில் இருந்து ஒரு சூறாவளி அடிக்கிறது. இச்சூறாவளியில் சிக்குண்டு யார் தமக்கு எதுவும் நடக்காது என்று எண்ணியிருக்கிறார்களோ அவர்களே இலக்குகளாக அடித்துச் செல்லப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்.
இதே அரசியல் சூறாவளி சுமார் ஒருவாரகாலத்தின் முன்னர் இங்கிலாந்து அரசியல்களத்திலும் அடித்தது. அதிலே அகப்பட்டு இங்கிலாந்து அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த உள்துறை அமைச்சர் அம்பர் ரட் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டார். இருவார காலத்தின் முன்னால் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவர் கனவில் கூட எண்ணியிருக்க மாட்டார். இதுவரை காலமும் அமைச்சரவையில் பிரதமருக்குப் பக்கபலமாக, மிகவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு திறமை மிக்க அமைச்சராகப் பணியாற்றிய இவர் இன்று தனது பதவியை இழந்த நிலையில் இருப்பதே அரசியல் களத்தின் நிலையற்ற தன்மையைக் காட்டுகிறது.
அப்படி அவர் பதவி விலகக் காரணமாக இருந்த சூறாவளிதான் என்ன?
ஆம், அந்தச் சூறாவளி ” Wind Rush (வின்ட் ரஷ் – அதாவது வேகக் காற்று)” எனும் வடிவில் தாக்கியது. சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாவது உலகப் போரின் அழிவுகளுக்குப் பின்னால். பிரித்தானிய நாடு பல சீரழிவுகளைச் சந்தித்த நிலையில் நாட்டைத் திரும்பக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையிலிருந்தது. அத்தேவைகளுக்கான வேலையாட்கள் பற்றாக்குறையை பிரித்தானியா எதிர்கொண்டது. அதனால் பல காமன்வெல்த் – பொதுநலவாய நாடுகளில் இருந்து மக்கள் இங்கிலாந்துக்குக் குடியேற வருமாறு அழைக்கப்பட்டனர். அப்படி அழைக்கப்பட்டவர்களில் மேற்கிந்திய தீவைச் சேர்ந்த பலர் இங்கிலாந்துக்கு வருகை தந்தனர். இவர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வந்த கப்பல் ” Wind Rush Empire (வின்ட் ரஷ் எம்பயர்) “ என்று அழைக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் வந்த பலர் தமது குடும்பத்துடன், கைக்குழந்தைகளுடன் வந்திறங்கினார்கள். இவர்கள் வந்திறங்கியபோது இவர்கள் இங்கு வந்ததன் அத்தாட்சியாக ” Landing Card எனும் குடிவரவு அட்டை ” அப்போதைய உள்துறை அமைச்சினால் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் இங்கிலாந்துப் பிரஜைகளாகக் கருதப்பட்டு அவர்கள் வரி செலுத்தவும், பணிகளில் அமர்த்தப்படுவதகும் முக்கியமான தேசிய காப்புறுதி இலக்கம் வழங்கப்பட்டு அவர்கள் சாதாரணமாக பணியாற்றி, வரி செலுத்தி இங்கிலாந்துப் பிரஜைகளாக வாழ்ந்தார்கள். அத்தோடு 1970களின் முற்பகுதியில் கொண்டுவரப்பட்ட இங்கிலாந்துக் குடியேற்றச் சட்டம் 1973 ஜனவரி மாதத்துக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் வந்த வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவர் அனைவரும் இங்கிலாந்துப் பிரஜைகளுக்கான தகுதியுடையவர்கள் என்று வரையப்பட்டது.
இவர்களில் பலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாததினால் இங்கிலாந்து பாஸ்போட் எடுக்காமலே இருந்து வந்தனர். சமீபகாலமாக இங்கிலாந்தில் வெளிநாட்டவரின் குடியேற்றம் ஓர் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது. 2010ஆம் ஆண்டு வரை சுமார் பத்துவருடங்களுக்கு மேலாக பதவியிலிருந்த லேபர் அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையின் தவறு காரணமாகவே வெளிநாட்டவரின் குடியேற்ற எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்தது எனும் குற்றச்சாட்டு பலமாக வைக்கப்பட்டதினால் 2010ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கன்சர்வேடிவ் கட்சி தனது வெளிநாட்டவர் குடியேற்றச் சட்டத்தை இறுக்கியது. இங்கிலாந்தில் சட்டத்துக்குப் புறம்பாக சரியான அனுமதி இல்லாமல் வாழும் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் தாம் கடுமையான போக்கைக் கையாளப்போகிறோம் என்றார்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். இன்றைய பிரதமர் திரேசா மே அவர்களே அன்றைய குடியேற்ற இலாகாவுக்கு பொறுப்பாக இருக்கும் உள்துறை அமைச்சராக இருந்தார். அவரது காலத்தில் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து குடியேற்றச் சட்டம் மிகவும் இறுக்கப்பட்டது. அதன் பிரகாரம்தாம் இந்த நாட்டில் வசிப்பதற்கு உரிய முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெறுவதோ, அன்றி அரசாங்க வீட்டு வசதி பெறுவதோ, கல்வி பெறுவதோ, பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதோ தடை செய்யப்பட்டது.
இத்தகைய கடுமையான சட்டங்களினால் அன்று இங்கிலாந்தின் அழைப்பின் பெயரில் குடியேறி இங்கு 60 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் “வின்ட் ரஷ்”எனும் கப்பலில் வந்தவர்களும் பாதிக்கப்படலாம் என்ற எதிர்க்கட்சியினரதும், பல சமூக அமைப்புகளினதும் எச்சரிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. பின்னால் நடந்த பல அரசியல் அதிர்வுகளின் விளைவாக திரேசா மே அவர்கள் பிரதமரானர் அவரது அமைச்சரவையில் அவர் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியை “அம்பர் ரட் (Amber Rudd) “ அவர்கள் எடுத்துக் கொண்டார். அந்தோ பரிதாபம்! வின்ட் ரஷ் பிரச்சனை அவரை நோக்கிய சூறாவளியாகத் தாக்கியது. இங்கிலாந்துப் பிரஜைகளாக இங்கிலாந்து நாட்டைக் கட்டியெழுப்பிய மக்கள் பலர் உரிய ஆவணங்கள் இல்லை எனும் பெயரில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர், பலர் தமது வேலைகளை இழந்தனர், பலருக்கு வைத்தியசாலைகளில் மருத்துவ வசதி மறுக்கப்பட்டது. வெகுண்டெழுந்தது சமூகம்! நாம் இங்கிலாந்து மக்கள் என்று சொல்லவே வெட்கப்படுகிறோம் என்று சமுதாயத் தலைவர்கள் கடிந்துரைத்தனர். அரசாங்கம் தனது தவற்றினைக் காலந்தாழ்த்தி உணர்ந்து கொண்டது. பிரதமர் தொடங்கி, உள்துறை அமைச்சர் வரை பாராளுமன்றத்திலே மன்னிப்புக் கோரினார்கள். உள்துறை அமைச்சர் மட்டுமல்ல, பிரதமரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆரவாரித்தன.பதவி விலகுவதால் பிரயோஜனமில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உடனடியாகச் சரிபடுத்துவதே எமது கடமை என பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஒருவாறு தமது பதவிகளில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் தான் மற்றொரு இடி விழுந்தது. பாராளுமன்றத்தில் குடியேற்றம் பற்றிக் கண்காணிக்கும் தெரிவுக்குழுவின் முன் சாட்சியளித்த உள்துறை அமைச்சர், சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் எண்ணிக்கை இலக்கு வைத்திருந்தீர்களா எனும் கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தார். வந்ததே பிரச்சனை! அவரது இலாகாவினுள் இருந்தே அனாமதேயமாக அப்படி ஓர் இலக்கு இருந்ததற்கு அத்தாட்சி வெளிவிடப்பட்டது. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் தனது தவற்றை ஏற்று உள்துறை அமைச்சர் இராஜினாமா செய்தார். இந்தக் குற்றச்சாட்டு உள்துறை அமைச்சருடன் மட்டுமல்ல பிரதமரையும் சாரும் எனும் குரல்கள் சில கோணங்களில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பிரதமரைக் காப்பதற்காக தன்னைப் பலிகடாவாக்கிக் கொண்டார் உள்துறை அமைச்சர் எனும் கோஷமும் கேட்காமல் இல்லை.
“நிலை மாறும் உலகில், நிலைக்கும் எனும் நினைப்பில்” எனும் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. எது எப்படி இருப்பினும் இங்கிலாந்து நாட்டின் நியாகக் கோட்பாடுகளைப் பார்த்துச் சற்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாக
மோட்சம் கொடுத்தனர் முதலைவாய் யானைக்கு
காட்சியிதைக் கேசவ் கொடுப்பு”
….கிரேசி மோகன்….!
–கிரேசி மோகன்
வென்றது கார்திக், விராட்கோலி தோற்றதால்
ஒன்றுதான் வெல்லும் உலகிலே: -நன்றிதைக்கேள்
நின்றுகொல்லும் தெய்வம்,நடனமா டியும்கொள்ளும்
(ஐபிஎல் ஆடியும் கொள்ளும் கேப்டனாய்)
மன்றில் அபஸ்மாரன்(முயலகன் -தாருகா வனத்தில் ரிஷிகள் சிவபெருமான் மீது ஏவியவன்) மீது….
-முனைவர் பா. கலையரசி
முன்னுரை
தமிழின் வளமையும், இனிமையும் அதன்கண் உள்ள இலக்கிய, இலக்கணங்களில் பொதிந்து கிடக்கின்றது. ஒரு மொழியின் உடல், இலக்கியமெனில், அவ்வுடலின் குருதி இலக்கணமாகும். அந்த வகையில், நம் மொழிக்குக் குருதியாய் அமைந்து நாட்டின் வரலாற்றினை அறிவதற்குரிய சான்றுகள் பலவற்றுள் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலுக்கு முக்கிய இடம் உண்டு.
தொல்காப்பியம் மூன்று பகுதிகளைக் கொண்டது.
தமிழ் ஒலிகளை ஆராய்வதை முதல் பகுதியும், சொற்கள், சொற்றொடர்களின் அமைப்பை ஆராய்வதை இரண்டாவது பகுதியும் விளக்குகிறது. மூன்றாவது பகுதியான பொருளதிகாரம் தமிழிலக்கியத்தை ஆராய்ந்து உரைப்பதாய் அமைந்துள்ளது. அவற்றுள் குறிப்பாக, செய்யுளுக்கு இலக்கணம் கூறும் செய்யுளியலில் பேராசிரியர் காட்டும் பாடபேதத்தை மட்டும் இக்கட்டுரை ஆராய்ந்து தெளிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பேராசிரியரின் உரைத்திறன்
தமிழ்ப் படைப்புகளில் நிரம்பிக் கிடக்கும் வளங்களை உணர்ந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் உரையாசிரியர்கள். வேற்று மொழியும் நாகரிகமும் தமிழ்மண்ணில் புகுந்து தமிழ்ப் பண்பாட்டினை மறக்கச் செய்த போதெல்லாம், பழம்பெரும் இலக்கண, இலக்கியச் செல்வங்களை தமிழர்களுக்கு எடுத்துக்காட்டி, விளக்கித் தமிழ்மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு மட்டுமே உண்டு.
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் இறுதி நான்கு இயல்களான மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கு மட்டுமே பேராசிரியரின் உரை இப்பொழுது கிடைக்கின்றது. இந்நான்கு இயல்களிலும் பேராசிரியர் தமக்கென ஒரு தனிநடையைக் கையாண்டு உரை யாத்திருப்பதால், இவரது உரைநெறியில் ஒரு தனித்தன்மையைக் காண இயலுகிறது.
பேராசிரியரின் உரைநெறிகள் அனைத்தையும் பகுத்தாய்ந்து வகுத்து வரையறுத்தால், சிறந்ததொரு உரைநூலின் கோட்பாட்டையும் நம்மால் உருவாக்க இயலும்.
பாடபேதம் – விளக்கம்
ஒரு சொல்லுக்கு மாற்றாகப் பொருளிலும், ஓசையின் அமைப்பிலும் ஒத்த சொற்கள் வருவது பாடபேதம் சுட்டி விளக்கல் எனப்படும். அதாவது, அசையின் அமைதியையும், ஓசையையும், தொடரமைப்பையும், பொருளையும் ஒத்து அமையக்கூடிய வேற்றுமைச் சொல்லைக் குறிப்பது இவ்வகை ஆகும்.
மூல நூலிலுள்ள சொற்களுக்கும், பேராசிரியரின் உரையில் உள்ள சொற்களுக்கும் பாடவேறுபாடு குறிப்பிடப்பட்டிருப்பினும், பேராசிரியர் யாத்துள்ள சொற்கள் யாவும் எந்நிலையிலும் மூலநூலின் பொருளை சிதைக்கா வண்ணம் அமைந்திருப்பது பேராசிரியத்தின் தனிச் சிறப்பென்றே கொள்ளலாம்.
ஏனைய வுரியசை – ஏனவை உரியசை
“இயலசை முதலிரண் டேனவை உரியசை”
[தொல்-பொருள்-இளம்பூரணம்-314]
என்ற சூத்திரத்திற்கு முதல் இரண்டு இயலசையும், ஏனைய உரியசையும் இயையும் தன்மையை உடையன எனப் பொருள் கொள்ளலாம். இயலசை என்பதற்கு இயற்கையால் இணையும் நேர், நிரை, என்பவற்றையும், இவை செய்யும் தொழிலைக் குறிக்கும் உரியசைக்கு நேர்பு, நிரைபு என்பவற்றையும் நேரடிப் பொருளாகக் கொள்ள வேண்டும். இச்சூத்திர உரையில் பேராசிரியரினின்று மாறுபட்ட இளம்பூரணர் ‘ஏனவை உரியசை’ என்று பாடங் கொண்டுள்ளார்.
பேராசிரியர் ‘ஏனைய வுரியசை’ என்று குறிப்பிடுகிறார். எனவே, ஏனையவை என்பதே ஏனவை என்று திரிவதால் பேராசிரியரின் பாடத்தினின்று பிறந்ததே இளம்பூரணர் கொண்டுள்ள வேறுபாடும் என்பது இதன்கண் தெளிவாகிறது.
நிரையுறினும் – நிரை இறினும்
இயலசையும் உரியசையும் கலந்து வரக்கூடிய ஈரசைச் சீர்களை ஆசிரியவுரிச் சீராகக் கொள்ள வேண்டும் என்பதை,
“முன்னிரை யுறினு மன்ன வாகும்” [தொல்-பொருள்-பேராசிரியம் – 326]
என்ற செய்யுளியல் சூத்திரம் தெளிவுற விளக்குகிறது. இதில் பேராசிரியர் ‘நிரை யுறினும்’ எனவும், இளம்பூரணர் ‘நிரை இறினும்’ எனவும் பாடபேதம் காட்டியுள்ளனர்.
நிரை இறினும் என்ற இளம்பூரணரின் பாடமானது நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளின் பின்னால் நிரை வந்து நிரையே ஈறாய் முடிந்து நிற்கும் முறைமையைச் சுட்டிக்காட்டுகிறது. பேராசிரியர் கொண்ட நிரையுறினும் என்பது நிரையுதறுலைக் குறிக்கிறது. அதாவது, உரியசைகளான நேர்பு, நிரைபு ஆகியவற்றின் பின்னால் நிரையசை வந்து மயக்கமுற்று, அது ஈரசைச் சீராய் மாறுவதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இவ்விடத்தில், சூத்திரப் பொருளையும் ஒப்பு நோக்கினால் பேராசிரியர் கொண்டுள்ள பாடம் நுட்பமுடையது என்பது தாமாகவே புலப்படும்.
கடியவும் படாஅ – கடியவும் பெறாஅ
வெண்பா உரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் கலித்தளையில் அடுத்தடுத்து முறைப்படி நிற்கும் தகைமையை உடையன என்ற கருத்தை,
“கலித்தளை மருங்கிற் கடியவும் பெறாஅ”
[தொல்-பொருள்-இளம்பூரணம்-332]
என வரும் செய்யுளியல் நூற்பா விளக்குகிறது.
ஆசிரியப்பாவில் கூறப்படவில்லையெனில், அது கலிப்பாவிலும் கூறப்படாது என்பதை உறுதிசெய்யும் வகையில் ‘கடியவும் படாஅ’ என்ற சொல்லை பேராசிரியர் பயன்படுத்தியுள்ளார். கடியவும் என்பதிலுள்ள மகர ஒற்று இறந்தது தழீஇய எச்சவும்மையாக நின்று ‘கடியவும் படாஅ’ என உரை செய்யப்பட்டுள்ளது.
இதே பொருளில் இளம்பூரணர் ‘கடியவும் பெறாஅ’ என்று குறிப்பிட்டிருந்தாலும், தளை என்பன எல்லாம் எழுத்தெண்ணிச் சீர் வகுக்கப்படும் கட்டளையடியையே குறிக்கும் என்ற அடிப்படையை நிலைநிறுத்திப் பாடம் வகுத்த பேராசிரியரின் உரைத்திறன் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஓரொரு வழியே – ஒரோவொரு வழியே
செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான சீரின் ஒட்டுமொத்த வகையினை,
“அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீ
ரொன்றுத லுடைய வோரோர் வழியே”
[தொல்-பொருள்-பேராசிரியம் – 343]
என்ற நூற்பா விளக்குகிறது. இதில் “ஒரோவொரு” என இளம்பூரணரும், “ஓரொரு” எனப் பேராசிரியரும் பாடங்கொண்டுள்ளனர். இளம்பூரணரைப் போன்று ஒருவழி என்று மட்டும் உரைக்காமல், ‘ஓரொருவழி’ எனப் பேராசிரியர் சுட்டி உரைத்திருப்பதால் பத்து வஞ்சியுரிச்சீரும் ஆசிரியப்பாவில் மயங்கி வரும் இயல்புடையது என்பது தெளிவாகிறது. எனவே, பேராசிரியரின் பாடத்தை பின்பற்றி ஆய்வது சீரின் வகைமை குறித்த தெளிவான சிந்தனைக்கு வித்திடுவது குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும்.
நேர்நிலை வஞ்சி – நேர்நிறை வஞ்சி
வஞ்சியுரிச் சீருக்குரிய எழுத்தின் வரையறையைக் குறிப்பிடும்,
“சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது
நேர்நிறை வஞ்சிக் காறும் ஆகும்” [தொல்-பொருள்-இளம்பூரணம்-349]
என்ற சூத்திரம் நேரீற்றுச் சீர்கள் அனைத்திலும் எழுத்துக்கள் நிற்கக் கூடிய நிலை ஐந்தெழுத்தை விட அதிகமாகப் பயின்று வராது என்பதையும், நிரையினை இறுதியாகக் கொண்டு வஞ்சியுரிச்சீர் வந்தால் அது ஆறெழுத்தினைப் பெறும் என்பதையும் விளக்குகிறது. மேற்காணும் நூற்பாவின் இரண்டாவது அடியில் வந்துள்ள நேர்நிறை என்பதையே இளம்பூரணர் பாடமாகக் கொண்டுள்ளார்.
பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் இரண்டு அடிகளால் அமையப் பெற்ற இச்சூத்திரத்தின் முதலடியை ஒரு சூத்திரமாகவும், இரண்டாவது அடியை அதற்கடுத்த சூத்திரமாகவும் பிரித்து நேர்நிறைக்குப் பதிலாக நேர்நிலை எனப் பாடவேறுபாடு காட்டியுள்ளனர்.
இளம்பூரணர் ஐந்தெழுத்தினைக் கொண்டு அதற்கு அதிகமாகாமல் வரக்கூடியவை நேரீற்றுச் சீர்கள் எனவும், ஆறு எழுத்தினைக் கொண்டவை நிரைவஞ்சி எனவும் இரு தொடர்களாக இணைத்துப் பொருள்கொண்டு ‘நேர்நிறை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சூத்திரத்தில் குறிப்பிடப் பெறும் வஞ்சியுரிச்சீர் இரண்டு சீர்களால் வருவதால் அதனை ‘சமநிலை வஞ்சி’ எனப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவது சமநிலையைக் குறித்து நிற்கிறது. இளம்பூரணரும், பேராசிரியரும் அவரவர் வகுத்துக் கொண்ட சூத்திர அடிகளுக்கு ஏற்ப அதன் பொருளையும், பாடத்தையும் மாறுபடக் குறிப்பிட்டுள்ள பாங்கு கூர்ந்து நோக்குவதற்குரியது.
குறிப்பிடத்தக்க பாட வேறுபாடுகள்:
முடிவுரை:
பேராசிரியர் பாடபேதம் சுட்டும்போது பிற உரையாசிரியர்களின் கருத்துக்களை எடுத்துக்காட்டித் தம் கருத்தை நிறுவுவது அவரின் தெளிந்த நோக்கை வெளிப்படுத்துகிறது. செய்யுளியலில் மட்டும் பேராசிரியர் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட பாடபேதங்களைச் சுட்டியுள்ளார். இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள அவ்வகைச் சில வேறுபாடுகள் இலக்கியப் பயிற்சிக்கு நல்லதோர் வழிகாட்டியாய் அமைவதோடு, செய்யுள் யாப்பதைக் கசடறக் கற்றுத் தெளிவுற விளக்கும் திறனாய்வாளர் பேராசிரியர் என்பதையும் நிறுவுகிறது.
*****
துணைநின்ற நூல்கள்
1) கணேசையர் [ப.ஆ], தொல்காப்பியம், பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. இரண்டாம் பதிப்பு – 2007.
2) இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், பொருளதிகாரம் பகுதி-3, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2001.
3) இளங்குமரன், இரா., உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம், அப்பர் அச்சகம், சென்னை, 1971.
*****
கட்டுரையாசிரியர் – உதவிப் பேராசிரியர்,
தமிழ் உயராய்வுத்துறை,
சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி,
மண்ணச்சநல்லூர்,
திருச்சி.
மன்னுபுகழ்க் காவிரி யாலெங்கள் நிலமொடு
====நன்செய் பயிர்களும் தழைத்ததொரு காலமாம்..!
தன்னிஷ்டம்போல் தமிழகமெங்கும் ஓடிய அது
====தண்ணீரின்றி வற்றியே தரையிலின்று குறுகியது..!
அன்றாடம் அலைததும்பும் அகண்ட காவிரிதான்
====இன்றும் வறண்ட காவிரியெனக் காட்சிதருகிறது..!
என்னவென இன்றதன் நிலையைச் சொல்வேன்
====என் நினைவலையில் நதிக்கரையே நிழலாடுது..!
என்னை மறப்பேன்! நதியில் அமிழும்போது
====எழுப்புமே கூழாங்கற்களென் நகவிரலை நெருடி..!
கன்னல் தமிழில் பாடிக்கொண்டே நீந்தும்போது
====கெண்டைமீனுமென் காலினழுக்கை நக்கி நீக்கும்..!
பொன்னிற மாலையில் நதிக்கரை மணலிலென்
====பொங்கும் நினைவைக் கவிதை யாக்கினேனின்று..!
என்னதான் நாமும் அறிவியலால் வளர்ந்தாலும்
====இயங்குமுயிர்க்கு நீர்தேவை! அது நதியிலில்லை..!
மன்னாவுலகில் மற்றவர் மெச்சிய பாரதத்தில்
====இன்னமும் வற்றாதஜீவ நதிகளுண்டு நீர்அறிவீர்.!
தென்னரங்கம் சூழவரும் காவிரிக் குழந்தையை
====திவ்யநதி கங்கைத் தாயுடனிணைத்து வைப்பீர்.!
தன்னிடம் தேவைக்கதிக மிருப்பதை..தானமாகத்
====தந்தருளும் மனநிலையை நதிமூலம் எழவைப்பீர்.!
அன்னமும் நீரும் இல்லையெனில் அதற்கொரு
====அர்த்தம் இராதெனும் உண்மையை நீரேற்பீரே.!
=========================================================
நன்றி:: தினமணி வெளியீடு:: 16-04-2018
நன்றி படம்:: கூகிள் இமேஜ்

கண்ணன் ஆடியதால் இந்த ஆட்டத்தின் பெயர் ‘’கண்ணாம்மூச்சி’’….!
—————————————————————————————————————————-
”கோபியர் கோர்த்திடும் கைபிருந்தா காட்டுக்குள்(பிருந்தா வனத்துள்….!)
பேபியாய்க் கண்ணமால் பூந்துவந்து -ஹாபியாய்
ஆடுறார் ஐபிஎல் அதோனி நவாபாக(ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம் கட்ட இடமளித்தவர்)
பாடுறார்உம் மாச்சிவெண் பா’’….கிரேசி மோகன்….!
-மேகலா இராமமூர்த்தி
ஐந்து திரிகளிட்டு அழகாய் ஏற்றிய குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. மோகன்தாஸ். இவ்வெழிற் படத்துக்குக் கவிதையெழுதும் வாய்ப்பை கவிஞர்கட்கு வழங்கியிருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!
ஐம்பூதங்களில் மனிதரை மருட்டும் இருட்டை விரட்டி வெளிச்சமூட்டுவது தீயெனும் ஒளியே ஆகும். கீழே இழியாது மேல்நோக்கி நிற்கும் இயல்பே அதன் தனிச்சிறப்பு எனலாம். அதுபோல் மனிதரும் எத்தகு சூழலிலும் நிலைதுவளாது தன்னம்பிக்கையின் கரம்பற்றி உரத்தோடு நிமிர்ந்திருந்தால் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கலாம்!
இனி, முத்துப்போல் எரியும் குத்துவிளக்கைத் தம் கவிதையில் ஏற்றிப் போற்றக் கவிஞர்கள் அணிவகுக்கிறார்கள்!
”மணல்விளக்காம் காவிரியில் நெய்யாய் நீர் வந்ததால் இதுவரை உயிர்வளர்த்தோம்; இப்போதோ தீர்ப்புகள் நமக்குத் தீராத வேதனையைத் தருவதால் நிலைகுலைந்தோம். இயற்கை ஏற்றிவைத்த காவிரி விளக்கைக் காக்கப் போராடுவோம்” என்று அறைகூவல் விடுக்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.
காவிரி விளக்கு!
இயற்கையது ஏற்றி வைத்த
மணல் விளக்காம் காவிரியில்
நெய்யாகநீர் நெடுக ஓடிவர
எரிந்து வந்த வெளிச்சத்தினால்
இதுவரைக்கும்உயிர்வளர்த்தோம்!
இப்போது வந்த தீர்ப்பதினால்
ஏதோ கொஞ்சம் நிம்மதியுற்றோம்!
நந்தாசுடராக அணையாமலிருந்து
காத்ததுபோல் இனி எப்போதும்
தப்பாமல் காக்குமென நம்பியபின்
மேலாண்மை அமைத்திடாமல்
இழுத்தடிக்கும் போக்கதினால்
ஐந்துதிரிகளிலும் பிரகாசம் தந்த
ஐமுகத் தீவெளிச்சம் குறைகின்ற
ஐயம் …நம்நெஞ்சில் கவலைதந்து
போராட்டக்களம் புகுந்து விட்டோம்!!
ஆனாலும் இதுவரைக்கும்எந்தவித
ஆதாயமும் கிடைக்கின்ற சூழ்நிலை
அகப்படாமல் ஆலாய்ப் பறக்கின்றோம்!
துறைதோறும் வளர்ந்திட்டாலும்
குறைவந்து குடிதண்ணீருக்குக்கூட
இறைஞ்சும்நிலைஏற்பட்டிருப்பதினால்
இனிநம் எதிர்காலம் இனித்திடுமா??
எழுவோம்!!ஏற்றியதீபம்காப்போம்..!!!
*****
”மணவிழாவில் சுடர்விடும் இந்தக் குத்துவிளக்கு, தத்துவப் பொருளாய் ஒளிசிந்தி, மணமக்களை வாழ்த்திடும் பந்தலிலே” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
வாழ்த்தும் விளக்கு…
குத்து விளக்கின் ஒளியினிலே
கல்வி கற்ற பெரியோர்முன்,
குத்து விளக்காம் மணமகளின்
குடும்பம் போற்றும் மணவிழாவில்,
தத்துவப் பொருளாய் ஒளிதந்திடும்
தன்மை கொண்ட விளக்கதுவும்,
நித்தம் வாழ மணமக்களை
நிறைவாய் வாழ்த்திடும் பந்தலிலே…!
*****
எத்துணைப் பெரிய விழாவாக இருந்தாலும் வனிதையர் வளைகுலுங்க, முத்துச்சுடர் சிந்தும் குத்துவிளக்கினை ஏற்றாவிட்டால் ஏது சிறப்பு என்று வினவுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
குத்துவிளக்கேற்றித் தொடங்கிய விழா..!
பத்துப்பேர் கூடுமிடத்தில் பந்தலும் மேடையும்
……….பார்த்துப் பார்த்துப் போடப் பட்டிருக்குமாம்..!
கொத்துக் கொத்தாய் மலர்கள் தொங்குமாம்
……….கூடியிருப்போரெலாம் மகிழ்ந்தே தோன்றுவர்..!
பொத்தாம் பொதுவாக அதுவோர் விழாவாம்
……….பகட்டுக்கு அங்கே பஞ்சமில்லை என்றாலும்..!
குத்துவிளக்கொன்று அங்கே ஏத்தா விட்டால்
……….கொண்டாட்டத் திற்கங்கே என்ன மதிப்பாம்..!
எத்துணை விழாக்கள் அமைத்தாலும் அவை
……….எல்லாவற்றுக்கும் மேலே ஒருமேடை தேவை..!
ஒத்துழைப்பு அங்கே இல்லாவிட்டால் மேடை
……….ஒன்றுக்கும் உதவாத செயல் போலாகிவிடும்..!
அத்துணை பேரும் விழிவைத்துக் காக்கவே
……….அனைவருக்கு மொரு தலைவரும் வருவார்..!
புத்தாடை உடுத்திய புதுத் தோரணையோடு
……….குத்துவிளக் கேற்றியதைத் துவக்கி வைப்பார்..!
சித்திரப் பூப்போலேச் சிரிக்கின்ற சிங்காரிகள்
……….சீராக சப்தஒலி எழுப்பியே கைதட்டுவார்கள்..!
மத்தியில் நிற்பவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு
……….மலர்க் கொத்தைக் கொடுத்தபின் வாழ்த்துவர்..!
முத்திரை பதிப்பதுபோல் அனைவரும் தம்
……….முத்தான வாழ்த்தை யெலாமங்கே உதிர்ப்பார்..!
வித்தகராமவர் மனிதரில் மாணிக்க மென்றும்
……….வித்தியாசம் இல்லாத வரென்றும் முழங்குவர்..!
*****
தெண்ணீரேந்திய திரள்கால் பாத்திரம் பொலிய, கதலி இலையில் நல்லணிச் சேற்றம் நறுநாற்றம் வீச, பஞ்சுத் திரியில் எரியும் பஞ்சமுகப் பட்டொளிக் கிரணத்தின் தோற்றத்தை நம் உளங்கவரும் வகையில் எழிலாய் விவரிக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.
பாத்தியன்ன தாழி ஊற்றம், கருதுகள் பொழிந்த பொன்னொளி தீர்த்தம்
மத்தியன்ன நெடிது பாயும் பஞ்சுத் திரியின் பிணை வரிப்படிவம்
கத்தியன்ன கூர்முனை பணிந்து நடுநாயகமாய் நல்லொளிச் சிரசம்
சுத்தியன்ன சுடரொளி ஏற்கும் பஞ்சமுகத்தின் பட்டொளிக்கிரணம்
ஒத்தியன்ன ஒழுங்கு செய்து நேர்த்தி விளைக்கும் நல்லுடல் தண்டம்
நெத்தியன்ன தெங்கு சுமக்கும் பசுங்குடை வார்த்தத் தங்கக் குடலம்
ஆத்தியன்ன வெண்ணீர்க்கலயம், மஞ்சள் சொரிந்த மற்றொரு கலயம்
பத்தியன்ன மறைமுறைபோற்றலில் தெண்ணீரேந்திய திரள்கால் பாத்திரம்
சத்தியன்ன ஓதனம் சாற்றும் கதலி இலையிலோர் நல்லணிச் சேற்றம்
முத்தியன்ன முழுமுனை ஏற்றம்! மோனவரப்பில் மங்கலத் தோற்றம்!
எத்தியன்ன அளவு அறிந்து போகம் காக்கும் நல்லெழில் போதகம்!
*****
தங்கநிறப் பதுமையாய்க் காட்சிநல்கும் குத்துவிளக்கில் பஞ்சுத் திரியே கலைமகள்; பரவும் ஒளியே அலைமகள், ஒளிரும் ஐந்து தீபங்களும் ஐம்புலன்கள் என்று சாத்திர விளக்கத்தை நேர்த்தியாய்ச் செப்புகிறார் திரு. ஆ. செந்தில் குமார்.
குத்துவிளக்கெனும் இறைவடிவம்…
தங்கநிறப் பதுமையென விளங்குகின்ற விளக்கு..
மங்களங்கள் நிறைவேறச் செய்கின்ற விளக்கு..
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் வடிவாய்..
மங்கையர் பூச்சொரிந்து வழிபடுகின்ற விளக்கு…!
அங்கத்தின் உச்சியில் கலசமொன் றிருக்கும்..
அகல்போன்ற அமைப்பில் ஐந்துமுகம் இருக்கும்..
அடிபாகப்பீடம் அலர்ந்த தாமரை போன்றிருக்கும்…
அழகிய வோர் தண்டு இவையிரண்டையும் இணைக்கும்…!
அடியிடைநுனியெனும் பாகங்கள் முத்தொழில் புரிந்திடும் தேவர்கள்..
அகலெனும் அமைப்பின் தீபங்கள் நமதுடற்கூறின் ஐம்புலன்கள்..
பஞ்சுத்திரியே கலைமகளாம் பரவுமொளியே அலைமகளாம்..
நெஞ்சத்தினுள்ளே ஒளிவடிவாய் இருக்குமுருவே இத்திருவிளக்காம்…!
*****
விளக்கை வைத்து நல்ல தத்துவ விளக்கங்களை, அதன் வாழ்வியல் பயன்பாடுகளைச் சத்தான கவிதைகளாய் வடித்துத் தந்திருக்கும் வித்தகக் கவிஞர்களை மெத்தப் பாராட்டுகின்றேன்.
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது இனி…
தீபம்
ஆதியும் அந்தமும்
காணவியலா ஒளிப்பிழம்பினுள்
ஆண்டவனும் ஆதவனும்,
அவனி மாந்தரின் அறியாமை இருளகற்றும் ஒளியாக
அவதாரமும் ஆன்றோரும்,
புறஉலகை அறியும் காட்சியும் ஜோதியாலே…….
அகவுணர்வின் தரிசனமும் ஜோதியாலே………
விளக்கின் ஒளியில் பேதமில்லை
விளக்கம் புரிந்தால் மோதலில்லை
எந்த வடிவ விளக்கானாலும்
நெய்யும் திரியும் இணைந்தே ஒளிரும்
ஒருமித்த நிலையில் ஒளிரும் ஜோதி
நீ அறியவே விளக்கிடும் விளக்கு,
வடிவத்தில் இல்லை ஒளியின் கூர்மை
வைக்கும் இடத்திலும் இல்லை ஒளியின் கூர்மை
ஏற்றும் கரத்திலும் இல்லை ஒளியின் கூர்மை
ஏற்றத்தாழ்விலாமை போதிப்பதே ஒளியின் மேன்மை,
ஐந்து முகமும் ஒளியின் தீட்சண்யம்
ஐந்தின் ஒளியேற்றலில் சாத்திர விதிகளாம்,
ஒன்றாம் முகத்தில் நினைத்த காரியம் கைகூடுமாம்
இரண்டாம் முகத்தில் குடும்ப ஒற்றுமை ஓங்குமாம்
மூன்றாம் முகத்தில் புத்திர விருத்தி கிட்டுமாம்
நான்காம் முகத்தில் சர்வபீடை நிவர்த்தியாம்
ஐந்தாம் முகத்தில் ஐஸ்வர்யம் கூட, சகலமும் கை கூட
சாத்திர சூத்திரம் ஒளியின் பலனை ஓதுவது போல
ஐம்புலனையும் ஆறாம் அறிவால் ஒளியூட்டிடு
ஒவ்வொரு புலனும் இருண்மை கிழிக்கட்டும்
ஒளியாய்ப் புலனைப் பட்டை தீட்டிடு
உன்னுள் எரியும் உள்ளொளி கண்டிடு
ஆன்ம தரினத்தால் அமைதி கொண்டிடு!
ஆதியும் அந்தமுமிலாச் சோதிப் பிழம்பாய்த் திகழும் அந்த ஆண்டவனும் ஆதவனும்போல, அகிலத்து மாந்தரின் அறியாமை இருளகற்றும் அறிவொளியாய்த் திகழ்வோர் அவதாரங்களும் சான்றோரும். எங்கும் பேதமின்றி ஒளி பரப்பும் விளக்கு, அனைவரும் சமம் எனும் அரிய உண்மையை அவனிக்கு விளக்கி நிற்கின்றது.
ஐந்து முகங்களிலும் ஒளிசிந்தும் இவ்விளக்கைப்போல் நாமும் ஐம்புலன்களிலும் அறிவு கொளுத்தி ஆன்ம சோதியைக் கண்டிடவேண்டும் என்று உள்ளொளி பெருக்க உபாயம் சொல்லிடும் இக்கவிதையை இயற்றிய திருமிகு. மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் பெருமையைப் பெறுகிறார். அவருக்கு என் பாராட்டு!
எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா
நீரின்றி வாடுகின்றார்
நீண்டநேரம் நிற்கின்றார்
பார்மீது உழைப்பவர்கள்
பஞ்சமதில் உழலுகிறார்
அவரைவைத்து சொத்துச்சேர்ப்பார்
அடுக்குமனை கட்டுகிறார்
அடுத்தவேளை உணவுக்கு
அலைந்திடுவார் உழைப்பவர்கள் !
நிலமீது காணுகின்ற
நிட்டூரம் ஒழிவதற்கு
நீண்டதொரு போராட்டம்
நெடுநாளாய் நடந்ததுவே
அதன்விளைவாய் உழைப்பவரை
அனைவருமே கண்டார்கள்
அத்தினமே மேதினமாய்
ஆகியதே உலகமெலாம் !
உழைப்பவரை வாழவைப்போம்
ஊதியத்தை உயர்த்திடுவோம்
விலைகுறைவாய் பலவற்றை
விரைவாகக் கொடுத்திடுவோம்
நலம்பயக்கும் திட்டங்கள்
நாங்கள் செய்விருக்கின்றோம்
நம்புங்கள் எனவுரைத்து
நம்பவைப்பார் அரசியலார் !
உரைகேட்ட உழைப்பாளி
உண்மையென நம்பிடுவான்
தலைவாநீ வாழ்கவென்று
தான்குரலை ஒலித்திடுவான்
உழைப்பாளி அறியாமை
உரமாக்கித் தலைமையெலாம்
உல்லாசம் அனுபவித்து
உவப்புடனே இருந்திடுவார் !
மேதினத்தில் வெளிச்சம்வர
வேண்டிநிற்போம் வாருங்கள்
மேதினத்தில் உழைப்பாரை
உயர்த்திநிற்போம் வாருங்கள்
பொய்யுரைக்கும் கூட்டத்தார்
தனைத்தவிர்ப்போம் வாருங்கள்
மெய்யாக மேதினத்தை
ஆக்கிடுவோம் வாருங்கள் !
ரா.பார்த்தசாரதி
கடவுள் எனும் முதலாளி, கண்டு எடுத்த விவசாயி எனும் தொழிலாளி
வீதியை சுத்தம் செய்யும் துப்புரவாளர் எனும் தொழிலாளி
பூங்காவை சுத்தம் செய்யும் தோட்டக்காரன் எனும் தொழிலாளி
சொல்லை வைத்து விளையாடும் கவிஞ்சன் எனும் தொழிலாளி !
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம்
ஏரோட்டம் , நின்றால் , இங்கு காரோட்டம் நிற்கும்
விவசாயின் இறக்கம் , நாட்டில் ஏற்படும் கலக்கம் !
துப்புரவாளர்கள் நாட்டின் சுத்தத்திற்காக பாடுபடுகின்றான்
பூந்தோட்ட தோட்டக்காரன் பூங்காவை அழகுற செய்கின்றான்
அநீதிகள் நடப்பதை கவிஞ்சர்கள் எடுத்துரைக்க மறுக்கின்றான்
ஆள்பவர்களும்,,அரசியல்வாதிகளும், தன்னையே காத்துக்கொள்கிறான்!
தாய்தந்தையர், பட்ட கடனுக்கு பிள்ளைகள் கொத்தடிமை
பலமணி நேரம் வேலை, படிப்பதற்கு நேரமில்லா நிலைமை
தீ பெட்டி , பட்டாசு தொழிலில் சிறுவர்கள் கடன்பட்ட கொத்தடிமைகள்
இன்றும் தீர்க்கப்படாத அடிமைபட்டு கல்வியறிவு இல்லா சிறுவர்கள் !
வியர்வினாலே மேனி கரைந்து வெயிலாலே முகம் கறுத்து
பசியாலே பலமும் குறைந்து, கேள்வி குறிபோல் முதுகு வளைந்து,
துயரமடைந்த கொத்தடிமைகள் இருக்கும்போது சந்தோஷ நாள் ஏது ?
தொழிலாளர்களின் மதிப்பை உணர்ந்து நலம்பெற செய்வது யாரு?
தொழிலாளியின் மதிப்பினை கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தான்
இன்றைய முதலாளிகள் அதனை கவலையின்றி மறுத்துரைத்தான்
பேருக்காக தொழிலாளர் தினம் நாட்டில் கொண்டாடப்படுகின்றதே
தொழிலாளர்களை அடிமையாக முதலாளி மனம் நினைக்குதே !
உலகை ஆளும் உழைக்கும் கரங்களே, ஒன்று கூடுங்களே
இந்த நாடு முழுதும் மலரவேண்டும் புரட்சி மலர்களே !
அடிமை எனும் மடமையை நீக்கி, உரிமையை நிலைநாட்டுங்கள்
தொழிலாளர் தினத்தை எண்ணியாவது வளம்பெற நினைத்திடுங்கள் !
-நிலவளம் கு.கதிரவன்
முன்னுரை:
இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி. நமது வாழ்க்கையே இலக்கியம். அவ்வகையில் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர். தமிழ்மொழியானது இன்றும் நிலைத்து நீடித்திருப்பதற்குக் காரணம், அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டே வருவதால் வழக்கிலும், வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து செம்மொழியாக மிளிர்ந்து நன்னடைபோட்டு வருகிறது.
தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிக ஏற்றமுண்டு. இரண்டாம் நுற்றாண்டுக் காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வகையில் சிலம்பில் காணப்படும் வாழ்க்கை நெறிகளில் முக்கியமான அம்சங்களை இக்கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.
சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்: –
”நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்று பாரதி கூறியதுபோல் சிலப்பதிகாரமானது தமிழினத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது. தமிழர்களின் பண்பாடுகளை மிகத் தெளிவாகக் காட்டும் நூல் சிலப்பதிகாரமாகும். இதற்குப் பிறகு நமது பண்பாட்டினை படம்பிடித்துக் காட்டும் பெருங்காப்பியம் இதுவரை தோன்றவில்லை எனலாம். சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், துறவி கவுந்தியடிகள் போன்றோர் வாயிலாக பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை நயம்பட உரைக்கிறார் இளங்கோவடிகள்.
பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்: –
கண்ணகியின் கற்புத் திறத்தை கற்புடை மகளிர் என இரண்டு சொற்களில் கூறாமல்
”பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்
கொண்ட தொழுநர் உறுகுறை தாங்குறுஉம்
பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டு கொல் ” ( ஊர்சூழ் வரி 51 – 53 )
அதாவது கணவன் செய்யும் துன்பங்களைத் தாங்குபவரே கற்புடைப் பெண்டிர். கணவன் துன்பங்களுள் பெண்களுக்கு மிகக் கொடியதாய் இருப்பது அவனது போற்றா ஒழுக்கமான பரத்தமையே. என்றாலும் கோவலனின் செய்கைகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு ஆறியக் கற்பு (அ) அறக் கற்பு மற்றும் சீறிய கற்பு (அ) மறக் கற்பு என கண்ணகி உயர்ந்து இருந்தாள்.
கண்ணகி புகார் நகர வாழ்க்கையில் கணவன் தனக்கு செய்யும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு ஆற்றியிருந்தாள். இதுவே ஆறிய கற்பொழுக்கம். மதுரை நகரில் மன்னனிடம் நீதிகேட்கச் செல்லும்போது தனது சீறிய கற்பொழுக்கமான மறக் கற்பை வெளிப்படுத்தினாள்.
மதுரை செல்லும் வழியில் கண்ணகியிடம் கோவலன் கழிவிரக்கமாகத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறான். வறுமொழியாளருடனும், புதிய பரத்தையருடனும் திரிந்து கெட்டேன், அறிஞர் பெருமக்கள் அறிவுரைகள் மறந்தேன். எனக்கு நன்னெறியே அமையாது. நன்மையே வாய்க்காது. என் பெற்றோர் இருவருக்கும் அவர்கள் முதிய பருவத்தில் பணிவிடை செய்ய வேண்டும். அதை மறந்துவிட்டேன். பேரறிவு படைத்த உனக்கும் தீமை செய்துவிட்டேன். எழுக என்றேன். மறுப்புக் கூறாமல் என்னுடன் வந்துவிட்டாய் என புலம்பினான்.
ஆனால் கண்ணகி, கோவலன் தன்னைவிட்டு பிரிந்த துயரை எடுத்துக் கூறவில்லை. மாறாக,
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (கொலைக்களக் காதை 71-73)
என்று அறம் செய்வோர்க்கு உதவுதல், அந்தண மரபினரைப் போற்றுதல், துறவிகளை எதிர்கொண்டு அவர்களுக்கு வேண்டுவன செய்தல், விருந்தினரைப் பாதுகாத்தல் என்ற நான்கு அறங்களை நான் தனித்திருந்ததால் செய்ய இயலவில்லை என்று கூறுகிறாள். மேலும் கோவலனின் பெற்றோர்கள் அடைந்த வருத்தத்தையும், உன் பெற்றோர்கள் வந்து விசாரித்தபோது விசனத்தைக் காட்டாமல் வியர்த்தமாகச் சிரித்தேன் என்றும், நீர் போற்றா ஒழுக்கம் விரும்பினீர். அது உங்கள் உரிமை. அதனை மறுத்து உரைப்பது உகந்தது அன்று. மேலும் பெண்களுக்கு அழகு எதிர் பேசாதிருத்தல் என்பதையும் கூறுகிறாள்.
தவிர, கண்ணகியின் பார்ப்பனத் தோழியான தேவந்தி காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவரைக் கூடி இன்புற்று, மறுமையிலும் போக பூமியிற் பிறந்து, கணவரைப் பிரியாதிருப்பர். எனவே நாமும் ஒருநாள் நீராடுவோமா? எனக் கேட்க, அதற்குக் கண்ணகி அது பெருமை தருவதன்று என மறுக்கிறாள். இதுவும் கண்ணகியின் கற்புக் கோட்பாட்டுக்கு நல்ல உதாரணமாகும்.
அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்:-
கொலை செய்யப்பட்ட கோவலனின் செய்தியைக் கேட்ட கண்ணகி, வீறு கொண்டு நீதி கேட்டு அரச சபைக்குச் சென்றாள். பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவியுடைய சிலம்பு, என் சிலம்போடு ஒத்திருப்பினும், அரசியின் காற்சிலம்பு முத்துக்கள் எனக் கூறுவதைவிட, தன்னுடையது மாணிக்கப் பரல்கள் கொண்டது எனத் தனது வாதத்தின் மூலம் நிரூபித்தாள். அரசன் உடைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனது அவசரமான முந்தைய தீர்ப்பு தவறு என்பதை உணர்ந்து, அறநெறி தவறியது தன் மானத்துக்கு ஊறு என உணர்ந்து உடனே தன் உயிர்துறந்து அறத்தை நிலை நிறுத்தினான். இதில் இரண்டு செய்திகள். சிலம்பு என்ற தடயத்தோடு ஒப்பிட்டு முடிவெடுத்ததால் இன்றைய தடய அறிவியல் நுட்பத்திற்கு அன்றே அச்சாரமிட்டவள் கண்ணகியே எனலாம். தவிரவும் வழக்கு, மேல் முறையீடு என்ற இன்றைய நீதிபரிபாலனத்திற்கு காரணமும் கண்ணகியே என்பதை உணரலாம்.
ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்:-
கோவலனைப் பார்த்து மாடலன் என்பவன் கூறுகிறான். ” இம்மைச் செய்தன யானறி நல்வினை, உம்மைப் பயன் கொல் ”( அடைக்கலக் காதை -90-94 ) அதாவது நான் பார்த்தவரையில் இப்பிறப்பில் நானறிந்தவரை நீ நன்மையைத்தான் செய்திருக்கிறாய். பின்னர் உனக்கு ஏன் இந்நிலை. ஒரு வேளை முற்பிறவியின் பயனாக இருக்குமோ? என்று கேட்கிறான். அதாவது ஊழ்வினைக்கான பயன் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி. கோவலன் முற்பிறவியில் ஒருவன் கொலை செய்யப்பட காரணமாக இருந்துள்ளான். அப்பயனே அவன் இப்பிறப்பில் கொலை செய்யப்படக் காரணம் என்பதே இதன் தாத்பர்யம்.
கவுந்தியடிகள் வடக்கிருத்தல்:-
வடக்கிருத்தல் என்பதைச் சமணர்கள் சல்லேகனை என்று கூறுவார்கள். வடக்குப் பக்கமாக அமர்ந்து உணவு உண்ணாமல் இருந்து இறப்பது வடக்கிருத்தல் எனப்படும். அதாவது பொறுக்கமுடியாத மனவேதனையைத் தருகின்றபோது வடக்கிருந்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை. சமணர் தவிர்த்து சங்க காலத் தமிழர்களிடையேயும் இத்தகைய வழக்கம் இருந்தது புறநானுறு வழியாக அறிய முடிகிறது. உறையூரை ஆண்ட கோப்பெருஞ்சோழன், தமது வாரிசுகளின் கலகத்தால் வடக்கிருந்து உயிர்விட்டான். சோழனின் பிரிவைத் தாங்காமல் அவனது நண்பர் பிசிராந்தையார், மற்றொரு நண்பர் பொத்தியார் ஆகியோரும் வடக்கிருந்து உயிர்விட்டனர். சிறுபஞ்ச மூலம் என்னும் நூலிலும் வடக்கிருக்கும் குறிப்பு காணப்படுகிறது.
வலியழிந்தார் மூத்தார்வடக்கிருந்தார் நோயின்
நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்………….(சிறுபஞ்ச மூலம்)
அதே வகையில், துறவியாக இருந்தாலும் கோவலன் கண்ணகி இருவர் மீதும் மாறாப் பற்று வைத்திருந்த கவுந்தியடிகள் அவர்களின் பிரிவினால் பெரிதும் மனத் துயர் அடைந்து உயிர்விட்டது சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்தில் மானுடவியல் மற்றும் நாட்டாரியல் கோட்பாடுகள் :-
காப்பியத்தில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகளால் அந்தணன், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகையானவர்களிலிருந்தும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களைப் பிரித்து, அதற்குரிய தெய்வங்களையும், மக்கள் வழிபடுவதையும் கூறியுள்ளார்.
”தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிமை” (இந்திரவிழவூரெடுத்த காதை – 59-67 ) என்ற வரியிலிருந்து காவல் தெய்வ வழிபாடு உள்ளதைக் காணமுடிகிறது. தவிரவும் இக் காவல் தெய்வத்தின் முன் வில், வேல், வாள், ஈட்டி படையலிட்டு வீரர்கள் வணங்குவதிலிருந்து சிலப்பதிகாரத்தில் காவல் தெய்வ வழிபாடு உள்ளதையும் அறிய முடிகிறது.
ஐயை கோட்டம் எனக் கொற்றவை வழிபாடு பற்றியும், சாலினி என்ற பெண்மீது தெய்வமேறி கண்ணகியை புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மக்கள் சாமியாடுபவர்கள், அவர்கள் கூறும் வார்த்தைகள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என அறிய முடிகிறது. மதுரை செல்லும் வழியில் ஆய்ச்சியரோடு தங்கியிருந்த கண்ணகிமுன் ஆய்ச்சியர் குரவைக் கூத்தை நடித்துக் காண்பித்துள்ளனர்.
தவிரவும் சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலம் எனலாம். அரங்கேற்று காதையில் ஆடல் கலைக் களஞ்சியமாக உள்ளதை அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் ஆடலாசிரியன், பாடல் ஆசிரியன், மத்தளம் கொட்டுவோன், யாழ் இசைப்பவன், ஆடும் பெண் ஆகியோருக்கு உரிய தகுதிகள், ஓர் ஆடல் அரங்கத்திற்குத் தேவையான நீளம், அகலம், உயரம் ஆகியவை பற்றி மிக நுட்பமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு நடைபெற்றது வியப்பைத் தருகிறது.
முடிவுரை :-
மற்றைய தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் போலல்லாமல், இலக்கியக் கொள்கைத் தீர்மானங்களுடன், சொல்லவந்த கதையை எந்தெந்தக் களத்தில் அது நிகழ்கிறதோ, அக் களத்தின் புவியியல் பின்னணியிலும், அக்களத்திற்குரியப் பாரம்பரிய கலை வடிவங்களைப் புலப்படுத்தும் கையேட்டு ஆவணமாக ஆக்கிக் கூறும் படைப்பு சிலப்பதிகாரம் என்றால் அது மிகையாகாது.
துணை நின்ற நுல்கள் : –
1. சிலப்பதிகாரம் – அரும்பதவுரை – அடியார்க்கு நல்லாருரை,
டாக்டர் வே.சாமிநாதையர், கபீர் அச்சுக் கூடம், சென்னை.
2. Tamil Heritage Group அமைப்பில் திரு.இந்திராபார்த்தசாரதி அவர்கள் ஆற்றிய உரை.
3. சிலம்பின் கதை, – டாக்டர்.ரா.சீனிவாசன்., வெளியீடு – Mukil e-Publishing Pvt ltd.