Blog

  • படக்கவிதைப் போட்டி (159)

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?


    லோகேஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நிழலில் தேடிய நிஜம்..!

     பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

     

     

    சுழலும் புவியுலகில் இறைவன் நமக்களித்தநற்

    ……….சூழல்தாம் எத்தனை கோடியின்பம் அளிக்கிறது..!

    உழலும் மாந்தரினம் இவ்வுலகில் பெற்றபலவுள்

    ……….ஒன்று உயர்வானது!அதுநல் நண்பரமைவதாகும்..!

    குழலூதி மாயம்செய்வித்த மாமணி வண்ணனே

    ……….குசேலனனெனும் ஏழைக்கு உற்ற நண்பனானான்..!

    நிழலில்தேடிய நிஜமானது நேரில் வந்ததுபோல்

    ……….நிகரிலாக் கர்ணனைப் பெற்றான் துரியோதனன்..!

     

    குழவிக் கல்லிருந்தால் கூடவே அம்மியிருக்கும்

    ……….வாழ்விலதுபோல வகையான நண்பர் வேண்டும்..!

    உழப்பம் விளைவித்து உபத்திரவம் உண்டுசெயும்

    ……….உதவாத நண்பர்கள் ஒருசமயம் அமைவதுண்டு..!

    அழகாரத்தினால் நம்மகத்தைக் கவர்ந் தோர்கள்

    ……….அதில் இடம்பெறுதலைத் தவிர்த்தல் வேண்டும்..!

    உழவுத்தொழில் செய்பவன் ஒருவனே நம்மில்

    ……….உத்தம நண்பனாவான்!இதுவள்ளுவனின் வாக்கு..!

     

    அத்தகையநல் நண்பனையே நான் தேடுகிறேன்

    ……….ஆங்கென் அறிவில் வருபவராக எவருமில்லை..!

    எத்துணைநபர் வந்தாலும் ஏற்கும் மனமில்லை

    ……….ஏதேனும் குறைகண்டால் விலகி யோடிடுவார்..!

    உத்தம நண்பன் எனவொருவன் அமைவானா.?

    ……….உள்ளத்துள் உரை பவனாக அவனிருப்பானா?

    நித்தமும்.. நிழலில்தேடிய நிஜம்போல நானுமே

    ……….நீண்ட நாளாய்த் தேடுகிறேன்! கிட்டவில்லை..

     

    =====================================================

    நன்றி தினமணி வெளியீடு:: 08-04-2018

     

    நன்றி :: கூகிள் இமேஜ்

    Share
  • தப்புக்கணக்கு !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு குடும்பம் வந்துசேர்ந்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாய் வந்தார்கள். வேற்று நாட்டவராய் காணப்பட்டார்கள். எங்களுக்கு அயலில் குடும்பத்துடன் அவர்கள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களின் அயலில் இருந்தவர்களில் பாதிப்பேர் தனித்தே இருந்தார்கள். எப்ப வருவார்கள் எப்ப போவார்கள் என்றே தெரியாது.

     

    ஒருமாதம் ஒருவரும் அடுத்தமாதம் இன்னொருவருமாய் மாறி மாறி வருவார்கள். எங்களுக்கு நல்ல அயல் இல்லாதபடியால் நல்ல குடும்பங்கள் இருக்கும் பக்கமாக பார்த்து வீடு வாங்கவேண்டும் அல்லது வீடுமாற வேண்டும் என்னும் எண்ணம் மனத்தினினுள் புதைந்தே கிடந்தது. ஆனால் இந்த வாரம் எங்களின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் புதுக்குடும்பம் வந்தது எங்களின் அபிப்பிராயத்தைத் தள்ளிப் போட்டுவிட்டது.

     

    எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல சந்தோசம். பக்கத்தில் குடும்பமாய் வந்தபடியால் எல்லாவற்றுக்கும் நல்லதுதானே என்ற எண்ணமே ஏற்பட்டது. எனது மனைவி பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் பேசத்தொடங்கினாள். அந்தப் பெண்ணும் நன்றாகவே பேச்சைக் கொடுத்தாள். தாங்கள் வேலையின் நிமித்தம் இங்கு வந்ததாயும் பிள்ளைகளின் படிப்பும் இங்கு நல்லதாய் இருப்பதால் இந்த   இடத்தைத் தேர்ந்தெடுத்ததாயும் அவள் பேசியதாக மனைவி என்னிடம் கூறினாள்.

     

    ஒருநாள் என்னிடம் அந்தப் பெண் பேச்சுக் கொடுத்தாள். நல்ல ஆங்கிலத்தில் பேசினாள். நீங்கள் எந்த நாடு என்று கேட்டதற்கு வியட்நாம் என்று பதிலளித்தாள். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. வியட்நாமியர், சீனர்கள், ஆங்கிலம் பேசினால் விளங்குவது சற்றுக் கடினம். அவர்களின் உச்சரிப்பு நச்சரிப்பாய்த்தான் அமையும். அப்படியிருக்க இவள் எப்படி நல்ல ஆங்கிலத்தைப் பேசுகிறாளென்று என்னுள் வியந்து கொண்டேன். அவளின் குடும்பம் பற்றி விசாரித்தேன். தான் ஏழுவயதில் அவுஸ்திரேலியா வந்ததாயும் இங்குதான் படித்ததாயும் தனது கணவன் ஒரு சீனக்காரர் என்றும் சொன்னாள். அவள் இங்கு சின்னவளாய் இருந்து படித்த படியால்த்தான் நல்ல ஆங்கிலம் பேசமுடிந்தது என்பதை அப்பொழுது உணர்ந்துகொண்டேன். கணவன் தன்னைவிடப் படிப்புக் குறைந்தவன் என்றும் ஆனால் நல்ல குணமுள்ளவன் என்றும் அதனால்த்தான் அவனைத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினாள். தான் ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பதாகவும் தனது கணவன் பாண் போறணையில் வேலை செய்வதாகவும் தெரிவித்தாள்.  “நீங்கள் குடும்பத்துடன் இங்கு இருப்பது எங்களுக்குப் பெரிய திருப்தியும் மகிழ்ச்சியும்” என்று தெரிவித்தாள். நானும் முறுவலுடன் தலையாட்டி விட்டு வந்தேன்.

     

    கணவன் மாலை வேலைக்குப் போய் அதிகாலைதான் வருவான். அவள் காலையில் போய் மாலையில் வந்துவிடுவாள். பிள்ளைகளை அவளே பாடசாலைக்குக் கூட்டிச் செல்லுவாள். எங்கள் பிள்ளைகளும் அவர்களும் சேர்ந்து விளையாடுவார்கள். எங்கள் வீட்டு விசேசங்களுக்கு அவர்கள் வருவார்கள். நாங்களும் அவர்களின் விசேசங்களில் பங்குபற்றுவோம். உணவைப் பொறுத்தவரை வேறு பட்டாலும் உள்ளத்தால் இணைந்து நின்றோம். நல்லவொரு குடும்பம் அயலாக வந்ததை நாங்கள் அனைவரும் மனதார விரும்பினோம். அவள் நல்ல அழகான பெண். எடுப்பான மூக்கு. கவர்ச்சியான கண்கள். பார்ப்பதற்கு பளிச்சென்ற நிறம். கட்டான உடல்வாகு. மொத்தத்தில் பார்பவர்களைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அவளிடம் கொட்டிக்கி டந்தது.

     

    அதற்கு மாறாக அவள் கணவனிருந்தான். நிறம் குறைவு. சற்றுக் குட்டையான உயரம். சப்பை மூக்கு. ஆனால் மல்யுத்த வீரன்போல் உடலமைப்பு அழகுப் பதுமையும் அவனும் அன்புடன் குடும்பத்தில் இணைந்து பிள்ளைகளுடன் இருப்பதைப் பார்க்கும் பொழுது எங்களுக்கே உள்ளூர ஆச்சரியம்தான். பிள்ளைகள் தாயைப்போல இருந்ததால் வடிவாக இருந்தனர். அந்தக் குடும்பம் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவளின் கணவன் விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டில் நிற்பான். அப்பொழுதுதான் அவனைப் பார்க்க முடியும்.  அவனுடன் பேச முயன்றும் அவன் அதனைத் தவிர்த்தே நின்றான். அவனின் முகத்தில் சிரிப்பென்பதை மருந்துக்கும் காணவே முடியாது. ஆனால் வீடும் வேலையுமாகவே அவனிருக்கிறான் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்.

     

    அவளிடம் ஒருநாள் துணிவுடன் கேட்டே விட்டேன். ” உனது கணவன் பேசுவதை ஏன் தவிர்க்கிறான் ? முகத்தில் சிரிப்பையே காணவில்லையே ! குடிக்கிறானா ? ” அவள் சொன்னாள். அப்படி ஒன்றும் இல்லை. அவர் மிகவும் நல்லவர். அவர் சீனப் பெளத்தர். சமய நம்பிக்கை மிக்கவர். அவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசவராது. அதனால் உங்களுடன் பேச அவருக்குப் பயம். அவரின் சுபாபமே அப்படித்தான். சீன மொழியில் கவிதைகூட இயற்றுவார். நல்ல சீன மொழி எழுத்தாளரும் கூட. என்று அவள் கணவனைப் பற்றிக் கூறியதும் என்னால் அதனை நம்பவே முடியாமல் இருந்தது. “இவ்வளவு திறமைசாலியா இப்படி!” என வியந்து கொண்டேன்.

     

    ஐந்து வருடம் என்பது எப்படி ஓடியதோ தெரியவில்லை. எங்கள் பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும் பத்தாம் வக்குப்பில் படிக்க வந்துவிட்டார்கள். அடிக்கடி வந்து கதைக்கும் அவள் இப்போது கதைப்பது குறைந்து விட்டது. அவளின் கணவனின் நடமாட்டமும் கண்ணில் படவே இல்லை.அவள் மட்டும் காரில் போவாள் வருவாள். அவள் கணவனின் காரையும் காணவில்லை. அவன் வேலைக்குப் போய் வருவதாகவும் தெரியவில்லை. வாசலிலே கண்டவுடன் சிரித்த முகத்துடன் நிற்கும் அவள் சிந்தனையில்த்தான் காணும் பொழுதெல்லாம் இருந்தாள். கதைப்பதுகூடக் குறைந்துவிட்டது. கையை மட்டும் அசைத்துவிட்டுச் சென்றுவிடுவாள். அடிக்கடி பல ஆண்கள் மட்டும் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். கணவனைக் காணவில்லை. அவளின் முகமும் மாறிவிட்டது. புதியவர்கள் அடிக்கடி வருகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இப்படி நடப்பது எங்களை சிந்திக்க வைத்தது.

     

    அவள் புருசனைத் துரத்திவிட்டு கண்டவன்களுடன் உல்லாசம் காண்கிறாள் என்று எனது மனைவி சொல்லிக் கொண்டே இருந்தாள். எனது பிள்ளைகளும் பக்கத்து வீட்டுக் காரியைக் கெட்டவள் என்றே நாளும் பொழுதும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் எனக்குள் அந்த எண்ணம் எழவே இல்லை.  ஒருவரிடம் பேசும் பொழுது, ஒருவரைப் பார்க்கும் பொழுது அவரை எடை போட்டுவிடலாம் என்பது எனது கருத்தாக இருந்தது. அதன்படி பக்கத்து வீட்டுக்காரி பக்குவமானவள் என்று நான் தீர்மானித்துவிட்டேன். ஆனால் நேரமும், காலமும் சூழலும் அவளின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும்படியே ஆக்கியிருந்தது.

     

    எனது மனைவியும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு மாறவே வேண்டும் என்று ஒரே பிடிவாதமாகவே இருந்தார்கள். நடத்தை கெட்டவளுக்குப் பக்கத்தில் இருந்தால் வருகிற எங்கட நண்பர்களும் உறவினரும் கூட எங்களையும் ஒரு விதமாகவே பார்ப்பார்கள் என்று என்னை நச்சரித்தபடியே இருந்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. வெயிலும் குறைவாக இருந்ததால் பக்கத்து வீட்டுக்காரி புல்லுவெட்ட ஆயுத்தமானாள். நானும் புல்லுவெட்ட மெசினுடன் முன்னுக்கு வந்தேன்.அவள் பழையநிலையில் என்னைப் பார்த்துச் சிரித்து தானாகவே சுகம் விசாரித்தாள்.

     

    இதனைச் சாக்காக வைத்து அவளுடன் பழையமாதிரி பேசத்தொடங்கி கணவனைப் பற்றியும் விசாரித்துவிட்டேன். கணவனைப் பற்றிக் கதை வந்ததும் அவளின் முகம் மாறியது. கண்கள் கலங்கின. பேச்சுக்கள் தடுமாறின. புல்லை வெட்டுவதை விட்டு விட்டு என்னை வரும்படி அழைத்தாள். பின் உடனேயே உங்கள் மனைவியையும் கூப்பிடுங்கள் என்றாள். அவளின் எண்ணப்படி மனைவியையும் அழைத்தேன். இருவரையும் தனது வீட்டுக்குள் கூட்டிச் சென்றாள்.  அவளின் வீட்டுக்குள் செல்வது இதுதான் முதல் தடவை. வீடு மிகவும் நேர்த்தியாக இருந்தது. புத்தர் சிலை ஒன்று எங்களை வரவேற்றது. அதன் முன்பாக ஊதுவத்தி நறும் புகையினை விட்டபடி வீட்டினை வாசமாக்கி நின்றது.

     

    ஒரு அறையினுள் எங்களைகூட்டிச் சென்றாள். அங்கு நாங்கள் கண்ட காட்சி எங்களையே உலுக்கிவிட்டது. எங்களை அறியாமல் எங்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவளின் கணவன் கட்டிலில் படுத்தபடி இருந்தான். அவனுக்குப் பக்கத்தில் பலவித மருந்துகள் நிறைந்து இருந்தது. அங்கும் ஒரு புத்தர் சிலையும் புத்தர் படமும் இருந்தது.  அவளையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தோம். எங்களுக்கே வெட்கமாயும் துக்கமாயும் இருந்தது. அந்தப் பெண் இமயமாய் தெரிந்தாள். நாங்கள் சரிந்து நிலத்திலே கிடந்தோம். எடுத்த எடுப்பிலே காணும் தோற்றத்தைத்தைக் கணக்குப் போட்டு நாங்கள் எடுத்த தப்பான முடிவு அப்பளுக்கில்லா அவளை. பின்புதான் கேள்விப் பட்டோம் அவளின் கணவன் விபத்தில் அகப்பட்டு சுயநினைவு திரும்பாநிலையில் கோமாவில் இருக்கிறான் என்று.

     

    கணவனை வேறு இடங்களில் விடாமல் தனது வேலையையும் பார்த்து அன்புக் கணவனையும் அருகிருத்திப் பார்க்கும் அவளை என்ன சொல்லி அழைப்பது ! அவள் பெண்ணல்ல. அவள் அன்பின் திருவுருவம் ! ஆண்டவனின் அனுக்கிரகம்.

    Share
  • அறுபது வயது ஆச்சு !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++

     

     

     

     

     

     

     

     

     

    வழுக்கை விழுந்து தலை நரைத்து

    வயதாகும் போது நீ எனக்கு

    வாலன்டைன் காதல் தின வாழ்த்து

    மறவாது அனுப்பு வாயா ?

    இரவு மணி மூன்றாகி நான்

    இல்லம் வராது போனால்,

    கதவுத் தாழ்ப்பாள் இடுவாயா ?

    உனக்கு தேவைப் படுவேனா ?

    உணவு ஆக்கி ஊட்டுவாயா ?

    எனக்கு அறுபது ஆகும் போது

    உனக்கும் வயது ஏறிடும் !

     

    உன்னோடு நான் இருப்பது உறுதி

    ஒரு வார்த்தை உரைத்து விட்டால் !

    உதவி செய்ய ஓடி வருவேன்

    ஒளி விளக்கு அணைந்தால் !

    சூட்டு அடுப் பருகில் அமர்ந்து

    சுவட்டர் பின்னித் தருவாயா ?

    காலைப் பொழுதில் கதிர் ஒளியில்

    கால் நடைக்கு வருவாயா ?

    தோட்டச் செடி தோண்டி வைப்பாயா ?

    களை எடுக்கக் குனிவாயா ?

    இவை தவிர வேறு எதற்கு ?

    அறுபது வயது எனக்கும் ஆச்சு !

    நான் உனக்கு வேணுமா ?

    நீ எனக்கு ஊட்டு வாயா ?

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் 105

     

    (அ)சிரத்தையான அப்பா அம்மா

    நிர்மலா ராகவன்

     

    படிப்பு, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது, பலருக்கும். உரிய காலத்தில் எல்லாமே நடந்துவிட்டாலும், அவை சிறப்பாக அமைகின்றனவா?

    படிப்பை எடுத்துக்கொள்வோம். தங்களுக்குப் பிடித்த பாடம், அல்லது நிறைய பொருள் ஈட்டக்கூடிய கல்வி என்று சில பெற்றோர், `நீ இந்தப் பாடங்களைத்தாம் தேர்ந்தெடுக்க வேண்டும்,’ என்று பிள்ளைகளுக்கு யோசிக்கவோ, முடிவு செய்யவோ இடம் கொடுக்காது தீர்மானித்துவிடுவார்கள்.

    அப்படிச் செய்யாவிட்டாலும், தமது எதிர்பார்ப்பின்படி நடக்காத பிள்ளைகளைக் கண்டு மனம் நொந்துபோவார்கள்.

    கதை

    இங்கிலாந்தில் ஒரு பிரபல விஞ்ஞானியின் மாணவர் அந்த மலேசியர். முதுகலைப்பட்டம் பெற்று, கோலாலம்பூரில் ஆசிரியராக இருந்தார்.

    “என் மகள் விஞ்ஞானமே வேண்டாம் என்று, இடைநிலைப்பள்ளியில் ஆங்கிலம், சரித்திரம் என்று என்னென்னவோ எடுத்துப் படிக்கிறாள்,” என்று என்னிடம் அரற்றினார், ஏதோ தன்னையே அவள் விலக்குவதுபோல் பாவித்து.

    “என் பெண் அறிவில் என்னைக் கொள்ளவில்லை,” என்று அவர் திரும்பத் திரும்ப பேசியதைக் கேட்டு, நான் அப்பெண் மக்கு என்ற முடிவுக்கு வந்தேன்.

    அண்மையில், தனக்குப் பிடித்த துறையில் அப்பெண் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறாள் என்று அறிந்தேன். தந்தையின் எதிர்பார்ப்புக்கும் விருப்பத்திற்கும் அவள் இணங்கியிருந்தால், தன் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி இருக்க முடியாதே! செய்ததில் திருப்தியும் கிடைத்திருக்காது.

    நல்ல வேளை, மகளைத் தன் அதிகாரத்திற்குப் பணியவைத்து, அவளைச் சுயமாக சிந்திக்கவிடாது செய்யவில்லையே என்று நண்பரைப் பாராட்ட வேண்டியதுதான்.

    பெற்றோரின் குறுக்கீடே இல்லாது வளர்பவர்களுக்கோ வேறு விதமான பிரச்னைகள்.

    தாம் பெற்ற குழந்தைகளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்கள் பிறருடன் எப்படிப் பழகுவது என்று வழி காட்டாது இருக்கும் பெற்றோரை இருவகையாகப் பிரிக்கலாம்:

    பெரிய உத்தியோகத்தில் நிறைய சம்பாதித்து, இன்னும் எப்படி மேலே போகலாம் என்பதுபோல் நடப்பவர்கள்.

    `அதுதான் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறோமே! அங்கே பார்த்துக்கொள்வார்கள்!’ என்ற அலட்சியம்.

    வேறு சில பெற்றோர், அவர்களும் அதிகம் படித்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய பெற்றோர் அவர்களை நடத்தியதுபோலவே, தம்மையும் அறியாது தம் பிள்ளைகளை அசிரத்தையுடன் நடத்த முற்படுவார்கள்.

    நான் இப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் போதித்தபோது, பெற்றோருக்கு மகன் எந்த வகுப்பில் படிக்கிறான், என்ன பாடம் எடுத்திருக்கிறான் என்பதுகூடத் தெரியாது.

    இந்த அலட்சிய மனப்பான்மை கட்டொழுங்கு ஆசிரியர்களுக்குச் சாதகமாகப் போயிற்று. எந்த ஒரு தவற்றுக்கும் வன்முறையைப் பயன்படுத்தித் தண்டிப்பார்கள்.

    பெற்றோரோ, `இந்தப் பள்ளிக்கூடத்தில் வெரி குட் டிசிப்ளின்’ (very good discipline!) என்று ஒருவருக்கொருவர் சிலாகித்துக்கொண்டு, `இந்தவரைக்கும் நம் பொறுப்பைக் கழித்தார்களே!’ என்ற நிம்மதியுடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மாணவர்களுக்காக பரிதாபப்படத்தான் என்னால் முடிந்தது.

    பணக்காரப் பெற்றோர் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, `இனி ஆசிரியர்கள் பாடு!’ என்று நிம்மதியாக இருப்பார்கள்.

    இன்னொரு வகை, தனித்து வாழும் தாய் அல்லது வறுமையில் வாடும் தந்தை. குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய நிலை. குழந்தைகளுக்கான உணவு, உடை, படிப்புச்செலவு ஆகியவற்றிற்குத் தேவையான பொருளை ஈட்டுவதிலேயே இவர்களுடைய காலம் கழிந்துவிடுகிறது.

    கதை

    பதினைந்து வயதிலேயே ஜரீனா பள்ளியில் அடங்காது இருந்தாள். ஓயாமல் ஆண்களைப்பற்றித்தான் அவள் பேச்சு இருக்கும். ஆசிரியைகள் கொடுத்த எந்த வேலையையும் செய்யமாட்டாள். அப்படியே செய்தாலும், அரைகுறையாக இருக்கும். அவளால் பிற மாணவிகளும் அதேபோல் நடக்கும் நிலை.

    அவளுடைய தந்தை என்னைச் சந்திக்க வந்தார்.

    “நான் டாக்சி ஓட்டுகிறேன். பெரிய குடும்பம். காலையிலிருந்து இரவு வெகு நேரம் வீட்டிலே இருக்கமுடியாது. என் மகளை எப்படி அடக்குவதென்றே தெரியவில்லை. தயவுசெய்து உதவுங்கள், டீச்சர்!” என்று கெஞ்சினார் அந்த மலாய்க்காரர். (அவரைப் போன்றவர்களுக்கு ஆசிரியர்கள் என்றால் பெருமதிப்பு).

    அடுத்த முறை ஜரீனா என்னை எதிர்த்தபோது, “உன் அப்பாவை வரவழைக்கட்டுமா?” என்று மிரட்டினேன்.

    பயந்து, அடங்கினாள். அவ்வப்போது கண்டிக்க யாருமில்லாது, அளவுக்கு அதிகமான சுதந்திர உணர்வு அவளை மனம்போனபடி நடக்க வைத்திருந்தது.

    பெற்றோருக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கும் புரிவதில்லை, வீட்டில் ஒழுக்கம் கற்பிக்கப்படாத சிறுவர்களைத் திருத்துவது மிகக் கடினம் என்று.

    அத்தகைய பெற்றோர், `குழந்தைகளுக்குத் தேவையானவைகள் எல்லாவற்றையும்தான் கொடுக்கிறோமே! போதாதா?’ என்று திருப்தி அடைபவர்கள்.

    குழந்தைகளுக்கோ, `இதெல்லாம் பெற்றோரின் கடமை!’ என்ற அலட்சியம்தான் உண்டாகிறது. ஆனால், அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெற்றோர் வேண்டுமே! பெற்றோரிடம் தம் அதிருப்தியைக் காட்டத் துணியாது, ஆசிரியர்களை எதிர்க்க முனைகிறார்கள்.

    `வீட்டில் யாருமே நம் உணர்வுகளை மதித்து நடத்துவதில்லை!’ என்ற ஆத்திரம் உள்ளுக்குள் எழும். `யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை!’ என்று நிச்சயம் செய்துகொள்வார்கள். இதனால் சுயமதிப்பு குன்றிப்போக, படிப்பிலும் சோடையாகிவிடும் அபாயமும் உண்டு.

    இவர்களுக்கு ஒத்த மனமுடைய நண்பர்களுக்கா பஞ்சம்! இப்படித்தான் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள்.

    சில மாணவர்களே என்னிடம் கூறியிருக்கிறார்கள், `வீட்டில் யாரும் எங்களைக் கவனிப்பதில்லை. நண்பர்களுக்குத்தான் எங்களைப் புரிகிறது. அதனால் அவர்களுடன் காலத்தைக் கழிக்கிறோம்,’ என்று. நீலப்படங்களைப் பார்ப்பதைக்கூட விவரித்திருக்கிறார்கள்.

    எது நல்லது, எது கெட்டது என்று அறியாத பருவம். பெற்றோருக்குத் தம் பிள்ளைகளுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பே கிடையாது. அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதிலும் அக்கறை செலுத்தமாட்டார்கள். எந்தவித வழிகாட்டலும் கிடையாது. இளைய வயதினர் திசை மாறுவது யாருடைய தவறு?

    சில பெற்றோருக்கு எப்படி வழிகாட்டுவது என்று புரிவதில்லை.

    ஒரு தாய் என்னைச் சந்தித்து, “என் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியவில்லை. அதுதான் குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிறான். அந்தக் காலத்திலே படிப்பு வேறு விதம் இல்லையா?” என்று சப்பைக்கட்டு கட்டினாள்.

    நானும், “ஆமாம். ஆமாம்,” என்று ஆமோதித்தேன். அப்போதுதானே அவள் நான் அடுத்துச் சொல்லப்போவதைக் கவனிப்பாள்!

    “தினமும் ஒரு மணி நேரமாவது அவனைப் படிக்கச் சொல்லுங்கள். அப்போது பக்கத்தில் உட்கார்ந்து, உரக்கப் படிக்கச் சொல்லுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் வேறு எதுவும் செய்யவேண்டாம்,” என்றேன்.

    (என் மகள் முதல் வகுப்பு படிக்கையில், “நீ ரொம்ப டிஸ்டர்ப் பண்றே! என்னாலே படிக்க முடியலே,” என்று குற்றம் சாட்டினாள்.

    நானோ, வாய்பேசாது, ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன்! “நான் என்ன செய்யணும்?”

    “என் பக்கத்திலே உட்காரேன்!”

    அப்போதுதான் புரிந்தது, தாம் செய்வதில் பெரியவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்ற குழந்தைகளின் எதிர்பார்ப்பு).

    அம்மாவுக்குத் தன் முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறை என்ற பூரிப்பில் பையன் கடுமையாக உழைத்தான். அம்மாவை மாற்றிய என்னையும் பிடித்துப்போனது!

    பொது இடத்தில் பாருங்கள். எத்தனை பெற்றோர் பிள்ளைகளுடன் பேசுகிறார்கள்? சிறிய குழந்தைகளானால், பார்ப்பதையெல்லாம் விளக்குகிறார்கள்? `உன்னை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருக்கிறேனே! அதற்காக சந்தோஷப்படு!’ என்பதுபோல், தன் கைப்பேசியில் ஆழ்ந்திருக்கும் தந்தையோ, தாயோதான் அதிகம் இருப்பார்கள்.

    கதை

    பல ஆண்டுகளுக்கு முன்னர், நானும் என் உறவினர் ஒருத்தியும் காரம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தோம்.

    என் பாட்டி உள்ளே போய் பார்த்துவிட்டு, “குழந்தைக்கு நல்ல பசி. உங்களுக்கு என்ன விளையாட்டு?” என்று இரைந்தார்.

    “நான் போட்டுவிட்டு வந்தேனே!” என்றேன்.

    “எதுக்கு அவ்வளவு கஷ்டப்படணும்? `நீயே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுடி,’ என்றால் சாப்பிட்டுவிட்டுப்போகிறாள்!”

    அவள் மூன்று வயதுக்குழந்தை!

    இருவரும் குற்ற உணர்ச்சியுடன் முழித்தோம்.

    அன்று நான் கற்ற பாடம்: ஒருவர் உணவருந்தும்போது கூடவே இருப்பது நல்லது. குழந்தைகளானால் கதை சொல்லலாம்.

    வளர்ந்தவர்களிடம் அன்றைய நடப்புகளை, முதல்நாள் பார்த்த திரைப்படத்தைப்பற்றிய விமரிசனத்தை, இப்படி எதையாவது பகிரலாம்.

    உறவுகள் பலப்படுவது இப்படித்தான்.

    தொடருவோம்.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 18

    க. பாலசுப்பிரமணியன்

    வளமான வாழ்விற்கு வளமான சிந்தனைகள்

    உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியும். உடல் நலத்திற்கு எவ்வாறு உடற்பயிற்சியும் சத்தான உணவும் தேவையோ அதேபோல் மனநலத்திற்கு நல்ல சிந்தனைப் பயிற்சியும் சத்தான சிந்தனைகளும் தேவை. ஒரு மனிதனின் சிந்தனையே அவனை உருவாக்குகிறது என்று அண்ணல் காந்தி அடிகள் கூறுகின்றார். வளமான தூய்மையான நேர்மறையான சிந்தனைகள் நமக்குத் தேவை. இவைகளை வளர்ப்பதற்கு நாம் அதைப் பேணும் சூழ்நிலைகளில் இருத்தல் அவசியம். எதிர்மறையான சிந்தனைகளைக் கொடுக்கும் மற்றும் வளர்க்கும் சூழ்நிலைகளில் நாம் இருந்தால் அதன் பாதிப்புக்கள் நம்மை உலுக்கும். அவைகளுக்கு இரையாகி நாம் வாழ்வில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்போம். இந்தக் கருத்தை பல மனநல வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப் படுத்தியிருக்கின்றார்கள் நல்ல சிந்தனைகள் நம்முடைய வளர்ச்சிக்கு ஆணிவேர். நல்ல சிந்தனைகள் நம்முடைய மகிழ்ச்சிக்கு உத்திரவாதம். நல்ல சிந்தனைகள் நம்முடைய வருகாலத்திற்கு நாம் அளிக்கும் காப்பீடு. நல்ல சிந்தனைகளே நம்முடைய அன்பான உறவுகளை வளர்ப்பதற்கு  நாம் போடும் உரம்.. நல்ல சிந்தனைகளே நம்முடைய ஆளுமை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு கிராமத்தின் எல்லையில் உள்ள ஒரு அரச மரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். அவருடன் அவருடைய சீடர்கள் அமர்ந்திருந்தனர். அங்கே வந்த ஒரு வழிப்போக்கன் அந்த முனிவரிடம் “நான் பக்கத்துக்கு கிராமத்திருக்குச் செல்கின்றேன். அங்குள்ள மக்கள் எப்படிப் பட்டவர்கள்” என்று கேட்கின்றான். அந்த முனிவர் பதிலுக்கு அவனிடம் ‘நீ வருகின்ற கிராமத்தில் உள்ள மக்கள் எப்படி’ என்று கேட்கின்றார். அதற்கு அவனோ “அங்குள்ளவர்கள் மிக மோசமானவர்கள்” என்று பதிலளிக்கின்றான். உடனே முனிவரோ “அப்படியா, இந்த கிராமத்தில் உள்ளவர்களும் அதே போன்றவர்கள்தான்” என்று சொல்கின்றார். சிறிது நேரம் கழித்து இன்னொரு வழிப்போக்கன் அதே போல் இந்த முனிவரிடம் கேட்க முனிவரும் தன்னுடைய அதே கேள்வியை இந்த வழிப்போக்கனிடம் கேட்கின்றார். இதற்கு பதிலளிக்கும் அந்த வழிப்போக்கன் மகிழ்வுடன் “அவர்கள்  மிகவும் நல்லவர்கள்”என்று சொல்ல முனிவர் “இந்த ஊர் மக்களும் அதே போல் நல்லவர்கள் என்று பதிலளிக்கின்றார். அதிர்ச்சியடைந்த சீடர்கள் முனிவரிடம் ‘குருவே, ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமான பதில் கூறுகின்றீர்களே” எனக் கேட்க  முனிவரோ “உன் சிந்தனை எப்படியோ அப்படித்தான் உன் உறவுகள் அமையும் “என்று பதிலளிக்கின்றார்.

    சிந்தனைகள் நமது சக்திக்கு உயிரூட்டுபவை. சிந்தனைகளின் வளமும் தூய்மையும் உண்மையும் நம்முடைய செயல்களுக்கு வெளிச்சம் போட்டு வழிகாட்டும் தன்மையுடையவை

    ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்று அறிவுரை கூறும் வள்ளுவர் மேலும் கூறுகின்றார்

    “சென்ற விடத்தாற் செலவிடாது தீதொறி

    நன்றின் பால் உய்ப்பது அறிவு.”

    பல நேரங்களில் நமக்கு துயரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் மனம் தன்னைத்தானே குறைவாக மதிப்பிட்டு நமது சிந்தனைகளின் வளத்தைப் பாதிக்க வாய்ப்புக்கள் வரும். அந்த நேரங்களில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை இளக்காரமாகவோ அல்லது நமது இயலாமையை பெரிதுபடுத்தியோ நம்மைக் கொச்சைப்படுத்த வாய்ப்புகள் ஏற்படலாம். அந்த நேரங்களில் நாம் நம்முடைய சிந்தனைகளை மேலும் பலவீனமாக்கிக்கொள்ளாமல் நம்மீது வீசப்படும் கணைகளை எவ்வாறு நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று முற்போக்காகச் சிந்திக்க வேண்டும்.

    ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் கழுதையை வளர்த்துக்கொண்டிருந்தான்,. ஒரு நாள் உணவுக்காக அந்தக் கழுத்தை மேய்ந்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டது. எவ்வளவு முயன்றும் அதனால் மேலே ஏறி வர முடியவில்லை. அதன் ஊரிமையாளருடன் ஊர் மக்கள் அனைவரும் அந்தப் பள்ளத்தின் அருகே கூடிவிட்டனர். “இது இனிமேல் மேலே வந்து என்ன செய்யப்போகின்றது “ïஇதற்கு வயதாகி விட்டது. இதை வெளியே எடுத்து என்ன செய்யப்போகின்றாய்”  என்று பல அறிவுரைகளை வீசிவிட மக்கள் சொல்கேட்டு மனம்மாறிய உரிமையாளர் அந்தப் பள்ளத்திருக்குள்ளேயே அதைப் புதைத்துவிட எண்ணி  அருகில் இருந்த மணலைப்போட்டு மூடிவிட முயற்சி செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தில் மண்சேர அந்தக்கழுதை அதன் மீது கால் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வெளியே வந்து விட்டது. அதன் சிந்தனையையும் தன்னம்பிக்கையையும் பாராட்டாமல் இருக்க முடியுமா?

    எதிர்மறையான சூழ்நிலைகளிலும் வளமான முற்போக்கான நேர்மறையான சிந்தனை நமக்கு தன்னம்பிக்கையையும் வெற்றியையும் அளிக்கும் என்பதில் ஐயப்பாடு ஏதுமில்லை.

    நல்ல நேர்மறையான முற்போக்கான சிந்தனையுடனும் அதைத் தருகின்ற சூழ்நிலைகளிலும் வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • சங்க இலக்கியத்தில் விழாக்கள்

    -முனைவர் க.லெனின்

    முன்னுரை

    பண்டைய காலத்தில் வெயில் மழையென்று பாராமல் உழைத்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வானது மனத்திற்கு இன்பத்தையும் சுகமான அனுபவங்களையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். வேலைமுடிந்து வீடு திரும்பியவன், கையில் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டு இசைத்தும் ஆடியும் பாடியும் தன்னை திருப்திப்படுத்திக் கொண்டான். அதுவே பெரியதாகவும், அனைத்து உறவுகளையும் ஒன்று கூட்டி விழாவாகச் செய்தால் எப்படி இருக்கும் என எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். விழா நடத்துவதற்கு காரணம் வேண்டுமே! தெய்வத்தின் திருப்பெயரைச் சொல்லி மக்களை அழைத்து விழாக்கொண்டாடினான். புதுஆடை உடுத்தியும், இல்லையென்று வந்தவருக்கு வேண்டியவைகளைக் கொடுத்தும் தன்னுடையக் குலம் இவ்பூவுலகில் நிலைபெறச் செய்தான். “மனிதன் வேட்டையாடினான். ஓய்வாக இருந்தபோது தன் களைப்பைப் போக்க ஆடிப்பாடினான். இதன் பயனாக விழா கொண்டாடி மகிழ்ந்தான். கிழமைக்கு ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டான். சங்ககாலத்தில் தைந்நீராடல், கார்த்திகை விழா, ஓணவிழா, இந்திரவிழா, உள்ளி விழா, பூந்தொடை விழா முதலிய விழாக்கள் குறிக்கின்றன”1 என்று பா.இறையரசன் குறிப்பிடுகின்றார்.

    விழாக்கள் என்றால் என்ன?

    விழவு, சாறு, திருவிழா, பண்டிகை, நோன்பு, திருநாள் என விழாவிற்கு வேறுபெயர்களாகச் சுட்டுவர். “விழாக்கள் உடலுக்கு ஓய்வும், உள்ளத்திற்கு இன்பமும் தரவல்லன. எனவே மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டாடுவதால் விழா என்று அழைக்கப்படுகிறது. விழா எனும் சொல் விழை என்ற சொல்லின் அடியாகத் தொன்றியது. இதற்கு விருப்பம், பற்று ஆகியபொருள்கள் உள”2 என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார். பரந்துபட்ட மக்கள் அனைவரும் ஒன்றுகூடி எடுக்கும் நிகழ்வினை விழா என்கிறோம். விழாக்களைப் பொது விழாக்கள், வழிபாட்டு விழாக்கள் என்று இருவகைப்படுத்தலாம். பொது விழாக்களை ஆண்டுவிழாக்கள், தின விழாக்கள், வாழ்வியல் சார்ந்த விழாக்கள் (திருமண விழா, காதணி விழா, பூப்பு விழா போன்றவைகள்) என வகைப்படுத்தலாம். வழிபாட்டு விழாக்களை தேர்த்திருவிழா, எருதுவிடும் விழா, குடமுழக்கு விழா எனப் பிரிக்கலாம்.

    விழாவும் விருந்தோம்பலும்

    பெரும்பாலான விழாக்கள் ஒற்றைப்படை நாட்களிலே நடைபெற்றன. முதல் நாள் பொங்கல் வைப்பது, இரண்டாம் நாள் கிடா வெட்டி உறவுகளுக்குச் சோறிடுவது, மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவோடு திருவிழாவினை முடித்து விடுகின்றனர். அக்காலத்தினர் இரவு நேரங்களில் சமைத்த பாத்திரங்களில் ஒரு பிடி சோற்றையாவது வைப்பர். ஏனெனில் இரவு நேரத்தில் யாரேனும் உறவினர்கள் வந்தால், இல்லையென்று சொல்லாது உணவிட்டு மகிழ்வார்கள். திருவிழாக்கள் என்பது உறவுகளைக் கூட்டி சோறிடுதலே முக்கிய நோக்காக அமைகின்றது.

    கூடி வாழும் பண்பு

    வறுமையின் காரணமாகவும், உறவுகளின் மூலமும் பிரிந்து சென்றவர்கள் கூடத் திருவிழாக்காலங்களில் சரியான நேரத்திற்கு உள்ளூர்க்கு வந்து விடுகின்றனர். இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடுதலை திருவிழாக்களில் பார்க்க முடியும். விவசாயிகள் மழைவருவதற்கு வெயில் காலத்தில் விழா எடுக்கின்றார்கள்.  பெரும்பாலும் தெய்வ வழிபாட்டு திருவிழாக்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் நடைபெறுவதைக் காணமுடியும். “கோயில் திருவிழாக்கள் நடைபெற்றன. திருவிழாவிற்கு பொதுமக்கள் பல பகுதியில் இருந்து வந்தனர். அவர்கள் செய்யும் நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் மூலம் நடைபெறும் தொழில்கள் ஆகியவை கூறப்படுகிறது”3 என்று பா இறையசரன் கோயில்கள் மூலமே திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்கிறார். விழாக்களைப் பொறுத்தவரையில் அரசன் முதல் ஆண்டி வரை மனமகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது எனலாம்.

    விழாக்களினால் ஏற்படும் நன்மைகள்

    1. அனைத்து மக்களும் ஒன்று கூடி உறவாட முடிகிறது.
    2. விருந்தோம்பல் பண்பு வெளிப்படல்.
    3. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வு ஒருநிலைப்படுத்தல்.
    4. விழாக்களினால் திருமணம் நிச்சயமாதல்.
    5. தெய்வங்களுக்கு வழிபாடுகள் மூலம் நேர்த்திக்கடன் செலுத்துதல்.

    ஆகியவைகள் திருவிழாக்காலங்களில் மக்களுக்கு நன்மைகளாக அமைகின்றன. மேலும், விழாக்காலங்களில் ஊரில் ஒரே இரைச்சல் நிறைந்திருக்கும் என்பதை ‘கல்லென் விழவு’ என்ற புறநானூற்றுத் தொடரால் ஏற்றுக்கொள்ளலாம். கல் என்பது ஓசையை உணர்த்தும் ஓர் இடைச்சொல்”4 என்று கண்ணப்ப முதலியார் கூறுகின்றார். இக்கட்டுரையில் சங்க இலக்கியங்களில் விழாக்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை இவ்வாய்வு எடுத்துரைக்க முயல்கிறது.

    சங்ககால திருவிழாக்கள்

    சங்க காலத்தில் அழகிய குடில்களையுடைய சிற்றூரில் எப்பொழுதும் விழாக்களைக் கொண்டாடி மகிழும் ஊராகத் திகழ்ந்தது என்கிறது குறுந்தொகை,

    “சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற” (குறும்.41:2)

     இங்கு சாறு என்னும் சொல் விழாவினைக் குறித்தது. சிற்றூர் மட்டும் அல்லாது பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற நகரத்திலும் விழாக்களினால் மிகுந்த ஆரவாரம் உண்டானது.

    “பேர்ஊர் கொண்ட ஆர்கலி விழவின்
    செல்வாம் செல்வாம் என்றி என்று, அன்று இவன்
    நல்லோர் நல்ல பலவால் தில்ல” (குறும்.223:1-3) 

    விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால், அவ்விடத்தில் வாழுகின்ற நல்லோர்களைப் பார்க்க முடியும். அவர்களிடமிருந்து நற்சொற்களைப் பெற்று நம்முடைய வாழ்வு சிறக்க உதவும் என்கிறாள் தலைவி. பண்டைய தமிழ் மக்கள் விழாக்களை இறைவனைத் தொடர்புபடுத்தியே நடத்தி வந்தனர். ஏதேனும் ஒரு கடவுளை முன்னிறுத்தியே விழாக்கள் கொண்டாடப்பட்டன. நற்றிணையில்,

    “விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!” (நற்.19:5)

    அரும்பு முதிர்ந்த தாழை மரங்களை கொண்டு வந்து விழா நிகழும் இடத்தினை அழகுப்படுத்துவர். அத்தாழை மரங்களில் உள்ள நறுமணம் விழா நடைபெறும் களமெல்லாம் வீசும்.

    மகளிர் அலங்கரித்தல்

     விழாக்காலங்களில் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். புது ஆடை உடுத்தியும், நீர்முள்ளிச் செடியில் வெண்மையான காம்புகளையுடைய பூக்களைப் பறித்து தலைநிறையப் பூச்சூடியும் விழா நடக்கும் இடத்தினை அழகுப்படுத்துகிறார்கள். அகநானூற்றில்,

    “மீன் முள் அன்ன, வெண்கால் மா மலர்
    பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்” (அகம்.26:2-3)

    என்கிறார் ஆசிரியர். பெண்கள் அணிகின்ற தழையாடைக்கு அழகு செய்யும் விதமாக நெய்தற் பூக்களைப் பறித்து அணிந்து கொள்கின்றனர் (அகம்.70:12). ஊரில் நடைபெறும் விழாவானது எவ்வாறு சிறப்புடன் விளங்குகின்றதோ, அதுபோல் தன்னுடைய பெண்மையும் சிறப்புடையவனாக விளங்கியது என்கிறாள் தலைவி,

    “விழவு மேம்பட்ட என் நலனே” (குறும்.125:3-4)

    இப்பாடல் வரிகள் மூலம் திருவிழாக்களினால் பெண்களிடம் உண்டாகும் தன்னம்பிக்கை எடுத்தாளப்பட்டுள்ளது.

    ஒழிவில்லாத விழாக்கள்

    விழாக்கள் பகல்பொழுதில் நடைபெற்றாலும், இரவுநேரத்தில் நிலவொளியில் ஆடல் பாடல் எனப் பார்ப்பது மிகவும் இனிமையுள்ளதாக தோன்றும். நற்றிணையில்,

    நிலவே நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பி,
    கலிகெழு மறுகின், விழவு அயரும்மே” (நற்.348:1-4)

    மகிழ்வுடன் விழா எடுக்கும் இந்நேரத்தில் நிலவின் ஒளியும், மத்தளத்தின் இசையும் (அகம்.4:14) தலைவிக்கு மிக்க காமத்தை உண்டாக்கின. தலைவன் இல்லாது இவ்விழாவில் கலந்து கொள்ளுதல் துயரத்தை ஏற்படுத்தியது. ஆகவே கணவன் மனைவி என்று கூட்டங்கூட்டமாய்த் திருவிழாவினைக் காண வந்திருந்தார்கள் என்பதை உணரமுடிகிறது. மாதம் மும்மாரிப் பொழிந்திருக்கிறது. அக்கால மக்கள் செல்வச்செழிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். பகைவர்களுக்கு அச்சத்தைத் தரக்கூடிய பழமை வாய்ந்த இவ்வூர். ஒழிவில்லாத விழாக்களை என்றும் கொண்டுள்ளது என அகநானூறு (115:1) உரைக்கின்றது.

    பங்குனி விழா

    தமிழக மக்களிடையே மிகப் பெரியதாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பங்குனி உத்திர விழாவாகும். இவ்விழாவில் பக்தர்கள் காவடி எடுப்பதும், மொட்டைப் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. அகநானூற்றில்,

    “உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
    பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்.137:8-9)

    பகைவர்களை வென்று அடிக்கின்ற முரசினையும், போர் வெற்றியையும் உடையது சோழனின் உறையூர். அவ்விடத்தே காவிரிப் பேரியாற்றின் பெரிய கரையில் மணம் கமழும் சோலையில் முருகக்கடவுள் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்றதருணமாக உத்திர நட்சத்திரத்தில் நிறைமதியும் கூடிய நன்னாளில் பங்குனி உத்திர விழா நடைபெறும்.

    “பல்பொடி மஞ்ஞை வெல்கொடி உயரிய,
    ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து”
    (அகம்.149:15 – 16)

    பாண்டிய மன்னன் ஆட்சிபுரிகின்ற மதுரை மாநகரில் கொடிகள் அசைந்தாடும் வீதிகளையுடையது. அனைத்து வீடுகளிலும் மயில் தோகையினைத் தொங்கவிட்டிருப்பார்கள். இடைவிடாது நடைபெறும் விழாக்களையுடைய முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அங்கே அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை முழுவதும் முருகப்பெருமானின் வழிபாடுகளும் விழாக்களும் சொல்லப்படுகின்றன.

    இந்திர விழா

    சங்க காலத்தில் இந்திரவிழா நடைபெற்று வந்துள்ளது. அக்காலத்தில் மக்கள் நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகியவைகளையே கடவுளாக வணங்கி வந்தனர்.  ஐம்பூதங்களின் தலைவராகவும், இயற்கையின் தெய்வமாகவும் இந்திரனே விளங்கினார். மருதநிலக் கடவுள் இந்திரன் ஆவார். வருடா வருடம் இந்திரனுக்கு விழாஎடுத்து கொண்டாடி மகிழ்வது வழக்கமாகிக் கொண்டிருந்தனர். அன்றைய விழாக்களில் சிறந்ததாக இந்திரவிழா கொண்டாப்பட்டது.

    “இந்திர விழவிற் பூவின் அன்ன” (ஐங்.62:1)

    நறுமணம் மிக்க பூக்களைச் சூடிய நடன மங்கையர் ஒன்றாகச் சேர்ந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவ்விழாவில் மக்கள்  கூட்டங்கூட்டமாய் அலைமோதுவார்கள். கடைகள், வாண வேடிக்கை எனக் களைக்கட்டும். சிலம்பில்,

    “கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
    தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
    மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து” (சிலம்பு.5:144-146)

     விழாத் தொடங்குகிறது என்பதை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்காகக் கொடியேற்றுதல் மரபு. இந்திரவிழாவின் போது வச்சிரக்கோட்டத்திலிருந்தும் முரசைக் கச்சணிந்த யானையின் பிடரியின் மேல் ஏற்றி ஐராவதம் நிற்கும் கோட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள். விழாவின் தொடக்கம் முடிவுபற்றிய விவரங்களை முரசறைந்து தருநிலைக் கோட்டத்தில் கொடி வானளாவப் பறக்குமாறு ஏற்றப்பட்டது.

    காமன் விழா

    இளவேனிற் காலத்தில் நடக்கக்கூடிய விழாவாகும். மன்மதனே காமன் என்று அழைக்கப்படுகிறார். காமன் விழா மக்கள் இன்பமாகப் பொழுதை கழிக்கக் கொண்டாடிய ஒரு விழாவாகும். சிற்றூர்களில் மழைவேண்டி மன்மதனுக்கு விழாஎடுக்கும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளதை அறியலாம். திருமணமாகாத ஆண்களும் பெண்களும் காமனை வணங்குவதால் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத் தம்பதிகளுக்கு குழந்தை கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது. கலித்தொகையில்,

    “வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ” (கலி.35:14)

    நீர் நிறைந்த ஆற்றின் கரையில் குடிகொண்டிருக்கும் மன்மதனுக்குப் பரத்தையர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விழா எடுக்கின்றனர்.  அவ்விழாவில் தலைவனும் கலந்துகொண்டு தன்னுடன் உறவாட வேண்டும் என எண்ணுகிறார்கள்.

    “விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ” ( கலி.30:13)

    காமனுக்கு எடுத்த விழாவில் தலைவன் பரத்தையருடன் விளையாடியதை நினைத்து வருத்தம் அடைகின்றாள்.  காமவேளுக்குச் செய்யும் விழாவில் தலைவன் இல்லாத தலைவிக்குத் தனிமைத் துயரம் துன்பத்தைக் கொடுத்தது. கலித்தொகையில்,

    “காமவேள் விழவாயின், கலங்குவள் பெரிது என” (கலி.29:24)

    என்கிறார் ஆசிரியர். “காமன் விழாவை உயர்ந்தவன் விழா, வில்லவன் விழா முதலிய பெயர்களில் கொண்டாடுவதையும், அவ்விழா இளவேனிற் காலத்தில் நடைபெற்றது”5 என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார்.

    கார்த்திகை விழா

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பூரண திதியும் கூடிய நாளில் கொண்டாடப்படும் விழா. சிவபெருமான் திரிபுர அசுரரைக் கண்டு சிரித்து எரித்ததை நினைவூட்டும் வகையில் இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது. இரவு நேரங்களில் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டிருக்கும். எங்கும் ஒளிபரவி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. அகநானூற்றில்,

    “அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
    மறுகுவிளக் குறுத்து மாலை நோக்கி”
    (அகம்.141:8 – 9)

    மழைபெய்து ஓய்ந்த சாயங்காலம். வானில் நிறம்மங்கி இரவை நெருங்கிற்று. மதி நிறைந்த கார்த்திகை நன்னாளில் இருள் அகன்ற வீதிகள் திருவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

    “பெருவிழா விளக்கும் போலப் பலவுடன்” (அகம்.185:11)

    கார்த்திகைத் திருநாளில் இடும் விளக்குகளைப் போல, இலவ மரங்களின் பூக்கள் பூத்திருக்கிறது. இந்நாளில் அறம் செய்வதற்கு நன்னாள். அன்றைய தினத்தில் விளக்கில் ஏற்றப்பட்ட ஒளியானது வானத்து நட்சத்திர சந்திரனின் ஒளியைவிட மிஞ்சி நிற்கும் (நற்.202:910) எனப் பாடல் அடிகள் குறிப்பிடுகிறது.

    புனல் விழா

     நீர் விழா என்றும் அழைக்கப்படுகிறது. நீர்இன்று அமையா உலகம் போல என நற்றிணை உரைக்கும். மனிதத் தேவையின் மிகவும் இன்றியமையாதன  ஒன்று தண்ணீர்தான். இவ்வுலகமானது வறண்டு விட்டால் நிலத்தில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களும் மண்ணில் புதைய வேண்டியதுதான். அன்றைய மக்கள் காவிரி ஆற்றில் வருகின்ற புதுப்புனலை ஆடி மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கின் நாளன்று காவிரிக்கரையில் புதுத்துணி உடுத்தி புனலாடுதல் வழக்கம்.

    “மலிபுனல் பொருத மருதுஓங்கு படப்பை
    கலிகொள் சுற்றமொடு கரிகால் காண” ( அகம்.376:3-5)

    நன்றாக வளர்ந்த கதிர்களையுடையது கழார் என்னும் பகுதியாகும். அப்பகுதியில் கரிகால மன்னன் தன் சுற்றத்தாருடன் ஆரவாரம் மிக்க புனல்விழாவினைக் கண்டு மகிழ்ந்தான் என்கிறார் ஆசிரியர். அகநானூற்றில் (222:4-7) மிகுந்த அழகுப் பொலிவினையும் திரண்ட தோள்களையும் உடைய ஆட்டனத்தி என்பான் முரசொலி இடைவிடாது கேட்கும் புனல்விழாவில் நடனம் ஆடினான் என்கிறது.

    தைத்திருவிழா

    இக்காலத்தில் பொங்கல் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. உழவர்களின் அறுவடை நாள் தைத்திருவிழாவாகக் கொண்டாப்படுகிறது. “மழைப்பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் ஆயமகளிர் விழாச் சிறப்புக்களைப் பற்றி  முன்கூட்டியே சொல்லுகிறார்கள். பொங்கல் பொங்கும்போது பெண்கள் குரவையிடுகிறார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்”6 என்கிறார் நா.வானமாமலை. சூரிய பகவானுக்கு நெல்லும் பூவும் இட்டு, ஏர்க்கலப்பை முன்னே பொங்கல் வைத்து இறைவனை வணங்குகின்றனர்.

    “நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
    தைஇத் தண்கயம் போல” (ஐங்.84:3-4)

    என்ற ஐங்குறுநூற்று அடிகள், நறுமணம் மிக்க மலர்களை அணிந்து ஐந்து வகையில் அலங்காரம் செய்யத்தக்க கூந்தலையுடையவர்களும், விடியற்காலையில் குளிர்ந்த நீரில் தைத்திங்கள் நோன்பிற்காக  நீராடுகின்றார்கள். பாவை நோன்பிற்கும் இவ்வாறு நீராடுதல் உண்டு.  இவ்வகை நோன்பின் பயனாகப் பிரிந்துசென்ற தலைவன் மீண்டும் என்னை விரும்பி நாடி வருவான் எனத் தலைவி நம்புகிறாள். தன்னிடம் உள்ளப் பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவுகிறாள் (நற்றிணை.80:7) என்றும், தை்திருநாளில் இறைவனை வழிப்பட்டு நிற்கும் தலைவி வகைவகையாய் அணிகலன்கள் புனைந்து பொலிவுப்பெற்று   (கலித்தொகை.59:13)  விளங்கினாள்.

    முழவு விழா

     முழவு என்பது இசைக்கருவிகளில் ஒன்றாகும். விழாக்காலங்களில் மேளம் அடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடுவார்கள். முழவுக்கருவி விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டதும், வட்டமாகவோ சதுரமாகவோ இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும். நெருப்பில் சூடு பறக்கக் காட்டி அடிப்பார்கள். நற்றிணையில்,

    “முழவு கண் புலரா விழவுடை ஆங்கண்” (நற்.220:6)

    சிறுவர்கள் பனைமடலில் செய்யப்பட்டக் குதிரையை வீதியில் இழுத்து வருகின்றார்கள். இவ்விளையாட்டுச் செயலுக்கு முழவு அடித்து ஆடியும் பாடியும் வருகிறார்கள். திருவிழாக்களின் போது அடிக்கின்ற மேளத்திற்கு ஏற்ப ஆட்டம் ஆடுவார்கள். அவ்வாட்டத்தைப் பார்க்க மக்கள் கூட்டகூட்டமாய் அலைமோதுவார்கள். முழவு விழா என்பது தனியாக நடைபெறக்கூடியது இல்லை. விழாக்காலங்களில் முழவு இசைக்கப்படும். இந்நிகழ்வானது பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் நடைபெறும். 

    உள்ளி விழா

    கொங்கு மண்டலத்தின் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறுவது உள்ளிவிழா. கொங்கர்கள் இடுப்பில் மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடுகின்ற விழாவாகும்.

    “கொங்கர்கள் மணிஅரை யாத்து மறுகின் ஆடும்
    உள்ளி விழவின் அன்ன”
    ( அகம்.368:16-18)

    என்று அகநானூறு உரைக்கும். இவ்விழாவினைக் காணவந்த மக்களின் ஆரவாரம் மிகப்பெரிது.

    வில் விழா

    வெற்றிப்பெற்ற மறவனின் வில்லினை வைத்துக் கொண்டாடப்படுவது.    இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி வீரத்தைக் கொண்டிருப்பவர்கள். தங்களின் வீரத்தை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த எண்ணி தெருக்களில் தம்மில் தாம் மாறுபட்டுப் போர் செய்கிறார்கள். தம்மீது பட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும் உடையவர்கள் மறவர்கள்.

    “மள்ளர் குழிஇய விழவினானும்” (குறும்.31:1)

    என்று குறுந்தொகை கூறுகிறது. போரிலே வெற்றி கண்ட வில்லினை சிறப்பிக்கும் பொருட்டு வீரர்கள் கூடி எடுக்கும் விழாவாக அமைந்துள்ளது.

    பூந்தொடை விழா

    படைக்கலப் பயிற்சி பெற்று திரும்பிய வீரர்களை அரகேற்றும் விழாவாகும். பெரும் வீரனான தன் மகன் பயிற்சி முடிந்து வீடு திரும்புகிறான். அவனுடைய வெற்றியை இவ்வுலகம் காணட்டும் என்று தங்களின் வீடுகளில் புது வண்ணம் பூசுவர். வீட்டின் முன்னால் பரந்துபட்ட இடத்தில் மணல் பந்தலிட்டுத் துணங்கைக் கூத்தினை ஆடி மகிழ்வார்கள்.

    “வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
    பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
    தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” (அகம்.187:7-9)

    பயிற்சிக் காலத்தில் விற்போர், வாட்போர், குதிரையேற்றம், யானையேற்றம், மதிலைக் காத்தலும் அழித்தலும், முன்னின்று சண்டையிடுதல் போன்றவற்றைக் கற்றுத்தெளிந்து வந்துள்ள மழவர்கள் பூந்தொடை விழாவினைப் பொலிவுடன் கொண்டாடினார்கள்.

    கோடியர் விழா

    கோடியர் என்போர் கூத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பாணர்கள், கூத்தர்கள், பொருநர்கள், விரலியர்கள் என அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து விழா நிகழ்த்துகிறார்கள்.

    “கோடியர்  விழவு கொள் மூதூர் விறலி பின்றை
    முழவன் போல அகப்படத் தழீஇ,” (அகம்.352:4- 6)

    என்கிறது அகநானூறு. ஆடல் பாடல் நிகழ்த்தும் கலைஞர்கள் இணைந்து பழமையான ஓர் ஊரின்கண் விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் ஆடுவோர், பாடுவோர், முழவு வாசிப்போர் என அவரவர் திறனை மக்களிடையே வெளிப்படுத்துவர். விழா நேரங்களில் ஆடும் கூத்தர்கள் வெவ்வேறான ஒப்பனைகளுடன் திகழ்வார்கள் என்று புறநானூற்றுப் பாடல் அடிகள் (29:22-23) குறிப்பிடுகின்றன.

    ஓணவிழா

    பலம் வாய்ந்த அசுரரை அழித்தும், பொன்னால் செய்த மாலையை அணிந்தும், கருநிறம் உடைய திருமால் பிறந்த திருவோண நட்சத்திர நன்னாளில் ஊரிலுள்ளோர் விழா எடுப்பர். தங்களைத் திருமாலாக நினைத்து அழகுப்படுத்திக்கொண்டு நடனம் புரிவர்.

    “கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
    மாயோன் மேய ஓணநல் நாள்” (மதுரை.590-591)

    என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப்பெற்றது. அவ்விழாவில் யானைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கேரள மக்கள் மட்டும் ஓணவிழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

    சங்க இலக்கியத்தில் விழாவைப் பற்றியக் குறிப்புகள்

    • தழையாடையை உடுத்திய தங்கைமார்கள் திருவிழாக்கள் நடைபெறும் தெருக்களில் மீன்களை விற்று வருவார்கள். (அகம்.320:3-5)
    • “விழவும் மூழ்த்தன்று, முழவும் தூங்கின்று” (நற்.320:1) – ஊரினர் நடத்திய திருவிழாவும் முடிவுற்றது. மத்தளங்களின் ஓசையும் அடங்கிவிட்டது என்று விழா முடிந்த நிகழ்வினை நற்றிணை உரைக்கிறது.
    • விழா நடைபெறுவதற்கு முன் முந்நீர் (ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர்) கொண்டு வந்து இறைவனைத் தொழுது, ( புறம்.9:10) பின் தொடங்குவார்கள்.
    • குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல நிலப்பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபட்டு விழா கொண்டாடுகின்றார்கள் என்று புறநானூறு (17:1-4) கூறுகிறது.
    • பல சிறப்புகளையுடைய பாசறையில் சிறு சோற்று விழாவினை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். (புறம்.33:22)
    • புறப்புண்ணுக்கு நாணி சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருத்தலால் அவ்வூரில் விழாக்களே மக்கள் மறந்து போயினர். ( புறம். 65:1-4)
    • போர் தொடங்குவதற்கு முன்னும், போரில் வெற்றிப்பெற்ற பின்பும் விழா எடுப்பார்கள். (புறநானூறு.84:3-5)
    • விழாக்காலங்களில் செம்மறி ஆட்டுக்கறியை உண்ணல். (புறம்.96:6)

    விழாக்கள் பற்றியச் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடக்கின்றன. 

    முடிவுரை

    வழிபாட்டை முன்னிறுத்தியே விழாக்கள் நடைபெறுவதால் ஆங்காங்கே சிறுமாறுபாடு அடைகின்றன. விழாக்களின் தோன்றலே மக்களின் மன மகிழ்வுதான். கடன் பெற்றாவது விழாவினை நன்முறையில் கொண்டாட வேண்டும். தன்னால் இயன்ற நாலு பேருக்காவது வயிறுநிரம்ப உணவு கொடுக்க வேண்டும்.  விழாக்காலங்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தன்னிறைவு பெறவும், பிரிந்துசென்ற உறவுகளை மீண்டும் சந்திக்கக் கிடைக்கும் விழாவினை மக்கள் எந்நாளும் வரவேற்றுக்கொண்டிருப்பார்கள்.

    சான்றெண் விளக்கம்

    1. பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, பக்.237-242
    2. கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, பக்.5-6
    3. பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, ப.235
    4. கண்ணப்ப முதலியார், கட்டுரைக்கொத்து, அம்மையப்பர் அகம், சென்னை -7, ப.40
    5. கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, ப.51
    6. நா.வானமாமலை, தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்), NCBH, சென்னை – 98, பக்.14-15

    **********

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    தமிழாய்வுத் துறை
    எம்.ஜி.ஆர் கல்லூரி
    ஓசூர் – 635 130
    9789246983

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180429 -vanvihari mixed media -icam-wm

    ’காத்த கஜேந்திரர்மேல் கண்ணபிரான் குந்திட
    ஊத்தநீர் தும்பிக்கை பாத்ஷவராய்(BATH SHOWER) -காத்(து)உலர்த்தும்
    போததுவே ஹேர்ட்ரையராய்(HAIR DRIER),பாத்துப்போ சொல்ஹார்னாய்(HORN)
    யாதுமாகி கான்(வனம்)விஹாரிக்(கு) ஏது(ஹேதுவின் தமிழ் வடிவம்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • புதிய கோட்பாடு ! பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின

     

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++

     

    1. https://youtu.be/0MElgqjgJ5M
    2. https://youtu.be/hP45Xd_IplM
    3. https://gizmodo.com/asteroids-really-could-have-brought-water-to-earth-exp-1825532121
    4.  https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html
    5. https://www.space.com/30582-asteroid-mining-water-propulsion.html
    6. https://www.space.com/8305-water-ice-discovered-asteroid-time.html
    7. https://www.bing.com/videos/search?q=asteroids+water&&view=detail&mid=434FF06AA6245CD80B77434FF06AA6245CD80B77&&FORM=VRDGAR

    ++++++++++++++++++

    [Click to Enlarge]

    பாரெங்கும் நோக்கினும் நீருண்டு

    பாலை வனத்தில் பசுஞ்சோலை !

    தாரணியில் கடல், நதிகள், ஏரிகள்.

    நிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள். 

    செந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம். 

    வால்மீன் தலையில்  பனித்த நீர்க்கட்டி.

    வக்கிரக்கோள் வயிறு குளிர்நீர்த் தொட்டி !

    +++++++++++

    Origin of water

     

    பூமிக்குப் பேரளவு நீர் வெள்ளம் எப்படி வந்தது ?

    பூர்வ காலத்தில் பூமியைப் பன்முறை வால்மீன்கள் தாக்கியதால்  கடலிலும், ஏரிகளிலும் நீர் வெள்ளம் நிரம்பியது என்பது பழைய  கோட்பாடு.  2018 ஏப்ரல் 25 இல் வெளியான புதிய விஞ்ஞான வெளியீட்டின்படி,  அதிவேக முரண்கோள்கள் [Asteroids] பன்முறை பூமியைத் தாக்கிப்  பேரளவு நீர் வெள்ளம் சேர்ந்தது என்று பாம் கேணன்  சோதனை மூலம் [BAM Cannon Experiment] ஆய்வு செய்து அறிவிக்கப் பட்டது.  சோதனை நடத்திய இடம் : காலிபோர்னி யாவில் உள்ள நாசாவின் ஆமெஸ் ஆய்வு மையம் [Ames Research Center].   சோதனையில் பங்கெடுத்த குழு விஞ்ஞானி  டெரிக் டாலி [Terik Daly] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டப் படிப்பாளி]   .

    See the source image

    செய்த சோதனை என்ன ? எரிமலைப் பாறை மீது, அதிவேக  எறிவிண்கற்கள் ஏவி [Shooting Meteorite-Like Projectiles on Volcanic Rocks], விளைந்த தாக்கல்களால் நீர் வெள்ளம் சேர்ந்தது என்று அறிந்தனர்.  அதற்குச் செய்த சிறு மார்பிள் கணைகளின் வேகம் 11,200  mph [18,000 kmh]. ஏவிய மார்பிள் கணைகள் பூர்வீக நீர்செழித்த, தாதுக்கள் நிரம்பிய பழைய முரண்கோள்கள் போன்று, [Carbonaceous] இருந்தன.  அந்த மோதல்களில் 30% கொள்ளளவு நீர் வெள்ளம்  தாக்க பீடத்தில் அடைபட்டு இருக்கும்.  இம்முறையில்தான் முரண்கோள்கள் தாக்கி, நிலவிலும், செவ்வாய்க் கோளிலும், மற்ற சூரிய மண்டலக் கோள்களிலும் நீர்வெள்ளம் சேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்.

    வால்மீன்களில் உள்ள தண்ணீர் ஆவியைச் சோதித்ததில், அதிலுள்ள கனநீர் [Heavy Water Molecule], பூமியில் கிடைக்கும் கனநீர் போலில்லை.  ஆனால் முரண்கோள் [Asteroid] பெற்றுள்ள கனநீர், பூமியில் உள்ள கனநீர் போல், அளவிலும், ஏகமூலப் பண்பாட்டி லும் ஒத்திருந்தது. ஆகவே விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடு :  பூகோளத்தின் கடல் நீர்வெள்ளம் முரண்கோள்கள் பன்முறை தாக்கியதால் சேர்ந்தது என்பதே. இவற்றை விளக்க மாக யூடியூப்  ஒளி திரைகளில் காணலாம்.

    +++++++++++++

     

    பூதக்கோள் வியாழனுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் 

    இடையே சூரியனைச் சுற்றும் பல்கோடி முரண்கோள்கள்

    ++++++++++++++++++

    https://youtu.be/BvrzM-BavDg

    https://youtu.be/PoV4qSwg7nc

    https://youtu.be/j1sFidXtKIU

    https://youtu.be/NAbcmtwyxgg

    https://youtu.be/t90lVO1JkGc

    https://youtu.be/W-gp5lapzi0

    https://youtu.be/vy6dj_ZWOos

    https://youtu.be/Idtk16T-cyY

    ++++++++++

    Origin of water -1

    பூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள்

    கோளுக்குள்

    கோளின் குடலுக்குள்

    பாறைக்குள்,

    உறங்கும் படு பாதாள

    ஊற்றுக்குள் நெளிந்தோடும்

    ஆற்றுக்குள்,

    நிலையான ஏரிக்குள்

    நிரம்பியது எப்படி

    நீர் வெள்ளம் ?

    எப்போது தோன்றியது ?

    நூறு கோடி

    ஆண்டுகட்கு முன்பா ?

    பூர்வப் பிரபஞ்சத்தில் தோன்றியதா ?

    படிப்படி வளர்ச்சியில்

    வடித்ததா ?

    மூலகங்கள் இணைந்தா ?

    மூலக்கூறுகள் பிணைந்தா ?

    மின்னல் அடித்து இரசாயனங்கள்

    பின்னியதா ?

    தோல் அடியில் நீர்ப்பனி சுமக்கும்

    வால்மீன்கள் தாக்கி

    கோளில் கொட்டியதா ?

    ஆழ்ந்து உளவினும் இந்தக்

    கேள்விக்கு விடை

    கிடைப்பது எக்காலம் ?

    ++++++++++

    Earth's water -1

    கனடா வடதுருவப் பனித்தளத்தில் உள்ள பாஃபின் தீவின் [Baffin Island, Canada] பாறைகளுக்கிடையே உறைந்த நீர் வெள்ளம் பூமி தோன்றிய துவக்க காலத்துப் பூர்வீக நீர் என்பது முதன்முறையாக அறியப் பட்ட சான்றாகக் கருதப் படுகிறது. அந்தப் பாறை நீர் மாதிரிகள் 1985 ஆண்டில் சேமிக்கப்பட்டவை. அவற்றைப் பல்லாண்டுகளாய்த் துருவிச் சோதிக்க வாய்ப்புக்கள் இருந்தன.  அவை பூமியின் ஆழ்தட்டிலிருந்து [Earth’s Deep Mantle] வெளி வந்த பூமி அங்கமாய்க் கருதப்படும் உட்சாதனத்தைக் கொண்டிருந்தது.  அவை மேற்தளப் பாறையிலிருந்து [Crustal Rocks] உதிரும்  வண்டல் படிவுகளால் [Sediments] பாதிக்கப் படவில்லை. இதுவரை நாங்கள் பாராத பூர்வ படிவுப் பாறை [Primitive Rocks] என்பது எங்கள் முடிவு. அவற்றின் நீர் பூமியின் பூர்வீகத் துவக்க நிலை நீராகக் கருதுகிறோம். அவை பூமியின்  தோற்ற வரலாற்றையும், ஆரம்ப நீர்மயம் எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியவும் உதவுகிறது.

    டாக்டர் லிடியா ஹால்லிஸ் [Astrobiology Institute, University of Glasgow, Scotland] 

    cover-image-swas-probe-1

    கனடா வடதுருவப் பாறை நீரில் மிகச் சிறிதளவு டியூட்டிரியம் [Deuterium] உள்ளதை அறிந்தோம்.  அதனால் அழுத்தமாய்த் தெரிவது : அந்த நீர்மயம் பூமி தோன்றிக் குளிர்ந்த பிறகு புறத்திலிருந்து வீழ்ந்து நிரம்பிய தில்லை என்பதே. அதாவது கோள்கள் தோன்றி உருவாவதற்கு முன்பே, நமது சூரியனைச் சுற்றி இருந்த தூசி, துணுக்குகள் நீர் மூலக்கூற்றை ஏற்கனவே ஏந்தி வந்திருக்கலாம்.  பல யுகங்களாய் இந்த நீர்மயம் செழித்த தூசி, துணுக்குகள் மெதுவாகச் சேர்ந்து நீர்க்கோள் பூமி வடிவாகி இருக்க வேண்டும்.  ஆரம்ப காலத்தில் பேரளவு நீர் வெள்ளம் பூதள வெப்பத்தில் ஆவியாகி இழக்கப் பட்டாலும், மிஞ்சி இருந்தது போதுமான அளவு கடலில் நிரம்பியுள்ளது.

    டாக்டர் லிடியா ஹால்லிஸ் [Astrobiology Institute, University of Glasgow, Scotland] 

    பூமியின் உட்தட்டில் பூர்வக் கால நீர்த் தேக்கம் கண்டுபிடிப்பு

    2015 நவம்பர் 13 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில்  [Journal Science] காரி ஹூஸ், கஸுஹைடு நாகசீமா, ஜெஃப்ரி டெய்லர், மைக்கேல் மோட்டில், காரென் மீச் [NASA Astrobiology Institute, University of Hawaii] ஆகியோர் முதன்முதல் வெளியிட்ட ஆய்வறிக்கை :  கனடாவின் வடதுருவப் பகுதியில் உள்ள பாஃபின் தீவுப் பாறைகளில் பூர்வக் கால நீர்த் தேக்கம் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.  அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் : அகிலவியல் இரசாயன விஞ்ஞானி, [Cosmochemist] டாக்டர் லிடியா ஹால்லிஸ் என்பவர். [Astrobiology Institute Fellow, University of Glasgow, Scotland]

    Deuterium content

    பூகோளப் பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி கடல் பரவியுள்ளது.  ஆனால் அந்தப் பேரளவு நீர்த் தேக்கம் எப்போது, எங்கிருந்து பூமியில் சேர்ந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.  பூமி தோன்றிய போது சேர்ந்ததா, அல்லது தோன்றிய பிறகு நேர்ந்ததா என்பது இதுவரை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை.  இப்போது கனடா பாறை மாதிரிகள் பூமியில் நீர்மயம் ஆரம்ப காலத்திலே உருவானது என்பதற்குச் சான்று தெரிவிக்கும். அதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவி அயான் நுண்ணுளவி [Ion Michroprobe].  அந்த பாறைகளுக்கிடையே இருந்த பனிக்கட்டி நீர்த் துளிகள் ஒப்பு நோக்க எத்தனை பங்கு டியூடிரியம் [Deuterium] கொண்டது என்று ஆராய்ந்தனர்.

    டியூட்டிரியம் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம்.  [Deuterium is an Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் பரமாணு உள்ள போது, டியூட்டிரியம் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்டிரானும் சேர்ந்துள்ளது.  அதாவது ஹைடிரஜனின் அணுநிறை : 1 டியூட்டிரியத்தின் அணுநிறை : 2.  சூரியக் கோள்களின் வெவ்வேறு நீர் மாதிரிகளைச் சோதித்ததில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதத்தைக் கொண்டிருந்தன.  [Different Hydrogen / Deuterium Ratio] கொண்டிருந்தன. சமீபத்தில் இரசாயன ஆய்வு செய்த நமது சந்திரனின் பாறை மாதிரிகள் மூலம், பூமியானது நீர்த் தேக்கமுடன் ஆரம்பம் முதலே இருந்தது என்பது உறுதியானது. அப்பெல்லோ -15 & 17 நிலவுப் பயணங்களில் நாசா விண்வெளி விமானிகள் சேகரித்த பாறை மாதிரிகள் காட்டிய டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதம் [Deuterium to Hydrogen (D/H) Ratio] பூமியில் இருக்கும் நீரைப் போன்று இருந்தது.

    D-H Ratio in Mars water

    பூமியை நீர்ப்பனி கொண்ட வால்மீன்கள் தாக்கியதால் நீர்த் தேக்கம் உண்டானதா, நீர்ச் செழிப்புள்ள முரண்கோள்கள் [Water Rich Protoplanets, or Asteroids] மோதியதால் நீர்மய அமைப்பு தோன்றியதா என்னும் வினாக்கள் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளன !  வான்மீன்களின் பனிநீர் மாதிரிகள் காட்டும் [D/H Ratio] நமது பூமியின் கடல் நீர் [D/H Ratio] போல் இரட்டிப் பானது.

    “வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்ப்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே.  நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூறுகள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.  மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”

    ஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]

    fig-1a-water-life-in-universe

    “மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர்.  மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.  ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”

    வயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]

    “நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன !  காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”

    ஜான் மெக்லீன்.

    “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது.  மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது.  அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலைநோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”

    வயலட் இம்பெல்லிஸெரி

    fig-1b-water-abundance-in-the-universe“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    fig-1e-formation-of-watery-earth1

    பிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா ?

    2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.  11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance).  அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64” என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு !  இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.

    fig-1f-what-controls-the-abundance-of-water

    பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாயிரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இணைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் !  முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது !  காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தையான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் !

    fig-2-molecular-clouds

    வெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது ?

    நீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது.  அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது.  அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது.  அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.

    Mars brine water flow

    நீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸி களில் காணப்படுகின்றன !  காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.  “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது.  மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது.  அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.

    fig-5-swas-space-probe-in-orbit

    பிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி

    வானியல் விஞ்ஞானிகள் ஊகிக்கும் பகுதிகளைத் தவிரப் பிரபஞ்சத்தில் எப்புறத்தில் நோக்கினாலும் அங்கே நீர் இருப்பது தெரிந்துள்ளது.  இந்த அறிவிப்பு 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாசா ஆய்வகத்தார் ஏவிய சுவாஸ் விண்ணுளவி (SWAS – Submillimeter Wave Astronomy Satellite) கண்டுபிடித்த விளைவுகளில் அறியப்பட்டது.  பூமியைச் சுற்றிய சுவாஸ் விண்ணுளவியின் குறிக்கோள்: விண்மீன்களின் வாயு முகில்களில் உள்ள இரசாயனக் கூட்டுப் பண்டங்கள் (Chemical Composition of Intersteller Gas Clouds) யாவை என்று அறிவது.  சுவாஸின் பிரதான தேடல் நீர் !  பிறகு விண்மீன் தோன்றும் காலாக்ஸி அரங்குகளில் ஆக்ஸிஜன் மூலக்கூறு, கார்பன், ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு ஆகியவற்றின் இருப்பைக் காண்பது.

    fig-6-swas-instrumentation

    1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது.  அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது.  சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது.  அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :

    1.  நீர் (Water H2O at 556.936 GHz)

    2.  ஆக்ஸிஜன் மூலக்கூறு (Molecular Oxygen O2 at 487.249 GHz)

    3.  நடுநிலைக் கார்பன் (Neutral Carbon C at 491.161 GHz)

    4.  ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு (Isotopic Carbon Monoxide 13CO at 550.927 GHz)

    5.  ஏகமூல நீர் மூலக்கூறு (Isotopic Water 2H18O AT 548.676 GHz)

    fig-swas-space-probe-mission

    நீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது.  சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது.  மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது.  செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.

    சுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்

    மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண்ணுளவி இதுவரை அறிவித்துள்ளது.  அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது.  அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது.  மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியாழன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.

    (தொடரும்)

    1.  https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html
    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Scientific American – Secrets of Saturn’s Moon-Icy Enceladus Has Active Geysers & Perhaps a Hidden Sea that could Harbour Life [December 2008]
    25. NASA Exobiology & Terraforming By : Steven Lin
    26.  The Primate Diaries – Parsimony & the Origin of Life in the Universe (Sep 5, 2007)
    27. Water in the Universe : Abundant ? Yes – But Not Where We Thought it Would Be ! By : Keith Cowing (Aug 20, 2000)
    28. University of Honolulu Astrobiology Team Studies Water & Life in the Universe By : Karen Meech & Eric Gaidos (June 2003)
    29. BBC News Astronomers Should Look for Life in Nearby Planetary Systems Where Comets Swirl Aound Blazing Stars, Releasing Vast Amounts of Water. By : Dr. David Whitehouse (July 12, 2001]
    30 Highlights of the SWAS Mission By : Gary J. Melnick (2003)
    31. Daily Galaxy – New Discovery Shows Water Abundant in Early Universe By : Jason McManus [Dec 29, 2008]

    32.  http://science.nationalgeographic.com/science/space/solar-system/early-earth.html  [December  2006]

    33.  http://www.smithsonianmag.com/ist/?next=/science-nature/how-did-water-come-to-earth-72037248/  [May 2013]

    33(a)  http://www.titech.ac.jp/english/news/2013/024238.html  [November 12, 2013]

    34. http://regator.com/p/269926483/origin_of_earths_water_part_of_our_planet/

    35.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/-origin-of-earths-water-part-of-our-planet-from-the-beginning.html  [November 13, 2015]

    36.  https://en.wikipedia.org/wiki/History_of_Earth  [December 15, 2015]

    37.  https://en.wikipedia.org/wiki/Origin_of_water_on_Earth

    38.  http://www.huffingtonpost.com/entry/earths-water-old_56460271e4b08cda348867ea [November 17, 2015]

    39.  http://karmaka.de/?p=6245  [November 13, 2015]

    40.  http://cnmnewz.com/water-has-been-on-earth-all-along-study-of-volcanic-rocks-reveals/

    41.  http://www.hngn.com/articles/150356/20151113/earths-water-probably-didnt-come-comet-here-beginning.htm  [November 13, 2015]

    42.   https://en.wikipedia.org/wiki/Deuterium  [December 12, 2015]

    43. https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html  [December 10, 2014]

    44.  https://www.space.com/30582-asteroid-mining-water-propulsion.html [September 18, 2015]

    45. https://gizmodo.com/asteroids-really-could-have-brought-water-to-earth-exp-1825532121  [April 25, 2018]

     

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] ( April 28, 2018)

    Attachments area

    Preview YouTube video Water on Asteroid Baffles Astronomers | Space News

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180428-Narasimha and Prahlada-conte-wm

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
    குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180427 Vatsalya lr A4 pen and conte

    ’வெள்ளைப் பசுவின்கால் பிள்ளைக் கரியமுது
    கொள்ளை அழகாய் கருப்புவெளுப்பில் -தெள்ளத்
    தெளிவாகத் தீட்டி அளித்திடுவோய் இன்று,
    பொலிவுடன் கண்ண பிரான்’’….கிரேசி மோகன்….!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (270)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் இணைகிறேன். இனியவைகள் சில இந்த மடலில் உங்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். வாழ்க்கை எனும் பயணம் இருக்கிறதே அதன் சிக்கலான் பாதையைக் கடந்து நாம் ஒவ்வொன்றாக பல மைல்கற்களை அடைகிறோம். அப்படி அடையும்போது இடையிடையே எமது இலக்குகளில் சிலவற்றை அடையும்போது நம் வாழ்க்கைப் பாதையில் நாம் கடந்துவந்த பாதையைச் சற்று திரும்பநோக்கி அசைபோட்டுக் கொள்கிறோம்.

    மனித வாழ்க்கை என்பது என்ன? அனுபவங்களைச் சேகரித்து வைக்கும் ஒரு வங்கி என்று கூடச் சொல்லலாம் தானே!

    சதாபிஷேகம்! ஆமாம் ஒருவர் தனது 80 அகவை பூர்த்தி செய்யும்போது அதனைச் சதாபிஷேகம் என்கிறோம். 80 வயதுஆனவர்களை இன்னும் துல்லியமாகச் சொல்வதானால் வயது10மாதம் ஆனவர்களை ஆயிரம்பிறை கண்டவர்கள் என்று சொல்லலாம். அது எப்படி ஆயிரம் பிறை கண்டவர்கள் என்கிறீர்களா?

    80 வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13சந்திர தரிசனம் நிகழும். 80வருஷத்தில் 30சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000பிறைகள் நிறைவுபெறும். எண்பது வயது கடந்தாலே ஒருவர் பூரணவாழ்வு அடைந்து விட்டார்கள் என்று பெருமைப்படுகிறோம். எண்பது அகவை ஏன் மிகப்பெரிய சரித்திரம் என்கிறோம்? ஒருவர் 20 வயது முதல் 80 வயது வரை காணும் வாழ்வின் அனுபவங்களே அவருடையா வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுப் பதிவாகிறது. இந்த 60 வருட காலத்தில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்திருக்கும். எண்பது அகவை மனிதர் வாழ்ந்து விட்டால் அவர்கள் இத்தகைய தோல்விகளைகளையும், வெற்றிகளையும் தாங்கிக் கொள்ளும் மனதைரியத்தை அடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதுவே முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஓர் எண்பதாண்டுப் பெரியவரின் வாழ்க்கை 60 ஆண்டு பேசும் சரித்திரமாக எம்முன்னால் உலவும் நிகழ்வே சதாபிஷேகம் ஆகிறது. நாம்அங்கே கொண்டாடுவது அவர்களுடைய சரீரத்தை அல்ல சரித்திரத்தையே !

    சமஸ்கிருதத்தில் 60 ஆண்டுப் பூர்த்தியை சஷ்டியப்தபூர்த்தி என்றும், 70 ஆண்டுகள் பூர்த்தியை பீமரத சாந்தி என்றும், 80 வயது பூர்த்தியைச் சதாபிஷேகம் என்றும் கொண்டாடுகிறார்கள். இதுவே நான் முன்பு சொன்ன வாழ்க்கைப் பயணத்தின் வெவ்வேறு இலக்குகளுக்கான மைற்கற்கள் ஆகின்றன. ஓர் ஆண் சதாபிஷேகம் காணும்போது தம்பதி சமேதராய் இருப்பவர் சிலரே. அதனால்தான் இத்தகைய தம்பதியினரிடம் ஆசி பெறுவது மிகவும் ஒரு பாக்கியம் என்று கருதப்படுகிறது.

    இதற்கு ஒரு சிறு மகாபாரத உபகதையொன்றுண்டு. தருமர் செய்த ராஜசூய யாகத்திற்கு சனகாதிகள் போயிருந்தார்கள். அவர்கள் அங்கு சென்றதன் காரணம் அவ் யாகத்திற்கு வாசுதேவர் வருவார் அங்கு அவரை வணங்கலாம் என்பதே. அவர்கள் எதிர்பார்த்தபடியே வாசுதேவரும் வந்தார் ஆனால் அவர் அவர்கள் எதிர்பார்க்காத காரியம் ஒன்றைச் செய்தார்.

    அது என்ன என்கிறீர்களா?

    அவர் அங்கு வந்திருந்த சில முதியவர்களைப் பாத நமஸ்காரம் செய்தார். அதைக் கண்ட சனகாதிகள் திகைத்து விட்டனர். அவர்கள் கண்ணபிரானிடமே”நாங்களெல்லாம் உங்களை வணங்குவதற்காக வந்திருக்கிறோம், ஏன் இவ்வகிலமே உங்களை வணங்குகிறது. நீங்கள் எதற்காக அம்முதியவர்களை வணங்கினீர்கள்?” என்றார்கள். அதற்கு வாசுதேவர் ” உலகில் ஆறு வகையான முதியவர்கள் வணங்கத்தக்கவர்கள் 1) தினமும் அன்னம் பாலிப்பவன் 2) வாலிப வயதிலேயே யாகம் செய்தவர் 3) ஒருநாள் அல்ல இருநாள் அல்ல வருடக்கணக்கில் தவவாழ்வை மேற்கொண்டவர் 4) கற்புக்கரசியராக வாழ்ந்தவர்கள் 5) பிரம்மத்தை அறிந்த ஞானியர் 6) ஆயிரம் பிறை கண்டவர்கள்.

    இதிலிருந்து நாம் சதாபிஷேகம் காணும் பெரியவர்களின் ஆசியைப் பெறுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.சரி, அப்படியான ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு அத்தகைய தம்பதியரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்கும் எனது மனைவிக்கும் சமீபத்தில் கிடைத்தது. செட்டிநாட்டுக்கும் எனக்கும் உள்ள சொந்தம் அலாதியானது. எனது எழுத்துக்கு வழிகாட்டியாக, மானசீகக் குருவாக இருக்கும் கவியரசர் கண்ணதாசனை ஈன்ற மண், யாதும் ஊரே! யாவரும் கேளிர் எனும் அரும்பெரும் தத்துவ வரிகளை எமக்களித்த கணியன் பூங்குன்றனார் தோன்றிய மண், புதுமையான் எழுத்துக்களுக்கு வித்திட்ட கல்கண்டை எமக்குச் சுவைக்கத் தந்த பெரியவர் தமிழ்வாணன் ஜயாவை ஈன்ற மண், மறையும்வரை என்னோடு நன்கு பழகி வந்த பதிப்புலகின் மூத்தவர், கவியரசரின் உற்ற நண்பன் வானதி திருநாவுக்கரசு ஜயா அவர்களைத் தந்த மண். என் இனிய நண்பர்களான ரவி, லேனா தமிழ்வாணன் சகோதரர்கள், அன்பு நண்பர் காந்தி கண்ணதாசன், அன்புத்தம்பி தேவகோட்டை இராமநாதன் எனப் பல சொந்தங்களை தமிழன்னை எனக்கு ஈயக் காரணமாயிருந்த மண்ணின் வாசத்தைக் கொண்டது செட்டிநாடு.

    அத்தகைய நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஜயா தியாகராஜன் அவர்களது சதாபிஷேகக் கொண்டாட்டம் லண்டனில் “டார்ட்ஃபோர்ட் (Dartford)” எனும் இடத்தில் இருவாரங்களின் முன் நடந்தபோது ஜயாவை வாழ்த்திப்பேசும் மகிழ்ச்சியான பணியை எனக்குத் தந்திருந்தார்கள். தியாகராஜன் ஜயா அவர்கள் சுமார் 55வருடங்களுக்கு முன்னால் இலண்டனுக்கு வந்தவர்.

    இலண்டன் தமிழ்ச்சங்கம், மற்றும் இலண்டன் நகரத்தார் சங்கம் அனைத்துக்கும் முதல் வித்திட்டு அனைவரையும் ஒன்றிணைப்பதில் முன்னின்று வெற்றி கண்டவர். இலண்டன் ஈஸ்ட்காம் முருகன் கோவில் அமைப்பதில் முன்னின்று செயலாற்றியவர்களில் ஒருவர். இப்படியாக ஐயா தமிழுக்கும், சைவத்துக்கும் பல சேவைகளை ஆற்றிக் கொண்டிருப்பவர். அத்தகைய பெரியவரின் சதாபிஷேக விழாவில் இச்சிறியேனுக்கு நாலுவரிகள் பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தை நல்கிய தமிழன்னைக்கும், என்றும் எனக்காக்கும் அண்ணமலையானுக்கும் நான் என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

    ஐயா தியாகராஜன் அவர்களுடைய குடும்பத்தோடு, இலண்டன் நகரத்தார் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இலண்டன் தமிழ்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து இவ்விழாவினைச் சிறப்பித்திருந்தார்கள்.. அருமையான சிற்றுண்டிகளோடு, இரவுப் போசனத்தையும் அளித்து அனைவரையும் மகிழ்வித்தார்கள். அனைத்துக்கும் மேலாக ஐயாவினதும், அம்மாவினதும் ஆசிகளைப் பெற்றுக் கொண்டது ஒன்றே அனைத்துக்கும் மேலாக நாமடைந்த பாக்கியம் என்று எண்ணுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்…
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • பெருமாள் திருப் புகழ்….!

     

    தனனா தனத்த தனனா தனத்த
    தனனா தனத்த -தனதான
    ————————————————–
    பெருமாள் திருப் புகழ்….!
    “சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்து
    சிலைஜா னகிக்கு -மணமாலை
    இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய
    மறைதே சிகர்க்கு -பரிவான,
    அவமா னமுற்று அரியே யெனக்கை
    அணிசே லைவிட்டு-அவள்கூவ
    சரணா கதிக்கு பதிலாய் உடுத்த
    வளர்சே லைகொட்டி -அருள்வோனே
    கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும்
    குறமா தணைக்க -மயலேறி
    கிழவே டமுற்று வருவே லவர்க்கு
    முறைமா மசக்தி -அபிராமி
    சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு
    வெகுநே சமுற்ற -முதியோனே
    அலைபாற் கடற்குள் விடசே டமெத்தை
    வளர்யோ கநித்ரை -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    வாவ் பிரில்லியண்ட் கேசவ்….!
    ——————————————————————
    ”தூண்பிளந்த சிங்கம், தொடையில் இரணியன்
    நானகந்தை நீவிடும் நாரணர் -ஆண்குழந்தை
    உத்தமர் சேவடி ஊறுகின்ற மாடாக
    நித்தம் இருந்திடுவாய் நீ’’….கிரேசி மோகன்….!

    Share